அரசியல் அலசல்

பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் அசாத் மௌலான வெளியிட்ட தகவல்கள்

2 months 1 week ago

Published By: VISHNU 17 APR, 2025 | 04:01 AM

image

டி.பி.எஸ்.ஜெயராஜ்

உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாணத்தில் புதியதொரு தேர்தல் கூட்டணி தோன்றியது. பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கழகமும் சேர்ந்து கிழக்கு தமிழர் கட்டமைப்பை அமைத்தன. ஒரு சில வாரங்களுக்குள் கேணல் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இணைந்து கொண்டதை அடுத்து புதிய கூட்டணி பலமடைந்தது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு அதன் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களை உற்சாகத்துடன் கிழக்கில் தொடங்கியது. யாழ்ப்பாண தலைமைத்துவத்துடனான தமிழ்க்கட்சிகளின்  போதாமை மற்றும் கிழக்கில் முஸ்லிம் விஸ்தரிப்புவாதம் என்று சொல்லப்படுவதன் விளைவான பிரச்சினைகள் மீது கவனத்தை குவித்து கிழக்கு தமிழர்களின் வாக்குகளை கவரும் நம்பிக்கையை கூட்டமைப்பு கொண்டிருந்தது.

கிழக்கு தமிழர்  கூட்டமைப்பின் பிரசாரங்கள் உத்வேகம் அடைந்துகொண்டிருந்த நிலையில், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்ற "மும்மூர்திகளுக்கும் " அனர்த்தம் ஏற்பட்டது. இலஞ்ச குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன்  விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  அடுத்து விடுதலை புலிகளுக்கும் இலங்கை ஆயுதப்படைகளுக்கும் இடையிலான போரின்போது மனித உரிமைமீறல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு முரளிதரனுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்தது.

இறுதியாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பரில் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் தொடர்பிருந்ததாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் 

முதலில் பிள்ளையான் விசாரணைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டார்.  அதற்கு பிறகு விசாரணைகளை தொடருவதற்காக அவரது தடுப்புக்காவல் 90 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. இரு தடுப்புக்காவல் உத்தரவுகளும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிறப்பிக்கப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தற்போது பெருமளவு ஆர்ப்பாட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். 2024 ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதியளித்ததன் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு பதிலாக அதே சடடத்தின் கீழ் சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைக்கி்ன்றமைக்காக ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. 

ஆனால், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் பிரதான எதிர்க்கட்சிகளும் செய்கின்ற ஆர்ப்பாட்டங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எட்டியும் கூட பார்க்கவில்லை. முன்னாள் முதவமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் இருந்த போதிலும், பிள்ளையானுக்கு ஒரு நேர்மறையான படிமம் ( Image) கிடையாது.   பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக உண்மையில் அவருக்கு கெட்டபெயரே இருக்கிறது.ஆட்கள் கடத்தல் தொடங்கி கொலைகள் வரை அவருக்கு எதிரானவை என்று கூறப்படுகின்ற குற்றச்செயல்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையில் சம்பந்தபட்டதாக கூறப்பட்டு சில வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், பிள்ளையான் குறாறவாளியாகக் காணப்படவில்லை. பிள்ளையானுக்கு ஒரு எதிர்மறையான படிமம் இருக்கின்ற போதிலும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அந்த கொடிய சட்டத்தை ஒரு கோட்பாட்டு அடிப்படையில் எதிர்ப்பதாக இருந்தால் பிள்ளையானின் தடுப்புக்காவலையும் எதிர்த்திருக்க வேண்டும். பதிலாக, அவர்கள் பக்கச்சார்பாகவும் தெரிந்தெடுத்து சிலரின் தடுப்புக்காவல்களை மாத்திரம் எதிர்க்கின்றார்கள் போன்று தெரிகிறது.

இத்தகைய பின்புலத்தில் இந்த கட்டுரை பிள்யைானின் கைதையும் தடுப்புக் காவலையும் பற்றி கவனம் செலுத்துகிறது.

சிவநேசதுரை சந்திரகாந்தன்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக தெரிவு செய்யப்படடதன் மூலம் வரலாறு படைத்தார். 2012 ஆம் ஆண்டுவரை அவர் முதலமைச்சராக பதவி வகித்தார். பிள்ளையான் 2020 பொதுத்தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து  பாராளுமன்றத்துக்கு தெரிவானார். அந்த தேர்தலில் மாவட்டத்தில் மிகவும் கூடுதல் விருப்பு வாக்குகள் அவருக்கே கிடைத்தன.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழும் அதே பதவியில் தொடர்ந்து நீடித்தார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆதரவாளர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தனர். ரணில்  மூன்றாவதாக வந்தார். 2024 பாராளுமன்ற தேர்தலில் பிள்ளையானுக்கும் அவரது கட்சிக்கும் மட்டக்களப்பு மாவடடத்தில் மிகவும் குறைவான வாக்குகளே கிடைத்தன. அந்த மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி இலங்கை தமிழரசு கட்சி பெருவெற்றி பெற்றது. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்திக்கும் மடக்களப்பில் ஒரு பாராளுமன்ற ஆசனம் கிடைத்தது. பிள்ளையான் உள்ளூராட்சி தேர்தல்களின் மூலமாக அரசியல் மீட்சியைப் பெறுவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நோக்கத்தைச் சாதிக்க  கிழக்கு தமிழர்  கூட்டமைப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது பிள்ளையானின் திட்டங்கள் எல்லாமே சிதறிப்போயின.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏப்ரில் 8 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தை (சி.ஐ.டி.) சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டார். அவர் மட்டக்களப்பில் தனது கட்சி அலுவலகத்தில் இருந்த வேளையிலேயே கைது இடம்பெற்றது. முதலில் பிள்ளையான் விசாரணைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

பேராசிரியர் இரவீந்திரநாத் 

ஆரம்பத்தில் வெளியான ஊடகச் செய்திகளின் பிரகாரம் பிள்ளையான் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் வைத்து  காணாமல்போன சம்பவம் தொடராபாகவே பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். முன்னாள் துணைவேந்தர் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் பிள்ளையானுக்கு இருந்ததாக கூறப்படும் ஈடுபாடு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற இட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் பேகச்செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை பிள்ளையானிடமிருந்து பெறமுடியும் என்று தாங்கள் நம்புவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் கூறின.

நிலைவரம் விரைவாகவே மாறியது.பிள்ளையான் 90 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். ஊடகச் செய்திகளின் பிரகாரம் பிள்ளையான் இப்போது 2019 ஏப்ரில் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். ஜ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையது என்று கூறப்பட்ட சஹரான் ஹாசிம் தலைமையிலான முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்றினால் ஈஸ்டர் ஞாயிறன்று நான்கு சுற்றுலா ஹோட்டல்களிலும் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தொடர்ச்சியான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.260 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

கார்டினல் மல்கம் ரஞ்சித்

தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகள் தொடர்பிலான முழு விபரங்களும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் ஆறாவது வருடாந்த நினைவுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கொழும்பு கத்தோலிக்க அதிமேற்றிராணியார் அதிவண. கார்டினல் மல்கம் ரஞ்சித்துக்கு உறுதியளித்திருக்கிறார்.

ஈஸ்டர் அனர்தத்துக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவது பற்றி கார்டினல் மல்கம் ரஞ்சித்துக்கு ஜனாதிபதி திசாநாயக்க அளித்த வாக்குறுதி,  விசாரணைகளின் கவனம் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களுக்கு திரும்ப வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது போன்று தெரிகிறது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவது ஏப்ரில் 21 காலக்கெடுவை சந்திப்பதற்காக துரிதப்டுத்தப்பட்ட முயற்சியின் ஒரு அங்கம் என்று கருதப்படுகிறது.

உதய கம்மன்பில 

ஒரு வழமைக்கு மாறான திருப்பமாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில் பிள்ளையானின் சட்டத்தரணியாக வந்திருக்கிறார். தடுப்புக்காவலில் உள்ள பிள்ளையானை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் முன்னிலையில்  30 நிமிடங்கள் சந்தித்துப் பேசுவதற்கு கம்மன்பில அனுமதிக்கப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகவே தன்னைக் கைதுசெய்ததாக  தனக்கு பிள்ளையான் கம்மன்பிலவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவரிடம் கூறப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் பெயர்களை வெளியிட்டு அரச சாட்சியாக மாறும்படி பிள்ளையான் இப்போது கேட்கப்படுகின்றார்.

சனல் 4 தொலைக்காட்சி 

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் பிள்ளையானுக்கு இருந்ததாக கூறப்படும் தொடர்பு 2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொலைக்காட்சியிலேயே முதன்முதலாக வெளியிடப்பட்டது.  2023 செப்டெம்பர் 5 செவ்வாய்க்கிழமை பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அதன் " டிஸ்பாச்சஸ் " என்ற நிகழ்ச்சியில் " இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்" என்ற  விவரண தொகுப்பை ஔிபரப்பியது. அதில் பிள்ளையானின் முன்னாள் செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளருமான அசாத் மௌலானா என்ற முஹம்மத் மிஹிலார் முஹம்மத் ஹன்சீர் தனது முன்னாள் தலைவரைப் பற்றிய அதிர்ச்சிதரும் தகவல்களை வெளியிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைச் சேர்ந்த அசாத் மௌலானா ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்று சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார். பிள்ளையானுக்கும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான மேஜர் --  ஜெனரல் சுரேஷ் சாலேக்கும்  ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகள் இருந்ததாகவும் இருவருக்கும் குண்டுத்தாக்குதல் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அசாத் மௌலானா கூறினார். ஆனால் பிள்ளையானும் சாலேயும் குற்றச்சாட்டுக்களை உடனடியாகவே மறுத்தனர். அப்படியானால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையானுக்கும் சுரேஷ் சாலேக்கும் எதிரான அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டுக்கள் எவை? 

சனல் 4 தொலைக்காட்சியினால் " டிஸ்பாச்சஸ் " நிகழ்ச்சியில் ஔிபரப்பு செய்யப்பட்ட " இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் " விவரணத் தொகுப்பு ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால்  2023 செப்டெம்பர் 21  ஆம் திகதி  வேறு ஒரு அரங்கில்  திரையிடப்பட்டது. அப்போது விவரணத் தொகுப்பின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தொம் வோக்கரும் நிறைவேற்று தயாரிப்பாளரான பென் டி பியரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். பிறகு அங்கு ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலந்துரையாடலுக்கு முன்னதாக அசாத் மௌலானாவினால் வெளியிடப்பட்ட விரிவான அறிக்கை ஒன்றின் பிரதிகள் பிரசன்னமாகியிருந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. நேரடியாகக் கலந்து கொள்ளாத அசாத் மௌலானா பிறகு வீடியோ இணைப்பின் ஊடாக கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அசாத் மௌலானாவின் அறிக்கை அவரால் சனல் 4 தொலைக்காட்சி விவரணத் தொகுப்பில் கூறப்பட்ட கருத்துக்களின் தெளிவுபடுத்தலும் விரிவுபடுத்தலுமாகவே அமைந்தது. விவரணத் தொகுப்பில் வெளியிட்ட தகவல்களை  கூடுதல் விபரங்களுடன் அவர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதன் தற்போதைய  பொருத்தப்படும் முக்கியத்துவமும் கருதி அசாத் மௌலானாவின் அறிக்கையை முழுமையாக கீழே  தருகிறோம் ; 

அசாத் மௌலானாவின் அறிக்கை

"பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியினால் செப்டெம்பர் 5 ஆம் திகதி ஔிபரப்பான " இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் "  விவரணத் தொகுப்பு இலங்கையில் கணிசமானளவுக்கு ஆர்வத்தை தோற்றுவித்திருக்கிறது. பல்வேறு கட்டுரைகளும் ஆசிரிய தலையங்கங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. விவரணத் தொகுப்பு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்ற கோராக்கைக்கு ஓரளவு ஆதரவைத் திரட்டியிருக்கின்ற அதேவேளை பெருமளவு வதத்திகளும் போலிச் செய்திகளும் வெளியிடப்பட்டன. எனது மனைவி,  பிள்ளைகளும் கூட அவதூறு செய்யப்பட்டார்கள். அவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதனால் பின்வரும் அறிக்கையை வெளியிடுவதற்கு நான் விரும்புகிறேன்.

" கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் தலைவரான பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்காக நான் 2006  ஆம் ஆண்டு தொடக்கம்  2022 பெப்ரவரி வரை பணியாற்றினேன். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி முன்னதாக ஒரு தீவிரவாத இயக்கமாக செயற்பட்டது. நான் அந்த கட்சியின் பிரசாரச் செயலாளராகவும் பேச்சாளராகவும் இருந்தேன். நான் ஒரு போராளி அல்ல. உண்மையிலேயே நான் ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டவன் அல்ல.

" எனது பதவி காரணமாக ஈஸ்டர் ஞாயிறு  தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகவும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பாகவும் முக்கியமானதும் இரகசியமானதுமான பெருமளவு தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தது.

" 2019 ஏப்ரில் 19 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் 45 சிறுவர்களும்  40 வெளிநாட்டவர்களும்  உட்பட 269 பேர் கொல்லப்பட்டதுடன் 500  க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். தற்கொலைக் குண்டுதாரிகளின் அடையாளத்தை ஊடகங்கள் வெளியிட்ட பின்னர் மாத்திரமே அந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகள் மற்றும் அவற்றை நடத்தியவர்கள் பற்றியும் தாக்குதல்களின் நோக்கங்கள் பற்றியும் என்னிடம் உறுதியான சான்றுகள் இருப்பதை நான் புரிந்துகொண்டேன். அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு தயாரிப்பு வேலைகளைச் செய்ததிலோ அல்லது தாக்குதல்களை  நடத்தியதிலோ எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் கிடையாது.

" 2015 ஆண்டில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்வியைத் தொடர்ந்து பிள்ளையான் கைது செய்யப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டார். பரராஜசிங்கம் 2005 நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார் .

" பிள்ளையானின் ஒரு செயலாளர் என்ற வகையில்,  அவரை அவரின் சட்டத்தரணிகள் சகிதம்  சந்தித்து சட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு என்னை நீதிமன்றம் அனுமதித்தது. 2017 செப்டெம்பரில் சிறைச்சாலைக்கான ஒரு விஜயத்தின்போது தன்னுடன் ஒரே கூண்டில் காத்தான்குடியைச் சேர்ந்த சில  முஸ்லிம் கைதிகள் இருப்பதாக பிள்ளையான் என்னிடம் கூறினார்.  ஒரு தந்தை, அவரின் மகன் மற்றும் ஆறு பேர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் காத்தான்குடியில் இன்னொரு முஸ்லிம் குழு மீது தாக்குதல் நடத்தியதற்காகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் என்று அழைக்கப்படும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

" பிள்ளையானின் வேண்டுகோளின்பேரில் நான் சைனி மௌலவியைச் சந்தித்தேன். பிறகு பிள்ளையான் என்னிடம் இந்த கைதிகளை பிணையில் வெளியில் எடுப்பதற்காக அவர்களின் உறவினர்களுக்கு நிதியை ஏற்பாடு செய்வதற்கு இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டார். அவர்கள் 2017 அக்டாபர்  24 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.  2018 ஜனவரி பிற்பகுதியில் பிள்ளையான் சைனி மௌலவியின் குழுவுக்கும் அப்போது ஒரு பிரிகேடியராக இருந்த சுரேஷ் சாலேக்கும் இரகசிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் கேட்டார். சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் தொடர்பில் சுரேஷ் சாலே எனக்கு அறிவிப்பார் என்றும் பிள்ளையான் கூறினார்.

" ஒரு சில நாட்கள் கழித்து சுரேஷ் சாலே என்னுடன் தொடர்பு கொண்டு புத்தளம் வனாத்தவில்லு பகுதிக்கு வருமாறு சைனி மௌலவிக்கு வேண்டுகோள் விடுக்குமாறு என்னைக் கேட்டார். அடுத்த நாள் கொழுப்பில் இருந்து புத்தளத்துக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவருடன் நான் பயணம் செய்தேன். சைனி மௌலவியின் குழு குருநாகலையில் இருந்து அங்கு வந்து சேர்ந்தது. இந்த சந்திப்புக்கு எனது சொந்த வாகனத்தையோ அல்லது சாரதியையோ பயன்படுத்த வேண்டாம் என்று என்னிடம் கூறிய பிள்ளையான் போக்குவரத்துக்கு இராணுவப் பலனாய்வுப் பிரிவு ஒழுங்கு செய்யும் என்று கூறினார்.

" புத்தளத்துக்கு வெளியே அமைந்திருக்கும் 50 -- 60 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பெரியதொரு தென்னந்தோட்டத்தில் 2018 பெப்ரவரி முற்பகுதியில் அந்த சந்திப்பு இடம்பெற்றது.சுரேஷ் சாலே சாம்பல் நிற டொயோட்டா கார் ஒன்றில் சாரதியுடன் வந்திருந்தார். அரை மணிநேரம் கழித்து சைனி மௌலவி ஆறு பேர் கொண்ட ஒரு குழுவுடன் வெள்ளை வான் ஒன்றில் வந்திருந்தார். சைனி மௌலவி தனது மூத்த சகோதரர் மௌலவி சஹரானை தங்களது குழுவின் தலைவர் என்று  அறிமுகம் செய்தார். சந்திப்பு இரு மணித்தியாலங்களுக்கும  அதிகமான நேரம் நீடித்தது. நான் அதில் கலந்துகொள்ளாமல் வெளியில் காத்திருந்தேன்.

அந்த சந்திப்புக்கு பிறகு நான் மட்டக்களப்புக்கு பயணம் செயதேன். சந்திப்பு பற்றி மறுநாள் பிள்ளையானுக்கு  விபரங்களை  தெரிவித்தேன்.  சுரேஷ் சாலேக்கு ஒரு பெரிய திட்டம் இருக்கிறது என்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடன் இருப்பதைப் போன்ற உடன்பாடொன்று  சஹரான் குழுவுடனும் அவருக்கு இருக்கிறது என்றும் பிள்ளையான் கூறினார். இந்த சந்திப்பு பற்றிய தகவல்களை இரகசியமாக வைத்திருக்குமாறும் ஏதாவது உதவியை அவர்கள் கேட்டால் செய்துகொடுக்குமாறும் அவர் என்னிடம் கூறினார். 2017 செப்டெம்பரில் சிறையில் சைனி மௌலவியை சந்தித்ததை தவிர பிறகு நான் சஹரானையும் அவரின் குழுவினரையும் சுரேஷ் சாலேயுடனான 2018  பெப்ரவரி சந்திப்பின்போது ஒரு தடவை மாத்திரம் சந்தித்தேன். அதைத் தவிர அவர்களுடன் எனக்கு எந்த தொடர்புமோ அல்லது உறவுமுறையோ இருந்ததில்லை. அவர்களின் பயங்கரவாத நோக்கங்கள் குறித்தோ அல்லது திட்டம் குறித்தோ பயங்கரவாத தாககுதல் நடைபெறும் வரை எனக்கு எதுவும் தெரியாது.

" 2019 ஏப்ரில் 19 ஈஸ்டர் ஞாயிறன்று காலை 7 மணியளவில் சுரேஷ் சாலே என்னுடன் தொடர்புகொண்டு கொழும்பில் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு உடனடியாகச் சென்று அங்கு காத்துக்கொண்டு நிற்கும் ஒரு நபரை ஏற்றிக் கொண்டு வருமாறும் அவரது தொலைபேசி இலக்கத்தைக் குறித்துக் கொள்ளுமாறும்  கூறினார். அந்த நேரத்தில் நான் கொழும்பில் அல்ல மட்டக்களப்பில் நிற்கிறேன் என்று அவரிடம் கூறினேன்.

" இந்த தொலைபேசி சம்பாஷணைக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஏககாலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும  பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றன. தாக்குதல்களை அடு்த்து உடனடியாக பிள்ளையான் ஒரு சிறைக்காவலர் ஊடாக செய்தி அனுப்பி தன்னை அவசரமாகச் சந்திக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். அவரை காலை 11  மணியளவில் நான் சந்தித்தபோது ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி சுரேஷ் சாலேயே என்றும் இதே போன்ற தாக்குதல்கள் நடக்கும் என்று தான் நினைத்திருந்ததாகவும் என்னிடம் கூறினார்.

" சைனி மௌலவியுடன் தொலைபேசியில்  தொடர்புகொண்டு நிலைவரத்தை அறியுமாறு பிள்ளையான் என்னைக் கேடடார். நான் முயற்சித்தேன். பதில் இல்லை. பிள்ளையானின் வேண்டுகோளின் பேரில் நான் ஏற்பாடு செய்த சந்திப்பில் பங்கேற்றவர்களே  உண்மையில் ஈஸ்டர் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் என்பதை அன்றைய தினம் மாலை ஊடகச் செய்திகள் மூலமாக மாத்திரமே நான் அறிந்து கொண்டேன். 

நான் போய்ச் சந்திக்க வேண்டும் என்று சுரேஷ் சாலே விரும்பிய அந்த பேர்வழி ஜமீல் என்பவரே என்பதையும் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை  நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அவர் பிறகு இறுதி நேரத்தில் திட்டத்தை மாற்றி அந்த ஹோட்டலை  விட்டு வெளியேறி தெஹிவளையில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் குண்டை வெடிக்க வைத்தவர் என்பதையும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகள் ஊடாக நான் அறிந்து கொண்டேன்.

" பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினரும்   கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்தனர். கோட்டாபய ஜனாதிபதியாக வந்த பிறகு சுரேஷ் சாலே இலங்கை திரும்பினார். அவருக்கு மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டு அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. அந்த பதவியில் அவர் தொடருகிறார்.

" ஆனால், உறுதியளித்ததன் பிரகாரம் பிள்ளையானை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவில்லை.  பிள்ளையானுக்கு எதிராக தீர்க்கமான சான்றுகள் இருந்ததால் அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கு சட்டமா அதிபர் மறுப்புத் தெரிவித்ததே அதற்கு காரணமாகும். 2020 ஆகஸ்ட் 5 பாராளுமன்ற தேர்தலின்போது சிறையிலேயே தொடர்ந்து இருந்த பிள்ளையான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

தேர்தலுக்கு பிறகு பிள்ளையான் என்னனயும் அவரது சகோதரரரையும் சுரேஷ் சாலேயைச் சென்று சந்திக்குமாறும் கோட்டாபய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு அதிகாரத்துக்கு வந்தார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று அவரிடம் கூறுமாறும் கேட்டுக் கொண்டார். தன்னை விடுதலை செய்யவில்லையானால் அதற்காக பாரியதொரு  விலையை செலுத்த வேண்டியிருக்கும் என்று சுரேஷ் சாலேயை எசாசரிக்குமாறும் எம்மிடம் அவர் கூறினார். 

" சில நாட்கள் கழித்து பிள்ளையானுக்கு எதிரான வழக்கை  சட்டமா அதிபர் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வைத்து வாபஸ் பெற்றார்.  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதர்களை ஏற்பாடு செய்தவர்களைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை தவிரவும், 2005 -- 2015  காலப்பகுதியில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றிய விரிவான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன.

" இந்த கொலைகளில் பெருமளவானவை இலங்கை இராணுவத்தின் கீழ் இயங்கிய திரிப்போலி பிளட்டூன் என்ற இரகசிய  கொலைப் படைப் பிரிவினாலேயே  செய்யப்பட்டன. அந்த பிரிவு தொடக்கத்தில் மேஜர் பிரபாத் புலத்வத்த தலைமையிலும் பிறகு கேணல் ஷம்மி கருணாரத்ன தலைமையிலும் இயங்கியது. அது  அப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் பின்னர் இராணுவ அதிகாரிகளின் பிரதானியாகவும்  இருந்த மேஜர் ஜெனரல் அமால் கருணாசேனவின் நேரடி கட்டளையின் கீழ் இயங்கியது. இந்த பிளட்டூன் நேரடியாக கோட்டாபயவுக்கே பதில் கூறும் கடப்பாட்டைக் கொண்டிருந்தது. அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவரிடமிருந்து மாத்திரமே உத்தரவுகளை அது பெற்றது.

"  இந்த பிளட்டூனும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் போர்காலத்திலும் போரின் முடிவுக்கு பின்னரும் பத்திரிகையாளர்கள் கொலைகள் மற்றும் காணாமல்போதல் உட்பட பெருமளவு அரசியல் கொலைகளுக்கு பொறுப்பாக இருந்தது.  குறிப்பாக அவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், பத்திரிகையாளர்களான லசந்த விக்கிரமதுங்க, தராக்கி சிவராம், ஐ. நடேசன் ஆகியோரின் கொலைகளுக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் காணாமல் போனதற்கும் பொறுப்பாக இருந்தன.

" இராணுவப் புலனாய்வு பிரிவினரும்  தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் கூட்டாகச் செய்த பல்வேறு மனித உரிமைமீறல்கள் பற்றிய தகவல்களும் என்னிடம் இருக்கின்றன. அவர்கள் செய்து கொண்டிருந்தவை  பற்றி எனக்கு இணக்கம் இல்லை என்ற போதிலும்,  எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயத்தின் காரணமாக அவர்களிடம் இருந்து என்னை விலகியிருக்க என்னால் முடியாமல் இருந்தது. இலங்கை அதிகாரிகள் என்னை கடத்தவோ அல்லது சிறையிலடைக்கவோ அல்லது ஏன் கொலைசெய்யவோ கூடும் என்ற பயம் இன்று வரை எனக்கு இருக்கிறது.

" சனல் 4  தொலைக்காட்சி விவரணத் தொகுப்பை ஔிபரப்பிய பிறகு உடனடியாக பொலிசார் எனது தாயாரையும் சகோதரியையும் சென்று பார்த்து விசாரணை செய்தார்கள். அது எனது பயத்தை மேலும் அதிகரித்தது. எனது தொலைபேசி இலக்கத்தையும் விலாசத்தையும் கண்டறியும் ஒரு முயற்சியாக எனது சகோதரியின் மகனை இனந்தெரியாத இரு நபர்கள் விசாரித்தார்கள்.

" ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை விசாரணை செய்யும் பெறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அந்த அனர்த்தத்தின் சூத்திரதார்கள் மற்றும் அதை செய்தவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தத் தவறிவிட்டன.

" குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் 2022 பெப்ரவரி 18  ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவில் குறிப்பிடப்பட்டதைப் போன்று, அவர் தலைமையிலான விசாரணைக்குழு  ( இராணுவத்தினருக்கும் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ) முக்கியமான  சான்றுகளை கண்டறிந்தது. ஆனால், அந்த குழு விசாரணைகளை தொடருவதை இராணுவம் தடுத்தது.

" நான் இந்த விபரங்களை எல்லாம் தெரிந்திருக்கின்ற  காரணத்தினால், இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுச் சேவையினால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன்.  எனது உயிரைப் பாதுகாப்பதற்காக அரசியல் தஞ்சம் கோருவதற்காக நான் ஐரோப்பாவுக்கு தப்பியோடி வந்தேன்.

சுயாதீனமான சர்வதேச விசாரணை 

"  இலங்கையில் இடம்பெற்ற  பல பயங்கரவாத தாக்குதல்கள், அரசியல் கொலைகள், ஆட்கடத்தல்கள்  திட்டமிடப்பட்டதை நேரில் கண்ட  ஒரு சாட்சி என்ற வகையில் இந்த குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளிக்க நான் முன்வருகிறேன். ஆனால், உண்மையை வெளிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு  அக்கறை இருக்கிறது என்று நான் நம்பவில்லை  . அதனால் நான் சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றின் முன்னிலையில் மாத்திரம் சாட்சியமளிக்க முன்வருவேன்." 

https://www.virakesari.lk/article/212173

ட்றம்பரின் ஊழித்தாண்டவம்

2 months 1 week ago
ட்றம்பரின் ஊழித்தாண்டவம்

Trumps-America.jpeg

சிவதாசன்

அது இயக்கங்கள் வானம் தொட்ட காலம். கிராமங்களின் ‘டவுண்ரவுண்கள்’ எனப்படும் கடைச் சந்திகளில் இயக்கக்காரர் ஆள்பிடிகளில் ஈடுபட்டிருந்த அக்காலத்தின் ஒருநாளில் இச்சம்பவம் நடந்தது. அவ்வூரிலுள்ள நோஞ்சான் ஒருவனுக்கு இயக்கத்தில் சேர ஆசை. ஒரு முக்கிய இயக்கத்தின் நாயகர் ஒருவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். நோஞ்சானின் புஜபல பராக்கிரமத்தை நன்றாக அறிந்த அந்த நாயகர் இதர தோழர்களிடம் இதைக்கூறி அந்நோஞ்சானை விடுப்புப் பார்வையாளர் முன்னால் எள்ளி நகையாடிவிட்டார். மனமுடைந்துபோன நோஞ்சான் “இப்ப உங்களுக்குக் காட்டிறன் நான் ஆரெண்டு” என்றபடி அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். அதற்கும் அந்த நாயகர் கூட்டம் அவரை எள்ளிநகையாடி உரத்துச் சிரித்து வழியனுப்பி வைத்தது. சற்று நேரத்தில் அந்த நோஞ்சான் வீட்டிலிருந்து ஒரு கோடரியுடன் வந்து அச்சந்தியில் விடுப்புப் பார்த்துக்கொண்டு நின்ற ஒரு மெலிந்த முதியவரைத் தள்ளி நிலத்தில் வீழ்த்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கைகளையும் கால்களையும் கோடரியால் துண்டிது விட்டு “இப்ப என்னை இயக்கத்துக்கு எடுப்பீங்களா?” எனக் கேட்டது.

நம்ம அமெரிக்கட் ட்றம்பரைப் பார்க்கும்போது இந்த நோஞ்சானின் ஞாபகம் வந்து போகிறது. உளவியல் ரீதியாக இருவருக்கும் ஒரே நிலை இருக்கலாமோ? இருவருமே தமது பலவீனங்களையும் இயலாமைகளையும் மறைக்க இப்படியான அநாகரீக தந்திரங்களைப் பிரயோகிக்கின்றனரோ?

ட்றம்பர் கல்வியில் போதாமை கொண்டவர். எவ்வளவு தான் பணமிருந்தாலும் வால் ஸ்ட்றீட் நாயகர்களால் எள்ளி நகையாடப்படுபவர். மோசடிகளாலும், மிரட்டல்களாலும் அவர் சேர்த்த கோடிகளே அவரைச் சுற்றிய அரக்கு மாளிகையைஅ எழுப்ப உதவி செய்தன. அழகிய மனைவி சகிதம் அவர் அங்கு தன்னை முடிசூட்டிக்கொண்ட பின்னர் தான் தன்னை ஒதுக்கிய நாயகர்களை நோக்கி கோடரியுடன் வந்தார். இனிமேல் அவர்தான் ‘இயக்கம்’ என்றளவுக்கு நிலைமையை மாற்றிக்கொண்டார். இந்த ‘இயக்கத்தின்’ மூலம் அவர் அமெரிக்காவுக்கு ‘விடுதலை’ வாங்கித் தருவேன் எனச் சூளுரைக்கிறார்.

ட்றம்பரின் முதலாவது ஆட்சியின் போது அவருக்கு அனுபவம் போதாது. அவரது வழிப்பறிச் சகாக்களே அவரது ஆலோசகர்களாக இருந்தனர். வால்ஸ்ட்றீட்டின் வெள்ளைச் சேட்டு வீரவான்கள் ட்றம்பரை மதிக்கவில்லை. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது தனது மக்கள் ‘சிவப்புக் கழுத்துக்காரர்கள்’ என அழைக்கப்படும் வெள்ளைக் கூலிக்காரர். அவரது இரண்டாவது வருகையைச் சாத்தியமாக்கியது இவர்கள் தான். ட்றம்பரை உசுப்பேத்திவிட்டுத் தமது காரியங்களைச் சாதிக்கலாமென்று நினைத்த மஸ்க் போன்றவர்களும், ட்றம்பர் போடும் எலும்புத் துண்டுகளுக்காக ஓடித்திரியும் மார்க்கோ ரூபியோ போன்றவர்களும் அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார்கள்.

ட்றம்பர் ஒரு விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறார். இப்போது அவராடும் ஊழித்தாண்டவத்தின் அசைவுகளை அவர் தேர்தலுக்கு முன்னரே கூறியிருந்தவர். “அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளுக்கு நான் ஒரு பாடம் படிப்பிப்பேன்; திருட்டுத்தனமாக நாட்டில் புகுந்தவர்களை நாடு கடத்துவேன்; போர்களை நிறுத்துவேன்; அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களை மீண்டும் இங்கு கொண்டுவருவேன்” என அப்போது உரக்கக் கூவியிருந்தார். அவரது வரவை எதிர்பார்க்காத ஜனநாயகக் கட்சியினதும், குடியரசுக் கட்சியினதும் வெள்ளைச் சேட்டு வீரவான்கள் அவரைத் தொடர்ந்து ஏளனம் செய்து அவரது ஓர்மத்தை உச்சிக்குக் கொண்டுசென்றுவிட்டனர். வந்ததும் வராததுமாக அவர் தன் கோடரியை விசுக்க ஆரம்பித்துவிட்டார். அவர் சொல்லாததைச் செய்யவில்லை.

அவரது முதலாவது கோடரி வீச்சு இறக்குமதித் தீர்வை என்ற பெயரில் அமெரிக்காவின் நண்பர்களான கனடா, மெக்சிக்கோ மீது விழுந்தது. இருவருமே ஓடிப்போய் அவரது கால்களில் வீழ்ந்து ‘மன்னிப்புக் கோரினர்’. இன்னுமொரு தென்னமெரிக்க நாடான கொலம்பியா “நாடகற்றப்பட்டவர்களைத் தான் எடுத்துக்கொள்கிறேன்” எனப் பேரம் பேசி தீர்வையைக் குறைத்துக்கொண்டு ஓரமாக ஒதுங்கிக்கொண்டது. எல் சல்வடோர் ‘அமெரிக்க பயங்கரவாதிகளை’ இன்னமும் இறக்குமதி செய்து விபச்சாரம் செய்துகொண்டிருக்கிறது. இன்னும் 75 நாடுகள் ஓடோடி வந்து ட்றம்பரின் கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறுகின்றன. இதில் ‘அனுரதீப’ வும் ஒன்று. நியூசீலந்திற்கு அருகேயுள்ள பென்குவின்கள் வாழும் தீவொன்றுக்கும் தீர்வை விதிக்கப்பட்டதெனவும் விரைவில் அவையும் கதறிக்கொண்டு ஓடிவரலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவையெல்லாம் ட்றம்பரின் ஊழித்தாண்டவத்தின் வெற்றிகள். “சொன்னேன், செய்தேன், பார்த்தீர்களா” என அவர் கர்ச்சிப்பதற்கான அத்தனை காரணங்களுமுண்டு. அவரது வெற்றியைப் பறைசாற்றுமாப்போல் சந்தைகள் ஓலமிட்டுக்கொண்டு சரிகின்றன. சீனா, இந்தியா, ஐரோப்பா போன்ற பெரிய சந்தைகள் “நாங்களும் சண்டியர்கள்” என்ற கணக்கில் வாணங்களை விட்டாலும் சரிவடையும் சந்தைகள் இவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கி விட்டன. மேற்கின் பொருளாதாரத் தடைகளால் முற்றுகையிடப்பட்ட ரஸ்யா, ஈரான், வெனிசுவேலா போன்ற நாடுகள் வாய்களைப் பொத்திக்கொண்டு சிரிக்கின்றன. இந்த ஊழிக்காலங்களுக்கு அவை பழகிப்போய்விட்டவையாக இருக்கலாம்.

ட்றம்பரின் இந்த ஊழித் தாண்டவம் பொருளாதாரம் சார்ந்தது அல்ல. “நான் ஆரெண்டு காட்டுறன் பார். என்ர கால்களில உங்களை விழச்செய்கிறேன்” என்ற அவரது பழிவாங்கலே இது. ஆனால் அவர் கிளப்பிவிட்ட இந்த உலகப் புயலின் பின்னால் ஒரு அமைதி வரத்தான் போகிறது. அதற்கு முதல் சந்தைகள் புரளும், எண்ணை விலைகள் இறங்கும். உலகம் தன் கால்களில் மட்டும் நிற்பதற்கான முயற்சிகளில் இறங்கும். மொத்தத்தில் நாரதர் கலகம் நன்மையில் தான் முடியப்போகிறது.

அமெரிக்க முதலாளிகளான மூட்டைப் பூச்சிகள் வறிய நாடுகளின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்து விட்டன. அவை தாமாகக் கழரும் நிலை இப்போது. “வேண்டுமானால் வந்து நம்ம வீட்டுக் காரரைக் கடி” என்கிறார் ட்றம்பர். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனம், வியட்நாமின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் நைக்கி நிறுவனமும் அமெரிக்கா மீள வேண்டும். ட்றம்பர் இதில் பாரபட்சம் காட்டவில்லை. சீனாவின் இரண்டு டொலர் ரீ சேட்டை இனிமேல் இருபது டொலர்களுக்கு அமெரிக்கர்கள் வாங்கப்போகிறார்கள். அமெரிக்கர்களுக்கு இனிமேல் தான் வியர்க்கப்போகிறது. இதுவே தான் ட்றம்பர் சொன்ன அமெரிக்க விடுதலை.

நேற்று அமெரிக்காவிலிருந்து நண்பர் ஒருவர் கூறினார். சுப்பர் மார்க்கட்டுகளில் பழ்ங்கள், காய்கறிகள் தட்டுப்பாடு என. பழங்களைப் பிடுங்குவதற்கு வரிசையில் நின்ற தென்னமெரிக்க குடிமக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுவிட்டார்கள். தோட்டக்காரர் கூலிகள் கிடைக்காமல் அல்லல் படுகிறார்கள். இவர்கள் தான் ட்றம்பரை ஆட்சியில் அமர்த்தியவர்கள். அவர்களால் தான் ட்றம்பர் தூக்கியெறியப்படவேண்டும். ட்றம்பருக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் களை கட்ட ஆரம்பித்துவிட்டன. மூன்றாவது தடவையாக ட்றம்பரை உள்ளே தள்ளுவதற்கான முயற்சிகளும் ஆரம்பித்து விட்டன. 2026 இல் நடைபெறவிருக்கும் நடுத்தவணைத் தேர்தலில்களில் குடியரசுக் கட்சி படுதோல்வியடைய வாய்ப்புக்கள் ஏராளம்.

கட்சிக்குள் குத்துக்களும் முறியல்களும் ஆரம்பித்து விட்டன. குடியரசுக் கட்சியின் செனட்டர் ரெட் குறூஸ் இரத்தக்களரி பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார். “ட்றம்பரின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவாரோ ஒரு முட்டாள், ஒரு உருளைக்கிழங்கு மூட்டையை விட மொக்கர்” என இலான் மஸ்க் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இவ்வர்த்தகப் போர் தோல்வியில் முடியும் என்பது மஸ்க் உட்படப் பலருக்குத் தெரியும். அதே வேளை ட்றம்பரின் உளநிலை / குணாதிசயம் பற்றியும் அவர்களுக்குத் தெரியும். இத் தோல்வியையும் அவர் வெற்றியெனவே மாற்ற முற்படுவார். இந்த வணங்காமுடியின் குணத்தை அறிந்து அவரது பரிவாரங்கள் “வெற்றி வேல், வீரவேல்” ஒலிக்கத்தான் வேண்டும். “எனது தீர்வை அறிவிப்பைத் தொடர்ந்து 75 நாடுகள் என்னுடன் பேசிவிட்டன. அவர்களது தீர்வையை 10% மாகக் குறைத்தது மட்டுமல்லாது 90 நாட்கள் அவகாசமும் கொடுத்திருக்கிறேன்” என இந்த வணங்காமுடி வீரவசனம் பேச ஆரம்பித்திருக்கிறது. அவர் பேசிக் களைத்து அடுத்த காரியத்தை ஆரம்பிக்கும்வரை ஒத்தூதவேண்டிய அவசியம் இருக்கிறது. ‘வெற்றி’ ஒன்றே அவரைத் திருப்திப்படுத்தும். அது போலியாகவிருந்தாலுங்கூட.

இக்கலகத்தை முடிவுக்குக் கொண்டுவர இரண்டே வழிகள் தானுள்ளன. “அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகள் எல்லோரும் தமது கால்களில் வீழ்ந்துவிட்டார்கள் அதனால் அவர்களுக்கு நான் சலுகையைக் கொடுத்திருக்கிறேன்” என ட்றம்பருக்கு வெற்றிக் கேடயத்தைக் கொடுத்து விடுவது. இதைப் பெற்றுக்கொண்டு அவர் யூக்கிரெய்னுடனோ, பாலஸ்தீனத்துடனோ அல்லது ஈரானுடனோ விளையாடப் போய்விடுவார். அல்லது அமெரிக்காவை அவர் விடுதலை செய்வதற்கு முதல் அவரிடமிருந்து மக்கள் அமெரிக்காவை விடுதலை செய்தல்.

எல்லாம் அமெரிக்கர்கள் கைகளில்தான்.

|
No image previewட்றம்பரின் ஊழித்தாண்டவம் |
சிவதாசன் அது இயக்கங்கள் வானம் தொட்ட காலம். கிராமங்களின் 'டவுண்ரவுண்கள்' எனப்படும் கடைச் சந்திகளில் இயக்கக்காரர் ஆள்பிடிகளில் ஈடுபட்டிருந்த அக்காலத்தின் ஒருநாளில் இச்சம்பவம் நடந்தது. அவ்வூரிலுள்ள நோ...

தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும்

2 months 1 week ago
தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும்

01__3_.jpg

பிரதமர் ஹரினி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குத் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 1968 ஜூன் மாதம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வெற்றி பெற்ற கோவில் அது. அந்தப் போராட்டத்திற்கு கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது. ஆனால் இங்குள்ள முரண் என்னவென்றால் அந்தப் போராட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி போராடும் தரப்பின் பக்கம் நின்று தலைமை தாங்கியது.தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராகிய சுந்தரலிங்கம் ஒடுக்கும் தரப்பின் பக்கம் நின்றார். குறிப்பிட்ட சில சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தரப்பின் பக்கம் சுந்தரலிங்கம் நின்றார்.

அவர் அடங்காத் தமிழன் என்று அழைக்கப்பட்டவர். எனினும் சமூக விடுதலை இல்லாத தேசிய விடுதலை என்பது விடுதலையே அல்ல என்ற அடிப்படை விளக்கம் அவரிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் இது நடந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளின் பின் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபொழுது சமூக விடுதலை இல்லாமல் தேசிய விடுதலை இல்லை என்ற கொள்கை விளக்கம் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம்  உருவாகியிருந்தது.எனினும் இப்பொழுதும்கூட தமிழ்த்தேசிய முகமூடி அணிந்திருக்கும் பலரிடம் இந்த விளக்கம் இல்லை. அல்லது அது அவர்களுடைய வாழ்க்கை முறையாக இல்லை.

சீன சார்புக் கொமியுனிஸ்ராகிய சண்முகதாசன்(சண்) தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் தொடர்பில் விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும் தெளிவான ஆதரவு நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். கட்சியின் இளையோர் அணிக்குத் தலைவராக இருந்த ரோகன விஜயவீர 1964இல் கட்சியிலிருந்து பிரிந்து 1965இல் ஜேவிபியை உருவாக்கினார். “ஜேவிபி ஒர் அரைப்பாசிச, இனவாத அமைப்பு” என்று  சண்குகதாசன் குற்றம் சாட்டினார்.ஜேவிபியின் முதலாவது  கொழும்புக் கூட்டத்திலேயே அதன் வகுப்புவாதத்தை அம்பலப்படுத்தி சண்முகதாசனின் கட்சியின் தோழர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகித்தார்கள்.பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோது சண் பின்வருமாறு கூறினார்…“பழைய இடதுசாரிக்  கட்சிகள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்க்கத் தவறியதால் வகுப்புவாத, அரைப் பாசிச ஜேவிபி சிங்கள இனத்தின் இரட்சகராகத் தோன்றி இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்த்தது. அரசாங்க எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஜேவிபி நன்கு பயன்படுத்திக் கொண்டது” இத்தகவல்களை சண் எழுதிய “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்ற நூலின் 332ஆம் பக்கத்தில் காணலாம்.

ரோகண விஜயவீர உருவாக்கிய ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பொழுது ஆட்சி செய்கின்றது.1965இல் ஜேவிபி உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகளின் பின் மாவிட்டபுரம் ஆலய பிரவேசப் போராட்டம் இடம்பெற்றது.இப்படிப்பட்டதோர் பின்னணியில், பிரதமர்  ஹரிணி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வந்தது. தற்செயலானதா ?அல்லது திட்டமிடப்பட்டதா?

பிரதமர் ஹரிணி அவருடைய வடக்கு விஜயத்தின் போது அவர் எங்கெங்கே போகிறார் என்று பார்த்தால் தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பாக விமர்சனங்களை கொண்ட அல்லது தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பில் முழு உடன்பாடு இல்லாத இடங்கள், நபர்களைத் தேடிச் அவர் செல்வது தெரிகிறது.

ஹரிணி மட்டுமல்ல அரசாங்கத்தின் பிரதானிகள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சபைகளை கைப்பற்றும் நோக்கத்தோடு தீயாக வேலை செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களுக்கு கொடுத்த வெற்றி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.அந்த வெற்றியை அவர்கள் வெளியரங்கில் குறிப்பாக டெல்லியிலும் ஐநாவிலும் ஒரு மக்கள் ஆணையாக காட்டி பேசுகிறார்கள். இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ் மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அதை வியாக்கியானப்படுத்துகிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் கிளிநொச்சியில் மட்டும் தமிழரசுக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்தது.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை.தேசிய மக்கள் சக்திக்கு மொத்தம் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு விஸ்தரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஆணை தமக்கே அதிகம் உண்டு என்று அவர்கள் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின் தமிழ் தரப்பு எனப்படுவது தமிழ் தேசிய தரப்பு மட்டுமல்ல என்ற ஒரு வாதத்தை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். அந்த வாதத்தை மேலும் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளில் வெற்றி தேவைப்படுகிறது.

அந்த வெற்றியை நோக்கி அவர்கள் தீயாக வேலை செய்கிறார்கள். 34 ஆண்டுகளின் பின் பலாலி வீதியைத்  திறந்ததும் அந்த நோக்கத்தோடுதான்.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகளின் பின்னர் தான் ஒரு பிரதான வீதியை  அதுவும் யாழ்குடா நாட்டின் நெஞ்சை ஊடறுத்துச் செல்லும் ஒரு வீதியைத்  திறக்க முடிகிறது என்றால் யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றியின் பொருள் என்ன? போருக்கு பின்னரான அரசியல் என்பதன் பொருள் என்ன? நிலை மாற்றம் என்று ஐநா கூறுவதன் பொருள் என்ன? 15 ஆண்டுகளின் பின்னரும் கூட அந்தப் பாதையை முழுமையாக திறக்க முடியவில்லை என்பதைதான் அந்தப் பாதை வழியே நிறுத்தப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை காட்டுகின்றது.அந்தப் பலகையில் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Untitled-84-1.jpg


காலை 6:00 மணியிலிருந்து பிற்பகல் 6:00 மணி வரையிலும் தான் அந்த பாதையைப் பயன்படுத்தலாம்.பயணிகள் பேருந்துகள் தவிர ஏனைய கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனங்களை இடையில் நிறுத்தவோ திருப்பவோ கூடாது. வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில்தான் பயணம் செய்ய வேண்டும். வாகன சாரதிகள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அந்த வழியால் யாரும் நடந்து போக முடியாது. அந்த வழியில் இரு புறங்களிலும் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்தை யாரும் படம் எடுக்க முடியாது. இவைதான் விதிகள்.இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவித்தல் கூறுகின்றது.

எந்த சட்டத்தின் அடிப்படையில் அந்த அறிவித்தல் பலகை அங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று சுமந்திரன் கேள்வி கேட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பு ஏறக்குறைய போர்க்காலத்தை நினைவு படுத்துவது. ஒரு போர்க்காலத்தில் அப்படிப்பட்ட பாதையால் போகும்போது அவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்படுவதுண்டு.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த15 ஆண்டுகளின் பின்னரும் அவ்வாறான நிபந்தனைகளை விதிப்பதன் பொருள் என்ன? நாடு யாருக்குப் பயப்படுகின்றது? உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லாத பாதுகாப்பான ஒரு நாட்டை ஏன் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பால் கட்டியெழுப்ப முடியவில்லை? சிங்கள பௌத்த அரச சிந்தனை அல்லது மகாவம்சம் மனோநிலை எனப்படுவது எப்பொழுதும் தற்காப்பு உணர்வோடு எதிரிக்கு எதிரான அச்சத்தோடு முள்ளுக் கம்பிகளுக்குள் இருப்பதுதானா?

தேர்தல் காலத்தில் பாதை திறக்கப்பட்டமை தேர்தல் நோக்கங்களைக் கொண்டதா என்று வழக்கறிஞர் கே.எஸ்.ரட்னவேல் கேள்வி எழுப்பி உள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் அவ்வாறு கேட்டிருக்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மதிப்புக்குரிய ஒரு சட்டச் செயற்பாட்டாளர் அவர்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளில் காணப்பட்ட சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதையும் வீதித் தடைகள் அகற்றப்பட்டதையும் குறிப்பாக பலாலி பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரமான ஒரு பகுதி விடுவிக்கப்பட்டதையும் இங்கு நினைவூட்ட வேண்டும்.

ஆனால் அவ்வாறு திறக்கப்பட்ட பெரும்பாலான வீதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் பின்னர் மீண்டும் தேர்தல்கள் முடிந்ததும் முளைத்து விட்டன. குறிப்பாக ஆனையிறவு மண்டை தீவின் நுழைவாயில்,புங்குடு தீவின் நுழைவாயில், வன்னியில் உள்ள சோதனைச் சாவடிகள் போன்ற பல சோதனைச் சாவடிகள் அல்லது வீதித் தடைகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் இது தொடர்பாக சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

articles_fiKb6dY0w8bg6DsogG01.webp

தேர்தல் நோக்கங்களுக்காக அரசாங்கம் பாதைகளை திறக்கின்றது. தேர்தல் தேவைகளுக்காக அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து அதாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மேலும் உறுதிப்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் வடக்கு கிழக்கில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.

“வெற்றி நமதே ஊர் எமதே” என்பது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்க் கோஷமாகக காணப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அது எதிர்பார்க்கும் வெற்றிகள் கிடைக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகக் கருதவில்லை;தங்களை ஒரு தேசிய இனமாகக்  கருதவில்லை என்று அரசாங்கம் வெளி உலகத்துக்குக் கூறப்போகிறது. தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியைக் கேட்கவில்லை; ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வைக் கேட்கவில்லை என்றும் கூறப்போகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த்  தேசியக்  கட்சிகள் மீது கொண்ட வெறுப்பினால் தமிழ் மக்கள் ‘தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்’ என்று தீர்மானித்து  வாக்களித்தார்கள்.ஆனால் தேசமும் வேண்டாம் என்று தீர்மானித்து வாக்களிக்கவில்லை என்பதை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும். 

 

ஆதவன் இணையத் தளத்தில் 13.04.2025 பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்  

https://www.nillanthan.com/7320/?fbclid=IwY2xjawJrqvNleHRuA2FlbQIxMQABHlRwaQyhqEnRbW5xpLLVXHARk8luHBz247bVlkUAHIz2oVQnX5m8_htqCxws_aem_DEPeUDz19oSAcTSEjw5kTg

சுமுகமான உறவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட மோடியும் திசாநாயக்கவும்

2 months 1 week ago

சுமுகமான உறவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட மோடியும் திசாநாயக்கவும்

April 13, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

சுமுகமான உறவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட மோடியும் திசாநாயக்கவும்

கடந்தவார இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் பல அம்சங்களில்  முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.  

ஒரு தசாப்த காலத்திற்குள்  நான்கு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்த  ஒரு இந்திய பிரதமராக மாத்திரமல்ல, ஒரேயொரு வெளிநாட்டுத் தலைவராகவும் மோடியே  விளங்குகிறார். கடந்தவார விஜயத்துக்கு முன்னதாக அவர் மூன்று தடவைகள் இலங்கைக்கு வந்திருந்தார். 

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட  மூன்று நாள் விஜயம் 28 வருடங்களுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவரின்  இலங்கைக்கான முதலாவது இரு தரப்பு விஜயமாக அமைந்தது. ( அதற்கு முதல் இறுதியாக இருதரப்பு விஜயத்தை மேற்கொண்டு  கொழும்பு வந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியே ஆவார். இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக அவர் வந்தார்)  தனது முதலாவது  விஜயத்தின் போது இலங்கை பாராளுமன்றத்திலும் மோடி  உரையாற்றினார். 

அடுத்ததாக அவர் 2017 மே மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக  மோடி  கலந்து கொண்டார். 

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு  ஆறு வாரங்கள் கழித்து  ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் மோடி மீண்டும்  இலங்கைக்கு  வந்தார். தாக்குதல்கள் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான கொழும்பு கொச்சிக்கடை  அந்தோனியார் தேவாலயத்தை  பார்வையிட்டதுடன் அவர்  பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு தனது நாட்டின்  ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டினார். அவரின் அந்த மூன்று விஜயங்களும் முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  பதவிக்காலத்திலேயே இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டதால் மோடியால் அடுத்தடுத்து நான்கு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்யக்கூடியதாக இருந்தது.  மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றும் இல்லாத பொருளாதார நெருக்கடியை அடுத்து மூண்ட மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு பெருமளவுக்கு மாற்றமடைந்த  அரசியல் சூழ்நிலையில்  இலங்கையின் வரலாற்றில் முதல்  தடவையாக இடதுசாரி அரசியல் கட்சி ஒன்று, அதுவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஒரு கட்சி  அதிகாரத்துக்கு வந்திருக்கும்  பின்புலத்தில் விஜயம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு தலைவராக மோடி விளங்குகிறார்.

மோடியின் கடந்த வாரத்தைய விஜயம் குறித்து கருத்துக்களை வெளியிட்ட அரசியல் அவதானிகள் பலரும் ஊடகங்களும்  ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ அரசியல் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின்( ஜே.வி.பி.) இந்திய விரோத கடந்த காலத்தை நினைவுபடுத்துவதற்கு தவறவில்லை. 1987 ஜூலை இந்திய —  இலங்கை சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை அடுத்து ஜே.வி.பி. மிகவும் தீவிரமான இந்திய விரோத பிரச்சாரத்துடன் அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியை முன்னெடுத்த காலப் பகுதியில்  பல்கலைக்கழக மாணவனாக அந்த இயக்கத்தில் இணைந்து செயற்படத் தொடங்கிய ஜனாதிபதி திசாநாயக்க தற்போது ஒரு இந்திய பிரதமரை வரவேற்கிறார் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. 

ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து தனியாக இயங்குவோரின் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி, 54 வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சி தொடங்கிய அதேதினத்தில் (ஏப்ரில் 5) ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் “விஸ்தரிப்புவாத” இந்தியாவின் பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு அளிப்பதாக குற்றஞ்சாட்டியதையும் காணக்கூடியதாக இருந்தது. 

ஜே.வி.பி.  இந்திய விரோத கடந்த காலத்தைக் கொண்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால், அந்த கட்சியினர்  கடந்தகால கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் பெருமளவுக்கு கைவிட்டு சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் நிவைரங்களுக்கு இசைவான முறையில் தங்களை தகவமைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? இந்திய விரோதக் கொள்கைகளை  ஜே.வி.பி. தொடர்ந்தும் உறுதியாக கடைப்பிடித்திருக்க வேண்டும் என்பதா அதன் கடந்த காலத்தை நினைவுபடுத்தி விமர்சனங்களை முன்வைப்பவர்களின் விருப்பம்? 

ஜே.வி.பி.யின் கடந்த காலத்தைப் பற்றி இந்தியாவே கவலைப்படாத நிலையில்  அத்தகைய விமர்சனங்கள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன. அண்மைக் காலத்தில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்படும்  ஒரு இலங்கை அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடையாளம் காணப்படுவது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அம்சமாகும்.  

ஜே.வி.பி.யின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கம் ஒன்று புதுடில்லியுடன்  நட்பார்வமில்லாத ஒரு உறவுமுறையையே கொண்டிருக்கும் என்றும் இந்தியாவுக்கு பாதகமான முறையில் சீனாவுடனான உறவுகளுக்கே அது கூடுதல்  முக்கியத்துவம் கொடுக்கும் என்றும்  ஒரு எண்ணம் பரவலாக இருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைகளில்  தேசிய மக்கள் சக்தி பெருமளவுக்கு உணர்திறனை வெளிக்காட்டாமல் போகக்கூடும்  என எதிர்பார்த்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் ஜனாதிபதி திசாநாயக்கவின்  அரசாங்கம் அதன் செயற்பாடுகள்  மூலம் பொய்யாக்கிவிட்டது. 

பிரதமர் மோடியின்  விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமானவையாக இருப்பதையும் புதுடில்லியுடன் உறவுகளை மேம்படுத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கருத்தூன்றிய அக்கறையுடன் செயற்படுவதையும்  தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. வெளிநாட்டு தலைவர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் அதியுயர் கௌரவ விருதான ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ மோடிக்கு வழங்கப்பட்டிருப்பதையும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதையும் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நெருக்கமான  உறவுகளுக்கு சான்றாக இந்தியாவின் முக்கியமான சில தேசியப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் சுட்டிக்காட்டியிருந்தன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை (11/4) “மோடியின் விஜயம் புதுடில்லிக்கு நெருக்கமாக கொழும்பைக் கொண்டுவந்திருக்கிறது” என்ற தலைப்பில் தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் “பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மூலோபாய நம்பிக்கையை வலுப்படுத்தியிருப்பதுடன் ஒத்துழைப்பை மேலும் வளர்த்து இரு நாடுகளுக்கும் இடையில் தீர்வுகாணப்படாமல் இருக்கும் பிரச்சினைகளை கையாளுவதற்கான அரங்கை அமைத்துக் கொடுத்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறது.

 மோடியின் விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருப்பது   மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.  அந்த  உடன்படிக்கையை பொறுத்தவரை, இலங்கை சுதந்திரமடைந்தபோது   பிரிட்டனுடன் செய்து  கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கைக்கு (அது பண்டாரநாயக்க ஆட்சியில் 1956 ஆம் ஆண்டில் இரத்து செய்யப்பட்டது) பிறகு அதையொத்த உடன்படிக்கை ஒன்று முதன் முதலாக வெளிநாடு ஒன்றுடன்  இலங்கை அரசாங்கத்தினால்  செய்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்க புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயம் உட்பட முன்னைய சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது சாத்தியமாகியிருக்கிறது. 

ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையில்  பாதுகாப்புத்துறையில் நிலவும்  ஒத்துழைப்பு செயற்பாடுகளை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவருவதாக இந்த உடன்படிக்கை அமைந்திருக்கிறது என்று இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்றி கொழும்பில் ஊடகங்களிடம் கூறினார். 

இந்தியாவும் இலங்கையும்  பொதுவான பாதுகாப்பு நலன்களைக் கொண்டிருப்பதுடன் அவற்றின் பாதுகாப்பு ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்ததாக மாத்திரமல்ல, பரஸ்பரம் தங்கியிருக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியாவின் நலன்கள் மீது ஜனாதிபதி திசாநாயக்க கொண்டிருக்கும் அக்கறைக்காக நன்றியுடையவனாக இருப்பதாகவும் தெரிவித்தார். 

அதேவேளை, ஜனாதிபதி திசாநாயக்க முன்னைய சந்தர்ப்பங்களில் கூறியதைப் போன்று  இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்திய உறுதிப்பாட்டுக்கும் எதிராக இலங்கையின் பிராந்தியம் பயன்படுத்தப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று மீண்டும் உறுதியளித்தார். 

 சென்னை ‘தி இந்து’ பத்திரிகை ஏப்ரில் 8 ஆம் திகதி  அதன் ஆசிரிய தலையங்கத்தில்  பாதுகாப்புத்துறையில் குறிப்பிட்ட சில ஏற்பாடுகளை புரிந்துணர்வு உடன்படிக்கை இருதரப்பு அடிப்படையில் விதிமுறைப்படுத்தியிருக்கின்ற போதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பில் கருத்தூன்றிய கவனத்துடன் செயற்படுவதில் மெய்யான  அக்கறை கொண்டிருப்பதை நிரூபிக்க வேண்டியது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பேயாகும் என்றும்  திருகோணமலை துறைமுகமோ அல்லது  இலங்கையின் வேறு எந்த துறைமுகமுமோ  இந்தியாவுக்கு எதிராக மூன்றாவது நாடொன்றினால் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று 1987 ஆம் ஆண்டில் காணப்பட்ட புரிந்துணர்வு  இந்தியாவின் ஐயுறவுகளை அகற்றுவதற்கு உதவவில்லை என்பதை இலங்கை உணர்ந்து கொள்வது அவசியம்  என்றும்  குறிப்பிட்டிருக்கிறது. 

பிரதமர் மோடியினதும் ஜனாதிபதி திசாநாயக்கவினதும் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு புறம்பாக மின்விநியோகம்,  சுகாதாரம், மருந்து உற்பத்தி, டிஜிட்டல்  தீர்வுகள் மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான நலத்திட்டங்கள் தொடர்பாக வேறு ஆறு  புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகின. இந்த உடன்படிக்கைகளில் அடங்கியிருக்கும் ஏற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளினால் கிளப்பப்படும் சந்தேகங்களுக்கு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சகல உடன்படிக்கைகளும் அமைச்சரவையினாலும் சட்டமா அதிபரினாலும் அங்கீகரிக்கப்பட்டவையே என்றும் அவற்றில் எந்த ஒன்றுமே சட்டவிரோதமானவை அல்ல என்றும் கூறினார்.

பாக்குநீரிணை மீனவர் தகராறு: 

==================

இது இவ்வாறிருக்க, கடந்த வாரத்தைய பேச்சுவார்த்தைகளின்போது இரு தரப்புகளுக்கும் இடையில் ஓரளவு முரண்பாடு வெளிக்காட்டப்பட்ட விவகாரம்  என்றால் அது மீனவர் பிரச்சினையேயாகும். இரு தலைவர்களும்  மீனவர் பிரச்சினை குறித்து  தாங்கள் ஆராயந்ததாக அறிக்கைகளில்  குறிப்பிட்டனர்.

மீனவர் பிரச்சினையில் ‘மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன்  இணங்கிக்கொண்டதாக  கூறிய பிரதமர் மோடி இந்திய மீனவர்களும் அவர்களின் படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்திய   அதேவேளை,  ‘நிலைபேறான தீர்வொன்றைக் காண்பதற்கு ஒத்துழைப்பு அணுகுமுறை அவசியம்’ என்று  ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தினார்.  இழுவைப் படகுகளினால் கடல்சார் சுற்றுச் சூழலுக்கு விழைவிக்கப்படுகின்ற சேதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று  கூறிய அவர்  சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவதற்கு உடனடியாக தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இலங்கையின் வடபகுதி மீனவர்களை பெரிதும் பாதிக்கின்ற மீனவர் பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வொன்றைக் காணுமுகமாக இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று இந்திய பிரதமரிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் மீனவர் பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் கணிசமானளவுக்கு விரிவாக ஆராய்ந்ததாகவும் இது மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் அண்மைக்காலத்தில் எடுத்த குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை  இலங்கையினால்  மீள்பரிசீலனை செய்யமுடியும் என்று பிரதமர் மோடி பேச்சுக்களின்போது  வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை கைதுசெய்வதையும் அவர்களின் படகுகளை கைப்பற்றுவதையுமே இலங்கை மேற்கொண்ட — மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய  அண்மைக்கால நடவடிக்கைகள் என்று மோடி கூறியிருக்கிறார் என்பது தெளிவானது.

இனப்பிரச்சினை 

இதனிடையே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக  சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு அசௌகரியத்தைக் கொடுக்கக்கூடிய  அணுகுமுறை எதையும் இனிமேல்  கடைப்பிடிக்கப் போவதில்லை என்பதையும் பிரதமர் மோடியின் விஜயம் வெளிக் காட்டியிருக்கிறது. 

இருதரப்பு உறவுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்குள் தமிழர் பிரச்சினையை இந்தியா கொண்டு வருவதை கொழும்பு இனிமேலும்  விரும்பவில்லை  என்பது ஏற்கெனவே தெளிவாக வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. அண்மைய தசாப்தங்களாக இந்திய அரசாங்கங்களும் தமிழர் பிரச்சினையில் இலங்கையுடன் முரண்படக்கூடிய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதை தவிர்த்து வந்திருக்கின்றன.

 முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயங்களின்போது அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்கவிடம் அவ்வாறு பிரத்தியேகமாக வலியுறுத்துவதை தவிர்த்தார். உள்நாட்டில் திசாநாயக்கவுக்கு பிரச்சினைகளை ஏற்டுத்தக்கூடியதாக எதையும் சொல்லி விடக்கூடாது என்பதில் மோடி எச்சரிக்கையாக இருக்கிறார் என்று தெரிகிறது.

புதுடில்லியில் திசாநாயக்கவுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் மோடி இலங்கை அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். கடந்தவாரம் கொழும்பில் கூட்டு செய்தியாளர்கள் மகாநாட்டிலும்  மோடி மீண்டும் அதையே கூறினார். 13 வது திருத்தம் பற்றி எதையும் அவர் கூறவில்லை. 

“இலங்கை ஜனாதிபதியுடன் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக ஆராய்ந்தேன். சகல சமூகங்களையும் அரவணைக்கும் தனது அணுகுமுறையை எனக்கு அவர் விளக்கிக் கூறினார். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் என்றும் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது தொடர்பிலான கடப்பாட்டை நிறைவு செய்யும் என்றும் நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்” என்று மோடி கூறினார். 

ஜனாதிபதி திசாநாயக்க  புதுடில்லியிலும் கொழும்பிலும் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமர் விடுத்த  வேண்டுகோள்களுக்கு பதிலளிப்பதை தவிர்த்தார். உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பிறகு மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக மோடியிடம் திசாநாயக்க கூறியதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி சில  கொழும்பு பத்திரிகைகள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தன. 

தமிழ்க்கட்சிகள் சந்திப்பு 

இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட் ), தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் தலைவர்கள் இந்திய பிரதமரைச் சந்தித்து தங்களது நிலைப்பாடுகளை  எடுத்துக்கூறினர். 

அர்த்தமுடைய அதிகாரப் பரவலாக்கலை நோக்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்தியா ஊக்குவிக்க வேண்டும் என்று அவரிடம் அவர்கள்  வேண்டுகோள் விடுத்தனர். ஜனாதிபதி திசாநாயக்க முன்னிலையில் தமிழர் பிரச்சினை தொடர்பாக கூறியதை  தவிர வேறு எதையும் பிரதமர் மோடி தமிழ் அரசியல் தலைவர்களிடம் கூறியதாக தெரிய வரவில்லை.

ஆனால், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு அனுசரணையாகச் செயற்படுவதில் இந்தியாவின் பாத்திரத்தையும் 1987 இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையின் முக்கியத்துவத்தையும்  வலியுறுத்துவதற்கு தமிழ்க்கட்சிகளுக்கு மோடியின் விஜயம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

மலையக கட்சிகள்:

===========

மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தாங்கள் இந்திய பிரதமரிடம் அரசியல் கோரிக்கை எதையும் முன்வைத்து அவர்களுக்கு சுமையை அதிகரிக்க விரும்பவில்லை என்றும் மலையக மக்களின் நல்வாழ்வுக்காக சமூக – பொருளாதார உதவிகளையே தற்போது இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை முன்னெடுக்கும்போது மலையக மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதை நோக்கிய யோசனைகளை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.

சமகால புவிசார் அரசியல் நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தீவிரமான அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கக்கூடிய அணுகுமுறைகளை தவிர்த்து இந்தியாவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை பேணிக்காப்பதில் மோடி அரசாங்கம் மிகுந்த நிதானத்துடன் செயற்படுகின்றது என்பதுமே தற்போதைய இந்திய — இலங்கை உறவுச்சமநிலையில் இருந்து நாம் புரிந்து கொள்ளக்கூடிய யதார்த்தமாகும். 

தேசிய மக்கள் சக்திக்கு சீனாவுடன் அரசியல் ரீதியில் என்னதான் நெருக்கம் இருந்தாலும், சீனாவையும் இந்தியாவையும் சமதூரத்தில் வைத்து உறவுகளைப் பேணவேண்டிய நிர்ப்பந்த நிலையில் அரசாங்கம் இருக்கிறது. இன்றைய புவிசார் அரசியல் நிலைவரங்களின் அடிப்படையில் நோக்கும்போது அரசாங்கம் ஒன்று அதிகாரத்தில் நீடிப்பதற்கு உள்நாட்டில் மக்களின் ஆதரவு மாத்திரமல்ல, சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளின் ஆதரவும் அனுசரணையும் கூட அவசியமாகிறது. அதனால், ஜனாதிபதி திசாநாயக்க தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கு அயல்நாடான இந்தியாவின் ஒத்துழைப்பின் அவசியத்தை நிச்சயமாக புரிந்துகொண்டிருப்பார் என்று நம்பலாம்.

மாறிவரும் மனோபாவம்:

==============

தேசிய மக்கள் சக்தி / ஜே.வி.பி.யின் கடந்தகால இந்திய விரோத கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தென்னிலங்கையில் இந்திய விரோத சிந்தனைகளிலும்  ஒரு மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது போன்று தெரிகிறது. இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படாவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீட்சி பெறமுடியாது என்றும் கடந்தகால மனோபாவங்களை கைவிட்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் இலங்கை தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரவலாக ஒரு எண்ணம் வளர ஆரம்பித்திருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பெருமளவுக்கு சுமுகமானவையாக இருக்கும் என்றும் பொருளாதார ஊடாட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கும் என்றும் முக்கியமான அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்களும் அவதானிகளும் அபிப்பிராயம் வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

இந்தியாவுக்கு விரோதமான கொள்கையுடன்  தொடங்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் தலைமையின் கீழான  ஆட்சியில் இந்தியாவுடனான உறவுகள் மற்றைய கட்சிகளின் அண்மைய  ஆட்சிக் காலங்களில் இருந்ததையும் விட மிகவும் சுமுகமானதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்ற ஒரு சுவாரஸ்யமான அரசியல் நிலைவரத்தைக் காண்கிறோம். 

இதனிடையே ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தாங்கள் அல்ல இந்தியாதான் மாறியிருக்கிறது என்றும் இந்தியா முன்னரைப் போன்று இப்போது இல்லை என்பதாலேயே இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கைகளை செய்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது என்றும் கூறுகின்றார். 

https://arangamnews.com/?p=11949

ஊர் யாரோடு? நிலாந்தன்.

2 months 1 week ago

Questen.png?resize=750%2C375&ssl=1

ஊர் யாரோடு? நிலாந்தன்.

பிரதமர் ஹரினி மாவிட்ட புரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குத் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 1968 ஜூன் மாதம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வெற்றி பெற்ற கோவில் அது. அந்தப் போராட்டத்திற்கு கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது. ஆனால் இங்குள்ள முரண் என்னவென்றால் அந்தப் போராட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி போராடும் தரப்பின் பக்கம் நின்று தலைமை தாங்கியது.தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராகிய சுந்தரலிங்கம் ஒடுக்கும் தரப்பின் பக்கம் நின்றார். குறிப்பிட்ட சில சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தரப்பின் பக்கம் சுந்தரலிங்கம் நின்றார்.

அவர் அடங்காத் தமிழன் என்று அழைக்கப்பட்டவர். எனினும் தேசிய விடுதலை என்பது சமூக விடுதலை இல்லாமல் முழுமை அடையாது என்ற அடிப்படை விளக்கம் அவரிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் இது நடந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளின் பின் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது சமூக விடுதலை இல்லாமல் தேசிய விடுதலை இல்லை என்ற கொள்கை விளக்கம் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் உருவாகியிருந்தது. எனினும் இப்பொழுதும்கூட தமிழ்த்தேசிய முகமூடி அணிந்திருக்கும் பலரிடம் இந்த விளக்கம் இல்லை. அல்லது அது அவர்களுடைய வாழ்க்கை முறையாக இல்லை.

சண்முகதாசன் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் தொடர்பில் விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும் தெளிவான ஆதரவு நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். அவரிடமிருந்து 1964இல் பிரிந்து சென்றவர்தான் ஜேவிபியின் தலைவராகிய ரோகன விஜயவீர. இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது அதுதொடர்பாக சண்முகதாசன் பின்வருமாறு கூறியிருக்கிறார்… “பழைய இடதுசாரி கட்சிகள் இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்க்கத் தவறியதால் வகுப்புவாத அரைப்பாசிச ஜேவிபி சிங்கள இனத்தின் இரட்சகராகத் தோன்றி இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்த்தது. அரசாங்க எதிர்ப்பு,தமிழர் எதிர்ப்பு,இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஜேவிபி நன்கு பயன்படுத்திக் கொண்டது”

சண்முகதாசன் தலைமை தாங்கிய சீனச் சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய ரோகன விஜயவீர 1965இல் ஜேவிபியை ஸ்தாபித்தார்.அதாவது மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு.

அந்த ஜேவிபியை அடித்தளமாக கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பொழுது ஆட்சி செய்கின்றது. இப்படிப்பட்டதோர் பின்னணியில், அதன் பிரதமரான ஹரிணி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வந்தது. தற்செயலானதா ?அல்லது திட்டமிடப்பட்டதா?

பிரதமர் ஹரிணி அவருடைய வடக்கு விஜயத்தின் போது அவர் எங்கெங்கே போகிறார் என்று பார்த்தால் தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பாக விமர்சனங்களை கொண்ட அல்லது தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பில் முழு உடன்பாடு இல்லாத இடங்கள், நபர்களைத் தேடிச் அவர் செல்வது தெரிகிறது.

ஹரிணி மட்டுமல்ல அரசாங்கத்தின் பிரதானிகள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சபைகளை கைப்பற்றும் நோக்கத்தோடு தீயாக வேலை செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களுக்கு கொடுத்த வெற்றி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.அந்த வெற்றியை அவர்கள் வெளியரங்கில் குறிப்பாக டெல்லியிலும் ஐநாவிலும் ஒரு மக்கள் ஆணையாக காட்டி பேசுகிறார்கள். இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ் மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அதை வியாக்கியானப்படுத்துகிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் மட்டும் தமிழரசு கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்தது.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை.தேசிய மக்கள் சக்திக்கு மொத்தம் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு விஸ்தரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஆணை தமக்கே அதிகம் உண்டு என்று அவர்கள் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின் தமிழ் தரப்பு எனப்படுவது தமிழ் தேசிய தரப்பு மட்டுமல்ல என்ற ஒரு வாதத்தை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். அந்த வாதத்தை மேலும் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளில் வெற்றி தேவைப்படுகிறது.

அந்த வெற்றியை நோக்கி அவர்கள் தீயாக வேலை செய்கிறார்கள். பலாலி பெருஞ்சாலையை திறந்ததும் அந்த நோக்கத்தோடுதான்.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகளின் பின்னர் தான் ஒரு பெருஞ்சாலையை அதுவும் யாழ்குடா நாட்டின் நெஞ்சை ஊடறுத்துச் செல்லும் ஒரு பெருஞ்சாலையை திறக்க முடிகிறது என்றால் யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றியின் பொருள் என்ன. போருக்கு பின்னரான அரசியல் என்பதன் பொருள் என்ன. நிலை மாற்றம் என்று ஐநா கூறுவதன் பொருள் என்ன? 15 ஆண்டுகளின் பின்னரும் கூட அந்தப் பாதையை முழுமையாக திறக்க முடியவில்லை என்பதைதான் அந்தப் பாதை வழியே நிறுத்தப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை காட்டுகின்றது.அந்தப் பலகையில் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

காலை 6:00 மணியிலிருந்து பிற்பகல் 6:00 மணி வரையிலும் தான் அந்த பாதையைப் பயன்படுத்தலாம்.பயணிகள் பேருந்துகள் தவிர ஏனைய கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனங்களை இடையில் நிறுத்தவோ திருப்பவோ கூடாது. வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில்தான் பயணம் செய்ய வேண்டும். வாகன சாரதிகள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அந்த வழியால் யாரும் நடந்து போக முடியாது. அந்த வழியில் இரு புறங்களிலும் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்தை யாரும் படம் எடுக்க முடியாது. இவைதான் விதிகள்.இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவித்தல் கூறுகின்றது.

எந்த சட்டத்தின் அடிப்படையில் அந்த அறிவித்தல் பலகை அங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று சுமந்திரன் கேள்வி கேட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பு ஏறக்குறைய போர்க்காலத்தை நினைவு படுத்துவது. ஒரு போர்க்காலத்தில் அப்படிப்பட்ட பாதையால் போகும்போது அவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்படுவதுண்டு.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த15 ஆண்டுகளின் பின்னரும் அவ்வாறான நிபந்தனைகளை விதிப்பதன் பொருள் என்ன? நாடு யாருக்குப் பயப்படுகின்றது? உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லாத பாதுகாப்பான ஒரு நாட்டை ஏன் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பால் கட்டி எழுப்ப முடியவில்லை? சிங்கள பௌத்த அரசு சிந்தனை அல்லது மகாவம்சம் மனோநிலை எனப்படுவது எப்பொழுதும் தற்காப்பு உணர்வோடு எதிரிக்கு எதிரான அச்சத்தோடு முள்ளுக் கம்பிகளுக்குள் இருப்பதுதானா?

தேர்தல் காலத்தில் பாதை திறக்கப்பட்டமை தேர்தல் நோக்கங்களைக் கொண்டதா என்று வழக்கறிஞர் கே.எஸ்.ரட்னவேல் கேள்வி எழுப்பி உள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் அவ்வாறு கேட்டிருக்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மதிப்புக்குரிய ஒரு சட்டச் செயற்பாட்டாளர் அவர்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளில் காணப்பட்ட சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதையும் வீதித் தடைகள் அகற்றப்பட்டதையும் குறிப்பாக பலாலி பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரமான ஒரு பகுதி விடுவிக்கப்பட்டதையும் இங்கு நினைவூட்ட வேண்டும்.

ஆனால் அவ்வாறு திறக்கப்பட்ட பெரும்பாலான வீதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் பின்னர் மீண்டும் தேர்தல்கள் முடிந்ததும் முளைத்து விட்டன. குறிப்பாக ஆனையிறவு மண்டை தீவின் நுழைவாயில்,புங்குடு தீவின் நுழைவாயில், வன்னியில் உள்ள சோதனைச் சாவடிகள் போன்ற பல சோதனைச் சாவடிகள் அல்லது வீதித் தடைகள் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டன. சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் இது தொடர்பாக சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

தேர்தல் நோக்கங்களுக்காக அரசாங்கம் பாதைகளை திறக்கின்றது. தேர்தல் தேவைகளுக்காக அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து அதாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மேலும் உறுதிப்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் வடக்கு கிழக்கில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.

“வெற்றி நமதே ஊர் எமதே”என்பது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்க் கோஷமாகக காணப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அது எதிர்பார்க்கும் வெற்றிகள் கிடைக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக கருதவில்லை;தங்களை ஒரு தேசிய இனமாக கருதவில்லை என்று அரசாங்கம் வெளி உலகத்துக்குக் கூறப்போகிறது. தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியைக் கேட்கவில்லை; ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வைக் கேட்கவில்லை என்றும் கூறப்போகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் மீது கொண்ட வெறுப்பினால் ‘தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்’ என்று வாக்களித்த தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசமும் வேண்டாம் என்று வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது தேசமாகத் திரண்டு வாக்களிக்கப் போகிறார்களா?

https://athavannews.com/2025/1428410

அநுர – மோடி பற்றிக் கொண்ட கரங்களுக்குப் பின்னால்… — கருணாகரன் —

2 months 1 week ago

அநுர – மோடி பற்றிக் கொண்ட கரங்களுக்குப் பின்னால்… — கருணாகரன் —

April 12, 2025

அநுர – மோடி பற்றிக் கொண்ட கரங்களுக்குப் பின்னால்…


  • கருணாகரன் —

அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு,  அவர் இந்தியாவுக்குச் செய்த விஜயமும் அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ததும் அரசியல் நோக்கர்களிடத்தில் பலவிதமான அபிப்பிராயங்களை உருவாக்கியுள்ளது. கூடவே சில விமர்சனங்களையும். 

உருவாகிய காலத்திலிருந்தே (1970 களில்) இந்திய எதிர்ப்பு உளநிலையிலிருந்த ஜே.வி.பியினரின் அரசாங்கம் இந்தியாவுடனான உறவை எப்படிப் பேணப்போகிறது? என்.பி.பியின் ஆட்சியில் இலங்கை – இந்திய உறவு நிலை எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் பலரிடத்திலும் எழுந்திருந்தன. மட்டுமல்ல, ஐ.எம். எவ் உடனான ஒப்பந்தத்தின் எதிர்காலம் அல்லது அதனுடைய தொடர் நடவடிக்கை, மேற்குலகத்துடனான உறவு என்பனவற்றிலும் கேள்விகள் இருந்தன.  குறிப்பாக அரசியற் கட்சிகளும் அரசியல் நோக்கர்களும் இதைக்குறித்து ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தனர். 

ஆனால், அநுரகுமார திசநாயக்க பதவியேற்ற கையோடு ஜே.வி.பியின் அடையாளத்தையே மாற்றிப்போடுவதாக இந்தியாவுக்கே முதற்பயணத்தைச் செய்தார். அதைப்போல ஐ.எம்.எவ்வுடனான தொடர் நடவடிக்கை பற்றிப் பேசினார். இதன்மூலம் தம்மைப்பற்றியிருந்த வெளி அபிப்பிராயத்தை மாற்றியது என்.பி.பி. அநுரவின் (என்.பி.பியின்) இந்த நடவடிக்கை பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. பலரும் கேள்விகளோடும் குழப்பங்களின் முன்பும் குந்தியிருந்தார்கள். எதிர்க்கட்சிகள் வழமையைப்போல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் என். பி. பி மிக வேகமாக அதிரடி ஆட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதிகாரத்திலிருக்கும் தரப்புகளின் பொதுக் குணம் இது. அதிகாரத்துக்கு வெளியே (அதிகாரம் இல்லாதபோது) பேசியதை எல்லாம் அதிகாரத்திலிருக்கும்போது எதிர்பார்க்க முடியாது. அதிகாரம் என்பது வேறான ஒன்று. அதை விளங்குவதற்கு வரலாற்றைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். 

பலருக்கும் என்ன குழப்பம் என்றால், நீண்டகாலமாக இவற்றையெல்லாம் கடுமையாக எதிர்த்து வந்த ஜே.வி. பி  அல்லது என்.பி.பி, இப்பொழுது எப்படிக் குத்துக்கரணமடித்து  இப்படிச் சமரசத்துக்கு வந்தது? அப்படிச் சமரசத்துக்கு வந்ததைப் பற்றி –  அதனுடைய நியாயங்களைப் பற்றி – அது பகிரங்கமாகச் சொன்னதா? அதாவது அது தன்னுடைய கொள்கை மாற்றத்தைப் பற்றிப்  பொதுத்தளத்தில் எங்கேயாவது பேசியுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்படுகின்றன. 

எந்தக் கேள்விக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவோ ஜே.வி.பியோ அல்லது என்.பி.பியோ பதிலே சொல்லவில்லை. சொல்லப்போவதுமில்லை. அவர்களைப் பொறுத்தவரை தம்மை நோக்கி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கான பதில் என்பது செயல்தான் எனக் கருதுகிறார்கள். அதாவது செயற்பாடு அல்லது நடவடிக்கை. 

எதையும் சொல்வதை விட, எதற்கும் விளக்கமளிப்பதை விட, உரிய காரியங்களைச் செய்வதே சரியானது. அதுவே அரசியற் பெறுமானமுடையது. அதுவே அவசியமானது. அதுவே பொருத்தமானது என்பதுதான் அவர்களுடைய நம்பிக்கை. அதாவது தாம் ஒரு மாற்றுச் சக்தி என்பது, தமது செயல்களின் அடையாளமாகும்; செயல்களின் விளைவாகும் என்ற நிலைப்பாடு. இதில் அவர்கள் எவ்வளவு தூரம் சரியாகச் செயற்படுவார்கள்? எந்தளவு வெற்றியைப் பெறுவார்கள்? எவ்வாறான மாற்றங்களை நிகழ்த்துவர்கள்? எப்படியான மாற்றங்கள் நிகழும்? என்ற கேள்விகள் ஒரு புறமிருக்கிறது. அதைப்பற்றியெல்லாம் அவர்களிடம் கேட்டாலும் பதில் கிடையாது. அவர்களுடைய ஆட்சியைக் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டியதுதான். 

இதன்படியேதான் என்.பி.பியின் நடவடிக்கைகள் அமைகின்றன.

இதற்குச் சிறந்த உதாரணம், என்.பி.பி இந்திய உறவைக் கையாள்வது அல்லது இந்தியாவைக் கையாள்வதாகும். முதலில் இந்தியாவுக்கும் பிறருக்கும் ஜே.வி.பியையைப் பற்றி அல்லது என்.பி.பியைப் பற்றி வெளியே இருந்த அபிப்பிராயத்தை அது மாற்றியிருக்கிறது. உண்மையில் அநுரவின் வெற்றியையும் அதைத் தொடர்ந்து என்.பி.பி. பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற பெரும்பான்மை பலத்தையும் குறித்து இந்தியாவுக்குச் சற்றுப் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. அநுரவும் என்.பி.பியும் சீனாவுடன் நெருங்கக் கூடும். அல்லது சீனா என்.பி.பி. அரசாங்கத்தை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி, இலங்கையில் செல்வாக்கை வலுப்படுத்தக் கூடும். இதனால் தனக்கு நெருக்கடி உண்டாகலாம் என இந்தியா பதற்றமடைந்தது. 

பதவியேற்ற கையோடு இந்தியாவுக்கு முதற் பயணத்தைச் செய்து இதையெல்லாம் மாற்றிப் போட்டு விட்டார் அநுர. இதை என்.பி.பியின் சரணாகதி என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அப்படியல்ல. 

இதுதான் அரசியல். 

அரசுக்கு வெளியே – ஆட்சிக்கு வெளியே இருப்பது வேறு. அரசைப் பொறுப்பெடுத்து இயக்குவது வேறு. வெளியே இருக்கும்போது பலதையும் பத்தையும் பேசலாம். அப்படிப் பேசுவது சரியென்று சொல்லவில்லை. ஆனால், வெளியே இருக்கும்போது எதையும் பேசுவதற்கான சூழலும் சுதந்திரமும் இருக்கும். ஆட்சியிலிருக்கும்போது அப்படிச் செய்ய முடியாது. ஒவ்வொன்றுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டும்; பொறுப்பேற்க வேண்டும். ஆகவே ஒவ்வொன்றிலும் நிதானம் வேண்டும். ஒவ்வொன்றிலும் சரிகளைத் தவற விட்டால், அதற்கான எதிர்விளைவுகள் வந்தே தீரும். அதற்கெல்லாம் முகம் கொடுத்தே ஆக வேண்டும். 

இதேவேளை நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 

என்.பி.பி என்பது கடந்த கால ஜே.வி.பி அல்ல. அது தன்னை மாற்றிக் கொண்ட ஒன்று. இன்று அது முற்றிலும் புதிய ஒன்று. அதில் பழைய ஜே.வி.பியின் சிறு குணங்கள் – பிசிறுகள் – இருக்கலாம். ஆனால், அதையும் விட அது மாறிய – மாற்றத்துக்குள்ளான – ஒரு அரசியல் இயக்கமாக, அரசியல் வடிமாகவே உள்ளது. 

ஆனால், பலரும் முந்திய ஜே.வி.பியைத்தான்  இன்னமும்மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதனால்தான் அவர்களுக்கு இன்னமும் குழப்பங்களும் கேள்விகளும் எழுகின்றன. அவர்களுடைய விமர்சனம் அந்த அடிப்படையிலானதே.

பலரும் ஒன்றைப் புரிந்து கொள்ளத்  தவறுகிறார்கள். ஜே.வி.பி ஏன் என்.பி.பி யாக மாற்றமடைந்தது? எப்படி அது ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய நிலைக்கு வந்தது? மட்டுமல்ல, ஏன் இவர்களில் பலரும் என்.பி.பியின் இந்தத் திடீர் வளர்ச்சியையும் அது ஆட்சியைக் கைப்பற்றியதையும் கூட இன்னமும் நம்ப முடியாமல் – ஏற்றுக் கொள்ள முடியாமல்- புரிந்து கொள்ள முடியாமல்தான் உள்ளனர். 

ஆனால், இதொரு மறுக்க முடியாத உண்மை. இதொரு யதார்த்தம். யாரும் ஏற்கலாம், விடலாம். ஆனால், இதொரு வெற்றி. அதாவது ஜே.வி.பியினுள் நிகழ்ந்த மாற்றம், என்.பி.பியின் வெளிப்பாடாக, வெற்றியாக வளர்ச்சியடைந்துள்ளது. 

இதைப் புரிந்து கொண்டால், அநுர – மோடி இருவரும் இறுகப் பற்றித் தழுவிக் கொண்டதற்குப் பின்னால், இறுகப் பற்றிக் குலுக்கிய கைகளுக்குப் பின்னால் உள்ள அரசியலையும் யதார்த்தத்தையும் குழப்பமின்றித் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 

இன்றைய சூழலில் இந்தியாவுக்கு இலங்கை மிக அவசியமானது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிர்நிலையிலேயே உள்ளன. அல்லது இந்தியாவுக்கு மாறான உளநிலையிலேயே இருக்கின்றன. ஆகவே இலங்கையையாவது தன்னுடைய நெருக்கத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவுக்குள்ளது. என்பதால்தான் அது இலங்கையுடன் நிபந்தனையற்ற உறவைக் கொண்டுள்ளது. அநுரவின் ஆட்சிக்கு முன்பு, சீனாவின் மடியில் ராஜபக்ஸக்கள் தலையை வைத்திருந்த காலத்திலும் இந்தியா மிகப்  பொறுமையாக – நிதானமாக இலங்கையுடனான உறவைத் தொடர்ந்தது. 

இதற்கு வாய்ப்பாக இலங்கையின் நெருக்கடிகளில் பங்கேற்கும் தரப்பாகத் தன்னைத் தொடர்ந்தும் வைத்திருக்கிறது. போரிலும் பொருளாதார நெருக்கடியிலும் இந்தியாவின் இலங்கைக்கான உதவிகளை இங்கே நினைவு கொள்வது நல்லது. 

இலங்கை இந்தியாவை விட்டு மேற்குலகம், சீனா  என்று சற்று விலகிச் சென்றபோதும் அதைக் கண்டும் காணாததைப்போல இருந்து கொண்டு தொடர்ந்தும் உறவிலும் உதவித்திட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது இந்த அடிப்படையிலேயே. இலங்கையோடு பகை நிலையைக் கொண்டால், அது (இலங்கை) முற்று முழுதாக சீனா, பாகிஸ்தான் என்ற இன்னொரு உறவு வளையத்துள் சென்று விடக் கூடும் என்ற அச்சம் இந்தியாவுக்குண்டு. 

இந்த நிலைமை இலங்கைக்குச் சாதகமான ஒன்று. இதைப் புரிந்து கொண்டிருக்கிறது என்.பி.பி – அநுரகுமார திசநாயக்க அரசாங்கமும். தாம் எப்படி ஆட்சியைக் கைப்பற்றும் தரப்பாக மாறுதலுக்கு உட்பட்டோமோ, அதைப்போல,ஆட்சியைத் தக்க வைப்பதற்கும் மாறுதல்கள் வேண்டும் என்பதே என்.பி.பியினரின் நம்பிக்கையாகும். எனவேதான் இந்தியாவுக்கு முதற் பயணத்தை அநுரகுமார திசநாயக்க மேற்கொண்டார். இந்திய எதிர்ப்புவாதத்தின் பின்னணியிலிருந்து வந்த ஒருவர், ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் இந்தியாவுக்கு முதல் வருகை செய்வதை இந்தியா வரவேற்றதும் இலங்கையைத் தன்னுடைய நட்பு வளையத்துள் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற நலன் நோக்கு அடிப்படையிலேயே. அதாவது  ஒவ்வொருவருக்குமான பரஸ்பர  நன்மைகள், லாபங்களின் அடிப்படையில். 

இதனால் ஜனாதிபதி அநுரவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு டெல்லியில் அளிக்கப்பட்டது. இதை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள அநுரகுமார திசநாயக்க முயற்சித்தார். குறிப்பாக இலங்கை சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரு துணைக்கரமாக இந்தியாவைப் பயன்படுத்திக் கொள்ள விளைந்தார். 

அதற்கான தொடர்பாடலின் விளைவாக – வெற்றியாக – மோடியின் இலங்கைப் பயணம் அமைந்தது. மோடிக்கு இலங்கையில் செல்லுமிடமெங்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. வழியெங்கும் நிறைந்திருந்த சனங்கள் மோடியை வாழ்த்திப் பாடினார்கள். 

இந்தப் பயணத்தில் பல விடயங்களை பேசப்பட்டன. சில விடயங்கள் இருதரப்பு உடன்பாட்டுக்குள்ளாகின. சில திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சில விடயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றோடு சேர்ந்து இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு போன்ற வழமையான விவகாரங்களும் அமைந்துள்ளன. 

இவையெல்லாம் இந்த ஆட்சியின் தொடக்க ஆட்டம்தான். ஏனென்றால், இந்தியாவுக்கு இலங்கையில் எத்தகைய நன்மைகள் வேண்டியிருக்கிறதோ, அதற்கு நிகராக இந்தியாவிடத்திலிருந்தும் பலவிதமான நன்மைகளைப் பெற வேண்டிய தேவை இலங்கைக்குள்ளது. என்பதால்தான் இது இருதரப்பு உறவாக – உறவாடலாக இருக்கிறது. எனவே இந்தத் தொடராட்டம் மேலும் நீடிக்கப்போகிறது. 

திசநாயக்கவின் அரசாங்கம் முதல் ஆட்டத்தைச் சிறப்பாகவே ஆடியிருக்கிறது. எப்படி அது ஐ.எம்.எவ்வுடன் ஒரு சுமுகமான ஆட்டத்தில் உள்ளதோ, அவ்வாறே இந்தியாவுடனும் உறவாடுகிறது.

மோடியின் இந்த இலங்கைப் பயணத்தில் அவருக்கு திருப்தி ஏற்பட்டிருப்பதை – மகிழ்ச்சி உண்டாகியதை –  அவருடைய சமூக வலைத்தளப் பதிவுகள் காட்டுகின்றன. இதற்கு முன்பு அவர் மூன்று தடவை இலங்கைக்கு வந்திருக்கிறார். ஆனால், இந்தத் தடவையே அவர் உற்சாகமாக இருந்ததாக உணர முடிகிறது. ஏதோ நீண்டகால நண்பர்களைப்போல அநுரவும் மோடியும் காட்டிய நெருக்கம் இதற்குச் சான்று. 

1980 களின் இறுதியில் இலங்கைத்தீவில் ஆயுதம் தாங்கிய இரண்டு அமைப்புகள் இந்தியாவைக் கடுமையாக எதிர்த்தன. ஒன்று ஜே.வி.பி. மற்றது விடுதலைப்புலிகள். ஜே.வி.பி தன்னை நெகிழ்த்தி, மாற்றியமைத்தது. அதனால்ஆட்சியைக் கைப்பற்றியது. இப்பொழுது அந்த ஆட்சியைத் திறம்பட நிகழ்த்திக் காட்ட முற்படுகிறது. 

விடுதலைப்புலிகள் மாற்றத்தைப்பற்றிக் கவனத்திற் கொள்ளவில்லை. சூழலின் – காலத்தின் மாற்றத்தைப் பொருட்படுத்துவதில் தவறிழைத்தது.  அதனால் அது களத்தில் இருந்து அகற்றப்பட்டது. 

மாக்ஸிஸத் தத்துவம் எப்போதும் வலியுறுத்துவது, “மாற்றம் என்பது நிகழ்ந்தே தீரும். மாறாதவை அழிவடையும்” என்பதாகும். என்.பி.பி (ஜே.வி.பி) இதைப் புரிந்துள்ளது என எண்ணலாம். 

ஆகவே, அடுத்த கட்டமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் மேலும் பல அனுகூலங்கள் சித்திக்கக் கூடும். பல புதிய திட்டங்களுக்கான வாசல்கள் திறக்கப்படலாம். அதில் சில நெருக்கடிகளைத் தருவனவாகவும் இருக்கலாம். அதையெல்லாம் கையாள்வதுதான் அரசியல். அதுதான் அரசியல் ஆளுமையும் தலைமைத்துவமும் ஆகும். 

அநுரகுமார திசநாயக்க இளைய தலைவர். என்.பி.பிக்கு இது புதிய ஆட்சி அனுபவம். ஆனாலும் விடயங்களைக்  கையாள்வதில் முதிர்ச்சியான போக்குத் தென்படுகிறது. இலங்கையின் இராசதந்திரமும் கொள்கை வகுப்பாளர்களும் எப்போதும் வியப்பூட்டும் வகையில் செயற்பட்டதே வரலாறு. தலைக்கு வருவதையெல்லாம் அவர்கள் தலைப்பாகையோடு தள்ளி விடுவார்கள். என்றபடியால்தான் இந்தச் சின்னஞ்சிறு தீவு, புவியியல் ரீதியாக நெருக்கடிப் புள்ளியிலிருந்தாலும் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 

சிந்திக்கக் கூடியவர்களின் வரலாறு எப்போதும் முன்னோக்கியே பயணிக்கும். பின்னோக்குவதில்லை. நதிகள் பின்னோக்கிப் பாய்வதில்லை. 

என்.பி.பி. தன்னை ஒரு நதியாக உணர்ந்துள்ளது போலும். வரலாறு அதைச் சொல்ல வேண்டும்

https://arangamnews.com/?p=11945

பிள்ளையான் கைது: ஒன்றும் ஒன்றும் இரண்டா….?

2 months 1 week ago

பிள்ளையான் கைது: ஒன்றும் ஒன்றும் இரண்டா….?

April 12, 2025

பிள்ளையான் கைது: ஒன்றும் ஒன்றும் இரண்டா….?       (வெளிச்சம் :050)

— அழகு குணசீலன்—

 தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சில நாட்களாகிறது. இந்த செய்தி அறிந்து வெடிக்கொழுத்தி சித்திரைப் புத்தாண்டை   முன்கைட்டியே கொண்டாடியவர்கள் இருக்கிறார்கள். பிள்ளையானுக்காக ஒப்பாரி வைக்காவிட்டாலும்  கவலைப்பட்டு நினைத்து பேச கணிசமானவர்கள் நிச்சயம் இன்னும் இருக்கிறார்கள். வழக்கம்போல் இந்தக் கைது விடயத்தில்  மட்டக்களப்பு  சமூகம் இரண்டாக இரு வேறுபட்ட நோக்குகளுடன்  பிரிந்து கிடக்கிறது. 

பிள்ளையானின் கைதுக்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது  ஒரு தரப்பினரின் பார்வை. அப்படி இல்லை இது கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியான சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும், நீதி, நிர்வாகத்தை அரசியல் பிடியில் இருந்து விடுவிக்கும் மற்றொரு நடவடிக்கை என்கின்றனர் மறுதரப்பினர்.  இதனால்தான்  இதனை ஒன்றும்,ஒன்றும் இரண்டா? அல்லது அதற்கும் மேலா?என்று கேட்கவேண்டி உள்ளது.

முதலில் கைது செய்யப்பட்டதற்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்பட்ட போதும்,  பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ். ரவீந்திரநாத்  15, டிசம்பர்,2006 இல் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமைக்காக இந்த கைது இடம்பெற்றதாக தெரியவந்தது. இது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்களையும், சட்டப்பிரிவுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதால் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் மூன்று நாட்கள்/ 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம் பெறுவதாகவே அறிய வந்தது. பின்னர் அது நீடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பாராளுமன்றத்தில் இது பற்றி பேசிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  பிள்ளையானுக்கு ஈஸ்டர் படுகொலைகளோடு கணிசமான தொடர்புகள் இருப்பதாக அறிவித்தார். இது பயங்கரவாத சட்டத்திற்குள் இழுத்து விடுவதற்கான காரணம் தேடலாக இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் ஈஸ்டர் படுகொலைகள் தொடர்பாக பிள்ளையான் பல தடவைகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.  அப்போது அவர் சிறையில் இருந்தவர். இது குறித்து சிறைச்சாலையில் நடந்த சில நிகழ்வுகளையும் தனது நூலில் எழுதியுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்திலும் இது போன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டா. தற்போது உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார காலத்தில் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு அரசியல் பின்னணியைக்கொண்டது என்பதற்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இதனை ஆதாரம் காட்டுகிறது.

இதைவிடவும் கடந்த தேர்தல் காலத்தில் மட்டக்களப்பு வந்திருந்த அநுரகுமார திசாநாயக்க பிள்ளையானையும் அவரது கட்சியையும் கடுமையாக  எச்சரிக்கும் தொனியில்  அவரது வழமையான பாணியில் விமர்சனம் செய்திருந்தார். 

அதற்கு பதிலளித்த பிள்ளையான், “எங்களுக்கு முதலில் ஆயுதம் தந்தவர்கள் ஜே.வி.பி.யினர்தான் என்றும், பின்னர் அவர்கள் ஆயுதம் கேட்டபோது நாங்கள் கொடுக்கவில்லை……” என்றும் கூறினார். பிள்ளையானின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜே.வி.பி. இதுவரை பதிலளித்ததாக தெரியவில்லை. 

அண்மையில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” என்ற கட்சியின் பெயரை பிள்ளையான், கருணா, வியாழேந்திரனின் கட்சிகள் இணைந்து ஒரு கூட்டமைப்பாக பயன்படுத்துவது குறித்து இரு தரப்பாலும் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த பெயர் குறித்து விவாதிப்பதற்கு இப்பத்தி பொருத்தமற்றது என்பதால் இனி வரும் காலங்களில் இதற்கு வெளிச்சம் போடப்படும்.  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரைப்பொறுத்தமட்டில் தமிழரசுகட்சிக்கு அடுத்து என்.பி.பி.க்கு சவாலாக  கிழக்கு கூட்டமைப்பு அமையும் என்று நம்புகின்றனர். இதனால் கடந்த பாராளுமன்ற தேர்தல் போன்று இப்போதும் பிள்ளையானின் தலையில் குட்ட அநுரகுமார அரசு முனைகிறது என்கிறார்கள் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்.

வியாழேந்திரன், பிள்ளையானுக்கு அடுத்து கருணா மீது புலனாய்வு பிரிவினர் பாய்வார்களா? என்ற கேள்வியும் மட்டக்களப்பில் நிலவுகிறது. ஜனாதிபதி அநுரகுமார சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு வந்தார். அதற்கு முன்னர் திட்டமிட்டு, கணக்கு பார்த்து பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று  அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இந்த “கணக்கு பார்ப்பில்” கவனிக்கத்தக்கது என்னவெனில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு  தற்போது நீதிமன்ற விடுமுறை காலமாகும். ஏப்ரல் 22 ம் திகதியே நீதிமன்றங்கள் மீண்டும் இயங்கத்தொடங்கும் இதுவும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்கிறது ரி.எம்.வி.பி. ஆக, பிள்ளையான் இல்லாத மட்டக்களப்புக்கு வருவதும், ஈஸ்டர் படுகொலையை அரசியல் பிரச்சாரமாக்குவதும் ஜனாதிபதியின் உள்திட்டம் என்று கூறுகிறார்கள் அவர்கள். 

முதலாவது தரப்பினரின் கருத்துக்களை வடிகட்டியதில் கிடைத்த மற்றொரு தகவல்  வடக்கில் என்.பி.பி. தனது ஆதரவை  அதிகரிக்க புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவை நாடியிருப்பதாகவும், அந்த டயஸ்போராவின் நிபந்தனையை நிறைவு செய்யவே, பிள்ளையான் கைது, வீதித்தடை நீக்கம் போன்றவை இடம்பெறுகின்றனவாம். தமிழ் டயஸ்போராவின் நிபந்தனைகளில் டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன் ஆகியோர், உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைத்த தகவல் ஒன்றில் அறியக்கிடைத்தது. 

டக்ளஸ் தேவானந்தா ஊழல், இலஞ்சம் மற்றும் சிறிதர் தியேட்டர் சொத்து சேர்ப்பு சம்பந்தமாகவும், சித்தார்த்தன் அவரது புளட் இயக்க தோழர்,  ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை தொடர்பாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம் என்றும் கதையடிபடுகிறதாம். என்.பி.பி. வடக்கில் பாராளுமன்றமன்ற தேர்தலில் கிடைத்த ஆதரவை தக்கவைக்க முயற்சிக்கிறது. எனினும் எப்படித்தான் இருந்தாலும் புலிகளை எதிர்த்து, உயிரைப்பணயம்வைத்து  ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை வலியுறுத்தியவர் டக்ளஸ் கொமறாட் என்று அநுரகுமார கருதுவதாகவும்  ஒரு கசிவு தகவல் உண்டு.

இது இவ்வாறு இருக்க,

தமிழ்த்தேசிய வெடித்தரப்பும், அரசாங்கத் தரப்பும் பிள்ளையான் கைது செய்யப்பட்டதில் சத்தியமாக அரசியல் பின்னணி இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்து வருகிறார்கள். அண்மையில் தென்னிலங்கையில் பேசிய பிரதி அமைச்சர் ஒருவர் திறைசேரி அந்நியச் செலாவணி இருப்பு குறித்து “அம்பே அப்பே” என்று அம்மா மேல் சத்தியம் செய்தது போல் இல்லாமல் இவர்களின் சத்தியம் இருந்தால் சரிதான். 

என்.பி.பி. அரசாங்கத்தின் இலஞ்ச, ஊழல் அற்ற, நீதி, நிர்வாகத்தில் சுதந்திர செயற்பாட்டை  கொச்சைப்படுத்தும் வகையில் இந்தப் பிரச்சாரம் அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது என்று அவர்கள் நம்புகின்றனர். ராஜபக்சாக்களின் சொத்து சேகரிப்பு, ஈஸ்டர், பட்டலந்த படுகொலைகள் போன்று படிப்படியாக ஒவ்வொன்றும் வெளிச்சத்திற்கு வரும் என்று வாதிடுகின்றனர். அப்படியானால் அரசாங்க அரசியல் வாதிகள் அடிக்கடி கைதுகள் குறித்து முன்கூட்டியே பேசுகின்றனரே அரசியல் தலையீடு இல்லாத நீதி நிர்வாகத்தில் இது எப்படி சாத்தியம் என்றும் மறு தரப்பு கேட்கிறது.

 முன்னாள் தமிழ்த்தேசிய ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளவர்கள் பிள்ளையான் – கருணா குழுவினிரால்  கொலை செய்யப்பட்டவர்கள் என்று  பிள்ளையானின் கைதை நியாயப்படுத்தியுள்ளார். அதைப்படித்தபோது இஸ்ரேல் மொசாட் புலனாய்வு பிரிவின் தலைவர் ஒருவர் முக அடையாளத்தை மறைக்க ஒரு கண்ணை மறைத்து இருப்பார். அதுதான் நினைவுக்கு வந்தது.  அந்த அதிகாரியின் பெயர் தயான். 

அது போன்று ஒரு கண்ணால் பார்த்ததாலோ என்னவோ அரியத்தாருக்கு புலிகள் செய்த கொலைகள் / கொலை முயற்சிகள் தெரியவில்லை. அந்த பட்டியலில் அ.தங்கத்துரை, கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, முன்னாள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மௌனகுருசாமி, கிங்ஸ்லி இராசநாயகம், சம்பந்த மூர்த்தி, ராஜன் சத்தியமூர்த்தி, நிமலன் சௌந்தரநாயகம்,  சாம்.தம்பிமுத்து, வாசுதேவா போன்றவர்கள் மீதான கொலைகள் அவருக்கு தெரியவில்லை.  இதில் வேடிக்கை என்ன வெனில் அனேகர் தமிழரசுக்கட்சிக்காரர், தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள், அவரின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள்.  இப்படி அரசியல் செய்வதால்தான் தமிழரசு இன்று “சின்னவீடு” ஆகி இருக்கிறது. சங்கு சின்னத்தில் ஜனாதிபதிக்கு போட்டியிட்டதால் சந்திரா பெர்ணான்டோ, வணசிங்கா, ஊடகவியலாளர் நித்தியின் கொலைகள்/ தாக்குதல்களையும் மறக்கவேண்டியதாயிற்று.

இந்த நாட்டில் மொத்தமாக 50 ஆண்டுகாலமாக ஆயுத வன்முறை நிலவியது. இன்னும் நிலவுகிறது. ஜே.வி.பி.யும், தமிழ் இளைஞர்களும் அவரவர் அரசியல் நோக்கை அடைவதற்காக ஆயுதம் தூக்கி ஆயிரக்கணக்கான படுகொலைகளை செய்து இறுதியில் தோற்றுப்போயினர். இவ்வாறான சூழலில் பல்வேறு சிறிய ஆயுதக்குழுக்களும், அரசாங்க படைகளுடன் சேர்ந்து செயற்படும் குழுக்களும், ஊர்காவற்படைகளும் இருந்தது வெளிப்படை.  கலவர காலத்தில் ஜனநாயக அரசாங்கமோ, சட்டம் ஒழுங்கோ நாட்டில் இருக்கவில்லை. ஆயுதமேந்தியோர் ரில்வின் சில்வா சொல்வதுபோல் என்ன காரணத்தை சொன்னாலும் இந்த  ஜனநாயக ரீதியான, நிறுவனரீதியான கட்டமைப்புக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இதன் போது மனித உரிமைகள் மீறல், ஜனநாயக மறுப்புக்கள், கொலைகள், கொள்ளைகள் , சட்டமறுப்புக்கள், மீறல்கள் உள்நாட்டு போர் நடந்த நாடுகள் போன்று இலங்கையிலும் இடம்பெற்றன. இந்த கொடூரத்திற்கான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கவேண்டும்.  இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். என்பதில் வேறு கருத்துகள் இல்லை.

அப்படி இல்லாமல் இனப்படுகொலை அழிவுகளையும், இறுதியுத்த அழிவுகளையும் செய்த அரசபயங்கரவாத இராணுவ இயந்திரத்தை பாதுகாத்துக்கொண்டு என்.பி.பி.யினால் எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி.னால் கொல்லப்பட்ட 1300 பேரின் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இதற்கு ஜே.வி.பி.யின் நீதி என்ன? இது வரை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே எம்.பி. இது இழகிய இரும்பை கொல்லன் ஓங்கி அடிக்கும் கதை.  புதிய அதிகாரம் பழைய அதிகாரத்தை பாதுகாத்தல். இளம் ராசபக்சாக்கள் மட்டும் விசாரணை என்று அழைக்கப்பட்டார்கள், எதுவும் நடக்கவில்லை. மகிந்த ராஜபக்சவை  அரசாங்க வீட்டில் இருந்து கூட எழுப்ப முடியவில்லை. 

அமைச்சர் பிமல் ரத்நாயக்க சர்வதேச ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார். அரியநேத்திரனின் கண் மறைப்பைதான் இவரும் செய்துள்ளா. இறுதியுத்தகால அழிவை விசாரிக்க உள்ளகபொறிமுறை தான் என்று சர்வதேச பொறிமுறையை நிராகரித்தவர்கள், ஆனால் ஜே.வி.பி.க்கு எதிரான பட்டலந்தை கொலைகளை விசாரிக்கவும் ரணிலுக்கு தண்டனை வழங்கவும் சர்வதேச ஆதரவை பெறப்போகிறார்கள். இதற்கு பெயர் இனவாதத்திற்கு இந்த நாட்டில் இனி இடமில்லை? 

இங்கு எப்படி ஒன்றும், ஒன்றும் இரண்டாகும்…….?

https://arangamnews.com/?p=11941

இந்தியப் பிரதமரின் வருகை : அனுர யாரோடு ? - நிலாந்தன்

2 months 1 week ago

இந்தியப் பிரதமரின் வருகை : அனுர யாரோடு ? - நிலாந்தன்

pm-modi-dissanayake-16101471-16x9_0.webpநான்கு தடவைகள் இந்திய பிரதமர் இலங்கைக்கு வந்து விட்டார். இந்த நான்கு தடவைகளிலும் அவர் நான்கு இலங்கை ஜனாதிபதிகளை சந்தித்திருக்கிறார். பத்தாண்டு காலத்துக்குள் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு நான்கு பேர்களிடம் கைமாறும் அளவுக்கு இச்சிறிய தீவின் அரசியல் ஸ்திரமற்றதாக இருந்து வருகிறது.ஆனாலும் பிரதமர் மோடியின் வருகையின்போது மாறாத இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று இனப்பிரச்சினை தொடர்பான இந்திய நிலைப்பாடு. இரண்டாவது,மீனவர்களின் விவகாரம்.அதுவும் தமிழ் மக்களோடு தொடர்புடையதுதான்.

இந்தியப் பிரதமரின் வருகையை மூன்று தளங்களில் வைத்துப் பார்க்க வேண்டும்.முதலாவது பிராந்தியத் தளம். இரண்டாவது கொழும்பு. மூன்றாவது தமிழ் நோக்கு நிலை.

பிராந்தியத்தில் இந்தியா “அயலவர் முதலில்” என்று கூறிக்கொள்கிறது. ஆனால் நடைமுறையில் அதன் அயலில் உள்ள சிறிய நாடுகளை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் இருந்து சீனா எங்கே கழட்டி எடுத்து விடுமோ என்ற நிச்சயமின்மைதான் காணப்படுகின்றது.நேபாளம், பங்களாதேஷ், மாலை தீவுகள் ஆகிய மூன்று நாடுகளிலும் இந்தியாவின் பிடி சகடயோகமாகத்தான் இருக்கிறது. இலங்கையிலும் அப்படித்தான். இப்பொழுது இலங்கையில் ஆட்சி செய்து கொண்டிருப்பது சீன இடதுமரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்திதான்.

இப்படிப்பட்டதோர் பிராந்தியப் பின்னணிக்குள் இந்தியப் பிரதமரின் வருகையின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்,காணொளிகளில் பிரதமர் மோடிக்கு அருகே அனுர பணிவான ஒரு இளைய சகோதரனைப்போலவே காணப்படுகிறார்.அயலில் உள்ள சிறிய நாடுகளுக்கும் தனக்குமான பிடி சகடயோகமாகக் காணப்படும் ஒரு பின்னணிக்குள் இலங்கைத்தீவில் தேசிய மக்கள் சக்தியை எப்படித்தன் செல்வாக்கு மண்டலத்துக்குள் பேணுவது என்பதுதான் இப்பொழுது இந்தியாவுக்குள்ள பிரதான சவால். இது முதலாவது.

இரண்டாவது,கொழும்பு.இப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியின் குழந்தை.பொருளாதார நெருக்கடியைத் தீர்க்காவிட்டால் அதற்கு எதிர்காலம் இல்லை.சில தசாப்தங்களுக்கு முன்பு இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராகக் காணப்பட்ட ஜேவிபிக்கு இப்பொழுது இந்தியா தொடர்பான அதன் கொள்கைகள் மாறியிருப்பதைக் காட்டவேண்டிய நிர்பந்தம் உண்டு.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.அவர் இங்கு ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்கள் நல்கிய ஆதரவை பாராட்டிப் பேசினார். அதாவது சீனா, புதிய அரசாங்கத்தை எதிர்பார்ப்போடு பார்க்கிறது என்று பொருள்.இந்த எதிர்பார்ப்பானது ஏற்கனவே தனக்குள்ள இந்தியாவின் எதிரி என்ற படிமத்தைப் புதுப்பிக்கக் கூடியது என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெரிகிறது.எனவே பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்காமல் எப்படிப் பொருளாதாரத்தை நிமிர்த்துவது என்பதுதான் அவர்களுக்குள்ள சவால்.அதை நோக்கியே அவர்கள் இந்தியாவை அணுகுவார்கள்.

மேலும் இந்தியாவை அரவணைப்பதன்மூலம் இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவிடம் இருந்து வரக்கூடிய அழுத்தங்களையும் குறைக்கலாம்.

GnxF7arWQAAWPlm-cc-1024x713.jpg

மூன்றாவது தமிழ் நோக்கு நிலை.கடந்த 15 ஆண்டுகளிலும் இந்தியா தமிழர் தொடர்பான அதன் நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் காட்டியிருக்கவில்லை.13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் அல்லது யாப்பில் இருப்பதை அமுல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப் பாடாகக் காணப்படுகின்றது.ஆனால் இந்த கோரிக்கையை இந்தியா கொழும்பிடம்தான் முன்வைக்க வேண்டும். மட்டுமல்ல, இந்தியாவுக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.13ஆவது திருத்தம் என்பது இந்தியாவின் குழந்தை.எனவே கடந்த 15 ஆண்டுகளாக ஏன் அதனை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற கேள்வியை இந்தியா கொழும்பிடமும் தன்னிடமும்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். இலங்கைத் தீவின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் 13ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.ஆனால் கடந்த 38 ஆண்டுகளாக அந்த நிறைவேற்று அதிகாரம் அந்த திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தாமல் தடுப்பதற்குத்தான் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது.அதாவது யாப்புக்கு எதிராகத்தான் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டதோர் அபகீர்த்தி மிக்க யாப்புப் பாரம்பரியத்தை கொண்ட ஒரு நாட்டிடம் திரும்பத் திரும்ப 13ஐ அமுல்படுத்து என்று ஏன் இந்தியா கூறிக் கொண்டிருக்கிறது?

தமிழ் மக்களின் பக்கம் நிற்பதன் மூலம் கொழும்பைப் பகைத்துக் கொள்ள இந்தியா தயாரில்லை?13ஆவது திருத்தம் என்பது இலங்கைத்தீவில் இந்தியாவின் இயலாமையைக் காட்டும் ஒரு குறியீடுதான்.

இந்த விடயத்தில் 13ஆவது திருத்தம் மற்றும் இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு பொருத்தமானது.கடந்த வாரம் இந்தியப் பிரதரைச் சந்தித்தபின் கஜேந்திரகுமார் பின்வருமாறு கூறியிருக்கிறார்…”இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு மட்டும்தான் அதன் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒரு பார்வை;பங்களிப்பு;உரித்து இருக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்று அங்கீகரிக்கின்றோம்…வேறு எந்த நாட்டுக்கும் தங்களுடைய தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் இலங்கையை அணுகும் உரிமையோ,அருகதையோ இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்தினோம்….இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு என்ற அம்சத்தில் இலங்கைத் தீவு இந்தியாவுக்கு மற்றைய நாடுகளை விட முன்னுரிமை வழங்கிச் செயற்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டைக் குறிப்பிட்டோம்….விசேடமாக வடக்கு,கிழக்கில் அந்த உரிமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் என்பதை இந்தச் சந்திப்பில் சொன்னோம்….”

இது முன்னணியின் புதிய நிலைப்பாடு அல்ல. இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பாக முன்னணி தொடர்ச்சியாக இதே கருத்தைத்தான் கூறி வருகிறது.இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கிலான அந்த அணுகுமுறை மிகவும் தெளிவானது; பொருத்தமானது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா தமிழ் மக்களின் பக்கம் நிற்பதன்மூலம் கொழும்பைப் பகைத்துக்கொள்ளத்  தயாரில்லை என்ற செய்தியை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது.ஆனால் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் சீனா எப்பொழுதோ நுழைந்துவிட்டது.அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா 100ஆண்டு குத்தகைக்குப் பெற்றுவிட்டது.கொழும்பில் ஒரு துறைமுக நகரத்தை கட்டியெழுப்பி வருகிறது.

இப்படிப்பட்டதோர் உள்நாடு பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் சூழலின் பின்னணியில் வைத்தே இந்தியப் பிரதமரின் வருகையை விளங்கிக்கொள்ள வேண்டும்

இரு தசாப்தங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் எதிரியாக காணப்பட்ட ஒரு கட்சியானது இப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கௌரவப் பட்டம் வழங்கியிருக்கிறது.அரசியலில் நிரந்தரப் பகைவரும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை.

Gnr76FnXEAAUMDMcc.jpg

GnvUztIXcAAY9oQ-c.jpg

Gn-evHHXcAAijN1-cc.jpg

488887193_24262574006677532_490409229492

488685055_29004431495838596_842525996183

Gn1Qr2IXgAAoB-N-c.jpg

 

ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு சிறீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்துக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது. ஆனால் அதே சீனாதான் ஜேவிபிக்கு கொம்யூனிச புத்தகங்களையும் வழங்கியது.ஜேவிபியின் முதலாவது போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின் சிறை வைக்கப்பட்ட ஜேவிபிக்காரர்களிடம் ஒரு சிறை அதிகாரி என்னென்ன புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.அவர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள்.அநேகமானவை சீன கொம்யூனிச புத்தகங்கள். அந்தப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்த அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே தன் கையில் வைத்திருந்த ரி-56 ரக ரைஃபிளைக் காட்டிச் சொன்னாராம்,”சீனா உங்களுக்கு இந்தப் புத்தகங்களைத் தந்தது, எங்களுக்கு இந்த துவக்கைத் தந்தது” என்று இதுதான் அரசியல்.

அன்றைக்கு சீனா மட்டுமல்ல இந்தியாவும் சிறீமாவோவின் அரசாங்கத்துக்கு ஆதரவாக நின்றது. இது நடந்தது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு. அதன்பின் இந்திய-இலங்கை உடன்படிக்கை கைச்சாத்தாகிய பின் ஜேவிபி அதன் இரண்டாவது போராட்டத்தைத் தொடங்கியது.அது முழுக்க முழுக்க இந்திய படையினரின் பிரசன்னத்துக்கு எதிரானது.அந்த இரண்டாவது போராட்டத்தோடு ஜேவிபியின் ஆயுதப்போராட்ட முனைப்பு முற்றாக நசுக்கப்பட்டது.

இவ்வாறு சீன இந்திய உதவிகளோடு நசுக்கப்பட்ட ஒரமைப்பு. இப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கௌரவப் பட்டத்தை வழங்குகிறது. இதுதான் அரசியல். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தரப் பகைவர்களும் இல்லை.

சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு.பெரிய இனம். ஆனால் ராஜதந்திரம் என்று வரும் பொழுது விவேகமாக முடிவுகளை எடுக்கின்றார்கள்.அரசற்ற சிறிய இனமாகிய தமிழ் மக்களும் விவேகமான முடிவுகளை எடுக்கவேண்டும்.

விவேகமான முடிவென்பது 13ஐ ஏற்றுக்கொள்வதோ அல்லது “எக்கிய ராஜ்ஜிய”வை ஏற்றுக்கொள்வதோ அல்லது நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டத்தைக் கைவிடுவதோ அல்ல. உடனடியாகவும் முதலாவதாகவும் ஒரு முடிவை எடுக்க வேண்டும்..கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் கொடுத்த வெற்றி நிரந்தரமானது அல்ல என்பதனை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டும்.facebook_1744029208540_73149886854967425மோடியின் வருகையையொட்டி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் ஆங்கிலத்தில் முகநூலில் பின்வருமாறு எழுதியிருந்தார்….”தென்னாசியாவின் சக்தி மிக்க தலைவர்கள். ஒருவர் தனது சிறுபிராயத்தில் புகையிரதத்தில் தேநீர் விற்றவர்.மற்றவர் புகையிரதத்தில் சிற்றுண்டிகள் விற்றவர். இருவருமே ஒரு காலம் அரசியல் இயக்கங்களின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.ஒன்று ஆர்.எஸ்.எஸ்.அதிலிருந்து பிஜேபி எழுச்சி பெற்றது.மற்றது,ஜேவிபி. அதிலிருந்து என்பிபி எழுச்சி பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகள் வேறு வேறாக இருந்தாலும், இரண்டு கட்சிகளுமே ஊழலுக்கும் சுதந்திரத்திற்கு பின் தத்தமது நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய உயர் குழாத்துக்கும் எதிரானவை.இந்த இரண்டு ஐதீகப்பண்புமிக்க தலைவர்களும் தென்னாசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடும்.”

இப்படிப்பட்ட பிராந்தியக் கனவு ஏதாவது தேசிய மக்கள் சக்தியிடம் இருக்குமாக இருந்தால் முதலில் அவர்கள் உள்நாட்டில் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் முழு இலங்கைக்கும் பாதுகாப்பு இல்லை மட்டுமல்ல இந்தப் பிராந்தியத்துக்கும் பாதுகாப்பு இல்லை என்பதுதான் கடந்த 15 ஆண்டுகால அனுபவமாக உள்ளது.

https://www.nillanthan.com/7302/

வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபயத்தை இந்தியா கைவிட்டுள்ளது : கலாநிதி தயான் ஜயத்திலக்க

2 months 1 week ago

12 APR, 2025 | 12:23 PM

image

- ஆர்.ராம்

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு சம்பந்தமாகவோ ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவோ உத்தியோக பூர்வமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் கவனம் செலுத்தப்படவில்லை.

இந்த நிலைமையானது வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபாயத்தினை இந்தியா கைவிட்டுள்ளது என்பதற்கான மிகப்பெரிய சமிக்ஞையாகவுள்ளது என்று இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமிழ்த் தலைவர்கள் பல தருணங்களில் இந்தியாவின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றாது பல்வேறு சந்தர்ப்பங்களை கைவிட்டு வரலாற்றுத் தவறிழைத்ததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் சம்பந்தமாகவும் தமிழ்த் தலைமைகளின் சந்திப்புத் தொடர்பாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகைக்கும் 2025இல் நரேந்திர மோடியின் வருகைக்கும் இடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1987இல் இந்தியப்படைகள் நிலை கொண்டிருக்கையில், மிராஜ் விமானங்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கையில் தான் ராஜீவ் காந்தியின் வருகை நிகழ்ந்தபோது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் அச்சமடைந்த நிலையில் இருந்தார்.

ஆனால், இந்திய எதிர்ப்புவாதக் கொள்கையில் செயற்பட்ட ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற தருணத்தில் பிரதமர் மோடியின் வருகை நிகழ்ந்திருக்கின்ற நிலையில் அது அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றிருக்கின்றது.

அதேபோன்று ராஜீவ் காந்தியின் வருகையானது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்தியதாக இருந்தது. குறிப்பாக, தமிழ் மக்களின் பூர்வகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாகவே இருந்தது.

ஆனால், பிரதமர் மோடியின் விஜயமானது, ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தை மையப்படுத்தியதாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் எதிர்கால பொருளாதார மூலோபயத் திட்டங்களை மையப்படுத்தியதாகவே உள்ளது.

அதனடிப்படையில் தான் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தவகையில் பார்க்கின்றபோது, இந்தியா தற்போது பொறுமையிழந்துவிட்டது என்றே கொள்ளவேண்டியுள்ளது. ஏனென்றால், பிரதமர் மோடி தனது இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசியப் பிரச்சினை தொடர்பிலோ, அதிகாரப்பகிர்வு தொடர்பிலோ உத்தியோக பூர்வமாக எந்த விடயங்களையும் குறிப்பிடவில்லை.

அவர் ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகக் கூட நேரடியாகக் கூறாது, இலங்கையின் அரசியலமைப்பு முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்கின்றார். மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களே. ஏனென்றால் இவர்கள் 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டு மாகாண சபை முறையில் பங்கேற்கவில்லை. குறிப்பிட்ட விடுதலை இயக்கங்கள் மட்டுமே பங்கேற்றன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளும் பங்கேற்கவில்லை.

அதன்பின்னர் புலிகளின் தனிநாட்டுக் கொள்கையை தலைவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு பயணித்தார்கள்.

பிரபாகரனின் தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் அங்கீகரித்தார்கள். போரின் முடிவின் பின்னர் அவர்கள் தங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக மீளாய்வு செய்வில்லை.

மாறாக, டில்லி வழங்கிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளாது அவர்களுக்கு கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தாது வரலாற்றுத் தவறிழைத்தார்கள்.

டில்லியை விடவும் புலம்பெயர் தமிழர்களையும் மேற்குலகத்தையும் அபரிதமாக நம்பிக்கொண்டு 13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட விடயங்களை முறையாக கையாளாது அவற்றை ஒற்றையாட்சிக்குள் பெறமுடியாதென நிராகரித்துவிட்டு, பொறுப்புக்கூறல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், வெளிநாட்டு விசாரணையாளர்கள் என்று நடைமுறைச்சாத்தியமற்ற விடயங்களின் மீது காலத்தினைக் கடத்தினார்கள்.

இதன் விளைவாக, தமிழ் மக்களுக்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த இந்தியாவுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கமான இடைவெளி அதிகரித்து விட்டது.

அந் நிலைமையானது, நான்கு தசாப்த இந்தியாவின் காத்திருப்புக்குப் பின்னர் ‘பொருளாதாரத்தினை மட்டும் மையப்படுத்தியதாக’ தனது மூலோபாயத்தினை மாற்றியமைத்துள்ளது.

அதனை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் நன்கு புரிந்துகொண்டுள்ளது. இந்த நிலைமையானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானதொரு சூழலாகும். ஏனென்றால், அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டை கையிலெடுத்தால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.

அவ்விதமானதொரு சூழல் ஏற்பட்டால் பிரதமர் மோடியின் அடுத்த இலங்கைக்கான பயணத்தின்போது அவர் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கூடக் கோரிக்கை விடுக்காத நிலைமைகளே ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

ஆகவே, தற்போதைய சூழலை தமிழ்த் தலைவர்கள் புரிந்துகொண்டு தமது பழைய சித்தாதந்தங்களை கைவிட்டு நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்காக டில்லியுடன் மீள் ஊடாட்டத்துக்குச் செல்ல வேண்டியது அவசியமாகின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/211882

திருடப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு

2 months 2 weeks ago

திருடப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு

மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இம்முறை பல வரலாற்றுப் பதிவுகளும் இடம்பெறவுள்ளன.அதாவது, உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகளவான அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள்  போட்டியிடும் தேர்தல்,அதிகளவான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட தேர்தலாகும்.

நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 339 உள்ளூராட்சி சபைகளுக்கு இத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 8,300க்கு மேற்பட்ட ஆசனங்களுக்காக 80,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் சார்பில் களமிறங்குகின்றனர்.  

இதில், சில கூட்டணிகள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டபோதிலும், பல கூட்டணிகளின் பேச்சுக்கள் தோல்வியடைந்து கூட்டணி முறிவுகளும் இடம்பெற்றுள்ளன. இதில் பிரதான சில தமிழ்த் தேசிய கட்சிகள் தேர்தல் முடிவடைந்த பின்னர் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அப்போது ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்த ஆட்சியமைப்பது தொடர்பில் பேசலாம் என்ற திட்டத்துடனும் உள்ளன.

இவ்வாறாக வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற அமைக்கப்பட்ட கூட்டணிகளில் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற கூட்டணி விசித்திர கூட்டமைப்பாக அமைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற கூட்டணியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்

சிவநேசதுரை சந்திரகாந்தன் (தற்போது சிறையில்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி,  கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (ஆட்கடத்தல்கள், படுகொலைகள் குற்றச்சாட்டுக்களினால் பிரிட்டன் அரசால் தடை விதிக்கப்பட்டவர்) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் அமல் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (தற்போது சிறையில்) தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகம் ஆகிய மூன்று கட்சிகள்  உள்ளன.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாகவுள்ள பிள்ளையான், கருணா அம்மான் அடுத்தவரான சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய இந்த மூவரின் மீதும் தமது தலைமைகளை காட்டிக் கொடுத்தல், தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்தல், குற்றச்சாட்டுக்களை விடவும் படுகொலைகள் ஆட்கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், கப்பம் கோரல்கள், மணல் கடத்தல்கள், காணி பிடிப்புக்கள், இலஞ்சம் கோரல், ஊழல் மோசடிகள்   உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இதில் பிள்ளையான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக 2015 அக்டோபர் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிள்ளையான் சிறையில் இருந்தவாறே 2020 பாராளுமன்றத்  தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி  பெற்று   பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.  இதனையடுத்து, 2020 நவம்பர் 24 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட  அவர் கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்தில்  இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், பிள்ளையான் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டுக்களும் உள்ளன.  உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் வாக்குமூலங்களையும் அளித்துள்ளார். இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நேர்மையாக நடைபெறுமாகவிருந்தால் பிள்ளையான் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என்று கூறப்படுகின்றது.

இதற்கிடையில் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்  கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை (08) இரவு  பிள்ளையான்  கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால்   மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..

அடுத்தவரான கருணா அம்மான், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004இல் வெளியேறி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். அரசின் ஒட்டுக்குழுவானார். இதற்கிடையில் கருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர், மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை அடுத்து,  2007 அரசினால் போலிக் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு, ரகசியமாக லண்டனுக்குச் சென்ற கருணா அம்மான், போலி கடவுச்சீட்டு வைத்திருந்ததாக அங்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு   மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

 இந்நிலையில், அரசியலில் நுழைந்த அவர்,  2008 அக்டோபர் 7ஆம் திகதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார். பின்னர், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து, உப தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இவர், 2010 பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர், மக்கள் செல்வாக்கை இழந்த இவர், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தபோதும் அரசியலில் ஒதுங்கியே இருந்தார். இவர் மீது பல்வேறு படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம்  கோரல்கள் உள்ளிட்ட குற்றச் சாட்டுகள் உள்ளன. இவ்வாறான நிலையில்தான் இலங்கையில்  கடுமையான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகக் கருதப்பட்ட இலங்கை இராணுவத்தின்  முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூரியா, ஆகியோருடன் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய கருணா அம்மானுக்கும் பிரிட்டன் அரசு அண்மையில்  தடை விதித்தது.

அடுத்தவர் சதாசிவம் வியாழேந்திரன், தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினரான இவர், 2015 பாராளுமன்றத்  தேர்தலில் புளொட் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு  பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். 2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது, 2018 ஒக்டோபர் 26இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போது பிரதமராகவிருந்த  ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றி, முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்‌ஷவை  பிரதமராக அறிவித்தார்.

இதனையடுத்து, மஹிந்த ராஜபக்‌ஷ தனது பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டி ஏற்பட்டது. அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்‌ஷவின் நியமனத்தினை எதிர்த்த நிலையில், வியாழேந்திரன் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளித்து கட்சி தாவினார். இவருக்கு 

2018 நவம்பர் 2இல் ராஜபக்‌ஷவின் அரசில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.  பின்னர் 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்

இவருக்கு மஹிந்த அரசில்  தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இறுதியாக நடந்த தேர்தலில் போட்டியிட முனைந்தபோதும், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டது.

ஆக, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மையமாக வைத்து ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களாக உள்ளவர்களில் ஒருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க  சிவநேசதுரை சந்திரகாந்தன், கருணா அம்மான் என அழைக்கப்படும்   முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,  அமல் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய மூவரும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவே உள்ளனர்.

அதுமட்டுமல்ல, ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரை முறையற்ற விதத்தில் தமது தேர்தல் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, மேற்படி கூட்டுக்கு எமது அனுமதியோ அல்லது சம்மதமோ இல்லாமல் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரைப் பயன்படுத்தியுள்ளதைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றோம். தொடர்ந்தும் பெயரைப் பயன்படுத்தினால் நீதிமன்றத்தை நாடுவோம் என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உண்மையான தலைவர், தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 15.03.2025 அன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிவனேதுரை சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் தலைமையிலான  தமிழ் மக்கள் வி டுதலைப் புலிகள் கட்சியும் தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டணியை அமைத்துள்ளனர். ஆனால், 2018ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ‘கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின்’ அரசியல் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரிலான அரசியல் கட்சியொன்று தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் தலைமையில் 2018இல் உருவாகி அதற்குத் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கடிதத் தொடர்பாடல்கள் 2019ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, இந்த ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற கூட்டணியின்  தலைவர்களும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களாகவும் சிறைகளில் இருந்தவர்களாகவும் இருப்பவர்களாகவும் ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ம் இன்னொருவரிடமிருந்து திருடப்பட்டதாகவும் உள்ளது.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திருடப்பட்ட-கூட்டமைப்பு/91-355411

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

2 months 2 weeks ago

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

April 7, 2025

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இலங்கை அரசியலில் அண்மைய நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவந்த   சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள்  மற்றும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல், பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை  பாராளுமன்றத்தில் சமர்பிப்பித்த அரசாங்கத்தின் செயல், இரு வாரங்களாக தலைமறைவாக இருந்த இடைநிறுத்தம் செய்யப்பட்ட  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில்  சரணடைந்த பிறகு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை, முன்னாள் இராணுவ தலைவர்கள் சிலர்  மீது பிரிட்டன் விதித்திருக்கும் தடைகள் ஆகியவையே அந்த சம்பவங்களாகும். 

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க பெப்ரவரி மாதம் லண்டனில் வைத்து அல் ஜசீராவின் ‘ஹெட் ரு ஹெட்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல் மார்ச் 6 ஆம் திகதி ஒளிபரப்பானது. தனது அரசியல் அனுபவம்,  அறிவு மற்றும் சாதுரியத்தில் அதீத நம்பிக்கை கொண்டவரான  விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, அவருக்கு விரோதமான சபையோரின் முன்னிலையில் இடம்பெற்ற அந்த நிகழ்ச்சி உண்மையில் பெரிய அனர்த்தமாக போய்விட்டது. அல் ஜசீரா செய்தியாளர்  மெஹ்டி ஹசன் பிறப்பதற்கு முன்னரே தான் அரசியலுக்கு வந்து விட்டதாக அவரிடம் கூறவேண்டிய அளவுக்கு ஒரு நிர்ப்பந்த நிலை விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது பரிதாபமானதாகும். நேர்காணலைப்  பற்றி உள்நாட்டில் விமர்சனம் செய்தவர்களில் அனேகமாக சகலருமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவர் இணங்கியிருக்கக் கூடாது என்றே கூறினார்கள். 

 மெஹ்டி ஹசன் விக்கிரமசிங்கவை நேர்காணல் செய்த விதம் பெருமளவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. கேள்விகளுக்கு பதிலளிப்பவர் தனது பதிலை நிறைவு செய்யவிடாமல் அட்டகாசமான முறையில் குறுக்கீடு செய்வதும் ஒரு எதிரியை நோக்கி கேள்வி கேட்பதைப் போன்ற தொனியில் மூத்த அரசியல் தலைவர்களுடன்  பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய  ஒரு  ஊடகத்துறைச் செயற்பாடாக இருக்க முடியாது. 

இரு மணித்தியாலங்கள் பதிவு செய்யப்பட்ட தனது நேர்காணலில் முக்கியமான பகுதிகளை திட்டமிட்டு நீக்கிவிட்டு அல் ஜசீரா ஒரு மணித்தியாலமே அதை ஒளிபரப்பியதாக விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) யின் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் (1988 — 1990 )  கம்பஹா மாவட்டத்தில் உள்ள  பட்டலந்த பிரதேசத்தில்  இயங்கிய தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை முகாம் தொடர்பாக தொடுக்கப்பட்ட கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி அளித்த நழுவல் போக்கிலான பதில்தான்  இறுதியில்  27 வருடங்கள் பழமையான  பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தூசி தட்டி  பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கத்துக்கு தைரியத்தைக்  கொடுத்தது. 

அல் ஜசீரா நேர்காணல் ஒளிபரப்பாகாமல் இருந்திருந்தால் ஆணைக்குழு அறிக்கை தற்போதைக்கு வெளியில் வந்திருக்குமா என்பது சந்தேகமே. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 1995 செப்டெம்பரில் நியமிக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழு அதன் அறிக்கையை  1998 ஆம் ஆண்டில் அவரிடம் கையளித்தது. ஆனால், அதன் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில்   திருமதி குமாரதுங்கவோ அல்லது அவருக்கு பிறகு ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர்களோ ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. 

ஆனால், ஆணைக்குழு அறிக்கையின் மென்பிரதிகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள்  மத்தியில் ஏற்கெனவே பகிரப்பட்டிருந்தது என்கிற அதேவேளை, விக்கிரமசிங்க தன்னிடம் பட்டலந்த முகாம் பற்றி மெஹ்டி ஹசன் கேட்டபோது ” ஆணைக்குழுவின் அறிக்கை எங்கே ?” என்று பொருத்தமில்லாத வகையில்  பதில் கேள்வி எழுப்பினார். 

கொழும்பில் முன்னாள் பி.பி.சி. செய்தியாளராக பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் ஆணைக்குழு  அறிக்கையின் பிரதி ஒன்றை அவருக்கு காண்பித்தபோது “அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை”  என்று விக்கிரமசிங்க கூறினார்.

பட்டலந்த விவகாரத்தில்  உரக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான வீடமைப்பு தொகுதியை பொலிசார் பயன்படுத்துவதற்கு அனுமதித்ததில்,  அன்றைய கைத்தொழில்துறை அமைச்சர் என்ற வகையில், உரிய நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்று மாத்திரமே தன் மீது அறிக்கையில் குறை கூறப்பட்டிருப்பதாக ஊடக  அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இனிமேல் தான் பட்டலந்த விவகாரம் குறித்து எதுவும் பேசப் போவதில்லை என்று சில தினங்களுக்கு முன்னர் ‘அத தெரண’ வின் ஹைட் பார்க் 24 நேர்காணலில் கூறினார். அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஏப்ரில் 10  திகதியும் பிறிதொரு தினத்திலும் விவாதம் நடைபெறவிருக்கிறது..

ஆணைக்குழுவின் அறிக்கையில் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் ஜே.வி.பி. யினர் செய்த அட்டூழியங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதால் பாராளுமன்ற விவாதத்துக்கு பிறகு எத்தகைய  நடவடிக்கைகளை எடுப்பது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு சிக்கலை எதிர்நோக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரமசிங்கவுக்கு பிரச்சினையைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் அரசாங்கம் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் அவசரம் காட்டியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவரது குடியியல் உரிமைகளை பறிக்க முடியும் என்று கூட அரசாங்க அரசியல்வாதிகள் சிலர் பேசினார்கள். தென்னிலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் குறித்து  விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கையில்  அக்கறை காட்டுகின்ற அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்நாட்டுப்போரின் போது இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பல்வேறு  ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விடயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி. 

உதாரணத்துக்கு கூறுவது என்றால், சர்வதேச சமூகத்தின் நெருக்குதலை அடுத்து  15 பிரத்தியேகமான உரிமைமீறல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2006 ஆம் ஆண்டில் நியமித்த உடலாகம  ஆணைக்குழு அறிக்கை,  போரின் முடிவுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டில் அவர் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை,  காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு 2013 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை,  முன்னைய ஆணைக்குழுக்கள் சகலவற்றினதும் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டில் நியமித்த நவாஸ்  ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவிடம்  கையளித்த அறிக்கை என்று போர்க்கால மீறல்கள் தொடர்பிலான பல அறிக்கைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.

அரசியல் அனுகூலத்துக்காக ‘தெரிந்தெடுத்த முறையில்’ பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையில் எடுத்திருக்கிறது. உரிமை மீறல்கள் என்று வருகின்றபோது பாரபட்சமின்றி முன்னைய சகல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் கவனத்தில் எடுக்கக்கூடிய அரசியல் துணிவாற்றல் அரசாங்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. 

அடுத்ததாக, பொலிஸ்மா அதிபர் தேசபந்து விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர் வீட்டில் இருந்து மூன்று வேளை உணவையும் வரவழைத்துக்கொண்டு விளக்கமறியலில் இருக்கிறார்.  முக்கியமான புள்ளிகள் விளக்கமறியலுக்கு அனுப்பப்படும்போது அவர்களை உடனே  தொற்றிக்கொள்ளும் ஒருவகை  “நோய்” தேசபந்துவை பீடிக்கவில்லை. இன்னமும் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை.  

அவரை பதவி நீக்குவதற்கான பிரேரணையை ஆளும் கட்சியின் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள். அரசியலமைப்பு பேரவை  அங்கீகாரம் வழங்கியதை அடுத்து தேசபந்துவை பொலிஸ்மா அதிபராக  ஜனாதிபதி விக்கிரமசிங்க நியமித்தார். அந்த அங்கீகாரத்தை வழங்குவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சபாநாயகர் நடந்துகொண்ட முறை குறித்து சர்ச்சை கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால்,  அவரது நியமனத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் ஒன்பது அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் அவர் பொலிஸ்மா அதிபராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் பொலிஸ்மா அதிபராக பதவியில் இருப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது என்பதால் அவருக்கு எதிராக பூர்வாங்க சான்றுகள் இருப்பதாகவும் அந்த பிரேரணையில் கூறப்பட்டிருக்கிறது.

தேசபந்து தனது நடத்தைகள் மூலமாக பொலிஸ்மா அதிபர் பதவிக்கும் பொலிஸ் திணைக்களத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாகவும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குறிப்பிட்ட சில நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றும் பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 23  குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார்கள். குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கு சபாநாயகர் குழுவொன்றை நியமித்து அதன் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அவர்  அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதே நடைமுறை.   

ஆனால், தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பிரேரணை ஏப்ரில் 8, 9 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பொலிஸ்மா அதிபர்  ஒருவர் இரு வாரங்களாக தலைமறைவாகி இருந்து இறுதியில் ஆடம்பர வாகனம் ஒன்றில் வந்து  நீதிமன்றத்தில் சரணடைந்தது உலகிலேயே இலங்கையில்தான் முதற் தடவையாக நடந்திருக்கிறது எனலாம்.

இது இவ்வாறிருக்க, கடந்த வாரம் இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவ தலைவர்களுக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்கு தளபதி கருணா அம்மான்  என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் எதிராக பிரிட்டன் தடைகளை விதித்திருக்கிறது. 

ஆயுதப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோரே தடைகள் விதிக்கப்பட்ட இராணுவ தலைவர்களாவர். பிரிட்டனுக்கான பயணத்தடையும் சொத்துக்கள் முடக்கமும் இந்த தடைகளில் அடங்கும். “உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகக்களுக்கு பொறுப்புக்கூற வைத்தல் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய இராச்சிய  அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருக்கிறது” என்று மார்ச் 24 ஆம் திகதி தடைகள் விதிப்பை  அறிவித்த  வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இணையமைச்சர் டேவிட் லாமி கூறினார். 

 வெளிநாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக  இவ்வாறு தடைகளை விதிப்பது இதுதான் முதற்தடவை அல்ல. ஏற்கெனவே சவேந்திர சில்வாவுக்கு எதிராக 2020 பெப்ரவரியில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகளை விதித்தது. அதன் பிரகாரம் அவரும் உடனடிக் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியாது. 

அதே போன்றே முன்னாள் ஜனாதிபதிகளான சகோதரர்கள் மகிந்த ராஜபக்சவுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் 2023 ஜனவரி 10 ஆம் திகதி கனடா அதன் விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடைகளை விதித்தது.

தற்போது மூன்று இராணுவ தலைவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை ஆட்சேபித்திருக்கும்  இலங்கை வெளியுறவு அமைச்சு வெளிநாடுகளினால் இவ்வாறாக ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கச் செயன்முறைகளுக்கு உதவப்போவதில்லை,  மாறாக அந்த செயன்முறைகளை சிக்கலாக்கும் என்று கூறியிருக்கிறது.  இது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை  வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்  கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக்கிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். 

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான  உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் செயன்முறைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது என்றும்  கடந்த காலத்தின் எந்தவொரு மனித உரிமைமீறலும் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாகவே கையாளப்பட வேண்டும் என்றும் ஹேரத் கூறியிருக்கிறார். 

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான  செயன்முறைகளைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடு முன்னைய அரசாங்கங்களின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபட்டதாக அமையப்போவதில்லை.  சில வாரங்களுக்கு முன்னர்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஹேரத் இதை திட்டவட்டமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் வெளிநாடுகள் தடைகளை விதித்த முன்னைய சந்தர்ப்பங்களில் கிளம்பியதைப் போன்ற கண்டங்கள் சிங்கள தேசியவாத சக்திகளிடமிருந்து தற்போதும் கிளம்பியிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்த இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர்களை ஐக்கிய இராச்சியம் எவ்வாறு தண்டிக்க முடியும் என்று மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியிருக்கிறார். 

வழமை போன்று விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் பிரிட்டனை கடுமையாக கண்டனம் செய்திருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னரான மக்கள் கிளர்ச்சியையும் கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களையும் அடுத்து பெரும் பின்னடைவைக் கண்ட தேசியவாத சக்திகள் மீண்டும் அரசியலில் தலையெடுப்பதற்கு இத்தகைய சந்தர்ப்பங்களை பயன்படுத்தும் என்பது தெரிந்ததே. முன்னாள் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடைகளை விதித்த பிரிட்டனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையாக கண்டனம் செய்யவில்லை என்று விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருக்கிறார். 

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் கூட அண்மைக்காலமாக சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலக நாடுகள் மனித உரிமைகள்  விவகாரத்தில் இலங்கையுடன் பாரபட்சமான முறையில் நடந்துவருவதாக குற்றம் சாட்டிவருகிறார். மத்திய கிழக்கில் காசா போர் மற்றும் உக்ரெயின் போரைப் பொறுத்தவரை ஒரு விதமாகவும் இலங்கை விவகாரத்தில்  வேறு வீதமாகவும் மேற்குலகம் இரட்டைத்தனமாக செயற்படுவதை சுட்டிக்காட்டும் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை வெளியேற வேண்டும் என்று  வலியுறுத்துகிறார்.  டொனால்ட் ட்ரம்ப் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற முடியுமானால் இலங்கையினால் ஏன் முடியாது என்று  அவர் கேள்வியும்  வேறு எழுப்புகிறார். 

அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக வெளிநாடுகள் விதித்த முன்னைய தடைகளினால்  இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதில் எந்தளவுக்கு  நிர்ப்பந்திக்க முடிந்தது?  என்ற ஒரு கேள்வி இருக்கிறது. தேசியவாத சக்திகள் மீண்டும் தலையெடுப்பதற்கான வாய்ப்புக்களை தோற்றுவிப்பதை தவிர இந்த தடைவிதிப்புகளினால் வேறு எதையும் உருப்படியாகச் செய்ய முடியாமலும் போகலாம். ஏனென்றால், இலங்கையில் எந்தவொரு அரசாங்கமும் உள்நாட்டுப் போரின்போது உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினர் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நெருக்குதல்கள் அதிகரிக்குமானால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மேலும் தீவிரமான தேசியவாத நிலைப்பாட்டை நோக்கிச் செல்லக்கூடிய சாத்தியமே இருக்கிறது. 

ஐக்கிய இராச்சியம்  கடந்தவாரம்  விதித்த தடைகளை தமிழ் அரசியல் கட்சிகள் வழமை போன்று வரவேற்றிருக்கின்றன. கடந்த பதினாறு வருடகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தமிழர்கள் நெடுகவும் கானல் நீரை விரட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான் விதியோ என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

https://arangamnews.com/?p=11926

மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?

2 months 2 weeks ago

மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?

April 7, 2025

மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?

— கருணாகரன் —

உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் அரசியற் கூட்டுகள் சில புதிதாக உருவாகியுள்ளன. இந்தக் கூட்டுகளின் பிரதான நோக்கம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதாகும். இரண்டாவது, தமிழ்த்தேசிய அரசியலை அல்லது பிராந்திய அரசியலை (சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics) மற்றும் புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) மேலும் தொடர்வது. பிராந்திய அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலமே அரசியல் அரங்கில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை. 

இதற்காக அவை தமது கொள்கை (அப்படி ஏதேனும் இருந்தால்) கோட்பாடு, உடன்பாடு, முரண்பாடு எல்லாவற்றையும் கடந்து கூட்டு வைத்துள்ளன; அணி சேர்ந்துள்ளன.

1.      தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடியில் இயங்கும் அதிதீவிர நிலைப்பாட்டையுடைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி ‘தமிழ்த்தேசியப் பேரவை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸோடு  ஸ்ரீகாந்தா – சிவாஜிலிங்கம் இரட்டையர்களின் தமிழ்த்தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர் தவராஜாவின் ஜனநாயகத் தமிழசுக் கட்சி, ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் மற்றும் சாவகச்சேரி அருந்தவபாலன், புங்குடுதீவு நாவலன் எனச் சில உதிரியாட்களின் அணி  என இணைந்துள்ளன. 

2.      ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இதில் ஏற்கனவே உள்ள ஈ.பி.ஆர். எல்.எவ், புளொட், ரெலோ, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடு புதிதாக இணைந்திருப்பது முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியாகும். ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவையும் இந்தக் கூட்டில் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஸ்டவசமாக அவை தனித்தே நிற்கும்படியாகி விட்டது. 

3.      கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு. இதில் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சதாசிவம் வியாழேந்திரனின் தமிழர் முற்போக்குக் கழகம் ஆகியவை 15. 03. 2025 இல் ஒரு உடன்படிக்கையைச் செய்து இணைந்திருந்தன. பின்னர் 22.03.2025 அன்று கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இந்தக் கூட்டில் இணைந்துள்ளது. ஆனாலும் இந்தக் கூட்டுக்கு முன்னோடியாக இருந்தது, கிழக்குத் தமிழர் ஒன்றியமாகும். 2018 இல் செங்கதிரோன் என்றழைக்கப்படும் த. கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த. சிவநாதன் ஆகியோர் இணைந்து கிழக்கின் சமூக,  பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்காக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினை உருவாக்கினர். இதனுடைய அரசியற் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் இணைந்து  கொள்ளுமாறு அப்போது சம்மந்தப்பட்ட தரப்பினரால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் கருணா அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பைப் புறக்கணித்தவர்கள் இப்பொழுது அதே பெயரில் ஒரு கூட்டமைப்பை பிரகடனப்படுத்தியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. 

இப்படி ஒவ்வொரு கூட்டுக்கு உள்ளும் புறமுமாகப் பல சங்கதிகள் உண்டு. எப்படியோ வழமையைப்போல தேர்தற்காலத் திருவிழாவின் ஓரம்சமாகத் தமிழ்க் கட்சிகளின் அரசியற் கூட்டுகள் இந்தத் தடவையும் நிகழ்ந்திருக்கின்றன. இதொன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனாலும் ஆச்சரியமாக இருப்பது, இந்தக் கூட்டுகளின் பின்னாலுள்ள சில விடயங்கள்.

1.      தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடியில் இயங்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இதுவரையிலும் வேறு எவரோடும் கூட்டு வைத்துக் கொள்ளாமல் தன்னைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தது. அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றையும் முன்னணி துரோகிப் பட்டியலில் தள்ளி விட்டுத் தான் மட்டுமே சுத்தமான தங்கம் என்று தன்னைப் புனிதப்படுத்தி முயற்சித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது இதிலிருந்து படியிறங்கி தான் ஒதுக்கி வைத்த தரப்புகளோடு அரசியற் கூட்டொன்றை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணிக்கு தமிழ்த்தேசியப் பேரவை என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், தேசிய மக்கள் சக்தி வடக்குக் கிழக்கில் வெற்றியடைவதைத் தடுப்பதும் ஏனைய தமிழ்த்தரப்புகளை விட, தமிழ்க் காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதுமாகும். பாராளுமன்றத் தேர்தலில் ஒரேயொரு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் கட்சியாக (தரப்பாக) தமிழ்க் காங்கிரஸ் இருப்பதால், அரசியல் அரங்கில் முதன்மையிடத்தைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் கஜேந்திரகுமார். இதற்காகவே அவர் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுவதற்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தரப்புகளை ஒருங்கிணைத்து, அதற்குத் தலைமை தாங்குவதற்கு முயற்சித்தார். அதற்காகவே சிறிதரனின் வீடு தேடிச் சென்றதும் பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானத்துடன் பேச்சுகளை கஜேந்திரகுமார் நடத்தியதுமாகும். ஆனாலும் கஜேந்திரகுமாரின் கனவுத்திட்டம் உருப்படாமல் சுமந்திரனால் சமயோசிதமாகத்  தடுக்கப்பட்டு விட்டது. இதையும் நிரப்பி, தன்னை எப்படியாவது முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக விலக்கி வைத்த கனிகளையே புசிக்கத் தொடங்கியிருக்கிறார் கஜேந்திகுமார். 

இதுவரையிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தன்னைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்றே அடையாளப்படுத்தி வந்தது. ஆனாலும் முன்னணியைப் பதிவு செய்யாமல் காங்கிரஸையே தேர்தலுக்குப் பயன்படுத்தி வந்தார் கஜேந்திரகுமார். காரணம், காங்கிரசுக்கு நீண்டகால அரசியற் பாரம்பரியம் உண்டு என்பதோடு கஜேந்திரகுமாரின் பேரன் ஜீ.ஜீ.பொன்னலம்பலம் உருவாக்கிய கட்சி. அதற்குப் பிறகு கஜேந்திரகுமாரின் தந்தை குமார் பொன்னம்பலம் தலைவராக இருந்தார் என்று ஒரு குடும்பப் பாரம்பரியமும் அதற்குண்டு என்பதேயாகும். ஆகவேதான் முன்னணி என்ற பெயரைத் தமிழ் மக்களின் அரசியலுக்கான ஒரு முகமூடியாகப் பயன்படுத்திக் கொண்டே காங்கிரஸில் கட்சியின் நடவடிக்கைகளை வலுவாக மேற்கொண்டு வந்தார் கஜேந்திரகுமார். அதாவது குடும்பத்தின் அரசியல் அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும் இழக்காமல் பேணுவதே முதன்மை நோக்கமாக இருந்தது.

இப்பொழுது இதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன், அருந்தவபாலன், தவராஜா எல்லோரும் ஒருங்கிணைந்து உதவுகிறார்கள். 

இவர்கள் காங்கிரஸை நெருங்கக் காரணம், தமிழ் மக்களுடைய சமூக, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்காகவோ நலனுக்காகவோ தமிழ்மக்களைப் பாதுகாப்பதற்காகவோ அல்ல.  தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியை – அதனுடைய வெற்றியைத் தடுப்பதற்காகவேயாகும். 

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியானது, தமிழ்த்தேசியக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளையெல்லாம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் தவிர்க்க முடியாமல் முடிந்தளவுக்கு விட்டுக் கொடுப்புகளோடு, இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அரசியற் கூட்டுகளை உருவாக்க வேண்டிய நிலை இந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வகையிற்தான் முன்னணியின் அரசியற் கூட்டும் அமைந்திருக்கிறது. ஆனால், இதற்கு கஜேந்திரகுமார் கொடுக்கும் விளக்கம்தான் சிரிப்பூட்டுகிறது. கொள்கை வழியில் விட்டுக் கொடுப்புகளற்ற அணியாகத் தம்முடைய தமிழ்த்தேசியப் பேரவையே உள்ளதால், கொள்கையை ஆதரிக்கும் மக்கள் தமக்கே – தமது கூட்டுக்கே ஆதரவழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒன்றும் புதியதோ ஆச்சரியமானதோ  அல்ல. அது ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்வார்களே. அதுதான். அதாவது ஏட்டுச்சுரைக்காயில் கறியை வைக்க முடியாது. ஆகவே நடைமுறைக்குப் பொருந்தாத கற்பனாவாதக் கருத்தியலில் தன்னைக் கட்டி வைத்திருக்கும் தமிழ்க் காங்கிரஸ் – கஜேந்திரகுமார் அணி, இலங்கைத்தீவின் யதார்த்தத்துக்கு முரணாகச் சிந்திக்கும் அரசியற் கட்சிகளில் ஒன்றாகும். அதிதீவிரவாத நிலைப்பாடே இதனுடைய அடிப்படையாகும். இதைப்போன்ற சிங்களக் கட்சிகளும் உண்டு. உதாரணமாக விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெலஉறுமய போன்றவை. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப்போராட்டத்துக்கும் தீர்வுக்கும் எந்த வகையிலும் பொருத்தமற்ற – நடைமுறைச் சாத்தியங்களற்ற அரசியல் நிலைப்பாட்டைத் தன்னுடைய தலையில் சுமந்து கொண்டிருக்கும் தமிழ்க் காங்கிரஸோடு, ஏனைய கட்சிகளும் அணிகளும் அரசியற் கூட்டுக்கு இணங்கியிருப்பது ஒரு வகையில் ஆச்சரியமானதே. முன்னணி படியிறங்கியதற்குக் காரணம், தன்னுடைய அரசியலை எந்த வகையிலாவது பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயேயாகும்.

ஆனால், இலங்கைத்தீவின் யதார்த்தமோ அதிதீவிர நிலைப்பாட்டையும் இனவாதத்தையும் விட்டு விலகும் தன்மையைப் கொண்டுள்ளது என்பதால்தான் வடக்குக் கிழக்கு, மலையகம் உள்பட நாடுமுழுவதிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியைப் பெறக் கூடியதாக இருந்தது. அதாவது சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics), புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) போன்றவற்றின் தேவையை அல்லது அதனுடைய போக்கை மக்கள் விட்டு விலகிச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர் எனலாம். இந்த இரண்டு வகையான அரசியலினாலும் குறித்த தமிழ், முஸ்லிம்,மலையகச் சமூகங்கள் பெற்றுக் கொண்டதை விட இழந்தது அதிகம் என்பதால்,அவை வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், அதற்காக இந்தச் சமூகங்களின் அக – புற அரசியல் பிரச்சினைகளை தேசிய மக்கள் சக்தியோ அல்லது தற்போதையை அரசாங்கமோ முழுமையாகத் தீர்த்து வைக்கும் என்றுமில்லை. எனிலும் மக்கள் வேறு வழியின்றி வேறு வகையான தெரிவுகளுக்கே முயற்சிக்கிறார்கள். இதை எப்படியாவது தடுத்து, மறுபடியும்  சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics), புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) போன்றவற்றிற்குள் திணித்து விடுவதற்கே கஜேந்திரகுமார் போன்றவர்கள் முயற்சிக்கிறார்கள். இதில் அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, நாவலன், அருந்தவபாலன், ஐங்கரநேசன், கஜேந்திரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் எப்போதும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்களேயாகும். ஆனால், இது வடக்கிற்குள்தான். வடக்கிற்கு வெளியே இப்படித் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர் என்றால், அது அரியநேத்திரன் மட்டும்தான். இந்த அணியில் இன்னொருவர் மட்டும் இதுவரையில் சேராமல் இருக்கிறார். அது சிவஞானம் சிறிதரன். தமிழரசுக் கட்சியிலிருந்து சிறிதரன் வெளியேறும் நிலை வந்தால் நிச்சயமாக அவர் இந்தக் கூட்டில்தான் சேருவார். காரணம், அவரும் ஒரு கற்பனாவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றவர். 

ஆக இப்பொழுது அதிதீவிர தேசியவாதிகளின் அணி தமிழ்த்தேசியப் பேரவை என்ற கூட்டில் இணைந்துள்ளது. இதனை மக்கள் எப்படி நோக்கப்போகிறார்கள்? எவ்வாறான ஆதரவு  இந்தக் கூட்டுக்கு எதிர்காலத்தில் கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே தமிழ் அரசியலின் எதிர்காலமும் இலங்கைத்தீவின் எதிர்காலமும் இருக்கப்போகிறது. இப்போது இந்தக் கூட்டுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒரு உறுப்பினரை மட்டும் கொண்டுள்ளது. அது காங்கிரஸைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமாகும்.

2.      ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியற் கூட்டாகும். ஈ.பி.ஆர். எல்.எவ், புளொட், ரெலோ, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடும்  புதிதாக இணைந்திருப்பது முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியாகும். இவை அனைத்தும் கடந்த கால ஆயுதப்போராட்ட அரசியலோடு ஒரு வகையில் சம்மந்தப்பட்டவை அல்லது அந்தப் பின்னணியைக் கொண்டவையாகும். முன்னணியின் தலைமையிலான கூட்டு, அதிதீவிரநிலைப்பாடும் முழுமையான மிதவாதப் பின்னணியைக் கொண்டது என்றால், இது ஆயுதப்போராட்ட அரசியலை வரலாறாகக் கொண்டது. ஆனால், ஒரு சிறிய வேறுபாடு இந்தக் கூட்டிற்கு உண்டு. அது என்னவென்றால், இது யதார்தத்த்தை – நடைமுறையைக் கவனத்திற் கொண்ட கூட்டாகும். அதாவது ஆயுதப்போராட்ட அரசியல் அனுபவத்தின் வழியாகவும் மிதவாத அரசியற் போராட்டத்தின் அனுபத்திற்கூடாகவும் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட தரப்பாகக் காணப்படுகிறது. ஆனால், இந்த அணிக்குப் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்புரிமையே உண்டு. ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதன் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.  

உள்ளுராட்சி மன்றத் தேர்தலிற்கான இந்தக் கூட்டின் வேட்புமனுக்கள் அதிகமாக நிராகரிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கூட்டின் அரசியல் சிக்கலுக் குள்ளாகியுள்ளது. இந்தக் கூட்டின் தலைக்குள்ளும் இருப்பது தேசிய மக்கள் சக்திக்கு எதிரான சிந்தனையே. கூடவே தமிழ்த் தேசியப் பேரவையுடனும் இது மோதக் கூடிய அடிப்படைகளையும் இயல்பையும்  கொண்டுள்ளது. 

கூட்டுகளுக்கு எதிராகத்  தனித்த நிற்கும் தரப்பு. இலங்கைத் தமிழரசுக் கட்சியே இதுவாகும். தேசிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசியப் பேரவை என்ற கஜேந்திரகுமார் அணி மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக தன்னை நிறுத்தியிருக்கும் தனித் தரப்பாக இதை  நோக்கலாம். வடக்குக் கிழக்கில் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிராந்தியக் கட்சியும் இப்போது இதுதான். ஆகவே உள்ளுராட்சித் தேர்தலில் இதனுடைய செல்வாக்கு கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அது எந்தளவுக்கு இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அதனை அந்தக் கட்சியின் பேச்சாளரும் பதிற் செயலாளருமான திரு. ஆபிரகாம் சுமந்திரன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அதாவது NPP  அலை இன்னும் ஓயவில்லை. அதற்குள்தான் நாம் வெற்றியைப் பெற வேண்டியுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை யாரும் பெறப்போவதில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் தம்மை – தமிழரசுக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று தான் நம்புவதாக – எதிர்பார்ப்பதாக. 

ஆனால், தமிழரசுக் கட்சி என்பது எப்போதோ காலாவதியாகிப்போன ஒன்று. அதற்கு உயிரூட்ட முயற்சிப்பது இறந்த உடலுக்கு saline ஏற்றுவதைப்போன்றதாகும். அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.

ஆக, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்குக் கிழக்கில் தேசிய மக்கள் சக்தியோடு தமிழ்க் கட்சிகள் மோதப்போகின்றன. அதைப்போலத் தமிழ்க்கட்சிகளோடு தேசிய மக்கள் சக்தி மோதப்போகிறது. இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தியோடும் ஏனைய தமிழ்த் தரப்புகள் ஒவ்வொன்றும் மோதவுள்ளன. ஆக கடுமையான ஒரு போட்டிக்களமாகவே இருக்கப்போகிறது வடக்குக் கிழக்கின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தற்களம்.

மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?

https://arangamnews.com/?p=11923

வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கைது செய்யக்கூடாதா?

2 months 2 weeks ago

07 APR, 2025 | 04:14 PM

image

டி.பி.எஸ். ஜெயராஜ்

பாகம் 1

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வார இறுதி இலங்கை விஜயம் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமைந்ததாக பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது  ஏப்ரில் 4 வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரில் 6 ஞாயிற்றுக்கிழமை வரையிலான அவரின் விஜயத்தின் முக்கிய அம்சங்களாக  இரு நாடுகளினதும் தேசிய பாதுகாப்புக்கு இடையிலான பிணைப்பின் தன்மையை அங்கீகரிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு  தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கை மக்களின் சார்பில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட  'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண ' விருது ஆகியவை அமைந்தன.

இணக்கபூர்வமான ஒரு சூழ்நிலையில் முரண்பாட்டுக்குரியதாக அமைந்தது வடபகுதி கடற்பரப்பிற்குள் பெரும் எண்ணிக்கையில்  அத்துமீறிப் பிரவேசித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிப்பிடிப்பதுடனும் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது போன்ற கெடுதியான நடைமுறைகள் மூலமாக கடல்வாழ் உயிரினங்களை நிர்மூலம் செய்து வருவதுடனும் தொடர்புடைய பிரச்சினை மாத்திரமேயாகும்.

இரு தலைவர்களும் எந்தளவுக்கு இந்த பிரச்சினை குறித்து விரிவாக ஆராய்ந்தார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. ஆனால், அவர்களின் ஊடக அறிக்கைகள் இந்த பிரச்சினை தொடர்பில் வேறுபட்ட மனப்பான்மைகளைக் கொண்டிருப்பதை வெளிக்காட்டின.

இந்த பிரச்சினைக்கு "நிலைபேறான  தீர்வொன்றைக் காண்பதற்கு ஒத்துழைப்பு அணுகுமுறை ஒன்று தேவை என்று திசாநாயக்க வலியுறுத்தினார்." இழுவைப்படகுகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாரதூரமான சேதத்தை தடுத்து  நிறுத்துவதற்கும் சட்டவிரோதமாக  மீன்பிடிப்பதை தடுப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை என்று நாம் கோருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், மறுபுறத்தில் இந்திய பிரதமர் மோடி பெருமளவுக்கு நம்பிக்கையுடனான ஒரு அணுகுமுறையை கடைப்பிடித்தார். இந்த பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்று வர்ணித்த அவர் மனிதாபிமான அணுகுமுறை ஒன்று கடைப்பிடிக்ககப்பட வேண்டும் என்று இலங்கை 

ஜனாதிபதியும் தானும் இணங்கியிருப்பதாக குறிப்பிட்டார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட அவர்களது படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று  அவர் வலியுறுத்தினார்.

அதை தொடர்ந்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்றி  நிறுவன ரீதியான கலந்தாலோசனைகளை தீவிரப்படுத்துவதற்கும் அண்மைய எதிர்காலத்தில் இரு நாடுகளினதும் மீனவர் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு வசதி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டதாக ஊடகங்களுக்கு கூறினார்."இரு தரப்புகளுக்கும் இடையிலான உயர்மட்டங்கள் உட்பட சகல மட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியான ஒரு அம்சமாக இது இருந்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் இரு தரப்புகளினாலும் கணிசமானளவு விரிவாக மீன்பிடிப் பிரச்சினை ஆராயப்பட்டது என்று கூறினார். "இறுதியாக பார்க்கும்போது  இது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை  என்றும் அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை  மீள்பரிசீலனை செய்யமுடியும்  என்றும்  பிரதமர் வலியுறுத்தினார்." 

மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதை பற்றி வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கு இணங்க இந்தியாவினாலும் இலங்கையினாலும் அடையாளபூர்வமான  பரஸ்பர நல்லெண்ண  சமிக்ஞை ஒன்று காண்பிக்கப்பட்டது.

சட்டமா அதிபரினால் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தமிழ்நாடு இராமநாதபுரத்தைச் சேர்ந்த பதினொரு மீனவர்கள் இலங்கையினால் விடுதலை செய்யப்பட்டனர்.  வடபகுதி கடலில் அத்துமிறி மீன்பிடித்தமைக்காக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்திருந்தனர். அதேபோன்றே யாழ்ப்பாணத்தின் குருநகரைச் சேர்ந்த இரு மீனவர்களை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்தனர். சீரற்ற காலநிலை காரணமாக  படகுகள்  திசைமாறி இந்திய கடற்பரப்புக்குள்  சென்றபோது அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

பிரதமர் மோடி -- தமிழ்க் கட்சிகள் சந்திப்பு

இது இவ்வாறிருக்க, வட இலங்கையின் டற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினையை ஏப்ரில் 5 ஆம் திகதி இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒரு தூதுக்குழுவும் கிளப்பியது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்  (புளொட் ) தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் யாழ்ப்பாண மாவடட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமீழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகிய எழுவர் அடங்கிய தூதுக்குழு மோடியைச் சந்தித்தது.

இவர்களது சந்திப்பு தொடர்பாக ' தி இந்து ' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் அனுப்பிய செய்தி பின்வருமாறு ; 

"வட இலங்கையினதும் தமழ்நாட்டினதும் மீனவர்களைப் பாதிக்கும் மீன்பிடிப் பிரச்சினைக்கு தீர்க்கமான முறையில் தீர்வு காணுமுகமாக இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்யவேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைலர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 5, 2025) வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

"பாக்குநீரிணையில் வளங்களுக்காக நீண்டகாலமாக நிலவிவரும் இந்த தகராறு குறித்து கவனத்துக்கு கொண்டுவந்த இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் போரினால் பாதிக்கப்பட்ட வட இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான பாதிப்புக்களையும் பாக்குநீரிணையில் கடல்சார் சூழல்தொகுதிக்கு ஏற்படுகின்ற அழிவுகளையும் விளக்கிக் கூறினர்.

"இந்த சந்திப்பின்போது தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் இழுவைப் படகுகளை பயன்படுத்தும் நடைமுறையை சாத்தியமானளவு விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கி மாற்று நடைமுறையை துரிதப்படுத்துவதற்கு 2016  ஆம் ஆண்டில் இந்திய, இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை நினைவுபடுத்தினார். 2016 நவம்பரில் புதுடில்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் மட்ட  பேச்சுவார்த்தைகளில்  பங்கேற்ற இலங்கை தூதுக்குழுவின் ஒரு உறுப்பினரான சுமந்திரன்" ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதற்கு இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாம் வரவேற்பதாக பிரதமர் மோடியிடம் கூறினோம். ஆனால் இழுவைப்படகுகளை பயன்படுத்தும் நடைமுறை இன்றுவரை தொடருவதை நாம் அவரிடம் சுட்டிக்காட்டினோம்" என்று கூறின்ர்.

"யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட தனிநபர் சட்டமூலம் ஒன்றையடுத்து 2017 ஆம் ஆண்டில் இலங்கை இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்தது. மீன் இனப்பெருக்கத்தை அனுமதிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரில் நடுப்பகுதிக்கும் ஜூன் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட  சுமார் இரு மாதங்களில் இந்தியா அதன் கிழக்கு கிரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு பருவகால தடைவிதிக்கும் நடைமுறையை தற்போது பின்பற்றுகிறது." 

தமிழ்நாட்டு கரையோர மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்கள் சிலவற்றைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் வட இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பது இலங்கை தமிழ் மீனவர்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இது ஒரு சில படகுகள் அவ்வப்போது வந்து எமது கடலில் மீன்பிடித்துவிட்டுச் செல்லும் ஒரு விவகாரம் அல்ல. இந்த பிரச்சினையின் அம்சங்கள் மிகவும் பாரதூரமானவை.

மீன்பிடி படகுகள் தொகுதி 

பல வருடங்களாக தொடருவது இதுதான். பெருவாரியான மீன்பிடி படகுகளைக் கொண்ட தொகுதி ஒன்று (Flotilla of fishing boats) எமது கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து வடகடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. படகுகளின் எண்ணிக்கை 500 க்கும் அதிகமானதாகவும்  அவற்றில் பல படகுகள் வசதியான உபகரணங்களைக் கொண்ட இழுவைப் படகுகளாக இருக்கின்றன.

இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயற்பாடாகும். இந்த படகுத் தொகுதியின  நடவடிக்கைகள் மன்னார் குடாவிலும் வங்காள விரிகுடாவிலும் இலங்கையின் கடற்பரப்பில் ஒரு கடற்படை வந்து மீன்பிடிப்பது போன்று இருக்கிறது. இந்திய மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கரையோரத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார் மாவட்டங்களில் மிகவும் நெருக்கமான பகுதிகளுக்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன.

நெடுந்தீவு , கச்சதீவு போன்ற வடபகுதி தீவுகளுக்கு நெருக்கமாகவும் வந்து இந்திய மீனவர்கள் பெருமளவில் மீன்பிடிக்கிறார்கள். இந்திய படகுகள் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக எமது கடறபரப்புக்குள் வந்து பொழுது புலர்வதற்கு முன்னதாக திரும்பிச் சென்றுவிடுகின்றன.

இந்த இந்திய படகுகள் தொகுதி  தாக்குதல் மற்றும் தற்காப்பு நோக்கங்களுக்காக பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து செயற்படுகின்றன. இவற்றின் பெரும் எண்ணிக்கை காரணமாக  இலங்கை மீனவர்கள் அவற்றை எதிர்கொண்டு தடுக்க முடியாமல் இருக்கிறது. இந்த படகுகள் தொகுதியின் தோற்றமே இலங்கை மீனவர்களை அச்சுறுத்துகிறது. இந்திய மீனவர்களிடம் அகப்படுகின்ற சில இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டு அவர்களது படகுகுகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலர் மரணமடைந்த சம்பவங்களும் உண்டு.

இலங்கை கடற்படை 

இலங்கை கடற்படை கூட இந்திய மீன்பிடி படகுகள் தொகுதிக்கு நடுவில் நகருவதில்லை.  அவ்வாறு இலங்கை கடற்படை கப்பல்கள் செய்தால்  இந்திய படகுகள் அவற்றை சுற்றிவளைத்து மோதுகின்றன. அத்தகைய அண்மைய சம்பவம் ஒன்றில் இலங்கை கடற்படை வீரர் ஒருவருக்கு காயமேற்பட்டு இறுதியில் அவர் மரணமடைந்தார். இது சமாதான காலம். இந்தியாவுடன் இலங்கை போரில் ஈடுபட்டிருக்கவில்லை.

அதனால், இலங்கை கடற்படையினர் இந்திய மீன்பிடிப் படகுகளில் இருக்கும் " சிவிலியன் ஆக்கிரமிப்பாளர்களை " நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யமுடியாது. இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் அச்சுறுத்தி அட்டகாசம் செய்கிறார்கள்.

ஆனால், இலங்கை கடற்படையினரும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. சாத்தியமான வேளைகளிர் கடற்படை உஷாராகவே இருக்கிறது. அதனால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கரையோரத்துக்கு மிகவும் நெருக்கமாக வரமுடிவதில்லை. பெருவாரியான படகுகள் தொகுதியில் இருந்து விலகி தனியே வருகிற இந்திய படகை கடற்படை பாய்ந்து பிடித்து விடுகிறது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது தனியான படகுகளை கடற்படை சுற்றி வளைத்து பிடிக்கிறது. அந்நிய மீனவர்களின் கைதுசெய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. 

2024 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை 550 இந்திய மீனவர்களைை கைது செய்ததாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை படகுகளின் சொந்தக்காரர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் உட்பட சிலர் குற்றவாளிகளாகக் காணப்படுவதுடன் ஏனையவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த வருடம் இதுவரையில் நூறுக்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 94 பேர் இன்னமும் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். 

இழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல் 

மீன்பிடிப் படகுகள் தொகுதியாக எமது கடற்பரப்புக்குள் ஊடுருவி எமது மீன்களையும் இறால்களையும் நண்டுகளையும் இந்திய மீனவர்கள் பிடிப்பது இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு அம்சம் மாத்திரமே. அதை விடவும் படுமோசமான அம்சம் இயற்கைக்கு நிரந்தரமாக ஏற்படுத்தப்படுகின்ற அழிவாகும்.

இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய படகுகளில் அனேகமானவை இழுவைப் படகுகளாகும். அவை கடல் படுக்கை ஓரமாக பெரிய மீன்பிடி வலைகளை ஒன்றாக இழுத்துக்கொண்டு வருகின்ற படகுகளாகும். அவை மீன் முட்டைகள், சிறிய மீன்வகைகள், கூனிஇறால்கள் மற்றும் சகல மீன்வகைகளையும் கடல் தாவரங்களையும் ஒருசேர இழுத்துக் கொண்டு வருகின்றன.

பல தசாப்தங்களாக தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு  கரையோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியாவின் கடலுணவு ஏற்றுமதியை உயர்த்தி பெரும் இலாபத்தை கொடுக்கும் இந்த நடைமுறையை கடைப்பிடித்து வருகிறார்கள். மீன்வகைகள் இல்லாமல் போவதும் கூனி இறால்கள் குறைவடைந்து போவதுமே இதன் எதிர்மறையான விளைவாக இருந்து வருகிறது. தமிழ்நாடு கரையோரமாக உள்ள கடலில் குறிப்பாக பாக்கு நீரிணையின் இந்திய பக்கத்தில் இதுவே நிலைமையாக இருக்கிறது.

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவி தமிழ்நாட்டு மீனவர்கள் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதில் அதீத நாட்டம் காட்டுவதற்கு  இந்த நிலைவரமே ஒரு மேலதிக காரணமாக இருக்கிறது. பெரியளவிலான இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் மூலம்க இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கடல்வாழ் உயிரினங்களை அழிக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் நிலைபேறாக மீன்பிடிப்பது என்பது சாத்தியமாகாமல் போகக்கூடிய அளவுக்கு இலங்கையின் கடல்வளங்கள் படுமோசமாக குறைவடைந்து போகக்கூடும். ஆனால், தங்களது சொந்த கடல் வளத்துக்கு மீட்டெடுக்க முடியாத கெடுதியை விழைவித்த சுயநலவாதிகளான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக்கும் அதே அழிவைச் செய்வதற்கு கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.

பகைமையும் வெறுப்பும் 

மேலும், தமிழ்நாடு மீனவர்கள் அவர்களது மொழியையே பேசுகின்ற இலங்கை மீனவர்கள் மீது நம்பமுடியாத அளவு பகைமையையும் வெறுப்பையும் வெளிக்காட்டுகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களிடம் அகப்படுகின்ற இலங்கை மீனவர்கள் படுமோசமாக தாக்கப்படுவதுடன் அவர்களது படகுகளும் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன.

இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான  வலைகள் இந்திய மீனவர்களினால் வேண்டுமென்றே சேதப்படுத்தப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன. அண்மையில் சில இந்தியப் படகுகள் மாதகல் -- சுழிபுரம் கரையோரத்துக்கு நெருக்கமாக வந்து மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியிருக்கின்றன. ஒரு அரிதான சம்பவமாக  இலங்கையில் உள்ள இந்திய தூதரகம்  அதற்காக இழப்பீட்டை வழங்கியிருக்கிறது.

இவ்வாறாக, தமிழ்நாட்டு மீனவர்கள் ஈவிரக்கமின்றியும் பேராசைத்தனமாகவும் வட இலங்கையின் கடல் வளங்களைச் சுரண்டுவதுடன  மீட்சிபெறமுடியாத அளவுக்கு கெடுதியையும் விழைவித்துவிட்டுப் போவதை காணக்கூடியதாக இருக்கிறது. நீண்டகாலத்துக்கு நிலைபேறாக மீன்பிடிப்பதற்காக கடல் வளங்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது.

தமிழ்நாட்டில்  கடற்தொழில் இனிமேலும் ஒரு பாரம்பரியமான தொழிலாக இல்லாமல் போயிருப்பது இதற்கு பிரதான காரணமாகும். பல தலைமுறைகளாக கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த சாதிகளில் பல கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு கல்வியின் மூலமாக வாழ்க்கையில் மேம்பட்டு விட்டன. கடற்தொழில் இன்னமும் கூட குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலாகவோ அல்லது உள்ளூர் முதலாளியின் படகுகளுடன் மட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு தொழிலாகவே இல்லை.

முலாளித்துவ தொழில் துறையாக  மாறிய மீன்பிடி

பதிலாக, கடற்தொழில் ஒரு முதலாளித்துவ தொழிற்துறையாக மாறிவிட்டது. மீன் வகைகளும் கூனி இறால்களும் நண்டுகளும் " பண்டங்களாக்கப்பட்டு விட்டன."  அவை வாழ்வாதார நீட்சிக்கான எந்த அக்கறையும் இன்றி சாத்தியமானளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்ற பண்டங்களாகி விட்டன.

பெரிய மீன்பிடி படகுகளும் இழுவைப் படகுகளும் பணக்கார முதலாளித்துவ வாதிகளுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. அவர்களில் பலர்  அரசியல்வாதிகளாக அல்லது அரசியல் தொடர்புகளைக் கொண்டவர்களாக இருக்கிற்ர்கள். பல படகுகள் மற்றவர்களுக்கு " பினாமிகளாக " இருக்கின்ற மீனவர்களுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. பினாமி என்பதுை உண்மையில் இன்னொருவருக்கு சொந்தமாக இருக்கும் ஒரு சொத்தின் சட்டபூர்வமான உரிமையாளரைக் குறிப்பதாகும்.

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நல உச்சவரம்பு  ஒன்று இருப்பதனால், பல நில உடைமையாளர்கள் தங்களது மேலதிகமான நிலங்களை படிப்பறிவில்லாத ஊழியர்களையும்  வேலைக்காரர்களையும் பினாமிகளாக வைத்து அவர்களின் பெயர்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோன்றே பல மீன்பிடி படகுகளும்  உண்மையில் பினாமிகளாக இருக்கின்ற மீனவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இலங்கை -- இந்திய மீன்பிடித் தகராறுகளைப் பற்றி ஆய்வுசெய்த டச்சு ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டில் மீன்பிடிப் படகுகளில் பணியாற்றுபவர்களில்  பெரும்பாலானவர்கள் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபடாத சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவர்கள் தினச்சம்பள அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களின் முதலாளிகளினால் இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்திய அதிகாரிகள்

இவ்வளவு பெருந்தொகையான மீன்பிடிப்படகுகள் இந்திய அதிகாரிகளினால் கட்டுப்படுத்தப்படாமல் அல்லது பிடிக்கப்படாமல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் எவ்வாறு ஊடுருவக்கூடியதாக இருக்கிறது என்பது இந்த பிரச்சினையில் இன்னொரு முக்கியமான விடயம். நடப்பவை குறித்து இந்திய அதிகாரிகள் வேண்டுமென்றே கண்டும் காணாமல் இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு கண்டும் காணாமல் இருக்குமாறு தங்களது அரசியல் எசமானர்களினால் அறிவுறுத்தப்படுகிற்ர்கள் .

அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்ற சாத்தியத்தையும் நிர்கரிக்க முடியாது. காரணம் என்னவாக இருந்தாலும் பிரச்சினை கூர்மையடைந்துவிட்டது. முன்னர் இந்திய மீன்பிடிப்படகுகள் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவின. இப்போது அவை பெரும்பாலும் தினமும் வருகின்ற என்று தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் நெடுந்தீவில் ஒரு கூட்டத்தில் கூறினார்.

கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் 

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கடற்தொழில், நீரியல்வள, சமுத்திரவியல் வள அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் இருக்கிறார். ஊவா மாகாணத்தின் பண்டாரவளையைச் சேர்ந்தவரான அவர் ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராகவும் இருக்கிறார்.

தமிழ்நாடடில் உள்ள தமிழ்பேசும் சகோதரர்களின் நடவடிக்கைகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுடன் நன்கு பரிச்சயமானவராக சந்திரசேகர் விளங்குகிறார். 2024 பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதாகளைச் சேர்ந்த பெருமளவு மக்கள் தேசிய மக்கள் திசைகாட்டிச் சின்னத்துக்கே வாக்களித்தார்கள்.  வடகடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தவதாக தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதியே அதற்கு காரணமாகும்.

வடபகுதி மீனவர்களின் இந்த பிரச்சினை தொடர்பில் சந்திரசேகர் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க புதுடில்லிக்கு செல்வதற்கு முன்னதாக சந்திரசேகர் கொழும்பில் " தி இந்து " வுக்கு ஒரு நேர்காணலை வழக்கியிருந்தார். மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய அந்த நேர்காணல் அவர் நாசகாரத்தனமான இழுவைப்படகு முறையை இந்தியத்தரப்பு நிறுத்தினால் மாத்திரமே மீனவர்களின் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்க்கமான முறையில் தீர்வைக்காண முடியும் என்று குறிப்பிட்டார்.

" வடக்கு,  கிழக்கு மற்றும் மலையகம் உட்பட சகல இனக்குழுமங்களையும் சகல புவியியல் பிராந்தியங்களையும் சேர்ந்த மக்கள்  அண்மைய தேர்தல்களில் எமக்கு ( தேசிய மக்கள் சக்திக்கு ) வாக்களித்து பெரிய ஒரு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அவர்களது அக்கறைகளை கவனிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் விளைவான இந்த நீண்டகாலப் பிரச்சினையே எமது வடபகுதி மீனவர்களின் முக்கியமான கவலையாக இருக்கிறது" என்று அமைச்சர் சந்திரசேகர் கூறினார்.

" நவீன தொழில்நுட்பத்தையும் நிலைபேறான வழிமுறைகளையும் பயன்படுத்தி மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரிவான திட்டங்களில் இலங்கை -- இந்திய மீனவர் தகராறுக்கு தீர்வைக் காண்பதும் ஒரு அங்கமாகும். 2017 ஆம் ஆண்டால் 17.2 கிலோ கிராமாக இருந்த நாட்டின் ஆள்வீத மீன் பாவனை இப்போது 11. 07 கிலோ கிராமாக குறைந்து விட்டது.இது மக்கள் புரதத்தை உள்கொள்ளும் அளவின் ஒரு வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கிறது.

" 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேதனைமிகு பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு மந்தபோசாக்கு மிகுந்த கவனத்துக்குரிய பிரச்சினையாக இருக்கிறது. மக்கள் ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதிசெய்வதற்கு கடலுணவு உற்பத்தியை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அவற்றை எல்லாம் செய்வதற்கு எமது கடல் மற்றும் கடல்சார் பல்வகைமையைப் பாதுகாகக்க வேண்டியது அவசியமாகும் " என்றும் அமைச்சர் சந்திரசேகர் அந்த நேர்காணலில் மேலும் கூறினார்.

இலங்கையின் நிலைப்பாடு 

மீன்பிடி நெருக்கடியில் இலங்கையின் நிலைப்பாடு மிகவும் தௌாவானது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.  வெறுக்கத்தக்க அந்த இழுவைப்படகு நடைமுறையை அவர்கள் நிறுத்த வேண்டும்.  நீணடகாலப் போரினால் பெரும் அவலங்களுக்கு உள்ளாகிய இலங்கை தமிழ் மீனவர்கள்  தங்களது வாழ்வைக் கட்டியெழுப்பவும் தங்களது வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதை தமிழ்நாட்டு மீனவர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்தியாவின் " மனிதாபிமான " அணுகுமுறை 

ஆனால், இந்தியாவின் ஆதிக்க மனோபாவமும்  அணுகுமுறையும்  வேறுட்டதாக இருப்பது கவலைக்குரியது.  இந்த பிரச்சினை மனிதாபிமான முறையில் அணுகப்பட்டு பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடி தொடக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் வரையானவர்களின் பதிலாக இருக்கிறது. 

இந்த மனிதாபிமான அணுகுமுறை என்பது பாதிக்கப்படும் இலங்கை தமிழ் மீனவர்கள் மீதான அக்கறையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது இலங்கை கடற்பரப்பில் அதுதுமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான அக்கறையின் விளைவானது.

தமிழ்நாட்டு மீனவர்களை பாதிக்கப்படும் ஒரு தரப்பாக தவறான முறையால் காண்பிக்கப்படுகிறது. இலங்கை கடற்படையையும் ஆக்கிரமிப்பாளர்களாக தவறான முறையில் கூறப்படுகிறது. இலங்கை கடற்படை அப்பாவி தமிழ்நாட்டு  கொடூரமான முறையில் கைதுசெய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்கிறது என்பதே இந்தியா கூறும் கதை.

இந்திய மீனவர்களை கைது செய்யப்படக்கூடாது எனபதும் அவர்களது படகுகள் கைப்பற்றப்படக்கூடாது என்பதுமே இந்தியா விரும்புகின்ற இரக்கமானதும் கண்ணியமாதுமான மனிதாபிமான அணுகுமுறை. சுருக்கமாகச் சொல்வதானால்,  மனிதாபிமான அணுகுமுறை என்ற பெயரில் இந்திய மீனவர்கள் எமது கடல் வளங்களை தொடர்ந்து சுரண்டுவதை அனுமதிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்  அனுதாபம் கொன்று தின்னும் விலங்கு மீதானதாக இருக்கிறதே தவிர அதன் இரை மீதானதாக இல்லை.

பேச்சுவார்த்தைகள் கொடுமையான பகிடி 

பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த பிரச்சினையை தீர்ப்பது என்பது கொடுமையான ஒரு பகிடியாகும். இது வீட்டுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக வீட்டுக்காரருக்கு கூறுவதை ஒத்ததாகும்.

இந்திய -- இலங்கை மீன்பிடி தகராறைப் பொறுத்தவரை,  வெவ்வேறு நேரங்களில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவிட்டன. உருப்படியாக எந்த பயனும் ஏற்படவில்லை. அதற்கு காரணம்  அந்த பேச்சுவார்த்தைகள் வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் நோக்குடனான செயற்பாடுகளாக இருந்தமையேயாகும். அத்துமீறலும் இழுவைப்படகு பயன்படுத்தலும் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இன்றி தொடருவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

கச்சதீவு 

மேலும், இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் புதியதொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. கச்சதீவை இந்தியா இலங்கைக்கு 1974  ஆம் ஆண்டில் விட்டுக் கொடுத்ததன் விளவாகவே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

கச்சதீவுக்கு அண்மையான கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் அவ்வப்போது  பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு பொய் பிரசாரப் படுத்தப்படுகின்றது. கச்சதீவை இந்தியா மீளப்பெற்றுக்கொண்டால்  தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தவறாகக் கூறப்படுகிறது.

தமிழர்களின் இடர்பாடு இருட்டடிப்பு 

இந்திய  -- இலங்கை மீன்பிடித் தகராறு தொடர்பில் இந்தியாவில் இடம்பெறுகின்ற கதையாடல்களில் இலங்கையின் வடபகுதி தமிழ் மீனவர்களின் அவலங்கள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். பிரச்சினை விரோத உணர்வைக் கொண்ட இலங்கை கடறனபடைக்கும் அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான மோதலாகவே காண்பிக்கப்படுகிறது. இலங்கை தமிழ் மீனவர்களின் இடர்பாடுகள் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. கச்சதீவை மீளப்பெறுவதே  பிரச்சினைத் தீர்வுக்கு முக்கியமானதாக பேசப்டுகிறது.

எனவே இந்த பிரச்சினையின் தோற்றுவாய் என்ன ? ஏன்? எவ்வாறு இந்தப் பிரச்சினைக்குள் கச்சதீவு கொண்டுவரப்படுகிறது? இந்தியா கூறுவது போன்று இலங்கை "மனிதாபிமான " அணுகுமுறை ஒன்றைக் கடைப்பிடித்து வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை கைதுசெய்யக்கூடாதா? இந்த கேள்விகளை  இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அடுத்த வாரம் விரிவாக ஆராய்வோம்.

https://www.virakesari.lk/article/211400

இந்திய அரசியல் நாடகத்தை கவனித்தல்

2 months 2 weeks ago

இந்திய அரசியல் நாடகத்தை கவனித்தல்

இந்தியாவிடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, கற்கத் தவறிய விடயங்கள் பற்றி பலரும் சிந்திக்கிறார்கள். இருந்தாலும், இப்போதும் இந்தியாவையே தங்களுடைய அரசியல் தீர்வுக்காக நம்பியும் இருக்கின்றனர்.  அதே நேரத்தில், சிங்களவர்களும் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன என்பதை மறந்தும் விடுகின்றனர். ஏனென்றால், தமிழர்களுடைய விடயத்தில் அவர்கள் இந்தியா தமக்குச் சார்பான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது .

என்பதால் அது மறுக்கப்படுவதாக இருக்கிறது என்பதே யதார்த்தம். 
உலக நடைமுறைகள், மாற்றங்களுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியல் கட்டமைக்கப்படாமையும், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமையும், அனுசரிக்காமையும்தான் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் இதுவரையில் நிறைவேறா ஒன்றாக இருந்து வருவதற்கு காரணமாகும். கடந்த வார இறுதியில் நடைபெற்ற இந்திய பிரதமரின் இலங்கை வருகை விட்டுச் சென்றிருப்பதும் 
இதனையே ஆகும். 

2024 செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார். அவருக்கு இலங்கை மித்ர விபூஷண் விருதை இலங்கை வழங்கியிருக்கிறது. அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு உறவுகள், நல்லிணக்கம்,  

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில்  ஒத்துழைப்பு 
குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மீளாய்வு செய்து கொண்டனர். அதே நேரத்தில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா தொடர்ந்து  உதவுவதற்குப் பிரதமர் உறுதியளித்திருந்தார். அந்த வகையில் ஜனாதிபதி அனுரகுமார பொருளாதார ஸ்திரம் குறித்துப் பேசிய கருத்து இந்த இடத்தில் அடிபட்டுப் போனது. 

எரிசக்தி மின்சார துறைகளுக்கான உதவிகள், சம்பூர் சூரிய மின்சக்தி திட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்பிப்பு மற்றும் பல்வேறு அபிவிருத்தி ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகியுள்ளன. 
இதற்கிடையில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது விடுபட்டுப் போன இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. இந்தியப் பிரதமரின் ஊடக அறிக்கையில், இலங்கை அரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்றும் இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியப் பிரதமரின் அபிவிருத்தி, இந்திய மீனவர் பிரச்சினை போன்ற பல்வேறு கருத்துக்களுக்கு 
பதிலளித்திருக்கிற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழர்களுடைய அரசியல் அபிலாசை, மாகாண சபை; தேர்தல் போன்ற விடயங்கள் குறித்து ஒரு வார்த்தையேனும் பகரவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். 

இந்தியப் பிரதமர் வட கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். மலையக அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தமிழரது அரசியல், தமிழ் அரசியல் தரப்பினருடைய நிலைப்பாடுகள் காரணமாக இறுக்கமான முடிவுகளுக்கு உரியதாக இல்லை என்ற குறைபாடே காணப்படுகிறது என்று கொள்ளலாம். 

ஜே.வி.பியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் என்கிற அலையில் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியல் அடிபட்டுப் போனது எல்லோருக்கும் வெளிப்படையானது. இந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அனுரகுமார திசாநாயக்கவை இந்தியா, புதுடெல்லிக்கு அழைத்துப் பேசியது.

அது அவர்களுக்கு மேலும் ஒரு சக்தியைக் கொடுத்திருந்தது. இதனையடுத்து, அனுரகுமார ஜனாதிபதியானதும் முதல் விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டார். இப்போது உள்ளூராட்சித் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அது கூடவும் அவர்களுக்குச் சாதகமாகவே அமையும். அதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. 

வடக்குக் கிழக்கில் உருவாகியிருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியல் வெறுப்பு என்கிற பாதகத்தை விளங்கிக் கொள்ளாத  தமிழ்த் தேசிய அரசியல் கட்சியினர் இப்போதும் தமது வெறுப்புணர்வுகளையும், வெப்பு சாரங்களையும் கோப தாபங்களையும், இறுமாப்புகளையும், வெட்டுக்குத்துக்களையுமே வெளிப்படுத்தியே வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் கூட இவ்வாறான சிந்தனைகளும் செயற்பாடுகளும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரிடம் காணப்படுவது நல்லவிதமான முன்னேற்றத்தைக் கொடுக்கப்போவதில்லை.

அது தமிழர்களின் அபிலாசை நிறைவேற்றத்துக்கு எதிரான நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தும். இது தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாதகமானது.வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் போராட்ட இயக்கங்களிடையே இருந்த ஒற்றுமை சீர்குலைவை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான சக்திகளை உருவாக்கிக் கொண்டது. அதே நேரத்தில், அண்டை நாடான இலங்கையின் இனப்பிரச்சினை தமக்குச் சாதகமான மாற்றிக் கொண்டது. பயன்படுத்தவும் ஆரம்பித்தது. அது இந்தியாவுக்கு அதிக பயனையே 
கொடுத்தது எனலாம். 

எப்போதும் இந்தியா கைக்கொள்ளும் தமக்குச் சாதகமான ஆட்சிகளையே வைத்துக்கொள்ளல் நிலைப்பாடு ஒவ்வொரு நாட்டிலும் வாய்ப்பதில்லை. ஆனால், நாடி பிடிப்புக்காக அனுரகுமாரவை இந்தியாவுக்கு அழைத்ததன் காரணமாக இப்போது ஒரு சிறப்பான நட்பு அரசாங்கமாக அதனைப் பயன்படுத்துகிறது என்று கூறலாம்.

அது இலங்கை மித்ர விபூஷண் இந்தியப் பிரதமருக்கு வழங்கும் அளவுக்கு நிலைமை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் தவறு செய்துவிட்டோமோ என்று தலையில் கை வைக்காமல் அதனையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலே இப்போது நடைபெறுகிறது. இது இலங்கைக்கும் பொருந்தும். 

இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலின் ஒற்றுமை முக்கியம் உடையதாக இருக்கிறது. இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கு வெறுமனே புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்புத் திருத்தம் தீர்வாக அமைந்து விடப் போவதிதில்லை. இதய சுத்தியுடனான அதிகாரப் பகிர்தல் ஒன்று நடைபெற வேண்டும்.

அதற்குச் சிங்கள அடிப்படைவாதம் இடம் கொடுக்க வேண்டும். அது ஒற்றையாட்சியை உடைய இலங்கையில் ஒருபோதும் சாத்தியமில்லை.இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடா கொள்கையை கடைபிடித்து வரும் இந்தியா தம்முடைய முழுமையான பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தைக் கூட முழுமையாக அமல்படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுப்பதில்லை.

ஆனால், இலங்கை அரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றம், இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல் என்பவை 13ஆவது திருத்தத்தையே சுட்டி நிற்கிறது என்ற வகையில் இந்தியா ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பது தெரிகிறது. 

இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியப் பிரதமரின் இக்கருத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். இருந்தாலும் தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாத ஒற்றுமை காரணமாக அதன் பயன் முழுமையாகத் தமிழர்களுக்குக் கிடைக்காது என்றே 
சொல்ல வேண்டும். 

ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைகளை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற தமிழர்கள் தமிழரின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலேனும் குறைந்தது ஒரு சமஷ்டி முறையிலான 
ஆட்சி முறையை அமைப்பது தொடர்பில் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமாக இருந்தால் சிறப்பு. 

அவ்வாறானால், ஒருமித்த தமிழர் நிலைப்பாடு ஒன்றுக்குத் தமிழ்த் தரப்பு வருதல் முக்கியமாகும்.  அதே நேரத்தில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்தல் உடனடியாக நடைபெற வேண்டும்.

அதற்குக் காலம் தாழ்த்துதல் கூடாது. பூனைக்கு மணி கட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதனைக் கட்டாது தவறவிட்டால் இறுதியில் பூனையைத் தேட வேண்டி ஏற்படலாம்.
இங்கு நடைபெற்ற யுத்தத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த இந்தியா தமிழீழ விடுதலைப் போரை நசுக்குவதிலும், இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணமாக அமைந்திருந்தது,

அதனால் தான், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தக் கோரி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலம்பெயர் மக்களின் நீதிக்கான போராட்டங்கள் ஊடாக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா 
தான் அதை நீர்த்துப் போகச் செய்தது.  இன்னொரு விதத்தில். இந்தியா வல்லாதிக்கம் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளல் முக்கியம்.

லக்ஸ்மன்

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-அரசியல்-நாடகத்தை-கவனித்தல்/91-355182

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? - நிலாந்தன்

2 months 2 weeks ago

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? - நிலாந்தன்

பிரித்தானியா இலங்கையில் போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு தடை விதித்திருக்கிறது. இதுவரை காலமும் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. பிரித்தானியா இவ்வாறு தடை விதித்திருப்பது இதுதான் முதல் தடவை.

image_2623ce9593-2.jpg

முதலில் இந்த தடை வெளிவந்திருக்கும் பின்னணியைப் பார்க்கலாம். 58 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் இன்று முடிவடைகிறது. அக்கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பிரித்தானியாவின் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இரு கிழமைகளுக்கு முன்பு ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில்,அல்ஜசிராவின் “ஹெட் டு ஹெட்” நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியும் இப்பொழுது வெளிவந்திருக்கும் பிரித்தானியாவின் தடையும் ஏறக்குறைய ஒரே நோக்கத்தை கொண்டவை. சீன இடதுசாரி மரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இரண்டு வரையறைகளை உணர்த்துவதே இந்தத் தடை மற்றும் அல்ஜசீராவின் நேர்காணல் இரண்டினதும் நோக்கம் எனலாம். முதலாவது வரையறை இந்த அரசாங்கம் சீனாவை நோக்கிச் சாய்வதில் உள்ள வரையறை. இரண்டாவது இனப்பிரச்சினை தொடர்பில் பொறுப்புக்கூறாமல் தப்புவதில் உள்ள வரையறை. இதை இன்னும் அறுத்துறுத்துச்  சொன்னால்,பொறுப்புக்கூறல் என்ற கவர்ச்சியான தலைப்பின் கீழ் இலங்கை அரசாங்கத்தை தமது செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்திருப்பதற்கான அழுத்தங்கள்.

பிரித்தானியாவின் தடை நான்கு பேர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் மூவர் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த அரச படைப்பிரதானிகள். ஒருவர் தமிழ்த் தரப்பில் ஒரு தளபதியாகவிருந்து பின்னர் அரச தரப்புடன் இணைந்த கருணா. இந்த நால்வரும் இலங்கைத்தீவின் சிவில் யுத்தத்தில்  செய்த குற்றங்களுக்கு எதிராகவே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரித்தானிய அரசின்  வெளிவிவகார,பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில்,கருணாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த காலமும் பின்னர் அரச தரப்போடு இணைந்து செயல்பட்ட காலமும்  உள்ளிட்ட சிவில் யுத்த  காலகட்டத்தில் செய்த குற்றங்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தியோகபூர்வ குறிப்பில் கருணா தொடர்பாக  கூறப்படுகையில் “பயங்கரவாதக் குழுவான விடுதலைப் புலிகள் இயக்கம்” என்ற சொற்பிரயோகம் உண்டு.

நாலாம் கட்ட ஈழப்போரில் கருணா அரச தரப்புடன் இணைந்து செயல்பட்டதை வைத்து இந்த தடை அரசு படைப்பிரதானிகளுக்கும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்ட கருணாவுக்கும் எதிரானது என்றுதான் ஒரு பொதுவான தமிழ் விளக்கம் காணப்படுகின்றது. ஆனால் அது முழு உண்மையல்ல. இந்தத் தடைக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் உண்டு. ஏற்கனவே ஐநாவின் அறிக்கைகளில் “போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புக்களுக்கும்” எதிராக என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளிலும்“மனித உரிமை மீறல்கள்,மனித உரிமைத் துஷ்பிரயோகங்கள்” போன்ற வார்த்தைகள்தான் காணப்படுகின்றன. இன அழிப்பு என்ற வார்த்தை இல்லை. அதாவது பிரித்தானியாவின் தடையானது நடந்தது இனஅழிப்பு என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 15ஆண்டுகளாக ஐநாவின் அறிக்கைகளிலும் அதுதான் காணப்படுகின்றது. அங்கேயும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றவை இனஅழிப்பு என்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

Screenshot-2025-04-05-193056-ccccc-e1743

இதில் ஒப்பீட்டளவில் கனடாவில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்கள் இன அழிப்பு என்பதனை ஏற்றுக்கொள்கின்றன. தீர்மானங்களில் இன அழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது கனடாவின் இலங்கை தொடர்பான வெளியுறவு அணுகுமுறைகளில் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானமாக எடுக்கப்படவில்லை. அதாவது ஒரு ராஜதந்திர முடிவாக அது நடைமுறையில் இல்லை.

எனவே கடந்த 15 ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக எடுக்கும் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் அங்கே ஒரு பொதுத் தன்மையைத் தமிழர்கள் கண்டுபிடிக்கலாம். அது என்னவென்றால் இலங்கைத் தீவில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதனை உத்தியோகபூர்வ வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடாக மேற்கு நாடுகள் இதுவரை எடுத்திருக்கவில்லை. ஐநாவும் அது இனப்படுகொலை என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது முதலாவது.

இரண்டாவது,கடந்த 15 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடைகளை எல்லா நாடுகளும் தொடர்ந்து பேணுகின்றன. தாயகத்தில் செயல்படாத ஒரு அமைப்புக்கு எதிராகத் தடையைத் தொடர்ந்து பேணுவதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்கு உணர்த்த முற்படும் வரையறைகள் எவை?

மூன்றாவது, ஐநாவில் இலங்கை இனப்பிரச்சினையானது வரையறுக்கப்பட்ட ஆணையைக் கொண்ட ஐநாவின் உறுப்பாகிய மனித உரிமைகள் பேரவைக்குள்தான் பெட்டி கட்டப்பட்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையானது ஐநாவின் 8 உறுப்புகளில் ஒன்று. பாதுகாப்புச் சபை, பொதுச் சபை போன்று அதிகாரம் மிக்கதல்ல. ஒரு நாட்டுக்கு எதிராக படையினரை அனுப்புவதற்கோ அல்லது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கோ தேவையான ஆணை மனித உரிமைகள் பேரவைக்குக் கிடையாது. சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே மனித உரிமைகள் பேரவை அந்த நாட்டில் இறங்கி வேலை செய்யலாம்.

குறிப்பாக 2021 ஆம் ஆண்டிலிருந்து ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் ஓர் அலுவலகம் இயங்கி வருகிறது.இலங்கைத்தீவின் போர்க்களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் அது. அப்படி ஒரு பொறிமுறை வேண்டும் என்று 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாக ஒரு கடிதத்தை எழுதின.அந்தப் பொறிமுறையானது மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே பொறுப்பு கூறலைக் கொண்டு போகவேண்டும் என்பது கடிதத்தின் சாராம்சம் ஆகும். மேலும் அந்தப் பொறிமுறைக்கு ஒரு கால வரையறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தப் பொறிமுறையானது ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு உட்பட்ட ஓர் அலுவலகமாகத்தான் உருவாக்கப்பட்டது. அதாவது பலவீனமான ஆணையை கொண்டது.

இதுதான் ஐநாவில் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடியவற்றின் வரையறை. இவ்வாறு கடந்த 15 ஆண்டு காலமாக மேற்கை மையமாகக் கொண்ட, அல்லது ஐநாவை மையமாகக் கொண்ட நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் சித்திரம் கிடைக்கும்.

மேற்கு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் அதே சமயம் நீதிக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.அதோடு தமிழ் மக்களுக்கு அனைத்துலக அளவில் இருக்கக்கூடிய ராஜதந்திர வாய்ப்புகளின் வரையறைகளையும் அவை உணர்த்துபவைகளாகக் காணப்படுகின்றன.

s300_Sri_Lankan_War_Atrocities_SQUARE__0

எனினும் 15 ஆண்டுகளின் பின்னரும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்ட வழியில் தமிழ் மக்கள் மெதுமெதுவாக முன்னேறி வருகிறார்கள் என்பதனை பிரித்தானியாவின் தடை உணர்த்துகின்றது. குறிப்பாக நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெற்ற ஆகப்பிந்திய வெற்றியாகவும் அதைக் கூறலாம். அண்மையில் கனேடிய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அத்தகையதே.கனடாவில் நிறைவேற்றப்படட இனஅழிப்பு அறிவூட்டடல் தீர்மானத்திற்கு எதிரான வழக்கில்,கனேடிய உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டுவது.

இவை யாவும் வரையறைக்குட்பட்ட வெற்றிகள்தான்.நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் மேலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.கனடா, அமெரிக்கா,பிரித்தானியா போன்ற நாடுகள் விதித்திருக்கும் தடைகளும் குறிப்பாக கனடாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உற்சாகமூட்டுபவை.அதேசமயம் மேற்கு நாடுகளின் மேற்படி நகர்வுகள் யாவும் அந்தந்த நாடுகளின் பூகோள ராணுவ அரசியல் பொருளாதார நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான் என்பதையும் தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.அதை அவர்கள் தமிழ் மக்களின் பெயரால் “பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பின் கீழ் ராஜதந்திரமாக முன்னெடுக்கின்றார்கள்.

இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் மட்டுமல்ல இந்தியா,சீனா,ஐநா முதலாக உலகில் எந்த ஒர் அரசுக் கட்டமைப்பும் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் அவ்வாறுதான் முடிவுகளை எடுக்கும்.அரசுகள் எப்பொழுதும் தங்களுடைய ராணுவப் பொருளாதார அரசியல் நோக்கு நிலைகளில் இருந்துதான் முடிவுகளை எடுக்கும்.ஏன் கடவுளுக்கு ஓர் அரசிருந்து அங்கு முடிவு எடுக்கப்பட்டாலும் அப்படித்தான் அமையும்.

இதில் தமிழர்கள்தான் தங்களுடைய நலன்களும் வெளி அரசுகளின் நலன்களும் இடை வெட்டும் ஒரு பொதுப் புள்ளியைக் கண்டுபிடித்து அங்கிருந்து தொடங்கி தமக்குக் கிடைத்திருக்கும் ராஜதந்திர வாய்ப்புகளை எப்படி முழு வெற்றியாக மாற்றுவது என்று திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.அதாவது தமிழ் மக்கள் உலக அளவில் தங்களுக்குள்ள வரையறைகளையும்  வாய்ப்புகளையும்  நன்கு விளங்கி வைத்திருக்க வேண்டும்.கிடைத்திருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வரையறைகளை எப்படிக் கடப்பது அல்லது உடைப்பது என்று திட்டமிட்டுச்  செயற்பட வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட தடைகளும் தீர்மானங்களும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த உற்சாகமூட்டும் வெற்றிகளாகும். தமிழ் மக்கள் யாருக்கு எதிராக நீதியைக் கேட்டு போராடுகிறார்களோ அவர்கள் அங்கு தண்டிக்கப்படுகிறார்கள்.மேற்கு நாடுகளின் தடைகள் ஒருவிதத்தில் தமிழ் மக்களுக்கும் வரையறைகளை உணர்த்துபவைதான்.என்றாலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக அதன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளாக அவை காணப்படுகின்றன.இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் தங்களோடு முழுமையாக இல்லை என்று கருதி தமிழ் மக்கள் அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தேவையில்லை. தடைகள் விடயத்தில் மேற்கும் ஐநாவும் அரைவாசி அளவுக்கு தமிழ் மக்களுக்குச் சாதகமாக நிற்கின்றன.எனவே தமக்கு கிடைத்திருக்கும் பாதியளவு சாதகமான ராஜதந்திர வாய்ப்புகளை முழு அளவு சாதகமானவைகளாக எப்படி மாற்றுவது என்றுதான் தமிழ்த் தரப்பு சிந்திக்க வேண்டும்.

வெளியரசுகள் அவற்றின் நலன் சார்ந்து எடுக்கும் நகர்வுகளை எப்படி ஈழத் தமிழர்கள் தமது நலன் சார்ந்து வெற்றிகரமாகக் கையாளலாம் என்று சிந்திக்க வேண்டும். இதைத் தொகுத்துச் சொன்னால் தமிழ் மக்கள் ஓர் அரசு போல சிந்திக்க வேண்டும். ஒரு அரசு இன்னொரு அரசோடு கொள்ளும் உறவுகளில் இரண்டு தரப்புக்கும் பொதுவான நலன்கள் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளியில்தான் உறவுகள் விருத்தி அடைகின்றன. எனவே ஈழத் தமிழர்கள் ஓர் அரசு போல சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ராஜதந்திரத்தில் நலன்கள்தான் முக்கியம். அறம்;தர்மம்;நீதி போன்றவை அங்கே கிடையாது. தொப்புள்கொடி உறவு;இதயமும் இதயமும் கலக்கும் உறவு; என்பவையெல்லாம் கிடையாது. நலன்களும் நலன்களும் இடை வெட்டும் புள்ளிகளைத் தீர்க்க தரிசனமாகக் கையாள்வதுதான் ராஜதந்திரம். எனவே ஓர் அரசுபோலச் சிந்தித்து ஈழத் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும்.பிரித்தானியாவின் தடை தமிழ் மக்களுக்கு அண்மையில் கிடைத்திருக்கும் ஒரு வெற்றி. அந்த வெற்றி முழுமையானது இல்லை. அதை எப்படி ஒரு முழுமையான ராஜதந்திர வெற்றியாக மாற்றுவது என்பது ஈழத் தமிழர்கள் ஓர் அரசுபோலச் சிந்தித்து முடிவெடுப்பதில்தான் தங்கியிருக்கின்றது. ஆனால் ஓர் அரசு போல் சிந்திப்பதென்றால் அதற்கு முதலில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள வேண்டும்

https://www.nillanthan.com/7265/

திரியாய் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு : சொந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியவில்லையென காணி உரிமையாளர்கள் ஆதங்கம்!

2 months 2 weeks ago

01 APR, 2025 | 01:07 PM

image

துரைநாயகம் சஞ்சீவன்

திரியாய் கிராமமானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இங்கு தமிழர்கள் 531 பேர், சிங்களவர்கள் 274 பேர், முஸ்லிம் ஒருவர் என 806 பேர் வசித்து வருகின்றார்கள். 

வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் திரியாய் வட்டாரத்தில் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் 1987 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் பின்வரும் கிராம சேவகர் பிரிவுகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள, மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த 2712 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை.

செந்தூர் கிராம சேவகர் பிரிவில் 474 ஏக்கரும் கல்லம்பத்தை கிராம சேவகர் பிரிவில் 636 ஏக்கரும் கட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவில் 1080 ஏக்கரும் திரியாய் கிராம சேவகர் பிரிவில் 522 ஏக்கருமான காணிகளை விடுவிக்குமாறு கோரி விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் உள்ள 4 இராணுவ முகாம்களுக்காகவும் 3 கடற்படை முகாம்களுக்காகவும் 55 ஏக்கருக்கு மேற்பட்ட மக்களுடைய காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் திரியாய் மக்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வந்த 80 ஏக்கர் காணியும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தினால் 466 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன். திரியாய் கிராமத்தில் உள்ள 2020.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட பத்மராஜ பபத புராண ரஜமகா விகாரைக்கு பூஜாபூமி மற்றும் அளிப்பு மூலமாக 44.325 ஹெக்டேயர் காணியும், திரியாய் கிராமத்தில் உள்ள 2018.05.30 அன்று பதிவு செய்யப்பட்ட சப்தநாக பபத வன செனசுந்த விகாரைக்கு 2019.07.06 அன்று அளவையிடப்பட்டு அளிப்பு மூலமாக 20.2343 ஹெக்டேயர் காணியும், கல்லறாவ கிராமத்தில் உள்ள 2022.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட தபசு பல்லுக வனசெனசுன விகாரைக்கு அளிப்பு மூலமாக 2020.12.30 அன்று 2.4598 ஹெக்டேயர் காணியும் ஒதுக்கப்பட்டு அளிக்கப்பட்டது. (2020.10.02 வர்த்தமானி) எனினும் இவற்றை விட மேலதிகமான காணிகளையும் கையகப்படுத்தியுள்ளனர்.

வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினர் திரியாய் பகுதியில் ஏறத்தாழ 2000 ஏக்கரில் எல்லைக் கற்களை போட்டு, அதற்குள் மக்களை செல்ல விடாத ஒரு சூழ்நிலையில், ஆத்திக்காடு பகுதியில் 349 ஏக்கரையும், திரியாய் குள வயலில் 107 ஏக்கரையும், குறுப்பிட்டி கண்டலில் 400 ஏக்கரையும், வேடன்குளத்தில் 310 ஏக்கர் நிலத்தையும் விடுவிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதியான பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் ஆத்திக்காட்டு வெளிப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் காலாகாலமாக விவசாயம் செய்துவந்த 64 ஏக்கரை தனியாகவும், 18 ஏக்கரை தனியாகவும் குச்சவெளி கமநல சேவை நிலையத்தில் தற்காலிகமாக பதிவு  செய்துகொண்டு, மொத்தமாக 82 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இதில் வைத்தியநாதன் தமயந்திதேவி என்பவருக்கு 5 ஏக்கர் பிரித்தானியர் காலத்து உறுதிக் காணியும் காணப்படுகிறது.

நீண்டகாலமாக பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு செய்கையிடப்பட்டு வருகின்ற விவசாய காணிகளை விடுவிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மக்கள் முறையிட்டதையடுத்து 07.10.2024 அன்று அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆவணங்கள் உள்ள காணிகளில் விவசாயம் மேற்கொள்ளுமாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருந்தார். 

இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் உட்பட பௌத்த மதகுருமார்கள், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள விவசாயிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

7.jpeg

மறுநாள் அப்பகுதியில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் சென்றபோது அந்த  விகாராதிபதி விவசாயப் பணிகளுக்கு தடை ஏற்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் பிரத்தியேக செயலாளரும் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளருமான ராஜசேகர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் உயர் அதிகாரிகள், அரிசி மலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், தங்களுடைய உறுதி காணிகளை பௌத்த மதகுரு ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் அதனை மீட்டுத் தருமாறும் கோரினர். 

அதனையடுத்து, கருத்து தெரிவித்த பௌத்த மதகுரு, தன்னிடம் 18 ஏக்கர் உறுதி காணியும் 50 ஏக்கர் பூஜா பூமிக்குரிய காணியும் இருப்பதாக கூறியதோடு, அதற்கு மேலதிகமாக இருக்கிற காணியில் பொதுமக்கள் விவசாயம் செய்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்தார். 

அதன் பின்னர், காணி அளக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு சபையில் தெரிவிக்கப்பட்டது. 

வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், தொல்லியல் துறையினர், கிராம உத்தியோகத்தர் உட்பட ஏனைய அரச அதிகாரிகள் முன்னிலையில் காணி அளவீடு செய்து பௌத்த பிக்குவுக்குரிய பகுதியை வழங்கி ஏனைய பகுதிகளில் மக்களை விவசாயம் செய்யுமாறு சபையில் முடிவு எட்டப்பட்டது. 

8.jpeg

அந்த வகையில் மறுநாள் 16.10.2024 அன்று நில அங்கீகாரம் பெற்ற நில அளவையாளரான கணபதிப்பிள்ளை சிவானந்தன் என்பவரினால் நில அளவை செய்யப்பட்டு பௌத்த மதகுருவுக்கு சொந்தமான காணி என கூறப்படுகின்ற 18 ஏக்கர் காணியும், பூஜா பூமி எனும் பெயரில் வழங்கப்பட்ட 50 ஏக்கர் காணியும் அளவீடு செய்து வழங்கப்பட்டு, ஏனைய பகுதிகள் மக்களுடைய விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன. எனினும், அக்காணிகளில் மீண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட பௌத்த மதகுரு தடையாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி, காலாகாலமாக வழிபட்டு வந்த நாகதம்பிரான் ஆலயத்துக்கு சென்று வழிபடவும் இந்த மதகுரு தடையாக இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

9.jpeg

திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜபிள்ளை மாணிக்கநடராசா இது தொடர்பாக கூறுகையில், 

“திரியாய் கிராமத்தில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். எங்களுடைய வாழ்வாதார தொழில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஆகும். எங்களுக்கு வளத்தாமலைப் பகுதியில் 28 ஏக்கர் உறுதிக் காணி இருக்கின்றது. இதனை அப்பா, அப்பாவின் அப்பா காலத்தில் இருந்து நாங்கள் செய்து வருகின்றோம். 1965ஆம் ஆண்டில் இருந்து அந்தக் காணியில் நான் விவசாயம் செய்து வருகின்றேன்.

10.jpeg

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வன்னி பகுதிக்கும் இந்தியாவுக்கும் சென்றோம். 2002ஆம் ஆண்டு திரியாய் மீள்குடியேற்றப்பட்டபோது நான் இந்தியாவில் இருந்ததால் வர முடியாமல் போனது. பின்னர் 2010ஆம் ஆண்டளவில் நான் எமது கிராமத்துக்கு வந்து எமது காணிகளில் விவசாயம் செய்வதற்காக சென்றபோது வனவளத்துறையினர் எங்களை அப்பகுதிக்குள் செல்ல விடாது தடுத்தனர். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு அரிசிமலைப் பிக்கு வந்து எமது உறுதிக் காணிகளில் விவசாயம் செய்து வருகிறார். 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித பலனும் இல்லை. எங்களுடைய உறுதிக் காணிகளில் விவசாயம் செய்யச் செல்லும் எம்மை தடுத்துக்கொண்டு பௌத்த பிக்கு காட்டைத் தள்ளி, விவசாயம் செய்ய ஆதரவாக வனவளத்துறையினர் செயற்படுகின்றார்கள். 

2020ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரைக்கும் எமது காணிகளை தனக்கு வேண்டிய சிங்கள மக்களுக்கு குத்தகைக்கு வழங்கி குத்தகை பெற்று வருகிறார். இன்னும் எமது காணியில் எம்மால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. ஊழல் அற்ற புதிய அரசாங்கம் வந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் எம்மைப் போன்ற ஏழை மக்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.

11.jpeg

அதுமட்டுமல்லாமல் காலாகாலமாக எமது மக்கள் வழிபட்டு வந்த “வளத்தாமலையான்” என்று அழைக்கப்படுகின்ற நாகதம்பிரான் ஆலயத்தையும் அரிசிமலைப் பிக்கு தங்களுடைய நாக விகாரை என்று சொல்லிக்கொண்டு எமது மக்களை வழிபட விடாமல் தடுத்து வருகின்றார். 

இந்த ஆலயத்தில் எமது பரம்பரையினரே பூசை செய்து வருகின்றனர். எனது அப்பாவுக்குப் பிறகு நான்தான் பூசாரியாக கடமையாற்றி வருகின்றேன். அருகில் உள்ள புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் வளத்தாமலையானுக்கு நேர்த்திக்கடன் வைத்து, நூல் கட்டுவதற்கும் திருநீறு இடுவதற்கும் வருவார்கள். 

ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் வளத்தாமலையானுக்கு பொங்கிப் படைத்துதான் எமது விவசாய நடவடிக்கைகளை தொடங்குவோம். மாடு கன்று போட்டால் முதல் கறக்கின்ற பாலை வளத்தாமலையானுக்கு பொங்கித்தான் நாங்கள் பாவனைக்கு எடுப்போம். இதை எமது மக்கள் எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே செய்து வருகின்றார்கள். எமது ஆலயத்தையும் சப்த நாக பபத விகாரை என சொல்லிக்கொண்டு அதையும் ஆக்கிரமித்து அதைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுடைய காணிகளையும் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். 

எமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் எமது வளத்தாமலையானுக்கு நேர்த்தி வைப்போம். ஆனால், எமது நேர்த்திக்கடனைக் கூட செலுத்த முடியாமல் பல வருடகாலமாக எமது மக்கள் தவித்து வருகின்றார்கள். சிலர் 2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பிரதான வீதியில் இருந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். எமது வளத்தாமலையானை வழிபடுவதற்கு எமது அனுமதி வழங்கப்பட வேண்டும். தற்போது இந்த பகுதியில் புதையல் தோண்டியிருப்பதாகவும் அறிகின்றோம்” என தெரிவித்தார். 

12.jpeg

12-1.jpeg

12-2.jpeg

மேலும், காணி பிரச்சினை தொடர்பாக திரியாய் விவசாய சம்மேளனத்தின் பொருளாளரும் விவசாயியும் ஆலய பூசகருமான மகாதேவஐயர் சாரங்கன் கூறுகையில்,

13.jpeg

“திரியாய் கிராமத்தில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். எமக்கு வளத்தாமலை கண்டப்பன் வயல் பகுதியில் எமது பாட்டனார் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து 15 ஏக்கர் வயற்காணி இருக்கிறது. 

நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இறுதியாக 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டில் மீள குடியமர்த்தப்பட்டோம். பின்னர் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து எமது காணியை துப்புரவு செய்து விவசாயத்தில் ஈடுபட முயற்சி செய்தபோதும் வனவள பாதுகாப்புத் துறையினர், தொல்லியல் துறையினர் உட்பட அரச துறையினர் எமக்கு அனுமதி அளிக்கவில்லை.  

இந்நிலையில் எமது காணிகளை பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக பிடித்து அதை சிங்கள மக்களுக்கு குத்தகைக்கு கொடுத்து, அவர்கள் அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே சமூகப் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக 80 தொடக்கம் 100 ஏக்கர் வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை பௌத்த பிக்குகள் அடாத்தாக பிடித்து விவசாயம் செய்து வருவதால் எமது மக்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. 

முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே இந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களுடைய உறுதிக்காணிகளை பௌத்த பிக்குகளிடம் இருந்து மீட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார். 

ஓய்வுபெற்ற அதிபர் கனகசுந்தரம் சௌந்தராசா கருத்து தெரிவிக்கையில், 

14.jpeg

“1985ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது திரியாயில் யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் எமது திரியாய் கிராமம் செல்வம் கொளிக்கும் ஊராக இருந்தது. எமது மக்கள் தன்னிறைவடைந்திருந்தனர். இதற்கு காரணம் விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். இதனால் அயல் கிராமங்களில் இருந்து குறிப்பாக திருகோணமலை நகரத்தில் இருந்து நிதி சேகரிக்க எமது கிராமத்துக்குத்தான் வருவார்கள். 

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று மீண்டும் 2002ஆம் ஆண்டு மீள குடியமர்த்தப்பட்டார்கள். நீண்டகாலமாக எமது மக்கள் கிராமத்தில் இல்லாததன் காரணமாக அவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

இந்நிலையில் அவர்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்வதற்கு வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எல்லைக் கற்களை போட்டு அப்பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்து  வருகின்றனர்.

தொடர்ச்சியாக விவசாயம் செய்யாததன் காரணமாக பற்றைக் காடுகள் வளர்ந்துள்ளன. எனினும் அப்பகுதியில் இன்னமும் வயல் வரம்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆத்திக்காடு, கொம்பெடுத்தான்மடு, கல்லம்பத்தை உட்பட பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 

ஆத்திக்காடு வளத்தாமலை பகுதியில் ஒரு மலை இருக்கிறது. இதில் நாகதம்பிரான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதில் மாதாந்தம் மற்றும் வருடாந்தம் பொங்கல் மற்றும் பூசை நிகழ்வுகளை எமது மக்கள் செய்து வந்தார்கள். ஆனால், அது தற்போது பௌத்த பிக்குவால் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுடைய பிரித்தானிய உறுதிக் காணிகளையும் அத்துமீறி பிடித்து குத்தகைக்கு வழங்கி வருமானம் ஈட்டி வருகின்றார். எமது மக்கள் அங்கு சென்றால் அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றார்கள்.

அத்துடன் நீலப்பனிக்கனுக்கு அப்பால் இருக்கின்ற கொம்பெடுத்தமடு பிரதேசத்தில் 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாயம் செய்த தமிழ் மக்களுடைய எல்லைக் காணிகளை தமது எல்லைகள் என கூறிக்கொண்டு சுமார் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை ஆக்கிரமித்து,  சகோதர இன மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தற்போது விவசாயம் செய்யப்படுகின்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள பற்றைக்காடுகளை எமது மக்கள் துப்புரவு செய்தாலும், அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். எனவே மக்கள் பயிர்ச்செய்கையிட்ட காணிகளுக்கு அதிகாரிகள்  வந்து ஆராய்ந்து அவற்றை மீள பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்” என குறிப்பிட்டார். 

ஆத்திக்காட்டு விவசாயி கிருஸ்ணபிள்ளை சதீஸ்வரன் தனது எண்ணக்கருத்தை வெளிப்படுத்துகையில், 

15.jpeg

“எங்களுக்கு ஆத்திக்காட்டு வெளியில் வயல்காணி இருக்கின்றது. இது என்னுடைய அப்பப்பா, அப்பா என பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்ற காணி. 10 ஏக்கர் அளவில் இந்த காணி காணப்படுகிறது. 

நாங்கள் 1985ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மீண்டும் 1990ஆம் ஆண்டு வந்து இந்த வயற்காணியில் விவசாயம் செய்தோம். பின்னர்,  1990ஆம் ஆண்டில் மீண்டும் இடம்பெயர்ந்து 2002ஆம் ஆண்டில் மீள்குடியேறி எங்கள் கிராமத்துக்கு வந்தோம். 

அந்த யுத்த காலத்தில் காணியை துப்புரவாக்கி வயல் நிலமாக்க உரிய அனுமதி தரப்படவில்லை. நாங்கள் அனுமதி பெற்று இந்த காணிகளை சீரமைக்க முற்பட்டபோது வளத்தாமலை பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வந்திருந்து, இங்கு எவரையும் விவசாயம் செய்ய விடவில்லை. இதனால் நீதிமன்றத்துக்கு சென்றதையடுத்து, தீர்ப்பு எமக்கு சார்பாக வந்தது. அதன் பின்னரும் அந்த பிக்கு எம்மை விவசாயம் செய்ய விடவில்லை. அதன் பின்னரும் இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர் உட்பட பலருக்கு தெரியப்படுத்தினோம். ஆனால், எந்த தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை.

தற்போது வந்திருக்கின்ற புதிய அரசாங்கத்தில் எமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாவட்ட செயலகத்தில் வைத்து காணி பிரச்சினை தொடர்பாக முறையிட்டோம். அப்போது, ஆவணங்கள் இருப்பவர்கள் காணிகளில் விவசாயம் செய்யுங்கள் என கூட்டத்தில் கூறப்பட்டது. அதை நம்பி விவசாயம் செய்ய வந்தபோது மீண்டும் பிக்கு பொலிஸ் அதிகாரிகளை அழைத்து வந்து தடை விதித்தார். 

பின்னர் ஆளுநரின் தலைமையில் குச்சவெளி பிரதேச செயலகத்தில் கூட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டது. அதன் ஊடாக, பிக்குவுக்கு உரிய காணியை அளந்து கொடுத்துவிட்டு, எமது காணிகள் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு விவசாயம் செய்ய முற்படுகின்றவேளையிலும் பௌத்த பிக்கு மீண்டும் தடைவிதித்து வருகிறார். 

சொந்த வயற்காணிகளை வைத்துக்கொண்டு அரிசியை விலைக்கு வாங்கி சாப்பிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, திரியாய் விவசாயிகளான நாங்கள் தற்போது பதவி வகித்திருக்கும் ஜனாதிபதியை நம்புகின்றோம். இந்த அரசாங்கத்தில் எமது மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம்” என தெரிவித்தார். 

திரியாய் விவசாய சம்மேளனத்தின் தலைவர் அற்புதராஜன் டனுர்சன் கூறுகையில், 

16.jpeg

“எமது திரியாய் மக்களுக்கு ஆத்திக்காடு – வளத்தாமலை பகுதியில் 125 வருட பழமை வாய்ந்த, பிரித்தானியரால் வழங்கப்பட்ட உறுதியுடைய காணி இருக்கிறது. எனினும், அந்த காணிகளை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் 2020ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரை அடாத்தாக பிடித்து ஆக்கிரமித்து வருகிறார். 

இந்நிலையில், புதிய அரசாங்கம் வந்த பின்னர் கிழக்கு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, 07.10.2024 அன்று மாவட்ட செயலகத்துக்கு எம்மையும் பௌத்த பிக்குவையும் மாவட்ட செயலாளர் அழைத்து, எங்களது ஆவணங்களை பரிசீலனை செய்து ஆவணங்கள் இருப்பவர்கள் விவசாயம் செய்யலாம் என தெரிவித்திருந்தார். ஆனால், மறுநாள் வயலுக்குச் சென்றபோது பௌத்த பிக்கு விவசாயிகளை விரட்டியடித்தார். பின்னர் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச சபையில் கூட்டம் நடைபெற்று, அதன் ஊடாக பௌத்த பிக்குவுக்குரிய காணி அளந்து கொடுக்கப்பட்டதோடு, மக்களுடைய காணிகளில் மக்கள் விவசாயம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. எனினும் தொடர்ந்து அந்த பௌத்த பிக்கு எமது மக்களுடைய காணிகளில் விவசாயம் செய்வதற்கு தடையாக இருந்து வருகின்றார்.

பௌத்த பிக்கு எமது உறுதிக்காணிகளை அடாத்தாக பிடித்து குத்தகைக்கு கொடுத்து வருடாவருடம் இலட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றார். அத்துடன் மாடி வீடு கட்டி வசித்து வருகின்றார். ஆனால் எமது மக்கள் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடி வருகின்றார்கள். எனவே எமது மக்களுக்கு புதிய அரசாங்கத்திலாவது நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். 

விவசாயி அற்புதராஜன் கௌசலா கூறுகையில், 

17.jpeg

“எமது திரியாய் கிராமத்தில் ஆத்திக்காடு எனப்படுகின்ற வயல்பகுதி 880 ஏக்கர்களை கொண்டதாக காணப்படுகின்றது. இது எமது மூதாதையர் காலத்தில் இருந்து அதாவது 1900 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. எனக்கு இங்கு பரம்பரைக் காணி 10 ஏக்கர் இருக்கிறது. இந்த காணிகளில் 1990ஆம் ஆண்டு வரை விவசாயம் செய்து வந்தோம். பின்னர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றதால் இந்தக் காணிகளில் செய்கையிட முடியாமல் போனது. 2002ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் மீள்குடியேற்றம் நடந்தது. தொடர்ந்தும் 2009ஆம் ஆண்டும் மீள்குடியேற்றம் நடந்தது. அதன் பின்னர், எமது ஜீவனோபாய தொழிலான விவசாயத்தை நம்பித்தான் நாங்கள் இந்த கிராமத்தில் மீள குடியேறி இருக்கிறோம். நீண்டகாலமாக பயிர் செய்யாமல் பற்றை வளர்ந்து கிடக்கும் காணிகளை துப்புரவு செய்வதற்காக எம்மிடம் இருக்கின்ற உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்களை காணிபித்தும் வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் எம்மை விடவில்லை. ஆனால், பௌத்த பிக்கு எமது காணிகளை துப்புரவு செய்து விவசாயம் செய்வதற்கு திணைக்கள அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள். 

அரிசிமலை பிக்கு மக்களுடைய பெருமளவான காணிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றார். அதில் 82 ஏக்கர் காணியை குச்சவெளி கமநல சேவை நிலையத்தின் கீழ் பதிவு செய்து பசளை பெற்றுக்கொண்டும் இழப்பீடுகள் பெற்றுக்கொண்டும் விவசாயம் செய்து வருகின்றார். 

திரியாயின் ஏனைய பகுதிகளை விட இந்த பகுதியில் மாத்திரம் உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்கள் கொண்ட 800 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இருக்கின்றன. இவற்றை வனவள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் எம்மை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றன. 

இந்நிலையில் பௌத்த பிக்கு எமது காணிகளில் விவசாயம் செய்து வருகின்றார். ஆனால், நாங்கள் ஒரு நேரம் கூட ஒழுங்காக சாப்பிட முடியாமல் பட்டிணியால் வாடி வருகின்றோம்” என்றார். 

இவ்வாறாக, அப்பகுதி மக்கள் தமது காணிகளில் தமக்கு உரித்து இருந்தும், விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலையை வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர். 

திரியாய் கிராமமும் அதன் வரலாறும்

திரியாய் கிராம சேவகர் பிரிவானது 11.26 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு 300 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் வசித்து வருகின்றார்கள். இதில் ஆண்கள் 442 பேர், பெண்கள் 364 பேர். 

திரியாய் கிராம சேவகர் பிரிவானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

திரியாய் கிராமம், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பழம்பெரும் கிராமமாகும். திருக்கோணேஸ்வரர் ஆலயத் திருப்பணிக்காக குளக்கோட்டு மன்னனால் திரியாயில் மக்கள் குடியேற்றப்பட்டு, 7 குளங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டதோடு கால்நடைகளும் கொடுக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. 

இந்த வரலாற்றுப் பின்னணியை நோக்குகையில், திரியாயில் இருந்து திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு திரி, நெய் வழங்கப்பட்டு வந்ததால் “திரி - ஆய் - திரியாய்” ஆகிய சொற்கள் இணைந்து “திரியாய்” எனும் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தாமரைத் தண்டில் இருந்து தயாரிக்கப்பட்ட திரியும், பசு நெய்யும் ஆலயத்துக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. 

இங்கு 1825ஆம் ஆண்டு பாடசாலையொன்று கட்டப்பட்டதாகவும், 1875ஆம் ஆண்டு பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. 

1985ஆம் ஆண்டு திரியாய் கிராமம் எரியூட்டப்பட்டது. அந்த சம்பவத்தில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 

அவ்வேளை, கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரியாய் மக்கள் இடம்பெயர்ந்தனர். அந்த சூழ்நிலையில் தங்கள் காணிகளுக்கான ஆவணங்களை இழந்த மக்கள் இன்று தங்கள் காணிகளை உரிமை கோர முடியாமலும், காணிகளில் விவசாயம் செய்ய முடியாமலும் தவிக்கின்றார்கள். 

எனவே, அரசாங்கம் திரியாய் மக்களுடைய காணிகளுக்கான ஆவணங்களை வழங்கி அவர்களுடைய நிலங்களை விடுவித்து, அந்த நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்ய உதவ வேண்டும். நல்லிணக்கம், சகவாழ்வை ஏற்படுத்த வேண்டுமாயின், இன மற்றும் மதங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளையும் அரசு தடுக்க வேண்டும்.

8a8c7ddc-4b26-4ad5-8950-072d1f9d8fbf.jpg

https://www.virakesari.lk/article/210824

இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் மோதி இருநாட்டு மீனவர் பிரச்னை பற்றி பேசுவாரா?

2 months 2 weeks ago

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,X/NARENDRA MODI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவரது இந்த பயணத்தில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சிக்கலான இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

மோதிக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோதி, அங்கிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ஏப்ரல் 4 இரவு சென்றார்.

3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மோதி, அந்நாட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். இது அவர் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள நான்காவது பயணமாகும்.

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இலங்கைக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மோதிதான். ஆகவே, அவரது இந்தப் பயணம் இருதரப்பாலும் மிகுந்த முக்கியத்துவத்துடன் கவனிக்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின்போது சில திட்டங்களைத் துவக்கி வைக்கும் மோதி, இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுகிறார்.

இருந்தபோதும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து பேசப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை இல்லை.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1247 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

6 ஆண்டுகளில் 1,200 தமிழக மீனவர்கள் கைது

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கையின் கடற்பரப்பிற்குள் சென்று மீன் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கொடுத்த தகவல்களின்படி, 2020 முதல் 2025 ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் 1247 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில்தான் அதிகபட்சமாக 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையுடன் கடலில் நடந்த மோதல்களில் 7 பேர் வரை இறந்துபோயுள்ளனர்.

2025ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகும் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மார்ச் ஐந்தாம் தேதி கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்தது. மார்ச் 26ஆம் தேதி 11 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் புகார்

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்து மீன் பிடிக்கும் விவகாரம் நீண்ட காலமாகவே நீடிக்கும் ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வட இலங்கையின் கடற்கரைக்கு அருகில் சென்று, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதாக வட இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர்.

அவர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலை போன்றவற்றைப் பயன்படுத்துவதாக, இலங்கை வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு தீர்வு காண நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான இலங்கை மீனவர் பிரதிநிதிகள், தமிழக மீனவர் பிரதிநிதிகள், இந்திய அரசு அதிகாரிகள் இடையே 2014 - 2015 வாக்கில் முத்தரப்புப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இருந்தபோதும் இந்த விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழக மீன்வர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலையைப் பயன்படுத்துவதாக, இலங்கை வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

இந்நிலையில், இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடரச் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஜஸ்டின், சகாயம், ஆல்வின், ஜெர்மனியஸ் ஆகிய 5 பேர் மார்ச் 25ஆம் தேதி இலங்கை சென்றனர்.

மார்ச் 26ஆம் தேதி வவுனியாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பிரதமர் மோதி இலங்கைக்கு வரும்போது, அவரிடம் இது குறித்துப் பேச தங்களுடைய ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்போவதாகவும், அதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்படலாம் என்றும் இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு, இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை நேரில் சந்தித்து பல ஆண்டுகளாக நடத்தப்படாத இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டுமென தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பிறகு இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் மீனவர்களைச் சந்தித்துவிட்டு அவர்கள் தமிழகம் திரும்பினர்.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மார்ச் 26ஆம் தேதி வவுனியாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது

தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பு என்ன?

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மீனவர் பிரதிநிதி ஜேசுராஜா, கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசை மோதி வலியுறுத்த வேண்டும்.

அதேபோல, இலங்கை கடற்படை 2018ஆம் ஆண்டு முதல் சிறைபிடித்து வைத்துள்ள 200க்கும் மேற்பட்ட நல்ல நிலையில் உள்ள மீன்பிடி படகுகளை மீட்பதற்கும் இலங்கை அரசிடம் பேச வேண்டும்.

மேலும், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்தின்படி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர இலங்கை ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

இலங்கை அமைச்சர் கூறியது என்ன?

ஆனால், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடிப்பதை நிறுத்துவது தான் ஒரே தீர்வு என்கிறார் இலங்கையில் கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக பிபிசியிடம் பேசியிருந்த அவர், "இவர்கள் கச்சத்தீவுக்கு வருகின்றார்களா அதற்குப் பக்கத்தில் இருந்து மீன் பிடிக்கின்றார்களா என்பது அல்ல பிரச்னை. கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது.

கச்சத்தீவுக்குக் கூட வந்து மீன் பிடிப்பதற்கான உரிமை இவர்களுக்குக் கிடையாது. அவர்கள் எங்களுடைய கரையையும் கூட அண்மிக்கின்ற அளவுக்கு வந்து மீன் பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள்," என்கிறார் அவர்.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

ஆழ்கடல் மீன்பிடிப்பு தீர்வாகுமா?

தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் செல்வதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு என்கிறார் சென்னையைச் சேர்ந்த, சர்வதேச விவகாரங்களில் நிபுணரான என். சத்தியமூர்த்தி.

"கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைதுசெய்ததாகவும் திசை மாறி இலங்கை கடற்பகுதிக்குள் சென்றுவிட்டதாகவும் சொல்வதெல்லாம் சரியானவையல்ல.

நம்முடைய மீனவர்கள் இலங்கை கடற்கரைக்கு 2-3 கி.மீ. அருகில் வரை செல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் மீன் வகைகள், நம்முடைய கடற்பரப்பில் இல்லை. அவற்றைப் பிடிப்பதற்காகவே அவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குச் செல்கிறார்கள். அதனால், இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு, ஆழ்கடல் மீன் பிடிப்புத்தான்" என்கிறார் அவர்.

இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக பெரிய படகுகளை வாங்கியளிக்கும் திட்டத்தை 2017-இல் இந்திய அரசு துவங்கியது. இதில் பத்து சதவீத நிதியை மீனவர்கள் கொடுத்தால் போதும். 20 சதவீதம் கடனாகவும் மீதமுள்ள தொகை மானியமாகவும் வழங்கப்படும்.

"ஆனால், இந்தத் திட்டம் மெதுவாக செயல்படுத்தப்படுகிறது. அதனை விரைவுபடுத்த வேண்டும். தற்போதைய பயணத்தின் போது பிரதமர் மோதி இது குறித்தும் இலங்கைத் தரப்பிடம் பேசுவார். கச்சத்தீவு தொடர்பாக அறிவிப்பு ஏதும் வருவது கடினம்" என்கிறார் என். சத்தியமூர்த்தி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg9mn7dy3vo

மோதியின் இலங்கை பயணம் - தமிழர்களின் முக்கிய எதிர்பார்ப்பு என்ன?

2 months 3 weeks ago

மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்தாண்டு டிசம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கு அரசமுறை பயணமாக வந்திருந்தபோது

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி,பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய பிரதமர் நரோந்திர மோதி வரும் ஏப்ரல் 4-அம் தேதி முதல் 6-அம் தேதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோதி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

மேலும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், இந்திய பிரதமருடன் சந்திப்புகளை நடத்துவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிகிறது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பௌத்தர்களின் புனிதத் தலமாக போற்றப்படும் அநுராதபுரம் ஸ்ரீமகா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும் மோதி கலந்துகொள்ள உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, இந்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் மோதி கலந்துகொள்ள உள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இந்த பயணத்தின் போது கையெழுத்திடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வை இந்தியாவால் வழங்க முடியுமென இலங்கை தமிழர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையில், 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக, தமிழர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது.

எனினும், இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை, அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கின்ற போதிலும், அதனை முழுமையாக அமல்படுத்த இலங்கை மத்திய அரசாங்கம் மறுத்து வருகின்றது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நிலையில், தமிழர்களுக்கான தீர்வாக 13வது திருத்தத்தையேனும் முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அழைக்கப்படும் மலையக தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகின்றது.

மேலும், பௌத்த மத முன்னேற்றத்துக்காக இந்தியா பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதுடன், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் இலங்கையில் முன்னெடுத்து வருகின்றது.

கடந்த 2014ல் மோதி முதன்முறையாக பிரதமராக பதவியேற்றதிலிருந்து, தற்போதுவரை மூன்று முறை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மோதி முதல் தடவையாக 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தநிலையில், மோதி நான்காவது தடவையாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் புதிய அரசாங்கம் இலங்கையில் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர், உலக அரசத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகின்றது.

மோதியின் இம்முறை பயணத்தை இலங்கை வாழ் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?

தமிழ் அரசியல் கட்சிகளின் பார்வை

மோதி இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பாக மலையக அரசியல் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளன என்பது குறித்து நாம் ஆராய்ந்தோம்.

இந்தியாவினால் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஓ.சி.ஐ அந்தஸ்தை இலங்கைக்கு இலகுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மோதியிடம் தாம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

மனோகணேசன்

படக்குறிப்பு,ஓ.சி.ஐ அந்தஸ்தை இலங்கைக்கு இலகுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க இந்திய பிரதமரிடம் கோர உள்ளதாக, மனோ கணேசன் தெரிவித்தார்

''இலங்கையின் இன்றைய நிலைமைக்கு பிரதானமான காரணம் பொருளாதார வீழ்ச்சி. அதிலிருந்து எழுந்து விடவில்லை. இன்னும் இரண்டு வருடங்களிலே மீள் திருத்தப்பட்ட கடன்களை கட்ட வேண்டிய நிலைமை இருக்கின்றது. ஐ.எம்.எஃப் பிரதான செயற்பாட்டில் அது பிரதானமான அங்கமாக இருக்கின்றது. ஆகவே, இந்தியா முன்னேறுகின்றது என்றால், பக்கத்தில் இருக்கின்ற நாமும் அவர்களோடு சேர்ந்து முன்னேற வேண்டும். தமிழர்களை பொறுத்தவரையில் இலங்கையின் அதிகாரப் பகிர்வு என்பது தேவையான விடயமாக இருக்கின்றது." என்கிறார் அவர்.

தற்போது ஆளும் கூட்டணியின் முதன்மையாக அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), இந்திய - இலங்கை ஒப்பந்தம், 13வது திருத்தம், அதிகார பகிர்வு, மாகாண சபை ஆகியவற்றுக்கு எதிராக முன்னர் போராடியதாக அவர் கூறுகிறார்.

"மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டாலும் கூட மாகாண சபைக்கு எதிராக அநுர குமாரவையும் மீறி, அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முரணான கருத்துக்களை தெரிவித்துக்கொண்டு தான் இருக்கின்றார். உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டாலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம்தான் எங்களுக்கு இருக்கின்றது." என்கிறார் அவர்.

மாகாண சபை தேர்தலை நடத்த இந்தியா இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கிறார்.

'ஓ.சி.ஐ முறையை இலகுப்படுத்துக'

"எங்களுடைய அரசியல் கோரிக்கைகள் தொடர்பாக எந்தவொரு கோரிக்கைகளையும் இந்தியாவிடம் முன்வைக்க விரும்பவில்லை. அரசாங்கம், எதிர்க்கட்சிகளிடம் அந்த கோரிக்கைகளை வைப்போம். ஏனெனில், இந்தியாவிடம் அக்கோரிக்கைகளை வலியுறுத்துவதன் மூலம் அவை நடக்காது என்று எங்களுக்கு தெரியும். " என்றும் கூறுகிறார் மனோ.

இந்தியாவிடம் அவர் முன்வைக்க உள்ள சில பொதுவான கோரிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

  • பெருந்தோட்ட மலையக மக்களுக்கான பொருளாதார உதவிகள்

  • கல்வி உதவிகளை வழமை போன்று இந்தியா அதனை அதிகரிக்க வேண்டும்.

  • இந்திய நாட்டிலே ஓ.சி.ஐ என்ற முறை இருக்கின்றது. இந்திய வம்சாவளி மக்களுக்கு, கடல் கடந்த பிரதிகள் என்ற அந்தஸ்தை வழங்கினார்கள். அந்த அந்தஸ்து இலங்கைக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், சமீப காலத்தில் அதனை பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது. அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஓ.சி.ஐ அந்தஸ்தை வழங்க வேண்டும்.

ஸ்ரீதரன்

படக்குறிப்பு,ஸ்ரீதரன்

கூட்டாட்சி தீர்வு

சமஷ்டி (கூட்டாட்சி) அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை இலங்கை தமிழர்களுக்கு வழங்குவதற்கான ஒத்துழைப்புகளை இந்தியா வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே ஈழத் தமிழர்களுக்கு காணப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஈழத் தமிழர் சார்பான தரப்பாக இந்தியாவே அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது, அந்த ஒப்பந்தம் தொடர்பான விடயங்கள் தமிழர் தரப்புக்கு முழுமையாக இதுவரை தெரிய வந்ததில்லை." என கூறுகிறார் ஸ்ரீதரன்.

குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு நிலவரங்கள், இலங்கையின் இறையாண்மை, இந்தியாவின் இறையாண்மை தொடர்பாகவே அதில் அதிகமாக பேசப்பட்டிருப்பதாக கூறப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.

"இந்திய பிரதமரின் வருகையால் தங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு அல்லது அரசியல் எதிர்காலம், நிரந்தரமான அரசியல் வாழ்வு கிடைக்கும் என்ற ஈழத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் பிரதமரின் வருகை அமையும் என நம்புகின்றோம்." என்கிறார் அவர்.

" 2015ம் ஆண்டில் பாரத பிரதமர் இலங்கை வந்தபோது, அவர் இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சமஷ்டி (கூட்டாட்சி) முறை பற்றி கூறியிருந்தார். சமஷ்டி அரசியல் தீர்வுதான் தமிழர்களுக்கு பொருத்தமானது. அந்த வகையிலான அரசியல் தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்," என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவிக்கின்றார்.

செந்தில் தொண்டமான்

படக்குறிப்பு,மலையக மக்களுக்கான தொடர் உதவிகளை எதிர்பார்ப்பதாக, செந்தில் தொண்டமான் கூறுகிறார்

மலையக மக்களுக்கு இந்தியா இதுவரை பெரும் உதவிகளை வழங்கியுள்ளதுடன், அதே உதவிகளை தாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிடுகின்றார்.

''இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் அரசியலையும் தாண்டிய ஒரு கலாசார உறவு காணப்படுகின்றது. இரண்டு பேரும் சகோதரர்கள். இலங்கை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இலங்கையுடன் முதன்முதலில் இருந்தது இந்தியா. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவதற்காக இந்தியா பெரும் உதவிகளை வழங்கியது." என்றார்.

பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இந்திய பிரதமர் முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தருகின்றார்.

"உலகிலேயே இந்தியாவின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றது. ஆசியாவில் மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் நாடாக இந்தியா உள்ளது. அப்படியிருக்கும் போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்த வகையில் இலங்கை பயணிக்கும் போது பொருளாதார ரீதியில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். இந்தியா அரசாங்கம் மலையக மக்களுக்காக பெரும் உதவிகளை வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளை விடவும் இந்தியா அதிக உதவிகளை வழங்கியுள்ளது. அதே உதவிகளையே நாங்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்'' என செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

சீன விவகாரம், அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், தமிழர் பிரச்னை, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம், ஒத்தி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இலங்கை பயணத்தின் போது கவனம் செலுத்தப்படக்கூடும் என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

சிவராஜா

பட மூலாதாரம்,SIVARAJA

படக்குறிப்பு,மோதியின் பயணம் பல்வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தும் என்கிறார் சிவராஜா

''இந்திய பிரதமரின் வருகையானது, மிக முக்கியத்துவமான காலக் கட்டத்தில் நடைபெறுகின்றது. இந்த அரசாங்கம் சீன சார்பான அரசாங்கம் என்ற ஒரு முத்திரை உள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியா தனது ராஜதந்திர உறவை வலுப்படுத்துவதற்காக அதன் பிரதமரே நேரடியாக வருகின்றார் என்பது இந்த அரசாங்கத்தின் மிக முக்கியமானதொரு வாய்ப்பாகும்." என்கிறார் அவர்.

"அதானி காற்றாலை திட்டம் கிடப்பில் இருக்கின்றது. எனவே, அது புத்துணர்ச்சி பெறுமா? அதேபோன்று, பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை இந்தியா செய்யவுள்ளதாக ஒரு தகவல் இருக்கின்றது. அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுமா என்பதை பொருத்து இந்த பயணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தெரியும். தமிழர்கள் திட்டத்தில் இந்தியா நிச்சயம் வலியுறுத்தும். பிரதமர் மோதி இந்த விஜயத்தில் அதனை சொல்வார் என நான் நினைக்கின்றேன்." என்றார் அவர்.

13வது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும். அது நீண்ட காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

"ஆனால், இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் தமிழர் பிரச்னை குறித்து நிச்சயம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு சென்றபோது கூட, இது தொடர்பான விடயத்தை இந்தியா பேசவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. எனவே, இந்த பயணத்தில் மோதி அதனை வலியுறுத்துவார் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது," என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2delxgg9lyo

பிரித்தானிய தடை:  துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!

2 months 3 weeks ago

பிரித்தானிய தடை:  துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!

April 3, 2025

பிரித்தானிய தடை:  துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!(வெளிச்சம்:048.)

  — அழகு குணசீலன் —

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது பாதுகாப்பு படையினர் தரப்பிலும், படையினருக்கு உதவியாக செயற்பட்ட  அரச ஆதரவு குழுவினர் தரப்பிலும் இடம்பெற்ற யுத்த மீறல்களுக்காக நான்கு பேருக்கு பிரித்தானியா பயணத் தடையையும், சொத்துமுடக்கத்தையும் அறிவித்திருக்கிறது.  பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னா கொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியாக இருந்து 2004 இல் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிரிந்து சென்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானுக்கும் இந்த தடைவிதிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை இலங்கை படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிப்போரில் இடம்பெற்ற யுத்த மீறல்களை அடிப்படையாகக்கொண்டது. இலங்கை இராணுவத்தின்  யுத்தமீறல்கள் போன்றே, விடுதலைப்புலிகளாலும் யுத்தமீறல்கள் செய்யப்பட்டுள்ளன என்பது சர்வதேசத்தின் பொதுவான பார்வை. தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் இந்த கருத்திற்கு ஆதரவாகவே இருதரப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று  கோரியிருக்கின்றனர் அல்லது ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உண்மையில் இந்த  நீதிக்கான அணுகுமுறை முழுமையானதும் சரியானதுமாக இருக்கவேண்டுமானால் 1970 களின் ஆரம்பத்தில் இருந்து 2009 வரையான காலப்பகுதிக்குள் சகல படைத்தரப்பும், சகல தமிழ் ஆயுதப்போராட்ட அமைப்புக்களும், இந்திய படைத்தரப்பும் , அவர்களுக்கு பின்னால் இருந்த  குழுக்களும் இந்த யுத்த மீறல்களுக்கு தனியாகவும், கூட்டாகவும் பொறுப்பானவர்கள்.” என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு  தண்டிக்கப்பட வேண்டும்.

30 ஆண்டு காலத்திற்கும் மேலான உள்நாட்டு யுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிற்பகுதியை மட்டும் – இறுதியுத்த பகுதியை மட்டும் கருத்தில் கொண்டு யுத்த மீறல்களை கருத்தில் கொள்வது பொருத்தமற்றது. இதனால்தான் தமிழ்த்தேசிய தரப்பு இன அழிப்பு என்று வருகின்றபோது 1956 ம் ஆண்டில் இருந்து கணக்கு காட்டுகிறது. இவை அனைத்துமே ஏதோ ஒருவகையில் படையினருடன் தொடர்பு பட்ட  உரிமை மீறல்கள். ஆனால் இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளும், மற்றைய ஆயுதப்போராட்ட குழுக்களும், இந்திய ஆதரவு குழுக்களும்  இந்த குற்றச்சாட்டுக்களில்  இருந்து தப்பிக்கொள்ள  அரச படையினரும், கருணா அணியினரும் குறிவைக்கப்பட்டிருப்பது ஒரு பக்கச்சார்பான செயற்பாடு.

தப்ப வைக்கப்பட்டுள்ள  விடுதலைப்புலிகளாலும், அவர்களால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாலும்  மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மறுப்புக்கள், பாலியல் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் தற்போது தப்பிப்பிழைத்தோம் என்று மூச்சு விடுகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்கும் சேர்த்து மாற்று தரப்பினருக்கு தண்டனை கோரும் அளவுக்கு புனிதர்களாக நிலத்திலும், புலத்திலும் தமிழ்த்தேசிய அரசியல் செய்கிறார்கள்.   சகல தரப்பிலும் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. 

ஆனால் அதுவல்ல இந்த பதிவின் பேசுபொருள். மாறாக  நான்கு தனிநபர்கள் மீதான பிரித்தானியாவின்  இந்த தடைகள் குறித்து துள்ளிக்குதித்து கொண்டாடவும், ஒப்பாரி வைக்கவும் என்ன இருக்கிறது? என்ற கேள்வியும், இன்றைய பூகோள அரசியல் இந்த தடையை  இப்போது ஏன் ? செய்திருக்கிறது என்பதுமே  பேசப்படவேண்டியவை. இலங்கையை பொறுத்த மட்டில் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை வெறும் பூகோள அரசியல் “சமிக்ஞை விளைவு” (SIGNAL EFFECT) மட்டுமே என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.

அமெரிக்க வாஷிங்டன் டொனால்ட் ட்ரம்ப்  நிர்வாகத்தின் புதிய பாதுகாப்பு, பொருளாதார கொள்கை சர்வதேசத்தில் இருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்திகொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் அல்ல இலங்கை போன்ற சிறிய வறியநாடுகள் கூட இந்த கொள்கைகளுக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளன.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒதுங்கி  இருக்கின்ற  பிரித்தானியாவுக்கு ஐரோப்பாவோடு  இணைந்து போவதா? அமெரிக்காவை திருப்திப்படுத்துவதா? என்ற நிலைமை  காணப்படுகிறது. பிரித்தானிய பொருளாதாரம் அகலபாதாளத்தில் வீழ்ந்து விட்டது. வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள்  வெட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அமெரிக்க புதிய பொருளாதார வரிக்கொள்கை பற்றி  அலட்டிக்கொள்ளாமல்  பிரித்தானியா இருப்பது, அது அமெரிக்காவுடன் முரண்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. 

உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்கியை வெள்ளைமாளிகைக்கு அழைத்து காதைப்பிடித்து “திருகி” இருக்கிறார் ட்ரம்ப். மறுபக்கத்தில் ரஷ்ய, இஸ்ரேல் தலைவர்களுடன் தோளில் கை போடுகிறார். வரலாற்றில் பாலஸ்தீனத்தில் ஹாமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக சொந்த மக்கள் திரண்டெழுகிறார்கள். இது இதுவரை மேற்குலகில் ஹாமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற கருத்துக்கு  வலுச்சேர்க்கிறது .

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரிலும் இந்த நிலை ஏற்பட்டபோது புலிகள் மக்களுக்கு எதிராக ஆயதங்களை திருப்பினர். அதற்குள் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த இடத்தில் வெள்ளைக்கொடி கொலைகள் பற்றி ஒரு பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதற்கு பிரித்தானிய தடைவிதித்த நான்கு நபர்கள் காரணம் என்றும் கதை சொல்கிறார்கள். வெள்ளைக்கொடியோடு சரணடையுங்கள் என்று புலிகளுக்கு சொன்னவர்கள் யார்? அதற்கான அனைத்து தொடர்பாடல்களையும் , பாதுகாப்பு உத்தரவாதங்களையும், செய்தவர்கள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்து, தடைசெய்த மேற்குநாடுகள். பூகோள அரசியலில் புலிகளை சரணடையச்செய்து கூண்டோடு அழிப்பதே இந்த மேற்குலக அணியின் முக்கிய இலக்காக இருந்தது என்பதை அவர்களிடம் நீதி, நியாயம் கோருவோர்  இன்னும் அறியவில்லையா? ஆக, வெள்ளைக்கொடி கொலைகளுக்கு யார் பொறுப்பு…..?  

இனி……, 

இலங்கையின் இன்றைய அரசாங்கத்தின் போக்கு மேற்குலகை விட்டு விலகி நகர்வதாக உள்ளது. பாரம்பரிய மேற்கு உறவையும், காலனித்துவம் கட்டிப்போட்ட உறவையும் தவிர்த்து மாற்று பிராந்திய உறவை என்.பி.பி. அரசாங்கம் நாடுகிறது. இந்தியா, சீனா, மத்திய கிழக்கு, வியட்நாம் என்று இலங்கையின் பிராந்திய உறவு வலுவடைகிறது. இதனை அமெரிக்காவினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் பிரித்தானியா அமெரிக்க கையாளாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் வாஷிங்டன் செல்வதற்கு முன்னர் தூரவைத்தே  அநுரவின் காதை திருகியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதற்காக வெளியிடப்பட்ட பூகோள அரசியல் அறிவிப்பே இந்த நான்கு தனிநபர்கள் மீதான தடை. இதன் மூலம் இலங்கை தங்கள் கைகளில் இருந்து விலகிப்போவதை தடுத்து மூக்கணாங்கயிறுபோடும் முயற்சி இந்த தடைக்கு பின்னால் இருக்கிறது.

கனடா நீதியமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியும், பிரித்தானிய லேபர் எம்.பி. உமாகுமாரனும் இந்த பயண, சொத்து தடைகளை வரவேற்று இருக்கிறார்கள். வரவேற்பதை விடவும் இவர்களால் வேறு என்னத்தை செய்ய முடியும். நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலின் தொடர் அரசியலையே டயஸ்போராவை வைத்து இவர்கள்  புலம்பெயர்ந்த நாடுகளில் செய்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குளுக்காக ஏங்குகின்ற கட்சிகள்  தங்கள் சொந்த அரசியலுக்காக இவர்களை பயன்படுத்துகிறார்கள். கனடிய, பிரித்தானிய அரசியல் வாதி ஒருவரை “யாழ்ப்பாணத்தமிழர்” என்று  பெருமையுடன் அழைப்பதன் மூலம் அடையாள அரசியல் அற்ற மேற்குலக கொள்கை அரசியலில் நம்மவர்கள் சாயம் பூசியே அரசியல் செய்ய முனைகிறார்கள் என்பது தெளிவாகிறது. சாயம் வெளிறினால் அரசியல் முடிந்து விடும். இது இதுவரை பல நாடுகளில் நடந்திருக்கிறது.

பிரித்தானியாவின் தடையை கண்டித்து விமல்வீரவன்ச, உதய கம்மன்வல, நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச போன்றோர் இராணுவத்தரப்புக்கு ஆதரவாக கருத்துவெளியிட்டுள்ளனர். இவர்களின் இந்த “ஒப்பாரி ராகமும்”, தமிழ் அரசியல்வாதிகளின் “துள்ளிக்குதித்தல் நடன தாளமும்” வெறும் அரசியல் பூச்சாண்டி . இதனை பயன்படுத்தி  பாதிக்கப்பட்ட தரப்பும், பாதிப்பை செய்த தரப்பும் தங்கள் தங்கள் கட்சி அரசியலை செய்யப்பார்க்கிறார்கள். தடைவிதிக்கப்பட்டுள்ள நான்கு தனிநபர்களும் பிரித்தானியாவுக்கு பயணம் செய்யமுடியா விட்டால் அதனால் அவர்கள் எவற்றை இழந்தார்கள்? பிரித்தானியாவில் சொத்து முடக்கம் என்றால் இருந்தால்தானே முடக்கலாம் (?).  பிரித்தானியாவை விடவும் பயணம் செய்வதற்கும், சொத்து சேர்ப்பதற்கும் உலகில் வேறு நாடுகள் இல்லையா?  இவர்கள் இலங்கையில் சொத்துக்கள் சேர்க்க தடையிருக்கிறதா?  கனடா, அமெரிக்கா ராஜபக்சாக்களுக்கு விதித்த தடையின் செயற்றிறன் என்ன? அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன?

ஆக, மொத்தத்தில் அமெரிக்க சார்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பட்டலந்த அறிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அநுரகுமார அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் எதிர்தரப்பை பிரித்தானியாவின் பெயரில் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது அமெரிக்கா.  போரின் பிராந்திய பங்காளர்களான  இந்தியாவும், சீனாவும் இந்த சிமிக்ஞை விளைவு  பழக்கப்பட்டு புளித்துப்போன ஒன்று என்று கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றன.

சர்வதேச  மேலாதிக்க அரசியல் இதுவரை நாடுகள், அவற்றின் தலைவர்களுக்கு எல்லாம் ஐ.நா.வின், பெயரிலும், அமெரிக்க அணியின் பெயரிலும் விதித்த தடைகள் 20 வீதம் இலக்கை கூட எட்டவில்லை என்பது சர்வதேச நிபுணர்களின் கருத்து. போயும்… போயும்..  இலங்கையைச் சேர்ந்த நான்கு தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை  சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் அநுர அரசுக்கு மூக்கணாங்கயிறு குத்தவும், தென்னிலங்கை பேரினவாத சக்திகளை மேலும் வளர்த்து விடவுமே உதவும்.

 இந்த சிக்னல் தடையால் இராணுவத்தை காட்டிக்கொடுக்கமாட்டோம், உள்நாட்டு பொறிமுறையைத்தவிர வேறு எந்த பொறிமுறையும் நிராகரிக்கிறோம்  என்று இந்த போரின் பின்னணியில் இருந்து செயற்பட்ட ஜே.வி.பி/என்.பி.பி. யை, எந்த குற்றங்களுக்காக பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருக்கிறதோ அந்த குற்றங்களை செய்திருக்கின்ற, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்கின்றன ஜே.வி.பி.யை இவ்வாறான அழுத்தங்கள் மூலம் திருத்தலாம் என்று அமெரிக்காவும், பிரித்தானியாவும் நினைத்தால் அது போன்ற சிறுபிள்ளை அரசியல் உலகில் எங்கும் இல்லை.

 அநுரவுக்கு தலைவலியை  கொடுக்கலாம், ஆனால் அதைக் குணப்படுத்துவதற்கான மாத்திரயை இந்தியாவும், சீனாவும் ஏற்கனவே கொழும்புக்கு அனுப்பிவிட்டன. அதில் ஒரு பகுதியை தன்னோடு  எடுத்துக் கொண்டுதான் ஹேரத் அமெரிக்கா போகிறார். பட்டலந்தையை திசை திருப்ப விதிக்கப்பட்டுள்ள இந்த தடையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் என்.பி.பி.க்கு தலையில் குட்டுவதும் , சேதாரத்தை ஏற்படுத்துவதும் திரைமறைவில் இடம் பெறுகிறது.

https://arangamnews.com/?p=11919

காங்கேசன்துறை தமிழர்கள் காணிகளில் புத்த விகாரை கட்டப்பட்டது சட்டவிரோதம் - இலங்கை விகாராதிபதி பிபிசிக்கு பேட்டி

2 months 3 weeks ago

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம், இலங்கை, முக்கிய செய்திகள்,

3 மணி நேரங்களுக்கு முன்னர்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை விரிவாக்கப் பணிகள் தமிழ் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் இலங்கையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் இங்கிருந்து சென்ற தமிழ் மக்கள் பலரும் அக்காலத்தில் அங்கே ஒரு விகாரை இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

உண்மையில் அப்படி ஒரு விகாரை இருந்ததா? அங்குள்ள பிக்குவும், ராணுவமும், நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரும் இந்த விவகாரம் குறித்து கூறுவது என்ன?

இந்த விகாரை சர்ச்சையாவது ஏன்?

"தற்போதுள்ள விகாரையை தமிழ் மக்களின் காணிகளிலேயே நிர்மாணித்துள்ளனர். இது தவறான விடயம் என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றோம். தமிழ் மக்களே இந்த இடத்தில் இருக்க வேண்டும்,'' என யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை மற்றும் நயினா தீவு விகாரையின் விகாராதிபதி (தலைமை தேரர்) நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

தையிட்டி பகுதியில் திஸ்ஸ ரஜமகா விகாரை அமைந்துள்ளது. இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இந்த தையிட்டி பகுதி காணப்படுகின்றது.

இலங்கை ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான யுத்தம் வலுப்பெற்ற 1990-ஆம் ஆண்டு காலப் பகுதியில் தையிட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறியதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தையிட்டி பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய 90ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் அந்த இடத்திற்கு பௌத்த விகாரையொன்று காணப்பட்டுள்ளது. ஆனால் திஸ்ஸ விகாரை என்று அழைக்கப்படவில்லை என்று அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன?

படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்?

இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி

வரலாற்று சிறப்புமிக்கதா இந்த விகாரை?

''திஸ்ஸ ராஜமஹா விகாரை என்பது பழமையை வரலாற்று பெறுமதிமிக்க விகாரை என்பதுடன், சங்கமித்தை ஜயஸ்ரீ மஹாபோதிக்கு வருகை தரும்போது ஓய்வுக்கு தரித்திருந்த இடத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விகாரையொன்றை அமைக்குமாறு தேவானப்பியதிஸ்ஸ மன்னனுக்கு அறிவித்துள்ளதாகவும் புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முதலாவது தமிழ் தம்ம பாடசாலை இந்த விகாரையிலேயே ஆரம்பிக்கப்பட்டமையும் விசேடமாகும்,'' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார் என நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அதன் தலைவராக பதவி வகித்த போது இதை தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 1946ம் ஆண்டு காலப் பகுதியில் காணி உரிமையாளரினால் இந்த விகாரைக்குரிய காணி ஈடு வைக்கப்பட்ட நிலையில், அதனை மீட்க முடியாது, பின்னர் வேறொரு நபருக்கு குறித்த காணி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த காணி பௌத்த அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டதை அடுத்தே இங்கு பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாக பிரதேசத்தில் வாழும் தமது மூதாதையர் கூறியதாக, அந்த பிரதேச தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தற்போது திஸ்ஸ விகாரை அமைந்துள்ள அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு விகாரை இருந்தது என்பது உறுதியாகியுள்ள பின்னணியில், யுத்த காலத்தில் விகாரையை அண்மித்து வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய சூழ்நிலையில், அந்த காணிகள் ராணுவம் வசமிருந்துள்ளது.

இவ்வாறு ராணுவம் வசமிருந்த காணி விடுவிக்கப்பட்டதுடன், விடுவிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளை திஸ்ஸ விகாரையிலுள்ள பௌத்த மதகுருமார்கள் கைப்பற்றி, ராணுவத்தின் உதவியுடன் விகாரையை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம், இலங்கை, முக்கிய செய்திகள்,

பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN

படக்குறிப்பு,யுத்த காலத்தில் விகாரையை அண்மித்து வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய சூழ்நிலையில், அந்த காணிகள் ராணுவம் வசமிருந்துள்ளது.

காணிகளுக்கு செல்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது - உரிமையாளர்கள் கூறுவது என்ன?

காணியின் உரிமையாளர்களில் ஒருவரான பத்மநாதன் சாரூஜன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசும் போது, ''யுத்தம் காரணமாக 90ம் ஆண்டு காலப் பகுதியில் ஒரே நாளில் நாங்கள் தையிட்டி பகுதியிலிருந்து வெளியேறியிருந்தோம். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்த காணிகள் பகுதி பகுதியாகவே விடுவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி விகாரை பிரச்னை நடைபெறும் பகுதி 2015-ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டது," என்று மேற்கோள்காட்டினார்.

"விகாரைக்கு பக்கத்திலுள்ள காணிகளை பிடித்துக்கொண்டு சற்று தொலைவிலுள்ள காணிகளே முதலில் விடுவிக்கப்பட்டது. விகாரைக்குரிய நிர்மாணங்கள் நடைபெறும் இடத்தில் தான் எங்களுடைய காணி சிக்குண்டுள்ளது. இதுவரை எங்களுடைய காணிகளுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டு தான் இருக்கின்றது," என்றும் அவர் தெரிவித்தார்.

''காணி விடுவிக்கப்பட்டதை அடுத்து, அந்த விகாரைக்கு வருகைத் தந்த பௌத்த பிக்கு ஒருவர், நில அளவையாளர்களை அழைத்து வந்து அளவிட்டு, 24 பரப்பு காணிகளை அவர் எடுத்துக்கொண்டார். எங்களுடைய உறவினர் ஒருவரின் காணியும் அதில் இருந்துள்ளது. அவர் பிரச்னையை ஏற்படுத்தினார். பின்னர் எங்களுடைய நில அளவையாளர் மற்றும் அவர்களுடைய நில அளவையாளர் வந்து மறு அளவை செய்து பிரச்னையை முடித்து கொடுத்தார்கள். அதிலிருந்து அப்போது விலகி சென்றார்கள்.

அதன்பின்னர் பழைய விகாரையில் சிறு சிறு வேலைகள் நடந்துக்கொண்டிருந்தது. மைத்திரி - ரணில் ஆட்சி காலத்தில் பழைய விகாரையில் அபிவிருத்தி பணிகள் நடந்திருந்தன. எனினும், இடைநடுவில் விடுப்பட்ட அந்த பணிகள் இன்று வரை அப்படியே இருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் கொரோனா பரவிய சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் காணிகளில் கொரோனா விதிமுறைகளில் பின்பற்றி அவர்கள் அத்திவார பணிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

விகாரை தான் கட்டுகின்றார்கள் என எங்களுக்கு தெரியாது. சுற்றி வர தகரங்களால் மூடி கட்டிடம் கட்டப்பட்டது. கொரோனா விதிமுறை காரணமாக எங்களால் வெளியில் போக முடியவில்லை. அப்போது இதனை கட்டினார்கள். இந்த இடத்தில் விகாரை கட்டவில்லை. ராணுவம் இருக்கின்றது. ராணுவம் வெளியேறும் போது முழு காணிகளையும் தந்து விடும் என அரசாங்க அதிபர் எங்களிடம் தெரிவித்தார்.

விகாரைக்குரிய காணி வேறொரு இடத்தில் இருக்கின்றது. அந்த இடத்தில் முதலிலேயே அத்திவாரம் போடப்பட்டுள்ளது என்பதனால் இந்த இடத்தில் விகாரை தான் கட்டப்படுகின்றது என்பதை நாங்கள் நம்பவில்லை. கொரோனா காலப் பகுதியை பயன்படுத்தி இதனை கட்டி முடித்து விட்டார்கள்.'' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம், இலங்கை, முக்கிய செய்திகள்,

பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN

படக்குறிப்பு,விகாரையை விரிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 16 நபர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கின்றனர் அங்குள்ள தமிழ் மக்கள்

போராட்டத்தில் மக்கள்

இந்த நிலையிலேயே, தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான போராட்டத்தை, காணி உரிமையாளர்கள் 2023ம் ஆண்டு ஆரம்பித்துள்ளனர்.

''குறித்த பகுதியில் சுமார் 16 பேரின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்தே இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பதை தென் பகுதியிலிருந்து வருகைத் தருகின்ற மக்களுக்கு உணர்த்துவதற்காகவே போராட்டங்களை நடத்துகின்றோம். உண்மையாக பௌத்த மதத்தை வழிபடுவோருக்கு உணர்த்துவதற்காகவே இதனை செய்கின்றோம்.

நயினை தீவு, யாழ்ப்பாணம் நகரம் போன்ற இடங்களில் பௌத்த விகாரைகள் இருக்கின்றன. அந்த இடங்களுக்கு சென்று போராட்டங்களை நடத்தவில்லை. இங்கு மாத்திரமே செய்கின்றோம். அநீதி இழைக்கப்பட்டுள்ளமையினாலேயே இந்த போராட்டத்தை நடத்துகின்றோம் என்பதை உணர்த்துவதற்காகவே இதனை செய்கின்றோம்'' என பத்மநாதன் சாரூஜன் குறிப்பிடுகின்றார்.

''பொதுமக்களின் காணிகளிலேயே இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. இதில் 8 ஏக்கர் காணி பிடிப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை தெளிவூட்ட வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு அளவு பிரமாணம் இருக்கின்றது. கொழும்பில் பச்சர்ஸ் என்றும் யாழ்பாணத்தில் பரப்பு என்றும் வெவ்வேறு அளவைகளில் நிலம் அளவிடப்படுகிறது.

10 பச்சர்ஸ் ஒரு பரப்பு. 16 பரப்புகளை உள்ளடக்கியது ஒரு ஏக்கர். ஏக்கர், பரப்பு, பச்சர்ஸ் என்பதிலும் ஒரு குழப்பம் இருக்கின்றது. அவர்களுக்கு இருந்த காணி 20 பரப்பு. அப்படியென்றால் 200 பச்சர்ஸ். பொதுமக்களுக்குரிய காணி 8 ஏக்கர். கிட்டத்தட்ட 150 பரப்பிற்குரிய காணி அதில் பிடிப்பட்டுள்ளது.'' என பத்மநாதன் சாரூஜன் தெரிவிக்கின்றார்.

இந்த விகாரையை அண்மித்து எந்தவொரு சிங்களவர்களும் காணி உறுதியுடன் இன்று வரை வசித்திருக்கவில்லை என கூறும் அந்த பிரதேச மக்கள், தமிழர்களினால் வழங்கப்பட்ட காணியிலேயே விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதைவிடுத்து, இந்த விகாரையானது புராதன பெருமதிமிக்க விகாரை என கூற முடியாது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

காணி உறுதிப் பத்திரத்திற்கு அமைய விகாரை அமைந்துள்ள காணியில் விகாரை அவ்வாறு நடத்திச் செல்வதற்கு தாம் எந்தவிதத்திலும் எதிர்ப்பை வெளியிடவில்லை என கூறும் அந்த பிரதேச மக்கள், தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரையை விஸ்தரிக்கும் திட்டத்திற்கே எதிர்ப்பை வெளியிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த விகாரையை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இன்றும் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருவதாக பத்மநாதன் சாரூஜன் தெரிவிக்கின்றார்.

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம், இலங்கை, முக்கிய செய்திகள்,

பட மூலாதாரம்,NAVATHAGALA PATHUMAKEERTHI THISS THERO

படக்குறிப்பு,யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நயினா தீவு பௌத்த விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர்

திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி என்ன சொல்கின்றார்?

யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நயினா தீவு பௌத்த விகாரையின் விகாராதிபதியாக கடமையாற்றிய வரும் நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியாகவும் செயற்பட்டு வருகின்றார்.

திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியாக நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் செயற்பட்டாலும், திஸ்ஸ விகாரைக்கான கண்காணிப்பு பொறுப்பு மற்றுமொரு பௌத்த பிக்குவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பௌத்த பிக்குவே, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை மற்றும் நயினா தீவு விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''இந்த பௌத்த பிக்கு ராணுவத்துடன் இணைந்து விகாரையின் காணியில் இல்லாது, தமிழ் மக்களின் காணிகளில் தற்போதுள்ள விகாரையை கட்டியுள்ளார். இது தவறு என நான் முதலில் இருந்தே கூறி வருகின்றேன். விகாரைக்கு 18 ஏக்கர் இருக்கின்றது. இது திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது என கூறுகின்றனர். திஸ்ஸ விகாரைக்கு என்று காணி உறுதிப்பத்திரம் இருக்கின்றது. அந்த காணிகள் அந்த மக்கள் இருக்க வேண்டும். நான் தானே அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களிடம் காணி உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றன. வெசாக் உற்சவத்திற்கு அரசாங்கத்தினால் விகாரைகளுக்கு பணம் வழங்கப்பட்டது. திஸ்ஸ விகாரைக்கும் பணம் வழங்கப்பட்டது. அந்த பிக்குவுடன் இணைந்து ராணுவம் பணத்தை பெற்று தமிழ் மக்களின் காணிகளில் அந்த நிர்மாண பணிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. திஸ்ஸ விகாரைக்கு கிடைத்த பணத்தை கொண்டு, ஏனையோரின் காணிகளில் விகாரையை நிர்மாணித்தது சட்டவிரோதமானது. தமது காணிகளை கோரியே தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்,'' என நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிடுகின்றார்.

''தற்போதுள்ள நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையை உடைக்க முடியாது. அவ்வாறு உடைத்தால் வேறு பிரச்னை வரும். அதனால், எனது காணியை தருகின்றேன் என நான் தமிழ் மக்களிடம் கூறினேன்.'' எனவும் அவர் தெரிவித்தார்.

''நான் ஏனைய பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடினேன். தற்போதுள்ள பிக்குவிடம் உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. ஏனையோர் ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் காணி விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். அது நியாயமான போராட்டம். நான் பௌத்தம் என்றாலும், எமது காணிகளில் விகாரையை கட்ட வந்தால் எமது மக்களும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா?

அது தெளிவாகவே தமிழ் மக்களின் காணிகள். வேண்டுமென்றே ராணுவத்துடன் இணைந்து இதனை செய்கின்றனர். எங்களையே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீதி தடையை ஏற்படுத்தியே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டது.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

''மக்கள் தவறானவர்கள் இல்லை. பிக்குவே தவறிழைத்தவர். ராணுவம் தவறிழைத்துள்ளது. அந்த பிக்கு பலவந்தமாகவே விகாரையில் இருக்கின்றார்,'' எனவும் நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிடுகின்றார்.

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம், இலங்கை, முக்கிய செய்திகள்,

படக்குறிப்பு, விகாரையை விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்றது குறித்து அறிவிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

திஸ்ஸ விகாரை பிக்குவின் பதில் என்ன?

சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரையில் தற்போதுள்ள பிக்கு தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து, அந்த பிக்குவை, பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது.

தாம் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்பதனால், தற்போதைக்கு எந்தவொரு ஊடகத்திற்கும் பதிலளிக்க முடியாது என அவர் கூறினார்.

இலங்கை ராணுவத்தில் பதில்

திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி மற்றும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தமிழ் மக்கள் ராணுவம் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வர்ண கமகேவிடம் வினவியது.

''ராணுவம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய என எந்தவொரு புனித தலத்திலிருந்தும் உதவிகளை கோரும் பட்சத்தில், அதற்கான உதவிகளை சட்டவிதிமுறைகளுக்கு அமைய நாங்கள் வழங்குவோம். சட்ட விதிமுறைகளுக்கு அமைவானது என்றால் நிச்சயம் நாங்கள் அதனை செய்துக்கொடுப்போம். அதைவிடுத்து, இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளிலும் ராணுவம் தொடர்புபடாது'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வர்ண கமகே தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c7989181jgxo

Checked
Tue, 06/24/2025 - 10:06
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed