தமிழகச் செய்திகள்

கீழடி நகரை மக்கள் கைவிட்டது ஏன்? சுமார் 1,170 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? ஆய்வில் புதிய தகவல்

1 month ago

கீழடி நகரை மக்கள் கைவிட்டது ஏன்? சுமார் 1,170 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? ஆய்வில் புதிய தகவல்

கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு

பட மூலாதாரம்,Archaeological Survey of India

படக்குறிப்பு,கீழடி

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மதுரைக்கு அருகில் கண்டறியப்பட்ட கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்திருந்த மக்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தைக் கைவிட்டு வெளியேறினர். சுமார் 1,150 ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தை விவரிக்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று.

அக்டோபர் 25ஆம் தேதி Current Science ஆய்விதழில் "Luminescence chronology of sediments from the prehistoric civilisation sites along the Vaigai river, India" என்ற கட்டுரை வெளியானது. இந்த ஆய்வுக் கட்டுரையை ஆமதாபாத் நகரில் உள்ள Physical Research Laboratory-ஐ சேர்ந்த ஆய்வாளர்களும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர்.

கீழடி தொல்லியல் தளத்தில் கிடைத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகள், அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தைப் புலப்படுத்துவதாக இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

அதாவது, அருகிலுள்ள வைகை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே, அங்கு வாழ்ந்த மக்களை அந்த இடத்தை விட்டு செல்லத் தூண்டியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நிகழ்வு சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்திருக்கலாம் என்றும் இவர்களது ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தியது.

இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டில் இருந்து மாநில தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை நடத்தி வருகிறது.

இங்கு கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகளும் இங்கு கிடைத்த தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகளும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கிலேயே ஒரு நகரம் இந்தப் பகுதியில் இயங்கியிருக்கலாம் என்ற செய்திகளைத் தந்தன.

இந்த நிலையில் கீழடியில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் சில ஓஎஸ்எல் எனப்படும் Optically Stimulated Luminescence ஆய்வுக்கு சில ஆய்வாளர்களால் அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள், கீழடியில் வாழ்ந்த மக்கள் வைகையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறியிருக்கலாம் எனத் தெரிய வந்திருப்பதாக ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு

படக்குறிப்பு,கீழடி தொல்லியல் தளம்

ஆய்வுக் குழிகளில் கிடைத்தது என்ன?

தற்போது வைகை நதி, கீழடி தொல்லியல் தளத்தில் இருந்து வடக்கில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் ஓடுகிறது. அந்நதியின் வெள்ளப் படுகையில்தான் இந்த தொல்லியல் களம் அமைந்திருக்கிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பகுதி ஒரு நகரமாக இருந்திருக்கலாம் என இங்கு கிடைத்த பொருட்களை கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது தெரிய வந்தது.

ஆனால், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்தபோது வெளிவந்த கட்டடத் தொகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால் படிவதைப் போன்ற மண் படிவங்கள் காணப்பட்டன. அந்தப் படிவங்களை ஆய்வுக்கு உட்படுத்த சில ஆய்வாளர்கள் முடிவெடுத்தனர்.

கீழடி பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு ஆய்வுக் குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில்தான் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு குழிகளிலும் களிமண், நுண்ணிய வண்டல், மணல், சரளைக் கற்கள் ஆகியவை இருந்தன. மேலும் இந்தக் குழிகளிலும் கிடைத்த மண் படிவங்கள் பொதுவாக நுண்துகள்களாகவும் பல்வேறு வகைகளைக் கொண்டனவாகவும் இருந்தன.

இந்த இரண்டு குழிகளிலும் மேற்பகுதியானது களிமண் படிவங்களால் மூடப்பட்டிருந்தது. இப்போது இந்த மண் படிவங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தித்தான் கீழடி எப்போது கைவிடப்பட்டது, ஏன் கைவிடப்பட்டது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்தக் குழிகளில் வேறு சில அம்சங்களும் தெரிய வந்தன. முதலாவது ஆய்வுக் குழியில் 50 செ.மீ. முதல் 170 செ.மீ. ஆழத்தில் திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டட அமைப்புகள் தென்பட்டன. ஒரே அளவிலான செங்கற்களால் கட்டப்பட்ட ஒரே மாதிரியான கட்டுமானங்களாக இவை இருந்தன. இதே குழியில் 2 மீட்டர் ஆழத்தில் உடைந்த கூரை ஓடுகளும் காணப்பட்டன. நீண்ட சுவர்கள், கால்வாய்கள் ஆகியவையும் தென்பட்டன. இந்தக் கால்வாய்கள் வெவ்வேறு அகலங்களைக் கொண்டிருந்தன.

நுணுக்கமான களிமண்ணை வைத்து தரைத்தளங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டுமானங்களின் மீது நுண்ணிய வண்டல் - களிமண் படிவங்கள் காணப்பட்டன. இதன் அடிப்பகுதி கரடுமுரடான மணல் அடுக்குகளைக் கொண்டிருந்தது.

இரண்டாவது அகழாய்வுக் குழியில் ஏராளமான பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், களிமண் கலைப் பொருட்கள் ஆகியவை கிடைத்தன. அது பானை தயாரிக்கும் பகுதியாக இருந்திருக்கலாம் என்பதை இந்தப் பொருட்கள் சுட்டிக்காட்டின. இங்கும் வண்டல் - களிமண் படிவங்கள் காணப்பட்டன. ஆனால், முதல் ஆய்வுக் குழியோடு ஒப்பிட்டால், இங்கு படிவங்களின் தடிமன் அதிகமாக இருந்தது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை.

இந்த இரண்டு ஆய்வுக் குழிகளிலும் கிடைத்த படிமங்கள் பெரும்பாலும் வண்டல் மண்ணாலும் களிமண்ணாலும் ஆனவையாக இருந்தன. சில வண்டல் படிவங்களின் இடையிடையே பானை ஓடுகளும் கிடைத்தன. முதலில், அதிக விசையுடன் மண் படிமங்கள் உருவான பிறகு, விசை குறைந்த நிலையில் அடுத்த நிலை படிங்கள் உருவானதை இது குறிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது?

கீழடியின் ஐந்தாம் கட்ட அகழாய்வில் - அதாவது 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் - பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு அகழாய்வுக் குழிகளில், வெவ்வேறு பண்பாட்டு அடுக்குகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

ஓஎஸ்எல் காலக்கணிப்புக்கு அனுப்புவதற்காக 0.8 மீட்டர், 1.5 மீட்டர், 2.8 மீட்டர், 3.9 மீட்டர் என வெவ்வேறு ஆழங்களில் மொத்தமாக நான்கு மாதிரிகள் சேரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் ஆமதாபாத்தில் உள்ள பௌதீக ஆராய்ச்சி ஆய்வகத்தின் Atomic, Molecular and Optical Physics Division-இல் உள்ள லுமினிசன்ஸ் ஃபிஸிக்ஸ் மற்றும் அப்ளிகேஷன் க்ரூப் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

முதல் குழியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் OSL காலத்தைப் பொறுத்தவரை, 80 செ.மீ ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 670 (± 40) ஆண்டுகளாக இருந்தது. அதே குழியில் 1.5 மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 1,170 (± 60) ஆண்டுகளாக இருந்தது. இரண்டாவது குழியில் 2.9 (2.8) மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியின் வயது 940 (± 70) ஆண்டுகளாக இருந்தது. 3.8 (3.9) மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 1,140 (± 70) ஆண்டுகளாக இருந்தது.

"இந்த ஓஎஸ்எல் காலக் கணிப்பின்படி பார்க்கும்போது சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் போன்ற தீவிர இயற்கை நிகழ்வுகளால் இந்தப் பகுதிகள் கைவிடப்பட்டு இருக்கலாம். இது படிப்படியாக நிகழ்ந்திருக்கலாம்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான எஸ். சத்தியசீலன்.

கீழடி, மதுரை, தொல்லியல், வரலாறு

பட மூலாதாரம்,keeladimuseum.tn.gov.in

படக்குறிப்பு,கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை

அந்த காலகட்டத்தில் வைகை நதி எப்படி இருந்தது?

அந்தக் காலகட்டத்தில் வைகை நதியின் போக்கு எவ்வாறு இருந்தது என்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

பனியுகத்திற்குப் பிந்தைய ஹோலோசீன் காலகட்டத்தின் பிற்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தின் காலநிலை நிலையானதாக இருக்கவில்லை என்றும் தென்னிந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் ஏற்ற இறக்கமான காலநிலை சூழலை எதிர்கொண்டன என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

அந்தக் காலகட்டத்தில் வைகை ஆற்றல்மிக்க நதியாகவும் பரந்த வடிநிலப் பகுதிகளையும் வெள்ளச் சமவெளி பகுதிகளையும் கொண்டிருந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

"வைகை நதி பல முறை தனது பாதையை மாற்றியுள்ளது. பூமியின் மேல் ஓட்டில் ஏற்பட்ட மாற்றங்களாலும் வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் இந்தப் பாதை மாற்றங்கள் நடந்துள்ளன. இதுபோல நதி தனது பாதையை மாற்றுவதும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளங்களும் 1,250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ந்து நடந்தன.

இதனால், நதிக் கரையோரம் இருந்த குடியிருப்புகள் அழிந்தன. அதன் அடிப்படையில் பார்க்கும்போது தற்போது கிடைத்துள்ள ஓஎஸ்எல் காலக்கணிப்பு (1,170 ஆண்டுகளுக்கு முன்) வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காலத்தையும் குடியிருப்புகள் அழிந்த நிகழ்வையும் அதன் மீது வெள்ளப் படிமங்கள் ஏற்பட்ட காலத்தையும் குறிக்கிறது" என்கிறார் சத்தியசீலன்.

கீழடியைப் பொறுத்தவரை, ஆரம்பக் காலத்தில் குடிசைகளில் இருந்து குடியிருப்புகள் துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் அவர்.

"பிறகு அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டு, அது ஒரு நகரமாகியிருக்க வேண்டும். அந்தப் பகுதியில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது மிகச் செழிப்பான விவசாயம் நடந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

இந்தப் பகுதி கைவிடப்பட்டதைப் பொறுத்தவரை, அது ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்காது, படிப்படியாக நடந்திருக்கும். அங்கிருந்த மக்கள், வட பகுதியில் ஆறு ஓடியதால் மற்ற மூன்று திசைகளில் நகர்ந்திருக்க வேண்டும்" என்கிறார் சத்தியசீலன்.

ஆகவே, 1,170 - 1140 ஆண்டுகளுக்கு முன்பு வைகையில் ஏற்பட்ட வெள்ளங்களின் விளைவாக இங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து நகர்ந்துள்ளார்கள் என்கிறது இந்தப் புதிய ஆய்வு. இதனால், அங்கிருந்த குடியிருப்புகள் அழிந்து அதன் மீது வெள்ளத்தால் ஏற்பட்ட மண்ணும் வண்டலும் படிந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgx04z36ypo

திருத்தணி: மருத்துவமனையில் இருந்து ஒடிசா இளைஞர் வெளியேறியது ஏன்? - நடந்தது என்ன?

1 month ago

திருத்தணி: மருத்துவமனையில் இருந்து ஒடிசா இளைஞர் வெளியேறியது ஏன்? - நடந்தது என்ன?

திருத்தணி,  ஒடிஷா மாநில இளைஞர், இன்ஸ்டாகிராம், வன்முறை, சிறார்கள்

படக்குறிப்பு,'வட இந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 30 டிசம்பர் 2025

"அந்த நான்கு பேரும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். யாரும் படிக்கச் செல்லவில்லை. வீட்டில் தாய் அல்லது தந்தை என யாரோ ஒருவர் இல்லாத சூழலில் வளர்கின்றனர். ஒருவரைத் தாக்கிவிட்டோம் என்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை" என்கிறார், திருத்தணி காவல்நிலைய ஆய்வாளர் மதியரசன்.

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சில சிறுவர்கள், ஆயுதங்களால் தாக்கி ரீல்ஸ் பதிவிட்ட சம்பவம் குறித்து இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கைதான சிறுவர்களை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவல்துறை அடைத்துள்ளது. ஒரு சிறுவனுக்கு சிறார் நீதிக்குழுமம் பிணை வழங்கியுள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருத்தணி,  ஒடிஷா மாநில இளைஞர், இன்ஸ்டாகிராம், வன்முறை, சிறார்கள்

பட மூலாதாரம்,Getty Images

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்

காவல்துறை அளித்த தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே டிசம்பர் 27 ஆம் தேதியன்று இளைஞர் ஒருவர் ரத்த காயத்துடன் விழுந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலைக்கு கலரிங் அடித்த சில சிறுவர்கள் தன்னை ஆயுதங்களால் தாக்கியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார் என்கிறது காவல்துறை.

அதேநாளில் ரயிலில் பயணிக்கும் இளைஞர் ஒருவரை அரிவாளால் சில சிறுவர்கள் மிரட்டுவது போன்ற ரீல் ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் தென்பட்ட நபரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒடிசா இளைஞரும் ஒன்று எனத் தெரியவந்தது.

இதையடுத்து, குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் முகவரியில் ரீல்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் தேடி வந்தனர்.

மறுநாள் (டிசம்பர் 28) திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் வசிக்கும் ஒரு சிறுவனை கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின்படி மேலும் மூன்று பேரை திருத்தணி போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல்துறை கூறுவது என்ன?

தாக்குதலுக்கு ஆளான சூரஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவேற்றம் செய்வதற்கான நோக்கத்துடன் நான்கு சிறார்கள் இந்தக் குற்றத்தைச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

டிசம்பர் 30 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "வடஇந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒடிசா இளைஞர் அளித்துள்ள புகாரில், 'எங்களை முறைத்துப் பார்க்கிறாயா?' எனக் கேட்டு அடித்துள்ளதாகக் கூறியுள்ளார்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு பட்டா கத்தியை சிறுவர்கள் வைத்திருந்தனர். சிலருடன் முன்விரோதம் உள்ளதால் வைத்திருந்ததாகக் கூறினர். இவர்கள் மீது சிறிய புகார் தவிர வேறு புகார்கள் எதுவும் வரவில்லை. அவர்களிடம் இருந்து இரண்டு கத்திகளும் இரண்டு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" எனக் கூறினார்.

வழக்கில் பிடிபட்ட நான்கு சிறார்களும் சிறார் நீதிக்குழுமம் முன்பு டிசம்பர் 28 அன்று ஆஜர்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ள காவல்துறை, 'அதில் மூன்று பேர் செங்கல்பட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒரு சிறாருக்கு சிறார் நீதிக்குழுமத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறியுள்ளது.

திருத்தணி,  ஒடிஷா மாநில இளைஞர், இன்ஸ்டாகிராம், வன்முறை, சிறார்கள்

பட மூலாதாரம்,Facebook

படக்குறிப்பு,திருத்தணி ரயில் நிலையம்

சிறுவர்கள் போதையில் இருந்தார்களா?

இந்தநிலையில், போதை காரணமாக இதுபோன்ற சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடுவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், 'தாக்குதல் தொடர்பான காணொளி காட்சியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது' எனக் கூறியுள்ளார்.

'கைதான சிறுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தையும் அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்' எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"நான்கு பேரும் போதையில் இருந்துள்ளதாகப் பலரும் கூறி வருகின்றனர். அவர்களைத் தாமதமாக கைது செய்தோம். அதனால் அவர்கள் போதையில் இருந்தார்களா என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை" என்கிறார் திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் மதியரசன்.

இதே தகவலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "அவர்கள் போதையில் இருந்தார்களா என்பது குறித்து தற்போதைய நிலையில் கூற முடியாது. அது விசாரணையில் உள்ளது" எனக் கூறினார்.

திருத்தணி,  ஒடிஷா மாநில இளைஞர், இன்ஸ்டாகிராம், வன்முறை, சிறார்கள்

ஒடிசா இளைஞரின் பின்னணி என்ன?

சிறுவர்களால் தாக்கப்பட்ட இளைஞர் குறித்துக் கேட்டபோது, "அவர் எங்கும் வேலை பார்க்கவில்லை. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சகோதரர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்" என்கிறார் மதியரசன்.

"இளைஞருக்கு தங்குவதற்கு வீடு என எதுவும் இல்லை. இரவு நேரங்களில் புறநகர் ரயில்கள் கடைசி நிறுத்தத்தில் நிறுத்தப்படும். அதில் உறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். ரயில் பயணிகளிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்" எனவும் காவல் ஆய்வாளர் மதியரசன் தெரிவித்தார்.

"இந்த வழக்கில் கைதான நான்கு பேரும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி" எனவும் அவர் குறிப்பிட்டார்.

'கண்காணிப்பு இல்லாத சிறுவர்கள்'

திருத்தணி,  ஒடிஷா மாநில இளைஞர், இன்ஸ்டாகிராம், வன்முறை, சிறார்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

"கைதான சிறார்கள் யாரும் படிப்பதற்கு செல்லவில்லை. வெறுமனே ஊர் சுற்றி வந்துள்ளனர். பெற்றோரின் கண்காணிப்பு என்பதே இல்லாத நிலையில் வளர்கின்றனர்" என்கிறார் மதியரசன் .

"அடிதடி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு தன்னை கதாநாயகனைப் போல பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் சிறுவர்கள் இறங்குகின்றனர். இது பெரியவர்களிடம் இருந்து தான் அவர்களுக்கு வருகிறது" என்கிறார் குழந்தைகள் நல செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு.

இதே கருத்தை முன்வைக்கும் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் மலையப்பன், "கதாநாயகன் ஆக வேண்டும் என்ற எண்ணம் சில சிறுவர்கள் மனதில் இருக்கும். அதை உள்வாங்கிக் கொண்டு இதுபோன்று ரீல்ஸ் வெளியிடுவதாகவே பார்க்க வேண்டும்" என்கிறார்.

"சினிமாவில் கதாநாயகனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளார்களோ, அதை அப்படியே பெரும்பாலான சிறுவர்களும் கடைபிடிக்கின்றனர். இதை சமூகத்தின் குறையாகவே பார்க்க வேண்டும்" எனக் கூறுகிறார், மருத்துவர் மலையப்பன்.

'ஒடிசா இளைஞர் எங்கே?'

இதற்கிடையில், இந்த தாக்குதலை கண்டித்து சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

பிற மாநில நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகள், பணியாற்றும் இடங்களில் போதுமான காவல் ரோந்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கூறியுள்ளது.

'தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒடிசா இளைஞர் தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவின.

இதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க், "மருத்துவரிடம் கூறிவிட்டு சொந்த மாநிலம் சென்றுவிட்டார். அதனை கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். அரசுத் தரப்பில் முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன" எனக் கூறினார்.

'சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் சாந்தாராமனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"ஒடிசா இளைஞருக்கு ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்" என்கிறார் அவர்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் சாந்தாராமன், "திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவருடைய காயத்துக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அதைப் பிரிப்பதற்கு கூட முதலில் அவர் எங்களை அனுமதிக்கவில்லை" என்கிறார்.

"ஒருகட்டத்தில், அவரது காயங்களை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு மீண்டும் கட்டு போட்டுவிட்டனர். அவர் பிடிவாதமாக இருந்ததால் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினோம். 'அவரும் சிகிச்சை பெறுவதற்கு விருப்பமில்லை' என எழுதிக் கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்" என மருத்துவர் சாந்தாராமன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20k0x443x1o

கேப்டன் விஜயகாந்த்தின் குரு பூஜையில் பங்கு பற்றி மலரஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

1 month ago

கேப்டன் விஜயகாந்த்தின் குரு பூஜையில் பங்கு பற்றி மலரஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

29 Dec, 2025 | 02:49 PM

image

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரான கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு, அவரது நினைவிடத்திற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து மலரஞ்சலி செலுத்தினார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினை ஏற்படுத்தி, தமிழகத்தின் நிகரற்ற அரசியல் சக்தியாக திகழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை சென்னையில் உள்ள அவருடைய நினைவிடத்தில் நடைபெற்றது.

இந்த குரு பூஜையில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சியின் மாநில நிர்வாகிகளும், தொண்டர்களும் அமைதி பேரணியாக வருகை தந்து  அவருக்கு குருபூஜை செய்தனர்.

இந்த தருணத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களான ஜி கே வாசன், எல் . முருகன் உள்ளிட்ட பலரும் பங்கு பற்றி கேப்டன் விஜயகாந்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ. வ. வேலு மற்றும் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்  ஏ எம் வி பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமான திமுகவினரும் இந்நிகழ்வில் பங்கு பற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ci_291225_political.jfif

ci_291225_political_3.jfif

https://www.virakesari.lk/article/234667

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம் விசிலா? மோதிரமா?

1 month ago

தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சின்னம் விசிலா? மோதிரமா?

29 Dec, 2025 | 12:40 PM

image

2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள் காட்டி இணையத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி - அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி - நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம்- சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி - என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முதல்முறையாக நேரடியாக தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு களம் காணும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக மக்கள் அலை உருவாகி இருக்கிறது என தேர்தல் வியூக நிபுணர்கள் தொடர்ந்து தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் தங்களுடைய தேர்தல் சின்னமாக விசில் / மோதிரம் ஆகியவற்றை பரிசீலிக்கும் படி வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் கட்சியின் மேலிட பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதால்.. சேலத்தில் விரைவில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் தலைவர் விஜய் இது தொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே திரையில் விஜய் தோன்றினால்.. ரசிகர்கள் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியையும், ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள். தற்போது விசில் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்படுவதால்.. அதனையும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து விஜயை- தமிழக வெற்றி கழகத்தை- ஆட்சி கட்டிலில் அமர செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/234659

விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை

1 month ago

கோலாலம்பூரில் பல்லாயிரகணக்கான மக்கள் ஆதரவுடன் ஜனநாயகன் இசை வெளியீட்டை நடத்தியபின் சென்னை திரும்பிய விஜையை பார்க்க பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டு, இதில் காரில் ஏறும் போது விஜை தடக்கி வீழ்ந்துள்ளாராம்.

பிகு

நாளைக்கு ரசிகர் குஞ்சுகள் யாரும் தற்கொலை செய்யாதவரை ஓக்கே.

அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

1 month 1 week ago

இந்தியாவில் அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,சுருட்டை விரியன்

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பாம்புக்கடி சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பாம்புக்கடி நிகழ்வுகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்கின்றன.

"தமிழ்நாட்டில் நிகழும் பாம்புக்கடிகளில் கிட்டத்தட்ட 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. மீதமுள்ள 5% சம்பவங்களில் பெரும்பாலும் கண்ணாடி விரியன், நாகம், சுருட்டை விரியன், கட்டு வரியன் ஆகிய நான்கு வகை நச்சுப் பாம்புகளே காரணமாக இருக்கின்றன," என்று கூறுகிறார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ்.

"நஞ்சுள்ளவை, நஞ்சற்றவை எனப் பிரித்தறிய முடியாத காரணத்தால் பல நேரங்களில் நஞ்சற்றவை எனக் கருதி மக்கள் கவனமின்றிச் செயல்படுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாம்புக்கடி விபத்துகள் நிகழக் காரணமாவதாக," கூறுகிறார் பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சியில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் மதுரையைச் சேர்ந்த சாம்சன் கிருபாகரன்.

இந்த நிலையில், நச்சுப் பாம்புகளை அடையாளம் காண முடிந்தால் பாம்பு-மனித எதிர்கொள்ளலின்போது ஏற்படும் அசம்பாவிதங்களை பெருமளவு தடுக்க முடியும் என்பதே நிபுணர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

எனவே, இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பிக்4 பாம்புகள் என்று அறியப்படும், அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளைப் பார்த்தவுடன் எளிதில் அடையாளம் காண உதவும், அவற்றின் உடலமைப்பின் முக்கியமான அம்சங்களை இங்கு காண்போம்.

நாகப் பாம்பை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,நாகப் பாம்பு

நாகம் என்றவுடன் அது படமெடுத்து நிற்கும் என்பதைப் பலரும் நன்கு அறிந்திருப்போம்.

அச்சம் அல்லது கோபத்தின் வெளிப்பாடாக அவை அப்படி படமெடுத்து நிற்கும்போது, "முன்பகுதியில் இரண்டு பெரிய கரும்புள்ளிகள் இருக்கும். பின்பக்கத்தில் அதேபோன்ற கரும்புள்ளிகளுடன் வெந்நிறத்திலான 'V' போன்ற ஒரு வடிவமும் இருக்கும்," என்று சாம்சன் விவரித்தார்.

இது மட்டுமின்றி, "நல்ல பாம்பின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும். அந்தக் கண்களுக்குக் கீழே கருமை நிறத்தில் மெல்லியதாக, கண் மை கலைந்ததைப் போன்ற வடிவில் ஒரு தடம் இருக்கும்" என்கிறார் முனைவர் மனோஜ்.

பெரும்பாலும், சாரைப் பாம்பினை நாகம் எனப் பலரும் தவறாகப் புரிந்துகொள்வதுண்டு. அப்படிக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதற்கு, அவற்றின் கண்களைப் பற்றி அறிந்துகொள்வது உதவும் என்கிறார் அவர்.

ஓலைப் பாம்பின் தலைப் பகுதியில் வேல்கம்பு போன்ற குறியீடு இருப்பதால் அதை நாகம் என்று நினைத்து மக்கள் குழப்பமடைவது உண்டு, ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட வடிவம் எனக் கூறுகிறார் சாம்சன்

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,ஓலைப் பாம்பின் தலைப் பகுதியில் வேல்கம்பு போன்ற குறியீடு இருப்பதால் அதை நாகம் என்று நினைத்து மக்கள் குழப்பமடைவது உண்டு, ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட வடிவம் எனக் கூறுகிறார் சாம்சன்

"சாரைப் பாம்பின் கண்ணில் இரண்டு நிறங்கள் இருக்கும். கருவிழி கருப்பாகவும், சுற்றியுள்ள பகுதி தங்க நிறத்திலும் இருக்கும். ஆனால், நாகத்தின் கண் முற்றிலும் கருப்பாக இருக்கும்."

அதோடு, "நாகப் பாம்பின் தலை, கழுத்து என உடல் முழுக்க ஒரே தடிமனாக இருக்கும். ஆனால் சாரைப் பாம்புக்கு தலை பெரிதாகவும், கழுத்து சிறிதாகவும், உடல் தடிமனாகவும் இருக்கும். நிறமும் நாகத்தின் உடல் முழுக்க பழுப்பு நிறத்திலும், சாரை மஞ்சள், பழுப்பு, சாம்பல் ஆகிய நிறங்களிலும் காணப்படுகின்றன. இதை வைத்து அவற்றை வேறுபடுத்திக் கொள்ள முடியும்," என்று விவரித்தார் சாம்சன்.

இதுபோக, ஓலைப் பாம்பு என்ற நஞ்சற்ற வகையும் நாகத்துடன் குழப்பிக் கொள்ளப்படுகிறது. அதற்குக் காரணம், ஓலைப் பாம்பின் தலையிலும் வேல்கம்பு போன்ற வடிவம் இருக்கும் என்பதுதான். ஆனால், அந்த வடிவம் நாகத்தில் இருப்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறார் சாம்சன்.

கட்டு வரியன் பாம்பை அடையாளம் காண்பது எப்படி?

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,கட்டு வரியன்

கட்டு வரியனை பொறுத்தவரை, பொதுவாக பிற பாம்புகளின் நாக்கு கருமையாக இருக்கும்போது, இவற்றுக்கு மட்டும் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்கிறார் முனைவர் மனோஜ்.

பிற பாம்புகளைப் போலன்றி, இது சற்று தனித்துவமான உருவ அமைப்பைக் கொண்டது என்கிறார் சாம்சன். "கட்டு வரியனின் உடல் முற்றிலுமாக அடர் கருப்பு நிறத்தில், மினுமினுப்பாக இருக்கும்."

இந்த மினுமினுப்பு இவற்றுக்கே தனித்துவமானது எனக் கூறிய மனோஜ், "அவற்றின் உடலில் '=' போல இரட்டை இரட்டையாக வெந்நிறத்தில் மெல்லிய கோடுகள் இணையாக இருக்கும். அதுவும் தலையில் இருந்து கழுத்து வரைக்கும் இருக்காது, கழுத்தில் தொடங்கி வால் வரைக்கும் இருக்கும்," என்று விளக்கினார்.

சில நேரங்களில் தோலுரிக்கும் கட்டத்தில் பாம்பு இருந்தால் இந்தக் கோடுகள் தெளிவாகத் தெரியாது எனக் கூறிய சாம்சன், அத்தகைய சூழ்நிலையில் "இவற்றின் அடர் கருப்பு நிறத்தை வைத்து அடையாளம் காணலாம்" என்றார்.

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,நஞ்சில்லாத வெள்ளிக்கோல் வரையன், அதன் உடலிலுள்ள பட்டையான கோடுகளின் காரணமாகச் சில நேரங்களில் கட்டு வரியன் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

பொதுவாக, வெள்ளிக்கோல் வரையன் போன்ற பாம்பினங்களுடன் மக்கள் இவற்றைக் குழப்பிக் கொள்வதாகக் கூறிய சாம்சன், "கட்டு வரியன் போலன்றி, இந்த நஞ்சில்லாத பாம்புகளுக்குத் தலையில் இருந்தே பட்டையான கோடுகள் தொடங்கிவிடும்" என்றார்.

அதேபோல, எண்ணெய்ப் பனையன் என்ற பாம்பு வகையுடனும் மக்கள் இதைக் குழப்பிக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம், எண்ணெய்ப் பனையன் ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பதும் உடலில் கோடுகள் இருப்பதும்தான். ஆனால், இந்த நஞ்சற்ற பாம்புக்கு கருப்பு நிறத்திலான கோடுகள்தான் இருக்கும்.

அதேபோல முனைவர் மனோஜின் கூற்றுப்படி, வெள்ளிக்கோல் வரையனின் உடல் உருண்டையாக இருக்கும். "ஆனால், கட்டு வரியனின் உடல் முக்கோண வடிவில், முதுகுப்பகுதி மேல்நோக்கிய வகையில் இருக்கும்."

அடர்த்தியான கருநீல நிறத்தில், மினுமினுப்பாக இருப்பது இவற்றை அடையாளம் காண்பதற்கான தனித்துவமான பண்புகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கண்ணாடி விரியன் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,கண்ணாடி விரியன்

பொதுவாக விரியன் வகைப் பாம்புகள் என எடுத்துக்கொண்டால், அவற்றின் தலைப் பகுதி முக்கோண வடிவத்திலும் கழுத்து சிறியதாக, தடிமன் குறைவாகவும் இருக்கும் என்கிறார் முனைவர் மனோஜ்.

கண்ணாடி விரியனை பொறுத்தவரை, தலை முக்கோண வடிவில் காணப்படும் என்கிறார் மனோஜ்.

அதோடு, "அதன் உடல் முழுக்க முதுகின் மேற்புறத்தில் கருப்பு நிற எல்லைகளைக் கொண்ட பாதாம் பருப்பு போன்ற நீள்வட்ட வடிவிலான வட்டங்கள் ஒரு சங்கிலித் தொடரைப் போல நீண்டிருக்கும்," என்று அவர் விவரித்தார்.

இந்த நீள்வட்டங்களின் சங்கிலித் தொடர் தலை முதல் வால் வரைக்கும் ஒரே சீராக இருக்கும் எனவும், அதுவே பக்கவாட்டில் அதேபோன்ற நீள்வட்டங்கள் அளவில் சிறிதாக இருக்கும் எனவும் விளக்கினார் சாம்சன் கிருபாகரன்.

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

படக்குறிப்பு,யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ்

மற்றுமொரு தனித்துவமான அம்சமாக முனைவர் மனோஜ், கண்ணாடி விரியனின் மூக்கு துவாரம் இருபுறமும் நன்கு பெரியதாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்.

முனைவர் மனோஜின் கூற்றுப்படி, அனைத்து கண்ணாடி விரியன்களுக்குமே இந்த வடிவம்தான் பொதுவாக இருக்கும் என்றாலும், மிக அரிதாக இவை எதுவுமே இல்லாமல் கோதுமை நிறத்தில் மட்டும் காணப்படுவதும் உண்டு. ஆனால், அத்தகைய கண்ணாடி விரியனை பார்ப்பது மிக மிக அரிது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைப் பார்த்துப் பல நேரங்களில் மலைப் பாம்பு என மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு, தீங்கற்றது எனக் கருதி அணுகுவதால் பாம்புக்கடி விபத்துகள் நிகழ்வதாகக் கூறுகிறார் சாம்சன்.

"மலைப் பாம்பு போலவே, இதன் உடல் நன்கு தடிமனாக இருப்பதால் பலரும் இதைத் தவறாகப் புரிந்துகொள்வது நடக்கிறது. ஆனால், மலைப்பாம்பின் உடலில் இருக்கும் வடிவங்கள் சீரற்றதாக இருக்கும்." என்றும் அவர் விவரித்தார்.

சுருட்டை விரியனை அடையாளம் காண்பது எப்படி?

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,சுருட்டை விரியனின் தலைப் பகுதியில் கூட்டல் (+) வடிவிலான குறியீடு இருக்கும்

சுருட்டை விரியன் வறண்ட பகுதிகளில் வாழக்கூடியது. கிராமப்புறங்களில் இவற்றால் பாம்புக்கடி அவ்வப்போது நிகழ்கிறது.

சுருட்டை விரியனின் தலை முதல் வால் வரைக்கும், "பக்கவாட்டில் இருபுறமும் ரம்பத்தின் கூர்முனை எப்படி வளைந்து வளைந்து இருக்குமோ அப்படி இருக்கும்" என்றார் மனோஜ்.

அதுவே அதன் முதுகின் மேற்புறம் பார்க்கையில் 'X' வடிவத்தில் கோடுகள் தென்படும் என்கிறார் சாம்சன்.

"அதுமட்டுமின்றி, சுருட்டை விரியனின் தலைப் பகுதியில் கூட்டல் குறியீடு '+' போன்றதொரு வடிவம் இருக்கும். கண்களைப் பொருத்தவரை, சுருட்டை விரியனுக்கு பூனைக் கண்களைப் போல நீள்வட்ட வடிவில், ஒரு மெல்லிய கோடு போன்ற வடிவிலான கருவிழியுடன் காணப்படும்."

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

படக்குறிப்பு,சாம்சன் கிருபாகரன், பாம்பு மீட்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்

பொதுவாக பாம்புகள் நேராக முன்னோக்கி ஊர்ந்து செல்பவை. ஆனால், சுருட்டை விரியனை பொருத்தவரை, பக்கவாட்டில் செல்லக்கூடியவை. அதாவது, நேராக ஊர்ந்து செல்லாமல், உடலை வளைத்து, பக்கவாட்டில் நகர்ந்து செல்பவை" என்று விவரித்தார் மனோஜ்.

தமிழ்நாட்டில் காணப்படும் பாம்புகளில் சுருட்டை விரியன் மட்டுமே இவ்வாறாக பக்கவாட்டில் செல்லக்கூடியது என்று விளக்கிய அவர், மிக மெதுவாக நகரும் நேரங்களில் மட்டும் அவை நேராகச் செல்லும் என்றும் கூறினார்.

இதேபோல, வறண்ட நிலப்பரப்புகளிலேயே வாழக்கூடிய பூனைக்கண் பாம்புடன் இதைக் குழப்பிக் கொள்வது அடிக்கடி நடப்பதாகக் கூறும் சாம்சன், சுருட்டை விரியன் அதிகபட்சம் ஒரு அடி வரைதான் வளரும் என்றும் உடல் சற்று தடிமனாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளை வகைப்படுத்தி எளிதாக அடையாளம் காண்பது எப்படி?

பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN

படக்குறிப்பு,பூனைக்கண் பாம்பு

ஆனால், பூனைக்கண் பாம்பைப் பொருத்தவரை, ஒன்றரை அடி வரைக்கும்கூட வளரும் எனவும் உடல் ஒல்லியாக நீளமாக இருக்கும் என்றும் இரு பாம்புகள் இடையிலான வேறுபாட்டை சாம்சன் விளக்கினார்.

சுருட்டை விரியனின் தலையில் கூட்டல் குறியீடு இருப்பதைப் போலவே, பூனைக்கண் பாம்பின் தலையில் 'Y' வடிவக் குறியீடு காணப்படும்.

பாம்புக்கடி காயத்தை வைத்து எந்த பாம்பு என்று அடையாளம் காண முடியுமா?

ஒரு குறிப்பிட்ட அளவு வரைக்கும் பாம்புக்கடியால் ஏற்படும் காயத்தை வைத்து, கடித்தது நச்சுப் பாம்பாக இருக்கலாம் என்பதைக் கூற முடியும் என்றாலும், அதை 100% உறுதி செய்ய முடியாது என்கிறார் முனைவர் மனோஜ்.

அனைத்து நச்சுப் பாம்புகளுமே கடிக்கும்போது பதியும் நச்சுப் பற்களின் தடம் இரண்டாகத்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை என்கிறார் அவர்.

எனவே, "ஒரு பல் உடைந்திருக்கும் நேரத்தில் அதன் அருகிலேயே மூன்றாவதாகப் புதிய பல் முளைத்துக் கொண்டிருக்கலாம். அதனால் இரண்டு பல் தடங்களுக்குப் பதிலாக மூன்று பல் தடங்கள் பதிந்திருக்கலாம்."

அவரது கூற்றுப்படி, பாம்புகளுக்கு ஆயுள் முழுவதுமே பல் மீண்டும் வளரக்கூடியது. இதனால், "அவை கடித்த இடத்தில் இரண்டு, மூன்று அல்லது நான்கு பற்கள் கூடப் பதிந்திருக்கலாம். இல்லையெனில் ஒரேயொரு பல் கூடப் பதியலாம். சில நேரங்களில் ஒரு கீறல் மட்டுமே இருக்கலாம். நஞ்சு உடலுக்குள் செல்வதற்கு அதுவே போதுமானது."

அதோடு, "ஒரு சில பாம்புகளில், அதாவது, விரியன் வகைப் பாம்புகள் கடித்தால், கடித்த இடத்தில், வீக்கம், ரத்தக் கசிவு போன்ற வெளிப்புற அடையாளங்களே நன்கு தெரியும். அவற்றின் மூலம் கடித்தது நச்சுப் பாம்புதான் என்பதைக் கண்டறிய முடியும்" என்று விளக்கினார் மனோஜ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8dyv9g1y78o

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

1 month 1 week ago

சென்னை: “எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக் குழு கூட்டத்தில் உரையாற்றிய சீமான், “நாம் தமிழர் கட்சியின் வெற்றிதான் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும். மக்களாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிற மண்ணில் ஆட்சி அதிகாரம்தான் எல்லா மாற்றத்துக்கும் அடிப்படையாக இருக்கும்.

இங்கே நம்முடைய மொழியை பேசி, நம் வாழ்க்கையை வாழ்ந்து, நம்மால் ஆட்சிக்கு வந்து, நம் மொழியை, வரலாற்றை, இனத்தை அழிக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். தமிழினத்தில் அவ்வப்போது எழும் எழுச்சியை திராவிடர்கள் தன் ஆட்சி அதிகாரத்தால் அடக்கிவிட்டார்கள்.

மக்களிடம் உள்ள வறுமையின் காரணமாக ஏற்பட்ட அறியாமை, மறதியை பயன்படுத்தி அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். தேர்தலில் இந்தக் கட்சிகள் பெறுவது எல்லாம் வெற்றியா? நான் இந்த மக்களை முழுமையாக நம்பி களத்தில் நிற்கிறேன். எனவே வெற்றியோ, தோல்வியோ அது அவர்கள் தரும் பரிசு. எங்களைப்போல தனித்து நின்று, தத்துவம் பேசி வெற்றி பெற்று காட்டுங்கள் பார்ப்போம். பெரிய கட்சி என்கிறார்கள்... ஆனால், மாநாட்டுக்கு, கூட்டத்துக்கு சாப்பாடு, சாராயம், காசு கொடுத்துதான் ஆள் சேர்க்கிறார்கள்.

நாங்கள் வெற்றிபெற்று விடுவோம் என எதிரிகள் பயப்படுகிறார்கள். இங்கே இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே. எல்லாமே பெரியார்தான் காரணம் என்கிறது ஒரு கூட்டம். உண்மையில்தான் இந்த நாட்டை திருடர்கள் நாடாக மாற்றியதற்கும், எங்கள் மொழி, கலை, இலக்கிய, பண்பாடு, வழிபாடு, நிலம், வளம், ஆட்சி, அதிகாரம் எல்லாம் சிதைந்து அழிந்து போனதற்கு காரணம் பெரியார்தான். அந்த திராவிட திருட்டு சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையேதான் இங்கே போட்டியே. இங்கே இந்திய திராவிடர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேதான் போட்டி.

தனித்து நின்று, தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு சின்னம் பெற்று, எளிய பிள்ளைகளை வேட்பாளர்களாக நிறுத்தி அங்கீகாரம் பெற்ற கட்சி, நாட்டில் எங்களைத் தவிர வேறேதும் உண்டா?

வாக்குக்கு காசு கொடுப்போம் என்ற கூட்டத்தை ஆதரிப்பீர்களா அல்லது மக்களுக்கு வாழ்க்கையை கொடுப்போம் என்பவர்களை ஆதரிப்பீர்களா?

இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல... அது வீழ்ச்சித் திட்டம். இலவசம் பெறும் ஏழ்மை நிலை இல்லாது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். நல்ல கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கினால் மக்களே தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள்.

நிலமும் வளமும் சார்ந்த தற்சார்பு தாய்மை பொருளாதாரத்தை உருவாக்குவோம். சாராயப் பொருளாதாரம் மூலம் வருவாய் ரூ.50 ஆயிரம் கோடி, கால்நடை வளர்ப்பு மூலம் பொருளாதாரம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி. எது வேண்டும் மக்களே?

பின்லாந்தை விஞ்சிய கல்வியை தமிழகத்து பிள்ளைகளுக்கு கொடுப்போம். இதனை நிச்சயம் சாத்தியப்படுத்திக் காட்டுவேன்.

நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் ஒருபக்கம், நாங்கள் தமிழர்கள் என்பவர்கள் ஒருபக்கம். எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். எங்கள் இனத்தில் எண்ணற்ற பெரியார்கள் உள்ளனர். திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும். சாதி, மதத்தை பார்ப்பவர்கள் ஒருபக்கம் நிற்கட்டும். மனிதமே புனிதம் என்பவர்கள் என்பக்கம் நிற்கட்டும்.

ஏற்காட்டில் சாலைக்கு தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற தமிழின வள்ளல் பெயரை அழித்து பெரியார் பெயரை வைத்தது ஏன்?

தமிழுக்காக, தமிழருக்காக பாடியதால்தான் திராவிடர்கள் பாரதியையும், பாரதிதாசனையும் போற்ற மறுக்கிறார்கள்.

மக்கள் சரியில்லை என நாம் சொல்லக் கூடாது. சரியில்லை என்பதை சரி செய்ய வேண்டியதே நம் வேலை. பிழை யாருடையதாக இருந்தாலும் நாம் திருத்துபவனாக இருக்க வேண்டும்.

நாட்டில் எல்லோருக்கும் சமமான தரமான கல்வி, தரமான மருத்துவம். அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்தவர்களுக்கே அரசு வேலை என சட்டம் போடுவோம்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். அவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என சட்டம் போடுவோம்.

திருப்பரங்குன்றம் பிரச்சினையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். வாக்குக்காக அந்த பிரச்சினையை மாற்றுகிறார்கள். சாதி, மதம் முக்கியம் என்பார்கள் அவர்கள். நாங்கள் மனிதம் பெரிது என்கிறோம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பதாக சொல்கிறார்கள். உடைத்து சூறையாடப்படும் குன்றுகளுக்காக அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்” என்று சீமான் பேசினார்.

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

ஒற்றையாட்சியை திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டம் ஏற்படும். –அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை.-

1 month 1 week ago

7817637-anbumaniramadoss.webp?resize=750

ஒற்றையாட்சியை திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டம் ஏற்படும் ––அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை.-

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, தற்போதைய அரசாங்கம், ஈழத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பை உறுதி செய்யவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தங்களைத் திட்டமிட்டு வருவதாகவும் அது, சிங்கள பெரும்பான்மைவாதத்தை மேலும் ஊக்குவிக்கும் என அன்புமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இரண்டு தேசிய இனங்கள் வசிக்கும் நாட்டில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆபத்தானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நினைவு கூர்ந்துள்ள அன்புமணி, இந்த ஒப்பந்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதன் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பைக் கருத்தில் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இலங்கை இதைத் தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருவதாகவும் 13வது அரசியலமைப்பு திருத்தம், தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் குறைத்து விட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும், தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மூல காரணங்கள் நீடிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலங்கையில் சுயாட்சியை நிரந்தரமாக மறுக்கும் எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும் ஈழத் தமிழர்களிடையே அடக்கப்பட்ட விடுதலை உணர்வுகளை மீண்டும் தூண்டிவிட்டு இலங்கையின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

https://athavannews.com/2025/1457334

அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு!

1 month 1 week ago

அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு!

26 Dec 2025, 8:11 AM

PMK Ramadoss Anbumani

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக PMK) பெயரை பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ், நாளிதழ்களில் ‘பொது விளம்பரம்’ மூலம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதலில் கட்சிக்கு இருவரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இருதரப்பும் தங்களுக்கு சாதகமாக முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளிதழ்களில் இன்று, டாக்டர் ராமதாஸ் ‘பொது விளம்பரம்’ மூலம் அன்புமணிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

G9DzihbaYAAh95I-473x1024.jpg

அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது; “இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கடைசியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம்,

மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.

எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும்.

மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை தவறாமல் மேற்கொள்ளப்படும் என்பதும் இதன் மூலம் கடைசியாக எச்சரிக்கப்படுகிறது.

G9EJuWBaQAASjuX-618x1024.jpg

மக்களே… ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் நீதியின் முழக்கம் – உண்மை மறைக்க முடியாது

இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் உறுதியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 என்ற வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, உண்மையை சட்டத்தின் முன் நிறுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும்.

போலிக்கு சட்டத்தில் இடமில்லை: போலி ஆவணங்களின் அடிப்படையில் கட்சித் தலைமை உரிமை கோரப்பட்ட முயற்சியும், அதனை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகளும், அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் நீதிமன்றம் தெளிவாகத் தகர்த்தெறிந்துள்ளது.

உண்மை இன்று சட்டமாகியது: இந்தத் தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாகவும், நிரந்தரமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களை ஏமாற்றும் அரசியல் – இனி இல்லை: நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி கட்சி தன் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் காட்டுவது, மக்களை ஏமாற்றும் சட்டவிரோத அரசியல் செயலாகும். இதனை மக்கள் அறிந்தே ஆக வேண்டும் என்பதற்காகவே, இந்த அறிவிப்பு மாவட்டம் தோறும் வெளியிடப்படுகிறது.

இது ஒரு கட்சி அல்ல – இது ஒரு தியாக இயக்கம்: 1980 ஆம் ஆண்டு இயக்கம் தொடங்கி, மின்சாரம் இல்லாத காலம், சாலை இல்லாத கிராமங்கள், மேடு-பள்ளங்கள், வயல் வரப்புகள் வழியாக நடந்து, ராந்தல் விளக்கின் ஒளியில் மக்களின் துயரை கேட்டவன், 96,000-க்கும் மேற்பட்ட ஊர்களை காலால் அளந்தவன், தன்னலமின்றி உழைத்து ஒரு மக்கள் எழுச்சியை அரசியல் இயக்கமாக மாற்றியவன் – நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள்.

தியாகத்தின் சொத்து – விற்பனைக்கு அல்ல: அந்தத் தியாகத்தின் பயனாக உருவான பாட்டாளி மக்கள் கட்சி, இன்றும் என்றும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமே உள்ளது. இந்த இயக்கம் பதவி பேராசைக்கோ, போலி ஆவணங்களுக்கோ ஒருபோதும் அடிமையல்ல.

முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம்?: எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும், அரசியல் முடிவும், நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமிருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை.

இது எச்சரிக்கை – அலட்சியம் அல்ல: மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எந்தவித அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்க ஒரு துளி உரிமையும் இல்லை. அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அல்லது வேறு எந்த அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும்.

நீதியை மீறினால் – விளைவுகள் கடுமையானவை: மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறாமல் தொடரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/pmk-ramadoss-issues-final-warning-to-anbumani/

ஆழிப்பேரலையின் நினைவலைகள்: 2004 சுனாமி தாக்கத்தை உணர்த்தும் புகைப்படத் தொகுப்பு

1 month 1 week ago

ஆழிப்பேரலையின் நினைவலைகள்: 2004 சுனாமி தாக்கத்தை உணர்த்தும் புகைப்படத் தொகுப்பு

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சுனாமி காரணமாக மெரீனா கடற்கரையிலிருந்து பல மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுந்த காட்சி.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

26 டிசம்பர் 2004 அன்று இந்தோனீசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.

'சுனாமி' - 2004ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற வார்த்தை தெரியாமல் காதில்பட்டாலும்கூட உள்ளூர ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்தும், குறிப்பாக கடலோர பகுதிகளில் வசித்தவர்களுக்கும் வசிப்பவர்களுக்கும்.

சுனாமி தாக்கி இன்றோடு 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் சுனாமி தாக்கிய போதும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட சேதங்களையும் விளக்குகிறது இந்த புகைப்படத் தொகுப்பு.

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,26 டிசம்பர் 2004, தாய்லாந்தில் சுனாமி அலைகள் கரையை நோக்கி வருவதைக் கண்டு வெளியேறும் சுற்றுலாப் பயணிகள்

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க உதவும் சிறிய படகுகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் கடுமையாக சேதமடைந்திருந்தன.

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தமிழகத்தை பொறுத்தவரையில் சுனாமி காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,MCT / Contributor

படக்குறிப்பு,சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்மணி

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,PRAKASH SINGH / Stringer

படக்குறிப்பு,2004 சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்து தவித்த அக்கரப்பட்டி மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள்

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,Paula Bronstein / Staff

படக்குறிப்பு,இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தனது மூன்று சகோதரர்களைப் பறிகொடுத்த 12 வயது பாத்திமா நுஸ்ரத்

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,Paula Bronstein / Staff

படக்குறிப்பு,26 டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட சுனாமியில் தனது வீட்டையும் குடும்பத்தையும் இழந்த இலங்கை பெண்மணி

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,U.S. Navy / Handout

படக்குறிப்பு,இந்தோனீசியாவில் சுனாமியில் சேதமடைந்த பகுதிகளை அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,STR / Stringer

படக்குறிப்பு,தங்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியேறும் இந்தோனீசிய கிராம மக்கள்.

சுனாமி, 2004 டிசம்பர் 26, இயற்கை, தமிழ்நாடு, இலங்கை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆண்டு தோறும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமியில் உயிரிழந்தோரை அவர்களுடைய உறவினர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjrjwlv2n4wo

கடலூர்: கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து - கார்கள் மீது மோதியதில் 9 பேர் பலி

1 month 1 week ago

கடலூர்: கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து - கார்கள் மீது மோதியதில் 9 பேர் பலி

கடலூர்: அரசுப் பேருந்து - கார்கள் மோதி 9 பேர் பலி

4 மணி நேரங்களுக்கு முன்னர்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எழுத்தூர் என்ற இடத்தில் புதன்கிழமை மாலை கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் டயர் வெடித்து, எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயம் அடைந்த மேலும் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலைமைச்சர் ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். நானும் எஸ்.பியும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்துள்ளோம். விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை மற்றும் ஆர்டிஓவை விசாரணை நடத்துமாறு கூறியுள்ளோம். அதன்பிறகே விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும்." என தெரிவித்தார்.

கடலூர்: அரசுப் பேருந்து - கார்கள் மோதி 9 பேர் பலி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் புதன்கிழமை மாலை சுமார் 7.30 மணியளவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததில் பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் என 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு கிகுந்த வேதனையடைந்தேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலாஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c865xnply30o

தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை

1 month 1 week ago

தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை

24 December 2025

1766546119_7900358_hirunews.jpg

இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ எனப்படும் வை.கோபால்சாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகளின் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், தமிழ்ப் புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி கட்சித் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகியோர் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான சி.வி விக்னேஷ்வரன் தீர்மானம் நிறைவேற்றினார்.

அத்துடன், தமிழக சட்டமன்றத்தில், சுதந்திரத் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை இந்திய அரசும், உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தீக்குளித்து மாண்டார்கள்.

இந்தப் பின்னணியை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், உலக நாடுகளும் உணர்ந்து ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை நடத்த முன்வர வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள அத்துமீறிய குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய தமிழகத்தில் உள்ள தமிழர்களும், புலம்பெயர் வாழ் தமிழர்களும் கடமையாற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/437352/referendum-for-tamil-eelam-joint-statement-by-tamil-nadu-political-parties

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ்

1 month 1 week ago

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ் 

22 Dec, 2025 | 04:01 PM

image

இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு,  தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும் என தமிழ்நாட்டில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இராமதாஸ் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு,  தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும்.

ஈழத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொ.ஐங்கரநேசன், செ.கஜேந்திரன், த.சுரேஸ், ந.காண்டீபன், க.சுகாஸ் ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் 20.12.2025 அன்று எனது இல்லத்திற்கு வந்து என்னைச் நேரில் சந்தித்திருந்தார்கள்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் கடந்த 2009 மே மாதம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் தமிழர் தேசத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் இன அழிப்பை தொடர்ந்து செய்து வருவதை தெளிவுபடுத்தினார்கள். 

இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைமையை எண்ணிப் பார்க்கும்போது வேதனைக்குரியதாக உள்ளது. இந்நிலை இலங்கையில் தொடர்வதற்கு தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாததே காரணமாகும். 

 1987ஆம் ஆண்டு  இலங்கை, இந்திய ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஒட்டி இதுவரை அதிகாரங்களை மாகாணங்களுக்கு இலங்கை அரசு வழங்கவில்லை. ஒற்றையாட்சி அரசியல் விதியில் 13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனால் 38 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை. அது மட்டுமன்றி தமிழர்கள் மீதான இன அழிப்பையும் தடுக்க முடியவில்லை.  13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துமாறு இந்திய ஒன்றிய அரசு பல முறை இலங்கை அரசாங்கங்களை வலியுறுத்தி வந்துள்ளபோதும் ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகாரங்கள் எதனையும் வழங்க முடியாதென இலங்கை உச்ச நீதிமன்றம் 32 தடவைகள் தீர்ப்பளித்துள்ளது.  இதனால் இந்தியாவின் கோரிக்கைகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.  

எனவே ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது. தமிழர்களின் இந்நிலையை‌ போக்க தற்போது இலங்கையில் தொடரும் அரசியல்  கட்டமைப்பை மாற்றவேண்டும். இன அழிப்பிலிருந்து தமிழர் தேசத்தை பாதுகாக்க, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதே ஒரே வழியாகும்.

தமிழர்களுக்கு தீர்வு வழங்குகின்றோம் என்ற போர்வையில் கடந்த 2015 – 2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஒற்றாட்சி அரசியல் விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) தற்போது பதவியில் உள்ள அனுரகுமார அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு விதியை கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது. 

அந்த அரசியல் அமைப்பு விதி வரைபானது கடந்த 76 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது போன்ற சிங்கள பௌத்த பெரும்பான்மையினரது கைகளில் அதிகாரத்தை வழங்கும் ஒருமித்த அரசியல் அமைப்பு விதி.

எனவே அத்தகைய ஓர் அரசியல் சட்டம் கொண்டு நிறைவேற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளை இந்திய ஒன்றிய அரசு தடுத்து நிறுத்திட மேலே குறிப்பிட்டது போன்று கூட்டாட்சி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் மாத்திரமே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் நோக்கமும் நிறைவேறும்.  இதுவே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடாகவும் உள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

10.jpg

3.jpg

https://www.virakesari.lk/article/234110

உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா? - வாக்காளப் பெருங்குடி மக்களே! – 12

1 month 1 week ago

வாக்காளப் பெருங்குடி மக்களே! – 12

வாக்காளப் பெருங்குடி மக்களே! – 12

உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா? - வாக்காளப் பெருங்குடி மக்களே! – 12

உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா? - வாக்காளப் பெருங்குடி மக்களே! – 12

audio-waves.png

Listen to Vikatan stories on our AI-assisted audio player

எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி சோபிக்காது என்றே பலரும் நினைத்தனர். ‘அ.தி.மு.க-வின் பலம் ஒரு தனிமனிதனின் கவர்ச்சிதான். மூன்று, நான்கு மாதங்களில் அந்தக் கட்சி கரைந்துவிடும்’ என்றார் நெடுஞ்செழியன். அ.தி.மு.க-வை இப்படிக் குறைத்து மதிப்பிட்டவர்களையெல்லாம் திகைக்க வைத்துவிட்டது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்!

கருணாநிதி கையிலெடுத்த ஆயுதம்!

1973, மே மாதம். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக இருந்த தி.மு.க-வின் ராஜாங்கம் மரணமடைந்ததால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாயத்தேவரை அ.தி.மு.க-வின் வேட்பாளராக எம்.ஜி.ஆர் அறிவித்தார். தி.மு.க வேட்பாளராக பொன்.முத்துராமலிங்கம், ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராக என்.எஸ்.வி.சித்தன், இந்திரா காங்கிரஸ் வேட்பாளராக கரு.சீமைச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) வேட்பாளராக என்.சங்கரய்யா ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. ஆனாலும், இவை மட்டுமே வெற்றிக்குப் போதாது என்று எம்.ஜி.ஆர் கருதினார். ஆகவே, சி.பி.எம் தலைவர் பி.ராமமூர்த்தியைச் சந்தித்து ஆதரவு கோரினார் எம்.ஜி.ஆர். இரண்டு காங்கிரஸ் கட்சிகளையும், தி.மு.க-வையும் தோற்கடிக்க வேண்டும் என்பது சி.பி.எம் கட்சியின் நோக்கம். எனவே, அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பது என்று சி.பி.எம் முடிவெடுத்தது. போட்டியிலிருந்து விலகினார் என்.சங்கரய்யா.

கருணாநிதி

கருணாநிதி

திண்டுக்கல் தொகுதியில் வேலை செய்ய ஒட்டுமொத்த தி.மு.க-வும் களமிறங்கியது. அத்தனை அமைச்சர்களும் முகாமிட்டார்கள். ‘தி.மு.க வெற்றிபெற வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார் பெரியார். பட்டி தொட்டியெங்கும் பிரசாரம் செய்த முதல்வர் கருணாநிதி, ‘உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா?’ என்ற கேள்வியை முன்வைத்தார். எம்.ஜி.ஆர் பிறப்பால் மலையாளி. அந்த இன அடையாளத்தைத் தேர்தல் வெற்றிக்கான ஓர் ஆயுதமாகக் கையிலெடுத்தார் கருணாநிதி.

யுத்த பூமியான திண்டுக்கல்!

தேர்தல் நெருங்க நெருங்க யுத்த பூமியாக மாறியது திண்டுக்கல். அ.தி.மு.க-வினரும், தி.மு.க-வினரும் பயங்கர ஆயுதங்களுடன் நாகல்நகரில் மோதிக்கொண்டனர். சிலருக்குக் கத்திக்குத்து விழுந்தது. அதில் ஒருவர் பலியானார். வன்முறையை அடக்குவதற்காகத் தடியடி நடத்தப்பட்டது, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

வத்தலக்குண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய பி.ராமமூர்த்தி, ‘மக்கள் ஆதரவைப் பெற முடியாத தி.மு.க., அதிகாரத்தின் மூலம் குண்டர்களைவைத்து உருட்டி, மிரட்டித் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று பார்க்கிறது. தி.மு.க குண்டர்களின் ரௌடித்தனத்தை மக்கள் முறியடிக்க வேண்டும்’ என்றார். நிலக்கோட்டையில் பிரசாரம் செய்த முதல்வர் கருணாநிதி, ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழிப்பதுதான் என் முதல் வேலை’ என்றார்.

அந்த நேரத்தில், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இன்னொரு புறம், திண்டுக்கல் இடைத்தேர்தலில் வாக்குகளை அ.தி.மு.க அள்ளிக்குவித்தது. 2,60,824 வாக்குகளைப் (52 சதவிகிதம்) பெற்று மாயத்தேவர் ஜெயித்தார். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாம் இடம்பிடிக்க, தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா? - வாக்காளப் பெருங்குடி மக்களே! – 12

இருவரும் இந்திரா பக்கம்!

அ.தி.மு.க வளர்ந்துகொண்டிருந்தது. எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற தி.மு.க-வின் முக்கியத் தலைகள் அ.தி.மு.க-வுக்குத் தாவிக்கொண்டிருந்தனர். அந்தக் கோபத்தில் முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தார். அவரது தாக்குதல் இனரீதியில் போனது. திண்டுக்கல் இடைத்தேர்தலின்போது, ‘உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா?’ என்று கேட்ட கருணாநிதி, அந்த ஆயுதத்தை மீண்டும் கையிலெடுத்தார்.

அதற்கு பதிலடியாக, ‘கருணாநிதியின் சமூகம் குறித்து’ எம்.ஜி.ஆர் பேசியதாக ஒரு புரளி கிளம்பியது. ‘எம்.ஜி.ஆர் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று தி.மு.க-வினர் போராட்டத்தில் இறங்கினர். திடீரென சென்னை வாழ் மலையாளிகள்மீது தாக்குதல் நடந்தது. மலையாளிகளின் வீடுகளும் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. மலையாளப் படங்கள் ஓடிய திரையரங்குகள் சூறையாடப்பட்டன. இதன் எதிரொலியாக, திருவனந்தபுரத்தில் தமிழர்கள்மீது தாக்குதல் நடந்தது. அதையடுத்து, சி.பி.எம் தலைவர் ஏ.கே.கோபாலன் முதல்வர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதினார். நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த கருணாநிதி, `இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தார். அந்தப் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

அடுத்ததாக, கச்சத்தீவு விவகாரம் பெரிதாக எழுந்தது. 1974-ம் ஆண்டு, ஜூன் மாதம் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது இந்திரா காந்தி அரசு. அந்த விவகாரத்தில், இந்திரா காங்கிரஸ் அரசை தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் எதிர்த்தன. ஆனால், அடுத்து வந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு கட்சிகளும் பல்டி அடித்தன. இந்திரா காந்தியால் நிறுத்தப்பட்ட பக்ருதீன் அலி அகமதுவை தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு ஆதரித்தன.

அப்போது, அரிசி விலை கடுமையாக உயர்ந்திருந்தது. ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என்று சொன்ன தி.மு.க-வின் ஆட்சியில், கிலோ அரிசி 5 ரூபாய்க்கும், 6 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மாநில அரசால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரிசி விலையைக் குறைப்பதற்கு எந்த உதவியையும் இந்திரா காங்கிரஸ் அரசு செய்யவில்லை. ஆனால், அந்த இந்திரா காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு, அரிசி விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார் எம்.ஜி.ஆர். அதேபோல, அப்போது தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவியது. அதைத் தீர்ப்பதற்கு இந்திரா காங்கிரஸ் அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை; புதிய மின் திட்டங்களைத் தமிழ்நாட்டுக்குத் தரவில்லை. ஆனால், அதே இந்திரா காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு மின்வெட்டுக்கு எதிராகப் பேரணி நடத்தினார் எம்.ஜி.ஆர்.

இந்திராகாந்தி

இந்திராகாந்தி

இருள் கவ்வியது!

1975-ம் ஆண்டு, ஜூன் 25-ம் தேதி. இந்திய தேசத்தை ‘எமர்ஜென்சி’ என்ற இருள் கவ்வியது. ‘நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமலுக்கு வருகிறது’ என்று அறிவித்தது இந்திரா காந்தி அரசு. காவல்துறை நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைதுசெய்யலாம். ‘தேசியப் பாதுகாப்பு’ என்று சொல்லி, ஆண்டுக்கணக்கில் சிறையில் வைக்கலாம். ஜூன் 25 அன்று இரவே கைது வேட்டை தொடங்கியது. நாடு முழுவதும் விடிய விடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.

ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சரண் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, அருண் ஜெட்லி, சந்திரசேகர், சரத் யாதவ், கர்பூரி தாக்கூர் உட்பட ஏராளமான அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டனர். குல்தீப் நய்யார் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் எனச் சுமார் ஒரு லட்சம் பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், ‘மிசா’வில் (Maintenance of Internal Security Act) சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்போது, பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் இந்திரா காந்தி என்றாலும், அவருடைய புதல்வர் சஞ்சய் காந்திதான் இந்தியாவின் அதிகார மையமாக இருந்தார். மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும், மாநில முதல்வர்களும் சஞ்சய் காந்தியின் ஆணைக்கிணங்க செயல்பட்டனர். சஞ்சய் காந்தி அறிமுகப்படுத்திய முக்கியத் திட்டங்களில் ஒன்று ‘குடும்பக் கட்டுப்பாடு திட்டம்’.

டாக்ஸி ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் என ஏழைகள்தான் இந்தத் திட்டத்தின் இலக்கு. அவர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்று ‘வாசெக்டமி’ எனும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார்கள். கிராமங்களில் போலீஸார் சுற்றிவளைத்து, அங்கிருக்கும் ஆண்களைப் பிடித்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டார்கள். சுகாதாரமற்ற முறையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ததால், பலர் மரணமடைந்தனர்.

‘நகரை அழகுபடுத்துதல்’ என்பது சஞ்சய் காந்தியின் இன்னொரு திட்டம். டெல்லியில் ‘துர்க்மேன் கேட்’ என்ற குடிசைப் பகுதியில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்துவந்தன. அவர்களில் பெரும்பாலானோர் ஏழை முஸ்லிம்கள். திடீரென்று புல்டோசர்களைக் கொண்டு சென்று அங்கிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார்கள். அதில், பலர் உயிரிழந்தனர்.

பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. அரசின் அனுமதியில்லாமல் எந்தச் செய்தியையும் வெளியிட முடியாது. அதனால், ‘துர்க்மேன் கேட்’ கொடுமைகள் போன்ற பல செய்திகள், எமர்ஜென்சி முடிவுக்கு வந்த பிறகுதான் வெளியுலகுக்கே தெரியவந்தன.

சஞ்சய் காந்தி

சஞ்சய் காந்தி

`உங்கள் மகன் ஸ்டாலினை..!’

1976, ஜனவரி 31-ம் தேதி. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடந்துவந்தது. தனியார் பள்ளி விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் கருணாநிதி, ‘அநேகமாக, முதல்வர் என்ற முறையில் நான் கலந்துகொள்ளும் கடைசி நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும்’ என்று பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறார். `தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது’ என்ற தகவல் வருகிறது. நண்பர்களிடம் பேசுவதற்காகத் தொலைபேசியை எடுக்கிறார். சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் வாபஸ் பெறப்படுகிறார்கள். இரவு 8 மணிக்குக் காவல்துறையினர் வருகிறார்கள். ‘என்னைக் கைதுசெய்ய வேண்டுமா?’ என்று கருணாநிதி கேட்கிறார். ‘உங்களை அல்ல...’ என்று பதில் வருகிறது. ‘பிறகு, யாரைக் கைதுசெய்ய வந்திருக்கிறீர்கள்?’ என்று கருணாநிதி கேட்கிறார். ‘உங்கள் மகன் ஸ்டாலினை...’ என்கிறார் காவல்துறை அதிகாரி!

சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து

1 month 2 weeks ago

சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து

21 Dec, 2025 | 09:17 AM

image

(நா.தனுஜா)

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை டில்லி பிரயோகிக்கவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர்.

அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேற்று முன்தினம் (19) பெரியார் திடலிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரவு வேல்முருகனை நேற்று முன்தினம் (19) அவரது அலுவலகத்திலும் சந்தித்தனர்.

அதேவேளை நேற்று சனிக்கிழமை (20) பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள்,  தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அத்தோடு இருநாடுகளுக்கும் இடையில் தீர்வின்றித் தொடரும் மீனவர் பிரச்சினை குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

https://www.virakesari.lk/article/233964

இலங்கைத் தமிழர் தீர்வு விடயத்தில் அழுத்தங்களை வழங்குவோம் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

1 month 2 weeks ago

தமிழர் தீர்வு விடயத்தில் எம்மாலான அழுத்தங்களை வழங்குவோம் -புதுடில்லிக்குக் கொண்டுசெல்வது பற்றி ஆராய்வதாக தமிழக முதலமைச்சர் கஜேந்திரகுமார் தரப்பிடம் உறுதி

Published By: Vishnu

20 Dec, 2025 | 03:33 AM

image

(நா.தனுஜா)

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், அதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம். இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர்.

அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக விடுதலைச் சிறுத்கைள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் ஏற்பாட்டில் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்கும் தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (18) முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் முதலமைச்சரின் செயலாளரும், முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் மத்திய அரசாங்கத்தின் இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து, 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தனித்துவ இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஜேந்திரகுமார் தலைமையிலான தரப்பினர் வலியுறுத்தினர்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், இவ்விடயத்தில் தம்மாலான அழுத்தங்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும், இதனை புதுடில்லிக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பது பற்றி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.

அதனையடுத்து இன்னமும் தீர்வுகாணப்படாமல் தொடரும் இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்தும் கஜேந்திரகுமார் தரப்பு முதலமைச்சரிடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியது. அதனை செவிமடுத்த ஸ்டாலின், 'இவ்விடயத்தில் நாம் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?' என்று வினவினார்.

அதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார், 'இந்தியாவுடனும், தமிழகத்துடனும் நெருங்கிய நட்புறவு பேணப்படவேண்டும் எனத் தமிழ்த்தரப்புக்கள் வலியுறுத்திவருகின்றன. ஆனால் இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் மீனவர் பிரச்சினையினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே நன்மையடைகின்றது. மீனவர் பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படாததன் காரணமாக, அதனால் அதிருப்தியுற்ற மக்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளது. இவ்விவகாரத்துடன் தொடர்புடைய வகையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத்தூதரகம் அகற்றப்படவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்கு புதுடில்லி ஊடாகவே தீர்வுகாணமுடியும் என்றாலும், எமது மீனவர்களைப் போன்றே இந்தியத்தரப்பில் பாதிக்கப்படும் மீனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆகவே அம்மக்களின் தலைவர் என்ற ரீதியில் இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு உங்களது நேரடித்தலையீடு அவசியமாகும்' என வலியுறுத்தினார்.

அதனை செவிமடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி, விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

https://www.virakesari.lk/article/233893

வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் - முழு விவரம்

1 month 2 weeks ago

வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் - முழு விவரம்

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியீடு - மாவட்டங்களில் என்ன நிலவரம்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப்படம்

19 டிசம்பர் 2025, 11:02 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் என்ன நிலவரம்?

தொடர்ந்து, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்து மாநில அளவிலான வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.

  • எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 6,41,14,587

  • எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான வாக்காளர் எண்ணிக்கை: 5,43,76,755

  • தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை: 97,37,832

  • தற்போது உள்ள வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள்: சுமார் 2. 77 கோடி

  • ஆண் வாக்காளர்கள்: சுமார் 2. 66 கோடி

  • மூன்றாம் பாலினம்: 7,191

  • மாற்றுத் திறனாளிகள்: சுமார் 4.19 லட்சம்

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

பட மூலாதாரம்,TNelectionsCEO

சென்னை, கோவை, தஞ்சாவூர், திருவள்ளூரில் என்ன நிலவரம்?

அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் 35.58% வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 40.04 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் இருந்த நிலையில், தற்போதைய வரைவுப் பட்டியலில் 25.79 லட்சம் பெயர்களே உள்ளன. மொத்தம் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதோடு, 1,19,489 வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர், 1,08,360 வாக்காளர்கள் முகவரியில் இல்லாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, 3,99,159 வாக்காளர்கள் குடிபெயர்ந்தவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர், 23,202 வாக்காளர்கள் இரட்டைப் பதிவுகளைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோலவே, விருதுநகர் மாவட்டத்தில், 1,89,964 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி விருதுநகர் மாவட்டத்தில் 14,36,521 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தஞ்சாவூர் வரைவுப் பட்டியலைப் பொருத்தவரை, 20,98,561 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர், 2.06 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் மொத்தம் 6,19,777 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 29,62,449 வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன.

இதேபோல, ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் 1,93,706 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பூர் மாவட்டத்தில் 23% பெயர்கள் நீக்கம்

தூத்துக்குடியில், வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 1,62,527 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகான கணக்கின்படி, அம்மாவட்டத்தில் 13,28,158 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு 12,54,525 வாக்காளர்கள் பட்டியலில் இருப்பதாகவும், 1,39,587 பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில், 3,24,894 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வரைவுப் பட்டியலில் தற்போது 16,09,553 பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில், 23% பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் மணிஷ் நாரணவரே வெளியிட்ட வரைவுப் பட்டியலின்படி, தற்போது 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பட்டியலில் 18,81,144 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

மதுரை

மதுரையில், 23,69,631 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம், 3.80 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 12,03,917 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், 81,515 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியீடு - மாவட்டங்களில் என்ன நிலவரம்?

படக்குறிப்பு,கோப்புப் படம்

தொடங்கியது எப்போது?

இந்தியாவில், தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 4ஆம் தேதியன்று வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின.

முதல் கட்டமாக கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 4 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இரண்டு முறை இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இறுதியாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்கும் பணிகள் தமிழ்நாட்டில் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,035-ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் என்ற கணக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

வரைவுப் பட்டியலில் இல்லாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

குறைந்தபட்சம் மூன்று முறை சென்று விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையிலேயே வரைவுப் பட்டியலை உருவாக்கியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என்று ஆட்சேபங்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18 வரை தெரிவிக்கலாம். அதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இடம் மாறியவர்கள் படிவம் 8, புதிதாகப் பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx25171yzy9o

தமிழக முதல்வரை சந்தித்த இலங்கை பிரதியமைச்சர் பிரதீப்

1 month 2 weeks ago

தமிழக முதல்வரை சந்தித்த பிரதியமைச்சர் பிரதீப்

Dec 19, 2025 - 08:13 PM

தமிழக முதல்வரை சந்தித்த பிரதியமைச்சர் பிரதீப்

இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (19) சென்னையில் சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தமது நன்றியை தமிழக முதல்வரிடம் தெரிவித்துக் கொண்டார். 

இதன்போது மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. 

சபரிமலை ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார். 

பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவிகளை வழங்கவும் கலை, கலாச்சார கல்வி அபிவிருத்திக்கு தொடர்ந்தும் தமிழக அரசு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை நல்குவதாகவும் இதன் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். 

இச்சந்தர்ப்பத்தில் சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயரஸ்தானிகர் கலாநிதி கணேசன் கேதீஸ்வரனும் கலந்து கொண்டார். 

இலங்கையில் கடந்த 27ஆம் திகதி முதல் இரு நாட்கள் வீசிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மலையகம் உட்பட 17 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் வாழும் பகுதிகள் பாரிய அளவில் மண் சரிவினால் பாதிக்கப்பட்டன. 

பேரிடரில் இருந்து இலங்கையை மீட்க இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக அரசும் எமக்கு உதவிக்கரம் நீட்டின. 

காலம் உணர்ந்து செயல்பட்ட இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் மலையக மக்களுக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது. 

நீண்ட நேர கலந்துரையாடலின் போது இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் மலையக மக்களின் வாழ்வு அவர்களின் எதிர்காலம் அதற்காக இலங்கை அரசாங்கம் எடுக்கும் திட்டங்கள் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசுகளால் செயல்படுத்தக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmjczbsdx02xio29nmjpq7na5

பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

1 month 2 weeks ago

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 06:05 - 0     - 24

image_5519cd5615.jpg

 

பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை (19) அன்று நடைபெற்றது.

 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர்கள் பிட்புல், ராட்வீலர் வகை நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, இந்த இரு இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த நாய் இனங்கள், உரிமையாளரின் கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாக செயல்படுவதாகவும், ரோட்டில் செல்வோரை கடித்துக் குதறுவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 Tamilmirror Online || பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

Checked
Wed, 02/04/2026 - 07:31
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed