விளையாட்டுத் திடல்

மகளிர் ஆசிய கிண்ணம் எழுச்சி நட்சத்திரங்கள் ரி20 கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது

1 day 10 hours ago

மகளிர் ஆசிய கிண்ணம் எழுச்சி நட்சத்திரங்கள் ரி20 கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது

23 Feb, 2026 | 04:26 PM

image

(நெவில் அன்தனி)

ஹொங்கொங் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றுவந்த 8 அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண எழுச்சி நட்சத்திரங்கள் (ரைசிங் ஸ்டார்ஸ்) கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனானது.

பாங்கொக் தேர்ட்தாய் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய இந்தியா 46 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனானது.

தேஜல் ஹசாப்னிஸ், அணித் தலைவர் ராதா யாதவ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 69 ஓட்ட இணைப்பாட்டம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது.

அத்துடன் ப்ரேமா ராவத், தனுஜா கன்வார் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் தேஜல் ஹசாப்னிஸ் 51 ஓட்டங்களையும் ராதா யாதவ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஷமிமா சுல்தான மாத்திரம் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ப்ரேமா ராவத் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தனுஜா கன்வார் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சோனியா மெந்தியா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: தேஜல் ஹசப்னிஸ்.

women_asia_cup_rising_stars_india_champs

https://www.virakesari.lk/article/239384

பதும் நிசங்கா: "இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு இவர் கையில்"

3 days 6 hours ago

பதும் நிசங்கா: "இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு இவர் கையில்"

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • வித்யுத் சிவராமகிருஷ்ணன்

  • முன்னாள் கிரிக்கெட் வீரர்

  • 50 நிமிடங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

2026 டி20 உலகக் கோப்பையில் இலங்கையின் சூப்பர் 8 பிரிவு ஆட்டங்கள் பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. குரூப் சுற்றில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி அடுத்ததாக அரையிறுதியைக் குறிவைக்கும். ஆனால், அது சாத்தியமா?

மெல்ல சூடுபிடிக்கும் இங்கிலாந்து, எப்போதும் இந்த ஃபார்மட்டில் சிறப்பாக ஆடும் நியூசிலாந்து, எப்போது எப்படி ஆடும் என்று தெரியாத பாகிஸ்தான் என 3 பெரும் சவால்களை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. அதில் 2 போட்டிகளை வெல்வது கடினமானது தான் என்றாலும், அது முடியாத காரியம் ஒன்றுமல்ல.

அவர்களின் சுழற்பந்துவீச்சு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. டுனித் வெல்லாலகே, தஷுன் ஹேமந்தா போன்ற ஸ்பின்னர்கள் ஆடுகளத்தை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர் சமீராவும் சிறப்பாக பந்துவீசிவருகிறார். முன்னணி வீரர்கள் சிலர் காயத்தால் அவதிப்பட்டாலும், ஒவ்வொரு போட்டியிலும் ஒன்றிரண்டு பௌலர்கள் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உதவி விடுகிறார்கள்.

அதனால், என்னைப் பொறுத்தவரை இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு அவர்களின் பேட்டிங் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். அதிலும் குறிப்பாக பிராகசமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் பதும் நிசங்காவின் ஆட்டம் இந்தப் போட்டிகளில் எப்படி இருக்கிறதோ அதன்படியே அவர்களின் வாய்ப்பு இருக்கும்.

இந்த 27 வயது வலது கை பேட்டர் என்னை நன்கு கவர்ந்துவிட்டார். அவரது ஆட்டத்தை ஒவ்வொரு முறையும் நான் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதை அவர் சீராகக் கொடுத்து அசத்திக்கொண்டே இருக்கிறார்.

வெற்றிடத்தை நிரப்பும் நிசங்கா

1990-களின் பிற்பகுதிக்குப் பிறகு இலங்கை அணி பல தரமான பேட்டர்களை உருவாக்கியது. அரவிந்தா டி சில்வா, சனத் ஜெயசூர்யா, மார்வன் அட்டபட்டு, குமார் சங்கக்காரா, மஹேலா ஜெயவர்தனா, திலகரத்னே தில்ஷன், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமல் என பல தரமான பேட்டர்களை உருவாக்கியிருக்கிறார்கள். டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஃபார்மட்டாக இருக்கட்டும் அதில் சிறப்பாக செயல்படக்கூடிய பல பேட்டர்கள் வந்தனர். 1996 உலகக் கோப்பை ஃபைனலில் டி சில்வா அடித்துத் தொடங்கிவைத்தார்.... அதன்பிறகு அவர்கள் ஓயவேயில்லை.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அவர்களால் அப்படி தரமான பேட்டர்களை உருவாக்க முடியவில்லை. நிறைய திறமையான வீரர்களைப் பார்த்தோம். ஆனால், அவர்களால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை.

இப்போது பதும் நிசங்கா அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார். அவர் அனைத்து ஃபார்மட்களிலும் சிறப்பாக விளையாடுகிறார். எளிதாக ரன் சேர்க்கிறார். வழக்கமான பாணியில் தான் பேட்டிங் செய்கிறார். நல்ல ஸ்டைல் இருக்கிறது. அற்புதமான டெக்னிக் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அடுத்த சில ஆண்டுகளில் அவர் மிகப் பெரிய பேட்டராக வரப்போகிறார்.

ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்தப்போகிறார். அதற்கு ஏற்ற சுபாவம் அவருக்கு இயற்கையாகவே இருக்கிறது. நல்ல 'கிளாஸான' வீரராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பொறுப்புணர்வோடு ஆடுகிறார். அணிக்காக ஆட்டத்தை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு முழுமையான வீரராக அவர் இருக்கிறார். இப்பொழுதே அவர் ஒரு முக்கிய வீரராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் அவர் ஒரு ஜாம்பவானாகவே மாறியிருப்பார் என்பது என் கருத்து.

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

விழிப்புணர்வு நிறைந்த ஆட்டம்

கடந்த சில ஆண்டுகளாக ஒரு விஷயத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட்டில் சோபிக்கவேண்டும் என்பதால், அதற்கேற்ப வீரர்கள் தங்கள் ஆட்ட முறையை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், நிசங்காவிடம் அவ்வளவு மாற்றங்கள் இல்லை. வழக்கமான, சரியான கிரிக்கெட் ஷாட்கள் ஆடுகிறார். கிரீஸில் அதிகம் அவர் நகர்வதில்லை. இடைவெளிகளை சரியாகப் பிடித்து அதைப் பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார். இந்த முறையில் விளையாடியே டி20 கிரிக்கெட்டில் 150+ ஸ்டிரைக் ரேட்டில் அவர் விளையாடுகிறார்.

இந்த ஃபார்மட்டில் நீங்கள் சுழன்று சுழன்று ஆடவேண்டிய அவசியம் இல்லை என்பதை இது சொல்கிறது. பவர்பிளேவில் ஃபீல்டர்கள் 30 யார்ட் வட்டத்துக்குள் நிற்கும்போது சரியான ஷாட்களை, சரியான இடைவெளியைப் பார்த்து அடிக்கும்போது நிச்சயம் ரன் சேர்க்க முடியும். ஆனால், டி20 என்று வரும்போது இதையெல்லாம் சொல்வது எளிதாக இருக்கும். ஆனால், களத்தில் இருக்கும்போது பெரிய ஷாட்கள் அடிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். ஆனால், அந்த மனநிலையை அடக்கி ஒரு நிலைத்தன்மையை தன் ஆட்டத்தில் நிசங்கா காட்டுகிறார்.

ஒருசில வீரர்கள் பவர்பிளேவில் அதிரடி காட்டுவார்கள். ஆனால், அவர்களால் மிடில் ஓவர்களில் தாக்கம் ஏற்படுத்த முடியாது. ஆனால், நிசங்கா அந்த இரண்டு பகுதிகளுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்கிறார். பவர்பிளேவில் 150+ ஸ்டிரைக் ரேட்டில் ஆடுபவர், மிடில் ஓவர்களில் நீட்டித்து நிற்கிறார். அதிகம் ஓடுகிறார். அப்படியும் 130 - 140 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிடுகிறார். அதனால், விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ரன்ரேட்டையும் அவர் சீராக வைத்திருக்க உதவுகிறார்.

கிரீஸில் அவருடைய கால் உறுதியாக இருக்கிறது. தலை உறுதியாக இருக்கிறது. நல்ல 'பேலன்ஸ்' இருக்கிறது. அதேபோல், ஆட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் சிறப்பாக இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து, எதிரணி பௌலர்கள் யார் என்பதை அறிந்து அதற்கேற்றதுபோல் தன் அணுகுமுறை அவர் தேர்வு செய்கிறார். மிகச் சிறந்த பேட்டர்கள் அதைத்தான் செய்வார்கள். அவர்கள் தங்கள் ஆட்டத்தில் எப்போதுமே ஒரு படி முன்னே இருப்பார்கள். பதும் நிசங்கா தன் கரியரின் ஆரம்ப காலகட்டத்தில் அதைக் காட்டியிருக்கிறார்.

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

பொறுப்பை உணர்ந்து ஆடும் திறன்

அவருக்குத் தன் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. 'நான் தான் இன்னிங்ஸை ஓப்பன் செய்கிறேன். நல்ல தொடக்கமும் கொடுக்கவேண்டும், வேகமாகவும் ஆடவேண்டும், அதேசமயம் நிலைத்தும் நிற்கவேண்டும்' என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அது மிகவும் கடினமான விஷயம். ஆனால், தன் கரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே அவர் அதை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் (டி20 ஃபார்மட்) இந்தியாவுக்கு எதிராக நிசங்கா ஒரு சதம் அடித்தார். அந்தப் போட்டி கூட டை ஆகி, சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெறும். அந்த ஆட்டம் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறது.

துபையில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்து இந்தியா 202 ரன்கள் அடித்தது. அந்தப் போட்டியின் வர்ணனையில் இருந்த நான், அந்த ஆடுகளத்தில் அந்த ஸ்கோரையெல்லாம் சேஸ் செய்யவே முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால், நிசங்கா வந்து ஆடிய விதம் பிரம்மிப்பாக இருந்தது. தொடக்க வீரராக இறங்கிய அவர், கடைசி வரை போராடி இலங்கையை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழக்க, இலங்கையும் 202 ரன்கள் தான் எடுத்தது. ஒருவேளை நிசங்கா ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், அவர் இலங்கையை வெற்றி பெறவே வைத்திருக்கலாம்.

அது ஏதோ ஒருநாளோடு முடிந்துவிடவில்லை. தொடர்ச்சியாக பல சிறப்பான செயல்பாடுகளைக் கொடுத்தார் நிசங்கா. அதை தற்போது இந்த உலகக் கோப்பையிலும் அவர் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சற்று கடினமானவை. பந்து பேட்டுக்கு நன்கு வரும். பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும். பவுண்டரி எல்லையும் சற்று சிறியது தான். பவர்பிளேவில் அடித்து நொறுக்கலாம். ஆனால், இலங்கையில் அப்படியில்லை. ஆடுகளங்கள் சற்று ஈரப்பதம் கொண்டவையாக இருக்கும். பந்து நின்று வரும். அங்கு பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருக்கும். பிரேமதேசா போன்ற மைதானமெல்லாம் மிகவும் பெரியது. அங்கு ஸ்கோர் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால், நிசங்கா அதை செய்திருக்கிறார்.

அவர் ஃபிட்னஸ் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதனால் ஓடியும் அதிக ரன்கள் எடுத்துவிடுகிறார். நான் முன்பே ஆட்ட விழிப்புணர்வு பற்றி சொல்லியிருந்தேன்... மைதானம் பெரிதாக இருந்தால் அதற்கேற்ப ஆடுகிறார். சிறிதான மைதானம் என்றால் எதிரணி பௌலர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். தன் அணியின் மிகமுக்கிய பேட்டராக விளங்குகிறார்.

நிசங்காவுக்கு உறுதுணையாக இருக்கப்போவது யார்?

என்னைப் பொறுத்தவரை இலங்கை அணி சூப்பர் 8 சுற்றில் சிறப்பாகச் செய்யவேண்டும் என்றால் அதற்கு நிசங்காவின் பங்களிப்பு மிகவும் முக்கியம். ஏனெனில், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் என சவால் கொடுக்கக்கூடிய அணிகளோடு இலங்கை விளையாடப்போகிறது. அவர் கொடுக்கக்கூடிய தொடக்கம் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியம்.

அதேசமயம் அவர் ஒருவரையே பெரும்பாலும் சார்ந்திருப்பது அவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்திவிடும். அதனால் அவருக்கு உறுதுணையாக மற்ற வீரர்களும் பங்களிக்கவேண்டும். பவன் ரத்நாயகே இந்த உலகக் கோப்பையில் நன்றாக ஆடுகிறார். அச்சமில்லாமல் அதிரடியைக் காட்டுகிறார். ஆனால், மற்ற வீரர்களிடமிருந்தும் அந்த பங்களிப்பு வரவேண்டும்.

குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் போன்ற வீரர்கள் அந்த உறுதுணையான ஆட்டத்தைக் கொடுக்கவேண்டும். எல்லோரும் 20-30 ரன்கள் எடுக்கிறார்கள். ஆனால், அதை பெரிய இன்னிங்ஸாக அவர்கள் மாற்றத் தொடங்கவேண்டும். அப்படிச் செய்யும்போது அது நிசங்காவின் நெருக்கடியைக் குறைத்து, இன்னும் சிறப்பான செயல்பாட்டை அவரிடத்திருந்து கொண்டுவரும். அது அணிக்கும் பேருதவியாக மாறும்.

இந்த முக்கியமான கட்டத்தில் இலங்கை வீரர்கள் பெரிதாக யோசிக்காமல் அச்சமற்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இலங்கை அரையிறுதியைப் பற்றி கனவு காணலாம்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crrx741l8lyo

2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று சாம்பியன்களை வீழ்த்திய கதை

4 days 5 hours ago

2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று சாம்பியன்களை வீழ்த்திய கதை

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 20 பிப்ரவரி 2026, 11:21 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் அநேக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அணி ஜிம்பாப்வே.

யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அந்த அணி, பின்னர் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

வியாழக்கிழமை நடந்த கடைசி லீக் சுற்றுப் போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி பி பிரிவில் முதலிடம் பெற்று அசத்தியிருக்கிறது அந்த அணி.

2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்றபோதும் ஜிம்பாப்வே அணியால் அதற்குத் தகுதி பெற முடியவில்லை. அப்படி தடுமாறிக்கொண்டிருந்த அந்த அணி, அடுத்தடுத்து இரு முன்னாள் உலக சாம்பியன்களை வீழ்த்தியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

இதை வெறும் எழுச்சிக் கதையாக மட்டுமே பார்த்திட முடியாது. ஏனெனில், அவர்கள் இப்படியான வெற்றிகள் பெறுவதோ, பெரிய அணிகளாகக் கருதப்படுபவர்களுக்கு அதிர்ச்சியளிப்பதோ, உலகக் கோப்பையின் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதோ இது முதல் முறை அல்ல.

1983 உலகக் கோப்பையில் முதல் முறையாக ஜிம்பாப்வே சர்வதேச அரங்கில் பங்கேற்றது. முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது அந்த அணி. இந்தியாவையும் உலகக் கோப்பையில் வீழ்த்தியிருக்கிறார்கள். இரண்டு முறை இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளிலும் தோற்கடித்திருக்கிறார்கள்.

அடுத்தடுத்து இரு உலகக் கோப்பைகளில் சூப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்த அணி ஜிம்பாப்வே.

இருந்தபோதிலும் அவர்கள் 20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பைக்குத் தகுதி பெறாமல் போனதுமே பெரும் செய்திதான்.

இவ்வளவு ஏன், அந்த அணிக்கு ஐசிசி தடையே விதித்திருந்தது.

இப்படி ஏற்றமும், முன்னேற்றமும் நிறைந்ததுதான் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் கதை.

கடந்த 3 தசாப்தங்களில் அவர்கள் சிகரத்துக்கு அருகேயும் சென்றிருக்கிறார்கள், பாதாளத்துக்குள்ளும் குதித்திருக்கிறார்கள்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

தொடக்க காலமும், பெரும் எழுச்சியும்

1980-ல் சுதந்திரம் பெற்ற ஜிம்பாப்வே, 1983-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக்குள் தகுதிச் சுற்றை வென்றதன் மூலம் நுழைந்தது.

முதல் போட்டியிலேயே அந்த அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃபிளெட்சர்தான் அப்போது ஜிம்பாப்வே அணியின் கேப்டன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த வெற்றியின் காரணகர்த்தாவும் இவர்தான்.

அந்த வெற்றியோடு தொடங்கியிருந்தாலும், ஜிம்பாப்வேவால் மற்ற அணிகளுக்கு இணையாக செயல்பட முடியவில்லை. அந்தத் தொடரின் மற்ற ஐந்து போட்டிகளிலும் தோற்றார்கள். 1987 உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் தோற்றார்கள். 1992-ல் இங்கிலாந்தை மட்டும் வென்றார்கள். அடுத்த உலகக் கோப்பையில் அவர்களை விடப் பலம் குறைந்த அணியாகக் கருதப்பட்ட கென்யாவை மட்டும் வீழ்த்தினார்கள்.

இப்படித்தான் ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடக்க காலம் இருந்தது. இதற்கிடையே அவர்கள் 1992-ல் டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருந்தார்கள்.

1990-களின் பிற்பகுதியில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் பொற்காலம் தொடங்கியது. 1995-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே. அதன்பிறகு தொடர்ச்சியாக பல குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை அந்த அணி ஈட்டியது.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,1999 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே

இந்தியாவுக்கு சவால்

ஏண்டி ஃப்ளார், கிரான்ட் ஃப்ளார், ஹீத் ஸ்ட்ரீக், ஏண்டி பிளிக்னாட், டேவ் ஹூடன், அலிஸ்டர் கேம்பெல், ஹென்றி ஒலாங்கா போன்ற வீரர்கள் உலகத்தர செயல்பாடுகளைக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான அந்த டெஸ்ட் வெற்றியில் ஃப்ளார் சகோதரர்கள் இருவருமே சதமடித்தார்கள். ஆண்டி ஃப்ளார் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கே முன்னேறினார். அப்படிப்பட்ட திறமையான இந்த வீரர்களின் சீரான செயல்பாடுகள் ஜிம்பாப்வே அணியை முன்னணி அணிகளோடு போட்டியிட வைத்தது.

1998-ல் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தங்களின் சிறந்த செயல்பாட்டைத் தொடர்ந்தது ஜிம்பாப்வே. ஹராரேவில் நடந்த அந்தப் போட்டியை 61 ரன்களில் வென்ற அந்த அணி, அடுத்த மாதம் பாகிஸ்தானுக்குச் சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.

அதற்கடுத்து, 1999 உலகக் கோப்பையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது ஜிம்பாப்வே. குரூப் சுற்றில் இந்தியாவை 3 ரன்களில் வீழ்த்தியது அந்த அணி. தங்கள் கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. விளைவாக இங்கிலாந்தும், நடப்பு சாம்பியன் இலங்கையும் முதல் சுற்றோடு வெளியேறின.

2001-ல் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியை வென்று, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்தது ஜிம்பாப்வே. இது, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற புகழ்பெற்ற தொடர் வெற்றிக்குப் பிறகு கங்குலி தலைமையிலான இந்திய அணி கலந்துகொண்ட அடுத்த டெஸ்ட் தொடர். அப்படியொரு ஃபார்மில் இருந்த இந்தியாவுக்கு சரிசமமாக சவால் கொடுத்தது ஜிம்பாப்வே.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2001-ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் ஏண்டி ஃப்ளார்

தேசத்தின் வீழ்ச்சி... கிரிக்கெட்டின் வீழ்ச்சி

ஜிம்பாப்வே கிரிக்கெட் மெல்ல எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த தேசத்தின் நிலை மோசமாகிக்கொண்டிருந்ததது. அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் அரங்கேறின. அந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட் அணியின் தேர்வில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் வீரர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யாவில் 2003 உலகக் கோப்பை நடந்தது.

அப்போது அதிபர் ராபர்ட் முகாபேவின் ஜிம்பாப்வே மீது பலரின் பார்வையும் பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே செல்ல மறுத்தது. போட்டிகளின்போது ஜிம்பாப்வே வீரர்கள் ஆண்டி ஃப்ளார் மற்றும் ஹென்றி ஒலாங்கா ஆகியோர் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடியது மேலும் அந்நாட்டின் சூழ்நிலை மீது வெளிச்சம் பாய்ச்சியது. ஜனநாயகத்தின் மரணத்தை உணர்த்துவதற்காக அவர்கள் அதைச் செய்ததாகக் கூறினார்கள்.

"வறுமை, வேலையின்மை, எச்ஐவி தொற்று என பல்வேறு விஷயங்களால் நாடு பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான ஜிம்பாப்வே மக்கள் மரணமடையலாம். இனவெறி வெறுப்பு பேச்சுகளைக் கேட்க முடிகிறது. இதை கண்டுகொள்ளாமல் இருப்பது கடினம்" என்று அவர்கள் இருவரும் இணைந்து அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் கிரிக்கெட்டை விட்டும் நாட்டை விட்டும் வெளியேறவேண்டிய நிலையே ஏற்பட்டது.

இதன்பிறகு ஜிம்பாப்வே அணியில் இட ஒதுக்கீடு குறித்து பல ஆண்டுகளாக நடந்துவந்த விவாதம் 2004-ல் உச்சம் அடைந்தது. அதன் விளைவாக கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் பதவி நீக்கம் செய்யப்பட, அது வீரர்களிடைய எதிர்மறையான வரவேற்பைப் பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் விளையாட மறுத்தார்கள்.

புதிய கேப்டனான தைபுவும் அவர் தலைமையிலான இரண்டாம் கட்ட அணியும் நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்கத் தடுமாறினார்கள்.

தொடர் தடுமாற்றங்கள் காரணமாக அந்த அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் விலகிக்கொண்டது. அதேசமயம் ஜிம்பாப்வேவின் உள்ளூர் கிரிக்கெட்டும் பாதிக்கத் தொடங்கியது. அவர்களின் முதல் தரத் தொடரான லோகன் கப் 2005/06 சீசனில் நடக்கவேயில்லை. இதற்கு மத்தியில் பங்கேற்ற தொடர்களிலெல்லாம் பெரும்பாலும் தோல்வியே சந்தித்தது ஜிம்பாப்வே.

அரசியல் தலையீடும், ஐசிசி தடையும்

அடுத்த சில ஆண்டுகள் ஜிம்பாப்வே கிரிக்கெட் எழுச்சி பெறத் தடுமாறவே செய்தது. அவ்வப்போது குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை அந்த அணி பெற்றது. ஆனால், அதை அவர்களால் தொடர்ச்சியாகப் பெற முடியவில்லை. 2007 டி20 உலகக் கோப்பையில் அந்த அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆனாலும், அவர்களால் அடுத்த சுற்றுக்குக் கூட முன்னேற முடியவில்லை.

2005-ம் ஆண்டுக்குப் பிறகு 2011-ல் தான் அவர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்கள். 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவும் அந்த அணி தவறியது.

இந்நிலையில் 2019-ல் அந்த அணியின் கிரிக்கெட் இன்னொரு பெரும் பிரச்னையை சந்தித்தது. அந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.

கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற விதிமுறையை ஜிம்பாப்வே உறுதி செய்யத் தவறியதாக கூறி இத்தடை விதிக்கப்பட்டது

அந்தத் தடை விரைவில் நீக்கப்பட்டிருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் நடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் அந்த அணியால் பங்கேற்க முடியவில்லை.

நம்பிக்கை தந்திருக்கும் 2026 உலகக் கோப்பை

இப்படியாக பல ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு மறுபடியும் ஜிம்பாப்வே அணி குறிப்பிடத்தக்க ஒரு செயல்பாட்டைத் தற்போது கொடுத்துக்கொண்டிருக்கிறது.

சிகந்தர் ராஸா, கிரீம் கிரெமெர் போன்ற சீனியர்கள் முன்நின்று வழிநடத்த பிரயன் பென்னட், தடிவானஷே மருமானி போன்ற வீரர்கள் தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜிம்பாப்வே தற்போது பெரிய அணிகளுக்கு சவாலளிக்கிறது.

அவர்களின் வெற்றி பற்றி இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், "அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவேண்டும் என்பதை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இன்னும் பெரிய இலக்கு வைத்திருக்கிறார்கள். பெரிய தாக்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் வந்திருக்கிறார்கள்" என்றார்.

கேப்டன் சிகந்தர் ராஸா தன்னுடைய போராட்ட குணத்தை அணி வீரர்களுக்கும் செலுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

தங்கள் போட்டிகள் அனைத்தையும் இலங்கையில் ஆடியது ஜிம்பாப்வே அணி. அங்கு சுழற்பந்துவீச்சுக்கே ஒத்துழைப்பு அதிகமாக இருக்கும். ஆனால், அந்த ஆடுகளங்களில் தங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் மூலம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது ஜிம்பாப்வே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் பிளெஸிங் முசர்பானி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜிம்பாப்வே அணியின் செயல்பாடு அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது

ஜிம்பாப்வே அணி சூழ்நிலையைப் பற்றி யோசித்து அதில் சறுக்கிவிடாமல், தங்கள் பலத்தை உணர்ந்து விளையாடியிருப்பதாகக் கூறினார் சஞ்சய் பங்கர்.

"என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஆடுகளத்திலும் எல்லா விதமான திறமைக்கும் இடம் இருக்கிறது. ஜிம்பாப்வே அதைத்தான் செய்திருக்கிறது. அவர்கள் இலங்கை ஆடுகளத்தை நினைத்து அதற்கேற்று செயல்படாதது நல்ல விஷயம்" என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜிம்பாப்வேவின் வெற்றி பற்றி பிபிசி தமிழிடம் பேசிய வர்ணனையாளர் பகவதி பிரசாத், "ஜிம்பாப்வே அணிக்கு சரியான திட்டம் இருந்தது. அவர்கள் பெரிய பவுண்டரிகளில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்குப் பொறிவைத்தனர். 'ஹார்ட் லென்த்'களில் சரியாகப் பந்துவீசினார்கள். அந்த சரியான திட்டமிடல் தான் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது" என்று கூறினார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பையில் 3 இன்னிங்ஸ்களில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் பிளெஸிங் முசர்பானி

சூப்பர் 8 சுற்றில் என்ன எதிர்பார்க்கலாம்?

பி பிரிவில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே அணி தற்போது சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

மேலும், இந்த உலகக் கோப்பையில் இதுவரை இலங்கையில் மட்டுமே விளையாடியிருந்த ஜிம்பாப்வே, இந்த 3 போட்டிகளையும் இந்தியாவில் விளையாடவேண்டும். அதனால், இந்திய ஆடுகளங்களுக்கு அந்த அணி எப்படி தகவமைத்துக்கொள்கிறது என்பது முக்கியம் என்றும் சஞ்சய் பங்கர் கூறியிருந்தார்.

பொதுவாக ஓர் அணி இரண்டு பெரிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்துகிறது என்றால் அதை அதிர்ஷ்டமாகவோ, அதிர்ச்சியாகவோ பார்க்க முடியாது. அதுவும், கடைசி வரை பரபரப்பாகவெல்லாம் செல்லாமல் நிதானமாக ஆடி வென்றிருக்கிறார்கள். இதற்கு மேலும் தாங்கள் இலக்கு வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதனால், ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்துமா என்பதை பார்க்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpd84xd6w91o

இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு

1 week 3 days ago

இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Christian Petersen

படக்குறிப்பு,ஸ்டெல்வியோ ஆல்பைன் ஸ்கீயிங் மையத்தில் ஆண்களுக்கான ஒருங்கிணைந்த ஸ்லாலோம் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் ரிவர் ராடமஸ். (பிப்ரவரி 9)

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இத்தாலியின் மிலன், கார்டினா நகரங்களில், 25வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள், 22ஆம் தேதி நிறைவு பெறுகின்றன.

இந்த 25வது குளிர்கால ஒலிம்பிக்கில் 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள், 116 பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள்.

இதில் இந்திய அணியும் கலந்துகொள்கிறது. இந்தியா சார்பில் ஆரிஃப் முகமது கான், ஸ்டான்சின் லுண்டப் ஆகிய இருவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு பிரான்சில் தொடங்கியதிலிருந்து, இதில் அதிக வெற்றிகளைப் பெற்ற நாடு நார்வே ஆகும்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற நாடு என்ற சாதனையை நார்வே மொத்தம் 405 பதக்கங்களுடன் பதிவு செய்துள்ளது. இதில் அதிக தங்கப் பதக்கங்களும் (148) அடங்கும்.

இந்த முறையும், 8 தங்கப் பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்களுடன் நார்வே முன்னிலையில் உள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிப்ரவரி 6, இத்தாலியில் நடைபெற்ற 2026 குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில், ஆரிஃப் முகமது கான் இந்தியாவின் கொடியை ஏந்திச் சென்றார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Elsa

படக்குறிப்பு,தொடக்க விழாவில் அமெரிக்க இசைக் கலைஞர் மரியா கேரி

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Matthias Hangst

படக்குறிப்பு,இத்தாலியின் சான் சிரோவில் நடைபெற்ற தொடக்க விழாவின் போது ஒலிம்பிக் வளையங்களிலிருந்து வெடித்த பட்டாசுகள்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,David Ramos

படக்குறிப்பு,லிவிக்னோ ஏர் பார்க்கில் ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் மொகல்ஸ் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் ஜகாரா அந்தோணி. (பிப்ரவரி 7)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Getty Images

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Jared C. Tilton

படக்குறிப்பு,மிலானோ சாண்டா கியுலியா ஐஸ் ஹாக்கி அரங்கில், கனடாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஆலோசனையில் அமெரிக்காவின் ஐஸ் ஹாக்கி அணி. (பிப்ரவரி 10)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Hector Vivas

படக்குறிப்பு,லிவிக்னோ ஏர் பார்க்கில் நடைபெறும் ஆண்களுக்கான ஃப்ரீஸ்கை ஸ்லோப்ஸ்டைல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற நார்வேயின் பிர்க் ரூட் (பிப்ரவரி 10)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Alex Slitz

படக்குறிப்பு,பிரிடாஸ்ஸோ ஸ்கை ஜம்பிங் ஸ்டேடியத்தில் கலப்பு அணி சோதனைச் சுற்றில் போட்டியிட்ட சீனாவின் கிவு சாங் (பிப்ரவரி 10)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Michael Reaves

படக்குறிப்பு,லிவிக்னோ ஸ்னோ பார்க்கில் அமெரிக்காவின் குளோய் கிம்மிற்கு ஆதரவாக ஜாக்கெட் அணிந்து, ராப்பர் மற்றும் அமெரிக்க அணியின் கௌரவ பயிற்சியாளர் ஸ்னூப் டாக், பெண்கள் ஸ்னோபோர்டு ஹாஃப்-பைப் இறுதிப் போட்டியைப் பார்க்கிறார். (பிப்ரவரி 12)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,தன்னுடைய பிரத்யேக தலைக்கவசத்தை அணிய அனுமதிக்கப்பட்டால் மட்டுமே போட்டியிடுவேன் என்று கூறியதை அடுத்து, விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு சக விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் தலைக்கவசம் அணிந்திருந்ததால், யுக்ரேனைச் சேர்ந்த விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Richard Heathcote

படக்குறிப்பு,தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, பயிற்சியில் யுக்ரேனின் விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் (பிப்ரவரி 11)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly0kp38y9do

'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா?

1 week 5 days ago

'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா?

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் உஸ்மான் தாரிக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உஸ்மான் தாரிக்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'அவர் என்ன செய்தார் என்பதை இந்தியாவால் கூட புரிந்துகொள்ள முடியாது.'

'இது இந்தியாவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக இருக்கும்.'

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, இந்தியத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் போட்டி குறித்த நிகழ்ச்சியில் இப்படி பேசப்பட்டது. இந்த விவாதம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கை பற்றியது. இவருடைய தனித்துவமான பந்துவீச்சு முறை இதற்கு முன்பே விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் உஸ்மான் தாரிக் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்தப் போட்டியின் காட்சிகள் இந்தியாவில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

அதனைத் தொடர்ந்து, உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து சில சமூக ஊடகப் பயனர்கள் கேள்வி எழுப்பினர்.

உஸ்மான் ஓடிவந்து நிறுத்தி பின்பு பந்து வீசும் விதம், விதிகளின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்றும் மற்றவர்கள் கேள்வி எழுப்பினர்.

இருப்பினும் இந்த முழு விவாதத்திற்கும் மத்தியில், இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், உஸ்மான் தாரிக்குக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

அஸ்வின், உஸ்மான் தாரிக்கை ஆதரித்துள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அஸ்வின், உஸ்மான் தாரிக்கை ஆதரித்துள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி என்ற சமூக வலைதள பயனர், உஸ்மானின் பந்துவீச்சில் அமெரிக்க பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டமிழக்கும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், உஸ்மான் பந்தை வீசுவதற்கு முன்பு ஒரு கணம் நிற்பது காணப்படுகிறது.

''ஆக்ஷன் ஒகே. ஆனால் நிறுத்துவது? அதுவும் பந்தை வீச வேண்டிய தருணத்தில் அவ்வாறு செய்வதா? இதை தொடரக்கூடாது'' என்று அந்த வீடியோ குறித்து ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியின் பதிவை மறுப்பதிவிட்டு எழுதிய அஸ்வின்,'' ''ஒரு பேட்ஸ்மேன் எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் நின்று அடிக்கலாம். இப்படி செய்வதற்கு முன்பு அம்பையரிடமோ, பந்துவீச்சாளரிடமோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒரு பந்துவீச்சாளர் விஷயத்தில் மட்டும் விதி கடுமையாக இருக்கிறது. அம்பையரிடம் சொல்லாமல் நடுவில் கையை மாற்றி பந்து வீசக் கூடாது. இந்த விதிதான் முதலில் மாற்றப்பட வேண்டும்," என்று எழுதியுள்ளார்.

உஸ்மான் தாரிக்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உஸ்மான் தாரிக்

இதற்கிடையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒரு வீடியோவில், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சு வலிமையானது என்று விவரித்ததுடன், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது என்று கூறியுள்ளார்.

"உஸ்மானின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது. நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று யாரோ ஒருவர் நிறுத்துவது போல் இது உணர்வைத் தருகிறது. அவர் நிறுத்திவிட்டு பின்னர் பந்து வீசுகிறார். அதேபோல் மெதுவாகப் பந்து வீசுகிறார். இதில் எந்தப் பிரச்னையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது சரியானதுதான். நீங்கள் நிறுத்தி பந்து வீசலாம். அதைப் பற்றி எந்த விதியும் இல்லை. மேலும் அவர் வீசும் மெதுவான பந்துகளில் கூட, முழங்கை மடங்குவது இல்லை," என்றார்.

ஆனால், கையை வளைக்காமல் பந்தின் வேகத்தை 20 முதல் 25 கிலோமீட்டர் வரை அதிகரிக்க முடியுமா என்ற கேள்வியையும் ஆகாஷ் சோப்ரா எழுப்பினார்.

இந்த விவாதம் தீவிரமடைந்த நிலையில், அஸ்வின் எக்ஸ் தளத்தில் மற்றொரு நீண்ட கருத்தைப் பதிவிட்டார்.

அதில் அவர், "முதலில், பந்துவீச்சு முறை சரியா இல்லையா என்பதை ஐசிசி பந்துவீச்சு சோதனை மையத்தில் மட்டுமே சோதிக்க முடியும்," என்று கூறினார்.

"இரண்டாவதாக, 15-டிகிரி விதி உள்ளது. அதன்படி, பந்துவீச்சாளர் தனது முழங்கையை 15 டிகிரி வரை நேராக்கலாம். மேலும், பந்துவீச்சாளர் 15 டிகிரியில் பந்து வீசுகிறாரா இல்லையா என்பதை மைதானத்தில் இருக்கும் நடுவர் தீர்மானிப்பது சாத்தியமற்றது."

மேலும், "இதற்கு ஒரே தீர்வு, போட்டி நடக்கும் நேரத்திலேயே சோதனை கருவியை அறிமுகப்படுத்துவதுதான். இது ஒரு தெளிவற்ற விஷயம், இந்தத் தெளிவற்ற விஷயத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஆதாயம் அடைகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறு.

கிரீஸுக்குள் பந்து வீசும்போது நிறுத்துவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, அது அவருடைய வழக்கமான பந்துவீச்சு முறை என்பதால் அது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்றே நான் நம்புகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உஸ்மானின் இந்த பந்து வீச்சு பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப் வர்ணித்துள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இயன் பிஷப்

உஸ்மான் தாரிக் தனது பந்துவீச்சு பற்றி கூறியது என்ன?

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, உஸ்மான் தாரிக் அளித்த பேட்டி ஒன்றில், தனது பந்துவீச்சு முறை சாதாரணமாகத் தெரிவதில்லை, ஏனெனில் தனக்கு 'இரண்டு முழங்கைகள்' உள்ளன என்று கூறியிருந்தார்.

தனது பந்துவீச்சு முறை குறித்து ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டபோது, தான் மருத்துவரிடம் சென்று தனது இரு கைகளையும் பரிசோதித்ததாக அவர் கூறினார்.

அவரது உடல் அமைப்பு ஒரு சாதாரண மனிதரிடமிருந்து வேறுபட்டது என்கிறார் உஸ்மான் தாரிக்.

மேலும், "இது பிறப்பிலிருந்தே இருக்கிறது, இரண்டு முழங்கைகள் இருப்பதால், என்னால் என் கைகளை நேராக்க முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், உஸ்மான் தாரிக் லாகூரில் உள்ள பயோமெக்கானிக்ஸ் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், அங்கு அவரது பந்துவீச்சு முறை அங்கீகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.

தாரிக் பந்து வீச்சு தொடர்பான அடுத்தடுத்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தாரிக் பந்து வீச்சு தொடர்பான அடுத்தடுத்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆட்டம் எவ்வளவு ஆபத்தானது?

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற பிறகு ஈஎஸ்பிஎன் (ESPN) தளத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து பேசினார்.

"அவர் வெவ்வேறு கோணங்களில் பந்து வீசுகிறார். அவர் ரவுண்ட் ஆர்ம் முறையிலும், பின்னர் ஓவர் தி டாப் முறையிலும் வீசுகிறார். இது உங்களுக்கு வெவ்வேறு அளவிலான பவுன்ஸ்களை வழங்குகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, அவர் பந்து வீசுவதற்கு முன்பு நிறுத்தி, பேட்ஸ்மேன் எங்கே நகரக்கூடும் அல்லது அவர் என்ன ஷாட் ஆடக்கூடும் என்பதைப் பார்க்க அவருடைய கால்களைக் கவனிக்கிறார். பின்னர் அவர் பந்தை வீசும்போது, அது பேட்ஸ்மேனின் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

அந்தச் சிறிய நிறுத்தம் தான் பந்துவீச்சாளருக்கு பேட்ஸ்மேனை விட முன்னிலை கொடுக்கிறது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் அதே விவாதத்தில் கூறினார்.

"ஏனெனில், இது அவருக்கு வெவ்வேறு மாற்றங்களை முயற்சிப்பதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது. கடந்த சில போட்டிகளில் நாம் பார்த்தது என்னவென்றால், அவர் (உஸ்மான்) சிறந்த மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைக் கூட ஆட்டமிழக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு அவரது தனித்துவமான பந்துவீச்சு முறை மிகவும் முக்கியமானதாக அமையலாம்," என்றார்.

விதிகள் என்ன?

இதுகுறித்த அம்சங்களைப் புரிந்துகொள்வதற்காக, லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயோமெக்கானிக்ஸ் நிபுணர் பேராசிரியர் முகமது ஓவைஸுடன் பிபிசி உருது பேசியது.

கடந்த காலங்களில், பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறையைச் சோதிப்பதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேராசிரியர் ஓவைஸைப் பணியமர்த்தியுள்ளது.

"பந்து வீசும்போது நிறுத்துவதைப் பொறுத்தவரை, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை, பந்து வீசும்போது முழங்கை கோணத்தின் மாற்றம் 15 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடாது. முழங்கையில் ஏற்படும் மாற்றம் 15 டிகிரி அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், அந்தப் பந்து செல்லுபடியாகும் எனக் கருதப்படும்," என்றார்.

"ஒரு பந்துவீச்சாளர் நிறுத்தி பந்து வீசினால், அப்போதும் அதே விதிகள் பொருந்தும் என்பது உறுதி. ஐ.சி.சி விதிகளில் நிறுத்தி பந்து வீசுவது குறித்து எந்த விதிமுறையும் இல்லை, 15 டிகிரி சாய்வு பற்றி மட்டுமே பேசுகிறது," என்றார்.

"சில நேரங்களில் ஒரு பந்துவீச்சாளரின் கை அமைப்பு இயற்கையாகவே அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும். எனவே, வெறும் கண்ணால் பார்க்கும்போது, பந்துவீச்சாளர் பந்தை எறிகிறார் , அதாவது தவறான முறையில் பந்து வீசுகிறார் என்று தோன்றலாம். இருப்பினும், ஐ.சி.சி கேமராக்கள் மூலம் அளவிடப்பட்டு ஆய்வு செய்யப்படும்போது, அது 'சக்கிங்' வகையின் கீழ் வராது. அந்தச் சோதனையில் பந்துவீச்சாளர் தவறாக வீசுவது நிரூபிக்கப்படாமல் போக முற்றிலும் வாய்ப்புள்ளது," என்றார்.

உஸ்மான் தாரிக்கின் பின்னணி

ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தகவலின்படி, உஸ்மான் தாரிக் நவம்பர் 2023-இல் பாகிஸ்தான் தேசிய டி20 கோப்பை போட்டியில் அறிமுகமானார். அவர் 2024-இல் பிஎஸ்எல் தொடரிலும் பங்கேற்றார், ஆனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், 2024-25 காலப்பகுதியில், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் மீண்டும் விளையாடத் தொடங்கி, 15 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இருப்பினும், இந்தக் காலக்கட்டத்தில் அவரது பந்துவீச்சு முறை குறித்து இரண்டு புகார்கள் வந்தன. முதல் முறை 2024 பிஎஸ்எல் தொடரின் போது புகார் எழுந்தது.

ஆனால், லாகூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, அவர் தேர்ச்சி பெற்றார் மற்றும் அவரது பந்துவீச்சு தொடர்ந்தது.

அடுத்த பிஎஸ்எல் தொடரிலும் அவர் மீது மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டது, ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையிலும் அவர் தேர்ச்சி பெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c626jnllrn5o

இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம்

1 week 6 days ago

இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம்

பானுகா ராஜபக்ச, இந்திய வீரர்கள் பேட் பற்றிய கருத்தால் சர்ச்சை, இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

பட மூலாதாரம்,Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்திய பேட்டர்கள் பயன்படுத்தும் பேட் பற்றி இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஒரு நேர்காணலின் போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட் மற்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டைகளை விட சிறந்த தரம் வாய்ந்தது, அவற்றின் மீது ரப்பர் அடுக்கு இருப்பது போல் தெரிகிறது" என்று பானுகா ராஜபக்ச கூறியதாக நியூஸ்வயர் ஊடகம் கூறியிருந்தது.

"எனது சமீபத்திய நேர்காணல் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பிழை காரணமாக திரிக்கப்பட்டிருக்கலாம். இந்திய பேட்டர்களைப் பாராட்டுவதே எனது நோக்கமாக இருந்தது. இந்திய கிரிக்கெட் மிகவும் முன்னேறியுள்ளது. அவர்களின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் உபகரணங்கள் அனைத்தும் உயர்தரமானவை. அவர்களின் பேட் உற்பத்தியாளர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது எனக்கு மரியாதை மட்டுமே உள்ளது." என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜபக்சவின் தெளிவுபடுத்தல் குறித்து நியூஸ்வயர் ஊடகம் விரிவாக எழுதியுள்ளது.

இலங்கை பேட்டர் பானுக ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டை 'மிகவும் முன்னேறிய' அணி என்று வர்ணித்து, அதன் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களின் தரத்தைப் பற்றி குறிப்பிட்டதாக நியூஸ்வயர் குறிப்பிட்டுள்ளது.

இந்திய பேட்டர்களின் பவர்-ஹிட்டிங் திறன் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் மட்டைகளைப் பற்றி அவர் பேசிய முந்தைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு அவரிடம் இருந்து இந்த விளக்கம் வந்துள்ளது.

பானுகா ராஜபக்ச, இந்திய வீரர்கள் பேட் பற்றிய கருத்தால் சர்ச்சை, இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

பட மூலாதாரம்,Getty Images

ராஜபக்ச கூறியது என்ன?

ஹரி டிவி பத்திரிகையாளர் லஹிரு முதலிகேவிடம் பேசிய ராஜபக்சே, "இந்திய பேட்டர்கள் அதிக சக்தியை உருவாக்கும் பேட்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. பேட் மீது கூடுதல் ரப்பர் அடுக்கு இருப்பது போல் அவர்கள் உணர்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

தனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், "இவை சில சிறப்பு வகை வில்லோ மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறினார்.

"இந்திய வீரர்களின் மட்டை நம்மிடம் உள்ள சிறந்த மட்டைகளை விட மிகச் சிறந்தவை. இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. மற்றவர்களால் இந்த மட்டைகளை வாங்கக்கூட முடியாது. அனைத்து வீரர்களுக்கும் இது தெரியும்" என்று அவர் கூறியிருந்தார்.

"இது முட்டாள்தனமாகத் தோன்றலாம், ஆனால் நேர்மையாகச் சொன்னால், நான் அப்படித்தான் உணர்கிறேன்" என்று அவர் கூறினார்.

அதே நேர்காணலில் பேசிய ஐபிஎல் முன்னாள் வீரர் ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டின் வலுவான பேட்டிங் கலாசாரத்தையும், உலகின் சிறந்த டி20 லீக் என்று அவர் வர்ணித்த இந்தியன் பிரீமியர் லீக்கையும் பாராட்டினார். இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் தொடர்ந்து உருவாகி வருவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார்.

பானுகா ராஜபக்ச, இந்திய வீரர்கள் பேட் பற்றிய கருத்தால் சர்ச்சை, இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

பட மூலாதாரம்,Getty Images

பானுகா ராஜபக்ச யார்?

  • பானுகா ராஜபக்ச ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

  • 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

  • சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் 17.80 சராசரியுடன் 89 ரன் எடுத்துள்ளார்.

  • சர்வதேச கிரிக்கெட்டில் 45 டி20 போட்டிகளில் 744 ரன் எடுத்துள்ளார். அவரது சராசரி 22.54 ரன்னாகவும் ஸ்ட்ரைக் ரேட் 130.52 ஆகவும் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cqlgvwedgd5o

சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம்

2 weeks 2 days ago

சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம்

டி20 உலகக்கோப்பை - முழு விவரம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் (இடது), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்) டிராவிஸ் ஹெட் (வலது)

7 பிப்ரவரி 2026

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது.

2024-ல் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இந்தத் தொடருக்குள் நுழைகிறது.

சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாகக் திகழக் கூடிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மை இந்த தொடரை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடர் பற்றிய முழு விவரமும் இங்கே தரப்பட்டுள்ளன.

டி20 உலகக் கோப்பை-2026 அட்டவணை

டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடரில் பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பு நகரில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

தொடக்க நாளில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.

மற்ற போட்டிகளில் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகளும், மற்றொன்றில் இந்தியா - அமெரிக்கா ஆகிய அணிகளும் மோதுகின்றன.

ஐந்து அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய 20 அணிகளுக்கான முதல் கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தொடரும். இறுதி நாளைத் தவிர மற்ற நாட்களில் தினசரி மூன்று போட்டிகள் நடைபெறும். இறுதி நாளில் மட்டும் ஒரு போட்டி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தினசரி ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் நடைபெறும்.

மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.

இறுதிப் போட்டி மார்ச் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் நடைபெறும்.

டி20 ஆடவர் உலகக்கோப்பைக்கான வடிவம் என்ன?

டி20 ஆடவர் உலகக் கோப்பை, 2024 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அதே வடிவத்தையே பின்பற்றுகிறது. அந்த தொடர், 20 அணிகள் பங்கேற்ற மிகப் பெரிய தொடராக அமைந்தது.

லீக் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் நான்கு போட்டிகளில் விளையாடும். தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில், தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இருக்கும்.

சூப்பர் 8 சுற்றில் அணிகளின் இடம் லீக் சுற்றில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அல்லாமல், அவற்றின் தர வரிசையைப் பொருத்தே அமையும்.

உதாரணமாக, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதாக எடுத்துக் கொள்வோம். அப்படியானால், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் குழுவிலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இரண்டாம் குழுவிலும் இடம்பெறும்.

சூப்பர் 8 சுற்றில் தங்கள் குழுவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அரையிறுதியைப் பொருத்தவரை, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடித்த அணி, மற்றொரு குழுவில் இரண்டாம் இடம் பிடித்த அணியுடன் மோதும்.

லீக் மற்றும் சூப்பர் 8 ஆகிய இரு கட்டங்களிலும் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். ஒரு போட்டி முழுமையாக நடக்காத பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். தோற்கும் அணிக்கு புள்ளிகள் கிடையாது.

டி20 உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகள் போட்டியிடுகின்றன?

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து 12 நாடுகளும் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஜிம்பாப்வே அணி தகுதிச்சுற்று மூலம் உள்ளே நுழைந்தது.

இத்தாலி இந்தத் தொடரில் முதன்முறையாக அறிமுகமாகிறது. அதேசமயம் கனடா 2014-க்குப் பிறகு தனது முதல் சர்வதேச தொடரில் பங்கேற்கிறது.

வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு காரணங்களால் தங்கள் போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்ததால், வங்கதேசம் இந்தத் தொடரிலிருந்து விலகியது.

தகுதி பெறாத அணிகளில் மிக சிறந்த தரவரிசையில் இருந்த ஸ்காட்லாந்து, 'குழு சி' பிரிவில் வங்கதேசத்தின் இடத்தைப் பிடித்துள்ளது.

பாகிஸ்தானும் தொடரை முழுமையாகப் புறக்கணிக்கப் பரிசீலித்தது, ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் விளையாட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் தாக்கம் குறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகள் பின்வரும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

குழு A: இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா

குழு B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே

குழு C: இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்

குழு D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

2026 டி20 உலகக்கோப்பை எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது?

இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எட்டு மைதானங்கள் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் ஐந்தும், இலங்கையில் மூன்றும் இதில் அடங்கும்.

இந்தியாவில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானம், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் மற்றும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் ஆகியவை போட்டிகளை நடத்தும்.

இலங்கையில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம் மற்றும் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், மற்றும் பல்லேகல கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோதி மைதானத்தில் இறுதிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் மட்டும் அந்தப் போட்டி கொழும்புக்கு மாற்றப்படும்.

டி20 உலகக்கோப்பைக்கான விதிகள் என்ன?

  • இந்த போட்டி டி20 வடிவில் நடைபெறுகிறது.

  • இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் விளையாடும்.

  • ஆனால், ஒரு அணி முன்பே ஆல்-அவுட் ஆகிவிட்டால் அல்லது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இலக்கை முன்பே எட்டிவிட்டால், போட்டி 20 ஓவர்களுக்கு முன்பே முடிவடையும்.

  • ஒவ்வொரு இன்னிங்சும் ஆறு ஓவர் பவர்பிளேயுடன் தொடங்கும். அந்த நேரத்தில் ஃபீல்டிங் வியூகம் வகுக்க தனி கட்டுப்பாடுகள் உள்ளன.

  • போட்டிகள் மூன்று மணிநேரம் 10 நிமிடங்கள் நீடிக்கும். ஒவ்வொரு இன்னிங்சுக்கும் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 20 நிமிட இடைவேளை அளிக்கப்படும்.

  • லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் 'ஸ்டாப்-கிளாக்' முறை உள்ளது. இதன் பொருள் ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீசும் அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும்.

  • 20 ஓவர்களுக்குப் பிறகு இரண்டு அணிகளும் எடுத்த ரன்கள் சமமாக இருந்தால், போட்டி சூப்பர் ஓவர் முறைக்குச் செல்லும் (ஒவ்வொரு அணியும் தலா 6 பந்துகளை எதிர்கொள்ளும் - அதிக ரன் எடுக்கும் அணி வெற்றி பெறும்).

  • அதுவும் டையில் முடிந்தால், ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறையில் ஆட்டம் தொடர்ந்து விளையாடப்படும்.

  • குழு போட்டிகளில், ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 ஓவர்கள் விளையாடியிருந்தால் மட்டுமே ஆட்டத்தில் முடிவு எட்டப்படும். ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், அதுவே 10 ஓவராக இருக்கும்.

  • வானிலை காரணமாக அந்த கட்டத்திற்குப் பிறகு போட்டி நிறுத்தப்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டிஎல்எஸ் (டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை) முறை பயன்படுத்தப்படும்.

  • நாக்-அவுட் போட்டிகளுக்கான கூடுதல் நேரம் மற்றும் ரிசர்வ் டே தொடர்பான விதிகளை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை.

  • பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், முதல் அரையிறுதி நடைபெறும் இடமாக கொல்கத்தாவிற்குப் பதிலாக கொழும்பு பிரேமதாசா மைதானம் மாற்றப்படும்.

  • ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் இறுதிப் போட்டியும் ஆமதாபாத் நகரில் இருந்து மாற்றப்படும்.

முந்தைய டி20 உலகக்கோப்பை சாம்பியன்கள் விவரம்

இதுவரை ஒன்பது டி20 ஆடவர் உலகக் கோப்பைகளில் ஆறு வெற்றியாளர்கள் உள்ளனர்.

அந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

  • 2007 - இந்தியா

  • 2009 - பாகிஸ்தான்

  • 2010 - இங்கிலாந்து

  • 2012 - வெஸ்ட் இண்டீஸ்

  • 2014 - இலங்கை

  • 2016 - வெஸ்ட் இண்டீஸ்

  • 2021 - ஆஸ்திரேலியா

  • 2022 - இங்கிலாந்து

  • 2024 - இந்தியா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwygy9j4g8yo

மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா

2 weeks 4 days ago

மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணிக்கு இது இரண்டாவது கோப்பை ஆகும்.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

2026 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

குஜராத் மாநிலம், வதோதராவில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 204 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கை ஆர்சிபி அணிக்கு நிர்ணயித்திருந்தது.

ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 87 ரன்களும், ஜார்ஜியா வோல்லின் 79 ரன்களும் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர்.

இது மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன். டெல்லி கேபிடல்ஸ் அணி நான்கு முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்லத் தவறிவிட்டது.

மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் மற்றும் மூன்றாவது சீசன்களை வென்றது, அதே சமயம் ஆர்சிபி இரண்டாவது மற்றும் நான்காவது சீசன்களை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பை உட்பட, கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது கோப்பையை ஆர்சிபி அணி வென்றுள்ளது.

டாஸ் வென்ற ஆர்சிபி

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்கள் எடுத்தார்

வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ஆர்சிபி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் லிசெல் லீ மற்றும் ஷாஃபாலி வெர்மா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்களை சேர்த்தது. ஐந்தாவது ஓவரில் ஷாஃபாலி வெர்மா, அருந்ததி ரெட்டி பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடி வந்த லிசெல் லீ, 7வது ஓவரில் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அவர் 30 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.

அதன் பின்னர், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ்- லாரா வால்வார்ட் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

37 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். லாரா வால்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். சினெல் ஹென்றி 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது ஆர்சிபி.

ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர்.

ஆர்சிபியின் தொடக்க வீராங்கனைகளாக கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். 2வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து கிரேஸ் ஆட்டமிழக்க ஆர்சிபி அணிக்கு அதுவொரு அதிர்ச்சியான தொடக்கமாகவே இருந்தது.

அடுத்து ஜார்ஜியா வோல் களமிறங்கினர். இறுதிப்போட்டி என்பதை கவனத்தில் கொண்டு, ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி மிகச்சிறப்பாகவே விளையாடியது. 2வது ஓவரில் 9 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆர்சிபி அணி, 2வது விக்கெட்டை 16வது ஓவரில் தான் இழந்தது.

ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். 54 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த ஜார்ஜியா வோல், 16வது ஓவரில் மின்னு மணி பந்தில் ஆட்டமிழந்தார்.

41 பந்துகளில், 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா, 18வது ஓவரில் சினெல் ஹென்றி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா

ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு 'பிளேயர் ஆப் தி மேட்ச்' விருது வழங்கப்பட்டது.

மகளிர் பிரீமியர் லீக்கின் நான்கு சீசன்களிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது, இருப்பினும் அந்த அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் நெருங்கிய தோழிகளாகக் கருதப்படுகிறார்கள், இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள்.

இருவரும் தங்கள் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார்கள், ஆனால் தனது அணியை முதல் முறையாக சாம்பியனாக்க வேண்டுமென்ற ஜெமிமாவின் கனவை அவரது தோழி ஸ்மிருதி மந்தனா தகர்த்துவிட்டார்.

வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, "இறுதிப் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்கிறோம் எனும்போது, நிச்சயமாக ஒரு அழுத்தத்தை உணர்ந்தோம். பேட்டிங் செய்வதற்கு ஏற்ற பிட்ச் இது. எங்களது அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆர்சிபி ரசிகர்கள் தான் எங்களோடு எப்போதும் உடன் நிற்கிறார்கள், இதுபோல ஒரு ரசிகர் கூட்டத்தை பார்க்க முடியாது. இந்த வெற்றி அவர்களுக்கானது" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg7ylx0ymyxo

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள்

3 weeks ago

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள் ,  BBC ISWOTY

2 பிப்ரவரி 2026

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் (Indian Sportswoman of the Year) 6-ஆவது பதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

2025-ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாகவும் விளையாட்டு துறையில் அனைத்து பெண்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலைத் தொகுத்தது. இந்த நடுவர் குழுவில் இந்தியா முழுவதிலுமிருந்து அனுபவமிக்க விளையாட்டுப் பத்திரிகையாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளனர்.

இம்முறை பிபிசி முதன்முறையாக வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழுவை (Grand Jury) அறிமுகம் செய்துள்ளது. இந்த தேர்வுக்குழுவில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பேஸ், நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் மற்றும் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் உள்ளனர்.

பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும் 3 பிரிவுகளின் கீழ் நடுவர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகளை பிபிசி கௌரவிக்கும். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை முன்னிலைப்படுத்த பிபிசி மாற்றுத்திறனாளி வீராங்கனை, இளம் தடகள வீராங்கனைகளின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக பிபிசி வளரும் வீராங்கனை விருது மற்றும் மூத்த வீராங்கனை ஒருவரின் ஈடுஇணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

பிபிசி நியூஸின் இடைக்கால உலகளாவிய இயக்குநர் (Interim Global Director) ஃபியோனா கிராக் கூறுகையில், "பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது (ISWOTY) இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டில் பெண்கள் செய்த சிறப்பான சாதனைகளை கொண்டாடுகிறது. அந்த சாதனைகளை வெளிக்கொணரவும் கொண்டாடவும் மற்ற எந்த ஊடக அமைப்பும் மேற்கொள்ளாத வகையில் பிபிசி உலக சேவை முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த பெண்கள் கடின முயற்சியினால் அடைந்த சாதனைகளை இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் ஒலிக்கச் செய்ய ஒரு தளத்தை வழங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்." என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி கலெக்டிவ் நியூஸ்ரூமால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் தயாரிக்கப்படுகிறது.

கலெக்டிவ் நியூஸ்ரூமின் முதன்மை ஆசிரியரும் இணை நிறுவனருமான ரூபா ஜா கூறுகையில், "திருமணம், வயது, உடல் ரீதியான விதிகள் அல்லது உடல் ரீதியான சவால்கள் காரணமாக விளையாட்டுகளில் பங்கேற்க பெண்களுக்கு பெரும்பாலும் ஊக்கம் தரப்படுவதில்லை. 'எல்லோரும் விளையாடலாம்' (Everybody Can Play) என்ற இந்தாண்டின் தலையங்க கருப்பொருள், விளையாட்டு எல்லோருக்குமானது என்ற எளிமையான யோசனைக்கு வலுவூட்டுகிறது. அதன் உண்மையான தாக்கம் அதனால் ஏற்படும் விளைவுகளால் அளவிடப்படாமல், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வாய்ப்புகளால் அளவிடப்படுகிறது. களத்தில் தைரியமாக இறங்கி தன்னுடைய இடத்தைக் கோரும் எந்தவொரு பெண்ணையும் ISWOTY 2026 கொண்டாடுகிறது." என்றார்.

பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகள் யார்?

திவ்யா தேஷ்முக், சதுரங்கம்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள், BBC ISWOTY , திவ்யா தேஷ்முக்

சதுரங்க விளையாட்டில் இளம் சாதனையாளரான 20 வயது திவ்யா தேஷ்முக், கடந்தாண்டு ஜூலை மாதம் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்திய மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியர் மற்றும் அந்த கோப்பையை கைப்பற்றிய இளம் சாம்பியன் என்ற புதிய வரலாற்றை படைத்தார். இதன்மூலம் திவ்யா தேஷ்முக் கிராண்ட் மாஸ்டரானார். இறுதிப்போட்டியில் திவ்யா இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பியை தோற்கடித்தார். அந்த தருணம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பொறுப்பை கையளிப்பது போன்றதாக இருந்தது.

மேற்கு இந்திய நகரமான நாக்பூரில் 2005-ஆம் ஆண்டு பிறந்தவர் திவ்யா தேஷ்முக். இவர் தன்னுடைய ஐந்து வயதில் சதுரங்கம் விளையாட தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குள் அவர் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன் பட்டம் வென்றார். 2017-ஆம் ஆண்டில் 12 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.

2022-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் திவ்யா முக்கிய பங்கு வகித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார் அவர். அதுமட்டுமல்லாமல், தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

ஹர்மன்ப்ரீத் கௌர், கிரிக்கெட்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள், BBC ISWOTY , ஹர்மன்ப்ரீத் கௌர்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத், நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் உலகக் கோப்பையை வெல்வதற்கு தன் அணியை வழிநடத்திச் சென்றார். சொந்த மண்ணில் விளையாடிய ஹர்மன்ப்ரீத், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 339 என்ற இமாலய இலக்கை துரத்துகையில் 88 பந்துகளில் 89 ரன்கள் அடித்து, அணியை முன்னின்று வெற்றிக்கு வழிநடத்தினார்.

2017-ஆம் ஆண்டில் நடந்த மற்றொரு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் எடுத்தது, மகளிர் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களுள் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.

1989-ஆம் ஆண்டு, பஞ்சாபில் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர் ஹர்மன்ப்ரீத். அவருடைய தந்தை ஹர்மன்ப்ரீத்துக்கு "குட் பேட்டிங்" என எழுதப்பட்ட டி-ஷர்ட்டை வாங்கிக் கொடுத்தார். இந்திய அணியின் பேட்டிங் முகமாக மாறுவார் என்ற தீர்க்கதரிசனத்திற்கு ஏற்ப 2009-ஆம் ஆண்டு அறிமுகமானதில் இருந்தே அவர் திறம்பட விளையாடினார்.

ஹர்மன்ப்ரீத் 2023-ஆம் ஆண்டின் டைம் இதழின் வளர்ந்து வரும் 100 தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றார். அதே ஆண்டில் பிபிசியின் மிகவும் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றார். 2017-ஆம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறையில் இரண்டாவது உயரிய அங்கீகாரமான அர்ஜுனா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட்டு துறையில் அவருடைய சிறந்த பங்களிப்புகளுக்காக 2026-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள், BBC ISWOTY , ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, எல்லா காலத்திலும் சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் ஒருவராக திகழ்கிறார். 29 வயதான இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சதங்களையும், தற்போதைய வீராங்கனைகளில் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக உள்ளார்.

மகாராஷ்டிராவின் சாங்லி நகரில் பிறந்த மந்தனா, மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடிய தனது தந்தை மற்றும் சகோதரரால் ஊக்கம் பெற்றார்.

2013-ஆம் ஆண்டில், 19 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான போட்டியில் விளையாடிய போது, உள்ளூர் அளவிலான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்தார் . இது 50 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இந்தியரின் அதிவேக சதமாகும். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார்.

அவர் 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 2019-ஆம் ஆண்டில் இந்திய அரசிடமிருந்து மதிப்புமிக்க அர்ஜுனா விருதை அவர் பெற்றார்.

சுருச்சி சிங், துப்பாக்கி சுடுதல்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள், BBC ISWOTY , சுருச்சி சிங்

துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்குவதில் சிறப்பான வரலாற்றைக் கொண்ட ஹரியாணாவைச் சேர்ந்த சுருச்சி சிங், 2024-ஆம் ஆண்டில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 7 தங்கப் பதக்கங்களை வென்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

19 வயதான அவர் அடுத்த ஓராண்டிற்குள் சர்வதேச அளவில் சீனியர் பிரிவு போட்டிகளில் அறிமுகமாகி, விரைவிலேயே உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2025-ஆம் ஆண்டில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எஃப் - ISSF) உலகக் கோப்பைத் தொடரில் பியூனஸ் அயர்ஸ் (Buenos Aires), லிமா மற்றும் மியூனிக் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 3 தங்கப் பதக்கங்களை வென்றார். லிமாவில் ஆண், பெண் இணைந்த கலப்பு குழு போட்டியில் அவர் தங்கம் வென்றார்.

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் -2025 தொடரில் மகளிர் குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் பாலக் குலியாவுடன் இணைந்து வெண்கலம் வென்றார்.

கடந்தாண்டு செப்டம்பரில் ஐஎஸ்எஸ்எஃப்-யின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார் சுருச்சி சிங்.

ஜோதி யாராஜி, தடகளம்

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள், BBC ISWOTY , ஜோதி யாராஜி

2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பங்கேற்க ஜோதி யாராஜி தகுதி பெற்றார். இதன் மூலம், தடகளம் மற்றும் களப் போட்டிகளில் சர்வதேச அளவிலான சாதனைகள் மிகக் குறைவாகவே இருக்கும் இந்தியாவில் இருந்து 'ஒலிம்பிக்கில் 100 மீ தடை தாண்டும் ஓட்டத்திற்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை' என்ற பெருமையை பெற்றார்.

26 வயதான ஜோதி யாராஜி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், தடைகளைத் தாண்டுவது உண்மையில் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. அவரது தந்தை ஒரு காவலாளியாகவும், தாய் வீட்டு வேலைகள் செய்பவராகவும் இருந்தனர்.

2022-ஆம் ஆண்டில், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 13.23 விநாடிகளில் இலக்கை எட்டி, புதிய தேசிய சாதனையை அவர் படைத்தார். அதன் பின்னர் அவர் தனது சொந்த சாதனையை பலமுறை முறியடித்துள்ளார்.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஸ்பிரிண்ட் ( குறுகிய தூர ஓட்டப்பந்தயம்) மற்றும் தடை தாண்டும் ஓட்டப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலத்தையும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளியையும் அவர் வென்றார்.

2023-ஆம் ஆண்டில், ஜோதி ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில் 60 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கத்தையும், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளியையும் வென்றார். இதன்மூலம் அவர் ஆசியாவின் சிறந்த தடை தாண்டும் வீராங்கனையாக தனது பெயரை உறுதிப்படுத்தினார். 2025-ஆம் ஆண்டு குமியில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

2024-ஆம் ஆண்டு ஜோதி யாராஜிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது

இந்தியாவில் விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது(ISWOTY) 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த விருதை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியாளரானார்.

2020-ஆம் ஆண்டுக்கான விருதை உலக சதுரங்க சாம்பியன் கொனேரு ஹம்பியும் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகளை பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வென்றார். 2024-ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இந்த விருதை வென்றார்.

தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா மற்றும் அஞ்சு பாபி ஜார்ஜ், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, ஹாக்கி வீராங்கனை பிரீதம் சிவாச் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் முந்தைய ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை பெற்றுள்ளனர்.

டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லேகரா ஆகியோர் பிபிசி இந்தியாவின் பாரா மகளிர் விளையாட்டு வீராங்கனை விருதுகளை வென்றுள்ளனர்.

கிரிக்கெட் வீராங்கனை ஷாஃபாலி வர்மா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் வில் வித்தை வீராங்கனை ஷீதல் தேவி ஆகியோர் பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்கான விருதுகளை வென்றுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg4e914y9l6o

மேஜர் லீக் கிரிக்கெட் முதல் சுற்று நிறைவு; துடுப்பாட்டத்தில் ஷாருஜன் முதல் நிலை

1 month ago

மேஜர் லீக் கிரிக்கெட் முதல் சுற்று நிறைவு; துடுப்பாட்டத்தில் ஷாருஜன் முதல் நிலை

image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் பிரதான கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் முதல் சுற்று நிறைவில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கிளப் வீரர் சண்முகநாதன் ஷாருஜன் அதிக ஓட்டங்களைக் குவித்து முன்னிலையில் உள்ளார்.

மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சுற்றில் 500 ஓட்டங்களை மொத்தமாக குவித்த ஒரே ஒரு வீரர் என்ற பெருமையையும் ஷாருஜன் பெற்றுக்கொண்டுள்ளார்.

தமிழ் யூனியன் கழகம் இக்கட்டான நிலையை எதிர்கொண்ட போதெல்லாம் அனுபவசாலி போன்று ஷாருஜன் பொறுப்புணர்வுடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டதை பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக இருந்தது.

நடப்பு பருவகால கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 6 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன் 3 சதங்கள், ஒரு அரைச் சதம் உட்பட 69.87 என்ற சராசரியுடன் 559 ஓட்டங்களைக் குவித்து அதிகூடிய மொத்த ஒட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதல் நிலையில் இருக்கிறார்.

பதுரெலியா கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில்  ஷாருஜன் சதம் குவித்து அசத்தி இருந்தார்.

இதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் குவித்தவர் என்ற பெருமையை 19 வயதான ஷாருஜன் பெற்றுக்கொண்டார்.

சிறு பராயத்தில் இருந்து கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் கல்வி பயின்ற சண்முகநாதன் ஷாருஜன், 13, 15, 17, 19 வயதுக்குட்பட்ட அணிகளில் விளையாடியதுடன் 2023, 2024ஆம் ஆண்டுகளில் அணித் தலைவராக விளையாடி இருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் ஷாருஜன் 118 ஓட்டங்களைப் பெற்றார். விக்கெட் காப்பாளராக 5 பிடிகளை எடுத்ததுடன் 2 ஸ்டம்ப்களையும் செய்திருந்தார்.

Sharujan_Shanmuganathan__2_.JPG

மேஜர் லீக் கிரிக்கெட்டில்

ஷாருஜன் பெற்ற ஓட்டங்கள்

123 மற்றும் 3 எதிர் பதுரெலியா கிரிக்கெட் கிளப்

60 எதிர் முவர்ஸ்  கிரிக்கெட் கிளப்

24 மற்றும் 23 ஆ.இ. எதிர் பேர்கர் ரெக்ரியேஷன் கிளப்

0 மற்றும் 122 ஆ.இ. எதிர் குருநாகல் யூத் கிரிக்கெட் கிளப்

87 மற்றும் 2 எதிர் நொண்டஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப்

103 ஆ.இ., மற்றும் 12 எதிர் ஏஸ் கெப்பிட்டல் கிரிக்கெட் கிளப்

_G6A7100.JPG

https://www.virakesari.lk/article/236530

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்து ஹசரங்க சாதனை

1 month 1 week ago

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்து ஹசரங்க சாதனை

Published By: Vishnu

12 Jan, 2026 | 02:33 AM

image

(ரங்கிரி தம்புள்ளை அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை இலங்கை சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க நிலைநாட்டியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3ஆவது விக்கெட்டை வீழ்த்தியபோது வனிந்து ஹசரங்க இந்த அரிய மைல்கல் சாதனையை நிலைநாட்டினார்.

தனது 92ஆவது போட்டியில் 90ஆவது இன்னிங்ஸிலேயே 150 விக்கெட்களை அவர் பூர்த்தி செய்தார். இதன் மூலம் மிக வேகமாக அதாவது குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிலைநாட்டியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பாகிஸ்தானின் அறிமுக வீரர் கவாஜா நவேயின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமே சர்வதேச ரி20 போட்டிகளில் வனிந்து ஹசரங்க 150ஆவது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தானுடனான கடைசி ரி20 போட்டியில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க, இதுவரை 90 இன்னிங்ஸ்களில் 151 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/235789

இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்

1 month 1 week ago

வேலூரில் பிறந்து நியூசிலாந்து அணியில் விளையாடும் ஆதித்யா அஷோக் - யார் இவர்?

நியூசிலாந்து, தமிழ் வம்சாவளி வீரர், ஆதித்யா அசோக்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக்.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதன் முதல் போட்டி இன்று (ஜனவரி 11) வதோதராவில் நடந்துவருகிறது.

வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் சேர்த்தது.

டேரல் மிட்ஷெல் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். ஹென்ரி நிகோலஸ் மற்றும் டெவன் கான்வே முறையே 62 மற்றும் 56 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ரானா தல 2 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்தார்.

இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் பிறந்த இரண்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவர் வாஷிங்டன் சுந்தர். இன்னொருவர் ஆதித்யா அஷோக் - இவர் ஆடுவது இந்திய அணிக்காக அல்ல... நியூசிலாந்துக்காக.

யார் இந்த தமிழ் வம்சாவளி வீரர்?

2002-ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆதித்யா அஷோக். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அப்போதிருந்து அவர் நியூசிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்த வதோதரா ஒருநாள் போட்டிக்கு முன்பு ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல், "அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர்கள் அதன்பிறகு சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார்கள். பின்னர் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருவருமே வேலை பெற்றார்கள். அவருடைய நான்கு வயதிலிருந்து நியூசிலாந்தில் இருக்கிறார். இஷ் சோதி, அஜாஸ் படேல் ஆகியோர் வரிசையில் இவரும் இந்தியாவில் பிறந்து நியூசிலாந்துக்காக விளையாடுகிறார்" என்று கூறினார்.

சோதி, அஜாஸ் படேல் போல் ஆதித்யாவும் ஸ்பின்னர் தான். இவர், கூக்ளி அதிகம் வீசக்கூடிய லெக்பிரேக் பௌலர். நியூசிலாந்து முன்னாள் வீரர் தருன் நேதுலாவிடம் பயிற்சி பெற்று அவர் தன்னுடைய கூக்ளியை மெருகேற்றியிருக்கிறார்.

நியூசிலாந்து, தமிழ் வம்சாவளி வீரர், ஆதித்யா அசோக்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சென்னையில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் அகாடெமியிலுமே சுழற்பந்துவீச்சு பயிற்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா.

ஆந்திராவில் பிறந்தவரான நேதுலா, நியூசிலாந்துக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருக்கும் சூப்பர் கிங்ஸ் அகாடெமியிலுமே சுழற்பந்துவீச்சு பயிற்சி பெற்றிருக்கிறார் ஆதித்யா.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ செய்தியின்படி, 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 13 வயதுக்குட்பட்டோருக்கான இண்டோர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக ஆதித்யா செயல்பட்டிருக்கிறார்.

இவர், 2020-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்தார். அந்தத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி அவர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

நியூசிலாந்து, தமிழ் வம்சாவளி வீரர், ஆதித்யா அசோக்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆகஸ்ட் 2023-இல் நியூசிலாந்து டி20 அணிக்காக அறிமுகமானார்.

ஆக்லாந்து அணிக்காக 2021-ஆம் ஆண்டு உள்ளூர் டி20 போட்டிகளில் அறிமுகமான ஆதித்யா, ஆகஸ்ட் 2023-இல் நியூசிலாந்து டி20 அணிக்காக அறிமுகமானார். அதே ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் அணிக்கும் அறிமுகமான இவர், 2 போட்டிகளில் ஆடினார்.

ஆனால், அதன்பிறகு அவருக்கு சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில், அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக பெரிதளவு அவதிப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவுக்கு எதிராக வாய்ப்பு பெற்றிருக்கிறார் ஆதித்யா அஷோக்.

ஆதித்யா அஷோக்

பட மூலாதாரம்,Instagram/Adhitya Ashok

படக்குறிப்பு,ஆதித்யா தன்னுடைய கையில் படையப்பா படத்தில் வரும் "என் வழி, தனி வழி" வசனத்தை பச்சை குத்தியிருக்கிறார்.

ஆதித்யா தன்னுடைய கையில் படையப்பா படத்தில் வரும் "என் வழி, தனி வழி" வசனத்தை பச்சை குத்தியிருக்கிறார்.

இதுபற்றி இந்தப் போட்டிக்கு முன்பாக பேசிய அவர், "நானும் என் தாத்தாவும் எங்கள் பூர்வீக வீட்டில் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். மதிப்புகள், ஒழுக்கங்கள் என அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் தனிப்பட்ட முறையில் உரையாடினோம். அப்போது பின்னால் தொலைக்காட்சியில் அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தது."

"அப்போது அந்த வசனம் வந்தது. அது எனக்கு மிகவும் பெர்சனலான ஒரு விஷயம். அந்த உரையாடல் எனக்கு மிகவும் நெருக்கமானது. அதன்பிறகு சீக்கிரமே அவர் இறந்துவிட்டார். அடுத்த சில நாள்களில் நான் அந்த வசனத்தை டாட்டூ குத்திக்கொண்டேன். இது எனது தமிழ் வேர்களுடனும், வேலூருடனும், பிரபலமான ஒரு தமிழ் சின்னத்துடனும், அதே சமயம் உலகளாவிய சின்னத்துடனும் உள்ள ஒரு தொடர்பாகும்" என்று இஎஸ்பிஎன்-க்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார். இவர் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோரின் ரசிகர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1wzdr0ldg4o

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள்

1 month 2 weeks ago

நாவாந்துறை சென். மேரிஸ், கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகங்களுக்கு இலகுவான வெற்றிகள்

Published By: Vishnu

05 Jan, 2026 | 11:51 PM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற இரண்டு சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் யாழ். நாவந்துறை சென். மேரிஸ் கழகமும் கொம்பனித் தெரு ஜாவா லேன் கழகமும் இலகுவான வெற்றிகளை ஈட்டிக்கொண்டன.

champions_legue_logo.jpg

மொரகஸ்முல்லை கழகத்திற்கு எதிரான பி குழு போட்டியில் 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய சென். மேரிஸ் கழகம் 7 புள்ளிகளுடன் நிகர கோல் வித்தியாச அடிப்படையில் அணிகள் நிலையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

st_mary_s___1_.jpg

இன்றைய போட்டியில் ஏகப்பட்ட இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட சென். மேரிஸ் கழகம் கடினமான சற்று சூழ்நிலைகளில் கோல்களைப் போட்டது.

முழுப் போட்டியிலும் திறமையாக விளையாடிய சென். மேரிஸ் கழகம் இந்த வெற்றியுடன் சுப்பர் 8 சுற்றுக்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் மொரகஸ்முல்லை கழகத்தின் பின்கள வீரர் 41ஆவது நிமிடத்தில் போட்டுக் கொடுத்து சொந்த கோலே சென். மெரிஸ் கழகத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது.

st_mary_s___2_.jpg

அதுவரை சென் மேரிஸ் கழகம் குறைந்தது 4 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் முழுத் திறமையுடன் விளையாடிய சென் மேரிஸ் கழகம், வெளிநாட்டு வீரர்களின் ஆற்றல்களின் உதவியுடன் மேலும் 3 கோல்களைப் போட்டது.

இரண்டாவது ஆட்ட நேரத்தின் மத்திய பகுதியில் 11 நிமிட இடைவெளியில் ஆபரிக்கர்கள் 3 கோல்களைப் போட்டு சென் மேரிஸ் கழகத்துக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்

ஜோன் லொவனி 62ஆவது மற்றும் 65ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டதுடன் டஞ்சுமா கம்பாரி 75ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டார்.

ஜாவா லேன் வெற்றி

தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெறத் தவறிய ஜாவா லேன் கழகம் ஏ குழுவுக்கான இன்றைய போட்டியில் இ.போ.ச.வை 5 - 0 என்ற கோல்கள் கணக்கில் மிக இலகுவாக வெற்றிகொண்டது.

java_lane__1_.jpg

போட்டி ஆரம்பித்து 5 நிமிடங்கள் ஆன நிலையில் ஜாவா லேன் அணித் தலைவர் ஹர்ஷன சுமுது முதலாவது கோலைப் போட்டு தனது அணியைத் முன்னிலையில் இட்டார்.

15 நிமிடங்கள் கழித்து முன்னாள் சென். லூசியா  மறறும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் டெரிக் பெர்னான்டோ அருமையான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேனை 2 - 0 என முன்னிலையில் இட்டார்.

java_lane__2_.jpg

java_lane__3_.jpg

போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் கழகத்தின் 3ஆவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டார்.

இடைவேளைக்குப் பின்னர் 57ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை ஒலுவாசெயுன் ஒலாவேல் போட்டதுடன் உபாதையீடு நேரத்தில் ஜாவா லேனின் 5ஆவது கோலை ஹர்ஷன சுமுது போட்டார்.

ஜாவா லேனுக்கு இலகு வெற்றி

https://www.virakesari.lk/article/235312

செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்த யாழ். வீரர் அபிஷான்

1 month 2 weeks ago

400 கி.மீற்றர் பயணித்து செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்து யாழ். திரும்பிய அபிஷான்

05 Jan, 2026 | 01:09 PM

image

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணத்திலிருந்து 400 கிலோ மீற்றர் பயணித்து கொழும்பு வருகை தந்து சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ஏ குழுப் போட்டியில் பங்குபற்றி கடைசிக் கட்டத்தில் கோல் போட்டு மாவனெல்லை செரெண்டிப் கழகத்துக்கு இறுக்கமான வெற்றியை (1 - 0) ஈட்டிக்கொடுத்த விஜயகுமார் அபிஷான், வெற்றிக்களிப்புடன் போட்டி முடிவடைந்த சிறிது நேரத்தில் மீண்டும் யாழ். திரும்பினார்.

அபிஷானுடன் அவரது மூத்த சகோதரர், அணித் தலைவர் விஜயகுமார் விக்னேஷும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்து போட்டி முடிந்தவுடன் யாழ். திரும்பினார். 

download__3_.jpg

இந்த சகோதரர்கள் இருவரும் அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி விளையாடி ரசிகர்களைப் பரபரப்பில் ஆழ்த்தினர்.

செரெண்டிப் கழகத்துக்கும் நிகம்போ யூத் கழகத்துக்கும் இடையில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற இந்தப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை வேகமும் விறுவிறுப்பும் கலந்ததாக அமைந்தது.

போட்டியின் முதல் 18 நிமிடங்கள் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதுடன் அவ்வப்போது கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் வீண் போயின.

vijayakumar_vignes_no_9_captain_of_seren

அதன் பின்னர் இரண்டு அணியினரதும் பந்துபரிமாற்றங்கள் மோசமாக இருந்ததால் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் கோல் போடப்படவில்லை.

இடைவேளைக்குப் பின்னர் எதிர்த்தாடல், தடுத்தாடல் ஆகிய இரண்டிலும் திறமையை வெள்ளிப்படுத்திய செரெண்டிப் கழகம அவ்வப்போது கோல் போட எடுத்த முயற்சிகள் கோல் குறுக்குக் கம்பத்தை உராய்ந்தவாறு வெளியே சென்றன.

serendib_sc.jpg

இவ்வாறு பல கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்ட செரெண்டிப் கழகம் போட்டியின் கடைசிக் கட்டத்தில் நிகம்போ யூத் கழகத்தின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் விளையாடியது.

இதன் பலனாக உபாதையீடு நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் டாக்கோ ஜோர்ஜ் பரிமாறிய பந்தை ஆறு யார் கட்டத்துக்கு அருகிலிருந்தவாறு அபிஷான் பலமாக உதைத்து கோலாக்கி, செரெண்டிப் கழகத்திற்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட அபிஷான், 'இயற்கை அனர்த்தத்திற்கு பின்னர் ரயில் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்ததால் நானும் எனது மூத்த சகோதரனும் யாழ்ப்பாணத்திலேயே பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறோம். ஏனைய செரெண்டிப் வீரர்களுடன் எங்களுக்கு பயிற்சிபெறக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆனால், செரெண்டிப் கழக முகாமைத்துவம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, முழு நேரமும் விளையாடவைத்து எங்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதற்காக அணி முகாமைத்துவத்திற்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன். ஏனைய வீரர்களுடன் நாங்கள் சிறந்த புரிந்துணர்வுடன் விளையாடி வருகிறோம். இந்தப் போட்டியில் செரெண்டிப் கழகத்தை நான் வெற்றிபெறச் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என தூய தமிழ் மொயில் தெரிவித்தார்.

பெலிக்கன்ஸ் கழகத்திடமும் பொலிஸ் கழகம் தோல்வி

இதே மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பி குழு போட்டியில் பொலிஸ் கழத்தை எதிர்த்தாடிய குருநாகல் பெலிக்கன்ஸ் கழகம 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பொலிஸ் கழகம் தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக தோல்வியைத் தழுவியது.

pelicans_sc__2_.jpg

பெலிக்கன்ஸ் கழகம் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியின் 26ஆவது நிமிடத்தில் கோஜோ அனோக்யே 25 யார் தூரத்திலிருந்து தாழ்வாக உதைத்த பந்தை நோக்கி இடதுபுறமாகத் தாவிய பொலிஸ் கோல் காப்பாளர் தினேஷ் மகேந்திரனினால் தடுக்க முடியாமல் போனது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் கோல் நிலையை சமப்படுத்த பொலிஸ் கழக வீரர்கள் எடுத்த முயற்சிகள் வீண்போயின.

ஒரு சந்தர்ப்பத்தில் பொலிஸ் கழக வீரர் கயான் ரிவால்டோ பலமாக உதைத்த பந்தை பெலிக்கன்ஸ் கோல்காப்பாளர் ரங்கன ஜயசேகர வேகமாக செயல்பட்டு திசை திருப்பினார். அவரது திறமையான கோல் தடுப்பும் பெலிக்கன்ஸ் கழகத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது.

https://www.virakesari.lk/article/235242

உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு

1 month 2 weeks ago

உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு

Jan 4, 2026 - 06:21 PM

உலக கிண்ணத்திற்காக இந்தியா செல்ல பங்களாதேஷ் அணி மறுப்பு

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா செல்வதை பங்களாதேஷ் அணி மறுத்துள்ளது 

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் ரீதியான பதற்றமான சூழ்நிலையில், பங்களாதேஷ் வீரர்களின் "பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை" கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இத்தொடரில் பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாடவிருந்த போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாரு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. 

இத்தொடரில், பங்களாதேஷ் அணி கொல்கத்தாவில் 3 போட்டிகளில் விளையாடவிருந்தது. 

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடவிருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் திடீரென அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை, இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பதற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

பங்களாதேஷில் வாழும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே முஸ்தபிசுர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmjzqczd403i3o29ngw2om12w

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்

1 month 3 weeks ago

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் 2026: இலங்கை குழாம்த்தில் யாழ். வீரர்கள் இருவர்

01 Jan, 2026 | 01:11 PM

image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக இந்த வருடம் நடைபெறவுள்ள 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களில் யாழ். வீரர்கள் இருவர் இடம்பெறுகின்றனர்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்துள்ளவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரே 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் இடம்பெறும் யாழ். வீரர்களாவர்.

vimath_dinsara_captain.jpg

kugadas_mathulan...png

துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்ற 11 வீரர்கள், உலகக் கிண்ண குழாத்திலும் பெயரிடப்பட்டுள்ளனர்.

நால்வர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை திரித்துவ கல்லூரி விக்கெட் காப்பாளர் ஆதம் ஹில்மி, வெஸ்லி கல்லூரி வீரர் ஜீவகன் ஸ்ரீராம் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

பதினாறு அணிகள் 4 குழுக்களில் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி  ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகின்றது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜப்பான் அணியை ஜனவரி 17ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

தொடர்ந்து 19ஆம் திகதி அயர்லாந்தையும் 23ஆம் திகதி அவுஸ்திரேலியாவையும் இலங்கை சந்திக்கும்.

இலங்கையின் குழு நிலைப் போட்டிகள் யாவும் நமிபியாவில் விண்ட்ஹோக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

vigneswaran_akash_hartley_-_hartley_poin

19 வயதின்கீழ் இலங்கை குழாம்

விமத் தின்சார (அணித் தலைவர் - றோயல் கல்லூரி), கவிஜ கமகே (உதவித் தலைவர் - கிங்ஸ்வூட் கல்லூரி), திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன (மூவரும் திரித்துவ கல்லூரி), விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார (இருவரும் மாத்தறை சென். சேவேஷியஸ் கல்லூரி), துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல (இருவரும் மஹாநாம கல்லூரி), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி), ரசித் நிம்சார (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை), விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட (இருவரும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி), ஜீவகன் ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி), மலின்த சில்வா (மொறட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரி)

https://www.virakesari.lk/article/234928

நம்ம ஊர்ப்பையனும் விளையாடப்போகிறார். வாழ்த்துகள் ஜீவகன் ஸ்ரீராம்.

2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள்

1 month 3 weeks ago

2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள்

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2025-ல் விளையாட்டு உலகில் பல முக்கியமான தருணங்கள் அரங்கேறியிருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் என பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கிரிக்கெட், கால்பந்து, தடகளம் என பல்வேறு போட்டிகளில் ரசிகர்களைக் கவர்ந்த சில புகைப்படங்களின் தொகுப்பு இங்கே

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்ததும் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்தியாவின் இரண்டு முன்னணி வீரர்கள் இருக்க, பின்னால் ஸ்கிரீனில் 100 என்ற மிகப் பெரிய எண்கள் தெரிவது போன்று எடுக்கப்பட்ட படம் இரு வீரர்களின் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானது

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,செளதி ப்ரோ லீக் தொடரில் அல் கலீஜ் அணிக்கெதிராக பைசைக்கிள் கிக் மூலம் கோலடித்தார் 40 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்தப் போட்டியில் 4-1 என ரொனால்டோவின் அல் நசர் அணி வெற்றி பெற்றது.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அந்த கோப்பையை வென்றதும் தனித்துவமாகக் கொண்டாடினார். நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உலக தடகள சாம்பியன்ஷிப்பின்போது போல் வால்ட்டில் 6.3 மீட்டர் தூரம் தாண்டி, தன்னுடைய முந்தைய உலக சாதனையை மீண்டும் முறியத்தார் ஸ்வீடன் வீரர் அர்மாண்ட் டுப்ளான்டிஸ். அந்த சாதனை படைத்ததும் கேலரியில் இருந்த ரசிகர்களோடு அவர் அதைக் கொண்டாடினார்

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பல ஐபிஎல் கோப்பையை ஏந்த காத்திருந்த கோலி, அந்தக் கனவு நனவானதும் தன் உணர்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டெல்லியில் நடந்த பாரா உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்றார் கியூபாவைச் சேர்ந்த கியார்மோ வரோனா கொன்சாலஸ். எறிவதற்கு முன்பாக அவர் இப்படித் தன்னைத் தயார்படுத்திக்கொண்ட விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியின்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணியின் ரசிகர்கள் வைத்த பேனர் இது. அந்த அணி மேனேஜர் லூயிஸ் என்ரீக்கேவின் மகள் ஜானா 2019-ஆம் ஆண்டு இறந்தார். 9 வயதான ஜானா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஜானா பிஎஸ்ஜி அணியின் ஜெர்ஸி அணிந்திருப்பதுபோன்று வடிவமைத்து தங்கள் மேனேஜரை ரசிகர்கள் நெகிழவைத்தனர். இந்த இறுதிப் போட்டியில் இன்டர் மிலன் அணியை வீழ்த்தியது பிஎஸ்ஜி. அவர்களின் நீண்ட நாள் லட்சியத்தை, என்ரீக்கே பதவியேற்ற பிறகே அவர்களால் அடையமுடிந்தது

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,14 வயதில் சதம் அடித்து, மிக இளம் வயதில் ஐபிஎல் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிவேக சதத்தையும் அன்று பதிவு செய்திருந்தார் வைபவ்.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்ததைக் கொண்டாடும் விராட் கோலி. இது கோலியின் 52வது ஒருநாள் போட்டி சதம். இதன்மூலம், ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள்) கோலி முறியடித்தார்.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஸ்டீபிள் சேஸ் தகுதிச் சுற்றின்போது நியூசிலாந்து வீரர் ஜார்டி பீமிஷ் தடுமாறி கீழே விழ, பின்னால் ஓடிவந்த வீரரின் ஷூ அவரது முகத்தில் பட்டது. இருந்தாலும், மீண்டும் எழுந்து ஓடி தகுதி பெற்ற பீமிஷ், இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கமும் வென்றார்.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பெண்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேஸிங்கில் உலக சாதனை படைத்து வெற்றி பெற்றது இந்தியா. கடினமான அந்தப் போட்டியில் சதமடித்து இந்தியா வெற்றி பெறக் காரணமாக இருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். அந்தத் தொடரின் பாதியில் அணியிலிருந்தே நீக்கப்பட்டிருந்தவர், அதன்பிறகு மீண்டும் வாய்ப்பு பெற்று இப்படியொரு ஆட்டத்தையும் கொடுத்தார். இந்தியாவை வெற்றி பெற வைத்த பிறகு கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி கூறினார் ஜெமிமா.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்காவில் நடந்த முதல் கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் செல்சீ சாம்பியன் பட்டம் வென்றது. வழக்கமாக கோப்பையை அணியிடம் அளிப்பவர்கள், அதன்பிறகு விலகிவிடுவார்கள். ஆனால், செல்சீ அணிக்குக் கோப்பையைக் கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கேயே சில நேரம் இருந்து அந்த அணியின் கொண்டாட்டத்தோடு பங்கெடுத்தது பரவலாகப் பேசப்பட்டது

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வெகுகாலம் ஐசிசி கோப்பைக்காகக் காத்திருந்த தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கேப்டன் டெம்பா பவுமா தலைமையில் தோல்வியே அடையாமல் ஆதிக்கம் செலுத்தி தங்கள் நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்தது தென்னாப்பிரிக்க அணி.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்த டியோகோ ஜோடா, ஜூலை மாதம் நடந்த ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவருடைய முன்னாள் அணியான வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸுக்கு எதிரான போட்டியின்போது ஜோடாவின் குழந்தைகளை மைதானத்துக்குள் அழைத்து வந்தார் லிவர்பூல் அணியின் கேப்டன் வேன் டைக். இரு தரப்பு ரசிகர்களும் அவர்களுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.

2025 - விளையாட்டு உலகின் சிறந்த புகைப்படங்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின்போது பந்து ஸ்டம்பை நோக்கிச் செல்ல, அதைத் தடுக்க கால்பந்து வீரரைப் போல் காலை நீட்டி உதைத்தார் இங்கிலாந்து பேட்டர் ஜேமி ஸ்மித்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crrkryxpr5zo

உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்று தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

1 month 3 weeks ago

உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

Dec 31, 2025 - 01:30 PM

உலக மேசைப்பந்து தரவரிசையில் தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில், இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி, அவர் உலகின் முதல் நிலை இடத்தைப் பெற்றுள்ளார். 

மிகச் சிறு வயதிலேயே உலகத் தரவரிசையில் உச்சத்தைத் தொட்டுள்ள தாவி சமரவீர, இலங்கைக்கு சர்வதேச அளவில் பெரும் புகழைத் தேடித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmjtq7vgx03c4o29njm0t4hqo

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார்

1 month 3 weeks ago

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார்

Published By: Digital Desk 3

30 Dec, 2025 | 01:16 PM

image

(என்.வீ.ஏ.)

South Asians & Diaspora

இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக  அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

அன்றைய தினம் கடற்கரையில் நடைபெற்ற அணியின் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் பெர்னாண்டோ தனது தலைமுறையினரில் மிகச் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, கித்ருவன் வித்தானகே ஆகியோருடன் அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பெற்றார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லின்கன் விளையாட்டரங்கில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அக்ஷு பெர்னாண்டோ 52 ஓட்டங்களைப் பெற்றார்.

பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரியில் கல்வி கற்ற அக்ஷு பெர்னாண்டோ 13, 15, 17 வயதுகளுக்குட்பட்ட அணிகளின் தலைவராகவும் 19 வயதுக்குட்பட்ட அணியின் உப தலைவராகவும் விளையாடினார்.

akshu_fernando.png

கழக மட்டத்தில் அவர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், சிலாபம் மேரியன்ஸ் கழகம் மற்றும் றாகமை விளையாட்டுக் கழகம் ஆகிவற்றை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

விபத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர் விளையாடிய கடைசி போட்டியில் (2018 டிசம்பர் 14) முவர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திலிருந்து  கடந்த 7 வருடங்களாக தொடர்ச்சியான தீவிர சிகிச்சைக்குள்ளாகி வந்த அக்ஷு பெர்னாண்டோவின் மறைவு ஒரு கவலைக்குரிய முடிவை குறிக்கிறது.

முன்னாள் சக அணி வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்தினர் அனைவரிடமிருந்தும் அவருக்கு அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அக்ஷு பெர்னாண்டோவை அவரது திறமைக்காக மட்டுமல்ல, அவரது குணம் மற்றும் சிறந்த மனப்பான்மைக்காக கிரிக்கெட் சமூகம் என்றென்றும் நினைவுகூறும் என்பது உறுதி.

அவரது ஆத்துமம் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.

https://www.virakesari.lk/article/234742

Checked
Tue, 02/24/2026 - 22:39
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed