அரசியல் அலசல்

விட்டுக்கொடுப்பு அரசியல்  செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள் — வீரகத்தி தனபாலசிங்கம் —

5 hours 48 minutes ago

விட்டுக்கொடுப்பு அரசியல்  செய்யப்பழகும் தமிழ்க்கட்சிகள்

June 23, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் —

உள்ளூராட்சி தேர்தல்களை பொறுத்தவரை, தென்னிலங்கையில்  எதிரணி அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் மூன்று ஒற்றுமைகளை காணக்கூடியதாக இருந்தது.  இரு தரப்புகளுக்கும்  பொது அரசியல் எதிரியாக ஆளும் தேசிய மக்கள் சக்தி விளங்குகிறது என்பது முதல் ஒற்றுமை. ஆளும் கட்சியை எதிர்த்து இரு முனைகளிலும் கட்சிகளினால்  ஒன்றுபட்டு களமிறங்க முடியாமல் போனமை இரண்டாவது ஒன்றுமை.  தேர்தல்கள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்ட நிலையில்,  உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு மற்றைய கட்சிகளின் ஆதரவை நாடி பேச்சுவார்த்கைளை நடத்துவது மூன்றாவது ஒற்றுமை. 

தேசிய மக்கள் சக்தியும்  அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய  உள்ளூராட்சி சபைகளை தவிர, கூடுதல் ஆசனங்களைப் பெற்ற தனியான கட்சியாக விளங்கும் பெருவாரியான சபைகளில் நிருவாகங்களை அமைப்பதில் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது.  கடந்தகால  தவறான ஆட்சிமுறைக்கும் ஊழலுக்கும் பொறுப்பானவை என்று தாங்கள் அடையாளப்படுத்திய கட்சிகளுடன் சேர்ந்து நிருவாகங்களை அமைப்பதில் தேசிய மக்கள் சக்திக்கு பிரச்சினை இருக்கிறது. ஆனால்,  சுயேச்சைக் குழுக்களில் இருந்து தெரிவான உறுப்பினர்களின் ஆதரவை இயன்றவரை நாடுவதில் அவர்களுக்கு எந்த அசௌகரியமும் இல்லை.  தேர்தல் அரசியலில்  ‘பிரத்தியேகமான’ கட்சியாக தங்களைக் காட்டிக்கொள்ளும் பழைய போக்கையே தொடர்ந்து கடைப்பிடிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலை ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) வின் தலைவர்கள் நாளடைவில் புரிந்துகொள்வார்கள்.

தேசிய மக்கள் சக்தி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையை  விடவும் எதிர்க்கட்சிகளும்  சுயேச்சைக் குழுக்களும் கைப்பற்றிய ஆசனங்களின் கூட்டு  எண்ணிக்கை அதிகமானதாக  இருக்கும் உள்ளூராட்சி சபைகளில்  சாத்தியமான அளவுக்கு ஒன்றுபட்டு  நிருவாகங்களை அமைப்பதற்கு முக்கியமான எதிர்க்கட்சிகள் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் நிகழ்வாக, தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் ஒன்றுபட்டு  நிருவாகங்களை அமைப்பதற்கு ஒரு இணக்கப்பாட்டை கண்டிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் கடந்த வாரம் அறிவித்தன. 

 கடந்த வியாழக்கிழமை கூட்டாக நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் இதை தெரிவித்த  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம், பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் லசந்த அழகிய வண்ண மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துக்கோரள ஆகியோர் நான்கு பிரதேச சபைகளில் ஏற்கெனவே நிருவாகங்களை அமைத்திருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் மேலும் பல சபைகளை   தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவதாகவும் கூறினர். குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சி நெறிகெட்ட வழிமுறைகளில் முயற்சிகளை முன்னெடுப்பதாக  அவர்கள் குற்றஞ்சாட்டுகிறாார்கள்.  

தேசிய மக்கள் சக்தியை எதிர்த்துநிற்க வேண்டும் என்பதை தவிர,  இந்த நான்கு கட்சிகளுக்கும் இடையில் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. கொள்கைகளைப் பொறுத்தவரை,  இவற்றுக்கு இடையில் குறைந்தபட்ச ஒற்றுமையாவது இருந்திருந்தால், தேர்தலிலேயே ஒன்றிணைந்து ஆளும் கட்சிக்கு எதிராக களமிறங்கியிருக்க முடியும். உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தரமான பொதுச்  சேவையை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே ஒன்றிணைந்திருப்பதாக இந்த கட்சிகளின் தலைவர்கள் கூறுவதை மக்கள் நம்பவா  போகிறார்கள்? கூட்டு முயற்சியினால் இவர்களால் எத்தனை சபைகளின் நிருவாகங்களை கைப்பற்ற முடியும் என்பதை எதிர்வரும் நாட்களில் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். 

இதே போன்றே வடக்கு, கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தேசிய மக்கள்  சக்தி எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் நிருவாகத்தை கைப்பற்றுவதை தடுப்பதில் தமிழ்க் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. தென்னிலங்கையில் எதிரணி கட்சிகளுக்கு உள்ளதைப் போன்றே தேசிய மக்கள் சக்தி தமிழ் கட்சிகளுக்கும் பொது அரசியல் எதிரியாக விளங்குகிறது. ஆனால், அந்த கட்சிகள்  உள்ளூராட்சி  தேர்தல்களில் ஒன்றுபட்டு போட்டியிடுவதை அவற்றுக்கிடையிலான “பாரம்பரியமான” கட்சி அரசியல் வன்மம் தடுத்துவிட்டது. தலைவர்களுக்கு இடையிலான ஆளுமைப் போட்டியும் இதற்கு பங்களிப்பு செய்தது

பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தி  பெற்ற முன்னென்றும் இல்லாத வகையிலான வெற்றியை தங்களது அரசியல் இருப்புக்கான அச்சுறுத்தலாக நோக்கிய தமிழ்க்கட்சிகள்  உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களின்போது தனித்தனியாக போட்டியிட்டாலும் பிறகு சபைகளின் நிருவாகங்களை அமைப்பதில் ஒன்றுபட்டுச் செயற்படப்போவதாக தமிழ் மக்களுக்கு கூறின.   ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து இந்த கட்சிகள்  மீண்டு வரக்கூடியதாக அந்த மக்களும் வாக்களித்தார்கள். ஆனால், மக்களுக்கு கூறியதைப் போன்று  உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதில் பிரதான தமிழ்க் கட்சிகளினால் அரசியல் விவேகத்தையும் பக்குவத்தையும் வெளிக்காட்ட முடியவில்லை. 

உள்ளூராட்சிகளின் நிருவாகங்களை அமைக்கும் செயற்பாடுகளை தமிழ்க்கட்சிகள் இரு முகாம்களாக நின்று ஏட்டிக்குப் போட்டியாக முன்னெடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்படும் கூட்டணியுமே அந்த இரு முகாம்களுமாகும். 

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இதுவரை காலமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரிலேயே இயங்கி வந்தது. பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிறகு தனது பாரம்பரியமான போக்கை மாற்றி பொன்னம்பலம் கூட்டணி அமைப்பதில் நாட்டம் காட்டினார். (அவரது கடந்த கால அரசியலுடன் ஒப்பிடும்போது மற்றைய தமிழ் கட்சிகளுடன் சேர்ந்து இயங்க வேண்டும் என்று அவருக்கு ஏற்பட்ட மனமாற்றத்தில்  வரவேற்கத்தக்க அம்சம் ஒன்று நிச்சயமாக இருக்கிறது)  உள்ளுராட்சி தேர்தல்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பேரவை என்று அழைக்கப்பட்ட அவர்களின் கூட்டணி தேர்தல்களுக்கு பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் சேர்த்துக் கொண்டது. 

பொன்னம்பலமும் அவரைச் சார்ந்தவர்களும் இதுநாள்வரை தாங்கள்  படுமோசமாக விமர்சித்து  வந்த (முன்னாள் தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களின்)  கட்சிகள் சிலவற்றை  அரவணைப்பதில் எந்தவிதமான அசௌகரியத்தையும் எதிர்நோக்கவில்லை.  உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்கு அந்த கட்சிகளின் சார்பில் தெரிவான உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதே நடைமுறை ரீதியான உடனடி நோக்கமாக இருந்த போதிலும், தாங்கள் ஒரு “கொள்கை அடிப்படையிலான கூட்டணியை”  அமைத்திருப்பதாக ஒரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள். 

தமிழரசு கட்சியை பொறுத்தவரை,  அது தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருப்பதை அந்த கட்சிக்குள் அவருக்கு எதிராக இருக்கும் அணியினரால் மாத்திரமல்ல, மற்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களினாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். தமிழரசு கட்சி கூட்டணிகளை அமைப்பதில் அக்கறை காட்டவில்லை.  உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்கு தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் பொதுச் செயலாளர் சுமந்திரனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுடன் மாத்திரமல்ல, பொன்னம்பலத்துடனும் பேச்சுவார்த்தைகளைை  நடத்தினார்கள். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே அவர்களினால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை. 

இதையடுத்து தமிழரசு கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவை நாடியது. சிவஞானம் தேவானந்தாவைச் சந்தித்துப் பேசுவதற்கு அவரது கட்சியின் அலுவலகத்துக்கு தானே நேரடியாகச் சென்றார். அது ஒரு “பாவச்செயல்” என்பது போன்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

போர்க்காலத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக வெவ்வேறு கட்டங்களில்  அரசாங்கங்களின் பக்கமாக நின்று அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் செயற்பட்ட வெவ்வேறு தமிழ்  இயக்கங்களை  (அவை இப்போது அரசியல் கட்சிகள்) “தீண்டத்தகாதவை” என்று அடையாளப்படுத்திய ஒரு அரசியல் கலாசாரத்தில் தற்போது ( அரசியல் அனுகூலங்களுக்காக)  ஒரு மாறுதல் ஏற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கிறது. இவற்றில் எந்த கட்சியுடன் கூட்டுச் சேருவது, எந்தக் கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பது என்பதில் வேறுபாடுகளைக்  காண்பதற்கான அளவுகோல் என்ன என்ற ஒரு கேள்வி எழுகிறது. 

அவர்கள்  தேசியவாதத்தின்  பக்கம் நிற்கிறார்கள்; இவர்கள் தேசியவாத நீக்க அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்கின்ற வகையிலான விமர்சனங்களை அல்லது சாக்குப் போக்குகளை  முன்வைப்பவர்கள் தாங்கள் கூறுகின்ற வியாக்கியானமே “உண்மையான தேசியவாதம்” என்று தங்களுக்குள் தாங்களே திருப்திப்பட்டுக்  கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த காலப் போராட்டங்களில் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத அரசியல்வாதிகள் போராளிகளின்   தியாகங்களை வெறுமனே உதட்டளவில் போற்றுவதன் மூலம் மாத்திரம்  ‘புடம்போட்ட  தேசியவாதிகளாக’ தங்களை உரிமை  கொண்டாடுவது எவ்வாறு பொருத்தமானதாக இருக்கும்?

தேசியவாதம் என்பது ஒரு தேசத்தின் அரசியல் சுதந்திரத்தின் மீதான நம்பிக்கைதான். அதை அடைவதற்கான வழிமுறைகள் என்று வரும்போது காலகட்டங்களையும் அகச்சூழ்நிலையையும் புறச்சூழ்நிலையையும் கருத்தில் எடுத்தே எந்தவொரு தேசமும்  தேசிய இனமும் அடிப்படை அபிலாசைகளை சமரசம் செய்யாமல் அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உலகில் அரசியல் சுதந்திரத்தை  அடைந்த  தேசங்களினதும் இனங்களினதும் வரலாறு இந்த உண்மையைப் போதிக்கிறது. சூழவுள்ள நிலைவரங்களை கருத்தில் எடுக்காமல் வெறுமனே கோட்பாடுகளில் வரட்டுப் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நினைவுகளுடன் மாத்திரம் மக்களைப் பிணைத்துவைத்திருக்க முயற்சிப்பதும் எந்தப் பயனையும் தராது என்பதே எமக்கு வரலாறு தந்த படிப்பினையாகும். 

இதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தங்களது  அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு முதலில் மூன்று தசாப்தங்கள் அகிம்சைவழிப் போராட்டத்தையும் அடுத்த மூன்று தசாப்தங்கள் ஆயுதப் போராட்டத்தையும் நடத்திய இலங்கை தமிழ் சமுதாயம் இன்று எந்த இடத்தில் நிற்கிறது என்பதை எமது அரசியல்வாதிகள் புரிந்துகொள்வது அவசியமானது.

 தாங்கள் முன்வைக்கின்ற கோட்பாடுகள்,  கோரிக்கைகளை அடைவதற்கான வழிமுறைகள் பற்றிய எந்தவிதமான நடைமுறைச் சாத்தியமான தந்திரோபாயமும் இல்லாமல், கடந்த நூற்றாண்டின்  பின்னரைப் பகுதியில்  வெறுமனே உணர்ச்சிவசமான அரசியலைச் செய்த மிதவாத தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிறந்த படிப்பினைகளாகும். அந்த மிதவாத தலைவர்கள் பாராளுமன்றத்திலாவது முன்னுதாரணமான பங்களிப்பைச் செய்தார்கள். 

தற்போது தமிழரசு கட்சி டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியினதும் வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கட்சியினதும் ஒத்துழைப்புடன் ஒரு முகாமாகவும் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை இன்னொரு முகாமாகவும் நின்று கொண்டு வடக்கில் உள்ளூராட்சி நிருவாகங்களை கைப்பற்றும் போட்டியில் இறங்கியிருக்கின்றன. 

உள்ளூராட்சி சபைகளில் தலைவர், துணைத் தலைவர் தெரிவுகளை ஏதோ எதிரியின் முகாம்களை சண்டையிட்டுக் கைப்பற்றுவது போன்று அரசியல்வாதிகள் அறிவிப்புகளைச் செய்கிறார்கள். அது மாத்திமல்ல, தமிழ்க் கட்சிகளின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் ஏட்டிக்குப் போட்டியாக செய்யும் பதிவுகள் தமிழ்த் தேசியவாதம் இணைய வெளியில் எந்தளவுக்கு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.

இன்று தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்காக செய்துவரும் விட்டுக் கொடுப்புக்கள் நாளடைவில் தேசிய இனப்பிரச்சினைக்கான குறுகியகால, நீண்டகால தீர்வுகளை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கு வழிவகுக்குமாக இருந்தால் பயனுறுதியுடையதாக அமையும். 

அரசியலில் விட்டுக்கொடுப்பு (Compromise)  என்பது எதிரெதிரான கட்சிகள் பரஸ்பரம் சலுகைகளைச் செய்வதன் மூலம் இணக்கப்பாடு ஒன்றை அடைவதற்கு தேவையான மிகவும் முக்கியமான செயன்முறையாகும். அது முழுநிறைவான கருத்தொருமிப்பை  சாதிப்பதாக அமையாது. அத்தகைய கருத்தொருமிப்பு மிகவும்  அரிதாகவே சாத்தியமாகும். ஆனால், சம்பந்தப்பட்ட கட்சிகளின்  நலன்களை ஓரளவுக்கேனும் நிறைவு செய்வதற்கு  உதவக்கூடிய சூழ்நிலைக்கு வழிவகுக்கும். மாறுபட்ட  நோக்குகளையும்  முன்னுரிமைகளையும் அங்கீகரித்துக்கொண்டு ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வருவதே உண்மையான விட்டுக்கொடுப்பாகும்.

உள்ளூராட்சி நிருவாகங்களை அமைக்கும் விடயத்தில் தமிழ்க்கட்சிகள் அவற்றின் தனித்தனியான  நலன்களை மனதிற் கொண்டுதான்    விட்டுக்கொடுப்பு  அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த விட்டுக்கொடுப்பு தற்போது தெரிவாகியிருக்கும் புதிய உள்ளூராட்சி சபைகளின் நான்கு வருட பதவிக்காலம்  நிறைவு பெறும் வரை  நீடித்து தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை  பயனுறுதியுடைய முறையில் நிறைவேற்றுவதற்கு உதவினால் அதுவே பெரிய விடயமாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இப்போதுதானே விட்டுக்கொடுப்பு அரசியலை பழகத் தொடங்கியிருக்கிறார்கள். 

https://arangamnews.com/?p=12111

இலங்கையில் இதுவரை 20 மனித புதைகுழிகள் : செம்மணி புதைகுழியின் மர்மம் துலங்குமா?

1 day 19 hours ago

Published By: PRIYATHARSHAN

19 JUN, 2025 | 04:06 PM

image

வீ. பிரியதர்சன்

உங்கள் பிள்ளை, உடன்பிறந்தவர், கணவன், மனைவி அல்லது பெற்றோர் என ஒரு அன்புக்குரியவர் காணாமல்போனதை கற்பனை செய்து பாருங்கள், அவர்களை  மீண்டும் கொண்டுவர அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வேண்டுகோள்கள் செவிடர் காதுகளில் விழுகின்றன. அரசாங்கங்களும் புரட்சிகளும் வந்துபோயின. அனைத்தும் நீதியை உறுதியளித்தன. ஆனால் இறுதியில் அந்த நீதியை வழங்கத் தவறிவிட்டன. ஆயினும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் 3 மூவாயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர் நீதிக்காக. 

IMG_20250605_103810.jpg

ஆம், இந்நிலையிலேயே 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பாரிய மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணத்தின் அரியாலைப் பகுதியிலுள்ள செம்மணி - சிந்துப்பாத்தி பகுதி அறிவிக்கப்பட்டது. அங்கு 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் அங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கும் போது மேலும் பல எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

1000046433.jpg

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட  19 எலும்புக்கூடுகளில் 3 பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள், மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம். செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள் மூலம்  இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர்  ராஜ்சோமதேவ கூறுகிறார்.

1996 ஆம் ஆண்டில் கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் தண்டனை பெற்ற ஒரு இராணுவ சிப்பாயால் 1998 ஆம் ஆண்டில் முதன் முதலில் அம்பலப்படுத்தப்பட்டது செம்மணி புதைகுழி. இதையடுத்து 1999 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற ஆகழ்வின்போது 15 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றில் சில எழும்புக்கூடுகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இருப்பினும் அந்தக்காலப்பகுதியில் நீதி நிறுத்தப்பட்டது.

பல ஆண்டுகளாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் முக்கியமாக தாய்மார்கள் மற்றும் கணவனை தொலைத்த மனைவிமார்கள் தங்கள் காணாமல்போன அன்புக்குரியவர்களின்  புகைப்படங்களை ஏந்தி நீதி கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அண்மையில் செம்மணியில் உள்ள சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் முன் போராட்டத்தை நடத்திய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர், சர்வதேச மேற்பார்வை மற்றும் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதுடன் இது ஒரு தனியான சம்பவமல்ல. இது குறித்த விசாரணைகள் மற்றும் அகழ்வுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய முழு உண்மையையும் வெளிக்கொணர உதவும்" என கூறினர்.

43__4_.jpg

இந்நிலையில், “ செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவது அவசியம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு நீதியையும் உண்மையையும் வழங்கும் நோக்கமாக அமைய வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

JDS1.png

மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் (CHRD), காணாமல் போனவர்களின் குடும்பங்கள் (FoD), இலங்கை ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள்  (JDS), கொழும்பு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் - இலங்கை (ITJP) ஆகியன இணைந்து கடந்த 2023 இல் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களில், உடல்கள் புதைக்கப்பட்ட பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதாகவும் ஆனால் இதுவரை 20 இடங்களில் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து பகுதியளவில் மனித எச்சங்கள், எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இன்றுவரை தங்கள் அன்புக்குரியவர்களை தொலைத்த எந்தவொரு குடும்பமும் மனித எச்சங்களை பெறவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

JDS2.png

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் மௌனமாக இருக்கின்றமை வலிகளை ஆழமாக்குவதுடன் இலங்கையின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான வாய்ப்பை அச்சுறுத்துவதாக அமைகின்றது. எனவே அரசாங்கம் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கி, சர்வதேச தடயவியல் தரங்களை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்ற நிறுவனங்களை இயங்க வைப்பதன் மூலம் உண்மைகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையை கட்டியெழுப்பி, கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்.

கடந்த 1971 மற்றும் 1987, 1989 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சிகளின் போது, தெற்கிலுள்ள சிங்களக் குடும்பங்கள் சூரியகந்த மற்றும் மாத்தளை புதைகுழிகளில் இழந்த அன்புக்குரியவர்களை நினைத்து வேதனையையை எதிர்கொண்டனர். அண்மையில் சர்வதேச தொலைக்காட்சி நேர்காணல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த படலந்த விவகாரம் பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியது. ஆனால் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு எந்தப்பொறுப்பும் அளிக்கப்படவில்லை. 

1000046438.jpg

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என நாம் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அழுதோம். அப்படியானால் நாம் ஏன் செம்மணியிலிருந்து விலகிச்செல்கின்றோம் ? கடந்த காலத்தை எதிர்கொள்வது பிரிவினை அல்ல, அது ஒற்றுமைக்கான பாதையாகும். நல்லிணக்கம் என்பது எமது கடந்த காலத்தின் கொடூரங்களை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான எமது கேடயம், மேலும் பொருளாதார மீட்சிக்கான பாதையும் கூட. நல்லிணக்கம் தான் முன்னோக்கிச் செல்லும் பாதை, அத்துடன் கடந்த கால தவறுகளுக்கு பொறுப்பேற்பது உண்மையைத் தேடுவதற்கும் உண்மையான குணப்படுத்தலுக்கும் இன்றியமையாதது.

https://www.virakesari.lk/article/217915

எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும் - நிலாந்தன்

1 day 22 hours ago

எரிபொருள் வரிசையில் நின்ற மக்களும் தொங்கு சபைகளும் - நிலாந்தன்

image_298e2c97ab-111111.jpg

கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தையில்,இஞ்சி வாங்கினேன். ஒரு கிலோ 3000 ரூபாய். ஏன் அவ்வளவு விலை என்று கேட்டேன். “இஸ்ரேலும் ஈரானும் மோதத் தொடங்கி விட்டன. அதனால் விலையை ஏற்றி விட்டார்கள்” என்று வியாபாரி சொன்னார். “மேற்காசியாவில் இருந்தா எங்களுக்கு இஞ்சி வருகிறது?” என்று கேட்டேன். ”எங்கிருந்து வருகிறதோ தெரியாது. ஆனால் சண்டை தொடங்கியதால் விலை கூடிவிட்டது என்று மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள்” என்று அவர் சொன்னார்.

அதே நாளில் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்து நின்றார்கள். மேற்காசியாவில் போர் தொடங்கியதால் எரிபொருள் தட்டுப்பாடு வரலாம் என்ற ஊகம்;பயம்; தற்காப்பு உணர்வு போன்றவைகள் காரணமாக எரிபொருளை நிரப்புவதற்குச் சனங்கள் முண்டியடித்தார்கள். கடந்த திங்கட்கிழமை மட்டுமல்ல இதற்கு முன்னரும்  மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் ஏற்படும்  போது யாழ்ப்பாணத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இவ்வாறு நீண்ட வரிசைகளைக் காண முடிந்தது.

யாழ்ப்பாணத்தவரின் முன்னெச்சரிக்கை உணர்வும் ரத்தத்தில் ஊறிய சேமிப்புக் கலாச்சாரமும்தான் அதற்குக் காரணமா? முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு சமூகம் அவ்வாறு முன்னெச்சரிக்கையோடு சில விடயங்களை ஊகித்து-அந்த ஊகங்கள் பிழையாக இருந்தாலும் பரவாயில்லை- தற்காப்பு உணர்வோடு சிந்திப்பது நல்லது. யாழ்ப்பாணத்தின் சேமிப்புக் கலாச்சாரம் என்பது தற்காப்பு உணர்வின் அடிப்படையானது. அரசற்ற ஒரு மக்கள் கூட்டம் தற்காப்பு உணர்வின் அடிப்படையில் சிந்திப்பது நல்லது.

ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால், இவ்வளவு முன்னெச்சரிக்கை உணர்வுடைய;தற்காப்பு உணர்வுடைய ஒரு மக்கள்கூட்டம் தமது பிரதிநிதிகளைத் தெரியும் பொழுது எந்த அடிப்படையில் முடிவெடுக்கின்றது?

படித்த பெரும்பாலான யாழ்ப்பாணத்தவர்களைக் கேட்டால், கணிதம் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைத்தான் உயர்வான பாடங்கள் என்று கூறுவார்கள். ஆனால் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது தமிழ் மக்கள் கணிதமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சிந்தித்து முடிவெடுக்கின்றார்களா?

லண்டனைச் சேர்ந்த ஒரு மருத்துவர்  சில நாட்களுக்கு முன் முகநூலில் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். மேற்காசியாவில் நிகழும் போர் தொடர்பான காணொளிகளைப் பற்றிய குறிப்பு அது. “படிச்ச பெரிய மனிதர்கள் என்கிறார்கள். டொக்டர், எஞ்சினியர்கள் என்கிறார்கள். அதுகூடப் பரவாயில்லை ,சொப்ட்வெயார் எஞ்சினியர் என்று புரொபைலில் போட்டு வச்சிருக்கானுகள். ஆனால் இப்படியான AIபடங்கள் (செயற்கை நுண்ணறிவின் மூலம் தயாரிக்கப்பட்ட படங்கள்) அதுவும் AI படங்கள் என்று இலகுவாக கண்டு பிடிக்கக்கூடிய படங்களையும், வீடியோக்களையும் பகிர்கிறார்கள்….என்னதான் படித்தாலும் பொதுப்புத்தி இல்லை. அடுத்தது  தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்துகொள்ளும் ஆர்வமில்லை.”

அவர் கூறுவதுபோல தமது  பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது தமிழ் மக்களில் எத்தனை பேர் பொதுப் புத்தியைப் பயன்படுத்துகின்றார்கள்? ஒரு பக்கம் கணித,விஞ்ஞான ஒழுக்கங்களைப் போற்றும் ஒரு சமூகம், பூகோள அரசியலில் நிகழும் மாற்றங்களை வைத்து தற்காப்பு உணர்வுடன் சிந்திக்கும் ஒரு சமூகம்,ஆனால் உள்நாட்டில் தனது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொழுது  அவ்வாறு அறிவுபூர்வமாக,தீர்க்கதரிசனமாகச் சிந்தித்து முடிவெடுக்கின்றதா?

509348876_24889420893979933_663493669303

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை எந்த அடிப்படையில் தெரிவு செய்தார்கள்? கடந்த மாதம் நடுப்பகுதியளவில் மானிப்பாய் அந்தோணியார் கோவிலில் நடந்த ஒரு மக்கள் சந்திப்பில் இந்த கேள்வியை வளவாளர் அங்கு வந்திருந்தவர்களிடம் கேட்டார். பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்,உள்ளூர் உணர்வுகளை மதித்து வாக்களித்ததாக.”எமது ஊரவர்; எமக்கு வேண்டியவர்; எமது இனசனம்;எமதுசமயம்;எமது சாதி; எமக்கு உதவுபவர்”…போன்ற உள்ளூர்  உணர்வுகளின் அடிப்படையில்தான் தமிழ்மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

அதேசமயம் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது எந்த அடிப்படையில் அதைச் செய்தன? முக்கியமாக மூன்று அளவுகோல்கள் அங்கே இருந்தன. முதலாவது அளவுகோல், அவர் உள்ளூரில் வெல்லக்கூடியவராக இருக்க வேண்டும். இரண்டாவது அளவுகோல், அவர் கட்சித் தலைமைக்கு விசுவாசமானவராக இருக்க வேண்டும். கட்சித் தலைமையின் சொல் கேட்டு நடப்பவராக இருக்க வேண்டும். மூன்றாவது அளவுகோல்-இது ஒரு விதத்தில் ஒரு சட்ட ஏற்பாடும் கூட-ஒரு தொகுதி வேட்பாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.

இந்த மூன்று அளவுகோள்களிலும் எனது கட்டுரைகளில் நான் திரும்ப திரும்ப கூறுவதுபோல,கீழிருந்து மேல் நோக்கிய தேசியப் பண்புமிக்க உள்ளூர்த் தலைமைகளை வார்த்தெடுக்க வேண்டும் என்ற கட்சிகடந்த தமிழ்த் தேசியத் தரிசனம் எத்தனை கட்சிகளிடம் இருந்தது?

வாக்களித்த  மக்களும் தேசியப் பண்புமிக்க உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று கருதி வாக்களிக்கவில்லை.  வேட்பாளர்களைத் தெரிவு செய்த கட்சிகளும் கீழிருந்து மேல் நோக்கிய உள்ளூர் தலைமைகளைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற தரிசனத்தோடு அதைச் செய்யவில்லை.

மிகச் குறைந்தளவு விதிவிலக்குகளைத்தவிர இப்போதுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் எத்தனை பேர் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல தமிழ் மக்களின் புத்திக் கூர்மையை; தற்காப்பு உணர்வை; எதிர்காலத்தை நோக்கிய முன்னெச்சரிக்கை உணர்வைப் பிரதிபலிக்கிறார்கள்?

அண்மை நாட்களாக புதிய சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இடையே நடக்கும் மோதல்களும் ரகசியப் பேரங்களும் ரகசிய வாக்கெடுப்புகளும் எதைக் காட்டுகின்றன ?அது தேசத்தைத்  திரட்டும் அரசியலா?அல்லது கட்சி அரசியல் போட்டியா? மிகக்குறிப்பாக அவை தமிழரசுக் கட்சிக்குள் உள்ள  முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன. கட்சியின் மத்திய குழுவுக்கு விசுவாசமாக இருப்பதா? அல்லது தேசத் திரட்சிக்கு விசுவாசமாக இருப்பதா ? என்ற  கேள்வி எழும் பொழுது உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் சிறு தொகையினர் தமது கட்சித் தலைமைக்கு விசுவாசமாக முடிவெடுக்கவில்லை. இந்த விடயத்தில் தமிழ்த் தேசியப் பேரவை தந்திரமாகக் காய்களை நகர்த்தி சில சபைகளைக் கைப்பற்றியிருக்கிறது. அதேசமயம் இந்த நகர்வுகள் தமிழ்த் தேசிய பேரவைக்கும் சுமந்திரன் அணிக்கும் இடையிலான முரண்பாடுகளை மேலும் ஆழமாக்கக் கூடியவை. சுமந்திரன் அணி எதிர் காலத்தில் பழிவாங்கும் உணர்வோடு சபைகளைக் கையாளும். அது பிரதேச சபைகளை நிர்வகிப்பதில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும். பிரதேச சபைகளை ஸ்திரமாக நிர்வகிப்பது சவால்களுக்கு உள்ளாகலாம். வென்ற கட்சிகளும் வெல்லாத கட்சிகளும் முகநூலில் மோதிக்  கொள்ளும் காட்சிகளைப் பார்த்தல் அப்படித்தான் சிந்திக்க வேண்டியுள்ளது. நாடு பிடிக்கப் புறப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் பிரதேச சபைகளைப் பிடிப்பதற்கு அடிபடும் காட்சி ரசிக்கத்தக்கதாக இல்லை.

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான பிடுங்குப்பாடு தனக்குச் சாதகமானது என்று தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது. தேசிய மக்கள் சக்தி தமிழ்ப் பகுதிகளில் இறுதி வாக்கெடுப்பின்போது நடுநிலை வகித்ததாகக் கூறுகிறது. ஆனால் அவர்கள் வாக்கெடுப்பில் நடுநிலைமை வகித்தமை என்பது தந்திரமானது. தனக்குத் தேவை என்று கருதிய சபையில், குறிப்பாக தையிட்டி விகாரை அமைந்திருக்கும் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ரகசிய வாக்கெடுப்பைக் கேட்டது.

மேலும், ஏனைய சபைகளில் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதில் குழப்பம் ஏற்பட்டால் தமிழ்க் கட்சிகள் அதை இனமுரண்பாட்டுக்கூடாக வியாக்கியானப்படுத்தும். மாறாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டால் தமிழ்க் கட்சிகள் தாங்களே தங்களுக்குள் மோதி சபைகளைக் கொட்டிக் குலைக்கும். அதைவிட முக்கியமாக இதுவரை காலமும் யாரோடு கூட்டுச்சேர மாட்டோம் என்று கூறி வந்தார்களோ அவர்களோடு கூட்டுச்சேர அல்லது அவர்களுடைய ஆதரவை மறைமுகமாகப் பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அவ்வாறு இதுவரை காலமும் தாங்கள் துரோகிகள் என்று பழித்தவர்களின் ஆதரவைக் கேட்கும் கட்சிகளை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் விதத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கருத்துத் தெரிவித்து வருகிறார்.

ஒருபுறம் அரசாங்கம் தமிழ்க் கட்சிகளை குறிப்பாக தமிழரசுக் கட்சியை வாக்காளர்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்னொருபுறம் தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே மோதி உள்ளூராட்சி சபைகளை போட்டுடைக்கும்போது தமிழ்மக்கள் அக்கட்சிகளின் மீது வெறுப்படைந்து, சலிப்படைந்து தேசிய மக்கள் சக்தியை நோக்கித் திரும்புவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடந்ததுபோல்.ஏன், உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திதானே இரண்டாம் இடத்தில் நிற்கின்றது?

தேசிய மக்கள் சக்தி அப்படியொரு எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஒரு பின்னணிக்குள் தமிழ்க் கட்சிகள் எல்லா விதமான முரண்பாடுகளுக்கும் அப்பால் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசிய நிர்வாகத்தை பலப்படுத்துவது என்ற அடிப்படையில் முடிவெடுத்தால் மட்டும்தான் உள்ளூர்ப் பொருளாதாரத்தை தமிழ்த் தேசியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகக் கட்டி எழுப்பலாம்; உள்ளூர்த் தலைமைகளை தேசியப் பண்புமிக்கவர்களாக வார்த்து எடுக்கலாம். இல்லையென்றால் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான, மறைந்த பசுபதிப்பிள்ளை ஒருமுறை மாகாண சபையில் கூறியதுபோல “நந்தவனத்து ஆண்டிகள் போட்டுடைத்த தோண்டிகளாக”உள்ளூராட்சி சபைகள் மாறக்கூடுமா?

https://www.nillanthan.com/7466/

ஜேவிபி செம்மணிக்குப் பொறுப்புக் கூறுமா? நிலாந்தன்.

2 days ago

Questen.png?resize=750%2C375&ssl=1

ஜேவிபி செம்மணிக்குப் பொறுப்புக் கூறுமா? நிலாந்தன்.

இம்மாத இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும் பொழுது செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. அதை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள செயற்பாட்டு அமைப்புக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றன.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வரப் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் கடந்த மாதம் 22 ஆம் திகதி சுமார் 35 தமிழ் குடிமக்கள் அமைப்புகள் இணைந்து ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதின.அதன் விளைவாக ஐநா அலுவலர்களுக்கும் தமிழ் குடிமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்ட்து.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்குள் வரக்கூடாது என்று குடிமக்கள் அமைப்புக்கள் கேட்டிருக்கின்றன. ஏனென்றால், இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐநாவின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.உள்நாட்டு விசாரணையைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறி வருகிறது. ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் “சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான கட்டமைப்போடு” இந்த அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. அக்கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், ஐநா தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளாத, ஐநா மனித உரிமை அலுவலர்களை நாட்டுக்குள் வர அனுமதிக்காத ஒரு நாட்டுக்கு, மனித உரிமைகள் ஆணையாளர் வருவது அந்த அரசாங்கத்துக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரமாகக் கருதப்படும் என்று அந்தக் குடிமக்கள் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.ஆனால் ஐநா மனித உரிமைகள் பேரவையோடு ஒத்துழைக்க மறுக்கும் ஓர் அரசாங்கத்தை அப்படியே வெளியில் விட முடியாது என்றும், அதை நெருங்கிச் சென்றுதான் அதன் தீர்மானங்களில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும், ஐநாவின் கண்காணிப்பு வளையத்துக்குள் அதை கொண்டு வரலாம் என்றும், ஒர் அபிப்பிராயம் ஐநா மட்டத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

இது இனப்பிரச்சினை தொடர்பில் இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைப்பதற்கான ஒரு முயற்சியாக வெளியில் தோன்றினாலும்,இதற்குப்பின் பிராந்திய மற்றும் உலகளாவிய ராஜதந்திர உள்ளோட்டங்கள் உண்டு. இப்போது ஆட்சியில் இருப்பது சீன இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த ஜேவிபியை அடித்தளமாக கொண்ட ஒரு கட்சியாகும். இக்கட்டுரை எழுதப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜேவிபியின் முடிவெடுக்கும் தலைவராகிய ரில்வின் சில்வா சீனாவில் காணப்பட்டார். எனவே சீனாவின் செல்வாக்குக்குள் விழக்கூடிய ஓர் அரசாங்கத்தை இயன்ற அளவுக்கு மேற்கின் செல்வாக்கு வளையத்துக்குள் பேணுவதுதான் மேற்கு நாடுகளின் தீர்மானமாக காணப்படுகிறது. இந்த அரசாங்கத்தை சீனாவை நோக்கித் தள்ளுவதற்குப் பதிலாக தாங்கள் அரவணைக்க வேண்டும் என்று இந்தியாவும் மேற்கு நாடுகளும் சிந்திக்கின்றன என்பதனைத்தான், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த அரசாங்கத்தோடு மேற்கும் இந்தியாவும் எவ்வாறு இடையூடாடி வருகின்றன என்பதை தொகுத்து அறியக்கூடியதாக உள்ளது. எனவே இந்த ராஜதந்திர இலக்கின் அடிப்படையில்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்குள் வருகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் ஐநா குடிமக்கள் சமூகங்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை.எனினும், அவ்வாறு மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்குள் வருவாராக இருந்தால், அவர் இங்கு செம்மணிப் புதை குழியைப் பார்க்க வேண்டும் என்று குடிமக்கள் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஐநா ஏற்றுக் கொண்டுள்ளது.அந்த அடிப்படையில் அவர் இந்த மாத இறுதியில் இலங்கை வருகையில்,யாழ்ப்பாணத்துக்கும் வந்து செம்மணிப் புதை குழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது.

அவருடைய வருகையையொட்டி தமிழ் குடிமக்கள் சமூகங்களும் செயற்பாட்டு அமைப்புகளும் கவனயீர்ப்பு போராட்டங்களை ஒழுங்குபடுத்திவருகின்றன. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வருவதன்மூலம் அதுபோன்ற மனிதப் புதைகுழிகள் மீதான அனைத்துலக கவனக்குவிப்பு செறிவாக்கப்படும். ஆனால் அது இப்போதிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான அழுத்தமாக எப்பொழுது மாறும் ?

ஏன் இப்படிக் கேட்க வேண்டியுள்ளது என்று சொன்னால், இப்போதிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது,நான் எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்பக் கூறுவது போல, ஒரு மிதவாத கட்டமைப்பில் இருந்து வந்தது அல்ல. மேட்டுக்குடி கட்டமைப்பும் அல்ல.அது ஒரு இயக்கம். இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு,இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டு, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட ஒரு இயக்கம். தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டு எழுந்த ஒரியக்கம். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கண்ணீரையும் துயரத்தையும் இதற்கு முன்பு இருந்த எந்த ஓர் அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் நன்கு விளங்கிக் கொள்ள முடியும். ஏனென்றால் ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களில் போதும் கொல்லப்பட்டவர்களின் தொகை ஆயிரக்கணக்கில் வரும். குறிப்பாக இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 12,000 என்று உத்தியோகபூர்வ குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் உத்தியோகப் பற்றற்ற குறிப்புகளின்படி அத்தொகை ஒன்றரை லட்சத்தைத் தாண்டும் என்று ஒரு குத்துமதிப்பான கணிப்பு உண்டு.

இவ்வாறு தனது தோழர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்,அது தொடர்பாக ஜேவிபி இதுவரை எடுத்த நடவடிக்கைகள் எவை ?

இந்த கேள்விக்கு விடை கூறமுன்பு, கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் வவுனியாவில் நடந்த ஒரு கருத்தரங்கை இங்கே நினைவுபடுத்த வேண்டும். கருத்தரங்கு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு நடந்ததாக ஒரு ஞாபகம்.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு கருத்தரங்கு. அதில் நான் ஒரு பேச்சாளராகக் கலந்து கொண்டேன்.தென்னிலங்கையில் இருந்து மற்றொரு வளவாளர், பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கலாநிதி ஜயலத் கலந்து கொண்டார். தனது உரையில் அவர் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக் காட்டினார்.”தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை என்பது மறக்கப்பட்ட ஒரு கதை” என்று. அவர் கூறினார்.தென்னிலங்கையில் அது மறக்கப்பட்ட கதை என்றால் அதை யார் மறந்தது? யார் அதற்காக போராட வேண்டுமோ அவர்கள்,அதாவது ஜேவிபி அதை மறந்து விட்டது என்று தானே பொருள்? ஜேவிபி ஏன் தன் தோழர்கள் தோழியர்கள் காணாமல் ஆக்கப்பட்டதை மறக்க விரும்புகிறது? அல்லது அதற்காக ஏன் நீதி கேட்டுப் போராடத் தயாரில்லை ?

விடை மிக எளிமையானது. மிகக்குரூரமானது. ஜேவிபி தனது தோழர்களுக்கு நீதி கேட்டுப் போராடத் தயாரில்லை.ஏனென்றால் அவ்வாறு நீதி கேட்டுப் போராடினால் அவர்கள் யாரை இப்பொழுது யுத்த வெற்றி நாயகர்களாக கொண்டாடுகிறார்களோ,அவர்களில் பலரை விசாரிக்க வேண்டிவரும். அவர்களில் பலர் குற்றவாளிகளாக தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும். அதாவது இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், இறுதிக்கட்டப் போரில் யாருடைய வெற்றிக்காக ஜேவிபி தன்னை வருத்தி உழைத்ததோ, யாருடைய வெற்றிக்காக ஆட்களை சேர்த்துக் கொடுத்ததோ,யாருடைய வெற்றிக்காக பிரச்சாரம் செய்ததோ,அந்தத் தரப்பை,அதாவது ஸ்ரீலங்கா படைத்தரப்பைத்தான் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும். விசாரிக்க வேண்டியிருக்கும். தண்டிக்க வேண்டியிருக்கும்.

இதை அவர்கள் செய்வார்களா? இப்பொழுது நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் அதாவது முப்படைத் தளபதி யார் என்று பார்த்தால், ஒரு ஜேவிபி உறுப்பினர்தான். காணாமல் ஆக்கப்பட்ட தன் தோழர்களுக்காக அவர் ஒரு முப்படைத் தளபதி என்ற அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடுவாரா? இல்லை. செய்ய மாட்டார். ஏனென்றால் அவர்களே இறுதிக்கட்டப் போரில் அந்த யுத்தத்தின் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள்.எனவே விசாரணை என்று தொடங்கினால் ஒரு கட்டத்தில் ஜேவிபியும் அந்த விசாரணைக்குள் வரும். இதுதான் பிரச்சனை. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை தென்னிலங்கையில் எங்கே மறைக்கப்பட்டது என்றால், அதற்காகப் போராட வேண்டிய ஜேவிபி போராட்டத் தயாரில்லை என்பதால்தான். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்,தமிழ் மக்களுக்கு எதிரான ஜேவிபியின் இனவாத நிலைப்பாட்டின் காரணமாகத்தான் அவர்கள் இவ்வாறு முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. தமது தோழர்களுக்கான நீதியை விடவும் தமிழ் மக்களை வெற்றி கொள்வது முக்கியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களை வெற்றி கொண்ட படை வீரர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அதனால்தான் கடைசியாக நடந்த ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பேசிய புதிய வெளியுறவு அமைச்சராகிய விஜித ஹேரத் ஐநாவின் பன்னாட்டு பொறிமுறையை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அனுர குமார அசோசியேட் நியூஸ் பிரஸ் இற்கு வழங்கிய ஒரு நேர்காணலில் என்ன சொன்னார் தெரியுமா?பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றுதான் கேட்கின்றார்களே தவிர,குற்றம் சாட்டப்படுகிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை என்று. யார் அவருக்கு அப்படி சொன்னது? அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளை தண்டிக்க விரும்பவில்லை என்று யார் அவர்களுக்குச் சொன்னது? தமிழ்ப் பகுதிகளில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் எந்த ஒரு தாயாவது அவ்வாறு கூறியிருக்கிறாரா? இல்லை.தமிழ்மக்கள் மத்தியில் உள்ள எந்த ஒரு கட்சியாவது அவ்வாறு கூறியிருக்கிறதா? இல்லை.ஆனால் ஜனாதிபதி அவ்வாறு கூறினார். அவர் அப்பொழுது ஜனாதிபதி அல்ல. வேட்பாளராக இருந்தார்.

மேலும் உண்மையை ஏன் கண்டறிய வேண்டும்? நிலை மாறு கால நீதியின் கீழ் உண்மையை கண்டறிவது என்பது குற்றவாளிகளை கண்டறிவது. குற்றம் நடந்த சூழலை, குற்றத்தின் பின்னணியை,குற்றத்துக்கான உளவியல் நோக்கத்தைக் கண்டறிவது.அந்த அடிப்படையில் குற்றவாளிகளை விசாரிப்பது.தண்டிப்பது.அதன்மூலம்,குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பது. குற்றம் புரிந்தாலும் தண்டனையிலிருந்து தப்பலாம் என்ற கொடூரமான பண்பாட்டை மாற்றி, குற்றம் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பது. எனவே உண்மைகளைக் கண்டடைவது என்பது பொறுப்புக் கூறுவதற்காகத்தான்.ஆனால் அனுர கூறினார்,பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை என்று. அதே நிலைப்பாட்டோடுதான் அவர் இப்பொழுதும் காணப்படுகிறாரா?

இப்பொழுது விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது அல்லவா? இப்பொழுதுள்ள அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.ஏனென்றால் அதுவே தனது தோழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு நீதியைக் கேட்டுப் போராடவில்லை.தனது காணாமல் ஆக்கப்பட்ட தோழர்களை மறப்பதற்குத் தயாரான ஒரு இயக்கம்,தமிழ் மக்களின் விடயத்தில் நீதியைப் பெற்றுத்தரும் என்று எப்படி எதிர்பார்ப்பது? ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வருவதால் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

https://athavannews.com/2025/1436592

இலங்கையின் புதிய மனித புதைகுழி தமிழர்களின் பழைய காயங்களை கிளறுகின்றது - அல்ஜசீரா

3 days 5 hours ago

Published By: RAJEEBAN

18 JUN, 2025 | 12:23 PM

image

By Jeevan Ravindran

இலங்கையின் வடபகுதியின் தலைநகரமான  யாழ்ப்பாணத்தில் மிகவும் மும்முரமான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இரண்டு பொலிஸார் சுடலையின் இரண்டு துருப்பிடித்துப்போன நிறத்தில் உள்ள கேட்களின் பின்னால் நின்று அவதானித்தவண்ணமுள்ளனர்.

sithupa.jpg

இலங்கையில் மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாரிய மனித புதைகுழிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை தமிழர்களின் காயங்களை மீள கிளறியுள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களிற்கு தனிநாடு கோரிய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடையிலான 26 வருட யுத்தம் காரணமாக தமிழ்மக்கள் துயரங்களை அனுபவித்தனர்.

அரசாங்கம் பலரை பலவந்தமாக காணாமலாக்கியது, 2017 இல் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கை 1980களின் பின்னர் இலங்கையில் 60,000 முதல் 100,000 வரையிலானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தது.

2009 இல் முடிவிற்கு வந்த யுத்தத்தின் இறுதிகாலப்பகுதியில் 170,000 கொல்லப்பட்டனர் என தமிழ் சமூகம் குற்றம்சாட்டுகின்றது. ஐக்கியநாடுகள் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

1996ம் ஆண்டு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி இலங்கை இராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது முதல்  கடந்த 25 வருடங்களாக செம்மணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்;துள்ளது. அவரது தாயார், சகோதரர், குடும்ப நண்பர் ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர், அவர்களின் உடல்கள் செம்மணியில் 1996 இல் மீட்கப்பட்டன.

கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு கொலையில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட முன்னாள் இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச, 1998 விசாரணையின் போது செம்மணி புதைகுழியில் 300 முதல் 400 பேரை புதைத்ததாக தெரிவித்திருந்தார். அவர் வழங்கிய தகவல்களை தொடர்ந்து அடுத்த வருடம் 15 உடல்கள் மீட்கப்பட்டன, இதில் இருவர் 1996 இல் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் என அடையாளம்காணப்பட்டனர்.

புதிய புதைகுழியின் கண்டுபிடிப்பு நீதிக்கான தேடலில் தமிழ் சமூகத்தினை  தொடர்ந்து காயப்படுத்தி வரும் ஒரு பழைய கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

கடந்த கால விசாரணைகள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் யுத்தகால கொலைகள் குறித்த கேள்விகளிற்கு விடைகளை வழங்கவில்லை, அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தாதது இதற்கான ஒரு  ஒரு காரணம் என்கின்றனர் தொல்லியல் நிபுணர்கள்.

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித  புதைகுழி போன்றவற்றால் இவற்றிற்கு விடையை வழங்க முடியுமா?

பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்

sithu_1.jpg

செம்மணியில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை பெப்ரவரி மாதம் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. மே மாத நடுப்பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின

மீட்கப்பட்ட 19 உடல்களில் 3 உடல்கள் பிறந்த குழந்தைகளுடையவை அல்லது பத்துமாதத்திற்கு உட்பட குழந்தைகளுடையவை என அல்ஜசீராவிற்கு தெரிவித்தார் மனித புதைகுழிஅகழ்வுகளிற்கு தலைமைதாங்கும் தொல்லியல் நிபுணர் ராஜ்சோமதேவ.

உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்த  அவர் உடல்கள் புதைக்கப்பட்ட திகதியை கண்டறிவதற்காக ஆடைகள் அல்லது செல்லோபோன் உறைகள் போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம்  இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார்.

நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்,இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் என தெரிவித்துள்ளேன்,மேலதிக விசாரணைகள் தேவை என  தெரிவித்துள்ளேன் என ராஜ்சோமதேவ தெரிவித்தார்.

நான் காணாமல்போன தங்கள் அன்புக்குரியவர்களை தேடும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 600 பேருடன்இணைந்து பணியாற்றுகின்றேன் இவர்களில் அதிகளவானவர்கள் 1996ம் ஆண்டிற்கும் 2008ம் ஆண்டிற்கும் இடையில் காணாமல்போனவர்கள் என காணாமல்போனவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா அல் ஜசீராவிற்கு தெரிவித்தார்.

இவர்களில் பலர் 1995 இல் யாழ்ப்பாணத்திலிருந்து இடமபெயர்ந்தவர்கள்,நாட்டின் தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தின் தலைநகர்.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உடல்களை தோண்டும் நடவடிக்கைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகின்றனர் என தெரிவித்த அவர் அடையாளம் காணும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும் என விரும்புகின்றனர் என  தெரிவித்தார்.

மனித புதைகுழிகளை அகழும் முன்னைய நடவடிக்கைகள் மூலம் முடிவுகள் எதுவும் வெளியாகாத நிலையிலேயே  இம்முறை உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அந்த பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொலிஸாருக்கு காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உதவுகின்றனர்.

தோல்வியில் முடிவடைந்த விசாரணைகளின் வரலாறு.

இதேவேளை செம்மணி மனித புதைகுழியிலிருந்து என்ன நடந்தது என்பதற்கான துப்புகளை கண்டுபிடிப்பதற்கு அகழ்வில் ஈடுபட்டிருப்பவர்களிற்கு உதவுவதற்கு தமிழ் சமூகம் கொண்டுள்ள விருப்பம்,கடந்த கால அனுபவங்களால் பாதிக்கப்படுகின்றது.

இலங்கையில் சமீபத்தில் ஏனைய மனித புதைகுழிகள் தோண்டப்பட்ட போதிலும் அவை அர்த்தமுள்ள பதில்களுக்கு வழிவகுக்க தவறிவிட்டன.மூடிமறைக்கப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

மன்னார் கொக்குதொடுவாய் ,திருக்கேதீஸ்வரம் .மனித புதைகுழிகளிற்கு நிகழ்ந்தது செம்மணி மனித புதைகுழிக்கும் நடக்கலாம் என அச்சம் கொண்டுள்ளதாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராஜா கனகரஞ்சனி தெரிவித்தார்.

graves.jpg

'இதனையும் ஏனைய மனித புதைகுழிகள் போல அவர்கள் எந்த பதிலையும் நீதியையும் வழங்காமல் மூடிமறைக்கலாம்," என அவர் தெரிவித்தார். இவரின் மகன் அமலன் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர், 2009 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனார்.' கொலைகாரர்களை நீதி வழங்குமாறு கேட்டால் அவர்கள் நீதி வழங்குவார்களா"?

மிகப்பெரிய மனித புதைகுழி அகழ்வு வடமேற்கு மன்னாரிலேயே இடம்பெற்றது. 2018 இல் இது ஆரம்பமானது. சோமதேவாவே இதனை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கினார். 346 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன, நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இந்த மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தன.

எனினும் சோமாதேவ மன்னார் புதைகுழி விடயத்தை அரசாங்கம் கையாளும் விதத்தினை கண்டித்தார்.

மூன்று வருடத்திற்கு முன்னர் நான் நான் ஆரம்ப கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் கடந்த வாரமே உடல்களை தோண்டியவேளை மீட்கப்பட்ட பொருட்களை கையளித்தார்கள் என குறிப்பிட்டார்.

அவற்றை ஆராய்வதற்கான நிதியை அரசாங்கம் இன்னமும் ஒதுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது எவரும் பொறுப்பேற்பதில்லை, காணாமல்போனோர் அலுவலகம் ஒரு வெள்ளை யானை என ராஜ்சோமதேவ தெரிவித்தார்.

செம்மணி புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளில் காணாமல்போனோர் அலுவலகம் ஒரு பார்வையாளராகவே இணைந்துகொண்டுள்ளது என தெரிவித்த அதன் பிரதிநிதி, மன்னார் புதைகுழி அகழ்வில் அது நீதியமைச்சுடன் இணைந்து செயற்பட்டது என குறிப்பிட்டார்.

வழங்கப்படவேண்டிய கட்டணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த அவர் முறைப்படியான முறைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

2024 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுப்பதற்கு போதுமான நிதி மனித மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இல்லை என்பது கவலை அளிக்கிறது மேலும் இது தொடர்பாக சர்வதேச ஆதரவைப் பெற அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது" என்று கூறியது.

கடந்தகாலத்தில் மனித புதைகுழி அகழ்வின் போது காணப்பட்ட குறைபாடுகள் பலவீனங்கள் செம்மணியிலும் காணப்படுகின்றன என தெரிவித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த அடையாளம் கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையம், சர்வதேச நிபுணத்துவமோ மேற்பார்வையோ இல்லாமல் செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டது.

மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை வெளிப்படையாக நேர்மையாக நடைபெறுகின்றது என தமிழ் சமூகமும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களும் கருதவேண்டும் என அரசாங்கம் விரும்பினால், முதலில் போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசாங்கம் தெளிவான மற்றும் விரிவான மனித புதைகுழிகளை தோண்டும் கொள்கையை பின்பற்றவேண்டும், சர்வதேச பங்களிப்பிற்கு அனுமதி வழங்கவேண்டும், சர்வதேச நிபுணத்துவத்தை நாடவேண்டும், மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளில் காணாமல்போனோரின் குடும்பத்தவர்கள் பங்கெடுப்பதற்கும், சட்டபூர்வ பிரதிநிதித்துவத்தை பெறவும் அனுமதிக்கவேண்டும் என அடையாளத்தின் பிரதிநிதியொருவர் அல்ஜசீராவிற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக செப்டம்பரில் அனுரகுமார திசநாயக்க தெரிவு செய்யப்பட்டமை அவர் நீதிக்கு ஆதரவை வழங்குவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது ஆனால் இதுவரை அவர் அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதத்தில் இடம்பெறவில்லை என கனகரஞ்சினி தெரிவித்தார்.

missing.jpg

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகின்றது. இதுவரை அவர்  எங்களின் பிரச்சினைகளை சிறிதளவும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்த அவர் ஆட்சியாளர் மாறியுள்ளார் ஆனால் யதார்த்தம் நீடிக்கின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/217798

இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா “மதில் மேல் பூனை”

5 days 6 hours ago

மதில் மேல் பூனை

sudumanal

modi.jpg?w=368

மத்தியகிழக்கை மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா ‘மதில்மேல் பூனையாக’ இன்னும் எவளவு காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் இன் தோற்றுவாயாக இருந்த முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு தென் ஆபிரிக்காவும் இணைந்து பிரிக் (BRIC) என்பது பிரிக்ஸ் (BRICS) என்றாகியது. இப்போ ஈரானும் அதில் ஒரு புதிய அங்கத்துவ நாடு.

ஒற்றைத் துருவ அரசியலை புரட்டிப்போடும் வலுவான பொருளாதார அமைப்பாக பலம்பெறுகிறது பிரிக்ஸ். பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட ஈரானின் மீதான இந்த யுத்தம் பிரிக்ஸ் இன் பொருளாதாரத்தை பாதிக்க வல்லது. அதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்த யுத்தத்தை விரும்பாதது மட்டுமல்ல, அமைதியான வழியில், ஓர் அரசியல் தீர்வை நோக்கிய வழியில் உடனடியான போர்நிறுத்தம் பற்றி வெளிப்படையாக பேசுகின்றன. பல காலமாக இஸ்ரேலுக்கு விளக்குப் பிடித்து மீண்டுவந்த சவூதி கூட, ஈரான் மீதான இஸ்ரேலின் வலிந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆனால் இந்தியா..?

எஸ்.சி.ஓ (SCO- Shanghai Cooperation Organisation) இன் ஓர் அங்கத்துவ நாடாகவும் இந்தியா இருக்கிறது. 2001 இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான், பெலாரூஸ், கஸஹஸ்தான், கிர்ஹிஸ்தான் உற்ஸ்பெஹிஸ்தான் இருந்தன. 2003 இல் இந்தியாவின் அனுசரணையின் கீழ் ஈரானும் இணைந்துகொண்டது.

இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்தியா இணைந்து கொள்ள மறுத்துள்ளது. ஈரான் மீதான வலிந்த தாக்குதலை இந்த அறிக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. ஈரானின் இறைமைக்கு எதிராக இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அது சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு இந் நடவடிக்கை பிராந்திய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்கிறது அந்த அறிக்கை. இதில் இந்தியாவின் குரல் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது.

2024 இல் இருமுறை வலிந்த தாக்குதலை இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்டது. ஈரானும் எதிர்த் தாக்குதல் செய்தது. ஆனால் இம் முறை நடந்த தாக்குதல் இன்னும் வீரியமான விளைவுகளை ஈரானுக்கு ஏற்படுத்தியுள்ளன. தாக்குதலில் (இதுவரையான கணக்கின்படி) 70 க்கு மேற்பட்ட மக்களை மட்டுமல்ல, அணு விஞ்ஞானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உயர்நிலை இராணுவ அதிகாரிகள் என்பவர்களும் இவ் எதிர்பாராத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது ஒரு நாட்டின் இறைமையை மோசமாக மீறிய செயலாகும்.

அத்தோடு பேரழிவை ஏற்படுத்தவல்ல அணுச் சக்தி நிலையங்கள் மீதும் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. ஒன்று புரியவில்லை. இன்று அணுவாயுதங்களை வைத்திருக்கிற இஸ்ரேல் உட்பட்ட நாடுகள் யாரிடம் அனுமதி வாங்கி அதை சாதித்தன. பெருமை வேறு கொண்டாடின. ஈரானுக்கு மட்டும் அதை மறுக்க அமெரிக்காவோ இஸ்ரேலோ யார்?.

உண்மையில் சிறிய நாடுகள் மீதான அச்சுறுத்தல்களுக்கு அணுகுண்டு ஒருவகையில் பாதுகாப்பு அளிக்க வல்லது என்ற கருத்து ஒன்று உண்டு. அது ஏவியவர் உட்பட மனித குலத்தையே அழிவுக்கு உள்ளாக்கும் வலு கொண்டது. அதனால் அதை எடுத்த எடுப்பிலே பாவிக்க முடியாதபடியான அதி எச்சரிக்கைத் தன்மையையும் அந்த வலு உள்ளடக்கியுள்ளது எனலாம்.

தாம் அணுகுண்டை தயாரிக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை என்கிறது ஈரான். அது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரேலின் இருப்புக்கு ஈரான் அணுவாயுத செயல்முறை அச்சுறுத்தலை தரலாம் என நியாயப் பூழல் சொல்லி ஈரானை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதுவரை 5 தடவைகள் பேசியுமாயிற்று. முன்னேற்றகரமாக இருக்கிறது என இரு தரப்பும் பேசிக்கொண்டிருக்க இஸ்ரேல் ஈரானுக்குள் நுழைந்து வெறியாட்டம் ஆடுகிறது. இதெல்லாம் பெரியண்ணனுக்கு தெரியாமலா நடக்கும் என்பதை ஊகிக்க கடினமேதுமில்லை.

இந்தத் தாக்குதலுக்கான இரகசிய ட்றோன் மறைவிடத்தை மொசாட் ஈரானுக்குள்ளேயே நிறுவி பதுங்கியிருந்ததானது ஈரானின் பாதுகாப்பு கவசத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. மொசாட் செய்திருக்கிற இந்த சதியில் இதுவரை ஈரானால் கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது இன்னொரு பக்கத்தில் அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் றோ சம்பந்தப்பட்டதா என்பது தெரியாது.

காஸா படுகொலை நடந்து கொண்டிருக்கிறபோது கூட, மோடி அரசு இஸ்ரேலுக்கு தமது ஆயுத விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டுக் கொலை, பட்டினிக் கொலை என்பவற்றின் மீதான மனிதாபிமானத்தையும், இனப்படுகொலையையும் கோடிப்புறத்துள் ஒளித்துவைத்து நடத்தும் இராசதந்திரம் ஜனநாயக அரசு எனப்படுகிற ஒரு நாட்டின் அசிங்கத்தையே வெளிப்படுத்தக் கூடியது.

இந்த இஸ்ரேல்-ஈரான் திடீர் யுத்தம் குறித்து அவசரமாகக் கூடிய ஐநா பொதுச்சபையில் உடனடியானதும் நிபந்தனை ஏதுமற்றதுமான நிரந்தரமான போர் நிறுத்தம் குறித்த வரைவின் மீது நடந்த வாக்கெடுப்பிலும் இந்தியா நடுநிலை வகித்து வாக்களிக்கவில்லை. இரு தரப்பும் போர்நிறுத்தம் செய்யக் கேட்பதில்கூட என்ன நடுநிலை வேண்டிக் கிடக்கிறதோ தெரியவில்லை. இக் கூட்டத்தில் ரசியா சீனா உட்பட பல நாடுகள் கறாராக தமது கருத்துகளை முன்வைத்து விவாதித்தன.

இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் நடந்தபின் இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் “இந்த சம்பவம் குறித்த சர்வதேச சமூகத்தின் ஆழமான அக்கறையை பகிர்ந்துகொள்கிறேன்” என்றார். கழுவுற சட்டியில் நழுவி ஓடும் மீனாக இந்த வார்த்தைகள் நெளிகின்றன. அத்தோடு, இந்த பதட்டநிலையை தவிர்க்க அவசரமாக வேண்டுகோள் விடுப்பதாகவும், விரைந்த இராசதந்திர நகர்வை எடுக்கும் படியும் கோரியிருந்தார். இவையெல்லாம் அவர் ஈரானுடன் தொலைபேசிவழி ஓடவிட்ட வார்த்தைகள். இதைத்தானே ஐநாவும் வரைபாய் முன்வைத்து வாக்கெடுப்புக்கு விட்டது. ஏன்தான் வாக்களிக்காமல் நழுவியது இந்தியா?

அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள் இந்த வருடம் இந்தியா வந்திருந்தபோது ஒன்றைக் குறிப்பிட்டார். இந்தியாவை பல பரிமாணங்களிலும் ஏற்று, விதந்துரைத்த அவர், “ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்கிறேன். சீனாவுடனான முரண்பாட்டை அமைதியாக இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து அமெரிக்காவின் விளையாட்டை நீங்கள் விளையாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். (Don’t play American’s game). இதைச் சொல்வதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்” என்றார்.

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் கடற்படைப் போருக்குச் சாதகமாகவும் அந்த சீனக் கடற் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்குடனும் உருவாக்கப்பட்ட QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பதே அவரது தூர நோக்காகும். நான் விரும்பிப் பார்க்கும் பிரபல இந்திய செய்தியாளர் பல்கி சர்மா உடனான நேர்காணல் அது. மேற்குலகு குறித்து மிகக் கூர்மையாக செய்தியிடும் பல்கி சர்மா, அதற்கு மாறாக ஸக்ஸ் வெளிப்படுத்திக் காட்டும் கூற்றினுள் அமெரிக்க நுண்ணரசியலை புரிந்துகொள்ளாமல் அல்லது புரிய மறுத்து “சீனாவுடனான முரண்பாட்டை நாம் (இந்தியா) எமது பாணியில் சந்திப்போம்” என பதிலளித்திருந்தார்.

அவர்கூட அண்மையில் தனது F. செய்தித் தளத்தில் “இந்த யுத்தத்தில் இந்தியா தனது நடுநிலையை எவளவு தூரத்துக்கு தக்கவைக்கும் என்பது கேள்வி” என்றார். இந்த உண்மையை மோடி அரசு எப்போ புரிந்துகொள்ளப் போகிறது.

அமெரிக்காவின் எதிரியாக இருப்பதைவிட பேரழிவு தரக்கூடியது அமெரிக்காவின் நண்பனாக இருப்பது என கென்றி கிஸிங்கர் சொன்னதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். எல்லா பிரச்சினைகளிலும் நடுநிலை என்பது ஓர் இராஜதந்திர அணுகுமுறை அல்ல. கோட்பாட்டு ரீதியில் ‘நடுநிலை’ என்பது ஒடுக்குபவர்களின் பக்கம் சாய்ந்து நிற்பதுதான்.

எங்கள் வீட்டு வாசல்படி வரை ஆபத்து வந்தபின் கத்திக் குளறி பிரயோசனமில்லை. யாரும் கண்டுகொள்ள மாட்டார். இதை அனுபவப்பட்டு உணரவேண்டும் என்பதில்லை. மோடி அரசு புரியாமலிருக்கலாம். ஆனால், விமர்சனங்களைக் கொண்டிருக்கிற போதும், பூகோள அரசியலில் நழுவல் போக்கு இன்றி நேரு, இந்திராகாந்தி போன்ற கறாரான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி நின்ற தலைவர்களைக் கண்ட இந்திய நாடும், -பார்ப்பனிய சிந்தனைக்கு வெளியில்- சிந்திக்கக் கூடிய இந்திய மக்களும் புரியாத விடயமல்ல,

https://sudumanal.com/2025/06/16/மதில்-மேல்-பூனை/#more-7180

வீழும் விழுமியங்கள்: இஸ்ரேலைக் கண்டிக்க இந்தியா தயங்குவது ஏன்?

1 week 1 day ago

வீழும் விழுமியங்கள்: இஸ்ரேலைக் கண்டிக்க இந்தியா தயங்குவது ஏன்?

16 Jun 2025, 9:33 AM

war-2.jpg

ராஜன் குறை

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் உலகப் போர் மூளக்கூடிய சூழல் உருவாகி வருவதைச் சுட்டிக் காட்டியதுடன், இஸ்ரேல் நாட்டின் மனிதாபிமானமற்ற போக்கையும், அத்துமீறும் ராணுவ தாக்குதல்களையும் கண்டித்துள்ளார். எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் தலைவராக அவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானது, வரவேற்கத்தக்கது.

காரணம், ஈரான் நாட்டின் அணு ஆற்றல் உற்பத்தி கேந்திரங்களின் மீது இஸ்ரேல் இரு தின ங்களுக்கு முன்பு தாக்குதல் நட த்தியுள்ளது. தொடர்ந்து அவற்றை முற்றிலும் தாக்கி அழிக்கும் திட்டமும் வைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேலின் மீது டிரோன் தாக்குதல்கள் நட த்த த் துவங்கியுள்ளது. இஸ்ரேலின் வான்வழிப் பாதுகாப்புக் கவசங்களைக் கடந்து அந்த டிரோன்கள் இஸ்ரேலில் சேதங்களை விளைவித்துள்ளன. பதிலுக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரான் பற்றியெறியும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால் சீனா ஈரானுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்தால், இது உலகப் போராக மாறும் சூழ்நிலை மிகத் தூலமாக நிலவுகிறது.

இஸ்ரேலின் பிரதமர் நெதான்யாஹு பாரதப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். பிரதமர் மோடி போர்ச் சூழல் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலைக் கண்டித்துக் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. உலக நாடுகளில் பெரும்பாலானவை, 142 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஆனால் இந்தியா வாக்களிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுவதுடன், இந்திய வெளி உறவுக் கொள்கை அறம் சார்ந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் இந்தியா கடைபிடித்துவந்த வெளியுறக் கொள்கைக்கு மாறானதாக, முரணானதாக இன்றைய வெளியுறவுக் கொள்கை அமைந்துள்ளது. இந்த பிரச்சினையை சற்றே ஆழமாக புரிந்து கொண்டால்தான் பாஜக அரசாங்கம் செய்யும் தவறு என்ன என்பதையும் பரிசீலிக்க முடியும்.

இஸ்ரேலின் உருவாக்கம்

இஸ்ரேல் என்பது இயற்கையாக வரலாற்றின் போக்கில் உருவான தேசமல்ல. அது புராண கதைகளின் அடிப்படையில் யூதர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட நிலம் (promised land) என்ற மத நம்பிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்களும் பாலஸ்தீனம் “திரும்பி வர”, குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். அந்த நிலத்தில் வசித்த வந்த பாலஸ்தீனியர்கள் திடீரென அந்நியப்படுத்தப் பட்டார்கள். அவர்களுக்கென்று தனி நாடும் அமைத்துத் தரப்படவில்லை. அவர்கள் இஸ்ரேலின் முழுமையான குடிமக்களாகவும் அங்கீகரிக்கப்படவில்லை. 

பல்வேறு நாடுகளில் வசித்துவந்த யூதர்களின் மூதாதையர்கள் பாலஸ்தீனத்தலிருந்துதான் சென்றார்கள் என்று நிறுவுவது சாத்தியமில்லை. கடவுள் யூதர்களுக்கு பாலஸ்தீன நிலத்தை வாக்களித்ததையும் நிரூபிக்க முடியாது. என்றாலும் அது மத நம்பிக்கை அல்லவா என்று கேட்கலாம். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால் கடவுள் வாக்களித்தாரே தவிர கையளிக்கவில்லை என்பதுதான். யூதர்கள் கடவுள் சொற்படி கேட்டு நடக்காததால் கோபமடைந்த கடவுள் அவர்களை சொந்த நாடற்றவர்களாக வாழும்படி சபித்துவிட்டார் என்பதுதான் யூதர்களின் உண்மையான மத நம்பிக்கை. அதனால் தீவிர மத நம்பிக்கையாளர்களான யூதர்கள், Orthodox Jews, இஸ்ரேல் நாட்டு உருவாக்கத்தையோ, அங்கே அனைத்து யூதர்களுக்கும் குடியேறும் உரிமை இருக்கிறது என்பதையோ ஏற்பதில்லை. எனவே இஸ்ரேலின் உருவாக்கம் உண்மையான யூத மத நம்பிக்கைக்கும் எதிரானது எனலாம்.

ISRAEL.jpg

ஹாலுகாஸ்ட் (Holocaust)

இந்த நிலையில் எப்படி இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க நேர்ந்தது, முடிந்தது என்றால் அதற்குக் காரணம் ஹிட்லர் நட த்திய ஹாலுகாஸ்ட் என்று குறிப்பிடப்படும் யூத இனப்படுகொலை (1933-1945). ஜெர்மானிய தேசம் ஆரியர்களுக்கு சொந்தமானது, அதில் யூதர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்று கூறிய ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்தான். பின்னர் காஸ் சேம்பர்களில் அவர்களை கொத்துக் கொத்தாக கொன்றழித்தான். இந்த கொடூர நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்த உலகம் யூதர்களுக்கு தனி நாடு இருப்பது நல்லது என நினைத்ததால்தான் இஸ்ரேலின் உருவாக்கம் சாத்தியமானது.

அடுத்து மற்றொரு கேள்வி எழ வேண்டும். ஹாலூகாஸ்ட் எப்படி சாத்தியமானது? ஹிடலர் ஏன் தன்னை ஆரிய இனம் என்று அழைத்துக்கொண்டான்? யூத  மதத்தின் வளர்ந்த நிலைதான் கிறிஸ்துவம் எனலாம். ஆனால் யூத மதம் தன்னை கிறிஸ்துவத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்வதில் தீவிர முனைப்புக் காட்டியது. கார்ல் மார்க்ஸ் 1843-ஆம் ஆண்டு எழுதிய “யூதர்கள் பிரச்சினை குறித்து” (On Jewish Question) என்ற சிறிய கட்டுரையைப் படித்தால் எப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி வந்த புதிய குடியாட்சி அரசாங்கங்களில் யூதர்களின் தனித்துவம் குறித்த கேள்விகள் எழுந்தன என்பதைக் காணலாம்.

holocast-1024x681.jpg

யூதர்கள் மத ரீதியாக, சமூக ரீதியாக விலகியிருந்த து மட்டுமல்லாமல், பெருமளவு பண த்தை வட்டிக்குத் தருபவர்களாக, வர்த்தக நிதியாதாரமாக இருந்தார்கள். யூதர்களின் சுயநலமும், பணப்பற்றும் அவர்களின் தனித்த அடையாளங்கள் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். கார்ல் மார்க்ஸும் ஒரு யூதர்தான் என்பதுடன், ராபை எனப்படும் யூத மதகுருவின் பெயரனும் ஆவார். அந்த கட்டுரையின் இறுதியில் யூதர்களின் சமூக விடுதலை என்பது சமூகமே யூத மத த்திலிருந்து விடுதலை அடைவதுதான் என்று கூறுகிறார் (the social emancipation of the Jew is the emancipation of the society from Judaism). பத்தொன்பதாம் நூற்றாண்டின் மானுடவாத சிந்தனை அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் மதச்சார்பற்ற அரசியலே இன்னமும் காலூன்றவில்லை என்பதைக் காண வேண்டும்.

யூத, கிறிஸ்துவ மதங்களின் மீது ஐரோப்பிய சிந்தனையாளர்களுக்கு இருந்த அதிருப்தியின் பின்னணியில்தான், ஐரோப்பியர்கள் சமஸ்கிருத மொழியை பயின்றபோது உருவாக்கிய ஆரிய இனக் கோட்பாடு பலரையும் கவர்ந்தது. சமஸ்கிருத மொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் இருந்த ஒற்றுமைகளை ஆராய்ந்தபோது சமஸ்கிருதம் பேசிய ஆரியர்களின் மத்திய ஆசியாவிலிருந்து வந்த மூதாதையர்களின் ஒரு பிரிவினர்தான் ஐரோப்பாவிற்கும் சென்றனர் என்ற கருதுகோள் உருவானது. அதனடிப்படையில்தான் ஜெர்மானியர்கள் தூய ஆரிய இனத்தவர் என்ற ஹிடலரின் இனவாதாக் கோட்பாடு உருவானது. அது யூத இனப் படுகொலைக்கு வழி வகுத்தது. அது ஏற்படுத்திய அதிர்ச்சியில் யூதர்களுக்கென்று பாலஸ்தீனத்தில் ஒரு நாடு உருவாவதற்கு ஆதரவு பெருகியது.

DgvWopK8-Gandhi.jpg

சையனிசமும் இந்திய எதிர்ப்பும்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கான நிலத்தை கையளிக்கும் சையனிச (Zionist) வேலைத்திட்ட த்தை காந்தி கடுமையாக எதிர்த்தார். “இங்கிலாந்து எப்படி இங்கிலீஸ்காரர்களுக்கு சொந்தமோ, ஃபிரான்ஸ் எப்படி ஃபிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமோ அப்படி பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. அதில் யூதர்களை குடியேற்றி இஸ்ரேலை உருவாக்குவது தவறு” என்று காந்தி திட்டவட்டமாகக் கூறினார். அதிலிருந்தே பாலஸ்தீனியர்களின் உரிமைகளை இந்தியா ஆதரித்து வந்தது. உள்ளபடி சொல்லப்போனால் 1948 முதல் 1992 வரை இந்தியா இஸ்ரேல் என்ற நாட்டுடன் அரசுமுறை உறவு வைத்துக்கொள்ளவில்லை.

இந்தியாவின் உருவாக்கத்தில் மத ரீதியான தேசியத்திற்கு இடமளிக்க க் கூடாது என்பதே காங்கிரசின் நிலைபாடாக இருந்தது. முஸ்லீம் லீக்கும், ஜின்னாவும் மத அடிப்படையில் பாகிஸ்தான் நாட்டைக் கோரினாலும், இந்தியா மத அடிப்படையிலான தேசியத்தை ஏற்கவில்லை. மக்களின் மதநல்லிணக்க அடிப்படையில் காந்தியும், அரசின் மதச்சார்பின்மை என்ற அடிப்படையில் நேருவும் மத அடையாள தேசியத்தினை முழுமையாக எதிர்த்து நின்றனர். அதனால் மத அடையாளத்தின் பேரில், புராணக் கற்பனையின் பேரில் உருவான இஸ்ரேலை அவர்களும், அவர்கள் வழி வந்த காங்கிரசும் முழுமையாக ஏற்கவில்லை எனலாம். குறிப்பாக அங்கே பன்னெடுங்காலமாக வசித்த வந்த பாலஸ்தீனியர்களின் உரிமைக் கோரிக்கைகளை ஆதரித்தனர். அதனால் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் (PLO) துவங்கப்பட்டபோது அதனை அரபு நாடுகள் தவிர்த்து முதலில் அங்கீகரித்த நாடு இந்தியாவாகத்தான் இருந்தது.

பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் நெடுநாள் தலைவர் யாசர் அராஃபத் (1929 – 2004) இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்தார். குறிப்பாக பிரதமர் இந்திரா காந்தியை (1917-1984) அவர் தன் மூத்த சகோதரி என்றே கூறினார். தலைநகர் டில்லியில் PLO அலுவலகம் 1974-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பாலஸ்தீனிய மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். முஸ்லீம் நாடான பாகிஸ்தான் இஸ்ரேலின் ஆதரவு சக்தியான அமெரிக்காவிற்கு நெருக்கமாக இருந்ததும், இந்தியா அணி சேராத நாடாக விளங்கினாலும் ரஷ்யாவின் சோஷலிச கொள்கைகளுக்கும், மக்கள் விடுதலை இயக்கங்களுக்கும் ஆதரவாக விளங்கியதும் குறிப்பிடத் தக்கது. இவ்வாறான கொள்கை சார்ந்த நிலைபாடு இந்தியாவிற்கு நம்பகத்தன்மையை, மரியாதையைப் பெற்றுத் தந்தது.  

India-3.jpg

இஸ்ரேலுடனான பாஜக அரசாங்கத்தின் நெருக்கம்

சோவியத் ரஷ்யா 1991-ஆம் ஆண்டு உடைந்த சிதறிய பிறகு, இரு துருவ உலகம் முடிவுக்கு வந்து, உலகில் அமெரிக்காவே ஒற்றைத் துருவமாக விளங்குவதாக க் கருதப்பட்டது. சுதந்திரவாத முதலீட்டிய பொருளாதாரம், சுதந்திர சந்தை பொருளாதரம், உலகமயமான வர்த்தகம் என புதிய உலகளாவிய உலக பொருளாதார அமைப்பு உருவானது. இந்தியாவில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு பதவியேற்ற நரசிம்ம ராவ் அரசு இந்திய வர்த்தக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, உலகமயமாதலை தொடங்கி வைத்தது. அத்தகைய சூழலில்தான் இஸ்ரேலையும் இந்தியா 1992-ஆம் அங்கீகரித்து அரசுமுறை உறவுகளைத் துவங்கியது.

வெகுகாலமாகவே இந்திய வலதுசாரி, பார்ப்பனீய மனோபாவக்காரர்களுக்கு இஸ்ரேலின் மீது கவர்ச்சியும், சார்பும் உண்டு. இது அரேபிய முஸ்லீம்களுக்கு எதிரான மன நிலையுடன் இணைந்தது எனலாம். அறுபதுகளில் அரபு-இஸ்ரேல் போர்களில் இஸ்ரேலின் வெற்றியை இவர்கள் கொண்டாடினர். இந்த பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ், பாஜக-வின் இஸ்ரேல் ஆதரவு மன நிலையை புரிந்துகொள்ள வேண்டும். சையனிச சிந்தனைக்கும், இந்துத்துவ சிந்தனைக்கும் உள்ள ஒப்புமைகளையும் புறக்கணிக்க முடியாது. தந்தை நிலம், தாய் நிலம் என்ற சிந்தனைக்குப் பதிலாக “புனித நிலம்” என்ற மத அடையாளவாத தேசியத்தை முன்னிறுத்தபவைதான் இரண்டுமே என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இதெற்கெல்லாம் மேலாக இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் அதானி குழுமத்தின் நிர்வாகத்தில்தான் இருக்கிறது.  பிரதமர் மோடி 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு சென்ற போது, அந்த நாட்டிற்குச் சென்ற முதல் இந்திய பிரதமராக இருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா பல முதலீடுகளைச் செய்தது. அதானி போர்ட்ஸ் நிறுவனம் ஹைஃபா துறைமுக நிர்வாகத்தை எடுத்துக்கொண்டது.  இதன் மூலம் அரசுமுறை உறவுகள் கடந்து, இஸ்ரேலுடன் வலுவான பொருளாதார உறவும் இந்தியாவிற்கு ஏற்பட பாஜக அரசும், அதானி நிறுவனமும் வழிசெய்துள்ளன எனலாம். இரானின் தாக்குதல்களுக்கு ஹைஃபா துறைமுகம் ஆட்பட்டுள்ள நிலையில் அதானி பங்குகளின் மதிப்பும் சரிந்துள்ளது. சரி செய்துவிடலாம் என்றுதான் கூறுகிறார்கள்.

காஸா இனப்படுகொலையும், ஈரான் மீதான தாக்குதலும்

காஸாவில் இயங்கும் தீவிரவாத ஹமாஸ் இயக்கம்தான் இஸ்ரேலின் மீது தாக்குதல் நட த்தியது. இஸ்ரேல் பிரதமர் நெதான்யாஹுவின் லிகுட் கட்சியும், ஹமாசும் 1993-ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீனிய ஆஸ்லோ உடன்படிக்கையை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹாமாஸை காரணமாக க் கொண்டு காஸாவில் பொதுமக்களை, குழந்தைகளை இஸ்ரேல் இரக்கமின்றி கொன்று குவித்து வருவது உலகெங்கும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் பெரும் மக்கள் திரள் ஊர்வலங்கள் நடக்கின்றன. சூழலியல் நடவடிக்கையாளர் கிரேடா துன்பர்க் தலைமையில் உணவு பொருட்களுடன் காஸா நோக்கி படகில் சென்ற குழு இஸ்ரேல் அரசால் கைது செய்யப்பட்டது. 

அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தனக்கு ஆதரவாக இருக்கும் துணிவில் இஸ்ரேல் ஈரான் மீதும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இரானின் அணு ஆயுத தயாரிப்புக் கேந்திரங்களைத்தான் தாக்கியதாக க் கூறினாலும் இது நிச்சயம் அத்துமீறல் என்பதில் ஐயமிருக்க முடியாது. ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கினால் உலகப் போர் மூளும் சாத்தியம் அதிகரித்து விடும். ஏற்கனவே உக்ரைன்-ரஷ்யப் போர் பதட்டமான நிலையில்தான் உள்ளது என்னும்போது மேலும் மற்றொரு பதட்டமான யுத்த முனை உருவாவது ஆபத்தானது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்போ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மனம்போன போக்கில் பேசுபவராக இருக்கிறார். அனைத்து நாடுகளையும் மிரட்டி பணியவைக்க முயல்கிறார். உலக அரசியல் நிகழ்வுகளை பின் தொடர்பவர்களுக்கு உறக்கம் வருவதில்லை. உலகின் எந்த பகுதியில் வெடிக்கும் யுத்தமும் உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கத்தான் செய்யும். தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. அதனை மனதில் கொள்ளும்போது முதல்வர் ஸ்டாலின் இஸ்ரேலைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கை முக்கியமானது. இந்திய அரசும் துணிந்து அறம் சார்ந்த நிலைபாட்டினை எடுக்க வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.

கட்டுரையாளர் குறிப்பு:  

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

https://minnambalam.com/why-india-hesitates-to-condemn-israel/

இஸ்ரேல் – ஈரான் போர்: மூன்று முக்கியமான கேள்விகள்!

1 week 2 days ago

இஸ்ரேல் – ஈரான் போர்: மூன்று முக்கியமான கேள்விகள்!

14 Jun 2025, 4:46 PM

gaurdiannewdfjfj.jpg

சாக் பியூசாம்ப் 

வியாழனன்று இரவு, இஸ்ரேல் ஈரானுடன் போரைத் தொடங்கியது. ஈரானின் மூத்த இராணுவத் தலைமையையும் அணு விஞ்ஞானிகளையும் இலக்காகக் கொண்டு குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது.

இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு ஒரு தந்திரோபாய வெற்றியாகவே அமைந்தன, ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே ஈரானின் ஒட்டுமொத்த இராணுவமும் அதன் புரட்சிகரப் படைகளின் தலைவர்களும் கொல்லப்பட்டனர். ஈரானிய வான் பாதுகாப்புத் தளங்கள் பெரும் சேதமடைந்தன. இஸ்ரேலுக்கு மிகக் குறைந்த இழப்புகளே ஏற்பட்டன. உடனடியாக ஈரானிடமிருந்து பெரிய பதிலடி எதுவும் வரவில்லை.

ஆனால், வெள்ளிக்கிழமை பிற்பகல், ஈரான் இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இது இஸ்ரேலின் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி நடந்தது. இந்த எதிர்த் தாக்குதலின் முழுமையான தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்தப் போரில் மற்ற எந்தப் போரிலும் போலவே—ஆரம்ப நாட்களில் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதன் முடிவு எப்படி இருக்கும் என்று இப்போதே உறுதியாகக் கணிப்பது கடினம்.

இஸ்ரேலிய அதிகாரிகள் இந்தத் தாக்குதல்கள் பல நாட்கள் அல்லது சில வாரங்கள் நீடிக்கும் என்று கூறுகிறார்கள். இது எதிர்காலத்தில் ஒரு முடிவில்லாத பிராந்தியப் போருக்கான அறிகுறியாகும். இந்த நிலையில், உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

image-2502.png

கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் அமைப்பின் ஈரான் நிபுணர் கரீம் சட்ஜாத்பூர் இவ்வாறு எழுதுகிறார்: “இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலின் முழுமையான தாக்கம் வெளிப்படப் பல ஆண்டுகள் ஆகும் என்று வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இது ஈரான் அணு குண்டு தயாரிப்பதைத் தடுக்கலாம் அல்லது அணு குண்டை உருவாக்குவதை உறுதி செய்யலாம். இது [ஈரானிய] ஆட்சியைச் சீர்குலைக்கலாம் அல்லது அதை வலுப்படுத்தலாம்.”

இந்த மோதலின் விளைவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றும் குறைந்தது மூன்று முக்கிய கேள்விகள் இருக்கின்றன.

  • இஸ்ரேலின் நோக்கம், அவர்கள் கூறியது போல, ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழிப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டதா, அல்லது இது ஆட்சி மாற்ற நடவடிக்கையா?

  • ஈரான் எந்த அளவிற்குப் பதிலடி கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது?

  • இது அணு குண்டு பெறுவது குறித்த ஈரானின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது?

இந்தக் கேள்விகள் அனைத்தும் இப்போதைக்கு பதிலளிக்க முடியாதவை. ஆனால் நமக்குத் தெரிந்தவற்றை மதிப்பிட முயற்சிப்பது, கடந்த ஒரு நாள் நிகழ்வுகளின் தாக்கங்களைக் கண்டறியும் போது எதைத் தேட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த உதவும்.

இஸ்ரேலின் உண்மையான நோக்கம் என்ன?

பல பதிற்றாண்டுகளாக, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் தன் இருப்புக்கான அச்சுறுத்தலாகவே கருதிவருகிறது.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதில் உறுதியாக இருந்ததா அல்லது அச்சுறுத்தலாக உணர்ந்தால் விரைவாக ஒன்றைப் பெறுவதற்கான திறனை மட்டுமே விரும்பியதா என்பது ஒருபோதும் முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால், அணுசக்தி திட்ட நடவடிக்கைகள் —உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யக்கூடிய மையவிலக்குகளை உருவாக்குவது போன்றவை — கடைசி நிமிடம்வரை ஒரே மாதிரியாக இருக்கும். அப்போது தாக்குதலால் அதைத் தடுப்பது சாத்தியமற்றதாகிவிடும். இஸ்ரேலியக் கண்ணோட்டத்தில், இஸ்ரேலியர்களைக் கொல்லும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாதக் குழுக்களை ஆதரிக்கும் மதகுருமார்களின் ஆட்சி அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்க முடியாது.

இந்தக் காரணத்திற்காக, இஸ்ரேல் பல பதிற்றாண்டுகளாக ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதாக அச்சுறுத்தி வருகிறது.

நேற்று இரவு, இஸ்ரேல் அந்த அச்சுறுத்தலை நிறைவேற்றியது. ஈரானிய அணுசக்தி வளர்ச்சியின் “உடனடி” அச்சுறுத்தலால் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் விவரித்துள்ளனர். அணு குண்டுகளை “சில நாட்களுக்குள்” தயாரித்திருக்க முடியும் என்று ஒரு அதிகாரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இப்போதே தாக்குவதா அல்லது எதிர்காலத்தில் அணு ஆயுதம் தாங்கிய ஈரானை எதிர்கொள்வதா என்ற ஒரு தேர்வை எதிர்கொண்டதாக இஸ்ரேலின் நிலைப்பாடு உள்ளது.

இந்தக் கூற்றுக்கள் எவ்வளவு உண்மை என்று நமக்கு இன்னும் தெரியவில்லை (ஒருவேளை ஒருபோதும் தெரியாமல் போகலாம்). ஆனால் நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கான நியாயப்படுத்தலுக்கும், அவர்கள் உண்மையில் தாக்கிய இலக்குகளுக்கும் இடையே சில முரண்பாடுகள் உள்ளன.

image-2503.png

தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள ஈரானின் நதான்ஸ் அணுசக்தி நிலையத்தின் காட்சி

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்கும் எந்த ஒரு முயற்சியும் இரண்டு இலக்குகளில் அதிக கவனம் செலுத்தும்: நதான்ஸிலும் ஃபோர்டோவிலும் உள்ள அணு செறிவூட்டல் வசதிகள். இஸ்ரேல் ஈரானிய அணு விஞ்ஞானிகளை இலக்காகக் கொண்டாலும், இயற்பியல் ஆராய்ச்சிப் பணிகள் சார்ந்த ஏற்பாடுகள் அழிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்ரேல் நதான்ஸைத் தாக்கியது, ஆனால் ஆரம்பகால நிபுணர் மதிப்பீடுகள் குறைந்த அளவிலான சேதத்தையே சுட்டிக்காட்டுகின்றன. ஃபோர்டோ ஆரம்ப சுற்றில் தாக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும், குறைந்தபட்சம் பகிரங்கமாக இல்லை.

எனவே, உண்மையான இலக்கு அணுசக்தித் திட்டம் என்றால், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன்கள்மீதும் இராணுவத் தலைமைமீதும் இவ்வளவு தாக்குதல் நடத்தி, அணுசக்தி உள்கட்டமைப்பிற்கு ஒப்பீட்டளவில் குறைந்த சேதத்தை இஸ்ரேல் ஏற்படுத்தியது ஏன் ?

இந்த கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன.

முதலாவது, போர் தொடரும்போது அணுசக்தி வசதிகளை இஸ்ரேல் மேலும் கடுமையாகத் தாக்கக்கூடும். ஈரானின் இராணுவத் தலைமையை – அதன் கிட்டத்தட்ட முழு விமானப் படையின் தலைமையையும் சேர்த்து – கொல்வதன் மூலம், இஸ்ரேல் ஈரானின் வான்பரப்பைப் பாதுகாக்கும் திறனையும் பதிலடி கொடுக்கும் திறனையும் பலவீனப்படுத்தியுள்ளது. இந்த முதல் தாக்குதல்கள், பின்னர் அணுசக்தி அமைப்புகளின் மீது அதிக கவனம் செலுத்தும் தாக்குதல்களுக்கு அடித்தளமாக அமையக்கூடும்.

அமெரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதர் மைக்கேல் லீட்டர், வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில், “முழு நடவடிக்கையும் ஃபோர்டோவை அகற்றுவதன் மூலம் நிறைவு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.

இரண்டாவது விளக்கம் என்னவென்றால், இஸ்ரேலுக்கு இன்னும் பெரிய திட்டங்கள் உள்ளன. இது அணுசக்தி வசதிகளைக் கடுமையாகத் தாக்கும் என்பது உறுதி. ஆனால் ஈரானிய ஆட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்துவதற்கான முயற்சியிலும் இது ஈடுபடும். முக்கியத் தலைவர்களை அகற்றுவதன் மூலம், இஸ்ரேல் ஈரானிய அரசாங்கத்தின் திறனை பலவீனப்படுத்துகிறது.

இஸ்ரேலின் இறுதி நம்பிக்கை என்னவென்றால், இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் பேரழிவுத் தாக்குதல்களைப் போலவே ஈரானிலும் ஒரு விளைவை ஏற்படுத்தும். அரசாங்கத்தின் திறனைக் கடுமையாகச் சேதப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் அதைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

வெளியுறவு உறவுகள் கவுன்சிலின் மத்திய கிழக்கு நிபுணர் ஸ்டீவன் குக், “ஃபாரீன் பாலிசி”யில் இவ்வாறு எழுதுகிறார்: “தாக்கப்பட்ட இலக்குகள், இஸ்ரேலின் நோக்கம் ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு சேதம் விளைவிப்பதைவிடவும் விரிவானது என்பதைத் தெளிவுபடுத்தின. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு சேதம் விளைவிப்பதில் இஸ்ரேலியர்கள் திருப்தி அடையவில்லை என்பது தெளிவாகிறது, ஆனால் ஆட்சி மாற்றத்தில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது.”

சுருக்கமாகச் சொன்னால், வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேல் அணுசக்தி வசதிகளைக் கடுமையாகத் தாக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. 

அணுசக்தி அழிப்பு, ஆட்சி மாற்றம் என்பதாக இஸ்ரேலின் லட்சியங்கள் விரிவானதாக இருந்தால் நீண்ட, ஆபத்தான மோதல் நிகழ்வதற்கான சாத்தியக்கூறை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்.

ஈரானால் பதிலடி கொடுக்க முடியுமா?

image-2504.png

பல ஆண்டுகளாக, மத்திய கிழக்கு ஆய்வாளர்களிடையே இஸ்ரேல் ஈரானைத் தாக்குவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாக இருந்தது.

ஈரான் பெரிய நாடு – ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளைவிட அதிக மக்கள் தொகை கொண்டது. அது இராணுவத்தில் பெரும் முதலீடு செய்துள்ளது. பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தையும், மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள பினாமி போராளிகளின் விரிவான வலையமைப்பையும் கொண்டுள்ளது, இவை அனைத்தும் இஸ்ரேலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த ஈரானின் ஏவுகணைத் தாக்குதல், அது குறைந்தபட்சம் சில பதிலடி கொடுக்கும் திறனைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால் எந்த அளவுக்கு அந்தத் திறன் உள்ளது?

2023, அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் ஈரானின் பினாமி வலையமைப்பை முறையாக அழித்துவருகிறது. காசாவில் நடந்த கொடூரமான போர் ஹமாஸைத் தலைமறைவு இயக்கமாகச் செயல்படவைத்துள்ளது, இஸ்ரேலிய நகரங்கள்மீது பெரிய ராக்கெட் தாக்குதல்களை நடத்தக்கூடிய ஒரு மினி-அரசாக அல்லாமல் வெறும் கிளர்ச்சிக் குழுவைப் போல ஹமாஸ் சண்டையிடுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹிஸ்புல்லாவின் தலைமைமீது நடந்த தொடர்ச்சியான திடீர்த் தாக்குதல்களின் விளைவாக ஹிஸ்புல்லா தற்போதைய சண்டையிலிருந்து விலகி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள ஈரானிய இலக்குகளை மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளது. இதில் 2024 அக்டோபரில் ஈரானின் வான் பாதுகாப்புமீதான பெரிய தாக்குதலும் அடங்கும். கடந்த ஆண்டு ஏப்ரலில் டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகம்மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலை இலக்காகக் கொண்ட ஈரானிய ஏவுகணை, டிரோன் தாக்குதல் கிட்டத்தட்ட எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிகழ்வுகளுக்கு அடிப்படையில் இரண்டு சாத்தியமான விளக்கங்கள் உள்ளன.

முதலாவது, ஈரான் இப்போது ஒரு காகிதப் புலி. அதன் பினாமிகளை அழிப்பதன் மூலமும் அதன் பதிலடி கொடுக்கும் திறன்களைப் பலவீனப்படுத்துவதன் மூலமும் இஸ்ரேல் ஒப்பீட்டளவில் அதிக இழப்பின்றி ஈரானைத் தாக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்ததுபோல ஈரானியர்கள் நிச்சயமாக பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் அது ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கும். இஸ்ரேலிய இலக்குகளுக்குக் குறைந்த சேதத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

இரண்டாவது விளக்கம், ஈரான் தன் பலத்தை வெளிப்படுத்தாமல் வைத்திருந்தது என்பதாகும்.

ஈரான் இஸ்ரேலை வெறுத்தாலும், அது முழு அளவிலான போரை தனது நலன்களுக்கு உகந்ததாகக் கருதவில்லை. இந்தக் காரணத்திற்காக, அது தனது மிகவும் பேரழிவுகரமான ஆயுதங்களையும் – யேமனில் உள்ள ஹவுதிகள் அல்லது ஈராக் போராளிகள் போன்ற அதன் மீதமுள்ள கூட்டாளிகளின் ஆயுதங்களையும் – பதற்றத்தை அதிகரிக்காமல் இருக்க ஒதுக்கிவைத்திருந்தது.

இப்போது பதற்றம் வெளிப்படையாக வந்துவிட்டதால், ஈரான் தன்னை இனி கட்டுப்படுத்திக்கொள்ளாது. மேலும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பேரழிவுகரமான எதிர்வினை வரவிருக்கும் நாட்களில் நடக்கும். அத்தகைய தாக்குதல் இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை மட்டுமின்றி நாட்டின் நகரங்களையும் தாக்கும். ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை நிறுத்த முயற்சிக்கும். அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்கப் பணியாளர்களைக் கொல்லவும் வாய்ப்புள்ளது.

image-2505-1024x576.png

இந்த இரண்டு காட்சிகளில் எது மிகவும் சாத்தியம் என்று நமக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இரண்டுக்கும் இடையில் நிறைய சாத்தியமான இடைவெளிகள் உள்ளன. ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக வலுவாக பதிலடி கொடுக்கிறது. ஆனால் போருக்கு முந்தைய மதிப்பீடுகள் அஞ்சியதைப் போல அமெரிக்கா அல்லது போக்குவரத்துக் கப்பல்களுக்கு எதிராக ஆக்ரோஷமான தாக்குதல் ஏதும் இல்லை.

ஆனால் மோதலின் எல்லை, ஈரான் உண்மையில் பலவீனமாக இருக்கிறதா அல்லது அப்படித் தோன்றுகிறதா என்பதைப் பொறுத்தே பெரிய அளவில் தீர்மானிக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

இந்த மோதலுக்குப் பிறகு ஈரான் அணு குண்டு பற்றி எப்படிச் சிந்திக்கும்?

தொழில்நுட்ப ரீதியாக, ஒற்றைத் தாக்குதலில் ஒரு நாடு அணு குண்டு தயாரிப்பதைத் நிரந்தரமாகத் தடுப்பது சாத்தியமற்றது. இலக்கு வைக்கப்பட்ட அரசாங்கம் ஒரு ஆயுதத்தைப் பெற உண்மையிலேயே உறுதியுடன் இருந்தால், அழிக்கப்பட்ட எதுவும் மீண்டும் கட்டியெழுப்பப்படலாம்.

இஸ்ரேல், வன்முறையால் மட்டும், குண்டு தயாரிக்கும் ஈரானின் விருப்பத்தை அகற்ற முடியாது. எனவே இஸ்ரேல் நதான்ஸுக்கும் ஃபோர்டோவுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினாலும், எதிர்காலத்தில் மற்றொரு தாக்குதலைத் தொடங்காமல் ஈரானியர்கள் அதை சரிசெய்வதைத் தடுக்க முடியாது. மேலும், வெற்றிகரமான இஸ்ரேலியத் தாக்குதல் அணுசக்தியைப் பெறுவதில் ஈரானின் ஆர்வத்தை வலுப்படுத்தும். அதாவது குண்டுகள் விழுவது நின்றவுடன் ஈரான் அணுசக்தி மறுசீரமைப்புக்காக பெரும் வளங்களில் முதலீடு செய்யும்.

இந்தத் தர்க்கத்தின்படி, இஸ்ரேலியத் தாக்குதல் இஸ்ரேலை முடிவற்ற போருக்கு இட்டுச் செல்கிறது. அதாவது ஈரான் தன் அணுசக்தித் திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பாமல் இருக்க வேண்டுமானால் இஸ்ரேல் ஈரான்மீது குறிப்பிட்ட இடைவெளியில் குண்டுகளை வீசிக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த வாதத்தைச் சற்றே ஆழமாக ஆராய்ந்துபார்க்கலாம். குறைந்தது மூன்று சாத்தியமான விளைவுகளை அலசலாம்.

image-2507.png

முதலாவது, இது சரியானது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு உண்மையான சேதத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் இந்தச் செயல்பாட்டில், எதிர்கால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தடுக்க ஒரு குண்டை உருவாக்க வேண்டும் என்று ஈரானை நம்ப வைக்கிறது. 1981 ஆம் ஆண்டில் ஈராக்கின் ஒசிராக் அணுசக்திக் கட்டமைப்பின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இதுவே நடந்தது. இது சதாம் உசேனின் அணுசக்தி வளர்ச்சியை இரட்டிப்பாக்கும் முடிவுக்குக் காரணமானது (இந்தத் திட்டம் 1992 வளைகுடாப் போரால் மட்டுமே உண்மையாகத் தடைபட்டது; அதைத் தொடர்ந்து அணுசக்தி ஆய்வுகள் நடந்தன).

இரண்டாவது சாத்தியக்கூறு என்னவென்றால், இஸ்ரேலின் தாக்குதல்கள் அதன் விமர்சகர்கள் நினைப்பதைவிடவும் மிகவும் அதற்குப் பயனளிப்பதாக இருக்கலாம். ஒருவேளை, ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்தும் சேதம் மிக அதிகமாக இருப்பதால், அவற்றை மீண்டும் கட்டியெழுப்புவது ஆபத்தானது என்றும் செலவு அதிகம் எனவும் ஈரானியர்கள் கருதலாம். அல்லது, ஆட்சி மாற்றத்திற்கான முயற்சி வெற்றிபெற்று, ஈரானில் புதிதாக வரும் அரசு அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்காமல், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண முடிவு செய்யலாம்.

மூன்றாவது சாத்தியக்கூறு: போரின்போது ஈரானின் அணுசக்தி வசதிகள் பொதுவாக எதிர்பார்க்கப்படுவதைவிட மிகக் குறைவான சேதத்தையே சந்திக்கின்றன. இஸ்ரேல் தடுப்பதற்குத் தயாராக இருக்கும் முன்பே ஈரான் ஒரு குண்டை உருவாக்க விரைந்து செயல்படுகிறது.

இஸ்ரேல் இதுவரை பெற்ற வெற்றிகளைக் கருத்தில் கொண்டால் இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் நிபுணர் மதிப்பீடுகள், ஈரான் தனது ஆயுதத் திட்டத்தைப் பாதுகாப்பதில் வெளிப்படையாகத் தோன்றுவதைவிட சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றன.

மத்திய கிழக்கு நிறுவனத்தின் கொள்கை துணைத் தலைவர் கென் பொல்லாக், “ஃபாரீன் அஃபேர்ஸ்” இதழில் எழுதுகிறார்: “ஈரானிடம் ஏற்கனவே பல அணு ஆயுதங்களை உருவாக்கப் போதுமான அளவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளது. இது கொள்கலன்களில் அடைக்கப்பட்டு மூன்று வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் நடந்துகொண்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களில் இஸ்ரேலால் அவை அனைத்தையும் கைப்பற்ற முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய மற்றும் பிற மேற்கத்திய உளவுத்துறைகள் புதிய, இரகசிய ஈரானிய அணுசக்தி தளங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கலாம். அவை அடையாளம் காணப்பட்டாலும் அந்தத் தளங்களை அழிப்பதிலும் சிக்கல் இருக்கலாம், ஏனெனில் ஈரான் தனது தற்போதைய வசதிகளின் அளவைவிட அவற்றை இன்னும் பலப்படுத்த வாய்ப்புள்ளது.”

எவ்வளவு விரைவாக என்பது சேதத்தின் அளவைப் பொறுத்தது. ஆனால் ஐரோப்பிய கொள்கை பகுப்பாய்வு சிந்தனை மையத்தின் ஃபேபியன் ஹாஃப்மேன், “கணிசமானவை தப்பித்தால்” அது “ஒப்பீட்டளவில் விரைவாக ஆயுத-தர செறிவூட்டல் அளவை அடையலாம்” என்று கூறுகிறார்.

இந்த மூன்று சாத்தியக்கூறுகளில் எது நடக்க வாய்ப்புள்ளது என்று நமக்குத் தெரியவில்லை. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியக்கூறுக்கும் ஈரான் மிக விரைவில் அணு குண்டை உருவாக்கும் சாத்தியக்கூறுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. எனவே, தற்போதைய மோதல்களின் தாக்கங்களை இப்போதே உறுதியுடன் கணிப்பது சாத்தியமல்ல என்பதே தெளிவாக இருக்கிறது.

நன்றி: வோக்ஸ் இணைய தளம்

https://minnambalam.com/israel-iran-war-three-important-questions/

துரோகிகள் Vs தியாகிகள்! — கருணாகரன் —

1 week 2 days ago

துரோகிகள் Vs தியாகிகள்!

June 15, 2025

துரோகிகள் Vs தியாகிகள்!

— கருணாகரன் —

தமிழரசுக் கட்சி ஆரம்பித்து வைத்த தியாகி – துரோகி ஆட்டத்தை, தமிழரசுக் கட்சியே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியின் ஆதரவோடு உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியதோடு ஈ.பி.டி.பியும் துரோகிப் பட்டியலில் இருந்தும் அரச ஒத்தோடிகள் என்ற பழிப்பெயரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட புனிதமளிப்பு நடைபெற்றுள்ளது. இனி, ஈ.பி.டி.பியை தமிழரசுக் கட்சியினர் துரோகிப் பட்டியலில் சேர்க்க முடியாது. அவர்களும் தமிழ்தேசிய அரசியலில் சங்கமித்துள்ளனர். 

இதுவரையிலும் ஈ.பி.டி.பியை துரோகி என்று சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அந்த வார்த்தைகளைச் சொன்னவர்களுடைய முகங்களிலேயே காறி உமிழ்ந்துள்ளன. அல்லது அவ்வாறு ஈ.பி.டி.பியைத் துரோகப்பட்டியலில் இன்னும் உள்ளதாகக் கருதும் தமிழரசுக் கட்சியினர், அதிலிருந்து வெளியேறி, தாங்கள் வலியுறுத்தும் புனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும். தமது கண்டனங்களைத் தமிழரசுக் கட்சியின் தலைமையை நோக்கித் தெரிவிக்க வேண்டும். 

ஆனால், அப்படியெல்லாம் நடக்கக் கூடிய வாய்ப்பு சுத்தமாக  இல்லை. 

யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பியின் ஆதரவோடு அதிகார பூர்வமாகப் பதவியேற்று ஒரு முழுநாள் ஆகிவிட்டது. தம்மைச் சுத்தவாளிகள், விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியினர் என்று சொல்லிக் கொள்ளும் – காட்டிக் கொள்ளும்  சிவஞானம் சிறிதரன் அணி கூட கனத்த மௌனத்தையே கொண்டுள்ளது. 

அந்த  அணியைத் தவிர, வேறு எவரும் தமிழரசுக் கட்சிக்குள் தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்வதில்லை. நடிப்பில் உச்சத்தைத் தொடுவதுமில்லை. 

ஆகவே அவர்களும் ஈ.பி.டி.பியை புனிதமாக்குவதற்குச் சம்மதமாகியுள்ளனர். அல்லது அவர்களும் தமிழரின் அரசியலில் துரோகியாகியுள்ளனர். 

இதொன்றும் புதியதோ புதுமையானதோ இல்லை. நடிப்புச் சுதேசிகள் என்று பாரதியார் தன்னுடைய கவிதையில் பாடியதைப்போலவே இவர்கள் தங்களுடைய அரசியல் வாழ்வை முன்னெடுத்து வந்திருக்கின்றனர், வருகின்றனர். அதனுடைய வெளிப்பாட்டுக் காட்சிகளே இவையாகும்.

துரோகி அரசியலின் தொடக்கமும் வரலாறும்:

1950 களில் இலங்கை அரசியலில் செல்வாக்கோடு இருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த நல்லையா (மாஸ்டர்)  அவர்களை வீழ்த்துவதற்காக எஸ். ஜே. வி.செல்வநாயகம் தூக்கியதுதான் இந்தத் துரோகி என்ற ஆயுதம். அதற்குப் பிறகு அமிர்தலிங்கம் அதைத் தூக்கி யாழ்ப்பாணத்தில் துரையப்பாவைத் துரோகியாக்கித் தொலைத்தார். பிறகு அமிர்தலிங்கமே துரோகியாக்கப்பட்டு புலிகளால் கொல்லப்பட்டார். இப்படியே நீண்ட துரோகிப் பட்டியல் ஈழ விடுதலை இயக்கங்களையும் விட்டு வைக்கவில்லை. இடதுசாரிகளையும் பலியெடுத்தது. சுருக்கமாகச் சொன்னால், ஈழ அரசியல் அரங்கிலும் அதற்கு வெளியிலும் பல ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பலி கொண்டது.

அதேவேளை முன்னர் துரோகி என்று அடையாளப்படுத்தி, ஒதுக்கு அரசியலை (புறக்கணிப்பு அரசியல் அல்லது விலக்க அரசியல்) மேற்கொண்டவர்களே, பின்னர் தாம் ஒதுக்கிய, புறக்கணித்த தரப்பைப் புனிதத் தண்ணீர் தெளித்து, அரவணைத்த சங்கதிகளும் இந்த வரலாற்றில் உண்டு.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைத் துரோகியாக்கி, தன்னைத் தியாகியாக்கித் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ஆதிக்கத்தைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, 1970 களின் முற்பகுதியில் காங்கிரசுடன் கூட்டு வைத்தது. அதுவே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். தமிழரசுக் கட்சி, தன்னுடைய அரசியல் இயலாமையை மறைத்துக் கொள்வதற்காகக் காங்கிரசுடன் சமரசமாகிக் கூட்டுச்சேர்ந்தது. அதோடு தன்னுடைய செல்வாக்கையும் தொடர்ந்தது. 

இப்படித்தான் 1980 களின் நடுப்பகுதியில் சக விடுதலை இயக்கங்களைத் துரோகிகளாக்கி ஒதுக்கிய விடுதலைப் புலிகள், 2000 த்தின் முற்பகுதியில் சமரசமாகி அவற்றைச் சேர்த்துக் கொண்டனர். அதுவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகியது. 

இதை நாம் திரும்பத்திரும்பச் சொல்லியே தீர வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் அரசியற் பரப்பில் மூத்தோர் தொடக்கம் இளையோர் வரையில் பெருந்திரளானோர் இந்தத் துரோகி – தியாகி விளையாட்டில் தொடர்ச்சியாகவே ஈடுபட்டு வருகிறார்கள். 

வரலாறு எத்தனை தடவை மகத்தான உண்மைகளையும் யதார்த்த நிலைகளையும் எடுத்துச் சொன்னாலும், தன்னை நிரூபித்துக் காட்டினாலும் இவர்கள் அதிலிருந்து எதையும் படித்துக் கொள்வதேயில்லை. அதற்குத் தயாராகுவதும் இல்லை. 

அதனால் இந்த வரலாற்று உண்மைகளை திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும். புத்திசாலிகளுக்கு ஒரு சொல். மூடர்களுக்கு ஆயிரம் வார்த்தைகள் என்பார்கள் அல்லவா! 

உலகில் இந்தளவுக்குத் துரோகி என்ற சொல்லோடு மிக நீண்ட காலம் – ஏறக்குறைய 75 ஆண்டுகள் – சீரழிந்த இனமோ சமூகமோ வேறு இருந்திருக்க முடியாது. அரசியலில் மட்டுமல்ல, கலை இலக்கியத்திலும் ஊடகத்துறையிலும் இந்தத் ‘துரோகி‘ முத்திரை குத்தும் போக்கு நீடித்தது. 

ஆக இந்த முட்டாள்தனம் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் செழித்துப் பரந்து வளர்ந்துள்ளது. 

இதற்குக் காரணம்:

தங்களையும் விட திறனாளர்களாகவும் ஆற்றல்களாகவும் விவேகத்தோடும் துணிவோடும் காரியமாற்றியவர்களை எதிர்கொள்ள முடியாதபோது  “தியாகி” என்ற ஆயுதத்தைத் தூக்கி, எதிர்த் தரப்பினரைத் தாக்கினார்கள். அதை எந்தக் கேள்வியுமின்றி, எத்தகைய விமர்சனமும் இல்லாமல் முழுத் தமிழ்ச்சமூகமும் கொண்டாடியது. விலக்குகள் மிகச் சொற்பமே.  

மறுவளத்தில் தங்களுடைய தவறுகளையும் பலவீனங்களையும் இயலாமைகளையும் மறைத்துத் தற்காத்துக் கொள்வதற்குத் “தியாகி” என்ற கேடயத்தைப் பயன்படுத்தித் தம்மைத் தற்காத்துக் கொண்டனர். கூடவே ரகசியமாக அரசுடன் கூட்டு வைத்துக் கொள்வது தவறல்ல என்றும். ஆனால் பகிரங்கத் தளத்தில் அப்படிச் செய்வது மாபெரும் குற்றச் செயல் என்றும் மக்களுக்குக் காட்டப்பட்டது. 

துயரம் என்னவென்றால், இதையிட்டுப் புத்திஜீவிகளும் பெரிய அளவில் மறுத்துப் பேசியதில்லை. பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கூட இது குறித்துத் துணிச்சலாக எதையும் சொன்னதில்லை. பதிலாக அனைவரும் இதையே ஒப்பித்துக் கொண்டனர். 

என்பதால்தான் தமிழ்ச்சமூகத்தில் இந்தளவு மிக நீண்ட காலத்தை (முக்கால் நூற்றாண்டை) “துரோகி – தியாகி” விளையாட்டில் சீரழித்துக் கொள்ள வேண்டியிருந்தது. 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது துரோகி – தியாகி விளையாட்டில் பலியாகுவது உயிர்களும் ஜனநாயகமும் என்பதை. ஈழத் தமிழ் அரசியலில் இது நிரூபணம். ஈழத் தமிழ் அரசியலின் பின்னடைவுக்கும் தோல்விக்கும் காரணமும் இதுவே. இந்த நோய், பல ஆயிரம் ஆற்றலர்கள் பலரைப் பலியெடுத்த்தோடு, சிறந்த – பொருத்தப்பாடுடைய கருத்துகளுக்கும் இடமளிக்காமல் கொன்று வெட்டை வெளியாக்கியது. 

வரலாற்றுக் காரணம்:

தமிழ்க் கலை, இலக்கிய வரலாறும் அரசியல் வரலாறும் துரோகி – தியாகி விளையாட்டுக்கு (நோய்க்கு) இடமளித்து வந்துள்ளது. பலருக்கும் தெரிந்த உதாரணங்கள். 

1.   வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றில் (திரைப்படத்திலும்தான்) எட்டப்பன் பாத்திரம். எட்டப்பன் காட்டிக் கொடுத்தபடியால்தான் வெள்ளையரிடம் கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டார் என்ற புனைவு. 

2.   அதை அடியொற்றி, பண்டாரவன்னியன் கதை. காக்கை வன்னியனால்தான் பண்டாரவன்னியனை வெள்ளையர்கள் இலகுவாகத் தோற்கடிக்க முடிந்தது என்ற வரலாற்றுக் கட்டமைப்பு. 

தமிழர்களுடைய வீரத்தை உயர்த்திக் காட்டுவதற்கு (அந்நியருடைய போர்த்திறனையும் சாணக்கியத்தையும் தந்திரோபாயத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் மறைத்துக் கொள்வதற்கு) இட்டுக் கட்டப்பட்ட புனைவுகளே இத்தகைய கட்டுக் கதைகளும் மிகுவாக்கமுமாகும். 

இதை நவீன அரசியல் சமூகமும் தனக்குள் ருசியாக விருப்போடு எடுத்துக் கொண்டது. இதற்காக அது இழந்ததும் பலி கொடுத்ததும் ஏராளம். இன்னும் இந்த நோய் முற்றாகத் தீரவில்லை. தமிழரசுக் கட்சி தன்னுடைய இயலாமைக் கட்டத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, ஏனைய தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும்தான்.

தற்போதைய நிலவரம்: 

கடந்த பாராளுமன்றத் தேர்தல், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்றவற்றில் ஏனைய தமிழ்க்கட்சிகளை விட கூடுதலான இடங்களைத் தமிழரசுக் கட்சி பெற்றாலும் அது பலவீனமான நிலையிலேயே உள்ளது. தமிழ்க்கட்சிகளில் பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சியைச் சிலர் அடையாளப்படுத்தினாலும் உள்ளே அது கோறை விழுந்தே உள்ளது. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சி எதிர் ஏனைய தமிழ்க்கட்சிகள் என்ற நிலையே காணப்படுகிறது. கூடவே தனக்குள்ளேயே அது கடுமையான உள்முரண்பாடுகளையும் பலமான இடைவெளிகளையும் கொண்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளில் தமிழரசுக் கட்சி சிக்குண்டிருப்பதை நினைவிற் கொள்ளலாம். 

ஆகவே தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் தலைமைச் சக்தியாக வளர்த்துக் கொள்வதற்கும் தமிழரசுக் கட்சி கடுமையாக முயற்சிக்கிறது. அது சந்திக்கும் சவால்களுக்கு ஏற்ற அளவில் அதனுடைய முயற்சிகளும் தீவிரமாக – எல்லை கடந்ததாக உள்ளன. தமிழரசுக் கட்சியின் தலைமைச் சக்தியாக சுமந்திரன் இருப்பதால், காய்கள் துரிதமாக நகர்த்தப்படுகின்றன. தியாகி – துரோகி என்ற அடையாளப்படுத்தலுக்கு சுமந்திரன் அஞ்சிப் பணிகின்றவர் அல்ல. 

மட்டுமல்ல, சம்மந்தன் இருந்த காலத்திலேயே தமிழரசுக் கட்சிக்கும் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் துரோகி அடையாளம் வரத் தொடங்கியிருந்தது. இதனால்தான் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் அணி வெளியேறியது. 

சம்மந்தனின் இறுதிக் காலம் கூட ஏறக்குறைய துரோகி என்ற அடையாளத்தோடுதான் கழிந்தது. ஒருசாரார் அவரைத் துரோகியாகக் கடுமையாகச் சாடினர். இது அவருடைய மரண நிகழ்விலும் எதிரொலித்தது. பின்னர் மாவை சேனாதிராஜாவின் மரண நிகழ்விலும் தியாகி – துரோகி விளையாட்டுகள் நீடித்தன. 

அப்போதும் தியாகிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கும் தமிழரசுக் கட்சியின் சிறிதரனின் அணி கள்ள மௌனமே காத்தது. சம்மந்தனை இறுதிவரையிலும் தலைவராக – தலைமைச் சக்தியாகவே ஏற்றுக் கொண்டது இந்த அணி. 

இது சுமந்திரனின் காலம். ஆகவே அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகத் தமிழரசுக் கட்சியைக் கொண்டு வந்துள்ளார். 

மறுபக்கத்தில் தம்மைத் தியாகப் பரப்பு என்று சொல்லிக் கொண்ட கஜேந்திரகுமார் அணியும் (தமிழ்த் தேசியப் பேரவையும்) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கூட்டு வைத்துள்ளது. அதில் சமத்துவக் கட்சியின் முருகேசு சந்திரகுமாரும் உள்ளார். 

ஆக மிஞ்சியிருப்பது, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள்தான். அவையும் ஒருநாள் புனிதப்படுத்தப்படும்.

இன்னும் பிள்ளையான் அணி மாத்திரந்தான் துரோகி பட்டியலில் தொடருகின்றனர். அதாவது அவர்கள் கிழக்கு என்ற காரணத்தால் இன்னமும் தீண்டத்தகாதவர்களாக வைக்கப்பட்டுள்ளார்களோ?”

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. சூழ்நிலைகளே எதையும் தீர்மானிக்கின்றன என்று சமாதானம் சொல்லிக்  கொள்ள வேண்டியதுதான்.  

கண்கெட்ட பின் சூரியோதயம்.

இதெல்லாவற்றுக்கும் ஒரு காரணம் NPP ஆகும். NPP யின் அரசியல் விளைவு, தமிழ் அரசியற் சூழலில் தியாகி – துரோகி என்ற அடையாளத்துக்கு முடிவைக் கொண்டு வந்துள்ளது. இப்பொழுது அனைவரும் துரோகிகள். அல்லது தியாகிகள்.

https://arangamnews.com/?p=12089

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது? - நிலாந்தன்

1 week 2 days ago

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது? - நிலாந்தன்

504710956_4118247221774593_4808453404441

புதிய உள்ளூராட்சி  சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டா போட்டிகளும் உள்ளூராட்சி  சபைகளை ஒரு கட்சி கைப்பற்றிய பின் கட்சிகளின் விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. நடப்பது கட்சிகளுக்கு இடையிலான போட்டிதான். அதாவது தேர்தல்மைய அரசியல் தான். இதில் தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்லது தேசத்தைக்  கட்டியெழுப்பும் அரசியல் எங்கே இருக்கிறது?

தமிழ்த் தேசிய மக்கள்  முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை  ஒப்பீட்டளவில்  அதைச் செய்யலாம். அதற்கு  மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், அது ஒப்பீட்டளவில் இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவு என்று தோன்றுவது. இரண்டாவதாக,அது ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசிய அரசியலில் இப்போதைக்கு ஏதோ ஒரு வகையான பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது. மூன்றாவதாக அது ஒப்பீட்டளவில் உள்ளவற்றில் பெரிய கூட்டாகக் காணப்படுகின்றது.

பைபிளில் ஒரு வசனம் உண்டு,“பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை”. இப்பொழுது உருவாக்கப்பட்டுவரும் புதிய பிரதேச சபைகளுக்கும் அது பொருந்தும். தமிழ்த்  தேசியப்  பேரவைக்கும் அது பொருந்தும். தமிழ்த் தேசியப் பேரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் டெலோ மற்றும் சந்திரகுமாரின் கட்சிகளைத்தவிர ஏனைய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்தவைதான். அதாவது கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவைக்குள் ஒன்றாக இருந்தவை. அப்பொழுது தயாரித்த யாப்பு முன்மொழிவைத்தான் இப்பொழுது இறுதித் தீர்வுக்கான முன்மொழிவாக அவர்கள் வைக்கிறார்கள். அப்பொழுது இரண்டாவது எழுக தமிழில் சிறீதரனும் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார்.

தமிழ்மக்கள் பேரவைக்குள் காணப்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், விக்னேஸ்வரனின் கட்சி ஆகிய இரண்டும் இப்போதுள்ள கூட்டுக்குள் இல்லை. புதிதாக சந்திரகுமாரும் டெலோவும்.

அப்படித்தான் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளரை முன் நிறுத்திய தரப்புகளில் பெரும்பாலானவை இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து புதிய கூட்டுக்குள் காணப்படுகின்றன. அதாவது கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன்பு தமிழ்ப் பொது வேட்பாளருக்காக ஒன்றுதிரண்ட அதே தரப்புகள் இப்பொழுது சமத்துவக் கட்சி, சைக்கிள் கூட்டு என்பவற்றோடு இணைந்து ஒரு புதிய கூட்டாக மேலெழுந்திருக்கின்றன.

பத்து மாதங்களுக்கு முன்பு கஜேந்திரக்குமார் பொது வேட்பாளரை எதிர்த்தவர். அந்த விடயத்தில் அவரும் சுமந்திரனும் ஒரே கோட்டில் நின்றார்கள். இருவேறு நிலைப்பாடுகளோடு அவர்கள் பொது வேட்பாளரை எதிர்த்தார்கள். தேர்தலுக்குப் பின் கஜேந்திரக்குமார் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளைத் தேசியப் பண்புமிக்கவை என்று சொன்னார். இப்பொழுது அதே கட்சிகளோடு கூட்டு. ஆனால் மூன்று வித்தியாசங்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு இல்லை. விக்னேஸ்வரனின் கட்சி இல்லை. சந்திரகுமாரின் கட்சி உள்ளே வந்திருக்கிறது. அப்பொழுது சிறீதரன் பொது வேட்ப்பாளரோடு துணிந்து நின்றார்.

எனவே இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ் மக்கள் பேரவையைப் பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன் பொறுமையாகவும் தீர்க்கதரிசனமாகவும் செயற்பட்டு இருந்திருந்தால்  இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலின் நிலைமை எங்கேயோ போயிருக்கும். அப்படித்தான் ஆகக்குறைந்தது கடந்த ஆண்டு பொது வேட்பாளரின் விடையத்திலாவது முன்னணி தீர்க்கதரிசனமாக முடிவெடுத்து இருந்திருந்தால் இன்றைக்கு முன்னணிதான் சிலசமயம் தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைச் சக்தியாக மேல் எழுந்திருந்திருக்கும். ஆனால் கடந்த சுமார் 10ஆண்டுகளில் அவர்கள் தீர்க்கதரிசனமற்ற முடிவுகளை எடுத்தார்கள். பகைவர்களைச் சம்பாதித்தார்கள். குறிப்பாக தமிழ்மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகிய நூதனமான கட்டமைப்புகளை பலப்படுத்தத் தவறினார்கள்.

தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியப் பொதுக கட்டமைப்பு ஆகியவை இந்தப் பிராந்தியத்திலேயே நூதனமான அரசியல் தோற்றப்பாடுகள். கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கலவை. அப்படி ஒரு கலவைதான் இப்பொழுது நாட்டை ஆளும் தேசிய மக்கள் சக்தியும். தமிழ்மக்கள் பேரவை படிப்படியாக பலமிழந்து போன ஒரு காலகட்டத்தில், 2019இல் தெற்கில் தேசிய மக்கள் சக்தி உருவாகியது. இன்றைக்கு அது ஆளுங்கட்சியாக எழுச்சி பெற்றுவிட்டது. அதற்கு முன் தோன்றிய தமிழ் மக்கள் பேரவையும் இப்பொழுது இல்லை. அதற்குப்பின் தோன்றிய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பும் இப்பொழுது இல்லை. 10ஆண்டுகளில் தமிழ்மக்கள் இரண்டு தடவைகள்  மேலெழ முயன்றார்கள்  என்று பொருள்.

எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடந்த ஒரு தசாப்த காலத்தில் விட்ட தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் புதிய கூட்டைப் பாதுகாக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்த கட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தியாக அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே நிராகரிக்கப்பட்டவரும், அதே ஆண்டின் இறுதியில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவருமாகிய சுமந்திரன் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி ஒன்றின் தீர்மானிக்கும் சக்திபோலச் செயற்படுகிறார். கட்சிக்குக் கிடைத்த வெற்றிக்கூடாக அவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளப் பார்க்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கு  தழுவிய ஒரே கட்சியாக அது காணப்படுகின்றது. அதனால்தான் அது ஏனைய கட்சிகளை விடவும் பலமாக மேலெழ முடிந்தது.

ஆனால் முன்னணி யாழ்ப்பாணத்துக்கு வெளியில் போதிய அளவுக்கு வேலை செய்யவில்லை என்பதுதான் உண்மை. கடந்த 15 ஆண்டுகளிலும் அவர்கள் ஒரு கட்சியாகவும் தங்களை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டார்கள்; தங்கள் கொள்கைகளை மக்கள் மயப்படுத்தி தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டவும் தவறிவிட்டார்கள். அதன் விளைவாக தமிழரசுக் கட்சியின் முதன்மையைக் கேள்விக்கு உள்ளாக்க அவர்களால் முடியவில்லை. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் வழங்கிய ஆணை என்பது மிகத்தெளிவானது. ஒன்றுபட்டால் மட்டும்தான் என்பிபியை எதிர்கொள்ளலாம் என்பதே அந்த ஆணை. வவுனியா உள்ளூராட்சி சபையில்  அதுதான் நிலைமை. ஒன்றுபடவில்லையென்றால் என்பிபி அடுத்த மாகாண சபைக்குள் மேலும் பலமாக கால்களை ஊன்றப் பார்க்கும்.

ஆனால் கடந்த சில வாரங்களாக புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்திலும், சபைகளைக் கைப்பற்றிய பின்னரும் தமிழ்த்சிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், வாதப் பிரதிவாதங்கள், மோதல்கள், குறிப்பாக அவர்களுடைய விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கும் வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றைத் தொகுத்துப்பார்த்தால் தெரிவது என்னவென்றால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் வழங்கிய ஆணையை மேற்படி கட்சிகள் சரியாகக் கிரகித்துக் கொள்ளவில்லை என்பதுதான். இந்த ஆணை புதியது அல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ஏறக்குறைய தமிழ் மக்கள் வழங்கிய ஆணை அத்தகையதுதான். தேசமாகத் திரளவில்லை என்றால் என்பிபியின் வழிகளை இலகுவாக்குவீர்கள் என்பதே.

எனவே பொது எதிரிக்கு எதிராகத் தேசமாகத் திரள்வது எப்படி என்பதுதான் இங்குள்ள சவால். சுமந்திரன் அதற்குத் தயாரில்லை என்பதற்காக, சிவிகே அந்த விடயத்தில் தளம்புகிறார் என்பதற்காக, தமிழரசுக் கட்சிக்குள் உள்ள எல்லாரையுமே அவ்வாறு தேசத் திரட்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்த முடியாது; குத்தவுங்கூடாது. ஏனென்றால் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது தெளிவாக இரண்டு அணிகள் உண்டு. அதில் சிறீதரன் அணியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் பரிவோடு காணப்படுகிறது. எழுக தமிழ்கள்,பொது வேட்பாளர் ஆகிய இரண்டு தீர்மானகரமான தருணங்களிலும் சிறீதரன் மிகத்தெளிவான நிலைப்பாட்டை எடுத்தார். சந்திரக்குமாரை புதிய கூட்டுக்குள் உள்ளீர்த்ததன்மூலம் சிறீதரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவில் சில நெருடல்கள் ஏற்படலாம். ஆனாலும் சுமந்திரனுக்கு எதிரான அணிச் சேர்க்கை என்று பார்க்கும் பொழுது சிறீதரன் அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிட்டவாகத்தான் நிற்கும்.

அதற்காக அரசியலை சுமந்திரனுக்கு எதிராக குவிமையப்படுத்தத் தேவையில்லை. மாறாக,தேசத்தைத் திரட்டுவது என்ற அடிப்படையில் கிராமங்களில் இருந்து தமிழ்த் தேசியப் பேரவையை எப்படிக் கட்டியெழுப்புவது என்று சிந்திக்கலாம். ஏறக்குறைய  ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்த பொழுது இதே கட்சிகள்தான் எழுக தமிழ்களைச் செய்தன. மக்கள் எழுச்சிகள்தான் அரசியலில் புதிய ரத்தச் சுற்றோட்டங்களை ஏற்படுத்தும்.அவ்வாறான மக்கள்  எழுச்சிகளுக்குரிய உணர்ச்சிகரமான தொடக்கப் புள்ளிகள் ஏற்கனவே உண்டு. உதாரணமாக தையிட்டி.அடுத்தது, கிழக்கில் மேய்ச்சல் தரை.மன்னாரில் கனியவள மண் அகழ்வு.இவை தவிர அண்மைக் காலமாக கிண்டப்பட்டு வரும் செம்மணிப் புதைகுழி.

498185341_2981946991974411_2871508700503

செம்மணிப் புதைக்குழு ஓர் உணர்ச்சிகரமான விடயம்.அது தமிழ் மக்களை வீதிக்குக் கொண்டுவரும்.அங்கே இதுவரையிலுமான 19 எலும்புக்கூடுகள்  அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அது ஒரு சுடலை.அரியாலை மக்களுக்கான சித்துப்பாத்தி மயானம்.அங்கே யாரையும் புதைப்பதில்லை.அங்கு கண்டெடுக்கப்பட்ட  எலும்புக் கூடுகள் ஆடைகளோடு இல்லை.பொதுவாக பூத உடல்களை நிர்வாணமாக எரிப்பதும் இல்லை;புதைப்பதும் இல்லை.அந்தப் பகுதியில் சுமார் 600க்கும் குறையாதவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கத் தேவையான  தகவல்களை சம்பந்தப்பட்ட படைத்தரப்பினரே  நீதிமன்றங்களில் வாக்குமூலங்களாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்பொழுது அப்புதை குழி  கிண்டப்படுகிறது. அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றவர்களின் உறவினர்கள் அப்புதை குழிக்குள் தங்களுடைய உறவுகளின் ஏதாவது ஒரு தடையம்  அல்லது மிச்சம் இருக்குமா என்ற தவிப்போடு அங்கே வந்திருக்க வேண்டும். உக்காத ஒரு சேலைத் துண்டு அல்லது ஒரு செருப்பு அல்லது பிளாஸ்டிக் காப்பு போன்ற ஏதாவது ஒரு தடயம் அங்கே கிடைக்குமா என்ற பதட்டங் கலந்த தவிப்போடு  அப்பகுதிக்கு இதுவரை எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?

இந்த இடத்தில் தென்னிலங்கையில் 2012இல் மாத்தளைப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பொழுது,அப்பொழுது உயிரோடு இருந்த மனித உரிமைச்  செயற்பாட்டாளர் ஆகிய சுனிலா அபயசேகர தெரிவித்த ஒரு கருத்தை இங்கு சுட்டிக்காட்டலாம்.மாத்தளை  ஆஸ்பத்திரி வளாகத்தில் 150க்கும் குறையாத எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அதுதொடர்பாக சுனிலா,”சண்டே டைம்ஸ்” பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டியிருந்தார்.“இதுவே லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தால் அங்கே இப்படி ஒரு புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டால்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அந்த இடத்தை நோக்கிக் குவிந்திருப்பார்கள்.ஆனால் இலங்கையிலோ நிலைமை அவ்வாறில்லை. யாரும் அந்த இடத்திற்கு வரவில்லை” என்ற பொருள்பட சுனிலா கவலையோடு கருத்துத் தெரிவித்திருந்தார். மாத்தளையில் மட்டுமல்ல செம்மணியிலும் நிலைமை அதுதானா?

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் செம்மணிப் புதை குழியைப் பார்வையிட வருகிறார்.செம்மணிப் புதைகுழி போல ஏற்கனவே மன்னார் புதைக்குழி,கொக்குத்தொடுவாய் புதைக்குழி என்று பல புதைக்குழிகள் உண்டு.எனவே  புதைக்குழிகள் தொடர்பான சுதந்திரமான விசாரணையைக் கேட்டு தமிழ் மக்களை வீதியில் இறக்கலாம்.கடந்த ஐந்தாம் திகதி யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் அதுதொடர்பான ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை செம்மணியில் ஒழுங்குபடுத்தியிருந்தார்கள்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான  போட்டா போட்டிகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு  புதைக்குழிகளின் மீது கட்சிகள் கவனத்தைத் திருப்புமா?குறிப்பாக தமிழ்த் தேசிய பேரவைக்குள் உள்ள கட்சிகளுக்கு  ஏற்கனவே “எழுக தமிழ்” செய்த அனுபவம் உண்டு.மக்களை எழுச்சிபெறச் செய்வதென்றால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எதையாவது காட்டவேண்டும்.அல்லது உணர்ச்சிக் கொதிப்பான ஏதாவது ஒன்று நடக்கவேண்டும்.தமிழ்த் தேசிய அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தரப்புகள் ஒன்றாகத் திரளும்பொழுது அது மக்கள் மனதில் புதிய நம்பிக்கைகளை உருவாக்கும். கடந்த பௌர்ணமி நாளன்று தையிட்டியில் வழமையைவிடக் கூடுதலானவர்கள் திரண்டார்கள்.அது ஐக்கியத்தின் பலம்.

அதுபோலவே செம்மணிப் புதைகுழிக்கு நீதி கேட்டு மக்களை வீதிக்கு கொண்டு வரலாம்.தனது கட்சிக்காரருக்கு எதிராகவும் ஏனைய கட்சிகளுக்கு எதிராகவும் வழக்குப்போடும்  அரசியல்வாதிகள் இந்தவிடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்குப்போடலாம். அவர்கள் அதைச் செய்வார்களோ இல்லையோ தமிழ்த் தேசிய பேரவையைப் பொறுத்தவரை அது ஒரு தேர்தல் மையக் கூட்டு அல்ல மக்கள்மைய அரசியலுக்கான ஒரு தொடக்கமே என்பதனை நிரூபிப்பதற்கான பொருத்தமான களம் அது.

https://www.nillanthan.com/7457/

இருளில் தேடும் தமிழ்ப்பூனை — கருணாகரன் —

1 week 3 days ago

இருளில் தேடும் தமிழ்ப்பூனை

June 13, 2025

இருளில் தேடும் தமிழ்ப்பூனை

— கருணாகரன் —

சில நாட்களுக்கு முன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டிய தமிழசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றிய சுமந்திரன், புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைக் கடுந்தொனியில் எச்சரித்தார். 

இதற்குக் காரணம், சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சிக்கு இவை ஆதரவளிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகள் பரஸ்பரம் ஆதரவளித்துக் கொள்வதென்ற பகிரங்க அறிவிப்பை தமிழ்த்தேசியப் பேரவை மீறி விட்டது என்பதாக இருந்தது.  

அப்பொழுது அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் வெளிப்படுத்திய உடல்மொழியும் எதிரணியைச் சவாலுக்கு அழைத்த விதமும் சிரிப்பையும் துக்கத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்தது. இரண்டுக்கும் காரணம், நட்புச் சக்திகள் யார், எதிர்ச் சக்திகள் யார் என்று தெரிந்து கொள்ளாமல் இந்த மாதிரி வீறாப்புப் பேசுவதால் எதிர்விளைவுகளே ஏற்படும் என்பது. கடந்த காலத்திலும் இதுவே நடந்தது. நட்புச் சக்திகளை எதிர்தரப்பாகக் கருதி வசைபாடுவதும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் துரோகியாக்கி விலக்குவதும் ஒரு நோயாகும். இது உச்சமடைந்தே சக போராளி இயக்கங்களை நோக்கி விடுதலைப்புலிகள் துப்பாக்கி ஏந்தியது. இறுதியில் சிங்களப் பேரினவாதத் தரப்புக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டு, அழிவைச் சந்தித்ததே மிச்சமாகும். 

இதிலிருந்தெல்லாம் யாரும் படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வளவுக்கும் சுமந்திரன் சற்று யதார்த்தமாகப் பிரச்சினைகளை அணுகக் கூடியவர்கள். துணிச்சலாகச் சில விடயங்களையேனும் பேசக் கூடியவர்கள். கொஞ்சமாவது ஜனநாயகத் தன்மையைப் புரிந்து கொண்டவர். தமிழரசுக் கட்சியில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கக் கூடிய ஓர் ஆளுமை. அவரே இப்படிப் பேசுகிறார் என்றால்… துக்கப்படாமல் என்ன செய்ய முடியும்?  

இதையிட்டு ஏன் சிரிப்பு வந்தது என்றால், இந்த மாதிரிப் பேச்சுகளும் எச்சரிக்கைகளும் சவால்களும் சிலருக்கு உளக் கிளர்ச்சியை அளிக்கலாம். ஆனால், மக்களுக்கு எத்தகைய நன்மைகளையும் தரப்போவதில்லை. ஆகவே இதனால் பயனில்லை. மட்டுமல்ல, இதெல்லாம் வானத்தை நோக்கித் தீர்க்கப்படும் வெற்று வேட்டுகளுக்கு நிகரானவை. இப்படி எத்தனை வெற்று வேட்டுகளைப் பார்த்து விட்டோம் என்பதால் உண்டான சிரிப்பு. 

அரசியல் பேச்சுகள், அரசியல் தீர்மானங்கள், அரசியல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு நன்மையைத் தருவதாக அமைய வேண்டும். அப்படியிருந்தால்தான் அந்த அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு முன்னேற்றம் கிட்டும். அந்த அரசியலும் முன்னகர்வதோடு அதுமுன்னேற்றகரமானதாகவும் அமையும். அதற்கே பெறுமானமும் வரலாற்று மதிப்பும் ஏற்படும். 

இதற்கு நிதானமும் கூர்மையான நுண்மதியும் விரிந்த மனப்பாங்கும் அவசியம். முக்கியமாக ஜனநாயகப் பண்பு வேண்டும். அப்படியாயின், அந்த அரசியலை முன்னெடுப்போர்  வெளிப்படுத்தும் வார்த்தைகளும் எடுக்கப்படும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் ஜனநாயகப் பண்புடனிருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் கையாளப்பட வேண்டும். இல்லையெனில் அனைத்தும் சிதைந்து விடும். 

ஈழப்போராட்டமும் ஈழத்தமிழரின் அரசியலும் சிதைந்து பின்னடைந்து, தோல்வி கண்டதற்குப் பிரதான காரணம், ஜனநாயக அடித்தளம் சிதைந்ததும் சிதைக்கப்பட்டதுமாகும். ஜனநாயகத்தைச் சிதைத்துக் கொண்டு எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஈடேற்றத்தையும் எவராலும் எந்தச் சக்தியாலும் செய்ய முடியாது. 

என்பதால்தான் உலகம் ஜனநாயகத்தை முதன்மையாக வலியுறுத்துகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் அடிச்சட்டமே ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதன் மூலம் பெற்ற வெற்றிதான். 

ஆகவே ஜனநாயகச் சட்டத்திலிருந்துதான் நீங்கள் அனைத்தையும் கட்டியெழுப்ப முடியும். எதையும் வலப்படுத்த இயலும். ஜனநாயகச் சட்டத்தைப் பலவீனப்படுத்தும்போதும் அதைப் புறக்கணிக்கும்போதும் நீங்களே சிதைக்கப்படுகிறீர்கள். சூழலும் சிதைக்கப்படுகிறது. 

இதைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல், மிக உணர்ச்சி வசப்பட்டுச் சுமந்திரன் அந்த உரையை ஆற்றியிருந்தார். அந்த உரை, தற்போதைய நிலையில் கட்சியின் உறுப்பினர்களை மகிழ்வித்திருக்கலாம். ஆனால், அதற்கு வரலாற்றில் எந்தப் பெறுமானமும் இல்லை. வரலாற்றில் மட்டுமல்ல, சமகாலச் சூழலிலும்தான். 

ஏனென்றால், அது அவருடைய அலைவரிசையில் சேர்ந்தியங்க வேண்டிய இன்னொரு தமிழ்த்தேசியவாதத் தரப்பான தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைச் சாடியது; எதிர்நிலைக்குத் தள்ளியது. 

தேர்தல் அரசியலில் போட்டித் தரப்பை எதிரணியாகக் கருதிப் பேசுவதொன்றும் புதிதல்ல. ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. தேர்தல் அரசியலில் போட்டி எந்தளவுக்கு முதன்மை பெற்றிருக்குமோ அந்தளவுக்கு சுழிப்புகளும் தந்திரங்களும் இருக்கும். அதேபோல சமரசங்களுக்கும் விட்டுக் கொடுப்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளல்களுக்கும் இடமுண்டு. இதையெல்லாம் மனதிற் கொண்டே எதிரணியின் மீதான விமர்சனங்களையோ கருத்துகளையோ முன்வைக்க வேண்டும்.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சுமந்திரன் உட்பட தமிழ்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் ஒருமுகப்பட்டு அறிவிப்புச் செய்தது, வடக்குக் கிழக்கில் NPP க்கான ஆதரவை வழங்கக் கூடாது. தமிழ்த்தரப்புகளே சபைகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதாகும். இதில் விசேடமாகச் சுமந்திரன் இன்னொன்றையும் சொன்னார், ‘கூட்டாக இந்தத் தேர்தலை எதிர்கொள்வதை விட தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்வோம். தேர்தலுக்குப்பின்னர் வெற்றியைப் பொறுத்து கூட்டாக ஆட்சியை அமைத்துக் கொள்வோம் என. 

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரன் கூறிய கருத்துகளை பலரும் ஏற்றுக் கொண்டனர். ஆகவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சபைகளில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அனைத்துத் தரப்பும் விட்டுக் கொடுப்பு – ஏற்றுக் கொள்ளல் – புரிந்துணர்வு போன்றவற்றின் அடிப்படையில் பேசியிருக்க வேண்டும். முதற்சுற்றுடன் முற்றுப் புள்ளியை வைத்துக் கொள்ளாமல், தொடர்ந்து நிதானமாகப் பேசியிருந்தால் இந்த மாதிரியெல்லாம் வார்த்தைகள் வெளிப்பட்டிருக்காது. நெஞ்சை நிமிர்த்தியிருக்க வேண்டியதில்லை. நமக்குச் சிரிப்பையும் துக்கத்தையும் வரவழைத்திருக்க வேண்டியிருந்திருக்காது. வேண்டிய அரசியற் சூழலையும் கெடுத்திருக்கத் தேவையில்லை. 

உண்மையில் இங்கே என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது? கோமாளித்தனமும் முட்டாள் வேலைகளும்தானே!

ஏனென்றால், போரினால் தோற்கடிக்கப்பட்டு, நிர்க்கதியாக நிற்கும் தமிழ்ச் சமூகத்தை அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு போன்றவற்றில் அனைத்துத் தரப்புமாக இணைந்து வளர்த்தெடுக்க வேண்டிய சூழலில், ஆளாளுக்கு பகை கொண்டு எதிர்முனைப்படுவது முட்டாள்தனமன்றி வேறென்ன? 

இதற்கு நிதானமாகப் பல பரிமாணங்களில் செயற்பட வேண்டும். அதில் ஒன்றே உள்ளுராட்சி மன்றங்களுமாகும். உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவதென்பது, தமிழீழத்தைக் கைப்பற்றுவதோ அதற்கு நிகரான ஆட்சியை நிகழ்த்துவதோ அல்ல. பதிலாக இந்தச் சபைகளின் மூலம் மக்களுக்கான சேவைகளை செழிப்பான முறையில் வழங்கச் செய்வதே. இது ஒரு  மிகச் சிறிய எல்லைக்குட்பட்ட பணியே. வேண்டுமானால், சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமது கட்சியை வளர்த்துக் கொள்வற்குச் சில வாய்ப்புகள் கிடைக்கலாம். அதற்கு அப்பால் அரசியல் நன்மைகள் இல்லை. 

ஆனால், இங்கே நடப்பதோ தமிழீழத்துக்கான இறுதிப்போரைப் போலவே உள்ளது. 

இதெல்லாம் தமிழ்த் தேசியவாதத் தரப்புகளுக்கிடையிலான மோதல்களும் முரண்பாடுகளும். அதாவது யார் 22 மாற்றுத் தங்கம். யார் 24 மாற்று. யார் 18 மாற்று என்ற அடையாளப்படுத்தலின் விளைவு. இதற்கே இந்தப் போர்.

இதற்கு முன்பு, தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கும் அதற்கப்பாலான தரப்புகளுக்குமிடையிலேயே முரண்பாடுகளும் மோதல்களும் இருந்தன. தமிழ்த்தேசியவாதத்  தரப்பு அரசாங்கத்தையும் (ஆட்சியாளர்களையும்) சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பையும் வெளிப்படையாக எதிர்த்தது. மறுதரப்பு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாலும் அதை அரசோடும் சிங்களப் பௌத்தத் தரப்போடும் கலந்து பேசியே பெற முடியும் என்று நம்பியது. 

ஆகவே இரண்டினது வழிமுறையும் வேறு வேறாக இருந்ததால் அவற்றின் நடைமுறையும் வேறாகவே இருந்தது. இதனால் இரண்டு வகையான அரசியல் முறைமைகளை மக்களிடையே கொண்டிருந்தன. இதில் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதில் தீராத நெருக்கடியும் போட்டியும் நிலவியது.  

விளைவாக துரோகி – தியாகி என்று பொதுவெளியை அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தன இந்தத் தரப்புகள். உண்மையில் இந்த அசிங்கப்படுத்தலை தமிழ்த்தேசியவாதத் தரப்புகளே செய்தன. அதற்கு மறுதலையான தரப்பு அதைச் செய்யவில்லை. அதற்கான தேவையும் அந்தத் தரப்புக்கு இருக்கவில்லை என்பதை நாம் அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். 

தமிழ்த்தேசியவாதத் தரப்பினுடைய அரசியல் தடுமாற்றங்களும் அரசியல் குறைபாடுகளும் வரட்சியுமே அது தன்னைத் தியாகியாக – சுத்தமான பேர்வழியாக முன்னிறுத்திக் கொள்ள முனைந்ததற்குக் காரணமாகும். தன்னுடைய பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்கும் எதிர்த்தரப்பிற்கு வளர்ந்து வரும் செல்வாக்கை மறுதலிப்பதற்குமே எதிர்த்தரப்பைத் துரோகியாகச் சித்தரித்தது. இது எதிர்கொள்ள முடியாத நிலையின் (Unable to face) வெளிப்பாடாகும். 

ஆனால், மக்கள் இரண்டு தரப்பையும் ஆதரித்தே வந்துள்ளனர். இதுதான் ஆச்சரியமளிக்கும் செய்தியாகும். அதிலும் தமிழ்த்தேசியவாதத் தரப்புகளுக்கே ஊடக ஆதரவு தாராளமாக இருந்தது. ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமல்ல, சிவில் அமைப்புகள், புலம்பெயர் சமூகத்தின் பெருந்திரள், மத நிறுவனங்கள் மற்றும் மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர், தமிழ்ப்பரப்பில் இயங்கும் அரசியல் நோக்கர்களும் பத்தியாளர்களும் எனப் பல தரப்புகளின் பேராதரவு தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கே இருந்தது. 

அதற்கு மறுதலையான தரப்புக்கு இவை எதுவுமே இல்லை. ஆனாலும் அவையும் தமிழ்ச்சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. செல்வாக்குச் செலுத்தின. அதாவது, ஆதரவுப் பரப்புரை கிடைக்காது விட்டாலும் பரவாயில்லை. மிகக் கடுமையான எதிர்ப்பரப்புரைகளின் மத்தியிலேயே அவை மக்களின் ஆதரவைப் பெற்றன. இது கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கியமான ஓரம்சமாகும். 

அதாவது மக்கள் ஜனநாயக அடிப்படையில் அனைத்துச் சிந்தனைக்கும் – மாற்று வழிமுறைகளுக்கும் ஆதரவளித்தனர். சமூகம் என்பது அவ்வாறுதானிருக்கும். அது எப்போதும் ஒற்றைப் படையாக இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. அப்படி ஒற்றைப்படையாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினால் அது ஜனநாயக அடிப்படையை மறுப்பதாகும். அது எதேச்சாதிகாரமாகும். ஆனால். அத்தகைய எதேச்சாதிகாரத்தையே தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் தொடர விரும்புகின்றன. இதற்கு அவை சொல்லும் நியாயமே – நியாயப்படுத்தலே – ‘ஏகபிரதிநிதிகள்‘, ‘ஏக பிரதிநிதித்துவம்‘ என்பது. 

இத்தகைய சிந்தனையும் அணுகுமுறையும் தவறு. சுமந்திரனின் அன்றைய பேச்சும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் கஜேந்திரன்களின் வெளிப்பாடுகளும் இதையே வெவ்வேறு விதமாகக் காட்டுகின்றன. 

இதைக் கட்டுப்படுத்துவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இல்லை. சிவில் சமூகத்தினரும் இல்லை. மதத் தலைவர்களும் இல்லை. மக்கள் அமைப்புகளும் இல்லை. ஊடகங்களும் இல்லை. பதிலாக கொம்பு சீவி விடுவதற்கே ஆட்கள் அதிகம். அல்லது கனத்த மௌனம்கொள்ளுதல்.

இதொன்றும் தமிழ் வரலாற்றுக்குப் புதியதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய் தொடங்கி விட்டது. அப்பொழுது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டி மகிழ்ந்தன.

அதற்குப் பிறகு இயக்கங்கள் துப்பாக்கியினால் விளையாடின. துரோக- – தியாகி அடையாளப்படுத்தல் தொடர்ந்தது. இந்த விளையாட்டுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் தம்மையே பலிகொடுக்க வேண்டியிருந்தது. 

2009 க்குப் பிறகு இது மெல்ல உள்ளடங்கிக் கிடந்தது. ஆனாலும் அடுத்த ஆண்டுகளில் மெல்ல மெல்லப் புத்துயிர் பெற்று இப்பொழுது உச்சமடைந்துள்ளது.

ஆனால், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நாவடக்கம், கையடக்கம் (மனம்போன போக்கில் எதையும் எழுதக்கூடாது) வேண்டும். 

இதை ஊடகத்துறையினரும் புரிந்து கொள்வது அவசியம். 

இப்போது ‘துரோகி’ என்ற புனிதச் சொல்லுக்கான அர்த்தம் என்ன என்று அதை உச்சரிப்போர் சொல்ல வேண்டும். ஏனென்றால் எல்லோரும் துரோகிகளாகவே மாறி மாறிச் சித்திரிக்கப்படுகிறது. 

இவ்வளவுக்கும் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளுக்கு வலுவான எதிர்ச் சக்தியாக NPP உள்ளபோதும் இந்தக் கூத்துகள் நடப்பதுதான் சிரிப்புக்கிடமானது.

https://arangamnews.com/?p=12082

பொருளாதார பொறுப்புக்கூறலில் இருந்து போர்க்கால பொறுப்புக்கூறலுக்கு

1 week 3 days ago

11 JUN, 2025 | 08:59 AM

image

கலாநிதி ஜெகான் பெரேரா

பாராளுமன்ற தேர்தலில் ஏழு மாதங்களுக்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆணை முறைமை மாற்றத்துக்கானது. பொருளாதார நிலைவரத்தில் மேம்பாடு வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்தவர்களின் பிரதான எதிர்பார்ப்பு. நீண்ட உள்நாட்டுப்போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்களும் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள சகோதரத்துவ குடிமக்களுடன் சேர்ந்து தங்களது பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் பல தசாப்தங்களாக தாங்கள் அனுபவித்த பாகுபாடுகளில் இருந்து விடுபடுவதற்காகவும் வாக்களித்தார்கள்.

ஒரு வழியில் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியில் இருந்து வளங்களை அபகரித்த ஊழலைக் குறைப்பதன் மூலமாக பொருளாதார மேம்பாட்டை அடையலாம் என்று நினைத்தார்கள். ஊழல் மோசடிகள், முறைகேடுகள் இன்றி தூய்மையாக ஆட்சி செய்வது, ஊழல் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பது, கொளளையடிக்கப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை மீட்டுக் கொண்டுவருவது ஆகியனவே தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகள். ஆனால், அவ்வாறு அந்த பணத்தை மீட்டுக் கொண்டுவருவதற்கு குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் இன்னமும் எடுக்கப்படவில்லை அரசாங்கத்தின் மீதான பொதுவான விமர்சனம் அதிகரித்து வருகின்றது.

அண்மைய சில வாரங்களாக, முன்னைய அரசாங்கங்களில் உறுப்பினர்களாக இருந்த ஊழல் மோசடிகளால் ஈடுபட்டதாக நம்பப்படும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக கைதுசெய்ப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் செய்ததாக நம்பப்படுகின்றதை விடவும் சிறியளவிலான குற்றச்செயல்களுக்காகவே குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் சிலர் அத்தியாவசியமான வரிகளைச் செலுத்தாமல் வாகனங்களை கொள்வனவு செய்ததை, பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வெளியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்க நிதியை பயன்படுத்தியமை போன்ற குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டார்கள்.

சில வழக்குகளில், அவர்கள் செய்ததாக சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட வகையிலான பாரிய ஊழலுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாகத் தோன்றுகின்ற குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவும் கடுமையான தண்டனைகளை நீதித்துறை விதித்திருக்கிறது. இது சட்ட மற்றும் அரசியல் சூழ்நிலையில் ஒரு மாற்றத்தைக் குறித்து நிற்கிறது.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்ற கோடிக்கணக்கான டொலர்களை அரசாங்கத்தினால் எவ்வாறு மீட்டுக் கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்பதற்கான அறிகுறி எதையும் தற்சமயம் காணமுடியவில்லை. உடைமைகள், ஆடம்பர வாகனங்கள், அடையாளம் காணப்பட்ட அரசியல்வாதிகளினால் அவர்களது உத்தியோகபூர்வ சம்பாத்தியத்தியத்துக்கு விகிதப் பொருத்தமில்லாத வகையில் கொள்வனவு செயாயப்பட்ட நிலங்கள் போன்ற உள்நாட்டுச் சொத்துக்களை கண்டுபிடிப்பதிலேயே இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் விசாசணைகள் கவனத்தைக் குவித்திருக்கின்றன.

ஆனால், உண்மையில் இடம்பெற்றதாக நம்பப்பட்ட ஊழலையும் விட சிறியதாக இருந்தாலும் அவற்றைச் செய்தவர்களை கண்டுபிடிப்பதில் சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் சுறுசுறுப்பாக செயற்படுகின்றமை அரசாங்கத்தின் பற்றுறுதியில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்கு, கிழக்கு

நீண்டகால உள்நாட்டுப்போர் இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவர்கள் தங்களது பொருளாதார நிலைவரத்தில் முன்னேற்றம் ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய " முறைமை மாற்றத்திற்காக " நாட்டின் ஏனைய பாகங்களில் வாழ்கின்ற மக்களுடன் சேர்ந்து வாக்களித்தார்கள். இதற்கு மேலதிகமாக, அரசியலில் புதிய முகமான தேசிய மக்கள் சக்தி தங்களுக்கு தங்களது உரிமைகளையும் நீதியையும் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் வாக்களித்தார்கள்.

பிழைத்து வாழ்ந்து முன்னேறுவதற்கு அவர்களுக்கு வளங்கள் எந்தளவுக்கு தேவையோ அதைப் போன்றே போர்காலத்தில் இடம்பெற்ற பயங்கரமான சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பான அனுபவங்களை அவர்களினால் அலட்சியம் செய்ய முடியாது. வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்ந்தாலும் சரி, வெளியில் வாழ்ந்தாலும் சரி, போரையும் அதன் விளைவான இழப்புக்களை அனுபவித்தவர்களை பழைய சம்பவங்கள் தொடர்ந்து அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும்.

பதினாறு வருடங்களுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்திருந்தாலும் கூட, காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்கள் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்காக இன்னமும் காத்திருக்கின்றார்கள். தங்களது அன்புக்குரியவர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனபதை தெரிந்துகொள்ளாத நிலையில், ஆட்கள் காணாமல்போகச் செய்யப்பட்ட அந்த சம்பவங்கள் முழுச் சமூகங்களையுமே அச்சுறுத்திக் கொண்டிருக்கும். அத்தகைய நிலைவரம் நல்லிணக்கத்துக்கான நாட்டின் முயற்சிகளை மலினப்படுத்தும்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அதற்கு ஒரு உதாரணமாகும். சாட்சியங்களின் பிரகாரம் கிழக்கு பல்கலைக்கழக முகாமில் 1990 செப்டெம்பர் 5 ஆம் திகதி இராணுவத்தினால் 158 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி எதுவும் தெரியாது.

அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அக்கறைகளில் இருந்து கவனத்தை திருப்பும் நடவடிக்கைகளிலேயே நாட்டம் காட்டி வந்திருக்கின்றன. கடந்த காலத்தைக் கையாளுவதில் முன்னைய அரசாங்கங்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை. முன்னைய அரசாங்கங்களின் உயர்மட்ட தலைவர்களில் பலர் தாங்களே போரில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஜனாதிபதிகள் பாதுகாப்பு அமைச்சராகவும் ஆயுதப்படைகளின் பிரதம தளபதியாகவும் இருந்தார்கள்.

கடந்த காலத்தில் உண்மையில் நடந்தவை பற்றிய வேதனையானதும் சர்ச்சைக்குரியதுமான விவகாரங்களை கையாள்வதில் பெரும்பான்மைச் சமூகத்துக்கு அக்கறை இல்லாமல் இருப்பது இரண்டாவது பிரச்சினை. வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்பவர்களைப் பொறுத்தவரை, அமைதியும் வழமைநிலையும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ஒரு எளிமையான நம்பிக்கையுடனேயே அவர்கள் இருக்கிறார்கள்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, போர்க்காலத்தில் பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தில்லை என்பதால் அதன் கீழ் கடந்த காலத்தைக் ஒரு கையாளக்கூடிய நிலைபேறான தீர்வொன்றை காண்பது சாத்தியமாகக் கூடியதாகும். ஆனால், அதற்கு கடந்த காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான அரசியல் துணிவாற்றலும் பற்றுறுதியும் அவசியமாகும்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கூட, முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற இடங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து செய்திகள் வருகின்றன. இது பல தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளின் பாணியை பிரதிபலிப்பவையாக அமைகின்றன. இத்தகைய நிலைவரம் போரின் தர்க்கம் உண்மையில் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதை மாத்திரமல்ல, அதன் வடிவம் மாற்றப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாக அமைகிறது.

வெளிப்படையான மோதலுக்கு பதிலாக, இப்போது காணிகளை திருப்பிக் கையளித்தலில் உயர் அதிகாரிகள் மற்றும் நிருவாக மட்டங்களில் காணப்படும் தாமதம், சட்டங்களை பாகுபாடான முறையில் நடைமுறைப்படுத்துதல் மற்றும் தீர்மானங்களை எடுப்பதில் மத்தியமய செயன்முறைகள் ஊடாக உள்ளூர்ச் சுயாட்சியை படிப்படாயாக திணறடித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடைசி ஆணைக்குழு

பதினாறு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட, இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட முறை தொடர்பிலான சர்வதேச கரிசனை தொடர்ந்தும் உயர்வாகவே இருந்துவருகிறது. இலங்கையின் போர்களத்தில் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் செய்தவர்கள் அவற்றை எவ்வாறு செய்தார்கள், செய்வதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது இலங்கையில் இடம்பெற்றதை விடவும் மோசமான மீறல்கள் இடம்பெற்ற உலகின் வேறு பாகங்களுக்கும் பாடங்களாக அமையக்கூடும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேர்க் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை நாட்டின் நற்பெயருக்கு ஒரு அச்சுறுத்தலாக அல்லது ஒரு சுமையாக நோக்குவதற்கு பதிலாக, உலகிற்கு ஒரு வகைமாதிரியாக அமையக்கூடியதாக சரவதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பாக அரசாங்கம் நோக்கலாம். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாட்டை அவலத்துக்கு உள்ளாக்கிய இன, மதப் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு இதுவே சிறந்த தருணம் என்பதையே " முறைமை மாற்றத்துக்கான " மக்களின் ஆணையும் உணர்த்துகிறது.

பொருளாதார குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் பின்பற்றுகின்ற அதே தந்திரோபாயத்தை அரசாங்கம் இது விடயத்திலும் பின்பற்ற முடியும். சுயாதீனமான அரச நிறுவனங்கள் ஊடாக செயற்பட அனுமதிக்கப்பட்டால் நீதியை நிலைநாட்டுவதற்கு வலிமையான கருவிகளாக அமையக்கூடிய வழமையான சட்டங்களையே அரசாங்கம் பயன்படுத்தவும் முடியும். மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்களை பொறுத்தவரை, அவற்றைக் கையாளுவதற்கென்ற அமைக்கப்பட்ட நிறுவனங்கள் கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்ட " வகை மாதிரியான" ( Emblematic cases ) வழக்குகளை கையாளமுடியும்.

இந்த வழக்குகள் பல தசாப்தங்களாக பொதுவெளியில் அறியப்பட்டிருக்கும் மனித உரிமைமீறல்கள் அல்லது போர்க்கால துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவையாகும். உதாரணமாக, திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம்( 2006), மூதூரில் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றின் பதினேழு உதவிப்பணியாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் ( 2006), ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் (2010 ) ஆகியவற்றை கூறலாம்.

போருடன் சம்பந்தப்பட்ட முன்னைய சகல ஆணைக் குழுக்களினதும் அறிக்கைகளை ஆராய்வதற்காக 2021 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நவாஸ் ஆணைக்குழுவே போர் விவகாரங்களை ஆராய்ந்த கடைசி ஆணைக்குழுவாகும். " வகைமாதிரியான வழக்குகளை " விசாரணை செய்வதை முதற்பணியாகக் கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று நியமக்கப்பட வேண்டும் என்று நவாஸ் ஆணைக்குழு சிபாரிசு செய்தது.

அத்தகைய ஒரு நடவடிக்கை போரில் பாதிக்கப்பட்ட மக்கள், பொதுமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அரசாங்கத்தின் அக்கறை தொடர்பில் நம்பிக்கையை கட்டியெழுப்பும். பொருளாதார ஊழல்கள் பொறுத்துக் கொள்ளப்படப் போவதில்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் மாற்றியமைக்கப்பட்ட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவைப் போன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் கடந்த காலத்துக்கு ஒரு முடிவைக் கட்டவும் தேசிய அபிவிருத்திக்காக சேர்ந்து பாடுபடுவதற்காக மக்களையும் சமூகங்களையும் ஐக்கியப்படுத்தவும் உதவ முடியும்.

https://www.virakesari.lk/article/217130

‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’

1 week 4 days ago

‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’

முருகானந்தம் தவம்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும்  அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் (ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ்  மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி.) தமிழினத் துரோகிகள், ஓட்டுக்குழு, ஆயுதக்குழு, இராணுவ துணைக்குழு, தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் படுகொலை செய்யப்படவும் காணாமல்போகவும் காரணமானவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள் என்றெல்லாம் இதே தமிழரசுக் கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டுத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஈ.பி.டி.பியிடமே ஆதரவு கேட்டு தமிழரசு கட்சி மண்டியிட்டுள்ளமை தமிழ் தேசியப் பரப்பில் மட்டுமன்றி, தமிழரசுக் கட்சிக்குள்ளும் கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தொகுதிவாரி, விகிதாசார முறைமையினால் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி  சபைகளில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட நெருக்கடிகளினாலேயே தமது தமிழ்த் தேசிய முகமூடிகளைக் கழற்றி வைத்துவிட்டு, தமிழினத் துரோகிகள், ஒட்டுக்குழு, இராணுவத் துணைக்குழு என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட, ஒதுக்கிவைக்கப்பட்ட தரப்புக்களின்  காலடி தேடித் சென்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி   சிரம் தாழ்த்தி தரம் தாழ்ந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் மீது வசை பாடப்படுகின்றது.தமிழ்த் தேசியத்தின் மீது  உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும், இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில்  ஆட்சியமைக்க வரட்டுக் கௌரவமும் மேதாவித் தலைக்கனமும் ஆணவமும் தமிழரசிலுள்ள சில மூக்கு வீங்கியவர்களின் தமிழ்த் தேசிய மறுப்பும் இடம்கொடுக்காமையினால்தான் தங்களினாலேயே துரோகிகள் என பட்டம் சூட்டப்பட்டவர்களிடம் பதவி  மோகத்தினால் பகை மறைந்து அடிபணிந்துள்ளது தமிழ்த் தேசியத்தின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சி. இது பதவிகளுக்கா தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் எந்தளவு கீழ்த்தரமான நிலைக்கும் தரம் இறங்குவார்கள், எந்தளவு கீழ்த்தரமான வேலைகளையும் செய்வார்கள்  என்பதற்கான உதாரணமாகவும் மாறிப்போயுள்ளது.

உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைக்க ஏனைய தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரவளிக்கத் தயாராக இருந்த போதும் அவர்களுக்கு எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்ய மறுத்து அவர்களை நிராகரித்து விட்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம்  ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவர்,  டக்ளஸ் தேவானந்தாவை  அவரது யாழ். நகரிலுள்ள ஸ்ரீதர் திரையரங்கு அலுவலகம் சென்று ஆதரவு கோரியுள்ளார். 

இந்த சந்திப்பு விடயம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும்  அதுமட்டுமன்றி, இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் ஒருவர்  தன்னைச் சந்திப்பதற்குப் பல தடவைகள் முயற்சி செய்ததாகவும் அதன் பின்னரே சிவஞானம் சந்தித்து ஆதரவு கோரியதாகவும் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக கூறியுள்ளதன் மூலம், டக்ளஸ் தேவானந்தா தனது கொள்கையில் இன்று வரை உறுதியாகவுள்ள நிலையில் தமிழரசுதான் பதவிகளுக்காகக் கொள்கையை விட்டுக் கொடுத்துள்ளதுடன், கட்சியையும் ஆதரவாளர்களையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுத்துள்ளது.  

ஈ.பி.டிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது, கட்சியின் அடிமட்ட தொண்டனால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் கருணா ஆகியோர் எங்களுடன் சேர்ந்து தமிழரசுக் கட்சி பயணிக்க வேண்டும் என்றனர்.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் சி.வி.கே.சிவஞானம் அவர்களுடனும் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட்டணி சேர முடிவெடுத்த இவர்களுக்கு பிள்ளையான் - கருணாவுடன் கூட்டணி சேர்வது இலகுவானது என்று தமிழரசுக் கட்சியினர் புலம்புமளவுக்குத் தமிழரசின் தலைமை அரசியல் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

தமிழரசின்  தலைவர்கள் இதுவரை கட்டிக் காத்துவந்த  கட்சியின் கொள்கை, தமிழ்த் தேசியம் மீதான பற்றுறுதி, கட்சி மீதான விசுவாசம், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பவற்றை இன்று சதிகள், கழுத்தறுப்புகள், குழிபறிப்புக்கள் மூலம் தலைமைப் பதவிக்கு வந்தவர்கள்  ஒட்டுமொத்தமாகக் கைவிட்டு, காட்டிக்கொடுத்து தமிழ்  மக்களினால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் கைகோர்த்து  தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் புறந்தள்ளிச் செயற்படத் தொடங்கியுள்ளமை விரைவில் ‘இலங்கை தமிழரசுக் கட்சி’ என ஆல விருட்சத்தை அடியோடு சாய்த்து விடவுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஒரு கட்சியாக ஒரு தடவை அப்போதைய தமிழரசுக் கட்சியினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தலைவராகவிருந்த இரா.சம்பந்தனை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட சில ஆசனங்களைக்  கோரியபோது, ‘தமிழரசுக் கட்சி அஹிம்சாவளிக்கட்சி.

அதில் ஆயுதம் தூக்கியவர்கள் போட்டியிடமுடியாது. தேவையானால் தமிழரசு தலைமையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடம் ஆசனம் கேட்டுப்பாருங்கள்’ என கூறி முன்னாள் போராளிகளின் கோரிக்கையை நிராகரித்து  அவர்களைத்  திருப்பி  அனுப்பியிருந்தார்.

இவ்வாறாக பாராளுமன்றத் தேர்தல் போட்டியிட வேட்பாளர் பட்டியலில் சில இடங்களைக் கேட்ட தமிழ் மக்களின் உரிமைக்காகப் போரிட்ட, அளப்பரிய தியாகங்களைச்  செய்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளையே 
‘ஆயுதம் தூக்கியவர்கள்’ என்ற காரணம் காட்டி, தமிழரசின்  தலைமை நிராகரித்த நிலையில்தான்  தமிழின போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த, இராணுவத்துடன் இணைந்து ஆயுதக் குழுவாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈ,.பி.டி.பியுடன் ஆதரவுடன் ஆட்சியமைக்க அவர்களின் காலடிக்கே சென்றுள்ளது தற்போதைய தமிழரசின்  தலைமை.

தலைமைப் பதவிக்கு தகுதியில்லாத தற்குறிகள் தலைவர்களானால் ஒரு கட்சியின் நிலைமை ‘விபசாரம்’ செய்வதற்கு ஒப்பானதாகிவிடும் என்பதற்கு 
‘இலங்கை தமிழரசுக் கட்சி’ தான் தற்போது சிறந்த உதாரணம். 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விபசாரம்-செய்ய-ஒப்பானதான-தமிழரசுக்-கட்சி/91-359119

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

1 week 5 days ago

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

Veeragathy Thanabalasingham

on June 11, 2025

https___archive-images.prod_.global.a201

Photo, REUTERS

உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிரணி கட்சிகளும் மற்றைய கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன.

முன்னைய அரசாங்கங்களைப் போன்று தேசிய மக்கள் சக்தியும் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அரசாங்கத் தலைவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஒரு அரசியல் ஆய்வாளர் கடந்த வாரம் கூறியதைப் போன்று முறைமையை அரசாங்கம் மாற்றுகிறதா அல்லது அரசாங்கத்தை முறைமை மாற்றத் தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.

தென்னிலங்கையில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்த தேசிய மக்கள் சக்தி நிருவாகங்களை அமைக்க முடியாமல் இருப்பதை போன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் பெரும்பாலான சபைகளில் முதலாவதாக வந்த இலங்கை தமிழரசு கட்சியினாலும் செய்ய முடியாமல் இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள சபைகளில் தமிழ் கட்சிகள் மாத்திரம் நிருவாகங்களை அமைப்பதற்கு ஒத்துழைப்பதாக தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய பல தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முன்னென்றும் இல்லாத வகையில் பெற்ற வெற்றி தங்களின் எதிர்கால அரசியலுக்கு பெரிய ஆபத்தாக அமையப்போகிறது என்று அஞ்சிய தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்யவும் தேசியவாத உணர்வை தமிழ் மக்கள் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கவும் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களிடம் கேட்டார்கள். தென்னிலங்கையின் எந்தவொரு தேசியக் கட்சிக்கும் தமிழர்கள் வாக்களிக்கக்கூடாது என்பதே அவர்களின் வலியுறுத்தலாக இருந்தது.

அதிகாரத்துக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக, தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடைப்பிடித்த அக்கறையற்ற அணுகுமுறை தமிழ் கட்சிகளின் வேண்டுகோளை தமிழர்கள் பெருமளவுக்கு கருத்தில் எடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுவது போன்று தமிழ் மக்கள் குறிப்பாக, வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியை முற்றாக நிராகரித்து விட்டதாக ஒருபோதும் கூறமுடியாது. வடக்கில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் அதற்கு தெளிவான சான்று. தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டை என்று கருதப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசு (135 ) கட்சிக்கு அடுத்ததாக கூடுதல் ஆசனங்களை (81) தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றியது.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 16 வருட காலப்பகுதியில் தங்களது அரசியல் உரிமைப் போராட்டத்தை வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களை முழங்குவதை விடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்ற முறையில் விவேகமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான வழிமுறைகளில் முன்னெடுக்கத் தவறிய தமிழ்க்கட்சிகளை தமிழ் மக்கள் மீண்டும் முழுமையாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறமுடியாது. கடந்த ஆறு மாதங்களில் ஜனாதிபதி அநுர குமார குமார திசநாயக்கவும் அவரது அரசாங்கமும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் அவர்களது பிரச்சினைகளை கையாளுவதில் மனப்பூர்வமான நாட்டத்தை காட்டியிருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்ததை விடவும் கூடுதலான ஆதரவை வடக்கு, கிழக்கில் பெற்றிருக்க முடியும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தத் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடத்தை புகடடுவதற்கு தமிழ் மக்கள் விரும்பினார்கள் என்றும் அந்தப் பாடத்தை உகந்த முறையில் புரிந்துகொண்டு தமிழ்க்கட்சிகள் அவற்றின் போக்கை மாற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் பெரிய அனர்த்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்குப் பின்னரான தமிழ் அரசியல் நிகழ்வுப் போக்குகளை நோக்கும் போது நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் எந்த பாடத்தையும் பெற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றிகளை அடுத்து அவர்கள் தங்களது பழைய பாதைக்குத் திரும்பிவிட்டார்கள். உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை அமைப்பதில் தமிழ் கட்சிகள் ஒத்துழைத்துச் செயற்படும் என்று எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. உள்ளூராட்சி நிருவாகங்களில் ஒத்தழைத்துச் செயற்படுவதற்கு கிடைக்கும் வாய்ப்பு நாளடைவில் தமிழ்க்கட்சிகளின் பரந்தளவிலான  ஒற்றுமைக்கு வழிவகுக்க முடியும் என்று எதிர்பார்த்தவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாக வடக்கில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள், கூட்டணிகளை அமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைப் பிரகடனங்கள்  தமிழ் மக்களின் நலன்களை விடவும் தங்களது கட்சி அரசியல் நலன்களிலேயே தமிழ் அரசியல்வாதிகள் கடுமையான கரிசனை காட்டுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரேமாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில் மாத்திரமே தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இருக்கிறது.

வடக்கில் தேசிய மக்கள் சக்தி பல உள்ளூராட்சி சபைகளில் தனியாக நிருவாகத்தை அமைக்கக்கூடியதாக அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தால் சில வேளைகளில் தமிழ் கட்சிகளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருந்திருக்கக்கூடும். ஏனென்றால், தங்களது அரசியல் இருப்புக்கு ஆபத்தாக அமையக்கூடிய எந்தவொரு நிகழ்வுப் போக்கிற்கும் எதிராக ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அந்த ஆபத்தைக் கடந்து விட்டால் தங்களது பழைய போக்கிற்கு திரும்பிவிடுவார்கள். இன்று வடக்கில் நடப்பது அதுதான்.

வடக்கு தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று இரு முகாம்களாக பிரிவுபடும் திசையை எடுத்திருக்கிறது. ஒன்று தமிழரசு கட்சியும் அதற்கு ஆதரவான சக்திகளும். மற்றையது தமிழ் தேசிய பேரவை என்ற புதிய அவதாரத்தை எடுத்திருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதற்கு ஆதரவான சக்திகளும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியாக இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக விளங்கிய தமிழரசு கட்சி தற்போது கூட்டணிகளை அமைப்பதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால், தங்களைத் தவிர கொள்கையில் நேர்மையானவர்கள் இலலை என்ற நம்பிக்கையில் இதுகாலவரை மற்றைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு திட்டவட்டமாக மறுத்து வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இப்போது கூட்டணி அமைப்பதில் அக்கறை காட்டுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான அங்கத்துவ கட்சியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விளங்குகிறது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னதாக சில குழுக்களை இணைத்துக் கொண்டு தமிழ் தேசிய பேரவை என்ற அவதாரத்தை எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்குப் பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருக்கிறது. புதிய கூட்டணிக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை.

தமிழ்ப் பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை அமைப்பதே புதிய கூட்டணியின் அடிப்படை நோக்கம் என்ற போதிலும், இரு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஓரணியில் செயற்படப்போவதாக உறுதிபூண்டு உடன்படிக்கையில் கடந்தவாரம் கைச்சாத்திட்டதுடன் கொள்கைப் பிரகடனம் ஒன்றையும் செய்திருக்கிறார்கள்.

இந்த உடன்படிக்கைக்கு முன்னதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் உள்ளூராட்சி சபைகளில் ஒத்துழைத்துச் செயற்படும் சாத்தியம் குறித்து தமிழரசு கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

ஆனால், தாங்கள் கணிசமான ஆசனங்களை கைப்பற்றிய சில உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க ஆதரவு தரவேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு தமிழரசு கட்சி மறுத்ததை அடுத்து அவர்கள் தமிழ் தேசிய பேரவை பக்கம் சென்றிருக்கிறார்கள். அதேவேளை, தமிழரசு கட்சி உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. அவர்களால் எந்தளவுக்கு ஒத்துழைத்துச் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தலைமைத்துவ தேர்தலுக்குப் பிறகு தமிழரசு கட்சி உட்கட்சித் தகராறுக்கு உள்ளாகியிருக்கிறது. தலைவர் தேர்தலில் சிவஞானம் சிறீதரனிடம் தோல்வி கண்ட எம்.ஏ. சுமந்திரன் மத்திய செயற்குழுவின் ஆதரவுடன் கட்சியை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருக்கின்ற போதிலும், சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் கட்சியை நிருவகிப்பவர் போன்றே பெரும்பாலும் நடந்துகொள்கிறார்.

தமிழரசு கட்சி சுமந்திரனின் வழிகாட்டலில் செயற்படுவதை கட்சிக்குள் உள்ள சிறீதரன் அணியினர் மாத்திரமல்ல, மற்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் விரும்பவில்லை. அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளத் தயங்காத அவர்கள் தமிழரசு கட்சி சிறீதரனின் தலைமையின் கீழ் வருவதை பெரிதும்  விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

உட்கட்சித் தகராறுக்கு தீர்வைக் காண்பது தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை பொறுத்த விடயம். ஆனால், தமிழரசு கட்சி சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அதற்கு விமோசனம் இல்லை என்று அவரை விரும்பாதவர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், உள்ளூராட்சி தேர்தலில் கட்சியின் பெரிய வெற்றி அவரின் எதிராளிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அந்தத் தேர்தல் பிரசாரங்களின் முன்னரங்கத்தில் சுமந்திரனே நின்றார். குறிப்பாக, யாழ்ப்பாண குடாநாடடுக்குள் தமிழரசு கட்சிக்கு தோல்வி ஏற்பட்டிருந்தால் அவரை கட்சிக்குள்ளும் தமிழர் அரசியலில் இருந்தும் ஒதுக்குவது சுலபமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. இந்தப் பின்புலத்திலேயே வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சியின் நிருவாகங்களை அமையவிடாமல் தடுப்பதற்கான வியூகங்களை நோக்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,  தமிழ் தேசிய பேரவை ஆகிய மூன்று அணிகளே தமிழர் தரப்பில் முக்கியமானவையாக களத்தில் இருந்தன. தனித்தனியாகப் போட்டியிட்டிருந்தாலும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை செய்வதில் அவற்றுக்கிடையில் ஒற்றுமை இருந்தது. தேர்தலுக்குப் பிறகு உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதில் தோன்றியிருக்கும் சிக்கல் நிலையை தவிர்ப்பதற்காக ஏன் இந்த மூன்று அணியினராலும் ஒரு சுமுகமான ஏற்பாட்டுக்கு வரமுடியாது? கட்சி அரசியல் போட்டியையும் ஆளுமை மோதல்களையும் தவிர இதற்கு வேறு என்ன காரணத்தை இவர்களால் கூறமுடியும்? குறைந்தபட்சம் உள்ளூராட்சி நிருவாகங்களிலேயே ஒத்துழைத்துச் செயற்ட முடியாத இவர்களிடம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு ஒன்றிணைந்த அணுகுமுறையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

இதனிடையே, உள்ளூராட்சி தேர்தல்களுக்குப் பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த சுமந்திரன் மாகாண சபை தேர்தலில்  தமிழரசு கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளியிடாமல் இருந்திருந்தால், வடக்கில் தற்போதைய புதிய அணிசேருகைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கவும் கூடும். வடக்கு அரசியலில் பல வருடங்களாக நிலவும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைமைத்துவத்துக்கான நிழல் யுத்தம் ஒன்று இந்த நிகழ்வுப் போக்குகளில் உட்கிடையாக இருக்கிறது.

அதுபோக, வடக்கில் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளையும் அமைக்கப்படும் கூட்டணிகளையும் நோக்கும்போது ‘துரோகிகள்’ என்று ஒருதரப்பு அரசியல்வாதிகளை அழைக்கும் கலாசாரத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்று தெரிகிறது.

Thanabalasingam-e1742967550320.jpg?resizவீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12126

டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்! — கருணாகரன் —

2 weeks ago

டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்!

June 9, 2025

டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்!

— கருணாகரன் —

இலங்கை அரசியலில் NPP செல்வாக்குப் பெற்றதோடு தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள அரசியல் எல்லாமே தடுமாற்றத்துக்குள்ளாகி விட்டன. குறிப்பாகத் தமிழ்த்தேசியவாத  அரசியற் கட்சிகள் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளன. 

இவ்வளவுக்கும் NPP ஒன்றும் ஆகச் சிறந்த அரசியல் விளைவுகளை உருவாக்கிய சக்தியாக இன்னும் வளர்ச்சியடையவில்லை. எதிர்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் இருக்கலாம். இதைப்பற்றிப் பல தடவை குறிப்பிட்டதால், மேலும் விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறேன். அல்லது இன்னொரு கட்டுரையில் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம். 

இப்பொழுது நமது கவனம், NPP யின் எழுச்சியானது, தமிழ்த்தேசிய அரசியலை எப்படி நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது? அதனால் ஏற்பட்டுள்ள குணாம்ச மாற்றங்கள் என்ன? எவ்வளவு தூரத்துக்குப் படியிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதாகும்.

NPP யை ஆதரித்தால் அல்லது அதனுடன் அரசியல் ரீதியான உடன்பாடுகள் எதையாவது வைத்துக் கொண்டால், அது ஏனைய தென்னிலங்கைத் தேசியக் கட்சிகளைப் போலன்றி, அப்படியே தம்மை உள்வாங்கி விழுங்கி விடும், பிராந்திய அரசியலுக்கு (தமிழ் அரசியலுக்கு) இடமில்லாமல் செய்து விடும், ஆகவே அதனுடன் இடைச் சமரசத்துக்குப் போக முடியாது என்ற அச்சத்தினால் எப்படியாவது NPP ஐத் தமிழ்ப் பகுதிகளில் தோற்கடிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் எதையெதையெல்லாமோ செய்து கொண்டிருக்கின்றன. இதில் தமிழ்த்தேசியவாதக் கட்சிகள், அல்லாத கட்சிகள் என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லாமே உச்சப் பதட்டத்தோடுதான் உள்ளன. 

இதனால் தமிழ் அரசியல் பரப்பில் ஏராளம் காட்சி மாற்றங்கள். திடீர்த்திருப்பங்கள். புரிந்து கொள்ளவே முடியாத ஆச்சரியமான சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தினமும் எதிர்பார்க்காத – அதிர்ச்சிகரமான சேதிகள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஊடகப் பரப்பிலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

இந்த வாரம் நடந்த மூன்று முக்கிய விடயங்களைப் பற்றிச் சொல்லலாம். 

1.   ‘அடைந்தால் மகாதேவி. இல்லையேல் மரண தேவி‘ என்ற பிடிவாதத்தோடு, ‘ஒரு நாடு இரு தேசம்‘, ‘கொள்கையே எமது உயிர்‘என்று சொல்லிக் கொண்டிருந்த கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையும் அதற்கு அப்பால் நின்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் சேர்ந்துள்ளன. இந்தக் கூட்டு வெறுமனே உள்ளுராட்சி சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கானது மட்டுமல்ல, கொள்கை சார்ந்த கூட்டு என்று இரண்டு தரப்பும் அறிவித்துள்ளன. அதற்கான ஒரு எழுத்து மூலமான உடன்படிக்கையும் செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தேர்தலுக்கு முன்பு செய்யப்படாமல், தேர்தலுக்குப் பின்னர் செய்யப்பட்ட – அதற்கான தேவைகளும் அவசியங்களும் உள்ளதால் – மேற்கொள்ளப்பட்ட கூட்டு. 

2.   இப்படி இணைந்தாலும் இந்தக் கூட்டினால் எதிர்பார்த்த அளவுக்கு சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. அப்படிக் கைப்பற்ற வேண்டுமாக இருந்தால், அதற்கு இன்னொரு தரப்பின் ஆதரவு வேண்டும். அதற்காக ஈ.டி.பி.யின் ஆதரவைப்  பெறலாமா என்று ஆலோசிக்க முற்பட்டிருக்கிறது இந்தக் கூட்டு. இதற்கான முயற்சியாகத் தனிப்பட்ட ரீதியிலான உரையாடல்கள் சித்தார்த்தனுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் தொலைபேசி வாயிலாகச் சிறிய அளவில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தக் கூட்டின் இன்னொரு தரப்பினரான கஜேந்திரகுமார் இதைக் மறுத்திருக்கிறார். 

3.   தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானம், தாம் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புள்ள சபைகளுக்கு ஆதரவு கேட்டு ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிடம், அவருடைய பணிமனையான ஸ்ரீதர் தியேட்டருக்குச் சென்றது. இதுவும் அரசியற் தேவைகளின் பாற்பட்ட ஒரு நடவடிக்கை. அதற்கான முயற்சி. இதைத் தமிழரசுக் கட்சியிலிருந்து இதுவரையில் யாரும் எதிர்க்கவில்லை என்றாலும் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடையே சற்றுக் குழப்பமான நிலை உண்டு. 

இவற்றுக்கு அரசியல் ரீதியாகப் பெறுமானங்களும் உண்டு. விமர்சனங்களும் உண்டு. அதை அணுக வேண்டிய விதமே வேறு. அப்படி இந்த விடயம் அறிவுசார்ந்து அணுகப்பட்டிருந்தால் அதனால் பயனுண்டு. நிறைவாகவும் இருந்திருக்கும். அது தமிழ்ப்பரப்பில் நிகழவில்லை. இதுதான் துயரமானது.

தமிழ்ப் பரப்பென்பது, இன்னும் மூடுண்ட இருட்பிராந்தியத்துக்குள்ளேதான் கட்டுண்டுள்ளது. இதில் குறிப்பாக இளைய தலைமுறையினரும் சிக்கியிருப்பதே மிகுந்த கவலையை அளிக்கிறது. கடந்த தலைமுறைதான் தவறுகளின் கூடாரத்துக்குள் தங்களுடைய தலைகளை வைத்திருந்தது என்றால், இளைய தலைமுறையும் அப்படியா இருக்க வேண்டும்? அதுவாவது ஒளியைக் காண வேண்டாமா? 

என்பதால்தான் சமூக வலைத்தளங்கள் போர்க்களமாகி, குருதி சிந்திக் கொண்டிருக்கின்றன. ஏட்டிக்குப் போட்டியாகக் கணைகள் பாய்கின்றன. கட்சிகளின் ஆதரவாளர்களிற் சிலர் தாக்குதலின் உக்கிரம் தாங்க முடியாமல் பதுங்கு குழிகளுக்குள் மறைந்து கொண்டுள்ளனர். 

இப்பொழுது தமிழ்த்தேசியவாத அரசியற் பரப்பில் நடந்து கொண்டிருப்பதெல்லாம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாத சங்கதிகள். அதிகம் ஏன், கடந்த மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வரையிற் கூட தமிழ்த்தேசிய முகாமின் பீரங்கிகள் ஏட்டிக்குப் போட்டியாகவே நிறுத்தப்பட்டிருந்தன. தமிழ்த்தேசியவாதத்துக்கு எதிரான தரப்பை நோக்கி மட்டுமல்ல, தமக்குள்ளேயே – தமிழ்த்தேசியவாதத்துக்குள்ளேயே – எதிரெதிர்முனையில் பீரங்கிகள் நிறுத்தப்பட்டன. 

தேர்தல் முடிவுகள் உருவாக்கிய சூழல், இதையெல்லாம் மாற்றி விட்டது. இப்பொழுது போர்க்களம் மூடப்பட்டு, தலைவர்களும் தளபதிகளும் சமாதானத் தூதுகளை அனுப்பி, சந்திப்புகளைச் செய்து கொள்கின்றனர். இந்தச் சந்திப்புகளில் ஆளையாள் கட்டி அணைத்து ஆரத் தழுவிக் கொள்கிறார்கள். 

தமிழ் அரசியலின் குழப்பமும் தேக்கமும்:

—————————————-

தமிழ்த்தேசியப் பேரவையில் உள்ள ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், சரவணபவன், ஐங்கரநேசன், அருந்தவபாலன் போன்றவர்கள், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கூட்டில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியோடு சேர முடியாது என்று இரண்டு மாதத்துக்கு முன் பிடிவாதமாக நின்றார்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தப் பிடிவாதமெல்லாம் கரைந்து விட்டது. அதாவது இரண்டு மாதங்களில் ஒரு தலைகீழ் மாற்றம். 

இதற்கு அவர்களின் தரப்பிலிருந்து ஒரு நியாயத்தைச் சொல்லக் கூடும். அப்போது கொள்கைக்கான கூட்டாக யாரும் பேசவில்லை. தேர்தல் கூட்டாக மட்டுமே சிந்திக்கப்பட்டது. இப்போது கொள்கைக்கான கூட்டாக இருப்பதால், எங்களின் ஆதரவைக் கொடுத்துள்ளோம் என. 

அதைப்போல, சிவஞானம் டக்ளஸ் தேவானந்தாவைத் தேடிச் ஸ்ரீதர் தியேட்டருக்கு (ஈ.பி.டி.பி பணிமனைக்கு) சென்றதை சுமந்திரன் வேறுவிதமாக வியாக்கியானப்படுத்தியிருக்கிறார். ஈ.பி.டி.பியுடன் மட்டுமல்ல, அதிக பெரும்பான்மையைக் கொண்ட தரப்பாக தமிழரசுக் கட்சி இருப்பதால், ஆட்சியை அமைப்பதற்காக ஆதரவைப் பல கட்சிகளிடமும் கோரினோம். அதில் ஒன்று இது என்பதாக. அதாவது ஆதரவைக் கோருவது வேறு. அரசியற் கூட்டு என்பது வேறு என்பதாக. இருந்தாலும் சிவஞானம் ஸ்ரீதர் தியேட்டருக்குப் போனது தவறு. தமிழரசுக் கட்சி எப்படித் தன்னுடைய தகுதியை விட்டுப் படியிறங்கலாம் என்று கொந்தளிக்கின்றது புரட்சிப் படை. 

ஆனால், அரசியலில் நிரந்தரமான முடிவுகள் (அதாவது முடிந்த முடிவுகள்) என எவையும் இல்லை. அடிப்படையில் இருக்கும்  கொள்கையோடு, அதற்குச் சேதாரங்கள் வராத வகையில், நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இயங்குவதே அரசியலாகும். இதையே சாணக்கியம் (Chanakya), இராஜதந்திரம் (Diplomacy), தந்திரோபாயம் (Strategy) என்று அரசியல் வரலாறு குறிப்பிடுகிறது. 

உலகம் முழுவதிலும் வரலாறு முழுவதிலும் இதற்குரிய ஆளுமைகளும் அடையாளங்களும் நிறைய உண்டு. சாணக்கியர், நிக்கோலோ மாக்கியவல்லி, கன்பூசியஸ் போன்ற மேதைகள் இதைப்பற்றித் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். 

ஆனால், நம்முடைய சமூகச் சூழலில், அரசியலை எவரும் எப்படியும் கையாளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. முகநூலில் அல்லது சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் எல்லாம் அரசியலைத் தீர்மானிக்கும் வல்லமையுள்ளோர் என்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளனர். இவர்களுடைய பதிவுகளைப் பார்த்து அரசியற் கட்சிகள் தடுமாறுகின்றன. தலைவர்கள் குழம்பிப்போகிறார்கள். உண்மையில் அப்படி இருக்கவே கூடாது. 

சமூக வலைத்தளங்களில் அபிப்பிராயங்களைப் பகிர்வோரில் பலரும் களச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் அல்ல. அரசியல் விடயங்களை, அதன் தாற்பரியங்களைப் புரிந்து கொண்டவர்களும் அல்ல. இவர்கள் தமது விருப்பு வெறுப்புகளை, அபிப்பிராயங்களைப் பகிர்வோராக  இருக்கலாமே தவிர, முடிவுகளை எடுக்கும் சக்திகளாகவோ தீர்மானிக்கும் தரப்பாகவோ இருக்க முடியாது.

இதை மறுத்து, சமூக வலைத்தளங்களுக்கு இன்று வலுவுண்டு. சமூக வலைத்தளப் பதிவர்களால் பல மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அல்லது மாற்றங்களுக்கு அவர்கள் தூண்டு விசையாக இருந்துள்ளனர், இருக்கின்றனர் என யாரும் சொல்லக் கூடும். அவ்வாறான பதிவுகளையும் அவற்றின் விளைவாக உருவாகிய போராட்டங்களையும் ஆழ்ந்து கவனித்தால், அவற்றின் கருத்தியல் தெளிவையும் அவற்றில் உள்ள பன்மைத்துவம், ஜனநாயக அடிப்படை, சர்வதேசத் தன்மை போன்றவற்றை இனங்காண முடியும். 

தமிழ்ச் சமூகத்தின் சமூக வலைத்தளப் பதிவுகள் அப்படியா உள்ளன? வெறும் உணர்ச்சிக் கோசங்களாகவே மலிந்து கிடக்கின்றன. என்பதால்தான் ஜனநாயக மறுப்புக் குரல்களாக துரோகி – தியாகி என்ற கூக்குரல்கள் ஒலிக்கின்றன. இன்னும் தமிழர்களின் அரசியலை அறிவுசார் நடவடிக்கையாக மாறாதிருப்பதற்கான முயற்சியாகவே இவை உள்ளன. இவற்றை மீறி எழ வேண்டிய பொறுப்பு அரசியற் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் உள்ளது.  

ஏனென்றால் அரசியல் என்பது ஒரு கற்கைமுறை. அது ஒரு பொறுப்புள்ள துறை. மக்களுடைய வாழ்க்கையோடும் அவர்களுடைய எதிர்காலத்தோடும் நேரடியாகச் சம்மந்தப்பட்டது. ஏன், மக்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதே அரசியல்தான். மக்களுடையது மட்டுமல்ல, நாட்டினுடைய நிகழ்காலத்தையும் அதுவே தீர்மானிப்பது. ஆகவே அத்தகைய துறையை, அதற்குரிய அடிப்படைகளோடு அணுக வேண்டும். அதை அறிவுபூர்வமாகக் கையாள வேண்டும். இந்தப் புரிதலோடு அரசியற் கட்சிகளும் அரசியல்தலைவர்களும் செயற்பட வேண்டும். தமிழ்ச் சமூகத்தை அரசியல் ரீதியாக அறிவூட்ட வேண்டும். 

ஆனால், மேற்படி அரசியலைக் குறித்த அறிவுபூர்வமான  சிந்தனையோ, எண்ணமோ தமிழ்ச் சமூகத்திடம் இல்லை. இங்கே காணக்கிடைப்பதெல்லாம் வெறும் உணர்ச்சிகரமான போக்கே. இது அரசியலுக்கு எப்போதும் எதிர்விளைவுகளையே – பாதகத்தையே உண்டாக்கும். என்பதால்தான் தமிழ் மக்களின் அரசியல் தோற்றுப்போகிறது. இலகுவில் தோற்கடிக்கப்படக் கூடியதாக உள்ளது. 

இதைப் பற்றி குறித்த கட்சிகளின் ஆட்களுக்கே சரியான தெளிவில்லை. என்பதால்தான் துணிச்சலாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அந்தத் தடுமாற்றமே அரசியற் கூட்டுகளை உருவாக்குவதில் நெருக்கடிகளையும்  இணைந்து செயற்படுவதில் குழப்பங்களையும் உண்டாக்குகிறது. 

கட்சிகளுக்கு முண்டு கொடுப்போரின் நிலையும் அதை அனுமதிப்போரின் நிலையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இது அனுபவமாகட்டும். ஏனென்றால், ஈழத் தமிழ் அரசியற் தலைவர்கள் உறுப்பினர்களையோ, தொண்டர்களையோ, ஆதரவாளர்களையோ அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கவில்லை. அவர்களை மனதிற் கொண்டு ஒரு போதும் தீர்மானங்களை எடுப்பதுமில்லை; செயற்படுவதுமில்லை. எல்லாமே ஏகத் தீர்மானம்தான். ஜனநாயக விதிமுறைகளை ஏற்றுப் பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சிகளாக இருந்தாலும், தீர்மானங்களை எடுப்பதும் செயற்படுவதும் இராணுவத் தன்மையோடுதான். 

என்பதால்தான் அரசியற் கூட்டுகள் உருவாகும்போது கட்சிகளுக்குள்ளேயே ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படுகிறது. அதை விட வெளியே உள்ள அரசியற் சக்திகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அதிர்ச்சி. சமூக வலைத்தளங்களில் இயங்கும் புரட்சியாளர்கள் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாத நிலை ஏற்படுகிறது. முக்கியமாக கட்சிக்குள் பேச முடியாததை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பேசலாம் என்று கருதுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் உள்ள ஜனநாயக வெளியைப் பயன்படுத்த விளைகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு விதமான உளத் திருப்தியை அளிக்கிறது. 

இந்த நிலை ஏன் வந்தது என்றால், கடந்த 75 ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியல் நடைமுறைக்கு (யதார்த்தத்துக்கு) வெளியே நிற்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அதாவது இலட்சியவாத அரசியல் என்ற போர்வையில் கற்பனாவாத அரசியலே மேலோங்கியிருந்தது. யதார்த்தவாத அரசியலை, நடைமுறை அரசியலை எதிர்கொள்ள  இது வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஈழத் தமிழ் அரசியலில் துரோகி – தியாகி என்ற பிரிகோடும் கறுப்பு – வெள்ளை என்ற எதிர் மனோபாவமும் நீடித்து வந்திருக்கிறது. 

இதை ஆரம்பித்து வைத்தவர், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே. வி. செல்வநாயகம். மட்டக்களப்பில் அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருந்த நல்லையாவை வீழ்த்துவதற்காகச் செல்வநாயகம் ஆரம்பித்து வைத்த ‘துரோகி‘ என்ற அடையாளப்படுத்தும் – ஒதுக்கும் – அரசியலை, பின்னர்  செம்மையாக வளர்த்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். ஆனால், அமிர்தலிங்கமே பின்னாளில் துரோகியாக்கப்பட்டுப் பலியானார்.  

இந்தத் துரோகி – தியாகி அரசியல் விளையாட்டு ஐந்து ஆறு தலைமுறையைக் கடந்து இப்பொழுதும் தமிழ் அரசியற் பரப்பில் தொடருவதால்தான் இந்த அதிர்ச்சியும் பரபரப்பும். 

ஆனாலும் கற்பனாவாதத்தை விட நடைமுறைக்கு – யதார்தத்துக்கு எப்போதும் வலு அதிகம். என்பதால்தான் 1980 களின் நடுப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழரசுக் கட்சி) போன்றவற்றைத் தடை செய்து இல்லாதொழித்த விடுதலைப்புலிகள், 2000 த்தின் தொடக்கத்தில் அவற்றை மீளச் சேர்க்க வேண்டி வந்தது. (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) அது புலிகளின் கீழிறக்கமே. அதுவொரு அரசியல் விளைவு. அன்றைய அரசியற் சூழலின் தேவையும் நிர்ப்பந்தமுமாகும். அன்றும் அந்தக் கூட்டில் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில்) இணைந்து கொள்வதற்கும் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உணர்ச்சிகரமான பல எதிர்நிலைகள் இருந்தன. அதைப்போல அவற்றை இணைப்பதிலும் புலிகளுக்கும் பலவிதமான உணர்ச்சிகரமான விவாதங்கள் நிகழ்ந்தன. அதையெல்லாம் கடந்தே அந்தக் கூட்டு உருவாகியது. 

இதையெல்லாம் படிப்பினையாக, வரலாற்று உண்மைகளாக, அரசியல் நடைமுறைகளாக, அரசியல் யதார்த்தமாக ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாகத் தலைவர்கள் தமது தீர்மானங்களிலும் நடவடிக்கைகளிலும் உறுதியும் தெளிவும் கொண்டிருப்பது அவசியம்.  

அது இல்லாதபோதுதான் குழப்பங்களும் தடுமாற்றங்களும் ஏற்படுகின்றன. இங்கே மிகப் பெரிய சிக்கலாக இருப்பது, தற்போதைய சூழலில் ஈ.பி.டி.பி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதேயாகும். தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இரண்டுக்கும் இப்போது ஈ.பி.டி.பி யின் ஆதரவு வேண்டும். ஆனால், அதைப் பகிரங்கமாகப் பெற முடியாது. இதுதான் பிரச்சினை. கள்ள உறவுக்குத் தயார். அதில் கிடைக்கின்ற இன்பத்தையும் சுகத்தையும் இலாபமாக அனுபவிக்கத் தயார். ஆனால், அதைப் பகிரங்கப்படுத்தத் தயாரில்லை. இந்தக் கேவலமான சிந்தனையை என்னவென்று சொல்வது?

அப்படியென்றால், பேசாமல் விடுங்கள். NPP ஆட்சியமைக்கட்டும். அதாவது எதிர்த்தரப்பு ஆட்சியை அமைத்துக்கொள்ளட்டும். இங்கேதான் சிக்கல். 

ஆனால், ஈ.பி.டி.பியின் தரப்பில் ஒரு நியாயம் சொல்லப்படுகிறது. தாம் தற்போதைய சூழலில் தமிழ்ச்சமூகமாக – தமிழ்த்தரப்பாகவே சிந்திக்கிறோம். அந்த அடிப்படையில்தான் ஆதரவைக் கொடுப்பதா இல்லையா என்று பேச முடியும் என. அதாவது, NPP க்கு எதிரான தரப்புகளாகிய தமிழ்த் தரப்புகள் எல்லாம் ஒன்றாக நிற்பதாக ஒரு தோற்றத்தை – ஒரு நிலையை உருவாக்குவதாக. 

அப்படியானால் எதற்காக தமிழரசுக் கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் தமிழ்த்தேசியப் பேரவையும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அவற்றின் ஆதரவாளர்களும் பதற்றமடைய வேண்டும். இந்த நியாயத்தைப் பொதுவெளியில் சொல்லி நிமிரலாமே!

https://arangamnews.com/?p=12072

காலங்கடந்த ஒற்றுமையின் பயன்?

2 weeks ago

காலங்கடந்த ஒற்றுமையின் பயன்?

லக்ஸ்மன் 

நாட்டின் தென் பகுதியிலும், வடக்கு கிழக்கிலும் காலங்கடந்த ஒற்றுமை குறித்த விவாதங்கள் இப்போது பிரபலமாகப் பேசப்படுபவையாக இருக்கின்றன. இவை பயனுடையவைதானா?
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் ஈகோ போர்களைத் தாண்டி, கொழும்பு மேயர் பதவிக்காக ஒன்றிணைவது பற்றிய செய்தி வந்தபோது, இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் அதை ‘மிக மிகக் கால தாமதமானது” என்றுதான் வரவேற்றனர்.

நாட்டையே ஆட்சி செய்யும் வாய்ப்பிருந்த போதிலும் அதனை நழுவவிட்டு தற்போது கொழும்பு மேயர் பதவியைத் தக்கவைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இணைந்து போராடுகின்றன.

இக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால், சஜித்தும் ரணிலும் ஒற்றுமையின் சக்தியை உணர்ந்து, வெறுப்பின் கோடரியை என்றென்றும் புதைக்க வேண்டும் என்று கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இது போன்றதொரு நிகழ்வு கடந்த செப்டெம்பரில் நடைபெற்றிருந்தால் வேறு வகையான நாடு இருந்திருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற அதிகாரங்கள் ஜே.வி.பி. கைகளில் இருப்பதனால், உள்ளூராட்சித் தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுக்கொள்ளவே ஜே.வி.பி. தீவிரமாக முயன்றது. மாநகர சபைகள் முதல் பிரதேச சபைகள் வரை முழுவதையும் வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதனை வைத்தே அவர்கள் பெருமையும் பேசிக் கொண்டனர்.

அதனடிப்படையில் தான், 339 சபாக்களையும் ஒரே நேரத்தில் கைப்பற்றுவோம். ஆதிக ஆசனங்களுடன் எதிர்க்கட்சிகளில் ஏதேனும் ஒரு சபையையேனும் வெற்றிகொண்டால், அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அரசாங்க நிதியிலிருந்து ஒரு சதம் கூட வழங்கப்படாது.

“எதிர்க்கட்சிகள் அனைத்தும் முரடர்கள், நேர்மையற்றவர்கள் மற்றும் ஊழல் நிறைந்தவர்கள். ஊழல்வாதிகளுக்கு பொதுப் பணத்தைக் கொடுக்க முடியாது. ஆனால், எங்களது சபைகளுக்கு, நான் கண்ணிமைக்காமல் கொடுப்பேன்”  என்று ஜனாதிபதி அறிவித்தார். அது அவரது எச்சரிக்கையாகவே இருந்தது. 

ஆனால், அரசியல் சொல்லாடல்கள் இருந்தபோதிலும், நம்பிக்கையான ஆரவாரம் மற்றும் தற்பெருமை இருந்தபோதிலும், இறுதித் தேர்தல் முடிவுகள், ஆறு மாதங்களுக்கு முன்பு ஜே.வி.பியை நோக்கி வீசிய 6.8 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அலை 2.3 மில்லியனாகக் குறைந்து. மிகக் குறுகிய காலத்திற்குள் ஜே.வி.பியின் ஆதரவில் ஏற்பட்ட இந்த வியத்தகு சரிவு, அதன் தலைவர்களுக்கு அவர்களின் ஆதரவு வேகமாகக் குறையத் தொடங்கியிருப்பதை எச்சரித்திருக்க வேண்டும்.

ஆனால், வேறு யார் வெற்றி பெற்றாலும், இந்த நாட்டை ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாங்கள்தான் என்று பொதுமக்களுக்கு அவர்கள் சித்திரித்த மாயையை அது உடைத்திருக்கிறது. 51 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டாலும், அதிக எண்ணிக்கையிலான இடங்களை தனித்து வெல்லும் கட்சியே உள்ளூராட்சி சபைகளை வெல்லும் என்ற கதையை ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா  கூறியிருந்தார்.

அதே நேரத்தில், மக்கள் தங்களுக்கு வழங்கிய ஆணையைத் திருட வேண்டாம் என்று எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எச்சரிக்கையும் விடுத்திருந்தார். ஆனால்,  நடைபெற்றதோ வேறாகத் தான் இருந்தது. நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாட்டிலுள்ள 339 உள்ளூராட்சி சபைகளில் ஜே.வி.பி. 115 நேரடி வெற்றிகளைப் பெற்றது, இது ஒரு கணக்கிடல் பிழையே.

இது ஒருபுறமிருக்க, கொழும்பு மாநகர சபையில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது பெரும் பரபரப்பாக எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்ற விடயமாக இருக்கிறது. கொழும்பு மாநகர சபையின் 117 ஆசனங்களில், ஜே.வி.பிக்கு 48, ஐ.ம.சக்கு 29, ஐ.தே.கவுக்கு 19, என்ற கணக்கிலேயே காணப்படுகிறது. இதில் எந்தத் தரப்புக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் என்பது இறுதி நாள் வரையில் தெரியாத ஒன்றே. இதே போன்றே, ஏனைய பல சபைகளிலும் தீர்மானங்களின்றி பேச்சுக்களும் பேரம் பேசல்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

தெற்கில் இவ்வாறு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்புக்காக நடைபெற்று வருகின்றன குழப்பங்களுக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்ப் பிரதேசங்கள் அனைத்தையும் கைப்பற்றுவோம் தனித்து ஆட்சியமைப்போம் என்கிற கோதாவிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் செயற்பட்டது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தனித்து செயற்படுவதாக முடிவை அறிவிக்கும் போதும் அவர்கள் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைப்பினையே காரணமாக சொல்லியிருந்தார்கள். ஆனாலரல் இப்போது நடைபெறுபவையெல்லாம் மிகவும் கேவலமானவைகளாக இருப்பது தமிழ்த் தேசிய அரசியலைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளாக இருப்பது கவலைக்குரியவைகளாகப் பார்க்கப்படுகின்றன.

அதற்கு காரணம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் கடந்த வாரத்தில் ஈ.பி.டி.பியின். செயலாளர் நாயகத்தை யாழ்ப்பாணம் சிறிதர் தியேட்டரில் சந்தித்ததுதான். அதற்கு பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கொடுக்கும் விளக்கம் இன்னமும் வினோதமானதாக இருக்கிறது.

தங்களது கட்சியின் உள்ளூராட்சித் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டும்  என்ற கோட்பாட்டின் அடிப்படையில், பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததாக அவர் கூறியிருக்கிறார்.

உள்ளூராட்சித் தேர்தல் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து, ஆட்சியமைப்பு குறித்து நடைபெற்று வருகின்ற கலந்துரையாடல்கள் வார்த்தை ஜாலங்களால் மறைக்கப்படுவதையே காட்டுகின்றன. இது காலங்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சியால் தமிழர் அரசியலில் செய்யப்படுவதைப் போன்றே தொடர்கின்றன என்பதுதான் உண்மை.

தேர்தல் முடிந்ததையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி என்பன தொடர்ச்சியாக சொல்லி வருவதைப் போலவே தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமை பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இருந்தாலும், உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைப்பு விடயத்தில் விட்டுக் கொடுப்புகளுடன் நகரலாம் என்றும் கூறினர். ஆனால், தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடானது, அதிக ஆசனம் பெற்ற கட்சி, மேயர், தவிசாளர், உப தவிசாளர்  பதவிகள் குறித்ததாகவே இருந்து வந்திருக்கிறன. இதில் ஒரு பகுதிதான் டக்ளஸ் தேவானந்தாவை சிறிதர் தியேட்டரில் சீ.வி.கே.சிவஞானம் சந்தித்ததாகும்.

மரத்தால் விழுந்தாலும் மீசையில் மண்ணொட்டாத வகையில் அனுசரிப்பது மிகவும் சிரமமானதே. தமிழ்த் தேசிய அரசியலில் விரோதிகள், துரோகிகன் நிலைப்பாடுகள் இருந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது இணைந்திருந்த கட்சிகளைப் புலிகளின் முடிவுக்குப் பின்னர் வெளியேற்றும் சூழ்ச்சியைக் கையாண்ட இலங்கைத் தமிழரசுக்கட்சி கூட்டமைப்பு உருவாக்கத்திலிருந்து இருந்த கட்சியான ரெலோவை வெளியேற்ற முடியாமல் போகவே தாமாக வெளியேறி இறுதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லையென்றாக்கியிருந்தது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அவர்கள் இயங்குவதற்கும் தடை ஏற்படுத்தினர்.

அதற்கு அவர்கள் சொல்லி வருகின்ற காரணங்கள் பல இருக்கின்றன. ஆனால், அதில் தனிப்பட்ட கோபதாபங்கள், வெறுப்புகள், ஈகோக்களும் இருப்பது வெளிப்படையே.
இவ்வாறான நிலையில்தான், வாசனைத் திரவியம் போன்று ஈ.பி.டிபியை பயன்படுத்திக் கொள்வதற்காக சிறிதர் தியேட்டருக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சென்றிருக்கிறார். இது மற்றொரு வகையில் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மிரட்டலும் கூட என்பது சிலருக்கு புரியாதிருப்பது வினோதமே.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியன முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு நாங்கள் மசியமாட்டோம். நீங்கள் ஆட்சியமைக்க ஒத்துழைக்காவிட்டால் இவ்வாறும் எங்களிடம் வழிகள் இருக்கின்றன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி மிரட்டல் விடுத்திருக்கும் நிலையில்  தமிழர் பிரதேசங்களிலுள்ள சபைகளின் நிலைமை எவ்வாறிருக்கும் என்பது சற்று சிந்திக்க வேண்டியதே.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குலையாமலிருந்திருந்தால், வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு பெருகியிருக்காது என்பதுபோல், தெற்கில் ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருந்தால் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கே வந்திருக்காது. இது யார் செய்த பிழை.

பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி அதிகாரம் தெற்கிலும், மக்களின் வெறுப்பினாலேயே ஒதுக்கப்படுகின்ற அரசியல் வடக்கு கிழக்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தெற்கில் நடைபெற்று வருகின்ற  குழப்பம் ஒரு ஒற்றுமைக்குக் காலாக அமைந்திருந்தாலும் வடக்கு கிழக்கில் மேலும் மேலும் விரிசலுக்கே வழிவகுத்து வருகிறது என்பதுதான் முக்கியமானது.

இதற்கு யார் காரணம் என்பதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளாமலிருப்பதுதான் இதில் வினோதம்.
ஒற்றுமையின் சக்தியை உணர்ந்துகொள்ளாதவர்கள் இருக்கின்றார்களானால் அவர்களுக்கு அதனைப் புரிய வைப்பது மக்களாகவே இருக்கவேண்டும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/காலங்கடந்த-ஒற்றுமையின்-பயன்/91-358887

மீண்ட ருவாண்டாவும், மீளாத இலங்கையும்

2 weeks ago

Published By: DIGITAL DESK 2

08 JUN, 2025 | 03:20 PM

image

ஹரிகரன்

31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட ருவாண்டா தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.

ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக இருக்கின்ற கல்லி அலெஸ் (Cally Alles) அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார்.

ருவாண்டாவின் வரலாறு, இனப்படுகொலையில் எதிர்கொண்ட அழிவுகள், அதற்குப் பின்னர் அங்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார, அரசியல், சமூக மாற்றங்கள் குறித்து மிகவிரிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

அந்த கட்டுரையை எழுதிய கல்லி அலெஸ், 1978 ஆம் ஆண்டிலிருந்து ருவாண்டாவில் வசித்து வருகின்ற- இலங்கையரான தேயிலைத் தோட்டத் தொழிலதிபர்.

1994 ஆம் ஆண்டு ருவாண்டாவின் ஜனாதிபதியாக இருந்த ஜூவேனல் ஹபியாரிமானா, பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, டுட்சி சிறுபான்மையினர் மீது, ஹூட்டு பெரும்பான்மையினர் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டனர்.

தலைநகர் கிகாலியில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கி இருந்த அகதிகள் முகாம்களுக்குள் நுழைந்து ஈவிரக்கமற்ற இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. சுட்டும் வெட்டியும், இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

பெண்கள், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

கடந்த நூற்றாண்டில் மிகக் கோரமாக அரங்கேறிய ஒரு இனப்படுகொலையாக இது அடையாளப்படுத்தப்படுகிறது.

சுமார் 3 மாத காலப்பகுதிக்குள் ருவாண்டாவில் சுமார் 8 இலட்சம் வரையிலான சிறுபான்மை டுட்சிக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன.

சுமார் 5 இலட்சம் வரையான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இதற்குப் பின்னர், அங்கு சர்வதேச தலையீட்டுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆட்சியில் இருந்த- இனப்படுகொலை அரசாங்கம விரட்டியடிக்கப்பட்டது.

அதன் பின்னர் இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டன.

இப்போது ருவாண்டா ஆபிரிக்காவிலேயே மிகமிக அமைதியான ஒரு நாடாக விளங்குகிறது.

உலகளவில் கூட, அமைதியான நாடு என்று சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறது.

ருவாண்டா என்றால் எதிர்மறையான ஒரு எண்ணமே மனதில் தோன்றும்.

அந்தளவுக்கு அங்கு நிகழ்ந்த இனஅழிப்பின் அடையாளம் உலகம் முழுவதும் பதிவாகியிருக்கிறது.

ஆனால், இப்போது அந்த நாட்டின் நிலைமை அதற்கு மாறாக உள்ளது என்பதை, ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவர் கல்லி அலெசின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

பாதுகாப்பு மிக்க ஒரு நாடாக அது மாறியிருக்கிறது.

பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

2023 ஆம் ஆண்டு 8.2 வீத பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்த ருவாண்டா, 2024 ஆம் ஆண்டு 8.9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது.

இது அந்த நாடு எந்தளவு வேகமாக பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அங்கு சேவைகள் துறையும், தொழிற்துறைகளும், விவசாயத் துறையும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன.

குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக அது மாறியிருக்கிறது.

அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 63.75% வீதமானோர் பெண்களாக இருக்கின்றனர்.

பெண்கள் அங்கு மிகவும் பாதுகாப்பான நிலையை உணர்கிறார்கள்.

பெண் சுற்றுலா பயணிகள் தனித்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மிகஉகந்த இடமாக இருக்கிறது.

இப்படி ருவாண்டாவின் புகழை அடுக்கியிருக்கிறார், கல்லி அலெஸ்.

நீண்ட இனஅழிப்பு வரலாற்றை கொண்டிருக்கும் இலங்கைத்தீவு போரில் இருந்து முற்று முழுதாக விடுபட்டு, 16 ஆண்டுகள் கடந்து விட்டன.

ஆனாலும், இலங்கைத் தீவு அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ அனைவருக்கும் பாதுகாப்பான நாடாக உருவாகவில்லை- உருவாக்கப்படவில்லை.

நாட்டின் பொருளாதாரம் உறுதியான நிலையில் இல்லை, அது மோசமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வங்குரோத்து நிலையில் இருந்து மீளுவதாகச் சொல்லப்பட்டாலும், மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதார நிலையும் மோசமான நிலையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெற்று வருவதாக கூறப்படுகின்ற போதும், அதனை நிரூபிக்கக் கூடிய வகையில், மக்களால் உணரக் கூடிய வகையில், நாட்டின் பொருளாதாரம் செழிப்பை நோக்கி நகரவில்லை.

அனைத்து சமூகங்களுக்குமான பொருளாதாரப் பாதுகாப்பு நிலை உறுதிப்படுத்தப்படாமல், கேள்விக்குறியான நிலையே நீடிக்கிறது.

அதேவேளை, அரசியல் ரீதியாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

போருக்கான அடிப்படைக் காரணிகளை தீர்ப்பதற்கு ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இப்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கங்கள் செயற்படுத்திய விடயங்களை கூட, வலுவற்றதாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது

எந்த ஒரு போருக்கும் அரசியல் ரீதியான காரணிகள் இருக்கும்.

இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டத்துக்கும் அரசியல் காரணிகள் இருந்தன.

தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளும் அட்டூழியங்களும் இனப்படுகொலைகளும் தான் பெரும் போருக்குள் நாடு தள்ளப்படுவதற்கு காரணம்.

அரசியல் ரீதியாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படாமல், அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமல் போனதன் விளைவு அது.

அதற்காக முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளும் சமாதான பேச்சுக்களும் எந்த பயனும் தராத நிலையில் இலங்கையின் ஆட்சியாளர்கள், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவது என்ற பெயரில் மிகப்பெரிய இனஅழிப்பை அரங்கேற்றினார்கள்.

அதன் பின்னரும், தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரவோ உரிமைகளை உறுதிப்படுத்தவோ இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசியல் ரீதியாக அதனை உறுதிப்படுத்தாமல் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியாது.

ஆனாலும் எந்த ஒரு சிங்கள ஆட்சியாளரும் அதற்குத் தயாராக இல்லை.

அதேபோல, போரின்போது இடம்பெற்ற இனஅழிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படவோ இல்லை.

பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கு எந்த ஒரு சிங்கள ஆட்சியாளர்களும் துணியாத நிலையிலேயே இருக்கின்றனர்.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் நீதி கிடைக்காமல் போராடுகின்ற நிலை இன்று வரை தொடர்கிறது.

பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது.

ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல் - குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்க வைத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

இது இலங்கையில் நல்லிணக்கம், நிலையான அமைதி ஏற்படுவதற்கு உள்ள மிகப்பெரிய தடையாக உள்ளது.

31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய அவலத்த எதிர்கொண்ட ருவாண்டா இன்று , மீள் எழுச்சி பெற்றிருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம், அங்கு இடம்பெற்ற இனஅழிப்புக்கு பொறுப்புக்கூறல் இடம் பெற்றதுதான்.

இனஅழிப்பை மேற்கொண்டவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருமளவானோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதன் ஊடாக, முற்று முழுதாக இல்லாவிட்டாலும், பொறுப்புக்கூறல் கடப்பாடு பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அதற்கு சர்வதேச துணையும் இருந்தது.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில், அத்தகைய நிலை இல்லை.

சர்வதேசமும் தனது முழுமையான அதிகாரத்தை பிரயோகிக்கவில்லை, இலங்கை அரசும் பொறுப்புக்கூறலை ஒரு முக்கிய கடப்பாடாக கருதி, நிறைவேற்றவில்லை.

தற்போதைய அரசாங்கம் கூட, ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்குவதாக கூறிய இப்போதைய அரசாங்கம், அதனை தொடங்கவே இல்லை.

இவ்வாறான நிலையில், இலங்கையின் நிலையான அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் ஏற்ற சூழல் உருவாக்கப்படவில்லை.

போருக்குப் பிந்திய அமைதி என்பது, அரசியல், பொருளாதார, பொறுப்புக்கூறல், சமூக ரீதியாக மாற்றங்களின் ஊடாகத் தான், சாத்தியப்படும்.

அத்தகைய மாற்றங்களை இலங்கை சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏதும், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தென்படுவதாக இல்லை.

https://www.virakesari.lk/article/216935

திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்!

2 weeks 2 days ago

திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்!

June 8, 2025 9:08 am

திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்!

அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன.

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் பணிகள் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி பிரதமர் தலைமையிலான ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்ற யோசனைகளும் உண்டு.

13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களும் அடுத்த நான்கு வருடங்களுக்கு நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இல்லை.

மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு அவசியமில்லை என ஜனாதிபதி அநுர கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடுதல் மற்றும் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தல் மாத்திரமே தற்போதைய திட்டமாகவுள்ளது.

இப்பின்புலத்தில் புதிய யாப்பு தயாரிப்பு விஷயத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக சுமந்திரன் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும், புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புக்கு அவர் ஒத்தழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும், நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார சக உறுப்பினர் ஒருவரிடம் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எந்த அடிப்படையில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று நீதியமைச்சா் எதுவும் கூறவில்லை. ஆனால், சத்தியலிங்கம் மிக விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதால், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சுமந்திரன் நியமிக்கப்படலாம் என்று தமிழரசுக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இப்பின்னணியில்தான் உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் விடயத்தில் கஜேந்திரகுமார் அணியுடன் கூட்டு சேராமல், ஈபிடிபியுடன் கூட்டுச் சேர்வதற்கான காய் நகர்த்தல் நடத்திருக்கிறது போல் தெரிகிறது.

அதேநேரம், மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின் பிரகாரமே ஈபிடிபி தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஈபிடிபியை ஆட்சி அமைக்குமாறு வலியுறுத்துமாறு, மகிந்த ராஜபக்ச மூத்த பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் கூறியதாகவும், அத் தகவலை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அந்த பத்திரிகை ஆசிரியர் தொலைபேசியில் எடுத்துச் சொன்னதாகவும் கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

சுமந்திரன் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் ஏற்கனவே நல்ல உறவில் இருக்கும் ஒருவர். அதன் காரண – காரியமாக டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி தமிழரசுக் கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதை மகிந்த ராஜபக்ச, கொழும்பு மைய அரசியல் நோக்கில் விரும்பியிருக்கலாம்.

சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, அவர்களிடையே கட்சி அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், வடக்கு கிழக்கு ஈழத்தமிழர்களைக் கையாளும் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று செயற்பட்டு வருகின்றனர் என்பது பொதுவான உண்மை.

அந்த அடிப்படையில் அநுரகுமார திஸாநாயக்க – சுமந்திரன் ஆகியோர் ஊடான தொடர்புகள் – காய்நகர்த்தல்கள் தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியாக தமக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணம் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லாமலில்லை.

கட்சி அரசியல் வேறுபாடுகள் இன்றி அரசியல் தலைவர்களுக்குரிய சட்ட உதவிகளை சுமந்திரன் கடந்த காலங்களிலும் மேற்கொண்டிருந்தார் என்ற பின்னணியில் இந்த நகர்வையும் அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், கஜேந்திரகுமார் மேற்கொண்ட முயற்சி, எந்தளவு தூரம் நிலையாக இருக்கும் என்ற கேள்விகள் உண்டு.

ஆனாலும், 13 பற்றிய பேச்சுக்கள் தற்போதைக்கு எழக் கூடிய நிலைமை இல்லாத ஒரு பின்னணியில், முழுமையான சுயாட்சிக் கட்டமைப்புக்கான ஏற்பாடுகளை, புதிதாக அமைத்த கூட்டின் மூலம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. குறிப்பாக இன அழிப்பு பற்றிய சர்வதேச நீதிக்குரிய ஏற்பாடுகளையும் துரிதமாகக் கையாள வேண்டிய காலம் இது.

ஆகவே, கஜேந்திரகுமாரின் அடுத்த கட்ட செயல்பாடு இந்த அடிப்படையில் அமையுமா அல்லது வெறுமனே உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான ஒரு கூட்டா என்பதை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஏனெனில், சங்கு அணி உறுப்பினர்கள் சிலரின் கடந்த கால செயற்பாடுகள் கொழும்பு மைய அரசியலுக்குள் பழக்கப்பட்டவை. 13 இல்லாவிட்டாலும், ஒற்றையாட்சியை ஏற்கும் பண்பு சங்கு அணியில் சிலரிடம் தொடர்ச்சியாக நிலவுகின்றது.

இப் பின்புலத்தில் மிக இறுக்கமான ஏற்க முடியாத மனக் கசப்புகளோடுதான் கஜேந்திரகுமார், சங்கு அணியுடன் ஒப்பந்தம் செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை.

இருந்தாலும் கசப்புகள் – சகிப்புத் தன்மைகள் – நெருக்கடிகள் – கடும் விமர்சனங்கள் போன்றவற்றை கஜேந்திரகுமார் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தலைமை ஒன்றிடம் இருக்க வேண்டிய பண்பு இதுதான். அதேநேரம், யாழ்ப்பாணத்தைக் கடந்து வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்ற இயங்கு நிலைக்கு கஜேந்திரகுமார் புத்துயிர் கொடுக்கவும் வேண்டும்.

சங்கு அணியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலத்துக்குப் பொருத்தம் என்று கூறினாலும், ”சுயநிர்ணய உரிமை” – ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை” என்ற பிரதான இரு உள்ளடக்கங்கள், வெறுமனே பேச்சுடன் மாத்திரம் நின்றுவிடுகின்றதா என்ற கேள்விகள் இல்லாமலில்லை.

ஆகவே, இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய அல்லது மேலும் செய்து காண்பிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு உரியது. அது இலகுவான காரியம் அல்ல.

ஆனாலும், 2009 இற்குப் பின்னர், அதாவது கடந்த பதினைந்து வருடங்களின் பின்னரான சூழலில், தேர்தல் அரசியலை இடது கையாளும் விடுதலைச் செயற்பாட்டு அரசியலை வலது கையாளும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு உண்டு.

ஏனெனில், புதிய அரசியல் யாப்பு என்ற கோசத்துடன் ஈழத் தமிழர் விவகாரம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து அடுத்த ஆண்டு முற்றாக நீக்கம் செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் கசிந்துள்ளன.

சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது கட்சி அரசியலுக்கு அப்பால் ஈழத்தமிழர் விவகாரத்தை ஒரு புள்ளியில் நின்று சர்வதேச அரங்கில் கையாண்ட பயன்கள் தான் இவை.

கட்சி அரசியலைக் கடந்து தமிழர் விவகாரத்தைக் கையாள ”வெளியுறவுக் கொள்கை” – ”சர்வதேச இராஜதந்திர சேவை” என்ற இரு பிரதான மையங்களையும் சிங்கள தலைவர்கள் வகுத்திருக்கின்றனர். அவர்களின் பிரதான வகிபாகம் அதுதான்.

ஆகவே அரசு அற்ற சமூகம் என்ற நிலையில், ”வலுவான கட்டமைப்புடன் கூடிய வெளியுறவுக் கொள்கை” – சர்வதேச இராஜதந்திர சேவை” என்ற இரு பிரதான மையங்களைத் தமிழ்த் தரப்பு உருவாக்க வேண்டும்.

இப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு மாத்திரமல்ல, அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள அணிக்கும் உண்டு.

கடந்த கால கொழும்பு மைய அரசியலை கைவிட்டு, அதாவது இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட அரசியல் வழி முறைகளில் கவனம் செலுத்தாமல், 1985 ஆம் ஆண்டு திம்புக் கோட்பாட்டு அடிப்படையிலான கட்டமைப்புக்கு வழி சமைக்க வேண்டும்.

பூட்டான் (Bhutan) தலைநகர் திம்புவில் இடம்பெற்ற பேச்சில் விடுதலைப் புலிகள், ஈபிஆர்எல்எப். புளொட் ரெலோ உள்ளிட்ட இயக்கங்கள் பங்குபற்றியிருந்தன. அங்கு ஏற்பட்ட இணக்கத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருந்தது.

ஆகவே சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பகிரங்கமாகத் தங்கள் நிலைப்பபாட்டை அறிவிக்க வேண்டும்.

அருந்தவபாலன், ஐங்கரநேசன் ஆகியோர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவையாக ஒன்றிணைந்துள்ள பின்னணியில், இச் செயற்பாட்டை நகர்த்த முடியும் என்ற நம்பிக்கைகள் மக்களிடம் உண்டு.

அ.நிக்ஸன்-

https://oruvan.com/sumanthiran-will-cooperate-with-the-new-constitution/

புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன்

2 weeks 2 days ago

புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன்

504710956_4118247221774593_4808453404441

கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று கூறத்தக்க பொருத்தமான கூட்டுக்கள்தான் உண்டு.இப்பொழுது கஜேந்திரக்குமார் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டும் அப்படித்தான். அதுவும் ஒரு சமயோசிதக் கூட்டுத்தான். தந்திரோபாயக் கூட்டுத்தான்.எனினும், தமிழ்த் தேசிய நோக்கு நிலையில், பொது எதிரிக்கு எதிராக ஆகக்கூடிய பட்ஷம் ஒரு தேசமாகத் திரள்வது என்ற  அடிப்படையில் அந்த கூட்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள்.அதேசமயம் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள். எனவே நீதிக்கான போராட்டத்தில் யாரைப் பிரதான குற்றவாளியாகக் காணப் போகிறோம்; யாருக்கு எதிராக அணி திரளப் போகிறோம் என்பதில் தமிழ் மக்களிடம் மிகத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.அதாவது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வது.எங்களுக்குள் ஒருவர் மற்றவரை குற்றஞ்சாட்டி நாங்கள் பல துண்டுகளாகச் சிதறிப் போவதா? அல்லது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வதா? என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம்.

இந்த அடிப்படையில் பார்த்தால் கஜேந்திரக்குமார்  டிரிஎன்ஏயோடு கூட்டுக்குப் போவது என்று முடிவெடுத்தது ஒரு திருப்பகரமான மாற்றம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தியாகி-துரோகி வாய்ப்பாட்டுக்கு வெளியே அந்தக் கூட்டு உருவாகியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகால வாய்ப்பாட்டுக்கு வெளியே முன்னணி வந்திருக்கிறது.அது இரண்டு தரப்புக்கும் மெய்யான ஒரு பண்புருமாற்றமாக இருந்தால் கூட்டு நிலைக்கும்.

அந்தக் கூட்டின் மூலம் அவர்கள் பின்வரும் நன்மைகளை  அடைய முயற்சிக்கலாம். முதலாவதாக, பொது எதிரிக்கு எதிராக ஒப்பீட்டளவில் பெரிய கூட்டு. இரண்டாவதாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளை உருவாக்கலாம். மூன்றாவதாக, தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியைத் தனிமைப்படுத்தலாம். நான்காவதாக, மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு பலமான முன்னணியை உருவாக்கலாம். ஐந்தாவதாக, கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தலாம்.

டிரிஎன்ஏயைப் பொறுத்த்தவரை அவர்கள் யாரோடாவது கூட்டுச் சேர வேண்டும். தனியாக நின்று பிடிக்க முடியாது. தமிழரசுக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்தால் மாகாண சபையிலும் அதற்குப் பின் வரக்கூடிய தேர்தல்களிலும் அதிகரித்த வெற்றி வாய்ப்புகள் அவர்களுக்கு இருக்கக்கூடும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவ்வாறான வெற்றி வாய்ப்புகளை இனிமேல்தான் நிரூபிக்க வேண்டாம். ஆனால் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது தொடர்பாக தமிழரசுக் கட்சியோடு அவர்கள் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளில் திருப்தியான பெறுபேறுகள் இல்லாத ஒரு பின்னணிக்குள் அவர்கள் முன்னணியை நோக்கி வந்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சி தன்னை முதன்மை கட்சியாகவும் பெரிய கட்சியாகவும் கருதி, தனது மேலாண்மையை வலியுறுத்த முற்பட்டதன் விளைவு இது.

புதிய கூட்டை எப்படி உளவியல் ரீதியாகவும் நடைமுறையிலும் பலவீனப்படுத்தலாம் என்று சிந்தித்து சுமந்திரன் அணி திட்டமிட்டு வேலை செய்கின்றது.சுமந்திரன் அணி இந்தக் கூட்டைக் கண்டு பதட்டமடைகிறது. எதிர்காலத்தில் தலைமைத்துவம் முன்னணியிடம் சென்று  விடக்கூடாது என்ற பயமும் அதில் உண்டு. எனவே இந்தக் கூட்டை உடைப்பதற்காக எந்த ஒரு வெளி எதிரியையும் விடக் கூடுதலாக சுமந்திரன் அணி வேலை செய்கின்றது.facebook_1749296419549_73370809697035033

ஈபிடிபியுடன் தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தைக்கு போனதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் அதனால் ஏற்படும் பின்னுதைப்பு கட்சியைக் கடுமையாக பாதிக்கக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன. இதில் சுமந்திரனுக்கு ஆறுதலான விடயம் என்னவென்றால்,சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் காணப்படும் சக்திகளுக்கு தலைமை தாங்க இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை தயாரில்லை  என்பதுதான். இதனால் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் படிப்படியாக கட்சிக்குள் தன் பிடியை பலப்படுத்தி வருகிறார். மந்திரித்து ஏவி விடப்பட்ட சேவலைப்போல அவர் அங்கலாய்ப்போடு ஓடிக்கொண்டேயிருக்கிறார். ஒரு கட்சியின் பதில் செயலாளர் இவ்வளவுக்குத்  தீயாக வேலை செய்வதில்லை. ஆனால் சுமந்திரன் தொடர்ந்து இயங்குகிறார். முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்சியின் எல்லாமுமாக அவர் தோன்றினார். இப்பொழுதும் அந்தப் பாத்திரத்தை எப்படித் தக்க வைப்பது என்று சிந்தித்துத் திட்டமிட்டு உழைக்கிறார்.அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் எப்படியும் மக்கள் ஆணையைப் பெற்று விட வேண்டும் என்ற தவிப்பு அதில் தெரிகிறது.

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைப் போட்டி என்பது பலமான தலைமைகள் இரண்டு இருப்பதால் ஏற்பட்டது அல்ல. இரண்டுமே பலவீனமான தலைமைகள் என்பதால் ஏற்பட்டதுதான்  என்பதைக் கடந்த ஆண்டு நிரூபித்து விட்டது. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தை பலப்படுத்த இதுதான் தருணம் என்று நம்புவதாகத் தெரிகிறது.கடந்த வெள்ளிக்கிழமை கஜேந்திரகுமார் கொழும்பில் நடாத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் சுமந்திரன் அணிக்குப் பொறி வைப்பவை.

503503384_10162603465459054_794533667309

தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த 15 ஆண்டுகளாக தன்னை ஒரு மாற்று அணியாகத்தான் ஸ்தாபித்து வந்திருக்கிறது. தன்னை ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாகக் கருதி வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக தன்னை கட்டமைத்துக் கொள்ள அக்கட்சி தவறிவிட்டது. 15 ஆண்டுகளின் பின் கஜேந்திரக்குமார் உடல் ரீதியாகவும் நோய்வாய்ப்பட்டு தேறிய பின், அந்தக் கட்சி அவருக்கு நெருக்கமான சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் தூண்டுதலால் தனது வழமையான வாய்ப்பாட்டிலிருந்து இறங்கி வருவதாகத் தெரிகிறது. ஆனால் வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக அவர்கள் வளர்வதற்கு இதை விடக் கடுமையாக உழைக்க வேண்டும்.அதாவது தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக வளர மேலும் கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் அப்படி உழைக்கும் வரையிலும் தமிழரசுக் கட்சிதான் முதன்மைக் கட்சியாக தொடர்ந்துமிருக்கும். புதிய கூட்டு நிலைத்திருக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சிப் பண்பு மீண்டும் தலை தூக்கும்.

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட கூட்டுக்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய கட்சிகளும் சரி ஆயுதப் போராட்ட இயக்கங்களும் சரி தங்களுக்குள்ளேயும் மோதியிருக்கின்றன.தங்களுக்கு இடையிலும் மோதியிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தொடங்கி ஆயுதப் போராட்ட காலத்தில் திம்பு பேச்சு வார்த்தையை நோக்கி உருவாக்கப்பட்ட இயங்கங்களின் கூட்டு. அதன்பின் உருவாக்கிய தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு. அதன் பின் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை. அதன்பின் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு  வரையிலுமான  எல்லாக் கூட்டுக்களும் ஒரு கட்டத்தின் பின் குலைந்து விட்டன. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலான தொகுக்கப்பட்ட தோல்வியென்பது கூட்டுக்களின் தோல்வியுந்தான்.

இப்பொழுது ஒரு கூட்டு உருவாகியிருக்கிறது. எனினும் இதுகூட பிரம்மாண்டமான ஒரு கூட்டு இல்லை.தமிழரசுக் கட்சி  தொடர்ந்தும் வடக்கு கிழக்கு தழுவிய பெருங் கட்சியாக, முதன்மைக் கட்சியாகக் காணப்படுகின்றது. எனவே இப்பொழுது ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் ரத்தச் சுற்றோட்டங்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி நிலையை பலப்படுத்துமா? மேற்கத்திய ஜனநாயகங்களில் உள்ளது போல இரு கட்சிப் போட்டி நிலைமை என்பது அங்கு ஆரோக்கியமானது. ஆனால் நீதிக்காக போராடும்,அரசற்ற மக்களாகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த 16 ஆண்டு காலத் தேக்கம், தோல்வி என்பவற்றின் பின்னணியில், அது ஆரோக்கியமானது அல்ல.பொது எதிரிக்கு எதிராகத் தேசம் திரண்டு நிற்காது.இரண்டாக நிற்கும். கட்சி மைய அரசியல் இப்படித்தான் இருக்கும்.கட்சிகளால் மட்டும் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது

https://www.nillanthan.com/7451/

இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள்

2 weeks 2 days ago

இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - இறுதி போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விசாரணையின் நிலை என்ன?

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மனிதப் புதைகுழி கண்டறியப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே 22 இடங்களில் மனிதப் புதைகுழிகள் அறியப்பட்டுள்ள நிலையில் அங்கு எந்த முன்னேற்றமும் இல்லையென்றும் விசாரணை ஏமாற்றம் அளிப்பதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதில் சர்வதேச ஆதரவும் நேர்மையான சட்ட நெறிமுறையும் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகளாகியுள்ள நிலையில், போரினால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுவோரின் மனித புதைக்குழிகள் இன்றும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் இதுவரை 20ற்கும் அதிகமான மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இறுதியாக நடத்தப்பட்ட அகழ்வு பணிகள் வரை ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஏற்கனவே ஐந்து எச்சங்களுடன், மனித மண்டையோட்டு எச்சங்களும், கால், கை, எலும்பு துண்டுகளும் எடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவனிடம் கையளிக்கப்பட்டுள்ளன.'' என சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன்

மேலும், 18ற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த பகுதியை மனித புதைக்குழியாக அறிவிக்குமாறு கோரி, சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கொன்றை வலிந்து காணாமல் போனோர் குடும்பங்கள் சார்பில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், இந்தப் பகுதி மனித புதைக்குழி காணப்படும் பகுதியாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டதாக சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

''யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏற்கனவே காணாமல் போனோர் குடும்பங்கள் சார்பில் நீதிமன்றத்தில் நாங்கள் விண்ணப்பத்தை செய்திருந்தோம், இதை மனிதப் புதைக்குழியாக அறிவிக்குமாறு. கௌரவ நீதவான் இது சம்பந்தமாக பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் ஆகியோரிடம் அறிக்கைகளை கோரியிருந்தார். போலீஸாரிடமும் சில விடயங்களை வினாவியிருந்தார். அதனடிப்படையில் அவர்களின் அறிக்கைகளை வைத்துக்கொண்டு, இது மனிதப் புதைக்குழி என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய பாதுகாப்பை போலீஸார் வழங்க வேண்டும் என்று சொல்லியும், இந்த விடயத்தில் அக்கறை கொண்டவர்களை சுழற்சி முறையிலும் பாதுகாப்புக்காக நியமிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். அதன் பின்னர் நிதி வசதிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் மீண்டும் அந்த அகழ்வு பணிகள் தொடர்ந்தும் நடத்தப்படும்.'' என அவர் கூறுகின்றார்.

சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,முல்லைத்தீவு புதைக்குழி

யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியிலுள்ள மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வு பணிகள் ஐந்து நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நான்காம் நாள் அகழ்வு பணிகள் நிறைவடையும் தருவாயில், ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டறியப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மே 15ஆம் தேதி அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின.

யாழ்ப்பாணம், செம்மணியில் அமைந்துள்ள சிந்துப்பாத்தி இந்து மயானத்தில், ஜூன் 2ஆம் தேதி, மண்டை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அகழ்வினை மேற்பார்வையிடும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

யாழ்ப்பாணம் - செம்மணியவில் உள்ள சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய மனித புதைகுழியில், நிலம் அளவீட்டின் பின்னர், மே 15ஆம் தேதி, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையின் கீழ் அகழ்வுப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

மே 16ம் தேதி அன்று அகழ்வு முடிந்ததும், குழியிலிருந்து பல மனித எலும்புகள் மீட்கப்பட்டன, மேலும் மழைக்காலம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அகழ்வு ஜூன் 2ம் தேதி மீண்டும் ஆரம்பமானது.

சிந்துப்பாத்தி மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 13ம் தேதி கட்டுமானப் பணிகளின் போது ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைத்தந்த நீதிபதி ஏ.ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20ம் தேதி அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும், மே 15 ஆம் தேதி அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க அவர் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய, மே 15 ஆம் தேதி, அகழ்வுக்கான முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, புதைகுழிக்குச் சென்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி ஜெனகநாதன் தற்பரன், காணாமல் போனவர்களுக்கும் மனித புதைகுழிக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அகழ்வுக்கு உதவும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அகழ்வு பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சிந்துப்பாத்தி மனித புதைக்குழிக்கு அருகில் போராட்டம்

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,இலங்கை மனிதப் புதைகுழி

யாழ்ப்பாணம் - அரியாலை - சிந்துப்பாத்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. சிந்துப்பாத்தி மனித புதைக்குழி அகழ்வானது, சர்வதேச கண்காணிப்பு மற்றும் நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் சங்கத்தினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தின் பின்னர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின் உறவினர் சங்கமான நாங்கள், தற்போது யாழ்ப்பாணம் - செம்மணி சிந்துப்பாத்தியில் நடந்து கொண்டிருக்கும் மனித புதைக்குழி அகழ்வு குறித்த எங்கள் தீவிரமான கவலையை வெளிப்படுத்துகிறோம் மற்றும் எங்கள் நிலைப்பாட்டை பகிர்ந்துகொள்கிறோம்.

''முன்னதாக, இலங்கையில் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்ப் பகுதிகளில் 22 க்கும் மேற்பட்ட மனித புதைக்குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக மன்னார் சதொச மனித புதைக்குழி, திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழி மற்றும் கொக்குத்தோடுவாய் மனித புதைக்குழிகள் அவற்றில் உள்ளடங்குகின்றன.

பல மனித புதைக்குழிகள் இன்னும் முழுமையாக அகழப்படவில்லை. ஏற்கனவே அகழப்பட்ட இடங்களிலும், உண்மை அல்லது நீதியாவது வழங்கப்படவில்லை. விசாரணைகள் ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளன.'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''இந்த தோல்விகள் காரணமாக, காணாமல் போனவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள், உள்ளூர் விசாரணைகளை நம்ப முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். எனவே, காணாமல் போனவர்களையும் மனித புதைக்குழி அகழ்வுகளையும் விசாரிக்க சர்வதேச ஆதரவும், நேர்மையான சட்ட நடைமுறைகளும் இருக்க வேண்டும் என்பதைக் கோருகிறோம்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் கோரிக்கைகள் என்ன?

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு,காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் போராட்டம் (கோப்புப்படம்)

''செம்மணி சிந்துப்பாத்தியில், இதுவரை 14க்கும் மேற்பட்ட மனித உடல்களின் எச்சங்கள் அகழப்பட்டுள்ளன, அதில் சில சிறிய குழந்தைகளின் உடல்களும் அடங்கும். இந்த தகவல்கள், பலர் கொடூரமாக கொல்லப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.'' என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

''சர்வதேச சட்டத்தின்படி, பலரது உடல் எச்சங்கள் அடங்கிய மற்றும் சட்டவிரோதக் கொலைகளுடன் தொடர்புடைய எந்த ஒரு பிணைத்தளமும் மனித புதைக்குழியாக கருதப்பட வேண்டும். எனவே, இந்த இடத்தை அதிகாரபூர்வமாக மனித புதைக்குழியாக அறிவித்து, அகழ்வுப் பணி செம்மணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.'' என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை தவிர மேலும் சில கோரிக்கைகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் முன்வைத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

1. செம்மணி சிந்துப்பாத்தியில் நடைபெறும் அகழ்வை அதிகாரப்பூர்வமாக மனித புதைக்குழி விசாரணையாக அறிவிக்க வேண்டும்.

2. அகழ்வு சர்வதேச நிபுணர்கள் மேற்பார்வையின் கீழ், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. எல்லா ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அகழ்வு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும்.

4. பத்திரிகையாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, அகழ்வைப் பார்வையிடவும், தகவல் வெளியிடவும் முழு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

5. விரைவில் இலங்கைக்கு வரவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணியை நேரில் பார்வையிட்டு, உண்மை மற்றும் நீதியை உறுதிசெய்வதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து வெளிவரும் மனிதப் புதைக்குழிகள்

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

பட மூலாதாரம்,JDS/FOD/CHRD/ITJP

படக்குறிப்பு, இலங்கையில் சுமார் 20க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

இலங்கையில் சுமார் 20க்கு மேற்பட்ட மனித புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மேலும் மூன்று மனிதப் புதைக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி மற்றும் யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி ஆகியன கடந்த ஒரு வருட காலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியாக பதிவாகியுள்ளன.

  1. யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டு அரங்கம்

  2. யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைக்குழி

  3. யாழ்ப்பாணம் - மிருசுவில் மனிதப் புதைக்குழி

  4. கிளிநொச்சி - மனிதப் புதைக்குழி

  5. கிளிநொச்சி - கணேசபுரம் மனிதப் புதைக்குழி

  6. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மனிதப் புதைக்குழி

  7. முல்லைத்தீவு - 2 முல்லைத்தீவு மனிதப் புதைக்குழிகள்

  8. மன்னார் - மன்னார் மனிதப் புதைக்குழி

  9. மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி

  10. குருநாகல் - நிகவரபிட்டிய மனிதப் புதைக்குழி

  11. கம்பஹா - மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை

  12. கம்பஹா - எஸ்செல்ல மனிதப் புதைக்குழி

  13. கம்பஹா - வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைக்குழி

  14. கொழும்பு - கோகந்தர மனிதப் புதைக்குழி

  15. கொழும்பு - பொல்கொட எரி மனிதப் புதைக்குழி

  16. மாத்தறை - அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைக்குழி

  17. இறக்குவானை - சூரியகந்தை மனிதப் புதைக்குழி

  18. மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மனிதப் புதைக்குழி

  19. மாத்தளை - மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைக்குழி

  20. கண்டி - அங்கும்புர மனிதப் புதைக்குழி

  21. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி

  22. கொழும்பு துறைமுக மனிதப் புதைக்குழி

  23. அரியாலை - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி

மன்னார் மனிதப் புதைக்குழியும் அமெரிக்காவில் விசாரணையும்

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம்

படக்குறிப்பு, பீட்டாவின் அறிக்கை

மன்னாரில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் மாதிரிகள் ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் பல வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

எனினும், அந்த மனித எச்சங்கள் ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்குச் சொந்தமானவை என பீட்டாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனித எச்சங்கள் கிறிஸ்த்துக்கு பின் 1477 - 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த விசாரணைகள் தொடர்பிலும் தமிழர்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். குறித்த மனித எச்சங்கள் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மாற்றப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் தமிழர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கடந்த கால அரசாங்கங்கள் நிராகரித்திருந்தன. இவ்வாறான நிலையிலேயே, தொடர்ச்சியாக அவ்வப்போது இவ்வாறான மனிதப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

''மன்னார் சதொச, திருகேதீஸ்வரம், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புதைக்குழி விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுமார் 57 புதைக்குழிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், 23, 24 புதைக்குழிகள் அகழப்பட்டுள்ளன.'' எனவும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்தின் பதில் என்ன?

இலங்கை, போர், காணாமல் ஆக்கப்பட்டோர், மனிதப் புதைகுழிகள், விசாரணை, யாழ்ப்பாணம், இலங்கை அரசு

பட மூலாதாரம்,HARSHANA NANAYAKARA

யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் குறித்து தாம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதித்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இந்த மனிதப் புதைக்குழி தொடர்பில் தாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpqe3wqp7gno

Checked
Tue, 06/24/2025 - 10:06
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed