தமிழகச் செய்திகள்

'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' - திடீரென முடிவெடுத்த சீமான்? பின்னணி என்ன?

3 weeks 2 days ago

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த சீமான், இனி விஜய் மீதான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்த சிலர். இந்த முடிவின் பின்னணி என்ன?

2024 பிப்ரவரியில் த.வெ.க-வை தொடங்கினார் விஜய். அப்போது ஆரத்தழுவி வரவேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து விஜய்யின் நடவடிக்கைகளை வரவேற்று பேசிவந்தார்.

2024 அக்டோபரில் நடந்த த.வெ.க-வின் முதல் மாநாட்டில் `நா.த.க-வை நட்பு சக்தியாக விஜய் முன்நிறுத்துவார்’ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமானை மறைமுகமாக விமர்சித்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய்.

சீமான், விஜய்

சீமான், விஜய்

2024 நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் இதற்கு எதிர்வினையாற்றிய சீமான், "திராவிடம் வேறு, தமிழ்த் தேசியம் வேறு. தமிழர்களுக்குத் திராவிடம் அயலமை. இரண்டும் ஒன்று எனக் கூறுவது அடிப்படை தவறு.

இது கொள்கை அல்ல… கூமுட்டை. அழுகிய கூமுட்டை. இது நடுநிலை அல்ல… கொடுநிலை. கொடும் சிறையிலிருந்து ரத்தம் சிந்தி வந்தவன் நான். சத்தமா பேசுகிறேனா? ஆமாம், சரக்கு இருக்கு, கருத்து இருக்கு. அதனால்தான் சத்தமா பேசுறேன்” என விளாசினார். இதிலிருந்து தொடங்கிய நா.த.க – த.வெ.க வார்த்தை போர், கரூர் சம்பவத்தின்போது உச்சத்தைத் தொட்டது.

நம்மிடம் பேசிய நா.த.க கொள்கை பரப்புச் செயலாளர்கள் “நா.த.க-வின் இளைஞர் வாக்குகளையும், அ.தி.மு.க-வின் தி.மு.க எதிர்ப்பு வாக்குகளையும் குறிவைத்தே வியூகம் அமைத்தார் ஜான் ஆரோக்கியசாமி. ஆகையால் விஜய்யை இளைஞர்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கடுமையாக விமர்சித்தோம்.

அதில் நாங்கள் வெற்றிப் பெற்றதாகவும் நினைக்கிறேன். களச் செயல்பாடுகள் இன்றி கரூர் விவகாரத்துக்கு பின் தவெக பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணிகள்மீது கவனத்தை திருப்பி அவர்களை டார்கெட் செய்வதே நம் வேலை என சீமான் முடிவு செய்துள்ளார்.” என்றனர்.


சீமான் இந்த முடிவை எடுக்க சில சம்பவங்களும் இருக்கின்றன எனப் பேசத் தொடங்கினார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள் சிலர், "சென்னையில் முத்துராமலிங்க தேவர் நினைவு பொதுக்கூட்டமும், திருவாரூரில் நடந்த தண்ணீர் மாநாட்டு பொதுக்கூட்டத்திலும் சீமான் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்.

அதே நேரத்தில் விஜய்மீதும் லேசான விமர்சனங்களை வைத்தார். ஆனால் கூட்டத்தின் நோக்கத்தை விட ‘விஜயை சாடிய சீமான்’ எனும் பகுதி மட்டும் வைரலாக்கப்பட்டது, அதனை அண்ணன் சீமான் விரும்பவில்லை. களச் செயல்பாடுகளற்ற கட்சியை தொடர்ந்து பேசிக் கொண்டே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டாம்; தி.மு.க பாணியில் ‘கில்லிங் இன் சைலன்ஸ்’ வியூகத்திலேயே எதிர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.” என்றனர்.

இதன்பின்னே சில அரசியல் கணக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் ஒருசிலர் "விஜயின் அரசியலை அம்பலப்படுத்தினால் அவரது அபிமானிகள் நா.த.க-வுக்கு திரும்புவார்கள் என்பது நா.த.க-வின் கணக்கு. ஆனால் கடுமையான விமர்சனங்களும் இரண்டாம் கட்ட நிர்வாகிகளின் மோசமான குற்றச்சாட்டுகளும் விஜய் ரசிகர்களைத் கொதிப்படைய செய்துவிட்டன.

ஒருவேளை விஜய் அரசியலை விட்டே போனாலும், ‘சீமானுக்கு வாக்களிக்கக் கூடாது’ என்ற மனநிலைக்கு விஜய் ரசிகர்கள் வந்துவிட்டனர் என்பதை நா.த.கவினர் தற்போது உணர்ந்திருக்கிறார்கள். இதை சரிகட்டவே விஜய் விமர்சனத்தை குறைக்க சீமான் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது கடுமையாக விமர்சித்த சீமான், ரஜினி ‘கட்சி தொடங்கவில்லை’ என அறிவித்தபின், ‘அரசியல் ரீதியாக வைத்த விமர்சனங்கள் ரஜினியையோ அவரது ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்’ என்று கூறினார். அதேபாணியில் விஜய் ரசிகர்களை கையாளும் வியூகமாகக்கூட இருக்கலாம்.” என்றனர்

'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' – திடீரென முடிவெடுத்த சீமான்… பின்னணி என்ன? | Seeman Calls Off Attacks on TVK Vijay - Vikatan

ராமேசுவரம் - மண்டபம் முகாமில் இலங்கை தமிழர் கொலை!

3 weeks 2 days ago

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

ராமேசுவரம் அருகே மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் கவிராஜ் (27). முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்கள் மலைச்செல்வம் (30), மணிகண்டன் (31). நண்பர்களான மூவரும் மண்டபம் முகாம் பகுதிக்குள் நேற்று இரவு மது அருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

கவிராஜின் தலையில் சுத்தியலால் மலைச்செல்வன் தாக்கினார். படுகாயமடைந்த கவிராஜ், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கவிராஜ் உயிரிழந்தார். இது தொடா்பாக மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மலைச்செல்வனை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மண்டபம் முகாமுக்குள் வெளிநபர்கள் பலர் அடிக்கடி வந்து செல்வதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், அதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி முகாமில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

ராமேசுவரம் - மண்டபம் முகாமில் இலங்கை தமிழர் கொலை!

பாம்பன் மீனவர் வலையில் 112 கிலோ எடையுடைய மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியது!

3 weeks 2 days ago

20 Nov, 2025 | 03:59 PM

image

மன்னார் வளைகுடா கடற்பரப்புக்குள் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் நாட்டுப்படகு  மீனவர்கள் வலையில் 112 கிலோ நிறை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட  படகுகள்,  நூற்றுக்கணக்கான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். பின்னர், மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குத் திரும்பினர்.

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் கடல் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் கடல் நீரோட்டம் அதிகமாக இருந்ததனால் மீன் பிடித்துவிட்டு உடனடியாக மீனவர்கள் கரை திரும்பியிருந்தனர்.

கரை திரும்பிய மீனவர்கள் தங்களது வலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதேபோல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவை விட அதிகளவு இருந்ததாக மீனவர்கள் திருப்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாம்பன் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான படகில்  சுமார்  3 மீட்டர் நீளம் கொண்ட  115 கிலோ நிறை  கொண்ட  மஞ்சள் வால் கேரை மீன் என்றழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் ஒன்று சிக்கியது.

1000925890.jpg

பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய 112  கிலோ எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீனை  கேரளா மீன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.150 என ரூ.17 ஆயிரம் கொடுத்து பெற்றுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஒரு மீன் 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதில்  மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் இலங்கை பெறுமதி சுமார் 80 ஆயிரம் ஆகும்.

இதன்போது மீனை பெற்றுச் சென்ற கேரள வியாபாரி கூறுகையில், மஞ்சள் வால் கேரை  மீனுக்கு கேரள மாநில அசைவ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மீனை அரை கிலோ, ஒரு கிலோ என வெட்டி எடை போட்டு 10 ஊர்களுக்கு பிரித்து அனுப்பி விற்பனை செய்துவிடுவேன் என்றார்.

வாள் பகுதியில் மஞ்சள் நிறத்தில் தட்டையான கத்தி போன்ற அமைப்பு காணப்படுகிறது. அவை வேகமாக இடப்பெயர உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வகை மீன்கள் அட்லாண்டிக், பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதியில் வாழக்கூடியவை. இந்த மீன் வழக்கமாக 3 மீற்றர் நீளமும், அதிகபட்சம் 4.55 மீற்றர் நீளமும் மற்றும் 550 கிலோ  எடை வரை வளரக்கூடியது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

1000925894.jpg

1000925896.jpg

1000925893.jpg

https://www.virakesari.lk/article/230907

'மேயரில்லாத மதுரை நகரம்' - ஒரு மாதமாக புதிய மேயரை நியமிக்க முடியாதது ஏன்?

3 weeks 4 days ago

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/rajprathaban

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மதுரை மாநகரின் மேயராக இருந்த இந்திராணி ராஜினாமா செய்து நான்கு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இப்போதுவரை புதிய மேயர் தேர்வு செய்யப்படவில்லை.

மதுரை மாநகராட்சியில் நடந்த வரி மோசடி விவகாரம் சில மாதங்களுக்கு முன்பாக மிகப் பெரிய அளவில் வெடித்தது.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், கவுன்சிலரின் கணவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். விவகாரம் பெரிதான நிலையில் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் இரண்டு பேரும் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர்.

இதற்குப் பிறகு மதுரை மாநாகராட்சியின் மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அக்டோபர் 9-ஆம் தேதி பொன் வசந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி மாநகராட்சியின் மேயரான இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா 17-ஆம் தேதி மாமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் மதுரை மாநகராட்சியின் புதிய மேயராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 இடங்களில் 69 இடங்கள் தி.மு.க. வசமே இருக்கும் நிலையிலும், புதிய மேயரை நியமிக்க முடியாதது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

பிரச்னையின் பின்னணி என்ன?

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை விவரங்களை 2024-ஆம் ஆண்டில், அப்போதிருந்த மாநகராட்சி ஆணையர் சி. தினேஷ் குமார் வழக்கம்போல ஆராய்ந்தபோது, 100-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கான வரி பாக்கித் தொகை வெகுவாகக் குறைந்திருப்பதைக் கண்டறிந்தார். இதையடுத்து, இது குறித்து ஒரு ரகசிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணையில் மாநகராட்சியின் ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களும் சேர்ந்து, மாநகராட்சியின் சொத்து வரியைக் கணக்கிடும் மென் பொருளில் இருந்த ஒரு சிறிய ஓட்டையைப் பயன்படுத்தி பலரது சொத்து வரிகளைக் குறைத்தது தெரியவந்தது. இதன் காரணமாக, இந்த சொத்தின் உடமையாளர்கள், மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையும் கணிசமாகக் குறைந்தது.

2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2024 ஜூலை 31 வரையிலான சொத்து வரி விதிப்பு விவரங்களை ஆராய்ந்தபோது இது தெரியவந்தது. 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் மதுரை நகரக் காவல் துறையில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்த மதுரை நகரக் காவல்துறை, மூன்றாவது மண்டலத்தில் குறைந்தது 150 பேரின் வரி குறைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தது. சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதையடுத்து 83வது வார்டின் அ.தி.மு.க. கவுன்சிலர் டி. ரவி, இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர். வழக்கை தொடர்ந்து விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது.

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/rajprathaban

படக்குறிப்பு, மதுரை நகர மேயர் இந்திராணி பொன்வசந்த் (வலது) மற்றும் அவரின் கணவர் பொன். வசந்த் (இடது)

இந்த சிறப்பு விசாரணைக் குழு மாநகராட்சியின் தற்காலிக ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் சிலர், வரி விதிப்பிற்கான நிலைக் குழு தலைவரின் கணவர் ஆகியோரைக் கைது செய்தது. மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை ஆணையர் சுரேஷ் குமாரும் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் மதுரை நகர மேயரின் கணவர் பொன். வசந்த்தை சென்னையில் கைது செய்தது காவல் துறை. அதற்கு முன்னதாகவே, மே மாதத்திலேயே கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவரை இடைநீக்கம் செய்வதாக தி.மு.க. அறிவித்திருந்தது.

"மதுரையில் வரலாறு காணாத அதிசயமாக மேயரின் கணவர் சிறையில் இருந்தபோதும், மனைவி மேயராக தொடர்ந்து செயல்பட்டார். எங்களுடைய அழுத்தத்தின் காரணமாகத்தான் பல நாட்கள் கழித்து அவர் ராஜினாமா செய்தார். இருந்தாலும் இத்தனை நாட்கள் ஆன பிறகும் புதிய மேயர் நியமிக்கப்படவில்லை. புதிய மேயராக வருவதற்கு மதுரை தி.மு.கவிற்குள் சரியான ஆட்கள் இல்லை போலிருக்கிறது." என்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு.

"அதனால்தான் புதிய மேயரை நியமிக்காமல் இருக்கிறார்கள். மேயர் மட்டுமல்ல ஐந்து மண்டலத் தலைவர்கள், இரண்டு நிலைக்குழு தலைவர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அந்தப் பதவிகளுக்கும் புதிதாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை," என்றார்.

இந்திராணி பொன். வசந்த் ராஜினாமா செய்து பல நாட்களாகியும் மேயர் பதவிக்கென யாரையும் தி.மு.க. அறிவிக்கவில்லை.

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/Sellur Raju

படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

'பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன சிரமம்?'

இதைப்பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அமைச்சர்களுக்கிடையே முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. பி.டி.ஆர். இப்போது இதிலெல்லாம் தலையிடுவதில்லை. இருந்தாலும், புதிய மேயரை நியமிப்பதில் தி.மு.க. தலைமை ஆர்வம் காட்டவில்லை. மதுரையில் எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலைகள் எல்லாம் குப்பைகளாகக் கிடக்கின்றன."

"அ.தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை இப்போதுவரை சரியாக செயல்படுத்தவில்லை. மேயர் இல்லாததால் மாநகராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. எந்தப் பணிகளும் நடக்கவில்லை. வைகை ஆறு கூவத்தைப் போல மாறி வருகிறது. இருந்தாலும் அப்படியே போட்டுவைத்திருக்கிறார்கள்" எனக் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் செல்லூர் ராஜு.

1971-ஆம் ஆண்டின் மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 40வது பிரிவு, மேயர் பதவி காலியாக இருக்கும்போதோ, 15 நாட்களுக்கு மேல் மேயர் நகரத்தில் இல்லாவிட்டாலோ துணை மேயர் அந்தப் பொறுப்பை வகிப்பார் எனக் கூறுகிறது. .

இதனால், துணை மேயரான டி. நாகராஜன் மேயருக்கான பணிகளை தற்போது மேற்கொண்டுவருகிறார். டி. நாகராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் (சி.பி.எம்.) சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தி.மு.க வட்டாரங்கள் ஒத்துழைப்பதில்லை என சி.பி.எம். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"மாநகராட்சியின் அதிகார அடுக்கில், மேயருக்கு அடுத்த இடத்தில்தான் ஆணையர். இப்போது துணை மேயர்தான், மேயரின் கடமைகளை ஆற்றுகிறார். ஆனால், இப்போதும் விழாக்களுக்கான அழைப்பிதழ்களில் ஆணையாளருக்குக் கீழ் சிறிய எழுத்தில் துணை மேயர் எனக் குறிப்பிட்டு அவரது பெயரை அச்சிடுகிறார்கள். கல்வெட்டுகளிலும் அப்படித்தான் பொறிக்கப்படுகிறது. துணை மேயரை, பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன சிரமம் எனத் தெரியவில்லை" என சி.பி.எம் மாவட்ட நிர்வாகி ஒருவர் தன் பெயரை குறிப்பிட விரும்பாமல் பிபிசியிடம் தெரிவித்தார்.

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், D Nagararajan

படக்குறிப்பு, துணை மேயர் டி. நாகராஜன்.

துணை மேயர் டி. நாகராஜன் தன்னை பொறுப்பு மேயராக அறிவிப்பதில் பிரச்னை இருக்கிறதா என்பது குறித்து ஏதும் பேச விரும்பவில்லை.

எல்லாத் தரப்பினருடனும் இணைந்து செயல்பட தான் தயாராகவே இருப்பதாக மட்டும் கூறுகிறார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "மேயர் இல்லாத காலகட்டத்தில் புதிதாக மேயர் நியமிக்கப்படும் வரை, துணை மேயரே பொறுப்பு மேயராக செயல்படலாம் என்கிறது மதுரை மாநகராட்சி சட்டம். அந்த அதிகாரத்தின் கீழ் நான் தற்போது செயல்படுகிறேன். மேயரின் ராஜினாமா 17-ஆம் தேதி ஏற்கப்பட்டது. நான் 19-ஆம் தேதியில் இருந்தே கோப்புகளில் கையெழுத்திட்டு வருகிறேன். மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பூங்கா முருகன் கோவில் கணக்குகளையும் நான்தான் பார்க்கிறேன். அதிகாரிகள், ஆளும்கட்சி, அமைச்சர் ஆகியோரோடு இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார்.

மதுரை நகரின் உள்கட்டமைப்பு, சுத்தம் ஆகியவை குறித்து ஏற்கனவே பல புகார்கள் இருக்கும் நிலையில், மேயர் இல்லாத காரணத்தால் மாநகராட்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கின்றன என்றும் சிறிய பணிகள்கூட நடப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார்கள் அந்த நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

"மழை நீர் வடிகாலைத் தூர்வாரும் பணிகள் அப்படியே நின்று போயிருக்கின்றன. மழை பெரிதாக பெய்தால் நிலைமை மோசமாகிவிடும். குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்ய முடியவில்லை. மாமன்றக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்க வேண்டும். ஆனால், மேயர் இல்லாததால் ஒன்றரை மாதமாக மாமன்றக் கூட்டமே நடக்கவில்லை." என்கிறார் மதுரை மாநகராட்சி ஆணையரின் கௌரவ ஆலோசகராக முன்பு இருந்தவரும் சமூக ஆர்வலருமான டி.ஆர். தேசிகாச்சாரி.

"மாமன்றக் கூட்டம் நடக்கவில்லை என்பதால் அதன் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமையன்று குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும். வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வந்ததில் இருந்து அந்தக் கூட்டமும் நடக்காமல் கிடக்கிறது. மக்களின் சின்னச் சின்னக் கோரிக்கைகளைக்கூட செயல்படுத்த முடியவில்லை" என்கிறார் அவர்.

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/Madurai Corporation

வேறு சில பிரச்னைகளையும் சுட்டிக்காட்டுகிறார் டி.ஆர். தேசிகாச்சாரி.

2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மதுரை மாநகராட்சிப் பகுதிக்குள் 72 வார்டுகள் இருந்தன. அதற்குப் பிறகு திருப்பரங்குன்றம், ஆவனியாபுரம் என்ற இரு முனிசிபாலிடிகளும் இரண்டு பஞ்சாயத்து யூனியன்களும் 13 பஞ்சாயத்துகளும் மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டன. இதனால், மாநகராட்சிக்குள் உள்ள தெருக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால், ''புதிதாக மாநகராட்சிக்குள் இணைந்த பல தெருக்கள் மாநகராட்சியின் இணைய தரவுத் தளத்தில் உள்ளிடப்படவில்லை. இதனால், இந்தத் தெருக்களுக்கு வரி விதிப்பதில் சிரமம் இருக்கிறது. அதேபோல, குடிநீர் இணைப்புகள், பாதாளச் சாக்கடை இணைப்புகளையும் தர முடியவில்லை. இந்தப் பணிகள் எல்லாமே கிடப்பில் கிடக்கின்றன. இந்த நிலையில் மேயரும் இல்லாதது நிலைமையை மோசமாக்கியிருக்கிறது'' என்கிறார் டி.ஆர். தேசிகாச்சாரி.

மேயர் பதவி மட்டுமல்லாமல், மாநகராட்சியில் வேறு சில பதவிகளும் காலியாகக் கிடக்கின்றன. வரி ஏய்ப்பு மோசடி குறித்த விவகாரம் வெடித்ததும் ஐந்து மண்டலங்களின் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். அந்தப் பதவிகளும் இன்னும் நிரப்பப்படவில்லை.

மண்டலங்களைப் பொறுத்தவரை, சிறு சிறு பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கு என தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மண்டலக் கூட்டங்கள் மாதாமாதம் நடத்தப்பட்டு, அந்தப் பணிகள் முடிவுசெய்யப்படும்.

"ஆனால், மண்டலத் தலைவர்கள் இல்லாததால் கூட்டங்களும் நடப்பதில்லை; பராமரிப்புப் பணிகளும் நடப்பதில்லை" என்கிறார் தேசிகாச்சாரி.

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/ptrmadurai

படக்குறிப்பு, "நான் இந்த விவகாரங்களில் இப்போது தலையிடுவதில்லை." என்று மட்டும் தெரிவித்தார் அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

'தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும்'

மதுரை மாவட்ட தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் இது குறித்து விரிவாகப் பேச விரும்பவில்லை.

"பிரச்னை வெடித்ததும் மேயரை ராஜினாமா செய்ய வைக்கச் சொன்னார்கள். மேயரை ராஜினாமா செய்ய வைத்தோம். அதோடு எங்கள் பணி முடிந்தது. புதிய மேயர் யார் என்பதை கட்சித் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும். இது தொடர்பான எல்லா விஷயங்களையும் கட்சித் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும்." என்கிறார் மதுரை மாநகர மாவட்டச் செயலாளரும் மதுரை வடக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கோ. தளபதி.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டபோது, "நான் இந்த விவகாரங்களில் இப்போது தலையிடுவதில்லை." என்று மட்டும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீனிடம் கேட்டபோது, இந்த விவகாரத்தால் மக்கள் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்கிறார்.

"புதிய மேயரை நியமிப்பது தொடர்பான பணிகள் நடந்துவருகின்றன. தவிர, துணை மேயர் மேயருக்கான பணிகளைப் பார்த்துவருகிறார்" என்று தெரிவித்தார்.

துணை மேயரை, பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன பிரச்னை? என கேட்டப்போது, "பொறுப்பு மேயராக நியமிப்பது குறித்து எந்த விதியும் இல்லை. மேயர் இல்லாவிட்டால், துணை மேயரே மேயராகச் செயல்படுவார். அப்படித்தான் செயல்படுகிறார். இதில் ஒரு பிரச்னையும் இல்லை." என்கிறார் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9867l08e85o

ஸ்டாலின், அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

3 weeks 6 days ago

New-Project-101.jpg?resize=750%2C375&ssl

ஸ்டாலின், அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி மற்றும் குஷ்பு ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு இன்று (17) வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 

இந்த மிரட்டல் மின்னஞ்சல் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்த மின்னஞ்சலில், நடிகர்களான அஜித் குமார், அரவிந்த் சுவாமி மற்றும் குஷ்பு ஆகியோரின் இல்லத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், தமிழ் முதல்வர் மற்றும் நடிகர்களின் வெளிப்புற வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மிரட்டல் மின்னஞ்சலைப் பெற்ற பின்னர், பொலிஸார் அதிரடியாக செயல்பட்டு, மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் முழுமையாக சோதனை செய்தனர். 

எனினும், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

கடந்த மாதமும் ஸ்டாலினுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 

இருப்பினும், விரிவான சோதனைக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. 

ஒக்டோபர் 3 ஆம் திகதி பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகம் மற்றும் நடிகை த்ரிஷாவின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

இதற்கிடையில், ஒக்டோபர் 3 ஆம் திகதி, சென்னை விமான நிலைய முகாமையாளர் அலுவலகத்திற்கும் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்த மர்மமான மின்னஞ்சல் வந்தது. 

அந்த மின்னஞ்சலின்படி, விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளுக்குள் சக்திவாய்ந்த குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவை வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

எனினும், பின்னர் அது ஒரு புரளியாகவும் மாறியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1452928

மாறும் காட்சிகள்: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் சிறிய கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

3 weeks 6 days ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், எந்தக் கட்சி யார் பக்கம்?

படக்குறிப்பு,(இடமிருந்து) தமிமுன் அன்சாரி, தனியரசு, கிருஷ்ணசாமி, வேல்முருகன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி,பிபிசி தமிழ்

  1. 21 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்களே இருக்கின்றன. அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு பிரதான கூட்டணிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகள் தங்களுக்கான கூட்டணி வாய்ப்புகளை எடை போடத் துவங்கியுள்ளன.

அதிலும் குறிப்பாக, சிறிய கட்சிகள் தங்களுக்கான சிறந்த வாய்ப்புகளை நோக்கி காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளன. எந்தக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது?

2021-ல் யார் எந்தப் பக்கம் இருந்தனர்?

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., இடதுசாரிகள் தவிர, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆர். அதியமான் தலைமையிலான ஆதித் தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவை தவிர, மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழக மக்கள் முன்னணி போன்றவையும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.

அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் தவிர, பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது தவிர, புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக், இந்திய தேசிய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தன.

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. கலப்பை மக்கள் கட்சி, ஜனநாயக மக்கள் இயக்கம் போன்ற சிறிய அமைப்புகளும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளித்தன.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ இடம்பெற்றிருந்தது.

நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை தனித்துப் போட்டியிட்டன.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது தமிழகத்தில் அரசியல் காட்சிகள் சற்று மாறியிருந்தன. தி.மு.க. கூட்டணி மக்கள் நீதி மய்யத்தை இணைத்துக் கொண்டு அதே போலத் தொடர, தேசிய ஜனநாயகக் கூட்டணயில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியிருந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தவிர, புதிய தமிழகம் கட்சியும் எஸ்டிபிஐ கட்சியும் இடம்பெற்றிருந்தன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க., ஓ. பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தவிர, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் காட்சிகள் மாறியிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரிந்த அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தற்போது ஒன்றாக இணைந்திருக்கின்றன. அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் சிறிய கட்சிகள் தங்களுக்கான வாய்ப்புகளை எடைபோடத் துவங்கியுள்ளன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/Velmurugan T

படக்குறிப்பு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்

தி.மு.க. கூட்டணியில் அவ்வப்போது அதிருப்திக் குரலை எழுப்பிவரும் கட்சி தி. வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி. 2019ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறார் தி. வேல்முருகன். 2021ஆம் ஆண்டில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று, பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் தி. வேல்முருகன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல சட்டமன்றத்தில் பல தருணங்களில் தி.மு.க. அமைச்சர்களுக்கும் வேல்முருகனுக்கும் இடையில் உரசல்கள் ஏற்பட்டன. அதேபோல, சபாநாயகருக்கும் தி. வேல்முருகனுக்கும் இடையிலும் மோதல்கள் ஏற்பட்டன. அந்தத் தருணங்களில் எல்லாம் தி.மு.க. மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார் வேல்முருகன். இந்தத் தேர்தலில் என்ன திட்டத்தில் இருக்கிறார் அவர்?

"நான் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடங்களை எதிர்பார்ப்போம். எங்கள் தகுதிக்குரிய இடங்களை எதிர்பார்ப்போம். அந்த அளவுக்குரிய இடங்கள் கிடைக்காவிட்டால் பொதுக் குழுவைக் கூட்டி முடிவெடுப்போம். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால் அங்கே செல்ல முடியாது. த.வெ.க. ஒரு நடிகரின் கட்சி. அங்கேயும் செல்ல முடியாது. ஆனால், வரும் தேர்தலில் எங்கள் கட்சிக்குரிய இடங்களை நாங்கள் நிச்சயம் எதிர்பார்ப்போம்" என பிபிசியிடம் தெரிவித்தார் வேல்முருகன்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/Thaniyarasu

படக்குறிப்பு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ. தனியரசு

நீண்ட காலமாக அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் ஒன்று உ. தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை. கோவை செழியனுடன் சில காலம் இணைந்து செயல்பட்டுவந்த உ. தனியரசு, 2001ஆம் ஆண்டில் கோவையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை துவக்கினார். 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலலிதா மறைந்த பிறகும் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.கவுக்கு ஆதரவளித்துவந்தார். ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உ. தனியரசுவுக்கு இடம் ஏதும் தரப்படவில்லை.

"2021ல் தி.மு.கவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால், அ.தி.மு.கவிலேயே இருக்கத் தீர்மானித்தேன். இறுதி நேரத்தில் இடம் வழங்கப்படவில்லை" என்கிறார் தனியரசு. இதற்குப் பிறகு அவரது கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க.பக்கம் திரும்பியது.

"கடந்த வியாழக்கிழமையன்று முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். இந்த முறை தி.மு.க. கூட்டணியில்தான் இடம்பெற விரும்புகிறேன்." என பிபிசியிடம் தெரிவித்தார் தனியரசு.

தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே கொங்குப் பகுதியை மையமாகக் கொண்ட கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி இருக்கும் நிலையில், மேலும் ஒரு கொங்குப் பகுதிக்கான கட்சியும் அதே கூட்டணயில் இடம்பெற முடியுமா என கேட்ட போது, "அவர்களோடு எங்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது. ஆகவே, கூட்டணியில் இடம்பெற முடியுமென்றுதான் உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் உ. தனியரசு.

மனிதநேய ஜனநாயகக் கட்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/Thaminum Ansari

படக்குறிப்பு, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி

மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து 2016ஆம் ஆண்டில் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயகக் கட்சி உருவானது. 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்தக் கட்சி இடம்பெற்றது. அக்கட்சிக்கு இரு இடங்கள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மு. தமிமுன் அன்சாரி வெற்றிபெற்றார். ஜெ. ஜெயலலிதா மறைந்த பிறகும் தொடர்ந்து அக்கட்சி அ.தி.மு.கவுக்கு ஆதரவளித்துவந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவான பிறகு அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார் தமிமுன் அன்சாரி.

இந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விரும்புவதாக பிபிசியிடம் தெரிவித்தார் மு. தமிமுன் அன்சாரி. "2019ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து பா.ஜ.க. இடம்பெறும் கூட்டணியை எதிர்த்துவருகிறோம். இந்த முறை தி.மு.க. கூட்டணியில் நிச்சயம் இடம்பெறுவோம்" என்கிறார் அவர்.

புதிய தமிழகம் கட்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/Dr K Krishnasamy

படக்குறிப்பு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி

2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 4 இடங்களில் போட்டியிட்டது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் போட்டியிட்டது அக்கட்சி. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது அக்கட்சி. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தென்காசி தொகுதியில் அக்கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி போட்டியிட்டார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் மீண்டும் கூட்டணி அமைத்தன. இந்தத் தருணத்தில் கே. கிருஷ்ணசாமி அதிருப்தி அடைந்தார். ஆகவே வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "வரும் ஜனவரி 7ஆம் தேதி எங்கள் கட்சியின் மாநில மாநாடு நடக்கவிருக்கிறது. அதற்குப் பிறகுதான் கூட்டணி தொடர்பான எங்கள் நிலைப்பாட்டைச் சொல்வோம். இப்போது எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் மக்களின் நிலை மோசமடைந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் எல்லாவிதங்களிலும் மோசமான நிலையை எட்டியிருக்கிறோம். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் முடிவெடுப்போம். ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கியமான செயல்திட்டம். அதனை மனதில்வைத்து கூட்டணி முடிவுகளை எடுப்போம்" என்றார் கே. கிருஷ்ணசாமி.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட நிலையில் அதிலிருந்து வெளியேறியது ஏன் என கேட்டதற்கு "அ.தி.மு.க. திடீரென பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தது. அதைப் பற்றி எங்களிடம் ஏதும் சொல்லவில்லை. நாங்களும் சுதந்திரமாக இயங்குகிறோம். அவ்வளவுதான்" என்கிறார் கிருஷ்ணசாமி.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/John Pandian

படக்குறிப்பு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்

ஆரம்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் பிரிவில் இருந்த ஜான் பாண்டியன், 2000வது ஆண்டில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலும் 2011ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டார் ஜான் பாண்டியன். பிறகு, 2017ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். 2021ல் எழும்பூர் தொகுதியில் போட்டியிடவும் செய்தார். பிறகு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2024ல் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்கிறார் ஜான் பாண்டியன்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் இதே கூட்டணி தொடருமா என கேட்டதற்கு, "நாங்கள் இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா என்பதை இப்போது சொல்ல முடியாது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது எங்கள் கட்சியினரைக் கலந்தாலோசித்துத்தான் முடிவுசெய்வோம். அந்தத் தருணத்தில்தான் அதைச் சொல்ல முடியும்" என பிபிசியிடம் தெரிவித்தார் ஜான் பாண்டியன்.

சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/Nellai Mubarak

படக்குறிப்பு, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவவர் முபாரக்

சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எனப்படும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சேர்த்து இக்கட்சி 8 இடங்களில் போட்டியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனியாகவே மூன்று இடங்களில் இக்கட்சி போட்டியிட்டது. 2016ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோது, தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவிப்புகள் வெளியாயின. ஆனால், உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தமாக 32 இடங்களில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டது. 2021லும் அதே கூட்டணியில் இடம்பெற்று ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட்டது.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் (திண்டுக்கல்) போட்டியிட்டது. ஆனால், அ.தி.மு.க. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததும் 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று கூறிவிட்டு அந்தக் கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ வெளியேறியது.

இந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவரான முபாரக். "எங்கள் கட்சியின் பொதுக் குழுதான் தேர்தல் நிலைப்பாடுகளை எடுக்கும். வரும் ஜனவரி மாதத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கவிருக்கிறோம். இந்த முறை எப்படியும் சட்டமன்றத்தில் எங்கள் கணக்கைத் துவங்க வேண்டும் என்பதை மனதில் வைத்து முடிவெடுப்போம்" என்கிறார் முபாரக்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y9r2gxjv7o

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள் - "ஏழைக் குழந்தைகளுக்கு தான் பாதிப்பு"

4 weeks ago

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள்

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 15 நவம்பர் 2025

கோவை நகரில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தி வந்த 10 ஏக்கர் காலியிடத்தை ரூ.76 கோடிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஏலத்தில் விட அறிவிப்பு வெளியிட்டது, அரசியல் ரீதியான வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், ஏழைக்குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான விளையாட்டு மைதானங்கள் புதிதாக உருவாக்கப்படாமல் இருப்பதாக விளையாட்டு அமைப்பினர் மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக கோவையில் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தும் காலியிடத்தை ஏலம் விடும் நடவடிக்கையை வீட்டு வசதி வாரியம் நிறுத்திவைத்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கோவைப்புதுார் பகுதியின் மையப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவிலான காலி மைதானம் உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இந்த இடம், பல ஆண்டுகளாக காலியாக இருப்பதால் அந்த இடத்தில் காலையிலும், மாலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.

இதற்காக கோவை மாநகராட்சி சார்பில், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள்

விளையாட்டு மைதானத்திற்காக அரசியல் மோதல்!

அதேபோன்று சுற்றுவட்டாரத்திலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் இந்த இடத்தில் கிரிக்கெட், கால்பந்து, பேட் மிண்டன், விளையாடுகிறார்கள். விடுமுறை நாட்களில் இங்கே குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களால் இந்த மைதானம் நிரம்பி வழியும்.

மாநகராட்சியுடன் இணைந்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுச் சங்கங்களும் பராமரித்து வந்த இந்த மைதானத்தில் நிறைய விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடப்பது வழக்கமாகவுள்ளது.

இந்நிலையில் இந்த காலியிடத்தை ரூ.76 கோடிக்கு ஏலம் விடுவதாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று டெண்டர் நோட்டீஸ் விட்டது. இதன்படி நவம்பர் 12 அன்று ஏலம் நடப்பதாக இருந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பல ஆண்டுகளாக பொதுமக்கள் மைதானமாகப் பயன்படுத்தி வந்த இந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மேம்படுத்தித்தர வேண்டுமென்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த நோட்டீஸ் அறிவிப்பு, கோவை தெற்கு பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மைதானமாகப் பயன்படுத்தும் அந்த இடம் மொத்தம் 10.79 ஏக்கர் என்பதும், அவற்றில் 4.54 ஏக்கர் இடம் (1,97,916 சதுரஅடி பரப்பு) மருத்துவமனை உபயோகத்துக்காகவும், 6.25 ஏக்கர் இடம் (2,72,403 சதுரஅடி பரப்பு) பள்ளிக்கூடம் கட்டுவதற்கான உபயோகத்துக்காகவும் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த ஏல அறிவிப்பில் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஏலத்தை நிறுத்த வேண்டுமென்று கோவைப்புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்கில், இந்த மனைப்பிரிவை உருவாக்கியதன் அடிப்படையில், இந்த நிலத்தின் உரிமையாளர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்பதால், வாரியமே அதை முடிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. ஆனாலும் பல ஆண்டுகளாக இந்த இடத்தை ஏலம் விடாமல் வாரியம் தவிர்த்துவந்தது.

கடந்த ஆண்டில் தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியத்தால் குடியிருப்புத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படாத 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களை, மீண்டும் நில உரிமையாளர்கள் வசமே ஒப்படைக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

இதே போன்று அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள விற்பனை செய்யப்படாத இடங்களை விற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் காலியிடங்களை ஏலம் விடும் பணியை வாரியம் துவங்கியது.

நவம்பர் 12 அன்று ஏலம் விடுவதாக இருந்த நிலையில், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே, திமுகவினர் இதுபற்றி துறை அமைச்சர் முத்துசாமியிடம் பேசி, ஏலத்தைத் தடுத்து நிறுத்திவிட்டதாக மக்களிடம் தெரிவித்தனர்.

கோவைப்புதுார் பகுதிகளில் மக்களுக்கு இனிப்புகளை வழங்கி, பல இடங்களில் பிளக்ஸ் பேனர்களை வைத்து, பட்டாசு வெடித்தனர். ஆனால் ஏலம் கைவிடப்பட்டதாகவோ, மைதானம் அதே நிலையில் நீடிக்குமென்றோ அரசு அல்லது வீட்டுவசதி வாரியம் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மைதானத்தை மீட்டு விட்டதாக அறிவித்து பட்டாசு வெடித்த திமுகவினர்

படக்குறிப்பு, மைதானத்தை மீட்டு விட்டதாக அறிவித்து பட்டாசு வெடித்த திமுகவினர்

இதனால் ஏலத்துக்கு முந்தைய நாளான நவம்பர் 11 ஆம் தேதியன்று, அதிமுக சார்பில் 'இந்த மைதானத்தை ஏலம் விடும் திட்டத்தைக் கைவிடவேண்டும்' என்ற கோரிக்கையுடன், குனியமுத்துார் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசிய போது, ''தமிழக அரசே இந்த மைதானத்தை ஏலம் விடுவதற்கு டெண்டர் விட்டநிலையில், அதை திமுகவினரே மீட்டு விட்டதாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் நாடகம். இந்த மைதானத்தை முழுமையாக மீட்கும் வரையிலும் அதிமுகவின் போராட்டம் தொடரும்" என்றார்.

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள்

படக்குறிப்பு, மைதானம் ஏலம் விடப்படுவதை எதிர்த்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

''மைதானமல்ல; மருத்துவமனை, பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடம்!''

ஆனால் ஏலம் ரத்து செய்யப்பட்டது தெரிந்தபின்பே, அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகச் சொல்கிறார் கோவைப்புதுார் பகுதி முன்னாள் திமுக கவுன்சிலர் முரளி. இவர் அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் நிர்வாகியாகவும் இருக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய முரளி, ''கடந்த மாதத்தில் மைதானத்தை ஏலம் விட டெண்டர் விட்டதுமே, மாவட்டச் செயலாளர் ரவியிடம் தெரிவித்தோம். அவரும் துணை மேயர் வெற்றிச்செல்வனும் இணைந்து அமைச்சர் முத்துசாமியிடம் பேசிவிட்டனர். அவரும் உரிய அதிகாரிகளிடம் பேசி, ஏலம் விடும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறிவிட்டார். அது உறுதியானபின்புதான் நாங்கள் இனிப்பு வழங்கி பட்டாசுகளை வெடித்தோம். ஆனால் இதுதெரிந்ததும் அதிமுகவினர் அவசர அவசரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.'' என்றார்.

அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில், வேலுமணி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும், இந்த மைதானத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அதேபோன்று அதிமுக ஆட்சியில்தான் விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள் அதிகளவில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது என்று ஒரு பட்டியலையும் கொடுத்தார்.

இந்த மைதானத்தை ஏலம் விடுவது தொடர்பாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவைப்பிரிவு நிர்வாகப் பொறியாளர் ஜேக்கப்பிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''அந்த இடம் வீட்டு வசதி வாரிய மனைப்பிரிவில் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம். பல ஆண்டுகளாக காலியாக இருந்ததால் பொதுமக்கள் மைதானமாகப் பயன்படுத்திவந்தனர். இப்போது வாரியத்தின் இடங்களை மீட்டு விற்பனை செய்யும் நடவடிக்கையில் இந்த ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசின் அறிவுறுத்தலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்

இந்த விளையாட்டு மைதானம் குறித்து அரசின் முடிவை தெரிந்து கொள்ள , துறையின் அமைச்சர் முத்துசாமியை பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவரிடம் பதில் பெறமுடியவில்லை.

வணிக வளாகமாக மாறிய மைதானம்!

சமீபத்திய ஆண்டுகளாக தமிழகத்தில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது என்பது சர்வசாதாரணமாக நடப்பதாகக் குற்றம்சாட்டுகிறது தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கம். இவ்வமைப்பின் தலைவரான தியாகராஜன், இதுதொடர்பாக ஏராளமான ஆதாரங்களுடன் பெரும் பட்டியலை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை அவர் காண்பித்தார். அதேபோன்று கோவை ராமநாதபுரம் பகுதியில் மாஸ்டர் பிளானில் 60 சென்ட் இடம் விளையாட்டு மைதானமாகவும், 100 அடி ரோடாகவும் இருந்த இடத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற நடந்த முயற்சிகள், வழக்கு விபரங்களையும் வீரப்பத்தேவர் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பகிர்ந்தனர்.

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள்

படக்குறிப்பு, தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத் தலைவர் தியாகராஜன்

அங்குள்ள நுாறடி ரோட்டை 60 அடியாகக் குறைக்கவும், விளையாட்டு மைதானத்தை மனையிடமாக மாற்றவும் கோவை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு நகர ஊரமைப்புத்துறையும் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. அதற்கு எதிராக குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில், நுாறடி ரோடு, விளையாட்டு மைதானத்துக்கான ஒதுக்கீட்டை மாற்றக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை அந்த இடம் விளையாட்டு மைதானமாக மேம்படுத்தப்படவில்லை.

''ஒரு மனைப்பிரிவு உருவாக்கப்படும்போது அந்த மனைப்பிரிவில் பூங்கா, குழந்தைகள் விளையாடும் இடம், விளையாட்டு மைதானம் ஆகிய பொது ஒதுக்கீட்டு இடங்களைக் காண்பித்து, அதன்படியே தொழில்நுட்ப அனுமதி வழங்கப்படுகிறது. அந்த இடங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது என்பதுடன், ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை அதற்கான அறிவிக்கையை வெளியிட்டு அந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல்கள் சட்டத்தில் (TAMIL NADU PARKS, PLAY-FIELDS AND OPEN SPACES (PRESERVATION AND REGULATION) ACT, 1959) உள்ளது.'' என்றார் தியாகராஜன்.

ஆனால் அதை அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் செய்வதில்லை என்பதுதான் இவர் உட்பட பலருடைய குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளின் ஒருமித்த குற்றச்சாட்டாகவுள்ளது. மதுரை மாநகராட்சி ஹார்வி நகரில் மதுரை மில் தொழிலாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் தனியாருக்கு ஒரு ஏக்கர் விளையாட்டுத் திடலை மோசடியாக விற்பனை செய்ததாக குற்றம் சாட்டுகிறார் ஜெகன்.

ஹார்வி நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் ஜெகன், ''நகருக்குள் இருந்த ஒரு ஏக்கர் பரப்பளவு விளையாட்டு மைதானத்தை மோசடியாக விற்பனை செய்துவிட்டனர். பட்டா ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த இடத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்தி வருகின்றனர். நாங்கள் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.'' என்கிறார்.

'ஏழை குழந்தைகளுக்கு மைதானம் இல்லை'

இதேபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்களும், பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகளை நடத்தி வருகின்றன. பொது ஒதுக்கீட்டு இடங்களில் விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்குவதே குறைவு என்ற நிலையில், அப்படி ஒதுக்கப்படும் இடங்களையும் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதால் ஏழைக்குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களே இல்லாத நிலை ஏற்பட்டு வருவதாக விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஓய்வு பெற்ற விளையாட்டு ஆசிரியர் ரஞ்சித், ''முன்பெல்லாம் நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் ஆங்காங்கே விளையாட்டு மைதானங்கள் இருக்கும். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இப்போது நகரங்களில் பெரிய பெரிய ஸ்டேடியங்களை அரசு கட்டுகிறது. தனியாரால் நிறைய 'டர்ஃப்' போன்ற மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏழைக் குழந்தைகள் விளையாடுவதற்கான மைதானங்கள் மாயமாகிவருகின்றன. அரசு உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.'' என்கிறார்.

தமிழகத்தில் பொது ஒதுக்கீடு செய்யும் இடங்களைப் பராமரிக்க வேண்டியது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். ஆனால் நகர ஊரமைப்புத்துறையின் ஒப்புதலுடனே இந்த இடங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதாகச் சொல்கிறார்கள் ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தினர். இதுகுறித்து கருத்து கேட்க அமைச்சர் முத்துசாமி, நகர ஊரமைப்பு இயக்குநர் ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்களிடம் பதில் பெறவே முடியவில்லை.

காணாமல் போகும் விளையாட்டு மைதானங்கள்

படக்குறிப்பு, தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம்

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக, தங்கள் அமைப்பினர் வாங்கிய தகவல்களில் மாநிலம் முழுவதும் ஏராளமான பொது ஒதுக்கீட்டு இடங்கள், வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று கூறும் தமிழ்நாடு ஆர்டிஐ ஆர்வலர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹக்கீம், ''வசதி படைத்தவர்கள் பொழுதுபோக்குக்கும், உடற்பயிற்சிக்கும் எங்கேயும் செல்வார்கள். ஏழைகளுக்கு பூங்காக்களை விட்டால் வேறிடமில்லை. இந்த மைதானங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது.'' என்கிறார்.

மேலும் பிபிசி தமிழிடம் பேசிய அவர், கோவையில் மட்டும் பொது ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்று குறிப்பிட்டார். இந்த வழக்குகள் சார்பு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலும் விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதே போன்று தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3epkqwj8w9o

பாரம்பரிய பல்லுயிர் தலமாக தேர்வு: எலத்தூர் குளம், நாகமலை குன்றில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு

4 weeks ago

எலத்தூர் குளம், நாகமலை குன்று, பாரம்பரிய பல்லுயிர் தலம், தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, எலத்தூர் குளம்

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம் 2002இன் படி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள எலத்துார் குளத்தை மூன்றாவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக தமிழக அரசு கடந்த செப்டம்பரில் அறிவித்தது.

அதற்கு அடுத்த மாதத்திலேயே அதற்கு மிக அருகிலேயே உள்ள நாகமலை குன்றை நான்காவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவித்தது.

எலத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 கி.மீ. துார இடைவெளியில் அமைந்துள்ள இவ்விரு இடங்களையும் பாரம்பரிய பல்லுயிர் தலங்களாக அறிவித்திருப்பது, அவற்றின் மீது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அப்படி அந்த இடங்களில் என்ன இருக்கிறது? இவற்றின் சூழலியல் சிறப்புகள் என்ன? விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வுக்குச் சென்றது.

ஊர்ப் பறவைகளை கவர்வதில் முக்கிய இடம் பிடித்த எலத்துார் குளம்

எலத்துார் குளம் மொத்தம் 96 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. சுற்று வட்டாரத்திலுள்ள 21 கிராமங்கள்தான் இதற்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக உள்ளன. குளத்தில் இருந்து வெளியேறும் நீர், ஓடை வழியாகச் சென்று அரசூர் என்ற இடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது.

இந்தக் குளத்திற்குள் முட்புதர் காடுகள், கரைக்காடு, வறண்ட புல்வெளி, சதுப்பு நிலம், ஆழமான நீர்ப்பகுதி, ஆழம் குறைவான பகுதி, மண் திட்டுகள், ஏரிக்கரை எனப் பலவிதமான நில அமைப்புகள் உள்ளன.

இதற்குள் குடைவேலம், நாட்டுக் கருவேலம், வேம்பு, அரப்பு, மூலிகைச் செடிகள் எனப் பலவிதமான மரங்களும், தாவரங்களும் இருக்கின்றன. குளத்திலுள்ள தண்ணீர் தெளிந்த நீராகத் தெரிகிறது. 134 விதமான மண்ணின் மரங்கள் கரைப்பகுதிகளில் உள்ளன.

மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் உள்ள இந்தக் குளத்தில்தான் பல்லாயிரக்கணக்கான பறவைகள் இருந்தன. வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன.

எலத்தூர் குளம், நாகமலை குன்று, பாரம்பரிய பல்லுயிர் தலம், தமிழ்நாடு அரசு

பட மூலாதாரம், ebird.org

அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தின் உலகளாவிய பறவைகள் கணக்கெடுப்புக்கான இ-பேர்ட் இணையதள தரவின் அடிப்படையில், 2024–2025ஆம் ஆண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் (Great Backyard Bird Count) எலத்துார் குளம் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 23வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோன்று 2024 ஜனவரி 28 அன்று, தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அதிக பறவைகளைக் கொண்ட நீர்நிலையாகவும் எலத்துார் பதிவு பெற்றுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னை பெருவெள்ளத்தின்போது தொடங்கப்பட்ட 'சூழல் அறிவோம்' அமைப்பு, நீர்நிலைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம் 5 ஆண்டுகளாக எலத்துார் குளம் மற்றும் நாகமலை குன்று பற்றி ஆவணப்படுத்தியுள்ளார்.

''கோவிட் காலத்தில் இந்தக் குளத்திற்கு வந்தபோது, பல்லாயிரக்கணக்கான பறவைகள் வருவதைப் பார்த்தோம். பறவை ஆராய்ச்சியாளர் ஜெகநாதன், இங்குள்ள பறவைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த பெரிதும் உதவினார். அதன் பின்பே இந்தக் குளத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று தொடர்ந்து அங்கு வரும் பறவைகளை 5 ஆண்டுகளாகப் பதிவு செய்தோம்'' என்றார் தீபக் வெங்கடாசலம்.

எலத்தூர் குளம், நாகமலை குன்று, பாரம்பரிய பல்லுயிர் தலம், தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, சூழல் அறிவோம், தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம்

இந்தக் குழுவினர் இங்கு வரும் பறவைகளை ஆவணப்படுத்தி இ–பேர்ட் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில்தான் 2 ஆண்டுகளாக ஊர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் எலத்துார் குளம் முதலிடம் பெற்றுள்ளது.

குளத்தை நவம்பர் முதல் வாரத்தில் பிபிசி நேரில் பார்வையிட்டது. அப்போது பெருமளவில் குளம் நிரம்பியிருந்தது. குளத்திற்கு நம்பியூர் பகுதியிலிருந்து சிறிய ஓடையில் தண்ணீர் வருகிறது. சமீப காலமாக அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மூலமாகவும் இந்தக் குளத்துக்கு தண்ணீர் வருகிறது.

குளத்தின் நடுவிலுள்ள மரங்களிலும், நீர்ப் பகுதிகளிலும், தரையிலுள்ள புதர்க் காடுகளிலும் பல ஆயிரம் பறவைகள் தங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது.

நீர்க்காகம், கொக்கு, வாத்துகள் என பலவகை பறவைகள் பகல் நேரத்திலேயே அங்கிருந்தன. மாலையில் இருள் சூழும் நேரத்தில் கூட்டம் கூட்டமாக நுாற்றுக்கணக்கான பறவைகள் அணி அணியாக வந்து குளத்தில் தங்குவதற்கு (Roosting) இறங்கியது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

எலத்தூர் குளம், நாகமலை குன்று, பாரம்பரிய பல்லுயிர் தலம், தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, எலத்தூர் குளம்

204 பறவையினங்கள்

'சூழல் அறிவோம்' ஆவணப்படுத்தியுள்ள தரவுகளின்படி, எலத்துார் குளத்தில் 204 பறவையினங்கள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலுாட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உள்பட 693 வகையான உயிரினங்கள் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 77 வலசைப் பறவைகள் என்றும், அவற்றில் 47 தொலைதுார வலசைப் பறவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 125 விதமான உள்ளூர்ப் பறவைகள் உள்ளன. 64 பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.

பன்னாட்டுப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் (அழியும் அபாயத்தில்) உள்ள 9 பறவைகள் இங்கு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் பாதுகாப்பு முன்னுரிமை பட்டியலில் (State of Indian Birds) உள்ள 52 விதமான பறவைகள் இங்கு வருவதும் தெரிய வந்துள்ளது.

குளத்திற்கு அருகிலுள்ள செங்காளிபாளையத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தேவிகா, ''ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில்தான் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) இந்த குளத்திற்கு ஏகமாகப் பறவைகள் வரும். அதிலும் அந்தி நேரத்தில் பார்த்தால் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் வரும். அத்திக்கடவு–அவிநாசி திட்டத்திலும் தண்ணீர் வருகிறது. குளத்தில் அதிக தண்ணீர் தொடர்ந்து இருப்பதால் மீன்களும் அதிகமாக இருக்கின்றன'' என்றார்.

எலத்தூர் குளம், நாகமலை குன்று, பாரம்பரிய பல்லுயிர் தலம், தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு,தேவிகா, செங்காளிபாளையம்

குளம், குன்று ஆகியவற்றின் அமைப்பு மற்றும் முக்கியத்துவத்தை சூழல் அறிவோம் குழுவினர், நம்முடன் நடை பயணம் மற்றும் மலையேற்றம் செய்து நேரில் விளக்கினர்.

குளத்திற்குள் கீச்சான், கரிச்சான்குருவி, குயில், புறா, சில்லை, அன்றில், தேன்சிட்டு, கொண்டலாத்தி, கதிர்குருவி உள்பட ஏராளமான உள்ளூர்ப் பறவைகள் இருப்பதை சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி அடையாளம் காண்பித்தார்.

அவை இனப்பெருக்கம் செய்வதற்காக அங்குள்ள மரம், புதர், தரை எனப் பல இடங்களில் கட்டியுள்ள விதவிதமான கூடுகளையும் காண்பித்து, அந்தப் பறவைகளின் இனப்பெருக்க காலத்தையும் விவரித்தார். ரசாயனப் பொறியாளரான கேசவமூர்த்தி, 'இயற்கை நடை' என்ற சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''எலத்துார் குளத்தைப் பாதுகாப்பதில் இப்போது உள்ளூர் மக்களின் பங்களிப்பு பிரதானமாகிவிட்டது. அரசின் அறிவிப்புக்குப் பின், சூழலியல் ஆர்வலர்கள், பறவை ஆய்வாளர்கள், மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். இங்கேயும் நாகமலை குன்றிலும் நாங்கள் இயற்கை நடைக்கு அழைத்துச் சென்று இங்குள்ள உயிர்ச் சூழல், பறவைகளின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்கிறோம்'' என்றார்.

எலத்தூர் குளம், நாகமலை குன்று, பாரம்பரிய பல்லுயிர் தலம், தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, இயற்கை நடை ஒருங்கிணைப்பாளர் கேசவமுர்த்தி

தொல்லியல் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நாகமலை குன்று

இந்த குளத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் நாகமலை குன்று உள்ளது. நாகமலை குன்றின் அடிவாரப் பகுதிகளையும், குன்றின் உச்சியிலுள்ள பாறைப் பகுதிகளையும் பிபிசி தமிழ் நேரில் பார்வையிட்டது.

நாகமலை குன்றின் உச்சியிலும், மலையடிவாரத்திலும் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல 700க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் தனிப்பாறையில் ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பம் கொண்ட தனிக்கோவில் உள்ளது.

நாகமலை குன்று பகுதியில் புலிக்குத்தி நடுகல், பாறைத்தட்டுகள் போன்ற வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்லியல் சான்றுகள் அதிகம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் க.ராஜன் தனது 'கொங்கு களஞ்சியம்' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளார். குன்றில் 5 இடங்களில் உள்ள பாறை ஓய்விடங்கள் (Caves) பண்டைக்கால வேட்டைச் சமூகத்திற்கான வாழ்விடங்களாக இருந்திருக்கலாம் என்கிறது அவரது நுால்.

நாகமலை குன்றின் மலையடிவாரப் பகுதியில் இருந்த மரங்களில் பகல் நேரத்திலேயே ஏராளமான பறவைகள் இருந்தன. அந்தக் குன்றின் உச்சியில் ராசாளிக் கழுகுகள் இணையாக வசிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறினர். அவற்றில் ஒரு ராசாளிக் கழுகு வெளியில் வலம் வந்ததையும் நேரில் பார்க்க முடிந்தது.

எலத்தூர் குளம், நாகமலை குன்று, பாரம்பரிய பல்லுயிர் தலம், தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, நாகமலை குன்று, முருகன் கோவில்

நாகமலை குன்று உச்சியைச் சுற்றிலும் உள்ள பாறைப் பகுதிகளில் 3 இடங்களில் நீர்ச்சுனைகள் உள்ளன. அவற்றில் கந்தன் தேரை இருப்பதை நேரில் காண்பித்த சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி, எலத்துார் குளத்திற்கும், நாகமலை குன்றுக்கும் ஓர் உணவுச் சங்கிலி இருப்பதையும் அவர் விவரித்தார்.

அரிய வகைப் பறவைகள் மட்டுமின்றி, அரிதான பல தாவரங்கள் இங்கு இருப்பதையும் தாவரவியல் வல்லுநர்களின் உதவியுடன் சூழல் அறிவோம் அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.

எலத்துார் பேரூராட்சியின் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழு (Biodiversity Management Committee), குளம் மற்றும் குன்று பகுதிகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

பறவைகளை நாட்டுத் துப்பாக்கி வைத்து வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், வலை விரித்து மீன்களைப் பெருமளவில் பிடித்தல், கால்நடை மேய்ச்சல், பேரூராட்சி குப்பைகளைக் குளத்தில் கொட்டுதல் போன்றவை சூழல் அறிவோம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக் குழுவின் முயற்சிகளால் பெருமளவில் தடுக்கப்பட்டு இருப்பதாக பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழுவின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.

எலத்தூர் குளம், நாகமலை குன்று, பாரம்பரிய பல்லுயிர் தலம், தமிழ்நாடு அரசு

படக்குறிப்பு, நாகமலை குன்று

உள்ளூர் மக்களின் கோரிக்கைகளும், வனத்துறையின் முன்மொழிவும்

குளம் மற்றும் குன்றின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக சூழல் அறிவோம் குழுவினர், சுற்றுவட்டாரத்திலுள்ள 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை இங்கே அழைத்து வந்து 'இயற்கை நடை' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இதைச் செய்து வருகின்றனர்.

''பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புச் சட்டம் (Biological Diversity Act, 2002) மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதால்தான், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தலம் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். இதில் இந்த இடங்களில் வளர்ச்சிப் பணிகளை மக்கள்தான் முடிவு செய்ய முடியும். இவை தவிர்த்து, அரசிடம் அடுத்த 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு என சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்'' என்றார் தீபக்.

சூழல் அறிவோம், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக்குழு மற்றும் உள்ளூர் சூழல் ஆர்வலர்கள் முன் வைக்கும் சில கோரிக்கைகள்:

  • குளம் மற்றும் குன்றின் பகுதிகளில் பறவை வேட்டையை முற்றிலும் தடுக்க, 2 இடங்களிலும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க வேண்டும். அதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

  • பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தல எல்லையை வரையறுத்து, நிறைய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

  • தாவரங்கள், உயிர்களின் வாழ்விடம் பாதிக்கும் வகையில் நில அமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது.

  • குளத்தில் நம்பியூர் கழிவுநீர் கலக்காமல் சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையும் வேறு வழியில் வெளியே கொண்டு செல்ல வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகக் கள இயக்குநர் ராஜ்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இத்தகைய தலங்களை பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புக் குழுதான் பராமரிக்க வேண்டும். ஆனால் பறவைகள் வாழ்விடம் என்ற வகையில் வனத்துறையும் அதைக் காக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் ஆலோசனைப்படி சில முன்மொழிவுகளைத் தயார் செய்து வருகிறோம்'' என்றார்.

"வனத்துறைக்கு வெளியே உள்ள உயிர்ச்சூழல் முக்கியத்துவம் உள்ள இடங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் ஒருங்கிணைந்த உயிரியல் வாழ்விடப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் நிதி கோரி முன்மொழிவு அனுப்பியிருந்தோம். அந்த நிதி கிடைக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க அனுமதி கிடைக்கும் வரை, தற்போது வனத்துறையினர் இவ்விரு இடங்களையும் அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

''நாகமலை குன்றை அப்படியே பாதுகாத்தால் போதுமானது. எலத்துார் கரையில் சூழல் நடை பயிலும் வகையில் ஒரு சிறிய நடைபாதை அமைத்து, சுற்றிலும் அங்குள்ள பறவைகள், அவற்றைப் பற்றிய தகவல்களைத் தரும் பலகைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

கரைப் பகுதிகளில் ஆலமரங்களை நட்டுப் பராமரிக்கும் திட்டமும் உள்ளது. சூழல் சுற்றுலாவை உருவாக்கினாலும் அதுவும் அங்குள்ள மக்களின் பங்களிப்போடுதான் செயல்படுத்தப்படும்.' என்றார் கள இயக்குநர் ராஜ்குமார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg16k3xxlro

விஜய் கட்சியை சேர்ந்தவர்களை ‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ - எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும்

1 month ago

“விஜய் கட்சியை சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம்தான் போய் பேச வேண்டும். அவர்களிடம் பேசாமல் விட்டது நம் தவறு. தற்போது திமுகவில் 200 இளம் பேச்சாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். அவர்கள் இந்த இளைஞர்களிடம் பேச வேண்டும். நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். விமர்சனம் செய்யக் கூடாது. அவர்களை அரசியல்படுத்த வேண்டியது நமது கடமை” - இது ’திமுக 75 - அறிவுத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் பேசியது.

இணையத்தில் அவரது பேச்சு வைரலாகிக் கொண்டிருக்கிறது. ‘சிலர் இது திமுக அதிருப்தி பேச்சு என்று கதை கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அலசி ஆராய்ந்தால் எழிலனின் சிந்தனை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. திமுகவுக்கு சுயபரிசோதனை பேச்சு என்பதை மறுக்க முடியாது என்பதுபோலவே தவெகவை, விஜய்யை தோலுரிக்கும் பேச்சும் கூட’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அரசியல்படுத்துவது எனப்படுவது யாதெனில்? - திராவிடக் கட்சிகளின் தொடக்கக் காலங்களில் இளைஞர், இளம்பெண்கள் பாசறைகள் வளர்த்தெடுத்தவர்கள் தான் இன்று அக்கட்சிகளில் கோலோச்சியுள்ள முகங்கள் எனலாம். இடதுசாரி கட்சிகளும் இதில் சளைத்தது இல்லை. விசிகவும் கூட இளைஞர்களை அரசியல்படுத்துவதில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிதாய் முளைத்த தவெக இந்த மாதிரியான எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமலேயே ‘தொண்டர்’ படையை வைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் பற்றிதான் அரசியல் நிபுணர்கள் தங்களின் பரந்துபட்ட பார்வையை முன்வைத்தனர். அவர்கள் கருத்துகளின் தொகுப்பு வருமாறு:

ADVERTISEMENT

“குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அரசியலை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். நம்மில் எத்தனை வீடுகளில் குழந்தைகளுடன் செய்தி வாசிக்கிறோம். அரசியல் பேசுகிறோம் என்று எண்ணிப் பார்க்க பத்து விரல்கள் கூட தேவையில்லை. அந்தளவுக்கு வீடுகளில் அரசியல் தீண்டத்தகாத பொருளாக இருக்கும்போது தாங்கள் திரையில், பேஸ்புக்கில், இன்ஸ்டாவில் கொண்டாடி ரசிக்கும் ஒருவர் நான் அரசியல் செய்யப்போகிறேன், முதல்வராகப் போகிறேன் என்று வந்து நின்றால், மிக எளிதாக அவர் பக்கம் இளம் தலைமுறையினர் சாய்ந்துவிடுவர். அதுதான் விஜய் கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

தனது சினிமா ஹீரோ படம் ஃப்ளாப் ஆனாலும் முட்டுக் கொடுப்பதுபோலத் தான் கரூர் நெரிசலில் குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள் கூட விஜய்க்கு முட்டு கொடுக்கிறார்கள். வீடு என்பது வெறும் கூடாரம் அல்ல. அது அரசியல் தன் பிரக்ஞையோடு குழந்தைகளை வளர்த்தெடுபது. அதேவேளையில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது அரசியல் திணிப்பாக இருக்கக் கூடாது.”

இது தந்திரமா? - “விஜய் கட்சித் தொண்டர்கள் அரசியல்மயமாக்கப்படாததால் தான் அவர்கள் விஜய் பிரச்சார வாகனத்தை உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்தார்கள். அதனால்தான் செய்தியாளரை சீண்டி விளையாடுகிறார்கள். அதனால்தான் அரசியல் பிரசாரத்துக்கு குடும்ப விழா போல் குழந்தைகளைக் கூட்டி வந்து பறிகொடுத்தார்கள். ஆனால், அந்த சமூகப் பிழையை மறைத்து அவர்களை ‘தற்குறிகள்’ எனப் பொதுமைப்படுத்துவது, இழிவுபடுத்துவது ஓர் அரசியல் தந்திரம். அதுவும் நிச்சயமாக எழிலன் குறிப்பிட்டதுபோல் ஒரு குறிப்பிட்டக் கட்சியின் சதியாகவும் இருக்கலாம் என்பதில் உடன்படுகிறேன்” என்று கூறுகிறார் கள அரசியல் நிபுணர் ஒருவர்.

இது குறித்து அவர் மேலும் விவரிக்கையில், “விஜய் ரசிகர்களை / தவெக தொண்டர்களை நாம் தமிழர் கட்சியில் கூடிக் கலையும் தொண்டர்களோடு ஒப்பிடலாம். சீமானின் திரைபிம்ப அடையாளம், தமிழ்த் தேசிய் உத்வேகப் பேச்சால் அவர் கட்சியில் இணைந்த பலர் ஒரு சில ஆண்டுகளில் அதிலிருந்து விலகி பிற கட்சிகளிலோ இணைவதைப் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு மெட்ரோ நகருக்கு வரும் ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் போல் அவர் கட்சியில் ஒரு கூட்டம் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருக்கும். அதுபோல் தான் இளைஞர் பட்டாளம் ஒன்று இப்போது தவெகவில் ஐக்கியமாகியுள்ளது. கொள்கை பிடிப்போ, லட்சியமோ கோட்பாடோ இல்லை. ஈர்ப்பரசியலில் சிக்கியவர்களே இவர்கள்.

அரசியல் பழகாமல் ஆர்ப்பரிக்கும் கூட்டம், அது சார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, மாநில அரசியலுக்கே ஆபத்து. உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போடுபவர்கள் இன்னும் வாக்கு அதிகாரம் பெறாத இளம் தளிர்களையும் தங்கள் பாதையில் இழுக்கும் ஆபத்து அதிகம். இது புற்றுநோய் போன்றது. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்துவிட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் அரசியல்மயமாக்குவது.

விஜய் கட்சியினரை தற்குறிகள் என்பது எலீட் அரசியல்வாதிகளின் ‘ஆர்கஸ்ட்ரேட்டட் பாலிடிக்ஸ்’. அவர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற எழிலனின் யோசனையும் அரசியல்தான். ஆனால், அதன்மூலம் விட்டேத்தியாக திரியும் இளைஞர்களை அரசியல்மயமாக்கலாம். அதன்மூலம் அவர்களுக்கு திமுகவுக்கு மடைமாற்றலாம். அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு உடையவர்களாவது மாற்றலாம்” என்றார்.

எப்படி உருவானது இந்த வெற்றிடம்? - “விட்டில் பூச்சிகள் விளக்கை நோக்கிப் பாய்வது போல் பெருமளவிலான இளைஞர் கூட்டம், ஏன் ஜென்ஸீ தலைமுறை என்று வைத்துக் கொள்வோம் எப்படி தவெக, தவெக என்று மார்தட்டுகிறது என்று பார்த்தால் ஓர் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது” என்கிறார் இன்னொரு அரசியல் விமர்சகர்.

அவர் கூறியதாவது: "திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று வாரிசு அரசியல் பட்டவர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இபிஎஸ் vs ஓபிஎஸ், இபிஎஸ் vs ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் என்று உள்கட்சி அரசியல் நீண்டு கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக அவர் உடல்நலம் தேய ஆரம்பத்திலிருந்தே தேய ஆரம்பித்துவிடது. விசிக, இடது சாரிகள், காங்கிரஸ் தனியாக வருவதில்லை கூட்டணி அரசியல்தான் சரி என்று சேஃப் ஜோன் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறது. மலர்ந்தே தீரும் என்று தாமரைக் கட்சி தடம் பதிக்க முயன்று கொண்டிருக்கிறது.

இப்படியான சூழலில் தான் விஜய் என்ட்ரி கொடுக்கிறார். நான் கோடிகளில் வாங்கும் சம்பளத்தை உதறுகிறேன்; கரியர் உச்சத்தை கைவிடுகிறேன்; அரசியல் வாரிசும் அல்ல கட்சியை அடகுவைக்கும் செயலையும் செய்ய மாட்டேன் என்று ரவுண்டு கட்டி கம்பு சுத்துகிறார். மேம்போக்காக அவர் சொல்வதெல்லாம் ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் கூட, அதற்காக மட்டுமே அரசியல் கத்துக்குட்டி கையில் ஆட்சியை எப்படிக் கொடுக்க முடியும்.

இது ஆண்ட, ஆளும் கட்சியினர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம். விஜய் தாராளமாக அரசியல் கட்சி நடத்தட்டும், ஆட்சிக்கு ஆசைப்படட்டும். ஆனால் அவரும், அவர் கட்சி விசிறிகளும் அரசியல்மயமாக்கப்படாத நிலையில் அவருக்கு ஓட்டுப்போடுவது எந்த மாதிரியான எதிர்காலத்தை உருவாக்கும் என்பது கணிக்க முடியாதது” என்று காட்டமாக விமர்சித்தார்.

‘ஏன் என்ற கேள்வி கேட்காமல்...’ - தமிழகத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் மாற்றாக கருதிக் கொள்ளும் கட்சியாக தவெக நிற்கிறது. அதுதான் முடிவு என்று அவர்கள் தீர்மானிக்கும் முன்; அதையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆழ்ந்து யோசித்து தேர்ந்தெடுங்கள் என்று அவர்களை அரசியல்மயமாக்க வேண்டும்.

“ஒரு தொண்டனுக்கு தேவைப்படும்போது அவனுடம் நிற்பவன்தான் தலைவன். திரையில் வீர ஆவேச வசனங்களும், ஃப்ரெண்ட்லி ஜெஸ்ச்சரும் காட்டுவதால் நிஜத்திலும் விஜய் அப்படியானவராகவே இருப்பார் என்று கூறிவிடமுடியாதல்லவா? இயல்பில் அவர் சற்றே தனிமை விரும்பி என்று அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இருக்கட்டும், ஆனால் பொது வாழ்வுக்கு வருவதென்று முடிவெடுத்து, முதல் தேர்தலிலேயே முதல்வராகத்தான் ஆவேன் என்று பேசினால், ஊடகங்களை சந்திக்க, அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல துணிச்சல் இருக்க வேண்டாமா?

அப்படியான சிறு அறிகுறி கூட விஜய்யிடம் இல்லையே. அவரை எப்படி நான் அரசியல் மாற்றாகப் பார்க்க முடியும்” என்று கேள்வி எழுப்பச் செய்ய வேண்டும். குடும்ப அரசியலையும் கேள்வி கேட்கச் செய்ய வேண்டும்; கோஷ்டிப் பூசலையும், அடகுவைக்கும் அரசியலையும் விமர்சிக்கக் கற்றுத்தர வேண்டும். இளைஞர்கள் அரசியலில் மூழ்கித் தெளிவார்கள். அது நிச்சயம் சாக்கடை அல்ல என்பதை அவர்களே உணர்வார்கள். ஏன் என்ற கேள்வி கேட்காவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல அரசியல் வாழ்க்கையும் இருக்காது என்பதே நிதர்சனம்.

‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ - எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும் | DMK MLA' viral speech about TVK cadres and an insight into Vijay's politics - hindutamil.in

'தூத்துக்குடி, தென்காசியைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்' - என்ன நடந்தது?

1 month ago

தமிழர்கள் கடத்தல், மாலி, மேற்கு ஆப்பிரிக்கா

படக்குறிப்பு, கடத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரின் புகைப்படங்கள்

கட்டுரை தகவல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பணியாற்றிவந்த ஐந்து தமிழர்கள் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கடத்தப்பட்டவர்களில் இரண்டு பேர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் 27 வயதான தளபதி சுரேஷ். இவர் கடையநல்லூர் அருகேயுள்ள கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர், 36 வயதான இசக்கிராஜா. இவர் முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர்.

மற்ற மூன்று பேரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஓட்டப்பிடாரம் நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுதுரை, கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த புதியவன், கலப்பை பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து ஆகியோர் அந்த மூவர்.

இவர்கள் அனைவருமே மாலியில் உள்ள கோப்ரி என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டுவந்த மின்சாரத் திட்டம் ஒன்றில் பணியாற்றிவந்தனர். இவர்கள் ஐந்து பேரும் வியாழக்கிழமையன்று கடத்தப்பட்டனர்.

ஏற்கனவே மாலியில் பணியாற்றிவிட்டு தற்போது ஊருக்குத் திரும்பியுள்ள ஜோசப், தனக்கு முதலில் தகவல் வந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"அங்கு என் மாமா பணியாற்றி வருகிறார். அவர் வியாழக்கிழமையன்று இரவில் எனக்கு போன் செய்தார். இதுபோல ஆட்களைப் பிடித்துச் சென்றுவிட்டதாக அவர் சொன்னார். இந்தத் தகவல் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கும் என்ற காரணத்தால் நான் அவர்களிடம் சொல்லவில்லை. நாளிதழ்களில் செய்தி வந்ததைப் பார்த்ததும்தான் அவர்களுக்கு இது குறித்துத் தெரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது. இப்போது மொத்தம் ஐந்து பேர் கடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கடத்தியவர்கள் யார், அவர்கள் கோரிக்கை என்ன என்பதெல்லாம் தெரியவில்லை" என்று ஜோசப் பிபிசியிடம் தெரிவித்தார்.

இவர், மாலியின் கோப்ரியில் சர்வேயராகப் பணியாற்றிவிட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஊர் திரும்பியிருக்கிறார்.

மாலியிலிருந்து பிபிசியிடம் பேசிய மோகன் ராஜா

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, மாலியிலிருந்து பிபிசியிடம் பேசிய மோகன்ராஜ்

இந்தக் கடத்தல் எப்படி நடந்தது?

கடத்தல் தொடர்பாக மாலியில் இருந்து ஜோசப்பிற்குத் தகவல் தெரிவித்த மோகன்ராஜிடம் கேட்டபோது, அவர் அன்று இரவு நடந்த நிகழ்வுகளை விவரித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

"கோப்ரி என்ற கிராமத்தில் மின் தொடரமைப்புப் பணிகளைச் செய்துவந்தோம். மொத்தம் 18 தமிழர்கள் அந்த முகாமில் இருந்தோம். வியாழக்கிழமையன்று இரவு ஒன்பது மணி இருக்கும். இசக்கிராஜாவும் சிவபாலனும் ஒரே வீட்டில் இருந்தார்கள். இசக்கிராஜா வெளியில் உட்கார்ந்திருந்தார். அப்போது துப்பாக்கியுடன் சிலர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து இறங்கினார்கள்.

இசக்கிராஜாவைப் பிடித்து 'உங்கள் தலைவர் யார்' எனக் கேட்டிருக்கிறார்கள். அவர் மேல் அறைக்கு அழைத்துச் சென்று சிவபாலனைக் காட்டியிருக்கிறார். அவரையும் பிடித்துக்கொண்டார்கள். அதற்குப் பிறகு விளக்குகள் எரிந்த அடுத்த அறைக்குச் சென்றவர்கள் அங்கிருந்த சுரேஷ், பேச்சிமுத்து, பொன்னுத்துரை, புதியவன் ஆகியோரைப் பிடித்தனர்.

எல்லோரையும் பிடித்துக்கொண்டு வெளியில் வந்தபோது, ஒரு வாகனம் குறுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் சாவி என்னிடம் இருந்தது. சிவபாலனிடம் அந்தச் சாவியை வாங்கிவரும்படி சொன்னார்கள்.

என்னுடைய வீடு அங்கிருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்தது. அவர் வந்து கதவைத் தட்டி விஷயத்தைச் சொன்னதும், அந்த வீட்டிலிருந்த நான், சிவபாலன், மேலும் நான்கு பேரும் பின்னால் இருந்த வேலி வழியாக வெளியேறிவிட்டோம். அருகிலிருந்த வீடுகளில் இருந்தவர்களையும் எச்சரித்து வெளியேற்றிவிட்டோம்.'' என்றார் மோகன்ராஜ்.

தமிழர்கள் கடத்தல், மாலி, மேற்கு ஆப்பிரிக்கா

படக்குறிப்பு, கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினர்

சிவபாலன் திரும்ப வராத நிலையில், மீதமிருந்த ஐந்து பேரின் சட்டையையும் கழற்றி, அவர்களது கைகளைக் கட்டி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள். எல்லாம் 15 நிமிடத்திற்குள் நடந்துவிட்டது என்கிறார் மோகன்ராஜ்.

''அவர்களில் ஒருவர் மட்டும் எந்திரத் துப்பாக்கி வைத்திருந்தார். மற்றவர்கள் கைத்துப்பாக்கிதான் வைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் போனில் சிக்னல் இல்லை என்பதால் உடனடியாக யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் அரபியும் ஆங்கிலமும் கலந்து பேசினார்கள். எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கோரிக்கை என்ன என்பதெல்லாம் தெரியவில்லை" என்கிறார் மோகன்ராஜ்.

இந்த மின் தொடரமைப்புப் பணிகளை மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் செய்துவருகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் கோப்ரியில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஒப்பந்ததாரராக பணியாற்றிவந்தார். அவர் மூலமாக தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எட்டு மாதங்களுக்கு முன்பாக அங்கு வேலைக்குச் சென்றனர்.

'ஊருக்குத் திரும்புவதாக இருந்தது'

"இங்கே இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் வேலைபார்த்துவந்தோம். வேலை முடியும் கட்டத்தை நெருங்கிவிட்டதால் எல்லோரும் நாடு திரும்பிவிட்டார்கள். நாங்களும் இந்த மாத இறுதியில் ஊருக்குத் திரும்புவதாக இருந்தது. அதற்குள் இப்படி நடந்துவிட்டது" என்கிறார் மோகன்ராஜ்.

கடத்தியவர்கள் யார், அவர்கள் கோரிக்கை என்ன என்பது இதுவரை தெரியவில்லை என்கிறார் மோகன்ராஜ். தலைநகர் பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். கடத்தப்பட்டவர்கள் தவிர்த்த மீதமுள்ளவர்கள் பமாகோவில் ஒரு முகாமில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடத்தப்பட்ட தகவல்கள் இப்போதுதான் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர்களை மீட்டுத்தர வேண்டுமென கோரியுள்ளனர்.

தமிழர்கள் கடத்தல், மாலி, மேற்கு ஆப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்)

2012ஆம் ஆண்டிலிருந்தே மாலி, நைஜர் உள்ளிட்ட நாடுகள் அல் - காய்தா மற்றும் ஐ.எஸ் குழுவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களை எதிர்கொண்டுவருகின்றன.

இந்த ஆயுதக் குழுக்களின் நடவடிக்கையால் நாட்டின் பல இடங்களில் எரிபொருள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த வெளிநாட்டுப் பணியாளர்களை வைத்து மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் வெளிநாட்டவர் கடத்தப்படுவது அங்கு இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது.

தற்போதைய சம்பவத்தில் கடத்தப்பட்டவர்களை மீட்டுத்தரும்படி இந்திய வெளியுறவுத் துறையிடம் கேட்டிருப்பதாக தமிழ்நாடு அயலக தமிழர்கள் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "மாலியில் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்களை உடனடியாக மீட்டுத்தர ராஜ்ஜிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். வெளியுறவுத் துறையின் செயலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், பிற சர்வதேச ஏஜென்சிகளுடன் சேர்ந்து இவர்களை பத்திரமாக மீட்பதற்கான உதவிகளைச் செய்ய வேண்டுமெனக் கேட்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gp4yzkqw9o

டெல்லி கார் வெடிப்பு: இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புத் தீவிரம்

1 month ago

Published By: Digital Desk 1

11 Nov, 2025 | 11:43 AM

image

டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து விபத்து ஏற்பட்டதை அடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பநாய் உதவியுடன் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் இராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா ஆகிய இரண்டும்  வெளிமாநிலங்களை சேர்ந்த அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதி என்பதால் ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில், இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர், மேலதிக பொலிஸ் கண்காணிப்பாளர், பிரதி பொலிஸ் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் அரச விடுதிகளில் 12 குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், விடுதிகளில் உள்ள நபர்களை விலாசம் மற்றும் அவர்களின் ஆதார் இலக்கம் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு அறையிலும் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 25 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பதிவெண் கொண்ட வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பின்னர் ராமேஸ்வரத்திற்குள்  அனுமதிக்கின்றனர்.

15 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு பணியில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மாநிலங்களில் இருந்து ரயில்கள் வந்து செல்வதால்  “தேவசேனா”  என்ற வெடிகுண்டு கண்டறியும் நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்புபிரிவு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்  மற்றும் உத்தரகோசமங்கை கோயிலில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடற்கரைப் பகுதிகளில்  பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் கடலோர பொலிஸார் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருவதுடன் உச்சப்புளி ஐஏஎஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள ஹெலிகாப்டர்கள்  மூலமாக வான்வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, ஏர்வாடி ராமேஸ்வரம் ஆகிய மூன்று  கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏர்வாடி தர்கா சுற்றுவட்டார பகுதியில் இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/230067

'நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் உள்வாங்கும் நிலம்' - சென்னை கட்டடங்களுக்கு ஆபத்தா?

1 month 1 week ago

'நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் இறங்கும் நிலம்' - சென்னை கட்டடங்களுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதால், சென்னை உட்பட இந்தியாவில் உள்ள ஐந்து பெரு நகரங்கள், நிலம் உள்வாங்கும் பிரச்னையை எதிர்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், சில நிபுணர்கள் இதற்கு மாற்றுக் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

உலகெங்கிலுமே கட்டடங்கள் சேதமடையும்போது பெரும்பாலும் அந்தக் கட்டடங்களின் கட்டுமானப் பிரச்னைகளே பொதுவான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், 'நிலம் உள்ளிறங்குவதாலும் கட்டடங்கள் சேதமடைகின்றன; நிலத்தடி நீரை உறிஞ்சுவதே இப்படி நிலம் உள்ளிறங்குவதற்கான முக்கியமான காரணம்' என்கிறது அந்த ஆய்வு.

Nature Sustainability ஆய்விதழில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வின்படி, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் சென்னை, டெல்லி, மும்பையில் உள்ள 2,406 கட்டடங்கள் நிலம் உள்வாங்குவதால் சேதமடையும் அபாயத்தில் உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

இதே நிலை இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு நீடித்தால், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் இன்னும் 23,529 கட்டடங்கள் சேதமடையும் என்கிறது இந்த ஆய்வு.

கனடாவில் உள்ள யுனைட்டட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா டெக், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகளைப் பதிப்பித்துள்ளனர்.

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2030வாக்கில் டோக்கியோவை விட தில்லியில் அதிக மக்கள் வசிப்பார்கள் என்கிறது இந்த ஆய்வு.

ஐந்து மெகா நகரங்கள்

செயற்கைக்கோள் மற்றும் ராடார் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இன்சார் (Interferometric Synthetic Aperture Radar - InSAR) என்ற முறையில் 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வேகமாக வளரும் ஐந்து மெகா நகரங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் நிலம் சுமார் சராசரியாக 4 மி.மீ. அளவுக்கு உள்வாங்குவது தெரியவந்திருக்கிறது. இந்த நகரங்களில் வசிக்கும் மக்களில், சுமார் 1.9 மில்லியன் மக்கள் இதன் பாதிப்பை எதிர்கொள்ளக்கூடும்.

தற்போதைய நிலையில், சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் மொத்தமாக 2,406 கட்டடங்களின் கட்டமைப்பு பாதிக்கப்படும் நிலையில் இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இதே போக்கு, ஐம்பது ஆண்டுகளுக்கு நீடித்தால் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூருவில் உள்ள 23,529 கட்டங்களின் அடிப்படைக் கட்டுமானங்கள் சேதமடையக்கூடும் என்கிறது ஆய்வு.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதே இப்படி நிலம் உள்ளிறங்குவதற்கு முக்கியக் காரணமாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் என இந்தியாவில் உள்ள ஐந்து மிகப் பெரிய நகரங்களில் 8.3 கோடி பேர் தற்போது வசிப்பதைச் சுட்டிக்காட்டும் இந்த ஆய்வு, 2030வாக்கில் டோக்கியோவைவிட டெல்லியில் அதிக மக்கள் வசிப்பார்கள் என்கிறது. இதன் காரணமாக, இந்த நகரங்களின் நீர்த் தேவை வெகுவாக அதிகரிக்கும்.

இந்தியாவின் பெரும்பாலான நகரங்கள் குடிநீருக்காக சார்ந்திருக்கும் ஏரிகள், குளங்கள் போன்றவையும் ஆழ்துளைக் கிணறுகளும் தங்கள் நீர்வளத்திற்கு பெரும்பாலும் பருவ மழையையே சார்ந்திருக்கின்றன.

மேலும், நிலத்தடியில் உள்ள நீரைத் தேக்கிவைக்கும் பகுதிகளும் பருவமழையால்தான் புத்துயிர் பெறுகின்றன.

ஆனால், பருவமழை பெய்வதிலும் அந்த நீர் நிலத்தில் உள்வாங்கப்படுவதிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், இப்படி நிலம் கீழிறங்குவதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்கிறது இந்த ஆய்வு.

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பையில் 26.1 மி.மீயும் நிலம் உள்வாங்குவது கண்டறியப்பட்டிருக்கிறது.

டெல்லியில் அதிகம்

2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்த ஐந்து நகரங்களிலும் நிலம் குறிப்பிடத்தக்க அளவில் உள்வாங்கியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக டெல்லியில் வருடத்திற்கு 51 மி.மீ. அளவுக்கு நிலம் உள்ளிறங்கியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 31.7 மி.மீயும் மும்பையில் 26.1 மி.மீயும் நிலம் உள்வாங்குவது கண்டறியப்பட்டிருக்கிறது.

இதுதவிர, ஒவ்வொரு நகரத்திலும் அதிகம் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும், பாதிப்படைய வாய்ப்புள்ள இடங்களும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை, அடையாற்றின் வெள்ளச் சமவெளி பகுதிகள், வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், தண்டையார்பேட்டை போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாறு ஆற்றை ஒட்டிய பகுதிகளில் நீண்ட காலமாகப் படிந்துள்ள களிமண் படிவங்களால் நிலம் உள்வாங்குவதாகவும் கே.கே. நகர், தண்டையார்பேட்டை பகுதிகளில் அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நிலம் உள்வாங்குவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இப்படி நிலம் உள்வாங்கப்படுவதால் கட்டடங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என இந்த ஆய்வு கூறினாலும், அதன் அர்த்தம் அவை உடனடியாக இடிந்துவிடும் என்பதல்ல என்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மாறாக, வெள்ளம், புயல், நிலநடுக்கம் ஏற்படும் தருணங்களிலும் மோசமான கட்டுமானப் பணிகளின்போதும் கட்டடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதே இதன் அர்த்தம் என இந்த ஆய்வு கூறுகிறது.

மேலும் கட்டடத்தின் வயது, அவை எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் மனதில்கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு.

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'சென்னையில் வருடத்திற்கு சராசரியாக 1,000 மி.மீக்கு மேல் மழை பெய்கிறது. ஆகவே நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மேலே உயர்ந்துவிடும்' என்கிறார் எஸ். ராஜா.

நீர் வளத்துறை நிபுணர்கள் கூறுவது என்ன?

ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக வாய்ப்பில்லை என்கிறார்கள் நீர் வளத்துறை நிபுணர்கள்.

"நிலத்தடி நீரை எடுப்பதால் வருடத்திற்கு 4 மில்லி மீட்டர் அளவுக்கு நிலம் உள்ளிறங்கும் என்பது சரியானதாகத் தெரியவில்லை. சென்னையில் பெரிய அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது என்றாலும்கூட, இப்படி நடக்காது" என்கிறார் தமிழக நீர் வளத் துறையின் ஓய்வுபெற்ற இணை தலைமைப் பொறியாளர் எஸ். ராஜா.

இதற்கான காரணங்களையும் அவர் முன்வைக்கிறார். "நிலத்தடியில் நீரைச் சேமிக்கும் நீரகங்கள் (Accufiers) இரண்டு வகையானவை. ஒன்று, அடைபட்ட நீரகம் (Confined Accufier). மற்றொன்று, அடைபடா நீரகங்கள் (Unconfined Accufier). அடைபட்ட நீரகங்களைப் பொறுத்தவரை, நிலத்தடி நீருக்கு மேலும் கீழும் நீர் உள்ளே செல்ல முடியாமல் மூடப்பட்டிருக்கும். இந்த இடங்களுக்கு பல மைல் தூரத்திலிருந்து நீர் வரவேண்டும். ஆனால், அடைபடா நீரகங்களைப் பொறுத்தவரை, அந்த இடத்தில் மழை பெய்தால் அதே இடத்தில் கீழே இறங்கும். இதனால், அந்த இடத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். "

"சென்னையின் பெரும்பகுதிகள் இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவை. அதனால், கோடை காலங்களில் நீர் வற்றினாலும், மழைக் காலங்களில் நீர் மட்டம் உயர்ந்துவிடும். சென்னையில் வருடத்திற்கு சராசரியாக 1,000 மி.மீக்கு மேல் மழை பெய்கிறது. தரமணியைத் தவிர்த்த பெரும் பகுதிகள் மணற் பாங்கானவை. ஆகவே நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மேலே உயர்ந்துவிடும்" என்கிறார் எஸ். ராஜா.

தரமணி பகுதியின் கீழே களிமண் இருப்பதால் அங்கு மட்டும் நீர் உடனடியாக கீழே இறங்குவது நடக்காது என்கிறார் அவர்.

'நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் இறங்கும் நிலம்' - சென்னை கட்டடங்களுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

சென்னை ஐஐடியின் சிவில் எஞ்சினீயரின் துறையின் வருகை பேராசிரியரான எல். இளங்கோவும் இதே கருத்தை வேறு காரணங்களை முன்வைத்து சுட்டிக்காட்டுகிறார்.

"முதலில் இந்தத் தரவுகள் எப்படி வந்தன என்பதைப் பார்க்கலாம். செயற்கைக் கோள்களில் உள்ள ராடார்களைப் பயன்படுத்தி இந்தத் தரவுகள் பெறப்பட்டிருக்கின்றன. அதாவது, செயற்கைக் கோள்களில் உள்ள ராடார்கள் கதிர்களை கீழே அனுப்பி, திரும்பப் பெறும். நிலப்பரப்பிற்கும் ராடாருக்கும் இடையிலான தூரம் கணக்கிடப்படும்."

"நிலப்பகுதி உயர்ந்தாலோ, தாழ்ந்தாலோ இந்த முறையில் பதிவாகும் என்பதுதான் புரிதல். 2015ல் இருந்து 2023 வரையிலான தரவுகளை வைத்து, இந்த ஆய்வு முடிவுகளைப் பெற்றிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த நகரங்களில் நிலம் சற்று கீழிறங்கியிருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது. சென்னை ஐஐடியைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளுக்கு முன்பாக, கொல்கத்தா நகருக்கு இதே போன்ற ஆய்வுகளைச் செய்திருக்கிறோம். ஆனால், செயற்கைக்கோள் ராடார் தரவுகளை மட்டும் பயன்படுத்தி இதனை மேற்கொண்டால், முடிவுகள் துல்லியமாக இருக்காது.'' என்கிறார் எல். இளங்கோ.

சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்கத்தா நகர கட்டடங்கள்

'சென்னையின் நிலப்பரப்பு அப்படியானதல்ல'

மேலும் ''இந்த ஆய்வைப் பொறுத்தவரை எந்த அளவுக்கு தவறுகள் நேரக்கூடும் என்பதையெல்லாம் கணக்கிட்டு, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றாலும்கூட, நிதர்சனத்தில் எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது எனப் பார்க்க வேண்டும். கொல்கத்தாவிலும் டெல்லியிலும் இதுபோல நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் அங்கு ஆற்றுப் படிமங்கள் அதிகம். இதனால், நிலத்தடி நீரை உறிஞ்சினால், அதற்கு மேலே உள்ள களிமண் சுருங்கி, நிலம் கீழே இறங்கும். ஆனால், சென்னையின் நிலப்பரப்பு அப்படியானதல்ல.'' என்கிறார் எல். இளங்கோ

''சென்னையில் வேளச்சேரியிலும் தரமணியிலும் தரைக்குக் கீழே களிமண் இருக்கிறது. ஆனால், இந்த ஆய்வில் அந்தப் பகுதிகளில் நிலம் இறங்குவதாக குறிப்பிடப்படவில்லை. அடையாறு, அதன் தென் பகுதிகளில் தரைக்கு கீழே பாறைகள்தான் உள்ளன. சென்னை ஐஐடிக்கு கீழேயும் பாறைகளே உள்ளன. வடபழனியிலும் விருகம்பாக்கத்திலும் நிலத்தடி மணற்பாங்கானது. வேளச்சேரியிலும் தரமணியிலும் இதுபோல நடக்கலாம் என்றாலும், அங்கு நடப்பதில்லை. காரணம், சென்னையைப் பொறுத்தவரை மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில்தான் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பகுதிகளில் உடனடியாக கடல் நீர் உள்ளே புகுந்துவிடும். ஆகவே அங்கும் நிலம் கீழே இறங்க வாய்ப்பில்லை."

"கொல்கத்தா போன்ற நகரங்களில் சில கட்டடங்கள் உள்ளே இறங்கியிருப்பதை நாம் சாதாரணமாகவே பார்க்க முடியும். இத்தாலி, ரோம் போன்ற இடங்களில் சில பழங்காலக் கட்டடங்கள் இதுபோல கீழே இறங்குகின்றன. ஆனால், சென்னையில் அப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இந்த ஆய்வுகளைப் பொறுத்தவரை வெறும் ராடார் தரவுகளை மட்டும் நம்பாமல், நேரிலும் ஆய்வு செய்திருக்க வேண்டும். ஏதாவது சில கட்டடங்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, கட்டடங்கள் உண்மையிலேயே இறங்குகின்றனவா என்பதை கணக்கிட்டிருந்தால் இது சிறப்பானதாக இருந்திருக்கும்" என்கிறார் பேராசிரியர் எல். இளங்கோ.

'விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆய்வு பயன்படும்'

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் எஸ். ராஜா. "இந்த ஆய்வு முடிவில் கே.கே. நகர், தண்டையார் பேட்டை பகுதிகளில் நிலம் அதிகம் கீழே இறங்குவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அம்மாதிரி இடங்களில் சில கட்டடங்களைத் தேர்வுசெய்து அவை ஒரு வருடத்திற்கு எத்தனை மி.மீ. கீழே இறங்குகிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டும். இதற்கென நவீன கருவிகள் இருக்கின்றன. அந்தத் தரவுகளை வைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்" என்கிறார் அவர்.

இந்த ஆய்வில் குறிப்பிடப்படும் வேறொரு தகவல் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் எல். இளங்கோ.

அதாவது, பல இடங்களில் நிலம் இறங்குவதாகக் குறிப்பிட்டாலும் டெல்லியின் துவாரகா போன்ற பகுதிகளில் நிலம் சற்று உயர்ந்திருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. "ஆனால், இதுபோல நிலம் மேலே உயர்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு" என்கிறார் எல். இளங்கோ.

இருந்தாலும், நிலத்தடி நீரை கண்மூடித்தனமாக உறிஞ்சுவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஆய்வு பயன்படும் என்கிறார் அவர்.

நிலத்தடி நீர் கண்மூடித்தனமாக உறிஞ்சப்படுவதைத் தடுக்க என்ன செய்வது?

"தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு நிலத்தடி நீர் (மேம்பாடு மற்றும் நிர்வாக) சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தது. அதனை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இதனை கட்டுப்படுத்த முடியும்" என்கிறார் எஸ். ராஜா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj6nwzy9g66o

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

1 month 1 week ago

Nov 5, 2025 - 05:38 PM

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல் காரணமாக சொத்துகளை இழந்து தமிழ் மண்ணுக்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் குடியேறினர். 

கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலுள்ள 116 முகாம்களில் வசிக்கின்றனர். பல ஆண்டுகள் இவர்கள் இங்கு வாழ்ந்தாலும் இந்திய மக்களை போல சுதந்திரமாக வாழ முடியாத சூழல் இன்றும் நிலவுகிறது. 

தமிழ்நாட்டில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின்போது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். 

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசும் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வாக்குரிமை அளிக்கப்பட்டால் தான் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவார்கள். ஆகவே இவர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmhlyenbk01f6qplpl1ll93f5

பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்!

1 month 1 week ago

New-Project-39.jpg?resize=750%2C375&ssl=

பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்!

கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார்.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு முதல் விவசாயிகளின் இழப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் விடயங்கள் வரை 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்போது, கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கட்சி கடுமையாகக் கண்டித்தது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. 

திமுக அரசு “சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறிவிட்டது” என்றும், “பெண்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றும் குற்றம் சாட்டிய TVK, முதலமைச்சர் “தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வாரா” என்றும் கேள்வி எழுப்பியது.

மற்றொரு தீர்மானத்தில், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்த TVK, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான தலையீட்டைக் கோரியது.

கனமழைக்கு மத்தியில் டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு TVK திமுக அரசை கடுமையாக சாடியது. 

அரசாங்கத்தின் “செயலற்ற தன்மை 20 லட்சம் தொன் இழப்புக்கு வழிவகுத்தது” என்று கட்சி குற்றம் சாட்டியதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரியது.

வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துக்காட்டிய மற்றொரு தீர்மானம், முழுமையடையாத மழைநீர் வடிகால்களை அம்பலப்படுத்தியுள்ளது என்று கூறியது. 

வெள்ளத்தைத் தடுக்க ரூ.4,000 கோடி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்துமாறும் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியது.

Athavan News
No image previewபொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்...
கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார். க

கோவை மாணவி பாலியல் பலாத்காரம்.. 3 பேரை சுட்டு பிடித்த காவல்துறை

1 month 1 week ago

கோவை மாணவி பாலியல் பலாத்காரம்.. 3 பேரை சுட்டு பிடித்த காவல்துறை

4 Nov 2025, 1:54 AM

Police arrest 3 men for gang-raping student

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதி அருகே கடந்த ஞாயிறன்று இரவு கல்லூரி மாணவி தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த 3 பேர் ஆண் நண்பரை தாக்கி விட்டு பெண்ணை தூக்கிச் சென்றனர். சிறிது தொலைவில் வைத்து மாணவியை கொடூரமான வகையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு நிர்வாண நிலையில் அங்கேயே விட்டு சென்றுள்ளனர்.

மயக்கம் தெளிந்த நிலையில் மாணவியின் நண்பர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை தேடிய போலீசார் நேற்று அதிகாலையில் நிர்வாணமாக இருந்த நிலையில் அவரை மீட்டனர். இதைத்தொடர்ந்து மாணவியும், அவரது நண்பரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், பெண்கள் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மகளிரணி தலைவரும், கோவை எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தலைமையில் நேற்று மாலை பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுட்டு பிடித்த காவல்துறை

இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை, நள்ளிரவில் கோவை வெள்ளகிணறு பட்டத்தரசியம்மன் கோயில் பகுதியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரும் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

https://minnambalam.com/police-arrest-3-men-for-gang-raping-student/

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்!

1 month 1 week ago

New-Project-16.jpg?resize=750%2C375&ssl=

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்!

தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், 

இலங்கை கடற்படையினரால் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 35 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

நவம்பர் 3 ஆம் திகதி, இலங்கை கடற்படை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளையும் கைது செய்தது.

அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ச்சியான இந்த சம்பவங்கள் தமிழக மீனவ சமூகங்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஏனெனில் அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அச்சமும் குடும்பங்களின் முதன்மை வாழ்வாதாரத்தை இழப்பது மட்டுமல்லாமல், ஆழ்ந்த பயத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது.

தற்போது 114 மீனவர்களும் 247 படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன. 

எனவே, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் உடனடியாக இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் – என்று அவர் கோரினார்.

https://athavannews.com/2025/1451918

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

1 month 1 week ago

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன.

கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க வந்தபோது, அவர்களில் ஒருவர் கடல் அலையில் சிக்கியுள்ளார்.

அவரைக் காப்பாற்ற முற்பட்டபோது மற்ற மூவரும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தேவகி, ஷாலினி, பவானி ஆகியோர் திருவள்ளூர் பொன்னேரியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஷாலினி என்பவர் அரசுக் கல்லூரியில் பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

https://www.vikatan.com/
No image previewசென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண...

'தென்கடலில் விழுந்த யாரும் பிழைத்ததில்லை'- கடலில் 26 மணி நேரம் மிதந்து உயிர்பிழைத்த சிவமுருகன்

1 month 2 weeks ago

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன்.

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நாள்: செப்டம்பர் 20- 21, 2025 (சனிக்கிழமை- ஞாயிற்றுக்கிழமை) நேரம்- நள்ளிரவு 1.15.

கன்னியாகுமரியிலிருந்து 16 கடல் மைல்கள் (சுமார் 29 கிமீ) தூரத்தில் தென்கடலில், கடும் அலைகளுக்கு நடுவே மிதந்துகொண்டிருந்தார் சிவமுருகன். கடலுக்கு மீன்பிடிக்க நண்பர்கள் மற்றும் சகோதரருடன் வந்த அவர், படகிலிருந்து தவறி கடலில் விழுந்து 5 மணிநேரம் கடந்திருந்தது.

"என் கண் முன்னே, ஒரு கடல் மைல் தொலைவில் (1.8 கிமீ) சில படகுகள் என்னைத் தேடிக்கொண்டிருந்தன. தொண்டைக்குள் கடல் நீர் சென்று, புண்ணாகி இருந்தது, உதவிகேட்டு கத்த முடியவில்லை. அமாவாசை இரவில், கடல் நீரிலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு நான் தவிப்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை. சில மணிநேரங்களில் அந்த படகுகள் கரைக்கு திரும்பிச் சென்றன. நான் அங்கேயே மிதந்து கொண்டிருந்தேன்" என பிபிசி தமிழிடம் அன்று நடந்ததை விவரித்தார் சிவமுருகன்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் எனும் கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சிவமுருகன்.

கடந்த மாதம் 20ஆம் தேதி, கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, நண்பர்கள் மற்றும் சகோதரர் என 16 பேருடன் ஒரு விசைப் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சிவமுருகன், கடலில் தவறி விழுந்து, தத்தளித்து, 26 மணிநேரங்களுக்குப் பிறகே மீட்கப்பட்டார்.

நடந்தது என்ன?

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்தச் சம்பவத்திற்கு 2 வாரங்கள் முன் தான் முதல்முறையாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தொடங்கியிருந்தார் சிவமுருகன்.

"வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு செட்டிகுளத்தில் இருந்து கிளம்பி, 4.30 மணிக்கு சின்னமுட்டத்திலிருந்து மீன்பிடிக்க படகில் புறப்படுவோம். சனிக்கிழமையும் (செப்டம்பர் 20) அப்படிச் சென்று, வலை விரித்து, மீன் பிடித்துவிட்டு, மாலை 6 மணிக்கு கரைக்குத் திரும்பத் தொடங்கினோம்."

"இரவு 8 மணிக்கு, சிறுநீர் கழிக்கலாம் என படகின் ஒரு ஓரத்திற்கு வந்தேன். ஜிபிஎஸ் கருவி மூலம் கடைசியாகப் பார்த்தபோது, நாங்கள் கன்னியாகுமரி கரையிலிருந்து 15 கடல் மைல்கள் தொலைவில் இருந்தோம். அப்போது திடீரென ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. படகு குலுங்கியதும், நான் நிலைதடுமாறி கடலில் விழுந்துவிட்டேன். விழுந்ததும், நீச்சல் அடித்து, தண்ணீருக்கு மேலே வந்து கத்தினேன். ஆனால், படகின் எஞ்சின் சத்தத்தில் யாருக்கும் எதுவும் கேட்கவில்லை." என்கிறார் சிவமுருகன்.

தொடர்ந்து பேசிய அவர், "10-15 நிமிடத்திற்கு மேல் ஆகியும் நான் திரும்பி வராததால், என் தம்பி வெளியே வந்து என்னைத் தேடியுள்ளான். நடந்ததைப் புரிந்துகொண்டு, சத்தம் போட்டு அனைவரையும் அழைத்து, ஜிபிஎஸ் கருவி மூலம் வந்த பாதையை கணக்கிட்டு, படகை திருப்பிக் கொண்டுவந்து என்னைத் தேடினார்கள். ஆனால், அதற்குள் அலைகள் என்னை 1 கடல் மைல் தூரம் வரை இழுத்துச் சென்றிருந்தன"

"அவ்வளவு பெரிய கடலில், அதுவும் அமாவாசை இரவில், தலையை நீட்டிக்கொண்டு, கைகளை உயர்த்தி கத்திக்கொண்டிருந்த என்னை அவர்களால் பார்க்க முடியவில்லை. டீசல் பிரச்னை காரணமாக அவர்கள் திரும்பிவிட்டார்கள். மீண்டும் சில படகுகளுடன் வந்து என்னை தேடினார்கள். படகுகளின் விளக்குகளைப் பார்த்து கத்தினேன், கைகளை அசைத்தேன், சில மணிநேரங்களில் அவர்கள் திரும்பிச் செல்லும்வரை அதையே செய்துகொண்டிருந்தேன்." என்கிறார்.

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அதிகமாக கடல் நீர் வாய்க்குள் சென்றதால், தொண்டையில் புண்கள் ஏற்பட்டும், முகத்தில் தொடர்ந்து அலைகள் அடித்ததால் தோல் உரிந்தும், கண்களில் உப்பு நீர் பட்டு அதிக எரிச்சல் ஏற்பட்டும் அவதிப்பட்டதாகக் கூறுகிறார் சிவமுருகன்.

"அந்த இரவில் சுற்றி எந்த வெளிச்சமும் இல்லாத அந்த நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் இருந்த ஒரே எண்ணம், எப்படியாவது கரைக்கு சென்றுவிட வேண்டும், உயிர் இங்கேயே போய்விட்டால், குடும்பம் என்னவாகுமென்று கவலை. நீரில் எளிதாக மிதக்கும் வகையில், எடையைக் குறைக்க அணிந்திருந்த டி-ஷர்டை கழற்றி எறிந்தேன். அப்போது தான் உடலெங்கும் ஏதோ ஒன்று கடிக்கத் தொடங்கியது" என்று கூறிய அவர் தொடர்ந்து பேசினார்.

"புழுக்களைப் போன்ற ஜெல்லி மீன்கள் அவை. உடலில் ஒட்டிக்கொள்ளும், கொஞ்சம் விட்டால் தோலில் துளை போட்டு விடும் என ஊரில் சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்தேன். தொடர்ந்து கை, கால்களை அசைத்து மிதந்து கொண்டே இருந்ததால், உடல் சோர்வடையத் தொடங்கியது. சில சமயங்களில் நீரில் மூழ்கினாலும், தன்னிச்சையாக நீச்சல் அடித்து மேலே வந்துவிடுவேன். மறுநாள் காலை (செப்டம்பர் 21) சூரியனைக் கண்டதும், எப்படியும் நீந்தி கரையை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்தது." என்கிறார்.

'தென்கடல் மிகவும் ஆபத்தானது'

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென்கடலில் ஒப்பீட்டளவில் ஆழம் குறைவு, ஆனால் காற்று அதிகமாக வீசும், ஆக்ரோஷமான சூழல் நிலவும் என்கிறார் பவுலின்.

கரையைத் தேடி நீந்தத் தொடங்கிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எந்தத் திசையில் நீந்தினாலும் கடல் அலைகள் மற்றும் காற்று அவரை வேறு திசையில் தள்ளியது. பிடிப்பதற்கு ஒரு கட்டை கூட கண்ணில் தென்படாத நிலையில், அலைகளால் அங்குமிங்கும் வீசப்பட்ட அவர், நீந்தும் முயற்சியைக் கைவிட்டார்.

"எப்படி நீந்தினாலும் ஒரே இடத்தில் தான் இருக்கிறேன் என்று தோன்றியது. பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. குளிரில் கால்கள் மரத்துப் போயிருந்தன. சூரிய அஸ்தமனம் முடிந்து, இருள் சூழத் தொடங்கியதுபோது, உடலில் இருந்த தெம்பும், மன தைரியமும் மொத்தமாக போயிருந்தது. தென்கடலில் காணாமல் போன யாரும் பிழைக்க மாட்டார்கள் என ஏன் சொல்கிறார்கள் எனப் புரிந்தது. இதற்கு மேலும் அவதிப்படமுடியாது என தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். அப்போது எனக்கு தெரியாத ஒன்று, ஊருக்குள் நான் இறந்துவிட்டேன் என அறிவித்திருந்தார்கள். என் உடலாவது கிடைக்காதா என குடும்பத்தினர் அழுது கொண்டிருந்தார்கள் என்பது" என்றார்.

"ஆனால், மூழ்க முயற்சி செய்தாலும், என்னால் மூச்சை அடக்க முடியாமல், மேலே வந்துகொண்டே இருந்தேன். எனவே அதிக கடல் நீரை குடித்தேன். இந்த முறை நிச்சயம் மூழ்கி விடலாம் என நினைக்கும்போது, தூரத்தில் ஒரு ஒளி தெரிந்தது." என்கிறார் சிவமுருகன்.

சிவமுருகன் பிழைத்து வந்தது ஒரு அதிசயம் தான் எனக் கூறுகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் மற்றும் எழுத்தாளர் பவுலின். 50 வருடங்கள் மீன்பிடி தொழிலில் அனுபவம் கொண்ட இவர், பிற கடல் பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்கடல் மிகவும் ஆபத்தானது எனக் கூறுகிறார்.

"ராமநாதபுரத்தின் சேதுக்கரை, கீழக்கரை தொடங்கி குமரிக்கரை வரை விரிந்திருக்கிறது தமிழகத்தின் தென்கடல். அதில் ஒப்பீட்டளவில் ஆழம் குறைவு, ஆனால் காற்று அதிகமாக வீசும், ஆக்ரோஷமான சூழல் நிலவும். எனவே அலைகளின் உயரம் அதிகமாக இருக்கும். அத்தகைய கடற்பகுதியில் தவறி விழுந்த ஒருவர், 24 மணிநேரம் கடந்து உயிர்பிழைப்பது என்பது மிகவும் அரிது. காரணம், கடலின் அதீத குளிர் உடலை உருக்கிவிடும். கால்கள் மரத்துப் போய் மேற்கொண்டு மிதக்க முடியாமல், மூழ்கத் தொடங்கிவிடுவோம். உடல் சோர்வடைந்து கடல் நீரைக் குடிக்கத் தொடங்குவார்கள், அது உடலில் நீர் வற்றலை ஏற்படுத்தும்." என்று கூறுகிறார்.

ஆழ்கடலின் நீரோட்டத்தால் எவ்வளவு நீந்தினாலும் கரையைக் கண்டறிவது கடினம் எனக்கூறும் பவுலின், "ஒரு கட்டை போன்று ஏதேனும் கிடைத்தால் அதைப் பிடித்துக்கொண்டே மிதப்பது நீண்ட நேரம் மிதக்க உதவும். ஆனால், 24 மணிநேரத்துக்கும் மேல் வெறுமனே கை, கால்களை அசைத்துக்கொண்டே மிதப்பது மிகவும் கஷ்டம். உடல் ஒரு கட்டத்தில் தளர்ந்து, மூழ்கி விடும்" என்கிறார்.

கடல் நீரில் தவறி விழுந்தால் ஏற்படும் பிரச்னைகள்

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இனி மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாமென குடும்பத்தினர் கூறிவிட்டதாகக் சிவமுருகன் தெரிவிக்கிறார்.

கடல் நீரில் அதிக உப்பு உள்ளது. மனிதர்கள் கடல் நீரைக் குடிக்கும்போது, மனித உடலின் செல்கள் தண்ணீரையும் உப்பையும் உறிஞ்சிக் கொள்கின்றன. மனித சிறுநீரகங்கள் உப்பு நீரை விட குறைவான உப்புத்தன்மை கொண்ட சிறுநீரை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எனவே, கடல் நீரைக் குடிப்பதன் மூலம் உறிஞ்சப்படும் அதிகப்படியான உப்பை அகற்ற, நீங்கள் குடித்ததை விட அதிக தண்ணீரை சிறுநீராக கழிக்க வேண்டும். இறுதியில், நீங்கள் நீரிழப்பால் உயிரிழக்க நேரிடும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் கடல் நீரைப் பருகக் கூடாது.

அதேபோல, குளிர்ந்த நீரில் (15°C க்கும் குறைவான எந்த வெப்பநிலையிலும்) இருக்கும்போது, உங்கள் உடல் ஒருவித அதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும். இது நடந்தால், சுவாசம் மற்றும் இயக்கத்தின் மீதான உங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். குளிர்ந்த நீரால் ஏற்படும் அதிர்ச்சி உங்கள் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை விரைவாக அதிகரிக்கச் செய்து, மாரடைப்பை ஏற்படுத்தும்.

'எந்த மாதிரியான நீர்நிலையில் தவறி விழுந்தாலும் முதலில் பதற்றப்படாமல் மிதப்பது மிகவும் முக்கியம், அதோடு நிதானமாக சுவாசிக்க முயற்சி செய்யுங்கள். தேவைப்பட்டால் மிதப்பதற்கு உதவ உங்கள் கைகளையும் கால்களையும் மெதுவாக நகர்த்தலாம். நிலைத்தன்மையை மேம்படுத்த உங்கள் கைகளையும் கால்களையும் விரிக்கவும், உங்கள் கால்கள் மூழ்கினாலும் பரவாயில்லை. முழு உடலும் மிதக்கவில்லை என்றாலும், நீருக்கு மேலே தலை பின்னோக்கி சாய்ந்து, முகம் மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்' என பிரிட்டனின், ராயல் நேஷனல் லைஃப் போட் இன்ஸ்டிடியூஷன் (RNLI) அறிவுறுத்துகிறது.

கடல், மீனவர்கள், மீன்பிடி தொழில், தென் கடல், கன்னியாகுமரி

படக்குறிப்பு, தனது மகன் சிவராதேஷுடன் சிவமுருகன்.

தான் பார்த்த அந்த ஒளி ஒரு படகின் முகப்பு விளக்கு என்பதைப் புரிந்துகொண்ட சிவமுருகன், அதன் பிறகு நடந்தவற்றை விவரித்தார்.

"முழு பலத்தையும் திரட்டி கைகளை அசைத்தேன். எப்படியோ அவர்களும் என்னைப் பார்த்துவிட்டார்கள். என்னை நோக்கி படகைத் திருப்பினார்கள். நானும் அவர்களை நோக்கி நீந்தினேன். கடலில் இருந்து யார் என்னை தூக்கினார்கள், என்ன பேசினார்கள் என ஒரு 30 நிமிடத்திற்கு ஒன்றும் புரியவில்லை. டீ, பிஸ்கட்டுகளை சாப்பிட்ட பின் தான் கண்களைத் திறக்க முடிந்தது. கூத்தன்குழி கிராமத்தைச் சேர்ந்த அருளப்பன் என்பவரின் படகு அது. அவரும் அவரது மீனவக் குழுவும், கடலில் விரித்திருந்த வலையை எடுக்க வந்திருந்தார்கள்." என்கிறார்.

கடலிலிருந்து மீட்கப்பட்ட சிவமுருகனுக்கு, கரைக்கு வந்தபிறகு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

சிவமுருகனுக்கு திருமணமாகி ஐந்து வயதில் சிவராதேஷ் என்ற மகன் இருக்கிறார்.

"கடந்த ஒரு மாதத்தில், ஒருமுறை கூட கடலில் கால் வைக்கவில்லை. இனி கடலுக்கு செல்லக்கூடாது என மகன் தொடங்கி குடும்பத்தினர் அனைவரும் கூறிவிட்டார்கள். இன்னும் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எனக்கு இப்படி ஆன பின்பு எனது சகோதரன் வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டான்."

"அவ்வப்போது கரையில் நின்று கடலைப் பார்ப்பேன். உடலில் ஜெல்லி மீன்கள், தலையைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் என அந்த இரவில் மிதந்தவாறு நான் பார்த்த கடல் தான் இப்போதும் எனக்குத் தெரிகிறது. அந்தக் காட்சியை மறக்கும் வரை என்னால் கடல் நீரில் கால்களை நனைக்க முடியாது." என்கிறார் சிவமுருகன்.

(தற்கொலை எண்ணங்கள், மன சோர்வு உள்ளிட்டவை இருந்தால் தமிழக அரசின் 104 என்ற இலவச உதவி எண்ணை அழைத்து ஆலோசனைகளும், உதவியும் பெறலாம்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn09rvgrxygo

தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு!

1 month 2 weeks ago

தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு!

28 Oct 2025, 8:18 PM

tvk management meeting will be held in panaiyur

தவெக பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பனையூரில் நாளை (அக்டோபர் 28) நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடங்கின. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகளும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி குழம்பி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இதனையடுத்து தனது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். அதன்படி கட்சியின் அன்றாட செயல்பாடுகள், பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் குழுவை இன்று நியமித்து உத்தரவிட்டார்.

பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முதல் கழக உறுப்பினர் மரிய வில்சன் என 28 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர். தமது வழிகாட்டுதல் படி இயங்கும் இந்த புதிய குழுவுக்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைய்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளரான ஆனந்த் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை காலை 10.00 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/tvk-management-meeting-will-be-held-in-panaiyur/

Checked
Sun, 12/14/2025 - 04:34
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed