ஊர்ப்புதினம்

செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 230க்கும் அதிகமான என்புக்கூடுகள் மீட்பு

1 week 4 days ago

செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 230க்கும் அதிகமான என்புக்கூடுகள் மீட்பு

சனி, 06 செப்டம்பர் 2025 11:13 AM

செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 230க்கும் அதிகமான என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது , அகழ்வாய்த்தளம் - 1 மற்றும் அகழ்வாய்வு தளம் - 02 என அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது அகழ்வாய்த்தளம் - 01 புதைகுழியில் கட்டம் கட்டமாக 54 நாட்களாக , அண்ணளவாக 30 அடி அகலமும் 50 அடி நீளமும் , 05 அடி ஆழத்திலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது குறித்த புதைகுழியில் இருந்து 231 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகவும் குவியல் ஆகவும், அமர்ந்த நிலையிலும் என சிறுவர் , சிசுக்கள் உள்ளிட்டவர்களின் என்புக்கூடுகளும் அடையாளம் கண்டு மீட்கப்பட்டிருந்தன.

அதேவேளை அகழ்வாய்வுத் தளம் - 02 இல்  மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 09 என்புக்கூடுகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/50440

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்!

1 week 4 days ago

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்!

1581307342.jpg

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. 

தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டது. 

அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது.

அதனடிப்படையில் நேற்றையதினம் (04) காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. 

இந்த நீர் சேகரிப்பு நிகழ்வானது சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது.

இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://newuthayan.com/article/அரசியல்_கைதிகளின்_விடுதலையை_வலியுறுத்தி_இந்தியாவில்_இருந்து_வந்த_விடுதலை_நீர்!

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

1 week 5 days ago

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலு வகிப்பார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966-1970 ஆம் ஆண்டு பயின்ற குமாரவடிவேல் பௌதீகத் துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர்.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.

2006 - 2007 ஆம் ஆண்டுகளில், மிக நெருக்கடியான காலகட்டத்தில், யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகப் பொறுப்போடு சிறப்புப் பணியாற்றியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 முதல் 2020 வரை அவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் அவர் பணி புரிந்தவர்.

பல்கலைக்கழக முன்னாள் சட்ட விரிவுரையாளர் சட்டத்தரணி கு.குருபரனின் தந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R

https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்-பல்கலை-வேந்தராகப்-பேராசிரியர்-ராஜரட்ணம்-குமாரவடிவேல்-நியமனம்/175-364092

மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை!

1 week 5 days ago

மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை!

adminSeptember 6, 2025

UN-Human.jpg?fit=900%2C487&ssl=1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது.

இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் அடிப்படையாக அமைந்த மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இத்தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது

இதுபோன்ற வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரியுள்ளது.

நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை https://globaltamilnews.net/2025/220156/

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

1 week 5 days ago

1707751-gunshoot.jpg?resize=750%2C375&ss

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மஹாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றிரவு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் , நீர்கொழும்பு பகுதியில் ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதேவேளை, பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

https://athavannews.com/2025/1446263

அமெரிக்காவின் அழுத்தத்தால் சீன மாநாட்டை புறக்கணித்த அரசாங்கம் ; அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து விலகுவது நாட்டுக்கு ஆபத்து - ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

1 week 5 days ago

05 Sep, 2025 | 03:30 PM

image

(எம்.மனோசித்ரா)

'பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி' என்ற தொனிப்பொருளில் சீனாவில் இடம்பெற்ற மாநாட்டை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ இதில் கலந்துகொள்ளவில்லை. அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து அரசாங்கம் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

'பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி' என்ற தொனிப்பொருளில் சீனாவில் ஆகஸ்ட் 31 – செப்டெம்பர் 1ஆம் திகதி வரை மாநாடொன்று இடம்பெற்றது. இந்த மாநாட்டில் உலகில் பலவந்த நாடுகள் பலவும் பங்கேற்றன.

அத்தோடு 10 நாடுகள் அந்த மாநாட்டில் நிரந்தர அங்கத்துவத்தையும் பெற்றுள்ளன. அத்தோடு 25 நாடுகள் பேச்சாளராகவும் பங்கேற்கின்றன. 1999இல் இந்த மாநாடு ஆரம்பமானது. 2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கை இம்மாநாட்டில் பங்கேற்று வருகிறது.

ஆனால் இம்முறை இலங்கையில் சார்பில் எவரும் பங்கேற்கவில்லை. இம்மாநாட்டில் பங்கேற்பதை இலங்கை நிராகரித்துள்ளதாக லங்கா கார்டியன் இணையதளம் தெரிவித்துள்ளது.

வெளியக அழுத்தம் காரணமாகவே இலங்கை இந்த மாநாட்டை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சீனத் தூதரகமும், பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகமும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நேரமில்லாததால் இந்த மாநாட்டுக்கு செல்லவில்லை என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அழைப்பு கிடைக்கவில்லையா என ஊடகவியலாளர்கள் கேட்ட போது, அதனை வெளிவிவகார அமைச்சரிடமே கேட்க வேண்டும் என்றும் பதிலளித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் விவகாரங்களைத் தவிர ஏனைய அனைத்தையும் அரசாங்க பேச்சாளர் அறிவார். இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட தென்னாசிய நாடுகள் அனைத்தும் இதில் பங்கேற்றன.

இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை என்ன? இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியிலிருந்த போது அப்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும் அமெரிக்க ஆதரவாளர்கள் என விமர்சித்தனர்.

வல்லரசுகள் கூறுவதற்கமையவே அவர்கள் செயற்படுவார்கள் என்றும் விமர்சித்தனர். ஆனால் அந்த அரசாங்கங்கள் அனைத்தும் இவ்வாறான மாநாடுகளை புறக்கணிக்காது அவற்றில் பங்கேற்று நாட்டுக்கு உதவிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தன. யாரும் அமெரிக்காவுக்கு பயந்து எந்தவொரு மாநாட்டிலும் பங்கேற்றாமல் இருக்கவில்லை.

அவ்வாறெனில் அநுர அரசாங்கம் ஏன் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை? சீனாவைப் போன்று ஒரு கட்சி ஆட்சியை அங்கீகரிக்கும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வாவின் கட்சி அமைத்துள்ள அரசாங்கத்திலுள்ளோர் இதனைப் புறக்கணித்துள்ளனர்.

அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே இலங்கை இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பதே தற்போது கிடைத்துள்ள தகவலாகும். ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்வதை மாத்திரமே காணக்கூடியதாக இருந்தது. அதைத் தவிர அவர் நேரமற்ற வகையில் எந்தவொரு முக்கிய நிகழ்வுகளிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

ஜனாதிபதிக்கு செல்ல முடியாவிட்டால் வெளிவிவாகார அமைச்சர் அல்லது வேறு அமைச்சர்கள் பங்கேற்றிருக்க முடியுமல்லவா? அல்லது குறைந்தபட்சம் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதுவரையாவது பங்குமற்றுமாறு ஆலோசனை வழங்கியிருக்கலாமல்லவா? அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து இவர்கள் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது நாட்டுக்கு பாரிய இழப்பாகும். இதேபோன்று தான் இவர்கள் பிரிக்ஸ் மாநாட்டையும் புறக்கணித்தனர்.

இவர்களது வெளிநாட்டு கொள்கை என்ன என்பது யாருக்கும் புரியவில்லை. இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒப்பந்தம் கையெழுத்திடுகின்றனர். ஆனால் அவற்றை பகிரங்கப்படுத்தவில்லை.

மறுபுறம் ரஷ்யர்களுக்கு இலவச வீசாவை வழங்குகின்றனர். அதிகாரத்துக்கு வர முன்னர் அமெரிக்காவை எதிர்த்தவர்கள் இன்று அந்நாட்டின் சகாக்களாகியுள்ளனர். இது ஜே.வி.பி.க்கு பாதிப்பல்ல, ஆனால் நாட்டுக்கு பெரும் பாதிப்பாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/224286

செம்மணி மனித புதைகுழி : சப்பாணி நிலையில் மனித எலும்பு கூடு மீட்பு

1 week 5 days ago

Published By: Vishnu

05 Sep, 2025 | 07:25 PM

image

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது வியாழக்கிழமை (4) குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

அதன் போது, வெள்ளிக்கிழமை அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 227 இலக்கமிடப்பட்டிருந்த என்பு கூட்டு தொகுதியே இருந்த நிலையில் காணப்படுகிறது.

செம்மணியில் இதுவரையில், கட்டம் கட்டமாக 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/224332

மன்னார் தீவுக்குள் காற்றாலை வேண்டாம் - ஒருமித்து எதிர்ப்பை தெரிவித்த சாந்திபுரம், சௌத் பார் மக்கள் கலந்துரையாடலில் இருந்து வெளியேறிய எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழுவினர்

1 week 5 days ago

05 Sep, 2025 | 05:27 PM

image

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட  எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) காலை மன்னாரிற்கு வருகை தந்தனர்.

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சௌத்பார் பகுதியில் 2 காற்றாலை கோபுரங்களும்,தாழ்வு பாட்டில் 2 காற்றாலை கோபுரங்களும், தோட்டவெளியில் 2 காற்றாலை கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.

குறித்த 5 காற்றாலை கோபுரங்களும் 20 மெகா வாட் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.மேலும் ஓலைத்தொடுவாய் பகுதியில் 06 காற்றாலை மின் கோபுரங்களும்,பேசாலை மேற்கில் 2 காற்றாலை மின் கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.குறித்த 8 காற்றாலை மின் கோபுரங்களும்   50 மெகா வாட் கொண்டதாக அமைக்க படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த 5 கிராமங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது குறித்து கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிய எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் மன்னாரிற்கு விஜயம் செய்த நிலையில் இன்று  காலை 10 மணி அளவில் முதலாவது கலந்துரையாடல் மன்னார் சாந்திபுரம் ,சௌத்பார் கிராமங்களை உள்ளடக்கி சாந்திபுரம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது அமைச்சருடன் அதிகாரிகள் வருகை தந்தனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், து.ரவிகரன்,ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,உதவி அரசாங்க அதிபர் எம்.பிரதீப்,மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன்,மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்,அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள்,கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடிய போதும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தேவை இல்லை எனவும் குறித்த காற்றாலை மின் கோபுரங்களை அமைக்க தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலை மின் கோபுரங்களால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும்,மீனவர்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

மேலும் தமது கிராம மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் காற்றாலை கோபுரங்களை மன்னார் தீவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு,எமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

எனினும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தமக்கு சாதகமான பதிலை எதிர்பார்க்க முயற்சி செய்த போதும் கலந்து கொண்ட அனைத்து மக்களும் தமது பகுதிக்குள் காற்றாலை வேண்டாம். அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என ஒருமித்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.குறித்த கலந்துரையாடல் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கருத்து கேட்ட போதும் எவ்வித பதிலும் வழங்காது அங்கிருந்து வெளியேறினர்.

DSC_0478.JPG

DSC_0508.JPG

DSC_0519.JPG

DSC_0500.JPG

https://www.virakesari.lk/article/224316

சந்நிதியான் ஆலயத்தின் மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் அதிக கட்டணம்!

1 week 5 days ago

சந்நிதியான் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் பகல் கொள்ளை!

05 Sep, 2025 | 05:32 PM

image

தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருவதோடு இன்று மாலை சப்பறத் திருவிழாவும், நாளை காலை தேர்த்திருவிழாவும், நாளை மறுதினம் காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும் நிலையில்   தொண்டமனாறு தண்ணீர் தாங்கி அருகே உள்ள மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றை பாதுகாப்பதற்கு 50 ரூபாய் அறவிடப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் அதிகம் தொடர்பில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலைய ஊழியரிடம் வினவிய போது அவர் வல்வெட்டித்துறை நகரசபையினர் தான் 50 ரூபாய் அறவிட சொன்னதாக குறிப்பிட்டு பொதுமக்களிடம் முரண்பட்டிருந்தார்.

இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, 

அவர் குறித்த பாதுகாப்பு நிலையம் தொடர்பில் ஏற்கனவே ஐந்தாறு முறைப்பாடுகள் கிடைத்து தங்களது வருமான வரி உத்தியோகத்தர் தலையிட்டு ரிக்கெட்டுக்களை பறிமுதல் செய்து எச்சரித்ததாகவும் குறிப்பிட்டார். 

வாகனப் பாதுகாப்பு நிலையத்துக்கு நகரசபை சார்பில் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 40 ரூபாயும், ஒரு ஹெல்மெட்டுக்கு 20 ரூபாய் அறவிடுமாறு உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார். 

இப்போது கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்ட அவர் குறிக்கப்பட்ட தொகையை தாண்டி பொதுமக்களிடம் கட்டணங்கள் அறவிட்டால் ஆலயத்தின் முன்னுள்ள வல்வெட்டித்துறை நகரசபையின் உற்சவகால பணிமனையில் முறையிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இவ்வாறு மோசடி இடம்பெற்றது குறித்து கேள்வி கேட்ட ஊடகவியலாளரை குறித்த பாதுகாப்பு நிலைத்தில் கடமையில் இருந்தவர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/224315

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

1 week 5 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

நுகர்வோர் விவகார அதிகாரசபையால், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுத்த சோதனைகள் ஊடாக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 14,682 ஆகும்.

அதன்படி, அரிசி சந்தைகளில் 2,800 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்பான 915 சோதனைகளும் அடங்கும்.

இந்த அரிசி சோதனைகள் தொடர்பாக நீதிமன்றங்களால் 95 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பது நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒரு கடுமையான குற்றமாவதுடன், குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச அபராதம் 500,000 ரூபாய் ஆவதுடன், நீதிமன்றங்களால் 5 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது.

அரிசி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினர்களும் சட்டத்திற்கு இணங்கி வர்த்தமானி விலைகளைப் பராமரிக்க பொறுப்புடன் செயல்படுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmf69bfd6008qo29nwtlioy5c

250 நீர்த்தேக்கங்களில் மீன் வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுப்பு

1 week 5 days ago

05 Sep, 2025 | 02:39 PM

image

மீன்வளங்களின் இழப்பைத் தடுக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 ஆண்டுகளில் 250 நிரந்தர நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவும் திட்டத்திற்கு அராசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக நீர் திறக்கப்படும்போது, வருடந்தோறும் நன்நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோகிராம் வரையிலான மீன்கள் அடித்துச் செல்லப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இனப்பெருக்க திறன் கொண்ட முதிர்ந்த மீன்களின் இழப்பு, எதிர்கால மீன்வளத்தை கடுமையாகக் குறைத்துள்ளது.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதில் நன்னீர் மற்றும் மீன்வளர்ப்பு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கையில் 95 வகையான நன்னீர் மீன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 52 இனங்கள் நாட்டிற்கு சொந்தமானவை என குறிப்பிடப்படுகிறது.

250 நீர்த்தேக்கங்களில் மீன் வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுப்பு | Virakesari.lk

கிழக்கு பல்கலையில் தஞ்சமடைந்தபோது இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேருக்கு நினைவேந்தல்

1 week 5 days ago

05 Sep, 2025 | 04:41 PM

image

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளையில் இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (5) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டமும் நடத்தப்பட்டது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முகாமில் தஞ்சமடைந்தவர்களில் 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்.

இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-09-05_at_12.41.31.jp

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அ.அமலநாயகி, கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

“எங்கே எங்கே உறவுகள் எங்கே”, “எமக்கு எமது உறவுகள் வேண்டும்”, “எமக்கு நீதி விசாரணை வேண்டும்”, “எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும்”, “1990-09-05அன்று வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் எங்கே” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

WhatsApp_Image_2025-09-05_at_12.41.27__1

அதனைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து கொண்டுசெல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.

1990.09.05 அன்று அகதி முகாமுக்குள் நுழைந்த இராணுவம் தங்களை அறிமுகப்படுத்தி, பின்னர் ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட வயதுடையவர்களை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

மைதானத்தில் வரிசையில் நிறுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட முகமூடி மனிதர்கள் முன் நிறுத்தப்பட்டு, முகமூடி மனிதர்களால் தலையாட்டப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்த சம்பவத்தை 35 வருடங்கள் கடந்தும் தங்கள் அனுபவ ரீதியாக பலரும் நினைவுகூருகிறார்கள்.

இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழுவானது பாதுகாப்பு அமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்தது.  

1990 செப்டம்பர் 5ஆம் திகதி 32 பேரை மட்டுமே விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் 24 மணிநேரத்துக்குள் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் எனவும் அவ்வேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த எயர்மார்சல் பெர்னாண்டோ பதில் அனுப்பியிருந்தார்.

இந்த பதிலை மட்டக்களப்பு சமாதானக் குழு நிராகரித்தது. விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாள் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த ஜெரி சில்வா உட்பட பாதுகாப்பு உயர்மட்டக் குழுவினரும் சென்றிருந்தனர்.

WhatsApp_Image_2025-09-05_at_12.41.30__1

இராணுவத்தினரே எமது உறவுகளை அழைத்துச் சென்றதாக மக்களும் முகாம் பொறுப்பாளர்களும் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்த வேளை கடும் தொனியில் இராணுவ அதிகாரிகள் பதிலளித்ததாக  கூறப்படுகிறது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்காக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு முன்னிலையில் பலர் சாட்சியமளித்தனர்.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே செப்டெம்பர் 5ஆம் திகதி 158 பேரையும், 23ஆம் திகதி 16 பேரையும் கைது செய்து கொண்டுசென்றனர் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் இதுவரை இவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் 35வது வருடமாக உறவுகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

WhatsApp_Image_2025-09-05_at_12.41.20.jp

WhatsApp_Image_2025-09-05_at_12.41.24__1


கிழக்கு பல்கலையில் தஞ்சமடைந்தபோது இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேருக்கு நினைவேந்தல்  | Virakesari.lk

கிளிநொச்சி ஏ-9 வீதியில் திடீரென தீப்பற்றியது கார்

1 week 5 days ago

05 Sep, 2025 | 02:06 PM

image

கிளிநொச்சி ஏ-9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வெள்ளிக்கிழமை (05) திடீரெனதீப்பற்றி எரிந்ததுள்ளது. 

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்,

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

இந்நிலையில் காரை விட்டு சாரதி இறங்கியதால் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்ட போதும் அங்கு ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் பொலிஸார், தீயை அணைத்த பின்னரே அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு பிரிவானது 24 மணி நேர சேவையை வழங்க வேண்டிய ஒரு முக்கிய நிறுவனம் ஆகும்.

இதைவிடமும் இன்னமும் பாரிய தீ விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் தீயணைப்பு பிரிவு இவ்வாறு அலட்சியமாக இருந்தால் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

எனவே, இவ்வாறான விபத்துகளோ அல்லது வேறு சம்பவங்களோ இடம்பெறும் பட்சத்தில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் உரிய நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு சென்று தமது கடமையை சரிவர ஆற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VID-20250905-WA0023_3_.jpg

VID-20250905-WA0023_2_.jpg

VID-20250905-WA0023_1_.jpg

VID-20250905-WA0021.jpg

https://www.virakesari.lk/article/224280

திருகோணமலை பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

1 week 5 days ago

05 Sep, 2025 | 11:33 AM

image

திருகோணமலை பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்கக் கோரி அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் சமூக நலன் விரும்பிகளால் வெள்ளிக்கிழமை (05)  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இது எமது வைத்தியசாலை வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப சத்திர சிகிச்சைக் கூடங்களும் தரம் உயர்த்தப்பட வேண்டும், சிற்றூழியர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

களங்களின் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும், வைத்தியர்களுக்கான விடுதி வசதிகள் வேண்டும், நோயாளிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும், மகப்பேற்றுக்காக கட்டப்பட்ட சத்திரசிகிச்சைக்கூடம் இயக்கப்பட வேண்டும், எலும்பு முறிவுக்காக தனியான தனியான களம் வேண்டும், ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது, பிண அறையில் வேலை செய்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள A&E  கட்டடம் திறக்கப்பட வேண்டும், பிரசவத்திற்காக வரும் தாய்மார்களை தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/224267

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு

1 week 5 days ago

wmremove-transformed-13.jpg?resize=750%2

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கில், விடுதலை நீர் சேகரிக்கும் நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு தற்போது விரிவுபடுத்தப்பட்டு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுசேர்க்கும் முகமாகப் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் நேற்றையதினம், காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது.

இந்த நீர் சேகரிப்பு நிகழ்வு, நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது. இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446212

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

1 week 5 days ago

FB_IMG_1739693299367.jpg?resize=750%2C37

51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கறுவாத்தோட்டம் புதிய பொலிஸ் நிலைய கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்

இதேவேளை நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில் ”இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக குற்றச் செயல்களுடனான கலாச்சாரம் காணப்பட்டது. அந்த கலாச்சாரத்தால் தோற்றம் பெற்ற செயற்பாட்டாளர்களையே அண்மையில் கைது செய்தோம்.

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்திச் செல்வதற்காக இரண்டு பாக்கிஸ்தானியர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது வெளிவந்துள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலும் தீவிரமாக ஆராயப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக எடுக்கப்படும். நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸாருக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்.

இவற்றை பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கும் பொருத்தமான இடங்கள் தேவைப்படுகின்றன” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1446194

கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை

1 week 6 days ago

கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை

04 September 2025

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஏறாவூர் நீதிவான் முன்னிலையில் மாணவர்கள் 16 பேரும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல குறித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், தினமும் மாலை 05 மணிக்கும் 06 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏறாவூர் காவல்நிலையத்துக்கு சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிவான் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் குறித்த 16 மாணவர்களும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 07 மாணவிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Hiru News
No image previewகிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை
கிழக்கு பல்கலை மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை . Most visited website in Sri Lanka.

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கோரிக்கை!

1 week 6 days ago

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கோரிக்கை!

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை பரப்பி கனடாவில் பல்வேறு தரப்பினர் பணம் வசூலித்து வருவதாக அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

அதன்படி, வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பின்வரும் கேள்விகள் பாதுகாப்பு அமைச்சிடம் கேட்கப்பட்டுள்ளது

  1. இறுதிச் சடங்கு எப்போது நடத்தப்பட்டன?

  2. இறுதிச் சடங்கு எங்கு நடைபெற்றன?

  3. இறுதிச் சடங்கு எவ்வாறு செய்யப்பட்டது? ( உதாரணம் - தகனம்)

  4. இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? அப்படியானால், அதன் அதன் இலக்கம் மற்றும் பிரதேசம்.

இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கண்ட தகவல்களை தான் கோருவதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://newuthayan.com/article/விடுதலைப்புலிகளின்_தலைவர்_தொடர்பில்_பாதுகாப்பு_அமைச்சிடம்_மனித_உரிமைகள்_செயற்பாட்டாளர்_கோரிக்கை!

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

1 week 6 days ago

நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!

700190474.jpeg

எல்ல - வெல்லவாய வீதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற இந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து 200 மீற்றர் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

காவல்துறையினர், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர்.

அத்துடன் விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/நாட்டை_உலுக்கிய_எல்ல_விபத்து_-_ஒருவர்_கைது!

களுவாஞ்சிகுடி - குருக்கள்மடம் மனித புதைகுழிகள் குறித்து முறைப்பாடளியுங்கள்; நீதியமைச்சர் பொதுமக்களிடம் வலியுறுத்தல்

1 week 6 days ago

Published By: Vishnu

04 Sep, 2025 | 06:49 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பிலும்,மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால சம்வங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். செம்மணி மனித புதைகுழி சர்வதே தரத்துடன் முறையாக ஆராயப்படுகிறது முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்? களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு பொதுக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வழங்கப்படும் தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் தகவல் வழங்குபவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் மனித புதைகுழிகள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய அப்பகுதிகளை அண்மித்த பகுதிகளுக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் கண்காணிப்பு விஜயத்தை வியாழக்கிழமை (4) மேற்கொண்டிருந்தார்.

கள கண்காணிப்பின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில்  முறையாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.இதனால் கடந்த காலங்களை காட்டிலும் காணாமலாக்கபட்டோர் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

செம்மணி மனிதப்புதைகுழியின் அகழ்வு பணிகள் சர்வதேச தரத்துடன் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் கண்காணிப்புடன் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனைய மனித புதைகுழிகள் இடத்தை காட்டிலும் குருக்கல்மடத்தின் நிலைமை மாறுப்பட்டது.2014 ஆம் ஆண்டு இந்த இடம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.2019 ஆம் ஆண்டு இந்த இடத்தை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் அகழ்வு பணிகளுக்கு தேவையான நிதியை வழங்குமாறு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் குறித்த தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அந்த அரசாங்கம் அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.கடந்த காலத்தை பற்றி பேசி இனி பயனில்லை.இருப்பினும் அந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட முடியும்.

எமது அரசாங்கம்; ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் கடந்த கால முறைப்பாடுகள் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலையீட்டுடன் முறையாக விசாரிக்கப்படுகிறது.காணாமல் போனோர் அலுவலகம் தமது பணிகளுக்குரிய கட்டளைகளை பெற்றுக்கொண்டு எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் கொழும்பில் இருந்து நீதிமன்ற சட்டவைத்திய அதிகாரிகளை அழைத்து வந்து கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.

இந்த அகழ்வு பணிகளுக்குரிய நிதி மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே இன்று (நேற்று) இவ்விடயத்துக்கு வருகைத் தந்தேன்.முறையான கண்காணிப்புக்களை தொடர்ந்து முறையான வழிமுறைகள் ஊடாக நிதி வழங்க தயாராகவே உள்ளோம்.

நடுநிலையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன், சர்வதேச தரத்துடன் பரிசோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீதியமைச்சு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.நீதி மற்றும் உண்மையை கண்டறிவது அரசாங்கத்தின் பிரதான கடப்பாடாகும்.தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால சம்வங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.குருக்கள்மடம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொதுமக்கள் அதனை எமக்கு வழங்க வேண்டும்.வழங்கப்படும் தகவல் பாதுகாக்கப்படுவதுடன், தகவல் வழங்குபவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அகழ்வு பணிகள் தொடர்பில் வைத்திய அதிகாரிகள் உட்பட துறைசார் நிபுணர்கள் வழங்கும் பரிந்துரைக்கு அமைய எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றமே தீர்மானிக்கும்.இங்கு நிதி பிரச்சினையில்லை.மனிதாபிமானம் தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

சகல மனிதப்புதைகுழிகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகிறோம்.ஐக்கிய நாடுகள் சபை, தென் ஆபிரிக்கா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் உட்பட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இம்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இவ்விடயங்கள் பேசப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.நாட்டு மக்களுக்காக  விசாரணைகளை மேற்கொள்கின்றோமே தவிர,சர்வதேச சமூகத்தை மகிழ்விப்பதற்காகவல்ல என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கு இந்த ஒருவருட காலத்தில் பலவற்றை செய்துள்ளோம்.ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதே சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக இந்த விசாரணைகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை.எமது அரசாங்கத்தின் பிரதான தரப்பான மக்கள் விடுதலை முன்னணியினர் 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் இவ்வாறே பாதிக்கப்பட்டார்கள்.

காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்? சகலருக்கும் நீதி மற்றும் நியாயம் கிடைக்கும் வகையில் செயற்படுவோம்.களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு பொதுக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.நிச்சயம் நீதியை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/224228

Checked
Thu, 09/18/2025 - 07:53
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr