நலமோடு நாம் வாழ

தொழுநோய் மறைக்க வேண்டிய நோய் அல்ல – குணப்படுத்தக்கூடியது; தொழுநோயை வென்ற ஒரு குடும்பத்தின் உண்மை கதை

5 hours 37 minutes ago

தொழுநோய் மறைக்க வேண்டிய நோய் அல்ல – குணப்படுத்தக்கூடியது; தொழுநோயை வென்ற ஒரு குடும்பத்தின் உண்மை கதை

23 Feb, 2026 | 09:57 AM

image

(மனோகரன் பிரியங்கா) 

எனக்கு இரட்டைப் பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு முகத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு வித்தியாசமான தேமல் தென்பட்டது. எனது கணவர் அதைப் பார்த்துவிட்டு, இது ஏதோ சாதாரணமாகத் தெரியவில்லை என்று கூறி, எங்களை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அங்குதான் அது தொழுநோய் (Leprosy) என்று எங்களுக்குத் தெரியவந்தது. அப்போது பிள்ளைகளுக்கு வெறும் இரண்டரை வயதுதான். "இவ்வளவு சிறிய பிள்ளைகளுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை, உங்கள் குடும்பத்தில் வேறு யாருக்காவது இருக்கிறதா என்று பாருங்கள்" என்று மருத்துவர்கள் கூறினார்கள். தேடிப் பார்த்தபோது, என் கணவரின் தந்தைக்கும் இந்த நோய் இருந்ததைக் கண்டறிந்தோம். இறுதியில், நானும் அந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. எங்கள் குடும்பத்தில் நான்கு பேருமே நோயாளிகளானோம் என்றார் தொழு நோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதான இளம் தாய்.

மட்டக்களப்பு மாவட்ட தொழுநோயாளர் சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில்,  2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 1,282 புதிய தொழுநோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 123 நோயாளிகள் (சுமார் 10%) 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். கண்டறியப்பட்ட புதிய நோயாளிகளில் சுமார் 8% பேர் ஏற்கனவே ஊனமுற்ற நிலையில் (Disabilities) இருப்பதும் தெரியவந்துள்ளது. மக்கள் தொகையில் 95% பேருக்கு இந்நோய்க்கு எதிராக இயற்கை எதிர்ப்பு சக்தி உள்ளது. மீதமுள்ள 5% பேருக்கு மட்டுமே இது பரவ வாய்ப்புள்ளது. இலங்கை 1995 ஆம் ஆண்டிலேயே உலக சுகாதார அமைப்பின் (WHO) தரநிலைப்படி தொழுநோயை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நோய் இன்னும் முழுமையாகத் துடைத்தெறியப்படவில்லை என்பதால், விழிப்புணர்வும் கண்காணிப்பும் தொடர்ந்து அவசியமாகிறது.

WhatsApp_Image_2026-02-09_at_4.51.08_PM.

“ இலங்கையின் தொழுநோய் பாதிப்புப் பட்டியலில் மட்டக்களப்பு இன்று இரண்டாம் இடத்தில் இருப்பதன் பின்னணியில் பல நூற்றாண்டுகால வரலாறும், சமூகப் பயமும், வறுமையும் பின்னிப் பிணைந்துள்ளன. சுமார் 200 - 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இலங்கையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பில் உள்ள மாந்தீவு என்ற இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஒரு காலகட்டத்தில், அங்கிருந்தவர்கள் முறையான மற்றும் முழுமையான மருத்துவ சிகிச்சை பெறாமலேயே வெளியேறி, மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர். அவர்கள் அறியாமலேயே இந்த நோய் பரவுவதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தனர். மேலும் வறுமை என்பது வெறும் உணவில்லாமை மட்டுமல்ல. முறையான வீட்டு வசதி மற்றும் ஊட்டச்சத்து இன்மையையும் குறிக்கும். சிறிய வீடுகளில் அதிக எண்ணிக்கையிலானோர் வசிப்பது, சுவாசம் வழியாக இந்நோய் மிக எளிதாகக் குடும்ப உறுப்பினர்களுக்குப் பரவக் காரணமாகிறது. போதிய குடிநீர், மலசலக்கூட வசதிகள் இல்லாமை மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை பாக்டீரியாக்கள் வேகமாகத் தாக்க வழிவகுக்கின்றன. மட்டக்களப்பின் பின்தங்கிய கிராமங்களில் நிலவும் நீண்டகால வறுமை தொழுநோய்க்கு முக்கியக் காரணியாகும்.” என்கிறார் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் மற்றும் சுகாதார மேம்பாடுகளை மேற்கொண்டுவரும் அமைப்பான  இலங்கை காவேரி கலா மன்றத்தின் இயக்குனர் வண ரி.எஸ். யோசுவா.

“ பயமும் சமூகப் புறக்கணிப்பும் தொழுநோய் என்றாலே கை, கால் அழுகிவிடும் என்ற பயம் எங்களுக்குள் இருந்தது. "மாந்தீவு" (தொழுநோயாளிகள் காப்பகம்) பற்றி கேள்விப்பட்டிருந்ததால், எங்களையும் அங்கு கொண்டு சென்று பிள்ளைகளிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கடவுளிடம் அழுது வேண்டினேன். சிகிச்சைக்காக மருந்துகள் எடுக்கும்போது முகம் கறுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்பினார்கள். நாங்கள் எதையும் மறைக்காமல் உண்மையைச் சொன்னோம். ஆனால், உண்மை தெரிந்ததும் சமூகம் எங்களை விலக்கி வைக்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்தினார்கள். உறவினர்கள், பெரியம்மா, அக்காமார் என நெருங்கியவர்களே வீட்டிற்கு வருவதையும் பிள்ளைகளைத் தூக்குவதையும் தவிர்த்தார்கள். எந்த நிகழ்வுகளுக்கும் எங்களை அழைப்பதில்லை ” என இளம் தாய் மனக் குமுறலுடன் கூறினார்.  

“ படித்தவர்கள் மத்தியில்கூட இந்த நோய் குறித்த புரிதல் குறைவாகவே உள்ளது. தவறான சிகிச்சைகள், ஆரம்பகாலத் தேமல்களைச் சாதாரணமானது அல்லது தோல் நோய் எனக் கருதி, முறையான மருத்துவரை நாடாமல் உள்ளூர் மருந்துகளையோ அல்லது எண்ணெய்களையோ பயன்படுத்துவதால் நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. "தொழுநோய் வந்தால் சமூகம் எங்களை ஒதுக்கிவிடும்" என்ற பயத்தால் பலர் நோயை மறைக்கின்றனர். இதனால் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்குத் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கிறது. சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் (தாத்தா, பாட்டி) இருந்து குழந்தைகளுக்கு இது பரவுகிறது. பாடசாலை ஆசிரியர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கத் தவறி விடுகின்றனர் ” என்கிறார் ரி.எஸ். யோசுவா.

இந்நோய் குறித்த அறியாமையினால் குடும்பங்களில் பிரிவுகள் ஏற்படுதல் மற்றும் திருமணத் தடைகள் போன்ற சமூகப் பிரச்சனைகளையும் இவர்கள் சந்திக்கின்றனர். ஆரம்ப காலத்தில் மருந்து வசதிகள் இல்லாததால் இந்நோய் குறித்த பயம் மக்களிடையே இருந்தது, ஆனால் தற்போது முறையான மருத்துவ சிகிச்சை மூலம் தொழுநோயை முற்றாகக் குணப்படுத்த முடியும். உணர்ச்சியற்ற தேமல், தடித்த தேமல், வெளிறிய நிறத்திலான தேமல், ரோமங்கள் வளர்ச்சி இல்லாத தேமல்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனையைப் பெற வேண்டும்.

“ எனது பிள்ளைகளை மூன்று வருடங்களுக்குப் பின்னர் பாடசாலையில் சேர்த்தபோது, ஆசிரியர்களுக்கு எனது பிள்ளைகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என தகவல் கிடைத்துவிட்டது. பிள்ளைகளுக்குத் தொழுநோய் இருக்கும்போது ஏனைய பிள்ளைகளுடன் எப்படிப் பழக விடலாம்? என்று ஆசிரியர்கள் என்னிடம் கேட்டனர். நான் மருத்துவரிடம் சென்று விளக்கம் கேட்டு, மருந்து எடுக்கத் தொடங்கிய உடனேயே இது மற்றவர்களுக்குத் தொற்றாது என்ற மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னரே பிள்ளைகள் பாடசாலையில் இணைய அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக மருந்து எடுத்த காலத்தில் உடல் சோர்வு, பசியின்மை மற்றும் இரத்தச் சோகை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும், விடாமுயற்சியுடன் மருந்துகளை உட்கொண்டோம். இப்போது நாங்கள் நான்கு பேருமே முழுமையாகக் குணமடைந்து விட்டோம்” என அந்த தாய் மகிழ்ச்சியுடன் கூறினார்.

தொழுநோய் என்பது மைக்ரோ பாக்டீரியம் என்ற கிருமியால் வரும் ஒரு சாதாரண நோயாகும். 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முறையான மாத்திரைகளை உட்கொண்டால் முழுமையாகக் குணப்படுத்தலாம். மருந்து உட்கொள்ளத் தொடங்கிய முதல் 3 நாட்களிலேயே உங்களிடமிருந்து கிருமி மற்றவர்களுக்குத் தொற்றும் வாய்ப்பு 100 வீதம் நீங்கிவிடுகிறது. தோலில் உணர்ச்சியற்ற தேமல், கை-கால்களில் மந்தமான உணர்வு ஆகியவை தொழுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் ஊனம் ஏற்படாமல் தடுக்கலாம். தொழு நோய் சிகிச்சையில் இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது, சிகிச்சை வகை ; PB (Paucibacillary) (குறைந்த பாதிப்பு) நோயாளியின் நிலை ; 3 அல்லது அதற்கும் குறைவான தழும்புகள் உள்ளவர்கள் சிகிச்சைக்கான காலம் 6 மாதங்கள் ஆகும். இரண்டாவது, MB (Multibacillary)(அதிக பாதிப்பு) நோயாளியின் நிலையானது 3-க்கும் மேற்பட்ட தழும்புகள் காணப்படுபவர்கள் சிகிச்சை காலம் 12 மாதங்கள் ஆகும்.

WhatsApp_Image_2026-02-09_at_4.53.40_PM.

“ ஒரு மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காட்டப்படுவது, அங்குக் கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் பணிகள் மிகச் சிறப்பாக நடப்பதைக் குறிக்கிறது. இலங்கை சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு (ALC) மற்றும் மாவட்ட ரீதியிலான மருத்துவக் குழுக்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றன. மட்டக்களப்பில் நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்திருப்பது, அங்கு மருத்துவத் துறை விழிப்புணர்வுடன் இருப்பதையே காட்டுகிறது. மறைந்திருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமே வரும் காலங்களில் இந்நோயை முழுமையாக ஒழிக்க முடியும். தொழுநோய் என்பது மருத்துவர்கள் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. சமூகம், குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதை வேரறுக்க முடியும். தொழுநோயை கண்டு பயப்படத் தேவையில்லை. ” என இலங்கை காவேரி கலா மன்றத்தின் இயக்குனர் ரி. எஸ் யோசுவா தனது கருத்துக்களை முன்வைத்தார்.

“ சமூகத்திற்குச் சொல்லும் செய்தி தொழுநோய் குறித்துச் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலேயே மக்கள் எங்களை ஓரம் கட்டுகிறார்கள். மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் இன்னும் பலர் இந்த நோய்க்குச் சிகிச்சை பெறப் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தொழுநோயைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இதற்கான மருந்துகள் இப்போது மிக எளிதாகக் கிடைக்கின்றன. சிகிச்சை எடுக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இது மற்றவர்களுக்குத் தொற்றாது. எனவே, மறைக்காமல் சிகிச்சை பெற்று இயல்பாக வாழுங்கள்” என ஏனையவர்களுக்கு மிகவும் தைரியத்துடன் கூறுகிறார் தொழுநோயை வென்ற இரண்டு பிள்ளைகளின் தாய்.

“மடக்களப்பு மாவட்டத்தில் தொழு நோயாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளாக 608 பேர் உள்ளனர். கடந்த ஆண்டை விட சில மாவட்டங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அல்லது சங்கங்களின் செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இன்னும் சில மாவட்டங்களில் இந்த நிலைமை எந்தவித மாற்றமுமின்றி கடந்த ஆண்டைப் போலவே சமநிலையில் காணப்படுகிறது. தொழுநோய்க்கான சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றன. நோயாளிகளைக் கண்டறிவதற்கும் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு, மிகச் சிறப்பான முறையில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நோயாளிகளைக் கண்டறிதல் முதல் அவர்களுக்கான மருந்து மற்றும் இதர மருத்துவ சேவைகள் வரை அனைத்தும் அரசின் நேரடி மேற்பார்வையில் சிறப்பாக நடைபெறுகின்றன ” என மட்டக்களப்பு மாவட்ட தொழுநோயாளர் சங்க இயக்குனர் டெபோரா தெரிவித்தார்.

தொழுநோய்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே என ஆய்வுகள் காட்டுகின்றன. வறுமை காரணமாக, வைத்தியசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத நிலையில் பலர் உள்ளனர். இந்நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், நோயாளிகள் தங்களைத் தாங்களே சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. நோய் குறித்த பயத்தினால் ஏனையவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அவர்கள் தயங்குகின்றனர். தொழுநோயின் தீவிரத்தினால் ஏற்படும் ஊன நிலைகள் (Grade 2 Deformity) சாதாரண பார்வையில் ஒருவருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதனால், அவர்கள் மற்றவர்களைப் போல வேலை செய்ய முடியாத நிலை இருந்தாலும், அவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

“புதிய நோயாளிகளைக் கண்டறியும் பணியில் தொழுநோயாளர் சங்கங்கள் (Leprosy People's Association) முக்கிய பங்கு வகிக்கின்றன. இவர்கள் மூலம் கண்டறியப்படும் புதிய நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக சுகாதாரத் திணைக்களத்திடம் (Health Department) ஒப்படைக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அரசால் வழங்கப்படுகின்றன. இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் தற்போது சுமார் 10 மாவட்டங்களில் மட்டுமே தொழுநோயாளர் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்தச் சேவையை 25 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதே பிரதான இலக்காகும். சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், நோய் குறித்த பயம் மற்றும் சமூகப் பாகுபாட்டினால் மறைந்திருக்கும் புதிய நோயாளிகளை வெளிக்கொண்டு வர உதவுகின்றனர். கண்டறியப்படும் நோயாளிகள் உடனடியாகச் சுகாதாரத் திணைக்களத்திடம் (Health Department) ஒப்படைக்கப்பட்டு, அவர்களுக்கான முறையான சிகிச்சைகள் உறுதி செய்யப்படுகின்றன ” எனத் தெரிவித்தார் டெபோரா.

i.jpg

மறைந்திருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலமே வரும் காலங்களில் இந்நோயை முழுமையாக ஒழிக்க முடியும். தொழுநோய் என்பது மருத்துவர்கள் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. சமூகம், குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதை வேரறுக்க முடியும். தொழுநோயை கண்டு பயப்படத் தேவையில்லை. அனைத்து தேமல்களும் தொழுநோய் அல்ல, அதனை மருத்துவர்களே உறுதி செய்வார்கள். ஒரு நோயாளி முறையாக மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கினால், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு இந்நோய் பரவாது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்திலிருந்து ஓரங்கட்டத் தேவையில்லை. அவர்கள் மருந்து உட்கொள்ளும் போது மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்பதால், அவர்கள் அனைவரையும் போல இயல்பாக வாழ்வதற்கு உரிமை உடையவர்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் சமூகத்திற்கு ஒரு சுமையாக அல்லாமல், சமூகத்தின் அழகான ஒரு பகுதியாகவே இலங்கையில் கருதப்படுகின்றனர்.

சமூகத்தில் அல்லது மாவட்டங்களில் தொழுநோய்க்கான அறிகுறிகளுடன் எவரேனும் இனம் காணப்பட்டால், அவர்களை உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வழிகாட்ட வேண்டியது அனைவரினதும் கடமையாகும். நமக்கோ அல்லது நமது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இலங்கையைத் தொழுநோயற்ற நாடாக மாற்றுவது ஒரு கூட்டுப் பொறுப்பு , அதனை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும். தொழுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்பதால், விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் இதனைத் தடுக்க முடியும்.

https://www.virakesari.lk/article/238236

பிரெட், பிஸ்கட் போன்ற பதப்படுத்திய உணவுகள் குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன?

1 day 15 hours ago

பிரெட், பிஸ்கட் போன்ற பதப்படுத்திய உணவுகள் குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன?

குடல் ஆரோக்கியம், பதப்படுத்திய  உணவுகள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • மெலிசா ஹோகன்பூம்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை நீண்ட காலத்திற்கு மலர்ச்சியாக வைத்திருக்கச் சேர்க்கப்படும் சேர்க்கைப் பொருட்கள் நமது குடலில் உள்ள நுண்ணுயிர் தொகுதிகளின் ஆரோக்கியத்தில் எதிர்பாராத விளைவை ஏற்படுத்தக்கூடும்.

நமது உடல் அனைவருக்குள்ளும் டிரில்லியன்கணக்கான செல்களின் பரபரப்பான கூட்டம் ஒன்று உள்ளது, இது நமது ஆரோக்கியத்தின் பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை நாம் நமது "மைக்ரோபயோம்" (நுண்ணுயிர் தொகுதி) என்று அழைக்கிறோம்.

"குடல் பன்முகத்தன்மையை ஒரு காடு போல நீங்கள் நினைக்கலாம். உங்கள் காட்டில் அதிக நுண்ணுயிரிகள் மற்றும் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் இருந்தால், ஏதேனும் இடையூறுகள் ஏற்படும்போது அதைத் தாங்கும் அதிக ஆற்றல் உங்களுக்கு இருக்கும்," என்கிறார் டீக்கின் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து தொற்றுநோயியல் நிபுணர் மெலிசா லேன்.

ஆரோக்கியமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நுண்ணுயிர் தொகுதி என்பது நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது என்பதை அறிவியல் நீண்ட காலத்திற்கு முன்பே உறுதிப்படுத்தியுள்ளது, ஏனெனில் இது நமது மனநிலை முதல் வளர்சிதை மாற்றம் மற்றும் நமது மூளை வரை அனைத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது.

குடலில் பாக்டீரியா பன்முகத்தன்மை குறைவாக உள்ளவர்களுக்குத் தூக்கப் பிரச்னைகள், மோசமான குடல் ஆரோக்கியம் மற்றும் வீக்கம் (Inflammation) ஏற்பட வாய்ப்புள்ளது, அதே சமயம் அதிக பன்முகத்தன்மை என்பது நீண்ட ஆயுளுடனும் தொடர்புடையது.

"இது ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பு. இது நமது உடலில் உள்ள ஒரு கூடுதல் உறுப்பு போன்றது," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து பேராசிரியை சாரா பெர்ரி விளக்குகிறார்.

ஆனால் நாம் பொதுவாக உண்ணும் சில உணவுகள் இந்தச் சுற்றுச்சூழல் அமைப்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமது குடலில் உள்ள நுண்ணுயிரிகளைச் சிதைத்து மாற்றக்கூடும்.

இதற்கான காரணங்களில் ஒன்று, நமது உணவில் உள்ள ஏராளமான சேர்க்கைப் பொருட்கள்தான் என்று அதிகளவில் கூறப்படுகிறது. இந்த சேர்க்கைப் பொருட்கள் நமது குடலுக்கு என்ன செய்கின்றன என்று என்னை யோசிக்க வைத்தது.

குடல் ஆரோக்கியம், பதப்படுத்திய  உணவுகள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பல சூப்பர் மார்க்கெட் உணவுகள் அவற்றின் வைப்பு கால அளவை நீட்டிக்கச் சேர்க்கப்பட்ட எமல்சிஃபையர்களைப் பயன்படுத்துகின்றன

எதைச் சேர்க்கிறோம்? ஏன் சேர்க்கிறோம்?

அடுத்த முறை நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களைப் பார்க்கும்போது ஏதேனும் ஒரு மூலப்பொருள் பட்டியலைப் பார்த்தால், நமது உணவில் எத்தனை உணவு எமல்சிஃபையர்கள், செயற்கை இனிப்புகள் மற்றும் உணவுச் சாயங்கள் சேர்க்கப்படுகின்றன என்பதை நீங்கள் விரைவாகக் கவனிப்பீர்கள்.

உணவைச் சுவையாக்குவது அல்லது அதன் மொறுமொறுப்பை அதிகரிப்பது முதல் அதன் மேற்பரப்பு தன்மையை மாற்றுவது மற்றும் அதன் ஆயுளை நீட்டிப்பது வரை இவை அனைத்தையும் செய்கின்றன.

உதாரணமாக, உணவின் ஊட்டச்சத்து தரத்தைச் சரிபார்க்க நான் பயன்படுத்தும் ஒரு செயலியின் படி, சமீபத்தில் நான் வாங்கிய ஒரு "ஆரோக்கியமான" சிக்கன் சாலட்டில் அதிக ஆபத்துள்ள சேர்க்கைப் பொருள் இருந்தது.

அதில் பல எமல்சிஃபையர்கள் இருந்தன. எமல்சிஃபையர்கள் என்பது எண்ணெயும் நீரும் ஒன்றோடு ஒன்று கலக்க அனுமதிக்கும் பொருட்கள் ஆகும். பொதுவாக அதிகப்படியாக பதப்படுத்தப்படும் உணவுகளில் இவை காணப்படுகின்றன. உங்களுக்குப் பிடித்தமான, வாயில் வைத்ததும் கரையும் ஐஸ்கிரீமின் அமைப்பு? அது எமல்சிஃபையர்களால் உருவானது. அவை அதன் விற்பனைக்கான கால அவகாசத்தையும் நீட்டிக்கின்றன. சூப்பர் மார்க்கெட் ரொட்டிகள் நீண்ட காலத்திற்கு பஞ்சுபோல இருப்பதற்கும் எமல்சிஃபையர்கள் உதவுகின்றன. வீட்டில் செய்த கேக்கை விட கடையில் வாங்கிய கேக் நீண்ட காலத்திற்கு ஈரப்பதத்துடன் இருப்பதற்கும் இதுவே காரணம்.

ஒரு ஆய்வின்படி, பிரிட்டன் சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள 6,640 வெவ்வேறு உணவுப் பொருட்களில் எமல்சிஃபையர்கள் உள்ளன, இது ஆய்வு செய்யப்பட்ட மொத்த தயாரிப்புகளில் பாதியாகும்.

எனவே இது ஏன் கவலைக்குரிய விஷயம்? இந்த சேர்க்கைப் பொருட்கள் நமது குடல் நுண்ணுயிர் தொகுதியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இவை குடல் அழற்சி நோய், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (Irritable bowel syndrome) மற்றும் பெருங்குடல் புற்றுநோயுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், எமல்சிஃபையர்களுக்கும் உடல்நலக் குறைவுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

நமது நுண்ணுயிர் தொகுதி எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

பிரான்சின் பாரிஸில் உள்ள இன்ஸ்டிட்யூட் பாஸ்டரில் பெனாய்ட் சாசைங் தலைமையில் எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு எமல்சிஃபையர்களின் குறைந்த அளவுகள், குடல் பாக்டீரியாக்கள் குடல் சுவரை நோக்கி நெருங்கிச் செல்லக் காரணமாக அமைந்தன, இது வீக்கம் மற்றும் நோய் அறிகுறிகளுக்கு வழிவகுத்தது. ஏற்கனவே குடல் பிரச்னைகள் உள்ள எலிகள் மிகவும் கடுமையான வீக்கத்தை எதிர்கொண்டன.

சாதாரணமாக நமது குடல் நுண்ணுயிரிகள் குடல் சுவரில் படர்ந்துள்ள ஒரு சளி அடுக்கினால் பாதுகாப்பான தூரத்தில் வைக்கப்படுகின்றன, இது வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது. பாக்டீரியாக்கள் நமது பாதுகாப்பு சளி அடுக்கைத் அரிக்கும்போதுதான் நாள்பட்ட அழற்சி நோய்களைத் தூண்டும் என்று சாசைங் கூறுகிறார்.

குடல் ஆரோக்கியம், பதப்படுத்திய  உணவுகள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட பல உணவுகளில் பயன்படுத்தப்படும் எமல்சிஃபையர்கள், குடல் அழற்சி நோய் போன்ற சாத்தியமான உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன

தொடர்ச்சியான ஆய்வு முடிவுகள் மனிதர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகின்றன. 2024-இல் பிரான்சில் 1,00,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், எமல்சிஃபையர்களுக்கு அதிகப்படியாக ஆட்பட்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. 90,000-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு, எமல்சிஃபையர்களுக்கும் மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கும் இடையே ஒரு சாத்தியமான தொடர்பைக் கண்டறிந்தது.

இவை வெறும் தொடர்புகளாக மட்டுமே இருந்த நிலையில், குடல் மாதிரிகளைச் சேகரிப்பதன் மூலம் சாசைங் மற்றும் அவரது சகாக்கள் மனிதர்கள் மீதான ஒரு சிறிய சோதனையில், ஆரோக்கியமான நபர்கள் உணவில் கெட்டியாக்கியாக பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு எமல்சிஃபையரை உட்கொண்டபோது, அது குடல் நுண்ணுயிரிகளைச் சிதைத்து, ஆரோக்கியமான நுண்ணுயிரிகளைக் குறைத்ததைக் காட்டியுள்ளனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் உணவுமுறை பேராசிரியர் கெவின் வீலன் மற்றும் சாசைங் ஆகியோர் சமீபத்தில் கிரோன் நோய் (Crohn's disease) பாதிப்புள்ள நபர்களிடம் ஒரு மருத்துவச் சோதனையில் இணைந்து பணியாற்றினர். அந்தச் சோதனையில், எமல்சிஃபையர் கட்டுப்படுத்தப்பட்ட உணவை உட்கொண்டவர்கள், தங்களது உணவின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து எமல்சிஃபையர் உட்கொண்டவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக நோயின் அறிகுறிகள் குறையப் பெற்றனர்.

அவற்றின் பயன்பாடு குறித்த உடல்நலக் கவலைகள் இருந்தபோதிலும், நாம் எமல்சிஃபையர்களைத் தவிர்க்க வேண்டுமா என்பது குறித்து பொது வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. இதற்கான ஒரு காரணம், நமது உணவில் ஏராளமான சேர்க்கைப் பொருட்கள் உள்ளன மற்றும் அவற்றில் எத்தனை நச்சுத்தன்மை வாய்ந்தவை அல்லது அவற்றின் கலவைதான் தீங்கு விளைவிக்கிறதா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் உறுதியாக அறியவில்லை என்று வீலன் கூறுகிறார்.

நாம் உண்ணும் எமல்சிஃபையர்கள் அனைத்தும் உணவுத் தொழில்துறையால் அங்கீகரிக்கப்பட்டவை என்று சாசைங் விளக்குகிறார். "அவை நச்சுத்தன்மை விளைவு அல்லது டிஎன்ஏ பாதிப்பை ஏற்படுத்தும் திறன் ஆகியவற்றிற்காக மட்டுமே சோதிக்கப்படுகின்றன. அந்த இரண்டு அம்சங்களிலும் அவை முற்றிலும் சரியாக உள்ளன. ஆனால் நுண்ணுயிர் தொகுதி மீதான நேரடி விளைவு குறித்து அவை கடந்த காலத்தில் ஒருபோதும் சோதிக்கப்படவில்லை," என்று அவர் கூறுகிறார்.

"ஐரோப்பிய ஒன்றியத்தில் அனைத்து உணவு சேர்க்கைப் பொருட்களும் 'E எண்' மூலம் அடையாளம் காணப்படுகின்றன. அவை உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவற்றின் பாதுகாப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது," என ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. இதேபோல் அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், "ஒரு உணவு சேர்க்கைப் பொருள் சந்தையில் விற்கப்படும் உணவில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று கூறுகிறது.

இருந்தபோதிலும், நிச்சயமாகக் குவியும் விளைவுகள் இருக்கலாம் என்று சாசைங் கூறுகிறார். இந்த வேதிப்பொருட்களும் ஊட்டச்சத்துக்களும் எவ்வாறு ஒன்றோடொன்று வினைபுரிகின்றன என்பது "காக்டெய்ல் விளைவு" என்று அழைக்கப்படுகிறது - மேலும் பல மாற்றங்கள் இருப்பதால், ஒரு சேர்க்கைப் பொருளின் விளைவை மற்றொன்றிலிருந்து பிரித்து அறிவது கடினம். ஆய்வகத்தில் மனித செல்கள் மீது வெளிவரும் சான்றுகள், பொதுவாக உட்கொள்ளப்படும் பல சேர்க்கைப் பொருட்களின் ஒருங்கிணைந்த விளைவுகள் செல் சேதத்தை அதிகரிப்பதோடு தொடர்புடையவை என்று தெரிவிக்கின்றன.

கூடுதலாக, ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைத் தாண்டி உணவு எவ்வாறு பதப்படுத்தப்படுகிறது என்பதும் குடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

ஒரு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையில் லேன் மற்றும் அவரது சகாக்கள் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் உணவுமுறை குடல் நுண்ணுயிரி பன்முகத்தன்மை குறைவதற்கு வழிவகுத்தது என்பதைக் கண்டறிந்தனர். குழு இரண்டு பிரிவினரை மூன்று வாரங்களுக்கு ஒப்பிட்டது; இரண்டு பிரிவினரும் குறைந்த கலோரி உணவுகளை உட்கொண்டனர். அந்த உணவுகள் ஒப்பீட்டளவிலான ஊட்டச்சத்துகளைக் கொண்டிருந்தன.

முக்கியமாக, ஒரு பிரிவு ஷேக்ஸ், சூப்கள் மற்றும் பார்கள் போன்ற அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவு மாற்றீட்டுத் தயாரிப்புகளை அடிப்படையாகக் கொண்ட உணவை உட்கொண்டது, மற்றொன்று குறைந்தபட்சம் பதப்படுத்தப்பட்ட, புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொண்ட குறைந்த அளவில், அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொண்ட உணவுமுறையைப் பின்பற்றியது.

இரண்டு குழுக்களும் ஒரே மாதிரியான எடை இழப்பைச் சந்தித்தாலும், ஒவ்வொரு குழுவிலும் உள்ள குடல் பாக்டீரியாக்கள் வியக்கத்தக்க வகையில் வேறுபட்டன. குறைந்த அளவில், அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் கொண்ட உணவு முறையைப் பின்பற்றியவர்கள் அதிகப் பன்முகத்தன்மை கொண்ட குடல் நுண்ணுயிரிகளைக் கொண்டிருந்தனர், அதே சமயம் அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகமாக கொண்ட உணவு முறையைப் பின்பற்றியவர்கள் குறைந்த பன்முகத்தன்மையையும், அதிக மலச்சிக்கலையும் கொண்டிருந்தனர். குடல் பன்முகத்தன்மை குறைந்த பங்கேற்பாளர்கள் வயிறு உப்புசம் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றில் சாதகமற்ற மாற்றங்களை சந்தித்ததாக கூறினர்.

ஏன் என்று குழுவினால் துல்லியமாகச் சுட்டிக்காட்ட முடியாவிட்டாலும், நார்ச்சத்து வகைகள் வேறுபட்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று லேன் கூறுகிறார். "அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுமுறையில் சேர்க்கைப் பொருட்களின் கலவைகள் மற்றும் மிகக் குறைந்த அளவிலான குறைந்தபட்ச பதப்படுத்தப்பட்ட பொருட்கள் இருந்தன, அதே சமயம் குறைந்த- அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவில் முழு உணவுகளிலிருந்து வரும் பல்வேறு வகையான நார்ச்சத்துக்கள் இருந்தன மற்றும் மிகக் குறைவான சேர்க்கைப் பொருட்களே இருந்தன," என்று அவர் கூறினார்.

குடல் ஆரோக்கியம், பதப்படுத்திய  உணவுகள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உணவில் உள்ள சேர்க்கைப் பொருட்கள் நமது டிஎன்ஏ-வைச் சேதப்படுத்தாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆனால் நமது குடல் நுண்ணுயிர் தொகுதியில் அவற்றின் விளைவுகள் குறித்து ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த ஆய்வுகளே உள்ளன

ஆரம்பத்திலிருந்து சமைத்தல்

கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பல அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன, இதுவும் குடலைப் பாதிக்கலாம். நார்ச்சத்து மற்றும் பாலிபினால்கள் நிறைந்த உணவு நமது குடல் பாக்டீரியாக்களுக்கு ஊட்டம் அளிக்கிறது என்பது ஏற்கனவே நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பாலிபினால்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை என்று அறியப்படுகின்றன.

சான்றுகள் பெருகி வரும் நிலையில், எமல்சிஃபையர்களின் இந்தத் தீங்கு ஏற்படுத்தும் விளைவுகளில் சிலவற்றைத் தவிர்க்கப் பொதுமக்கள் எவற்றைக் கவனிக்க வேண்டும் என்று நான் பேசியவர்களிடம் கேட்டேன்.

முடிந்தவரை புதிய பொருட்களைப் பயன்படுத்தி ஆரம்பத்திலிருந்தே சமைப்பதுதான் சிறந்தது என்று பெர்ரி கூறுகிறார். அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்ப்பது என்பது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்று அவர் கூறுகிறார்.

வீலனும் இதை ஒப்புக்கொள்கிறார்: "உணவு சேர்க்கைப் பொருள் உள்ள எதையும் ஒருபோதும் சாப்பிட வேண்டாம் என்று நான் பொதுமக்களிடம் சொல்ல விரும்பவில்லை, நிச்சயமாக நான் அதைச் செய்யவில்லை, மக்களையும் அதைச் செய்யுமாறு நான் பரிந்துரைக்கவில்லை." நாம் அனைவரும் செய்யக்கூடியது என்னவென்றால், ஆரோக்கியமாக உண்பதைப் பற்றிச் சிந்திப்பதாகும் என்று அவர் கூறுகிறார். "உணவு என்பது நமது வாழ்வில் ஒரு விலைமதிப்பற்ற விஷயம், நாம் அதைக் கொண்டாட வேண்டும்."

தெளிவாகக் கூறினால், அளவோடு இருப்பதுதான் முக்கியம், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நமது உணவில் எதைச் சேர்க்கலாம் என்பதையும் நாம் பரிசீலிக்கலாம் என்று பெர்ரி கூறுகிறார், குறிப்பாகத் தின்பண்டங்கள் (Snacks) என்று வரும்போது, அவை நமது தினசரி கலோரிகளில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன.

இறுதியில், ஒரு நல்ல விதி என்னவென்றால், முடிந்தவரை அதிகப் புதிய விளைபொருட்களை உண்பதாகும். நாம் அவ்வாறு செய்யும்போது, நமது உடலும் நமது நுண்ணுயிரிகளும் பயன் அடைகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3097v4pqemo

'ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி' சிறப்பு சிகிச்சை!

6 days 8 hours ago

காயத்திலிருந்து 'விரைவில்' மீள ரிஷப் பண்ட் எடுத்து வரும் சிறப்பு சிகிச்சை என்ன?

ரூர்க்கி, ரிஷப் பண்ட், சாலை விபத்து, ஐபிஎல் 2026 தொடர், உயர் அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை, கிரிக்கெட்

பட மூலாதாரம்,Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, இந்திய விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், 'ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி' எனும் ஆக்சிஜன் சிகிச்சை எடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் போது, ரிஷப் பண்ட்-க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவரின் தோளில் கைவைத்தபடி, ஒரு காலில் நடந்தவாறு அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

அதற்கு முன்னதாக, லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்தபோது அவரது இடது கை விரலில் காயம் ஏற்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி, போட்டியின் போது அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தக் காயங்கள் மற்றும் ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதைக் கருத்தில் கொண்டு, ரிஷப் பண்ட் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியைத் தொடங்கியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளுக்குத் திரும்புவதற்கு ரிஷப் பண்ட் நம்பியிருக்கும் இந்த சிகிச்சை எப்படிப்பட்டது? இது எவ்வளவு பயனுள்ளது மற்றும் எந்தச் சூழ்நிலைகளில் வழங்கப்படுகிறது? இது தொடர்பாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் ட்ராமா சிகிச்சை மைய பேராசிரியர் டாக்டர் சௌரப் சிங்கிடம் பிபிசி பேசியது.

ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை

ரூர்க்கி, ரிஷப் பண்ட் சாலை விபத்து, ஐபிஎல் 2026 தொடர், உயர் அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை, கிரிக்கெட், ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை

பட மூலாதாரம்,Getty Images

ஹைப்பர்பேரிக் என்ற சொல், சாதாரண அளவை விட அதிகமான என்ற பொருள் கொண்ட 'ஹைப்பர்' மற்றும் அழுத்தம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் 'பேரிக்' ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாகும்.

ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி, சாதாரண அளவை விட அதிகப்படியான ஆக்சிஜனை வழங்கி, உடல் நலம் தேறுவதை விரைவுபடுத்தும் ஒரு சிகிச்சை முறையாகும்.

அறிவியல் ரீதியாக, நமது வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன் மற்றும் 21% ஆக்சிஜன் உள்ளது. ஆனால், இதில் சிசிச்சை பெறும் நபருக்கு 100% சுத்தமான ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

இந்த ஆக்சிஜன் ஒரு சிறப்பு அழுத்த கேபினில் வழங்கப்படுகிறது, அங்கு காற்றின் அழுத்தம் சாதாரண நிலையை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும்.

அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, சிசிச்சை பெறும் நபரின் நுரையீரல்கள் சாதாரண நிலையை விட மிக அதிகமான ஆக்சிஜனை உள்வாங்கிக்கொள்ள முடியும்.

இந்தக் கூடுதல் ஆக்சிஜன், ரத்தத்தின் வழியாக உடலில் காயம், புண் அல்லது தொற்று உள்ள பகுதிகளை சென்றடைகிறது.

'' திசுக்கள் அல்லது காயமடைந்த பகுதிகள் அதிக ஆக்சிஜன் பெறுவதால் வேகமாக குணமடைகின்றன. இதன் மூலம் உடலில் புதிய செல்கள் உருவாகும் செயல்முறை மேலும் விரைவாகிறது.'' என்கிறார் சௌரப் சிங்.

மேற்கத்திய நாடுகளில் இது ஆரம்பத்தில் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கே பயன்படுத்தப்பட்டது.

"ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி தொடர்ந்து ஆராய்ச்சிக்கு உட்பட்டு வருகிறது. முன்னதாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருந்த இதன் பயன்பாடு, தற்போது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்காக மருத்துவர்களும் நோயாளிகளும் இந்தத் தெரபியைத் தேர்வு செய்யும் அளவில் மேம்பட்டுள்ளது" என்று தெரிவித்தார் சௌரப் சிங்.

ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை, ரூர்க்கி, ரிஷப் பந்த், சாலை விபத்து, ஐபிஎல் 2026 தொடர், உயர் அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை, கிரிக்கெட்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,2022 ஆம் ஆண்டு, ரிஷப் பண்ட் ஒரு சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.

எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

டாக்டர் சௌரப்பின் கூற்றுப்படி, இந்தத் தெரபி மிகவும் நல்ல பலன்களை வழங்கி வருகிறது.

குறிப்பாக செல்கள் வேகமாக உருவாகி அழியும் பகுதிகளில், குணமடைய அதிக ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களில் இந்த சிகிச்சை சிறப்பாக செயல்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

"பார்வை இழப்பு, கதிர்வீச்சினால் ஏற்படும் திசு சேதம், கடுமையான ரத்த சோகை, தோல் ஒட்டுதல் அதாவது 'ஸ்கின் கிராஃப்டிங்' எனப்படும் உடலின் ஒரு பகுதியில் உள்ள தோலை நீக்கிவிட்டு மற்றொரு பகுதியின் தோலைப் பொருத்தும் முறை, பலத்த காயம், எலும்பு அல்லது தோலில் ஏற்படும் தீவிரத் தொற்றுகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணலாம்" என்று கூறுகிறார்.

"அதேபோல், தீக்காயங்களால் தோல் அல்லது திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு, 'ஆஸ்டியோமைலிடிஸ்' எனப்படும் எலும்பில் ஏற்படும் தீவிரத் தொற்று, கேட்கும் திறன் குறைபாடு ஏற்படும் பிரச்னைக்கும் தற்போது இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது," என்று டாக்டர் சௌரப் குறிப்பிட்டார்.

ரூர்க்கி, ரிஷப் பந்த், சாலை விபத்து, ஐபிஎல் 2026 தொடர், உயர் அழுத்த ஆக்சிஜன் சிகிச்சை, கிரிக்கெட்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

இந்தச் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?

இந்தியாவில் இந்த சிகிச்சையை வழங்கும் மையங்கள் அல்லது நிபுணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சைக் கட்டணத்தைப் பொறுத்தவரை, அரசு மையங்களில் இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதால், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்தில் ஒரு அமர்வுக்கு நோயாளியிடமிருந்து 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.'' என்கிறார் சௌரப் சிங்.

அதே நேரத்தில், தனியார் மையங்களில் ஒரு அமர்வுக்கு 2,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அமர்வு எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது உங்கள் காயம் அல்லது உடல்நலப் பிரச்னையைப் பொறுத்தது. சராசரியாக ஒவ்வொரு அமர்வும் 45 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கும்.

அழகுக்கலையில் பயன்பாடு

வயதான தோற்றத்தைக் குறைப்பதற்காகவும், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்காகவும் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி பயன்படுத்தப்படுவதாக இணையதளங்களில் பார்க்கமுடிகிறது.

பல அழகு நிலையங்கள் இந்த வசதியை வழங்குகின்றன. இந்த சிகிச்சை உண்மையிலேயே பாதுகாப்பானதா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சௌரப், "உண்மையில், இந்தத் தெரபியை எடுத்துக்கொள்வதால் சருமம் இளமையாக மாறும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி தற்போது அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறாத சில விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தங்கள் முகம் பொலிவு பெற்றதாகக் கூறுகிறார்கள், ஆனால் அவை தனிப்பட்ட அனுபவங்களே தவிர, இதற்கான போதிய அறிவியல் சான்றுகள் இல்லை" என்று கூறுகிறார்.

விடாமுயற்சி

ரிஷப் பண்ட் மற்றும் அவரைப் போன்ற மற்ற வீரர்கள் காயங்களிலிருந்து விரைவாக மீண்டு வர இந்த சிகிச்சைமுறையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

2022-ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கினார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மிகக் கடுமையானவை. பண்ட் 2024-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியது மட்டுமல்லாமல், மிகவும் அதிரடியாகத் தனது வருகையைப் பதிவு செய்தார். இருப்பினும், விளையாட்டின் போது அவருக்கு அவ்வப்போது ஏற்படும் காயங்களில் இருந்து வெளிவர அவர் ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபியை மேற்கொள்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg15gdjvx7o

சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை

1 week 3 days ago

சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை

14 Feb, 2026 | 03:36 PM

image

இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களில் சுமார் 10 சதவீதமானோர் தமக்கு அந்த நோய் இருப்பதனை அறியாமலேயே இருப்பதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute for Nephrology, Dialysis and Transplantation) விசேட நிபுணர் வைத்தியர் அர்ஜுன மாரசிங்க இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாத நபர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது.

பல நோயாளர்கள் தமக்கு நோய் இருப்பதை அறியாமல் இருப்பதாலும், நோய் முற்றிய பின்னரே அதனைத் கண்டறிவதாலும், அவர்களுக்கான சிகிச்சைகள் மிகவும் சிக்கலானதாக மாறுகின்றன.

அதிக கொலஸ்ட்ரால் அல்லது இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு உள்ளவர்கள் வழக்கமான சிறுநீரகப் பரிசோதனைகளை (Kidney Screenings) மேற்கொள்ள வேண்டும்.

https://www.virakesari.lk/article/238642

வயிறு மற்றும் குடல் ஆரோக்கியம் - மருத்துவர் அறிவூட்டல்

2 weeks 2 days ago

சில நேரங்களில் துர்நாற்றத்துடன் 'வாயு' வெளியேற என்ன காரணம்?

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • சண்முகப் பிரியா

  • பிபிசி தமிழுக்காக

  • 8 பிப்ரவரி 2026, 02:38 GMT

    புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்

வயிறு மற்றும் குடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவருடனான நேர்காணலை கேள்வி - பதில் வடிவில் பார்க்கலாம்.

கேள்வி: வயிற்று வலிக்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பதில்: ஆங்கிலத்தில் வயிற்றை பாண்டோரா பாக்ஸ் (Pandora's box) என்று அழைப்பார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. முந்தைய நாள் இரவு அளவுக்கு அதிகமான உணவு உண்டாலோ அல்லது உணவகத்தில் உண்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ அஜீரண கோளாறு காரணமாக மேல் வயிற்றில் வலி ஏற்படும். பசி ஏற்படாது. இவை இரண்டும் சாதாரணமானவை. சோடா, எலுமிச்சை சாறு, மோர், சீரகம், இஞ்சி போன்றவற்றை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், வயிற்று வலிக்கு குடல் புண், அல்சர் போன்ற 100-க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன.

எச்சரிக்கை அறிகுறிகள்:

  • தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு வலி

  • சிறப்பு உணவு எதுவும் சாப்பிடாமலேயே கடுமையான வலி

  • 4-5 மணி நேரம் தொடரும் வலி

  • 4-5 வாரங்கள் தொடர்ந்து வலி

  • நாளுக்கு நாள் அதிகரிக்கும் வலி

  • முதுகு பகுதிக்கு பரவும் வலி

  • பசியின்மை மற்றும் வாந்தி

  • சோர்வு மற்றும் மயக்கம்

  • ரத்த பரிசோதனையில் ஹீமோகுளோபின் குறைவு

  • இரும்புச்சத்து குறைவு

  • ஸ்கேன் செய்தால் வயிறு அல்லது கல்லீரலில் பிரச்னை

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

படக்குறிப்பு,இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணி

கேள்வி: சாப்பிட்ட பிறகு புகைபிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்னை என்ன?

பதில்: புகையிலை தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். நிகோடின் வயிற்றை தளர்த்துகிறது. வயிறு தளர்ந்தால் பசி குறையலாம், ஆனால் ஸ்பிங்க்டர் தசை தளர்ந்தால் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அதிகரிக்கும். எனவே, சாப்பிட்ட பிறகு புகைபிடிப்பது நல்லதல்ல.

கேள்வி: காலையில் எழும்போது வாயில் இருக்கும் உமிழ்நீரை விழுங்கலாமா?

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பதில்: உமிழ்நீர் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. அதில் வலி நிவாரண குணம் உள்ளது. குழந்தைக்கு காயம்பட்ட இடத்தில் உமிழ்நீரை வைப்பது நல்லதுதான். இது வலி நிவாரண விளைவு மற்றும் ஆண்டிபயாடிக் விளைவு கொண்டது. உமிழ்நீரில் நல்ல பாக்டீரியா நிறைய இருப்பதால் அது ஆண்டிபயாடிக் போன்றது. அது கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடம் கொடுக்காது.

இதை காம்பெடிடிவ் இன்ஹிபிஷன் (competitive inhibition) என்று அழைக்கிறோம். பாக்டீரியாக்களைப் பொருத்தவரை வாயில் ஒரு பெரிய உலகமே உள்ளது. தூக்கத்தின் போது அந்த விகிதம் மாறுகிறது. வறட்சியின் காரணமாக கெட்ட பாக்டீரியாவின் எண்ணிக்கை மாறுகிறது. இரவில் உமிழ்நீர் உற்பத்தி குறைகிறது.

காலையில் வாயில் இருக்கும் பாக்டீரியா நல்ல பாக்டீரியா அல்ல. அதை விழுங்குவதில் பிரச்னை இல்லை. நம்மிடம் போதுமான அமிலம் இருந்தால், விழுங்கினாலும் நம் வயிறு பாதிக்கப்படாது. பாக்டீரியா வயிற்றில் இறந்துவிடும்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கேள்வி: வயிறு மற்றும் வாய்ப் புண் இடையே தொடர்பு உள்ளதா?

பதில்: இது பாதி உண்மை. வயிறு என்பது வயிற்றுப் பகுதி மட்டுமல்ல, வயிற்றுக்கு அப்பால் 8 மீட்டர் வரை உள்ளது. சிறுகுடலின் இறுதியில் ஒரு சிறிய புண் இருந்தாலும், வாயில் உள்ள பாக்டீரியாவால் அது பாதிக்கப்படலாம். வாய்ப்புண்களுக்கு பல காரணங்கள் உள்ளன. வயிறு இல்லாமலேயே, சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் போன்ற தன்னுடல் தாக்க நிலைகள் மற்றும் லைகன் க்ளோனஸ் போன்ற சில நிலைகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலைகளில் வயிற்றில் உள்ள பாதிப்பு வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கலாம்.

கேள்வி: குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

பதில்: குடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் ஒரு பகுதி. இவை சரியாக இருந்தால் குடல் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளும்.

இரவில் ஒரு துப்புரவு தொழிலாளி போல இருக்கும். நாம் உறங்கும்போது நமது குடல் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். 3 மணிநேரம் சாப்பிடாமல் இருந்தால், சிறுகுடலில் எதுவும் இருக்காது. இதை ஜெஜூனம் என்று அழைக்கிறோம். ஜெஜூனம் என்றால் குடல் காலியாக இருக்கும் என்று அர்த்தம்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கேள்வி: குடல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

  • மன அழுத்தம் இல்லாமல் நன்றாக உறங்க வேண்டும்.

  • பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது.

  • சமச்சீர் உணவு - சில புரதம், சில வைட்டமின் டி, சில இரும்புச்சத்து, தாவர நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிஸ்கட், பர்கர், பீட்சாவில் காய்கறி குறைவு. நார்ச்சத்து இல்லை என்பதால் இவை குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. இதுபோன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால்

  • குடல் எரிச்சல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome)

  • உணவு சாப்பிடும்போது குமட்டல்

  • குடல் வீக்க நோய்க்குறி (Inflammatory Bowel Syndrome)

  • குடல் புற்றுநோய்

  • பார்கின்சன் நோய்

  • மனச்சோர்வு

  • தோல் ஒவ்வாமை

  • மூட்டுவலி

ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கேள்வி: துர்நாற்றத்துடன் வாயு வெளியேற என்ன காரணம்? அது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பதில்: நார்ச்சத்து ஜீரணமாகும் போது காற்று உற்பத்தியாகிறது. ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்றவை நம் உடலில் இருந்து வெளியேறும். மீத்தேன் மற்றும் சல்ஃபைடு ஆகியவை அழுத்தம் கொடுத்து குடலிலிருந்து வெளியேறும். இதுதான் துர்நாற்றத்திற்கு காரணம்.

சில ரசாயனங்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியா நம் உணவு பழக்கத்தால் இருக்கலாம். சில உணவுகள் நிச்சயமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், நமது குடல் ஆரோக்கியம், தூக்கம், மன அழுத்தம், பாக்டீரியா - இவை அனைத்தும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். காலையில் எழும்போது வாயு வெளியேறுவது இயல்பு.

20-30 முறைக்கு மேல் வாயு வெளியேற்றம் சத்தமாகவும் இரைச்சலாகவும் இருந்தால், குடலில் உள்ள பாக்டீரியா ஏன் மாறியது என்று பார்க்க வேண்டும். இது நமது உணவு பழக்கத்தால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தெரியாத காரணத்தால் வந்ததா என்று அறிந்து தீர்வு தேடலாம்.

கேள்வி: பழைய சோறு உண்மையில் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

பதில்: சந்தேகமே இல்லாமல் பழைய சோற்றுக்கு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் கொடுக்கலாம். அது ஆரோக்கியமான உணவு. இதில் ப்ரோபயாடிக் உள்ளது. நிறைய சாப்பிடுபவர்களால் ஜீரணிக்க முடியாது. பழைய சோற்றில் கலோரிகள் மற்றும் ஸ்டார்ச் உள்ளன. எனவே, இது ஒரு நல்ல உணவு. ஆனால், மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c80102jejdeo

'தேனில் உருவாகும் நச்சு' - குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?

2 weeks 5 days ago

'தேனில் உருவாகும் நச்சு' - குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?

தேன், குழந்தைகள், குழந்தை நலம்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 25 ஜனவரி 2026

    புதுப்பிக்கப்பட்டது 30 ஜனவரி 2026

கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் பாலசேகர் என்கிற 4 வயது சிறுவனுக்கு வயிற்று வலிக்கு மருந்தாக தேன் கொடுக்கப்பட்ட போது மயக்கமடைந்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீன் சீனிவாசன் சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி விளக்கினார்.

"தேனில் உருவாகும் பொட்டுலினம் என்கிற பொருள் நச்சுத்தன்மையை உருவாக்கி நேரடியாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். சுவாசமும் ரத்த ஓட்டமும் உடனடியாக பாதிக்கப்படும். " என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சிறுவனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்யூனோகுளோபின் மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது." என்றார்.

இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு, அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா என்பது பற்றிய கேள்விகளும் எழுந்துள்ளன.

குழந்தைகள் பிறந்த உடனே தேன் கொடுப்பது அல்லது தாய்ப்பாலுக்கு முன்பாக தேன் கொடுப்பது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் பதிவு செய்கின்றன. சௌதி அரேபியா போன்ற வளைகுடா நாட்டிலும் கூட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் பழக்கம் இருப்பதாக அமெரிக்க தேசிய மருத்துவ நூலக இணையதளத்தில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.

அதன்படி, 2022-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவை மையமாக வைத்து இணைய வழியாக தாய்மார்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 52% பேர் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் குடல் அசைவின்மையில் இருந்து சுவாசப் பிரச்னைகள் வரை ஏற்படலாம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

குமட்டல், வாந்தி, சாப்பிடுவதில் சிக்கல் ஆகியவை இந்த நோயின் பிரதான அறிகுறிகளாக இருந்தாலும் கூடுதல் அறிகுறிகளையும் இந்த ஆய்வு பட்டியலிடுகிறது. அவை

  • முக தசை சுருக்கம்

  • மலச் சிக்கல்

  • முக தசை பிடிப்பு

  • மூளை பாதிப்பு

  • வலிப்பு

  • உடல் வெப்பநிலை குறைவது

தேன், குழந்தைகள், குழந்தை நலம்

பட மூலாதாரம்,Getty Images

ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது பொட்டுலிசம் என்கிற தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாட்டுக்கான மையம் (சிடிசி) தெரிவிக்கிறது.

தேனை நேரடியாக மட்டுமல்லாமல் உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரவ உணவு ஆகியவற்றில் சேர்த்தும் கூட வழங்கக்கூடாது என அந்த மையம் குறிப்பிடுகிறது.

"குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக்கூடாது. தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது. சிலர் உணவு கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்திலும் அல்லது தாய்ப்பால் போதவில்லையோ என்கிற கவலையிலும் பால் மற்றும் தேன் ஆகியவற்றை கொடுக்கின்றனர். இது தான் பொட்டுலிசம் பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரான வித்யா.

இதற்கான காரணத்தை விளக்கிய அவர், "பச்சிளம் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்காது. அதோடு உணவுகளை செரிமானம் செய்யும் சக்தியும் குறைவாக இருக்கும். மருத்துவமனைகளில் இவை தெளிவாக எடுத்துரைக்கப்படுவதோடு குழந்தைகளின் உணவு முறையும் கண்காணிக்கப்படுகிறது." என்றும் குறிப்பிட்டார்.

தேன், குழந்தைகள், குழந்தை நலம்

பட மூலாதாரம்,Vidhya

படக்குறிப்பு,மூத்த குழந்தைகள் நல ஆலோசகர் மருத்துவர் வி வித்யா

தேனில் உள்ள கிளாஸ்டிரிடியம் பொட்டுலினம் ஸ்போர்கள் மூலம் உருவாகும் பாக்டீரியாக்கள் குழந்தையின் குடலில் நச்சுக்களை உற்பத்தி செய்யும் என்றும் இது மிகவும் தீவிரமான நோய் பாதிப்பான இன்ஃபேன்ட் பொட்டுலிசத்தை (ஐபி) ஏற்படுத்தும் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (என்.ஹச்.எஸ்) கூறுகிறது.

இன்ஃபேன்ட் பொட்டுலிசம் என்பது உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோய் என்று அமெரிக்க தேசிய மருத்துவ நூலக இணையதளத்தில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது. இது தீவிரமான நரம்பியல் பிரச்னைகளுக்கும் வித்திடலாம் என அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த பாதிப்பை உடனடியாக அடையாளம் காண்பது கடினம் எனக் கூறும் மருத்துவர் வித்யா, சில மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார், "குழந்தைகளின் குடலில் தான் தொற்று பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் சோர்வுற்று இருப்பது, தாய்ப்பால் குடிக்காமல் இருப்பது, வயிறு வீக்கமாக தெரிவது ஆகியவை இதன் ஆரம்பகட்ட அறிகுறிகள்," என்றார்.

குழந்தைகளின் குடல் மற்றும் செரிமான அமைப்பு முறையாக வளர 12 மாதங்கள் ஆகும். அதனால் தான் உலக சுகாதார நிறுவனம் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது என பரிந்துரைத்திருப்பதாக அவர் கூறினார்.

"பொட்டுலிசம் என்கிற பாதிப்பு அனைத்து வயதினருக்கும் வரும். ஆனால் குழந்தைகளிடம் அதன் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கும். ஆரோக்கியமற்ற தேன் சாப்பிட்டால் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படும், ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமான தேன் சாப்பிட்டாலும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். " என்றார் மருத்துவர் வித்யா.

"ஒரு வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. தேன் ஒரு ஆரோக்கியமான சர்க்கரை. பெற்றோர்கள் தெரிவித்தால் தான் எங்களுக்கு தேன் கொடுக்கப்பட்டதே தெரியவரும் என்றாலும் இது மிகவும் அரிதாகவே நிகழும்," என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cre203ey0yyo

புற்றுநோய் என்றால் என்ன? எப்படி உருவாகிறது?

2 weeks 6 days ago

கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு முடி மீண்டும் வளருமா? புற்றுநோய் மருத்துவர் விளக்கம்

புற்றுநோய் தினம், மலக்குடல் புற்றுநோய், தொடர் மலச்சிக்கல்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • சண்முகப்பிரியா

  • பிபிசி தமிழுக்காக

  • 4 பிப்ரவரி 2026, 02:51 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக புற்றுநோய் தினமான இன்று மக்கள் மத்தியில் அதுகுறித்து இருக்கக்கூடிய அடிப்படை சந்தேகங்களைத் தீர்க்க உதவும் வகையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது.

புற்றுநோய் வருவது எப்படி? ஒரு சாதாரண கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாற்றமடைவது எப்படி? தொடர் மலச்சிக்கல் புற்றுநோயின் அறிகுறியா? கீமோதெரபி பற்றி நிலவும் தவறான கருத்துகள் உள்பட அவர் பகிர்ந்த பல்வேறு அறிவியல்பூர்வமான தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

புற்றுநோய் என்றால் என்ன? எப்படி உருவாகிறது?

மனித உடலில் செல்கள் தொடர்ந்து பிரிகின்றன. செல்கள் இரண்டாகவும், இரண்டு செல்கள் நான்காகவும் பெருகி உறுப்புகள் உருவாகின்றன. இயல்பான நிலையில், செல் பகுப்பு ஒரு கட்டுப்பாடான செயல்முறையின் படி நடக்கிறது.

ஆனால், சில நேரங்களில் இந்தக் கட்டுப்பாடான முறை செயலிழக்கும் போது, செல்கள் கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகத் தொடங்குகின்றன. இவ்வாறு கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் செல்கள் கட்டியை உருவாக்குகின்றன. இந்தக் கட்டியையே புற்றுநோய் என்று அழைக்கிறோம்.

கட்டுப்பாடற்ற செல் பகுப்பால் உருவாகும் கட்டிகளை, சாதாரண கட்டிகள் (Benign Tumors), புற்றுநோய் கட்டிகள் (Malignant Tumors) என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

சாதாரண கட்டிகளில் இருந்து புற்றுநோய்க் கட்டிகள் வேறுபட்டவை. புற்றுநோய் கட்டிகள் உயிருக்கு ஆபத்தானவை. பிற உறுப்புகளுக்கும் பரவக்கூடியவை.

புற்றுநோய் செல்களால் ரத்த ஓட்டத்தின் வழியாக நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், எலும்புகள் போன்ற உறுப்புகளுக்குப் பரவ முடியும். இதை மெட்டாஸ்டாசிஸ் (Metastasis) என்று அழைக்கிறோம். நோய் உருவான இடத்திலேயே தங்கியிருப்பது முதல் நிலை. ஆனால், மற்ற உறுப்புகளுக்கும் பரவிவிட்டால் அது முற்றிய நிலை.

சாதாரண கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாறுமா?

புற்றுநோய் தினம், மலக்குடல் புற்றுநோய், தொடர் மலச்சிக்கல்

படக்குறிப்பு,புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பன்

சாதாரண கட்டிகள் பொதுவாக அப்படியே தொடரும்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் ஆண்டுக்கணக்கில் இருக்கும் சாதாரண கட்டிகள் திடீரென பெரிதாகத் தொடங்கினால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவை புற்றுநோய் கட்டிகளாக மாறுவது மிகமிக அரிது என்றாலும், சில அரிதான சந்தர்ப்பங்களில், சாதாரண கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாக மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

இது சார்கோமா (Sarcoma) வகையில் ஏற்படலாம். நூறு பேரில் ஒருவருக்கு இத்தகைய மாற்றம் ஏற்படக்கூடும். எனவே, மருத்துவரிடம் அவ்வப்போது கட்டியைப் பரிசோதித்து அதன் நிலையை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அது தாமதமாகக் கண்டறியப்படுவதே பல சவால்களுக்குக் காரணமாக உள்ளது.

ஒரு சில உறுப்புகள் தவிர, பெரும்பாலான உறுப்புகளில் ஆண், பெண் இருபாலருக்கும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெண்களிடையே மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கருமுட்டைப் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஆண்களைப் பொறுத்தவரை, நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

புற்றுநோய் தினம், மலக்குடல் புற்றுநோய், தொடர் மலச்சிக்கல்

பட மூலாதாரம்,Getty Images

பெருங்குடல் புற்றுநோய் அதிகரிக்க என்ன காரணம்?

சமீப காலமாக பெருங்குடல் (colon) மற்றும் மலக்குடல் (Rectum) ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

பெருங்குடல், மலக்குடல் ஆகியவை செரிமான மண்டலத்தின் இறுதிப் பகுதிகளாகும்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், போதிய காய்கறிகளை உட்கொள்ளாமல் இருப்பது, அதிக அளவிலான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வது ஆகியவை பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

குறிப்பாக, புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடலுக்கு அதிக இயக்கத்தைக் கொடுக்காமல் இருப்பது போன்றவை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும்.

மலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுதல், தொடர் மலச்சிக்கல், பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அடைப்பு போன்ற காரணங்களால் மலக்குடல் புற்றுநோய் வரலாம்.

இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுவதற்கான செலவு மிகக் குறைவு. சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவாகவே இருக்கும்.

மலக்குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்:

  • ரத்தப்போக்கு: மலத்துடன் ரத்தம் வெளியேறுதல் மிக முக்கியமான அறிகுறி. ஆசனவாயில் ரத்தம் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

  • ரத்தசோகை: ரத்தசோகை, மூச்சுத்திணறல், கால் வீக்கம்

  • திடீர் எடை இழப்பு: காரணமின்றி திடீரென எடை குறைதல் ஓர் எச்சரிக்கை அறிகுறி.

  • மலம் கழித்தலில் மாற்றங்கள்: மலத்தை வெளியேற்றுவதில் சிரமம், மலச்சிக்கல் போன்றவையும் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

தொடர் மலச்சிக்கல் புற்றுநோய் அறிகுறியா? எச்சரிக்கும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்

பட மூலாதாரம்,Getty Images

வயிற்றுப் புண் புற்றுநோயாக மாறுமா?

பெருங்குடல் புண்கள் மற்றும் இரைப்பை புண்களை வேறுபடுத்தி அறிந்துகொள்ள வேண்டும்.

பெருங்குடலில் காணப்படும் புண்களில் 99% புற்றுநோயுடன் தொடர்புடையதாகவே உள்ளன. இவை மிகுந்த கவனத்துடன் அணுகப்பட வேண்டியவை.

இரைப்பையில் காணப்படும் புண்களில் பெரும்பாலானவை சாதாரண புண்களே. அவற்றை மருந்துகளால் குணப்படுத்திவிட முடியும். ஆனால் அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.

அப்படி கவனிக்காமல் விட்டால், பல ஆண்டுகள் கழித்து அவை புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியமுள்ளது. சாப்பிடுவதில் சிரமம் இருந்தாலோ, வலி இருந்தாலோ, எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கீமோதெரபியால் கொட்டும் முடி மீண்டும் வளருமா?

புற்றுநோய்க்கான சிகிச்சைகளில், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை என மூன்று முக்கிய வகைகள் இருக்கின்றன.

இவற்றில், மருந்துகள் மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பது கீமோதெரபி முறை. கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை கதிரியக்க சிகிச்சை முறை.

கீமோதெரபி செய்கையில் கொட்டும் முடி மீண்டும் வளருமா என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கும். அதற்குப் பதிலளித்த மருத்துவர் ஐயப்பன், "அதைச் செய்யும்போது முடி கொட்டினாலும், சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மீண்டும் நிச்சயம் நன்றாக வளர்ந்துவிடும்" என்றார்.

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியம் என்ற அவர், "தொடக்க நிலையிலேயே கண்டறிதல், முறையான சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை புற்றுநோயை எதிர்கொள்வதற்கான முக்கியக் கருவிகள். தடுப்பூசிகள், தொடர் மருத்துவப் பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக" அவர் தெரிவித்தார்.

நவீன மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறைகள் புற்றுநோய் சிகிச்சையில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய மருத்துவர் ஐயப்பன், புற்றுநோய் தொடக்க நிலையிலேயே கண்டறியப்படுவது முழுமையாகக் குணப்படுத்துவதைச் சாத்தியமாக்கும் என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0ke03edx7do

குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பதில் உள்ள ஆபத்து - வயதுக்கேற்ற உணவு முறையின் அவசியம்

1 month ago

குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பதில் உள்ள ஆபத்து - வயதுக்கேற்ற உணவு முறையின் அவசியம்

பழுப்பு நிற சுருட்டை முடி கொண்ட ஒரு பெண், தக்காளி மற்றும் கீரைகள் கொண்ட ஒரு முட்கரண்டியைப் பார்த்தபடி புன்னகைக்கிறார். அவர் மஞ்சள் நிற காலர் கொண்ட மேல்சட்டையும் தங்கச் சங்கிலியும் அணிந்துள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வயதாகும்போது நாம் வெவ்வேறு ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கட்டுரை தகவல்

  • ஜெசிகா பிராட்லி

  • பிபிசி ஃபியூச்சர்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது, இது குடும்பங்களுக்கு வாராந்திர கொடுப்பனவை அனுமதித்தது. மக்கள் தங்கள் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய அனுமதிக்கும், அதே நேரத்தில் உணவு நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதுதான் இதன் நோக்கம்.

சர்க்கரை என்பது பங்கீடு செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. தனிநபர்களுக்கு வாரத்திற்கு சுமார் 8 அவுன்ஸ் (227 கிராம்) இனிப்பு பொருட்கள் அனுமதிக்கப்பட்டன. அவர்களை வருத்தப்படுத்தும் வகையில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை.

1953-ல் சர்க்கரை பங்கீடு முடிந்தபோது, பெரியவர்களின் சராசரி சர்க்கரை உட்கொள்ளல் இருமடங்கானது. இதனை அந்த நேரத்தில் மக்கள் அறிந்திருக்கவில்லை, ஆனால் இது எதிர்கால விஞ்ஞானிகளுக்கு ஆரம்பகால சர்க்கரை நுகர்வு நமது ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைத் துல்லியமாகக் கண்டறிய ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியது.

2025-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றில், உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் குழு, சர்க்கரை பங்கீடு முழுவீச்சில் இருந்த 1951 மற்றும் 1956-க்கு இடையில் இங்கிலாந்தில் பிறந்த 63,000 பேரின் மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்தது.

கருப்பையிலும், வாழ்வின் முதல் 1,000 நாட்களிலும் குறைந்த சர்க்கரைக்கு ஆளான குழந்தைகளுக்கு, பிற்கால வாழ்க்கையில் இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு 20% குறைவு என்பதையும்; இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 25% குறைவு என்பதையும்; பங்கீடு நடைமுறை முடிந்த பிறகு இனிப்புகளைச் சாப்பிட அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை விட பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 31% குறைவு என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

சர்க்கரை உட்கொள்ளலுக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையிலான இந்த வலுவான உறவு நாம் பிறந்த பிறகும் தொடர்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எளிமையாகச் சொன்னால், நாம் எந்த வயதினராக இருந்தாலும் அதிக இனிப்புச் சுவை கொண்ட தின்பண்டங்களை உண்பது நமக்குத் தீங்கானது.

ஆனால் வேறு சில உணவுகளைப் பொறுத்தவரை, ஊட்டச்சத்து நன்மைகள் நீங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, சிறு குழந்தைகளுக்கும் கைக்குழந்தைகளுக்கும் பால் மற்றும் முழு பாலில் உள்ள கொழுப்புகள் அதிகம் தேவைப்படுகின்றன, ஆனால் அத்தகைய உணவு 20 மற்றும் 30 வயதுடையவர்களுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப்படாது.

இங்கிலாந்தின் லண்டன் இம்பீரியல் காலேஜின் ஊட்டச்சத்து விஞ்ஞானி ஃபெடெரிகா அமதியின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவை என்பதால் அவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தேவை என்பதாகும்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஒரு கருப்பு வெள்ளை படத்தில் உள்ள ஒரு குழந்தை, ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் அதன் மேல் ஒரு புளுபெர்ரி பழம் ஊட்டப்படும்போது வாயைத் திறந்து கேமராவைப் பார்க்கிறது. பின்னணி மஞ்சள் நிறத்திலும், ஸ்பூன் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்திலும் உள்ளது.

பட மூலாதாரம்,Serenity Strull/BBC

படக்குறிப்பு,வளரும் குழந்தையாக நமக்குத் தேவையான உணவுகள் பிற்கால வாழ்க்கையில் எப்போதும் நமக்குத் தேவையானவையாக இருப்பதில்லை.

"குழந்தைப் பருவத்தில், உணவு என்பது உடலையும் மூளையையும் உருவாக்குவதாகும்," என்கிறார் அமதி. ஆரோக்கியமான கலோரிகள் தவிர, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மூளை வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சியை ஆதரிக்க இரும்புச்சத்து, அயோடின் மற்றும் பரந்த அளவிலான வைட்டமின்களும் தேவைப்படுகின்றன.

இதன் பொருள் ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் விதைகள் உள்ளிட்ட நல்ல தரமான கொழுப்புகள் மற்றும் மிகக் குறைந்த அளவில் அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பதாகும்.

"கருத்தரித்தல் முதல் முதல் 1,000 நாட்கள் மற்றும் பள்ளி ஆண்டுகள் வரை, குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள் மற்றும் அவர்களின் எதிர்கால எலும்பு நிறையில் பெரும்பாலானவற்றை உருவாக்குகிறார்கள்," என்கிறார் அமதி.

"அதனால்தான் இந்த நிலையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை முன்னுரிமை ஊட்டச்சத்துக்களாக உள்ளன; சாதாரண எலும்பு வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான உச்ச எலும்பு நிறையை அடைவதற்கும் அவை அவசியம், இது பிற்கால வாழ்க்கையில் எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது."

நடைமுறையில், பால், தயிர், சீஸ், கால்சியம் நிறைந்த டோஃபு அல்லது பலப்படுத்தப்பட்ட தாவர பானங்கள் போன்ற வழக்கமான கால்சியம் ஆதாரங்கள் மற்றும் சூரிய ஒளி மற்றும் மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி ஆகியவை இதில் அடங்கும் என்று அமதி கூறுகிறார்.

குழந்தைப் பருவத்தில் சரியான உணவுகளை உண்பது பிற்கால வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்குப் பயனளிக்கும் என்பதற்கு நல்ல சான்றுகள் உள்ளன. 2023-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளின் உணவுகளை ஆய்வு செய்து, அதை அவர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளம் பருவ ஆரோக்கியத்துடன் ஒப்பிட்டனர். ஏழு வயதில் இங்கிலாந்தின் ஈட்வெல் வழிகாட்டியில் (Eatwell Guide) இருந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட உணவுப் பரிந்துரைகளைப் பின்பற்றிய குழந்தைகளுக்கு, எந்தத் தேவைகளையும் பூர்த்தி செய்யாதவர்களுடன் ஒப்பிடும்போது, 24 வயதில் இதய நோய் அபாயக் குறிகாட்டிகள் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

பதின்ம வயது மற்றும் 20-கள்

குழந்தைப் பருவம் ஒரு முக்கியமான காலம் என்றாலும், நமது பதின்ம வயது மற்றும் 20-களில் நாம் உண்ணும் உணவுகள் எதிர்கால ஆரோக்கியத்திற்கான அடித்தளத்தை அமைக்கலாம். அமதியின் கூற்றுப்படி, இந்த வாழ்க்கைக் கட்டத்தில்தான் நாம் எலும்பு மற்றும் தசை கட்டமைப்பை முடிக்கிறோம், மேலும் படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் சமூகமயமாக்குவதற்கும் மணிநேரங்களைச் செலவிடத் தொடங்குகிறோம் - இவை அனைத்தும் ஊட்டச்சத்து தேவைகளை அதிகரிக்கின்றன.

"இளமைப் பருவம் மற்றும் முதிர்ந்த வயதின் ஆரம்பம் ஊட்டச்சத்திற்கான மற்றொரு பெரிய வாய்ப்பாகும்," என்கிறார் அமதி.

"20-களில், வளர்ச்சி குறைகிறது, ஆனால் பிற்கால வாழ்க்கையில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பழக்கங்களை ஏற்படுத்துவதற்கு இது இன்னும் ஒரு முக்கியமான தசாப்தமாகும். அறிகுறிகள் மிகவும் தாமதமாகத் தோன்றினாலும் கூட இந்த வயதினரிடமே இருதய நோய்க்கான அடித்தளம் போடப்படுவதைக் காண்கிறோம்,."

நமது பதின்ம வயதில், பிற்கால முதிர்ந்த வயதை விட உடலுக்குப் பல ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. இதில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அடங்கும் - இது குறிப்பாக மாதவிடாய் சுழற்சி கொண்டவர்களுக்கு முக்கியமானது. புரதம் மற்றும் பி வைட்டமின்களும் முக்கியமானவை என்று அமதி கூறுகிறார்.

அப்படியானால் இந்த உணவு முறை எப்படி இருக்கும்? அமதியின் கூற்றுப்படி, பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்கள் பெரும்பாலும் தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்ற வேண்டும் மற்றும் அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எனவே நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ், கொட்டைகள், பருப்பு மற்றும் விதைகளை உண்ணவேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் போதுமான அளவு புரதத்தைக் கொண்டிருப்பதும் முக்கியம், அது தாவர அடிப்படையிலானதாகவும் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

இத்தகைய உணவைப் பின்பற்றுவது உடலுக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

"இளமைப் பருவத்தில் உணவு முறைகள் மனநல அபாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றுகள் அதிகரித்து வருகின்றன - அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் சேர்த்துக்கொள்வது மற்றும் முழு தாவர உணவுகள் குறைவாக உள்ள உணவுகளை உண்பது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அதிக விகிதங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் மெடிட்டரேனியன் பாணி முறைகள் பாதுகாப்பதாகத் தோன்றுகின்றன," என்று அமதி கூறுகிறார்.

ஐந்து பதின்ம வயது பெண்களை கொண்ட ஒரு குழு நடைபாதையில் ஒன்றாக அமர்ந்து சிரித்து மகிழ்கிறார்கள்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பருவமடையும் போது மாதவிடாய் தொடங்குபவர்கள் ஊட்டச்சத்துக்களின் சரியான சமநிலையைப் பெறுவது மிகவும் முக்கியமானது.

மெடிட்டரேனியன் உணவு முறையில் காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் அதிகமாகவும், மீன், பால் மற்றும் கோழி இறைச்சி குறைந்த அளவிலும் இருக்கும்.

மெடிட்டரேனியன் உணவு முறை ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் பயனளிக்கலாம், இது பெரும்பாலும் ஒரு நபரின் 20, 30 மற்றும் 40-களில் நிகழ்கிறது. மெடிட்டரேனியன் உணவு கருவுறுதலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, அதே நேரத்தில் நிறைவுற்ற கொழுப்பு, இறைச்சி மற்றும் வெள்ளை கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கும் மேற்கத்திய உணவுகள் பெண் மற்றும் ஆண் மலட்டுத்தன்மையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

பெண்களைப் பொறுத்தவரை, ஃபோலேட் நிறைந்த உணவுகள் கருவுறுதல் சிகிச்சைக்கு உதவக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஃபோலேட் அதிகம் உள்ள உணவுகளில் அடர் பச்சை இலைக் காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், ப்ரோக்கோலி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை அடங்கும்.

மத்திய வயது

இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மனித ஊட்டச்சத்து பேராசிரியரான எலிசபெத் வில்லியம்ஸின் கூற்றுப்படி, மத்திய வயதில், பிற்கால ஆரோக்கியத்திற்கு ஏற்ப நமது உணவை மேம்படுத்துவது பற்றி நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

மாதவிடாய் நிற்கும் காலத்தை நெருங்கும் பெண்களுக்கு இது மிகவும் பொருத்தமானது, "அப்போது எலும்பு அடர்த்தி இழப்பு, சார்கோபீனியா (வயது தொடர்பான தசை இழப்பு) மற்றும் எலும்புப்புரை ஆகியவை வேகமாக நடக்கும்," என்கிறார் வில்லியம்ஸ்.

எலும்புப்புரை தவிர, மாதவிடாய் நிற்றல் உடல் பருமன், இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கான அதிகரித்த ஆபத்துடன் தொடர்புடையது. இனப்பெருக்க வயதுடைய பெண்களில், ஈஸ்ட்ரோஜன் மத்திய நரம்பு மண்டலத்தில் செயல்பட்டு பசியைக் குறைக்கிறது. இது இன்சுலின் உணர்திறன் மற்றும் தசைகளின் குளுக்கோஸ் உட்கொள்ளலையும் அதிகரிக்கிறது. இருப்பினும் மாதவிடாய் நிற்றலில், உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவே சுழல்கிறது. இதன் விளைவாக, எடை - மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு (visceral fat) - அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இருப்பினும், ஒரு நல்ல உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் இந்த அபாயத்தைக் கணிசமாக ஈடு செய்ய முடியும். உதாரணமாக, ஒரு சமீபத்திய மக்கள் தொகை ஆய்வில், குறைந்தது 39 வயதுடைய 1,00,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் உணவு முறைகள் மற்றும் ஆரோக்கியத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

ஒரு கருப்பு வெள்ளை படத்தில் ஒரு பெண் கேமராவைப் பார்க்கிறார், தக்காளி, மிளகு மற்றும் லெட்டூஸ் கொண்ட ஒரு முட்கரண்டி அவரது திறந்த வாயை நோக்கிச் செல்கிறது.

பட மூலாதாரம்,Serenity Strull/ BBC

படக்குறிப்பு,மாதவிடாய் நிற்றலை நெருங்கும் பெண்கள் வரும் ஆண்டுகளில் தங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நிறைவுறாக் கொழுப்புகள், கொட்டைகள், பருப்பு வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்ட ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான முதுமையுடன் வலுவாகத் தொடர்புடையது என்று அவர்கள் கண்டறிந்தனர் (ஆரோக்கியமான முதுமையை அவர்கள் நாள்பட்ட நோய் ஏதுமின்றி குறைந்தது 70 வயது வரை வாழ்வது மற்றும் நல்ல அறிவாற்றல், உடல் செயல்பாடு மற்றும் மனநலம் என்று வரையறுக்கிறார்கள்).

"பெண்கள் தங்கள் 40 மற்றும் 50-களில் செல்லும்போது, இரண்டு பெரிய ஊட்டச்சத்து முன்னுரிமைகள் உருவாகின்றன: இதய ஆரோக்கியம் மற்றும் எலும்பு மற்றும் தசை ஆரோக்கியம்," என்கிறார் அமதி. "மாதவிடாய் மாற்றமானது இருதய நோய் அபாயத்தில் கூர்மையான உயர்வுடன் தொடர்புடையது, ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் இழப்பு இரத்த லிப்பிடுகள், இரத்த நாளங்கள் மற்றும் உடல் கொழுப்பு விநியோகத்தைப் பாதிக்கிறது."

ஒமேகா 3 கொழுப்புகள் - குறிப்பாக மேக்கரல் மற்றும் சால்மன் போன்ற எண்ணெய் மிகுதியாக உள்ள மீன்வகைகளில் காணப்படுபவை - உதவுகின்றன, ஏனெனில் அவை இதய நோய்க்கான ஆபத்துக் காரணிகளைக் குறைக்கின்றன மற்றும் அழற்சி எதிர்ப்பு பலன்களை கொண்டுள்ளன என்று அமதி கூறுகிறார்.

இதற்கிடையில், தசை நிறை இழப்பின் விளைவுகளை எதிர்கொள்ள புரத உட்கொள்ளலைச் சற்றே அதிகரிக்கவும், சிறந்த இதய வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கும் - மற்றும் குடல் ஆரோக்கியம் மற்றும் மனநலத்திற்கும் - மெடிட்டரேனியன் பாணி உணவைப் பின்பற்றுமாறு அமதி பரிந்துரைக்கிறார்.

இறுதியில், இதயம், எலும்பு மற்றும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் போதுமான புரதம், கால்சியம், வைட்டமின் D மற்றும் ஒமேகா-3 களைக் கொண்ட மாறுபட்ட, தாவரங்கள் நிறைந்த, மெடிட்டரேனியன் பாணி உணவை இலக்காகக் கொள்வதும் என்றும் அதே வேளையில், அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பதும் முக்கியம் என்று அவர் கூறுகிறார்.

வாழ்க்கையின் பிற்பகுதி

வயதாகும்போது, நமது உடல் அமைப்பு மாறுகிறது மற்றும் நமது ஆற்றல் தேவைகள் குறைகின்றன, எனவே நாம் குறைந்த கலோரிகளை உட்கொள்ள வேண்டும். இருப்பினும் எலும்பு மற்றும் தசை வலிமையைப் பராமரிக்க போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை நாம் இன்னும் உறுதி செய்ய வேண்டும்.

வில்லியம்ஸின் கூற்றுப்படி, முதுமையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்கள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகும். போதுமான கால்சியம் அல்லது வைட்டமின் டி பெறாத முதியவர்களுக்கு எலும்புப்புரை மற்றும் பலவீனமான எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் அதிகம். கால்சியம் பால் மற்றும் பலப்படுத்தப்பட்ட மாற்று பானங்கள், கடினமான சீஸ், தயிர், சார்டின் மீன், டோஃபு மற்றும் கீரை ஆகியவற்றில் காணப்படுகிறது. வைட்டமின் டி நிறைந்த உணவுகளில் எண்ணெய் மீன், முட்டை மஞ்சள் கரு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் அடங்கும்.

முதுமையில் போதுமான தரமான புரதத்தை உண்பதும் மிகவும் முக்கியம் என்று இங்கிலாந்தின் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தின் முதுமை மற்றும் டிமென்ஷியா ஆராய்ச்சி மையத்தின் இணைத் தலைவரும் உணவியல் நிபுணருமான ஜேன் மர்பி கூறுகிறார்.

"வயதாகும்போது, நமது வடிவம் மற்றும் செயல்பாடுகள் மோசமடைகின்றன, நாம் தசை நிறை மற்றும் வலிமையை இழக்கிறோம், மேலும் சார்கோபீனியாவைத் தடுக்க புரதம் தேவைப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.

ஆனால் நமது உடல் அதைச் சரியாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, கார்போஹைட்ரேட்டுகள், தரமான கொழுப்புகள் (ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் பழம், கொட்டைகள் மற்றும் எண்ணெய் மீன் உள்ளிட்ட நிறைவுறாக் கொழுப்புகள் போன்றவை) மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய சீரான உணவு முறையின் ஒரு பகுதியாகப் புரதம் இருக்க வேண்டும் என்று மர்பி கூறுகிறார்.

நரைத்த முடி கொண்ட ஒரு முதியவர் தனது வீட்டில் ஒரு மேஜையில் அமர்ந்து ஒரு கிண்ணத்தில் இருந்து தானியங்களை உண்கிறார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வயதாகும்போது நமது குடல் பாக்டீரியாவில் ஏற்படும் மாற்றங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு உணவு முறையில் மாற்றம் செய்யப்படவேண்டும்

நமக்கு வயதாகும்போது, நமது நுண்ணுயிரி மண்டலமும் மாறுகிறது, ஃபெர்மிகேட்ஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் இழப்பு ஏற்படுவதுடன், க்ளோஸ்ட்ரிடியம் போன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய இனங்களின் அதிகரிப்பும் ஏற்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு அல்சைமர், பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற பல ஆரோக்கிய நிலைகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

ஒவ்வொரு நோயுடனும் தொடர்புடைய குடல் நுண்ணுயிரி மண்டலத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், 100 வயது கடந்தவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று லண்டன் கிங்ஸ் காலேஜின் முதியோர் மருத்துவ விரிவுரையாளர் மேரி நி லோக்லைன் கூறுகிறார்.

" 100 வயது வரை வாழ்பவர்கள், முதுமையின் பொதுவான பாதிப்புகளைத் தவிர்ப்பதாகத் தெரிகிறது," என்கிறார் நி லோக்லைன். "அவர்கள் மற்ற முதியவர்களின் குடல் அமைப்பிலிருந்து வேறுபட்ட மாறுபட்ட நுண்ணுயிரி மண்டலத்தைக் கொண்டுள்ளனர்."

பொதுவாக, ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற குடல் பாக்டீரியா என்பதற்கு ஒரு வரையறை இல்லை, ஏனெனில் இது ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒன்றாகச் செயல்படும் நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பற்றியது. இருப்பினும், ஃபேக்கலிபாக்டீரியம் ப்ராஸ்னிட்ஸி போன்ற சில குறிப்பிட்ட பாக்டீரியா இனங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆரோக்கியமாக வயதாகி வருபவர்கள் எஃப் ப்ராஸ்னிட்ஸியைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று நி லோக்லைன் கூறுகிறார், ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இது பாதுகாப்பு மற்றும் நேர்மறையான குணங்களைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருந்தாலும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. உங்கள் குடலில் எஃப் ப்ராஸ்னிட்ஸி வாழ்வதை ஊக்குவிக்க நீங்கள் விரும்பினால், நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் (பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளவை) நிறைந்த உணவே சிறந்த வழியாகும்.

ஆரோக்கியமான குடலைக் கொண்டிருப்பது முதுமையுடன் தொடர்புடைய சில ஊட்டச்சத்து குறைபாடுகளை நிர்வகிக்கவும் உதவும், ஏனெனில் இளைஞர்களை விட முதியவர்கள் உணவில் இருந்து வைட்டமின்களை உள்வாங்கிக்கொள்வதில் குறைவான திறன் கொண்டவர்கள். ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள் அந்த நபரின் தேவைகளுக்கு போதுமான பி12-ஐ உற்பத்தி செய்யக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, அதே நேரத்தில் சில குடல் பாக்டீரியாக்கள் ஃபோலிக் அமிலத்தையும் உற்பத்தி செய்யக்கூடும். ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரி மண்டலம் முதுமையில் தசை இழப்பு மற்றும் சார்கோபீனியா அபாயத்தைத் தடுக்கவும் உதவும்.

இறுதியாக, சில ஊட்டச்சத்து குறைநிரப்பிகள் பிற்கால வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கலாம். ப்ரீபயாடிக் குறைநிரப்பிகள் (நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இயற்கை கலவைகள்) முதியவர்களில் 12 வார காலப்பகுதியில் அறிவாற்றலை மேம்படுத்தும் என்று நி லோக்லைனின் ஆராய்ச்சி காட்டுகிறது. நி லோக்லைனின் ப்ரீபயாடிக்குகளில் இன்யூலின் என்ற ஒரு வகை நார்ச்சத்து மற்றும் தாவரங்களில் காணப்படும் சர்க்கரைகளான ஃபிரக்டோ-ஒலிகோசாக்கரைடுகள் உள்ளன. முதியவர்கள் - குறிப்பாக முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் வைட்டமின் டி குறைநிரப்பிகள் மூலம் பயனடையலாம் என்று பிற ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3dmmk0dzreo

பெண்கள் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வில் புதிய தகவல்

1 month ago

பெண்கள் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வில் புதிய தகவல்

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ஃபிலிப்பா ராக்ஸ்பி & ஜிம் ரீட்

  • சுகாதார செய்தியாளர்கள்

  • 21 ஜனவரி 2026, 01:49 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பானது என்றும், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஒரு புதிய பெரிய ஆய்வின் பின்னணியில் உள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாராசிட்டமால் மாத்திரை "நல்லதல்ல" என்றும், கர்ப்பிணிகள் அதைத் தவிர்க்க "கடுமையாகப் போராட வேண்டும்" என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். அதற்கு மாறாக அமைந்துள்ள இந்த ஆய்வின் முடிவுகள், கர்ப்பிணிகளுக்கு "நிம்மதி மற்றும் நம்பிக்கையை அளிக்கக்கூடும்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டிரம்பின் கருத்துகள் அந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள மருத்துவ அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டன. 'தி லான்செட்' மருத்துவ ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த சமீபத்திய ஆய்வு மிகவும் துல்லியமானது என்றும், பாராசிட்டமாலின் பாதுகாப்பு குறித்த விவாதங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது குறித்து "பல நிபுணர்கள்" கவலை தெரிவித்துள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் இன்னும் கூறி வருகின்றனர்.

கர்ப்பிணிகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணி மருந்தான பாராசிட்டமாலை (அமெரிக்காவில் 'அசிட்டமினோஃபென்' என்று அழைக்கப்படுகிறது), கர்ப்ப காலத்தில் உட்கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படக்கூடும் என்று டிரம்பும் அவரது நிர்வாகமும் கூறியபோது உலகெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வாதங்கள் பெண்களிடையே குழப்பத்தையும், சுகாதார நிபுணர்களிடையே கவலையையும் ஏற்படுத்தின. இதுவே இந்தப் புதிய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தது.

'லான்செட் மகப்பேறியல், பெண் நோயியல் மற்றும் பெண்கள் ஆரோக்கியம்' (The Lancet Obstetrics, Gynaecology & Women's Health) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, லட்சக்கணக்கான பெண்கள் சம்பந்தப்பட்ட 43 வலுவான ஆய்வுகளை ஆராய்ந்தது. குறிப்பாக, பாராசிட்டமால் உட்கொண்ட தாய்மார்களின் கர்ப்ப காலத்தையும், உட்கொள்ளாதவர்களின் கர்ப்ப காலத்தையும் ஒப்பிட்ட ஆய்வுகளை அது ஆராய்ந்தது.

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

உடன் பிறந்தவர்களைக் கொண்டு செய்யப்பட்ட உயர்தர ஆய்வுகளைப் பயன்படுத்தியதன் மூலம், மரபணுக்கள் மற்றும் குடும்ப சூழல் போன்ற பிற காரணிகளைத் தங்களால் நிராகரிக்க முடிந்ததாகவும், இதனால் இந்த ஆய்வு 'மிகவும் உயர்தரமானது' என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி பாரபட்சமற்ற ஆய்வுகளையும், ஏதேனும் பாதிப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கண்காணித்த ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டது.

"நாங்கள் இந்த ஆய்வைச் செய்தபோது, பாராசிட்டமால் ஆட்டிசம் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறப்படும் கூற்றுடன் எந்தத் தொடர்போ அல்லது ஆதாரமோ கிடைக்கவில்லை," என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், மகப்பேறு மருத்துவருமான பேராசிரியர் அஸ்மா கலீல் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், "வழிகாட்டுதல்படி உட்கொள்ளும்போது, கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் ஒரு பாதுகாப்பான தேர்வாகவே நீடிக்கிறது என்ற செய்தி தெளிவாக உள்ளது," என்று கூறினார். இது பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முக்கிய மருத்துவ அமைப்புகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உறுதிப்படுத்துகிறது.

பாராசிட்டமால் மருந்துக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்ட தொடர்புகள், மருந்தின் நேரடி விளைவைவிட பிற காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

"கர்ப்பிணிகளுக்கு வலி அல்லது காய்ச்சல் ஏற்படும்போது முதலில் பரிந்துரைக்கப்படும் மருந்து பாராசிட்டமால் என்பதால் இது மிகவும் முக்கியமானது," என்று லண்டன் சிட்டி செயின்ட் ஜார்ஜ் பல்கலைக் கழகத்தின் தாய்-சேய் மருத்துவப் பேராசிரியர் அஸ்மா கலீல் கூறினார்.

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

கர்ப்ப காலத்தில் அதிக வெப்பநிலையைக் குறைக்கவோ அல்லது வலியைப் போக்கவோ பாராசிட்டமால் எடுக்காவிட்டால், அது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார ஆலோசனைகள் எச்சரிக்கின்றன. இது கருச்சிதைவு, முன்கூட்டிய பிரசவம் அல்லது குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளை அதிகரிக்கக்கூடும்.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத மருத்துவ நிபுணர்களும் இதன் முடிவுகளை வரவேற்றுள்ளனர். இது பெண்களிடையே உள்ள கவலையைக் குறைக்க உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் கிரெய்ன் மெக்கலோனன் இதுகுறித்துப் பேசியபோது, "தலை வலிக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து குழந்தையின் ஆரோக்கியத்தில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியால் எழும் மன அழுத்தத்திற்கு கர்ப்பிணிகள் ஆளாக வேண்டிய அவசியமில்லை. இந்த ஆய்வின் முடிவுகள் இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் இயன் டக்ளஸ், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தாத தாய்மார்களுக்கு இடையே இருக்கும் அடிப்படை நோய்கள் போன்ற முக்கிய வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாத தரம் குறைந்த ஆய்வுகளைத் தவிர்த்துள்ள காரணத்தால் இந்த ஆய்வு "சிறப்பாக நடத்தப்பட்டது எனக் கூறலாம்" என்றார்.

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,செப்டம்பர் 2025இல் ஓர் உரையில், கர்ப்பிணி பெண்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை தவிர்க்க வேண்டுமென்று அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியது சர்ச்சையானது

பெர்கன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு நரம்பியல் விஞ்ஞானியும் மனநல மருத்துவருமான பேராசிரியர் ஜான் ஹாவிக், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது ஆட்டிசம், ஏடிஹெச்டி அல்லது அறிவுசார் குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்காது என்பதற்கு இந்த ஆய்வு "வலுவான ஆதாரங்களை" வழங்குவதாகவும், "இந்தக் கேள்விக்கு இது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" எனவும் கூறினார்.

ஆட்டிசம் என்பது மரபணு, சுற்றுச்சூழல் காரணிகள் உள்படப் பல சிக்கலான காரணிகளின் கலவையால் ஏற்படுகிறது என்பது இந்தத் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் பொதுவான கருத்தாகும்.

அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் (பாராசிட்டமாலுக்கான அமெரிக்க பெயர்) பயன்படுத்துவது குறித்து "பல நிபுணர்கள்" கவலை தெரிவித்துள்ளனர்" என்றார்.

உதாரணமாக, ஆகஸ்ட் 2025இல் ஹார்வர்ட் டி.ஹெச். சான் பொது சுகாதாரப் பள்ளியின் தலைவர் மருத்துவர் ஆண்ட்ரூ பாக்கரெல்லி தலைமையிலான ஆய்வு ஒன்றில், கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவது குழந்தைகளின் ஆட்டிசம் மற்றும் ஏடிஹெச்டி அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது. குறிப்பாக "அதிகமான அல்லது நீண்ட காலப் பயன்பாடு" குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சுகாதார செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், ஆட்டிசம் பாதிப்புகள் திடீரென அதிகரிப்பதற்கான காரணத்தைக் கண்டறியப் போவதாக உறுதியளித்திருந்தார்.

செப்டம்பர் மாதம் ஓவல் அலுவலகத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையில், கர்ப்பிணிகளுக்கு இந்த வலி நிவாரணியைப் பரிந்துரைக்க வேண்டாம் என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் கூறினார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்டிஏ) கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்களுக்குக் கடிதம் எழுதியது. அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே மருந்து இதுதான் என்றும் குறிப்பிட்டது.

தனது இணையதளத்தில், இந்த மருந்துக்கும் நரம்பியல் குறைபாடுகளுக்கும் இடையே "நேரடித் தொடர்பு" இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் எஃப்டிஏ கூறுகிறது.

பாராசிட்டமால் இன்னும் கர்ப்பிணிகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பான வலி நிவாரணியாகவே உள்ளது என்பதை பிரிட்டனின் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp82zq0v1y4o

நம் உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்ய இறைச்சி அவசியம் என்பது உண்மையா?

1 month ago

நம் உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்ய இறைச்சி அவசியம் என்பது உண்மையா?

உணவு, புரதச்சத்து, மாமிச உணவு, இறைச்சி, தாவர உணவு

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • சோஃபி மாக்ஃபி

  • பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர்

  • 19 ஜனவரி 2026, 01:52 GMT

ஒரு உடற்பயிற்சி நிபுணர் மற்றும் தாவர அடிப்படையிலான உணவு வகைகளை உருவாக்குபவர் என்ற முறையில், அதிக புரதம் கொண்ட தாவர அடிப்படையிலான சமையலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதே எனது நோக்கம். இது குறித்து 'சோஃப்ஸ் பிளான்ட் கிச்சன்' (Soph's Plant Kitchen) என்ற புத்தகத்தையும் நான் எழுதியுள்ளேன்.

நீங்கள் அதை வலிமைப் பயிற்சியுடன் (வலிமையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்) இணைக்கும்போது, புரதம் நமது உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் மற்றும் சரிசெய்யவும் உதவுகிறது.

இது மிகவும் நிறைவான ஊட்டச்சத்தும் கூட, இது நமக்குத் திருப்தி உணர்வைத் தருகிறது. ஆனால் புரதத்தைப் பற்றி குறிப்பாக அது தாவரங்களிலிருந்து வரும்போது பல கட்டுக்கதைகள் உள்ளன.

புரதத்திற்காக உங்களுக்கு உண்மையில் இறைச்சி தேவையா?

தாவரப் புரதங்கள் விலங்குப் புரதங்களைப் போலச் சிறந்தவை அல்ல என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. அங்கு கிடைக்கும் தகவல்கள் குழப்பமானதாகவும் முரண்பட்டதாகவும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை நீங்கள் நம்புவதில் வியப்பில்லை.

உண்மை என்னவென்றால், அனைத்து தாவர உணவுகளிலும் அத்தியாவசியமானவை எனக் கருதப்படும் ஒன்பது அமினோ அமிலங்கள் உட்பட 20 அமினோ அமிலங்களும் (புரதத்தின் அடிப்படை அலகுகள்) உள்ளன. இவற்றை நமது உடலால் உருவாக்க முடியாது, எனவே நாம் உணவின் மூலம் அவற்றைப் பெற வேண்டும்.

தாவரங்களில் உள்ள ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்கள் போதுமான அளவில் இல்லாததால், அவை 'முழுமையான புரதம்' (complete protein) என்று கருதப்படுவதில்லை என்பதே இந்த குழப்பத்திற்குக் காரணம்.

இதற்கு ஒரு எளிய வழி உள்ளது: நாள் முழுவதும் பல்வேறு வகையான தாவர உணவுகளை உட்கொள்வது. சமச்சீரான உணவில் இது இயற்கையாகவே நடக்கும் என்பதால், உங்கள் புரத இலக்குகளை அடைவது எளிது.

உணவு, புரதச்சத்து, மாமிச உணவு, இறைச்சி, தாவர உணவு

பட மூலாதாரம்,Getty Images

'முழுமையான' புரதங்களாக இருக்கும் தாவர உணவுகளும் உள்ளன - அவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.

வாரந்தோறும் சிறிய அளவில் விலங்குப் புரதத்திற்குப் பதிலாகத் தாவரப் புரதத்திற்கு மாறுவது நோய் அபாயத்தை 10% வரை குறைக்கும் என்று நீண்ட கால ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே வாரத்திற்கு ஒரு முறை இறைச்சி இல்லாத உணவை உண்பது கூட நன்மை பயக்கும்.

உங்கள் உணவில் அதிக தாவர உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் மற்றும் கூடுதல் நார்ச்சத்தையும் (fibre) பெறலாம். இது பிரிட்டனில் உள்ள 90% பேருக்குப் போதுமானதாகக் கிடைப்பதில்லை. எனவே இது ஒரே முயற்சியில் மூன்று நன்மைகளை வழங்குகிறது

நமக்கு உண்மையில் எவ்வளவு புரதம் தேவை?

வலிமைப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு, உடல் எடையில் ஒரு கிலோவிற்கு 1.6 கிராம் புரதம் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சாதாரணமாக உடற்பயிற்சி செய்பவர் என்றால், ஒரு கிலோவிற்கு 1.1 முதல் 1.2 கிராம் புரதம் போதுமானது.

நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே போதுமான புரதத்தை உண்கிறோம், எனவே நாம் உணவில் கூடுதலாகச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக நாம் அதை எங்கிருந்து பெறுகிறோம் என்பதைப் பற்றி யோசிப்பது உதவியாக இருக்கும். பெரும்பாலும் இது விலங்கு மூலங்களிலிருந்து பெறப்படுவதால், அவற்றுடன் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை சேர்கின்றன.

அதிக புரதமுள்ள தாவர உணவுகள் எவை என்பது இங்கே விவரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

1. சோயா (Soy)

உணவு, புரதச்சத்து, மாமிச உணவு, இறைச்சி, தாவர உணவு

பட மூலாதாரம்,Getty Images

சோயாவில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது, கொலஸ்ட்ரால் இல்லை. இது நார்ச்சத்து நிறைந்தது மற்றும் அதிக புரதம் கொண்டது. இது பல்துறை சார்ந்தது மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு அடிப்படையாக அமைகிறது.

டோஃபுவில் (Tofu) 100 கிராமிற்கு 7-15 கிராம் புரதம் உள்ளது. சில்கன் டோஃபு குறைந்த அளவைக் கொண்டிருந்தாலும் (100 கிராமிற்கு 7 கிராம்), அதை சாஸ்கள் அல்லது சூப்களில் கலந்து கிரீமி அமைப்பைப் பெறலாம் - இது புரதத்தைப் பெறுவதற்கான எளிதான வழி.

டெம்பே (Tempeh) முழு சோயா பீன்களையும் பயன்படுத்துகிறது மற்றும் நொதிக்க வைக்கப்படுகிறது, எனவே குடலில் ப்ரீபயாடிக் (prebiotic) விளைவைக் கொண்டுள்ளது. இதில் 100 கிராமிற்கு 20 கிராமுக்கும் அதிகமான புரதம் உள்ளது.

எடமேம் (Edamame) என்பது இளம் சோயா பீன்கள், 100 கிராமிற்கு 11 கிராம் புரதம் கொண்டது.

மிசோ (Miso) என்பது நொதிக்க வைக்கப்பட்ட சோயா பீன் பேஸ்ட் - 100 கிராமிற்கு 13 கிராம் புரதத்துடன் ஒரு சிறந்த சுவையை அளிக்கிறது.

இனிப்பு சேர்க்கப்படாத சோயா தயிரில் புரதம் அதிகம். சோயா பால் அனைத்து தாவர அடிப்படையிலான பாலை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது (100 மில்லிக்கு 3.5 கிராம்).

2. பயறு வகைகள் (Legumes)

உணவு, புரதச்சத்து, மாமிச உணவு, இறைச்சி, தாவர உணவு

பட மூலாதாரம்,Getty Images

பீன்ஸ் மற்றும் கொண்டைக் கடலையில் பொதுவாக 100 கிராமிற்கு 6-9 கிராம் புரதம் உள்ளது. இவை பாஸ்தா, சாலட், சூப் மற்றும் கறிகளில் சேர்க்க ஏற்றவை.

பருப்புகளில் பொதுவாக 100 கிராமிற்கு 11-24 கிராம் புரதம் உள்ளது. இவற்றை அரிசி அல்லது தானியங்களுடன் சேர்த்து புரதம் மற்றும் நார்ச்சத்துக்காகப் பயன்படுத்தலாம்.

3. செய்டான் (Seitan)

இது கோதுமை குளூட்டனிலிருந்து தயாரிக்கப்படுகிறது, 100 கிராமிற்கு 25 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. சோயா ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது சிறந்தது.

4. நியூட்ரிஷனல் ஈஸ்ட் (Nutritional yeast)

இந்த மசாலாப் பொருள் 50% புரதத்தைக் கொண்டது. ஒவ்வொரு தேக்கரண்டி நியூட்ரிஷனல் ஈஸ்டிலும் சுமார் 3 கிராம் புரதம் உள்ளது. எனவே இது எந்த உணவிலும் புரதத்தை அதிகரிக்க சுலபமான வழி.

இது கொட்டை (nutty) மற்றும் சீஸ் (cheesy) போன்ற சுவையைக் கொண்டுள்ளதுடன், சாஸ்களைக் (sauces) கெட்டியாக்கும் பொருளாகவும் செயல்படுகிறது.

சத்துணவு ஈஸ்ட் மற்றும் பருப்புகள் சேர்க்கப்பட்டிருப்பதால், ஒருமுறை பரிமாறப்படும் அளவில் 16 கிராம் புரதத்தைக் கொண்டுள்ள 'வீகன் மூசாக்காவில்' இதனை முயற்சித்துப் பாருங்கள்."

5. முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள்

உணவு, புரதச்சத்து, மாமிச உணவு, இறைச்சி, தாவர உணவு

பட மூலாதாரம்,Getty Images

தாவரப் புரதங்களைப் பற்றிப் பேசும்போது முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளை மறந்துவிடாதீர்கள்.

"ஒரு வேளை உணவில் ஏராளமான புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைச் சேர்ப்பதற்கு 'பவர் பவுல்' (புத்தா பவுல் அல்லது தானியக் கிண்ணம்) ஒரு சிறந்த வழியாகும். வெள்ளை அரிசிக்குப் பதிலாக, 100 கிராமிற்கு சுமார் 7-9 கிராம் புரதம் கொண்டுள்ள குயினோவா மற்றும் பக்வீட் ஆகியவற்றின் கலவையை நான் பயன்படுத்த விரும்புகிறேன்."

"நீங்கள் இதன் மேலே கொட்டைகள் மற்றும் விதைகளைச் சேர்த்தால் (ஒரு மேசைக்கரண்டியில் சுமார் 2–4 கிராம் புரதம் இருக்கும்), அவை புரதத்துடன் கூடுதல் மொறுமொறுப்பையும் வழங்குகின்றன. சாலட், சூப் மற்றும் ஸ்டூக்களுக்கு (stews) உடனடி 'டாப்பராக' (மேலே தூவுவதற்கு) பயன்படுத்துவதற்காக, நான் இவற்றை ஓவனில் சிறிது தமாரி (tamari) அல்லது சோயா சாஸ் மற்றும் சில மசாலாக்கள் சேர்த்து வறுக்க விரும்புகிறேன். இதற்காக 'துக்கா' (Dukkah) எனும் நறுமணப் பொருள் கலவையும் மிகச் சிறந்தது."

ஓட்ஸும் ஒரு முழு தானியமாகவும் புரதச் சத்துக்கான ஆதாரமாகவும் (100 கிராமிற்கு 10.9 கிராம்) கருதப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், காலையில் நீங்கள் முதலில் உட்கொள்ளும் 'ஓவர்நைட் ஓட்ஸ்' மூலம் உங்கள் புரதத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்; அதனுடன் நார்ச்சத்துக்காகப் பெர்ரி பழங்களையும், மொறுமொறுப்பு மற்றும் கூடுதல் புரதத்திற்காகக் கொட்டைகளையும் அடுக்குகளாகச் சேர்த்துக் கொள்ளலாம்."

சிறிய அளவு விலங்குப் புரதத்திற்குப் பதிலாகத் தாவரப் புரதத்திற்கு மாறுவது, நீங்கள் ஆரோக்கியமாக வயதாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

தாவரப் புரதங்கள் சுற்றுச்சூழல் ரீதியாகவும் சிறந்தவை; குறைந்த நிலம் மற்றும் நீரைப் பயன்படுத்துவதோடு குறைந்த கார்பன் வெளியேற்றத்தை உருவாக்குகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd0y4eg0y3jo

"பல் துலக்கும்போது வெடித்த கழுத்து ரத்தக்குழாய்" - அரிதான நிகழ்வுக்கு என்ன காரணம்?

1 month 1 week ago

"பல் துலக்கும்போது வெடித்த கழுத்து ரத்தக்குழாய்" - அரிதான நிகழ்வுக்கு என்ன காரணம்?

சத்தீஷ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார்.

பட மூலாதாரம், Lakshmi Jangde

படக்குறிப்பு, ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார்.

கட்டுரை தகவல்

  • விஷ்ணுகாந்த் திவாரி

  • பிபிசி செய்தியாளர்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

"அன்று காலை நான் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது எனக்கு விக்கல் எடுத்தது. அதன் பிறகு, எனது தொண்டையின் வலது பக்கத்திற்குள் ஒரு பலூன் வேகமாக வீங்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே எனது தொண்டை முழுவதுமாக வீங்கிவிட்டது, கண்கள் இருட்டும் அளவுக்குக் கடுமையான வலி ஏற்பட்டது."

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரைச் சேர்ந்த ராகுல் குமார் ஜங்டே, டிசம்பர் 1-ஆம் தேதி தனக்கு ஏற்பட்ட அந்த தாங்க முடியாத வலியை நினைவு கூர்கிறார்.

அப்போது அவர் தனது மனைவியிடம், "ஏதோ சரியில்லை, நாம் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்று மட்டும் கூறியுள்ளார்.

அதன் பிறகு அவருக்கு நினைவு திரும்பியபோது, ராய்ப்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

அவருக்கு ஏற்பட்ட அந்த பாதிப்பு எந்த காயத்தினாலோ அல்லது நோயினாலோ ஏற்படவில்லை, மாறாக அது ஒரு அரிய நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கழுத்தில் உள்ள ஒரு தமனி தானாகவே வெடித்துவிட்டது.

இது மருத்துவ மொழியில் 'ஸ்பாண்டேனியஸ் கரோடிட் ஆர்டரி ரப்சர்' என்று அழைக்கப்படுகிறது. மாநிலத்தில் பதிவான இது போன்ற முதல் நிகழ்வு இதுவாகும்.

பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் இதயம், மார்பு மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 6 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராகுலின் உயிரைக் காப்பாற்றினர்.

இந்த நிலை ஏன் ஆபத்தானது?

பீம்ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் இதயம், மார்பு மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 6 மணி நேர சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு ராகுலின் உயிரைக் காப்பாற்றினர்.

பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu

படக்குறிப்பு,இந்த ஸ்கேன் ராகுலின் நிலையை தெளிவுபடுத்துகிறது, அவரது வலது கரோடிட் தமனி, அதன் சிதைவு ஆகியவற்றைக் காட்டுகிறது.

அதே துறையின் தலைவரான மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு பிபிசி இந்தியிடம் கூறுகையில், "கழுத்தில் உள்ள ரத்த நாளம் வெடிப்பது உயிருக்கு ஆபத்தான ஒரு நிகழ்வு. இதற்குச் சிகிச்சை அளிக்காவிட்டால், சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படலாம். ஆனால், இது பெரும்பாலும் கடுமையான விபத்துக்கள் அல்லது தொண்டை புற்றுநோய் போன்ற நோய்களின் போதுதான் நடக்கும். ஒரு சாதாரண மனிதருக்குக் கழுத்து ரத்தக்குழாய் தானாகவே வெடிப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவ இதழ்களின் படி, இதுவரை உலகம் முழுவதும் இது போன்று 10 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. அந்த அளவுக்கு இது அரிதானது," என்றார்.

40 வயதான ராகுல், ராய்ப்பூர் அருகிலுள்ள பன்புரி பகுதியில் வசிக்கிறார். அவர் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள் விற்கும் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உள்ளனர்.

தமக்கு இதற்கு முன்பு இது போன்ற எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்று ராகுல் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், அந்த டிசம்பர் காலை நடந்தது ராகுலுக்கு மட்டுமல்ல, மருத்துவர்களுக்கும் ஒரு சவாலான விஷயமாக அமைந்தது.

மருத்துவப் பரிசோதனையில் ராகுலின் வலது பக்க கழுத்து நாளம் வெடித்திருப்பது தெரியவந்தது.

பொதுவாக, கழுத்தில் உள்ள வலது மற்றும் இடது நாளங்கள் இதயத்திலிருந்து மூளைக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன.

இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் தமனிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த நாளங்களின் வலைப்பின்னல் மனித உடல் முழுவதும் மிகவும் பாதுகாப்பாகப் பரவியுள்ளது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் ஒரு இடத்தில் காயமோ அல்லது கிழிவு ஏற்பட்டால், அது இதயத்திலிருந்து ரத்தத்தை வழங்கும் நாளங்களைப் பாதித்து ரத்தப்போக்கை ஏற்படுத்தினால் மட்டுமே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இந்த நாளங்கள் மிக அதிக அழுத்தத்தில் பாய்வதால், அதிக அளவு இரத்தம் மிக விரைவாக இழக்கப்படும்.

இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் கிருஷ்ணகாந்த் சாஹு தலைமையிலான குழு மேற்கொண்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எந்தவித காயம், தொற்று, புற்றுநோய் அல்லது முன்கூட்டிய நோய் ஏதுமின்றி கழுத்தில் உள்ள நாளம் தானாகவே வெடிப்பது ஒரு அரிய நிகழ்வு," என்றார்.

ராகுலின் கழுத்தில் வலது நாளம் வெடித்ததால், கழுத்துப் பகுதியில் ரத்தம் வேகமாக நிரம்பியது. தமனியைச் சுற்றி ரத்தம் தேங்கியதால் ஒரு பலூன் போன்ற அமைப்பு உருவானது.

இதனை மருத்துவ மொழியில் 'சூடோஅன்யூரிசம்' என்று அழைக்கிறார்கள்.

மருத்துவர் சாஹு இதுகுறித்து கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள மருத்துவ இதழ்களில் இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது பணிக்காலத்தில் இது போன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை," என்றார்.

உயிரைக் காப்பாற்றுவது எவ்வளவு கடினம்?

மருத்துவர் சாஹு இதுகுறித்து பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள மருத்துவ இலக்கியங்களில் இது போன்ற சம்பவங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது முழுப் பணி வாழ்க்கையிலும் இது போன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை," என்றார்.

பட மூலாதாரம்,Dr. Krishnakant Sahu

படக்குறிப்பு,மருத்துவமனையில் மருத்துவர்களும் ஊழியர்களும் தன்னை கையாண்ட விதம் தனக்கு தைரியத்தை அளித்ததாக ராகுல் கூறுகிறார்.

இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பகிர்ந்த மருத்துவர் சாஹு, "எளிமையாகச் சொன்னால், ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு பக்கவாதத்தை உண்டாக்கும். ஆனால் ராகுலின் விஷயத்தில், பிரச்னை இன்னும் ஆபத்தானது. நாளமே வெடித்துவிட்டது. அங்கு உருவான ஒரு சிறிய ரத்தக் கட்டி கூட மூளையை அடைந்திருந்தால், முடக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தன," என்றார்.

பெரிய ரத்தக் கட்டிகளோ அல்லது அதிக எண்ணிக்கையிலான கட்டிகளோ மூளையை அடைந்தால், முழு மூளையும் சேதமடையக்கூடும் அல்லது நோயாளி 'மூளைச்சாவு' அடையும் நிலை கூட ஏற்படலாம்.

அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோதும், நாளம் மீண்டும் வெடிக்கும் அபாயம் இருந்ததாக அவர் விளக்கினார்.

அப்படி நடந்திருந்தால், கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கினால் சில நிமிடங்களிலேயே நோயாளி இறந்திருக்கக்கூடும்.

ராகுல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவரது நிலைமை சீராக இல்லை. அவரது கழுத்திற்குள் அதிக ரத்தம் சேர்ந்திருந்ததால், அறுவை சிகிச்சையின் போது நாளத்தை துல்லியமாகக் கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது.

"கழுத்தின் இந்தப் பகுதியில் பேச்சு, கை கால்களின் அசைவு மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பல முக்கியமான நரம்புகள் உள்ளன. நாங்கள் ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும், அது நோயாளிக்கு வாழ்நாள் முழுவதும் குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தியிருக்கும்," என்று மருத்துவர் சாஹு குறிப்பிட்டார்.

நாளத்தைக் கண்டறிந்து அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கே மருத்துவர்களுக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது.

முழு அறுவை சிகிச்சையும் 5 முதல் 6 மணி நேரம் நீடித்தது.

வெடித்த நாளத்தைச் சரிசெய்ய 'பொவைன் பெரிகார்டியம் பேட்ச்', அதாவது மாட்டின் இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு பயன்படுத்தப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ராகுலுக்கு 12 மணி நேரம் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

"ராகுலுக்கு சுயநினைவு திரும்பிய பிறகு, முதலில் அவருடன் பேசி அவரது குரலைச் சரிபார்த்தோம். பின்னர் அவரது கைகால்களின் அசைவுகளையும், பின்னர் அவரது முக அசைவுகளையும் சரிபார்த்து, ரத்தக் கட்டிகள் ஏதும் மூளையை அடையவில்லை என்பதையும், அறுவை சிகிச்சையின் போது எந்த முக்கிய நரம்புகளும் காயமடையவில்லை என்பதையும் உறுதி செய்தோம்," என்று மருத்துவர் சாஹு கூறினார்.

ராகுலின் மனைவி லட்சுமி ஜங்டே பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், ஆரம்ப நாட்கள் மிகவும் பயமாக இருந்ததாகவும், நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார்.

"இப்போது அவர் குணமடைவதைப் பார்க்கும்போது, அவரது கழுத்து ரத்தக்குழாய் வெடித்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை," என்கிறார் அவர்.

சதீஷ்கரில் இது போன்று நிகழ்வது முதல் முறை என மருத்துவர்கள் கூறியபோது தான் மிகவும் பயந்ததாக ராகுல் கூறுகிறார்.

ஆனால் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அளித்த தைரியம் அவரை மீட்டெடுத்தது.

தற்போது அவர் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்காத தனது குழந்தைகளை, குறிப்பாகத் தனது மகளைச் சந்திக்க வீட்டிற்குச் செல்லத் தயாராகி வருகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp82vde6506o

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு – ஐ.நா. எச்சரிக்கை

1 month 3 weeks ago

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு – ஐ.நா. எச்சரிக்கை

03 Jan, 2026 | 04:50 PM

image

உலகளவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் ( cervical cancer) உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்த நோய் முழுமையாகத் தடுப்பதற்கும் ஆரம்ப நிலையில் குணப்படுத்துவதற்கும் இயலும் என்றாலும், சமமற்ற சுகாதார அணுகுமுறைகள் காரணமாக பல உயிரிழப்புகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்னெடுத்துள்ள கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக பேசிய ஜீனெட் என்ற பெண், “என் உடலே என்னை ஏமாற்றியது போல உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய் என கண்டறியப்பட்ட ஒரு ஆண்டுக்குள் அவர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பப்பை புற்றுநோய் என்றால் என்ன?

கர்ப்பப்பை புற்றுநோய் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் உள்ள கர்ப்பப்பையில் உருவாகும் புற்றுநோய் ஆகும். ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிட்டால், இது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 6.6 இலட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டதுடன், 3.5 இலட்சம் பெண்கள் இதனால் உயிரிழந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனம், இந்த நோயால் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் உயிரிழக்கிறார் என எச்சரித்துள்ளது.

காரணம் என்ன?

கர்ப்பப்பை புற்றுநோய் பெரும்பாலும் HPV (Human Papillomavirus) எனப்படும் வைரஸ் தொற்றுடன் தொடர்புடையது. இது பாலியல் தொடர்பு மூலம் பரவும் மிகப் பொதுவான வைரஸ் ஆகும்.

பாலியல் செயலில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது HPV வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம். பெரும்பாலும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை தானாகவே நீக்கிவிடும். ஆனால் சில வகை HPV தொற்றுகள் நீடித்தால், அசாதாரண செல்கள் உருவாகி பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது.

தடுப்பு மற்றும் சிகிச்சை

கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் கூடிய நோயாகும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தில் பரிந்துரைகளின் படி, 9 முதல் 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் HPV தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதுடன் 30 வயதிலிருந்து பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக HIV தொற்றுள்ள பெண்களுக்கு 25 வயதிலிருந்து கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது.

ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இது மிகவும் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய முயற்சி

2020 ஆம் ஆண்டு, 194 நாடுகள் இணைந்து கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய திட்டத்தை தொடங்கின. அந்த நாள், நவம்பர் 17, தற்போது உலக கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு நாள் ஆகக் கடைபிடிக்கப்படுகிறது.

2030க்குள் அடைய வேண்டிய இலக்குகள்:

* 15 வயதிற்குள் 90% சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி

* 35 மற்றும் 45 வயதுகளில் 70% பெண்களுக்கு பரிசோதனை

* நோய் கண்டறியப்பட்ட 70% பெண்களுக்கு முழுமையான சிகிச்சை

இந்த இலக்குகள் நிறைவேற்றப்பட்டால், 2120 ஆம் ஆண்டுக்குள் 7.4 கோடி புதிய நோய் சம்பவங்களைத் தவிர்க்கவும், 6.2 கோடி உயிர்களை காப்பாற்றவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் ஆகிய சர்வதேச அமைப்புகள், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மற்றும் பரிசோதனை வசதிகளை சமமாக அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/235114

முதுகு வலி வராமல் தடுக்கவும் வந்தால் சமாளிக்கவும் நீங்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

1 month 3 weeks ago

முதுகு வலி வராமல் தடுக்கவும் வந்தால் சமாளிக்கவும் நீங்கள் அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

முதுகெலும்பு

பட மூலாதாரம்,Getty Images and BBC

படக்குறிப்பு,பிபிசி வரைபடம் வெவ்வேறு நிலைகளில் உள்ள மூன்று பேரைக் காட்டுகிறது. ஒவ்வொருவரின் முதுகெலும்பும் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

30 டிசம்பர் 2025, 01:52 GMT

பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வின் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக, முதுகு வலி சில வாரங்களில் குறைந்துவிடும் - ஆனால் மீண்டும் மீண்டும் வலி ஏற்பட்டால், அது பாதிக்கப்பட்டவர்களை முடக்கி, அவர்களது அன்றாட வாழ்க்கையை மோசமானதாக மாற்றிவிடும்.

அதுமட்டுமல்ல, மனித முதுகெலும்பானது விலா எலும்புகள் மற்றும் இடுப்பு எலும்புகளுடன் மட்டுமல்லாமல், தசைநாண்கள், தசைநார்கள், குருத்தெலும்புகள், தசைகள் மற்றும் நரம்பு திசுக்களின் தொகுப்போடும் இணைக்கப்பட்டது. எனவே, இந்த பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் பிரச்னைகளும் முதுகு வலியை ஏற்படுத்தக்கூடும்.

முதுகு வலி ஏற்படுவது என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவானது. எனவே, முதுகு வலியைத் தடுக்கவும், முதுகு வலி இருந்தால், அதை சிறப்பாக கையாளவும் முக்கியமான ஐந்து உபாயங்களைத் தெரிந்துக் கொள்வோம்.

மேல் அல்லது கீழ்?

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் Institute for Health Metrics and Evaluation ஆராய்ச்சியாளர்கள் தயாரித்த 'குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்' என்ற ஆய்வின் சமீபத்திய பதிப்பின்படி, நாள்பட்ட கீழ் முதுகு வலியுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் அதிகரிக்க உள்ளது.

அப்போதைய காலகட்டத்தில், உலக மக்கள்தொகையில் பத்தில் ஒருவர் முதுகு வலியால் பாதிக்கப்படுவார்கள்.

உலகளாவிய ஆரோக்கியத்தில் முதுகு வலியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் என்று குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வு கூறுவதையும் தெரிந்துகொள்வோம். பக்கவாதம், இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள், நீரிழிவு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் ஆகியவையே அவை.

முதுகுப் பகுதியின் கீழ் பகுதியே உடலின் அதிகளவிலான அசைவுகளுக்குத் துணைபுரிவதாலும், அதிக அழுத்தத்தை உள்வாங்கிக் கொள்வதாலும், அங்குதான் அடிக்கடி வலி ஏற்படுகிறது. இருப்பினும், உடலின் மேல் முதுகுப் பகுதி, குறிப்பாக கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளும் கூட இத்தகைய வலியை உண்டாக்கலாம்.

முள்ளெலும்பு, மனித முதுகெலும்பு, முள்ளெலும்புகள்

படக்குறிப்பு,33 முள்ளெலும்புகளைக் கொண்ட மனித முதுகெலும்பானது பொதுவாக மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்து பிட்டத்தின் உச்சி வரை நீண்டுள்ளது, அதன் கீழ் உள்ள ஒன்பது முள்ளெலும்புகள் ஒன்றாக இணைந்திருக்கின்றன

சிகிச்சைக்கு முன் நோயறிதல்

சிகிச்சைக்கு முன் நோயறிதல் என்ற மருத்துவக் கொள்கை முதுகு வலிக்கு மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், முதுகு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், முதுகு வலி ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய ஒரேயொரு குறிப்பிட்ட நோயறிதல் சோதனை என்று எதுவும் கிடையாது.

பித்தப்பை அல்லது சிறுநீரக நோய் அல்லது சில வகை புற்றுநோய்கள் என உயிருக்கு ஆபத்தான நிலைகளை மருத்துவர்கள் பொதுவாக முதலில் நிராகரிக்க முயற்சிப்பார்கள். வழக்கமாக, நோயறிதல் என்பது உடல் பரிசோதனை மற்றும் நோயாளியின் மருத்துவ வரலாற்றைச் சரிபார்ப்பதையும் உள்ளடக்கியது.

ரத்தப் பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் அல்லது குருத்தெலும்புகளை சேதப்படுத்தி மூட்டுவலியை உண்டாக்கும் வீக்கங்களைக் கண்டறிய முடியும். மேலதிக உறுதிப்படுத்தலுக்கு, மூட்டுகள், எலும்புகள், டிஸ்க்குகள், உறுப்புகள் அல்லது மென்மையான திசுக்களை ஆய்வு செய்ய எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ போன்ற இமேஜிங் சோதனைகள் தேவைப்படலாம்.

பெரும்பாலான முதுகுவலிகள் லேசான வலி மற்றும் உடல் இறுக்கமானது போன்ற உணர்வாகவே இருக்கும். ஆனால், தசை அல்லது தசைநார் கிழிந்துபோனால் திடீரென கடுமையான வலியை உண்டாக்கும். அதேபோல, பிட்டம் மற்றும் கால்களுக்கு பரவும் வலி, அந்தப் பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற உணர்வு அல்லது மரத்துப்போதல் போன்ற அறிகுறிகள் தோன்றுவது நரம்புப் பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

தசைகளில் உள்ள மின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் 'எலக்ட்ரோடியாக்னோசிஸ்' முறை, தசை மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு இடையிலான வேறுபாட்டை கண்டறிய உதவும்.

கயிறு இழுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிற எலும்புகளை விட முதுகெலும்பு வேகமாக நீளமாகும்போது, அது குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தலாம்

இந்த நோயறிதல் அணுகுமுறையானது பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பொருந்தும்.

இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குழந்தை நல மருத்துவராகப் பணியாற்றியவரும், தற்போது ஜெர்மனியில் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்துவரும் மருத்துவர் அரினா டிசோசா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது தான் கூர்ந்து கவனிக்கும் விஷயங்கள் என்ன என்பதை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்:

"குழந்தைகள் குதித்து விளையாடிக்கொண்டிருப்பார்கள், அப்போது நான் சில விஷயங்களைக் கூர்ந்து அவதானிப்பேன்:

  • அந்தச் செயல்பாடுகளின் போது அவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டதா?

  • மறைந்திருக்கும் தசைக்கூட்டு குறைபாடுகள் ஏதேனும் உள்ளனவா?

  • பெற்றோர்களுக்கும் முதுகு வலி வரும் வாய்ப்பு உள்ளதா?

  • அவர்கள் சமச்சீர் உணவை உண்கிறார்களா?

முழங்கால்களிலும் கால்களிலும் ஏற்படும் வலி அதிகரித்து வருவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் சில சமயங்களில் இது முதுகிலும் ஏற்படலாம் - ஏனெனில் ஓர் குழந்தையின் முதுகெலும்பு முழுவதுமே, சில நேரங்களில் பிற எலும்புகளை விட மிகத் துரிதமாக நீளமாக வளரும்.

முதுகு வலி

பட மூலாதாரம்,Getty Images

ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடல்

முதுகு வலி மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சமே சில நோயாளிகளின் குணமடையும் செயல்முறைக்கு தடையாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"முதுகெலும்பு மற்றும் தசைப் பிரச்னைகள் ஏதும் இல்லாதபோதும், மீண்டும் வலி வந்துவிடுமோ என்ற கவலையே சிலர் தங்கள் முதுகைப் பயன்படுத்துவதில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது" என இங்கிலாந்தின் Down2U Health and Wellbeing இயக்குனர் ஆடம் சியு, பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும், "இந்த பயம் அவர்களைச் சுறுசுறுப்பற்றவர்களாகவும், மந்தமானவர்களாகவும் மாற்றுகிறது. சிலர் தங்களுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்வதைக் கூட நிறுத்திவிடுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் மக்வாரி பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபி பேராசிரியர் மார்க் ஹான்காக் முதுகு வலி பற்றிக் கூறுகையில்: "சில நோயாளிகள் தங்கள் முதுகுப் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால், சமூக வாழ்க்கையிலிருந்தே விலகிவிடுகிறார்கள். சமூக அழுத்தம், வலியைப் பற்றிய கவலை, எரிச்சலூட்டும் முதுகு வலி என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது, திடீரென்று இதுவொரு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கிறது" என்று கூறுகிறார்.

எனவே, முதுகு வலி என்பது ஆக்கப்பூர்வமான மற்றும் முழுமையான அணுகுமுறையின் அவசியத்திற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது.

"உலகெங்கிலும் உள்ள மருத்துவ வழிகாட்டுதல்களும் இப்போது உடல் ரீதியான, உளவியல் ரீதியான மற்றும் சமூகக் காரணிகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசுகின்றன," என்று பேராசிரியர் ஹான்காக் கூறுகிறார்.

"சி.எஃப்.டி (Cognitive Functional Therapy) எனப்படும் சிகிச்சை முறை, நோயாளிகள் சிகிச்சையாளர்களுடன் கலந்துரையாடி, வலிக்குக் காரணமான பல்வேறு விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அனுமதிக்கிறது.

அதன்பின், அவர்களுக்குப் பிடித்தமான செயல்களைப் படிப்படியாக மீண்டும் செய்வதற்குத் தகுந்த மாற்று வழிகளுடன் கூடிய திட்டம் ஒன்று வகுக்கப்படுகிறது.

தேவைப்பட்டால், நோயாளிகளின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்த சிகிச்சையாளர்கள் அவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள்."

முன்னேறிக் கொண்டே இரு

முகப்பு மூட்டு மாதிரி, முதுகெலும்புத் தட்டு, ஆடம் சியு

பட மூலாதாரம்,Adam Siu

படக்குறிப்பு,முகப்பு மூட்டு மாதிரியைப் பயன்படுத்தி, உட்காரும்போது அல்லது குனியும் போது முதுகெலும்புத் தட்டு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குகிறார் ஆடம் சியு

மீண்டும் வலி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால், ஓய்வு எடுப்பது குணமடைய உதவும் என சில நோயாளிகள் நம்புகிறார்கள். ஆனால், அது தவறு எனக் கூறும் பிரிட்டிஷ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (BASS), முதுகு வலியைத் தவிர்ப்பதற்கு சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம் என்று கூறுகிறது. முதுகு வலிக்காக அதிக ஓய்வு எடுப்பது என்பது, வலி குணமாகும் காலத்தை மேலும் நீட்டிக்கும் என கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆராய்ச்சிகளும் கூறுகின்றன.

"முதுகெலும்புத் தொடர், வெர்டிப்ரே எனப்படும் தனிப்பட்ட எலும்புகளால் ஆனது, இது இயற்கையாகவே வெவ்வேறு பிரிவுகளில் வளைந்திருக்கும்" என ஆடம் சியு கூறுகிறார்.

"உடலின் எடை மற்றும் அசைவுகளுக்கு முதுகெலும்பு துணைபுரிய முதுகெலும்புத் தொடரின் வளைவுகள் உதவுகின்றன. முதுகெலும்பின் மேல் பகுதியில் உள்ள 24 எலும்புகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை; இவை ஒவ்வொன்றும் ஃபேசெட் மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொன்றுக்கும் இடையில் இன்டர்வெர்டெபிரல் டிஸ்க் எனும் மெத்தை போன்ற அமைப்பு உள்ளது.

இந்த இயற்கையான அமைப்பு மற்றும் அந்த டிஸ்க்கின் அதிர்வுகளைத் தாங்கும் தன்மை பலவீனப்படாமல் இருக்க வேண்டுமெனில், அமர்வது, குனிவது அல்லது நீண்ட நேரம் நிற்பது என ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்."

ஆனால் நவீன வாழ்க்கை முறையில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது, ஆன்லைனில் படிப்பது, கேம் விளையாடுவது, வீடியோக்களைப் பார்ப்பது என உடலுழைப்பு குறைந்துவிட்டது.

அலுவலக ஊழியர்களில் சிலருக்கு மட்டுமே அவ்வப்போது ஓய்வு எடுப்பதற்கோ அல்லது நடப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்; ஆனால் பல வேலைகளில் இதற்கான வாய்ப்புகளும் இருக்காது.

"வாகன ஓட்டுநராக இருந்தால், போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் போது அமர்ந்த நிலையிலேயே சில பயிற்சிகளை செய்ய முயற்சிக்கலாம்," என்று ஆடம் சியு கூறுகிறார்.

"கனமான பொருட்களைத் தூக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள், வேலை செய்வதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைத் தெரிந்துகொள்ள பிசியோதெரபிஸ்ட்டுகளை அணுக வேண்டும்."

கர்ப்பகால முதுகு வலி

கர்ப்பிணிப் பெண், கர்ப்பமுற்ற பெண்கள், உடல் தோரணை, உடல் எடைப் பரவல், மன அழுத்தம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கர்ப்பமுற்ற பெண்கள், உடல் தோரணை, உடல் எடைப் பரவல் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அனுபவிக்கின்றனர்

கர்ப்ப காலமும் முதுகு வலியை உண்டாக்கக்கூடும் - அதுவும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இது ஏற்படலாம்.

கருத்தரித்த சில காலத்திலேயே பெண்ணின் உடலில் 'ரிலாக்ஸின்' என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இது பிரசவத்திற்குத் தயாராகும் வகையில் பெண்ணின் இடுப்புப் பகுதியில் உள்ள தசைநார்களைத் தளர்த்தி, கருப்பை வாயை மென்மையாக்குகிறது. ஆனால், அதே வேளையில் இது முதுகெலும்பில் உள்ள இணைப்புத் திசுக்களையும் மூட்டுகளையும் தளர்த்துவதால், முதுகின் கீழ் பகுதியில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

கரு வளரும்போது, கர்ப்பிணிகள் தங்களின் உடல் நிலை, உடல் எடை பரவல் மற்றும் மன அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உணர்கிறார்கள்.

கர்ப்ப காலத்தில் முதுகு வலியைத் தணிக்க சில குறிப்புகள்:

  • உடலைத் திருப்பும் போது, முதுகெலும்பை முறுக்குவதைத் தவிர்க்க உங்கள் கால்களையும் சேர்த்துத் திருப்புங்கள்.

  • உங்கள் உடல் எடையைச் சீராகத் தாங்கக்கூடிய வசதியான காலணிகளை அணியுங்கள்.

  • மகப்பேறு கால சிறப்புத் தலையணைகள் மற்றும் நல்ல மெத்தையை பயன்படுத்துவது, போதுமான ஓய்வு பெற உதவும்.

வலி நிவாரண மாத்திரைகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

"முதுகு வலியின் ஆரம்ப கட்டத்தில், மருந்துக் கடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய வீக்கத்தைக் குறைக்கும் (anti-inflammatory) மருந்துகளை எடுத்துக்கொள்வது தவறில்லை; இது நீங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு உதவும்" என்று சியு கூறுகிறார்.

"ஆனால், வலி தொடர்ச்சியாக இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யாமல், சில வாரங்களுக்கு மேலாகவோ அல்லது நீண்ட காலமோ இந்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டால், அது பிரச்னையை மூடி மறைப்பதாகவே அமையும். துரதிருஷ்டவசமாக, பல ஆண்டுகளாக மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும் நபர்களை பார்க்கிறேன்."

வலியை மரத்துப் போகச் செய்வது என்பது, அந்த வலிக்கான உண்மையான காரணத்தை மேலும் மோசமாக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (BASS) இதை மறுக்கிறது.

"இது முற்றிலும் உண்மையல்ல. நம் உடலில் மிகவும் வலிமையான பாதுகாப்பு அனிச்சைச் செயல்கள் உள்ளன. சாதாரண வலி நிவாரணிகளால் அவற்றை அகற்றிவிட முடியாது. அதாவது, வலி நிவாரணிகள் வலியை மட்டுமே குறைக்கும்; ஆபத்தான செயல்களில் இருந்து உங்களைத் தடுக்கும் உடலின் இயற்கையான பாதுகாப்பு உணர்வை அவை நீக்கிவிடாது.

இதற்கு உதாரணமாக, சாதாரண வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டவர், கொதிக்கும் நீரில் கையை வைத்தால் என்னவாகும்? உடலின் அனிச்சை செயல்கள் வலியை ஏற்படுத்தும். அதேபோலத்தான், எளிய வலி நிவாரண நடவடிக்கைகளை எடுத்துக்கொண்ட பிறகு நடமாடுவதால் ஒருவரின் முதுகுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

இவ்வகையான மருந்துகளை எடுத்துக்கொள்வதில் உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால், ஒரு மருந்தாளரிடம் கலந்தாலோசிக்கவும்."

மூல உரை: பிபிசி நியூஸ் வேர்ல்ட் சர்வீஸ், குளோபல் ஜர்னலிசம் க்யூரேஷன்

கூடுதல் தகவல்கள்: பிபிசி நியூஸ் மராத்தியின் கணேஷ் போல்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c33m37mgy4po

குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள்

1 month 3 weeks ago

குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள்

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • சுப் ரானா

  • பிபிசி இந்திக்காக

  • 28 டிசம்பர் 2025, 03:25 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் அதிக மரணங்களை விளைவிக்கும் காரணிகளுள் இதய நோயும் ஒன்று. குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வின்படி, இந்தியாவில் நிகழும் மரணங்களில் நான்கில் ஒன்று இதய நோயால் நிகழ்கின்றன.

இதய நோயால் ஏற்படும் மரணங்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானவை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன.

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருந்தால் அனைத்தும் நன்றாக உள்ளது என்பது தான் இதய ஆரோக்கியம் தொடர்பான பரவலான நம்பிக்கையாக உள்ளது. ஆனால் இந்த அனுமானம் சரியா என்கிற கேள்வியும் மருத்துவ வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.

கொலஸ்ட்ரால் தவிர வேறு எந்த அறிகுறிகள் மற்றும் காரணிகள் மாரடைப்பு தொடர்பான எச்சரிக்கையை வழங்குகின்றன, குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

குளிர் காலத்தில் வரும் ஆபத்துகள்

2024-ஆம் ஆண்டு அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் முதன்மை ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, தீவிரமான குளிர்ந்த வானிலை மற்றும் திடீர் குளிர் அலை ஆகியவை மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின்படி, குளிர்காலம் தொடங்கிய உடனே பெரிய ஆபத்து இல்லையென்றாலும் 2 - 6 நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தரவுகள்படி, அதிக அளவிலான மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்புடைய மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டியே பதிவு செய்யப்படுகின்றன.

குளிர், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் உடல் சார்ந்த எதிர்வினை ஆகியவற்றின் கலவை இதயத்தின் மீது கூடுதல் அழுத்தம் தருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் 4 காரணிகள்

குளிர் காலத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பது ஏன் என்கிற கேள்வியை மேதாந்தா மூல்சந்த் ஹார்ட் சென்டரின் இணை இயக்குநரும் தலைமை பேராசிரியருமான தருண் குமாரிடம் முன்வைத்தோம்.

இதன் பின் நான்கு முதன்மையான காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

"வானிலை குளிராக இருக்கிறபோது உடல் தன்னை இதமாக வைத்துக் கொள்ள ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை சுருக்குகிறது. இது இதயத்தின் முக்கியமான ரத்த நாளங்களை சுருக்குகிறது. இதன் விளைவாக இதயத்திற்கு குறைவான ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்கிறது."

"குளிர்காலத்தில் குறைவாகவே வியர்க்கிறது, மக்கள் அதிகம் நகர்வதும் இல்லை. இது உடலில் பிளாஸ்மா அல்லது மொத்த ரத்த அளவை அதிகரிக்கிறது. இது ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு விகிதத்தை அதிகரித்து இதயத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது," என்றார்.

குளிர்காலத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் சிறிதளவு மெதுவாகும் என்று கூறும் அவர், "மக்கள் தங்களை அறியாமலே கலோரி அதிகமாக உள்ள கேரட் அல்வா, வெல்லம், வேர்க்கடலை, வறுத்த பக்கோடா போன்ற உணவுகளை சாப்பிடத் தொடங்குகின்றனர். கூடுதலாக அவர்கள் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் உடற்பயிற்சியை குறைத்துக் கொள்கின்றனர். இது உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது."

"குளிர்காலம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இதனால் ரத்தம் கசியும் போக்கையும் அதிகரிக்கிறது. இந்தக் கசிவு இதயத்தின் நரம்புகளில் ஏற்பட்டால் நரம்பு அடைத்து மாரடைப்பும் ஏற்படலாம்.' என்று தெரிவித்தார்.

நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜியின் இயக்குநரான மருத்துவர் சமீர் குப்தா பிபிசியிடம் கூறுகையில், "ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயம் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதிக அளவில் சூப் அல்லது உப்பான உணவுகளை எடுத்துக் கொள்வது ஆபத்தானது. அதிக அளவிலான உப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இதயம் செயலிழக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது." என்றார்.

குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது எப்படி?

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

குளிர் காலத்தில் அதிக அளவிலான வறுத்த உணவுகள் மற்றும் மன அழுத்தம் இதயத்திற்கு ஆபத்தானது என்கிறார் சமீர் குப்தா.

"உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் கூடுதல் எடை இதயத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. மன அழுத்தத்தை குறைக்க தினமும் யோகா, தியானம் செய்ய வேண்டும். 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

பக்கோடா மற்றும் சமோசா போன்ற வறுத்த உணவுப் பொருட்களை உட்கொள்வதை குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

"அதிக அளவில் உப்பு மற்றும் சர்க்கரை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதய துடிப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த புகையிலை மற்றும் மது பழக்கத்தை கைவிட வேண்டும்," என்றார்.

உடலில் உள்ள ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீரான இடைவெளிகள் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் எனக் கூறும் அவர், நெஞ்சு வலி, சுவாசக் குறைபாடு அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த சிறிய அளவிலான மாற்றங்களால் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றார்.

மாரடைப்பின் அறிகுறிகள்

2025-ஆம் ஆண்டு ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில் இளைஞர்களிடம் நிகழும் திடீர் மரணங்களுக்கு இதய நோய் முதன்மை காரணியாக இருப்பது தெரியவந்தது.

இதய பிரச்னையால் ஏற்படும் 85% மரணங்களுக்கு ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் மாரடைப்பே காரணமாக உள்ளது.

"இந்தியாவில் மாரடைப்பு சம்பவங்கள், இளைஞர்களிடம் கூட வேகமாக அதிகரித்து வருகிறது. 50 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மாரடைப்பு என்பது மிகவும் இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது. இதில் 25-30% மரணங்கள் 40 வயதுக்கும் குறைவானவர்களிடம் நிகழ்கிறது," என்கிறார் தருண் குமார்.

உடனடியாக மருத்துவ உதவியைப் பெறுவதற்கு மாரடைப்பின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது.

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

நெஞ்சின் இடது பக்கம் அல்லது நடுப் பகுதியில் வலி, அழுத்தம், கனமான அல்லது எரிச்சல் உணர்வு மாரடைப்பின் முதன்மையான அறிகுறிகள். இந்த வலி வயிற்றின் மேல் பகுதியிலிருந்து கீழ் பகுதிக்கு பரவலாம். இந்த வலி இடது கையின் மேல் பகுதிக்கும் பரவலாம்.

அத்துடன், பதற்றமாக உணர்வதும் தலைச்சுற்றல் மற்றும் சுவாசக் குறைபாடு ஏற்படுவதும் பொதுவான அறிகுறிகள் எனக் கூறும் தருண் குமார், இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் என்கிறார்.

"அனைவரும் நெஞ்சு வலியை அனுபவிக்க மாட்டார்கள். பலரும் சுவாசக் குறைபாட்டை உணர்வார்கள். சுயமாக இதனைக் கையாளாமல் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இந்த அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தாக அமையும்," என்கிறார் தருண் குமார்.

இதர காரணிகள்

இதய நோய் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் கொலஸ்ட்ரால் அல்லாத இதர காரணிகளை சமீர் குப்தா விவரித்தார்.

ஏபிஓ பி அளவு (Apo B Level): இவை ஒவ்வொரு கெட்ட கொலஸ்ட்ரால் துகளிலும் இடம்பெற்றிருக்கும். ஏபிஓ பி ரத்தத்தில் உள்ள கெட்ட துகள்களின் எண்ணிக்கையை துல்லியமாக தெரிவித்து இதய நோய் ஆபத்து பற்றிய சிறப்பான கணிப்பை வழங்குகிறது.

லிபோபுரோட்டீன் (எ) அளவுகள்: இது பிறப்பின் போதே தீர்மானிக்கப்படும் மரபணு அம்சம் மற்றும் இவற்றை பெரிதாக மாற்ற முடியாது. தெற்கு ஆசியாவில் வசிப்பவர்களிடம் (குறிப்பாக இந்தியர்களிடம்) இவை அதிக அளவில் காணப்படுகிறது. இது இதய நோய் மற்றும் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கிறது.

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

ஹீமோகுளோபின் ஏ1சி: இந்த ரத்தப் பரிசோதனை கடந்த 2-3 மாதங்களாக உள்ள சராசரி ரத்த சர்க்கரை அளவைத் தெரிவிக்கிறது. நீரழிவு நோயுடன் அதிக அளவிலான ரத்த சர்க்கரையும் இதய நோய் பாதிப்பை அதிகரிக்கிறது.

இதய நோய் ஆபத்தை தீர்மானிப்பதற்கான சில முக்கியமான வரம்புகளையும் பரிசோதனைகளையும் தருண் குமார் குறிப்பிடுகிறார். இவற்றைப் பரிசோதிப்பதன் மூலம் நோய் பாதிப்பை முன்கூட்டியே எச்சரிக்க முடியும் என்கிறார்.

முக்கியமான வரம்புகள் என்ன?

எடை மற்றும் பிஎம்ஐ: பிஎம்ஐ 18.5 - 24.9 என்கிற அளவில் இருக்க வேண்டும்.

கொலஸ்ட்ரால் அளவு: எல்டிஎல் (கெட்ட கொலஸ்ட்ரால்) - 100 எம்ஜி/டிஎல் என்கிற அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். இது மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணிசமாக குறைக்கிறது.

ஹெச்டிஎல் (நல்ல கொலஸ்ட்ரால்): இவை 50 எம்ஜி/டிஎல் என்கிற அளவில் இருப்பது இயல்பானதாகக் கருதப்படுகிறது.

அதிக உணர்திறன் கொண்ட சி-ரியாக்டிவ் புரோட்டின்: இது உடலில் உள்ள ரத்தக்குழாய் வீக்கத்தைக் கணக்கிடுகிறது. கொலஸ்ட்ரால் அளவு இயல்பாக இருந்தாலும் ரத்தக்குழாய்களில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் முறிவு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. இவை கடினமான உடற்பயிற்சி மற்றும் அழுத்தம் ஏற்படும் சமயங்களில் கசிவிற்கு வித்திடுகிறது.

ஆபத்தைக் கணக்கிடும் வழிமுறை

இதய நோய், மாரடைப்பு, கொழுப்பு அளவு, இதய பாதிப்புகள்

பட மூலாதாரம்,Getty Images

ஃப்ராமிங்காம் ரிஸ்க் கால்குலேட்டர்: இது அடுத்த 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் கணக்கிடுகிறது. வயது, பாலினம், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்ற காரணிகள் இதில் கணக்கிடப்படுகின்றன. ரிஸ்க் 5 சதவிகித்தை விட அதிகரித்தால் மருத்துவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டும்.

கொரோனரி ஆர்டெரி கால்சியம் ஸ்கோர்: இது சிடி ஸ்கேன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஸ்கோர் பூஜ்ஜியத்தை விட எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது.

இவை போக மேலும் சில பரிசோதனைகளையும் தருண் குமார் பரிந்துரைக்கிறார். "நீரழிவு அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கும் என சந்தேகித்தால் ஈசிஜி, எகோ மற்றும் டிஎம்டி (டிரெட்மில் பரிசோதனை) எடுத்துக் கொள்ள வேண்டும். டிஎம்டி பரிசோதனையில் நடக்கிற நிலையில் ஈசிஜி மேற்கொள்ளப்படுகிறது. இது பிரச்னையை முன்கூட்டியே கணிக்க உதவும்." என்றார்.

இளம் வயதிலிருந்தே கவனமாக இருப்பது முக்கியம் எனக் கூறும் அவர் 18-20 வயதிலே கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார்.

30 - 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஃப்ராமிங்காம் ரிஸ்க் கால்குலேட்டர், கொரோனரி ஆர்டெரி கால்சியம் ஸ்கோர் மற்றும் டிஎம்டி பரிசோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx25ekj0n0po

“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!

1 month 4 weeks ago

“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!

25 Dec 2025, 6:57 AM

5 simple health habits for people over 60 senior citizen care tips healthy aging

“வயசாகிடுச்சு, இனிமே என்ன இருக்கு?” என்று மூலையில் முடங்கிவிடுபவரா நீங்கள்? 60 வயது என்பது வாழ்வின் முடிவுரை அல்ல; அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். பணி ஓய்வுக்குப் பிந்தைய இந்த ‘இரண்டாவது இன்னிங்ஸை’ (Second Innings) ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. பெரிய அளவில் மெனக்கெடாமல், தினசரி வாழ்க்கையில் இந்த 5 எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும், நோயின்றி நூறாண்டு வாழலாம்!

1. அசைவே ஆரோக்கியம் (Keep Moving): முதுமையில் வரும் மூட்டு வலிக்கு முக்கியக் காரணம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான். தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி (Walking) செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், எலும்புகளின் உறுதிக்கும் உதவும். “நடக்கும்போது மூச்சு வாங்குது” என்றால், வீட்டிற்குள்ளேயே அல்லது மொட்டை மாடியிலேயே சிறுகச் சிறுக நடங்கள்.

2. தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடியுங்கள்: வயது ஏற ஏற, மூளையில் தாகத்தை உணர்த்தும் திறன் குறையத் தொடங்கும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து (Dehydration), சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படலாம். எனவே, தாகம் எடுக்கிறதோ இல்லையோ, குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் அல்லது மோர், பழச்சாறு அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

3. உணவில் மாற்றம் அவசியம்: இளம் வயதில் சாப்பிட்டது போல எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை இப்போது செரிப்பது கடினம். எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம், வேகவைத்த காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாக, இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. இது நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கமின்மையைத் தவிர்க்கும்.

4. தனிமையைத் தவிருங்கள் (Socialize): உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியம் மிக முக்கியம். தனிமை என்பது முதுமையின் மிகப்பெரிய எதிரி. உங்கள் பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுங்கள், பேரப்பிள்ளைகளுடன் விளையாடுங்கள் அல்லது ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். மனதை லேசாக வைத்துக்கொண்டாலே பாதி நோய்கள் குணமாகிவிடும்.

5. மூளைக்கு வேலை கொடுங்கள்: உடலைப்போலவே மூளைக்கும் பயிற்சி தேவை. சுடோகு (Sudoku), குறுக்கெழுத்துப் போட்டிகள் அல்லது புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். இது ஞாபக மறதி (Dementia) போன்ற பிரச்சனைகள் வருவதைத் தாமதப்படுத்தும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையல்ல!

முதுமை என்பது ஒரு நோய் அல்ல; அது வளர்ச்சியின் ஒரு கட்டம். மருந்துகளை விட, மகிழ்ச்சியும் நம்பிக்கையுமே உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த 5 பழக்கங்களையும் இன்றே தொடங்குங்கள், முதுமையை வெல்லுங்கள்!

https://minnambalam.com/5-simple-health-habits-for-people-over-60-senior-citizen-care-tips-healthy-aging/

இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள்

2 months ago

இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தால் ஏற்படும் பாதிப்புகள்

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மூட்டுகளில் மீண்டும் மீண்டும் ஏற்படும் வலி, வீக்கம், சிவத்தல் ஆகியவையும் கீல்வாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

கட்டுரை தகவல்

  • சுமன்தீப் கவுர்

  • பிபிசி செய்தியாளர்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

காலையில் எழும்போது கால் மூட்டுகள் விறைப்புடன் இருப்பதையோ, கால் அல்லது மூட்டுகளில் லேசான வலி இருப்பதையோ, வயது அல்லது சோர்வு காரணமாக நடப்பதில் சிரமம் ஏற்படுவதையோ நாம் புறக்கணித்து விடுகிறோம்.

ஆனால், இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், அது உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில் தாங்க முடியாத வலி ஏற்பட அது காரணமாகவும் இருக்கலாம். இது கீல்வாதம் அல்லது ஆர்த்ரிட்டீஸ் எனப்படுகிறது.

யூரிக் அமிலம் என்பது என்ன, அது ஏன் நம் உடலில் அதிகரிக்கிறது, சரியான நேரத்தில் அதன் மீது கவனம் செலுத்துவது ஏன் முக்கியம் என்பவை குறித்து மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் புரிந்து கொள்ள முயல்வோம்.

குர்காவுனை சேர்ந்த மூத்த வாத நோய் (rheumatologist) மற்றும் நோயெதிர்ப்பு நிபுணரான மருத்துவர் ரேணு டாபர், உடலில் உருவாகும் இயற்கைக் கழிவுகளே யூரிக் அமிலம் என விளக்கினார்.

"இவை பியூரின்கள் எனப்படும் கரிம சேர்மங்கள் உடையும்போது உருவாகின்றன. பியூரின்கள் என்பது உடலின் செல்களில் இயற்கையாகக் காணப்படும் வேதிம சேர்மங்களாகும். மேலும் அவை சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. இவை உடையும்போது யூரிக் அமிலம் உருவாகிறது" என்றார்.

ஹைப்பர்யூரிசெமியா (Hyperuricemia) என்பது ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் இருப்பதால் ஏற்படும் பாதிப்பு. இதனால் கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் ஆகியவை ஏற்படுகின்றன.

யூரிக் அமிலம் எப்படி உருவாகிறது?

லூதியானா சிவில் மருத்துவமனையில் எலும்பியல் துறையில் மருத்துவ அதிகாரியாக உள்ள மருத்துவர் சௌரவ் சிங் சிங்லா, பியூரின் வளர்சிதை மாற்றம் அடையும்போது உருவாவதாகவும் அது இரண்டு வழிகளில் உருவாவதாகவும் விளக்கினார்.

முதலாவது உடலின் திசுக்களிலேயே, அதாவது கல்லீரல், குடல், தசைகள், சிறுநீரகங்கள் மற்றும் வாஸ்குலர் எண்டோதெலியம் (vascular endothelium - ரத்த நாளங்களை உருவாக்கும் உட்புறச் சுவரை உருவாக்குகின்ற மெல்லிய செல் அடுக்கு) ஆகியவற்றில் உருவாகிறது. இரண்டாவது வழி, உடலுக்கு வெளியே, அதாவது விலங்குப் புரதங்களைக் கொண்ட உணவுகளை உண்ணும்போது உருவாகிறது.

மேலும் அவர் கூறுகையில், "இந்த பியூரின் நியூக்ளியோடைடுகள் (nucleotides) நொதிகள் மூலம் ஹைபோக்ஸன்தைன் (hypoxanthine), ஸன்தைன் (xanthine) ஆகியவையாக உடைந்து, பின்னர் மேலும் ஸன்தைன் ஆக்ஸிடேஸ் (xanthine oxidase) எனும் நொதி மூலம் யூரிக் அமிலமாக மாறுகின்றன" என விவரித்தார்.

"மனிதர்களிடத்தில் யூரிகேஸ் (uricase) எனும் நொதி இல்லை என்பதால் யூரிக் அமிலம் உடையாமல் இருக்கும். எனவே அது சிறுநீரகங்களையே சார்ந்திருக்கிறது. அதன் மூலம், யூரிக் அமிலம் சிறுநீர் வாயிலாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அமிலத்திற்கு தண்ணீரில் கரையும் தன்மை குறைவாக இருக்கும். எனவே, அது மிக அதிக அளவில் இருந்தால், உடல்நல பிரச்னைகள் ஏற்படும்."

"மற்ற விலங்குகளிடம் யூரிக் அமிலத்தை மேலும் உடைத்து வெளியேற்றும் யூரிகேஸ் நொதி உள்ளது. ஆனால் மனிதர்களிடம் இந்த நொதி இல்லை. எனவே, யூரிக் அமிலம் சிறுநீர் வாயிலாக சிறுநீரகத்தில் இருந்து வெளியேறுகிறது."

யூரிக் அமிலத்தின் இயல்பு அளவு

ஆண்கள் மற்றும் மெனோபாஸ் நிலையை கடந்த பெண்கள்: 3.5-7.2 mg/dL

மெனோபாஸ் கட்டத்திற்கு முந்தைய நிலையில் உள்ள பெண்கள்: 2.6–6.0 mg/dL

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பியூரின் எனப்படும் ஒரு பொருள் சிதைக்கப்படுவதன் மூலம் உடலில் யூரிக் அமிலம் உருவாகிறது.

யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் காட்டும் அறிகுறிகள்

நிபுணர்களின் கூற்றுப்படி யூரிக் அமிலம் 6.8 mg/dL-க்கு அதிகமாக இருந்தால், மோனோசோடியம் யூரேட் படிகங்கள் (crystals) உருவாகத் தொடங்கும். இந்தப் படிகங்கள், மூட்டுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள திசுக்களில் சேர்ந்து, கீல்வாதத்தை ஏற்படுத்தும்.

சில மருத்துவ ஆதாரங்கள், ஆண்களுக்கு 3.4-7.0 மற்றும் பெண்களுக்கு 2.4-6.0 என்பதை இயல்பு அளவாகக் குறிப்பிடுகின்றன.

எனினும் நிபுணர்களின் கூற்றுப்படி, "வெவ்வேறு ஆய்வகங்களில் அதன் அளவில் சிறிது வித்தியாசங்கள் இருக்கும். ஆனால், 7 mg/dLக்கு மேலே இருப்பது அதிகமான அளவாகக் கருதப்படுகிறது" என்றார்.

மருத்துவர் ரேணு விளக்கும்போது, கீல்வாதம் அல்லது சிறுநீரக கற்கள் ஏற்படும் வரை யூரிக் அமிலம் அதிகரித்திருப்பது பெரும்பாலும் அறிகுறிகள் வாயிலாக எளிதில் தெரிய வருவதில்லை என்றார்.

"திடீரென மற்றும் கடுமையாக அழற்சி கீல்வாதம் ஏற்படும். இதனால் மூட்டுகளில் வீக்கம், சிவப்பாகுதல், சூடாகுதல் மற்றும் கடுமையான வலி ஏற்படும்," என்று அவர் விளக்கினார்.

"இந்த வலி கை, கால்களின் பெருவிரலில் ஆரம்பித்து, குதிங்கால், கணுக்கால்கள், மணிக்கட்டுகள் மற்றும் சிறு மூட்டுகளுக்குப் பரவும். இந்த வலி இரவு ஓய்வில் இருக்கும்போது ஆரம்பித்து ஓரிரு நாட்களில் அதிகபட்ச வலியை எட்டும்."

யூரிக் அமிலம் அதிகமாவதற்கான முக்கிய காரணங்கள்

மருத்துவர் சௌரவ் இதுகுறித்து விளக்கியபோது, யூரிக் அமிலம் அதிகமாவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

"சுமார் 90% நோயாளிகளில், யூரிக் அமிலத்தை சிறுநீரகங்கள் முறையாக வெளியேற்றாததால் அதிகரிக்கும். 10% நோயாளிகளில் உடலில் அதிகப்படியாக யூரிக் அமிலம் உற்பத்தியாவது காரணமாக இருக்கிறது."

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம்,Getty Images

யூரிக் அமிலம் எதனால் உருவாகிறது? யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்?

நிபுணர்களின் கூற்றுப்படி, யூரிக் அமிலம் அதிகமாக இருப்பது கீல்வாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

  • வாழ்வியல் முறை: அதிகளவிலான இனிப்பு உணவுகள், மது (குறிப்பாக பீர்) மற்றும் இனிப்பு கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி மற்றும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது.

  • அதிகமாக மது அருந்துவது, உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதைத் தடுத்து, பியூரின்களின் அளவை அதிகரிக்கிறது.

  • உடலில் நீரிழப்பு ஏற்படுவதால் ரத்தத்தில் யூரிக் அமிலம் செறிவூட்டப்படுகிறது.

  • இதுதவிர, வேகமாக உடல் எடையைக் குறைக்க அதிக புரதம் சார்ந்த உணவுமுறையைப் பின்பற்றும்போது போதிய உடலுழைப்பு இல்லாமல் போனால் இவ்வாறு யூரிக் அமிலம் அதிகரிக்கிறது.

  • மரபியல்: பிறவி நொதிக் குறைபாடுகள் (congenital enzyme deficiencies) அல்லது சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளிட்ட சில நோய்கள் குடும்பத்தில் ரத்த உறவுகள் யாருக்காவது இருந்தாலும் இது ஏற்பட வாய்ப்புண்டு.

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம்,Getty Images

  • உடல்பருமன் (வயிற்றுப்பகுதி பருமனாக இருத்தல்): இதனால், இன்சுலின் எதிர்ப்பு அதிகமாவதால், குறிப்பாக பெண்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே யூரிக் அமிலம் உருவாவதையும் அது சுரப்பதையும் அதிகரிக்கிறது.

  • உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்தத்தில் அதிகமான அல்லது குறைவான கொழுப்பு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள், வளர்சிதை மாற்றக் குறைபாடு (metabolic syndrome) ஆகியவற்றாலும் சிறுநீரகங்களில் இருந்து யூரிக் அமிலம் வெளியேறுவது குறைகிறது.

  • ரத்த புற்றுநோய் மற்றும் குறிப்பிட்ட மருந்துகள்: நோயெதிர்ப்பு அமைப்பைப் பாதிக்கும் மருந்துகள் மற்றும் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதும் யூரிக் அமிலம் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம்.

  • வயது மற்றும் பாலினம்: இந்தப் பிரச்னை பெண்களைவிட ஆண்களிடம் மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம்.

  • மேலும், வெளிப்படையான காரணம் ஏதுமின்றி, மூட்டுகளில் தொடர்ச்சியாக வலி, வீக்கம், சிவந்துபோகுதல் ஆகியவற்றை அனுபவிக்கும் நபர்களுக்கும் இந்த நோயின் அறிகுறிகள் இருக்கலாம்.

இத்தகைய காரணங்களும் அறிகுறிகளும் உள்ளவர்கள் ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் (hyperuricemia) உள்ளதா என்பதை வழக்கமான ரத்தப் பரிசோதனைகளைச் செய்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு ஓய்வு அளித்தல், ஐஸ் தடவுதல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும்

எப்போது இந்த பிரச்னை அதிகமாகும்?

மருத்துவர் ரேணு கூறுகையில், அதிகப்படியான யூரிக் அமிலம் உடலில் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை எடுக்காவிட்டால், கீல்வாதம் தவிர மூட்டுகள் மற்றும் சிறுநீரகங்களில் நீண்ட கால விளைவுகள் ஏற்பட வழிவகுக்கும்.

"சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் யூரிக் அமிலம் படிகங்களாக உடலில் படிந்துவிடும்" என்கிறார் அவர்.

அவரது கூற்றுப்படி, "இதனால் எலும்பு சேதமடைந்துவிடும், இதை எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன்கள் மூலம் பார்க்கலாம். இதில், பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உள்ள நீரை நீக்குவதன் மூலமும் இத்தகைய படிகங்களை அடையாளம் காண முடியும்."

அவரை பொறுத்தவரை, "இந்தப் படிகங்கள் சிறுநீரகங்களில் படிந்து, சிறுநீரக கற்கள், சிறுநீரக நோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்."

சிறுநீரக நோய் (Nephropathy) என்பது சிறுநீரகங்களை பாதிக்கும் ஒரு நோயாகும். இதனால் சிறுநீரகம் அதன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் போகும்.

இதற்கு சிகிச்சை என்ன?

மருத்துவர் சௌரவை பொறுத்தவரை, மருந்துகளுடன் சரியான வாழ்வியல் முறைகளைக் கடைபிடிப்பதைச் சார்ந்தே கீல்வாதத்திற்கான சிகிச்சை உள்ளது.

அதுகுறித்து விளக்கியவர், "இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது, மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களின் உதவியுடன் இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்," என்றார்.

பாதிக்கப்பட்ட மூட்டுகளை ஓய்வில் வைத்திருத்தல், அதில் ஐஸ் தடவுதல் ஆகியவையும் சிகிச்சையில் அடங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதோடு, நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகள் பலன் தரும் என்றும் இவை உடல்நலத்தைப் பேணவும் மேம்படுத்தவும் உதவுவதாகவும் கூறுகின்றனர்.

மேற்கொண்டு விளக்கிய மருத்துவர் ரேணு, "மது மற்றும் இனிப்பு நிறைந்த பானங்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்."

"கீரைகள், தக்காளி, வெள்ளரிக்காய், செர்ரி, சிட்ரஸ் நிறைந்த பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். போதுமான தண்ணீரைப் பருகுவதும் மிக முக்கியம். ஒரு நாளைக்கு 2-4 லிட்டர் அல்லது 6-8 டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதற்கு உதவும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்க் குழாய்களில் கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyvee7j1r7o

ரத்தப் புற்றுநோயை மரபணு சிகிச்சை மாற்றியமைப்பது எப்படி?

2 months ago

"நான் இறந்து விடுவேன் என நினைத்தேன்" - ரத்தப் புற்றுநோயை மரபணு சிகிச்சை மாற்றியமைப்பது எப்படி?

16 வயதான அலிசா டேப்லி

படக்குறிப்பு,16 வயதான அலிசா டேப்லி எனும் இவர் தான் இந்த முறையில் சிகிச்சை பெற்ற முதல் நபர்.

கட்டுரை தகவல்

  • ஜேம்ஸ் கல்லாகர்

  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட ஒரு சிகிச்சை முறை ஒன்று, சில நோயாளிகளில் மிக மோசமாகப் பாதித்த மற்றும் குணப்படுத்த முடியாத ரத்தப் புற்றுநோய்களை மாற்றியமைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சிகிச்சை, வெள்ளை ரத்த அணுக்களில் உள்ள டிஎன்ஏவை துல்லியமாக மாற்றி, அவற்றை புற்றுநோயை எதிர்த்துப் போராடும் "உயிருள்ள மருந்தாக" மாற்றுகிறது.

இதற்கு முன்பு இந்த சிகிச்சை பெற்ற முதல் சிறுமியைக் குறித்து 2022-இல் பிபிசி ஒரு செய்தி வெளியிட்டது. நோயில் இருந்து விடுபட்டுள்ள அவர், இப்போது புற்றுநோய் குறித்த விஞ்ஞானியாக மாறும் கனவுடன் உள்ளார்.

தற்போது இதே சிகிச்சை மூலம், டி-செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவால் பாதிக்கப்பட்ட எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 64% பேர் நிவாரணம் பெற்றுள்ளனர்.

டி-செல்கள் சாதாரணமாக உடலைப் பாதுகாக்கும் காவலர்களாக செயல்பட்டு, உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களைத் தேடி அழித்துவிடுகின்றன. ஆனால் லுகேமியாவின் வடிவில், அதே டி - செல்கள் கட்டுப்பாட்டை இழந்து அதிக அளவு பெருகுகின்றன.

கீமோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்திருந்தன. எனவே பாதிப்பில் இருந்தவர்களுக்கு, பரிசோதனை மருந்தை தவிர எஞ்சிய ஒரே வழி, அவர்களுடைய மரணத்தை சற்று வசதியானதாக மாற்றுவதாக மட்டுமே இருந்தது.

"நான் உண்மையிலேயே இறந்து விடுவேன் என்று நினைத்தேன். வளர்ந்து, ஒவ்வொரு குழந்தையும் செய்யத் தகுதியான அத்தனை விஷயங்களையும் என்னால் செய்ய முடியாமல் போய்விடும் என நினைத்தேன்" என்கிறார் லெய்செஸ்டரைச் சேர்ந்த 16 வயது அலிசா டாப்லி.

கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் உலகிலேயே இந்தச் சிகிச்சை பெற்ற முதல் நபர் இவர் தான். இப்போது அவர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.

அலிசா

படக்குறிப்பு,அலிசா தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையில், அவரது பழைய நோயெதிர்ப்பு மண்டலத்தை முற்றிலும் அகற்றி, புதிய ஒன்றை உருவாக்கும் முறை இடம்பெற்றது. அவர் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். தொற்று ஏற்படக்கூடும் என்பதால், அந்த சமயத்தில் அவரது சகோதரனைக் கூட அவரால் சந்திக்க முடியவில்லை.

ஆனால் இன்று, அவரது புற்றுநோய் முற்றிலும் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அவர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அலிசா தற்போது தனது ஏ -லெவல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். டியூக் ஆஃப் எடின்பர்க் விருது திட்டத்தில் பங்கேற்கிறார். ஓட்டுநர் பயிற்சி பெறுவதையும், தனது எதிர்காலத்தை திட்டமிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார் அலிசா.

"நான் உயிரி மருத்துவ அறிவியலில் பயிற்சி செய்வது குறித்து யோசித்து வருகிறேன். ஒருநாள் ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடுவேன் என்று நம்புகிறேன்," என்கிறார் அலிசா.

ஓட்டுநர் பயிற்சி பெறுவதையும், தனது எதிர்காலத்தை திட்டமிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார் அலிசா.

படக்குறிப்பு,அலிசா தற்போது தனது ஏ-லெவல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். டியூக் ஆஃப் எடின்பர்க் விருது திட்டத்தில் பங்கேற்கிறார்.

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் குழு பேஸ் எடிட்டிங் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.

பேஸ்கள் (bases) தான் உயிரின் அடிப்படை. அடினைன் (A), சைட்டோசின் (C), குவானைன் (G), தைமின் (T) எனும் நான்கு பேஸ்களே நமது மரபணு குறியீட்டின் கட்டுமானத் தொகுதிகள். எப்படி எழுத்துக்கள் சேர்ந்து அர்த்தமுள்ள சொற்களை உருவாக்குகின்றனவோ, அதுபோல நமது டிஎன்ஏவில் உள்ள பில்லியன் கணக்கான பேஸ்கள், நமது உடல் இயங்க வேண்டிய வழிமுறைகளை எழுதுகின்றன.

பேஸ் எடிட்டிங் என்பது மரபணு குறியீட்டின் குறிப்பிட்ட இடத்துக்கு நேராகச் சென்று, ஒரு அடிப்படையின் மூலக்கூறு அமைப்பை மாற்றி, அதை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாற்ற உதவும் முறையாகும். இதனால் மரபணு கையேட்டையே புதிதாக எழுத முடியும்.

ஆரோக்கியமான டி-செல்களிடம் இயற்கையாக உள்ள சக்தியைப் பயன்படுத்தி, உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அழிக்கவும், அந்த சக்தியை டி-செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவுக்கு எதிராக பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர்.

ஆனால் இது மிகவும் சிக்கலான செயல்முறை. இந்த சிகிச்சை முறை தன்னைத் தானே அழித்துக்கொள்ளாமல் இருப்பதற்காக, கெட்ட செல்களை மட்டும் குறிவைத்து அழிக்க நல்ல டி -செல்களை மாற்றி வடிவமைக்க வேண்டியிருந்தது.

அதற்காக முதலில் ஒரு நன்கொடையாளரிடமிருந்து ஆரோக்கியமான டி -செல்களைப் பெற்று, அவற்றை மாற்றியமைக்கத் தொடங்கினர்.

முதல் பேஸ் எடிட்டிங் மூலம், டி -செல்களின் 'இலக்கு பொறிமுறை' (targeting) செயல்பாடு முடக்கப்பட்டது. இதனால் அந்த செல்கள் நோயாளியின் உடலைத் தாக்காது.

இரண்டாவது திருத்தம், அனைத்து டி -செல்களிலும் காணப்படும் சிடி7 என்றழைக்கப்படும் ஒரு வேதியியல் குறியை நீக்கியது. ஏனென்றால், அந்த சிகிச்சை தன்னை தானே சிதைத்துக் கொள்ளும் அபாயத்தைத் தடுப்பதற்கு இந்தக் குறியை நீக்குவது அவசியம்.

மூன்றாவது திருத்தம், செல்களைச் சூழ்ந்த "கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு மேலங்கியைப்" போன்றது. இது கீமோதெரபி மருந்துகள் அந்த செல்களை அழிப்பதைத் தடுக்கிறது.

மரபணு மாற்றத்தின் இறுதி கட்டத்தில், சிடி7 (CD7) குறியுடன் இருக்கும் செல்களை தேடி அழிக்க டி-செல்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் மாற்றியமைக்கப்பட்ட டி -செல்கள், புற்றுநோய் செல்லாக இருந்தாலும், ஆரோக்கியமானதாக இருந்தாலும், தங்கள் முன் வரும் மற்ற எல்லா டி-செல்களை அழித்து விடும். ஆனால் அவை ஒன்றையொன்று தாக்காது.

அதன் பிறகு இந்த சிகிச்சை நோயாளியின் உடலில் மேற்கொள்ளப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, நான்கு வாரங்கள் கழித்து புற்றுநோய் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்திருந்தால், நோயாளிக்கு புதிய நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

"சில ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு அறிவியல் புனைகதையாக இருந்திருக்கும்" என்கிறார் யூசிஎல் மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த பேராசிரியர் வசீம் காசிம்.

தொடர்ந்து பேசிய அவர், "நாம் முற்றிலும் நோயெதிர்ப்பு மண்டலத்தையே அகற்ற வேண்டும். இது ஆழமான, தீவிரமான, நோயாளிகளுக்கு மிகவும் கடினமான சிகிச்சை. ஆனால் இது வேலை செய்தால், மிகச் சிறப்பாகச் செய்கிறது," என்றார்.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வு, கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மற்றும் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற முதல் 11 நோயாளிகளின் முடிவுகளைப் பற்றி கூறுகிறது. அவர்களில் ஒன்பது பேர் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யும் அளவுக்கு ஆழ்ந்த நிவாரணத்தைப் பெற்றுள்ளனர்.

சிகிச்சைக்கு பிறகு மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை ஏழு பேர் முழுமையாக நோயின்றி உள்ளனர்.

நோயெதிர்ப்பு மண்டலம் அகற்றப்படும் காலத்தில் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் தான், இந்த சிகிச்சையின் பெரிய ஆபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இரண்டு நோயாளிகளில், புற்றுநோய் தனது சிடி7 அடையாளத்தை இழந்தது. இதனால் அது இந்த சிகிச்சையிலிருந்து தப்பித்து உடலில் மீண்டும் வளரத் தொடங்கியது.

"இந்த வகை லுகேமியா எவ்வளவு தீவிரமானது என்பதைக் கருத்தில் கொண்டால், இந்த சிகிச்சை முடிவுகள் மிகச் சிறப்பானவையாக உள்ளன. நம்பிக்கையிழந்த நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்க முடிந்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் எலும்பு மஜ்ஜை மாற்றுத் துறையின் மருத்துவர் ராபர்ட் சீசா கூறினார்.

"குணப்படுத்த முடியாததாகத் தோன்றிய லுகேமியாவை அகற்றுவதில் கூட நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். இது மிகவும் சக்திவாய்ந்த சிகிச்சை முறை" என்று கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் ரத்தவியல் நிபுணரும் மருத்துவருமான டெபோரா யல்லோப் தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சி குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் ஸ்டெம் செல் தொண்டு நிறுவனமான அந்தோணி நோலனின் மூத்த மருத்துவ அதிகாரி, மருத்துவர் டானியா டெக்ஸ்டர், "சோதனைக்கு முன்னர் இந்த நோயாளிகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தற்போது கிடைத்துள்ள இந்த முடிவுகள், இது போன்ற சிகிச்சைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு, நோயாளிகளின் வாழ்வை மீட்டெடுக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20gzdgqgrpo

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

2 months ago

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

வேலூரை பூர்வீகமாகக் கொண்ட மணிஷா மனோகரனுக்கு திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், முன்பெல்லாம் ஒவ்வொரு முறை திரையரங்கம் செல்லும்போதும் தன்னைப் பதற்றம் தொற்றிக் கொண்டதாகக் கூறுகிறார்.

அதற்குக் காரணம், அவரது கட்டுப்பாடின்றி தன்னியக்கமாக ஏற்படும் டிக்ஸ் (tics) என்ற உடல் இயக்கங்கள் அல்லது குரல் ஒலிகளே.

"நான் படம் பார்க்கும்போது, உணர்ச்சி மிகுதியில் என் உடலில் தன்னியக்கமாக ஏற்படும் அசைவுகள் அல்லது எழுப்பப்படும் ஒலிகள் தங்களைத் தொந்தரவு செய்வதாகவும் அதைக் கட்டுப்படுத்துமாறும் பிறர் கூறுவதுண்டு."

ஆனால், "அதைக் கட்டுப்படுத்த முடிந்தால் செய்ய மாட்டேனா?" என்று பதற்றமும் கோபமும் தனக்கு ஏற்படும் எனக் கூறுகிறார்.

அவர் மட்டுமின்றி, கேரளாவை சேர்ந்த பாடகி எலிசபெத் மேத்யூவும் தனக்கு இருக்கும் டூரெட்ஸ் குறைபாட்டால் (Tourette's Syndrome) ஏற்படுகின்ற தன்னியக்கச் செயல்பாடுகளால் இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் எதிர்கொண்டுள்ளார்.

டூரெட்ஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?

உளவியல் நிபுணர் ராஜ்குமாரின் கூற்றுப்படி, டூரெட்ஸ் சிண்ட்ரோம் என்பது ஒரு நரம்பியல் குறைபாடு. இது பிறவியிலேயே இருக்கும் என்றாலும், அது இருப்பது, "பொதுவாக ஐந்து முதல் பத்து வயதுக்குள், குழந்தைப் பருவத்தில் தெரியத் தொடங்குகிறது. உடல் இயக்கங்கள் அல்லது குரல் ஒலிகளைத் தன்னிச்சையாக மேற்கொள்வது, அதையே திரும்பத் திரும்பச் செய்வது இதன் முதன்மையான அறிகுறி" என்று விளக்கினார்.

அதாவது நிபுணர்களின் கூற்றுப்படி, மூளை திடீரென ஒரு சமிக்ஞையை உடலுக்கு அனுப்புகிறது, அதற்கு உடல் டிக்ஸ் வடிவில் உடனடியாக எதிர்வினையாற்றுகிறது. "இந்த நிலை காரணமாகத் தங்களது உடல் ஏற்படுத்தும் அசைவுகளையோ ஒலிகளையோ ஒருவரால் கட்டுப்படுத்த முடியாது." என்கிறார் ராஜ்குமார்.

"அப்படிக் கட்டுப்படுத்த முயலும்போதுதான் நிலைமை மிகவும் மோசமாகும். ஓர் எறும்புப் புற்றின்மீது நிற்கிறீர்கள், அங்குள்ள எறும்புகள் உங்கள் கால்களைக் கடுமையாகக் கடிக்கின்றன. ஆனால், நீங்கள் அங்கிருந்து நகரவே முடியாது என்றால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் இந்தத் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முயலும்போது எங்களுக்கு இருக்கும். அது அவ்வளவு கடினமானது," என்கிறார் மணிஷா.

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

படக்குறிப்பு,மணிஷா மனோகரன்

டூரெட்ஸ் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகள்

உடல் அசைவுகள், குரல் ஒலிகள் என டூரெட்ஸ் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகள் இரண்டு வகைப்படுகின்றன.

உடல் அசைவுகளாக ஏற்படும் டிக்ஸ்களை பொருத்தவரை, "கண்களைப் பலமுறை சிமிட்டுவது, தோள்களைக் குலுக்குவது, முகத்தைச் சுருக்கிக் கொண்டே இருப்பது, கை கால்களைத் திடீர் திடீரென அசைப்பது ஆகியவை தன்னிச்சையாக அடிக்கடி நிகழக்கூடும்." என்கிறார் உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி.

உதாரணமாக, வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர் ஒருவர், தொடர்ந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருப்பதைத் தன்னைக் கேலி செய்யும் செயலாக ஆசிரியர் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. ஆனால், "இந்தக் குறைபாடு உடைய அந்த மாணவரின் சுயக் கட்டுப்பாடின்றி அது நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்," என்று விளக்கினார் அனிஷா.

அதேபோல, தொண்டையை திரும்பத் திரும்பச் செருமுதல், நோய்க் காரணி ஏதுமின்றி இருமுதல், சிறு சத்தங்களை எழுப்புதல், ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறுவது ஆகியவை குரல் ஒலி டிக்ஸ்களுக்கான சில உதாரணங்கள்.

"நான் படிப்பை முடித்து முதன்முதலில் வேலைக்குச் சென்ற காலகட்டத்தில், தோள்களை திடீர் திடீரெனக் குலுக்குவது, அடிக்கடி குரலொலிகளை எழுப்புவது போன்ற என் உடலில் நடக்கும் தன்னியக்கச் செயல்பாடுகளை, பிறரின் கவனத்தை ஈர்க்க நான் செய்பவை என்று சக பணியாளர்கள் கருதியதுண்டு. ஆனால், அவை தன்னியக்கமாக நிகழ்பவை. எனது கட்டுப்பாட்டில் நடப்பவையல்ல.

என் உடலில் நடக்கும் இத்தகைய செயல்பாடுகள், பிறரின் கவனத்தை அதிகமாக ஈர்த்த காரணத்தால், நான் மிகவும் சங்கடமாகவும் பதற்றமாகவும் உணர்ந்தேன். அதனால் டிக்ஸ்கள் அதிகமானதே தவிர குறையவில்லை," என்று கூறுகிறார் மணிஷா.

உளவியல் நிபுணர்கள் ராஜ்குமார், அனிஷா ரஃபி இருவருமே, "இதுபோன்று திடீர் திடீரென நடக்கும் உடல் இயக்கங்கள், எழுப்பப்படும் குரலொலிகளை டூரெட்ஸ் சிண்ட்ரோம் இருப்பவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று வலியுறுத்துகிறார்கள்.

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

படக்குறிப்பு,உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி

சமூகத்தில் ஏற்படும் அழுத்தம்

தற்போது பெங்களூருவில் பணியாற்றி வரும் மணிஷா மனோகரன், டூரெட்ஸ் குறைபாட்டால் பள்ளிப் பருவத்தின்போது பல சவால்களை எதிர்கொண்டதாகக் கூறுகிறார்.

"முதன்முதலில் டிக்ஸ் ஏற்படத் தொடங்கியபோது, எனக்கு 6 வயது இருக்கும். என்னை அறியாமல் நான் கண் சிமிட்டிக்கொண்டே இருந்தேன். நான் ஏதோ அதிகமாக டிவி பார்ப்பதாலேயே இப்படி இருப்பதாக கண் மருத்துவர்கள் கூறினர். பல ஆண்டுகளாக என்ன பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ளாமலே வளர்ந்தேன்."

பிறகு 2021-ஆம் ஆண்டுதான், தனக்கு இருப்பது ஏதோ வினோதமான பழக்கம் கிடையாது, அதுவொரு குறைபாடு என்பதை முழுமையாக உணரத் தொடங்கியதாகக் கூறுகிறார் மணிஷா.

ஒரு பெண் இந்தச் சமூகம் கருதும் "சாதாரணமான, அழகான, ஆரோக்கியமான" என்ற வகைப்பாட்டின் கீழ் வரவில்லை என்றால், அவர் ஒருவித "சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடும். அதை நானும் எதிர்கொண்டேன்" என்கிறார் மணிஷா.

தனது பெற்றோர் இந்தக் குறைபாட்டைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு வினோதமான பிரச்னையாகப் பார்த்தாலும், எப்போதாவது அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்ததாகக் கூறுகிறார் அவர்.

ஆனால், "டூரெட்ஸ் சிண்ட்ரோமை உளவியல் சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த முடியுமே தவிர அதைக் குணப்படுத்த முடியாது," என்கிறார் உளவியல் நிபுணர் ராஜ்குமார்.

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தக் குறைபாட்டால் ஏற்படும் உடலின் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது எறும்புப் புற்றின் மீது நிற்பதைப் போல் மிகவும் கொடுமையானது என்கிறார் மணிஷா மனோகரன்

சமூகத்தில் தொடர்ந்து வினோதமாகப் பார்க்கப்படுவதைத் தவிர்க்க, "இயன்ற அளவுக்கு உடலில் நிகழும் தன்னியக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முயன்றேன். இப்படித் தொடர்ந்து முகமூடியுடன் வாழ்ந்தது, என் மனநலனைப் பெரியளவில் பாதித்தது. நான் போலியானவளைப் போல் உணரத் தொடங்கினேன்" என்று தான் எதிர்கொண்டதை விவரித்தார் மணிஷா.

பிறரின் அடிப்படைப் புரிதலற்ற அறிவுரைகள் மற்றும் கேலிகளால் மிகுந்த மனச்சோர்வை எதிர்கொண்ட மணிஷா, மிகப்பெரிய உளவியல் போராட்டத்திற்குப் பிறகு, "இதுகுறித்து முதலில் நானே புரிந்து, உணர்ந்து, அங்கீகரிக்க வேண்டும்" என்பதையும் "இந்தக் குறைபாட்டுடன் சேர்த்து என்னை நானே முழுமையாகக் காதலிக்க வேண்டும்" என்பதையும் உணர்ந்ததாகக் கூறினார்.

பலவீனத்தை பலமாக மாற்றிய பாடகி

கேரளாவை சேர்ந்த பாடகியான எலிசபெத் எஸ். மேத்யூ, தனது டூரெட்ஸ் குறைபாட்டை ஒரு பலவீனமாகப் பார்க்காமல் அதையே பலமாகக் கருதித் தனது பாடல்களைப் பாடி வருகிறார்.

மேட்ச் பாயின்ட் ஃபெயித் என்ற இசை நிறுவனத்துடன் இணைந்து பாடல்களைப் பாடி வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் பாடும் பாடல்களுக்கு, பலராலும் இடையூறாகப் பார்க்கப்படும் டிக்ஸ்களே, ஒரு தனி அழகூட்டும் அம்சமாக மாறியுள்ளது.

"நான் பத்து வயதாக இருந்தபோது, எனக்கு டூரெட்ஸ் குறைபாடு இருப்பது தெரிய வந்தது. அப்போது அதுகுறித்த புரிதல் இல்லாததால், அதை நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை."

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம்,Elizabeth/IG

படக்குறிப்பு,பாடகி எலிசபெத் எஸ். மேத்யூ

அதற்கு மாறாக, "எனது பெற்றோர் இப்படியொரு அரிய குறைபாடு தங்கள் மகளுக்கு இருப்பதை நினைத்து மிகுந்த கவலைக்கு உள்ளானார்கள். ஆனால் அவர்களும் இப்போது இதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்" என்கிறார் எலிசபெத்.

இந்தக் குறைபாட்டால் ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகளை, "நான் பிறரது கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்வதாகவும், வலிய வேண்டுமென்றே செய்வதாகவும், உறவினர்கள் உள்படப் பலர் குறைகூறத் தொடங்கினார்கள். இதன் விளைவாக என் சுயத்தை மறைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.

பள்ளிப் பருவத்தில், எப்போதும் ஒருவித கோபத்துடனும், ஆதங்கத்துடனுமே இருப்பேன். மனப் பதற்றம், அச்சம், குழப்பம் எனப் பல எதிர்மறை உணர்ச்சிகளால் பீடிக்கப்பட்டிருந்தேன். இந்தப் பிரச்னைகளை டூரெட்ஸ் குறைபாடு இருப்பவர்கள் பலரும் எதிர்கொள்கின்றனர்," எனக் கூறிய எலிசபெத், இந்தக் குறைபாட்டுடன் வாழ்வது அவ்வளவு எளிய விஷயமல்ல என்றார்.

அதையெல்லாம் கடந்து, "எனக்கு பாடுவது பிடிக்கும் என்பதால், தன்னிச்சையாக ஏற்படும் டிக்ஸ்களை பொருட்படுத்தாமல், அதனூடாகவே பாடத் தொடங்கினேன்."

தனது பாடல்களை லட்சக்கணக்கானோர் ரசிக்கக் காரணம், அவரது திறமை மட்டுமில்லை எனக் கூறும் எலிசபெத், "இந்தக் குறைபாட்டால் ஏற்படும் டிக்ஸ்களை இடையூறாகக் கருதாமல், அவற்றின் ஊடாகவே நான் எனது பாடல்களைப் பாடுவதுதான் என் வளர்ச்சிக்குக் காரணம்," என்றார்.

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம்,Getty Images

சமூக விழிப்புணர்வு மிகவும் அவசியம்

நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடான டூரெட்ஸ் சிண்ட்ரோம் இருப்பவர்களுக்கு ஏற்படும் டிக்ஸ்கள் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் நடப்பதில்லை என்ற விழிப்புணர்வு "சமூகத்தில் மிகவும் குறைவாக இருப்பதாக" கூறுகிறார் உளவியல் நிபுணர் அனிஷா ரஃபி.

டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள், தங்களுக்கு ஏற்படும் தன்னியக்கச் செயல்பாடுகளை பிறர் வினோதமாகப் பார்ப்பதால், "தன்னம்பிக்கை குறைவு, மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்," என்றும் கூறுகிறார் அவர்.

பொதுவாக, இதுகுறித்து முதன்மையாக பெற்றோர்களுக்குக் கற்பிக்கப்படும் எனக் கூறுகிறார் அனிஷா. "தங்களது குழந்தைகள் இத்தகைய செயல்பாடுகளை வேண்டுமென்றே செய்வதில்லை. இது அவர்களின் கட்டுப்பாட்டை மீறிய இயக்கம் என்பதை பெற்றோருக்குப் புரிய வைக்க வேண்டும்."

மேலும் அவரது கூற்றுப்படி, அதற்கு அடுத்தகட்டமாக பெற்றோர் வாயிலாக ஆசிரியர்கள் உள்பட அவர்களின் சுற்றத்தாருக்கு இந்த விழிப்புணர்வைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

இதன் மூலம், "டூரெட்ஸ் குறைபாடு இருக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏதுவான சமூக சூழ்நிலையை ஆசிரியர்கள் உதவியுடன் ஏற்படுத்த முடியும்" என்பதை வலியுறுத்துகிறார் உளவியல் நிபுணர் அனிஷா.

'தன்னிலை அறிதலே என்னை காப்பாற்றியது' – டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள்

பட மூலாதாரம்,Getty Images

குழந்தைகளோ, பெரியவர்களோ, டூரெட்ஸ் இருப்பவர்களுக்கு டிக்ஸ் ஏற்படும்போது, "அவர்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதே" அவர்களுக்கு நேர்மறையான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்கிறார் அவர்.

ஒருவேளை, இதற்கு நேர்மாறாக, இந்தக் குறைபாடு உடையவர்கள் தொடர்ச்சியாக கேலிக்கு உள்ளாவது, கண்டிக்கப்படுவது, வினோதமாக நடத்தப்படுவது, மனரீதியான கொடுமைகளைச் சந்திப்பது ஆகியவற்றை எதிர்கொள்ள நேர்ந்தால், அது அவர்களின் வளர்ச்சியைப் பெரியளவில் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

'தன்னிலை அறிதலே என்னைக் காப்பாற்றியது'

டூரெட்ஸ் குறைபாடு உள்ளவர்களுக்குப் பிறர் செய்யக்கூடிய சிறந்த உதவி அவர்களைப் புரிந்துகொள்வதுதான் என்கிறார் அனிஷா ரஃபி.

"அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் திட்டுவது, கேலி செய்வது, டிக்ஸ்களை நிறுத்துமாறு வலியுறுத்துவது போன்ற செயல்பாடுகள் அதை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும்.

அதற்கு மாறாக, அவர்களிடம் பொறுமையைக் கடைபிடித்து, இந்த டிக்ஸ்கள் அடங்கும் வரை அவர்களுக்கு உளவியல் ரீதியாகப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது, அவர்களின் நிலைமையை மேம்படுத்தும்," என்றும் விளக்கினார்.

"நீண்ட காலமாக, இந்தக் குறைபாட்டின் காரணமாகவே எனக்குள் ஏதோ தவறு இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய வேண்டுமென்றும் நினைத்துக் கொண்டிருந்தேன்" என்கிறார் மணிஷா.

ஆனால், "எப்போது அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, பிறரைப் பற்றிக் கவலைப்படாமல், என் உடலில் நிகழும் தன்னியக்கச் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேனோ, அதன் பிறகுதான் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கினேன்," என்று கூறியபோது மணிஷாவின் முகம் மகிழ்ச்சியில் பூரித்தது.

"இந்த உலகம் உங்களைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக, நீங்கள் முதலில் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் உடலை, மனதை, அவற்றிலுள்ள சிக்கல்களை, முழுதாக அப்படியே நீங்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்."

"அன்று முதல் டூரெட்ஸ் குறைபாட்டின் விளைவாக நான் எதிர்கொண்ட சவால்களும் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கின" என்கிறார் அவர்.

இதையே வழிமொழியும் வகையில் பேசிய பாடகி எலிசபெத், "தன்னைப் பற்றி ஏற்படும் சுய உணர்வுகளை மேம்படுத்திக் கொண்டபோதுதான், தன் மீதான நம்பிக்கையும் மேம்பட்டது" என்கிறார். மேலும், அதுவே தனது பலவீனத்தை பலமாக மாற்றவும் வித்திட்டதாகக் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3d0m9xr1dvo

ஆன்டிபயாடிக் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களால் இந்திய மருத்துவத் துறைக்கு புதிய சவால்

2 months 1 week ago

ஆன்டிபயாடிக் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களால் இந்திய மருத்துவத் துறைக்கு புதிய சவால்

ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • நந்தினி வெள்ளைச்சாமி

  • பிபிசி தமிழ்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவில் 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' (antibiotic resistant) என்பது சுகாதாரத் துறையில் மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) சமீபத்தில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கை இதுதொடர்பான எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.

முதலில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் என்பது என்ன?

ஒரு நோய்த்தொற்று உங்களுக்கு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த தொற்றுகளில் இருந்து நீங்கள் குணமடைவதற்காக மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். ஆனால், நாளடைவில் அந்த மருந்தின் திறன் தன்னை பாதிக்காத வகையில் சில தொற்றுகள் தங்களை தகவமைத்துக் கொள்ளும். அதாவது, அந்த மருந்து குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக செயல்புரியாது. அதாவது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தொற்றுகள் பெற்றுவிடும்.

"இப்படி மாறும் தொற்றுகள் பெரும்பாலும் பாக்டீரியா தொற்றுகளாகவே உள்ளன" என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்படி ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெறும் பாக்டீரியாக்கள் 'சூப்பர்பக்' (superbug) என அழைக்கப்படுகின்றன.

'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட "கவலைக்குரிய" ஆய்வு என்ன சொல்கிறது?

ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்

பட மூலாதாரம்,Getty Images

ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்தது என்ன?

இந்தியாவில் ஜனவரி 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரையில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளை ஐசிஎம்ஆர் சமீபத்தில் வெளியிட்டது. உயர்நிலை சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 99,027 மாதிரிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்றும், அதனால் இந்த தரவுகள் சமூக மட்டத்தில் (community patterns) அதன் நிலையை பிரதிபலிக்காது எனவும் ஐசிஎம்ஆர் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்கள்:

  • ஒட்டுமொத்தமாக ஏற்பட்டுள்ள தொற்றுகளில், கிராம் நெகட்டிவ் வகை பாக்டீரியா தொற்று (72.1%) அதிகமாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் கிராம் பாசிட்டிவ் வகை பாக்டீரியா தொற்றும் (17.7%) அடுத்ததாக பூஞ்சை தொற்றும் (10.2%) உள்ளன.

  • யுடிஐ (சிறுநீர் பாதை தொற்று) மற்றும் மூச்சு சம்பந்தமான பிரச்னைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் ஃப்ளூரோக்வினோலோன் (Fluoroquinolones) எனும் ஆன்டிபயாடிக், நிமோனியா, யுடிஐ போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் செஃபாலோஸ்போரின் (cephalosporin) எனும் ஆன்டிபயாடிக், நிமோனியா, செப்சிஸ் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் கார்பாபெனெம் (carbapenems) எனும் ஆன்டிபயாடிக், பல்வேறு வித தொற்றுகளுக்கு பயன்படுத்தப்படும் பிபெராசிலின் - டாஸோபாக்டம் (piperacillin-tazobactam) எனும் ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக நோய்த்தொற்றுகள் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளன என இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

  • சிறுநீர்ப் பாதை தொற்று (யுடிஐ) போன்றவற்றுக்கு முக்கிய காரணமாக உள்ள இ.கோலை (Escherichia coli) பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் அமிகசின் (Amikacin) போன்ற சில ஆன்டிபயாடிக் மருந்துகள் தொற்றை எதிர்த்து செயலாற்றுவதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

  • நிமோனியா போன்றவற்றுக்குக் காரணமான கிளெப்சியெல்லா நிமோனியே (Klebsiella pneumoniae) பாக்டீரியா, பிபெராசிலின் - டாஸோபாக்டம் (Piperacillin–tazobactam) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறியுள்ளது.

  • சூடோமோனாஸ் ஏருகினோசா (Pseudomonas aeruginosa) எனும் பாக்டீரியா, கார்பாபெனெம் (Carbapenem) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்டதாக மாறியுள்ளது.

  • அசினெடோபாக்டர் பௌமானி (acinetobacter baumannii) எனும் பாக்டீரியா மெரோபெனெம் (meropenem) ஆன்டிபயாடிக் மருந்துக்கு மிக அதிகளவில் (91%) எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறியுள்ளது.

  • சால்மோனெல்லா டைஃபி (Salmonella Typhi) எனும் டைஃபாய்டை ஏற்படுத்தவல்ல பாக்டீரியா செஃட்ரியாக்சோன் (Ceftriaxone- 98%), அஸித்ரோமைசின் (Azithromycin - 99.5%), டிஎம்பி-எஸ்எம்எக்ஸ் (TMP-SMX - 97.7%) எனும் ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிர்ப்பு சக்திகொண்டவையாக உள்ளன.

ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்

பட மூலாதாரம்,Getty Images

இதுமட்டுமின்றி, முந்தைய சில ஆய்வுகளும் இதுகுறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. "மருத்துவ ஆய்விதழான தி லான்செட், உலகளவில் 2019ம் ஆண்டில் 10 லட்சத்து 27 ஆயிரம் உயிரிழப்புகள் இதனால் நேரடியாக ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறது. இத்தகைய கடும் தொற்றுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கேடயங்களுள் முதல் வரிசையில் உள்ள ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இத்தகைய தொற்று பாதிப்புகளில் பெரும்பாலும் செயல்படுவதில்லை." என குறிப்பிட்டுள்ளது. இதனால் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என அந்த ஆய்வு கூறுகிறது.

இவ்வாறு மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் தொற்றுகளுக்கு அன்றாடம் மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அத்தொற்றுகள் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறியுள்ளன. இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்? இதை எப்படி புரிந்துகொள்வது? மருத்துவர்களிடம் பேசினோம்.

ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்

பட மூலாதாரம்,Getty Images

ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தியை பாக்டீரியா எப்படி பெறுகிறது?

ஆன்டிபயாடிக் என்பது பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள்.

"பாக்டீரியாக்களை கிராம் நெகட்டிவ் மற்றும் கிராம் பாசிட்டிவ் என வகைப்படுத்துகிறோம். பாக்டீரியா தொற்றுக்களுக்குதான் பெரும்பாலும் நாம் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவோம். நோயாளிகளுக்கு சரியான நேரத்தில், சரியான அளவில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தப்படவில்லையெனில் பாக்டீரியாக்கள் அதற்கான எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். அதாவது, குறிப்பிட்ட காலகட்டத்தில், உயிர் பிழைப்பதற்காக பாக்டீரியாக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டு மருந்துகளுக்கு எதிரான சக்தியை பெறும்" என்று சென்னையில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக உள்ள எஸ். சந்திரசேகர் விளக்கினார்.

பாக்டீரியாக்கள் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கான காரணங்கள் என்ன?

"பாக்டீரியாக்கள் உருமாற்றம் அடைந்து பல்வேறு திரிபுகள் உருவாகும் போது அவை ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவையாக மாறுகின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையில்லாமல் உபயோகிக்கும் போதோ அல்லது சரியான அளவில் பயன்படுத்தாத போதோ அவ்வாறு அவை மாறுகின்றன. சரியான ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்காமல் வேறு ஒன்றை மாற்றிக் கொடுத்தாலும் இது நிகழும்." என கூறுகிறார், சென்னையை சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் விஜயலஷ்மி.

ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்

பட மூலாதாரம்,Getty Images

பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை பெற்றால் என்ன நடக்கும்?

"ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான எதிர்ப்பு சக்தி பாக்டீரியாக்களிடம் உருவாகிவிட்டால், அந்த மருந்து நோயாளிகளிடத்தில் வேலை செய்யாது." என்கிறார், மருத்துவர் சந்திரசேகர்.

"இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான தொற்றுகளுக்கு நாம் பயன்படுத்தும் பல ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காது. இதனால், நோயாளிகள் உயிரிழப்பதும் நிகழ்கின்றன. குறிப்பாக, புற்றுநோய், இதயநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு கடினமான அறுவை சிகிச்சைகளை செய்து காப்பாற்றுகிறோம். ஆனால், பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை பெறுவதால், சாதாரண தொற்றுகளுக்கு ஆளாகியும் கூட அவர்கள் உயிரிழப்பதை பார்த்துள்ளோம்." என்கிறார் மருத்துவர் விஜயலட்சுமி.

பாக்டீரியாக்கள் பலவும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதால், மருத்துவர்கள் வழக்கமாக பரிந்துரைக்கும் திறன் வாய்ந்த மருந்துகள் நோயாளிகளிடையே செயலாற்றுவதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதில் எப்படி கவனமாக இருப்பது?

மருத்துவர்கள் சந்திரசேகர் மற்றும் விஜயலட்சுமியின் பரிந்துரைகள்

  • பரிந்துரைக்கப்பட்டதை விடவும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இடையில் அவற்றை எடுத்துக் கொள்வதை நிறுத்தாமல் பரிந்துரைக்கப்பட்ட நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் கவனத்துடன் பரிந்துரைக்க வேண்டும். சாதாரண சளி, காய்ச்சல் என்றாலே ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்காமல் நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை கல்ச்சர் பரிசோதனையில் உறுதி செய்த பின்னரே பரிந்துரைக்க வேண்டும்.

  • இந்தியாவில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் மருந்தகங்களில் ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி போட்டுக்கொள்ளலாம் என்ற நிலை உள்ளது. இதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0q51pn1ln0o

இந்திய கழிவறை - மேற்கத்திய கழிவறை: யாருக்கு எந்த முறை உகந்தது?

2 months 2 weeks ago

இந்திய கழிவறை - மேற்கத்திய கழிவறை: யாருக்கு எந்த முறை உகந்தது?

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும், கழிவறை செல்வது பற்றிச் சிந்தித்தவுடன் பலருக்கும் கால்களை மடக்கி உட்காரும் முறைதான் மனக் கண்ணில் வரும்.

ஆனால், மேற்கத்திய முறையான நாற்காலியில் அமர்வதைப் போன்ற வகையில் உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிவறைகளும் தற்போது இந்தியா மட்டுமின்றி ஆசிய கண்டம் முழுவதுமே கணிசமாக பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில் கழிவறை பயன்பாட்டில் இந்திய பாணி அல்லது மேற்கத்திய பாணி ஆகிய இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு உகந்தது? என்கிற விவாதம் தொடர்ச்சியாக எழுகிறது.

இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியான ஓர் ஆய்வு, அறிவியல்பூர்வ பதிலை வழங்குகிறது.

இரண்டுமே மலம் கழிக்க ஏதுவான பாணியாக இருப்பதாகவும் இந்திய பாணி, மேற்கத்திய பாணி இரண்டிலுமே சாதகங்களும் பாதகங்களும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித உடலின் ஆரோக்கியம் மேம்படுவதற்கு எந்த பாணியில் மலம் கழிப்பது சிறந்த தேர்வாக இருக்கும்?

மலம் கழிக்கும் முறையின் பின்னுள்ள அறிவியல்

மலம் கழித்தல் என்பது மிகச் சாதாரண விஷயமாக தெரியலாம். ஆனால் உடலின் உட்புறத்தில், "தசைகள், உடல் இயக்கத்தின் கோணங்கள் ஆகியவற்றின் சிக்கலான அமைப்பைப் பொறுத்து, எளிதில் வெளியேறுவதும், சிரமப்படுவதும் இருப்பதாக" ஆய்வு கூறுகிறது.

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

இதில், மலம் வெளியேறும் பாதையான மலக்குடல்வாய் எந்த அமைப்பில் இருக்கிறது என்பதும் பங்களிப்பதாகக் கூறும் மூத்த இரைப்பை குடல் மருத்துவர் கயல்விழி ஜெயராமன், "இந்த மலக்குடல்வாய் பாதை நேர் கோணத்தில் இருக்கும்போது மலம் எளிதாக வெளியேறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாற்காலி போன்ற மேற்கத்திய பாணி கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது இந்தப் பாதை வளைந்திருப்பதால் சிலர் மலம் கழிப்பதில் சற்று சிரமங்களைச் சந்திக்கலாம்" என்றும் கூறினார்.

அதாவது ஜூலை மாதம் வெளியான ஆய்வு முடிவுகள்படி, மலக்குடல்வாய் பாதை, மலம் கழிக்கும்போது நேராக்கப்பட வேண்டும்.

''அதுதான் இந்திய பாணி டாய்லெட் பயன்பாட்டில் நடக்கிறது." என்கிறார் கயல்விழி ஜெயராமன்

அதாவது, ஒருவர் குத்தவைத்து அமரும்போது, தொடைகள் வயிற்றுடன் அழுந்துகின்றன. அப்போது உடல் இயல்பாகவே முன்னோக்கிச் சாய்கிறது. அதனால், "தசைகள் தளர்வடைவதாகவும் மலக்குடல்வாய் பாதை நேராவதாகவும்" கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.

"மாறாக, மேற்கத்திய பாணி கழிவறையில், ஒருவர் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் போது தசைகள் இறுக்கமாகவும், மலக்குடல்வாய் வளைந்தும் இருப்பதால், மலத்தை வெளியேற்ற கூடுதலாக அழுத்தம் கொடுத்து வேண்டியிருப்பதாக" ஆய்வு கூறுகிறது.

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

இருப்பினும், இதை மட்டும் அடிப்படையாக வைத்து மேற்கத்திய பாணி கழிவறை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று கூறிவிட முடியாது என்கிறார் மருத்துவர் கயல்விழி.

அவரது கூற்றுப்படி, இரண்டு விதமான கழிவறைகளுமே பல்லாண்டு காலமாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. "ஒருவேளை மேற்கத்திய பாணியில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்திருந்தால் அதன் பயன்பாடு இவ்வளவு காலம் நீடித்திருக்காது."

அதோடு, "முதியவர்கள், உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மேற்கத்திய பாணி கழிவறை பயனுள்ளதாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

மலம் கழிக்க சிறந்த முறை எது?

மலம் கழிப்பதைப் பொருத்தவரை, "இந்திய பாணியில் முழுமையாகக் குத்தவைப்பது, மேற்கத்திய பாணியில் நாற்காலி வடிவத்தில் உட்காருவது மற்றும் அதே பாணியில், கால்கள் மட்டும் சற்று உயரமாக இருக்கும் வகையில் முக்காலி அல்லது ஸ்டூலை காலுக்கு அடியில் பயன்படுத்திக் கொள்வது ஆகிய மூன்று வழிகள் உலகளவில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன." என்கிறார் மருத்துவர் கயல்விழி.

இதில் எந்த வகையிலும் பெரியளவில் இடையூறுகள் ஏற்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் "நாற்காலி வடிவத்தில் உட்கார்ந்தாலும், கால்களை உயர்த்தி மடக்கியபடி உட்காருவது மலம் கழிப்பதை எளிமையாக்குவதால், மேற்கத்திய பாணியில்கூட இப்படியான மாறுதல்களைச் செய்து கொள்கிறார்கள்," என்று விளக்கினார்.

அதாவது, இந்திய பாணியில் மலம் கழிக்கும்போது மலக்குடல்வாய் நேர்க்கோணத்தில் இருக்கிறது. அதனால், மலம் வெளியேறுவதில் பெரிய பிரச்னை எதுவும் இருப்பதில்லை. ஆனால், நாற்காலி வடிவ கழிவறையைப் பயன்படுத்தும்போது, சில சிரமங்கள் ஏற்படுவதால், அதைத் தவிர்க்க கால்களை ஸ்டூல் வைத்து உயர்த்திக் கொள்ளும் பழக்கம் பலராலும் பின்பற்றப்படுகிறது.

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

மேலும், ஆய்வில் பங்கெடுத்த தன்னார்வலர்கள், "குந்துதல் முறையில், மலத்தை வெளியேற்றுவதற்குக் குறைந்த அளவிலான உழைப்பையே செலுத்த வேண்டியுள்ளது. மேற்கத்திய பாணியில் இருக்கக்கூடிய, சற்றுக் கூடுதல் அழுத்தம் கொடுத்து மலத்தை வெளியேற்ற வேண்டிய சூழல், இதில் இருக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளனர்.

அதோடு, வெளிப்புற அழுத்தம் அதிகப்படியாக கொடுக்கப்படும்போது, அந்த அசௌகரியம், மூல நோய், மலக்குடல் இறக்கம், மலப்புழையில் பிளவுகளை உண்டாக்குவது போன்ற அபாயங்களுக்கு வழிவகுக்கலாம் என்றும் ஆய்வு முடிவு எச்சரிக்கிறது.

இது மட்டுமின்றி, எந்தவித இடையூறுமின்றி மலம் எளிதாக வெளியேறுவதால் இந்திய பாணியிலான குந்துதல் முறை, ஒருவர் கழிவறையில் செலவழிக்கும் நேரத்தையும் குறைப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஜர்னல் ஆஃப் அட்வான்ஸ்டு மெடிக்கல் அண்ட் டென்டல் சயின்சஸ் ரிசர்ச் ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை, இந்திய பாணி கழிவறைகளைப் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படுவதில்லை எனவும் செரிமானம் சரியான முறையில் நடப்பதாகவும் கூறுகிறது.

அதேவேளையில், "இந்திய பாணி கழிவறைகள், முதியவர்கள், உடல் இயக்கக் குறைபாடுகளைக் கொண்டவர்கள் பயன்படுத்துவதில் சிரமங்கள் இருப்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், மேற்கத்திய கழிவறைகள் அல்லது ஸ்டூல் போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி இந்திய கழிவறைகளைப் பயன்படுத்துவது அவர்களுக்கு வசதியாக இருப்பதை நாமே பல வீடுகளிலும் பார்க்கிறோம்.

எனவே, எந்தக் கழிவறையைப் பயன்படுத்தினாலும், உணவுமுறையை, சரியான அளவுகளில் ஊட்டச்சத்துகளை உட்கொள்வதற்கு ஏற்பத் திட்டமிடுவதும், எந்தச் சிக்கலுமின்றி மலம் வெளியேறுவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது," என்று கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்திய பாணி கழிவறையைப் பயன்படுத்துவதில் சிரமங்களை சமாளிக்க, இதுபோன்ற மாற்றுத் தீர்வுகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்திய கழிவறை வடிவங்களில் மேற்கத்திய பாணி

கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சமூகங்களை உருவாக்க முயல்வதன் மூலம் சுகாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

அந்தத் திட்டம், "மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் ஆகியோரும் எளிதில் அணுகுவதற்கு ஏற்ற கழிவறை வடிவங்களைக் கருத்தில் கொண்டிருந்ததாகவும்" அதற்கெனவே, 'குறைபாடுகள் உள்ளோர் அணுக ஏதுவான வீட்டு சுகாதாரம் பற்றிய கையேட்டில்' இந்திய பாணியிலான குந்துதல் முறைக்கு மாறாக "இரண்டு சிக்கனமான கழிவறை வடிவமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டதாகவும்" நேஷனல் மெடிக்கல் ஜர்னல் ஆஃப் இந்தியா என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரை கூறுகிறது.

ஆனால், "அந்த மாற்றுத் தீர்வுகள், அதாவது மேற்கத்திய பாணியிலான நாற்காலி போன்ற கழிவறை வடிவங்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் பயன்படுத்தப்படவில்லையோ என்ற சந்தேகத்தை கள ஆய்வுகள் எழுப்பியிருப்பதாக" கட்டுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கட்டுரையின் கூற்றுப்படி, இந்திய பாணி கழிவறை அனைவருக்கும் ஏற்படையதல்ல மற்றும் மேற்கத்திய பாணியிலான கழிவறைகளின் தேவையும் சமூகத்தில் இருக்கவே செய்கிறது.

அதற்காக, "ஸ்டூல் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்திய கழிவறைகளை மேற்கத்திய பாணிக்கு ஒத்த வகையில் மறுவடிவமைப்பு செய்து, பயன்படுத்தும் முறையைப் பல குடும்பங்களில் நம்மால் அவதானிக்க முடிகிறது. அதற்கேற்ற உபகரணங்களும் சந்தையில் கிடைக்கின்றன." என்று கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.

மலம் கழிக்க சிறந்த முறை எது? இந்திய பாணியா, மேற்கத்திய பாணியா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மேற்கத்திய பாணி கழிவறையில், மலக்குடல்வாய் பாதை நேரான கோணத்தில் இருப்பதற்காக, கால்களுக்கு ஸ்டூல் வைக்கும் பழக்கமும் பின்பற்றப்படுகிறது

மேற்கத்திய பாணியில் காலுக்கு ஸ்டூல் வைப்பது உதவுமா?

இந்திய பாணியிலான குந்துதல் முறையில் மலம் கழித்து முடிக்கும்போது ஏற்படும் தன்னிறைவு, மேற்கத்திய பாணியில் அனைத்து நேரங்களிலும் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்று ஜூலை மாதம் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, "மலம் முழுமையாக வெளியேறவில்லையோ என்ற உணர்வை ஏற்படுகிறது. இது மலச்சிக்கல், செரிமான அசௌகரியத்துடன் தொடர்புடையது. இந்த உணர்வு மேற்கத்திய கழிவறைகளைப் பயன்படுத்தியவர்களிடம் அதிகம் தென்பட்டது," என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், இத்தகைய அசௌகரியங்களைச் சமாளிக்க "கால்களுக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது ஓரளவு உதவுவதாக" கூறுகிறார் மருத்துவர் கயல்விழி.

"கால்களை ஒரு சிறிய ஸ்டூலில் வைத்து உயரப்படுத்திக் கொள்வது, மலக்குடல்வாய் கோணத்தை மேம்படுத்துகிறது. இதனால், மேற்கத்திய பாணியில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன" என்றும் அவர் தெரிவித்தார்.

கழிவறைகளும் வாழ்க்கை முறை மாற்றங்களும்

இந்தியாவில் குந்துதல் நிலையிலான கழிவறை பயன்பாட்டு முறையில் இருந்து நாற்காலி வடிவ கழிவறை முறைக்கு நிகழ்ந்த மாற்றம், உலகமயமாக்கப்பட்ட அழகியல் வடிவமைப்புகளுடன் தொடர்புடையது.

கடந்த சில ஆண்டுகளாக நாற்காலி வடிவ கழிவறைகளே, பெரும்பாலான புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்களில் பொருத்தப்படுகின்றன.

மலச்சிக்கல், வீக்கம், மூல நோய் போன்ற பாதிப்புகள் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, அதற்கும் இதற்கும் இடையே தொடர்பு இருக்கக்கூடுமா என்று மருத்துவர் கயல்விழியிடம் கேட்டபோது, "கழிவறை வடிவங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவரது உடல் பாதிப்புகளை முடிவு செய்துவிட முடியாது. உணவுமுறை, வழக்கமாக உட்காரும் முறை, மன அழுத்தம் எனப் பலவும் அதற்குப் பங்கு வகிக்கிறது," என்று கூறினார்.

இந்தியாவில் தற்போது இருவிதமான கழிவறை முறைகளும் பழக்கத்தில் உள்ளதைக் குறிப்பிட்ட அவர், "குடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது, உடலுக்குத் தேவையான தண்ணீரைப் பருகுவது போன்ற பழக்கங்களை முறையாகப் பின்பற்றினால், எப்படிப்பட்ட கழிவறையைப் பயன்படுத்தினாலும் சரி, மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதில் எந்த இடையூறும் இருக்காது," என்றும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdegey9p07eo

Checked
Tue, 02/24/2026 - 22:39
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed