தமிழகச் செய்திகள்

'ஓர் அடி விலகியிருந்தால் மரணம்': ஊசிமலையில் ஆழமான பாறையில் விழுந்த நபர் - ராணுவம் வந்து மீட்டது எப்படி?

5 hours 12 minutes ago

'ஓர் அடி விலகியிருந்தால் மரணம்': ஊசிமலையில் ஆழமான பாறையில் விழுந்த நபர் - ராணுவம் வந்து மீட்டது எப்படி?

நீலகிரி: மீண்டும் ஒரு 'மஞ்சுமல் பாய்ஸ்' சம்பவம்: மலையில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர்!

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வக்குமார்

  • பிபிசி தமிழ்

  • 20 மார்ச் 2026, 12:23 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை காட்சி முனையில், இரும்பு வேலி தடுப்புகளைத் தாண்டி பாறை பகுதிக்குச் சென்ற இளைஞர் 150 அடி ஆழத்திலுள்ள பாறையில் தவறி விழுந்தார்.

உயிருடன் இருந்த அவரை தீயணைப்பு துறையினர் முயன்றும் மீட்க இயலாத நிலையில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ராணுவ வீரர்கள் விடிய விடிய முயற்சி செய்து அதிகாலை 3:30 மணியளவில் உயிருடன் மீட்டனர்.

தவறி விழுந்த இளைஞரே அங்கிருந்து போனில் பேசி, லொகேஷன் அனுப்பிய பின்பே அவர் அங்கே விழுந்து கிடந்த தகவல் வெளியில் தெரியவந்ததாக கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார் தெரிவித்தார்.

இந்த மீட்புப் பணி இரவு முழுவதும் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது.

மீட்புப் பணியின்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்துள்ளனர்.

மீட்கப்பட்ட இளைஞரின் உயிருக்கு ஆபத்தில்லையெனினும், முதுகெலும்பு மற்றும் இடுப்பு எலும்புகள் உடைந்து இருப்பதால் அவர் நடப்பதற்கு பல மாதங்களாகும் என்றும், அவருக்கு தற்போது உளவியல் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் உதகை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தனியாக வந்து தவறி விழுந்த இளைஞர்!

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் வழியாக கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஊசிமலை காட்சி முனை உள்ளது.

இப்பகுதி, கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட காப்புக்காடு பகுதியாகவும் இருக்கிறது.

சூழல் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஊசிமலை காட்சி முனை சூழல் சுற்றுலா மையத்தை வனத்துறை நிர்வகித்து வருகிறது.

இந்த பகுதியில் சாலையின் இரு புறமும் யூகலிப்டஸ் மரங்கள் அமைந்துள்ளது.

அதனால் அந்த இடத்தில் நின்று சுற்றுலாப் பயணிகள் படமெடுப்பது வழக்கம். அங்கே நிறைய படப்பிடிப்புகளும் நடந்துள்ளன.

இதில் ஒரு புறத்தில் மரங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள மலையுச்சியிலிருந்து கீழே பார்க்கும்போது, அதற்கும் கீழே உள்ள தவளை மலை, முதுமலை மற்றும் கூடலூர் வனப்பகுதிகளை நன்கு ரசிக்கலாம்.

இதற்காக ஒரு காட்சி முனையும், படிக்கட்டுகள், இரும்புத் தடுப்புகள், கழிப்பறை வசதிகள் என சில கட்டமைப்பு வசதிகளையும் தமிழக வனத்துறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அங்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வருவதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

ஊசிமலை காட்சி முனைக்கு கடந்த 19-ஆம் தேதியன்று, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.

சிவகுருநாதன் (வயது 28) என்ற இளைஞரும் அன்று மாலை ஊசி மலை காட்சி முனைக்கு வந்துள்ளார்.

தனியாக வந்திருந்த அவர், காட்சி முனைக்கு அருகிலிருந்த இரும்பு வேலி தடுப்பையும் தாண்டி கீழே பாறையில் நடந்துசென்றுள்ளார்.

அப்போது பாறையிலிருந்து வழுக்கி, 150 அடி ஆழமுள்ள பாறையில் விழுந்துள்ளார். நல்வாய்ப்பாக தலையில் எதுவும் அடிபடாமல் உயிர் தப்பியுள்ளார்.

ஆனால் எழமுடியாமல் பலத்த காயமடைந்திருந்த அவர், தனது போனில் தகவல் தெரிவித்த பின்புதான் அவர் விழுந்தது வெளியே தெரியவந்ததாக கூடலூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீலகிரி: மீண்டும் ஒரு 'மஞ்சுமல் பாய்ஸ்' சம்பவம்: மலையில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர்!

பிபிசி தமிழிடம் காவல்துறையினர் பகிர்ந்த தகவலின்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த சிவகுருநாதன், தற்போது கோவையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

திருமணமாகாத அவர், காந்திபுரம் பகுதியில் ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். 3 நாட்களுக்கு முன்பு, உதகைக்கு தனியாக வந்து ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர், மார்ச் 19 அன்று கால் டாக்சி புக் செய்து, ஊசிமலைக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து பெங்களூரு சென்று, அதன்பின் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர்.

பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய கூடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார், ''பாறையைத் தாண்டி அவர் செல்ஃபி எடுக்கப் போனதாகத் தெரிகிறது. அப்போது வழுக்கி 150 அடி ஆழமுள்ள பாறையின் மீது விழுந்திருக்கிறார். அப்போது மாலை 3:30 மணி இருக்கலாம். தலையில் அடிபடாததால் உயிர் தப்பிய அவர் நினைவிழக்காமலும் இருந்துள்ளார். ஆனால் பலத்த காயமடைந்துள்ளார். நல்வாய்ப்பாக அவர் விழுந்த இடத்தில் அவருக்கு போன் சிக்னல் இருந்துள்ளது. அவர், தான் வந்த வாகன ஓட்டுநர் மற்றும் தங்கியிருந்த இடத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவர் விழுந்து கிடந்த லொகேஷனையும் அனுப்பியுள்ளார்.'' என்றார்.

''ரிசார்ட்டில் இருந்த ஒருவர், தனக்குத் தெரிந்த ஒரு வனக்காவலருக்குத் தெரிவித்து, அவர் மூலமாக முதலில் வனத்துறையினருக்கு தகவல் தெரிந்துள்ளது. எங்களுக்கு 5:30 மணிக்குத் தகவல் வந்தது. நாங்களும் தீயணைப்புத் துறையினரும் சென்றோம். அப்போது வெயில் இருந்தது. நாங்கள் தேடிப்பார்த்தபோது அவர் விழுந்த பாறை தெரியவில்லை. அதன்பின்பே யானையைக் கண்காணிக்கப் பயன்படுத்தும் டிரோன் மூலமாக வனத்துறையினர் அவர் விழுந்து கிடந்த இடத்தைக் கண்டுபிடித்தனர்.'' என்றார்.

நீலகிரி: மீண்டும் ஒரு 'மஞ்சுமல் பாய்ஸ்' சம்பவம்: மலையில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர்!

படக்குறிப்பு,மீட்புக் குழுவினர்

வெலிங்டன் ராணுவ மையத்தின் உதவியை நாடிய நீலகிரி ஆட்சியர்

டிரோன் மூலமாக அவர் இருந்த இடம் தெரிந்தபோது, 6:45 மணியாகிவிட்டது என்றார் கூடலூர் தீயணைப்பு அலுவலர் சங்கர்.

தீயணைப்புத்துறைக்கு மாலை 5:15 மணிக்குத் தகவல் தெரிந்து, 5:35 மணிக்குச் சென்று விட்டாலும் அவர் இருந்த இடத்தைக் கண்டறியவே முடியவில்லை என்பதை அவரும் விளக்கினார்.

டிரோன் மூலமாக அவர் இருந்த இடம் தெரிந்த அடுத்த கால் மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணிக்கு அவர் இருக்குமிடத்தில் தீயணைப்புத் துறையினர் இறங்கிவிட்டதாகவும் தீயணைப்பு அலுவலர் சங்கர் விளக்கினார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''நாங்கள் அங்கே போனபோது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரால் அசையக்கூட முடியவில்லை. உடலில் பல எலும்புகள் உடைந்திருந்ததால் கடுமையான வலியில் இருந்தார். ஆனால் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்து எப்படி மேலே கொண்டு வருவது என்று ஆலோசிப்பதற்குள் நன்கு இருட்டிவிட்டது. அங்கிருந்து மேலே வருவதற்கு பாதை எதுவுமே இல்லை. அந்த இளைஞரின் எலும்புகள் உடைந்து, அவரால் எழவும் முடியாத நிலையில், 80 கிலோவுக்கும் மேலாகவுள்ள அவரை கயிறு கட்டி தூக்குவது பெரும் ரிஸ்க் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.'' என்றார்.

தீயணைப்புத்துறையில் இருக்கும் உபகரணங்களைக் கொண்டு, அவரை மேலே கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருப்பது பற்றி நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாவுக்கு காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விளக்கியுள்ளனர்.

அதன்பின் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ( எம்ஆர்சி ) அதிகாரிகளிடம் இதுபற்றி பேசி உதவி கோரியிருக்கிறார்.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் இதற்காக எம்ஆர்சி அதிகாரிகளிடம் பேசியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தகவல் தெரிந்து, முறையான அனுமதி பெற்று, எம்ஆர்சி ராணுவ வீரர்கள் 20 பேர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவும் வந்தபோது நள்ளிரவு 12 மணியாகியிருக்கிறது.

அதே நேரத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் வந்து விட்டதாகத் தெரிவித்தார் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார்.

இரவில் 8 மணி நேரம் நீடித்த மீட்புப்பணி முழுக்கவும் ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்ததாகக் கூறிய அவர், அதிகாலை 3:30 மணியளவில் அவரை ராணுவத்தினர் மீட்டு மேலே கொண்டுவந்ததாகத் தெரிவித்தார்.

நீலகிரி: மீண்டும் ஒரு 'மஞ்சுமல் பாய்ஸ்' சம்பவம்: மலையில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர்!

படக்குறிப்பு,மீட்புப்பணியின்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி

''ராணுவ வீரர்களுடன் எம்ஆர்சி சிறப்பு மருத்துவக்குழுவினரும் மருத்துவர் கவிதா தலைமையில் வந்தனர். இளைஞர் விழுந்திருந்த இடத்திற்கே சென்று அதே இடத்தில் வைத்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றி, வலி நிவாரணி ஊசி உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சைகளை அளித்தனர். ரத்தக்கசிவையும் நிறுத்தினர். அந்த இடத்தின் ஆழம், சுற்றுப்புறச்சூழல் எல்லாவற்றையும் ஆராய்ந்த ராணுவத்தினர், அவரை எப்படிக் கொண்டு வருவது என்று ஆலோசித்து, கனமான இரும்புக் கம்பிகளால் மேலேயிருந்து அந்த இடம் வரை கன்வேயர் பெல்ட் போன்று வலுவான பாலம் அமைத்தனர். பின்பு ஸ்ரெச்சரில் அவரை இறுக்கமாகக் கட்டி மேலே கொண்டுவந்தனர்.'' என்று அந்த இளைஞரை மீட்ட விதத்தை விளக்கினார் தீயணைப்பு அலுவலர் சங்கர்.

விழுந்ததிலிருந்து 13 மணி நேரத்துக்குள் அந்த இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

அதன்பின் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அவருக்கு உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை என்றும், தலையில் அடிபடாததால் அந்த இளைஞர் உயிர் தப்பியிருப்பதாக உதகை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர் தெரிவித்தார்.

சிவகுருநாதனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மருத்துவர் ரவிசங்கர், ''உயிருக்கு ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டிவிட்டார். 150 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் அவருடைய முதுகெலும்பு, இடுப்பு எலும்பு மற்றும் நெஞ்சுக்கூட்டு எலும்புகள் உடைந்துள்ளன. கால் எலும்புகள், கை எலும்புகள் சேரும் இடமும் உடைந்திருப்பதால் அதற்கு முதலில் சிகிச்சை கொடுத்து வருகிறோம். எல்லாவற்றையும் ஆராய்ந்த பின்பே அவருக்கு எங்கெங்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்பதை திட்டமிடமுடியும்.'' என்றார்.

''இப்போது அவர் நன்றாகவுள்ளார். நன்கு பேசுகிறார். ஆனால் தான் யார் என்பதே தெரியவில்லை என்கிறார். அவருக்கு முதலில் உளவியல் ரீதியான சிகிச்சைதான் அவசியமாகவுள்ளதால் தற்போது உளவியல் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இடுப்பு, முதுகெலும்பு உட்பட பல எலும்புகள் உடைந்திருப்பதால் அவர் நடப்பதற்கு இன்னும் பல மாதங்களாகும்.'' என்றார் மருத்துவர் ரவிசங்கர்.

இளைஞர் சிவகுருநாதனின் தாய், தந்தை ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்த துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார், இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.

இந்த ஊசிமலை காட்சி முனையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்றும், இரும்பு வேலி தடுப்பைத் தாண்டிச் சென்ற கேரள இளைஞர்கள் 3 பேர்களில் ஒருவர் தேனீக்கள் கொட்டி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி: மீண்டும் ஒரு 'மஞ்சுமல் பாய்ஸ்' சம்பவம்: மலையில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்ட இளைஞர்!

தேனீக்கள் கொட்டி உயிரிழந்த கேரள இளைஞர்

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆசிப், ஜாபீர், சினான் ஆகிய 3 நண்பர்கள், கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதியன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

ஊசிமலை காட்சி முனையில் இரும்புத் தடுப்பைத் தாண்டிச் சென்றுள்ளனர். தூரமாக பாறையில் இருந்த தேன் கூட்டின் மீது கல் எறிந்துள்ளனர்.

தேனீக்கள் கொட்டியதில் ஜாபீர் (வயது 23) அதே இடத்தில் உயிரிழந்தார்.

அந்த சம்பவம் பற்றி விளக்கிய தீயணைப்பு அலுவலர் சங்கர், ''தேனீக்கள் அவர்களைச் சூழ்ந்து தாக்குவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்து நாங்கள் விரைந்து சென்றோம், கவச உடையணிந்து அங்கே நாங்கள் சென்றபோது அந்த இளைஞர் மரணமடைந்திருந்தார். ஒருவரைக் காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பினோம். இறந்த இளைஞரின் உடலில் ஒட்டியிருந்த ஆயிரக்கணக்கான தேனீக்களை அகற்றுவதே சிரமமாயிருந்தது. பாதை இருந்ததால் அவரை மேலே கொண்டுவந்துவிட்டோம். இந்த இளைஞர் சிவகுருநாதன் விழுந்த இடத்திலிருந்து பாதையே இல்லை. அவர் விழுந்த பாறையிலிருந்து ஓரடி விலகி விழுந்திருந்தாலும் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.'' என்றார்.

சூழல் சுற்றுலா என்ற பெயரில் ஊசிமலை காட்சி முனைக்குச் செல்ல தமிழக வனத்துறையினர் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், அங்கே சுற்றுலாப் பயணிகள் அத்துமீறிச் செல்லாமல் தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தாமலும் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த இளைஞர் விழுந்து மீட்கப்பட்டது குறித்து, 'ஊட்டியில் மீண்டும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ்' என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். வனத்துறையையும் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதுபற்றி கருத்து கேட்பதற்காக கூடலூர் மாவட்ட வனஅலுவலர் தேவராஜை பலமுறை தொடர்பு கொண்ட போதும், தொடர்ந்து மீட்டிங்கில் இருப்பதாக பதிலளித்தார்.

கேள்விகளை அனுப்புமாறு கூறிய அவர், அதற்குரிய பதில்களை அனுப்பவில்லை. ஆனால் அந்த இளைஞர் இருந்த இடத்தைக் கண்டறிய டிரோன் அனுப்பியதாகவும், இரவில் புலி, சிறுத்தை உள்ளிட்ட காட்டுயிர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு, அவரைச் சுற்றிலும் தீ மூட்டி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாங்கள் செய்ததாகவும் கீழ்நிலையிலுள்ள வனத்துறையினர் தகவல் பகிர்ந்தனர்.

நீலகிரி மண்டல வனப்பாதுகாவலரும், முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான கிருபா சங்கரிடம் இதுபற்றி கேட்டபோது, ''அங்கு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நிறைய எச்சரிக்கை, விழிப்புணர்வு பலகைகள் வைத்துள்ளோம். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் வனத்துறையினர் கண்களுக்கும் படாமல் சிலர் இப்படி இரும்பு வேலிகளைத் தாண்டிச் செல்கின்றனர். அதனால் காட்சி முனையைத் தாண்டி யாரும் கீழே செல்லாத வகையில் மேலும் இரும்புத் தடுப்புகளை பலமாக அமைப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். விரைவில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm2r38y3w9xo

சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன?

9 hours 35 minutes ago

சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன?

சீர்திருத்த திருமணம், சென்னை, பதிவு, சட்டம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • ப.சிவசங்கர்

  • பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னையில் சீர்திருத்த திருமணம் ஒன்றை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"இந்த மாதிரி திருமணம் செய்வதை என்னால் ஊக்குவிக்க முடியாது, இதை நான் பதிவு செய்யமாட்டேன்," என திருமணத்தை பதிவு செய்ய சென்றபோது விருகம்பாக்கம் சார் பதிவாளர் ரவீந்திரநாத் கூறியதாக தெரிவிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தென்சென்னை மாவட்ட செயலாளர் வேல்முருகன்.

சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்கும் நிலையில், அதன் பதிவு நிராகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவாதப் பொருளாகியுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பதிவுத்துறை தென்சென்னை மாவட்ட பதிவாளர் சுடரொளி, "ஆவணங்கள் சரியாக இருந்தால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதில் எந்த சிக்கலும் இல்லை" எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

பதிவு மறுக்க சொல்லப்பட்ட காரணம் என்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உஷா ஆகிய இருவருக்கும் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு அதனை பதிவு செய்ய அந்த பகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து 23-ஆம் தேதி நேரில் சென்றனர். உரிய ஆவணங்களோடு அணுகிய போதும் அவர்களது திருமணத்தை ஏற்க சார்பதிவாளர் மறுத்ததாக வேல்முருகன் குற்றம் சாட்டுகிறார்.

திருமணம் மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டபோது இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டி 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம் என எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

"அதில் திருமணம் நடைபெற்ற இடத்தின் முகவரியில் குழப்பம் மற்றும் திருமணத்தை தலைமையேற்றவரின் கையொப்பம் இல்லை என்று குறிப்பிடப்பட்டது," என்கிறார் வேல்முருகன்.

இந்தப் பதிவு மறுக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

'ஆவணங்களைக் காட்டிய பிறகு ஏற்கவில்லை'

சீர்திருத்த திருமணம், சென்னை, பதிவு, சட்டம்

படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தென்சென்னை மாவட்ட செயலாளர் வேல்முருகன்.

"ஒவ்வொரு முறையும் சீர்திருத்தத் திருமணங்களைப் பதிவு செய்யும்போது போராட வேண்டியுள்ளது" என்கிறார் திருமணத்தை முன்னின்று நடத்திய வேல்முருகன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அண்ணா முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட சீர்திருத்தத் திருமணத்தின் பதிவு முறைகளை மட்டுப்படுத்தும் வகையில் சார் பதிவாளரின் அணுகுமுறை உள்ளது." என குற்றம் சாட்டினார்.

"திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்தது குறித்து கேள்வி எழுப்பிய போது 'இது போன்ற திருமணங்களை நான் ஊக்குவிப்பது இல்லை' எனப் பதிலளித்தார். மறுப்புக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக கேட்ட போது 'திருமணம் நடந்த இடம் எங்கள் எல்லைக்குள் இல்லை' என்று கூறினார்" என வேல் முருகன் தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டில் தங்களது கட்சி அலுவலகத்தில் 6 சீர்திருத்த திருமணங்கள் நடத்தப்பட்டு இதே சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது எனக் குறிப்பிடுகிறார் வேல்முருகன்.

மேலும், "விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஆவணங்களையும், எங்கள் கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலிகிராமம் பகுதி விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்டது என்பதற்கான ஆவணங்களையும் காட்டிய பிறகும் அதனை அவர் ஏற்கவில்லை" என்றார்.

திருமணத்தை பதிய மறுத்தது தொடர்பாக மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்து 20 நாட்கள் ஆனதாக குறிப்பிடும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கிறார்.

மனு நிராகரிக்கப்பட்டது ஏன்?

சீர்திருத்த திருமணம், சென்னை, பதிவு, சட்டம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

சீர்திருத்த திருமணம் நிராகரிக்கப்பட்டதற்கு "கட்சி அலுவலக முகவரி முக்கிய காரணம்" என்று கூறியது குறித்து விளக்கம் பெற விருகம்பாக்கம் சார் பதிவாளர் ரவீந்திரநாத்-ஐ பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. "இந்த விவகாரம் பற்றி எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் அந்த திருமணத்தை பதிவு செய்ய மாவட்ட பதிவாளர் அனுமதி கொடுத்துவிட்டார்" என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பான தகவல் தங்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்கிறார் வேல்முருகன்.

இருப்பினும், தொடக்க நிலையில் அந்த மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ரவீந்திரநாத் பதிலளிக்கவில்லை.

"திருமண பதிவில் தவறு ஏற்பட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது நாங்கள் தான்" என்கிறார் பதிவுத்துறை தென்சென்னை மாவட்ட பதிவாளர் சுடரொளி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த புகாரில் களத்திற்கு சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டு நிலையை தெரிந்துகொண்டோம். அதில் கோடம்பாக்கம், விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகங்கள் அருகருகே இருப்பதும், மார்க்சிஸ்ட் அலுவலகத்தின் அமைவிடம் 'சாலிகிராமம்' என்று குறிப்பிடப்படாமல் இருப்பதும் தான் பிரச்னைக்கு காரணம் என்பதை தெரிந்துகொண்டோம்." என்றார்.

"இனி வரும் காலங்களில் அந்த அலுவலகத்தில் இருந்து வரும் அனைத்து திருமணங்களையும் பரிசீலித்து பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்" என்றார் அவர்.

மேலும், "இந்த திருமண பதிவில் சம்மந்தப்பட்ட இணையர் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் திருமணம் நடத்தப்பட்ட இடத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற இறுதி வாய்ப்பில் அவர்கள் இருந்தனர், ஆனால் அதற்குரிய ஆவணங்களை சரி பார்க்க வேண்டியது எங்கள் கடமை, அதில் தவறு ஏற்பட்டால் அந்தப் பதிவை மேற்கொண்ட சார் பதிவாளர் பின்னாளில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்" என்று அவர் கூறினார்.

சார் பதிவாளரின் அணுகுமுறை குறித்த வேல்முருகனின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த பதிவாளர் சுடரொளி, "பெற்றோர் இல்லாமல் நடத்தப்படும் திருமணங்களில் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில் சிறிய அளவிலும் பிரச்னை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சார் பதிவாளர் சொன்னதை தவறான கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டிருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.

ஆவணங்கள் சரியாக இருந்தால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று அவர் விளக்கமளித்தார்.

சீர்திருத்த திருமணத்தை சார் பதிவாளரால் நிராகரிக்க முடியுமா?

சீர்திருத்த திருமணம், சென்னை, பதிவு, சட்டம்

படக்குறிப்பு,முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார்.

"நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதை எவராலும் தடுக்க முடியாது" என்கிறார் முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சீர்திருத்தத் திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலகத்தை நாடுவோர், இந்து திருமணச்சட்டப்படி உள்ள படிவத்தில் பிரிவு 7 (அ) எனக் குறிப்பிட்டு உரிய ஆவணங்களை மட்டும் வழங்கினால் போதுமானது" என்றார்.

மேலும், "கட்டாய திருமணம், கடத்தல் திருமணம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் திருமணங்களின் போது ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்கள் யாரேனும் ஒருவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் வழங்கும் அறிவுரைகளைக் காரணம் காட்டி சில சார் பதிவாளர்கள் திருமணங்களைப் பதிவு செய்ய தடை விதிக்கிறார்கள், இது தவறான அணுகுமுறை." என்று தெரிவித்தார்.

ஆனால் குறிப்பிட்ட வழக்கில் மணமக்களின் பெற்றோர் குறித்து சார்பதிவாளர் எதுவும் குறிப்பிட்டதாக புகார் இல்லை.

"ஒரு சீர்திருத்த திருமணம் பதிவு செய்வது மறுக்கப்பட்டால், அந்த சார் பதிவாளர் மீது மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம். அதிலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் பதிவுத்துறை துணை தலைவர் அல்லது தலைவரை அணுகலாம், அவர் செய்தது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.

சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?

சீர்திருத்த திருமணம் அல்லது சுயமரியாதை திருமணம் என்பது மதம் மற்றும் சாதி சடங்குகளைக் கடந்து மணமக்கள் மற்றும் சாட்சியங்களை மட்டும் வைத்து எளிய முறையில் நடத்தப்படுகிறது. 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து திருமணச்சட்டம், 1967-இல் தமிழ்நாடு அரசால் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதில் பிரிவு 7 (அ) சேர்க்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி தம்பதிகள் மாலை மாற்றிக்கொள்வது, உறுதி மொழி ஏற்பது, தாலி கட்டிக்கொள்வது என மூன்று வழிமுறைகளில் ஒன்றோ அல்லது மூன்றையும் பின்பற்றி சீர்திருத்த திருமணம் செய்துக்கொள்ளலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

சுயமரியாதை திருமணம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?

"சுயமரியாதை திருமணத்தைப் பதிவு செய்ய பதிவுத்துறையை நாடும்போது சிலர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் தமிழ்நாடு சாதி மறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இரமேசு பெரியார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "கொள்கையால் ஈர்க்கப்படுபவர்கள், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மட்டுமே சீர்திருத்த திருமணத்தை நோக்கிச் செல்கின்றனர், ஆனால் பெற்றோர் வரவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி பல இடங்களில் பதிவு மறுக்கப்படுகிறது" என்றார்.

"தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் விதி 7-இல் சார் பதிவாளர் மனநிறைவு அடையாவிட்டால் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போலி திருமணங்களை தடுப்பதற்காக வழங்கப்பட்ட அதிகாரங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்" என்கிறார் வழக்கறிஞர் இரமேசு பெரியார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cje42kk8y2no

கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்!

14 hours 21 minutes ago

image_server_news-30.jpg?resize=600%2C37

கூட்டணி குறித்து பரவும் வதந்திகள்: மௌனம் கலைத்த தளபதி விஜய்!

கூட்டணி குறித்து வரும் வதந்திகளை நம்பாதீர்கள். நம் தலைமையில் தான் ஆட்சி என்று இப்தார் நோன்பு திறப்பு விழாவில் விஜய் கூறினார்.

தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்றார். இப்தார் நோன்பு திறந்த பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு தொழுகையில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டார்.

நம்முடைய தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.   யார் என்ன அவதூறு பரப்பினாலும், தயவுசெய்து அதை நம்பாதீர்கள். எல்லாம்வல்ல இறைவனின் அருளால் நாம் நினைச்ச டார்கெட்டை நம்மால் நிச்சயமாக அடைய முடியும். என்னுடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் நல்வாழ்த்துகள். நம்பிக்கையோடு இருங்கள், நல்லது நடக்கும், வெற்றி நிச்சயம்.

இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.

தமிழகத்தில் எந்த கூட்டணியை நோக்கி விஜய் நகர்கிறார் என்ற பேச்சுகள் பல வாரங்களாக ஓடிக் கொண்டு இருந்தன. அதிலும் கடந்த சில நாட்களாக கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அவர் டில்லி சென்ற போதும் கூட அதிமுக பாஜவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தான் பேச்சுகள் பரவிக்கிடந்தன.

இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமல்லாது, மற்ற கட்சிகள் மத்தியிலும் தவெக மீது ஒரு சந்தேக கண்ணோட்டமே காணப்பட்டது. இதுபற்றி விஜய் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் கருத்துகள் எழுந்தன.

இப்போது, ‘கூட்டணி தொடர்பான அனைத்து பேச்சுகளும் வதந்தி, நம்பாதீர்கள், நம் தலைமையில் தான் ஆட்சி’ என்று அவராகவே அறிவித்து விட்டதால், 234 தொகுதிகளிலும் தவெக தனித்துதான் போட்டி என்பது உறுதியாகிவிட்டது.

https://athavannews.com/2026/1469143

தேசிய அல்லது சர்வதேச மதிப்புள்ள விருதுகளை எப்படித் தோற்றுவிக்கிறார்கள்?

1 day 3 hours ago

தேசிய அல்லது சர்வதேச மதிப்புள்ள விருதுகளை எப்படித் தோற்றுவிக்கிறார்கள்?

By ஆர். அபிலாஷ் March 16, 2026

AVvXsEgH1UzI3N_PlwDwYeAxQbKM_3PUv5PAY9Ew

AVvXsEjhO_bqlnwF7FVKwj1EJdmvaRa5Pun3mKAC

முதலில் தேசிய விருதுகள். இவை தொடர்ந்து அரசியல் சாய்வாலோ செல்வாக்காலோ மதிப்பிழந்து வந்தாலும் சாகித்ய அகாடெமி போன்றவற்றின் மதிப்பு அடிப்படையில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக சில நல்ல படைப்பாளிகளுக்கு அது விருதளித்துள்ளது, அதை நமது தேசியம் அங்கீகரிக்கிறது என்பதாலே உருவாகிறது. ஒவ்வொருமுறை மோசமான படைப்பாளிகள் தேர்வு செய்யப்படும்போதும் அது மதிப்புக் குறைவதைக் காண்கிறோம். தேர்வு சரியானதும் மதிப்பும் கூடுகிறது.

அகாடெமியின் தேர்வுகள் மீதுள்ள புகார்கள், பரிந்துரைகள் நியாயமானவை. அதையெல்லாம் நடைமுறைப்படுத்த நாம் சரியான நபர்களை அரசியலில் தேர்ந்தெடுக்க வேண்டும். சரியான நபர்கள் அகாடெமிக்குள் சென்று நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும். இந்தியர்களின் முக்கியமான பிரச்சினை நாம் நேர்வழியை ஏனோ நம்புவதில்லை. தொடர்ந்து நாம் புறக்கணிப்பட்டதாக, நாம் அதிக மதிப்புக்குத் தகுதியானவர்கள் என நம்புகிறோம். நமது வாசகச் சூழலும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். இயல்பாகவே வாய்ப்புக் கிடைத்து உள்ளே போகும் சிலர் குறுக்குவழியில் தமக்கும் தமக்குச் சார்பானவர்களுக்கு விருது வாங்கிக் கொடுக்க விழைகிறார்கள். சிலநேரங்களில் கட்சிக் குறுக்கீடுகளும் சாதியச் சாய்வுகளும் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். இப்படி, இது ஒரு பண்பாட்டுப் பிரச்சினையும்தான்.

இவ்வளவு போதாமைகளுக்கு மத்தியிலும் கூட, ஒட்டுமொத்தமாக பல்வேறு மொழிகளிலுள்ள தேர்வுகளைக் காண்கையில் அகாடெமியின் செயல்பாடுகள் நியாயமாகவே உள்ளது எனச் முடியும். ஒப்பீட்டுக்கு நாம் உள்ளூர் தனியார் விருதுகளைப் பார்ப்போம் - அவற்றில் தேர்வுக்குழு, தேர்வு முறைமை என ஒன்றுமே கிடையாது. யாராவது பரிந்துரைக்கிறார்கள், யாரோ முடிவெடுக்கிறார்கள், அறிவிக்கிறார்கள், கொடுக்கிறார்கள். இதனாலே இத்தகைய தனியார் விருதுகள் வாசகர்கள் மத்தியில் பொருட்படுத்தப்படுவதில்லை. விளைவாக நன்கு அறியப்பட்டவர்களுக்குக் கொடுப்பதன் வழியாக அம்மதிப்பைப் பெருக்க விருது அமைப்புகள் முயல்கின்றன. இந்த சுழற்சி மாறுவதில்லை. பரிந்துரைப்பவர்களுக்கு எந்த எழுத்தாளர்களிடத்து நட்பும் நன்மதிப்பும் உள்ளதோ அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கிறது. இதை ஒரு மறைமுக சமூக நீதித் திட்டம் எனலாம்.

ஜெயமோகனின் "விஷ்ணுபுரம்" விருதுதான் இருப்பதிலேயே விஷமத்தனமானது - அவர் எந்த முறைமையையும் பின்பற்றுவதில்லை என்பதுடன் எதையும் நம்புவதோ பொருட்படுத்துவதோ இல்லை. அவர் தன் சக-எழுத்தாளர்களின் மதிப்பீடுகளையும் ஏற்பதில்லை. அவர் மனத்தில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு விருதாளர்களின் வயதைப் பொறுத்து அறிவிப்பதாகச் சொல்கிறார். அவரது விருப்பவெறுப்புகளோ விருதைத் தீர்மானிக்கின்றன. இதையொட்டி அவர் எழுதும் விசயங்கள் இந்தப் படைப்பாளிகளைச் சமமாக மதித்துப் பாராட்டுவதாக இருக்காது. இந்த விருதோ அவர் தன் சக-எழுத்தாளர்களுக்குத் தரும் பரிசிலாகச் சித்தரிக்கப்படுகிறது. ரமேஷ் தான் சீக்கிரம் இறந்து விடுவதாகவும் தனக்கு அதற்கு முன் விருது தர வேண்டும் எனக் கோரியதாக ஜெயமோகன் எழுதியதை சான்றாகக் குறிப்பிடலாம். தனிப்பட்ட முறையில் ஒருவர் வேடிக்கையாகவோ அல்லது உணர்வுரீதியான வெளிப்பாடாகவோ கொள்ளாமல் அதை ஒரு கட்டுரையில் பதிவு செய்யக் கூடாது, அது அவரை அவமதிப்பதாகும் என்பதுகூட இவருக்குப் புரிவதில்ல. ஜெயமோகனின் குறுக்கீடும் விஷமத்தனமும் காரணமாகவே இவ்விருது மதிக்கத்தக்கதாக இல்லை. என்னதான் ஊடகங்களில் விளம்பரம் செய்தாலும், பிரபலங்களைப் பேச வைத்தாலும் இது ஒரு குழு விருதாக மாறிவிட்டது. அவர்களுக்குள்ளாகக் கொடுத்துக் கொண்டு பாராட்டிக் கொண்டு முடித்து விடுகிறார்கள்.

விருதாளர்கள் மற்றும் விருதுக் குழுவினர் விவகாரமும் இங்கு சுவாரஸ்யமானது - சாகித்ய அகாடெமியோ தனியார் விருதுகளோ ஒரு சரியான விருதாளரைத் தேர்வு செய்வது கடினமல்ல. தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் பெயர்களைத் திரட்டுவது சுலபம். சிக்கல் சரியான புத்தகங்களைத் தேர்வு பண்ணுவது - அதற்கு நிறைய மெனெக்கெட்டு பரவலான விருதுக்குழு ஒன்றின் கருத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும். மாறாக, அறியப்பட்ட படைப்பாளிகளின் பங்களிப்புக்கு ஒட்டுமொத்தமாக விருதளிப்பது சுலபம். இதனால் இதுவே இன்று அதிகமாக நடக்கிறது. இதுவும் விருதுகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை என்னால் இணையத்தில் தேடியே பெற முடியும் எனும்போது விருதின் பயன்தான் என்ன?

விருதுக் குழுவினரும் தமக்குள் பேசி வைத்து award fixing செய்யும் அவலத்தை சிலர் என்னிடம் குறிப்பிட்டுள்ளார்கள். இதைச் சரிசெய்யவே இரண்டு மூன்று நிலைகளில் பரிசீலிக்க விருதுக்குழுவினரை உருவாக்கிப் பார்க்கலாம். சரியான நபர்களை இக்குழுக்களில் தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு சன்மானமும் கொடுக்கலாம். விருதளிப்பின் போது இறுதிக் குழுவினரைத் தம் விளக்கங்களைத் தரக் கோரலாம்.

அடுத்து, நாம் தேசிய விருதுகள், உள்ளூர் விருதுகளைத் தாண்டிச் சென்று ஒருசில சர்வதேச விருதுகளை எடுத்துக் கொள்வோம்.

முதலில் நோபல் பரிசு

இதைக் குறித்து wired.in இல் ஒரு நல்ல கட்டுரை வந்துள்ளது (https://www.wired.com/2014/10/whats-nobel-prize-become-biggest-award-planet/). நோபல் பரிசு 1888இல் நடந்த ஒரு பெயர்க் குழப்பத்தாலே தோன்றுகிறது. ஆல்பிரட் நோபல் டயனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்த பெரும் தொழிலதிபர். இவரது சகோதரர் இறந்துவிட அதை இவரது மரணம் என நினைத்து ஒரு பிரஞ்சுப் பத்திரிகையில் "மரண வியாபாரி ஆல்பிரெட் நோபல் மரணம்" என அஞ்சலிக் குறிப்பு எழுதுகிறார்கள். நோபல் நம்மாட்களைப் போல் அல்லாது சொரணை மிக்கவர். ஆகையால் அவர் இதைப் படித்து நொந்து போகிறார். தன் காலத்திற்குப் பிறகு தான் மரண வியாபாரி என அறியப்படக் கூடாது என்று அவர் தன் மொத்தச் சொத்தில் கணிசமான பகுதியை ஒரு சர்வதேச விருதை உருவாக்கி தன் பெயரில் அளிக்கச் செலவிட வேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டுப் போகிறார்.

இதற்காக ஒரு விருது நிர்வாகக் குழு உருவாக்கப்படுகிறது. 1897இல் இருந்தே அவர்கள் உலகில் சிறந்த விஞ்ஞானிகளைக் கண்டறிய உலகம் முழுவதிலும் இருந்து பரிந்துரைகளைப் பெற்று ஆய்வு செய்கிறார்கள். தம் ஆய்வு முடிவை, தேர்வை அவர்கள் Swedish Royal Society of Sciences (வேதியலுக்கும் இயல்பியலுக்கும்) மற்றும் the Karolinska Institute (மருத்துவத்துக்கு) ஆகிய நிறுவனங்களிடம் கொடுத்து அவர்களை இறுதி முடிவை எடுக்கக் கேட்கிறார்கள். தம் தேர்வு குறித்து தேர்வுக் குழுவினர் எழுதும் பரிந்துரைகளை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் விருதுப் பணமே உலகம் முழுக்க கவனத்தைப் பெற்றுத் தந்தாலும் போகப் போகம் பணம் அல்ல நோபல் விருதுக் குழுவின் தேர்வு முறைமையும் அவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்து ஒருவரது பங்களிப்பின் தாக்கத்தை அவதானித்து அங்கீகரிக்கும் பாங்குமே அவ்விருதை உலக முக்கியத்துவம் கொண்டதாக்குகிறது. சில நேரங்களில் அவர்கள் அதிகமாக அறியப்படாத விஞ்ஞானிகளை, எழுத்தாளர்களைக் கண்டறிந்து அங்கீகரிக்கிறார்கள். இதுவும் அவர்கள் மீதான மதிப்பைப் பெருக்குகிறது. இந்த பாரம்பரியம்தான் நோபல் பரிசின் மதிப்பு, அதன் பணம் அல்ல என்று ஸக்கர்மேனும் கார்ல்ஸ்டெராண்டும் வைர்ட் கட்டுரையில் சொல்வது கவனிக்கத்தக்கது.

(இந்த இடத்தில்தான் நம்மவர்கள் சொதப்புகிறார்கள் - நம்மிடம் நடுநிலையான, புறவயமான நடைமுறைகள், முறைமைகள் இல்லை. நாம் அனைவருக்குமானவர்களாக இருப்பதும் இல்லை. அதாவது தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ யாரையும் மதிப்பிட்டு அங்கீகரிப்பதில்லை.)

அடுத்து புக்கர் பரிசு

1969இல் இவ்விருது புக்கர்-மெக்கோனெல் எனும் கயானாவில் உள்ள தொழிலதிபரின் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரித்தானிய காமென்வெல்த் எனப்படும் காலனிகளில் உள்ள படைப்புகளைப் பிரதானப்படுத்தினாலும் அண்மையில் இது இங்கிலாந்திலும் ஐயர்லாந்திலும் பிரசுரிக்கப்பட்ட ஆங்கிலத்தில் கிடைக்கிற எல்லா நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் எடுத்துக் கொள்கிறது. சர்வதேச புக்கர் பரிசு எனும் பெயரில் மொழிபெயர்ப்புகளுக்கும் விருதளிக்கிறார்கள். இவ்விருதின் சிறப்பும் இதன் சர்வதேசியத்தன்மையும் விருதைத் தேர்வு செய்யும் கறாரான முறைமையும்தான். அடுத்து, இவ்விருதுக்குச் செய்யப்படும் விளம்பரம் இதற்கு ஒருவித தனி கவனத்தைப் பெற்றுத் தருகிறது. இவ்விருதின் முக்கியத்துவம் அடுத்து தேர்வாகும் படைப்புகள் அடுத்த சில பத்தாண்டுகளாவது கல்வித்துறையிலும் வாசகர்கள், விமர்சகர்கள் இடத்தும் பரவலான தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதே.

ஒரு கூடுதல் தகவல்: இவ்விருது பெற்ற நாவல்களை ஆய்வு செய்த ஆடம் நவோமி பொதுவாக அரசியல் பகடி எழுதுகிற, 400 பக்கங்களுக்கு மேலாக உள்ள நாவல்களுக்கே இவ்விருது அதிகமாக அளிக்கப்படுகிறது என்கிறார் (Adam, Naomi. “How to win the Booker prize: is there a formula for ‘the finest in fiction?’” The Conversation, October 14, 2022.). பெண்களை விட ஆண்களே இவ்விருதை அதிகமாக வெல்கிறார்கள் என்பதும் இவரது அவதானிப்பு.

இந்த சர்வதேச விருதுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்வது இவற்றைத்தாம் -

1) புத்தகங்களுக்கு விருதளிக்க வேண்டும். எழுத்தாளர்களுக்கு அல்ல.

2) புறவயமான நடைமுறைகளை உருவாக்கி, எந்த சார்புநிலையுமற்றுச் செயல்பட வேண்டும். ஒரு நிதியாளரின் பெயரை விருதுடன் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அவர் விருதாளரைத் தேர்வு செய்யக் கூடாது. செல்வாக்கு என ஒன்று வந்தாலே விருது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்குகிறது.

3) விருதுக்குத் தேர்வாகும் ஒரு புத்தகத்தின் நீண்டகாலத் தாக்கம் என்னவென்று பரிசீலிக்க வேண்டும்.

4) தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ பலரையும் இதே நடைமுறையைக் கொண்டு விருளித்து அங்கீகரித்தாலே அவர்களும் அவ்விருதைப் பொருட்படுத்துவார்கள்.

இதையெல்லாம் செய்யாத பட்சத்தில் விருதுகள் கெடாவெட்டு, காதுகுத்து, பூப்பெய்தல் விழா எனும் கணக்கில்தான் மதிக்கப்படும். அவற்றைப் பெறுவதில் எழுத்தாளர்களுக்கு தற்காலிக சந்தோஷம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதை இருக்காது.

https://www.writerabilash.in/2026/03/blog-post_16.html

சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026

1 day 8 hours ago

5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

சீமான் வெளியிட்ட கட்சியின் செயற்பாட்டு வரைவு 2026

hindutamil-prod%2F2026-03-19%2Fmn2mzv9c%

சென்னை: அன்பான சர்வாதிகார ஆட்சி முறையாக நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை இருக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டு வரைவு அறிக்கையை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்:

தலைநகரை மாற்றுவோம்; தமிழகத்தை மாற்றுவோம்:

சென்னை மட்டுமே தலைநகரா இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தையும் தேடி மக்கள் சிற்றூர்களில் இருந்து நகரத்தை நோக்கி வருவதால் சென்னை பிதுங்கி வழிகிறது. உயிரைச் சுமந்து செல்கிற அவசர ஊர்தி கூடச் சரியான நேரத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் சென்னையின் நிலை மேலும் சிக்கலாம். அதனால், நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி உட்பட அனைத்தும் பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு தலைநகரை பரவலாக்கும்.

தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்:

தமிழகத்தின் மையத்தில் உள்ள திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். சென்னை தொழில்நுட்ப தலைநகராகச் செயல்படும். கோவை தொழில் மற்றும் வணிகத் தலைநகராகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகராகவும் செயல்படும்.

பெண்களுக்குத் தனித்தொகுதி:

உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. பெண்களுக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.

மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி:

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவம் என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7-வது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில் ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறது.

இவை தவிர, ஒன்றிய அரசும் மாநில அசுகளும் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கிறது. ஆக ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பையும் உறுதி செய்கிறது.

எனவே, நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர பாடுபடுவோம்.

தமிழர்களுக்கு முன்னுரிமை:

தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடப்பங்கீட்டு முறையைப் அம்பேத்கர் வழியில் நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். நாம் தமிழர் அரசானது தமிழ்நாட்டில் தமிழ்க் குடிகளுக்கு இடப்பங்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிற மொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அதே முன்னுரிமை பிறமொழி வழி தேசிய இன மக்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும்.

தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை:

தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளையைச் சென்னையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை:

தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது ஆட்சிமுறை தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையாக இருக்கும்.

மணல் கொள்ளைத் தடுப்பு:

அங்குலம் ஆற்றுமணல் உருவாக நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால், ஒரு நாளைக்கே முப்படி ஆழத்துக்கு மேலாக ஆற்று மணலை சுரண்டி மணல் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை, பனை மரங்கள் கூட பட்டுப்போய் நிற்கின்றன. எனவே, நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுமையாக தடுக்கும்.

பனை தமிழ் தேசிய மரமாக அறிவிக்கப்படும். இருக்கும் பனை மரங்களைப் பாதுகாப்பது, புதிய பனை மரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் உருவாக்கப்படும். ஊர்தோறும் இரக்கும் நீர் நிலைகளைச் சுற்றி பனைமரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுப்போம்.

வேளாண் பெருங்குடி மக்களே விலையை உறுதிப்படுத்தலாம்:

குண்டூசி முதல் ஏவுகணை வரை எல்லாவற்றையும் உருவாக்குபவர்களே விலையை முடிவு செய்ய இயலுகிறது. ஆனால், வேளாண் பெருங்குடி மக்கள் மட்டும் விளைவிக்கின்ற பொருட்களுக்கு விலையை முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையை மாற்றி உழவர்களே உணவுப் பொருட்களுக்கான விலையைத் தீர்மானிக்கிற உரிமையை நாம் தமிழர் அரசு அளிக்கும்.

ஆடு, மாடு வளர்த்தல் அரசுப் பணி:

ஆடு மாடுகளை வளர்த்தல் அவமானமில்லை, வருமானம், வெகுமானம் அரசுப் பணி. ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் உருவாக்கும் நடுவம் அனைத்திலும் வேலை பார்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்கள். அரசு ஊழியர்களுக்கான அனைத்துச் சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்று நாதக வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

தூத்துக்குடியில் 'பிளஸ் 2 மாணவி கொலை' - 6 நாட்களாக போராட்டம் தொடர்வது ஏன்?

3 days 3 hours ago

தூத்துக்குடியில் 'பிளஸ் 2 மாணவி கொலை' - 6 நாட்களாக போராட்டம் தொடர்வது ஏன்?

தமிழ்நாடு, தூத்துக்குடி

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • செய்தியாளர், பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் மூன்றாவது இடம் பிடித்தாள். பிளஸ் 2 முடித்துவிட்டு பி.எஸ்சி நர்சிங் படிப்பதுதான் அவளுடைய கனவாக இருந்தது. அதற்குள் இப்படியொரு கொடூரத்தை யார் செய்தார்கள் எனத் தெரியவில்லை" எனக் கூறி அழுகிறார், கொல்லப்பட்ட மாணவியின் சகோதரி.

'மாணவி கொல்லப்பட்டு ஆறு நாட்கள் கடந்த பின்னரும் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்படாததால், சடலத்தைப் பெற மாட்டோம்' எனக் கூறி கிராம மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை, சாட்சிகளிடம் விசாரணை என விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதாக, நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெற்றோர் கடந்த 10-ஆம் தேதி இரவு காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளிக்கச் சென்றனர்.

'இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற தங்கள் மகள் வீடு திரும்பவில்லை' என அங்கிருந்த காவலர்களிடம் கூறியுள்ளனர்.

"சம்பவம் நடந்த நாளில் வீட்டில் இருந்து ஆறு மணிக்கு மகள் கிளம்பிச் சென்றார். ஆறே முக்கால் வரை வராதால் மனைவியும் இன்னொரு மகளும் தேடிச் சென்றுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை" என, மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

"ஏழு மணியளவில் வீட்டுக்கு வந்தேன். மகள் காணாமல் போனதை அறிந்து ஊரில் உள்ள சுமார் நாற்பது பேரைக் கூட்டிக் கொண்டு போய் தேடினோம்." என்கிறார்.

'அலைக்கழித்த போலீஸ்'

இதன்பிறகும் மாணவியைக் கண்டறிய முடியாததால், இரவு 10.30 மணியளவில் காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளிக்கச் சென்றுள்ளனர்.

"காலை பத்து மணிக்கு வருமாறு காவலர்கள் கூறினர். மறுநாள் போனபோது, 18 வயதுக்குக் கீழ் உள்ள மாணவி என்பதால் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினர்," என மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.

அங்கும் மாணவியின் பெற்றோருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

"வழக்கை 'அந்த காவல்நிலைய அதிகாரிகள் விசாரிக்க மாட்டார்களா' என திட்டிவிட்டி அலட்சியமாக பதில் அளித்தனர்" என்கிறார் மாணவியின் தந்தை.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், மேலும் சிலருடன் சேர்ந்து மாணவியை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

மார்ச் 11-ஆம் தேதியன்று மதியம் சுமார் 3 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் மாணவியை சடலமாக கண்டறிந்துள்ளனர்.

இதன்பிறகே சம்பவ இடத்துக்கு காவல்துறை வந்துள்ளது என்கின்றனர் குடும்பத்தினர்.

தமிழ்நாடு, தூத்துக்குடி

'அந்த நபர் யார் எனத் தெரிந்தால் போதும்' - மாணவியின் சகோதரி

"வீட்டில் கழிப்பறை வசதியில்லை. அருகில் சித்தப்பா வீட்டில் கழிவறை இருந்தாலும் அதை நாங்கள் பயன்படுத்துவதில்லை. அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு செல்வது வழக்கம்," எனக் கூறுகிறார் மாணவியின் சகோதரி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இப்படியொரு கொடூர சம்பவத்துக்குக் காரணமான நபர் யார் எனத் தெரியவில்லை. காவல்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த நபர் யார் என்று மட்டும் எங்களுக்குத் தெரிந்தால் போதும்." என்கிறார்.

மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்று உள்ளது.

மறுப்பு அறிக்கை வெளியிட்ட காவல்துறை

இந்தநிலையில், 'பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொல்லப்பட்டிருக்கலாம்' என்ற ரீதியில் தகவல் பரவியதால், மாணவி வசித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் தகவலை மறுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'உடற்கூராய்வு அறிக்கை, தடயவியல் நிபுணர்களின் விசாரணை அறிக்கைக்குப் பின்னரே பாலியல் குற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது தெரியவரும்' எனத் தெரிவித்துள்ளது.

கனிமொழியை முற்றுகையிட்ட மக்கள்

தமிழ்நாடு, தூத்துக்குடி, கனிமொழி

மாணவிக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்ட பின்னரும் அதன் முடிவுகள் வெளியாகவில்லை.

'குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கைது செய்யும் வரை மாணவியின் சடலத்தை வாங்கப் போவதில்லை' எனக் கூறி கிராம மக்கள் ஆறு நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மாணவி மரணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், "குற்றத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பதைக் கண்டறிவதில் காவல்துறை உறுதியாக உள்ளது. குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்" எனக் கூறினார்.

மாணவி இறந்து மூன்று நாட்கள் கழித்து மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்காக கனிமொழி எம்.பி வந்திருந்தார்.

'பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?' எனக் கேள்வி எழுப்பிய மக்கள், அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காவல்துறையின் விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் காவல் உதவி கண்காணிப்பாளர் அஸ்வினி தலைமையில் இரண்டு டி.எஸ்.பிக்கள் அடங்கிய 10 தனிப்படை போலீசார் மாணவி இறந்த கிராமத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் 2 மாணவி வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாடு, தூத்துக்குடி

பட மூலாதாரம்,TN Police

'5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை'

நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வில் திங்கள்கிழமையன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக அரசுத் தரப்பில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

மாணவி கொலை தொடர்பாக ஐந்து பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்துவதற்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

சம்பவம் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் பதிவான செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு காவல்துறை விசாரித்து வருவதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

"சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை" எனக் கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், "அருகில் உள்ள 24 கண்காணிப்பு கேமராக்களில் இருந்த பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 212 பேர் வரை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர்," எனக் குறிப்பிட்டார்.

மாணவி காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகாரை அலட்சியமாக கையாண்டதற்காக குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் பிரவீனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

"இதுபோதுமான தண்டனை அல்ல" எனக் கூறிய நீதிபதிகள், "புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

வழக்கின் விசாரணை சரியான முறையில் நடந்து வருவதாகக் கூறிய நீதிபதிகள், 'குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டம் நடத்துவது, அமைப்புகள் சார்பில் அழுத்தம் கொடுப்பது விசாரணையை பாதிக்கும்" எனக் கூறினர்.

"வழக்கின் விசாரணை தொடர்பாக அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

'மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்'

"கிராமத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்கள் உள்பட சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவத்தால் கிராமத்து மக்களும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறுகிறார் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்.

"சம்பவம் நடந்த கிராமத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாணவியின் உறவினர்களையும் காவல்துறை விசாரித்துள்ளது. குற்றவாளியை தங்கள் கண்முன்னால் நிறுத்த வேண்டும் என்பது தான் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது'' என்கிறார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பூமயில்.

"காவல்துறை புகாரைப் பெற்ற உடனே விசாரிப்பதற்கு வந்திருந்தால் மாணவியைக் காப்பாற்றியிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறும் பூமயில்,"கிராம மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2lr55d2l4wo

நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சு.. அந்தர் பல்டியடித்த சி.வி சண்முகம்

3 days 6 hours ago

நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சு.. அந்தர் பல்டியடித்த சி.வி சண்முகம்

17 Mar 2026, 4:12 PM

cv s

நயன்தாரா குறித்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வருத்தம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டதாகவும், எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எதிராக திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்பேசுகையில், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். “நயன்தாரா” வேண்டும் என்றால் முதல்வர் நிறைவேற்றுவாரா. “நயன்தாராவை” திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா.? என்று கேள்வி எழுப்பினார். ஆட்சி போன பிறகு கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என கூறுகிறார். 5 ஆண்டுகள் என்ன செய்தார் முதல்வர் என தரம் தாழ்ந்த வகையில் பேசினார்.

அவரது கருத்துக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சிவி சண்முகம் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் “ஸ்டாலினின் கனவு கூறுங்கள்” என்ற ஏமாற்று வேலை குறித்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த வார்த்தை முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டு விட்டது. எந்தவிதமான நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார்.

https://minnambalam.com/admk-cv-shanmugam-apology-nayanthara-issue/

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!

5 days 4 hours ago

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!

14 Mar 2026, 6:43 PM

vairamuthu.jpg

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஞானபீட அமைப்பு வைரமுத்துவுக்கு ஞான பீட விருதை இன்று அறிவித்துள்ளது. 

சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு தமிழில் 1975-ல் அகிலனுக்கும், 2002-ல் ஜெயகாந்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து வைரமுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு ஞானபீட விருது கிடைத்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த விருதைவிட, தமிழ் மொழிக்குக் கிடைத்த மகுடமாகவே கருதுகிறேன்” என்றார். 

கடந்த காலங்களில் ஞானபீட விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்துத் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து,  “தகுதியுள்ள படைப்புகள் இருந்தும் காலதாமதம் ஆனது வருத்தமளித்தாலும், இப்போது வழங்கப்பட்டிருப்பது நீதி நிலைநாட்டப்பட்டதாக உணர்கிறேன். இந்த விருது என் பேனாவுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே என் எழுத்துக்கள் இயங்கும்” என்றார். 

இந்நிலையில் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.  ” தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது!

காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது!

தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன்!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஏற்கனவே வைரமுத்து 7 முறை தேசிய விருதுகளையும், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதையும், மற்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://minnambalam.com/jnanpith-award-for-vairamuthu/

அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!

1 week ago

hindutamil-prod%2F2026-03-13%2Fxipo51hp%

அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அந்தத் தேர்தலின்போது அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். அவருடன் திமுக, அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று நான் இன்று அதிமுகவில் இணைந்துள்ளேன்” என்றார்.

நாகையைச் சேர்ந்த காளியம்மாள் தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், 15 கடலோர மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ‘தமிழக மீனவ பெண் தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தக் கட்சிக்கும் பிடி கொடுக்காமல் இருந்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. காளியம்மாள் மேடைப் பேச்சுத் திறன் கொண்டவர். நாதகவில் இருந்தபோதே அவரது பேச்சால் அக்கட்சியின் தொண்டர்களைக் கட்டிப் போட்டதிலும், பெண்களை ஈர்த்ததிலும் அவருக்கு பங்கு இருந்தது. அதனாலேயே கட்சிக்குள் சீமான் அவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க, பின்னாளில் அந்த முக்கியத்துவமே உரசலுக்கும் வித்திட்டது. பின்னர் நாதகவில் இருந்தே விலகினார்.

இப்போது அவர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இது, அவரது ஆதரவாளர்களையும், நாதக அதிருப்தியாளர்களையும் ஈர்த்திட துணைபுரியும் என்பது அதிமுகவின் நம்பிக்கை. அத்துடன், அதிமுகவில் பெண் முகத்துக்கு பற்றாக்குறை என்பதைவிட துடிப்பான இளம் பெண்ணாக காளியம்மாள் இருப்பது மகளிரணிக்கு பெரும் பூஸ்டாக இருக்கும் என்று கட்சி கணித்துள்ளது.மகளிர் வாக்குகளைக் கவர, காளியம்மாளின் பேச்சு மிக முக்கிய அஸ்திரம் என்பதாலே அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வரை கொடுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

https://www.hindutamil.in/news/tamilnadu/ntk-former-cadre-kaliammal-joins-admk

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

1 week ago

New-Project-11-3.jpg?resize=750%2C375&ss

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் உதவியலாளரான வி.கே. சசிகலா இன்று (13) தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளான கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி புதிதாக கட்சியை தொடங்கி உள்ளதாக சசிகலா அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, கட்சியின் பெயரை அறிவித்தார்.

அதன்படி, தனது கட்சியின் பெயர் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் (All India Puratchi Thalaivar Makkal Munetra Kazhagam) என்று தெரிவித்ததுடன், தனது கட்சியின் சின்னம் தென்னந்தோப்பு என்றும் அறிவித்தார்.

தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் போது அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்களை அன்புடன் நினைவு கூர்ந்தார்.

மக்களுக்கு சேவை செய்வதற்கும், திமுகவை எதிர்த்து நிற்பதற்கும் எம்.ஜி.ஆர். கட்சியை நிறுவினார் என்றும், ஏழைகளின் நலனுக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் நிறுவப்பட்ட கட்சி அது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு காலத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராகவும், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1468304

எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம் - தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?

1 week 1 day ago

எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல் தட்டுப்பாடு அச்சம் - தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?

எரிவாயு, பெட்ரோல்- டீசல், தட்டுப்பாடு, தமிழ்நாடு, மத்திய கிழக்கு

கட்டுரை தகவல்

  • ப.சிவசங்கர்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

"எங்களுக்கு கழிவறைக்குக் கூட செல்ல கூட முடியாத நிலை உள்ளது"- கூட்டம் கூட்டமாக பெட்ரோல் பங்கை நாடி வரும் மக்களுக்கு இடையே பணியாற்றி வரும் பெட்ரோல் நிலைய பணியாளர் ஆஷாவின் வார்த்தைகள் இவை.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், உலக அளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதன் அதிர்வலைகள் இப்போது தமிழகத்தின் வீதிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

எரிவாயு, பெட்ரோல்- டீசல், தட்டுப்பாடு, தமிழ்நாடு, மத்திய கிழக்கு

பட மூலாதாரம்,Getty Images

உண்மையிலேயே பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா?

கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், "வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தை காட்டிலும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் வழங்குவதில் முன்னுரிமை தருகிறோம்" என மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் 'மூன்று நாட்களில் பெட்ரோல் தட்டுப்பாடு' என்ற சமூக வலைதள செய்தி மக்களை வீதிக்கு வர வைத்துள்ளது.

கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்ற சமூக ஊடக பதிவுகள் தலை தூக்கின.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல், விற்பனை நிலையங்களில் மக்களை வரிசை கட்டி நிற்க வைத்துள்ளது. நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு மக்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்புகின்றனர்.

அகில இந்திய அளவில் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி கூறியுள்ளார்.

எரிவாயு, பெட்ரோல்- டீசல், தட்டுப்பாடு, தமிழ்நாடு, மத்திய கிழக்கு

படக்குறிப்பு,'பெரும்பாலானோர் கேன்களில் பெட்ரோல் வாங்குவதுதான் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படக் காரணம்' என்கிறார் பிரகாஷ்.

பெட்ரோல் நிரப்ப வந்தவர்கள் சொல்வது என்ன?

''கேன்களில் எரிபொருள் நிரப்புவர்களால் பல கி.மீ தூரம் பயணித்தும் எங்களுக்கு பெட்ரோல் கிடைப்பதில்லை'' என்கிறார் வரிசையில் நின்றிருந்த பிரகாஷ்.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "மடிப்பாக்கத்தில் இருந்து பெட்ரோலுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன், எங்கு பார்த்தாலும் பெட்ரோல் இல்லையென விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது, இறுதியாக மீனம்பாக்கத்தில் வந்து பெட்ரோல் நிரப்பினேன். பெரும்பாலானோர் கேன்களில் பெட்ரோல் வாங்குவதுதான் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படக் காரணம்" என்கிறார்.

"எங்கள் வாழ்வாதாரமே வாகனங்களை நம்பிதான் உள்ளது, டீசல் இல்லையென்றால் எங்கள் பிழைப்பு நடக்காது. நாங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய டீசல் வாங்கவில்லை, எங்கள் தேவைக்கு இருப்பு வைக்கவே வாங்குகிறோம்" என்கிறார் சரக்கு வாகனம் ஓட்டும் ரவிச்சந்திரன்

"இந்த தேவையற்ற அச்சம் என் பணியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார் டெலிவரி வேலை செய்யும் கெளதம்.

"டெலிவரி வேலை செய்வதால் எனக்கு நேரம் மிகவும் முக்கியம், தினமும் 5 நிமிடத்தில் பெட்ரோல் போடுவேன், ஆனால் இன்று ஒரு மணி நேரம் ஆனது" என்றார்.

"அதிக நேரத்தை பெட்ரோல் போட செலவழித்துவிட்டேன், டெலிவரி செய்யும் இடத்தில் என் மேல் கோபப்படுவார்கள்" என்கிறார் கெளதம்.

அதே நேரத்தில் "பெட்ரோல் தட்டுப்பாடு ஒரு வதந்தி மட்டுமே, தானாகவே இது சரியாகிவிடும்" என்கிறார் நிதித்துறையில் பணியாற்றும் திவ்யேஷ்.

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் பெண்.

' யாரும் பேசுவதில்லை'

"பெட்ரோல் பங்குகளை நாடி வருவோரை பற்றி மட்டுமே பேசுவோர் எங்கள் துயரை கண்டுகொள்வதில்லை" என்கிறார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் குமுதா.

"இதுபோன்ற நாட்களில் அமர்வதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை" என்றார் அவர்.

"கழிவறை செல்லக்கூட நேரம் கிடைப்பதில்லை" என்கிறார் மற்றொரு பணியாளர் ஆஷா.

"வழக்கத்தை விட ஐந்து மடங்கு கூட்டம் வருகிறது, வருபவர்கள் அனைவரும் டேங்க் புல்லாக நிரப்ப சொல்கிறார்கள், நகர்வதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை" என அவர் கூறினார்.

அரசும் எண்ணெய் நிறுவனங்களும் என்ன சொல்கின்றன?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் தரவுகளின்படி, இந்தியாவில் 42 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் 3 கோடியே 35 லட்சம் வாகனங்கள்.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி "பெட்ரோல் இருப்பில் எந்த குறையும் இல்லை" என விளக்கமளித்துள்ளார்.

"நாட்டுக்கு தேவையான அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது" என்றும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் திடீரென ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த பீதி அவசியமற்றது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் "பெட்ரோல் டீசல் போதுமான அளவு கிடைப்பதுடன் விநியோகமும் சீராக உள்ளது, வதந்திகளில் யாரும் கவனம் செலுத்த வேண்டாம்" என்று குறிப்பிட்டிருந்தது.

பிபிசி தமிழிடம் பேசிய சென்னையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் டீலர் அரசன், "மக்கள் பதற்றமடையும் அளவுக்கு இங்கு எதுவும் நடக்கவில்லை, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எப்போதும் போல பெட்ரோல் டீசல் வந்துக் கொண்டிருக்கிறது" என்றார்.

"இந்த திடீர் வதந்தியால் எரிபொருள் தேவை இரட்டிப்பாகியுள்ளது அதையும் நிறுவனத்திடம் இருந்து பெற்று மக்களுக்கு வழங்கி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தேவைக்கு மட்டும் எரிபொருளை மக்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கேன்களில் பெட்ரோல் டீசல் நிரப்புவது குறித்து விளக்கமளித்த அவர், "கேன்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற விதி ஏற்கனவே அமலில் இருப்பதால் அதனை நாங்கள் பின்பற்றி வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj98xj22pjjo

செங்கல்பட்டு: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது

1 week 2 days ago

செங்கல்பட்டு: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது

செங்கல்பட்டு : 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது

பட மூலாதாரம்,Getty Images

25 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மதுராந்தகம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் சிறுமி மற்றும் அவரது நண்பர்கள் சென்ற இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த சிலரால் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை அளித்துள்ள தகவல்படி, மதுராந்தகம் அருகே சிறுவன் மற்றும் இரண்டு சிறுமிகள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்களின் வாகனத்தை இரண்டு பேர் தங்களின் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் வேகமாக வருவதைப் பார்த்து தனது வாகனத்தை சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது நிலை தடுமாறி சிறுவனும் சிறுமிகளும் கீழே விழுந்துள்ளனர். அப்போது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவர்களைத் தாக்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, சிறுமி பாலியல் வன்கொடுமை

குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து சென்றதும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார்.

அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையை மருத்துவர்களிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை மூலமாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் நேரடி தொடர்புடைய காக்கா பாலாஜி என்கிற பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்' எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

காக்கா பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், தாமு என்கிற தாமோதர பெருமாள் என்ற நபரை புதன்கிழமையன்று கைது செய்துள்ளதாக, காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, சிறுமி பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம்,Devaneyan

படக்குறிப்பு,குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு.

இதுதொடர்பாக மூன்று காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காக ஆவடியில் வசித்து வரும் காக்கா பாலாஜியின் வீட்டுக்கு மேல்மருவத்தூர் போலீசார் சென்றுள்ளனர்.

அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். முடிவில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காக்கா பாலாஜியை காவல்துறை கைது செய்துள்ளது.

காக்கா பாலாஜியிடம் தனிப்படை காவலர்கள் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, புதன்கிழமையன்று தாமு என்கிற தாமோதர பெருமாளை கைது செய்துள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

"சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை, குழந்தைகள் நலக் குழு எனப் பலமுனைகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றொரு சிறுமியும் சிறுவனும் பற்றிய விவரங்கள் காவல்துறை விசாரணை முடிவில் விடை தெரியவரும்" எனக் கூறுகிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உதவி செய்வதற்குக் கூட ஆள் இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு சிறுமி நடந்தே சென்றதாகக் கூறியுள்ளார்.

இதே தகவலை சில நாளேடுகளும் வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக மதுராந்தம் டிஎஸ்பி தீபக் ரஜினியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால், அவரிடம் இருந்து உரிய விளக்கம் பெற முடியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c98qvlpj42mo

தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்!

1 week 2 days ago

New-Project-28.jpg?resize=750%2C375&ssl=

தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்!

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அரசுப் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, சில மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர் மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக முறைப்பாடு அளித்தனர்.

இதேபோன்ற அறிகுறிகள் இருப்பதாக அதிகமான மாணவர்கள் முறைப்பாடு அளித்ததால், அவர்கள் சிகிச்சைக்காக அரசு வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழக அரசுப் பாடசாலை மாணவர்கள் மதிய உணவை சாப்பிட்ட பின்னர் நோய்வாய்ப்படுவது இது முதல் முறை அல்ல. 

இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் உணவு விஷம் அடைந்ததாக சந்தேகிக்கப்படும் 33 மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image previewதமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்தியசாலையில்!
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது. செவ்வா

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு.

1 week 3 days ago

image_server_news-15.jpg?resize=600%2C37

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு.

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெற்றிடமாகஉள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல், எதிர்வரும் , 16ம் திகதி நடைபெறும் என, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில், திமுகவிற்கு நான்கு, அதிமுகவிற்கு இரண்டு ராஜ்யசபா எம்பிக்கள் பதவி கிடைப்பது உறுதியானது. திமுக கூட்டணியில், தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

திமுகவில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்; தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் தம்பிதுரை, அக்கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அன்புமணி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மனு ஏற்கப்பட்டு, மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுவை திரும்ப அவகாசம் வழங்கப்பட்டது. ஆறு பேர் தவிர, மற்றவர்கள் யாரும் களத்தில் இல்லை.

இதனையடுத்து திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், சுதீஷ், கிறிஸ்டோபர் திலக்,  தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி அறிவித்துள்ளார்.

https://athavannews.com/2026/1467774

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் - வேகமெடுக்கும் கரூர் நெரிசல் வழக்கு

1 week 4 days ago

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூரில் கடந்த் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கி 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அப்போதே விஜய்யின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு, விஜய் கைதாக வாய்ப்பு என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஊகங்கள் பொய்க்க அவர் விசாரணை முடிந்து சென்னை திரும்பினார்.

அதேவேளையில், 2-வது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் படலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து சிபிஐ அலுவலக வட்டாரங்களில், ‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் சில விவரங்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பாக விஜய்யிடம் மேலும் விசாரித்து, தெளிவு பெற வேண்டியுள்ளது. இதன் நிமித்தமாகவே அவர் மார்ச் 10-ல் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், இதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகங்களை சிலர் எழுப்பி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாகக் களம் காண திட்டமிட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தவெக தனித்து நிற்கிறது. தவெகவை தங்கள் கூட்டணிக்கு வருமாறு தமிழக பாஜக தரப்பில் காய் நகர்த்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் விஜய்க்கு சிபிஐ அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் - வேகமெடுக்கும் கரூர் நெரிசல் வழக்கு

எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? விஜய்யை கிழித்தெறிந்த தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார்

1 week 5 days ago

எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? விஜய்யை கிழித்தெறிந்த தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார்

Mani Singh SUpdated: Sunday, March 8, 2026, 21:33 [IST]

Ranjana Nachiyar slams Vijay Over Divorce Remark Asks Do You Have Respect to Speak on Feminism

சென்னை: பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா? என தவெக உறுப்பினர் ரஞ்சனா நாச்சியார் விஜய்க்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தனது விவாகரத்து வழக்கு வொர்த்தே இல்லை என விஜய் பேசியதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். எது வொர்த் இல்லை?, உங்கள் மனைவியா அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? எனவும் ரஞ்சனா நாச்சியார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Also Read

சங்கீதாவுக்கு துரோகம்.. தாய், தந்தையை மதிக்காத விஜய் எப்படி முதல்வர் ஆக முடியும்? தனியரசு அட்டாக்

மனம் திறந்த விஜய்

அப்போது அவர், "அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை.. தேவையின்றி நீங்க கஷ்டப்படாதீங்க.. நீங்க கஷ்டப்படுறத பார்த்தா எனக்கு கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா?

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.. முக்கியமாக எங்கள் தலைவர், விஜய் அவர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த மேடையில் தலைவர் பல கருத்துகளை பகிர்ந்தார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினையை நேரடியாகச் சொல்லாமல், கோடிட்டு காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது.

Ranjana Nachiyar slams Vijay Over Divorce Remark Asks Do You Have Respect to Speak on Feminism

Recommended For You

collage-1772866680.jpg

"அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை" என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம் தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?

ஏழு பொண்டாட்டி கட்டுவான்

ஒரு அரசியல் தலைவர் பேசும் ஒவ்வொரு சொல்லும், ஒரு குடும்பத்தில் மட்டும் ஒலிக்காது. அது ஒரு சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும். உங்கள் மனைவி அவர்கள் உங்கள் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன.

உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில், "வீட்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருகிறேன்" என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா?

You May Also Like

என் புள்ளைய அந்த மர்ம வலையில இருந்து காப்பாத்துங்க: உருகிய எஸ்ஏசி.. விஜய் பற்றி உடைத்த உண்மை இதுதான்

ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன ? உங்களை தெய்வமாகக் கருதி வாழும் உங்கள் ரசிகர்கள், குறிப்பாக இன்றைய Gen-Z தலைமுறையினர், சமூக ஊடகங்களில் என்ன பேசுகின்றனர் தெரியுமா? "எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான், அதில் தவறு இல்லை" என்று எழுதுபவர்கள் இருக்கின்றனர். "நான் உனக்கு பொண்டாட்டியாக வருகிறேன்; உன் மனைவியை விட்டு விலகிவிடு" என்று எழுதும் பதிவுகளும் இருக்கின்றன..

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே

இந்த மொழி யாரால் உருவாக்கப்பட்டது? இந்த மனநிலை எங்கே இருந்து வந்தது? ஒரு தலைவரின் சொல் ஒரு ரசிகனின் முழக்கமாக மாறும். ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும். "தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே" என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? "திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்" என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா?

இது தான் நம் தமிழ் கலாச்சாரமா? தமிழ் பண்பாடு பெண்களை பொருளாக பார்க்கவில்லை. மரியாதையாக பார்த்தது. தமிழ் மரபு பெண்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களை உயர்த்தியது. நம் கலாச்சாரம் என்ன சொல்கிறது? இழவு வீட்டிற்கு சென்று கேதம் கேட்பதே நம் பண்பு. அன்பும் மரியாதையும் காக்கும் வாழ்வே நம் வழி. துயரத்தில் இருக்கும் குடும்பங்களிடம் சென்று, அவர்களின் கண்ணீரை துடைப்பதே தமிழர் மரபு.

இது தான் நம் கலாச்சாரமா?

அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதே மனிதநேயத்தின் அடையாளம். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை, அவர்கள் துயரத்தில் இருக்கும் அந்த நேரத்தில், அவர்களையே உங்கள் இடத்திற்கு வரவைத்து இரங்கல் தெரிவித்தீர்கள். இது தான் நம் கலாச்சாரமா? இது தான் தமிழர் பண்பாட்டின் வழியா? துயரத்தில் இருக்கும் மனிதர்களிடம் செல்வதே மரபு, அவர்களை அழைத்து வருவது மரபல்ல.

அதையும் 'பரவாயில்லை" என்று ஏற்றுக்கொண்டு விட்டுவிட்டதால் இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி விட்டது. ஒரு தலைவர் உருவாக்கும் நடைமுறை, நாளைய அரசியலின் ட்ரெண்டாக மாறிவிடும். அதனால் தான் நான் கேட்கிறேன் -தமிழக அரசியலில் நாம் உருவாக்க வேண்டியது மரபை மதிக்கும் கலாச்சாரமா? அல்லது மரபை மாற்றும் மோசமான ட்ரெண்ட் செட்டிங்களா? தமிழர் கலாச்சாரம் மரியாதையை கற்றுக் கொடுத்தது. அந்த மரியாதையை காக்கும் அரசியல் தான் தமிழகத்திற்கு தேவையான அரசியல் அந்த மரபை மாற்றும் வழியில் நாம் போகக் கூடாது.

கண்ணியத்தை காக்க வேண்டாமா?

எனது மூதாதையரான வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல. வாழ்க்கையில் ஒழுக்கம். பெண் என்பது ஒரு உறவு மட்டும் அல்ல. ஒரு மரியாதை.

இன்றைய Gen-Z தலைமுறையின் பெற்றோர்கள் கூட, உங்கள் செயல்-பேச்சுகளை பார்த்து மெதுவாக கவலைப்படத் தொடங்கியுள்ளனர். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் இயக்கம், தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கம் காரணமாக தேய்ந்து போகக் கூடாது. அது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் புறக்கணிக்கிறீர்களா?

"பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா ? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது.

முன்னுதாரணமாகவே இருங்கள்

ஒரு தலைவர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் உருவாக்கும் கலாச்சாரம் தான் ஒரு தலைமுறையை உருவாக்கும். TVK ல் உங்களுடன் இணைந்து பயணிக்கும் நான் அக்கறையுடன் எச்சரிக்க வருகிறேன். மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள். தமிழக இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகவே இருங்கள்.

நம் மதிப்பையும் மரியாதையும் நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அந்த மரியாதையை உயர்த்தவோ அல்லது மெதுவாகக் குறைக்கவோ செய்கிறது. சரியோ தவறோ அதைப் பற்றி பேசாமல் மௌனம் காப்பது அறிவுடைமை அல்ல.

நாம் செய்யும் துரோகம்

சமுதாயத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஏனெனில் மௌனம் பல நேரங்களில் ஒப்புதலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால் நம் மரபையும், நம் மதிப்பையும், நம் மரியாதையையும் காக்க தேவைப்படும் போது குரல் கொடுப்பதே ஒரு பொறுப்புள்ள சமூகத்தின் அடையாளம் மேலும் ஒரு தலைவனின் பண்பு.

தமிழக வெற்றிக்கழகத்தில் பயணித்துக்கொண்டே இதை நான் சுட்டிக்காட்டாவிட்டால் அது நம் கழகத்துக்கும், மக்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் இளைஞர்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

https://tamil.oneindia.com/news/chennai/ranjana-nachiyar-slams-vijay-over-divorce-remark-asks-do-you-have-respect-to-speak-on-feminism-779707.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

பிகு

விஜை சீமான் கூட்டணி வைத்தால் சகல விதத்திலும் பொருத்தமாய் இருக்கும்.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கொலை; உறவினர்கள் சாலை போராட்டம்.!

1 week 5 days ago

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கொலை; உறவினர்கள் சாலை போராட்டம்.!

01-2.jpg

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதி முகாமில் வசித்து வந்த சிவக்குமார் என்ற இலங்கை தமிழர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களின் வீட்டை கொளுத்திய உயிரிழந்த சிவக்குமாரின் உறவினர்கள்.

அதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுளளதுடன் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கொலைச் சம்பவத்தினை கண்டித்து கும்மிட்டிப்பூண்டி இலங்கை தமிழ் முகாம் மக்கள் தேசிய நெஞ்சாலையினை மறித்து சாலை மறியல் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

https://akkinikkunchu.com/363341/

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

1 week 5 days ago

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

கட்டுரை தகவல்

  • சுதாகர்

  • பிபிசி தமிழுக்காக

  • 7 மார்ச் 2026

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார்.

குற்றம் நடந்த சுமார் 125 நாட்களில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி, 3 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்

இவ்வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கியது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு பிப்ரவரி 23ம் தேதி விசாரணை நிறைவு பெற்றது.

இந்நிலையில் மார்ச் 7 அன்று நீதிபதி சுந்தரராஜன், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

தண்டனை பெற்று தந்த ஆதாரங்கள்

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்காக வாதாடிய அரசு வழக்கறிஞர் ஜிஷா பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்த வழக்கில் குற்றம் நடந்த நேரம் இரவாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த தகவல்கள் மட்டுமல்லாமல் குற்றத்தை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்பித்தோம்.'' என்றார்.

''அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு ஆதாரங்கள் பெறப்பட்டது. டி.என்.ஏ ஆதாரங்கள் மூலம் குற்றவாளிகள் இவர்கள் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தது முதல் குற்றம் செய்து விட்டு தப்பி சென்றது வரையிலான 22 சிசிடிவி காட்சி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.

குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு பழைய வழக்குகள் உள்ளன. அவர்கள் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட முதல் வழக்கு இதுதான். பாதிக்கப்பட்ட பெண் குறித்து பரப்பபட்ட தவறான பிம்பங்களை சட்டரீதியாகவும் உடைத்துள்ளோம்" என்று கூறினார்.

"எதிர்தரப்பில் அந்த நேரத்தில் ஏன் பாதிக்கப்பட்ட பெண் அங்கு வந்தார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இரவு 10:45 மணிக்கு மட்டுமல்ல, நள்ளிரவு 2 மணிக்கு கூட பெண் அங்கு செல்லலாம். அதேபோல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அங்கு வரவில்லை என்ற வாதத்தையும் முன்வைத்தனர். அதற்கும் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் பதில் அளிக்கப்பட்டது." என்றார்.

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : 126 நாட்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

படக்குறிப்பு,ஜிஷா

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் டிஎன்ஏ மாதிரி முடிவுகள் துல்லியமாகத் திரட்டப்பட்டது. நீதித்துறையின் ஒத்துழைப்போடு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு வலுவான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

சிறைக்கு அழைத்து சென்ற போது குற்றவாளிகளில் ஒருவர் மீசையை முறுக்கிக் கொண்டு சைகை காண்பித்து சென்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பாதிக்கப்பட்ட பெண் பயப்பட தேவை இல்லை. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி கோவை பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. குற்றச் செயல்கள் என்பது ஓர் அசாதாரண மனநிலை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் வெளியே வர முடியாது. பாதிக்கப்பட்ட பெண் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு : 126 நாட்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு

விசாரணை அதிகாரி கூறுவது என்ன?

இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளுள் ஒருவரான காவல் ஆய்வாளர் அர்ஜுன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "மொத்தம் 60 காவல்துறையினர் இந்த வழக்கில் பணியாற்றினர். இந்த வழக்கில் பல்வேறு சவால்களை சந்தித்தோம். குற்றம் நிகழ்த்தப்பட்டு எங்களுக்கு தகவல் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட பெண்ணை காலை வரை தேடும் நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்தில் அந்த பெண்ணின் உடையை முதலில் கைப்பற்றிய போது அவரை உயிருடன் மீட்டுவிடுவோமா என்ற கவலை இருந்தது.

பின்னர் குற்றம் நடந்த இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில்அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்து அவர் உடல் அளவிலும் மனதளவிலும் மீண்டு வந்த பின்னர் அவரிடம் புகார் பெறப்பட்டது. அதேபோல் குற்றவாளிகளை உறுதி செய்து பிடிக்க செல்லும் போது பதுங்கியிருந்த அவர்கள் தாக்கியதால் துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கும் சூழல் ஏற்பட்டது. 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்தாலும், குற்றவாளிகள் தப்ப முடியாதவாறு வலுவான ஆதாரங்களை திரட்டி ஒரு மாதத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ததும் கடும் சவாலாக இருந்தது. இதுபோன்ற குற்றங்கள் புகார்களாக அளிக்கப்படுவதில்லை. இதனால் குற்றவாளிகள் துணிச்சலாக இதை செய்கின்றனர். இந்த தீர்ப்பு அதுபோன்ற குற்றவாளிகளுக்கு பாடமாக இருக்கும். பொதுமக்களும் விழிப்புணர்வோடு இதை அணுக வேண்டும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

'அடிமனை அரங்கநாதனுக்கே': ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு லட்சம் பேரை பாதிக்கும் என்ற அச்சம் ஏன்?

1 week 6 days ago

'அடிமனை அரங்கநாதனுக்கே': ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு லட்சம் பேரை பாதிக்கும் என்ற அச்சம் ஏன்?

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

கட்டுரை தகவல்

காவிரி ஆற்றின் கரையோரமுள்ள ஸ்ரீரங்கம், கடந்த சில வாரங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு காரணம், ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை விவகாரம்.

'அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்' என, பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலை வரும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

"பூர்வீகமாக வாழ்ந்து வருவதால் இடம் தங்களுக்கே சொந்தம்" என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

"கோவில் நிலத்துக்கு தனி நபர்கள் உரிமை கோருவதை அனுமதிக்க முடியாது" என இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கோவில் அடிமனை விவகாரத்தின் பின்னணியை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்

திருச்சியில் இருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ கோவில்களில் முதன்மையானதாக இந்தக் கோவில் உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை கூறுகிறது.

பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோவிலாக ஸ்ரீரங்கம் உள்ளது எனவும் பூலோக வைகுண்டம் என்று இந்தக் கோவில் அழைக்கப்படுவதாகவும் இந்துசமய அறநிலையத்துறை இணையதளம் கூறுகிறது.

காவிரி ஆற்றினால் சூழப்பட்ட திருநாவலந்தீவில் 236 அடி ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்களுடன் 156 ஏக்கர் பரப்பளவில் அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

அடிமனை என்று கூறுவது ஏன்?

கோவிலுக்கு வெளியில் நான்கு உத்தரவீதிகள், நான்கு சித்திரவீதிகள், நான்கு அடையவளைஞ்சான் (கோவில் பிரகாரத்தைச் சுற்றியுள்ள வீதிகள்) உள்பட 329 ஏக்கர் நிலத்தில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகக் கூறுகிறார், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம்.

ஸ்ரீரங்கம் கோவில் நிலங்களை 'அடிமனை' என கோவில் நிர்வாகம் கூறுகிறது. 1998ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பிலும் இதே வார்த்தையை நீதிபதி பயன்படுத்தியுள்ளார்.

மனையின் அடியில் உள்ள நிலம் என்பதைக் குறிக்கும் வகையில் 'அடிமனை' என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறார், சுரேஷ் வெங்கடாச்சலம்.

கோவிலின் பராமரிப்பு செலவுக்காக தேவதாயம் (Devadayam) என்ற பெயரில் சுற்றியுள்ள நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விவரங்கள் 1864 ஆம் ஆண்டு இனாம் காட்சிப் பதிவேட்டில் (Inam Fair Register) பதிவாகியுள்ளது.

"தமிழ்நாட்டில் 1963 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 1969 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தாசில்தார் விசாரணை நடத்தி கோவில் நிலத்தில் குடியிருந்த மக்களுக்கு பட்டா வழங்கினார்" என சுரேஷ் வெங்கடாச்சலம் குறிப்பிட்டார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு,"ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறுகிறார், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம்.

மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி

ஆனால், 'இந்த பட்டா செல்லாது' எனவும் இனாம் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கோவில் நிலங்கள் வராது எனவும் அரங்கநாத சுவாமி தேவஸ்தானம் சார்பில் 1981 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இனாம் ஒழிப்பு தீர்ப்பாயம் (Inam Abolition Tribunal) என்பது பல்வேறு காரணங்களுக்காக வழங்கப்பட்ட இனாம் நிலங்களை ரத்து செய்து அவற்றுக்கு பட்டா வழங்குவதற்காகவும் இதுதொடர்பான பிரச்னைகளை தீர்க்கவும் அமைக்கப்பட்டது.

சுமார் 1500 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கு எதிராக இந்த வழக்கை கோவில் நிர்வாகம் தொடர்ந்திருந்தது. 1998ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த இனாம் ஒழிப்பு தீர்ப்பாய நீதிபதி பொன்.கலையரசன், 'அடிமனை கோவிலுக்கு சொந்தம்; மனையில் உள்ள கட்டடம் மக்களுக்கு சொந்தம்' எனத் தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 1998ஆம் ஆண்டு பொன்.கலையரசன் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.

'தங்களுக்கே முழு நிலமும் சொந்தம்' என அறிவிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்தநிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் தரப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி வசிக்கும் 41 பேர் வசிக்கும் இடத்தைக் காலி செய்து தங்களிடம் நிலத்தை ஒப்படைக்குமாறு கோவில் நிர்வாகம் அந்த மனுவில் கோரியிருந்தது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

'அடிமனைகள் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்'

சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுமார் 700 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் பல்வேறு விஷயங்களை நீதிபதி சுவாமிநாதன் மேற்கோள் காட்டியுள்ளார்.

சொத்துகளின் முழு உரிமையாளராக கோவில் நிர்வாகம் இருப்பதாக முந்தைய வழக்குகளில் கூறப்பட்டுள்ளதாகவும் தனக்குள்ள உரிமை அடிப்படையில் கோவில் நிர்வாகம் உரிமை கோருவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கோவில் நிலத்தில் குடியிருக்கும் மக்கள் 30.9.1951ஆம் ஆண்டுக்கு முன்பு தங்களுக்கோ அல்லது தங்களின் முன்னோடிகளுக்கோ இவற்றில் உரிமை இருந்தது என்பதை நிரூபிப்பதற்கு சட்டப்பூர்வமான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை' என நீதிபதி தெரிவித்துள்ளார்.

குடியிருப்புவாசிகள் சமர்ப்பித்த ஆவணங்கள் பலவும் அர்ச்சகர்கள் உள்பட பல்வேறு உரிமைகளில் நடந்த பரிவர்த்தனைகளை மட்டுமே காட்டுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், 'ஸ்ரீரங்கம் கோவில் அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்' எனவும் கோவில் நிலத்தின் குடியிருக்கும் மக்கள் மூன்று மாதங்களுக்குள் இடத்தைக் காலி செய்து நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் மதுரை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'கட்டடம் மக்களுக்கு சொந்தம்' எனக் கூறப்பட்ட நிலையில், காலி இடத்தை ஒப்படைக்குமாறு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

"ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படுவார்கள்ர்" எனக் கூறுகிறார், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம்.

'நிம்மதியாக தூங்க முடியவில்லை'

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு,"இந்த வீடு ஒன்று தான் எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்தாக உள்ளது. எனக்குத் திருமணம் முடிந்து 50 வருடங்களுக்கு மேலாக இங்கு தான் வசித்து வருகிறோம்" என்கிறார், திருவள்ளுவர் நகரில் வசிக்கும் ஜான்சிராணி.

ஸ்ரீரங்கத்தில் உத்தரவீதிகள், சித்திரவீதிகள், அடையவளஞ்சான் தெருக்களில் வசிக்கும் மக்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இந்த வீடு ஒன்று தான் எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்தாக உள்ளது. எனக்குத் திருமணம் முடிந்து 50 வருடங்களுக்கு மேலாக இங்கு தான் வசித்து வருகிறோம்" என்கிறார், திருவள்ளுவர் நகரில் வசிக்கும் ஜான்சிராணி.

கொரோனா தொற்று காலத்தில் கணவரை இழந்த இவர், தனது மகன்களுடன் வசித்து வருகிறார். "சுமார் 17 வருடங்களாகவே இது கோவில் நிலம் எனப் பேசி வருகின்றனர். நிம்மதியாக தூங்குவதற்கு ஓர் இடம் உள்ளது என நினைத்தோம். அதற்கும் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்" என்கிறார் அவர்.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசும் ஜான்சிராணி, "இப்படியொரு தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்களும் பெருமாளைக் கும்பிடுகிறவர்கள் தான். 90 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்றால் எங்கே போய் நிற்பது?" எனக் கேள்வி எழுப்புகிறார்.

கோவில் நிலம் எனக் கூறி 2007ஆம் ஆண்டு 329 ஏக்கரில் அமைந்துள்ள நிலங்களுக்கு பத்திரப்பதிவை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறார், கலைச்செல்வி.

இவர் தெற்கு அடையவிளைச்சான் பகுதியில் சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார். "எனது முன்னோர் 1921 ஆம் ஆண்டில் இருந்தே இதே தெருவில் தான் வசித்து வருகின்றனர். இந்த சொத்தின் பத்திரத்தைக் கூட இப்போது எங்களால் அடமானம் வைக்க முடியவில்லை" என்கிறார் அவர்.

"வீடு கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி தருவதில்லை. ஆனால், வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை தவறாமல் செலுத்தி வருகிறோம்" என்று கலைச்செல்வி கூறினார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு,"வீடு கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி தருவதில்லை. ஆனால், வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை தவறாமல் செலுத்தி வருகிறோம்" என்கிறார் கலைச்செல்வி

'தேர்தலை புறக்கணிப்போம்'

அடிமனை பிரச்னையால் மனதளவில் தனது குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், இதே பகுதியில் வசிக்கும் ஜெகதீஸ்வரி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " எனது கணவர், பூ சந்தையில் மூட்டை தூக்கும் வேலை செய்கிறார். தினமும் 200 ரூபாய் வரை வருமானம் வருகிறது. எங்களால் வேறு இடத்தில் வாடகை கொடுத்து வாழ முடியாது" என்கிறார்.

தற்போது குடியிருக்கும் வீட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கிக் கட்டியதாகக் கூறும் ஜெகதீஸ்வரி, "கோவில் நிலம் எனத் தெரிந்திருந்தால் வீடு கட்டியிருக்க மாட்டோம். வாங்கிய கடனை இன்னும் கட்டி வருகிறோம்" எனக் கூறுகிறார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு,தற்போது குடியிருக்கும் வீட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கிக் கட்டியதாகக் கூறும் ஜெகதீஸ்வரி, "கோவில் நிலம் எனத் தெரிந்திருந்தால் வீடு கட்டியிருக்க மாட்டோம். இன்னமும் கடனை கட்டி வருகிறோம்" எனக் கூறுகிறார்.

'அரசே ரத்து செய்தது சரியல்ல'

"இனாம் ஒழிப்புச் சட்டத்தின்படி அரசே முன்வந்து மக்களுக்கு பட்டா கொடுத்தது. அதை அரசே ரத்து செய்தது எந்த வகையிலும் நியாயம் அல்ல" என்கிறார், ஸ்ரீரங்கம் நகர குடியிருப்போர் நலச் சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவராம்குமாரிடம் நேரில் பேச பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அந்த முயற்சி பலன் தரவில்லை.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு, பிபிசி கள ஆய்வு

இதையடுத்து, இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவிடம் பிபிசி தமிழ் பேசியது.

"கோவிலுக்கு 329 ஏக்கர் நிலமும் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள் முழுமையாக உள்ளன. உண்மையில் 454 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. சாலை உள்பட இதர பயன்பாடுகளைத் தவிர்த்து மற்றவை கோவிலுக்கு சொந்தமானவையாக உள்ளன" என்கிறார் அவர்.

"அனைவரிடமும் பணம் வாங்கி கோவிலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறும் கூடுதல் ஆணையர் கவிதா, "ஆனால் அந்த நிலம் கோவிலின் சொத்து என்பதை அனைவரும் ஏற்க வேண்டும் என்பது தான் இதில் முக்கியமானது" எனக் கூறுகிறார்.

கோவில் சொத்து என்பதை ஏற்றுக் கொண்டால் அதற்கேற்ப வரி வசூல் செய்ய வேண்டும் என 2003 ஆம் ஆண்டிலேயே அரசுக்குப் பரிந்துரை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் கோவில் நிலங்களில் மக்கள் குடியிருந்துள்ளனர். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என எந்த இடத்திலும் கூறவில்லை" எனக் கூறும் கவிதா, "கோவில் சொத்துகளை உரிய அனுமதியின்றி அனுபவிப்பதை ஏற்க முடியாது" என்றார்.

'இருமுறை பேசினேன்' - எம்.எல்.ஏ பழனியாண்டி

ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பழனியாண்டியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"கோவில் அடிமனைப் பிரச்னை தொடர்பாக சட்டமன்றத்தில் இரண்டு முறை பேசியிருக்கிறேன். இதற்கென குழு அமைத்து பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.

'காலம் காலமாக வசிக்கும் தங்களுக்கே நிலம் சொந்தம்' என ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் கூறினாலும், வரியை ஏற்றால் மட்டுமே சுமூக தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

'அடிமனை அரங்கநாதனுக்கே': ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு லட்சம் பேரை பாதிக்கும் என்ற அச்சம் ஏன்?

` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்

2 weeks 2 days ago

"ரொம்ப நாள் ஆசைய்யா... ஆனா யார்கிட்ட கேட்டாலும் யாராவது சொந்தக்காரங்க சாட்சிக் கையெழுத்துப் போடணும்னு சொன்னாங்க. யாரைக் கூட்டிட்டிப் போறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ அறிவு இருக்கான்ல... நல்லகண்ணு அய்யாவே தன்னோட உடலை தானம் செஞ்சுட்டாரு... இதுக்கு மேல காத்திருக்கக் கூடாதுன்னு போய் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்..." - அற்புதம் அம்மாளின் வார்த்தைகளில் அத்தனை திருப்தி.

அற்புதம் அம்மாளும் பேரறிவாளனும் இன்று (மார்ச் 4) சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு தன் உடலைத் தானம் செய்த பிறகு உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது.

"எப்படியிருந்தாலும் மண்ணுக்குப் போற உடம்பு... மருத்துவம் படிக்கிற நம்ம பிள்ளைகளோட ஆராய்ச்சிக்கு தேவையில பாதிகூட உடல்கள் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்க. அவங்களுக்கு உதவட்டுமே... ரொம்பநாளா நினைக்கிறேன். ஆனா அதுக்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதா இல்லை. இன்னைக்கு நிம்மதியா முடிச்சுட்டேன். அறிவுக்கிட்ட சொன்னப்போ, கொஞ்சம் யோசிச்சான்... 'போடுப்பா கையெழுத்தைன்னு சொல்லிட்டேன். என் உடலைத் தானம் செய்யப்போனா கூடவே அவனும் செஞ்சிட்டான்...

` மண்ணுக்கு போற உடம்பு; படிப்புக்கு உதவட்டுமே!'- உடல் தானப் பதிவுசெய்த அற்புதம் அம்மாள், பேரறிவாளன்

சாங்கியம், சடங்குகள் எல்லாம் வழக்கமா நாங்க செய்றது இல்லை. அதனால முழு மனதோட இந்த முடிவை எடுத்தோம்... எனக்கு அவனும் அவனுக்கு நானும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுக்கிட்டோம்..." என்கிறார் அற்புதம் அம்மாள்.

"அம்மா தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கூட இருக்கவங்ககிட்டயும் நிறைய பார்க்கிறோம். சமீபத்துல என் நெருக்கமான நண்பர், 'கீற்று' ரமேஷ் மனைவி காலமானபோது அவர் ரொம்ப உறுதியா நின்னு உடல்தானம் செஞ்சார். இத்தனைக்கும் அவங்க இறக்கும்போது 43 வயதுதான். தஞ்சாவூர்ல ஒரு நண்பர் தன் அப்பாவோட உடலை தானம் செஞ்சார். ஒரு தம்பி தன் பிள்ளையோட கண்ணை தானம் செஞ்சார். இது எல்லாத்திலயும் கூட நின்னேன். எனக்கு இதெல்லாம் பெரிய தாக்கத்தை உருவாச்சு. நல்லகண்ணு அய்யாவோட உடலை தானம் செஞ்ச பிறகு அம்மா ரொம்ப உறுதியா நின்னாங்க. கூடவே நானும் பதிவு செஞ்சுக்கிட்டேன்... இது பெரிய விஷயமில்லை. ஆனா, நிறைய பேர் செய்ய முன்வரணும்..." என்கிறார் பேரறிவாளன்.

உடல் தானம்

உடல் தானம்

உறுப்பு தானம் பலரின் உயிரை மீட்கும். உடல் தானம், மருத்துவத்துறை மாணவர்கள் கற்றுத்தேர்ந்து மனித குலத்தைக் காக்க உதவும்! தாயும் பிள்ளையும் ஒருசேர உடல் தானத்துக்குப் பதிவு செய்திருப்பது நல்லதொரு முன்னுதாரணம்... வாழ்த்துகள்!

காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!

Checked
Fri, 03/20/2026 - 19:44
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed