கவிதைக் களம்

மூன்று கவிதைகள் / 26"

1 hour 14 minutes ago

மூன்று கவிதைகள் / 26"

புகைப்படக் கவிதை'

பனி பொழியும் மாலை வேளையிலே
பணி முடித்து எட்டிப் பார்க்கிறேன்!
பகலோன் கதிரும் ஓய்ந்து விட்டது
பஞ்சுபஞ்சாய் வான் கொட்டித் தீர்க்குது!!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

...........................................................

"மின்னலாய் ஒரு பின்னல்"
[வண்ணம், புன்னகை, கன்னம் & கண்ணீர்]

வண்ணம் கொண்ட அழகு ஆடையிலே
புன்னகை பொழியும் அணங்கே!
கன்னம் சிவந்தது யாராலோ?
கண்ணீர் ததும்பும் ஆனந்தம் இதுவோ?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

............................................................

'நீயின்றி நானில்லை கண்ணே'

நீயின்றி நானில்லை கண்ணே- உன்
நிழலின்றி வாழ்வு ஏது மண்ணில்?
மூச்சின்றி பிழைப்பில்லை பெண்ணே - என்
கிழத்தியின்றி இயக்கம் எங்கே என்னில்?
உயிரின்றி உடலில்லை நுண்ணிடையே - தேன்
மொழியின்றி இன்பம் யாது உலகில்?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

துளி/DROP: 2055 ["மூன்று கவிதைகள் / 26"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33980369108278301/?

"மூன்று கவிதைகள் / 25"

4 days 6 hours ago

"மூன்று கவிதைகள் / 25"

"மின்னலாய் ஒரு பின்னல்"
[கனவு, நனவு, விழிப்பு, சோம்பல்]

கனவு கண்டது போதும் தமிழா
நனவு மனம் வேண்டாமோ?
விழிப்புக் கொண்டு எழுந்து
சோம்பல் அறுத்து வினை செய்யாயோ?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

...................................................................................

"உழைக்கும் கைகளே உருவாக்குவது நீங்களே"

ஏழை பணக்காரன் முடிச்சு போடாமல்
பிழைகள் தேடி நேரத்தை வீணாக்காமல்
மழை வெயிலென சாட்டுச் சொல்லாமல் ...

உழைத்து வாழ ஆர்வம் இருந்தால்
உள்ளம் மகிழும் உயர்ச்சி உண்டு
உழைக்கும் கைகளே உருவாக்குவது நீங்களே

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

............................................................

"வைகரை கரையினிலே வைகறை நேரத்திலே"

வைகரை கரையினிலே வைகறை நேரத்திலே
வைத்தகண் மாறாமல் உனக்காகக் காத்திருக்க ...
வைராக்கியம் நெஞ்சை முட்டி மொத
வைரம்பதித்த மாலை மார்பைத் தழுவ
வைதேகி வந்தாள்! மௌனமாய் நின்றாள்!!

உன் நினைவு இதயத்தில் பூத்துக்குலுங்க
என் மனம் மகிழ்ந்து எதிர்பார்க்க ...
அன்ன நடையில் அழகு ஓவியமாய்
கன்னம் இரண்டும் வெட்கிச் சிவப்பாக
இன்பம் தந்தாள்! கூடல் கொண்டாள்!!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

துளி/DROP: 2047 ["மூன்று கவிதைகள் / 25"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33912545815060631/?

"மூன்று கவிதைகள் / 24"

1 week 1 day ago

"மூன்று கவிதைகள் / 24"

'ஏறு தழுவல்'

ஏறு தழுவல் தமிழன் விளையாட்டு
வீரம் கொண்ட காளை அடக்கி
அடங்கா எதிரிக்கும் அச்சம் கொடுப்பான்!

வியர்வையில் வீரம் ஒளிரும் போது
மண்ணின் மணம் மார்பில் உறையும்
தாயின் மரபு இரத்தத்தில் பேசும்!

கோபமல்ல—கட்டுப்பாடே அவன் பலம்
அடக்கமல்ல—அறிவே அவன் ஆயுதம்!
உயிரை மதித்து காளையை அணைப்பவன்
தமிழன்—வீரத்தின் மனித முகம்!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

................................................................

'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா'

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
கலந்து பேசி முடிவு எடுக்கலாமா?
மனங்கள் இணைந்தால் அதுவே பொருத்தம்
மறந்து என்றும் விண்மீனைக் கேட்காதே?

நேரம் தீர்மானிக்குமா ஒருவரின் வாழ்வை
இதயம் சொன்னால் அதுவே போதும்!
அன்பு நிலைத்தால் நாள் இனிது
புரிதல் இருந்தால் தடைகள் இல்லை!
கண்கள் சந்தித்து உள்ளங்கள் இணைந்து
காதல் மலர்ந்தால் அதுவே திருமணம் !

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

..........................................................................

“ஆடல் காணீரோ”

சிந்துவெளி நாகரிகம் கண்ட இவன்
குந்து வைத்து மாடி எழுப்பினான்!
வெந்த மண்ணில் வடித்த பாவை
விந்தை விளைக்கும் ஆடல் காணீரோ!

அணங்கின் கைவழி நயனம் செல்க
அழகுக் கண்வழி மனமும் போக
அவள் மனம்வழி பாவம் சேர
அம்மண சிலையின் கூத்து அறிவீரோ!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

துளி/DROP: 2039 ["மூன்று கவிதைகள் / 24"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33843158675332679/?

"மூன்று கவிதைகள் / 23"

2 weeks 4 days ago

"மூன்று கவிதைகள் / 23"

'பொங்குக பொங்கல்'

கற்ற அறிஞர்கள் வரலாறு பாட
கற்புக் கன்னிகள் கோலம் போட
உற்றார் உறவினர் கதிரவனை வணங்க
ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!

மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர்
புதுக் கலத்தில் வளர்த்த செந்தீயில்
பொது வெளியில் தோரணம் ஆட
பதுமை கூடி பொங்குக பொங்கல்!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

...........................................................................

"மின்னலாய் ஒரு பின்னல்"
[ஏழ்மை, உழைப்பு, செல்வம் & தானம்]

ஏழ்மை இருந்தாலும் கல்வியை விடாதே
உழைப்பு கட்டாயம் நிறைவேற்றும்!
செல்வம் பூட்டி வைப்பதல்ல
தானம் கொடுத்து மகிழ்வு காண்பதே!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

..............................................................................

"மூவெழில் மூன்று"

காற்றின் இசையில் கனவுகள் மலர,
நினைவுகள் வான் உயர,
அமைதியில் உறையும் ஆனந்தக் கற்பனை!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

.....................................................................

துளி/DROP: 2019 ["மூன்று கவிதைகள் / 23"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33671173965864485/?

"மூன்று கவிதைகள் / 22"

3 weeks 1 day ago

"மூன்று கவிதைகள் / 22"

மின்னலாய் ஒரு பின்னல்
[சாந்தம்/ கோபம்/ பொறுமை/ மகிழ்ச்சி]



சாந்தம் நிறைந்த விழிகள் எனோ
கோபம் கொண்டு பார்க்குதே
பொறுமை தொலைத்து ஏங்குதே
மகிழ்ச்சி தேடி என்னை அழைக்குதே

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

..................................

'காதல் கோட்டைகள்'

காதல் கோட்டைகள் அன்பில் கட்டியது
காதலன் காதலி சேர்ந்து அமைத்தது
காலம் முழுவதும் நினைவில் நிற்குதே!

ஆசையும் பாசமும் நிறுவிய அரண்மனை
ஆரவாரம் இல்லா உறவின் கனவு
ஆழ்ந்த நட்பின் நிரந்தர அடையாளமே!


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

............................................................

புகைப்படக் கவிதை

பாலைவனம் எம்மை ஒட்டகத்தில் ஏற்றிட,
மாலைக் கதிரவன் உடலைத் தீண்ட,
அலை அலையாக இன்பம் பொங்க,
சோலைவனம் மனதில் துளிர் விட்டது!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

...........................................................................

துளி/DROP: 2007 ["மூன்று கவிதைகள் / 22"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33602025986112617/?

"மூன்று கவிதைகள் / 21"

1 month 1 week ago

"மூன்று கவிதைகள் / 21"

'பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே'

அன்ன நடையாள் தூளியிலே ஆடி
இன்முகம் காட்டி அருகில் அழைத்து
இன்பம் கொட்டும் நிலா ஒளியில்
மின்னும் விளக்கில் இருவரும் சேர
பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே ?

சின்ன இடையாள் அழகு காட்டி
தேன் சிந்தும் இதழ்கள் பதித்து
கன்னம் இரண்டிலும் முத்தம் கொடுத்து
அன்பு மழையால் உள்ளம் நனைக்க
இன்னாள் என்றும் கிடைக்குமா மீண்டும் ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

..............................................................

'புகைப்படக் கவிதை'

அம்மம்மாவின் வடிவிலேயே, எமக்கு வந்தவளே
அவளின் பெயரையே, தனக்கும் எடுத்தவளே
அழகான மழலையே, எங்கள் பேத்தியே
அன்போடு அணைத்து, அகம் மகிழ்கிறேன்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.................................................................

'வெள்ளிக் கிழமை விடியும் வேளை'

வெள்ளிக் கிழமை விடியும் வேளை,
கள் உண்ட வண்டுகள் பாட,
இல்லம் எல்லாம் நறுமணம் வீச,
நல்லாள் முற்றத்தில் கோலம் போட்டாள்!

வெள்ளை மனம் கொண்ட பூவை
உள்ளம் நிறைய அன்பு பொங்க
அல்லல் தீரும் என்ற நம்பிக்கையில்
புள்ளிகள் வைத்து வடிவம் இட்டாள்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.................................................................

துளி/DROP: 1988 ["மூன்று கவிதைகள் / 21"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33245683025080250/?

"மூன்று கவிதைகள் / 20"

1 month 2 weeks ago

"மூன்று கவிதைகள் / 20"

'பட்டாம்பூச்சியின் காதல் ... '

பட்டாம்பூச்சியின் காதல் நிரந்தரம் அல்ல
பருவம் கொடுத்த அழகின் ஈர்ப்பு!
தொட்டால் குலுங்கும் ஒரு உணர்வு
பட்டால் தெரியும் அதன் மாயை!
திடீரென பிறக்கும் இதயத்தின் துடிப்பு
திட்டம் இல்லா மனிதனின் ஆசை!


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.............................................................................

'புத்தருக்கும் ஆசை வருமா'

புத்தருக்கும் ஆசை வருமா?
இலங்கைத் தமிழரைக் கேட்டுப் பார்—
சிலை வடிவில் ஊடுருவும் பேராசையை!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

..............................................................................

'வெள்ளை மழை இங்கு பொழிகிறது'

வெள்ளை மழை இங்கு பொழிகிறது
பிள்ளை நிலா வானில் ஒளிர்கிறது
வள்ளி உன்னை மனம் தேடுகிறது!


துள்ளி இருவரும் பனியில் சறுக்கி
அள்ளி அணைத்து குளிர் காய்ந்து
பள்ளி அறையில் இன்பம் காண்போம்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

............................................................................

துளி/DROP: 1982 ["மூன்று கவிதைகள் / 20"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33204560462525840/?

வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும்

1 month 2 weeks ago

வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும்

------------------------------------------------------------------

large.Destruction.jpg

தேசங்கள் வெட்கம் அற்றவை

மெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும்

எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை

ஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போல

அடித்து பிடுங்கி அழித்துக் கொண்டே

தர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவை

போலிச் சாமியார்கள் போல 

கலப்பட வியாபாரிகள் போல 

வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள்

நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்து

வந்த பின் முகமூடியை  கழட்டி எறிந்து விட்டு

குதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும்

எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை

அயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டே

பயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரும் தேசங்கள்

ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சொல்லும்

அத்தனையும் கடைந்தெடுத்த பொய்கள்

ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்தும்

இன்னொரு ஆக்கிரமிப்பை ஆதரித்தும்

ஒரு கண் மூடி மறு கண் திறக்கும் மனிதர்களும்

வெட்கமற்ற தேசங்கள் போலவே

அபிமானிகளும் வெட்கம் அற்றவர்கள்.

"மூன்று கவிதைகள் / 19"

1 month 2 weeks ago

"மூன்று கவிதைகள் / 19"

'தூது செல்லாயோ'

தூது செல்லாயோ கண்மணியை அழைக்காயோ
தூய்மை அன்பில் நட்பை வளர்த்து
தூரிகை எடுத்து காதல் வரைந்தவள்
தூர விலகிப் போனது ஏனோ?
ஓரமாய்த் தள்ளி ஓடியது எதற்கோ?
ஈர உள்ளம் உனக்கு இல்லையோ?


கால் சலங்கை இசை எழுப்பக்
காதணி இரண்டும் சேர்ந்து ஆடக்
காமன் வலையில் என்னை வீழ்த்தி
காதோரம் கெஞ்சிய வார்த்தை எங்கே?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

.............................................................

புகைப்படக் கவிதை

மழலையின் மொழி கேட்டு நான்
குழல் ஊதும் கண்ணனை மறந்தேன்!
குழவியின் கெஞ்சிக் கொஞ்சிக் குலாவுதலில்
அழகு மங்கையின் தழுவலைத் துறந்தேன்!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

..........................................................................

'மின்னலாய் ஒரு பின்னல்'
[ஏற்றம், இறக்கம், சமநிலை, தாழ்வு]

ஏற்றம் மிகு வாழ்வு வேண்டின்
இறக்கம் தருவதைத் தவிர்!
சமநிலை தவறாது வாழ
தாழ்வு எண்ணங்களை முற்றிலும் அகற்றிடு!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.............................................................................

துளி/DROP: 1972 ["மூன்று கவிதைகள் / 19"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33126338203681400/?

"மூன்று கவிதைகள் / 18"

1 month 3 weeks ago

"மூன்று கவிதைகள் / 18"

'மின்னலாய் ஒரு பின்னல்'
[நம்பிக்கை, துரோகம், சத்தியம், சோதனை]

நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து
துரோகம் செய்யும் மனிதர்களை அறியாயோ?
சத்தியம் வெல்ல களத்தில் இறங்கினால்
சோதனை வந்து வேதனை கொடுக்குதே!

அல்லது

நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து/
துரோகம் செய்யும் மனிதர்களே/
சத்தியம் வெல்லும் நாளில்/
சோதனை வரும் உங்கள் வாழ்வுக்கு!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.............................................................................

'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்'

விண்ணில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை
உண்மை ஒன்றை உலகிற்குப் பகிர
ஆண்டவன் வருகையை ஞானிகள் அறிய
மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்!

கண்கள் எல்லாம் அன்பு பொழிய
கந்தலில் மறைந்து இருந்த பாலகன்
கருணை காட்டி உலகை அணைத்து
களவு இல்லா மனிதம் காட்டினான்!!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

..................................................................................

'வன்னியில் குண்டுகள் ... '

வன்னியில் குண்டுகள் ஆயிரம் விழுகுது
கன்னியின் பார்வையில் ஏக்கம் தழுவுது
மண்ணுக்கும் மொழிக்கும் நின்ற மக்கள்
கண்ணுக்கும் தெரியாமல் சாம்பல் ஆகினர்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

................................................................

துளி/DROP: 1968 ["மூன்று கவிதைகள் / 18"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33098366463145241/?

"மூன்று கவிதைகள் / 17"

1 month 3 weeks ago

"மூன்று கவிதைகள் / 17"

'புகைப்படக் கவிதை'

குறள் தந்த வள்ளுவருடன் நான்
குரல் அடக்க எரித்த நூலகத்தில்!
குமிழி வாழ்வின் விளிம்பில் இவன்
குமுறும் தமிழனின் தாய் நிலத்தில்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.......................................................................

மின்னலாய் ஒரு பின்னல்
[படைத்தல், காத்தல், அழித்தல் & அருளல்]

படைத்தல் தொழில் கடினம் என்றாலும்
காத்தல் அதனிலும் மேல்!
அழித்தல் செய்தவன் ஒருநாள்
அருளல் புரிந்து அணைத்தாலும் ஏற்காதே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

..........................................................................

'மகளா மருமகளா'

மகளா மருமகளா கேட்பவன் யாரடா
குலப்பெருமை காக்க மணாட்டி ஆனவளே
விளக்கேற்ற வந்த மற்றைய மகளே!

திருமணம் முடிந்தது மனையாட்டி ஆகி
இருஉடல் சேர்ந்ததும் தாயாய் மாறி
சந்ததி பெருக தன்னையே தந்தவளே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.............................................................

துளி/DROP: 1961 ["மூன்று கவிதைகள் / 17"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33041205765527978/?

"மூன்று கவிதைகள் / 16"

1 month 4 weeks ago

"மூன்று கவிதைகள் / 16"

'புகைப்படக் கவிதை'

அருகம் விரிகுடா எம்மை அழைத்தது
அருகில் பேத்தி சறுக்கி விளையாடுகிறாள்!
பருவக் காற்று முகத்தைத் தடவுது
புருவம் உயர்த்தி அழகை அனுபவிக்கிறேன்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

...........................................................................

'காவலாய் நிற்கும் மரங்கள்'

காவலாய் நிற்கும் மரங்கள் எங்கே
காற்றாய் மறைந்து போனது ஏனோ?
காடுகள் அழித்து நகரம் வந்ததோ
கால மாற்றத்தால் வெள்ளம் புகுந்ததோ?

கோலம் மாறும் மனித சமூகம்
ஆல மரத்தின் நிழல் அறியாதோ?
உலகம் தேடும் வானிலை மாற்றம்
நலமாக இனி எமக்கு அமையாதோ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

...................................................................

பேருந்துப் பயணங்களில்'

பேருந்துப் பயணங்களில் பார்த்த முகம்
அருகில் இருக்கையில் கண்ட சொர்க்கம்
புருவம் உயர்த்தி மலர்ந்த புன்முறுவல்
பருவம் கொட்டிய பெண்மை வனப்பு
திருடுதே இதயத்தை! தேடுதே அவளை!!

மஞ்சள் சேலையில் பயணத்தில் கண்டவள்
வஞ்சகம் இல்லா நட்புத் தந்தவள்
நெஞ்சம் குளிர அன்பாய்ப் பேசியவள்
கொஞ்சும் பார்வையால் மனதைக் கிளறியவள்
தஞ்சம் தருவாளா? வாழ்வு கொடுப்பாளா??

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

................................................................

துளி/DROP: 1958 ["மூன்று கவிதைகள் / 16"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33022090424106179/?

நில உயிர்கள்

2 months ago

நில உயிர்கள்
--------------------

large.Submission.jpg

ஒரு பக்கமாக சாய்ந்து நின்று 

பார்த்துக் கொண்டிருந்தவர்கள்

யுத்தங்களால் இழப்பன்றி வேறு எதுவும் இல்லை 

சமாதானம் சமாதானம் என்றனர்

நாடு நகரம் குடும்பம் குழந்தை எதிர்காலத்துடன்

இப்படியே போனால்

உன்னைக் கூட இழக்கப் போகின்றாய் என்றனர்

எத்தனை நாளைக்குத்தான் முடியும்

மூன்று வாரங்கள் கூட தாங்க மாட்டாய் என்றனர்

மூன்று வாரங்கள் தாண்டி

மூன்று வருடங்களும் வந்து போனது

ஒரு மலையை உளியால் பிளப்பது போல

என் வீட்டுக்குள் வரும் பலசாலியை

என்னால் முடிந்த வரை நிறுத்தப் போராடுகின்றேன்  

அவர்களின் கணக்கு சரியே

நான் இழந்து கொண்டேயிருக்கின்றேன்

என் குலமும் நிலமும் வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன 

இழந்து இழந்து

எதற்காகப் போராடுகின்றாய் 

இப்போது கூட நீ அடங்கினால்

ஒரு மூலையில் ஒதுங்கினால் 

உயிர் தப்பி 

பலசாலியுடன் வாழலாம் என்கின்றனர்

சாய்ந்து நிற்பவர்கள்

உயிர் விட்ட பின்னும்

நிலமாகப் பரந்து நீராக ஓடி

அங்கே புதிய உயிர்களாக நித்தியமாக வாழும்

மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..........?

உங்கள் வீட்டுக்குள்ளும்

ஒரு பலசாலி வரும் போது

பணிந்து குனிந்து வழிவிடுவீர்களா...............?

"மூன்று கவிதைகள் / 15"

2 months ago

"மூன்று கவிதைகள் / 15"

'நீல நயனங்களில் நீண்டதொரு கனவு'

நீல நயனங்களில் நீண்டதொரு கனவு
ஓலம் இடுகிறது மனதை வருத்துகிறது!
காலம் கனிந்து கைகூடிய காதல்
கோலம் மாறி கூத்து அடிக்கிறது
உலக வரையறை காற்றில் பறக்கிறது!

கண்ணோடு கண் கலந்த அன்பு
மண்ணோடு மண்ணாய் போனது எனோ?
விண்ணில் தோன்றிய கதிரவன் மாதிரி
வண்ண ஒளி பரப்பிய அவன்
பண்பு துறந்து ஏமாற்றியது எதற்கோ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

............................................................

'பாரதி'



"அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி
விடிவை நோக்கி வரிகள் முழங்கும்!
இடித்து உரைப்பான் காரணம் சொல்வான்
அடித்துப் பொய்யை தூர விரட்டுவான்!!"

"தமிழின் அரவணைப்பில் வரிகள் மலரும்
பூமி எங்கும் பரந்து விரியும்!
திமிர் பிடித்த கொள்கை வெறியன்
அமிர்தம் தோற்கும் கவிதை தருவான்!!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.............................................................

'பருவக் கிளர்ச்சி'

பருவக் கிளர்ச்சி ஆசை தூண்ட
உருவம் மனதில் மோகம் தெளிக்க
அருகில் இருந்தால் இன்பம் பொங்குமே!

பருத்தி ஆடை இதம் தர
பக்குவமாக இருவரும் சாய்ந்து இருக்க
பகல் வேளையிலும் கனவு வருமே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 1944 ["மூன்று கவிதைகள் / 15

https://www.facebook.com/groups/978753388866632/posts/32884649584516931/?

"மூன்று கவிதைகள் / 14"

2 months 1 week ago

"மூன்று கவிதைகள் / 14"

'புகைப்படக் கவிதை'

தோற்றத்தில் பெரியவனே - தும்பிக்கை கொண்டவனே
ஆற்றலில் பலமானவனே - நம்பிக்கைத் தோழனே
மதம் பிடித்து - சிலவேளை அலைந்தாலும்
மதம் [சமயம்] உன்னிடம் - ஒருவேளையும் இல்லையே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
-------------------------------------------

'மலைமுடியில் பனியழகு மனங்கவரும் இயற்கையழகு'


மலைமுடியில் பனியழகு - மனங்கவரும் இயற்கையழகு
மகளிர் வடிவத்தையும் - மகிமையிழக்கச் செய்து
மடவரலின் அன்னநடையையும் - மறைத்து விடுமே!


கொடுமுடியில் மஞ்சுபெய்ய - கொடிகளில் வெண்மைபடர
கொடிச்சியின் எழிலையும் - கொன்று மங்கலாக்கி
கொற்றவையின் கவினையும் - கொடுமையாய் மாற்றுமே!


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
-------------------------------------------

'திசையறியாத மனிதர்கள்'

அநீதி பாகுபாடு இரண்டிலும் தவித்து
சோற்றுக்கும் வீட்டுக்கும் வழிகள் அற்ற
அகதிகளே திசையறியாத மனிதர்கள்

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 1939 ["மூன்று கவிதைகள் / 14"

https://www.facebook.com/groups/978753388866632/posts/32806741562307734/?

டிட்வா தந்த வலி!

2 months 1 week ago

டிட்வா!துயர்.

****************

மண் சரிவு இது

மற்றவர்களுக்கு

ஒரு செய்தி.

நாளை விடிந்தால்

மகிழ்வான..

எத்தனை எண்ணங்கள்

எத்தனை கனவுகள்..

எத்தனை குழந்தைகளின்

மழலைப் பேச்சுக்கள்

வேலை, பாடசாலை.

திருமணங்கள்.காதல்.

கொ̀ண்டாட்டங்கள்.

அத்தனையும் ஒரு நொடியில்

உயிரோடு மண்ணுக்குள்

புதைக்கப்பட்டு விட்டதே!

இறைவா!

அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி

அக்கா,தங்கை நண்பர்களென

வெளியில் நின்று தேடும்

உறவுகளுக்குத் தான்

தெரியும்

மூடிய மலையைவிட

பெரியது.

இந்த இழப்புகளின்

வலியென்பது.

மண்சரிவு இது

மற்றவர்களுக்கு

ஒரு செய்தி.

துயருடன் -பசுவூர்க்கோபி.

'ஊன்றுகோல்'

2 months 2 weeks ago

'ஊன்றுகோல்'

காத தூரத்தையும் நொடியில் கடந்து
காற்றைக் கிழித்து ஓடிய கால்கள்
காடு மேடு அளந்த பாதம்
காலக் கொடுமையால் துணை தேடுது!

பூண் சூட்டிய நுனியைப் பிடித்து
கண்ணின் மங்கிய ஒளியில் பார்த்து
மண்ணைத் தடவி மெல்ல நடக்கிறேன்
வண்ணக் கொடியாளாக இன்று ஊன்றுகோல்!!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 1933 ['ஊன்றுகோல்'] 

https://www.facebook.com/groups/978753388866632/posts/32731437279838163/?

"மூன்று கவிதைகள் / 13"

2 months 2 weeks ago

"மூன்று கவிதைகள் / 13"

'பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே'

பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே
வஞ்சனை இல்லா கம்பீர நாயகனே!
கொஞ்சும் மொழியாலே உன்னைத் தாலாட்டவா
தஞ்சம் தேடி என்னிடம் வந்தவனே
மிஞ்சும் அழகு மகிழ்ச்சி தருகுதே!

துள்ளும் ஆசை இதயத்தில் எழ
சொல்லும் வார்த்தைகள் தேனாய் இனிக்க
கள்ளும் தராத மயக்கம் வர
உள்ளும் புறமும் நீயே தோன்ற
அள்ளும் ஆசை அலையாய் பாயுதே?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

-----------------------------


''புகைப்படக் கவிதை''

"பெண்ணில் பிறந்தவன் அவளையே நாடுகிறான்
மண்ணில் தவழ்ந்தவன் அதுவே ஆகிறான்!
வண்ண விளக்கில் அணிச்சலை வெட்டுகிறான்
வண்ணாத்திப் பூச்சியாய் மகிழ்ச்சியில் பறக்கிறான்!!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

-----------------------------

மின்னலாய் ஒரு பின்னல்
[ஆரம்பம் - முடிவு - தொடக்கம் - கடைசி]

ஆரம்பம் சரியாக அமைந்தால் நண்பா
முடிவு மகிழ்வாக மலருமே!
தொடக்கம் கோணலாக மாறினால்
கடைசிப் பலன் என்றும் பூச்சியமே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 1930 ["மூன்று கவிதைகள் / 13"]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32706564062325485/?

இயற்கையே ஏன் இந்தக்கோபம்!

2 months 2 weeks ago

இயற்கையே ஏன் இந்தக்கோபம்!

***************************************

உழுதவன் விதைக்கும் காலம்

உணர்விலே மகிழ்ச்சி பொங்கும்

அழுதவன் வறுமையெல்லாம்

அடங்குமே என நினைத்தான்.

வரம்பு நீர் உயற்ச்சி கண்டு

வளர்கின்ற நெற்பயிரின்

அருகிலே..

அதிகாலை தொட்டு

ஆதவன் மறையும் மட்டும்

உடலது உயிராயெண்ணி

ஒன்றியே வாழ்ந்தான் வயலில்.

கடலலை அடித்தாற் போல

காற்றிலே பயிர்கள் ஆட

உளமது நிறைந்துழவன்

உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான்.

நிறைமாத கெற்பனி போல்

நெற்பயிர் குடலை தள்ள

வறுமையும் கடனும் நீங்கி-நல்

வாழ்கையை கனவில் கண்டான்.

மனைவிக்கு சாறியோடு

மகளுக்கு வரனும்தேடி

மகனுக்கு  கல்வியூட்ட

மனதினில் எண்ணம் கொண்டான்.

அடை மழை கட்டி வானம்-"டித்வா"

அடித்தது புயலாய் நாட்டில்

பெரு வெள்ளம் உட்புகுந்து

பிரளையம் ஆச்சே வீட்டில்.

வயலெல்லாம் குளமாய் போச்சு

வருமானம் அழிந்தே போச்சே

கனவெல்லாம் கலைந்து போச்சு

கண்ணீரும் மழை நீராச்சே.

மலையெல்லாம் உருண்டுவந்து

மண்மூடி உயிர்கள் போச்சு

குளம் குட்டை ஆறு எல்லாம்

நிலம் மூடி கடலாய்யாச்சே

பார்க்கின்ற இடங்களெல்லாம்

பரிதவிக்கும் மக்கள் கூட்டம்

இயற்கையின் கோபத்துக்கு

எவன் தானோ? குற்றவாளி.

எதிர்க் கட்சி வாதமெல்லாம்

இந்நேரம் தேவையில்லை

அழிவினிலிருந்து நாட்டை

அனைவரும் காப்போம்

வெல்வோம்.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

Checked
Tue, 02/24/2026 - 22:39
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/