சமூகவலை உலகம்

பிள்ளைகள் வெளிநாட்டிலா?! மருத்துவர்கள் உரையாடல்

4 hours 23 minutes ago

பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தால் பெற்றவர்கள் என்ன பணக்காரர்களா? தனியார் மருத்துவமனைகள் முதல் கோவில்கள் மற்றும் பல இடங்களில் பணம் பறிக்கும் செயற்பாடுகள்.

https://www.facebook.com/reel/889326097465245

கொக்குத்தொடுவாய் பகுதியில் தடையை மீறி உப்பளம் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

1 day 16 hours ago

கொக்குத்தொடுவாய் பகுதியில் தடையை மீறி உப்பளம் அமைக்கும் பணியை எதிர்த்து விவசாயிகள், மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள குஞ்சுக்கால் வயல்வெளிகளை ஆக்கிரமித்து, தென் இலங்கைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினால் உப்பளம் அமைக்கும் பணி மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை அப்பகுதி விவசாய நிலங்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதைக் குறிப்பிட்டு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இணைந்து குறித்த முயற்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பல தலைமுறைகளாக பயிரிடப்பட்டு வரும் வயல்வெளிகள் உப்பளமாக மாற்றப்படுமானால், எதிர்காலத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் உவர்நிலங்களாக மாறும் அபாயம் இருப்பதாகக் கவலை வெளியிட்டனர்.

மேலும், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, விவசாய நிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

https://web.facebook.com/share/v/19Qg4Wn8oP/

விவசாய நிலத்தில் உப்பளம் அமைக்க அரசு எவ்வாறு அனுமதி கொடுத்தது?

உணவுமுறை, எண்ணெய் வகைகள் பற்றிய புதிய தகவல்களுடன் மருத்துவர் பிரகாஸ்மூர்த்தியுடனான உரையாடல்

2 days 3 hours ago

இத்தனை நாள் சந்தேகத்தை தெளிவா விளக்கிட்டார் மன்னார்குடி மருத்துவர்| Positivitea | Dr Prakashmurthy

Positivitea இன் இந்த எபிசோடில், டாக்டர் பிரகாஷ்மூர்த்தியுடன் பல உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி முக்கியமாக எண்ணெய், முட்டை மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி பேசினோம். ரேஷன் பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், செக்கு எண்ணெய் போன்றவற்றைப் பற்றி அவர் எங்களிடம் ஒரு சிறந்த நேர்காணலை வழங்கியுள்ளார்.

வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன்.

4 days 2 hours ago

வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன்.

written by admin December 13, 2020

Jaffna-Vellam.jpg?fit=600%2C360&ssl=1

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது.

யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது.

இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் பிரதான வாய்க்காலின் மேல் தட்டு அமைத்து வாகனத் தரிப்பிடம் அமைத்துள்ளனர். இதனால் அதன் கீழ் துப்பரவுப் பணிக்கு மாநகர சபை ஊழியர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும், துயரத்தின் மத்தியிலுமே ஈடுபடுவது வழமையாகி விட்டது.

இவை அணைத்திற்கும் அப்பால் காங்கேசன்துறை வீதிக்கு மேற்குத் திசையில் நாவாந்துறைக்கு உட்பட்ட பகுதியின் நீர் ஓட்டத்திலே ஏற்படும் தடைக்கு சந்திரத்துச் சந்திக்கு மேற்கே 25 மீற்றர் பரப்பிற்குள் ஓர் அடுக்குமாடி கட்டிடம் கழிவு வாய்க்காலை முழுமையாக மூடியே அமைக்கப்பட்டுள்ளதோடு அப் பகுதியின் ஊடான நீர் ஓட்டம் முழுமையாகவே தடைப்பட்டுள்ளதோடு அந்த இடங்களில் இருந்த வாய்க்காலை காணவில்லை. அதேபோல் பொம்மை வெளியில் கடலிற்கு நீர் வெளியேறும் பகுதியின் ஒரு பகுதி ஆக்கிரமித்து அரசியல் குடியேற்றமும் இடம்பெற்றது.

அவ்வாறு இல்லை என மறுக்க முடியாத நிலமை ஏனெனில் தற்போது கொட்டடிச் சந்தியினையும் தொலைத் தொடர்பு நிலையத்தினையும் இணைக்கும் வீதியில் இதன் மிகுதி வாய்க்கால் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்தப் பெரிய மழைக்கும் அதனுள் ஒரு துளி நீரையும் காணவில்லை. இதேநேரம் நகரின் மத்தியில் 55 ற்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அதில் 4 அல்லது 5 குளங்களை காணவில்லை. தற்போது 44 குளங்கள் உள்ளன. ஆனால் எந்தக் குளமும் இருந்த அளவில் இல்லை. எல்லாமே மெலிந்து விட்டது. அதாவது நான்கு பக்கத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டவை ஆட்சியாளர்களின் அணைவின் மூலம் 15 ஆண்டுகளிற்கு முன்பு தமக்கு இசைவானவர்களிற்கு வீடு அமைக்கவும் கடைகளாகவும் மாற்றப்பட்டது ஒரு புறம் எனில் ஆலயங்களும் தமது பணி மறந்து குளங்கள், ஏரிகள், கால்வாய்களை ஆக்கிரமித்துள்ளன.

ஒருபுறம் இத்தனை இடர்பாடுகளும் ஏற்பட மறுபுறம் சுற்றுமதில்கள் வீதிகளின் அருகே கானப்படும் நிலத்திற்கும் நீர் ஓட இடமின்றி சீமேந்து. மிக நெருக்கமாக அடுக்குமாடிக் கட்டிடங்கள் என்பன எழுப்பும் அதே நேரம் வீதி அமைப்புக்களின்போது வீதிப் புனரமைப்பிற்கே போதாத நிதியில் வடிகால் எவ்வாறு சீரமைப்பது என்ற கேள்வியுடன் கூடிய பணிகளே இடம்பெறுகின்றன.

நகரின் பல பகுதியிலும் நீர் தேங்குகின்றது. வடிகால் சரியில்லை மாநகர சபை தூங்குகின்றதா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது. அரசியல் நோக்கத்திற்காக சிலர் எழுப்பும் கேள்விகளும் இதில் உள்ளடக்கம் . ஏனெனில் இடம் கண்ட இடத்தில் மடம் கட்டியதுபோன்று மாநகர சபையில் மட்டும் பழி போடப்படுகின்றது. அவ்வாறானால் மாநகர சபையின் எல்லைக்கு வெளியே குடாநாட்டின் ஏனைய பகுதியில் நீர் தேங்காமல் அல்லவா இருந்திருக்க வேண்டும். அது தொடர்பில் வாய் திறக்க மாட்டார்கள்.

இவ்வாறெல்லாம் மாநகர சபையில் பழிச் சொல் சொல்லப்படுகின்றது. அவ்வாறானால் மாநகர சபை என்னதான் செய்கின்றது என அதன் மாநகர முதல்வர் இ.ஆனல்ட்டை தொடர்பு கொண்டு கேட்டபோது,

“எமது பொறியியல் வல்லுநர்களிடம் கோரினால், மாநகர சபையின் வாய்க்கால் இரு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான் ஆனாலும் அந்த நீர் தற்போது வேறு மார்க்கமாக திருப்பப்படுகின்றது. இதேபோன்று பல இடங்களில் கிளை வாய்க்கால், பிரதான வாய்க்காளிற்கு மேலாக கட்டித்திற்கான பாதை, வாகனத் தரிப்பிடம் என்பவை அனுமதி இன்றி அரசியல் செல்வாக்கின் மூலம் முன்பு கட்டியதோடு அந்த அரசியல்வாதிகள் மூலமே திறப்பு விழாவும் நடாத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்பெற்றது எல்லாம் இந்த சபை உருவாக்கத்தின் பின்பு அல்ல. 2010ஆம் ஆண்டிற்கும் 2013ஆம் ஆண்டிற்கும் இடையில் நடாத்தி முடிக்கப்பட்டது. ஒரு தவறு இடம்பெறும்போது அதனை தடுப்பது சுலபம். அது விருட்சமாக மாறிவிட்ட பின்பு தடுப்பதில் பல சட்ட நெருக்கடிகள் உண்டு. அதேநேரம் வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு கடந்த ஆட்சியில் வதிவிடச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறே குளங்கள், ஏரிகளை சூழ இருந்த நிலங்கள் தூர்வாரப்பட வேண்டியதே அதன் சீரமைப்பு அதற்கு மாறாக அந்த இடங்களை கட்சிக்காக நோட்டீஸ் ஒட்டியவர்களிற்கும், கட்சிப் பணியாற்றியவர்களிற்கும் வழங்கி குளத்தின் அரைவாசிப் பங்கு ஆக்கிரமித்தாள் மிகுதி இடத்தில் மட்டும் நீர் தேங்க அதன் கொள் அளவு போதாது.

தற்போது அவர்களை எழுப்பி வீதியில் நிறுத்தவும் முடியாத நிலமையே உள்ளது. இவைகளுடன் யாழ்ப்பாணக் குடாநாடு ஆண்டிற்கு சராசரியாக ஆயிரத்து 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கும் பிரதேசம் . ஐந்து நாட்களில் மட்டும் 624 மில்லி மீற்றர் மழை பொழிந்துள்ளது அதாவது அரைப் பங்கு மழை வீழ்ச்சி 5 நாள் இடைவெளியில் ஏற்பட்டது. இருப்பினும் ஒரு நாளில் அதனை வடிந்தோட வைத்தமையானதும் ஓர் இலகுவான பணி கிடையாது. அந்த நீர் ஓட்டத்தில் நெஞ்சளவு தண்ணீரில் இரு மணித்தியாளத்திற்கு ஒரு தடவை தொழிலாளர்கள் வாய்க்காளில் தேங்கும் கழிவுகளை அகற்றினர். அந்தப் பணியானது இலகுவில் கூறிவிட முடியாது.

இதேநேரம் மாநகர சபை எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும்தான் அண்மை மழையில் நீர் தேங்கி நின்று ஏனைய இடத்தில் அவ்வாறான நிலமை காணப்படவில்லை எனில் அதுதான் மாநகர சபையின் தவறாக இருக்க முடியும்.” எனப் பதிலளித்த மாநகர முதல்வரிடம் திட்டமிடப்படாத வடிகால் பணியின் காரணமாகவே வைத்தியசாலையின் இரு விடுதிகளிற்குள் நீர் புகுந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி முகநூல் வாயிலாக கருத்து பகிர்ந்துள்ளமை தொடர்பில் கேட்டபோது,

“இந்தக் கருத்து நகைப்பி்கிடமானது, ஏனெனில் அவர் ஓர் நிர்வாக அதிகாரி அரசியல் நோக்கம் கொண்ட பதிலை நிர்வாக ரீதியில் கூறக்கூடாது. அதாவது சைவத்தில் கூறுவார்கள் யமதர்மராயாவின் மந்திரியான சிப்திரகுப்தன் ஒவ்வொருவர் தொடர்பிலும் எழுதி வைக்கும் பிரம்மச் சுவடி அவரை தவிர வேறு யாருக்கும் புரியாது என. அதுபோன்றுதான் உள்ளது யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அமைப்பு முறமை அந்த 13 ஏக்கர் நிலப் பரப்பு காணிக்குள் போனால் வெளியில் வர பாதை தெரியாத காட்டில் விட்ட நிலமை. அதனை அமைத்தவர்களிற்கே விளங்குமோ புரியாது.

இதேநேரம் 2010ற்கு பின்பு 10 வரையான கட்டிடம் அமைக்கப்பட்டு விட்டது எதற்குமே மாநகர சபையின் அனுமதியே கிடையாது என்பதல்ல எதற்கும் விண்ணப்பிப்பதே கிடையாது. அங்கே நெருப்பு பெட்டி போன்று அருகருகே அமைத்து ஒரு கட்டிடத்தின் நீர் மறு கட்டிடத்திற்குள் செல்லும் நிலமையும் நீர் ஓடுவதற்கு பாதையின்றி சகல திசையும் கட்டிடம் அமைக்கப்பட்டு விட்டது.

இவை அனைத்தும் அவர்கள் நிர்வாகம் அதற்கும் அப்பால் வைத்தியசாலையின் மதில் ஓரம் எமது பிரதான வாய்க்கால. உள்ளது. அந்த நீரை கொண்டு வந்து வாய்க்காலில் விழ வைப்பது ஒரு சாதாரணமான பணி வேண்டுமானால் நோயாளர்களின் நலன் கருதி அதனையும் நாமே செய்து வழங்கவும் தயாராகவே உள்ளோம்.” என்றார்.

இதேநேரம் குடாநாட்டில் நீண்ட காலம் பணியாற்றிய ஓய்வு பெற்ற பொறியியலாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டபோது ,

நீர், குப்பை, சுகாதார ஏற்பாடு என்றால் மக்களிற்கு உள்ளூராட்சி மன்றங்களே பொறுப்பு எனத் தெரியும் ஆனால் நகரின் மத்தியில் பலாலி வீதி, ஸ்ரான்லி வீதி, காங்கேசன்துறை வீதிகளில் நீர் வடிந்து ஓடவில்லை என்றால் அதற்கு முதல் பதில் அளிக்க வேண்டியவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதியின் இரு மருங்கும் இருந்த வாய்க்காலை அழித்தே வீதி அகட்டப்பட்டது. அதன் பின்பு வாய்க்காலை அமைக்காது வீதி அபிவிருத்தி அதிகார சபை தலை மறைவாகினர், அப்போது எவருமே கேட்கவில்லையே. இதுதான் இன்றைய நகரின் மத்தியில் அதிக இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதற்கு காரணம். இதனை யாரும் கூறுவதில்லை என்றார்.

பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள பெண்கள் விடுதிக் கட்டிடம் உள்ள இடம் 1980ஆம் ஆண்டுவரை குளம். அந்த குளத்தை மூடி அடுக்கு மாடிக் கட்டிடத்தை கட்டிப்போட்டு அதை கட்டிய அதே அறிவாளிகளே இன்று கூறுகின்றனர் மாநகர சபை சரியாக வடிகாலமைப்பு செய்யவில்லை என்று.

இவை அனைத்திற்கும் மத்தியில் யாழ் நகர் முழுமையாக தேடியபோது வீதி அபிவிருத்தி அதிகார சபை உண்மையில் அழிவிருத்தியாகவே செயல்பட்டுள்ளமை பட்ட வெளிச்சமாக தெரிகின்றது. அதாவது பலாலி வீதியில் இருந்த வாய்க்காலை மூடி வீதி அமைத்துள்ளது, அதேபோன்று பல்கலைக் கழகம் முதல் பரமேஸ்வராச் சந்தியின் ஊடாக வீதியின் இரு பக்கமும் வாய்க்காலை அமைத்து வந்து எந்தவொரு பொறுப்பற்றதனமாக பழம்றோட், மணல்தறை வீதிகள் ஊடாக அந்த வெள்ள நீரை பாயவிட்டு அதற்கு அப்பால் வாய்க்காலே அமைக்காது தலைமறைவாகியுள்ளமை, ஒஸ்மாணியாக் கல்லூரி முன்பாக சிறிது தூரம் உள்ள வாய்க்கால் மிகுதி இடத்தில் வாய்க்காலே அமைக்கப்படாமை என 6 இடங்களில் இவ்வாறு பொறுப்பற்ற பணி ஆற்றியுள்ளது வீதி அபிவிருத்தி அதிகார சபை.

இதனையாருமே கேட்கவோ அல்லது பேசாமல் இருப்பதன் மூலம் யாருக்கு லாபமோ அவர்களே மாநகர சபை மீது பழியை போடுகின்றனர் என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டியே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://globaltamilnews.net/2020/154326/

சித்திரமும் கைப்பழக்கம் - T. கோபிசங்கர்

1 week 1 day ago

சித்திரமும் கைப்பழக்கம்

இன்று:

Phone ஐ எடுத்து Tamil font ஐ தேடித்தேடி type பண்ணிக் கொண்டிருக்க வந்த பேத்தி போனைப் பறிச்சு “ஏன் இவ்வளவு கஸ்டப்படிறீங்கள் voice typing செய்யலாம்” எண்டு சொல்லத் தொடங்க, “பரவாயில்லை கொண்டா” எண்டு ஒவ்வொரு எழுத்தாத் தேடித்தேடி, தட்டித்தடவி எழுதத் தொடங்கினார் சந்திரன்.

குடும்பங்கள் busy ஆப் போனதால காலமை good morning இல இருந்து , பிறந்த நாள் வாழ்த்தெல்லாம் what’s app இல மட்டும் எழுத்தாய் மாறி, பிறகு அதுக்கும் பஞ்சி வர, voice message விடத்தொடங்கி, இப்ப என்னெண்டே விளங்காத emoji வந்து நிக்க, தானாவது ஏதாவது எழுதுவம் எண்டு போட்டு, கண்ணாடியை போட்ட படி type பண்ணத் தொடங்கினார். எண்டாலும் பேத்தி சொன்னதைக் கேட்டு ஒரு ஆர்வத்தில voice typing க்குப் போய்ப் பாத்துச் சரி வராம, ஒவ்வொரு எழுத்தா அடிக்க வெளிக்கிட, எழுதத் தொடங்க முதலே அடுத்த என்ன எண்டு googleம், யோசிக்க முதலே என்னெண்டு சொல்ல AI எண்டு எல்லாச் சொற்களும் வசதியும் இருந்தும் எங்கடை தமிழைக் காணாம திருப்பியும் type பண்ணத் தொடங்கினார். டைப் பண்ணிக் கை சோந்த போய் , typo mistake எல்லாம் correct பண்ணிக் களைச்சுப் போய் சாய்மனையில சாய்ஞ்சவரின்றை வீட்டு hall லை காட்சிக்கு மட்டும் வைச்சிருந்த, ஆச்சி பொங்கலுக்குப் பாவிச்ச பித்தளைக் குடத்துக்குப் பக்கத்திலை இருந்த…. Typewriter கண்ணில பட்டுது. அந்தக் காலத்தில இதுதான் தொழிலாயே இருந்திச்சுது , ஆனால் இப்ப கை நோகாம எழுதினாலும் ஐஞ்சு வரி எழுதவே கஸ்டமா இருக்குது எண்டு யோச்சபடி நித்திரையானார்.

அன்று:

முதல் நாள் காலமை குண்டெறிந்தவனை ஓடவிட்டிட்டு, சாவகாசமா பின்னேரம் “ round up” எண்டு சனத்தைக் கூப்பிட்டிருத்தி வைச்சு கைக்கு அம்பிட்ட ஆக்களை அள்ளிக் கொண்டு போக, மிச்சச் சனம் எல்லாம் வீட்டோட பதுங்க பகல்லயே ஊர் இருண்டிச்சுது. இந்தக் களோபரத்தில கடைகளைப் பூட்ட, தேத்தண்ணிக் கடைக்காரன் தானமாப் போட்ட வடைத் துண்டோட பறந்து போய் காகத்தார் வயர்கம்பீல இருந்தபடி நரி இல்லைத்தானே எண்டு வடையைச் சாப்பிடத்தொடங்க கேட்ட வெடிக்கு இந்தமுறையும் வடை கீழ விழ ஆலமரத்தடிக்குப் போய் தானும் அடங்கிக் கொண்டார் ஊரடங்கினது போல.

இனி ஊருக்கு விடிஞ்சு தான் என்ன எண்டு போட்டுச் அடுத்த நாள் சூரியனும் சோம்பலோட பிந்தி எழும்ப, இன்னும் நித்திரையால எழும்பாமக் காக்கையார் நித்திரை கொள்ள, சந்திரன் சைக்கிளைக் கொண்டந்து நிறுத்தி “ குட் மோர்னிங்” சொல்ல, கழுத்தை நிமித்தி ஒரு கண்ணால பாத்திட்டு கொஞ்சம் தள்ளிப் போய் “ஆக்கள் எல்லாம் எழும்பீட்டினம் மானத்தை வாங்காம எழும்புங்கோ” எண்டு பிள்ளைகளைப் பாத்துக் கரையத் தொடங்கிச்சுது.

சைக்கிளால இறங்கி stand இல விடுவம் எண்டு சந்திரன் இழுக்க , அது , பிள்ளை அங்கால படுத்திருக்கேக்க கையைப் போடேக்க முறண்டு பிடிக்கிற மனசி மாதிரி வர மாட்டன் எண்டு நிண்டிச்சுது. சைக்கிள் பாரம் கூடவா இல்லாட்டி உடம்பில பலமில்லையா எண்டு சந்தேகம் வர, இந்தா பார் இழுக்கிறன் எண்டு ஒருமாதிரி இழுத்து நிமித்தி சைக்கிளை விட்டிட்டு சந்திரன் நிமிர மூண்டு நாளா வருமானமில்லாத முன் சைக்கிள் கடைக்காரன் “ அண்ணை ஒருக்கா கழுவிப் பூட்டுங்கோவன் “ எண்டு சொன்னான். பாவம் தன்னிலும் பாக்க அவன்டை நிலமை மோசம் போல எண்டு நெச்சிட்டு அப்பிடியே மரத்ததடீல இருந்த தேத்தண்ணிக்கடைக்குப் பின்னால இருந்த மேசையையும் கதிரையையும் எடுத்துக்க கொண்டந்து போட்டிட்டு பேப்பரைத் துறந்தார். சந்திரன் மூக்குக் கண்ணாடியின்டை உடைஞ்ச காதுப்பிடியைக்( கைபிடி) விழாம rubber band ஐப் போட்டு ஆடிக்கொண்டிருந்த கைபிடியை இறுக்கிக் கட்டீட்டு பேப்பரைத் துறந்து நேத்தைக்கு நடந்த சம்பவத்தை பாத்திட்டு பாவப் பட்டாலும் எப்பிடியும் ஐஞ்சு பேராவது வருவினம் எண்ட உள்மனசு சொல்ல fileஐ எடுத்து பேப்பரை அடுக்கத் தொடங்கினார்.

கச்சேரிக்கு முன்னால ஆலமரத்தை குத்தகைக்கு எடுத்தமாதிரி சுத்திவரக் கடைகள். வெய்யிலுக்கு ஒதுக்கமா வடக்கை சைக்கிள் கடையும் தெற்க தேத்தண்ணிக்கடையும் வர, கிழக்க கச்சேரி வாசலுக்கு நேர முன்னுக்கு சந்திரன் ஐக்கியமானர். மரத்திற்கு மேற்கை ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்கிறதுக்கு எல்லாரும் பாவிச்சிச்சினம்.

”your highness” எண்டு தொடங்கி பேர் தெரியாத ஒருத்தனுக்கு, (வாசிக்கத் தெரியுமா எண்டும் தெரியாது ) நாலு வரீல கடிதம் எழுதி “yours truly ” எண்டு முடிச்சு, பேருக்கும், விலாசத்துக்கும் எண்டு இடம் விட்டபடி நாலு பேப்பரை அடிச்சு வைச்சிட்டு ஆக்களுக்காகப் பாத்துக்கொண்டிருந்தார் சந்திரன்.

காஞ்சு போன காபன் பேப்பரை வைச்சு தேய்ஞ்சு போனவிரலால இறுக்கி அடிச்சாத்தான் மற்றப் பேப்பரில ஏதாவது தெரியுது, அதிலேம் குண்டு செய்யிறாங்களோ எண்ட சந்தேகத்தில தடை விதிச்சதால இப்ப வாங்கிறதும் கஸ்டம் , எப்படியாவது அடுத்த முறை form எடுக்குப் கச்சேரிக்குள்ள போகேக்க CC ( Chief Clerk) ற்றை ரெண்டு பழசைக் கேட்டு வாங்கோணும் எண்டு யோசிச்சுக் கொண்டு இருக்க சனப்பிழக்கம் கூடத் தொடங்கிச்சுது.

விடியாத காலையில ஊர்ச்சனம் எல்லாம் பிடிபட்டதை தேடினபடியும், பிடிச்சுவங்களைத் திட்டினபடியும் ஒவ்வொரு “campஆ” ஓடித்திரிஞ்சிட்டு ஒண்டும் சரிவராம கடைசியா GAக்கு ஒண்டு, ICRC க்கொண்டு, uniform போட்டபடி ஆமியே நடத்தின சிவில் நிர்வாகத்துக் கொண்டு எண்டு முறைப்பாட்டுக் கடிதம் கேட்டு வந்து நிக்க சைக்கிள் கடைக்காரன் சந்திரனைப் பொறாமையாய்ப் பாத்தான்.

எழுவதின்டை கடைசீல, அப்பரோட அதே தொழிலுக்குப் போகாம ஏதோ O/L ஐஞ்சு பாடம் திக்கிமுக்கிப் பாஸ் பண்ணி A/L பக்கம் எட்டிப்பாக்காம , “ விதி”ப்பட மோகன் மாதிரி பொம்பிளைப் பள்ளிக்கூட typing course க்குப் போனவர் சந்திரன்.

கச்சேரியடியில செஞ்சிலுவைச்சங்கம் பெண்களுக்கு மட்டும் எண்டு boardஐ வெளீல போட்டு உள்ளயே போகவிடாமத் தடுக்க , ஆரியகுளத்தடீல bond institute இல கடைசீல இடம் கிடைச்சுது.

முதல் நாள் வகுப்பு எல்லா ரெட்டைப் பின்னலும் முன்னால இருக்க கடைசி வாங்கில சந்திரனும் முன்னுக்குப் படிப்பிச்ச கிழவனும் தான் அங்க trouser போட்ட ஆக்கள். வந்த கிழவன் அடிப்படையில இருந்து தொடங்கிறன் எண்டு அறுக்கத் தொடங்கிச்சுது.

“ Ink ribbon ஐ load பண்ணுறது முக்கியமான வேலை கமராவிற்கு film roll போடிறது மாதிரித் தான் மேல மூடியைத் திறந்து வட்ட roller க்கால இழுத்து மற்றப் பக்க rollerஐக் கொண்டேச் சுத்தி lock பண்ணிறது முதல் வேலைஅடுத்தது paper load பண்ணிறது. Type பண்ணிற நல்ல பேப்பரைக் கடைசீல தலைகீழா வைச்சு பிறகு காபன் பேப்பரை வைச்சு அதுக்கு மேல copy பண்ணிற பழைய பேப்பரை வைச்சு மேல இருக்கிற வலப்பக்க குமிழை இழுத்தபடி அடுக்கின set ஐ உள்ள தள்ளீட்டு குமிழை உருட்ட சரியான பேப்பர் முன் பக்கம் வந்து நிக்கும்” எண்டு முடிச்சார் முதல் நாள் வகுப்பை.

வாத்தியார் ஒவ்வொண்டா இது தான் key board , கடைசி வரீல நீட்டா இருக்கிறது space bar, இடது பக்கம் கீழ shift எண்டு சொல்லிக் கொண்டே போனார். அமெரிக்காரான் கண்டு பிடிச்சதால qwerty keyboard தான் type writerக்கும். எழுத்து அடிக்கிற இடமும் , எழுத்தும் சரியா எண்டு பாக்க hairpin நுனி மாதிரி ஒரு சின்ன வளை வொண்டிருக்கும் sniper point மாதிரி.

“நாலு வரிசை key board இல ரெண்டாம் வரிசையில இருந்து தான் தொடங்கிறது. இடது கை நாலு விரல் , வலது கைநாலு விரல், தொடங்கேக்க நடுவில இருந்து தொடங்கி மேல கீழ side இல எண்டு விரலை நீட்டி ,அகட்டி மேல் வரிசை கீழ் வரிசை ஏறி இறங்கி , Capitalக்கு கீழ போய் shift ஐத் தேடிப்பிடிச்சு அமத்தி வைச்சு அடிக்கோணும். எப்பவும் line பாத்து paperஐ உருட்டி, மேல ஒட்டி இருக்கிற scale பாத்து alignment adjust பண்ணி இடைவெளி விடோணும்” எண்டு சொன்னது விளங்கின மாதிரி மண்டையை ஆட்டினார் சந்திரன்.

a, b, c, d பாத்துப் பாத்து அடிக்கிறது தானே சின்ன வேலை எண்டு நெச்சவர் ஒரு சொல் அடிக்கவே ஒரு நிமிசம் போச்சுது. அந்தாள் என்னெண்டா 50-60 words per minute எண்டாத் தான் வேலை கிடைக்கும் எண்டத்தான் விளங்கிச்சுது இதுகும் கஸ்டம் தான் எண்டு சந்திரனுக்கு.

“ஒரு நாள் முழுக்க type பண்ணினால் விராலயே 3 மைல் நடக்கிற களை வரும்” எண்டு முதல் நாள் வாத்தி சொன்னது உண்மையோ எண்ட மாதிரி விரல் வீங்கி ஒரே நோ. விரலின்டை ரேகை எல்லாம் key board ஓட போச்சுது. நல்ல வேளை at least பெருவிரலை பயன்படுத்தாத படியால கைநாட்டுப் போட அதாவது மிஞ்சிச்சுதே எண்டு சந்தோசப்பட்டார்.

உத்தியோகம் தேடிற பொம்பிளைகள் O/L முடிய அப்ப தேடிப்போறது இந்த tutoryஐ தான். பழைய படங்கிளில வாறமாதிரி short hand & typing தெரிஞ்சாத் stenographer வேலை கிடைக்கும். கிளாக்கர் உத்தியோகம் தேடிக் களைச்சு கடைசீல typist ஆ இருந்து , முல்லைத்தீவுக்கு டிரான்ஸ்பர் வர, மனிசி சொன்னதைக் கேட்டு retire பண்ணீட்டு கச்சேரி வாசலில தஞ்சமடைஞ்சார் ஏற்கனவே இருந்த நாலுபேரோட ஐஞ்சாவதா போன சந்திரனை வாங்கோ எண்டு கூப்பிட்டது அந்த மரத்தைச்சுத்தி இருந்த நாலு பேர், என்ன எல்லாம் அவரிலும் பாக்கக் கிழடுகள் தான். பிறப்பு, இறப்பு, கலியாணம் , பென்சன் , பெட்டிசன் எண்டு எல்லாதுக்கும் formஓட, ஒரு கடிதம் இணைக்கோணும் எண்டதால சந்திரனுக்கும் சோத்துக்கு வழிசெஞ்சது இந்த type writer.

அப்ப Town க்குள்ள ஆசுப்பத்திரிக்கு முன்னாலே இருக்கிற பாமசிகளுக்கு முன்னாலேம் ஆக்கள் இருக்கிறவை type writer ஓட. போயக் கொஞ்ச நாளிலியே எங்க போய் எந்த form வாங்கோணும் ,எத்தினை காபன் கொப்பி அடிக்கோணும், எங்க கையெழுத்துப் போடோணும், நிரப்பீட்டு எங்க போய் ஆரைச் சந்திக்கோணும், வேலை நடக்காட்டி எப்பிடி முடிக்கோணும் எண்டு எல்லாத்தையும் தெரிஞ்ச சந்திரன் சூரியனாய்ப் பிரகாசித்தார்.

ஏதோ பெருமாள் தாற பிச்சையில வாழ்க்கை போக புடிங்கித் திண்ண வந்த அனுமார் மாதிரி மினிபஸ்ஸால வந்திறங்கிறவயை மடக்கிப் பிடிச்சிக் கொண்டந்து விடத் தொடங்கினான் ஒருத்தன். முதல்ல வடை பிளேன்ரீக்கு ஒமெண்டவன் கடைசீல ஐஞ்சு, பத்தெண்டு கையை நீட்ட, விட்டால் வாறதும் போயிடும் எண்டு அவனையும் கவனிச்சுக் கொண்டு ஓடவேண்டியதாப் போட்டுது எல்லா டைபிஸ்ட் மாருக்கும்.

தொண்ணூறுக்குப்பிறகு காணாமல் போனோர் கடிதங்கள் இல்லாமல் போக, அங்க பக்கத்திலயே வந்த புது நிர்வாகத்திட்டை “ pass” எடுக்க கேட்டுக் கடிதம் , கையெழுத்தெண்டு நிலமை மாற type பண்ணிக்கொண்டிருந்த ஐஞ்சு கடைசீல ரெண்டாக அதே மரத்தடி உறவுகள் எண்டு தொடர்ந்து கொண்டிருந்தார் சந்திரன் .

95 இல சனம் இடம்பெயரத் தொடங்க வீட்டை விட்டுப் போக விருப்பமில்லாத சந்திரன் கடைசீல வெளிக்கிட்டு வேலைக்குப் போக பயம் எண்டு வேலையை விட்ட ஊருக்கே போய்த் திரிஞ்சலைஞ்சு திரும்பி வந்தார். சந்ததிக்கெண்டு சேத்து வைச்சதுகள் எல்லாம் இழந்து போனாலும் அவரின்டை type writer எங்கயோ பக்கத்து வீட்டில இருந்து வந்து சேர திருப்பியும் தூக்கிக்கொண்டு போய்ப் பாத்தா மரத்தைச்சுத்தி மண்மூட்டையும் கச்சேரியடீல காவலும் வர வீட்டோட நிரந்தரமா ஐக்கியமானார்.

இன்று

பேத்தி கேக்கிறாள் license எடுக்க வரச்சொல்லி எண்டு கச்சேரியடிக்கு வந்தவர் இடம் வலம் பிடிபடாமக் கஸ்டப்பட்டார். ஆலமரத்தடியில மோட்டச் சைக்கிளை விட்டு stand ஐத் தட்டத் தலைக்கு மேல கத்தின காகம் பழைய காகம் தானோ எண்டு நிமிந்து பாத்திட்டு, வாசலுக்க போக “ ஏதும் வேணுமா ?செய்தரலாம் form ஐ check பண்ணிக் கொண்டு போங்கோ எண்டு வந்த அனுமாரைத் தாண்டி” உள்ள வந்தார். முந்தி அடிக்கடி போன இடம் இப்ப அந்நியப்பட்டுப் போனதை உணர்ந்த படி அறையைத் தேடி formஐக் குடுக்க, ஐயா மூண்டு கொப்பி வேணும் போய்க் கொண்டு வாங்கோ எண்டவரை இழுத்துக் கொண்டந்த பேத்தி முன்னால இருந்த கடையில Photocopy க்கு குடுக்க , அங்க இருந்த ஒரு பிள்ளை computer இல எதையோ தேடி அழிச்சழிச்சு அடிக்கிறதை எட்டிப் பாத்திட்டு qwerty key ஆவது மாறாமல் இருக்கெண்டு ஆறுதலோட திரும்பி நடந்தார்.

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்.

பி.கு( எண்பதுகளில St. John’s இல steno ஒராள் இருந்ததாகவும் அவவைப் பாக்கிறதுக்கே பிரின்சிப்பலிட்டை அடி வாங்கப் பல அண்ணாமார் போனதாகவும் வரலாறு உண்டு)

விளையாட்டின் மூலம் தடைகளை உடைக்கும் Siddi பெண்கள்

1 week 2 days ago

இந்தியாவில் ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்த சுமார் 20,000 பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சித்தி சமூகமாக அறியப்படுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இவர்களில் பெரும்பாலானோர் அடிமைகளாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள். காலப்போக்கில், அவர்கள் சமூக விளிம்பில் தள்ளப்பட்டவர்களாகவே இருந்து, வறுமை மற்றும் பாகுபாடுகளை எதிர்கொண்டு வந்துள்ளனர்.ஆனால் இன்றைய சூழலில், சித்தி சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் இந்த தடைகளை எதிர்கொள்ள ஒரு சக்திவாய்ந்த வழியை கண்டுபிடித்துள்ளனர். விளையாட்டு வழியாக, அவர்கள் தனிமைப்படுத்துதலை உடைத்து, பாகுபாட்டை எதிர்த்து, தங்களுடைய வாழ்க்கையை மாற்றி வருகின்றனர்.

#BBCISWOTY #Changethegame

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் - இந்தக் கதை உண்மையா?

2 weeks ago

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் - இந்தக் கதை உண்மையா?

This is a discussion about the Easter Sunday attacks in Sri Lanka, based on true stories and news articles published in newspapers. This discussion elaborates on the real and chilling events, from the planning stage to the aftermath of the bombings, which claimed the lives of more than 250 innocent people.

டெய்லிமிரர் பத்திரிகையில் நிர்மலா கன்னங்கரா எழுதிய பத்தியை தமிழில் மருத்துவர் செந்தூரன், மருத்துவர் சாதிக்கின் சுவாரஸ்யமான உரையாடல் காணொளி.

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

3 weeks 4 days ago

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

By ஆர். அபிலாஷ் February 21, 2026

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது.

உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமான நாடகக் காட்சிகள், மேலோட்டமான பக்தி என தன்னை மறு-உருவாக்கம் செய்துகொண்டார். அதுவும் "அறம்" இருக்கிறதே ரொம்ப மட்டமான ஒரு தொகுப்பு. மிகையான மதிப்பீடுகள், போலியான அற விழுமியங்கள், போலியான மனிதச் சித்தரிப்புகளின் அடுக்கு அது. அவரே நல்லுணர்ச்சிகளைத் தூண்டும் நோக்கில் எழுதியதாகச் சொல்கிறார். எந்த இலக்கியவாதியும் அப்படிச் செய்ய மாட்டார். அது இலக்கியத்தின் நோக்கம் அல்ல. நல்லுணர்ச்சி என்ன அல்வாவா பொட்டலம் மடித்துக் கொடுக்க? அதுவென்ன பாலுணர்ச்சியா தூண்டுவதற்கு? அது 30,000 பிரதிகள் விற்றதாக பவா சொன்னதில் அதிர்ச்சி இல்லை. அது பல லட்சம், கோடி பிரதிகள் விற்றிருக்க வேண்டும். நம் ஊரில் வாசிக்கவே தெரியாத எத்தனையோ கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அது போய் சேர்ந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அந்நூல் ரொம்பவே பிடிக்கும். "வெண்முரசு" இன்னொரு கொடுமை. வியாசரின் "மகாபாரதத்தைப்" படித்திருக்கிறேன். அதைப் படித்தவர்களுக்குத் தெரியும் - அதில் பாத்திரங்கள் அவ்வளவு எதார்த்தமாக இருக்கும். நிறைய பலவீனங்கள், ஈகோ, தன்னலம் ஆகியவற்றால் நடத்தப்படுபவர்களாக இருப்பார்கள். அர்ஜுனன் கூட ஆன்ம பலம் மிக்கவனாக இருந்தாலும் பெரும்பாலும் எளிய உணர்ச்சிகளே அவனைப் பிடித்தாட்டும். இதையெல்லாம் நீங்கள் ஜெயமோகனின் "வெண்முரசு" பாத்திரங்களில் பார்க்க முடியாது. அவர்கள் டிவி தொடர் பாத்திரங்களைப் போல இருப்பார்கள். அவர் டிவி தொடருக்காக எழுத ஆரம்பித்து பின்னர் நாவலாக மாற்றிவிட்டதாக சொல்கிறார்கள். கார்ட்போர்ட் பாத்திரங்கள், கார்ட்போர்ட் கதை. மகாபாரதம் எனும் மகத்தான காவியத்தைப் படிக்க விரும்பும் ஒரு தலைமுறைக்கு அதன் சாரத்தைத் தொடாமல் வடிவத்தை மட்டுமே எடுத்து சீரியல் வடிவில் அவர் தனதான ஜிகினா மொழியில் எழுதிக் கொடுத்துவிட்டார். அது வெளிவந்தபோது ஒரு பதிப்பாள நண்பர் என்னிடம் சொன்னார், "வாசகர்களை இந்துத்துவப்படுத்த ஜெயமோகன் அதைச் செய்கிறார்" என்றார். ஆனால் அந்தளவுக்குகூட அதற்கு முக்கியத்துவம் இல்லை. ஜெயமோகனுக்கு இது தெரியும் - தன் இலக்கிய வீழ்ச்சியை ஈடுகட்டத்தான் அவர் இலக்கிய அரசியல் செய்கிறார், கூட்டம் கூட்டமாகப் போடுகிறார், பணம் செலவழித்து எழுத்தாளர்களைத் தன் வசம் இழுக்கிறார், விருது ஆசை காட்டுகிறார், சினிமாக்காரர்களை வரவழைத்து அவர்களுடைய அணுக்கம் தரும் அதிகாரத்தைக் காட்டி இன்னும் மிரட்டுகிறார், இப்போது ரீல்ஸும் போடுகிறார். இதுதான் நம் இலக்கியவாதிகள் வந்து சேர்ந்துள்ள இடம். இவர்களை வாசிப்பவர்கள் நிலை பட்டுக்கோட்டை பிரபாகரை வாசிப்பவர்களை விடப் பரிதாபம். அவர்களுக்காவது தமக்கு இலக்கியம் தெரியாது என்று தெரியும்; இவர்களுக்குத் தாம் வாசிப்பது இலக்கியம் அல்ல என்று தெரியாது.

இந்த லும்பன் இலக்கிய கும்பலுக்கும் அசல் இலக்கிய வாசகர்களுக்கும் தான் இடைவெளி இன்று எழுந்துள்ளது. நாம் பேச வேண்டியது பாவப்பட்ட பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவிடம் அல்ல, போலியான சினிமாத்தனமான இலக்கிய எழுத்தாளர்களிடம்தான்.

பின்குறிப்பு: இன்றும் மிகத்தீவிரமான சிக்கலான ஆழமான இலக்கியத்தைப் படிப்பதற்கு மிகக் குறைவான வாசகர்களே உள்ளனர். அவ்வளவு பேர் இருப்பதே சாத்தியம் என எனக்குத் தோன்றுகிறது. அதாவது சிறந்த நாவல்களை நீங்கள் லட்சக்கணக்கில் கூட விற்க வைக்கலாம். அதற்கு சந்தையும் ஊடகங்களும் உதவக் கூடும். ஆனால் அவற்றை ஆழமாக வாசிக்கும் பயிற்சி அப்போதும் மிகக்குறைவானவர்களிடமே இருக்கும். நல்ல இலக்கியத்தை வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அப்படிச் சேரும் நிலை ஏற்பட்டால் நம் உலகம் இப்படி இருக்காது. அது பௌதீகமாகவும் ஆன்மீகரீதியாகவும் முழுமையாக விடுதலை பெற்றிருக்கும்.

https://www.writerabilash.in/2026/02/blog-post_21.html

இன்று உலக தாய்மொழி தினம்

3 weeks 6 days ago

உலக தாய்மொழி தினம் இன்று

Feb 21, 2026 - 10:49 AM

உலக தாய்மொழி தினம் இன்று

உலக தாய்மொழி தினம் இன்றைய தினத்தில் ( 21) அனுஷ்டிக்கப்படுகிறது.

மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ (UNESCO) பொது மாநாட்டில் உலக தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டதுடன், 2000 ஆம் ஆண்டிலிருந்து இது உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

நிலையான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மை அவசியம் என்று யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கான முன்மொழிவை முதன்முதலில் பங்களாதேஷ் நாடே சமர்ப்பித்தது.

பங்களாதேஷின் தாய்மொழியைப் பாதுகாப்பதற்கான தனித்துவமான வரலாறு, மொழி பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அந்நாட்டின் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தன.

1952 ஆம் ஆண்டில் உருது மொழியை தேசிய மொழியாக அறிவிக்க அந்த நாட்டு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடித்தன.

அந்தப் போராட்டத்தின் போது பல மாணவர்கள் உயிர்த்தியாகம் செய்ததுடன், பின்னர் பெங்காலி மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

அதன்படி, மொழி உரிமைகளுக்காகச் செய்யப்பட்ட அந்த அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில், 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி உலக தாய்மொழி தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதேவேளை, உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில், இலங்கையர் என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஒரு சமூகத்தின் தாய்மொழியே அந்தச் சமூகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான காரணியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் வரலாற்றை முன்னோக்கி கொண்டு செல்லும் அடிப்படை ஊடகமாகவும் அடையாளப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmlvvc9e6000b356psr4em1w7/documents/Tamil.pdf

https://adaderanatamil.lk/news/cmlvvc9e6000b356psr4em1w7

கல்வி பயிலும் மொழி பாகுபாடு : ஆங்கில மீடியம் vs தமிழ் மீடியம்

1 month ago

யாழ்ப்பாணத்தில, கல்வி முறையில ஒரு விசித்திரமான மனப்பாங்கு வேரூன்றி பெருமரமாக வளர்ந்து வாறதை நான் அவதானிக்கிறன். என்னை போல நீங்களும் அவதானிச்சிருக்கலாம். அது என்னெண்டா, ஆங்கில ஊடகத்தில படிக்கிறது மேதாவிலாசத்தின்ர அடையாளம் எண்டும் தாய்மொழியில படிக்கிறது ஒருவித பின்தங்கிய நிலை என்றும் ஒரு மாயையான நினைப்பு. இந்த நினைப்பு மாணவர்கள் மத்தியில மட்டுமில்லாமல், சமூகத்தின்ர வழிகாட்டிகளாக இருக்கிற ஆசிரியர்கள் மத்தியிலும் ஆழ ஊடுருவியிருப்பது கவலையாக இருக்கு.

சிந்திக்கிற மொழியில படிக்கிறது தான் அறிவை வினைத்திறனோட உள்வாங்க உதவும் எண்டதால என்ர இரண்டு பிள்ளைகளையும் தாய்மொழி மூலமாக தான் கல்வி கற்க தெரிவு செய்தன். பிள்ளைகளும் அதை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். மொழிமூலத் தெரிவு எண்டது எங்கட தனிப்பட்ட விருப்பே தவிர அது பிறப்புடன் வந்த அறிவு வெளிப்பாடு இல்லை. அது மாணவர்களை மேல் கீழ் இடங்களில் வைப்பதற்கான அனுமதிச் சீட்டும் இல்லை.

ஆசிரியர்களின் இந்த பாகுபாடான அணுகுமுறையால, பாவம் ஆங்கிலமொழி மூலமாக கல்வி கற்கும் மாணவர்களும் தங்களுக்கு பின்னால ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒளிவட்டம் இருக்குதெண்டு நம்பினம். அந்த நம்பிக்கையை தங்கட நடத்தையிலும் காட்டினம். தமிழ் மீடிய மாணவர்களோடு ஒட்டி உறவாடும் தன்மையை வலிந்து நிறுத்துகின்றார்கள் ( விதிவிலக்கான பிள்ளைகளும் இருக்கினம்) இது ஒருவிதமான சாதீய மனநிலையை பள்ளிக்கூடங்களில, ரியூசனுகளில உருவாக்குது. "நீங்கள் எவடம்?" எண்ட கேள்விக்கும் "நீங்கள் எந்த மீடியம்?" எண்டிற கேள்விக்கும் பின்னால இருக்கிற மனநிலை ஒண்டு தான்.

மகள் தன்ர பத்தாம் வகுப்பில ஆங்கில இலக்கியத்தை ஒரு விருப்புக்குரிய தொகுதிப்பாடமாக தெரிவு செய்தாள். அதற்கான தனியார் வகுப்புக்கு ஆசிரியை ஒருவரிடம் அனுமதி எடுக்க செல்லும் போது, அவர் நடத்திய "நேர்முகத்தேர்வில்" என்னிடம் கேட்ட கேள்வி "இவ எந்த மீடியம்?". தமிழ் எண்டதும், ஆசிரியையின் முகம் மாறி, "தமிழ்மீடிய பிள்ளைகள் இந்த பாடத்துக்கு கஷ்டப்படுவினம்" எண்டு ஒரே போடாக போட்டார். "இல்லை... இவ A எடுப்பா " எண்டு சிரித்தபடியே தான் சொன்னேன்.

அதை விட இன்னொரு படி மேல போய் ஒரு ஆசிரியப்பெருந்தகை சொல்லி இருக்கிறார், "இது சரியான கஷ்டமான பேப்பர் தான். இங்கிலீஷ் மீடிய பிள்ளைகளே இந்த கேள்விக்கு சரியா ஆன்ஸர் எழுதேல்ல" இதில பகிடி என்னெண்டா அவர் சொன்னது வரலாற்று சோதினை பேப்பரை. அவரும் படிப்பிக்கிறது வரலாறு தான். பாவம் வரலாறு அவருக்கு வழிகாட்டேல்ல 😜

இந்த மாயையான மனநிலை எங்க வரை கொண்டு வந்து விடுகின்றது என்றால், கற்பித்தலுக்கான ஆசிரிய வளங்களை வகுப்புகளிடையே பிரித்தளிக்கும் போது, ஆங்கில மொழிமூலமான வகுப்புகளுக்கு திறன் கூடிய ஆசிரியர்கள் வழங்கப்படுவது வரை.

இரண்டாம் தர பிரஜைகளாக தமிழ் மொழிமூலமான வகுப்புகளும் பிள்ளைகளும் அணுகப்படுகின்றமை அனேகமான பாடசாலைகளில் தூலமாக அவதானிக்க முடிகின்றதை பலர் கூற கேட்டிருக்கிறேன்.

இதுக்கு என்ன வழி என்று கல்விசார் உளவியலாளர்கள் ஒரு ஆய்வை நடத்தி அதற்கான பரிந்துரையை மிக நிச்சயமாக கொடுக்க வேண்டும்.

அவை ஆய்வு செய்ய முதல், A/L க்கு வந்து பௌதீகவியலுக்கு ரியூசனுக்கு போகும் போது குமரன் சேர் செய்தது தான் thug life. 😜

"நீ இங்கிலீஷ் மீடியமோ தமிழ் மீடியமோ என்னவாவெண்டாலும் இரு. இப்ப தலையங்கம் போடு,

திருகாணி நுண்மானியில் பூச்சியவழு"

சமரசம் உலாவும் இடம் இப்ப அவற்ர ரியூசன் தான் 😜

https://www.facebook.com/share/18K5RsDhag/?mibextid=wwXIfr

சோதனைகளை கடந்து பாராலிம்பிக்கில் சாதித்த கதை - Deepa Malik Interview

1 month 1 week ago

பிபிசியின் இந்தாண்டுக்கான ISWOTY விருதின் தேர்வுக்குழுவில் ஒருவராக இருக்கும் தீபா மாலிக் அளித்த நேர்காணல்.

#BBCISWOTY #Changethegame

Report: Sumedha Pal | Shot: Sandeep Yadav & Prabhat Tiwari

Edit: Shaad Midhat

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

1 month 2 weeks ago

எமது சுழிபுரம் கிழக்கு கிராமத்தில் 55 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மாடிக்கட்டிடம் அ.மி.த.க பாடசாலையில் திறக்கப்பட்டது.

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பேட்டி

1 month 2 weeks ago

''மத்தியவங்கியின் ஆளுநராக என்னை நியமித்தமை இன்னொருவர் கூறியே எனக்கு தெரியும்''

#indrajitcoomaraswamy #formergovernor #centralbank #powermoves #srilanka #lka

தனிமையும் துணிச்சலும்

1 month 2 weeks ago

தனிமையும் துணிச்சலும்

January 31, 2026

AVvXsEimZyZvKefUUewsTu_t03rECN3Cf94Wo0qzTo9BXFqYW8bcFdcQc3pKMOQwH_Z6BGL_hxkZmc34YNLLZlB9iWPBVVGvLOqpOVNu8wHya-gi25QVdx2Ixm9GnXmcXADyyl95E8oNl_VnJ0s2GOiT2qV853R7-8fL_DAbb-lgs1jKk_fzrBmfkC1JdS1v_Np4=w400-h393


துணிச்சலை இரண்டாகப் பகுக்கலாம் என்று நேற்று என் மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 'புறத்துணிச்சல், அகத்துணிச்சல். புறத்துணிச்சலே வன்முறை, தாக்குதல், உணர்ச்சியால் தூண்டப்பட்டு தன் உடலால் ஒரு வேலையைச் செய்தல். அகத்துணிச்சல் என்பது புற உலகிற்குப் பணியாமல் ஒருவர் தான் நம்பும் விழுமியத்துக்காக, நம்பிக்கைக்காக ஒன்றைச் செய்வது. இரண்டாவதுதான் இருப்பதிலேயே கடினம். 99% ஜனங்களால் அகத்துணிச்சலைக் காட்ட முடியாது.' இதைக் கேட்ட ஒரு மாணவர் அகத்துணிச்சல் ஏன் கடினமாகிறது என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "நாம் ஒரு குழுவுக்குள் இருக்கையில் நம் துணிச்சல் குழுவின் துணிச்சல்தான். குழு சொல்வதை, செய்வதை நாமும் அப்படியே செய்வோம். இத்துணிச்சலே அச்சத்தினால் விளைவதுதான். ஆக அது துணிச்சலே அல்ல. துணிச்சலைச் சரியாக விளக்குவதானால் அகத்தெளிவுடன் குழுவுக்கு எதிராகச் செயல்படுவதுதான். இதைச் செய்தால் நாம் வெளியேற்றப்படுவோம் எனும் அச்சத்தினாலே நாம் பதுங்கிக் கொள்கிறோம்."

இதைச் சொல்லும்போதே குழுவுடன் இருப்பதன் பயன்கள் என்ன என்றும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். குழுவுடன் இணங்குவது நமக்கான பல பிரச்சினைகளை தன்னிலையிலே சரி பண்ணிவிடும். எழுத்தாளர்களை, வாசகர்களைப் பாருங்கள். கட்டுப்பெட்டியான குழுக்களில் அவர்கள் இணைந்ததுமே அவர்களுக்கு நூறு கைகள் முளைத்ததைப் போல உணர்வார்கள். ஆனால் போகப்போகத்தான் அது முழுக்க உண்மையல்ல என்று தோன்றும். ஒருநாள் தன் இரு கைகளுமே கட்டப்பட்டதாகத் தோன்றும். கடைசியில் தனக்குக் கையே இல்லையெனத் தோன்றும். அப்போது அதை ஏற்காமல் தனக்கு நூறு கைகள் உள்ளதாகக் கற்பனை பண்ணி அதை ஊருக்கும் நியாயப்படுத்தப் பார்ப்பார்கள். மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருப்பதாக நடிப்பார்கள்.

மனிதனாக இருப்பதே தனியனாக இருப்பதுதான். தனியர்கள் பரஸ்பரம் அன்பு காட்டுகிறார்கள், ஒத்திசைகிறார்கள், உழைக்கிறார்கள் என்று கூறலாம். ஆனாலும் இதனூடே தான் தனக்காகவே இருப்பதாக நினைக்கிறார்கள். இந்த உள்முரணே மனித நிலை. குழு இதை அனுமதிப்பதில்லை. குழு ஒரு மனிதனை மீண்டும் விலங்கு நிலைக்குக் கொண்டு போவதாக சிலர் நம்பலாம். ஆனால் கூட்டு விலங்குகளுக்கு தன்னிலை குறித்த உணர்வு இருந்தால் கூட அவை மனிதனைப் போன்றே யோசிக்கும். அதனாலே விலங்குகள் இடையே சூழலுடனும் வேறு உயிர்களுடனும் கலந்து புது விலங்குகள் தோன்றியபடியே இருந்திருக்கின்றன. நாம் நம்புகிற குழுவென்பது மனிதக் கண்டுபிடிப்புதான் என நினைக்கிறேன். அது அச்சம், குற்றவுணர்வை அடிப்படையாகக் கொண்டும், அதை மறைத்து பொய்யாக மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் சாதனை உணர்வையும் சிருஷ்டிக்கும் தந்திரங்களைக் கொண்டது. இந்த முரண்தான் அதன் அடிப்படை.

ஒவ்வொரு குழுவும் தனிமனிதனை நோக்கியே "உன்னை மேம்படுத்துவேன், விடுதலை செய்வேன்" என்று சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. "குழுவை வளர்ப்போம், அதற்காக உன்னைத் தியாகம் பண்ணு" என்று எக்குழுவும் கோருவதில்லை. ஆனால் அதில் இணைந்தபின் அது "உன்னைத் தியாகம் செய்" என்று கோருகிறது. அவனது மேம்பாட்டை மறுத்து, அதைக் குற்றமாக்குகிறது; அவனது சுதந்திரத்தைப் பறித்து, அதை ஒழுங்கீனமாக்குகிறது.

இந்தப் பொய்மையைப் புரிந்துகொண்டு தனியாக நிற்க ஆரம்பத்திலேயே பழகுவது நல்லது. உள்ளே போய் மாட்டிக் கொண்டு பழகி வெளிவர இயலாமல் தவிப்பவர்கள் ஏராளம். இது ஒரு மனிதக் கண்டுபிடிப்பு என்பதால் இது மனிதனின் தன்னியல்பான பலவீனம் அல்ல. மனிதன் தன்னியல்பாகத் தனியாகவே சிந்தித்து தனக்காகவே முடிவுகளை எடுக்கிறான். குழுவுக்குள் இயங்கவே அவனுக்குப் பயிற்சி தேவை. அப்பயிற்சி இல்லாவிட்டாலே அவன் தன்னிலையில் உருப்படியாக இருப்பான். பரஸ்பரம் பாராட்டுவது, பொய் சொல்வது, அற்ப அனுகூலங்களைத் தாண்டி குழுவுக்குள் ஒன்றுமில்லை என்பதை அவன் புரிந்துகொண்டால் போதும். குழுவுடன் இருக்கையில் பல ஆயிரம் பேர்களின் பகுதியாக, பேராற்றலின் துளியாக இருப்பதாக உணர்வது ஒரு பிரமை. ஒரு சின்ன குண்டு வெடித்த சப்தம் கேட்டால் அது கலைந்து விடும். எந்த மனிதனும் ஒரு சத்தம் கேட்டால் கை வேறு, கால் வேறு, மூக்கு வேறு, வாய் வேறு எனப் பிரிவதில்லை.

தனிமையைப் பழகுவது, அதை ரசிப்பது, அதை ஏற்பதுதான் முதற்பகுதி. தனித்து யோசித்து முடிவெடுப்பது அடுத்தது. அதைச் செயல்படுத்துவது அடுத்தது. அதுதான் தைரியம், துணிச்சல். அதன்பிறகு யாருடனும் இருக்கலாம், எவ்வளவு அன்பையும் கொட்டலாம். எவ்வளவு பெருங்கூட்டத்திலும் இருக்கலாம். ஆனால் தனியாகத்தான். இதுதான் துணிச்சலின் உச்சக் கட்டம். தனிமையின் நேர்மறையான, சிறப்பான விளக்கம் இதுதான். இது பௌதீகத் தனிமை அல்ல, இது அகத்தனிமை.

அகத்தனிமையே தைரியம்தான். அகத்தனிமை இருந்தால் யார் என்ன சொன்னால், செய்தால் என்ன என்று துணிச்சலாக இருக்கலாம்.

https://www.writerabilash.in/2026/01/blog-post_31.html

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,

1 month 2 weeks ago

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது!

உதாரணமா பார்த்தீங்க என்றால்,

* ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால்

* டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால்

* எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால்

* கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால்

* கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால்

*யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால்

தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால்

*செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா

* அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா

என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !!

இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!!

ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!!

#அழகியதொருவாழ்வு

முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....

கள்ளத்தீனி - T. கோபிசங்கர்

1 month 3 weeks ago

கள்ளத்தீனி

ரெண்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகம் எண்டு நெக்கிறன் “பாடசாலை முடிந்து வீடு வந்த பாலாவையும் தங்கையையும் அம்மா கை கால் அலம்பிவிட்டு சாப்பிட அழைத்தார், “அம்மா முழுவதும் சாப்பிட்டால் என்ன தருவீர்கள்” எண்ட பாலாவின் கேள்விக்கு “ ஒவ்வொரு வாழைப்பழம் தருவேன்” எண்டு அம்மா பதில் சொன்னார்”, எண்டு வாசிச்சது மனசில பதிய, நானும் சாப்பிட்டாப்பிறகு என்ன இருக்கெண்டும் எண்ட ஆராய்ச்சியோட தான் சாப்பிடவே தொடங்கிறனான்.

சின்னனில சாப்பாடு எப்பவுமே பிரச்சினையாத்தான் இருந்திச்சுது. சோத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கிற கறிகளை தேடிக் கஸ்டப்பட்டு அடைஞ்சிட்டு, மிச்சச் சோத்தை குளம்போ , சொதியோ இல்லாட்டி ரசத்தையோ சேத்து விழுங்கீட்டூ , நான் உண்ட களையில அம்மா படுக்க, extra சாப்பாட்டுக்கு அவ ஏதும் ஒளிச்சு வைச்சிருக்கிறாவோ எண்டு கண் ஆராயத் தொடங்கும். பூனை போனாலே எழும்பிற அம்மா நான் போய் தேடித் திரியிறது தெரிஞ்சிருக்கும் எண்டு நம்பிறன் , ஆனாலும் தெரியாத மாதிரி இருப்பா ஏனெண்டா சோத்தைச் சாப்பிடாதவன் உதையாவது சாப்பிடட்டும் எண்டு.

எங்களுக்குப் பின்னேரத் தேத்தண்ணி வாழ்க்கையில முக்கியமானது. வெள்ளைக்காரனுக்கு dinner table மாதிரித் தான் எங்களுக்கு பின்னேரத் தேத்தண்ணி. (தே)தண்ணியைப் போட்டபடி தான் பல குடும்பத்தில சில முடிவுகளை எடுக்கிறது. காலமைச்சாப்பாடு இருந்தாலும் சாப்பிட நேரம் இருக்காது, அதை ஓட ஓட விழுங்கிறதாலேம், மத்தியானச் சாப்பாடு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரம் சாப்பிடறதாலம், இரவுச் சாப்பாட்டு மத்தியானம் மிஞ்சிறதுக்கேத்த மாதிரித் தான் இருக்கும் எண்டதாலேம், தேத்தண்ணிக்குத் தான் எல்லாரும் ஒண்டா இருக்கிறது. என்ன “தேத்தண்ணியைக் குடிச்சிட்டு விளையாடப் போ” எண்டு அம்மா சொன்ன காலம் மாறி இப்ப , தேத்தண்ணி வேணாம் கிளாசுக்குப் போ எண்ட நிலமை வந்திட்டுது.

கூப்பிட்ட உடன போகாட்டி தேத்தண்ணி ஆறிப் போடும் எண்டதாலேம், அம்மா எதையாவது கடிக்கத் தருவா எண்ட நம்பிக்கையாலேம், நாலு மணியெண்டா வெளி விறாந்தையில எல்லாரும் இருப்பம். சாப்பாடு எல்லாம் வீட்டுக்குள்ள இல்லாட்டி குசினீலயோ வைச்சு முடிச்சிடுவிம். அதுகும், காலமை ஓடிக்கொண்டேயும் மத்தியானம் மேசையில நிண்டபடியும், இரவு அடுப்படீல குந்தியும் தான் சாப்பிடிறது. ஆனாத் தேத்தண்ணி நேரம் ஆர் வந்தாலும் குடுக்கிறதுக்கோ தெரியேல்லை எல்லாரும் வெளி விறாந்தையில தான் இருக்கிறது.

மகேந்திரன் மாஸ்டர் வீட்டு மாடு கண்டு போட்டால் பால் தேத்தண்ணி, அதில்லாட்டி lakspray இருந்தா மாப்போட்ட தேத்தண்ணி , ரெண்டுமில்லாட்டிப் பிளேன்ரீ. மாசத் தொடக்கத்தில முதல் சீனி போட்டும், பிறகு சீனியை நக்கியும் பிறகு குட்டித்துண்டுப் பனங்கட்டியும் வர விளங்கும் இது மாசக்கடைசி எண்டு. பனங்கட்டியைப் பல்லால நருவி சூட்டோட தாற மூக்குப்பேணி பிளேன்ரீயைக் குடிச்சிட்டு கடைசி வாய்க்கு ஒட்டின விரலைச் சூப்ப, அது இன்னும் இனிக்கும்.

மாதச் சாமாங்கள் “பாய் கடை”(பிரியாணி விக்கிறேல்லை) வாங்கேக்க வாங்கிற Marie biscuit இல்லாட்டி பிறவுன் கலரில பூ மாதிரி டிசைனில வாற மஞ்சி பிஸ்கட்டை வாங்கி, பழைய Laxpray ரின்னுக்க போட்டு ஒளிச்சு வைச்சு, வாங்கின ஒரு கிலோவை எல்லாருக்கும் பங்கிட்டு அந்த மாசம் முழுக்க குடுக்கோணும். பங்கீட்டுப் பிரச்சினையால பாதிக்கப்பட்டு ஒண்டு மட்டும் கிடைக்கேக்க அப்பப்ப களவா இன்னும் ஒண்டு ரெண்டெண்டு எடுத்தாத்தாதன் வயிறு தாக்குப்பிடிக்கும்.

ஏனோ தெரியேல்லை எனக்கெண்டா கூடப் பசிக்கிறது பின்னேரத்தில தான். காலமை சாப்பாடு lunch box இல கொண்டாறது ஒருத்தனுக்கே காணாது ஆனாலும் பத்து மணிக்குத் திறக்க பதினைஞ்சு கை உள்ள வைக்க கடைசீல lunch boxஐக் கழுவாமலே உள்ள வைக்கலாம். மத்தியானம் வெய்யிலுக்கால வந்தா சோறு சத்திராதி, இரவு புட்டுத்தான் தேசிய உணவு . ஏதோ கொஞ்சமா இருந்தாலும் விதம் விதமா கிடைக்கிறது பின்னேரம் தான். அதுகும் வரியத்துக்கு ஒருக்காத் தான் குகானந்தபவானில வடை வாங்கிறது மற்றும் படி லோக்கல் தயாரிப்புத் தான். பின்னேர tiffin நாங்கள் சாப்பிடிறேல்லை, கொறிக்கிறது. வாயை தொடந்து அசைக்கிற மாதிரித் தான் சாப்பாடு தேவைப்படும்.

வீட்டையோ இல்லாட்டி சொந்தத்திலயோ விசேசங்கள் வந்தால் தான் பலகாரம் இல்லாட்டி அதுகும் இல்லை. நாலும் வீட்டை கடுவன் குட்டி எண்டதால சாமத்தியங்களும் இல்லை ஆனாலும் இந்தப் பின்னேர “ Tiffin”, விதம் விதமா சீசனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது கிடைக்கும்.

வாங்கினது , செஞ்சு ஒளிச்சு வைச்சது, ஒண்டும் இல்லாட்டி அடிப்படையா தேங்காய்பூவையும் சீனியையும் வைச்சு எதை சேத்தாலும் ஒரு தீனி ரெடி . ஆனால் என்ன தேத்தண்ணிக்கு சீனி “கட்”.

புழுங்கல் அவிச்சிக்குத்தி வாற புழுங்கல் அரிசியைப் வறுத்து தேங்காய்ப்பூ சீனி சேத்துக் குழைக்க பொங்கிப் பொரிஞ்ச அரிசியைக் கடிக்க வாற பெரிய சத்தம் .அதோட சீனியும் அரைபட வாற சின்னச் சத்தம் , இது ரெண்டொடேம் தேங்காய்பூவும் அரைபட வாய்குள்ள ஒரு mill ஓட, கடைவாயால தேங்காய்ப்பால் வடிய அதையும் துடைச்சு நக்கிச் சாப்பிட, …..அது சாப்பிட்டவனுக்கு மட்டும் தான் தெரியும் . இல்லாட்டி அரிசிமா இடிச்சிட்டு வறுத்து மாவை அரிக்கேக்க வாற அரிசிமாக் கட்டைக்கும் சீனியும் தேங்காய்ப்பூவும் சேத்தாலும் அமரக்களம் தான் என்ன விழுங்கேக்க விக்கும்.

Barbecue நாங்களும் காலம் காலமாச் செய்யிற நாங்கள் என்ன மச்சத்துக்கில்லை மரக்கறிக்குத் தான். உள்ளி, ராசவள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சோளம், கஜூ, பிலாக்கொட்டை எண்டு எல்லாத்தையும் மத்தியானம் சமைச்ச அடுப்பில சுட்டுச் சாப்பிடிறனாங்கள்.

பங்குனி எண்டால் ராசவள்ளிக் கிழங்கை சமைச்சு அடுப்புத் தணலில போட்டிட்டு சுட்டெடுத்துத் தோலை உரிச்சிட்டு திருவலையில திருவீட்டு அதுக்கும் தேங்காய்ப்பூவும் சீனியும் சேத்தா அதுகும் அல்வா தான்.

சித்திரையில அம்மா புளி வாங்கி பினைஞ்செடுத்திட்டு எறியிற புளியங்கொட்டையை வறுத்துக் கோதுடைச்சு சாப்பிடிறது. ஒண்டு காணும் ஒரு நாள் முழுக்க பல்லுக்க வைச்சு அராவ பல்லுக்கும் புளிக்கும் சண்டை நடந்து எப்பிடியும் பல்லு வெண்டிடும்.

ஆவணீல நல்லூரோட தான வத்தாளங் கிழங்கு வரும். என்ன பிரச்சினை கூடி உருளைக்கிழங்கு இல்லாமல் போக அது கள்ளத்தீனீயாய் இருந்து கறியாப் போட்டுது.

மாரீ காலத்தில ஒண்டும் இல்லாட்டி புழுக்கொடியலும் முட்டுத் தேங்காய்ச் சொட்டும் பல்லுக்கும் வாய்க்கும் நல்ல வேலை தரும். அதோட புழுக்கொடியல் மாவும் தேங்காய்ப்பூ பனங்கட்டியும் எப்பவாவாது கிடைக்கும்.

என்னத்தை தான் எப்பிடிச் சாப்பிட்டாலும் நொறுக்குத்தீனியை தேடித் தேடிச் சாப்பிடிறது ஒரு சந்தோசம். எல்லா நேரத்திலேம் களவெடுத்துச் சாப்பிடாட்டியும் சாப்பாட்டுக்கு கள்ளப் பட்டடிட்டு , கொறிச்சித் திண்ண இஸ்டப்பட்டுச் சாப்படிறதாலயோ தெரியேல்லை அதுக்கு கள்ளத்தீனீ எண்டு பேர் வந்தது. பேர் எப்பிடி இருந்தாலும் இப்பத்த சாப்பாட்டிலும் பாக்க இந்தக் கள்ளத்தீனி நல்ல தீனி தான்.

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்

உயிரினை பறிக்கும் அதிகுளிர்!!

1 month 3 weeks ago

உயிரினை பறிக்கும் அதிகுளிர்!!

நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 22, 2026 1 Minute

21/01/2026 அன்று இலங்கையின் வரலாற்றில்  மிகக் குறைந்த வெப்பநிலை 3.5°C ஆக நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை பண்டாரவளையில் 11.5°C, பதுளையில் 15.2°C, அனுராதபுரத்தில் 18.6°C, யாழ்ப்பாணத்தில் 19.6 °C என வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது அது மக்களுக்கு உயிராபத்தினை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது எவ்வாறு உயிராபத்து நிகழுகின்றது என்பதை இப்பதிவு விளக்குகின்றது.

aa7ca5bc-f636-4e0d-97b3-6c07526c1332.jpg

சுற்றுச்சூழல் வெப்பநிலை மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நமது உடல் சீராக இயங்குவதற்கும் உயிர்வாழ்வதற்கும் இதுவே அடிப்படை காரணியாகும். மனிதன் போன்ற பாலூட்டிகள் ஓர் சீர்த்திட வெப்பநிலைக்கு உரியவை. இதன் காரணமாக மனித உடல் எப்போதும் உடல்  வெப்பநிலையை சுமார் 37°C (98.6°F) என்ற அளவில் நிலையாக வைத்திருக்க முயலும் . சூழல் வெப்பநிலை குறையும் பொழுது ஆரம்ப நிலையில் உடல் வெப்பநிலை மாறாமல் இருக்கும் ஆனால் சூழல் வெப்பநிலை குறித்த நிலையினை விட குறையும் பொழுது உடல் வெப்பநிலையும் குறையும் அதன் காரணமாக உடல் மாற்றங்கள் ஏற்பட்டு இறுதியாக இறப்பு ஏற்படும்.

உடல் வெப்பக்குறைவு (Hypothermia) ஏற்படுவதற்கு சுற்றுப்புற வெப்பநிலை உறைநிலைக்கு (0°C) கீழ் இருக்க வேண்டும் என்பதில்லை. 15°C (60°F) க்கும் குறைவான சுற்றுப்புற வெப்பநிலையிலேயே பாதிப்புகள் தொடங்கலாம். மேலும் உடல் வெப்பநிலை குறைவினால் ஏற்படும் மரணங்கள் கட்டாயம் பனி விழும் பிரதேசங்களில் தான் நடக்கும் என்றில்லை.

ஆபத்தான சுற்று சூழல்  வெப்பநிலை

  • 10°C முதல் 15°C (50°F – 60°F): இது மிதமான குளிர் என்றாலும், மழையில் நனைந்தாலோ அல்லது பலத்த காற்று வீசினாலோ உடல் வெப்பம் வேகமாக குறையும்.

  • 0°C முதல் 5°C (32°F – 41°F): பெரும்பாலான நகரப்புற உயிரிழப்புகள் இந்த வெப்பநிலை வரம்பில்தான் நிகழ்கின்றன. நீண்ட நேரம் வெளியில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது.

  • -15°C (5°F) க்குக் கீழே: இந்த வெப்பநிலையில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இங்கு சருமம் நேரடியாகக் காற்றில் பட்டால் சில நிமிடங்களிலேயே உறைபனி காயம் (Frostbite) ஏற்படும்.

நீர் காற்றை விட 25 மடங்கு வேகமாக வெப்பத்தைக் கடத்தும் எனவே ஆபத்தான சுற்று சூழல் வெப்பநிலை நிலவும் காலங்களில் குளிர் நீரில் நீராடுவது அல்லது மழையில் நனைவது உடலுக்கு தீங்கானதாக மாறலாம். சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருந்தாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் உடல் வெப்பம் மிக விரைவாக வெளியேறும். உதாரணமாக, சுற்று சூழல் வெப்பநிலை 5°Cஆக இருந்து, காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ ஆக இருந்தால், உங்கள் உடல் உணரக்கூடிய வெப்பநிலை  -7°C ஆக இருக்கும்.

oip.jpg?w=474

குறைந்த சூழல் வெப்பநிலைக்கு மனித உடல் வெளிக்காட்டிடப்படும் பொழுது ஏற்படும் மாற்றங்கள்

1. உடனடி உடல் எதிர்வினைகள்(Acute Responses)

உடல் குளிர்ச்சியடையும் போது, வெப்பத்தைத் தக்கவைக்க இரண்டு முக்கிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கிறது:

  • இரத்த நாளச் சுருக்கம் (Vasoconstriction): தோலின் மேற்புறம் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குவதால், உட்புற உறுப்புகளுக்கு (Core) இரத்த ஓட்டம் திருப்பி விடப்படுகிறது. இதனால் கை, கால் விரல்கள் மரத்துப்போகும்.

  • நடுக்கம் (Shivering): மூளை தசைநார்களை வேகமாகச் சுருங்கச் செய்வதன் மூலம் வெப்பத்தை உருவாக்குகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. 

2. முக்கியமான உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள்

  • இதயம்: இரத்த நாளங்கள் சுருங்குவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய அதிக சிரமப்பட வேண்டியிருக்கும், இது மாரடைப்பு (Heart Attack) மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

  • சுவாசம்: குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று சுவாசப் பாதையில் எரிச்சலை உண்டாக்கி வீக்கத்தை (Inflammation) ஏற்படுத்தும். இது ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும்.

  • மூளை: உடல் வெப்பநிலை 35°C (95°F) க்கும் கீழே குறையும் போது, சிந்தனைத் திறன் மந்தமாகும், குழப்பம் ஏற்படும் மற்றும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். 

3. குளிரால் ஏற்படும் நோய்கள்(Cold-Related Illnesses)

  • பனிப்புண் (Frostbite): மிகக் கடுமையான குளிரால் தோலின் திசுக்கள் உறைந்து இறந்துவிடும் நிலை. இது பெரும்பாலும் மூக்கு, காது மற்றும் விரல் நுனிகளில் ஏற்படும்.

  • ட்ரெஞ்ச் ஃபுட் (Trench Foot): நீண்ட நேரம் ஈரமான மற்றும் குளிர்ந்த நிலையில் கால்கள் இருக்கும்போது திசுக்கள் அழுகத் தொடங்கும் நிலை. 

உடலின் வெப்பநிலை குறைவடையும் பொழுது முதலில் பாதிக்கப்படும் அங்கம் மூளை ஆகும். இதன் காரணமாக குளிரினை எதிர்கொள்பவர். அசாதாரண நடத்தைகளை காண்பிப்பார் (Abnormal Behavioral Signs) உதாரணமாக

  • முரண்பாடான ஆடை களைதல் (Paradoxical Undressing): அதிக குளிர் நிலவிலும், மரணத்திற்கு முன் ஏற்படும் மாய வெப்ப உணர்வால் பாதிக்கப்பட்டவர் தன் ஆடைகளைத் தானாகவே கழற்றி எறிந்துவிடுவார்.

  • பதுங்கும் நடத்தை (Terminal Burrowing): ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவது போல, கட்டிலுக்கு அடியிலோ அல்லது குறுகிய இடங்களிலோ உடலை மறைத்துக்கொண்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்படலாம்.

சூழல் வெப்பநிலைக் குறைவினால் உயிராபத்தினை எதிர்நோக்கும் நபர்கள்

பின்வரும் நபர்கள் சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது உயிராபத்தினை எதிர்நோக்குவார்கள். இவர்கள் அதிக கவனத்தினை எடுக்க வேண்டும்.

  1. முதியவர்கள்: வயதானவர்களுக்குக் குளிரை உணரும் திறன் (Nerve sensitivity) குறைவாக இருக்கும். மேலும், உடலில் வெப்பத்தை உருவாக்கும் வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolism) குறைவாக இருப்பதாலும், போதிய உடல் கொழுப்பு இல்லாததாலும் இவர்கள் விரைவில் பாதிக்கப்படுகிறார்கள்.

  2. குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்: இவர்களின் உடல் பரப்பளவு எடையை விட அதிகமாக இருப்பதால், வெப்பம் மிக வேகமாக வெளியேறும். இவர்களுக்கு நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்கும் திறன் குறைவாக இருக்கும்.

  3. மதுபானம் அருந்துபவர்கள்: இது மிக முக்கியமான ஆபத்துக் காரணியாகும். மது ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதால் (Vasodilation), ஒருவருக்கு உடல் சூடாக இருப்பது போன்ற மாய உணர்வு ஏற்படும், ஆனால் உண்மையில் உடலின் முக்கிய வெப்பம் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கும்.

  4. சில மருந்துகள் பாவிப்பவர்கள்: சில வகை மனநல மருந்துகள் (Antidepressants, Antipsychotics) மற்றும் தூக்க மாத்திரைகள் உடலின் வெப்பநிலை ஒழுங்குபடுத்தும் திறனைப் பாதிக்கும்.

  5. தைராய்டுகுறைபாடு(Hypothyroidism) உள்ளவர்கள்: தைராய்டு ஹார்மோன் குறைவாக இருந்தால் உடல் வெப்பம் உருவாவது குறையும்.

  6. நாள்பட்டநோய்கள் உள்ளவர்கள்: நீரிழிவு (Diabetes), இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் (Stroke) போன்றவை ரத்த ஓட்டத்தைப் பாதித்து உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதைக் கடினமாக்குகின்றன.

  7. மனநலப் பாதிப்புகள்: நினைவாற்றல் குறைபாடு (Dementia) உள்ளவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணியாமல் வெளியே செல்வதால் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.

  8.  சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகள்

  • வீடற்ற நிலை (Homelessness): போதிய தங்குமிடம் மற்றும் போர்வைகள் இல்லாத நிலையில் வெளிப்புறக் குளிரில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது.

  • நீரில் மூழ்குதல்: காற்றை விட நீரில் உடல் வெப்பம் 25 மடங்கு வேகமாக வெளியேறும். எனவே, குளிர்ந்த நீரில் விழுவது உடனடி மரணத்தை விளைவிக்கும்.

  • சமூகத் தனிமை: தனியாக வசிக்கும் முதியவர்கள், உதவிக்கு ஆள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

மரணம் எவ்வாறு நிகழும் (Mechanism of Death)

உடல் வெப்பக்குறைவினால் (Hypothermia) மரணம் ஏற்படுவதற்கு பின்னால் உள்ள உடலியல் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. உடல் வெப்பநிலை குறையும் போது, உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கின்றன. அதன் நிலைகள் பின்வருமாறு:

1. அனுசேபச்சிதைவு  (Metabolic Breakdown)

உடல் வெப்பநிலை 35°C (95°F) க்குக் கீழே குறையும் போது, உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க முயல்கிறது. ஆனால் வெப்பநிலை 30°C (86°F) க்குக் கீழ் செல்லும் போது, இந்த அனுசேப செயல்பாடுகள் நின்றுவிடுகின்றன. கலங்கள் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாமல் போவதால், உறுப்புகள் செயலிழக்கத் தொடங்குகின்றன.

2. இதயச் செயலிழப்பு (Cardiac Failure) – மிக முக்கியக் காரணம்

குளிர் அதிகரிக்கும் போது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன:

  • இரத்த அடர்த்தி: குளிர்ச்சியால் இரத்தம் தடிமனாகிறது (Hemoconcentration), இதனால் இதயத்தால் இரத்தத்தை அழுத்தித் தள்ள முடிவதில்லை.

  • இதயத் துடிப்பு மாற்றம் (Arrhythmia): வெப்பநிலை 28°C (82°F) க்குக் குறையும் போது, இதயத் துடிப்பு சீரற்றதாகிறது (Atrial/Ventricular Fibrillation). இறுதியில் இதயம் துடிப்பதை நிறுத்திவிடுகிறது.

3. சுவாசச் செயலிழப்பு (Respiratory Depression)

ஆரம்பத்தில் குளிர் காரணமாக சுவாசம் வேகமாக இருக்கும், ஆனால் வெப்பநிலை குறையக் குறைய மூளையில் உள்ள சுவாசக் கட்டுப்பாட்டு மையம் (Respiratory center) மந்தமடைகிறது. சுவாசம் மிகவும் மெதுவாகி, இறுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் (Hypoxia) மரணம் நிகழ்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

உடல் வெப்பக்குறைவு காரணமாக ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க பின்வரும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:

  • உடல் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்க தலை, கழுத்து மற்றும் கைகளை முழுமையாக மூடவும். தலை மற்றும் கழுத்துப் பகுதியை மூடி வைப்பதும் அவசியம். முக்கியமாக கழுத்து பகுதியினை மூடி வைக்க வேண்டும் ஏனெனில் அப்பகுதியில் தோலிற்கு கீழாக பாரிய இரத்த குழாய்கள் காணப்படுவதினால் வெப்ப இழப்பு இலகுவாக நடைபெறும் அதனை தடுப்பதற்காகவே ஆகும்

  •  கடும் குளிரில் கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கவும். இதனால் ஏற்படும் வியர்வை ஆடைகளை நனைத்து, உடல் வெப்பத்தை விரைவாகக் குறைத்துவிடும்.

  • ஒரே கனமான ஆடைக்கு பதிலாக, பல அடுக்குகளாக தளர்வான ஆடைகளை அணியுங்கள். கம்பளி (Wool) அல்லது பாலியஸ்டர் துணிகள் உடல் வெப்பத்தைத் தக்கவைக்க உதவும்.

  • ஆடைகள் நனைந்தால் உடனடியாக அவற்றை மாற்றிவிடவும். ஈரமான ஆடை உடல் வெப்பத்தை 25 மடங்கு வேகமாக கடத்திவிடும்.

  • உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவை. எனவே, அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளுங்கள்.

  • மதுவைத் தவிர்க்கவும் ஏனெனில் மது அருந்துவது தற்காலிகமாக வெப்பமாகத் தெரிந்தாலும், அது உண்மையில் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடல் வெப்பத்தை மிக வேகமாக வெளியேற்றிவிடும்.

  • போதிய அளவு தண்ணீர் மற்றும் சூடான பானங்களை அருந்துங்கள்.

நன்றி

Dr. கனகசபாபதி வாசுதேவா

MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine)

உயிரினை பறிக்கும் அதிகுளிர்!!

Checked
Fri, 03/20/2026 - 19:44
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed