மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
sachinthaOctober 30, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியின் தெற்கில் எழிற்சூழலில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பெருமாகடவைப் பிள்ளையாரின் விழிகள் நிலைக்கின்ற இடத்தில் பிணக்கைக்குளம் விரிந்து கிடக்கிறது. மாரி காலத்தில் இக்குளம் நீரால் நிரம்பி வழியும் இக்குளத்தைச் சுற்றியுள்ள வயல்களுக்கு போதிய நீரை அக்காலத்தில் இக்குளத்தின் வழியாகவே வழங்குவார்கள். இது தென்புறமாக சிறு நதி ஒன்றினூடாக கடலை அடைகின்றது. அந்த நதி தான் யாழ்ப்பாணத்தின் ஒரே ஆறு! எழிலாறு! வழுக்கி ஆறு.
அகத்தியர் முனிவர் காவேரி நதியை கமண்டலத்திலே அடைத்து வைத்திருந்தார். விநாயகர் காக உருவில் பறந்து சென்று கமண்டலத்தை கவிழ்த்து விட காவேரி நதி பொங்கி பெருகிப் பாய்ந்தது. அதைப்போலத் தான் இந்த வழுக்கி ஆறும் விபீசணன் இலங்கையை ஆண்ட காலத்திலே பெருமாலியன் என்ற ஒரு அரக்கன் வழுக்கி ஆற்றை மறித்து யாழ்ப்பாணத்தை வெள்ளத்துக்குள் ஆழ்த்த நினைத்தான். அப்போது பிள்ளையார் வந்து அவனை கொன்று வழுக்கி ஆற்றினைப் பாயவிட்டார் என்பது புராணக்கதை. யாழ்ப்பாண பெரும் வரலாற்றோடு இணைந்த இவ் ஆற்றை கந்தரோடை அரசர்கள் வெட்டிய கடல்கால் என்றும் கூறுவார்கள்.
பிணக்கை குளத்தை பெருமாலியன் மறித்த போது, நீர் தேங்கியது. அக்குளத்துக்கு பக்கத்திலேயே பிள்ளையாரும் காவலாக இருந்து விட்டார் அவர்தான் பெருமாகடவைப் பிள்ளையார்.
உண்மை பொய் எதுவோ பிணக்கைக் குளத்தில் மழைக்காலத்தில் ஊர் வெள்ளம் எல்லாம் நிறைகின்றது. அதனால் மழைக்காலத்தில் வழுக்கி ஆறு பொங்கிப் பெருகி வழிகின்றது.
ஆனி, ஆடி மாதத்தில் மழை குறைவு என்பதால் வழுக்கியாறு வறண்டு காணப்படுகின்றது. வழுக்கி ஆற்றுப் படுகையில் புட்களும், முட்செடிகளும் பரவிக் கிடக்கின்றன. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இந்த ஆற்றைப் பார்க்க வேண்டும். வெள்ளம் கரை புரண்டு ஓடும். வெள்ளத்துக்கு மேலால் தலையை தூக்கி படி பயிர்கள் நிற்கும். வழுக்கி ஆற்றின் இருகரைகளிலும் நீர் இறைப்புமேடைகள் காணப்படுகின்றன. ஆற்றில் நீர் பாயும் போது வயல்களில் காய்கறிப் பயிர்கள் பயிரிட்டால் நீரைக் குறைத்துப் பாய்ச்சுவார்கள். நீர் இறைப்பு மேடைகளைப் போலவே ஆற்றின் படுகையில் குறுக்கு அணைகள் கதவுடன் காணப்படுகின்றன.
பெருமாகடவைப் பிள்ளையார் கோயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் பிணக்கைக் குளம் காணப்படுகின்றது அக்குளத்தின் தென்கிழக்கு மூலையில் தான் வழுக்கி ஆறு பிணக்கைக் குளத்தை விட்டு வெளியேறுகின்றது. அவ் ஆற்றுவரப்பில் நடந்து சென்றால் வழுக்கியாற்றின் போக்கில் உப்புக்குளம் குறுக்கிடும். வழுக்கி ஆறு போகின்ற பாதையில் உள்ள பல குளங்களை இணைத்துக் கொண்டே செல்கின்றது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றால், ஆற்றுக்குக் குறுக்கே ஒரு வீதி செல்கின்றது. அதுதான் கந்தரோடை- மாசியப்பட்டி வீதி. அதில் கந்தரோடை குளமும் நான்கு கோயில்களும் உள்ளன. அதாவது, வழுக்கியாற்றின் இடது பக்கத்தில் பிள்ளையார், மீனாட்சி, நாகம்மாள், கண்ணகி ஆகிய தெய்வங்களின் கோயில்களும், குளம் மற்றும் வயலும் உள்ளது.
இவ்வாறு அளவெட்டி- கந்தரோடையை கடந்தால் சிறு வாய்க்கால் ஒன்று வழுக்கி ஆற்றுடன் இணைகின்றது. அந்த இடத்தை தாண்டிச் சென்றால். சங்குவேலி, சண்டிலிப்பாய் ,கட்டுடை அதில் வழுக்கை ஆற்றின் பாதையில் குறுக்கிடும் பெரிய மதகு உள்ளது. இதனை ஐந்துகண் மதகு என்று கூறுவார்கள். இதில் 5 வாசல்கள் உள்ளன. இதனால் வெள்ளமானது வேகமாக பாயக்கூடிய வகையில் காணப்படுகின்றது. அதற்கு முன்னால் சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயமும் உள்ளது.
அளவெட்டி – கட்டுடை வரை வயல்களும் கோயில்களும் காணப்படும். கட்டுடைக்கு அப்பால் வயல்களும், சுடலைகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் மூலம் இறைவனை மறக்காமல் வாழ்ந்து இறுதியில் மயானத்தை அடைந்தால் பேரின்ப கடலை ஈற்றில் சேரலாம் என்பது புலப்படும்.
இவ்வாறே சென்றால் வழுக்கி ஆற்றின் போக்கில் சில மாறுதல்கள் புலப்படும். வழுக்கி ஆற்றின் படுகை இரு மடங்காக அகலிக்கின்றது. அத்தோடு ஆற்றின் இரு மருங்கும் தென்னந் தோட்டங்களும் காணப்படும்.
இவ்வாறு கட்டுடையைத் தாண்டி நவாலியை அடையலாம். நவாலியைத் தாண்டிச் சென்றால் அராலிப் பாலத்துடன் கிட்டத்தட்ட 16 கிலோமீற்றர் தொலைவில் கடலோடு இணைந்து வழுக்கியாறு தனது நீண்ட பிரயாணத்தை முடிக்கின்றது.
யாழ்ப்பாண மக்களின் நீர் வளத்தில் பிரதான ஒரு இடத்தை வழுக்கியாறு பெறுகின்றது. விலங்குகளுக்கு பல சமயங்களில் தாகம்தீர்க்கும் வகையில் செயற்பட்டுள்ளது. அத்தோடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சாணியாகவும் இருக்கின்றது. இவ் ஆறு பருவகால மழைவீழ்ச்சி குறைவினாலும், காலநிலை மாற்றங்களினாலும் நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. வெயில் காலத்தில் ஆற்றுப்படுகை முழுமையாக வரண்டு விடுகின்றது. உவர்நீர் ஊடுறுவல் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், சனத்தொகை அதிகரிப்பு, கழிவுகளைக் கொட்டுதல் போன்றவற்றால் இவ் ஆறு மாசடைந்து வருகின்றது. சமையல் கழிவுகளை மக்கள் கொட்டுவதனால் அவை ஆற்றோடு கலந்து ஆற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. இவ்வாறாக பலவகையில் இவ் ஆறானது மாறுபடுகின்றது.
யாழ்ப்பாணத்தின் உயிர்நாடியில் ஒன்றான வழுக்கி ஆற்றினை மீள மாற்றியமைக்கும் வகையில் கழிவு மறுசுழற்சி ஊக்குவிப்பு, நீர்மட்டம் மற்றும் நீர்த்தரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்ற ஊக்குவிப்பு செயற்பாடுகள் மூலம் இதனைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் எமது தொன்மங்களை ஒப்படைக்கலாம்.
பானுஷா நிமல்…
ஊடகக் கற்கைகள் துறை,
யாழ் பல்கலைக்கழகம்
https://www.thinakaran.lk/2025/10/30/featured/161276/மறந்து-போனோமா-வழுக்கி-ஆற/