ஊர்ப்புதினம்

திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது

2 months 3 weeks ago

திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது

2026 ஜனவரி 09 , பி.ப. 09:00

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. R

image_f7da12003e.jpg

image_63ad15a9b4.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_e79bdb86a6.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_2eedf89698.jpgimage_809cf376ee.jpgimage_757af25553.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_d84d5a4efc.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_535189f9ca.jpgimage_e448f36d57.jpgimage_0b8c0bc21a.jpgimage_b633d9f365.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_610bad1f29.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_dae015aea7.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KBimage_6e9b99c0c4.jpgimage_9e6defcc4a.jpg

image_077ad79085.jpg

 https://www.tamilmirror.lk/செய்திகள்/திருத்தப்பட்ட-பயங்கரவாத-பெயர்-பட்டியல்-வெளியானது/175-370814

இன்று முதல் கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல்

2 months 3 weeks ago

images-5.jpg?resize=288%2C175&ssl=1

இன்று முதல் கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல்.

கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மக்கள் எதிர்ப்பை இதன் மூலம் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2026/1459245

வவுனியாவில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை

2 months 3 weeks ago

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை

Jan 10, 2026 - 11:07 AM

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு கடூழிய சிறை

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது. 

தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைககளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது. 

குறித்த வழக்கு தீர்ப்புக்காக நேற்றைய தினம் (09) திகதிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது. 

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். 

குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

-வவுனியா தீபன்-

https://adaderanatamil.lk/news/cmk7vicnv03qwo29nud96yvrj

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா

2 months 3 weeks ago

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..

Jan 10, 2026 - 07:00 AM

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..

தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

கணொளி ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்த வகையில் எனது விடுதலையையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், பல்வேறு வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். 

நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் பல காரணங்களுக்காக. 

அதேபோன்று, எனது தரப்பு நியாயங்களை நீதிமன்றில் எடுத்துரைத்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

அத்துடன், அந்த நியாயங்களை உணர்ந்து தீர்ப்பளித்த கம்பஹா மாவட்ட நீதவான் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகின்றேன்." என்றார்.

2001ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

பின்னர் நேற்றைய தினம் அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmk7moi8a03qmo29nsw0hd480

செங்கலடியில் பாரிய கொள்ளை

2 months 3 weeks ago

செங்கலடியில் பாரிய கொள்ளை

Jan 9, 2026 - 07:22 PM

செங்கலடியில் பாரிய கொள்ளை

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள பிரபல சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று (09) வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

மிகவும் திட்டமிட்ட முறையில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பெறுமதியான சொத்துக்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 

வர்த்தக நிலைய உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சுமார் 45 இலட்சம் ரூபா பணம், 5 பவுன் தங்க நகைகள், கடையில் இருந்த பெறுமதியான விற்பனைப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொள்ளையர்கள் தாங்கள் அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்காக மிகவும் சாதுர்யமாகச் செயற்பட்டுள்ளனர். 

கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களைச் சேதப்படுத்தியதுடன், காட்சிகளைப் பதிவு செய்யும் கருவிகளையும் (DVR) கையோடு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கடையிலிருந்த கண்காணிப்புப் பதிவுக்கருவி திருடப்பட்ட போதிலும், அந்தச் சந்தியில் அமைந்துள்ள ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பொதுவான CCTV கெமரா காட்சிகளைப் பயன்படுத்தி கொள்ளையர்களை அடையாளம் காண பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

https://adaderanatamil.lk/news/cmk6xr19803qao29noxw128gf

இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம்

2 months 3 weeks ago

09 Jan, 2026 | 05:26 PM

image

இலங்கை கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் பாஸ்டர் சிவனேஷ் தலைமையில், நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (09)  சமர்ப்பித்தனர்.

இலங்கையில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஓரினச்சேர்க்கை மற்றும் பாலின அடையாளங்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து, கிறிஸ்தவ சமூகத்தின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பரிசுத்த வேதாகமத்தின் போதனைகளின் அடிப்படையில் இந்த விடயங்களை தாங்கள் எவ்வாறு நோக்குகிறோம் என்பதை ஜனாதிபதிக்கு இக்கடிதம் மூலம்  விளக்கியுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் இத்தகைய விடயங்களை ஊக்குவிக்கும் அல்லது பரப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இது சமூகத்திற்கும், குடும்பக் கட்டமைப்பிற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர்.

விவிலிய விழுமியங்கள் மற்றும் நாட்டின் சட்ட ரீதியான காரணிகளின் அடிப்படையில் இவ்வாறான போக்குகள் மனிதர்களுக்கு எவ்விதமான இடையூறுகளை விளைவிக்கும் என்பதை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி செயலக அதிகாரிகள், இது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கித் தருவதாக உறுதியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், வரும் நாட்களில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து இது குறித்து மேலதிக விளக்கங்களை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இலங்கையில் பாலின அடையாள விவகாரம்: ஜனாதிபதிக்கு கிறிஸ்தவ சபைகள் அவசர கடிதம் | Virakesari.lk

கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது!

2 months 3 weeks ago

09 Jan, 2026 | 05:22 PM

image

(செ.சுபதர்ஷனி)

கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானம், வியாழக்கிழமை (8) இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்களின் பின்னர் இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 8 ஆம் திகதி குவைத் இராஜியத்தின் குவைத் விமான நிலையம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பித்ததன் பின்னர் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானி இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தமையை அறிந்துள்ளார்.

இந்நிலையில் சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்கள் வான்பரப்பில் பறந்ததன் பின்னர் மேற்படி விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. யு.எல் 229 என்ற இந்த விமானம், வியாழக்கிழமை மாலை 6.44 மணியளவில் குவைத் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்தது. விமானம் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஹைட்ரோலிக் தொகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அவதானித்துள்ளார். உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்ட விமானிக்கு, பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருப்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதற்கமையச் செயற்பட்ட விமானி  இரவு 9.05 மணியளவில் விமானத்தைப் பாதுகாப்பாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதன்போது குறித்த விமானத்தில் 179 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றித் தரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா, தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான விமானத்தின் பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலமாக குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது! | Virakesari.lk

குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு

2 months 3 weeks ago

09 Jan, 2026 | 05:18 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டில் அண்மைகாலமாக   பிறப்பு வீதம்  குறைவடைந்துள்ள  நிலையில், குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின்  களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். 

குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்கவிப்புத் தொகையை வழங்குதல் என்ற தலைப்பில் அஜித் பி. பெரேராவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையின் வருடாந்த குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக விழ்ச்சியடைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாலும் இதனால் எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர் சனத்தொகை நிச்சயமாக வீழ்ச்சியடையக் கூடிய வாய்ப்பு உள்ளதாலும் இளைஞர் சனத்தொகை இவ்வாறு வீழ்ச்சியடையும்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் பாதகமான தாக்கங்கள் ஏற்படக் கூடும்.

இதனால் இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்ப அலகுகளை கவரக்கூடிய ஊக்குவிப்புத் தொகையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு | Virakesari.lk

25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி

2 months 3 weeks ago

25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி

Jan 9, 2026 - 01:32 PM

25,000 புதிய வீடுகளை மேலதிகமாக அமைக்க வேண்டும் - ஜனாதிபதி

'டித்வா' புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (09) முற்பகல் கல்நேவ, ஹந்துன்கம, அலுபெத்த பகுதியில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைப்பதற்கும், வீடு ஒன்றைக் கட்டுவதற்கு 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அங்கு மேலும் ஜனாதிபதி கருத்து வௌியிடுகையில், 

தற்போதைய அறிக்கைகளின்படி சுமார் 6,000 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் 17,000 - 18,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் அல்லது வசிக்க முடியாத அபாய நிலையிலும் உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக 20,000 முதல் 25,000 வீடுகள் வரை கட்ட வேண்டியுள்ளது. 

2026 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 'எமக்கு ஒரு வீடு' திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வறிய மக்களுக்காக 10,000 வீடுகளும், தேசிய வீடமைப்பு அதிகார சபையூடாக மேலும் 10,000 வீடுகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. 

யுத்தம் 2009 ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்த போதிலும், இன்னும் பலர் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக 2,500 வீடுகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், தோட்டப்புற மக்களுக்காக இந்திய உதவியுடன் வீடுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இவ்வாறான சூழலிலேயே மேலதிகமாக இந்த 25,000 வீடுகளைக் கட்டும் பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முன்பிருந்ததை விடச் சிறந்த வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க 50 இலட்சம் ரூபாய் வழங்க தீர்மானித்துள்ளோம். அதற்கு 20 + 15 + 15 இலட்சம் வீதம் கட்டம் கட்டமாக வழங்கப்படும். நிதியில் ஒருபோதும் தாமதம் ஏற்படாது, 2-3 மாதங்களுக்குள் விரைவாக வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும். 

அதேநேரம் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். எமது தற்போதைய வாழ்க்கை தரத்திலேயே இறக்கக் கூடாது. தற்போதைய நிலையில் இருந்து மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு செல்ல முற்பட வேண்டும். 

இன்று 26 பேருக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ஒரு மனிதனுக்குத் தேவையான பல அடிப்படை உரிமைகள் உள்ளன. சிறந்த வருமான வழி, பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்வு, நல்லதொரு இல்லம் மற்றும் மன அமைதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmk6l91pm03pto29n1m1hqmrb

கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்!

2 months 3 weeks ago

கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்!

Jan 9, 2026 - 10:37 AM

கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்த சூழலில் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. 

கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரத்தை வட பகுதி மீனவர்கள் இழந்துள்ள நிலையில், இந்திய மீனவர்கள் இந்த நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

https://adaderanatamil.lk/news/cmk6ezwoc03pmo29n070u1n1n

மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.!

2 months 3 weeks ago

மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.!

ஜனவரி 09, 2026

AVvXsEiIJUetequr2q-Bg7bKDldxhmSP0CoPfxu3Vnty3udsoxYSI8DJwJmFq3ePVrCQ0OUCRJpqK4FqULiC1DsHuM5-dMiIg0wZRy4dRA4fLOSNY-K9rU-g-iNvQ04-HUZxtDSaYkDMMr4OtSWVO749lGJ2cziLEKzidF5iBrJGw-06Xe651fo6_wbFW_M2euOz

இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இந்த இணக்கத்தை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாலையடிவட்டை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய, 12 பேர்ச் காணியை விடுவிக்கவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு வானூர்தி நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் அறிவித்தலை, மட்டக்களப்பு வான் படையினருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

https://www.battinatham.com/2026/01/blog-post_09.html

லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது

2 months 3 weeks ago

லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது

09 Jan, 2026 | 05:05 AM

image

( செ.சுபதர்ஷனி)

'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமையுடன் (ஜனவரி 8, 2026) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அமரர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை (8) பொரளை பொது மயானத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அத்திட்டிய பகுதியில் வைத்து லசந்த விக்ரமதுங்க கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த அவரது இழப்பு, இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த பெரும் அடியாகக் கருதப்படுகிறது. 17 ஆண்டுகள் கடந்தும், இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அன்நாரது குடும்பத்தினர், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது கருத்துத் தெரிவித்தவர்கள், கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்த போதிலும், விசாரணைகள் மந்தகதியிலேயே உள்ளதாகக் கவலை வெளியிட்டனர். லசந்த விக்ரமதுங்க தொழில்முறை சட்டத்தரணியாவதுடன், ஊடகத்துறையில் நுழைவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவராவார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பின்னரே முழுநேர ஊடகவியலாளராகத் தன்னை மாற்றிக்கொண்டு, 1994 இல் லால் விக்ரமதுங்கவுடன் இணைந்து 'சண்டே லீடர்' பத்திரிகையைத் தொடங்கினார். அத்தோடு லசந்த விக்ரமதுங்க மாத்திரமன்றி இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள போதும், அவற்றில் ஒரு வழக்குக் கூட முழுமையாக விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், யுனெஸ்கோ அவருக்கு 'உலக ஊடக சுதந்திர விருது' வழங்கி கௌரவித்தது. சர்வதேச ஊடக நிறுவனம் (IPI) அவரை உலகின் 50 துணிச்சலான ஊடகவியலாளர்களில் ஒருவராக அறிவித்தது. இதேவேளை, லசந்தவின் துணிச்சலான எழுத்துக்களும், அவர் எழுதிய "And Then They Came For Me" எனும் தலையங்கமும் இன்றும் உலகளவில் ஊடகப் போராட்டத்தின் அடையாளமாகப் போற்றப்படுகின்றன. கடந்த வாரம் கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களை நினைவுகூரும் அருங்காட்சியகம் ஒன்றில் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் உருவச்சிலைகள் திரைநீக்கம் செய்யப்பட்டன.

அரசியல்வாதிகளால் செய்ய முடியாதவாறு, வடக்கு மற்றும் தெற்கு மக்களை இவ்வாறான ஊடகப் போராளிகளின் தியாகம் ஒன்றிணைத்துள்ளமையை இது சுட்டிக்காட்டுகிறது. பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தும், லசந்தவின் குடும்பத்தினர் இன்றும் சர்வதேச ரீதியில் நீதிக்காகப் போராடி வருகின்றனர். எதிர்வரும் காலத்திலாவது இந்தப் படுகொலைக்கான உண்மையான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் என ஊடக அமைப்புகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/235566

முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு

2 months 3 weeks ago

முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு

09 Jan, 2026 | 12:33 AM

image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி மன்னாருக்கு வருகை தரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்திய நிலையில் இ முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (8) ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமம் மீள்குடியமர்த்தப்படவேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு முள்ளிக்குளம் மக்களின் நிலமைகள் தொடர்பிலும் முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த 400வரையான குடும்பங்கள் கடந்ந 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். அதன்பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு 300வரையான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியதுடன், அதில் 150வரையான குடும்பங்களுக்கு வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இதேவேளை அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் கடந்த 2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம்கிராம மக்கள் மீளவும் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்தபோதிலும் இதுவரை அந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு எம்.பி துரைசாரா கொண்டுவந்துள்ளார்.

இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராமமக்கள் அயற் கிராமங்களான காயாக்குழி மற்றும் மலைக்காடு ஆகிய கிராமங்களில் பலத்த சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும், கடந்த 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது முள்ளிக்குளத்தில் அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் தற்போது கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் முள்ளிக்குளத்தில் இயங்கிவரும் பாடசாலைக்கும் அங்குள்ள பரலோக மாதா தேவாலயத்திற்கும் மலைக்காடு,காயாக்குழி கிராமங்களில் தங்கியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களும், மாணவர்களும் சென்று வருகின்றார்கள் என்பதையும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்புக்காணிகள், தோட்டக்காணிகள்,வயற்காணிகள்,குளங்கள், கடற்றொழிலுக்காக மீனவர்களால் பயன்படுத்தப்படும் இறங்குதுறைகள் என எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

எனவே தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேறுவதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராம மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கடற்படை அதிகாரி, முள்ளிக்குளத்தில் ஒருபகுதிக் காணி மக்களுடைய காணிகள் என தம்மால் அறியமுடிவதாகத் தெரிவித்ததுடன், அந்த மக்களுடைய காணிகளை விடுவிக்கக்கூடிய நிலையிருப்பதாகவும் தெரிவித்தார்.

கூடிய விரைவில் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பான முடிவுகள் தம்மால் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அவ்வாறு மன்னாருக்கு வருகை தரும்போது முள்ளிக்குளம் காணிவிடுவிப்புத் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/235562

தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தவறு குறித்து மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு விளக்கமளித்த பிரதமர்!

2 months 3 weeks ago

தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தவறு குறித்து மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு விளக்கமளித்த பிரதமர்!

09 Jan, 2026 | 08:43 AM

image

 (எம்.மனோசித்ரா)

கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பொறுத்தமற்ற இணையதள முகவரியொன்று உள்ளடக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து நேற்று வியாழக்கிழமை (8) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

'எதிர்காலத்தில், பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும். குறைபாடுகள் அடையாளம் காணப்பட்ட அந்த மாதிரிப் பாடப்புத்தகங்கள் எந்தவொரு மாணவருக்கும் விநியோகிக்கப்படவில்லை என்பதுடன், உள்வாரி விசாரணைகள் நிறைவடையும் வரை அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.' என்று கல்வி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் தரப்பின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன  தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோருக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய  தரம் 6 ஆங்கில மாதிரிப் பாடப்புத்தகத்தின் முதலாம் அச்சுப்பதிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/235570

உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் வருடாந்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

2 months 3 weeks ago

உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் வருடாந்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

09 Jan, 2026 | 09:00 AM

image

(செ.சுபதர்ஷனி)

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.  எனச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்தார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பாகப் புதன்கிழமை (7) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்:

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறும் பட்சத்தில் நோய் நிலைமையை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதற்கான சிகிச்சை முறைகளும் பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளன.

எனினும் அது பற்றிய போதியளவான புரிந்துணர்வு இன்மையால் நாட்டில் வருடாந்தம் பல உயிரிழப்புகள் ஏற்படுவது கவலைக்குரிய விடயமாக உள்ளது. நோய் தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக ஜனவரி மாதம் 'கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு' மாதமாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பெண்களிடையே அதிகமாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலாவதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மூன்றாவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையில் 2022 ஆம் ஆண்டு தரவுகளுக்கமைய 226 நோயாளர்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு 179 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன. இலங்கையில் பாதிக்கும் புற்றுநோய் பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. ' ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாகக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற  பால் உறவுகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.  இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக  தேசிய நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி வழங்கப்படுகிறது.

மேலும் 35 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் கட்டாயம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். மாதவிடாய் சுழற்சி காலப்பகுதிகளுக்கு இடையில் ஏற்படும் அசாதாரணமான இரத்தப்போக்கு அல்லது துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறுமாயின், உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்" என்றார்.

https://www.virakesari.lk/article/235573

இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

2 months 3 weeks ago

இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

09 January 2026

இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி போக்குவரத்து தொடர்பிலான யோசனையை, இலங்கை அரசாங்கமே முன்வைத்தது. அதனை முன்னெடுத்துச் செல்ல, இந்தியா தயாராக இருக்கிறது. 

எனினும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று, இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பிலும் இலங்கையின் பதிலை இந்தியா எதிர்பார்த்திருப்பாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக கட்டமைப்புத் தொடர்பில் நிதியளிப்பு தொடர்பான ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று, இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 3300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

எனினும், எஞ்சிய 6700 வீடுகளை டிட்வா பாதிக்கப்பட்ட அல்லது, எதிர்காலத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படவுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

https://hirunews.lk/tm/439766/land-route-to-india-what-is-the-governments-position

டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

2 months 3 weeks ago

டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) ஆரம்பமாகியுள்ளது. 

அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது. 

அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmk6dos5z03pko29nn2gexzt5

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

2 months 3 weeks ago

Douglas-Devananda.jpg?resize=750%2C375&s

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (09) கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே முன்னாள் அமைச்சரவை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷுக்கு துப்பாக்கி வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காக கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவர், கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 2026 ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

டிசம்பர் 30 அன்று, டக்ளஸ் தேவானந்தாவின் உடல்நிலையை மதிப்பிட்ட பின்னர் மருத்துவர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1459098

மதியிறுக்கம்(ஆட்டிஸம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் - சுகாதார அமைச்சர்

2 months 3 weeks ago

மதியிறுக்கம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் - சுகாதார அமைச்சர்

08 Jan, 2026 | 04:09 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

மதியிறுக்கம் (ஆட்டிஸம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை  பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  விசேட பாதுகாப்பு மத்திய நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், அவர்களுக்குரிய மருத்துவ வசதிகளை வழங்குவற்கும்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்ட மட்டத்தில் விசேட  செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மதியிறுக்கம் (ஆட்டிஸம்) போன்ற நோய்களால்  அவதியுறும் பிள்ளைகளை  முன்கூட்டியே இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிக்கும்  செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் 16 வைத்தியசாலைகள், தெற்கு மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், சப்ரகமுவ மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், வடமேல் மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், வடமத்திய மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள், மத்திய மாகாணத்தில் 09 வைத்தியசாலைகள், ஊவா மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள், கிழக்கு மாகாணத்தில் 03 வைத்தியசாலைகள், வடக்கு மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள் என்ற அடிப்படையில்  55 வைத்தியசாலைகளில்  குழந்தை மருத்துவ  நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள்.

இவ்வாறான வைத்தியசாலைகளில் ஆட்டிஸம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்குதம் கிளினிக்குகள்  இயங்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 20 ஆக காணப்படுகிறது.

இந்த வைத்தியசாலைகளுக்குத்  தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், ஏனைய வசதிகளையும் வழங்குவதற்கு 2025 ஆம் ஆண்டு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

இந்த ஆண்டு மேலதிகமாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல்  இந்த நோயால் அவதியுறும் பிள்ளைகளை பாதுகாக்க விசேட பாதுகாப்பு மையங்கள் அமைப்பதற்கும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/235528

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?

2 months 3 weeks ago

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,MET.DEPARTMENT (SRI LANKA)

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 52 நிமிடங்களுக்கு முன்னர்

திட்வா புயலின் பாதிப்புகளில் இருந்து இலங்கை மக்கள் இன்னமும் மீண்டு வராத நிலையில், நாட்டில் மீண்டுமொரு அனர்த்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாக வானிலை அவதானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையை அண்மித்துள்ள வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாகவே இந்த அனர்த்த அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தாழமுக்க நிலைமையானது, பொத்துவில் பகுதியில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (ஜனவரி 08) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.

''இலங்கையை அண்மித்து ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமையானது, தற்போது வலுவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த தாழமுக்கமானது, இலங்கையின் கிழக்கு கரையோர பகுதியான பொத்துவில் பிரதேசத்தில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையாக நிலைகொண்டுள்ளது'' என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க குறிப்பிடுகின்றார்.

இந்தத் தாழமுக்கமானது, படிப்படியாக கிழக்கு கரையோரத்தை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறுகின்றார்.

''இது தாழமுக்கமாகவே தற்போது வரை காணப்படுகின்றது. இன்று முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கெனவே கூறியிருக்கின்றோம். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலேயே அதிகளவான மழை வீழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானில் மேக மூட்டங்கள் காணப்படும். ஏனைய பகுதிகளில் 50 முதல் 75 மீல்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சி இன்றைய தினத்தில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வானிலை நிலைமையால், நாட்டிற்குள் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,MET.DEPARTMENT (SRI LANKA)

இந்தத் தாழமுக்கமானது, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு திசையாகப் பயணித்து கிழக்கு கரையோரப் பகுதியை அண்மிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது, எதிர்வரும் 12 மணிநேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான காலி வரையான கரையோர பகுதிகளில் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்படுகின்றது.

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கரையோரப் பகுதிகளிலும் சில சந்தர்ப்பங்களில் இடைக்கிடை இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகமானது 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நாட்டைச் சூழவுள்ள சில கரையோரப் பகுதிகளில் கடல் அலை 2 முதல் 3 மீட்டர் வரை உயர்ந்து, சற்று சீற்றத்துடன் காணப்படும் எனக் கூறப்படுகின்றது.

இந்தக் காலப்பகுதியில் கடல்சார் தொழிலாளர்கள் கடல் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரித்து வீசுகின்றமையினால், மரங்களின் கிளைகள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், கூரை தகடுகள் காற்றில் அள்ளுண்டு செல்லும் அபாயமும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,DEPARTMENT OF INFORMATION

படக்குறிப்பு,வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க

தாழமுக்கம் புயலாக மாறுமா?

இலங்கையின் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமையானது, புயலாக மாறும் நிலைமை தற்போதைய சூழ்நிலையில் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.

''இந்தத் தாழமுக்க நிலைமையானது, தற்போதுள்ள ஆய்வுகளின் ஊடாகப் பாரிய புயலாக மாறும் நிலைமை ஏற்படும் சாத்தியம் இல்லை எனத் தென்படுகின்றது. அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. எனினும், வலுவான தாழமுக்கமாக நாட்டின் நிலப் பரப்பிற்குள் நாளைய தினத்தில் இது பிரவேசிக்கும் பட்சத்தில், மழையுடனான வானிலையில் கடுமையான அதிகரிப்பு ஏற்படும்'' என அவர் கூறுகின்றார்.

கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் சுமார் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறு கணிப்பிடப்பட்டுள்ள 150 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியானது, சில சந்தர்ப்பங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியாகப் பதிவாகக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மீல்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி நாளைய தினத்தில் பதிவாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,Getty Images

நாட்டின் நிலப்பரப்பிற்குள் இந்தத் தாழமுக்கம் பிரவேசித்ததை அடுத்து, நாளை மறுதினம் (ஜனவரி 10) முதல் மழை சற்று குறைவடைந்து பெய்யும் என அவர் கூறுகின்றார்.

எனினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை அன்றைய காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியும் என அவர் எதிர்வு கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஜனவரி 11ம் தேதிக்குப் பின்னர் இந்தத் தாழமுக்கம் முழுமையாக வலுவிழந்து, பாதிப்புகள் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.

வெள்ளப் பெருக்கு அபாயம்

இலங்கையிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில், 25 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் விஞ்ஞான மற்றும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவிக்கின்றார்.

மத்திய தரத்திலுள்ள 24 நீர்த்தேக்கங்களிலுள்ள வான் கதவுகள் திறக்கப்பட்டு, நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

''மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதுருஓயா மற்றும் முந்தனியாறு நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. யாங்ஓயா மற்றும் பதவி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கப்பட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, நீர் விடுவிக்கப்பட்டு வருகின்றன.'' என்கிறார் எல்.எஸ்.சூரியபண்டார.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,DEPARTMENT OF INFORMATION

படக்குறிப்பு,நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் விஞ்ஞான மற்றும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார

''குறிப்பாக பராக்கிரம சமுத்திரம், கவ்டுல்ல நீர்த்தேக்கங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருகின்றோம். வானிலை அவதானிப்புகளின் பிரகாரம், அதிகளவிலான மழை வீழ்ச்சி ஒரே சந்தர்ப்பத்தில் பதிவாகும் பட்சத்தில், நீர்மட்டம் சடுதியாக அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன" என எல்.எஸ்.சூரியபண்டார குறிப்பிடுகின்றார்.

அதனால், "அம்பாறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால், குறித்த பகுதிகளில் நீர்நிலைகளை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,NBRO

படக்குறிப்பு,தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர

மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையை அண்மித்து நிலைகொண்டுள்ள தாழமுக்க நிலைமையை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவிக்கின்றார்.

இதன்படி, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதிக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தன்தாஹின்ன, வலபனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,DEPARTMENT OF INFORMATION

படக்குறிப்பு,இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட

அவசர அனர்த்தங்களின் போது என்ன செய்வது?

திடீர் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், அது குறித்து உடனடியாக அறிவிப்பதற்காக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற தொலைபேசி இலக்கத்தை 24 மணிநேரமும் செயற்பாட்டில் வைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவிக்கின்றார்.

''அவசர அனர்த்த மத்திய நிலையம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் 80 குழுக்களும், கடற்படையின் 16 மீட்புக் குழுக்களும், விமானப்படையின் 66 மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில், அதில் பயணிக்கக்கூடிய வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

அவசர நிலைகளில் உதவிகளைச் செய்வதற்காக விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளும் வகையில் தம்முடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்'' என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவிக்கின்றார்.

இலங்கையில் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cevnxerddy1o

Checked
Fri, 04/03/2026 - 18:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr