சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து
08 Jan, 2026 | 04:17 PM
![]()
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவருடைய பாரியார் திருமதி சுனிதா திவேதி இருவரும் சீதையம்மன் ஆலயத்திற்கு வியாழக்கிழமை (08) விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில் நுவரெலியாவில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டது.
இந்திய இராணுவத் தளபதி உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா நகர சபை மைதானத்திற்கு வருகை தந்து அங்கிருந்து விசேட வாகனம் ஊடாக சீத்தாஎலிய செல்வதற்கான ஏற்பாடுகள்; செய்யப்பட்டீரந்த நிலையில் காலநிலை சீர்கேடு காரணமாகவும் குறிப்பாக முகில் கூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால் உலங்கு வானூர்தி தறை இறங்குவதற்கான அனுமதியை இலங்கையின் ஆகாயப்படை தரப்பினர் வழங்க மறுத்தமை காரணமாக இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது.
இந்திய இராணுவ தளபதி சார்பாக வருகை தந்திருந்து ஏ.வி.குருமூர்த்தி இந்த பூஜை வழிபாடுகளில் பங்கு பற்றியதுடன் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உட்சவ மூர்த்தி திருவுருவச் சிலையும் மற்றும் இந்தியாவின் அயோத்தி நகரின் சரயு நிதியில் பெறப்பட்ட புனித நீரும் ஆலய நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையிலான நிர்வாக சபையினரிடம் கொழும்பு இந்திய தூதவராலயத்தின் அதிகாரி ஏ.வி.குருமூர்த்தனால் கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.
இந்திய இராணுவத்தளபதியின் வருகை காலநிலை காரணமாக சாத்தியப்படாமல் போய்விட்டது.ஆனாலும் நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தோம்.
அதேபோன்று இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை வழங்கி வருகின்ற ஒத்துழைப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் விசேட பேரிடரின் பின்பு இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக இலங்கைக்கு வருகை தந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாதைகளை மீள கட்டியெழுப்புவதற்கும் மேலும் நிவாரண பணிகளில் ஈடுபட்டமைக்கும் உயிரிழந்தவர்களை கண்டு பிடிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்து செய்த சேவைக்காகவும் யஎங்களுடைய நாட்டின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் எங்களுடைய நாட்டை கட்டியெழுப்புவதற்கு தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும்.விசேடமாக பாரிய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இரயில்வே பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்ய முடியுமாக இருந்தால் அதன் மூலமாக எங்களுடைய உல்லாச பயணத்துறை வளர்ச்சியடைவதன் மூலமாக எங்களுடைய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பு முடியும் எனவும் குறிப்பிட்டார்.
ஆலய நிர்வாக சபையினரால் இந்திய இராணுவ தளபதிக்கு அவருடைய வருகையை முன்னிட்டு வழங்கப்படவிருந்த விசேட நினைவுச் சின்னத்தை இந்திய தூதரக அதிகாரியிடம் கையளித்தனர்.
சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து | Virakesari.lk

























