தமிழகச் செய்திகள்

யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது

21 hours 1 minute ago

யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது

13 Dec 2025, 11:15 AM

YouTuber Savukku Shankar arrested

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர்.

வழக்கு விபரம்

ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன், சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது அந்த வீடியோவை நீக்க 10 லட்சம் பணம் கேட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினர் தயாரிப்பாளர் புருஷோத்தமனை அடித்து அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து விட்டதாகவும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் விளக்கம்

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சவுக்கு சங்கர், ” இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய் வழக்கு. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. நீங்கள் சொல்லும் புருஷோத்தமன் என்ற யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. இதை எனது விளக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று நவம்பர் 1 ம் தேதி பதில் கடிதம் அனுப்பிவிட்டேன்.

இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று இரவு வெளியிட்டுள்ளதால் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

https://minnambalam.com/youtuber-savukku-shankar-arrested/

முதுமலையில் சிக்கிய புலி வேட்டைத் திறனை இழந்துவிட்டதா? என்ன நடந்தது?

2 days 13 hours ago

முதுமலையில் சிக்கிய புலி வேட்டைத் திறனை இழந்துவிட்டதா? என்ன நடந்தது?

முதுமை எய்திய புலிக்கு காட்டில் ஏற்படும் அவலநிலை – இறுதியில் என்ன ஆகும்?

பட மூலாதாரம்,Mudumalai Forest Department

2 மணி நேரங்களுக்கு முன்னர்

உதகை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் சுற்றித் திரிந்த டி37 என்ற ஆண் புலி நவம்பர் 24ஆம் தேதியன்று பழங்குடிப் பெண் ஒருவரைத் தாக்கியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தேடப்பட்டு வந்த அந்தப் புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று(டிசம்பர் 11) சிக்கியுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் எம்.ஜி. கணேசன், அது வேட்டைத் திறனை இழந்த வயதான புலி என்பதால், சென்னையிலுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன? புலியை வனத்துறை பிடித்தது எப்படி? வேட்டைத் திறனை இழந்த புலி என்றால் என்ன?

பழங்குடிப் பெண்ணை தாக்கிய புலி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள மாவனல்லா கிராமத்தில் நவம்பர் 24ஆம் தேதியன்று தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாள் என்ற பழங்குடிப் பெண்ணை புலி தாக்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தின் தாக்கத்தால், உள்ளூர் பொது மக்கள் புலியைப் பிடித்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் "தானியங்கி கேமராக்களை பொருத்தி, நான்கு குழுக்களுடன்" தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் மூலம், மாவனல்லா பகுதியில் ஒரு வயதான புலி சுற்றி வருவதையும், அது ஆண் புலி என்பதும் அடையாளம் காணப்பட்டது.

வனத்துறையின் அறிக்கைப்படி, பழங்குடியினப் பெண் உயிரிழந்த மறுநாளான நவம்பர் 25ஆம் தேதியன்று, தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்தபோது சம்பவம் நடந்த இடத்தில் டி37 எனப் பெயரிடப்பட்ட வயதான ஆண் புலி இருப்பது கண்டறியப்பட்டது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட புலியைக் காட்டுமாறு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

படக்குறிப்பு,கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட புலியைக் காட்டுமாறு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

கூண்டில் சிக்கிய புலி

இதைத் தொடர்ந்து டி37 புலியைப் பிடிக்க நான்கு வெவ்வேறு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.

"புலியின் நடமாட்டத்தை ரோந்துப் பணிகள், டிரோன் மூலமாகவும், 29 தானியங்கி கேமராக்கள் வாயிலாகவும்'' வனத்துறை கண்காணித்து வந்தது.

புலி கடந்த 24ஆம் தேதி பழங்குடிப் பெண்ணை தாக்கியது முதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த கண்காணிப்புகளின் விளைவாக, "டிசம்பர் 11ஆம் தேதியன்று அதிகாலையில் செம்மநத்தம் சாலை பகுதிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியதாக" தனது அறிக்கையில் முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் எம்.ஜி. கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முயற்சியின்போது மயக்க மருந்து பயன்படுத்தப்படவில்லை எனவும் துணை இயக்குநர் கணேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

முதுமலை - கூண்டில் சிக்கிய புலி

படக்குறிப்பு,முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் எம்.ஜி. கணேசன்

புலியை பார்க்க விடுமாறு மக்கள் போராட்டம்

சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக புலி குறித்த அச்சத்தில் இருந்து வந்த மாவனல்லா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பிடிக்கப்பட்ட புலியைக் காணக் கூடியிருந்தனர். ஆனால், வனத்துறை புலி இருந்த பகுதிக்கு யாரையும் அனுமதிக்கவில்லை.

அதுமட்டுமின்றி, புலி சிக்கிய கூண்டு மூடப்பட்டு இருந்ததால், "அது பெண்ணைத் தாக்கிய புலி இல்லை" என்றும் பிடிக்கப்பட்ட புலியை பொது மக்களுக்குக் காட்ட வேண்டும் என்றும் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதோடு, வனத்துறை வைத்த கேமராவில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலிகள் பதிவாகி இருப்பதால், பிடிக்கப்பட்டது பழங்குடிப் பெண்ணை தாக்கிய புலிதானா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால், செய்தியாளர்களிடம் பேசியபோது இதற்குப் பதிலளித்த துணை இயக்குநர் கணேசன், "கூண்டில் சிக்கிய புலி, பழங்குடிப் பெண் தாக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் பதிவான அதே புலிதான் என்பது உறுதி செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.

மேலும், அது வயதான புலி என்பதால் வேட்டையாடும் திறனை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், "அதன் கோரை பற்கள், முன்னங்கால்கள், மூக்கு ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதாகவும்" கூறியதோடு, "சுமார் 14 முதல் 15 வயது மதிக்கத்தக்க புலியாக அது இருக்கக்கூடும்" என்றும் தெரிவித்தார்.

அதோடு, "அது தனது வேட்டைத் திறனை இழந்துவிட்டதால், எளிதில் கிடைக்கக்கூடிய இரைகளான கால்நடைகளைக் குறிவைத்து வந்தது. அப்படிப்பட்ட ஒரு முயற்சியின்போதே பழங்குடிப் பெண்ணை தவறுதலாக புலி தாக்கியுள்ளது" எனவும் குறிப்பிட்டார்.

கூண்டில் சிக்கிய புலி

பட மூலாதாரம்,Mudumalai Forest Department

படக்குறிப்பு,பழங்குடிப் பெண்ணை தாக்கிய புலியின் உடலில் மூக்கு, முன்னங்கால் ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

வயதான புலிக்கு காட்டில் நேரும் நிலை

புலிகள் பொதுவாக பன்னிரண்டு வயதை நெருங்கும்போது முதிர்ச்சி அடைவதன் விளைவுகளை அனுபவிக்கத் தொடங்குவதாகக் கூறுகிறார் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயிர் உயிரியலாளராக இருக்கும் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி.

"ஒரு புலியால், வயதாகிவிட்டால் இரை உயிரினங்களை வேகமாகச் செயல்பட்டு துரத்திப் பிடிக்க முடியாது. இதன் காரணமாக, எளிதில் பிடிக்க ஏதுவான இரைகளாகப் பார்த்து வேட்டையாடத் தொடங்கும்.

நோய்வாய்ப்பட்ட விலங்கு, அடிபட்ட உயிரினங்கள் போன்றவற்றைக் குறிவைக்கலாம். அப்படியான வாய்ப்புகளும் கிடைக்காமல் போகும் சூழலில், அவை கால்நடைகள் அல்லது மனிதர்களை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபடக்கூடும்," என்று விவரித்தார்.

அவரது கூற்றுப்படி, தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் அந்தப் புலியை அதன் வாழ்விடத்தில் இருந்து துரத்தும் செயல்களில் பிற இளம் புலிகள் ஈடுபடலாம். "அந்தச் சூழலில், காட்டின் வெளிப்பகுதிகளை நோக்கி அவை தள்ளப்படுகின்றன. அப்போது கால்நடைகள் போன்ற எளிதில் பிடிக்கவல்ல இரைகளை குறிவைக்கின்றன."

இந்தக் குறிப்பிட்ட டி37 புலியின் உடலில்கூட முன்னங்கால்கள், மூக்கு ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதாக முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் கணேசன் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டிருந்தார்.

அதற்கும் ஒருவேளை காட்டுயிர் உயிரியலாளர் பீட்டர் கூறுவதைப் போல் பிற புலிகளுடன் ஏற்பட்ட வாழ்விட மோதல் காரணமாக இருக்கக்கூடுமா என்ற கேள்வி எழுந்தது.

அதுகுறித்து விளக்கியபோது, "அதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருப்பதாக" குறிப்பிட்ட பீட்டர், புலிகளிடையே நிகழும் அத்தகைய மோதல்களின் விளைவாகவே இப்படிப்பட்ட காயங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

தற்போது பிடிக்கப்பட்டுள்ள டி37 புலி, முதிர்ச்சி காரணமாக அதன் வேட்டைத் திறனை இழந்துவிட்டதை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

எனவே, "அதைக் காட்டில் விடுவிப்பது சாத்தியமில்லை என்று முடிவு செய்துள்ள வனத்துறை, சென்னையிலுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அதைக் கொண்டு செல்லத் தீர்மானித்துள்ளது" என்று முதுமலை துணை இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd6x7d7n7jyo

தமிழக வனத்துறை பிடித்து இடமாற்றம் செய்த 2 யானைகள் இறந்தது ஏன்? சிறப்புக் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி

3 days ago

தமிழக வனத்துறை பிடித்து இடமாற்றம் செய்த 2 யானைகள் இறந்தது ஏன்? சிறப்புக் குழு அமைக்கப்பட்டதன் பின்னணி

காட்டு யானைகள், இயற்கை, காடுகள், காட்டுயிர், விலங்கு நலம்

படக்குறிப்பு,கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 10 டிசம்பர் 2025

தமிழ்நாட்டில் சமீபத்தில் பிடிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டுயானைகள் இறந்ததன் எதிரொலியாக யானைகளை இடமாற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க சிறப்புக்குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இரு மாதங்களில் இந்த குழு இதற்கான வரைவு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்க வேண்டுமென்று காலஅவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யானைகள் காட்டை விட்டு வெளியில் வருவதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இத்தகைய குழுக்களை அமைப்பதால் எந்த பயனுமில்லை என்று காட்டுயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மனிதர் வாழும் பிரதேசத்திற்குள் நுழைந்த காட்டுயானைகளை இடப்பெயர்வு செய்வதே தீர்வு என்று மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு ஏற்ற வகையில் யானைகளை இடப்பெயர்வு செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறை அவசியம் என்கின்றனர் அரசு நிர்ணயித்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள்.

நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க சிறப்புக்குழு அமைப்பு

காட்டு யானைகள், இயற்கை, காடுகள், காட்டுயிர், விலங்கு நலம்

மத்திய அரசின் யானை பாதுகாப்புத் திட்டத் தரவுகளின்படி, இந்தியாவிலுள்ள 29 ஆயிரம் ஆசிய யானைகளில் தமிழகத்தில் 10 சதவிகிதம், அதாவது 2,961 யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளின் வலசைப் பாதைகளில் ஏற்படும் பலவித தடங்கல்களால் யானை–மனித மோதல்கள் பதிவாகின்றன.

இதன் காரணமாக, அதில் தொடர்புடைய யானைகளை இடமாற்றம் செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு இடமாற்றம் செய்வதற்கு, இந்திய காட்டுயிர் மையம் (Wildlife Institue of India) வழங்கியுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SoP) கடைபிடிப்பது அவசியம்.

சமீபத்தில் தமிழக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்ட 2 காட்டு யானைகள் உயிரிழந்தன.

அதன் தொடர்ச்சியாகவே யானைகளை இடமாற்றம் செய்வதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்க 6 பேர் கொண்ட சிறப்புக்குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலரும், சென்னை உயர்நிலை வனஉயிரினப் பாதுகாப்பு நிறுவன இயக்குநருமான உதயன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் வனத்துறை சிறப்புச் செயலாளர் அனுராக் மிஷ்ரா, மாவட்ட வன அலுவலர்(கூடலுார்) வெங்கடேஷ் பிரபு, ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் கலைவாணன், முதுமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லுாரி உதவி பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமீபத்தில் 2 காட்டு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது உயிரிழந்ததன் காரணமாகவே, தற்போதுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யானைகளைப் பிடிப்பதில் துவங்கி, அவற்றைக் கையாள்வது, இடமாற்றம் செய்து விடுவிப்பது, அந்த புதிய இடத்தில் கண்காணிப்பது பற்றிய நடைமுறைகள் சார்ந்து அறிவியல் அடிப்படையில் மதிப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது என்று கூறும் அந்த அறிக்கை, யானைகளை இடமாற்றம் செய்யும் நடைமுறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தெளிவான நெறிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளது.

காட்டு யானைகள், இயற்கை, காடுகள், காட்டுயிர், விலங்கு நலம்

படக்குறிப்பு,கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒரு காட்டுயானை உயிரிழந்தது.

காட்டு யானைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான விரிவான, செயல்படுத்தக்கூடிய நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SoP) உருவாக்க வேண்டுமென்று கூறியுள்ள தமிழக அரசு, அந்த நெறிமுறை தேசிய மாதிரியாகக் கருதப்படுவதற்கு ஏற்ற தரநிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்ட இரு காட்டு யானைகள் இறந்ததைக் காரணம் காட்டியே, இந்த குழுவை அமைத்துள்ளதாக அரசே கூறியிருப்பது ஒரு வகையில் விவாதப்பொருளாகியுள்ளது. இவ்விரு யானைகளும் பிரச்னைக்குரிய யானைகளாக (problematic elephant) அடையாளம் காணப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்பு இடமாற்றம் செய்யப்பட்டவை.

நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் கடந்த செப்டம்பரில் பிடிக்கப்பட்ட காட்டுயானை ஒரு மாதம் க்ரால் எனப்படும் பலமான மரக்கூண்டில் அடைக்கப்பட்டு, சாந்தப்படுத்தப்பட்டது. பின்னர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அந்த யானை, அடுத்த 45 நாட்களில் மலையிலிருந்து கீழே விழுந்து இறந்தது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்பகுதியில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி பிடிக்கப்பட்ட மற்றொரு காட்டுயானை (ரோலக்ஸ் என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டது), ஆனைமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அந்த யானை கடந்த நவம்பர் 26 ஆம் தேதி உயிரிழந்தது.

2 யானைகள் உயிரிழப்புக்கு வன அதிகாரிகள் கூறும் காரணமென்ன?

காட்டு யானைகள், இயற்கை, காடுகள், காட்டுயிர், விலங்கு நலம்

படக்குறிப்பு,நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் ஒரு காட்டு யானை, கடந்த செப்டம்பரில் பிடிக்கப்பட்டது.

இரு யானைகளின் இறப்புக்கும், அவை இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்த தொடர்புமில்லை என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். இயற்கையான விபத்து மற்றும் உடல்நலக்குறைவே இறப்புக்கு காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

கூடலூர் பகுதியில் பிடிபட்ட யானை இறந்ததற்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) வெங்கடேஷ் பிரபு, ''ஒரு யானை பிடிக்கப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது. 45 நாட்கள் கழித்து, கனமழை பெய்தபோது மலையில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரு பக்கத் தந்தம் உடைந்து ரத்தம் பெருமளவில் வெளியேறி இறந்துவிட்டது. அது ஒரு விபத்து.'' என்றார்.

கூடலுார் பகுதியில் 2024 டிசம்பர் மாதத்தில் பிடிக்கப்பட்டு, அதே அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை ஒன்று இப்போது வரை அங்கே நன்றாகவுள்ளது என்றார் வெங்கடேஷ் பிரபு. இவ்விரு யானைகளுக்கும் ரேடியோ காலர் பொருத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பிடிக்கப்பட்ட காட்டு யானை இறந்ததற்கான காரணம் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் வெங்கடேஷ், ''அந்த யானைக்கு 50 வயதாகிவிட்டநிலையில், இதயம், நுரையீரல் இரண்டிலும் பிரச்னை இருந்துள்ளது. முதற்கட்ட பிரேத பரிசோதனையில் இதய செயலிழப்பே உயிரிழப்புக்குக் காரணமென்று தெரியவந்துள்ளது. உடற்கூறு மாதிரிகள், சென்னை, கேரளா உள்ளிட்ட 5 ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை வந்த பின்பே முழு காரணத்தை அறியமுடியும்.'' என்றார்.

வழக்கமாக ஒரு காட்டு யானை 3.5 டன் முதல் 4 டன் வரை எடையிருக்கும். ஆனால் இந்த யானையின் எடை 6.5 டன் ஆக இருந்ததாக கூறிய களஇயக்குநர் வெங்கடேஷ், இது அதீதமான எடை என்பதாலும் உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

காட்டு யானைகள், இயற்கை, காடுகள், காட்டுயிர், விலங்கு நலம்

படக்குறிப்பு,முதுமலை புலிகள் காப்பக களஇயக்குநர் வெங்கடேஷ்

யானைகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு

ஆனால், இத்தகைய யானைகளை இடமாற்றம் செய்வதே தவறு என்று வைல்ட்லைஃப் ரேங்க்ளர்ஸ் (Wildlife Wranglers) அமைப்பின் நிறுவனர் கிறிஸ்டோபர் கூறுகிறார். அந்த யானைகள் மயக்க நிலையில் பிடிக்கப்பட்டு, அவற்றின் வாழ்விடங்களை விட்டு இடமாற்றம் செய்யப்பட்டு புதிய இடங்களில் விடப்படுவதால் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாவதும் அவற்றின் இறப்புக்கு ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''யானைகளை இடமாற்றம் செய்வதில் வனத்துறை தவறு செய்கிறது. வளர்ந்த யானைகளால் புதிய வாழ்விடங்களின் இயற்கை அமைப்புடன் ஒன்றுவது எளிதானது அல்ல. அதில் ஏற்பட்ட சிக்கலால் அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்ட யானை வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம்.'' என்றார்.

'இடமாற்றம் செய்யும் யானைகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிப்பதாகக் கூறும் வனத்துறை, அந்த யானையை பிடித்த பகுதியிலேயே அடர்ந்த வனத்தில் விடுவித்து அதனை கண்காணிப்பதில் என்ன பிரச்னை என்று கிறிஸ்டோபர் கேள்வி எழுப்பினார்.

'இடமாற்றம் செய்வதே தீர்வு'

இந்த கருத்துடன் ஓசை சூழலியல் அமைப்பின் தலைவர் காளிதாசன் உடன்படவில்லை. பிரச்னைக்குரியவையாக கருதப்படும் யானைகளை இடமாற்றம் செய்வதே தீர்வு என்பது அவரது கருத்து.

தமிழ்நாட்டில் 1985 முதல் இதுவரை 22 ஆண் காட்டு யானைகள் மட்டுமே பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு குடியேற்றப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து யானைகள் காட்டை விட்டு வெகு தூரம் வெளியே வந்ததால் பிடிக்கப்பட்டு மீண்டும் அதே காட்டில் விடப்பட்டவை. மற்ற யானைகள் வேறு காடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்கிறார் அவர்.

''இவற்றில் பெரும்பாலான யானைகள் விடப்பட்ட சில நாட்களிலேயே காட்டை விட்டு வெளியே வந்து பயிர் சேதம் விளைவித்தல், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் மீண்டும் பிடிக்கப்பட்டு வளர்ப்பு யானைகளாக மாற்றப்பட்டன. சில யானைகள் இறந்து போயின. சில யானைகளைப் பற்றிய தகவல் இல்லை.'' என அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''யானைகளை இடமாற்றம் செய்யும் பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் 2 காட்டுயானைகளை பிடித்து 200 கி.மீ. தள்ளி பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் விட்டனர். ஆனால் அந்த இரு யானைகளும் ஹாசன் பகுதிக்கே மீண்டும் திரும்பிவிட்டன.'' என்றார்.

''பிரச்னைக்குரிய யானைகளை கும்கியாக மாற்ற வேண்டும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். யானைகளை இடமாற்றம் செய்யும்போது, வழக்கமான கூட்டத்தின் தொடர்பற்ற புதிய காட்டில் தனித்துவிடப்படும்போது அவை மன அழுத்தத்துக்கு உள்ளாவதும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளால் இறந்து போவதற்கும் சாத்தியம் அதிகமுள்ளது. அதனால் யானைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான நெறிமுறைகளை மறுஆய்வு செய்து புதிதாக உருவாக்குவது நல்ல முயற்சிதான்.'' என்றார் காளிதாசன்.

யானைகளை இடமாற்றம் செய்வதற்கு தற்போது கடைபிடித்து வரும் இந்திய காட்டுயிர் மையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளில்லாமல் புதிதாக உருவாக்குவதன் அவசியம் என்ன என்ற கேள்வியையும் பலரும் முன் வைக்கின்றனர். ஆனால் தேசிய அளவில் மட்டுமின்றி, மாநிலத்துக்குள்ளேயே யானைகளால் ஏற்படும் பிரச்னை, பகுதிக்குப் பகுதி வெவ்வேறாக இருக்கும் என்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறினார்.

''ஓசூரில் 30–60 யானைகளைக் கொண்ட யானைக்கூட்டம் அதிகமாக இருக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் கேழ்வரகு (ராகி) உண்பதற்காக தனது கூட்டத்தை மூத்த பெண் யானை வழிநடத்தி வரும். அவற்றைக் கையாள்வது ஒரு சவாலாக இருக்கும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலேயே பவானி சாகரில் ஒரு விதமாகவும், கடம்பூரில் வேறு விதமாகவும் பிரச்னை இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் ஒற்றை ஆண் யானைகளால்தான் பிரச்னை ஏற்படும்.'' என்றார் அவர்.

ஒற்றை யானைகளை இடமாற்றம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கும் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லுாரி உதவி பேராசிரியர் பாஸ்கரன், ''ஆப்ரிக்காவில் மிகவும் அறிவியல்பூர்வமாக யானைகளை இடமாற்றம் செய்கிறார்கள். முதலில் அதன் குணாதிசயத்தைக் கவனிப்பார்கள். பின் மன அழுத்தத்தை சோதிப்பார்கள். இடமாற்றத்துக்கு முன்னும் பின்னும் அந்த யானைகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள்.'' என்கிறார். யானை ஆராய்ச்சியாளரும், உதவி பேராசிரியருமான பாஸ்கரன், தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.

''அத்தகைய அறிவியல்பூர்வமான நெறிமுறைகளை உருவாக்கும் நோக்கத்தில்தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். காட்டுயானைகளை இடமாற்றம் செய்கையில் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம்.'' என்கிறார் பாஸ்கரன்.

"ஒரு யானை கூட இறக்கக் கூடாது என்பதே நோக்கம்"

காட்டு யானைகள், இயற்கை, காடுகள், காட்டுயிர், விலங்கு நலம்

படக்குறிப்பு,வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ

தற்போது யானைகளை இடமாற்றம் செய்வதற்கு கடைபிடிக்கப்படும் உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான வழிகாட்டுதல் நெறிமுறைகள், தமிழகத்தின் காட்டுயிர் பிரச்னைகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்கிறார் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ. அந்த காரணத்தால்தான் தனியாக வழிகாட்டுதல் நெறிமுறைகளை (Sop) உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, ''எக்காரணத்திற்காகவும் இடமாற்றத்தின்போது அல்லது அதற்குப் பின் ஒரு யானை கூட இறக்கக்கூடாது என்பதே இதன் நோக்கம். கடந்த ஓரிரு ஆண்டுகளில் 8–9 காட்டு யானைகளை இடமாற்றம் செய்த நிலையில், இந்த 2 யானைகள் மட்டும் இடமாற்றத்திற்குப் பின் இறந்துள்ளன என்பதால், அதில் ஏதாவது தவறு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதும், அப்படியிருந்தால் அது எதிர்காலத்தில் நடக்காமலிருக்க நடவடிக்கை எடுப்பதும் நம் பொறுப்பு என்பதால்தான் தகுந்த நிபுணர்களால் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நிலை வனஉயிரினப் பாதுகாப்பு நிறுவனம், இத்தகைய விஷயங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்யும் நிறுவனம் என்பதால்தான் அதன் இயக்குநர் உதயனை இதற்கு தலைவராக நியமித்துள்ளோம்.'' என்றார் சுப்ரியா சாஹூ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c075mge92gko

Carrom World Cup-ல் தங்கம் வென்ற கீர்த்தனா

3 days 15 hours ago

"வாங்குன Cup-ஐ கூட வைக்க வீட்டுல இடம் இல்ல" - Carrom World Cup-ல் தங்கம் வென்ற Keerthana

Carrom விளையாட்டில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனாவின் கதை இது.

#Carrom #CarromWorldCup

Producer: ShanmughaPriya

Shoot & Edit: Ranjith

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன?

4 days 15 hours ago

'ஆளும் கட்சியை விமர்சிக்காமல்' ஆட்சியை பிடிப்போம் என கூறும் விஜய் - புதுச்சேரி திட்டம் என்ன?

விஜய்யின் புதுச்சேரி பேச்சு: என்ன திட்டமிடுகிறார்?

பட மூலாதாரம்,X

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரி அரசை பெரிதாக விமர்சனம் செய்யாமல், பொதுவான பிரச்னைகளைப் பேசிச் சென்றிருக்கிறார். புதுச்சேரியில் விஜய்யின் திட்டம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று (டிச. 09) நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து கடுமையான திமுக எதிர்ப்பு நிலையை மேற்கொண்டுவரும் நிலையில், அக்கட்சியின் கூட்டங்களில் விஜய்யும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் திமுகவைக் கடுமையான விமர்சித்து வந்தனர்.

ஆனால், இந்தக் கூட்டம் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் என்பதால் இங்கே விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

சுமார் 11 மணியளவில் கூட்டம் துவங்கியதும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேச ஆரம்பித்தார்.

புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "தமிழ்நாட்டில் எங்கேயும் நம்மை விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். 2026ல் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் நம்முடைய கட்சி ஆட்சியைப் பிடிக்கும்" என்று குறிப்பிட்டார்.

விஜய், தமிழக வெற்றிக்கழகம், புதுச்சேரி, தவெக

பட மூலாதாரம்,TVK Party HQ/x

படக்குறிப்பு,புதுச்சேரியில் விஜய் பேசிய போது

இதற்குப் பிறகு பேச வந்த அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தி.மு.கவை விமர்சிப்பதில் துவங்கி, புதுச்சேரிக்கென பல திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறி முடித்தார்.

அவர் பேசுகையில், "இங்கிருக்கும் முதலமைச்சருக்கும் காவல்துறைக்கும் நன்றி. இதுபோன்ற பாதுகாப்பை தமிழகத்தில் கொடுத்ததில்லை. சி.எம். சார் (மு.க. ஸ்டாலின்), உங்கள் அரசியலைத் தூக்கிப்போட்டுவிட்டு, தைரியம் இருந்தால் தேர்தலில் மோதுங்கள். காவல்துறையை வைத்து எங்களை நிறுத்துவதை விடுங்கள்" என்றார்.

மேலும், புதுச்சேரியில் தவெக கூட்டம் நடத்துவது ஏன் என்பது குறித்தும் அவர் பேசினார்.

"ஏன் புதுச்சேரியில் கூட்டம் எனக் கேள்வியிருக்கிறது. இது போலத்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டார்கள். புதுச்சேரி மக்கள் ஒரு நல்ல ஆட்சி, கல்வி, போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்காக ஏங்குகிறார்கள். எங்கள் தலைவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் திட்டம் வைத்திருக்கிறார். அடுத்த 50 வருடத்திற்கான புதுச்சேரியின் வரலாற்றை நாங்கள் எழுதுவோம்" என்றார் அவர்.

விஜய் பேசியது என்ன?

இந்தக் கூட்டத்தில் விஜய்யின் பேச்சு மிகச் சுருக்கமாகவே அமைந்திருந்தது. எல்லா ஊர்களிலும் பேசுவதைப் போலவே முதலில் அந்த ஊரைப் பற்றிப் பேசினார். அதற்குப் பிறகு அ.தி.மு.க. முதலில் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்ததைப் பற்றிப் பேசினார்.

"1977ல்தான் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பாக, 1974லேயே புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது. அவரை 'மிஸ்' பண்ணிவிடக்கூடாது என 'அலர்ட்' செய்ததே புதுச்சேரிதான்" என்றார் விஜய்.

விஜய், தமிழக வெற்றிக்கழகம், புதுச்சேரி, தவெக

பட மூலாதாரம்,TVK Party HQ/x

மத்திய அரசு பற்றி என்ன சொன்னார்?

அடுத்ததாக, தங்கள் கூட்டத்திற்கு காவல்துறை சிறப்பான பாதுகாப்பை அளித்ததாக என்.ஆர். காங்கிரஸ் அரசைப் பாராட்டினார் விஜய்.

"இங்கிருக்கும் அரசைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசைப் போல இல்லை. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு பாரபட்சமில்லாமல் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்" என்றார்.

அடுத்ததாக, புதுச்சேரியை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை எனக் குற்றம்சாட்டினார்.

"கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலும் கண்டுகொள்வதில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டுமென சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனுப்பிய தீர்மானம், அப்படி அனுப்பப்பட்ட 16வது தீர்மானம்." என்றார்.

மேலும், புதுச்சேரியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விஜய் பேசினார்.

"புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து மில்கள் மற்றும் பல தொழிற்சாலைகளைத் திறக்க துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. இங்கே ஒரு ஐ.டி நிறுவனம் வர வேண்டுமென்ற எண்ணமே இல்லை. காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை." என்றார்.

காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்கால் கைவிடப்பட்ட பகுதியாக உள்ளது என குறிப்பிட்ட விஜய், புதுச்சேரிக்கு கடலூர் மார்க்கமாக ரயில் வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை என்றார்.

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி

படக்குறிப்பு,புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி

சுமார் 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி, மத்திய நிதிக் குழுவில் இடம்பெற்றவில்லை என பேசிய விஜய், இதனால் போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை, தோராயமான நிதியே ஒதுக்கப்படுகிறது என்றார்.

அப்போது, "அந்த நிதி சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கே சென்றுவிடுகிறது. அதனால் பிற செலவுகளுக்கு புதுவை கடன் வாங்குகிறது. இந்த நிலைமை மாற மாநில அந்தஸ்து தேவை." என்றார்.

மீன் பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்வதாக கூறிய அவர், மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றார்.

இந்தப் பேச்சின் நடுவிலேயே யார் பெயரையும், எந்த அரசையும் சுட்டிக்காட்டாமல் சில விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.

"இங்கே ஒரு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு, புதிய அமைச்சரை நியமித்தார்கள். அந்த அமைச்சருக்கு இலாகாவே தரவில்லை. இந்தச் செயல் சிறுபான்மையினரை அவமானப்படுத்தும் செயல் என மக்களே சொல்கிறார்கள். சுற்றுலா நகரமான புதுச்சேரியில் போதுமான அளவு பார்க்கிங், கழிப்பறை வசதி இல்லை. இந்தியாவில் ரேஷன் கடைகளே இல்லாத பகுதியாக புதுச்சேரி உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான். மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போலவே இங்கேயும் அந்த முறை சீராக்கப்பட வேண்டும்" என்றதோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

எனினும், பாஜகவை சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ரேஷன் கடைகள் குறித்த விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளார். அதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நமச்சிவாயம், "புதுச்சேரியில் உள்ள ரேஷன் கடைகள், மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் தான் செயல்படுகின்றன. அவற்றின் மூலமாகத்தான் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுகூடத் தெரியாமல் விஜய் பேசியுள்ளார்." என தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர்

பட மூலாதாரம்,MGR FAN CLUB

படக்குறிப்பு,"1977ல்தான் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பாக, 1974லேயே புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது." என விஜய் பேசினார்

விஜய் பேச்சு எத்தகையது?

''புதுச்சேரியில் தற்போது முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2026ல் புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் எனக் குறிப்பிட்ட விஜய், தற்போதுள்ள ஆட்சி குறித்து எந்தக் கடுமையான விமர்சனத்தையும் வைக்கவில்லை. இதுபோன்ற நிலைப்பாடு அக்கட்சிக்கு பலனளிப்பது கடினம்'' என்கிறார், புதுச்சேரியின் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ம. இளங்கோ.

"தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் த.வெ.க. அங்கே ஆளும் தி.மு.கவைக் கடுமையாக எதிர்க்கிறது. ஏன் தி.மு.கவை மட்டும் எதிர்க்கிறீர்கள் எனக் கேட்டால், ஆட்சியில் இல்லாத அ.தி.மு.கவையா எதிர்க்க முடியும் என்கிறார்கள். ஆனால், புதுச்சேரியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பவர்கள், என்.ஆர். காங்கிரஸை விமர்சிக்காமல் பேசுகிறார்கள். இங்கே ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் புதுச்சேரிக்கென தனியான அரசியல் தேவை." என்கிறார் ம. இளங்கோ.

புதுச்சேரி குறித்து விஜய் பேசிய விஷயங்கள் பல ஆண்டுகளாக இருப்பவைதான் என்று கூறும் ம. இளங்கோ, சமீபத்தில் வெடித்த போலி மருந்து விவகாரம் குறித்து எதுவும் சொல்லாமல் கடந்து சென்றது ஏன் எனக் கேள்வியெழுப்புகிறார்.

சில நாட்களுக்கு முன்பாக, பிரபலமான மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை போலியாக தயாரித்து விற்றதாக இரண்டு மருந்து நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டன. புதுச்சேரி அரசு போலி மருந்து தயாரிப்பாளர்களையும் உடந்தையாக இருந்தவர்களையும் காப்பாற்றுகிறது எனக் கூறி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்த விவகாரம் குறித்து விஜய் எதையும் பேசாததையே ம. இளங்கோ சுட்டிக்காட்டுகிறார்.

விஜய், அம்மாநில முதலமைச்சர் என். ரங்கசாமியுடனான தனிப்பட்ட நல்லுறவை அரசியல் உறவாகக் கருதுகிறார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி.

"ஆனால், அரசியலில் இதுபோன்ற தனிப்பட்ட உறவுகளுக்கு பெரிய இடம் இல்லை. புதுச்சேரி அரசைப் பாராட்டுகிறார் என்றால் அது என். ரங்கசாமியுடன் மட்டும் முடிவதில்லை. அங்கிருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. பா.ஜ.கவைக் கொள்கை எதிரி எனக் கூறுபவர், எப்படி இதுபோலச் செய்ய முடியும்?" என்கிறார் ஆர். மணி.

புதுச்சேரியில் 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகியவை இணைந்து போட்டியிட்டன. என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தது.

ஆனால், இந்தக் கூட்டணிக்குள் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்தபடியே இருந்தன. இதன் காரணமாக, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், தே.ஜ.கூட்டணியிலிருந்து விலகி, த.வெ.கவுடன் கூட்டணி அமைக்கும் எனக் கருதுகிறாரா விஜய்? "அப்படி ஒரு ஆசை விஜய்க்கு இருக்கலாம். ஆனால், அது போன்ற ஒரு முடிவை என்.ஆர். காங்கிரஸ் எடுக்காது" என்கிறார் ம. இளங்கோ.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjdr1pl03g3o

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!

1 week 1 day ago

சென்னை: தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் மதிமுக, அதிமுக, அமமுக என ஒரு வலம் வந்துவிட்டு தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னரே, பல்வேறு பேட்டிகளில், “விஜய் அரசியல் கட்சித் தொடங்கினால், என்னை அழைத்தால் அரசியல் ஆலோசனைகள் வழங்குவேன்” என்று அவர் கூறியிருந்தது இந்த வேளையில் நினைவுகூரத்தக்கது.

யார் இந்த நாஞ்சில் சம்பத்? - எந்தக் கூட்டத்தில் பேசினாலும் தனது கம்பீரமான உரையால் பார்வையாளர்களை தன் வசம் இழுப்பதில் கைதேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். கல்லூரிக் காலத்திலேயே தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டவர், அந்தக் காலத்திலேயே கருணாநிதியால் பாராட்டப்பட்டார். இருப்பினும் வைகோ மீதான ஈர்ப்பால் அவர் மதிமுகவைத் தொடங்கியபோது அவர் பின்னால் நின்றார்.

தொடர்ந்து வைகோவுடனும் மனக்கசப்பு வர, அதிமுகவில் ஐக்கியமானார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தினகரன் அணிக்குச் சென்றவர், அமமுக உதயமானதும் கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை எனச் சொல்லி தினகரனை விட்டு விலகினார். பின்னர் திராவிடப் பேச்சாளர் என்னும் அடைமொழியோடு திமுக மேடைகளில் பேசினார். ஆனால் திமுக அவரை பெரிதாக அங்கீகரிக்கவில்லை. அதனை அவருமே வெளிப்படையாகப் பல்வேறு இடங்களில் ஆதங்கத்துடன் கூறிவந்தார்.


அரசியல் தவிர பள்ளி - கல்லூரி விழாக்களிலும் தொடர்ந்து பேசிவந்தார் நாஞ்சில் சம்பத். அதனால் இலக்கிய மேடைகளும் அவருக்கு புகழ் வெளிச்சமும், வருமானமும் கொடுத்தன. ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (டிச.5) தவெகவில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிமுகவின் அடையாளங்களில் ஒருவராக இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். தற்போது திமுக, அதிமுக, மதிமுக என பல கட்சிகளிலும் அனுபவம் பெற்ற சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்துள்ளார்.

“தவெகவை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பேன்” - இந்நிலையில் இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி விஜய் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார், நான் மெய்சிலிர்த்துப் போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே!” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

1 week 2 days ago

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்படுகிறது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி. அதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதியாக மறுத்துவிட்டது. 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது,

இந்த விவகாரங்களெல்லாம் பேசுபொருளான நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும்." என்றது.

அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்

100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை.

30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது.

அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது." என வாதிடப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது....

https://www.vikatan.com/government-and-politics/governance/the-government-is-arguing-in-the-madurai-high-court-regarding-the-thiruparankundram-issue

இடிந்த வீடுகள், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - தமிழ்நாட்டில் திட்வா புயல் பாதிப்பு விவரம்

1 week 6 days ago

திட்வா புயல், தமிழ்நாடு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சென்னையில் ஒரு காட்சி.

30 நவம்பர் 2025, 09:41 GMT

புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தற்போது தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டியே வடக்கு நோக்கி நகர்கிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது வரை தமிழ்நாட்டில் இந்தப் புயல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

தஞ்சாவூர்

கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூரில் பெய்துவரும் கனமழை காரணமாக, சுந்தரம் மீனா நகர் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கும்பகோணம் தேவனாஞ்சேரியில் தொடர்மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்த முத்துவேல் மற்றும் குடும்பத்தார் (மனைவி மற்றும் இரண்டு மகள்கள்) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்துள்ளது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டனர். அவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த இளைய மகள் ரேணுகா (19 வயது) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மற்ற மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திட்வா புயல், தமிழ்நாடு

படக்குறிப்பு,ஆலமன்குறிச்சியில் இடிந்து விழுந்த வீடும், பலியான ரேணுகாவும்

கடலூர்

திட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதுமே கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடலும் சீற்றமாக காணப்படுகிறது. கடலூர் துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி கடற்கரையில் கடல் அலைகள் சுமார் 10 அடிக்கு மேல் எழுகின்றன.

மீனவர்கள் கரைகளில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்திவிட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அவ்வப்போது காற்றும் வீசி வருவதால் தரங்கம்பாடி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 நாட்களாக மழை தொடர்கிறது. மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான சவளக்காரன், தரிசுவேளி, கூனமடை, கீழநாலாநல்லூர், ராமாபுரம், துண்டாக்கட்டளை, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன.

ஏற்கனவே பெய்த கனமழையின் காரணமாக குளம் போல் தேங்கியிருந்த மழை நீர் இன்னும் வடியாத நிலையில் தற்போது மீண்டும் கனமழை நீடிக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் மழை நீரை வடிய வைக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாகக் கணக்கெடுத்து அதற்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திட்வா புயல், தமிழ்நாடு

படக்குறிப்பு,திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்திலும் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சோழன்குளம் கண்மாய் நிரம்பியது.

நிரம்பிய நீர், தடுப்புச் சுவரைத் தாண்டி மறுகால் பாயும் நிலையில் அதன் வழியாக மீன்கள் துள்ளி குதிக்கின்றன. அந்த மீன்களை அப்பகுதி மக்கள் பிடித்து மகிழ்கின்றனர்.

விழுப்புரம்

திட்வா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் சூழ்நிலையை சமாளிக்க தீயணைப்புத் துறை தயார் நிலையில் இருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நிலைய பொறுப்பாளர் ஜமுனாராணி, "திட்வா புயல் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 10 தீயணைப்பு நிலையங்களிலும் சுமார் 200 வீரர்கள் விடுப்பு எடுக்காமல் தயாராக உள்ளனர். ஐந்து ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் கருவிகள் உள்பட அனைத்து மீட்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்." என்று கூறினார்.

மேலும், மாவட்டத்தில் புயல் காரணமாக ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் 112 என்ற அவசர எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் அவர் கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் வீதியில் நள்ளிரவில் தனம்மாள், சரவணன் ஆகியோரது வீடுகளின் மீது புளிய மரக்கிளை விழுந்தது. இதில் விஜயா (60) என்பவர் காயமடைந்தார். விஜயாவின் கூச்சலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி

திட்வா புயல், தமிழ்நாடு

படக்குறிப்பு,புதுச்சேரியில் சீற்றத்தோடு காணப்படும் கடல்

புதுச்சேரியில் திட்வா புயல் காரணமாக நேற்று (நவம்பர் 29) காலை 8:30 மணியிலிருந்து இன்று (நவம்பர் 30) அதிகாலை 5.30 மணி வரையிலும் சுமார் 7.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கரையை நோக்கி வருகின்றன.

புதுச்சேரி துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான விமான சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திட்வா புயல், தமிழ்நாடு

படக்குறிப்பு,காரைக்காலில் மழையால் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் தீயணைப்புத் துறையினர்

காரைக்கால்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் நகரின் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இரு தினங்களாக காற்று பலமாக வீசுகிறது.

காரைக்கால் பாரதியார் வீதி உள்ள பகுதியில் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், காரைக்கால் மாவட்ட குடிமை பாதுகாப்பு படை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78v90l8kedo

தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!

1 week 6 days ago

தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே !

tamilexamfailed-1764492116.jpg

சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். தமிழில் 50க்கு 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற நிலையில் அவர்கள் தோல்வியடைந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது.


தமிழ் - 216,

ஆங்கிலம் - 197,

கணிதம் - 232,

இயற்பியல் - 233,

வேதியியல் - 217,

தாவரவியல் - 147,

விலங்கியல் - 131,

வணிகவியல் 198,

பொருறியல் - 169,

வரலாறு - 68,

புவியியல் - 15,

அரசியல் அறிவியல் - 14,

கணினி பயிற்றுநர் 57,

உடற்கல்வி இயக்குநர் 102

என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதற்கு 10.07.2025 (இன்று) முதல் 12.08.2025 விண்ணப்பம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 12ம் தேதி தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.20லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர். தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

கட்டாய தமிழ் தகுதித்தாள்தேர்வில் மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த கேள்விகளுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும். அதில் 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெறுவார்கள். 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் கேள்விகள் இருக்கும். இதனால் எளிதில் தேர்ச்சி பெறலாம். மேலும் இந்த கட்டாய தமிழ் தேர்வில் தேர்ச்சியடைந்தால் தான் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படும்.

ஆனால் 85,000 ஆசிரியர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சியடைவில்லை. இதனால் அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி தமிழாக வைத்து கொண்டு, பள்ளி முதல் தமிழ் பாடத்தை படித்த பலராலும் கூட இந்த தேர்வை தேர்ச்சியடைய முடியவில்லை.

இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியர்களே இப்படியென்றால் மாணவர்களின் நிலை எப்படி இருக்கும்? தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

https://tamil.oneindia.com/news/chennai/tn-trb-exam-85-000-teachers-fail-in-tamil-subject-754703.html

டிஸ்கி :

இதில் இவர்களுக்கு எந்த தேர்வும் இல்லாமல் விண்ணப்ப முதிர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமாம் . மத்திய அரசு அலுவர்களுக்கு இணையான சலுகைகள் , மற்றும் ஒய்வூதியம் , பணி பாதுகாப்பு அனைத்தும் வேண்டுமாம். இவர்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் கான்வென்டில் படிப்பார்களாம் அரசு பள்ளிகளின் கல்வி தரம் அந்த அளவில் தான் இருக்கும்

அப்புறம் அடுத்த மாநிலத்தான் நம் அரசு வேலைகளை பறிக்கிறான் என்று கூப்பாடு வேறு..?

'2 நாட்களாக உணவில்லை' - கொழும்பு விமான நிலையத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?

2 weeks ago

திட்வா புயல்

பட மூலாதாரம்,UGC

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

திட்வா புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் திட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இன்று மதியம் (நவம்பர் 29 சனிக்கிழமை) வரை 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொழும்புக்கு செல்ல வேண்டிய சர்வதேச விமானங்கள் பல நேற்று (நவம்பர் 28) இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டன.

இந்நிலையில், துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த தமிழர்கள் உட்பட பலர், கொழும்புவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

'கொழும்பு விமான நிலையத்தில் ஒரு அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்பட தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக' இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒரு எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது. +94 773727832 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கூறியது என்ன?

திட்வா புயல்

பட மூலாதாரம்,UGC

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானியார் சுபைர், சௌதி அரேபியாவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.

கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வருவதே பயணத் திட்டம். வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) இலங்கை வந்து சேர்ந்தோம். திட்வா புயல் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று கூறிவிட்டார்கள். 24 மணிநேரங்களைக் கடந்தும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக வந்தவர்கள் கூட இங்கு சிக்கியுள்ளனர்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இங்கு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். ஆனால், கடந்த 2 நாட்களாக, உறங்குவதற்கான இடமோ, உணவு மற்றும் தண்ணீரோ வழங்கப்படவில்லை. விமான நிலையத்தில் இருப்பவர்களிடம் கேட்டால் முறையான தகவல்கள் எதுவும் கூறவில்லை." என்கிறார்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவிகள் ஏதும் கிடைத்ததா எனக் கேட்டபோது, "இந்திய தூதரக அதிகாரிகள் இன்று மதியம் தான் வந்து எங்களை சந்தித்தனர். தேவையான உதவிகள் உடனடியாக செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்கள். ஆனால் எந்த உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை" எனக் கூறினார்.

திட்வா புயல்

பட மூலாதாரம்,UGC

கொழும்பு விமான நிலையத்திலிருந்து பேசிய தஞ்சாவூரைச் சேர்ந்த மகேஸ்வரி, "உணவு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களுக்கு மேலாக எங்களால் எப்படி இருக்க முடியும். விமான நிலையத்தில் இந்திய ரூபாயை ஏற்க மறுக்கிறார்கள். அதற்காக போராட்டம் கூட நடத்தினோம். இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை சந்தித்து உதவுவதாக கூறினர். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை. உணவு இல்லாமல் இங்கு சிலர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்கள்" என்று கூறினார்.

நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய மகேஸ்வரி, "இங்கு தமிழ்நாட்டை சேர்ந்த பலர் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். கூட்ட நெரிசலில் பலரது பாஸ்போர்ட்டுகள் காணாமல் போய்விட்டன எனக் கூறுகிறார்கள். இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்.

நவம்பர் 27 அன்று அபுதாபியிலிருந்து இலங்கை வந்துசேர்ந்த அறந்தாங்கியைச் சேர்ந்த சதீஷ்குமார், "இந்திய தூதரக அதிகாரிகள் வந்து அளித்த உணவு இங்கு இருந்த பாதி பேருக்கு கூட போதவில்லை. விமான நிலையத்தில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகளும் அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை. நான் இந்தியாவுக்கு வர சில நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருந்தேன். இப்போது இங்கேயே 3 நாட்கள் கழிந்துவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் பலரும் அவதிப்படுகிறார்கள்" என்று கூறினார்.

இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

திட்வா புயல்

பட மூலாதாரம்,@IndiainSL

படக்குறிப்பு,திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா இதுவரை 12 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், இலங்கை விமான நிலையம் மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் இருந்தும், இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற அவசர எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

கொழும்பு விமான நிலையத்தில் ஒரு அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்பட தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா இதுவரை 12 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

"'ஆபரேஷன் சாகர்பந்து' தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் C-130 விமானம் - கூடாரங்கள், தார்பாய்கள், போர்வைகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு சென்றடைந்தது" என்று எஸ். ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கொழும்பு விமான நிலையத்தில் உள்ள தமிழர்களை மீட்பது குறித்து தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசரிடம் கேட்டபோது, "இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்." என்று கூறினார்.

மேலும், "இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்களுடன் ஒருங்கிணைந்து கொழும்பு விமான நிலையத்தில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yqdrnll3ro

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்; சால்வை அணிவித்து வரவேற்ற விஜய் - என்ன நடக்கிறது?

2 weeks 2 days ago

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்; சால்வை அணிவித்து வரவேற்ற விஜய் - என்ன நடக்கிறது?

செங்கோட்டையன் , விஜய், தவெக

பட மூலாதாரம், TVK

27 நவம்பர் 2025, 05:07 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இன்று தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அப்போது, செங்கோட்டையனுக்கு தவெகவின் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் உடனிருந்தனர்.

தவெக அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தவெக அலுவலகத்தில் செங்கோட்டையன்

தவெக உறுப்பினர் அட்டையை சட்டைப் பையில் வைத்துக் கொண்ட செங்கோட்டையன்

கட்சியில் இணையும் நிகழ்வில் "வேற்றுமைகளை களைந்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் விஜய் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேடையில் விஜய்க்கு அருகில் நின்றிருந்த செங்கோட்டையனுக்கு உறுதிமொழி ஏற்ற பிறகு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் விஜய். அதன் பின் அவருக்கு பச்சை நிற சால்வை அணிவித்தார் விஜய். பிறகு, விஜய் தவெகவின் கட்சித் துண்டை செங்கோட்டையனின் கழுத்தில் அணிவித்தார்.

பிறகு விஜய் தவெகவின் உறுப்பினர் அட்டையை செங்கோட்டையனிடம் வழங்க, அதைப் பெற்றுக் கொண்டு தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

அதன் பின் செங்கோட்டையன் விஜய்க்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தார். மேடையில் விஜயிடம் சில நூல்களையும் விஜய்க்கு பரிசாக அளித்தார். அப்போது புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க இருவரும் அருகருகே நின்ற போது, செங்கோட்டையனின் கழுத்தில் இருந்த தவெக கட்சித் துண்டை சரி செய்தார் விஜய்.

கட்சியில் இணைந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறி விஜயிடம் வாழ்த்துப் பெற்றனர். அவர்களுக்கு சால்வை மற்றும் தவெக கட்சித் துண்டை அணிவித்து, கட்சியில் வரவேற்றார் விஜய்.

விஜய் பேசியது என்ன?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், செங்கோட்டையன் தனது கட்சியில் இணைந்த பிறகு அது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் விஜய், "20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்ஜிஆர்-ஐ நம்பி அவரது மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சிறுவயதில் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பின் அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு (எம்ஜிஆர், ஜெயலலிதா) பெரிய நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன், இன்று அவரது அரசியல் அனுபவமும், அவருடைய அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்" என்று பேசினார்.

பாஜக கூறுவது என்ன?

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "பாஜக யாருக்கும் எந்த வாக்குறுதியும் தரவில்லை. அதிமுகவில் இருந்துகொண்டு பாஜகவை நம்பி இருந்தோம் என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும், எப்படி பொருத்தமாக இருக்கும்? செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர்களின் உட்கட்சி பிரச்னை குறித்து பேசுவது நியாயமாக இருக்காது." என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து மதுரையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, "அவர் (செங்கோட்டையன்) அதிமுகவில் இல்லை. எனவே அதைப் பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "செங்கோட்டையனுக்கு எனது வாழ்த்துகள். செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கும் அந்த கட்சிக்கும் பலம் சேர்க்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பாராட்டி பேசுகிறார் விஜய். செங்கோட்டையனுக்கு உரிய மரியாதையை தவெக கொடுக்க வேண்டும்.

அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றாக சேரப்போவதில்லை." என தெரிவித்தார்.

மேலும், "செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது குறித்து, எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, "என்னை ஏன் கேட்கிறீர்கள்" என்கிறார். இவர் தானே செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார், இவர் தானே அந்த தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தினார், பிறகு வேறு யாரை கேட்பது? இப்படி இருந்தால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது." என்றார்.

பின்னணி

அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவிய காலம் தொட்டு அக்கட்சியில் பணியாற்றிவரும் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், அவரது கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 3 ஆம் தேதி ஊடகங்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் மனம் திறந்து பேசப் போகிறேன். எனது கருத்துக்கள் கட்சி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும்" என்று கூறியிருந்தார்.

மனம் திறந்து பேசப்போவதாக கூறிய அவர், "அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்" என்று செப்டம்பர் 5ம் தேதி பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். அது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு மேற்கொள்வதற்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார்.

அடுத்த நாளே அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ஊடகங்களில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன்னை அழைத்து பேசியது பாஜகதான் என்றதுடன் "பாஜகவை விட்டால் நமக்கு வேறு வழியில்லை, நம்மை விட்டால் பாஜகவுக்கும் வேறு வழியில்லை என்று கூறினேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சிக்கவில்லை" என்று தெரிவித்தார். 2026-ல் அதிமுக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என்றும் 2029-ல் பாஜகவின் எண்ணங்கள் நிறைவேற கட்சித் தலைமையிடம் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தான் கூறியதாக அப்போது செங்கோட்டையன் பேசியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgqpvkxvqvo

இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு

2 weeks 4 days ago

இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு

written by admin November 25, 2025

ILAIYARAJA-GANKAI-AMARAN.jpg?fit=1067%2C

 

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா்  இளையராஜாவின் பாடல்களுக்கான  காப்புரிமை (copy right)  குறித்த  சா்ச்சை  எப்போதும் சூடான விவாத பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில்  அவரது தம்பியும்  பிரபல இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது  இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக  விளக்கம் அளித்துள்ளார்.

இளையராஜா தன்னுடைய பாடல்களை சினிமாவில் பயன்படுத்துவதற்கு  காப்புரிமை  கேட்டுத் தொடர்ந்து வழக்குப் போடுவது குறித்து கங்கை அமரனிடம் கேட்கப்பட்ட போது . ‘ஆமாம்  அண்ணன் கேட்பதில் எந்த தவறும் இல்லையே! அண்ணன் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய பாடல்களை இப்போதுள்ள படங்களில் பயன்படுத்தும் போது ‘இந்தப் பாடல் இளையராஜாவுக்குச் சொந்தமானது’ என்று ஒரு நன்றிக் குறிப்பு போடத்தானே கேட்கிறார்? அப்படிப் போடுவதில் என்ன தப்பு இருக்கிறது? அதைச் செய்யாதவர்கள் இடம்தான் இளையராஜா  காப்புரிமை  கேட்கிறார்’ என தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

மேலும் ஒரு பாடலை பயன்படுத்தும் போது ஒரு சில வரிகளை மட்டும் பயன்படுத்தினால் அது காப்புரிமை  பட்டியலில் வராது. ஆனால்  ஒரு பாடலை  அப்படியே முழுவதுமாக பயன்படுத்தும் போது  அது கண்டிப்பாக  காப்புரிமை  என்றுதானே வரும்? ‘

பொட்டு வெச்ச தங்கக்குடம், சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா’ போன்ற பாடல்களை எல்லாம் சிலர் பயன்படுத்துறாங்க. குறைவாகப் பயன்படுத்தினால் கூடப் பரவாயில்லை .  முழுப் பாடலையும் பயன்படுத்தினால் தான்  பிரச்சனையே வருகிறது’ என கங்கை அமரன் தன் வாதத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.


https://globaltamilnews.net/2025/223052/

தமிழ்நாட்டின் தென்காசியில் பஸ் விபத்து : 6 பேர் பலி, 28 பேர் காயம்!

2 weeks 5 days ago

Published By: Digital Desk 1

24 Nov, 2025 | 02:25 PM

image

இந்தியா, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (24) இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுரையிலிருந்து செங்கோட்டைக்குச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், தென்காசியிலிருந்து கோவில்பட்டிக்குச் சென்ற மற்றொரு பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இரண்டு பஸ்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/231279

'அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு' - எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?

2 weeks 5 days ago

தமிழ்நாட்டில் எங்கெல்லாம்  கனமழை பெய்யும்?

பட மூலாதாரம், Getty Images

24 நவம்பர் 2025, 01:51 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா இன்று (நவ. 24) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் கூறிய தகவல்கள்:

அந்தமான் கடல் பகுதி

நவ.23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று, 24ம் தேதி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்

நவ.23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது.

அரபிக்கடல் பகுதிகள்

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

"இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்." என்றார் அமுதா.

மேலும், அவர் "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 4 இடங்களில் அதி கனமழையும், 15 இடங்களில் கனமழையும் 76 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது." என்றார்.

மேலும் அடுத்துவரும் நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கையையும் அவர் வெளியிட்டார். அதன்படி,

நாளை 8 மணி வரை: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 27 : தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

நவ. 30 திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், "ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்.

தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றிலிருந்து நவ. 29ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்." என்றார் அமுதா.

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

''இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும். இது தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும்'' என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RAIN ALERT

பட மூலாதாரம், Getty Images

எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?

கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

மேலும், மழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இதற்கிடையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 25ம் தேதி வாக்கில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லையில் கனமழை

நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் நெல்லை வந்தடைந்தனர்.

குற்றாலம் அருவி

தென்காசி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகளில் 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் பேருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjrj39j49wlo

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?

2 weeks 6 days ago

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?

written by admin November 23, 2025

sabarimalai.jpg?fit=840%2C473&ssl=1

 

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை நடத்தவும் எஸ்ஐடி திட்டமிட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அதனை மீண்டும்  கோயிலுகு கொண்டு சென்றனர். அப்போது அவற்றின் எடை குறைந்ததாக குற்றம் சாட்டு எழுந்தது.. மேலும் அந்த சிலைகளில் இருந்த தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

இந்தக் குற்றச்சாட்டு கேரள சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அரசு மீதும், தேவசம் போர்டு மீதும் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் உரிய விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக் கொண்ட பெங்களூர் தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் முதலில் கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள டவுனில் நகைக்கடை நடத்தி வரும் தங்க வியாபாரியான கோவர்தன் நகைக்கடையில் இருந்து 478 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது.

இதற்கிடையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகர் ஜெயராம் மீதும் சர்ச்சை எழுந்தது. 2019-ம் ஆண்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை வைத்து சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் அவர் கலந்து கொண்டதே இந்தக் குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஜெயராம்: “கடந்த 50 ஆண்டுகளாக நான் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தராக உள்ளேன்.

கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை காட்சிப்படுத்திய பூஜையில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில்தான் அந்த பூஜையில் பங்கேற்றேன். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அது தற்போது இப்படி ஒரு பிரச்சினையை தரும் என நான் நினைத்ததில்லை. உண்மை வெளிவரட்டும். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார் மற்றும் சிலர் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெயராமிடம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக வெளியாகும் தகவல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Global Tamil News
No image previewசபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத...
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத்…


கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’!

3 weeks ago

கரூர் துயரத்துக்கு பின் முதல் நிகழ்ச்சி.. காஞ்சிபுரத்தில் நாளை விஜய் ‘சந்திப்பு’!

22 Nov 2025, 2:00 AM

TVK Vijay Kanchipuram

கரூரில் 41 பேர் பலியானதற்கு பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் முதல் முறையாக நாளை நவம்பர் 23-ந் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் ஜேப்பியார் கல்லூரியில் 5 நாட்களாக தவெக தொண்டரணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

இப்பயிற்சியை பெறும் தொண்டரணியினருடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து விஜய் குறைகளைக் கேட்கிறார்.

G6SeUsBaIAIzVox-710x1024.jpeg

இந்த நிகழ்ச்சிக்காக சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளரிடம் தவெகவின் திருப்பெரும்புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ். கார்த்திக், பாதுகாப்பு கோரி கொடுத்த கடிதம்: வரும் 23-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவரச்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காஞ்சிபுரம் மாவட்ட மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிக்கு அம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் மட்டுமே
இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே வரவும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் அனுமதி இல்லை. எனவே இந்த நிகழ்ச்சிக்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/after-karur-tragedy-vijay-to-visit-kanchipuram-tomorrow/

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்

3 weeks ago

21949215-ilayaraja.webp

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட்

சென்னை: 'யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில், தன் புகைப் படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'என்னை அடையாளப்படுத்தும் வகையில், என் புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என, எதையும் பயன்படுத்தக் கூடாது.

'சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்தியதன் வாயிலாக கிடைத்த வருமான விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

https://www.dinamalar.com
No image previewஇளையராஜா புகைப்படம் சமூக வலைதளங்களில் பயன்படுத்த ஐகோர்ட் தடை
சென்னை: யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி

3 weeks 1 day ago

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் மாவட்டங்களில் கனமழை

RAIN ALERT

பட மூலாதாரம், Getty Images

தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (நவ. 22) உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் நாட்களில் தொடர்ந்து வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடையும். தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெறும். அதற்கு அடுத்த 48 மணி நேரங்களில் அது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிரமடையக் கூடும்" என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, வரும் 26ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3A1faae534-6770-45b4-85eb-1bff1338e180#asset:1faae534-6770-45b4-85eb-1bff1338e180

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு என்ன நடக்கிறது?

3 weeks 2 days ago

இரவு நேரத்தில் இலங்கை காவல்துறையால் அழைத்துச் செல்லப்படும் மீனவர்கள்

பட மூலாதாரம், MATHIVANAN

படக்குறிப்பு, இலங்கையில் பேருந்தில் ஏற்றப்படும் கைதான இந்திய மீனவர்கள்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை கடற்றொழில் அமைச்சு கூறுகிறது.

இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள், கடற்றொழில் திணைக்களம் மற்றும் போலீஸாரின் உதவியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் மீன்பிடிப் படகுகளை, இலங்கை அரசாங்கம், அரசுடமையாக்கி வருகின்றது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 127க்கும் அதிகமான படகுகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மன்னார் பகுதிகளில் இந்தப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

''கைப்பற்றப்பட்ட படகுகள் சில கடலில் மூழ்கடிக்கப்படவுள்ளன. ஏனைய படகுகள் இரும்புக்கு விற்பனை செய்யப்படவுள்ளன'' என இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதோடு, இந்த ஆண்டில் இதுவரையான காலம் வரை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 40 இந்திய படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த 167 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கைதாகும் மீனவர்களுக்கு விலங்கிட்டு, தடுத்து வைப்பு

செய்தியாளரை மிரட்டும் காவல்துறையினர்

பட மூலாதாரம், MATHIVANAN

படக்குறிப்பு, இந்திய மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுவதை வீடியோ எடுக்க விடாமல் தடுக்கும் சிறைச்சாலை அதிகாரிகள்

இலங்கை கடற்பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் நாகை மாவட்ட மீனவர்கள் நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து வரப்பட்டமை மற்றும் மருத்துவமனையில் தளபாடங்களில் விலங்கிட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் கடந்த 17ஆம் தேதி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களை நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்ல இரவு வேளை வரை ஆகியுள்ளது.

இதன்போது, இந்தச் செய்தியை சேகரிப்பதற்காக நீதிமன்றத்தின் நுழைவாயிலுக்கு வெளியில் செய்தியாளர்கள் காத்திருந்தனர். அவர்களில் ஒருவரே ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன்.

கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்களை சிறைச்சாலையின் பேருந்துக்கு மீள அழைத்து வந்து ஏற்றுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதை வீடியோ பதிவு செய்ய ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் முயற்சி செய்துள்ளார். இதை அவதானித்த சிறைச்சாலை அதிகாரி, ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணனின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதை அவதானிக்க முடிந்தது.

ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன்

பட மூலாதாரம், MATHIVANAN

படக்குறிப்பு, தான் சிறைச்சாலை அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாகக் கூறுகிறார் ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன்

இந்திய மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுவதை வீடியோ பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் சிறைச்சாலை அதிகாரியின் செயல்பாடு காணப்பட்டதாக ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து, இவர்களை சிறைச்சாலை பேருந்தில் ஏற்றும்போது, அதை வீடியோ பதிவு செய்தேன். வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் வந்து, வீடியோ எடுக்க இயலாது என்றார், நான் மீடியா எனக் கூறினேன்.

'இல்லை இல்லை எடுக்க இயலாது' எனச் சொல்லி கேமராவுடன் சேர்த்து என்னையும் தள்ளிவிட்டார். நான் ரெகோட் ஆவதை நிறுத்தவில்லை. நான் கொஞ்சம் பின்னால் வந்து, ரெகோட் போட்டுக்கொண்டு நிற்க, போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வந்து வீடியோ எடுக்க வேண்டாம் எனச் சொல்லி மறித்தார்" என்று தெரிவித்தார்.

அப்போது, "யார் எடுக்கக்கூடாது எனச் சொன்னது என்று நான் கேட்டேன். அப்போது 'நான் தான் சொன்னேன்' என்று சொல்லிக் கொண்டு சிறைச்சாலை அதிகாரி வந்தார். நீதிமன்றத்திற்கு வெளியில் எடுப்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் தடை செய்ய வேண்டாம் என்று கூறினேன். அவர் 'இல்லை எடுக்க முடியாது' எனச் சொன்னார்.

நீதிமன்றத்திற்குள்ளும் நான் வரவில்லை. சிறைச்சாலைக்குள்ளும் நான் வரவில்லை. நான் வீதியில் இருந்தே எடுக்கின்றேன் என சொன்னேன். வழமையாக நாங்கள் முறைப்படியே வீடியோக்களை எடுப்போம் எனச் சொன்னேன். இல்லை முடியாது. நான் உங்களைக் கைது செய்வேன். நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என சொன்னார். நான் பரவாயில்லை என்றேன்'' என ஊடகவியலாளர் முருகப்பெருமாள் மதிவாணன் கூறுகிறார்.

இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

பட மூலாதாரம், RAMALINGAM CHANDRASEGARAN

படக்குறிப்பு, இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

''நாங்கள் பல வழக்குகள் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்குச் சென்றுள்ளோம். இதுவரை யாரும் தடை விதித்தது இல்லை. இப்போது அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது" எனவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், விலங்கிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை மாத்திரமன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் காலில் சங்கிலியிட்டு, அந்த சங்கிலி மருத்துவமனை கட்டிலில் கட்டப்பட்டிருக்கும் விதத்திலான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் பிபிசி தமிழ் வினவியது.

குறித்த விடயம் தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் பதிலளித்தார்.

சிறைச்சாலை திணைக்களம் கூறுவது என்ன?

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விலங்கிடப்பட்டு, சங்கிலியில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மற்றும் இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் பிபிசி தமிழ், சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்கவிடம் வினவியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் பதிலளித்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

சிறையில் உள்ள இந்திய மீனவர்களின் தற்போதைய நிலை என்ன?

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 31 பேர் தற்போது சிறையில் இருப்பதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் க.கிரிஷாந்தன் தெரிவிக்கின்றார்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அளித்த தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 40 இந்திய படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த 167 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறாகக் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறைவைக்கப்படுவதுடன், பின்னரான காலத்தில் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் விடுவிக்கப்படுவதாகக் கூறுகிறார் கிரிஷாந்தன்.

இந்த நிலையில், எல்லை தாண்டி வரும் மீனவர்கள் எந்த அடிப்படையில் கைது செய்யப்படுவார்கள் என்பது குறித்தும் கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் க.கிரிஷாந்தன் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

''படகின் உரிமையாளர், படகோட்டி ஆகியோருக்கு உடனடியாகவே சிறைத் தண்டனை வழங்கப்படும். ஏனைய மீனவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்படும். இரண்டாவது முறை அதே மீனவர் கைது செய்யப்படும் பட்சத்தில் முதல் குற்றத்திற்கும் சேர்த்து சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்."

அதோடு, "கைவிரல் அடையாளங்களை எடுத்த பிறகே மீனவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைப்போம். அவர்கள் மீண்டும் வரும்போதும் கைவிரல் அடையாளங்கள் எடுக்கப்படும். பொதுவாக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்.

ஒரு குற்றச்சாட்டுக்கு 6 மாதங்கள் என்ற அடிப்படையில் ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, அந்த சிறைத் தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும். இந்த ஐந்து வருட காலத்திற்குள் வந்து மீண்டும் பிடிபடும் பட்சத்தில், பழைய குற்றச்சாட்டு மற்றும் புதிய குற்றச்சாட்டு இரண்டுக்கும் சேர்த்து சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்" என்றும் கிரிஷாந்தன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

எல்லைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு, அவர்களின் உடமைகள் அரசுடமையாக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு மீண்டும் அறிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj414q8xj59o

Checked
Sun, 12/14/2025 - 04:34
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed