கதை கதையாம்

மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம். (உண்மை சம்பவம்)

5 days 22 hours ago

May be an image of 2 people, people standing and text

8.8.2015  காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.

ப்ளஸ் டூ தேர்வுகளின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். இந்த விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகசொல்லியிருக்கிறார். அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும் காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர். 11.40 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில்தரையிறங்கியிருக்கிறது. அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்குள்ள ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர் யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது.

மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்.
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!

செந்தில் குமார்  ·   · 

வியாபார தந்திரம்.

1 week ago

May be an image of 3 people and outdoors

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.
கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. 
கூட்டம் கூடி விட்டது.
வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.:
 பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"
 அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.
அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்?
 எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.
 அதோடு " தம்பி 
இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.
 உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார்.
 மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.
முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.
 அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார். 
பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"
 

########## ####### ########

 

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.
 எவரும் பழம் வாங்க முன்வரவில்லை.
 சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான்.
 அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார்.
 பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.
 அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.
 முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான்.
 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது.
 அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.
அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

 

############ ######### ##########


சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாயகேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித். 
அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!
கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹாரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார்.
 ஹாரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். சித் உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹாரி பதிலுக்கு கத்துவார். சித் கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!
நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு. 
அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!

Raghu Ram

நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள்

1 week 3 days ago

 நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள்

எத்தனையோ மனிதர்களை நட்புக்கு எடுத்துக்காட்டாய் நாம் சுட்டுகிறோம். படித்து அதிசயிக்கிறோம். ஆனால் எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலேயே நட்புக்கு எடுத்துக்காட்டாய் பார்த்த கணத்திலிருந்து இறந்து வீழ்ந்த கணம் வரை வாழ்ந்தவர்கள் என்றால் கர்ணனையும் துரியோதனனையுமே சுட்டலாம். அவர்களின் சிறப்பான பக்கங்களைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அஸ்தினாபுர அரண்மனையில் மன்னர்களுக்கிடையே ஒரு வில்வித்தைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபோட்டியில் விஜயன் வென்றுவிட அங்கே தேரோட்டியின் மகனான கர்ணன் பங்கெடுக்க விரும்புகிறான். ஆனால் துரோணரோ அது க்ஷத்திரிய மன்னர்களுக்கான போட்டி என நிராகரிக்கிறார். உடனே துரியோதனன் கர்ணனைத் தன் நண்பனாக ஏற்று அங்க தேசத்தின் அரசனாக அறிவிக்கிறான். இங்கே ஆரம்பிக்கிறது அவர்களின் மாசற்ற நட்பும் கர்ணனின் செஞ்சோற்றுக் கடனும்.

 

ப்ரக்ஜோதிஷ்பூரை ஆண்ட பகதத்தன் என்பவரின் மகள் பானுமதி. இவளுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொள்ளை கொள்ளும் அழகுடைய பானுமதியைக் கரம்பிடிக்கஅங்கே அனைத்து தேசத்து அரசர்களும் அணிவகுத்திருந்தனர். அப்போட்டியில் பங்கேற்க துரியோதனனும் சென்றிருந்தான். அவனுக்குத் தோழனாக கர்ணனும் சென்றிருந்தான்.

பார்த்ததுமே பானுமதியின் அழகில் மயங்கினான் துரியோதனன். ஆனால் அவளோ சுயம்வர மாலையோடு துரியோதனன் பக்கம் வந்ததும் வேறு பக்கம் திரும்பி விட அவளைக் கடத்திச் சென்று மணக்கத் துடிக்கிறான். இச்சந்தர்ப்பத்தில் கர்ணன் தேரோட்டியாக இருந்து பல்வேறு மன்னர்களுடன் போரிட்டு  இருவரையும் அஸ்தினாபுரத்துக்குக் கொண்டு வந்து சேர்க்க அவர்கள் திருமணம் அதன் பின் இருமனம் இணைந்த திருமணமாக முடிந்தது.

ஒருமுறை பானுமதியும் கர்ணனும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே துரியோதனன் வருகை புரிந்தான். கணவனைக் கண்ட பானுமதி மரியாதை நிமித்தமாக எழுந்தாள். தோற்கும் நிலையில் இருந்த அவள் ஆட்டத்தைவிட்டு வெளியேறுவதாக நினைத்த கர்ணன் வேகமாக அவள் உடையைப் பற்றி அமரவைக்க எத்தனித்தான். ஆனால் அவள் இடுப்பில் அணிந்திருந்த மணிமேகலை என்னும் ஆபரணம் அறுபட்டு அதிலிருந்து மணிகள் தரையெங்கும் உருண்டோடின. இருவருமே பதற்றத்தில் ஆழ்ந்தனர்.

அதற்குள் பக்கத்தில் வந்துவிட்ட துரியோதனன் ” எடுக்கவோ, கோர்க்கவோ” என சூழ்நிலையை இயல்பாக்க முயன்றான். தன் மனைவியுடன் தன் சிநேகிதனே ஆனாலும் தனிமையில் அமர்ந்து சொக்கட்டான் ஆடுவதையோ அவன் பற்றியதால் அவளது ஆடையின் மேகலை அறுந்து உதிர்ந்ததையோ பெரிதாக எண்ணாமல் சூழ்நிலையை இலகுவாக்க முயன்ற துரியோதனன் தன் நண்பன் கர்ணனின் மேல் வைத்த நம்பிக்கை கர்ணனைத் தன் வாழ்நாள் முழுவதும் அசைத்துக் கொண்டிருந்தது.

இது எப்போது வெளிப்பட்டது என்றால் குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கும் சமயம் பாண்டவர்களின் தாயான குந்தி, கர்ணன் தன் மகன் என்ற உண்மையை கர்ணனிடமே உரைக்க வந்தாள். மேலும் போரில் அவன் பாண்டவர் பக்கம் சேர்ந்து கௌரவர்களை எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள வந்தாள். அப்போது கர்ணன் வாய்மொழியாகவே இந்நிகழ்வு வெளிப்பட்டது.

கர்ணன் தன் தாயிடம்” பிறந்தவுடனே என்னைக் கைவிட்ட தாயான நீங்கள் இப்போதுதான் மகனாக ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறீர்கள். ஆனால் என் நண்பனான துரியோதனனோ நான் யாரென்று தெரியாமலே என் வீரத்தைப் பார்த்துச் சகோதரனாக ஏற்று அங்க தேச அரசனாக்கினான். அங்கேயே ஆரம்பித்துவிட்டது என் செஞ்சோற்றுக் கடன். இதைவிடத் தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடும்போது அவள் மேகலை அறுந்து வீழ்ந்ததைக் கூடத் தப்பாக எண்ணாமல் எடுக்கவோ கோர்க்கவோ என்று கேட்ட அவன் பண்பின் முன் என் எல்லா அன்பும் இணைந்துவிட்டது அம்மா. ”

”நான் இன்றுவரை தானதர்மம் செய்துவரும் பொருட்களெல்லாமே துரியோதனனைச் சேர்ந்ததுதானேம்மா. மாயக் கிருஷ்ணனின் துணையை நீங்களெல்லாம் நம்பும்போது என் வில்திறமையை மட்டுமே நம்புகிறான் அம்மா. இப்படிப்பட்ட என் நண்பனுக்குனுக்கு என் உடல் பொருள் ஆவியைத் தியாகம் செய்யாவிட்டால், செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்காவிட்டால் நான் வாழ்ந்ததன் பயன் ஏது?” என்று கேட்க அர்ஜுனன் மேல் பிரம்மாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் ஏவக்கூடாது என்றும், அர்ஜுனனைத் தவிர பாண்டவர்கள் யாருடனும் பொருதக் கூடாது என்றும் கர்ணனிடம் வரம் பெற்றுச் செல்கிறாள் குந்தி.

இப்படித் தன் நண்பனுக்காகத் தாயே வந்து கேட்டும் மாறாத கர்ணனின் பண்பு உயர்ந்ததுதானே. அதனினும் குருக்ஷேத்திரப் போரின் போது பீஷ்மர் தடுத்ததால் அவன் வெறும் படைவீரனாகவே போரிட நேருமென்பதால் போரிடப் புகமாட்டேன் என்று மறுத்ததையும் துரியோதன் ஏற்றான். அதன்பின் பீஷ்மர் விழுந்ததும்தான் அவன் தன் நண்பன் துரியோதனுக்காகப் போர்க்களம் புகுந்தான். இதுவே இவர்களின் இணைபிரியாத புரிதலுள்ள நட்பினுக்கு எடுத்துக்காட்டு என்பதைப் பார்த்தோம் இல்லையா குழந்தைகளே.  

 

ஒரு பல்லியால், முடியும் போது.. உங்களால் முடியாதா? ஜப்பானில் நடந்த உண்மைக் கதை.

2 weeks ago

 

May be an image of text that says 'ஒரு உ ணமைக ண கதை இது ஜப்பானில் நடந்தது'
 

🚩ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.
🚩ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
🚩வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவனித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.
🚩அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது, இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்காணித்து கொண்டு இருந்தார்
🚩சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்
🚩அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.
🚩ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும் போது உங்களால் முடியாதா..? .
🚩உங்களை 10 மாதம் சுமந்த உம் தாய் தந்தைக்கு அவர்கள் முடியாத காலக் கட்டத்தில் உணவளிக்க முடியாதா,
🚩சிந்திப்பீர் *மனிதர்களே!!!* 🌹🌹🌹🌹🌹

Raghu Ram

புண்ணியம் என்பது என்ன?

3 weeks 6 days ago
May be an image of 1 person and outdoors
 
பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்...
300-ரூபாய்
200-ரூபாய்க்கு வருமா ?
சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
சரி 250-ரூபாய் கொடுங்க...
 
பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது.
அண்ணே இந்த வழியா போனா
நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...?
ரோட்டுக்கடைதான் சார்
அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ
அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,
நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
விட்டு போகலாம்.
 
இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு
புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு
வண்டிகிட்ட ஆட்டோ நின்றது.
 
ஒரு நடுத்தரவயது அம்மா,
அவரது நெற்றி மற்றும் தோற்றம்
அவர் கணவர் துணையற்றவர்
என சொல்லியது
வாங்க... இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார் ஆட்டோ டிரைவர்.
இட்லி, தோசை என சாப்பிட்டோம்.
எவ்ளோம்மா ?.
60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க
100-ரூபாய் கொடுத்தேன்...
மீதியை... சில்லரையாக பொறுக்கியது,  அந்த அம்மா...
 
இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன்
சில்லரை கஷ்டமுன்னாங்க...
 
சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
வருவேன்... அப்போ வாங்கிக்கிறேன்
என்று கூறி புறப்பட்டனர்...
 
சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு
போறீங்க... நாளைக்கு வருவேன்னு
சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?
 
அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு
ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்... இல்லையா ?
எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம
உதவணும் அண்ணா
 
நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,
அதன்மூலம் பொதுசேவை செய்வது,
புண்ணிய தலங்கள் செல்வது,
நன்கொடை கொடுப்பது, உண்டியல்
போடுவது என... இப்படித்தான்
புண்ணியம் தேட வேண்டும்
என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.
 
ஆட்டோ வீடு வந்து சேர்ந்தது...
இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.
200-ரூபாய் போதும்
என்னாச்சு அண்ணா? என்றேன்...
 
அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.
ஒரு கணம் மூச்சு நின்றது
நான் போட்ட புண்ணிய கணக்கை
விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
புண்ணிய கணக்கு !!!.
 
உதவியை உதவி என அறியாமலே
செய்துவிட்டு கடந்து விடுங்கள்...
புண்ணியம் நம்மை தேடி வரும்.
Raghu Ram  

ஓஷோ சொன்ன குட்டிக்கதை

4 weeks ago
ஓஷோ சொன்ன குட்டிக்கதை
ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன.
 
அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும்.
 
தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும்.
 
ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது.
 
அடுத்து காற்று கொஞ்சம் சுழித்து அடித்ததில் தம்பி கிளை, முறிந்து விழுந்தது. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது. இருவருமே ஆற்றில் விழுந்தார்கள். 
 
தம்பி கிளை கத்த ஆரம்பித்தது. “என்னய்யா அநியாயம் இது..நான்பாட்டுக்கு சிவனேன்னு தானே மரத்துல இருந்தேன்..இப்படி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப் போறனே..அய்யய்யோ” என்று அழுதது.
 
அண்ணன் கிளை “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” என்றது.
 
தம்பி கிளை கடுப்பாகி விட்டது. “ச்சீ..நீயெல்லாம் ஒரு கிளையா? இங்க உசுரே போகுதுங்கிறேன். ஜில்லுன்னு இருக்குன்னு லொள்ளு பண்றே..அய்யய்யோ..தூக்கித் தூக்கிப் போடுதே” என்றது.
 
அண்ணன் கிளையோ “தம்பி, இதை மனிதர்கள் கண்காட்சியில் காசு கொடுத்து அனுபவிக்கிறார்கள். நமக்கோ இலவசமாகக் கிடைச்சிருக்கு. சொய்ங்..சொய்ங்னு போறது சூப்பரா இருக்கில்ல?” என்றது.
 
‘இனியும் இவன்கூட பேசக்கூடாது’ என்று முடிவு செய்த தம்பி கிளை, ஆண்டவனில் ஆரம்பித்து அனைத்தையும் திட்டித் தீர்த்தது. எவ்வளவு சொகுசா மரத்துல இருந்தேன், இப்படி பாறையிலயும் கரையிலயும் முட்டி மோதும்படி ஆயிடுச்சே என்று புலம்பித் தள்ளியது. அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க்கொண்டிருந்தது.
 
கடைசியில் இரு கிளைகளும் கடலை நெருங்கின. தம்பி கிளை பதறியது. “அண்ணே, நம்ம கதை முடிஞ்சுச்சு. இந்த நல்லதண்ணில கரை ஒதுங்குனாக் கூட வேர் பிடிச்சு வளர வாய்ப்பிருக்கு. அங்கே கடலுக்குள்ள போனா கன்ஃபார்மா சாவு தான்” என்றது.
 
“ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமே” என்றது அண்ணன் கிளை.
 
“தெரியுமா? அது தெரிஞ்சா சந்தோசமா வந்தே?”
 
“ஆமா, எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்காங்க தம்பி. அதனால் எப்படியும் நம்ம கதை முடியப்போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிஞ்சு போச்சு. இது நம்மால கட்டுப்படுத்த முடியாத காட்டாத்து வெள்ளம். அப்போ நமக்கிருந்தது ரெண்டே சாய்ஸ் தான். ஒன்னு அதை அமைதியா ஏத்துகிட்டு ,அந்த கஷ்டத்தையே எஞ்சாய் பண்றது. இன்னொன்னு அதை எதிர்த்துக்கிட்டு டென்சன் ஆகி சாவுறது.நான் முதல் சாய்ஸை எடுத்தேன். நீ இரண்டாவதை எடுத்தே..ரெண்டு பேருக்கும் ஒரே முடிவு. ஆனாலும் நான் சந்தோசமா சாவை நோக்கி வந்தேன். நீ அழுதுக்கிட்டே வந்தே. இங்க முடிவும், ஆரம்பமும் நம்ம கையில் இல்லை. இடைப்பட்ட பயணம்..அதுல நல்ல சாய்ஸ்-ஐ நாம தான் எடுத்துக்கணும்”
 
தம்பி “நீ சொல்றது சரி தான்ணே..நான் வேஸ்ட் ஆக்கிட்டேன்”ன்னு சொல்லும்போதே கடல் வந்துவிட்டது. இருகிளைகளும் கடலில் சங்கமித்தன.
 
தையே காப்மேயர் ‘மழை பெய்யட்டும்’ என்றார். எங்கோ அவசரமாகக் கிளம்புகிறீர்கள். மழை பிடித்துக்கொண்டது. இப்போது உங்களுக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான். ஒன்று, ’என்னய்யா மழை இது’  என்று டென்சன் ஆவது. இரண்டாவது மழை பெய்யட்டும் என அமைதியாக மழையை ரசிப்பது. நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்?

மெய்யெழுத்து - ஷோபாசக்தி

1 month 1 week ago
மெய்யெழுத்து

2009 -வது வருடம், வைகாசி மாதத்தின் இறுதி நாளில்; ஓர் இளநிலை இராணுவ அதிகாரி “நாங்கள் திலீபனின் உடல் எச்சங்களைக் கைப்பற்றிவிட்டோம்” என்றொரு செய்தியை வவுனியா இராணுவ மையத்திற்கு அறிவித்தான். அப்போது மருத்துவர் ராகுலன் மனநிலை சரிந்தவர் போன்று, மணலை அள்ளித் தனது தலையில் போட்டுக்கொண்டு, குழறி அழுதவாறிருந்தார். 

1977 -வது வருட இன வன்செயல்களின் பின்பாக, ராகுலனின் குடும்பம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்திருந்தது. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் பத்தாவது வகுப்பில் சேரும்போது ராகுலனுக்கு வயது பதினாறு. அங்கேதான், பார்த்திபன் என்ற பெயரோடு எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த திலீபனை அவர் முதன்முதலாகச் சந்தித்தார்.

கல்லூரியில் நடக்கவிருக்கும் விஞ்ஞானக் கண்காட்சியில், ராகுலனின் வகுப்பு மாணவர்கள் ஏதாவது ஒரு புதுமையை வைக்க வேண்டும் என்று விஞ்ஞான ஆசிரியர் வரதராஜ சர்மா கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இவர்களாலோ குறுகிய காலத்திற்குள் ஏதொன்றையும் உருவாக்க முடியாமலிருந்தது. வெறுத்துப் போன ஆசிரியர் கடுங்கோபத்துடன் ராகுலனைப் பார்த்து “எயிட் ஏ வகுப்பிலயிருக்கிற பார்த்திபன் எண்ட ஸ்டுடண்டைக் கூட்டிக்கொண்டு வாரும். அப்பயாவது சோத்து மாடான உங்களுக்கெல்லாம் புத்தி வருதா எண்டு பார்ப்பம்” எனச் சொல்லி, திலீபனை அழைத்துவருமாறு ராகுலனை அனுப்பிவிட்டார்.

சோற்று மாடு என ஆசிரியர் தன்னைத்தான் குத்திக்காட்டியிருக்க வேண்டும் என்று நினைத்து ராகுலன் தனக்குள்ளே துக்கித்தவாறேதான் திலீபனைத் தேடிப் போனார். ‘ஏன் இந்தப் பொடியன் சோறு தின்னமாட்டானோ?’ என்று அதுவரை பார்த்திராத திலீபனை மனதிற்குள் கரித்துக்கொட்டியவாறு தான் போனார்.

ராகுலன் கொழும்பில் பாற்கட்டிகளும், நெய்ச்சோறுமாகச் சாப்பிட்டுச் சொகுசாக வளர்ந்த பிள்ளை. அதனால் மினுமினுப்பாகக் கொழுத்த கன்றுக்குட்டி போலிருப்பார். சற்றுக் குள்ளமானவர் என்பதால் அவருடைய குண்டுத் தோற்றம் இன்னும் தூக்கலாகவே தெரியும். இந்த உடல்வாகு அவருடன் எப்போதுமிருந்தது.

ராகுலன் தேடிச் சென்ற அந்த மாணவர் மிக ஒல்லியாக, பொது நிறத்திலிருந்தார். அவருடைய முன்வாய்ப் பற்கள் சற்றுத் துருத்திக்கொண்டிருந்தன. அடர்த்தியான தலைமுடி கலைந்து விழுந்திருந்த நெற்றிக்குக் கீழே மூக்குக் கண்ணாடிக்குள் அவரது கண்கள் சற்றே கிறங்கியிருந்தன. இந்தக் கிறக்கம் கடைசிவரை திலீபனோடு இருந்ததை, ராகுலன் எப்போதுமே ஞாபகம் கொள்வார்.

திலீபனை அழைத்து வரும்போது “நீர் எங்கயிருந்து வாறனீர்?” என்று ராகுலன் கேட்க “ஊரெழு” என மிக மென்மையான குரலில் திலீபன் பதில் சொன்னார். “நீர் படிப்பில பெரிய கெட்டிக்காரனோ?” என்று ராகுலன் எகத்தாளமாகக் கேட்டபோது “ஓம்” என்று ஒற்றை வார்த்தையில் திலீபன் அதே மென்மையான குரலில் பதில் சொன்னார். ஒருவிதமான விலகியிருக்கும் சுபாவம் அந்த மாணவனிடம் ஒட்டியிருப்பதை ராகுலன் கவனித்தார்.

வகுப்பறையில் ஆசிரியர் வரதராஜ சர்மா முன்பு நின்றபோதும், அதே விலகல் தன்மையோடுதான் திலீபன் நிலைகொள்ளாமல் கால்மாறி கால்மாறி நின்றார். இப்படி ஏதாவது சேட்டைகளைச் செய்தால் “என்ன உனக்குப் பிரச்சினை… மாதவிலக்கே? நேரா நிமிந்து நிக்கேலாதே?” என வெடுக்கெனக் கேட்பவர் வரதராஜ சர்மா. ஆனால், திலீபன் மிகப் புத்திசாலியான மாணவன் என்று அவர் கருதியிருந்ததால், திலீபன் மீது அவருக்குத் தனி அன்புண்டு. திலீபனின் தந்தையாரான இராசையா வாத்தியாரோடு ஒரு காலத்தில் பணியாற்றியதால் திலீபனின் குடும்பச் சூழலையும் அவர் அறிவார். திலீபன் பத்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே தாயை இழந்தவர் என்பதால், திலீபன் மீது கூடுதல் பரிவும் வரதராஜ சர்மாவுக்கு இருந்தது. திலீபனின் விலகியிருக்கும் சுபாவத்திற்குத் தாயாரின் இழப்புக்கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் எனப் பிற்காலத்தில் ராகுலன் யோசித்ததுண்டு.

“பார்த்திபன்… வாற எக்ஸிபிசனில புதுமையா நாங்கள் என்ன செய்யலாம் எண்டு நீ இந்த பத்தாம் வகுப்பு எருமைகளுக்குச் சொல்லிக்குடு!” எனச் சொல்லிவிட்டு, ஆசிரியர் வெளியே போய்விட்டார். “ஒரு மயிலின்ர எலும்புக்கூட்டை நாங்கள் விளக்கங்களுடன் கண்காட்சியில வைக்கலாம்’ என்று திலீபன் மாணவர்களுக்குச் சொன்னார்.

அதுவொரு புதுமையான யோசனையாகவே மற்றைய மாணவர்களுக்கும் தெரிந்தது. யாழ்ப்பாணத்தாருக்கு மயில் பறவை அதிசயம்தான். யாராவது வன்னியிலிருந்து கொண்டுவந்து வளர்த்தால் தான் உண்டு. ஆனாலும், யாழ்ப்பாணத்தின் அனல் பறக்கும் காலநிலையாலோ அல்லது வனச்சூழல் இல்லாததாலோ அந்த மயில்களும் சீக்கிரமே இறந்து போகும்.

“மயில் எலும்புக் கூட்டுக்கு எங்க போறது?” என்று ராகுலன் கேட்டார்.

“அது ஒரு இடத்தில இருக்கு… ஆராவது ஒராள் மட்டும் என்னோட வந்தால் போதும். எடுத்துத் தருவன்” என்றார் திலீபன்.

மாலையில் பாடசாலை விட்டதும், ராகுலனே திலீபனோடு சென்று, அந்த மயில் எலும்புக்கூடைப் பெற்றுவருவதென்று தீர்மானம் ஆயிற்று.

பாடசாலை விட்டு ராகுலன் வெளியே வந்தபோது, சொன்னது போலவே திலீபன் வெளிவாசலில் நின்றிருந்தார். “போகலாம்” என்று ராகுலன் சொன்ன போது “இப்ப போய் சாமானை எடுக்க ஏலாது, நீர் இரவு பத்து மணிக்கு ஊரெழு கணக்கன் சந்திக்கு வாரும்! நான் அங்க நிப்பன்” என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் கூடக் காத்திராமல், திலீபன் வெளியேறிக்கொண்டிருந்த மாணவர்களுடன் கலந்து மறைந்துவிட்டார்.

ராகுலன் குழம்பிப் போனார். முதலில் அவருக்கு ‘ஊரெழு கணக்கன் சந்தி’ எங்கேயிருக்கிறது என்பதே சரியாகத் தெரியாது. அதுவும் இரவு பத்துமணிக்கு அங்கே போவதென்றால் எப்படிப் போவது? போகாவிட்டாலோ வரதராஜா சர்மாவைச் சமாளிக்க முடியாது. தனது வீடு இருக்கும் உரும்பிராய் தெற்குக்கு, பக்கத்துக் கிராமமே ஊரெழு என்பதால், குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று மனதைத் தேற்றியவாறே ராகுலன் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்குப் போனார்.

இரவு ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி, ஊரெழுவை நோக்கி நடந்தார். அன்று நிலவு வெளிச்சம் அவருக்கு வழி காட்டிற்று. வழியில் தென்பட்ட ஒரேயொரு சைக்கிள்காரரிடம் விசாரித்ததில், அதே தெருவால் நேராக நடந்து போனாலே ஊரெழு கணக்கன் சந்தி வந்துவிடும் என்பதைத் தெரிந்துகொண்டார். பத்து மணிக்கு முன்பே குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டவர் அங்கே திலீபனுக்காகக் காத்திருந்தார். இரவு பத்து மணிக்கு அப்படியென்ன மயிலைப் பிடிக்கிற மயிர் வேலை என்ற குழப்பம் அவருக்கு இருந்துகொண்டேயிருந்தது.

சரியாகப் பத்து மணிக்கு ராகுலனுக்குப் பின்னால் திலீபன் தோன்றினார். “வாரும்” என்று முணுமுணுத்துவிட்டு திலீபன் முன்னே விரைந்து நடக்க, ராகுலன் செம்மறி ஆடு போலப் பின்தொடர்ந்தார்.

அய்ந்து நிமிட நடைதூரத்தில், வண்ண மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஊரெழு முருகன் கோயில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. கோயில் புறமதிலைச் சுற்றிப் பின்புறமாக திலீபன் ராகுலனை அழைத்துப் போனார். அங்கே முழத்துக்கொரு உயரிப் பனையாக அடர்ந்த பனங்கூடல் இருந்தது. ஓரிடத்தில் நின்று, வடலி மறைவிலிருந்து ஆறு மின்கலங்கள் போடக்கூடிய டோர்ச் லைட்டையும், ஒரு மண்வெட்டியையும், ஒரு பெரிய சாக்குப் பையையும் திலீபன் எடுத்தார். 

“இது ஆற்ற சாமான்கள்?” என்று ராகுலன் கொஞ்சம் திகிலுடன்தான் கேட்டார்.

“நான் பொழுதுபட முன்னமே கொண்டுவந்து வைச்சிட்டன்” என்று சொன்னவாறே திலீபன் இன்னும் சற்றுத் தூரம் பனங்கூடலுக்குள் நடந்து சென்று, ஓரிடத்தில் நின்றவாறே மெதுவாகச் சொன்னார்:

“கோயில்ல நிண்ட மயில்தான். இஞ்சதான் தாட்டிருக்கு!”

“நாமள் தோண்டினால் பிரச்சினை ஏதும் வராதே?”

“தோண்டின தடயமே இல்லாமல் செய்துபோட்டுப் போகவேணும் ஐஸே!”

ராகுலனின் கையில் டோர்ச் லைட்டைக் கொடுத்துவிட்டு, திலீபன் மண்வெட்டியால் மெதுவாகச் சாறிச் சாறி மணலைக் கவனமாக விலக்கிக்கொண்டே போனார். ராகுலனுக்கு உண்மையிலேயே நடுக்கமாக இருந்தது. அவரது கையிலிருந்த விளக்கு வெளிச்சம் அங்குமிங்குமாகத் தளம்பியது.

“நேராப் பிடியும் ஐஸே…” என்று திலீபன் எரிச்சலுடன் சொன்னார். மதியம் பாடசாலையில் விலகல் சுபாவத்துடன் குரல் எழாமல் பேசிக்கொண்டிருந்த சிறுவன், இப்போது கட்டளை அதிகாரி போல மாறிவிட்டிருந்ததை ராகுலன் வாயைப் பிளந்துகொண்டே கவனித்தார்.

மயில் எலும்புக்கூடு பெரிய சேதங்களில்லாமல் கிடைத்தது. அதைச் சாக்குப் பைக்குள் பத்திரமாக வைத்துவிட்டு, திலீபன் அந்தக் குழியை இருந்தது போலவே மூடிவிட்டு, அதன் மீது இரண்டு காவோலைகளை இழுத்துப் போட்டார். வந்த திசைக்கு எதிர்த் திசையால் திலீபன் நடக்க, ராகுலன் சாக்குப் பையுடன் பின்னாலேயே போனார். பனங்கூடலால் வெளியேறிதும் எதிர்ப்பட்ட ஊரி ஒழுங்கையின் ஓரமாக ஒரு சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. “நீர் சைக்கிள எடும்” என்று சொன்னவாறே தீலீபன் சாக்குப் பையை வாங்கிக் கரியரில் கட்டினார். தனக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதைச் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டே “நீர் ஓடும்… நான் பெடல் போட்டுத் தருவன்” என்று ராகுலன் சமாளித்தார். “எலும்புக் கூடு எங்கயிருந்தது எண்டு ஆராவது கேட்டால், என்ர வீட்டில இருந்தது எண்டுதான் சொல்லவேணும்…சரியா” என்று கொஞ்சம் கடுமையான தொனியில் திலீபன் சொல்ல “சரி மச்சான்” என்றார் ராகுலன். இப்படித்தான் திலீபனுக்கும் ராகுலனுக்குமான நட்பு ஆரம்பித்தது.

அதன் பின்பாக, ராகுலன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படிக்கும்வரை ‘லவ்வர்ஸ்’ என்று மாணவர்கள் கேலி செய்யக்கூடியளவுக்கு இருவரும் மயிலும் வேலும் போல ஒட்டிக்கொண்டார்கள். ராகுலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்பதற்குத் தேர்வானதற்கு இரண்டு வருடங்கள் கழித்து, திலீபனும் அதே மருத்துவ பீடத்தில் கற்பதற்குத் தேர்வானார். அந்தச் செய்தியைச் சொல்வதற்காக ராகுலனைத் தேடி உரும்பிராய் வீட்டுக்குச் சென்றிருந்த திலீபன், சில நாட்களுக்குப் பின்பு ராகுலனுக்குச் சொல்லாமலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டார்.

2

1987 -வது வருடம், செப்டம்பர் மாதத்தில்; திலீபன் நீரையும் உணவையும் முற்றாக மறுத்து, நல்லூர் முருகன் கோயிலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இரண்டாவது நாளில், ராகுலன் கூட்டத்தோடு கூட்டமாக நின்று, மேடையிலிருந்த திலீபனைப் பார்த்துக்கொண்டிருந்தார். உண்மையிலேயே இதுவொரு தேவையில்லாத அரசியல் சாகசம் என்றுதான் ராகுலன் நினைத்தார். இரண்டு, மூன்று நாட்கள் உண்ணாவிரதமிருந்து நாடகமாடிவிட்டு, ஏதாவதொரு சாக்குப்போக்கைச் சொல்லி உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வார்கள் என்றுதான் அவர் நம்பினார். அதற்குக் காரணமுமிருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்துக்கொண்டிருந்த காலத்தில்தான், இலங்கை அரசுக்குக் கோரிக்கை வைத்து, பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதமிருந்து அறப்போராட்டம் நடத்திய மதிவதனி, படிகலிங்கம், வனஜா உள்ளிட்ட ஒன்பது மாணவர்களும் பட்டினி மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, அந்த உயிர்களைப் பாதுகாப்பதற்காக புலிகள் வலுகட்டாயமாக துப்பாக்கிமுனையில் அந்த மாணவர்களைக் கடத்திச் சென்றிருந்தார்கள். அந்த நடவடிக்கையை முன்னின்று செய்தவர்களில் திலீபனும் ஒருவர். அவர் அப்போது ஒரு சிறிய ஏரியாவுக்குப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராகயிருந்தார். ராகுலனுக்கோ அரசியலில் துளி ஆர்வமும் கிடையாது. எல்லா ஆயுத இயக்கங்களின் மீதும் அவருக்கு அவநம்பிக்கையே இருந்தது. எந்தப் பிரச்சினைக்கும் ஆயுதப் போராட்டம் தீர்வாகாது என்பதுதான் ராகுலனின் எண்ணம். அப்போதெல்லாம் திலீபன் அடிக்கடி பல்கலைக்கழகத்திற்கு வருவார். ராகுலனைக் கண்டால் அவரோடு சேர்ந்து ஒரு தேநீராவது அருந்தாமல் போகமாட்டார்.

இந்த நல்லூர் உண்ணாவிரதத்தைப் புலிகள் சீக்கிரமே முடித்துக்கொள்வார்கள் என ராகுலன் நம்புவதற்கு இன்னொரு வலுவான காரணமுமிருந்தது. போர்முனைகளில் படுகாயப்பட்ட திலீபனுக்கு இதுவரை மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நடந்த அறுவைச் சிகிச்சையில், திலீபனது குடலில் பதினான்கு அங்குலங்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அவர் தண்ணீரும் அருந்தாமல் உண்ணாவிரதமிருப்பது மிக மிக ஆபத்தானது. மேடையில் திலீபனைச் சுற்றி நான்கைந்து புலிகள் இயக்க இளைஞர்கள் நின்றிருந்தார்கள். ‘ஆக்களப் பாரு… ஒவ்வொருத்தனும் ஒரு கொட்டுப்பனை போல உருண்டு திரண்டு நிக்கிறான். உவங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே… எப்பிடியும் ஒரு மாசம் தாக்குப் பிடிப்பாங்கள்… அதை விட்டுப்போட்டு எதுக்கு ஒரு ஏலாவாளியான நோயாளியை மேடையில இழுத்துவிட்டிருக்கிறாங்கள்’ என்று மனதிற்குள் ராகுலன் மருகிக்கொண்டிருந்தார்.

மேடையில் திலீபன் உரையாற்றிக்கொண்டிருந்தார். “நான் இறந்தால் என்னுடைய உடலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைத்துவிடுமாறு தலைவர் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். எம் மண்ணின் மாணவர்களது கல்விப்புல ஆய்வுக்காக எனது உடல் பயன்பட வேண்டும். நான் மலரப் போகும் தமிழீழத்தை வானத்திலிருந்து பார்ப்பேன்” என்று உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே, திலீபனின் கிறங்கிய கண்கள் மேடையின் கீழே கூட்டத்தில் நின்றிருந்த ராகுலனின் முகத்தைக் கண்டுவிட்டன. பேசி முடித்ததும், மேடையிலிருந்த கட்டிலில் தளர்வாக உட்கார்ந்துகொண்டவர், ராகுலனுக்குச் சைகை செய்து தன்னிடம் வருமாறு அழைத்தார்.

ராகுலனுக்குக் கொஞ்சம் பதற்றமாகயிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க இப்போது மேடையில் இருப்பவர் இவரோடு இந்துக் கல்லூரியில் படித்த விலகல் சுபாவியான பார்த்திபன் இல்லை. நேற்றைய தினம் சர்வதேசப் பத்திரிகைகளில் நாயகனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் புலிகளின் அரசியல்துறைத் தலைவரே அங்கிருக்கிறார். புலிகள் இயக்கத்தின் கவனம் மட்டுமல்லாமல், இலங்கை – இந்திய அரசுகளின் மொத்தக் கவனமும் அந்த மேடையில்தான் குவிந்திருக்கிறது. திலீபன் தன்னை அழைத்தது ராகுலனுக்குக் கொஞ்சம் பெருமையாகவுமிருந்தது. 

தன்னுடைய கனத்த உடலை மேடையை நோக்கி நகர்த்திச் சென்றவரால், உயரமான மேடையில் ஏற முடியாமலிருந்தது. மேடையிலிருந்த ஒருவன் ராகுலனைக் கைகொடுத்துத் தூக்கிவிட்டான். திலீபனின் சோர்ந்திருந்த முகத்தில் அற்புதமானவொரு புன்னகை வந்து அமர்ந்துகொண்டது.

“வாடா தடியா…” என்று திலீபன் வரவேற்றவாறே, ராகுலனுடைய கையைப் பற்றிக் கட்டிலில் தன்னருகே உட்கார வைத்துக்கொண்டார். திலீபனின் உடல் எவ்வளவு தளர்ந்திருக்கிறது என்பதை அந்தத் தொடுகையிலேயே ராகுலன் தெரிந்துகொண்டார். அவர் திலீபனின் கையைப் பற்றிப் பிடித்து, நாடித் துடிப்பைப் பரிசீலிக்க முயன்றபோது. திலீபன் வெடுக்கெனக் கையைப் பின்னே இழுத்துக்கொண்டார்.

“தடியா…என்ர பிரேதம் யூனிவர்ஸிட்டிக்குத் தானே வரும். அங்க நீ என்ர உடம்ப செக் செய்யலாம், இப்ப சும்மாயிரு” என்று சிரித்தார் திலீபன். அவரது குரல் மிகவும் பலவீனப்பட்டிருந்தது.

“சீக்… இதென்ன கதை பார்த்தீ? அப்பிடியெல்லாம் ஒண்டும் நடவாது. உன்ர கோலமும் குறியும் என்ன? பத்தாயிரம் சனம் உன்னத்தானே பார்த்துக்கொண்டிருக்கு… குளிச்சு உடுப்ப மாத்திப்போட்டு மேடையில இருக்கலாம்தானே…”

“விடுறா தடியா…அழியப் போறவனுக்கு கோடித் துணிதான் கேடு”

தான் இறக்கப் போகிறேன் என்று திலீபனுக்கு மிக உறுதியாகவே தெரிந்திருக்கிறது என்பது போலவே அவரது பேச்சுகள் அமைந்திருந்தன. அதை ராகுலனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை அவருக்கு அருகே அமர்ந்திருப்பது அவர் பதினான்கு வயதுச் சிறுவனாகக் கண்ட பார்த்திபன் தான். அந்தச் சிறுவன் தலைமுதல் பாதம்வரைக்கும் வெண்துணி சுற்றி இறந்து கிடக்கும் காட்சி அவரையறியாமலேயே அவரது மனதில் விரியலாயிற்று

“இஞ்சே பார்த்தீ… தண்ணியாவது கொஞ்சம் குடியன். மகாத்மா காந்தி கூட மிளகு போட்டுத் தண்ணி குடிச்சுக்கொண்டுதான் உண்ணாவிரதம் இருந்தவர்…”

“அப்பிடியே டொக்டர்… அவர் கூடுத்தி ஒரு நாட்டுக்காரனை எதிர்த்துத்தான் போராடினவர். நாங்கள் உலகத்தையே எதிர்த்துப் போராட வேண்டியிருக்கு. தண்ணியக் குடி சு***யைக் குடியெண்டு சொல்லி என்னை அவமானப்படுத்தாத!”

“உனக்கு நான் புத்திமதி சொல்ல ஏலாது பார்த்தீ… உனக்கு எல்லாமே தெரியும். ஆண்டு அனுபவிச்சு பிள்ள குட்டியப் பெத்துப்போட்டுத்தான் காந்தி உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் எண்டு கிழட்டு வயசில வெளிக்கிட்டவர். அழிய வேண்டிய வயசே உனக்கு? நீ இருந்து செய்ய வேண்டிய போராட்ட வேலையள் இன்னும் கனக்கக் கிடக்கெல்லே…”

“மச்சான்… போராடுறது என்ர வேலையில்ல… அது என்ர குணம்!”

இந்த உரையாடல் நிகழ்ந்ததிலிருந்து ஒன்பதாவது நாள் காலை 10 மணி 48 நிமிடத்திற்கு, மருத்துவர் சிவகுமார் உண்ணாவிரத மேடையில் அசையாமல் கிடந்த திலீபனின் நாடித்துடிப்பைப் பரிசீலித்துவிட்டு, திலீபனின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். அப்போதும் ராகுலன் அந்த மேடையில் இருந்தார். அவரது கண்களிலிருந்து ஒரு சொட்டு நீரும் திலீபனின் உடலத்தின் மீது விழவில்லை. அந்தக் கணத்தில் அவர் கடுமையான ஆத்திரத்தில் இருந்தார். ‘எல்லோருமாகச் சேர்ந்து ஒருவனைக் கொன்றுவிட்டார்கள்’ என்று மனதிற்குள் கறுவியவாறே மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.

பூரணமாக இராணுவ உடைகள் அணிவிக்கப்பட்டு, லெப்டினன்ட் கேர்ணல் என்ற பட்டத்தோடு திலீபனின் உடல் யாழ்ப்பாணத்தின் கிராமங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில், பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பார்த்திபனுக்காக ராகுலன் காத்திருந்தார்.

3

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் துறையில் விரிவுரையாளராகப் பணியை ஏற்கும் போது, ராகுலனுக்கு வயது முப்பத்துநான்கு. அப்போது, திலீபனின் உடல் அங்கே வைக்கப்பட்டு முழுதாக எட்டு வருடங்களாகியிருந்தன. பணியை ஏற்றவுடன் அவர் நேராக திலீபனின் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குத்தான் சென்றார். மேற்படிப்புக்காக இலண்டனில் இருந்த அய்ந்து வருடங்களில், பலமுறை திலீபனின் உடலைப் பற்றி அவர் சிந்தித்திருக்கிறார். அதன் காரணமாகவே உடலத்தைப் பாதுகாத்து வைப்பதற்குரிய அதிநவீன தொழில்நுட்பங்களை அவர் ஆராய்ந்தார். இலண்டனுக்குக் கிளம்பவதற்கு முன்பும் இங்கே வந்து திலீபனின் உடலைப் பார்த்து, அவருடைய நேசத்துக்குரிய பையனிடம் விடைபெற்றுத்தான் சென்றார்.

கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த திலீபனின் உடலில், உண்மையில் பாரதூரமான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை. உடல் மேலும் கருமையேறி இருந்தது. உதடுகளின் ஓரங்கள் மெலிதாகக் கரைந்து பற்கள் கடல் சோழிகளைப் போன்றிருந்தன. உடலைப் பதப்படுத்தும் இரசாயனங்களால் உடல் சற்றே ஊதியிருந்தது. கைகளிலும் தொடைகளிலும் மட்டும் தசையை சில அங்குலங்களுக்குக் கீறியிருந்தார்கள். நீண்ட நேரமாகத் தனியராகவே நின்று அந்த உடலைப் பார்த்துக்கொண்டிருந்த ராகுலன் சற்றுச் சத்தமாகவே முணுமுணுத்தார்:

“நீ இப்ப என்ர பொறுப்பில பார்த்தீ…”

அன்று மாலையில் அவர் வீட்டுக்குத் திரும்பும் போது, அவரது மனைவி ஜனனி அவரைப் பார்த்தும் பார்க்காதது போலவே புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். இருவரும் அமெரிக்காவுக்கோ, கனடாவுக்கோ சென்று அங்கேயே குடியேறிவிட வேண்டும் என்ற ஆசை ஜனனிக்கு இருந்தது. ஆனால், ராகுலனுக்கோ வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்வதில் விருப்பமில்லாமலிருந்தது.

“என்ன உம்மிட லவ்வரப் பார்த்தாச்சோ?” என்று ஜனனியிடமிருந்து குரல் வந்தது.

“ம்” என்று சொல்லிவிட்டு ராகுலன் குளிக்கப் போய்விட்டார்.

திலீபனுடனான தன்னுடைய அனுபவங்களை ஆங்கிலத்தில் சிறு நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணம் ராகுலனுக்கு இருந்தது. அந்த முயற்சியை அவர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார். குளித்துவிட்டு வந்ததும், தேநீர் கோப்பையோடு மேசையின் முன்னால் அமர்ந்து, திலீபனைப் பற்றி ஏற்கனவே எழுதி வைத்திருந்த குறிப்புகளை எடுத்துப் பரிசீலிக்க ஆரம்பித்தார். அவருக்குப் பின்னாலிருந்து ஜனனியின் குரல் கேட்டது:

“கல்வெட்டு எழுதத் தொடங்கியாச்சே?”

ஜனனி எப்படிச் சீண்டினாலும், இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் ராகுலனுக்குக் கோபமே வருவதில்லை. ஜனனி எரிச்சலுறுவதில் நியாயம் இருக்கிறதென்றே அவர் நம்பினார். யுத்தம் நாலாபுறத்தாலும் நகரத்தைச் சூழ்ந்துகொண்டிருந்தது. விமானக் குண்டுவீச்சுகள் நகரத்தில் நிகழாத நாட்களேயில்லை. யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் மருத்துவராகக் கடமையிலிருந்த ஜனனி ஒரு நாளைக்கு அய்ம்பது நூறெனக் கோராமாகச் சிதைந்த உடல்களைப் பார்க்க வேண்டியிருந்தது. இதனால் ஜனனி உளச்சோர்வுக்கு ஆளாகி, சில சமயங்களில் பிரமை பிடித்தது போலவே கடமையிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார். இப்போது கர்ப்பகால விடுப்பில் இருப்பதால், அவரது கவலையெல்லாம் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றியே இருந்தது. “என்ர குஞ்சையும் நான் சிதறின உடம்பாக பார்க்க வேண்டி வருமோ?” என்று ஒவ்வொரு நாளுமே ராகுலனிடம் கேட்டு அச்சத்தில் உறைந்திருந்தார். 

யாழ்ப்பாண நகரத்தை நோக்கி இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் நகரத்தைப் பிடித்துவிடுவார்கள் என்றும் கதைகள் பரவிக்கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேறாதவாறு புலிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், கணிசமான மக்கள் புலிகளையே ஏய்த்துவிட்டுத் திருட்டுப் பாதைகள் வழியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள். தாங்களும் கொஞ்ச நாட்களுக்கு எங்கேயாவது போய்விடலாம் என்று ஜனனி சொல்லும் போதெல்லாம், புலிகள் ஒருபோதும் யாழ்ப்பாணத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்று ராகுலன் சொல்லி, அதற்கான காரணங்களையும் ஜனனிக்கு விளக்குவார். அது ஜனனியின் அழுகையில் முடிவுறும்.

ஆனால், ராகுலன் சொல்லிய காரணங்கள் எல்லாமே சத்தற்றவை என்பது சீக்கிரமே தெரிந்தது. 1995 -வது வருட அய்ப்பசி மாதத்தின் கடைசி நாட்களில், இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாண நகரத்தைக் கைப்பற்றுவதற்காகப் பெரும் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வெளியேறுவது என்ற முடிவைப் புலிகள் எடுத்தார்கள். ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களையும் அங்கிருந்து வெளியேறி வன்னிப் பெருநிலப் பரப்புக்குச் செல்லுமாறு புலிகள் கட்டளையிட்டார்கள். மேலே விமானங்கள் குண்டுகளை வீசிக்கொண்டிருக்க, கீழே புலிகளின் வாகனங்கள் இந்தக் கட்டளையை ஒலிபெருக்கிகளில் இடைவிடாது அறிவித்தவாறே சுற்றிக்கொண்டிருந்தன. 

இந்த அறிவித்தலைக் கேட்டபோது, ராகுலன் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் திலீபனோடு இருந்தார். சில நாட்களாகவே பல்கலைக்கழகம் மூடப்படிட்டிருக்கிறது. ராகுலன் மட்டும் திலீபனின் உடலைக் கவனிப்பதற்காக அங்கே வந்து போய்க்கொண்டிருந்தார். ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்களையும் வெளியேற்றுவது புலிகளின் நோக்கமல்ல என்றே ராகுலன் நினைத்தார். அது எப்படிச் சாத்தியம்? மருத்துவர்கள், மருத்துவனைப் பணியாளர்களாவது இங்கே இருக்க வேண்டுமல்லவா. படுத்த படுக்கையாகக் கிடக்கும் நோயாளிகளையும், போரில் காயமடைபவர்களையும் பாதுகாப்பது அவசியமல்லவா.

ஆனால், அன்று மதியம் புலிகளின் இரண்டு வாகனங்கள் மருத்துவ பீடத்திற்கு வந்த போதுதான், முழு யாழ்ப்பாணத்தையும் வன்னிக்கு நகர்த்தப் புலிகள் முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது ராகுலனுக்குப் புரிந்தது. வந்திருந்த புலிப் போராளிகளில் அவர்களது மருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்களில் சிலர் ராகுலனுக்கு ஏற்கனவே அறிமுகமுள்ளவர்கள் தான். ராகுலன் திலீபனின் இளமைக்கால நண்பர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். வந்தவர்களது திட்டம் திலீபனின் உடலைத் தங்களோடு வன்னிக்கு எடுத்துச் செல்வதே என்று ராகுலன் அறிந்தபோது, அவர் அதிர்ந்து போனார். ஆத்திரத்தால் அவரது நாக்குத் துடித்தது.

“தம்பியவை… பார்த்தீ தன்ர உடம்ப யூனிவர்ஸிட்டிக்குத்தான் தந்தவன். அது மாணவர்களின்ர சொத்து. நீங்கள் உங்கிட எண்ணத்துக்கு எடுக்கேலாது!”

“டொக்டர்… தயவு செய்து விளங்கிக்கொள்ளுங்கோ! நாளைக்கு இஞ்ச ஆமி வந்திருவான். அவன்ர கையில திலீபன் அண்ணையின்ர உடலம் சிக்கக் கூடாது எண்டு தலைவர் சொல்லிப் போட்டார்.”

“அத நான் பாத்துக்கொள்ளுறன் தம்பியவை. நான் கொழும்புக்கு கதைக்கிறன். யூனிவர்ஸிட்டிக்குள்ள ஆமி உள்ளிடாது.”

“அப்பிடி இல்ல டொக்டர்… வந்தாறுமூலை யூனிவர்ஸிட்டிக்குள்ள ஆமி பாய்ஞ்சு இருநூறு பேரைச் சுடயில்லையே…”

“இந்த உடம்பு இப்பயே எட்டு வருஷமாயிற்று. நீங்கள் வன்னிக்குக் கொண்டு போறதுக்கிடையில டீகொம்போஸ் ஆகிரும்…”

“அதுக்கான ஏற்பாடுகளோட தான் வந்திருக்கிறம் டொக்டர்… எங்கிட மருத்துவப் போராளிகள் திலீபன் அண்ணையின்ர உடலத்தைப் பத்திரமா வன்னிக்குக் கொண்டு வந்திருவினம்… நாங்கள் கெதியில யாழ்ப்பாணத்தைத் திரும்பிப் பிடிப்பம். அப்ப திலீபன் அண்ணையின்ர உடலத்த இஞ்ச கொண்டுவந்து உங்கிட கையில பத்திரமா ஒப்படைக்கிறது எங்கிட பொறுப்பு.”

‘கிழிச்சியள்’ என்று ராகுலன் மனதிற்குள் நினைத்துக்கொண்டார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நடுவில் கர்ப்பவதியான ஜனனி வேறு அவரது நினைவுக்கு வந்துகொண்டிருந்தார். எல்லோருமே வன்னிக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் தெரிந்துவிட்டது. அவரது ஞாபகத்தில் மயில் எலும்புக்கூடை எடுக்கத் தன்னைக் கூட்டிக்கொண்டு போன அந்தச் சிறுவன் வந்துகொண்டேயிருந்தான். அவன் முன்னே நிலவொளியில் நடக்க, பின்னே மயிலின் எலும்புக்கூடைச் சுமந்தவாறே அவர் நடந்துகொண்டிருந்தார். ராகுலன் அறைக்குள்ளே போய், மூடியிருந்த திலீபனின் இமையைத் திறந்து பார்த்தார். குழியாயிருந்த இடத்தில் சிறுவனின் கிறங்கிய கண் தெரிந்தது. அப்போதுதான் ராகுலன் அந்த முடிவை எடுத்தார். அவர் வெளியே வந்து புலிப் போராளிகளிடம் சொன்னார்:

“நானும் கூட வருவன். ஓமெண்டால் பார்த்தீயின்ர உடம்ப நீங்கள் எடுக்கலாம்.” 

இதை உறுதியான குரலில் அறிவித்துவிட்டு, ராகுலன் அறைக்குள் நுழைந்து திலீபனின் உடலுக்கு அருகிலேயே நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொண்டார். ஜனனியின் ஞாபகம் அவரைக் குழப்பிக்கொண்டிருந்தது. ஜனனியின் பெற்றோரும் வீட்டிலிருப்பதால், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று தன்னைத்தானே அவர் சமாதானப்படுத்திக்கொண்டார்.

புலிப் போராளிகள் வெளியே தொலைத் தொடர்புக் கருவிகளில் பேசிக்கொண்டிருப்பது தெளிவற்றுக் கேட்டது. சற்று நேரத்தில் ஒருவன் உள்ளே நுழைந்து ராகுலனிடம் சொன்னான்:

“நீங்களும் வரலாம் டொக்டர். அது எங்களுக்கும் நல்லதுதான். ஆனால், இதுவொரு இரகசிய நடவடிக்கை. நீங்கள் இரகசியத்தைப் பாதுகாப்பீங்கள் எண்டு நம்புறம். உங்கிட குடும்பத்துக்குக் கூடச் சொல்லக்கூடாது. நாங்கள் உடனேயே வெளிக்கிடோணும்.” 

அங்கே ஆலோசிக்க நேரமிருக்கவில்லை. உடலத்தை அங்கிருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோதும், அதை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பதற்கான இரசாயனங்களை எடுத்துப் போராளிகளிடம் கொடுத்தபோதும், ஜனனியைக் குறித்த சிந்தனையே ராகுலனை வதைத்துக்கொண்டிருந்தது.

நான் புலிகளோடு சேர்ந்து வன்னிக்குப் போவதை ஜனனி ஒருபோதும் விரும்பமாட்டார். நான் எதற்காகப் போகிறேன் என்பதையும் அவரிடம் சொல்ல முடியாது. எதற்கும் நான் இப்போது உடலத்தோடு வன்னிக்குப் போய்விடலாம். இவர்களை நம்பி இதை ஒப்படைக்கவே முடியாது. புலிகளின் கற்றுக்குட்டி மருத்துவக் குழுவுக்கு உடலை அழியாமல் காப்பாற்றும் வல்லமை இல்லை. களத்தில் காயமடைந்த தோழனைக் கொன்றுவிட்டுப் பின்வாங்கும் வழக்கமுள்ளவர்கள், இந்த உடலையா பத்திரமாக வைத்திருக்கப்போகிறார்கள் என்றெல்லாம் குறுக்குமறுக்காக ராகுலனின் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

அவர் திலீபனின் உடலோடு கடலைக் கடக்கப் புலிகளின் படகில் ஏறியபோது, கரையில் நின்றிருந்த அவருக்குத் தெரிந்த போராளியொருவனிடம் ஒரு தகவலைச் சொன்னார்:

“தம்பி உங்களுக்கு என்ர வீடு தெரியுமெல்லே… பிரவுண் ரோட்டில போய் பெரியாஸ்பத்திரி டொக்டர் ஜனனியின்ர வீடெண்டு கேட்டாலே காட்டுவினம். நான் வன்னிக்குப் போயிட்டன் எண்டும், அவவையும் வன்னிக்கு வரச் சொல்லியும் சொல்லிவிடுங்க. அவ கர்ப்பவதி தம்பி… உடனேயே தகவல் சொல்லுறியளா?”

“நீங்கள் கவலைப்படாதீங்க டொக்டர். நான் இப்பயே யாழ்ப்பாணத்தில நிக்கிற போராளியளுக்கு வோக்கியில தகவல் சொல்லுறன். நீங்கள் முன்னால போங்கோ…பின்னாலேயே ஜனனி டொக்டர அனுப்பிவிடுறம்.”

பேய்மழை பெய்த அன்றைய இரவில்தான், அந்த மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. இலட்சக்கணக்கான யாழ்ப்பாண மக்கள் தங்களது வீடுகளையும், உடைமைகளையும், முதியவர்களையும் கைவிட்டு, உப்புநீரைக் கடந்து வன்னிப் பெருநிலப் பரப்புக்குச் சென்றார்கள். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் பிறகு எப்போதும் அந்நிலத்தை விட்டு நீங்கவேயில்லை.

4

திலீபனின் உடல் மிக இரகசியமாக வன்னிக்குக் கொண்டுவரப்பட்டதைப் புலிகளின் முக்கியமான உறுப்பினர்களைத் தவிர அறிந்த ஒரேயொரு நபர் மருத்துவர் ராகுலன்தான். எனவே தன்மீது புலிகள் எப்போதும் ஒரு கண்ணை வைத்திருப்பார்கள் என்பது ராகுலனுக்கும் தெரியும். அவர் எங்கு சென்றாலும் புலி நிழல் தன்னைத் தொடர்ந்துவருவதை அவர் உணர்ந்திருக்கிறார். இதனால் அவர் ஆத்திரமேதும் அடையவில்லை. அது அவர்களின் கடமை, அவர்களின் குணம் என்பதை ராகுலன் தெரிந்தே வைத்திருக்கிறார்.

வன்னிக்குக் கொண்டுவரப்பட உடலை கிளிநொச்சியிலிருந்த புலிகளின் மருத்துவ முகாமில்தான் இரகசியமாக மறைத்து வைத்தார்கள். அந்த முகாமுக்குப் பக்கத்திலேயே ராகுலன் தங்குவதற்கு ஒரு சிறிய வீட்டையும் புலிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். ராகுலன் மருத்துவ முகாமுக்குச் சென்று, திலீபனின் உடலைப் பாதுகாப்பதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்தார். வேறு எவரும் அந்த உடலத்தைத் தொடுவதற்கு ராகுலன் அனுமதிக்கவேயில்லை. 

ஜனனி வன்னிக்கு வரவேயில்லை. அவரும் பெற்றோரும் யாழ்ப்பாண நகரத்திலிருந்து வெளியேறி, தென்மராட்சியில் எங்கேயோ தங்கியிருக்கிறார்கள் என்ற தகவலும், பின்னர் அவர்கள் எப்படியோ கொழும்புக்குச் சென்றுவிட்டார்கள் என்ற தகவலுமே தென்மராட்சியிலிருந்து வன்னிக்கு வந்தவர்கள் மூலமாக ராகுலனுக்குக் கிடைத்தன. அவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கட்டும் என்று ராகுலன் நினைத்துக்கொண்டார். ஜனனி கொழும்பு மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அங்கே அவருக்கு ஏராளமான நண்பர்களும் உறவினர்களுமிருக்கிறார்கள். ஜனனியின் நண்பியான தர்ஷினியின் முகவரி ராகுலனது ஞாபகத்திலிருந்தது. ஒரு கடிதத்தை எழுதி, அந்த முகவரிக்கு ராகுலன் அனுப்பிவைத்தார். ஒரு முக்கியமான மருத்துவக் கடமையில் தான் ஈடுபட்டிருப்பதாக மட்டுமே அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்திற்குப் பதில் ஏதும் வராததால், தனக்கு ஞாபகத்திலுள்ள கொழும்பு விலாசங்களுக்கு எல்லாம் ராகுலன் கடிதம் எழுதிப் போட்டார். அவற்றுக்கும் பதில்கள் கிடைக்கவில்லை. 

அவர் அனுப்பிய எல்லாக் கடிதங்களும், அவருக்கு அனுப்பப்பட்ட எல்லாக் கடிதங்களும் புலிகளின் உளவுத்துறையால் கைப்பற்றி அழிக்கப்பட்டன என்று பல வருடங்கள் கழித்துத்தான் ராகுலன் அறிந்துகொண்டார். வன்னிக்கு வரும்போது, அவரது மனைவிக்குப் போராளி ஒருவன் மூலம் அனுப்பிவைத்த தகவல் கூட மனைவியிடம் சென்று சேர்ந்திருக்காது என்று அவர் ஊகித்தார்.

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடுமளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது. நீண்ட காலங்களிற்குப் பின்பு விசுவமடுவில் ராகுலனைச் சந்தித்த நோர்வே நாட்டைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்க மருத்துவர் ஒருவர் சொன்னார்:

“டொக்டர்… காணாமற்போனவர்களது பட்டியலில் மருத்துவர் சேக்கிழார் ராகுலன் என்ற உங்களது பெயரும் இருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட முகம் எரியுண்ட உடல் உங்களுடையது என்றே எல்லோராலும் நம்பப்படுகிறது”. 

இதற்குச் சில நாட்கள் கழித்து ஜனனியும் குழந்தையும் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி புலிகள் மூலமாக ராகுலனுக்குக் கிடைத்தது. அதையிட்டும் ராகுலன் மகிழ்ச்சியடையவே செய்தார். போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. இவையெல்லாம் முடியும் நாளில், நான் அவர்களைச் சந்திப்பேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

திலீபனின் உடலைக் கிளிநொச்சியில் பாதுகாத்துவைத்த அடுத்த வருடமே, அந்த நகரமும் இராணுவத்திடம் வீழ்ந்தது. ராகுலன் திலீபனின் உடலோடு, முத்தையன்கட்டிலிருந்த புலிகளின் மருத்துவ முகாமுக்குச் சென்று, அங்கே உடலைப் பாதுகாத்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்தார். புலிகளுக்கு ராகுலனின் பணியில் முழுத் திருப்தியேயிருந்தது. தலைவரின் நேரடி உத்தரவு எனச் சொல்லி, மாதாமாதம் ஒரு கணிசமான தொகையை ராகுலனுக்குச் சம்பளமாகக் கொடுத்தார்கள். ராகுலன் அந்தத் தொகையில் கால்வாசியைக் கூடச் செலவு செய்ய மாட்டார். எஞ்சியிருக்கும் பணத்திற்கு மருந்துகளை வாங்கி, ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கினார்.

புலிகளின் மருத்துவக் கட்டமைப்பைத் தான் மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டதாகக் கூடப் பல தடவைகள் ராகுலன் நினைக்க வேண்டியிருந்தது. திறமையான பல மருத்துவர்கள் புலிகளின் அணியிலிருந்தார்கள். மருத்துவ முகாம் கிட்டத்தட்ட ஒரு வெளிநாட்டு மருத்துவமனைக்குரிய உபகரண வசதிகளுடனிருந்தது. திலீபனின் உடலைப் பாதுகாப்பதற்காக ராகுலன் கேட்ட இரசாயனங்களையும், மருந்துகளையும் புலிகள் எந்தக் குழப்பமுமின்றி வழங்கினார்கள்.

இரண்டு வருடங்கள் கழித்து, திலீபனின் நினைவு நாளன்று ‘ஓயாத அலைகள்-2’ என்ற தாக்குதல் நடவடிக்கையைப் புலிகள் ஆரம்பித்து, மூன்றே நாட்களில் கிளிநொச்சியைத் திரும்பவும் கைப்பற்றினார்கள். திலீபனின் உடலோடு ராகுலன் மறுபடியும் கிளிநொச்சி மருத்துவ முகாமுக்கு வந்து சேர்ந்தார். சில வருட வன்னி வாழ்க்கையில் ராகுலனே மோசமான உடல் உபாதைகளில் சிக்கிக்கொண்டார். ஆனாலும், அவர் ஒருபோதும் மனம் சோர்ந்தாரில்லை. திலீபனின் உடலை ஓர் அற்புதச் செடியைப் போன்று கவனித்தார். ஒவ்வொருநாள் காலையிலும் அதை மலர வைத்தார். மற்றைய வேளைகளில் மருத்துவமனைகளுக்குச் சென்று, நோயாளிகளைப் பராமரித்தார்.

சமாதான காலம் வந்தபோது, புலிகள் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்தியிருந்தார்கள். வன்னிக்கான பாதைகள் திறக்கப்பட்டன. அப்போது கூட வன்னியிலிருந்து வெளியேற ராகுலன் யோசிக்கவில்லை. அவருக்கு அங்கேதான் கடமையிருந்தது.

கிளிநொச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டியெழுப்பி, அங்கே மருத்துவ பீடத்தில் திலீபனின் உடலைப் பாதுகாத்து வைப்பதற்குப் புலிகளின் தலைமை திட்டமிட்டிருப்பதாக மருத்துவக்குழுப் போராளிகள் மூலமாக ராகுலன் அறிந்தார். இந்தச் சமாதான காலத்தில் அதற்கான சாத்தியமும் நிறையவே இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால், அங்கே திலீபனின் உடலைப் பாதுகாத்துவைக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மனைவியிடமும் குழந்தையிடமும் போய்விடலாம் என்று ராகுலனுக்கு மனதிற்குள் ஓர் எண்ணமிருக்கவும் செய்தது. சமாதான காலத்தில் மனைவியிடமும் குழந்தையிடமும் தொலைபேசியில் பேசவும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இங்கே பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கவிருப்பதாகச் சொல்லி, அதை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு வந்துவிடுவதாகச் சொன்னார். ஒரு சொல் கூட அவர் திலீபனைப் பற்றிச் சொன்னாரில்லை. ‘நீங்கள் பொறுப்பற்றவர், வெற்றுப் பகட்டுக்காரர்’ என்று ஜனனி சொல்லவும் தவறவில்லை. ராகுலன் முடிந்தவரை ஜனனியைச் சமாதானப்படுத்தி, நம்பிக்கையூட்டினார். இனித்தான் மிகத் துன்பமான, பேரழிவான, ஊழியான காலத்தை எல்லோருமே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ராகுலன் அப்போது உணரவில்லை.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிக்கப்பட்டு, மீண்டும் உக்கிரமாகப் போர் ஆரம்பித்த போது, புலிகளின் தளங்கள், முகாம்கள் குறித்து எல்லாத் தகவல்களும் துல்லியமாக இலங்கை விமானப்படையினரிடம் இருந்திருக்க வேண்டும். அவர்கள் குறிவைத்து இலக்குகளின் மீது வெற்றிகரமாகத் தொன் கணக்கில் குண்டுகளை இறக்கினார்கள். அப்படியான ஒரு தாக்குதலில்தான் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனும் கொல்லப்பட்டார்.

காலையில், திலீபனின் உடலை மீள் பதப்படுத்துவதற்கான வேலைகளை முடித்துவிட்டு, மருத்துவ முகாமை விட்டு ராகுலன் வெளியேறிய இரண்டாவது நிமிடத்தில், மருத்துவ முகாம் மீது இரண்டு போர் விமானங்கள் குத்தி இறங்கி ஏறின. முகாமிலிருந்து சிதறிய எச்சங்கள் பறந்து வந்து ராகுலனைச் சுற்றி வீழ்ந்தன. ராகுலனும் தன்னையறியாமலேயே நிலத்தில் வீழ்ந்துவிட்டார். எனினும் சுதாகரித்துக்கொண்டு எழுந்து, மருத்துவ முகாமை நோக்கி ஓடினார். அந்த முகாமிலிருந்த அத்தனை பேரும் சிதறிக் கிடந்தார்கள். வலுவாகக் கட்டி எழும்பப்பட்டிருந்த நான்கு நெருக்கமான இரகசியச் சுவர்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி சிதறுண்டு, வெளிறிய நட்சத்திரங்களைப் போன்ற துகள்கள் திலீபனின் உடலை மூடியிருந்தன. 

கிளிநொச்சி மறுபடியும் இராணுவத்தினரிடம் வீழ்ந்தபோது, திலீபனின் உடலையும் எடுத்துக்கொண்டு ராகுலன் கிளம்பினார். அவர் புலிகளின் மருத்துவ அணியுடன் ஒவ்வொரு ஊராக நகர நகர அந்த ஊர்களும் இராணுவத்திடம் வீழ்ந்துகொண்டேயிருந்தன. அவை மிகக் கடுமையான காலங்களாகின. பஞ்சமும், தீயும், வெடி முழக்கமும், அழுகுரல்களும், இரத்தமும், சாவும் எல்லோரையுமே பைத்தியங்களாக்கிக்கொண்டிருந்தன. என்றாலும் அந்த மக்கள் கூட்டம் கிழக்குக் கடல் நோக்கி நகர்ந்துகொண்டேயிருந்தது. அவர்களுடன் திலீபனின் உடலும் நகர்ந்தவாறேயிருந்தது. 

இனியும் திலீபனின் உடலைப் பாதுகாக்க முடியாது என்ற நிலை தோன்றிவிட்டது. அதற்குத் தேவையான இரசாயனங்களும் மருந்துகளும் கிடைப்பதாகயில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கே மருந்தில்லாத போது, உயிரற்ற உடலுக்காக மருந்துகளைச் செலவழிப்பது நீதியற்றது என்றே ராகுலனுக்குத் தோன்றிற்று. எல்லாமே கையை விட்டுப் போய்விட்டன. திலீபனின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டிய தருணம் இதுவென்றே அவர் நினைத்தார். அதை இப்போதுகூடச் செய்யாவிட்டால், ஓடும் வழியில் துர்நாற்றமடிக்கும் அழுகிய மூட்டையாக அதைக் கைவிட்டுவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார். இந்துக் கல்லூரியில் அவர் முதன் முதலாகப் பார்த்த கிறங்கிய கண்களும் அடக்கத்தையே கேட்டுக்கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றிற்று.

புலிகளின் மருத்துவ அணிக்கும் நிலைமை தெளிவாகப் புரிந்தது. அவர்களும் திலீபனின் உடலை அடக்கம் செய்வதே நல்லது என்று நினைத்தார்கள். ஆனால், தலைமையிடமிருந்து அதற்குக் கண்டிப்பான மறுப்புக் கிடைத்தது. எப்பாடு பட்டாவது திலீபனின் உடலைப் பாதுகாக்க வேண்டுமெனத் தலைமையிடமிருந்து உத்தரவு வந்தது.

நல்லூர் முருகன் கோயிலில், திலீபன் ஆற்றிய கடைசி உரையை ராகுலன் நினைத்துக்கொண்டார். பேசுவதற்கான சக்தியை முழுமையாக இழந்திருந்த திலீபன் மெல்லிய குரலில் முனகினார்: “நேற்றுத் தலைவர் என்னை வந்து பார்க்கும் போது ஒன்றைச் சொன்னார்… திலீபன் நீ முன்னாலே போ, நான் பின்னாலே வருகிறேன் !”

கிடைக்கும் இரசாயனங்களையும், மருந்துகளையும் பயன்படுத்தி, திலீபனின் உடலைப் பாதுகாக்க ராகுலன் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அது சிறுகச் சிறுக அழிந்துகொண்டிருக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. உயிரை வதைத்து மரணமுற்றவனின் உடலும் இப்படி வதைபட்டு, நாற்றம் பெருகித் தன் கண்முன்னே காய்ந்த இறைச்சியாகப் புழுத்துக்கொண்டிருப்பதை அவரால் தாங்கவே முடியவில்லை. ஆனாலும், திலீபனின் உடல் நகர்ந்துகொண்டேயிருந்தது. உடலை அடக்கம் செய்துவிடுவதே நல்லது எனச் சொல்லியவாறே ராகுலனும் கூடவே போய்க்கொண்டிருந்தார்.

இறுதியாக, 2009-வது வருடத்தின் சித்திரை மாதத்தில், திலீபனின் உடலை அடக்கம் செய்வதற்குத் தலைமையிடமிருந்து உத்தரவு கிடைத்தது. மிக இரகசியமான முறையில், இரகசியமான இடத்தில், இராணுவ மரியாதைகளோடு திலீபன் புதைக்கப்பட்டார். ஓர் எலும்புக்கூட்டுக்கு இராணுவச் சீருடை போர்த்தப்பட்டிருந்ததை ராகுலன் பார்த்தவாறே நின்றிருந்தார். அவரது கண்களிலிருந்து இப்போதும் ஒரு சொட்டுக் கண்ணீர் விழவில்லை. அவரது ஆன்மா உணர்ச்சியற்றுக் கடினமாகியிருந்தது. ‘யுத்தம் முடிந்தது’ என்று அவர் உதடுகளுக்குள் முணுமுணுத்துக்கொண்டார்.

இதற்கு ஒரு மாதம் கழித்து, நந்திக்கடலைக் கடந்த மக்களோடு ராகுலனும் கலந்து சென்று இராணுவத்திடம் சரணடைந்தார். சில நாட்கள் கழித்து, அவரை வவுனியா தடுப்பு முகாமில் எதேச்சையாகப் பார்த்த ஒரு நடுத்தர வயது இராணுவ அதிகாரி “உன்னைப் பார்த்தால் பிரபாகரன் மாதிரி இருக்கிறதே…அந்த ஆளைத்தான் நாங்கள் முடித்துவிட்டோமே…இங்கே எப்படி?” என்று நக்கலாகப் பேசியபடியே அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றான்.

தானொரு மருத்துவர் என்று ராகுலன் சொன்னதும், அதிகாரியின் விசாரணைக் கோணமே மாறிவிட்டது. ஓரளவு மரியாதையுடன் ஆனால், துருவித் துருவி ராகுலனிடம் அவன் விசாரணை செய்தான். ராகுலன் இத்தகைய விசாரணைகளுக்குப் பழக்கப்படாதவர். அவர் திலீபனின் உடல் குறித்த உண்மையை எக்காரணத்தாலும் வெளிப்படுத்தக்கூடாது என்ற உறுதியோடுதான் இருந்தார். ஆனாலும், அந்த அதிகாரி குறுக்கு விசாரணையில் நிபுணனாக இருந்தான். “டொக்டர்… நீங்கள் இலண்டனில் மருத்துவம் கற்றது போலவே, நானும் இலண்டனில் தான் புலனாய்வுத் துறையில் உயர்ந்த பயிற்சியைப் பெற்றிருக்கிறேன்” என்று சொல்லியவாறே, சுத்தமான கண்ணாடிக் கோப்பையில் குளிர்ந்த நீரை நிரப்பி ராகுலனிடம் கொடுத்தான். கடைசியில் ராகுலன் சிலந்திவலை போன்று பின்னப்பட்டிருந்த விசாரணை வளையத்திற்கு நடுவே திலீபனின் உடலத்தை எடுத்து வைக்க வேண்டியதாகப் போய்விட்டது. 

ராகுலன் சொன்னதைக் கேட்டதும், அந்த அதிகாரியே ஆடிப்போய்விட்டான். “திலீபனின் உடல் எங்கே புதைக்கப்பட்டிருக்கிறது டொக்டர்?” என்று இராணுவ அதிகாரி கேட்கவும், “முள்ளிவாய்க்கால்” என்று ராகுலன் சொல்லிவிட்டார். அது அவர் எதிர்பாராமலேயே அவரது வாயிலிருந்து உருண்ட வார்த்தை. 

அதைக் கேட்டதும் அந்த அதிகாரி ஒரேயடியாக உற்சாகத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டான். திலீபனின் உடல் இருக்கிறதா இல்லையா என்பது கூட இதுவரை அரசாங்கத்திற்குத் தெரியாமலேயேயிருந்தது. அந்த உடல் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்ததும், அந்த உடலைக் கைப்பற்றிவிட அதிகாரி துடித்துக்கொண்டிருந்தான். திலீபனது ஒவ்வொரு எலும்பும் அவர்களது வெற்றிக் கேடயத்தில் பொறிக்கப்படும் ஒவ்வொரு நட்சத்திரம்.

உடனடியாகவே அதிகாரி ஓர் இராணுவ அணியை ராகுலனுடன் முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பிவைத்தான். அது ராகுலன் எதிர்பாராதது. இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துபோன ஒரு மனிதனின் உடலை, பதினான்கு வருடங்கள் வன்னியின் வனாந்தரம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஓர் உடலை இவர்கள் மீளத் தோண்டி எடுப்பார்கள் என்றெல்லாம் அவர் நினைத்திருக்கவில்லை.

செல்லும் வழியெல்லாம் ஒன்றை மட்டுமே ராகுலன் திரும்பத் திரும்ப மனதிற்குள் உறுதியாகச் சொல்லியவாறே சென்றார். நான் ஒருபோதும் இவர்களிடம் பார்த்திபனின் உடலைக் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. இத்தனை வருட அலைச்சலுக்குப் பிறகு பூமிக்குள் அமைதியடைந்திருக்கும் அவனை மீண்டும் ஒருபோதும் வெளியே கொண்டுவரக்கூடாது. 

ராகுலனது மூளையில் வேறொரு திட்டம் உருவாகியது. வயலில் எள்ளை விதைத்தது போலவே முள்ளிவாய்க்காலில் எல்லா இடங்களிலும் மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே ஏதாவதொரு இடத்தைக் காட்டி, அங்கேதான் திலீபனைப் புதைத்தார்கள் எனச் சொல்லிவிட வேண்டியதுதான். நிச்சயமாக ஏதாவதொரு உடல் கிடைக்கும். ஏதாவது பிசகு நேர்ந்தால், நினைவுத் தடுமாற்றம் எனச் சாக்குபோக்குச் சொல்லிவிட்டு, இன்னொரு இடத்தைக் காட்ட வேண்டியதுதான்.

அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்து சேரும்போது மாலை நேரமாகிவிட்டது. அந்த நிலத்தில் இராணுவத்தினர் மட்டுமே நின்றிருந்தார்கள். அலைகள் பேரிரைச்சலோடு கரைக்கு ஏறிக்கொண்டிருந்தன. அங்கே ஓர் இடத்தைக் காட்டி “இங்கேதான்” என்றார் ராகுலன். இராணுவத்தினர் மிகுந்த உற்சாகத்தோடு அந்த இடத்தை மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார்கள். உள்ளே என்ன இருக்கப் போகிறது என்ற பதற்றத்தோடு ராகுலன் காத்திருந்தார்.

அதிக தூரம் தோண்ட வேண்டியிருக்கவில்லை. இரண்டடி தோண்டியதுமே சில எலும்புகள் கிடைத்தன. இராணுவத்தினர் ஆளுக்கொரு எலும்பை மகிழ்ச்சியுடன் எடுத்துப் பார்த்தார்கள். ராகுலனும் கண்களை விரித்து அந்த எலும்புகளைக் கூர்ந்து கவனித்தார். அவரது கண்களிலிருந்து நீர் உருண்டு கொழுத்த கன்னங்களில் இறங்கியது. அதைக் கவனித்தவாறே, ஓர் இளநிலை அதிகாரி தொலைத்தொடர்புக் கருவியில் வவுனியா இராணுவ மையத்திற்குப் பேசினான்:

“நாங்கள் இப்போது சில எலும்புகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். ஆனால், மிகச் சிறிய எலும்புகளாகயிருக்கின்றன. அவன் பட்டினி கிடந்து செத்ததாலும், நீண்ட நாட்களாகிவிட்டதாலும் அவனுடைய எலும்புகள் சிறுத்துவிட்டன என்றே நினைக்கிறேன்.”

அப்போதுதான் மருத்துவர் ராகுலன் தனது கனத்த சரீரத்தை அந்தக் கடற்கரையில் உட்கார்த்திக்கொண்டு, மணலை அள்ளித் தலையில் போட்டவாறே குழறி அழத் தொடங்கினார். இராணுவத்தினரின் கைகளிலிருந்தவை மயில் பறவையொன்றின் சிதைந்த பாகங்கள் என்பதை அவர் கண்டுபிடித்திருந்தார்.

(உயிர்மை – சனவரி 2023 இதழில் வெளியானது)

 

https://www.shobasakthi.com/shobasakthi/2023/02/14/மெய்யெழுத்து/?fbclid=IwAR2RDWpWcjyrMGYeFDBo85HNZcqzTAQde-b_1b6yTyfqX6vIDad7M8C7qv8

பல்லிராஜா -  ஷோபாசக்தி

1 month 3 weeks ago
பல்லிராஜா

மோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்மாசம்புத்தஸ்ஸ! நான், சாக்கியமுனியும் ததாகதருமான சம்புத்தர் அருளிய தம்மம் வணங்கி; இக்காலத்தில் இலங்கைத் தீவில் பெயர் பெற்றவரும், தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கொடிய சித்திரவதைக் கூடத்திற்குள் இரகசியமாக வீழ்த்தப்பட்டவரும், தற்போது அய்ம்பத்தியிரண்டு கனிந்த வயதுகள் நிரம்பப் பெற்றவருமான சீவலி பால தேரரின் கதையைக் கூறத் தொடங்குகிறேன்!

ஒரு தெருநாயே இலகுவாக வாயில் கவ்வி இழுத்துச் செல்லக் கூடியளவுக்குத் தான் சீவலி தேரரின் உடலிலுள்ள மொத்த எலும்புகளும் மாமிசமும் இருக்கும். கடுமையான நீண்ட உபவாசங்களாலும், மற்றைய தினங்களில் ஒருவேளை மட்டுமே உள்ளங்கையளவு உண்ணும் வழக்கத்தாலும் தேரரின் உடல் வற்றிக் கிடக்கிறது. இலங்கையரின் சராசரி உயரத்தை காட்டிலும் குறைந்தது ஓரடி அளவுக்காவது தேரரது சரீரம் உயரமாகயிருப்பதால்; சீவர துறவாடை தரித்து, மிதியடிகள் தீண்டா வெற்றுப் பாதங்களால் அவர் நடந்து வரும்போது, ஒரு மஞ்சள் பல்லியைப் போலத்தான் தோற்றமளிக்கிறார். ஆனாலும், அவரது உடல்வலு நம்ப முடியாதளவுக்கு அபரிதமானது என்பதற்கு, அவர் தனது வலப்புறத் தோளில் சுமந்துவரும் சம்புத்தரின் மூன்றடி உயரமான வெண்ணிறக் கற்சிலையே பூரண சாட்சியமாகும்.

கொத்திமலையை நோக்கி, சம்புத்தரின் சிலையைச் சுமந்தவாறே, சீவலி தேரர் தன்னந்தனியாகவே நடந்து வந்துகொண்டிருந்தார். காலையில் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டவர், உச்சி வெயிலில் குளித்து வந்தாலும் சிறிதும் களைப்பு இல்லாதவராகவே காணப்பட்டார். தாகம் அவரை வாட்டியது தான். அவரது இடப்புறத் தோளில் தொங்கும் காவிநிறத் துணிப் பையில் தண்ணீர்க் குடுவையும் வடிகட்டியும் உள்ளன. ஆனாலும், கொத்திமலையை அடையும்வரை ஆகாரம், நீர் எதுவுமே உட்கொள்ளக் கூடாது என்றொரு விரதத்தை சீவலி தேரர் வரித்திருந்தார்.

தேரரின் பயணப் பாதையில் எதிர்ப்பட்ட இராணுவ அதிகாரிகளும், சிப்பாய்களும் தேரரை வணங்கி “ஹாமத்துருவெனே! எங்களது வண்டியில் ஏறி அமருங்கள்” என்று மன்றாட்டமாக அழைத்தபோதும், உணர்ச்சியற்றதும் உதடுகள் பிரியாததுமான புன்னகையுடன் அவர்களது வேண்டுதல்களை நிராகரித்துவிட்டு, தன்னுடைய பித்தவெடிப்பேறிய பாதங்களை எட்டிப்போட்டு சீவலி தேரர் நடந்தே சென்றார்.
அப்போது நேரம் மாலை நான்கு மணியாகிவிட்டது. தூரத்தே கொத்திமலை உச்சியிலிருக்கும் கைக்கல்லும் சீவலி தேரரின் கண்களுக்குத் தெரியலாயிற்று. சூரியன் படுவதற்குள் தோளிலிருக்கும் சம்புத்தரின் சிலையை இறங்கி வைத்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் தேரர் இருந்ததால், எலும்பு துருத்திக்கொண்டிருக்கும் தன்னுடைய கொக்குப் பாதங்களை இன்னும் வேகமாக முடுக்கிவிட்டார்.

பெயர் தான் மலையே தவிர, உண்மையிலேயே கொத்திமலை ஒரு மொட்டைப் பாறை தான். அங்கே செங்குத்தாக ஆறடி உயரத்திற்கு எழுந்து நிற்கும் கல்லையே கிராமத்தினர் கைக்கல் என்றழைக்கிறார்கள். இந்த மொட்டைப் பாறைக்குக் கீழேயிருக்கும் பசுமையான சமவெளியில் ஒருகாலத்தில் முந்நூறு குடும்பங்களுக்குக் குறையாமல் வசித்தார்கள். இப்போது நாற்பது குடும்பங்கள்தான் இங்கே எஞ்சியுள்ளன. போர்க் காலத்தில் பெருமளவு கிராமவாசிகள் படகுகளில் இந்தியாவுக்குப் போய்விட்டார்கள். இராமேஸ்வரத்தையொட்டியுள்ள மண்டபம் அகதி முகாமில் ‘கொத்தி செட்’ என்றொரு தனிப்பகுதியே உள்ளது.

கொத்திமலைக் கிராமத்தின் எல்லையில் நுழைந்து, ஒற்றையாளாக சம்புத்தர் சிலையோடு வந்துகொண்டிருந்த தேரரை முதலில் ஒரு மூதாட்டிதான் பார்த்தார். சில நிமிடங்கள் கழித்து, ஆதிவைரவர் கோயிலின் சிறிய மணி ஒலித்தது. அதற்கடுத்த நிமிடத்தில் வேறெங்கிருந்தோ காண்டா மணியொலிக்கத் தொடங்கியது. இரண்டு மணிகளும் இடையறாது ஒலித்துக்கொண்டிருக்க, சீவலி தேரர் கொத்திமலையை நோக்கி இப்போது மெதுவாக ஓடவே ஆரம்பித்துவிட்டார். வயல்களிலும், தோட்டங்களிலும் வேலையாகயிருந்த கிராமத்து மக்கள் மொட்டைப் பாறையை நெருங்குவதற்கு முன்பாகவே, சீவலி பால தேரர் அங்கே ஏறிச் சென்று; நிமிர்ந்து நின்ற கைக்கல்லின் தட்டையான உச்சியைப் பீடமாக்கி, அங்கே சம்புத்தரின் சிலையை வைத்துவிட்டார். அந்தப் பீடத்திற்குக் கீழாக, கைக்கல்லில் ஆழமாகப் பதிந்து குழிந்துபோன அய்ந்து கைவிரல்களின் தடங்களிருந்தன. ஒவ்வொரு விரலும் ஒரு முழுப் பனங்கிழங்கின் நீளத்திலிருந்தது.

சீவலி தேரரின் தவறாத கணக்குப்படி, இது அவர் நிறுவியிருக்கும் இருபத்தியிரண்டாவது சம்புத்த சிலையாகும். கொத்திமலையைக் குறித்து ஸ்ரீ சுபூதி தேரரிடமிருந்து அறிந்த கணத்திலேயே, இருபத்தியிரண்டாவது சிலையை அங்கேதான் நிறுவுவது என்று சீவலி தேரர் முடிவெடுத்திருந்தார். ஆனால், இந்தக் காரியத்தில் சீவலி தேரரின் வழிமுறை ஸ்ரீ சுபூதி தேரரின் வழிமுறையிலிருந்து வேறானது. ஸ்ரீ சுபூதி தேரரின் முரட்டுத்தனத்தையும், அடாவடிப் பேச்சையும் சீவலி தேரர் உண்மையில் வெறுக்கவே செய்தார். ஸ்ரீ சுபூதி தேரரால் அன்புநெறிக்கும் தம்மத்துக்கும் இகழ் நேர்கிறது என்பதுவே சீவலி தேரின் எண்ணமாகயிருக்கிறது.

கைக்கல்லின் மீது திடீரெனத் தோன்றிய சம்புத்தர் சிலையை நோக்கிக் கிராமத்துச் சனங்கள் ஓரிருவராகக் கூட ஆரம்பித்து, பத்து நிமிடங்களிலேயே முழுக் கிராமமும் மொட்டைப் பாறைக்கு வந்து சேர்ந்துவிட்டது. சம்புத்தரின் சிலைக்குக் கீழே, மொட்டைப் பாறையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த சீவலி தேரர் கிராம மக்களைத் தன்னுடைய சாந்தமானதும் அடக்கமானதுமான கண்களால் நோக்கினார். அவருடைய வாயில் எஞ்சியிருந்த ஒருசில பற்களால் முறுவலித்தவாறே, அவர் கிராமவாசிகளிடம் பேசத் தொடங்கினார்:

“நம்முடைய சகோதர சகோதரிகளுக்குப் புத்த பெருமானின் அருளால் நிறைவான ஆசிகளைத் தருகிறேன். இந்தப் புனிதமான கல்லில் சம்புத்தரை ஏற்றி வைத்திருப்பதால், இப்போதிலிருந்து நற்காரியங்களும், அதிர்ஷ்டங்களும், அமைதியும், சமாதானமும் மட்டுமே மஹா புத்தரின் பெருங்கருணையால் உங்களைச் சூழ்ந்திருக்கும்…”

சீவலி தேரரை இடைமறித்து ஒரு கிராமவாசி தமிழில் ஏதோ சொன்னார். தேரருக்குத் தமிழ் மொழியில் ஒரேயொரு வார்த்தைதான் தெரியும். ஆனால், அந்த வார்த்தைக்குக் கூட என்ன பொருளென்று அவர் அறியமாட்டார். அந்த வார்த்தையைக் கடந்த முப்பது வருடங்களாக அவர் நினைக்காத நாளில்லை. ஆனால், அந்த வார்த்தையின் பொருளை அறிந்துகொள்ள அவர் ஒருபோதும் விரும்பினாரில்லை. அந்த வார்த்தையை நினைவுறும் போதெல்லாம் தேரர் அளவற்ற துக்கத்தால் பீடிக்கப்படுவதுண்டு.

கொத்திமலைச் சனங்களிடம் சீவலி தேரர் புன்னகை மாறாமலேயே கேட்டார்:

“சகோதரர்களே! உங்களில் யாருக்காவது சிங்கள மொழி தெரியுமா?”

கூட்டத்திலிருந்து முன்னே வந்த, முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணைத் தேரர் கனிந்த விழிகளால் நோக்கினார். குரூபி என்றே சொல்லக் கூடிய அந்தப் பெண்ணில் மூக்கு, காது, உதடு என்ற எந்த அடையாளத்தையும் குறிப்பாகக் காண முடியாதவாறு, அவளது முகம் தீயில் வெந்திருந்ததால், அம்முகம் முறுகக் காய்ச்சிய இரப்பர் போன்றிருந்தது. அந்தப் பெண் சீவலி தேரரை வணங்கிவிட்டு நின்றாள்.

“சகோதரிக்கு நன்மையே விளையட்டும்! உங்களுக்குச் சிங்களம் பேசத் தெரியுமா?”

“ஹாமத்துருவெனே!”

அந்தப் பெண்ணின் இரப்பர் முகம் சற்றே அசைந்தது. இப்போது விட்ட இடத்திலிருந்து சீவலி தேரர் பேசலானார்:

“இப் புனித நிலத்தில் வாழும் ஜனங்களான நீங்கள், கலிங்கத்து அரசன் குஹசிவவைக் காட்டிலும் பேறுடையோர். அவனிடமிருந்த சம்புத்தரின் புனிதப் பல்லைக் கொள்ளையிடுவதற்காக, பெரும் சேனையைத் திரட்டி கீரதர நரேந்திர வம்சத்தார் போர் தொடுத்தபோது, மன்னன் குஹசிவ தன்னுடைய புத்திரியான இளவரசி ஹேமமாலியிடம் ததாகதரின் புனிதப் பல்லைக் கொடுத்து, இரகசியமாக இலங்கைத் துவீபத்துக்கு அனுப்பிவைத்தான். இளவரசி தன்னுடைய கூந்தலுக்குள் புனிதப் பல்லை மறைத்து வைத்துக்கொண்டு, இந்த முல்லைக் கடற்கரையிலேயே தரையிறங்கி, தலைநகர் அனுராதபுரத்திற்குச் சென்று, அரசனான ஸ்ரீ மேகவண்ணவிடம் புனிதப் பல்லைக் கையளித்தாள். அவன் மேஹகிரி விகாரையில் புனிதப் பல்லை அறுக்கை செய்துவைத்து வழிபட்டான். அவனது வம்சத்தினரின் தலைநகரங்கள் மாற மாற புனிதப் பல்லும் அவர்களுடனேயே எடுத்துச் செல்லப்பட்டது.”

சீவலி தேரர் பேச்சை இடைநிறுத்தி, இரப்பர் முகப் பெண்ணை நோக்கினார். அவள் தேரர் சொல்லியதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கிராமவாசிகளிடம் சொல்லலானாள். முழுக் கிராமமும் கவனமாக அந்தக் கதையைக் கேட்டது. சிலர் மொட்டைப் பாறையில் தளர்வாக உட்கார்ந்துகொண்டது, தேரர் சொல்லவிருக்கும் சுவையான மிகுதிக் கதைக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது போலவேயிருந்தது. சீவலி தேரர் முகத்திலும் இப்போது நிம்மதி ரேகை தோன்றி மறைந்தது. அன்புவழியைத் தேர்ந்தெடுத்தவர்களை சம்புத்தர் கைவிடார் என்று அரத்த தம்மசக்கரம் அவர் இருதயத்தில் மெல்லச் சுழலலாயிற்று. தேரர் தொடர்ந்தார்:

“இளவரசி ஹேமமாலி முல்லைக் கடற்கரையில் இறங்கி, இந்தக் கொத்திமலை வழியாகவே சென்றாள். இரவைக் கழிப்பதற்காக, இங்கே படுக்கையைப் போன்றிருந்த ஒற்றைக்கல்லின் மீது சயனித்தாள். விடியல் கருக்கலில் அவள் எழுந்தபோது, அந்தக் கல்லும் கூடவே எழுந்து நிரந்தரமாக இதோ நிற்கிறது! அவளது வலது கை இந்தக் கல்லில் விட்டுச் சென்ற அடையாளம் குழிந்து இது கைக்கல்லுமாயிற்று…”

“இது கொத்தியம்மாவின் கை” என்று தன்னையறியாமலேயே தமிழில் உரக்கச் சொன்ன இரப்பர் முகப் பெண், தேரர் சொன்னதைக் கிராமவாசிகளிடம் சொல்லத் தொடங்கினாள். அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருந்த சனங்கள் மெல்ல எழுந்தார்கள். அவர்கள் சலசலத்துப் பேச ஆரம்பித்தார்கள். 

“அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?” என்று அந்தப் பெண்ணிடம் சாந்தம் நுரைக்கும் குரலால் சீவலி தேரர் கேட்டார்.

“இந்தக் கை எங்களது தாயார் கொத்தி அம்மாவுடையது என்றே அவர்கள் கருதுகிறார்கள்.”
அடக்கத்துடன் புன்னகைத்த சீவலி தேரர் வானத்தை நோக்கிக் கைகூப்பித் தொழுதுவிட்டுச் சொன்னார்:

“கொத்தி தெய்வமல்ல! அது அலைவுறும் ஆவி. அதனால் அடையாளத் தடங்களை நீரிலோ நிலத்திலோ கல்லிலோ காற்றிலோ மேகத்திலோ ஒருபோதுமே பதிக்க முடியாது!”

“தெரியும் ஹாமத்துருவெனே” என்று தலையசைத்த அந்தப் பெண் தொடர்ந்தாள்:

“கொத்தி ஆவியாக இருக்கும் அதே வேளையில், அவள் காவல் தெய்வமாகவும் இருப்பாள். எங்களது குழந்தைகள் பிறக்கும் போது கொத்தி தெய்வமாக மாறி மருத்துவிச்சியை இயக்குவாள். குழந்தை பிறந்ததும் ஆவியாகிவிடுவாள். அவளுக்காக நாங்கள் ‘கொத்தி கழிப்பு’ செய்வோம்.”

இப்போது, சீவலி தேரர் தனது வலது கையால் இடது கையைப் பற்றிக்கொண்டார். இன்னொரு கதையைச் சொல்வதற்கு அவர் தயாராகிறார் எனக் கிராம மக்கள் தெரிந்துகொண்டனர்.

“தலதாவம்சம் புனித நூலில் இருக்கும் செய்தியை உங்களுக்கு அறிவிப்பது என்னுடைய கடமையாகிறது சகோதரர்களே! தனது கடமையை நிறைவேற்றிய இளவரசி ஹேமமாலி கலிங்க தேசத்திற்குத் திரும்பிச் செல்லவேண்டிப் பயணித்தபோது, இரவான போழுதில் இந்தக் கைக்கல்லின் மீது தலையைச் சாய்த்து நின்றபடியே துயின்றாள். அவ்வேளையில் யட்சர்களின் நாகம் இரத்தின ஒளியை உமிழ்ந்தவாறே பறந்து வந்து அவளைத் தீண்டியதால், அந்தப் புனிதவதி இங்கேயே முகம் கருகி உயிர்விட்டாள். ஆகவேதான் அவள் கருணைத் தெய்வமாகவும், அதேவேளையில் தந்தை குஹசிவவிடம் சென்று சேர முடியாத துக்கத்தால் ஆவியாக அலைபவளுமாக இருக்கிறாள். இப் புனித இடத்தில் சம்புத்தரை இப்போது நிறுவியுள்ளதால், இனி ஹேமமாலி அமைதியுறுவாள். அவள் அமைதியுற்றால், இந்த நிலமெங்கும் அது பரவிச்செல்லும்.

இரப்பர் முகப் பெண் சீவலி தேரருக்கு முதுகைக் காட்டியவாறே உடலைத் திருப்பி, கூடியிருந்த கிராமவாசிகளைப் பார்த்து, தேரர் சொன்ன மிகுதிக் கதையைச் சொன்னாள். அதைக் கேட்டதும் சனங்களிடமிருந்து கேலியாக எழுந்த முனகல்கள் அப்படியே கூச்சல்களாக மாறத் தொடங்கின. அவள் சீவலி தேரரிடம் உடலைத் திருப்பிச் சொன்னாள்:

“ஹாமத்துருவெனே! கொத்தி எங்கிருந்தோ இங்கு வந்தவளல்ல! முல்லைக் கடலோரக் குறுமணிலில் உதித்த கன்னி. சூலன் பரியாரியின் இளைய மகள். அவளைப் பற்றி எங்களிடம் நூறு கதைகளும் ஆயிரம் பாடல்களுமுள்ளன. மேலதிகமாக உங்களிடமிருந்து கதையும் சிலையும் எங்களுக்குத் தேவைப்படாது என்கிறார்கள் சனங்கள்.”

சீவலி தேரர் மொட்டைப் பாறையில் கூடியிருந்தவர்களை ஊடுருவிப் பார்த்தார். ஏழ்மையும் நோயும் பரவிக் கிடந்த சனங்களாக அவர்களிருந்தார்கள். இளந்தாரிப் பருவ ஆண்கள் அதிகமாகயில்லை. சட்டையற்ற ஆண்களின் தேகங்கள் தழும்புகளாலும் காய்ந்து சொரசொரத்த தோலாலும் போர்த்தப்பட்டிருந்தன. அநேகமான பெண்களோ உதடுகளும் நகங்களும் அசிங்கமாக வெடிப்புற்று இரத்தச் சோகை பூத்திருந்தார்கள். குழந்தைகளோ வயிறுகள் வீங்கிக் கிடக்க, ஈர்க்குக் கால்களால் தள்ளாடி ஓடித்திரிந்தார்கள். தேரர் நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து பேசலானார்:

“என் சகோதர்களான உங்களது நம்பிக்கைகளில் தலையிடவோ மறுத்து நிற்கவோ நான் தகுதியற்றவன். எனினும், இந்த நாட்டின் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையின்படி, இது புனிதப் பல்லைக் கொண்டுவந்த இளவரசி மரணித்த புனிதத் தலம். அவளது சரீரம் பட்டெழுந்த கல்லில் மஹா புத்தர் வீற்றிருந்து பாலிக்கும் கருணை உங்கள் மீதும் இந்த நாட்டின் மீதும் நித்திய சமாதானத்தைக் கொண்டுவரும்!”
அந்தப் பெண் தேரரிடம் சொன்னாள்:

“இது கொத்தியம்மா காலமாக உறைந்திருக்கும் மனை! நன்மையோ புன்மையோ அது கொத்தியம்மாவோடேயே எங்களுக்கு இருக்கட்டும். ஹாமத்துருவெனே! இந்தச் சிலையையும் தூக்கிக்கொண்டு இங்கிருந்து புறப்படுமாறு உங்களைத் தயவாக வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம்.”

இப்போது தேரரது சரீரம் நடுங்கத் தொடங்கியது. பொழுதும் செக்கலாகி இருள் கீழே கவியலானது. கடற்காற்று கூவென மொட்டைப் பாறையில் மோதித் திரும்பிற்று. சீவலி தேரர் பூமியை நோக்கிக் கண்களைத் தாழ்த்தியவாறே துயரோடு சொன்னார்:

இந்தப் புத்தர் சிலையை அகற்றுமாறு நீங்கள் சொல்வது, நானும் நீங்களும் துக்கத்தைப் பெருக்குவதாகும். இந்த நாட்டில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் – ஏன் தலைநகரத்தில் கூட – எத்தனையோ முருகன் கோயில்களும், இயேசு மாடங்களும், மசூதிகளுமிருக்கின்றன. அப்படியிருக்கும் போது, ஒரு தமிழ் கிராமத்திலோ, முஸ்லீம் கிராமத்திலோ கருணையையும் சமத்துவத்தையும் போதிக்கும் புத்த பெருமானின் சிலையோ, பன்சாலையோ இருக்கக்கூடாது எனச் சொன்னால் அது தர்மமாகுமா?”

அந்தப் பெண் கூடியிருந்த சனங்களிடம் பேசி விட்டுச் சொன்னாள்:

“இந்தக் கைவிடப்பட்ட சனங்கள் சொல்வதைக் கேளுங்கள் துறவியானவரே! அங்கெல்லாம் பிற ஆலயங்கள் உண்டெனில், அங்கே வாழ்ந்தவர்களும் குடியேறியவர்களும் அவற்றை உண்டாக்கவும் வழிபடவும் செய்தார்கள். இந்தக் கிராமத்தில் ஒரேயொரு பவுத்தர் கூட வசிக்கவில்லையே. எங்கிருந்தோ வரும் நீங்கள் திடீரென இங்கேயொரு சிலையை நாட்டுவது எங்களது நிலத்தைக் களவாடும் சூதென்றே இந்த ஏழைச் சனங்கள் கருதுகிறார்கள்.”

சீவலி தேரர் இப்போதும் சாந்தமாகவும் ஆனால், குரலில் உறுதி தொனிக்கவும் சொன்னார்:

“சம்புத்தர் போதி ஞானமடைந்த ஒன்பதாவது மாதத்தில், பூஸ பவுர்ணமியன்று இந்தத் தீவில் இறங்கி, தன்னுடைய அற்புதங்களால் இங்கிருந்த தீயர் யட்சர்களை அகற்றிவிட்டு, இந்த அழகிய நிலத்தை நமக்குத் தத்தம் செய்தார். அந்தத் தூயரின் திருவுருவை இங்கிருந்து அகற்றுவதே உங்களது முடிவான விருப்பமானால், என்னைக் கொன்றுவிட்டு, தாராளமாக நீங்கள் அதைச் செய்துகொள்ளுங்கள். 

கிராமத்துச் சனங்கள் இந்த நாளை மட்டுமல்லாமல், தேரரின் இந்தப் பதிலையும் எதிர்பார்த்தேயிருந்தார்கள். இங்கிருந்து நான்கு கட்டைகள் தொலைவிலிருக்கும் ஈச்சங்குடா கிராமத்தில், முதலில் இவ்விதமே ஒரு புத்தர் சிலை இரவோடு இரவாக ஸ்ரீ சுபூதி தேரரால் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த நிலம் பண்டைய சகாப்தத்தில் புத்த விகாரையாகயிருந்தது என்ற கதையைப் பவுத்த மடாலயங்களும், அரசியல்வாதிகளும் கிளப்பிவிட்டார்கள். புத்தர் சிலையை அகற்றக் கோரிய வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றபோது, விசாரணையை நடத்தவிருக்கும் நீதிபதி ஒரு தமிழர் என்பதையறிந்த ஸ்ரீ சுபூதி தேரர் தீக்குளிக்கப் போவதாக அறிவித்துக்கொண்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். தடுத்த இரண்டு பொலிஸ்காரர்களுக்கும் மண்ணெண்ணெய் நாற்றமடித்த கையால் கன்னத்தைப் பொத்தி ஆளுக்கொரு அறைவிட்டார். அந்த நீதிபதி கூட ‘நாட்டில் திடீரென எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு ஸ்ரீ சுபூதி தேரரும் ஒரு காரணம்’ என்று தனிப்படக் குறைப்பட்டுக்கொண்டாராம். இப்போது ஈச்சங்குடாவில் பெரிய புத்த விகாரையே கட்டி எழுப்பப்படுகிறது. எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடுத்திருந்த முகிலன், மரியநேசன் என்ற இரண்டு இளைஞர்களும் ஈச்சங்குடா கிராமத்திற்குள்ளேயே நுழையக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பாக, ஸ்ரீ சுபூதி தேரருடன் சில துறவிகள் வந்து மொட்டைப் பாறையில் வழிபாடு செய்துவிட்டுப் போனதிலிருந்தே, இங்கேயும் இரவோடு இரவாகப் புத்தர் சிலை தோன்றக்கூடும் எனக் கிராம மக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஆனால், அதை எப்படித் தடுப்பது என்று இவர்களுக்குத் தெரியவில்லை. கடைசியில் கொத்தியம்மனில் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, அவளையே நம்பியிருந்தார்கள். ஒவ்வொருநாள் காலையிலும் கைக்கல்லைப் பார்த்து நிம்மதியடைந்தார்கள்.

இப்போது சீவலி தேரர் பகலிலேயே புத்தர் சிலையை வைத்துவிட்டார். இப்போதும் சனங்கள் செய்வதறியாமல் தங்களுக்குள்ளேயே விவாதித்துப் பேசியும், ஒருவரையொருவர் குற்றம் சொல்லியும் தளர்ந்து போனார்கள். தாங்கள் கையாலாகாதவர்கள் என ஒருவரையொருவர் பழித்துக்கொண்டார்கள். இவர்களால் இந்தப் புத்தர் சிலையின் நகத்தைக் கூடத் தொட முடியாது. மீறித் தொட்டால், அது நாட்டு அதிபருக்கோ, இராணுவ ஜெனரலுக்கோ ஊனம் விளைவிப்பதற்குச் சமமான குற்றமாகும்.

சீவலி தேரர் எழுந்து நின்று, தனது இடது தோளில் மாட்டியிருந்த துணிப் பைக்குள்ளிருந்து அகல் விளக்கையும், நெய் குப்பியையும், தீப்பெட்டியையும் எடுத்தார். சூத்திரங்களை உச்சாடனம் செய்தபடியே, புத்தர் சிலையின் முன்னே அகல் விளக்கைத் தேரர் ஏற்றிவைக்கும்போது, சல்லடை இருளைப் பிளந்துகொண்டு காவல்துறையினரின் ஜீப் வண்டி கொத்திமலையை நோக்கி வந்தது. 

பொலிஸ் அதிகாரி மூச்சிரைப்போடு மொட்டைப் பாறையில் ஏறிவந்து, சீவலி தேரரைப் பணிந்து வணங்கினான். அவனோடு வந்திருந்த பொலிஸார் மொட்டைப் பாறையில் மண்டியிட்டுத் தேரரை வணங்கினார்கள். தேரரிடமிருந்து மீண்டும் ஓர் உணர்ச்சியற்ற வெற்றுப் புன்னகையே மொட்டைப் பாறையில் வீழ்ந்தது. இரப்பர் முகப் பெண் அங்கிருந்து காணாமற்போயிருப்பதைத் தேரர் அறிந்துகொண்டார்.

பொலிஸ் அதிகாரிக்குக் கொச்சைத் தமிழ் பேசத் தெரிந்திருந்தது. அவனது வாயிலிருந்து முதல் வசனமாக “எல்லோரும் இங்கிருந்து கலைந்து வீடுகளுக்குச் செல்லுங்கள்” என்ற உத்தரவே கொத்திமலைச் சனங்களுக்குக் கிடைத்தது.

“புத்தர் சிலையை இங்கே வைக்க அனுமதிக்கக் கூடாது” என்று தைரியமாக ஒரு முதியவர் சொன்னபோது 

“பெரியவரே… இந்த இடம் உன்னுடையதா? நீ அதற்கான காணி உறுதிப் பத்திரம் வைத்திருக்கிறாயா? எங்கே காட்டு! வேறு யாரிடமாவது இந்த மொட்டைப் பாறைக்கான உரிமைப் பத்திரம் இருக்கிறதா?” எனக் கேட்டுப் பொலிஸ் அதிகாரி சீறிச் சினந்தான். பின்பு சற்றுத் தணிந்து “எதுவாகயிருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்! இப்போது கலகம் செய்யாமல் இங்கிருந்து கலைந்து போங்கள்!!” என்றான். 

நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த சீவலி தேரர் தனது குரலை உயர்த்திப் பொலிஸ் அதிகாரியிடம் சொன்னார்:

“நீங்கள் உடனடியாக இங்கிருந்து போய்விடுங்கள். நான் இந்த மக்களிடம் பேசிக்கொள்கிறேன். எளியவர்களிடம் அதிகாரம் செய்வது பவுத்த நெறியல்ல. தயவுசெய்து இங்கிருந்து இறங்கிச் செல்லுங்கள்!”
பொலிஸ் அதிகாரி தலையைத் தாழ்த்தி, வலது கையால் தனது நரைத்த மீசையை மறைத்துக்கொண்டு கிசுகிசுப்பாகத் தேரரிடம் சொன்னான்:

“ஹாமத்துருவெனே! உங்களைச் சுற்றி நின்றிருப்பவர்கள் காட்டுச் சனங்கள். எந்தத் தர்மத்துக்கும் கட்டுப்படாத சண்டைக்காரர்கள். தருணம் பார்த்து சம்புத்தரின் சிலையைச் சல்லியாக உடைத்துக் கற்குவியலில் கரைத்துவிடுவார்கள். இந்த மாவட்டத்தில் சங்கைக்குரிய ஸ்ரீ சுபூதி தேரர் நிறுவிய சிலையொன்று ஏற்கனவே உடைக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர் உங்களுடனேயே இருக்கத் தயவு செய்து நீங்கள் அனுமதிக்க வேண்டும்.”

“ஸ்ரீ சுபூதி தேரரின் வழிமுறை வேறானது. அவர் போதிசத்துவரைப் பரப்புவதற்கு உங்களைப் போன்ற காவல் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் அரசியல்வாதிகளையும் நம்பியிருக்கிறார். நானோ முழுவதுமாகத் தம்மத்தையும் ததாகதரையும் இந்த மக்களின் இருதயங்களையுமே நம்பி நடந்துவருகிறேன். நான் நிறுவிய சிலைகளில் ஒன்றுகூட இதுவரை சேதப்பட்டதில்லை! அகற்றப்பட்டதில்லை!!”

கடைசியில் சீவலி தேரரின் பிடிவாதமே வென்றது. அதிருப்தியுடன் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். போவதற்கு முன்பாக, அங்கே கூடிநின்ற சனங்களின் முகங்களில் பொலிஸார் வெளிச்சத்தைப் பாய்ச்சி, கைத்தொலைபேசியில் அவர்களைப் படம் பிடித்துக்கொண்டார்கள்.

அதன் பின்பு, மொட்டைப் பாறையிலிருந்த சனங்களும் தமக்குள் பேசியவாறே மெதுமெதுவாக அங்கிருந்து கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அப்போது அங்கே இரப்பர் முகப் பெண்ணை தேரர் மறுபடியும் கண்டார். அவளை நோக்கி “இங்கே சம்புத்தரின் சிலை இருப்பதற்கு கிராமத்துச் சனங்கள் ஒப்புதல் கொடுத்துவிட்டார்களா சகோதரி?” என்று கேட்டார். அப்போது அந்த இரப்பர் முகப் பெண் தமிழில் ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு நிதானமாக இருளுக்குள் நடந்து சென்றாள். 

அந்த வார்த்தை முப்பது வருடங்களுக்கு முன்பு சீவலி தேரர் கேட்ட அதே வார்த்தையாகயிருந்தது. அந்தக் கணத்தில் அதீத துக்கம் அவரை மூழ்கடித்துக் கீழே தள்ளிற்று. யாருமற்ற மொட்டைப் பாறையில் கால்களை நீட்டியவாறே, கைக்கல்லில் தளர்வாக முதுகைச் சாய்த்துக்கொண்டார். துக்கம் ஒரு பாறையாக அவரை அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. தன்முன்னே விரிந்திருக்கும் இருளைக் கண்களை விரித்துப் பார்த்தவாறே, சம்புத்தரைத் தியானித்து இரு உள்ளங்கைகளையும் மார்பில் வைத்துக்கொண்டார். அவரது மெல்லிய உதடுகள் “துக்கங் அரியசச்சங்” என்று முணுமுணுத்துக்கொண்டன. 

துக்கம் இவ்வுலகின் மாற்றமுறா நித்திய உண்மை என்பதுவே கவுதம புத்தருக்கு முதன் முதலாகச் சித்தித்த ஞானமாகும்.

2

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னதாக, கண்டியிலுள்ள குண்டசாலை பவுத்த துறவு மடத்தில் இருந்தபோது, சீவலி தேரருக்குப் பத்தொன்பது வயதுதான் ஆகியிருந்தது. துறவின் உச்சநிலையை எட்டுவதைத் தவிர வேறு சிந்தனைகளே இல்லாத இளம் துறவியாகவே அவரிருந்தார். தம்மத்தின் நாற்பேருண்மைகளான துக்கம், துக்கத்திற்கான காரணம், துக்க நிவர்த்தி, துக்க நிவர்த்திக்கான மார்க்கம் ஆகியவற்றைக் குறித்து இடையறாது சிந்திப்பது, மூத்த துறவிகளிடம் பாலி கானான் பாடம் கேட்பது, விமானவத்து, பீடவத்து போன்ற சுத்த பிடக குத்தக நிகாயகங்களை ஆராய்வது, சக்க சம்யுக்த சூத்திரத்தைக் கசடறப் புரிந்துகொள்ள முயல்வது போன்றவற்றில் அவர் மூழ்க்கியிருந்தபோது தான்; அவரைத் தேடி நெருங்கிய உறவினனும், பால்ய தோழனுமான மனோஹர சேனக வந்திருந்தான்.

சேனக அவரிடம், தான் ‘தேசப்பிரேமி ஜனதா வியபரயா’ இயக்கத்தைச் சேர்ந்தவன் எனச் சொன்னதை சீவலி தேரரால் முதலில் நம்பவே முடியவில்லை. சேனகவின் குடும்பம் கடுமையான வறுமையில் தத்தளிக்கிறது. சேனக பூனைக்குட்டியைப் போல அமைதியானவன். தவளையைப் போல மந்தமானவன். நாளொன்றுக்கு நான்கு வார்த்தைகளுக்கு மேலாகப் பேசிப் பழக்கப்படாதவன். அப்படியானவன் ஓர் ஆயுத இயக்கத்தின் முக்கிய உறுப்பினரென்றால் யாரால்தான் நம்ப முடியும்.

சேனக உறுப்பினராக இருந்த ‘தேசப்பிரேமி’ என்ற தலைமறைவு இயக்கம் அப்போது நாட்டையே கதிகலங்க வைத்துக்கொண்டிருந்தது. ஆளுங்கட்சி அரசியல்வாதிகளை அந்த இயக்கம் தேடித் தேடிக் கொன்றது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும், இந்திய அமைதிப் படையின் இலங்கை வருகையையும் ஓர்மத்துடன் எதிர்த்து நின்ற அந்த இயக்கம் அம்பாறையிலும், திருகோணமலையிலும் இந்திய அமைதிப் படையின் மீது கண்ணிவெடித் தாக்குதல்களைச் செய்திருந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு குண்டுத் தாக்குதலையும் நிகழ்த்தியது.

தேசப்பிரேமி இயக்கத்தின் எந்தவொரு செயலையும் அணுவளவு கூட ஆதரிக்க இயலாதவர் சீவலி தேரர். அவரது இருதயத்திலே ஓயாமல் சுழன்றுகொண்டிருப்பதாக, அவர் நம்பும் அரத்த தம்மசக்கரமும் ததாகதரின் நெறிகளும் வன்முறையை எதன்பொருட்டும் ஏற்றுக்கொள்ளாதவை. ஆனால், சேனக தன்னுடைய பேச்சால் சீவலி தேரரை வளைக்க முயன்றான். தேசப்பிரேமி இயக்கம் சேனகவின் நாவில் வசிய சூத்திரத்தைப் பொறித்திருந்தது: 

“ஹாமத்துருவெனே! கவனமாகவும் பொறுமையாகவும் கேட்க வேண்டும். நமது சிங்கள மக்களுக்காக அமைந்த ஒரேயொரு நிலம் இந்தச் சிறிய நாடே. இந்தத் தீவைக் கடல் நீர் மட்டும் சூழ்ந்திருக்கவில்லை. தென்னிந்தியாவிலிருந்து படையெடுத்து வரும் தமிழர்களால் ஆயிரம் வருடங்களாகவே அபாயமும் சூழ்ந்திருக்கிறது. சோழர்கள் படைகொண்டு வந்து எங்களுடைய குடிகளையும், தலைநகரத்தையும்,விகாரைகளையும், புராதனப் புத்தர் சிலைகளையும், ஆயிரங்கால் மண்டபத்தையும் அழித்தும் கொளுத்தியும் போட்டார்கள். அதே போன்றுதான் இப்போது இங்கே இந்திய இராணுவமும் நுழைந்திருக்கிறது. இலங்கை அரசாங்கமும் ஒத்துப் போய் இந்த நாட்டையே விற்றுவிட்டது. இந்தத் தேசத்துரோகத்தைத் தேசப்பிரேமிகள் எப்படி அனுமதிக்க முடியும்?” 

உண்மையிலேயே சீவலி தேரர் தனது நண்பன் சேனகவை மறுத்துப் பேச முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டார். நாட்டின் அரசியல் நிலைமைகளைக் குறித்து அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதும் உண்மையே. தன்னுடைய புலன்கள் முழுவதையும் துறவையும் தம்மத்தையும் நோக்கி ஒருமுகப்படுத்தியே இந்தனை காலங்களாக அவர் வாழ்ந்திருக்கிறார். புத்தரின் தம்மத்தையும் அஹிம்சையையும் சேனகவுக்குப் புரியப்பண்ண சீவலி தேரர் எத்தனித்தபோது, சேனக மிக இலகுவாக தேரரை நிலைகுலையச் செய்தான்:

“இறைமையுள்ள பவுத்த நாடொன்று இருந்தால்தான் தம்மத்தை காப்பாற்ற முடியும்! அதற்காகவே இலங்கையைக் கவுதமர் தேர்வு செய்தாரென்பதை சீவலி தேரருக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை.”

தேசப்பிரேமி இயக்கம் செய்யவிருக்கும் அடுத்த நடவடிக்கைக்கு சீவலி தேரர் உதவாவிட்டால், நாட்டைப் பெரும் ஆபத்து அழித்துப்போடும் என்ற பீடிகையுடன் சேனக திட்டத்தை விளக்கினான்.

“பெப்ரவரி, எட்டாம் தேதியன்று கண்டி புனிதத் தந்த தாது விகாரைக்குள் நுழைவதற்குத் தேசப்பிரேமி இயக்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் புனித விகாரைக்கோ, பவுத்த துறவிகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவொரு ஆபத்தும் நிகழாது என்று முன்கூட்டியே உத்தரவாதம் கொடுத்துவிடுகிறேன். எங்களுடைய திட்டம் மிக இலகுவானதும் வெற்றியளிக்கக் கூடியதுமாகும். தேசப்பிரேமியின் பெண் தோழர்கள் இருவர் வெள்ளை ஆடைகளை அணிந்து, மலர்களால் நிறைந்த தட்டுகளுடன் வழிபாட்டுக்குச் செல்வதுபோல விகாரைக்குள் நுழைவார்கள். மகர தோரண முகப்பில் காவல் கடமையில் இருக்கும் பொலிஸார் புனிதருக்காக எடுத்துச் செல்லப்படும் மலர்களைத் தொடவோ சோதனையிடவோ போவதில்லை. ஏற்கனவே விகாரைக்குள் பக்தர்களுடன் கலந்து நின்றிருக்கும் எங்களுடைய இரண்டு ஆண் தோழர்களின் அருகே இந்த மலர்த் தட்டுகள் சென்றவுடன், மலர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைத்துப்பாக்கிகளை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அந்தத் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, சம்புத்தரின் புனிதப் பல் வைக்கப்பட்டிருக்கும் பேழையை எங்களது தோழர்கள் கவர்ந்து வந்துவிடுவார்கள்.”

சேனக சொன்னதைக் கேட்டதும் சீவலி தேரரின் உடல் குளிர்ந்து நடுங்கிவிட்டது. “என்னவொரு கீழ்மையான முட்டாள் திட்டம்” என்று அவரது மெல்லிய உதடுகள் முணுமுணுத்தன.

“கிடையாது ஹாமத்துருவெனே! இதுவொரு புத்திசாலித்தமான உயர்ந்த அரசியல் திட்டம். ஆட்சியாளர்கள் சம்புத்தரின் புனிதப் பல்லைப் பாதுகாக்கும்வரை தான் மக்கள் அவர்களை நம்புவார்கள். இந்தத் தீவின் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகால அரசியல் வரலாறே இந்தப் புனிதப் பல்லைப் பாதுகாக்கும் வரலாறுதான். இந்தத் தேசத்தில் மன்னர்களிடையே நிகழ்ந்த ஒவ்வொரு போரும் இந்தப் புனிதப் பல்லுக்காக நடத்தப்பட்டதுதான். வெள்ளையர்களுக்கு எதிராகக் கண்டி மன்னன் கடைசிவரை போரிட்டு நின்றதற்கும், ரதல பிரபுக்களின் சதியால் அவன் வீழ்த்தப்பட்டதற்கும் காரணம் இந்தப் புனிதப் பல்லே. இந்தப் புனிதப் பல்லைப் பாதுகாக்கத் துப்பில்லாதவர்களை இந்நாட்டு மக்கள் ஆட்சியாளர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்நாட்டு மக்கள் கூடிக் கலகம் செய்யும் தருணத்திற்காக ஏங்கிக் கிடப்பவர்கள். அவர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகத்தில் கண்டிப்பாக இறங்குவார்கள். புனிதப் பல்லை வைத்திருக்கும் தேசப்பிரேமி இயக்கமே ஆட்சியதிகாரத்தைப் பிடிக்கும். அதுவே மாற்றமுறாத நியதி எனும் ஆரிய சத்தியம்!”

புனிதப் பல்லை ‘தேசப்பிரேமி’ இயக்கம் எடுத்துச் செல்லப்போகிறது என்ற விஷயத்தை சீவலி தேரரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இவர்கள் அதை என்ன செய்வார்கள்? பேழையின் புனிதத்தன்மையை இவர்களால் காப்பாற்ற முடியுமா? குப்பைமேட்டில் புதைத்து வைப்பார்களா? பேழையுடன் கடலில் விடுவார்களா? அசிரத்தையாக எங்காவது தொலைத்து இந்நாட்டுக்கும் தம்மத்துக்கும் அபகீர்த்தியைக் கொண்டுவருவார்களா? சீவலி தேரர் இதையெல்லாம் சேனகவிடம் கேட்டேவிட்டார்.

“இங்கேதான் சங்கைக்குரிய சீவலி தேரரின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. புனிதப் பல்லை கெரில்லாக் குழுவான நாங்கள் வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியானதல்ல. புனிதப் பல்லை வைத்திருக்கும் எங்களது அணியொன்று முற்றாக அழிக்கப்பட்டால், புனிதப் பல்லுக்கு என்ன நிகழும் என்பதும் நமக்குத் தெரியாது. என் நண்பனும், நம்பிக்கைக்குரியவனும், தம்மத்தின்மீது அளவற்ற பற்றுள்ளவனுமான சீவலி தேரர் தான் தகுந்த காலம் வரும்வரை புனிதப் பல்லைப் பூஜித்துப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.”

இதைக் கேட்ட சீவலி தேரர் மனக் குழப்பத்துடன், ஆழ்ந்த யோசனைக்குள் செல்லலானார். ஆனால், சேனகவோ “சிந்திக்கவெல்லாம் நேரமில்லை. சீவலி தேரரின் சம்மதத்தைப் பெற்றாகிவிட்டது என்ற நற்செய்தியுடன் எங்களது தலைமைத் தோழரை இன்றிரவே சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன். இப்போதே தாமதமாகிவிட்டது. தன்னுடைய புனிதக் கடமையை ஏற்றுக்கொள்வதற்கு வணக்கத்திற்குரிய சீவலி தேரர் மறுத்துவிட்டார் என்ற அவச் செய்தியுடன் நான் இங்கிருந்து செல்ல முடியாது!” என்றான்.

மனோஹர சேனகவுடைய, வசியச் சூத்திரம் பொறிக்கப்பட்டிருந்த நாவு தங்கத் தகடுபோல சீவலி தேரரின் முன்னே ஒளியாகத் துடித்தது. 

3

தேசப்பிரேமி ஜனதா வியபரயாவின் திட்டப்படி, சரியாகப் பிற்பகல் 02:30 மணிக்கு, கண்டி புனிதத் தந்த தாது ஆலயத்தில் நடவடிக்கை தொடக்கப்படும். அங்கிருந்து எடுத்துவரப்படும் புனிதப் பல் மகாவலிகங்கைக் கரையில் சேனகவிடம் ஒப்படைக்கப்படும். கங்கைப் பாலத்தை சேனக மோட்டார் சைக்கிளில் கடந்து, பிற்பகல் மூன்று மணிக்கு நரப்பிட்டிய சந்தியை அடைந்துவிடுவான். அங்கே சீவலி தேரர் காத்திருக்க வேண்டும். புனிதப் பேழை தேரரிடம் ஒப்படைக்கப்பட்டதும், பேழையை அவர் தரித்திருக்கும் சீவர ஆடைக்குள் மறைத்துவைத்து, குண்டசாலை பவுத்த மடாலாயத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வைக்க வேண்டும்.

நரப்பிட்டிய சந்திக்கு பிற்பகல் 02:55 மணிக்கு சீவலி தேரர் வந்துவிட்டர். அவர் தங்கியிருக்கும் மடாலயத்திலிருந்து அய்ந்து நிமிட நடை தூரத்திலேயே அந்தச் சந்தி இருந்தது. அங்கிருக்கும் சிறிய படிப்பகத்திற்குள் வைத்துத்தான் புனிதப் பேழை கைமாற்றப்படும். சேனக துல்லியமாகக் கணித்தவாறே அந்த நேரத்தில் படிப்பகத்தில் ஒருவருமில்லை. அங்கே தனியாக உட்கார்ந்திருந்து செய்தித்தாள்களைப் புரட்டிய சீவலி தேரர் உள்ளூறப் பதற்றமுற்றிருந்தாலும், தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் ஒரு வரலாற்றுக் கடமையைச் சுமப்பதால் அவரது உள்ளத்தில் அபரிதமான கிளர்ச்சியுமிருந்தது. சேனகவின் தங்க நாவுக்குத் தான் கட்டுப்பட்டிருப்பதை அவரால் இன்னும்தான் நம்ப முடியவில்லை. 

புனிதப் பேழையைப் பாதுகாக்க சீவலி தேரரிடம் தெளிவான திட்டமிருந்தது. தங்கத்தால் பூஜை மணி வடிவத்தில் செய்யப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கவசக் கூட்டுக்குள்ளே வைக்கப்பட்டிருக்கும் புனிதப் பல்லிருக்கும் சிறு பேழை உள்ளங்கைக்குள் அடங்கிவிடக் கூடியதே. சீவலி தேரரின் அறைச் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் இரும்புக் கதவுள்ள புத்தக அலுமாரிக்குள் பேழையைப் பத்திரமாக வைத்துவிடலாம். அலுமாரியின் சாவியை சீவர ஆடையில் முடிச்சிட்டு எப்போதும் கூடவே வைத்துக்கொள்ளலாம்.

மணி மூன்றைக் கடந்த போது, தேரரின் இருதயத்திலிருந்த அரத்த தம்மசக்கரம் நின்று போயிற்று. பதற்றம் மெல்ல மெல்ல அச்சமாகி, அது கனத்த துக்கமாகித் தேரரை மூடிற்று. புனிதப் பல்லுடன் சேனக வரவேயில்லை. ஆனால், நரப்பிட்டிய சந்தியில் தேரரைச் சூழவர ஒரு செய்தி வேகமாகவும் கோபமாகவும் பரவிற்று: 

‘புனிதத் தந்த தாது விகாரையை, மாறுவேடத்தில் வந்த தமிழ்ப் பயங்கரவாதிகள் தாக்கினார்கள். முதலில் அவர்கள் காவல்துறையினரில் இருவரைச் சுட்டுக் கொன்றார்கள். ஆனால், காவல்துறையினர் துரிதமாகச் செயற்பட்டு, எதிர்த் தாக்குதலை நிகழ்த்திப் பயங்கரவாதிகளில் ஓர் ஆணையும் பெண்ணையும் கொன்றுவிட்டார்கள். இன்னொரு ஆணும் பெண்ணும் காவல்துறையினரால் காயங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புனிதப் பல் பாதுகாப்பாகவேயுள்ளது.’

முதலில், அந்தச் செய்தி உண்மையாகவே இருக்கட்டும் என்றுதான் சீவலி தேரரின் மனம் விரும்பியது. இந்தத் தாக்குதலை தேசப்பிரேமியினர் செய்யாமல் தமிழர்கள் செய்திருந்தால், தன்மீதிருக்கும் மலைபோன்ற பாரம் காற்றாக வீழ்ந்துவிடும் என்பது போலத் தேரர் கற்பனை செய்தார். ஆனாலும், அவரது அறிவு முற்றாக மழுங்கிவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயமாகத் தேசப்பிரேமிகளே இந்தத் தாக்குதலைச் செய்திருப்பார்கள் என்றே அவரது அறிவு சொன்னது.

மறுநாள் அதிகாலையில் சீவலி தேரர் விழித்தபோது; இன்று யாராவது, ஏதாவதொரு சேதியைத் தன்னிடம் கொண்டுவரக் கூடும் என்றொரு உள்ளுணர்வு அவரை அருட்டிப் போட்டது. செய்தித்தாளை வாங்கிப் படித்தால், நேற்றைய தாக்குதல் குறித்து ஏதாவது விபரம் தெரியும் என்று நினைத்துக்கொண்டே, ஆட்கள் நடமாட்டமற்ற அந்தப் பொழுதில் அவர் தனியராக நரப்பிட்டிய சந்திக்கு வீதியோரமாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ புறப்பட்டு வந்த சிறிய கறுப்புநிற வண்டியின் பின்புறக் கதவு திறந்துகொள்ள, சீவலி தேரர் உள்ளே இழுத்துப் போடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டார்.

தன்னைக் கடத்தியிருப்பது தேசப்பிரேமி இயக்கமே என்றுதான் முதலில் சீவலி தேரர் நினைத்தார். ஆனால், வாகனத்தினுள்ளே ஒலித்துக்கொண்டிருந்த தொலைத்தொடர்புக் கருவிகளின் பேச்சுச் சத்தம், அவர் அரச புலனாய்வுத்துறையினராலேயே கடத்தப்பட்டிருக்கிறார் என்பதை அவருக்கு மெல்ல மெல்லத் தெளிவுபடுத்திற்று. அக்கணத்திலேயே, புலனாய்வுத்துறையினரிடம் எதையும் மறைத்துவைத்துப் பேசக்கூடாது எனத் தேரர் மனதில் உறுதியெடுத்துக்கொண்டார். புனிதப் பல்லை மறைத்துவைக்க நினைத்ததற்கு இதுவே தகுந்த பிராயச்சித்தம் என்று அவரது மனதின் அரத்த தம்மசக்கரம் உரைத்தது. ஒருநாள் தம்மத்திலிருந்து வழுவியதற்காக, தன்னுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதும் பிராயச்சித்தம் செய்துகொண்டேயிருக்கப் போவதாகவும் அவர் பிரதிக்ஞை கொண்டார். 

ஆனால், புலனாய்வாளர்களுக்கு சீவலி தேரரிடமிருந்து எந்த உண்மையுமே தேவைப்படவில்லை. ஏற்கனவே மனோஹர சேனக தன்னுடைய தங்க நாக்கால் எல்லாவற்றையும் புலனாய்வுத்துறையினரிடம் வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தான். புலனாய்வுத்துறையினர் தன்னை எங்கே கடத்திச் சென்றார்கள் என்பது இப்போதுவரை சீவலி தேரருக்குத் தெரியாது.

சீவலி தேரரின் கண்கட்டு அவிழ்க்கப்பட்ட போது, போறணை போன்றிருந்த ஓர் அறைக்குள் அவரிருந்தார். பாழடைந்து கிடந்த அந்த அறைக்குச் சாளரங்கள் ஏதும் கிடையாது. அறையின் மூலையில் ஒரு கோணலான மலக்குழி திறந்து கிடந்தது. அதிலிருந்து கிளம்பிய பிணநாற்றம் அறையை நிறைத்திருந்தது. கீழிருந்து வரும் வேதனைக் கூக்குரல்களை வைத்துப் பார்க்கையில், இதுவொரு மாடி அறையாகத்தான் இருக்கவேண்டும். அறையில் ஊசலாடும் மின்விளக்குக்குரிய பொத்தான் அறைக்கு உள்ளேயில்லை. அறையிலிருந்த ஒரேயொரு துருப்பிடித்த நாற்காலியில் தேரரை அமர வைத்துவிட்டுப் புலனாய்வுப் பொலிஸார் வெளியேறினார்கள். இரும்பாலான அறைக்கதவை மூடியதும், வெளியே தாழிடும் சத்தம் தேரருக்குக் கேட்டது. அடுத்த விநாடியே மின்விளக்கும் அணைந்துபோக, தேரர் மை இருளுக்குள் தோய்ந்தார். குத்தக நிகாயகமான பீடவத்துவை அவரது மனம் நினைக்கலாயிற்று. மானுடப் பிறவியில் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக, நித்திய இருளாகயிருக்கும் பேய்களது உலகில் வாழ விதிக்கப்பட்டவர்களது கதைகளைச் சொல்வது பீடவத்து.
துக்கத்தைத் தவிர வேறு உணர்வுகள் சீவலி தேரரிடம் இருக்கவில்லை. துக்கம் அவரை மலைப்பாம்பு போலச் சுற்றிப்பிடித்து நொறுக்கியது. அப்போது அந்த அறையில் ஒரு பல்லி சொல்வதைத் தேரர் கேட்டார். அந்தச் சத்தம் அவரது இடதுபுறமிருந்தே வந்தது. ஆனால், அது எத்திசை என்பதைத் தேரரால் அறிய முடியாது. இன்னொரு முறை பல்லி சொன்னால் கேட்பதற்காகத் தேரர் தன்னுடைய முகத்தை இடதுபுறம் திருப்பிக் காதுகளைக் கூர்மையாக வைத்துக்கொண்டார். அப்போது அறைக்குள் ஒளி பிரகாசித்தது. பல்லி சுவரில் குத்தென இறங்கி, சுவரிலேயே மறைந்தும் போனது.

அறைக்கதவு திறக்கப்பட்டு மறுபடியும் மூடப்பட்டபோது, கைக்குட்டையால் தனது மூக்கைப் பொத்தியவாறே புலனாய்வுத்துறை உயரதிகாரி அமரக்கூன் உள்ளே நின்றிருந்தான். கட்டான இளந்தாரியான அவனுக்கு வயது முப்பதிற்கும் குறைவாகவேயிருக்கும். சிவந்த தேகமும், இடுங்கிய கண்களும், அடர்த்தியான கம்பித் தலைமுடியும் கொண்டிருந்த அமரக்கூனில் சீன முகச் சாயலிருந்தது. தன்னெதிரே அமைதியாக நின்றுகொண்டு, தன்னுடைய கண்களையே உற்றுப் பார்க்கும் அமரக்கூனின் கண்களை நாற்காலியில் அமர்ந்தவாறே சீவலி தேரர் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார். தேரரது பார்வை அவர் எத்தகைய பிராயச்சித்தத்திற்கும் தயாராகவேயிருக்கிறார் என்பது போலிருந்தது.

அமரக்கூன் தன்னுடைய ஒரேயொரு கேள்வியைக் கேட்டான்:

“ஹாமத்துருவெனே! உமக்கு சுபசிங்க பளிகவர்த்தன ஆராய்சிலாகே என்ற மனிதனைத் தெரியுமா?”

அந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போலத்தான் சீவலி தேரருக்குத் தோன்றியது. அந்தப் பெயரைச் சேனக தன்னிடம் சொல்லியிருப்பானோ என்று தேரர் யோசிக்கும் போதே, அமரக்கூன் சொன்னான்:

“சுபசிங்க பளிகவர்த்தன ஆராய்சிலாகே என்னுடைய இரத்தவழி மூதாதை. கண்டி புனிதத் தந்த தாது விகாரையை அமைப்பதற்கு நிலம் வழங்கியவர்…” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தன்னுடைய வலது காலைத் தூக்கி, சீவலி தேரரின் மார்பில் அமரக்கூன் ஓங்கி மிதித்தான். நாற்காலியோடு சாய்ந்து பின்புறமாகத் தரையில் வீழ்ந்த சீவலி தேரரின் மழிக்கப்பட்ட தலை பந்து போலத் தரையில் மோதித் துள்ளியது. அமரக்கூனின் கனத்த பூட்ஸ் தேரரின் இடது மார்பில் அச்சாகப் பதிந்து போயிற்று. 

தன்னிடம் புலன் விசாரணை செய்வதல்ல அமரக்கூனின் நோக்கம், மாறாகத் தன்னைச் சிறுகச் சிறுகப் பழி தீர்ப்பதே அவனது நோக்கம் எனச் சில நாட்களிலேயே சீவலி தேரர் புரிந்துகொண்டார். தன்னை ஒரு சாட்சியாக அல்ல, குற்றவாளியாகக் கூட நீதிமன்றத்தில் அவன் நிறுத்தப் போவதில்லை என்பது அவருக்குத் தெளிவாகிவிட்டது. தேரர் கடத்தப்பட்டதும் எவருக்குமே தெரியாது. தேரர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் அமரக்கூனைத் தவிர வேறு யாருமே வரவும் முடியாது. சீவலி தேரருக்கு எப்போதாவது கிடைக்கும் உணவையும் நீரையும் கூட அமரக்கூனே கொண்டுவருவான். அவன் வராத நாட்களில் உபவாசம் இருப்பதைத் தவிர தேரருக்கு வேறு வழியில்லை.

அமரக்கூன் எதையாவது விசாரித்துத் தொலைத்தால் கூட சீவலி தேரருக்குச் சற்று நிம்மதியாக இருக்கும். தன்னுடைய பாவத்தை அவன் முன்னே இறக்கி வைத்துவிடுவார். ஆனால், முதல் சந்திப்பில் பேசியதை விடுத்து, வேறெப்போதும் தேரரிடம் அமரக்கூன் பேசியதேயில்லை. ஆனால், ஓயாமல் உத்தரவுகளைப் பிறப்பிப்பான். ஒவ்வொரு உத்தரவும் தேரருக்குச் சிறுமையையும் வலியையும் கொண்டுவரும். அவர் அந்த அறையில் அமரக்கூனோடு வருடங்களைக் கழிக்க வேண்டியிருந்தது.

அமரக்கூனின் கையால் சீவலி தேரர் வதைபட்ட இரத்தம் தெறித்துத் தெறித்து அந்த அறையின் அழுக்குச் சுவர்கள் மினுங்கும் செந்நிறமாக மாறிக்கொண்டிருந்தன. அமரக்கூனின் தடித்த தோல் இடுப்புப் பட்டியும், முள்ளுத் தடிகளும் விளாறி விளாறித் தேரரின் உடலெங்கும் ஏற்பட்ட பச்சைப் புண்களிலிருந்து வடியும் ஊனாலும் சீழாலும் தரை செம்மஞ்சள் நிறமேறிற்று. தேரர் குளிக்கவோ, மழிக்கவோ அனுமதிக்கப்படவேயில்லை. சிக்கேறிய கத்தை முடிகள் தேரரின் தோளைத் தொட்டன. முகத்தில் வளர்ந்திருந்த முடியால் முகத்தின் அரைப் பகுதி மறைந்துபோனது. முன்வாயில் சில பற்கள் தெறித்து விழுந்துவிட்டன. ஒவ்வொரு பல்லையும் அமரக்கூன் கைக்குட்டையில் சுற்றி தன்னோடு எடுத்துச் சென்றான். தேரரும் சளைத்தவரல்ல. எந்த வேளையிலும் அவர் அமரக்கூன் முன்னே கண்ணீர் விடவோ, ஓலமிடவோ செய்ததில்லை. சகிப்புத்தன்மையின் உச்சமாகயிருப்பதே அரஹந்தப் பாதை. பொளியப்படும் கருங்கல் போன்று தேரரின் துறவு மனம் சீராகச் செதுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. 

ஒருநாள், சீவலி தேரர் பேசிய வார்த்தைகள் தான் அவரது நித்திய துக்கத்திற்குத் திறவுகோலாகியது. அந்த நாளுக்குப் பின்பு, துயரற்ற ஒரேயொரு விநாடிகூட சீவலி தேரருக்கு இருந்ததில்லை. அன்றைய இரவில்தான் அமரக்கூன் “இது உமக்குப் பொருத்தமற்றது” என்றவாறே முதன்முறையாக தேரரின் சீவர ஆடையைக் களையத் தொடங்கினான். அப்போதும் சலனமற்று நின்றிருந்த சீவலி தேரர் உண்மையிலேயே அமரக்கூனுக்குச் சலிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். “புனிதத் தந்த தாது ஆலயத்தில் இரண்டு பொலிஸ்காரர்களைச் சுட்டுக்கொன்ற மாவீரர் கூட்டத்தைச் சேர்ந்த நீர் என்முன்னே பட்ட மரம்போல நிற்கலாமா?” எனக் கேட்டவாறே, அமரக்கூன் சீவலி தேரரை முழு அம்மணமாக்கியபோது, தேரர் அமரக்கூனின் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னார்:

“தசசீலத்தைக் கடைப்பிடிக்கும் துறவி இழப்பதற்குத் தம்மத்தைத் தவிர ஏதுமற்றவன்.”

இந்த வார்த்தைகள்தான் அமரக்கூனைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். அவன் உடனேயே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான். அறைக்கதவைக் கூடத் தாழிடாமல், அவன் குதித்து மாடிப்படிகளில் ஓடிச் சென்றான். தேரர் தரையில் கிடந்த சீவர ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டார். இப்போது மாடிப்படிகளில் காலடியோசைகள் கேட்டன. மறுபடியும் அறைக்குள் நுழைந்த அமரக்கூன், கைகளில் விலங்கிடப்பட்ட ஒரு பெண்ணைத் தன்னோடு அழைத்து வந்திருந்தான்.

அந்தப் பெண்ணுக்கு இருபது வயதிருக்கும். மார்பிலிருந்து தொடைகள் வரை, நாற்றமடிக்கும் அழுக்குப் பாவாடையைக் கட்டியிருந்தாள். அவள் இயல்பிலேயே குண்டான உடல்வாகு உள்ளவளாக இருக்க வேண்டும். கைகளிலும் கால்களிலும் தசை வழிந்தது. தாடையிலும் தசை இலேசாகத் தொங்கியது. அவளது புழுத்துக்கிடந்த தலைமுடியிலிருந்து இரத்தவாடை கசிந்தது. அவளின் தடித்த உதடுகள் புண்ணாகி, அயறு படர்ந்திருந்தது. அவளது கண்கள் வியப்புடன் தேரரை நோக்கியிருந்தன.

அமரக்கூன் அந்தப் பெண்ணிடம் சில வார்த்தைகளைச் சொன்னான். அவற்றில் ஒரு வார்த்தை கூட சீவலி தேரருக்குப் புரியாது. ஆனால், அமரக்கூன் தமிழில் பேசுகிறான் என்பது மட்டும் தேரருக்குத் தெரிந்தது. அந்தப் பெண் பாவாடையை அவிழ்த்துத் தரையில் நழுவவிட்டாள். சீவலி தேரர் தன்னுடைய கண்களை இறுக மூடிக்கொண்டார். இந்தக் கண்களில் அமரக்கூன் காய்ச்சிய எண்ணெயை ஊற்றினால்கூட இவை திறக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். 

அறைக்கதவை உள்ளிருந்து மூடும் சத்தம் கேட்டது. அமரக்கூனின் கனத்த பூட்ஸ்கள் தன்னை நெருங்கி வருவதையும் சீவலி தேரர் உணர்ந்தார். தனது மார்பில் உள்ளங்கைகளைப் பதித்தவாறே அவர் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார். தேரரை நெருங்கிய அமரக்கூன் அவரது இடதுபுறச் செவிமடலைப் பற்றியிழுத்து, தேரரின் காதுக்குள் கிசுகிசுத்தான்:

“தசசீலரான துறவி சீவலி பால தேரர் இந்தப் பெட்டை நாயைத் தனது ஆண்மையால் அடக்க வேண்டும்! 

அந்தக் கணத்தில் சீவலி தேரரின் உள்ளத்தில் அச்சம், கோபம், பச்சாதாபம் என எந்த உணர்வும் எழவில்லை. முழுவதுமாக அவர் துக்கத்தால் மட்டுமே போர்த்தப்பட்டிருந்தார். அவர் தனது உடலை மரத்துப்போகச் செய்வதற்கு முயன்றார். தன்னையொரு காய்ந்த விறகாகக் கற்பனை செய்துகொண்டார். அப்போது அந்தப் பெண் தன்னுடைய விலங்கிடப்பட்ட கைகளைச் சீவலி தேரரின் இடது முழங்காலில் வைத்து, தமிழில் ஒரு வார்த்தையைச் சொன்னாள். தன்னுடைய முழுப் புலன்களையும் அடக்கி மரக்கட்டையாவதற்கு முயன்றுகொண்டிருந்த தேரரின் செவியில் அந்த வார்த்தை தைத்து அங்கேயே நிலைத்தது.

அமரக்கூன் மறுபடியும் தேரரின் ஆடையைக் களைந்தபோது கூட, தேரர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. அவரது உடல் மரத்துக்கொண்டே வந்தது. நிர்வாணியான தேரரை இழுத்து அமரக்கூன் குப்புறப் படுக்க வைத்தபோதும் தேரர் கண்களைத் திறந்தாரில்லை. அவர் துக்கத்தின் உன்மத்தத்துள் ஆழ்ந்துகொண்டிருந்தார்.

சீவலி தேரர் அந்தப் பெண்ணின் மீதே படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவள் உடல் வலியால் முனகுவது தேரருக்குக் கேட்டது. அவளது முலைக் கும்பங்கள் தேரரின் ஒட்டிய வயிற்றின் கீழே சப்பளிந்து கிடந்தன. தேரர் மூளையில் தீயின் வாசனையை உணர்ந்தார். அமரக்கூனின் கண்முன்னே இரண்டு அழுக்குப் பிண்டங்கள் அசைவற்றுக் கிடந்தன.

அமரக்கூன் தமிழில் ஏதோ கத்தியபோது, அந்தப் பெண் தனது சதைப்பிடிப்பான கால்களால் தேரரின் கால்களைப் பின்னிக்கொண்டாள். அவளது விலங்கிடப்பட்ட கைகள் தேரரின் நிர்வாணத்தைப் பற்றின. தேரர் சம்புத்தரைத் தியானித்து தனது மூச்சுக்காற்றை நிறுத்தி வைத்தார். அப்போது, அமரக்கூனின் கையிலிருந்த தடித்த தோல் இடுப்புப் பட்டி தேரரின் புட்டத்தில் சடசடவென விளாறத் தொடங்கியது. தேரர் கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டே, வலியைச் சத்தமேயில்லாமல் தாங்கிக்கொண்டார். புட்டத்தில் முதல் துளி இரத்தம் துளிர்த்தபோது, சீவலி பால தேரருக்கு விந்தும் வெளியாகியது. 

அந்தக் கணத்திற்குப் பின்பு அமரக்கூன் அந்த அறைக்குள் வருவதில்லை. உணவையும் நீரையும் யார் யாரோ எடுத்து வருகிறார்கள். சீவலி தேரரைக் குளிக்க வைத்து, புதிய வேட்டியும் சட்டையும் கொடுத்தார்கள். தேசப்பிரேமி இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், சீவலி தேரர் சீக்கிரமே விடுதலை செய்யப்படலாம் என்றும் அவர்களில் ஒருவன் தேரருக்கு இரகசியமாகச் சொன்னான்.

அவற்றைப் பற்றியெல்லாம் சீவலி தேரர் அக்கறை கொள்வதில்லை. தன்னுடைய சிந்தனை முழுவதையும் அவர் சம்புத்தரிடமே வைத்திருந்தார். மாளாத துக்கத்தால் அவர் மூழ்கடிக்கப்பட்டிருந்தாலும், துறவு நிலையிலிருந்து தான் விலகியதாக அவர் ஒருபோதுமே கருதவில்லை. அந்தப் பெண் குறித்து இந்த முப்பது வருடங்களில் அவர் யாருடனும் பேசியதுமில்லை. அந்தப் பெண் சொன்ன வார்த்தை மட்டும் அவருடன் எப்போதுமிருந்தது.

4

மொட்டைப் பாறையில் படுத்திருந்த சீவலி தேரர் விண்மீன்களை வைத்து நேரத்தைக் கணக்கிட முயன்றார். நடுநிசி தாண்டியிருக்கலாம். கடற்காற்று அவ்வப்போது கைக்கல்லில் இருந்த அகல் விளைக்கை அணைப்பதாகவும், தேரர் திரும்பவும் விளக்கை ஏற்றுவதுமாகத் தூக்கமற்றிருந்தார். அவரது எண்ணங்கள் கட்டற்றுப் பெருகி இருளில் சிதறிக்கொண்டிருந்தன:

‘புனிதப் பல் இந்தத் தீவில் இருக்கும் வரைதான் நாட்டுக்குத் தீங்கு நேராது. நாட்டை மீண்டும் அபாயம் சூழாதவாறு, ஒவ்வொரு கடற்கரையிலும், மலையிலும், கல்லிலும், மரத்திலும், தெருவிலும் சம்புத்தரை வைக்க வேண்டும். நான் இங்கு இருக்கும்வரை, இதோ இந்தச் சம்புத்தர் சிலையில் கை வைக்க யாருக்கும் துணிவு வராது. சீக்கிரமே இங்கேயொரு சிறிய பன்சாலையைக் கட்டி எழுப்பிவிட வேண்டும். அதற்கான வழியை இப்போது நான் அறியமாட்டேன்…’ 

கூவென வந்த காற்று இன்னொருமுறை விளக்கை அணைத்துத் திரும்பியது. சீவலி தேரர் இருளில் தடுமாறி நடந்து சென்று, திரும்பவும் அகல் விளக்கை ஏற்றிய போது, கைக்கல்லில் பதிந்துள்ள விரல் குழியில் ஒரு பல்லி ஒட்டியிருப்பதைப் பார்த்தார். பல்லி இருப்பது தென்மேற்குத் திசையென தேரர் கணித்தார். அவர் கையில் விளக்கோடு பல்லியை நோக்கி மெல்லக் குனிந்தார். தென்மேற்குத் திசையிலிருந்து பல்லி சொன்னால், எடுத்த கருமம் நிறைவேறும் என்று பலன் என்பதைத் தேரர் அறிவார். அவர் பல்லி சொல்வதற்காகக் காதுகளைக் குவித்துக் காத்திருந்தார். அந்தப் பல்லியோ ஒன்றும் சொல்லாமலும், அசையாமலும் அங்கேயே சித்திரம் போல ஒட்டிக்கொண்டிருந்தது.

சீவலி பால தேரர் பல்லிக்கு நெருக்கமாக விளக்கை எடுத்துச்சென்று “ஒரேயொரு சத்தமெழுப்பு! இலங்கைத் தீவு முழுவதற்கும் உனக்கு அரசுரிமை அளிக்கிறேன்” என்றார்.

(நீலம் – டிசம்பர் 2022 இதழில் வெளியானது)

 

 

https://www.shobasakthi.com/shobasakthi/2023/02/02/பல்லிராஜா/?fbclid=IwAR3mHFfC0S4jp_t0B4aFda6XDdRb5E3bmIbcVatpUrY1u6_a4vw4lS-qGLM

ONE WAY – ஷோபாசக்தி

2 months 2 weeks ago
ONE WAY – ஷோபாசக்தி
 
ONE WAY – ஷோபாசக்தி

அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு இரவில் நான் அலைபேசியை அணைத்து வைக்க மறந்து தூங்கிவிட்டேன். அதிகாலை நான்கு மணிக்கு என்னை அலைபேசி அலறி எழுப்பி, அப்பாவின் மரணச் செய்தியை எனக்குச் சொல்லிற்று.

என்னுடைய அப்பா கொஞ்சம் கோணல் புத்திக்காரர். அப்பாவித்தனத்தால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள என்னுடைய அம்மா, ஒரு கிறுக்குத் தீவிரவாதியிடம் சிக்கிக்கொண்ட பணயக் கைதியைப் போலத்தான் அப்பாவிடம் சிக்கியிருந்தார். ஆனால், நான் அப்பாவை இலேசாக முறைத்தாலோ, வார்த்தையைச் சிதற விட்டாலோ அப்பாவுக்கு ஏவம் கேட்டு அம்மா என்னுடன் சண்டைக்கே வந்துவிடுவார். தன்னுடைய கணவர் ஓர் அருமையான புத்திசாலி, சுத்த வீரர் என்றெல்லாம் சொல்லி அம்மா என்னை எச்சரிப்பார். 

அவர்களுக்குக் கல்யாணமான புதிதில், அம்மாவை ‘அன்பே வா’  திரைப்படம் பார்ப்பதற்காக அப்பா அழைத்துப் போயிருக்கிறார். இடைவேளையின் போது, திரையரங்கில் இருந்த ஒரு வாலிபன் அம்மாவைப் பார்த்துச் சிரித்திருக்கிறான். அவன் தன்னுடன் பள்ளிக்கூடத்தில் அய்ந்தாம் வகுப்பு வரை – அம்மா அவ்வளவுதான் படித்திருக்கிறார் –  ஒன்றாகக் கற்றவன் என்பதால் அம்மாவும் பதிலுக்குப் புன்னகைத்திருக்கிறார். இதைக் கவனித்த அப்பா உடனேயே அம்மாவைத் திரையரங்கை விட்டு வெளியே அழைத்துச் சென்று, நடுவீதியில் வைத்து அம்மாவின் கன்னத்தைப் பொத்தி அறைந்துவிட்டு “யாரடி அவன்?” என்று கேட்டிருக்கிறார். அத்தோடு முடிந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. ஆனால், எண்பத்தொரு வயதில் அப்பா இறந்துபோவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகக் கூட, அம்மாவின் கன்னத்தில் அறைந்துவிட்டு “யாரடி அவன் உன்னைத் தியேட்டரில் பார்த்து இளித்தவன்?” என்று கேட்டிருக்கிறார். தொடர்ந்து அய்ம்பது வருடங்களாக தோன்றும் போதெல்லாம் அப்பா இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டேயிருந்திருக்கிறார்.

கோணல் புத்தியிருந்தாலும் அப்பா காரியக்காரர் என்பதில் மறுப்பில்லை. புகையிலைத் தரகு வியாபாரத்தில் அவர் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமாக அலைந்து திரிந்து, கொஞ்சம் கொஞ்சமாக எங்களது குடும்பத்தின் பொருளாதார நிலைமையைத் தூக்கி நிறுத்தினார். அவர் தரகு வியாபாரத்தில் சில மோசடிகளையும் செய்வார் எனப் பேச்சுண்டு. சில வழக்குகள் எங்களது வீடு தேடியே வந்துள்ளன. ஊருக்கு நடுவில் ஒரு பென்னம் பெரிய வெறுங் காணியை வாங்கி, அதைத் தென்னஞ்சோலையாக்கி, ஒரு வீட்டையும் கட்டியுள்ளார். முதலில் பிறந்தது நான்குமே பெண் குழந்தைகள் என்பதால், அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதற்காகக் கட்டுச்செட்டாகப் பணத்தைச்  சேமித்து வைத்திருந்தார். அப்பாவின் முயற்சியோடு, எனது நான்கு அக்காமாருக்கும் அம்மாவின் அழகும் இயற்கையாகவே கிடைத்திருந்ததால், வெளிநாட்டு மாப்பிள்ளைகள் அக்காக்களைக் கொத்திக்கொண்டு போய்விட்டனர். முதலாவது அக்காவான திலகா பிரான்ஸுக்குப் போனதும், அவரது ஏற்பாட்டில் இரண்டாவது அக்காவான ரோகிணிக்கு மாப்பிள்ளை அமைந்தது. அக்காவை வழியனுப்பும்  கொண்டாட்டத்தில் வீடே  திளைத்திருந்தபோது தான், நான் சொல்லாமற்கொள்ளாமல் இயக்கத்திற்கு ஓடிப்போய், கொண்டாட்ட வீட்டை இழவு வீடு போல மாற்றிவிட்டேன். என்னுடைய அந்தச் செயலை அப்பா ஒருபோதும் மன்னிக்கவேயில்லை.

கடைசி அக்காவான வேணி கல்யாணத்திற்காகப் பிரான்ஸுக்குக் கிளம்பியபோது, நான் சிறையில் இருந்தேன். வேணி அக்கா விமானம் ஏறுவதற்கு முன்பாக, அம்மாவோடு மகசீன் சிறைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டே போனார். அப்போதெல்லாம் என்றாவது ஒருநாள் நான் சிறையிலிருந்து  வெளியே வந்துவிடுவேன் என்று நானே நம்பவில்லை. எனக்கு எப்படியும் முப்பது வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். அதுதான் அப்பா கோணல் புத்திக்காரரென்று சொன்னேனே… அவர் ஒரு தடவை கூட என்னைச் சிறையில் வந்து பார்க்கவில்லை. அம்மா தான் ஊரிலிருந்து யாராவது ஓர் உறவினரைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு, அவ்வப்போது வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவார்.

அம்மா தன்னை வருத்திப் பிடித்த விரதங்களாலோ, கோயில் கோயிலாக வைத்த நேர்த்தியாலோ என்னவோ நான் சிறையிலிருந்து ஏழு வருடங்களிலேயே விடுதலையாகிவிட்டேன். வெளியே வந்ததும், பிரான்ஸிலிருந்த நான்கு அக்காமார்களும் ஆளுக்கொரு பங்கு பணம் போட்டு, பயண முகவர் மூலம் என்னைப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொண்டார்கள். நான் இங்கே வந்ததும், அவர்கள் ஒரே குரலில் எனக்கு ஒன்றைச் சொன்னார்கள்:

“தம்பி! நாங்கள் உன்னுடைய வழக்குக்காக ஏழு வருடங்களாகப் பணம் செலவு செய்திருக்கிறோம். உன்னை இப்போது வெளிநாட்டுக்கும் அழைத்துவிட்டோம். அந்தப் பணத்தையெல்லாம் நாங்கள் உன்னிடம் திருப்பிக் கேட்கப் போவதில்லை. ஆனால், இனி அம்மாவையும் அப்பாவையும் கவனித்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு.”

நான் இயக்கமும் போராட்டமும் கசந்து போய்த்தான், என்னுடைய இருபத்தேழாவது வயதில் பிரான்ஸுக்கு வந்தேன். நான் சிறையிலிருந்த காலத்தில் இயக்கம் என்னை முழுமையாகக் கைவிட்டிருந்தது. என்னுடைய குடும்பமே என்னைக் காப்பாற்றிச் சிறையிலிருந்து மீட்டது. என்னுடைய மிகுதிக் காலத்தைக் குடும்பத்தின் நன்மைக்காகச் செலவழிப்பது என்ற எண்ணத்தோடு, நான் கடுமையாக உழைத்தேன். 

நான் பிரான்ஸுக்கு வந்து அய்ந்து வருடங்களான போது, பயண முகவர் மூலம் அம்மாவையும் அப்பாவையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ளுமளவிற்கு என்னிடம் பணம் சேர்ந்திருந்தது. அம்மாவையும் அப்பாவையும் அழைப்பதில் என்னுடைய அக்காமார்களும் ஆர்வமாகயிருந்தார்கள். ஆனால், கோணல் புத்திக்காரரான என்னுடைய அப்பா வெளிநாட்டுக்கு வர மறுத்துவிட்டார். “என்னால் உங்களைப் போல அகதியாக மானம் கெட்டு வாழ முடியாது. வேண்டுமானால் அம்மாவைக்  கூப்பிட்டுக்கொள்ளுங்கள்!” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். அப்பாவைத் தனியே விட்டுவிட்டு அம்மா வரமாட்டார் என்பதை விளக்கத் தேவையில்லை. அவர்களை அழைப்பதற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தில்தான், என்னுடைய மச்சாள் முறையான செவ்வந்தியை இலங்கையிலிருந்து பயண முகவர் மூலம் பிரான்ஸுக்கு வரவழைத்துத் திருமணம் செய்துகொண்டேன். என்னுடைய முழு வாழ்க்கையிலும் நான் செய்த ஒரேயொரு புத்திசாலித்தனமான செயல் அதுதான். கல்யாணங்களின் போது ‘இன்பங்களிலும் துன்பங்களிலும் ஒருவரையொருவர் பிரியோம்’ எனச் சாட்டுக்கு உறுதிமொழி எடுப்பார்கள். ஆனால், செவ்வந்தி மச்சாள் அந்த உறுதிமொழியை இப்போதுவரை தீவிரமாகக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள்.

அப்பா இறந்த போது, தூரத்து உறவினர் தான் அப்பாவுக்குக் கொள்ளி வைக்க வேண்டியதாகப் போய்விட்டது. கொள்ளியிட உரித்துள்ள நானும், அக்காக்களும் பிரான்ஸில் அகதி நிலையில் வசிப்பதால் எங்களிடம் இலங்கைக் கடவுச்சீட்டுக் கிடையாது. எங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் வழங்கியிருக்கும் அகதிகளுக்கான கடவுச்சீட்டில் <இலங்கைக்குப் பயணம் செய்ய  அனுமதியில்லை> என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அய்ந்து பிள்ளைகளைப் பெற்றும் அப்பா பிள்ளைகுட்டி இல்லாதவரைப் போல அநாதையாக இறந்துவிட்டார். அம்மாவுக்கு இப்போது எண்பது வயதாகிவிட்டது. முதுமையின் கனியாகிய நோய்கள் அவரில் பூரணமாகப் படர்ந்திருந்தன. அப்பாவுக்கு ஏற்பட்ட கதிதான் அம்மாவுக்கும் ஏற்படும் என்ற பதற்றத்திலேயே நான் இரவுகளில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தேன். 

ஆனால், பகலிலும் எனக்கொரு கெட்ட சேதி வந்தது. சமையலறைப் பானைக்குள் மறைந்திருந்த பாம்பு  அம்மாவைத் தீண்டியதால், அவர் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று பெரியக்கா எனக்கு அலைபேசியில் சொன்னதும், நான் உடனேயே அம்மாவின் அலைபேசிக்கு அழைத்தேன். அம்மா ஆஸ்பத்திரியிலிருந்து என்னிடம் பேசிய முதல் விஷயமே, தன்னை உடனடியாகப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகயிருந்தது.

அப்பா தவறிப் போன சில நாட்களிலேயே, பிள்ளைகள் நாங்களும் இதுபற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தோம். ஆனால், அம்மாவை பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் அது யோசனை அளவிலேயே நின்றுவிட்டது. இப்போது அம்மா அவராகவே வாய்விட்டுக் கேட்டுவிட்டார். அந்த நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிச் சொன்னால் உங்களாலேயே சரிவரப் புரிந்துகொள்ள முடியாத போது, படிப்பறிவற்ற, உலகமறியாத என்னுடைய அம்மா எப்படிப் புரிந்துகொள்வார் சொல்லுங்கள்!

அகதிகளான நாங்கள் ‘ஸ்பொன்ஸர்’ செய்து அம்மாவை அழைக்க முடியாது. பயண முகவர் மூலம் அம்மாவைச் சட்டவிரோதமான வழிகளில் தான் பிரான்ஸுக்கு வரழைக்க முடியும். அதைத் தவிர வேறெந்த வழியும் எங்கள் முன் கிடையவே கிடையாது. ஆனால், இந்த வயதில் அம்மாவை எப்படி ஒரு சட்டவிரோதப் பயணத்திற்குள் நாங்கள் தள்ளிவிட முடியும். அந்தப் பயணத்தில் பல பனிப்பாலைகளையும் குளிராறுகளையும் கால்நடையாகவே கடக்க வேண்டியிருக்கும் அல்லது ஏதாவது ஒரு திருட்டுக் கடவுச்சீட்டிலோ, போலி விசாவிலோ அம்மா ஆகாய மார்க்கமாகப் பயணிக்க வேண்டியிருக்கும். வழியில் ஏதாவது ஒரு விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் சிறையில் போட்டுவிடுவார்கள். பெரியக்காவின் கணவர் ஒரு யோசனையைச் சொன்னார். ஒருமுறை சுற்றுலா விசாவுக்கு முயற்சித்துப் பார்க்கலாம். கிடைத்துவிட்டால், அம்மா பிரான்ஸுக்கு வந்ததும் இங்கே அகதியாகப் பதிவு செய்துவிடலாம்.

அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முழுவதுமாக என்னிடமே கொடுக்கப்பட்டிருந்ததால், நான்தான் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தேன். அம்மா ஒரளவு உடல்நலம் தேறியதும், அவருக்குத் தெரிந்த ஒருவரின் உதவியோடு கொழும்புக்குச் சென்று, பிரஞ்சுத் தூதரகத்தில் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தார். நேர்முக விசாரணையில் தூதரக அதிகாரி ஒரேயொரு கேள்விதான் கேட்டாராம்:

“நீங்கள் முதியவராக இருக்கிறீர்கள். உங்களை அலையவைக்க நான் விரும்பவில்லை. உங்களுக்கு மூன்று மாதங்கள் விசா வழங்கிவிடலாம். ஆனால், மூன்று மாதங்கள் முடிந்ததும் நீங்கள் மறுபடியும் இலங்கைக்குத் திரும்பி வருவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?”

நான் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தேன். எனவே நேர்முக விசாரணைக்கு முன்பாகவே, நான் அம்மாவை இது விஷயமாக எச்சரித்திருந்தேன். எனவே அம்மா தூதரக அதிகாரியின் கேள்விக்குப் பதிலாக “ஊரில் நிலமும் வீடும் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு நான் பிரான்ஸிலேயே தங்கிவிடமாட்டேன்” என்றிருக்கிறார். 

அதற்கு அந்த அதிகாரி “யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏராளமான நிலங்களும், வீடுகளும் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றின் உரிமையாளர்கள் அய்ரோப்பாவுக்கும் கனடாவுக்கும் சென்றுவிட்டுத் திரும்பி வரவேயில்லை” எனச் சொல்லிவிட்டு, அம்மாவின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார். 

அந்த நிராகரிப்பு எனக்கு அம்மா மீதுதான் கோபத்தைக் கிளப்பிவிட்டது. பதினைந்து வருடங்களுக்கு முன்பே, நான் அழைத்தபோது அம்மாவும் அப்பாவும் கிளம்பி இங்கே வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சட்டவிரோதப் பயண முகவர் மூலம் பயணம் செய்யுமளவுக்கு அப்போது அம்மாவுக்குத் தெம்பிருந்தது. இங்கே வரும் வழிகளும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. நிறையச் சனங்கள் பயண முகவர்கள் ஏற்பாடு செய்துகொடுத்த போலி விசாக்களோடு கொழும்பில் விமானம் ஏறி, பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கி அகதித் தஞ்சம் கேட்டார்கள். அது இலங்கையில் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம் என்பதால், இலங்கையிலிருந்து வரும் அகதிகளைப் பெரிய கெடுபிடிகளில்லாமல் பிரான்ஸ் ஏற்றுக்கொண்டிருந்தது. இப்போதோ அங்கே போரும் முடிந்துவிட்டது. அம்மாவும் பழுத்து முதுமையடைந்து நோயாளியாகிவிட்டார். ஒருநாளைக்குப் பன்னிரண்டு மாத்திரைகளைச் சாப்பிடுகிறார். பிரான்ஸின் பனிக்குள்ளும் குளிருக்குள்ளும் இன்னும் எத்தனை வருடம்தான் அவர் சீவித்துவிடுவார்? வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரத்தைக் கொண்டுவந்து நட்டால் கூட அது இந்தக் காலநிலையில் செத்துவிடுகிறதே. இலங்கையின் வெயிலும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையும் அம்மாவுக்கு அதிக ஆயுளைக் கொடுக்கக்கூடும். இயலாமையால் என்னுள் எழுந்த தாழ்வுணர்ச்சியை விரட்டுவதற்காக, நான் இப்படிக் காரணங்களை வலிந்து தேடிக் கோபப்பட்டுக்கொண்டிருந்தேன்.

ஆனால், பிரான்ஸுக்கு வந்தே தீருவது என்பதில் அம்மா மிக உறுதியாகயிருந்தார். அதற்காக அவர் சொன்ன காரணங்களில் ஏதொன்றையும் என்னால் மறுத்துப் பேசிவிடவே முடியாது.

“கவனமாகக் கேள் தம்பி! இந்த ஊர் காடாகி வருடங்களாகிவிட்டன. பாம்பும், பூரானும், விசர் நாய்களும்தான் இங்கே நாட்டாமை. ஊரில் பத்து வீடுகளைத் தவிர எல்லா வீடுகளும் பாழடைந்து கிடக்கின்றன. யுத்தத்தின் போது, இங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் ஊருக்குத் திரும்பி வரவேயில்லை. எங்களுடைய வீட்டைச் சுற்றி அரைக் கிலோமீற்றர் தூரத்திற்கு யாருமேயில்லை. மின்சாரம் இரவில் வராமல் பகலில் மட்டுமே எப்போதாவது வருகிறது. இந்த வீட்டில் நோயாளிக் கிழவியான நான் எப்படித் தனித்திருக்க முடியும்? கிழக்குத் தெருவில் என்னைப் போலவே தனியாக வசித்துவந்த கிழவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். செய்தது கொள்ளையர்களா? ஆவா குறூப்பா? ஆர்மியா? நேவியா? என்று யாருக்குமே தெரியாது. கிழக்குத் தெருவுக்கும் மேற்குத் தெருவுக்கும் பெரிய தூரமா என்ன? எப்போது வேண்டுமானாலும் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.” 

“அம்மா…நீங்கள் கொஞ்ச நாட்களுக்கு சொந்தக்காரர்கள் யாருடைய வீட்டிலாவது போய் இருக்கலாமே?”

“யார் வீட்டுக்குப் போவது? உன்னுடைய அப்பா எல்லோருடனும் பகையைத் தேடி வைத்துவிட்டுத்தானே போயிருக்கிறார். ஆனால் ஒன்று… அவராகச் சண்டையை ஒருபோதும் தொடக்கியதில்லை. சரி… இப்போது நான் போய் யாராவது சொந்தக்காரர்களோடு இருந்தாலும், அவர்கள் என்னை நன்றாக வைத்துப் பார்ப்பார்களா? என்னிடம் காசு பிடுங்கத்தான் பார்ப்பார்கள். தம்பி! இது நீயிருந்த இலங்கையில்லை. எல்லோருமே வெளிநாட்டுப் பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்.

“இப்போது இங்கே வருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அம்மா. சட்டங்களை இறுக்கிவிட்டார்கள்… உங்களுக்கும் வயதாகிவிட்டது.”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. சென்ற மாதம்தானே செல்லையாவின் பெண்சாதியைப் பிள்ளைகள் கனடாவுக்குக் கூப்பிட்டார்கள். அவள் எனக்கு இரண்டு வயது மூப்பு. மனுசி சக்கர நாற்காலியில்தான் உலாவியது. எனக்கு இன்னும் இரண்டு கால்களிலும் தெம்புள்ளது. நான்தான் தனியாகக் கிணற்றில் தண்ணீர் அள்ளுகிறேன், வளவில் தேங்காய் பொறுக்கி வைக்கிறேன், மழை வெள்ளம் வீட்டுக்குள் ஏறும்போது, நான்தான் தனியாகவே சிரட்டையால் அள்ளி அள்ளித் தண்ணீரை வெளியேற்றுகிறேன். பஸ் பிடித்துப் பத்து மைல்கள் பயணம் செய்து பெரியாஸ்பத்திரிக்குப் போகிறேன். ஆனால், இன்னும் எத்தனை காலத்திற்கு என்னால் இப்படித் தனியாக இருக்க முடியும் தம்பி? எனக்குப் பதினைந்து பேரப் பிள்ளைகள்! ஒருவரது முகத்தைக் கூடத் தொட்டுப் பார்க்காமல் நான் செத்துப்போனால், என்னுடைய உடம்பு தான் வேகுமா? எனக்குக் கொள்ளி வைக்க நீ தான் வருவாயா?”

அக்காமார்கள் முழுவதுமாக அம்மாவின் பக்கமே நின்றார்கள்:

“தம்பி! அம்மா இதுவரை எங்களிடம் பணம் அனுப்பு என்று ஒரு ஈரோ கூடக் கேட்டதில்லையே. நாங்களாக அனுப்பும் பணத்தைக்கூட அவர் தாராளமாகச் செலவு செய்து அனுபவிக்காமல், சிக்கனமாகச் சேர்த்துத்தான் வைத்திருக்கிறார். அவருடைய கடைசிக்கால விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், நாங்கள் அவருக்குப் பிள்ளைகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். தம்பி… உன்னிடம் பணம் போதாமலிருக்கிறது என்றால் நாங்களும் தருகிறோம். அம்மா வந்ததும் நீ தான் அவரை வைத்துப் பராமரிக்க நேரிடும் என்று தயங்காதே. நாங்கள் நான்கு பெண் பிள்ளைகள் இருக்க, மருமகளின் பொறுப்பில் அவரை விட்டுவிட மாட்டோம்.” 

அம்மாவை வரவழைப்பதற்கு நான்தான் ஏதோ முட்டுக்கட்டை போடுகிறேன் என்பது போலவே அக்காமார்கள் பேசியது எனக்கு இன்னும் கோபத்தைக் கூட்டியது. அந்த ஆத்திரத்தில் அன்றைக்கே ஒரு பயண முகவரைத் தேட ஆரம்பித்தேன். என்னுடன் இயற்கை உணவு அங்காடியில் வேலை செய்யும் கைலாசநாதன் உதவிக்கு வந்தார். அவரது நண்பரொருவர் கொழும்பில் பயண முகவராகயிருக்கிறார் என்று சொல்லித் தொலைபேசியில் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த ஏஜெண்ட் கேட்ட தொகை மிக அதிகம் என்றாலும், நான் ஒப்புக்கொண்டேன். விமானப் பயணம்தான். ஏஜெண்டுக்கு முதலில் பாதிப் பணத்தைச் செலுத்துவதென்றும், அம்மா பிரான்ஸ் வந்து இறங்கியதும் மீதிப் பணத்தைக் கொடுப்பதென்றும் பேசிக்கொண்டோம். அக்காமார்களிடம் செப்புச் சல்லி வாங்கவும் நான் விரும்பவில்லை. என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையெல்லாம் வழித்துத் துடைத்துப் பாதித் தொகையை ஏஜெண்டுக்குச் செலுத்தினேன். மீதித் தொகையைக் கட்டுவதற்கு செவ்வந்தியின் நகைகள் இருக்கின்றன.

பணம் கிடைத்ததும், ஒரே வாரத்தில், அம்மாவை டெல்லிக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் அங்கிருந்து அம்மாவைப் பாரிஸுக்கு அனுப்ப ஓர் இந்தியக் கடவுச்சீட்டைத் தயார் செய்தான். டெல்லியிலிருந்து  பிரான்ஸுக்கு வரும் முதியவர்களால் நிரம்பப்பெற்ற சுற்றாலாக் குழுவுக்கு நடுவில் அம்மாவைத் தந்திரமாகக் கலந்துவிட்டான். இந்தத் தந்திரத்தை மிகப் பழமையானதும் எளிமையானதுமான மறு தந்திரத்தால் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் உடைத்துவிட்டார்கள். அவர்கள் அம்மாவிடம் ஒன்று…இரண்டு…மூன்று எனப் பத்துவரை விரல்விட்டு எண்ணிக் காட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். அம்மாவும் விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி எண்ணிக் காட்டியிருக்கிறார். இந்தியர்கள் இப்படி எண்ணும் போது, எங்களைப் போல விரல்களை ஒவ்வொன்றாக மடக்காமல், விரல்களை ஒவ்வொன்றாக விரித்தே எண்ணுவார்களாம். எனவே அம்மா இந்தியரல்ல என்பதை அதிகாரிகள் சுளுவாகக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

அம்மாவை டெல்லியிலுள்ள குடிவரவுச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற தகவலை ஏஜெண்ட் தயக்கத்தோடு தொலைபேசியில் என்னிடம் சொன்னபோது, நான் படு தூஷணத்தால் அவனைத் திட்டித் தீர்த்தேன். எண்பது வயது மூதாட்டியொருவர் மொழி தெரியாத நாட்டில்,  சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு என்னைவிட அதிக ஆத்திரம் ஏற்படுகிறதா இல்லையா! அம்மா சிறையிலிருக்கும் செய்தியை நான் அக்காமார்களிடம் மறைத்துவிட்டேன். அவர்களால் இந்தச் செய்தியைத் தாங்கவே முடியாது. அவர்களது துக்கமெல்லாம், நான்தான் பயண ஏற்பாட்டில் கவனமின்றித் தவறிழைத்துவிட்டேன் என்பது போல என்மீதே கோபமாகத் திரும்பும். 

என்னுடைய மொத்தக் கோபமும் அந்த முட்டாள் ஏஜெண்டை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கைலாசநாதன் மீது திரும்பியது. அவர் எனக்கு உதவி செய்ய முன்வந்ததால், என்னிடம் தும்பு பறக்க ஏச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் இனிமையான குணமுள்ள அந்த மனிதர் என்னுடைய கவலையையும் கோபத்தையும் புரிந்துகொண்டு, முட்டாள் ஏஜெண்டைப் பாடாகப் படுத்தி, அம்மாவை அய்ந்தே நாட்களில் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்துவிட்டார். அம்மா சிறையிலிருந்து வெளியே வந்து, தொலைபேசி வழியாக என்னிடம் பேசும் போது, நான் உண்மையிலேயே குழறி அழுதுவிட்டேன். முட்டாள் ஏஜெண்ட் மறுபடியும் ஒரு முயற்சியை மும்பை விமான நிலையம் வழியாக எடுப்பதாகச் சொன்னான். “ஒரு மயிரும் வேண்டாம்! அம்மாவைப் பத்திரமாக ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்” என்றேன். அப்படியானால் தனக்குக் கொடுத்த பாதிப் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்றான். “வேண்டாம்… அது எனக்கு வேண்டாம்! அம்மாவைப் பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் சென்றால் போதும்” எனச் சொல்லிவிட்டேன். 

அடுத்த வாரம், அம்மா இலங்கையிலிருந்து தொலைபேசியில் அழைத்துப் பேசினார்:

“தம்பி! இந்தியா வழியாக வருவது கொஞ்சம் கஷ்டம் போலல்லவா இருக்கிறது… இப்போது உக்ரேன் வழியாகத் தான் சனங்கள் பிரான்ஸுக்கு வருவதாக தொலைக்காட்சியில் சொல்கிறார்கள்…”

“அம்மா… அங்கே கடுமையான சண்டை நடந்துகொண்டிருக்கிறது” என்றேன்.

“அது பரவாயில்லைத் தம்பி… நான் பார்க்காத சண்டையா! நீ வீணாகப் பயப்படாதே! நாளைக்கே சாகப்போகிற கிழவியான என்னை அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்றார் அம்மா.

அம்மா ஒவ்வொரு நாளுமே எங்கள் எல்லோரையும் வாட்ஸப்பில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டேயிருந்தார். தன்னால் ஒரு நிமிடம் கூட இலங்கையில் இருக்க முடியாது என்று திரும்பத் திரும்பச் சொன்னார். “காசு பணம் இருந்து என்ன பலன்? சாப்பாட்டுச் சாமான்கள் எதுவும் கிடைப்பதில்லையே! சனங்கள் இங்கே பஞ்சத்தில் சாகப் போகிறார்கள். சீனாக்காரன் கொடுக்கும் அரிசிப் பசையையும், குப்பையில் விளையும் கீரையையும் சாப்பிட்டே இங்கே வாழ வேண்டியிருக்கிறது” என்றார். இதைக் கேட்ட பின்பும் நிம்மதியாக ஒருபிடி சோறு தின்பதற்குப் பிள்ளைகளான எங்களுக்கு எப்படி மனம் வரும்!

எனக்கு அங்காடியில் வேலை ஓடவேயில்லை. அம்மாவைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். நிராசையால் ஏங்கியே என்னுடைய அம்மா அநாதையாகச் செத்துவிடுவாரா என்றெல்லாம் யோசித்து எனது தலை கொதித்துக்கொண்டிருந்தது. நான் தட்டுத் தடுமாறிக்கொண்டிருப்பதை யூதரான முதலாளி கவனித்துக்கொண்டிருந்தார். என்னைக் கூப்பிட்டு, ஒலிம்ப் அம்மையாரிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாகச் சொல்லி, அம்மையார் கேட்டிருக்கும் இயற்கை உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று, அவரது வீட்டில் கொடுத்துவிட்டு வருமாறு சொன்னார். நான் பட்டியலிலுள்ள பொருட்களை எடுத்துத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிவாறே ஒலிம்ப் அம்மையாரின் வீட்டை நோக்கி நடந்தேன். அங்கே போவதென்றாலே என்னிடம் ஓர் உற்சாகம் ஒட்டிக்கொள்ளும். இப்போது உற்சாகம் ஏற்படவில்லை என்றாலும் மனதிற்குச் சற்று ஆறுதலாகவேயிருந்தது.

நான் இரண்டு வருடங்களுக்கு முன்பாக, இந்த யூதரின் அங்காடியில் வேலைக்குச் சேர்ந்த போது, என்னுடைய முதல் வேலையே ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குப் பொருட்களைத் தள்ளுவண்டியில் எடுத்துச் செல்வதாகவே இருந்தது. அவரது வீடு அதிக தூரத்திலில்லை. நான் வேலைக்கு வந்து இறங்கும் ட்ராம் தரிப்பிடத்திற்கு, எதிரேயிருந்த சிறிய காணித் துண்டிலேயே அவரது பழமை வாய்ந்த வீடு இருந்தது.

பிரஞ்சு – கோர்ஸிகா பெற்றோருக்குப் பிறந்த ஒலிம்ப் அம்மையாருக்குக் கிட்டத்தட்ட என்னுடைய அம்மாவின் வயதுதான் இருக்கும். அம்மாவைப் போலவே இவரும் தனிமையிலேயே வசிக்கிறார். சராசரி உயரம் உள்ளவர் என்றாலும், அவரது முதுகில் பெரிதாகக் கூன் விழுந்திருப்பதால், சிறிது குள்ளமாகத் தோற்றமளிப்பார். முகத்தில் இலேசாகத் தாடி மீசை அரும்பியிருக்கும். உச்சந்தலையில் சிறிதளவு வழுக்கையுமுண்டு. ஒலிம்ப் அம்மையார் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. உளவியலில் பட்டப் படிப்புப் படித்தவராம். அவரது வீடு முழுவதும் கருப்பு அட்டை போட்ட தடிமனான புத்தகங்கள் எல்லா இடங்களிலுமே அடுக்கப்பட்டிருக்கும்.

நான் ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குச் சென்ற முதல் நாளிலேயே, அம்மையார் தன்னுடைய சாம்பல் நிறச் சிறிய கண்கள் ஒளிர என்னைப் பார்த்துவிட்டு, வீட்டினுள்ளே அழைத்து உட்காரவைத்துப் பேசினார்.

“அழகிய இளைய மனிதனே! நீ ஸ்ரீலங்கனா?”

“ஆம்… அம்மா” என்றேன்.

அதன் பின்பு, நான் அங்கே பொருட்களை விநியோகிக்கப் போய்வரும் போதெல்லாம் ஒலிம்ப் அம்மையார் என்னிடம் சிறுகச் சிறுகச் சொல்லியது இவைதான்:

“அதுதான் மகனே! அப்போது இரண்டாம் உலகப் போர் முடிந்து சில வருடங்களே ஆகியிருந்தன. பிரான்ஸ் நாசிப் படையிடமிருந்து விடுதலை பெற்றுச் செழிக்கத் தொடங்கிய காலம். அப்போதும் எங்களது குடும்பம் இந்த வீட்டில்தான் வசித்தது. என்னுடைய அப்பா போரில் இறந்துபோயிருந்தார். அம்மா முரடனான ஒரு கிரேக்கனைச் சிநேகிதம் செய்துகொண்டார். அப்போது எனக்குப் பதின்மூன்று வயது.

எங்கிருந்து வந்ததெனத் தெரியாத ஓர் இலங்கைக் குடும்பம் இந்த ஊரில் குடியேறியது. அந்தக் குடும்பம் சிங்களக் குடும்பமா? தமிழ்க் குடும்பமா? அல்லது கலப்புக் குடும்பமா? என்பது கூட எனக்குத் தெரியாது. அந்தக் குடும்பத்தில் என்னுடைய வயதையொத்த ஒரு பையன் இருந்தான். அவன் எங்களுடைய பாடசாலையில்தான் தான் சேர்க்கப்பட்டான். அவனுக்கு ஆரம்பத்தில் ஒரு பிரஞ்சு வார்த்தை கூடத் தெரியாது. ஆனால், போர்த்துக்கேய மொழியை ஓரளவு பேசுவான். நானும் அதை ஓரளவு புரிந்துகொள்வேன். அவனுடைய பெயர் தோமஸ். 

நான் சீக்கிரமே வெட்க சுபாவமுள்ள அந்தக் கறுப்பு அழகனிடம் காதல் வயப்பட்டேன். அப்போது இந்த ஊர் ஒரு சிறு கிராமம். காடு பூத்துக் கிடக்கும். இப்போது போல் அல்லாமல் அப்போது நதியில் ஏராளமாக நீர் வரும். புல்வெளிகளில் குதிரைகள் நிதானமாக மேய்ந்துகொண்டிருக்கும். நானும் தோமஸும் காடுகளுக்குள்ளும் நதியிலும் விளையாடித் திரிந்தோம். ஒரு வேடிக்கையான விஷயம் சொல்லட்டுமா? தோமஸுக்கு முத்தமிடக் கூடத் தெரிந்திருக்கவில்லை. நான்தான் அதை அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன்.

எங்களுடைய உறவு அம்மாவுக்குத் தெரிய வந்தபோது, அவர் என்னைக் கடுமையாகக் கண்டித்தார். அவரது காதலனான கிரேக்கன் என்னை முரட்டுத்தனமாக அடித்தான். அப்போதும் நான் தோமஸைச் சந்திப்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் அந்த இலங்கைக் குடும்பமே இந்த ஊரிலிருந்து திடீரெனக் காணாமற் போய்விட்டது. இரண்டு மாதங்கள் மட்டுமே நீடித்த அந்த உறவை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது. என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் செல்வேன் என்ற முட்டாளத்தனமான எண்ணமொன்று இந்தக் கிழவியின் மனதிற்குள் ஒளிந்து கிடப்பதை நான் உன்னிடம் மறைக்கத் தேவையில்லைத்தானே மகனே!”

ஒலிம்ப் அம்மையாரின் வீடடில் இலங்கை சம்பந்தமான நூல்கள், படங்கள், சிலைகள், முகமூடிகள், வரைபடங்கள் எல்லாமே இருந்தன. இலங்கையைக் குறித்துப் புத்தகங்கள் வழியாக அவர் ஏராளமாகப் படித்திருந்தார். என்னிடம் பேசுவதால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதை அவர் சொல்லிக்கொண்டேயிருப்பார். ஆனால், நான் வேலைக்குத் திரும்பாமல் ஒலிம்ப் அம்மையாரது வீட்டில் மெனக்கெடுவது என்னுடைய முதலாளிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. 

நான் ஒலிம்ப் அம்மையாரை ஒருநாள் எனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து, வகைவகையான இலங்கை உணவுகளைப் பரிமாறினேன். காரத்தால் அவருக்குக் கண்களில் நீர் கசிந்த போதும், தட்டில் வைத்த எதையும் மீதம் வைக்காமல் இரசித்துச் சாப்பிட்டு முடித்தார். அது பிரஞ்சுக்காரர்களின் வழக்கம்.

“அம்மா… நான் ஒருநாள் உங்களை நிச்சயமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வேன்” என்று நான் ஒலிம்ப் அம்மையாரிடம் அடிக்கடி சொல்வேன். அவர் சிறு குழந்தையைப் போலப் புன்னகைப்பார். எனக்கே இலங்கைக்குப் போக வழியில்லை என்பது ஒலிம்ப் அம்மையாருக்குத் தெரியாது. 

நான் தள்ளுவண்டியோடு ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குள் நுழைந்ததுமே, அவர் கேட்ட முதல் கேள்வி “ஸ்ரீலங்காவில் உன்னுடைய அம்மா நலமாகயிருக்கிறாரா? கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றி விட்டார்களாமே. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், அடிதடி என்று பத்திரிகையில் படித்தேன். உன்னுடைய கிராமத்தில் பிரச்சினை ஏதும் இல்லையல்லவா?”

நான் உங்களிடம் உண்மையை மட்டுமே சொல்கிறேன்! ஒலிம்ப் அம்மையார் ‘பிரச்சினை’ என்று சொன்ன அந்த விநாடியில்தான் என்னுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் திடீரெனப் பளிச்சிட்டு ஓடியது. அதை ஒலிம்ப் அம்மையாரிடம் சொல்லலாமா வேண்டாமா எனக் கடுமையான மனப் போராட்டம் எனக்குள் நடந்துகொண்டிருந்த போதே, என்னுடைய பரிதாபத்திற்குரிய நாவு பேசிற்று:

“அம்மா உங்களால் எனக்கொரு உதவி செய்ய முடியுமா?”

“சொல்லு மகனே! நிச்சயம் செய்வேன்!”

“இப்போது இலங்கையில் நிலைமை அவ்வளவு சரியில்லை. பஞ்சம் பரவிக்கொண்டு வருகிறது. மருந்துப் பொருட்களும் தட்டுப்பாடு. நோயாளியான என்னுடைய அம்மாவை பிரான்ஸுக்கு அழைத்து, கொஞ்ச நாட்களுக்கு என்னுடன் வைத்திருக்க விரும்புகிறேன் அம்மா…”

“ஆம்… அதை நீ நிச்சயம் செய்தாக வேண்டும் மகனே. நான் உனக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?”

“நீங்கள் ஒரு ஸ்பொன்ஸர் கடிதம் கொடுத்தால், என்னுடைய அம்மாவுக்கு விசா வழங்கிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்…”

“அவ்வளவு தானா! உன்னுடைய அம்மா பிரான்ஸுக்கு வந்துவிட்டார் என்றே வைத்துக்கொள்! அவரைப் பயணத்திற்குத் தயாராகச் சொல். நான் இப்போதே நகரசபை அலுவலகத்திற்குப் போய்த் தேவையான படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் ஸ்பொன்ஸருக்கான பத்திரத்தைப் பெற்று வந்துவிடுகிறேன். நீ வேலை முடிந்ததும் மாலையில் என்னை வந்து பார்!”

நன்றியுணர்வால் எனக்குப் பேச்சு எழவில்லை. என்னுடைய கண்கள் கலங்கியதைப் பார்த்ததும், குழந்தைச் சிரிப்புடன் எழுந்துவந்து ஒலிம்ப் அம்மையார் என்னைக் கட்டியணைத்துக்கொண்டார்.

நான் வேலையில் இருந்த போது, அங்காடிக்குத் தொலைபேசியில் அழைத்த ஒலிம்ப் அம்மையார் என்னுடைய அம்மாவின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விபரங்களை என்னிடம் கேட்டார். அப்போது ஒலிம்ப் அம்மையார் நகரசபை அலுவலகத்தில் இருந்தார்.

ஆயிரம் கேள்விகள் மனதிற்குள் குத்திமுறிய, நான் மாலையின் ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குச் சென்றேன். அவர் என்னை அவரது படிப்பு மேசையின் முன்னே உட்காரவைத்துவிட்டு, அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்து அய்ந்து பத்திரங்களை என்னிடம் கொடுத்தார். 

“கேள் மகனே! முதலாவது பத்திரம் உன்னுடையை அம்மாவை நான் விருந்தினர் விசாவில் மூன்று மாதங்கள் பிரான்ஸில் தங்க வைப்பதற்கான நகரசபையின் ஒப்புதல் பத்திரம். இரண்டாவது என்னுடைய வங்கிக் கணக்கு விபரம். மூன்றாவது என்னுடைய பிரஞ்சுத் தேசிய அடையாள அட்டையின் பிரதி. நான்காவது உன்னுடைய அம்மாவை என்னுடைய விருந்தினராக வருமாறு கேட்டு நான் அவருக்கு அனுப்பும் கடிதம். அய்ந்தாவது பத்திரம் உண்மையிலேயே அவசியமற்றது… ஆனால், அதுவே மிக முக்கியமானது என்று நகரசபையில் சொன்னார்கள். மூன்று மாதங்களுக்குள் விருந்தினர் பிரான்ஸிலிருந்து வெளியேறாவிட்டால், உள்துறை அமைச்சு என் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் ஒப்புதல் தெரிவிக்கும் பத்திரம். இவற்றை எடுத்துக்கொண்டு போய் உன்னுடைய அம்மா கொழும்பிலிருக்கும் பிரஞ்சுத் தூதரகத்தில் விண்ணப்பித்தால், நிச்சயமாக விசா கொடுத்துவிடுவார்கள். உன்னுடைய அம்மாவைச் சந்திக்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நானே அவரிடம் வருவேன்!” 

ஒலிம்ப் அம்மையார் என்னிடம் கொடுத்த ஒவ்வெரு பத்திரத்தின் அடியிலும் நடுங்கும் கையால் ஒலிம்ப் அம்மையார் இட்ட கையெழுத்து இருந்தது.

கிறுக்கலான கையெழுத்து என்றாலும், பிரஞ்சுக் கையெழுத்துக்கு ஒரு மதிப்பிருக்கத்தான் செய்கிறது இல்லையா! கொழும்பிலிருக்கும் பிரஞ்சுத் தூதரகத்தில் விண்ணப்பித்த பத்து நாட்களுக்குள்ளேயே, அம்மாவுக்கு மூன்று மாதங்களுக்கான விருந்தினர் விசாவைக் கொடுத்துவிட்டார்கள். இந்தச் செய்தியை அறிந்ததும் என்னுடைய அக்காமார்கள் பூரித்துப்போய், என்னை அலைபேசி வழியே கொஞ்சித் தள்ளிவிட்டார்கள். அதன் பின்பு, அம்மாவை என்னுடைய வீட்டில் நான்தான் வைத்துக்கொள்வேன், நான்தான் வைத்துக்கொள்வேன் என்று அவர்களிடையே கடும் போட்டி தொடங்கிவிட்டது. எப்போதும் போலவே இந்தப் போட்டியிலும் தன்னுடைய விட்டுக்கொடுக்காத பிடிவாதத்தால் என்னுடைய மூன்றாவது அக்காவான மலரே வெற்றிபெற்றார்.

அவர்கள் மகிழ்ச்சியில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, என்னுடைய உள்ளம் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. பிரான்ஸுக்கு வரும் அம்மா நிச்சயமாக மூன்று மாதங்களில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். தன்னுடைய அய்ந்து பிள்ளைகளையும், பதினைந்து பேரக் குழந்தைகளையும் விட்டு, மறுபடியும் அவர் தனிமையை நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும். ஆனால், நான் அம்மாவிடம் அதைச் சொல்லத் துணியவில்லை. அது பிரான்ஸுக்கு வரும் அவரது மகிழ்ச்சியில் நிச்சயமாகவே மண்ணையள்ளி எறிந்துவிடும். பிரான்ஸுக்கு வந்ததும், அதைப் பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்லி, அவரைத் தேற்றித் திருப்பி அனுப்பிவிடலாம் என்றே நினைத்தேன். இன்னொன்றும் நடக்கக் கூடும். சீக்கிரமே வரவிருக்கும் கடுங்குளிர் காலத்தாலும், இங்குள்ள அடைத்த அடுக்குமாடிக் குடியிருப்புகளாலும், சமைத்த உணவைக் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருந்து, ஒரு வாரம் வரை உண்ணும் உணவுப் பழக்க வழக்கங்களாலும் அம்மாவே சலிப்புற்று இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பலாம். இருபது வருடங்களாக இங்கேயிருக்கும் எனக்கே இலங்கைக்கு எப்போது போகலாம் என மனம் தவித்துக்கொண்டிருக்கிறதே! அம்மா அவ்வாறாக விருப்பப்பட்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் எல்லாமே மகிழ்ச்சியாக முடிந்துவிடும். பேரக் குழந்தைகளைப் பார்த்த திருப்தியில் ஊர்ச் சுடலையிலேயே அவர் நிம்மதியாக நீறாவார். 

அம்மா பிரான்ஸுக்கு வந்த மூன்றாவது நாளே, நான் ஒலிம்ப் அம்மையாரை அழைத்துக்கொண்டு, மலர் அக்காவின் வீட்டுக்குச் சென்றேன். ஒரு ‘மிமோஸா’ பூங்கொத்தோடு வந்த ஒலிம்ப் அம்மையார் அங்கிருந்து கிளம்பும்வரை, என்னுடைய அம்மாவின் கையைப் பற்றிப் பிடித்தபடியே இருந்தார். அப்போது, என்னுடைய நான்கு அக்காக்களுமே அங்கிருந்தனர். அவர்கள் ஆரவாரமாக ஒலிம்ப் அம்மையாரை  வரவேற்றாலும், அம்மையார் இந்த நேரத்தில் ஒரு வேண்டப்படாத விருந்தாளி என்பதைப் போலவே தங்களுக்குள் சாடை பேசிக்கொண்டிருந்தார்கள்.

இன்னொருநாள் அம்மா என்னிடம் சொன்னார்:

“தம்பி! ஊரில் காணியையும் வீட்டையும் கவனித்துப் பார்க்க ஆட்களில்லை. யாராவது அயலவர்கள் கள்ள உறுதி முடித்துக் காணியையும் வீட்டையும் கைப்பற்ற முன்பாக நாங்கள் வீட்டை விற்றுவிட வேண்டும். அதொன்றும் பெரிய பணம் இல்லைத் தான். கைவிடப்பட்டுக் காடாகியிருக்கும் அந்த ஊரில் ஒரு பரப்புக் காணி ஓர் இலட்சத்திற்குக் கூட விலை போகாது. காணியையும் வீட்டையும் ஒரு பாதிரிமார் சபை விலைக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதை விற்று முடிப்பதற்கான வேலையை நாங்கள் சீக்கிரமே செய்ய வேண்டும்.”

“அம்மா… அது நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு. எங்களது குடும்பத்திற்கு இலங்கையில் இருக்கும் ஒரே அடையாளம் அந்தக் காணிதான். அது அதுபாட்டிற்கு இருந்துவிட்டுப் போகட்டுமே…”

“இருந்து? நாங்கள் யாருமே அங்கே திரும்பிப் போகப் போவதில்லை. கள்ளர் அனுபவிக்கவா அந்தக் காணியை உன்னுடைய அப்பா தேடி வைத்தார்? விற்கிற வேலையைப் பார் தம்பி.”

அம்மாவுக்குப் பிரான்ஸ் இவ்வளவு பிடித்துப் போகும் என்று நான் உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. பனியையும் குளிரையும் ஒரு குழந்தையைப் போலல்லவா அவர் அனுபவிக்கிறார். ஒருநாள், நான் மலர் அக்காவின் வீட்டுக்குப்  போயிருந்தபோது, அம்மா தரைக் கம்பளத்தின் மீது அமர்ந்திருந்து பேத்தியிடம் பிரஞ்சு மொழிப் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார். 

“அம்மா! தரையில் உட்காராதீர்கள்…குளிர் ஏறிவிடப் போகிறது” என்றேன்.

“சீச்சி… குளிர்தான் என்னுடைய நோய்க்கு நல்ல மருந்தென்று நினைக்கிறேன். இங்கே வந்ததிலிருந்து எனக்குக் காய்ச்சல், தடிமன் கூட வந்ததில்லையே… வாழப் போகும் நாட்டின் பாஷையில் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே தம்பி. அதுதான் கொஞ்சம் பிரஞ்ச் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். உன்னுடைய அப்பாவுக்குச் சிங்களம் தெரிந்திருந்ததால் தானே கொழும்பு வரைக்கும் போய்க் கெட்டித்தனமாக வியாபாரம் செய்தார்” என்றார் அம்மா.

அம்மா பிரான்ஸுக்கு வந்து இரண்டரை மாதங்கள் கழிந்துவிட்டன. மலர் அக்காவின் வீட்டில் அம்மா தங்கியிருந்தாலும், மற்றைய பிள்ளைகளின் வீடுகளிலும் அவ்வப்போது ஒன்றிரண்டு நாட்கள் தங்கி அம்மா எப்போதுமே ரவுண்ட்ஸில் இருந்தார். நடுவில் அம்மாவை அழைத்துக்கொண்டு பெரியக்கா குடும்பம் லூட்ஸ் மாதா கோயிலுக்கும் சென்று வந்தது. பாரிஸையும் அதன் புறநகரங்களையும் அம்மா சுற்றியடித்து, எல்லாச் சைவக் கோயில்களுக்கும் போய்விட்டு வந்துவிட்டார். பேரப் பிள்ளைகளோடு நதிக்கரைக்குச் சென்று விளையாடிவிட்டு வந்து “ச்சா… என்னவொரு சோக்கான நாடு! ஒரு பூச்சியிருக்கா பூரானிருக்கா பாம்பிருக்கா?” என்று வியந்துகொண்டிருந்தார். நடுநடுவே, ஊரிலிருக்கும் காணியையும் வீட்டையும் விற்க வேண்டும் என்று என்னிடம் சொல்லியவாறேயிருந்தார்.

அம்மாவின் விசா முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. நான் பெரியக்காவைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்:

“பெரியக்கா… நீங்கள்தான் அம்மாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அம்மா முப்பதாம் திகதி இலங்கைக்குத் திரும்ப வேண்டும்.”

“தம்பி… என்ன விசர்க் கதை கதைக்கிறாய்?  படாத பாடுபட்டு அம்மாவை இங்கே கூப்பிட்டுவிட்டு, திருப்பி அனுப்புவதா? அந்த மனுசி இலங்கைக்குப் போய் என்ன செய்யும்? அம்மா உயிரோடு இருக்கப் போவதே இன்னும் ஒன்றோ இரண்டோ வருடங்கள்தான். அவர் இங்கேயே இருக்கட்டும். இனி நீ கஷ்டப்பட வேண்டாம். நானே அம்மாவுக்குத் தேவையானவற்றைச் செய்கிறேன். விசா முடிந்த அடுத்த நாளே, அம்மாவைக் கூட்டிப்போய் பொலிஸில் அகதியாகப் பதிவு செய்து விடுகிறேன்.”

“அக்கா…நான் உங்களுக்கு முதலிலேயே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அப்படிச் செய்ய முடியாது. அம்மா திரும்பிப் போகாவிட்டால் ஸ்பொன்ஸர் செய்து வரவழைத்த ஒலிம்ப் அம்மையார் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.”

“நல்ல ஒலிம்பும் பிளிம்பும்! அந்தக் கிழவி ஏதாவது பணம் கேட்டால் கொடுத்துவிடலாம். ஆனால், அம்மாவைத் திருப்பி அனுப்ப முடியாது.”

“இங்கே பெரியக்கா.. இது ஒலிம்ப் அம்மையார் பணத்திற்காகச் செய்த காரியமில்லை. எங்கள் மீதுள்ள அன்பால் செய்தது. நம்பிக்கையால் செய்தது. அவருக்கு எங்களது அம்மாவை விட வயது அதிகம். இந்த வயதில் அவரை நீதிமன்றத்திற்கு அலைய வைக்க முடியுமா? ஒருவேளை அவர் சிறைக்குக் கூடச் செல்ல வேண்டியிருக்கலாம்…”

“பேய்க்கதை கதைக்காதே தம்பி. இங்கே எவ்வளவு சனங்கள் ஸ்பொன்ஸரில் வந்துவிட்டு இங்கேயே அகதித் தஞ்சம் கேட்டுத் தங்கிவிடுகிறார்கள். ஏதாவது பிரச்சினை நடந்ததா? நீ பயப்படுவது போல எதுவும் நடக்காது.”

“இல்லை பெரியக்கா… என்னால் ஒலிம்ப் அம்மையாருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய முடியாது. அம்மா திரும்பிப் போகத்தான் வேண்டும்!”

நான் மூன்றாவது அக்காவான மலரைத் தொலைபேசியில் அழைத்தேன். அதற்குள் பெரியக்கா மலர் அக்காவை அழைத்து விபரம் சொல்லியிருக்கிறார். மலர் அக்கா தன்னுடைய இயல்புப்படியே எடுத்ததும் என்மீது சீறி விழுந்தார்:

“ஆமோ! அப்படியோ!! என்னுடைய அம்மாவை நீ எப்படித் திருப்பி அனுப்புகிறாய் என்று நானும் பார்க்கிறேன். இப்போதே அம்மாவின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கிழித்து அடுப்பில் போட்டுவிடுகிறேன்” என்று மலரக்கா ராங்கி காட்டினார்.

“அது முடியாது மலரக்கா… அம்மாவின் பாஸ்போர்ட் என்னிடம்தான் இருக்கிறது.”

“உன்னுடைய இயக்கத்துக் குறுக்கு மூளையைக் காட்டிவிட்டாய் தம்பி. உனக்கு அம்மாவை விட அந்த வெள்ளைக்காரக் கிழவி முக்கியமாகப் போய்விட்டாள் தானே! அம்மாவிடம் மட்டும் ஊருக்குத் திரும்பிப் போகவேண்டும் என்று தயவுசெய்து சொல்லிவிடாதே! ஏங்கி இப்போதே செத்துவிடுவார். பழியைச் சுமக்காதே!”

ஆனாலும், நான் கடைசியில் பழியைச் சுமக்கவே நேரிட்டது. ஒரு வாரமாகவே ஒலிம்ப் அம்மையாரிடமிருந்து எங்களது அங்காடிக்கு அழைப்பு ஏதும் வரவேயில்லை. ஒருமுறை அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கவும் எனக்கு மனம் ஏவவில்லை. அம்மாவின் விசா பிரச்சினை என்னைக் கடுமையாகக் குழப்பிக்கொண்டேயிருந்தது. மாலையில் வேலை முடிந்து செல்லும் போது, ஒலிம்ப் அம்மையாரின் வீட்டைக் கவனித்தேன். வெளியே பூட்டுப் போடப்பட்டிருந்தது. கதவின் இடுக்குகளில் விளம்பரப் பத்திரிகைகள் குப்பையாகச் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் நான் இந்த ட்ராம் தரிப்பிடத்திலிருந்து ஒலிம்ப் அம்மையாரின் வீட்டைப் பார்க்கிறேன். இதை எப்படிக் கவனிக்கத் தவறினேன்? என்னையறியாமலேயே ஏதோவொரு கள்ள எண்ணம் என்னுடைய உள்ளத்தில் புகுந்துவிட்டது என்று எனக்குத் தோன்றியதும், வாயில் ஊத்தை எச்சில் ஊறி வந்தது. அதை வீதியில் உமிழ்ந்தேன். வீதியைக் கடந்து சென்று, ஒலிம்ப் அம்மையாரின் பக்கத்து வீட்டுக்காரரின் அழைப்பு மணியை அழுத்தினேன். அந்த இத்தாலியரிடம் எனக்கு ஓரளவு பழக்கமுண்டு. அவருக்கும் நான் தான் பொருட்களை எடுத்து வருபவன். 

ஒலிம்ப் அம்மையார் மூச்சுத் திணறல் பிரச்சினையால் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று இத்தாலியர் சொன்னார். நான் ட்ராம் தரிப்பிடத்திற்குத் திரும்பவும் சென்று, எனது வீட்டுக்குச் செல்வதற்கான ட்ராம் வண்டிக்காகக் காத்திருக்கலானேன். என்னுடைய சின்ன மூளைக்குள் கட்டெறும்புகளைப் போல ஆயிரம் எண்ணங்கள் புற்றெடுத்துச் சுற்றிக்கொண்டிருந்தன.

வீட்டுக்குச் செல்லும் வழியில், மத்திய மருத்துமனைத் தரிப்பிடத்தில் ட்ராம் நின்றபோது, என்னுடைய கால்கள் என்னை அறியாமலேயே ட்ராம் வண்டியிலிருந்து கீழே இறங்கின. ஏதோ ஒரு கிலோ போதை மருந்தைத் தின்றவனைப் போலத்தான் நான் நடந்து சென்றேன். மருத்துவமனையின் வரவேற்புப் பகுதியிலிருந்த பெண்ணுக்கு முன்னால் நான் தளர்ந்து போய் நின்றிருந்தபோது, நான் ஆஸ்பத்திரியில் சேர வந்த நோயாளி என்று கூட அந்தப் பெண் நினைத்திருக்கக் கூடும். அவளிடம் ஒலிம்ப் அம்மையார் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறை எண்ணை விசாரித்துத் தெரிந்துகொண்டு உள்ளே சென்றேன். லிஃப்டில் கூட ஏறாமல், மாடிப் படிகளில் நடந்தே ஏறிச் சென்றேன். ஒலிம்ப் அம்மையாரின் கண்களைச் சந்திக்கும் தருணத்தை நான் கூடியவரை ஒத்திப்போட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை.

படுக்கையில் கிடந்த ஒலிம்ப் அம்மையாரின் கண்கள் மூடியே இருந்தன. முகத்தில் மூடியிட்டு பிராணவாயு செலுத்தப்பட்டுக்கொண்டிந்தது. முழங்கால்கள் வரையிருந்த நீல ஆடைக்குள் ஒரு பொம்மை போல ஒலிம்ப் அம்மையார் அசைவற்றுக் கிடந்தார். நான் அங்கிருந்த தலைமைத் தாதியிடம் விசாரித்த போது “இந்த அம்மையாரின் உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது… இவரது உடல் நிலை குறித்து எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது” என்று அவள் இயந்திரம் போல என்னிடம் சொன்னாள். அதுவரை அலைவுற்றுக்கொண்டிருந்த என்னுடைய ஆன்மா மெதுவே தணிவதை உணர்ந்தேன். என்னுடைய நாவில் ஊத்தை எச்சில் கொத்தாகச் சுரந்தது. அதை வாய்க்குள் அடக்கியபடியேதான் நான் வீடுவரை வந்தேன்.

நான் வீட்டுப் படியில் கால் வைக்க முன்பே, என்னுடைய கடைசி அக்கா வேணியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. நான் வாய்க்குள் எச்சிலை வைத்துக்கொண்டே பேசினேன்.

“என்னடா தம்பி… நீ உண்மையில் அம்மாவைத் திருப்பி அனுப்பத்தான் போகிறாயா?” என்று வேணி அக்கா கேட்டார்.

“எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது” என்றேன். நான் சொன்னது வேணி அக்காவுக்குப் புரிந்ததோ தெரியாது. 

அடுத்து வந்த நான்கு நாட்களும், நான் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று ஒலிம்ப் அம்மையாரின் படுக்கையைக் கவனித்தேன். அவர் கண்களை மூடி அசைவற்றுக் கட்டையாகக் கிடந்தார். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் நான் அங்கே செல்வதால், அந்தத் தாதி எனக்குப் பழக்கமாகிவிட்டாள். என்னைத் தவிர வேறு யாருமே ஒலிம்ப் அம்மையாரைப் பார்க்க வருவதில்லை என்று அந்தத் தாதி சொன்னபோது, நான் என்னுடைய அம்மாவை நினைத்துக்கொண்டேன்.

என்னுடைய அம்மா இலங்கைக்குத் திரும்பிப் போகவேயில்லை.

*

 

https://vanemmagazine.com/one-way-ஷோபாசக்தி/

 

றாகிங் – ஒரு வன்முறை

2 months 3 weeks ago

றாகிங் – ஒரு வன்முறை

 

ragging-1.jpg

“நான் இனி பல்கலைக் கழகம் போகாமல் இருந்துவிடுகிறேன். அவர்களை தண்டிக்க வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்”

சொன்னவன் இப்போ இறந்து போய்விட்டான். பல நூற்றுக் கணக்கான தோப்புக்கரணங்கள் போட்டே செத்துப்போனான் அவன் என்றால், அதிர்ச்சியடையாதார் யார்?. இதற்குப் பெயர் “பகிடிவதை”. “பகிடிப்பட்டவன்” வரப்பிரகாஷ்.


“எனது மகனின் மரணச் சடங்கில் எந்த மாணவனும் பங்குபற்றக்கூடாது”.
தட்டியில் துயரமும் கோபமும் கலந்து எழுதிவைத்தார் விதுரா இன் தந்தை. சிறுநீரகம் சிதைக்கப்பட்டு செத்துப்போனவன் விதுரா. செயற்கைச் சிறுநீரகம் பொருத்தி இயங்கவைக்க செய்யப்பட்ட முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிந்தது. இவன் பலியாகியதும் “பகிடிவதைக்குத்தான்”.

இவையெல்லாம் அண்மையில் நடந்த துயரங்கள்.

!யாழ் பல்கலைக் கழகத்திலும் றாகிங் சூடுபிடிக்கிறது” என்று எழுதிய -யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும்- பத்திரிகையொன்றின் காரியாலயத்தின் மீது, திரண்டு வந்து கல்வீச்சு நடத்தினர் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்.
இதுவும் அண்மையில் வெளிவந்த செய்திதான்.

* * *
“ஏய்! நீர் இண்டைக்கு பின்;னேரம் என்னை வந்து சந்திச்சிட்டுத்தான் போறீர். இப்போதைக்கு காணும்;. போயிட்டு வா”
யாராக இருக்கும்? என்னவாக இருக்கும்?
ஆமியா? பொலிஸா?
நீங்கள் மனசைப் போட்டு அனாவசியமாகக் குழப்ப வேண்டாம்.
அதிகாரத்தின் தொனி. இந்தக் குரலுக்குரியவர் ஒரு பல்கலைக் கழக சீனியர் மாணவன். முன்னே நிற்பவன் புதிய மாணவன்.
றாகிங்!
அங்கீகரிக்கப்பட்ட ஒரு வன்முறை.
இதை புதிய மாணவன் சந்தித்துக் கொண்டிருந்தான். சகித்துக்கொண்டிருந்தான்.
அடுத்த ஆண்டில் இந்தப் பாத்திரம் மாறிவிடும். இவன் முன்னே இன்னொருவன் நிற்பான், இப்படி சதை கழன்றுபோய்.

காலை நேரம். பஸ் நிலையம். அந்நிய மொழி. அந்நிய இடம்.
பல்கலைக் கழக வாயிலை அடையாளம் காணவேண்டும். இறங்கவேண்டும். அதுவேறு பதட்டம்.
றாகிங்! பயம் கௌவியது. உடல் உளம் எல்லாம் சோர்ந்து போக… படித்ததால் பெற்ற பயன் தொடங்குகிறது. அவன் படபடத்துக் கொண்டிருந்தான்.
வெள்ளை றவுசர். வெள்ளை சேர்ட். இள வயசு. ஓ! இவனும் புது மாணவனாகத்தான் இருக்க வேண்டும்.
உதவிக்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டான். படபடப்பு சற்று தணிகிறது.
அவன் வருகிறான். “நீரும் புதுஆளா?”
ஓம்.
“நானும்தான்.”
உமக்கு கம்பஸ் ஹோல்ற் தெரியுமா?
“தெரியும்”

இறங்கிக் கொண்டார்கள்.
“ஏய் பு… மோனை நானென்ன புது ஆளெண்டு நம்பியிட்டியோ?
வா றூமுக்கு!”
தூக்கிவாரிப் போட்டது.
மீட்பர்களைக்கூட நம்பிக் கெட்ட பரம்பரையல்லவா? அதனால் அவனுக்கு ஆச்சரியமாக எதுவும் இருக்கவில்லை.
தயக்கம். நேரத்துக்கு கம்பஸ் போகவேண்டும் என்ற பதட்டம் வேறு. ஆனாலும் கேட்க முடியாது.
போனான்.
அறிமுகமே காட்டுமிராண்டித் தனமாகத் தொடங்கிவிட்ட அந்த நாள்.
அவன் உத்தரவுப்படியான மாலைத் தரிசனம்.
இப்போ அவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். றவுசர் பொக்கற்றை இடையிடையே அமத்தி சரிசெய்தபடி. அதற்குள் அவனது பென்ரர் (underwear) இருந்தது.
“ஏய் உடுப்பைக் கழற்று!
நீ —ச்சிருக்கிறியா? (அங்கீகரிக்கப்பட்ட தமிழில் சொன்னால் நீ உடலுறவு கொண்டிருக்கிறியா? என்று வரும்)
கை—-போட்டிருக்கிறாய்தானே. போ ரொயிலற்றுக்கை. ———- விந்தை கொணர்ந்து காட்டு”.

அவன் உடல் உதறியது.
பாலியல் வக்கிரம் பல்லுக் காட்டிச் சிரித்தது. மனித நினைவே அகன்றுபோன சூன்ய நிலை. பாலியல் புலனுணர்வு பற்றிய எதுவித பிரக்ஞையுமற்று இப்படியொரு உத்தரவு வேறு. அவர் ஒரு பல்கலைக் கழக மாணவன். சீனியர். படித்தவர்.
அவன் அழுதான். நொந்துபோய் நின்றான்.
“உனக்கெல்லாம் சா… எழும்பவில்லையெண்டால் உனக்கு என்னத்துக்கு பென்ரர்.
போடு றவுசரை. இந்தா பென்ரர். கையிலை கொண்டு போ!”
பிதுங்கிப்போய் ஒழுங்கைக்குள் விழுந்த அவன் மெல்ல பென்ரரை பொக்கற்றுக்குள் திணித்துவிட்டு உடலை இயக்குகிறான்.

இன்றைய காலை வரவேற்புக்கும் இப்படியானதோர் மாலை வழியனுப்பலுக்கும் இடையில்….
பல்கலைக் கழக வளவுக்குள் றாகிங் சொறிந்துவிட்டுக் கொண்டு திரிந்தது.

Room றாகிங்
Group றாகிங்.
Physical றாகிங்.
Severe றாகிங் (கொடுமையான றாகிங்) என்று பல முகங்கள் அதற்கு.

ஆண்குறியையும் விதையையும் சேர்த்து “சலோ ரேப்” இனால் ஒட்டுதல் (கம்பஸ் சீல்)
ஆண்குறிக்கு மேலுள்ள உரோமத்தை வெட்டுவித்து நெருப்பில் எரித்து சத்தியப் பிரமாணம் எடுத்தல்
இராவணனின் ஆண்குறியை உருவகித்து அதனுடனான சேட்டைகளை மேற்கொள்ளுவித்தல்
தூசண வார்த்தைகளை மூச்சுவிடாமல் சொல்லுவித்தல்
உன்ரை சதோதரியை எனக்கு….. போன்ற வார்த்தைப் பிரயோகங்கள்…
எல்லாம் சுழன்றடித்து சூழல் பரபரப்பாக இருக்கும், இரண்டு கிழமைகள். பிறகு மெல்ல மெல்ல ஓய்ந்து ஒரு மாதம் வரை நலிந்து நீடித்து றாகிங் செத்துப் போய்விடும். இப்போ அவை சொல்லிச் சிரிப்பதற்கான சுவாரசியங்களாக உருமாறிப்போய்விடும். வன்முறையை பழக்கப்படுத்திக் கொள்வதில் ஒரு பயிற்சி நடந்தேறிவிடும்.

மாணவ பருவம் வாழ்நாளின் ஓர் அற்புதமான காலம். குருத்து முற்றி விரியும் உடலில் இள ரத்தம் ஓடும் காலம். மனம் எண்ணற்ற எதிர்பார்ப்புக்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கும். துடிப்பு. எதிலும் ஒரு வேகம். படபடப்பு. சமூகம் அவர்களுக்கு வழிவிட்டு நிற்கும். ஒருவித மதிப்பு. அதிலும் மிகக் கடினமான முயற்சிகளைக் கொட்டி, தடைகளைத் தாண்டி கம்பஸ் வாயிலை தாவிப் பிடித்துவிட்டால்…. ஒரு இலட்சியம் நிறைவேறினமாதிரி ஒருவித திருப்தி. இந்த உணர்வுகள் எல்லாம் புரிந்துகொள்ளப்பட வேண்டியதுதான்; மதிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் இதெல்லாம் றாகிங் க்கு எந்தவித நியாயத் தன்மையையும் தராது.

மாணவர்கள் தமக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றிக் கொள்ள இது உதவும் என்று சொல்லப்படும் வியாக்கியானம், அவர்கள் சீனியர் ஆகியதும் (குறிப்பாக மருத்துவஃபொறியியல் பீடங்களில்) தானாகவே தகர்ந்து போகிறது. சில சந்தர்ப்பங்களில் இறுதி ஆண்டு மாணவனைக் கண்டதும் ஆரம்பநிலை மாணவர்கள் எழுந்து இடம்கொடுத்து மரியாதைப்படுத்துவதுகூட நடந்தேறுகிறது. தமக்கிடையில் ஒரு அறிமுகப்படுத்தலுக்கும் பரஸ்பர இறுகிய நட்புத்தன்மைக்கும் இது உதவும் என்பதெல்லாம் ஒரு பசப்புத்தான். இதைச் சாதிப்பதற்கு இப்படியொரு (வன்)முறை உதவுமென்றால் சமூகம் எங்குபோய் நிற்கும்.

ragging-2.jpg

உண்மையில் றாகிங் இல் எற்படும் திருப்திதான் அதை நியாயப்படுத்துவதற்;கான காரணங்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறது. இந்தத் திருப்தியை தனிமனித அகநிலைக்குள் குறுக்கிவிட முடியாது. இதற்குள் புதைந்திருக்கும் அரசியல்தான் முக்கியமானது. அதிகாரம் செலுத்தலும், பணிந்துபோதலும் தான் இதன் அரசியல். குழந்தைப் பருவத்திலிருந்தே குடும்பம், பாடசாலை போன்ற சமூக நிறுவனங்களெல்லாம் இந்த அரசியலை கொண்டுள்ளதுதான் அடிப்படைக் காரணம். தகப்பன்-பிள்ளை, ஆண்-பெண், ஆசிரியர்-மாணவர் உறவுகளெல்லாம் இந்த அரசியலுக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒழுக்கம், கட்டுப்பாடுகள், மரபுகள் என்றெல்லாம் கருத்தியல்களை தமக்கு சாதகமாக ஆதிக்கம் வகிக்கும் சக்திகளே வகுத்துக்கொள்கின்றன. கலாச்சார, கருத்தியல் நிறுவனங்களினூடாக இவை சாதிக்கப்பட்டு (அது இயல்பானதாக) மனதில் இருத்திக்கொள்ளப்படுகிறது. இந்த அரசியலை இனங்கண்டு கேள்விகேட்காதவரை இந்தத் தளத்திற்கு வெளியே வந்து மனித வாழ்வை வேறு பரிமாணங்களில் புரியும் முயற்சிகளுக்கு சாத்தியமில்லை.

இந்த அதிகாரம் செலுத்துதலும் பணிந்துபோதலும் கருத்தியல் ரீதியில் சமூக நியதிகளாக சாதிக்கப்பட்டு பிரக்ஞைப+ர்வமாக ஏற்றுக் கொள்ளச் செய்யப்படும்போது இரு சாராருக்குமே இந்த உறவுமுறையில் திருப்தி வருகிறது. விருப்பமின்றி அதிகாரத்துக்கு (இயலாமையால்) பணிந்துபோகும் சந்தர்ப்பங்களில் அதிகாரம் செலுத்தும் சக்திகளுக்கு மட்டுமே இவை திருப்தி தருகிறது. தம்மால் அடக்கப்படும் சக்திகளின் வேதனைகளைவிட அவர்களுக்கு தங்கள் திருப்தி முக்கியமாகப் (குறைந்தபட்சம் தவிர்க்கமுடியாதவையாகவோகூட) படுகிறது. உயர்சாதியினருக்கு தாழ்த்தப்பட்ட சாதியினர் தரும் மரியாதை, ஆசிரியனுக்கு மாணவன் தரும் மரியாதை, கணவனுக்கு மனைவி தரும் மரியாதை, தகப்பனுக்கு பிள்ளை தரும் மரியாதை எல்லாவற்றிலும் இந்தக் கூறுகளை நாம் கண்டுகொள்ளலாம். யாழ் முஸ்லிம் மக்கள் விடயத்தில்கூட அவர்கள் சொந்த மண்ணிலிருந்து பெயர்த்தெறியப்பட்போது அவர்களின் வேதனைகள், உணர்ச்சிகள், கோபம் எல்லாவற்றையும் கொட்டி எழுதும் ஒரு கவிதையைவிட அவர்கள் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவுகளை மீட்டு எழுதும் ஒரு கவிதை எமக்கு அதிக திருப்திதந்துவிடுகிறது.

றாகிங் தோற்றம்பெற்றதற்கான காரணங்கள் எப்படியிருந்ததென்ற ஆராய்ச்சியைவிட அது இன்றளவும் உயிர்வாழ்வதற்கான காரணங்கள் இவ்வகையில் முக்கியம் பெறுகின்றது எனலாம்.

எனவே இதன் விளைவுகள் அதிகார சக்திகளுக்கு, அதன் நிறுவனங்களுக்கு துணைபோக வைப்பதில் ஒரு பங்கை ஆற்றுகிறது; அல்லது குறைந்தபட்சம் அதை கேள்விகேட்க விடாமலாவது பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. வாழ்நாளில் இளமைப் பருவம் அதுவும் மாணவ பருவம் சக்திவாய்ந்தது எனலாம். துடிப்பு, வேகம், எதையும் புதிதாக அறிந்து கொள்ளும் ஆர்வம், அதற்கான வசதி வாய்ப்புக்கள் என்பவற்றுக்கும் மேலாக ஒன்று இருக்கிறது. ஆதுதான் அவர்களின் விரைவாக அணிதிரளும் வசதிகள். ஒருவகையில் ஒரு கூட்டுவாழ்க்கைமுறை என்றும் சொல்லலாம். இதனால் செய்திகள் விரைவாக பரிமாறப்படுகின்றன. கூட்டு விவாதங்கள், கருத்துப் பரிமாறல்கள், செய்திப் பரிமாறல்கள் எனபனவெல்லாம் மிக வேகமாக நடந்தேறுகின்றன. இந்த ஆற்றல்களின் திரட்சியெல்லாம் ஒன்றுகூடி செயற்பாட்டு வடிவம் பெறும்போது அதன் தாக்கம் அபரிதமானது. ஆட்சி, அதிகாரங்களை உலுக்கிய வரலாறுகள்கூட மாணவ சக்திக்கு உண்டு. யாழ் பல்கலைக்க கழகம் இதற்கு சிறந்த உதாரணம். சமூக சேவை, சமூக விழிப்புணர்வு என்பதையும்கூட தாண்டி ஜனநாயகத்துக்கான குரலில் உயிரைக்கூட தானமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் மனசைவிட்டு இலேசில் அகன்றுவிடக் கூடிய சரித்திரமல்ல. (இப்போ றாகிங் பற்றி எழுதியதற்காக இது கல்லெறியாய்த் தேய்ந்துபோனது ஒரு அவலம்)

இத்தகைய ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ள மாணவ சந்ததி றாகிங் இன் அரசியலை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று அவாப்படுவதில் தவறில்லை. மற்றபடி மாணவ சமுதாயத்துக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாக இதை எடுத்துக் கொள்ளக்கூடாது.

மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால்கூட இதை சகித்துக் கொள்ளமுடியாமலே உள்ளது. அண்மையில் பேராதனைப் பல்கலைக் கழக பொறியியல் பீட மாணவன் வரப்பிரகாஷ் றாகிங்கினால் கொல்லப்பட்டுவிட்ட செய்தி மனித நாகரிகத்தையே பிடித்து உலுப்பிவிடக்கூடியது. இன்றைய போர் நிலைமைகளில் ஒரு நெருப்புக் குச்சிக்கே அலைந்துதிரியும் காலம்… குண்டுகள் பிளம்பாய் விரியும் பயங்கரங்களின் நடுவே படித்து சாதித்துப் பெற்ற வெற்றி றாகிங் க்கு இரையாகிவிட்டது ஒன்றும் சாதாரண விடயமல்ல் மிகவும் கஸ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த (சிங்கள மாணவன்) விதுரா பெற்ற வெற்றியும் றாகிங் இடம் தோற்றுப் போனது. இவையெல்லாம் மாணவ சமுதாயத்தின் உள்வீட்டு விவகாரமல்ல.

Physical றாகிங் என்பதே உடலியல் ரீதியல் மோசமான வதையாக மேற்கொள்ளப்படுகிறது. பழைய மாணவர்களின் அறைகளில் மட்டுமல்ல, கம்பஸ் வளவுகளுக்குள் மட்டுமல்ல, வகுப்பறைக்குள்கூட கதவைச் சாத்திவிட்டு குறூப் றாகிங் என்ற பெயரில் நடக்கிறது. மேசை கதிரைகளுக்குக் கீழால் புகுந்து செல்லுதல், ஒற்றைக் காலில் நிற்றல், தலைகீழாய் நிற்றல், நூற்றுக் கணக்காக தோப்புக் கரணம் போடுவித்தல் போன்ற பலவித உடற்பயிற்சிகள்… எல்லாம் மூச்செறிய செய்விக்கப்படுகிறது. மறுநாள் எழுந்து நடக்க சிரமப்படும் அளவுக்கு இது துன்புறுத்தலாக அமைகிறது. இவ்வளவு காலமும் சுதந்திரமாய் கத்திச் சொல்ல முடியாத அதிகார, ஆபாச வார்த்தைகளை கொட்டித்தீர்ப்பதில் குதூகலம் வேறு. அதுவும் குறிப்பாக பெண்கள்மீது இவ் வார்த்தைகளை மெல்ல எறிவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அடங்காத மாணவர்களை அடக்குவதில் பேணப்படும் றாகிங் பல சந்தர்ப்பங்களில் கொடுரமானதாக இருக்கும். தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களிடம் அவர்களை ஒப்படைத்து “சிவியர் றாகிங்” வேண்டுகோள் விடுப்பர். கத்திமுனையில் றாகிங் செய்யப்படும் நிலைகூட ஏற்படுவதுண்டு.

ragging-3

றாகிங் ஒருவகையில அங்கீகரிக்கப்பட்ட அல்லது கண்டும் காணாமல் விடப்படுகின்ற ஒரு வன்முறை. எல்லாம் ஒரு இரண்டு கிழமைக்குத்தானே என்று பல்லைக் கடித்துக் கொள்ளும் சுபாவம். இரண்டும் பிணைந்து பிறக்கும் விளைவு….?

இரண்டும் பிணைந்து கொள்ளாதபோது இப்படியொரு காட்சி.
அந்தப் புதிய மாணவன் உடம்பில் உடையேதுமின்றி கையால் பொத்தியபடி ஓடுகிறான். பழைய மாணவனின் றூம் றாகிங்கிலிருந்து அவன் தப்பி ஓடுகிறான்… பின்னால் ~”அடே! இந்தா சரம். இதை உடுத்து. சனம் பார்க்குது|…”. அப்போதைக்கு கையில் அகப்பட்ட தனது சரத்தோடு பின்னே பரிதாபமாக ஓடிக்கொண்டிருந்தார் பழைய மாணவன். அவனோ நிற்பதாக இல்லை.
பிறகென்ன! இது சொல்லிச் சிரித்து மகிழும் சுவாரசியமாக மாறிவிட்டது.

ஆனால் வரப்பிரகாஷ் விடயத்தில்…?? விதுராவின் விடயத்தில்…??

– ரவீந்திரன்

குறிப்பிட்ட சம்பவங்கள் தரவுகள் எதுவும் புனைவு அல்ல. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அனுபவித்தவற்றில், கண்டுகொண்டவற்றில் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். கட்டுரைக்கு ஆதாரம் சேர்க்கிற வகையிலான அளவுக்குத்தான் அவை சொல்லப்பட்டிருக்கின்றன.

https://sudumanal.com/1998/05/10/றாகிங்-ஒரு-வன்முறை/

 

கோழியும் ஆமையும் - நிமிடக்கதை

2 months 4 weeks ago

கோழியும் ஆமையும் - நிமிடக்கதை


பங்குனி வெயில் உச்சியில் அறைந்தது. கடற்கரையை அண்டிய குடிலில் தொங்கிய கடகத்திலிருந்து பாய்ந்த கோழி கொக்கரித்தபடி நின்றது. தரையேறி முட்டைகளைப் பத்திரப்படுத்திவிட்டு அவ்வழியே நடந்து கொண்டிருந்த ஆமை நின்று கோழியைப் பார்த்தது. கோழி '' என்ன பார்க்கிறாய்,, என்று கேட்டது. ஆமையோ ''ஏனிந்தக் கலவரம்! என்றது. கோழி தான் முட்டை போட்ட சோம்பல் முறிக்க என்றது. ஆமையோ சிரித்துவிட்டு விரைந்து கடலோடு கலந்தது.   

நன்றி

வர்ணகலா - ஷோபாசக்தி

3 months ago

 

வர்ணகலா
 

spacer.png

இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டே

பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து, அரசறிவியல் படித்துக்கொண்டிருந்த மிதுனா பாலப்பாவுக்கு அன்றைய காலை மற்றுமொரு கொடூரமான கொலைச் செய்தியுடன் விடிந்தது. அவள் படுக்கையிலிருந்து நகராமல், அலைபேசியின் தொடுதிரையை உருட்டி உருட்டிப் பார்த்தவாறேயிருந்தாள். காலையில் எட்டு மணிக்கு வகுப்பு இருக்கிறது என்பது அவளது ஞாபகத்திலேயே இல்லை.

மிதுனாவுக்கு ஆறு வயதாகியிருந்த போதுதான், அவளை இலங்கையில் விடுமுறையை கழிப்பதற்காக முதலும் கடைசியுமாக பெற்றோர் அழைத்துச் சென்றிருந்தார்கள். ஏழாலைக் கிராமத்திலுள்ள அவர்களது பாரம்பரிய, பெரிய நாற்சார் வீட்டில் மிதுனா கழித்த அந்த விடுமுறையை ஒரு குஞ்சுத் தேவதை போன்றே அவள் அனுபவித்தாள். தரையில் அவளது கால்களைத் தீண்டவிடாமல் சொந்தபந்தங்கள் எப்போதும் தூக்கி வைத்துக்கொண்டு திரிந்தனர். பிரான்ஸில் கண்டேயிராத விதவிதமான மரங்கள், கனிகள், வீட்டுக்குள் உல்லாசமாக நுழைந்து படுத்துக்கிடக்கும் வெள்ளாடுகள், தலையைத் தட்டிப் பறக்கும் கோழிகள், குங்கும நிறமூட்டிய கோழிக் குஞ்சுகள், வீட்டின் பின்னே தொழுவத்தை நிறைத்திருக்கும் பசுமாடுகள், வீட்டைச் சுற்றிப் பறந்தபடியே இருக்கும் வண்ணப் பறவைகள், தோள்களில் வந்தமர்ந்து விளையாட்டுக் காட்டும் பட்டாம்பூச்சிகள், இரவில் தேவதைகளைப் பற்றி மட்டுமே கதைசொல்லும் பாட்டியும் தாத்தாவும் என்றிருந்த சூழலின் ஒவ்வொரு வண்ணப் படிமமும் இப்போதும் அவளது நெஞ்சில் படிந்துள்ளது. அவர்கள் இலங்கையை விட்டுத் திரும்பவும் பிரான்ஸுக்குப் புறப்பட்ட அன்றுதான் மாவிலாறில் மறுபடியும் யுத்தம் வெடித்தது.

மறுபடியும் அவளைப் பெற்றோர் இலங்கைக்கு அழைத்துச் செல்லவில்லை. மிதுனா கேட்ட போதெல்லாம் “ஆமிக்காரங்கள் நிக்கிற முத்தத்த நான் இனி மிதிக்க மாட்டன்” என்று தந்தை பாலப்பா சொல்லிவிட்டார். ஆனால், ஒவ்வொரு வருட விடுமுறைக்கும் மிதுனாவை இலண்டன், நோர்வே, கிரேக்கம், துருக்கி, துனிஷியா என வெவ்வேறு நாடுகளுக்குப் பெற்றோர் கூட்டிச் சென்றனர். ஆனால், மிதுனாவின் கனவுகள் இலங்கையைச் சுற்றியேயிருந்தன. பெரியவளானதும் தனியாகவே அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்வாள்.

வன்னியியில் இறுதி யுத்தம் நடந்த காலங்களில், பாரிஸ் நகர வீதிகளிலே ஈழத் தமிழர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு பாலப்பா செல்லும் போது, சிறுமி மிதுனாவையும் அழைத்துப் போயிருக்கிறார். அங்கேயிருந்த தட்டிகளிலும், பதாதைகளிலும் மிதுனா பார்த்த இலங்கை வேறுமாதிரியாக இருந்தது. தலையற்ற உடல்கள், எரிந்துகொண்டிருக்கும் வீடுகள், வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தைப் பிரேதங்கள் என்பவற்றைத் தான் அவள் அங்கே பார்த்தாள். பல மாதங்களுக்கு அந்தப் படங்கள் அவளது மனதை வதைத்துக்கொண்டேயிருந்தன. அப்போதிலிருந்தே இலங்கை குறித்த செய்திகளை அவள் கவனமாகப் பின்தொடர்ந்தாள். பல்கலைக்கழகத்தத்தில் நடக்கும் கருத்தரங்குகளில் இலங்கைப் போரைக் குறித்தும், இனப் படுகொலை குறித்தும் மிதுனா சில தடவைகள் உரையாற்றியிருக்கிறாள். இலங்கை இனமுரண்கள் குறித்ததே அவளது அரசறிவியல் பட்டத்திற்கான ஆய்வேட்டை எழுதுவதற்குத் தீர்மானித்து வேலை செய்கிறாள்.

இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்களை அவள் உன்னிப்பாக அவதானித்துக் குறிப்புகளைச் சேகரித்து வைத்தாள். நீண்டகாலம் சிறைகளிலிருக்கும் அரசியல் கைதிகள், யுத்தத்தில் காணமற்போனவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக நடத்தப்படும் தொடர் ‘அரகலய’ போராட்டம் எல்லாலற்றையும் அவள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். இலங்கையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு முக்கிய செய்தியையும் அவள் தவறவிடுவது கிடையாது.

இந்தக் காலையில், அவள் யாழ்ப்பாண இணையமொன்றை உருட்டிக்கொண்டிருந்த போது, இந்தக் கொலைச் செய்தியைப் பார்த்தாள். ஆனால், அது தனக்குத் தெரிந்த வர்ணகலா டீச்சர்தானா என்று அவளுக்கு உறுதிப்படத் தெரியவில்லை. வர்ணகலா டீச்சருக்கு எத்தனை வயதிருக்கும் எனக் கணக்குப்போட்டுப் பார்த்தாள். இவளுக்கும் வர்ணகலாவுக்கும் இடையே வயதால் பதினேழு வருடங்கள் வித்தியாசங்கள் என்பது மிதுனாவுக்குத் தெரியும். அப்படியானால் இப்போது வர்ணகலாவுக்கு முப்பத்தொன்பது வயது. கொலையுண்டவர் நாற்பது வயதுப் பெண் என்றும் வெளிநாட்டிலிருந்து அண்மையில் இலங்கைக்கு வந்தவர் என்றும் அந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது, அது தனக்குத் தெரிந்த வர்ணகலா டீச்சராக இருக்கலாமோ என்ற அவளது சந்தேகம் வளர்ந்துகொண்டே போனது. அந்த இணையத்தில் கொலையுண்டவரின் வண்ண ஒளிப்படத்துடன், சில வரிகள்தான் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தன:

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த வர்ணகலா என்ற நாற்பது வயதுப் பெண்மணி, வட்டுக்கோட்டைப் பகுதியில் அவர் புதிதாக வாங்கியிருந்த வீட்டினுள்ளே தூங்கிக்கொண்டிருந்தபோது, நேற்று இரவு, தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் காணியையும், வீட்டையும் அவர் வாங்கியதில் எழுந்த தகராறுகள் காரணமாகவே அவர் ஒரு கும்பலால் கொடூரமாக முகம் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று வர்ணகலாவின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்தச் செய்தியின் நடுவில் பிரசுரிக்கப்பட்டிருந்த படத்தில், ஒளிப்பான சருமமுள்ள பெண் கொலையுண்டு கிடந்தார். அவரது முகம் இருந்த இடத்தில் ஓர் இரத்தக் கோளமேயிருந்தது. முகம் முழுவதுமாகச் சிதைக்கப்பட்டு, எந்தவொரு அடையாளமும் இல்லாமலிருந்தது. அந்தப் படத்தைப் பெரிதாக்கி, அது வர்ணகலா டீச்சர்தானா எனக் கண்டுபிடிக்க மிதுனா முயற்சி செய்தாள். கணினியில் இருந்த பல தொழில்நுட்பச் சாத்தியங்களையும் அதற்காக உபயோகப்படுத்தினாள். ஆனால், அந்தச் சடலத்தின் கழுத்துக்கு மேலே சிவப்புக் குழம்பைத் தவிர அவளால் ஓர் உறுப்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாரிஸ் புறநகரொன்றில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு மிதுனா தொலைபேசியில் அழைத்து, தனது பெற்றோரிடம் இந்தக் கொலைச் செய்தியைப் பதற்றத்துடன் சொன்னாள். “ஸே வ்ரே? லங்காஸ்ரீ நியூஸில அப்பிடியொரு செய்தியையும் காணேல்லையே” என்றார் தகப்பன் பாலப்பா.

“ஆரு… அந்தத் தமிழ் டீச்சரோ?” என்று கேட்டார் தாயார் இந்திரா.

2

மிதுனாவுக்கு பத்து வயதான போது, வீட்டுக்கு அருகிலிருந்த தமிழ்ச்சோலையில் ஞாயிறு காலைகளில் நடத்தப்பட்ட தமிழ் வகுப்பில் அவளைப் பாலப்பா வலுகட்டாயமாகச் சேர்த்துவிட்டார். மிதுனாவுக்கு அது பிடிக்கவேயில்லை. அங்கே சொல்லிக்கொடுக்கும் பாடங்களும் அவளுக்கு வேதனையாகவேயிருந்தன. ஆனா, ஆவன்னா சொல்லிக்கொடுக்கும் முன்பே பத்துத் திருக்குறள்களைக் கொடுத்து மனனம் செய்து வருமாறு சொல்லிவிட்டார்கள். பாலப்பா பொறுமையாக திருக்குறளை மகளுக்குக் கற்றுக்கொடுத்தார். “எங்கிட தாய் மொழியை நாங்கள் மறக்கவே கூடாது” என்பது அவரது அன்றாடப் போதனையாக மிதுனாவின் குட்டித் தலையில் விழுந்தது.

வார நாட்கள் முழுக்க ‘அலெக்ஸாந்தர் துமா’ தொடக்கப் பள்ளியில் படித்த மிதுனாவுக்கு, அந்தப் பிரஞ்சுப் பள்ளிக்குப் போவதென்றால் ஒரே கொண்டாட்டம்தான். அங்கிருந்த ஆசிரியர்கள் மிதுனாவுடன் தோழர்களைப் போலவே பழகி, அவர்களுக்குச் சரிசமமாகவே அவளை நடத்தினார்கள் என்றே சொல்லலாம். ஆனால், இந்தத் தமிழ்ப் பாடசாலைஆசிரியையோ எரிச்சலும் கூச்சலுமாகத்தான் பாடங்களை நடத்தினார். இந்தத் தமிழ்ச் சித்திரவதையெல்லாம், அடுத்த வருடம் வர்ணகலா டீச்சரின் வகுப்புக்கு மிதுனா போகும் வரைதான் இருந்தது. வர்ணகலா டீச்சரின் வகுப்போ, கடவுளும் குட்டித் தேவதைகளும் போல கனவுலகமாக இருந்தது.

வர்ணகலா வார நாட்களில் ஓர் அச்சகத்தில் பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றுபவர். ஞாயிறு தினங்களில் தொண்டு அடிப்படையில் தமிழ்ச்சோலையில் ஆசிரியையாகப் பணியாற்றினார். அவர் சங்கப்பாடல் விளக்கவுரை, தலைவர் மாமாவின் சிந்தனையிலிருந்து சில துளிகள் என்றெல்லாம் பொட்டலங்களைக் குழந்தைகளின் குரும்பைத் தலையில் சுமத்தி வைக்கவில்லை. அவரது முதல் வகுப்பையே இப்படித்தான் ஆரம்பித்தார்:

தாளந்தான் போடுகிறேனே
தமிழ் பாட அறியேனே
தாதிமிதா தாதிமிதா
தத்திமிதா தத்திமிதா

வர்ணகலா டீச்சருக்கு சிரிக்காமல் பேசவே தெரியாது. காலையில் வரும்போது, வீட்டிலிருந்து முறுக்கு, பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை எடுத்துவந்து இடைவேளையில் குழந்தைகளுடன் பகிர்ந்து சாப்பிடுவார். அவரது வகுப்பு பாடலாலும், நடனத்தாலும், சிரிப்பாலும் நிறைந்திருந்தது. இப்படியாகத்தான் மிதுனா ஆர்வத்துடன் தமிழ் மொழியைப் படிக்கத் தொடங்கிய கட்டமொன்று நிறைவேறிற்று.

மிதுனாவின் தமிழ்ப் படிப்புத் தீவிரம் பாலப்பாவையே திகைக்க வைத்தது. ஞாயிறு காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் வர்ணகலா டீச்சரின் வகுப்புக்காக, எட்டு மணிக்கே மிதுனா தயாராகிவிடுவாள். பாடசாலைக்குக் காரில் அழைத்துவரும் பாலப்பாவும் மெல்ல மெல்ல வர்ணகலாவுடன் பழக்கமானார். இந்தப் பழக்கம் ஒருவருடைய வீட்டுக்கு இன்னொருவர் வந்து போவதுவரை வளர்ந்தது. வர்ணகலாவின் கணவர் வெள்ளையினத்தவர். அவரும் சிறிதளவு தமிழ் பேசக் கற்றிருந்தார். தீபாவளி விருந்துக்கு மிதுனாவின் வீட்டுக்கு வர்ணகலா குடும்பமும், புதுவருட விருந்துக்கு வர்ணகலாவின் வீட்டுக்குப் பாலப்பா குடும்பமும் பரிசுகளோடு போய்வந்து உறவு கொண்டாடினார்கள்.

ஒரு கொடுமையான பனிக்காலத்தில், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் மிதுனா பருவமடைந்தாள். ஒரு வாரம் வீட்டிலேயே வைத்திருந்து, சோறும் நல்லெண்ணெய் ஊற்றிய கத்தரிக்காய் பால்கறியும், பச்சை முட்டைகளும், உளுத்தம்மாக் களியுமாகக் கொடுத்து உடலைத் தேற்றி, அடுத்த வாரமே அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிட்டார்கள். பருவமடைந்த காரணத்தைச் சொல்லியெல்லொம் பிரஞ்சுப் பள்ளிக்குப் போகமலிருக்க முடியாது. ஆனால், தமிழ்சோலைக்கு ஒரு மாதகாலம் அவள் அனுப்பப்படவில்லை. முப்பதோராவது நாள் அய்யரை வீட்டுக்கே கூப்பிட்டு, புண்ணியவாசம் செய்து தீட்டைக் கழித்த பின்புதான் மிதுனாவைத் தமிழ் வகுப்புக்கு அனுப்பிவைத்தார்கள். ஏழு மாதங்கள் கழித்து வரும் கோடைகாலத்தில், மஞ்சள் நீராட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதாக பாலப்பாவும் இந்திராவும் முடிவெடுத்தார்கள். பிரான்ஸில் கோடை காலம்தான் விழாக்களை நடத்துவதற்கு ஏற்ற காலம். அற்புதமான காலநிலையுள்ள அந்த நாட்களில்தான் நண்பர்களும் உறவினர்களும் வெளிநாடுகளிலிருந்தும் விழாவுக்கு வருவார்கள்.

ஆனால், மிதுனாவுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை நடத்துவது சரியற்றது என்பது பாலப்பாவின் தம்பியான பாலரஞ்சனின் எண்ணம். அவன், பாலப்பா வீட்டுக்கு வந்தபோது தனது மறுப்பைக் கடுமையாகத் தெரிவித்தான்:

“பெரியண்ணே… இது காலத்துக்கு ஒவ்வாத வழக்கம் கண்டியே. நீ இதைச் செய்யாத!”

பாலப்பா சற்றும் மனம் சளைக்காமல் உடனடியாகவே பாலரஞ்சனுக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்தார்.

“மடக் கதை கதைக்காத… வெளிநாட்டுக்கு வந்தா வெள்ளைக்காரனுக்கு நடிக்க ஏலுமே? எங்கிட கலாச்சாரத்தப் பண்பாட விட்டுக் கொடுக்க ஏலுமே… இஞ்ச எல்லாரும் தானே சடங்கு செய்யினம்.”

“இது சீரழிவுக் கலாச்சாரம் கண்டியே… ஊருக்கெல்லாம் சொல்லி பெரிய எடுப்பில சாமத்தியச் சடங்கு எதுக்கு நடத்துறது சொல்லு பார்ப்பம்?”

“என்னத்துக்கோ? எங்கிட பிள்ளை பெரிய பிள்ளையான சந்தோசத்தை நாலு இனசனத்தைக் கூப்பிட்டுக் கொண்டாடடத்தான்…”

“இல்லவேயில்லை… கலியாணத்துக்கு ரெடியா எங்கிட வீட்டில ஒரு பொம்புள இருக்கெண்டு ஊருக்குப் பறைதட்டிச் சொல்லத்தான் இந்தச் சடங்கு வந்தது.”

“இஞ்சே… நாலு பேப்பர் புத்தகத்த அரைகுறையாப் படிச்சுப் போட்டு லூசு மாதிரிக் கதைக்காத ரஞ்சன். எங்கிட கலாச்சாரத்தில ஒவ்வொண்டுக்கும் அர்த்தமிருக்கு…”

“இது எங்கிட கலாச்சாரமே இல்ல… இது தேவதாசிக் கலாச்சாரம் கண்டியே… எங்களட்ட ஒரு பொம்பிள தொழிலுக்கு ரெடியா நிக்கிறாள் எண்டு… உன்னட்ட எல்லாம் உடைச்சுச் சொல்லோணும் பெரியண்ணே…

“பொத்தடா வாயை… உனக்கு விருப்பமில்லாட்டி நீ வர வேணாம்… முறை மயிரொண்டும் செய்ய வேணாம்… நான் யானையில என்ர மகளை ஊர்வலம் கொண்டு போறனா இல்லையா எண்டு இருந்து பாரு!”

உரத்த சத்தத்தைக் கேட்டு, சமையலறைக்குள்ளிருந்து மிதுனாவின் தாயார் இந்திரா எட்டிப் பார்த்தார்.

“இஞ்சேரும் இந்திரா இதைக் கேட்டீரே… சாமத்திய வீடு செய்ய வேணாமெண்டு இந்த விடுபேயன் சொல்லுறான்… ஸெ பா விறே பித்தான்..”

“பெரியண்ணே! முதலில பிரஞ்சப் பிழையாக் கதைக்கிறத நிப்பாட்டு.”

மிதுனாவின் தாயார் சொன்னார்:

“இருக்கிறது ஒரு பிள்ளை. அதுக்குச் சடங்கு செய்ய வேணாமே… சனம் என்ன சொல்லும்! ஊரில இருக்கிற உங்கிட அம்மா அப்பா ஒத்துக்கொள்ளுவினமே? நாங்கள் பிரான்சுக்கு வந்து இருபது வருசத்தில் எத்தின கொண்டாட்டங்களுக்குப் போய்க் காசு போட்டிருப்பம்… எப்படியும் ஒரு லட்சம் ஈரோவாவது இருக்கும். திருப்பி வாங்கத்தானே வேணும்… எங்கிட இவர் வீடு வாங்கி வித்த தமிழ்ச்சனமே அய்நூறு இருக்கும். அவயளும் வருவினம்…”

பாலரஞ்சன் மெல்லிய சிரிப்போடு கேட்டான்:

“ஏன் அண்ணி உங்களிட்ட இருக்கிற காசு காணாதே?”

எதுவும் பேசாமல் இந்திரா மாடிக்குச் சென்றார். ஒவ்வொரு படியிலும் ஏற அவருக்குப் பாலரஞ்சன் மீது கொதிப்பும் படிப்படியாக ஏறிக்கொண்டே வந்தது. ‘எல்லாம் இவர் குடுக்கிற இடம்’ என்று நினைத்துக்கொண்டார். ‘நாங்கள் கயிட்டப்பட்டு உண்ணாமத் தின்னாம, சுடுதண்ணீ பாவிக்காம குளிர் தண்ணியில தோய்ஞ்சு முழுகி ஒவ்வொரு சென்ரிமாச் சேர்த்துப் பெருக்கின காசு இவற்றை கண்ண உறுத்துதாமோ? சோம்பேறி நாய்… இதெல்லாம் புதுசாப் பெந்தக்கோஸ்தில சேர்ந்ததால கதைக்கிற கதை… அதுகள் தான் உதெல்லாம் செய்யாம புரியன் உயிரோட இருக்கேக்கையே வெள்ளைச் சீலை கட்டுறதுகள்’ என்று மனதிற்குள் கோபமும் கொந்தளிப்புமாகப் போய், மிதுனாவின் அறைக்குள் நுழைந்தார்.

படித்துக்கொண்டிருந்த மிதுனா என்ன என்பது போலப் பார்க்க “உன்ர சித்தப்பருக்கு உனக்குச் சாமத்தியச் சடங்கு செய்யிறது பிடிக்கேல்லையாம். சடங்கில உனக்கு ஏதாவது சங்கிலி காப்புப் போட்டு முறை செய்யோணுமே… அதுதான் அந்தக் கசவாரம் தேவையில்லாக் கதை கதைக்கிது.”

இதைக் கேட்டதும் மிதுனாவுக்குப் பெரும் கவலை பிடித்துக்கொண்டது. வரப் போகும் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக அவள் ஆவலுடனும், மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடனும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள். அவள் பாரிஸில் நிகழ்ந்த எத்தனையோ மஞ்சள் நீராட்டு விழாக்களுக்குப் பெற்றோருடன் போயிருக்கிறாள். விழாவின் நாயகியான பெண்ணை எவ்வளவு சோபனமாக அலங்கரித்திருப்பார்கள். அந்த நாளின் உச்ச நட்சத்திரம் அவள்தானே! தேவதைக் கதைகளில் நிகழ்வதுபோல எவ்வளவு அற்புதப் பரிசுகள் அவளுக்குக் கிடைக்கும். அவளது தோழிகள் சூழ்ந்து மலர்களைத் தூவ நடுவில் ராஜகுமாரி போலல்லவா அவள் அமர்ந்திருப்பாள். எத்தனை எத்தனை புகைப்படங்கள்! மஞ்சள் நீராட்டு விழாவின் வீடியோப் பிரதி ஒரு பொலிவூட் படம் போல எவ்வளவு குதூகலமாகயிருக்கும்!

கோடை நெருங்கிக்கொண்டிருந்த போது, மிதுனாவின் பெற்றோர் வர்ணகலா டீச்சர் வீட்டுக்குப் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, வெற்றிலை, பழங்கள் சகிதமாகச் சென்று, மஞ்சள் நீராட்டு விழாவுக்குப் பத்திரிகை வைத்தார்கள். மிதுனாவின் அம்மா “டீச்சர் நீங்கள் வேளைக்கே வந்து உங்கிட வீட்டுக் கொண்டாட்டமா நினைச்சு முன்னுக்கு நிண்டு எல்லாம் செய்யோணும். மிதுனா உங்கிட பிள்ளை” என்றார்.

3

shoba-story.jpg

பாரிஸ் நகரத்தின் ஆகாயம் நீல வெளிச்சமாக மின்னிக்கொண்டிருந்தது. சரியாகப் பகல் பன்னிரண்டு மணிக்கு, அந்த வெளிச்சத்தைப் பிளந்துகொண்டு, ஒரு ஹெலிகொப்டர் கீழே இறங்கத் தொடங்கியது. மைதானத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். வெள்ளைக்கார விமானியால் மிக இலாவகமாக ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்ட போது, நாதஸ்வரங்களும், தவில்களும் மங்கல இசையை முழங்கத் தொடங்கின.

ஹெலிகொப்டரின் கதவு திறக்கப்பட்டபோது, பட்டு வேட்டியும், பட்டுச் சட்டையும், தோளில் தங்கச் சரிகை அங்கவஸ்திரமும், கண்களிலே கறுப்புக் கண்ணாடியுமாகக் கைகளைத் தலைக்கு மேலே தூக்கிச் சனங்களைப் பார்த்துக் கும்பிட்டவாறு, கறுப்பு எம்.ஜி.ஆர். போலவே பாலப்பா ஹெலிகொப்டரிலிருந்து கீழே இறங்கினார். அவருக்குப் பின்னால் கும்பிட்டவாறே, திருவிழா காலத்து முத்து மாரியம்மன் போன்று மிதுனாவின் தாயார் இறங்கினார். அவர்களின் பின்னே தேவதையாக அலங்கரிக்கப்பட்டிருந்த மிதுனாவின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வர்ணகலா இறங்கினார்.

மைதானத்தில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த பலகீனமான யானை இலண்டனிலிருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த யானையின் முதுகில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டுக் கம்பீரமாக இருந்த அம்பாரி மாடத்துள் மிதுனாவை உட்கார வைத்து, விழா மண்டபம் வரை அவளை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.

யானையிலிருந்து இறங்கியதும், எட்டுப் பேர்கள் சுமந்த அலங்காரப் பல்லக்கில் மிதுனாவை உட்காரவைத்து மேடைவரை தூக்கிச் சென்றார்கள். பல்லக்கின் இருபுறத்திலும் ஒவ்வொரு பக்கத்துக்கும் இருபது சிறுமிகள் மிதுனா மீது மலர்மாரி பொழிந்தவாறே நடந்தார்கள்.

மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரமாட்டேன் என்று சூளுரைத்திருந்த பாலரஞ்சன் மண்டபத்தின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மதுபானச்சாலையில் நின்று விஸ்கி அருந்தியவாறே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான். மதுச்சாலையை மெல்ல மெல்ல ஆண்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. பெண்கள் வட்டமான மேசைகளைச் சூழ உட்கார்ந்துகொண்டார்கள்.

ஒவ்வொரு மேசையும் வெண்ணிறப் பட்டுத் துணி விரிக்கப்பட்டு, சுற்றிவர எட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நாற்காலிகளும் வெண்ணிற மஸ்லின் துணிகளால் போர்த்தப்பட்டிருந்தன. மேசைகளை நிரப்பி வகைவகையான சிற்றுண்டிகளும், குளிர்பானப் போத்தல்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தங்கத்தாலும் பட்டாலும் போர்த்தப்பட்டிருந்த மக்கள் கூட்டம் நாசூக்காக சிற்றுண்டிகளைக் கொறித்துக்கொண்டிருந்தது.

விழாவுக்கு நாயகி மிதுனா என்றால், புகைப்படக்காரரும் வீடியோ படப்பிடிப்பாளரும்தான் எப்போதும் போலவே இந்த விழாவிலும் நாயகர்கள். கல்யாணங்களின் போது தாலி கட்டுவது சரியாக வீடியோவில் பதிவாகவிட்டால், கழுத்தில் ஏறிய தாலியைக் கழற்றவைத்து மறுபடியும் கட்டவைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இந்த ஒளி ஓவியர்கள். அதிலொரு ஒளி ஓவியர் பறக்கும் குட்டிக் கமெரா ஒன்றை மண்டபத்தில் ஒவ்வொருவரின் தலைக்கு மேலும் வேகமாக இறக்கியும், சட்டெனத் திசைமாற்றி ஏற்றியும் மொத்த வித்தையையும் காட்டிக்கொண்டிருந்தார். மண்டபத்தின் எல்லாப்புறங்களிலும் ஒலியைப் பெருக்கும் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்ததால், பெரும் சத்தத்தால் மண்டபமே அதிர்ந்துகொண்டிருந்தது. இசைத்தட்டைச் சுழலவிடும் நிபுணரை ஜெர்மனியிலிருந்து அழைத்திருந்தார்கள். அந்தப் பையன் தன்னுடைய சேவல் கொண்டையைச் சிலுப்பிச் சன்னதம் ஆடியவாறே, ஒரு பாட்டைக் கூட முழுதாகக் கேட்க முடியாமல் பாடல்களைக் கொத்துரொட்டி போட்டுக்கொண்டிருந்தான்.

உணவு வகைகளில் இலங்கை, இந்திய, சீன வகைகளோடு கொஞ்சம் பிரஞ்சு அயிட்டங்களும் இருந்தன. பாலப்பாவுடைய ‘வீடு விற்பனை முகவர்’ நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டு வெள்ளையர்களும் விழாவுக்கு வந்திருந்து வாய்களை அகலப் பிளந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மண்டபத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னும் தமிழ்க் கலாசாரம் இருக்கிறதென்றே அவர்கள் நம்பியிருக்கக்கூடும். “பிரஞ்சுக்காரன் கலாச்சாரம் எண்டு எதைச் சொன்னாலும் த்ரில்லாகி நம்புவான்” என்று பாலரஞ்சன் அடிக்கடி சொல்வதுண்டு.

மேடையில் வைத்து மிதுனாவுக்கு பாற்சோறு, அரிசிமாவுக் களி, பிட்டு, பால்ரொட்டி ஆகியவை வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டுகளால் ஆரத்தி சுற்றினார்கள். வர்ணகலாவும் இந்திராவின் தங்கையான சித்ராவுமே அவற்றைச் செய்தார்கள். ஆரத்தி சுற்றி முடித்ததும், ஏதோ மலையையே தூக்கிச் சுற்றிய பாவனையோடு சித்ரா முகத்தைச் சுழித்தவாறே, ஒற்றைக் கையால் இடுப்பைப் பிடித்துக்கொண்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டார். இவை எல்லாவற்றையும் மேடையில் நின்று கண்களில் நீர் கண்ணாடித் திரையிடப் பெருமிதத்துடன் பாலப்பாவும் இந்திராவும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாலரஞ்சன் தள்ளாடியபடியே திடீரென மேடையிலேறி, மிதுனாவைக் கன்னங்களில் முத்தமிட்டுப் பத்துப் பவுண் சங்கிலியை அவளது கழுத்தில் அணிவித்துச் சிற்றப்பன் கடமையை முடித்தான்.

மண்டபத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊஞ்சலில் மிதுனாவை உட்கார வைத்துத் தாயும் தகப்பனுமாக ஆட்டினார்கள். யாழ்ப்பாணத்தில் ஊஞ்சல் ஆடியதற்குப் பிறகு, இப்போதுதான் மிதுனா ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறாள். அங்கே அப்போது ஒலித்த பாடலுக்கு அவளையறியாமலேயே அவளது கால் விரல்கள் அசைந்து தாளம் போட்டன.

விழாவில் பாடுவதற்கு ‘சுப்பர் சிங்கர்’ புகழ் ஆணும் பெண்ணுமாக இருவர் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் பொருத்தமானதொரு பாடலை அப்போது பாடினார்கள்.

கொலுசுங்க சத்தமிட
கல் உடைய மண் உடைய
குதியாட்டம் போட்ட புள்ள
குமரி புள்ள ஆனாளே…

அவர்கள் அருமையாக இசைக்க, பாலப்பாவும் சளைத்தவரில்லையே… அவர் ஒரு கையால் ஊஞ்சலை ஆட்டியாவாறே அந்தப் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டே மற்றக் கையால் பலவித அபிநயங்களைச் செய்தார். இந்திரா தான் வெட்கப்பட்டுக்கொண்டே நடனத்திலிருந்து ஒதுங்க, வர்ணகலா டீச்சர் வாய்கொள்ளாச் சிரிப்புடன் பாலப்பாவுடன் சேர்ந்து நளினமாகச் சில நடன அசைவுகளைப் போட்டார்.

காலையில் மிதுனாவைப் படுக்கையிலிருந்து எழுப்பி, அவளது கைகளில் பாக்குகளும், ஈரோ நாணயங்களும் வைத்துச் சுருட்டப்பட்ட வெற்றிலைச் சுருளைக் கொடுத்துத் தலையில் பால் வார்ப்பதிலிருந்து மிதுனாவை விட்டு அசையாமல் கூடவேயிருந்தவர்கள் வர்ணகலா டீச்சரும், புகைப்படக்காரரும், வீடியோக்காரருமே. வர்ணகலா தன்னுடைய வீட்டு விஷேசம் போலவே எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு ஓடியாடி வேலை செய்தார். நீலப்பட்டில் வெள்ளி நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்த சேலைத் தலைப்பை இடுப்பில் வரிந்துகட்டிக்கொண்டு வர்ணகலா மண்டபத்தில் எந்த இடத்தில் நின்றாலும், அவர் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டேயிருந்தார். மஞ்சள் நீராட்டு விழா நிறைவடையும் வரை வர்ணகலா சாப்பிடக் கூடயில்லை. பிற்பகலில் விழா நிறைவுற்று விருந்தினர்கள் எல்லோரும் கிளம்பிய பின்பாக, தனியாக உட்கார்ந்து நான்கு சோற்று உருண்டையை உருட்டி வாயில் திணித்துக்கொண்டிருந்த வர்ணகலாவைப் பார்த்தபோது, பாலப்பாவுக்கு கண்கள் கலங்கியதற்கு நன்றியுணர்ச்சி அடிப்படைக் காரணமாகயிருந்தாலும், கொஞ்சமாக அருந்தியிருந்த விஸ்கியும் ஒரு துணைக் காரணம் என்றே சொல்லலாம்.

அன்று மிதுனா தேவதை! அவளது சிறகுகள் வர்ணகலா!

4

மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தாலும், மிதுனாவின் தாய்மாமனும், இந்திராவின் தம்பியுமாகிய சுரேந்திரன் விழாவுக்கு வராதது ஒரு குறையாகவேயிருந்தது. விழாவுக்கு வரமுடியாதவாறு வேலைப்பளுக்களில் சிக்கியிருந்த சுரேந்திரன், கிறிஸ்துமஸ் விடுமுறையில் அவுஸ்ரேலியாவிலிருந்து குடும்பத்தோடு மருகளுக்கு முறை செய்ய வந்திருந்தான்.

சுரேந்திரனின் மனைவி நந்தினி பிரான்ஸ் குளிரைப் பார்த்து அரண்டு போய்விட்டாள். அன்றைக்கு காலநிலை மைனஸ் ஆறைத் தொட்டிருந்தது. மிதுனாவின் வீட்டைச் சுற்றி ஓரடி உயரத்திற்குப் பனி சொரிந்து கிடந்தது. வீட்டின் பெரிய வரவேற்பறையிலிருந்த கணப்பை விறகுகளைச் செருகி பாலப்பா எரியவிட்டார். மதிய உணவுக்குப் பின்னாக, எல்லோரும் உட்கார்ந்து மிகப் பெரிய தொலைக்காட்சித் திரையில் மஞ்சள் நீராட்டு விழாவின் வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தார்கள். மிதுனா இந்த வீடியோவைப் பத்தோ பன்னிரண்டாவதோ தடவையாகப் பார்க்கிறாள். அவளுக்கு இது ஒருபோதுமே சலிப்பை ஏற்படுத்தியதில்லை.

பாலப்பா ஹெலிகொப்டரிலிருந்து இறங்கும் காட்சி ஸ்லோமோஷனில் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் பாலப்பாவே கொஞ்சம் நாணமுறுவார். சுரேந்திரன் பெரிதாகக் கெக்கடமிட்டுச் சிரித்து “அத்தார் அந்தமாதிரி க்ளாஸ்” என்றான். இப்படிச் சிரிப்பும் கனைப்புமாக அந்த வரவேற்பு அறை அமளிப்பட்டுக்கொண்டிருக்க, சுரேந்திரனின் மனைவி நந்தினி மட்டும் அமைதியாக வீடியோவைக் கவனித்துக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டாள்:

“நீலச் சாரியோட ஆரத்தி எடுக்கிற பொம்பிள ஆர் ?”

“அது மிதுனாவின்ர தமிழ் டீச்சர்… நல்ல குணமான பிள்ள. சாமத்திய வீட்டில அரைவாசி வேலை அதுதான் செய்தது” என்றார் இந்திரா.

“வர்ணகலாவே பேர்?” என்று கேட்டாள் நந்தினி.

“ஓமோம்… வர்ணகலா டீச்சரை உமக்குத் தெரியுமே நந்தினி?”

“தெரியாமலென்ன! இவள் என்ர ஊர்தான். முசலிக்குளம் கணவதி நளவன்ர மகள்…” என்று சொன்ன நந்தினி முஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டு பாலப்பாவைப் பார்த்து “என்ன அத்தார் நீங்கள்? வெளிநாட்டுக்கு வந்தா இதெல்லாம் பார்க்கேலாது தான்… ஆனால், அதுக்காக உள்வீட்டுக்கேயே அடுக்கிறது? அங்கபாரு எங்கிட பிள்ளைய அந்த நளத்தி ஆலாத்தி ஆலாத்தி எடுக்கிறாள்…” என்று சொன்ன நந்தினியின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.

பாலப்பாவும் இந்திராவும் ஏங்கிப் போய் அரைச் சவமாகிவிட்டார்கள். பாலப்பா மெதுவாக எழுந்து போய் ஓடிக்கொண்டிருந்த வீடியோவை நிறுத்தவிட்டு, கம்மிய குரலில் நந்தினியிடம் கேட்டார்:

“நீ சரியாத்தான் சொல்லுறியோ நந்தினி! அவளைப் பார்த்தால் அப்பிடித் தெரியேல்லையே…”

“இதென்ன அத்தார்… எங்கிட அடிமை குடிமையள எனக்குத் தெரியாதே? எங்கிட பின்வளவுப் பனையெல்லாம் கணவதி தானே இப்பவும் சீவிறவன்…போன வருச ஹொலிடேக்கு ஊருக்குப் போகக்கயும் அவன வளவுக்குள்ள கண்டனான்… மோள்காரி பிரான்ஸில இருக்கிறாள் எண்டும், தன்னை மரம் ஏறுறத நிப்பாட்டச் சொல்லியிருக்கிறாள் எண்டும் பெரிய நடப்பா என்னட்டச் சொன்னானே… மரம் ஏறுறதுகள நீங்கள் இப்ப மேடையில எல்லோ ஏத்தியிருக்கிறீயள். ஆர் என்னெண்டு விசாரிச்சு நடக்கிறதில்லேயே அத்தார்?”

பாலப்பா கொஞ்ச நேரம் பல்லை நெருமிக்கொண்டு, கையைக் கட்டியவாறே உட்கார்ந்திருந்தார். பிறகு அவக்கென எழுந்து போய் சி.டி. பிளேயரிலிருந்த குறுந்தகட்டை வெளியே வரச் செய்து, தனது பெருவிரலாலும் சுண்டுவிரலாலும் எலியின் வாலைப் பிடிப்பது போல குறுந்தகட்டின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு கணப்பை நோக்கி நடந்து சென்று, முளாசி எரிந்துகொண்டிருந்த நெருப்பினுள் அதனைச் சுழற்றி வீசினார்.

நடப்பது எல்லாவற்றையும் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் பார்த்துக்கொண்டிருந்த மிதுனாவுக்கு குறுந்தகடு எரிக்கப்பட்டது பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. மஞ்சள் நீராட்டு விழாவில் ஒரு தேவதையைப் போல இருந்த அவளையே நெருப்பில் தூக்கிப் போட்டது போலத்தான் அவள் உணர்ந்தாள். எதுவும் பேசாமல் எழுந்து சென்று, வெளியே பனி நடுவேயிருந்த மர இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள். சொரிந்துகொண்டிருந்த வெண்பனி அவளை மூடிக்கொண்டிருந்தது.

இதற்குப் பின்பு தமிழ்ச்சோலைப் பள்ளிக்குச் செல்லாமல் மிதுனாவைப் பாலப்பா தடுத்துவிட்டார். சில மாதங்களின் பின்பு, அவர்களது குடும்பம் இன்னொரு புறநகருக்குக் குடிபெயர்ந்தது. மிதுனாவும் மெல்ல மெல்ல வர்ணகலாவை மறந்துவிட்டாள். வர்ணகலாவும் மிதுனாவை மறந்திருப்பார்.

5

வர்ணகலா என்ற நாற்பது வயதுப் பெண்மணி முகம் முற்றாகச் சிதைத்துக் கொல்லப்பட்டதற்குச் சில வாரங்கள் கழித்து, மிதுனா பாரிஸ் புறநகரிலிருந்த பெற்றோரின் வீட்டுக்குச் சென்றாள்.

இரவுணவு மேசையில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கும் போது வர்ணகலா டீச்சர் குறித்துப் பேச்சு வந்தது. “அண்டைக்கு போனில ஒரு நியூஸ் சொன்னனானெல்லோ… அது தமிழ்ச்சோலை டீச்சரே அப்பா?”

“தெரியேல்லையே பிள்ள. நாங்கள் இஞ்சால வீடு வாங்கி வந்தாப் பிறகு நான் அந்தப் பக்கம் போகவேயில்லை” எனச் சொல்லிவிட்டு, பாலப்பா சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்.

“நீ சாப்பிடு பிள்ள… ஆராராக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கோ அதுதானே நடக்கும்” என்று சொல்லிக்கொண்டே, தட்டில் இடியப்பங்களை வைத்து மேலாக இறால் சொதியை ஊற்றினார் இந்திரா.

நீண்ட நாட்களுக்குப் பின்பாகத் தமிழ்ச் சாப்பாடு சாப்பிட்டதில் மிதுனாவுக்குக் கண்களைக் கட்டிக்கொண்டு வந்தது. தந்தையையும் தாயையும் முத்தமிட்டுவிட்டுத் தனது அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்துகொண்டு, அலைபேசியின் தொடுதிரையை உருட்டத் தொடங்கினாள். கட்டிலுக்கு எதிரே சுவரில், மஞ்சள் நீராட்டு விழாவில் எடுக்கப்பட்டிருந்த மிதுனாவின் மார்பளவு ஒளிப்படம் மூன்றடிக்கு இரண்டடி அளவில் தொங்கிக்கொண்டிருந்தது. தற்செயலாக அந்தப் படத்தின் மீது மிதுனாவின் பார்வை படவும், அவள் கட்டிலிலிருந்து எழுந்து, அந்தப் படத்தை நெருங்கிச் சென்றாள். அப்படத்தில் தேவதை போன்று அலங்கரிக்கப்பட்டிருந்த மிதுனாவின் இடது தோளைச் சில விரல்கள் பற்றியிருந்தன. அந்த விரல்கள் வர்ணகலாவின் விரல்களாக இருக்குமோ என்று திடீரென அவளுக்குத் தோன்றவே, அவள் கடகடவென மாடிப்படிகளில் இறங்கிக் கீழே சென்றாள்.

“அம்மா… என்னைக் குழந்தைப் பிள்ளையில எடுத்த போட்டோ அல்பங்கள் எங்கயிருக்கு?”

“என்ன பிள்ள திடீரெண்டு அதைத் தேடுறாய்?”

“சின்னப்பிள்ளையில் எடுத்த ஒரு நல்ல போட்டோ தேவைப்படுது… யூனிவர்ஸிட்டி புத்தகமொண்டில போடுறதுக்கு”

“ஸ்டோர் ரூமுக்குள்ள ஒரு சிவப்பு சூட்கேஸ் இருக்கும் பார். அதுக்குள்ளதான் பழைய அல்பங்கள் கிடக்கு” என்றார் இந்திரா.

ஸ்டோர் ரூமுக்குள் சென்ற மிதுனா அங்கே தாறுமாறாகத் தூசி தும்பு படிந்துகிடந்த பலசரக்குகளிடையே அந்தச் சிவப்பு பெட்டியைக் கண்டுபிடித்து, அதை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்று, படுக்கையில் வைத்துப் பெட்டியைத் திறந்தாள்.

அதற்குள் பாலப்பா – இந்திரா கல்யாண அல்பம் முதற்கொண்டு பத்துப் பன்னிரெண்டு அல்பங்கள் கிடந்தன. அவற்றுக்கு நடுவேயிருந்த தன்னுடைய மஞ்சள் நீராட்டு விழா அல்பத்தை மிதுனா கண்டுபிடித்து, கொஞ்சம் பதற்றத்துடனேயே பக்கங்களைப் புரட்டினாள்.

பெரியளவிலான அந்த அல்பத்தில் பக்கத்திற்கு ஆறு ஒளிப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. எல்லாப் படங்களிலும் அவள் இருந்தாள். சில படங்களில் அவளோடு அவளது பெற்றோர் இருந்தனர். வேறு பலரும் இருந்தனர். ஆனால், அந்தப் படங்களில் வர்ணகலா டீச்சர் இல்லை.

அவள் சோர்வுடன் அந்தப் பெட்டியைக் கிளறியபோது, உள்ளேயொரு தடித்த கடிதவுறையைக் கண்டாள். அதைத் திறந்தபோது, அதற்குள்ளிருந்த பல ஒளிப்படங்களுக்குள், மஞ்சள் நீராட்டு விழாவில் மிதுனாவுக்கு ஆரத்தி சுற்றும்போது எடுத்த படம் ஒன்றுமிருந்தது. மிதுனாவுக்கு வலது புறத்தில் ஒளிப்பான சருமத்தோடு, நீலப்பட்டில் வெள்ளி நட்சத்திரங்கள் மின்ன வர்ணகலா டீச்சர் ஆரத்தி சுற்றிக்கொண்டிருந்தார். அவரது முகமிருந்த பகுதி மட்டும் அந்தப் படத்தில் திருத்தமாக வெட்டியெடுக்கப்பட்டு, கழுத்துக்கு மேலே மொட்டையாக இருந்தது.

இதற்கு மேலே மிதுனா பாலப்பா சொல்லிய கதையின் போக்கையும் முடிவையும் தேர்ந்த வாசகரான நீங்கள் நிச்சயமாகவே ஊகித்திருப்பீர்கள் என்பதால், நான் இந்த இடத்தில் நிறுத்திக்கொள்கிறேன்.

*

 

https://vallinam.com.my/version2/?p=8902

தாயகக் கனவுடன்…

3 months ago
தாயகக் கனவுடன்…
 
 

(அவள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின் வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும்போதெல்லாம் அறையன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப் பார்ப்பதை அவதானித்திருக்கிறேன்)

ஸ்டோர்ரூம் சுவரில் சாய்ந்தபடி நான் விம்மியழுததை சுவேதா கவனித்திருக்க வேண்டும்.

‘அப்பா, ஏன் அழுவுறீங்க?’ என்றாள்

‘இல்லை, ஒன்றுமில்லை.’ என்று தலையை அசைத்தபடி கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

‘அழாதீங்கப்பா, அத்தைப் பாட்டியோட வீடு மட்டுமல்ல, இங்கே எல்லா வீடும்தான் சிதைந்து போச்சு, மெல்ல மெல்லத் திருத்தியிடுவாங்க.’ ஏன்று தனது அறிவுக்கேற்ற அறிவுரை தந்தாள்.

யுத்தம் முடிந்தபின் நான் குடும்பத்தோடு விடுமுறைக்குச் சண்டிலிப்பாய் சென்றிருந்தேன். ஏனைய வீடுகள் போல அத்தையின் வீடும் யுத்தத்தின் அவலத்தை எடுத்துக் காட்டியது. செல் குண்டுகள் வந்து விழுந்ததில் கூரை முற்றாகவே தூர்ந்து போயிருந்தது. செடி கொடி பற்றைகளுக்கு நடுவே வீடு ஒன்று இருந்ததற்கு அடையாளமாய் ஆங்காங்கே இடிந்து போன சுவர்கள் தலை தூக்கி நின்றன.

நான் கண் கலங்கியதற்குக் காரணமிருந்தது. என்னை அழவைத்தது கூரையற்ற அந்த ஸ்டேர்ரூமில் முளைத்திருந்த பற்றைச் செடிகளுக்கு மத்தியில் முளைத்துப் பூத்திருந்த கார்த்திகைச் செடியின் பூதான் என்பது மகளுக்குத் தெரியாது. மஞ்சள் சிகப்பு நிறத்தில் பளீச்சென்று கண்ணில் பட்டது. பழைய நினைவுகள் எல்லாம் திடீரெனக் கண்முன்னால் வந்து நின்றன. என்னால் மறக்க முடியாத அந்த நிகழ்வு இங்கே, இந்த ஸ்டோர்ரூமில்தான் அன்று நடந்தது. ஒவ்வொரு விடுமுறையின்போதும் நாங்கள் ஓடியாடிக் கும்மாளம் போட்ட இந்த வீடு இன்று சீரழிந்து கேட்பாரற்றுக் கிடந்தது. குடியிருந்த அந்த வீட்டைப் பார்க்கவே எவருக்கும் அழுகை வரும், ஆனால் நான் அழுதது அதற்காக அல்ல, என் அத்தை மகள் பிரியாவுக்காகத்தான்.

மனதைவிட்டகலாத எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவை என்பதால் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தேன். எங்கள் இளமைக் கனவுகளைத் தின்றுவிட்ட யுத்தத்தை மனசுக்குள் திட்டித் தீர்ப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்.

அத்தையின் குரல் கேட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நாங்கள் சமையல் அறைக்கு ஓடிச் சென்றோம். சாப்பிட வரும்படி எல்லோரையும் அழைத்த அத்தையின் ‘கை அலம்பியாச்சா’ என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமல் கையலம்பக் கொல்லைப் பக்கத்தில் இருந்த கிணற்றடி நோக்கி ஓடினோம்.

கொழும்பு பட்டணத்தில் இருந்து நானும் தங்கையும் விடுமுறையைக் கழிக்க அத்தை வீட்டிற்கு வந்திருந்தோம். யாழ்ப்பாணத்தில் இருந்த சண்டிலிப்பாய் என்ற கிராமத்தில்தான் அத்தையின் வீடு இருந்தது. பட்டிணத்தில் வளர்ந்த எங்களுக்குக் கிராமத்து மருதநில சூழ்நிலை வித்தியாசமாக இருந்தது.

வயல் வரம்பு வழியே ஓடிப்பிடிப்பது, இலுப்பங்கொட்டை பொறுக்குவது, வானரப்படைகளோடு ஒல்லித்தேங்காய் கட்டிப் பூவல் குளத்திலே தாமரைக் கொடிகளில் சிக்காமல் நீச்சலடிப்பது, ஐயர் வீட்டு வளவிலே கொய்யாப்பழம் பறிப்பது, வேப்பமர நிழலில் மாங்கொட்டை அடிப்பது, மாட்டுவண்டில் சவாரி விடுவது இப்படிப் பொழுது போவதே தெரியாது. வேப்பமர நிழலில் விளையாடினாலும், வெய்யில் அதிகமாகையால் ஓடியாடி விளையாடியதில் உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது. முகம் கைகால் அலம்பி ஒடிவந்த எல்லோரையும் உட்காரவைத்து அத்தை பிட்டு பரிமாறினாள். பிட்டுக்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ச் சம்பல். வறுத்த மிளகாயை இடித்து தேங்காய்த் துருவலுடன் உப்பும் புளியும் கலந்து தயாரிப்பதுதான் சம்பல். நான் ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்துவிட்டு, சாப்பிடாமல் அத்தை முகத்தையே பார்த்தேன்.

‘என்ன அரிசிமாப்பிட்டு பிடிக்கலையா?’

‘பிட்டுப்பிடிச்சிருக்கு ஆனா..’

‘என்ன சம்பல் வேண்டாமா? உறைக்குதா?’

‘ஆமா உறைப்பாயிருக்கு, எனக்கு மாம்பழம் சீவித் தாறீங்களா?’

‘மாம்பழமா? ஓ அதுக்கா இந்தத் தயக்கம், சரி ஓடிப்போய் ஸ்டோர்ரூமில இருக்கு பழுத்ததாய் பார்த்து இரண்டு எடுத்துவா’ என்றாள் அத்தை.

நான் சந்தோஷமாய் எழுந்து ஓடிப்போனேன். ஓடி ஒளித்து கண்ணாமூச்சி விளையாடும் போதெல்லாம் இந்த ஸ்டோர் ரூமுக்குள் நாங்கள் ஓடிவந்து பதுங்கி இருந்திருக்கின்றோம். வீட்டின் கடைசியாக இருந்த சிறிய அறையைத்தான் ஸ்டோர் அறையாகப் பாவித்தனர். அந்த அறைக்குச் சிறிய யன்னல் ஒன்று தான் இருந்தது. அதுவும் அரைகுறையாக மூடியபடியிருந்தது. உள்ளே போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாய் இருப்பதால் என்ன உள்ளே இருக்கிறது என்று உடனே கண்டு கொள்வது கடினம். நேற்று இங்கேவந்து ஒளித்திருந்த போதுதான் மாம்பழ வாசம் குப்பென்று அடித்தது. அங்கே மாம்பழம் பழுக்க வைத்திருப்பதை அவதானித்தேன். அருகே சென்று பார்க்க முடியவில்லை, வாசத்திலிருந்து கறுத்த கொழும்பு மாம்பழமாய் இருக்கலாம் என்று ஊகித்தேன்.

கறுத்தக் கொழும்பு மாம்பழம் என்றாலே எனக்கு வாய் ஊறும். அதற்கு ஒரு காரணமும் இருந்தது. மாம்பழங்களில் பலவகையாகன மாம்பழங்கள் யாழ்ப்பாண மண்ணிலே இருந்தன. ஒவ்வொரு வீட்டுக் காணியிலும் குறைந்தது இரண்டு மூன்று மாமரங்களாவது இருக்கும். முக்கனிகள் என்று சொல்லப்படுகின்ற கனிகளில் மாம்பழமும் ஒன்றாக இருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே காங்கேசந்துறைக்குத் தெற்கே இணுவில் என்ற ஊர் ஒட்டு மாம்பழக் கன்றுகளுக்குப் பிரபலமாக இருந்தது. பாண்டி, கொழும்பு, பச்சைதின்னி, மல்கோவா, விலாட், அம்பலவி, செம்பாட்டான், சேலம், என்று காங்கேயந்துறை வீதிவழியாக யாழ்ப்பாண நகரம் நோக்கிப் போகும்போது இந்த ஒட்டு மாங்கன்றுகளை விற்பனைக்காக வீதி ஓரங்களில் வைத்திருப்பதை அவதானிக்கலாம். கொழும்பு மாம்பழங்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று வெள்ளைக் கொழும்பு, மற்றது கறுத்தக் கொழும்பு. சற்றுக் கரும்பச்சை நிறம் கொண்டதால் கறுத்தக் கொழும்பு மாம்பழம் என்று பெயர்பெற்றது. பழுக்கும்போது காம்புப்பக்கம் மஞ்சளாக மாறும். இது சற்று நீண்ட சதைப்பிடிப்புள்ள மிகவும் ருசியானமாம்பழம்.

ஸ்டோர் ரூம் திறந்தேயிருந்தது. கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே சற்று இருட்டாக இருந்தது. கண்களை இருட்டுக்குள் பழக்கப்படுத்திக் கொண்டு பார்த்தேன். ஒரு சாக்குப் பைமேலே வைக்கோல் பரப்பி அதன்மேல் மாம்பழங்களைப் பரப்பியிருந்தனர். பெரிய பெரிய கறுத்தக் கொழும்பு மாம்பழங்கள் கொழுகொழு என்றிருந்தது மட்டுமல்ல வாசமும் தூக்கியடித்தது. விரல்களால் மெதுவாக அமத்திப் பார்த்து பழுத்த பழங்களாக இரண்டு பழங்களை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தேன். திருப்திப் படாமல் போகவே அதை வைத்துவிட்டு சற்றுப் பெரிதான ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்.

எனக்கருகே ‘க்ளுக்’ என்ற சிரிப்பொலி கேட்டது.

திடுக்கிட்ட நான், என்னை நானே சமாளித்துக் கொண்டு நிமிர்ந்த போது தான் அவள் கண்ணில் பட்டாள். கால்களை மடித்து முழங்கால்களைக் கைகளால் அணைத்தபடி ஸ்ரோர் ரூம் மூலையில் கிடந்த பலகைக் கட்டிலில் தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள். ஒரு நிமிடம் திகைத்துப்போய் நின்றேன். இவளேன் இங்கே மௌனமாய் உட்கார்ந்து இருக்கிறாள்.

‘ஏய் பிரியா, ஏன் இங்கே தனியே உட்கார்திருக்கிறாய்?’ என்றேன்.

‘சும்மாதான்’ என்றாள் தலை குனிந்தபடி.

‘உனக்கு இங்கே இருட்டிலே இருக்கப் பயமேயில்லையா?’

‘இல்லையே’ என்று தலையசைத்தாள்.

‘நாங்க சாப்பிடப்போறோம். நீயும் வாவேன் சாப்பிட..’

‘நான் அங்கெல்லாம் வரக்கூடாது’

‘வரக்கூடாதா.. ஏன்? யார் சொன்னா?’

‘அம்மா!’

‘தண்டனையா, அப்போ மாம்பழம் சீவிக்கொண்டு வந்து தரட்டா’

‘ம்.. கூம்.. வேண்டாம். நான் சாப்பிடக்கூடாது’

‘ஏன் உனக்கு மாம்பழம் பிடிக்காதா?’

‘பிடிக்கும்!’

‘பிடிக்குமா, அப்போ ஏன்?’

‘அப்படித்தான்..!’

‘அப்போ எங்களோட விளையாட வரமாட்டியா?’

‘இனிமேல் வரமாட்டேன்!’

‘ஏன் என்னாச்சு உனக்கு? எங்களோட கோபமா? என்னைப்பார்த்துச் சொல்லு’ மெல்ல அருகே நகர்ந்தேன்.

‘கிட்ட வராதே வேணாம் கிட்ட வராதே’ கைகளை குறுக்கே அசைத்துத் தடுத்தாள்.

இவ்வளவு காலமும் இல்லாத பதட்டம் இவளுக்கு இப்போ ஏன் வந்தது?

அவளை முறைத்துப் பார்த்தேன், அவளது கண்கள் கலங்கியிருந்தன. அவளோ அழுதுவிடுவாள்போலக் கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தாள். எனக்கு எதுவும் புரியவில்லை. இருட்டறைக்குள் இப்படி ஏன் உட்கார்ந்திருக்கிறாள்?

‘வேண்டாம் என்றால் போ’ என்று சொல்லிவிட்டு பசி வயிற்றைக் குடையவே நான் மாம்பழங்களை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தேன்

‘ஏன்டா இவ்வளவு நேரம்?’ என்ற அத்தையிடம் மாம்பழங்களைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். அத்தை பழங்களின் தோலைச் சீவி, சிறுதுண்டுகளாக நறுக்கி எனது தட்டில் போட்டாள். ஒரு கவளம் பிட்டும், ஒரு கடி மாம்பழமும்.. ஆகா என்ன ருசி. மாங்கொட்டையைச் சூப்பிவிட்டு திருப்தியோடு எழுந்து கை அலம்பினேன்.

சாப்பிட்டு முடித்தாலும் சிந்தனை எல்லாம் ஸ்டோர் ரூமைச் சுற்றித்தான் இருந்தது. இருட்டறைக்குள் தனிமையில் பிரியா ஏன் உட்கார்ந்திருக்கிறாள்?

நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தேன். கண்ணாமூச்சி விளையாடும் போது அவள் திடீரென அழுதது ஞாபகம் வந்தது. அந்த இருட்டறையில்தான் கட்டிலுக்குப் பின்னால் அவளுக்குப் பக்கத்தில் நானும் ஒளித்திருந்தேன். யாரோ உள்ளே தேடிவரும் காலடியோசை கேட்டது.

‘ஸ்.. யாரோ தேடி உள்ளே வர்றாங்க..!’ அந்தச் சிறிய இடத்தில் கட்டிலுக்குப் பின்னால் இடித்துக்கொண்டு இருட்டுக்குள் என்னோடு ஒளித்திருந்த அவளது காதுக்குள் கிசுகிசுத்தேன். சற்று நேரம் அறைமுழுவதும நிசப்தம் நிலவியது. தேடிப்பிடிக்க வந்தவன் இருட்டுக்குள் எங்களைக் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பிச் செல்லும் காலடி ஓசை காதில் மெல்ல விழுந்தது. அதையும் மீறி பிரியா மூச்சிரைக்கும்; சத்தம் கேட்டது.

‘ஏய்.. கையை எடுக்கிறியா?’

அவளது தோளில் மேல் எனது கை பட்டிருந்ததை அப்போதுதான் நானும் அவதானித்தேன்.

யாரும் உள்ளே இல்லை, ஆனாலும் காரணம் சொல்லாமல் திடிரென அவள் விம்மி அழுதது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

‘ஏய்,.. ஏன் அழுகிறாய்?’ என்று பதட்டத்துடன் கேட்டேன். அவள் எதுவும் சொல்லாமல் மிரண்டு போனவள்போல மீண்டும் ஓவென்று அழுதாள்.

‘வா, வெளியே போயிடுவோம்’ என்றேன்.

‘மாட்டேன்’ என்று அடம் பிடித்தவள் மீண்டும் விம்மினாள்.

பயந்துபோன நான் அத்தையிடம் ஓடிப்போய் முறையிட்டேன். அத்தை ஸ்டோர் ரூமுக்குள் வந்து அவளிடம் ஏதோ கேட்டுவிட்டு, தறதறவென்று அவளை இழுத்துச் சென்றாள். எனக்குப் பயமாக இருந்தது. அவள் அழுததற்குக் காரணம் நான்தான் என்று என்னை வம்பில் மாட்டி விடுவாளோ என்ற பயம் எனக்குள் இருந்தது.

அப்புறம் சற்று நேரம் கழித்து பக்கத்து வீட்டுப் மாமியை அவசரமாக அழைத்து வரச் சொன்னாள் அத்தை. நாங்கள் பீ..பீ என்று ஹார்ண் அடித்துக் கைகளால் கார்விட்டபடியே ஒடிப்போய் மாமியை அழைத்து வந்தோம். அத்தையும் மாமியும் ஏதோ கிசுகிசுத்தார்கள். எங்களை வெளியே போய் விளையாடச் சொல்லிவிட்டு அவளைக் கிணற்றடிக்குக் கொண்டு சென்று தலையிலே தோயவார்த்தனர். அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நாங்கள் விளையாடிவிட்டு வந்து அந்தக் களைப்பில் அப்படியே தூங்கிவிட்டோம்.

இன்று இவள் இந்த அறையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தாள். கேட்டால் எதுவும் சொல்ல மறுக்கிறாள். அத்தை நல்லெண்ணையும், முட்டையும் எடுத்துக் கொண்டு ஸ்டோர் ரூமுக்குப் போவதை அவதானித்தேன்.

‘அத்தை, பிரியா எங்களோட விளையாட வரமாடேன் என்கிறாள்’ என்று முறைப்பாடு செய்தேன்.

‘இனிமே அவள் உங்களோட எல்லாம் விளையாட வரமாட்டாள்’ என்றாள் அத்தை.

‘ஏன் அத்தை?’ என்றேன்.

‘அப்படித்தான்..!’ அத்தை ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, அப்பா வந்து எங்களை அழைத்துப் போகப்போவதாக அத்தை சொன்னாள். நாங்க அப்பாவோட போயிடுவோம் என்பதால் நானும் தங்கையும் பிரியாவிடம் விடைபெறச் சென்றோம். நான் தயங்கித் தயங்கி நின்றேன். எத்தனை நாளைக்குத்தான் இவள் இந்த இருட்டறைக்குள் அடைந்து கிடக்கப் போகிறாளோ?

இருட்டறைக்குள் நிற்கப் பயந்த தங்கை அவளை அணைத்து முத்தம் கொடுத்து, அவளுக்கு பாய் சொல்லிவிட்டு சட்டென்று வெளியேறினாள். நானும் என் பங்குக்கு அருகே சென்று,

‘ஏய் பிரியா, நாங்க போயிட்டு வர்றோம்’ என்று கை அசைத்துக் காட்டிவிட்டுத் திரும்பினேன்.

சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் சட்டென்று என் கையை எட்டிப்பிடித்து இழுத்தாள். நான் தடுமாறித் திரும்பிபப் பார்த்தேன்.

என்னை நானே சுதாரித்துக் கொள்ளுமுன் என்னை அருகே இழுத்துக் கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தாள்.

‘ஏய் என்ன செய்கிறாய்?’ நான் தடுமாறிப்போனேன்.

‘எனக்கு இந்த கறுத்த கொழும்புதான் பிடிக்கும்’ என்றாள் காதுக்குள் மெதுவாக. அவளது மூச்சுக் காற்று கன்னத்தில் சுட்டதில் உடம்பு சிலிர்த்தது.

உறைந்து போய் நின்ற நான், அத்தை அழைக்கும் குரல் கேட்கவே, கன்னத்தைத் தடவிக்கொண்டு மெல்ல வெளியேறினேன்.

சுகமான அந்த அனுபவம் மீண்டும் அவளைத் தேடிப் போக வைத்தது. அடுத்த விடுமுறைக்கு ஆவலோடு ஓடிவந்தபோது பிரியாவை எங்களோடு சேர்ந்து விளையாட அனுமதிக்கவில்லை. அத்தை சொன்னதுபோல பெரியபிள்ளையானதால் அவள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தாள். குமர்ப்பிள்ளைகளோடு கண்டபடி பேசக்கூடாது என்ற அம்மாவின் அறிவுறுத்தல் ஒரு பக்கம் என்னைப் பின்வாங்க வைத்தது. நாங்கள் வெளியே ஓடியாடி விளையாடும் போதெல்லாம் அறை யன்னலுக்கால் அவள் ஏக்கத்தோடு எட்டிப்பார்ப்பதை அவதானித்திருக்கிறேன். சமுதாயக் கட்டுப்பாடுகள் எங்கள் இருவரையும் நெருங்கவே விடவில்லை. அவள் வளர்ந்து அழகாய், கவர்ச்சியாய் இருந்தது மட்டுமல்ல, அவளிடம் சில மாற்றங்களையும் அவதானித்தேன்.

நாட்டுச் சூழ்நிலை காரணமாக மூன்றாம் வருடம் எங்களால் விடுமுறைக்குப் போகமுடியவில்லை. அதற்கு அடுத்த வருடம் போவதென்று முற்கூட்டியே ஆயத்தங்கள் செய்தபோதுதான் அந்தச் செய்தி வந்தது. பிரியா வீட்டைவிட்டுப் போய்விட்டதாகவும், விடுதலைப் போராட்டத்தில் அவளுக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவள் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. பிரியாவா.. எப்படி..? தாய்மண்ணை நேசித்த வயது வந்த ஒரு பெண் என்பதால் அவளது விருப்பத்தை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆண்களைவிடப் பெண்களிடம்தான் இனவுணர்வு அதிகமாக இருக்கலாம் என நான் நினைத்தேன். மகளின் பிரிவால் மட்டுமல்ல, யுத்தம் காரணமாக அவர்களின் குடும்பமும் சொல்லெனாத் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு சொந்த வீட்டைவிட்டு இடம் பெயரவேண்டி வந்தது. யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இறுதி யுத்தத்தின் போது பிரியாவிற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கால்களை மடித்து முழங்கால்களைக் கைகளால் அணைத்தபடி ஸ்ரோர் ரூம் மூலையில் கிடந்த பலகைக் கட்டிலில் தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருந்த, கள்ளங்கபடமற்ற அவளின் சிரிப்புத்தான் என் மனதில் பதிந்து நின்றது. தங்களிடம் சரணடைந்தவர்களையே இல்லை என்று சொல்லும்போது, ஏமாற்றப்பட்ட இனத்தைச் சேர்ந்த இவள் இருக்கிறாளா இல்லையா என்பது கூட உறவுகளுக்குத் தெரியாத ஒரு அவலம்.

‘அம்மா, அத்தைப்பாட்டி வீடு எல்லாம் இடிஞ்சு போய்க்கிடக்குது. அதைப் பார்த்ததும் அப்பாவிற்கு அழுகையே வந்திடிச்சு’ என்றாள் என் மகள் சுவேதா தாயைப்பார்த்து.

எனது மனைவி சங்கீதம் கற்றவள். பாரதி பாடல்கள் என்றாள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. என் கண்கள் கலங்கியிருந்ததை அவளும் அவதானித்திருக்க வேண்டும்.

‘பின்னே இருக்காதா, இந்த அநியாயத்தைப் பார்த்தால் யாருக்குத்தான் அழுகை வராது. ‘எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிவ்வீடே.. அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே..’ என்ற பாரதி பாடலின் வரிகளைச் சற்று மாற்றி மெல்லிய குரலில் பாடியபடியே கலங்கிய கண்களோடு என் கைகளைப்பற்றிச் சமாதானப் படுத்தினாள்.

நான் ஏன் அழுதேன் என்பது, என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. கண்ணீரைத் தவிர வேறெதைத் தரமுடியும்? 

கதையாசிரியர்: குரு அரவிந்தன்

https://uthayannews.ca/2022/11/23/தாயகக்-கனவுடன்/

வாக்குறுதி : அகரன்

3 months ago
வாக்குறுதி : அகரன் ஓவியம்: செயற்கை நுண்ணறிவு

1

கனடா, யூகொன்.

மாயோன், மயூரன் என்னும் பெயரில் தனது இரண்டு வயதில் கனடாவில் உள்ள மொன்றியல் என்ற நகரத்தில் தன் கால்களை ஊன்றியவன். இப்போது தனது முப்பத்தி ஏழாவது வயதில் கனடாவின் மேற்கு பாகத்தில் அலாஸ்காவோடு ஒட்டிக்கொண்டிருக்கும் யூகொன் (yukon)  என்ற மாநிலத்தில் அமெரிக்க-கனடிய விஞ்ஞானிகள் குழுவில் ஒருவனாக போராடுகிறான். தனக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வங்கிக்கு வருகிறது ? என்பது அவனுக்கு தெரியாது. அதைப்பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. ஆனால் உலகின் பல நாட்டு அதிபர்களை விட அவனுடைய மாத கொடுப்பனவை கனடிய அரசு உயரமாக கொடுப்பதில் கவனமாக இருக்கிறது. மாயோன் பூமிக்காக போராடுகிறான் என்பதுதான் அதற்குக்காரணம்.

‘யூகொன்’ ஆண்டின் அதிக காலத்தை வெண்நிலமாகவே வைத்திருக்கும். கடும் வெயில் காலத்தில் 18 இல் இருந்து இருபது பாகை வெப்பம் மட்டுமே அங்கிருக்கும். மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஒருவருடம், ஒருநாள் முன்னதாக அங்கு  -51 குளிர் பதிவாகியது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் யூகொன் கண்ட உயர்ந்த குளிர் அதுதான்.

உயிர்களையும் இயற்கையையும் சம ஆத்மாவாக நேசித்த மகாத்மா ஒன்று, கொல்லப்பட இருப்பதை இயற்கை தனது முன்னறிவிப்பால் வெளியிட்டுக்கொண்டது.

மனிதர்களின் தோல்களே கல்லாகி இறுகிவிடும். யூகொன் கனடாவின் வெண்கட்டி இரும்புகளின் குளிர்..நிலம்.

சூரியனுக்கும், நிலவுக்கும் பெரிய குணவேறுபாடு அங்கில்லை. யூகொன் நதி பனிக்கட்டிக்கு கீழ் ஓடுவதைத்தான் பெருமையாகக் கருதுகிறது. ஆற்றின்மேல் சறுக்குப்பலகையில் மக்கள் செல்வார்கள். பனிக்கிணறு கிண்டி மீன்பிடிப்பார்கள்.

மாயோன் கடந்த இருபது ஆண்டில் வேகமாக உருகும் பனிக்கட்டிகளையும், நுண்ணுயிர்களையும் ஆராய்வதும், வெப்பமாதலில் இருந்து துருவ வெண்நிலங்களை காப்பதற்கான கட்டுரைகளை எழுதுவதும்தான் அவனது பணி.

அவன் தன் வாழ்நாளில் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துபவன். ‘நெகிழியை கையால் தொடுவதில்லை’ போன்ற மூட நம்பிக்கை அவனிடம் உண்டு. யூகொன் ஆராட்சிப்பணிக்கு தனக்கு நாய் வண்டியொன்றை அமர்த்தியுள்ளான். ஐந்து நாய்கள் அவனை வேண்டிய இடங்களுக்கு இழுத்துச்செல்லும். அன்று இரவு பன்னிரெண்டுமணி. சூரியனையும், நிலவையும் காணவில்லை. வானம் மென் வெளிச்சத்தில் முயங்கி இருந்தது. அந்த நேரத்தில் வானம் சிலவேளை பாடும். ஒளி நடனம் நிகழ்த்தும்.

பிரபஞ்சத்தின் அந்தப்பாடலை கேட்பதில் அவனக்கு அவ்வளவு பிரியம். நாய்வண்டியில் வானத்தை பார்த்தவாறே சென்றுகொண்டிருந்தான். அந்த நடனத்தை பார்த்தால் அவன் மனம் நிறைந்து விடும். ஆண்டின் எட்டு மாதங்களை கடும் குளிரில் கழிக்க அதைத்தவிர உற்சாகப்படுத்தும் காரியம் அவனுக்கு வேறில்லை.

அப்போதுதான் அவன் கைக்கடிகாரத்தில் தாயாரின் அழைப்பு வந்தது. இப்படியான நேரத்தில் வனசா அவனை தொந்தரவு செய்வதில்லை. அவன் ‘அம்மா ஆர் யூ குட் ?’ என்றதும் வனசா கைக்கடிகாரப்பேசி கழன்றுவிடும் அதிர்வுடன் பேச ஆரம்பித்தாள்.

அந்த நேரம்பார்த்து ஐந்து நாய்களும் குரலெழுப்ப துருவ வானம் பாட ஆரம்பித்தது. ஒளிநடனம் பச்சை, மஞ்சள், நீலம், நாவலென மாயம் செய்தது.  இயற்கைக்காக போராடும் போராளி பேரொளியில் நனைந்திருந்தான்.

Story_Akaran_2.png?resize=1020%2C1020&ss

2.

பிரான்ஸ். பாரிஸ்.

இன்றுதான் இறுதிச் சவாரி என்று நினைத்துக் கொண்டு வண்டியை எடுத்தேன். இரண்டு வருடமாக டாக்சி ஓடுவது தான் என் தொழில். ஒரு அறைக்குள் இருந்து வேலை செய்வது கூண்டுக்குள் வளரும் பறவை போல உணரச் செய்தது.

டாக்சி ஓட்டுவதால் பாரிஸ் நகரை அறியலாம், அங்கு வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட  நாடுகளைச் சேர்ந்த மக்களை அறியலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும், என்னைத்  திருமணம் முடித்தவளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுதான் எல்லாவற்றையும்விட முன்னுக்கு என்னை தள்ளிய விடயம்.

அவள் ஊரில் இருந்து வந்த புதிதில் நான் வேர்க்க விறுவிறுக்க சமையல் வேலைமுடித்து வந்தபோது அவள் முகம் வெம்பிப்போன பப்பாப்பழம்போல் சூம்பிக்கிடந்தது.

« என்ன ?… என்ன.. ?  உமக்கு ஏதும் உடம்பு சரியில்லையா ? »

என்று நான் கேட்டபோது, ‘வெளிநாட்டு மாப்பிள்ளை ரை கட்டி வேலை செய்வார் என்று நான் நினைத்தேன்,. நீங்கள் படுற பாட்டைப்பார்த்தால் கவலை.. கவலையாய் கிடக்குது.. ‘’

 என்று அவள் சொன்ன மறு நொடி எனக்கு ‘பக்’ என்று இருந்தது. எனக்கு கிடைத்த ஒரே ஒரு பெண்ணின் மனக்கவலையின் ஆழம் என்னை அதிர்வுக்குள்ளாக்கிற்று.

சமையல் வேலையை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக என் மூளையில் எல்லா பாகங்களும் இயங்க வைத்து டாக்ஸி ஓட்டும் உரிமையைப்பெற்றேன். பிரெஞ்சு மொழியையும் ஓரளவு சீர் திருத்தி வாசனைதிரவியம் போட்டு பாரிசுக்கு ஏற்றபடி நளினமாக்கி மனைவி பெருமைப்படும்படி ரை கட்டி டாக்சி ஓட்ட ஆரம்பித்தேன்.

இப்போது அந்தத்தொழிலையும் கைவிடும் நிலைக்கு நிலமைகள் வந்துவிட்டிருக்கிறது. பாரீஸ் நகரின் வாகன நெரிசல், வங்கிக்கணக்கே எரிந்துவிடும்படி ஏறி நிற்கும் எரிபொருள் விலையேற்றம். வாடிக்கையாளர்கள் மோசமாகிச்செல்லும் போக்கு, கரியமில வாயுவின் அடர்த்தியால் பாரீஸ் காற்று அழுக்காவதற்கு என் வண்டியும் காரணமாக இருப்பது பேன்ற காரணங்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அதிகமானவர்கள் ஓய்வெடுப்பதால் சாலை சற்று ஓய்வாக இருக்கும். நீண்ட தூர ஓட்டங்கள் வந்துசேர வாய்ப்புண்டு.. என்று கொக்கின் காத்திருப்புப்போல வண்டியில் இருந்தேன்.

பாரீஸ் றுவசி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வனசா என்ற பெயரில் அழைப்பு வந்தது. அது ஒரு பெரிய சவாரி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வனயா, வனயாதேவி என்ற பெயர்களில் தமிழ்ப் பெண்களுக்கும் பெயருண்டு.

இதுவரை என் வண்டியில் ஒரு தமிழ்ப்பெண் மட்டுமல்ல தமிழ் ஆண் கூட ஏறியதில்லை என்ற வருத்தம் எனக்கும் வண்டிக்கும் உண்டு. இந்த வனசா ஒரு தமிழ்ப்பெண்ணாக இருந்தால் என் தொழில் ஒரு பூரணமான முடிவை அடையக்கூடும். ஆனால் பிரஞ்சுப்பெண்களுக்கும் வனசா என்ற பெயருண்டு. அதை அகதியாக பதிவு செய்து அலைந்து திரிந்த நாட்களில் அறிந்திருந்தேன். 

முதல் முறையீடு நிராகரிக்கப்பட்டால் மேன்முறையீடு செய்யவேண்டும். அதற்கு அப்புக்காத்துமார்களை அகதி ஒருவன் அமர்த்தவேண்டும். அப்படி அகதிகளின் மேன்முறையீடுகளால் புகழும் செல்வச்செழிப்பும் அடைந்த சில பிரஞ்சு சட்டவாளர்கள் பாரீசில் உண்டு. அதில் ஒருவரின் பெயர் ‘வனசா’. அதன்பின்னர்தான் தமிழின் பெருமை எனக்கு பிடிபட்டது. இப்போது என் வண்டியில் வர இருப்பது தமிழ்ப்பெண்ணா ? பிரஞ்சுப்பெண்ணா ? என்பதில் மனம் குழைந்துகொண்டிருந்தது.

பாரீஸ் றுவசி சார்த்துகோல் சர்வதேச விமான நிலையம் மூன்று முனையங்களை வைத்திருக்கிறது. இதில் முனையம் இரண்டில் சிறுபிள்ளை அரிவரி படிப்பதுபோல் A, B, C, D, F  என்று ஆறு வாசல்கள். இதில் F வாசலில் தான் நிற்பதாக வனசா குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.

நான் அழைப்பெடுத்து அந்தக்குரலை ஆராய விரும்பினேன். அவர் ஆங்கிலத்தில் பேசினார். நானும் பிடி கொடுக்காமல் பேசினேன். ‘அம்மணி, உங்களை நான் இலகுவாக கண்டுபிடிக்க உங்கள் தோற்றத்தை கூறமுடியுமா ?’ என்றேன்.

‘நீலக்கோட்டும், மூன்று சிவப்புப் பயணப்பெட்டிகளுடன் நிற்கிறேன்’ என்றார்.

‘அம்மணி, வனசா நீங்கள் இந்தியப்பெண்ணின் தோற்றத்தில் இருப்பீர்களா ? ‘

‘ஓ.. கடவுளே ! எப்படித்தெரியும் ?’

‘உங்கள் பெயரை வைத்து ஊகித்தேன்’

‘உங்கள் கணிப்பு கிட்டத்தட்ட சரியானது. நான் இலங்கைப்பெண்’

‘நீங்கள் தமிழ் பேசுவீர்காளா ?’

‘கந்தனே.. ! யேஸ்.. யேஸ்.. நான் தமிழ்ப்பெண்தான்’

(மொழி மாறியது)

‘மகிழ்ச்சி, இன்னும் ஐஞ்சு நிமிசத்தில வந்திடுவன்’

‘நன்றி, பாரிசில் தமிழ் டாக்சி கிடைச்சது மகிழ்ச்சி. நான் ஐம்பத்தி ஐந்தாவது வாசலில் நிற்கிறேன்.’

முனையம் F  இல் நுழைந்ததும் ஐப்பத்தைந்தாவது வாசலைப்பார்த்தேன். வனசா கொண்டைபோட்டு, கறுப்பு நீள்சட்டையும், மேல் நீலக்கோட்டும், கறுப்புநிற கைப்பையை தள்ளுவண்டியின் முன் கூடையில் வைத்துக்கொண்டு மீன்பறவையின் தலையசைவுகளோடு என்னைத்தான் தேடிக்கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட ஐம்பது வயதுகளை யோசித்துக் கடந்த தோற்றம். செவ்விளநீர் கோம்பைகள் போன்ற கன்னம். புன்னகைக்கும், அழுகைக்கும் நடுவில் களைத்துப்போய் இருக்கும் முகம். சராசரியான தமிழ்ப்பெண்களைவிட உயரமும் அதற்கேற்ற பருமனும். தரிப்பிடத்தில் இருந்தே அவரை அவதானித்துவிட்டு, வண்டியின் பிருட்டம் வாய்பிளந்து திறப்பதற்கு கட்டளை கொடுத்துவிட்டு அவரருகே நடந்தேன்.

என்னை இனங்கண்டவர் அவர் வீட்டுக்குச் சென்ற விருந்தாளி போல..

‘’வாருங்கோ தம்பி. சொன்ன நேரத்திற்கு வந்திட்டீர்கள். நீங்கள் தமிழ் எண்டது எனக்கு மகிழ்ச்சி. பாரிசுக்கு முதல்முறை வருகிறேன். உங்கள் உதவி தேவை.’

‘கட்டாயம் அன்ரி. நீங்கள் காறுக்குள் ஏறுங்கோ நான் சூட்கேசுகளை ஏத்துறன்.’’

‘நன்றி ராசா’

ஒரு நொடியில் என்னைத் தன் ‘ராசா’ ஆக்கிவிட்டு அவர் ‘ராணி’ போல வண்டிக்குள் அமர்ந்திருந்தார்.

தாய்மார்கள் பிள்ளைகளை ‘ராசா’ என்று சொல்லும்போது வரும் சொல்வாசம் பூவாசம் நிறைந்தது. அதனால் வனசாவை எனக்குப்பிடித்துப்போனது.

‘அன்ரி, நீங்கள் போகவேண்டிய முகவரி என்ன ?’

‘தம்பி, ஒரு கொட்டல் முகவரியை என்ர மகன் அனுப்பி இருக்கிறார். அங்குதான் போகவேண்டும். நான் இரண்டு நாளில் மீண்டும் கனடாவுக்கு பிளைட் பிடிக்கோணும். என்னால் தொடர்ந்து இலங்கையில் இருந்து கனடாவிற்கு பயணம் செய்யமுடியாதென்பதால் பாரிசில் இரண்டுநாள் தங்கி பின்னர் பயணம் செய்யும்படி மகன் ரிக்கற் போட்டவர். உங்களுக்கு நல்ல கொட்டல் தெரிஞ்சா அங்க என்னை விட்டு விடூறிங்களா பிளீஸ் ? ’’

‘ அன்ரி, உங்களுக்கு பாரிசில் சொந்தக்காரர் ஒருவரும் இல்லையோ !’

‘இல்லத்தம்பி, எல்லாரும் கனடாவில இருக்கிறம். இலங்கையில கூட இப்ப சொந்தபந்தம் இல்லையெண்டா பாருமன்’

‘அன்ரி பாரிசில் எல்லாக் கோட்டலும் நல்லதுதான். ஆனால் நீங்கள் விரும்பினால் எங்கள் வீட்டில் தங்கலாம். இரண்டு நாட்கள்தான ? நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.’

‘ஐயோ..தம்பி நீர் எவ்வளவு நல்லபிள்ளையாய் இருக்கிறீர் ? உமக்கு இடைஞ்சல் தர நான் விரும்பேல்லை. என்ர மகனும் விரும்பமாட்டார்.’

‘அன்ரி,பாரிஸ் வினோதமானது. உங்கள் மகன் தெரிவு செய்த கோட்டல் இருக்குமிடம் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாதது. ஆனால் உடைமைகளுக்கு உத்தரவாதம் இல்லாத பகுதியில் இருக்கிறது. உங்களைப்போன்ற புதியவர்களை அவர்கள் இலகுவாக இனம்கண்டு விடுவார்கள்.

வனசா மறுகதை பேசவில்லை. ‘உங்கள் வீட்டில் சிரமம் இல்லையோ ? என்ர பிள்ளை போல இருக்கிறீர்’

(இப்போது தான் நீங்கள் கதையின் வாசலுக்கு வந்திருக்கிறீர்கள். இந்தக்கதை வனசா மூலம்தான் கிடைத்தது. அவரே அதைச்சொல்லட்டும். விமான நிலையத்தில் இருந்து ஒருமணி நேர பயண தூரத்தில் என் வீடு உள்ளது. அந்த ஒரு மணி நேரத்தில் என் காதுகளில் வந்த கதைதான் உங்கள் கண்களுக்கு வர இருக்கிறது)

‘அன்ரி இலங்கையில் ஒருவரும் இல்லை என்கிறீர்கள். அப்ப, யாரிடம் சென்று வருகிறீர்கள் ?’

‘ராசா, முப்பத்தி ஐந்து வருடத்தின் பின்பு என் நண்பியை சென்று பார்த்துவிட்டு வாரன்.

என்ர மனுசன் 1987 இல் இலங்கையை விட்டு வெளிக்கிட்டு கனடா போனவர். உங்களுக்கு அந்தக்கதைகள் தெரியாது. அப்பேக்க ஒரு இனம் மற்ற இனத்த அடக்குதெண்டு போராட வெளிக்கிட்ட காலம். பிறகு எல்லா இடத்திலும் போர் ஆட வெளிக்கிட்டுது. என்ர மனுசன் ‘இந்தத் தீவில் இனி மனுசர மனுசர் கொல்லத் தெரிஞ்சாத்தான் வாழலாம் வனசா’ என்று அங்கலாய்த்துக்கொண்டே இருந்தார்.

எண்பத்தி ஏழுல இந்தியன் ஆமி வந்தபிறகு பிரச்சினை தீர்ந்து விடும் என்று ஆறுதலாய் இருந்தனாங்கள். அவரோட பள்ளியில் உயிரியல் படிப்பித்த சினேகிதர் ஒருத்தர எங்கோ வெடித்த குண்டுக்கு பதிலாய் வந்த இந்தியன் ஆமி சுட்டுக்கொன்றது மட்டுமல்லாமல். அந்த சடலத்தை நாலுதுண்டா வெட்டிப்போட்டு போயிட்டினம்’ அந்த அதிர்ச்சியில் இலங்கையை விட்டு வெளிக்கிட்டவர், அவற்ற வாழ்நாளில இலங்கை திரும்பேல்லை.

அவற்ற அப்பா, பெரியவர் கன்டி பேரின்பநாயகம் உடன் சேர்ந்து மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்தவர்களில் ஒருவர். அந்த நேரத்தில் கதர் போராட்டத்துக்கு எங்கட சனத்திட்ட காசு தெண்டி காந்தியின் கையில் லட்ச ரூபா கொடுத்தவர்கள் தம்பி. அதைப்பற்றி இப்ப யாருக்கு மோன தெரியப்போகுது ?

இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு நான் மட்டும் திரும்பக்காரணம் என்ர நண்பி  அதே கிராமத்தில வாழ்கிறாள் என்ற சேதி கிடைத்தது. இத்தனை ஆண்டுகளும் அவளை நினைக்காத நாளில்லை.

நம் ஊரை விட்டு வெளிக்கிடேக்க அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால் அவள் காதலித்து திருமணம் செய்த மனுசன் யாராலோ கடத்தப்பட்டு விட்டிருந்தார். அவள் ஒரே அழுகையாய் இருந்தவள்.

பள்ளியில் படிக்கேக்க நான் முதலாம் பிள்ளையாக வந்தால் அவள் இரண்டாம் பிள்ளையா வருவாள் : நான் இரண்டாம் பிள்ளை என்றால் அவள் முதலாம் பிள்ளையா வருவாள். இருவரும் வேறு யாருக்கும் அந்த இடத்தை விட்டுக் கொடுக்கவில்லை. குடும்ப ரகசியங்களையும் நாம் பகிர்ந்து கொண்டோம். தோற்றத்தில் கூட இருவரும் ஒத்து போனோம். அப்போது பள்ளிக்கூடம் பூராவும் எங்களை ‘இரட்டை இராட்சசிகள்’ என்று தான் சொல்லுவினம்.

நான் அவளை விட்டு பிரியேக்க என் மகன் மயூரனுக்கு இரண்டு வயது. அவள் மகள் பச்சைக்குழந்தை. அவள் பிறந்த மணம் மாறாத அந்தக்குழந்தையை மடியில வைச்சுக்கொண்டு ‘வனசா இந்தப்பிள்ளையும் நானும் என்ன சொய்யப்போறோமோ தெரியேல்ல’ என்று சொன்னதும் அவளை கட்டிக்கொண்டு இருவரும் அழுததும் என் மனதில் அப்பிடியே இருக்குது.

‘தம்பி மயூரனுக்கு இவளைத்தான் கட்டிக்கொடுக்கிறது. எப்படியாவது நான் எங்கிருந்தாலும் வருவன். நீ காத்திரு. ஒருபோதும் உன்னை மறக்கமாட்டன்’

என்று சொல்லிப்போட்டு அந்த பெண்குழந்தையை வாரியெடுத்து அணைத்து வெளிக்கிடும்போது அந்த குழந்தை என் ஆட்காட்டி விரலை விடவே இல்லை. அவர்களின் படலை தாண்டி நான் வரப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

கனடா வந்த பிறகு ஊரில் நடந்த ஓவ்வொரு இரத்தக்களறியிலும் கனகாம்பிகையும், குழந்தையும் என்ன பாடோ ? அவர்கள் உயிரோடு இருப்பார்களோ என்று நினைத்தவாறே இருப்பேன்.

‘ பிறகு ?’

கனடா வந்து மொன்றியலில் குடியேறினோம். சகோதரம், சொந்தபந்தம் என்று எல்லோரும் கனடா வந்துவிட்டார்கள். நாங்கள் இருந்த வீடு அந்த ஊரிலேயே பெரிய வீடு. முதலில் போராளிகள் இருந்தார்கள். பிறகு ஐ. சி. ஆர். சி இருந்தார்கள். பிறகு 1999 இல் கிபிர் விமானத்தால் எங்கள் வீட்டை தாக்கி அது தரைமட்டமாய் கிடந்ததை அப்போது பி. பி. சி இல் பார்த்து தெரிந்துகொண்டோம்.

நாள்பட.. நாள்பட இலங்கைய பற்றி நினைப்பதே நின்றுபோனது. அம்பியையும், குழந்தையும் நினைத்தால் கடும் கவலைதான் வரும்.

அண்மையில் ரொரன்ரோவில் ஒரு விழாவில் எங்கள் ஊரைச் சேர்ந்த, அந்த காலத்தில் கனகாம்பிகையை காதலிக்க முன்னும் பின்னும் திரிந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் கனடாவில் பெரும் பணக்காரர். அவரிடம் கேட்டால் கனகாம்பிகை பற்றி தெரியும் என்று விசாரித்தேன். அவர், ‘அவள் யுத்தத்தில் இருந்து மீண்டு ஊரில் மீள் குடியேறி வாழ்வதாகவும் தேடிப் போனபோது   வீட்டு முத்தத்தில்(முற்றம்) வைத்துப் பேசிவிட்டு அனுப்பி விட்டதாகவும், தான் பணம் கொடுத்தபோது அதை விரும்பவில்லை என்றும் தனக்கு அவமானமாக போய் விட்டது தான் வந்து விட்டேன்’ என்றும் சொன்னார்.

கனகாம்பிகையின் மகள் பற்றிக்  கேட்டேன். மகள் இருப்பது பற்றி தனக்கு தெரியாது. ஆனால் அவள் வாழும் இடம் அவர்களின் தோட்டக்காணியில் சிறு வீட்டில் வாழ்வதாக கூறினார்.

 எனக்கு உடலெல்லாம் உவர் நீர் சுரந்து அடுத்த நொடியே அங்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. விபரத்தை மகனுக்கு கூறியபோது உடனே ரிக்கற் போட்டுத்தந்தான். அப்படித்தான் என் நண்பியையும் அவள் மகளையும் பார்க்க இலங்கைக்குப்போனேன்.

‘அப்ப, உங்கட மகன் திருமணம் செய்து விட்டாரா ? ‘

‘இல்லைத் தம்பி. அவனுக்கு இப்ப மயூரன் பெயரில்லை. அவனை பள்ளியில் சிறு வயதில் இருந்து எல்லோரும் மாயோன்… மாயோன் என்று கூப்பிட்டினம். அவனுக்கும் அது பிடித்துப்போய் விட்டது. பிறகு நாங்கள் அகராதியெல்லாம் ஆராய்ந்தால் மாயோன் நல்ல தமிழ்ப்பெயர்தானே ?  கனடிய குடியுரிமை பெற்றபோது மாயோன் என்றே பெயரை மாற்றிவிட்டோம்.

தம்பி, என்ர மகன் முதலில் தத்துவம் படித்தான். பிறகு உயிரியல் படித்தான். பிறகு இயற்கையியல் படித்து அதில் அவன் எழுதிய காலநிலை பற்றிய கட்டுரை பெரிய விஞ்ஞானிகளின் தொடர்பை அவனுக்கு ஏற்படுத்தியது. காசுக்காக வேலைக்கு போக முடியாது என்று அடம்பிடித்துக்கொண்டு எப்போதும் படித்துக்கொண்டே இருப்பான். காலியான வயது வந்தும் அவனுக்கு அதைப்பற்றி கவலையில்லை. ‘பூமி ஆபத்தை நோக்கி நகர்கிறது. இந்தத்தலைமுறைக்கான இயற்கையை மீட்டெடுக்கும் பெரும் சண்டையை நாம்தான் செய்யவேண்டும்’ என்று எனக்கு புரியாத பல விசயங்களை சொல்வான். எனக்கு சிலநேரம் பயம் பிடித்துவிடும்.

அவன் ஆசைப்பட்டது போல கனடிய-அமெரிக்க அரசாங்கங்கள் சேர்ந்து ‘வடதுருவ பாதுகாப்பு ஆராட்சி விஞ்ஞானிகள்’ குழுவில் ஒருவனாக கனடாவின் யூகொன்(yukon) என்ற இடத்தில் இருக்கிறான். அந்த இடத்துக்கு மொன்றியலில் இருந்து விமானம் மூலம் செல்வதானால் பத்து மணிநேரம் பிடிக்கும். அங்கு கடும் குளிர். அவன் சொல்லும் கதைகளைக் கேட்டாலே எனக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். இலங்கையை விட எட்டு மடங்கு பெரிய அந்த கனடிய மாவட்டத்தில் நாற்பத்தி ஐஞ்சாயிரம் சனம் தான் இருக்குதெண்டால் யோசித்துப்பாரன் தம்பி.

மகன் காதலித்ததாகவும் தெரியவில்லை. அவனுக்கு முப்பத்தி ஏழு வயதாவதை நினைத்தால் எனக்கு கவலைதான்.

மகனிடம் சிறு வயதிலேயே நண்பி அம்பியைப் பற்றியும், அவள் மகள் பற்றியும் கூறியிருக்கிறேன். அம்பி பற்றி அறிந்தபோது அவள் பற்றிச் சொல்லி சிலவேளை அவள் மகள் திருமணம் செய்யாது இருந்தால் நீ அவளை திருமணம் செய்வாயா ? என்று கேட்டேன். ‘நான் எதிர்பார்க்கவில்லை ‘அந்தப்பெண் இப்போதும் இருந்தால் நான் திருமணம் செய்கிறேன்.’ என்று சொல்லி விட்டான். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. இந்த சந்தோசத்தோடுதான் இலங்கை போனேன்.

«’கனகாம்பிகையை கண்டீர்களா? மகனுக்கு மருமகள் கிடைத்தாளா? ‘

வனசாவின் முகம் சிவக்க ஆரம்பித்தது. பேச்சு வரவில்லை. முன் கண்ணாடியால் பார்த்தபோது துன்பச்சாக்கை கட்டிவிட்டதுபோல் உதடுகள் குவிந்திருந்தது. வார்த்தைகள் வராதபோது கண்கள் முட்டி நின்றது. இடது கையால் அதை ஒற்றி எடுக்கிறார். நான் அமைதியாக வண்டியை ஏகாந்த நிலையில் செலுத்தினேன்.

‘ஊருக்குப்போய் கனகாம்பிகை இருப்பதாகச் சொல்லப்பட்ட அவர்களின் தோட்டக்காணியில் இருந்த இடம் அடைந்தேன். ஒர் சிறு வீடு. பனமட்டை கட்டிச்செய்த கதவு. வீடு பூட்டப்பட்டிருந்தது. பெட்டிகளை திண்ணையில் வைத்துவிட்டு அயல் வீட்டில் சென்று விசாரித்தேன். கனகாம்பிகை கூலி வேலைக்கு சென்றிருப்பார் வருவார் என்றார்கள். நினைவுகளோடும், ஏக்கத்தோடும் அவளின் திண்ணையில் காத்திருந்தேன்.

பொழுதுபடும் நேரம் படலை திறந்து அவள் வந்தாள். அவள் என்னைக்கண்டு கத்திவிட்டாள். இருவரும் மணிக்கணக்காக முதலில் அழுதோம். அம்பிகை ஒரு தாமரை போல இருக்கவேண்டியவள் ; கப்பியில் தொங்கும் கயிறுபோல இருந்தாள். நான் தன்னைப்பார்க்க வருவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றாள். பின்பு அயல் வீட்டில் ஓடிச்சென்று கறி வேண்டி வந்தாள். தடபுடலாக உணவு தயாரிக்க ஆரம்பித்தாள். நான் முப்பத்தி ஐந்து ஆண்டுகளின் பின் கிணற்றில் அள்ளிக்குளித்தேன். மகளைப்பற்றி எப்படிக்கேட்பது என்று தெரியாமல் இருந்தது. இளம் பெண் வாழும் தடயங்கள் அந்த வீட்டில் இல்லை. சிலவேளை மகள் திருமணம் செய்து வேறெங்கும் வாழலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

இருவரும் சாப்பிட உட்கார்ந்தோம். அப்போதுதான் ‘அம்பி மகள் எங்க ?’ என்றேன். அந்த வீட்டில் அவள் கணவனின் படம் மட்டும் மாலையிடப்பட்டிருந்ததால் என் மனதில் தைரியம் இருந்தது.

அம்பி எழுந்தாள். என்னைக் கை பிடித்து அறைக்குள் அழைத்துப்போனாள். அங்கு ஒருவரும் இல்லை. சாமியறையில் இரண்டு சாமிப்படங்கள் இருந்தன. மலர் வாசனையும், அகில் வாசனையும் அந்த குடிசை அறையை நிறைத்திருந்தது. அம்பி அதில் ஒரு சாமிப்படத்தை எடுத்து பின்பகுதியைத் திருப்பினாள். கறுப்பு வெள்ளை படத்தில் வரி உடையுடன் ஒரு இளம் பெண் கனகாம்பிகை இளமையில் இருந்த தோற்றத்தில் புன்னகைத்தபடி இருந்தாள்.

பெயர்    :-கேணல் இதயக்கனி

வீரச்சாவு :- 04 :04 :2009

இடம் :-ஆணந்தபுரம்.  என்றிருந்தது தம்பி.’’

என்றவர், விம்ம ஆரம்பித்தார். அந்த வாய்மூடி அழும் சத்தம் கேட்டு என் இதயம் தொண்டைக்குள் வந்து அடைத்துவிட்டது போல் இருந்தது.

என் வீடு வந்திருந்தது. என் மனைவி வனசாவிற்கான அறையை தயார் செய்திருக்கக்கூடும். இரண்டு நாட்களுக்குள் மீதிக்கதையை அவள் கேட்கட்டும். அவர் எம்மை விட்டு பிரியும்போது எம் பெண் குழந்தைக்கு ஏதாவது வாக்குறுதி கொடுத்துவிட்டு கனடா செல்லக்கூடும். அதை அவர் நிறைவேற்றுவார். சர்வ நிச்சயமாக அதுதான் எனது கடைசிச் சவாரியாக இருக்கும்.

 

அகரன் 

 

பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.

 

https://akazhonline.com/?p=3993

 

 

1951 - கொழும்பில் நடந்த கொலை - பொன்னம்பலம் குலேந்திரன்

3 months ago

முற்குறிப்பு

இது ஒரு கதை அல்ல. வரலாற்று சம்பவத்தின் மீட்டல். 

எழுதியவர் பொன் குலேந்திரன் (கனடா)

https://eluthu.com/kavithai/352788.html

 

1951 இல்    கொழும்பில் நடந்த கொலை

 

உயர் மட்டத்தில் ஒரு கொலை நடந்தால் அது மக்களினதும் ஊடகங்களினதும் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை 1951 ஆம் ஆண்டு கொழும்பு 3, பம்பலபிட்டியாவில் நடந்த கொலை பிரபல கிரிகெட் விளையாட்டு வீரரின் மனைவியின் கொலை. இலங்கையிலும் பல கொமன்வேல்த் நாடுகளிலும் பெரியளவில் இந்த கொலை பேசப்பட்டதுக்கு முக்கிய கரணம், கொலை செய்த முதல் குற்றவாளி மாகாதேவன் சதாசிவம் என்ற பிரபல கிரிக்கெட் வீரர். கொமன்வேல்த் நாடுகளுக்கு கிரிக்கெட் விளயாட்டை அறிமுகப் படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர் ஒரு காலத்தில் இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் ஆகிய மூன்று தேசங்களின் கூட்டுlக் கிரிக்கெட் டீமுக்கு கேப்டனாக இருந்தவர் மகாதேவன் சதாசிவம் . டானல்ட் பிரட்மன் (Donald Bradman). சோபர்ஸ் (Sobers) பிரான்க் வோரெல் (Frank Worell) போன்ற அக்காலத்து பல பிரபல கிரிக்கெட் வீர்களின் பாராட்டைப் பெற்றவர். 
**** 
1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி செவ்வாய் கிழமை. இலங்கையின் தலைநகரமான கொழும்பு மாநகரசபை வட்டரம் 3 என்று அழைக்கப்படும் பம்பலப்பிட்டியாவில் உள்ள பிரதான காலி பெரும் பாதையில் இருந்து கடற்கரையை நோக்கிச் செல்லும் செயின்ட் அல்பன்ஸ் பிலேஸ் என்ற கிரவல் பாதையில் , 7 ஆம் இலக்கதில் (No 7 St Albans Place) ஜெயமங்களம் என்று வாசலில் பெயர் பதித்த வீட்டின் முன்னே, பகல் 3.15 மணியளவில் இரு சிறுமிகள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த காலத்தில் எல்லா வீடுகளிலும் டெலிபோன் வசதி இருந்ததில்லை. அதனால் வசதி உள்ள 7 ஆம் இலக்க வீட்டுக்கு டெலிபோன் கோல் எடுக்க. அந்த வீதியில் உள்ள 2 ஆம் இலக்க வீட்டில் வசிக்கும் வீட்டுக்காரி யோன் பொன்டர் (Yone Fonder) என்பவள் ஜெயமங்களதுக்கு வந்தாள். அங்கு முன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுமிகளில் ஒருத்தியிடம் 
” எங்கே உன் அம்மா மஞ்சுளா”? என்று கேட்டாள் யோன். 
அதற்கு அந்தச் சிறுமி : “அம்மாவுக்கு காய்ச்சல். கார் கராஜூக்குள் படுத்திருக்கிறா” என்றாள் மஞ்சுளா. 
அந்த சிறுமியின் பதில் யோனை சந்தேகிக்க வைத்தது உடனே கார் கராஜ் கதவைத் திறந்து உள்ளே போய் பார்த்தபோது அங்கு கண்ட காட்சி யோனை திகைக்க வைத்தது. கராஜ்ஜின் நிலத்தில் வீட்டுச் சொந்தக்காரி திருமதி ஆனந்தா சதாசிவத்தின் உடல் முச்சுப் பேச்சு இல்லாமல், கழுத்தில் ஒரு அம்மிக் குழவியோடு நிலத்தில் நீட்டி நிமிர்ந்து பிரேதமாக கிடந்தது . அருகில் யோன் போய் பார்த்தபோது திருமதி ஆனந்தா சதாசிவத்தின் கழுத்தில் காயமும், கசிந்த ரத்தமும் இருந்தது. மூச்சு இல்லாமல் பிரேதமாக திருமதி ஆனந்தா சதாசிவம் கிடந்தாள். சதாசிவத்தின் மற்ற இரு பிள்ளைகளையும் அந்த நேரம் வேலைக்காரி போடிகாமி ஸ்கூலால் கூட்டி வரவில்லை . பதட்டப் பட்டு, யோன் வீட்டு ஹாலுக்குள் இருந்த போனில் பொலீசுக்கு போன் செய்ய முயற்சித்த போது அந்தபோனில் பேச முடியாமல் சாவி போட்டிருந்தது. உடனே மேல் தட்டில் உள்ள படுக்கை அறைக்குள் சென்று அங்கிருந்த போனில் பம்பலபிட்டிய பொலீசுக்கு போன் செய்து முழு விபரமும் யோன் சொன்னாள். பொலீஸ் ஸ்டேஷன் அந்த வீட்டுக்கு அண்மையில் இருந்தபடியால் பத்து நிமிடங்களில் இன்ஸ்பெக்டர் தியடோமன் பொலீஸ்காரர்களோடு அந்த வீட்டுக்கு வந்தார். 
**** 
ஜெயமங்களத்தில் கிரிகெட் வீரர் மாஹதேவன் சதாசிவம். அவர மனைவி பரிபூரணம் ஆனந்தா, அவர்களின் நான்கு பெண் பிள்ளைகள், வீட்டு சமையல் வேலை செய்யும் மாத்தறையைச் சேர்ந்த 18 வயது வில்லியம என்ற வேலைக்காரனும் வசித்து வந்தனர். வில்லியம சதாசிவம் வீட்டில் வேலைக்குச் சேர்ந்து 11 நாட்களே ஆயிற்று அவனை அறிமுகப் படுத்தியவர் பத்மநாதன் என்ற ஆனந்தாவின் மைத்துனர் . உதவிக்கு பிள்ளகளை ஸ்கூலுக்கு கூட்டி சென்று வரவும் கடைகளுக்குப் போய் பொருட்கள் வாங்கி வரவும் வயது வந்த போடிகாமி என்ற சிங்களப் பெண் ஒருத்தியும் அந்த வீட்டுக்கு வந்து போவாள். 

1915 இல் பிறந்த மகாதேவன் சதாசிவம், கொழும்பு 7 யில் உள்ள ஹோர்டன் பிளாசில் வசிக்கும் ராஜேந்திரா தம்பதிகளின் கடைசி மகள் ஆனந்தாவை 1941 இல் 26 வயதில் திருமணம் செய்தார் . அப்போது சதாசிவத்துக்கு நிரந்தர உத்தியோகம் எதுவும் இல்லை. இராணுவத்தில் தற்காலிக வேலையில் இருந்தார். அவர ஒரு பிரபல கிரிகெட் வீரர் என்ற படியால் அவருக்கு உயர் வட்டத்தில் பல நண்பரகள் இருந்தனர். ஆனால் கிரிகெட்டால் அவருக்கு வருமானம் இல்லை .அவரின் மாமனார் ராஜேந்திரா ஒரு வசதி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் . கொழும்பில் இருந்து புத்தளத்துக்கு போகும் பாதையில் உள்ள லுனுவிலவில் தென்னம் தோட்டமும் கொழும்பில் சில வீடுகளும் உண்டு. அவர் காலம் சென்ற சேர் பொன்னம்பலம் இராமநாதனின் மகன் . 

சதாசிவத்துக்கு 1942 யில் மகள் பிறந்தாள். அதன பின் மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தார்கள். கொழும்பு 3 யில் உள்ள ஜெயமங்களம் வீட்டை தன் கடைசி மகள் அனந்தாவுக்கு சீதனமாக ராஜேந்திரா கொடுத்தார் . அவருக்கு கடைசி மகள் மீது தனிப் பாசம் . 

சதாசிவம் குடும்பப் பொறுப்பு இல்லாதவராய் .பண வசதி உள்ள மனைவியின் ஆதரவிலும் தாயின் அன்பிலும் வாழ்ந்தார் . குடியும். கிளப்பும் என்று, பணக்கார நண்பர்களோடும. கிரிக்கெட் விளையாடுவதிலும் நேரத்தை கழித்தார் . அவரின் பிரபலத்தை அறிந்த பல பெண்கள் சதாசிவத்தின் நட்பை நாடிப் போனார்கள். அவர்களில் சதாசிவத்தோடு அவருடன் நெருக்கமாக பழகியவள் இவோன் ஸ்டீபன்சன் ( Yvone Stephenson)என்ற கொழும்பில் வாழ்ந்த அழகிய ஆங்கில டச்சு இனப் பெண். அவளும் ஒரு கிரிக்கெட் ரசிகை . சதாசிவம் விளையாடும் எல்லா மட்சுகளையும் அவள் தவற விடமாட்டாள். அடிக்கடி சதாசிவமும் இவோனும் ஹோட்டல்களில் குடித்து ஒன்றாக ஆடி மகிழ்ந்தனர். 

.**** 
1951ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ந் திகதியன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் மகாதேவா சதாசிவம் தமது மனைவியை பம்பலப்பிட்டி சென். அல்பன்ஸ் வீதியின் 7ம் இலக்க இல்லத்தில் வைத்து கொலை செய்தார் என்ற தகவல் பத்திரிகையின் மூலம் வெளிவந்தது. தமது மனைவி ஆனந்தா சதாசிவத்தை இவர் கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. 
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்தவர் சதாசிவம். இரண்டாவது குற்றவாளி வீட்டில் வேலைக்காரனாக இருந்த மாத்தறைப் பகுதில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஏவா மாரம்பகே வில்லியம் என்ற 18 வயது சிங்கள இளைஞன். இந்த இளைஞனின் சாட்சியத்தை நாட்டிலுள்ள தலைசிறந்த சட்டமேதைகளும், வைத்திய நிபுணர்களும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள். இந்த வழக்கு விசாரணை 57 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் தமது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து மகாதேவா சதாசிவம் நிரபராதி என்று கருதப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சதாசிவம் குடும்பத்துக்கு பணிபுரிந்த மாத்தறையை பிறப்பிடமாக கொண்ட ஏவா மாரம்பகே வில்லியத்தின் சாட்சியம் முக்கியத்துவம் பெற்றது. சதாசிவம் இல்லத்தில் அன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உண்மையான சாட்சியத்தை அளித்தமைக்காக நீதிமன்றம் இந்த இளைஞனுக்கு மன்னிப்பு அளிக்க இருந்தது. 
சதாசிவம், கொலைக் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த காரணத்தினால் இந்த இளைஞன் திருமதி சதாசிவத்தை கொலை செய்திருக்கலாம் என்ற ஊகம் வலுப்பெற்றது. அரச தரப்பில் சாட்சியம் அளித்த இந்த வேலைக்காரன் இளைஞனின் சாட்சியம் இந்த வழக்கு விசாரணையின் போது பொய்யான சாட்சியம் என்று நிரூபிக்கப்பட்டது. 
இந்த இளைஞனின் சாட்சியத்தை உண்மையான சாட்சியமா அல்லது கற்பனையில் உருவான சாட்சியமா என்று ஆராய்ந்த பல புத்திஜீவிகள் அவரது சாட்சியம் உண்மையாக இருந்திருக்கலாம் என்று தனிப்பட்ட முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 
கொலை நடந்த தினத்தன்று காலை 10.30 மணியளவில் வீட்டை விட்டு தான் வெளியேறிய போது தமது மனைவி வீட்டிலிருந்தார் என்று சதாசிவம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். ஆனந்தா சதாசிவத்தின் சடலம் அவர்களின் வீட்டிலுள்ள கராஜின் நிலத்தில் கிடப்பதை பொலிஸார் கண்டறிந்தனர். 
அவரது உடலை பரிசோதித்த சட்ட வைத்திய நிபுணர் இந்தப் பெண் காலை 10.30 மணிக்கும் முற்பகல் 11.15ற்கும் இடையில் மரணித்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்தப் பெண்ணின் சடலம் சமயலறையிலிருந்து கார் கராஜ் வரை இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளங்கள் அங்கு தென்பட்டன. திருமதி சதாசிவத்தை சமயலறையில் வைத்து கொலை செய்துவிட்டு அவ்வுடலை கார் கராஜ் வரை இழுத்துச் சென்றிருப்பதாக சதாசிவத்திற்காக ஆஜரான சட்டத்தரணி கொல்வின் அஆர் டி சில்வா வாதாடினார். இதன் மூலம் இந்த கொலையை வீட்டு வேலைக்காரனே செய்திருக்கிறான் என்று அவர் கருத்தை வெளியிட்டிருந்தார். 
இந்த வழக்கை விசாரணை செய்த நீதியரசர் நொயல் கிரேஷனுக்கு கூட கொலை எவ்விதம் நடந்தது என்பது பற்றி தீர்மானிப்பது பெரும் புதிராக இருந்தது. 
சதாசிவம் சார்பில் லங்கா சமசமாஜ கட்சியின் உபதலைவரும், தெஹிவளை, கல்கிசை பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். கொல்வின் ஆர்.டி.சில்வா ஆஜராகி சதாசிவம் நிரபராதி என்று நீதிமன்றத்தில் வாதாடி சதாசிவத்தை இந்த வழக்கிலிருந்து நிரபராதியாக விடுவிப்பதற்கு உதவி செய்தார். இந்த வழக்கு இலங்கையின் சட்டத்துறை வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று நாட்டில் இடம்பெறுவது போன்று அன்று கொலைகள் அடிக்கடி நடப்பதில்லை. ஒரு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று கொலைகளே இடம்பெற்றன. அதனால் அந்த கொலை வழக்குகள் மீது மக்கள் ஆர்வமாக தங்கள் கவனத்தைச் செலுத்தினார்கள். 
இலங்கையில் தேசிய பத்திரிகை அனைத்திலும் இந்த வழக்கு விசாரணை செய்திகள் நாளாந்தம் முன்பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் வந்தன. தெஹிவளை, கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் திரு. சதாசிவத்தின் ஆடம்பர வாழ்க்கையைப் பார்த்து, இந்த மனிதரே தனது அப்பாவி மனைவியை கொலை செய்திருக்க வேண்டும் என்ற மனோநிலையில் இருந்தார்கள். 
குறிப்பாக, தெஹிவளை, கல்கிசைத் தொகுதியிலுள்ள பெரும்பாலான பெண்கள் தன் மனைவியைக் கொலை செய்த கொடியவன் சதாசிவத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற ஆத்திரமடைந்த நிலைப்பாட்டில் இருந்தார்கள். 
இவ்விதம் 57 நாட்களுக்கு நடைபெற்ற சதாசிவம் கொலை வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட போது, மக்கள் கொலை செய்திருப்பார் என்று சந்தேகித்த திரு. சதாசிவம் கொலை செய்யவில்லை என்று தீர்மானித்து விடுவிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த தெஹிவளை, கல்கிசைத் தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் 1956ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பல்லாண்டு காலம் அத்தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர். கொல்வின் ஆர்.டி.சில்வாவின் சட்ட வாதத்தினால் தான் கொலை குற்றவாளி சதாசிவம் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார் என்று ஆத்திரமடைந்தனர். 
இந்த நிலையை ஏற்படுத்தியமைக்காக டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா மீது வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் தெஹிவளை கல்கிசைத் தொகுதி மக்கள் 1956ஆம் ஆண்டு தேர்தலில் டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வாவை தோற்கடித்தார்கள். இதே போன்ற நிலை ருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலை வாழகில் ஆஜரான தமிழ் அரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமிர்தலிங்கக்துகும் ஏற்ப்ட்டது  
****** 
சதாசிவத்துக்கு ஆஜரான வழக்கறிஞர். கொலை செய்தது வேலைக்காரன் வில்லியம் என்ற வாதத்தை நிலை நிறுத்தினார். அவரின் விளக்கத்தின் படி .கணவன் சதாசிவம் வீட்டை விட்டு காலையில் சென்றபின் ஆனந்தா தன் படுக்கை அறையில் இருந்து சமையல் அறைக்கு சமையல் எப்படி நடக்ககிறது என்பதை அறிய இரவு அணிந்த உள்ளாடையோடும் அதன் மேல் சேலை ஒன்றை அணிந்தபடி சென்றாள். அங்கு வில்லியம் தேங்காய் துருவிக்கொண்டு இருந்ததை கண்டு அவனோடு பேசியபடி துருவிய தேங்காயை குனிந்து எடுத்து வாயில் போடும் போது வில்லியம் ஆனந்தாவில் உடலை பார்த்து பால் உணர்ச்சிக்கு உள்ளாகி அவலுடன் உடலுறவு கொள்ள முயற்சித்தபோது ஆனந்தா எதிர்த்ததால் அவளின் களுத்ததை திருகி கொலை செய்த்தான் என்றும். ஆனந்த எதிர்பினால் வில்லியத்தின் உடல் மேல் நகத்தின் கீறல் காயங்கள் ஏற்பட்டது என்று தன் பக்கத்துக்கு வாதத்தை சொன்னார் அதன் பின் வில்லியம் உடலை தூக்கிக்கொண்டு கராஜூக்கு தூக்கிச சென்று நிலத்தில் போட்டதாக சில்வா சொன்னார் வில்லியம சதாசிவம் வீட்டில் ஒருவரினதும் சிபார்சும் இன்றி வேலையில் சேர்ந்து 11 நாட்கள் மட்டுமே சென்றது . அவன் எப்படிப் பட்டவன் என்பது வீட்டுக்காரர்களுக்கு தெரியாது என்றும் கொல்வின் ஆர் டிசில்வா சொன்னார் இவ்வாறு நிறையுள்ள ஆனந்தத்தை தனியாக சுமந்து சென்று கராஜூக்குள் போட்டதுக்கு போதிய விளக்கம அளிக்கவில்லை 

கொலை நடந்த தினமே சதாசிவமும், சில நாட்களுக்குப் பிறகு வில்லியம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். 10 முதல் 12 நாட்களுக்கு பின்னர் கைது செய்த பொது வில்லியத்தின் கையில் மற்றும் முகத்தில் அவர்கள் 10 முதல் 12 நாட்களுக்கு பின்னர் கீறல் குறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. சதாசிவம் மீது இத்தகைய காயங்கள் ஏதும் இருக்கவில்லை. 

சில மாதங்களுக்கு முன்னர், சதாசிவம் இங்கிலாந்தில் விடுமுறைக்கு போய் வந்தபோது, அவருக்கு இரண்டு கடிதங்கள் ஆனந்தம் எழுதினார். அந்த கடிதங்கள் அவளின் துயரம் நிறைந்த குடுமப் வாழ்கையை வெளிப்படுத்தியது, என்று ஒரு சில வல்லுனர்கள் சொல்கிறார்கள். அந்தக் கடிதத்தில் அவள் எழுதிய சில்[ வார்த்தைகள் இவை. 

“. . . . ஆனால் வெளிப்படையான நம்பிக்கையையும் கசப்புணர்வையும் நான் என் பேனாவில் மூலம் சொல்லுகிறேன் ... நீங்கள் என்னை 'கைப் பையாக' பாவிக்க மாட்டீர்கள் என நினைக்கிறன். ஏன் என்னை சித்திரவதை செய்கிறீர்கள்? . நான் உங்களை விவகரத்து மூலம் விடுவிப்பேன். . நீங்கள் என்னை விட்டு விலகி விடுங்கள் உங்கள் போக்கு என் போக்கில் இருந்து மாறானது. நான் அமைதியை நாடுபவள். நீங்களோ கிளப் வாழ்கையை விரும்புபவர் குடிப்பதும், நடனமாடுவதும் உங்களுக்கு விருப்பம் , குடும்பம் என்று ஓன்று இருப்பதைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை இவையெல்லாம் என்னால் தாங்க முடியாது....” 
**** 
சதாசிவம் தனது மனைவியை விவாகரத்து செய்யாமல் , தன்னைத் திருமணம் செய்ய அவரின் காதலி யுவோன் ஸ்டீவன்ஸன் சம்மதிப்பதாக இல்லை . இந்த விசித்திரமான விவகாரத்தில், அழகான யுவோன் ஸ்டீவன்ஸன் சதாசிவத்தின் மீது தொடர்ந்து ஒரு முடிவு எடுக்கும் படி அவருக்கு அழுத்தம் கொடுத்தபடியே இருந்தாள் . ஆனந்தத்தின் வழக்கறிஞர்கள் மாக் & மாக் விவாகரதுக்கு அக்டோபர் 8 ம் திகதி சம்மன்கள் சதாசிவத்துக்கு அனுப்பியபோது அவர் என்ன செய்வது என்று யோசித்தார். அன்றிரவு வெகு நேரம் தன் விவாகரத்து பற்றி நண்பர்களோடு பேசியபின் அக்டோபர் 8 ம் தேதி இரவே . சமரசம் பற்றிய இறுதி முயற்சியில், சதாசிவம் ஜெயமங்கலம் சென்று அங்கேயே தங்கினார். அவ்விரவு மனவியோடு அவர் உடலுறவு கொண்டதுக்கு ஆதாரம் இருந்தது.. அப்போதே அவர் ஒரு முடிவுக்கு வந்தார் . காலையில் இறுதி முயற்ச்சியாக மனவியோடு விவாகரத்தை வாபஸ் வாங்கும் படி கேட்டு வாதாடினார். அவள் விவாகரத்து செய்தால் , அவர் தன் மனைவியின் பங்கை இழப்பதைத் தவிர, குழந்தைகளுக்கு தனிமனித பராமரிப்பு மற்றும் ஆனந்தாவின் பராமரிப்பிற்காக கட்டாயப்படுத்தப்படுவார் என்பதை உணர்ந்தார் . அதோடு யுவோன் மீது இருந்த ஆசை வேறு அவரின் .மூளையை தீய வழியில் சிந்தித்து முடிவு எடுக்க வைத்தது மனைவியை தீர்த்துக் கட்டுவதை விட வேறு வழி இல்லை என தீர்மானித்தார் தன் மனைவியை விவாகரத்து நோட்டீசை வாபஸ் வாங்கும் படி அவர் எவ்வளவோ கேட்டும் ஆனந்தா சம்மதிக்கவில்லை. 
கோபம் அடைந்த சாதாசிவம் அவளை தீர்த்து கட்டுவதே சரி என்ற முடிவுக்கு வந்து வேலைக்காரன் வில்லியத்தின் உதவியை நாடினார். அவனோடு அவர் நேருகமாக் பழகியதில்லை . ஒரு சில நாட்கள் மட்டுமே அவானோடு எஜமான் என்ற முறையில் பேசி இருகிறார். , வில்லியதுக்கு தன் எஜமானுக்கும் எஜமாட்டிக்கும் இடையே அடிக்கடி விவாகரத்து வாக்குவாதம் நடந்து வருவது தெரிந்தது. 

மனைவியை சம்திக்க வைக்க முடியாமல் கோபத்தோடு படுக்கை அறையில் இருந்து சமையல் அறைக்கு வந்த சதாசிவம் வில்லியத்தின் அருகே சென்று அவனுக்கு தனது விவாகரத்து பற்றி எடுத்துச் சொல்லி. எஜமாட்டியை கொலை செய்ய தான் முடிவு கட்டியதாகவும் அதன் காரணத்தை அவனுக்கு சொல்லி விளக்கினார் அவனின் உதவியை நாடினார் வில்லியம் முதலில் அவர் சொன்னதைக் கேடு பயந்து. உதவ முடியாது என்று மறுத்து, தனக்கு தான் வேலை செய்த 11 நாட்களுக்கான சம்பளம் வேண்டாம் என்றும், தன்னை தன் வீட்டுக்குப் போக விட்டால் போதும் என்று சொன்னான் . அவர் வில்லியத்தை விடாது “உனக்கு காசும் நகையும் தருவேன். நீ கொலை செய்யத் தேவை இல்லை. எனக்கு உதவினால் பொதும் என்று ஒரு படியாக அவனை விருப்பமில்லாமல் சம்மதிக்க வைத்தார்.. இறுதியில் அவனோடு படுக்கை அறைக்குள் சென்று வில்லியத்தின் உதவியோடு மனைவியின் கழுத்தை நெரித்து சதாசிவம் கொலை செய்தார் . அதன் பின் வில்லியயம் உதவி செய்ய அவனின் உதவியோடு கீழே உள்ள கராஜூக்கு மனைவியின் உடலை தூக்கிசென்று நிலத்தில் போட்டார் . சமையல் அறையில் இருந்த குழவியை கீழே கொண்டு வந்து மனைவியின் கழுத்தில் வைத்திருக்கிறார். தன கையால் கொலை செய்த மனைவிக்கு மூச்சு இருகிறதா என்பதை மனைவியின் கை கண்ணாடியை படுக்கை அறையில் இருந்து கொண்டு வந்து மூக்கின் அருகே வைத்துப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார் . அதன் பின் வில்லியதை படுக்கை அறைக்கு கூட்டிப்போய் மனைவியின் தாலிக்கொடி, நகைகள் , கைப்பையில் இருந்து பணம் ஆகியவற்றை அவனுக்கு சதாசிவம் கொடுத்தார். வில்லியத்துக்கு சதாசிவத்தின் திட்டம் தெரியாமல் அவர் கொடுத்த பொருட்களையும் நகைகளையும் வாங்கிக் கொண்டு சுமார் காலை 9.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறான். அவன் போகும் பொது வெளியில் விளையாடிக் கொண்டிருந்த இரு பிள்ளைகளிடம் “ தான் போறன் இனி திரும்பி வரமாட்டேன் என்று சொல்லிப் போயிருக்கிறான். 





வில்லியம் மாத்தறையில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஒரு குற்றவாளியின் பொறுப்பை ஏற்க ஒரு மூத்த அதிகாரி வில்லியம் மேல் நம்பிக்கை தெரிவித்தார். பொலிசாரின் முதல் அறிக்கையானது அந்த வழியில் இருந்தது. வில்லியம் ஒரு நிபந்தனை மன்னிப்புகளும் இன்றி ஒரு அரச சாட்சியாக ஆனான். அரசு சாட்சியாக மாறிய வில்லியம் பற்றி அட்டர்னி ஜெனரல் திணைக்களத்தில் சந்தேகம் ஏற்பட்டிருந்ததால், அவனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கப்பட்டது. அந்த மன்னிப்பு பலரை ஆச்சரியப்படவைத்தது , சதாசிவத்தின் வழக்கறிஞரான டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வாவினால் அட்டர்னி ஜெனரல் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

**** 

காலை10.30 மணியளவில் கொலை நடனத்து என்று நிரூபிக்க மருத்துவப் பரிசோதனை பயன்படுத்தப்பட்டது. அது முன்பு கொலை நடந்து இருந்திருந்தால், சதாசிவம் வீட்டில் இருக்கும் போது கொலை நடந்துள்ளது. அவர் இருந்திருக்காவிட்டால் வில்லியம் தான் அவளை கொன்றது. என்பது வாதம் கொலை நடந்த இடத்தை தீர்மானிப்பது அடுத்தது; படுக்கையறையிலா அல்லது சமையலறையிலா கொலை நடந்தது ? இறுதியாக, எப்படி காயங்கள் ஏற்பட்டன? இந்த சந்தேகம் வாதிக்கப் பட்டது. 
***** 

செப்டம்பர் 17 அன்று தன் குடும்ப பிரச்னையை விளக்கி , ஒரு ஆனந்தா சதாசிவம் பொலிஸ் இன்சஸ்பெக்டருக்கு தன கணவனால் தனக்கு ஆபத்து ஏற்றபடலம் என்றும் அதனால் தனக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை என்று கடிதம் எழுதினார். அக்கடிதம் ஜூரிகளின் பார்வைக்கு வைக்கப்படவில்லை. அது முக்கியமான சதாசிவத்துக்கு எதிரான் ஆதாரம் அவரை காப்பற்றவே பொலீஸ் அதை முடக்கி விட்டார்கள் 

கொலை நடந்த நேரம். இடம் என்பதில் சந்தேகத்தை உறுதியாக தீர்மானிக்க முடியாதால் தீர்ப்பினை ஜூரிகள் நிரபராதி என்று சதாசிவத்துகு சாதகமாக வழங்கியதால் அவர் விடுதலை செய்யப்பட்டார் மனைவியின் சொத்துக்களில் ஒரு பங்கிற்கு சதாசிவம் உரிமையானார் இலங்கையில் மக்களின் விமர்சனத்தில் தப்ப முடியாமல் லனடனுக்கு புலம் பெயர்ந்தார் அங்கு அவரின் நீண்டகால காதலியான யுவோனை மணந்து தனது கிரிக்கெட்டைத் தொடர்ந்தார். வருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். 

சதாசிவம் கதை முடிவைப் பற்றி தெரிந்து கொள்ள பலர் ஆவலாக இருப்பீர்கள் அது மகிழ்ச்சியான முடிவைக் கொண்டது என்பதுதான் தயைய் இழந்த 10 வயதிற்குட்பட்ட நான்கு பெண்கள், மற்றொரு நாட்டில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்கள்,. திரு. சதாசிவம் இரண்டாவது மனைவியாகிய ஆங்கிலேய பெண்மணியான யுவோன் ஸ்டீஃபன்ஸன் அவர்களுக்கு ஒரு சிறந்த சித்தியாக இருந்தாள். அவர்களோடு சேர்த்து யுவோன் - சதாசிவம் தம்பதிகளுக்கு ஒரு மகனும் இரு மகள்களுமாக இருந்தார்கள் . சதாசிவத்துக்கு இறக்க ஜூலை 1977 இல், 62 வயதில் இறக்க முன் அவருக்கு எழு பிள்ளைகள் . கிரிகேட்டில் சாதனை படைத்தவர். குடும்பத்தில் அதிக பிள்ளைகளுக்கு தந்தையாய் இருந்ததிலும் சாதனை படைத்தார்.

தேளும் தேரையும் - ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

3 months 1 week ago
தேளும் தேரையும் spacer.png ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

  கல்லுக்குள் பதுங்கியிருந்த தேளுக்கு பயம் பீடித்துக் கொண்டது. பசி வரும் போதும், தினவு எடுக்கும் போதும், எரிச்சல் வரும்போதும், ஏன் சும்மா பொழுது போகாமல் போர் அடித்தாலும் தேள் கொட்டிக் கொண்டே இருக்கும். அகப்படும் எதையாவது கொட்ட வேண்டும் போலிருக்கும். அதற்குத் தெரிந்தது இரண்டே உணர்வுகள் தான். கோபம், மற்றது பயம். அதற்கப்பால் பகுத்தறிவு எதுவும் கிடையாது. தனது உயிருக்கு ஆபத்து என நினைத்தால், உண்மையானதோ அன்றி கற்பனையானதோ, கோபம் மிகுந்தெழுந்து தேள் கொட்டும். உயிர் மீதான பயம், அதற்கு உயிர் வாழ்வன மீதான பயத்தையும், கோபத்தையுமே கொள்ள வைத்தது. யாரைப் பார்த்தாலுமே எதிரியாகத் தான் தோன்றியது. தனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுபவர்கள் போலவே எல்லோரும் தெரிந்தார்கள். தேள் யாரையுமே நம்ப மறுத்தது. உருவத்தில் சிறியதாய், இலகுவில் சந்துகளுக்குள் ஓடி மறையக் கூடியதாக இருந்ததால், மற்ற மிருகங்களாலும் தேளை வேட்டையாட முடியவில்லை. கரந்துறைந்த வாழ்வும், கரந்தடித் தாக்குதலும் என அதன் வாழ்க்கை ஜாலியாகத் தான் போய்க் கொண்டிருந்தது.

இந்த ஜாலியான வாழ்க்கைக்கு வேட்டு வைக்க, காட்டுக்குள் ஒரு மனிதன் குடி புகுந்து விட்டான். நாட்டுக்குள் இருந்த மனிதர்களால் தேடப்பட்டு ஒளிக்க வந்தானா? இல்லை, காட்டை வெட்டி களனியாக்க வந்தானா? அல்லது காட்டு மிருகங்களை வேட்டையாடத் தான் வந்ததா? என்பதெல்லாம் தேளுக்குத் தெரியாது. அவன் வந்ததே தனக்கு ஒரு வழி பண்ணத் தான் என்று தேள் திடமாக நம்பியது. தனக்குக் குடில் அமைத்த மனிதன் பற்றைகளை வெட்டி, கற்களை அகற்றி, குப்பை கூளங்களுக்குத் தீ வைத்ததைப் பார்க்க தேளுக்கு உறைக்கத் தொடங்கியது. சேனைப் பயிர்ச்செய்கைக்காகவோ என்னவோ, ஒரு பெரும் காட்டுப் பகுதிக்கு தீ வைத்து, எந்த வித மிருகாபிமானமும் இல்லாமல், முழு வனவிலங்குகளையும் அவன் கொன்றொழித்த போது... தேளுக்கு எல்லாமே ஓடி வெளித்தது. விசயம் தெரியாமல் மனிதன் கண்ணில் அகப்பட்டால், நசிந்து உயிரை விடவும் வேண்டியிருக்கும். அல்லது அவன் வைக்கும் தீயின் பிளம்புகளுக்கு இரையாகவும் வேண்டியிருக்கும். தனது நாட்கள் எண்ணப்படுபவதை தேள் உணரத் தொடங்கியது.

மனிதன் தன்னைக் குறி வைத்துத் தான் இந்தக் காட்டை அழிப்பதாக தேள் நம்பியது. இங்கிருந்தால் ஆபத்து என தேள் தப்பியோடுவதற்கு முடிவு செய்தது. நாட்டுக்குள் தப்பிப் போகலாம் என்றால்... அங்கே... ஒன்றல்ல, ஆயிரம் மனிதர்கள்! தேளின் விசம் பற்றி முழுதாய் அறிந்தவர்கள். மரணம் நிச்சயம்! மரண சாசனத்தையும் உயிலையும் எழுதி வைத்து விட்டு வேண்டுமானால் நாட்டுக்குள் காலை வைக்கலாம்! உயிர் வாழ ஒரே வழி? எப்படியாவது தப்ப வேண்டும்... அடுத்த காட்டுக்கு! ஆனால் இடையில் ஒரு ஆறு! தேளுக்கோ நீச்சல் சுட்டுப் போட்டாலும் வராது. மிதந்து செல்லும் தடிகளில் பயணிக்கலாம் என்றாலும் அவை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும் என்பது தெரியாது. எங்காவது நீர்வீழ்ச்சிகளில் விழுந்து உடல் நொருங்க நேரிடலாம். நீந்தத் தெரிந்த மிருகங்கள் எதனாவது முதுகில் சவாரி செய்தால் தான் உண்டு.

வெற்றிகரமான பின்வாங்குதலுக்கு சில ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டே ஆக வேண்டும். எதிரிகளின் அல்லது எதிரிகளின் எதிரிகளின் காலில் விழ வேண்டியது தான். உயிரைக் காத்துக் கொள்வது தான் தற்போது முக்கியமானது. யாரைப் பிடிக்கலாம்? யாரின் காலில் விழலாம்? விசயம் தெரிந்த மிருகங்கள் தன்னுடன் சகவாசம் வைக்க மாட்டா என்பது தேளுக்கு நன்றாகவே தெரியும். தன் கடிக்கு ஆளானவைகளும் தன்னைப் பழி வாங்குவதற்காக எங்காவது மாட்டி விடக்கூடும் என்ற பயம் வேறு. யாராவது இளிச்சவாயன் அகப்பட்டால் தான் உண்டு. கண்ணில் பட்டது, கல்லுக்குள் தேரை!

தன்னுடைய விசத்துக்கு அஞ்சி ஜீவராசிகள் தலைதெறிக்க ஓடுவது தேளுக்குத் தெரியாததல்ல. எனவே, ஒண்ணும் தெரியாத பாப்பா போல முகத்தை வைத்துக் கொண்டு தேரைக்குப் பல்லிளித்தது.

'மெலிஞ்சிருக்கிறாப்ல?' தேரையின் உடல்நிலையில் அக்கறை கொண்டது போல தேள் நடித்தது. தேரை ஒன்றும் ஊருலகம் புரியாததல்ல! தேளிடம் முன்பின் கடி வாங்கிய அனுபவம் இல்லா விட்டாலும், தேளின் கூத்துக்கள் பற்றி ஏற்கனவே பெரியவர்கள் சொல்லித் தந்திருக்கிறார்கள். பட்டறிவு இல்லாவிட்டாலும், படிப்பறிவு இருந்தது. பகுத்தறிவு இருக்குமோ யாருக்குத் தெரியும்?

'அப்படியொண்ணும் இல்லியே?' தேள் பிள்ளையார் சுழி போடுவது தேரைக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

'இல்லையே, போனவாட்டி பாக்கிறப்போ, ஆரோக்கியமாகத் தானே இருந்தே!' தேள் முகத்தைச் சீரியஸாக வைத்தபடியே...

தேரைக்கோ தேளுடன் சகவாசம் வைத்துக் கொள்வதில் நாட்டமில்லை. துட்டனைக் கண்டால் தூர விலகு என்று ஏற்கனவே பெரியோர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

'உனக்கு ஒரு இரகசியம் தெரியுமோ?' தேள் சஸ்பென்ஸ் போட்டது.

தேரை எட்ட நின்றபடியே... 'என்னது?' என்றது. தேரைக்கு மர்மத்தை அறியும் ஆவல்.

'உனக்குத் தெரியுமா? இந்த மனிதன் இந்தக் காட்டை அழிக்கப் போகிறான்.' தேள் கதை விடத் தொடங்கியது. 'அவன் மூட்டும் பெருநெருப்பில் நீ அழியப் போகிறாய்'

'நான் அழிந்தால் நீயும் தானே அழியப் போகிறாய்'. தேரைக்கு உள்ளூரப் பயம் வந்தாலும், மனதைத் தேற்றிக் கொள்ள முயன்றது.

'நான் அழிவது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. உன்னை நினைக்கத் தான் எனக்குக் கவலையாக இருக்கிறது'

'அப்படி என்னில் என்ன அக்கறை?'

'எனக்கென்னவோ மனிதன் உன்னை அழிப்பதற்காகத் தான் இந்தக் காட்டுக்கு வந்திருக்கிறான் போலிருக்கிறது' தேள் நன்றாகவே கதை விட்டது.

'உன்னைக் கொன்று உன் இறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறானாம்'

சீனச் சட்டிகளுக்குள் தான் சூப் ஆவதைக் கற்பனை செய்ய தேரைக்குப் பயமாக இருந்தது.

'மெய்யாத் தான் சொல்றியோ?' பயம் பீடிக்க தேரை கேட்டது.

'நான் என்ன பொய்யே சொல்றன்? உன்னைக் காப்பாற்ற என்னால் தான் முடியும்'

'அதெப்படி? உன்னைக் கண்டாலே அவன் நசுக்கிடுவானே?'

'கண்டால் தானே! நான் அவனைக் குத்தி விட்டு ஓடினாலும், அவன் என்னைக் கொல்ல முடியாது'

தேரை முழி பிதுங்கியது. தேரையின் பயத்தைக் கண்ட தேள் அக்கறையுடன் சொன்னது.

'என்ன மனிசாளுக்கு மனிசாள் உதவியாய் இருக்கிற மாதிரி நாங்கள் மிருகங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டாமா? அடுத்த கரையில் என் உறவினர்கள் நிறையப் பேர் வசதியாக இருக்கிறார்கள். அங்கே மனிதர்களும் கிடையாது. அளவுக்கு மிஞ்சிய உணவு. சும்மா உண்ட பின்னால் உறங்க வேண்டியது தான். அங்கே போனால் நீ நிம்மதியாக வாழலாம். அது பாலும் தேனும் ஓடும் சொர்க்க பூமி'

'எனக்கு மனிதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. மனிதனுக்கும் என்னால் எந்தப் பிரச்சனையும் இல்லை. நீ விருப்பம் என்றால் போ. எனக்குத் தேவையில்லை'

'நான் அவனைக் குத்தி விட்டு, பொந்துக்குள் பதுங்கி விடுவேன். அவன் கோபத்தில் உங்களைத் தான் கொல்வான். இவன் ஒரு மனிதன் தான் இப்போது காட்டுக்குள் காலை வைத்து விட்டான். இனி என்ன? ஒரு நகரமே இந்தக் காட்டுக்குள் உருவாக நாள் எடுக்காது'

தேரையைப் பயம் முற்றாகவே பீடித்தது. மனிதர்கள் எல்லாம் தன்னை இரவிரவாய் வலை வீசிப் பிடிப்பதாகவும், சீனாவில் பாம்புகளுடனும் அட்டைகளுடனும் புழுக்களுடனும் சட்டிகளுக்குள் வேகுவதாகவும் பயங்கரக் கனவுகள் வருமே என்று நடுங்கத் தொடங்கியது.

'எனக்கு அக்கரையில் யாரையும் தெரியாதே'

தேரை வழிக்கு வந்ததை தேள் உணர்ந்தது.

'அந்தக் கவலை உனக்கேன்? என்னுடைய உறவினர்களுடன் விருந்தாளியாகத் தங்கு. பின்னால் உனக்கு விருப்பமான இடத்திற்குப் போகலாம்'

தேளின் பசப்பு வார்த்தையில் தேரை நன்றாகவே மயங்கி விட்டது. வேலை செய்யாமல் சும்மா குந்தியிருந்தே சாப்பிடலாம் என்ற ஆசை வேறு. தனக்கு இனிமேல் ராஜபோகம் தான் என்ற நினைப்பில்... வாழ்க்கைத் துணை வேறு கிடைக்குமா என்பதை அறிய,

'அங்கே எனக்கு என் இனத்தவர்கள் யாருமே இல்லையே?' என்று தூண்டில் போட்டது?

'நீ இருந்து பார், அக்கரையில் இறங்கும்போது, 72 கன்னித் தேரைகள் உன்னுடன் போகம் செய்யக் காத்திருக்கும்'.

இதற்கு மேல் தேரைக்கு சிந்திக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

'நீ தான் என் குரு. உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன்' புல்லரித்த தேரை அவசரப்பட்டது.

'சரி, வா புறப்படலாம்' தேரை ஆற்றில் துள்ளிக் குதித்தது.

72 கன்னித் தேரைகளின் நினைவு படுத்தும் பாடு! இன்றிரவுக்குள் போய் விட்டால், அதில் பாதிப் பேருக்காவது வழி பண்ணலாம். தேளோ கரையில்!

'குதித்து நீந்து, இருட்டுவதற்குள் போய் சேர்ந்து விடலாம்' தேரை அழைத்தது.

'உனக்கென்ன பைத்தியமா? எனக்கு நீந்தத் தெரியாது என்பது உனக்குத் தெரியாதா?'

'அப்போ எதற்கு என்னைக் கூப்பிட்டாய்?'

'நான் உன் முதுகில் தான் பயணம் செய்ய வேண்டும்'.

'எனக்கென்ன பைத்தியமா உன்னை முதுகில் ஏற்றுவதற்கு?'

தேரைக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்தது.

'உன்னை ஏற்றினால் நடுவழியில் என் முதுகில் குத்துவாய்'

தேளுக்குக் கோபம் வந்தது.

'முதுகில் குத்துவது மனிதர்கள் செய்யும் வேலை. நான் கெட்டவன் தான், கேவலமானவன் இல்லை'. தேள் எம்.ஜி.ஆர் வசனம் பேசியது.

'எனக்குத் தெரியாது. நட்டாற்றில் நீ என்னைக் குத்தினால், மயக்கத்தில் நான் நீரைக் குடித்து இறந்து போவேன்'.

'உன்னைக் குத்த எனக்கென்ன பைத்தியமா? நீ நீரில் மூழ்கி இறந்தால் நானும் தான் இறக்க வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியாதா? என் வார்த்தை தான் எனக்குச் சத்தியம்' தேள் தேரைக்கு நம்பிக்கையூட்ட முயன்றது.

தேள் சொன்னது தேரைக்கு நியாயமாகத் தான் பட்டது. இருந்தாலும் நம்பத் தயாராக இல்லை.

'அம்மாவாணை சத்தியம் செய்வியோ?'

'நீ எந்த தெய்வம் மேல சத்தியம் செய்யச் சொன்னாலும் நான் சத்தியம் செய்து தருவேன்'

தேரைக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. 72 கன்னித் தேரைகள் நினைவு வேறு படாத பாடு படுத்துகிறது. தேளின் சத்தியத்தை தேரை நம்ப விரும்பியது.

'சரி, ஏறிக் கொள்'

தேரை முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு மீண்டும் ஆற்றில் குதித்தது. முதுகில் சவாரி செய்த தேளுக்கு, ஏதோ குதிரைப் பந்தயம் செய்யும் குஷி.

'ஏய், இந்தப் பக்கம் திரும்பு. ஏன் உன்னால் இன்னமும் வேகமாய் நீந்த முடியாதோ? இந்தா, இந்த நுரை என் கண்ணில் படுகிறது, மெதுவாய் போக முடியாதோ?'

தேளுக்குத் தன் சௌகரியம் தவிர, வேறெதுவும் கண்ணில் படவில்லை. தேரை தனக்கு உதவி செய்கிறதே என்ற நன்றியுணர்வு கூட இல்லை. அவ்வப்போது தேரை நீரில் சுழியோட ஆரம்பிக்க...

'ஏய்.. ஏய்... என்னை என்ன முக்குளிக்கச் செய்து கொல்ல நினைக்கிறாயோ?'

தேரை மன்னிப்புக் கேட்டது. 'பழக்க தோசம். இனிக் கவனமாக தண்ணீர் மட்டத்திலேயே நீந்துகிறேன்'.

பயணம் நெடுந்தூரமானது. முதுகில் உட்கார்ந்து தேரையைத் தேராய் நினைத்து சவாரி செய்த தேளுக்கு... எந்தப் பக்கம் பார்த்தாலும் நீராகவே தெரிந்தது. சலிப்புத் தட்டத் தொடங்க... தேளுக்குத் தினவெடுத்தது. யாரையாவது கொட்ட வேண்டும் போலிருந்தது. வேறு யார் உண்டு? தேரை தானே வசதியாக முதுகில் உட்கார வைத்திருக்கிறது.

'சுள்' தேரையைத் தேள் கொட்டி விட்டது.

தேரைக்குப் புரிந்து விட்டது. தேள் வேலையைக் கொடுத்த விடயம்.

'அட முட்டாளே, என்ன காரியம் பண்ணினாய்? இப்போ நான் இறக்கப் போகிறேனே? என்னோடு சேர்ந்து நீயும் இறக்கப் போகிறாயே?'

விசம் ஏறி... தேரையின் நரம்பு மண்டலங்களைத் தாக்க.. தேரை நினைவிழக்கத் தொடங்கியது.

'உன்னைப் பற்றித் தெரிந்து கொண்டும் உன்னை ஏற்றிய என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேணும். பேசாமல் என்ரை பாட்டைப் பாத்துக் கொண்டு இருந்திருக்கலாம். அந்த மனிசன் எங்களை ஒண்டும் செய்திருக்க மாட்டான். உன்னை நம்பி வந்து இப்ப எனக்கும் அழிவு வந்திட்டுது' தேரை புலம்பத் தொடங்கியது.

தேள் சாவதானமாகச் சொன்னது.

'என்னைப் பற்றித் தெரிந்து கொண்டும் என்னை ஏற்றியது உன்ரை பிழை.'

'நீயுமல்லோ என்னோட சேர்ந்து சாகப் போறாய்?'

'குத்துறது என்ரை இயல்பு. சாகிறது, சாகாமல் இருக்கிறதைப் பற்றியெல்லாம் யோசிச்சால்... நான் ஒருத்தரையும் குத்தேலாது. விளைவைப் பற்றி யோசிக்கிறது எல்லாம் என்ரை வேலை இல்லை. எனக்கே மரணம் நிச்சயமான நிலையில, மற்றவையின்ரை உயிரைப் பற்றிக் கவலைப்பட எனக்கென்ன விசரே? நான் இல்லாத உலகத்தில மற்றவை இருந்தென்ன? வாழ்ந்தென்ன?'

தன்னுடைய முட்டாள்தனம் தன் உயிருக்கே ஆபத்தானதை உணர முடியாத தேள், தன் முட்டாள்தனத்திற்கு வியாக்கியானம் செய்தபடியே தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியது.

மற்றவர்களுக்கு உதவி செய்வதாக இருந்தாலும், அவர்களுடைய உண்மையான இயல்புகளை அறியாமல் உதவி செய்ய முனைந்தால் உள்ளதையும் இழக்க வேண்டி வரலாம் என்பதையோ, தன்னுடைய பயமும் ஆசையும் தன் அழிவுக்கு காரணங்களாக அமைந்ததையோ உணர்ந்து கொள்ள முடியாதபடிக்கு... மயங்கியபடியே தேரை நீரில் அமிழத் தொடங்கியது.

அந்த மரண வேளையிலும் 72 கன்னித் தேரைகள் காலம் பூராவும் கன்னிகளாய் வாழப் போவதை நினைத்து தேரை ரொம்பவும் கவலைப்பட்டது! 

 

http://www.thayagam.com/தேளும்-தேரையும்/

 

விடியுமா?

3 months 1 week ago
விடியுமா? - கு.ப.ரா.
 
தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது.
‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல்kupara ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.
என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.
ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள்.
எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. ‘இருக்காது!’, ’ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்’ என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. ‘இருக்கும்!’ என்ற கட்சி, தந்தியின் பலத்தில் வேரூன்றி வலுக்க வலுக்க, ‘இருக்காது!’ என்ற கட்சி மூலைமுடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.
தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்துதான் வந்திருந்தது. சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள். குஞ்சம்மாள் பேருக்குத்தான்! தவறு எப்படி நேர்ந்திருக்க முடியும்?
ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு சௌகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?
என் தமக்கையும் நானும் சாயந்தரம் ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப்  போகும் முதல்வண்டி.
புறப்படுவதற்கு முன் நல்லவேளை பார்த்துப் ‘பரஸ்தானம்’ இருந்தோம். சாஸ்திரிகள், ‘ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும், அவ்வளவுதான்!’ என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக் கூடவிடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு, மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைத்தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைப் பாக்கு க்ஷேமதண்டுலம் எல்லாம் மறந்து போகாமல் மடி நிறையக் கட்டிக்கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று. புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள்.
குஞ்சம்மாள், இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்; ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு!’ என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள்.
அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவள் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு, முதல் தடவையாக அன்று, எங்கோ அடங்கிவிட்டது.
அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். திவ்யமான சகுனம். காவேரியிலிருந்து அடுத்தவீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள்.
‘ஒண்ணும் இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒருத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே’ என்றெல்லாம், அம்மா அடிக்கடி தன்னையும் பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.
ரெயில் ஏறுகிறபோது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும், கலக்கலுங்கூட மட்டுப்பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம்.
‘நீ புறப்படுகிறபோது ஒன்றுமே’ இல்லையே, அக்கா?’ என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று.
‘ஒண்ணுமில்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?’ என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள்.
‘அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!’
எது எப்படியானாலும், மனசைச் சில மணி நேரங்களாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது போலப் பேச்சு வெளிவந்தது.
‘நான், இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல், போயிருக்காமல் போனேன்!’
’ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்துவிட்டாரோ?’
‘ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?’
’ஆஸ்பத்திரி பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக் கூடாதா?’
‘அப்படி அடிக்க முடியுமோ?’ குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது.
‘ஏன் முடியாது? தந்தியாபீஸில் - ‘
‘ஒருவேளை அப்படி இருக்குமோ?’ என்று கேட்டபொழுது குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது.
‘அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தா நாள் தானே கடிதாசு வந்தது?’
‘ஆமாம்! அதில் ஒடம்பெப் பத்தி ஒண்ணுமே இல்லையே?’
‘தந்தி அடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால் கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரி பேரை வைத்து அடித்திருக்கிறார்’.
‘அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி? அப்படியிருக்குமா?’ என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்ட பொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ?
‘நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்’ என்றேன்.
மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒரு தரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரமடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.
சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?
ரெயில் வண்டி வெறி பிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.
துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம்போல தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது.
சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப் போலப்பின் தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப் போல, அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூட வராது! சென்னையில் காலைதான்! - இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருந்தது.
குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.
எங்களவர்க்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்கு தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு.
அன்று என்னவோ, இன்னும் அதிகமாக, அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் என்று முதல் முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவள் அழகு மிளிர்ந்து தோன்றினாள்.
குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யாரு கேலி செய்தாலும் லட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக் கொள்ளுவாள். ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக் கொண்டிருந்த பூவைப்போல, அது என்றும் சோபித்ததில்லை என்று என் கண்களுக்குப் பட்டது. வெற்றிலைக்காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்ததுபோல இருந்தது.
சோர்வில்தான் சௌந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது-? கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு-? இல்லை! இல்லை!
குஞ்சம்மாள் அன்று என்னவோ அப்படி இருந்தாள்.
வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, ‘அம்பு, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்றாள் குஞ்சம்மாள்.
அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.
‘என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? - என் வாழ்வே அழுகையாக-’ என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.
‘எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது!’
இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தோம். ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை.
நல்ல நிசிவேளை. வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள், மௌனமாகப் பிசாசுகள் போல. அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், ‘இதென்ன ஸ்டேஷன்?’ என்று தலையை நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி வழிந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும்.
சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய் நின்றது. அதுவரையிலும் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும் கூக்குரலும் அதிகமாயின. அது வரையில் காலியாகவே வந்த எங்கள் பலகையில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண் குழந்தையும் புட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
அவள் அணிந்திருந்த முதல் தரமான வைரங்களுடன் அவள் முகமும் ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப்பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள்.
வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி; ‘எங்கிட்டுப் போறீக அம்மா?’ என்று கேட்டாள்.
என் தமக்கை சுருக்கமாக, ‘பட்டணம்’ என்றாள்.
’நானும் அங்கேதாம்மா வாரேன்!’ என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள்.
என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, ‘கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!’ என்று சொன்னதுபோல எண்ணினாள்.
அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக் கொண்டு வந்தவள். உடனே இளகி, அவளிடம் சங்கதி பூராவும் சொன்னாள்.
‘மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!’ என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டுவிட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்ச நேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. ஏதோ பெருத்த குற்றம் செய்தவள் போலத் திகிலடைந்தாள். ‘ஐயையோ! பைத்தியம் போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிக் கொண்டிருக்கிறேனே!’ என்று எண்ணினவள்போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.
ஆனால் எவ்வளவு நேரந்தான் கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம்.
துக்கத்தில், நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு சிறு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?
வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக்கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு குக்கிராமத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தபொழுது கோழி கூவியதுகூடக் காதில் வந்துபட்டது.
‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒருபக்கம்.
‘ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.
இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவதுபோல் இருந்தது.
எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
‘செங்கற்பட்டில் பல் தேய்த்துக்கொண்டு காபி சாப்பிடுவோமா?’ என்று கேட்டேன்.
‘எல்லாம் பட்டணத்தில்தான்!’ என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள். பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
‘இதோ ஆயிற்று, இதோ ஆயிற்று!’ என்று சொல்வதுபோல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.
ஆனால் எங்களுக்கு என்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வண்டி வேண்டுமென்றே ஊர்வதுபோல இருந்தது.
எழும்பூர் வந்தது கடைசியாக.
ஸ்டேஷனில் யாருமில்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை - எல்லோரு இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வரவேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று.
வீட்டுக்குப் போனோம். வீடு பூட்டியிருந்தது.
உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை இப்பொழுது!
ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணி நேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.
‘நீங்கள் கும்பகோணமா?’ என்றார்.
’ஆமாம்-’ என்றேன்.
‘நோயாளி - நேற்றிரவு - இறந்துபோய்விட்டார்’ என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்.
’இறந்து-? அது எப்படி? அதற்குள்ளா?’ அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை.
‘சிவராமையர்-?’
’ஆமாம், ஸார்!’
‘ஒருவேளை-’
‘சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.
கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம்.
அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!
ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.
பிறகு-?
விடிந்துவிட்டது.

மனத்தடை

3 months 1 week ago
12/21/2022
மனத்தடை
 

எல்லாமே கைகூடி வரும்; செய்துவிடலாமென்கின்ற துணிவிருந்தால். மாந்தனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய சொந்த மனத்தடைதான். நம்மில் எல்லாருக்குமே மனத்தடை இருக்கின்றது; நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதனைச் செய்ய முடியாது எனப் பலவாறாக. மனம் அனுமதிக்குமேயானால் முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are!

எப்போதெல்லாம் தாயகம் செல்கின்றேனோ அப்போதெல்லாம் ஈரோட்டு உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டு இருந்ததுதான். தோட்டத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்பது. கைகூடி வரவில்லை. செல்லக் கூடாதென்பதும் இல்லை. அமையவில்லை, அவ்வளவுதான். உலகில் நடக்கின்ற, இடம் பெறுகின்ற ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருந்தே ஆக வேண்டுமென்பதில்லை. ஆனால் நாம் காரணங்களைத் தேடுகின்றோம். கிடைக்காத பொழுதில் நாமாக ஒன்றைக் கட்டமைத்துக் கொள்கின்றோம். இதுதான் நம்மில் பலருக்குமான நிம்மதிக் கேட்டுக்கும் வழிவகுக்கின்றது. இவர் என்னிலிருந்து தோட்டத்தைக் காண்பிக்கத் தயங்குகின்றாரென நானே ஒரு காரணத்தைச் சூட்டிக் கொண்டு வெம்பிப் புழுங்கிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அதற்கு ஒருபொருளுமில்லை. இம்முறை அந்தப் பக்கமாக அன்னையர் தொழுதல் மிகப் போற்றுதலாக அதன் போக்கில் இடம் பெற்றது. அப்படித்தான் எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்களின் தோட்டம் சென்று வந்தோம்.

நிறையத் தகப்பன்கள் வளர்ந்து ஆளாகிய மகளைக் குழந்தைகளாகவே எண்ணி சோறூட்டுவது முதற்கொண்டு செய்வதைச் சிலாகித்து வலைதளங்களில் மனமுருகுவதைப் பார்க்கின்றோம். ஆனால் அதே தகப்பன்கள்தாம் அன்னையர்களையும் குழந்தைகளாகவே பார்க்கின்றனர் என்பதும்.

அம்மாவுக்கு ஏட்டுக்கல்வி என்பது அறவே கிடையாது. ஆனாலும் கூட, நிர்வாகம், நிதிமேலாண்மை(ஃபைனான்சிங்), இடர் மேலாண்மை(crisis management) இப்படிப் பல துறைகளிலும் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். வீட்டில் வசதி இருந்திராது. விருந்திநர்கள் வந்து விடுவர். புறக்கொல்லை, இட்டேரி, ஊர்நத்தம் என எங்கிருந்தாவது ஏதாவது  காய் கனி தாவரம் பண்டங்களைக் கொணர்ந்து ஒரு நிறைவான விருந்தோம்பலை அரங்கேற்றி விடுவர். இதற்கெல்லாம் என்ன அடிப்படை? மனத்தடை இல்லாததுதான் அடிப்படை. வந்திருப்போரைக் கவனித்து அனுப்ப வேண்டுமென்கின்ற ஆவல் பிறந்து விடுகின்ற போது அது ஈடேறி விடுகின்றது. அண்ணன் காசி ஆறுமுகம் அவர்களின் தாயார் அவர்களது செய்கைகள் இப்படியானதாக இருக்கின்றதைப் பார்க்கின்றோம். இப்படி நிறையப் பேர் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

தோட்டத்தை விட்டுக் கிளம்பி வருகின்றபோது பேசலானார் மாப்பு. ஆங்கில வரி வடிவங்களின் அடையாளம் கூடத் தெரியாது. ஆனாலும் காணொலிக் கூட்டங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு குறித்த நேரத்தில் அவற்றில் கலந்து கொள்வது, பேசுபொருளின்பாற்பட்டுக் கற்றுக் கொள்வது, யுடியூப்களில் எது சரியான செய்திகள், போலிகள் என்பனவற்றைப் பகுத்துணர்ந்து கொள்வது முதலானவற்றைக் குறிப்பிட்டு, ஒரு குழந்தையின் அசைவுகளைப் பார்த்துப் பார்த்து இலயித்து இன்புறும் தகப்பனைப் போலே பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டே வந்தார். இதற்கும் அடிப்படை இதுதாம், மனத்தடை இல்லாததுதான் அடிப்படை. துள்ளுமனம் வாய்த்து விடுகின்றது அவர்களுக்கு. அதுவே நோயெதிர்ப்பு ஆற்றலுக்கும் வழிவகுத்து மூப்பெய்துதலின் வேகத்தையும் குறைத்து விடுகின்றது.

காசி, அயோத்தி இன்னபல இடங்கள் குறித்த வடநாடு என்பதான பயணம், சென்று வர வேண்டுமென அனுமதி கோரினார். எண்பத்து இரண்டு வயது மூதாட்டி முடங்கிக் கிடக்காமல் உலகைச் சுற்ற வேண்டுமென நினைப்பதே மனத்தடை இல்லாமைக்கான வேர்தான். அந்த வேரில் வெந்நீரைப் பாய்ச்சுவதற்கு நான் யார்? அடுத்தவர்களின் ஊக்குவிப்பு என்பதான புறத்தாக்கமாக அல்லாமல், போய்வர வேண்டுமென்கின்ற திண்ணிய மனம் உங்களிடத்தே இருக்குமானால் சென்று வாருங்களெனச் சொன்னேன்.

வானூர்திப் பயணத்திலே தள்ளுவண்டி(வீல்சேர்)க்குப் பணித்திருக்கின்றார்கள். கண்டு மனம் பதைப்புக்கு ஆட்பட்டிருக்கின்றது. என்னால் மற்றவர்களைப் போல இயல்பாய் நடக்க, ஏற முடியும், மறுத்து விட்டிருக்கின்றார். இவரின் ஊக்கம், தொய்வின்மையைக் கண்டு மற்றவர்கள் சோம்பலுக்கு ஆட்படாமல் ஊக்கம் கொண்டிருந்திருக்கின்றனர். அன்றாடமும் காலையில் வந்து இவரிடம் ஆசி பெற்றிருக்கின்றனர். வீடு திரும்பும் தருவாயில், மனநிறைவுடன், அடுத்தடுத்த பயணங்களுக்கும் தாங்கள் வர வேண்டுமெனக் கோரியிருக்கின்றனர். உவப்புடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பயணத்தில் தம்மை ஈடுபடச் செய்த மருமகள் குறித்தும் பாராட்டுதல்களைப் பணித்துக் கொண்டார். மழலைச் சொல் கேட்டுக் கொண்டிருப்பது போல இருந்தது.

குழந்தைகள் எல்லாருமே பிறவிக்கலைஞர்கள்தாம். வளர்ந்து ஆளாகி மூப்பெய்திப் பெரியவரானதும் அந்தக் கலைஞருக்குள் இருக்கும் கலைக்கு உயிரூட்டுவதில்தான் சிக்கல்! நீரை ஊற்றினால், எந்தச் செடியும் உயிர்ப்புடன் இருக்கும்தானே!!

 

இரசவாதம்!

3 months 1 week ago
 
சிறுகதை
 

ajay_desat1.jpg

                            - தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் -

தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் -  பி.அஜய் ப்ரசாத் (முழுப் பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மரிகொன்னு கதலு” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைகள் ஆங்கிலம், இந்தி, பெங்காளி மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்துள்ளன.

மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன் - பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திரமாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், ஒப்பியலாளர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022இல் இவரின் தெலுங்குச் சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.

mariappan_g5.jpg

அன்று மதியம் பழைய புத்தகக் கொட்டகையில் இருந்தேன். மே மாதம் என்பதால் உள்ளே ஒரே வெக்கை. காற்றில்லாத புழுக்கத்தில் மர அலமாரிகளின் நடுவில், பழைய புத்தகங்களின் வாசனையில் என்னோடு சேர்ந்து, உள்ளே வேறு இரு வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

சாலையோரம் இருக்கும் இந்தப் புத்தகக் கொட்டகையின் பின்னால் கிருஷ்ணா வாய்க்கால். கொட்டகை முன்பும் சாலை மீதும் பெரிய ஆரவாரம் இருக்காது. இந்தக் கொட்டகைகள் எல்லாம் பதினைந்து வருடங்களாக, அதாவது என் கல்லூரி நாட்களில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். பத்துவருடங்கள் கழித்துக் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு எங்கள் ஊர் அத்தங்கியை விட்டுவிட்டு இந்த விஜயவாடாவிற்கு வந்து சேர்ந்தேன். பல ஆண்டுகளாக இந்தக் கொட்டகை அப்படியே இருக்கிறது. முதல்முறை பார்த்தபொழுது அவருக்கு நீண்ட தாடி இருந்தது. அவர் புத்தகங்களைப் படிக்காவிட்டாலும் எந்தெந்தப் புத்தகங்கள் யார் வாங்குகிறார்கள் என்று சொல்லிவிடுவார். வாங்குபவர்களின் அவசரத்திற்குத் தகுந்தவாறு அப்போதைக்கு அப்போதே விலை நிர்ணயத்துவிடுவார். அவரிடம் ஆரம்பத்தில் ஒன்றே கால் காசு விலையுள்ள ஒரு பழைய புத்தகத்தை இருநூற்றைம்பது ரூபாய் கொடுத்து வாங்கினேன். புத்தகங்கள் விற்பதில் அவர் பேராசைப்படுபவர் என்று நானும், புத்தகம் வாங்குவதில் நான் பரமகஞ்சன் என்று அவரும் வாதிடுவோம். எங்கள் இருவரின் அறிமுகம் அவ்வளவுதான். அதற்குமிஞ்சி வளரவில்லை.

 

அவர் பலரிடம் வாதிடுவதைப் பல சமயம் பார்த்திருக்கிறேன். விலை சொல்வதில் எள்ளளவும் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை. ஆத்திரத்தில் பொங்கியெழுந்து என்ன பேசுவாரோ தெரியாது. பேசும்பொழுது எழுந்து கத்திக்கொண்டு கடைக்குள்ளேயே அடியெடுத்துவைத்து அங்கும் இங்கும் நடப்பார். அவரின் குரல் கனத்த குரல். பேசும்பொழுது இரண்டு வீதிகளுக்கு அப்பாலும் அவரின் குரல் கேட்கும். அப்படிப் பேசும் பொழுது ஒரு சிலசமயம் யாரும் தடுக்காமல் இருந்தால் பேச்சு தானாகவே அரசியலை நோக்கிப் போகும். ஆவேசம் மேலும் அதிகமாகும். சாதாரணமாக எப்பொழுது பார்த்தாலும் கொட்டகை முன்பு பாயை விரித்துப் பழைய புத்தகங்களுக்கு அட்டைப் போட்டுக்கொண்டும், கிழிந்துப்போன காகிதங்களை ஒட்டிக்கொண்டும் இருப்பார்.

 

ஒருமுறை அரசியல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, வழக்கம் போல அவரின் மனைவி போன் செய்தாள்.

 

அவர் ஒரு பக்கம் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது போனில் ஸ்பீக்கர் ஆன் ஆனது.

அந்தப்பக்கத்திலிருந்து, ‘என்ன பேசிட்டிருக்குற? பேரம் பேசும்பொழுது வாதம் செய்யாத. அதெல்லாம் உனக்கெதுக்கு?’ என்ற பேச்சு வெளியே கேட்டது.

 

அவர் அவசரமாக, ‘அம்மா தாயி.. அதெல்லாம் ஒன்னும் பேசல. வாதம்லா இல்ல… இருக்குற சங்கதியதான் சொன்னன். அப்படில்லாம் எதும் இல்ல’ என்றார்.

உச்சி வெயில் மத்தியான புழுக்கத்தில் அந்தப் பழைய புத்தக அலமாரிகளுக்கு இடையில் நின்று அப்படியே தேவையான புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தபொழுது, வெளியிலிருந்து, ‘இரசவாதம் இருக்கா?’ என்று கேட்டது காதில் விழுந்தது.

நான் கொஞ்சம் இந்தப் பக்கமாக முன் நகர்ந்து வெளியே பார்த்தால் யாரோ ஒருவர் வெயிலில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் தண்ணீரால் முகம் கழுவியதுபோல் கன்னத்தில் வியர்வை வழிந்தது. அந்த வெயிலிலும் அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அவரின் உடல்மேல் கறை படிந்த சட்டை, இடது தோளில் தொங்கும் துணிப் பை. அதற்குப் பின்னால் கயிற்றில் தொங்கும் தண்ணீர் பாட்டில்.

 

அவரைப் பார்த்தால் சிறுவயதில் நன்றாகத் தெரிந்த மனிதர், பெரியவர் ஆனதும் உருவமாற்றத்துடன் எவ்வாறு இருப்பாரோ அப்படித் தெரிந்தது. பார்க்கப் பார்க்க நன்றாக அறிந்த முகமாகவே பட்டது. அடையாளம் காணமுடியாத, தெரிந்தும் தெரியாத ஒப்பீடுகள்.

மர ஸ்டூலில் அமர்ந்திருந்த கடை முதலாளி அவர் சொன்னதைக் கேட்டுப் புரியாதமாதிரி, “என்ன வேணும் மறுபடியும் சொல்லுங்க’ என்று சத்தமாகக் கேட்டார்.

வெளியில் நிற்கும் மனிதர் இன்னும் அதே சிரித்த முகத்துடன் ‘இரசவாதம் வேணும்’ என்றார். பார்ப்பதற்குப் பைத்தியக்காரர் போல் தோன்றியது. தோன்றுவது என்ன, பைத்தியக்காரர்தான். சற்று நெற்றி ஏறிய நடுத்தரவயது முகம். அந்த முகத்தில் இருந்த கீறல்களைப் பார்த்து இதற்குமுன்பு எங்கேயோ பார்த்த மனிதர் என்று நினைவுப்படுத்திப்பார்க்க முயற்சித்தேன்.

 

கடை முதலாளி அவர் கூறியதைக் கேட்டுத் திடுக்கிட்டு “இரசவாதமா?” என்று வந்த மனிதரை விசித்திரமாகப் பார்த்தார். அவருக்கு இந்தப் பக்கமாகப் பெஞ்ச் மீது தன் கனமான உடலைக் கைகளில் வைத்து முன்னோக்கி வளைத்து அமர்ந்து அரட்டையடிக்கும் சிவப்புச்சட்டை அணிந்த வெள்ளைத்தாடி மனிதர்கூட ஒரேயடியாக இதயம் வெடித்தது போன்று அதிர்ந்துபோனார். அவர்கள் இருவரும் மிரண்டுபோனதைப் பார்த்துக் கொஞ்சம் இந்தப் பக்கமாக வந்து வெளியே நின்றிருக்கும் மனிதரை நான் ஒரு பார்வை பார்த்தேன். அவர் அப்படியே நின்று சிரித்தமுகத்துடன் மறுபடியும் “ஆமா.. எனக்கு இரசவாதமே வேண்டும்’ என்றார்.
கடை முதலாளி ஸ்டூல் மீதிருந்து தடால் என்று வெளியே வந்துநின்று அவரை அடிப்பது போல் கீழே வரை கிடந்த வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சரிசெய்து ‘போய்யா.. போ…இரசவாதமும் இல்ல ஒன்னும் இல்ல.. அது இருந்தா நா எதுக்கு இங்க இருக்கன்’ என்றார்.

வெளியே நிற்கும் மனிதர் இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து, “போய்யான்னு சொன்னா புரியாதா” சிவப்புச் சட்டை மனிதரும் கர்ஜித்தார்.

 

கடை முன்பிருக்கிற வெயிலின் நிழல் அந்தப் பக்கமாக நகர்ந்தது. யாரோ கூப்பிடுவது போல் இருந்ததால், அந்தப் பக்கம் போனதும், எனக்கு எங்கள் ஊரில் எப்பொழுதும் நூலகத்திலேயே அமர்ந்திருக்கும் சிவலிங்கம் சட்டென்று நினைவுக்கு வந்தார். சந்தேகம் இல்லை… அவர் சிவலிங்கம் தான். அவரே இவர்..! பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த சிவலிங்கம் இன்று தற்செயலாகப் புத்தகங்கள் தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் அகப்பட்டார். சிவலிங்கம் நினைவுக்கு வந்தாலும் விசாரிப்பதற்கு அவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அத்தங்கியில் என் படிப்பு தொடர்ந்த பொழுது அவரைத் தினமும் நூலகத்தில் பார்த்திருக்கிறேன். அந்த ஊரைவிட்டு வந்ததும் அவரைப்பற்றிய நினைப்பும் படிப்படியாக மறந்துபோய்விட்டது. என் ஊரில் அமைதியாக இருக்கும் வீதியின் கடைசியில் ‘கிளை நூலகம்’ இருந்தது. அது எங்கேயோ நடு வீதியிலோ அல்லது அரசு அலுவலகம் மத்தியிலோ இல்லாமல் தெருக் கடைசியில் வீடுகளின் மத்தியில் இருந்தது. நூலக உதவியாளர் வெள்ளைத் தலைப்பாகையுடன் பெஞ்சில் அமர்ந்து சுவரில் சாய்ந்து எப்பொழுதும் கீழே குனிந்து கொண்டே இருப்பார். உள்ளே நுழையும் முன்பே வரண்டாவின் ஒரு பக்கம் செய்தித்தாள் பிரிவு, மறுபக்கம் அகலமான மேசையின் மேல் இதழ்கள் இருக்கும். மனிதர்கள் அமர்ந்து அமர்ந்து அந்த மரப் பலகை, பெஞ்சுகள் தேய்ந்து ஒரு விசித்திரமான பழுப்புநிறத்தில் ஒளிர்ந்தன. சிவலிங்கம் இரண்டு வேளையும் நூலகம் திறந்ததில் இருந்து மூடும் வரைக்கும் தினசரி, வாரப்பத்திரிக்கைப் பிரிவில் அமர்ந்திருப்பார். அவரின் பணி பேப்பர்களைப், பத்திரிக்கைகளைப் படிப்பது அல்ல. சுற்றிவருவது மட்டுமே. காகிதங்களுக்கு இடையில் தேடுவது… சும்மா ஒன்று மாற்றி ஒன்று. அதே வேலையாகப் பக்கங்களைத் திறந்து கண்களைச் சுழற்றி கொஞ்சநேரம் அங்கும் இங்கும் பார்த்து.. மறுபடியும் ஆட்காட்டி விரலால் நாக்கில் எச்சில் தொட்டுப் பக்கங்களைத் திருப்பியவாறு அப்படியே. அவர் பைத்தியம் பிடித்திருப்பவரும் இல்லை. நூலக உதவியாளருக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது. பத்திரிக்கை மேசை அருகிலேயே நாற்காலி மீது அமர்ந்து சுவரில் தலை சாய்த்து தூங்கும் அந்த நூலகத்தின் உதவியாளர் ஒவ்வொருமுறையும் இருந்தாற்போல் கண்களைத் திறந்து சிவலிங்கத்தையே பார்ப்பார். ஒவ்வொருமுறையும் சிவலிங்கத்தின் கைகளில் இருந்த பேப்பரைப் பிடுங்கி டேபிள் மேல் தூக்கி எறிவார். சிவலிங்கம் மறுபடியும் அந்தப் பேப்பரை திரும்ப எடுத்துவருவார். நூலகத்திற்கு நிறைய இதழ்கள் வந்துகொண்டிருந்தன. நான் கொஞ்ச நேரம் பேப்பரைப் பார்த்து, இதழ்களை மேலோட்டாமாகப் பார்த்துப் புத்தகத்தைத் தேடி உள்ளே போவேன். அவர் யாரிடமும் பேசுவது கிடையாது. நான் தினந்தோறும் அவரைப் பார்ப்பேனே தவிர நூலகத்தின் அமைதி அவரிடம் பேச அனுமதிக்கவில்லை. ஒருமுறை பார்வையாளர் பதிவேட்டில் அவர் ‘சிவலிங்கம்’ என்று கிறுக்கலான தெலுங்கு எழுத்துக்களிலே கையெழுத்துப் போடுவதைப் பார்த்தேன். எப்பொழுதும் சுத்தமாகத் துவைத்த சாதாரணத் துணிகளை அணிந்திருப்பார்.

 

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கே இப்படிப் பார்க்கிறேன் சிவலிங்கத்தை. இந்த நடுத்தரவயது மனிதரை அந்த நாள் தோற்றத்தோடு என்னால் ஒப்பிடமுடிந்தது. பாதி முடி காணாமல் போயிருந்தது. ‘என்கிட்டமட்டும் இரசவாதம் இருந்துச்சுனா… அதுக்காக ஐனங்க இங்கயிருந்து பஸ்ஸ்டாண்டு வரைக்கும் வரிசைக்கட்டி நிப்பாங்க. ஆ..’ என்று பின்னால் திரும்பி நாற்காலியில் அமர்ந்தார் கடை முதலாளி. பெஞ்ச் மீது அமர்ந்திருக்கிற சிவப்புச்சட்டை வெள்ளைத்தாடி மனிதர் “ஆ..ஆ.. வாங்க வேணாம்.. அத அஞ்சு நிமிஷம் பாக்குறதுக்குக் குடுத்தாலே போதும்… ஜனம் கூடிரும்” என்று வயிறு குலுங்கச் சிரித்தார். “ஆமா… ஆமா… பார்க்க குடுத்தா போதும்” என்று கடை முதலாளி மீண்டும் பழையபுத்தகத்தைத் தைக்கும் வேலையில் மூழ்கினார்.

நான் புத்தகத்தைத் தேடுவது முடிந்தது. எடுத்துக்கொண்ட புத்தகத்திற்கு விலை சொல்லவேண்டுமென்று அவரின் மேசையின் மேல் வைத்து ‘இத்தனைக்கும் அந்த இரசவாதம்னா என்னங்க?’ என்றேன். கடைமுதலாளி என்னை விந்தையாகப் பார்த்தார். சிவப்புச்சட்டை மனிதர் இடைமறித்து, ‘ஒங்களுக்குத் தெரியாம இருக்கும். இரசவாதம் எப்ப இருந்தோ இருக்குச் சுதந்திரத்திற்கு முன்னாடி… யோகி வேமனாவிற்கு முன்னாடி, இல்ல இல்ல அதுக்கும் முன்னாடி… அந்தப் பேச்சை எடுத்தா எப்பயிருந்தோ யாருக்குத் தெரியும்?..”

புத்தகத்துக்கான விலையைக் கொடுத்துவிட்டு கடையிலிருந்து வெளியே வந்தேன். சிவலிங்கம் அந்தப் பக்கத்தில் இருந்த வேறொரு புத்தகக் கடை முன்பு நின்று அதே புத்தகம் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். அதே சிரித்த முகம். அவர் என்ன பதில் சொன்னாரோ என்னமோ சிவலிங்கம் இன்னும் எங்கும் நிற்காமல் கடகடவென்று முன்னே போனார். அப்படிப் பின்னால் நின்று பார்த்தால் அவர் நடை விசேஷமாகத் தெரிந்தது. அவர் கால்களைத் தூக்கி நடந்தார். பக்கவாட்டில் தொங்கும் ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கால்களுக்குத் தடையாக அவர் நடக்கும்பொழுதெல்லாம் முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே மக்கள் கூட்டத்திற்கு நடுவில் அவர் மறைந்துபோனார். ஆனாலும் சிவலிங்கம் தேடுவதை இன்னும் நிறுத்தமாட்டார் என்றே தோன்றியது. அவர் காகிதங்களுக்கு இடையில்… பத்திரிக்கைகளின் இடையில் இன்னும் எதற்காகவோ தேடிக்கொண்டே இருக்கிறார். நான் புத்தகங்களுக்காக இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

நாங்கள் இருவரும் சில ஆண்டுகளாக இதே வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். இருவரும் மாறவில்லை.

எனக்கு இந்தத் “தேடல்” என்பது சிறுவயதிலிருந்தே அதாவது அநேகமாக எட்டாம் வகுப்பிலிருந்தே பழக்கமாகி இத்தனை ஆண்டுகளாகியும் இப்பொழுதும் போகவில்லை. எங்கள் நூலகத்தின் உள்ளேகூடப் புத்தகங்கள் படிப்பதற்கு ஒரு சின்னப் படிப்பறை உள்ளது. வட்ட மேசையைச் சுற்றி யாராவது அமர்ந்தால் பழையதாகி பிடி தளர்ந்து அங்கும் இங்கும் அசையும் நாற்காலி, இரண்டு மூன்று ஸ்டூல்கள். சுவருக்கும் மரமேசைக்கும் இடையில் சிலந்தி வலைப்பின்னல். உள்ளே புத்தக மரஅலமாரி அருகில் பழைய காகித வாசனை. அங்கே என் பள்ளிக்கூடத் தெலுங்கு ஆசிரியர் சந்திரமோகன் அவர்கள் முற்றத்தின் பின்புறத்திலிருந்து வரும் பகல் வெளிச்சத்தில் கையில் புத்தகத்துடன் செய்யுள் வரிகளை விரல்களால் தடவிக்கொண்டு எப்பொழுதாவது தென்படுவார். நான் அப்படியே மேசை முன்பு அமர்ந்து பழையபுத்தகத்தைப் படிப்பேன். சாதாரணமாக என்னைப் புதிய புத்தகங்கள் ஈர்ப்பது இல்லை. நான் படித்தவை எல்லாமே பழைய புத்தகங்கள் தான். சிலவற்றில் முதல் பக்கமும் கடைசிப்பக்கமும் இருப்பதில்லை. நூலாசிரியர்களின் பெயரும் இருப்பதில்லை. இருந்தாலும் அவர்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை. என் விரல்கள்பட்டு மஞ்சள்நிறக் காகிதங்கள் நொறுங்கிப்போய்விடும். அப்படி நான் படித்தப் பழங்காலப் புத்தகங்களில் ஒன்று “ரகசிய கங்கணம்”

என் ஊரிலிருந்து வந்தும், எங்கும் நிரந்தரமாக இல்லாமல், எந்த வியாபாரத்திலும் உறுதியாக இல்லாமல், ஆண்டுகள் கடந்து வயதாக வயதாகப் புத்தகத்தைத் தேடுவது என்பது இன்னும் அதிகமானது. சிறுவயதில் தேடிப் பிடித்துப் படித்த புத்தகங்களின் ஆசிரியர் பெயர்கள் மறந்துபோயின. சில புத்தகங்களில் வரும் கதைமாந்தர்களின் பெயர்களை நினைவுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். இன்றைக்கு நடைபாதையில் பழைய புத்தகக் கடைகள் தென்பட்டால் என் கால்கள் நின்றுவிடுகின்றன. அவைகளுக்கு இடையில் நின்று எனக்குத் தேவையான புத்தகத்தைத் தேடி எடுக்கிறேன். லெனின் மையம் தாண்டி இரண்டு திருப்பங்களைக் கடந்து மின்கம்பத்துக்கு அருகில் நின்றேன். அந்தச் சந்தில் மங்கலான பங்களாவின் முதல் தளத்தில் சீ.பி.ராவ் வேலை பார்க்கும் டிரான்ஸ்போர்ட்டு ஆபிஸ் உள்ளது. இங்கு வரும்பொழுதெல்லாம் எப்பொழுதும் அவனை அலுவலகத்தில் சந்திப்பதுண்டு. காலை எத்தனை மணிக்கு வருவானோ தெரியாது. ஆனால், இரவு ஒன்பது மணி கடந்து கடைசி லாரியை அனுப்பும் வரை அங்கேயே இருப்பான்.

சீ.பி.ராவ் என்று அழைப்பது எனக்குப் பழக்கமாக இருந்தாலும், சீ.ஹெச்.பாஸ்கர்ராவும் நானும் அத்தங்கியில் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். அதற்குப் பிறகு இங்கெங்கேயோ உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு பிறகு சீ.பி கல்லூரியில் என்னோடு இணைந்தான். அவன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இங்கே வேலைக்கு வந்து சேர்ந்தான். அலுவலகத்தில் சேர்ந்தபொழுது வெள்ளையாக ரொம்ப ஒல்லியாக இருந்தான். இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அவன் குண்டாகிவிட்டான். வெள்ளையாக ஒல்லியாக இருந்த அந்த முகம் கருப்பாகி முதிர்ந்து காணப்பட்டது. முடியைப் பின்னால் சீவி, வளர்ந்த புதர் போன்ற மீசை முன்னால் நீட்டிக்கொண்டிருந்தது. மேலும் அவனுக்கு அந்த வேலை கிடைத்த புதிதில், ஏதோ மனை விலைக்கு வந்ததென்றும் மறுபடியும் அது மாதிரி குறைந்த விலைக்குக் கிடைக்காதென்றும் என்னிடம் இருந்து இரண்டு லட்சம் கடன் வாங்கினான். வருடம் கடந்தும் அதைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லை.

நான் அந்தப் பேச்சை எடுக்கும்பொழுதெல்லாம், “தர்ரன்ப்பா, உன் பிச்சைக்காசு எனக்கெதுக்கு” என்பான் சிறுவயது நட்புடன். அவனின் பேச்சைப் பார்த்தால் அப்பொழுதே தருவது போல இருக்கும். ஆனால் கொடுப்பவன் கிடையாது. வருடம் கடந்து ஆறு மாதங்களும் கடந்துபோயின. தருவனோ தரமாட்டோனா என்ற சந்தேகத்தில் இரவில் தூக்கம் வருவதில்லை. கொஞ்சநாட்கள் சந்திப்பதை தவிர்த்து, திடீரென்று சந்திப்பேன், அப்பொழுதாவது நினைவுக்கு வந்து பணத்தைத் திருப்பித் தருவானென்று. மற்றும் சிலநாட்கள் வேலையற்றுப்போய்த் தினந்தோறும் சந்திப்பேன். ஆனாலும் தரவில்லை. இதனால் பலன் இல்லையென்று, வீட்டில் மருத்துவமனை செலவென்று சொல்லி அழுத்தம் கொடுத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அசலைக் கொண்டு வந்து கொடுத்தான். அதற்குப் பிறகு ஆறுமாதத்திற்கு வட்டிக் கொடுத்தான். இதெல்லாம் நடந்து நீண்ட காலம் ஆனது. அதற்குப் பிறகு அதனைப் பற்றிய பேச்சு எப்பொழுதும் எங்களுக்கு இடையில் வந்ததில்லை. நான் புத்தகங்களுக்காக இந்தப் பக்கம் வரும் பொழுதெல்லாம் அவனைச் சந்திப்பேன். உள்ளே நுழையும் வேளையில் அவனைச் சுற்றி இரண்டு மூன்று போர்ட்டர்கள், லாரி ஓட்டுனர்கள் சூழ்ந்திருப்பார்கள். அந்த அடாவடியில் என்னைப் பார்த்ததும் உள்ளே வா என்றவாறு சைகை செய்வான். உள்ளே வந்ததும் “என்ன விசயம். புத்தகத்துக்காக வந்தயா?’ என்றான் சீ.பி.ராவ். அவனுக்குத் தெரிஞ்சதுதான். பேச்சுக்கொடுப்பதற்காக, எதிரில் அமர்ந்ததும் யாருக்கோ டீ கொண்டு வரச் சொன்னான். சீ.பி.ராவிடம் பகிர்ந்துகொள்வதற்கு எந்த விசயமும் இல்லை. என் சிறுபிராய நினைவுகளில் அவன் ஒரு பாகம். சந்திக்கும் பொழுது எங்களுக்கிடையில் பெரிதாக எந்தப் பேச்சும் இருக்காது. அவன் ஒரு பக்கம் ஓட்டுனர்களையும் போர்ட்டர்களையும் வேலைப்பாருங்கள் என்று சொல்லிக்கொண்டு தன் வேலையைச் செய்துகொண்டிருப்பான். தலைப்பாகை அணிந்த போர்ட்டர் இருவருக்கும் டீ க்ளாசைப் பணிவுடன் கொடுத்தார். எங்கே டீ சிந்திவிடுமோ என்ற நிதானத்துடன். மேசையின் மேல் பாக்ஸ்பைலோடு ரசீது எழுதிய பவுண்டு புத்தகம், கசங்கிய வாடிப்போன கார்பன் பேப்பர், மை கறை ரப்பர் ஸ்டாம்பு, மூடி இல்லாத பால்பாய்ண்டு பேனா. அறையின் நான்கு புறங்களிலும் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகள். அட்டைப் பெட்டிகளில் மளிகைக் கடை வாசனை. எனக்குப் பிடிக்காத வாசனை! சிறு வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். சீ.பி.ராவிற்கு சிறுவயதிலிருந்தே இந்த வாசனை பழக்கம்தான். அவர்களுடையது மண்ணென்ணெய் மளிகைக்கடை. என்றைக்காவது பள்ளிக்கூடத்திற்கு வரவில்லையென்றால் அவர்களின் மளிகைக் கடையில்தான் இருப்பான். கடையில் அமர்ந்திருந்ததால் அவனுக்குக் கணக்கு நன்றாக வந்தது. கணக்கு நன்றாக வந்ததால் டிரான்ஸ்போர்ட்டு ஆபிஸில் குமாஸ்தா வேலை கிடைத்தது. எனக்குக் கணக்கும் ஆங்கிலமும் வராது. சீ.பி.ராவ் குறைந்தபட்டசம் கல்லூரிப் படிப்பையாவது பூர்த்திச் செய்தான். கல்லூரியில் அரியர் வைத்து, அதை முடிக்காமல் சிலநாட்கள் ஹார்டுவேர் கடை வைத்து திவாலாகி, சினிமா தியேட்டடரை லீசுக்கு எடுத்து அங்கேயும் நில்லாமல் கடைசியாக எதுவும் இல்லாமல் ஆனேன்.

சரியாக அந்த நாட்களில் நானும் அவனிடம் வியாபாரத்திற்காகக் கடன் வாங்கினேன். பல மாதங்கள் வட்டிகூடக் கட்டவில்லை. அதன் காரணமாக எங்கள் இருவருக்கிடையில் நட்பு கொஞ்சகாலம் கெட்டுப்போனது. ஒருநாள் காலையிலேயே பணம் வசூல் செய்வதற்காக வந்தான். எங்கள் இருவருக்கிடையில் அன்றைக்குப் பெரிய வாக்குவாதம் நடந்தது. தெரிந்தவர்களிடம் இருந்து பணம் வாங்கி அன்றைக்கு அவனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்தேன். அதற்குப் பிறகு எங்கள் இருவருக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் இல்லை. மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு வழக்கமான நண்பர்களானோம். நமக்குள்ளே இருக்கிற சந்தேகங்கள் இப்பொழுதுவரை அப்படியே தான் இருக்கிறது. எங்கள் பேச்சுகள், சந்திப்புகள், பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற தேவைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. நான் வாங்கிய புத்தகங்களைச் சீ.பி.ராவ் திருப்பிப் பார்த்து, “இன்னும் உனக்குப் பைத்தியம் போகலையாடா” என்றான். ஊரில் இருந்தபொழுது நான் புத்தகம் படிக்கம் வழக்கம் அவனுக்கு விந்தையாக இருந்தது. “அவ்வளவு நேரம் என்ன பண்றடா? அந்த நூலகத்துல” என்பான். அங்கே பணிபுரியும் வேறு மனிதர் முழங்கால் போட்டு அமர்ந்துகொண்டு சுவரில் சாய்ந்து பார்சலைக் கணக்கிட்டு எண்ணிக்கொண்டிருந்தார். சீ.பி.ராவ் என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறானே தவிர எனக்குக் காதில் எதுவும் ஏறவில்லை. அங்கே ஒரே வாசனை! மண்ணெண்ணெய் வாசனை! கோணிப் பை, வெங்காய மளிகைக் கடை வாசனை.. போர்ட்டர்கள் ஏதோ கோணிப் பையில் கட்டிய பெட்டியை உள்ளே தூக்கிக் கொண்டுவந்தார்கள். அங்கே அமர்வதற்கு விரும்பவில்லை. மறுபடியும் பார்க்கலாம் என்று வெளியே வந்தேன்.

அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி ரோட்டில் நின்றிருந்தேன். விசாலமான அத்திமரம் தன் கைகளை விரித்து நின்றிருந்தது. வெயிலில் மினுங்கிக்கொண்டிருந்த இலைகள் காற்றுக்குப் படபடவென்று அடித்துக்கொண்டன. பூமியில் அமைதியைக் கொடுக்கக் கூடிய இடம் எது? ஏதோ பெரிய மிருகம் எதையோ சாப்பிட்டது போல பயத்தைக் கிளப்புகிறது. மரத்தின்கீழே நின்றிருந்தேன். முகத்தில் அனல்காற்று அடித்தது. வீதியின் மூலையிலிருந்த குப்பைத்தொட்டி அருகில் நாய் எதிலேயோ முகத்தை வைத்துக் கிளறிக்கொண்டிருந்தது. சாலைக்கு அப்பால் காகிதக்குப்பைக் குவியலை ஒட்டி தார்ப்பாய் கொட்டகை முன் தரையில் விரிக்கப்பட்டிருந்த அழுக்குப் பாயின் மேல் இளைஞன் ஒருவன் ஸ்மார்ட் போனைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதற்கு அப்பால் பக்கத்திலிருக்கிற கூடாரத்தின் முன் மரத்தில் கட்டிய தூளியில் பச்சிளங்குழந்தை தூங்கிகொண்டிருப்பதுபோல் கனமாக அசைகின்ற அமைதி இருந்தது. தொட்டிலுக்குக் கொஞ்ச தூரத்தில் பெண்ணொருத்திப் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். சாலைக்கு இருபுறங்களிலும் பாதையோர வியாபாரிகள், அதற்குப் பின்னால் ஷட்டர்கள், கடைகள், துணிக்கடைகள், பூவிற்பவர்கள், நடந்துகொண்டே எவ்வளவு தூரம் வந்தேனோ தெரியாது. தூரத்தில் நதி மீதுள்ள இருப்புப் பாலத்தில் செல்லும் ரயில். கிருஷ்ணாவந்தன மலை முடிவில் இருட்ட தொடங்கியது. அந்தக் கடைசி மேற்குச் சரிவில் கடலை நோக்கி விழுகிற வெளிச்சத்தில் கருநிழல் பரவியிருந்தது. சந்தையில் கூட்டமாகப் போகின்ற மனிதர்களுக்கு இடையில் வேகமாக நடக்கின்ற சிவலிங்கம் தென்பட்டார். அவரைப் பார்த்தமாத்திரத்திலேயே மனிதர்கள் தூரமாக விலகிப்போகிறார்கள். அவரை நோக்கிப் பார்க்கின்றேன் என்று அறிந்து என்னை நோக்கித் திரும்பினார். படபடவென்று நடந்த கால்கள் நிதானிந்து என்னை நோக்கி வந்தது. முகத்தின் மெல்லிய சிரிப்பு அருகில் வரவர பெரிதாகியது. சிரிப்பில் அவரின் பல் ஈறுகள் கூடத் தெரிந்தன. கறை படிந்த பற்கள். பக்கத்தில் வந்ததும் ‘சிவலிங்கம்’ என்றேன். அடையாளம்கண்டு பேச்சுக்கொடுப்பதுபோல.

“யார் சார் நீங்க?’” என்றார் பயமுறுத்துவதுபோல். கீச்சுக்குரல். கறைபடிந்த பற்கள். உடல்மேல் காற்றுக்கு அசைகின்ற கந்தல் ஆடை. எந்த மனநலகுறைபாடு, அவரை மனிதர்களிடமிருந்து பிரித்தது என்று சொல்வது கடினம், சில நேரமோ, கொஞ்ச காலமோ அவருடன் நேரத்தை செலவிடுவதைத் தவிர. அவரின் சிரிப்பைப் பார்த்துக் கொஞ்சம் பயம் வந்தது. ஊர்ப் பெயர் சொன்னேன். நூலகத்தில் பல வருடங்களாக அவரைப் பார்த்ததைச் சொன்னேன். “நீங்க அத்தங்கியா?” என்று மறுபடியும் அவர் யோசித்துக்கொண்டே தரையைப் பார்த்தார். “ஒங்கள பார்த்த மாதிரி இருக்கு, ஆனா நினைவுக்கு வர்ரல, பல வருஷம் ஆயிட்டுலா” என்றார். இருந்தாற்போல “பத்ரய்யாவை தெரியும், நான் ரொம்ப வருசமா பார்க்கல. அந்த ஊர விட்டு வந்து ரொம்ப வருசம் ஆச்சு” என்றார். என் சந்தேக முகத்தைக் கவனித்து, “நூலக உதவியாளர்… ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்” என்றார். நூலக உதவியாளர் பேர் பத்ரய்யா என்று எனக்கு இப்பொழுதுவரைக்கும் தெரியாது. சிவலிங்கம்… பத்ரய்யாவை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அந்தப் பத்ரய்யாவிற்கு இந்தச் சிவலிங்கம் நினைவில் இருப்பாரோ இல்லையோ. அவரே பேசிக் கொண்டிருந்தார். அவரின் பேச்சுக்கும் சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. எதற்குச் சிரிக்கிறார் என்று சொல்வது கஷ்டம்.

“நீங்க… இரசவாதம்…”

“இரச… ஓ! அதுவா… இப்பவரைக்கும் கடையில… கிடைக்குமோன்னு. வேடிக்கையும் கூட. பணம் சம்பாதிக்கணும்னு சின்னவயசுலயிருந்து எங்க அம்மா சொல்லுவா. தங்கம் செய்யும் ரசவாதக் கலையைக் கத்துக்கலாம்னு. அப்படி ஒரு புத்தகம் இருக்கும்னு தெரியும் ஆனா பாத்ததில்ல.” அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். ‘வாழ்வது எவ்வளவு கஷ்டம் அவ்வளவு சுலபமில்ல. ஆமால்ல… எல்லாம் நம்மைப் பொறுத்துதான் இருக்கிறது பணத்தைப் பணம் சம்பாதிப்பது தெரிகிறது. பணத்தை ஒருத்தன் அரைமைல் ஓடி சம்பாதிப்பது மற்றொருவனுக்கு அது இருந்த இடத்திலேயே கிடைக்கிறது. கொஞ்சபேருக்குத் தெரியாமல், கொஞ்சபேருக்குத் தெரிந்து. அதைத்தான் எல்லாரும் புத்திசாலித்தனம்னு சொல்லுவாங்க’ என்றார் அண்ணியா. அவர் வக்கீல். ஒருமுறை நரசராவுபேட்டையிலிருந்து அவருக்குத் திருட்டு வழக்கு வந்தது. நகையை இழந்தவர்கள் வழக்குப் போட்டனர். திருட்டுத்தனம் செய்தவர்கள் உதை வாங்கினார்கள். மத்தியில் காவலர்கள், வழக்கறிஞர்கள் புகுந்தார்கள். பேச்சாலே நொடியில் ஐம்பதாயிரம் சம்பாதித்தார் அண்ணிய்யா. எல்லாம் மாயை! வாழணும்னா தந்திரமாயிருக்கணும்னு சொல்லுவார் எங்க அண்ணிய்யா. யோசிக்கணும்… யோசித்தால் விசயம் தெரியும். யோசனையே இருக்கணும்…’ திடிரென்று தான் சொல்லிக்கொண்டிருப்பதை நிறுத்தினார்… ‘இத்தனைக்கும் நீங்க இரசவாதம் படிச்சிருங்கீங்களா?’

மென்மை விலகிப்போயின முகத்தில் கண்கள் உள்ளே போய் இருண்டு, இடதுக்கண்ணில் பார்வையில்லாமல் கோடு போன்ற வெண்மையான சாறு. ‘இல்லை’

‘உலோகவியல் இல்லை… மாயாஜாலம்..’ சிறுபிள்ளைப்போலச் சிரித்தார், கண்களை மூடிக்கொண்டு. ஒல்லியான அவரின் சரீரம் மேலும் கீழுமாக ஆடியது செங்குத்தாக இருக்கிற மூங்கில்குச்சிபோல. பைத்தியக்காரனின் வெறித்தனம்!’

இனி கிளம்புகிறேன் என்பதாகத் தலை அசைத்து முன்னே நகர முற்பட்டேன். அவர் சரியென்றவாரு இரண்டடி எடுத்துவைத்து தடால் என்று பக்கத்தில் வந்து உள்ளங்கையை நீட்டி, ‘ஒரு அஞ்சு ரூவா இருந்தா குடுங்க?” என்றார். நான் ஒருநொடி என்ன செய்வதென்று தெரியாமல் ‘எதுக்கு அப்படிக்கேட்டாரோ, இதில் எதாவது ரகசியம் உள்ளதா? என்று யோசித்து மேல் பாக்கெட்டில் கைநுழைத்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவருக்குக் கொடுத்தேன். ஒருநொடியில் ஆயிரம் யோசனைகள், நூறு சந்தேகங்கள். தெரிந்தவர்தான்…. நூறு கேட்டார் என்றால்..? அவர் கேட்கவில்லை சரி.. அப்ப நான் ஐந்நூறு கொடுத்துருக்கலாம்ல…? அப்ப ஏன் ஐந்து ரூவா மட்டும் கொடுத்தேன்…? தர்மம் செய்யுங்கன்னு சொல்றாறா? திரும்பத் தருவாரா? நான் கைகளைப் பின்னால் எடுப்பதற்கு முன்பாகவே, அவர் அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு அதே கையால் என் கையில் எதையோ வைத்தார். ஒரு நொடி என்ன நடந்ததோ தெரியவில்லை. என்ன இருக்கும் என்று என் உள்ளங்கையைப் பார்த்தால் பளபளவென்று மின்னுகிற ஐந்து ரூபாய் நாணயம்! ஆனால் அது நான் கொடுத்தது இல்லை. வேறொன்று! அவர் ஒரு முறை என் பக்கமாகப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துப் பின்னே திரும்பினார். என் உள்ளங்கையில் ஐந்து ரூபாய் நாணயம் எஞ்சியிருந்தது.

gmariappan.du@gmail.com

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/7392-2022-07-25-14-05-51

Checked
Sat, 04/01/2023 - 13:45
கதை கதையாம் Latest Topics
Subscribe to கதை கதையாம் feed