தமிழகச் செய்திகள்

"குழந்தைக்கான நல்லுணவு தேடல் என் வாழ்வை மாற்றியது" இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்

2 hours 28 minutes ago
"குழந்தைக்கான நல்லுணவு தேடல் என் வாழ்வை மாற்றியது" இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN

 
படக்குறிப்பு,

இயற்கை விவசாயி அனுராதா

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழ் செய்தியாளர்
  • 1 ஏப்ரல் 2023, 10:11 GMT
    புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்

குழந்தைக்கான நல்லுணவுத் தேடலே என்னை இயற்கை விவசாயி ஆக்கியது என்கிறார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான அனுராதா. அதற்காக கல்யாண நகைகளை விற்று நிலம் வாங்கிய போது பரிகாசம் செய்த உறவுகள், நண்பர்கள் பலரும், இன்று தன்னுடைய இயற்கை வேளாண் விளைபொருட்களுக்கு வாடிக்கையாளர்களாகி அவரது வெற்றிக்கு சான்றாக நிற்கிறார்கள்.

பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பிறகு வந்த ஆண்டுகளில் உணவுப் பஞ்சத்தால் பசி, பட்டினியில் தவித்த இந்தியா பசுமைப் புரட்சியின் விளைவாக இன்று உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதுடன், ஏற்றுமதி செய்யும் நிலைக்கும் உயர்ந்திருக்கிறது. நாடு கண்ட பசுமைப் புரட்சியில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் முக்கிய இடம் உண்டு. ஆனால், அதிகப்படியான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடும் சில நேரங்களில் ஆபத்தாகிவிடுகிறது.

அதன் எதிரொலியாகவே, இயற்கை விவசாயம் என்பது நம் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே டிரெண்டாகி வருகிறது. அந்த டிரெண்டில் இணைந்து கொண்டவர்களில் விக்கிரவாண்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும் ஒருவர்.

 

பட்டதாரிப் பெண்ணான அவர், குடும்பத் தலைவியாக வீட்டு நிர்வாகத்தை பார்த்துக் கொண்டிருந்த தாம், இயற்கை விவசாயியாக மாறியது ஏன்? அதற்காக எதிர்கொண்ட சவால்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் சாதித்தது என்ன? என்பது குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். இனி அவரே தொடர்கிறார்.

 
"போலி ஆர்கானிக் உணவுப்பொருட்களால் ஏமாற்றம் அடைந்தேன்"

என்னுடைய கணவர் நடராஜன் ஸ்டேஷனரி கடை வைத்திருக்கிறார். குடும்பத்தலைவியாக இருந்து வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த நான், அவ்வப்போது கடைக்குச் செல்வேன். கணவர் இல்லாத நேரங்களில் கடையைப் பார்த்துக் கொள்வேன். இப்படியாகத்தான் என்னுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

 

என்னுடைய ஒரே மகனுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்ற தேடலே என் வாழ்க்கையை மாற்றியது. குழந்தையின் ஆரோக்கியம் கருதி இயற்கை விவசாயப் விளைபொருட்களைத் தேடி வாங்கி வீட்டில் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால், இயற்கை விவசாயப் விளைபொருட்கள் என்ற பெயரில் கிடைக்கும் பலவும் போலியானவை என்பது எனக்கு அப்போதுதான் தெரியவந்தது. நான் என் குழந்தைக்காக வாங்கிப் பயன்படுத்திய பலவும் போலியானவை என்பதை அறிந்த போது வருந்தினேன்.

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN

இயற்கை விவசாயம் செய்ய முடிவு - உறவுகள் எதிர்ப்பு

"நாமே ஏன் இயற்கை விவசாயம் செய்யக் கூடாது?" என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதனை வீட்டில் சொன்ன போது உறவுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது என்ன பைத்தியக்காரத்தனம்? என்று உறவுகளும், நண்பர்களும் பரிகாசம் செய்தார்கள். ஆனால், நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். இயற்கை விவசாயம் செய்தே தீருவது என்று தீர்மானித்தேன்.

"கல்யாண நகைகளை விற்று 5 ஏக்கர் நிலம் வாங்கினேன்"

திருமணத்திற்காக என்னுடைய வீட்டில் எனக்கு போட்டிருந்த நகைகளை விற்று, இயற்கை விவசாயம் செய்ய 4 ஏக்கர் நிலம் வாங்கினேன். எனக்கு ஆதரவாக நின்ற என் தங்கை ஒரு ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயத்திற்காக என்னிடம் அளித்தார்.

விவசாயத்திற்காக நான் நிலம் வாங்கியதை என் உறவினர்கள் பலரும் எதிர்த்தனர். அதிலும், நகைகளை விற்று விவசாய நிலம் வாங்கியதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. "பணத்தை மண்ணில் போட முடிவு செய்தால் வீட்டுமனை வாங்கு? விவசாய நிலம் எதற்கு?" என்பது அவர்களின் அறிவுரை.

எதிர்ப்புகள், பரிகாசங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, 2013-ம் ஆண்டு எனக்குச் சொந்தமான 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் தொடங்கினேன். என்னுடைய முதல் இலக்கு என் குழந்தைக்கு, என் குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

"ஏக்கருக்கு 6 சீரக சம்பா நெல் மூட்டைகளே கிடைத்தன"
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN

போதிய அனுபவம் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் இறங்கிய நான் முதலில் சீரக சம்பா நெல்லை விளைவித்தேன். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 மூட்டைகள் வீதம் நெல் கிடைத்த போது, எனக்கு ஏக்கருக்கு 6 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் இருந்தது.

என் நிலத்தில் விளைந்த சீரக சம்பா நெல்லை நானே அரிசியாக்கி சந்தைப்படுத்த முயன்றேன். சென்னைக்கு நேரில் சென்று, சுயமாக வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். அந்த நேரத்தில், இயற்கை விவசாயத்தில் விளைந்த சீரக சம்பா அரிசியை கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய்க்கு என்னால் விற்க முடிந்தது.

இயற்கை விவசாயத்தில் என்னுடைய முதல் அனுபவம் சற்று கடினமான ஒன்றாகவே இருந்தது. ஏக்கருக்கு 6 நெல் மூட்டைகள் மட்டுமே கிடைத்ததால் எனக்கு நஷ்டமே மிஞ்சியது. ஆனாலும், மனம் தளராமல் என்னுடைய முயற்சியைத் தொடர்ந்தேன். சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் வகைகளை பயிர் செய்தேன்.

"150 விவசாயிகள் குழுவாக இணைந்து செயல்பட்டதில் ஏமாற்றம்"

பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டதில், ஆரோக்கியமான உணவுப்பொருளை என் குடும்பத்திற்கும், மக்களுக்குக் கொடுக்கிறேன் என்ற மன திருப்தி இருந்தாலும் பொருளாதார ரீதியில் அது பெரிய அளவில் பலன் தரவில்லை. இயற்கை விவசாயத்தில் சுமார் 4 ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு நான் அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன்.

இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த சான்றிதழ் பெறுவது அவசியம் என்பதை அறிந்து அதற்காக திண்டிவனத்தில் உள்ள வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்குச் சென்றேன். அங்கே திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த ஷீபா, எனக்கு ஆதரவாக இருந்ததோடு நல்ல வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

இயற்கை விவசாயத்தில் எனக்கிருந்த ஆர்வத்தையும், என்னுடையே நோக்கத்தையும் வெகுவாக பாராட்டிய அவர், இயற்கை விவசாயத்தில் சிறந்த முன்மாதிரியாக திகழும் நீங்கள் ஏன் மற்ற விவசாயிகளையும் இயற்கை விவசாயத்தின் பால் ஈர்க்கக் கூடாது என்று கூறி என்னுடன் 150 விவசாயிகள் குழுவாக இணைந்து விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் செயல்பட வழிவகை செய்தார்.

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN

என்னுடைய வழிகாட்டுதல்களால் இயற்கை விவசாயத்தின்பால் கவரப்பட்டு அந்த குழுவில் இருந்த பலரும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள முன்வந்தனர். ஆனால், அதிகம் பேர் கொண்ட அந்த குழுவை முழுமையாக மேற்பார்வை செய்ய முடியாததால் சிலர் இயற்கை விவசாயம் என்ற பெயரில் ஏமாற்றியதை அறிந்து ஏமாற்றம் அடைந்தேன். இதனால், அந்த முயற்சியைக் கைவிட்டேன்.

"புனே சென்று சுபாஷ் பாலேக்கரிடம் இயற்கை வேளாண்மை பயிற்சி"

இயற்கை விவசாயத்தில் என்னுடைய தொடர்ச்சியாக செயல்பாடுகளால், சென்னையைச் சேர்ந்த 'நல்லகீரை' ஜெகன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. உரம், பூச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கையான முறையில் கீரை வளர்ப்பது குறித்து அவரிடம் கற்றுத் தேர்ந்தேன். இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கினார். இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகள், கருத்தரங்குகள் பலவற்றில் முதல் ஆளாக சென்று பங்கேற்று வழிகாட்டுதல்களைப் பெற்று விடுவேன்.

தமிழ்நாட்டில் நம்மாழ்வாரைப் போல மகாராஷ்டிராவில் இயற்கை விவசாயத்தில் புகழ் பெற்ற சுபாஷ் பாலேக்கரிடம் நேரில் சென்று பயிற்சி பெற்ற அனுபவம் எனக்கு உண்டு. புனேவில் சுமார் 10 நாட்கள் தங்கி இயற்கை வேளாண் பயிற்சி பெற்று வந்தேன். ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாத, ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்ற கருத்தை நாடு முழுவதும் விதைத்தவர்களில் ஒருவரான அவர் விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக கைக்கொள்வது எப்படி என்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN

"காய்கறிகள், கீரைகள் மீது என் கவனத்தை திருப்பினேன்"

அதன் பின்னரே, காய்கறிகள், கீரைகள் மீது என் கவனத்தை திருப்பினேன். அவற்றை இயற்கை விவசாயத்தில் விளைவித்து சந்தைப்படுத்த தீர்மானித்தேன். இது நல்ல பலனையும் கொடுத்தது. ஏனென்றால், ஒரே ஒரு முறை மட்டுமே அறுவடை செய்யக் கூடிய நெல்லைக் காட்டிலும் அவ்வப்போது பறித்து சந்தைப்படுத்த வாய்ப்பளிக்கக் கூடிய காய்கறிகள், கீரைகளை இயற்கை விவசாயத்தில் விளைவிக்க விவசாயிகள் ஆர்வமுடன் முன் வந்தனர்.

வயலில் விளையும் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை விற்பதன் மூலம் வாரந்தோறும் பணம் கிடைக்கும் என்பதால் இயற்கை விவசாயத்தில் என்னுடன் பலரும் இணைந்து கொண்டனர். அவர்களை இணைத்துக் கொண்டு"ஞாயிறு இயற்கை உழவர் குழு"வை தொடங்கினேன்.

"இயற்கை விவசாயத்துடன் அதனுடன் இணைந்த பிற தொழிலும் செய்கிறோம்"

இந்த குழுவில் தற்போது 55 பேர் இருக்கிறோம். பாரம்பரிய நெல் வகைகள், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள், கீரைகள் என அனைத்தையும் இயற்கை முறையில் விளைவிக்கிறோம். எங்கள் குடும்பத்திற்கு மட்டுமின்றி எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் விஷமில்லா உணவைக் கொடுக்கிறோம்.

எங்கள் குழுவில் இன்று ஒருவர் சத்துமாவு தயாரிக்கிறார், மற்றொருவர் சிறுதானியங்களில் இருந்து லட்டு செய்கிறார், இன்னொருவர் அரிசி ஆலை அமைத்திருக்கிறார். அந்த அரிசி ஆலையில் நாங்கள் அனைவருமே நெல்லை அரைத்துக் கொள்கிறோம். ஏனென்றால், மற்ற ஆலைகளில் உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட நெல்லும் அரைக்கப்படும் என்பதால், அதனுடன் கலக்காமல் இருக்க நாங்கள் அனைவரும் எங்கள் குழுவில் உள்ளவரின் ஆலையையே பயன்படுத்திக் கொள்கிறோம். இயற்கை விவசாயத்தில் விளைவித்த நெல்லை அரிசியாக்கிக் கொள்கிறோம். நாட்டு மாட்டுப் பசுவின் பாலில் நெய் தயாரிக்கிறோம்.

நாங்கள் விளைவிக்கும் எண்ணெய் வித்துகளை பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்க எங்கள் குழுவில் உள்ள ஒருவர் 'செக்கு' வைக்க முன்வந்திருக்கிறார். எங்கள் குழுவினர் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்த 'உழவி ஆர்கானிக்ஸ்' என்ற பெயரில் தனியே இணையதளமும் தொடங்கியுள்ளோம்.

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN

5 ஏக்கர் இயற்கை வேளாண் பண்ணையில் மீன்குட்டை, கால்நடை வளர்ப்பு

சீரக சம்பா நெல்லை விதைத்து இயற்கை விவசாயத்தை தொடங்கிய நான் இன்று அதே 5 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரில் நெல், மற்ற இடங்களில் கீரைகள், காய்கறிகள், சிறு தானியங்கள் என என்னுடைய விவசாயப் பண்ணையை ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றியுள்ளேன். நிலத்தடி நீரைப் பராமரிக்க வெட்டியுள்ள சிறு குட்டையில் மீன் வளர்க்கிறேன். இதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. என்னுடைய நிலத்திற்குள் சுமார் 150 கோழிகள் மற்றும் மாடுகளையும் வளர்க்கிறேன்.

 

ஒருங்கிணைந்த பண்ணை முறை சிறந்த பலனைத் தருகிறது. இயற்கை விவசாயத்தை லாபகரமாக செய்வது எப்படி என்று நாங்கள் இன்று பயிற்சி அளிக்கிறோம். எங்களிடம் ஆர்வத்துடன் வரும் விவசாயிகளிடம், ஒருங்கிணைந்த பண்ணை முறையில் இயற்கை விவசாயம் செய்யவே அறிவுறுத்துகிறோம்.

ஒரு ஏக்கர் நிலத்தில் கணவனும், மனைவியும் மட்டுமே உடல் உழைப்பைச் செலுத்தி இயற்கை விவசாயம் செய்தால் மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாயை எளிதில் ஈட்டிவிட முடியும் என்று எடுத்துச் சொல்கிறோம். விதை முதல் விற்பனை வரை அத்தனையையும் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்.

"நாங்கள் கார்பரேட் அல்ல; தற்சார்பு வாழ்க்கையை வலியுறுத்துகிறோம்"

ஒரு காலத்தில் திண்டிவனம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மைய திட்ட ஒருங்கிணைப்பாளரே முன்னின்று அமைத்துக் கொடுத்த விவசாயிகள் குழுவில் என்னுடன் இணைந்திருந்த பலரை என்னால் இயற்கை விவசாயத்திற்கு மாற்ற முடியவில்லை. ஆனால், இன்றோ இயற்கை விவசாயத்தை லாபகரமாக செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள பலரும் என்னைத் தேடி வருகின்றனர். நாங்கள் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறோம்.

இயற்கை விவசாயத்தை செய்வது குறித்து மட்டுமின்றி, விளைவித்த வேளாண் பொருட்களை அவரவர் உள்ளூரிலேயே சந்தைப்படுத்தவும் வழிவகை செய்து கொடுக்கிறோம். இன்று தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாயிகள் நெட்வொர்க்கும், அதனை சந்தைப்படுத்துவதற்கான வலையமைப்பும் உருவாகி விட்டது.

தற்சார்பு வாழ்க்கை என்பதே எங்களின் இலக்கு என்பதால், மையப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்துதலை நாங்கள் ஆதரிக்கவில்லை. அப்படி செய்தால் அது கார்ப்பரேட் போன்றதாகி விடும். அதனைத் தவிர்க்கவே, ஆங்காங்கே பத்துப்பத்துப் பேராக இயற்கை விவசாயிகள் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்கிறோம். உழவர்கள் தாங்கள் இயற்கையான முறையில் விளைவிக்கும் வேளாண் பொருட்களை உள்ளூரிலும், சுற்றுப்புறங்களிலும் தாங்களே விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறோம்.

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN

"அமெரிக்கா, சிங்கப்பூரில் ஏற்றுமதி வாய்ப்பு - தேவையை ஈடுகட்ட உற்பத்தி இல்லை"

எங்கள் குழுவில் உற்பத்தி செய்யும் இயற்கை வேளாண் பொருட்களை சென்னை உள்பட தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்புகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் கூட எங்களுடைய ஆர்கானிக் பொருட்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன.

ஆனால், ஏற்றுமதி செய்யும் அளவுக்கு மிகுதியான உற்பத்தி எங்களிடையே இல்லை. நாட்டு மாட்டுப் பசுவில் தயாராகும் நெய்யை அவர்கள் கேட்கும் அளவுக்கு எங்களால் இப்போதைக்கு சப்ளை செய்ய முடியாது.

"அரசு திட்டங்கள், சலுகைகளை நாடிச் செல்வதில்லை"

இயற்கை வேளாண்மைக்காக தமிழ்நாடு அரசோ அல்லது மத்திய அரசு வகுத்திருக்கும் திட்டங்கள், சலுகைகள் நாடிச் செல்வதில்லை. ஏனெனில், அதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்வது கடினமாகி விடுகிறது. சில நேரங்களில் 100-க்கும் அதிகமானோர் இணைந்து செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது. அவ்வாறு செய்ய முற்பட்டால் அத்தனை பேரும் உண்மையிலேயே இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார்களா என்பதை கண்காணிப்பது சிக்கலாகிவிடும்.

எங்கள் குழுவில் 55 பேர் இருப்பதே அதிகமாகத் தோன்றுகிறது. இதையே நாங்கள் இரண்டாக வகைப்படுத்தி இயற்கை வேளாண்மையை கண்காணிக்கிறோம். அப்படிச் செய்தால் மட்டுமே விதை முதல் இடுபொருட்கள் வரையிலான விவசாயிகளின் அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிப்பதுடன், அவர்களின் விவசாய நிலத்திற்கு நேரடியாக சென்று மேற்பார்வை செய்யவும் முடிகிறது.

"கொரோனா பேரிடர் திருப்புமுனையாக அமைந்தது - எனக்கு நல்லதையே செய்தது"
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரி பெண்

பட மூலாதாரம்,ANURADHA NATARAJAN

உலகம் முழுவதும் பல கோடி பேரின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொரோனா பேரிடர் என்னுடைய வாழ்க்கையில் நல்லதையே செய்திருக்கிறது. சுமார் 3 ஆண்டு காலம் முழுமையாக என் பண்ணையிலேயே நான் கழித்தேன். எங்கே, எந்த இடத்தில் தவறு நடக்கிறது? எங்கே இடறுகிறது? என்பதை என்னால் உணர முடிந்தது. அத்துடன் குடும்பத்தினரும் உடனிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அவர்கள் இயற்கை விவசாயத்தை புரிந்து கொள்ளவும் இது வாய்ப்பாக அமைந்தது.

அதுமட்டுமின்றி, கொரோனா காலம் என்னுடைய சந்தைப்படுத்துதலை எளிமையாக்கியது. என்னுடைய பண்ணையில் விளைந்த பொருட்களை சந்தைப்படுத்த நான் கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை. சமூக வலைதளத்தில் 'என்னிடம் 200 கிலோ இயற்கை வேளாண் விளைபொருள் இருக்கிறது' என்று பதிவிட்டால் உடனே பண்ணைக்கே வந்து வாங்கிச் சென்றுவிட்டார்கள்.

கொரோனா காலம் எனக்கு இயற்கை வேளாண்மை முறையை மெருகூட்டிக் கொள்ளவும், சந்தைப்படுத்துதலை எளிதாக்கிக் கொள்ளவும் உதவியது.

"எல்லோருக்கும் ஆரோக்கிய உணவு என்பதே இலக்கு"

என்னுடைய குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்ற தேடலே என்னை இயற்கை விவசாயி ஆக்கியது. இயற்கை விவசாயத்தில் இறங்கிய போது என்னை பரிகாசம் செய்தவர்களே இன்று என்னுடைய வாடிக்கையாளர்களாகிவிட்டனர்.

என்னைச் சுற்றிலும் 50 பேரையாவது இயற்கை விவசாயத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டேன். இதேபோல், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தபட்சம் 50 பேர் இயற்கை விவசாயத்திற்கு மாறினால் அது மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். 50 பேர் என்பது 500 பேர் ஆகலாம். இன்னும் அதிக எண்ணிக்கையைத் தொடலாம்.

இயற்கை விவசாயத்திற்கு மாறும் போது முதல் 3 ஆண்டுகள் சற்று கடினமான இருக்கும். அந்த காலத்தை மட்டும் கடந்துவிட்டால் அதன் பிறகு மண் நாம் சொல்வதைக் கேட்கும். இயற்கை விவசாயம் லாபகரமான ஒன்றாகிவிடும். ஒவ்வொரு ஊரிலும் இந்த நிலை உருவாகும் போது அனைவரின் தட்டிலும் ஆரோக்கியமான உணவு போய்ச் சேரும். அதுவே எங்களின் இலக்கு.

https://www.bbc.com/tamil/articles/c51vv01zq0yo

8 புதிய மாவட்டங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்!

5 hours 56 minutes ago
8 புதிய மாவட்டங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்!
Apr 01, 2023 13:16PM IST ஷேர் செய்ய : 
Tamil-Nadu-1.jpg

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. இதில் நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாகத் திண்டுக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்கள் உள்ளன. 

பெரிய மாவட்டங்களின் தலைநகருக்கு செல்ல பயண நேரம் அதிகமாவதால் புதிய மாவட்டங்களை உருவாக்க ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்தன. 

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 01) சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின் போது ”திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகிறார்கள்.

எனவே ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதேபோல் திமுக கொறடா கோவி செழியன், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

Screenshot-2023-04-01-130341.jpg

இதற்குப் பதிலளித்துப் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்கள் நிறைய உள்ளன. மாவட்டத்தில் ஒரு இடத்திலிருந்து தலைநகர் நோக்கிச் செல்ல அதிக பயண நேரம் ஆகிறது.

எனவே தங்கள் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று என்னிடத்திலும் முதலமைச்சரிடத்திலும் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அந்த வகையில் மொத்தம் எட்டு மாவட்டங்களை பிரிக்க வலியுறுத்தி பொதுமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதேபோல் ஆர்டிஓ அலுவலகங்களைப் பிரிக்க வேண்டும் என்றும், தாலுகா அலுவலகங்களைப் பிரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கு உண்டான சட்டப்படியான தகுதிகள் அந்தப் பகுதிகளுக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதேபோல் மாவட்டங்களை பிரிப்பதற்குத் தேவையான நிதி நிலை இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்றார்.
 

https://minnambalam.com/political-news/8-new-districts-in-tamilnadu-kkssr-ramachandiran/

 

கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் - தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

1 day 20 hours ago
image

(நா.தனுஜா)

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை மற்றும் இந்தியவாழ் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், கச்சதீவில் பாதுகாப்புப்பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள கடற்படை இணைப்பில் பணிபுரியும் கடற்படையினரில் பெரும்பான்மையானோர் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் மதவழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஒரு சிறிய புத்தர்சிலை கடற்படையினரின் இல்லத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருப்பதாகக் கடற்படை விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மக்களவையில் விவாதிப்பதற்கு மக்களை உறுப்பினர் தொல்.திருமாவளவன் மக்களவையின் செயலாளர் நாயகத்திடம் கடிதம் மூலம் அனுமதிகோரியுள்ளார்.

'சிங்கள இனவாதிகள் மதரீதியான முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் நோக்கில் கச்சதீவில் புத்தர்சிலையொன்றை நிறுவியுள்ளனர். அங்கு புனித அந்தோனியார் தேவாலயம் மாத்திரமே இருப்பதுடன், வருடாந்தத் திருவிழாவும் இடம்பெற்று வருகின்றது. எதுஎவ்வாறெனினும் அங்குள்ள கிறிஸ்தவர்களை விரட்டும் நோக்கில் சிங்கள இனவாதிகள் அப்பகுதியில் பெரியதொரு புத்தர்சிலையை நிறுவியுள்ளனர். இந்நடவடிக்கை தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் வாழும் தமிழர்களுக்கு எதிரானது மாத்திரமல்ல. மாறாக இது அவர்களின் மதரீதியான உரிமைகளுக்கும் எதிரானதாகும்' என்று அக்கடிதத்தில் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இச்செயலைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.  

கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் - தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் | Virakesari.lk

தமிழ் வழக்காடு மொழி... உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது... மத்திய சட்ட அமைச்சர்

2 days 22 hours ago
தமிழ் வழக்காடு மொழி... உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது... மத்திய சட்ட அமைச்சர்

Published By: RAJEEBAN

29 MAR, 2023 | 04:33 PM
image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்றக் கோரி விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், தங்களது மாநில உயர்நீதிமன்றத்தில் தாய் மொழியை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும் என்று தமிழ்நாடு, குஜராத், சத்தீஸ்கர், மேற்குவங்கம், கர்நாடக மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற முழு நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், இந்த கோரிக்கைகளை ஏற்பதில்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், முந்தையை முடிவை மறுபரிசீலனை செய்யும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக் கொண்டதாகவும், ஆனால், உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

 

நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சட்டத்துறை சார்ந்த ஆவணங்களை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க அரசு உறுதி பூண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சட்டத்துறை சார்ந்த ஆவணங்களுக்கு என்று அனைத்து மாநில மொழிகளிலும் பொதுவான சொற்களஞ்சியத்தை ஏற்படுத்த ஓய்வூபெற்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/151702

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !!

3 days 9 hours ago
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !!

பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார்.

இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது.

இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது.

எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

https://athavannews.com/2023/1328797

கச்சத்தீவில் புத்தர் சிலை: வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

4 days 10 hours ago
கச்சத்தீவில் புத்தர் சிலை: வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன் கச்சத்தீவில் புத்தர் சிலை: வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கச்சத்தீவில், இலங்கை கடற்படையினர் இரு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என, தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இடங்களிலும் ஒருசில பிரச்சினைகள் வரும்போது, அதற்கு வழிபாட்டுத் தலங்களை அந்த பிரச்சினைக்குள் கொண்டுவரக் கூடாது என்பதே தமது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை எந்த அரசாங்கமும் அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1328632

"கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்" - விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி

4 days 22 hours ago
"கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்" - விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி
விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூர தாக்குதல்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சேரன் மாதேவி உதவி ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விசாரணைக் கைதிகள் சிலர், வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளனர்.

வெங்கடேசன் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக கடந்த மார்ச் 23ஆம் தேதி சிலர் கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு வந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீந்தர் சிங் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

 

தாக்கப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோவில், காவல் நிலையத்திற்கு இவர்கள் அழைத்து வரப்பட்டபோது காவல்துறையினருக்கான சீருடையில் இருந்த பல்வீந்தர் சிங், பிறகு சாதாரண உடைக்கு மாறிக்கொண்டு இவர்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர்.

"ஏஎஸ்பி சார் கையில் கையுறை அணிந்து கொண்டு டிராக் பேண்ட் அணிந்துகொண்டு அங்கு வந்தார். எங்கள் வாய்க்குள் ஜல்லி கற்களைப் போட்டு கொடூரமாக அடித்தார். மேலும் கற்களை வைத்து பல்லை உடைத்தார்.

எனது அண்ணன் மாரியப்பனுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. அவன் தற்போது படுத்த படுக்கையாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகிறான். எங்களுக்கு நடந்ததைப் போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது," என்று அவர்கள் பேசியுள்ளனர்.

பல்வீந்தர் சிங்கால் பல்லை பிடுங்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள வேத நாராயணனிடம் பிபிசி பேசியபோது, "நான் அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

எனக்கும் எனது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், குடும்பத்தை விட்டுப் பிரிந்து கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வருகிறேன். 27 ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். எனக்கு அந்தச் சான்றிதழ் தேவைப்பட்டதால் கடந்த 20ஆம் தேதி அதைக் கேட்டு என் மனைவி தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்றபோது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து என்னிடம் இருந்து செல்போனை பிடுங்கிவிட்டு உடனடியாக காவல் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றனர். மறுநாள் கோவில் திருவிழா என்பதால் 23ஆம் தேதி காலை காவல் நிலையம் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, என்னைத் தேடி வந்த இரண்டு காவலர்கள் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தனர்.

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூர தாக்குதல்

காவல் நிலையத்தில் வெகுநேரமாக உட்கார்ந்து இருந்தபோது அங்கிருந்த காவலர் ஒருவர் 'உனக்கு தனி ட்ரீட்மென்ட் இருக்கு, ஏஎஸ்பி வந்து கொடுப்பாரு' என்று கூறினார். இதனிடையே எனது கையில் கட்டியிருந்த பாஜக கயிறு, சாமிக் கயிறு மற்றும் இடுப்பிலிருந்த கயிற்றை போலீசார் அறுத்து எடுத்தனர்.

சிறிது நேரத்தில் ஏஎஸ்பி அங்கே வந்து என்னிடம் இந்தியில் ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. நான் உடனே ஆங்கிலத்தில் குடும்பத்தில் மனைவிக்கும் எனக்கும் பிரச்னை எனக் கூறினேன்.

காவல் நிலையத்தின் மேல்பகுதியில் இருந்த அறைக்கு என்னை ஏஎஸ்பி மற்றும் சில காவலர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு கட்டிங் பிளேடு ஒன்றை எடுத்து எனது வாயின் கீழ் தாடையில் உள்ள பல் ஒன்றைப் பிடுங்கினார். மேலும் எனது காதில் அந்த கட்டிங் பிளேயரை வைத்து அமுக்கியதில் எனக்குக் காயம் ஏற்பட்டது.

பின்னர் காவல் நியைத்தில் இருந்து மாலை 5 மணிக்கு என்னை அனுப்பினார். நான் அன்றிலிருந்து இன்று வரை ஐந்து நாட்களாகச் சாப்பிட முடியவில்லை," என்றார் வேதநாராயணன்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பல்பீர் சிங் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடைய பற்களைப் பிடுங்கி கொடூரமான தண்டனை வழங்கி வருவதாகப் பலர் கூறுகின்றனர்.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட நபர்களின் பற்களைப் பிடுங்கியதாகச் சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்னை செய்தார் என்ற குற்றச்சாட்டில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு ஏஎஸ்பி பல்பீர் சிங் அவரது பற்களைப் பிடுங்கியது மட்டுமல்லாமல் விசாரணைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்களின் பற்களையும் உடைத்து, தற்போது அந்த மூன்று பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சூர்யா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூர தாக்குதல்

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞர் மகாராஜா பிபிசி தமிழிடம் பேசும்போது, "பொதுவாக எவ்வளவு பெரிய வழக்காக இருந்தாலும் விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்தில் வைத்தோ, சிறைச்சாலையில் வைத்தோ காவல்துறையினர் தாக்கக்கூடாது என்பது சட்டம். அந்த விதியை மீறி பல்வேறு வழக்குகளில் காவல்துறையினர் கைதிகளைக் கொடூரமாகத் தாக்குகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் நடத்தும் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ இதை விசாரிக்கவேண்டும். புகார் தெரிவிக்கும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஏஎஸ்பி மற்றும் இதில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இது சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள பல்வீந்தர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஶ்ரீவைகுண்டம் பகுதியின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அம்பாசமுத்திரம் பொறுப்பு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c514ljyg8xwo

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

4 days 22 hours ago
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 27 மார்ச் 2023, 11:18 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவ மகளிர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் பணி புரியும் மகளிர் உள்ளிட்டோர் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று பேசிய பா.ம.கவின் ஜி.கே. மணி, மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில், அந்தத் தொகை கிடைக்காதவர்களின் நிலை என்ன என்றும் இந்தத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்றும் கேள்வியெழுப்பினார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கமொன்றை அளித்தார்.

அதில், "இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘மகளிர் உரிமைத் தொகை’ குறித்த அறிவிப்பு வெளியாகி, பொருளாதார வல்லுநர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்தும் விதம் குறித்தும் அதில் பயன்பெறக் கூடிய குடும்பத் தலைவிகளின் தேர்வு குறித்தும் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளை முன்வைத்து விளக்கமளிக்கிறேன்.

 

பொருள் ஈட்டும் ஒவ்வோர் ஆணுக்குப் பின்னாலும், தன் தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது. ஆண் ஒருவரின் வெற்றிக்காகவும் தங்கள் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் காக்கவும் இந்த சமூகத்திற்காகவும் வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் அவர்கள் உழைத்திருப்பார்கள்?

அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டிருந்தால், இந்நேரம் நம் நாட்டில் குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும் சட்டம் இயற்றாமலேயே இடம்பெற்றிருக்கும்.

இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு அங்கீகரித்தால் ஆண்களை உள்ளடக்கிய இந்தச் சமூகமும் பெண்களுக்கான சமஉரிமையை வழங்கிடும் நிலை விரைவில் உருவாகிவிடும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு 'மகளிருக்கான உதவித் தொகை' என்று இல்லாமல் ‘மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது.

Universal Basic Income என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சோதனை முறையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு சில சமூகப் பிரிவினரிடம் மட்டும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அப்படி பரிசோதனை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலமாகவே, பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம், வறுமை பாதியாகக் குறைந்திட வாய்ப்பு உண்டு என்றும் கிடைக்கும் நிதியை பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவச் செலவு செய்திடவும் முன்னுரிமை தருகிறார்கள் எனவும் சிறு சிறு தொழில்களைச் செய்ய முன்வருகிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, தன்னம்பிக்கை பெற்றுள்ளார்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பரிசோதனை முயற்சியாக உலகில் சில நாடுகளில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன என்றால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போகும் இந்த மாபெரும் முயற்சி, எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கப் போகும் பயன்களை உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தத் திட்டத்திற்காக, இந்த நிதிநிலை அறிக்கையில் ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதையொட்டி, எவ்வளவு பேர் பயன்பெறுவார்கள் என்று பலர் மனக் கணக்குப் போட்டு வருகிறார்கள்.

‘அனைவருக்கும் வீடு’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டால், வீடு இல்லாதவர்களுக்கு ஓர் இல்லம் அமைத்துத் தருவது என்று பொருள். ‘அனைவருக்கும் நிலம்’ என்றொரு திட்டம் என்றால், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்பதுதான் அடிப்படை நோக்கம். ‘முதியோர் ஓய்வூதியம்’ என்றால், ஆதரவற்ற முதியோரின் நலன் காக்க முனையும் திட்டம் என்று பொருள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் என்றால், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு முன்னுரிமை என்று பொருள்.

அந்த வகையில், இந்த ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.

அடுத்ததாக ஆண்டுக்கு 12,000 ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம்

பட மூலாதாரம்,TNDIPR

மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, தேவைப்படும் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

இந்த ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்.

மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும் எந்தக் குடும்பத் தலைவியையும் மனிதநேய அடிப்படையிலான பெண் உரிமை காக்கக்கூடிய எனது தலைமையிலான அரசு கைவிட்டுவிடாது" என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்ற பட்ஜெட் உரையின்போது அறிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c9w7d8xvk2ko

ஆடு மேய்த்த பெண் மரணம்: சிறுவன் கைது; சந்தேகத்தில் வட மாநிலத்தவர் குடிசைகளுக்கு தீ வைத்ததாக 6 பேர் கைது

5 days 20 hours ago
ஆடு மேய்த்த பெண் மரணம்: சிறுவன் கைது; சந்தேகத்தில் வட மாநிலத்தவர் குடிசைகளுக்கு தீ வைத்ததாக 6 பேர் கைது
போலீஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

26 மார்ச் 2023, 17:01 GMT
புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்

நாமக்கல் மாவட்டத்தில் ஆடுமேய்க்க சென்ற பெண் முள் புதரில் ஆடைகள் கிழிக்கப்பட்டு, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில், ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் நிலவுகிறது.

இது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தவிர, அருகே குடியிருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் இதை செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அவர்களது குடிசைக்குத் தீவைத்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

நடந்தது என்ன?

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள காரபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 35). விவசாய கூலி வேலை செய்து வரும் இவருக்கு நித்யா (வயது 27) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.

 

கடந்த 11 ஆம் தேதி ஆடு மேய்க்க சென்ற நித்யா குட்டை அருகே முள் புதரில் இறந்து கிடந்தார். அவரைக் காணவில்லை என்று தேடி வந்து பார்த்த கணவர் விவேகானந்தன், அதிர்ச்சி அடைந்து, அவருக்கு உயிர் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து நித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் நித்யாவின் கணவர் மற்றும் உறவினர்கள், ஊர் மக்கள் வட மாநிலத்தவர்கள்தான், நித்யாவை வல்லுறவு செய்து கொலை செய்திருக்கு வேண்டுமென புகார் கொடுத்தனர்.

போலீசார் வடமாநிலத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். இதை அடுத்து நாமக்கல் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் வந்து அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தார்.

கொலை செய்யப்பட்ட நித்யாவின் கணவரின் அண்ணன் பூபதி பாத்திரிகையாளர்களிடம் பேசுகையில்

"என் தம்பி விவேகானந்தன் - மனைவி நித்யா (28) தம்பதியருக்கு மூன்று வயதிலும் ஏழு வயதிலும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். எங்களது விவசாய தோட்டத்திற்கு அருகில் குட்டை உள்ளது. அருகிலிருக்கும் வெல்ல ஆலையில் தங்கியிருக்கும் வட இந்தியர்கள் இந்தக் குட்டையில் மீன் பிடிக்க வருவார்கள். அவர்களை மீன் பிடிக்கக்கூடாது என நாங்கள் அடிக்கடி துரத்தி விடுவோம்.

கடந்த 11 ஆம் தேதி தம்பி மனைவி நித்தியா, மதியம் இரண்டு மணிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றார். மாலை 4.45 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற ஆடுகள் வீட்டுக்கு வந்துவிட்டன. என் தம்பி விவேகானந்தன் குட்டைக்கு அருகில் சென்று தேடி பார்த்துள்ளார். ஒரு செருப்பு , செல்போன் கவர், கப், சூரி கத்தி ஆகியவை அருகே கிடந்துள்ளன.

ஓடைக்குள்ளே இருந்து 450 அடி முள்ளுக்குள் தள்ளிக் கொண்டு போய், வல்லுறவு செய்து, கழுத்தில் கயிறு போட்டு கொன்றுவிட்டனர். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். போலீசாருக்கு வட மாநில தொழிலாளர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று தகவல் சொன்னோம். சுற்றி 15 வெல்ல ஆலைகள் உள்ளன. அங்கிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் கஞ்சா போதையில் இருப்பது, குட்டைக்கு வந்து மீன் பிடிப்பது, மரம் வெட்டுவது என அனைத்தையும் போலீசிடம் சொன்னோம்," என்றார்.

போராட்டம்

நித்யாவின் கணவர் விவேகானந்தன் பேசும்போது

"ஆடுகள் வீட்டுக்கு வந்த பிறகும் மனைவி வீட்டுக்கு வரவில்லை என்று சந்தேகமடைந்து காட்டுக்குள் போய் பார்த்தேன். அங்கு மனைவி அலங்கோலமாகக் கிடந்தாள். உடனே அரசு மருத்துவமனை கொண்டு வந்து பார்த்தோம். ஆனால், அவர் இறந்துவிட்டார்.

இது முழுக்க முழுக்க வட மாநிலத் தொழிலாளர்கள் செய்துள்ளதாக போலீசிடம் சொன்னோம். ஆனால், போலீசார் எங்கள் குடும்பத்தினரைத்தான் கேள்வி கேட்கின்றனர். வட மாநிலத்தவரை கேள்வி கேட்பதில் ஆர்வம் காட்டவில்லை" என்றார்.

தனக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை கயிற்றைக் கொண்டு இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுவன் கைது

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்திரவின் பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, சுரேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கடந்த 13 ஆம் தேதி இது தொடர்பாக கைது செய்தனர். விசாரணையில் சிறுவன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், தான் கரும்பு வெட்டும் வேலைக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வந்திருந்ததாகவும், நித்யாவை கண்டதும் தனக்கு சபலம் ஏற்பட்டதாகவும், அதனால், அவர் ஆடு மேய்க்கும் பகுதியில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு அவரை வல்லுறவு செய்து கொன்றதாகவும், பிறகு நகைகளை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

நித்யாவின் செல்போனை தான் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த இடத்தை போலீசாரிடம் சிறுவன் காண்பித்தான். கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாகவும் போலீசாரிடம் நடித்து காட்டினான். அதன்பிறகு சிறுவனை ஜேடர்பாளையம் போலீசார் சிறையில் அடைந்தனர்.

ஆனால், அந்த சிறுவன் இதைச் செய்திருக்க மாட்டான் என்று ஊர் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனிடையே ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை வளாகத்தில் குடிசை அமைத்து, தங்கியிருக்கும் குடிசைகளுக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்தனர்.

மர்ம சம்பவங்கள்
போராட்டம்

ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் , பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலை யரசன் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த தீ வைப்பு சம்பவத்திற்கும் நித்யா மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து 16 ஆம் தேதி அதிகாலையில் காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து காரில் வந்த, கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன்(28), தமிழரசன்(26), சுதன்(25), பிரபு(37), சண்மு கசுந்தரம்(43), பிரகாஷ்(29) ஆகிய 6 பேரை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பேசுகையில்

நித்யா கொலை வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளான். வட மாநிலத்தவர்களுக்கும் இக்கொலைக்கும் சம்பந்தமில்லை. சிறுவன் மட்டும் இக்கொலையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக வடமாநிலத்தவர்கள் ஈடுபடவில்லை என்பதை நித்யாவின் குடும்பத்தினருக்கு புரிய வைத்துள்ளோம் என்றார். நித்யா கொலையில் தொடர்பு இருக்கலாம் எனக்கருதி, வட மாநிலத்தவர்களின் குடிசைகளை எரித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 21 ஆம் தேதி சரளைமேடு வெல்ல ஆலையில் வட மாநிலத்தவர்களின், பத்துக்கும் மேற்பட்ட குடிசைகளுக்கும், மூன்று டிராக்டர்களுக்கும் தீ வைத்த சம்பவம்,

திடுமல் ரோடு பகுதியில் ஆலை கொட்டகை நடத்தி வரும் பழனிசாமி வீட்டு தீ வைத்த சம்பவம்,

வடகரையாத்தூரில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஆகியவை குறித்து விசாரணை செய்து தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் முயன்றுகொண்டுள்ளனர்.

அடுத்தடுத்த சம்பவங்களால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. இதை தொடர்ந்து ஜேடர்பாளையத்தில் வடகரையாத்தூர், வீ.கரைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த இருதரப்பினர் இடையே அமைதி பேச்சு கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

"இந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலையை சிலர் தவறாக பயன்படுத்தி தேவையற்ற அசம்பா விதங்களை உருவாக்க நினைக்கிறார்கள். இதை தவிர்க்க, கிராமங்களை சேர்ந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிராம மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படும். மேலும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்.

https://www.bbc.com/tamil/articles/c2ervl7q44po

பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கையர் தமிழக கடலோர காவல் படையினரால் கைது!

5 days 20 hours ago
பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கையர் தமிழக கடலோர காவல் படையினரால் கைது! 

Published By: NANTHINI

26 MAR, 2023 | 12:21 PM
image

 

பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவரை இந்திய கடலோர காவல்படையினர் தமிழக கடற்பகுதியில் வைத்து நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையரான ஜெகன் பெர்னாண்டோ மனோகரன் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த நபர் இலங்கையிலிருந்து அகதியாக வெளியேறி, நிரந்தர விசா பெற்று, லண்டனில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், அவர் நேரடியாக இலங்கைக்குச்  செல்ல முடியாத காரணத்தால் தமிழ்நாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், அவர் இந்தியாவுக்குச் சென்று, படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு வர திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேலதிக விசாரணைக்காக அவர் இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

https://www.virakesari.lk/article/151417

யானைகளை காவு வாங்கும் மின்சார வேலிகள் - தொடரும் துர்மரணங்களை தவிர்க்க என்ன வழி?

6 days 2 hours ago
யானைகளை காவு வாங்கும் மின்சார வேலிகள் - தொடரும் துர்மரணங்களை தவிர்க்க என்ன வழி?
யானைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

26 மார்ச் 2023, 05:54 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் வெவ்வேறு மின்சார விபத்துகளால் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளன.

யானை - மனித மோதல், யானைகள் இறப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில் சமீபத்திய துர்மரணங்கள் இதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதிரி படம்

யானை மரணங்கள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளி அருகேசக்தி என்பவருக்குச் சொந்தமான 22 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இதை முருகேசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டிய இடம் என்பதால் தோப்பைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர்.

கடந்த மார்ச் 7 ஆம் தேதி இவருடைய தோட்டம் அருகே வந்த மூன்று காட்டு யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன. இந்த விபத்தில் இரண்டு பெண் யானைகள், ஒரு மக்னா யானை பலியாகின. இரண்டு குட்டி யானைகள் தனித்துவிடப்பட்ட நிலையில் அவற்றை வனத்துறையினர் மீட்டனர்.

 

இந்தச் சம்பவம் நிகழ்ந்து 10 நாட்கள் கழித்து அதே பகுதியில் மேலும் ஒரு யானையின் மரணம் பதிவாகியிருந்தது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகம் பிக்கிலி கிராமப் பகுதியில் ஆண் யானை ஒன்று விளை நிலங்களில் நடமாடி வந்தது. அந்த யானையை வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் திருப்பி அனுப்ப முயன்று வந்தனர்.

மார்ச் 18ஆம் தேதி அன்று காலை கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் ஏற முயன்ற இந்த யானை அங்கு தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்பாதையில் மோதியுள்ளது. இதில், யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த யானை உயிரிழந்தது. யானை மின்சாரம் தாக்கி சரிந்து விழும் காணொளி இணையத்தில் பரவியது.

இந்த நிலையில் யானைகளின் தொடர் மரணங்கள் தொடர்பாகக் கவலை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பாக தலைமை வனப் பாதுகாவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்து ஒரு வாரத்திற்குள்ளாக கோவையில் மேலும் ஒரு யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது.

மார்ச் 25ஆம் தேதி அன்று கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் அருகே ஆண் யானை ஒன்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. தனியார் நிலத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், “கோவையில் உயிரிழந்த யானை மின்வேலியில் மோதி இறக்கவில்லை.

வனப்பகுதியிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் தனியார் தரிசு நிலத்தில் அமைந்துள்ள மின் கம்பத்தில் யானை மோதியுள்ளது. அதில் சரிந்த மின் கம்பம் யானை மீதே விழுந்ததில் உயிரிழந்துள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத துர்திருஷ்டவசமான சம்பவம்," எனக் கூறினார்.

மின் வேலிகள் சட்டப்பூர்வமானதா?

கோவை வனக்கோட்டத்தில் சமீப மாதங்களில் மின்வேலியால் அடிபட்டு யானை உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழவில்லை. மின் கம்பமே சரிந்து உயிரிழப்பது இதுதான் முதல்முறை. மின்வேலிகள் அமைப்பதற்கு அனுமதி கிடையாது. ஆனால் சிலர் யானை மீது உள்ள அச்சத்தால் மின்வேலிகள் அமைக்கின்றனர்.

அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. அதிகபட்சம் 12 வாட் திறன் கொண்ட சூரிய மின்சார வேலிகள் மட்டுமே அமைக்க வேண்டும். சட்டவிரோத மின்வேலிகள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை வனத்துறையினரும் மின்சாரத் துறையினரும் இணைந்து கண்காணித்து வருகிறோம்.

யானை நடமாட்டம், யானை வழித்தடம் அமைந்துள்ள பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்,” என்றார்.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோவையில் யானை இறப்பைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் துறை மற்றும் வனத்துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், “காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தாழ்வான, பழுதடைந்த மின் கம்பங்களைச் சரி செய்யவும், உயர் மின் கம்பங்களை அமைக்கவும் மின் கம்பங்களைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்வேலிகள் மற்றும் மின்கம்பங்களை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படும் கூட்டுப்புலத்தணிக்கை தொடர்ந்து நடத்தப்படும். மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை வருவாய் வட்ட அளவில் அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வன ஆர்வலர் பாண்டியராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “காட்டுயிர்கள் உயிரிழக்கும் செய்திகள் வருகின்றபோது அல்லது நீதிமன்றம் தலையிட்டு விசாரிக்கும்போது காட்டப்படும் தீவிரம் அதன் பிறகு இருப்பதில்லை.

தென்காசியில் விவசாயி ஒருவர் காட்டுப்பன்றியைத் தடுக்க மின்கம்பத்திலிருந்து நேரடியாக மின்சாரத்தை இழுத்துள்ளார். ஆனால் துர்திருஷ்டவசமாக அதில் அவரே அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது குறிப்பிட்ட ஒரு துறையின் தவறு என்று கூறிவிட முடியாது.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

அரசு என்ன செய்ய வேண்டும்?

காட்டுயிர்களை எதிர்கொள்வதில் மக்களுக்கும் போதிய விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் வனத்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.

வனச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். மின்சாரத் துறை, வனத் துறை என எந்தத் துறையாக இருந்தாலும் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் அரசு அதிகாரிகள் அதற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

யானைகளின் போக்கை நாம் கட்டுப்படுத்த முடியாது. எனவே யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். காட்டை ஒட்டிய இடங்களில் அமைந்துள்ள மின் அமைப்பு போன்ற கட்டுமானங்கள் விபத்துகளைத் தவிர்க்கும் வண்ணம் பலப்படுத்தப்பட வேண்டும்.

காட்டை ஒட்டியுள்ள நிலங்களில் யானைகளை ஈர்க்கும் பயிர்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட துறையின் பொறுப்பு என இதைத் தவிர்த்துவிட முடியாது. இதில் சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்பும் இணைந்து பணி செய்தால்தான் எதிர்பாராத யானைகளின் மரணங்களைக் குறைக்க முடியும்,” என்றார்.

தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி பிபிசி தமிழிடம் பேசுகையில், “யானைகள் இறப்பைத் தடுக்க பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கோவையில் யானை மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தது. தர்மபுரியில் வனப்பகுதியிலிருந்து 60 கிமீ தொலைவில் ஓர் இடத்தில் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தது. இவை இரண்டுமே விபத்துகள் தான். மின்வேலியில் யானை அடிபட்டு உயிரிழந்த சம்பவம்தான் குற்றம்.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சட்டவிரோதமாக மின்வேலியை அமைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது. மின் கம்பங்களில் இருந்து சட்டவிரோதமாக மின் இணைப்பை எடுத்துப் பயன்படுத்துகின்றனர்.

இது மின்சார சட்டம் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டங்களின்படி குற்றம். பெரும்பாலான சம்பவங்களில் காட்டுப் பன்றிகளைத் தடுப்பதற்காக இதை வைக்கிறார்கள், அதனால்தான் உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தாழ்வான மின்வேலிகள், கம்பங்களில் எதிர்பாராத விதமாக யானைகள் சிக்கிக் கொள்கின்றன.

வனத்துறையின் நடவடிக்கைகள் என்ன?

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மின்சாரத் துறை, வனத்துறை இணைந்து தொடர் கண்காணிப்பு மேற்கொண்டோம்.

அதில் பல இடங்களில் சட்ட விரோத மின்வேலிகள், தடுப்புகள் இருப்பது அறியப்பட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் யானை நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மின்வேலிகளால் தொடரும் யானை மரணங்கள்

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

யானையின் வழித்தடங்களில் மின் விபத்துகளால் பாதிக்கப்பட சாத்தியமுள்ள இடங்களைக் கண்டறிந்துள்ளோம். அந்த இடங்களில் மின் கசிவை தடுக்கவும் அரண் அமைக்கவும் தேவைப்படும் இடங்களில் மின் கம்பங்களை நிலத்திற்கு அடியில் அல்லது உயர்மட்டத்தில் அமைப்பதற்கும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தலைமை செயலாளர் தலைமையில் மின்சாரத் துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வருகின்ற செவ்வாய்க்கிழமை அடுத்த கூட்டம் நடைபெற உள்ளது. மின் பரிமாற்றக் கோடுகளை மாற்றியமைப்பது அதிக பொருட்செலவு கொண்டது மற்றும் நீண்ட காலம் செய்யக்கூடியது. அதற்கான முன்மொழிவை வனத்துறை தரப்பிலிருந்து வழங்கியுள்ளோம்.

அதை நிறைவேற்றும் பொறுப்பு மின்சாரத் துறையிடம் உள்ளது. அதற்கான ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைத்த பிறகு அவை நிறைவேற்றப்படும்,” என்றார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் யானைகள் மரணம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cg3zj371jyno

சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதில்

6 days 8 hours ago
சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதில்
மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,TNDIPR

25 மார்ச் 2023

மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.

வழக்காடு மொழி குறித்த கோரிக்கைக்கு மேடையில் பதில் கூறிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 348வது பிரிவு கூறுவதால், தமிழை வழக்காடு மொழியாக உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவைப்படலாம் என்று தெரிவித்தார்.

தமிழ் மொழியை வழக்காடு மொழியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன், உச்சநீதிமன்ற கிளை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் கொண்டு வர வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையிலான பணி நியமனம் பின்பற்றப்படவேண்டும் என்றும் அடிக்கல்நாட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் கோரிக்கைகளை முன்வைத்தார்.

முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு ரிமோட் மூலம் அடிக்கல் நாட்டினார். அதனை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தனர்.

 

அடிக்கல்நாட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும், கடந்த ஒரு வருடத்தில், தமிழ்நாட்டில், பல்வேறு நீதிமன்ற வளாகங்கள் அமைக்க ரூ.106 கோடி செலவிடப்பட்டது என்றும் பட்டியல் இன மக்களின் வழக்குகளை கையாள நான்கு புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

முதல்வரின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்த நீதிபதி சந்திரசூட், வழக்காடு மொழியாக தமிழ் மொழியை உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்திருத்தம் தேவைப்படலாம் என்று தெரிவித்தார். ''டெல்லியில் உச்சநீதிமன்றம் இருந்தாலும், இந்த நீதிமன்றம் இந்தியா முழுமைக்குமான நீதிமன்றமாக இருக்கவேண்டும் என்பதை நான் பலமுறை சொல்லிவருகிறேன்.

தற்போது இணையவழியாக நீதிமன்றம் செயல்படும் வசதி இருப்பதால், உச்சநீதிமன்றம் டெல்லியிலிருந்தாலும், மதுரை மேலூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஒரு வழக்குரைஞர் இணைய வழியில் உச்சநீதிமன்ற நீதிபதியிடம் முறையிடமுடியும்.

உச்சநீதிமன்ற வழக்குகளை இணைய வழியாகப் பார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தியுள்ளதால், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டம் பயிலும் மாணவர்கள் தங்களது ஊர்களிலிருந்தபடியே உடனடியாக இவற்றைப் பார்க்கமுடியும்,'' என்றார்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை
நீதிபதிகள் நியமனம்

அடுத்ததாக, நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் நியமனம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருகின்றது என்றும், அதற்காக ஆறு நபர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்ததாக, இந்திய அளவில் சட்டம் படித்து வழக்குரைஞர்களாக பணியாற்றும் நபர்களில் ஆண்-பெண் விகிதத்தில் பெரும் வேறுபாடு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதோடு, இந்தியாவில் பல நீதிமன்றங்களில் பெண் வழக்குரைஞர்கள் மற்றும் பெண் நீதிபதிகளுக்கு முறையான கழிவறை வசதிகள்கூட இல்லை என்றார். நவீன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள இந்த காலத்தில், பெண்களுக்குத் தேவையான வசதிகளை நீதிமன்ற வளாகங்களில் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், குழந்தைகளைப் பராமரிக்கும் மையங்களும் நீதிமன்றங்களில் அமைக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

இளம் வழக்குரைஞர்களுக்கு மிகவும் குறைந்த சம்பளம் அளிக்கும் முறை இந்த காலத்திலும் நிலவுவதாக கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ஒரு சிலர் ரூ.5,000 முதல் ரூ,12,000தான் மாத சம்பளமாக பெறுகிறார்கள் என்றார்.

''இளம் வழக்குரைஞர்கள் நம்மிடம் கற்பதற்காக சில ஆண்டுகள் வேலைபார்ப்பதால், குறைந்த சம்பளம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தை சிலர் இன்றும் வைத்திருக்கிறார்கள். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும். இந்த காலத்து இளைஞர்களிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன.

என்னிடம் கிளர்க்காக பணியாற்றும் ஐந்து இளம் வழக்குரைஞர்களில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண். சட்டத்துறை பின்னணி எதுவும் இல்லை, அவர் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆனால் இதுபோன்ற இளைஞர்கள் வேகமாக கற்பதோடு, வேறு கோணங்களிலிருந்து நீதிமன்ற செயல்பாடுகளை அணுகுகிறார்கள். அதனால், இளம் வழக்குரைஞர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,TNDIPR

அடுத்ததாக, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் பிரிண்ட் செய்யப்படும்போது, அவை சிறிய எழுத்துகளில், நெருக்கமான வரிசைகளில் இருப்பதாகவும், வாட்டர்மார்க் உள்ள தாளில் பிரிண்ட் செய்யப்படுவதால், பார்வைமாற்றுதிறனாளிகள் தீர்ப்பை படிப்பதற்குச் சிரமம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக பேசிய மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என்றார். கடந்த பட்ஜெட்டில் இந்தியாவில் இ-கோர்ட்டுகள் திட்டத்திற்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது 'ஒரு கேம் சேஞ்சராக' இருக்கும் என்றார்.

''இந்தியாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. தற்போதைய கணக்குப்படி சுமார் 4 கோடியே 90 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு முடிவுக்குள் 6 கோடியாக அதிகரிக்கும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் என்றும் மூத்த நீதிபதிகள் என்னிடம் சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை மிகவும் கவலை தருவதாக உள்ளது.

இதுபோன்று வழக்குகள் தேங்குவதற்கு நீதிமன்றங்களில் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் போவதும் ஒரு காரணம். அதேநேரம், தற்போது, இணையவழி நீதிமன்றம்(இ-கோர்ட்) என்ற முறை மேம்படுத்தப்படுவதால், இந்த நிலுவை வழக்குகள் குறையும் என்று நம்புகிறோம்,'' என்று தெரிவித்தார் கிரண் ரிஜிஜு.

https://www.bbc.com/tamil/articles/c3gvp00z718o

தமிழ்நாடு அரசின் இயற்கை வேளாண் கொள்கை: பயன் தருமா? உணவு பற்றாக்குறையில் தள்ளுமா?

1 week ago
தமிழ்நாடு அரசின் இயற்கை வேளாண் கொள்கை: பயன் தருமா? உணவு பற்றாக்குறையில் தள்ளுமா?
இயற்கை வேளாண்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 25 மார்ச் 2023, 03:10 GMT
    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த வாரத்தில் தமிழ்நாடு அரசு அங்கக வேளாண்மை கொள்கை ஒன்றை அறிமுகம் செய்தது. சென்ற இரண்டு ஆண்டுகளில் விவசாயத்துறை அதிகாரிகள், வல்லுநர்கள், அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் உள்ளிட்டவர்களைக் கொண்ட குழு இந்தக் கொள்கையை வடிவமைப்பதில் ஈடுபட்டிருந்தது.

தற்போது வெளியாகியுள்ள இந்தக் கொள்கையின் தேவை என்ன, எப்படி நடைமுறைப்படுத்தப்படும் விவசாயிகளின் வருமானம் உயர இந்தக் கொள்கை கைகொடுக்குமா என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தியாவில் 2.66 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் சான்றளிக்கப்பட்ட அங்கக வேளாண்மை நடைபெறுகிறது என்றும் அதில் தமிழ்நாட்டில் அந்த பரப்பளவு 31,629 ஹெக்டேராக உள்ளது என்றும் அங்கக வேளாண்மை கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் அங்கக வேளாண்மையில் மத்திய பிரதேசம் முதல் இடத்திலும் தமிழ்நாடு 14ம் இடத்திலும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

2020-21ஆம் ஆண்டு காலத்தில், 4,223 மெட்ரிக் டன் அளவிலான ரூ.108 கோடி மதிப்பிலான அங்கக வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பதால், இந்த வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகள் புதிய அங்கக வேளாண் கொள்கை மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முதலில், அங்கக வேளாண்மை என்ற சொல்லாடல் பலருக்கும் புதிதாகத் தெரிந்தது. இதுவரை இயற்கை வேளாண்மை அல்லது மரபுவழி விவசாயம் என்ற பயன்பாடுதான் புழக்கத்தில் உள்ளது. அதாவது, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதே இயற்கை வேளாண்மை என்ற புரிதல் இருந்தது.

ஆனால், உரங்களை சொந்த பண்ணையில் தயாரிப்பது, விவசாயம் செய்யும் இடத்திற்கு அருகே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விளைச்சல் எடுப்பதே இயற்கை வேளாண்மை என்றும் பண்ணைக்கு வெளியில் இருந்து சந்தையில் கிடைக்கும் உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்வது அங்கக வேளாண்மை என்றும் தமிழ்நாடு வகுத்துள்ள அங்கக வேளாண்மை கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கக வேளாண்மையின் முக்கிய நோக்கம்
  • மண் வளத்தை அதிகரிப்பது, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பது
  • ஏற்றுமதியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவது
  • அங்கக வேளாண்முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்குச் சான்றிதழ் பெறுவது
  • விவசாய பொருட்களில் நச்சுத்தன்மையை பகுப்பாய்வு செய்வது
அங்கக வேளாண்மைக்கான தேவை

தமிழ்நாடு அரசு அங்கக வேளாண்மையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. உடனடி மாற்றமாக இல்லாமல், ரசாயன உர விவசாயத்தில் இருந்து மெள்ள மீளும் நடவடிக்கையாக அந்த நகர்வு இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அங்கக வேளாண்மைக்கான தேவை குறித்துக் கேட்டபோது, ''ரசாயன மருந்துகளைக் கொண்டு நடைபெறும் விவசாயம் காரணமாக, பூச்சிக்கொல்லி எச்சங்கள் உணவுச் சங்கிலியில் நுழைந்து உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதை உலக சுகாதார மையம் நிரூபித்துள்ளதால், அங்கக வேளாண்மைக்கு நகர்வது அவசியமாகிறது.

அதே நேரம், அந்த மாற்றத்தை தீவிரப்படுத்தாமல், இயல்பான மாற்றமாக அதனை கட்டமைக்க இந்த கொள்கை உதவும். விவசாயிகளுக்கு ஏற்ற விலை கிடைக்கவேண்டும், அதேநேரம் அந்த உணவுப் பொருளை வாங்கும் சக்தி மக்களுக்கு இருக்கவேண்டும் என்பதால், நீடித்த முறையில் இந்த மாற்றத்தை செயல்படுத்துவோம்,'' என விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறுகிறார்.

விவசாயிகளுக்கு என்ன நன்மை?

அங்கக வேளாண்மை கொள்கை உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அரியனுர் ஜெயச்சந்திரன் என்ற விவசாயி, பிபிசி தமிழிடம் இந்த கொள்கை செயல்படுத்தப்படும்போது விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று விளக்கினார்.

கடந்த 23 ஆண்டுகளாக ரசாயனமின்றி நெல், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகிறார் ஜெயச்சந்திரன்.

இயற்கை வேளாண்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

''அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, பயிர்க்கடன், உயிர் உரங்கள், உயிரி இடுபொருட்கள் மானிய விலையில் தரப்படும் என்று அரசு முன்மொழிந்துள்ளது வரவேற்கத்தக்கது. பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் விதை வங்கி, மரபணு வங்கி, பண்ணை கழிவு, உரக் கூடங்கள் அமைக்கப்படும் என்பதால், தற்போது ரசாயன உர விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூட தங்களது நிலத்தில் அங்கக வேளாண்மையை ஒரு சிறு நிலப்பரப்பில் தொடங்க முடியும்.

ரசாயனமில்லா உணவுப்பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு அங்கக வேளாண் பொருட்களுக்குச் சான்றளிக்கும் நடைமுறையைக் கொண்டுவருவதால், சர்வதேச சந்தையில் எங்கள் விளைபொருட்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும், ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரிக்கும்,'' என்கிறார் விவசாயி ஜெயச்சந்திரன்.

தமிழ்நாட்டில் அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள், விளைச்சல் பொருட்களைச் சந்தைப்படுத்த சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல இடங்களில் நேரடியாகப் பொருட்களை விற்பது, சிறப்பு அங்காடி நடத்துவது உள்ளிட்ட நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படும் என விவசாயத்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறுகிறார்.

மேலும் எல்லா மாவட்டங்களிலும் அங்கக உணவுத் திருவிழாக்களை தமிழ்நாடு அரசு நடத்தும் என்றும் அங்கக வேளாண்மை கொள்கையின் செயல்பாடுகள் ஐந்து ஆண்டுகள் கழித்து விவசாயிகளின் வருமானம் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு சீராய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அங்கக வேளாண்மைக்கு மாறும் நேரமா?
இயற்கை வேளாண்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள முயற்சி அங்கக வேளாண்மைக்கு மாறும் முதல்படி என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கும்போது, அதற்கான தேவையும் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார் விவசாயிகள் நல செயற்பாட்டாளரும், அங்கக வேளாண்மை கொள்கை வரைவு குழுவில் இடம்பெற்ற வல்லுநருமான அனந்து.

''உலகம் முழுவதும் ரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கும் உணவுப் பொருட்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. ஆனாலும், ரசாயன உரங்களை முற்றிலும் புறக்கணித்து அங்கக வேளாண்மைக்கு மாறுவது என்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ்நாடு அரசு விவசாயத்திற்கு ஒதுக்கியுள்ள நிதி ரூ.38,904 கோடியில் ரூ.26 கோடி மட்டும் அங்கக வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இது சிறு ஒதுக்கீடாகத் தெரிந்தாலும், இந்த ஆண்டு நாம் பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளோம். கிராமம், நகரம் என எல்லா பகுதிகளிலும் விழிப்புணர்வு அதிகரிக்கும். மக்களின் தேவையை ஒட்டி உள்நாட்டுச் சந்தையிலும் அங்கக வேளாண் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்,''என்கிறார் அனந்து.

அங்கக வேளாண்மைக்கு மாறுவது குறித்து விளக்கிய தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் இளங்கீரன், படிப்படியான மாற்றம்தான் தேவை என்றும் அதிரடியான மாற்றம் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார்.

''பல கிராமங்களில், விவசாயிகள் தங்களது நிலத்தில், ஒரு சிறு பகுதியில் தங்களது தேவைக்கான பொருட்களை அங்கக வேளாண்மை முறையில் பயிரிடுகின்றனர்.

தற்போது, அரசாங்கம் கொடுக்கும் ஊக்கம் மேலும் அந்த நிலப்பரப்பை ஓரளவு அதிகரிக்க உதவும். உடனடியாக அங்கக வேளாண்மைக்கு மாறினால், உணவுப்பொருள் உற்பத்தி பலமடங்கு குறைந்துவிடும்.

எடுத்துக்காட்டாக, ஒரு ஏக்கர் நிலத்தில், ரசாயன முறையில் 40மூட்டை நெல் விளைந்தால், அங்கக வேளாண் முறைப்படி 15மூட்டைகள்தான் எடுக்கமுடியும்.

குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் ரசாயன முறைக்கு இணையான உற்பத்தியை அங்கக வேளாண் முறையில் பெறமுடியும் என்பதால், அதிரடியாக மாறுவதற்குப் பதிலாக, உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வழியில் நடைமுறைப்படுத்துவதுதான் நீடித்த மாற்றமாக இருக்கும்,' 'என்கிறார் இளங்கீரன்.

https://www.bbc.com/tamil/articles/c72n0m94d88o

ஆட்டிசம் குழந்தைகளைப் பாடகர்களாக்கி மேடை ஏற்றும் பிரபா குருமூர்த்தி

1 week ago
ஆட்டிசம் குழந்தைகளைப் பாடகர்களாக்கி மேடை ஏற்றும் பிரபா குருமூர்த்தி
 
IMG-20230203-WA0001.jpg
 

 

சாதாரணமா தனக்குக் கிடைச்ச மேடையைப் பாடகர், பாடகியர் யாரும் அடுத்தவங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க ஆனா. இவங்க வித்யாசமானவங்க அவங்க தன்கிட்ட பாட்டுக் கத்துக்க வந்த ஆட்டிசம் குழந்தைகளையும் தான் பாடும் மேடையில் ஏற்றி ஒளிரச் செய்கிறார். இம்மாதிரியான தொண்டைச் செய்து வருபவர் பிரபலபாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி டாக்டர். பிரபா குருமூர்த்தி,

SCAN__0038.jpg
 

 

 

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர். பிரபா குருமூர்த்தி. வங்கியல்லாத நிதி நிறுவனம், வங்கி, கல்வித் துறையில் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக பல்வேறு பணியாற்றி பல அனுபவங்கள் உள்ளன. அவர் கடந்த பத்து வருடங்களாக ஐஜிடிசியில் பணியாற்றுகிறார். பல ஆண்டுகளாக, வாய்ஸ்-ஓவர் உலகத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். புகழ்பெற்ற பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி இவர். சிறந்த பாடகர். இப்படி பன்முகத்திறமை வாய்ந்தவர். லேடீஸ் ஸ்பெஷலுக்குப் பேட்டி கேட்டதும் அவர் நம்முடன் பகிர்ந்தது...

லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கையின் கிரிஜா மேடம் நான் ரொம்பவும் அப்ரிஷியேட் செய்யும் பர்சனாலிட்டி. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து பத்திரிகை நடத்திக்கிட்டு வரும் சாதனையாளர். பெண்களின் தன்னம்பிக்கையின் தூண்டுகோல். இதற்காக அவங்களுக்கு வாழ்த்துக்கள். அவங்களோட பத்திரிக்கையில் எனது பேட்டி வெளிவருவது மகிழ்ச்சியா இருக்கு.

நான்பிறந்தது மதுரை. மதுரை சோழவந்தான் அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் பள்ளிப்படிப்பு. சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.ஏ (ஆங்கில இலக்கியம்) முடித்தேன். பிறகு டிப்ளமோ இன் பிஸினஸ் அட்மினிஸ்டிரேஷன் படித்தேன். இப்போது எம்.எஸ்.சி. சைக்காலஜி பயின்று வருகிறேன்.

அப்பா வி.வெங்கடாசலம் & எல்.ஐ.சியிலிருந்து ஓய்வு பெற்றவர். அம்மா & விஜயலட்சுமி, அக்காள்கள் கிரேஸி மீனாட்சி, மாலினி, தங்கை சுதா   ரகுராமன். எனது 18 வயது வரை தாத்தா வீடான சோழவந்தானில் மாமா வீட்டில்தான் இருந்தேன். பின்னர் கல்லூரி படிப்பிற்காக சென்னை  வந்தோம்.

எனது குடும்பத்தினர் அனைவருமே எனக்கு முழு ஆதரவோடு இருக்கின்றனர். ஆரம்ப காலங்களில் எனது குடும்பத்தினருக்கு நான் செய்யும்  அலுவலக வேலை தவிர பிறவற்றில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதில் விருப்பமில்லை. இப்போது அந்த நிலை மாறி வருகிறது.

எனது 4 வயது முதலாகவே பாட்டு கற்றுக் கொண்டு பாட ஆரம்பித்தேன். எனது குரு எனது சித்தி (டி.ஆர்.மகாலிங்கத்தின் இளைய மகள்)  சாவித்தி. இவர்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷனும் கூட. எனது கணவர் குருமூர்த்தி. மணிகண்டன், விக்னேஷ்வர் என்ற இரண்டு மகன்கள்  உள்ளனர்.

மொத்தம் 30 வருடங்கள் பூர்த்தி ஆகிவிட்டது. வங்கியில்லாத நிதிநிறுவனம், வங்கி, கல்வித் துறையில் கடந்த 13 ஆண்டுகள் பணிபுரிந்த  அனுபவம். மீண்டும் தற்போது பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் டிஜிஎம்மாக பணியாற்றுகிறேன்.

அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சியில் பின்குரல் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்துள்ளேன். தமிழ்நாடு பிலிம் டிவிஷன், ரூரல் டெவலப்மெண்ட், ஹெல்த் டிபார்ட்மெண்ட், சோசிஷயல் வெல்பர் டிபார்ட்மெண்ட் டிடிடீசி போன்றவற்றின் டாக்குமெண்டரிக்காக டப்பிங் செய்திருக்கிறேன்.தமிழ்நாடு அரசு நிகழ்ச்சி உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். தனியார் பத்திரிக்கை ஒன்றில் தமிழ மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பாளராகவும் இருந்திருக்கிறேன்.

தமிழகத்திலுள்ள பல்வேறு பிரபல கோவில்களில் பக்தி இன்னிசை கச்சேரி செய்து வருகிறேன். எனது அத்தை பையனான  டி.ஆர்.மகாலிங்கத்தின் மகன் வயிற்றுப் பேரன் டாக்டர் ராஜேஷூடன் இணைந்து தாத்தாவின் பெயரில் டி.ஆர்.எம்.எஸ். சென்னை கிளாஸிக்  ஆர்கெஸ்டிரா  என்ற பெயரில் மியூசிக் டுரூப் வைத்துள்ளேன். கல்வித்துறையில் வேலை செய்தபோது கிடைத்த அனுபவத்தின் மூலம் நிறைய கவுன்சிலிங் செய்து வருகிறேன். 

மூன்றரை வயது முதல் 73 வயது வரை உள்ளவர்களுக்கு பஜன்ஸ், பக்திப்பாடல்கள், ஸ்லோகங்கள் பயிற்றுவிக்கிறேன். தமிழ்மொழியின் பால் உள்ள அலாதியான பற்று காரணமாக, தமிழ்மொழிப் பயிற்சி சொல்லிக் கொடுக்கிறேன். 

SCAN__0039.jpg
 

 

டி.ஆர்.மகாலிங்கம், சி.எஸ்.ஜெயராமன் போன்றவர்கள் பாடிய பாடல்களை ஆண் குரலில் எங்களது இசை நிகழ்ச்சிகளில் பாடுவேன்.  மற்றவர்களிடமிருந்து தனித்து தெறிய வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி. பள்ளிப் பருவத்திலேயே பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி,  கோலப்போட்டி, பேச்சுப்போட்டி முதலியவற்றில் முதல் பரிசு பெற்றுள்ளேன். ஓட்டப்பந்தயம், கைப்பந்து முதலியவற்றில் நிறைய பரிசுகள்  பெற்றுள்ளேன். கைப்பந்து விளையாட்டில் மூன்று முறை பல்கலைக்கழத்திற்கும் மூன்று முறை தமிழ்நாடு அணிக்கும் விளையாடியுள்ளேன்.

பெஸ்ட் வாய்ஸ் ஓவர் ஆரட்டிஸ்ட்டுக்காக சிவாஜி விருதினையும், சிறந்த மகளிர் விருது, சிறந்த பாடகி விருது, வாழ்நாள் சாதனையாளர்  விருது, வின் விருது, சமூக நலனில் ஹானரி டாக்டரேட் விருதும் பெற்றுள்ளேன். பல்வேறு கல்வி, கல்லூரி போட்டிகளுக்கு விருந்தினராக  சென்றுள்ளேன். நிறைய சாப்ட் ஸ்கில் பயிற்சிக்கான நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறேன். இரண்டு விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன்.  விளம்பர படங்கள், குழந்தைகளுக்கான கார்டூன் படங்களுக்கும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறேன். 

எனது நண்பர் சூரியநாராயணன் மற்றும் அவரது மனைவி லலிதா நாராயணனுடன் இணைந்து ஏஎல்4எஸ் சாரிடபுள் டிரஸ்டில் பிஆர்ஓவாக  இருக்கிறேன். தன்னலமின்றி அவர்கள் செய்யும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு அவர்களுடன் இணைந்து பணியாற்றி அதன் பயனாகவே சமூக சேவைக்கான டாக்டர் விருதினை பெற்றேன்.

எனது தாத்தா டி.ஆர்.மகாலிங்கம் இருந்தவரை நாங்கள் யாரும் அவருக்கு நாங்கள் இந்த மீடியா துறையில் வருவதற்கு விரும்பவில்லை.  தற்போது எனது தாத்தாவின் பெயர் அடுத்த தலைமுறையினரை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே நான் இத்துறையில் என்னை  ஈடுபடுத்திக் கொண்டேன். 2023ம் ஆண்டு எனது தாத்தாவின் நூற்றாண்டு வருகிறது. அதற்கான ஒரு பெரிய விழாவினை எடுக்க நானும், டாக்டர். ராஜேஷ் மகாலிங்கமும் முடிவு செய்துள்ளோம்.

தாத்தாவுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.  எப்போதுமே வீட்டில் நிறைய பேர் இருக்கணும், குழந்தைகள் எல்லாரும் இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதிக நேரம் வெளியிடத்திற்கு பாட்டுப் பாட போய்விடுவார். போய் வந்ததும் பேரன், பேத்திகளுடன் தான் அதிக நேரத்தை செலவிடுவார். மிகவும் எளிமையானவர். தன்னை பற்றி பெருமிதத்தை வெளியிடத்தில் காட்டிக் கொள்ளாதவர். எனக்கு 8 வயது இருக்கும் போது அவர் இறந்தார். ஒரு சில விஷயங்கள் பசுமையாக இருக்கிறது. முதலில் குழந்தைகளுக்கு எல்லாம் செய்த பிறகுதான் பெரியவர்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைப்பவர். எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார். 

நிறைய படங்களில் நடிக்கும் போதும், பாடும் போதும் அவர் சொல்லும் வார்த்தை “என் பொழப்பு நம் குடும்பத்தில் யாரும் வரக்கூடாது” என்பார். சித்தி கச்சேரிகள் பண்ணும்போது கூட போய் பாடியிருக்கிறேன். ஒரு காலத்திற்கு அப்புறம்தான் யாரெல்லமோ நம் தாத்தா பேரை சொல்லி பாடுகிறார்கள். நம் குடும்பத்தில் யாருமே தாத்தாவின் பெயரை சொல்வதற்கில்லையே என்று நினைக்க ஆரம்பித்தேன்.

அதன் பிறகு தாத்தாவின் பெயரை சேர்த்துதான் என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்கிறேன். கலைத்துறையில் கவியரசர் கண்ணதாசன், சீர்காழி கோவிந்தராஜன், சுசீலாம்மா, தாத்தாவுடன் நடித்த நடிகைகள், நடிகர்கள் என அனைவருடைய குடும்பத்துடனும் உறவுடனும் நட்புடனும் இருக்கிறோம்” என்கிறார் டாக்டர். பிரபா குரூமூர்த்தி.

இதில்மிகச்சிறப்புஎன்னவெனில்இவர் கடந்த நான்கு மாதங்களாக அறிவுத்திறன் குறைபாடு அதாவது ஆட்டிஸம் குழந்தைகளுக்கு " சூர்யா SchoolofMusic"  என்ற இசை பள்ளியை நடத்தி வருகிறார். இதில் அந்த குழந்தைகளுக்கு பாடல்களை பயிற்று விற்பது மட்டுமல்லாது அவர்களுக்குப் பல மேடைகளையும் அமைத்து கொடுக்கிறார்.

இதில் சில குழந்தைகள் எங்களை எல்லாம் ஸ்டேஜில் ஏற்ற மாட்டீர்களா என்று ஆவலுடன் கேட்டார்களாம். அது இவர் மனதில்  சுழன்று கொண்டேயிருந்தது. மேலும் இவரது இரண்டாவது மகனும் ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தை என்பதால் இவர் அக்குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றத் தன்னுடைய மேடையிலேயே பங்களித்துப் பாட வைப்பது சிறப்பு.

  தற்போது ஒரு 15 குழந்தைகள் இருக்கிறார்கள். விரைவில் ஒரு 50 முதல் 75 குழந்தைகள் கொண்டு ஒரு 'Worldrecordshow  செய்ய வேண்டும் என்பது இவரது எண்ணம்.

இந்த musicschool ஆரம்பித்த பிறகு தான் இவருக்கு ஆட்டிஸம் குழந்தைகளுக்கு பாடல்களை பாடுவது மட்டுமல்ல சிலர் musicalinstruments வாசிப்பார்கள் என்பது தெரிய வந்தது. தனக்கு இசை வாத்தியங்கள் வாசிக்க மற்றும் பயிற்றுவிக்க தெரியாது என்பதால் , இந்த corona விற்கு பிறகு வாழ்வாதாரதிற்கே கஷ்ட படும் கலைஞர்களுக்கு ஒரு வருமானத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இவரது எண்ணம்.

அது மட்டும் இன்றி தற்போது "SmuletoStage' என்ற புதிய concept மூலம் Smule பாடகர்களை தனது இசை குழு மூலம் மேடை இசை பாடகர்களாக மற்ற முயற்சி எடுத்திருக்கிறார். அவர்களுக்கும் liveorchestra வில் பாட வாய்ப்பு அளிக்கிறார். இங்கு திறமை இருக்கிறதோ அதை அங்கீகரிக்க வேண்டும் என்பது இவரது கொள்கையாக வைத்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு தனது தாத்தா TRMahalingam அவர்களின் நூற்றாண்டு வருவதால் தன்னால் முடிந்த அளவு இந்த இசை துறைக்கு சேவை செய்ய வேண்டும் என்பது இவரது அவா. அந்த இசை பரம்பரையில் பிறந்தது இருப்பதால் அத்துறைக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பது இவரது  எண்ணம். எவ்வளவு பணிகள், அத்தோடு ஆட்டிசம் குழந்தைகள் மேலும் இவ்வளவு பேரன்பு கொண்ட ப்ரபா குருமூர்த்தியின் சேவை சிந்தனையைக் கேட்டதும் உண்மையிலே இவர் ஒரு பளிச் பெண் எனத் தோன்றியது.

http://honeylaksh.blogspot.com/2023/03/blog-post_24.html

ரஜினி மகள் வீட்டில் திருடிய நகைகள் மூலம் வீடு வாங்கிய முன்னாள் பணிப்பெண், ஓட்டுநருடன் கூட்டு: போலீஸ்

1 week ago
ரஜினி மகள் வீட்டில் திருடிய நகைகள் மூலம் வீடு வாங்கிய முன்னாள் பணிப்பெண், ஓட்டுநருடன் கூட்டு: போலீஸ்
நகை திருட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
 
படக்குறிப்பு,

ஈஸ்வரி (இடது), ஐஸ்வர்யா (வலது)

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக சிறுகச் சிறுக திருடிய நகைகளைக் கொண்டு சென்னையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியதாக பணிப்பெண் மற்றும் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த இருவரும் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 100 சவரன் தங்கம், 30 கிராம் வைர நகைகள், நவரத்தின நகை செட், நான்கு கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடியதாக போலீஸார் கூறுகின்றனர்.

ஐஸ்வர்யா வீட்டில் பணிப்பெண் ஈஸ்வரி (46), ஓட்டுநர் வெங்கடேசன்(44) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டில், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் மதிப்புள்ள பல நகைகளை காணவில்லை என கடந்த மாதம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

 

அதில், கடந்த 18 ஆண்டுகளில் அவர் சேகரித்த பலவிதமான விலை உயர்ந்த நகைகள் பலவற்றையும் அந்த லாக்கரில் வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த லாக்கரை கடந்த மூன்று ஆண்டுகளாக திறக்கவில்லை என்பதாலும், பலமுறை அந்த லாக்கரை தனது வீட்டில் இருந்து கணவர் தனுஷ் வீட்டுக்கு எடுத்துச் சென்று மீண்டும் கொண்டு வந்திருந்ததால், நகைகள் கொள்ளை போனது தனக்கு தெரியவில்லை என்று ஐஸ்வர்யா கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 வருடங்களாக வேலை செய்தவர்
தேனாம்பேட்டை காவல் நிலையம்

ஐஸ்வர்யா வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் வேலைசெய்து வந்ததாகவும் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஈஸ்வரி மட்டும் வேலையிலிருந்து விலகி விட்டார் என்பதால் முதலில் அவரை காவல்துறையினர் விசாரித்தனர்.

அவர் கொடுத்த தகவலைகொண்டு, இதுநாள் வரை வேலையில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர் வெங்கடேசன் என்பவரையும் கைது செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

நகை லாக்கர் வைக்கும் இடமும், அதற்கான சாவி வைக்கும் இடமும் ஈஸ்வரிக்கு தெரியும் என்று ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்திருந்தார். அதன் பேரிலேயே ஈஸ்வரியிடம் போலீஸார் விசாரித்தனர். அதைத்தொடர்ந்து வெங்கடேசனிடமும் நடத்திய விசாரணையில் இருவரும் கூட்டு சேர்ந்து ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடியதை ஒப்புக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதியே இருவரும் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் திருடிய நகை உள்ளிட்ட பொருட்களின் விவரம் எத்தனை என்பதை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

அடகு கடையில் நகைகள் விற்பனை
இளவரசி
 
படக்குறிப்பு,

ஈஸ்வரி

இந்நிலையில், ஈஸ்வரியும் வெங்கடேசனும் தங்களுடைய நண்பர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்த நகைகள், அடகு கடையில் வைத்திருந்த நகை என 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருட்டு நகைகள் சிலவற்றை மயிலாப்பூரில் உள்ள ஒரு அடகு கடையில் விற்றதையும் போலீஸார் கண்டறிந்தனர். அதன்பேரில் அடகு கடை உரிமையாளர் வினால்க் சங்கர் நவாலி என்பவரை தற்போது விசாரித்து வருவதாக பிபிசிதமிழிடம் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

''இருவரும் பல ஆண்டுகளாக சிறிய அளவில் தங்கநகை, வெள்ளி பொருட்களைத் திருடியுள்ளனர். கொள்ளையடித்த பொருட்களில் சிலவற்றை அடகு வைத்து, ஈஸ்வரி ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார். ஓட்டுநர் வெங்கடேசனிடம் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகிய இருவரும் இதுவரை அளித்துள்ள தகவலை வைத்துப்பார்க்கையில், பல இடங்களில் அவர்களின் நண்பர்களிடம் நகைகளை மறைத்துவைத்துள்ளனர். அதனை மீட்பதற்காகத் தீவிரமாக விசாரித்துவருகிறோம்,'' என தேனாம்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக சிறிய அளவில் நகை மற்றும் பிற பொருட்கள் திருடப்பட்டதால், அவற்றில் ஒரு பகுதியை மட்டும்தான் தற்போது மீட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பணிப்பெண் ஈஸ்வரியின் கணவர் அங்கமுத்துவிடம் விசாரித்தபோது, தனது மனைவியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பற்றி தனக்கு எந்த விவரமும் தெரியாது என்று கூறியுள்ளார். இருந்தாலும் அவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் கூறும்போது, ''ஈஸ்வரியின் கணவர் தனது மனைவியின் பெயரில் வீடு இருப்பது பற்றி தனக்கு தெரியாது என்கிறார். ஈஸ்வரி, ஓட்டுநர் வெங்கடேசனின் உதவியுடன்தான் பல ஆண்டுகாலமாக திருடியுள்ளார்.

திருடிய பொருட்களை இருவரும் பல இடங்களில் மறைத்து வைத்துள்ளார். அவர் ஒரு வீடு வாங்கும் அளவுக்கு பணம் சேர்ந்ததும், திருடுவதை குறைத்துள்ளார். வீடு வாங்கி விட்டு, மீதமுள்ள நகைகளை அடகு கடையில் வைத்துள்ளார். அந்த பணம் எதற்காகப் பயன்பட்டது என்று விசாரித்து வருகிறோம். அதேநேரம், வெங்கடேசன், தனது பங்குக்கு பணமாகப் பெற்றுள்ளார். அவர் சொத்தாக எதுவும் வாங்கவில்லை என்று தற்போது சொல்கிறார். மேலும் விசாரித்து வருகிறோம்,'' என்று கூறினர்.

ஆனால் முதலில் புகார் கொடுத்தபோது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வெறும் 60 சவரன் நகைகளைக் காணவில்லை என்று கூறியிருந்தார், தற்போது 100 சவரன் தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதால், ஐஸ்வர்யாவிடமும் அவரிடம் இருந்த நகை தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்டுள்ளனர். பல ஆண்டுகளாக பொருட்கள் திருடு போனது குறித்து ஐஸ்வர்யா அறியாமல் இருந்தது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

''புகார் கொடுத்தபோது, ஆரம், நெக்லேஸ்,கம்மல், வளையல் உள்ளிட்ட 60 சவரன் நகை, இரண்டு வைரநகை செட், நவரத்தின நகை செட் ஆகியவை காணவில்லை என்று ஐஸ்வர்யா கூறியிருந்தார். தற்போது நாங்கள் 100 சவரன் நகைகளை மீட்டிருக்கிறோம்.

பல ஆண்டுகள் நகைகளைத் திருடியுள்ளதை ஈஸ்வரி,வெங்கடேசன் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் கொடுத்துள்ள தகவல்களை கொண்டு மற்ற இடங்களில் உள்ள நகைகளை மீட்டு வருகிறோம் என்பதால், ஐஸ்வர்யாவிடமும் அவரிடம் இருந்த நகைகளுக்கான ஆவணங்களைக் கேட்டிருக்கிறோம்,''என்கின்றனர் அதிகாரிகள்.

https://www.bbc.com/tamil/articles/ce561g4818lo

'ராம்ஜி நகர் திருடர்கள்': கொண்டை ஊசி, ஹேர்பின் மூலம் திருடும் கொள்ளை கும்பல் - அதிர்ச்சி தரும் கைவரிசை மற்றும் பின்னணி

1 week 1 day ago
'ராம்ஜி நகர் திருடர்கள்': கொண்டை ஊசி, ஹேர்பின் மூலம் திருடும் கொள்ளை கும்பல் - அதிர்ச்சி தரும் கைவரிசை மற்றும் பின்னணி
ராம்ஜி நகர் திருடர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை நகரில் கடந்த சில வாரங்களாக கொண்டை ஊசி, ஹேர்பின் உள்ளிட்ட பெண்கள் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கார் கண்ணாடிகளை உடைத்து, பொருட்களை திருடிச்செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சாமார்த்தியமாக பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பி, பலமான பொருட்களை கொண்டு தாக்காமல், அன்றாட பொருட்களை வைத்து கொள்ளையடிக்கும் முறைக்கு பெயர்போன 'திருச்சி ராம்ஜி நகர்' கொள்ளை கும்பல் இந்த திருட்டு சம்பவங்களுக்குப் பின் இருப்பதை உறுதி செய்துள்ள சென்னை காவல்துறையினர், விசாரணை வலையை விரித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக வெளிமாநிலங்களில் மட்டுமே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 'ராம்ஜி நகர்' கொள்ளையர்கள், தற்போது தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கத் தொடங்கியுள்ளனர் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இரண்டு மாத கால தேடுதலுக்கு பின்னர், சென்னை தேனாம்பேட்டை காவல்நிலைய அதிகாரிகள், ராம்ஜி நகர் கும்பலைச் சேர்ந்த ஒரு நபரை கடந்த வாரம் பெங்களூரு சென்று கைது செய்துவந்தனர்.

 

'ராம்ஜி நகர்' கொள்ளை கும்பலைச் சேர்ந்த சபரி (33) என்ற நபர் கைதாகியுள்ள நிலையில், பிற நபர்களைக் கண்டறியத் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் யார்? பின்னணி என்ன?

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த ராம்ஜி மூலே என்பவர் திருச்சியில் நடத்திய பருத்தி ஆலையில் ஆந்திரா, குஜராத் என பல வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.

1990களில் இருந்து 2007வரை செயல்பட்ட அந்த ஆலையின் அடையாளமாக அந்த பகுதி ராம்ஜி நகர் என்ற பெயர் பெற்றது.

ஆலையில் வேலை செய்த பலர் தொடர்ந்து தமிழ்நாட்டில் தங்கிவிட்டாலும், வட மற்றும் தென் மாநில மொழிகளை இன்றும் சரளமாகப் பேசுகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் கொள்ளையடித்து தங்களது வாழ்க்கையை வாழுகின்றனர்.

சுமார் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்களாக அவர்கள் பெருகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தங்களது வங்கிக் கணக்குகளைப் பிற மாநிலங்களில் வைத்திருப்பார்கள் என்றும் தமிழ்நாட்டில் தங்கள் மீது எந்த வழக்கும் பதிவாகாத வகையில் இதுநாள் வரை செயல்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இந்தியாவில் நூற்றுக்கணக்கான காவல்நிலையங்களில் பல நூறு திருட்டு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளாக அறியப்படுபவர்கள்தான் ராம்ஜி நகர் கொள்ளையர்கள். இவர்களை தேடி பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியாணா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து திருச்சி ராம்ஜி நகர் பகுதிக்கு விசாரணை அதிகாரிகள் வந்து சென்றுள்ளனர்.

ராம்ஜி நகர் கொள்ளையர்களை நேரடியாக அணுகி, அவர்களை திருட்டு தொழிலிலிருந்து மீட்க பல காவல்துறை அதிகாரிகள் முயன்றும் இன்றுவரை பயன் இல்லை என்றும் தெரிகிறது.

 

1990களின் பின்பகுதியில் தொடங்கி இன்றுவரை இந்தியாவின் பல பகுதிகளில் வங்கி,நகைக்கடைகள், ஏடிஎம் அறைகள், பொது இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கார்கள், கூட்டநெரிசலான பகுதிகளில் நகை, பணப்பை உள்ளிட்ட பலவகையான பொருட்களைத் திருடும் வேலையில் ஈடுபட்டு அதையே தங்களது வாழ்வாதாரமாக வைத்திருப்பவர்கள்தான் ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என்கிறார்கள் மூத்த காவல்துறை அதிகாரிகள்.

ராம்ஜி நகர் திருடர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் திருடும் விதம்

ராம்ஜி நகர் கொள்ளையர்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், அவர்களை கைது செய்தவர்கள் என பல மூத்த அதிகாரிகளிடம் பேசினோம். தமிழ்நாடு காவல்துறையில் ஐ.ஜி ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சாரங்கன் ஐபிஎஸ்.

இவர் திருச்சி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். ராம்ஜி நகர் கொள்ளையர்களை அடையாளம் காண அவர்களின் புகைப்படங்கள், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொண்ட தரவு தளத்தை உருவாக்க முனைந்தவர்.

 

''ராம்ஜி நகர் கொள்ளையர்கள் பொதுவாக யாரையும் தாக்க மாட்டார்கள். யாரையும் காயப்படுத்திக் கொள்ளையடிக்க மாட்டார்கள். மக்களின் கவனத்தை திசை திருப்பி பொருட்களைக் கொள்ளையடிப்பதுதான் அவர்களின் தனித்திறன்,'' என்கிறார் சாரங்கன்.

 

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் திருடும் விதத்தை மேலும் விவரித்த சாரங்கன் பல சம்பவங்களைச் சுட்டிக்காட்டினார்.

 

எடுத்துக்காட்டாக, சாலையில் பத்து ரூபாய் நோட்டுகளை வீசியிருப்பார்கள், அதனை எடுக்கவரும் நபர் குனியும்போது, அவர்களிடம் உள்ள பணப்பையை எடுத்துவிட்டு ஓடிவிடுவார்கள்.

 

திடீரென இரண்டு நபர்கள் சண்டையிட்டுக் கொண்டு வருவது போல வந்து, நகை அணிந்துள்ள நபர் மீது மோதிவிட, அதே குழுவைச் சேர்ந்த மற்றொரு நபர் நகையைத் திருடிவிட்டு ஓடிவிடுவார்.

கண்ணாடியை உடைக்கும் சத்தம் கூட அதிகமாக கேட்காது. துளையை பெரிதாக்கி உடைப்பார்கள் என்பதால், அருகே அவர்களின் குழுவை சேர்ந்த மற்றவர்கள் அங்கு செல்லும் மக்களின் கவனத்தை ஏதாவது பேசி திசை திருப்புவார்கள். சந்தேகம் ஏற்பாடாத நேரத்தில் பொருட்களை ஒருவர் எடுத்துச்சென்றுவிடுவார், குழுவில் உள்ள மற்றவர்கள் மெதுவாக அங்கிருந்து சென்றுவிடுவார்கள்.

 

கும்பலாக ஒரு கடையில் நுழைந்து, சந்தேகம் கேட்பது போல ஒரு குழு இயங்க, மற்றொரு குழு பொருட்களை லாவகமாக எடுத்துச்சென்றுவிடும்.

ராம்ஜி நகர் திருடர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழுவாக திருட செல்வது ஏன்?

பலமொழிகளை பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பதால், பஞ்சாபி, மராத்தி, போஜ்புரி,இந்தி,குஜராத்தி என பல மொழிகளில் பேசி, அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று அதிக கவனம் இல்லாத வங்கிகளில் கொள்ளையடித்த சம்பவங்கள் உள்ளன. திருட செல்லும்போது ஒரு குழுவாக இருப்பார்கள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். பதின்பருவத்தில் இருந்தே திருட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபடுவதால், பலரும் பிற வேலைகளுக்கு செல்வதற்கு விருப்பம் காட்டுவதில்லை என்று தெரியவருகிறது.

 

ஒரு சில சம்பவங்களில் திருட்டில் யாராவது பிடிபட்டுவிட்டால், அந்த இடத்தில் கைதாகுவதற்காக ஒரு நபரை உடன் அழைத்துவருவது ராம்ஜி நகர் கொள்ளையர்களின் வழக்கம் என்பதால், திருட செல்வதற்கு குழுவாகத்தான் செல்வார்கள் என்கிறார்கள் அதிகாரிகள்.

 

குற்றச் சம்பவங்களைப் பொறுத்தவரை, குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவராகவும் கைதாகும் நபர் வேறு நபராக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள் என்பதால், வழக்கில் ஒரு சில நபர்கள் கைதுசெய்யப்பட்டாலும், திருட்டில் ஈடுபட்ட நபர், சில நாட்கள் கழித்து மீண்டும் திருட்டில் ஈடுபடுவார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் திருட செல்வதால், தங்களுக்கென ஒரு வழக்கறிஞர் குழுவை இவர்கள் தங்கள்வசம் வைத்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். கொள்ளையடித்த பணத்தை தங்களுக்குள் பிரித்துக்கொள்வது, ஒரு பங்கை வழக்கு நடத்துவதற்கு ஒதுக்குவது போன்றவற்றில் கவனமாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

 

ராம்ஜி நகர் பகுதிக்குள் நுழைந்தால், காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த பதிலும் கிடைக்காது என்றும் தேடிச் செல்லும் நபரைக் கைது செய்வது மிகவும் அரிது என்றும் தெரிவிக்கின்றனர்.

 

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் தற்போது கவனிக்கப்படுவது ஏன்?

பல ஆண்டுகளாக வெளிமாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட ராம்ஜி நகர் கொள்ளையர்கள் ,தற்போது சென்னை நகரில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

தி.நகர், பூக்கடை, பாண்டிபஜார், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கார்களில் இருந்த மடிக்கணினி உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களைக் களவாடிய சம்பவங்களை அடுத்து, இவர்களைக் கண்டறியத் தனிப்படை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

''தற்போது ராம்ஜி நகர் கும்பலைச் சேர்ந்த சபரி என்ற நபரை விசாரித்து வருகிறோம். இவர் தி.நகர் கிரி ரோடு பகுதியில் காரில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினியைத் திருடியுள்ளார்.

ராம்ஜி நகர் கொள்ளையர்கள் குறித்து இதுவரை வெளிமாநிலங்களிலிருந்து தகவல் கேட்பார்கள். தற்போது சென்னையில் பல இடங்களில் இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரில் பல இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து துல்லியமாக அடையாளம் காண முடிந்ததால், சரியான நபரைக் கைது செய்வதில் நாங்கள் குறியாக இருக்கிறோம். அவர்கள் குழுவில் இருந்து அனுப்பும் நபரை கைது செய்வதை ஏற்கமுடியாது. திருட்டில் ஈடுபட்ட நபரை புகைப்படத்தை வைத்து கைது செய்துவருவதால், ராம்ஜி நகர் கொள்ளையர்கள் பலர் பிடிபடுவார்கள்,''என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர்.

 

''விசாரணை முடிவில்தான் எத்தனை பொருட்கள் எந்த இடங்களில் களவாடப்பட்டன என்று தெரியவரும். இதுவரை ஆறு மடிக்கணினிகளைக் கைப்பற்றியுள்ளோம்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

 

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, ராம்ஜி நகர் கும்பலைச் சேர்ந்த சபரியை அடையாளம் கண்டதாகவும், சென்னையில் இருந்து வெளியேறி பெங்களூரூவில் தங்கியிருந்த சபரி, டெல்லி செல்வதற்காகத் தயாரான சமயத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ராம்ஜி நகர் திருடர்கள்

பட மூலாதாரம்,CHENNAI POLICE

 
படக்குறிப்பு,

கைது செய்யப்பட்ட சபரி

வெளிமாநிலங்களில் திருடிய சம்பவங்கள்
ராம்ஜி நகர் திருடர்கள்

இதுவரை பிற மாநிலங்களில் பதிவாகியுள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கையில், பொது இடங்களில் மக்களை திசைதிருப்பி அலைப்பேசி, மடிக்கணினி, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் வண்டியை திருடுவது, பணப்பை உள்ளிட்டவற்றைத் திருடியுள்ளது தெரியவருகிறது. இதுவரை இவர்கள் பல ஆயிரம் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தாலும், யாரையும் தாக்கிப் பொருட்களைத் திருடியதில்லை என்றும் கூறப்படுகிறது.

 

2019ல் ஹைதராபாத்தில், ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப வந்த வங்கி அதிகாரியின் கவனத்தைத் திசைதிருப்பி, அவரிடம் மோசமாகப் பேசி வம்புக்கு இழுப்பது போல பாவனை செய்து ரூ.58 லட்சத்தைக் கொள்ளையடித்துள்ளனர் என்று வழக்கு பதிவாகியுள்ளது.

 

இதேபோல, பெங்களூரூவில் பரபரப்பான சாலையில் நிறுத்தியிருந்த காரில் இருந்த ரூ.30,000 கொண்ட பணப்பை, மடிக்கணினி மற்றும் சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திருடியுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. அந்த கார் கண்ணாடியை வெறும் கொண்டை ஊசியைக் கொண்டு உடைத்து யாரும் பார்க்காதவாறு பொருட்களை எடுத்துச்சென்றுள்ளனர்.

 

2021ல் சண்டிகர் மாநிலத்தில் அரங்கேற்றிய திருட்டில், வங்கிக்கு பணம் கொண்டுசெல்லும் வண்டியை மறித்து, ஓட்டுநரிடம் வண்டியில் இருந்து ஆயில் வழிந்து வருவதாகக் கூறியுள்ளனர். ஓட்டுநர் இறங்கியதும், வண்டியில் ரூ.39 லட்சம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டியைத் திருடிச்சென்றனர். இந்த வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் பல வாரங்கள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல வாரங்கள் கழித்துத் திருச்சி வந்த அவர்கள் மொபைல் போனைப் பயன்படுத்திய பின்னர்தான் அவர்களைக் கண்டறிய முடிந்தது என்று தெரியவந்துள்ளது.

சொந்த மாநிலத்தில் கொள்ளையைத் தொடங்கியது ஏன்?

வடமாநிலத்தில் உள்ள பவாரியா கொள்ளையர்களை போல தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்ஜி நகர் கொள்ளையர்கள், பிற மாநிலங்களுக்குச் சென்று கொள்ளையடித்துச் சம்பாதிக்கும் பணத்தைத் தங்களது வேலைக்கு ஏற்ப பங்குபோட்டுக் கொள்வார்கள் என்று ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் அதிகாரி கருணாநிதி கூறுகிறார்.

 

''ராம்ஜி நகர் கொள்ளையர்கள் 1990களில் இருந்து மிகவும் பிரபலமாக இருந்தனர். இவர்கள் திருட்டில் ஈடுபடும்போது யாரையும் காயப்படுத்த மாட்டார்கள். பொருட்களை எடுப்பது மட்டும்தான் இவர்களின் நோக்கமாக இருக்கும். திருட்டில் சிக்கிக் கொண்டால், பொருட்களைத் திருப்பிக் கொடுத்து விடுவதோடு, தங்களது குழுவைச் சேர்ந்த ஒருவரைக் காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள்.பல ஆண்டுகளாக இவர்கள் குறித்த தகவலைக் கேட்டுப் பிற மாநிலக் காவல்துறை அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வருவார்கள். தற்போது இவர்கள் தமிழ்நாட்டில் திருட்டைத் தொடங்கியுள்ளனர் என்பது புலனாகிறது.'' என்கிறார் அவர்.

 

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருந்த பலரும் திருந்தி நல்லமுறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாகவும், ஒரு சிலர் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வருவது வருத்தத்தைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

''ஒரு காலத்தில் ராம்ஜி நகர் பகுதி என்றாலே திருட்டுக் கும்பல் வசிக்கும் இடம் என்று தான் சொல்வார்கள். திருச்சி நகரத்தில் இருந்து வெறும் 10கிலோமீட்டரில் தான் உள்ளது. தற்போது அது நகரத்தில் ஒரு பகுதியாகி விட்டதால், அங்கிருந்த பலர் நல்ல விலைக்கு நிலங்களை விற்றுவிட்டுத் திருந்தி நல்ல முறையில் வாழ்க்கை அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் திருட்டில் ஈடுபட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதைத் தான் சமீபகாலச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன,'' என்கிறார் கருணாநிதி.

நீங்கள் கவனமாக இருப்பது எப்படி?

ராம்ஜி நகர் கொள்ளையர்களை போல கவனத்தை திசை திருப்பும் நபர்களிடம் இருந்து பொது மக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்று கருணாநிதியிடம் கேட்டோம்.

 

திசை திருப்பவதை கொள்ளையர்கள் நோக்கமாக வைத்திருப்பதால், பொது மக்கள் தங்களது பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை தங்களது கடமையாகக் கருதவேண்டும்.

 

பொது இடங்களில் நகை,பணம், மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய பைகளை வெளியில் தெரியும்படி எடுத்து செல்வதைத் தவிர்க்கவேண்டும்.

அதிக மதிப்பிலான பணத்தை வங்கியிலிருந்து எடுக்க செல்லும்போது அல்லது நகைக் கடையில் பையை எடுத்துக்கொண்டு சாலையில் செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும். யாரும் உங்களை நோட்டம் விடுகிறார்களா என்று பார்ப்பது நல்லது. உங்கள் பொருட்களைக் கவனமாக வைத்திருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு கடையில் இருந்து வெளியேறவேண்டும்.

காரில் பொருட்களை வைத்துச்செல்லும்போது, வெளியில் இருந்து பார்த்தவுடன் தெரியும்படி பொருட்களை வைக்கவேண்டாம். முடிந்தவரை உங்களது பொருட்களை வைத்து செல்வதைவிட, அங்கு ஒரு நபரைப் பாதுகாப்பிற்காக விட்டுச்செல்வது நல்லது. அல்லது பாதுகாப்பு நிறைந்த இடத்தில் காரை நிறுத்திச் செல்லலாம்.

சாலையில் பணம் அல்லது மதிப்புள்ள பொருள் எதாவது கிடந்தால் அதனை எடுப்பதைத் தவிர்க்கவேண்டும்.

பொது இடங்களில் சம்பந்தமில்லாத நபர் உங்களிடம் பேச்சுக்கொடுப்பதை ஊக்குவிக்கக்கூடாது.

சாலையில் நடக்கும் தகராறுகளைப் பார்ப்பதில் ஆவலாக நீங்கள் நிற்கும் சமயத்தில் உங்கள் பொருள் களவாடும் வாய்ப்புள்ளது என்பதால், தேவையற்ற தகராறுகளைப் பார்ப்பதில் கவனம் வேண்டாம்.

https://www.bbc.com/tamil/articles/clw1q7rq545o

பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சம் காட்டும் நிதி நிறுவனங்கள்: சட்டம் என்ன சொல்கிறது?

1 week 1 day ago
பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சம் காட்டும் நிதி நிறுவனங்கள்: சட்டம் என்ன சொல்கிறது?
பார்வையற்றவர்கள், நிதி நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,திவ்யா ஜெயராஜ்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு கிரெடிட் கார்டு, செக்புக், மாதத் தவணை மற்றும் கடன் வழங்குவதல் போன்ற அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு நிதி நிறுவனங்கள் மறுத்து வருவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுதிறனாளி சக்திவேல் என்பவர், ”வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் ஒன்று மாதத் தவணையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பொருட்கள் வழங்குவதில்லை என்று தெரிவித்ததாக” குற்றம்சாட்டியுள்ளார்.

புதுகோட்டை மாவட்டம், பெருங்கலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் சக்திவேல். இவரும், இவரது மனைவியும் பார்வை மாற்றுத்திறனாளிகள். சமீபத்தில் புதுகோட்டையில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் நிறுவனம் ஒன்றிற்கு சென்ற தம்பதியினர், தங்களது வீட்டிற்கு மாதத் தவணை முறையில் ஏ.சி வாங்குவது குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவது இல்லை என்றும், அதனால் தங்களது நிறுவனம் சார்பில் சக்திவேலுக்கு தவணை முறையில் ஏ.சி., வழங்க முடியாது என்றும் அந்நிறுவனத்தைச் சார்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டிருந்த சக்திவேல்,

 

“ஒரு நிறுவனம் பார்வையற்றோருக்குரிய வசதிகளை கட்டாயம் செய்திருக்க வேண்டும். சாதாரண வாடிக்கையாளர்களுக்கு தரும் அனைத்து வசதிகளையும் பார்வையற்றோருக்கும் தர வேண்டும். நல்ல நிறுவனம் பார்வையற்றோருக்கு இது போன்ற வசதிகளை செய்து தர முடியாது என ஒருபோதும் வெளிப்படையாய் சொல்லக்கூடாது. அதற்கான சாத்திய கூறுகளையே ஆராய வேண்டும். ஒரு சாதாரண நபருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தரப்பட வேண்டுமென மாற்றுத் திறனாளிகளுக்கான 2016 சட்டம் சொல்கிறது.

கார் வாங்க போனால் உங்கள் பெயரில் தர முடியாது, லோன் வாங்கப் போனால் உங்கள் பெயரில் தர முடியாது, கிரெடிட் கார்டு வாங்கப் போனால் உங்கள் பெயரில் தர முடியாது.. இவையணைத்தும் பொருளீட்டும் பார்வையற்றவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள். பொருளீட்டுவதோ பார்வையற்றவர்கள், பொருட்கள் மட்டும் அவர்கள் பெயரில் வாங்க முடியாது என்பதெல்லாம் மிகக் கொடிய பொருளாதார ஒடுக்குமுறை” என்று குறிப்பிட்டிருந்தார்.

மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள் :
பார்வையற்றவர்கள், நிதி நிறுவனம்
 
படக்குறிப்பு,

சக்திவேல்

“இது எனக்கு மட்டுமல்ல, என்னை போன்ற எத்தனையோ பார்வை மாற்றுத்திறனாளிகள் இத்தகைய பிரச்னைகளை தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். எனவே இதுகுறித்த குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைத்து குரல் கொடுக்க வேண்டியது எங்களது கடமை” என்று பிபிசி தமிழிடம் கூறுகிறார் சக்திவேல்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “கோடை காலம் வந்துவிட்டதால், வெப்பத்தை சமாளிக்க, மாதத் தவணையில் ஏ.சி வாங்கலாம் என முடிவு செய்து கடைக்கு சென்றோம். ஆனால் என்னைப் பார்த்துவிட்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி நிறுவனங்கள் மாதத் தவணை வழங்குவது இல்லை., வேறு யாராவது நண்பர்கள் இருந்தால், அவர்கள் பெயரில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

நான் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறேன், அதனால் எனது பெயரிலேயே கொடுங்கள் என அவர்களிடம் முறையிட்டேன். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை. ஏற்கனவே பொருட்கள் வாங்க வந்த எங்களை போன்ற மற்ற பார்வை மாற்றுதிறனாளிகளிடமும் இதே காரணத்தை கூறி அனுப்பி வைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து நான் முகநூலில் பதிவிட்டப் பிறகு, நேரடியாக எனது வீட்டிற்கே வந்த அந்த தனியார் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் விரைவில் நிலைமை சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். மாதத் தவணைக்காக நிதி நிறுவனத்திடம் பேசி எழுத்துப்பூர்வ ஆதாரத்தையும் பெற்று தருவதாக கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

பார்வையற்றவர்கள், நிதி நிறுவனம்
 
படக்குறிப்பு,

சக்திவேல் மற்றும் அவரது மனைவி

அவர்கள் கூறியப்படியே தனக்கான தேவையை செய்து தருகிறார்களா என்பதை பார்த்துவிட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கூறுகிறார் சக்திவேல்.

“தகுதியும், திறனும் இருந்தாலும், பார்வை மாற்றுத்திறனாளிகளாக இருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக எங்களுக்கு அடிப்படை உரிமைகளும், சலுகைகளும் மறுக்கப்படுகின்றன.

நுகர்வோர் யாராக இருந்தாலும், வாங்கும் திறனும் செலுத்தும் திறனும் இருந்தால் அவர்களுக்கு தேவையானதை நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், பார்வை மாற்றுத்திறனாளிகள் என்ற காரணத்தை கூறி நீங்கள் மறுக்க முடியாது” என்று கூறுகிறார் சக்திவேல்.

மாற்றுத்திறனாளிகள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறை
பார்வையற்றவர்கள், நிதி நிறுவனம்
 
படக்குறிப்பு,

முத்துச்செல்வி, அகில இந்திய பார்வையற்றவர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர்

”எந்தவொரு நிதி தொடர்பான ஒப்பந்தத்திற்கும், பார்வை மாற்றுத்திறனாளிகள் தகுதியானவர்கள்தான் எனச் சட்டம் சொல்கிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டமும் (2016), ஆர்.பி.ஐ வங்கியின் விதிகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆனாலும் இதுபோன்ற சூழல்களில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுவது, இந்த சமூகத்தின் பிற்போக்கு மனநிலையைதான் பிரதிபலிக்கிறது” என்கிறார் வழக்கறிஞரும், அகில இந்திய பார்வையற்றவர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவருமான முத்துச்செல்வி.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், “ பார்வையற்றவர்கள் என்பதால் எங்களால் ஒவ்வொரு முறையும் ஒரேமாதிரியான கையெழுத்தை போட முடியாது. அதில் சில வேறுபாடுகள் வரலாம். அதன் காரணமாகத்தான் நாங்கள் கைரேகை வைக்கும் முறையை பயன்படுத்துகிறோம். ஆனால் இதை இழிவாக கருதுபவர்கள், எங்களை படிப்பறிவு இல்லாதவர்கள் என நினைக்கின்றனர். இதன் காரணமாக வங்கியில் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற அடிப்படையான வங்கி வசதிகளை வழங்குவதற்கு கூட எங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. வங்கிகளிலேயே இந்த நிலைமை என்றால் தனியார் நிதி நிறுவனங்கள் எங்களை எப்படி நடத்துவார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். இது எங்கள் மீது நிகழ்த்தப்படும் அப்பட்டமான ஒடுக்குமுறையாகும்.

இதுபோன்ற சிக்கல்களை சரி செய்வதற்கு, எங்களின் உரிமைகளை வலியுறுத்தி அனைத்து வங்கிகளுக்கும், தனியார் நிதி நிறுவனங்களுக்கும் ஆர்பிஐ தொடர்ந்து சுற்றறிக்கை அனுப்புகிறது. வங்கியில் கடன் பெறுதல் உட்பட அனைத்து விதமான நிதி தொடர்பான ஒப்பந்தத்திற்கும், மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி நாங்கள் தகுதியானவர்கள் என்பதை மேற்கோள் காட்டுகிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் குறித்து சரியான புரிதல் இல்லாத சில தனிநபர்களால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று அவர் கூறுகிறார்.

நிதி நிறுவனங்களின் நிலை என்ன?
பார்வையற்றவர்கள், நிதி நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

”எந்தவொரு தனியார் நிறுவனங்களும் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டவைதான். ஆனால் தங்களுடைய நிறுவன நலன் சார்ந்து சில முடிவுகளை எடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

அப்படிதான் தனி நபர்களுடன் நிதி ஒப்பந்தம் செய்வது போன்ற விஷயங்களில் அந்தந்த நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு கருதி சில வழிகளை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன” என்று கூறுகிறார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர் ஒருவர்.

தன்னுடைய அடையாளத்தை வெளிபடுத்த விரும்பாத அவர் பிபிசியிடம் பேசுகையில், “ தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வழங்குதல், மாதத் தவணை வழங்குதல் போன்ற விஷயங்களுக்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த மேலாளர்கள்தான் பொறுப்பாகிறார்கள்.

எனவே ஒருவருக்கு கடனோ, மாதத் தவணையோ அளிக்கும்போது, அவர் திரும்ப செலுத்தமுடியாத சூழல் ஏற்படும்பட்சத்தில் அந்த தொகைக்கு அந்த குறிப்பிட்ட பகுதி மேலாளர்தான் மேலிடங்களில் பதிலளிக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்திற்கு பயந்து, இதுபோன்ற நிதி ஒப்பந்தங்களுக்கு அவர்களாகவே சில வரைமுறைகளை வகுத்துக் கொள்கிறார்கள்.

அப்படிதான் மாற்று திறனாளிகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், அவர்களுடன் நிதி ஒப்பந்தத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். இது முற்றிலும் அந்த தனிநபர் எடுக்கும் முடிவை சார்ந்தது.அவர்கள் செய்வது நியாயப்படுத்தக் கூடிய விஷயமல்ல. ஆனால் அவர்களது வேலையில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மையே, அவர்களை இத்தகைய நிலைக்கு தள்ளுகிறது” என்று கூறுகிறார்.

சட்டம் என்ன சொல்கிறது ?

பார்வையற்றவர்களுக்கு இதுபோன்ற உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் கையாள வேண்டிய சட்ட வழிமுறைகள் குறித்து பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார் முத்துச்செல்வி.

அடிப்படையாக பார்த்தால் மனித உரிமை பாதுகாப்புச் சட்டங்கள், நுகர்வோர் சட்டங்கள் என அனைத்து விதமான பொதுச் சட்டங்களும், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதுதான். ஆனால் அதில் சரியான தீர்வுகள் எட்டப்படாத நிலையில்தான் நாம் மாற்றுத்திறனாளிகளுக்காக இருக்கும் தனி சட்டங்களின் அடிப்படையிலும், ஆர்பிஐ விதிகளை மேற்கோள் காட்டியும் பிரச்னைகளை கையாள்கிற சூழல் ஏற்படுகிறது.

  • மனநிலை பாதிக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் இருப்பவர்கள் (Insane), 18வயதிற்கு கீழே இருப்பவர்கள்(Minor), ஏற்கனவே கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்கள் (Insolvent) ஆகிய இந்த மூன்று தரப்பினருக்குத்தான் சட்டத்தின்படி கடன் வழங்க கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. எனவே இதுதவிர மாற்றுத்திறனாளிகள் உட்பட மற்ற அனைத்து தரப்பு மக்களும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களுக்கு தகுதியானவர்களே.
  • மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகளில், முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதற்கான விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்படும்.
  • குறிப்பிட்ட நிறுவனம், அதற்கு சரியான பதிலளிக்காதபோது சட்டப்படி வக்கீல் நோட்டிஸ் அனுப்ப முடியும்.
  • தில்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தின் தலைமை ஆணையரிடமும், இதுகுறித்து நாம் புகார் அளிக்கலாம்.
  • மாநில அளவிலும் இதுபோன்ற மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் உள்ளது. இதுபோன்ற ஆணையரகத்திற்கு சிவில் நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரங்கள் இருக்கின்றன. அவர்களால் இதனை தனி வழக்காகவே எடுத்து நடத்த முடியும்.
  • இதில் சரியான தீர்வுகள் கிடைக்கப்படவில்லை என்றால், உயர்நீதிமன்றத்திலும், நுகர்வோர் நீதிமனறத்திலும் சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

”ஆனால் உண்மை என்னவென்றால், இத்தகைய உரிமைகள் மறுக்கப்படும்போது அனைத்து மாற்றுத்திறனாளிகளாலும் எதிர்த்து குரல் கொடுக்க முடியாது, சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது. அவர்கள் சோர்வடைந்து விடுகின்றனர். எனவே அரசுதான் இதில் உள்ள சிக்கல்களை கலைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இன்று அரசு சார்ந்த பல பொதுத்துறை வங்கிகளிலேயே இதுபோன்ற பாரபட்சங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பார்வையற்றவர்கள் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் முத்துச்செல்வி.

https://www.bbc.com/tamil/articles/cerzddyvlemo

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

1 week 1 day ago
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Published By: RAJEEBAN

23 MAR, 2023 | 03:36 PM
image

பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (23-3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் (IND-TN-08-MM-1802 மற்றும் IND-TN-08-MM-65) கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 28 மீனவர்களும், 4 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் நமது மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள முதல்வர், நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பல கண்டனக் கடிதங்களை அனுப்பியும் இதுபோன்ற சம்பங்கள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தடுத்து நிறுத்திட இந்திய அரசு தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையிலும், இந்திய மீனவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் அடிக்கடி நடைபெற்று வருவதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள முதல்வர், இது தொடர்பாக உறுதியான மற்றும் காலவரையறைக்குட்பட்ட ஒரு திட்டத்தினை உடனடியாக வகுத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மீன்பிடித் தொழிலை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களும், அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், மீனவ சமூகத்தினரிடையே

கடும் மனவேதனையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதல்வர், தற்போதைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 104 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையால் விடுவிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளும் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், 16 இந்திய மீனவர்கள் ஏற்கெனவே இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், பிரதமர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/151260

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: முதலமைச்சர் பேசியது என்ன?

1 week 2 days ago
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: முதலமைச்சர் பேசியது என்ன?
Stalin
2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்யும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துவரும் நிலையில், இந்த விளையாட்டைத் தடைசெய்ய வேண்டுமென பரவலான கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து இந்த விளையாட்டைத் தடைசெய்யும் சட்டம் அ.தி.மு.க. ஆட்சியிலேயே நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இது தொடர்பாக அவசரச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு இது தொடர்பாக சட்டம் இயற்றி அனுப்பப்பட்டது. இந்தச் சட்டம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பல்வேறு விளக்கங்களைக் கோரி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, இதே சட்டத்தை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்ப மாநில அரசு முடிவுசெய்ததது. அதன்படி இன்று இந்தச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல்செய்யப்பட்டது.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மிகுந்த வேதனையோடு பேசுவதாகக் குறிப்பிட்டார். "மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் உரையை தொடங்குகிறேன்.

 

சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 17 இலட்சம் ரூபாய் வரை இழந்து, அந்தக் கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்துக்கு முன்னால் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு, இறந்து போயிருக்கிறார். ''தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்; என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டுச் செல்லக் கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ''எனது தற்கொலையே கடைசி தற்கொலையாக இருக்கட்டும்" என்று எழுதி வைத்துவிட்டு, சென்னையைச் சேர்ந்த வினோத்குமார் தற்கொலை செய்துள்ளார்.

இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டத்தைக் கையில் வைத்திருக்கக்கூடிய இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்துதான், இணையவழி சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்தோம். அரசின் சார்பில் அமைக்கப்பட்ட இக்குழு 27-6-2022 அன்று தனது அறிக்கையினை என்னிடம் வழங்கியது.

இணையதள விளையாட்டைத் தடுப்பது தொடர்பாக அரசால் இயற்றப்பட்ட, உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையவழி விளையாட்டுத் தொழில் நிறுவனர்கள் ஆகியோரிடம் 7-8-2022 அன்று கருத்துகள் கேட்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து 10,735 மின்னஞ்சல்கள் பெறப்பட்டன. அதில், 10,708 மின்னஞ்சல்களில், இணையதள சூதாட்டத்தையும், இணையதள ரம்மி விளையாட்டையும் தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 மின்னஞ்சல்களில் மட்டுமே தடை செய்வதற்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக் கல்வித் துறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலும், இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26.9. 2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்டம், 2022, ஆளுநரால் அக்டோபர் 1, 2022 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மேற்கண்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 என்று பெயர். இந்தச் சட்டமானது கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி சட்டத் துறையால் அனுப்பப்பட்டது. இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காத ஆளுநர், நவம்பர் 23ஆம் தேதி சில விளக்கங்களைக் கேட்டிருந்தார். இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சித்தரிப்புப் படம்

ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள் கழித்து, சில குறிப்புகளுடன் இந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவானது சட்டமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.

இந்தச் சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அரசியல் காரணங்களில், கொள்கைகளில் நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம், அப்படி எழுவது இயற்கையானதுதான். ஆனால், மனித உயிர்களைப் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. 'எனது மரணம் கடைசியாக இருக்கட்டும்' என்ற சோகக் குரலும், 'என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக் கூடாது' என்ற அழுகுரலும் இனியொரு முறை இந்த மாநிலத்திலும் எழக்கூடாது. எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன் அடையாளமாக ஆகிவிடும்

மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் – மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் இது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதென்று மிகத் தெளிவாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அப்பாவு

இதற்குப் பிறகு ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒரு உறுப்பினர் பேச அனுமதிக்கப்பட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியிலிருந்து அக்கட்சியின் தலைவர் வேல் முருகன், அதற்குப் பிறகு ஈஸ்வரன், அதற்குப் பின் ஜவாஹிருல்லா, ஆளூர் ஷா நவாஸ், நயினார் நாகேந்திரன், கு. செல்வப்பெருந்தகை, அ.தி.மு.கவின் சார்பில் தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசினர். இதற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் பேசவும் சட்டமன்றத் தலைவர் அப்பாவு வாய்ப்பளித்தார்.

இந்தப் பேச்சுகளில் ஆளுநரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவேண்டாம் என சபாநாயகர் கேட்டுக்கொண்டார். வேல்முருகன் பேசியதில் சில வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. வேல்முருகன் பேசிய சில கருத்துகளுக்கு பா.ஜ.கவின் நயினார் நாகேந்திரன் எதிர்ப்புத் தெரிவித்தார். மீண்டும் ஒரு குழு அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி சட்டத்தை இயற்ற வேண்டும் என அவர் கூறினார்.

அ.தி.மு.கவின் சார்பில் ஏற்கனவே தளவாய் சுந்தரம் பேசிய பிறகு, ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், இது மிக முக்கியமான சட்டம் என்பதால், முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ. பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததாக அப்பாவு விளக்கமளித்தார்.

இதற்குப் பிறகு ஒரு மனதாக இந்தச் சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cv2qp3d7lqpo

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 9 பேர் பலி - 13 பேருக்கு சிகிச்சை

1 week 2 days ago
காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ, 9 பேர் பலி - 13 பேருக்கு சிகிச்சை
காஞ்சிபுரம் தீ விபத்து
5 மணி நேரங்களுக்கு முன்னர்

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் ஏற்கெனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த மருத்துவமனையில் கஜேந்திரன் (50) 90 சதவீதமும், சசிகலா (45) 100 சதவீதமும், ஜெகதீசன் (35) 95சதவீதமும், ரவி (40) 90 சதவீதமும், உண்ணாமலை (48) 40 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உண்ணாமலை என்ற பெண் தவிர 3 ஆண்களும் 1 பெண்ணும் அபாய கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வெடி விபத்தில் தற்போது சசிகலா (வயது 45 ) என்ற பெண்மணி இறந்துவிட்டார். இவருடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் இறந்து விட்டனர்.

என்ன நடந்தது?

 

தீ விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தில் சிறிய ரக பட்டாசுகள் மற்றும் வாண வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நண்பகல் 12 மணியளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டு இருந்த, பட்டாசின் மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.

இந்த தீ வேகமாக பரவி பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் பகுதிக்கும் பரவியது. அந்த நேரத்தில் குடோன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துள்ளனர். பலத்த வெடிசத்தத்துடன் சிறிய நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்தனர்.

தீ மளமளவென பரவியதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

 

இதையடுத்து தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காஞ்சிபுரம் தீ விபத்து

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

 

காஞ்சிபுரம் தீ விபத்து

நடந்த சம்பவத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் தீ விபத்து

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்த்தி, டிஐஜி பகலவன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். மேல் சிகிச்சைக்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்புமணி கோரிக்கை

இதற்கிடையே, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்பகுதிகளில் செயல்பட்டு வரும் வெடி ஆலைகளை கண்காணிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் தனி விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய வெடி ஆலைகளுக்கு பொறுப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஏதேனும் விபத்துகள் நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை அரசு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c04v8n70vjko

Checked
Sat, 04/01/2023 - 13:45
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed