அரசியல் அலசல்

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை - அரசுகள் தலையிடாக் கொள்கை

2 months 3 weeks ago

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை - அரசுகள் தலையிடாக் கொள்கை

லக்ஸ்மன்

இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல் பாலைவனமாக மாறுகின்ற நிலை ஏற்படும். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார்கள். இந்த மீன்பிடி முறைமையை நிறுத்த வேண்டும். கடலுக்கு அடியில் வலைகளைப் பயன்படுத்தி மீன்களை அள்ளும் இழுவை மடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படுவது இந்திய கூலித் தொழிலாளர்களே. அந்த செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

இந்திய மீனவர்கள் நமது நாட்டுக் கடற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்து இந்தியாவின் அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அறிந்திருக்கின்றனர் என்று  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை  புதிய அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற ஆரம்பித்ததல்ல. மிக நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற பிரச்சினையாகும்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற் பரப்புக்குள் நுழைவதும், அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களுடைய உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதும், நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதும், தண்டனை வழங்கப்படுவதும், விடுவிக்கப்படுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறைந்தபாடுமில்லை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வந்ததுமில்லை. இந்தநிலையில், கடந்த வாரத்தில் இந்திய இலங்கை மீனவர் சங்கத்தினர்களுக் கிடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படடுள்ளது. இருந்தாலும், இரு தரப்பினரும்  இப்பிரச்சினைக்கான தீர்வு அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படக்கூடியது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இருந்தாலும், கடந்த வருடம் டிசெம்பர் மாதத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் முதல் உத்தியோகபூர்வ விஜயத்தில் புதுடெல்லியில் இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் மீனவர் பிரச்சினையை ‘முக்கியமானது’ என அடையாளம் கண்டிருந்தனர். மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வுகாண வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர்.

ஆனால், மீனவர் பிரச்சினை விடயத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது அல்லது பெறுவது தொடர்பில் இனி பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை என மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் டிசெம்பர் இறுதியில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் நிறுத்தப்படமாட்டாது எனவும், தொழில்நுட்பம், தொழில்சார் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடல் தொடரும் என்றும் அவர் தெரிவித்ததற்கமைய இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகக் கொள்ளலாம்.

ஆனால், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இராஜதந்திர மட்டத்தில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல. இராஜதந்திர ரீதியில் எவ்வளவு விவாதித்தாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இந்திய மீனவர்கள் வடக்குக் கடலில் மீன்பிடிப்பது குற்றவியல் ஆக்கிரமிப்பு போன்ற நிலைப்பாடுகள் இலங்கையின் அமைச்சு வட்டம் வரையில் இருக்கின்ற நிலையில் இரு நாட்டு அரசுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைக்குச் சாத்தியமிருக்கிறதா? என்பது கேள்வியானதே.

எது எவ்வாறானாலும், எங்களின் கடல் வளங்களையும், மீனவர்களையும் பாதுகாக்க இந்த விடயத்தில் எப்போதும் தலையீடு செய்து கொண்டுதான் இருப்போம் என்கிற நிலைப்பாட்டில் இலங்கை அரசும், ஏதோ நடப்பது நடக்கட்டும். நமது மீனவர்களைக் கட்டுப்படுத்தினால் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகி அரசுக்கெதிரான சிந்தனையை ஏற்படுத்தி விடும் என்ற முடிவில் இந்திய அரசும், சுமுகமான மீன்பிடிக்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்திய மீனவர்களும் இருக்கையில் முரண்பாடே மிஞ்சும்.

இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையில் இருக்கும் தாண்டிய மீன்பிடி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசும் தமிழ்நாட்டு அரசும் தீர்வைக் காண்பதற்கு  முயற்சிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அந்த முயற்சி இலங்கை நாட்டின் இறமை, ஆட்புல ஒருமைப்பாட்டினைப் பாதிக்காத வகையில் இருந்தால் சரி.

1921ஆம் ஆண்டு இந்திய - இலங்கை பிரிட்டிஷினால் செய்து கொள்ளப்பட்ட மீன்பிடி ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்களுக்குப் பாக்கு நீரிணையில் அதிக கடல்பகுதியும், இலங்கை மீனவர்களுக்கு குறைவான கடல் பகுதியும் பிரிக்கப்பட்டது. அதில் கச்சத்தீவு உள்ளிட்ட 28 கடல் மைல் பகுதிகள் இந்தியாவுக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட 12 கடல் மைல் கடல் பகுதிகள் இலங்கைக்கும் என பிரிக்கப்பட்டன.

1974இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதனால் இந்திய மீனவர்கள் பயன்படுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வசமாகியது. இதனால், தமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் பறிபோனதாக இந்திய மீனவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்துப்படி, இந்த 500 சதுர கி.மீ. பரப்பளவில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க உரிமையுள்ளது.

இருந்தாலும், பாக்கு நீரிணைப் பகுதியில் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதும் இழுவை வலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனாலேயுமே பிரச்சினைகள் எழுகின்றன. இந்திய இலங்கை மீனவர்களிடையே இருக்க வேண்டிய ஒற்றுமை சீர்குலைவுக்கும் இதுவே காரணம். பாக்கு நீரிணை கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட இழுவை வலையைப் பயன்படுத்தக்கூடாது என்பது  இலங்கை மீனவர்களின் ஒரு கோரிக்கை.  

இழுவைப் படகுகளின் செயற்பாட்டினால், இலங்கைக் கடற்பரப்பிலுள்ள மீனும் பிற வளங்களும் அழிகின்றன. அதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. நீண்டகாலத்தில் எதிர்கால மீன்பிடியே அழியவேண்டி ஏற்படலாம் என்பது அச்சமே. ஒவ்வொருவரும் தம் பக்கமே நிற்பர் என்பது போல் இந்திய அரசும், தமிழ் நாட்டு அரசும் தமிழக மீனவர்களின் பக்கமாகவே இருந்து விடுகின்றன. இதனால், பாதிக்கப்படுவது இருதரப்புமே என்பதுதான் உண்மை.

கடந்த வாரத்தில் வவுனியாவில் நடைபெற்ற இந்திய-இலங்கை மீனவர் சங்க உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் கூட அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவேளையில், கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் வாடும் இந்திய மீனவர்களைப் பார்வையிடுதலுடன் தான் நடைபெற்றிருக்கிறது.

தீர்க்கப்படாமல் இழுபட்டுச் செல்லும் இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருந்தாலும், இழுவை மடிகளைக் கொண்ட ரோலர் படகுகள் கடல் வளத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதனை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றிருக்கையில், தீர்வு எவ்வாறு கிடைக்கும் என்பதுதான் இந்த இடத்தில் சிக்கலானது. இந்தச் சிக்கல் பார்த்தும் பாராமல் தொடருமா? அல்லது ஓயுமா? என்பது பதிலில்லா தொடரே.

இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம், மீன்பிடிப் பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டங்கள்,  போராட்டங்கள், அறிக்கைகள், ஊடக சந்திப்புக்கள் எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் எல்லை மீன்பிடிப் பிரச்சினை தீர்க்கப்படாதா என்ற சந்தேகம் ஏற்படுவதற்குத் தாமதிப்பும் இழுத்தடிப்புகளுமே காரணமாக இருக்கிறது.

இந்தியா இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வை முன்வைக்கும் என்று எல்லோரும் எண்ணினாலும், தமிழக அரசும் பல வழிகளிலும் இந்திய மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசை கோரினாலும் இந்திய மத்திய அரசாங்கமானது வருடத்தில் குறிப்பிட்ட அளவான நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோருகிறதே தவிர ஏதும் நடைபெறவில்லை.

ஆனாலும், இந்தியா கைக்கொள்ளும் அரசுகள் தலையிடாது மீனவர்களே தம் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வுக்கு வரட்டும் என்ற நிலைப்பாட்டைதான் நாம் விளங்கி நடந்து கொள்ளவேண்டும். இல்லையேல் இப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படப்போவதில்லை. அது தவிர, எல்லை தாண்டலை ஒரு குற்றமாகக் கொள்ளாது கைதுகளை விடுத்து ஏதோ நடக்கட்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேண்டும்.

2025.03.31

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசுகள்-தலையிடாக்-கொள்கை/91-354740

மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் என்ன நடக்கிறது? நிலாந்தன்.

2 months 3 weeks ago

Questen.png?resize=750%2C375&ssl=1

மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் என்ன நடக்கிறது? நிலாந்தன்.

மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியவை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குத் தூலமான ஓர் உதாரணம் தையிட்டி விகாரை. உலகம் முழுவதையும் பெருந் தொற்று நோய் கவ்விப் பிடித்த ஒரு காலகட்டத்தில் தையிட்டி விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதாவது கொரோனா வைரஸ் மனிதர்களைத் தாக்கிய அந்தக் காலத்திலும் இலங்கைத் தீவின் இனவாத வைரஸ் உயிர்ப்புடன் பரவியது என்று பொருள். அப்பொழுது நடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அப்பொழுது இருந்த பிரதேச சபையின் நிர்வாகம் - அதாவது கூட்டமைப்பின் அதிகாரத்துக்குள் இருந்த பிரதேச சபை நிர்வாகம்-சிங்கள பௌத்த மயமாக்கலுக்குத் துணை போனது. விளைவாக இப்பொழுது விகாரை கட்டப்பட்டு விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக நடந்துவரும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களால் அந்த விகாரை கட்டி எழுப்பப்படுவதைத் தடுக்க முடியவில்லை. மட்டுமல்ல, கடந்த வாரம் அங்கே ஒரு புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அடுத்த பௌர்ணமிக்கு ஒரு போராட்டத்தைச் செய்வதற்கிடையில் மேலும் ஒரு கட்டடம் திறக்கப்படக்கூடும்.கடந்த வாரம் நடந்த அபிவிருத்திக் குழும் கூட்டத்தில் அது தொடர்பாக காணி உரிமையாளரான பாதிக்கப்பட்ட ஒரு பெண் எழுந்து நின்று கதைக்கிறார். அவருக்கு அங்கே தீர்வு வழங்கப்படவில்லை. அதுதான் மாவட்ட அபிவிருத்திகும் குழுக் கூட்டம்.

அப்படித்தான் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக அங்கு நிகழும் சட்டவிரோத மண் அகழ்வு, சட்டவிரோத மது உற்பத்தி போன்றவைகள் தொடர்பாக தொடர்ச்சியாகக் கதைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மண் அகழ்வையும் கசிப்பு உற்பத்தியும் கசிப்பு வலைப் பின்னலையும் கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப்பொருள் வலைப் பின்னலையும் கட்டுப்படுத்த முடியவில்லை. கசிப்பு உற்பத்தியை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை அதில் சம்பந்தப்பட்டவர்கள் நடுவீதியில், கண்டி வீதியில் வைத்துத் தாக்கினார்கள். எந்த மக்களுடைய நன்மைக்காக அவர் அந்தச் செய்தியை வெளியே கொண்டு வந்தாரோ,அதே மக்கள் அவர் தாக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு தம் வழியே போனார்கள். யாரும் அதைத் தடுக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நடக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி முக்கியமான பிரச்சினைகளில் எத்தனைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது ?

இப்படிப்பட்டதோர் பின்னணியில், அண்மை நாட்களாக நடந்துவரும் வெவ்வேறு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அர்ஜுனா மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறார். அர்ஜுனாவை பேசுபொருள் ஆக்குவது குறிப்பிட்ட சில யுரியூப்களும் ஊடகங்களும்தான். இம்முறை ஆளும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அர்ஜுனாவை பேசுபொருள் ஆக்கியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அர்ஜுனா பேசுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடையின் பின்னணியில்,அவர் தனக்கு கிடைக்கும் ஏனைய மேடைகளை நாடாளுமன்றம் போல பயன்படுத்தத் தொடங்கி விட்டார். தன்னைப் பேச விடாது தடுத்த அரசாங்கத்துக்கு எதிராக பேசுவதற்கு அவர் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை பயன்படுத்துகின்றார். அக்கூட்டங்களில் பாவிக்க கூடாத வார்த்தைகளை அவர் பாவிக்கின்றார். அவரால் சீண்டப்படும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு பாவிக்கக்கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். இந்தக் கோமாளிக் கூத்துக்குள் சிக்கி அவமானப்பட விரும்பாத அதிகாரிகள் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறீதரன் இடையில் எழும்பி வெளிநடப்புச் செய்கிறார்.

அர்ஜுனாவுக்கு பதில்வினை ஆற்றும் அரசியல் தோல்விகரமானது. அவர் தானும் சிரிக்கிறார், மற்றவர்களுக்கும் சிரிப்புக் காட்டுகிறார். எந்த அதிகாரிகளை நோக்கி அவர் குற்றம் சாட்டுகிறாரோ அவர்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள். அதாவது அவர் வைக்கும் குற்றச்சாட்டுக்களும் அங்கே சீரியஸ் இழந்து போகின்றன. அதிகாரிகளுக்கு எதிரான அவருடைய விமர்சனங்கள் மட்டுமல்ல தமிழ்த் தேசிய அரசியலும் அவ்வாறு சீரியஸ் தனத்தை இழப்பதை; ஒரு நகைச்சுவையாக மாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது.

பொது வெளியில் அர்ஜுனாவை எதிர்ப்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஏனென்றால் அவரில் வாய் வைத்தால் அவர் திருப்பி எப்படி வாய் வைப்பார் என்ற பயம். கம்பன் கழகத்துக்கு அதுதான் நடந்தது. அதே சமயம் யாரை எதிர்த்ததன்மூலம் அர்ஜுனா மிக விரைவாக வைரல் ஆனாரோ, அந்த அதிகாரிகள் இப்பொழுது கூலாக இருந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அர்ஜுனா தானே தன்னை தோற்கடிப்பார் என்று அவர்களுக்குத் தெரிகிறது.அவர் தன் வாயாலேயே கெட்டுவிடுவார் என்றும் எல்லாருக்கும் தெரிகிறது.

ஒருபுறம் அவர் புத்திசாலித்தனமாகக் கதைக்கிறார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் வைக்கத் தயங்கும் இடங்களில் வாய் வைக்கிறார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனிக்கத் தவறிய விடயங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார். அபிவிருத்தி சம்பந்தப்பட்ட, திட்டமிடல் சம்பந்தப்பட்ட எல்லா உரையாடல்களிலும் அவர் மைக்கைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறார். நாடாளுமன்றத்திலும் அப்படித்தான். கிடைக்கின்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர் கதைக்கிறார். எல்லாவற்றையும் பற்றிக் கதைக்கிறார். அவருடைய வார்த்தைகள் எல்லைமீறிப் போனதன் விளைவாக நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தடைகளால் அவரைத் தடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் தனக்குத் தடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் மாவட்ட,பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் யூடியூப்பர்கள் மத்தியிலும் எடுத்துக் கொள்கிறார்.அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவர் தன் வாயாலேயே தன்னைக் கெடுத்துக் கொள்வார். தானே தன்னைத் தோற்கடித்துக் கொள்வார்.

ஆனால் அவருக்கு எதிர் வினையாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு கடந்த கிழமை நடந்த யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு வாக்குவாதப்பட்டு தங்களுடைய கொள்ளளவு இவ்வளவுதான் என்பதனை நிரூபித்திருக்கிறார்கள்.

அதையே தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அர்ஜுனா வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. தமிழ்த் தேசிய அரசியலின் போதாமைகள், இயலாமைகள், தவறுகளில் இருந்துதான் அவர் தோன்றினார். தமிழ்த் தேசிய அரசியல் என்பதனை எதிரிக்கு எதிரான எதிர்ப்பு அரசியலாக மட்டும் குறுக்கியதன் விளைவுகளில் ஒன்றுதான் அர்ஜுனா. எதிரிக்கு எதிரான அரசியலை செயல்பூர்வமான அரசியலாக முன்னெடுக்காமல் வெறும் கோஷ அரசியலாக முன்னெடுத்ததன் விளைவுகளில் ஒன்றுதான் அர்ஜுனா. தமிழ்த் தேசியம் என்பது திருடர்களும் கபடர்களும் பொய்யர்களும் நபுஞ்சகர்களும் எடுத்தணியும் முகமூடியாக மாறியதன் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் பின்னடைவைக் கண்டன.

எனவே அர்ஜுனாக்கள் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள் என்பதனை தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள ஒரு தலைமுறையை எப்படி நெருங்கி செல்வது? அவர்கள் மத்தியில் எப்படி வேலை செய்வது? அதற்குத் தொழில்நுட்பத்தையே எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்துவது? என்பதனை தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும். கோஷ அரசியல் மற்றும் வேஷ அரசியல் என்பவற்றின் சிவப்பு மஞ்சள் நிறங்கள் வெளுரத் தொடங்கிவிட்டன.

தேசியவாத அரசியல் என்பது அது தமிழ்த் தேசமாக இருந்தாலும் சரி, சிங்கள தேசமாக இருந்தாலும் சரி, எந்தத் தேசமாக இருந்தாலும் சரி, ஒரு மக்கள் கூட்டத்தை ஆகக்கூடிய பட்சம் பெரிய திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான். அந்தப் பெரிய திரட்சியின் நன்மை- தீமை; பெரியது- சிறியது; நல்லவை- கெட்டவை; பிரம்மாண்டமானது- அற்பமானது… என்ற எல்லாவற்றையும் கவனத்திலெடுத்து அரசியல் செய்வதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்கியிருந்திருந்தால் அர்ச்சுனாக்கள் மேலெழுவதற்கான வெற்றிடம் தோன்றியிருக்காது. நிதிப்பலமும் அரச அனுசரணையும் உடைய படித்த நடுத்தர வர்க்கம் அரசு அலுவலகங்களில் எப்படியோ சமாளித்துக் கொள்ளும். ஆனால் சாதாரண ஜனங்களின் நிலை அப்படியல்ல.அவர்களுக்குச் சின்னச்சின்னப் பிரச்சனைகள், சின்னச் சின்னக் குறைகள் உண்டு. இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வரையிலும் அந்தப் பிரச்சினைகளை ஒத்திவைக்க முடியாது. ஏனென்றால் அவை நாளாந்தப் பிரச்சினைகள்; உடன் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைப் பரப்பின் மீது தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனத்தைக் குவிக்கவில்லை. அவ்வாறு கவனத்தைக் குவிப்பதற்கு என்ன வேண்டும்?

திட்டமிடல் துறையில் அடுக்கடுக்காகப் பட்டங்கள் வேண்டுமா? அல்லது நிர்வாகத் துறையில் பட்டங்கள் வேண்டுமா? அல்லது மக்கள் ஆணை வேண்டுமா? இல்லை. இவை எவற்றையும் விட அதிகமாகத் தேவைப்படுவது, பேரன்பு. தனது மக்களை நேசிக்கத் தெரிய வேண்டும். தன்னைப்போல் தன் மக்களையும் நேசிக்கத் தெரிய வேண்டும். மக்களில் அன்பு வைத்தால், அவர்களுடைய நன்மை தீமைகளில் பங்கெடுத்தால் மக்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள். எனவே அர்ஜுனாவுக்கு பதில் வினையாற்றுவதை விடவும் அர்ஜுனாக்கள் தோன்றக் காரணமாக இருந்த தமது பலவீனங்களையும் போதாமைகளையும் எப்படி அகற்றலாம் என்றுதான் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

https://athavannews.com/2025/1426843

சரியான நேரத்தில் சரியான கூட்டு ? - நிலாந்தன்

2 months 3 weeks ago

சரியான நேரத்தில் சரியான கூட்டு ? - நிலாந்தன்

12-1024x683.jpg

“அனுரவின் அரசாங்கத்தை வலுவான முறையில் எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்திய ஊடகவியலாளரான மீரா சிறீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

புதிய யாப்பு ஒன்று உருவாக்கப்படுமிடத்து அந்த யாப்பை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. தமிழர்கள் ஒரு தரப்பாகத் திரண்டு நின்றால்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை பலமாக வெளிப்படுத்தலாம். மிகக் குறிப்பாக சுமந்திரனும் அவருடைய கூட்டாளிகளும் இணைந்து முன்பு தாங்கள் தயாரித்த “எக்கிய ராஜ்ய” என்கிற இடைக்கால வரைவை மீண்டும் மேசைக்கு எடுப்பதைத் தடுப்பது என்றால் தமிழ்த் தரப்பு ஐக்கியப்படுவது தவிர்க்கமுடியாதது.

அதேசமயம் யாப்பை நோக்கி மட்டும் தமிழ்த் தரப்பு ஐக்கியப் படக்கூடாது, மாறாக தேர்தல்களை நோக்கியும் சமயோசிதமான,தந்திரோபாயமான கூட்டுக்களுக்குப் போகவேண்டும். அல்லது குறைந்த பட்சம் போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைகளுக்காவது போகவேண்டும் என்பதனை நான் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன்.

அதற்கு ஒரு அடிப்படைக் கோட்பாட்டு விளக்கம் உண்டு. தேர்தல் கூட்டுகள் பெரும்பாலும் தந்திரோபாயமானவை. ஆனாலும் தமிழ்மக்கள் ஒரு தரப்பாக தங்களை பலப்படுத்த வேண்டும் என்று சிந்தித்தால், தேர்தலுக்கும் அங்கே ஒரு பங்கு உண்டு. தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாகத் தோற்கும் பொழுது பின்னர் நாடாளுமன்றத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தரப்பு பலமாக நின்று பேச முடியாது. எனவே ஒரு தரப்பாக தமிழ் மக்களைப் பலப்படுத்துவது என்று பார்த்தால் அது நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, மாகாண சபைகள்,உள்ளூராட்சி சபைகள் என்று எல்லாத் தேர்தல் களங்களிலும் தமிழ் தரப்பை ஆகக்குறைந்த பட்சம் தந்திரோபாய நோக்கத்தோடாவது ஒருங்கிணைக்க வேண்டும்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தந்திரோபாய கூட்டுக்களுக்குத் தயாராக இல்லை. அவர்கள் கொள்கை வழிக் கூட்டுக்களுக்கே தயாராக இருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்.கடைசியாக இயங்கிய உள்ளூராட்சி சபைகளின் கடைசி கட்டத்தில் காரைநகரில் ஒரு பிரச்சினை வந்தது. அங்குள்ள சுயேட்சைக் குழு தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைக்க விரும்பியது. அது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு நான் உரையாடினேன். அவர்கள் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி குறிப்பிட்ட சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள். அதேசமயம் அந்த உரையாடலின் போது, செல்வராசா கஜேந்திரன் என்னிடம் சொன்னார், “அண்ண இது போன்ற விடயங்களில் நீங்கள் என்ன கேட்டாலும் நாங்கள் செய்வோம். ஆனால் ஐக்கியத்தைப் பற்றி மட்டும் கேட்டு விடாதீர்கள்” என்று.

அந்தளவுக்கு அவர்களுக்கு ஐக்கியம் அலர்ஜிக்காக இருந்தது. இருக்கலாம். அரங்கில் நம்பிக் கூட்டுச்சேர முடியாத சக்திகளே அதிகமாக இருக்கலாம். ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், ஒரு தரப்பாக தமிழ் மக்களை பலப்படுத்துவது என்று சொன்னால் அதனை தந்திரோபாயமாகத்தான் செய்யலாம். அதுவும் தேர்தல் வழியில் தந்திரங்கள்தான் அதிகம்.

நான் திரும்பத்திரும்பக் கூறும் ஒர்  உதாரணம் உண்டு. சுத்தமான தங்கத்தை வைத்து ஆபரணங்களைச் செய்ய முடியாது. தங்கத்தில் நகை செய்ய வேண்டுமானால் குறிப்பிடத்தக்க அளவுக்கு செப்பைக் கலக்க வேண்டும் வேண்டும். இந்த பூமியிலே பெரும்பாலான விடயங்கள் அப்படித்தான். அதிலும் அரசியலில், குறிப்பாக தேசியவாத அரசியலில்,அதுதான் நடைமுறைச் சாத்தியமானது.

அரசியலில் புதுமையானது,நீதியாயானது,புனிதமானது, சரியானது, பிழையானது…போன்ற அனைத்துமே சார்புக் கணியங்கள்தான். ஒப்பீட்டு முடிவுகள்தான். நடைமுறை வாழ்வில் முழுப் புனிதமானது எதுவும் இல்லை. முழுத் தூய்மையானது எதுவும் இல்லை. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரையும் முசோலினியையும் தோற்கடிப்பதற்காக இரண்டு கொள்கை எதிரிகள்தான் கூட்டுச் சேர்ந்தார்கள். அதாவது முதலாளித்துவமும் கொம்யூனிசமும் கூட்டுச்சேர்ந்தே இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தன. கொள்கைப்படி பார்த்தால் அது ஒரு பிழையான கூட்டு. ஆனால் அது உலகப்போரை நிறுத்திய கூட்டு.

24-1-ccc-1024x476.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்பொழுது உருவாக்கியிருக்கும் கூட்டில் இருப்பவர்களில் அநேகர் முன்பு வெவ்வேறு கூட்டுக்களில் இருந்தவர்கள்; வெவ்வேறு தரப்புகளோடு சேர்ந்து உழைத்தவர்கள். இறந்த காலத்தைக் கிண்டினால்  யாருமே புனிதரில்லை. ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தான். கஜேந்திரக்குமாரின் தகப்பனார் குமார் பொன்னம்பலம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில் 1980களின் இறுதிக் கட்டத்தில் கொழும்பில் உள்ள தனது இல்லத்தின் பாதுகாப்புக்கு புளட், டெலோ ஆகிய இயக்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றிருந்தார். அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பு பணிக்காகச் சென்ற தமது அனுபவத்தை ஏற்கனவே சிவாஜிலிங்கம் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.புளொட் இயக்கத்தின் சிவநேசனும் அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் அதற்காக பின்னாளில் குமார் சிந்திய இரத்தத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதுதான் அரசியல்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தந்திரோபாயமாகக் கூட்டுக்களை வைத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை.கொள்கை வழிக் கூட்டுக்கே தங்கள் தயார் என்று திரும்பத்திரும்பக் கூறிவருகின்றது.தங்கள் கொள்கையில் வழுக்காதவர்கள் என்று கூறுவதன் மூலம் மற்றவர்களை கொள்கைகளில் வழுக்கியவர்கள் என்று முத்திரை குத்தி வந்தது.அதன் விளைவாக கடந்த 15 ஆண்டுகளாக அவர்களால் தாங்கள் முன்வைக்கும் இலட்சியத்தை நோக்கி அவர்களுடைய சொந்தக் கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை;தமிழ் மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை.

இப்பொழுது யாப்புருவாக்க முயற்சியில் தமிழ் மக்கள் பேரவையின் முன் மொழிவின் அடிப்படையில் ஒன்றுசேர வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் பேரவையை செயல்படாத நிலைக்கு தள்ளியதில் அவர்களுக்குப் பொறுப்பு இல்லையா? அவர்கள் நினைத்திருந்தால் தமிழ் மக்கள் பேரவையை அதன் அடுத்தகட்டக் கூர்ப்புக்குக் கொண்டுபோய் இருந்திருக்கலாம்.பேரவை என்ற தாயின் முடிவுக்குக் காரணமாக இருந்து கொண்டு அந்தத் தாய் ஈன்ற பிள்ளையாகிய முன்மொழிவை இப்பொழுது காவுகின்றார்கள்.

அப்படித்தான் பொது வேட்பாளரின் விடயத்திலும் முன்னணி அந்த கூட்டுக்குள் இணைந்து இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாகப் போயிருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிகழ்ந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் இருந்தே பொது வேட்பாளரை முன்னணி எதிர்த்தது. மட்டுமல்ல, பொது வேட்பாளருக்கு ஆதரவானவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள், முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூறியது.பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் சந்திப்புகளின்போது குடிமக்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை நோக்கி  கஜேந்திரன் பின்வருமாறு சொன்னார் “இந்த முயற்சியில் நீங்கள் வெற்றிபெற்றால் நாங்கள் இப்பொழுது வைத்திருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்று எங்களுக்குத் தெரியும்.அதை நன்கு தெரிந்து கொண்டுதான் உங்களை எதிர்க்கிறோம்” என்று.

04-1024x683.jpg

ஆனால் பொது வேட்பாளருக்கு முன்னணியின் தீவிர ஆதரவாளர்கள் பலரும் வாக்களித்தார்கள். தேர்தல் முடிவுகளின் பின் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை கஜேந்திரக்குமார் தமிழ்த்தேசியத் தன்மை மிக்க வாக்குகள் என்று கூறினார். அதெப்படி வெளிநாட்டின் ஏஜென்ட்கள் தமிழ் தேசிய தன்மைமிக்க வாக்குகளைத் திரட்டலாம்? கெட்ட கூட்டு எப்படி நல்ல விளைவைத் தரும் ?

தமிழ் மக்கள் பேரவையின் சிதைவுக்குக் காரணமாக இருந்த ஒரு தரப்பு கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளின் பின் அதே பேரவையின் முன் மொழிவை கையில் எடுத்திருப்பது எதைக் காட்டுகின்றது? ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமற்றது என்பதைத்தானே? பொது வேட்பாளரைத் தவறு என்று கூறிவிட்டு அவர் பெற்ற வாக்குகளைத் தேசியத் தன்மை மிக்கவை என்று கூறுவது எதைக் காட்டுகின்றது? எட்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் எடுத்த முடிவு தவறானது என்பதைத்தானே?பொது வேட்பாளருக்காக முன்னணியில் நின்று உழைத்த ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் கூறுவதுபோல “முன்னணியானது சரியான வேளைகளில் பிழையான முடிவை எடுக்கிறது. பிழையான வேளைகளில் சரியான முடிவை எடுக்கின்றது” என்பது சரியா ? இப்பொழுது முன்னணி எடுத்திருக்கும் முடிவானது சரியான வேளையில் எடுக்கப்பட்ட சரியான முடிவா? கடந்த 15 ஆண்டுகால அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னணி அப்படி ஒரு முடிவை எடுத்திருக்குமாக இருந்தால் அதை வரவேற்க வேண்டும்.

ஒப்பீட்டளவில் பெரிய கூட்டை முன்னணி உருவாக்கியிருக்கிறது.அதை வளர்த்தெடுக்க வேண்டும்.ஒப்பீட்டளவில் யார் தேசத்தைத் திரட்டும் நம்பிக்கைகளை பலப்படுத்துகின்றார்களோ,அந்த நம்பிக்கைகளுக்காக உண்மையாக உழைக்கின்றார்களோ,அவர்களை தமிழ்மக்கள் ஆதரிக்க வேண்டும். பொது வேட்பாளருக்குப் பின் மீண்டும் ஒப்பீட்டளவில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரு கூட்டை முன்னணி உருவாக்கியிருக்கிறது. அது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளுக்கும் உண்டு.குறிப்பாக வாக்களிக்கப்  போகும் மக்களுக்கு உண்டு.

https://www.nillanthan.com/7257/#google_vignette

‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’

2 months 3 weeks ago

‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’

முருகானந்தம் தவம்

ஜே .வி.பியினரின் (மக்கள் விடுதலை முன்னணி) ஆயுதக் கிளர்ச்சியை அடக்கி  ஒடுக்கவென 1988, 1989களில் நடத்தி செல்லப்பட்டதாகக்  கூறப்படும் ‘பட்டலந்த வதை முகாம்’ தொடர்பான ‘பட்டலந்த அறிக்கை’ 

25 வருடங்களின் பின்னர், தூசி தட்டப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு தற்போதைய 
ஜே.வி.பி., என்.பி.பி. அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாள் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கை தொடர்பில் இலங்கையில் மீண்டும்  ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக  ரணசிங்க  பிரேமதாச ஆட்சி  புரிந்த காலத்தில், இளைஞர் விவகார, தொழில் வாய்ப்புக்கள்  அமைச்சராகவும், பின்னர் கைத்தொழில் அமைச்சராகவும்  இருந்த ரணில் விக்ரமசிங்கவே இந்த ‘பட்டலந்த வதை முகாம்’ சூத்திரதாரியென்ற குற்றச்சாட்டுக்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டு, அவரைக் கைது செய்ய வேண்டும், குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்ற குரல்கள் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளன. ஆட்சியாளர்களும் நாம் விசாரணை நடத்துவோம், நீதி வழங்குவோம் என உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர். 

கம்பஹா  மாவட்டத்தில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவில் கிரிபத்கொட- பியகம வீதியின் சந்தியிலிருந்து தெற்காக சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் உரத் தொழிற்சாலை ஒன்று உள்ள  பகுதியிலேயே இந்த பட்டலந்த வதை முகாம் இருந்தது. இந்த பட்டலந்த வதை முகாமில் வைத்தே  ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு,  சித்திரவதை செய்யப்பட்டு, பலர்   படுகொலை செய்யப்பட்டனர்.

இளைஞர், யுவதிகள் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்படுவதை  இந்த வதை முகாமின் சூத்திரதாரியென குற்றம்சாட்டப்படும்  அப்போதைய  அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இவ்வாறான நிலையில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995இல் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய பட்டலந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டதையடுத்து, 1988, 1989களில் பட்டலந்த உரத் தொழிற்சாலையில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில்  நடத்திச் செல்லப்பட்ட வதை முகாம் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகின. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் தப்பியவர்கள் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளை ஆணைக்குழு முன்னிலையில் அடையாளப்படுத்தினர்.

இந்நிலையில், ‘பட்டலந்த வதைமுகாம்’ படுகொலைகள் பற்றி  குற்றத்தடுப்பு பிரிவினராலும், ஜனாதிபதி ஆணைக் குழுவினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார். ஆனால், அந்த விசாரணை  அறிக்கை  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. அதன் பரிந்துரைகள் வெளிப்படுத்தப்படவும் இல்லை. அறிக்கை சந்திரிகா அரசினால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

இவ்வாறான நிலையில், ‘பட்டலந்த வதைமுகாம்’ சித்திரவதைகள், படுகொலைகளை, அதுதொடர்பிலான ஆணைக்குழு அறிக்கையினை மக்களும் இந்த நாடும் மறந்து விட்டன. ஏன்? பட்டலந்த வதைமுகாமில் தமது ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்த இன்றைய ஆட்சியாளர்களான
ஜே.வி.பியினர் கூட, பட்டலந்த அறிக்கையை மறந்து விட்டனர்.

இவ்வாறான நிலையில்தான், கடந்த  06-03-2025 அன்று அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு முன்னாள் ஜனாதிபதியும் ‘பட்டலந்த வதைமுகாம்’சூத்திரதாரியென குற்றம் சாட்டப்படுபவருமான  ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியும் அதில்  ஜே.வி.பி. ஆயுத கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை, மற்றும் படுகொலை பற்றிய கேள்விக்கு அவர் கூறிய பதில்களும்   மீண்டும் பட்டலந்த வதைமுகாமை மக்கள் முன் கொண்டு வந்துள்ளதுடன், அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வெளிப்பாடாக, அப்போது ஆயுத கிளர்ச்சியாளர்களாக இருந்தவர்களும் தற்போது ஆட்சியாளர்களாக உள்ளவர்களுமான ஜே.வி.பியினர், அந்த ‘பட்டலந்தை வதைமுகாம்’ தொடர்பான அறிக்கையை 25 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மாளிகையிலிருந்து எடுத்து தூசு தட்டி, பாராளுமன்றத்தில்  சமர்ப்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டம் பாயும் எனவும்  அறிவித்துள்ளனர். இதனால் தற்போது நாட்டில் உள்ள அனைத்து நெருக்கடிகளும் மறக்கடிக்கப்பட்டு ‘பட்டலந்த அறிக்கை’ முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ‘பட்டலந்த வதை முகாம்’ செயற்பட்ட காலத்தில் அந்த வதைமுகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள், ஆயுத  கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்த தற்போதைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர். ‘பட்டலந்த அறிக்கை’யைத் தயாரிக்க உத்தரவிட்ட அப்போதைய  ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவினரின் கட்சியினரும் இந்த ஜே.வி.பியினரால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், 2005இல் இந்த ஜே.பி.யினர்   அப்போதைய  ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அரசின் பங்காளிகளாக இருந்ததுடன்,  அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர். அப்போது ஜே.வி.பியினருக்கு இந்த ‘பட்டலந்த அறிக்கை’ தேவைப்படவில்லை.அதன்பின்னர் மஹிந்த  ராஜபக்‌ஷ ஆட்சிபீடம் ஏற இதே ஜே.வி.பியினர் பேராதரவு வழங்கியதுடன், பக்க பலமாகவும் இருந்தனர். அப்போதும் இந்த ‘பட்டலந்த அறிக்கை’யை வெளியே கொண்டுவர வேண்டுமென்பதில் இவர்கள் கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை.

அதன் பின்னர், 2015இல் ரணில் விக்ரமசிங்க  அரசுக்கும் ஆதரவளித்தனர். அப்போதும் இந்த ‘பட்டலந்த அறிக்கை’யை வெளியே கொண்டுவர வேண்டுமென்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. தற்போது தமது ஆட்சி அமைந்த நிலையில் கூட, அல்-ஜஸீரா தொலைக்காட்சி ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் கேள்வி எழுப்பும் வரை அந்த அறிக்கை தொடர்பில் ஒரு துரும்பைக்கூட இந்த ஜே .வி.பியினர் நகர்த்தவில்லை.

அல்-ஜஸீரா தொலைக்காட்சி ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் கேள்வி எழுப்பிய பின்னர்தான் ஏதோ அப்போதுதான் ‘பட்டலந்த வதைமுகாம்’ தொடர்பான அறிக்கை ஒன்று  இருப்பதனை அறிந்து கொண்டதுபோல, துடித்தெழுந்து அதை ஜனாதிபதி மாளிகையின் இருட்டறையிலிருந்து தேடிக் கண்டுபிடித்து எடுத்ததாகக் கூறி பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.-என்.பி.பி. அரசின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க அந்த ‘பட்டலந்த அறிக்கை’யை சமர்ப்பித்து உணர்ச்சிகரமாக உரையாற்றியதும் சபாநாயகர் கண்கலங்கியதும் 

 ஜே.வி.பி.-என்.பி.பி. அரசின் அமைச்சர்கள் எம்.பிக்கள் இறுகிய, துயரம் தோய்ந்த முகங்களுடன்  அமர்ந்திருந்தது எல்லாம் அப்பட்டமான அரசியல் நாடகம். நடிப்பு
கடந்த காலங்களில் சந்திரிகா அரசாங்கம், ராஜபக்‌ஷ அரசாங்கம் ஆகியவற்றில் பங்காளிகளாக இருந்த போது, இந்த ‘பட்டலந்த  அறிக்கை’ தொடர்பில் வாய்திறக்காதவர்கள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தாதவர்கள், தற்போது இவர்கள்  சித்திரவதைக்காரர் என்று குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து. 

2015இல் அரசாங்கத்தை அமைத்த போது கூட,  ‘பட்டலந்த அறிக்கை’யைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென  வலியுறுத்தாதவர்கள் ஒருவருக்கும் தெரியாத இந்த அறிக்கையை அல்-ஜஸீரா தொலைக்காட்சி  கண்டுபிடித்து அறிவித்ததையடுத்தே அது தொடர்பில் தெரிந்து கொண்டவர்கள் போல, உணர்ச்சிவசப்படுவது, கண்கலங்குவது, துயரமடைவது ஜே.வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல்  நாடகமின்றி, நடிப்பின்றி வேறு என்னவாக இருக்க முடியும்? 

அதேவேளை, ‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’ தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த  16ஆம் திகதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,  முழுமையான அரசியல் அவதூறு பிரசாரத்தை நோக்கமாகக் கொண்டு ‘பட்டலந்த ஆணைக்குழு’ நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

அறிக்கையின் முடிவுகளில், ஒரு அமைச்சராக, பொலிஸ் கண்காணிப்பாளர் மூலம் பொலிஸாருக்கு வீட்டு வசதி வழங்குவது எனக்கு சரியாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளை ஐ.ஜி.பியிடம் ஒப்படைத்து, அவர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதே சரியான முறையாக இருக்க வேண்டும். இந்தச் செயலுக்கு நளின் டெல்கோடாவும் நானும் மறைமுகமாகப் பொறுப்பு என்று ஆணைய அறிக்கை கூறுகிறது.

ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விடயங்கள்  எதுவும் எனக்கு பொருந்தாது. 1988இல் ஜே.வி.பி. மேற்கொண்ட ஏராளமான பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் அவதானிப்புகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளன. பின்னணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டுகளும் எனக்கு பொருந்தாது. அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனவே, ஆட்சிபுரிந்த அனுபவமற்ற ஜே .வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றவாளியாக்க வேண்டும், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலில் அனுதாப வாக்குகளை அள்ள  வேண்டும் என்ற நோக்கத்தில், அவசரப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இந்த ‘பட்டலந்த அறிக்கை’ விவாதத்திற்கு வரும்போது, பட்டலந்த வதைமுகாமில் சித்திரவதைப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட  ஜே.வி.பியினரைப் பற்றி மட்டுமல்லாது, அப்போது ஆயுதக் கிளர்ச்சி என்ற பெயரில் ஜே.வி.பியினரால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின்  படுகொலைகளையும் அம்பலப்படுத்தப் போகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து ஜே.வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்கள் வீசிய ‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’  இறுதியில் ஜே.வி.பி. என்.பி.பி. ஆட்சியாளர்களையே மோசமாகத் தாக்கப் போகின்றது.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பட்டலந்த-அறிக்கை-என்னும்-பூமராங்/91-354662

கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன?

2 months 4 weeks ago

இலங்கை

படக்குறிப்பு, கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த பீல்ட் வசந்த கரணாகொட, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கே இவ்வாறு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறல் இடம் பெற்றுள்ளமைக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பிரிட்டனில் இந்த நால்வர் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நால்வருக்கும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பிரிட்டனில் சொத்துகளை வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரிட்டனுக்குள் இந்த நால்வருக்கும் சொத்துகள் இருக்கும் பட்சத்தில், அவற்றைத் தடை செய்வதற்கும் அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டை அடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 15 வருடங்கள்

இலங்கை

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

படக்குறிப்பு,ஷவேந்திர சில்வா

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

முல்லைத்தீவு மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகப் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அத்துடன், ராணுவத்திடம் சரணடைந்த பெரும்பாலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழர்களின் உறவினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ள பின்னணியிலும், தமக்கான நீதி இன்று வரை கிடைக்கவில்லை எனக் கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.

இவ்வாறான பின்னணியிலேயே இந்தத் தடையை பிரிட்டன் விதித்துள்ளது.

எந்தெந்த நாடுகளில் யார் யாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது?

  • கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது.

  • கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி கடற்படை புலனாய்வு அதிகாரியான சந்தன ஹெட்டியாராட்ச்சி, சிப்பாய் சுனில் ரத்நாயக்க உள்ளிட்டோர் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டது.

  • கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. அவர்களின் சொத்துகளைத் தடை செய்யவும் தீர்மானம் எட்டப்பட்டது.

  • கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, சிப்பாய் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராட்ச்சி ஆகியோருக்கு, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி, தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்தது. அந்த நாட்டிலுள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் தீர்மானம் எட்டப்பட்டது.

  • கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி கடற்படைத் தளபதி வசந்த கரணாகொடவிற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது.

  • கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி ஸ்ரீலங்கா விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, ரஷ்யாவின் முன்னாள் இலங்கைக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கும், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது.

  • ஷவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத் ஜயசூரிய, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பிரிட்டன் தடை விதித்துள்ளது.

இலங்கை அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி, கோட்டாபய ராஜபக்ஸ, தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்தது

இலங்கை உள்நாட்டுப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பிரிட்டனால் தடை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை அரசியல்வாதிகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் மீது இவ்வாறு தடை விதிப்பதானது, அசாதாரணமாக செயற்பாடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கும்போது தானே பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியதாகக் கூறிய அவர், இறுதித் தருணத்தில் என்ன நேர்ந்தது என்பதை தாம் நன்கு அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

''இந்தப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் தாய்நாட்டின் ஒற்றுமைக்காகவும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்காகவும் போராடினார்கள். அவர்கள் பொது மக்களைக் கொலை செய்யவில்லை. யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களும் நினைவில் இருக்கும். இனங்களை அடிப்படையாகக் கொண்டு யாரும் கொலை செய்யப்படவில்லை" என்று கூறினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

தொடர்ந்து பேசிய அவர், "நான் 5 சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தேன். பிரபாகரன் உயிரிழக்கும் சந்தர்ப்பத்திலும் நானே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தேன். இறுதி இரண்டு வாரங்களில் என்ன நேர்ந்தது என்பதை நான் நன்கு அறிவேன். அதனால், எமது முப்படை அதிகாரிகளுக்கு இவ்வாறு தடை விதித்தமையானது அசாதாரணமான செயற்பாடாகும். அவர்கள் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். எமது ராணுவத்தினர் தமது உயிர்களை எந்தளவுக்கு அர்ப்பணித்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம் போன்றவர்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பு கொலை செய்தது. அவர்களை ஏன் கொலை செய்தாரகள்? இந்த விடயங்கள் குறித்தும் கதைக்க வேண்டும். எனினும், எமது ராணுவத்தினர் மீதான இந்த நடவடிக்கையானது ஒரு சூழ்ச்சியாகும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். யுத்தம் முடிவடையவில்லை என்றால், கொழும்பும், பொலன்னறுவையும் இருந்திருக்காது. இந்த நாட்டைக் காப்பாற்றிய வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் நான் கவலையடைகிறேன்'' என யுத்தம் முடிவடையும் சந்தர்ப்பத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

பிரிட்டன் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையானது, மனித உரிமை மீறல் தொடர்பானது அல்லது எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, விடுதலைப் புலி அமைப்பிற்கு உதவி வழங்குவோரின் அழுத்தங்கள் காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவே இதைக் குறிப்பிட்டுள்ளார். இது நீதியான விடயம் அல்ல என்பதுடன், சில மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுடைய நிதியின் ஊடாக விடுக்கப்படும் அழுத்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

பட மூலாதாரம்,PMD

படக்குறிப்பு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

''நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், சர்வதேச ரீதியில் பிரிவினைவாதம் முடிவுக்கு வரவில்லை. விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தற்போதுள்ள புலம்பெயர்ந்தோர் அரசியலில் ஆட்சி கவிழ்ப்புகளை மேற்கொள்வதற்கும், ஆட்சிகளை அமைப்பதற்குமான உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன்படி, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல்வாதிகள் தமது அரசாங்கங்களின் ஊடாகவும், தமது நிர்வாக வியூகங்களின் ஊடாகவும் எமது நாட்டின் மீது மீண்டுமொரு முறை பிரிவினைவாதத்தை ஸ்தாபிப்பதற்கும், ஈழ அரசாங்க கனவை நனவாக்கிக் கொள்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்று கூறுகிறார் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ.

மேலும் பேசிய அவர், "இது இன்று நேற்று இடம்பெற்ற ஒன்றல்ல. இதைத்தான் நாங்கள் முதலில் இருந்தே கூறி வருகிறோம். தற்போதுள்ள இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான பதில் அறிவிப்பை வெளியிடவில்லை. முதலில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும். ராணுவத்தினர் இந்த நாட்டிற்காகவே யுத்தத்தை நடத்தினார்கள்.

அது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. அதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்கியிருந்தார். அதற்கு முன்னர் பல ஜனாதிபதிகள் இருந்துள்ளனர். அவர்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியதை மாத்திரமே இந்த அதிகாரிகள் மேற்கொண்டிருந்தார்கள்" என்றார்.

"எனினும், தெரிவு செய்யப்பட்ட சில அதிகாரிகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு யுத்த குற்றங்களுக்கு குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இது தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான பிரச்னை கிடையாது. இது விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கையர்களுக்கு இடையிலான பிரச்னை. நாங்கள் பயங்கரவாதிகளுடன் மோதினோம்.

இன்று புலம்பெயர்ந்தோரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் என்ற இரு தரப்பினரும் இன்று தமிழ்-சிங்களப் பிரச்னையாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு இடம்பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டு ராணுவ வீரர்களுக்காக நாங்கள் முன்னின்று குரல் எழுப்புவோம். அரசாங்கம் தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும் என்பதுடன், மக்கள் ராணுவ வீரர்களுடன் இன்று ஒன்றுபட வேண்டும்," என்றார் நாமல் ராஜபக்ஸ.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஸவின் பதில்

இலங்கை

பட மூலாதாரம்,NAMAL RAJAPAKSA'S FACEBOOK

படக்குறிப்பு,நாமல் ராஜபக்ஸ

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாரியளவிலான யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக பிரிட்டன் அரசாங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை தாம் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதியும், யுத்தத்தை நிறைவு செய்ய தலைமைத்துவம் வழங்கியவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

பிரிட்டன் அரசாங்கம் இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது தடை விதித்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

''தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கான தீர்மானத்தை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான நானே எடுத்தேன். இலங்கையின் ஆயுதப் படை அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது'' என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் 363 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004ஆம் ஆண்டு வெளியேறி, ஜனநாயக ரீதியில் அரசியல் நடவடிக்கைகளுக்குள் பிரவேசித்த விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளமையானது, விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்ட தமிழர்களுக்கு தண்டனை வழங்கும் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கை என்பது தெளிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

''முப்பது ஆண்டுக் காலம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பினால், 27,965 ராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அது மாத்திரமன்றி, அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என மேலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன'' என மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கடந்த 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை, உலகிலேயே மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பு 2008ஆம் ஆண்டு பெயரிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், பல்வேறு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற சட்ட அழுத்தங்களில் இருந்து தமது ஆயதப் படையை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரிட்டன் அரசாங்கம் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் விசேட சட்டங்களை இயற்றியதை நினைவு படுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தமது கடமைகளை நிறைவேற்றிய ஆயுதப் படை அதிகாரிகளை இலக்கு வைத்து வெளிநாட்டு அரசுகள் மற்றும் அமைப்புகள் விடுக்கும் அழுத்தங்களுக்குத் தற்போதைய அரசாங்கம் நேரடியாக முன்நிற்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மஹிந்த ராஜபக்ஸ

இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட நால்வர் மீது பிரிட்டன் விதித்துள்ள தடை ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று எனவும், அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், சிறீதரன் இவ்விடயம் சார்ந்து அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், "எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரிட்டன் அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரிட்டன் அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதி கோரும் பயணத்தில் தமக்குக் கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத்தமிழர்கள் பார்க்கிறார்கள்'' எனவும் கூறியுள்ளார்.

எண்பது வருடங்களுக்கு மேலாகக் கேட்பாரற்றுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், "காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத்தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பதில்

இலங்கை

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசாங்கத்தால் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகருக்கு விடயங்களை தெளிவூட்டியபோதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஏதோவொரு வகையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமானால், அது தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

தடை விதிக்கப்பட்ட நபர்களுக்கு அந்த நாட்டிலுள்ள சொத்துகள் முடக்கப்படும் மற்றும் அவர்களுக்கு அந்த நாட்டிற்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டமையானது, பிரிட்டனால் எடுக்கப்பட்ட ஒருதலைபட்ச நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளால் இவ்வாறு எடுக்கப்படுகின்ற ஒரு தலைப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை உள்நாட்டு நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் விதித்த தடையால் இலங்கைக்கு பாதிப்பு உள்ளதா?

இலங்கை

பட மூலாதாரம்,PRATHIBA MAHANAMAHEWA

படக்குறிப்பு, பிரதீபா மஹனாமஹேவா

இலங்கை முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையால் இலங்கைக்கு எவ்வாறான பாதிப்புகள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

''இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள தடையானது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் விதிக்கப்பட்ட தடை கிடையாது. அதை பிரிட்டனே விதித்துள்ளது. அமெரிக்கா, ஐநா மனித உரிமை பேரவையில் இருந்து விலகியதை அடுத்து, இலங்கை தொடர்பில் பிரிட்டனே அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. இது நபர்களுக்கு பிரட்டனால் விதிக்கப்பட்ட விசா மற்றும் சொத்துகளுக்கான தடையாகும்.

எனினும், அரச அதிகாரிகள் என்ற வகையில் இலங்கைக்கு இதனூடாக பாதிப்பு காணப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதில் 72 ஈ என்ற ஷரத்தில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மிகவும் தெளிவாகக் கூறியுள்ளனர். எனினும், இது தண்டனை வழங்கும் நடவடிக்கை கிடையாது" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதீபா மஹனாமஹேவா, "தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. எனினும், 2025ஆம் ஆண்டாகும் போதும், நாம் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எமது பக்கத்திலும் குறைப்பாடுகள் காணப்படுகின்றன. தேசிய பொறிமுறையொன்றை ஏற்படுத்தி, அதைச் செய்ய வேண்டியிருந்தது. இலங்கைக்குத் தற்போது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். 72வது ஷரத்திலுள்ள பரிந்துரைகளைச் செயற்படுத்தவில்லை எனக் கூறுகின்றனர்.

கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும் அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். பொருளாதாரக் குற்றங்கள் இடம் பெற்றுள்ளதாக ஈ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பிலும் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் வேறு நாடுகளில் சொத்துகள் இருக்குமானால், அது தொடர்பிலும் தாம் உதவி செய்வோம் என அவர்கள் கூறுகின்றனர். பொதுநலவாய அமைப்பில் மனித உரிமை பிரிவுடன் இணைந்து பல வேலைகளை எம்மால் செய்திருக்க முடியும். நாங்களும் சிற்சில சந்தர்ப்பங்களில் பலவற்றைத் தவறியுள்ளோம். அதனாலேயே இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன'' என்றார்.

''இலங்கையில் ஐபிரிட் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பிரிட்டன் 2018ஆம் ஆண்டு முதல் கூறி வருகின்றது. ஐபிரிட் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்க முடியாத பட்சத்தில், அதற்குப் பதிலாக என்ன செய்ய முடியும் என்பதையேனும் நாம் கூறியிருக்க வேண்டும். பிரிட்டன் மீது முழுமையாக விரலை நீட்ட முடியாது. மனித உரிமைப் பேரவையின் ஊடாக நம்மை பிரிட்டனே கண்காணிக்கின்றது. எதிர்காலத்தில் நடைபெறுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்து'' என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

எனினும், இந்த நிலைமை தொடருமாக இருந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாது போகுமோ என்ற அச்சம் எழுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அத்துடன், தனி நாடொன்று என்ற விதத்தில் அவர்களால் நமக்கு எதிராக பொருளாதாரத் தடையைக்கூட ஏற்படுத்த முடியும் என அவர் கூறுகின்றார்.

வலையில் சிக்கும் விதத்தில் அல்லாமல், வலையில் சிக்காது அதைத் தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் இலங்கை செயல்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/czed7j5k04po

அனுர போட்ட முடிச்சு

2 months 4 weeks ago

அனுர போட்ட முடிச்சு

லக்ஸ்மன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கும் ஒரு முடிச்சைப் போட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாருடத்துக்கான வரவு-செலவுத் திட்ட  விவாதத்தை முடித்து வைத்தார். மிகவும் லாவகமான பேச்சுக்கள் மூலம் மக்களை தம்வசம் இழுத்து வைத்துக் கொள்வதில் அனுரவுக்கு நல்ல இயலுமை இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு பேச்சும் இலங்கை மக்களின் உள்ளிருக்கும் பல விடயங்களை வெளியே எடுத்து விடுவதைச் செய்து விடுகின்றன.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் தமது அரசு மீதுள்ள கோபத்திலும் வேதனையிலும் தான் விமர்சனங்களை முன்வைத்தன என்று கூறினார்.

தேர்தல் காலத்தில் பிரசாரங்களைச் செய்கின்ற போது, பலவாறு பலதையும் கூறிய ஜனாதிபதி இப்போது யதார்த்தத்திலும் உத்தியோகப்பூர்வமாகவும் வங்குரோத்து அடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம் என்று கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் தேர்தல் கால வாக்குறுதிகளைக் கணக்கிலெடுக்காதீர்கள் என்பதாகக் கூட இருக்கலாம்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் நாடு பெற்றுள்ள கடன்களின் வட்டிகளைச் செலுத்துவதற்காக 2950 பில்லியன் ரூபாவும், அரச சேவை சம்பளத்திற்காக 1352 பில்லியன் ரூபாவும், ஓய்வூதிய கொடுப்பனவைச் செலுத்துவதற்காக 442 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசின் செலவினத்தைக் குறைப்பதற்காக வருவாயை அதிகரிக்கவென அரச ஊழியர்களின்  கொடுப்பனவுகள் நீக்கப்பட்டு அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டு அதிலிருந்து கழிக்கப்படுகின்றவைகள் அதிகமாகியிருக்கின்றன. இது அரச ஊழியர்களுக்காக செலவிடப்படும் தொகையைக் குறைக்கும். இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே இருக்கிறது.

அவ்வாறானால் அரச ஊழியர்களின் கைகளுக்குக் கிடைக்கும் பணத்தின் அளவு இப்போதைக்குக் குறைவாகவே இருக்கப்போகிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி போதாது, பிரதேசங்களுக்கான நிதிகள் குறைவு என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில்தான் இவ்வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேறியிருக்கிறது.

அனுர ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்குச் சென்று வந்தார் பின்னர் சீனாவுக்குச் சென்றார். வேறு பல நாடுகளுக்கும் பயணமாக இருக்கிறார். அவரது பதவிக்காலத்தின் ஆறு மாத காலத்துக்குள் நாட்டு மக்களுக்காக அவர் செய்து முடித்திருக்கின்றார் என்று கேள்வி கேட்பதனை விடுத்து இவ்வாறு கதைகளை அடித்துவிடுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சாதாரணமாக இருக்கிறது.

ஒன்றுக்காக ஒன்றைப் பதிலீடாகக் கொடுக்கின்ற அல்லது காண்பிக்கின்ற சம்பவங்கள் வழமையாகவே நடைபெற்றுவருவதுதான். ஆனால் இங்கு வழமையைவிடவும் அதிகமாக நடைபெறுகிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.  நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பொருளாதார கொள்கையை எடுத்த எடுப்பில் மாற்றிவிடுவது சாத்தியமற்ற ஒன்றே. இதற்குள் தேசிய மக்கள் சக்தி சொல்வதைப்போல் பொருளாதாரத்தை மக்களுக்கு ஏற்றால் மாற்றியமைப்பது மிகச் சிரமாகவே இருக்கும்.

வரவு-செலவுத் திட்ட முன்வைப்பின்போது, எதிர்ப்புகள்  தெரிவிக்கப்படுவதும், விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் வெறுமனே விலக்கி விடப்படாமல் சாதகமான விடயங்கள் பரிசீலிக்கப்படுதல் நாட்டுக்குச் சிறப்பானதாகும். இந்நிலையில் பொருளாதார நிலைப்பாட்டினை நோக்குகையில், தேசிய மக்கள் சக்தி தங்கள் தேர்தல் கால பிரசாரத்தில் முன்வைத்திருந்த, ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச நாணயநிதியத்தின் கடன் வசதிக்காகக் காண்பித்த எதிர்ப்புகள் இப்போது எங்கே போயின என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கின்ற சர்வதேச நாணய நிதியத்தின் பரந்தளவிலான கடன் வசதிகளுடன் நாட்டைக் கொண்டுசெல்லுதல் என்ற வழியே அவர்களுக்கு இருக்கிறது என்பது மாத்திரமே நிலைமை.

இந்த நிலைமையில் இருந்து கொண்டு பொருளாதாரம் ஸ்திர நிலையை அடைந்து விட்டது என்ற கதையை எவ்வாறு அனுரவால் சொல்ல முடிகிறது என்பது தான் வேடிக்கை. ஆனால், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என்று கூறமுடியும்.  இந்தியாவும் சீனாவும் மாத்திரமே ஏட்டிக்குப் போட்டியாக தங்களுடைய ஆதிக்கத்தை நிலைப்படுத்துவதற்காகவும், அதிகரித்துக் கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் வேலைகள் நாட்டில் நூறு வீதம் பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தி விடாது என்பது மறக்கப்படக் கூடாதது.  

இந்நிலையில்தான், தன்னுடைய நாட்டு நலன்களைப் பிரதான நோக்காகக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கிறார். அவ்வேளையில், பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட இருக்கின்றன. முக்கியமாக சம்பூர் மின் நிலையத்துக்கான நிர்மாணத்தை இந்தியப் பிரதமர் ஆரம்பித்து  வைப்பார். அதனை தவிர, வேறு ஒன்றும் நடைபெறப்போவதில்லை. அயல் நாட்டின் தலைவரின் வருகைக்குப் பொருளாதார ஸ்திரநிலையைக் கொண்டு முடிச்சிடுவது எந்தவகையில் பொருந்தும் என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

159 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையுடன் மக்களின் மகிழ்ச்சிக்கான, நிம்மதியான வாழ்வுக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதே நல்லதாகும். அதனை விடுத்து, தேசபந்துவைக் கைது செய்வதே ஒரு பெரும் விடயமாகக் காண்பிக்கப்படுவதும் பாராளுமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி வரையில் அதற்காகக் கருத்து வெளியிடுவதும். அதில், அவ்வளவு அக்கறையாக இருப்பது எந்தளவுக்கானது என்பது தெரியவில்லை.

தேசபந்து தேடப்பட்டார், தலைமறைவாக இருந்தார்.அவருக்காகப் பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. இறுதியில் அவர் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். இப்போது சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதிலென்ன வேடிக்கையென்றால், அவர் கடமையாற்றிய பொலிஸ்த் துறையின் உத்தியோகத்தர்களாலேயே அவர் வேட்டையாடப்பட்டிருக்கிறார். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு தேசபந்துவின் விளம்பரம் தேசிய மக்கள் சக்திக்குப் போதுமானதாக இருக்கலாம்.

ஆனால், மூன்று வாரங்களாக நாட்டின் உளவுத்துறையால் அவரை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. கைது செய்யத் திறந்த பிடியாணை உள்ள ஒருவர், ஒரு சொகுசு காரில் நீதிமன்றத்தில் தோன்றி எப்படி வந்தார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று காவல்துறைக்குத் தெரியாததா? அல்லது அவர் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தாரா? அல்லது அவரைக் கைது செய்ய விரும்பவில்லையா? போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதும், ஆட்சி கலைக்கப்பட்டு அமைக்கப்பட்ட காபந்து அரசாங்கம் முன்னைய ஜனாதிபதி முதல், அமைச்சர்கள், பிரதானிகள் கைவசம் வைத்திருந்த வாகனங்கள் மீளப் பெறப்பட்ட, துரத்திப் பிடிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டு ஒரு விளம்பரம் நடத்தப்பட்டது. அது சற்று ஓய்ந்து போகவே ஊழல் தொடர்பான விடயங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைந்த புதிய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களால் மருத்துவச் செலவுக்கான பணம் பெறப்பட்டவைகள் வெளிப்படுத்தப்பட்டன.

பின்னர். ‘அரகலய’ போராட்டத்தில் பற்றவைக்கப்பட்ட சொத்துக்களுக்காக அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட இழப்பீடுகள் வெளிக்கு வந்தன. பின் சுத்தமான இலங்கை ( கிளீன் சிறிலங்கா). அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் பட்டலந்த ஆணைக்குழு விவகாரம் பூதாகாரமாக்கப்பட்டது.

இவ்வாறு நகரும் அரசு தனக்குரிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கிறது என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது.அனுரகுமார ஜனாதிபதியானவுடன், பாராளுமன்றத்தைக் கலைத்து அந்தச் சூட்டுடனேயே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், அந்தச் சூட்டுடன் நடத்த முடியாது போன உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கான சூடாக வரவு-செலவு திட்டம் பயன்படுத்தப்படப் போகிறது. இருந்தாலும், இன்னமும் இரண்டு மாதங்களில்தான் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடான பிரதிபலிப்பு தெரிய வரும். அதுவரையில் காலம் தாழ்த்தாது இத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலின் பின்னரே மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வர்.இவ்வாறான நிலையில், “காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த” கதையாக நடைபெறுவனவற்றைக் கொண்டு ஒட்டுமொத்தமான முடிவுக்கு வருவதும் கருத்துக்களை வெளியிடுவதும் பொருத்தப்பாடற்றதாகவே தோன்றுகிறது. நாடு ஸ்த்திரநிலையை எட்டிவிட்டதா? இல்லையா? என்பதை மக்களிடமே கேட்க வேண்டும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அனுர-போட்ட-முடிச்சு/91-354307

படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்

2 months 4 weeks ago

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் இலங்கை ஜனாதிபதியும், 6 தடவை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, படலந்த சித்திரவதை முகாம் பேசுபொருளாக மாறியது.

படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் நடத்தப்பட்ட படலந்த ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையுடன் தொடர்புபட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விடயம் பாரிய சர்ச்சையை நாட்டில் தோற்றுவித்துள்ளது.

படலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு

படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான அறிக்கையை, அரசாங்கம் கடந்த மார்ச் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்த படலந்த சித்திரவதை முகாம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையினால் கொள்கை தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார்.

''கடந்த 1988ஆம் ஆண்டின் தொடக்கம் 1990ஆம் ஆண்டில் சிவில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குற்றச் செயல்களில் படலந்த பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட பாரிய சித்திரவதை முகாம் தொடர்பில் நடத்தப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை குறித்து தற்போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பேசப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்து அவர் பேசுகையில், "1977ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் ஊடாக சட்டவிரோதமான, ஜனநாயக விரோதமான தன்னாட்சி அரசாங்கத்தை வீழ்த்தி 17 வருட சாபத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஜனநாயகத்தை உறுதி செய்வதே நோக்கமாக அமைந்திருந்தது.

கடந்த 17 வருட காலப் பகுதியில் இடம்பெற்ற அரச பயங்கரவாதத்தில் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதே நோக்கம். சூரியகந்த போன்ற மனித புதைகுழிகள் தொடர்பாகவும், படலந்த போன்ற சித்திரவதை முகாம்கள் தொடர்பாகவும் அப்போதைய தலைவர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று தகவல்களை வெளியிட்ட தருணத்தில் நியாயத்தை நிலைநாட்டிக் கொள்ளவே மக்கள் எதிர்பார்த்தார்கள்" என்றார்.

இதன்படி, 1995ஆம் ஆண்டு படலந்த வீடமைப்புத் திட்டத்தில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத சித்திரவதை முகாம் குறித்த விசாரணைகளை நடத்த அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலப் பகுதிகள் பல தடவை நீடிக்கப்பட்டன. இந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை 1998ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஜி.கே.ஜி.பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இலங்கை

பட மூலாதாரம்,GOVERNMENT PRESS

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அமைக்கப்பட்ட படலந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 1998ஆம் ஆண்டு ஆணைக் குழுவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், அந்த அறிக்கை கடந்த 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையிலேயே, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான பேச்சு மீண்டும் உருவெடுத்த பின்னணியில், இந்த அறிக்கையைத் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி சமர்ப்பித்திருந்தது.

''இந்தச் சம்பவம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு 30 வருடங்களும், ஆணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு 25 வருடங்களும் கடந்துள்ள இந்தத் தருணத்தில் எமது கட்சி மற்றும் எமது அமைச்சரவையினால் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதை மக்கள் மயப்படுத்துவதற்குமான பொறுப்பு நம்மிடம் உள்ளது'' என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார்.

இந்த அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கவும், இந்த அறிக்கை தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எட்டுவதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள படலந்த சித்திரவதை முகாம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதத்தை எதிர் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை இந்த விவாதம் நடத்தப்பட இருப்பதுடன், இரண்டாம் கட்ட விவாதத்தை மே மாதத்தில் நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

படலந்த சித்திரவதை முகாம் - பின்னணி என்ன?

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

படலந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைப்படி, 1980ஆம் ஆண்டு காலப் பகுதியின் இறுதிக் காலகட்டத்தில், அப்போதைய அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலைகள், சித்திரவதை முகாம்கள், சட்டவிரோத தடுத்து வைப்புகள் இடம்பெற்ற பகுதியாக படலந்த சித்திரவதை முகாம் கூறப்படுகின்றது.

கடந்த 1987-1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் படலந்த வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளில் இந்த முகாம்கள் நடத்திச் செல்லப்பட்டதாகவும், இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக போலீஸ் அதிகாரிகளின் தலையீட்டில் பல்வேறு நபர்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட படலந்த ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சிக் காலத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி மக்களுக்கான நியாயத்தைத் தமது அரசாங்கம் நிலைநாட்டும்" என்பது 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதான தேர்தல் பிரசாரமாகக் காணப்பட்டது.

இதன்படி, படலந்த சித்திரவதை முகாம் மற்றும் சூரியகந்த மனித புதைகுழி தொடர்பில் அந்தக் காலப் பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி பீடம் ஏறிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஆட்சி பீடம் ஏறிய குறுகிய காலத்திலேயே ஆரம்பித்திருந்தார்.

இதன்படி, 1995ஆம் ஆண்டு இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் சுமார் 12 தடவைகளுக்கும் அதிக சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டதுடன், இந்த ஆணைக்குழுவின் அறிக்கை 1998ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அப்போதைய ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டு இருந்தது.

ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரியான சட்டத்தரணி எஸ்.குணவர்தன செயற்பட்டிருந்ததுடன், அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னணியில் பதில் செயலாளராக டேவிட் கீதனகே பணியாற்றியிருந்தார்.

அதன் பின்னரான காலத்தில் இந்த ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் இரண்டாம் நிலை தரத்தைக் கொண்ட அதிகாரியான ஜீ.கே.ஜீ.பெரேரா பணியாற்றியுள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு தனது பணிகளை நிறைவு செய்த ஆணைக்குழு, அந்த அறிக்கையை அதே ஆண்டு ஜனாதிபதியிடம் கையளித்திருந்த போதிலும், இந்த அறிக்கை கடந்த 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

"கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை அரச உர கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான படலந்த வீடமைப்புத் திட்டத்தில் நடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதமான சித்திரவதை முகாமில் நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்களா? சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டார்களா? அதற்குப் பொறுப்பு கூறவேண்டிய நபர்கள் யார்?" என்பவை உள்ளிட்ட ஐந்து விடயங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் 2ஆம் இலக்க மேல் நீதிமன்ற வளாகத்தில் 1996ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்தக் கூட்டம் தொடர்ச்சியாக 127 நாட்கள் இடம்பெற்றது.

இந்த விசாரணைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல தலைமைகளான ரணில் விக்ரமசிங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க உள்ளிட்ட 82 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

படலந்த சித்திரவதை முகாம் மற்றும் ரணில் விக்ரமசிங்க

இலங்கை

பட மூலாதாரம்,GOVERNMENT PRESS

படக்குறிப்பு,படலந்த ஆணைக்குழுவின் விசாரணைக் குழு உறுப்பினர்கள்

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதியில் படலந்த பகுதி அமைந்துள்ளது. இந்த படலந்த பகுதியில் இலங்கை உர கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வீடமைப்பு திட்டமொன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் 64 வீடுகள் அமைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டின் வசதிகள் மற்றும் தரங்களுக்கு அமைய ஏ, பி, சி என அந்த வீடுகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த வீட்டுத் திட்டமானது, அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சுக்கு கீழ் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, அரச உர கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட அசோக்க சேனாநாயக்கவை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, படலந்த வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளில் சிலவற்றை போலீஸ் அதிகாரிகளுக்காக ஒதுக்கீடு செய்து தருமாறு கோரியுள்ளதாக ஆணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச உர கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வீடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரியாக உதவி போலீஸ் அத்தியட்சராக அப்போது கடமையாற்றிய டக்ளஸ் பீரிஸ் ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளின் பிரகாரமே, படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகளை வழங்கியதாகவும், அவர் ஆலோசனை வழங்காத பட்சத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்காது எனவும் அரச உர கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிய அசோக்க சேனாநாயக்க, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

இந்த வீடுகளை வழங்குவதற்காக எந்தவோர் உடன்படிக்கைகளும் கைச்சாத்து இடப்பட்டிருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அப்போதைய போலீஸ் மாஅதிபர் எர்னஸ்ட் பெரேரா சாட்சி வழங்கியுள்ளார்.

'இந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டமையானது, டக்ளஸ் பீரிஸ், அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் குறித்த அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்' என அப்போதைய போலீஸ் மாஅதிபர், ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

குறித்த வீடமைப்புத் திட்டத்தில் A 2/2 என்ற இலக்கத்தைக் கொண்ட வீட்டில் 1983ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரணில் விக்ரமசிங்க வசித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அந்தக் காலப் பகுதியில் அவர் பதவி வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சரின் சுற்றுலா விடுதியாகவும், கைத்தொழில் அமைச்சரின் அதிகாரபூர்வ வீடாகவும் ரணில் விக்ரமசிங்க அந்த வீட்டைப் பயன்படுத்தியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் நபர்களைத் தடுத்து வைத்து, அவர்களுக்கு சித்திரவதை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடுகளின் இலக்கங்களையும் ஆணைக்குழு தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் பிரகாரம், 23 முதல் 26 வரையான இலக்கங்களைக் கொண்ட அறிக்கை பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989 முதல் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம்.

இந்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய டி.எம்.பந்துல என்ற நபர் சாட்சியம் வழங்கியுள்ளார். ஆணைக்குழுவினால் வீட்டுத் தொகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபரினால் இந்த வீடு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியான போலீஸ் பரிசோதகர் சுதத் சந்திரசேகர தங்கியுள்ளார். உதவி போலீஸ் அதிகாரியான டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்கியுள்ளனர்.

இந்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டு, தான் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சாட்சியமளித்த அர்ல் சுகி பெரேரா என்பவர் இந்த வீட்டை அடையாளம் காட்டியுள்ளார். சபுகஸ்கந்த போலீஸாரிடம் வீடொன்று கையளிக்கப்பட்டு இருந்ததும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வாசல ஜயசேகர என்பவர் இந்த வீட்டை அடையாளம் கண்டுகொண்டுள்ளார்.

A 1/8 என்ற இலக்கத்தைக் கொண்ட வீடு எவருக்கும் கையளிக்கப்படாத பின்னணியில், அந்த வீட்டை அண்மித்து போலீஸ் அதிகாரிகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உர கூட்டுத் தாபனத்தின் தலைமை அதிகாரி பேலியகொடை போலீஸாரிடமும், ரணில் விக்ரமசிங்கவிடமும் அறிவித்துள்ளார். ஆனால், இந்த விடயம் தொடர்பில் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கியிருந்த A 1/7 என்ற வீட்டை அண்மித்து இந்த வீடு அமைந்துள்ளதுடன், அந்த வீடு பிரத்தியேக பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த இடம் என அஜித் ஜயசிங்க என்ற நபர் ஆணைக்குழுவிடம் சாட்சி வழங்கியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம்

அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, இந்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார். அதன்படி, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ரஞ்ஜன் விஜேரத்னவின் கோரிக்கைக்கு அமையவே தான் முன்னெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

எனினும், அது தொடர்பான எந்தவோர் ஆவணங்களையும் முன்வைக்கவில்லை என்பதுடன், அது தொடர்பில் அப்போதைய போலீஸ் மாஅதிபர் மற்றும் போலீஸ் திணைக்களம் இது தொடர்பில் அறிந்து இருக்காமையினால், ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது.

வழக்கறிஞர் விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சியின் மரணம்

வழக்கறிஞரான விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி என்பவர் 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காணாமல் போயிருந்தார். அவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி வழக்கறிஞர் ரஞ்ஜித் அபேசூரிய, போலீஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி கைது செய்யப்பட்டுள்ளாரா என அப்போதைய பாதுகாப்பு செயலாளர், அப்போதைய போலீஸ் மாஅதிபரிடம் வினவியுள்ளார்.

போலீஸ் மாஅதிபர் இந்த விடயம் தொடர்பில் கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபரிடம் வினவியபோது, அவ்வாறு கைது செய்யப்படவில்லை என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விஜயதாஸ, தங்காலை போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அப்போதைய அரச பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வரான ரவி ஜெயவர்தன போலீஸ் மாஅதிபரிடம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, போலீஸ் மாஅதிபர் தங்காலை போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட போலீஸ் அத்தியட்சர் கரவிட்ட தர்மதாஸவிடம் வினவியுள்ளதுடன், அவ்வாறான சம்பவமொன்று பதிவாகியுள்ளதை அதிகாரி மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 72வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் ஆர்னஸ்ட் பெரேராவின் சாட்சியத்தின் பிரகாரம், ரணில் விக்ரமசிங்க தன்னை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு சந்தேக நபரை (வழக்கறிஞர் விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி) கொழும்புவுக்கு கொண்டு வந்து, ''களனி பிரிவில் செயற்படுகின்ற விசேட குழுவிடம்'' ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, போலீஸ் மாஅதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், வழக்கறிஞர் விஜயதாஸ லியக்க ஆராய்ச்சி கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு, களனி பிரதேசத்திற்குப் பொறுப்பாகச் செயற்பட்ட குற்றச் செயல் தடுப்புப் பிரிவின் போலீஸ் பரிசோதகர் குலரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கடும் காயங்களுடன் வழக்கறிஞர் லியன்ன ஆராய்ச்சி மீட்கப்பட்டு, கொழும்பு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர் நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.

ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தப்பட்டமையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் உடலில் 207 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த வழக்கறிஞரை கொழும்பிற்குக் கொண்டு வரும்படி தான் போலீஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கவில்லை என ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

போலீஸ் மாஅதிபருக்கு ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தை ரணில் விக்ரமசிங்க நிராகரித்த போதிலும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேராவிடம் குறுக்குக் கேள்வி எழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வரவில்லை என்பது விசேடமான விடயமாக இந்த ஆணைக்குழுவினால் கருத்தில் கொள்ளப்பட்டது.

படலந்த அறிக்கையின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு?

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க

கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையான காலப் பகுதியில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் எவரேனும் ஒருவர் அல்லது நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்கள் அமானுஷியமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பான தரவுகள் ஆணைக்குழுவின் ஆங்கில பிரதியின் 119 முதல் 122 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த 1986ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்போதைய கைத்தொழில் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளை நிறுத்துவதற்கு, அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அதனூடாக 13 வீடுகள் உதவி போலீஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸிற்கு பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீடுகளை வழங்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தமையானது, தனது அமைச்சுப் பதவியின் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை எனக் கூறப்படுகின்றது.

இந்த வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு போலீஸ் திணைக்கள சரத்துகளுக்கு அமைய அது முறையற்றது என்பதுடன், அது குறித்து நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூறவேண்டும் என்பதுடன், அங்கு சட்டவிரோதமாக எதேனும் நடந்திருக்குமானால் அதை நிறுத்துவதற்காக அவர் நடவடிக்கை எடுக்காமை குறித்துப் பொறுப்பேற்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் வரவழைக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்குக் கூட்டம் நடத்தியமையும், அவரால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க போலீஸாரின் செயற்பாடுகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும் தலையீடு செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்ட வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்களை ஸ்தாபிக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது.

B2, B8, B34, A1/8 ஆகிய படலந்த வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நடத்த ரணில் விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிந்திருந்த போதிலும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து அப்போதைய பிரதி போலீஸ் மாஅதிபர் எம்.எம்.ஆர் (மெரில்) குணரத்ன, அப்போதைய போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேரா ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்ன?

இலங்கை

பட மூலாதாரம்,BATALANDA COMMISSION REPORT

படக்குறிப்பு,படலந்த சித்திரவதை முகாம் வரைபடம்

நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமை தொடர்ச்சியாக மீறப்படும் நபர்கள் யார் என்பது அடையாளம் காணப்படும் பட்சத்தில், அவர்களின் பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே சரியான தண்டனை என்பதுடன், அதை வழங்குவதற்கான சட்ட அதிகாரத்தை உயர்நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 124, 125 ஆகிய பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத விடயங்கள் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்று அதுகுறித்து விசாரணைகளை நடத்தும் அதிகாரம் வழங்கும் வகையில், குற்றவியல் கோவை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துமாறு போலீஸ் மாஅதிபருக்கு உத்தரவிடுதல் உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்க தற்போது கூறுவது என்ன?

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தான் முழுமையாகவே நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரம் தொடர்பில் தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

''கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து இடப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது" என அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "பியகம பகுதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மாவெலியில் இருந்து கொழும்பிற்கு மின்சாரத்தைக் கடத்தும் மத்திய நிலையம் உள்ளிட்ட வர்த்தக மையங்களில் முக்கியமான பொருளாதார நிலையங்கள் காணப்பட்டன. அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது.

பாதுகாப்புப் பிரிவினர் தங்குவதற்காக இலங்கை உர கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான, அந்தச் சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கட்டடங்கள் மற்றும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் சில வீடுகளில் தங்கியிருந்தனர். இந்த வன்முறை காலப் பகுதியில் சப்புகஸ்கந்த போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி போலீஸ் பொறுப்பதிகாரி கொலை செய்யப்பட்டார்," என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, "அப்போதைய பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் விஜேரத்ன என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீடமைப்புத் திட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, களனி போலீஸ் அதிகாரியான நலின் தெல்கொடவிடம் கையளிக்கப்பட்டது" என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த காலப் பகுதியில் உள்ளுராட்சி சபை உறுப்பினர் ஒருவர், கூட்டுறவு சங்கத் தலைவர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொலை செய்யப்பட்டதாகவும், சில வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, "சரிவை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரத்தையும், மக்களின் இயல்வு வாழ்க்கையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்ற், இந்த ஆணைக்குழு அரசியல் இலாபத்தை கருத்திற் கொண்டே செயற்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டுகின்றார்.

''கடந்த 1994ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, படலந்த பகுதியில் சித்திரவதை முகாமொன்று இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். அதற்காகப் பலரை வரவழைத்திருந்தார். என்னை சாட்சியாளராக மாத்திரமே வரச் சொன்னார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் எதிர்கட்சித் தலைவராகச் செயற்பட்டேன்."

"படலந்த ஆணைக்குழு முழுமையாக அரசியல் சேறுபூசும் நடவடிக்கையை நோக்கமாகக் கொண்டது. எனினும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. அறிக்கையில் அமைச்சர் என்றே என்னைக் குறிப்பிட்டுள்ளனர். போலீஸ் அத்தியட்சகரினால் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்குவது சரியானது இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. போலீஸ் மாஅதிபருக்கு வீடுகளை வழங்கி, அதை போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதே சரியான நடைமுறை எனக் கூறப்பட்டுள்ளது."

"இதில் நானும், தெல்கொடவும் பொறுப்பு கூற வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் என்னுடன் தொடர்புப்படவில்லை'' என அவர் பதிலளித்துள்ளார்.

இந்த அறிக்கையை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதம் இடம்பெறவில்லை எனத் தான் நம்புவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.

அத்துடன், நாடாளுமன்ற சபை அறிக்கையொன்றை 25 வருடங்களுக்குப் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் சம்பிரதாயம் இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரமன்றி, உலகிலுள்ள எந்தவொரு நாடாளுமன்றத்திலும் கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2er00e9mkmo

“நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன்.

3 months ago

Ilankai_Tamil_Arasu_Kachchi_Logo_1200px_

“நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன்.

சில கிழமைகளுக்கு முன்பு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம் நடத்திய ஒரு ஊடகச் சந்திப்பில்,ஒரு வசனத்தைச் சொன்னார்.”நாங்கள் மட்டும் தோற்கவில்லை”. இதை அவர் எத்தகைய அர்த்தத்தில் சொன்னார் ? இது எல்லாருக்குமான தோல்வி என்ற அர்த்தத்தில் சொன்னாரா? அல்லது எல்லாருமே தோற்றிருக்கிறார்கள். எனவே இதில் எங்களை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? என்ற அர்த்தத்தில் சொன்னாரா ?

எல்லாருக்குமே தோல்வி ஏற்பட்டிருக்கிறது என்பதை அதன் சரியான வார்த்தைகளில் சொன்னால்,தமிழ்த் தேசியத் தரப்பைச் சேர்ந்த கட்சிகள் எல்லாவற்றுக்குமே பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.அந்த பின்னடைவுக்கு யார் பொறுப்பு? ஒரு மூத்த கட்சியாக, உள்ளதில் பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சி எடுத்த முடிவுகள் அதற்குக் காரணம் இல்லையா ? இந்தத் தோல்வியானது கடந்த 15 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான தோல்விகளில் ஆகப்பிந்தியது என்பதனை சிவிகே சிவஞானமும் தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொள்ளுமா? இந்தத் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்ன?

காரணம் மிகவும் எளிமையானது. தமிழரசுக் கட்சி தன்னை எல்லாக் கட்சிகளையும் விட உயர்வானது, பெரியது, தலைமைப் பொறுப்பில் இருப்பது என்றெல்லாம் கூறிக்கொள்கின்றது. ஆனால் அந்தக் கட்சி அந்தப் பொறுப்பை உணர்ந்து நடக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக சம்பந்தர் அந்தக் கட்சியை கொழுப்பை நோக்கிச் சாய்த்துசெல்ல முற்பட்டார்.அதன் விளைவாக கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் பலமாக மேலெழுந்து விட்டன. ஒரு நிலைப்பாடு கொழும்பை நோக்கிச் சாய்வது. இன்னொரு நிலைப்பாடு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக இருப்பது. சம்பந்தர் நினைத்தது போல கட்சியை செங்குத்தாகக் கொழும்பை நோக்கித் திருப்ப முடியவில்லை. அதன் விளைவாக மேற்சொன்ன இரண்டு போக்குகளும் ஒன்று மற்றதற்கு எதிரானதாக மேல் எழுந்துவிட்டன. அதன் விளைவாகக் கட்சி இரண்டாகப் பிளந்து கிடக்கின்றது. கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில்தான் நிற்கின்றது.கட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவருமாகிய சுமந்திரன் கட்சிக்குள் புத்திசாலித்தனமாக உள்நுழைந்து கட்சியைப் படிப்படியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டவர். கடந்த ஆண்டின் இறுதியில் நாடு முழுவதும் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் கட்சிக்குள் ஒரு பிரதானியாகத் தன்னைப் பலப்படுத்தி வருகிறார். தேர்தலில் தோற்ற ஒருவர் கட்சிக்குள் இவ்வளவு முக்கியத்துவத்தை பெறுவதை எப்படிப் பார்ப்பது?

தேர்தலில் வெற்றி பெறுவதை ஒரு பிரதான தகுதியாகக் கருதிய சம்பந்தர் அதைச் சொல்லித்தான் ஏனைய கட்சிகளை மட்டம் தட்டுவார்.சம்பந்தரின் வார்த்தைகளில் சொன்னால் தேர்தலில் வெல்லாத ஒருவர் கட்சிக்குள் தன்னுடைய பிடியைப் பலப்படுத்தி வருகிறார். இதை எப்படிப் பார்ப்பது?

கட்சியைப் பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அவர் முன்னெடுக்கும் எல்லா நடவடிக்கைகளிலும் மற்றொரு உள்நோக்கமும் இருக்கும்.சிறீதரனை எப்படி கிளிநொச்சிக்குள் முடக்குவது? என்பதே அந்த உள்நோக்கம். சிறீதரனையும் அவருடைய அணியையும் முடக்குவதற்கு அவர் பயன்படுத்தும் பிரதான ஆயுதங்களில் ஒன்று பொது வேட்பாளரை ஆதரித்தமை.

பொது வேட்பாளர் என்ற கருத்துருவமே தமிழ் அரசியலில் புதுமையானது. அது கடந்த 15 ஆண்டு கால ரியாக்ரிவ்-பதில் வினையாற்றும் அரசியலில் இருந்து தமிழ் அரசியலை ப்ரோ ஆக்டிவாக – செயல்முனைப்பு உள்ளதாக மற்றும் நோக்கத்தைக் கொண்டது.அது கட்சி கடந்து ஒரு திரட்சியை ஏற்படுத்த முயற்சித்தது. கிழக்கிலிருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கு மேலான வாக்குகள் கிடைத்தன. அது ஒரு சாதாரண தொகை அல்ல. தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு தனி அரசியல்வாதிக்கு இதுவரை கிடைத்த வாக்குகளில் அதிகமான தொகை வாக்குகள் அவை.

அந்த வாக்குகளைத் திரட்டும் குறியீடாக தேர்தலில் நின்றவர் அரியனேத்திரன். அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர். நமது கட்சி உறுப்பினர் ஒருவருக்கு அவ்வாறு அதிக தொகை வாக்குகள் கிடைத்ததை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தாயக ஒருமைப்பாட்டுக்காக வாக்குகளை திரட்டும் ஒரு குறியீடாக தேர்தலில் நின்றமையை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தமிழ் அரசியலை செயலூக்கம் மிக்கதாக மாற்றும் உயர்வான நோக்கத்தோடு ஒரு தேர்தலில் நின்றமையை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தேசத்தைத் திரட்டும் குறியீடாக ஒரு சந்நியாசி போல தேர்தலில் நின்றதை, தமிழரசுக் கட்சி எப்படிப் பார்க்கின்றது? அதை ஒரு குற்றமாகக் கூறி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது. அதாவது அவர் செய்த குற்றம் தேசத்தைத் திரட்டியது. தமிழரசுக் கட்சிக்கு தனது கட்சிக்காரரின் மகிமையே தெரியவில்லை. தேசத்தைத் திரட்டிய குற்றத்துக்காக அரியநேத்திரனை கட்சியை விட்டு நீக்கலாமென்றால் அதே குற்றத்துக்காக பொது வேட்பாளரை ஆதரித்த ஏனையவர்களிடம் விளக்கம் கேட்கலாமென்றால், தமிழரசு கட்சி எங்கே நிற்கின்றது? தேசத் திரட்சிக்கு எதிராகவா நிக்கிறது?

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்காவின் அல்ஜசீரா பேட்டி தொடர்பாக எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். அந்தப் போட்டியில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் பிரதான செய்தி, ரணில் இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூற மாட்டார் என்பதுதான்.ரணில் விக்கிரமசிங்கம் மட்டுமல்ல, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற்ற சஜித் பிரேமதாசவும் பொறுப்புக் கூறத் தயாரில்லை.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐநா கூட்டத் தொடர் நடந்து கொண்டு இருந்தது.அப்பொழுது தமிழ் வாக்குகளில் தங்கியிருந்த சஜித் என்ன சொன்னார் ? பன்னாட்டுப் பொறிமுறைக்கு எதிராகத்தான் கருத்து தெரிவித்திருந்தார். எனவே ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல, மகிந்த மட்டுமல்ல, அனுர மட்டுமல்ல, சஜித்தும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறத் தயார் இல்லை. ஆனால் சுமந்திரன் அவருக்கு ஆதரவாக பகிரங்கமாக மேடையில் தோன்றினார். பொது வேட்பாளருக்காக விழும் வாக்குகள் வீணாகப்போன வாக்குகள் என்று கூறினார். பொது வேட்பாளருக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு எதிராக பகிரங்கமாக பிரகடனங்களை வெளியிட்டார். பொது வேட்பாளரை ஆதரித்த தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தனக்கு விசுவாசமான கட்சியின் மத்திய குழுவைத் தூண்டி வருகிறார். அப்படி என்றால் சுமந்திரன் எங்கே இருக்கிறார்? தேசத் திரட்சிக்கு ஆதரவாகவா? தேசத் திரட்சிக்கு எதிராகவா? பொறுப்புக் கூறலுக்கு ஆதரவாகவா? பொறுப்புகு கூறலுக்கு எதிராகவா ? தேசத் திரட்சியை அவர் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்?

கட்சியை ஒரு கட்டுக்கோப்பான இறுக்கமான ஸ்தாபனமாகத் திரட்ட முடியாத ஒருவர் எப்படித் தேசத்தைத் திரட்ட முடியும்? தானே ஒரு திரண்ட கட்டமைப்பாக இல்லாத கட்சி தேசத்தைத் திரட்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

பொது வேட்பாளரின் விடயத்தில் தேசத் திரட்சிக்கு எதிராக நின்றவர்,கட்சிக்குள் தனது பிடியை படிப்படியாகப் பலப்படுத்தி வருகிறார். தேசத் திரட்சிக்கான குறியீடாக நின்ற அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அரியநேத்திரனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி எடுத்த நடவடிக்கை என்பது அக்கட்சியின் மத்திய குழு எடுத்த முடிவுகளிலேயே பாரதூரமான ஒரு வரலாற்றுத் தவறு. தேசத் திரட்சியின் குறியீடாக நின்ற தன் கட்சிக்காரரின் மகிமை தமிழரசுக் கட்சிக்கே தெரியவில்லை.கட்சி அரசியலானது தேசிய உணர்வை மழுங்கடித்து விட்டதா?

தமிழ்த் தேசிய வரலாற்றில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில் ஒரு தனித்தமிழ் வேட்பாளர் பெற்ற ஆகக் கூடிய வாக்குகளை அரியநேத்திரன் பெற்றார்.அந்த மகத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவருடைய கட்சியின் மத்திய குழு அதன் தேசிய ஆன்மாவை இழந்து விட்டதா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 257,813. அரியநேத்திரனுக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகள் 2,25,000. அவை தேசத்தைத் திரட்டலாம் என்ற நம்பிக்கைக்கு கிடைத்த அடிப்படை வாக்குகள். அவை பொதுக் கட்டமைப்புக்கு மட்டும் சொந்தமான வாக்குகள் அல்ல என்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் நிரூபித்தார்கள். அவை கட்சி கடந்த தேசத் திரட்சிக்கு கிடைத்த வாக்குகள்.

ஆனால் அரியநேத்திரனின் மகத்துவத்தை அவருடைய சொந்தக் கட்சியே உணரத் தவறிவிட்டது மட்டுமல்ல அவரைக் கட்சிக்குள் இருந்து நீக்கியதன் மூலம் கட்சியின் மத்திய குழு தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தும் செய்தி என்ன? தேசத் திரட்சிக்கு எதிராக நிற்கிறோம் என்பதா?

தேசத் திரட்சிக்காக ஒரு சன்னியாசியைப் போல குறியீடாக நின்ற அரியம் கட்சிக்கு வெளியே. தேசத் திரட்சிக்கு எதிராகவும் பொறுப்புக் கூறலுக்கு எதிராகவும் தமிழ் வாக்குகளை சஜித்திற்குச் சாய்த்துக் கொடுத்தவரும் அதை ஆதரிப்பவர்களும் கூறுகிறார்கள் “நாடு அனுரவோடு; ஊர் எங்களோடு” என்று. ஆனால் கட்சி யாரோடு?

https://athavannews.com/2025/1426184

கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? - நிலாந்தன்

3 months ago

கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திய மக்கள் அமைப்புக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் ஒரு பல்கலைக்கழக மாணவரை அறிமுகப்படுத்தினார். அவர் பொது வேட்பாளருக்கான அணியுடன் இணைந்து இயங்குவார் என்றும் சொன்னார். அந்த மாணவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குத் துடிப்பாகச் செயல்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு காணப்பட்டார்.

இது பழைய கதை. அண்மையில் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மேற்படி மாணவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் விதத்தில் கவர்ச்சியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு  காணொளி அது. அவர் ஏன் அதைப் பகிர்ந்திருக்கிறார் என்பதனை அறிவதற்கு பல்கலைக்கழகத்தில் அவருக்கு கற்பித்த ஓர் ஆசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னார்,”அந்த மாணவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களில் ஒருவர் போலத் தோன்றுகிறார்” என்று. “ஜனாதிபதித் தேர்தலில் அவர் பொது வேட்பாளரின் பக்கம் வந்தாரே?” என்று கேட்டேன். ”அது அப்பொழுது.இப்பொழுது அவர் தேசிய மக்கள் சக்திக்கு வந்து விட்டார். படிக்கும் காலங்களில் அவர் தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்து சக மாணவர்களோடு தர்க்கப்படுவார். ஆனால் படித்து முடிந்ததும் அவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் பக்கம் நிற்கிறார்” என்றும் அந்த ஆசிரியர் கூறினார்.

அந்த மாணவர் பகிர்ந்த காணொளியானது அனுரவை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே அதுபோன்ற சிறிய காணொளித் துண்டுகள் பல வெளிவந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் டிஜிட்டல் ப்ரோமோஷனக்கான அணி வினைத்திறனோடும் படைப்புத்திறனோடும் செயல்படுகின்றது. அனுரவை ஒரு கதாநாயக பிம்பமாகக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு திட்டமிட்டு அவ்வாறான காணொளிகளை உருவாக்கி வருகிறது. அவற்றில் காணப்படும் தொழில்சார் திறன், கலை நயம் போன்றன அனுரவைச் சுற்றி ஓர் ஒளிவட்டத்தைக் கட்டமைக்கும் நோக்கமுடையவை.

ஒரு கதாநாயகராகக் கட்டியெழுப்பத் தேவையான முகம், உடல்வாகு, உடல் மொழி போன்றன அனுரவுக்கு உண்டு. அவற்றையும் சேர்த்து மாற்றத்தின் அலை ஒன்றுக்குத் தலைமை தாங்கும் கதாநாயக பிம்பமாக அவரைக் கட்டமைத்திருக்கிறார்கள்.

இந்த இடத்தில் தமிழ் நோக்கு நிலையில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கலாம். அனுரவைப் போல ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கத்தக்க அம்சங்களைக் கொண்ட தமிழ் தலைவர்கள், தலைவிகள் யாருமே இப்பொழுது களத்தில் இல்லையா? அல்லது அவ்வாறு கதாநாயக பிம்பங்களைக் கட்டியெழுப்ப முடியாத ஒரு சமூக,உளவியல்,அரசியற் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்குள் இருக்கிறது தமிழரசியலின் சீரழிவும் சாபக்கேடும்.

கடந்த 15ஆண்டுகளாக ஈழத்தமிழ் கூட்டு உளவியலானது கொந்தளிப்பானதாகவே காணப்படுகின்றது.கடந்த 15ஆண்டு கால தலைமைத்துவ வெற்றிடத்தில் தன்னைத்தானே தின்னும் ஒரு சமூகமாக; தானே தன்னை நம்பாத; ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்துகின்ற; தன் பலம் எதுவென்று தெரியாமல் தூர்ந்து போகும் ஒரு சமூகமாக ஈழத் தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா?

உளவியலில் Pistanthrophobia – “பிஸ்டாந்ரோ ஃபோபியா” என்ற ஒர் ஆங்கிலப் பதம் உண்டு. அதன் பொருள், யாரையும் நம்புவதற்கு பயம். இறந்த காலத்தில் ஏற்பட்ட எதிர்மறையான, கசப்பான அனுபவங்களின் விளைவாக மற்றவர்களை நம்பத் தயாரற்ற எரிச்சலுடன் கூடிய பயம். (An irritating fear of trusting others, typically resulting from previous negative experiences) போருக்குப் பின்னரான கூட்டு மனவடுக்களின் போதும் இதுபோன்ற உளவியல் விளைவுகளைக் காண முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

421931823_122125375670138407_73558661184

இவ்வாறு கூட்டுக் காயங்கள்,கூட்டு மன வடுக்களுக்குள் அழுத்திக் கிடக்கும் ஒரு சமூகத்தின் கொந்தளிப்பான கூட்டு உளவியலுக்குத் தலைமை தாங்கும் அரசியலானது ஒரு விதத்தில் கூட்டுச் சிகிச்சையாக அமைய வேண்டும். அதை ஒருவிதத்தில் குணமாக்கல்  செயற்பாடு என்று கூடச் செல்லலாம். அவ்வாறு இறந்த காலத்தின் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மனவடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஒரு அரசியலுக்குத் தலைமை தாங்கும் சக்தி மிக்க தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லையா? அல்லது இருப்பவர்களை மேலெழ விடாமல் ஒருவர் மற்றவரைக் கடித்துத்  தின்னும் அல்லது ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்தும் அல்லது மேலெழ முயற்சிப்பவரின் காலைப் பிடித்து இழுத்து விழுத்துகின்ற ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா? அதனால்தான் தமிழ் அரசியலில் கதாநாயக பிம்பங்களைக் கட்டமைக்க முடியவில்லையா?

அரசியலில் கதாநாயக பிம்பங்களை கட்டமைப்பது என்பது தனிமனித துதிக்கும் தலைமை வழிபாட்டுக்கும் வழிவகுக்கும் என்ற விமர்சனங்களை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வாக்கு வேட்டை அரசியலில் ஜனவசியம் மிக்க பிம்பங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதுவும் டிஜிட்டல் ப்ரோமோஷனின் காலத்தில் அந்த முக்கியத்துவம் பல மடங்கு அதிகம். அதைவிட முக்கியமாக,சுமார் 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடத்துள் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்ட அரசியலுக்கு பண்புரு மாற்றம் செய்வதற்கு அவ்வாறான தலைமைகள் அவசியம். ஆனால் அப்படிப்பட்ட தலைமைகள் மேலெழ முடியாத அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலின் கூட்டு உளவியலானது சிதைந்து போய்க் கிடக்கின்றது.

ஐக்கியத்துக்காக உழைப்பவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று கூறும் அளவுக்கு பிஸ்டாந்ரோ போபியா ஒரு சமூக அரசியல் நோயாக மாறிவிட்டது. ஐக்கியப்படுமாறு கேட்பவர்களை எதிரியின் ஆட்கள் என்று முத்திரை குத்தும் நோய் ஈழத் தமிழர்கள் மத்தியில் மட்டும்தான் உண்டா?

தமிழ்த் தேசிய அரசியலில் வெறுப்பர்களை அதிகம் உற்பத்தி செய்த ஒரு கட்சியாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளின் பின் ஞானம் பெற்று கொள்கை வழி ஐக்கிய முயற்சிகளில் இறங்கியிருப்பதை ஒரு திருப்பகரமான மாற்றம் என்றே வர்ணிக்க வேண்டும்.

ஆனால் கொள்கை எது? ஒரு மக்களை அவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய பலம், பலவீனங்களோடு ஒரு திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான் தேசியவாத அரசியல். ஒரு தேசம் என்பது புனிதர்களுக்கு மட்டுமல்ல. ஒரு தேசத்துக்குள் தியாகிகள் மட்டும் இருப்பதில்லை.நல்லவர்கள், கெட்டவர்கள், புனிதர்கள், கபடர்கள், நபுஞ்சகர்கள், மனம் திருந்தியவர்கள், மனம்திருந்தாதவர்கள், விலைபோனவர்கள், ஒத்தோடிகள், எதிர்த்தோடிகள் மறுத்தோடிகள் என்று எல்லா ஓட்டங்களும் ஒரு சமூகத்துக்குள் இருக்கும். அந்த எல்லா ஓட்டங்களையும் ஒரு பொது எதிரிக்கு எதிரான பேரோட்டமாக மாற்றுவதுதான் தமிழ்த் தேசிய அரசியல். கடந்த 15 ஆண்டுகளாக அதைச் செய்யத் தமிழ் தேசியக் கட்சிகளால் முடியவில்லை. அவர்களால் தமது கட்சிகளையும் கட்டியெழுப்ப முடியவில்லை மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை.

தங்களைக் கதாநாயகர்களாக அல்லது தியாகிகளாகக் கட்டமைப்பதற்காக தமது அரசியல் எதிரிகளை வில்லன்களாகச் சித்திரிக்கும் ஓர் அரசியல் பாரம்பரியமானது முடிவில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் அநேகம் பேரை சொந்த மக்களே நம்ப முடியாத வில்லன்களாக பார்க்கும் ஒரு பரிதாபதாபகரமான இடத்தில் வந்து நிற்கின்றதா?

உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தலைமைப் போட்டிக்குள் சிக்கி ஏறக்குறைய தூர்ந்து போய்விட்டது. அந்தக் கெட்ட முன்னுதாரணமானது தமிழரசியலின் குறிகாட்டியும் கூட. சுமந்திரன்,சிறீதரன்,சாணக்கியன் போன்றவர்கள் தங்களுக்கென்று டிஜிட்டல் ப்ரோமோஷன் அணிகளை வைத்திருக்கிறார்கள். அவை அவர்களை கதாநாயகர்களாகக் கட்டமைக்கின்றன. ஆனால் கட்சியை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவர முடியாத தலைவர்களை தமிழ் மக்கள் கதாநாயகர்களாகக் கருத மாட்டார்கள். சில சமயம் வில்லன்கள் ஆகத்தான் பார்ப்பார்கள்.

விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்த புதிதில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகத் தோன்றினார்.தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியோடு அவருக்கு இருந்த ஜனக் கவர்ச்சி மேலும் அதிகரித்தது. ஆனால் அவரே அதனைப் போட்டு உடைத்தார். இப்பொழுது அவருடைய ஜனவசிய முகம் பரிதாபகரமான விதத்தில் சுக்குநூறாகிவிட்டது. இது விக்னேஸ்வரனுக்கு மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளில் மேலெழுந்த பெரும்பாலான எல்லா தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். தமிழ்த் தேசிய அரசியலில் மேல் எழுகின்ற எந்த ஒரு தலைவருமே தன் ஜனவசியத்தை ஏன் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை?

ஏனென்றால் யாருமே தாங்கள் முன்வைத்த இலட்சியத்தை நோக்கி தமது கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை; தமிழ் மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை. தன் பலம் எதுவென்று தெரியாமல், தானே தன்னில் நம்பிக்கை இழந்து, ஒருவர் மற்றவரை நம்பாத, ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற,ஒருவர் மற்றவரை வெறுக்கின்ற, ஒரு சமூகமானது தன்னை ஒரு தேசம் என்று அழைக்க முடியாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களையும் ஒரு தேசமாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன.தங்களையும் கட்சிகளாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன.

தமிழ் மக்களுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை ஒளியாகவும் முன்னுதாரணமாகவும் நிற்கக்கூடிய தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? அல்லது அப்படிப்பட்ட தலைவர்கள் மேலெழு முடியாத ஒர் அரசியல் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா? அதற்குக் கட்சிகள் பொறுப்பில்லையா?

இந்த சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் உளவியல் சூழல் தொடருமாக இருந்தால் அனுரவை நோக்கி ஆர்வத்தோடு பார்க்கின்ற;அவரை கதாநாயகராகக் கொண்டாடுகின்ற இளையவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.அது இனி வரக்கூடிய தேர்தல்களிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.

https://www.nillanthan.com/7232/

தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன?

3 months ago

நடராஜா ஜனகன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது. முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல் மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றை வெளிக்கொணர்வதில் புதிய அரசாங்கம் காட்டி வரும் வேகமான செயற்பாடுகள் நிச்சயம் பாராட்டப்படக்கூடிய நிலையிலேயே காணப்படுகின்றன .

இந்நிலையில், தற்போது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.

இதேபோன்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அவர்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தி தரும் நிலையில் காணப்படவில்லை. தமிழ் பகுதிகளில் பொருளாதார நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் புதிய ஆட்சியாளர் காட்டி வரும் அக்கறை குறிப்பாக பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்தை மீள ஆரம்பிக்கும் முயற்சிகள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் கள விஜயம் பாராட்டப்படக்கூடியவையே .

ஆனாலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சுய கௌரவத்தை உறுதிப்படுத்த நிலை நிறுத்தும் அரசியல் உரிமை சார்ந்த நகர்வுகள் பின்நிலைக்கு தள்ளப்பட்டு வருவது கவலை தரும் நிலையாகும். குறிப்பாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய புதிய அரசியல்யாப்பு வருகை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பது புதிய ஆட்சியாளர் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை பலவீன நிலையை நோக்கி நகர வைத்துள்ளது.

மேலும் போர்க்காலத்தில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் பேசப்படாத விடயங்களாக மாறி வருகின்றன. உதாரணமாக திருகோணமலை மாணவர்களின் படுகொலை தொடர்பான விடயம் மற்றும் போரின் இறுதிக்காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை தொடர்பான விடயம் போன்றவை காலம் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

காணாமல் போன உறவுகளை தேடி தாய்மார்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் ஆயிரக்கணக்கான நாட்களைத் தாண்டி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. உள்ளூர் விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச விசாரணையை அவர்கள் கூறி வருகின்றனர். தமிழ அரசியல் கைதிகளின் நிலையும் தொடர் கதையாகவே மாறியிருக்கிறது. போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் 58வது கூட்டத்தொடரில் முன் வைத்திருக்கும் நிஜங்கள் நீதி கோரி போராடிவரும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் நிலையில் காணவில்லை.

பொறுப்புக் கூறலில் அவர்கள் எதனையும் வெளிப்படுத்துவதற்கு தயாரில்லாத நிலை உறுதி பெற்று வருகிறது. இதேநேரம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மரபுரிமை சார்ந்த சவால்களுக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை நிரந்தர தீர்வை வழங்கும் நிலை காணப்படவில்லை. வடபகுதியில் தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டிருக்கும் விஹாரை தொடர்பான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இது தொடர்பில் புத்தசாசன சமய விவகார அமைச்சர் கனித்துவ சுனில் கெனவி நேரடியாக களத்தை பார்வையிட்டு தீர்வு வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் தனது முடிவை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது உறுதிப்பாடு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியை பெற்றுக் கொடுத்தால் சிறப்பாக அமையும். மேலும் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி சிவன் தொடர்பான விடயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தில் மக்கள் அங்கே சென்று வழிபாட்டில் ஈடுபட மாற்றங்கள் உருவாக்கப்பட்டிருப்பது நல்ல மாற்றங்களாகவே பார்க்கப்படுகிறது.

இதேநேரம் வாகரைப் பகுதியில் சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயிகளின் உற்பத்தி முயற்சிகளை வன இலாகாவினர் எதுவித தயக்கமும் இன்றி அம்மக்களை அவர்களது பகுதிகளிலிருந்து வெளியேற்றியிருப்பது கண்டனத்துக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பை அரசாங்கம் இன்று வரை நிலை நிறுத்தாதிருப்பது பெரும் கேள்வியாக மாறியிருக்கிறது. மேலும் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் வடக்கில் ராணுவத்தால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முப்பதாயிரம் ரூபா வேதனமாக வழங்கப்பட்டிருக்கும் நிலை ராணுவம் அல்லாத தமிழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வெறும் 6000 ரூபாய் வழங்கப்படுவதாக வெளியிடப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனயீர்ப்பு விடயத்துக்கு அரசாங்கத்தின் உரிய பதில் வழங்கப்படாத நிலை தொடர்கின்றது.

மேலும் நாயாறு பகுதியில் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர்கள் அப்பகுதியில் முகாமிட்டு நிரந்தரமாக தங்கி உள்ளூர் மீனவர்களின் தொழிலை பாதிக்கும் வகையில் செயற்படுவதாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் கிடைக்காத நிலை தொடர்கிறது. இந்திய மீனவர்களின் செயற்பாடு காரணமாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பாரிய இழப்புக்கள் போன்றே இந்த நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் மேல் வந்திருக்கிறது.

மேலும் வன்னி நிலப்பரப்பில் 2009 க்கு முன்பு விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் காட்டு மரங்களை கனரக இயந்திரங்களைக் கொண்டு வெட்டுவது, அரிவது போன்ற செயற்பாடுகள் அது தொடர்பான ஓசைகள் கூட இல்லாதிருந்த நிலையில் தற்போது வன்னிப் பகுதியில் கனரக ஆயுதங்கள் மூலம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தொடர்கின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி நிற்கும் நிலையில் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை அவர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களில் புதிய ஆட்சியாளர்கள் அவற்றை முன்னிலைப்படுத்தி அதற்கான தீர்வை வழங்கும் நிலையை நோக்கி நகர வேண்டும். 1970ல் உருவான இடதுசாரிக் கட்சிகளின் கூட்டரசாங்கத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களை புறந்தள்ளிவிட்டு பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள் முதன்மை நிலை பெற அது இறுதியில் ஆயுதப் போராட்டமாக மாறி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாடு உள்நாட்டு யுத்தத்தை சந்தித்ததுடன், இறுதியில் நாடே வங்குரோத்து நிலைக்கு சென்றது வரலாறாகும். இத்தகைய நிலைகள் தோற்றம் பெறாமல் இருப்பதற்கு புதிய ஆட்சியாளர் அதிக கவனத்தை இதன் மீது குவிப்பதுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அதற்கான புதிய அரசியல் யாப்பின் வெளிவருகை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மரபுரிமை சார்ந்த சவால் நிலைமைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கி தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கும் அழகிய இலங்கையை உருவாக்கும் முயற்சிகள் முதன்மை நிலை பெற வேண்டும்.

https://thinakkural.lk/article/316207

பம்மாத்து - சுப.சோமசுந்தரம்

3 months ago

பம்மாத்து

(Pretensions)

- சுப.சோமசுந்தரம்

               உலகில் பம்மாத்து அல்லது பாசாங்கிற்கு எக்காலத்தும் பஞ்சம் இருந்ததில்லை. இவற்றில் நன்மை விளையும் பம்மாத்தும் உண்டு - பொய்மையும் வாய்மையிடத்த என்பது போல. யானறிந்து தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவித்த ஒரு தலைசிறந்த பம்மாத்து, நான் பெரிதும் போற்றும் அறிஞர் அண்ணா அவர்கள் திருமூலரை எடுத்தாண்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பறைசாற்றியது. சமூகத்திற்காகப் போராடுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட திராவிடர் கழகத்தில் இயங்கிய அண்ணாவும் அவர்தம் தம்பிமார் சிலரும், மக்களுக்கான திட்டங்களை இயற்றுவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே கைகூடும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்துக் களம் கண்டனர். மக்களிடம் தேர்தல் வாக்குக்காக கையேந்தும்போது சமரசம் எனும் தீமைக்குள் வந்துதானே ஆக வேண்டும் ? கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். அவ்வாறு பம்முகிற ஒவ்வொரு தருணத்திலும், "ஆனால் எனக்குத் தெரியும் அந்த ஒரு தேவனும் கிடையாது" என்று அண்ணா தமக்குள் முணுமுணுத்திருப்பார் என்பதை அண்ணாவை அறிந்தவர் அறிவர். அந்தப் பம்மாத்தில் மக்களுக்கு நன்மைகள் விளைந்தன என்பதை அறிவார்ந்தோர் அறிவர்.

               பெரியார் மற்றும் பெரும்பாலான திராவிட கழகத்தினரைத் தவிர்த்து ஏனைய திராவிட இயக்கங்களிலும், இடதுசாரி இயக்கங்களிலும் நமக்குத் தெரிந்த ஒரு பிம்மாத்து உண்டு; அதாவது, நமக்குப் பம்மாத்தாகத் தோன்றுகிற ஒன்று உண்டு. அது "நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோமே தவிர பார்ப்பனர்களை அல்ல" என்பதுவேயாம். பார்ப்பனியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை எதிர்க்கும் பார்ப்பனர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கலாம். விதிவிலக்குகள் விதி யாது என்பதைச் சொல்பவைதாமே ! அவ்விதிவிலக்குகள் பார்ப்பனியத்தை உதறியவர்கள்; எனவே அவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ?முடிவு செய்துவிட்டு நியாயங்களைத் தேடிக் கற்பிதம் செய்ய அறிவு ஜீவிகளுக்குச் சொல்லியா தர வேண்டும் ? பெரியார் வேறு எந்த சாதிக்காரர்களையும் விமர்சிக்கவில்லையே !

              மேற்கூறியது போலவே திராவிட இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகள், "நாங்கள் இந்திய எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம்" என்பதுவும். நீங்கள் வேறு எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே ! ஆனால் ராஜஸ்தானி, போஜ்புரி, மைதிலி, அவந்தி என்று எத்தனையோ மொழிகளைத் தின்று செரித்து விட்டு, அடுத்து மராத்தி, ஒரியா, பெங்காலி என்று காவு கொள்ளத் துடிக்கும் இந்தியை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும் ?

            நமது பம்மாத்து ஜோடிகளில் அடுத்து வருபவை காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும். தமிழ்நாட்டில் (தமிழகத்தில் என்று நம்மைப் பேச விடாமல், எழுத விடாமல் செய்த ஒரு கிராதகனை என்னவென்று சொல்வது !) இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்த அறுபதுகளில் ஒன்றிய அரசான காங்கிரஸ் பணிந்தது. "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் திகழும்" என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவாதம் அளித்ததன் பேரிலேயே போராட்டத் தீ அணைந்தது. இடதுசாரிகள் தங்களது அகில இந்திய மாநாடுகளில் மொழி பற்றிய விவாதங்களில், 'தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழி, மற்றபடி இந்தியே இணைப்பு மொழி' என்ற நிலைப்பாடு கொள்வது வழக்கம். "மக்கள் விரும்பும் வரை" என்பதன் பொருள் "நாங்கள் விரும்பவில்லை; என்றாவது ஒரு நாள் நீங்கள் ஏற்பீர்கள். அதுவரை நாங்கள் அடக்கி வாசிப்போம்" என்பதே !. இது ஒரு சூளுரை அல்லது கெக்கலிப்பு. தேசியம் எனும் நீரோடையில் கரைந்து போன கட்சிகளுக்கு இந்தப் பிரச்சினை எப்போதும் உண்டு. அந்நீரோடையில் மூழ்காமல் நீந்தக் கற்றுக் கொண்ட எங்களுக்கு என்ன பிரச்சினை ? காங்கிரஸ் தேசியத்தில் கரைந்தது என்றால், இடதுசாரிகள் ஒரு படி மேலே போய் உலகவியத்தில் கரைந்தவர்கள். நேற்றைய சோவியத் யூனியனில் பெரும்பான்மையின ரஷ்ய மொழியின் தாக்குதலினால் பல சிறுபான்மையின மொழிகள் தொலைந்து போனதை லாவகமாகக் கடந்து வந்தவர்கள் ஆயிற்றே ! அது நமக்குத் தான் ரணம்; வர்க்கப் போராட்டத்தில் அவர்களுக்கு அதெல்லாம் சாதா'ரணம்' தோழர்  !தமிழ்நாட்டில் அன்றைக்குப் போராடிய மக்களிடம் காங்கிரசின் சமரசம் என்பது "உங்களுக்கு இனி இந்தி கிடையாது" என்பதாகத்தானே இருக்க முடியும் ? "நீ செத்த பின்பு பார்த்துக் கொள்கிறேன்" என்பது சமரசமா ? மும்மொழித் திட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு விலக்களிக்கப்பட வேண்டும் என்பதுதானே இடதுசாரிகளின் மண்ணுக்கேற்ற மார்க்சியமாய் அமையும் ? அப்படி விலக்கு அளிக்கப்பட்டாலும் பாஜக அடாவடித்தனமாய் ஜம்மு - காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதைப் போல பின்னர் வரும் அரசுகள் நடந்து கொள்ளா என்பதற்கு உத்திரவாதம் இல்லைதான். ஆனால் சொல்லும்போதே 'தற்காலிகமாக' என்று பொருள்படச் சொல்வது ஒரு பம்மாத்து வேலை. இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராகத்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று பொருள்.

               இப்போது ஒன்றியத்தில் உள்ள பாசிச பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழித் திட்டத்தை முன்வைத்து விட்டு, "மும்மொழித் திட்டம் என்றுதானே சொன்னோம் ? இந்தி படி என்று எங்கே சொன்னோம் ?" என்று சொல்வதுதான் உலக மகா பம்மாத்து. ஒரு திரைப்படத்தில் வருவது போல, "நீ எப்படியெல்லாம் டைப் டைப்பா முழியை மாத்துவே !" என்று எங்களுக்குத் தெரியாதா ? நான் கேரளாவில் வேலை கிடைத்துச் சென்றால், தேவை அடிப்படையில் அப்போது மலையாளம் தெரிந்து கொள்வேன். அதுவரை நான் என் மொழியையும், வெளியுலக இணைப்பு மற்றும் கணினி பயன்பாட்டிற்காக நமது அடிமை வரலாறு நமக்களித்த வரமான ஆங்கிலத்தையும் படிப்பேன். நீ உன் மொழியையும் ஆங்கிலத்தையும் படி. அப்போது மொழியில் கூட சமநீதி, சமூக நீதி எல்லாம் உருவாகுமே !

            எனவே உலகீரே ! மக்கள் நலனுக்காக பம்மாத்து அரசியல் செய்ய வேண்டுமென்றால், அறிஞர் அண்ணா போன்றோரிடம் படித்துவிட்டு வாருங்கள். அப்புறம் பேசுவோம்.

பின் குறிப்பு : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்",  "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பவற்றிற்கு மாற்றுச் சிந்தனையை  ச.தமிழ்ச்செல்வன், தொ.பரமசிவன் ஆகியோரிடம் வாசித்த நினைவு. பழம் பாடல்களின் அவ்வரிகள் இன்று தமிழனின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை அவர்கள் மறுதலிக்கவில்லை. எனினும் அவர்கள் மாற்றுச் சிந்தனையைப் பதிவிடாமலும் விடவில்லை. அந்த அடிப்படையில் அக்காலச் சமூக, அரசியல் சூழல் கருதி மக்கள் நலனுக்காக திருமூலர், கணியன் பூங்குன்றனார் ஆகியோரின் பம்மாத்தாக அவ்வரிகளைப் பார்க்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்பார்வை நம் கற்பனையாகவே இருக்கலாம். பல நேரங்களில் கற்பனையும் ரசனைக்குரியதுதானே !

           பேரரசுகள் மருத நிலங்களைச் சுற்றியே தோன்றியிருக்கும். நிலவுடமைச் சமூகங்களும் அங்கேதான் உருவாகி அமைந்திருக்க முடியும். அவர்களுக்கான உழைக்கும் வர்க்கத்தினர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தே வந்திருப்பர் அல்லது கொண்டு வரப்பட்டிருப்பர். தன் நிலத்தில் தன் சாமியை விட்டு வந்திருப்பவன் கொண்ட ஏக்கம் தீர, "இங்குள்ள சாமியும் உன் சாமிதானய்யா" என்று அவனை ஆற்றுப்படுத்துவதே "ஒன்றே குலம் ஒருவனே தேவ"னாய் முகிழ்த்திருக்கலாம். அன்றைய தேவைக்கேற்ப, பன்முகத்தன்மையை உடைத்து ஓர்மையை உருவாக்கும் பம்மாத்தாக (அன்றைய பாசிசம் எனக் கொள்ளலாமா ?") இதனைப் பார்க்கலாமோ ! மேலும் அவனது நிலத்தில் சாமியின் அருகிலிருந்து பிடி மண் எடுத்து வந்து அவன் புலம்பெயர்ந்த இடத்தில் அதே சாமியை உருவாக்கும் வழக்கம் அப்போது உருவாகியிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் வந்த இடத்துடன் அவன் மனம் ஒன்றியிருக்கச் செய்ய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" !

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

3 months ago

15 வருடங்களின் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிரான புதிய உத்தி

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

கொலைகளுக்கான நீதி் விசாரணையைவிடவும் புலிகளுக்கு எதிரான போருக்கு முக்கியத்துவம் வழங்கிய அநுர

பதிப்பு: 2025 மார்ச் 17 18:29

புலம்: வவுனியா, ஈழம்

புதுப்பிப்பு: மார்ச் 17 22:53

main photomain photomain photo

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பல காரண - காரியங்கள் உண்டு. இதனை மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பட்டலந்த வதை முகாமுடன் இருந்த தொடர்பு. இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயகவாதி எனவும் இனப் பிரச்சினைக்கு அவரால்தான் தீர்வை முன்வைக்க முடியும் என்றும் நம்புகின்ற மற்றும் அவருக்காக பிரச்சாரம் செய்கின்ற தமிழர்களின் மன நிலை பற்றியது.
 

2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் - ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்

மூன்றாவது, 1994 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை சந்திரிகாவுக்கும் 2005 இல் இருந்து 2009 வரை மகிந்தவுக்கும் ஆதரவு வழங்கி தேன்நிலவை அனுபவித்த காலத்தில் இந்த 'பட்டலந்த ' வதை முகாம் பற்றிய அறிக்கையை ஜேவிபி ஏன் கோரவில்லை என்ற சந்தேகங்கள்.

இதில் முதலாவது காரணத்தை நோக்கினால்,

1988- 89 ஆண்டுகளில் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் அமைச்சராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக ரஞ்சன் விஜேரட்ன இருந்தார். 'பட்டலந்த' வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ. கருணாரத்ன அப்போது முகாமில் நடந்த ஈவிரக்கமற்ற கொலைகள் பற்றி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

குறிப்பாக சட்டத்தரணி விஜயதாஸ லியனாரச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை பற்றி அவர் அந்த நேர்காணலில் விபரித்துள்ளார்.

சட்டத்தரணி விஜயதாச குற்றுயிராக இருந்த நிலையில் முகாமுக்கு ஒரு வாகனத்தில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும், ரணில் விக்கிரமசிங்கவும் வந்து சென்றதாக அவர் கூறுகிறார்.

ஆகவே, இப் படுகொலைகளுக்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி காரணம் என்பதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பு இருந்தது என்பதும் வெளிப்படையான ஒன்று. அதுவும் ரணிலின் இச் செயற்பாடுகள் பற்றி கடந்த 30 வருடங்களில் நாடாளுமன்றத்தில் சிங்கள உறுப்பினர்கள் பலரும் ஆதாரங்களுடன் சுட்டியிருக்கின்றனர். 1990 களில் நாடாளுமன்றத்தில் 'பட்டலந்த' என்ற பட்டப் பெயரும் ரணிலுக்கு இருந்தது.

இப் பின்னணியில் இரண்டாவது காரணத்தை நோக்கினால்,

இந்த ரணில் விக்கிரமசிங்கவை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவிட்டதாகவும், இனப்பிரச்சினைக்குரிய தீர்வை ரணில்தான் வழங்கக்கூடியவர் எனவும், முற்போக்குத் தமிழர்கள் பலரும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மாற்றுக் கருத்தாளர்கள் எனப்படுவோரும் திட்டித் தீர்த்து ரணிலை புனிதராக்கினர்.

ரணில் 2002 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சில் புலிகளுக்கு எதிராக சர்வதேச அரங்கில் ரணில் மேற்கொண்ட இரகசிய காய்நகர்த்தல்களை அறிந்துகொண்ட பின்புலத்தில்தான் ரணிலை 2005 இல் புலிகள் ஜனாதிபதியாக்க விரும்பியிருக்கவில்லை என்பது நிதர்சனம்.

இதன் காரண காரியத்தோடு தான் ரணில் ஒரு 'நரி' என 2006 ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கம் லண்டனில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

1990 களில் நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு 'பட்டலந்த' என்று பட்டப் பெயர் வைத்திருந்த சிங்கள உறுப்பினர்கள் பலரும் 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் ரணிலை நரி என்றும் அவ்வப்போது உச்சரித்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள்தான் ரணில் ஒரு நரி என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினர்.

அதேநேரம், 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நல்லாட்சி என்றும் ரணில்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வழங்கும் நாயகன் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் தம்பட்டம் அடித்த காலமும் உண்டு.

இந்த வரலாற்றோடு மேற்படி மூன்றாவது காரணத்தைச் சற்றுப் பின்னோக்கி ஆராய்வோம்.

17 வருடங்களின் பின்னர் 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், 'பட்டலந்த ' வதை முகாம் மாத்திரமல்ல, 'சூரியவெ' படுகொலை உள்ளிட்ட ஜேவிபிக்கு எதிரான பல கொலைகளை விசாரணை நடத்துவதாக உறுதியளித்திருந்தது.

சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது

போரை நிறுத்தி புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தப்படும் என்றும் அப்போது சந்திரிகா மார் தட்டியிருந்தார். 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த சந்திரிகா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நடந்த கொலைகள், அட்டூழியங்கள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாகக் காண்பித்தார்.

தோ்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்ற சந்திரிகா பின்னர் பிரதமராகவும் சில மாதங்களில் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். அதாவது, முதன் முறையாக அரசியலில் ஈடுபட்டு 18 மாதங்களில் மேல் மாகாண சபை முதலமைச்சர், பின்னர் பிரதமர் அதன் பின்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும் பதவியேற்றார்.

அதன்போது ஜேவிபி சந்திரிகாவுக்கு ஆதரவு கொடுத்தது. ஜேவிபியும் 1994 இல் முதன் முறையாக ஜனநாயக வழியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிஹால் கலப்பத்தி சந்திரிகா அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்திருந்தார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்றும் சந்திரிகாவுக்கு அவர் நிபந்தனை விதித்திருந்தார்.

அதேநேரம், தேர்தல் பிரச்சாரங்களின் போது உறுதியளித்தபடி புலிகளுடன் சமாதானப் பேச்சையும் சந்திரிகா ஆரம்பித்தார். ஆனாலும், பேச்சுகள் முறிவடைந்து 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. இந்தப் போருக்கு ஜேவிபி முழு ஆதரவு வழங்கியது.

ஆனால், நிஹால் கலப்பத்தி சந்திரிகாவிடம் முன்வைத்த நிபந்தனைகளுக்கு நடந்தது என்ன? பட்டலந்த வதை முகாம் பற்றி மாத்திரமே சந்திரிகா விசாரணை நடத்தினார். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அத்துடன், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படவுமில்லை.

நிஹால் கலப்பத்தி ஆதரவை விலக்கிக் கொண்டார். 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அங்கு பல கொலைகள் நடந்தன. 1996 இல் கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். 600 இற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் - பெண்கள் கொல்லப்பட்டு செம்மனியில் புதைக்கப்பட்டுள்ளதாக கிரிசாந்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பல திட்டமிடப்பட்ட படுகொலைகள் சித்திரவதைகள் நடந்தன. குறிப்பாக மட்டக்களப்பில் குடும்பப் பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் கிரனேட் வீசப்பட்டு நடந்த கோரக் கொலைகள் அன்று சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தன.

ஆனால், சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற இக் கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த வதை முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று ஜேவிபி எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், 'நுவா' எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள - தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது.

இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார். அத்துடன் பிரித்தானியாவில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு இலங்கை வருவதற்கு சந்திரிகா அனுமதியும் வழங்கினார்.

1988 ஆம் ஆண்டு இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற சோமவன்ச அமரசிங்க 2000 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாடு கல்கிசை ஹோட்டேலில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த சோமவன்ச ஐம்பதாயிரம் சிங்கள இளைஞர்களைத் திரட்டி புலிகளுக்கு எதிரான போருக்கு அனுப்புவேன் என்று உறுதியளித்திருந்தார்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் அவர் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று முழங்கியிருந்தார்.. இதனால் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜேவிபி பெற்றது. ஜேவிபியின் ஆதரவுடன் சந்திரிகா நற்சான்றிதழ் என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்திருந்தார். ஆனால், இந்த ஆட்சியில் கூட பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜே.வி.பி சந்திரிகாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இருந்தாலும் இந்த அரசாங்கமும் கவிழ்ந்து 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அக் காலத்தில்தான் நோர்வேயின் சமாதான முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரங்களில் நோர்வேயின் சமாதான முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, பட்டலந்த வதை முகாம் உட்பட தங்களுக்கு எதிராக 1970 களிலும் 1988 -89 ஆம் ஆண்டுகளிலும் இலங்கை இராணுவம் புரிந்த படுகொலைகள் தொடர்பாக பேசாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மாத்திரமே முன்னெடுத்திருந்தது.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், 'நுவா' எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள - தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது. இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார்

இதனால் ஜேவிபிக்கு 16 ஆசனங்கள் கிடைத்தன. ஆனாலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்தது.

சந்திரிகா ஜனாதிபதியாக இருக்க ரணில் பிரதமராக இருந்தார். அரசாங்கம் வேறு கட்சியாகவும் ஜனாதிபதி மற்றொரு கட்சியாகவும் முதன் முதலில் மாறுபட்ட ஆட்சி முறை ஒன்று இலங்கைத்தீவில் உருவானது.

இச் சூழலில்தான் நோர்வேயின் ஏற்பாட்டுடன் சந்திரிகா ஆரம்பித்த சமாதான முயற்சியை ரணில் முழுமைப்படுத்தினார். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஜேவிபி பௌத்த பிக்குமாரின் ஒத்துழைப்புடன் கொழும்பில் தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தது. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்து கொண்டு ஜேவிபிக்கு மறைமுக ஆதரவு வழங்கினார்.

ஜேவிபியின் எதிர்ப்பை காண்பித்து நோர்வேயின் சமாதான முயற்சிகளில் பல இடர்பாடுகளை சந்திரிகா உருவாக்கினார். ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிகாவின் எதிர்ப்புகளை மேற்கோள் காண்பித்து பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை தட்டிக்கழித்தார். அதாவது, தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதை தடுக்க சந்திரிகாவின் எதிர்ப்பை ஒரு உத்தியாகப் பயன்படுத்தினார் ரணில்.

இந்த இழுபறியில் தான் 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது.

இந்த இழுபறி நிலையினால் ரணிலின் அரசாங்கத்தை சந்திரிகா கலைத்தார். இதனால் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. நோர்வேயின் சமாதான முயற்சிக்கு எதிராகவே ஜேவிபியும் சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன.

சந்திரிகாவின் வெற்றிலைச் சின்னத்தில் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் ஜேவிபிக்கு 39 ஆசனங்கள் கிடைத்தன. சந்திரிகா அமைத்த அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

ஆனால், அந்த அரசாங்கத்தில் கூட 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பான அறிக்கை யை ஜேவிபி கோரவில்லை. மாறாக நோர்வேயை சமாதான முயற்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே ஜேவிபியின் ஒரேயொரு இலக்காக இருந்தது.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக் கடுமையாக உழைத்த ஜேவிபி புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த கடும் அழுத்தங்களைக் கொடுத்தது.

ஆக புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கு மாத்திரமே ஜேவிபிக்கு 1994 இல் இருந்து 2009 மே மாதம் வரை இருந்தது என்பது இங்கே கண்கூடு.

எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் இனவாதத்தை மூலதனமாக்கி 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ள ஜேவிபியின் முகத் தோற்றமான தேசிய மக்கள் சக்தி, பட்டலந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்திருக்கிறது.

உண்மையில் பாதிக்கப்பட்ட ஜேவிபி உறுப்பினர்கள் - ஆதரவாளர்கள் மற்றும் சாதாரண சிங்களப் பொதுமக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காவே என்று சிங்கள மக்கள் நம்பலாம். ஆனால் நோக்கம் அதுவல்ல.

இதை மூன்று வகைப்படுத்தலாம்

ஒன்று, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைகளை மடைமாற்றி எண்பது வருட அரசியல் போராட்டத்தை இலங்கைத்தீவின் உள்ளக விவகாரமாக மாற்றுவது.

2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது

இரண்டாவது, இலங்கையின் மூத்த சிங்கள அரசியல்வாதிகள் சிலரையும் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் சிலரையும் தண்டித்தால் போதும் என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு இலங்கை ஒற்றை அரசு என்ற கட்டமைப்பு நியாயமானது நீதியானது என்ற எண்ணப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவது.

மூன்றாவது, ரணில் - சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்காலத்தில் கூட்டுச் சேர்ந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியாக அல்லது புதிய அரசியல் அணியாகச் செயற்படுவதை தடுப்பது.

ஆகவே "மாற்றம்" "சோசலிசம்" என்று மார் தட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜேவிபி, இரண்டு விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும்

ஒன்று - ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக நடந்த 30 வருட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டமை, சித்தரவதை செய்யப்பட்டமை என்பது இன அழிப்பின் வெளிப்பாடு. தமிழர்களின் மரபு அடையாளங்கள், கலாசாரங்கள் கூட 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலிலும் அழிக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது - பட்டலந்த வதை முகாம் உட்பட பல வதை முகாம்களில் ஜேவிபி உறுப்பினா்கள்- ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமை சித்திரவதை செய்யப்பட்டமை என்பது ஒரு இனத்துக்குள் நடந்த கொலைகள்.

அது இன அழிப்பு அல்ல. இக் கொலைகள் சர்வதேசக் குற்றங்கள் என்று இதுவரையும் எந்தவொரு சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கூறவேயில்லை.

ஆனால் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய படு கொலைகள் சர்வதேசக் குற்றங்கள் என்றே ஜெனிவா மனித உரிமைச் சபையின் அறிக்கைகள் கூறியிருக்கின்றன. போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று ஐ.நா அறிக்கைகளிலும், சர்வதேச நீதி விசாரணை அவசியம் என்றும் பல சர்வதேச நாடுகளும் கூட சுட்டிக்காட்டியுமிருக்கின்றன.

இன அழிப்பு என தமிழர்கள் கோரினாலும் இன்னமும் அதனை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் கனடா போன்ற சில சா்வதேச நாடுகள் இன அழிப்பு என்பது பற்றி பரிசீலிக்கிக்கின்றன.

எனவே பட்டலந்த படுகொலைகள் சர்வதேசக் குற்றமா என்பதை ஜேபிவிதான் கூற வேண்டும்.

ஆகவே, மேலும் இரண்டு விடயங்களை ஜேவிபி புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்று - பட்டலந்த வதை முகாம் அறிக்கையை மாத்திரம் நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்து அதனை வெறும் பேசுபொருளாக சித்தரிக்க முயற்சிக்கும் நகர்வு என்பது ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் அரசியல் அநீதி.

இரண்டாவது - பட்டலந்த முகாம் அறிக்கையை உள்ளூராட்சி சபை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தினால், பெரும்பான்மையாக வாக்களித்த சிங்கள மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.

ஆகவே, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பட்டலந்த முகாம் அறிக்கை மாறலாம். இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பலவீனங்களும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் வியூகங்களுக்குள் மாத்திரம் மூழ்கியிருப்பது மிக மிக ஆபத்தானது. புதிய இளம் தலைமுறை இந்த வரலாறுகளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் - ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்.


கூர்மை - koormai.com
No image previewபட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்ப...
போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாள...

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி தேர்தல்களில் பெரிய வெற்றியை பெறுமா?

3 months ago

16 MAR, 2025 | 03:31 PM

image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

"தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்று நிருவாகங்களை அமைக்கும்."  கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13)  யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கிளப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்தொழில், நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் தேசிய மககள் சக்தி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அவர் யாழ்ப்பாணம் தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பிரதேச அமைப்பாளர்களுடன் கூட இருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான ஆள் அமைச்சர் சந்திரசேகர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பதுளை மாவட்டத்தின் பண்டாரவளையை சேர்ந்தவராக இருந்தாலும், சந்திரசேகரிடம் யாழ்ப்பாணத்தில் அரசியல் விவகாரங்களை  யேற்பார்வை செய்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவரே யாழ்ப்பாணம், கிளிநொச்சி நிருவாக  மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார். இந்த இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டமாகும். சந்திரசேகர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல்களில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் குறிப்பாக  ஊடகங்களுடன் பேசும்போது வெற்றியில் நம்பிக்கையை வெளிப்படுத்தவதாக தெரிகிறது. தேர்தல் வெற்றி மீதான நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு  சாசுவதமாக பீறியெழும். அது வழமையாக எதிர்பார்க்கப்படுவதே. நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற இயலாத வேட்பாளர்களும் கூட தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று தம்பட்டம் அடிப்பார்கள். யதார்த்தமாக நோக்கும்போது தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக தாங்கள் வெற்றி பெறுமாட்டார்கள்  என்று எந்த வேட்பாளரும் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் கூட பலர் தங்களுடன் போட்டியிட்டவர்கள் வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அல்லது வாக்குகள் எண்ணும் செயன்முறைகளில் தலையீடு செய்ததாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

இந்த பின்புலத்தில் பார்க்கும்போது, ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சந்திரசேகர் எதிர்வு கூறுவதைப் போன்று உண்மையில் பெரிய வெற்றியை பெறுமா அல்லது அவரது நம்பிக்கை நடைமுறைக்கு ஒத்துவராதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் சந்திரசேகர் இவ்வாறு கூறியிருந்தால், அவர் கேலி செய்யப்பட்டிருப்பார். தேசிய மக்கள் சக்தி போன்ற சிங்கள ஆதிக்கத்திலான ஒரு தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் சகல உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்பது நம்பமுடியாதது.

ஆனால், கடந்த வருடத்தைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நிலைவரத்தை முற்றாக மாற்றிவிட்டது. குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் திருப்பமாக யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான வாக்குகளைப் பெற்றது.  போனஸ்  ஆசனம் ஒன்றுக்கும் அது  உரித்துடையதாக இருந்தது. அதனால் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது. அதற்கு அங்கு 80, 830 ( 24. 85 சதவீதம் ) வாக்குகள் கிடைத்தன. இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ்த் தேசியவாத கட்சிகளை விடவும் தேசிய மக்கள் சக்தி கூடுதல் வாக்குகளைப் பெற்றது. இந்த கட்சிகளுக்கு முறையே  63, 327 ( 19.47 சதவீதம்), 22,513(6.92 சதவீதம் ), 27, 986 (8.60 சதவீதம்)  வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

தேசிய மக்கள் சக்தியின் மூன்று எம்.பி.க்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் கூடுதலான வாக்குகள் கருணானந்தன் இளங்குமரனுக்கே கிடைத்தன. அவருக்கு 32, 102 விருப்பு வாக்குகள் கிடைத்தன. தென்மராட்சி பிராந்தியத்தின்  உசனை சொந்த இடமாகக் கொண்ட  இலங்கை மின்சார சபையின் முன்னாள் ஊழியரான அவர் தற்போது யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் வசிக்கிறார். ஐந்து வருடக்களாக தேசிய மககள் சக்தியின் முழுநேரச் செயற்பாட்டாளராக இருந்துவரும் இளங்குமரன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் பிரதான வேட்பாளராக களமிறங்கினார்.

யாழ்ம்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து இரண்டாவதாக தெரிவான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜாவுக்கு 20, 430 விருப்பு வாக்குகள் கிடைத்தன. முப்பது வருடங்களுக்கும் கூடுதலான காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய அவர் அண்மையில் பிரதி் பணிப்பாளராக ஓய்வு பெற்றார். 

தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினரான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனுக்குை17, 579 விருப்பு வாக்குகள் கிடைத்தன யாழ்ப்பாணத்தில் அவர் நன்கு பெயர்பெற்ற தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ரஜீவன் அண்மைக்காலம் வரை இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக தனது அரசியல் விசுவாசத்தை மாற்றிக்கொண்ட அவர் அநுரா குமாரவுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டார்.

சந்திரசேகர்

WhatsApp_Image_2025-03-16_at_1.22.32_PM.

யாழ்ப்பணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் சிற்பி அதன் மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரேயாவார். அவர் ஜே.வி.பி.யின் மத்தியகுழுவிலும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரான அவர், இந்த தடவை தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு  அநுரா குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் கடற்தொழில் அமைச்சராக இணைத்துக் கொள்ளப்ட்டார்.

ஜே.வி.பி.யின் அமைப்பாளர் என்ற வகையில் சந்திரசேகர்  யாழ்ப்பாணத்தில் பல வருடக்கள் பணியாற்றியிருக்கிறார். தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சி சேவைகள் மற்றும் செல்வாக்குமிக்க யூரியூபர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்ட அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  விவசாயிகள், மீனவர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் போன்ற யாழ்ப்பாணச் சமூகத்தின்  பல பிரிவினரையும் அணிதிரட்டிய அவர்  தேசிய மக்கள் சக்தியின் அணிகளுக்குள்   அவர்களை இணைத்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சந்திரசேகர் பரவலாக்கினார் என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது. அவர்களில் இலட்சிய நோக்குடன் கூடிய சில படித்த இளைஞர்களும் அடங்குவர்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பட்டியலை  அநுராாகுமார, பிமால் இரத்நாயக்க, விஜித ஹேரத் ஆகியோருடன் ஆலோசனை கலந்து சந்திரசேகர் இறுதி செய்தார். முன்னதாக,  2024 செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  அநுரா குமாரவுக்கு சுமார் 27,000 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. ஆனால், பாராளுமன்ற தேர்தலில் அந்த எண்ணிக்கை சுமார் மூன்று மடங்காக அதிகரித்தது.

இந்த வாக்குகள் எங்கிருந்து வந்தன?  தமிழரசு கட்சி,  தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களினால் பெறப்பட்ட வாக்குகளில் காணப்பட்ட வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு இந்த கட்சிகள் சகலதிலும் இருந்தும் புதிய வாக்காளர்களிடம் இருந்தும் வாக்குகள் வந்து சேர்ந்தன என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளில்  ஒரு  கணிசமானவை பெண்களினாலும் இளைஞர்களினாலும் போடப்பட்டவையாகும்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த  மிகவும் கூடுதலான தபால்மூல வாக்குகள் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அதற்கு இருக்கும் ஆதரவை வெளிக்காட்டின. மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தேர்தல் தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்தது. நல்லூர், கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை, உடுப்பிட்டி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும்  பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் ' திசைகாட்டி ' முதலாவதாக வந்தது. ஏனைய கட்சிகளினால் மூன்று தொகுதிகளில் மாத்திரமே வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. ஊர்காவற்துறை (ஈ.பி.டி.பி.), கிளிநொச்சி ( தமிழரசு கட்சி ), சாவகச்சேரி ( சுயேச்சைக்குழு 17) ஆகியவையே அந்த தொகுதிகளாகும்.

அநுரா குமார திசாநாயக்க

WhatsApp_Image_2025-03-16_at_1.22.32_PM_

அநுரா குமார திசாநாயக்க 2024 செப்டெம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தேர்தலில் முதலாவதாக வந்தார், ஆனால் 42.31 சதவீதமான வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. இரண்டாவதாக வந்த சஜித் பிரேமதாசவுக்கு 32.76 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் வெற்றிபெற்ற வேட்பாளரினால் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறமுடியாத சந்தர்ப்பமாக 2024 ஜனாதிபதி தேர்தல் அமைந்தது. அதனால் ஏனைய வாக்காளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கில் எடுக்கப்பட்டது. இதில் அநுரா 55.89 சதவீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானார்.

அநுராவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாடு தடுமாற்றமானதாக இருந்த போதிலும், பிறகு ஒரு அரசியல் அதிசயம் நிகழ்ந்தது. அநுரா தனது கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களை தலைமை தாங்கி முன்னெடுத்தார். ஜனாதிபதியாக அவர் நாடுபூராவும் பயணம் செய்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்காக வாக்குக் கேட்டார். அலை திரும்பியது. நாட்டை ஒரு அநுரா அலை சூழ்ந்து கொண்டது. பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்தது.

அநுரா அலை

தமிழ்த் தேசியவாத கோட்டையான யாழ்ப்பாணம் அநுரா அலையின் கீழ் சென்றது. 25 சதவீதமான வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தின் ஆறு ஆசனங்களில்  மூன்று ஆசனங்கள் கிடைத்தன. தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தியைக் குதூகலிக்க வைத்தன. யாழ்ப்பாண வெற்றி ஒரு மகுடச்சாதனை என்று பல தலைவர்கள் வர்ணித்தனர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக் கிரீடத்தில் யாழ்ப்பாண முடிவுகள் ஒரு அணிகலனாக அமைந்தன. அதை யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியவாதத்தின்  முடிவு என்றும் கூட சில அவதானிகள் எதிர்வு கூறினர்.

இந்த பின்னணியிலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியினால் மகத்தான வெற்றியைப் பெறமுடியும் என்று அமைச்சர் சந்திரசேகர்  அதிவிசேடமான  நம்பிக்கையைக் கொண்டவராக இருக்கிறார். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, மூன்று நகரசபைகள் மற்றும் பதின்மூன்று பிரதேச சபைகள் இருக்கின்றன. எல்லாமாக பதினேழு உள்ளூராட்சி சபைகள். பாராளுமன்ற தேர்தலில்  யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பத்து  தொகுதிகளில் எட்டு தொகுதிகளில்  தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்ததால், உள்ளூராட்சி தேர்தல்களில் ஒரு முற்றுமுழுதான  வெற்றி சாத்தியம் என்று தோன்றலாம்.

தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமான தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் கருத்துக்களின் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்று தெரிகிறது. அதற்கு ஆதரவு பெருகியிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால், யாழ்ப்பாண மக்கள் அதிகாரத்தில் உள்ள கட்சியுடன் சேர்ந்துகொண்டால் அலுவல்களைச் செய்வித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு வாக்களிக்க விரும்புவர். அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் வடக்கிற்கு ஓரளவு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்திருக்கிறது. நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்கும் யாழ்ப்பாண தமிழர்கள் தேசிய மக்கள் சக்தியின் 'வண்டிலில்' தொங்கிக் கொண்டுபோவது சிறந்தது என்று விளங்கிக்கொள்வர்.

வல்வெட்டித்துறை 

அநுரா அலை யாழ்ப்பாணத்தில் தணிந்துவிடவில்லை என்று தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் உணருகின்றன. அநுரா அண்மையில்  யாழ்ப்பாணத்துக்கு செய்த விஜயம் அதற்கு சான்று என்று அவர்கள் கூறுகிறார்கள். வல்வெட்டித்துறையிலும் மிருசுவிலிலும் இடம்பெற்ற வெற்றிகரமான பொதுக்கூட்டங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சாதாரண மக்கள் அநுரா மீது தன்னியல்பாகவே அன்பை வெளிப்படுத்தினார்கள். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற வெற்றிகரமான கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்று இந்த தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

வல்வெட்டித்துறை விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய தலைலர்களின் சொந்த ஊராகும். ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதத்தின் தொட்டில் என்று வல்வெட்டித்துறை கருதப்படுகிறது. அந்த ஊரில் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றிகரமான ஒரு கூட்டத்தை நடத்தக்கூடியதாக இருந்தமை  உண்மையில் அதன் செல்வாக்கு வளருவதன் ஒரு அறிகுறியாகும் என்று இந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

உறுதிமொழியும் செயற்பாடும்

தேசிய மக்கள் சக்திக்குள் நம்பிக்கை நிலவுகின்ற போதிலும், உள்ளூராட்சி தேர்தல்களில் யாழ்ப்பாண மக்களின் போதுமான  ஆதரவை கட்சியினால் பெறக்கூடியதாக இருக்குமா என்று சந்தேகமும் இருக்கிறது. உறுதிமொழிக்கும் செயற்பாட்டுக்கும் இடையிலான வெளியே இதற்கு பிரதான காரணமாகும். பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது பொதுவில் தேசிய மக்கள் சக்தியும் குறிப்பாக அநுராவும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும், சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை கையாளப்படும், இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் அவற்றுக்கு உரித்தானவர்களிடம் மீண்டும் கையளிக்கப்படும், பாதுகாப்பு படைகளின் முகாம்களும் வீதிச்சோதனை நிலையங்களும் குறைக்கப்படும், உயர்பாதுகாப்பு வலயங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களும் வீதிகளும் குறைக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் அள்ளிவீசப்பட்டன.

இவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வீதிச்சோதனை நிலையங்களும் முகாம்களும் மூடப்பட்டன. ஒரு சில வீதிகள் பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்துவிடப்பட்டன. முக்கியமான எந்த காரியமும் இடம்பெறவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செயதல்,  காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை, காணிகளை திருப்பிக் கையளித்தல் போன்ற விவகாரங்களில் நடைமுறைச் சாத்தியமான முறையில் முன்னோக்கிய செயற்பாடு எதையும் காணக்கூடியதாக இல்லை. அரசியல் கைதிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, நீதியமைச்சர் இப்போது அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறுகிறார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படமாட்டாது என்றும் அரசாங்கம் கூறுகிறது.

இன்னொரு கசப்பான விடயம் அதிகாரப்பரவலாக்கல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பானதாகும். புதிய அரசியலமைப்பு ஒன்று  கொண்டுவரப்படும் வரை மாகாணசபைகள் தொடர்ந்து இருக்கும்  என்று தேசிய மக்கள் சக்தி கூறுகின்றது. ஆனால், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் திட்டம் இப்போது பின்போடப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அதிகாரப்பரவலாக்கம் பற்றியோ அல்லது மாகாணசபைகள் பற்றியோ எந்த குறிப்பும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக அவரால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நம்பவைக்க இயலுமாக இருந்தது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களில் அத்துமீறில் தொடர்ந்து உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இந்திய மீனவர்களின் படகுகள்  வருவதையும் அவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்துவதாக 2024 தேர்தல் பிரசாரங்களின்போது சந்திரசேகரும் அநுரா குமார திசாநாயக்கவும் விசேடமாக வாக்குறுதிகளை வழங்கினார்கள். 

ஆனால்,  இதுவரையில் அர்த்தமுடைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்திய படகுகள் பெரும் எண்ணிக்கையில் வந்து வடபகுதி கடலில் தொடர்ந்து இழுவைப்படகுகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இந்திய மீனவர்களை இடைக்கிடை கைதுசெய்து அவர்களி்ன் படகுகளையும் கைப்பற்றும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்கிறது. ஆனால், சில நாட்களுக்கு பிறகு 'மனிதாபிமான அடிப்படையில்' அந்த மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். 'சட்டவிரோத மீன்பிடியை' முடிவுக்கு கொண்டுவருவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்திய இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி வளர்ந்து வருவது  தேசிய  மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சினையாகலாம். வடபகுதி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பெருமளவானோர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். கரையோரப்பகுதி மக்களிடம் தமிழ் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களன  வாக்குக் கேட்கச் சென்றபோது அவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று அந்த மக்கள் முத்துக்கு நேரே கூறினார்கள்."நாங்கள் இந்த தடவை ஜே.வி.பி.க்கே வாக்களிக்கப் போகிறோம். ஏனென்றால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய ஒரே கட்சி ஜே வி.பி.யே என்று நாம் நம்புகிறோம்"  என்று அவர்கள் கூறினார்கள். அவர்களில் பலர் இப்போது ஏமாற்றமடைந்து விட்டார்கள். "கதையே தவிர காரியம் எதுவும் இல்லாத" ஒரு கட்சியாக ஜே வி.பி. இப்போது பலராலும் நோக்கப்படுகிறது.

இது தவிர, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றல் மற்றும் நடத்தைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் காணப்படுகிறது. யாழ்ப்பாண வெற்றியை தங்களது கிரீடத்தில் உள்ள அணிகலன் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கொக்கரித்துக் கொண்டு திரிகிறார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான மூவரும் செயற்திறன் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவது அபூர்வம். அவ்வாறு அபூர்வமாகப் பேசுகின்ற சந்தர்ப்பங்களிலும் கூட மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி எதையும் கூறுவதை காணமுடியவில்லை. அந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கு வாக்களித்த மக்களால் சந்திக்க  முடியாமல் இருக்கிறது. அவர்களிடம் மக்கள் பிரச்சினை கிளப்பும்போது "இந்த விவகாரத்தில் எமது கட்சியின் தலைமைத்துவம் மாத்திரமே தீர்மானம் எடுக்கமுடியும்" என்று ஒரு பதிலை கைவசம் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் திசைகாட்டிக்கு வாக்களித்த மக்கள்  சலிப்படைந்து போகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. ஆனால்,  இந்த அதிருப்திப் போக்கு ஒரு தொடக்கமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது ஒரு தொடக்கமாக இருந்தால்  வாக்களிப்பில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மக்கள் பெருமளவில் திரும்பவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் இந்த அதிருப்தி ஆழமானதாக வளருமானால்  யாழ்ப்பாணத்தில் உள்ள பதினேழு உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றும் அமைச்சர் சந்திரசேகரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வெறும் பகற்கனவாக மாத்திரமே இருக்க முடியும்.

இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் இருக்கிறது என்ற உண்மையை கருத்தில் எடுத்தே ஆகவேண்டும். செல்வாக்கான இடத்தை தேடியோடும் அருவருப்பான பேர்வழிகளுக்கு அது ஒரு காந்தம் போனறு இருக்கும்.  அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளவே பலரும் விரும்புவர். ஆனால், தேசிய மக்கள் சக்தியில் இணைகின்ற அல்லது  ஆதரிக்கின்ற அந்த சந்தர்ப்பவாத பேர்வழிகளினால் பெருமளவில் வாக்குகளைக் கொண்டுவர முடியுமா என்பது மிகவும் சந்தேகமே.

எண்கணிதக் காரணி

எண்கணிதக் காரணியை கருத்தில் எடுக்கவேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களில் அரைவாசியைக் கைப்பற்றியதன் மூலமாக தேசிய மக்கள் சக்தி மிகச்சிறந்த வெற்றயைப்  பெற்றது. ஆனால், அது பெற்ற வாக்குகள் நான்கில் ஒரு பங்கிற்கு சமமானது மாத்திரமே. அநுரா அலை  தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைக் கவர்ந்தாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் நான்கில் மூன்று பங்கு ஏனைய கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்குமே சென்றது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இந்த கட்சிகளிலும் சுயேச்சைக் குழுக்களிலும் பெரும்பாலானவறனறை "தமிழ்த் தேசியவாத அமைப்புகள்" என்று வகைப்படுத்த முடியும்.

அதனால், தமிழ்த் தேசியவாத கட்சிகளினாலும்  குழுக்களினாலும் ஒரு வகையான ஐக்கியத்தை  ஏற்படுத்தி இரண்டு அல்லது மூன்று கூட்டணிகளாக தேர்தலில் களமிறங்க முடியுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாய்ப்புகள் குறைவானதாகவே இருக்க முடியும். அவ்வாறு நடந்தால் தமிழ்த் தேசாயவாத கட்சிகளும்  கூட்டணிகளும் தேசிய மக்கள் சக்தியை விடவும் உயர்வான செயற்பாட்டை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்களுக்கு இடமிருக்கிறது. தவிரவும், தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் சிங்கள தேசியக் கட்சி ஒன்று முதலாவதாக வந்தது குறித்து குறிப்பிட்ட சில வட்டாரங்கள் கவலைப்படுகின்றன.

தமிழ்த் தேசியவாத கட்சிகள்

அதனால், தமிழ்த் தேசியவாதக்கட்சிகள் திருப்பித்தாக்கி அநுரா அலையைப் பின்வாங்கச் செய்வதற்கான ஒரு சாத்தியப்பாடு இருக்கிறது. இது தமிழ்த் தேசாயவாதக் கட்சிகளினால் எந்தளவு ஐக்கியத்தைச் சாதிக்கக்கூடியதாக இருக்கும் என்பதிலேயே தங்கியிருக்கிறது. பல்வேறு கூட்டங்களும்  கலந்துரையாடல்களும் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், இதுவரையில் அவற்றினால் பயன் கிட்டவில்லை. ஐக்கியம் சாத்தியமாகாமல் போனாலும் கூட, தேர்தல் பிரசாரங்களின்போது தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் ஒன்றை ஒன்று தாக்குவதைத் தவிர்த்து தேசிய மக்கள் சக்தியை தனியொரு இலக்காகக் கொண்டு தாக்குவதற்கான ஏற்பாடொன்றைச் செய்துகொள்ள முடியும்.

மேலும், தமிழ்த் தேசியவாத கட்சிகள் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டுமானால் புதிய, நடைமுறைச் சாத்தியமானதும் கற்பனைத் திறனுடையதுமான கொள்கைகளை அவை வகுக்க வேண்டும். பழைய கொள்கைகளையே தொடர்ந்தும் பின்பற்றிக்  கொண்டிருப்பது எதிர்பார்க்கப்படும் பயன்விளைவுகளைத் தராது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான அடிப்படைக் காரணம் மக்கள் மத்தியில் காணப்பட்ட மாற்றுத்துக்கான அவாவேயாகும் என்பதை  நினைவிற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க வேண்டுமானால் இந்த முதன்மையான காரணியை கருத்தூன்றிக் கவனத்துக்கு எடுக்கவேண்டும். தங்களது தற்போதைய கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளினால் தேசிய மக்கள் சக்தியிடமிருந்து வாக்காளர்களை கவரக்கூடியதாக இருக்குமா என்பதை தமிழ்த் தேசியவாத கட்சிகள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டும்.

உள்ளூராட்சி தேர்தல்முறை 

உள்ளூராட்சி சபைகளுக்கென்று தேர்தல் முறையொன்று இருக்கிறது. 60 சதவீதமான ஆசனங்கள் வட்டாரங்கள் மூலமாகவும் 40 சதவீதமான ஆசனங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலமும் தெரிவு செய்யப்படுவதே அந்த முறையாகும். இந்த தேர்தல் முறையின் விளைவாக 2018  பெப்ரவரி  தேர்தல்களுக்கு பிறகு அரசியல் கட்சிகளினால் உள்ளூராட்சி சபைகளில் ஒரு தெளிவான பெரும்பான்மையைப் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அது 2018 ஆம் ஆண்டில் போட்டியிட்ட  48 உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளில் மாத்திரமே பெரும்பான்மைப் பலத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. 

அதனால் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபை ஒன்றில் கூடுதலான வாக்குகளைப் பெற்றாலும் தெளிவான பெரும்பானமைப் பலத்தை பெறமுடியாத சூழ்நிலை தோன்றுவதற்கான சகல சாத்தியப்பாடுகளும் இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்டக் கூடியதாக இருக்கும்.

https://www.virakesari.lk/article/209374

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —

3 months 1 week ago

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —

March 17, 2025

புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ்  அண்மைக் காலத்தில்  எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற்றின் இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு  ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் ; இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க’ என்று  தலைப்பு. 

இத்தகையதொரு நூல் வெளிவரப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்துகொண்ட — ஜெயராஜின் எழுத்துக்களை பற்றி நன்கு தெரிந்த அரசியல் ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் அவர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் குறித்து  மார்க்சியப் பார்வையில் வர்க்க அடிப்படையிலான ஆய்வு ஒன்றைச் செய்து  எழுதியிருக்கிறாரா என்று பதிப்பாளர்களிடம் வினவினார்கள். கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9/3) மாலை  நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் அந்த கேள்வி எழுந்தது. குறிப்பாக, அங்கு உரையாற்றிய சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம் அந்த விடயம் குறித்து ஒரு வகையான விமர்சன அடிப்படையில்  கருத்து வெளியிட்டார்.

திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்ததையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்ததையும் அரசியல் அதிகாரத்தின் ஒரு வர்க்க மாற்றமாக  கருதமுடியாது என்று அவர் கூறினார். தன்னை ஒரு  இடதுசாரி என்று  அடையாளப்படுத்திக்கொண்டு உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு  வந்திருப்பதை இலங்கையில் முதலாளி வர்க்கத்தை தோற்கடித்து தொளிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதாக வியாக்கியானம் செய்தலாகாது என்று கூறிவைக்கவே விரும்பினார் என்று தெரிகிறது. நூலின் தலைப்பே இந்த குழப்ப நிலைக்கு காரணமாகும். 

 ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்’  என்ற தலைப்புடன்  நூல் வெளிவரவிருக்கிறது என்று ஜெயராஜுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் தான் அவ்வாறு எந்தவிதமான  வர்க்கக் கண்ணோட்டத்தில்  திசாநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் எழுச்சியை பார்க்கவில்லை என்றும்  அத்தகைய தலைப்பு தன்னை ஒரு அசௌகரியத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடும் என்றும்  கூறினார். ஜெயராயை பொறுத்தவரை ‘அநுரா குமார திசாநாயக்கவின் வாழ்வும் அரசியல் எழுச்சியும்’  என்பதே நூலுக்கு பொருத்தமான தலைப்பு. 

‘அநுரா குமார திசாநாயக்க இலங்கை வானில் ஒரு இடதுசாரி நட்சத்திரம்’ என்ற தலைப்பிலான முதலாவது கட்டுரையில் ஜெயராஜ்  ஜனாதிபதியின் எழுச்சி பற்றிய தனது பார்வையை பின்வருமாறு முன்வைக்கிறார்; 

“அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் (மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள்) அவரை மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ‘இந்திய விரோதி’ என்றும் ‘தமிழர் விரோதி’ என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர். எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி. ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் அவரை ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது சந்தேகமே.

“டொனால்ட் ட்ரம்ப் என்ற பேர்வழி வெள்ளை மாளிகையை அசிங்கப்படுத்துவதற்கு முன்னதாக அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர் ஆபிரகாம் லிங்கனையே சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை  முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப்போர் ஒன்றையே நடத்துமளவுக்கு அவர் சென்றார்.

“லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு’ மரக்கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான ஒரு கதை’ என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே. அவரின் உயர்வையும் கூட ‘மண் வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு வந்த காவியம்’ என்று வர்ணிக்க முடியும்.”

இலங்கையில் இதுகாலவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் ரணசிங்க பிரேமதாசவையும் மைத்திரிபால சிறிசேனவையும் தவிர, மற்றையவர்கள் சகலரும் பாரம்பரியமான அரசியல் அதிகார உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பிரேமதாசவும் சிறிசேனவும் கூட அந்த உயர்வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருக்கும ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூலமாகவே ஜனாதிபதியாக வந்தனர்.  

அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அந்த அதிகார வர்க்கத்தையும் அதைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளையும் சாராத ஒருவரான, அதுவும் ஒரு காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்திய இடதுசாரி கட்சியொன்றின் இன்றைய தலைவரான  திசாநாயக்க ஜனாதிபதியாக வந்ததில் ஒரு தரம்சார்ந்த மாற்றம் (Qualitative Change )  இருக்கிறது. அதை விளங்கிக்கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.  தன்னை ஒரு மார்க்சிய — லெனினியவாதி என்று திசாநாயக்க தற்போது வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்கிறாரோ இல்லையோ அது வேறு விடயம். 

ஆனால், இடதுசாரி இயக்கம் ஒன்றைச் சேர்ந்த —  ஒரு காலத்தில் ஆட்சியதிகாரத்துக்கு மாத்திரமல்ல, அரசியலிலும் கூட மிகவும்  உயர்ந்த இடத்துக்கு வருவது குறித்து நினைத்துப் பார்த்திருக்க  முடியாத ஒரு எளிமையான குடும்பப் பின்புலத்தைக் கொண்ட அவர் நாட்டின் அதியுயர்ந்த பதவிக்கு மக்களால் தெரிவாகக் கூடியதாக இருந்ததை ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்தே ஜெயராஜின் நூலுக்கு அந்த தலைப்பை வெளியீட்டாளர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

திசாநாயக்க ஒரு இடதுசாரிக் கிளர்ச்சி  மூலமாக ஆட்சிக்கு வரவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட  படுமோசமான பொருளாதார நெருக்கடியை அடுத்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத வகையில் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள். ஆரம்பக்கட்டங்களில் அந்த கிளர்ச்சியில் ஒரு அமைதி வழியிலான அரசியல் புரட்சியின் பரிமாணங்கள் தென்பட்டன. தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முதலாக மக்கள் கிளர்ச்சி ஒரு அரசாங்கத்தை தூக்கியெறிந்த முதல் சந்தர்ப்பமாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சி அமைந்தது. 

கடந்த வருடம் ஆகஸ்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவை நாட்டை விட்டு விரட்டிய கிளர்ச்சிக்காரர்களுக்கு இலங்கையின் கிளர்ச்சி நிச்சயமாக  ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,   பங்களாதேஷில் கிளர்ச்சிக்காரர்களின்  பக்கம் நின்ற அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றின் தலைவரான முஹமட் யூனுஸ் இடைக்கால தலைவராக வந்ததைப் போன்று,  கோட்டாபய  நாட்டை விட்டு தப்பியோடிய பிறகு  கிளர்ச்சிக்காரர்கள் ஆட்சிக்கு வரவில்லை. அறகலய கிளர்ச்சியின் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது மக்கள் அவர்களை கருத்தில் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

அறகலய கிளர்சியின் விளைவாக நாட்டு மக்கள் மத்தியில் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கும் அதை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளுக்கும்  எதிராக மக்கள் மத்தியில் வளர்ந்த உணர்வுகளை மிகவும் விவேகமான  முறையில் பயன்படுத்தி திசாநாயக்கவினால் ஜனாதிபதியாகவும் தேசிய மக்கள் சக்தியினால் ஆளும் கட்சியாகவும் வரமுடிந்தது. இதை  தொழிலாளர் வர்க்கம் இடதுசாரி இயக்கம் ஒன்றின் தலைமையில் அதிகாரத்துக்கு வந்திருப்பதாக எவரும்  கூறவில்லை. ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களில் எவருமோ கூட  அவ்வாறு கூறவில்லை. 

இடதுசாரிகளினால் இலங்கையில் ஒருபோதும் அதிகாரத்துக்கு வரமுடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மற்றும்  ஆதரவாளர்களில்  ஒரு  பிரிவினர் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்ததை அடுத்து தங்களுக்குள் திருப்திப் பட்டுக்கொண்டார்கள். 

ஆனால், முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களை விடவும் வேறுபட்ட சமூகப் பின்னணியுடனான அதிகப் பெரும்பான்மையானவர்களைக் கொண்டதாக இன்றைய அரசாங்கம் இருக்கிறது. இதை கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையின் முக்கியமான அரசியல் நிபுணரான  பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மிகவும் தெளிவான முறையில் விளக்கியிருந்தார்.

“இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரா குமார திசாநாயக்க பதவியேற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொடக்கம் ஒன்றை குறித்து நிற்கிறது. அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்களில் ஒரு திடீர் நகர்வை அடையாளப்படுத்துவதாக அந்த தொடக்கம் அமைகிறது. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட — மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வசதிபடைத்த ஒரு சிறிய எண்ணிக்கையான  பிரிவினரிடம் இருந்து அதிகாரத் தளங்கள் உயர் வர்க்கத்தைச் சாராத  சமூக சக்திகளின் கூட்டணி ஒன்றுக்கு நகர்ந்திருக்கிறது. 

“காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரமடைந்த நாளில் இருந்து இலங்கையின் ஜனநாயகம் அரசியல் அதிகாரத்தில் உயர் வர்க்கத்தவர்களின் இடையறாத தொடர்ச்சியை உத்தரவாதம் செய்திருந்தது என்றால், இப்போது அது கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகலை ஏற்படுத்தியிருக்கிறது ;  அது ஜனநாயகத்தினாலும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களினாலும் அவ்வப்போது தோற்றுவிக்கப்படக் கூடிய ஒரு வியத்தகு தருணமாகும்.

“குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அமைதியான — இரத்தம் சிந்தாத அதிகார மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. சுமார் ஏழு தசாப்தங்களாக வசதிபடைத்த சமூக வர்க்கங்களின் பிறப்புரிமை போன்று நிலைத்திருந்த ஊழல்தனமானதும் நாட்பட்டுப் போனதுமான அரசாங்க முறைமை ஒன்றை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கான  வாக்குறுதியுடன் புதிய ஜனாதிபதி தனது மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார். நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் மீதான வர்க்க ஏகபோகம் ஜனநாயகத்தின் ஊடாக பொதுமக்களினாலேயே இப்போது தகர்க்கப்பட்டிருக்கிறது” என்று பேராசிரியர் உயன்கொட எழுதினார்.

‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சி ‘ முறைமை  மாற்றத்தையும்’ புதிய அரசியல் கலாசாரத்தையும் வேண்டி நின்றது. அந்த சுலோகங்களை தனது கையில் எடுத்துக் கொண்டு தேர்தல்களைச் சந்தித்த  ஜனாதாபதி திசாநாயக்கவிடம் ‘மெய்யான மாற்றம் ‘  ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய ‘புதிய தொடக்கம்’  ஒன்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில்  வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தைச் செய்ததன் மூலமாக அந்த புதிய தொடக்கத்தை நோக்கிய  திசையில் முதலாவது அடியை இலங்கை மக்கள் எடுத்துக் கொடுத்தார்கள். 

ஆனால், முறைமை மாற்றம் என்பதையும் புதிய கலாசாரம் என்பதையும்  மக்கள் மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூட எவ்வாறானதாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சந்தேகம் எழக்கூடியதாக கடந்த ஆறு மாதகால அரசியல் மற்றும் ஆட்சிமுறை நிகழ்வுப் போக்குகள் அமைந்திருக்கின்றன. 

இலங்கையில் புதிய அரசியல்  கலாசாரம் என்பது வெறுமனே ஊழல் முறைகேடுகளும்  அதிகார துஷ்பிரயோகமும்  இல்லாத ஆட்சிமுறை என்று மாத்திரம் அர்த்தப்பட்டுவிடாது. சகல சமூகங்களையும் அவலத்துக்கு உட்படுத்திய  மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான அரசியல் இணக்கத் தீர்வொன்றைக்  காணவேண்டிய தேவையை தென்னிலங்கை மக்கள் உணரக்கூடிய சூழ்நிலை ஒன்றை உருவாக்குவதும் அந்த புதிய அரசியல் கலாசாரத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் ஏற்றுக்கொள்கின்ற மனநிலை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துக்கு ஏற்படாத பட்சத்தில் புதிய கலாசாரம் என்பதில் எந்தவிதமான அர்த்தமும் இருக்கப்போவதில்லை. இதை  தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புரிந்துகொண்டதற்கான எந்த அறிகுறியையும் கடந்த ஆறு மாதங்களில் காணமுடியவில்லை. 

பழைய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு காலங்காலமாக சேவை செய்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு பழைய ஒழுங்கை மாற்றுவதை  நோக்கிய செயற்பாடுகளை ஒரு இடதுசாரிக் கட்சி முன்னெடுப்பதில் உள்ள சிரமங்களை ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜே வி.பி.யின் தலைவர்களும் இதுவரையில் விளங்கிக் கொண்டிருப்பார்கள். 

உயர் சமூக வர்க்கங்களைச் சாராத பிரதிநிதிகள் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாற்றத்தை வேண்டி நிற்கும் சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வுகளையும் மதித்துச் செயற்படக்கூடிய ஆட்சியாளர்களாக தங்களால் மாறமுடியும் என்பதை இதுவரையான செயற்பாடுகள் மூலமாக எந்தளவுக்கு நிரூபித்திருக்கிறார்கள் என்ற முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது.

https://arangamnews.com/?p=11905

ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை! - நிலாந்தன்

3 months 1 week ago

ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை!- நிலாந்தன்

adminMarch 16, 2025

ranil-wickremesinghe-al-jazeera.jpg

சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, யாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் உணர்த்துகின்றது. ஐநா கூட்டத்தொடரில்,கடந்த மாதம் 25ஆம் திகதி,தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையில் ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான பன்னாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்திருந்தார். ”சிறீலங்கா பொறுப்புக் கூறலுக்கான நிகழ்ச்சித்திட்டம்”(Sri Lanka accountability project) எனப்படும் அப்பொறிமுறையானது கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செயற்பட்டு வருகின்றது. போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பலவீனமான ஆனால் பன்னாட்டுப் பொறிமுறை அதுவாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பன்னாட்டுப் பொறிமுறையை நிராகரித்து ஒன்பது நாட்களின் பின், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய் மூல அறிக்கை வெளிவந்து நான்கு நாட்களின் பின், ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நிகழ்ச்சி வெளிவந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியும் சிங்களத் தலைவர்கள் யாராயிருந்தாலும் குற்றங்களுக்குப் பொறுப்புக்குகூற மாட்டார்கள் என்பதைத்தான் உலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் மேற்படி காணொளி வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய காணொளி உள்ளடங்களாக ‘சனல் நாலு’ காணொளிகள் இவ்வாறு ஐநா கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே வெளிவந்தனை என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்கவேண்டும். தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்துக்கு மறைமுகமாக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உள்நோக்கங்கள் இதில் உண்டா என்றும் பார்க்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளிலும் இவ்வாறு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் விளைவாக தமிழ்மக்களுக்கு என்ன கிடைத்தது என்பதையும் தொகுத்துப் பார்க்கவேண்டும்.

இனி அந்தக் காணொளிக்குள் நுழைவோம். முதலில்,அந்த நிகழ்ச்சி எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். அது ஒரு நேர்காணல் என்பதைவிடவும் குறுக்கு விசாரணையாகவே பெருமளவுக்கு அமைந்திருந்தது. மஹ்தி ஹசன் நன்கு வீட்டுவேலை செய்துகொண்டு வந்திருந்தார். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். வீட்டுவேலை செய்யாமல் கேள்வி கேட்கப்போகும் ஊடகவியலாளர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது புலம் பெயர்ந்த தமிழர்கள் பலமாக உள்ள ஒரு களம். புலம்பெயர்ந்த தமிழர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் ரணில் அநாயாசமாகப் போய் மாட்டிக் கொண்டார். இனி எந்த ஒரு சிங்களத் தலைவரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் ஒன்றுக்கு பலதடவை யோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி அது. ஒரு விதத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பலத்தையும் அது காட்டியது.

ரணிலைச் சுற்றிவளைக்கும் கேள்விகள். அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மஹ்தி ஹசன் குறுக்கே பாய்ந்து கேள்விகளைக் கேட்கிறார். சில இடங்களில் ரணில் கூறும் பதில்களைப் பொருட்படுத்தாமலேயே கடந்து போகிறார். சில பதில்களுக்கு மறுத்தான்களை அனாயசமாகத் தூக்கிப்போட்டு விட்டுப் போகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதிலும் மஹ்தி ஹசன் ஒரு குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையிலேயே பெருமளவுக்கு நடந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த கவர்ச்சியும் அதுதான். தமிழ்த் தரப்பு அதை கொண்டாடுவதற்கு பிரதான காரணங்களில் அதுவும் ஒன்று.

ஆனால் மஹ்தி ஹசன் எவ்வளவுதான் சுற்றிவளைத்தாலும் ரணில் பெருமளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை என்பதனை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். ரணில் வெகு ‘கூலாக’ பதில் கூறுகிறார். அவருடைய சிறிய தொந்தியில் வழுகும் கழுத்துப்பட்டியை இடைக்கிடை சரிசெய்து நேராக்கியபடி மிகவும் ‘கூலாக’அவர் பதில் கூறுகிறார். ஒரு இடத்தில் மஹ்தி ஹசனைப் பார்த்து “பொறுமையை இழக்காதீர்கள்”என்று சொல்லுகிறார். அதை அவர் மஹ்தி ஹசனுக்குச் சொன்னாரா? அல்லது தனக்குத் தானே சொன்னாரா?

அவர் கூறும் பதில்களில் பல இக்கட்டுரையின் நோக்கு நிலையில், அதாவது தமிழ் நோக்கு நிலையில் மோசமானவை. ஆனால் ரணில் முக்கியமான இடங்களில் மிகவும் கூலாகப் பதில் சொல்லுகிறார். சிரித்துக் கொண்டே தன்னை காந்தியோடு ஒப்பிடுகிறார். சிரித்துக்கொண்டே இலங்கை ஒரு வன்முறை இல்லாத நாடு என்று கூறுகிறார். சிரித்துக்கொண்டே சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார்.

அதே சமயம் அவர் சொன்ன பதில்கள் பலவற்றிலிருந்து உலக சமூகமும் குறிப்பாக ஐநா ஒரு தெளிவான செய்தியைப் பெறக்கூடியதாக இருந்தது. அது என்னவென்றால், சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதுதான்.

2015ஆம் ஆண்டு பொறுப்புக் கூறலுக்கான ஐநாவின் தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியது ரணில் விக்ரமசிங்கதான். நிலைமாறு கால நீதிக்கான அந்த தீர்மானத்துக்கு ரணில்-மைத்திரி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதற்கு முன்னரும் பின்னரும் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்களுக்கு எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவில்லை. மட்டுமல்ல,அந்த தீர்மானங்களுக்கு எதிராகவே காணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தீர்மானம்,அதுவும் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்,அதற்கு இணை அனுசரணை வழங்கிய ஒரே ஒரு தலைவர்,ஒரு பகிரங்க நிகழ்வில் வைத்துப் பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதனை வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால் ஐநாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணைக்குப் பொருள் என்ன?

பான் கி மூன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மஹிந்த விசாரணைக் குழுக்களை உருவாக்கினார். ஆனால் அவை உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. அல்லது அவை கண்டுபிடித்த அற்ப உண்மைகளையும் கூட மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ரணில் அதைவிட ஒருபடி மேலே சென்று ஒரு தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினார். அதுவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் அவரும் அந்தத் தீர்மானத்துக்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஐநாவைப் பேய்க் காட்டுவதற்காகத்தான் அவர் அவ்வாறு இணை அனுசரனை வழங்கினார் என்பதைத்தான் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

ஆனால் அதற்காக அவர் வெட்கப்படவில்லை.என்பதுதான் இங்குள்ள பயங்கரமாகும்.

ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது சிங்கள மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சரி,தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி,ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் சரி,அவர் பொறுப்புக்கூறத் தயாராக இருக்கவில்லை.பொறுப்பற்ற தனமாகப் பதில் சொன்னார்.

இலங்கைத்தீவின் வரலாற்றில் ஒரு முன்னாள் அரசத் தலைவர் அதுபோல எங்கேயும் அவமானப்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ’உன்னுடைய வயதை விட என்னுடைய அரசியல் வாழ்வின் காலம் அதிகமானது’ என்று ரணில் சிரித்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அவ்வளவு அனுபவசாலியான அவர் அதுபோல வேறு எங்கேயும் அவமானப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்திய ஆகப் பிந்திய நிகழ்ச்சி அது. சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்; கொல்லப்பட்ட சிங்கள மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்;முஸ்லிம்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள்;மட்டுமல்ல சிங்களக் கத்தோலிக்கர்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பது அங்கே தெளிவாகத் தெரிந்தது.
எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டு கூலாக அவர் சொன்ன பதில்கள் யாவும், இனஅழிப்புச் செய்தவர்களையும் தமது அரசியல் வெற்றிகளுக்காக முஸ்லிம் மக்களை பலியிட்டவர்களையும் அவர் பாதுகாக்கிறார் இன்று நம்பப் போதுமானவைகளாக இருந்தன. அதாவது குற்றங்களைப் பாதுகாக்கும் குற்ற மயப்பட்ட ஒரு அரசுக் கட்டமைப்புக்கு அவர் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினாரா?

மகா சங்கத்துக்கு விசுவாசமாக அவர் கூறிய பதிலில் தன்னை ஒரு சிங்கள பௌத்தனாகப் பிரகடனப்படுத்துகிறார். அங்கே அவருடைய லிபரல் முகமூடி பாரதூரமாகக் கிழிகிறது. ஆனால் அவர் கூலாகப் பதில் கூறுகிறார்.

இதில் தமிழ் மக்களுக்குப் புதிதாக எதுவும் இல்லை. ஏனென்றால் ரணிலைப் பற்றி ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் மிகப்பலமான ஒரு படிமம் உண்டு. அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்ததை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டுவது அந்த அடிப்படையில்தான். எனவே ரணில் யார் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.

ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ரணிலோடு இணைந்து நல்லாட்சிக் காலகட்டத்தில் அதாவது 2015 இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில், நிலைமாறு கால நீதிக்காக உழைத்த தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கிறார்களே, அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அவர்கள் ரணிலை மட்டும் பாதுகாக்கவில்லை,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித்தையும் பாதுகாத்தார்கள்.சஜித்தும் ரணிலைப்போலதான்.கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில்தான் ஐநா கூட்டத் தொடரும் நடந்தது.அப்பொழுது சஜித் ஐநா தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார்.ரணில் மட்டுமல்ல சஜித்தும் பொறுப்புக்கூறத் தயார் இல்லை. அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டு பொறிமுறைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இது நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடந்த,பொது வேட்பாளருக்கான கடைசிப் பிரச்சார கூட்டத்தில்,மேடையில் வைத்துப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் தமிழ்மக்களின் வாக்குகளை சுமந்திரன் சஜித்துக்கு வாங்கி கொடுத்தார்.தேசத் திரட்சிக்காக,பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரிய நேத்திரனை சுமந்திரனுக்கு விசுவாசமான மத்திய குழு கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது. அதாவது சிங்களத் தலைவர்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயார் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை அவர்களுக்குச் சாய்த்துக் கொடுக்கும் தமிழ்த் தலைவர்களும் தமிழ்மக்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை.

https://globaltamilnews.net/2025/213515/

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்!

3 months 1 week ago

Courtesy: I.V. Mahasenan

கடந்தவாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை அரசியலில் கொதிநிலை விவாதத்தை உருவாக்கி உள்ளது.

குறிப்பாக ரணிலின் சலனம், இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரத்தை பொது வெளியில் தோலுரிப்பதாக அமைந்திருந்தது. மறுதலையாக ரணில் தனது இராஜதந்திர உரையாடலால் இலங்கையை சர்வதேச அரங்கில் பாதுகாத்துள்ளார் என்ற வாதங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது.

எனினும் நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து, ரணிலின் அவசரமான ஊடக சந்திப்பில் புலி, பூச்சாண்டி மற்றும் பௌத்த சங்கங்களிடம் சரணாகதி உரையாடல்கள், தனது சலனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் நேர்காணலில் ஊடகவியலாளரால் முன்வைத்த பட்டலந்த வதைமுகாம் விவாகரம் தென்னிலங்கை அரசியலில் முதன்மையை பெற்றுள்ளது.

ரணிலின் நேர்காணல் 

மாறாக ஈழத்தமிழர்கள் ரணிலின் சலனமான நிலைமைகளை இரசித்ததுடன் கடந்து சென்றுள்ளார்கள். இக்கட்டுரை பட்டலந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுமளவிற்கு, ரணில் விக்ரமசிங்கவின் உரையாடலில் காணப்பட்ட இனப்படுகொலை சாட்சியங்கள் போதிய கவனத்தை பெறாமைக்கான அரசியல் பலவீனங்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

கடந்த மார்ச்-06அன்று அல் ஜசீரா (Al Jazeera) எனும் சர்வதேச ஊடகத்தில் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நேர்காணல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

குறித்த நிகழ்ச்சியில் ரணிலிற்கு வழங்கப்பட்ட அறிமுகத்தை பதிவு செய்வதே, இலங்கை அரசியலில் அவரின் முக்கியத்துவத்தையும், ஈழத்தமிழர் மீதான இலங்கை அரசாங்கங்களின் ஒடுக்குமுறையில் அவரின் சாட்சியத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள இலகுவானதாக அமையும். ‘ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரச நிறுவன ஆதரவாளராகவே பார்க்கப்பட்டுள்ளார்.

ஒருமுறை ஜனாதிபதியாகவும் ஆறு முறை பிரதமராகவும் நிதி, தொழில் அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சராகவும் 1977ஆம் ஆண்டு முதல் இலங்கை அரச நிறுவனத்தின் அனைத்து பதவிகளையும் வகித்துள்ளார்.

இத்தகையதொரு இலங்கை அரச நிறுவன ஆதரவாளர், இலங்கை அரச நிறுவனத்தின் பலவீனங்களை ஏற்றுக்கொள்வது, அதனூடாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை ஏற்றுக் கொள்வதும் உயர்வான வாக்குமூலமாகும். குறித்த நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் ரணில் பதிலளிக்க முடியாத நிலையில் சலனப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் இலங்கையை வன்முறையற்ற நாடாக குறிப்பிட்டிருந்தார்.

உள்நாட்டுப் போர் 

‘ஹிமாலய குன்றிலிருந்து நாம் வன்முறையற்ற ஒரு நாடாகும்’ என்றவாறு குறிப்பிட்டிருந்தார். அதற்கு குறுக்கிட்ட நேர்காணல் செய்பவர், ‘நீங்கள் 26 வருடங்கள் நீடித்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை பற்றி கூறுங்கள்’ என்றவாறு வினா எனுப்பினார். ‘பதில் சொல்லப் போவதில்லை’ என ரணில் மறுதலித்திருந்தார்.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

இவ்வாறே உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், பதில் வழங்க மறுத்திருந்தார். இது வெளிப்படையாக இலங்கை அரசாங்கங்களின் பொறுப்புக்கூறலற்ற தன்மையையே வெளிப்படுத்தியிருந்தது. மேலும் பார்வையாளர் தரப்பிலிருந்து 2009ஆம் இறுதிக்கட்ட போரில் இலங்கை அரச இயந்திரம் வைத்தியசாலைகள் மீது குண்டு வீசியது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆரம்பத்தில் நிராகரித்த போதிலும், பார்வையாளர்களிடம் ஏற்பட்ட கூச்சலை தொடர்ந்து வைத்தியசாலைகள் மீதான தாக்குதலை ரணில் ஏற்றுக்கொண்டார். ‘முள்ளிவாய்க்காலில் மருத்துவமனைகள் குறித்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. மற்ற சில சம்பவங்களை விசாரணை செய்தோம். கொலைகள் நடந்த சில சந்தர்ப்பங்களில் விமானப்படையின் நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், மருத்துவமனைகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று கூற முடியாது. போரின் இறுதிக்கட்டத்தில் சில பிரச்சினைகள் இருந்தன, அதனை மறுக்க மாட்டேன்’ என முன்பின் முரணாக கருத்துரைத்தார். ரணிலின் அல் ஜசீரா நேர்காணல், ஒருவகையில் ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிவிசாரணைகளை நியாயப்படுத்துவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணிலை இனப்படுகொலையின் சாட்சியமாக்கியுள்ளது.

எனினும் இத்தகையதொரு விளைவுசார் அரசியலை ஈழத்தமிழரசியலில் அவதானிக்க முடியவில்லை. சமுக வலைத்தளங்களில் மீம்ஸ்களாவும் (Memes - போன்மி), பதிவுகளாகவும் (Status) தமிழ் இளையோர்களின் ஆதங்கமே உயர்ந்தபட்ச விளைவுகளாக அமைகின்றன. அப்பதிவுகள் கடலலையில் இழுத்தடிக்கப்படும் பொருட்கள் போல் புதிய அலையில் இன்னொரு பொருளை காவிச்சென்று விடுகிறன.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

அரசியல் விளைவுகளை அறுவடை செய்ய வேண்டிய தமிழ் அரசியல் தரப்பின் உரைகளில் ரணிலின் நேர்காணலும் ஈழத்தமிழர்களின் நலன்களும் போதிய உள்ளடக்கத்தை பெறவில்லை. தமிழ் அரசியல்வாதிகளிடையே ரணில் தொடர்பிலான கடந்த கால விசுவாசம் நிலை பெற்றுள்ளதையே உணர முடிகின்றது. தமிழ் அரசியல் தரப்பிடமிருந்து காத்திரமான எதிர்வினைகள் ரணில் நேர்காணலில் வழங்கிய வாக்குமூலத்துக்கு கிடைக்கப்பெறவில்லை.

குறைந்தபட்சம் நேர்காணலில் ரணில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கூறிய கருத்திற்கு கூட அவர்கள் எதிர்வினையாற்றியிருக்கவில்லை.

இதுவொரு வகையில் ரணிலின் கருத்தை ஏற்பதாகவே அமைகிறது. 2022ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியை தெரிவு செய்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவையே ஆதரித்திருந்தது. இரகசிய வாக்கெடுப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பலரும் தமக்கே வாக்களித்ததாக அன்றைய காலப்பகுதியில் ரணில் குறிப்பிட்டிருந்தார். அதே கருத்தை அல் ஜசீரா நேர்காணலிலும் குறிப்பிட்டிருந்தார்.

‘முக்கியமான தமிழ் உறுப்பினர்களில் சிலரும் எனக்கு வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களித்தனர். மற்றவர்கள் எனக்கு வாக்களித்தனர்’ எனத் தெரிவித்திருந்தார். ரணிலின் கருத்து பிழையெனில் உறுப்பினர்கள் நிராகரித்திருக்க வேண்டும். நிராகரிப்பற்ற நிலை ஏற்பதாவே அமைகின்றது.

இத்தகைய உறவின் பின்னணியிலேயே ரணிலின் வாக்குமூலங்களை முன்னிறுத்தி உரையாடி, அவரை நெருக்குவாரத்துக்கு தள்ள தமிழ் கட்சிகள் விரும்பவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இயங்கிய கட்சிகளும் உறுப்பினர்களும், தமிழ்த்தேசியத்துக்கு விசுவாசமாக செயற்படுபவர்களாயின், ரணிலின் நேர்காணல் கருத்துக்கு எதிர்வினையாற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

 ரணில்-மைத்திரி

2015-2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தோடு இதயத்தால் ஒப்பந்தம் மேற்கொண்டு காதல் கொண்டிருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கௌரவ பதவியாகவே காணப்பட்டது. செயற்பாட்டில் அரசாங்க விசுவாசத்தையே வெளிப்படுத்தினார்கள்.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

ரணிலுடன் இணைந்து ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கான கால அவகாசத்துக்கான ஆதரவை வழங்கினார்கள். சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். அவ்வாறே 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் இன்றைய தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர், ‘2005 ஆண்டில் ரணிலின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை அவர்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள்’ என ஆதங்கப்பட்டிருந்தார்.

இத்தகைய செயற்பாடுகளும் உரைகளும் ரணில் மீதான தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நம்பிக்கையையே எடுத்துக்காட்டுகிறது. எனினும் ரணில், நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டு போரின் அழிவுகளுக்காக தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை நிராகரித்திருந்தார்.

இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் ரணிலின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி, கூட்டாக செயற்பட்டமையின் ஏமாற்றத்தையே குறிக்கிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏமாற்றம் என்பது அவர்களின் பின்னால் திரட்டப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஒற்றையாட்சி 

தமிழ் மக்களை ரணிலின் பின்னால் அழைத்து சென்ற தமிழரசு கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் ரணிலின் பொறுப்புக்கூறலற்ற செயலை கண்டிப்பது தார்மீக கடமையாகும். எனினும் அக்கட்சிகளிடமிருந்து அத்தகைய எந்தவொரு எதிர்வினையும் வரவில்லை. இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளும் ரணிலுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

மேலும், தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் தேர்தல் மைய கட்சிகளாகவே உள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரச நிர்வாக கட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு, அவ்வொற்றையாட்சி நிர்வாக கட்டமைப்பில் கதிரைகளை நிரப்புவதை இலக்காக கொண்டே செயற்படுகின்றார்கள். மாறாக தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடும் தேசிய இனமாக, ஓர் இயக்கமாக செயற்படும் மனநிலையில் இல்லை.

சமகாலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தென்னிலங்கை அரசாங்கம் விடுத்துள்ள நிலையில், அதற்கு இழுபட்டு இயங்கும் நிலையிலேயே உள்ளனர். அதற்கான கூட்டுக்களை உருவாக்குவதிலேயே முனைப்பாக உள்ளார்கள். மாறாக ரணிலின் நேரலையில் இனப்படுகொலையின் சாட்சியமாக அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடிய சிந்தனை இல்லை.

சமுகவலைத்தளங்களில் இளையோர்களிடம் உருவாகிய ஆதங்கத்திற்கு கூட தமிழ் அரசியல் கட்சிகள் வினையாற்ற தயாராக இல்லை. இது தமிழ் மக்களிடமிருந்து கட்சிகள் விலகியுள்ளமையை உணர்த்துகின்றது. இவ்விலகிலே பொதுத்தேர்தலின் வீழ்ச்சிக்கு காரணமாகியது.

வீழ்ச்சியிலிருந்து படிப்பினையை கற்காதவர்களாய், அதேநிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை எதிர்கொள்வதும் தமிழ் கட்சிகளின் தோல்வியையே எதிர்வு கூறுகிறது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தேர்தல் அரசியல் பிழையான உத்தியாக கருத முடியாது. எனினும் விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் அரசியல் போராட்டத்தில் தேர்தல் அரசியல் மாத்திரமே உத்தியாக கருத முடியாது. தேர்தல் அரசியல் ஒரு பகுதியே ஆகும். தமிழ் அரசியல் கட்சிகள் அவ்வாறானதொரு போக்குடன் இயங்குவதில்லை.

சர்வதேச விசாரணையை கோரும் ஈழத்தமிழர்களிற்கு, சர்வதேச ஊடகமொன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கான நெருக்கீடு என்பது சாதகமானதாகும். சர்வதேச அரங்கில் வாக்குமூலமாக முன்னிறுத்தக்கூடிய பொறியாக காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழரசியலுடன் சர்வதேச தொடர்பு காணப்படுகின்றதா என்பதை சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தேசிய இனங்கள் சர்வதேச உறவை பேண முடியாதென விலகிட முடியாது. மேற்காசியாவில் குர்துகள் அமெரிக்காவின் ஆதரவை பெற்றுள்ளார்கள்.

பலஸ்தீனிய ஹமாஸ் அணியினர் ஈரான் மற்றும் அதுசார் அணியின் ஆதரவை பெற்றுள்ளார்கள். சர்வதேச உறவு என்பது அணிசேர்க்கையும் அதுசார்ந்த கூட்டு செயற்பாடுகளுமேயாகும். ஈழத்தமிழர்களிற்கு அவ்வாறான, நிலையான சர்வதேச ஆதரவு தளம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டால், தமது வாக்கு பலத்தால் அரசாங்கங்களில் தலையிட்டு, ஈழத்தமிழருக்கு சாதகமான சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ள போதிலும், அவை நிலையான வெளியுறவுக் கொள்கையாக அரச நிகழ்ச்சி நிரலுக்குள் இணைக்க முடியவில்லை.

பட்டலந்த வதைமுகாம்

சர்வதேச அரசியலில் எந்த ஒரு நிலையான ஆதரவையும் உருவாக்காமலேயே, வாய் வீச்சளவில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர், சர்வதேச விசாரணையையும் சர்வதேச நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இது வெறுமனவே அவர்களின் கட்சி அரசியல் நலன் சார்ந்த விடயமாகவே அமைகின்றது. மாறாக தமிழ் மக்களுக்கான தேசிய விடுதலைக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதாக இல்லை.

கிடைக்கும் வாய்ப்புக்களையே தமிழ் கட்சிகள் தொடருவதில்லை. எனினும் தென்னிலங்கை அரசாங்கம் நேர்காணலில் தமக்கு சாதகமானவற்றை தூக்கி, நேர்காணலின் இலக்கை பட்டலந்த விவகாரத்துக்குள் சுருக்கியுள்ளது. தொடர்ந்து 25 வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட பட்டலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை தூசி தட்டப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

தென்னிலங்கை அரசியலில் பூதாகரமான விவாதத்தை உருவாக்கிருந்தது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதுவொருவகையில் நேர்காணலில் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடியை தளர்த்து போகச் செய்யும் தென்னிலங்கை செயற்பாடாகவே அமைகின்றது.

நேர்காணலில் இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் பேசுபொருளாகிய ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் உள்நாட்டு போரின் விளைவுகளுக்கான பொறுப்புக்கூறல் என்பனவே பிரதானமாகியது. அவற்றிற்கு இலங்கை அரசே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. அதனடிப்படையில் இவ்விடயங்கள் மையப் பேசுபொருளாகுவது சமகால அரசாங்கத்திற்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகும். ஆதலாலேயே தென்னிலங்கை அரசாங்கம் தம்மை பாதுகாத்து கொள்ள, நேர்காணலை ரணில் மீது குற்றச்சாட்டை முன்னிறுத்தி பட்டலந்த விவகாரத்துக்குள் மாத்திரம் சுருக்கியுள்ளனர்.

எனினும் இதுவும் நிலையான முடிவை நோக்கி நகரப்போவதில்லை. பட்டலந்த விவகாரத்துக்கான முடிவு, ஈழத்தமிழர்களின் நீதிக்கோரிக்கையை வலுப்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கும். ஆதலால் தென்னிலங்கை அரசாங்கம் அதனை தீர்க்கமான முடிவுக்குள் நகர்த்தப் போவதில்லை என்பதே நிதர்சனம். தமிழ் அரசியல் கட்சிகள் ரணிலுக்கான விசுவாசத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் மக்களுக்கான விசுவாசத்துடன் பட்டலந்த விவகாரத்திற்கான தீர்வை பெற உந்துவது அவசியமானதாகும்.

எனவே, ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவிற்கு வழங்கிய நேர்காணல் சமுக வலைத்தளங்களில் இளையோர்களால் கொண்டாடப்பட்ட அளவிற்கு, தமிழ் அரசியல் கட்சிகளால் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. சர்வதேச விசாரணை எனும் கோரிக்கையை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், சர்வதேச ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு சார்பாக கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தை பலப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இது ஈழத்தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது. தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியலை செய்யாது, தென்னிலங்கை எஜமான்களை குளிர்விப்பதாகவும் - தமது அதிகார நலன்களுக்காவும் - குடும்ப கௌரவத்திற்காகவும் அரசியல் செய்யின், ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாகவே அமையக்கூடியதாகும்.  

https://tamilwin.com/

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

3 months 1 week ago

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

CTC-BANNER-960x564.png

கனடியத் தமிழரின்  குரல் எனத் தம்மை நியாயப்படுத்துவதில், கனடியத் தமிழர் பேரவை (பேரவை / CTC) தனது இருப்பின் பெரும்பகுதியைச் செலவழித்து வருகிறது.  ஆனால் அதன் நடவடிக்கைகள் அதற்கு முரணாக அமைந்துள்ளன என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எழுகிறது.

பின்வரும் விடயங்களில் CTC குறித்த கேள்விகள் உள்ளன:

1) தமிழர் உரிமைகளுக்காகப் போராடுவதாகப் பொது வெளியில் கூறிக் கொண்டாலும், முக்கிய விடயங்களில் மௌனம் காக்கும் தனது நிலைப்பாட்டை CTC மாற்றவில்லை,

2) தமிழர்களின் துயரங்களுக்குக் காரணமான இலங்கை அரசாங்கத்துடன் பேரவை தொடர்ந்து நெருக்கமான தொடர்பைப்  பேணி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது,

3) தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரும் பொறிமுறைகளில் இருந்து CTC பின் தங்கியுள்ளது.

இந்த முரண்பாடுகள் கனடிய, தாயக, உலகத் தமிழர் சமூகத்தினால் கவனிக்கப்படாமல் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கனடிய தமிழர்களின் அபிலாஷைகளைப்  பிரதிபலிக்கத்   தவறிய குற்றச்சாட்டுகளையும் CTC நீண்ட காலமாக தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

புதிய நெருக்கடி நிலை

CTC இதுவரை காலமும் இல்லாத கடுமையான நெருக்கடி நிலை ஒன்றை இப்போது எதிர்கொள்கிறது. பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றின் அடிப்படையில் இருந்து சமீபத்திய சர்ச்சை உருவாகிறது.

raj-2-219x300.jpg

பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம்

கனடா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மின்னஞ்சல், தமிழ் இனப்படுகொலை, தமிழ் மரபுத் திங்கள்  அங்கீகாரங்களையும், இவற்றுக்காக முன்னின்று செயற்பட்ட கனடியத்  தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ்ச் சமூகச்  செயற்பாட்டாளர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.  இந்த மின்னஞ்சல் பிரதி ஒன்றை “தேசியம்” பெற்றுள்ளது.

(இந்த மின்னஞ்சல் வாசகர்களின் பார்வைக்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளது)

Strengthening Canada Through Unity and Understanding

குறிப்பிட்ட மின்னஞ்சலின் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துக்கள் என ராஜ் தவரட்ணசிங்கம் வலியுறுத்துகின்றார்.  ஆனால், தனது நீண்ட பதவிக் காலத்தில்  பேரவைக்குள் ஒரு முக்கிய முடிவெடுக்கும் சக்தியாகச்  செயற்பட்ட பின்னணியில், அவர் தனது கருத்தையும் பேரவையின் கருத்தையும் வேறுபடுத்த முனைவது ஓர் அப்பட்டமான முரணாகும்.

மின்னஞ்சல் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துகள் என ராஜ் தவரட்ணசிங்கம் கூறுவது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்?  இந்தக்  கருத்துகள் எப்போதாவது பேரவையின் சொந்த நிலைப்பாட்டிலிருந்து உண்மையிலேயே வேறுபட்டு இருந்தனவா?

தமிழர்களின் முக்கிய அரசியல் விடயங்களில் தீர்க்கமாகச் செயற்படத் தவறியதற்காக பேரவை நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.  தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை  CTC பல ஆண்டுகளாக மறுத்துவந்தது . இறுதியாக May 2024 இல், ஒரு சுருக்கமான, அடையாள அறிக்கை மூலம் மாத்திரமே தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்வதாக முதல் தடவையாக CTC தெரிவித்தது. இது மிகவும் தாமதமானது எனப்  பலராலும் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

பேரவை, ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பு குறித்தும் கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. கனடாவுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் நிகழ்வுகளில் பங்கேற்பது, தமது நிகழ்வுகளுக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகளை விருந்தினர்களாக அழைப்பது, தமிழ் இனப்படுகொலை விடயத்தில் அதன் மௌனம், கனடிய உள் விவகாரங்களில் இலங்கையின், வெளிநாடுகளின் தலையீடு (Foreign interference) குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியது உட்பட்ட விடயங்களில் பேரவையின் நகர்வுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் , பேரவையின் மூத்த பிரமுகர்களுள் ஒருவரான ராஜ் தவரட்ணசிங்கத்தின் தமிழர் விரோத நிலைப்பாட்டின் வெளிப்பாடு, தமிழர் மத்தியில் நீண்ட காலமாக இருந்த கவலைகளையும் விமர்சனங்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அபாயகரமானதாக்கியுள்ளது.

பல ஆண்டுகளாக, பேரவை தமிழ் கனடியருக்கான பெரும் சக்தியாக தன்னை சுயபிரகடனம் செய்துவந்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய விடயங்களில் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்க அது மறுத்து வருகிறது. தமிழர்களின் துயரங்களுக்குக்  காரணமானவர்களைக் கேள்விக்குட்படுத்தவும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும் அது தவறியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகத்திடமிருந்து பேரவையை, தூர விலக்கியது மட்டுமல்லாமல், அதன் தலைமை மீது பரவலான அவ நம்பிக்கைக்கும் வழிவகுத்தது.

இமாலயப் பிரகடம் – மகிந்த ராஜபக்ச சந்திப்பு – பதவி விலகல்

இவற்றின் வெளிப்படையானதும் தெளிவானதுமான  உதாரணங்களுள் ஒன்று April 27 2023 அன்று நிகழ்ந்தது. உலகத் தமிழர் பேரவையின் (GTF) தலைமையிலான இமாலயப் பிரகடனத்தில் ராஜ் தவரட்ணசிங்கம் GTF-இன் அங்கத்துவ அமைப்பாக விளங்கிய பேரவையின் சார்பாக ஒப்பமிட்டார். இந்தப் பிரகடனம் தமிழர்களின் அரசியல் ஈடுபாட்டை நோக்கிய ஒரு முதல் படியாக பேரவையினால் நியாயப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

Himalaya Declaration, with signatories

ஆனால் அது கனடாவிலும் தாயகத்திலும் ஏனைய நாடுகளிலும் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது.

இந்தப் பிரகடனம் குறித்து ஈழத் தமிழருடன் பேரவை கலந்தாலோசிக்கவில்லை. தவிரவும், தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனப்படுகொலை போன்ற விடயங்களில் மௌனம் காத்துள்ளது.

சில மாதங்களின் பின்னர், ராஜ் தவரட்ணசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நிற்கும் ஒளிப்படம் ஒன்று வெளியானது. பேரவை இந்த ஒளிப்படத்தை, “பெருமையுடன்” தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது. மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டவர்.

Himalaya-Declaration-and-CTC.jpeg

வெளியான ராஜ் தவரட்ணசிங்கம் – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒளிப்படம்

மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச உட்பட நான்கு பேர் கனடாவினுள்  நுழைய கனடிய அரசாங்கம் January 2023-இல் தடை விதித்தது. இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தின் போது இவர்கள் இருவரும் முறையே ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். மேலும் கனடாவில் உள்ள இவர்களின் சொத்துகள், நிதிச் செயற்பாடுகள் முடக்கப்படும் எனவும் கனடிய அரசாங்கம் அறிவித்தது. இவர்கள் தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக இந்த முடிவு குறித்து கனடிய அரசாங்கம் அறிவித்தது.

இந்தத் தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவும், அவரோடு புகைப்படம் எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஸ்ரீலங்காவின் அரச தலைமையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆதரவாக, நீதியை ஓரங்கட்டும் ஓர் இராஜதந்திரச் சூழ்ச்சியாகத் தோன்றிய பேரவையின் இந்த முயற்சியைக் கனடாவிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழர் கண்டித்தனர்.

தனது தவற்றை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, CTC ஆரம்பத்தில் தன்னை நியாயப்படுத்தியது. எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் கூட, இராஜதந்திர ஈடுபாட்டின் அவசியம் இது என தனது தவற்றுக்கு பேரவை நியாயம் கற்பித்தது. தொடர்ச்சியான நீண்ட சமூக அழுத்தத்தின்  பின்னர், உலகத் தமிழர் பேரவையில் இருந்து CTC தன்னை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.

Himalaya-Declaration-withrowal-1024x374.

இவற்றின் பின்னணியில் ராஜ் தவரட்ணசிங்கம் தனது ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் அவரது பதவி விலகல் பொது வெளியில் இருந்த மையக் கேள்விக்கு எந்த வகையிலும் பதிலளிக்கவில்லை.

இது பேரவையின் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த முயற்சிக்கும் ஓர் உண்மையான நகர்வா? அல்லது பேரவையை மேலும் விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையா?

தமிழர் தெருவிழாவும் சமூகத்தின் எதிர்வினையும்

தமிழ் அரசியல் விடயங்களை CTC கையாண்ட விதம் மற்றொரு சவாலை August 2024 இல் எதிர்கொண்டது.

தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் அமைப்பதைத் தடுக்குமாறு Brampton நகர முதல்வர் Patrick Brown-க்கு Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo, May 3, 2024-இல்  கடிதம் ஒன்றை அனுப்பினார். கனடிய அரசாங்கம் இதற்கு உரிய முறையில் பதிலளித்தது. கனடாவின் உள்  விவகாரங்களில் வெளிநாடுகளின்  தலையீட்டுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்த கனடியப் பிரதமர் Justin Trudeau இதன் தீவிரத்தை ஒப்புக்கொண்டார். கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். இந்த நடவடிக்கையை வெளிநாட்டுத் தலையீடு எனக் கண்டித்த Patrick Brown, கனடியத்  தமிழர் பக்கம் உறுதியாக நின்றார்.

இலங்கை அரசாங்கத்துடன் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டுகளை பேரவை சந்தேகத்துக்கு  இடமின்றி நிராகரித்தது. ஆனால் பேரவையுடன் இணைந்து இமாலயப் பிரகடன வேலைத் திட்டங்கள் உட்பட  நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறுவதாக இலங்கைத் தூதரகம் தனது கடிதத்தில் உறுதிப்படுத்தியது. தூதரகத்தின் இந்தக் கூற்றை CTC கண்டிக்கவும் இல்லை – நிராகரிக்கவும் இல்லை. ‘தேசியம்’ பெற்றுக்கொண்ட  இந்தக்  கடிதத்தின் பிரதி இங்கு இணைக்கப்படுகிறது.

LETTER TO PATRICK BROWN

கனடியத் தமிழர் சமூகம், பேரவையின் இந்த கேள்விக்குறியான  முடிவை அன்றும் அவதானித்தது – இன்றும் அவதானிக்கிறது.

CTC முன்னெடுக்கும் வருடாந்தக் கலை நிகழ்வான,  ‘தமிழர் தெருவிழா – 2024’ காலத்தில், சமூகத்தின் குமுறல்கள் பெரும் கொந்தளிப்பாக வெளிப்பட்டது. கனடாவின் உள்  விவகாரங்களில் இலங்கையின் தலையீடு குறித்த பேரவையின் மௌனம், இமாலயப் பிரகடனத்தில் அதன் கடந்த கால ஈடுபாடு, தமிழ் இனப்படுகொலைக்கு நியாயம் கோரத் தவறியது  உட்பட்ட விடயங்களைக்  கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் Markham வீதியில் தெருவிழாவின் இரு தினங்களும் ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், தெருவிழாவின் ஆரம்ப நிகழ்வில் CTC தலைவர்  குமார் ரட்ணம்   பகிரங்க மன்னிப்புக்  கோரினார். ஆனால் அந்த அறிக்கை பேரவை மீது மக்கள் நம்பிக்கையை மீள் உறுதி செய்யத் தவறிவிட்டது. கலைஞர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் புறக்கணித்தனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், மக்களில் ஒரு சிறு பகுதியினர் மாத்திரம் கலந்து கொண்டனர். ஒரு காலத்தில் பேரவையின் முதன்மையான கொண்டாட்டமாக இருந்த நிகழ்வு இம்முறை நிராகரிப்பின் பகிரங்க சாட்சியாக மாறியது.

Video Player

00:00

01:13

தமது கடந்த காலத் தவறுகளுக்கு CTC-யின் தலைவர் குமார் ரட்ணம் பகிரங்க மன்னிப்புக் கோரிய போதிலும், மாற்றத்தைப் பிரதிபலிக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை CTC இதுவரை முன்னெடுக்கவில்லை. நிர்வாக மறுசீரமைப்பு, தமிழ் இனப் படுகொலைக்கான நீதி கோரல், வெளிப்படைத் தன்மை, மக்கள் தொடர்பு, ஊடகத் தொடர்பு என அனைத்து விடயங்களிலும் CTC தனது முன்னைய நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது. எனவே, CTC மக்களுக்கான, மக்கள்மயப்படுத்தப்பட்ட அமைப்பாக இயங்கத் தயாரில்லை என்பதையே  தனது இறுமாப்பான நிலைப்பாடுகள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.

கனடிய அரசியல்வாதிகளுக்கான ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டின் உச்சக்கட்டமாக வெளிப்பட்டுள்ளது. இது இனப்படுகொலைக்கான அங்கீகாரத்தை மறுக்கிறது, தமிழர் பாரம்பரியத்தை இழிவுபடுத்துகிறது, மேலும் கனடியத் தமிழ் அரசியல்வாதிகளை அவமதிக்கிறது.

இந்நிலையில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது:  ராஜ் தவரட்ணசிங்கம் எவ்வாறு பேரவையின் தலைவராகவும், அதன் ஆலோசகராகவும் இத்தனை காலம் பதவி வகித்தார்?

இவ்வாறான முக்கியமான விடயங்களில் பேரவை தொடந்தும் தோல்வியடைந்த நிலையில் ராஜ் தவரட்ணசிங்கத்தின் அழுத்தமும் செல்வாக்கும் பேரவைக்குள் எவ்வாறு தாக்கம் செலுத்தியது என்பதே பெரும் கேள்வி.

வெளிவராத ஆலோசனை!

தமிழர் தெரு விழாவைத் தொடர்ந்து, CTC உள்ளகச் சீர்திருத்தத்தை உறுதியளித்தது. ஒரு சமூக ஆலோசனை முயற்சியை அறிவித்தது. அதிக வெளிப்படைத்தன்மை, நிர்வாகச் சீர்திருத்தங்கள் பொறுப்புக்கூறலுக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதியளித்தது. இந்த ஆலோசனையின் முடிவுகளை விவரிக்கும் அறிக்கை February  2025-இல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டுரை March மாதம் வரையப்படுகிறது. இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எந்தக் கண்டுபிடிப்புகளும் பகிரப்படவில்லை. இந்த ஆலோசனை ஓர்  இணைய மூலக் கணக்கெடுப்புக்குச் சமமாக இருப்பதால், இதன் மூலம் வெளியாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் எந்த ஒரு நம்பகத் தன்மையையும் கொண்டிருக்காது.

பலருக்கும் இவை ஒன்றும் ஆச்சரியமான விடயங்கள் இல்லை. இந்த ஆலோசனை ஒருபோதும் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பது இந்தக் கட்டுரையாளர் உள்ளிட்ட விமர்சகர்களின் வாதமாகும்.  மாறாக இது தமது இன்றைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பொதுமக்கள் கோபத்தைத் தணிப்பதற்கான ஒரு  யுத்தியாகும்.

இந்த ஆலோசனைகள் முறையானதாக இருந்தால், அவற்றின் முடிவுகள் எங்கே?

இந்த விடயம் குறித்து “தேசியம்” சார்பாக வினவிய பின்பே, முதல் தடவையாக March இறுதிப் பகுதியில் குறிப்பிட அறிக்கை வெளியாகும் என பேரவை பதில் அளித்தது.

பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை

இந்தப் பின்னணியில், ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது.  தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை அவர் நிராகரிப்பதும், தமிழ் மரபுத்  திங்கள் அங்கீகாரத்தைக்  கண்டனம் செய்ததும், தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை கேள்விக்கு உட்படுத்தியதும் பேரவையை அதன் நீண்டகாலத் தலைவர்களுள் ஒருவரின் சர்ச்சையான தமிழர் விரோதப் போக்கான கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டிய சங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது.

 

raj-1-225x300.jpg

பேரவையின் நிகழ்வொன்றில் ராஜ் தவரட்ணசிங்கம்

இந்தக் கட்டுரையாளர், ராஜ் தவரட்ணசிங்கத்தின் குறிப்பிட்ட மின்னஞ்சலில் உள்ளடக்கத்தை முழுமையாகக் கண்டிக்கிறார். பேரவையின்  முழுமையான தலைமைத்துவ மாற்றங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.  ராஜ் தவரட்ணசிங்கத்தின் கருத்துகள் ஒரு தனி மனிதனின் கருத்துகள் இல்லை. மாறாக கனடியத் தமிழரின் நலன்களில் இருந்து தூர விலகி நிற்கும் ஒரு தனியார் குழுமத்தின் நிலைப்பாடாகும். இதை பல உதாரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மௌனம், மழுப்பல், நம்பிக்கை சிதைவு: நுண்ணாய்வுக்குள் பேரவையின் பதில்கள்

சமூக நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்ட ஓர்  அமைப்பு, சமூகத்தின் கேள்விகளுக்கு மௌனத்தால் பதிலளிப்பது அதிகம் ஆபத்தானது என்பது நடைமுறை அடிப்படை. “கனடியத் தமிழர்களின் குரல்” என தம்மைப் பிரகடனப்படுத்தும் பேரவை, சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகள் பலவற்றுக்கு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சலின் உள்ளடக்கம் உட்பட பேரவை குறித்த சமூகத்தின் பல கேள்விகளுக்கு “தேசியம்”, CTC இடம் முன்வைத்து. நேரடிச் செவ்விக்கான அழைப்புக்கு பேரவை சாதகமாகப் பதில் அளிக்காவிட்டாலும், தேசியத்துடன் இரண்டு மின்னஞ்சல் கேள்வி – பதில் பரிமாற்றத்தில் CTC பங்கெடுத்தது. இதில் தலைமை, முடிவெடுத்தல், பொறுப்புக் கூறல் குறித்த பல கேள்விகளை CTC மீண்டும் மீண்டும் திசை திருப்பியது, தவிர்த்தது அல்லது முற்றிலுமாகப்  புறக்கணித்தது.

இனப்படுகொலையை அங்கீகரிப்பதில் பேரவையின் நிலைப்பாடு விடயத்தில் நீண்டகாலமாக மௌனம் காப்பது ஏன்? என “தேசியம்” கேள்வி எழுப்பியபோது, முதலில் வெறுமனே  சமீபத்திய அறிக்கை ஒன்றை CTC தனது பதிலாகச் சுட்டிக்காட்டியது. ஒரு சமூகத்துக்காகக்  குரல் எழுப்பும் நேர்மையான பரப்புரைக்குத்  தேவை தொடர்ச்சியே தவிர, தெருவிழா நிராகரிப்பின் முன்னதான அழுத்தத்தின் கீழ் எதிர்வினையாற்றும் அறிவிப்புகள் அல்ல. மேலும் அடையாள ஒப்புதலைத் தாண்டி எடுக்கப்பட்டுள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்துக்  கேள்வி எழுப்பிய போது, 15 ஆண்டுகளாக பேரவை, மனித உரிமைகள், இனப்படுகொலை அங்கீகாரத்துக்காக வாதிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என பதில் அளித்தது. இது உண்மைக்கு புறம்பானதாகும்.

தமிழ் இனப்படுகொலை என்ற பதத்தை எழுத்திலோ, பேச்சிலோ பயன்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை CTC கொண்டுள்ளது என அதன் முன்னாள் தலைவர் சிவன் இளங்கோ February 2024 இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார். உண்மையோ, பொய்யோ பேரவை தனது நிலைபாட்டில் உறுதித்தன்மையைப்  பேணமுடியவில்லை என்பது இந்த விடயத்தில்  மீண்டும் உறுதியாகிறது. அதனைக் கண்டிக்க வேண்டிய பேரவை, ஏன் மௌனத்தைப் பரிசளிக்கிறது? முன்னர் குறிப்பிட்டதைப் போல, ஒரு கேள்விக்கு இரண்டு வெவ்வேறு விடயங்கள் உண்மையாக இருக்க முடியாது.

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தலையீடு குறித்துக் கேள்வி எழுப்பிய போது, அது குறித்த கரிசனையை பேரவை நிராகரித்தது. இதுபோன்ற விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பின் கீழ் வருவதாக பேரவை நியாயம் கற்பித்தது. அதனால் இந்த விடயங்களில் தலையிடமுடியாது என தமது நிலைப்பாட்டைத்  தெளிவுபடுத்தியது. ஆனால் CTC நீண்ட காலமாக மத்திய அரசின் மேற்பார்வையின் கீழ் வரும் விவகாரங்களில் உரிமை எடுத்துக் கொண்டமைக்கான சாற்றுகள் அதிகம் உள்ளன. அகதிகள் உரிமைகள் முதல் சர்வதேச விவகாரங்கள் வரை அதற்கான உதாரணங்கள் விரிவடைகின்றன. ஆனாலும், தமிழ் கனடியர்களை நேரடியாக பாதிக்கும் ஒரு விடயமான இலங்கை அரசின் வெளிநாட்டுத் தலையீடு குறித்து தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க பேரவை தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வியை “தேசியம்” மீண்டும் முன்வைத்தது: மீண்டும், அதற்கு பேரவையிடம் பதில் இல்லை.

CTC-யின் கனடியத் தமிழர் சமூகம் குறித்த ஈடுபாட்டை விரும்பாத நிலை, இலங்கை அரசாங்கத்துடனான அதன் உறவுகள் வரை நீண்டுள்ளது. கனடா – ரொறன்ரோவுக்கான இலங்கைத் துணைத் தூதர் Thusara Rodrigo போன்றவர்களுடன் அதன் உறவு குறித்து வினவிய போது, பேரவைக்கு அது போன்ற  எந்த ஒரு தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தது. ஆயினும்  SJV  செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் (SJV Chelvanayakam Memorial Lecture), Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo கலந்து கொண்டிருந்தார்.

CJV-1024x473.jpg

CTC ஏற்பாடு செய்த SJV  செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo

CTC ஏற்பாடு செய்த இந்த நிகழ்விலும் ஏனைய சில நிகழ்வுகளிலும் பேரவையின் உறுப்பினர்களுடன் Thushara Rodrigo ஒளிப்படம் எடுத்துக் கொண்டார். பேரவை கூறுவதைப் போல் இரு தரப்பினருக்கும் இடையில் உண்மையில் எந்த உறவும் இல்லை என்றால், இலங்கைத் தூதரகம் அதன் நல்லிணக்க முயற்சிகளை நியாயப்படுத்த ஏன் CTC-யின் பெயரைப் பயன்படுத்துகிறது? இங்கு “தேசியம்” மீண்டும் முன்வைத்த கேள்வி: இந்த நிகழ்வுகளுக்கு Thushara Rodrigo-வை அழைத்தது யார்? முன்னைய பல கேள்விகள் போல் CTC இதற்கும் பதில் கூற மறுத்து விட்டது.

ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல் சர்ச்சையைப் பேரவை கையாண்ட விதமும் இதே பாணியைப் பின்பற்றியது. அந்த மின்னஞ்சல் தமிழர்களுக்கு எதிரானதா? என “தேசியம்” மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்பியது. “அது, அவரது தனிப்பட்ட கருத்து” என CTC நிராகரித்தது. ஆனால் பேரவையின் அனைத்துப் படிமுறைகளையும்  அறிந்த, முன்னாள் தலைவர், மூத்த ஆலோசகர் என பதவிகளை வகித்த ஒருவரிடமிருந்து வெளியாகும் கருத்துகள் தனிப்பட்ட ஒருவரின் கருத்தாக வகைப்படுத்தப்படுவதில்லை. மேலும், இந்த “மின்னஞ்சலை நீங்கள்  கண்டிக்கிறீர்களா இல்லையா?” என மீண்டும் வற்புறுத்தியபோது,  CTC மீண்டும் மௌனம் காத்தது. இந்த விடயங்களில் பேரவையின் நிலைப்பாடு ராஜ் தவரட்ணசிங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது எனக் கேள்வி எழுப்பிய போது, மீண்டும் CTC எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

இமாலயப் பிரகடன விடயத்தில்; யார் முடிவுகளை எடுத்தார்கள்?, யார் உரையாடல்களில் பங்கேற்றார்கள்?, யாருடன் கலந்தாலோசிக்கப்பட்டது? என்பதற்கு CTC பதிலளிக்க மறுத்து விட்டது . ராஜ் தவரட்ணசிங்கம் இந்தச் செயல்முறையில் ஈடுபட்டிருந்தார், பேரவைக்கு உடனுக்குடன் விபரங்களை வழங்கினார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் பல உள்ளன. அதற்குப் பதிலாக,”ஏற்கனவே எமது நிலைப்பாட்டைத்  தெளிவுபடுத்தி விட்டோம்” எனக் கூறியதுடன், “ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் முன்வைப்பது  உண்மைகளை மாற்றாது” என பேரவை தேசியத்திடம் வலியுறுத்தியது. இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவெனில், ஒரு போதும் இதில் உண்மை வெளியாகவில்லை என்பதாகும். தொடர்ந்து கேள்விகளைத்  திசை திருப்புவதனால்; பதில்கள் உண்மையாகப் போவதில்லை. ஒரு விடயத்தில் இருந்து விலகி நிற்பது என்பது அதைத் தெளிவுபடுத்துவது அல்ல.  இந்த செயற்பாடுகளை  யார் அங்கீகரித்தார்கள், என்பதை CTC கூற மறுத்தால், இவற்றின் தவறுகளுக்கு  யார் பொறுப்பேற்பார்கள்?

அண்மைய காலத்தில் CTC தலைமைத்துவத்தின் மிக வெளிப்படையான தோல்வி தெருவிழா 2024-இல் வெளிச்சத்துக்கு வந்தது.  முன்னைய ஆண்டுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட நிகழ்வு – இம்முறை பலராலும் நிராகரிக்கப்பட்டு – சமூக நிராகரிப்பின் உதாரணமாக மாறியது. இதனால் அங்கு சாவடி அமைத்த விற்பனையாளர்கள் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டனர். அவர்கள் பணத்தைத் திரும்பத் தருமாறு  கோரியபோது, Toronto காவல்துறையினர் மூலம் அவர்களுக்குப் பதிலளிக்க முடிவு செய்தது பேரவை.  இதில் சமூகத்தின்  அக்கறைகளை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என “தேசியம்” கேள்வி எழுப்பிய போது, CTC “ஒப்பந்தக் கடமைகளை” (Contractual obligations) பூர்த்தி செய்ததாக மாத்திரம் கூறியது. அதிகாரத்துவப் பாணியிலான இந்தப் பதில், நம்பிக்கை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டிய தெருவிழாவின் கட்டமைப்பைக்  கேள்விக்குள்ளாக்குகிறது. விற்பனையாளர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல் தவிர்ப்பதற்கான எண்ணம் முன்னரே பேரவையினால் திட்டமிடப்பட்டதா?  என வினவியபோது, CTC மீண்டும் பதிலளிக்கவில்லை. ஏனைய கேள்விகள் போல், தெளிவாக ஆம் அல்லது இல்லை என்று விடை தரக்கூடிய பின்வரும் கேள்வியை “தேசியம்” முன்வைத்தது. “CTC எந்த விற்பனையாளர்களுக்கும் பணத்தை மீள வழங்கியுள்ளதா?”. பேரவை அதற்குப் பதிலளிக்கவில்லை.

பேரவைக்கும் தேசியத்துக்கும் இடையிலான நீண்ட இரண்டு கேள்வி பதில் மின்னஞ்சல்  பரிமாற்றம் நியாயத் தன்மையின் அடிப்படையிலும், நடுநிலை, நெறிமுறை இதழியல் கோட்பாட்டிலும், CTC-யின் பதில்கள் நியாயமாகவும், துல்லியமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இங்கு முழுமையாக வழங்கப்படுகிறது. பேரவையின் நிலைப்பாடுகள் எந்த வகையிலும் தவறாகச் சித்தரிக்கப்படாமல் வெளியிடப்படுவதை இந்த நடைமுறை  உறுதி செய்யும் என தேசியம் நம்புகிறது. மேலும் ஒரு தொகுப்புக் கேள்விகள் தேசியத்தால் பேரவையிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.  அவற்றுக்கான பதில்களும் கிடைக்கப்பெறும் போது இங்கு இணைக்கப்படும்.

EMAIL EXCHANGE BETWEEN THESIYAM AND CANADIAN TAMIL CONGRESS

பேரவையின் தமிழர் சமூகத்துடனான இந்த நெருக்கடியின் மையத்தில் இருப்பது வெறும் நிர்வாகத்தின் தோல்வி மட்டுமல்ல; மாறாக நம்பிக்கைத் துரோகமாகும் என்பதை உறுதியாகக்  கூறலாம். CTC தன்னை தமிழ்க் கனடியர்களின் பிரதிநிதியாக நிலை நிறுத்துகிறது, இருப்பினும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அது பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அதே சமூகத்தின் நியாயமான கவலைகளுக்குச்  செவிசாய்க்கத்  தொடர்ந்து மறுத்து வருகிறது  முக்கிய விடயங்களில் அழுத்தம் கொடுக்கப்படும் போது, பேரவை உள்ளடக்கம் இல்லாத பதில்களால்,  அல்லது நிராகரிப்புகளால், அல்லது வெளிப்படையான மௌனத்துடன் கடந்து செல்கிறது. ஆனால் மௌனம் நடுநிலையானதல்ல என்ற கசப்பான உண்மையை இந்தச்  சந்தர்ப்பத்தில் பேரவையின் நிர்வாகக் கட்டமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வர  இந்தக் கட்டுரையாளர் விரும்புகிறார். மௌனம் பொறுப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான தேர்வாகும். ஒரு சமூக அமைப்பு தனது செயல்களுக்குப் பதிலளிக்க மறுக்கும்போது, சமூகத்தின் கரிசனையும், தொடர் கேள்விகளும் கொள்கை பற்றியதாக இல்லாமல் நேர்மைத்தன்மை  குறித்ததாக மாறும் அபாயம் உள்ளது. பேரவையின் விடயத்திலும் இன்றைய நிலை இதுதான்.

பேரவையின் எதிர்காலம் என்ன?   

பல ஆண்டுகளாக, CTC கனடிய தமிழர்களின் முதன்மை அரசியல் குரலாகத் தன்னை நிலைநிறுத்த முயன்றுவருகிறது. ஆனால் வளர்ந்து வரும் அதிருப்தி, மறுசீரமைப்புக்கான வலியுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், அதன் தகுதி இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

1) பேரவை தனது கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொள்ளுமா?

2) வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா?

3) சமூகத்தின், மாற்றத்துக்கான தொடர் கோரிக்கைகளை அது தொடர்ந்து புறக்கணிக்குமா?

4) பேரவையின் உறுப்புரிமையை யார் பெறவேண்டும் என்ற முடிவைத்  தன்னிச்சையாகச் சில தனிநபர்கள் தொடர்ந்தும் மேற்கொள்வார்களா?

5) CTC குறித்த அண்மைக்காலத் தொடர் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இவை  நிகழ்ந்த காலப்பகுதியில் பேரவையைத் தனிமனித ஆளுமைக்குள் கட்டுபடுத்தி வைத்துள்ளதான குற்றச்சாட்டை  எதிர்கொள்ளும் நிர்வாகப் பணிப்பாளர் டான்டன் துரைராஜா,  அனைத்துத் தவறுகளுக்கும் பொறுப்பேற்றுப் பதவி  விலகுவாரா?

இந்தப் பின்னணியில், CTC அடையாளம் அற்று நீர்த்துப் போகுமா என்பதை வரும் வாரங்களும் மாதங்களும் தீர்மானிக்கும்!

https://thesiyamnation.com/41151/

 

இலங்கதாஸ் பத்மநாதன்

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 1 week ago

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது...

மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்...

மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கியத்தனம் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காயத்தை மீண்டும் கிண்டி சுயஇன்பம் தேடும் சைக்கோத்தனம்…

பாதிக்கப்பட்ட ஒரு இனம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு அசட்டு உற்சாகம் பைத்தியக்காரத்தனமானது... இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து என்று கடந்து போக முடியாது, மாறாக, விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணத் தமிழர்களை பாராளுமன்றத்தில் பிரிதிநிதிப்படுத்துகிற ஒரு பைத்தியக்காற பாராளுமன்ற உறுப்பினருடைய வார்த்தைகள் இவை…

அர்ச்சுனாவின் இக்கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது... பலர் இவரது கருத்துக்களை இனவாத பிதற்றல்கள் எனக் கண்டித்து வருகின்றனர்... இது தமிழர் சமூகத்துக்குள் இனவாத எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு, முஸ்லிம் மலையக தமிழ் சமூகத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் அபாயமும் உள்ளது…

சிங்களவர்களையோ, இஸ்லாமியர்களையோ ‘இனவாதிகள்’ என்று நாம் கூறும் போது ‘நாம் ஒருபோதும் இனவாதிகளாக இருந்ததில்லையா?’ என்கிற ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டுப்பார்க்கவேண்டும்…

இனவாத கருத்துக்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை கண்டித்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணுவது முக்கியம்... அர்ச்சுனாவின் கருத்துக்கள் இதற்கு புறம்பாக உள்ளதால, அவற்றை பொதுவெளியில் கண்டிப்பது சமூகத்தின் அறச்செயலாகும்…

இவ்வாறான வெறுப்புக்கருத்துக்கள் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை... அவை இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை பாதிக்கக்கூடும்... எனவே, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேண, இவ்வாறான கருத்துக்களை கண்டிப்பது அவசியம்...

இப்படிப்பட்ட அயோக்கியர்களின்,படித்த முட்டாள்களின் இனவாத பிதற்றல்களை கண்டும் காணாமலும் இருப்பது ஆபத்தானது... காரணம் மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு இப்படி வாந்தி எடுத்து வைப்பவர்கள் வந்துவிடுவார்கள்... வந்துவிடுகிறார்கள்... ஆதலால், குறைந்தபட்சம் இவற்றைப் பொதுவெளியில் கண்டிப்பது ஒரு அறம் கொண்ட சமூகமாக முக்கியமானது...

இந்த பைத்தியக்காறனுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பாராளுமன்றம் போக ஆதரவாக எழுதினேன் என்பதை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகிறேன்..

இந்த கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு யாழ் இணைய சமூகமும் தன் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும்..

—-—

தேசப்படத்தில் மட்டும் இந்திய - இலங்கை கடல் எல்லை

3 months 1 week ago

வங்கையூரான்

பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கிறார்.

மேலும் மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி, தென்பகுதி ஆழ்கடல் பன்னாட் கல மீன்பிடி மீனவர்களின் பயன்பாட்டுக்குரிய ஒன்றாகவும் வடக்கு மீனவர்கள் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், வடக்கே பரந்த ஆழ்கடல் இருந்தும் அதனைப் பயன்படுத்துவதற்கான உட்கட்டுமான வசதிகள் முக்கியமாக பலநாட் கலங்களுக்கான முதலீட்டு வசதியின்மை, துறைமுகம், பயிற்சி, மற்றும் உபகரணங்கள் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாதுள்ளமை குறித்தும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

வடகரையோரத்தில் அடுக்கடுக்காக படைமுகாம்களை வைத்துக்கொண்டு இந்திய மீனவர்களின் ஊடுருவலையோ போதைவஸ்து கடத்தலையோ அவர்களால் தடுக்கமுடியாத கையறு நிலையில் இருப்பது குறித்தும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் திணறிப்போயிருந்த அரசு சார்பிலே கடற்றொழில் அமைச்சர் வடக்கு மீனவர்களின் நம்பிக்கையை காப்போம் எனவும் வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் தீங்கு விளைவிக்கமாட்டோம் எனவும் ஒப்பாரி வைத்திருக்கிறார்.

தவிர அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, இந்தியாவை நோக்கி வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பின் எல்லை தாண்டி மேற்கொள்ளும் சட்டபூர்வமற்ற மீன்பிடியினை தடுக்க உதவ வேண்டுமெனவும் மன்றாடியிருக்கின்றார். வடக்கு என்.பி.பி. தமிழ் உறுப்பனர்களோ, வன்னி உறுப்பினர்களோ வாய் பிளந்து கொட்டாவி விடும் நிலைதான். மீனவர் துன்பம் குறித்து எந்தக் கவலையும் அவர்களுக்கு கிடையாது. ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவினுடைய நிலைப்பாடு புரியாத ஒன்றல்ல, அவர்களை நம்பமுடியாது.

எமது கோரிக்கை

நாம் சிறிலங்கா அரசிடம் கோருவது என்னவெனில், அரசு வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் முதலில் உள்ளூர் இழுவைமடித் தொழில் தடையினை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதுதான். 2017 ல் இழுவைமடி உள்ளூரில் தடையென சட்டம் இயற்றியிருந்தது. ஆனால் இதுவரை அது அமுற்படுத்தப்படவில்லை. முதலில் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பல தடவைகள் இது குறித்து பேசியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே நிலைமை உள்ளது.

மேலும் கண்டல் கிளைகளையும் மரக்குற்றிகளையும் வெட்டி கடற்பகுதிகளில் அதனை அமிழ்த்தி மீனை ஒருங்குசேர விட்டு வெடிகளை அதன் மீதும் பவளப்பாறைத் தொடர்கள் மீதும் வீசி எறிந்து மீன்களை வேட்டையாடுவதையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையில் படையினர் பார்த்திருக்க டைனமெட் வெடி வைத்து மீன்களைக் கொல்லும் நாசகார செயற்பாடுகளையும், கடலில் நிலையாக நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கிலான கம்பிப்பொறி வலைகளை அகற்றி சிற்றளவு மீன்பிடியாளர்களின் மீன்பிடிச் செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின்போது பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட மக்கள் மீளவும் சொந்த இடம் திரும்பி தமது மீன்பிடிச் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம்பெயர்ந்து வரும் தென்பகுதி மீனவர்களை படையினரின் உதவியுடன் நிரந்தர குடியிருப்புக்களை அமைப்பது, அவ்விடங்களில் பிக்குகளை கொண்டு விகாரைகளை அமைப்பது போன்ற இழிவான, அருவருப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது வெறுக்கத்தக்கது.ஏற்றுக் கொள்ளவும் முடியாதது.

மேலும், கரையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள படை முகாம்களால் மீனவர்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்பதை உறுதிபடக் கூறிவைக்க விரும்புகின்றோம். தேசிய பாதுகாப்புக்கென பெருமளவு நிதியினை ஒதுக்கீடு செய்து படையினரை நிலைகொள்ள வைப்பதைத் தவிர தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கஞ்சாக் கடத்தலைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லையே?

மனித புதைகுழிகளும் பெளத்தர்களே இல்லாத இடங்களிலும் படைமுகாம்களிலும் துப்பாக்கி முனையிலே விகாரைகளை கட்டி அருவருப்பை ஊட்டியதும் தவிர, காத்திரமான அபிவிருத்தி திட்டங்கள் எவற்றையும் வடக்கில் காணோம்.

தேசப்படத்தில் மட்டுமே சர்வதேச கடல் எல்லை

வடக்கிலே பாக்கு நீரிணை, பாக்கு குடா, மன்னார் குடா ஆகிய பாரம்பரிய கடல்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் வசமே உள்ளன. இதை ஊடறுத்தே 1974, 76 களில் இந்திய – இலங்கை எல்லைக்கோடு வரையப்பட்டது. கச்சதீவு அன்றைய பாரதப் பிரதமரின்( இந்திரா காந்தி) ஆலோசனையின் பிரகாரம் இலங்கை பிரதமரின் ( சிறிமாவோ) விருப்பிற்கிணங்க இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆயினும் ஐம்பது வருடங்களாக கச்சதீவில் வடக்கு தமிழர் அடைந்த நன்மை எவையுமே இல்லை. இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன. எல்லாமே ஒன்றுதான். கச்சதீவும் ஐந்து மைல் சுற்றாடல் பரப்பு கடல் பகுதியும் மீனவர்களுக்காக குத்தகைக்குத் தேவையென ஓர் கோரிக்கை இந்திய தரப்பில் (பேராசிரியர் சூரியநாராயன்) ஓர் கருத்து முன்னர் முன்வைக்கப்பட்டது. பாக்கு கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதிப்பது வடக்கு கடலில் சவப்பெட்டிகளை மிதக்க விடுவதற்குச் சமம்.

புதுக்கோட்டை, நாகபட்டின மீனவர்களின் தளமாக பாக்கு நீரிணை மற்றும் முல்லைத்தீவு கடற் பகுதியும், இராமேஸ்வர மீனவர்களின் பகுதிகளாக பாக்கு குடா கடலும், தூத்துக்குடி மீனவர்களுக்கான பகுதியாக மன்னார் குடாக்களும் பறிபோயுள்ளன. ஏறத்தாழ வடக்கு கடல் முழுவதும் பறிபோயுள்ளது. இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லைக்கோடு தேசப்படத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் அந்த எல்லைக் கோடானது வடக்கு கரையோரமாக இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. சர்வதேச கடற் சட்டம் இங்கு செல்லுபடியாகாத ஓர் விடயமாகவே உள்ளது. இந்திய மீனவர்களுக்கு கச்சதீவு அமைவிடம் எது, எல்லைக்கோடு எது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் தெரியாது என்பதே இந்தியாவின் நிலை.

Thinakkural.lk
No image previewதேசப்படத்தில் மட்டும் இந்திய-இலங்கை கடல் எல்லை
வங்கையூரான் பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக...

பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும் - அருண்மொழிவர்மன்

3 months 1 week ago

பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும் - அருண்மொழிவர்மன்

“பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? “ என்ற கேள்வியை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். சீமானின் திட்டமிட்ட அவதூறுகளில் ஒன்றினை அப்படியே நம்பிக் கொண்டே நண்பர் என்னிடம் கேள்வி கேட்கின்றார்; அவருக்கான தனிப்பதிலாக இல்லாமல் இந்தக் கேள்வி இருக்கக் கூடிய பலருக்குமான விளக்கமாக இதுபற்றிச் சற்றே பகிர்கின்றேன்.



ஒன்றைச் சொன்னால் அதை அப்படியே ஒப்பிக்காமல் சிறிதளவேனும் ஆராய்ந்து முடிவெடுத்தலே பகுத்தறிவு; அதன்படி சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் தர்க்கபூர்வமாக யோசித்தால், அது உண்மை தானா என்று தேடினாலே, பகுத்து ஆராய்ந்தாலே, இப்படிச் சீமான் சொல்வதை அப்படியே திருப்பிக் கேட்கின்ற நிலைமை வராது.


பெரியார் சொல்லாத ஒருவிடயத்தை, அவர் சொன்னதாகச் சொல்வது அவதூறு. சீமான் அவ்வாறு சொல்லி, அது இந்தத் திகதியிட்ட பத்திரிகையிலும் வந்துள்ளது என்றும் சொல்கிறார். ஆனால் அந்தத் திகதியிட்ட பத்திரிகையில் அப்படி இல்லை என்று கூறி ஆதாரத்தைக் கேட்கின்றார்கள், அதற்கு பெரியார் எழுத்துகளைப் பூட்டி வைத்துள்ளார்கள், நாட்டுடமை ஆக்கினால் ஆதாரம் காட்டுவேன் என்று சொல்கிறார் சீமான். தான் வாசித்ததாகச் சொன்னவரிடம் எங்கே வாசித்தாய் என்று கேட்டால் சொல்லும் பதில் இதுவா?

எழுத்துகளை நாட்டுடமை ஆக்குவது என்பதே எனக்குத் தெரிந்து ஒக்ரோபர் புரட்சிக் காலத்தில் சில காலம் ரஷ்யாவில் நடைமுறையில் இருந்தது; மற்றும்படி தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றது. ஏதோ உலகம் முழுவதும் எழுத்துகளை நாட்டுடமையாக்குவது நடைமுறையாக இருக்கின்றது; பெரியாரின் எழுத்துகளை மட்டும் ஒழித்து வைத்துள்ளார்கள் என்பது போல சீமான் சொல்கின்ற, உள்நோக்கம் கொண்ட உளறலை அப்படியே நாமும் எதிரொலிப்பது அபத்தமானது அல்லவா?

எழுத்துகளை நாட்டுடமை ஆக்குதல் என்றால் என்ன?

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இணையத்தளத்தில் நாட்டுடமை ஆக்குதல் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

மறைந்த தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் அவர்களின் படைப்புகள் பாரெங்கும் பவனி வர வேண்டும்; எளிய வகையில் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையருக்குப் பரிவுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, காப்புரிமை போன்ற காரணங்களினால் ஒரு எழுத்தாளரின் எழுத்துகள் அவரது குடும்பத்தினரிடமோ அல்லது அவற்றுக்கான காப்புரிமையைக் கொண்டுள்ளவரிடமோ முடங்கி இருக்கும்போடு, அவரது எழுத்துகளைப் பொதுக்களத்திற்குக் (Public Domain) கொண்டு வருவதன் மூலம் அவர்களது எழுத்துகள் பரவலாகச் சென்றடையச் செய்வதே இந்த நாட்டுடமையாக்கலின் நோக்கமாகும். எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படும்போது குறித்த எழுத்தாளரின் நூல்களுக்கான மரபுரிமை யாரிடம் இருக்கின்றதோ, அவருக்குப் பரிவுத் தொகையாக பணமும் வழங்கப்படும். 

இவ்வாறு முதலில் நாட்டுடமையாக்கப்பட்டவை பாரதியின் எழுத்துகளும் பாடல்களும்; இதனை இன்னொரு விதத்தில் பாரதியின் பாடல்கள் தனியார் சொத்தாகிவிடாமல் மீட்டெடுப்பதற்காகவே இந்த நாட்டுடமையாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் சொல்லலாம். பாரதியாரின் குடும்பத்தினரிடம் இருந்த பாரதியின் பாடல்களுக்கான உரிமை பல்வேறு கைகள் மாறி, ஒரு கட்டத்தில் மெய்யப்பச் செட்டியார் 9500 ரூபாய் கொடுத்து பாரதியாரின் பாடல்களின் ஒலிப்பதிவாகப் பாவிக்கின்ற உரிமையை வாங்கி வைத்திருந்தார். பிரபல நாடகக் கலைஞரான அவ்வை டி.கே. சண்முகம் பாரதியாரின் “தூண்டில் புழுவினைப் போல” என்ற பாடலைத் தனது திரைப்படம் ஒன்றில் சேர்த்தபோது, மெய்யப்பச் செட்டியார், பாரதியின் பாடல்களுக்காக உரிமை தன்னிடம் உள்ளதால் அவ்வை. டி.கே. சண்முகம் தனக்கு 50,000 ரூபாய்கள் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்குப் பதிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட போராட்டங்களும், காப்புரிமை பற்றிய விழிப்புணர்வும். பாரதியாரின் பாடல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதில் அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி காட்டிய ஆதரவும் சேர்ந்து பாரதியாரின் முழு எழுத்துகளும் நாட்டுடமையாக்கப்பட்டன. இதுபற்றி “பாரதி: கவிஞனும் காப்புரிமையும்” என்கிற ஆய்வு நூலொன்றினை ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ளார்.

இப்போது “பெரியாரின் எழுத்துகளை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? என்கிற கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

பெரியாரின் எந்த எழுத்துகள் இன்று பொதுக்களத்தில் இல்லை?, எந்த எழுத்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று சொன்னால்தானே இதற்குப் பதிலளிக்கலாம்? தான் சொன்ன அவதூறுக்குப் பதிலளிக்க முடியாமல் சீமான் உளறுவதை காவித் திரிந்தால் நாமும் அந்த மந்தைக் கூட்டத்தில் ஒருவராகி விடுவோமேயன்றி வேறொன்றும் நடக்கப் போவதில்லை. இதே சீமான் எதிர்வரும் காலத்தில் புலிகள் இயக்கம் பற்றியும் ஏதேனும் ஓர் அவதூறைக் கூறிவிட்டு அதற்கு ஆதாரம் கேட்டால், புலிகள் இயக்கத்தின் ஆவணங்கள் அனைத்தையும் பொதுவெளியில் பகிருங்கள் நான் ஆதாரம் தருவேன் என்று உளறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன என்பதையும் சீமானை நம்புகின்ற ஈழத்தமிழர்கள் உணர வேண்டும். ஏனென்றால் சீமானின் வரலாறு அப்படித்தான் இருக்கின்றது.

பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும்

பெரியாரின் எழுத்துகளை முழுமையாகத் தொகுத்துக் காலவரிசையில் வெளியிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் மிக நீண்ட காலமாக பெரியாரியவாதிகளாலும் ஆய்வுத்துறை சார்ந்தோராலும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில் 1925 முதல் 1938 வரை குடியரசு ஏட்டில் பெரியார் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள், அறிக்கைகள், பேச்சுகள் என்பவற்றை முழுமையாகத் திரட்டி கால வரிசைப்படி தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட உள்ளதாக பெரியார் திராவிடர் கழகம் 2008 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது.

ஆனால் பெரியாரின் எழுத்துகளுக்கான வாரிசுரிமை தனக்கே இருப்பதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி உரிமை கோரி வழக்குப் பதிவு செய்திருந்தார். பெரியாரின் பொதுவாழ்வின் தொடக்க காலத்திலிருந்து அவரது எழுத்துகள், பேச்சுகள், சிறுநூல்கள் என்பவற்றை வெளியிடுவதற்காக பெரியார் ஆரம்பித்ததுப் பின் 1952-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின்” உரிமை கி. வீரமணிக்கு உண்டென்பதால் பெரியாரின் எழுத்துகளுக்கும் தனக்கே உரிமை உள்ளது என்பது அவரது வாதமாக இருந்தது. இதன்மூலம் பெரியாரின் எழுத்துகள் காலவரிசைப்படி வெளியிட முன்வந்த பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு முட்டுக்கட்டை ஒன்றினை வீரமணி இட்டிருந்தார்.

இக்காலப்பகுதியில் பெரியாரின் எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன், எஸ்.வி. ராஜதுரை, உள்ளிட்ட பெரியாரியவாதிகளும், பெரியாரிய ஆய்வறிஞர்களும் சட்டப் போராட்டத்தையும் பிரச்சாரங்களையும் முன்னெடுத்தார்கள்.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு ஜூலை 27, 2009 அன்று “பெரியாரின் எழுத்துகளுக்கும் பேச்சுகளுக்கும் பதிப்புரிமை கூறும் உரிமை கி. வீரமணியை செயலாளராகக் கொண்டுள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்குக் கிடையாது என்றும் பெரியார் அந்த உரிமைகளை தனக்கும் கோரவில்லை; மற்றவர்களுக்கும் வழங்கி விடவில்லை” என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கி இருந்தார்.

1957 ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டத்தின் 52(1) (எம்) பிரிவை ஆதாரமாக வைத்து இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, எவற்றுக்கு எல்லாம் பதிப்புரிமையைக் கோர முடியாது என்பதனை விளக்கும் இந்தச் சட்டப்பிரிவின்படி பொருளாதாரம், அரசியல், சமூகம், அல்லது மதம் தொடர்பான தலைப்புகளில் நாட்டின் நடப்புகள் குறித்துச் செய்தித்தாள்களிலும் இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை மீண்டும் வெளியிட்டால் அதற்கு பதிப்புரிமை கோர முடியாது என்றும், இந்தக் கட்டுரைகளை எழுதியவர்கள் அதற்கான பதிப்புரிமையைக் கோரியிருக்க வேண்டும் என்றும் இந்த பிரிவு குறிப்பிடுகின்றது; பெரியார் திராவிடர் கழகத்தின் வக்கீல் வைத்த இந்த வாதம் வலிமையானது என்று சுட்டிக்காட்டி கி.வீரமணியின் மனுவைத் தள்ளுபடி செய்தார். 

மேலும் பெரியாரின் எழுத்துக்களை இலக்கியம் என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்து, பெரியாரின் எழுத்துகள் அறிவுசார் சொத்துரிமையாகக் கருதப்பட வேண்டும் என்ற கி வீரமணி தன் மனுவில் குறிப்பிட்டு இருந்ததற்கும், “அறிவுசார் சொத்துரிமை கோருவதற்கும் எழுத்துப்பூர்வமாக உரிமை தரப்பட்டிருக்க வேண்டும்; அப்படி எழுத்து மூலமாக பெரியார் எதுவும் வழங்கவில்லை என்பதுடன் பெரியார் எந்த உயிரும் எழுதி வைக்காமல் தான் இறந்துள்ளார்; இது எல்லோருக்கும் தெரியும் என்றும்” விளக்கம் அளித்துள்ளார்.

அத்துடன் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஊடாக பெரியார் வெளியிட்ட நூல்களுக்காக பதிப்புரிமையைப் பொறுத்தவரை, அந்த அறக்கட்டளை அமைக்கப்பட்ட போது இருந்த காப்புரிமை விதிகள் எழுத்தாளர் இறந்து 25 வருடங்களின் பின்னர் அவரது எழுத்துகள் பொதுக்களத்திற்கு வரும் என்றே இருந்ததால், அதன்படி அவையும் பெரியார் இறந்து 25 வருடங்களின் பின்னர், அதாவது 1998 இன் இறுதியில் பொதுக்களத்திற்கு வந்து விட்டன என்றும் இந்தத் தீர்ப்பு உறுதி செய்தது.

இதன்படி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்ற தீர்ப்பின் வழியாக இனி பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் வெளியிடும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதையும் நீதிபதி கூறியுள்ளார். 

எனவே பெரியாரின் எழுத்துகள் இப்போது பொதுக் களத்திற்கு (Public Domain) வந்து விட்டன. காப்புரிமை என்ற பெயரால் எவரிடமும் அவரது எழுத்துகளும் பேச்சும் பதுக்கிவைக்கப்படவில்லை. எழுத்துகளை நாட்டுடமையாக்கல் என்பதன் நோக்கமே, காப்புரிமை போன்ற காரணங்களினால் ஒரு எழுத்தாளின் எழுத்துகள் அவரது குடும்பத்தினரிடமோ அல்லது அவற்றுக்கான காப்புரிமையைக் கொண்டுள்ளவரிடமோ முடங்கி இருக்கும்போடு, அவரது எழுத்துகளை பொதுக் களத்திற்குக் (Public Domain) கொண்டுவருவதன் மூலம் அவர்களது எழுத்துகள் பரவலாகச் சென்றடையச் செய்வதுதானே. இன்னொரு விதத்தில் சொன்னால், ஒருவரின் எழுத்துகளுக்கான காப்புரிமை குறித்த ஒரு தரப்பிடம் இருப்பதன் காரணமாக அந்த எழுத்துகள் பரவலாகச் சென்றடைவது தடைப்படுகின்றது என்ற சூழலில், காப்புரிமையை வைத்திருப்பவருக்கு குறித்த தொகையைக் கொடுப்பதனால் அந்த எழுத்துகளை எவரும் வெளியிடலாம் என்கிற நிலையை உருவாக்குவதே எழுத்துகளை நாட்டுடமையாக்குதல். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் பொறுத்தவரை அது 2009 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்புடன் நிறைவேறி விட்டது.

காலவரிசைப்படியாக எழுத்துகள் தொகுக்கப்படுவதன் அவசியம்

பெரியாரின் எழுத்துகளை முழுமையாகத் தொகுத்து வெளியிடவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தவர்கள், அவை கால வரிசைப்படியான தொகுப்புகளாகத் தொகுக்கப்பட வேண்டும் என்பதையும் சேர்த்தே கேட்டுக் கொண்டனர். இது ஒரு முக்கியமான வேண்டுகோளாகும். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் கால வரிசையில் வைத்துப் பார்த்தாலே ஒட்டுமொத்த விடுதலைக்கான, சமூகநீதி நோக்கிய பயணத்துக்கான அவரது படிமுறை வளர்ச்சி தெரியும். தனிப்பட்ட முறையில், காலவரிசையில் தொகுக்கப்பட்ட பெரியாரின் குடியரசு எழுத்துகளையும் பேச்சுகளையும் வாசித்ததே எனக்குப் பெரியாரைப் புரிந்து கொள்ள உதவியது. அதுபற்றியும் இங்கே குறிப்பிடுவது முக்கியம் என்று நினைக்கின்றேன்.

பெரியார் திராவிடர் கழகம் 1925 முதல் 1938வரையான குடியரசில் வெளிவந்த பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் மின்னூல்களாக வெளியிட்டிருந்தது. அவற்றினை முழுமையாக படிக்க ஆரம்பித்த எனக்கு பெரியாரின் எழுத்துநடையும், சமத்துவக்கான அவரது பயணம் எப்படி எப்படியெல்லாம் முகிழ்ந்து வந்தது என்கிற அந்தப் பரிணாம வளர்ச்சியும் மிகுந்த ஆர்வத்தைக் கொடுத்தது. அவை அனைத்தையும் ப்ரிண்ட் பண்ணி கோப்புகளில் இட்டு வைத்து வாசித்து வந்தேன். ஈழப் பிரச்சனை, சாதியம், பெண்ணுரிமை, மதங்கள், அறிவியல் பார்வை, பகுத்தறிவு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து அவ்வப்போது வாசித்தவை தரவுகளாகவும் சம்பவங்களாகவும் செய்திகளாகவும் மூளைக்குள் தேங்கி குழப்பங்களும் துலக்கமற்ற பார்வையுமே அப்போது இருந்தது. பெரியாரை வாசிக்கத் தொடங்கிய பின்னர், அவரது அணுகுமுறையும் சிந்தனைமுறையும் எனக்குப் பெரிதும் கைகொடுத்தன. அந்த வகையில் பெரியாரின் எழுத்துகள், சமூக உறவுகளையும், அரசியலையும் புரிந்து கொள்வதற்கு உதவியதுடன் சமத்துவத்துக்காகச் செயற்பட வேண்டும் என்கிற உந்துதலையும் எனக்கு ஏற்படுத்தின.

குறிப்பாக, மிக நீண்டகாலம் பொதுவாழ்வில் ஈடுபட்ட பெரியாரின் எழுத்துகளை அவற்றின் காலவரிசையில் வைத்துப் பார்க்கின்றபோதே அவரது எழுத்துகளின் முழுமையான அர்த்தமும், சிந்தனை வளார்ச்சியின் பரிணாமமும் தெரியும். உதாரணத்துக்கு இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் உருவாகுவதற்கு முன்னர் திராவிட நாடு திராவிடருக்கே என்று சொன்ன பெரியார் தான், மொழிவழி மாநிலங்கள் உருவான 1965 இற்குப் பின்னர் தமிழ் நாடு தமிழருக்கு என்பதையே தன் கடைசி மூச்சு வரை சொல்லி வந்தார். திருக்குறளை ஆரம்பத்தில் நிராகரித்தவர் பின்னர் திருக்குறள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அதனைத் தமிழர்களின் அடையாளமாகச் சொல்ல வேண்டும் என்று பேசியவரும் அதே பெரியார் தான். காலவரிசையை பின்பற்றாமல் எழுத்துகள் தொகுக்கப்பட்டால் அரசியல் நிலைப்பாடுகளே திரிக்கப்பட்டு விடக்கூடும் என்ற அச்சம் வீரமணிக்கு இருந்திருக்கலாம். இன்று, வாசித்து, ஒவ்வோர் விடயத்தையும் கேள்வி கேட்டு சான்றாதாரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தேடித் துலங்கி உண்மையக் கண்டடையாமல் கேள்விச் செவியன்களாக பெரும்பான்மையானோர் மாறிப் போய்விட்ட "post-truth" காலத்தில் எல்லாத் திரித்தல்களுக்குமான வாய்ப்பும் இருக்கின்றது. ஆயினும் பெரியார் உள்ளிட்டோர் ஏற்றிய சமூகநீதிக்கான தீபத்தின் வெளிச்சத்தில் நாம் மானுட சமத்துவம் பேணுவோம்

பின்குறிப்பு:

குடிஅரசு ஏட்டில் வெளிவந்த பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் வெளியிடுவது தொடர்பாகவும் அவற்றுக்கான காப்புரிமை குறித்தும் நடந்த வழக்கு விபரங்களையும் வெவ்வேறு கட்டுரைகளையும் தொகுத்து குடிஅரசு வழக்கு என்ற பெயரில் திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

- அருண்மொழிவர்மன்

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/47925-2025-03-11-08-40-53

Checked
Tue, 06/24/2025 - 13:11
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed