தமிழகச் செய்திகள்

தொகுதிப் பங்கீட்டில் இரட்டை சவாலை எதிர்கொண்டுள்ள திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது?

6 hours 6 minutes ago

தொகுதிப் பங்கீட்டில் இரட்டை சவாலை எதிர்கொண்டுள்ள திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது?

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படபடம்

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"புதிய கட்சிகளுக்கு திமுக போட்டியிட்ட இடங்களை தானமாக வழங்க வேண்டிய சூழல் உள்ளது. கூட்டணி நலன் கருதி கூட்டணி கட்சிகளும் சில இடங்களை விட்டுத் தர வேண்டும்,"

திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு தங்களிடம் இவ்வாறு கூறியதாக இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக-முஸ்லிம் லீக் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்தை அவர் தெரிவித்திருந்தார்.

"நீங்கள் 3 இடங்களில் போட்டியிட்டீர்கள், தொகுதியை குறைக்கச் சொல்லி கேட்கவில்லை. ஆனால் ஏதாவது ஒரு தொகுதியை தானமாக கொடுத்தால் நன்றாக இருக்கும். கூட்டணி கட்சிகளில் உள்ளவர்களிடம் தொகுதிகளைக் குறைக்குமாறு கேட்கிறோம், அந்த அடிப்படையிலே உங்களிடமும் கேட்கிறோம்.' என்று திமுக தரப்பில் கூறினார்கள்." என்று அவர் குறிப்பிட்டார்.

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன்

மறுநாள் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, "கடந்த முறை 2 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றோம். இந்த முறையும் உதய சூரியன் சின்னத்திலே போட்டியிடுவோம். 5 இடங்களைக் கேட்டுள்ளோம். இது முதல்கட்ட பேச்சுவார்த்தை தான். அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் எனக் கூறியிருக்கிறார்கள்," எனத் தெரிவித்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்றவை இருந்தன. வேறு சில சிறிய கட்சிகளும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டன.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் புதிதாக மக்கள் நீதி மய்யம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் ஆகியவை இணைந்துள்ளன.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் கூட்டணி கட்சிகள், கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதல் இடங்களைக் கேட்பதாகவே தெரிவித்து வருகின்றன.

"விரைவில் உடன்படிக்கை எட்டப்படும்" - காங்கிரஸ்

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம்,X/Gopanna

படக்குறிப்பு,காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா

திமுக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சி தான் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்திருந்தது. இந்த நிலையில் அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார்.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, "காங்கிரஸ் தலைமையின் முடிவு திமுக தலைமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாகவே உள்ளது. விரைவில் உடன்படிக்கை எட்டப்படும்," எனத் தெரிவித்தார்.

"எங்களுக்கான நியாயம் உள்ளது" - விசிக

கூடுதல் இடங்களைக் கேட்பதற்கான நியாயம் விசிகவுக்கு உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேமுதிகவின் வருகை கூட்டணிக்கு வலு சேர்த்துள்ளது உண்மை தான். ஆனால் விசிக அல்லது இடதுசாரி கட்சிகள் நீண்ட காலமாக ஒரே கூட்டணியில் உள்ளன. இரு தரப்புக்கு இடையே பேரம் நடத்தவில்லை. எனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சந்தை அணுகுமுறை இல்லாமல் கொள்கை அணுகுமுறையையே கடைபிடிக்க விரும்புகிறோம்." எனத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட விசிக 4 இடங்களில் வென்றிருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் 2 இடங்களில் போட்டியிட்டு வென்றிருந்தது.

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம்,X/Sinthanai Selvan

படக்குறிப்பு,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன்

"கடந்த சில வருடங்களில் கட்டமைப்பு ரீதியாக வளர்ந்துள்ளோம், இதை திமுகவும் ஒப்புக்கொள்ளும். இப்போது ஒரு மையநீரோட்ட கட்சியாக வளர்ந்துள்ளோம். திமுக தலைமையும் விசிகவின் இடத்தை புரிந்துகொண்டுள்ளது. எங்களுடைய வெற்றி விகிதமும் அதிகமாக உள்ளது. அதனால் நிச்சயம் கடந்த முறை போட்டியிட்டதைவிட இந்த முறை கூடுதலான இடங்களைக் கேட்போம்." என்றும் குறிப்பிட்டார்.

புதிய கட்சிகளைச் சேர்க்க வேண்டிய தேவையை தவிர்த்துவிட முடியாது எனக் கூறும் சிந்தனை செல்வன், "அதே வேளையில் எங்களுக்கான நியாயங்களும் உள்ளன. அதற்கேற்ப இடங்களைக் கேட்டுப் பெறுவோம். அதற்கான பக்குவப்பட்ட தலைமை இரண்டு கட்சிகளிலும் உள்ளது." என்றும் தெரிவித்தார்.

"இரட்டை இலக்கத்தில் போட்டி" - சிபிஎம்

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம்,X/Shanmugam P

படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம்.

இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம் என்கிற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட சிபிஎம் 2 இடங்களில் வென்றிருந்தது.

பிபிசி தமிழிடம் பேசிய சண்முகம், "நாங்கள் அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் தொடர்ந்து நிலையாக இருந்து வருகிறோம். இரட்டை இலக்க இடங்களில் போட்டியிடுவது தான் கட்சியின் நிலைப்பாடு என முன்னர் அறிவித்திருந்தோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும் அதையே வலியுறுத்துவோம்," எனத் தெரிவித்தார்.

"மதிமுக முன்வைத்த 3 கோரிக்கைகள்"

பேச்சுவார்த்தையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் குழு மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறுகிறார் அக்கட்சியின் பொருளாளர் செந்தில் அதிபன்.

கடந்த முறை 6 இடங்களில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக அதில் 4 இடங்களில் வென்றிருந்தது.

"மதிமுகவும் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. கடந்த முறை போட்டியிட இடங்களை விட கூடுதலான இடங்களைக் கேட்டுள்ளோம். அதோடு ஒரு மாநிலங்களவை இடமும், தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்," என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

"திமுக குறைவான இடங்களில் போட்டியிடலாம்"

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் பிரியன்

"முஸ்லிம் லீக் கட்சி கடந்த முறை மூன்று இடங்களில் தோல்வியடைந்தது. அதோடு திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் உள்ளது, கூடுதலாக தமிமுன் அன்சாரியும் இருக்கிறார். தற்போது எஸ்டிபிஐ கட்சியும் உள்ளது. எனவே சில இடங்களைப் பிரித்து இதர இஸ்லாமிய கட்சிகளுக்கு வழங்கலாம் என திமுக நினைத்திருக்கலாம். ஆனால் விசிக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தாங்கள் போட்டியிடும் இடங்களைக் குறைத்துக் கொள்ள வாய்ப்பு இல்லை," என்கிறார் பிரியன்.

"திமுக கூட்டணியில் கடந்த முறையே இடங்கள் பங்கீடு என்பது சவாலானதாக இருந்தது. தற்போது புதிதாக மேலும் சில கட்சிகள் இணைந்திருப்பது கூடுதல் சவாலானதாகவே இருக்கும். திமுக குறைவான இடங்களில் போட்டியிட தயாராக என்றாலும் கூட்டணி கட்சிகள் எந்த அளவுக்கு இறங்கி வருவார்கள் என்பது கேள்விக்குறி தான்." என்கிறார் அவர்.

"இரட்டை சவாலை திமுக எவ்வாறு சமாளிக்கப் போகிறது?"

புதிய கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்களை வழங்க வேண்டும் என்கிற இரட்டைச் சவாலை திமுக சந்தித்து வருவதாகக் கூறுகிறார் பிரியன்.

"கடந்த தேர்தலில் பெற்ற வெற்றி சதவிகிதம் (ஸ்ட்ரைக் ரேட்) ஒரு கருதுகோலாக இருந்தாலும் கடந்த தேர்தலைக் காட்டிலும் தற்போது சூழல் மாறியுள்ளது. போட்டி கடுமையாக உள்ள, குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள இடங்களைக் குறிவைத்து தான் பல கட்சிகளை கூட்டணியில் திமுக இணைத்து வருகிறது. இது சிறிய கட்சிகளுக்கு பேச்சுவார்த்தையில் வலு சேர்க்கிறது."

"இதனால் நீண்ட காலம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்கின்ற போது திமுகவால் அதனை தவிர்க்க முடியாது. சிறிய கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக கூறலாம். எனவே புதிய கட்சிகளுக்கு இடம் கொடுத்து கூட்டணி கட்சிகளுக்கும் கூடுதல் இடம் கொடுத்தால் திமுக இம்முறை 18 இடங்கள் வரை குறைவாகவே போட்டியிடும் சூழல் உருவாகலாம்." எனத் தெரிவித்தார்.

"கூட்டணியின் வெற்றி முக்கியம்" - திமுக

திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு

பட மூலாதாரம்,Constantine Ravindran

படக்குறிப்பு,கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அனைத்து தரப்புக்கும் இணக்கமான சூழல் எட்டப்படும் என்கிறார் திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

"திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அப்படியே இருக்கின்றன. புதிதாக சில கட்சிகளும் கூட்டணியில் இணைந்து வருகின்றன. இந்தச் சூழலில் கட்சியின் வெற்றி என்பதை விட கூட்டணியின் வெற்றி என்பதும் முக்கியமானது. எனவே கூட்டணியின் வெற்றியைக் கவனத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்," என்றார்.

கூட்டணி கட்சிகள் கூடுதல் இடங்களில் போட்டியிடும் தங்களின் விருப்பத்தை வெளிப்படையாக கூறி வருகின்றன. அதைப் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஸ்ட்ரைக் ரேட் என்பது இரண்டாம் பட்சம் தான். நீண்ட காலமாக கூட்டணியில் தொடரும் கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்பதில் தவறில்லை. அது அவர்களின் உரிமை. ஆனால் புதிய கட்சிகள் இணைவதால், திமுக கூடுதல் இடங்களை வழங்குவதற்கு தயாரா என்பதை விடவும் அது சாத்தியமா என்பதைப் பார்க்க வேண்டும். வெற்றி பெறும் சதவிகிதத்தை அதிகரிப்பதற்கான தேவையும் இருக்கிறது. தற்போது முதல் கட்ட பேச்சுவார்த்தை தான் நடைபெற்று வருகிறது. விரைவில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும்." எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2k8zdk8kqeo

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: "மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர்" - இந்தியப் பிரதமர் மோடி புகழாரம்!

6 hours 27 minutes ago

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: "மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர்" - இந்தியப் பிரதமர் மோடி புகழாரம்!

24 Feb, 2026 | 10:39 AM

image

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

"ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். அவர் ஒரு மனம் கவர்ந்த தலைவராகவும், தலைசிறந்த நிர்வாகியாகவும் எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் அசாத்தியமான மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் அமைந்திருந்தது."

"தமிழக முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அவர் உறுதியான நோக்கத்தைக் கொண்டிருந்தார். சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களை முன்னிறுத்தி, ஒரு சிறந்த ஆட்சியாளராக அவர் திகழ்ந்தார். கருணை மற்றும் உறுதி ஆகிய இரு பண்புகளையும் அவர் ஒருங்கே பெற்றிருந்தார்."

"அவருடனான எனது கடந்தகால கலந்துரையாடல்களை நான் எப்போதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். இந்த மாத 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் ஜெயலலிதா குறித்து நான் பகிர்ந்த கருத்துக்களையும் இதனுடன் இணைத்துள்ளேன்." எனப் இந்தியப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (24) ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/239435

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

2 days 15 hours ago

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

21 Feb, 2026 | 02:50 PM

image

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை (21) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மீனவர்களையும், விடுதலை செய்யப்படாமல் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப் படகையும் விடுவிக்க கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசிடம் வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

637331712_1563961981525499_1267095326804

638324920_947318571056669_42695674847552

637808568_1328805335723065_1537491775497

https://www.virakesari.lk/article/239231

ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன?

4 days 11 hours ago

ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன?

ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி ஓ.பன்னீர் செல்வம் கூறியது என்ன?

பட மூலாதாரம்,ANI

20 பிப்ரவரி 2026, 10:01 GMT

புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப்ரவரி 20) தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

அந்தச் சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" எனக் கூறினார்.

அதற்கு முன்னதாக, இன்று சட்டப்பேரவையில் பேசிய உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன், "எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியோடு, ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் மீண்டும் முதல்வராக வேண்டும்" எனக் கூறினார்.

அப்போது ஓ.பன்னீர் செல்வமும் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம், திமுக

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன்

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்எல்ஏ பேசியது என்ன?

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதிலுரை வழங்கினார்.

அதிமுக உறுப்பினர்கள், அன்புமணி தலைமையிலான பாமக உறுப்பினர்கள் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இந்தப் பதிலுரையை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன், "முதல்வரின் காலை உணவு திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் ஏற்படுத்தப்பட்ட திட்டம். ஆரம்பப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தாயாக இருந்து முதலமைச்சர் உணவு வழங்கி வருகிறார். காலை உணவு திட்டத்துக்காக தமிழ் சமுதாயம் இருக்கும் வரை முதலமைச்சரை பாராட்டிக் கொண்டிருப்பார்கள்." என்று கூறினார்.

மேலும், "வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆசியோடும், புரட்சி தலைவி அம்மா ஆசியோடும், மீண்டும் மீண்டும் வரவேண்டுமென இந்த நேரத்தில் அவரை வாழ்த்துகிறேன். என் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் பேசியதைக் கேட்டு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வமும் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம், திமுக

பட மூலாதாரம்,@Udhaystalin/X

படக்குறிப்பு,கடந்தாண்டு ஜூலை மாதம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் (கோப்புப் படம்)

'திமுகவில் இணைவா?'

சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலினை அவரது அறையில் சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர், முதலமைச்சரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான ஆட்சிக்கு, முதலமைச்சரை சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்." எனக் கூறினார்.

அப்போது உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "தமிழக மக்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்களோ, அதை அவர் சொல்லியிருக்கிறார்" என்று கூறினார்.

"அது பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலை, ஆட்சியின் நிலை, 5 ஆண்டுகள் திமுக செய்த சாதனைகள் மக்கள் மனதில் பதிந்திருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் கூறினார்.

திமுகவில் இணையப்போகிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "பொறுத்திருந்து பாருங்கள்" என்று மட்டும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce8n2v3rp2eo

தி.மு.க உடன் தே.மு.தி.க கூட்டணி

4 days 15 hours ago

'10 ஆண்டு கழித்து' - தேமுதிக வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பா?

பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக, திமுக, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,PremallathaDmdk/X

கட்டுரை தகவல்

"தி.மு.க உடன் எத்தனையோ முறை கூட்டணி பேசப்பட்டாலும் அது நிறைவேறவில்லை. 2016 ஆம் ஆண்டில் 'பழம் நழுவி பாலில் விழப் போகிறது' என கருணாநிதி கூறினார். பத்து ஆண்டுகள் கழித்து தேன் கலந்த பாலில் அது விழுந்துள்ளது"

தி.மு.க உடன் கூட்டணி அமைத்தது குறித்து தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பின்போது இவ்வாறு கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால், 'கட்சிகளின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தலைமை முடிவெடுக்கும்' என தி.மு.க கூறுகிறது.

தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா?

மூன்று நாட்களில் மாறிய காட்சிகள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கூட்டணியை இறுதி செய்யும் பணிகளில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்வில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். இதே நிகழ்வில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றார். அவருடன் பிரேமலதா பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. இதன்மூலம், கூட்டணி உறுதிப்படுத்தப்படலாம் என ஊடகங்களில் பேசப்பட்டது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக, திமுக, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,PremallathaDmdk/X

ஆனால், அடுத்த மூன்று நாட்களில் தி.மு.க கூட்டணியை தே.மு.தி.க தலைமை தேர்வு செய்துள்ளது.

இப்படியொரு முடிவு எடுத்தது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார். அவர் பேசும்போது, "கட்சி நிர்வாகிகள் மத்தியில் வாக்குப்பெட்டி வைத்து அனைவரின் கருத்தையும் கேட்டோம். இந்தமுறை தி.மு.க கூட்டணியை அவர்கள் விரும்பினர்" எனக் கூறினார்.

"தொண்டர்களின் முடிவையே என்னுடைய முடிவாக ஏற்றுக் கொண்டு அறிவித்துள்ளோம்" என்கிறார் பிரேமலதா.

கருணாநிதி - விஜயகாந்த் நட்பு

அப்போது, கருணாநிதிக்கும் மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு குறித்து பிரேமலதா விவரித்தார். "இருவரும் பல ஆண்டுகளாக நட்பில் இருந்தனர். எங்கள் திருமணத்தைக் கருணாநிதி தான் நடத்தி வைத்தார்" எனக் கூறினார்.

2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தே.மு.தி.க உடன் கூட்டணி வைப்பதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி பெரிதும் ஆர்வம் கட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, "பழம் நழுவி பாலில் விழப் போகிறது" எனப் பேசினார்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய பிரேமலதா, "எத்தனையோ முறை பேசப்பட்டாலும் கூட்டணி என வரும்போது நிறைவேறாமல் இருந்தது. பத்து ஆண்டுகள் கழித்து தேன் கலந்த பாலில் இது விழுந்துள்ளது" என்கிறார்.

அ.தி.மு.க கூட்டணியை தவிர்த்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இந்தமுறை ஒட்டுமொத்த கட்சியின் விருப்பமாக தி.மு.க கூட்டணி இருந்தது" எனத் தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக, திமுக, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,PremallathaDmdk/X

'ராஜ்யசபாதான் இலக்கு'

"மார்ச் 16-ஆம் தேதியன்று நடக்க உள்ள மாநிலங்களவை தேர்தலில் தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் கிடைக்க உள்ளன. அதில், ஓரிடத்தை தே.மு.தி.கவுக்கு கொடுப்பதற்கான வாக்குறுதியை வழங்கியிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் மாலன்.

அ.தி.மு.க கூட்டணியில் நீண்டகாலமாக மாநிலங்களவை இடத்தை தே.மு.தி.க கேட்டு வருவதையும் அவர் பிபிசி தமிழிடம் மேற்கோள் காட்டினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது, மாநிலங்களவை இடம் தொடர்பாக வாக்குறுதி வழங்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பின்போது பிரேமலதா தெரிவித்தார்.

பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக, திமுக, மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,PremallathaDmdk/X

ஆனால், "அவ்வாறு எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை" என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார்.

மேலும் அதிமுகவை சேர்ந்த இருவருக்கு மாநிலங்களவை இடங்களை அ.தி.மு.க தலைமை ஒதுக்கியது.

இதனை எதிர்பார்க்காத பிரேமலதா, கடந்த ஆண்டு மே மாதம் செய்தியாளர் சந்திப்பில், "தி.மு.க கூறியபடி கமலுக்கு மாநிலங்களவை இடம் கொடுத்துள்ளனர். அரசியலில் நம்பிக்கை தான் முக்கியம். அப்போது தான் மக்கள் அவர்களை நம்புவார்கள்" என அவர் கூறினார்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், "மாநிலங்களவை இடத்தைக் கொடுக்க அ.தி.மு.க மறுத்துவிட்டது. இந்தமுறை சட்டமன்றத் தொகுதிகளை ஒற்றை இலக்கத்தில் கொடுத்தாலும் தே.மு.தி.க பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கு மாநிலங்களவை இடம் முக்கியமானதாக உள்ளது" என்கிறார்.

இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "மாநிலங்களவை இடத்தை வைத்தே தே.மு.தி.க இந்த முடிவை எடுத்துள்ளது. அ.தி.மு.கவில் ஜெயக்குமார் உள்பட பல்வேறு மூத்த நிர்வாகிகள் மாநிலங்களவை இடத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்" என்கிறார்.

ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாள் கூட்டணி முடிவாகியுள்ளதே? என செய்தியாளர்கள் பிரேமலதாவிடம் கேட்டபோது,'' ஒரு கட்சிக்கு என்ன தேவை உள்ளதோ அதையெல்லாம் பேசுவோம். கூட்டணிக்கு தலைமையில் உள்ள ஸ்டாலின் அறிவித்தால்தான் சரியாக இருக்கும்.'' என்றார்.

'இப்படியொரு நகர்வை எதிர்பார்க்கவில்லை'

மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

பட மூலாதாரம்,Shyam Shanmugaam/Facebook

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்

"தி.மு.க வசம் நான்கு மாநிலங்களவை இடங்கள் உள்ளதால் அவர்களால் ஓரிடத்தைக் கொடுக்க முடியும். அ.தி.மு.க நிர்வாகிகளைத் தாண்டி வேறு கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி அந்த வாய்ப்பை கொடுத்தால் கட்சிக்குள் பிரச்னை ஏற்படும்" எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஷ்யாம், "சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கி தே.மு.தி.க நகரலாம் என எதிர்பார்த்த சூழலில் இப்படியொரு நகர்வை யாரும் எதிர்பார்க்கவில்லை" என்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

படக்குறிப்பு,எடப்பாடி பழனிசாமி

தே.மு.தி.க எடுத்த முடிவு சரியானதா?

"தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வரும் தே.மு.தி.கவுக்கு இந்தக் கூட்டணி மிக முக்கியமானது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை தனது கூட்டங்களில் த.வெ.க தலைவர் விஜய் முன்னிலைப்படுத்திப் பேசி வந்தார்.

"விஜயுடன் கூட்டணி சேருவதற்கும் தே.மு.தி.க தயாராக இல்லை என்பதையே பிரேமலதாவின் முடிவு காட்டுகிறது" எனக் கூறுகிறார் ஷ்யாம்.

"விஜயகாந்த்தின் ஒரு மகன் (விஜய பிரபாகரன்) விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இன்னொரு மகன் (சண்முக பாண்டியன்) சினிமாவில் இருக்கிறார். அப்படியிருக்கும்போது இன்னொரு திரை நட்சத்திரம் பின்னால் அவர்கள் செல்வதற்கு வாய்ப்பில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு என்ன பாதிப்பு?

"தற்போது கூட்டணியில் தே.மு.தி.க வருவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

"தே.மு.தி.கவை ஒரு காரணமாக தி.மு.க முன்வைக்கக் கூடும். அந்தவகையில், காங்கிரஸ் கட்சிக்கான முக்கியத்துவம் குறையலாம்" என அவர் தெரிவித்தார்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. "இந்த முறை 25 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க கொடுப்பதற்கும் வாய்ப்பில்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"சுமார் 170 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடுவது என தி.மு.க முடிவெடுத்தால் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்படும் தொகுதிகளில் மாற்றம் வரலாம்" எனவும் அவர் தெரிவித்தார்.

'உரிய முடிவை முதலமைச்சர் எடுப்பார்'

ஆனால், இந்தக் கூற்றை மறுத்துப் பேசுகிறார் தி.மு.க தலைமைக் கழக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன்.

தேமுதிக வருகையை "காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களை ஒதுக்கலாம் என்ற ரீதியில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை." எனக் கூறுகிறார்.

"இதுபோன்ற அனுமானங்களை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை" எனக் கூறும் கான்ஸ்டன்டைன், "அனைவரின் சுயமரியாதையும் அங்கீகாரத்தையும் காக்கும் வகையில் முதலமைச்சர் முடிவை எடுப்பார்" என்கிறார்.

தே.மு.தி.க எடுத்த முடிவு சரியானதா?

பட மூலாதாரம்,X/AIADMKOfficial

படக்குறிப்பு,தேமுதிக முன்பு அதிமுக கூட்டணியில் இருந்தது

"எங்களுக்கான இடங்கள் குறையாது"

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழ் பேசியது.

"கூட்டணிக்குள் தே.மு.தி.க வந்ததை வரவேற்கிறோம். இந்தநேரத்தில் தே.மு.தி.க இணைவதன் மூலம் தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் குறையும் எனக் கூறுவது தேவையற்ற அனுமானம் எனக் கூறும் கோபண்ணா, "அவர்கள் வருவதன் மூலம் எங்களுக்கான இடங்கள் குறையாது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் சரியான புரிதல் உள்ளது. அவை பேசி தீர்க்கப்படும்" எனத் தெரிவித்தார்

கூட்டணிகளை மாற்றுவதால் பாதிப்பா?

"கூட்டணிகளை மாற்றுவது குறித்து தே.மு.தி.க கவலைப்படுவதில்லை. விஜயகாந்த் சந்தித்த கடைசி தேர்தலிலும் அக்கட்சி சரிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்கிறார் மாலன்.

"விஜயகாந்த் மறைந்த பிறகு தே.மு.தி.கவுக்கு பெரிதாக செல்வாக்கு இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க இல்லாதது பாதிப்பாக பார்க்கப்படலாம்" எனக் கூறுகிறார் ஷ்யாம். "இதனால் ஏற்படும் நஷ்டம் குறித்து கட்சிகள் ஆலோசிக்கும். அதற்கான மாற்று வழிகளை அவர்கள் ஆராய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3ewv27z9x9o

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பழங்குடி ஓவியரின் மனைவிக்கு அரசுப்பணி

1 week ago

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பழங்குடி ஓவியரின் மனைவிக்கு அரசுப்பணி

பழங்குடி ஓவியர் கிருஷ்ணன்

பட மூலாதாரம்,Getty Images

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வியைத் தொடரவும் அரசு வழிவகை செய்துள்ளது.

கடந்த ஆண்டில் கிருஷ்ணன் மறைந்துவிட்ட நிலையில், அவரின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ஒரு மகன், 3 மகள்களுடன், கிருஷ்ணனின் வெள்ளரிக்கோம்பையில் வசித்து வந்தார். கிருஷ்ணன் மறைவுக்குப் பின், பாதுகாப்பு கருதி, கல்லாறு அருகேயுள்ள புளியமரத்தூர் என்ற கிராமத்திற்கு அவரின் குடும்பம் குடிபெயர்ந்தது.

சுசீலாவின் தாய், தந்தை, அங்குள்ள ஒரு பாக்குத்தோட்டத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் குடியிருப்பதற்கு அந்தத் தோட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில், சுசீலாவும் 4 குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். சுசீலா அதே தோட்டத்தில் ரூ.300 கூலிக்கு பணியாற்றி வந்தார். இவர்களின் மூத்த மகள் வாசுகி, பிளஸ் 2 முடித்து விட்டு, உதகையிலுள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் பார்மஸி டிப்ளமோ படித்துவந்தார்.

ஆனால் அதற்கான கல்விக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் வீட்டில் இருந்துவந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ராகுல், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளி விடுதியிலும், ஏழாம் வகுப்பு படிக்கும் கீதா, நான்காம் வகுப்பு படிக்கும் கீர்த்திகா ஆகிய இருவரும் நீலகிரியிலுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியிலுள்ள விடுதியிலும் தங்கிப் படித்து வந்தனர்.

இந்நிலையில்தான் கிருஷ்ணனுக்கு கடந்த மாதத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தங்களின் குடும்ப நிலை குறித்து சுசீலா, பிபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிடம் பேசியிருந்தார்.

தன்னுடைய கல்வித்தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்கவேண்டும், தனது மூத்த மகள் அவள் படித்த அதே கல்லூரியில் படிப்பதற்கும், மற்ற குழந்தைகள் கல்விக்கும் அரசு உதவ வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் விளைவாக, தமிழக அரசு சார்பில் கிருஷ்ணன் குடும்பத்தினரை நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அணுகினர். அவர்களுடைய விருப்பத்தின்பேரில், தற்போது நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள அரசு ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியில் தோட்டப்பணியாளர் பணிக்கான ஆணையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வழங்கினார். அதே பள்ளியில் அவர்கள் குடியிருக்க வீடும் ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த மகள் வாசுகி, அவர் படித்து வந்த கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் தொடரவும், மற்ற 3 குழந்தைகளும் சுசீலா பணியாற்றும் அதே ஏகலைவா பள்ளியில் விடுதியில் தங்கிப்படிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ‘‘எனது கணவர் இறந்தபின்பும் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். அவரால்தான் எனக்கு இந்த பணி கிடைத்துள்ளது. என் மூத்த மகள் வாசுகியை இந்த ஆண்டில் டிப்ளமோ பார்மஸி படிப்பில் தொடரவும், அடுத்த ஆண்டில் அவள் விரும்பியபடி பி.பார்ம் படிப்பில் இணையவும் நீலகிரி ஆட்சியர் ஏற்பாடு செய்திருக்கிறார்.’’ என்றார்.

மேலும் பேசிய அவர், ‘‘எனக்கு மாதம் ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் பணி ஆணை தரப்பட்டுள்ளது. இனிமேல் என்னுடைய 3 குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டுமென்ற கோரிக்கையையும் அரசிடம் வைத்திருக்கிறோம். அதற்கும் ஆவன செய்வதாக ஆட்சியர் கூறியுள்ளார். வரும் 22, 23 ஆகிய நாட்களில் சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் 15 பேருடன் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அங்கே செல்கிறோம். ’’ என்றார்.

https://www.bbc.com/tamil/live/clyx48qxzddt?post=asset%3A3cb5d876-3db9-425e-bc74-55638be241d8#asset:3cb5d876-3db9-425e-bc74-55638be241d8

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

1 week ago

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

hindutamil-prod%2F2026-02-17%2F4wa3u9ds%

சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் ‘தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு ஆற்றிய உரை: பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது.

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 புதிய வீடுகள் கட்ட ரூ.630 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 6,010 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், மற்ற வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர்கள் கல்லூரிகளில் பயிலும் போது மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் இதுவரை 6,95,296 மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப்படிப்பினைத் தொடர, மாதம் ரூ.2,000 வழங்கும் 'அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், இதுவரை 10,637 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 23,56,623 நபர்களுக்கு. வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் இதர நகர்ப்புரப் பகுதிகளில் இதுவரை 77,800 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 59 நபர்களில் 52 நபர்கள், ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள் ஆவர்.

தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.101 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க பல்வேறு மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் 199 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 101 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாணவர்களும், தொழில் முனைவோரும் பயன்படுத்தும் வகையில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும். இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 38 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.8,911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடியும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடியும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,400 கோடியும், மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடியும், தொழிலாளர் நலத் துறைக்கு ரூ.1,996 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 25 இடங்களில் அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 17 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மின்னணு துறை உற்பத்தியில் 41 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. செமி கண்டக்டர் திட்டத்துக்கு 5 ஆண்டு செயல் திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11.19% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது.

ரூ.285 கோடியில் தமிழகத்தில் சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியங்கள் அமைக்கப்படுகின்றன.

நாட்டிலேயே தொழிற்சாலைகளில் அதிகம் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியின் கனவை நிறைவேற்றும் அரசாக திமுக உள்ளது.

19.34 லட்சம் மாணவர்கள் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் ,

தமிழகத்தில் உள்ள 1048 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,363 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.8,100 கோடி செலவில் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

சுற்றுலா துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறைக்கு ரூ.1394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் வீடுகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர் வழங்கல், கடற்கரைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ.1,237 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். அப்போது. கப்பல் கட்டும் தொழிலில் உலகளாவிய ஒரு மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டப் பணிகள், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் (TANFINET) மூலம், தற்போது 11,953 கிராம ஊராட்சிகளில் 95% முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் மூலம், நெய்தல் மீட்சி இயக்கம் மற்றும் தொடர்புடைய திட்டங்களின் கீழ் 3,733 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் மீள்உருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்திற்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

14.6 கி.மீ. நீளமுள்ள 11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

திறமையான மாணவர்கள் உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க தொடங்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 385 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் தொழில்கள் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 4,948 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கு 420 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ. 16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் புனரமைப்பிற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அரசின் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசினார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/tamil-nadu-government-interim-budget-2026-highlights

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

1 week 1 day ago

New-Project-4-9.jpg?resize=750%2C375&ssl

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து குறித்து “மனிதாபிமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற” தீர்வைக் கோரி முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து நேற்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், 

இந்த பிரச்சினை “ஆழ்ந்த மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் விவரித்தார்.

அத்துடன், சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாம்களுக்குள்ளும் வெளியேயும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வசிக்கின்றனர்.

அவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள், மேலும் பலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், 1983 ஆம் ஆண்டு முதல், அடுத்தடுத்த தமிழக அரசாங்கங்கள், மத்திய அரசின் ஒப்புதலுடன், இலங்கையில் இன மோதலில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு தங்குமிடம், கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளன.

இருப்பினும், பலர் குடியுரிமை அல்லது நீண்டகால விசா அந்தஸ்தைப் பெற முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அத்துடன், மாநில ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைக் குறிப்பிட்டு, குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதைத் தடைசெய்யும் முந்தைய நிர்வாக வழிமுறைகளை இரத்து செய்யுமாறும், பொருத்தமான இடங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளைத் தள்ளுபடி செய்யுமாறும், விரைவான செயலாக்கத்திற்காக மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்குமாறும், 2025 ஜனவரி 9 ஆம் திகதி வரை தங்கியிருந்த பதிவுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழ் நாட்டினரை “சட்டவிரோத குடியேறிகளாக” கருதக்கூடாது என்பதை முறையாக தெளிவுபடுத்துமாறும் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தினார்.

இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக “கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும், ஆழமான கலாச்சார உறவுடனும்” வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மனிதாபிமான அடிப்படையில் சாதகமான முடிவை எடுக்குமாறும் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டமூலம், 2025 மீதான விவாதங்களின் போது, அகதிகள் பிரச்சினையை திமுக ஒருபோதும் தன்னிடம் எடுத்துச் செல்லவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியபோது, இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.

இந்தக் கூற்றை திமுக எம்பி கனிமொழி கருணாநிதி மறுத்தார், அவர் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதங்களின் விவரங்களை மேற்கோள் காட்டினார்.

இந் நிலையில் அரசியல் ரீதியாக, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரக் கருப்பொருள்களாக ஆளும் திமுக தமிழ் மொழி, அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தி வரும் நேரத்தில் தமிழக முதலமைச்சரின் இந்தக் கடிதம் வந்துள்ளது. 

இந்தக் கடிதம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மற்றும் சட்ட தெளிவுக்காக அழுத்தம் கொடுப்பதன் மூலம், திமுக தமிழ் ஆதரவு வாக்காளர்களையும் இலங்கை அகதிகளின் அனுதாபிகளையும் ஒருங்கிணைக்க முயல்கிறது.

நீண்ட காலம் தங்கியிருந்த போதிலும், இதுவரை 11 இலங்கை அகதிகளுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 

அவர்களில் ஒருவர் மட்டுமே வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார், மீதமுள்ள பத்து பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர், இது அவர்களின் நிலையை முறைப்படுத்துவதில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.

https://athavannews.com/2026/1465008

என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்?

1 week 3 days ago

என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்?

Shyamsundar IUpdated: Tuesday, February 10, 2026, 15:40 [IST]

naam tamilar seeman

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத 'மூன்றாவது சக்தியாக' உருவெடுத்திருந்தது. தீவிரமான தமிழ்த் தேசியப் பேச்சுகள் மற்றும் சீரான வாக்கு வங்கி வளர்ச்சியால் கவனத்தை ஈர்த்த இந்த கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை நெருங்கும் வேளையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மௌனமான நிலையை எட்டியுள்ளது.

Also Read

Trichy East: விருகம்பாக்கமோ விருத்தாசலமோ இல்லை! திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியா?

களத்தில் குறைந்த வேகம்?

வழக்கமாக தேர்தல் நெருங்கும் நேரங்களில் சீமானின் மேடைப் பேச்சுகளும், தொடர் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும். ஆனால், இந்த முறை 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்ததைத் தாண்டி, சீமான் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களையோ அல்லது மக்கள் சந்திப்புகளையோ (Makkal Sandhippu) இன்னும் தீவிரப்படுத்தவில்லை.

வழக்கம் போல தங்களது வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பதிலும், அதில் 50% பெண்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்தது. இந்த முறையும் வேகமாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இருப்பினும், தற்போது கட்சியின் தேர்தல் வேலைகளில் பழைய வேகம் இல்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. கடந்த தேர்தல்களில் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரங்களும், சமூக வலைதளங்களில் தொண்டர்களின் தீவிரமான செயல்பாடுகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். ஆனால், தற்போது பொதுக்கூட்டங்களும், தெருமுனைப் பிரச்சாரங்களும் பெரிய அளவில் வேகம் எடுக்காமல் இருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே ஒருவித தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் எப்போதும் டிரெண்ட் செட்டர், நர்ரேட்டிவ் செட்டர் ஆக இருப்பார். ஆனால் இந்த முறை சீமான் கடுமையாக அமைதி காத்து வருகிறார்.

Recommended For You

தமிழகத்தில் நாளை 3 மணி நேரத்திற்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது

அமைதிக்கான காரணங்கள்:அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு

சீமானின் இந்த "அமைதியான" ஆட்டத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்:

விஜய் காரணி (The TVK Factor): நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இதுவரை சீமானிடம் இருந்த "மாற்று அரசியல்" வாக்குகள் பிரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் வருகை ஏற்படுத்தியுள்ள சலசலப்பை உற்று நோக்கி, தனது அடுத்த கட்ட நகர்வை சீமான் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

You May Also Like

விஜய் தடுமாறுவது இங்கேதான்.. டேக்-ஆஃப் ஆக இருந்த தவெகவை லேண்ட் செய்த சீமான்.. நாம் தமிழர் சம்பவம்!

உள்கட்சி சீரமைப்பு:பொதுவெளியில் சத்தமாக கூட்டம் போடுவதை விட, இந்த முறை பூத் கமிட்டிகளை பலப்படுத்துவதிலும், வேட்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவதிலும் (சென்னை-போரூர் ஆலோசனைக் கூட்டங்கள் போல) அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தனித்து போட்டி - 50:50 முறை: இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் தனித்து போட்டி மற்றும் "ஆண்-பெண் சம பிரதிநிதித்துவம்" என்பதில் அவர் உறுதியாக இருப்பது அவரது பலமாகப் பார்க்கப்படுகிறது.

காத்திருக்கும் புயல்?

சீமானின் அமைதி குறித்து அவரது தம்பிகள் (கட்சித் தொண்டர்கள்) கூறுகையில், "அவர் அமைதியாக இல்லை. பேசிக்கொண்டுதான் இருக்கிறார். விஜய் மீடியாவால் பெரிதாக்கப்படுகிறார். மக்கள் என்னவோ சீமானுக்கே அதிக மதிப்பு தருகிறார்கள்.

நாங்கள் தேர்தலை வைத்து மட்டும் அரசியல் செய்ய மாட்டோம். அப்போது மட்டும் நாங்கள் அரசியல் பேசுபவர்கள் அல்ல, அதனால் நாங்கள் செய்வதை அமைதி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்" என்று கூறுகின்றனர்.

https://tamil.oneindia.com/news/chennai/the-quiet-before-the-storm-naam-tamilar-seeman-s-strategic-silence-in-the-2026-race-772597.html

'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா?

1 week 4 days ago

'மகளிருக்கு ரூ.5000' - பிகார் போல திமுகவுக்கு தேர்தலில் பலன் தருமா?

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

பட மூலாதாரம்,MKSTALIN/X

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 13 பிப்ரவரி 2026, 10:16 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டிலுள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று காலையில், ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தேர்தலை காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகக் கூறியுள்ள அவர், அதைத் தவிர்க்கவே இவ்வாறு வழங்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், இது தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் வாக்குகளைப் பெறுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மறுபுறம், பிகார் சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு ரூ.10,000 கொடுத்தது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு துருப்புச் சீட்டாக அமைந்தது போல, தமிழக தேர்தலில் இந்த 5,000 ரூபாய் திமுகவுக்கு அமையுமா என்ற கேள்வி எழுகிறது.

இது தொடர்பாக அரசியல் தலைவர்களின் கருத்துகள் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு அரசியலைக் கூர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?

உரிமைத் தொகை ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோடிக்கும் மேலான மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 இன்று காலையில் வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்திற்கான உரிமைத் தொகை, முன்பணமாக வழங்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை ஆகியவை சேர்த்து ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 என ஒட்டுமொத்தமாக ரூ.5000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதோடு, "தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசு முந்திக்கொண்டது," என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் இந்தத் திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவே இவ்வாறு முன்கூட்டியே வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் தோல்வி பயம் முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பார்த்தீர்களா? ஸ்டாலின் அவர்களே 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக தலைவர் விஜய், "புதிதாகக் கோடைக்கால சிறப்புத் தொகை என திடீரென அறிவித்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் இதை அறிவிக்கிறார்கள் என்பதை தமிழக மக்களும் மகளிரும் புரிந்துகொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "ஒரே நேரத்தில் ரூ.5000 மகளிருக்கு கிடைத்திருக்கிறது. இது அவர்களின் மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பு," என்று கூறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சி கையைவிட்டுப் போவது உறுதியானதை உணர்ந்துகொண்ட திமுக, தோல்வியின் வெளிப்பாடாகவே இதைச் செய்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல மு.க.ஸ்டாலின் போடும் வேடங்கள் அனைத்தும் கலைந்துவிட்ட நிலையில், தமது நாடகங்களை தமிழ்நாட்டு மக்கள் இன்னும் நம்புவார்கள் என்ற நப்பாசையில்தான் முதலமைச்சர் பேசியிருக்கிறார். அதெல்லாம் நடக்காது," என்று விமர்சித்துள்ளார்.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

ரூ.5000 கொடுத்தது தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

பிகார் சட்டமன்றத் தேர்தலில், குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான பங்கை ஆற்றியது. தமிழ்நாட்டிலும் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் ரூ.5,000 என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இதுகுறித்துப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் சூழ்ச்சிகளைச் செய்ய வாய்ப்புள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பிகார் அரசியல் களத்தையும் தேர்தல் முடிவுகளையும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாகச் செயல்பட்டதையும் பார்க்கும்போது, இங்கு அவர் கூறுவது போன்ற சூழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது," என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், "அத்தகைய முயற்சிகளை முறியடிக்கும் உத்தியாக மகளிர் உரிமைத்தொகையை முன்பணமாக வழங்கியிருப்பது தேர்தலில் திமுகவுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது கூற்றுப்படி, இதுபோன்ற ஒரு தேர்தல் உத்தியைக் கையில் எடுக்கும் சூழலுக்கு திமுக தள்ளப்பட்டது.

ஆனால், "இது வாக்குக்காக நடக்கும் அரசியல்தான்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "மத்திய அரசு முடக்க நினைக்கிறது என்ற வாதத்தை முன்வைப்பதன் மூலம் திமுக வாக்குகளைப் பெறுவதற்கான இந்த அரசியல் உத்தியைப் பயன்படுத்தியது."

அதோடு, "இந்தத் தொகையைப் பெற்ற அனைவருமே திமுகவுக்கு வாக்களிப்பார்கள் எனக் கூறிவிட முடியாது என்றாலும், அவர்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இதன் மூலம் உண்மையாகவே பலனடையும் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தப் பயனாளிகளில் 60% பேர் வாக்களித்தாலே அது திமுகவுக்கு வெற்றிதான்" என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், "இதுபோன்ற திட்டங்களையும் தாண்டி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதே ஓர் அரசாக திமுக எப்படிச் செயல்பட்டது என்பதைத் தீர்மானிக்கிறது. அதுவும் தேர்தலில் தாக்கம் செலுத்தும்," என்று என்கிறார் குபேந்திரன்.

"திமுக அரசு அறிவித்துள்ள ரூ.5000 என்பது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயமாகவே இருக்கும். ஏனெனில், பெண்களின் வாக்குகளைக் கவர வேண்டுமென்பதில் அனைவருமே தனிக் கவனம் செலுத்துவர். அந்த வகையில், இந்தத் திட்டம் பெண்களின் வாக்குகளைப் பெறுவதில் கணிசமாக உதவக்கூடும்," என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

அதிமுக, பாஜக கூறுவது என்ன?

மகளிருக்குப் பணம் கொடுத்ததில் தவறில்லை எனக் கூறும் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் பிரச்னையாக இருக்கிறது," என்கிறார்.

"யாரோ தடுக்கப் பார்ப்பதாக, ஒடுக்கப் பார்ப்பதாகக் கூறுகிறார். யார் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமல்லவா! முதலில் இதை யாரால் தடுக்க முடியும்? இது முதலமைச்சர் அரண்டு போயிருக்கிறார் என்பதையே காட்டுகிறது. மோசமான, தோல்வியுற்ற ஆட்சி என்பதால்தான் இதுபோன்ற அறிவிப்பை திடீரென்று வெளியிட்டுள்ளார். இது அவரது அச்சத்தையே காட்டுகிறது," என்கிறார் நாராயணன் திருப்பதி.

மேலும், "5000 ரூபாய் இல்லை ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதற்காகவே அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசின் ஆட்சியில், சீரழிந்த சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள், டாஸ்மாக் காரணமாக ஏற்படும் சீர்கேடுகள், போதைப்பொருளின் நடமாட்டம் ஆகியவற்றையெல்லாம் மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே, திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே கிடையாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிகார் தேர்தலில், ஆளும் கட்சி பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்ததை ஆதரித்தது குறித்து கேட்டபோது, "இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அதுவொரு கடன் திட்டம். ஆனால், இது இலவச திட்டம். மக்களை கவர்வதற்காக இது செயல்படுத்தப்படுகிறது. இதை அதோடு ஒப்பிட முடியாது," என்றார்.

பிகாரில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட10 ஆயிரம் ரூபாயை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கு ரூ.5000: பிகார் போல வரும் தேர்தலில் திமுகவுக்கு பலன் தருமா?

இதை ஆமோதிக்கும் வகையில் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், "மு.க.ஸ்டாலின் தனது மற்றும் தம் மகனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது என்பதை அறிந்து, அந்த அச்சத்தில்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்" என்றார்.

மேலும் பேசிய அவர், "இந்த அறிவிப்பு, ஸ்டாலினின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. இந்தத் திட்டத்தை வழக்கு போட்டு முடக்கிவிடுவார்கள் என்பது மிகப்பெரிய பொய். ஏற்கெனவே இரண்டேகால் கோடி பேருக்கு கொடுப்பதாகக் கூறி ஒரு கோடி பேருக்கே கொடுத்தார்கள். ஆட்சி முடியப்போகும் நேரத்தில் மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுக்கத் தொடங்கினார்கள். இவையனைத்துமே மகனை அரியணை ஏற்றுவதற்கான வேலைகள்.இது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பாதிக்காது.

கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கப்படும் என கூறும்போது 'கொடுக்க முடியாது' எனக் கூறினார்கள். இப்போது அதே 2000 ரூபாயை கொடுப்பதாக இவரே ஒப்புக்கொண்டுள்ளார். இது எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதற்கான ஒப்புதல்தானே! அவர்களின் மீதிருந்த நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிட்டார்கள். அது தேர்தலில் எதிரொலிக்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக கூறுவது என்ன?

"பிகாரில் தேர்தல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு 10,000 ரூபாய் திட்டத்தை அறிவித்தார்கள், அதைக் கடுமையாக விமர்சித்தோம். இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆனால், இந்தத் திட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அதற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது," என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

"பிகாரில் நடந்தது அரசியல் சூழ்ச்சி. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஆளும் கட்சி கபட நாடகமாடி வாக்குகளைப் பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் இருக்கும், பல கோடி மகளிர் பயனடையும் திட்டம் இது," என்றார்.

மேலும், "திமுகவுக்கு கிடைத்த தகவலின்படி, தேர்தல் காலகட்டத்தில் நிதி சார்ந்த எவ்வித உதவித் திட்டங்களையும் தடை செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று கூறிய ரவீந்திரன், "அந்த முயற்சிகளின் விளைவாக மகளிர் உரிமைத் தொகை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டால், அதன் மூலம் பயனடையும் பல கோடிப் பெண்களின் வாழ்க்கையை அது பாதிக்கும் என்பதாலேயே, முதலமைச்சர் இவ்வாறு அறிவித்தார்," எனவும் விளக்கினார்.

மேலும் பேசிய அவர், "ஒருவேளை மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டால், அரசியல் ரீதியாக, தேர்தல் களத்தில் பிற கட்சிகள், அந்தத் திட்டத்தையே நிறுத்திவிட்டதாகப் பரப்புரை செய்து வாக்குகளைப் பெறும் முயற்சியில் இறங்கக்கூடும். அதையும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் முன்கூட்டியே மூன்று மாதங்களுக்கான தொகை வழங்கப்பட்டது," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c74755nz3elo

நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்

1 week 5 days ago

'நான் படிக்க முடியுமா என கேட்பார்கள்' - நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்

தான்யா நாதன்

பட மூலாதாரம்,Thanya Nathan

படக்குறிப்பு,24 வயது தான்யா பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார்.

கட்டுரை தகவல்

  • நந்தினி வெள்ளைச்சாமி

  • பிபிசி தமிழ்

  • 12 பிப்ரவரி 2026, 05:59 GMT

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"சவால்களை கடப்பதை தவிர எனக்கு வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை. கடின உழைப்பும் நிலையான பயிற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும்."

24 வயது தான்யா நாதனின் பேச்சில் உறுதியும் தெளிவும் வெளிப்படுகிறது. இவர், பிறவியிலிருந்தே பார்வை சவால் உடையவர் ஆவார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தான்யா, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுபூர்வ தீர்ப்பை தொடர்ந்து, அதே ஆண்டில் கேரள நீதித்துறை சேவை தேர்வெழுதி, அதில் மாற்றுத்திறனாளிகள் போட்டியாளர்களுக்கான தகுதிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம், கேரளாவில் சிவில் நீதிபதியாகும் (இளநிலை பிரிவு - Junior division) முதல் முழு பார்வை மாற்றுத்திறன் கொண்ட நபராக தான்யா உள்ளார்.

"நான் நீதிபதியாவது என்பது சாத்தியமில்லாத, கனவுகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் (பார்வையற்றவர்கள்) தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 2025ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றம் பார்வையற்றவர்கள் நீதிபதி தேர்வெழுத அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு தான் என் திருப்புமுனை." என்கிறார் தான்யா நாதன்.

உத்வேகம் அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு

2025ம் ஆண்டு மார்ச் மாதம் பார்வையற்ற நபர்களும் நீதிபதியாகலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய பிரதேச நீதித்துறை சேவைகள் தேர்வில் இருந்த விதிமுறைகளை ரத்து செய்து, நீதிபதிகள் ஜேபி பர்டிவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியமான தீர்ப்பை வழங்கியது.

மத்திய பிரதேச நீதித்துறை தேர்வு விதிமுறை 6(ஏ)-வின்படி, நீதித்துறை நியமன நடவடிக்கைகளில் பார்வையற்றோர் பங்குபெறுவது தடை செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதாக லைவ் லா இணைய தளம் கூறுகிறது. இதன்மூலம், நீதித்துறையில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது.

"மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது. இதனை உறுதியான நடவடிக்கை மூலம் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்." என உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வு அதன்பின் நேர்காணல் என மூன்று அடுக்கு தேர்வு முறைகளை கொண்ட கடினமான செயல்முறைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது சிவில் நீதிபதி தேர்வு முறை. இந்த தேர்வில் தான்யா அவ்வளவு எளிதில் வெற்றி பெறவில்லை.

"படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் கிடைப்பது சவாலாக இருந்தது. சட்டம் போன்ற துறைகளில் புத்தகங்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் வடிவிலோ அல்லது பிரெய்லி புத்தகங்களாகவோ எங்களுக்கு கிடைப்பதில்லை. தேர்வுக்கு தயாராவதில் இதுதான் எனக்கு பிரச்னையாக இருந்தது." என கூறுகிறார் தான்யா நாதன்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,"மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எவ்வித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக்கூடாது." என கூறியிருந்தது உச்ச நீதிமன்றம்

பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குடிமைத் தற்காப்புச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய புதிய சட்டங்கள் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்தன.

எனவே, பழைய சட்டங்கள் குறித்த குறிப்புகள் டிஜிட்டல் வடிவில் கிடைப்பது தனக்கு சவாலாக இருந்ததாக தான்யா குறிப்பிடுகிறார்.

படிப்பதில் சிரமங்கள்

"எனக்கு தேவையான குறிப்புகளை மற்றவர்களை போன்று நான் உடனேயே படித்துவிட முடியாது. முதலில் குறிப்புகளை டிஜிட்டல் வடிவிலோ அல்லது பிரெய்லி வடிவமாகவோ மாற்றிதான் படிக்க வேண்டும். என்னுடைய செல்போனில் எழுத்துகளை ஒலி வடிவில் மாற்றித்தரும் செயலியையே நான் அதிகம் சார்ந்திருக்கிறேன். இவையெல்லாம் அதிக நேரம் எடுக்கும் செயல்முறை. நீங்கள் தேர்வை எழுத வேண்டும் என நினைத்தால் இந்த வழிமுறைகளை செய்துதான் ஆக வேண்டும், ஏனெனில் அதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி."

அவரின் தாய் பபிதா - தந்தை ஜெகந்நாதன் இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவருடைய மூத்த சகோதரியும் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

தான்யா சோர்ந்துபோகும் நாட்களில், "பரவாயில்லை, இதுவும் சரியாகிவிடும்," என்றே தன்னுடைய பெற்றோர் கூறுவார்கள் என்கிறார்.

தானும் அத்தகைய சமயங்களில் சிறிது காலம் அமைதியாக இருந்து அந்த சவாலை ஏற்றுக்கொண்டு கடக்க முயற்சிப்பேன் என்கிறார் தான்யா.

பள்ளி, கல்லூரி நாட்களில் எவ்வித கேலியையோ அல்லது பெரிய புறக்கணிப்புகளையோ தான் சந்தித்ததில்லை என்கிறார் அவர். ஏழாம் வகுப்பு வரை கண்ணூரின் தர்மசாலாவில் உள்ள பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் படித்தார், பின்னர் 12ம் வகுப்பு வரை அனைவரையும் உள்ளடக்கிய பள்ளியில் படித்தார். பின்பு, கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படிப்பில் முதல்தரத்தில் தேர்ச்சி பெற்று, 2024ம் ஆண்டில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார்.

தான்யா நாதன்

பட மூலாதாரம்,Thanya Nathan

"நீதித்துறையை தேர்ந்தெடுத்ததற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. சட்ட ரீதியான அறிவு நிச்சயமாக ஒரு பலம். விவாதம் நடத்துவதோ அல்லது குரலை உயர்த்துவதோ இத்துறைக்கு முக்கியம் அல்ல. உங்களின் கருத்துகளை தெளிவாக சொல்வதுதான் முக்கியம் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. விளிம்புநிலையில் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு சட்ட அறிவு நிச்சயம் வேண்டும். உங்களின் உரிமைகளை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், நீங்கள் எந்தவித தாக்குதலுக்கு ஆளாகும்போதும் உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்."

சிறப்புப் பள்ளியில் படித்தது முக்கிய காலகட்டம் என்று கூறும் அவர், அங்குதான் பிரெய்லியில் படிப்பது உள்ளிட்ட மற்ற சமூக திறன்களை கற்றுக்கொண்டதாக கூறினார்.

"என்னுடைய சிறுவயது எல்லோரை போலவேதான் இருந்தது, ஒரு வித்தியாசம் எனக்கு பார்வை ரீதியான சவால் இருந்ததுதான். என்னைப் போன்றவர்கள் இந்த உலகத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கும். அதற்கு என் குடும்பம், நண்பர்கள், என்னுடைய சீனியர் சுனில் குமார் போன்றோர் எனக்கு உறுதுணையாக இருந்துவருகின்றனர். என் சீனியர் சுனில் குமார் எனக்கு தந்தை போன்றவர். ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல சொல்லித் தருவார்."

தான்யாவின் மூத்த வழக்கறிஞர் சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஆரம்பத்தில் அவர் எப்படி பணியாற்றுவார் என்பதில் எங்களுக்கு பயம் இருந்தது. ஆனால், ஒரு வாரத்திற்குள்ளேயே தான்யா தன் திறமையை வெளிப்படுத்தினார். தான்யாவின் வாதங்களை நீதிபதிகள் அடிக்கடி பாராட்டுவார்கள். ஒரு வழக்கை தாக்கல் செய்வது, வாதிடுவது என எல்லா பணிகளையும் தனியாக பார்ப்பார்." என்றார்.

தான்யா நீதிமன்றத்தில் தனக்கென உதவியாளர் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. எனினும், தனக்காக கிளார்க் ஒருவரை நியமித்துள்ளார், அவர் தான்யாவுக்காக தட்டச்சு செய்வது உள்ளிட்ட பணிகளில் உதவுகிறார்.

நீதித்துறையில் சவால்கள்

பாகுபாட்டுடன் அணுகுபவர்களையோ அல்லது அவர்களின் கருத்துகளையோ தான்யா நாதன் பொருட்படுத்துவதில்லை.

"நான் எல்எல்பி படிப்பை படிக்க முடியுமா என சிலர் கேட்பார்கள். என்னால் வழக்கறிஞராக வேலை பார்க்க முடியுமா என கேள்வி கேட்பார்கள். நான் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை."

பிரெய்லி புத்தகம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிரெய்லி புத்தகம் (சித்தரிப்புப் படம்)

நீதித்துறையில் பார்வை சவால் கொண்டவராக அவருக்கான வாய்ப்புகள் எப்படி இருந்தன?

"நிச்சயமாக சமவாய்ப்பு என்பது இல்லை. ஆனால், சிலவற்றை செயல்படுத்துவதன் மூலம் இதனை மாற்ற முடியும். குறிப்பாக, கேரளாவில் நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல்மயப்படுத்துவது நடைபெற்று வருகிறது. இதன்மூலம், சம வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்." என்கிறார் தான்யா.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கண்ணூரில் உள்ள தலிபரம்பா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்துவந்தார் தான்யா. எனவே, அவர் இந்த தேர்வுக்காக தனியே பயிற்சி பெறவில்லை. வழக்கறிஞராக பயிற்சி பெறுவதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு போதுமானதாக இருந்திருக்கிறது. அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இன்னும் ஓராண்டு காலம் அவர் வழக்கறிஞராக பயிற்சி பெற வேண்டும்.

"வழக்கறிஞராக பணியை தொடங்கியபோது என் மனதில் நிறைய நிச்சயமற்ற விஷயங்கள் இருந்தன. எனக்கு வேலை செய்வதற்கான சௌகரியமான சூழல் கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், இந்த அழுத்தங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் கால்பதித்த உடனேயே மறைந்துவிட்டது. முதல் நாள் நீதிமன்றம் சென்றபோது நான் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். சிவில் வழக்கில்தான் வாதாடினேன். என்னுடைய வாதத்தை நீதிபதி பாராட்டினார். மற்ற வழக்கறிஞர்கள் எல்லோரும் எனக்கு ஊக்கமளித்தனர். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொண்டனர். நான் எப்போதெல்லாம் வாதிடுகிறேனோ அப்போதெல்லாம் நீதிபதிகள் என்னை மனதார பாராட்டினர். அந்த ஊக்கம் தான் தொடர்ந்து என்னை முன்னேறச் செய்தது." என கூறுகிறார் தான்யா.

பார்வை மாற்றுத்திறன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

என்ன மாற வேண்டும்?

பார்வை சவால் உட்பட மாற்றுத்திறன் உடையவர்களுக்கு நீதிமன்றங்கள் அணுகக்கூடிய விதத்தில் இருக்கின்றதா என கேட்டதற்கு, "நீதிமன்றங்களில் உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்கின்றன. எங்களின் ஊன்றுகோல் உதவியுடன் நாங்கள் நீதிமன்றங்களின் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும். ஆனால், உடலியல் ரீதியான சவால்களை கொண்டிருப்பவர்களுக்கு நீதிமன்றங்கள் முழுவதும் அணுகக் கூடியதாக இல்லை. மாடிப்படிகள் அவர்களுக்கு தடைகளாக இருக்கின்றன, மேலும் சில இடங்களில் சாய்வு நடைபாதை (ramp) இருப்பதில்லை. இவையெல்லாம் மாற வேண்டும்." என கூறினார்.

தான்யாவுக்கு வழக்குகள் தொடர்பாக மலையாள மொழியில் உள்ள பழைய ஆவணங்கள் பிரெய்லி அல்லது டிஜிட்டல் வடிவில் இல்லாததால், அவரால் அவற்றை அணுகுவதில் சிரமங்கள் இருப்பதாக கூறுகிறார் வழக்கறிஞர் சுனில் குமார். எனவே, அவற்றை டிஜிட்டல்மயப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

தொழில்நுட்பத்தின் மூலம் இந்த விஷயங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் தான் சமவாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் தான்யா வலியுறுத்துகிறார்.

ஸ்க்ரைப் உதவி மூலம் தனி அறையில் தேர்வு எழுதியுள்ளார் தான்யா. மாற்றுத்திறன் உடையவர்கள் இத்தகைய தேர்வெழுதுவதற்கான தற்போதைய நடைமுறைகள் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

"ஸ்க்ரைப் நியமித்தல், பதவி உயர்வு போன்றவை தொடர்பாக சமீப காலங்களில் உச்ச நீதிமன்றங்கள் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உறுதிசெய்துள்ளன." என அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"நம்முடைய இலக்கை அடைவதற்கு தொடர்ந்து கடினமாக உழைக்கும்போது அதற்கு பலன் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகள் தயங்கக்கூடாது. உச்ச நீதிமன்றம் நமக்கான வழியை திறந்துவிட்டுள்ளது, இனி, நாம்தான் நீதித்துறைக்குள் நுழைவதற்கான வேலைகளை செய்ய வேண்டும்."

கடந்த 2009ம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே திமிரி கிராமத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறன் கொண்ட டி.டி. சக்கரவர்த்தி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 4 வயதில் உடல்நலக் குறைபாட்டால் பார்வையை இழந்ததாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

அதேபோன்று, 2018ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த பிரம்மானந்த சர்மா என்பவர் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் தன்னுடைய 22வது வயதில் கிளைகோமா நோயால் பார்வையை இழந்தவர் என ஊடக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில், முழு பார்வை மாற்றுத்திறன் கொண்டவரான தான்யா, இளம் வயதில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y4x3l6d38o

'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன?

1 week 5 days ago

'தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது' - ஆட்சியில் பங்கு குறித்த ஸ்டாலின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்வினை என்ன?

தி.மு.க, காங்கிரஸ், தமிழ்நாடு தேர்தல், கூட்டணி ஆட்சி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 11 பிப்ரவரி 2026

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'ஆட்சியில் பங்கு' என காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் தொடர்ந்து கோரிவரும் நிலையில் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் எனக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என தொடர்ந்து கோரிவரும் நிலையில், சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'கூட்டணி ஆட்சி கிடையாது' என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கும் வகையில் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் தாமதமாகி வருவதில் காங்கிரஸ் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில், முதலமைச்சரின் இந்தக் கருத்து வந்து சேர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்போதுவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சிக்கான பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனாலும் அதற்குப் பிறகும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் ஏதும் துவங்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதியன்று ஊடகம் ஒன்றிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், "எங்கள் கட்சியின் சார்பில் வாக்குறுதிகளை கட்சியின் தலைவர்கள் வழங்குவார்கள். இதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியில் பங்கு பெறுவது அவசியம்" என்று குறிப்பிட்டார்.

அவரது இந்தப் பேச்சே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆட்சியிலும் பங்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியின் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியான மாணிக்கம் தாகூர், புரொஃபஷனல் காங்கிரசைச் சேர்ந்த பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோரும் வலியுறுத்த ஆரம்பித்தனர்.

தி.மு.க, காங்கிரஸ், தமிழ்நாடு தேர்தல், கூட்டணி ஆட்சி

பட மூலாதாரம்,@mkstalin/X

டெல்லியில் கூட்டம்

இதற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' எனக் கூறிவந்ததால், அக்கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கலாமோ என்ற யூகங்கள் எழுந்தன. இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதெல்லாம் நடந்து பல நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் துவங்கவேயில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப. சிதம்பரம், மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கு.செல்வப்பெருந்தகை கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்காதது தொடர்பாக காங்கிரசின் வருத்தத்தை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார்.

"தொகுதி பங்கீடு குறித்து பேச முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாகக் குழுவை அமைக்க வேண்டும். விரைவில் தேர்தல் உடன்பாட்டை எட்ட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தவும் வேட்பாளர் தேர்வுகளைச் செய்யவும் எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படும். கடைசி நேரத்தில் அறிவித்தால் குழப்பம்தான் வரும். தி.மு.க பேச்சு வார்த்தையைத் தாமதப்படுத்துவதால் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

தி.மு.க, காங்கிரஸ், தமிழ்நாடு தேர்தல், கூட்டணி ஆட்சி

பட மூலாதாரம்,K.Selvaperunthagai/FB

படக்குறிப்பு,செல்வப்பெருந்தகை (கோப்புப் படம்)

கு. செல்வப்பெருந்தகையின் இந்தப் பேச்சுக்கு விளைவு இருந்தது. செவ்வாய்க்கிழமையன்று இரவில், கூட்டணிப் பேச்சு வார்த்தை தொடர்பாக அறிக்கை ஒன்றை தி.மு.க. வெளியிட்டது.

"வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் அவர்களால் விரைவில் அமைக்கப்படவுள்ள தி.மு.க-வின் தொகுதிப் பங்கீட்டுக் குழு, சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் தோழமைக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடும்" என்று அந்த அறிக்கை கூறியது.

இதற்கு அடுத்த நாள் சென்னையில் ஊடகம் ஒன்று நடத்திய மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார். காங்கிரசுடனான கூட்டணி குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த முதலமைச்சர், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது எனத் தெரிவித்திருக்கிறார்.

"(காங்கிரசுடன்) கூட்டணி நிச்சயமாக நன்றாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பதைப் போல இல்லை. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் (காங்கிரசுக்கும்) தெரியும். இடையில் ஏதாவது பிரச்னை ஏற்படுத்தலாம் என நினைப்பவர்கள் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். நாங்களும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவர்களும் கவலைப்படவில்லை." என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, தி.மு.க-வின் சில அமைச்சர்கள் கூட்டணி ஆட்சி தி.மு.கவுக்கு ஏற்புடையதல்ல எனக் கூறிவிட்ட நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் எதிர்வினை

தி.மு.க, காங்கிரஸ், தமிழ்நாடு தேர்தல், கூட்டணி ஆட்சி

பட மூலாதாரம்,Manickam Tagore / Facebook

படக்குறிப்பு,மாணிக்கம் தாகூர்

அடுத்தது கூட்டணி ஆட்சிதான் என காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து குரல் எழுப்பிவந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், உடனடியாக இதற்கு எதிர்வினையாற்றினார்கள்.

விருதுநகர் தொகுதியின் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பியான மாணிக்கம் தாகூர், "மக்கள் முடிவு செய்வார்கள் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006இல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் பிரவீண் சக்கரவர்த்தியும் எதிர்வினையாற்றினார். "மற்ற மாநிலங்கள் அனைத்தும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும்போது, தமிழ்நாட்டின் 'தனித்தன்மை' என்ற காரணத்தைக் கூறி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள மறுப்பது ஏன்? மற்ற இந்தியர்களைப் போலவே, தமிழ்நாட்டு மக்களுக்கும் கூட்டணி ஆட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்று குறிப்பிட்டார்.

கூட்டணி ஆட்சி என்பதை முதல்வர் மறுத்துவிட்ட நிலையில் இனி காங்கிரஸ் இதனைத் தொடர்ந்து வலியுறுத்துமா? "அதனை இப்போது வெளியில் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பவர்கள் அந்தத் தருணத்தில் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பார்கள்" என பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கு. செல்வப்பெருந்தகை மிகக் கவனமாகவே இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் தலைமையும் தமிழ்நாட்டுத் தலைமையும் சேர்ந்து பேசி இதற்கு ஒரு தீர்வைக் காண்பார்கள். எல்லோரும் அவரவர் கருத்தைச் சொல்வார்கள். முடிவு செய்ய வேண்டியது, தேசியத் தலைமையும் தமிழ்நாட்டுத் தலைமையும்தான். ஊடகங்களில் யூகங்களை உருவாக்காதீர்கள்" என்று கூறி இந்த விவகாரத்திற்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தி.மு.க, காங்கிரஸ், தமிழ்நாடு தேர்தல், கூட்டணி ஆட்சி

பட மூலாதாரம்,Praveen Chakravarty/Facebook

படக்குறிப்பு,பிரவீண் சக்கரவர்த்தி

ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை இது குறித்து பேசாதபோது மாநில அளவில் சிலர் சொல்லும் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.

"2006ல் தவறு செய்துவிட்டோம் என மாணிக்கம் தாகூர் நினைத்தால், அவர் அதனை காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் கேட்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குள் இரண்டு, மூன்று பேர்தான் இதுபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கூடுதல் இடங்களைக் கேட்பது நியாயமானதுதான். தேர்தல் முடிவுகள் வரும்போது எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அப்போதுகூட ஆட்சியில் பங்கு கேட்கலாம். ஆனால், தேர்தலுக்கு முன்பே இப்படிக் கேட்பது சரியல்ல. தி.மு.க. தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்பார்கள்?" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

தி.மு.கவைப் பொறுத்தவரை 22ஆம் தேதிதான் பேச்சுவார்த்தைகளைத் துவங்கவிருக்கிறார்கள். இந்த நிலையில், முதல்வரின் பேச்சு ஆழம் பார்ப்பதற்காக சொல்லப்பட்ட கருத்து என்று கருதுவதாகச் சொல்கிறார் ப்ரியன்.

"காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை யாரும் எதையும் சொல்ல முடியும். கேரளாவில் காங்கிரஸின் கொள்கைக்கே மாறுபட்ட கருத்தையெல்லாம் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணியைப் பற்றி ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்கிறார்கள். காங்கிரசின் பக்கம் இருந்து பார்க்கும்போது இதுபோன்ற அழுத்தம் நல்லதுதான். கூடுதல் இடங்களைப் பெற உதவலாம். ஆனால், முதல்வர் இது குறித்து தெளிவுபடுத்திய பிறகும் இதைச் சொல்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமளிக்கிறது" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ராகுல் காந்தியும் சந்தித்தபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார் அவர்.

திமுக கூறுவது என்ன?

ஆனால், தனித்து ஆட்சி என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. "கூட்டணி ஆட்சி வேண்டுமென்றால் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளும் தனியாக நிற்க வேண்டும். மக்கள் யாருக்கு எவ்வளவு இடங்களை அளிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். எந்தக் கட்சிக்கும் தனியாக பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், மற்ற கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், நாம் ஒரே கூட்டணியாக இணைந்து நின்று, அந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியை ஆட்சியில் அமர்த்த வாக்குக் கேட்கிறோம். அம்மாதிரி சூழலில், கூட்டணி ஆட்சி என்று கேட்டால் எப்படி?" என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்.

2006ஆம் ஆண்டில் காங்கிரஸ் தவறுசெய்துவிட்டதாக மாணிக்கம் தாகூர் சொல்வது குறித்துக் கேட்டபோது, அந்தக் கருத்து சரியானதல்ல என்கிறார் அவர்.

"2006ஆம் ஆண்டில் தி.மு.க 128 இடங்களில் போட்டியிட்டது. மற்ற இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்தத் தருணத்திலேயே தனித்துப் பெரும்பான்மை பெறுவது கடினம் என்பது தி.மு.க-வுக்குத் தெரியும். இருந்தபோதும் தி.மு.க. ஆட்சியமைக்க வாக்களியுங்கள் என்றுதான் பிரச்சாரம் நடந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைத்தன. ஆகவே அது தி.மு.க. ஆட்சியமைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட இடங்கள்தான். கூட்டணி ஆட்சி அமையட்டும் என்று கொடுத்தது அல்ல. அப்போது காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டாலும் இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் அந்த ஆட்சி நீடித்திருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

"தற்போதைய காலகட்டத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த அலையும் இல்லாவிட்டால் ஒரே ஒரு கட்சி மட்டும் தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது கடினம்" என்று கூறும் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன், தமிழ்நாட்டில் எப்போதுமே மக்கள் ஒரே கட்சியின் ஆட்சிக்காகத்தான் வாக்களிக்கிறார்கள்" என்கிறார்.

எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?

தி.மு.க, காங்கிரஸ், தமிழ்நாடு தேர்தல், கூட்டணி ஆட்சி

பட மூலாதாரம்,X/Edappadi K Palaniswami

படக்குறிப்பு,கோப்புப் படம்

இந்நிலையில், 'கூட்டணி ஆட்சி' குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக- என்டிஏ கூட்டணியில் இந்தப் பிரச்னை இல்லையென்றும்", "அதிமுக தான் ஆட்சியமைக்கும்" என்றும் கூறினார்.

இன்று (பிப்ரவரி 11) தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர் "இது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் உள்ள கூட்டணி பிரச்னை. இதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை. ஆனால், முதலமைச்சர் பேசியதற்கு உடனடியாக ஒரு காங்கிரஸ் தலைவரிடமிருந்து எதிர்வினை வருகிறது. இது அங்கு ஒரு குழப்பமான சூழல் நிலவுவதைப் பார்க்க முடிகிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் கூட்டணியில் இந்தக் குழப்பம் இல்லை, அதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுபடுத்திவிட்டார். அதிமுக- தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், அதிமுக ஆட்சியமைக்கும், நான்தான் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர், இதெல்லாம் முன்பே தெரிவிக்கப்பட்டதுதான்" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp9mz528zxgo

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.

2 weeks 1 day ago

32350.jpg?resize=700%2C375&ssl=1

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.

சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் இரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

மைதானத்துக்குள் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல வழக்கம் போல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக குடிநீர் போத்தல்கள்இபவர் பேங்க் உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்படுவது வழக்கம்.

தற்போது முதல் முறையாக விசில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு, விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாகஇ இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள் என அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் விமர்சித்துள்ளார்.

விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கு விசிலுக்குத் தடை விதிப்பது என்பதுஇ மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2026/1463787

இந்தியாவில் பறவைக்காய்ச்சல்; தமிழ்நாடு, பீகார் மாநிலங்களில் 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு

2 weeks 2 days ago

இந்தியாவில் பறவைக்காய்ச்சல் ; தமிழ்நாடு, பீகார் மாநிலங்களில் 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

08 Feb, 2026 | 02:08 PM

image

இந்தியா முழுவதும் H5N1 பறவைக் காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளன.

இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/238151

நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் - உயர் நீதிமன்றம் தானாக விசாரணை

2 weeks 2 days ago

தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் - பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா?

நஞ்சுக்கொடி

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 7 பிப்ரவரி 2026

பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எதிர்கால சந்ததியினருக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், அவற்றில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிப்பதற்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டனர்.

முன்னதாக, தாயின் நஞ்சுக் கொடியில் (Placenta) மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பரவியிருப்பது தொடர்பான தனியார் கல்லூரியின் ஆய்வு அறிக்கையை தானாக முன்வந்த விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், வழக்கில் மத்திய, மாநில அரசுகளை எதிர் மனுதாரர்களாக சேர்த்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு, கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றை தானாக முன்வந்து விசாரித்தது.

'அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம்'

அந்த ஆய்வில், பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பிஸ்பினால் ஏ (BPA) வகை ரசாயனம், பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடியில் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் தன்மைவாய்ந்த பிஸ்பினால் ஏ வகை ரசாயனம், பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆய்வில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களின் ஒப்புதலுடன் அவர்களின் நஞ்சுக் கொடியில் இருந்து ரத்த மாதிரிகளை மருத்துவக் குழு சேகரித்துள்ளது.

'இவற்றில் பிபிஏ (Bisphenol A) அளவானது ஒரு கிலோ எடைக்கு 0.43 மைக்ரோகிராம் முதல் 1.1578 மைக்ரோகிராம் வரை இருந்தது கண்டறியப்பட்டது. இவை பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தன' என அந்த ஆய்வு கூறுகிறது.

தமிழ்நாடு அரசு சொன்னது என்ன?

பிஎஸ்ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை அடுத்து நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வு, 'தாயின் நஞ்சுக் கொடியைக் கூட பிளாஸ்டிக் துகள்களால் மாசுபடுத்த முடியும் என்றால் இதற்கு தகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' எனக் கூறினர்.

'இதுதொடர்பாக விரிவாக ஆராய வேண்டும்' எனக் கூறி மத்திய, மாநில அரசின் சுகாதாரத் துறைகளை வழக்கில் எதிர் மனுதாரர்களாக நீதிபதிகள் சேர்த்தனர்.

மீண்டும் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, இதுதொடர்பாக விரிவான ஆய்வு நடத்துமாறு சென்னை ஐ.ஐ.டியை உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த தகவலை அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் மூலம் தமக்குத் தெரிவித்ததாகவும் நீதிமன்றத்தில் அவர் கூறினார். 'இந்த விவகாரத்தை தீவிரமாக ஆராய வேண்டும்' எனக் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

நஞ்சுக் கொடி, மைக்ரோ பிளாஸ்டிக், நெகிழி பாதிப்பு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மைக்ரோ பிளாஸ்டிக் (கோப்புப் படம்)

ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (European Food Safety Authority - EFSA) 'மனித உடலின் ஒரு கிலோ உடல் எடைக்கு 0.2 நானோ கிராம் (ng) அளவுக்கு பிஸ்பினால் ஏ இருக்கலாம்' என வரையறுத்துள்ளதாகக் கூறுகிறார் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான பார்த்திபன்.

வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 6) சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வி.சந்திரசேகரன், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

பிளாஸ்டிக் குடுவைகள் மற்றும் பாலித்தீன் உறைகளில் மைக்ரோ பிளாஸ்டிக்கின் இருப்பு மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது என்ன?

மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் வகைகளை வளர்ந்து வரும் மாசுகளாகவும் உணவுப் பொருள்களில் அவற்றின் பரவலை அறிந்து கொள்வது தொடர்பான திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தொடங்கியுள்ளதாகவும் வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் தெரிவித்தார்.

லக்னௌவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), கொச்சியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் மீன் தொழில்நுட்பத்திற்கான மத்திய கல்விநிறுவனம் (ICAR- CIFT), மற்றும் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம் (BITS Pilani) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

'உணவுப் பொருள்களில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகளை அடையாளம் காணவும் அவற்றின் அளவைத் தீர்மானிக்கவும் பகுப்பாய்வு முறைகளை உருவாக்கி சரிபார்ப்பது இதன் முக்கிய நோக்கமாக உள்ளது' என, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

உப்பில் அதிக மைக்ரோ பிளாஸ்டிக்

நஞ்சுக் கொடி, மைக்ரோ பிளாஸ்டிக், நெகிழி பாதிப்பு

பட மூலாதாரம்,Getty Images

பிளாஸ்டிக் குடுவைகளில் அடைக்கப்பட்ட தண்ணீர், பொட்டலங்களில் அடைக்கப்பட்டுள்ள பானங்கள், உலர்ந்த மீன்கள், மீன் உணவு ஆகியவற்றில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடைபெற்று வருவதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'இதன் முதற்கட்ட ஆய்வுகளில் அயோடின் கலந்த உப்பில் அதிக எண்ணிக்கையிலும் கருப்பு உப்பு மற்றும் பாறை உப்பு ஆகியவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது' எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த அறிக்கையில், 'இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடிநீர் பாட்டில்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது' என்கிறது.

இதுதொடர்பாக விவாதிப்பதற்கு கூட்டுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், குடிநீர் பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்யுமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

'நஞ்சுக் கொடியில் பரவிய பிளாஸ்டிக் துகள்கள்'

நஞ்சுக் கொடி, மைக்ரோ பிளாஸ்டிக், நெகிழி பாதிப்பு

பட மூலாதாரம்,Facebook/Sudha Ramalingam

படக்குறிப்பு,மருத்துவர் சுதா ராமலிங்கம்.

தாயின் நஞ்சுக் கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் பாதிப்பு இருப்பது குறித்த ஆய்வை கோவை கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது.

"நாங்கள் நடத்திய தொடக்கநிலை ஆய்வு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டன. இதனை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்," என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம்.

இவர் கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக மருத்துவத் துறையின் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக இதுதொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறோம். சிறு வயதிலேயே உடல் பருமனுடன் வளரும் குழந்தைகள், சர்க்கரை குறைபாடு, புற்றுநோய் என பல்வேறு நோய்கள் வரத் தொடங்கிவிட்டன." என்கிறார்.

'கருவிலேயே தீர்மானிக்கப்படும் நோய்கள்'

நோய்கள் பெருகிக் கொண்டிருப்பதற்கு அடிப்படையாக கருவில் குழந்தை உள்ளபோதே சில வகை வியாதிகளுக்கான தன்மை வெளிப்படுவதாக, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் சுதா ராமலிங்கம் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, மருத்துவரீதியாக இதனை 'டோஹாட்' (Developmental Origin Of Health And Disease - dohad) என்கின்றனர். கருவில் உள்ளபோதே, 'என்ன வியாதி வரும்' என்பதை செல்களின் நடத்தைகள் தீர்மானிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"உணவு முறை காரணமாக தாயின் உடலில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது கருவில் உள்ள குழந்தைக்குச் சென்றால் அதனால் உடல் பருமன், சர்க்கரை குறைபாடு வருமா எனக் கண்டறியும் ஆர்வம் எங்களுக்கு ஏற்பட்டது," என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம்.

மனித உடலில் உள்ள நாளமில்லாத சுரப்பிகளை (endocrine system) சீர்க்குலைக்கும் வேலையை பிஸ்பினால் ஏ வகை ரசாயனம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

400 கர்ப்பிணிகளிடம் ஆய்வு

நஞ்சுக் கொடி, மைக்ரோ பிளாஸ்டிக், நெகிழி பாதிப்பு

பட மூலாதாரம்,Facebook/Parthiban

கடந்த ஆறு மாதங்களாக சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளின் நஞ்சுக் கொடிகளை (placenta) மருத்துவர் சுதா ராமலிங்கம் தலைமையிலான குழு சேகரித்துள்ளது. இந்த நஞ்சுக் கொடிகள், பிரசவத்துக்குப் பிறகு வெளியில் தூக்கி எறியப்படுகின்றன.

"அதில் உள்ள ரத்த மாதிரிகள் பெற்றோரின் ஒப்புதலுடன் சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக, நெறிமுறைக் குழு (Ethics commitee) ஒப்புதல், பணிபுரியும் நிறுவனத்தின் ஒப்புதல் ஆகியவை பெறப்பட்டன," என்கிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம்.

முதல்கட்ட ஆய்வு முடிவில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட சற்று அதிகமாக நுண் நெகிழி துகள்கள் இருப்பதைக் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

"மைக்ரோ பிளாஸ்டிக் என்பது பலவகையான தன்மைகளைக் கொண்ட ரசாயனமாக உள்ளது. அதில் பிஸ்பினால் ஏ வகை ரசாயனத்தை மட்டும் கவனித்தோம். மற்ற துகள்களின் வடிவங்களைக் கண்டறிய மேம்பட்ட ஆய்வக வசதி தேவைப்படுகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன," என்கிறார் மருத்துவர் சுதா ராமலிங்கம்.

பாதிப்பைக் கொடுக்கும் தேநீர், சாம்பார் பைகள்

நஞ்சுக் கொடி, மைக்ரோ பிளாஸ்டிக், நெகிழி பாதிப்பு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உணவுப் பொருட்கள் பேக்கேஜிங் (கோப்புப் படம்)

பால், தேநீர், சாம்பார் ஆகியவற்றை கட்டிக் கொடுப்பதற்கு ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் பிளாடிக் உறைகள் மூலம் மனித உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் நுழைய வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம்.

"இவை நாளமில்லா சுரப்பிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. " என்கிறார் அவர்.

தொடர்ந்து அவர் பேசும்போது, "தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மனநலரீதியான பாதிப்புகள், இதயநோய், சர்க்கரை குறைபாடுகள் போன்றவற்றை உருவாக்கும் ஆபத்துடைய ரசாயனங்களாக இவை உள்ளன." என அவர் தெரிவித்தார்.

பேப்பர் குடுவைகள், ஒருமுறை பயன்படுத்தும் டீ தூள் பைகள் (Tea bags) ஆகியவற்றிலும் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளதாகக் கூறும் அவர், "சூடாக தேநீர் குடிக்கும்போது மைக்ரோ பிளாஸ்டிக் உருகி வயிற்றுக்குள் செல்கின்றன. இதுபோன்ற பொருட்களைத் தவிர்க்க வேண்டும்." என்கிறார்.

வெளியில் உள்ள புகையை சுவாசிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் மனித உடலில் இயல்பாகவே ரசாயனங்கள் உள்ளதாகக் கூறும் அவர், "ஆனால், அது தாயின் நஞ்சுக் கொடி வரையிலும் சென்று சேர்ந்திருப்பது தான் அதிர்ச்சியூட்டுகிறது" எனக் கூறுகிறார்.

"பிஸ்பினால் ஏ வகை ரசாயனம் போல தாலேட்ஸ் (Pthalates) வகை ரசாயனம் உள்ளது. மனிதர்களைச் சுற்றியே இவை உள்ளன. ஓட்டலில் ஊற்றிக் கொடுக்கும் சாம்பார், பிளாஸ்டிக் குடுவைகள் எனப் பலவற்றில் இவை உள்ளன." என்கிறார் அவர்.

'முன்கூட்டிய பிரசவ பாதிப்பு'

நஞ்சுக் கொடி, மைக்ரோ பிளாஸ்டிக், நெகிழி பாதிப்பு

பட மூலாதாரம்,Facebook/Perumal pillai

படக்குறிப்பு,மருத்துவர் பெருமாள் பிள்ளை

பிளாஸ்டிக் துகள்கள், நஞ்சுக் கொடியைக் கடந்து கருவை அடைவதாகக் கூறுகிறார், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத்துறையின் இணைப் பேராசிரியரும் மருத்துவருமான பெருமாள் பிள்ளை.

கர்ப்பகால நீரிழிவு போன்ற நீண்டகால வளர்சிதை மாற்றங்களுக்கு இவை வழிவகுப்பதாகக் கூறும் மருத்துவர் பெருமாள் பிள்ளை, "தாயின் நஞ்சுக் கொடியில் பி.வி.சி, பாலிமர் போன்ற மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் சில ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன" எனக் கூறுகிறார்.

இதுதொடர்பாக ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் ஏற்படும் ஆபத்துகளை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தென்கொரியாவில் குடிநீர் குடுவைகள், பால் பாட்டில் ஆகியவற்றில் பிஸ்பினால் ஏ வகை ரசாயனத்தைக் கண்டறியப்பட்டதாகக் கூறுகிறார், தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபன்.

"அங்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக பரிசோதனையில் இதன் பாதிப்பு அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர்" எனக் கூறுகிறார்.

தவிர்ப்பதற்கான வழிகள் என்ன?

தொடர்ந்து பிளாஸ்டிக் குடுவையைப் பயன்படுத்தும்போது மைக்ரோ பிளாஸ்டிக் தாக்கம் அதிகரிக்கும் என கூறும், மருத்துவர் சுதா ராமலிங்கம் மனித உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் செல்வதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.

  • பிளாஸ்டிக் குடுவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

  • இரும்பு குடுவைகள் பாதுகாப்பானவை

  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

  • ஒருமுறை பயன்படுத்தப்படும் தேநீர் கோப்பைகளைத் தவிர்க்க வேண்டும்

  • சூடான சாம்பார், தேநீர் போன்றவற்றை பாலித்தீன் பைகளில் வாங்கக் கூடாது.

"தற்போது இடைக்கால ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளோம். விரைவில் விரிவான அறிக்கை வெளியிடப்பட உள்ளது. மைக்ரோ பிளாஸ்டிக் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுமாறு சென்னை ஐஐடியிடம் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அவை வெளிவரும்போது மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படும்," என்கிறார், மருத்துவர் சுதா ராமலிங்கம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgrdrpxey8ro

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

2 weeks 2 days ago

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். த.வெ.க தலைவர் விஜய் குறித்தும் அவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாறே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றதும் அப்பகுதியில் ஐந்து கார்களில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்தனர். இதில் த.வெ.க நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்

பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்ததாக கூறப்படும் நபர் யார் என்பது குறித்து தேனி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/live/cn9zwzl89v4t?post=asset%3A1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2#asset:1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

2 weeks 3 days ago

madras.jpg?resize=750%2C375&ssl=1

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலான விசாரணையின் போது மத்திய அரசின் சட்டத்தரணி மேலதிக அவகாசம் கோரியதை அடுத்து, 2026 வழக்கு பெப்ரவரி 16 வரை ஒத்திவைக்கப்பட்டது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) பொதுச் செயலாளர் வைகோ இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது.

அதன் பின்னர் இந்தத் தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை.

2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் இந்த அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை UAPA தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 ஆம் ஆண்டு சென்னை மேல் நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன் விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மனுவை ஒத்திவைக்கக் கோரினார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசாரணையை பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய வைகோ பின்வருமாறு கூறினார்,

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நான் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

நானே நேரில் முன்னிலையாகி இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான முதற்கட்ட வாதங்களை முன்வைத்தேன். 

மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் முக்கியமான குற்றச்சாட்டு: “புலிகள் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்” என்பது. 

இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.

வட்டுக்கோட்டை தீர்மானத்திலோ, தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளிலோ ஒருபோதும் தமிழ்நாட்டை இணைக்கும் நோக்கம் இருந்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விளக்கினேன்.

தலைவர் பிரபாகரனின் பின்னால் இருக்கும் தமிழீழ வரைபடத்தில் கூட தமிழ்நாட்டின் ஒரு சிறு துளி இடம் கூட இருந்ததில்லை. 

ஈழ மண்ணை மீட்பது மட்டுமே அவர்களின் நோக்கம். 

மத்திய அரசின் அடிப்படை வாதமே பொய்யானது எனும்போது, இந்தத் தடையின் மொத்த கட்டுமானமும் (The whole edifice of the ban) சரிந்து விழுகிறது.

ஆயுதப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, 1948 ஐநா மனித உரிமைகள் பிரகடனத்தின் முகவுரையை மேற்கோள் காட்டினேன். 

ஒரு நாட்டில் அடக்குமுறையும் சர்வாதிகாரமும் நிலவும் போது, அதை எதிர்த்துப் புரட்சி செய்வது (Rebellion against tyranny) நியாயமானது என ஐநா-வே அங்கீகரிக்கிறது.

மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் ரிவோனியா நீதிமன்றத்தில் சொன்னது போல—அரசாங்கம் ஆயுதங்களால் மக்களை ஒடுக்கும் போது, மக்கள் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது. 

ஈழத்தில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை (Genocide). 

அதற்கான நீதியை வென்றெடுக்கும் வரை எனது சட்டப்போராட்டம் ஓயாது – என்றார்.

https://athavannews.com/2026/1463517

'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

2 weeks 4 days ago

'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

வருமான வரி வழக்கு, விஜய், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,TVK

படக்குறிப்பு,கோப்புப் படம்

கட்டுரை தகவல்

வருமான வரித் துறையால் தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. நிவாரணம் கோரி தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் கூறியுள்ளது.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2015 -16ஆம் நிதியாண்டில் தனக்குக் கிடைத்த கூடுதல் வருவாயான 15 கோடி ரூபாய் குறித்த விவரத்தை தானாக முன்வந்து தெரிவிக்காததாக வருமான வரித் துறை 2022ஆம் ஆண்டில் அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அபராதம் விதிக்கப்படவில்லையென்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, குறிப்பிட்ட காலத்திற்குள் தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

விஜய் தரப்பு விரும்பினால், காலக்கெடு குறித்த விவகாரத்தைத் தவிர்த்து வேறு விஷயங்களை முன்வைத்து மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

வருமான வரி வழக்கு, விஜய், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,@actorvijay/X

படக்குறிப்பு,2015இல் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படம்

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தி சில ஆவணங்களைக் கைப்பற்றியது. அந்த ஆவணங்களின்படி, 2015ஆம் ஆண்டில் புலி திரைப்படத்தைத் தயாரித்த பி.டி. செல்வகுமாரும் ஷிபு என்பவரும் அந்தப் படத்திற்காக காசோலை மூலம் 16 கோடி ரூபாயும் ரொக்கமாக 4.93 கோடி ரூபாயும் அளித்திருந்தது தெரியவந்தது.

காசோலை மூலம் கொடுக்கப்பட்ட பணத்திற்கு வருமான வரி (TDS) செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், ரொக்கப் பணத்திற்குச் செலுத்தப்படவில்லை.

இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது 5 கோடி ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்ட அவர், அதற்கான வரியைச் செலுத்தவும் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த ஐந்து கோடி ரூபாய் உள்பட கணக்கில் வராமல் 15 கோடி ரூபாயை பெற்றதாகவும் அதற்கான வரியைச் செலுத்தவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி 2016 - 17ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார். அதில் அவரது வருவாய் 35.42 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ரசிகர் மன்றத்திற்குச் செய்த செலவாக சுமார் 64.71 லட்ச ரூபாயையும் சில சொத்துகளின் மதிப்பு குறைந்ததற்காக 17.81 லட்ச ரூபாயையும் வரி விலக்கிற்காகக் கோரியிருந்தார்.

ஆனால், வருமான வரித் துறை அதனை ஏற்கவில்லை. 38.25 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டுமென்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால், அவர் இந்தக் கூடுதல் வருவாயை கணக்கில் காட்டியிருக்க மாட்டார் என்றும் கூறியது. இதற்காக அவருக்கு வருமான வரி சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்தே விஜய் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

வருமான வரித்துறை தரப்பு கூறியது என்ன?

வருமான வரி வழக்கு, விஜய், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,Getty Images

இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்துவந்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறைக்காக வாதாடிய வழக்கறிஞர் வருமான வரிச் சட்டங்களின் படி, சரியான முறையிலேயே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதனால் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் அவர் வாதாடினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபராதம் விதிப்பதற்கான நடைமுறைகள் 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பாகவே துவங்கியிருக்க வேண்டுமே தவிர 2022 ஜூன் 30 முன்பாக அல்ல என்று வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜனவரி 23ஆம் தேதி வழக்கின் விசாரணையை முடித்து, தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 6) விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gvngvxv0wo

’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு

2 weeks 4 days ago

’’45 பவுனைவிட நேர்மைதான் முக்கியம்” பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு

image_4ed76e7029.jpg

சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை மலேசிய அரசு கவுரவித்துள்ளது. அவருக்கு தங்க மோதிரத்தையும் பரிசாக அனுப்பியுள்ளது.

குப்பையில் கிடந்த 45 பவுன் தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவுக்கு அன்றாடம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தற்போது கடல் கடந்தும் அவருக்கு கவுரவம் தேடி வருகிறது.

பத்மாவின் செயலால் நெகிழ்ந்து போன மலேசிய அரசின் சட்டத் துறை அமைச்சர் குலசேகரன், தனது உதவியாளர் வடிவுக்கரசியை சென்னை அனுப்பியிருந்தார். அவரிடம் பத்மாவுக்கு அணிவிக்குமாறு கூறி மோதிரத்தையும் பரிசாக கொடுத்துள்ளார்.

இதையடுத்து சென்னை வந்த வடிவுக்கரசி, நேராக பத்மா இருப்பிடத்தை தேடி வந்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன் அமைச்சர் கொடுத்த மோதிரத்தையும் அணிவித்தார். மேலும் அமைச்சருக்கு வீடியோ கால் போட்டு பத்மாவை பேச வைத்தார். அப்போது பத்மாவுக்கு அமைச்சர் குலசேகரன் பாராட்டுகளை தெரிவித்தார். இதனால் பத்மா நெகிழ்ந்து போனார்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 48 வயது பத்மா, தூய்மைப் பணியாளர். கடந்த ஜனவரி 11 அன்று, தி.நகர் வண்டிக்காரன் பகுதியில் பணியிலிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். அதில் 45 பவுன் தங்க நகைகள் இருந்தன.

உடனடியாக, அந்த நகைகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், அவை நங்கநல்லூரைச் சேர்ந்த 46 வயது பரமேஷுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்து, உரியவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நேர்மைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.

தொடர்ந்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், பத்மாவின் புகைப்படத்துடன் கூடிய 'மை ஸ்டாம்ப்' அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. இச்செயல் பல தரப்பிலும் பாராட்டுக்களைப் பெற்றது. இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பத்மாவை அழைத்து "முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவித்தார்.

அந்த வகையில் தற்போது நடிகர் பார்த்திபனும், பத்மாவை பாராட்டியுள்ளார். பத்மாவுக்கு காலணியை அணிவித்த பார்த்திபன், அவருக்கு பாத பூஜை செய்து கௌரவப்படுத்தினார். பாதணியை பார்த்திபன் கீழே வைத்து அணிய சொன்ன போது பத்மா, நெகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.

வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்... இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பத்மாவுக்கு நாளுக்கு நாள் பாராட்டுகளும் கௌரவங்களும் குவிந்து வரும் நிலையில் மலேசியாவில் இருந்தும் பாராட்டு மழை பெய்துள்ளது. மலேசிய அமைச்சர் குலசேகரன் பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/45-பவுனைவிட-நேர்மைதான்-முக்கியம்-பத்மாவுக்கு-மலேசிய-அமைச்சர்-பாராட்டு/175-372088

Checked
Tue, 02/24/2026 - 22:39
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed