ஊர்ப்புதினம்

தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர்

3 months 2 weeks ago

18 Dec, 2025 | 06:55 PM

image

மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா நகரில் பெய்த அதிக மழை காரணமாக நுவரெலியா பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும்  தலகலஓயா நீரோடை பெருக்கெடுத்தமையே கடந்த மாதம் 27ஆம் திகதி நுவரெலியா நகரில் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாகும்  என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேக்கர தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை  (18) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது உபாலி வணிகசேக்கர இதனை தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் பிரதி நகர முதல்வர் சிரேஸ்ட  சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா, மாநகர ஆணையாளர், மாநகர செயலாளர் உட்பட மாநகர சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

அங்கு மாநகர முதல்வர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாநகர சபை கட்டுப்பாட்டில் உள்ள நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கட்டு வான்கதவுகள் திறக்கப்படாததால் நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியதாக ஒரு சில ஊடகங்களில் நுவரெலியா பொது மக்கள் கூறியதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அதில் எந்தவித உண்மையும் இல்லை.

நுவரெலியா நகரம் நீரில் மூழ்வதற்கு முன்பே நுவரெலியா கிரகரி வாவியின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களும் இடைவிடாது பெய்த கன மழையினால் பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகல ஓயா நீரோடையில் நீர் பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது.

அத்துடன் நுவரெலியாவில் அதிகரித்த சட்டவிரோத கட்டடங்கள், கால்வாய்கள் குறுகியதாக மாறியிருப்பது மற்றும் கிரகரி வாவியின் மதகை அகலமாக்காமை என்பனவே இதற்குக் காரணமாக அமைந்ததாக தெரிவித்தார்.

மேலும், நுவரெலியா நகரில் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்லும் வீதி, நுவரெலியா குதிரைப்பந்தய திடல் (ரேஸ்கோஸ்) நுவரெலியா கொல்ப் மைதான லயம், நுவரெலியா யுனிக் கிராமம் உட்பட பல இடங்களில் இயற்கை அனர்த்தத்தால் மழை நீர் நிரம்பியும் மண்சரிவு ஏற்பட்டும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. அவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை நுவரெலியா மாநகர சபை முன்னின்று செய்து வருகிறது.

மேலும் நுவரெலியா நகரில் பாதிக்கப்பட்ட விவசாயத்துறையையும், சுற்றுலாத் துறையையும், பாதிக்கப்பட்ட வர்த்தகத் துறையையும் அபிவிருத்தி செய்து மீண்டும் பழைய நிலைக்கு  நுவரெலியாவை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் நுவரெலியா நகரில் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு நுவரெலியா மாநகர சபை தயாராக இருப்பதாகவும் மாநகர சபை முதல்வர் மேலும் தெரிவித்தார்.

தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர் | Virakesari.lk

டித்வா பேரிடர்: மலையக மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் உடனடி நடவடிக்கை தேவை - மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தல்

3 months 2 weeks ago

டித்வா பேரிடர்: மலையக மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் உடனடி நடவடிக்கை தேவை - மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தல்

18 Dec, 2025 | 02:04 PM

image

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக மலையகப் பிரதேசங்கள், குறிப்பாக தோட்டப்பிரதேசங்களில் வாழும் மலையகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வறுமை மற்றும் அபாய நிலைகளில் வாழ்ந்துவந்த இம்மக்கள், இந்தப் பேரிடரால் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண, புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணத் திட்டங்கள் மலையக மக்களைச் சென்றடைவதில் பல்வேறு சவால்கள் நிலவுவதாகவும், அவற்றை உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தெளிவான தகவல் தொடர்பாடல் அவசியம்

பாதிக்கப்பட்ட மலையக மக்கள் தற்போது முகாம்கள், பாடசாலைகள், உறவினர் வீடுகள் மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் தங்கியுள்ளனர். எதிர்காலத்தில் அவர்களுக்கான நிவாரணம், மீள்குடியேற்றம், நிரந்தரத் தீர்வுகள் என்ன என்பது குறித்த தெளிவான தகவல் இல்லாததால், மக்களிடையே அச்சம் மற்றும் மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அனைத்து அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களும் ”தமிழ் மொழியில், உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் வெளியிடப்பட வேண்டும்“ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக ஆளணி நியமனம் தேவை

தோட்டப்பிரதேசங்களில் கிராம சேவையாளர் பிரிவுகள் மிக அதிகமான சனத்தொகையை கொண்டுள்ள நிலையில், ஒரே கிராம சேவையாளருக்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொறுப்பாக இருப்பது நிவாரணப் பணிகளை தாமதப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ் பேசும் மேலதிக அரச உத்தியோகத்தர்களை தற்காலிகமாக நியமித்து, நிவாரண விண்ணப்பங்கள், சேத மதிப்பீடு மற்றும் சிபாரிசு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிவாரணத் தகுதிகளில் நெகிழ்வு அவசியம்

காணி உரிமை இல்லாமை காரணமாக தோட்ட மக்களுக்குப் பயிர் சேதம், கால்நடை இழப்பு, சிறுதொழில் பாதிப்பு போன்றவற்றிற்கான இழப்பீடுகளைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.

இதனால், மலையக மக்களின் தனித்துவமான நிலைமைகளை கருத்தில் கொண்டு விசேட சுற்றுநிருபங்கள் மற்றும் நெகிழ்வான தகுதி நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்ட உட்கட்டமைப்பு மீள்கட்டமைப்பு – அரச பொறுப்பு

டிட்வா பேரிடரால் தோட்டப் பிரதேசங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் வீதிகள், பாலங்கள், வடிகால்கள், பாதுகாப்புச் சுவர்கள், முன்பள்ளிகள், மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட சமூக உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இவை பெரும்பாலும் தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இருந்ததால், மீள்கட்டமைப்பு தாமதமடையும் அபாயம் இருப்பதாகவும், இப்பணிகளை நேரடியாக அரச பொறுப்பில் எடுத்துக் கொண்டு போதிய நிதி ஒதுக்க வேண்டும்** என கோரப்பட்டுள்ளது.

காணி மற்றும் வீட்டு உரிமைக்கு நிரந்தரத் தீர்வு

மலையக மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வீடு நிர்மாணத்தில் காணி உரிமை இல்லாமை முக்கிய தடையாக இருப்பதாகவும், இதற்கான தெளிவான கொள்கை தீர்மானங்களை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாற்று இடங்கள் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத் தொடர்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக பிரதியமைச்சர் பிரதிப் சுந்தரலிங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மலையக பிரதிநிதிகள் மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் சாதகமான ஆதரவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உடனடி தீர்மானங்களைப் பெற அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233717

மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !

3 months 2 weeks ago

மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !

18 Dec, 2025 | 11:17 AM

image

நாட்டில் 8 மாவட்டங்களில் மீண்டும்  டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

டெங்கு பரவலைக் குறைப்பதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதே நோய் அதிகரிப்பதற்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார்.

பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி சுத்தம் செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம்  ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகளின் அபாயம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில், நுளம்புகள்  இனப்பெருக்கம் செய்யும் இடங்களை  சுத்தம் செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு

அறிவிக்கப்பட்டதாகவும்,  இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, சுமார் 25-30 சதவீதம் பேர் இதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும், டெங்கு நோயை கட்டுப்படுத்த  மக்களிடையே ஆர்வம் இல்லாத காரணத்தினால், ஜனவரி முதல் வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நாடு முழுவதும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் , சுகாதார ஊழியர்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு பொது மக்களின் பங்களிப்பு வேண்டும் எனவும்  சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/233701

யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்

3 months 2 weeks ago

யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்

18 December 2025

1766028956_4141108_hirunews.jpg

யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. 

இதனையடுத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தாங்கள் செயற்படப்போவதில்லை என்ற கருத்தை முன்வைத்து, தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியிருந்தனர். 

தொடர்ந்து சபையில் உரையாற்றிய பிரதி முதல்வர், சிங்கள மகாவித்தியாலயத்தில் உள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்கலாம் என யோசனை ஒன்றையும் முன்வைத்தார். 

குறித்த யோசனையை சபையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

https://hirunews.lk/tm/436365/jaffna-ban-on-construction-in-the-old-park-action-resolution-passed-in-the-municipal-council

பிள்ளையானின் நெருங்கிய சகா கைது

3 months 2 weeks ago

பிள்ளையானின் நெருங்கிய சகா கைது

image_d7ef207333.jpg

கனகராசா சரவணன்

சி ஐ டி யினரால் தேடப்பட்டு வந்த போது குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்துவிட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாட்களின் பின்னர் பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து   புதன்கிழமை (17) கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் (சிஜடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 8ம் திகதி (4-8-2025) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் மேற்கொண்டுவரும் விசாரணையின் அடிப்படையில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிள்ளையானின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் பிள்ளையான் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரை சிஜடி யினர் தேடி வந்துள்ள நிலையில் அவர் குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்துள்ள அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் திரும்பி நாட்டிற்கு வந்துள்ள நிலையில் சம்பவ தினமான   புதன்கிழமை காலையில் அவரது வீட்டிற்கு கொழும்பில் இருந்து சென்ற சிஐடியினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/பிள்ளையானின்-நெருங்கிய-சகா-கைது/175-369698

உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு

3 months 2 weeks ago

உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு

image_a32a37a978.gif

image_742127ab17.gif

image_e88b5f3bd3.gif

சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இராணுவ பொறியாளர்கள் புனரமைத்து, பிரதேசத்தின் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.

பாலம் இடிந்து விழுந்ததையடுத்து முல்லைத்தீவு-வெலியோயா, முல்லைத்தீவு-திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு-கொக்கிலாய் உள்ளிட்ட முக்கிய பாதைகளில் வாகனப் போக்குவரத்து தடைபட்டு, பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதுடன், பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அவசர நடவடிக்கையாக, கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இராணுவ பொறியாளர் படையினர் உடனடி பழுதுபார்ப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

120 அடி நீளமுடைய, 12 பேகள் கொண்ட, இரு வழி போக்குவரத்திற்கான ‘Compact 100’ கனரக பாலம் அமைக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் துரிதமான பங்களிப்பினால், நாட்டின் வட பிராந்தியத்திலுள்ள இந்தப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து இயல்புநிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/உடைந்த-நாயாறு-பாலம்-புனரமைப்பு/175-369735

எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்! - ரணில் விக்ரமசிங்க

3 months 2 weeks ago

எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் தாம் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள்  ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக  கொழும்பு தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க . நேற்று (17) இடம்பெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில்   இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று பிற்பகல் பிட்டகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்காக பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது, அதே நேரம் ஐக்கிய மக்கள் சக்தி விவகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையாண்டு வருகிறார்.

அந்தக் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், தொடர்புடைய கலந்துரையாடல்களை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்றும், இனி அவற்றை இழுத்தடிக்க நேரமில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க செயற்குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்த ஆண்டு முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதால் மேற்கண்ட விடயங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அந்த விவாதங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு விரும்பினால், அது தனக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று இங்கு குறிப்பிட்ட ரணில் , ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரணில் தலைமைப் பதவியில் இருந்து விலகி சஜித் அல்லது வேறு ஒருவருக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் இங்கு கூறினார். “நான் நீண்ட காலமாக கட்சித் தலைவராக இருந்து வருகிறேன்.

நாட்டின் ஜனாதிபதியானேன். நான் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்டேன். மேலும், நாடு ஒரு கடினமான தருணத்தில் இருந்தபோது, நான் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தேன்.

எனவே, இந்த இராஜினாமாவில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.samakalam.com/எவ்வேளையிலும்-தலைமைப்-ப/

இந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க இராணுவ திடீர் ஆதிக்கம்

3 months 2 weeks ago

யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது.

தமிழர் பகுதிகளில் திருகோணமலை, பலாலி விமானநிலையம், யாழ் கடல்வழி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பாதைகளை பயன்படுத்தவும், கண்காணிக்கவும் மிக திடமான இடங்களாக அமெரிக்காவால் உணரப்படுகின்றது.

அமெரிக்கா அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அமெரிக்கா, இந்தியா, சீனா என மூன்று நாடுகளும் போட்டிப் போடும் இடங்களாக பலாலி மாறியுள்ளமை தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

கடந்த காலங்களில் அம்பாந்தோட்டை மற்றும் Port City Colombo போன்ற இடங்கள் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது மாற்றம் பெற்றுள்ளது அவதானிக்ககூடியதாக உள்ளது.

எனினும் சீனா வடபகுதி மீது நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாது. எனவே தற்போது பலாலி விமானத்தளம் மற்றும் நெடுந்தீவு என்பவை சக்திவாய்ந்த இடங்களாக மாறபோகின்றன.

இலங்கையுடன் இந்தியா மற்றும் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தங்களின் விளைவுகளாலேயே தற்போது அமெரிக்கா விமானங்கள் குறித்த பகுதிகளில் தரையிறங்குவதை தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது.

Tamilwin
No image previewஇந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க...
யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது. தமிழர் பகுதிகளில் திருகோணம...


இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி!

3 months 2 weeks ago

இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி !

Published By: Digital Desk 3

17 Dec, 2025 | 04:50 PM

image

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டுள்ளது.

அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற நிலைமையும் காணப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

இதன் காரணமாக தற்பொழுது நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை இரவு முதல் (18) வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் கிழக்கு ஊவா, மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

காற்றுச்சுழற்சி இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருப்பதனாலும் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல உறுதியற்ற தன்மையினாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இன்று முதல் (17) எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சற்று கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை மாவட்டங்களில் கனமழையோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் மழை தொடர்ந்து கிடைத்து வருவதாலும் கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை கிடைக்கும் என்பதனாலும் கிழக்கு மாகாணத்தில் குளங்களுக்கு நீரை கொண்டு வருகின்ற நீரேந்துப் பிரதேசங்களுக்கும் மழை தொடரும் என்பதனாலும் கிழக்கு மாகாண குளங்களுக்கு அதிகளவான நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற மிதமான மற்றும் கனமான மழை காரணமாக வடக்கு மாகாணத்தில் பல குளங்கள் வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகின்றது. எனினும் நாளை (18) இரவு முதல் வடக்கு மாகாணத்திற்கு மழை குறைவடையும் வாய்ப்புள்ளது. அதேவேளை கடந்த சில நாட்களாக நிலவிய குளிர் மீண்டும் நாளை மறு தினம் (19) முதல் அதிகரிக்கும் என்பதோடு இந்த குளிரான வானிலை 26 ஆம் திகதி வரைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/233662

hurican-2025-12-17.jpg

weather-17-12.jpg

wether-17-12.jpg

டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர்

3 months 2 weeks ago

டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர்

17 Dec, 2025 | 04:11 PM

image

டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பேரழிவு குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த உப தலைவர் , பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அனர்த்த சமயத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா இலங்கைக்கு வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவியையும் அவர் மனப்பூர்வமாக பாராட்டினார்.

குறிப்பாக சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை எதிர்கொண்ட அனர்த்த நிலைமை மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் குறித்து சீன பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதே அரசாங்கத்தின் பிரதான பிரயத்தனமாக இருந்தாகவும் பின்னர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அவர்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக திட்டமிடப்பட்ட வகையில் பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வள பாதுகாப்பு குழுவின் தலைவரான LU XINSHE, வெளிநாட்டலுவல்கள் குழுவின் உப தலைவரும் தேசிய மக்கள் காங்கிரஸின் சீன-இலங்கை நட்புறவுக் குழுவின் உப தலைவருமான WANG KE, சமூக அபிவிருத்திக் குழுவின் உப தலைவரான TAN TIANXING, நிலைக்குழுவின் பொதுச் செயலகத்தின் வெளியுறவுக் குழுவின் உப பணிப்பாளர் TANG JIAN,வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரத் திணைக்கள ஆலோசகர் YANG YIN , வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரத் திணைக்கள மூன்றாவது செயலாளர் SHA LONG மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் QI ZHENHONG ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில்  அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி  அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி  நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

WhatsApp_Image_2025-12-17_at_2.48.57_PM.

WhatsApp_Image_2025-12-17_at_2.48.58_PM.

WhatsApp_Image_2025-12-17_at_2.48.57_PM_

WhatsApp_Image_2025-12-17_at_2.48.58_PM_

WhatsApp_Image_2025-12-17_at_2.48.59_PM.

WhatsApp_Image_2025-12-17_at_2.49.00_PM.

WhatsApp_Image_2025-12-17_at_2.49.00_PM_

WhatsApp_Image_2025-12-17_at_2.49.00_PM_

https://www.virakesari.lk/article/233645

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - உதவிக்கு சென்ற முதியவர்கள் மீது சித்திரவதை

3 months 2 weeks ago

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - உதவிக்கு சென்ற முதியவர்கள் மீது சித்திரவதை

17 Dec, 2025 | 02:58 PM

image

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து அட்டகாசம் புரிந்த வன்முறை கும்பலிடம் இருந்து இளம் தாயையும் குழந்தையையும் மீட்க சென்ற முதியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 

மண்டைதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றின், கணவர் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற நிலையில் , மனைவியும் அவர்களது சிறு குழந்தையும் வீட்டில் தனியாக இருந்த போது  நள்ளிரவு வேளை மூவர் அடங்கிய வன்முறை கும்பல் வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

வீட்டில் இருந்த பெண் , அபயக்குரல் எழுப்பிய வேளை உதவிக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் முதியவரும், மற்றுமொரு வீட்டில் வசிக்கும் வயோதிப தம்பதிகளும் விரைந்துள்ளனர். 

அதன் போது முதியவர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட போது, அவரது கை விரல் ஒன்று துண்டாட்டப்பட்டுள்ளது. அத்துடன் வயோதிப தம்பதியினரில் முதியவர் மீது தாக்குதல் மேற்கொண்டு, தம்பதியினரை முழங்காலில் இருந்தியுள்ளனர். 

வீட்டினுள் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நின்று அட்டகாசம் புரிந்த பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. 

தாக்குதலில் காயமடைந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் கடற்படை இணைந்து கடமையில் நிற்கும் நிலையில் மண்டைதீவுக்குள் இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றன. 

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, வன்முறைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாதை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/233639

நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிணை

3 months 2 weeks ago

17 Dec, 2025 | 03:24 PM

image

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார்.

அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து  உத்தரவிட்டு,  ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என தெரிவித்தார்.  

இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக  என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கிய நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்யுமாறு 15-12-2025 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதித்து மட்டு.மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தேரருக்கு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தேரர் இன்று புதன்கிழமை 3 சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சரணடைந்ததையடுத்து, நீதிபதி  தேரை தலா ஒரு இலட்சம் ரூபாய் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

அதேவேளை பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் கொண்ட பெரும் படையுடன் நீதிமன்றத்துக்கு தேரர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிணை | Virakesari.lk

இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

3 months 2 weeks ago

17 Dec, 2025 | 03:13 PM

image

இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகரித்துள்ளது.

அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்று இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானம், ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகியவற்றின் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்திருந்தது.

ஜெர்மனியிடமிருந்து 5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களும், லக்ஸம்பேர்க் அரசிடமிருந்து கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு கொண்டுவரப்பட்டன.

இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக, இலங்கைக்கான ஜேர்மனியின் பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத் (Sarah Hasselbarth), ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிப்போன் (Pierre Tripon) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-12-17_at_13.21.55.jp

WhatsApp_Image_2025-12-17_at_13.21.36.jp

இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்! | Virakesari.lk

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!

3 months 2 weeks ago

17 Dec, 2025 | 05:08 PM

image

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை வியாழக்கிழமை (18) வானிலை முன்னறிவிப்பு குறித்து இன்று புதன்கிழமை (17) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி! | Virakesari.lk

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி

3 months 2 weeks ago

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி

Published By: Digital Desk 3

17 Dec, 2025 | 11:19 AM

image

டித்வா சூராவளியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகள் பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகின. இதில் பலர் உயிரிழந்ததுடன், பெறுமதிமிக்க சொத்துகளும் முற்றாக சேதமடைந்தன. பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் வீடுகள் இடிந்து விழுந்தும், முழுமையாக நாசமாகியும் உள்ளன. மண்ணில் புதையுண்டவர்களை மீட்க முடியாமல் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதன் விளைவாக, பல குடும்பங்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனுடன், அரசாங்கம் மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் பாரிய அளவில் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

மலையகத்தில் பல அரசியல் தலைவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கோடிக்கணக்கான சொத்துகள் இருந்த போதிலும், இந்நிதியத்திற்கு ஒரு சதம் கூட வழங்க முன்வராத நிலை காணப்படுகிறது. இதற்கு மாறாக, எந்தவித வசதி வாய்ப்புகளும் இன்றி, ஒருநேர உணவுக்கே போராடி வாழும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் நேர்மையான உழைப்பிலிருந்து ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் வழங்க முன்வந்தமை பாராட்டத்தக்கதாகும்.

அந்த வகையில், நுவரெலியா மாவட்டம், லிந்துலை – நாகசேன டிலிகூல்றி தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், விவசாயிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தேசிய நிதியத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளனர்.

இதன்படி, 114 பேர் இணைந்து ரூ. 1,81,100 இலங்கை வங்கி திறைசேரி கணக்கில் வைப்பு செய்துள்ளனர். இது குறித்து சிலர்  தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

20251216_152549.jpg

இது தொடர்பில் நிதி பங்களிப்பு செய்த எம். சத்யானந்தன் கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.

இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களாகிய நாமும் நிதி உதவி வழங்கி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

உறவுகளை இழந்து துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு எங்களால் இயன்ற அளவில் உதவி செய்ய கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் அனைவரும் நலமாக இருந்தால்தான் நாங்களும் நிம்மதியாக வாழ முடியும். பெரிய உதவி செய்ய இயலாவிட்டாலும், சிறிய உதவியையாவது செய்ய முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி.”

மேலும், “தோட்ட மக்களிடம் உதவி கேட்கும் போது யாரும் மறுக்கவில்லை. அவர்களால் இயன்ற அளவு மன நிறைவோடு பங்களிப்பு செய்தனர். ஒவ்வொருவரின் பெயரிலும் வங்கியில் வைப்பு செய்து, ரசீதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய அரசியல் சூழலில் பலர் மக்களின் பணத்தை தனிப்பட்ட சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ரூபாய் கூட வழங்காதது மன வேதனையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளோம். நாடு நன்றாக இருந்தால்தான் எங்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

20251216_155128.jpg

நிதி பங்களிப்பு செய்த கலைச்செல்வி கருத்து தெரிவிக்கையில்,

“கடவுளின் ஆசீர்வாதத்தால் எங்கள் தோட்டத்தில் பெரிய அனர்த்தம் ஏற்படவில்லை. ஆனால், எங்கள் உறவுகள் பலர் இன்று தங்கள் உறவுகளை இழந்து நிராதரவாக உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது.

இந்த நிலையில், தோட்ட இளைஞர்கள் வீடு வீடாக வந்து உதவி கோரிய போது, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எங்கள் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை வழங்கினோம். இது எங்களுக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் வருமான ரீதியாக எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், உதவி செய்யும் மனம் எங்களிடம் உள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் எங்கள் நாட்டுக்கு உதவி செய்கிறார்கள் என்றால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. எங்களால் முடிந்த சிறிய உதவியை செய்துள்ளோம்” என்றார்.

இன்றும் பல பகுதிகளில் மக்கள் ஒருநேர உணவுக்கே போராடி, உறவுகளை இழந்து கண்ணீருடன் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவுவது தங்களுக்கும், தங்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்படும் தோட்டத் தொழிலாளர்கள், நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றனர். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தங்களின் உழைப்பிலிருந்து நிதி பங்களிப்பு வழங்கிய தோட்ட மக்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/233603

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்ப உதவும் ஜப்பான்!

3 months 2 weeks ago

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்ப உதவும் ஜப்பான்!

17 Dec, 2025 | 11:07 AM

image

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்து பல உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த வகையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கால நிதி உதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (16) தீர்மானித்துள்ளது. 

சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தால் இந்த அவசர கால நிதி உதவி வழங்கப்படும்.

அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளுவதற்காக இலங்கைக்கு இந்த அவசர கால நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

இந்த அவசர கால நிதியுதவி மூலம், உணவு மற்றும் உணவு அல்லாத ஏனைய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இந்த அவசர கால நிதியுதவிக்கு, சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM) மூலம் 1 மில்லியன் அமெரிக்க டொலரும்,  உலக உணவுத் திட்டம் (WFP) மூலம்  1 மில்லியன் அமெரிக்க டொலரும்,  ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மூலம் 500,000 அமெரிக்க டொலரும், ஜப்பான் மூலம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

சர்வதேச புலம்பெயர் அமைப்பு [International Organization for Migration (IOM)], ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் [United Nations Children's Fund (UNICEF)] மற்றும் உலக உணவுத் திட்டம் [World Food Programme (WFP)] மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர நன்கொடைகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

IOM மூலம் கண்டி, பதுளை மற்றும் கேகாலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, சமையலறைப் பொருட்கள், கழுவும் பாத்திர பொருட்கள் மற்றும் படுக்கைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை 615 தங்குமிடங்களுக்கு ஜப்பான் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கும்.

கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, WFP மூலம் ஜப்பான் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உணவு உதவியை வழங்கும். இந்த உதவியின் கீழ், குடும்பங்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும்.

இவற்றுக்கு மேலதிகமாக , யுனிசெஃப் மூலம், ஜப்பான் மத்திய, ஊவா, கிழக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு நீர், சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக 500 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கும். 

இந்த அவசர கால நிதியுதவி மூலம், நீர் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குதல், நீர்வழங்கல் வசதிகளில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்தல் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கச் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துதல், சுத்தமான நீரை வழங்குதல், தொற்றுநோய்களைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கு முன்னரும், ஜப்பான் அரசாங்கம் கூடாரங்கள் , போர்வைகள், படுக்கை விரிப்புகள், நீர் சுத்திகரிப்பான்கள் போன்ற அவசரகால நிவாரணப் பொருட்களை கண்டி, மாத்தளை, பதுளை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கியது.

மேலும், ஜப்பான் அவசரகால மீட்புக் குழுவைச் சேர்ந்த 31 உறுப்பினர்களை கொண்ட மருத்துவக் குழுவையும்  ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அனுப்பியது. 

ஜப்பான் அவசரகால மீட்புக் குழு டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை சிலாபத்தில்  கள வைத்திய முகாமை அமைத்து 1,250 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியிருந்தது.

இந்த உதவிகள், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் வலுவான நம்பிக்கை மற்றும் நட்புறவுக்கான சான்றாகும். இது தேவைப்படும் நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஜப்பானின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.

https://www.virakesari.lk/article/233607

குச்சவெளி பிரதேச சபைத்தலைவரின் அலுவலகம் முத்திரையிட்டு மூடல்

3 months 2 weeks ago

குச்சவெளி பிரதேச சபைத்தலைவரின் அலுவலகம் முத்திரையிட்டு மூடல்

17 Dec, 2025 | 09:31 AM

image

குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக்கின் உத்தியோகபூர்வ அலுவலக அறை நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை 7.00 மணிக்கு திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால்,கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனைக்கு அமைய முத்திரையிட்டு (சீல் வைத்து) மூடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இலஞ்சம் பெற்றார் என்ற குற்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச சபைத்தலைவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று புதன்கிழமை (17) பிரதேச சபையின் இந்த வருட வரவு செலவு திட்டத்தை முன்வைக்க சபைக்கு வர உள்ளார். இந்த சூழலில் வழக்கு விசாரணை முழுமையாக முடியவில்லை என்பதால் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் அவர் செல்வதை தடுப்பதற்காக இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் பிரதேச சபைத்தலைவர் தமது கடமைகளை ஆற்ற தற்காலிகமாக வேறு ஒரு அறையை அவருக்கு வழங்கும்படி சபையின் செயலாளருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/233597

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

3 months 2 weeks ago

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

Published By: Vishnu

16 Dec, 2025 | 08:47 PM

image

(எம்.மனோசித்ரா)

வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பயன்பாட்டினால் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கண்டி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்டன் செக்ட்ரோம் எனப்படும் குறித்த மருந்து முழுரைமயாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒன்டன் செட்ரோன் - Ondansetron (வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து) என்ற மருந்தினைப் பயன்படுத்தியதால் இருவர் உயிரிழந்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பாவனையால் உயிரிழப்பு ஏற்பட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் இவ்வாறு சந்தேகிக்கப்படும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன.

37 மற்றும் 33 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 12ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் இந்த மருந்தை வழங்கிய பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதன் பின்னர் குறித்த மருந்து முழுமையாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாட்டுக்கு விநியோகிக்கும் 11 பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் உள்ளனர். தேசிய ஒளடத கட்டுப்பாட்ட அதிகாரசபையில் ஆகக் கூடியது 15 விநியோகத்தர்கள் பதிவு செய்ய முடியும்.

இங்கு 11 விநியோகத்தர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 விநியோகத்தர்கள் பங்களாதேஷில் உற்பத்தி செய்யப்படும் மருந்தினையும், ஏனையோர் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்தினையும் விநியோகிக்கின்றனர். எனினும் இவ்வனைத்து நிறுவனங்களும் யு.எஸ்.பி. (United States Pharmacopeia ) சான்றுக்கமையவே மருந்தினை விநியோகிக்கின்றனர். மாறாக இந்திய சான்றுக்கமைய அல்ல. அந்த வகையில் இந்த மருந்து குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/233578

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

3 months 2 weeks ago

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

17 Dec, 2025 | 10:54 AM

image

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (16) எழுவைதீவு பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

எழுவைதீவு  ஆரம்ப பாடசலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு மேலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள் ,மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது பாடசாலையின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

மேலும் எழுவைதீவு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்குள்ள ஐந்து கிணறுகளை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அவற்றை மீண்டும் மக்களின் பாவனைக்காக புனரமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தற்போது நிதி ஒதுக்கீட்டின் கீழ் எழுவைதீவில் நடைபெற்று வருகின்ற வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களினையும் நேரடியாக பார்வையிட்டார்.

அத்தோடு அண்மையில் ஏற்பட்ட  "டித்வா" புயலினால் கண்ணகி அம்மன் இறங்குதுறை பாரியளவில்  சேதமடைந்து ஆபத்தான நிலைமையில் காணப்படுவதை அவதானித்த அரசாங்க அதிபர் இது தொடர்பாக மதிப்பீடு தயாரித்து வீதி அபிவிருத்தி திணைக்களத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இக் களவிஜயத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் ,உள்ளக கணக்காய்வாளர் , உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FB_IMG_1765936610437.jpg

FB_IMG_1765936613903.jpg

FB_IMG_1765936599261.jpg

FB_IMG_1765936594046.jpg

FB_IMG_1765936590236.jpg

FB_IMG_1765936629792.jpg

FB_IMG_1765936623264.jpg

FB_IMG_1765936579141.jpg

FB_IMG_1765936620572.jpg


https://www.virakesari.lk/article/233604

மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு

3 months 2 weeks ago

மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு

image_dc9f5a96c6.jpg

நிதர்ஷன் வினோத்

மண்டைதீவு புதைகுழி வழக்கு அறிக்கை ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், செவ்வாய்க்கிழமை (16)  சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து புதன்கிழமை (17) சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்,மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதாக   திகதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (16)  அன்று குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில்  எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த வழக்கு தொடர்பாக அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடர்பான கிடைக்க பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின் அறிக்கையை எழுத்து மூலமாக நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

கையால் எழுதிய குறித்த அறிக்கையையாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி சமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சில்  பிரதியாக்கம் செய்து  (17.12.2025) அன்று மீண்டும் அறிக்கை சமர்பிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்பதாக மண்டைதீவு புதைகுழி தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கடந்த செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால்,

வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், கருணாகரன் நாவலன்  திருநாவுக்கரசு சிவகுமாரன், செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரின் பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள்  ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அந்தக் கிணறுகளை சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 புதன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரினால் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து இவ் வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனால் பல வருடங்கள் கடந்த விஷயம் என்பதால் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியமையால் வழக்கு  டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு டிசம்பர் 16 ஆம் திகதியான இன்று மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நாளை தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/மண்டைதீவு-புதைகுழி-வழக்கு-தட்டச்சு-வடிவ-அறிக்கைக்கு-உத்தரவு/175-369659

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr