கவிதைக் களம்

"மூன்று கவிதைகள் / 20"

4 hours 34 minutes ago

"மூன்று கவிதைகள் / 20"

'பட்டாம்பூச்சியின் காதல் ... '

பட்டாம்பூச்சியின் காதல் நிரந்தரம் அல்ல
பருவம் கொடுத்த அழகின் ஈர்ப்பு!
தொட்டால் குலுங்கும் ஒரு உணர்வு
பட்டால் தெரியும் அதன் மாயை!
திடீரென பிறக்கும் இதயத்தின் துடிப்பு
திட்டம் இல்லா மனிதனின் ஆசை!


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.............................................................................

'புத்தருக்கும் ஆசை வருமா'

புத்தருக்கும் ஆசை வருமா?
இலங்கைத் தமிழரைக் கேட்டுப் பார்—
சிலை வடிவில் ஊடுருவும் பேராசையை!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

..............................................................................

'வெள்ளை மழை இங்கு பொழிகிறது'

வெள்ளை மழை இங்கு பொழிகிறது
பிள்ளை நிலா வானில் ஒளிர்கிறது
வள்ளி உன்னை மனம் தேடுகிறது!


துள்ளி இருவரும் பனியில் சறுக்கி
அள்ளி அணைத்து குளிர் காய்ந்து
பள்ளி அறையில் இன்பம் காண்போம்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

............................................................................

துளி/DROP: 1982 ["மூன்று கவிதைகள் / 20"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33204560462525840/?

வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும்

2 days 20 hours ago

வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும்

------------------------------------------------------------------

large.Destruction.jpg

தேசங்கள் வெட்கம் அற்றவை

மெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும்

எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை

ஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போல

அடித்து பிடுங்கி அழித்துக் கொண்டே

தர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவை

போலிச் சாமியார்கள் போல 

கலப்பட வியாபாரிகள் போல 

வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள்

நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்து

வந்த பின் முகமூடியை  கழட்டி எறிந்து விட்டு

குதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும்

எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை

அயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டே

பயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரும் தேசங்கள்

ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சொல்லும்

அத்தனையும் கடைந்தெடுத்த பொய்கள்

ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்தும்

இன்னொரு ஆக்கிரமிப்பை ஆதரித்தும்

ஒரு கண் மூடி மறு கண் திறக்கும் மனிதர்களும்

வெட்கமற்ற தேசங்கள் போலவே

அபிமானிகளும் வெட்கம் அற்றவர்கள்.

"மூன்று கவிதைகள் / 19"

5 days 7 hours ago

"மூன்று கவிதைகள் / 19"

'தூது செல்லாயோ'

தூது செல்லாயோ கண்மணியை அழைக்காயோ
தூய்மை அன்பில் நட்பை வளர்த்து
தூரிகை எடுத்து காதல் வரைந்தவள்
தூர விலகிப் போனது ஏனோ?
ஓரமாய்த் தள்ளி ஓடியது எதற்கோ?
ஈர உள்ளம் உனக்கு இல்லையோ?


கால் சலங்கை இசை எழுப்பக்
காதணி இரண்டும் சேர்ந்து ஆடக்
காமன் வலையில் என்னை வீழ்த்தி
காதோரம் கெஞ்சிய வார்த்தை எங்கே?

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

.............................................................

புகைப்படக் கவிதை

மழலையின் மொழி கேட்டு நான்
குழல் ஊதும் கண்ணனை மறந்தேன்!
குழவியின் கெஞ்சிக் கொஞ்சிக் குலாவுதலில்
அழகு மங்கையின் தழுவலைத் துறந்தேன்!

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

..........................................................................

'மின்னலாய் ஒரு பின்னல்'
[ஏற்றம், இறக்கம், சமநிலை, தாழ்வு]

ஏற்றம் மிகு வாழ்வு வேண்டின்
இறக்கம் தருவதைத் தவிர்!
சமநிலை தவறாது வாழ
தாழ்வு எண்ணங்களை முற்றிலும் அகற்றிடு!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.............................................................................

துளி/DROP: 1972 ["மூன்று கவிதைகள் / 19"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33126338203681400/?

"மூன்று கவிதைகள் / 18"

1 week ago

"மூன்று கவிதைகள் / 18"

'மின்னலாய் ஒரு பின்னல்'
[நம்பிக்கை, துரோகம், சத்தியம், சோதனை]

நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து
துரோகம் செய்யும் மனிதர்களை அறியாயோ?
சத்தியம் வெல்ல களத்தில் இறங்கினால்
சோதனை வந்து வேதனை கொடுக்குதே!

அல்லது

நம்பிக்கை கொடுத்து கண்களை மறைத்து/
துரோகம் செய்யும் மனிதர்களே/
சத்தியம் வெல்லும் நாளில்/
சோதனை வரும் உங்கள் வாழ்வுக்கு!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.............................................................................

'மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்'

விண்ணில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை
உண்மை ஒன்றை உலகிற்குப் பகிர
ஆண்டவன் வருகையை ஞானிகள் அறிய
மண்ணுலகில் தேவன் இறங்கி வருகிறான்!

கண்கள் எல்லாம் அன்பு பொழிய
கந்தலில் மறைந்து இருந்த பாலகன்
கருணை காட்டி உலகை அணைத்து
களவு இல்லா மனிதம் காட்டினான்!!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

..................................................................................

'வன்னியில் குண்டுகள் ... '

வன்னியில் குண்டுகள் ஆயிரம் விழுகுது
கன்னியின் பார்வையில் ஏக்கம் தழுவுது
மண்ணுக்கும் மொழிக்கும் நின்ற மக்கள்
கண்ணுக்கும் தெரியாமல் சாம்பல் ஆகினர்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

................................................................

துளி/DROP: 1968 ["மூன்று கவிதைகள் / 18"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33098366463145241/?

"மூன்று கவிதைகள் / 17"

1 week 4 days ago

"மூன்று கவிதைகள் / 17"

'புகைப்படக் கவிதை'

குறள் தந்த வள்ளுவருடன் நான்
குரல் அடக்க எரித்த நூலகத்தில்!
குமிழி வாழ்வின் விளிம்பில் இவன்
குமுறும் தமிழனின் தாய் நிலத்தில்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.......................................................................

மின்னலாய் ஒரு பின்னல்
[படைத்தல், காத்தல், அழித்தல் & அருளல்]

படைத்தல் தொழில் கடினம் என்றாலும்
காத்தல் அதனிலும் மேல்!
அழித்தல் செய்தவன் ஒருநாள்
அருளல் புரிந்து அணைத்தாலும் ஏற்காதே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

..........................................................................

'மகளா மருமகளா'

மகளா மருமகளா கேட்பவன் யாரடா
குலப்பெருமை காக்க மணாட்டி ஆனவளே
விளக்கேற்ற வந்த மற்றைய மகளே!

திருமணம் முடிந்தது மனையாட்டி ஆகி
இருஉடல் சேர்ந்ததும் தாயாய் மாறி
சந்ததி பெருக தன்னையே தந்தவளே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.............................................................

துளி/DROP: 1961 ["மூன்று கவிதைகள் / 17"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33041205765527978/?

"மூன்று கவிதைகள் / 16"

1 week 5 days ago

"மூன்று கவிதைகள் / 16"

'புகைப்படக் கவிதை'

அருகம் விரிகுடா எம்மை அழைத்தது
அருகில் பேத்தி சறுக்கி விளையாடுகிறாள்!
பருவக் காற்று முகத்தைத் தடவுது
புருவம் உயர்த்தி அழகை அனுபவிக்கிறேன்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

...........................................................................

'காவலாய் நிற்கும் மரங்கள்'

காவலாய் நிற்கும் மரங்கள் எங்கே
காற்றாய் மறைந்து போனது ஏனோ?
காடுகள் அழித்து நகரம் வந்ததோ
கால மாற்றத்தால் வெள்ளம் புகுந்ததோ?

கோலம் மாறும் மனித சமூகம்
ஆல மரத்தின் நிழல் அறியாதோ?
உலகம் தேடும் வானிலை மாற்றம்
நலமாக இனி எமக்கு அமையாதோ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

...................................................................

பேருந்துப் பயணங்களில்'

பேருந்துப் பயணங்களில் பார்த்த முகம்
அருகில் இருக்கையில் கண்ட சொர்க்கம்
புருவம் உயர்த்தி மலர்ந்த புன்முறுவல்
பருவம் கொட்டிய பெண்மை வனப்பு
திருடுதே இதயத்தை! தேடுதே அவளை!!

மஞ்சள் சேலையில் பயணத்தில் கண்டவள்
வஞ்சகம் இல்லா நட்புத் தந்தவள்
நெஞ்சம் குளிர அன்பாய்ப் பேசியவள்
கொஞ்சும் பார்வையால் மனதைக் கிளறியவள்
தஞ்சம் தருவாளா? வாழ்வு கொடுப்பாளா??

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

................................................................

துளி/DROP: 1958 ["மூன்று கவிதைகள் / 16"

https://www.facebook.com/groups/978753388866632/posts/33022090424106179/?

நில உயிர்கள்

2 weeks 6 days ago

நில உயிர்கள்
--------------------

large.Submission.jpg

ஒரு பக்கமாக சாய்ந்து நின்று 

பார்த்துக் கொண்டிருந்தவர்கள்

யுத்தங்களால் இழப்பன்றி வேறு எதுவும் இல்லை 

சமாதானம் சமாதானம் என்றனர்

நாடு நகரம் குடும்பம் குழந்தை எதிர்காலத்துடன்

இப்படியே போனால்

உன்னைக் கூட இழக்கப் போகின்றாய் என்றனர்

எத்தனை நாளைக்குத்தான் முடியும்

மூன்று வாரங்கள் கூட தாங்க மாட்டாய் என்றனர்

மூன்று வாரங்கள் தாண்டி

மூன்று வருடங்களும் வந்து போனது

ஒரு மலையை உளியால் பிளப்பது போல

என் வீட்டுக்குள் வரும் பலசாலியை

என்னால் முடிந்த வரை நிறுத்தப் போராடுகின்றேன்  

அவர்களின் கணக்கு சரியே

நான் இழந்து கொண்டேயிருக்கின்றேன்

என் குலமும் நிலமும் வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன 

இழந்து இழந்து

எதற்காகப் போராடுகின்றாய் 

இப்போது கூட நீ அடங்கினால்

ஒரு மூலையில் ஒதுங்கினால் 

உயிர் தப்பி 

பலசாலியுடன் வாழலாம் என்கின்றனர்

சாய்ந்து நிற்பவர்கள்

உயிர் விட்ட பின்னும்

நிலமாகப் பரந்து நீராக ஓடி

அங்கே புதிய உயிர்களாக நித்தியமாக வாழும்

மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..........?

உங்கள் வீட்டுக்குள்ளும்

ஒரு பலசாலி வரும் போது

பணிந்து குனிந்து வழிவிடுவீர்களா...............?

"மூன்று கவிதைகள் / 15"

3 weeks 1 day ago

"மூன்று கவிதைகள் / 15"

'நீல நயனங்களில் நீண்டதொரு கனவு'

நீல நயனங்களில் நீண்டதொரு கனவு
ஓலம் இடுகிறது மனதை வருத்துகிறது!
காலம் கனிந்து கைகூடிய காதல்
கோலம் மாறி கூத்து அடிக்கிறது
உலக வரையறை காற்றில் பறக்கிறது!

கண்ணோடு கண் கலந்த அன்பு
மண்ணோடு மண்ணாய் போனது எனோ?
விண்ணில் தோன்றிய கதிரவன் மாதிரி
வண்ண ஒளி பரப்பிய அவன்
பண்பு துறந்து ஏமாற்றியது எதற்கோ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

............................................................

'பாரதி'



"அடிமை ஒழிக்கும் குரலோன் பாரதி
விடிவை நோக்கி வரிகள் முழங்கும்!
இடித்து உரைப்பான் காரணம் சொல்வான்
அடித்துப் பொய்யை தூர விரட்டுவான்!!"

"தமிழின் அரவணைப்பில் வரிகள் மலரும்
பூமி எங்கும் பரந்து விரியும்!
திமிர் பிடித்த கொள்கை வெறியன்
அமிர்தம் தோற்கும் கவிதை தருவான்!!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

.............................................................

'பருவக் கிளர்ச்சி'

பருவக் கிளர்ச்சி ஆசை தூண்ட
உருவம் மனதில் மோகம் தெளிக்க
அருகில் இருந்தால் இன்பம் பொங்குமே!

பருத்தி ஆடை இதம் தர
பக்குவமாக இருவரும் சாய்ந்து இருக்க
பகல் வேளையிலும் கனவு வருமே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 1944 ["மூன்று கவிதைகள் / 15

https://www.facebook.com/groups/978753388866632/posts/32884649584516931/?

"மூன்று கவிதைகள் / 14"

3 weeks 6 days ago

"மூன்று கவிதைகள் / 14"

'புகைப்படக் கவிதை'

தோற்றத்தில் பெரியவனே - தும்பிக்கை கொண்டவனே
ஆற்றலில் பலமானவனே - நம்பிக்கைத் தோழனே
மதம் பிடித்து - சிலவேளை அலைந்தாலும்
மதம் [சமயம்] உன்னிடம் - ஒருவேளையும் இல்லையே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
-------------------------------------------

'மலைமுடியில் பனியழகு மனங்கவரும் இயற்கையழகு'


மலைமுடியில் பனியழகு - மனங்கவரும் இயற்கையழகு
மகளிர் வடிவத்தையும் - மகிமையிழக்கச் செய்து
மடவரலின் அன்னநடையையும் - மறைத்து விடுமே!


கொடுமுடியில் மஞ்சுபெய்ய - கொடிகளில் வெண்மைபடர
கொடிச்சியின் எழிலையும் - கொன்று மங்கலாக்கி
கொற்றவையின் கவினையும் - கொடுமையாய் மாற்றுமே!


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
-------------------------------------------

'திசையறியாத மனிதர்கள்'

அநீதி பாகுபாடு இரண்டிலும் தவித்து
சோற்றுக்கும் வீட்டுக்கும் வழிகள் அற்ற
அகதிகளே திசையறியாத மனிதர்கள்

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 1939 ["மூன்று கவிதைகள் / 14"

https://www.facebook.com/groups/978753388866632/posts/32806741562307734/?

டிட்வா தந்த வலி!

3 weeks 6 days ago

டிட்வா!துயர்.

****************

மண் சரிவு இது

மற்றவர்களுக்கு

ஒரு செய்தி.

நாளை விடிந்தால்

மகிழ்வான..

எத்தனை எண்ணங்கள்

எத்தனை கனவுகள்..

எத்தனை குழந்தைகளின்

மழலைப் பேச்சுக்கள்

வேலை, பாடசாலை.

திருமணங்கள்.காதல்.

கொ̀ண்டாட்டங்கள்.

அத்தனையும் ஒரு நொடியில்

உயிரோடு மண்ணுக்குள்

புதைக்கப்பட்டு விட்டதே!

இறைவா!

அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி

அக்கா,தங்கை நண்பர்களென

வெளியில் நின்று தேடும்

உறவுகளுக்குத் தான்

தெரியும்

மூடிய மலையைவிட

பெரியது.

இந்த இழப்புகளின்

வலியென்பது.

மண்சரிவு இது

மற்றவர்களுக்கு

ஒரு செய்தி.

துயருடன் -பசுவூர்க்கோபி.

'ஊன்றுகோல்'

1 month ago

'ஊன்றுகோல்'

காத தூரத்தையும் நொடியில் கடந்து
காற்றைக் கிழித்து ஓடிய கால்கள்
காடு மேடு அளந்த பாதம்
காலக் கொடுமையால் துணை தேடுது!

பூண் சூட்டிய நுனியைப் பிடித்து
கண்ணின் மங்கிய ஒளியில் பார்த்து
மண்ணைத் தடவி மெல்ல நடக்கிறேன்
வண்ணக் கொடியாளாக இன்று ஊன்றுகோல்!!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 1933 ['ஊன்றுகோல்'] 

https://www.facebook.com/groups/978753388866632/posts/32731437279838163/?

"மூன்று கவிதைகள் / 13"

1 month ago

"மூன்று கவிதைகள் / 13"

'பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே'

பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே
வஞ்சனை இல்லா கம்பீர நாயகனே!
கொஞ்சும் மொழியாலே உன்னைத் தாலாட்டவா
தஞ்சம் தேடி என்னிடம் வந்தவனே
மிஞ்சும் அழகு மகிழ்ச்சி தருகுதே!

துள்ளும் ஆசை இதயத்தில் எழ
சொல்லும் வார்த்தைகள் தேனாய் இனிக்க
கள்ளும் தராத மயக்கம் வர
உள்ளும் புறமும் நீயே தோன்ற
அள்ளும் ஆசை அலையாய் பாயுதே?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

-----------------------------


''புகைப்படக் கவிதை''

"பெண்ணில் பிறந்தவன் அவளையே நாடுகிறான்
மண்ணில் தவழ்ந்தவன் அதுவே ஆகிறான்!
வண்ண விளக்கில் அணிச்சலை வெட்டுகிறான்
வண்ணாத்திப் பூச்சியாய் மகிழ்ச்சியில் பறக்கிறான்!!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

-----------------------------

மின்னலாய் ஒரு பின்னல்
[ஆரம்பம் - முடிவு - தொடக்கம் - கடைசி]

ஆரம்பம் சரியாக அமைந்தால் நண்பா
முடிவு மகிழ்வாக மலருமே!
தொடக்கம் கோணலாக மாறினால்
கடைசிப் பலன் என்றும் பூச்சியமே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 1930 ["மூன்று கவிதைகள் / 13"]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32706564062325485/?

இயற்கையே ஏன் இந்தக்கோபம்!

1 month ago

இயற்கையே ஏன் இந்தக்கோபம்!

***************************************

உழுதவன் விதைக்கும் காலம்

உணர்விலே மகிழ்ச்சி பொங்கும்

அழுதவன் வறுமையெல்லாம்

அடங்குமே என நினைத்தான்.

வரம்பு நீர் உயற்ச்சி கண்டு

வளர்கின்ற நெற்பயிரின்

அருகிலே..

அதிகாலை தொட்டு

ஆதவன் மறையும் மட்டும்

உடலது உயிராயெண்ணி

ஒன்றியே வாழ்ந்தான் வயலில்.

கடலலை அடித்தாற் போல

காற்றிலே பயிர்கள் ஆட

உளமது நிறைந்துழவன்

உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான்.

நிறைமாத கெற்பனி போல்

நெற்பயிர் குடலை தள்ள

வறுமையும் கடனும் நீங்கி-நல்

வாழ்கையை கனவில் கண்டான்.

மனைவிக்கு சாறியோடு

மகளுக்கு வரனும்தேடி

மகனுக்கு  கல்வியூட்ட

மனதினில் எண்ணம் கொண்டான்.

அடை மழை கட்டி வானம்-"டித்வா"

அடித்தது புயலாய் நாட்டில்

பெரு வெள்ளம் உட்புகுந்து

பிரளையம் ஆச்சே வீட்டில்.

வயலெல்லாம் குளமாய் போச்சு

வருமானம் அழிந்தே போச்சே

கனவெல்லாம் கலைந்து போச்சு

கண்ணீரும் மழை நீராச்சே.

மலையெல்லாம் உருண்டுவந்து

மண்மூடி உயிர்கள் போச்சு

குளம் குட்டை ஆறு எல்லாம்

நிலம் மூடி கடலாய்யாச்சே

பார்க்கின்ற இடங்களெல்லாம்

பரிதவிக்கும் மக்கள் கூட்டம்

இயற்கையின் கோபத்துக்கு

எவன் தானோ? குற்றவாளி.

எதிர்க் கட்சி வாதமெல்லாம்

இந்நேரம் தேவையில்லை

அழிவினிலிருந்து நாட்டை

அனைவரும் காப்போம்

வெல்வோம்.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

'காதல் சிறகினிலே'

1 month ago

'காதல் சிறகினிலே'


காதல் சிறகினிலே ஒரு வெடிப்பு
மோதல் தந்து தூர விலகுது!
சாதல் கண்களில் அருகில் தெரியுது
கூதல் காற்றும் நெஞ்சை வருடுது!



காற்றின் கீதம் எனக்குப் புரியவில்லை
வேற்று மொழியாக இதயத்தைத் தாக்குது!
கூற்றவன் என்னைக் கட்டி அணைத்து
கற்ற அறிவையும் மெல்ல அறுக்கிறான்!


பிடிக்கும் என்று முத்தத்தால் கூறியவளே
நடிக்கும் உன்னை நம்பியது எனோ?



[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

துளி/DROP: 1926 ['காதல் சிறகினிலே']

https://www.facebook.com/groups/978753388866632/posts/32650780024570556/?

ஆயிரங்களில் ஒன்று

1 month 1 week ago

ஆயிரங்களில் ஒன்று

------------------------------

எப்படி மறைந்தார்கள் என்று தெரியாத

ஆயிரம் ஆயிரம் மனிதர்களில் 

ஒரு குடும்பத்தின் கதை இது

ஊரில் அழகான பெண்களில் அவர் ஒருவர்

தெரிந்தவர் தான்

பலர் கவனம் கொண்டிருந்தார்கள்

அந்த நாட்களில்

அடிக்கடி ஊரையே துலாவித் தேடும் 

இலங்கை இராணுவமும் காவல்துறையும்

அடிக்கடி ஊரில் கொன்றும் குவித்தது

ஒரு முறை 

அகப்பட்டவர்களை

ஒரு கான்கிரீட் கட்டடத்துக்குள் அடைத்து

அதற்கு குண்டு வைத்து அப்படியே கொன்றது

இன்னொரு முறை

எங்கள் கடற்கரையில் 

முழங்காலில் வரிசையில் இருக்கச் சொல்லி சுட்டுக் கொன்றது

நாட்டில் எங்கு தாக்குதல் நடந்தாலும்

எங்கள் ஊரையே திருப்பி அடித்தார்கள்

எங்கு கண்டாலும்

எங்களை இறக்கி

அடையாள அட்டை பார்த்து அடித்தார்கள்

ஊரே உயிர் காக்க சிதறி ஓடியது

கடலே தாயென்று வாழ்ந்தவர்கள்

அதைத் தாண்டி ஓடினர்

கடல் மேல் ஓடும் போது 

தாண்டு மாண்டு போனவர்களும் ஏராளம்

ஒரு நாள் இந்தப் பெண் அக்கரை போய்ச் சேர்ந்தார்

அங்கே உறவினர் ஒருவரை மணம் முடித்தார்

அந்த நாட்டில் நடந்த அனர்த்தம் ஒன்றுக்கும்

இந்த ஊரவர்களையே தேடித் தேடிப் பிடித்தார்கள்

அவர்கள் கொண்டு போன கணவரை

அவர்களே பிணமாக கொண்டு வந்து

அவரின் நடு வீட்டில் தூக்கினார்கள்

அந்தப் பெண்ணையும்

அவரின் மாமியையும்

விசாரணை என்று 

பின்னர் அவர்களில் யாரோ கொண்டு போனார்கள்

35 வருடங்களுக்கு மேல் ஆகியும்

விசாரணை இன்னும் முடியவில்லை

யார் எங்கே என்ன விசாரிக்கின்றார்கள் என்றும் 

எவருக்கும் தெரியாது.

புறநானூற்றுத்தாயின் இன்னுமொரு பரிமாணம் நீ.

1 month 2 weeks ago

புறநானூற்றுத்தாயின் இன்னுமொரு பரிமாணம் நீ.

 

என் அன்பான பர்வதகுமாரியே!

இன்று நீ எங்கே?

இன்று நீ இருந்திருந்தால்..

பர்வதகுமாரியே என்று விளித்த என்னை

நன்றாகவே ஏசியிருப்பாய்

இதற்குள் தான் உன் பெயர் உள்ளதே.

அதனால் இப்படி விளித்தேன்?

உனது ஆரம்ப காலக்கவிதை ஒன்றில்

உலவிய பிருதுவிராஜனும் சம்யுக்தாவும்

என் நினைவில் நிழலாடினார்கள்.

அதனால்த்தான் என் அன்பான தோழியே!

இப்படி விளித்தேன்.

இப்போது என்னை மன்னிப்பாய் என்று

எனக்கு நன்றாகவே தெரியும்.

ஏனென்றால் உன்னை எனக்கு தெரியும்.

வயதில் இளையவளென்றாலும்

எனக்கு தாயாகவும் நீ இருந்திருக்கின்றாய்.

நோயாளியாக ஆன அந்த நாட்களில்

பெற்ற பிள்ளையை அன்னை கவனிப்பது போல்

நீயும் பூமணியும்

என்னைத் தாங்கியதை எப்படி மறப்பேன்?

உனது இலக்கிpய ஆற்றலின் வெளிப்பாட்டின்

சிறு துளிதான்

அந்த  ஆரம்பகால பிருதுவிராஜனும் சம்யுக்தாவும்

அதன் பின் உன் படைப்பாற்றலின்

பல்மடங்கு வளர்ச்சியைப் பார்த்து

எத்துணை மகிழ்ச்சி அடைந்தோம்.

களத்தில் நின்று நீ படைத்த

போரிலக்கியப் படைப்புக்கள் 

புறநானூற்றில் இணைக்கப்படவேண்டியவை.

சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவள் நீ.

சோகங்களை உனக்குள்

இறுக்கமாகப் பூட்டிவைத்து

உன்னைச் சுற்றியிருந்தவர்களை

கலகலப்பாக சிரிக்க வைத்தவள் நீ.

இன்று எல்லோரையும் அழவைத்துவிட்டு

எங்கே சென்றுவிட்டாய்?

உன் நேசத்துக்குரியவனின் இழப்பை

உனக்குள் சுமந்து கொண்டு

இழப்புக்காக அழக்கூட தருணமின்றி

இறுதிவரை போராடினாய்.

உங்கள் வீரமகள்

தீரமுடன் வாழவேண்டும் என்பதற்காக

உன் அன்னையிடம் அந்த நிலவை

ஒப்படைத்துவிட்டு சென்றாயே.

உன் வீரத்தை ஈகத்தை

எப்படிச் சொல்வது?

புறநானூற்றுத்தாயின் இன்னுமொரு பரிமாணம் நீ.

தமிழினத்து வரலாற்றில் உன் பெயரும் அழிக்கப்படமுடியாதது.

 

மந்தாகினி

 

என்னை விட்டு விடுங்கள்.

1 month 2 weeks ago

என்னை விட்டு விடுங்கள்.

 

நான் சொன்னது என்ன?

இவர்கள் செய்வதுதான் என்னவோ?

இன்பம் துன்பம் கடந்த நிலையில்

எனது போதனைகள் இருந்தன.

கடவுளாக என்னை ஏற்கச் சொல்லவில்லையே?

 

எனது பெயரால் ஏனிந்தக் கொடுமைகள்?

அன்பைப் போதித்த என்னை

இப்படி அவமதிப்பது சரிதானா?

 

மனதை பக்குவப்படுத்தச் சொன்னேன்.

என்னை வைத்து இனவாதக் கொடுமைகளா?

தமிழர் நிலங்களைக் கைப்பற்ற

எனது பெயரில் சிலை வைப்பா?

நானோ ஆசைகளைத் துறந்தேன்

ஆனால் என்னை சொல்லி சொல்லியே

தமிழினத்தை அழிக்க நினைக்கிறார்களே

மனங்களை பண்படுத்தச் சொன்னேன்

தமிழரின் உரிமைகளை பறிக்க

என்னை பயன்படுத்துகிறார்களே.

இவர்களா என்னைப் பின்பற்றுகிறார்கள்?

 

உயிர்களிடத்தில் அன்பு காட்டத்தானே சொன்னேன்.

என் போதனைகள் வழி நடப்பதாகச் சொல்பவர்கள்

அடாவடித்தனமாக தமிழர் நிலங்களை பறிக்கிறார்களே/

 

காலம் காலமாமாக எனது  பெயரால் தானே

தமிழினப் படுகொலைகளைத் தொடர்கிறார்கள்.

இனி எனது பெயரால்

உங்கள் இனவாதக் கொடுமைகளைத்

தொடர்ந்திட வேண்டாம்

என்னை விட்டு விடுங்கள்.

 

 

மந்தாகினி

 

 

 

'காதல் சொல்லத் தூண்டாதோ?'

1 month 2 weeks ago

'காதல் சொல்லத் தூண்டாதோ?'

பெண்மையின் அழகில் பிரம்மனும் மயங்கினான்
கண்களின் அசைவில் நானும் தடுமாறினேன்
விண்ணில் வாழும் தேவதை இவளோ
மண்ணில் வந்தது என்னைத் தழுவவோ?

உதடு பிரித்து முத்துப் புன்னகை
உதடு பிரிக்காமல் பவளப் புன்னகை
உதடு சுழித்து கொல்லும் புன்னகை
உதடு கடிக்க உள்ளம் ஏங்காதோ?

மேனி எங்கும் சுவை தேடி அலையும்
இளம்முயல் குட்டிகள் என் இதழ்களோ?
குரல் அலையையும் இதய வாசத்தையும்
கடத்திவந்து காற்று என்னைப் போர்க்காதோ?

விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்து
பொங்கும் நட்பைக் காதலாய் மாற்றாதோ?
வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்து
அவளுக்கு காதல் சொல்லத் தூண்டாதோ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

'காதல் சொல்லத் தூண்டாதோ?'

https://www.facebook.com/groups/978753388866632/posts/32458742860440941/?

பனையின் கவலை!

1 month 2 weeks ago

பனையின் கவலை!

**********************

என் மண்ணைப் பற்றி

பிடித்ததனால்

மரமாக நிற்கின்றேன்

பிள்ளைகளை

மாடுழக்கி தோலுரித்து

பற்களால்- உதிரக்கழி

உறிஞ்சி தூக்கியெறிய

வந்தவனோ

பனம் பாத்தியென்று

மண்தோண்டி

மூடிச்சென்றான்.

நாளை வடலியாக

வளருமென்ற

நம்பிக்கையில்தான்

நான் வாழுகின்றேன்.

-பசுவூர்க்கோபி.

பெரும்பான்மைக்கு ஒரு கடிதம்!

1 month 3 weeks ago

கவலை தருகிறது!

**********************

பெளவுத்தத்தை வணங்கும்-அன்பு

பெரும்பான்மை மக்களே!

புத்தர் போதித்ததெல்லாம்

அறமும்,அகிம்சையும் தானே.

அடாவடித்தனமும்,அரசியலுமா?

புத்தரின் புனிதம் கெடுமளவில்-சில

காவியுடையணிந்தவர்களை

எப்படி அனுமதிக்கீறீர்கள்.

ஒற்றுமையான நாட்டில் தான்

ஒவ்வொரு மனித இனமும்

வாழநினைப்பது தப்பா?

இலங்கையென்ற அழகிய நாடை

கெடுப்பதற்கென்றே- சில

அரசியல் வாதிகளும்,

அரசடி வாதிகளும்

தங்களின் சுகபோக வாழ்வுக்காகவே

இனங்களை பிரித்து

பிணங்களை தின்ன நினைப்பது

உங்களுக்கு புரியவில்லையா?

மதங்களெல்லாம் மனிதத்துள்ளடங்கும்.

புத்தபெருமானே இன்று பார்த்தால்

இரத்தக் கண்ணீர் வடிப்பார்.

எந்த அரசாங்கம் வந்தாலும்

இவர்களுக்கு அடங்குவதென்றால்

ஜனாதிபதி,பிரதமர் என்ற

அரசியலமைப்புத்தான் ஏனோ?

அறிவார்ந்த சிங்கள மக்களே!

சிந்தியுங்கள்.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

18.11.2025

Checked
Fri, 01/09/2026 - 14:54
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/