அறிவியல் தொழில்நுட்பம்

🚀 அதிசயம் ஆனால் உண்மை – விண்வெளியில் ஒரு வரலாற்று சாதனை: பூமியிலிருந்து ‘ஒரு ஒளி நாள்’ தொலைவில் வொயேஜர் 1!

1 week 2 days ago

🚀 அதிசயம் ஆனால் உண்மை – விண்வெளியில் ஒரு வரலாற்று சாதனை: பூமியிலிருந்து ‘ஒரு ஒளி நாள்’ தொலைவில் வொயேஜர் 1!

adminJanuary 25, 2026

NASA-s-Voyager-1-i-1.jpg?fit=819%2C555&s

சுமார் 48 ஆண்டுகால நெடிய பயணம்… மனிதகுலத்தின் அறிவியலுக்குச் சான்றாக விண்வெளியின் எல்லையில் பயணித்துக் கொண்டிருக்கும் வொயேஜர் 1 (Voyager 1), தற்போது ஒரு புதிய மைல்கல்லை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

🌌 பூமியிலிருந்து சுமார் 16 பில்லியன் மைல்கள் (25.4 பில்லியன் கிலோமீட்டர்) தொலைவைக் கடந்துள்ள இந்த விண்கலம், விரைவில் “ஒரு ஒளி நாள்” (One Light-Day) தொலைவை எட்டவுள்ளது.

நாம் அனுப்பும் ஒரு ரேடியோ சிக்னல் (ஒளியின் வேகத்தில் பயணிப்பது) வொயேஜர் 1-ஐ அடைய முழுதாக 24 மணிநேரம் ஆகும்.

அங்கிருந்து பதில் வர மீண்டும் ஒரு நாள் ஆகும். அதாவது, ஒரு தகவலைப் பரிமாறிக்கொள்ள இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும்!

🛰️ 1977-இல் ஏவப்பட்ட போது, இதன் ஆயுட்காலம் சில ஆண்டுகள் மட்டுமே என கணிக்கப்பட்டது. ஆனால் 48 ஆண்டுகளைக் கடந்தும் இது இன்றும் தகவல்களை அனுப்பி வருகிறது.

இது தற்போது சூரிய குடும்பத்தைத் தாண்டி நட்சத்திரங்களுக்கு இடையிலான விண்வெளியில் (Interstellar Space) பயணித்துக் கொண்டிருக்கிறது. (Golden Record): வேற்று கிரகவாசிகள் யாராவது ஒருவேளை இந்த விண்கலத்தைக் கண்டெடுத்தால், பூமியைப் பற்றித் தெரிந்துகொள்ள இதில் மனிதர்களின் குரல், இசை மற்றும் படங்கள் அடங்கிய தங்கத் தட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

முடிவில்லா இந்த பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இந்த விண்கலத்தின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. மனிதனின் விடாமுயற்சிக்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம்! 🌟

https://globaltamilnews.net/2026/227429/

மனிதன் வாழத் தக்கதாக, பூமி போலவே பரிணமிக்கிறதா இந்த புறக்கோள்? கோவை விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு

1 week 6 days ago

மனிதன் வாழத் தக்கதாக, பூமி போலவே பரிணமிக்கிறதா இந்த புறக்கோள்? கோவை விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு

Wasp-107b புறக்கோளில் தமிழக விஞ்ஞானி கண்டுபிடித்த அதிசய நிகழ்வு – ஆய்வில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம்,University of Geneva/NCCR PlanetS/Thibaut Roger

படக்குறிப்பு,WASP-107 நட்சத்திரம் மற்றும் WASP-107b புறக்கோளின் சித்தரிப்பு ஓவியம்

கட்டுரை தகவல்

விண்வெளியில் உள்ள பல கோடி நட்சத்திரங்களில் ஒன்று WASP-107. அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையில் கட்டுண்டு, அதைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் கோள்களில் ஒன்றுதான் WASP-107b. இந்தப் புறக்கோளில் தமிழக விஞ்ஞானி ஒருவர், பூமியின் இயற்கை வரலாற்றில் நிகழ்ந்ததை ஒத்த ஓர் அதிசய நிகழ்வு நடப்பதைச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்தவரும் கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக வானியற்பியல் விஞ்ஞானியுமான முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர், பூமியில் இருந்து 210 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இந்த பிரமாண்டமான புறக்கோளை ஜேம்ஸ்வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து இதைக் கண்டறிந்துள்ளனர்.

அளவில் மிகப் பெரிதான இந்தப் புறக்கோள் தான் சுற்றி வரும் நட்சத்திரத்திற்கு வெகு அருகில் இருப்பதால் வெப்பம் மிகுந்ததாகவும் உள்ளது. இந்த அதீத வெப்பம் காரணமாக, அதன் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் ஆவியாகிக் கொண்டிருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய முனைவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

அதுகுறித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக அவதானித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பிரமாண்டமான ஹீலியம் வாயு மேகம் அதிலிருந்து வெளியேறுவதைத் தாங்கள் கண்டதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை நேச்சர் அஸ்ட்ரானமி ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

இந்த வாயு மேகம், கோளின் மொத்த அளவைவிட சுமார் 10 மடங்கு பெரிதாகப் பரவியிருந்ததாக இதுகுறித்து மெக்கில் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

"பிற கோள்களிலும் இதுபோன்ற வாயு மேகத்தை விஞ்ஞானிகள் கண்டிருந்தாலும், இவ்வளவு பிரமாண்டமான வாயு சூழ்ந்த வளிமண்டலத்தை அவதானிப்பது இதுவே முதல்முறை" என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது ஏன், இந்தப் புறக்கோளில் நடக்கும் மாற்றங்களுக்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு என்ன ஆகியவை குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் முனைவர் விக்னேஷ்வரனிடம் பேசியது.

Wasp-107b புறக்கோளில் தமிழக விஞ்ஞானி கண்டுபிடித்த அதிசய நிகழ்வு – ஆய்வில் தெரிய வந்தது என்ன?

படக்குறிப்பு,முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் விஞ்ஞானியாக உள்ளார்

புறக்கோள் என்றால் என்ன?

பூமி சூரியனை சுற்றி வருவதை நாம் அனைவருமே அறிவோம். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசைத் தளையில் கட்டுண்டுதான், பூமி, புதன், செவ்வாய் என்று எட்டு கோள்களும் அதைச் சுற்றி வருகின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நம்முடைய சூரியனை போலவே, விண்வெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களைச் சுற்றியும் சூரிய மண்டலத்தில் இருப்பதைப் போன்று பல கோடிக்கணக்கான கோள்கள் உள்ளன என்பதைக் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விண்வெளி ஆய்வுகளின் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

அதோடு, சூரியன் தவிர வேறு நட்சத்திரங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் அத்தகைய 6,000க்கும் மேற்பட்ட கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து அடையாளப்படுத்தியுள்ளனர். அவற்றில் ஒன்பது புறக்கோள்கள் தங்களது குழுவினர் கண்டுபிடித்தவை என்று கூறுகிறார் முனைவர் விக்னேஷ்வரன்.

இப்படியாக, சூரிய மண்டலத்திற்கு வெளியே பிற நட்சத்திரங்களைச் சுற்றி அமைந்திருக்கும் கோள்கள், புறக்கோள்கள் (Exoplanet) என்று அழைக்கப்படுகின்றன.

இந்தப் புறக்கோள்களில் மனிதர்கள் உயிர் வாழ ஏதுவான கோள் ஏதேனும் உள்ளதா, நாம் உயிர் பிழைக்கத் தேவையான காற்று, தண்ணீர் போன்ற கூறுகள் உள்ளனவா என்பனவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

இந்தப் புறக்கோள் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்தவரான விக்னேஷ்வரன், WASP-107b என்ற புறக்கோளில் மேற்கொண்ட ஆய்வில் சில முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்.

Wasp-107b புறக்கோளில் தமிழக விஞ்ஞானி கண்டுபிடித்த அதிசய நிகழ்வு – ஆய்வில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம்,Angel P. Geego

படக்குறிப்பு,தன்னுள் இருந்து வெளியேறும் வாயு மேகத்தால் சூழப்பட்ட WASP-107b புறக்கோளை சித்தரிக்கும் ஓவியம்.

'பூமியைவிட 11 மடங்கு பெரியது'

"சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் வரிசையில் சூரியனுக்கு நெருக்கமாக சிறிய கோள்களும் அதைத் தொடர்ந்து அளவில் பெரிய கோள்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு காலமாக இதுதான் எதார்த்தம் என்று நாம் கருதிக் கொண்டிருந்தோம். ஆனால், வியாழன் அளவுக்கு, அதாவது பூமியைவிட பத்து, பதினைந்து மடங்கு பெரிதாக இருக்கும் நிறைய புறக்கோள்கள் அவை சுற்றும் நட்சத்திரத்திற்கு மிகவும் பக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது," என்கிறார் விக்னேஷ்வரன்.

இருப்பினும், இப்படிப்பட்ட பிரமாண்ட கோள்கள் ஒரு நட்சத்திரத்திற்கு அவ்வளவு நெருக்கமாகத் தோற்றம் பெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு என்று கூறும் அவர், அவை எப்படி அந்த இடத்திற்கு வந்தன என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் பலவும் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அப்படிப்பட்ட ஒரு புறக்கோள்தான் WASP-107b.

"WASP-107 என்ற நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் இது, பூமியைவிட அளவில் 11 மடங்கு பெரியது. எடையில் சுமார் 30 மடங்கே அதிகம். ஒப்பீட்டளவில் WASP-107b கோளின் அளவை கணக்கிடுகையில் அதன் எடை மிகவும் குறைவு. இதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள, அதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தோம்" என்றார் விக்னேஷ்வரன்.

Wasp-107b புறக்கோளில் தமிழக விஞ்ஞானி கண்டுபிடித்த அதிசய நிகழ்வு – ஆய்வில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,Wasp-107 நட்சத்திரம் பூமியில் இருந்து சுமார் 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது

'பூமியைவிட 15-20 மடங்கு அதிக தண்ணீர்'

முனைவர் விக்னேஷ்வரன் மற்றும் அவரது குழுவினர் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக, WASP-107b புறக்கோள் அதன் நட்சத்திரத்திற்கு நேராக வரும்போது அதைக் கண்காணித்தனர்.

WASP-107 நட்சத்திரத்திற்கு நேராக இந்தப் புறக்கோள் வந்து, நட்சத்திரத்தின் ஒளியை இடைமறிக்கும்போது அதைத் தாங்கள் அவதானித்ததாக அவர் விளக்கினார்.

அதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "புறக்கோள் நட்சத்திரத்தை இடைமறிக்கும்போது, இங்கு நாம் பார்க்கும் கிரகணத்தைப் போலவே அங்கும் நட்சத்திரத்தின் ஒளி மங்கலாகும். அந்த நேரத்தில், புறக்கோளின் வளிமண்டலத்தில் என்னென்ன மூலக்கூறுகள் உள்ளனவோ அவற்றைப் பொறுத்து, அதற்கேற்ற அலைநீளங்களைக் கொண்ட ஒளிகள் நமக்குத் தென்படும்.

உதாரணமாக, சிவப்பு நிற ஒளியை ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இடைமறிக்கும். இப்படியாக ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தைக் கொண்ட ஒளி இடைமறிக்கப்பட்டால், அதைத் தடுக்கும் திறன்கொண்ட மூலக்கூறு அந்தப் புறக்கோளில் உள்ளது என்பதை உறுதி செய்யலாம். இந்த ஆய்வு முறைக்கு டிரான்ஸ்மிஷன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி என்று பெயர்" என்றார்.

இதன் மூலம் ஒரு புறக்கோளின் வளிமண்டலத்தில் என்னென்ன வாயுக்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும் என்கிறார் விக்னேஷ்வரன்.

இதே முறையில் WASP-107bஐ ஆய்வு செய்தபோது அதில், பூமியைவிட 15-20 மடங்கு அதிக தண்ணீர் இருப்பதும், கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், சோடியம், பொட்டாசியம் போன்றவை அதிகளவில் இருப்பதும் அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.

Wasp-107b புறக்கோளில் தமிழக விஞ்ஞானி கண்டுபிடித்த அதிசய நிகழ்வு – ஆய்வில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,WASP-107b புறக்கோள் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்கு 5.7 நாட்களே எடுத்துக் கொள்கிறது

'ஓராண்டு என்பது 5.7 நாட்கள் மட்டுமே'

பூமி சூரியனை சுற்றி வருவதற்குத் தோராயமாக 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால், WASP-107b புறக்கோள் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பூமியின் நேர கணக்கீடு அடிப்படையில் பார்த்தால் வெறும் ஐந்தரை நாட்கள்தான் என்கிறார் விக்னேஷ்வரன். அதாவது, அங்கு ஓர் ஆண்டு என்பது வெறும் 5.7 நாட்கள் மட்டுமே.

அதேபோல, "பூமியில் சராசரியாக 15 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. ஆனால், அந்தப் புறக்கோளின் வெப்பநிலை 700 டிகிரி. அந்த வெப்பத்திலும்கூட காற்றில் தண்ணீர், கரிம வாயு, மீத்தேன் போன்றவை இருக்கின்றன" என்கிறார் விக்னேஷ்வரன்.

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, அதில் ஹீலியம் வாயு அதிகளவில் இருப்பதையும் இந்த ஆய்வுக் குழு கண்டறிந்தது.

ஆரம்பக் காலத்தில், பூமியிலும் இதேபோல அதிகளவில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் இருந்திருக்கலாம் என்றும் சூரியனின் வெப்பத்தால் அவை ஆவியாகி வெளியேறி இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

"இந்த ஆவியாதல் செயல்முறை ஒரு கோள் உருவாகி சில நூறு மில்லியன் ஆண்டுகளிலேயே நடக்க வேண்டியவை. WASP-107b புறக்கோளை பொறுத்தவரை, அது கிட்டத்தட்ட பூமியை போலவே, சுமார் 300 முதல் 400 கோடி ஆண்டுகள் பழமையானது. அப்படி இருந்தும்கூட அவற்றில், புறக்கோளின் அளவைவிட பத்து மடங்கு அதிகமான ஹீலியம் இன்னமும் இருக்கிறது."

அது எப்படி வந்தது, தான் சுற்றி வரும் நட்சத்திரத்திற்கு இவ்வளவு நெருக்கமாக, அதீத வெப்பநிலையில் அது இருந்தும்கூட இன்னமும் இந்த வாயுக்கள் ஆவியாகி கோளைவிட்டு வெளியேறாமல் அப்படியே இருப்பது ஏன் என்பன போன்ற கேள்விகள் தங்களுக்கு எழுந்ததாகக் கூறுகிறார் விக்னேஷ்வரன்.

இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள முயலும்போது தங்களுக்கு மேலும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் தெரிய வந்ததாகத் தெரிவித்தார் அவர்.

Wasp-107b புறக்கோளில் தமிழக விஞ்ஞானி கண்டுபிடித்த அதிசய நிகழ்வு – ஆய்வில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம்,NASA, ESA, CSA, Northrop Grumman

படக்குறிப்பு,ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (சித்தரிப்புப் படம்)

'தொலைதூரத்தில் இருந்து நட்சத்திரம் அருகே நகர்ந்த WASP-107b'

WASP-107b போலவே, அதற்கு அடுத்ததாக WASP-107c என்ற மற்றொரு கோளும் அந்த நட்சத்திரத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பதாகக் கூறிய அவர், "அது நட்சத்திரத்தை முழுதாகச் சுற்றி முடிக்க ஆயிரம் நாட்கள் எடுத்துக் கொள்வதாக" குறிப்பிட்டார்.

அப்போதுதான், "முன்பு எங்கோ தொலைதூரத்தில் WASP-107b உருவாகியிருக்கலாம் என்பதையும், WASP-107c கோளின் ஈர்ப்புவிசையால் இழுக்கப்பட்டு, தற்போது இருக்கும் இடத்தை அடைந்திருக்கலாம் என்பதையும்" தங்களது ஆய்வுக் குழுவினர் கண்டறிந்ததாக அவர் கூறினார்.

"நட்சத்திரத்தில் இருந்து தொலைதூரத்தில் இருந்த காரணத்தால் நிலவிய மிகவும் குளிரான வெப்பநிலை, பல கோடி ஆண்டுகளுக்கு WASP-107bஇல் தண்ணீர், கரிம வாயு, ஹீலியம் உள்பட அனைத்து வாயுக்களையும் உறைநிலையில் வைத்திருக்கலாம். அதன் பின்னர், WASP-107c கோளின் ஈர்ப்புவிசையால் நட்சத்திரத்திற்குப் பக்கத்தில் நகர்ந்து வந்த பிறகு அங்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது.

இதனால், உறைநிலையில் இருந்த வாயுக்கள் அனைத்தும் ஆவியாகத் தொடங்கியுள்ளன. அதைத்தான் நாங்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பார்த்தோம். இந்த வாயுக்கள் அனைத்தும் அடுத்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் முற்றிலுமாக ஆவியாகி கோளைவிட்டு வெளியேறியிருக்கும் என்று கணித்துள்ளோம்," என்று விக்னேஷ்வரன் விளக்கினார்.

அதைத் துல்லியமாகக் கணிப்பதற்காக, இந்தப் புறக்கோளை மீண்டும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்யத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

பூமி போலவே பரிணமிக்கிறதா இந்த புறக்கோள்?

"பூமியிலும் ஆரம்பத்தில் அதிகளவிலான ஹீலியம், ஹைட்ரஜன் வாயுக்கள் வளிமண்டலத்தில் இருந்திருக்கலாம். அவை சூரியனில் இருந்து வெளிப்பட்ட அதீத வெப்பத்தின் காரணமாகச் சிறிது சிறிதாக ஆவியாகி, அதன் பின்னர் பூமியில் தண்ணீர் உள்பட உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடிய மூலக்கூறுகள் உருவாகி நிலைபெற்று இருக்கலாம்" என்ற கருதுகோளை மேற்கோள் காட்டுகிறார் முனைவர் விக்னேஷ்வரன்.

அவரது கூற்றுப்படி, "அதே போன்றதொரு செயல்முறையே இப்போது WASP-107b புறக்கோளில் நடந்து கொண்டிருக்கலாம். அதன்மூலம், வளிமண்டலத்தில், புறக்கோளின் மொத்த அளவில் பத்து மடங்கு பெரிதாக இருக்கக்கூடிய வாயு மேகங்கள் முற்றிலுமாக விலகினால், தண்ணீர் உள்பட உயிர் வாழ ஏதுவான சூழலை உண்டாக்கும் மூலக்கூறுகள் கோள் முழுக்கப் பரவ வாய்ப்புள்ளது."

ஆனால், அது நிச்சயமாக நடக்குமா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது என்றும் கூறுகிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0jven4j0ngo

நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு

2 weeks 1 day ago

நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு

Jan 19, 2026 - 03:08 PM

நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, தமது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ் II' திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது. 

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, 'ஓரியன்' (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படும். 

இதில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு நினைவுப் பொருளாக, அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட 'டிஜிட்டல் போர்டிங் பாஸ்' நாசாவால் வழங்கப்படும். 

இதற்கானப் பதிவுகள் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 

சுமார் 10 நாட்கள் நீடிக்க உள்ள இந்தச் சோதனைப் பயணத்தில், நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளனர். 

ஆர்ட்டெமிஸ் II பயணமானது, மனிதர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது. 

இந்தக் குழுவினர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க மாட்டார்கள், ஆனால் அதை சுற்றி பறப்பார்கள். விண்வெளி ஆய்வில் பொதுமக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், இந்த வரலாற்றுப் பயணத்தில் அவர்களை இணைக்கவும் நாசா இந்த 'போர்டிங் பாஸ்' முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. 

விருப்பமுள்ளவர்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான go.nasa.gov/49NQ4mf மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்

https://adaderanatamil.lk/news/cmkkz3lfu044mo29nvzwngewu

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக பூமிக்குத் திரும்பிய வீரர்கள்! - காரணம் இதுதான்

2 weeks 4 days ago

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக பூமிக்குத் திரும்பிய வீரர்கள்! - காரணம் இதுதான்

16 Jan, 2026 | 02:32 PM

image

சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும்  4 விண்வெளி வீரர்களும் நேற்று வியாழக்கிழமை (15) அதிகாலை அவசர அழைப்பின் பேரில் பூமிக்குத் திரும்பியதாக நாசா தெரிவித்துள்ளது. 

சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வுகளை மேற்கொண்ட விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கவேண்டிய தேவை காணப்படுவதால் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

11.JPG

க்ரூ -11 (Crew-11) என்ற விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ் ஜெனா கார்ட்மேன் (Zena Cardman), மைக் பின்கே (Mike Fincke) ஆகிய இரண்டு அமெரிக்க வீரர்கள், ஜப்பான் வீரர் கிமியா யூயி (Kimiya Yui), ரஷ்ய வீரர் ஒலெக் ப்ளாட்டோனோவ் (Oleg Platonov) ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் 1ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பூமியிலிருந்து அனுப்பப்பட்டனர். 

இந்த வீரர்கள் “ஸ்பேஸ் எக்ஸ்” (SpaceX) நிறுவனத்தின் “ட்ராகன்” (Dragon) விண்கலத்தில் சென்றுள்ளனர். 

இவர்களது விண்வெளி ஆய்வுப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை மேற்கொள்ளப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆய்வில் ஈடுபட்டிருந்த குறித்த நான்கு வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

6.JPG

அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதால் வீரர்கள் குழுவை அவசரமாக பூமிக்கு திரும்ப அழைக்க நாசா தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து, கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை மாலை ட்ராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு 10 மணிநேர பயணத்தை மேற்கொண்டு படிப்படியாக உயரத்தை குறைத்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையத் தொடங்கியது. 

4.JPG

பின்னர், விண்வெளி வீரர்கள் சான் டியாகோ அருகே பசுபிக் கடற்பரப்பில் நேற்று அதிகாலை பாதுகாப்பாக தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வேளை, கடலில் நீந்திய டொல்பின்களை கண்டு ரசித்ததாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். 

பின்னர், அவர்கள் கடற்படை கப்பலின் மூலம் மீட்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

சர்வதேச விண்வெளி நிலையத்தின் 25 ஆண்டுகால வரலாற்றில், விண்வெளியிலிருந்து இதுபோன்று அவசர தேவை கருதி வீரர்களை பூமிக்கு திருப்பி அழைத்த முதல் நிகழ்வு இதுவே என தெரிவிக்கப்படும் அதேவேளை தனியுரிமை கருதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட வீரர் யார் என நாசா வெளியிட மறுத்து வருகிறது. 

3.JPG

5.JPG

22.JPG

https://www.virakesari.lk/article/236181

பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15க்கு மாறியது ஏன்? அறிவியல் பின்னணி

2 weeks 5 days ago

பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15க்கு மாறியது ஏன்? அறிவியல் பின்னணி

பொங்கல் ஜனவரி 15-ஆம் தேதிக்கு மாறியது ஏன்? அறிவியல் விளக்கம்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

இந்த ஆண்டு பொங்கல் தினம் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், 1940களில் இருந்து 2000களின் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தோர் ஜனவரி 14ஆம் தேதியையே பொங்கல் தினமாகக் கொண்டாடியதாகக் கூறுகிறார் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

நிபுணர்களின் கூற்றுப்படி பொங்கல், சங்கராந்தி ஆகியவை அனுசரிக்கப்படும் தேதி மாறிக் கொண்டே வந்துள்ளது.

சமீபத்தில், ஜோதிட நிபுணரான வேதாஞ்சனம் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 13ஆம் தேதியன்று வெளியிட்ட பதிவில், "மகர சங்கராந்தி அடுத்த 69 ஆண்டுகளுக்கு ஜனவரி 14இல் அன்றி 15ஆம் தேதியில் வரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பொங்கல் ஜனவரி 15-ஆம் தேதிக்கு மாறியது ஏன்? அறிவியல் விளக்கம்

பட மூலாதாரம்,Getty Images

இதுகுறித்துப் பேசியபோது, இந்த மாற்றங்கள் புதியதல்ல என்று கூறினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

மேலும் அவர், "நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பொங்கல், 1901இல் ஜனவரி 13ஆம் தேதியிலும், 1902, 1903, 1904 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 14இலும் கொண்டாடப்பட்டது.

அதுவே, 2015, 2019, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 15ஆம் தேதியே பொங்கல் கொண்டாடப்பட்டது. அதுவே, 2016, 2017, 2018, 2020, 2021, 2022, 2025 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி 14ஆம் தேதியன்று வந்தது" என்று தெரிவித்தார்.

பொங்கல், சங்கராந்தி ஆகியவை இவ்வாறாக ஒரே குறிப்பிட்ட தேதியில் வராமல், மாறி மாறி வருவதற்குக் காரணம் என்ன?

பஞ்சாங்கக் கணக்கீடுகள் தவறாகின்றனவா?

பூமி சூரியனை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அதோடு அது தனது அச்சிலும் தன்னைத் தானே சுழல்கிறது. பூமியின் சுழற்சி அச்சு, சூரியனை சுற்றியுள்ள அதன் சுற்றுப் பாதையில் 23.5 டிகிரி சாய்வாக உள்ளது.

பொங்கல், சங்கராந்தி தேதி 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை தள்ளிப் போவது ஏன்? பஞ்சாங்க கணிப்புகள் தவறா?

பட மூலாதாரம்,Getty Images

பூமி சூரியனை சுற்றுவது மற்றும் தன்னைத் தானே சுற்றிக் கொள்வது போக, மூன்றாவது இயக்கம் ஒன்றும் உள்ளது. அது, 23.5 டிகிரி சாய்வாக இருக்கும் அச்சின் சுழற்சியாகும்.

இந்த இரண்டு இயக்கங்கள் தவிர, பூமிக்கு முன்னிசைவு எனப்படும் மூன்றாவது இயக்கமும் உள்ளது. "இந்த அம்சம் பஞ்சாங்கக் கணக்கீடுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதுவே பஞ்சாங்கத்தில் பிழை ஏற்பட்டு, தேதிகள் மாறுவதற்கு முக்கியக் காரணம்" என்கிறார் முனைவர் த.வி. வெங்கடேஸ்வரன்.

பூமி தனது அச்சில் சுழல்வதால் இரவு, பகல் ஏற்படுகிறது. சூரியனைச் சுற்றி வருவதை வைத்து ஆண்டு கணக்கிடப்படுகிறது.

இவைபோகக் கூடுதலாக, "புவி அதன் அச்சில் சுழலும்போது மெதுவாக ஒரு வட்டத்தில் சாய்ந்து சுழல்கிறது. இந்தச் சாய்வு முன்னோக்கிய அசைவு என்று அழைக்கப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் மெதுவாக நிகழ்கிறது. மெதுவாகச் சுழலும் பூமியின் அச்சு அதன் முழு வட்டத்தைச் சுற்றி முடிக்க 26,000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.

எடுத்துக்காட்டாக, துருவ நட்சத்திரம் வட வானியல் துருவத்திற்கு அருகில் உள்ளது என வைத்துக் கொள்வோம். ஆனால், கி.பி.15,000இல் பூமியின் அச்சு லைரா விண்மீன் கூட்டத்தின் பிரகாசமான நட்சத்திரமான வேகாவை சுட்டிக்காட்டும். மேலும் வட வானியல் துருவத்திற்கு அருகில் அந்த நட்சத்திரமே இருந்திருக்கும், துருவ நட்சத்திரம் இருக்காது," என்று விளக்கினார் வெங்கடேஸ்வரன்.

பொங்கல், சங்கராந்தி தேதி 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை தள்ளிப் போவது ஏன்? பஞ்சாங்க கணிப்புகள் தவறா?

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,மிகவும் மெதுவாகச் சுழலும் பூமியின் அச்சு அதன் முழு வட்டத்தைச் சுற்றி முடிக்க சுமார் 26,000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது

சுழலும் பம்பரம் போலத் தள்ளாடும் புவி அச்சு

பூமியைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வெற்றுப் பந்து இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வோம். அனைத்து நட்சத்திரங்களும் இந்தப் பந்தின் உட்புறப் பரப்பில் பதிக்கப்பட்டு இருப்பது போலத் தெரிகின்றன. இந்தக் கற்பனையான பந்து வானக்கோளம் என்று அழைக்கப்படுகிறது.

இப்போது, புவியின் நிலநடுக்கோட்டை வரைந்து, அதை வானம் வரை நீட்டிப்பதாகக் கற்பனை செய்தால், அது வானக் கோளத்தில் ஒரு பெரிய வட்டத்தை உருவாக்குகிறது. இந்த வட்டம் வான்நிலநடுக்கோடு என்றழைக்கப்படுகிறது.

"பூமி சுமார் 23.5 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இந்தச் சாய்வின் காரணமாக, சூரியன் சரியாக வான்நிலநடுக்கோட்டின் ஊடாகப் பயணிப்பதில்லை. மாறாக, சூரியன் வானத்தில் சற்றே சாய்ந்த ஒரு பாதையில் பயணிக்கிறது. இந்தப் பாதை கிரகணப் பாதை என்றழைக்கப்படுகிறது.

சூரியனின் பாதையும் வான்நிலநடுக்கோடும் இரண்டு புள்ளிகளில் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கின்றன. பூமி இந்தப் புள்ளிகளை அடையும்போது, ஒரு சம இரவு நாள் ஏற்படுகிறது. சம இரவு நாட்களின்போது, பூமியில் உள்ள ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் இரவுபகல் ஏறக்குறைய சமமாக இருக்கும்." என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்

மேலும் விவரித்த அவர், "சரியாக ஓராண்டுக்குப் பிறகு பூமி அதே நாளில் சம இரவுபகல் புள்ளியை அடைய வேண்டும். ஆனால், புவியின் அச்சு பம்பரம் சுழல்வது போலத் தள்ளாடுகிறது. இந்த மெதுவான இயக்கம் முன்னிசைவு என்றழைக்கப்படுகிறது.

இதன் காரணமாக பூமி, ஒவ்வோர் ஆண்டும் சம இரவுப் புள்ளியை சுமார் 20 நிமிடங்கள் முன்னதாகவே அடைகிறது. இப்படியே சிறிது சிறிதாகக் கூடி, 72 ஆண்டுகளில் அதுவொரு முழு நாளாகவே கூடிவிடுகிறது. ஆனால், பாரம்பரிய பஞ்சாங்கங்கள் இந்த மாற்றத்தைச் சரியாகக் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை" என்றார்.

பஞ்சாங்கங்களில் பயன்படுத்தப்படும் எண்களிலும் தவறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார் அவர். பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுக்கும் உண்மையான நேரம், 365 நாட்கள், 5 மணிநேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 விநாடிகள். ஆனால், பண்டைய கணக்கீடுகள் இதைவிடச் சற்று நீண்ட நேரத்தைக் காட்டின.

"இந்தச் சிறிய தவறுகள் பல ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகின்றன. அதனால் கணிப்புகளில் பிழைகள் ஏற்படுகின்றன."

இவற்றின் காரணமாக, சூரியனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட பண்டிகைகளின் தேதிகளில் மெதுவாக மாற்றங்கள் நிகழ்கின்றன.

உதாரணமாக, முன்பு ஜனவரி 14ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட பொங்கல், இப்போது பொதுவாக 15ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், பூமி வானத்தில் அந்தக் குறிப்பிட்ட நிலையைச் சற்று முன்னதாகவே அடைவதால் இந்த மாற்றம் ஏற்படுவதாகக் கூறுகிறார் வெங்கடேஸ்வரன்.

பொங்கல், சங்கராந்தி தேதி 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை தள்ளிப் போவது ஏன்? பஞ்சாங்க கணிப்புகள் தவறா?

பட மூலாதாரம்,Getty Images

உத்தராயணம் குறித்த கணக்கீடு

பஞ்சாங்கங்கள் தங்கள் கணக்கீடுகளில் புவி அச்சின் முன்னிசைவு இயக்கத்தைக் கருத்தில் கொள்வதில்லை என்பதால் அவற்றின் கணக்கீடுகள் தவறாவதாகக் குறிப்பிடும் வெங்கடேஸ்வரன், அதற்கான உதாரணங்களாக, பொங்கல் பண்டிகை மற்றும் உத்தராயணத்தை குறிப்பிடுகிறார்.

உத்தராயணம் நிகழ்வு பற்றி விளக்கிய அவர், "ஓர் ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் சூரியன் துல்லியமாகக் கிழக்கில் உதிப்பதில்லை. புவியின் அச்சு 23.5 டிகிரி சாய்ந்திருப்பதால், சூரியன் உதிக்கும் புள்ளி வடக்கு-தெற்காக நகர்கிறது. உத்தராயண தினத்தன்று, சூரியன் உதயமாகும் புள்ளி கிழக்கு அடிவானத்தில் அதிகபட்ச தென்கிழக்கில் இருக்கும்.

அடுத்தடுத்த நாட்களில், சூரியன் உதிக்கும் புள்ளி முந்தைய நாளைவிட சற்றே வடக்கில் நகர்ந்திருக்கும். அடுத்த ஆறு மாதங்களில், சூரியன் உதிக்கும் புள்ளி கிழக்கு அடிவானத்தில் உச்சபட்ச வடகிழக்கை அடைகிறது. அந்த நாள் தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகிறது. தட்சிணாயனத்திற்குப் பிறகு, சூரிய உதயப் புள்ளி முந்தைய நாளைவிட தெற்கே நகர்வது போலத் தோன்றும். இந்த இயக்கத்தின்போது, சூரியன் ஆண்டுக்கு இருமுறை சரியாகக் கிழக்கில் உதிப்பது போலத் தோன்றும்," என்று விளக்கினார்.

வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் ஆகியவற்றின்படி, உத்தராயணம் ஜனவரி 14, 15 தேதிகளில் வரவேண்டும். ஆனால், "உண்மையில் அது டிசம்பர் 20-21 அன்றே நிகழ்ந்துவிடுகிறது."

இதுபோல, பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள கணக்கீடுகளில், வானியல் பொருட்களின் உண்மையான நிலைகளிலும் பல பிழைகள் இருப்பதாக த.வி.வெங்கடேஸ்வரன் விவரித்தார்.

பொங்கல், சங்கராந்தி தேதி 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை தள்ளிப் போவது ஏன்? பஞ்சாங்க கணிப்புகள் தவறா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வானக் கோளத்தில் சூரியனின் தோற்றப் பாதையான கிரகணப் பாதை, ராசிகள் எனப்படும் 12 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொங்கல், சங்கராந்தி தேதி மாறுவது ஏன்?

மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படும் பொங்கல் தினம் மாறிக் கொண்டிருப்பதன் பின்னணியை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பாக, சங்கராந்தி என்றால் என்னவென்பதைப் பார்ப்போம்.

"சங்கராந்தி என்பது சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைக் குறிக்கும் நிகழ்வாகும். இது பஞ்சாங்கங்களில் சூரிய மாதங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது. வானக் கோளத்தில் சூரியனின் தோற்றப் பாதையான கிரகணப் பாதை, ராசிகள் எனப்படும் 12 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மகர சங்கராந்தி என்பதை சூரியன் தனுசு ராசியில் இருந்து தை முதல் தேதியன்று மகர ராசியில் புகுவதாக பஞ்சாங்கம் கூறுகிறது. எனவே, தை 1 மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. ஆனால், உண்மையில் ஜனவரி 15 அன்று சூரியன் இன்னும் தனுசு ராசியில்தான் இருக்கிறது. சூரியன் டிசம்பர் 19 முதல் ஜனவரி 19 வரை தனுசு ராசியில் நிலைபெற்றிருக்கும். ஜனவரி 20ஆம் தேதிதான் மகர ராசிக்குள் நுழைகிறது. இதுவும் பஞ்சாங்கக் கணிப்புப்படி ஒரு பெரிய பிழை" என்று விளக்கினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

அதோடு, பஞ்சாங்கக் கணக்கீடுகளில் உள்ள குறைபாடுகள் மிகத் தெளிவாகத் தெரிவதாகவும், பஞ்சாங்கத்தால் கணக்கிடப்பட்ட பொங்கலின் வானியல் தொடர்பு முற்றிலும் தவறானது எனவும் குறிப்பிட்டார் அவர்.

"சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பொங்கல் திருநாள் உத்தராயணத் திருநாளாக இருந்தது. ஆனால் பூமி அச்சின் சுழற்சி இயக்கம் காரணமாக, பல ஆண்டுகளாக, பொங்கல் தினமும் உத்தராயணமும் 72 ஆண்டுகளுக்கு ஒரு நாள் வீதம் விலகிச் சென்றன.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், என் குழந்தைப் பருவத்தில், பொங்கல் பொதுவாக ஜனவரி 14ஆம் தேதி, அதாவது டிசம்பர் 21இல் உத்தராயணம் வந்து 25 நாட்கள் கழித்து வந்தது. காலப்போக்கில் இது ஒரு நாள் தள்ளிப்போய், ஜனவரி 15இல் பொங்கல் வரத் தொடங்கியது" என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

மேலும் அவர், "இதில் எந்தச் சீர்திருத்தமும் செய்யப்படாவிட்டால், நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ஜனவரி 16ஆம் தேதிக்கு மாறிவிடக்கூடும்" என்றும் குறிப்பிட்டார்.

பஞ்சாங்கத்தின் கணக்கீடுகளில் இத்தகைய குழப்பம் இருக்க, எப்படி அதில் கிரகணம் தொடங்கும், முடியும் நேரம் மட்டும் சரியாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

அதுகுறித்து முன்பு ஒருமுறை பிபிசிக்கு விளக்கமளித்த அவர், "கிரகணம் போன்ற வெறும் கண்களால் எளிதில் காணக்கூடிய நிகழ்வுகள் பிழையாக இருந்தால் அதன் மீதான நம்பகத்தன்மை அடிபடும். அதனால் பஞ்சாங்கத்தில் தங்கள் கணிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நிறுவனமான வான்பொருள் நிலை கணிப்பு மையம் (Positional Astronomy Centre) கணிக்கும் தரவுகளை அப்படியே தங்களுடைய பதிப்பில் பிரசுரம் செய்துவிடுகிறார்கள். அதனால்தான் கிரகணம் போன்ற கண்களுக்குப் புலப்படக்கூடிய விஷயங்களில் சரியான கணக்கீடுகள் இருப்பது போலத் தெரிகின்றன" என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj9rv4p9ly4o

பிரபஞ்சத்தின் முடிவு பற்றி 'விசித்திரமான' இருண்ட ஆற்றலின் ஆய்வு என்ன சொல்கிறது?

1 month ago

பிரபஞ்சத்தின் முடிவு பற்றி 'விசித்திரமான' இருண்ட ஆற்றலின் ஆய்வு என்ன சொல்கிறது?

அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தனிமையான தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக மில்லியன் கணக்கான தொலைதூர விண்மீன் திரள்களைக் கண்காணித்து வருகிறது.

பட மூலாதாரம்,KPNO/NOIRLab

படக்குறிப்பு,அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக தொலைதூர நட்சத்திர மண்டலங்களை கண்காணித்து வருகிறது.

கட்டுரை தகவல்

  • பல்லப் கோஷ்

  • பிபிசி

  • 30 டிசம்பர் 2025

இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான விசை, காலம் மற்றும் விண்வெளி குறித்த நமது தற்போதைய புரிதலுக்கு சவால் விடும் வகையில் மாறிக்கொண்டிருக்கலாம் என்ற சமீபத்திய சான்றுகள் குறித்த சர்ச்சை வளர்ந்து வருகிறது.

பிரபஞ்சம், தொடர்ந்து விரிவடைவதற்குப் பதிலாக நட்சத்திர மண்டலங்கள் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றாக இழுக்கப்பட்டு வானியலாளர்கள் பெருஞ் சிதைவு (பிக் கிரஞ்ச்) என்று அழைக்கப்படும் நிகழ்வுடன் முடிவுக்கு வரலாம் என்று தென்கொரிய குழுவின் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

இதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், ஒரு தலைமுறையின் மிகப்பெரிய வானியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக நம்புகின்றனர்.

பிற வானியலாளர்கள் இந்த கண்டுபிடிப்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர், ஆனால் இந்த விமர்சகர்களால் தென்கொரிய குழுவின் வாதங்களை முழுமையாக நிராகரிக்க முடியவில்லை.

இவை ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்கள். இருண்ட ஆற்றல் இவற்றைத் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேகத்தில் ஒன்றைவிட்டு ஒன்று பிரித்துச் செல்கிறது.

பட மூலாதாரம்,NASA/ESA

இருண்ட ஆற்றல் என்றால் என்ன?

சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்புடன் (பிக் பேங்) தொடங்கிய பிரபஞ்சத்தின் விரிவாக்கம், ஈர்ப்பு விசையினால் படிப்படியாக வேகம் குறையும் என்று வானியலாளர்கள் முன்பு நினைத்தார்கள்.

பின்னர் 1998-ஆம் ஆண்டில், பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை துரிதப்படுத்தும் ஒரு விசையாக இருண்ட ஆற்றலுக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 'சூப்பர்நோவாக்கள்' எனப்படும் மிகவும் பிரகாசமான வெடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த ஆய்வுகள், தொலைதூர நட்சத்திர மண்டலங்கள் வேகம் குறைவதற்குப் பதிலாக, உண்மையில் ஒன்றைவிட்டு ஒன்று அதிவேகமாக விலகிச் செல்வதைக் காட்டின.

பிரபஞ்சம் தொடர்ந்து வேகமாக விரிவடைவதால், நட்சத்திரங்கள் மிகவும் தூரமாகப் பிரிந்து போகும் அப்போது ஒருநாள் இரவு வானில் கிட்டத்தட்ட எதுவுமே தெரியாத நிலை கூட வரலாம் என்றும், இன்னும் அதிர்ச்சியூட்டும் விதமாக, இறுதியில் அணுக்களையே சிதைத்துவிடும் பெருங் கிழிசல் (பிக் ரிப்) ஏற்படலாம் என்றும் சில கோட்பாடுகள் தெரிவித்தன

இந்த விவாதம் மார்ச் மாதம் அரிசோனா பாலைவனத்தில் ஒரு தொலைநோக்கியில் இருக்கும் 'டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இன்ஸ்ட்ரூமென்ட்' (DESI- டெசி) என்ற உபகரணத்தில் கிடைத்த எதிர்பாராத முடிவுகளுடன் தொடங்கியது.

இருண்ட ஆற்றல் பற்றி மேலும் அறிய டெசி உருவாக்கப்பட்டது. இது மில்லியன் கணக்கான நட்சத்திர மண்டலங்கள் எவ்வாறு வேகமடைகின்றன என்பதை மிக நுணுக்கமாகக் கண்காணித்தது, ஆனால் அது வழங்கிய முடிவுகள் வானியலாளர்கள் எதிர்பார்க்காததாக இருந்தது.

'விசித்திரமானது'

நட்சத்திர மண்டலம் வேகமடைதல் காலப்போக்கில் மாறியுள்ளதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. இது வழக்கமான புரிதலுக்கு உட்பட்டது அல்ல என்று டெசி திட்டத்தில் ஈடுபட்டுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் பேராசிரியர் ஓஃபர் லஹவ் கூறுகிறார்.

"இப்போது இந்த மாறும் இருண்ட ஆற்றல் ஏறி இறங்குவதால், நமக்கு ஒரு புதிய வழிமுறை தேவைப்படுகிறது. இது முழு இயற்பியலையுமே உலுக்கக்கூடும்," என்று அவர் கூறுகிறார்.

பின்னர் நவம்பர் மாதம், 'ராயல் அஸ்ட்ரோனோமிகல் சொசைட்டி' (ஆர்ஏஎஸ்), தென்கொரிய குழுவின் ஆராய்ச்சியை வெளியிட்டது. இது இருண்ட ஆற்றலின் விசித்திரத்தன்மை நாம் நினைத்ததைவிட விசித்திரமானது என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது.

யோன்செய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யங் வூக் லீ மற்றும் அவரது குழுவினர், 27 ஆண்டுகளுக்கு முன்பு இருண்ட ஆற்றலை முதலில் வெளிப்படுத்திய அதே வகை சூப்பர்நோவா தரவுகளை மீண்டும் ஆய்வு செய்தனர். இந்த நட்சத்திர வெடிப்புகளை ஒரு நிலையான பிரகாசம் கொண்டவையாக கருதுவதற்குப் பதிலாக, அவை உருவான நட்சத்திர மண்டலத்தின் வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அந்த சூப்பர்நோவாக்கள் உண்மையில் எவ்வளவு பிரகாசமாக இருந்தன என்பதை அவர்கள் கணக்கிட்டனர்.

இந்தச் சரிசெய்தல், இருண்ட ஆற்றல் காலப்போக்கில் மாறியது மட்டுமல்லாமல், அதிர்ச்சியூட்டும் விதமாக அதன் வேகம் குறைந்து வருவதையும் காட்டியது.

"பிரபஞ்சத்தின் விதி மாறும்," என்று பேராசிரியர் லீ பிபிசி நியூஸிடம் வெளிப்படையாகக் கூறுகிறார்.

"இருண்ட ஆற்றல் நிலையானது அல்ல மற்றும் அது பலவீனமடைந்து வருகிறது என்றால், இது நவீன அண்டவியலின் முழு கருத்தோட்டத்தையும் மாற்றிவிடும்."

பேராசிரியர் லீயின் முடிவுகள் தெரிவிப்பது போல, நட்சத்திர மண்டலங்களை ஒன்றைவிட்டு ஒன்று தள்ளும் விசையான இருண்ட ஆற்றல் பலவீனமடைந்தால், ஈர்ப்பு விசை நட்சத்திர மண்டலங்களை மீண்டும் ஒன்றாக இழுக்கத் தொடங்கும் சாத்தியம் உள்ளது.

"ஒரு 'பெருங் கிழிசல்' உடன் முடிவடைவதற்குப் பதிலாக, ஒரு 'பெருஞ் சிதைவு' இப்போது சாத்தியமாகிறது. எந்த முடிவு வெற்றி பெறும் என்பது இருண்ட ஆற்றலின் உண்மையான தன்மையைப் பொறுத்தது, அதற்கான பதில் நமக்கு இன்னும் தெரியவில்லை," என்கிறார் பேராசிரியர் லீ.

பேராசிரியர் லீயின் பணி சக நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு ஆர்ஏஎஸ்-இன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது வாதங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜ் எஃப்ஸ்டதியு போன்ற மூத்த வானியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

"இது சூப்பர்நோவாக்களின் குழப்பமான விவரங்களை மட்டுமே பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன். வயதுடனான தொடர்பு அவ்வளவு நெருக்கமானது அல்ல, எனவே 'சரிசெய்தல்' முறையைப் பயன்படுத்துவது ஆபத்தானது. இது எனக்குப் பலவீனமாகத் தோன்றுகிறது," என்று அவர் கூறுகிறார்.

டார்க் எனர்ஜி பெரிதாக மாறாமல் இருப்பதுடன், பிரபஞ்சம் இன்னும் வேகமாக விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாக உள்ளது.

ஆனால் பேராசிரியர் லீ இத்தகைய விமர்சனங்களை வலுவாக எதிர்க்கிறார்.

"எங்கள் தரவு 300 நட்சத்திர மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு தற்செயலான நிகழ்வாக இருப்பதற்கு டிரில்லியனில் ஒரு பங்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. எனவே, எங்களது ஆராய்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கது என்று நான் நினைக்கிறேன்."

அண்டத்திற்கான ஒரு தேவாலயம்: இந்த தொலைநோக்கிக்குள் இருக்கும் ஒரு கருவி ஒரே நேரத்தில் 5,000 விண்மீன் திரள்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும்.

பட மூலாதாரம்,Marilyn Sargent/Berkeley Lab

படக்குறிப்பு,இந்த தொலைநோக்கிக்குள் இருக்கும் ஒரு கருவி ஒரே நேரத்தில் 5,000 நட்சத்திர மண்டலங்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும்.

தென்கொரிய முடிவுகளுக்குப் பிறகு, இரண்டு குழுக்கள் சில சூப்பர்நோவாக்களின் பிரகாசத்தை மீண்டும் மதிப்பீடு செய்தன.

மொத்த பரபரப்பையும் தொடங்கிய டெசி முடிவுகளுக்கு அடிப்படையாக இருந்த முந்தைய ஆய்வு ஒன்றினை அவர்கள் மீண்டும் பரிசீலித்தனர். இருண்ட ஆற்றல் மாறிக்கொண்டிருக்கிறது என்ற வாதம் மிகுந்த சர்ச்சைக்குரியதாக இருந்ததால், மார்ச் மாத முடிவுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்ப்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர்.

இரண்டு குழுக்களும் அசல் குறிப்புகளிலிருந்து சற்றே பின்வாங்கினாலும், விரிவான ஆய்வுக்குப் பிறகும் அந்தக் குறிப்புகள் முழுமையாக மறைந்துவிடவில்லை.

இது தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன மற்றும் சிறந்த விளக்கம் எது என்பதில் வானியலாளர்கள் வேறுபடுகின்றனர். இது ஒரு மோசமான விஷயம் அல்ல என்கிறார் ஆர்ஏஎஸ்-ன் துணை இயக்குநர் பேராசிரியர் ராபர்ட் மாஸ்ஸி.

"பிரபஞ்சம் எப்படி முடியப் போகிறது மற்றும் அது எப்படித் தொடங்கியது என்பதைப் புரிந்து கொள்ள யார் தான் விரும்ப மாட்டார்கள்? மனிதர்கள் எப்போதுமே மத ரீதியாகவோ அல்லது அறிவியல் ரீதியாகவோ இதில் ஆர்வம் காட்டியுள்ளனர்," என்று அவர் கூறுகிறார்.

"இன்னும் பல பில்லியன் ஆண்டுகளில் விஷயங்கள் இப்படித்தான் முடிவடையும் என்று சிந்திக்க முடிவது அசாதாரணமானது அல்லவா?"

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crl9lz099d6o

ஐபோன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

1 month ago

ஆப்பிள் ஐபோன் iPhone பயனர்கள் உடனடியாக தங்கள் சாதனங்களின் மென்பொருளை புதுப்பிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மிக தீவிரமான இரண்டு மென்பொருள் பாதுகாப்புக் குறைகள் (software vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை “மிகவும் நுணுக்கமான” சைபர் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.ஐபோன் பயனர்கள்

இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், Safari உலாவி மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் அனைத்து மூன்றாம் தரப்பு உலாவிகளுக்கும் அடிப்படையாக உள்ள WebKit என்ற உலாவி இயந்திரத்தை இந்த குறைகள் பாதிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஐபோன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Apple Issues Urgent Notice To All Users

இந்த பாதுகாப்பு குறைகளை பயன்படுத்தி, ஒரு பாதிக்கப்பட்ட இணையதளத்தை பயனர் பார்வையிட்டாலே, அவருடைய சாதனத்தில் தீங்கு விளைவிக்கும் நிரல்கள் (malicious code) இயங்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைகள் உண்மையில் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அவை பொதுவான பெருமளவு தாக்குதல்கள் அல்ல என்றும், குறிப்பிட்ட சில நபர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எனத் தோன்றுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த பாதுகாப்பு குறைகள், குறிப்பிட்ட சில இலக்கு நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக நுணுக்கமான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் எங்களிடம் உள்ளது,” என ஆப்பிள் தனது பாதுகாப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த குறைகளை சரிசெய்யும் வகையில், iPhone, iPad மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களுக்கு அவசர மென்பொருள் புதுப்பிப்புகளை (emergency software updates) ஆப்பிள் வெளியிட்டுள்ளது. அனைத்து பயனர்களும் உடனடியாக புதிய புதுப்பிப்புகளை நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சுமார் 1.8 பில்லியன் iPhone பயனர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என சில தகவல்கள் வெளியானாலும், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், இது பெருமளவு சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கான சான்று கிடையாது என தெரிவிக்கின்றனர்.எச்சரிக்கை

மாறாக, இந்த பாதுகாப்புக் குறைகளின் தீவிரத்தையும், புதுப்பிக்கப்படாத சாதனங்களுக்கு ஏற்படும் அபாயத்தையும் இந்த எச்சரிக்கை எடுத்துக்காட்டுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னால் யார் உள்ளனர் அல்லது யார் இலக்காக்கப்பட்டனர் என்பது குறித்து பாதுகாப்பு காரணங்களால் எந்த விவரங்களையும் ஆப்பிள் வெளியிடவில்லை.

ஐபோன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Apple Issues Urgent Notice To All Users

முன்னதாக அறியப்படாத மென்பொருள் குறைகள் (Zero-Day Vulnerabilities) உலகளவில் அதிகரித்து வரும் சூழலில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இவ்வகை குறைகள், திருத்தங்கள் வெளியிடப்படும் முன்பே ஹேக்கர்களால் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாதனங்களை எப்போதும் அண்மைய மென்பொருள் பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் வைத்திருப்பது மிகவும் அவசியம் எனவும் ஆப்பிள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  

https://tamilwin.com/

பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

1 month 1 week ago

பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

நட்சத்திரங்களின் இறுதிக்கட்ட நிலை அவற்றின் நிறையைப் பொறுத்தே அமையும்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நட்சத்திரங்களின் இறுதிக்கட்ட நிலை அவற்றின் நிறையைப் பொறுத்தே அமையும்

கட்டுரை தகவல்

  • பெர்னாண்டோ டூர்டே

  • பிபிசி உலக சேவை

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

எதுவும் நிலையானது அல்ல... நமது பிரபஞ்சம் கூட.

கடந்த இருபது ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வாளர்கள் இந்தப் பிரபஞ்சம் தனது முக்கிய காலகட்டத்தை கடந்துவிட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வருகின்றனர். புதிய நட்சத்திரங்கள் பிறப்பது படிப்படியாகக் குறைந்து வருவது அதில் ஒரு முக்கியமான அடையாளம்.

இதன் பொருள் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தீர்ந்துவிட்டன என்பதல்ல. இதில் ஒரு செப்டில்லியன் - அதாவது ஒன்றுக்குப் பின் 24 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ணிக்கை - வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், புதிய நட்சத்திரங்களின் உற்பத்தி வேகம் குறைந்து வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நட்சத்திரங்களின் பிறப்பும் இறப்பும்

தற்போதைய ஒருமித்த அறிவியல் கருத்தியலின்படி, பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்த சிறிது காலத்திலேயே முதல் நட்சத்திரங்கள் உருவாகத் தொடங்கின.

உண்மையில், கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி நமது பால்வெளி அண்டத்திலேயே 13 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மூன்று நட்சத்திரங்களைக் கண்டறிந்தது.

நட்சத்திரங்கள் அடிப்படையில் சூடான வாயுக்களால் ஆன ராட்சதப் பந்துகள். அவை அனைத்தும் ஒரே மாதிரியாகவே தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன.

விண்வெளித் தூசு மற்றும் வாயுக்கள் நிறைந்த நெபுலா எனப்படும் பிரமாண்ட மேகக்கூட்டங்களில் இவை உருவாகின்றன. ஈர்ப்பு விசை வாயுத் திரட்சிகளை ஒன்றாக இழுக்கிறது; இது இறுதியில் வெப்பமடைந்து ஒரு 'குழந்தை நட்சத்திரமாக' அல்லது புரோட்டோஸ்டாராக மாறுகிறது.

ஆரஞ்சு மற்றும் நீல நிறச் சுழல் மேகங்கள் ஒரு பிரகாசமான மையத்திற்கு மேலேயும் கீழேயும் விசிறி போல விரிந்துள்ளன; பின்னணியில் தொலைதூர நட்சத்திரங்கள் கருமையாகத் தெரிகின்றன.

பட மூலாதாரம்,Nasa/Esa/CSA/STScI; Processing: J DePasquale/A Pagan/A Koekemoer (STScI)

படக்குறிப்பு,குழந்தை நட்சத்திரங்கள் (புரோட்டோஸ்டார்கள்) அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களைத் தரும் மேகக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ளன

நட்சத்திரத்தின் மையக்கரு கோடிக்கணக்கான டிகிரி அளவுக்கு வெப்பமடையும்போது, அதிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக அழுத்தப்பட்டு ஹீலியமாக மாறுகின்ற, 'அணுக்கரு இணைவு' என்ற செயல்முறை நடைபெறுகிறது. இது ஒளி மற்றும் வெப்பத்தை வெளியிடுகிறது. இப்போது நட்சத்திரம் ஒரு நிலையான 'முதன்மை வரிசை' கட்டத்தில் இருக்கும்.

நமது சூரியன் உள்பட முதன்மை வரிசை கட்டத்தில் இருக்கும் நட்சத்திரங்களே பிரபஞ்சத்தின் மொத்த நட்சத்திரங்களில் 90% உள்ளதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இவை சூரியனின் நிறையைப் போல பத்தில் ஒரு பங்கு முதல் 200 மடங்கு வரை இருக்கின்றன.

இறுதியில் இந்த நட்சத்திரங்கள் எரியூட்டும் எரிபொருளை இழக்கின்றன. பின்னர் அவை மரணத்தை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பயணிக்கக்கூடும்.

நமது சூரியனை போன்ற குறைந்த நிறை கொண்ட நட்சத்திரங்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளில் மெல்ல மங்கி மறையும் செயல்முறைக்கு உள்ளாகின்றன.

சூரியனைவிட குறைந்தது எட்டு மடங்கு நிறை கொண்ட பிரமாண்ட நட்சத்திரங்களின் முடிவு மிகவும் வியத்தகு முறையில் இருக்கும்: அவை சூப்பர்நோவா எனப்படும் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுக்கு உள்ளாகி வெடித்துச் சிதறுகின்றன.

தலையில் பொருத்தப்பட்ட டார்ச் விளக்கை அணிந்திருக்கும் ஒரு மனிதனின் சிறிய நிழல் உருவம், எண்ணற்ற நட்சத்திரங்கள் நிறைந்த பரந்த இரவு வானத்தை அண்ணாந்து பார்க்கிறதும்; அதன் நடுவே பால்வெளி (Milky Way) அண்டம் மேல்நோக்கி ஒரு கோடு போல நீள்கிறது.

பட மூலாதாரம்,Anadolu via Getty Images

பழைய நட்சத்திரங்களின் ஆதிக்கம்

கடந்த 2013ஆம் ஆண்டு, நட்சத்திர உருவாக்கப் போக்குகளை ஆய்வு செய்த சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் குழு ஒன்று, இனி உருவாகப் போகும் மொத்த நட்சத்திரங்களில் 95% ஏற்கெனவே பிறந்துவிட்டன என்று கூறியது.

"தெளிவாகப் பழைய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரபஞ்சத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்," என்று அந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டேவிட் சோப்ரல் அந்தக் காலகட்டத்தில் சுபாரு தொலைநோக்கி இணையதளக் கட்டுரையில் கூறியிருந்தார்.

பிரபஞ்சத்தின் காலவரிசையில், 'காஸ்மிக் நூன்' என்று அழைக்கப்படும் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலப்பகுதியில்தான் நட்சத்திர உருவாக்கம் உச்சத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

"அண்டங்கள் வாயுவை நட்சத்திரங்களாக மாற்றுகின்றன, ஆனால் இப்போது குறைவான விகிதத்திலேயே அதைச் செய்கின்றன," என்கிறார் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அண்டவியல் பேராசிரியரான டக்ளஸ் ஸ்காட்.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் யூக்ளிட் மற்றும் ஹெர்ஷல் தொலைநோக்கிகளின் தரவுகளை ஆய்வு செய்த ஒரு புதிய ஆய்வின் இணை ஆசிரியராக பேராசிரியர் ஸ்காட் உள்ளார்.

பிரபஞ்சத்தின் பிரமாண்டமான 3D வரைபடத்தை உருவாக்கும் யூக்ளிட் திட்டத்தின் மூலம், அவரும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவும் ஒரே நேரத்தில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான அண்டங்களை ஆய்வு செய்ய முடிந்தது.

சுழலும் ஆரஞ்சு நிற மேகங்கள் பின்னணியில் உள்ள தொலைதூர நட்சத்திரங்களுக்கு எதிராகத் தெரிகின்றன; நட்சத்திர உருவாக்கம் நடைபெறும் மூன்று பிரகாசமான மையங்கள் செங்குத்தான கோட்டில் மின்னுகின்றன.

பட மூலாதாரம்,Esa/Euclid/Euclid Consortium/Nasa; Processing: JC Cuillandre (CEA Paris-Saclay)/G Anselmi

படக்குறிப்பு,யூக்ளிட் விண்வெளித் திட்டம், விண்வெளியில் புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் பகுதியின் விவரங்களைப் படம் பிடித்துள்ளது

குறிப்பாக விண்வெளித் தூசுகள் வெளியிடும் வெப்பத்தின் மீது ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டினர். அதிக நட்சத்திர உருவாக்க விகிதத்தைக் கொண்ட அண்டங்கள், பெரிய மற்றும் வெப்பமான நட்சத்திரங்களைக் கொண்டிருப்பதால் அதிக வெப்பமான தூசுகளைக் கொண்டிருக்கும்.

பிரபஞ்சத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக அண்டங்களின் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து வருவதை ஆய்வுக் குழு கண்டறிந்ததாக பேராசிரியர் ஸ்காட் கூறுகிறார்.

"நாம் ஏற்கெனவே நட்சத்திர உருவாக்கத்தின் உச்சகட்டத்தைத் தாண்டிவிட்டோம், ஒவ்வொரு தலைமுறை நட்சத்திர உருவாக்கத்திலும் புதிய நட்சத்திரங்கள் குறைவாகவே பிறக்கும்," என்று அவர் கூறுகிறார்.

பிரபஞ்சம் எப்போது முடிவுக்கு வரும்?

பழைய நட்சத்திரங்களின் மரணம் அதே பொருட்களைப் பயன்படுத்திப் புதிய நட்சத்திரங்கள் உருவாக வழிவகுக்கும் என்பது உண்மைதான், ஆனால் இது அவ்வளவு எளிமையானதல்ல.

நமக்கு ஒரு குவியல் கட்டுமானப் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி ஒரு வீட்டைக் கட்டுவதாகவும் வைத்துக் கொள்வோம். நாம் புதிய வீடு ஒன்றைக் கட்ட விரும்பினால், பழைய கட்டடத்தை மறுசுழற்சி செய்ய முயற்சி செய்யலாம், ஆனால் அதிலுள்ள அனைத்துமே பயனுள்ளதாக இருக்காது.

"அதாவது நாம் ஒரு சிறிய வீட்டையே கட்ட முடியும். ஒவ்வொரு முறை அதை இடிக்கும்போதும் கிடைக்கும் பயனுள்ள பொருட்கள் என்னால் ஒரு வீட்டைக்கூட கட்ட முடியாத நிலை வரும் அளவுக்குக் குறைந்து கொண்டே இருக்கும்," என்று பேராசிரியர் ஸ்காட் விளக்குகிறார்.

நட்சத்திரங்களுக்கும் இதுதான் நடக்கிறது.

"ஒவ்வொரு தலைமுறை நட்சத்திரங்களுக்கும் எரியூட்டக் குறைந்த எரிபொருளே இருக்கும். இறுதியில் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கக்கூடப் போதுமான எரிபொருள் இருக்காது" என்று அந்த அண்டவியலாளர் கூறுகிறார்.

சூரியன் பிரகாசமான மற்றும் இருண்ட சுழல்களுடன் ஒரு ஒளிரும் பந்தாகத் தெரிகிறது; அதன் மேற்பரப்பில் ஏற்படும் ஒரு பெரிய ஒளிக்கீற்று ஒரு சக்திவாய்ந்த சூரியச் சுடரைக் குறிக்கிறது.

பட மூலாதாரம்,Nasa/SDO

படக்குறிப்பு,நமது சூரியன் இறுதியாக மங்கி மறைவதற்கு இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்

"பிரபஞ்சத்தில் பெரிய நிறை கொண்ட நட்சத்திரங்களைவிடக் குறைவான நிறை கொண்ட நட்சத்திரங்களே மிகவும் அதிகம் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும்."

பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாகத் தத்துவங்களை முன்வைத்து வருகின்றனர். அது எப்படி, எப்போது என்பது குறித்து அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாது.

தற்போது மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளில் ஒன்று 'வெப்ப மரணம்' (heat death).

'பிக் ஃப்ரீஸ்' (Big Freeze - மகா உறைநிலை) என்றும் அழைக்கப்படும் இது, பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையும்போது, ஆற்றல் பரவி, இறுதியில் உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு குளிர்ச்சியடையும் என்று கணிக்கிறது. நட்சத்திரங்கள் ஒன்றையொன்று விட்டு விலகி தூரமாகச் செல்லும், அவற்றின் எரிபொருள் தீர்ந்துவிடும் மற்றும் புதிய நட்சத்திரங்கள் உருவாகாது.

பேராசிரியர் ஸ்காட் அளிக்கும் விளக்கத்தின்படி, "பிரபஞ்சத்தில் கிடைக்கும் ஆற்றலின் அளவு வரையறுக்கப்பட்டது."

ஒரு அண்டத்தின் மையத்தில் உள்ள பிரகாசமான நீல நிற நட்சத்திரக் கூட்டத்திலிருந்து சாம்பல் மற்றும் பழுப்பு நிற வாயு மற்றும் தூசு இழைகள் வெளிநோக்கிச் சுழல்வதைக் காண முடிகிறது.

பட மூலாதாரம்,Esa/Webb/Nasa/CSA/J Lee/PHANGS-JWST Team

படக்குறிப்பு,பல அண்டங்களில் நட்சத்திர உருவாக்கம் இன்னும் மிக நீண்ட காலத்திற்குத் தொடரும்

நிறைய பூஜ்ஜியங்கள்

ஆனால் நீங்கள் வானத்தை ஏக்கமாகப் பார்ப்பதற்கு முன்பாக, நட்சத்திரங்களின் அழிவு நிகழ மிக நீண்ட காலம் எடுக்கும் என்பதை அறிய வேண்டும்.

நமது சூரியன் மறைந்த பிறகும், அடுத்த 10 முதல் 100 டிரில்லியன் ஆண்டுகளுக்குப் புதிய நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும் என்று பேராசிரியர் ஸ்காட் மதிப்பிடுகிறார்.

'பிக் ஃப்ரீஸ்' நிலையைப் பொறுத்தவரை, அது இன்னும் நீண்ட காலம் எடுக்கலாம்: இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதர்லாந்தின் ராட்பவுட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பிரபஞ்சத்தின் இறுதி முடிவு சுமார் ஒரு 'குவின்விஜிண்டில்லியன்' ஆண்டுகளில் வரும் என்று மதிப்பிட்டனர். அதாவது, ஒன்றுக்குப் பின்னால் 78 பூஜ்ஜியங்களை கொண்ட ஆண்டு எண்ணிக்கை அது.

எனவே, நீங்கள் தெளிவான இரவு வானத்தைப் பார்த்து, நட்சத்திரங்களை ரசிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2lvqjd9lxno

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட்

1 month 1 week ago

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட்

Published By: Digital Desk 2

24 Dec, 2025 | 11:54 AM

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று புதன்கிழமை (24) அமெரிக்காவின் ASD தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான புளூபேர்ட்-6 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம், விண்வெளியிலிருந்து நேரடியாக ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதாகும்.

இதன் மூலம் தொலைபேசி சிக்னல் கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் போன்ற இடங்களிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும்.

புளூபேர்ட்-6 செயற்கைக்கோள் 6,100 கிலோகிராம் எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட் LVM3-M6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

விண்ணில் ஏவுதல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளம் மூலம் காலை 8.55 மணிக்கு நடைபெற்றது.

ISRO இதன்மூலம், 6,100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னர், இதே அளவிலான எடையுள்ள செயற்கைக்கோள்களை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பிரெஞ்சு கயானா எனும் இடத்திலிருந்து ஏவியுள்ளன. இவ்வளவு எடையுள்ள செயற்கைக்கோளை இஸ்ரோ முதன் முறையாக வெற்றிகரமாக ஏவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/234288

"பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம்

1 month 2 weeks ago

"பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம்

சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம்

பட மூலாதாரம்,Star Catcher

கட்டுரை தகவல்

  • ஜோனாதன் ஓ'கல்லகன்

  • 13 டிசம்பர் 2025

சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன.

சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக்கத்தில் உள்ள எமிட்டரில் இருந்து பாய்ந்து, மறுபக்கத்தில் உள்ள திரையில் சேகரிக்கப்பட்டன.

சூரிய ஒளியைச் சேகரித்து, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய லென்ஸ்கள் (அவை ஒவ்வொன்றும் சுமார் 1.2 மீட்டர் (4 அடி) உயரம் கொண்டது) மூலம் அவை அனுப்பப்பட்டது.

"லென்ஸ்களைத் திறக்க ஏணி மீது ஏறி இறங்க வேண்டியிருந்தது" என்று கூறுகிறார் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டார் கேச்சர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ரஷ்.

இந்தச் சோதனையின் நோக்கம் என்னவென்றால், விண்வெளியில் சூரிய ஒளியை ஒரு செயற்கைக்கோளிலிருந்து மற்றொன்றுக்கு அனுப்பி ஆற்றல் தர முடியுமா என்பதைச் சோதிப்பது தான்.

"ஜாகுவார்ஸ் அணியில் சிலரை எங்களுக்குத் தெரியும். இது ஒரு சுவாரஸ்யமான முயற்சி என்று நினைத்தோம்," என்று கூறும் ரஷ், "நாங்கள் சுமார் 105 மீட்டர் [345 அடி] தூரத்திற்கு 100 வாட் கதிர்வீச்சை அனுப்பினோம்" என்கிறார்.

ஸ்டார் கேச்சர் (Star Catcher) நிறுவனம் உலகம் முழுவதும் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பல நிறுவனங்களில் ஒன்றாகும். பல ஆண்டு காலமாக அறிவியலுக்கும் புனைவுக்கும் இடையே சிக்கித் தவித்த இந்த யோசனை, பூமிக்கு மிகுந்த சுத்தமான ஆற்றலை வழங்கும் நோக்கத்துடன், விண்வெளியில் சூரிய ஒளியை சேகரித்து அதை பூமிக்கோ அல்லது பிற செயற்கைக்கோள்களுக்கோ அனுப்புவதை குறிக்கிறது.

பூமியில் உள்ள சோலார் பேனல்கள் வளிமண்டலம், வானிலை, பகல்-இரவு சுழற்சி ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் சூரிய ஒளி, பேனல்களை எட்டுவதற்கு முன்பே குறிப்பிடத்தக்க அளவு கதிர்வீச்சை வடிகட்டிவிடுகின்றன. ஆனால் விண்வெளியில் இரவு-பகல் சுழற்சி இல்லாமல் கிட்டத்தட்ட 24 மணி நேரமும், அதிக திறனுடன் சூரிய ஒளியைச் சேகரிக்க முடியும்.

"நான் இதைப் பற்றி அப்பாவிடம் சொன்னபோது, அவர் என்னை ஒரு முட்டாளைப் போல பார்த்தார்," என்கிறார் பிரிட்டன் நிறுவனமான 'ஸ்பேஸ் சோலார்' நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான டேவிட் ஹோம்‌ஃப்ரே. ஆனால் இப்போது பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகின்றன.

பூமியில் உள்ள சோலார் பேனல்கள் வளிமண்டலம், வானிலை, பகல்-இரவு சுழற்சி ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் சூரிய ஒளி பேனல்களை எட்டுவதற்கு முன்பே குறிப்பிடத்தக்க அளவு கதிர்வீச்சை வடிகட்டிவிடுகின்றன. ஆனால் விண்வெளியில் இரவு-பகல் சுழற்சி இல்லாமல் கிட்டத்தட்ட 24 மணி நேரமும், அதிக திறனுடன் சூரிய ஒளியைச் சேகரிக்க முடியும்.

பட மூலாதாரம்,Star Catcher

படக்குறிப்பு,நீண்ட தூரங்களுக்கு வயர்லெஸ் முறையில் ஆற்றலைக் கதிர்வீச்சு செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மேம்பாடுகள் இப்போது விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை மிகவும் யதார்த்தமான வாய்ப்பாக மாற்றத் தொடங்கியுள்ளன

"விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றலே எரிசக்தி மாற்றத்தை செயல்படுத்தும்," என்று ஹோம்‌ஃப்ரே கூறுகிறார். ஐரோப்பாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேவைகளில் 80% வரை இந்த முறையால் பூர்த்தி செய்ய முடியும் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

விண்வெளியில் கிடைக்கும் சூரிய சக்தியின் அடர்த்தி (power density) பூமியில் உள்ள சோலார் பேனல்களை விட 10 மடங்குக்கும் அதிகமாக இருப்பது தான் இதற்கான முக்கிய காரணம். அதாவது, அங்கு சூரியனின் ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் மிக அதிகம்.

ஆனால் இதை நிஜத்தில் செயல்படுத்துவது எளிதான காரியம் அல்ல.

இதற்கு பிரம்மாண்டமான செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை (enormous satellite constellations) விண்ணில் அமைக்க வேண்டும். இது சர்ச்சைக்குரியதாகவும், பாதுகாப்பாக இயக்குவதற்கு கடினமாகவும் இருக்கும். அதோடு, இவற்றை உருவாக்க ஏராளமான ராக்கெட் ஏவுதல்கள் தேவைப்படும்.

மேலும், இதை விட மலிவாகவும் விரைவாகவும் பூமியில் செயல்படுத்தக்கூடிய பல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழிகள் உள்ளன. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டுமெனில், புதைபடிம எரிபொருள்களை உடனடியாக மாற்றியாக வேண்டும் என்பதால் வேகமாக செயல்பட வேண்டியது மிக முக்கியம்.

இருந்தாலும், விண்வெளி சூரிய மின்நிலையங்களை உருவாக்குவதால் கிடைக்கும் பலன்கள் எல்லா குறைபாடுகளையும் மிஞ்சிவிடும் என்று சிலர் நம்புகிறார்கள்.

உதாரணமாக, அமெரிக்க ராணுவம் இந்தத் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. உலகில் எந்த இடத்துக்கும் தேவைப்படும்போது உடனடியாக ஆற்றலை அனுப்ப முடியும் என்பது நவீன போர்க்களங்களில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றைத் தீர்க்கும். அதேபோல், இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளுக்கோ, மின்சாரம் இல்லாத கிராமப்புறங்களுக்கோ இது அதிக பயனுள்ளதாக அமையும்.

விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல், பூமியில் உள்ள சூரிய ஆற்றல் அமைப்புகளைப் போலவே செயல்படுகிறது. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் பேனல்கள் மூலம் அது இயங்குகிறது. ஆனால் ஒரு பெரிய நன்மையையும் அது கொண்டுள்ளது. ஏனென்றால் அது வளிமண்டலத்திற்கு மேலே இருக்கும். நமது கிரகத்தை சூழ்ந்துள்ள வாயு மற்றும் மேகங்கள் மூலம் வடிகட்டப்படாத சூரிய ஒளியை நேரடியாக சேகரிக்க முடியும் என்பது தான் இதன் பொருள்.

வளிமண்டலம் நமது கிரகத்தை அடையும் ஆற்றலில் சுமார் 30% பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் அது பூமியின் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே கால் பகுதியை உறிஞ்சுகிறது. விண்வெளி அடிப்படையிலான சூரிய பேனல்கள் இந்த இழப்புகளைத் தவிர்க்கலாம், மேலும் அவற்றை சரியான சுற்றுப்பாதையில் வைத்தால் கிட்டத்தட்ட தொடர்ச்சியான சூரிய ஒளியை பெற முடியும்.

சேகரிக்கப்பட்ட மின்சாரம் மைக்ரோவேவ் அல்லது லேசர் கதிர்களாக பூமிக்கு அனுப்பப்பட்டு, பூமியில் உள்ள பெரிய ஆன்டெனாக்களால் (rectennas) பிடிக்கப்பட்டு மீண்டும் மின்சாரமாக மாற்றப்படும்.

ஆனால் பொருளாதார ரீதியாக இது பயனுள்ளதாக இருக்க, ஒவ்வொரு செயற்கைக்கோளும் ஜிகாவாட் அளவிலான மிகப் பெரிய அளவில் ஆற்றலை உற்பத்தி செய்து அனுப்ப வேண்டும். அதற்காக விண்வெளியில் மிகப்பெரிய சூரிய பலகை வரிசைகள் ஒன்றுசேர்க்கப்பட வேண்டிய தேவை எழலாம்.

அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோவ், 1941 ஆம் ஆண்டு 'ரீசன்' (Reason) என்ற சிறுகதையில், விண்வெளியில் இருந்து சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் யோசனையைப் பற்றி முதன்முதலில் எழுதினார் . பின்னர் 1970-களில், நாசா நடத்திய ஆய்வுகள் இந்த யோசனை சுவாரஸ்யமானது என்றாலும், அதை செயல்படுத்த பெரிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தடைகள் உள்ளன என்று கூறியது.

நாசாவின் முன்னாள் இயற்பியலாளரும் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை ஆதரிப்பவருமான ஜான் மான்கின்ஸ், 1990களில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வை வழிநடத்தினார். சூரிய மின்கலங்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களால், இந்த யோசனை நடைமுறைக்கு இன்னும் சாத்தியமானதாக மாறி வருவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

"செலவு மதிப்பீடு ஒரு டிரில்லியன் டாலரில் (1 trillion USD) இருந்து 100 பில்லியன் டாலராக (100 billion USD) மாறியது என்று மான்கின்ஸ் கூறுகிறார். "ஆனால் அந்தக் காலகட்டத்தில் இதில் ஆர்வம் கொண்டவர்கள் யாருமே இல்லை."

"முப்பது வருடங்களுக்கு முன் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் என்பது மிகவும் குழப்பமான விஷயமாக இருந்தது," என்று கூறும் மான்கின்ஸ், "மக்கள் இரு துருவங்களாகப் பிரிந்திருந்தனர்.ஒரு பகுதியினர் இதை உச்சகட்ட ஆர்வத்துடன் ஆதரித்தனர், மற்றொரு பகுதியினர் இதை முழுமையாக வெறுத்தனர்" என்கிறார்.

கடந்த பத்தாண்டுகளில் நிலைமை மாறிவிட்டதாக, பிரிட்டனில் உள்ள சேட்டிலைட் அப்ளிகேஷன்ஸ் கேடபுல்ட் என்ற ஆராய்ச்சி அமைப்பின் மைக் கர்டிஸ்-ரௌஸ் கூறுகிறார்.

"இந்த துறையில் ஆர்வம் பெரிதும் உயர்ந்துள்ளது," என்கிறார் அவர்.

விண்வெளியில் பொருட்களை ஏவுவதற்கான செலவு குறைந்து வருவதாலும், டெக்சாஸில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் போன்ற புதிய பெரிய ராக்கெட்டுகளின் வருகையாலும் இதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உற்பத்தி, ரோபாட்டிக்ஸ் மற்றும் பவர்-பீமிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியைப் பெறுவது தொடர்பான வாய்ப்பை நம்முன் கொண்டு வந்துள்ளன.

"நாம் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டிவிட்டோம் என்று சொல்லலாம்," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ்.

"அடுத்த இருபது ஆண்டுகளுக்குள், சுற்றுப்பாதையில் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் திறன் உருவாகும் என நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்றும் அவர் பகிர்ந்து கொள்கிறார்.

2023 ஆம் ஆண்டில், பிரிட்டன் அரசு விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் பல நிறுவனங்களுக்கு 4.3 மில்லியன் யூரோ (சுமார் 5.7 மில்லியன் டாலர்) நிதி வழங்கியது.

சீனாவில், விஞ்ஞானிகள் ஓமேகா 2.0 எனும் ஒரு முன்மாதிரி விண்வெளி சூரிய மின் செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றனர். இது மைக்ரோவேவ்களைப் பயன்படுத்தி பல்வேறு சூரிய பேனல்களிலிருந்து மின்சாரத்தை கடத்தும் திட்டத்தை நோக்கி செயல்படுகிறது.

இதற்காக, விண்வெளியில் 1 கிமீ அகலமான ஆன்டெனாவையும், தலா 100 மீட்டர் அகலமுடைய 600 சூரிய துணை-வரிசைகளையும் ஒன்றுசேர்க்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது பூமியில் நடத்தப்பட்ட சோதனைகளில், மைக்ரோவேவ் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2,081 வாட், அதாவது ஒரு சமையலறை கெட்டில் (kettle) இயங்க போதுமான அளவு சக்தியை 55 மீட்டர் தூரத்துக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளனர்.

தற்போது பூமியில் நடத்தப்பட்ட சோதனைகளில், மைக்ரோவேவ் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2,081 வாட் , அதாவது  ஒரு சமையலறை கெட்டில் இயங்க போதுமான அளவு  சக்தியை 55 மீட்டர் தூரத்துக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளனர்.

பட மூலாதாரம்,ESA

படக்குறிப்பு,ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சோலாரிஸ் முயற்சி, விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சோலாரிஸ் (Solaris) திட்டம் , விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றலை மேலும் ஆழமாக ஆராய வேண்டுமா என்பது குறித்து இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை எடுக்க உள்ளது.

அமெரிக்காவில், அமெரிக்க ராணுவத்தின் நிதியுதவியுடன் பல தொடக்க நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.

"இது பலரும் நினைப்பதை விட யதார்த்தத்திற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது" என்று மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் விண்வெளி சட்ட நிபுணரான மிச்செல் ஹன்லான் கூறுகிறார்.

"ஒருமுறை அந்த தொடக்க முதலீட்டை செய்துவிட்டால், அந்த ஆற்றல் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கும். ஆகவே, அந்த முதலீட்டை செய்யும் தைரியம் மற்றும் தொலைநோக்குப் பார்வை உள்ளதா என்பதுதான் முக்கியம்" என்கிறார் அவர்.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஏதர்ஃப்ளக்ஸ் (Aetherflux) எனும் தொடக்க நிலை நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தில் பணிபுரியும் நிறுவனங்களில் ஒன்று.

"விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி என்பது இந்த அற்புதமான யோசனை," என்கிறார் நிறுவனர் பைஜு பட்.

"ஆனால் நாங்கள் கேட்டுக்கொண்ட கேள்வி இதுதான், 2050-க்கு இலக்கு வைக்காமல், அடுத்த 2-3 ஆண்டுகளுக்குள் இதைச் செய்ய வேண்டுமானால் எப்படிச் செய்வது?" என்றும் அவர் தெரிவித்தார்.

ஏதர்ஃப்ளக்ஸ் நிறுவனம், அதிக சக்தி வாய்ந்த அகச்சிவப்பு லேசர்கள் மற்றும் ஃபோட்டோவோல்டாயிக் செல்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களின் தொகுப்பை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் சூரிய சக்தியைச் சேகரித்து, பின்னர் அதை பூமியில் உள்ள 5–10 மீட்டர் (16–33 அடி) அகலமுடைய சிறிய சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பும். இதனால் அவை நிலத்தில் மிகக் குறைந்த இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, ஒவ்வொரு லேசரும் அதன் பாதையில் ஒரு விமானமோ, மற்றொரு செயற்கைக்கோளோ அல்லது வேறு பொருளோ பறந்து வந்தால், உடனடியாக அணைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்படும். இது அவற்றின் சென்சார்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ சேதம் விளைவிக்காது.

இந்த லேசர்கள் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வலிமையானவை அல்ல. உதாரணமாக, இவற்றால் ஒரு விமானத்தை இரண்டு துண்டுகளாக உடைக்க முடியாது. ஆனால், அவை போதுமான சக்தி கொண்டவை என்பதால், அவற்றால் மனித உடல்நலத்திற்கு ஏற்படக்கூடிய விளைவுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கர்டிஸ்-ரௌஸ் கூறுகிறார்.

"ஒரு 'டெத் ஸ்டாரை' உருவாக்குவது நோக்கம் இல்லை," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ்.

தொடர்ந்து பேசிய அவர், "உண்மையில் இந்த லேசரில் ஒரு முட்டையை வேகவைக்கக் கூட நிறைய நேரம் ஆகும். அதனால் பறவைகள், விமானங்கள், சூப்பர்மேன் என எதுவாக இருந்தாலும் அதன் வழியாக செல்ல முடியும்" என்கிறார்.

ஆற்றல் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயனளிக்கக்கூடும் என்று பட் கூறுகிறார். இதில் ராணுவம் ஆரம்பகட்டப் பயனாளர்களில் ஒருவராக இருக்கலாம்.

"அமெரிக்க அரசாங்கத்துக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எரிசக்தி தேவைகள் உள்ளன," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ்.

ஆற்றல் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயனளிக்கக்கூடும் என்று பட் கூறுகிறார். இதில் ராணுவம் ஆரம்பகட்டப் பயனாளர்களில் ஒருவராக இருக்கலாம்.

பட மூலாதாரம்,Alamy

படக்குறிப்பு,இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியால் எல்லா நகரங்களுக்கும் மின்சாரம் வழங்க போதுமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்க முடியும் என்று சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன

ஏப்ரல் மாதத்தில், ஏதர்ஃப்ளக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் டாலர் நிதியை திரட்டியதாக அறிவித்தது. 2026ஆம் ஆண்டில், பூமியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்கலங்களுக்கு 1 கிலோவாட் அல்லது 1.3 கிலோவாட் சக்தி கொண்ட லேசர் கற்றையை அனுப்பக்கூடிய ஒரு செயல் விளக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது.

"சிறந்த சூழ்நிலையில், இரண்டு நூறு வாட் அளவிலான மின்சாரம் கிடைப்பதை காண வாய்ப்பு உண்டு," என்கிறார் பட்.

பூமியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதன் அகச்சிவப்பு லேசர் பரிமாற்ற அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

பிரிட்டனின் ஸ்பேஸ் சோலார் (Space Solar) நிறுவனம் முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது. விண்வெளியில் பெரிய நகரங்களின் அளவில், பிரம்மாண்டமான சூரிய மின் நிலையங்களை அமைத்து, எல்லா நாடுகளுக்கும் போதுமான மின்சாரத்தை வழங்க வேண்டும் என கனவு காண்கிறார்கள். இது மிகப்பெரிய பணியென்றாலும், அது சாத்தியமான ஒன்று என ஹோம்‌ஃப்ரே நம்புகிறார்.

"2050க்குள், உலகின் மொத்த மின்சார தேவையின் 20% வரை விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் வழங்கும் என எதிர்பார்க்கலாம். அது முற்றிலும் சாத்தியம் தான் " என்கிறார் அவர்.

சுமார் 1.2 மில்லியன் யூரோ (1.6 மில்லியன் டாலர்) பிரிட்டன் அரச நிதி பெற்ற ஸ்பேஸ் சோலார், அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு செயல் விளக்கப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஒன்று ரேடியோ அலைகள் மூலம் நிலத்துக்கு சக்தியை கடத்துவதைப் பயிற்சி செய்வது. இன்னொன்று, ரோபோக்களால் விண்வெளியில் பெரிய கட்டமைப்புகளை உருவாகும் திறனை நிரூபிப்பது.

இறுதியில், 1.8 கிமீ அகலமுடைய ஒரு பிரம்மாண்ட விண்வெளி கட்டமைப்பை உருவாக்கி, அதை கேசியோபியா (Cassiopeia) என அழைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது பூமியில் இருந்து சுமார் 36,000 கிமீ உயரத்தில் உள்ள ஜியோஸ்டேஷனரி சுற்றுவட்டத்தில் (geostationary orbit) நிலைநிறுத்தப்படும். அதாவது, பூமியின் ஒரே இடத்திற்கு மேலேயே எப்போதும் நிலைத்து, கிட்டத்தட்ட தொடர்ச்சியாக சூரிய ஒளியைப் பெறும்.

இந்த மின்நிலையம், மில்லியன் கணக்கான மேசை அளவிலான சிறு செயற்கைக்கோள்களால் (modular satellites) ஆனது, அவை ஒவ்வொன்றும் சோலார் பேனல்களால் மூடப்பட்டிருக்கும். அதன்பின், சுமார் 100 கோடி சிறிய ஆன்டெனாக்கள் மூலம் சேகரித்த ஆற்றலை ரேடியோ அலைகளாக பூமிக்கு அனுப்பும். பூமியில் ஒரு ஹீத்ரோ (Heathrow) விமான நிலைய அளவிலான ரிசீவிங் ஸ்டேஷன் போதும்.

சுமார் ஒரு பில்லியன் ஆன்டெனாக்கள் சேர்ந்து, சேமித்த சக்தியை ஹீத்ரோ விமான நிலையத்தின் பரப்பளவுக்கு இணையான தரை நிலையத்துக்கு அனுப்பும். அங்கு ரேடியோ அலைகள் மின்சாரமாக மாற்றப்படும்.

"இவற்றில் ஒரு டஜன் அளவு நிலையங்கள் பிரிட்டனில் இருந்தால், நாட்டின் முழு மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்," என்கிறார் கர்டிஸ்-ரௌஸ்.

இந்த மின்நிலையம், மில்லியன் கணக்கான மேசை அளவிலான சிறு செயற்கைக்கோள்களால் (modular satellites) ஆனது, அவை ஒவ்வொன்றும் சோலார் பேனல்களால் மூடப்பட்டிருக்கும். அதன்பின், சுமார் 100 கோடி சிறிய ஆன்டெனாக்கள் மூலம் சேகரித்த ஆற்றலை ரேடியோ அலைகளாக பூமிக்கு அனுப்பும். பூமியில் ஹீத்ரோ விமான நிலைய அளவிலான ரிசீவிங் ஸ்டேஷன் போதும்

பட மூலாதாரம்,Space Solar

படக்குறிப்பு,சுமார் ஒரு பில்லியன் ஆன்டெனாக்கள் சேர்ந்து, சேமித்த சக்தியை ஹீத்ரோ விமான நிலையத்தின் பரப்பளவுக்கு இணையான தரை நிலையத்துக்கு அனுப்பும். அங்கு ரேடியோ அலைகள் மின்சாரமாக மாற்றப்படும்.

ஒரு கேசியோபியா மின்நிலையம் சுமார் 700 மெகாவாட் மின்சார திறன் கொண்டதாக இருக்கும் என ஹோம்‌ஃப்ரே கூறுகிறார். இது பிரிட்டனில் அரை மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப் போதுமானது. மேலும், சோமர்செட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் ஹின்க்லி பாய்ன்ட் C அணு மின் நிலையத்தின் மின்சார உற்பத்தியின் நான்கில் ஒரு பங்கை இது வழங்கும் அளவுக்கு சக்திவாய்ந்தது.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பேஸ் சோலார், விண்வெளியில் கட்டமைப்புகளை அமைக்கத் தேவையான ரோபோடிக் அமைப்பின் செயல் விளக்க வடிவமைப்பை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. கடந்த ஆண்டு, வட அயர்லாந்தின் குயின்ஸ் பல்கலைக்கழகம், பெல்ஃபாஸ்டில் உள்ள ஒரு ஆய்வகத்தில், 360-டிகிரி வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றம் செய்யும் திறனை நிறுவனம் வெற்றிகரமாகக் நிரூபித்தது.

அமெரிக்க நிறுவனமான விர்டுஸ் சோலிஸ், விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறது. இந்நிறுவனத்தின் திட்டம், 2,00,000 தேன்கூடு வடிவ செயற்கைக்கோள்களை பல கிலோமீட்டர் நீளமான மிகப்பெரிய விண்மீன் கூட்டங்களாக ஒருங்கிணைப்பது தான். இவற்றால், மால்னியா சுற்றுப்பாதை எனப்படும் விசித்திரமான சுற்றுப்பாதையில் பயணித்து, வட அரைக்கோளத்திற்குச் சக்தியை அனுப்ப நீண்ட நேரம் உயர்ந்த அட்சரேகைகளில் தங்க இயலும். விர்டுஸ் சோலிஸ் தனது செயல் விளக்கப் பயணத்தை 2027ல் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இது வெற்றி பெற்றால், பூமியில் மின்சாரச் செலவு மிகுந்த வீழ்ச்சியடையும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிறுவனர் ஜான் பக்னல் கூறுகிறார்.

"உலகளாவிய சராசரி மின்சார விலை, ஒரு மெகாவாட்-மணிக்கு 75 டாலராக (£55) உள்ளது," என்கிறார் அவர்.

ஆனால் நிறுவனத்தின் மாதிரி அடிப்படையில், விண்வெளி அடிப்படையிலான மின்சாரம் ஒரு மெகாவாட்-மணிக்கு 0.50 டாலர் (£0.40) ஆக அமையலாம்.

"அதனால், நம் அனைவருக்கும் ஆண்டுதோறும் எரிசக்திக்காக சுமார் 10 டாலர் (£7) செலவு மட்டுமே ஆகும்," என்கிறார் பக்னல். "அதுவே எங்கள் நோக்கம்."

இருப்பினும், சிலர் விண்வெளி சூரிய மின்சாரத்தை குறைந்த செலவில் வழங்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. பெரிய அளவிலான விண்வெளி- சூரிய மின்சக்தி வடிவமைப்புகளின் ஒரு மதிப்பீடு, இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பூமி அடிப்படையிலான மாற்றுகளை விட 12-80 மடங்கு அதிகமாக செலவாகும் என்று கூறுகிறது.

விண்கலங்கள் பூமி மட்டும் அல்லாமல் பிற இடங்களுக்கும் சக்தியை அனுப்ப முடியும். ஃப்ளோரிடாவில் என்எஃப்எல் மைதானத்தில் இந்த சோதனையை நடத்திய ஸ்டார் கேச்சர் நிறுவனம், ஒரு நாள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களுக்கு திருப்பி, விண்வெளியில் அவற்றின் சக்தியை அனுப்ப முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது.

அவர்களின் கதிர்வீச்சு (beam) அமைப்பு, ஃப்ரெஸ்னல் லென்ஸ் (Fresnel lenses) எனப்படும் ஒரு தொடர் கண்ணாடிகளைப் பயன்படுத்தும். இவை நீண்ட காலமாக லைட் ஹவுஸ்களில் (lighthouses) ஒளியை பிரதிபலிக்கவும், விலக்கவும் (reflect & refract) பயன்படுத்தப்பட்டவை. இந்தக் கண்ணாடிகள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களின் சூரிய பலகைகளில் திருப்பி செலுத்தும். இந்தத் தொழில்நுட்பம் செயற்கைக்கோள்களுக்கு இயற்கையான சூரிய ஒளியால் மட்டுமே கிடைக்கும் ஆற்றலைவிட அதிக சக்தியை வழங்கக்கூடும் என்று ரஷ் கூறுகிறார்.

"சூரிய ஒளி நேராகப் பட்டால் அவற்றுக்கு மின்சாரம் கிடைக்கிறது. சூரியன் மறைந்தால் எந்த ஆற்றலும் கிடைக்காது," என்கிறார் ரஷ்.

"நாங்கள் அந்தச் செயற்கைக்கோள்கள் இருக்கும் இடத்துக்கே ஒளியை அனுப்புகிறோம். அந்த ஒளியின் தீவிரத்தைக் ஒரு சூரியனிலிருந்து பத்து சூரியன்கள் அளவுக்கு எங்களால் மாற்றிக் காட்ட முடியும்" என்றும் விளக்குகிறார்.

விண்கலங்கள் பூமி மட்டும் அல்லாமல் பிற இடங்களுக்கும் சக்தியை அனுப்ப முடியும்.

பட மூலாதாரம்,Star Catcher

படக்குறிப்பு,விண்கலங்கள் பூமி மட்டும் அல்லாமல் பிற இடங்களுக்கும் சக்தியை அனுப்ப முடியும். ஃப்ளோரிடாவில் என்எஃப்எல் மைதானத்தில் இந்த சோதனையை நடத்திய ஸ்டார் கேச்சர் நிறுவனம், ஒரு நாள் சூரிய ஒளியை செயற்கைக்கோள்களுக்கு திருப்பி, விண்வெளியில் அவற்றின் சக்தியை அனுப்ப முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது.

அத்தகைய அமைப்பு சந்திரனில் உள்ள ரோவர்களுக்கு ஆற்றலை வழங்கவும் உதவும், அவை இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும் சந்திர இரவுகளில் உயிர்வாழ வேண்டும் என்று ரஷ் கூறுகிறார்.

ஆனால், விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆற்றல் குறித்து அனைவரும் நம்பிக்கையுடன் இல்லை. முக்கிய கவலை என்னவென்றால், மிக அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை ஏவுவதும், விண்வெளியில் பாதுகாப்பாக இயக்குவதும் தான். இது இதுவரை யாராலும், இத்தகைய அளவுக்கு, முயற்சிக்கப்படாத ஒன்று.

நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைத்து இயக்குவது, மேலும் அவை மற்ற செயற்கைக்கோள்களுடன் மோதாமல் பாதுகாப்பது, மிகப்பெரிய சவால் என்று நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளிக் குப்பை நிபுணர் பிரான்செஸ்கா லெடிசியா கூறுகிறார்.

ஏதேனும் விபத்துகள் நடந்தால், அது இந்த புதிய தொழில்துறையின் வளர்ச்சியை உடனடியாகத் பாதிக்கக்கூடும். "சில சம்பவங்கள் மட்டுமே நடந்தால் கூட அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார்.

மேலும், இத்தகைய மிகப்பெரிய செயற்கைக்கோள் குழுக்கள் சட்டபூர்வமானதாக கூட இல்லாமல் இருக்கலாம் என ஹான்லன் கூறுகிறார். 1967 ஆம் ஆண்டின் விண்வெளி ஒப்பந்தத்தின் படி, பூமியின் சுற்றுப்பாதையின் எந்தப் பகுதியையும் எந்த நாடும் உரிமை கோர முடியாது.

"ஆனால் ஒரு சதுர மைல் அளவிலான செயற்கைக்கோள் வரிசையைப் பற்றிப் பேசும்போது அது எப்படி அமையும்?" என ஹான்லன் கேள்வி எழுப்புகிறார்.

"சீனா 4 சதுர மைல் [10 சதுர கி.மீ] செயற்கைக்கோள்களை அமைக்கப் போவதாக அறிவித்தால், அமெரிக்கா கண்டிப்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று நான் நினைக்கிறேன்."

விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி உண்மையில் நம்மால் அடையக்கூடியதா என்பது மற்றொரு கேள்வியாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாசா அறிக்கை, இந்த தொழில்நுட்பம் தற்போது நிலத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விட மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது என்றும், ஏவுதல், உற்பத்தி மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றங்கள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் கூறியது.

"நாம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நிச்சயமாக சிறந்த இடத்தில் இருக்கிறோம்," என்று தொழில்நுட்பம், கொள்கை மற்றும் உத்தி சார்ந்த செயல்பாடுகளுக்கான முன்னாள் நாசா இணை நிர்வாகியும், விண்வெளி கொள்கை நிபுணருமான சாரிட்டி வீடன் கூறுகிறார். "ஆனால், இதைச் செய்ய நாம் தயாரா ?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

அமெரிக்க லாப நோக்கற்ற நிறுவனமான தி ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷனின் விண்வெளி பொருளாதார வல்லுநரும் தொழில்நுட்ப மூலோபாய வல்லுநருமான கரேன் ஜோன்ஸ், விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியை உருவாக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் என்றும், "இது கார்பன் இல்லாத ஆற்றல்," என்றும் கூறுகிறார்.

"இது நிஜமாகட்டும் என்று நம்புவோம். ஏனெனில், தற்போதைய சூழலில் விண்வெளியில் பரஸ்பர நம்பிக்கை குறைவாக உள்ளது."

அத்தகைய முயற்சி , ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ISS) கட்டுமானத்தை சாத்தியமாக்கிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கக்கூடும்.

"பூமத்திய ரேகைக்கு மேல் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியில் நீங்கள் ஒரே ஒரு முதலீட்டைச் செய்யலாம்," என்கிறார் மான்கின்ஸ். "தேவையைப் பொறுத்து, இது போலந்து, லண்டன், ரியாத், கேப் டவுனுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். மேலும் ஒரு நாளில் பல முறை இலக்கை மாற்றவும் முடியும்."

பெரிய புயல் அல்லது பேரழிவுக்குப் பிறகு மின்சாரம் இழந்த நாடுகள், மின்கட்டமைப்பு சரி செய்யப்படும் வரை தற்காலிக உயிர்நாடி போல இதன் பயன்களை பெறலாம். "மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு குறைந்த அளவு மின்சாரத்தையும் நீங்கள் வழங்க முடியும்," என்கிறார் ஜோன்ஸ்.

ஸ்டார் கேச்சர் தனது அடுத்த பெரிய சோதனையை விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த முறை அமெரிக்க கால்பந்து மைதானத்தில் அல்ல. புளோரிடாவின் கேப் கனாவெரலில் நாசாவின் விண்வெளி ஷட்டிலின் பழைய ஓடுபாதையில் திட்டமிட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் ஆற்றல் பரிமாற்றத்தில் ஒரு புதிய சாதனை உருவாகும்.

"அந்த ஓடுபாதையில் பல கிலோமீட்டர் தூரம் மின்சாரத்தை வழங்க போகிறோம்," என்கிறார் ரஷ்.

ஆனால் இவ்வளவு வியப்பை உண்டாக்கும் இந்த தொழில்நுட்பம் ஒருநாள் உண்மையில் வெற்றி பெறும் அளவுக்கு வளருமா என்பது இன்னும் பெரிய கேள்வியாகத் தான் எஞ்சியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly32x5ee4eo

3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன?

1 month 3 weeks ago

3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன?

பிரமாண்ட கருந்துளை காட்டிய பேரண்டத்தின் புதிய ரகசியம் – விஞ்ஞானிகள் கண்டது என்ன?

பட மூலாதாரம், European Space Agency (ESA)

படக்குறிப்பு, என்.ஜி.சி 3783 எனப்படும் விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையில் நிகழும் ஆற்றல் வெடிப்பைக் காட்டும் விவரிக்கும் கலைப் படைப்பு

52 நிமிடங்களுக்கு முன்னர்

ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது.

திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை தன்னில் இருந்து சில பொருட்களை, விநாடிக்கு 60,000கி.மீ என்ற அதீத வேகத்தில் விண்வெளியில் வீசியது.

கருந்துளையில் ஏற்பட்ட இந்த எக்ஸ்ரே ஒளி வெடிப்பும், அதன் விளைவாக உருவாக்கப்பட்ட வேகமான காற்றும், சூரியனில் நிகழ்வதை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலதிகமாக அறிவதற்கு உதவக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் முழு விவரமும், அஸ்ட்ரானமி & அஸ்ட்ரோஃபிசிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

கருந்துளை என்றால் என்ன?

கருந்துளை என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அவை துளைகள் இல்லை. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, மிகச் சிறிய இடத்திற்குள் மிகப்பெரிய அளவிலான பொருள்களை கருந்துளைகள் கொண்டுள்ளன. அவை மிகவும் அடர்த்தியானவை. அதாவது, அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்பிக்க முடியாத அளவுக்கு அடர்த்தி மிகுந்தவை.

பேரண்டத்தில் உள்ள மிகவும் மர்மமான வான்பொருட்களில் ஒன்றாக கருந்துளைகள் இருக்கின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இவற்றில், மிகப்பெரிய, பிரமாண்ட கருந்துளைகள் சில நேரங்களில் சூரியனைவிட பல்லாயிரம் மடங்கு அல்லது பல பில்லியன் மடங்கு அதிக நிறையைக் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய விண்மீன் மண்டலத்தின்(galaxy) மையத்திலும் இவை காணப்படுகின்றன.

அவற்றைச் சுற்றி, வாயு, தூசு வடிவங்களில் இருக்கும் வான்பொருட்களால் ஆன சுழலும் வட்டுகள் உள்ளன. அந்தப் பொருட்கள் கருந்துளையின் அதிதீவிர ஈர்ப்புவிசை காரணமாக அதற்குள் இழுக்கப்படலாம்.

அப்படி, கருந்துளைகள் தம்மைச் சுற்றியுள்ள வட்டுகளில் இருக்கும் வான்பொருட்களை "விழுங்கும்போது", அந்த வட்டுகள் நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமாக வெப்பமடைந்து எக்ஸ் கதிர்கள் உள்பட வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட பிரகாசமான ஒளி வெடிப்பை வெளியிடுகின்றன.

பிரமாண்ட கருந்துளை காட்டிய பேரண்டத்தின் புதிய ரகசியம் – விஞ்ஞானிகள் கண்டது என்ன?

பட மூலாதாரம், ESA/Hubble/Nasa/MC Bentz/DJV Rosario

படக்குறிப்பு, இந்த மிகப்பெரிய கருந்துளை பூமியிலிருந்து 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள என்.ஜி.சி 3783 என்று அழைக்கப்படும் விண்மீன் மண்டலத்திற்குள் அமைந்துள்ளது

இரண்டு தொலைநோக்கி

மேலும் இதன்போது, கருந்துளைகள் அதிவேகமாக வாயுக்களை வெளியேற்றுகின்றன. விண்வெளியில் ஏற்படும் தீவிர காற்று போல் இருக்கும் அந்தக் காற்றில் மின்னூட்டம் மிக்க சிறு துகள்களும் இருக்கும்.

இந்தக் காற்று விண்மீன் மண்டலத்தின் வழியாக வீசும்போது, புதிய நட்சத்திரங்களின் தோற்றத்தில்கூட அவை தாக்கம் செலுத்தக்கூடும்.

"ஒரு கருந்துளை இவ்வளவு வேகமாக வெளிப்படும் காற்றை உருவாக்குவதை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று நெதர்லாந்து விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி லியி கு கூறுகிறார்.

ஆய்வு செய்யப்படும் இந்த பிரமாண்ட கருந்துளை, பூமியில் இருந்து சுமார் 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சுழல் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளது.

இந்தத் தனித்துவமான விண்வெளி நிகழ்வைக் கண்டறிய, ஒன்றிணைந்து இயங்கிய இரண்டு தொலைநோக்கிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.

அதில் ஒன்று, பிரபஞ்சம் முழுவதும் எக்ஸ்ரே மூலங்களை ஆய்வு செய்யும் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கி.

மற்றொன்று, ஐரோப்பிய விண்வெளி நிலையம் மற்றும் நாசாவின் ஆதரவுடன் செயல்பட்ட ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தலைமையிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் (XRISM) தொலைநோக்கி.

கருந்துளை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கருந்துளையைச் சுற்றியுள்ள மிகவும் பிரகாசமான பகுதி ஆக்டிவ் கேலக்டிக் நியூக்ளியஸ் (AGN) என்று அழைக்கப்படுகிறது.

ஒரு ரப்பர் பேண்ட் பல முறை முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படுவதைப் போல, ஏ.ஜி.என் பகுதியிலுள்ள காந்தப்புலம் முறுக்கப்பட்டு, பின்னர் திடீரென விடுவிக்கப்பட்டபோது, "அது பெரியளவிலான ஆற்றலை வெளியிட்டு, பலத்த காற்றை உருவாக்கியது. இது கிட்டத்தட்ட சூரியனில் நிகழ்வதைப் போலவே இருந்தாலும், கருந்துளையில் சூரியனில் நடப்பதைவிடப் பல மடங்கு, அதாவது கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு, பெரிய அளவில் நிகழ்கிறது" என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷனின் திட்ட விஞ்ஞானியும், இந்தக் கண்டுபிடிப்பின் இணை ஆசிரியருமான மத்தேயோ குவைநாஸி விளக்கினார்.

இந்த ஆய்வுக் குழுவில் ஒருவரும், ஐரோப்பிய விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவருமான கமில் டியெஸ், இந்த ஏ.ஜி.என்-கள் அவை இருக்கும் விண்மீன் மண்டலங்கள் காலப்போக்கில் எவ்வாறான மாற்றங்களை எதிர்கொள்கின்றன என்பதில் "பெருமளவு பங்கு வகிப்பதாக" கூறுகிறார்.

மேலும், "அவை மிகவும் செல்வாக்கு மிக்கவையாக இருப்பதால், ஏ.ஜி.என்.களின் காந்தத்தன்மை மற்றும் அவை எவ்வாறு காற்றை உருவாக்குகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது, பிரபஞ்சம் முழுவதும் உள்ள விண்மீன் மண்டலங்களின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாக இருக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

பிரமாண்ட கருந்துளை காட்டிய பேரண்டத்தின் புதிய ரகசியம் – விஞ்ஞானிகள் கண்டது என்ன?

பட மூலாதாரம், Solar Orbiter/EUI Team/ESA/Nasa

படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி நிலையம் தலைமையிலான சோலார் ஆர்பிட்டர் விண்கலம் பிப்ரவரி 15, 2022 அன்று ஒரு பெரிய சூரிய வெடிப்பைப் படம் பிடித்தது

பேரண்டத்தின் ரகசியங்கள்

கருந்துளையில் காணப்பட்ட இந்த ஆற்றல் வெடிப்பு, சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகளை ஒத்திருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகள் கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் (Coronal Mass Ejection) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் வெடிப்பின்போது, சூரியனின் வெளிப்புற அடுக்கில் இருந்து மின்னூட்டப்பட்ட துகள்கள் பெருமளவில் வெளியேறுகிறது. இந்த நிகழ்வு பூமியிலும் தாக்கம் செலுத்தக்கூடும்.

சூரியனில், காந்தப்புலங்கள் முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றலின் விளைவாக சூரியப் பிழம்புகள்(Solar Flare) என்றழைக்கப்படும் பிரகாசமான ஒளி வெடிப்பு நிகழ்வு நடக்கும். மேலும், அது நடக்கும் அதே நேரத்தில்தான் கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் என்றழைக்கப்படும் வெடிப்பும் நிகழ்கிறது.

அதேபோலத்தான் இந்த பிரமாண்ட கருந்துளையிலும், "முறுக்கப்பட்ட காந்தப்புலங்கள் விடுவிக்கப்படும்போது", ஆற்றல் வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து பெரும் காற்று உருவாக்கப்படுவது நடக்கிறது.

ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கியின் திட்ட விஞ்ஞானியாக இருக்கும் எரிக் குல்கர்ஸ், இரண்டு விண்வெளித் தொலைநோக்கிகளும் இணைந்து "நாம் இதுவரை பார்த்திராத, புதிய ஒன்றைக் கண்டுள்ளதாக" கூறுகிறார். "கருந்துளையில் இருந்து வெளிப்படும் மிக வேகமான காற்று, ஆற்றல் வெடிப்பால் உருவாக்கப்பட்டது. இது சூரியனில் நிகழ்வதை ஒத்திருக்கின்றது."

மேலும் பேசிய அவர், "இதில் மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சூரியனில் நிகழும் அதேபோன்ற இயற்பியல் செயல்முறைகள், ஆச்சர்யமளிக்கும் வகையில், பேரண்டத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துகளைகளுக்கு அருகிலும் நிகழக்கூடும் என்பதை இது காட்டுகிறது" என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqxq342l573o

சூப்பர் மூன் என்றால் என்ன? அதை எப்போது, எங்கே காணலாம்?

1 month 4 weeks ago

சூப்பர் மூன் என்றால் என்ன? அதை எப்போது, எங்கே காணலாம்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஸ்பெயினில் படம் பிடிக்கப்பட்ட சூப்பர் மூன்

கட்டுரை தகவல்

  • த.வி. வெங்கடேஸ்வரன்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டிசம்பர் 4, 2025 சூப்பர் முழு நிலா

"சூப்பர் மூன்" என்பது ஒரு மெய்யான வானியல் நிகழ்வு அல்ல. நிலவு பூமிக்கு அருகில் இருக்கும்போது ஏற்படும் முழு நிலாவை குறிக்க பொதுவெளியில் பயன்படுத்தப்படும் கருத்து மட்டுமே.

ஆண்டின் கடைசி முழு நிலா, டிசம்பர் 4, 2025 அன்று, ஒரு 'சூப்பர் முழு நிலா'வாக (Supermoon) நிகழும். டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் வரிசையாக வரும்போது, நிலவு பூமியிலிருந்து வெறும் 3,57,219 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும்.

அந்த நேரத்தில், முழு நிலவின் விட்டம் சராசரி முழு நிலாவைவிட கிட்டத்தட்ட 7 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசம் 16 சதவிகிதம் கூடுதலாகவும் இருக்கும். இதுவே "சூப்பர் முழு நிலா".

எங்கே, எப்போது காணலாம்?

டிசம்பர் 4ஆம் தேதி மாலை நிலவு உதயமாகும் நேரத்தில், கிழக்கு நோக்கி மறைப்பு ஏதுமில்லாத இடமாகத் தேர்வு செய்து, கிழக்கு முகமாகப் பார்த்தல் சூப்பர் மூன் தென்படும்.

'உண்மையான' முழு நிலா நிலை, அதாவது 'வானவியல் பார்வையில் முழு நிலா நிலை' (astronomical full Moon) டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு (இந்திய நேரம்) நிகழும்.

ஆனால் நிலா உதயத்திற்குப் பிறகு கிழக்கு அடிவானத்தில் தாழ்வாக இருக்கும்போது பார்ப்பதே, சூப்பர் முழு நிலாவைக் காணச் சிறந்த நேரம். அடிவானில் முழு நிலா பெரிதாகக் காட்சி தரும்; இதை "நிலா மாயை" (moon illusion) என்பார்கள். ஏன் இப்படியான பார்வைத் தோற்றம் நிகழ்கிறது என்பது இன்னமும் புதிராகத்தான் உள்ளது.

சூப்பர் மூன் என்றால் என்ன?

"சூப்பர் மூன்" என்பது நிலவு பூமிக்கு மிக அருகில் இருக்கும் 'அண்மை நிலை'யில் (Perigee) ஏற்படும் ஒரு முழு நிலாவாகும். நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதை சரிவட்டமானது அல்ல, அதுவொரு நீள்வட்டப் பாதை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதன் விளைவாக, நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் மாறுபடுகிறது. பூமியின் மையத்தில் இருந்து நிலாவின் மையம் வரையிலான தூரம், அண்மை நிலையில் (Perigee) 3,63,396 கிலோமீட்டர் முதல் தொலைவு நிலையில் (apogee) 4,05,504 கிலோமீட்டர் வரை அலைவுறும்.

இந்திய வானியலில், நிலாவின் சுற்றுப்பாதையில் அதன் மிக அருகிலுள்ள புள்ளியான 'அண்மை நிலை' (perigee) 'சீக்கிரோச்சம்' என்றும், மிகத் தொலைவிலுள்ள புள்ளியான 'தொலைவு நிலை' (apogee) 'மந்தோச்சம்' என்றும் அழைக்கப்படுகிறது.

முழு நிலா கட்டத்தில், நிலவு பூமிக்கு மிக அருகிலுள்ள புள்ளியான அண்மை நிலையில் (சீக்கிரோச்சம்) இருக்கும்போது "சூப்பர் மூன்" ஏற்படுகிறது. இதேபோல, அமாவாசை நிலவு ஏற்படும்போது நிலவு அண்மை நிலையில் இருந்தாலும், அதுவும் 'சூப்பர் மூன்'தான். ஆனால் அப்போது நிலாவின் வட்டுத் தோற்றம் காணப்படாது. எனவே, அது பற்றி இங்கு விவாதிக்கப் போவதில்லை. சுருக்கமாக, அதன் அண்மை நிலைக்கு அருகில் ஏற்படும் முழு நிலாவையே 'சூப்பர் மூன்' என்று குறிப்பிடுகிறோம்.

சூப்பர்மூன் என்பது என்ன? எங்கே, எப்போது காணலாம்?

அது ஏன் 'சூப்பர்' மூன்?

நமக்கு அருகிலுள்ள பொருள்கள், தொலைவில் உள்ளவற்றைவிட இயற்கையாகவே பெரிதாகத் தோன்றுகின்றன. இதன் விளைவாக, நிலவு அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வரும்போது அதன் தோற்ற அளவு மாறுபடுகிறது.

அது மிக அருகிலுள்ள புள்ளியான அண்மை நிலையில் (perigee) பெரிதாகவும், தொலைவு நிலையில் (apogee) சிறிதாகவும் இருக்கும்.

இதேபோல், ஒளிரும் ஒரு பொருள் அருகில் இருக்கும்போது பிரகாசமாகத் தோன்றி, அதுவே தொலைவாகச் செல்லும்போது மங்குகிறது. இதன் விளைவாக, பூமிக்கு மிக அருகே அண்மை நிலையில் இருக்கும் ஒரு சூப்பர் மூன், தொலைவு நிலையில் இருக்கும் முழு நிலாவைவிட விட்டத்தில் 14 சதவிகிதம் வரை பெரிதாகவும், 30 சதவிகிதம் வரை பிரகாசமாகவும் இருக்கும்.

முழு நிலா என்றால் என்ன?

முழு நிலா என்பது நிலவு பூமியில் இருந்து காணும்போது நிலாவின் வட்டம் முழுமையாக ஒளிர்வதாகத் தோன்றும் பிறைக்கட்டமாகும். இது பூமி, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் வரும்போது ஏற்படுகிறது. இந்த வரிசையமைப்பின் காரணமாக, சூரிய ஒளி நிலவுடைய முகத்தின் மீது முழுமையாகப் படர்ந்து முழு முகத்தையும் ஒளிர வைக்கிறது, அதை வானில் ஒரு பிரகாசமான, வட்ட வட்டு போல தோன்றச் செய்கிறது.

பொதுவாக, முழு நிலா சூரிய அஸ்தமனத்தில் உதயமாகி, அடுத்த சூரிய உதயத்தின்போது மறைகிறது. நாம் இந்த இரவு முழுவதையும் 'முழு நிலா' என்றே சொல்கிறோம்.

இருப்பினும், வானியலாளர்கள் நிலவு சூரியனுக்கு சரியாக 180 டிகிரி எதிர்த் திசையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கணத்தையே 'வானவியல் பார்வையில் முழு நிலா' என்று கருதுகிறார்கள்.

நிலவும் பூமியும் அவற்றின் சுற்றுப்பாதைகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால், சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரு கோட்டில் வரிசையாக ஒரு கணம் மட்டுமே நிலை கொள்ளும்; பின்னர் அவை நகர்ந்து விடும்.

எனவே, மெய்யான 'முழு நிலா' நிகழ்வு ஒரு கணமே நீடிக்கும். எடுத்துக்காட்டாக, டிசம்பர் 4 அன்று 23:15 UTC (டிசம்பர் 5, 2025, காலை 04:45 இந்திய நேரம்), இந்த மூன்று வான்பொருட்களும் வரிசையாக அமைந்து 'வானவியல் முழுநிலா நிலை' (astronomical full Moon) ஏற்படும்.

சூப்பர்மூன் என்பது என்ன? எங்கே, எப்போது காணலாம்?

பட மூலாதாரம்,Getty Images

சூப்பர் மூன் எப்போது நிகழ்கிறது?

வானவியல் முழு நிலாவை போலவே, நிலாவும் அதன் அண்மை நிலையில் (perigee) ஒரு கணமே இருக்கும். எனவே, முழு நிலா, அண்மை நிலை (perigee) ஆகிய இரு நிகழ்வுகளும் ஒருபோதும் சரியாக ஒரே நேரத்தில் நடக்காது. 21ஆம் நூற்றாண்டில், ஒரு முழு நிலா ஒருபோதும் சரியாக அண்மை நிலையுடன் (perigee) ஒத்துப்போவதில்லை.

முழு நிலாவும் அண்மை நிலையும் (perigee) 21ஆம் நூற்றாண்டில் நவம்பர் 26, 2034 அன்று காலை 04:02 மணிக்கு (இந்திய நேரம்) மிக நெருக்கமாக நிகழ்கிறது. அப்போது நிலவு வெறும் 356,448 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும். நவம்பர் 26 அன்று காலை 03:36 மணிக்கு முழு நிலா நிகழ்ந்த சுமார் 26 நிமிடங்களுக்குப் பிறகே அண்மை நிலை நிகழும்.

இதேபோல, முழு நிலாவும் அண்மை நிலையும் (perigee) மிக நெருக்கமாக நிகழ்ந்ததற்கு ஓர் எடுத்துக்காட்டு நவம்பர் 14, 2016. அப்போது இரு நிகழ்வுகளுக்கும் இடையிலான நேர இடைவெளி 2 மணிநேரம் 29 நிமிடங்களுக்கும் குறைவாக இருந்தது. கிட்டத்தட்ட வானவியல் முழுநிலா நிலையும், நிலவு அண்மை நிலையை அடைவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததாகக் கூறலாம்.

இருப்பினும், நடைமுறையில், "90 சதவிகித விதி" பயன்படுத்தப்படுகிறது. அதாவது, முழு நிலா கட்டம், நிலவு ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மையில் (perigee) 90%-க்குள் இருக்கும்போது நிகழுமானால், பூமியில் இருந்து பார்க்கும்போது முழு நிலவின் அளவு (பார்வைக்கோணம்) கணிசமாகக் கூடும். இதைத்தான் சூப்பர் மூன் என்கிறார்கள். மேலும் இந்தக் கட்டத்தில் பூமியின் மையத்தில் இருந்து நிலாவின் மையம் 3,67,607 கிலோமீட்டருக்கு குறைவாக இருக்கும்.

சூப்பர்மூன் என்பது என்ன? எங்கே, எப்போது காணலாம்?

பட மூலாதாரம்,Costfoto/NurPhoto via Getty Images

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வானவியல் முழு நிலா நிகழ்வுக்கு முன்னும் பின்னும் 24 மணிநேரத்திற்குள் நிலவு அண்மை நிலைப் புள்ளியைக் (perigee) கடந்தால், அது 'சூப்பர் மூன்' என்று வகைப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஆண்டின் முதல் வானவியல் முழு நிலா, ஜனவரி 14 அன்று காலை 03:58 மணிக்கு நிகழ்ந்தது. அப்போது நிலவு 3,78,038 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

நிலவு அதன் அண்மை நிலைப் புள்ளியை (perigee) ஜனவரி 8 அன்று காலை 05:06 மணிக்கு அடைந்தது, இது முழு நிலாவுக்கு சுமார் 142 மணிநேரம் 52 நிமிடங்களுக்கு முன்னதாகும். எனவே, அது ஒரு சூப்பர் மூன் அல்ல.

இதற்கு மாறாக, நவம்பர் 5 அன்று மாலையில், 18:50 மணிக்கு முழு நிலா நிகழ்ந்தது. அப்போது நிலவு 3,56,852 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது மற்றும் நவம்பர் 6 அன்று காலை 04:00 மணிக்கு அண்மை நிலைப் புள்ளியைக் (perigee) கடந்தது. இது முழு நிலா நிகழ்வுக்கு சுமார் 9 மணிநேரம் 10 நிமிடங்களுக்குப் பிறகு நிகழ்ந்தது. எனவே, இதுவே ஒரு சூப்பர் மூன்.

சூப்பர் மூன்கள் தொடர்ச்சியாகவே வரும்

ஒவ்வோர் ஆண்டும், மூன்று அல்லது நான்கு சூப்பர் மூன்கள் அடுத்தடுத்து நிகழும். நிலவின் இரண்டு இயக்கங்கள் சூப்பர் மூனின் கால அலவைத் தீர்மானிக்கின்றன. ஒரு முழு நிலவு நிலையில் இருந்து மறுபடியும் முழுநிலவு நிலையை அடைய சுமார் 29.5306 நாட்கள் ஆகும். இருப்பினும், பூமியைச் சுற்றி அண்மை நிலையில் இருந்து மறுபடி அதே அண்மை நிலைக்கு (perigee to perigee) வந்து சேர சுமார் 27.5545 நாட்கள் ஆகும்.

இந்த இரண்டு சுற்றுகளும் ஒத்துப்போகும்போது சூப்பர் மூன் ஏற்படுகிறது. இந்த இரண்டு காலங்களுக்கு இடையிலான சிறிய வித்தியாசம் காரணமாகத்தான் ஆண்டுதோறும் வெவ்வேறு மாதங்களில் சூப்பர் மூன்கள் உருவாகின்றன.

இந்த ஆண்டில் (2025) அக்டோபர் 7, நவம்பர் 5, டிசம்பர் 4 ஆகிய அடுத்தடுத்த முழுநிலவுகள் சூப்பர் மூன்கள். இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 3, 2026 முழுநிலவும் சூப்பர் மூன் தான். அடுத்த ஆண்டில்(2026), நவம்பர் 24, டிசம்பர் 24 ஆகிய இரண்டும் சூப்பர் மூன். 2027ஆம் ஆண்டில், சூப்பர் மூன் ஜனவரி 22, பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில் நிகழும்.

சூப்பர்மூன் என்பது என்ன? எங்கே, எப்போது காணலாம்?

பட மூலாதாரம்,Getty Images

வானியல் கருத்தல்ல

"சூப்பர் மூன்" என்ற கருத்து கிரகணம் போன்ற மெய்யான வானியல் நிகழ்வல்ல. எனினும் கடந்த சில ஆண்டுகளில் பொது மக்களிடையே கணிசமான உற்சாகத்தையும் ஊடக கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த 1979ஆம் ஆண்டு டெல் ஹோரோஸ்கோப் (Dell Horoscope) இதழில் அமெரிக்க ஜோதிடர் ரிச்சர்ட் நோலே (Richard Nolle) எழுதிய கட்டுரையைத் தொடர்ந்தே சூப்பர் மூன் என்ற கருத்து பிரபலமானது.

அதில், "புது நிலா அல்லது முழு நிலா, நிலவு ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மையில் (90 சதவிகிதத்திற்குள்) இருக்கும்போது நிகழ்வது சூப்பர் மூன்" என்று நோலே வரையறை செய்தார். ஏன் இந்த அளவுகோல் என்பதற்கு எந்தவித விளக்கத்தையும் அவர் தரவில்லை. எனவே இது வெறும் கருத்து மட்டுமே.

சூப்பர் மூனின் இயக்க முறைக்குப் பின்னாலுள்ள நிலவின் இயக்கம் குறித்துப் பண்டைய காலம் தொட்டே அறிந்திருந்தனர். 29.5 நாட்களுக்குப் பிறகு முழு நிலா மறுபடி மறுபடி வரும் சுழற்சியை எளிதாக அறிந்த பண்டைய மக்கள் மேலும் கூர்ந்து நிலவின் இயக்கத்தைக் கவனித்தபோது வேறொரு விசித்திரமான இயக்கத்தையும் கண்டார்கள்.

அதாவது, விண்மீன்களின் பின்னணியில் நிலவின் தினசரி இயக்கம் சீராக அமையவில்லை. சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் இயங்கியது.

இன்று நிலவின் இந்த விசித்திர இயக்கத்திற்குப் பின்னாலுள்ள விதியை நாம் அறிவோம். கெப்லர் மூன்றாவது விதியின்படி நீள்வட்டப் பாதையில் செல்லும்போது நிலவு போன்ற வான்பொருள் அண்மைப் புள்ளிக்கு அருகே வேகமாகச் செல்லும்; தொலைவுப் புள்ளிக்கு அருகே மெதுவாகச் சுற்றும். அதாவது அது பூமிக்கு மிக அருகிலுள்ள அண்மை நிலையில் (perigee) இருக்கும்போது சராசரியைவிட வேகமாகவும், பூமியில் இருந்து மிகத் தொலைவிலுள்ள தொலைவு நிலையில் (apogee) இருக்கும்போது வழக்கத்தைவிட மெதுவாகவும் நகரும்.

வானியலாளர்கள் வேகத்தில் உள்ள இந்த வித்தியாசத்தை 'பிறழ்வு' (anomaly) என்று குறிப்பிடுகிறார்கள். நிலவு அண்மை நிலையில் இருந்து தொடங்கி மீண்டும் அண்மை நிலையை அடைந்து ஒரு சுழற்சியை முடிப்பதற்கு எடுக்கும் காலத்தை 'நிலவின் பிறழ் மாதம்' (anomalistic month) என்பார்கள்.

பண்டைய பாபிலோனிய வானியலாளர்கள் முதல் இந்திய வானியலாளர்கள் வரை பலரும் நிலவின் வேகத்திலுள்ள இந்த மாறுபாட்டை (பிறழ்வை, anomaly) அறிந்திருந்தனர். இந்திய சித்தாந்த வானியலில், நிலவின் மெதுவான இயக்கம் 'மந்தம்' என்றும், வேகமான இயக்கம் 'சீக்கிரம்' என்றும் அழைக்கப்பட்டது.

வாஸிஷ்ட சித்தாந்தம் பிறழ் மாதத்திற்கு (anomalistic month) இரண்டு வெவ்வேறு கால அளவுகளைப் பதிவு செய்கிறது. முதலாவது சற்று எளிமையானது: 248/9 நாட்கள், அல்லது சுமார் 27.5556 நாட்கள். இதை மெய் அளவோடு ஒப்பிட்டால் வெறும் சுமார் 0.00104 நாட்கள் மட்டுமே வேறுபடுகிறது.

மற்றொரு பகுதியில், பிறழ் மாத காலம் 3031/110 நாட்கள் என்ற மிகத் துல்லியமான மதிப்பீட்டைத் தருகிறது. இது சுமார் 27.5545 நாட்களுக்குச் சமம். அதாவது மெய் அளவிலிருந்து வெறும் 0.00000579 நாட்கள் மட்டுமே வேறுபடுகிறது. அவ்வளவு துல்லியமாக உற்றுநோக்கி நிலவின் இயக்கத்தைப் பண்டைய வானவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clydzv34p70o

சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்கள் - கிரிக்கெட் பந்து அளவு குப்பையால் சிக்கல்

2 months 1 week ago

சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்கள் - கிரிக்கெட் பந்து அளவு குப்பையால் அடுத்தடுத்த சிக்கல்

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • த. வி.வெங்கடேசுவரன்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் இன்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில், சென் தோங் தலைமையில், வாங் ஜீ மற்றும் சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர் குழு, சீனாவின் தியான்கொங் விண்வெளி நிலையத்தை அடைந்தது.

சுமார் 200 நாட்களுக்கு மேல் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்து சாதனை படைப்பது இவர்களின் நோக்கமாக இருந்தது.

சீன தாய்கோனாட்டுகள் (சீனா தனது விண்வெளி வீரர்களை 'தாய்கோனாட்' என அழைக்கிறது) நீண்டகாலம் விண்வெளியில் தங்கிய சாதனையைப் படைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், தனது மூன்று விண்வெளிப் பயணங்களில் மொத்தமாக 400 நாட்கள் விண்வெளியில் கழிக்கும் சாதனையை குழுத் தலைவர் சென் தோங் படைப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்தச் சாதனைகளை நிறைவேற்றிய பின், நவம்பர் 5-ஆம் தேதி புகழுடன் வீடு திரும்புவதே இவர்கள் திட்டம்.

ஆனால், ஒரு சிறிய விண்வெளிக் குப்பை திடீர் என்று வந்து, தலைவிதியையே மாற்றி விட்டது.

விண்வெளிக் குப்பை மோதலால், மூவரும் பூமி திரும்பப் பயணிக்க வேண்டியிருந்த சென்சோ-20 விண்கலம் பழுதடைந்தது. எனவே, அதில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் எப்படி பூமிக்குத் திரும்புவார்கள் என்பதே கேள்விக்குள்ளானது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

75a09730-c92f-11f0-9fb5-5f3a3703a365.jpg

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்சோ-21 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டபோது

விண்ணில் சிக்கிய குழு

பூமி திரும்பும் பயணத்திற்காக விண்கலத்தைத் தயார்படுத்தும் பரிசோதனையின் போது, விண்கலத்தின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல்கள் இருப்பதை இவர்கள் கண்டறிந்தனர்.

சுமார் கிரிக்கெட் பந்து அளவுக்கு, 10 சென்டிமீட்டர் விட்டம் உள்ள ஒரு விண்வெளிக் குப்பை, வேகமாகப் பாய்ந்து வந்து சென்சோ-20-ஐ மோதி சேதப்படுத்தியது எனக் கருதப்படுகிறது.

விண்கலத்தின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்படுத்தும் அளவுக்கு பலமான மோதல் ஏற்பட்டிருந்தால், அதன் தொடர்ச்சியாக விண்கலத்தின் வெப்பப் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்தது. எனவே, அந்த விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவது சாத்தியமற்றதாகிவிட்டது.

கடந்த ஆண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோர் தொழில்நுட்பக் கோளாறுகளால் பல மாதங்கள் சிக்கிக்கொண்ட சம்பவத்தைப் போன்றே, இப்போது சென்சோ-20 குழுவினரும் விண்ணில் சிக்கிக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சீன விண்வெளி நிலையம்

சுமார் 390 கிலோமீட்டர் தூரத்தில் பூமியைச் சுற்றி வரும் தியான்கொங் எனும் இந்த சீன விண்வெளி நிலையம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ஒப்பிடும்போது அதன் ஆறில் ஒரு பங்கு அளவே உள்ளது. அடுத்தடுத்த கட்டுமானத்தில் விரிவாக்கம் செய்ய சீனா உத்தேசித்துள்ளது.

மூன்று பேர் 180 நாட்கள் வரை வசதியாக தங்கிச் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டாலும், பணிக்குழு மாறும் நாட்களில் ஆறு பேரையும் தற்காலிகமாக தங்க வைக்க முடியும்.

பொதுவாக, விண்வெளி நிலையத்தில் மூவர் தங்கி ஆய்வு செய்வார்கள். எந்த விண்கலத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்தார்களோ, அதே விண்கலம் தயார் நிலையில் இருக்கும். அவசரகால சூழ்நிலையில் பூமிக்குத் திரும்புவதற்கான மீட்பு ஊர்தியாகவும் அதே விண்கலம் செயல்பட தயாராக இருக்கும்.

தங்கி செயல்படும் குழுவின் பணி முடியும் தருவாயில், புதிய பணிக்குழுவினர் வேறொரு விண்கலத்தில் விண்வெளி நிலையத்தை வந்தடைவார்கள். புதிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, பழைய குழு தங்களைக் கொண்டு வந்த அதே விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவது வழக்கம்.

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளம்

ஆனால், சென்சோ-20 பயன்பாட்டிற்கு உபயோகமற்றதாக ஆகிவிட்டதால், வழக்க நடைமுறையை கைக்கொள்வது சாத்தியமற்றதாக ஆகிவிட்டது.

இந்தச் சிக்கலின் விளைவாக, தியான்கொங் விண்வெளி நிலையத்தில் மூன்று பேருக்குப் பதிலாக ஆறு பேர் தங்கும் நிலைமை ஏற்பட்டது.

எனினும், விண்வெளி நிலையத்தின் தியான்ஹே மைய தொகுதி மற்றும் வென்டியன் ஆய்வகத் தொகுதி ஆகியவற்றில் தலா மூன்று பயணிகள் தூங்கும் வசதிகள் உள்ளன. எனவே, ஆறு பேரும் தங்கி உறங்குவதற்கு இடவசதி சிக்கல் எதுவுமில்லை.

உணவு, தண்ணீர், உபகரணங்கள், ஏவுகல எரிபொருள் போன்றவற்றைச் சுமந்து, தியான்சோ எனும் ஆளில்லா ரோபோட் விண்வெளிக் கலம், சுமார் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை விண்வெளி நிலையத்தை அடையும்.

இதுபோல, கடந்த ஜூலையில், தியான்சோ-9 ரோபோட் விண்கலம் சரக்குகளை ஏற்றி வந்து பொருள்களை வழங்கியது.

எனவே, விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்பவர்களுக்குத் தேவையான பொருள்களில் குறைவேதுமில்லை. தேவை ஏற்பட்டால், அடுத்த தியான்சோ விண்கலம் மூலம் பொருள்களை பூமியிலிருந்து அனுப்பி வைக்க முடியும்.

விண்வெளி 'இசை நாற்காலிகள்' விளையாட்டு

முக்கிய சிக்கல், விண்வெளி நிலையத்தின் மறுசுழற்சி அமைப்பில் ஏற்படும் தாக்கம்தான். மூன்று பேர் கூடுதலாகக் கூடுதல் நாட்கள் தங்குவதால், நீர், ஆக்சிஜன், உணவு போன்றவற்றின் நுகர்வு வீதம் அதிகரிக்கும்.

வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறும் நீரை மறுசுழற்சி செய்து சுத்தம் செய்துதான் பயன்படுத்துவார்கள்.

அதேபோல, சுவாசித்த காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடை நீக்கி, ஆக்சிஜனைப் பிரித்து மீண்டும் மறுசுழற்சி செய்வார்கள். இதுபோன்ற மறுசுழற்சி அமைப்புகள் கொண்டுதான் விண்வெளி நிலையம் மனிதர்கள் வாழத்தகுந்த நிலையைப் பேணுகிறது.

கூடுதல் நபர்கள் தங்கி வாழும்போது, இந்த மறுசுழற்சி அமைப்புகள் மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டியிருக்கும். இதுதான் முக்கிய சாவல்.

எனவேதான், சீன விண்வெளி நிறுவனம் எப்போதும் ஒரு லாங் மார்ச்-2எஃப் ஏவுகலத்தையும், ஒரு மாற்று சென்சோ விண்கலத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது. தேவை ஏற்பட்டால், எட்டரை நாட்களுக்குள் விரைவாக ஏவி விண்வெளி நிலையத்தை அடைந்து விட முடியும்.

சில நாட்கள், பாதுகாப்பாகத் தங்கியிருக்க விண்வெளி நிலையத்தில் அவசரகால ஏற்பாடுகள் உண்டு. அவசரநிலை ஏற்பட்டால், மாற்று விண்கலத்தை ஏவி விண்வெளி நிலையத்தில் உள்ள பயணிகளைக் காப்பாற்றி பூமிக்குக் கொண்டு வர முடியும்.

ரயில் பெட்டிகளை முன்னும் பின்னும் மற்ற பெட்டிகளில் இணைக்க முடியும். அதுபோல, சீன விண்வெளி நிலையத்தில், ஒரே சமயத்தில் அதிகபட்சமாக மூன்று விண்கலங்களை மட்டுமே இணைத்து வைக்க முடியும்.

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென் தோங் தலைமையிலான சென்சோ-20 குழு நவம்பர் 14-ஆம் தேதி பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியது.

அண்மையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் போது, ஏற்கனவே சென்சோ-20, சென்சோ-21 (அடுத்த பணிக்குழு) என்ற இரண்டு குழுக்களின் விண்கலங்களும், சரக்குகளைக் கொண்டு சென்ற தியான்சோ-9 விண்கலமும் இணைக்கப்பட்டிருந்தன. எனவே, புதிய மீட்புக் கலத்தை இணைக்க இடமில்லாமல் போனது.

எனவேதான், 'இசை நாற்காலிகள்' விளையாட்டைப் போன்ற ஒரு தீர்வைச் சீன விண்வெளிப் பொறியாளர்கள் வகுத்தனர். சமீபத்தில் விண்வெளி நிலையத்தை அடைந்த சென்சோ-21-ஐ பயன்படுத்தி, சென்சோ-20 குழுவைப் பூமிக்குக் கொண்டு வருவது.

இதன் மூலம் ஒரு விண்கல இணைப்பு மையம் (Docking Port) காலியாகும். மேலும், விண்வெளி நிலையத்தில் மூவர் மட்டுமே இருப்பார்கள். அடுத்ததாக, ஆளில்லாத நிலையில் சென்சோ-22 விண்கலத்தை ஏவுவது. இந்தச் சென்சோ-22 விண்வெளி நிலையத்தில் மீதமுள்ள மூவருக்கு மீட்பு விண்கலமாகச் செயல்படும். இதுவே திட்டம்.

இதன் விளைவாக, சென் தோங் தலைமையிலான சென்சோ-20 குழு, சென்சோ-21 குழு வந்த விண்கலத்தைப் பயன்படுத்தி, நவம்பர் 14-ஆம் தேதி பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பியது.

சென்சோ-21 இல் சென்ற விண்வெளி வீரர்களான குழுத் தலைவர் சாங் லூ தலைமையில், சாங் ஹோங்க்ஜாங் மற்றும் சீனாவின் இளைய தாய்கோனாட்டான வூ ஃபெய் ஆகிய மூவர் குழு தற்போது தியான்கொங்க் விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது, இவர்கள் பூமி திரும்ப எந்த விண்கலமும் அவர்களுடன் இணைக்கப்பட்ட நிலையில் இல்லை.

மீட்புக் கலத்தை ஏவுதல்

நாளின் எந்த நேரத்திலும் சென்னையிலிருந்து திருச்சிக்குப் பேருந்து இயக்க முடியும். ஆனால், நினைத்த சமயத்தில் எப்போது வேண்டுமென்றாலும் விண்வெளி நிலையத்தை நோக்கி விண்கலத்தை இயக்க முடியாது.

பறந்து செல்லும் பறவையைத் தாக்க, திசையிலும் நேரத்திலும் முன்னே குறி வைப்பது போல, தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் இருந்து விண்கலத்தை ஏவி, பூமியைச் சுற்றி வரும் விண்வெளி நிலையத்தை அடைவது சிக்கலானது.

பூமியின் ஏவுதளத்துக்குச் சரியான நிலையில் விண்வெளி நிலையம் வரும் நேரத்தில் ஏவினால்தான், விண்கலத்தை விண்வெளி நிலையத்தைச் சந்திக்கச் செய்ய முடியும். அடுத்த ஏவல் உகந்த காலம் நவம்பர் 25-ஆம் தேதி கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டது.

அதாவது, பத்து நாட்கள் மட்டுமே எந்த மீட்புக் கலமும் இல்லாமல் மூவர் குழு விண்வெளியில் ஆபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், ஆளில்லாத நிலையில் ஏவப்படுவதால், கூடுதல் உணவு, எரிபொருள் போன்ற சரக்குகளை அனுப்ப முடியும்.

அமெரிக்காவில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரை மீட்பது ஒன்பது மாதங்கள் எடுத்துக்கொண்டதை ஒப்பிடுகையில், சீன நிறுவனம் வெறும் மூன்று வாரங்களில் முழு செயல்பாட்டையும் நிறைவேற்ற உள்ளது.

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்வெளி வீரர்கள் குழுத் தலைவர் சென் தோங்

ஆபத்தை உணர்த்துகிறது

வெற்றிகரமான மீட்பு முயற்சி, சீன விண்வெளி பயணிகளுக்கு பெரும் ஆறுதலாக இருந்தாலும், அது ஒரு பெரும் எச்சரிக்கை மணி. தாழ் விண்வெளிப் பாதையில் (Low Earth Orbit) தினமும் அதிகரித்து வரும் விண்வெளிக் குப்பைகளின் ஆபத்தை இது உணர்த்துகிறது.

1957-ல் சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக்கை (Sputnik) ஏவியதிலிருந்து, உலகின் பல நாடுகளும் நிறுவனங்களும் தங்களின் விண்வெளிப் பயணங்களின் போது, செயலிழந்த செயற்கைக்கோள்கள், ஏவுகலப் பகுதிகள், குப்பைகள் போன்றவற்றை விண்வெளியில் விட்டுவிட்டு வந்துள்ளன.

இதன் விளைவாக, 10 சென்டிமீட்டருக்கு அதிகமான 34,000-க்கும் மேற்பட்ட பொருள்கள், பூமியை மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றன என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. மிளகு அளவுள்ள நுண்குப்பைகளின் எண்ணிக்கை பல லட்சம் எனவும் கூறப்படுகிறது.

துப்பாக்கி தோட்டாவின் வேகத்தை விட பல மடங்கு கூடுதலான வேகத்தில் பயணிக்கும் இந்த நுண்பொருள்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சீனா, விண்வெளி நிலையம், தியான்கொங்

பட மூலாதாரம், Getty Images

விண்குப்பை மோதும் அபாயம் ஏற்பட்டதால், விண்வெளி வீரர்கள் தங்களின் திரும்பும் விண்கலங்களில் புகுந்து, அவசரமாகப் பிரிந்து செல்லத் தயாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன.

1967-இல் ஏற்படுத்தப்பட்ட விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty) மற்றும் 1972-ல் வெளிவந்த பொறுப்பு ஒப்பந்தம் (Liability Convention) போன்ற ஐ.நா. சட்டங்கள், விண்வெளி முயற்சிகள் குறித்த தனித்தனி நாடுகளின் பொறுப்புகளை வரையறுக்கின்றன. ஆனால், விண்வெளிக் குப்பைக்கென தனியான சர்வதேச சட்டம் இல்லை.

'யார் குப்பை செய்கிறார்களோ, அவர்களே அதற்குப் பொறுப்பேற்பது தான் சரி' அல்லவா? எனினும், விண்வெளிக் குப்பை குறித்து யார் பொறுப்பு என்பது குறித்த சர்வதேசச் சட்டங்கள் தெளிவாக இல்லை.

விண்வெளி வணிகம் பெருகி வரும் நிலையில், விண்வெளிக் குப்பை குறித்த வலுவான சர்வதேச சட்ட ஏற்பாட்டை உருவாக்குவது, இக்காலத்தின் மிக முக்கியத் தேவையாக உருவெடுத்துள்ளது.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3w7pgnze5qo

பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம் - வேற்றுக்கிரகம் பற்றிய கதைகளைத் தூண்டியது எப்படி?

2 months 1 week ago

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamani

கட்டுரை தகவல்

  • எலன் சாங்

  • பிபிசி உலக சேவை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இது ஒரு வால் நட்சத்திரம் (comet) என்பதை கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது, வேற்றுக்கிரகவாசிகளின் வருகை மற்றும் மனிதகுலத்தின் முடிவு பற்றிய ஊகங்கள் பரவுவதைத் தடுக்கவில்லை.

3I/அட்லஸ் என்பது நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருந்து (interstellar object) வந்து நமது வானத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பொருள் ஆகும். எனவே அதன் பெயர் "3I" எனத் தொடங்குகிறது.

நமக்குத் தெரிந்த பெரும்பாலான வால் நட்சத்திரத்தைப் போலல்லாமல், இது சூரியனைச் சுற்றி வருவதில்லை. இதன் பாதை மற்றும் வேகத்திலிருந்து இது நமது விண்மீன் மண்டலத்தின் வேறொரு இடத்திலிருந்து வந்திருப்பதுடன் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நமது சுற்றுப்புறப் பகுதியை விட்டு வெளியேறும் ஒருமுறை பயணத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

இதன் சில அம்சங்கள் ஹார்வர்ட் வானியற்பியலாளரான பேராசிரியர் அவி லோப் - மற்றும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத்தில் இது செயற்கையாக இருக்கலாம் என்ற சாத்தியத்தை சிந்திக்கத் தூண்டியுள்ளது.

ஈலோன் மஸ்க் கூட இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ரியாலிட்டி நிகழ்ச்சி நட்சத்திரமான கிம் கர்தாஷியன் கூட எக்ஸ் தளத்தில்: "இருங்கள்.. 3I அட்லஸ் பற்றிய தகவல் என்ன?!!!!!!!!!?????" என்று பதிவிட்டார்.

ஆனால் நாசாவும் மற்றும் வானியலாளர்களின் பெரும்பான்மையினரும் இதுவரை செய்யப்பட்ட அனைத்து அவதானிப்புகளையும் இயற்கையான, வேற்றுக்கிரகவாசிகள் அல்லாத நிகழ்வுகளால் விளக்க முடியும் என்று தெளிவாக வலியுறுத்துகின்றனர்.

இதுவரை நமக்குத் தெரிந்தது என்ன?

3I/அட்லஸ் முதன்முதலில் ஜூலை 2025-இல் சிலியில் உள்ள நாசாவால் நிதியளிக்கப்பட்ட அட்லஸ் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முதல் இது உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், Atlas/University of Hawaii/Nasa

படக்குறிப்பு, அட்லஸ் தொலைநோக்கி, பூமியுடன் மோதக்கூடிய அபாயம் உள்ள பொருட்களைக் கண்டறிய இரவு வானத்தை ஆய்வு செய்கிறது, இருப்பினும் 3I/அட்லஸ்ஸால் அத்தகைய ஆபத்து இல்லை என்று வானியலாளர்கள் கூறுகிறார்கள்.

"நமக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன, அதன் பிறகு இந்தப் பொருளை நாம் மீண்டும் பார்க்க மாட்டோம்," என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியரான கிறிஸ் லின்டாட் கூறுகிறார். "அதனால் எங்களால் முடிந்தவரை அதிகமான தரவுகளைப் பெற நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்."

சிலர் இது நியூயார்க்கின் மன்ஹாட்டன் அளவு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து கிடைத்த அளவீடுகள் இதன் விட்டம் 5.6 கிலோமீட்டரோ அல்லது 440 மீ சிறியதாகவோ இருக்கலாம் என்று கூறுகின்றன.

இது கண்டுபிடிக்கப்பட்டபோது விநாடிக்கு சுமார் 61 கிமீ வேகத்தில் விண்வெளியில் விரைந்து கொண்டிருந்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறுகிறது.

இது எங்கிருந்து வந்தது?

3I/அட்லஸ் ஒரு தொலைதூர நட்சத்திர அமைப்பின் பிறப்பின் போது உருவாகி, பில்லியன் கணக்கான ஆண்டுகளாக விண்மீன் இடையேயான வெளியில் (interstellar space) பயணித்து வந்துள்ளது என்று வானியலாளர்கள் நினைக்கிறார்கள்.

இது நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வால் நட்சத்திரமாக இருக்கலாம்; ஒரு ஆய்வு அதன் வயதை 7 பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள், இது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான நமது சொந்தச் சூரிய குடும்பத்திற்கு முன்பே இருந்ததாகும்.

"இதன் பொருள் நமது விண்மீன் மண்டலத்தின் வரலாற்றின் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி இது நமக்குத் தெரிவிக்கிறது," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார்.

இந்த வால் நட்சத்திரம் தனுசு விண்மீன் குழுவின் (constellation Sagittarius) திசையில் நம்மிடம் வந்தது, இது நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தின் மையம் இருக்கும் இடமாகும்.

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், M Hopkins/Ōtautahi-Oxford team; Base map: Esa/Gaia/DPAC, S Payne-Wardenaar

படக்குறிப்பு, வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட பாதை) நமது சூரியன் (மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட பாதை) போலவே, நமது பால்வெளி விண்மீன் மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது.

இது பூமியில் இருந்து பார்க்க முடியாதவாறு அக்டோபரில் சூரியனுக்குப் பின்னால் கடந்து சென்றது, இதனால் அது ஏன் "மறைந்திருந்தது" என்பது பற்றிய அவதானிப்புகளுக்கு தூண்டுகோலானது.

ஆனால், பல விண்வெளி ஆய்வுச் சாதனங்கள் வால் நட்சத்திரத்தைக் கண்காணித்து வருகின்றன, இது ஏற்கெனவே தரையில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரியனுக்கு அருகில் வெப்பமடைதல்

3I/அட்லஸ் சூரியனை நோக்கிய தனது பயணத்தில் வெப்பமடைந்து, ஈர்ப்பு விசை அல்லாத முடுக்கத்தைக் (non-gravitational acceleration) காட்டியது - அதாவது ஈர்ப்பு விசையால் நகரும் வேகம் என எதிர்பார்க்கப்படுவதை விட அதிக வேகமாக நகர்ந்தது.

ஒரு "தொழில்நுட்ப ராக்கெட் எஞ்சின்" இதை உந்தித் தள்ளுவதாக இருக்கலாம் என்று பேராசிரியர் லோப் ஊகித்தார், இதனால் வேற்றுக்கிரக விண்கலம் பற்றிய தலைப்புச் செய்திகள் மற்றும் மீம்கள் இணையத்தில் வெள்ளம்போல் பெருகின.

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/K Meech (IfA/U Hawaii); Processing: J Miller, M Zamani

படக்குறிப்பு, வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் சூரிய குடும்பம் வழியாக நகரும்போது அதன் வண்ணமயமான பாதையை ஹவாயில் உள்ள ஜெமினி வடக்குத் தொலைநோக்கி படம்பிடித்தது.

ஆனால் வால் நட்சத்திரங்களை அளவிடுவதில் நிபுணத்துவம் வாய்ந்த பல விஞ்ஞானிகள், இந்த முடுக்கம் வாயு வெளியேற்றத்தின் (outgassing) வரம்புக்குள் தான் உள்ளது என்று கூறுகின்றனர் என்று பேராசிரியர் லின்டாட் விளக்குகிறார்.

வெப்பமடையும் வால் நட்சத்திரத்தில் உள்ள சில பொருட்கள் திடப் பனிக்கட்டியிலிருந்து வாயுவாக மாறும் போது, மேகம் மற்றும் தூசி தாரைகளை வெளியேற்றுகிறது. இந்த தாரைகள், உந்துவிசைகளைப் போலச் செயல்படுகின்றன.

உண்மையில், 3I/அட்லஸ் அதி தீவிரமாகச் செயல்படுவதாகத் தோன்றியது.

ஒரு வால் நட்சத்திரத்தில் இருந்து வெளியேற்றப்படும் தூசி பொதுவாக ஒளியைப் பிரதிபலிக்கும், இது சூரியனை நெருங்கும்போது வால் நட்சத்திரத்தைப் பிரகாசமாக்குகிறது. 3I/அட்லஸ் மிக விரைவாகப் பிரகாசமானது.

இது சிவப்பு நிறத்திலிருந்து நீல நிறமாக மாறியிருக்கலாம் என்ற சில தகவல்களும் உள்ளன, இதனால் ஒரு வேற்றுக்கிரக ஆற்றல் மூலத்தைப் பற்றிய கோட்பாடுகள் தூண்டப்பட்டன.

வானியலாளர்கள் இது ஏன் என்று துல்லியமாகக் கண்டறிய இன்னும் முயற்சித்து வருகின்றனர். ஆனால், ஏராளமான இயற்கையான விளக்கங்கள் உள்ளன என்று கூறுகின்றனர்.

இந்த விரைவான பிரகாசமடைதல், "அங்கு நிறைய பனிக்கட்டிகள் உள்ளன என்பதைக் குறிக்கலாம்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார்.

நிற மாற்றம் உண்மையாக இருந்தாலும், மற்றும் அது அளவிடப்பட்ட விதத்தில் ஏற்பட்ட தவறாக இருந்தாலும் இது மாறும் வேதியியலைக் குறிக்கலாம்.

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், Nasa/SPHEREx

படக்குறிப்பு, ஒளியியல் மற்றும் அருகிலுள்ள அகச்சிவப்பு ஒளியால் வானத்தை ஸ்கேன் செய்யுநாசாவின் SPHEREx ஆய்வகம், வால் நட்சத்திரம் 3I/அட்லஸ்ஸில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீர் பனிக்கட்டியை அளவிட்டது.

"நாம் உண்மையில் செய்ய விரும்புவது வால் நட்சத்திரத்தின் உள் பகுதி எதனால் ஆனது என்பதைக் கண்டுபிடிப்பதுதான்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார்.

மர்மமான வேதியியல்

3I/அட்லஸ்ஸின் ரசாயன அமைப்பைப் புரிந்துகொள்வது, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அது தோன்றிய தொலைதூர நட்சத்திர அமைப்பு எப்படி இருந்தது என்பதைப் பற்றி நமக்குத் தெரிவிக்கலாம்.

தொலைநோக்கிகள் இதுவரை வால் நட்சத்திரத்தில் நிறைய கார்பன் டை ஆக்சைடைப் பார்த்துள்ளன.

மேலும் இது நிக்கல் என்ற உலோகத் தனிமத்தில் செறிவூட்டப்பட்டதாகத் தெரிகிறது - இந்த அவதானிப்பு வேற்றுக் கிரக விண்கலம் என்ற கருத்தை தீவிரப்படுத்தியுள்ளது, ஏனெனில் நமது சொந்த விண்கலங்களின் பல பாகங்களில் நிக்கல் உள்ளது.

தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் பாட்காஸ்டில் பேசிய ஈலோன் மஸ்க், முழுவதுமாக நிக்கலால் செய்யப்பட்ட ஒரு விண்கலம் மிகவும் கனமாக இருக்கும், அது "ஒரு கண்டத்தையே அழிக்கக்கூடும்" என்று குறிப்பிட்டார்.

ஆனால், 2019-இல் கண்டுபிடிக்கப்பட்ட இண்டர்ஸ்டெல்லார் வால்நட்சத்திரமான 2I/போரிசோவ் உட்பட மற்ற வால்மீன்களிலும் நிக்கல் காணப்பட்டுள்ளது.

மிகுதியான நிக்கல் இருப்பது 3I/அட்லஸ் உருவான சூழலை பிரதிபலிக்கலாம் அல்லது அதன் நீண்ட விண்மீன் பயணத்தில் வால் நட்சத்திரம் விண்வெளிக் கதிர்வீச்சால் தாக்கப்பட்டிருக்கலாம். இது அதன் மேற்பரப்பு வேதியியலை மாற்றியிருக்கலாம் என்று ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

வெளியேறும் வழியில்

அக்டோபர் மாத பிற்பகுதியில் சூரியனைத் தாண்டிச் சென்ற 3I/அட்லஸ் விரைவில் விடைபெறும்.

இது டிசம்பர் 19 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில், 270 மில்லியன் கிமீ என்ற பாதுகாப்பான தூரத்திற்கு வரும். இது சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் தூரத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தூரம் ஆகும்.

வால் நட்சத்திரம், 3I/அட்லஸ், நாசா

பட மூலாதாரம், Spacecraft: Esa/ATG medialab; Jupiter: Nasa/Esa/J Nichols (Uni of Leicester)

படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் வியாழன் பனிக்கட்டி நிலவுகள் எக்ஸ்ப்ளோரர் (Juice), வால் நட்சத்திரம் 3I/அட்லஸ் சூரியனுக்கு மிக அருகில் கடந்து சென்ற பிறகு தீவிர நிலையில் இருக்கும்போது, அதை நவம்பர் மாதத்தில் உற்று நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல விண்வெளி மற்றும் தரை அடிப்படையிலான ஆய்வகங்கள் அதிக அளவீடுகளை எடுக்கமுடியும் என நம்புகின்றன, மேலும் பொழுதுபோக்கு வானியலாளர்கள் கூட 8-இன்ச் தொலைநோக்கி மூலம் அதைப் பார்க்க முடியும் என்கின்றனர்.

இதுவரை மூன்று விண்மீன் இடையேயான வால் நட்சத்திரங்களை மட்டுமே பார்த்திருப்பதால், இந்த பண்டைய பயணிகளைப் பற்றி நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

"விண்மீன் மண்டலத்தில் இவற்றைப் போல பில்லியன்கணக்கானவை இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம், நாம் மூன்றைதான் பார்த்திருக்கிறோம்," என்று பேராசிரியர் லின்டாட் கூறுகிறார். "இது மிகவும் ஆரம்ப நிலை என்பதால் இது அசாதாரணமானதா என்று சொல்வது கடினம்."

சிலியில் உள்ள வேரா ரூபின் ஆய்வகம் போன்ற சக்திவாய்ந்த புதிய தொலைநோக்கிகள் மூலம், அடுத்த பத்தாண்டுகளில் மேலும் டஜன் கணக்கானவற்றைக் கண்டுபிடிப்போம் என்று அந்த வானியற்பியலாளர் நம்புகிறார்.

"அப்போது, எந்த வகையான நட்சத்திரங்கள் கோள்களை உருவாக்குகின்றன, பொதுவான கலவைகள் என்னென்ன என்பது பற்றி நம்மால் சொல்ல முடியும். மேலும் நமது சூரிய குடும்பம் இந்தப் படத்தில் எப்படிப் பொருந்துகிறது என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை நாம் பெறலாம்," என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz9187wnky3o

இங்கிலாந்தில் AI யால் உருவாக்கப்படும் படங்களை கண்டறிய புதிய நடவடிக்கை!

2 months 3 weeks ago

Artificial-Intelligence-1-770x400-1.jpg?

இங்கிலாந்தில் AI யால் உருவாக்கப்படும் படங்களை கண்டறிய புதிய நடவடிக்கை!

இங்கிலாந்தில் AI-யால் உருவாக்கப்படும் துஷ்பிரயோரயோகங்களை சமாளிக்க இங்கிலாந்தின் புதிய சட்ட மூலம் உதவும் என கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

அதன்படி, AI மாதிரிகள் மூலம் உருவாக்கப்படும் போலி படங்களை அவை போலி என உறுதிப்படுத்துவதற்கும் அவற்றைச் சரிபார்ப்பதற்கும் இந்த புதிய விதிகள் உதவும் என கூறப்படுகிறது.

AI-யால் உருவாக்கப்பட்ட விடயங்களை பயன்படுத்தும் குழந்தைகளை நிகழ்நிலையில் பாதுகாக்க இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலம் உதவுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை, Internet Watch Foundation இன்டர்நெட் வாட்ச் ஃபவுண்டேஷன் (IWF) போன்ற நிறுவனங்களும், AI டெவலப்பர்களும், சட்டத்தை மீறாமல் அத்தகைய உள்ளடக்கத்தை அவதானித்து அதனை சோதனை செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1452604

இந்தியா செலுத்திய 'பாகுபலி' ராக்கெட்டின் முக்கியத்துவம் என்ன? 4 முக்கிய அம்சங்கள்

2 months 4 weeks ago

Bahubali Rocket, LVM3, ISRO

பட மூலாதாரம், X/@isro

படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • சாரதா வி

  • பிபிசி தமிழ்

  • 3 நவம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய மண்ணிலிருந்து, இது வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை சாத்தியமாக்கியது LVM3-M5 ராக்கெட். இது'பாகுபலி' ராக்கெட் என்று பரவலாக அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் ஞாயிறன்று 4410 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இதுவரை வேறு நாடுகளை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இனி அந்த நிலைமை இல்லை. இது இந்திய விண்வெளி துறைக்கு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன், "செயற்கைகோள் ஏவுதல் கடினமாகவும் சவாலானதாகவும் இருந்தது. வானிலை ஒத்துழைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் வெற்றியடைந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

இந்திய கப்பற்படையின் பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் குறைந்தது 15 ஆண்டுகள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Bahubali Rocket, LVM3, ISRO

"இந்தியாவின் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் CMS-03 ஐ விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள்" என்று பிரதமர் மோதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகுபலி திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில், " இந்தியாவுக்கு இது பெருமையான தருணம். இந்த ராக்கெட் தனது வலிமை மற்றும் பளுவின் காரணமாக பாகுபலி என்றழைக்கப்படுவதால் பாகுபலி (திரைப்பட) குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

LVM3 ராக்கெட் சந்திரயான் -3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாகும். இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவேதான் ககன்யான் திட்டத்திலும் பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவிக்கிறது.

இதற்கு முன்பு செலுத்தப்பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் எவை?

இந்தியா இதற்கு முன்பு, CMS-03 செயற்கைக்கோளை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.

2018-ம் ஆண்டு ஏவப்பட்ட GSAT 11 செயற்கைக்கோள் 5,854 கிலோ எடை கொண்டது. இது தென் அமெரிக்காவில் பிரான்ஸ் நாட்டின் நேரடி அதிகாரத்தின் கீழ் இருக்கும் ஃப்ரெஞ்ச் கியானா என்ற பகுதியில் கோரோவ் என்ற இடத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து Ariane-5 VA-246 எனும் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் முக்கிய ஏவுதளங்களில் ஒன்றாகும்.

Geostationary orbit -ல்(புவிநிலை வட்டப்பாதை) இதை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் வெவ்வேறு நாடுகளால் ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் சில : பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தால் 2013-ம் ஆண்டு ஏவப்பட்ட Inmarsat-4A F4 எனும் செயற்கைக்கோள் 6469 கிலோ எடை கொண்டிருந்தது. 2012-ம் ஆண்டு ஏவப்பட்ட EchoStar XVII எனும் அமெரிக்க செயற்கைக்கோள் 6100 கிலோ எடை கொண்டிருந்தது.

இருந்தபோதிலும் CMS-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது நான்கு காரணங்களால் இந்தியாவுக்கு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

1. தற்சார்பு

இந்தியா இந்த ராக்கெட்டை கொண்டிருப்பதன் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பிற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறையும். இதனால் ஏவுதல் செலவு குறையும் என்பதை தாண்டி தற்சார்பு நிலைக்கு இந்தியா செல்லும்.

2013-ம் ஆண்டு GSAT 7 எனும் தகவல் தொடர்பு செயற்கைகோளை ஃப்ரெஞ்ச் கியானாவிலிருந்து இஸ்ரோ ஏவியுள்ளது.

இந்த செயற்கைக்கோளின் காலம் முடிவடைவதால் அதை அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக GSAT-R எனப்படும் CMS-03 செயற்கைக்கோளை ஞாயிறன்று விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

இந்திய கப்பற்படைக்கு பயன்படக்கூடிய தகவல்களை வழங்குவதே இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும்.

"பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களுக்காக செலுத்தப்படும் செயற்கைக்கோளை வேறு நாட்டிலிருந்து ஏவுவதை விட இந்திய மண்ணிலிருந்தே ஏவுவது இந்தியாவின் தகவல்கள் பாதுகாக்கப்பட உதவும். எனவே, குறைவான செலவு, தற்சார்பு, பாதுகாப்பு என பல்வேறு விதங்களில் இது உதவும்" என்று பிபிசி தமிழிடம் பேசிய, மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

Bahubali Rocket, LVM3, ISRO

அதிகபட்ச எடையை விட கூடுதல் எடையை ஏந்தி சென்றது எப்படி?

LVM3 ராக்கெட் அதிகபட்சமாக 4.2 டன் (4200 கிலோ) எடையை Geosynchronous Transfer Orbit (GTO) வரையிலும், 8000 கிலோ எடையை குறைந்த புவி வட்டப் பாதை வரையிலும் ஏந்தி செல்ல முடியும்.

ஆனால் ஞாயிற்றுகிழமை GTO-வில் ஏவப்பட்ட CMS-03 செயற்கைக்கோள் 4410 கிலோ எடை கொண்டது. ராக்கெட்டின் அதிகபட்ச எடை திறனை விட 200 கிலோ அதிகமாக இருந்தாலும், இது எப்படி சாத்தியமானது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன்விளக்கினார்.

"செயற்கைக்கோளின் கூடுதல் எடையை ஏந்தி செல்லும் வகையில் ராக்கெட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதீத வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்கும் வகையில் ராக்கெட்டில் வெப்ப பாதுகாப்பு அமைப்பு இருக்கும். பொதுவாக LVM3 ராக்கெட்டில் இது 245 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த முறை விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் வெப்ப பாதுகாப்பு அமைப்பின் எடை 165 கிலோ மட்டுமே.

எடை குறைந்தாலும், பாதுகாப்பு குறையாதவாறு அமைய தேவையான ஆய்வுகள் செய்த பிறகே இந்த எடை முடிவு செய்யப்பட்டது. செயற்கைக்கோளை சற்று குறைந்த உயரத்தில் வட்டப் பாதையில் நிலை நிறுத்தினோம். இப்படி வேறு சில மாற்றங்களும் செய்து, இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம்" என்றார்.

LVM3 ராக்கெட்டின் மற்றொரு வடிவமும் தயாராகி வருகிறது என்கிறார் த வி வெங்கடேஸ்வரன். அதில் 6டன் முதல் 8 டன் வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும்.

"இப்போது 4 டன் எடை திறன் கொண்ட ராக்கெட்டை 4.4 டன் வரை ஏந்தி செல்ல செய்துள்ளனர். வருங்காலத்தில் 6டன் முதல் 8 டன் வரையிலான எடையை ஏற்றிச் செல்வதற்கான ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வந்துவிட்டால், இந்தியா எந்த நாட்டையும் நம்பியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்ற நிலையை எட்டும்" என்கிறார் அவர்.

ஏனென்றால் விண்ணில் செலுத்தப்படக்கூடியவை பொதுவாக அந்த எடைக்குள்ளேயே இருக்கும் என்கிறார் முனைவர் த வி வெங்கடேஸ்வரன்.

" இனி வரும் காலங்களில் ஸ்மார்ட் மெட்டீரியல்களே பயன்படுத்தப்படும். அதாவது குறைந்த எடையில் அதிக திறன் கொண்ட பொருட்கள். எனவே விண்ணில் செலுத்த வேண்டியவற்றின் எடை பெரும்பாலும் அந்த வரம்புக்குள் இருக்கும்" என்றார்.

Bahubali Rocket, LVM3, ISRO

பட மூலாதாரம், முனைவர் த வி வெங்கடேஸ்வரன்

படக்குறிப்பு, முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

2. க்ரையோஜெனிக் என்ஜின் மறு- இயக்கம் (Cryogenic restart)

க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ராக்கெட்டின் என்ஜினை மீண்டும் செயல்பட துவக்குவது (Cryogenic restart) முக்கியமான செயலாகும்.

க்ரையோஜெனிக் என்ஜின் என்பது மிக குளிர்ந்த நிலையில் திரவ ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற எரிபொருளை பயன்படுத்துவதாகும். இந்த என்ஜினை பயன்படுத்தும் ராக்கெட் ஒரு இடத்தை சென்றடைந்த பிறகு, அங்கிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல அதை மீண்டும் இயக்கத் தொடங்குவது cryogenic restart எனப்படும்.

இந்த தொழில்நுட்பம் விண்வெளி துறையில் இருக்கும் பிற நாடுகளால் இந்தியாவுக்கு மறுக்கப்பட்டதாகும், இதை இந்தியாவே செய்து காட்டியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஊடகங்களிடம் பேசினார்.

"செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு 100 விநாடிகள் கழித்து, மீண்டும் ராக்கெட்டை இயக்கினோம். இதனை நிலத்தில் பல தடவை வெற்றிகரமாக செய்து பார்த்துள்ளோம். ஆனால் முதல் முறையாக இதனை விண்வெளியில் செய்து பார்த்துள்ளோம். அது வெற்றி அடைந்துள்ளது" என்று நாராயணன் கூறினார்.

க்ரையோஜெனிக் மறு துவக்கம் என்பது ஒரு வாகனத்தை நிறுத்திவிட்டு, அதை மீண்டும் ஸ்டார்ட் செய்வது போல என விளக்குகிறார் த வி வெங்கடேஸ்வரன்.

"அப்படி மீண்டும் இயக்கும் போது சிக்கல் இல்லாமல் அதை எளிதாக இயக்க முடிகிறதா என்பதுதான் கேள்வி, அதை தான் சோதித்துப் பார்த்துள்ளனர்." என்கிறார்.

Bahubali Rocket, LVM3, ISRO

பட மூலாதாரம், X/@isro

படக்குறிப்பு, க்ரையோஜெனிக் மறு துவக்க தொழில்நுட்பம் பல செயற்கைக்கோள்களை பல வட்டப்பாதைகளில் நிலை நிறுத்த உதவும்.

3. ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்கள்

இதன் மூலம் பல வட்டப் பாதைகளில், பல செயற்கைக்கோள்களை ஒரே ஏவுதலில் நிலை நிறுத்த முடியும். அதாவது எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனம் அந்த வெவ்வேறு இடங்களில் நின்று சரக்குகளை இறக்கி வைப்பது போன்றது.

குறைந்த புவி வட்டப்பாதையில் (Low Earth Orbit) செயற்கைக்கோள்களை ஏந்தி செல்ல பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை கொண்டு ஏற்கெனவே பல செயற்கைக்கோள்களை ஒரே ஏவுதலில் இந்தியா செலுத்தியுள்ளது.

2017-ம் ஆண்டு PSLV-C37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை செலுத்தி, 2014-ம் ஆண்டு 37 செயற்கைக்கோள்களை செலுத்திய ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது இந்தியா.

Geostationary orbit (புவி நிலை வட்டப்பாதை) என்பது குறைந்த புவி வட்டப் பாதையை (Low Earth Orbit) விட உயரத்தில் இருக்கும் வட்டப்பாதையகும். Geosynchronous Transfer Orbit என்பது இந்த புவி நிலை வட்டப்பாதைக்கு செல்லும் வழியில் அதற்கு முன்பு இருக்கக் கூடியதாகும். இந்தப் பாதைகளில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த ஜிஎஸ்எல்வி ( GSLV) ராக்கெட் தேவைப்படும். இதிலும் பல செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவுவதை சாத்தியமாக்க, க்ரையோஜெனிக் மறு துவக்கம் பயன்படும்.

"நான்கு டன் ஏந்தி செல்லக்கூடிய ராக்கெட்டில் 1.5 டன் எடைக்கான செயற்கைக்கோள் மட்டுமே பொருத்தப்படுகிறது என்றால், மீதமுள்ள இடத்தை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும்." என்று முனைவர் த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

4. ககன்யான் திட்டம்

டிசம்பர் மாதத்தில் LVM3 ராக்கெட்டின் மற்றொரு ஏவுதல் திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்திலும் LVM3 ராக்கெட் பயன்படுத்தப்படும் என்று CMS-03 செயற்கைக்கோள் ஏவுதலின் திட்ட இயக்குநர் டி.விக்டர் ஜோசப் தெரிவிக்கிறார்.

மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று ஆளில்லா திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ககன்யான் திட்டத்தின் கீழ் அதிக எடை கொண்டவை விண்ணில் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கும் என்பதால், தற்போதைய வெற்றி அதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

"ககன்யான் திட்டத்தின் குறிப்பாக பிற்பகுதிகளில் இது மிகவும் உதவியாக இருக்கும்" என்று த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd67xlqxepno

'ஈஸ்ட் பூஞ்சை செவ்வாய் கிரகத்தில்கூட சாகாது' - விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி?

3 months ago

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Riya Dhage

படக்குறிப்பு, ஒரு செல் உயிரியான ஈஸ்ட் பூஞ்சைகளால் செவ்வாய் கோளில்கூட பிழைத்திருக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 1 நவம்பர் 2025, 05:02 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரெட், பீர் போன்ற உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் நுரைமம் அல்லது நொதி என அழைக்கப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையால் செவ்வாய் கோளில்கூட சாகாமல் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஒரு செல் உயிரியான ஈஸ்ட், பூமி தவிர்த்துப் பிற கோள்களில் உயிர்கள் எவ்வாறு பிழைத்திருக்க முடியும் என்பதற்கான தடயங்களைக் கொண்டுள்ளதாக, இந்திய அறிவியல் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு, "விண்வெளியில் மனித செல்கள் சந்திக்கும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைக் கண்டறிவதற்கான ஓர் அளவுகோலாக ஈஸ்ட் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முன்னாள் விஞ்ஞானியும் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

பெங்களூருவில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் உயிரிவேதியியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆய்வாளர்கள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் சுற்றுச்சூழல் பல சவால்களைக் கொண்டது

விண்வெளிப் பரிசோதனையில் ஈஸ்ட் பூஞ்சை

உயிர்கள் பூமி தவிர பிற கோள்களில் பிழைத்திருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த புரிதலைப் பெறுவதற்காக பிரெட், மைதா போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையை வைத்து விஞ்ஞானிகள் ஒரு விண்வெளி மாதிரிப் பரிசோதனையை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் ஆக்ஸ்ஃபோர்ட் அகாடெமிக் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, செவ்வாய் கோளின் கடினமான சுற்றுச்சூழலை ஒத்த மாதிரிகளை உருவாக்கிய ஆய்வுக் குழுவினர், அதைத் தாங்கிப் பிழைத்திருக்கக் கூடிய தன்மை ஈஸ்டுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய் கோளில் தொடர்ந்து நிகழும் விண்கல் மோதல் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே அளவிலான அதிர்ச்சி அலைகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல், ஹிஸ்டா என்றழைக்கப்படும் ஹை-இன்டன்சிடி ஷாக் டியூப் (HISTA) என்ற கருவி மூலம் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள முனைவர் பாலமுருகன் சிவராமனின் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்டது. அதோடு, செவ்வாய் கோளில் உள்ள மண்ணில் காணப்படும் நச்சு வேதிப்பொருளான சோடியம் பெர்க்ளோரேடை ஈஸ்ட் எதிர்கொள்ளக் கூடிய சூழலையும் விஞ்ஞானிகள் ஏற்படுத்தினர்.

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Dr Bhalamurugan Sivaraman

படக்குறிப்பு, செவ்வாய் கோள் மீது விண்கற்கள் மோதுவதால் ஏற்படும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் அதிர்வுகளை உருவாக்க உதவிய ஹிஸ்டா கருவி

செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில், அதன் சுற்றுச்சூழலில் பல சவால்கள் உள்ளன. "அப்படிப்பட்ட இரண்டு சவால்கள் மீது கவனம் செலுத்தி இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றுதான் செவ்வாயில் ஏற்படும் அதிர்வுகளை ஒத்த பரிசோதனை" என்று விவரித்தார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

அதுகுறித்து எளிமையாக விளக்கிய அவர், "செவ்வாய்க் கோளினுடைய வளிமண்டலம் பூமியைவிட மிகக் குறைவான அடர்த்தியுடன் இருக்கும். அதனால் தடையின்றி விண்கற்கள் செவ்வாயின் மேற்பரப்பில் மோதும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கும். எனவே, ஒளியைவிட 5.6 மடங்கு அதிக வேகத்தில் விண்கல் மோதல் நிகழ்வதை ஒத்த கடுமையான அதிர்வுகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டது," என்றார்.

மேற்கொண்டு பேசியவர், "மற்றுமொரு சூழ்நிலையில், செவ்வாய் மண்ணில் காணப்படும் சோடியம் பெர்க்ளோரைட் என்ற நச்சு வேதிமத்தைக் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த வேதிமம் குறிப்பாக, நீருடன் ஒட்டாத வேதிப் பொருள்களுடன் வினைபுரியும். அப்படி வினைபுரிவது, உயிரினங்களின் செல்களை உடைத்துவிடும். அத்தகைய உயிரி செல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதிமத்துடன் ஈஸ்டுகள் பரிசோதிக்கப்பட்டன," என்று விளக்கினார்.

இந்த இரண்டு சவால்களையும் தனித்தனியாகவும் ஒருசேரவும் ஈஸ்ட் பூஞ்சைகளை எதிர்கொள்ள வைத்து விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அப்போது அவற்றின் எண்ணிக்கை பெருகுவதன் வேகம் குறைந்ததே தவிர அவை இறக்கவில்லை என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Riya Dhage

படக்குறிப்பு, செவ்வாயின் சூழலை ஒத்த அழுத்தம் ஏற்பட்டபோது, புகைப்படத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகளாகத் தெரியும் ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கித் தமது எம்.ஆர்.ஏ மூலக்கூறுகளை ஈஸ்டுகள் பாதுகாத்துக் கொண்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செவ்வாய் கோளில் ஈஸ்ட் பூஞ்சை உயிர் பிழைத்தது எப்படி?

ஒற்றை செல் பூஞ்சைகளான ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் சுற்றுச்சூழலை ஒத்திருக்கும் மிகக் கடினமான சவால்களைக்கூட சமாளித்து உயிர் பிழைத்திருந்தது எப்படி?

அதற்கான காரணம், "இந்த ஈஸ்டுகள் தங்களுக்குள் ஆர்.என்.பி எனப்படும் புரதத்தை சிறிய, துளி போன்ற கட்டமைப்புகளாக, ஒரு கவசத்தைப் போல் உருவாக்கிக் கொண்டதே" என்று ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, "இந்த ஆர்.என்.பி கவசங்கள் அணுவின் சாதாரண பாகங்களைப் போல் இருக்கவில்லை. அது ஒரு நீர்த்துளியை ஒத்த வடிவில் இருந்தது.

"அணுவானது ஒரு புற அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது, அதன் மரபணு செயல்முறைகளைக் கடத்தும் எம்.ஆர்.என்.ஏ மூலக்கூறுகளைச் சுற்றி இந்த ஆர்.என்.பி புரதத் துளிகள் ஒரு கவசம் போல் உருவாகின. அதன் மூலம் ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் கடினமான சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டன."

இத்தகைய பாதுகாப்புக் கவசங்களை உருவாக்கிக் கொள்ளாத ஈஸ்டுகள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Swati Lamba

படக்குறிப்பு,முனைவர் புருஷர்த் ராஜ்யகுரு (வலது), ஆய்வாளர் ரியா காதே (இடது)

அதேவேளையில், "இந்த ஆர்.என்.பி கவசத் துளிகள், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆக்சிஜனேற்ற அயற்சி போன்ற பல காரணங்களின் விளைவாகவும் உருவாகலாம்" ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

இந்நிலையில், செவ்வாய் கோளை ஒத்த சவால் மிகுந்த சுற்றுச்சூழலை எதிர்கொண்டதன் விளைவாக, அதிலிருந்து உயிர் பிழைக்கவே ஈஸ்ட் பூஞ்சைகள் இந்தக் கவசத்தை உருவாக்கின என்ற முடிவுக்கு எப்படி வர முடியும், என்ற கேள்வி எழுகிறது.

அதற்குப் பதிலளித்த முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "ஈஸ்ட் பூஞ்சைகள் இந்த ஆர்.என்.பி. கவசங்களை பல்வேறு கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க உருவாக்கலாம். ஆனால், அவை பரிசோதிக்கப்படும் நேரத்தில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

இந்தப் பரிசோதனையில் அவை செவ்வாய் கோளின் விண்கல் தாக்கம் மற்றும் நச்சு வேதிம அபாயத்தை எதிர்கொண்டன. அதுதவிர வேறு அழுத்தங்களை அவை எதிர்கொள்ளவில்லை. எனவே, அவற்றுக்கு எதிர்வினையாகவே அவை ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கின என்ற முடிவுக்கு வரலாம்," என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, பூஞ்சையில் தோன்றும் இந்தச் சிறிய துளி போன்ற கவசங்கள், "விண்வெளி போன்ற சூழ்நிலைகளில் உயிர்கள் இருக்கும்போது அவற்றின் செல்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்க உதவும் உயிரியல் அளவுகோலாகப் பயன்படுத்தப்படலாம்" என்றும் அவர் கூறினார்.

'இந்தப் பூஞ்சை செவ்வாய் கோளில்கூட சாகாது' - விஞ்ஞானிகளை வியக்க வைத்த கண்டுபிடிப்பு

படக்குறிப்பு, முனைவர் பாலமுருகன் சிவராமன் (இடது), முனைவர் அரிஜித் ராய் (வலது)

செவ்வாய் கோளில் ஈஸ்ட் பிழைத்திருப்பதால் மனிதர்களுக்கு என்ன பயன்?

இந்த ஆய்வு மனிதர்கள் விண்வெளியில் உயிர் பிழைக்க ஏதுவான வழிகளைக் கண்டறிய உதவுமா? ஈஸ்ட் பூஞ்சையை செவ்வாய் கோளின் சுற்றுச்சூழல் மாதியில் பரிசோதிப்பதால் என்ன பயன்?

ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தின் பேராசிரியருமான முனைவர் பாலமுருகன் சிவராமன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது அவர், "நிச்சயமாக இந்த ஆய்வு எதிர்காலத்தில் மனிதர்களின் பல விண்வெளித் திட்டங்களுக்கு உதவும். இது இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது" எனக் கூறினார்.

செவ்வாய் கோளில் ஒரு உயிர் பிழைத்திருக்கப் பல வகை சவால்கள் இருப்பதாகக் கூறிய அவர், "அவற்றில் சில சவால்களான விண்கல் மோதல் மற்றும் நச்சு வேதிமத்துடனான எதிர்வினை இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டன" என்றும் அவற்றில் சாகாமல் ஈஸ்டுகள் பிழைத்து இருந்ததாகவும் கூறினார்.

ஆனால், "மனிதர்கள் விண்வெளியில் பிழைத்திருப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, மேலும் பல கட்டங்களில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளில் இது ஒரு துளி மட்டுமே" என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு, வான் உயிரியல், வான் வேதியியல் ஆகிய துறைகளில் இந்தியா ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகக் கூறிய முனைவர் பாலமுருகன், அதில் இன்னும் மேம்படுவதன் மூலம் நாம் பலவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்," என்றும் தெரிவித்தார்.

விண்வெளி சூழலில் ஆய்வு செய்ய ஈஸ்ட் பூஞ்சையை தேர்வு செய்தது ஏன்?

விண்வெளியில் உயிர்கள் பிழைத்திருக்க முடியுமா என்பதை ஆராய ஈஸ்ட் போன்ற மிகச் சாதாரணமான பூஞ்சை நுண்ணுயிரி உதவக்கூடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த ஆய்வில், சாக்கரோமைசெஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae) என்ற வகையைச் சேர்ந்த ஈஸ்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிக்கு அது தேர்வு செய்யப்பட மிக முக்கியக் காரணம் இருந்ததாகக் கூறுகிறார் ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணை பேராசிரியருமான புருஷர்த் ராஜ்யகுரு.

இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை ஈஸ்ட், ஒரு ஒற்றை செல் பூஞ்சைதான். இருந்தாலும், "அது மனித உடலில் நடப்பவை குறித்துப் பல பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. அதில் நடக்கக்கூடிய பல செயல்பாடுகள் நம் உடலிலும் நடக்கின்றன. அதனால்தான் இதை வைத்து விண்வெளியில் வாழும் திறனை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது."

மேலும் அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் ராஜ்யகுரு, "செவ்வாய் கோளின் அழுத்தமான சூழலில் ஈஸ்ட் பூஞ்சைகள் தமது ஆர்.என்.ஏ மற்றும் புரதங்களை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது, உயிர்கள் பூமிக்கு வெளியே விண்வெளியின் பிற பகுதிகளில் பிழைத்திருக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள எதிர்காலத்தில் உதவக்கூடும்" என்று விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1e3dxvlylpo

Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு!

3 months 1 week ago

New-Project-255.jpg?resize=750%2C375&ssl

Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு!

‘Lemon’ என்றும் அழைக்கப்படும் ‘C/2025 A6’ வால் நட்சத்திரத்தை தற்போது மாலை வானில் இலங்கையர்களும் காண முடியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், மாலை 6.30 மணி முதல் சுமார் 30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தெரியும்.

மழை இல்லாத தெளிவான மாலை நேரங்களில் இலங்கையின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகக் காணலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

2025 ஜனவரி மாதம் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் இந்த இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டமையினால் அதற்கு Lemon என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இது சுமார் 90 மில்லியன் கிலோ மீட்டர்கள் அல்லது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் சுமார் 60% தூரத்திற்குள் உள்ளது.

இது தற்போது அதன் முதன்மையான பார்வைத் திறனில் உள்ளது.

நாசாவின் கூற்றுப்படி, Lemon வால் நட்சத்திரம் சுமார் 1,350 ஆண்டுகளுக்குப் பின்னர் நமது சூரிய மண்டலத்திற்குள் திரும்பி வருகிறது. 

இது நவம்பர் 8 ஆம் திகதி சூரியனுக்கு மிக அருகில், சுமார் 80 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வரும்.

பொதுவாக, வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்போது பிரகாசமாக பிரகாசிக்கும். 

இருப்பினும், Lemon வால் நட்சத்திரம் அதற்கு முன்பே பூமியை நெருங்கும் என்பதால், அது இரவு வானத்தைக் கடக்கும்போது அதன் பிரகாசத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1451006

மனிதன் 3 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் தடயமே கிடைக்காதா?

3 months 1 week ago

மனிதன் 3 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் தடயமே கிடைக்காதா?

பிரஷ் ஒன்றைக் கொண்டு தரையில் இருந்து மனித எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மனிதர்களான நாம் நீண்ட காலமாகப் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறோம்.

பூமியின் 4.5 பில்லியன் ஆண்டுகால வரலாற்றின் நினைவுச் சின்னங்களாக இருக்கும் எண்ணற்ற தொல்லுயிர் எச்சங்களை நாம் மண்ணிலிருந்து தோண்டியெடுத்துள்ளோம்.

நாம் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு பண்டைய இனங்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பதற்கான குறிப்புகளை இவை நமக்கு வழங்குகின்றன.

ஆனால், நாம் அழிந்துபோய், பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புத்திசாலித்தனமான இனம் தோன்றினால் – நாம் இருந்தோம் என்பதை எப்போதாவது அவர்கள் அறிந்துகொள்வார்களா? அல்லது நமது நாகரிகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வார்களா?

எச்சங்களாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு

எதிர்கால தொல்லுயிர் ஆய்வாளர்கள் நமது எச்சங்களைளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நாம் நம்ப முடியாது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் ஆடம் ஃபிராங்க்.

"புவியியல் ரீதியாக ஒரு நாகரிகம் குறுகிய காலம் மட்டுமே நீடித்தால், பூமியின் உயிர்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே எச்சங்களாக மாறும்," என்று அவர் விளக்குகிறார்.

இரண்டு கால்களில் உயரமாக நிற்கும் ஒரு பெரிய டைனோசர் எலும்புக்கூட்டை மூன்று பெண்கள் புகைப்படம் எடுக்கிறார்கள்.

பட மூலாதாரம், Courtney Hale/E+ via Getty Images

படக்குறிப்பு, ஆடம் ஃபிராங்க் மற்றும் கேவின் ஷ்மிட் ஆகியோரின் 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையின்படி, டைனோசர்களின் இருப்பு இருந்த ஒவ்வொரு 100,000 ஆண்டுகளுக்கும், ஒரு சில முழுமையான டைனோசர் எச்சங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ஃபிராங்க் இணைந்து எழுதிய 2018-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை ஒன்று, 165 மில்லியன் ஆண்டுகளாக டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்த போதிலும், இதுவரை ஒப்பீட்டளவில் சில முழுமையான எச்சங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டுகிறது.

எனவே, நமது மனித இனம் சுமார் 300,000 ஆண்டுகளாகத்தான் (இதுவரை) இருந்து வருவதால், தொல்லுயிர் எச்ச பதிவில் நாம் பெரிய அளவில் எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாமல் போகலாம் என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

இருப்பினும், நாம் வேறு தடயங்களை விட்டுச் செல்லக்கூடும்.

பூமியின் வேதியியலை மாற்றுதல்

பூமியின் இயற்கையான புவியியலின் ஒரு பகுதியாக, பாறைகள் தொடர்ந்து அடுக்குகளாக அல்லது மண் படிவங்களாக மண்ணில் படிய வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு படிவத்தின் வேதியியல் கலவையும் அந்தக் காலக்கட்டத்தில் நிலைமைகளுக்கு ஏற்ப இருக்கும்.

பேராசிரியர் ஃபிராங்க் கூற்றுப்படி, மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு மற்றும் கடல் மட்ட மாற்றங்கள் ஆகியவை பாறையில் படியும் விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது "இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு கூட கண்டறியப்படலாம்" என்கிறார்.

"மனிதச் செயல்பாட்டால் பூமியின் காலநிலை அமைப்பு மாறியதால், ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள், கார்பன் ஐசோடோப்புகளில் ஒரு வித்தியாசம் இருப்பதை அவர்கள் காண்பார்கள்," என்கிறார் ஃபிராங்க்.

பரிணாமத்தை மறுவடிவமைத்தல்

நமது எலும்புகள் தொல்லுயிர் எச்சங்களில் அதிகமாகக் காணப்படாவிட்டாலும், நாம் உலகம் முழுவதும் கொண்டு சென்ற அல்லது பல்லுயிர்த் தன்மையை மாற்றியமைத்த மற்ற இனங்களின் எச்சங்களை நாம் மாற்றியிருக்கலாம்.

பூமியில் உள்ள பாலூட்டிகளின் எடையின் (அல்லது உயிர் எடை - biomass) விகிதத்தைக் காட்டும் விளக்கப்படம் - 60% கால்நடைகள், 36% மனிதர்கள் மற்றும் 4% காட்டு பாலூட்டிகள்.

படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு ஆய்வின்படி, வாழும் பாலூட்டிகளின் உயிர் எடையை (biomass) ஒப்பிட்டதில், அதில் 4% மட்டுமே காட்டுப் பாலூட்டிகளைக் கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகில் உள்ள அனைத்து பாலூட்டிகளிலும் 96% நாம் அல்லது நம்முடைய கால்நடைகள் என்று உயிர் எடையின் (biomass - அனைத்து உயிரினங்களின் மொத்த எடை) அடிப்படையில் அளவிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள பறவைகளின் உயிர் எடையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமாக நம்முடைய கோழிப் பண்ணைகளிலிருந்து வருகிறது.

அவர் வேர்ல்ட் இன் டேட்டா (Our World in Data) என்ற லாப நோக்கற்ற இதழின்படி, நாம் ஒவ்வொரு ஆண்டும் 75 பில்லியனுக்கும் அதிகமான கோழிகளைக் கொல்கிறோம். எனவே, அதிக எண்ணிக்கையில் இறக்கும் இந்த பறவைகளின் எச்சங்கள் எதிர்காலத்தில் கவனத்தை ஈர்க்கலாம்.

"நாம் உயிரியல் பரிணாமத்தின் பாதையை மாற்றியுள்ளோம்," என்கிறார் பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர், தொல்லுயிரியியலர் மற்றும் கெளரவ பேராசிரியர் ஜான் ஸலாசியேவிச்.

"நமது தொலைதூர எதிர்கால ஆராய்ச்சியாளர்கள், 'என்ன நடந்தது? ஏன் இது நடந்தது?' என்று ஆச்சரியப்படுவார்கள்," என்று அவர் கூறுகிறார்.

"அவர்கள் இவையெல்லாம் தொடங்கிய அடுக்குகளைத் தேடுவார்கள், அது நமது அடுக்குதான்."

நமது 'இறுதி மரபுச் சின்னம்'

பேராசிரியர் ஸலாசியேவிச் மற்றும் அவரது லீசெஸ்டர் பல்கலைக்கழக சக பேராசிரியர் சாரா கேபோட் இணைந்து எழுதிய "Discarded: How Technofossils Will Be Our Ultimate Legacy" என்ற புத்தகத்தில், நமது அன்றாடப் பொருட்கள் பூமியின் புவியியல் பதிவில் நீடித்து நிற்கும் என்று வாதிடுகின்றனர்.

ஒரு அலுமினிய பாட்டில், பாலியஸ்டர் ஸ்வெட்டர் அல்லது நிலத்தடி கார் பார்க்கிங் என இவற்றை அவர்கள் தொழில்நுட்பப் எச்சங்கள் என்று அழைக்கிறார்கள்.

சாம்பல் நிறப் படிமத்தில் நவீன சார்ஜிங் கேபிள்களின் அச்சு

பட மூலாதாரம், Sarah Gabbott

படக்குறிப்பு, பூமியின் மண் படிவங்களில் (sediment) தடயத்தை விட்டுச்செல்லும் அன்றாடப் பொருட்கள், நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது குறித்த குறிப்புகளை எதிர்கால நாகரிகங்களுக்கு வழங்கக்கூடும்.

2020-ஆம் ஆண்டு ஆய்வின்படி, நாம் ஆண்டுதோறும் 30 ஜிகா டன் பொருட்களை உற்பத்தி செய்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பூமியில் உள்ள ஒவ்வொருவரும் வாரந்தோறும் தங்கள் உடல் எடையை விட அதிகமாக உற்பத்தி செய்வதற்குச் சமம்.

பூமியில் இப்போது உயிருடன் உள்ள பொருள்களைவிட, மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களின் அளவு (அவற்றின் உலர்ந்த எடை) அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனித உற்பத்தியில் மிகப்பெரிய விகிதம் கான்கிரீட்டிலிருந்து வருகிறது. இது எதிர்காலத்தில் கண்டுபிடிப்பவர்களுக்கு மிகவும் இயற்கைக்கு மாறானதாகத் தோன்றலாம்.

''கான்கிரீட் கட்டடங்களின் விளிம்புகள், நடைபாதை கற்கள் என தொல்லுயிர் எச்சங்களில் வடிவங்களை அவர்கள் கண்டால்... அது இயற்கையான படிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிவார்கள்." என்கிறார் ஜான் ஸலாசியேவிச்.

4 ஜிகாடன் (gigatonnes) விலங்குகளுக்கு எதிராக 8 ஜிகாடன் பிளாஸ்டிக் உலகில் உள்ளது என்பதைக் காட்டும் விளக்கப்படம்.

படக்குறிப்பு, நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2020-ஆம் ஆண்டில், உலகில் உள்ள வாழும் விலங்குகளை விட மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு இரு மடங்கு அதிகமாக இருந்தது.

நமது பல பொருட்கள் மிக நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்கும்.

பிளாஸ்டிக் "ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மட்டுமல்ல, மில்லியன் கணக்கான ஆண்டுகள் கூட நீடிக்கலாம்" என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார்.

2050-ஆம் ஆண்டுக்குள் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் இருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் அளவு நாம் அவ்வளவு அதிகமான பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறோம்.

ஆனால் இது பிளாஸ்டிக் மட்டும் அல்ல.

"நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் கிராஃபைட் உள்ளது," என்று பேராசிரியர் கேபோட் கூறுகிறார்.

"எனவே, பென்சில் வடிவில் உள்ள கிராஃபைட் நான்கு பில்லியன் ஆண்டுகள் நீடிக்கும்."

நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவ இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இந்தப் தொல்லுயிரியியலர் கூறுகிறார்.

"காகிதம் செல்லுலோஸால் ஆனது, அது இலைகளின் பொருளே ஆகும். எனவே... சரியான சூழலில் காகிதம் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் நீடிக்கலாம்," என்று அவர் ஊகிக்கிறார்.

கிரக அளவில் ஏற்படும் மாற்றங்கள்

மனிதர்கள் பூமியின் புவியியலில் ஒரு பெரிய தடத்தை ஏற்கனவே பதித்திருக்கலாம். நம் மறைவுக்குப் பிறகு, வேறொரு புத்திசாலித்தனமான இனம் ஒரு நாள் அதைப் பார்க்குமா என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு நமது மரபுச் சின்னத்தை கற்பனை செய்ய இவை பயனுள்ளதாக இருக்குமா? என்று கேட்டால் பேராசிரியர் ஃபிராங்க் ''ஆம்'' என்கிறார்.

"பூமியில் ஏற்படும் இந்த பெரிய மாற்றங்கள் - பல நூற்றாண்டுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்விளைவுகளை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார்.

பிபிசி உலக சேவையின் கிரவுட் சயின்ஸ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. கூடுதல் தகவல்கள்: எல்லென் சேங்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crmxj8n4n2lo

ஓரியானிட் விண்கல் பொழிவை எப்போது, எங்கே பார்க்கலாம்?

3 months 1 week ago

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், VCG via Getty Images

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஓரியானிட் விண்கல் பொழிவு இந்த ஆண்டும் விரைவில் வருகிறது. அப்போது இரவு வானம் ஒளிரும், இதனை உலகம் முழுவதும் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.

"ஆண்டின் மிக அழகான விண்கல் மழைகளில் ஒன்று" என்று நாசா இந்த விண்கல் பொழிவை வர்ணிக்கிறது.

இந்த விண்கல் பொழிவு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 12 வரை ஏற்படும். நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 22 இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரையிலான நேரத்தில் இது உச்சத்தை எட்டும்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images

ஓரியானிட் விண்கல் பொழிவு என்றால் என்ன?

ஓரியானிடுகள் விநாடிக்கு சுமார் 41 மைல் வேகத்தில் பயணிக்கும் விண்கற்கள் ஆகும்.

ஓரியன் விண்மீன் குழுமத்திலிருந்து விழுவதைப் போல தெரிவதால், அதன் பெயரிலேயே இவை அழைக்கப்படுகின்றன.

ஹாலி வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் நிறைந்த பாதையை பூமி கடக்கும் போது ஓரியானிட் விண்கல் மழை ஏற்படுகிறது . இந்த தூசி மற்றும் சிறு கற்கள் வினாடிக்கு சுமார் 41 மைல்கள் (66 கிலோமீட்டர்) வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன.

இந்த ஹாலி வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. பூமிக்கு அருகே வரும் நிகழ்வு 2061-ம் ஆண்டு கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் காற்றுடன் உராயும்போது இவை ஆவியாகி, நமது கண்களுக்கு தென்படுகிற ஒளிக்கீற்றுகளைஉருவாக்குகின்றன. இவை வானில் சில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அவை மங்கலாகத் தோன்றலாம், ஆனால் தனித்துவமான ஒளிப் பாதையை விட்டுச் செல்கின்றன.

பெரிய விண்கற்கள் பிரகாசமான பாதைகளை உருவாக்கும். சில நேரங்களில் விண்கற்கள் வீனஸ் கோளை விட பிரகாசமாக தோன்றலாம் - இவை ஃபயர்பால்கள் (fireball) என்று அழைக்கப்படுகின்றன.

ஹாலியின் தூசி மற்றும் சிறு கற்களால் உருவாக்கப்படும் இரண்டு விண்கல் மழைகளில் ஓரியானிட்ஸ் ஒன்றாகும். மற்றொன்று ஈட்டா அகுவாரிட்ஸ் விண்கல் மழை ஆகும். இது ஆண்டின் முற்பகுதியில், மே மாதத்தில் தோன்றும்.

ஓரியானிட்ஸ் எங்கே, எவ்வளவு தெரியும்?

ரேடியன்ட் என்பது வானில் விண்கற்கள் தோன்றுவதாகத் தெரியும் புள்ளி. ஓரியானிட்ஸுக்கு இது ஓரியன் விண்மீன் குழுமமாகும்.

ஓரியன் நள்ளிரவுக்குப் பிறகு கிழக்கில் உதிக்கிறது, இது சிவப்பு நிற பீட்டல்ஜியூஸ் நட்சத்திரத்திற்கு அருகே தோன்றும்.

ஓரியனைக் கண்டுபிடிக்க, ஓரியன்ஸ் பெல்ட் என்று அழைக்கப்படும், நெருக்கமாக அமைந்த மூன்று பிரகாசமான நட்சத்திரங்களின் வரிசையைத் தேடுங்கள்.

காட்சியின் தரம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எத்தனை விண்கற்கள் தெரியும் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது - இது ஜெனித்தல் மணிநேர விகிதம் (zenithal hourly rate) என்று அழைக்கப்படுகிறது.

அக்டோபர் 22 அன்று ஓரியானிட்ஸின் உச்சத்தின்போது மணிக்கு சுமார் 15 விண்கற்கள் 148,000 மைல் (238,000 கிமீ/மணி) வேகத்தில் பயணிக்கலாம்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், VCG via Getty Images

ஓரியானிட் விண்கல் மழையை எப்போது காண முடியும்?

ஓரியானிட்ஸ் விண்கல் மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்படக்கூடும். நாசாவின் கூற்றுப்படி, விண்கற்களைக் காண சிறந்த வாய்ப்பு அக்டோபர் 22 இரவு, அக்டோபர் 23 அதிகாலை வரை ஆகும்.

இரவு வானில் பிரகாசமான நட்சத்திரங்களின் பின்னணியில் இதைப் பார்க்க முடியும்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், CFOTO

ஓரியானிட் விண்கல் மழையை எப்படிப் பார்ப்பது?

நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், முடிந்தவரை குறைந்த ஒளி கொண்ட இருண்ட இடத்தைக் கண்டுபிடிப்பது.

நகரங்கள் மற்றும் தெரு விளக்குகளிலிருந்து விலகிய பகுதியைக் கண்டுபிடிக்கும்படி நாசா அறிவுறுத்துகிறது - மேலும் வானிலைக்கு ஏற்பவும் சரியான இடம் வேண்டும்.

"இருளில் 30 நிமிடங்களுக்குள், உங்கள் கண்கள் பழகிவிடும், நீங்கள் விண்கற்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்" என்று நாசா கூறுகிறது.

பின்னர், நீங்கள் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தால் தென்கிழக்கு வானத்தையும், தெற்கு அரைக்கோளத்தில் இருந்தால் வடகிழக்கு வானத்தையும் பாருங்கள். இந்தியா தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.

இந்த விண்கல் பொழிவை பார்க்க தொலைநோக்கி தேவையில்லை - சூழ்நிலைகள் சரியாக இருந்தால், வெறும் கண்களால் பார்க்க முடியும்.

தீபாவளிப் பட்டாசுகள் அலங்கரித்த வானத்தை, விரைவில் ஓரியானிட்ஸ் ஆண்டு காட்சியின் உச்சம் அலங்கரிக்க உள்ளது.

வானம் தெளிவாக இருக்குமா?

வானில் அதிகமாக மேகங்கள் இருக்கும் போதும், மழைப்பொழி காலத்திலும் விண்கல் பொழிவை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்.

மூடுபனி, பிரகாசமான கால நிலைகளுடன் இந்த விண்கல் பார்ப்பது சிரமமாகும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/clyz56zmp40o

Checked
Wed, 02/04/2026 - 04:31
அறிவியல் தொழில்நுட்பம் Latest Topics
Subscribe to அறிவியல் தொழில்நுட்பம் feed