ஊர்ப்புதினம்

கனடாவிடமிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான அனர்த்த நிவாரண நிதியுதவி!

3 months 2 weeks ago

19 Dec, 2025 | 03:06 PM

image

இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக கனடா அரசாங்கம் 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஹெச்.இ. இசபெல் மார்ட்டின் (HE Isabelle Martin) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை அலுவலகத்தில் வைத்து சந்தித்து இந்த நிதியுதவியை கையளித்துள்ளார்.

இந்த நிதியுதவியில் 1.4 மில்லியன் டொலர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உணவு வசதிகளை வழங்குவதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 350,000 டொலர்கள், நிவாரணப் பொருட்கள், அவசரகால தங்குமிடங்கள், நீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவதற்காக, 'வேர்ல்ட் விஷன் கனடா' (World Vision Canada) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

215,000 டொலர்கள்,  கனடா செஞ்சிலுவைச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் அவசரகால பேரிடர் உதவி நிதியத்தின் மூலம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய சுமார் 70,000 டொலர்கள், உள்ளூர் முயற்சிகளுக்கான கனடா நிதியத்தின் (Canada Fund for Local Initiatives) ஊடாக அவசரகால நிவாரணங்களை வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான கூட்டாண்மையையும், மனிதாபிமான உதவிகள் மற்றும் மீள்தன்மை மீதான அர்ப்பணிப்பை இந்த அனர்த்த நிவாரண நிதியுதவி பிரதிபலிக்கிறது.


கனடாவிடமிருந்து இலங்கைக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான அனர்த்த நிவாரண நிதியுதவி! | Virakesari.lk

GovPay சாதனை : இந்த ஆண்டில் 2 பில்லியனைத் தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

3 months 2 weeks ago

19 Dec, 2025 | 04:40 PM

image

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின் டிஜிட்டல் கட்டண தளமான GovPayஆல் நடத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2025ஆம் ஆண்டில் 2 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது.

விரைவாக மாற்றியமைக்கும் திறன், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் அரச நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு ஆகியவற்றின் காரணமாக GovPay 45 நாட்களில் அதன் வருமானத்தை 1 பில்லியன் ரூபாவில் இருந்து 2 பில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்க முடிந்தது என தெரிவிக்கப்படுகிறது.

2025 பெப்ரவரி 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இன்று வரை 70,178க்கும் மேற்பட்ட GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 221 அரச நிறுவனங்களில் 3,372 அரச சேவைகளுக்கான கட்டண வசதிகள் செயற்படுத்தப்படுகின்றன. இந்த விரைவான வளர்ச்சி, பொதுமக்களும் அரச நிறுவனங்களும் இந்த கட்டமைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூலோபாய தலைமையின் கீழ், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) LankaPay உடன் இணைந்து செயல்படுத்திய GovPay, இலங்கையின் தேசிய டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளில் முக்கிய சேவை வழங்குநராக மாறியுள்ளது.

இந்த டிஜிட்டல் தளம் அனைவருக்கும் பொதுவான, திறமையான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறது.

2025 ஏப்ரல் 10ஆம் திகதி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்துவதற்கான ஒன்லைன் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், இந்த கட்டமைப்பின் மூலம் 50,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஊடாக 66 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த சேவை தற்போது தெற்கு, கட்டுநாயக்க மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் முழுவதும் செயல்படுகிறது.

இது 2025 டிசம்பர் மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸுடன் இணைந்து LankaPayஇன் ஆதரவுடன், 2026 ஜனவரி மாதத்தில் நாடு பூராகவும் செயல்படுத்த இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) இணக்கம் தெரிவித்துள்ளது.

GovPay, பிரதேச செயலகங்கள், மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூரட்சி மன்றங்கள் ஊடாக அதன் பிரவேசத்தை விரிவுபடுத்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் அரசாங்க சேவைகளை அணுகுவதை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி வட மாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும், தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இலக்கை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், இலங்கை பொலிஸ், தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம், மொரட்டுவ பல்கலைக்கழகம்  மற்றும் இலங்கை அணுசக்தி சபை போன்ற நிறுவனங்கள் 2025ஆம் ஆண்டில் GovPayக்கு அதிக பங்களிப்பு செய்த நிறுவனங்களில் அடங்குகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் இதற்கு நிலவுகின்ற அதிக வரவேற்பு, இளைய தலைமுறையினர் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தையும், இந்த டிஜிட்டல் தளத்தின் வியாபிப்பு மற்றும் நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

வழக்கமான அரச சேவைகளுக்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கும் GovPay ஆதரவு அளித்தது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி முதல், இது Rebuilding Sri Lanka அனர்த்த நிவாரண நிதியத்திற்கு டிஜிட்டல் நன்கொடைகளுக்கு வசதிகளை வழங்கியுள்ளதுடன், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் நன்கொடைகள் உட்பட 909 பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 14 மில்லியன் ரூபா நிதியை திரட்ட உதயுவியுள்ளது.

தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, மேலதிகமான நிறுவனங்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கி, மேம்பட்ட வசதிகளுடன் கூடிய  www.govpay.lk  நவீனமயமாக்கும் பணியில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

முதல் ஆண்டில் 2 பில்லியன் ரூபா பெறுமதியுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் 45 நாட்களில் 1 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியதன் மூலம், GovPay டிஜிட்டல் தளம், 2030ஆம் ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை யதார்த்தமாக்குவதற்கான ஒரு தனித்துவமான தொடக்கமாகக் காணலாம்.

GovPay சாதனை : இந்த ஆண்டில் 2 பில்லியனைத் தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள் | Virakesari.lk

10 தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் மருந்துகளை கொள்வனவு செய்கிறது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

3 months 2 weeks ago

(செ. சுபதர்ஷனி)

"இந்தியாவின் 'மான் பார்மசூட்டிகல்' நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 10 மருந்துகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அதே நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.

குறித்த நிறுவனத்திடம் மிருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அச்சங்க ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் சஞ்ஜீவ வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்:

"பொதுமக்களுக்குத் தரமான மருந்துகளை விநியோகிப்பது அரசாங்கத்தின் மிக முக்கிய பொறுப்பாகும். அதற்கமைய, தமது பணியை உரியவாறு நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் மீது சாடுவதை எப்போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.  பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம். இந்நாட்டில் நீண்டகாலமாக நிலவிவரும் மருந்து மாபியா மற்றும் தரமற்ற மருந்து இறக்குமதி போன்றன தொடர்பில் கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். புதிய அரசாங்கத்தின் கீழும், தற்சமயம் மருந்து கொள்வனவு செயற்பாட்டில் முறைக்கேடாகச் செயற்பட்ட நபர்கள் குறித்த நிறுவனங்களில் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டில் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 100 மருந்து வகைகள் தரமற்றவையாக உள்ளன. சர்ச்சைக்குரிய ஓண்டன்செட்ரோன் என்னும்  ஊசி மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 2 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். இம்மருந்து இந்தியாவில் உள்ள மான் பார்மசூட்டிகல் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்ட  சுமார் 90 மருந்து வகைகள் தரமற்றவை எனப் பரிசோதனைகளில் நிரூபணமாகியுள்ளதாக அரச மருத்துவ விநியோகப் பிரிவு கணினி தரவு தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயாளி ஒருவரின் உடலில் செலுத்தப்படும் ஊசி மருந்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது பாரதூரமான விடயமாகும். இந்த மருந்து நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கும் வரை அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? கட்டமைக்கப்பட்டுள்ள பரிசோதனையின் பின்னரே மருந்துகள் நோயாளர்களுக்கு வழங்கப்படும். மேற்படி மருந்து உற்பத்தி செய்யும் மான் பார்மசூட்டிகல் தனியார் நிறுவனத்திடமிருந்து ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட 9 மருந்துகள் தரமற்றவை எனப் பாவனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஓண்டன்செட்ரோன் மருந்துடன் அந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மருந்து தயாரிப்பின் போதே கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையும் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாகத் தரமற்ற மருந்துகளை விநியோகிக்கும் நிறுவனத்திடமிருந்து மருந்துகளைக் கொள்வனவு செய்கின்றனர். எதற்காக இவ்வாறு செயற்படுகின்றனர்? குறித்த நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்குப் பின்னால் உள்ள 'மருந்து மாபியா' குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.   ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. கடமை அலட்சியத்தை அதிகாரிகள் மீது சுமத்தி தப்பிச்செல்ல முயலும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்."

10 தரமற்ற மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் மருந்துகளை கொள்வனவு செய்கிறது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் | Virakesari.lk

IOM மூலம் இலங்கையின் தங்குமிடங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது ஜப்பான்!

3 months 2 weeks ago

IOM மூலம் இலங்கையின் தங்குமிடங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது ஜப்பான்!

19 Dec, 2025 | 12:47 PM

image

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, சர்வதேச புலம்பெயர் அமைப்பின் [International Organization for Migration (IOM)] இலங்கைக்கான தூதரகத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்கோவுடன் இணைந்து, பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) இயக்குநர் (முனனேற்பாடுகள்) சதுர லியனாரச்சியிடம் தங்குமிடங்களை வெள்ளிக்கிழமை (19) ஒப்படைத்தார்.

IOM மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை உதவி, 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையதாகும், இது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நன்கொடையின் ஒரு பகுதியாகும், இதை ஜப்பான் அரசு டிசம்பர் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் அமைப்புகளான IOM, உலக உணவுத் திட்டம் [World Food Programme (WFP)] மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் [United Nations Children’s Fund (UNICEF)] ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க முடிவு செய்தது.

கண்டி, பதுளை மற்றும் கேகாலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, IOM மூலம், ஜப்பான் சமையலறைப் பொருட்கள், கழுவும் பொருட்கள் மற்றும் படுக்கைப் பொருட்கள் உட்பட 615 தங்குமிடங்களை வழங்கும்.

டிசம்பர் 17 ஆம் தேதி நிலவரப்படி, பேரிடர் மேலாண்மை மையத்தின் [Disaster Management Center (DMC)] சூழ்நிலை அறிக்கையின்படி, 66,000 க்கும் மேற்பட்ட நபர்களும் 22,000 குடும்பங்களும் இன்னும் சொந்த வீடுகள் இல்லாமல் பாதுகாப்பு மையங்களில் உள்ளனர்.

கூடுதலாக, 100,000 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன, அதே நேரத்தில் 6,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்த பேரழிவின் பின்னரான சூழ்நிலையில், இந்த உதவி வீடுகளை இழந்தவர்களுக்கு தங்குமிடம் வழங்கவும், அவர்களின் அவசர வாழ்க்கைத் தேவைகளை நிவர்த்தி செய்யும்மென எதிர்பார்க்கப்படுகிறது.

இடம்பெயர்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளின் ஒரு பகுதியாக அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை இடத்தை உறுதி செய்வது ஒரு அவசரத் தேவை" என்று தூதர் இசொமதா தனது கருத்துக்களில் கூறினார்.

மேலும், "இந்த உதவி ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான நம்பிக்கை மற்றும் நட்பைப் பிரதிபலிக்கிறது, மேலும் தேவைப்படும் காலங்களில் இலங்கை மக்களை ஆதரிப்பதில் ஜப்பானின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் இலங்கை மக்களுடன் ஜப்பான் முழு ஒற்றுமையுடன் நிற்கிறது" என்று வலியுறுத்தினார்.

IMG_4277.jpeg

https://www.virakesari.lk/article/233824

யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு!

3 months 2 weeks ago

யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு!

19 Dec, 2025 | 02:15 PM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இசைத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவராஜா ராஜ்உமேஸ் ஆகியோர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகப் பேரவையின் கூட்டம் வெள்ளிக்கிழமை (19) துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி சுகன்யா அரவிந்தன், கலாநிதி சிவராஜா உமேஸ் மற்றும் திறந்த முறையில் கோரப்பட்ட விளம்பரத்துக்கு அமைவாக விண்ணப்பித்திருந்த சட்ட வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் ஆகியாரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.  

அவற்றின் அடிப்படையில், சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இசைத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் இசையியல் துறையில் பேராசிரியராகவும், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிவராஜா ராஜ்உமேஸ் சந்தைப்படுத்தல் துறையில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன்,  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் சட்ட வைத்தியப் பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சட்ட வைத்தியத்துறைக்குச் சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/233829

மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

3 months 2 weeks ago

மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டை எதிர்த்து சாந்தைப் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

19 Dec, 2025 | 11:45 AM

image

மானிப்பாய் பிரதேச சபையின் முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை சாந்தை கிராம சேவகர் பிரிவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியே மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது பகுதியில் உள்ள வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அந்த வீதியானது புனரமைப்புக்கான கேள்வி விண்ணப்பம் கோரப்படாமல் ஒரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்நிலையில் அந்த வீதியில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்காக நாங்கள் வீதியோரத்தில் உள்ள மரங்களையும் வெட்டி புனரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.

இதன்போது குறித்த வீதிக்கு தரமான அடித்தளம் இடப்படாமல், தரமற்ற வகையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன. இதுகுறித்து நாங்கள் பிரதேச சபை தவிசாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் ஆகியோருடன் முரண்பட்டோம்.

இதன்போது தவிசாளரும், தொழில்நுட்ப உத்தியோகத்தரும் ஆளுக்கு ஒவ்வொரு கருத்தினை, ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தினை கூறினர். பின்னர் ஓரளவு தரமான நிலையில் வீதிக்கு அடித்தளம் இடப்பட்டது. இருப்பினும் அதுவும் திருப்திகரமாக இல்லை.

குறித்த வீதியானது முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல் அந்த வீதிக்கு வந்த மூலப்பொருட்கள் வேறு ஒரு வீதிக்கு, எமது அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்டு அங்கு புனரமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதனைக் கண்டித்த நாங்கள், வைரவர் வீதியை முழுமையாக புனரமைக்குமாறும் மற்றைய பகுதியில் உள்ள வீதியை வேறொரு நிதியியல் புனரமைக்குமாறும் கூறினோம். காரணம், இரண்டு வீதிகளும் அரைகுறையில் காணப்படும் என்பதால் ஒரு வீதியை முழுமையாக புனரமைக்குமாறு நாங்கள் கூறினோம்.

சம்பவ இடத்திற்கு வந்த மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன், தங்கள் மீது பிழை இருப்பதனை ஒத்துக்கொண்டார். மற்றைய வீதியில் பரவப்பட்ட மூலப் பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியை முழுமையாக புனரமைப்பதாக கூறினார்.

அந்த வீதியில் பரவப்பட்ட மூலப்பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியில் பரவுமாறு ஊர் மக்களாகிய எங்களிடம் கூறினார். அவர்கள் விட்ட தவறுக்கு நாங்கள் அந்த வேலையை செய்ய தேவையில்லை. இருப்பினும் நாங்கள் அதையும் செய்வதாக கூறினோம். இருப்பினும் இதுவரை மேற்கொண்டு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

இதுவரை காலமும் புனரமைக்காது காணப்பட்ட எமது வீதியானது தற்போதாவது புனரமைப்பு செய்யப்படுகின்றது என்று நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கும்போது இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. எனவே இது குறித்து பிரதேச சபையானது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG-20251219-WA0027.jpg

IMG-20251219-WA0025.jpg

IMG-20251219-WA0024.jpg

IMG-20251219-WA0028.jpg

VID-20251218-WA0107.jpg

20251218_173116.jpg

https://www.virakesari.lk/article/233808

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்!

3 months 2 weeks ago

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்!

Published By: Digital Desk 2

19 Dec, 2025 | 10:37 AM

image

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கட்டடம், சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என்ற பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதியின் பவுதவி உயர்க்காக எதிர்ப்பை தெரிவித்தும், தீர்மான பிரேரணை ஒன்று சபையில் முன்மொழியப்பட்டது.

குறித்த பிரேரணையையும் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233791

பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் - கிருஷ்ணன் கலைச்செல்வி

3 months 2 weeks ago

பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் -  கிருஷ்ணன் கலைச்செல்வி

18 Dec, 2025 | 05:52 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் அது என்றாவது ஒருநாள் அதன் பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்ற சிறந்த பாடத்தை இடம்பெற்ற அனர்த்தம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் புகட்டியுள்ளது. எனவே அதிகம்  பாதிக்கப்பட்ட மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

வழமையாக இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் போது தனித்தனியே ஒவ்வொருவரும் அதற்கான பங்களிப்புகளை வழங்கி வருவர்.ஆனால் இம்முறை அரசாங்கம்,அமைச்சர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாலேயே இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு 23 தினங்களுக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

இயற்கை அனர்த்தங்களினால் மலையக பிரதேசங்களில் வாழும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வீடுகளில் வாழ்ந்த மக்கள் மற்றும் மலை பிரதேசங்களில் வாழ்ந்த மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அனர்த்தும் இடம் பெற்ற பின்னர் இன்றும் கூட அந்த மக்கள் தமக்கு இயற்கை அனர்த்தங்கள் மூலம் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். பெருமளவு மக்கள் இன்னும் நலன்புரி நிலையங்களிலேயே வாழ்கின்றனர்.

எவ்வாறெனினும் இம்முறை இடம் பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்கள் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு சிறந்த பாடத்தை புகட்டியுள்ளது. அதாவது இயற்கைக்கு எதிராக நாம் செயற்பட்டால் இயற்கையானது என்றாவது ஒருநாள் அதன் விளைவுகளை, பிரதிபலனை மீண்டும் எமக்குப் பெற்றுத் தரும் என்பதாகும்.

அனர்த்தத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பல வீதிகள் பல குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகள் பெரும் சேதமடைந்துள்ளன.கொத்மலை, வலப்பனை,ஹங்குரங்கெத்த போன்ற பிரதேசங்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களில் மக்கள் வீடுகளையும் இழந்து பெருமளவு உயிர்களையும் இழந்துள்ள நிலையையே காண முடிகிறது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியமர்த்துவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான உறுதி மொழியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அந்த மக்களுக்கு வழங்கி யுள்ளார்.

இந்த இயற்கை அனர்த்தத்தின் போது எமது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மீதும் நம்பிக்கை வைத்து பெருமளவிலான நாடுகள் எமக்கு உதவி, ஒத்துழைப்புகளை வழங்கின.பல்வேறு நாடுகளும் எமக்கு உதவிகளை வழங்கின. சில தோட்டங்களில் தொழிலாளர்களும் தமது ஒருநாள் சம்பளத்தை வழங்க முன் வந்தனர். ஆனால் அந்த நிவாரணங்கள் உரிய வகையில் மக்கள் கைகளுக்கு போய் சென்றுள்ளதா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/233753

வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் !

3 months 2 weeks ago

வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் !

Published By: Digital Desk 1

19 Dec, 2025 | 10:19 AM

image

வவுனியா, ஈச்சங்குளம் - கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் கருவேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் கணவர் இந்தக் கொலையைச் செய்ததாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரும் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_20251219_080149.jpg

IMG_20251219_083935.jpg

IMG_20251219_075904.jpg

https://www.virakesari.lk/article/233785

மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு!

3 months 2 weeks ago

மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு!

written by admin December 18, 2025

srilankan-boats-roundup-in-malteives.jpg

மாலைத்தீவின் விசேட பொருளாதார வலயத்திற்குள் (SEZ) சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினரால் (MNDF) நேற்று (17) சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

🔍 சம்பவத்தின் விபரங்கள்:

  • இடம்: மாலைத்தீவின் வடக்கு பகுதியில் உள்ள கேலா (Kelaa) தீவிலிருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

  • நேரம்: நேற்று முற்பகல் 8:30 மணியளவில், வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • தற்போதைய நிலை: கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாலைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

🚩 பின்னணி:

கடந்த காலங்களிலும் இதேபோன்று இலங்கை மீனவர்களின் படகுகள் மாலைத்தீவு எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னதாக இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் பேரில், 300 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருட்களுடன் சென்ற இலங்கை படகொன்றை மாலைத்தீவு படைகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

💬 மீனவர்களின் கவனத்திற்கு:

கடல் எல்லைகளைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதோடு, இது போன்ற கைதுகள் மீனவ குடும்பங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்த மேலதிக விழிப்புணர்வு அவசியமாகும்.

#SriLankaFishermen #MaldivesNavy #MNDF #MaritimeSecurity #BreakingNews #LKA #Maldives #TamilNews #FishermenIssue


https://globaltamilnews.net/2025/224471/

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

3 months 2 weeks ago

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

18 Dec, 2025 | 05:48 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மலையகம் எமது தாயகம். நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அனத்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முகாம்களிலும் பாடசாலைகளிலும் தங்கிவரும் நிலையல், அவர்களுக்கு எந்த வசதியும் செய்துகொடுக்காமல் தற்போது அவர்களை தங்களின் வீடுகளுக்கு செல்லுமாறு அரசாங்கம் தெரிவித்து  வருகிறது.  தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமையவே  அவர்கள் தங்களின் வீடுகளைவிட்டு முகாம்களுக்கு வந்தார்கள்.அதனால்  கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் முறையான அறிக்கையை பெற்றுகொண்ட  பின்னரே அந்த  மக்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்புவது பொருத்தமாகும்.

 வேவெண்டன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் காமினி திஸாநாயக்க பாடசாலைகளில் இருக்கிறார்கள். அவர்களை தற்போது  வேறு பாடசாலைகளுக்கு செல்லுமாறு அல்லது  தொண்டமான் பயிற்சி நிலையத்துக்கு அல்லது வீடுகளுக்கு போங்கல் என  தெரிவிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அந்த மக்களின் நிலமையை புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.

மேலும் வரவு செலவு திட்ட விவாதத்தின்போது, மலையக மக்களுக்கு தனியான வீடு நிர்மாணித்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் தெரிவித்து வந்தார்கள். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மாறாக நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. மலையகம் எமது தாயகம்.  நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும்.

தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி இந்த காணிகளை பெற்றுக்கொடுக்க  அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். எமது காலத்தில் அதனை மேற்கொள்ள நாங்கள் முயற்சித்தோம். அது  சாத்தியமாகவில்லை. அதனால் அதனை தற்போது  நீங்களாவது செய்யுங்கள்.

நாட்டில் இன்று தேயிலை, இறப்பர் போன்றவை ஒரு லட்சத்தி 3ஆயிரம் ஹெக்டயர்களில்  பயிர்ச் செய்யப்படுகின்றன. அகவே பெருந்தோட்ட மக்களுக்கு அதிலே 7பேர்ச் காணி ஒதுக்குவதாக இருந்தால், வெறும் 5ஆயிரம் ஏக்கர் காணியே தேவைப்படுகிறது.

அதனை ஒதுக்கிக்கொடுப்பதால் எந்த  நட்டமும் ஏற்படப்போவதில்லை. அந்த மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என அரசாங்கத்தில் இருக்கும் 159பேரும் பேசி இருக்கிறார்கள்.அதனால்  அந்த மக்களுக்கு காணிகளை பிரித்துக்கொடுப்பதற்கு  நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால், இந்த  சமூகம் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும்.

அதேநேரம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களைவிட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றன. அவர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/233750

கண்டி உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

3 months 2 weeks ago

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

Dec 18, 2025 - 07:57 PM

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் உடுதும்பரை பகுதியில் 308 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

மேலும், உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் பொப்பிட்டிய பகுதியில் 234 மி.மீ, நுகதென்ன பகுதியில் 221 மி.மீ மற்றும் கைகாவல பகுதியில் 218 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன. 

உடுதும்பரை பகுதியில் மண்சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுவதால் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும், அப்பகுதி மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கோரிக்கை விடுத்துள்ளது. 

நிலவும் மழை நிலைமையால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான 'வெளியேற்றல்' (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். 

இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பரை, மெததும்பரை மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த நாட்களில் பெய்த கடும் மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதால், வீடுகள் அல்லது கட்டிடங்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வசந்த சேனாதீர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். 

அப்பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அல்லது மண்மேடு சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவ்விடங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjbjbw6b02w2o29nu17fjd93

119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

3 months 2 weeks ago

119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

Dec 18, 2025 - 04:48 PM

119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். 

'119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, உண்மையான அவசர சந்தர்ப்பங்களில் 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவடைவதுடன், இவ்வாறான தேவையற்ற முறைப்பாடுகளுக்காக நேரத்தைச் செலவிடுவதன் மூலம், பொலிஸாரின் உடனடி உதவி தேவைப்படும் அத்தியாவசிய அவசர முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும், இந்த 119 அழைப்பு இலக்கத்திற்கு போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெரிந்தே பொய்யான தகவல்களை வழங்குவது இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, பொலிஸாரின் நேரடி உதவி அவசியமில்லாத ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தந்த நிறுவனங்களுக்குரிய குறுந்தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறும், இந்த அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

01. Police Emergency Service - 119

02. Ministry Of Child Development and Women's Affairs (Women Help Line) - 1938

03. Ministry Of Child Development and Women's Affairs (Child Help Line) - 1929

04. Fire and Rescue Service - 110

05. National Transport Commission - 1955

06. Drug Organized Crime Issues Emergency Notification unit - 1997

07. The Bureau for the Prevention and Investigation of Abuse of Children and women - 109

08. Emergency Call Center (Tamil Medium) - 107

09. Commission to Investigate Allegations of Bribery or Corruption - 1954

10. Expressway Emergency - 1969

11. Department of Immigration and Emigration - 1962

12. National Dangerous Drug Control Board - 1984

13. Sri Lanka Bureau Of foreign Employment - 1989

14. National Help Desk (Ministry of Defance) - 118

15. Disaster Management Call Center - 117

16. Sri Lanka Tourism - 1912

17. Government Information Center - 1919

https://adaderanatamil.lk/news/cmjbckst002voo29n0l3czd9u

அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

3 months 2 weeks ago

Editorial   / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0     - 60

 

image_6da9aacce1.jpg

கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம்  கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று  விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அப்பிரதேச மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹீர், தாஹீர் மரைக்கார், கண்டி மாவட்ட கட்சியின் அமைப்பாளர் அம்ஜத் ஹாஜியார், குருநாகல் மாநகர பிரதி நகர பிதா அஸார்டீன் மொய்னுடீன்,  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பயாஸ், அஸ்மி, றாபி, பஸால் உள்ளிட்டோருடன் ரமலான், இர்ஷாட் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

image_7e36fbd0eb.jpgimage_abeb2a210a.jpgimage_b6083ca7bc.jpgimage_5713e8681f.jpgimage_e6df0714af.jpgimage_ba95c407c6.jpg

 Tamilmirror Online || அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

3 months 2 weeks ago

18 Dec, 2025 | 02:29 PM

image

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்ட மாஅதிபரால் வழங்கப்பட்டன. 

அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார். 

ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்ட மாஅதிபரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில், 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் ஏற்பாட்டாளராக இருந்த தற்போதைய அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கோப்புகள் சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 

இதற்கமைய, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சட்ட மாஅதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Virakesari.lk

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!

3 months 2 weeks ago

18 Dec, 2025 | 02:10 PM

image

இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கும் நிகழ்வாக இச்சந்திப்பு நிகழவுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் குறித்த சந்திப்பில் இணையவுள்ளனர்.

இச்சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மகஜர் ஒன்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இச்சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஷ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலும் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக நீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்படவுள்ளது.

உயர்ஸ்தானிகருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மகஜர் வடிவில் தயாரிக்கப்பட்டு ஆறு  கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் உயர்ஸ்தானிகரின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இம்மாத இறுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்! | Virakesari.lk

முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

3 months 2 weeks ago

18 Dec, 2025 | 02:18 PM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது.

கோட்டைகட்டிய குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் ஒருவர் முதல் முறையாகத் தமது கிராமத்துக்கு வருகை தந்தமை குறித்துப் பொதுமக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வுகளும் வழங்கப்பட்டன.

தென்னியன்குளம் சந்தி முதல் அம்பலப்பெருமாள்குளம் சந்தி வரையிலான பிரதான வீதி முற்றாகச் சிதைவடைந்துள்ளமையை மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதற்குத் தீர்வாக, அவ்வீதியின் ஒரு பகுதியை வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாகவும், எஞ்சிய பகுதியை வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாகவும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கிராமத்தினுள் அமைந்துள்ள பாடசாலை வீதி, கோட்டைகட்டியகுளம் பாடசாலைப் பின்வீதி மற்றும் விடத்தை வீதி ஆகியவற்றை உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஊடாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அமைதிபுரம் முதல் துணுக்காய் பிரதேச செயலகம் வரை ஏழு கிராமங்களை இணைக்கும் அரச பேருந்து சேவைக் கோரிக்கை தொடர்பில், தற்போது வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தனியார் பேருந்துச் சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அம்பலப்பெருமாள்குளம் பகுதியில் சிதைவடைந்து ஆபத்தான நிலையிலுள்ள கலிங்குக்குப் பதிலாக நிரந்தர மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், அதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அதனைத் தற்காலிகமாகத் திருத்தியமைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

அத்துடன், கோட்டைகட்டியகுளம் மற்றும் அம்பலப்பெருமாள்குளம் கலிங்கு நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமையால் ஏற்படும் வெள்ள பாதிப்பைத் தடுக்க, வனவளத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று, நீர்பாசனத் திணைக்களத்தின் ஊடாகச் சீர்செய்ய மாவட்டச் செயலர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

அவசர மருத்துவத் தேவைகளுக்குத் தொலைதூர மருத்துவமனைகளை நாடவேண்டியுள்ளமைக்குத் தீர்வாக, முதற்கட்டமாக வாரத்தில் ஒரு நாள் பொதுக்கட்டடம் ஒன்றில் மருத்துவ நிலையம் இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மேலும், இரு கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளூராட்சித் திணைக்களம் அல்லது மாற்று வழிகள் ஊடாக அமைத்துத் தருவதாக ஆளுநர் உறுதியளித்தார்.

பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்புத் தேவைகளைச் சாதகமாக அணுகுவதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

அம்பலப்பெருமாள்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் களஞ்சிய அறையுடன் கூடிய மண்டபம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீட்டுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முதல்கட்டமாக அந்த மைதானத்துக்கு அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் பதிலளித்தார். குடியிருப்புக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க யானை வேலி அமைப்பது தொடர்பில் கவனத்தில் கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

“அபிவிருத்திகள் கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடும்போதே அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதனாலேயே அதிகாரிகளுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். இப்பகுதி இளைஞர்கள் மதுபாவனை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள்” எனத் தெரிவித்தார். 

இச்சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், துணுக்காய் பிரதேச செயலர், பிரதேச சபை தவிசாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்! | Virakesari.lk

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!

3 months 2 weeks ago

18 Dec, 2025 | 05:28 PM

image

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது.

இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ஆகியவை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றைத் தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மக்களின் நலன், மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தி மற்றும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டிய அவசியம் என்பதே இக்கூட்டத்தின் மையக் கருத்தாக அமைந்தது.

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்! | Virakesari.lk

யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்!

3 months 2 weeks ago

18 Dec, 2025 | 05:44 PM

image

யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்பதால் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக் கல்லின் அளவிற்கு குறித்த எல்லையை இடுமாறு நாங்கள் கோரினோம். அதற்கு அவர்கள், அது தங்களுக்குரிய பிரதேசம் என்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாநகர சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அனுமதி எடுத்த பின்னரே இவ்வாறு எல்லைக் கல் நாட்டுவதாக கூறினர்.

வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியில் நாங்கள் நினைவேந்தல் செய்வது வழமை. அந்த வளாகத்திற்கு உள்ளே சென்று நாங்கள் நினைவேந்தல் செய்ய வேண்டும். ஆகையால் அந்த பகுதியை விட்டு எல்லை இடுமாறு கோரினோம்.

அதன்படி வாயிலின் சிறிய பகுதியை விட்டுவிட்டு, எல்லைக்கல் நாட்டப்படுகிறது. வாயிலுக்கு கதவு போடுமாறு அவர்கள் கூறினர்.

இது தொல்பொருள் திணைக்களத்தின் பகுதி, ஆகையால் யாரும் இதனை தடுக்க முடியாது என்று கூறுகின்றனர். யாழ். மாநகர சபை இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கிறதா என பார்ப்போம் என்றார்.

IMG-20251218-WA0054.jpg


யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்! | Virakesari.lk

வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர்

3 months 2 weeks ago

18 Dec, 2025 | 05:56 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சேதமடைந்த புகையிரத பாதைகள் வெகுவாக புனரமைக்கப்படுகின்றன. 2026.01.01ஆம் திகதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும். 2026 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த  சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தித்வா சூறாவளி தாக்கத்தினால் மத்திய  மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்து அமைச்சும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான மற்றும் சிறு வீதிகள், பாலங்கள்,புகையிரத  வீதிகள், பாலங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.

  நாடளாவிய ரீதியில் உள்ள ஏ மற்றும் பி கட்டமைப்பிலான வீதிகள் சேதமடைந்துள்ளன.  அண்ணவளாக 1450. 6.4 கிலோமீற்றர் தூர வீதிகள் சேதமடைந்துள்ளன. மத்திய மாகாணத்தில் பெருமளவிலான வீதிகள் சேதமடைந்துள்ளன.  மலைகளுக்கு நடுவில் வீதிகளை அமைத்ததன் விளைவையே  நாடு இன்று எதிர்கொண்டுள்ளது. வீதி அபிவிருத்தியின் போது எதிர்க்கால திட்டமிடல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும்.  சேதமடைந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு  69 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சூறாவளி தாக்கத்தால் புகையிரத திணைக்களம் பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. புகையிரத பாதைகள், பாலங்கள், சமிஞ்சை கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மலையக புகையிரத பாதையில் புகையிரத வீதியின் இருப்புகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன.  புகையிரத பாலங்களை புனரமைப்பதற்கு மாத்திரம் 6 பில்லியன் ரூபா செலவாகும் என்று  மதிப்பிடப்பட்டுள்ளது.

சேதமடைந்த புகையிரத பாதைகளை விரைவாக புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படுகின்றன.இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பு  வழங்குகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் 2026.01.01 ஆம் திகதி முதலும், தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் 2026 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்தும் முழுமையாக ஆரம்பிக்கப்படும்.

 மலையகத்துக்கான புகையிரத சேவையை ஆரம்பிக்கும் பணிகள் துரிதப்படுதப்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நட்டஈடு மற்றும் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அதனை விடுத்து அரசியல் இலாபம் தேடக்கூடாது என்றார்.

வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர் | Virakesari.lk

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr