எங்கள் மண்

யாழ்ப்பாணத்து வேலி.

2 weeks ago
May be an image of outdoors and tree
 
யாழ்ப்பாணத்து வேலி
********************
இந்த வேலிகளை பார்க்கையில் பலருக்கும் பல நினைப்புகள் வந்து போகும்.
இந்த வேலிகளுக்கு நிறைய வரலாறுகள் உண்டு. நிறைய விடயங்களுக்கு இந்த வேலிகளே தூதாகவும் ஏன் சாட்சியாகவும் கூட இருந்துள்ளது. சில விடயங்களுக்கு இந்த வேலிகளே குறியீடாகவும் இருக்கின்றன. எல்லாத்துக்கும் மேலாக இந்த வேலிகளால் சண்டைகள் ஏற்படாத வீடுகளே இல்லை எனலாம்.
 
வேலி உயர்த்திக் கட்டிய வீடுகளில் குமர்கள் உண்டு என்பதும் சீற் உயர்த்தி சைக்கிள் பெடியள் அடிக்கடி வந்து போனால் மறுநாளே ஒரு அடுக்கு கிடுகு உயர்வதும் யாழ்ப்பாண வேலிகளுக்குள்ள சிறப்பு அடையாளமாகும்.
 
இந்த வேலிகளில் பலவிதமான வேலிகள் உண்டு. கிடுகு வேலி, மட்டை வேலி, ஓலை வேலி, தகரவேலி,கம்பி வேலி, அலம்பில் வேலி, தூண் நிறுத்திய முள்க்கம்பி வேலி போன்றவை இதில் முக்கியமானவையாகும்.
 
இதில் கிடுகு வேலிகள் பின்னப்பட்ட தென்னோலைகளால் அடைக்கப்படும். ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி குத்தூசியால் கயிறு கொண்டு கட்டி இவ்வேலி அமைக்கப்படும். இது கொஞ்சம் செலவு குறைவு பாவனை காலமும் குறைவு. அடுத்து பனை ஓலை வேலிகள், இந்த பனை ஓலை வேலிகள் மிதித்து நேராக்கப்பட்ட்ட பனையோலைகளை குறுக்காக சரிவாக வைத்து அடைக்கும் முறை, இதன் ஆயுள்காலம் கிடுகு வேலியின் ஆயுட்காலத்தைவிட அதிகமானாலும் யாழ்ப்பாணத்தார் அதிகம் விரும்புவது என்னவோ கிடுகு வேலிகளைத்தான். அடுத்து மட்டை வேலிகள் இவை மூரி வேலிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மூரி வேலிகள் பனையோலை நீக்கப்பட்ட மட்டைகளை ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து அடுக்கி கம்பியால் வரித்துக்கட்டப்படும். இது நீண்ட கால ஆயுளைக்கொண்டது. செலவு கொஞ்சம் அதிகமானது. அந்தநாட்களில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களின் வேலிகளே மட்டைவேலியாக வரியப்படும். இந்த மட்டை வேலிகளின் மீது சில அடுக்கு கிடுகுகளால் வரிந்துவிட்டால் கொள்ளை அழகாக இருக்கும். இந்த மட்டை வேலிகளின் கீழ்ப்பகுதியை கறையான் அரிக்காதவாறு கழிவு எண்ணையால் வர்ணம்போல் தீட்டிவிடுவோரும் உண்டு.
 
இந்த வேலிகளில் யாழ்ப்பாணத்து வேலிகள் எப்போதுமே தனி அழகுதான். பிரதேசவாதம் என்று ஆரன் கிழம்பி வந்தாலும் அதுதான் உண்மையும், அதற்கு அந்தக் காணிகளின் அளவுகளே முக்கிய காரணம். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் காணிகள் இரண்டு முதல் ஆகக்கூடியது ஐந்து பரப்பு வரைதான் இருக்கும். அப்படியான அளவைக்கொண்ட காணிகளை அச்சறுக்கையான அழகான வேலிகளை அமைத்து பராமரிப்பது சுலபம்.
 
இந்த வேலி அடைப்புக்கும் சில விதிமுறைகள் உண்டு. இரண்டு காணிகளுக்கு நடுவேயுள்ள வேலியை அடைக்கும்போது அரைவாசி வேலியை ஒரு காணிக்காரரும் மறுபாதி காணியை ஒரு காணிக்காரருமாக அடைப்பார்கள். அப்படி அடைக்கப்படும் போது அரைவாசி வேலி ஒருகாணியின் உட்புறமாயும் மறுபாதி வேலி வெளிப்புறமாயும் இருக்கும்.
 
அனேகமான யாழ்ப்பாணத்து வேலிகளை கிளுவங் கதியால்களே அலங்கரித்து இருக்கும். முன்னர் பூவரசு, வாதராணி, முள்முருங்கை, சீமையில் கிளுவை போன்றவை அதிகளவில் இடம்பிடித்திருந்தன. இந்த வாதராணி இலை புளியம் இலை சாயலில் இருக்கும் அந்த இலை மருத்துவ குணம் மிக்கதென்று அம்மா அடிக்கடி அதில் வறை வறுப்பா. பூவரசும் வாதராணியும் விரைவாக மொத்தித்துவிடும், முள்முருங்கை மற்றும் பூவரசில் மயிர்க்கொட்டிகளின் தொல்லை என்பதாலும் காலப்போக்கில் அவை வெகுவாக குறைவடைந்துவிட்டன. இந்த கிளுவை நீண்டகாலத்துக்கு சிம்ரன் போல இருக்கும் என்பதால் பிற்காலத்தில் கிளுவை முற்றுமுழுதாக ஆக்கிரமித்துக் கொண்டது. எல்லைகளை நிர்ணயிக்கும் பகுதிகளில் தொடர்ச்சியாக பூவரசுகளே நிலைத்திருந்தன.
 
புகையிலை பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் ஊர்களின் வேலிகளில் அதிகளவு பூவரச மரங்கள் இருந்தன. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் இந்த பூவரசங் கிளைகள் வெட்டப்பட்டு தோட்டக்காணிகளில் குழைகள் பசளைக்காக தாழ்க்கப்படும். பின்னர் புகையிலை நட்டு வளர்ந்து வெட்டிய பின் அந்த குழைகள் உக்க மிஞ்சிக் கிடக்கும் தடிகள் கிழறி எடுக்கப்படும். அப்பம்மா வீட்டடியில் இலைகள் வெட்டிய பின் சாற்றிக் கிடந்த பூவரசந் தடிகளால் அருளானந்தத்தார் இந்திய இராணுவத்தால் நையப்புடைக்கப்பட்டது இன்னமும் கண்களில் நிழலாடுகின்றது.
 
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்கள் பகுதிகளில் இந்த வேலி அடைத்தல் காலம் வரும்போது எமக்கெல்லாம் கொண்டாட்டமாயிருக்கும். நாங்களும் பங்காளர்களாக இருப்போம். அனேகமாக கூலிக்கு ஆள்ப்பிடிப்பதெல்லாம் கிடையாது. எங்கள் பகுதியில் பெண்கள் இணைந்துதான் வேலி அடைப்பார்கள். வேலிகளை பார்த்து சரிந்த கதியால்களை நேராக்கி புதிய கதியால் இட வேண்டிய இடங்களுக்கு புதிய கதியாலிட்டு வேலி அடைக்கப்படும். அடைத்த வேலிகளில் சிறு பொட்டு அமைத்து குறுக்குப்பாதைகள் அமைக்கப்படும். எங்கள் பிராந்தியத்தவர்கள் சிவகாமி அம்மன் கோயிலுக்கு விரைவாகப் போவதற்கான பொட்டு எங்கள் வேலியில் அமைந்திருந்தது. நாம் சிறுவர்களாக இருந்தபோது சில அப்புமார் பொட்டுக்குள் குனிந்து போவதை பின்னுக்கு நின்று வாய்பிழந்து பார்த்து சிரிப்பம். பொட்டுக்குள் பூந்த புழுக்கொட்டி துரையப்பரின் வாயிலிருந்து புழுக்கொட்டியதைப்போல் விழுந்த செந்தமிழ் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்...
 
சரி விடயத்துக்கு வாறன் என்னவோ சொல்ல வெளிக்கிட்டு கடைசியா இவ்வளவு நீட்டி முழங்கீட்டன். இந்த வேலிகள் சார்ந்து பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கும்.
 
எனக்கு மட்டைவேலிகளை கண்டா தடியாலை இழுத்துக்கொண்டு ஓடுவதென்றா கொள்ளை விருப்பம். தட தட என்ற அந்த சத்தத்துக்காக திரும்ப திரும்ப என்று பல தரம் இழுப்பேன். பதினொரு வயது வரை ஊரிலை இருந்த உனக்கு வேலிதாண்டின காதல் கதையோ இருக்குமென்று நீங்கள் முனுமுனுப்பது கேக்குது.
 
பதினொரு வயதில் ஊரை விட்டு சுவிசுக்கு புலம்பெயர்ந்த நான் என் அஞ்ஞாதவாசம் முடித்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் என் 23 வது வயதில் ஊரில் கால்பதித்தபோது பாதைகள் எல்லாம் ஒடுங்கி வேலிகள் வீதியின் நடுப்பகுதிகள் வரை வந்திருந்தை கண்டபோது அதிசயமாக இருந்தது. பூமி சுற்றுவது உண்மைதான் என்பதை உறுதியாய் நம்ப ஆரம்பித்தேன்.
 
அப்படி ஊரில் நின்ற ஒரு நாளில் இரவு ஒன்பது மணியிருக்கும் இணுவில் அங்களப்பாயில் உள்ள அத்தை வீட்டிலிருந்து இருந்து எங்கள் வீட்டுப் பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். தர்மலிங்கத்தாரின் கடைக்கு அருகே இருந்த ஒழுங்கைக்குள் நுழைந்து நடக்க மட்டை வேலியொன்று தென்பட்டது நிலத்தில் ஒரு தடி 80களின் திரைப்படங்களில் வருவதுபோல என் கண்கள் மட்டை வேலியையும் தடியையும் மாறி மாறி பார்த்தது. உருக்கொண்டவன் போல குனிந்து தடியை எடுத்து தட தடவென இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கினேன். அந்த வீட்டு நாய் வேலியையும் தாண்டி குரைத்துக்கொண்டு கலைக்கத் தொடங்கியபோதுதான் சுயநினைவுக்குத் திரும்பினேன். தண்டவாளக் கரை வரை ஓட்டம் தொடர்ந்தது.
 
இப்ப ஊருக்கு போனாலும் மட்டை வேலியை கண்டால் கை துருதுருப்பது தவிர்க்க முடியாதது. கடந்த பயணத்தில் மகளுக்கு சின்ன வயசில் நாங்கள் இப்படித்தான் என்று தடிகொண்டு இழுத்துக்காட்டி என் அவாவை தீர்த்துக்கொண்டேன். அனேகமாக பேரப்பிள்ளையோடு போகும் காலத்திலும் இது தொடரும் போல... அதற்கு வேலியும் இருக்க வேண்டுமே...

புளியமர நிழலில் ஏழு மாணவருடன் துவங்கி 200வது ஆண்டில் நுழையும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி

2 weeks 5 days ago

புளியமர நிழலில் ஏழு மாணவருடன் துவங்கி 200வது ஆண்டில் நுழையும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி 

IMG-20230313-071919.jpg

இலண்டனில் இருந்து ஜோசப் நைட் அடிகளும் அவரது குழாமும் 1818 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் தங்கள் கல்விபபணிகளைத் தொடங்கினர். ஆங்கில மிஷனரிமார்களுள் ஈழத்து யாழ்ப்பாணத்தில் முதல் பாதம் பதித்தவர் வண.ஜோசப் நைட் அடிகளார் ஆவார்.

அன்று விதைத்த விதையே இன்றைய சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 வது வருடம் என்ற நீண்ட நெடிய உயர்ந்த வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்தது. பாரெங்கும் புகழ் பரப்பி, பல கிளைவிட்டு விருட்சமாய் வியாபித்திருக்கும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி 200ஆவது ஆண்டினை தற்போது பூர்த்தி செய்கிறது.

இலங்கையின் கல்வி மறுமலர்ச்சியில் ஆங்கில மிஷனரிமார்களின் வருகை அக்காலத்தில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக ஒழுக்க விழுமியங்கள், தொழில் நுட்ப அறிவு, ஆங்கிலக் கல்வி என்பன மேலோங்கிக் காணப்பட்டன.

இன்று யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி
உலகெங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வண்ணமாய், அக்கல்லூரி மாணவர்களின் திறமை போற்றப்படுகிறது. இக்கல்லூரியின் ஆரம்ப வரலாற்றை சற்று பின்நோக்கிப் பார்த்தால், இப்பாடசாலையின் பரிணாம வளர்ச்சியை அறியலாம்.

ஏழு மாணவருடன் முதல் பள்ளி:

1823 இல் தன் வீட்டிலேயே ஏழு மாணவர்களுடன் சிறந்ததொரு பள்ளியை அமைத்து அம் மாணவர்களுக்கான வாழ்வாங்கு வாழ கல்வியை ஆரம்பித்தார். 1824இல் பதின்மூன்று மாணவர்களையும் 1825இல் முப்பது மாணவர்களையும் கொண்டு இப்பள்ளி வளர்ச்சி பெற்றது.

இதன்பின் 1824 இல் ஜோசப் நைற் அவர்களிடமிருந்து வண வில்லியம் அட்லி (Rev.William Adley) பொறுப்பேற்றார். இவர் ஒரு திறமையுள்ள ஆங்கில அறிவும் தமிழ் அறிவும் நிறைந்தவராகவும் காணப்பட்டார். 1839 முதல் 1841 வரை D.W.Tailor என்பவர் வில்லியம் அட்லி அவர்களைத் தொடர்ந்து பொறுப்பேற்றார்.

1841 காலப்பகுதியில் பெண்கள் தங்கியிருந்து கற்பதற்காக தனியார் விடுதியாக நல்லூர் ஆங்கில செமினரி மாற்றம் நடந்தது. அவ்வாண்டிலேயே நல்லூர் ஆங்கில செமினரி சுண்டிக்குளிக்கு இடமாற்றம் பெற்று சுண்டிக்குளி செமினரி எனவும் பெயர் மாற்றம் பெற்றது.

புளியமர நிழலில் வகுப்புகள்:

ஆரம்ப நிலையில் வகுப்பறை வசதியின்மையால் ஓங்கி வளர்ந்த புளியமர நிழலிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டன. அக்காலத்தில் Rev.J.T.Johnstone அதிபராகப் பணியேற்றார். அவருடன் இணைந்து John Hensman அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
அவரைத் தொடர்ந்து Rev.Robert William அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுட்பேற்றார். ஆயினும் 1866 இல் கொடிய நோய் காரணமாக அவர் இயற்கை எய்தினார்.
அதன் பின் J.Evarts 1867 – 1878 வரை தலைமை ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.

ராபர்ட் வில்லியம்ஸ் நினைவு மண்டபம்:

1866 ஆம் ஆண்டில் நாட்டைப் பேரழிவிற்குள்ளான காலரா தொற்றுநோய் காரணமாக, ராபர்ட் வில்லியம்ஸ் தனது 8 வயது மகனை இழந்தார். அவரும் காலரா நோயால் பாதிக்கப்பட்டு தீவிர நோய்வாய்ப்பட்டு அக்டோபர் 10, 1866 இல் காலமானார். திரு. ராபர்ட் வில்லியம்ஸ் நோயுற்ற படுக்கையில் மானிப்பாய் கிரீன் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டார்.

இலங்கைத் தீவின் இரண்டாவது பழமையான செய்தித்தாளான மார்னிங் ஸ்டார் மற்றும் முதல் தமிழ் மொழி செய்தித்தாள் உதயதாரகை அவரது மரணச் செய்தியை அப்போது வெளியிட்டன. அவரது அகால மறைவைக் குறிப்பிடுகையில், “ராபர்ட் வில்லியம்ஸ் தனது பூமிக்குரிய கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றி கடவுளின் அருளால் யாழ் மக்கள் மனதில் நுழைந்தார். அவரது மரணம் சுண்டிக்குளி செமினரிக்கு ஒரு பெரிய இழப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவர் நினைவாகவே தற்போது புதிய மண்டபம் 200வது ஆண்டில் திறக்கப்பட உள்ளது.

சிறு விதை பெரு விருட்சமாக :

இத்தகைய கல்விப் பணியாளர்களின் தன்நலமற்ற சேவையாலும் அயராத உழைப்பாலும் விதைக்கப்பட்ட சிறு விதை இன்று பெரு விருட்சமாக ஓங்கி வளர்ந்து பல்லாயிரம் பேருக்கு நிழல் கொடுக்கின்ற ஒரு ஸ்தாபனமாக மிளிர்கின்றது.

இங்கிலாந்து திருச்சபையின் இறுதி மிசனரியாளரும், கல்லூரியின் பதினாறாவது அதிபருமான அருட்திரு ஹென்றி பிற்றோ அடிகளார் கல்லூரியின் அதிபராக இருந்தபோது கல்லூரி மேலும் ஓங்கி வளர்ந்தது.

அருட்திரு ஹென்றி பிற்றோவின் (1920-1940) பின்னர், முதலாவது தேசிய அதிபர் என்னும் அந்தஸ்தினைப் பெற்ற அருட்திரு J.T.அருளானந்தம் (1940-1957), திரு.P.T.Mathai (1957-1959), திரு.A.W. ராஜசேகரம் (1959-1966) திரு.க.பூரணம்பிள்ளை (1967-1976),திரு.சி.இ.ஆனந்தராஜன்(1976-1985) திரு.குணசீலன் (1985-1987), திரு. தனபாலன் (1990-2006), திரு. ஞானப்பொன் ராஜா(2006-2017), தற்போது திரு. துஷிதரன் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி உள்ளனர்.

மகாத்மா காந்தி வருகை :

இக்கல்லூரியிலேயே 1927 நவம்பர் 29இல் இந்திய தேசபிதா மகாத்மா காந்தி கல்லூரிக்கு வருகை தந்து, வில்லியம் மண்டபத்தில் உரையாற்றிய வரலாறும் உண்டு.

ஆயினும் 1945ல் நடைமுறைக்கு வந்த அன்றைய இலவசக் கல்வித் திட்டத்துடன் இணைந்து செயற்படாது தனித்துவமாக வெளியே இருக்க தீர்மானித்தது. மீண்டும் பல்வேறு நோக்கங்களுக்காக 1951ல் இலவச கல்வித் திட்டத்தில் இக் கல்லூரி இணைந்து கொண்டது.

கல்லூரி எதிர்கொண்ட சவால்கள் :

1960ல் அரசு பாடசாலைகளைக் கையகப்படுத்தி பொதுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அதன் பிரகாரம் இக்கல்லூரியையும் அரசாங்கப் பாடசாலையாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்லூரி தன் தனித்துவத்தை இழக்க விரும்புவதைத் தவிர்த்து, தனித்து இயங்க முற்பட்டது.

பல்வேறுபட்ட தியாகங்கள், சோதனைகள், வேதனைகள் போராட்டங்கள்,மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள். நலன் விரும்பிகள் என பல்வேறு பட்டவர்களின் மேலான ஒத்துழைப்பினாலும், பக்கபலத்தினாலும் சென்.ஜோன்ஸ் கல்லூரியைத் தனியார் பாடசாலையாக இயங்குவதற்கு தீரமானிக்கப்பட்டது.

கல்லூரி நிர்வாகத்தை ஆளுகை செய்வதற்கு ஆளுகைக்குழுவும் ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனை சபையும் உருவாக்கப்பட்டது.

அரச உதவிகள் தடைப்பட்டமையினால் கல்லூரி நிர்வாகம் பாரிய நிதிப்பற்றாக் குறையை எதிர்கொண்டது. ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியாது திண்டாடியது. கல்லூரியிலிருந்து வெளியேறினர் சிலர் பாதிவேதனத்தில் பணிபுரிந்தனர் பலர் இலவசமாகவும் பணியாற்றினர்.

பல்வேறு அளப்பெரும் ஆளுமைகளால் வளர்க்கப்பட்ட ‘பரியோவான் கழுகு’ (Johnian Eagle) தன் கூரிய பார்வையுடன் நேரிய இலக்கை நோக்கி உயரப் பறந்து வருகிறது.

– ஐங்கரன் விக்கினேஸ்வர

https://vanakkamlondon.com/stories/2023/03/187748/

"சங்கப் படலை" என்றால் என்ன என்று தெரியுமா?

3 weeks 3 days ago
May be an image of tree and outdoors
 
சங்கப் படலை.

இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு,
மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும்.

இவற்றைத் தாண்டியே வீட்டின் தலைவாசலை (Main Entrance) அடையலாம்.
வீதியிலிருந்து வீட்டுக் காணிக்குள் செல்ல உபயோகிக்கும் வாயிலை (Gate) அங்கே "படலை" என்பார்கள்.
வீதிகளில் செல்லும் வழிப்போக்கர்கள் சற்று ஆற, அமர இருந்து விட்டுச் செல்லும் நோக்கில்,
சில வீடுகளின் வாயில்களின் இரு புறமும் திண்ணைகளும், மேலே கூரையும் அமைக்கப்பட்டிருக்கும்.
இது "சங்கப்படலை" அல்லது "சங்கடப்படலை" எனப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் தென்னோலையில் பின்னிய கிடுகுகள், தடிகள் கொண்டமைக்கப்பட்ட
சங்கப் படலையானது காலப் போக்கில் ஓடுகள், சீமெந்து கொண்டு அமைக்கப்பட்டது.

சங்கப் படலையோடு மண் பானையில் தண்ணீரும், அருகே குவளையையும் வைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
அங்கு நடந்த போரினாலும், பழமையை விட்டுப் புதுமையைத் தேடும் மனோபாவத்தாலும்
இத்தகைய சங்கப்படலைகள் பெரும்பாலும் அழிந்து விட்டன.

இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாகவிருக்கும் சங்கப்படலைகள்
எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகின்றனவோ?

முன்னோர்கள் எவ்வித பலனையும் எதிர்பாராது, மற்றவர்களின் நலன் கருதிச் செய்த
பல விஷயங்களை நாம் தொடராமல் விட்டதோடு, அவர்கள் விட்டுச் சென்றவற்றைக்
கூடப் பாதுகாக்க முடியாதவர்களாக  இருக்கிறோ என்பது அவமானமே !

படம்:
யாழ்ப்பாணத்தில், "அளவெட்டி" என்னும் ஊரிலிருந்து "அம்பனை" என்னும் ஊருக்குப் போகும் வீதியில் சங்கப்படலையுடன் இப்போதும் காட்சியளிக்கும் வீடு.

Sriram Govind

வடமாகாண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும்

4 weeks ago
வடமாகாண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும்
மார்ச் 3, 2023

மோகன் பரன்

10-1.jpg?resize=678%2C509&ssl=1

 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் அன்றாட தேவையின் 40% வீத தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உற்பத்திப் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருந்தது

குறிப்பாக அந்தக்காலத்தில் A9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து புகையிலை, வெங்காயம், மரக்கறிகள், மீன் மற்றும் கடலுணவுப்பொருட்கள் பனையோலைப்பாய், பினாட்டு , மற்றும் பனம்பொருட்கள். காங்கேசன்துறைச் சிமேந்து, வாழைக்குலைகள் என பல்வேறு உற்பத்திப் பண்டங்களை ஏற்றிய 200 க்கு மேற்பட்ட லொறிகள் கொழும்பு மற்றும் தென்னிலங்கையை நோக்கி செல்வதனை அந்தக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருப்பீர்கள் .

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளில் இருந்து செத்தல் மிளகாய், நெல், அரிசி, மற்றும் கடலுணவுப்பொருட்கள் ஏற்றிய பொருட்கள் தென்னிலங்கையை நோக்கிச் சென்றன .

திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து, கடலுணவுப் பொருட்கள், நெல் என்பன லொறிகள் மூலம் சென்றன.

இத்தகைய பொருட்களைச் சந்தைப்படுத்திய வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்மக்கள், மண்ணெண்ணை, பெற்றோல் போன்ற எரிபொருட்கள் மற்றும் கட்டட பொருட்கள் உள்ளிட்ட இதர பொருட்களை தென்னிலங்கையில் இருந்து வரும் போது கொள்வனவு செய்து வாங்கி வருவார்கள்.

கிட்டத்தட்ட பணப்புழக்கம் இருந்தாலும், பண்டமாற்று மாதிரியான விடயம் இடம்பெற்றது .

இந்தக்காலப்பகுதியில் தமிழர்பகுதிகள், முன்னேற்றகரமான அபிவிருத்தியை நோக்கிச் சென்றது.

ஒரு உற்பத்திப் பொருளாதாரம் தமிழர்களின் கையில் இருந்தது.

மாணவர்கள் கூட பாடசாலையில் இருந்து வீடு வந்தவுடன். மேற்குலக விவசாய செய்கையாளரின் குடும்பங்களைப்போல வயல்களிலும் தோட்டங்களிலும் பெற்றோர்க்குத் துணையாக வேலை செய்து படித்து வந்தார்கள்.

பெரியளவு பணம் இல்லாவிட்டாலும், வீட்டின் நாளாந்த வாழ்க்கைச் செலவைக் கழித்து சொற்ப பணத்தைச் சேமித்து வந்தார்கள். அத்தகைய வாழ்க்கை முறை அன்றிருந்தது .

ஆனால் தற்போது இலங்கை சென்று திரும்பியபோது அவதானித்த விடயம் ,
அன்றைய காலம் போல தமிழர்களிடம் உற்பத்திகள் எதுவும் இல்லை . உற்பத்திப் பொருளாதாரத்தில் ஒப்பீட்டு ரீதியில் வளர்ச்சி இல்லை.

தமிழர்பகுதியில் இருந்து கடலுணவு, நெல், அரிசி தவிர்ந்த ஏனைய உற்பத்திப் பொருட்கள், தென்னிலங்கைச் சந்தைகளுக்கு செல்வது அருகிவிட்டது.

அத்தகைய உற்பத்தி முயற்சிகள் சொல்லும் அளவுக்கு பெரிதாக செய்வதும் இல்லை.

spacer.png

வடக்கு கிழக்கு மாகணங்களில் இருந்து உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் குறைவடைந்து, கொழும்பு, தம்புள்ள, புத்தளம், மற்றும் தென்னிலங்கைப் பகுதிகளில் இருந்தே பெருமளவு உற்பத்திப்பொருட்கள் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குள் வருகின்றன.

அன்று தென்னிலங்கையில் சந்தைவாய்ப்பைக் கொண்டிருந்த தமிழர்கள், இன்று தென்னிலங்கை மக்களுக்கு தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களில் சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து, சோம்பெறிச் சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம்.

இதற்கான காரணங்கள் முற்றுமுழுதாக புலம்பெயர் தமிழர்களே காரணம்.

பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களில் உற்பத்திப்பொருளாதார முறைமையின் கீழ் , இலங்கையில் வாழ்ந்து, கஷ்டங்கள் பலவற்றை சந்தித்தவர்கள் .

அந்த கஷ்டங்கள் துன்பங்களின் நினைவுகளோடு வாழும் பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களின் மனநிலை.

அந்த மனநிலையின் பிரகாரம் அந்த வாழ்வியலின் உணர்வாக, தனது தாய் , தந்தை சகோதரர்கள், உறவினர்கள் கஷடப்படக்கூடாது என்பதற்காக, பெருமளவு பணத்தினை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமது உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

பாடசாலைகள் சனசமூக நிலையங்கள், மற்றும் பொது அமைப்புக்கள் என்பவற்றின் கட்டுமானங்களுக்கு எனவும் பெருமளவு பணத்தை அனுப்புகிறார்கள்.

உள்ளக கட்டுமான செயற்பாடுகள் என்பற்றுக்கும் பணத்தை அனுப்புகிறார்கள்.

அதனைவிட, புலம்பெயர் தேசத்தில் யுத்தம் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு என, சமூக சேவைநிறுவனங்கள், அறங்கட்டளைகள், நலன்புரி அமைப்புக்கள் என பலவற்றை அமைந்து, அவை மூலமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதார தேவைகளுக்காக நன்கொடைகளை அனுப்பி உதவுகிறார்கள்.

ஆகவே ஒட்டுமொத்தமாக, புலம்பெயர் தமிழர்களின் பெருந்தொகைப் பணம், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள, தமிழர்களைச் சென்றடைகிறது.

இந்தப்பணமே, வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பாலான தமிழர்களைச் சோம்பேறி ஆக்கியுள்ளது.

இந்தப்பணத்தின் வருகையால் குழந்தைப் பிறப்பில் இருந்து மரணச்சடங்குவரை கேளிக்கைகளும் செல்வச்செருக்கும் மிகுந்த வாழ்வியலாக மாறியிருக்கிறது.

உடல் உழைப்பு பின்தள்ளப்பட்டு விட்டது . இதனால் அங்கு வாழும் இளைய சமூகத்திற்கான ஒய்வு நேரங்கள் அதிகமாகின்றன.

தேவைக்கு அதிகமான பணமும் , அதிக ஒய்வு நேரமும் ஒரு சமூகத்தைச் சோம்பெறிகள் ஆக்குவதோடு, குற்றச்செயல்களிலும் ஈடுபட வைக்கிறது.

இதன் தாக்கம் வடக்கு கிழக்கு இளைய சமூகத்தின் பெரும்பாலனவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை, சமூகப்பெரியவர்களிடம் இருக்கிறது.

அதைவிட புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படும் , பெருந்தொகைப் பணம் வடக்கு கிழக்கில் தங்கி நிற்பது கிடையாது. நிதிநிறுவனங்கள், வங்கிகள் மூலமாக, தென்னிலங்கை முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது.

spacer.png

 

வடக்கு கிழக்கில் உற்பத்திப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால், வாழ்க்கைக்கான பொருட்கள், சேவைகள் பெருமளவு தென்னிலங்கைப் பகுதியில் இருந்தே வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு கிடைப்பதால், அவற்றுக்கான கொடுப்பனவாக புலம்பெயர் தமிழர்களால் அனுப்பபடும் பணம், இன்னொரு மார்க்கமாக தென்னிலங்கையைச் சென்றடைகிறது.

அடிப்படையில் நோக்கினால் புலம்பெயர் தமிழர்களால் வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் தமது உறவுகளுக்கு அனுப்பும் பணம், தென்னிலங்கைச் சமூகத்தினைச் சென்றடைகிறது என்கின்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் உள்ள சொந்தங்களுக்கு பணம் எதிர்காலத்திலும் அனுப்ப முடியுமா என்றால், அது விவாத்திற்கு உட்பட்டதே.
அதற்கு ஒரு சமூகவியல் பார்வை அவசியம்.

1985/1990 களில் புலம்பெயர்ந்து வந்த ஊர் மண்வாசனையை நினைத்துக்கொண்டு இருக்கும் அந்த புலம்பெயர் சமூகம் மூப்படைந்துவிட்டது .

ஓய்வூதியத்தினை அண்டிவிட்டது .

அவர்களால் இனி பணம் அனுப்புவது குறைவடையப் போகிறது .

அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்பனவற்றிலேயே அக்கறை காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

புலம்பெயர் நாடுகளில் பிறந்த பிள்ளைகள் இலங்கை வந்து திரும்பிய போது, ஏற்பட்ட வாழ்வியல் ஒப்பீடு திருப்திகரமானது இல்லை .

அவர்கள் இலங்கையில் உள்ள தாய்வழி உறவுக்கோ, தந்தைவழி உறவுக்கோ உதவுவார்கள் என கட்டியம் கூற முடியாது .

spacer.png

 

எனவே இன்னும் 10 வருடங்களில புலம் பெயர் தமிழர்களின் பணம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வருவது வீழ்ச்சியடையும் .

இது வடக்கு கிழக்கு தமிழர்களை மேலும் பாதிப்படைச் செய்யும் .

எனவே வடக்கு கிழக்குத் தமிழர்கள் கொள்முதல் பொருளாதாரமாக தங்கி இருக்காமல், உற்பத்திப் பொருளாதாரத்தினை கட்டி அமைக்கவேண்டிய தேவை, அவசியமாகவும் அவரமாகவும் இருக்கிறது .

இதன் அவசியப்பாட்டை உணர்ந்து அனைவரும் செயலாற்றவேண்டும் .

(இக்கட்டுரை முழுக்க முழுக்க தமிழ் தேசியவாத நோக்குடனேயே எழுதப்பட்டுள்ளது என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் யுத்தத்திற்கு முன்னரான வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதார நிலைமையின் ஒரு பகுதியைச் சொல்லுவதாலும், வடக்கு கிழக்கு மக்கள் புலம்பெயர் சமூகத்தில் தங்கி வாழும் நிலையில் மாற்றங்கள் நிகழ வேண்டுமென்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுவதாலும் இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

 

 

https://chakkaram.com/2023/03/03/வடமாகாண-பொருளாதாரமும்-ப/

 

 

 

வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம்

1 month ago

வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம்

IMG-20230227-112217.jpg

IMG-20230227-112236.jpg

வட பகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இயக்கச்சி எனும் இடத்தில் ReeCha எனும் பெரிய பண்ணை ஒன்றை எமது புலம் பெயர் தமிழர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார்.

150 ஏக்கர் நிலப்பரப்பில் இதை அமைத்திருக்கிறார். இயற்கையாகவே இயற்கையில் நாட்டமுள்ள எனக்கு இந்த பண்ணையை பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது.

IMG-20230227-112332.jpg

இங்கே பலவிதமான பயன் தரும் மரங்களும், பலவகையான உயிரினங்களாகிய ஆடு, மாடு,கோழி, பன்றிகள், வாத்துக்கள், முயல்கள் போன்றனவும் வளர்க்கப்படுகின்றன.

வடபகுதியில் உள்ள இந்தப் பண்ணையினை மிகவும் அழகாகவும்,நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள்.
150 ஏக்கரையும் முழுமையாக பயன்படுத்துகிறார்கள்.

உள்ளே பண்ணைக்குரிய அடையாளங்களைத் தவிர சிறுவர்களை உற்சாகப்படுத்தும், மகிழ்வூட்டும் பலவகையான பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்திருக்கின்றன.

Adventure rides, Roller coasters, fun rides,boat rides போன்றன காணப்படுகின்றன. இங்கே குழந்தைகள் மட்டும் அல்ல இறுக்கமான சமூக அமைப்பைக் கொண்ட எமது சமூகத்தில் உள்ள வயது வந்தவர்களும் தங்களை் மறந்து தங்களுக்குள் இருந்த குழந்தைத்தனத்துடன் சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டும் எனக்கு இது மிகவும் சந்தோஷத்தை அளித்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கோயில்களுக்கு பணம் வழங்கி கோயில்களை ஹோட்டேல் ஆக்குவபவர்கள் மத்தியிலும், மக்களுக்கு பணம் வழங்கி அவர்களை அடிமைகளாகவும், சோம்பேறிகளாகவும் உருவாக்கும் மக்கள் மத்தியில் இந்த பண்ணையின் உரிமையாளர் எனக்கு அதிசயப் பிறவியாக தெரிந்தார். கிட்டத்தட்ட 200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

IMG-20230227-112410.jpg

தாயக நிலத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறார். இதன்மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். Organic விளைச்சல்களை ஊக்குவிப்பதுடன் Organic பொருட்களை பெறக்கூடிய வாய்ப்பையும் அளிக்கிறார்.மற்றவர்களை சந்தோஷப்டுத்துகிறார் போன்றவற்றிற்காக இவரது முயற்சிக்கு பெரியதொரு பாராட்டை தெரிவித்தே ஆகவேண்டும். இப்படி சமூகமாக முன்னேற்றுபவர்களை ஆதரிப்போம்.உற்சாகப்படுத்துவோம்.

-கலைச்செல்வி

https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185932/

கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் (தரநிலை அறியில்லை) விடுதலை

1 month ago

1996 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து லெப். கேணல் பொன்னம்மான் 06ல் அடிப்படைப் பயிற்சியை முடித்து கடற் புலிகளிகள் அணியில் உள்வாங்கப்பட்ட விடுதலை அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டு கனரக ஆயுதப் பயிற்சியில் தனது திறமையான செயற்பாட்டால் பொறுப்பாளர்களின் பாராட்டைப்பெறுகிறான். இவரின் திறமையான செயற்பாடு காரணமாக இவர் அணிகள் பிரிக்கப்படும் போது கடற்புலிகளின் கடற்தாக்குதலணியான சாள்ஸ் படையணிக்குள் உள்வாங்கப்பட்டு அங்கே நடந்த பெரும்பாலான கடற்சமர்களில் அதாவது விநியோகப் பாதுகாப்புச் சமராகிலும் வலிந்த தாக்குதலாகிலும் சரி பங்குபற்றினார் விடுதலை.

1996ம் ஆண்டு தந்திரோபாயப் பின்வாங்கல் மூலம் வன்னிக்கு வந்து மரபுவழிச் சமருக்கான புதிது புதிதாக அணிகளை உருவாக்கினார் தலைவர் அவர்கள். அந்தவகையில் 1998 ஆம் ஆண்டு முற்பகுதியில் புதிதாக கொள்வனவு செய்ப்பட்ட ஆயுதங்களில் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்ட கனரக ஆயுதத்திற்க்கான பயிற்சிக்காக உள்வாங்கப்பட்டு அதன் சிறந்த சூட்டாளனாக வெளியே வருகிறான். இம்முறை அக்கனரக ஆயுதத்தின் மூலம் கடற் சண்டைகளில் பெரும் பங்காற்றியவன். தனது அர்ப்பணிப்பு மிக்க கடின உழைப்பால் படகின் இரண்டாவது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அங்கும் தனது ஆளுமையை வளர்த்துக் கொள்கிறான் .அவ் வேளையில்தான் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது கனரக ஆயுதம் தரைத்தாக்குதலுக்கு தேவையான போது சிறப்புத் தளபதியால் விடுதலையின் தலைமையில் அணிகள் அங்கே அனுப்பப்ட்டது. அங்கு சிலமாதங்களாக தரைத்தாக்குதலில் தனது அநுபவங்களைப் பெற்று தனது அணிகளை செவ்வனவே வழிநடாத்தினான். மீண்டும் தரைத் தாக்குதலில் ஈடுபட்ட கடற்புலிகளின் அணிகளை கடலில் ஒரு வலிந்த தாக்குதலுக்காக எடுக்கப்பட்ட போது விடுதலையும் தனது அணிகளுடன் வந்து 16.09.2001 அன்று நடைபெற்ற இலங்கைக் கடற்படையினரின் மீதான வலிந்த தாக்குதலிலும் பங்குபற்றினான்.

23.09.2001ல் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கைக்கு எதிரான கடற்சமரில் பாரிய விழுப்புண்ணடைகிறான். இச் சமரில் இவனது நெருங்கிய நண்பணான மேஜர் திருமலை வீரச்சாவடைகிறான். விழுப்புண்மாறி முகாம் திரும்பிய விடுதலை அக்காலப்பகுதியில் சமாதானம் நிலவியதால். முகாமில் நின்றார். அவ்வேளையில் ஆழ் கடல் விநியோகம் தென் தமிழீழத்திலும் தொடருமாறு தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு பணிக்கப்படுகிறது. அதற்கமைவாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களால் அணிகள் பிரிக்கப்பட்டு ஒரு அணிக்கு பொறுப்பாளராக விடுதலை நியமிக்கப்படுகிறார். அங்கு சென்ற அணிகள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ் விநியோகமுறை முற்றிலும் மாறுபட்டிருந்து .சாலையிலிருந்து வேகமான படகுகளிலில் கப்பலுக்குச் சென்று பொருட்களை இரவிற்க்குள் கொண்டு வந்தவர்களுக்கு ரோலரில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பயணித்து கப்பலுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை எடுத்து வருவதுமாக இருந்தது.விநியோக நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டபோது ஒரு பகுதிக்கான பொறுப்பாளராக விடுதலை நியமிக்கப்பட்டு அதனை செவ்வனவே வழிநடாத்தினான்.

அவ் வேளையில் தான் ஒரு துரோக நடவடிக்கை உருவானபோது அணிகளையும் பொருட்களையும் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தான். அத்துரோக நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடல் நடவடிக்கையை கடலில் நின்ற அணிகளுக்கு பொறுப்பாக கடலில் நின்றே வழிநடாத்தி வெற்றிக்கு வித்திட்டான்.அதனை தொடர்ந்து தென்பகுதிக்குச் சென்று ரோலர் கொள்வனவு செய்து அவ் ரோலரில் கப்பலுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை மன்னாருக்கு கொண்டுவந்த விநியோக நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்த்தான்.

இது ஒரு இலகுவான காரியமல்ல வன்னியிலிருந்தால் ஏதாவது ஆலோசனை தேவையென்றால் உடனடியாக சிறப்புத்தளபதியுடன் கதைத்து ஆலோசனை பெறலாம் அல்லது சிறப்புத்தளபதி பொறு அண்ணையிட்டை கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி அதற்கேற்ப உடனடியாக முடிவுகளைச் சொல்வார். இது அப்படியல்ல என்னவாகிலும் விடுதலையே முடிவுகளை எடுக்க வேண்டும். இப்படியாக இக்கட்டான இடங்களிலிருந்து பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலிருந்து பணியாற்றிய விடுதலை . தென்தமிழீழத்தில் நடைபெற்ற பல்வேறு தரை கடற்சமர்களிலும் பங்குபற்றினான்.

தென் பகுதி துறைமுகம் மீதான தாக்குதலுக்கான அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்த விடுதலை
அத்தோடு நின்று விடாமல் அணிகளை கூட்டிச் சென்று துறைமுகத்துக்கு அருகில் சென்று வழியனுப்பிவிட்டும் வந்தான். இப்படியாக இருந்தவேளையில் தென் தமிழீழத்தில் இருந்த போராளிகளை வன்னிக்கு அழைத்தபோது இறுதியாக வந்த போராளிகளுடன் தனக்கு இட்ட பணிகளை செவ்வனவே செய்த திருப்தியுடன் வந்து சேர்ந்தான். வன்னிக்கு வந்து லெப் கேணல் எழிற்கண்ணன் படையனிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு அப்படையணியுடன் மன்னார் சென்றான். கப்பலிலிருந்து ரோலர் மூலம் மன்னாருக்கு லெப். கேணல் டேவிற் படையணி மூலம் கொண்டு வந்த பொருட்களை மன்னாரிலிருந்து கடல்வழியாக லெப் கேணல் எழிற்கண்ணன் படையணி சுட்டபிட்டிக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள் இந் நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்து விடுதலை செயற்பட்டான்.

இவ்வேளையில் கடற்புலிகளின் தரைத்தாக்குதலுக்கு அணி ஒன்றை உருவாக்கி அவ் அணியை மன்னார் களமுனைக்கு அனுப்புமாறு தலைவர் அவர்களால் பணிக்கப்பட்டது.அதற்கமைவாக அணி ஒன்று உருவாக்கப்பட்டு விடுதலையிடம் சூசை அவர்களால் கொடுக்கப்பட்டு மன்னார் களமுனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது .அங்கு முன்னேறிவரும் படையினருக்கு எதிரான மறிப்புத் தாக்குதலிலும் முறியடிப்புத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு இரு தடவைகள் விழுப்புண்ணடைந்தும் விழுப்புண்மாறமுன்னரே களமுனைக்குச் சென்றவன் விடுதலை.

மன்னார் களமுனையைப் பொறுத்தளவில் பெரும்பாலும் ஒவ்வொரு நாட்களுமே சண்டையாகயிருந்தது.அதன் பின்னர் மணலாற்றின் கடற்கரையோர முன்னரங்கப் பகுதி கடற்புலிகளிடம் வழங்கப்பட அதன் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட விடுதலை அங்கு முன்னேறிய படையினருக்கு எதிரான சமரை திறம்பட நடாத்தினான். அதில் உடுப்புக்குளப்பகுதியில் பகுதியில் காலையில் முன்னேறியபடையினர் மீது ஒரு முறியடிப்புத் தாக்குதல் நடாத்தி பெருமளவில் படையினரைக் கொன்று பெருமளவிலான ஆயுதங்களும் படைச் சடலங்களும் கைப்பற்றப்பட்ட இவ் வெற்றிகர சமரை விடுதலையே வழிநடாத்தினான். இதற்க்கு பழிதீர்க்குமுகமாக குறிப்பிட்ட மணித்தியாலயத்திற்குள் ஆறு தடவைகள் விமானத்தாக்குதல் நடாத்தினான். இதிலிருந்தே தெரிய வேண்டும் இத்தாக்குதலின் இழப்பை. அதன் பின்னர் கடற்புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டு கடல் தரை என இருபகுதியில் நடைபெற்ற சமர்களை அணிகளுடன் நின்றே வழிநடாத்தினான்.

பல்வேறு களங்களில் பல்வேறு பணிகளை இக்கட்டான சூழ்நிலையில் மாவீரர்களையும் தலைவரையும் மனதில் சுமந்து தன்னால் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்க்கு திறம்பட செயற்பட்ட விடுதலை .இறுதிவரை முள்ளிவாய்க்காலில் களமாடி வீரச்சாவடைகிறான்.

இவர் வீரச்சாவடைந்த திகதியோ தெரியாத நிலையில் உள்ளனர். இது மாதிரியான எத்தனையோ மாவீரர்கள் இம் மண்ணின் விடுதலைக்காக போராடி வெளித்தெரியாத் தடங்களாக இருக்கிறார்கள்.

“கடலிலே காவியம் படைப்போம்”

என்றும் அலையரசி.

http://eelamalar.com/கடற்புலிகளின்-துணைத்-தள/

தாய‌க‌ பாட‌லுடன் நீதி கேட்டு ஈழ‌ ம‌ண்ணில் மாண‌வ‌ர்க‌ள் ந‌ட‌த்தின‌ போராட்ட‌ காணொளி

1 month 3 weeks ago

ச‌மாதான‌ கால‌த்தில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு போல் இருக்கு நீதி கேட்டு மாண‌வ‌ர்க‌ளும் பொது ம‌க்க‌ளும் முன்னெடுத்த‌ ஆர்பாட்ட‌ம் 

வாழ்க‌ த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் புக‌ழ் 

 

 

 

போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?

2 months ago
போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?
 
spacer.png

ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? ‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான கருணாகரன் எழுதுகிறார்.

கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49), செந்நிலா (வயது 50). எல்லாமே எதிர்பாராத சந்திப்புகள். ஏழு பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக இவர்களோடு பழகி வந்திருக்கிறேன். சிலரோடு சில சந்தர்ப்பங்களில் சேர்ந்து வேலையும் செய்திருக்கிறேன். என்ன துணிச்சல்! எவ்வளவு ஆற்றல்! எப்படியான திறமை! நாம் எதிர்பார்த்தேயிராத வகையில் எந்த வேலையையும் வலு சிம்பிளாகச் செய்து முடித்துவிடுவார்கள். எதிர்பாராத கோணங்களில் அசாத்தியமான முடிவுகளை எடுப்பார்கள். அத்தனை சிந்தனைத் திறன், அவ்வளவு விவேகம்.

அந்த நாட்களில் இரவு பகலாகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வேலை செய்தவர்கள். காடு மேடு, கடல், மலை என்று தங்களுடைய பணிகளுக்காக ஓய்வின்றிக் களைப்பின்றி அலைந்து கொண்டிருந்தவர்கள். எந்த அபாயச் சூழலையும் துணிச்சலாக எதிர்கொண்டவர்கள். அநேகமாக எல்லோரும் தங்களுடைய பள்ளிக் காலத்திலேயே வீட்டை விட்டு வெளியே வந்து, ஆயுதந்தாங்கிய விடுலைப் போராட்டத்தில். போராளிகளாக. பதினைந்து இருபது ஆண்டுகளாக செயற்பட்டிருக்கிறார்கள். சிலர் அதற்கும் கூட.

ஆனால், போராட்டம் தோற்கடிக்கப்பட்டு, போர் பேரழி்வுகளோடு முடிந்தபோது எல்லோரும் நிர்க்கதியாகி விட்டனர். அதற்குப் பிறகு, இவர்கள் பழகிய, பயின்ற எதையும் வீட்டிலோ சமூகத்திலோ பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. தங்களை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாமல் போனது. திறமையான கடலோடிகளாக இருந்த பெண்கள் பின்னர் கடலில் ஒரு நாள் கூட படகோட்டுவதற்கு வாய்ப்பின்றிப் போனது. என்னதான் திறமையும் கடற் பரிச்சியமும் இருந்தாலும் யார்தான் பெண்களைக் கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பார்கள்? மிகத் துணிச்சலான சமராடிகள், (போர்க்களத்தில் படையினரை விரட்டியவர்கள்) வீட்டிலே யாருடன் சமராடுவது? கனரக வண்டிகளைச் செலுத்திய பெண்களுக்கு யார்தான் அந்த வேலையைக் கொடுக்க முன்வருவார்? காடுகளில் பாதுகாப்பு அரண்களை அமைத்தவர்களுக்கு ஊருக்குள்ளே என்ன வேலை கொடுப்பதென்று தெரியவில்லை யாருக்கும். மனதுக்குள் இவர்களுடைய திறனையும் ஆற்றலையும் புரிந்துகொண்டாலும் வெளியே அதை ஏற்று அங்கீகரித்து இடமளிக்க முடியாமலிருக்கிறது.

தங்கள் இளமையை இந்தச் சமூகத்துக்காக, இந்த இனத்துக்காக, இந்த மண்ணுக்காக அர்ப்பணித்திருக்கிறார்களே, அதற்குக் கைமாறாக என்ன கொடுக்க முடியும்? இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்படவில்லை என்றால் இன்று இவர்கள் இருக்கின்ற உயரம் எப்படியாக இருந்திருக்கும்? இவர்கள் வேறு யாருமல்லவே, எங்கள் மகள், எங்கள் சோதரிகள், எங்கள் தோழிகள் அல்லவா!

ஆனால், இப்படி யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. இதனால் இவர்களுடைய வாழ்க்கை இன்று கேள்வியாகிவிட்டது. கொல்லாமல் கொல்லும் உறவுகளின் – சமூகத்தின் பாராமுகமும் இரண்டக நிலையும் இவர்களை கொன்று கொண்டேயிருக்கிறது.

அருவி, பின்தங்கிய ஒரு கடலோரக் கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு வயதுப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுக்கு ஒரு கை இல்லை. அந்தப் பிள்ளைகள் கொடுக்கும் சிறிய தொகைப் பணமே அவளுடைய தேவைகளுக்கானது.

வெற்றிமலர், இவளும் ஒரு கடலோரக் கிராமத்தில்தானிருக்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு தையல் பழகி, அதன் மூலம் சீவியத்தை ஓட்டுகிறாள்.

நிலா, சில காலம் பழகிய தொழிலான வீடியோ எடிற்றிங்கைப் பல கடைகளில் செய்தாள். எல்லோரும் மிகக் குறைந்த ஊதியத்தையே கொடுத்தார்கள். ஒரு காலம் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் குறும்படங்களையும் உருவாக்கியவள். அவளுடைய திறமைகளைப் புரிந்துகொள்ளவோ கொண்டாடவோ யாருமே இல்லை. பேசாமல் தோட்டத்தில் புல்லுப்பிடுங்கவும் வெங்காயம் நடவும் போகிறாள். வயிறொன்று இருக்கிறதல்லவா. அதை விட ஒவ்வொரு நாளையும் எப்படியோ போக்கிக்கொள்ள வேண்டுமே!

அறிவுமங்கை, இதழியல், அச்சு, வடிவமைப்பு போன்றவற்றில் அனுபவம் கொண்டவள். இந்தத் துறையில் எங்காவது வேலை செய்யலாம் என்று செய்து பார்த்தாள். அடிமாட்டுச் சம்பளம் கொடுக்கிறார்கள். கடையொன்றில் வேலை செய்தாள். அங்கும் கெடுபிடிகள் அதிகம். ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை. எல்லோரும் அவளைப் பயன்படுத்தும் அளவுக்கு அவளுடைய திறன்களுக்கான மதிப்பையும் ஊதியத்தையும் கொடுக்கத் தயாரில்லை. தனியாக ஒரு இடத்தில் அச்சு வடிவமைப்பைச் செய்யலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்.

நிலவழகி, எதையும் கூருணர்வோடு அணுகும் திறனுள்ளவள். இடுப்புக்குக் கீழே இயங்க முடியாதிருக்கிறார். அதனால் எங்குமே செல்வதில்லை. ஒரு சிறிய வீட்டின் ஒதுக்குப் புறத்தில் உள்ள அறையே அவளுடைய பேருலகம். அமைதியான சுபாவம். சிரிப்பினால் எல்லாவற்றையும் சமன் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். நெருங்கிய உறவுகள் என்று எதுவுமில்லை. தெரிந்தவர்களின் அனுசரணையில் வாழ்க்கை ஓடுகிறது. ஆனால், இதுவும் எவ்வளவு காலத்துக்கு இப்படியிருக்கும் என்று தெரியவில்லை என்கிறார். அதனால், இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத போராளிகளுக்காக இயங்கும் விடுதி ஒன்றில் (இது புலம்பெயர்ந்தோரினால் நடத்தப்படுவது) இடம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறாள். கிடைத்தால் போய் விடுவேன் என்றாள். அவளுக்கென்றொரு காணி வன்னியில் உண்டு. ஆனால், அதில் ஒரு வீட்டைப் போட்டுக் கொண்டு இருப்பதற்கு இன்னும் முடியவில்லை. அவளும் எத்தனையோ வழிகளால் முயற்சித்து விட்டாள். ஆனாலும் எதுவுமே கை கூடவில்லை.

மலரினி, காலில் பெரிய காயம். சீராக நடக்க மாட்டாள். அதைவிட வயற்றிலும் பெருங்காயங்களின் தளும்பும் உள் வலியும் இன்னும் உண்டு. ஒரு திருமணம் ஏற்பாடாகி வந்திருக்கிறது. ஆனால், அந்த மணவாளன் தன்னைப் பற்றிய விவரங்களை முழுதாகவே மறைத்து அவளைத் திருமணம் செய்ய முற்பட்டிருக்கிறான். இறுதியில்தான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகளும் மனைவியும் ஏற்கனவே உண்டென்று. “அரும்பொட்டில் தப்பினேன்” என்று சொன்னாள். “இனி திருமணத்தைப் பற்றிய பேச்சே வேண்டாம்” என்கிறாள்.

செந்நிலா, ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லை. ஆனாலும் ‘நம்பிக்கை’ என்றொரு சிறிய அமைப்பை உருவாக்கி அதை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாள்.

வீட்டிலிருந்து பொது வெளிக்குச் செல்லும்போது ஏற்படும் நெருக்கடியை விட, எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களை விட, பொதுவெளியில் செயற்பட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது ஏற்படும் நெருக்கடியும் சிக்கல்களுமே பெண்களுக்கு அதிகம். அவர்கள் அவற்றை எதிர்கொள்வதுதான் மிகச் சிரமம். அதிலும் சற்று வயது அதிகமாகி விட்டால் யாரோடும் ஒட்டிக்கொள்ள முடியாமல் முகச்சுழிப்பு வரையில் கொண்டு போய் விடும். 

திருமண வயதை இழந்துவிட்டால் எப்படி இந்தப் பெண்ணை வீட்டில் வைத்துக்கொள்வது என்ற கேள்வி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வந்துவிடும். சிலவேளை அம்மாவோ அப்பாவோ இல்லாமல் சகோதர்கள், சகோதரிகள் மட்டும் இருக்கிற வீடுகள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. “வந்து விட்டாயா? இனி என்ன செய்யப்போகிறாய்?” என்று பச்சையாகவே கேட்டுவிடுவார்கள். என்னதான் பிள்ளைப் பாசம், சகோதர பாசம் என்றிருந்தாலும் மணமாகாத, மண வயதைக் கடந்த பெண் என்றால் அது ஒரு முள்தான்.

அதுவும் போராட்டத்தில் – இயக்கத்தில் – ஆயுதப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பதால் கடுமையாக நடந்துகொள்வார்கள்; அதிக சுயாதீனத்தைக் கோருவார்கள் என்ற கற்பிதங்கள்… எனப் பல காரணங்கள் இந்த மதிப்பிறக்கத்தை உண்டாக்குகின்றன.

இதனால், இந்த முன்னாள் போராளிகளுக்கு இன்று வந்திருக்கும் சோதனை சாதாரணமானதல்ல. சிலர் இவர்களை மதித்து சிறிய அளவிலான உதவிகளைச் செய்தாலும் அது வாழ்க்கையைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கில்லை. வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடிய வயதெல்லையையும் கடந்துவிட்டார்கள்; அதோடு கல்வி மூலமாகப் பெறக்கூடிய தொழில்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறார்கள்.

ஆனால், ஒவ்வொருவரோடும் கதைத்தபோது பொதுவாகவே சில விசயங்களை உணர்ந்துகொள்ள முடிந்தது. தங்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் தேற்றிக்கொள்கிறார்கள். இதுதான் இனி நிலை என்ற பிறகு வேறு என்ன செய்ய முடியும் என்ற கட்டத்தில் அத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாமல் எதையும் ஜீரணித்துக்கொள்கிறார்கள். இதில் அவமானங்கள், துயரங்கள் அனைத்தும் சேர்த்தி.

இந்த நிலை ஏதோ இந்த ஏழு பெண்களுக்கும் மட்டும்தான் என்றில்லை. இவர்களைப்போலப் போராட்டத்தில் (இயக்கத்தில்) பங்கேற்ற பல நூறு பெண்களுக்கு, ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையாகும்.

இது பேரவலம். பெருந் துயரம். பெரும் அநீதி.

முதலாவதாக இவர்கள் எதிர்த்தரப்பினால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தத்தத்தின் மூலம். அதைத் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டனர். மீள வேண்டியிருந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகள் சிறையிருந்தே மீள வேண்டியிருந்தது. மீண்ட பெண்களைத் தமிழ்ச் சமூகம் தோற்கடிக்கிறது. அது நோக்கும் நிலை குறித்து, நடத்தும் விதம் குறித்து இங்கே நாம் எழுதித் தீராது.

அத்தனை வலி நிறைந்த ஏராளம் ஏராளம் கதைகள் அவை.

1970களில் பொதுவாழ்வில் ஈடுபட்டு, (அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக) சிறை சென்ற புஸ்பராணியின் அனுபவங்களே போதும் இந்தப் பெண்களுடைய நிலையை அறிந்துகொள்வதற்கு. அதற்கும் அப்பால் இவர்கள் இப்போது சமூகச் சிறையில் சிக்கியிருக்கிறார்கள். இது இரண்டாவது சிறை. இதனுடைய தண்டனைகள் மிக நுட்பமானவை. வீட்டிலிருந்தும் சமூக வெளியிலிருந்தும் நுட்பமாக ஓரம் கட்டுவது.

ஆனால், அதை இவர்கள் வெளியே காட்டிக் கொள்வதில்லை. “என்ன இருந்தாலும் எங்களை வீட்டுக்காரர் (பெற்றோரும் சகோதர சகோதரிகளும்) ஏற்றுக்கொண்டிருப்பதே பெரிய விசயம். அவர்களும் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் தோற்றுப் போனதற்கும் தோற்கடிக்கப்பட்டதற்கும் அவர்கள் பொறுப்பாளிகளில்லையே!… நாங்களும் வீட்டிலிருந்திருந்தால் எங்களுடைய வாழ்க்கையும் வேறாகியிருக்கும்… ஆனால், நாங்கள் இன்னொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விட்டோமே. அந்தக் கடந்த கால வாழ்க்கையின் மூலம் எங்களுக்கு ஒரு திருப்தி இருக்கு. ஒரு நிறைவிருக்கு. எங்களால் முடிந்த ஏதோ ஒன்றை இந்தச் சமூகத்துக்காகச் செய்திருக்கிறோம். அதில் முழுமையான வெற்றி கிடைக்காது விட்டாலும் ஏதோ நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அது போதும். ஒரு காலத்தில் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய பணி என்ற நிலையில் நாங்கள் இணைந்துகொண்டு எங்களுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறம். அந்தக் காலப் பணியை களப்பணியாகச் செய்த நிறைவுக்கு முன்னால் எதுவும் ஈடாகாது. அந்த நிறைவு போதும் எங்களுக்கு. இதை எங்களைச் சமாதானப் படுத்துவதற்காகச் சொல்லவில்லை. எங்களைப் பற்றிய சுயமதிப்பீட்டிலிருந்தே சொல்கிறோம். இதுதான் எங்களுடைய பலம். மகிழ்ச்சி. அடையாளம் எல்லாம். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு திருப்தி இருக்கும் அல்லவா. ஒரு மகிழ்ச்சி. ஒரு நிறைவு. ஒரு அடையாளம். அப்படி எங்களுக்கு எங்களுடைய கடந்த காலம் இருக்கு….” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே போகிறார்கள்.

நான் எதுவும் பேசாமல் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒவ்வொரும் தனித்தனியாகச் சொன்னாலும் எல்லோருடைய கூட்டு எண்ணமும் நம்பிக்கையும் கருத்தும் ஒன்றுதான். ஒரே சாரத்தைக் கொண்டவை.

செந்நிலா, பேசும் போது தன்னுடைய அனுபவங்களை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். அதைப் படிக்கத் தந்தாள். அதிலே சில வரிகளின் கீழே அடிக்கோடிட்டிருந்தாள். அந்த வரிகள் இப்படி இருந்தன: ‘நாம் தேவதைகளாக ஒரு போதுமே இருந்ததில்லை. நிலமாக, நீராக, காற்றாக, வானாக, தீயாக இருந்தோம். அப்படித்தான் இன்னும் இருக்கிறோம்.’

இதைப் புரிந்துகொண்டு இவர்களுக்குரிய வாழ்க்கையை அளிப்பதற்கு, இவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு, இவர்களும் மகிழ்ந்திருப்பதற்கு, மிஞ்சிய காலத்தை இவர்கள் இயல்பாக மற்றவர்களோடு கலந்து கொண்டாடுவதற்கு நம்மிடத்திலே ஏதாவது வழி உண்டா?
 

 

http://wowtam.com/ta_in/4-after-the-war-what-is-the-condition-of-the-ltte/11519/?fbclid=IwAR3x3Zmv5GBFTVPctsQZRu0oWHkOaVb3EFOkKfduhgIR-TLDBzYA9Z5xgfs#

 

தேசவழமைச் சட்டம் பற்றி சட்டத்தரணி திருமதி மாதுரி நிரோசன்

2 months 1 week ago

தேசவழமைச் சட்டம் பற்றி யாழ் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் நிறுவுனர் பேருரையில் சட்டத்தரணி திருமதி மாதுரி நிரோசன் உரையாற்றினார். இவர் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.

https://m.facebook.com/groups/1154600214558221/permalink/6144796765538516/?sfnsn=mo&ref=share

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம்

2 months 2 weeks ago
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம்

அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார்.

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் | Tamil Village Disappearing History Ampara District

 

அவரின் முயற்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், கலைப்பீடாதி ஆகியோர் வழங்கிய ஆதரவும், உதவிகளும் ஆய்வுக் குழுவினரைப் பெரிதும் உற்சாகப்படுத்தியது. இந்த ஆய்வுக்குழுவில் வரலாற்றுத் துறை தலைவர் எஸ். சிவகணேசன், மற்றும் விரிவுரையாளர் செல்வி கிறிஸ்ரினா நிரோசினி, ஊடகவியலாளர் வை.சத்தியமாறன் ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல்துறைத் தலைவர் கலாநிதி தில்லைநாதன் அவர்களும் இணைந்து கொண்டமை ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தின் சமூக நிலமைகளை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவியது.

இவ்வாலயம் அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி குடுவில் ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய ஆலங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

 

 

 

 

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் | Tamil Village Disappearing History Ampara District

 

இவ்வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்து வரும் பல இடப்பெயர்கள் பண்டுதொட்டு இங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்ததன் அடையாளங்களாகக் காணப்படுகின்றன.

ஆயினும் தற்போது இங்கு ஒரு தமிழ்க் குடியிருப்பைத் தானும் காணமுடியவில்லை. இந்நிலையில் ஆலயத்தைச் சுற்றாடலில் பரந்த அளவில் வாழ்ந்து வரும் ஏனைய இன மக்கள் தமிழர்கள் இங்கு வாழவில்லை எனவும் அவர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இங்கு வந்த போது அவர்களின் வழிபாட்டிற்காகவே முன்பொரு காலத்தில் கட்டப்பட்ட ஆலயமே தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படுகிறது என அவர்கள் எம்மிடம் கூறிய புதுக்கதை எமக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.

 

 

 

ஏனெனில் இற்றைக்கு ஐந்து சகாப்தங்களுக்கு முன்னரே குடுவில் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுக்களை ஆய்வு செய்த பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டுக்களில் ஒன்றை ஆதாரமாகக் காட்டி இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்விடத்தில் வாழ்ந்த “திஸ” என்ற தமிழ்ப் பெண்ணின் தலைமையில் தமிழ் வணிகர்கள் ஒன்று சேர்ந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தி இருந்தார்.

பேராசிரியர் இந்திரபாலா இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மொழியால் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கியதற்கு இக்கல்வெட்டையும் முக்கிய ஆதாரமாகக் காட்டுகின்றார்.

அண்மையில் கிழக்கிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வில் எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இச்சாசனங்கள் தமிழ் மொழியில் தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளன.

 

 

 

அவற்றுள் நாகன், ணாகன், தம்பன், வண்ணக்கன் முதலான பெயர்கள் பொறித்த சாசனங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இச்சாசனங்கள் பற்றி பேராசிரியர் பத்மநாதன் அண்மையில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் | Tamil Village Disappearing History Ampara District

இவ்வகையான மட்பாண்டச் சாசனங்கள் தமிழகத்தை அடுத்து கிழக்கிலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கிழக்கிலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றுக்கு புதுவெளிச்சமூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பெருங்கற்காலப் பண்பாடு என்ற புதிய நாகரிகத்தை அறிமுகப்படுத்தியவர்கள் நாக இன மக்கள் எனக் கூறுகின்றனர்.

இப்பண்பாட்டு மக்கள் கிழக்கிலங்கையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் நாகன், ணாகன் முதலான பெயர்கள் இடம்பெற்றிருப்பது கிழக்கிலங்கையில் வாழ்ந்த பூர்வீக தமிழர்கள் நாக இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை மேலும் உறுதி செய்வதாக உள்ளது.

 

 

 

இவ்வரலாற்றுப் பின்னணியிலேயே அம்பாறை ஆலங்குள ஆலயத்தின் தோற்றத்திற்கான காரணங்களை நோக்குவது பொருத்தமாகும். நீண்ட காலத்திற்கு முன்னரே ஆலங்கேணியில் வாழ்ந்த தமிழர்கள் இவ்வாலயத்தைக் கைவிட்டதன் காரணமாக தற்போது இவ்வாலயம் பெருமளவுக்கு அழிவடைந்து ஆலமரங்களுக்கு மத்தியில் வழிபடப்பட முடியாத ஆபத்தைத் தரும் வெறும் கட்டிடமாகக் காணப்படுகின;றது.

ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வளர்ந்துள்ள பெரிய ஆலமரங்களின் கிளைகளும், வேர்களும் ஆலயச் சுவர்கள் சிலவற்றிற்கு பாது காப்பு அரண்களாக உள்ளன. இவ்வாலயம் சிறிய விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகம், அந்தராளம், முன்மண்டபம், பலிபீடம், கொடிக்கம்பம் என்பவற்றைக் கொண்டு கட்டப்பட்டதை ஆய்வுக் குழுவினரால் அடையாளப்படுத்த முடிந்தது.

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் | Tamil Village Disappearing History Ampara District

நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கும் இவ்வாலயம் பிற்காலத்தில் சீமேந்து கொண்டு மீள் உருவாக்கம் செய்யப்பட்டதை ஆலயத்தின் கட்டிட வடிவங்களும் விமானத்தின் கலை வடிவங்களும் உறுதி செய்கின்றன. ஆயினும் இவ்வாலயம் மிகத் தொன்மையானதென்பதை ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் புதையுண்டு காணப்படும் பெருமளவு செங்கற்கள் உறுதிசெய்கின்றன.

அதிலும் கற்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றின் உட்பாகங்கள் முழுக்க செங்கற்களால் கட்டப்பட்டவையாகக் காணப்படுகின்றன. செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அந்தராளத்தின் முன்பக்கச் சுவர் சீமெந்து கொண்டு பூசப்பட்ட நிலையில் செங்கற் சுவர் தெளிவாகக் காணப்படுகிறது.

 

 

 

இந்த வேறுபாடுகளைக் கொண்டு செங்கற்களால் கட்டப்பட்ட கர்பக்கிரகம், அந்தராளம் ஆலயத்தின் தொடக்ககால நிலையில் அதன் வெளிப்புறம் மட்டும் பிற்காலத்தில் சீமெந்து கொண்டு மீள் உருவாகம் செய்யப்பட்டதாகவும், முன் மண்டபம், பலிபீடம் முதலான கட்டிடங்கள் ஆலயம் தோன்றிய கால அத்திவாரங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாக அல்லது ஆலயத்தை விரிவுபடுத்த பிற்காலத்தில் சீமெந்து கொண்டு கட்டப்பட்ட ஆலய பாகங்களாக இருக்கலாம் எனக் கூறமுடியும்.

இவ்வாலயத்தின் தோற்றகாலத்தை உறுதியாகக் கூறக்கூடிய கல்வெட்டுக்களோ விக்கிரகங்களோ இதுவரை கிடைக்கவில்லை. ஆலயத்தின் கர்பக்கிரகம், அந்தராளம் என்பவற்றிற்கு உள் நுளைய முடியாதவாறு பெரிய ஆலமர வேர்கள் காணப்படுகின்றன. அதற்குள் கொடிய விசப்பாம்புகள் குடியிருப்பதற்குரிய தடயங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.

இதனால் அச்சமின்றி அக்கட்டிடப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வினை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு கர்பக்கிரகத்தில் தெய்வ விக்கிரகங்களை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பீடம் முழுமையாக சிதைவடைந்துள்ளமை தெரிகின்றது.

 

 

 

அவ்விடம் ஆழமாகத் தோண்டப்பட்டு பீடம் இருந்த இடம் பெரும் குழியாகக் காணப்படுகின்றது. பீடத்தின் பின்பக்கச் சுவரில் இருக்கும் திருவாசி புகைபடர்ந்த நிலையில் அதன் கலைவடிவங்கள் தெளிவற்றுக் காணப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் | Tamil Village Disappearing History Ampara District

 

இருப்பினும் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு இவ்வாலயம் மிகப் பழமையானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. அவற்றுள் கர்பக்கிரகத்தின் மேற்பக்கச் சுவரில் குறுக்காகவைக்கப்பட்ட நான்கு கற்பலகைகள் மீது மேல் நோக்கி வட்டமாக இரு தளங்களில் கட்டப்பட்ட விமானத்தின் அமைப்பு, விமானம் அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் அமைப்பும் அவற்றின் நீள அகலங்கள், கர்பக்கிரம், அந்தராளம் என்பவற்றின் வடிவமைப்பு, அவற்றின் நீள அகலங்கள், வாசற்பகுதிகளில் அமைக்கப்பட்ட அகலமான கற்தூண்கள் என்பன 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொலநறுவை, திருமங்களாய் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சோழர் கால ஆலயங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன.

எதிர்காலத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதியுடன் இவ்வாலயப் பகுதியில் விரிவான தொல்லியல் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டால் இவ்வாலயத்தின் தோற்றகாலம், அதன் கலைமரபுகள் வழிபடப்பட்ட தெய்வங்கள் காலரீதியான ஆலய வளர்ச்சி மாற்றம் ஆலயத்திற்கு சொந்தமாக இருந்த அசையும் அசையாத சொத்துக்கள் ஆலயத்தைப் பராமரித்த மக்கள் வழிபாட்டு மரபுகள் தொடர்பான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை.

 

 பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் – குறியீடு (kuriyeedu.com)

 

(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்

2 months 2 weeks ago
(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்

on January 11, 2023

 
3N7A9512-scaled.jpg?resize=1200%2C550&ss

வெட்ட வெளி, வெயில் சுட்டெரிக்கிறது. மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகள் ஆங்காங்கே வளந்திருக்கின்ற மரங்களின் நிழலில் நெருக்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. நான் தேடிவந்த செல்வரத்தினம் ஐயா மாடுகளை அழைத்துக்கொண்டு இந்தப் பக்கமாகத்தான் வந்திருப்பதாக அவரது மனைவி கூறியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவரை காணாததால் நானும் மரமொன்றைத் தேடி உட்கார்ந்தவாறு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்டநேரத்தின் பின்னர் வயதான ஒரு ஐயாவும் இளைஞனொருவனும் வருவதைக் கண்டேன். நான் தேடி வந்தவர் இவர்தான் என்பதை கண்டுணர்ந்து அவரோடு பேச்சுகொடுக்க ஆரம்பித்தேன்.

மூச்சிரைத்தபடி எனது அருகில் உட்கார்ந்தார். “இப்போதெல்லாம் முன்ன மாதிரி நடக்க முடியாது தம்பி. கொஞ்சம் நடந்தாலே மூச்சிரைக்குது. நீண்டநேரம் நிற்கவும் முடியாது.” இரண்டு கைகளையும் பின்பக்கமாக தரையில் ஊன்றியவாறு கால்களிரண்டையும் நீட்டி உட்கார்ந்தார்.

ஏற்கனவே, தொலைபேசி வழியாக செல்வரத்தினம் ஐயாவுடன் பேசியதால் நேரடியாக விசயத்துக்கே வந்தேன். எப்போ ஐயா உங்கள கைதுசெய்தாங்க? எப்ப விட்டாங்க?

“தம்பி, என்னை ரெண்டு தரம் பிடிச்சவங்க. முள்ளிவாய்க்கால் வழியா இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு போய் முகாமல்ல இருந்தப்போ ரி.ஜ.டி. ஆக்கள் என்னை பிடிச்சவங்க. இரண்டு நாள் விசாரணை முடிஞ்ச பிறகு விட்டவங்க. நான் இயக்கத்துல எந்த பிரிவிலயும் எந்த வேலையும் செய்ததில்ல. அவங்க (விடுதலைப் புலிகள்) பங்கர் வெட்ட கூப்புடுவினம். அதுக்குப் போய் உதவி செய்திருக்கன். அவ்வளவுதான். முகாம்ல இருந்து இங்க வீட்டுக்கு வந்த பிறகு வெள்ளை வான் ஒன்டுல ரி.ஐ.டி. ஆக்கள் வந்தவங்க. திரும்பவும் விசாரிக்கனும் என்று கூட்டிட்டுப் போனவங்க 12 வருஷம் கழிச்சுத்தான் விட்டவங்க. 58 வயசுல போய் 70 வயசுல வெளியில வந்திருக்கன் தம்பி. எந்தக் குற்றச்சாட்டும் என் மீது சுமத்தல.”

காய்ந்த நிலத்தையே பார்த்து பேசிக்கொண்டிருந்த அவர் மகனின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார்.

“கடைசி காலம் வரைக்கும் இவங்களின்ட தயவுலதான் வாழனும். செத்தாலும் இவங்கதான் தூக்கி அடக்கம் செய்யனும். என்னால தனியா ஒன்டுமே செய்ய முடியுதில்ல. இப்படியே பாரமா இருந்திட்டு செத்திட வேண்டியதுதான்.”

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி வாழ்க்கையைத் தொலைத்த பலருள் செல்வரத்தினமும் ஒருவர். முதுமையான வயதில் குடும்பத்தினரோடு வாழவேண்டிய செல்வரத்தினம் போன்ற பலர் இந்தக் கொடூரச் சட்டத்தால் தங்களுடைய எஞ்சிய காலத்தை சிறையிலோ அல்லது விடுதலையின் பின்னர் இறுதி கொஞ்ச காலத்தை உபாதைகளுடனோ கழிக்கவேண்டியிருக்கிறது. குடலில் ஏற்பட்டிருக்கும் தீவிர புண் காரணமாக தொடர்ச்சியான சிகிச்சைகளுக்கு நகரத்தை நோக்கி செல்வரத்தினத்தால் போகவேண்டியிருக்கிறது. “இன்னும் எத்தனை நாள்தான் வாழப்போறன் தம்பி, அதுவரைக்குமாவது இவங்க யாருக்கும் தொந்தரவில்லாம வாழ்ந்திட்டுப் போயிரனும்.”

* பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செல்வரத்தினத்துடனான முழுமையான நேர்க்காணல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 

https://maatram.org/?p=10579

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்!

2 months 3 weeks ago
 

 

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்திருந்த நிலையிலும் இரு பிரிவுகளாக நினைவேந்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதாவது இன்று காலை பத்து மணிக்கு இவ் நினைவேந்தல் நடைபெறுமென சிவாஜிலிங்கம் அறிவித்திருந்த நிலையில் காலை 9.30 மணியளவில் தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடாத்தப்பட்டிருந்தது.

இதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழரசு மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட தமிழரசு கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆனாலும் ஏனைய கட்சிகளின் ஒரு சில உறுப்பினர்களும் அதேநேரத்தில் மறவன்புலவு சச்சிதானந்தமும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் காலை பத்து மணியளவில் மற்றுமொரு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2023/1319591

மாவீரர் நாள் மரபாகி வந்த கதை

2 months 3 weeks ago

வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவு­கூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக்  குறிப்பிட்டார். முன்­னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்­துகொண்டிருந்தன.

அத்துடன் இலங்கைத்­தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளி­யாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர் குறிப் பிட்டார். உலகில் வெவ்­வேறு நாடுகளில்  யூதர்கள் என்ற காரணத்­துக்காக கொல்லப்­பட்ட அனைவரது பெயர், சம்பவங்கள் அனைத்தையுமே இஸ்ரேலில் பதிவுக்­குள்ளாக்கி வைத்துள்ளனர்  எனக் குறிப்பிட்ட அவர் ஒடடு­மொத்தமாக யூத இனம் தாம் சந்­தித்த இன அழி­வு­களை வர­லா­றா­கப் பதிவு செய்­வ­தில் காட்­டிய அக்­க­றையை விலா­வா­ரி­யாக விப­ரித்­தார். அத­னைப் போலவே ஈழ­நா­தம் காட்­டும் அக்­க ­றையை குறிப்­பி­டத்­தக்க விட­யம் எனப் பாராட்­டி­னார்.

இறுதி யுத்­தம் முடிந்து பதி­னோரு ஆண்­டு­கள் கழிந்து விட்­டன. இன்­ன­மும் இனப்­ப­டு­கொ­லைக்­குள்­ளாக்­கப்­பட்ட தமது உற­வு­கள் பற்­றிய பதி­வு­களை எம்­மி­னம் பூர­ணப்­ப­டுத்­த­ வில்லை. இறுதி நாட்­க­ளில் நடை­பெற்ற வீரச்­சாவு விப­ரங்­கள் கூட முழு­மைப்­ப­டுத்­தப் ப­ட­வில்லை. இந்த விட­யங்­க­ளில் யாரா­வது அக்­கறை காட்ட முனைந்­தால் தலை­யில் குட்டி அம­ர­ வைக்­கும் போக்­கி­னையே சிலர் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர். வர­லாற்றை மாற்றி எழு­தும் பிர­கி­ரு­தி­கள் தமது கற்­ப­னை­களை ஓரிரு சம்­ப­வங்­க­ளில் சோடித்து இணை­யத்­த­ளங்­கள், முக­நூல்­க­ளில் உலாவ விடு­கின்­ற­னர். லூக்­காஸ் சாள்ஸ் அன்­ரனி என்ற இயற்­பெ­ய­ரைக்­கொண்ட மாவீ­ர­ருக்கு சீலன் எனப் பெயர் வைத்­த­வன் தானே என்­றும் தான் ஒரு மூத்த உறுப்­பி­னர் என்­றும் அண்­மை­யில் ஒரு­வர் இணை­யத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.மூத்த உறுப்­பி­னர் என்று சொல்­வ­தற்கு அவர் தலை நரைக்­கும் வரை காத்­தி­ருந்­தார்  போலும்.

வர­லாற்­றில் நடை­பெ­றும் திணிப்­புக்­கள் என்ற விட­யத்­தில் நாம் எச்­ச­ரிக்­கை­யா­கத் தான் இருக்­க­வேண்­டும். அந்த விட­யத்­தில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­கள் பற்­றி­யும் குறிப்­பிட்­டா­க­வேண்­டும். ஏனெ­னில் இன்­றைய நிலை­யில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­க­ளின் செயற்­பா­டு­கள்,முடி­வு­கள் தொடர்­பாக தீர்­மா­னிக்­கும் உரிமை தமக்கே உள்­ளது என்ற நினைப்பு சில­ரி­டம் ஊறி­விட்­டது போல் உள்­ளது.

விடு­த­லைப்­பு­லி­க­ளின் முதல் மாவீ­ரர் சங்­க­ரின் வித்­து­டல் தமி­ழ­கத்­தில் எரி­யூட்­டப்­பட்­டது. (கொள்ளி வைத்­த­வர் அப்­பையா அண்­ணர்) இரண்­டா­வது,மூன்­றா­வது மாவீ­ரர்­க­ளான லெப்.சீலன் மற்­றும் ஆனந்­தின் உட­லங்­கள் யாழ்.போத­னா­வைத்­தி­ய­சா­லை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. எப்­ப­டியோ தக­வல் அறிந்த சீல­னின் தாயார் தனது மக­னின் உடலை தன்­னி­டமே கைய­ளிக்­க­வேண்­டு­மென பொலி­ஸா­ரி­டம் வேண்­டிக்­கொண்­டார். அவ் வேண்­டு­கோளை பொலி­ஸார் நிரா­க­ரித்­த­னர். ஊர்­கா­வற்­து­றைப் பகு­தி­யி­லேயே பொலி­ஸா­ரால் இவ்­விரு உடல்­க­ளும் எரி­யூட்­டப்­பட்­டன. வர­லாற்­றுச் சம­ரான 1983 ஜூலை  திரு­நெல்­வே­லி­யில் வீரச்­சா­வெய்­திய லெப். செல்­லக்­கிளி அம்­மா­னின் வித்­து­ட­லைப்  புலி­களே கொண்டு சென்­ற­னர். நீர்­வே­லிப் பகு­தி­யில் இவ் வித்­து­டல் விதைக்­கப்­பட்­டது. அன்­றைய கால­கட்­டத்­தில் இவ் விட­யம் பகி­ரங்­கப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை. சுவ­ரொட்­டி­கள் மூலமே இவ்­வி­ட­யம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் ஓராண்டு நினைவு நாளை யொட்­டியே அவ­ரது வீரச்­சா­வுச் சம்­ப­வ­மும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது .

முதல் மாவீ­ரர் சங்­கர்

அன்­றைய கால­கட்­டத்­தில் இரு­வ­ரின்  பாது­காப்­புக் கருதி சங்­க­ரின் வீரச்­சாவை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ ரான நித்­தி­யா­ னந்­த­னை­யும், அவ­ரது துணை­வி­யார் நிர்­ம­லா­வை­ யும் கைது செய்ய இரா­ணு­வத்­தி­னர் யாழ். நாவ­லர் வீதி­யி­லுள்ள அவர்­க­ளது வீட்­டுக்­குச் சென்­ற­னர். ”27.10 1982 அன்று இடம்­பெற்ற சாவ­கச்­சேரி பொலி­ஸ் நிலை­யத் தாக்­கு­த­லில் காய­ம­டைந்த சீலன்,புலேந்­தி­ரன். ரகு (குண்­டப்பா) ஆகி­யோர்  இவர்­க­ளது வீட்­டி­லேயே  தங்­க­வைத்து சிகிச்­சை­ ய­ளிக்­கப்­பட்­ட­னர்” என்ற தக­வல் படை­யி­ன­ருக்­குக் கிடைத்­தி­ருந் தது. படை­யி­னர் இவர்­க­ளது வீட்டை முற்­று­கை­ யி­டச்  சென்ற போது அங்­கி­ருந்த சங்­கர் அந்த முற்­று­கை­யி­லி­ருந்து தப்ப முயன்­றார்.படை­யி­ன­ரின் துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­தில் வயிற்­றில் காய­ம­டைந்த அவர் கைலா­ச­பிள்­ளை­யார்  கோவி­ல­டிக்கு ஓடி வந்து சேர்ந்த போது துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்­து­கொண்­டி­ருந்­தார் அப்­போது  யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வ­னும் பின்­னா­ளில் 18 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஈழநாதம் நாளிதழின்  பிரதம ஆசிரியராக விளங்கிய வருமான பொ .ஜெயராஜ் . அவர் சங்­க­ரைக்­கண்­டார். ஏற்­க­னவே அறி­மு­க­மா­யி­ருந்த சங்­கரை தனது துவிச்­சக்­கர வண்­டி­ யில் ஏற்­றிக்­கொண்டு சென்­றார். யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதிரே உள்ள குமா­ர­சாமி வீதி­யி­லுள்ள 41 எண்­ணு­டைய வீட்­டுக் குக்­கொண்­டு­போ­னார். இந்­தப்­போ­ராட்­டத்­து­டன் சம்­பந்­த­மு­டைய பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் பலர் பழகி வந்த இந்த வீட்­டில் இருந்த ஏனை­யோ­ரு­டன் இணைந்து சங்கரைக் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.

அன்­றைய கால­கட்­டத்­தில் பொது வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை பெறு­வது முடி­யாத விட­யம். எனவே மேல­திக சிகிச்­சைக்­காக சங்­கர் தமி­ழ­கத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டார். சிவ­கு­மார் என்­னும் இயற்­பெ­ய­ரைக் கொண்ட அன்­ரனே இவ­ரைத் தமி­ழ­கத்­துக்குக் கொண்டு சென்­றார்.

சங்­க­ருக்­காக உண்­ணா­வி­ர­த­மி­ருந்த தலை­வர்

பொது­வாக எவ­ருமே நினைவு தப்பி வலி­யில் துடிக்­கும் போது “அம்மா ….. அம்மா .. „ என்றே அரற்­று­வ­துண்டு . ஆனால் சிகிச்­சைக்­காக கொண்டு செல்­லப்­பட்ட அந்­தச் சம­யத்­தில் சங்­கர் “ தம்பி … தம்பி “ என்றே அரற்­றி­னார். தலை­வர் சங்­க­ரின் மன­தில் எந்­த­ள­வுக்கு ஆழ­மாக உறைந்­தி­ருந்­தார் என்­ப­தற்கு இது­வோர் சிறந்த உதா­ர­ணம். தமி­ழர்­க­ளின் விடு­த­லைக்­காக இது­வரை  36 ஆயு­தப்­போ­ராட்ட இயக்­கங்­கள் தோன்­றிய போதும் அதில் புலி­கள் மட்­டுமே வித்­தி­யா­ச­மா­கத் தெரிந்­தார்­கள் என்­றால் அதற்கு இது போன்ற உதா­ர­ணங்­களை சுட்­டிக் காட்­ட­லாம். வேறு எங்­கும் காண முடி­யாத விட­யம் இது . அந்­தப் பாசப்­பி­ணைப்பே வர­லாற்­றில் முதல் மாவீ­ர­னாக (விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின்) பெயர்  பதித்த சங்­க­ரின் நினைவு நாளின் போது 1983 இருந்து 2008 வரை நீர் கூட அருந்­தா­மல் உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் எண்­ணத்­தைக் தலை­வ­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யது

மாவீ­ரர் நாள் அறி­விப்பு

இதன் அடுத்­த­கட்­டம் தான் மாவீ­ரர் நாள் பற்­றிய அறி­விப்பு.இந்­திய இரா­ணுவம் செயற்பட்ட காலத்­தில் 1989 ம் ஆண்­டில் இந்த அறி­விப்பு மண­லாற்­றுக் காட்­டில் இருந்த( ’14’முகாம் ) மூலம் சகல பிராந்­திய தள­ப­தி­க­ளுக்­கும்   தெரி­விக்­கப்­பட்­டது. முத­லாம் உல­கப்­போ­ரின்போது போர்க்­க­ளத்­தில் உயிர் நீத்த வீரர்­களை நினை­வு­கூ­ரும் வகை­யில் முதன் முத­லாக ஆரம்­பிக்­கப்­பட்ட பொப்பி மலர் நினைவு நாள் பற்றி சங்­கர் என்ற மூத்­த­போ­ராளி உரை­யா­ட­லொன்­றின்­போது  தலை­வ­ரி­டம் குறிப்­பிட்­டார் (இவரே பின்­னா­ளில்  விமா­னப் படை­யின் உரு­வாக்­கத்­தில் பெரும்பங்கு வகித்­த­து­டன் அதனை வழி­ந­டத்­தி­ய­வர். (இயற்­பெ­யர் வை.சொர்­ண­லிங்­கம்)

இந்த பொப்பி மலர் உதா­ர­ணமே இலங்­கை­யில் ‘சூரி­ய­மல்’ எனப்­ப­டும் சூரி­ய­காந்தி இயக்­கத்­துக்கு வழி வ­குத்­தது.
அந்­தப்­பொ­றியை சங்­கர் தட்­டியபோதே எங்­க­ளது தேசிய விடு­த­லைப் போராட்­டத்­தில் ஆகு­தி­யா­கிய போரா­ளி­க­ளுக்­கும் ஒரு நாளைப் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென்ற சிந்­தனை தலை­வர் மன­தில் உரு­வா­னது  . அந்­த­வ­கை­யி­லேயே புலி­க­ளின் முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் (சத்­தி­ய­நா­தன் ) நினைவு நாளை மாவீ­ரர் நாளா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­னார் அவர். இது பற்றி குறிப்­பினை தேவர் அண்­ணா­வும் வெளி­யிட்­டி­ருந்­தார் .

கிழக்­கில்…!

மட்­டக்­க­ளப்­புக்­கு இந்த அறி­விப்பு  வந்­த­போது வடக்கு,கிழக்­கில் நிலை­கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­வம் கட்­டம்­கட்­ட­மாக வெளி­யே­றும் நிலை­யில் இருந்­தது .முத­லா­வது தொகு­தி­யி­னர் அம்­பாறை மாவட்­டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்­றாக வெளி­யே­றி­விட்­ட­னர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்­கங்­க­ளுக்கு கூடு­த­லான ஆயு­தங்­க­ளை­யும் அவர்­க­ளால் பிடிக்­கப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்கு பயிற்­சி­யும் வழங்­கி­விட்டே  இம் மாவட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.இந்­தி­யப்­ப­டை­யி­னர். இவர்­க­ளால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டோர் திருக்­கோ­வில் மற்­றும் தம்­பி­லு­வில் ஆகிய இடங்­க­ளில் இரு பெரும் முகாம்­களை  அமைத்­தி­ருந்­த­னர் .இந்­த­நி­லை­யில்  அன்­றைய அம்­பாறை மாவட்டத்  தள­ப­தி­யாக விளங்­கிய  அன்­ரனி தலை­மை­யில் ஒரு முகா­மை­யும்   இன்­னொன்றை  அன்­றைய மட்­டக்­க­ளப்பு மாவட்ட தள­பதியாக விளங்­கிய ரீகன் தலை­மை­யி­லும்   05.11.1989 அன்று    தாக்கி கைப்­பற்­றி­னர்­பு­லி­கள்.

இந்த நிலை­யில் அம்­பா­றை­யில் அன்­ரனி முதல் மாவீ­ரர் நாளை திறம்­பட நடத்­தி­னார். திருக்­கோ­யில்  பகு­தி­யில் தள­பதி அன்­ரனி தலை­மை­யில்   போரா­ளி­கள் பாது­காப்பு வழங்க  அம்­பாறை மாவட்ட அர­சி­யல் துறை­யி­னர் நிகழ்வை நடத்­தி­னர்.

ஆனால் மட­டக்­க­ளப்பு மாவ­ட­டத்­தில் இந்­திய இரா­ணு­வம் நிலை கொண்­டி­ருந்­த­தால் பெரும்­பா­லான கிரா­மங்­க­ளில்  மாவீ­ரர்­க­ளின் படங்­கள் வைத்து தீபம் ஏற்­றப்­பட்­டது.வந்­தா­று­மூ­லை­யில் புலி­க­ளும் மக்­க­ளும் கூடி­யி­ருந்த இடத்­துக்கு எதிர்­பா­ராத வித­மாக இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­த­போ­தும் அசம்­பா­வி­தம் எது­வும் நடக்­க­வில்லை.

திரு­கோ­ண­ம­லை­யைப் பொறுத்­த­வரை இந்­திய இரா­ணு­வத்­தின் நெருக்­கடி அதி­க­மாக இருந்­தது. அவ்­வா­றி­ருந்­தும் சாம்­பல்­தீவு மகா­வித்­தி­யா­ல­யத்­தில் நிகழ்­வுக்­கென ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 150 க்கு மேற்­பட்ட பொதுமக்­கள் இந் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர். நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­க­ளின்  பாது­காப்­புக்­காக ஒரு அணி அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலை­யி­லான சுரேஷ் என்ற போரா­ளி­யை­யும்  (பின்­னர் படகு விபத்­தில் ஆகு­தி­யா­னார் ) நிகழ்­வைப் பொறுப்­பேற்று நடந்த அர­சி­யல் பொறுப்பை ஏற்­றி­ருந்த ரூப­னை­யும் அனுப்­பி­யி­ருந்­தார் பது­மன். அன்­றைய கால­கட்­டத்­தில் சங்­க­ரின் புகைப்­ப­டம் கூட இவர்­க­ளின்  கைவ­சம் இருக்­க­வில்லை.

நிகழ்வு நடை­பெ­றும் தக­வல் அறிந்து இந்­தி­யப்­ப­டை­யி­னர் அங்கு விரைந்­த­னர். அவர்­களை எதிர்த்து புலி­கள் போரிட்­ட­னர். ஒரு பக்­கம் மோத­லில் ஈடு­பட்­டுக்­கொண்டே நிகழ்­வை­யும் நடத்­தி­மு­டித்­த­னர் .மாவீ­ரர்­க­ளின் பெற்­றோ­ரின் பாது­காப்­பைக் கருத்­திற்­கொண்டு சுருக்­க­மாக நிகழ்வு நடந்­தன. ரூபன் சுட­ரேற்றி வைத்­தார்.அதே­வேளை இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரைத் தடுக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்ட  லெப்.ரிச்­சாட்  (இரா­ம­சாமி குண­ராசா, இறக்­கண்டி, திரு­கோ­ண­மலை.)என்ற போராளி களப்­ப­லி­யா­னார். இன்­னு­மொரு போரா­ளி­யும் இந்­தச் சம­ரில் காய­ம­டைந்­தார்.மாவீ­ரர் நாளின் மாண்­பைப் பேண­வும்  மாவீ­ர­ரின் பெற்­ரோ­ரைக்­காக்­கும் முயற்­சி­யி­ லும் தன்னை ஆகு­தி­யாக்­கிய முதல்­மா­வீ­ர­னாக ரிச்­சாட்டின்  வர­லாறு அமைந்­தது.

வடக்­கில்..!

கிளி­நொச்சி மாவட்­டத்­தின்  நிகழ்வு பிர­தே­சப் பொறுப்­பா­ள­ராக இருந்த அத்­தா­ரின் ஏற்­பாட்­டில் நடை­பெற்­றது. உருத்­தி­ர­பு­ரம் சிவன்­கோ­யி­ லடி, அக்­க­ரா­யன்,கிளி­நொச்சி ஆகிய இடங்­க­ளில் இந்­திய இரா­ணுவ முகாம்­கள் இருந்­த­போ­தும் இவற்­றுக்கு நடு­வில் இருந்த கோணா­வில் அ.த.க பாட­சா­லை­யில் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. வாடகை மோட்­டார் வண்­டி­யில் ஒலி­ பெ­ருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறி­விப்­புச் செய்­யப்­பட்­டது. சில வேளை இவர்­க­ளுக்கு இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரால் தொந்­த­ரவு ஏற்­ப­ட­லாம் எனக்­க­ருதி, நக­ரில் இருந்த சகல ஒலி­பெ­ருக்கி மற்­றும் வாடகை மோட்­டோர் வண்டிக­ளின் உரி­மை­யா­ளர்­கள் நிகழ்­விடத்­துக்கு அழைக்கப்­பட்­ட­னர்.

“வானம்  பூமி­யா­னது பூமி ­வா­ன­மா­னது” என்ற பெரு­மாள் கணே­ச­னின் பாடலை பின்­னா­ளில் பிர­பல எழுச்­சி­பா­ட­க­ராக விளங்­கிய S .G சாந்­தன் பாடி­னார். அடி­மைத்­த­னத்­துக்கு எதி­ரான சினி­மாப் பாடல்­களை மாண­வர்­கள் பாடி­னர்.  (சத்­தி­யமே இலட்­சி­ய­மாய் கொள்­ளடா , உள்­ளத்­திலே உரம் வேண்­டு­மடா போன்ற) “ஓநா­யும் ,சேவல்­க­ளும்” என்ற நவீன குறி­யீட்டு நாட­க­மும் மேடை­யேற்­றப்­பட்­டது.வன்­னி­யில் முதன்­மு­தல் மேடை­யேற்­றப்­பட்ட இக் குறி­யீட்டு நாட­கத்தை நா. யோகேந்­தி­ர­நா­தன் எழு­தி­யி­ருந்­தார். அன்­ரன் அன்­ப­ழ­கன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றி­ருந்­தார். மாவீ­ரர் நாளுக்­கான சுட­ரேற்­றல் முத­லான நிகழ்­வு­க­ளு­டன் மிகச் சிறப்­பான முறை­யில் அனைத்­தும் நடை­பெற்­றன.மூன்று முகாம் களி­லி­ருந்­தும் இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­தால் எதிர்­கொள்­ளத் தேவை­யான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்த போதும் அசம்­பா­வி­தம் ஏது­மின்றி அனைத்­தும் நடை­பெற்­றன.

மன்­னார்ப் பிராந்­தி ­யத்­தின்  சகல மாவீ­ரர் விப­ரங்­க­ளை ­யும் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் அமு­தன் (சுரேஷ் ) தலை­வ­ரி­டம் சமர்ப்­பித்­தி­ருந்­தார். பண்­டி­வி­ரிச்­சான் , நானாட்­டான், கறுக்­காய்க் குளம், முழங்­கா­வில் ஆகிய இடங்­க­ளில் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பண்­டி­வி­ரிச்­சான் பாட­சா­லை­யில் பிர­தே­சப்­பொ­றுப் பா­ளர் கணே­ஷின் ஏற்­பாட்­டில் நிகழ்வு நடை­பெற்­றது. கவிதை, பேச்சு, நாட­கம் என பல்­வேறு நிகழ்­வு­க­ளின் போட்­டி­க­ளும் முன்­கூட்­டியே ஏற்­பாடு செயப்­பட்­டி­ருந்­தன. நானாட்­டான் நெல் களஞ்­சி­யத்­தில் பிர­தே­சப் பொறுப்­பா­ளர் ஞானி­யின் ஏற்­பாட்­டில் நிகழ்­வு­கள் நடந்­தன. பின்­னா­ளில் தமி­ழீழ நிர்­வாக சேவை­யில் பிர­மு­க­ராக விளங்­கிய சின்­னப்பா மாஸ்­டர் இந் நிகழ்வை திறம்­ப­டச் செய்­வ­தற்­கான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தார்.

கறுக்­காய்க் குளத்­தி­லும் நெற்­க­ளஞ்­சி­யத்­தி­லேயே நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பிர­தே­சப்­பொ­றுப்­பா­ளர் பாரதி இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்.பூந­கரி பிர­தே­சத்­துக்­கான நிகழ்வு முழங்­கா­வில் மகா வித்­தி­யா­யத்­தில் நடை­பெற்­றது. பிர­தே­சப் பொறுப்­பா­ளர் சாம் இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார். யாழ்.மாவட்­டப் பொறுப்­பா­ள­ராக  பொட்­டுவே செயற்­பட்­டார். அவர் தன்­னு­டன் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த ராஜன் (பின்­னா­ளில் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கி­ய­வர்) சூட் ( தவளை நட­வ­டிக்­கை­யின் போது வீரச்­சா­வெய்­தி­ ய­வர்) ஜக்­சன் (தற்­போது  புலம்­பெ­யர் நாடொன்­றில் வசிப்­ப­வர்) முத­லா­னோ­ரி­டம் மாவீ­ரர் நாள் அறி­விப்பு பற்­றிக் குறிப்­பிட்­டார். இந்­தி­யப் படை­யி­ன­ரின் நட­வ­டிக்கை தீவி­ர­மா­யி­ருந்­த­தால் சிறு சிறு குழுக்­க­ளாக காலத்­துக்­கேற்ப செயற்­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர் புலி­கள். நீர்­வேலி வாத­ர­வத்தை, குப்­பி­ளான், மாத­கல் போன்ற இடங்­க­ளில் இந்த நக­ரும் குழுக்­கள் பெரும்­பா­லும் தங்­கி­யி­ருந்­தன. பகி­ரங்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது சிர­ம­மென்­ப­தால்,  சுவ­ரொட்­டி­கள் அடித்து சாத்­தி­ய­மான இடங்­க­ளில் ஒட்­டு­வோம் என ராஜ­னி­டம் தெரி­வித்­தார் பொட்டு.

முதல் சுவ­ரொட்டி

திலீ­பன் காலத்­தில் அர­சி­யற் பணி­களை மேற்­கொண்­ட­வர் என்ற வகை­யில் நடை­மு­றைச் சாத்­தி­ய­மான விட­யங்­கள் பற்றி ராஜ­னின் அபிப்­பி­ரா­யங்­கள் கவ­னத்­திற் கொள்­ளப்­பட்­டன. ‘‘உங்­கள் சுவ­டு­க­ளில் தொட­ ரும் பாதங்­கள்’’ என்­றொரு வச­னத்தை (சுலோ­கம் என்­றும்  சொல்­ல­லாம்) எழு­திக் கொண்­டு­போய் பொட்­டு­வி­ டம் காட்­டப்­பட்­டது. அவர் அதை ஏற்­றுக் கொண்­டார். எனி­னும் மக்­கள் மன­தில் இன்­னும் ஆழ­மா­கப் பதிய வைப்­பது எப்­படி என்று சிந்­தித்­த­ வாறே தொடர்ந்து செய­லில் இறங்­கி­னார்.

எங்­கே­யா­வது கறுப்பு வர்­ணம் (பெயின்ற்) எடுத்து வரும்­படி சொன்­னார். வெளியே சென்­ற­வர்­கள் ஒரு வாளி­யில் அத­னைக் கொண்டு வந்­த­னர். வெள்­ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அரு­கில் நின்ற சூட்டை அழைத்து அவ­ரது காலின் அடிப்­பா­தத்­தில் பெயின்றை அடித்து அத்­தா­ளில் பதிய வைத்­தார். அச்­சொட்­டாக கால் பதிந்­தது. எனி­னும் அங்கு நின்ற அன்­னை­யொ­ரு­வர் இவ­ரது கால் சிறி­ய­தாக உள்­ளது; வேறொ­ரு­வ­ரின் கால் பெரி­தாக இருக்­கு­மா­யின் நன்­றாக இருக்­கும் எனத் தனது அபிப்­பி­ரா­யத்தை வெளி­யிட்­டார். அது சரி­யா­கவே இருந்­தது பொட்­டு­வுக்கு. உடனே அரு­கில் நின்ற ஜக்­ச­னின் காலில் மை பூசப்­பட்­டது. அது மிகப் பொருத்­த­மாக இருந்­தது. ராஜன் எழு­திய வச­னத்­தில் பாதங்­கள் என்ற சொல்லை நீக்­கி­விட்டு அதற்­குப் பதி­லாக …. (டொட் டொட்) என குறிப்­பிட்­டார் பொட்டு.
அந்த வகை­யில் தயா­ரிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டியே முதன் முத­லில் மாவீ­ரர் நாளுக்­கென மக்­க­ளின் பார்­வைக்கு வந்­தது. துவிச்­சக்­க­ர­வண்டி மூல­மாக பல்­வேறு இடங்­க­ளுக்­கும் கொண்டு சென்று ஒட்­டி­னர் புலி­கள்.

ஒதுங்­கிய இரா­ணு­வம்

புத்­தூர் முகா­மி­லி­ருந்து புறப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­னரை   நாட­கக் கலை­ஞர் செல்­வம் மற்­றும் பாலன் முத­லா­னோர் வழி மறித்­த­னர். மாவீ­ரர் நாள் தொடர்­பான விட­யங்­கள் இருப்­ப­தால் வெளியே வரா­ம­லி­ருக்­கு­மாறு அவர்­கள் இரா­ணு­வத்­தி­டம் கூறி­னர். தாங்­கள் எப்­ப­டி­யும் வெளி­யேற வேண்­டி­ய­வர்­கள் தானே என்ற நினைப்­பிலோ என்­னவோ மக்­க­ளின் கருத்­துக்கு மதிப்­ப­ளித்து திரும்­பிச் சென்­ற­னர் இந்­தி­யப் படை­யி­னர்.

புலி­க­ளின் கட்­ட­ளைப் பணி­ய­க­மான மண­லாறு’ 14: முகா­மில் தேவர் அண்­ணா­வோடு இணைந்து ஏற்­பா­டு­களை கவ­னிக்­கு­மாறு தலை­வர் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தார். அந்த வகை­யில் பெண் போரா­ளி­கள் உட்­பட அனை­வ­ரும் உணர்­வு­பூர்­வ­மாக பணி­க­ளில் ஈடு­பட்­ட­னர். புலி­க­ளைத் தவிர வேறு எந்த விடு­தலை இயக்­க­மும் காட்­டுக்­குள் இருந்து ஒலி­பெ­ருக்கி மூலம் பாடல்­களை இசைக்க விட்டு தமது தோழர்­களை நினைவுகூர்ந்­தி­ ருக்­காது.

இந்­நி­கழ்­வு­கள் நடை­பெ­றும்­போ­தும் இந்­தி­யப் படை வந்­தால் எதிர்­கொள்­வ­தற்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளில் தளர்ச்சி ஏதும் இருக்­க­வில்லை.

நிகழ்­வு­களை கார்த்­திக்  மாஸ்­டர் புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்­டி­ருந்­தார். இவ­ருக்கு ஏற்­க­னவே காட்­டுக்­குள் வைத்தே புகைப்­ப­டக் கரு­வி­யைக் கையாள்­வது, அதன் நுணுக்­கங்­கள் என்­ப­வற்­றைக் கிட்டு கற்­பித்­தி­ருந்­தார். தலை­வ­ரின் உரை முத­லான விட­யங்­கள் அடங்­கிய நிகழ்ச்சி நிரலை சங்­கர் மற்­றும் தேவர் அண்ணா திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

1990 ஆம் ஆண்டு நள்­ளி­ரவு 12 மணிக்கு மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் ஆரம்­ப­மா­கின. 12 மணி இரு நிமி­டத்­துக்கு  சுட­ரேற்­று­மாறு விடுத்த அழைப்­புக்கு மதிப்­ப­ளித்­தி­ருந்­த­னர் மக்­கள். ஆல­யங்­க­ளில் மணி­கள் ஒலிக்க வைக்­கப்­பட்­டன. அத­னைத் தொடர்ந்து மக்­கள் சுட­ரேற்ற தலை­வ­ரின் உரை வானொ­லி­யில் ஒலி­ப­ரப்­பா­னது. வீட்டு வாச­லில் சுட­ரேற்­றிய சம­யம் மழை பெய்­தது. அத­னால் சுடர் அணைந்து விடா­ம­லி­ருக்க குடை பிடித்­த­னர். இந்­தக் காட்சி ஒரு ஓவி­ய­ரின் மன­தில் தைத்­தது. அவர் இக்­காட்­சி­யைத் தத்­ரூ­ப­மாக வரைந்­தி­ருந்­தார். தீப­மேற்­றல், மணி­யோசை ஒலிக்­கச் செய்­தல் முத­லான விட­யங்­க­ ளெல்­லாம் கவி­ஞர் புது­வை­ அண்­ணா­வின் ஆலோ­ச­னையே. அத­னைத் தலை­வர் ஏற்­றி­ருந்­தார். மாவீ­ர­ரின் பெயரை வீதி­க­ளுக்கு சூட்­டு­வ­தும் நடை­பெற்­றது.

மாவீ­ரர் பெற்­றோ­ரைக் கெள­ர­வித்­தல் நிகழ்­வும் இந்த ஆண்­டி­லேயே ஆரம்­ப­மா­கி­விட்­டது. வலி­கா­மம் பகுதி மாவீ­ரர்களது பெற்­றோர் கோப்­பாய் ஆசி­ரிய கலா­சா­லை­யி­லும் வட­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரி­யி­லும் தென்­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் டிறி­பேர்க் கல்­லூ­ரி­யி­லும் தீவ­கத்­தைச் சேர்ந்­தோர் வேல­ணை­யி­லும் கெள­ர­விக்­கப்­பட்­ட­னர். புதிய உடை­கள், அன்­ப­ளிப்­பு­கள் வழங்­கல், விருந்­தோம்­பல் முத­லான விட­யங்­கள் பெற்­றோரை நெகிழ வைத்­தன. தாங்­கள் இழந்த பிள்­ளை­களை அங்­கி­ருந்த போரா­ளி­க­ளின் வடி­வில் கண்­ட­னர். இந்­திய இரா­ணுவ காலத்­தில் ஒரு போராளி வீரச்­சா­டைந்­தார். அவ­ரது உடல் ஓரி­டத்­தில் எரி­யூட்­டப்­பட்­டது. ஏதோ அனா­தை­கள் போல எங்­கள் சகாவை எரிப்­பது ஒரு போரா­ளி­யின் மன­தைத் தைத்­தது. விடு­த­லைக்­கா­கப் புறப்­பட்­ட­ வர்­கள் என்­றா­லும் அவர்­க­ளுக்­கான நிகழ்வு கெள­ர­வ­மாக நடத்­தப்­பட வேண்­டும்– எங்­கள் கட்­டுப்­பாட்­டில் ஒரு நிலம் இருக்­கு­மா­யின் தனிப் போரா­ளி­க­ளுக்­கென ஒரு சுடலை அமைக்க வேண்­டும் என ராஜன்  நினைத்­தார்.

துயி­மில்­லங்­க­ளின் உரு­வாக்­கம்

நெருக்­க­டி­கள் தானே புதிய சிந்­த­னை­களை தோற்­று­விக்­கும். எம்.ஜி.ஆர். இள­மை­யில் வறுமை கார­ண­மாக பட்­டினி கிடக்க வேண்­டி­யேற்­பட்­டது. அந்த வலி மன­தில் ஆழ­மா­கப் பதிந்­தி­ருந்­த­தால் தான், தாம் முத­ல­மைச்­ச­ராக வந்­த­போது சத்­து­ண­வுத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார். தான் சாப்­பி­டக் கூடிய நிலை­யில் இருந்­தி­ருந்­தால் நிச்­ச­யம் கல்­வியை இடை­நி­றுத்­தி­யி­ருக்க மாட்­டார். இந்த நிலை தனது ஆட்­சி­யில் குழந்­தை­க­ளுக்கு ஏற்­ப­டக்கூடாது .  முத­லில் உண­வுக்­கா­க­வே­னும் பாட­சா­லை­க­ளுக்­குப் பிள்­ளை­கள் வரட்­டும் என நினைத்­தார்.

அது­போல் வாழைத்­தோட்­டத்­தில்  சேரி வாழ்க்­கையை அனு­ப­வித்­த­தால்­தான் ஒவ்­வொரு குடும்­பத்­துக்குத் தனித்­தனி வீடு­கள் அமைக்­கப்­பட வேண்­டு­மென்று பிரே­ம­தாஸ நினைத்­த­ப­டி­யால்­தான் வீட்­டுத் திட்­டத்­தில் அதீத அக்­கறை காட்­டி­னார். 10 லட்­சம் வீட்­டுத் திட்­டத்தை நிறை­வேற்­றி­னார். அதைப் போன்­றதே போரா­ளி­க­ளுக்­கான தனிச் சுடலை என்ற சிந்­த­னை­யும். ராஜன் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ரா­ன­தும் தனது எண்­ணத்­தைச் செயற்­ப­டுத்த முனைந்­தார். முத­லில் நிலம் வேண்­டுமே? சிறைச்­சா­லைத் திணைக்­க­ ளத்­துக்கு சொந்­த­மான நிலம் கோப்பாய்– இரா­ச­பா­தை­யில் உள்­ளது என்ற தக­வலை ஒரு போராளி தெரி­வித்­தார். அத­னையே போரா­ளி­க­ளின் சுட­லை­யாக்­கு­வோம் என முடி­வெ­டுத்­தார் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் ராஜன். காணி­யைத் துப்­பு­ர­வாக்­கு­தல் போன்ற பணி­க­ளில் பொ.ஐங்­க­ர­நே­ச­னின் ‘தேனீக்­கள்’ அமைப்­பைச் சேர்ந்த மாண­வர்­க­ளும் ஈடு­பட்­ட­னர். அடுத்து சுட­ லை­யை­யும் வடி­வ­மைக்க வேண்­டும். யாழ்.நக­ரப் பொறுப்­பா­ள­ராக இருந்த கமல் மாஸ்­டர் (வீரச்­சா­வ­டைந்­து­விட்­டார்) தனது பணி­ம­னைக்கு முன்­னால் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த கட்­டட வடி­வ­மைப்­பா­ளர் ஒரு­ வர் இருக்­கி­றார் என்று தெரி­வித்­தார். அவ­ரையே வர­வ­ழைத்து சுட­லைக்­கான வடி­வம் அமைக்­கப்­பட்­டது. வடி­வ­மைப்­பா­ளர் கோரி­ய­படி கந்­தர்­ம­டத்­தி­லி­ருந்த பொறி­யி­ய­லா­ளர் பங்­க­ளிப்­பும் கிடைத்­தது. ஏற்­க­னவே அறி­மு­கம் இல்­லா­த­போ­தும் இரு­வ­ரும் ஆர்­வ­மு­டன் இப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர். பொற்­பதி வீதி­யி­லுள்ள கட்­ட­டத் தொழி­லா­ளி­க­ளின் பங்­க­ளிப்­பில் நடந்த பணி­க­ளில் உடலை எரிப்­ப­தற்­கான மேடை­யும் அடங்­கி­யி­ருந்­தது.

இதன்­பின்­னர் வீரச்­செய்­தி­ய­வர் ஒரு கிறிஸ்­த­வர். அவரை எப்­படி எரிப்­பது என்ற பிரச்­சினை. அது­வும் தனிச் சுட­லை­யில் ஏன் எரிப்­பான் என்­பது அடுத்த கேள்வி. விவ­கா­ரம் எழுந்­த­தும் ராஜன் அங்கு சென்­றார். ‘‘பொதுச் சுட­லை­யில் கண்ட காவாலி, கழி­ச­றை­க­ளை­யும் எரித்­தி­ருப்­பா­ர்­கள். எங்­கள் மகனோ புனி­த­மான மாவீ­ரர். காவா­லி­களை எரித்த இடத்­தில் இவ­ரை­யும் எரிப்­பதை ஏற்­க­மாட்­டார்­கள் தானே?” எனக் கேட்­டார். யதார்த்­தத்­தைப் புரிந்­த­னர் பெற்­றோர். மேடை­யில் இவ­ரது சட­லம் எரிப்­பதை ஒளிப்­ப­ட­மாக எடுத்து தலை­வ­ருக்­குக் காண்­பிக்­கப்­பட்­டது. ‘‘தனி மயா­னம் நல்­ல­து­தான்; நாங்­கள் ஏன் எரிக்க வேண்­டும்? புதைக்­க­லாமே?’’ இந்­தக் கேள்வி  தான் வித்­து­டல்­க­ளைப் புதைக்­கும் வழக்­குக்கு அத்­தி­பா­ரம். அடுத்­த­தாக வீரச்­சா­வெய்­து­ப­வ­ரின் வீட்­டுக்கு சென்­ற­போது அங்­கும் பிரச்­சினை எழுந்­தது. ஏன் எங்­கள் பிள்­ளை­யைச் சுட­லை­யில் எரிக்­கா­மல் புதைக்க வேண்­டும்? என்று கேட்­ட­னர். நீங்­கள் மக­னின் நினைவு எழும் போதெல்­லாம் அந்த இடத்துக்­குச் சென்று கும்­பி­ட­லாம். அழ­லாம். பூப்­போ­ட­லாம் என்று விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.

வர­லாற்­றில் துயி­லு­மில்­லத்­தில் முதன் முத­லாக விதைக்­கப்­பட்­ட­வர் என்ற வர­லாறு சோலை என்ற மாவீ­ர­ருக்­குக் கிடைத்­தது. மாவீ­ரரை விதைக்­கு­முன் வாசிக்­கப்­ப­டும் வாச­கங்­க­ளை­யும் (மாவீ­ரர் பெயர் தவிர்த்­தது )புதுவை அண்­ணாவே எழு­தி­னார்.

மாவீ­ரர் பதி­வு­கள்

இந்­தக்­கா­லப் பகு­தி­க­ளிலே மாவீ­ரர் பணி­மனை முழு அள­வில் செயற்­பட ஆரம்­பித்­தது. இந்­தி­யப் படை­யி­ன­ரின் வரு­கைக்கு முன்­னர் மாவீ­ரர்­க­ளின் விப­ரம் பேணப்­பட்­டி­ருந்­தது.  எனி­னும் இந்­தி­யப் படை­யி­ன­ரின் காலத்­தில் புதி­தாக இணைந்து கொண்­டோர் பற்­றிய விவ­ரம் தலை­மைக்­குத் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அந்­தக் காலத்­தி­லேயே இணைந்து அக்­கா­லப் பகு­தி­யி­லேயே சிலர் மாவீ­ர­ரா­கி­யும் இருந்­த­னர். எனவே இவ்­வா­றான விட­யங்­க­ளைத் தெரி­விக்­கும்­படி பகி­ரங்க அறி­விப்பு விடுக்­கப்­பட்­டது. இதற்கு பொன்.பூலோ­க­சிங்­கம் என்ற சட்­டத்­த­ர­ணி­யின் பங்­க­ளிப்பு காத்­தி­ர­மா­ன­தாக இருந்­தது.  அவர் நாள்­தோ­றும் தினக்­கு­றிப்பு (டயரி) எழு­தும் பழக்­க­மு­டை­ய­வர். பத்­தி­ரி­கை­க­ளில் வரும் மாவீ­ரர் இழப்பு,  பொது­மக்­கள் இழப்பு (படையினர் மற்­றும் இன­வா­தி­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டவை) குறித்து அவர் எழு­திய குறிப்­பு­களே மாவீ­ரர் பட்­டி­யலை கணி­ச­மான அளவு சரி­யாக்க உத­விற்று.  தாவ­டி­யில் தும்­புத் தொழிற்­சா­லை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட விமா­னக் குண்­டு­ வீச்­சில்  லூக்­காஸ் என்­ப­வர் மாவீ­ர­ரா­னார். ஆனால் இந்த மாவீ­ரர் பற்­றிய விவ­ரம் எவ­ருக்­கும் தெரி­யாது. நாவ­லப்­பிட்­டி­யைச் சேர்ந்­த­வர் என்று மட்­டுமே தெரி­யும்.

1990 இல் ஈழ­நா­தம் நாளி­தழ் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது வீர­வ­ணக்க விளம்­ப­ரங்­கள் வெளி­வந்­தன. தங்­கள் பிள்­ளை­களை, உற­வு­களை, நட்­பு­களை நினை­வு­கூர வச­தி­யான சில­ரால் மட்­டுமே முடிந்­தது. அதே­சம்­ப­வங்­க­ளில் வீரச்­சா­வெய்­திய ஏனைய மாவீ­ரர்­களை எவ­ரும் நினை­வு­கூ­ர­வில்லை. இத­னைக் கண்­ணுற்ற ஒரு போராளி அப்­போ­தைய அர­சி­யல் தலை­மையை வகித்த மாத்­த­யா­வி­டம் இவ்­வி­ட­யம் பற்­றிக் குறிப்­பிட்­டார். நாளாந்­தம் அதே நாளில் வீரச்­சா­வெய்­தி­யோர் விவ­ரம் வெளி­யி­டப்­பட வேண்­டும் என்ற ஆதங்­கத்­தைத் தெரி­வித்­தார். வரு­டம் 365 நாளில் மட்­டு­மல்ல 4 வரு­டங்­க­ளுக்கு ஒரு­மு­றை­வ­ரும் (லீப்­வ­ரு­டம் ) பெப்­ர­வரி 29 இல் கூட  மாவீ­ரர் விவ­ரம் உண்டு என்­ப­தும் தெரி­ய­வந்­தது. இதற்­கென இயங்­கி­வந்த பணி­மனை இரண்டு மாவீ­ரர்­க­ளின்  தந்­தை­யான பொன்.தியா­கம் அப்­பா­வின் பொறுப்­பில் ஆரம்­பிக்­கப்­பட்டு மாவீ­ரர் பணி­ம­னை­யு­டன் இணைக்­கப்­பட்­டது. (பின்­னர் இவர் மூன்று மாவீ­ரர்­க­ளின் தந்­தை­யா­னார். பள்­ள­ம­டு­வில் இவ­ரது மக­ளும் வீரச்­சா­வ­டைந்­தார்) பெய­ரில், திக­தி­யில், முக­வ­ரி­யில் என பல்­வேறு தவ­று­க­ளு­டன் இருந்த பட்­டி­யல்­கள் தியா­கம் அப்­பா­வின் முயற்­சி­யால் திருத்­தப்­பட்­டன. மாவீ­ரர் நிகழ்­வு­கள் பற்­றிய சுற்­று­நி­ரு­பங்­கள் இந்­தப் பணி­ம­னை­யி­னால் விடுக்­கப்­பட்­டன. இந்­தப்­ப­ணி­மனை கோரும் விவ­ரங்­களை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என பிராந்­தி­யத் தள­ப­தி­க­ளுக்­கும் தலை­வ­ரும் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தார். எந்­தெந்­தத் துயி­லு­மில்­லங்­க­ளில் யார் ,யார் விதைக்­கப்­பட்­டார்­கள், வித்­து­டல் கிடைக்­காத யார் யாருக்கு எங்­கெங்கு நினை­வுக்­கல் உள்­ளன போன்ற முழு விவ­ரங்­க­ளும் இந்­தப்­ப­ணி­ம­னை­யில் இருந்­தது.இதன் மூலம் மிக­வும் காத்­தி­ர­மான பணியை செய்­து­வந்­தார் பொன் தியா­கம் அப்பா.

‘‘தாயகக் கனவுடன்..”

1992 ஆம் ஆண்­டுக்­கான மாவீ­ரர் நாள் ஏற்­பா­டு­கள் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் தலை­வர் தலை­மை­யில் நடந்­தது. அப்­போது மக­ளிர் அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கிய ஜெயா ஒரு  ஆலோ­ச­னையை முன்­வைத்­தார். மாவீ­ரர் பெற்­றோ­ரும் போரா­ளி­க­ளும் இணைந்து பாடக் கூடிய ஒரு பாடல் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்­றார். உடனே தலை­வர் புது­வை­யண்­ணா­வைப் பார்க்க கையைப் பொத்தி பெரு­வி­ரலை உயர்த்­திக் காட்­டி­னார் புதுவையண்ணா.

ஈழ­நா­தம், விடு­த­லைப் புலி­கள், சுதந்­தி­ரப் பறவை வெளி­வந்த மாவீ­ரர்­கள் பற்­றிய கட்­டு­ரை­களை தனி­யான நூல்­க­ளாக வெளி­யிட வேண்­டும் என்ற அறி­வ­னின் யோச­னை­யும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது. துயி­லு­ மில்­லத்­துக்கு வரு­வோர் தமது பிள்­ளை­க­ளின் நினை­வாக வீடு­க­ளில் நாட்­டு­வ­தற்கு அவர்­க­ளின் கல்­ல­றை­கள் மற்­றும் நினை­வுக் கற்­க­ளுக்கு முன்­னால் தென்னை போன்ற பயன்­தரு மரங்­களை வைக்க வேண்­டும் என்று பொருண்­மிய மேம்­பாட்டு நிறு­வ­னத்­தி­ன­ரால் வைக்­கப்­பட்ட யோச­னை­யும் ஏற்­கப்­பட்­டது. இந்த யோசனை இன்று பல்­வேறு வகை­யி­லும் பின்­பற்­றப்­ப­டு­வது ஆரோக்­கி­ய­மான விட­யம்.

ஜெயா­வின் கருத்தை உட­ன­டி­யாக செய­லாக்­கி­னார் புது­வை­யண்ணா. அது­தான் ‘‘தாய­கக் கன­வு­டன்’’ என்று ஆரம்­பிக்­கும் மாவீ­ரர் பாடல். மன­தைப் பிழி­யும்  இப்­பா­டல் இன்­று­வரை மாவீ­ரர் குடும்­பத்­தி­னர், முன்­னாள் போரா­ளி­கள்­மற்­றும் தமிழ் மக்­கள் மன­தில் நிலைத்து நிற்­கி­றது. கண்­ணன் இசை­ய­மைக்க வர்­ண­ரா­மேஸ்­வ­ரன் குர­லில் ஒலித்த பாடல் இது. கோப்­பாய் துயி­லு­மில்­லத்­தில் தனக்­குப் பக்­கத்­தில் நின்று நேரில் அத­னைப் பாட­வேண்­டும் என்று அப்­போ­தைய அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ளர் தமிழ்ச் செல்­வன் வர்­ண­ரா­மேஸ்­வ­ர­னின் வேண்­டிக் கொண்­டார். ஒலி­பெ­ருக்­கி­யி­லும் இந்­தப்­பா­டல் இசை­யு­டன் ஒலித்­தது.

முதன்­மு­த­லாக இவ்­வ­ரி­க­ளைக் கேட்ட மாவீ­ரர் குடும்­பத்­தி­னர் கதறி அழு­த­னர். இப்­பா­ட­லின் ஒலி­நா­டாவை ஒரு போரா­ளி­யி­டம் (கரும்­ப­றவை) வழங்­கிய புது­வை­யண்ணை முதன் வரி­க­ளைக் கேட்­கும்­போது உங்­க­ளுக்கு நினை­வில் வரும் சம்­ப­வங்­க­ளை­யும் கருத்­துக்­க­ளை­யும் எழு­தித் தாருங்­கள் என்­றார். அந்த விட­யம் வெளிச்­சம் இத­ழில் வெளி­வந்­தது. ஒரு மாவீ­ர­னின் தாயா­ரான மல­ரன்­னை­யும் அன்­றைய மாவீ­ரர் நாள் குறித்து கட்­டுரை எழு­தி­யி­ருந்­தார்.

மாறிய நேரம் 1992 மாவீரர் நாள் பொதுச்­சு­டரை தமிழ்ச்­செல்­வன் ஏற்­றி­னார்.1991 இல்  இதனை மாத்­தயா ஏற்­றி­யி­ருந்­தார். மாவீ­ரர் பாட­லில் வரும் ‘‘நள்­ளிரா வேளை­யில் நெய் விளக்­கேற்­றியே நாமுமை வணங்­கு­கி­றோம்’’ என்ற வரி ‘‘வல்­லமை தாரு­மென்­றுங்­க­ளின் வாச­லில் வந்­துமே வணங்­கு­கின்­றோம்’’ எனப் பின்­னா­ளில் மாற்­றப்­பட்­டது. ஏனெ­னில் முன்­னர் நள்­ளி­ர­வி­லேயே மாவீ­ரர் நாள் நினைவுகூரப்­பட்­டது. பின்­னரே தற்­போதுள்ள மாலை 6.05 க்கு மாவீ­ரர் சுடர் ஏற்­றும் முறை வழக்­கத்­துக்கு வந்­தது . தற்­போ­தைய நேரமே முதல் மாவீ­ர­ரான சங்­கர் வீரச்­சா­வெய்­திய கணம், 2009 மே 15 ஆம் நாள் வரை 35 ஆயி­ரம் அள­வில் மாவீ­ரர்­க­ளின் விவ­ரம் கிடைத்­தன. இதன் பின்­னர் தர­வு­க­ளைப் பேணவோ வழங்­கவோ இய­லக் கூடிய நிலை­யில் சூழல் அமை­ய­வில்லை.

 

https://eelamhouse.com/?p=2591

 

தேசப்பாடகர் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் - 103 பாடல்கள் | திரட்டு

2 months 4 weeks ago

s-g-santhan-music-group.webp

'ஓர் மேடைப் பாடல் நிகழ்ச்சியின் போது தேசப்பாடகர் எஸ். ஜி. சாந்தனும் தமிழீழத்தின் போராளிகள் இசைக்குழுவினரும்'

 

இதனுள் தமிழீழத் தேசப் பாடகர்களில் ஒருவரான எஸ். ஜி. சாந்தன் அவர்களின் 'எழுச்சிப் பாடல்'களை மூன்று பிரிவுகளாகத் தொகுத்துப் பதிவிட்டுள்ளேன். சில பாடல்கள் விடுபட்டிருக்கக் கூடும். விடுபட்டவற்றை அறிந்தவர்கள் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவர் 150இற்கும் மேற்பட்ட 'தமிழீழப் பாடல்'களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனித்துப் பாடிய எழுச்சிப் பாடல்கள்

  1. வானம் பூமியானது - இவருடைய முதலாவது பாடல்... 1989 இல் வெளிவந்தது
  2. அடங்கிக் கிடந்த தமிழன்
  3. அந்தி நேரப் பொழுதிலே
  4. ஆதியாய் அநாதியாய்
  5. அம்மா உன் சுகம் கேட்டு
  6. அலையை அலையைப்
  7. அலைகள் குமுறி
  8. ஆழக் கடலெங்கும்
  9. அழுது அழுது
  10. ஆனையிறவில் மேனி தடவி
  11. இங்கு வந்து பிறந்தபின்பே
  12. இந்த மண் எங்களின்இது இவருடைய இரண்டாவது எழுச்சிப் பாடலும் தமிழீழத்திலிருந்து இசையமைக்கப்பட்டு வெளியான முதலாவது எழுச்சிப் பாடலுமாகும். இப்பாடலைத் தாங்கியபடி வெளியான இறுவெட்டே முதலாவது தமிழீழ இறுவெட்டாகும்... 1990 இல் வெளிவந்தது
  13. இருளின் திசைகள் புலரும்  
  14. இனிவரும் இனிவரும் 
  15. ஈழநாதம் பேப்பரில
  16. எங்களின் வாசலில்
  17. எத்தனை பேர்களை 
  18. எதிரிகளின் பாசறையை
  19. எந்தையர் ஆண்ட
  20. எம்மண்ணில் எதிரிகள்
  21. ஒரு கூட்டுக் கிளியாக
  22. உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
  23. கடலதை நாங்கள்
  24. கடலலை எழுந்து
  25. கடலின் மடியில்
  26. கண்ணுக்குள்ளே வைத்து - இதுவே இவர் பாடிய கடைசி எழுச்சிப் பாடலாகும்
  27. கரும்புலிகள் என நாங்கள்
  28. கரும்புலி எழுதிடும் கடிதம்
  29. களங்காண விரைகின்ற
  30. கல்லறை மேனியர்
  31. கல்லறைகள் விடை திறக்கும்
  32. கிழக்கு வானம்
  33. குத்தாட்டம் போடடா
  34. குயிலே பாடு
  35. கைகளில் விழுந்தது கிளிநொச்சி
  36. கோபுர தீபம் நீங்கள்
  37. சண்டைகளின் நாயகனே
  38. சிங்களம் எங்களை கொன்று
  39. சீலன் புயலின் பாலன்
  40. ‘சூரிய தேவனின்’ வேருகளே
  41. தமிழீழத்தின் எல்லையை
  42. தூக்கம் ஏனடா
  43. நித்திய புன்னகை  
  44. நித்திய வாழ்வினில் 
  45. நிலவே கண்ணுறங்கு
  46. நிலாக்கால நேரமிங்கே
  47. நீர்கிழித்தோடியது அன்று
  48. நீலக்கடலே பாடுமலையே
  49. பண்பாட்டுக்கு இசைவாக
  50. பாட்டுக்குள் கரும்புலி
  51. பாயும் புலி அணி
  52. பெய்யுதே மழை
  53. பெருகும் கால நதியில்
  54. மாரிகால மேகம் தூவி
  55. மீண்டும் எனக்கொரு
  56. வஞ்சகர் வஞ்சனை
  57. விண்வரும் மேகங்கள்
  58. வேங்கைமார் வீரரெல்லாம்

 

S-G-Santhan-Eelamsinger-1.jpeg 

பின்னணிப் பாடகர்களுடன் பாடிய எழுச்சிப் பாடல்கள்

  1. அன்னை தேசமே உடன் பின்னணிப் பாடகரான ??
  2. படைகொண்டு வந்த உடன் பின்னணிப் பாடகரான ??
  3. வா பகையே உடன் பின்னணிப் பாடகரான ??
  4. வீரக் கடற்புலி உடன் பின்னணிப் பாடகரான மணிமொழி மற்றும் ??
  5. நீலக்கடலே அலை மோதும் உடன் ஜெயா சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான ??
  6. விடியும் திசையில் பயணம்  உடன் ஜெயா சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களாக மேஜர் சிட்டு மற்றும் தியாகராஜா ஆகியோர்
  7. பூங்கொடியாய் இருந்தாய் உடன் பின்னணிப் பாடகரான ??

 

 

shanthan.jpg

கூட்டாகப் பாடிய எழுச்சிப் பாடல்கள்

பெரும்பாலான பாடல்களில் தமிழீழப் பாடகர் சாந்தன் அவர்களுடன் கூடப் பாடியவர்கள் யாரென என்னால் பிரித்தறிய இயலாமலுள்ளதால் அவர்களைக் வினாக்குறியால் குறித்துள்ளேன். அறிந்தவர்கள் தெரிவித்துதவவும்.

  1. இளமைக் காலம் கவிதை உடன்  ??
  2. இன்னுமின்னும் கரும்புலி வெடிக்கும் உடன் ??
  3. எதிரி வாய்கள் மௌனம் உடன் ??
  4. எம் வேரினை அவனே உடன் ??
  5. எரியும் நெருப்பில் உடன் ??
  6. உலகத் தமிழர் உடன் ??
  7. ஊர் பெயரைச் சொல்லவா உடன் ??
  8. கருவேங்கை ஆகிய காற்று உடன் ??
  9. கருவேங்கை புயலெனப் புகுந்தது உடன் ??
  10. காலை விடிகின்றதடா உடன் ??
  11. தலைநகர் மீட்க உடன் ??
  12. தமிழர் என்ற சொல்லிலே உடன் ??
  13. தமிழர் தேசம் உடன் ??
  14. தாண்டிக்குளம் தாண்டி உடன் ??
  15. மட்டுநகர் மண்ணைத் தொட்டு உடன் ??
  16. மனமே மனமே உடன் ??
  17. மெல்லிய பூக்களை உடன் ?? 
  18. வட்டமதிமுகப் பெண்ணே உடன் ??
  19. விடியும் விரைவில் உடன் ??
  20. விடுதலை மகுடம் சூடிய உடன் ?? (பலர்)
  21. விண்ணையாளும் சூரியனை உடன் ??
  22. வீரப்படை வெகு வீரர்படை உடன் ??
  23. ஆனையிறவுக்கு சேலைகள்‌ உடன் திருமலைச் சந்திரன்
  24. இடியா மழையா உடன் ஜெயா சுகுமார்
  25. இந்தக் கடல் ஈழத்தமிழரின் உடன் ஜெயா சுகுமார்
  26. ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா உடன் ஜெயா சுகுமார்
  27. எம்மை நினைத்து யாரும் உடன் பார்வதி சிவபாதம் மற்றும் மோகனதாஸ்
  28. ஒரு லட்சம் சூரியன் உடன் வசீகரன், பிறின்சி, மற்றும் மணிமொழி
  29. கல்லறையில் விளக்கேற்றி உடன் புவனா 
  30. காற்றில் கலந்த கடற்கரும்புலிகள் உடன் ஜெயா சுகுமார், கௌசி மற்றும் பிறின்சி
  31. சங்கு முழங்கடா தமிழா உடன் மேஜர் சிட்டு
  32. தாயக மண்ணின் காவலராகி உடன் ஜெயா சுகுமார்
  33. நிலவற்ற வானத்தில் உடன் ஜெயா சுகுமார், மற்றும் நிரோஜன்
  34. நெருப்பாகி நெருப்பாகி உடன் வசீகரன்
  35. நெருப்பில் விளைந்த உடன் பார்வதி சிவபாதம்
  36. பாரில் தமிழன் படும் உடன் ஜெயா சுகுமார் & நிரோஜன்
  37. முல்லை மண் எங்களின் உடன் ஜெயா சுகுமார்
  38. வெள்ளிநிலா விளக்கேற்றும் உடன் மேஜர் சிட்டு

 

உசாத்துணை:

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல் | தமிழ்நெற்

3 months 1 week ago
ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல்

 

மூலம்https://www.tamilnet.com/art.html?catid=79&artid=8839
செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:56, 24 ஏப்பிரல் 2003
தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22/12/2022

 

ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே மிக அதிகமாக அரணப்படுத்தப்பட்ட தானைவைப்புகளில் ஒன்றாகயிருந்ததன் இதயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 22 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப்புலிகள் (தவிபு) தங்கள் கொடியை ஏற்றினர். ஆனையிறவின் வீழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னர் தானைவைப்பிற்கு வருகைபுரிந்த ஒரு அமெரிக்க படைத்துறை அதிகாரியால் "அசைக்க முடியாதது" என்று விரிக்கப்பட்டது, இன்று உலகின் சிக்கலான தடூகப் போர்ச் சண்டையில் வல்ல ஒரேயொரு அரசல்லாத படைத்துறைப் படையாகப் புலிகளை நிறுவியுள்ளது.

Elephant-Pass-LTTE-flag.jpg

'ஆனையிறவினை மீட்டபின்னர், சமர் ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் பேரரையர் பானு அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடியை காலை 9:52ற்கு கூட்டுப் படைத்தளத்தின் நடுப்பரப்பில் ஏற்றிவைக்கிறார் | படிமப்புரவு: தமிழ்நெற்'

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலாட்படை உருவாக்கங்களும் வீறல் அதிரடிப்படைப் பிரிவுகளும் ஏப்ரல் 21 அன்று யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலில் அகலக்கால்பரப்பி பரந்து விரிந்திருந்த சிறிலங்கா கூட்டுப்படைத்தளத்தைப் பரம்பின.

eps_map.jpg

'ஆனையிறவையும் அதன் சுற்றுப்புறங்களையும் காட்டும் வரைப்படம். | படிமப்புரவு: தமிழ்நெற்'

புலிகளின் படைத்துறை உருவாக்கங்களை எதிர்கொள்ளும் அதன் தென்முகப்பில், ஆனையிறவுக் களப்பு, அதன் உவர்க்கம் மற்றும் கரையோர நிலப்பகுதிகளில் மூன்று முக்கிய வலுவெதிர்ப்புக் கோடுகளால் தானைவைப்பு வலுவாக அரணப்படுத்தப்பட்டது. இவை மைல்களுக்கு கற்காரை மற்றும் எஃகுக் கட்டமைப்புகள், கண்ணிவயல்கள், முட்கம்பி அடுக்குகள், கண்ணிவயல்கள் மற்றும் கொடிய கூர்முனைகளின் படுக்கைகள் ஆகியவற்றால் வலுவூட்டப்பட்டன.

aanaiyiravu.jpg

'களப்பினுள் தாட்டுப் புதைக்கப்பட்டிருந்த கொடிய கூர்முனைகளின் படுக்கைகள் | படிமப்புரவு: பெயர் அறியில்லா வலைப்பூ'

சிறிலங்கா தரைப்படையானது பூநகரி (நவம்பர் 93), முல்லைத்தீவு (ஜூலை 96), கிளிநொச்சி (செப்டம்பர் 98) ஆகிய தானைவைப்புகளைப் புலிகள் பரம்புவதற்காகக் கறந்த இவற்றின் வலுவெதிர்ப்பிலுள்ள ஓட்டைகள் மற்றும் வலுவீனங்களை கவனமாக கற்றறிந்தது; மற்றும் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைத்துறையின் ஆலோசனை உள்ளீடுகள் மூலம் யாழ்ப்பாணத்திற்கான கேந்திர நுழைவாயிலை வைத்திருப்பதற்கு ஒரு அஞ்சத்தக்க அரண முறைமையைத் திட்டமிட்டுக் கட்டமைத்தன.

LTTE leader with his senior commanders.jpg

'ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கைக்காகத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் புலிகளின் தலைமையும் கட்டளையாளர்களும். | படிமப்புரவு: தமிழ்நெற்'

இந்த வலுவெதிர்ப்புகள் ஆனையிறவுக்கு நேராக வன்னி பெருநிலப்பரப்பில் ஒரு கொத்தளம் போல கட்டமைக்கப்பட்ட பரந்தனிலுள்ள ஒரு பெரிய சிறிலங்கா படைமுகாமால் காக்கப்பட்டன.

வடக்கில் அதன் பாரிய படைமுகாம்களின் வலுவெதிர்ப்பை ஒழுங்கமைப்பதில் "நிலையான அணுகுமுறையை" எடுத்துக்கொண்டதற்காக கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் சிறிலங்கா தரைப்படையானது நீண்டகாலமாகத் திறனாயப்பட்டது.

அவர்கள் சிறிலங்கா படையத் தலைமையை வல்லோச்சான சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுமாறும், இளக்கமான, பெயர்ச்சியான வலுவெதிர்ப்புக் கோடுகளுக்கு முன்னால் ஒரு பெரிய பரப்பில் பதிதாக்கல் வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

ஆனையிறவின் அரணங்கள் மீளொழுங்குபடுத்தப்பட்டு வலுவூட்டப்பட்ட போது அவர்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படவில்லை.

ஆனையிறவின் வலுவெதிர்ப்பென்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப்புலிகளின் எவ்வுருவத்திலுமான 'அதிர்ச்சி மற்றும் மதிப்பச்சம்' என்ற கேந்திரத்திற்குத் தடுப்பாற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டதாகும்.

சிறிலங்காவின் நவீன படைத்துறை வரலாற்றில் ஆனையிறவின் வலுவெதிர்ப்பின் ஆழம் முன்னிகழ்வற்றதாகும்.

அதன் பிற்பகுதியான யாழ் குடாநாடானது சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டின் கீழிருந்த போதிலும் அங்கு விடுதலைப்புலிகளின் தவிர்க்கவியலா கமுக்க நடவடிக்கைகளானவை படைத்துறை வகையாகப் புறக்கணிக்க முடியாததாகக் கருதப்பட்டது. 51, 52 மற்றும் 53 ஆகிய மூன்று படைப்பிரிவுகள், புலிகளால் அச்சுறுத்தப்பட்ட குடாநாட்டின் எந்தப் பகுதியிலும் படைகளைக் ஒருங்குவிக்கும் வகையில் சிறப்பாக அமர்த்தப்பட்டிருந்தன.

தானைவைப்பானது குடாநாட்டின் முக்கிய நகரத்திலிருந்து ஒரு கல்வீதிப்பாவாலான முதன்மை வழங்கல் பாதையையும் யாழ்ப்பாணக் களப்பின் தென்கிழக்குக் கடற்கரையில் ஒரு நிச்சயமற்ற முதன்மை வழங்கல் பாதையையும் கொண்டதால் 'முற்றிலும்' ஓம்பலானதாகக் கருதப்பட்டது.

பரந்தனின் நன்னீர் கிணறுகளிலிருந்து ஆனையிறவிற்கான நீர் வழங்கலிற்கான மாற்றீடு பின்புறத்தில், இயக்கச்சியில், தளத்திற்கு மைல்களிற்குப் பின்னால், பாதுகாப்பாகயிருந்தது.

இவற்றைத் தவிர, அதை அழிப்பதற்காக வலுவெதிர்ப்பு வேலிகளுக்குப் பின்னால் ஊடுருவும் புலிகளின் முயற்சியை முறியடிக்க, பலாலியில் ஒரு டசின் சேணேவிச் சுடுகலன்கள் அடங்கிய ஒரு சூட்டுத்தளம், ஆனையிறவு தானைவைப்பிற்குப் பிற்பகுதியில் ஒப்பீட்டளவில் ‘ஆழமாக’, அமைக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், தானைவைப்பின் வலுவெதிர்ப்பிற்குக் கொடுக்கப்பட்ட 'ஆழத்தின்' வலுவான கூறு, கட்டைக்காடு-வெற்றிலைக்கேணி கடற்கரையிலுள்ள சிறீலங்கா தரைப்படை, கடற்படைத் தளம் ஆகும். இது நிலம் மற்றும் வானின் தொடர்பு துண்டிக்கப்படும் போது, ஒடுவில் முயற்சியான வழங்கல் பாதையாக தொழிற்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எனவே, சிறிலங்காப் படைத்துறைத் தலைமையானது, அவர்களின் மேற்கத்திய பாடநூலின் 'வலுவெதிர்ப்பு ஆழம்' பற்றிய அறிவுக்கு இணங்க, புலிகள் ஆனையிறவின் 'வலுவெதிர்ப்பின் ஆழத்திற்கு' எதிராக, பாரிய கடல் கடப்புகள் மற்றும் படைத்துறை உருவாக்கங்களை போதுமான வேகத்துடன் நகர்த்துதல் என்பவற்றை உள்ளடக்கிய தடூகத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று மிகவும் சரியாகவே கருதினர். 

சிறிலங்கா படைய உசாவல் நீதிமன்றங்களின் அறிக்கைகள் இருந்தபோதிலும், சிறிலங்கா தரைப்படை அதிகாரப் படிநிலை மற்றும் அதன் பிரித்தானிய/அமெரிக்க 'வலுவெதிர்ப்பு ஆலோசகர்கள்', முன்னோக்கிய படைநிலைகள் மீது தீவிரமான பல்லங்களை ஏவுவதன் மூலமும், முன்னோக்கிய தாக்குதல்களில் தற்கொலைப் படையினரின் அலைகளை வீசுவதால் ஊடறுத்து கட்டளை மற்றும் தகவல் தொடர்பு மையங்களை ஒரேயடியில் வீழ்த்துவதன் மூலமும், கடந்த காலத்தில், விடுதலைப்புலிகள் சிறிலங்கா தரைப்படை முகாம்களில் பேரளவிலான வெற்றியை பெற்றனர் என்ற பொதுவான பார்வையைக் கொள்ள முனைந்தனர்.

கொழும்பிலும் வெளிநாடுகளிலுமுள்ள மேற்கத்திய படைத்துறை மற்றும் புலனாய்வு ஆளணியினருடன் நெருக்கமாகப் பணியாற்றும் அல்லது ஆலோசனை செய்யும் சிங்கள வலுவெதிர்ப்பு ஆய்வாளர்கள் மற்றும் செய்தியாளர்களால் இந்தக் கருத்து முக்கியமாக வளர்த்தெடுக்கப்பட்டது.

சிறிலங்கா தரைப்படை மற்றும் அதன் அமெரிக்க மற்றும் பிரித்தானிய நண்பர்கள், ஆனையிறவு போன்ற பெரிய தானைவைப்பை கடுமையாக அச்சுறுத்துவதற்குத் தேவையான அளவிலான தடூகப் போர்முறைக் கேந்திரத்தை ஒருங்கிணைக்கும் திறனை தவிபு பெற்றிருக்கும் என்று வெளிப்படையாக எதிர்பார்த்திருக்கவில்லை.

20ஆம் நூற்றாண்டில், எந்தவொரு தேச எதிர்ப்பு ஆய்தக் குழுவும் அவ்வாறு செய்து வெற்றிபெறவில்லை - வியட் கொங் கூட.

('தியம் பியன் பூ'க்கான சமரானது அடிப்படையில் 200 சேணேவித் துண்டுகள் மற்றும் 20,000 வழக்கமான வழங்கல்துறை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆதரவுடன் 15,000 க்கும் மேற்பட்ட படையினரால் முற்றுகையிடப்பட்டதோடு வியட்நாமியருக்கு தனிப்பட்ட முறையில் சாதகமான நிலப்பரப்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது ஆகும்.)

1997ஆம் ஆண்டுமுதல் போர் பற்றிய மெய்யுண்மைகளின் அடிப்படையில் அவர்களின் பார்வை ஏரணமானதாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

மே 1997 முதல் நவம்பர் 1999 வரை சிறீலங்கா படைத்துறையின் 'ஜெய சிக்குறுய் நடவடிக்கை'க்கு எதிரான அவர்களின் வலுவெதிர்ப்புச் சமர்களில் புலிகள் வன்னியிலுள்ள முக்கிய மக்கள்தொகை மையங்களையும் (புளியங்குளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், மாங்குளம்), 3000க்கும் மேற்பட்ட படையினரையும் (காயமடைந்தவர்கள் மற்றும் வீரச்சாவடைந்தவர்கள்), மதிப்புமிக்க படையப் பொருட்களையும் இழந்தனர்.

SLA Soldiers in Jeyasikurui military operation.jpg

'ஜெயசிக்குறுய் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினர். | படிமப்புரவு: தமிழ்நெற்'

மென்மேலும், விடுதலைப் புலிகள் 1995-96 இல், தீவின் வடகிழக்கில் இயக்கத்தின் மிகப்பெரிய வருவாய்த் தளமான யாழ்ப்பாணத்தையும் இழந்தனர்.

எனவே, கடுமையாக வலுவெதிர்க்கப்பட்ட தெற்கு யாழ்ப்பாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான சிக்கலான தடூகப் போரைத் தொடங்குவதற்கும், பொருண்மத்தின் அடிப்படையில் நிலைநிறுத்துவதற்கும் விடுதலைப்புலிகள் திறனற்றவர்கள் என்ற முடிவுக்கு சிறிலங்கா தரைப்படை மிகவும் ஏரணமாக வந்தது.

பின்னோக்கிப் பார்த்தால், ஆனையிறவுத் தானைவைப்பின் 'அசைக்க முடியாத பாடநூல்' மீதான சிறிலங்கா தரைப்படையின் நம்பிக்கையானது, அதைப் பார்வையிட்ட பிரித்தானியா மற்றும் அமெரிக்க படைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசதந்திரிகளின் பாராட்டுகளால் சிறியளவில் மீளுறுதிப்படுத்தப்பட்டதோடு, தெற்காசியாவின் நவீன படைத்துறை வரலாற்றில் மோசமான தோல்விகளில் ஒன்றுக்கு பங்களித்தது என்று ஒருவர் திறவினையாகக் கூறலாம். 

இது 1999 திசம்பரில் கட்டைக்காடு-வெற்றிலைக்கேணியில் உள்ள சிறிலங்கா தரைப்படை-கடற்படைக் கூட்டுத்தளத்தைப் புலிகள் கறங்கி நொறுக்கியபோது கல்மேல் எழுதப்பட்ட எழுத்துப் போலானது.

ஆனையிறவுத் தானைவைப்பின் முக்கிய உவர்க்கத்தலை இல்லாமல் போய்விட்டது என்பதை உணர்ந்து, சிறிலங்கா தரைப்படையானது, அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட அதிசிறப்பு 53 வது படைப்பிரிவினரைக் கொண்டு, கட்டைக்காட்டிற்கு வடக்கேயுள்ள தாளையடி முகாமை விரைவாக வலுவூட்டியதோடு வத்திராயன் பெட்டியையும் கட்டியது.

புலிகள் முன்னோக்கிய தாக்குதல்களுக்கு மட்டுமே திறன் கொண்டவர்கள், ஆனால் ஈரூடகத் தடூகத்திலில்லை என்ற கற்பிதத்தின் அடிப்படையிலேயே இந்த நகர்வு இருந்தது.

(வத்திராயன் பெட்டியின் கருத்தாக்கம், தாளையடியிலிருந்து ஏ9 வீதியில் புதுக்காட்டுச் சந்தி வரையிலான கனமாக அரணப்படுத்தப்பட்ட செவ்வகக் கொத்தளம், இந்தத் தற்கோளின் அடிப்படையிலேயே அமைந்தது)

சிறிலங்கா மற்றும் செந்தரப்படுத்தப்பட்ட மேற்கத்திய படைய ஞானத்தின்படி, எந்தவொரு விடுதலைப்புலிகளின் ஊடுருவல் குழுவும் தப்பிப்பிழைப்பதும் ஆனையிறவின் வலுவெதிர்ப்பிற்கு முக்கியமான பிற்பகுதியிலுள்ள முகாமையான சிறிலங்கா தரைப்படையின் படைநிலைகளுக்கு ஒரு சிறும நிலைத்தன்மையற்ற அச்சுறுத்தலைக் கூடப் பொதிப்பதும் சாத்தியமற்றது என்று கருதப்பட்டது.

தொடர்ந்து வந்த மூன்று வாரங்களில், புலிகள், வான்வழி ஆதரவில்லாமல் பகையின் நன்கு வலுவூட்டப்பட்ட பிற்பகுதியில் நிலைப்படுத்தப்பட்ட சமரில் சண்டையிட்டு வெற்றிபெற முடியும் என்பதை நவீன படைத்துறை ஞானத்திற்கு மெய்ப்பித்துக் காட்டியதன் மூலம் இன்னும் தெரிவித்து பல கற்பிதங்களை சிதறடித்தனர்.

kudaarapppu4.png

'தரையிறங்கிய போராளிகளோடும் தன் மெய்க்காவலர்களோடும் விரக்களியாற்றின் சதுப்பு நிலத்தினூடாக விடியப்புறம்போல் இத்தாவில் சமர்க்களம் நோக்கி நகரும் தரையிறக்கத் தலைமைக் கட்டளையாளர் பேரரையர் பால்ராஜ். | படிமப்புரவு: தமிழ்நெற்'

26 மார்ச் 2000 அன்று, புலிகளின் மூத்த படையக் கட்டளையாளர் பேரரையர் பால்ராஜ், கடற்புலிகள் 1200 படையினரையும் அவர்களது படைய வழங்கல்களையும், உரகடலில் சிறிலங்கா கடற்படையின் ஒரு பெரிய கடலணி மூலம் அமைக்கப்பட்ட கடற்றடுப்பூடாக தங்கள் வழிக்குச் சண்டையிட்டு, சிறிலங்கா தரைப்படையின் பிற்பகுதியிலுள்ள, இரும்பு போர்த்திய வத்திராயன் பெட்டிக்கு அப்பால், குடாரப்பு-மாமுனையில் தரையிறக்கிய போது, ஒரு அரசின் மரபுவழி தரைப்படையின் எந்த ஆழமான பிற்பகுதி வலுவெதிர்ப்பையும் கேந்திர வான்வலு கொண்ட ஒரு ஆயுதப்படையைத் தவிர வேறு யாராலும் கடுமையாக அச்சுறுத்த முடியாது என்ற கருத்தாக்கத்தைப் பொய்ப்பித்தார்.

எவ்வாறாயினும், 21 ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட போர்களை நடத்துவதில் ஒரு முன்னுதாரண பெயர்ச்சியை இது சைகை செய்வதை சிலர் கவனித்துள்ளனர்.

 

மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

3 months 1 week ago
மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்! மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எட்டுப் பொதுமக்களின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் காலை 10.30 மணிக்கு அஞ்சிலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தமது வீடுகளை விட்டு வெளியேறிய எட்டுப் பொதுமக்கள் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண நகரில் இருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ள மிருசுவிலுக்குச் சென்ற போது 2000 திசம்பர் 19 இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களினால் 2000 திசம்பர் 20 இல் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள்.

மிருசுவிலில் இருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த சில அகதிகள் தமது வீடுகளையும், உடமைகளையும் பார்ப்பதற்காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும் உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்று திசம்பர் 19 ஆம் நாள் மிருசுவிலுக்குச் சென்ற வேளை அரைகுறையாக புதையுண்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை அங்கு கண்டிருந்தனர்.

அவர்களுள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் இத் தகவலை பகிர்ந்து கொண்டுமிருந்தனர்.

அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங் காண முற்பட்டவேளை அங்கு நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.

இவர்களுள் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமகனொருவரது வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பொன்னுத்துரை மகேசுவரன் என்பவர் பலத்த காயங்களுடன் இத்தாக்குதல்களில் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் தெரிய வந்தன.

அவர் வழங்கிய தகவலிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.

கொல்லப்பட்டவர்களில் மூவர் பதின்ம வயது சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவன் வில்வராசா பிரசாத் ஆகியோர் அடங்குவர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதிற்கும் 41 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.

https://athavannews.com/2022/1316371

Checked
Sat, 04/01/2023 - 13:45
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed