அரசியல் அலசல்

ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன - நிலாந்தன்

2 months 2 weeks ago

ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன - நிலாந்தன்

G1Y021ZXoAAE33w.jpg

மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை. திருக்கோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம் ஆண்டு ஐனவரி இரண்டாந்திகதி இந்த ஐந்து மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட தனது மகனுக்காக இறக்கும்வரை மனோகரன் போராடினார். அவர் அணுகாத மனித உரிமை அமைப்பு இல்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைவரை அவர் போனார். ஆனால் அவருக்கு இறக்கும்வரை நீதி கிடைக்கவில்லை.

இடையில் 2015இல் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில், அதாவது நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தின் காலத்தில், அதைவிட குறிப்பாக ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால், நிலைமாறு கால நீதிக்குரிய-பொறுப்புக் கூறலுக்குரிய – தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய அரசாங்கத்தின் காலத்தில், குற்றஞ் சாட்டப்பட்ட அதிரடிப் படையினர் சிலர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். அதற்குப்பின் யாரும் தண்டிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

மருத்துவர் மனோகரன் உயிர் பிரியும்வரை போராடினார். அவருடைய ஏனைய பிள்ளைகளுக்கும் அவருக்கும் ஆபத்து வந்தபோது நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் அவரை நினைவு கூரும் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு செம்மணி வளைவில் “அணையா விளக்கு” போராட்டத்தை ஒருங்கமைத்த “மக்கள் செயல்” என்ற அமைப்பு அந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியது.

அது ஒரு நினைவு கூரலாகவும் அதேசமயம் நீதிக்கான மக்களின் போராட்டம் தொடர்பான ஆய்வு அரங்காகவும் அமைந்தது. அதில் அரசியல் விமர்சகர்களும் அரசியல்வாதிகளும் உரையாற்றினார்கள். குறிப்பாக அதில் உரையாற்றிய கஜேந்திரகுமார், மருத்துவர் மனோகரன் தொடர்பான தனது நினைவைப் பகிர்ந்து கொண்டார்.

லண்டனில் இருந்து மனோகரன் கஜேந்திரகுமாருடன் கதைப்பதற்கு தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் கதைக்கத் தொடங்கியதும் அழத் தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர் அழுதிருக்கிறார். அதன் பின்னர் சுதாகரித்துக் கொண்டு சிறிது உரையாடியிருக்கிறார். அவரை மீண்டும் ஐரோப்பிய நாடு ஒன்றில் சந்தித்ததாக கஜேந்திரகுமார் தனது உரையில் கூறினார். அச்சந்திப்பின் போதும் கிட்டத்தட்ட அரை மணித்தியாளத்துக்கு மேலாக மருத்துவர் மனோகரன் அழுதிருக்கிறார்.

அன்றைய நிகழ்வில் அவருடைய மார்பளவு உருவப்படம் பெருப்பிக்கப்பட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்தது. துக்கமும் விரக்தியும் நிறைந்த மனோகரனின் கண்கள் அதைப் பார்ப்பவர்களிடம் எதையோ எதிர்பார்ப்பது போலிருந்தது.

558804078_122157287384637056_45169079237

அந்த நிகழ்வு நடந்த அடுத்த நாள் திங்கட்கிழமை ஜெனிவாவில் அறுபதாவது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பு இன்றி அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எந்த நாடும் அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை.

அந்தத் தீர்மானம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுபோல நீர்த்துப்போன ஒரு தீர்மானமாகக் காணப்படுகிறது. வழமைபோல அதில் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும், 13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் போன்ற திரும்பத் திரும்ப வரும் விடையங்கள் உண்டு. அதுபோலவே போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பும், அரச படைகளும் விடுதலைப் புலிகள் இயக்கமும் பொறுப்புக்கூற வேண்டும், விசாரிக்கப்பட வேண்டும் என்ற விடயமும் அதில் உண்டு.

கடந்த 16 ஆண்டுகளாக மனித உரிமைகள் பேரவையில் இதுதான் நடந்து வருகிறது. இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும்,13ஐ முழுமையாக அமல்படுத்தி மாகாண சபைகளை இயங்க வைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகின்றன. அதேசமயம் புதிய ஆட்சிகள் வரும் பொழுது குறிப்பாக ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சிகள் வரும்போது அவற்றை அரவணைத்துப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐ நா முயற்சித்து வருகிறது. இம்முறை தீர்மானமும் அந்த நோக்கத்திலானதுதான்.

ஆனால் அரசாங்கம் தெளிவாகக் கூறுகிறது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைதான் உண்டு. வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று. அதேசமயம் ஏற்கனவே 2021ஆம் ஆண்டிலிருந்து ஒரு பன்னாட்டுப் பொறிமுறை மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்காவை பொறுப்புக்கூற வைப்பதற்கான அலுவலகம் என்று அழைக்கப்படும் அந்தக் கட்டமைப்பானது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரித்து வருகிறது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வந்து விசாரணைகளை செய்து சான்றுகளையும் சாட்சிகளையும் உறுதிப்படுத்துவதற்கு இதுவரையிலும் இருந்த எந்தவொரு அரசாங்கமும் விசா வழங்கவில்லை. கடந்த ஓராண்டு காலமாக அநுர அரசாங்கமும் விசா வழங்கவில்லை.

அதேசமயம் உள்நாட்டுப் பொறி முறையைப் பொறுத்தவரையிலும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ரிங்கோ5 என்று அழைக்கப்படுகின்ற ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் உட்பட இன்றுவரையிலும் நடந்த எத்தனை படுகொலைகளுக்கு நீதி கிடைத்திருக்கிறது? கடந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண்டு காலப் பகுதிக்குள் மாணவி கிருசாந்தியின் கொலை வழக்கில்தான் குற்றவாளிகள் ஓரளவுக்காவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு குற்றவாளி இன்றுவரை தலைமறைவாக இருக்கிறார். மற்றொரு குற்றவாளியாகிய லான்ஸ் கோப்ரல் சோமரட்ன ராஜபக்ஷ அக்குற்றங்களில் தனக்குச் சம்பந்தமில்லை என்றும், தனக்கு மேலதிகாரிகள் இட்ட கட்டளைகளையே தான் நிறைவேற்றியதாகவும் பகிரங்கமாகக் கூறி வருகிறார். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, கடந்த 20 ஆண்டுகளாக அவர் அவ்வாறு கூறி வருகிறார். அவர் தனது வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிட்டிருக்கும் அதிகாரிகள் யாரும் இதுவரையிலும் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அனுர அரசாங்கம் கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் 80க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறது. இவர்களில் தரைப்படை, கடற்படை பிரதானிகள், போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள், பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பல வகையினரும் அடங்குவர். ஆனால் கைது செய்யப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த யாருமே இன முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர்களில் சிலர் மீது இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்டு.

உதாரணமாக ஒரு கடற்படைப் பிரதானி மீது அவ்வாறான குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இன்றுவரை அரசாங்கம் கைது செய்திருக்கும் எந்த ஒரு படைத் தரப்பைச் சேர்ந்தவர் மீதும் இன முரண்பாடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. அரசாங்கம் அந்த விடயத்தில் மிகத்தெளிவாக இருக்கிறது.

ஆனால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மூலம் உண்மையைக் கண்டடையலாம், அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐநா நம்புகின்றதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் அதைத்தான் பிரதிபலிக்கின்றது.

facebook_1759035290243_73779287540090932

திங்கட்கிழமை மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த மனோகரன் நினைவு நிகழ்வில் பேசியவர்களில் ஒருவர் திருக்கோணமலையைச் சேர்ந்த ரஜீவ் காந்த். அவர் ஓர் அரசியல் செயற்பாட்டாளர். தென்னிலங்கையில் நடந்த “அரகலய” தன்னெழுச்சிப் போராட்டங்களில் காணப்பட்ட தமிழர்களில் முக்கியமானவர்.

இவர் மருத்துவர் மனோகரனின் மகனின் பாடசாலையில் சமகாலத்தில் படித்தவர். அந்த ஐந்து மாணவர்களும் கொல்லப்பட்ட சம்பவத்தில் அரும்பொட்டில் உயிர் தப்பியவர். அந்த மாணவர்கள் வழமையாக ஒரு சிமெண்ட் கட்டில் உட்கார்ந்திருந்து கதைப்பதுண்டாம். அவர்களோடு சேர்ந்து இருந்திருக்க வேண்டிய ரஜீவ் அன்றைக்கு வேறொரு அலுவல் காரணமாக அங்கே வரப் பிந்திவிட்டது. அதற்குள் எமன் அவரை முந்திக் கொண்டு விட்டான்.

அந்த நினைவு நிகழ்வில் பேசும் பொழுது அவர் சொன்ன பல விடயங்களில் ஒன்று அந்த ஐந்து மாணவர்களில் ஒருவராகிய யோகராஜா ஹேமச்சந்திராவின் மூத்த சகோதரனைப் பற்றியது. கொல்லப்பட்ட தனது தம்பியின் பூத உடலை அழுதழுது தூக்கி கொண்டு வரும் அவருடைய அண்ணனை இப்பொழுதும் அதில் சம்பந்தப்பட்ட ஒளிப்படங்களில் காணலாம் என்று ரஜீவ் சொன்னார். ஆனால் அந்த அண்ணனும் இப்பொழுது இல்லை.

ஹேமச்சந்திரனின் மூத்த சகோதரன் திருக்கோணமலையில் இயங்கிய “அக்சன் பெய்ம்” (Action Against Hunger) என்று அழைக்கப்படுகின்ற பிரான்ஸை மையமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனத்தில் வேலை செய்தவர். நாலாம் கட்ட ஈழப் போரின் தொடக்க நாட்களில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பதினேழு உள்ளூர் ஊழியர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹேமச்சந்திரா கொல்லப்பட்ட ஐந்தே மாதங்களில் அவருடைய அண்ணனும் மூதூரில் தனது சக ஊழியர்களோடு கொல்லப்பட்டு விட்டார். அந்த குடும்பத்துக்கு ஐந்து மாதங்களில் இரண்டு இழப்பு.

அந்தக் குடும்பத்தில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரண்டு இழப்புக்களுக்கும் இன்றுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. ஆனால் ஐநாவும் பெரும்பாலான உலக நாடுகளும் நம்புகின்றனவா, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக இலங்கையில் நிலைமாறு கால நீதியை நிலைநாட்டலாம் என்று?

ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் கூடிய கருத்தரங்கில் பேசிய யாருமே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை நம்பவும் இல்லை. அவர்கள் பேசிக் கொண்டிருந்த மேடையில் பின்னணியில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவர் மனோகரனின் விழிகள், அழுதழுது களைத்துப் போன அந்த விழிகள், அங்கிருந்து எல்லாரையும் எதிர்பார்ப்போடு உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தன.

https://www.nillanthan.com/7832/

தமிழ் மக்கள் ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன்.

2 months 2 weeks ago

united-nations-assembly.jpg?resize=672%2

தமிழ் மக்கள்  ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன்.

எர்னெஸ்ற் ஹேமிங்வே ஓர் அமெரிக்க எழுத்தாளர்.அவர் எழுதிய A  Farewell to Arms- “போரே நீ போ” என்ற நாவல் உலகப் புகழ்பெற்றது. கதையின் களம் இரண்டாம் உலக மகாயுத்தத் சூழலுக்குரியது. நாவலின் மையப் பாத்திரம் போரினால் சப்பித் துப்பட்ட ஒரு கட்டத்தில் பின்வரும் பொருள்படக் கூறும் “இப்பொழுது சமாதானம்,அமைதி,போர் நிறுத்தம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டன.வீதிகளின் பெயர்கள்,ரெஜிமென்ற்களின் பெயர்கள்,படைப்பிரிவின் பெயர்கள்தான் அவற்றுக்குரிய அர்த்தத்தோடு காணப்படுகின்றன.” என்று.

இது கடந்த 16ஆண்டுகளாகத் தமிழ் அரசியலில் கூறப்பட்டு வருகின்ற “நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல்,நிலைமாறுகால நீதி”போன்ற வார்த்தைகளுக்கும் பொருந்துமா?

மீண்டும் ஓர் ஐநா தீர்மானம் கடந்த ஆறாம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.கடந்த 16 ஆண்டுகளிலும் இவ்வாறு 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.இந்த தீர்மானங்களால் தமிழ் மக்களுக்குக் கிடைத்தவை என்ன?

கடந்த 16 ஆண்டுகளிலும் போர் முடிந்த கையோடு ஐநா மகிந்தவை பாராட்டியது.வெல்லக் கடினமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை தோற்கடித்தமைக்காக ஐநாவில் மகிந்தவுக்கு பாராட்டு பத்திரம் கிடைத்தது.ஆனால் சில ஆண்டுகளிலேயே ஐநாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் மஹிந்த சீனாவை நோக்கிச் சாயத் தொடங்கியது.இரண்டாவது காரணம் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உழைப்பு.

இந்த இரண்டு காரணங்களின் விளைவாகவும் 2012இலிருந்து ஐநா தீர்மானங்கள் மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக வரத் தொடங்கின.ஆனால் மஹிந்த அரசாங்கத்தை அசைக்க முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த ஆட்சி மாற்றத்தில் மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து மஹிந்தவைத் தோற்கடித்தன.ரணில்-மைத்திரி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தன.அந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அதற்கு கால அவகாசத்தை வழங்குவதற்காக அப்பொழுது நடக்கவிருந்த ஐநா கூட்டத்துடன் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.அக்கூட்டத் தொடரில்தான் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது நிலைமாறு கால நீதிக்கான தீர்மானம்-பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்-நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பொழுது அப்போது இருந்த இலங்கை அரசாங்கம் அதாவது நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற அரசாங்கம் அந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது.

அதன்பின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஐநா நிலை மாறு கால நீதிச் செய்முறைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. ஆனால் 2018 இல் நடந்த யாப்புச் சதி முயற்சி ஒன்றின்மூலம் மைத்திரிபால சிறிசேன நிலைமாறு கால நீதி முன்னெடுப்புகளைத் தோற்கடித்தார்.அதாவது நிலை மாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி அதனைக் காட்டிக் கொடுத்தார்.விளைவாக நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட யாப்புருவாக்க முயற்சிகள் இடைக்கால வரைபுடன் நின்று விட்டன.

அந்த நிலைமாறுகால நீதிச் செய்முறைகளை சுதந்திரன் தோல்வியுற்ற பரிசோதனை என்று சொன்னார்.2021ஆம் ஆண்டு ஐநா கூட்டத் தொடரை முன்னிட்டு கட்சிகளை இணைத்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கான சந்திப்பு வவுனியாவில் நடந்த பொழுது அதில் வைத்து சுமந்திரன் “ஆறாண்டுகளாக ஒரு பரிசோதனை செய்தோம்  அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்ற பொருள்படச் சொன்னார்.இத்தனைக்கும் அவர்தான் நிலைமாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளி.

நிலைமாறு கால நீதி என்ற கருத்துருவம் நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கும் ஒரு நாட்டுக்குத்தான் பொருந்தும்.இலங்கையில் அப்படி என்ன நிலை மாற்றம் ஏற்பட்டது? யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் யுத்தத்தை தோற்றுவித்த அரசியல் காரணிகள் அப்படியே உள்ளன.அதற்காக உருவாக்கப்பட்ட படைக் கட்டமைப்பும் புலனாய்வுக் கட்டமைப்பும் அப்படியே உள்ளன.கடந்த 15 ஆண்டுகளின் பின் மாற்றம் என்று கூறிக்கொண்டு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால்கூட இன்றுவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க முடியவில்லை என்பது ஓர் ஆகப்பிந்திய உதாரணம்.அந்தச் சட்டத்தை கடந்த மாதம் நீக்க போவதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தது.

எனவே இலங்கைத்தீவில் நிலைமாற்றம் ஏற்படவில்லை.நிலைமாற்றம் ஏற்படாத போது நிலைமாறுகால நீதியை எப்படி ஸ்தாபிப்பது?அப்படி ஸ்தாபிக்க முற்படுவது என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களே நீதி விசாரணை செய்வதுதான்.எனவே நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் தோற்றுப் போனதற்கு மைத்திரி மகிந்தவிடம் அப்பம் சாப்பிட்டுவிட்டு குத்துக்கரணம் அடித்தது மட்டும் காரணமில்லை. நிலைமாற்றம் இல்லாத ஓர் அரசியல் சூழலில் நிலைமாறு கால நீதியை அமுல்படுத்தலாம் என்று நம்பியதுதான் தவறு.

அதன் பின் கோத்தபாய வந்தார்.ஐநா மீண்டும் இறுக்கிப்பிடித்தது. முடிவில் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளில் ஏற்பட்ட பின்னடைவுகளின் விளைவாக,ஐநா 2021ஆம் ஆண்டு மற்றொரு தீர்மானத்தின்மூலம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தை உருவாக்கியது.இந்த அலுவலகமானது இலங்கை தீவில் போர்க்களத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் இன்று வரை சேகரித்து வருகிறது.கடந்த ஆறாம் தேதி நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானமானது மேற்படி அலுவலகத்தைத் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இயங்க அனுமதிக்கின்றது.

எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம் கடந்த 16 ஆண்டுகளிலும் ஐநா மைய தமிழ் அரசியலின்மூலம் கிடைத்தவை எவையெவை என்று பார்த்தால், இடையில் நிறுத்தப்பட்ட பலவீனமான நிலை மாறுகால நீதிச் செய்முறைகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் இவை இரண்டும்தான்.

 

நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் குறிப்பாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் பொருட்படுத்தவில்லை;நிராகரித்து விட்டார்கள்.அதேசமயம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அலுவலகத்தைச் சேர்ந்த ஐநா அலுவலர்கள் இலங்கைக்குள் வர இன்றுவரை அனுமதியில்லை.அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் அதுதான் நிலைமை.அந்த அலுவலகத்தைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறைக்கூடாகவே பொறுப்புக் கூறமுடியும் என்று அரசாங்கம் கூறிவருகிறது.

 

இதில் ஐநா இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறதா? ஒருபுறம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம்.அது பன்னாட்டுப் பரிமாணத்தைக் கொண்டது. இன்னொருபுறம் உள்நாட்டுப் பொறிமுறையை  வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகளின்மூலம் பலப்படுத்தலாம் என்று எதிர்பார்ப்பது.அதாவது குற்றம் சாட்டப்படும் தரப்பையே விசாரிப்பதற்கு அனுமதிப்பது.

 

மனித உரிமைகள் பேரவையின் மேற்படி நிலைபாட்டை எதிர்த்தே பாதிக்கப்பட்ட மக்கள் செம்மணியில் மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையை எரித்தார்கள்.

 

கடந்த ஆறாம் திகதி ஐநா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக செம்மணி வளைவில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவ அமைப்புகளும் ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து அந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள்.இப்போராட்டத்தின் முடிவில் செம்மணியில் அணையா விளக்கு இடம்பெற்ற இடத்தில்  வைத்து, ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை,பாதிக்கப்பட்ட அம்மாக்களால் எரிக்கப்பட்டது.

 

இதில் ஒரு செய்தி உண்டு. எந்த ஐநாவை தலையிட வேண்டும் என்று கேட்டுத் தமிழ் மக்கள் ஊர்வலம் போனார்களோ,எந்த ஐநாவில் நீதி கேட்டு தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்களோ,எந்த ஐநா மன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு ஆண்டும் கடிதங்கள் எழுதப்படுகின்றனவோ,எந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வர வேண்டும் என்று கேட்டு ஒரு சுடரை மூன்று நாட்கள் அணியாமல் ஏற்றி வைத்திருந்தார்களோ,அதே இடத்தில்,அதே ஆணையாளருடைய அறிக்கையைப் பாதிக்கப்பட்ட அம்மாக்கள் ஏரிக்கும் ஒரு நிலைமை.கடந்த 16 ஆண்டு கால ஐநாவை நோக்கிய அரசியலில் தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருவதை அது காட்டுகிறது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்ற சொற்கள் அவற்றின் புனிதத்தை இழக்கத் தொடங்கி விட்டதையும் அது காட்டுகின்றதா ?

https://athavannews.com/2025/1450118

இலங்கையின் வெளியுறவில் அமெரிக்கா - சீனா கொள்கை மோதல்

2 months 2 weeks ago

12 Oct, 2025 | 09:26 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது, தற்போது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக மேற்குலக சார்பு நிலையில் ஒரு தரப்பும்,  மார்க்சிசம் அல்லது சோசலிச சீன சார்பு கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள் செயல்படுகின்றமையானது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிலையான போக்கில் முன்னெடுப்பதற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன.

எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாது இலங்கையின் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். குறிப்பாக மேற்குலக நாடுகளுடன் இவர்கள் கூடுதலான உறவை வளர்க்க விரும்புகின்றனர். இந்த அணுகுமுறை காரணமாகவே அமெரிக்காவின் பக்கமிருந்து பெரும் ஆதரவுகள் அரசாங்கத்திற்கு கிடைத்தன.

ஆனால் மார்க்சிசம் அல்லது சோசலிச சார்பு கொள்கையில் இருக்கும் ஆளும் கடசியின் மற்றொரு தரப்பான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் செல்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

இந்தக் கடுமையான இழுபறி காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு முக்கியமான அம்பாந்தோட்டை சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கெரவலப்பிட்டிய மற்றும் சப்புகஸ்கந்த போன்ற பல பாரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் முடங்கியுள்ளன.

சமீபத்தில், அரசாங்கம் இந்த கொள்கை ரீதியான நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் சில திட்டங்களை முன்னெடுத்திருந்தது. கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் எஞ்சிய பணிகள் மீண்டும் சீனாவுக்கு வழங்கியது. இதற்கான கடனை அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக சீன யுவானில் பெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.

மேலும் அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையத்திற்கான சினோபெக் நிறுவனம் கேட்ட 40 வீத சந்தை வாய்ப்பை வழங்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த மாற்றத்தைக் கண்காணித்த அமெரிக்கா உடனடியாக எதிர்வினையாற்றியது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நியூயோர்க் விஜயத்தின் போது, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  அமெரிக்க தரப்புடன் கலந்துரையாடல்களில் இதன் போது ஈடுப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவுக்கு வழங்குவது குறித்து அமெரிக்காவின் கடுமையான கவலைகள் உள்ளதாக இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கர் நேரடியாகக் கூறியிருந்ததாகவும், அதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இது முந்தைய அரசாங்கத்தின் முடிவு என்றும், மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கைக்கு முதலீடுகள் தேவைப்படும ;போது அமெரிக்கா இன்னும் எந்த முதலீட்டையும் செய்யவில்லை என்றும் அரசாங்கம் பதிலளித்துள்ளது.

இதற்குப் பின்னரே, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அஞ்சுவதாகவும், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையில் ஒத்திசைவின்மை இருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவரான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது,  சீன முதலீடுகள் குறித்து விவாதிக்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக, ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 20 வீத வரியைக் குறைப்பது மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இலங்கையின் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு கரையோர பாதுகாப்பு கப்பல் மற்றும் கண்காணிப்பு சீ1-30 ஹெலிகொப்டர் வழங்க அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227509

"நா.த.க., த.வெ.க கட்சிகளுக்கு இளைஞர்கள் அதிகளவில் திரளும் காரணம் இதுதான்!" - பேரா. அருணன் நேர்காணல்

2 months 3 weeks ago

நாம் தமிழர் கட்சி மெய்யான தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கிறது என்றால், மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க ஆகியவற்றை எதிர்த்து எத்தனை போராட்டங்களை சீமான் நடத்தியிருக்கிறார்?" - பேரா. அருணன்

Published:51 mins agoUpdated:51 mins ago

விஜய் - சீமான் | த.வெ.க - நா.த.க.

விஜய் - சீமான் | த.வெ.க - நா.த.க.

Join Our Channel

3Comments

Share

நாம் தமிழர் கட்சியிலும், தமிழக வெற்றிக் கழகத்திலும் இளைஞர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டிருப்பது, தமிழ்த் தேசிய அரசியல், மாநில உரிமைகள் போன்ற விவகாரங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் விகடனுக்கு அளித்திருக்கும் நேர்காணல் இது...

"ஒரு காலத்தில், திராவிட இயக்கங்களிலும், பொதுவுடைமைக் கட்சிகளிலும்தான் இளைஞர்கள் அதிகளவில் இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளில் அதிகமான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். என்ன காரணம்?"

அருணன்

அருணன்

"சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை எடுத்துக்கொண்டால், 2019 தேர்தலில் தனித்து நின்று 4% வாக்குகளைப் பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8% வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. சீமான் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது வேறு விஷயம். அவர்களால் ஒரு எம்.எல்.ஏ சீட், ஒரு எம்.பி சீட் கூட ஜெயிக்க முடியவில்லை. ஆனால், அவர்களின் வாக்கு சதவிகிதம் இரு மடங்காக அதிகரித்தது. அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்."

"ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், சீமானுக்கும் உங்களுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு, மக்கள் நலக் கூட்டணியைவிட அதிக வாக்குகளைப் பெற்றுக்காட்டுகிறேன் என்று சீமான் சவால் விடுத்தார். தற்போது 8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கும் அவர், சவாலில் வெற்றிபெற்றுவிட்டார்தானே?"

“இல்லை. அது, 2016-ம் ஆண்டு நிகழ்ந்தது. அந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி பெற்ற வாக்குகளைவிட நா.த.க குறைவான வாக்குகளைத்தான் பெற்றது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை ‘சினிமாக்காரர்’ என்று சீமான் கிண்டல் செய்தார். ‘கம்யூனிஸ்ட் இயக்கம் சினிமாக்காரர் பின்னாடி போயிடுச்சு’ என்று அவர் விமர்சித்தார். அப்போதுதான், ‘நீங்களும் சினிமாக்காரர்தானே.. ஒரு சினிமாக்காரர் இப்படிப் பேசலாமா?’ என்று நான் கேட்டேன். அப்போதுதான், வார்த்தைகள் தடித்தன.

சீமான்

சீமான்

அப்போது விடப்பட்ட சவாலில், அன்றைக்கு அவர் தோற்றார். அதை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ‘மக்கள் நலக் கூட்டணிதானே கூடுதலா வாக்குகள் வாங்கியிருக்கு... நா.த.க குறைவாகத்தானே வாங்கியிருக்கு.. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று என்னிடம் கேட்டார்கள். ‘அட இருக்கட்டுங்க... நான் சொன்னது உண்மையா இருந்துருக்கு... அதனால என்ன... அவர் அவருடைய வழியில நல்லபடியா கட்சி நடத்தட்டும்’ என்று சொன்னேன். ஆனால், 2019-ல் நிலைமை மாறி, 2024-ல் இரண்டு மடங்கு வாக்குகள் நா.த.க-வுக்கு அதிகரிக்கின்றன. அதற்கு என்ன காரணம் என்பதை கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட இயக்கமும் ஆய்வு செய்ய வேண்டும்."

"இளைஞர்களை ஈர்க்கும் வகையில் சீமான் பேசுகிறார்... அதனால்தான், அவரை நோக்கி ஏராளமான இளைஞர்கள் வருகிறார்கள் என்ற கருத்து சிலரிடம் இருக்கிறது. அது சரியா?"

"அதற்காக மட்டுமே இளைஞர்கள் அந்தக் கட்சியை நோக்கிப் போகிறார்கள் என்று பார்க்க முடியாது. தேசிய இன உணர்வு... தமிழ்த் தேசிய இன உணர்வு... அதற்காகத்தான் அங்கு போகிறார்கள். ஆனால், அந்த விஷயத்தை அவர் சரியாக முன்வைக்கவில்லை.

இளைஞர்கள் மத்தியில தமிழ்த் தேசிய இன உணர்வு இருக்கிறது. என் பார்வையில், சீமான் பேசும் தமிழ்த் தேசியவாதம் போலியானது. தமிழர்களாகிய நமக்கு ஒரு நல்ல மரபு உண்டு. நம்முடைய தாய்மொழியாம் தமிழுக்கு ஒரு தொன்மை உண்டு. அதற்கு இன்று பொதுவாக ஆபத்து வருகிறது. இலங்கைத் தமிழர் பிரச்னை போன்ற விவகாரங்களையொட்டி, அந்த உணர்வு இயல்பாக அவர்களிடம் வருகிறது. அதை அவர் பயன்படுத்திக்கொள்கிறார்.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

அவருடைய போக்கு சரியல்ல... அவர் காட்டுகிற பாதை சரியல்ல என்பது என்னுடைய மதிப்பீடு. ஆனால், அவருக்குப் பின்னால் செல்லும் இளைஞர்கள் அதையெல்லாம் ஆய்வுசெய்யவில்லை. சீமானைப் பொறுத்தளவில், அவர் தமிழ் பற்றிப் பேசுகிறார். தமிழர்கள் பற்றிப் பேசுகிறார். தமிழர்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிறார். அதனால், அவர் பின்னால் போகிறார்கள்."

"சமீபத்தில் நாம் தமிழர் கட்சி, மாடுகள் மாநாடு, மரங்கள் மாநாடு, மலைகள் மாநாடு என்று நடத்துகிறார்கள். அதை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும், தி.மு.க-வினரும் கிண்டல் செய்கிறார்கள். ஆனால், அந்த மாநாடுகளின் நோக்கம் நியாயமான ஒன்றாக இருக்கிறது. உதாரணமாக, இன்றைக்கு மேய்ச்சல் நிலங்கள் காணாமல் போய்வரும் நிலை இருப்பதால், அதை முன்வைத்து மாடுகள் மாநாடு நடத்துகிறார்கள். அதை கேலியாகப் பார்ப்பது சரியா?"

"இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பு, ஏற்கெனவே நான் ஆரம்பித்த கருத்தை சொல்லி முடித்துவிடுகிறேன். நாம் தமிழர் கட்சி 8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஒரு நியாயமான தேசிய இன உணர்வுதான் காரணம். தமிழ்த் தேசியம் தொடர்பான ஓர் உரிமைக்குரல் அந்த இளைஞர்களின் நெஞ்சுக்குள் ஒலிக்கிறது. ஆகவே, அவர்கள் அங்கு போகிறார்கள். ஆனால், சீமான் பேசும் தமிழ்த் தேசியம் அடிப்படையில் போலியானது.

நாம் தமிழர் கூட்டம்

நாம் தமிழர் கூட்டம்

நியாயமான உணர்வு கொண்டிருக்கும் அந்த இளைஞர்கள் தவறான வழியில் போகிறார்கள். அந்த இளைஞர்களை வென்றெடுப்பது குறித்து திராவிட இயக்கங்களும், பொதுவுடைமை இயக்கங்களும் யோசிக்க வேண்டும்."

"சீமான் பேசுவது போலியான தமிழ்த்தேசியம் என்று எதன் அடிப்படையில் விமர்சிக்கிறீர்கள்?"

"சீமான், தி.மு.க-வை கடுமையாக விமர்சிக்கிறார். திராவிட இயக்கங்களையும், திராவிட கட்சிகளையும் கடுமையாக எதிர்க்கிறார். இவர்கள்தான், தமிழ்த் தேசிய உரிமைக்கான எதிரிகள் என்று காண்பிக்கிறார். இதில்தான் பிரச்னை இருக்கிறது. தி.மு.க உள்ளிட்ட திராவிட இயக்கங்களை தமிழ்த்தேசியத்தின் எதிரி என்று சொல்லும் சீமான், பா.ஜ.க-வை எதிரி என்று சொல்கிறாரா? போகிற போக்கில் ஊறுகாய் மாதிரி பா.ஜ.க-வை லேசாக விமர்சிப்பார். ஆனால், முழு எதிர்ப்பையும் தி.மு.க மீது மட்டுமே காண்பிப்பார்.

அவர்களும் தமிழ்த் தேசியம்தானே பேசுகிறார்கள் என்று சொன்னால், ‘இல்லை.. திராவிடம் வேறு தமிழ் வேறு’ என்று வாதம் செய்கிறார் சீமான். அதற்குள் போனால் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல முடியும். ஆனால், போலி தமிழ்த் தேசியவாதத்தால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் அங்கு போகிறார்கள் என்றால், அந்த இளைஞர்களை வென்றெடுப்பதற்கு, மெய்யான தமிழ்த் தேசியத்தைப் பேசினால் மட்டும் போதாது, அதற்கான உரிமைப் போராட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்பது என் கருத்து."

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

"போலி தமிழ்த் தேசியவாதம், மெய்யான தமிழ்த் தேசியவாதம் என்கிறீர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"போலி தமிழ்த் தேசியம் என ஏன் சொல்கிறேன்? இன்றைக்கு தமிழ்த் தேசியத்துக்கு ஆபத்து என்பது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தாலும், ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க-வினாலும் வருகிறது. மொழியிலிருந்து, மாநிலங்களை ஒழிப்பதிலிருந்து, ஆளுநர் மூலம் மாநில அரசுக்கு இடையூறு செய்வதிலிருந்து, எல்லாவற்றையும் ஒன்றிய பா.ஜ.க அரசுதானே செய்கிறது. நாம் தமிழர் கட்சி மெய்யான தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கிறது என்றால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வை அவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டாமா? மெய்யான தமிழ்த் தேசியம் உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது பாய வேண்டும்.

மாநிலங்களே இருக்கக்கூடாது என்கிறார்கள். ஜம்மு காஷ்மீரை ஒழித்துவிட்டார்கள். ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக பிரதமர் மோடி கொண்டாடுகிறார். நாணயமும், தபால் தலையும் வெளியிடுகிறார். இந்த பா.ஜ.க-வுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டிய சீமான், மாடுகள் மாநாடு, மரங்கள் மாநாடு என்று நடத்திக்கொண்டிருக்கிறார். இதன் பின்னால் இருக்கும் சில பொருளியல் உண்மைகளை நான் மறுக்கவில்லை. இந்த மாநாடுகளை நான் ஒருபோதும் கேலி செய்யவில்லை.

மேய்ச்சல் நிலங்கள் பறிபோவதை எதிர்த்து மாடுகள் மாநாடு, சரியானது. சூழலியலைப் பாதுகாக்க மரங்கள் மாநாடு, இது சரியானது. தமிழ்நாட்டின் நீர் உரிமையைப் பாதுகாக்க கடல் மாநாடு, அதுவும் சரியானது. ஆனால், அவர்கள் இதிலேயே இருப்பதுதான் பிரச்னை. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு நடைபெறுகிறதே... அதை எதிர்த்து எத்தனை போராட்டம் நடத்தியிருக்கிறீர்கள்? மாநிலத்துக்கான நிதி ஆதாரங்களை மறுக்கிறார்களே... அதை எதிர்த்து எத்தனை போராட்டம் நடத்தினீர்கள்? மோசமான கல்விக் கொள்கையை எதிர்த்து எத்தனை போராட்டம் நடத்தினீர்கள்?

சீமான்

சீமான்

Chris

மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு எதிராகத்தான் தேசிய இன உணர்வுப் போராட்டம் வெடித்துக்கிளம்ப வேண்டும். ஆனால், சீமான் அப்படியான போராட்டங்களை முன்னெடுக்கவில்லையே. அதனால்தான், போலி தமிழ்த் தேசியவாதம் என்று விமர்சிக்கிறேன்.""புதிதாகத் தொடங்கப்பட்ட விஜய் தலைமையிலான த.வெ.க., பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களை வழிகாட்டிகளாக முன்னிறுத்துகிறது. அதற்கு என்ன காரணம்?"

"பெரியார் உள்ளிட்ட தலைவர்களுக்கு இருக்கக்கூடிய நல்ல மரபுகளுக்கு விஜய் சொந்தம் கொண்டாடுகிறார். அதற்கான அவசியம் இருக்கிறது என்பதை விஜய் உணர்ந்திருக்கிறார். அல்லது, விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் உணர்ந்திருக்கிறார்கள்."

TVK Vijay | த.வெ.க - விஜய்

TVK Vijay | த.வெ.க - விஜய்

"அப்படியென்றால், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் த.வெ.க தொண்டர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?"

"த.வெ.க-வில் இருப்பவர்கள் அடிப்படையில் விஜய்யின் ரசிகர்கள். விஜய் போய் நின்றுகொண்டு, ‘என்னைப் பாருங்கள்... இதோ நான் சொல்கிறேன் கேளுங்கள். என் கட்சிக் கொடியைப் பிடியுங்கள். வாக்களித்து என்னை முதல்வ்ர் நாற்காலியில் அமர வையுங்கள்’ என்று அவர் ஏன் பேசவில்லை?

பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களை முன்னிறுத்துகிறார். அதில், அவர் சாதுர்யமாக இருக்கிறார். அதில் இருக்கும் உண்மை என்னவென்றால், வெகு காலமாக இங்கு இருக்கும் நியாயமான தமிழ்த் தேசிய உணர்வு... தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள்... இவற்றை நாமும் பேச வேண்டும்.. அதற்கான முகங்களை நம் மேடைகளில் வைக்க வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். இதுதான் உண்மை."


"நா.த.க., த.வெ.க கட்சிகளுக்கு இளைஞர்கள் அதிகளவில் திரளும் காரணம் இதுதான்!" - பேரா. அருணன் நேர்காணல் | Prof Arunan interview about the politics of NTK leader seeman and TVK leader Vijay - Vikatan

அர்ச்சுனாவின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும்

2 months 3 weeks ago

அர்ச்சுனாவின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும்

முருகானந்தன் தவம் 

‘‘கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்’’ என்பார்கள். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தின்  வழியாகத் தமிழ் அரசியல்வாதியாக வடக்கிலிருந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்து தனது  கொள்கையில்லாத, தில்லாலங்கடி அரசியல் மூலமும் தனது சமூக ஊடகம் மூலமும் இன்று இலங்கையில் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களினால் நன்கறியப்பட்டவராக , விமர்சனங்களுக்குட்பட்டவராக உருவெடுத்துள்ளார்.

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.துணிச்சலான அரசியல்வாதியாக, கோமாளித்தன  அரசியல்வாதியாக,  புலம்பெயர் தமிழர் பணத்தில் அரசியல் செய்யும்  அரசியல்வாதியாக, உண்மையை ஒளிவு, மறைவின்றி பேசும் அரசியல்வாதியாக, பொய், புரட்டுக்கள் நிறைந்த அரசியல் வாதியாக, கொள்கை இல்லாத அரசியல்வாதியாக, தமிழ் மக்களின் வலி உணர்ந்த அரசியல்வாதியாக, தமிழ் 
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதியாக, ஏனைய அரசியல்வாதிகள் மீது சேறடிக்கும் இழிவான  அரசியல்வாதியாக என பல கோணங்களில் பார்க்கப்படுகின்றார். விமர்சிக்கப்படுகின்றார்.

இலங்கை அரசியலில் அர்ச்சுனா எம்.பி. போன்று மிக இலகுவாக அரசியல்வாதியாக வெற்றி பெற்றவர்கள்  வேறு  யாரும் இல்லை என்று அடித்துக்  கூற முடியும்.  அந்தளவுக்கு அவர் ஒரு அதிர்ஷ்டசாலி. ஆனால் அர்ச்சுனா எம்.பியின் கொள்கை ,கோட்பாடுகள் என்ன? அவரின் அரசியல் பாதை எது?அவரின் இலக்கு இலட்சியம் எவை?அவர் நல்லவரா, கெட்டவரா? நல்ல அரசியல்வாதியா அல்லது சிறந்த நடிகரா? அவர் கூறுவதில் எது உண்மை எது பொய்?அவர் தமிழ் தேசியவாதியா அல்லது தமிழ்த் தேசியத் துரோகியா ?அவர் யாருக்கு நண்பன் யாருக்குப் பகைவன்? என்பது தமிழ் மக்களுக்கும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

ஏன் இதில் தான் எந்த வகை என்பது அர்ச்சுனா எம்.பிக்கு கூட தெரியாமல்தான் உள்ளது. அதனால்தான் அவர் நித்தம் ஒரு அரசியல் செய்கின்றார்.  எப்போதும் பரபரப்புக்களை ஏற்படுத்துகின்றார். தனது சமூக  ஊடகத்தை மட்டுமே  நம்பியிருக்கின்றார்.இதற்கு தற்போது அவர் ஜெனீவா சென்று நடத்தும் ‘ரோட் ஷோ’ அரசியல் சிறந்த உதாரணம். 

 அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய நிலையில்,  2024 ஜூலை  மாதம், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற முறைகேடுகளையும் ஒழுங்கீனங்களையும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் அம்பலப்படுத்தி  தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.

அதன்பின்னர் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலும் தலையிட்டு மக்கள் மனம் வென்றார். இதன் விளைவாக, அவர் அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால், ஒரு மருத்துவராக நேர்மையானவராக இருந்த அர்ச்சுனாவால் ஒரு அரசியல்வாதியாக நேர்மையானவராக  இருக்க முடியவில்லை.

2024 நவம்பரில் சுயேச்சைக் குழு 17 என்ற அரசியல் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் 2024பாராளுமன்றத்  தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு,   27,855 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.

அவ்வாறு தெரிவாவதற்கு முன்னரே அர்ச்சுனா தேசிய மக்கள் சக்தியின் வடக்கிற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளரான பெண் ஒருவருடன் தேசிய மக்கள் சக்திக்குத் தான் ஆதரவளிக்க விரும்புவதாக பேரம் பேசினார், ஆனால், அந்த ஒருங்கிணைப்பாளர் “முதலில் நீங்கள் உங்களை மூளையை  பரிசோதியுங்கள்” என கூறி நிராகரித்தார்.

இது தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவும்  வெளியானது.
இதனையடுத்து,  சஜித் பிரேமதாசா  தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகக் கூறி அழையா விருந்தாளியாக ஐக்கிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரசாரக் கூட்டத்தில் அர்ச்சுனா மேடையேறியபோது, சஜித் பிரேமதாசாவினால் மேடையிலிருந்து இறக்கப்பட்டார்.

இதனையடுத்து, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாகக்கூறி அதன் ஆடையையும் அணிந்து கொண்டு திரிந்தார். ஆனால், அவர்களும் ஏற்க மறுக்கவேதான் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட முன்னரே இவ்வளவு பேரம் பேசுதல்களையும் அர்ச்சகனா செய்தபோதும் அவர் மீது நம்பிக்கை 
வைத்தே தமிழ் மக்கள்  அவரை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர். 

தேர்தலில் வென்றவுடனேயே தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரிப்பதாகத் தானாகவே அறிவித்தார். பாராளுமன்றத்திலும் ‘‘உங்களுக்கு 159 எம்பி.க்கள் அல்ல. என்னுடன் சேர்த்து 160எம்.பிக்கள்” என்று பிரதமரிடத்திலேயே தெரிவித்தார். அரசு கொண்டு வந்த சில சட்ட மூலங்களையும் ஆதரித்தார். ஆனால், அரசு அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. தனது அரசுக்கான ஆதரவை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திப் பார்த்தார். ஆனால், அவர் நினைத்து நடக்கவில்லை .

மாறாக, அவர் பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளைகளுக்கு முரணாக நடந்து கொண்டதினால் ஒரு மாதத்திற்கு அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய  சபாநாயகர் தடைவிதித்தார். இதனையடுத்து, தான் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக அர்ச்சுனா சபையில் அறிவித்தார்.

தமிழ் மக்களின் எந்த நலனையும் கருத்தில் கொண்டு அவர் அரசுக்கான ஆதரவை 
வாபஸ் பெறவில்லை. தன்னை அரசு தண்டித்து விட்டது என்ற கோபத்திலேயே அரசு கேட்காமல் அவராகவே வலிந்து கொடுத்த ஆதரவை அவராகவே  வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

அர்ச்சுனாவின் அரசியலே பொய், வாய்க்கு வந்ததை பேசுவது, ஏனையவர்கள் மீது சேறடிப்பத, தன்னை எதிர்ப்போரைக் கீழ்த்தரமாக சபையிலும் தனது சமூக  ஊடகத்திலும்  விமர்சிப்பது, தன்னை விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனின் ஒரு வளர்ப்பாக  காட்டிக் கொள்வது, தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசும் ஒரேயொரு தமிழ் மக்களின்  பிரதிநிதி தானே என கூறிக்கொள்வது, தானே சிங்களம் பேசத்தெரிந்த தமிழ் பிரதிநிதி என்பதாக சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது தான்.

இவ்வாறாக வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறியும்  பித்தலாட்டங்களைச்  செய்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரையும்  தனது சமூக  ஊடகத்தையும் வைத்து  தமிழ் மக்களை முட்டாள்களாக்கி ஏமாற்றி வரும் அர்ச்சுனா எம்.பி. இப்போது அணி சேர்ந்துள்ளது நாமல் ராஜபக்‌ஷவுடன்.

இதனை  பாராளுமன்றத்தில் ஒரு தடவை  உரையாற்றும் போது, ‘‘நாமல் ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், நான் அவரை ஆதரிப்பேன். அதனை அவரிடம்   நேரடியாகவே கூறினேன். உங்கள் தந்தை, சித்தப்பா தமிழ் மக்களுக்குச் செய்த வேலைகளைச் செய்ய வேண்டாம்.

என்று அவரிடம் கூறியுள்ளேன். அவரும் அதற்கு இணங்கியுள்ளார்’’ என்று கூறியதன் மூலம் நாமல் ராஜபக்‌ஷவுடன் தனக்குள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் பாராளுமன்றத்தில் பல தடவைகள் நாமலுக்கு  ஆதரவாகவும் ராஜபக்‌ஷக்களுக்கு ஆதரவாகவும் அர்ச்சுனா குரல் கொடுத்து வருகின்றார்.

அதுமட்டுமல்ல, தற்போது கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் ராஜபக்‌ஷக்கள் சிக்கியுள்ள நிலையில், அந்த கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகக் கூறி  பொய்த்  தகவலைப் பரப்பியவரும் இந்த அர்ச்சுனாதான்.

அவ்வாறு பொய் தகவலைப் பரப்பி அந்த கொள்கலன்கள் விடயத்தைத் திசை திருப்ப அர்ச்சுனாவை ராஜபக்‌ஷக்கள் குறிப்பாக, நாமல் ராஜபக்‌ஷ பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்களும் வெளியிடப்படுகின்றன.

ராஜபக்‌ஷக்களுடனான அர்ச்சுனா எம்.பியின் டீலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றத்தில் அர்ச்சுனா எம்.பி கைதானபோது பிணை எடுத்தவர் நாமல்ராஜபக்ச. இதன்போது அர்ச்சுனா எம்.பி கருத்துக்கூறுகையில்,  எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுகின்றேன். ஆனால்,  சிங்கள மக்கள் தமக்காகச் சேவையாற்றிய மஹிந்த ராஜபக்‌ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர்.

எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால், இந்நாட்டு 
மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரைக்காட்டிக் கொடுத்துள்ளனர்.

மஹிந்த தமிழ் மக்களின் தலைவர் அல்லர். ஆனால், அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால், அவர்கள் மஹிந்தவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் என கூறியபோது, நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது.

பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக்கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர்.ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன்’’ என்றார்.

மீண்டும் நாட்டில் மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராஜபக்சக்கள் தற்போது இந்த  அர்ச்சுனாவை தேர்ந்தெடுத்து பிரபாகரன் புகழ் பாட வைத்து அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கின்றார்கள்.

அதற்காகவே 2024 ஜூலை மாதம் வரையில் விடுதலைப்புலிகளின் தலைவரைப் பற்றியோ விடுதலைப் புலிகளைப் பற்றியோ எங்கும் எப்போதும் ஒரு வார்த்தைகூடப்  பேசாத,தமிழ் மக்களின் எந்த வித வெகுஜனப் போராட்டங்களிலும்  பங்கேற்காத,  இந்த அர்ச்சுனா   இன்று ‘‘பிரபாகரன் எனது தெய்வம்’’என்பதும் ‘‘தமிழ் மக்களுக்காகவே நான் முன்நிற்கின்றேன்’’ என்றும் முழங்கி  வருகின்றார்.   

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தெய்வமாக நினைக்கும் வழிபடும் ஒருவரினால் எப்படி அதே தெய்வத்தை அழித்த அந்த தெய்வத்தின் தமிழீழம் என்ற ஆலயத்தைத் தகர்த்தெறிந்த ராஜபக்‌ஷக்களை ஆதரிக்க  முடியும்? அவர்கள் நல்லவர்கள், வல்லவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்? ராஜபக்சக்கள் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிட்டால் நான் ஆதரிப்பேன் என எவ்வாறு அறிவிக்க முடியும்? எனவே, அர்ச்சுனா எம்.பியின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள்தான் அதிலும் குறிப்பாக சாவகச்சேரி மக்கள்தான் தெளிவடைய வேண்டும்.  

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அர்ச்சுனாவின்-அரசியல்-தொடர்பில்-தமிழ்-மக்கள்-தெளிவடைய-வேண்டும்/91-366032

மன்னார் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம்

2 months 3 weeks ago

Published By: Vishnu

07 Oct, 2025 | 04:49 AM

image

ஆர்.ராம்

'காற்றாலைத்திட்டத்தினாலும், கனிய மணலுக்கான கேள்வியும் மன்னாரை சுற்றுச்சூழல் பாதிக்கவல்ல போராபத்துக்குள் தள்ளிவிடும் நிலையை தோற்றுவித்துள்ளது'

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம், இலங்கையின் வலுசக்தித்தேவையை நோக்கிய முக்கியமான படியாகக் கருதப்பட்டாலும், அது மன்னார் தீவுப் பகுதியின் பூகோள முக்கியத்துவம், அதியுயர் உணர்திறன்கொண்ட உயிர்ப்பல்வகைமைச் சுற்றுச்சூழல், மன்னார் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான சர்ச்சைகளின் மையமாக உருவெடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே 30 காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்ட நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் அபாயங்கள் குறித்த நிபுணர்களின் எச்சரிக்கைகளையும் வலுவாகவே பெற்றிருக்கின்றன.

முன்னதாக, இந்தியாவின் அதானி நிறுவனம் இப்பகுதியில் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலைத் திட்டத்திலிருந்து விலகிய போதும், உள்ளுர் மக்களின் கவலைகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார் முதலீட்டாளர்களின் துணையுடன் இலங்கை மின்சார சபை அத்திட்டத்தை இடைநிறுத்தாமல் நகர்த்துவது, மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 

AR_02.jpeg

மன்னார் மக்களின் எதிர்ப்பானது, வெறும் மின் உற்பத்திக்கு எதிரானது அல்ல. அந்தப்போராட்டம் அந்த மக்கள் தங்கள் பூர்வீக நிலம், வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கானவொரு பரந்துபட்ட போராட்டமாகும்.

மன்னார் பிராந்தியம் புவியியல் ரீதியாகவும், கனிம வளங்கள் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு இல்மனைட் உட்படப் பல்வேறு வகையான கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தக் கனிமங்கள் சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா போன்ற நிபுணர்கள், மன்னாரில் இல்மனைட்டை மிகக் குறைந்த செலவில் அகழ்ந்தெடுக்க முடியும் என்ற நிலை, இங்கு கனிம மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடுகிறார். 

மன்னார் நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைந்த அளவில் இருப்பதால், காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காகவோ அல்லது கனிமங்களை அகழ்வதற்காகவோ நிலத்தை ஆழமாகத் தோண்டுவது, நில மட்டத்தை மேலும் தாழ்த்தி, இப்பிராந்தியம் சில வருடங்களிலேயே கடல் நீருக்குள் மூழ்கும் பாரிய அபாயம் உள்ளதாகப் புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உதாரணமாக, ஒரு காற்றாலை அமைப்பதற்கு 3000 பைகள் மண் அகழ்ந்து அகற்றப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுவது, இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. குhற்றாலைக் கோபுரங்களை நாட்டுவதற்காக 25அடி வரை தோண்டி, கொங்கிரீட் மற்றும் மண்ணைக் கொட்டி மூடுவது, கரையோரங்களில் கொங்கிரீட் போடுவதனால் மழை நீர் வெளியேறுவது தடுக்கப்படுவது போன்ற கட்டுமானச் செயற்பாடுகள், மன்னாரின் பூகோள சமநிலையைச் சீர்குலைத்து, எதிர்காலத்தில் பாரிய இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

சுற்றுச்சூழல் ரீதியாக பார்க்கின்றபோது, மன்னார் வகிபாகம்  சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. மிகப் பெறுமதியானது. யுனெஸ்கோவே அங்கீகாரத்தினையும் அளித்துள்ளது. இங்குள்ள சூழலியல் வளங்கள், இலங்கைக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான வெளிநாட்டு வலசைப் பறவைகளின் முக்கிய நுழைவாயிலாகவும், இனப்பெருக்க மையமாகவும் உள்ளன. 

வலசைப் பறவைகள் இலங்கையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து, மீண்டும் குஞ்சுகளுடன் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் இந்த அரிய பறவைகளுக்கு, உயரமான காற்றாலை கோபுரங்களும் அவற்றின் சுழலும் இறக்கைகளும் நேரடியான அச்சுறுத்தலாக அமைகின்றன என்று சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

அத்துடன், காற்றாலைத் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான பனை மரங்கள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது, உள்ளுர் இயற்கைக்குப் பேரிழப்பாக உள்ளது. இச்சூழலியல் பாதிப்புகளை முழுமையாக ஆராயும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் தரப்பிலிருந்து வலுப்பெற்றுள்ளது.

காற்றாலைகள் அமைக்கப்பட்டதன் சமூகப் பொருளாதார விளைவுகள் மன்னார் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளன. இப்பகுதி மக்கள் பிரதானமாக மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்கின்றனர். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பின்னர், முன்னர் இருந்ததைக் காட்டிலும் மீன்களின் வரத்து மிகக் குறைவாகி, தங்கள் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதாகக் கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன், தாழ்வுபாடு போன்ற கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் காற்றாலைகள் அமைக்கப்பட்டிருப்பது, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மேலும், நிலத்தில் நீர் தேங்கி நிற்கும் காலம் நீடித்துள்ளதால், மழைக்காலத்திற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு கிராமப்புறங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்களின் எதிர்ப்பானது, திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை குறித்த தீவிரமான விமர்சனமாகவும் வெளிப்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை போன்ற அமைப்புகள், இத்தகைய பாரிய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் முறையான கலந்துரையாடல் நடத்தப்படும் வரை அத்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. 

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம், மக்களின் உணர்வுகளையும் பாதிப்புகளையும் புறக்கணித்து, அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகத் தீர்மானங்களை எடுப்பது 'ஜனநாயக முறைமைக்கு உகந்ததல்ல' என்றும், இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. 

இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தம்முடன் கலந்துரையாடியிருக்க வேண்டியது மக்களாட்சித் தத்துவத்தின் இலக்கணம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். மக்களின் பங்கேற்பின்றித் திட்டங்களை முன்னெடுப்பது என்பது, கடந்தகால நிர்வாகங்களின் விலக்களிக்கப்பட்ட ஆட்சி வடிவத்தின் நீட்சியே என்றும், இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே, மன்னார் மக்களின் கோரிக்கை, வெறும் காற்றாலைத் திட்டத்தை நிறுத்துவதல்ல. மாறாக, தங்கள் வாழ்வாதார உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, ஒரு சமநிலையான தீர்மானத்தை எட்டுவதே ஆகும். கனிம மண் அகழ்வுத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மக்களின் கோபமும் வலியும் நியாயமானது என்பதைப் புரிந்து கொள்ள அரசு தவறுவதாகவே இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன.

எனவே, மன்னார் மக்களின் கோரிக்கை காற்றாலைத் திட்டத்தை முழுவதுமாக நிறுத்துவதல்ல் மாறாக தங்கள் வாழ்வையும், நிலத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில் சமூக சமநீதி மற்றும் மக்கள் பங்கேற்புடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.

ஆனால் இந்தநிலைப்பாட்டுக்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக காற்றாலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தான்.

இந்த செயற்றிட்டத்தினை இடைநிறுத்துவதென்ற எண்ணமே இல்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்களை மீளப்பரிசீலிக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாக இருந்தாலும், அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு முன்னதாக தாங்கள் பதவிக்கு வந்தவுடன் மன்னார் காற்றாலைத்திட்டத்தினை நிறுத்துவோம் என்ற வாக்குறுதியை முழுமையாக மறந்துவிட்டது. அப்படியென்றால் ஒரேவழி வெகுஜனப் போராட்டம் தீவிரமயப்படுத்துவது தான்.

https://www.virakesari.lk/article/227070

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை - இரண்டு வருடம் கடந்த போராட்டம்

2 months 3 weeks ago

இரண்டு வருடம் கடந்த போராட்டம்

லக்ஸ்மன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை,  மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். 

சிறிது சிறிதாக அத்துமீறிய செயற்பாடுகள் தணிக்கப்பட்டன. இருந்தாலும், இப்போதும் ஒருசிலர் அப்பிரதேசத்தில் தங்களது தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். அதற்கெதிரான போராட்டமும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. 

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியானது, இதுவரையில் வர்த்தமானியில் வெளியிடப்படுத்தப்படாதிருப்பதே அதற்கான முக்கிய காரணம் என்பது கால்நடை பண்ணையாளர்களின் நிலைப்பாடு. இருந்தாலும் அதற்குள்  வேறு சில விடயங்களும் இருக்கலாம் என்பது யதார்த்தம்.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் இல்லாத பொலன்னறுவை அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அத்துமீறிய வருகை யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் ஆரம்பித்தது. அது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் காலத்தில் உச்சத்துக்கு வந்தது.

அதன் பின்னர் ரணிலின் ஆட்சி காலத்தில் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் முடிவாகாத நிலையில், பண்ணையாளர்கள் சித்தாண்டிச் சந்தியில் போராட்டத்தினை ஆரம்பித்தனர். சந்திப்புக்கள் பல நடைபெற்றிருந்தாலும் இப்போதும் முடிவுக்கு வரமலாம்.

எதிர்பார்த்தளவுக்கான எந்தவிதமான முன்னேற்றத்தையும் அடைந்து விடாத போராட்டத்தினை பண்ணையாளர்கள் தொடர்ந்து வருகின்றனர் என்பதே உண்மை. எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் மூன்றாவது வருடத்துக்குள் இந்தப் போராட்டம் சென்றிருக்கிறது.

பரம்பரை பரம்பரையாகப் பண்ணை வளர்ப்புக்கெனப் பயன்படுத்தி வந்த காணிகளை வர்த்தமானிப்படுத்தித் தாருங்கள் என்ற நியாயமான கோரிக்கைக்குப் பதில் கிடைக்கும்வரை தொடரும் என்பது பண்ணையாளர்களின் நிலைப்பாடு. 

2009 இற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப்  பிரச்சினை தலையெடுக்கத் தொடங்கியது முதல் பல தடவைகளிலும் பலவாறும் தீர்வுக்காக முயற்சி செய்து பயனில்லாமல், பல பிரச்சினைகளை எதிர்கொண்டும் வந்திருந்த கால்நடை வளர்ப்பாளர்கள் இறுதியாக எடுத்த முயற்சியாக இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் அமைந்திருக்கிறது. 

மயிலத்தமடு, மாதவணை பிரதேசம் 1974இன் காலப்பகுதியிலிருந்து மேய்ச்சல் தரையாகப்  பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துமீறிய குடியேற்ற சம்பவங்கள் இங்கு இடம்பெற்றபோது, அவற்றினைத் தடுப்பதற்குச் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இவர்களை வெளியேற்றுவதற்குக் கிழக்கு முதலமைச்சர்  மற்றும் ஆளுநரால் 2009களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்போது முழுமையான பயனைத் தரவில்லை. 

அதேநேரம், 2015இல் ஆட்சி மாற்றத்தையடுத்து, 2016இல் அத்துமீறலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு, நீதிமன்றக் கட்டளையின் அடிப்படையில், அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று மகாவலி அதிகார சபையினால் உறுதியளிக்கப்பட்டது.

இருந்தாலும், அது முழுமையாக நடைபெற்றிருக்கவில்லை. கிழக்கு மாகாண சபை 2017 செப்டெம்பரில் கலைக்கப்பட்டதையடுத்து, அத்துமீறலாளர்களது நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பித்தன.

கோட்டாபய ஜனாதிபதியானதும் இந்த அத்துமீறல்கள் பூதாகாரமானது. அதற்கு முழுமையான ஒத்துழைப்பையும் உந்துதல் உதவிகளை வழங்கியவர் முன்னாள் கிழக்கு ஆளுநர் அனுராதா ஜகம்பத் ஆவார்.

பெருந்தொகை கால்நடைகள் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோரால் களவாடப்படுவதும், பிடிக்கப்படுவதும்,  இறைச்சிக்காகக் கொல்லப்படுவதும், பொறி வெடிக் குண்டுகளால் கொல்லப்படுவதும் வாய் மற்றும் உடற் பாகங்கள் பாதிக்கப்படுவதும் சம்பவங்களாக இருந்தன.

அவ்வாறு காணாமல்போன தமது கால் நடைகளைத் தேடிச் செல்லும்  பண்ணையாளர்கள் தாக்கப்படுல், கைது செய்யப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களும் நடைபெற்று வந்தன. இதனால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரணமாகியிருக்கின்றன. 

இன்னல்களை அனுபவித்தபடியே தங்களது கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கின்ற பண்ணையாளர்களுக்கு ஏற்கனவே வாய் மொழி மூலமாக வழங்கப்பட்ட தீர்வுகள் எதுவும் பயனில்லாதவைகளாகவே இருந்துள்ளன. 

மயிலத்தமடு - மாதவணை பிரதேசத்தில் மேய்ச்சல் தரைக்கான பகுதி   அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவின் ஈரணைக்குளம் கிராம சேவையாளர்பிரிவில் 6383 ஹெக்டெயரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவின் குடும்பிமலை கிராம சேவையாளர் பிரிவில் 9,969 ஹெக்டெயரும் முன்மொழியப்பட்டுள்ளன. இருப்பினும், அது வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படவில்லை. 

அது நிறைவேறாமையினாலேயே இப்பிரச்சினை நீண்டகாலப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.கல்லோயா குடியேற்றம், அல்லை- கந்தளாய் குடியேற்றம் என பல குடியேற்றங்களைக் கிழக்கில் ஏற்படுத்தி கிழக்கில் தமிழர்களுடைய இனப் பரம்பலைக் குறைத்தது மாத்திரமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

தமிழர்களுடைய இனப்பரம்பல் கிழக்கின் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் குறைந்து கொண்டே வருகிறது. மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமே பெரும்பான்மையாக தமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற மாவட்டமாக இருந்து வருகிறது. அந்தவகையில், இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாடாகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல்தரைப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் குடியேற்ற நடவடிக்கைகள் பார்க்கப்படவேண்டும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டது.

மேய்ச்சல் தரை பிரச்சினையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாகப் பண்ணையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். சிவில் தரப்பினர் பண்ணையாளர்களுடைய பிரச்சினைகளை சர்வதேச மட்டம் வரையிலும் வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதற்கு மேய்ச்சல் தரைப் போராட்டக்காரர்களிற்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. இருந்தாலும் மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்குட்பட்ட பிரதேசமாக இந்தப்பிரதேசம் உள்ளதனால் மகாவலியினுடைய நடவடிக்கைகளுக்குட்பட்டதாகவே இருக்க வேண்டிய நிலைமையொன்றும் உள்ளது. 

மகாவலி பி வலயமானது அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. பெரும்பாலான நிலப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குரியதாக இருக்கிறது.

மகாவலியினுடைய அபிவிருத்தி திட்டங்கள் பெரும்பான்மை மக்களைப் பிரதானமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவது என்றவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மை மக்களை அதிகளவில் உள்வாங்கி மேற்கொள்ளப்படும் நிலை ஏற்பட்டால் பாதிக்கப்படவுள்ளது கால்நடைப் பண்ணையாளர்களே. 

இந்த இடத்தில் வாழ்வாதாரத்திற்கு அடுத்தபடியாக, நில உரிமை மீறல், கால்நடைகளின் பாதுகாப்பு, பாரம்பரிய கால்நடை இனங்களின் அழிவு, நல்லிணக்கம் பாதிக்கப்படல், எதிர்கால சந்ததிகளுக்கான வாழ்வாதாரம் கேள்விக்குறியாதல், இயற்கை வள ஆக்கிரமிப்பு, பாரம்பரிய புல்லினங்களுக்குப் பாதிப்பு, இனப் பரம்பல் மாற்றம், அரசியல் பிரதிநிதித்துவப் பாதிப்பு என பல்வேறு விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். 

வடக்கில் மணலாறு பகுதி மகாவலி எல் வலயமாக உருவாகி வெலிஓயாவாக மாற்றம்பெற்றது. அதே ஒழுங்கில் கிழக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மகாவலி பி வலயம் அமையலாம் என்ற அச்சம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. இதனால் ஏற்படவுள்ள பாதிப்பானது அனைவரையும் உள்வாங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இயற்கையாக அமைந்துள்ள கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்ற இப்பிரதேசம், மகாவலி பிரதேசத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இந்நிலைமை கால்நடை பண்ணையாளர்களின் நோக்கத்தினை சிதைக்கும் என்ற கவலை இருந்தாலும், அரசாங்கத்தின் திட்டம் என்றவகையில், அனைவரும் வாய்மூடிய பொம்மைகளாக இருக்கவேண்டிய சூழலே உருவாகியிருக்கிறது. 

முன்னைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக்கான போராட்டம், தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியிலும்  
தொடர்ந்து கொண்டிருப்பது அரசுக்கு அபகீர்த்தியான ஒன்றேயாகும். அரசாங்கம் இதனைக் கண்டும் காணாத வகையிலிருந்து வருகின்றமையானது, இவ்விடத்தில் கவனிக்கப்படவேண்டும். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களது விடயங்களில் பாராமுகமாக இருப்பது போன்ற நடத்தையைக் கைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அதே போலவே கிழக்கின் மேய்ச்சல் தரைப் பிரச்சினையையும் கையாள்வது போலவே தெரிகிறது. 

அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் அரசியல் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. என்றாலும் பிரதேசத்தின் அரசியல் தரப்பினர் கொடுக்கின்ற அழுத்தங்களின் போதாமை தற்போது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

அல்லது தேவையற்றதான ஒரு போராட்டம் நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது. எது எவ்வாறானாலும், திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் மகாவலியின் அபிவிருத்தித் திட்டம் மேய்ச்சல் தரையை வர்த்தமானிப்படுத்தக் கோரும் பண்ணையாளர்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதகத்தை ஏற்படுத்தாதிருந்தால் சரி.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இரண்டு-வருடம்-கடந்த-போராட்டம்/91-365826

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

2 months 3 weeks ago

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

October 6, 2025

விஜயின் அரசியல் எதிர்காலத்தை கரூர் அனர்த்தம் தீர்மானிக்குமா?

— வீரகத்தி தனபாலசிங்கம் —

இந்தியாவில் கோவில் திருவிழாக்கள், மத ஒன்றுகூடல்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் சன நெரிசலும் உயிரிழப்புகளும் ஒன்றும் புதியவையல்ல. அவை பெரும்பாலும் அடிக்கடி நிகழ்கின்ற அனர்த்தங்கள் என்று கூறலாம். விளையாட்டுப்போட்டிகள், சில திரைப்பட வெளியீட்டு நிகழ்வுகளிலும் கூட நெரிசலில் மக்கள் மரணமடைந்திருக்கிறார்கள். 

ஆனால், அரசியல் பொதுக்கூட்டங்களில் மிகவும் அரிதாகவே நெரிசல் மரணங்கள் ஏற்பட்டதாகவும் தமிழ்நாட்டில்  கரூரில் நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகரின்  தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் செப்டெம்பர் 27 சனிக்கிழமை இரவு பெண்கள், குழந்தைகள், உட்பட 41 பேர் பலியான சம்பவமே  அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பெரும் எண்ணிக்கையில் மக்கள்  மரணமடைந்த முதல் சம்பவம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநிலத்தின்  முதலமைச்சராக ஆட்சிக்கு வந்த சினிமா நடிகர் என்று வரலாறு படைத்த எம்.ஜி. இராமச்சந்திரனுக்காக மக்கள் மணிக்கணக்காக அல்ல, நாட்கணக்காக இரவுபகலாக காத்திருந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது கடந்தவாரம் விஜயின் கூட்டத்தில் இடம்பெற்றதைப் போன்ற எந்தவொரு அனர்த்தமும் ஏற்பட்டதில்லை என்று சுட்டிக்காட்டும் இந்திய ஊடகங்கள் எம்.ஜி.ஆரின் கட்சி அமைப்புரீதியாக வலிமையாக இருந்ததும்  கிராமங்கள் வரையில் அரசியல் அனுபவமுடைய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் இருந்ததுமே அதற்கு காரணம் என்று கூறியிருக்கின்றன.

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அவரது சினிமாச் செல்வாக்கில் மாத்திரம் நம்பிக்கை வைத்து தொடங்கப்பட்ட கட்சி என்றும் அவருக்கு எந்த அரசியல் சிந்தனையோ அல்லது கோட்பாடோ கிடையாது என்றும் மற்றைய அரசியல் கட்சிகள் செய்துவந்த விமர்சனத்தை கரூர் சம்பவம்  நிரூபித்திருக்கிறது என்றும் ஊடகங்கள் மாத்திரமல்ல, பல  அரசியல் அவதானிகளும் கூறுகிறார்கள்.   பெருமளவில் மக்கள் கலந்துகொள்ளும்  அரசியல் கூட்டங்களை பாதுகாப்பான முறையில் ஒழுங்குபடுத்தக்கூடிய  அனுபவமும் ஆற்றலும்   விஜயின் கட்சியினரிடம்  இல்லாததையும் தனது இரசிகர்களை கட்டுப்பாடான கட்சித் தொண்டர்களாக மாற்றுவதில் அவர் அக்கறை காண்பிக்காததையுமே மக்கள் பலியானதற்கு பிரதான காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின்  மகாநாடுகளிலும் விஜயின் பிரசாரக் கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்றுவந்தது மற்றைய கட்சிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அவரைப் பார்ப்பதற்காக திரளும் மக்கள் கூட்டம் தேர்தலில் வாக்குகளாக மாறப்போவதில்லை என்று வெளிப்படையாகவே அரசியல்வாதிகள் கூறிவந்தார்கள். 

கூட்டணி அமைப்பதற்கு  சில மாதங்களுக்கு முன்னர்  விஜய் விடுத்த அழைப்பை எந்த அரசியல் கட்சியுமே பொருட்படுத்தவில்லை. அதனால், அவர் தனது பிரசாரக் கூட்டங்களுக்கு பெருமளவில் மக்களை அணிதிரட்டி  தனது செல்வாக்கை நிரூபிப்பதில் தீவிர கவனத்தைச் செலுத்தினார் என்று தெரிகிறது. ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் வரை பிரசாரக் கூட்ட  அரங்குகளுக்கு  வருவதை தாமதிக்கும் ஒரு யுக்தியை அவர் கடைப்பிடித்தார் என்பது வெளிப்படையானது. 

அனர்த்தத்தில் முடிந்துபோன கரூர் கூட்டத்துக்கு முன்னதாக அவரின் சில  பிரசாரக் கூட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாதளவு மக்கள் திரண்டதால் சனநெரிசல் ஏற்பட்டு குழப்பநிலை ஏற்பட்டதற்கு பின்னரும் கூட அத்தகைய   ஆபத்தான  நிலைவரம் மீண்டும் தோன்றுவதை தடுப்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் உகந்த  முன்னேற்பாடுகளைச்  செய்வதில் கவனம் செலுத்தவில்லை  என்றும் குற்றச்சாட்டப்படுகிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக,  கரூரில் அனர்த்தம் நிகழ்ந்த மறுகணமே விஜய் தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி தனது தனிப்பட்ட விமானத்தில் சென்னைக்கு திருப்பி விட்டார். இறந்தவர்களின் குடும்பத்தவர்களைச் சந்தித்து அவரோ அல்லது அவரது கட்சி முக்கியஸ்தர்களோ ஆறுதல் கூறவில்லை என்பது மாத்திரமல்ல காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிடவுமில்லை. 

நான்கு மணித்தியாலங்களுக்கு பிறகு சமூக ஊடகத்தில் தனது  அனுதாபத்தை தெரிவித்த விஜயின் செயல் அவர் இன்னமும் ஒரு சினிமா நடிகராக இருக்கிறாரே தவிர மக்களின் நலன்களில் அக்கறைகொண்ட அரசியல்  தலைவராக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை வெளிக்காட்டியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது அமைச்சர்கள் மற்றைய  கட்சிகளின் தலைவர்கள் உடனடியாகவே வைத்தியசாலைகளுக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்ட அதேவேளை, விஜய் தனது பிரசாரங்களை  இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தாரே தவிர, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை முதலமைச்சர் அறிவித்த பிறகு 20 இலட்சம் ரூபா இழப்பீட்டு அறிவிப்பு விஜயிடமிருந்து வந்தது.

கரூரில் அவரைப் பார்ப்பதற்காக பகல் பூராவும் உணவோ தண்ணீரோ இன்றி சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த மக்களுக்கு நேர்ந்த அனர்த்ததுக்கு பின்னர் விஜய் நடந்து கொண்ட முறை அவரது அரசியல் தலைமைத்துவ  ஆற்றல்  எதிர்நோக்கிய முதல் பரீட்சையிலேயே அவர் தோல்வி கண்டுவிட்டார் என்பதை நிரூபித்திருக்கிறது.  தன்னில்  தவறு இருப்பதாக அவர் இன்னமும் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை. மக்களிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. தன்னைப்  பார்க்க வந்த மக்கள் வீதிகளில் மயங்கி வீழ்ந்து  கொண்டிருந்த வேளையில் சினிமா படப்பிடிப்பு ஒன்றை இடையில் நிறுத்திவிட்டு வீடு திரும்புபவர் போல அவர் நடந்துகொண்டது  பாரதூரமான நிலைவரங்களை கையாளுவதிலும்  முதிர்ச்சியான தீர்மானங்களை எடுப்பதிலும்  அவரின் அனுபவமின்மையை வெளிக்காட்டியது.

விவேகமும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால், தான்  நடந்துகொண்ட விதத்துக்கு முற்றிலும் மாறாகவே விஜய் நிச்சயமாக நடந்து கொண்டிருப்பார். அனர்த்தம் நிகழ்ந்த இடத்தில் குழப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும்  தனது கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து விஜய் முயற்சி செய்திருக்க வேண்டும்.

சம்பவத்துக்கு பிறகு புத்திசாலிகளாக பேசுவது சுலபம். அரசியல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்  மக்கள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தற்போது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அறிவுரை கூறிவருகிறார்கள். 

கரூரில் இடம்பெற்றதைப் போன்று  பொது நிகழ்வுகளில் சனநெரிசல் ஏற்படாதிருப்பதை  உறுதிசெய்வதற்கு  விதிமுறைகளை வகுக்க அரசியல் கட்சிகளுடனும் பொது அமைப்புக்களுடனும் கலந்தாலோசனை நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கும் முதலமைச்சர் ஸ்ராலின் கரூர் அனர்த்தம் குறித்து விசாரண செய்வதற்கு ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்ட தனிநபர் ஆணையம் ஒன்றை நியமித்திருக்கிறார். அந்த ஆணையம் கையளிக்கும் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். 

ஏற்கெனவே ஐந்து மாவட்டங்களில் தனது கட்சி பிரசாரக் கூட்டங்களை நடத்தியபோது நிகழாத அசம்பாவிதங்கள் கரூரில் மாத்திரம் எவ்வாறு நேர்ந்தது என்று   கேள்வி எழுப்பியிருக்கும் விஜய், சதி ஒன்று இடம்பெற்றிருக்கிறது என்பது போன்று சந்தேகத்தைக் கிளப்புகிறார். விஜயின் கட்சி தங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமையாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஏனைய கட்சிகளும் கரூர் அனர்த்தத்தை தங்களால் இயன்ற அளவுக்கு பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.  தனக்கு ஏற்பட்டிருக்கும்  நெருக்கடியை  விஜய்  எவ்வாறு கையாளப்  போகிறார் என்பதிலும் அவரது அரசியல் எதிரிகள் அனர்த்தத்தை எவ்வாறு தங்களது அரசியல் அனுகூலத்துக்காக பயன்படுத்தப் போகிறார்கள் என்பதிலுமே  அவரின் எதிர்கால வாய்ப்புக்கள் தங்கியிருக்கின்றன.

குழப்பகரமான அரசியல் நிலைப்பாடு:

நெருக்கடியான சூழ்நிலைகளை கையாளுவதில் விஜயின் அனுபவமின்மையும் பொறுப்புணர்வின்மையும் ஒருபுறமிருக்க, அவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நாட்களில் (2024 பெப்ரவரி) இருந்து தனது அரசியல் கொள்கையை பொறுத்தவரையிலும் கூட குழப்பகரமான கருத்துக்களையே கூறிவருகிறார். 

மத்தியில் பாரதிய ஜனதாவும் மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் தனது அரசியல் எதிரிகள் என்று கூறிய அவர், தனது கோட்பாட்டு வழிகாட்டிகளில் ஒருவராக பெரியார் ஈ.வெ. இராமசாமியை குறிப்பிட்டார். அம்பேத்காரின் கொள்கைகளையும் புகழ்ந்து பேசும் விஜய் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நீண்டகால நேசக்கட்சியான காங்கிரஸிடமிருந்து தூரவிலகியிருந்தாலும், காமராஜரின் இலட்சியங்களை பின்பற்றுவதாக உறுதியளித்தார்.

2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் மகாநாட்டு அரங்கை  முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாத்துரையினதும்  எம்.ஜி.ஆரினதும் பிரமாண்டமான ‘கட் அவுட்கள்’ அலங்கரித்தன. திராவிட கட்சிகள் பாதைமாறிப் போய்விட்டதால் தமிழ்நாட்டுக்கு புதியதொரு பாதையை காட்டப்போவதாக அவர் கூறுகிறார்.

 காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து அண்ணாத்துரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1967 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் கருணாநிதி  தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்கடித்து எம்ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததையும் உதாரணங்களாக சுட்டிக்காட்டும் விஜய்,  அதேபோன்று 2026 சட்டசபை தேர்தலிலும் வரலாறு திரும்பப் போகிறது என்று பேசுகிறார்.

நீண்டகால அரசியல் போராட்டங்கள் மற்றும்  அனுபவங்களுக்கு பிறகு முதலமைச்சர்களாக பதவிக்குவந்து அண்ணாத்துரையும் எம்.ஜி. ஆரும் படைத்த சாதனையை  தன்னாலும் நிகழ்த்திக்காட்ட முடியும் என்று  ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்த விஜய் கூறுவது மிகவும் நகைப்புக்கிடமானதாக இருக்கிறது. வெறுமனே அரசியல் சுலோகங்கள் வரலாற்றைத் திருப்பி எழுதுவதில்லை. தனது  கட்சியிடம் தெளிவான அரசியல் நிகழ்ச்சி நிரலோ அல்லது மாற்றுத்திட்டமோ இல்லாமல் இன்னும் ஏழு மாதங்களில் முதலமைச்சராக வருவதற்கு அவர் கனவு காண்கிறார். 

 தமிழ்நாட்டு மக்கள் சினிமா நட்சத்திரங்கள் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பக்தியின் விளைவாக மாநில அரசியலில் ஆழமாக வேரூன்றிவிட்ட ஆரோக்கியமற்ற  ஒரு கலாசாரத்தையும் கரூர் அனர்த்தம் மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

பொருளாதாரத்திலும் கல்வி மற்றும் சமூகநீதியிலும் பாரிய முன்னேற்றங்களை கண்டிருப்பதாக பெருமை பேசுகின்ற ஒரு மாநிலத்தில் சினிமா கவர்ச்சி தொடர்ந்தும் அரசியலைத் தீர்மானிக்கின்ற போக்கு துரதிராஷ்டவசமானது. எவரும் அரசியலில் பிரவேசிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் மாத்திரமே  திரைப்படங்களில் மக்களைப் பாதுகாப்பவர்களாகவும் நீதிக்காக உயிரைக் கொடுத்துப் போராடுபவர்களாகவும் வேடங்களில் நடிப்பவர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கும் முதலமைச்சராக வருவதற்கும் தங்களுக்கு உரிமையும் அருகதையும் இருப்பதாக நினைக்கிறார்கள்.

https://arangamnews.com/?p=12369

மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும் — கருணாகரன் —

2 months 3 weeks ago

மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும்

October 4, 2025

மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும்

— கருணாகரன் —

‘மக்களின் எதிர்பார்ப்பும் அரசின்பொறுப்பும்‘ ஒன்றுடன் ஒன்றாகக்கலந்தவை. எதிர்ப்பார்ப்புகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு தரப்பையும் மக்கள் ஆட்சியில் அமர்த்துகிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் மக்களிடம் சில அடிப்படைகளில் உருவாகின்றன.

1.   அவர்களுடைய தேவைகள் நீண்ட காலமாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்ததன் காரணமாக. 

2.   அவர்களுடைய நீண்டகால – குறுகிய காலப் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்காமல் இருப்பதனால்.

3.   ஜனநாயக விழுமியங்கள், மக்களின் அடிப்படை உரிமைகள், சுயாதீனத்துக்கான வெளி போன்றவற்றை அனுபவிப்பதற்காக.

4.   அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் நாடும் மக்களும் வளர்ச்சியைப் பெறுவதற்காக. குறிப்பாகச் சர்வதேசத் தன்மையைக் கொண்டதாக தாமும் நாடும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக. 

இதையெல்லாம் கடந்த கால ஆட்சியாளர்கள் நிறைவேற்றாத காரணத்தினால், புதிய தரப்பொன்றின் மூலமாக அல்லது மாற்றுத் தரப்பின் மூலமாக இவற்றைப் பெற முடியும் என்று கருதுகிறார்கள். 

ஆனால், இவை அனைத்தும் மக்களுக்குரியவை. மக்களுக்குக் கிடைக்க வேண்டியவை. மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டியவை. இவற்றைச் செய்வது – நிறைவேற்றுவது ஆட்சியாளர்களின் கடமை. அரசின் பொறுப்பு. 

சரியாகச் சொன்னால்,  இவற்றை நிறைவேற்றுவதற்குத்தானே அரசும் ஆட்சியும். 

ஆனால், ஏற்கனவே ஆட்சியிலிருந்த தரப்புகள் (ஆளும் வர்க்கம்) தமக்கிருந்த அதிகாரத்தின் மூலம் நாட்டின் வளங்களையும் வாய்ப்புகளையும் தாமே அளவுக்கு அதிகமாக அனுபவித்தன; கொள்ளையிட்டன. 

மக்களின் பேரால் அதிகாரத்திலிருந்து கொண்டே மக்களுடையவற்றை எல்லாம் தாம் எடுத்துக் கொண்டு – அபகரித்துக் கொண்டு – மக்களுக்கு விரோதமாகச் செயற்பட்டன. 

இதனால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் மாபெரும் இடைவெளியும் ஏற்ற இறக்கமும் ஏற்பட்டது. இதுதான் அவர்களைத் தூக்கித் தூர வீச வேண்டியதாகியது. 

இந்த நிலையில்தான் மக்களுடைய எதிர்பார்ப்புகளை (அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும்) நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தே புதிய தரப்பானது ஆட்சிப் பொறுப்பை (அதிகாரத்தை) எடுக்கிறது அல்லது ஏற்கிறது. 

அப்படித்தான் தங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஒரு ‘மாற்றுச்சக்தி‘ என்ற அடிப்படையில் NPP யை மக்கள் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். ‘மாற்றங்களை – திருத்தங்களை- ச் செய்வோம்‘, ‘பிரச்சினைகளைத் தீர்ப்போம்‘, ‘நாட்டை முன்னேற்றுவோம்‘ என்று சொல்லியே, உத்தரவாதம் அளித்தே ஆட்சிப் பொறுப்பை ஏற்றது NPP யும். 

NPP ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு கடந்து விட்டது. மிஞ்சியிருப்பது நான்கு ஆண்டுகளே. 

இந்த நான்கு ஆண்டுகளுக்குள் NPP மக்களுக்கு உத்தரவாதப்படுத்தியவற்றை நிறைவேற்ற வேண்டும். அதைப்போல மக்கள் எதிர்பார்த்தவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். 

கவனிக்கவும்: ஒன்று, அரசாங்கம் தானாகவே பொறுப்பெடுத்தவையும் ஏற்றுக் கொண்டவையும் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியவையும் நிறைவேற்ற வேண்டும் என்பது. இரண்டாவது, மக்கள் எதிர்பார்க்கின்றவைகளும் அவர்கள் நம்பியிருப்பவையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது. 

இரண்டும் பொறுப்பு ஏற்றல், பொறுப்புக் கூறல் ஆகியவற்றின் அடிப்படையிலானவை. 

ஆனால், இவற்றை எழுந்தமானமாகச் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. ஏனென்றால், மக்களுடைய எதிர்பார்ப்புகள் என்பது பல வகையானவை. அவற்றை பொதுமைப்படுத்த முடியாது. அப்படிச் செய்தால், அது எதிர்விளைவுகளையும் உண்டாக்கும். இதுவே கடந்த காலத்திலும் நடந்தது. 

குறிப்பாகத் தமிழ் மொழிபேசும் மக்களுடைய பிரச்சினைகளும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளும்வேறு. தமிழ் பேசும் மக்களிலும்கூட முஸ்லிம்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் ஒரு விதமானவை. மலையக மக்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் இன்னொரு வகைப்பட்டன. தமிழர்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் வேறானவை. 

இதேவேளை இன்னொரு நிலையில் தமிழ்மொழிச் சமூகங்கள் என்ற வகையில் அவர்கள் எதிர்கொள்கின்ற பொதுப் பிரச்சினைகளும் உண்டு. அது அந்தச் சமூகங்களின் மொழி, பாதுகாப்பு, அபிவிருத்தி, அரசியல் உரிமை (அதிகாரப் பகிர்வு) போன்றன. அப்படித்தான் அனைவரும் இலங்கையின் குடிமக்கள் என்ற அடிப்படையில் பொதுப் பிரச்சினைகளும் உள்ளன. உதாரணமாகப் பொருளாதாரப் பிரச்சினை அவற்றில் ஒன்று. 

ஆகவே ஒவ்வொன்றையும் அதனதன் தன்மை, அவற்றின் முக்கியத்துவம் என உணரப்பட்டு, அவற்றுக்கான தீர்வுப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். பொருத்தமான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். 

அதாவது ‘பொதுப்பிரச்சினைகள், பிரத்தியேகப் பிரச்சினைகள்‘ என  வகைப்படுத்தி, அவற்றைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனால், NPP யும் இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அல்லது ஏற்றுக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிப்பதாகத் தெரியவில்லை. பதிலாக கடந்த ஆட்சியாளர்களைப் போலவே சிந்திக்கிறது; செயற்பட விளைகிறது. 

‘அப்படி அல்ல‘ என்று யாரும் இதை மறுத்துரைத்தால், அவர்கள் அதை ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். வெளிப்பார்வையில் NPP பல அதிரடி மாற்றங்களை உருவாக்குகிறது. புதியனவற்றைச் செய்கிறது. பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது போலவே தோன்றும். ஆனால், நிஜமாக அப்படியல்ல. ஆழ்ந்து நோக்கினால் இந்த உண்மை தெரியவரும். 

சில நடவடிக்கைகளை NPP எடுத்துள்ளது என்பது உண்மை. அவை மேலோட்டமானவை. உதாரணமாக, ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார். ரணிலின் மீதான குற்றச்சாட்டு, அரச பணத்தைத் தனிப்பட்ட தேவைகளுக்காக விரயமாக்கினார் என்பதாகும். அந்தப் பணத்தின் அளவு (தொகை) மிகச் சொற்பம். 

ராஜித சேனாரத்ன தொடக்கம் மகிந்தானந்த அழுத்கம வரை நான்காம் ஐந்தாம் நிலையாளர்களும் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆட்சித் தவறுகளுக்கு அனுசரணையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் கடற்படை, பொலிஸ், பாதுகாப்புப் பிரிவு போன்றவற்றின் உயர் அதிகாரிகளில் சிலரும் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவை முக்கியமானவைதான்.

ஆனால், நாட்டைக் கொள்ளையிட்ட பலர், பல கோடிகளைச் சாப்பிட்டு விட்டு இன்னும் பாதுகாப்பாகவே உள்ளனர். குறிப்பாக ராஜபக்ஸக்கள். அவர்களில் கை வைப்பதற்கு அரசாங்கம் தயங்குகிறது. 

இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களும் விசாரணை செய்யப்பட்டவர்களும் பலிக்கடா நிலையில் உள்ளோர். உண்மையான பெருச்சாளிகள் வெளியேதான் உள்ளனர். 

பாதாள உலகக் குழுக்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான – இல்லாதொழிப்பதற்கான – நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தப் பாதாள உலகக் குழுக்களே கடந்த ஆட்சியாளர்களின் கவசமாகவும் போதைப்பொருள் மாஃபியாக்களாகவும் இருந்தன.

ஆகவே அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே கடந்த கால ஆட்சியாளர்களின் (குற்றவாளிகளின்) வேர்களை அறுப்பதற்கான முதல் நடவடிக்கையாகும். இதைப் பாராட்ட வேண்டும். 

ஆனால், அரசியற் கொலைகளோடும் போர்க்குற்றங்களோடும் தொடர்புபட்டவர்களின் மீது எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதைப் பற்றிய பேச்சே இல்லை. மீளிணக்க நடவடிக்கைகள் உறங்கு நிலையிலேயே உள்ளன. அரசியற் கைதிகளின் விடுதலை பற்றிய பேச்சே இல்லை. மிக இலகுவாகச் செய்யக் கூடிய – அவசரமாகச் செய்ய வேண்டிய மாகாண சபைகளுக்கான தேர்தலைக் கூட நடத்துவதற்கு அரசாங்கம் சாட்டுப் போக்குகளைச் சொல்கிறது. 

அவசரகாலச் சட்டத்தை நீக்குவதைப்பற்றி அரசாங்கம் சிந்திக்கவே இல்லை. இன்னொரு புதிய சட்டம் வந்ததற்குப் பிறகுதான் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் என்று அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். இதைச் சொல்வதற்கு சந்திரசேகரனும் NPP யும் வெட்கப்பட வேண்டும். இதுதான் மாற்றம் பற்றிய NPP யின் சித்தாந்தமும் நடைமுறையுமா?

பொருளாதாரக் கொள்கையளிலும் NPP ஒன்றும் புதிய சிந்தனையைக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. அதே பழைய பாதையில் வண்டியை ஓட்டுவதே NPP யின் இலக்கு. ஏன் அதனால் புதிதாகச்சிந்திக்க முடியாமல் உள்ளது? அறிவுக் குழப்பமா? உள அச்சமா? இயலாமையா? அப்படியென்றால் முறைமை மாற்றம் (System Change) என்று ஏன் மக்களுக்குச் சொல்லப்பட்டது; படம் காட்டப்பட்டது?

இதே அளவுக்கு தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்களின் (தேசிய இனங்களின்) அரசியல் உரிமை – அதிகாரப் பகிர்வு தொடக்கம் அவர்களுடைய பிரதேசங்களின் அபிவிருத்தி வரையில் தனிக் கவனத்துக்குரிய கொதிநிலைப் பிரச்சினைகள் பல உண்டு. இது தனியே வடக்குக் கிழக்குக்குரிய பிரச்சினை மட்டுமல்ல, மலையகத்துக்குமான பிரச்சினையுமாகும். 

இவற்றைப் பற்றி அரசாங்கம் (NPP) இதுவரையில் சிந்தித்ததாக எந்தச் சிறு அடையாளமும் இல்லை. பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து விட்டால் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்ற முந்திய ஆட்சியாளர்களின் பழைய, மூட நம்பிக்கையோடுதான் NPP யும் உள்ளது. 

அதாவது அனைத்துக்குமான நோய் நிவாரணி பொருளாதாரப் பிரச்சினையே. அதைத் தீர்த்து விட்டால், அனைத்தும் குணமடைந்துவிடும்; தீர்ந்து விடும் என்று. 

இந்த முட்டாள்தனத்தின் விளைவாகத்தான் பொருளாதார நெருக்கடியே உருவானது. அது ஏதோ ஊழல் செய்ததால் மட்டும் ஏற்பட்ட நெருக்கடி அல்ல. ஆனால், அப்படித்தான் NPP யும் சிங்கள மக்களில் ஒரு தொகுதியினரும் நம்புவதாகத் தெரிகிறது. 

இதுதான் சரியென அவர்கள் மேலும் முட்டாள்தனமாக நம்பினால், நாடு இன்னும் நெருக்கடியைத்தான் சந்திக்கும். படிப்பினைகளைச் சரியாக எடுத்துக் கொள்ளாத தனி மனிதர்களும் சரி, குடும்பமும் சரி, நாடும் சரி, முன்னேற்றத்தை எட்டவும் முடியாது. தவறுளைத் திருத்திக் கொள்ளவும் முடியாது.  

பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சி கூட பலவீனமாகவும் தவறாகவுமே உள்ளது. எளிய உதாரணம், வடக்குக் கிழக்குக்கான விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் காட்டும் பாரபட்சமும் தவிர்ப்பு முறைகளும் இதற்கு வலுவான சான்று. 

காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தியைப் புறம் தள்ளி விட்டு யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானத்தை அரசாங்கம் அமர்க்களமாக உருவாக்க முயற்சிக்கிறது. அப்படித்தான் வடக்கிற்கான விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இழுத்தடிப்பதுமாகும். இவை இரண்டுக்குமான நிதி அனுசரணை இந்திய அரசு வழங்குகிறது. இருந்தும் இழுத்தடிப்பதற்கான காரணம் என்ன? 

இப்படிப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்தளவுக்குத்தான் NPP யின் ஆட்சித் தவறுகள் பெருகிக் கொண்டுள்ளன. மக்கள் NPP க்கு அதிகாரத்தை – ஆணையை வழங்கியது மாற்றங்களைச் செய்வதற்கே. அதாவது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தமது நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும். 

ஆனால், அதைச் செய்யாமல், கடந்த கால ஆட்சித் தவறுகளைத் தொடருவதும் கடந்த கால ஆட்சியாளர்கள் காட்டிய தயக்கத்தையும் – விட்ட தவறுகளையும் (ஊழலைத் தவிர) தொடருவதும் நல்லதல்ல. அது ஆட்சித் திறனுமல்ல. 

NPP யைக் கைவிட்டால், அதல்லது அதனை அதிகாரத்திலிருந்து அகற்றினால் அந்த இடத்தில் ராஜபக்ஸக்களோ ஐ.தே.க, ஐக்கிய மக்கள் சக்தி அல்லது, சு. க போன்ற பழைய – மோசமான தரப்புகள்தானே அதிகாரத்தைக் கைப்பற்றும். அது சரியானதா? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஏனைய தரப்புகளை விட NPP பரவாயில்லைத்தான். ஆனால், இப்படி ஒரு நியாயத்தை முன்வைத்து NPP யின் தவறுகளையும் ஆட்சித் திறனின்மையையும் அதனுடைய இரகசிய இனவாத – இன ஒதுக்கல் நிகழ்ச்சி நிரலையும் ஏற்றுக் கொள்ளவும் கூடாது. அனுமதிக்கவும் முடியாது.  அது நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் அநீதி, துரோகமாகும். இன்னொரு வகையில் சொன்னால், இன்னொரு தவறான தரப்பை நியாயப்படுத்தி நம்மை நாமே தண்டனைக்குள்ளாகுவதாகும். 

https://arangamnews.com/?p=12362

காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு - நிலாந்தன்

2 months 3 weeks ago

காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு - நிலாந்தன்

image_e9807621df.jpg

Pix by Nimalsiri  Edirisinghe

மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன.

சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். சந்திப்பின்போது அவர் மன்னாரில் நிகழும் கனிமவள அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசியதாக அறிய முடிகிறது. அதன்பின் ஆயர் ஐரோப்பாவில் சுற்றிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரகுமாரவும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலைகளை நிறுவுவது என்ற தனது முடிவை அரசாங்கம் அறிவித்திருந்தது.

அவ்வாறு காற்றாலைகளை நிறுவுவதற்குத் தேவையான உபகரணங்கள் தீவப்பகுதிக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு கடந்த 26ஆம் திகதி இரவு அப்பகுதி மக்களும் கத்தோலிக்க மதகுருமாரூம் தீவின் வாயிலில் நின்று போராட்டம் நடத்திய பொழுது, அவர்கள் மீது போலீசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டார்கள். இதில் பெண்களும் மத குருமார்களும் தாக்கப்பட்டார்கள், அவமதிக்கப்பட்டார்கள். இதன் விளைவாக அங்குள்ள மக்கள் கடந்த திங்கட்கிழமை  பொது முடக்கத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள்.

மன்னாரில்,குறிப்பாக கனிமவள அகழ்வுக்கு எதிரான போராட்டத்தில் யாருமே கேள்விகளை எழுப்புவதில்லை. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்  என்ற அபிப்பிராயம் எல்லாத் தரப்புக்களிடமும் உண்டு. ஆனால் காற்றாலை விடயத்தில் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் விஞ்ஞானபூர்வமானவை அல்ல என்ற ஒரு விமர்சனம் ஒரு பகுதி தமிழ் மக்கள் மத்தியிலேயே உண்டு.

மன்னார் தீவில் காற்றாலைகள் நிறுவப்பட்டதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மழைக் காலங்களில் தங்களுடைய வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கி நிற்பதாக,கடற்தொழில் பாதிக்கப்படுவதாகவும், காற்றாடிகள் சுற்றும் சத்தம் அதிகமாக இருப்பதாகவும் முறைப்பாடு செய்கின்றார்கள். இது போன்ற  முறைப்பாடுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் கடந்த வாரம் அப்பகுதியில் காற்றாலைகளை நிறுவுவது என்ற தனது முடிவை அரசாங்கம் மீள உறுதிப்படுத்தியது.

நாட்டின் அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பதனால் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை அரசாங்கம் நிறுவி வருகின்றது. இந்த அடிப்படையில் ஏற்கனவே வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வீடுகளின் கூரைகளில் சூரிய மின்கலங்கள் கடன் அடிப்படையில் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த மின்கலங்களைப் பொருத்துவதன் மூலம் குறிப்பிட்ட பயனாளி லாபமடைகிறார். அதனால் வரும் வருமானம் அவருடைய வீட்டுத் தேவைகளுக்கான மின் பாவனைக் கட்டணத்தை முழுமையாக இல்லாமல் செய்கின்றது. தவிர,மாதாமாதம் மேலதிகமாக லாபமும் கிடைக்கும். அந்த லாப நோக்கமானது அவர்களை அறியாமலேயே பசுமை மின்சக்தித் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றது.

உலகம் முழுவதும்  பசுமை மின்சக்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. மனித நாகரீகம் என்பதே இயற்கையை சுரண்டுவதில் இருந்துதான் தொடங்குகின்றது. எனவே இயற்கை சுரண்டாமல் அபிவிருத்தி இல்லை. இந்த விடயத்தில் இயற்கையின் சமநிலை கெடாமல் எப்படி அபிவிருத்தி செய்வது என்று சிந்தித்து கண்டுபிடிக்கப்பட்டவைதான் சூழல் நேயத் திட்டங்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளில் காற்றாலைகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு வருகின்றன. அண்மையில் ஸ்பெயின் நாடானது  நாட்டின் ஒருநாள்  மொத்த மின் பாவனையை முழுக்கமுழுக்க பசுமை மின்சக்தியின் மூலம் பூர்த்தி செய்து சாதனை செய்ததாகச் செய்திகள் வெளிவந்தன.

மேலும்,ஐரோப்பாவில் காற்றாலைகள் தொடர்பாக வந்த விமர்சனங்களை உள்வாங்கி புதிதுபுதிதாக மாற்று ஏற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. குறிப்பாக காற்றாலை விசிறிகளில் பட்டு வலசைப் பறவைகள் இறப்பது தொடர்பான விமர்சனத்தை உள்வாங்கி செட்டைகள் இல்லாத காற்றாடிகள் எப்பொழுதோ உருவாக்கப்பட்டு விட்டன. ஜெர்மனி இந்த விடயத்தில் முன்னோடியாகக் காணப்படுகிறது. அதுபோலவே அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின்படி காற்றாலைகளின் செட்டைகளில் ஒன்றைக் கறுப்பாக்கினால் அங்கே கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கை 70%தால் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காற்றாலை மின் சக்தியின் சூழல்நேயப் பண்பை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தோடு ஐரோப்பா முன்னேற்றகரமான புதிய காற்றாடிகளைக் கண்டுபிடித்து வருகிறது. இப்படிப்பட்டதோர் உலக மற்றும் உள்நாட்டுச் சூழலில்,மன்னார் மக்கள் ஏன் காற்றாலைகளை எதிர்க்கிறார்கள் என்று ஒரு பகுதியினர் கேள்வி கேட்கின்றார்கள்.

Mannar.jpg

இங்கே முக்கியமாக இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும். மன்னார் மக்கள் மன்னாரின் தீவுப்பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதைத்தான் எதிர்க்கிறார்கள். யாரும் சூரிய மின்கலங்களை எதிர்ப்பதாகத் தெரியவில்லை.

இந்த விடயத்தில் காற்றாலை தொடர்பான மன்னார்த் தீவு மக்களின் கவலைகளை சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள்,அதிகாரிகள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றவர்கள் கேட்கவேண்டும். இதில் மாற்று ஏற்பாடு ஏதும் உண்டா என்று சிந்திக்க வேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் 19.08.2025 அன்று நியமித்த சிறப்புக் குழு கடந்த மாதம் முதலாந் திகதியன்று (01.09.2025) அங்குள்ள சிவில் சமூகத்தோடு(MCC) உரையாடியதாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் மக்களுடைய பயங்களைப் போக்க முடியவில்லை.

காற்றாலைகள் ஏன் வேண்டாம் என்பதற்கு மன்னார் தீவுப்பகுதி மக்கள் கூறும் காரணங்கள் எவையாகவும் இருக்கலாம். ஆனால் காற்றாலைகள் ஏன் வேண்டும் என்பதற்குக் கூறப்படும் பிரதான காரணத்திலிருந்து சிந்தித்தால் அந்த மக்களின் பயத்தைப் போக்க வேண்டியது அவசியம். சூழல்நேய அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் அந்தச் சூழலில் வாழும் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சூழலுக்கு அந்த அபிவிருத்தித் திட்டம் முழுமையாக நேசமானதாக அமையும். அந்த மக்களின் விருப்பமின்றி அதை அங்கே பலவந்தமாக நிறுவ முடியாது. அப்படி நிறுவினால் சூழல்நேய அபிவிருத்தி என்ற அடிப்படைச் சிந்தனை கேள்விக்குள்ளாகிவிடும். எனவே ஒரு பகுதி மக்கள் அதை எதிர்க்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுடைய பயங்களை,கவலைகளைப் போக்க வேண்டிய, மாற்று ஏற்பாடுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் உண்டு.அதுதொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைக்கு உண்டு.

மன்னாரில் காற்றாலைகளை முதலில் நிறுவ முற்பட்டது அதானி குழுமம் ஆகும். ஆனால் அது தொடர்பான லாப நட்டப் பேரங்களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதானி குழுமம் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறி விட்டது. இப்பொழுது உள்நாட்டு நிறுவனம் ஒன்று காற்றாலைகளை நிறுவி வருகிறது.

இங்கு அரசியல் முரண் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதானி குழுமம் மன்னாரில் காற்றாலைகளை நிறுவ முற்பட்டபொழுது அதனை ஜேவிபியும் உட்பட அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் எதிர்த்தார்கள். காலி முகத்திடலில் “கோட்டா கோகம”  கிராமத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது. அது அதானி குழுமத்தின் முதலீடுகளை எதிர்த்தது. இதுதொடர்பாக ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஒரு கத்தோலிக்கம் மதகுருவோடு உரையாடினார். ”நீங்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு  எதிராக போராடுகிறீர்கள் என்று சொன்னால்,ஜேவிபியின் முன்னைய நிலைப்பாடுகளில் ஒன்றைத் தொடர்ந்து பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். ஜேவிபியின் முன்னைய நிலைப்பாட்டின்படி மலையகத் தமிழர்களை அவர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகக் கண்டார்கள். அப்படியென்றால் அரகலயப் போராட்டமும் மலைகத் தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கின்றதா?” என்று அவர் கேட்டார். அந்தக் கத்தோலிக்க மதகுரு அதை மறுத்தார்.”இல்லை நாங்கள் எல்லாவிதமான விஸ்தரிப்பு வாதங்களுக்கும் எதிரானவர்கள்”என்று சொன்னார். அப்படியென்றால் சீனா ஏற்கனவே அம்பாந்தோட்டையிலும் கொழும்புத் துறைமுகத்துக்கு அருகிலும் வந்துவிட்டது.அந்தச் சீன விஸ்தரிப்பு வாதம் தொடர்பாகவும் நீங்கள் பேசுவீர்களா?என்று அந்தத் தமிழ்ச் செயற்பாட்டாளர் கேட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அதானியின் முதலீட்டை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஒரு பகுதி என்று எதிர்த்த அரகலய போராட்டங்களின் குழந்தைதான் இப்போதுள்ள என்பிபி அரசாங்கம்.ஆனால் அது காற்றாலை வேண்டாம் என்று கேட்டுப் போராடிய மன்னார் மக்களின்மீது பலத்தைப் பிரயோகித்துள்ளது. அதற்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நடந்த போராட்டத்தில் அரகலய போராட்டத் தலைவர்களும் இணைந்திருக்கிறார்கள். இதன்மூலம் என்பிபி வேறு தாங்கள் வேறு என்று அவர்கள் காட்டக்கூடும்.

காற்றாலைகளின் விடயத்தில் தமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய அளவுக்கு எதிர்ப்புக் காட்ட வில்லை என்ற ஒரு குறை மன்னார் மாவட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முன்பு இருந்தது.அப்பகுதி அரசியல் தலைமைத்துவம் இது தொடர்பில் மக்களுக்கு வழிகாட்டத் தவறிவிட்டது.அதனால் அங்கு ஏற்கனவே பலமாக உள்ள மதத் தலைமைத்துவதின் வழிகாட்டலே தீர்மானகரமானதாகக் காணப்படுகின்றது.

எனினும் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,பொது வேட்பாளரை முன்னிறுத்திய அணி மன்னாரில் நகரப் பகுதியில் நடத்திய பெரிய ஒருவர் அங்கே மன்னார் மக்களின் கவலைகளைப் பிரதிபலித்தார். காற்றாலை,கடலட்டை இரண்டும் ராஜதந்திரப் பொருட்களாகி விட்டன என்று கூறிய அவர், காற்றாலை,கடலட்டை,கனிமவள அகழ்வு போன்றவை தமிழ் மக்களின் நில உரிமை,கடல் உரிமை போன்ற கூட்டு உரிமைகளோடு சம்பந்தப்பட்டவை என்றும்,எனவே அதில் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முடிவுகள் எடுக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

இப்பொழுது அரசாங்க மக்கள் மீதும் மதகுருக்கள் மீதும் பலப் பிரயோகத்தைச் செய்த பின் விவகாரம் உணர்ச்சிகரமானதாகி விட்டது. தமிழ்த்தேசியக் கட்சிகளும் உட்பட பெரும்பாலான கட்சிகள் மன்னார் மக்களின் பக்கம் நிற்கின்றன. இப்பொழுது போராட்டம் பரந்தளவில் மக்கள் மயப்பட்டுவிட்டது. அரசாங்கத்தின் பலப்பிரயோகம் அதைப் பலப்படுத்தி விட்டது. தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக வந்த ஓர் அரசாங்கம் இந்த விடயத்தில் என்ன முடிவை எடுக்கும்? தனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜனாதிபதி கதைத்த கவர்ச்சியான,அலங்காரமான சொற்களைக் கொண்ட உரைகள் யாவும், மன்னார்  மக்கள் மீது  போலீசார் பலத்தைப் பிரயோகித்தபோது பொருள் இழந்து போய்விட்டன.

https://www.nillanthan.com/7814/

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தொடர் கேள்விகள்

2 months 4 weeks ago

02 Oct, 2025 | 06:19 PM

image

அ. அச்சுதன்

உலகிலேயே மிக அழகான தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதே இலங்கையின் வட பகுதியில் உள்ள செம்மணியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை குழந்தைகள் உட்பட 235 ற்கும் மேற்பட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது, அழகிய இலங்கைத் தீவின் பின்னால் மறைந்துள்ள மனிதாபிமானமற்ற கடந்த கால கொடூரங்களை வெளிக்கொணர்வதாக உள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடைபெற்று, அந்த உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தில் கண்டறியப்பட்ட இந்த மனிதப் புதைகுழியில், கட்டம் கட்டமாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, கலாநிதி கெஹான் குணதிலக்க ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டனர். 

அதன் பின்னர், ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த அவதானிப்புகளும் பரிந்துரைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் திட்டமிட்ட வகையில் படுகொலைகள் நடந்திருப்பது தற்போது நிரூபணமாகி வரும் நிலையில், இது ஒரு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. 1995 - -1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இத்தகைய படுகொலைகள் அரங்கேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

கிருசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, செம்மணி பகுதியில் 300 முதல் 400 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாக முன்னர் சாட்சியம் அளித்திருந்தார்.

அதன்பின் அவர் அடையாளம் காட்டிய இடத்தில் அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டு 15 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு யாழ் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் அநுராதபுரம், கொழும்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது. 

தோண்டப்பட்ட சடலங்கள் மேலதிக பரிசோதனைக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்ட பின்னர், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.

இந்த நிலையில்தான், 2025 பெப்ரவரியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றபோது, மனித எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. 

கடந்த பெப்ரவரியிலிருந்து செம்மணி புதைகுழி மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த சாட்சியம் தற்போது உண்மை என்று நிரூபணமாகி வருகிறது.

செம்மணி விவகாரத்தில் சர்வதேச தரத்திலான விசாரணை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், செம்மணிக்கு நேரடியாகச் சென்று அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார். அதன் பின்னர், உரிய விசாரணையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்தச்சூழலில், அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிபுணத்துவத்தைக் கோரி இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, நீதி அமைச்சினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் இந்தச் செயற்திட்டத்தில் விரைவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அகழ்வுப்பணிகளுக்கு நிதி உதவி, கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வழங்கி வருகிறது.

அண்மையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியிருந்த சோமரத்ன ராஜபக்சவை சிறைச்சாலையில் சந்தித்து, காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் அவரிடம் இருந்து தகவல்களைப் பெற்றிருந்தமை இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய நகர்வாகும்.

மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகள்

பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு, கிழக்கு சமூக இயக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தன. அதில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள்:

• சர்வதேச விசாரணை : தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு உட்பட அனைத்துலகக் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதித்துறை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

• செம்மணி, மன்னார் புதைகுழிகள் : செம்மணி மற்றும் பிற மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச நிபுணர்களை விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும்.

• நில ஆக்கிரமிப்பு : தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் நடைபெறும் அரச ஆதரவுடனான குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி, நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்க வேண்டும்.

• கலாசார அழிப்பு : தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் சிங்களமயமாக்கல் திட்டங்களை நிறுத்த வேண்டும்.

• காணாமல் போனோர் விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை உடன் வெளிப்படுத்தி, நீதி வழங்க வேண்டும்.

• சட்டங்கள் நீக்கம் : பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசேட கருத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகுதியான 75 பேருடன் கூடிய 25 உப குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.

2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னரும் காணாமல் போனோர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. முன்னர் அமைக்கப்பட்ட மெக்ஸ்வல்பரணகம ஆணைக்குழுவுக்கு 19,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.

1990களில் தென்னாபிரிக்காவில் 'உண்மை கண்டறியும்பொறிமுறை' உருவாக்கப்பட்டு, பல உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டன. அதன் மூலம், அந்தப் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது. இலங்கைக்கும் இதேபோன்ற ஒரு முறை தேவை என நீண்டகாலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்திற்கான வேண்டுகோள்

தற்போது புதிய அரசாங்கம் நியமித்துள்ள இந்த உப குழுக்களின் செயற்பாடுகள் சுயாதீனமாகவும் நம்பகத்தன்மையுடனும் நடைபெறுவது அவசியம். செம்மணிப் புதைகுழியில் 90 வீதமான எலும்புக்கூடுகள் ஆடைகள் இன்றிப் புதைக்கப்பட்டிருப்பது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடந்திருப்பதற்கான சாத்தியத்தை உணர்த்துகிறது. இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே சர்வதேச நிபுணத்துவம் அவசியம் என வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.

மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு அரச சார்பு நிறுவனம் என்ற போதிலும், அது சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இத்தகைய ஆலோசனைகளை வழங்கியிருப்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எனவே, காணாமல் போனோர் மற்றும் செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் ஒரு நீதியான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிய முன்வரவேண்டும்.

https://www.virakesari.lk/article/226724

அபத்தமான அமைதி திட்டத்திற்கு நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்!

2 months 4 weeks ago

அபத்தமான அமைதி திட்டத்திற்கு நோபல் பரிசு கேட்கும் டிரம்ப்!

-ச.அருணாசலம்

3333.jpg

நோபல் விருது பெறும் கனவிலுள்ள அதிபர் டிரம்ப்  காசா போரை முடிவுக்கு கொண்டு வர தந்துள்ளது அமைதி திட்டமா? டிரம்பின் அமைதி திட்டம் காசாவை கபளீகரம் செய்யும் சூழ்ச்சியா?  அமைதி நாயகன் வேடம்  டிரம்புக்கு பொருந்துகிறதா? தீராப் பழியிலிருந்து  நேதன்யாகு விடுபடும் முயற்சி பலிக்குமா? ஒரு அலசல்;

அமைதி திட்டத்தின் முக்கிய கூறுகள் என்ன?

# தாக்குதலை நிறுத்துதல். ஹமாஸ் இஸ்ரேல்  இரு தரப்பும் பிணைக்கைதிகளை விடுவித்தல். ஆனால், காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின் வாங்கப்படாதாம்.

#  மேற்படிக்கு ஒத்துக் கொண்டால் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்குமாம்.

# அமைதிக்கான சர்வதேசக் குழுமத்தை (International Board of Peace) ஏற்படுத்தி அக் குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காசா பகுதியை கொண்டு வருவதாம். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைவராம்!  டோனி பிளேர் போன்ற உலகத் தலைவர்கள் இதில் உறுப்பினர்களாம்!

# இத்தகைய ஆட்சிமுறை , புதிதாக ஏற்படுத்தவுள்ள சீரமைக்கப்பட்ட பாலத்தீன குழு முதிர்ச்சி பெறும் வரை – கால வரையிரை இன்றி தொடருமாம்!

#  ஹமாஸ் அமைப்பிற்கு இனி மேல் காசாவை நிர்வகிப்பதில் எந்த பங்கும் அளிக்கப்பட மாட்டாதாம். அவர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, தங்களது அமைப்புகளை கலைத்து விட்டால், அவர்களுக்கு உயிர்பிச்சை தருவார்களாம்.

# காசா பகுதியை பொருளாதார ரீதியாக வளர்த்தெடுக்க  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு வெளிநாட்டு  முதலாளிகளின் கீழ் காசா மக்கள் உழைத்து பிழைக்கலாமாம்.

12610202.jpg

# பாதுகாப்பிற்காக சர்வதேச உறுதிப்படுத்தும் படைகள் (International Stabilisation Force) உருவாக்கப்படுமாம். இந்த படை காசாவின் எல்லைகளையும் உள்ளூர் காவல் கடமைகளையும் நிறைவேற்றுமாம்.

இந்த படைகள்  வந்தாலும் இஸ்ரேலிய படைகள் தற்போது விலகாதாம்.

# அடுத்து அமைதியை நிரந்தரமாக்க சக வாழ்வையும் ஒற்றுமை உணர்வையும் தூண்ட உரையாடல்களை(dialogue) இரு பிரிவு மக்களிடையே இத்திட்டம் ஊக்குவிக்குமாம். காசா பகுதி இன்றிருக்கும் பின்னடைவிலிருந்து மீளும் பொழுது அமெரிக்காவின் தலைமையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களிடையே அரசியல் பேச்சு வார்த்தைகள்- பாலத்தீனர்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் அரசை ஏற்படுத்துதல் குறித்து பேச்சு வார்த்தைகள் – நடத்தப்படும். பாலத்தீனீய அதிகார அமைப்பு அத்தகைய பேச்சு வார்த்தைகளை நடத்துமளவிற்கு சீரமைக்கப்பட்டு பக்குவமும் அடைந்திருக்க வேண்டுமாம்….என்று இத் திட்டம் நீட்டி முழக்குகிறது!

555555.jpg

சொல்லமறந்த அல்லது தவிர்த்துவிட்ட அம்சங்கள்என்னென்ன?

# இந்த அமைதி திட்டம் ஐ நா சபை யின் முயற்சியிலோ, அதன் கண்காணிப்பிலோ நடைமுறைக்கு வரும் திட்டமல்ல. இத்திட்டத்தில் ஐ நா விற்கு எந்த பங்கும் இல்லை!

இத்திட்டம் இதுவரை இஸ்ரேல் நடத்திய போர் குற்றங்களுக்கு எந்தவித தண்டனையையும் அளிக்கவில்லை.

# இஸ்ரேல் இதுவரை பறித்த உயிர்களுக்கும், அழித்த சிறார் மற்றும் மகளிர்களுக்கும், சிதைத்த கட்டிடங்களுக்கும் அமைப்பு முறைகளுக்கும் இழப்பீடோ, நிவாரணமோ, இஸ்ரேல் கொடுக்க வேண்டுமென்று கூறவில்லை.

# இவ்வளவு கொடுமைகளையும் அரங்கேற்றிய இஸ்ரேலின் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தாமல் உதவிகள் வழங்குவதைக் கூட இத்திட்டத்தை ஏற்றால் தான் வழங்குவோம் என்று கூறுகிறது இந்த அமைதி திட்டம்.

# அடுத்து, இத் திட்டம் உடனடியாகவோ அல்லது நீண்ட காலத்திலோ காசா மக்கள் இத் திட்டத்தில் பங்கு கொள்ள எந்த வகையான ஜனநாயக வழி முறைகளையும்வழங்கவில்லை. உண்மையில் அவர்களுக்கு அவர்களதுதலைவிதியை நிர்ணயிப்பதில் எந்தவித பங்கையும்அளிக்கவில்லை இந்த திட்டம்.

israeli-palestinian-ceasefire-1200x630-1

ஆயுதங்களை கீழே போடும் பாலத்தீனர்களுக்கு எந்தவிதபாதுகாப்பையும் வழங்க மறுக்கும் இத்திட்டம் , இஸ்ரேலியகுடியமர்த்தல்களுக்கும் தடை விதிக்கவில்லை, பாலத்தீனர்களின் நிலங்கள் உடமைகள்பறிக்கப்படுவதையும்  தடுக்கவில்லை.

இத்தகைய திட்டம் உண்மையில் அமைதிக்கான திட்டமா அல்லது உலகத்தினரின் கண்களில் மண்ணைத் தூவும் முயற்சியா?

ஒருபுறம் எப்படியும் சமாதான நாயகன் என்ற பட்டத்தை பெற்றுவிட துடிக்கும் தலைக்கனமிக்க கோமாளி டிரம்ப், மறுபுறமோ, கடந்த இரண்டு ஆண்டுகளில் 65,00 மக்களை கொன்று குவித்தாலும் பிணைக் கைதிகளை போரின் மூலம் மீட்கவோ, ஹமாஸ் அமைப்பை ராணுவரீதியாக முறியடிக்கவோ முடியாத நெத்தன்யாகு ஆகிய இரு நபர்களும் தங்களின் கொடூரங்களை தொடரவும் அதற்கான பழியை ஹமாஸ்  மீது போடவும் துணிந்தே இத்தகைய நகைப்பிற்கிடமான திட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்த அடிமை சாசனத்தை ஹமாஸ் அமைப்பு ஒரு போதும் ஏற்காது என்ற துணிச்சலில் தான் எத்தன் நெத்தன்யாகு டிரம்ப்பின் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளான் . இதை ஹமாஸ் நிராகரித்தால் நெத்தன்யாகு , நான் அமைதிக்கு முயற்சி செய்தேன். ஆனால், ஹமாஸ் ஒத்துக் கொள்ளவில்லை என பழியை ஹமாஸ் அமைப்பின் மீது போட்டுவிட்டு தனது இனப்படுகொலையை தொடர்ந்து நடத்துவான். அதே நேரத்தில் தன் மீதான இஸ்ரேலிய மக்களின் கோபத்தை மடைமாற்றி தப்பித்து கொள்ளவே இந்த அமைதி திட்டம்.

636776.jpeg

நேதன்யாகுவிற்கு எதிராக அமைதியை விரும்பும் யூத மக்கள்

இத்தகைய மோசடி திட்டத்தை, இந்தியப் பிரதமர் மோடி வரவேற்று அறிக்கை விட்டுள்ளார். இந்திய அரசின் நீண்ட நாள் கொள்கையும் , சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரால் ஐநா சபையில் அறிவிக்கப்பட்ட இரண்டு அரசு தீர்வுகளும்  ( Two State Solution to Palestine) என்னவாயிற்று? அக் கொள்கையை அடைய இத்திட்டம் வழிவிடவில்லையே என்ற கேள்விக்கு  இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து பதிலில்லை. நெத்தன்யாகு இஸ்ரேலிய மக்களை ஏமாற்றுவது போலவே, மோடி இந்திய மக்களை ஏமாற்றுகிறார்.

அமைதி திட்டத்திற்கு ஆதரவு என்ற போர்வையில் இந்தியாவின் நெடுநாளைய கொள்கையானபாலத்தீன சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல், இஸ்ரேல்ஆக்கிரமித்துள்ள பாலத்தீன பகுதிகளில் இருந்துவெளியேறுதலை வற்புறுத்துதல், பாலத்தீன அரசிற்குஅங்கீகாரம் அளித்தல் , பாலத்தீன அரசு , இஸ்ரேல் அரசு எனஇரண்டு சுதந்திரமான அரசுகளே பாலத்தீனபிரச்சினைக்கான உண்மையான தீர்வு என்றகொள்கைநிலையை மறந்துவிட்டு தனது இஸ்லாமிய வெறுப்பை காட்டும் வண்ணம் இந்த திட்டத்தை ஆதரித்துள்ளார் மோடி.

டிரம்ப் அறிவித்துள்ள இத்திட்டத்திற்கு அரபு நாடுகளான சௌதி அரேபியா, யு ஏ இ, கத்தார், எகிப்து, ஜோர்டான் துருக்கி போன்ற நாடுகள் ‘ஆரம்ப கட்ட’ ஆதரவை தெரிவித்துள்ளன. பல் பிடுங்கப்பட்ட, சோரம் போன , பொம்மை அரசான பாலத்தீனிய அதிகார அமைப்பும் (Palestine Authority) இத்திட்டத்தை வரவேற்றுள்ளது என்றாலும், ஹமாஸ் அமைப்பு தனது இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.

Arab-Summit-Arab-Peace-Initiative-768x43

சர்வதேச நீதிமன்றத்தால் போர்க்குற்றவாளி என பிரகடனப்படுத்தப்பட்ட நெத்தன்யாகு தனது இனப் படுகொலையை இந்தப் போர் நிறுத்த்தின் மூலமாக நிறுத்துவான் என்பது பகல் கனவு.  உலகெங்கிலுமுள்ள மக்களின் கோபத்திற்கு பயந்து ஐரோப்பிய நாடுகள் பல – பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்றவை- பாலத்தீன அரசை இப்பொழுது அங்கீகரித்து உள்ளன.

அமைதி திட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றுவதற்காக , காசா பகுதியை செல்வங் கொழிக்கும் ரியல் எஸ்டேட் ரிவர்ரியாக மாற்றவே இத்திட்டம் முன் வைக்கப்படுகிறது எனலாம் . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க டிரம்ப் முயல்கிறார்.

ஐநா சபை தீர்மானங்களை, ஐ நா வின் வழிகாட்டுதல்களை, சர்வதேச நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்களை  இஸ்ரேல் மதித்தது உண்டா? இத்தகைய தான்தோன்றிதனத்தை ஊக்குவிக்கும் அமெரிக்காவிடம் நீதியை எதிர்பார்க்க முடியுமா ?

Hamas-rally-Gaza.jpg

ஹமாஸ் தலைவர்களும், பாலஸ்தீன மக்களும்

நீதி என்பதை யாரிடமும் யாசகமாகப் பெற முடியாது, அது போராடி பெரும் வெற்றியின் விளைவாக கிட்டும் கனியே ஒழிய தோற்றவனுக்கு வழங்கப்படும் பிச்சையல்ல. ஹமாஸ் இயக்கம் பாலத்தீன மக்களின் நாடி நரம்பு என்பதை உலகம் புரிந்து கொள்ளும்நாள் விரைவில் வரும்.

இஸ்ரேலையும் உள்ளடக்கிய பரந்த பாலத்தீனத்தில் இன்றும் யூத இன மக்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாமல் பாலத்தீனர்கள் வாழ்வதை மறந்து விட்டு, பாலத்தீனம் முழுமையுமே யூத இனத்திற்கு கடவுள் அளித்த புண்ணிய பூமி என்று கதையளக்கும். யூதமதவெறித் தனத்தை (ஜியோனிசத்தை) கைவிட்டு யூதர்களுக்கான தேசமாக இஸ்ரேல் அரசும் ,  பாலத்தீனர்களுக்கான பாலத்தீன அரசும் ஏற்படுத்தி சுதந்திரமாக இயங்க (Two States) இஸ்ரேல் ஒத்துக் கொள்ள வேண்டும்.

அல்லது

பரந்த பாலத்தீனத்தில் அனைத்து மக்களுக்கும்( யூதர்கள்,பாலத்தீன இஸ்லாமியர்கள், ட்ரூஸ் கிறித்தவர்கள், ஜொராஸ்ட்ரிய மத்த்தினர்) இயைந்து வாழும் ஒற்றை மத சார்பற்ற அரசை ஏற்படுத்த (One Secular State) இஸ்ரேல் முன்வரவேண்டும்.

இழப்பதற்கு ஏதுமற்ற பாலத்தீன மக்கள் தங்களது அடையாளத்திற்காக தங்களது கண்ணியத்திற்காக களத்தில் நிற்பார்கள் என்பது உறுதி!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

https://aramonline.in/22927/trump-peace-plan-for-gaza/

அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும்

2 months 4 weeks ago

அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும்

முருகானந்தன் தவம்

தியாகி திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் அரசின் ,நீதிமன்றங்களின், படைகளின் தடைகள், அடக்கு முறைகள், அடாவடிகள் எதுவுமின்றி அண்மையில் நடந்து முடிந்துள்ளது.

இம்முறை இவ்வாறாக அரச தரப்புக்களின் அடக்கு முறைகள் அடாவடிகள் இல்லாதபோதும் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அடாவடிகள், அடக்கு முறைகளுடன் நடந்து முடிந்துள்ளதுதான் தமிழ் மக்களை விசனப்படுத்தியுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழி  அகழ்வு இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்கள், கண்டனங்கள், கவலைகள், விமர்சனங்கள் தணிவதற்குள் தியாகி  திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த  அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியமை இவ்வாறு விரட்டுபவர்களின் அரசியல் நாகரிகத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன்,  அரசியல் அடாவடித்தனத்தை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.

தமிழரின் போராட்ட வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறான  போராளிகளில்  அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கையிலேந்தி, காந்திய வழியில்  தமிழ் மக்களின் விடிவிற்காய் காந்திய தேசமான இந்தியத் தேசத்திற்கு எதிராக  நீரின்றி, உணவின்றி பட்டினியால் உயிர் துறந்த ஒருவர் தான் தியாகி  திலீபன்.

1987இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் வடக்கு,கிழக்கில்  கால்பதித்தது. தன்னினம் பகைவனால் அழிக்கப்பட்டு, இந்திய வல்லாதிக்க அரசின் கூட்டுச்சதிக்கு இலக்காகி சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்ட திலீபன் தான் உயிரிலும் மேலாக நேசித்த மக்களின் விடியலுக்காக மகாத்மா காந்தி இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையான   உண்ணா விரதம்  என்ற  அகிம்சை வழி  ஆயுதத்தைக்  கையில் எடுத்து அகிம்சையின் தாய் வீடான  
இந்தியத் தேசத்திடமே 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத அறப்போரைத் தொடுத்தார்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி  நல்லைக் கந்தனின் முன்றிலிலே மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,சிறைச் சாலையிலும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும்,

அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதம் யாவும் மீளப்பெறப்பட வேண்டும், தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாக பொலிஸ்  நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என்ற 5 கோரிக்கைகளை முன்வைத்து தனது சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை  திலீபன்  ஆரம்பித்தார்.

திலீபனின் உண்ணாவிரத நாட்கள் கடந்தோடிய போதும், அந்தக் கோரிக்கைகள் எதுவும் காந்தி தேசத்தினால் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம்  ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை அன்று, தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள்,  சரியாகக்  காலை 10.48 மணிக்கு   திலீபன் உயிர் பிரிந்தது.  அன்றிலிருந்து இன்றுவரை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15ஆம் திகதி  முதல் 26ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் தமிழர் தேசம் மற்றும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில்தான், தமிழர் தேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமான திலீபனை தமது தனியுரிமையாக, தனிச் சொத்தாகச் சொந்தம் கொண்டாடி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  செய்து வந்த அரசியல் இம்முறை தமிழ் மக்களினது கடும் வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.   

வழக்கம் போலவே, இம்முறையும் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஆரம்பமாகின. இதனையடுத்து தினமும் பெருமளவிலான மக்கள், மதத் தலைவர்கள்,அரசியல்

கட்சியினர் என வேறுபாடின்றி சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதில்   கடந்த  17ஆம் திகதி  மாலை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் திலீபனுக்கு  அஞ்சலி செலுத்தச் சென்றனர்.

இதன்போது, அங்கிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என  தடுத்து நிறுத்தி முரண்பட்டுள்ளனர். அமைச்சரையும் அவரது குழுவினரையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

தமிழ்த் தேசத்திற்காக, தமிழ் மக்களுக்காகா உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் அடங்கிய குழுவினரை அதிலும் அவர்கள் தமிழர்களாகவும்  இருக்கும் நிலையில்  அவர்களை அஞ்சலி செலுத்த விடாது தடுக்க,திருப்பியனுப்ப தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு என்ன உரிமையுள்ளதென்பதே   இன்று தமிழர் தேசத்தில் எழுந்துள்ள கேள்வி.

திலீபன்  அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானவனாக  இருக்கையில்  திலீபனை உரிமை கொண்டாடத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யார்? இவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்? இவர்களுக்கும் திலீபனுக்கும் என்ன தொடர்பு? திலீபனுக்கு  அஞ்சலி செலுத்த  யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதனை தீர்மானிக்க இவர்கள் யார்?என்பதே தமிழ்  மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள்
 தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே  நல்லூரில்  திலீபன்  நினைவுத்தூபியை  நிர்மாணித்துப் பராமரித்தவர்கள்.

ஆனால், வீட்டிற்குள் ஒட்டகம் புகுந்து போல்  புகுந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று அங்குள்ளவர்களை எல்லாம் விரட்டிவிட்டு திலீபனின் நினைவுத்தூபி இடத்தை சர்வாதிகாரமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசத்தை  மீட்க வந்தவர்கள் போல, காட்டி அரசியல் செய்கின்றனர். இதுதான் இன்று தமிழ்  மக்களைத்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீது விசனமும் வெறுப்பும் கொள்ள வைத்துள்ளது.

அமைச்சரும் அவரது குழுவினரும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவிடாது தடுக்கப்பட்டமை மிகவும் மோசமான செயல். ஏனெனில், தியாகி திலீபன்   நினைவிடம் என்பது ஒரு பொது இடம் அங்கு எதிரிகளுக்குக் கூட நினைவேந்தல் செய்ய உரிமை உண்டு. இந்த உரிமையைத் தடுப்பதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு  எந்த உரிமையும் இல்லை.

அரசாங்கத்தை எதிர்க்கின்ற களம் தியாகி  திலீபனது நினைவேந்தல் களம் அல்ல.தியாகி திலீபனின் நினைவிடத்தைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சர்வாதிகாரமாக  தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதனால் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள்கூட  திலீபனுக்கு அஞ்சலி செலுத்த அங்கு சென்றால் தாமும் அவமானப்படுத்தப்படுவோம் ,

திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சம் காரணமாக செல்லத் தயங்குகின்றனர்.எனவே தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணியினர் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவார்கள் என்றவாறாக, மக்கள் தமது விசனத்தை வெளிப்படுத்துகின்றனர்.

யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம். அதுதான் மனித மாண்பு. திலீபன்  போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் கூட  திலீபனின் தியாகத்தை மதித்து இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். ஒரு மாவீரனின் தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை.

தமிழ் மக்களின் இனமான உணர்வுகளை, போராளிகளின் தூய்மையான போராட்டத்தை அறியாதவரல்ல அமைச்சர் சந்திரசேகர், திலீபன் போன்ற தமிழ்த் தேசிய இனத்தின் உயர்ந்த நோக்கத்திற்காகத் தமிழ் மக்களுக்காகத் தன்னுயிரை ஆகுதியாக்கியவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த  அவரை அஞ்சலி செலுத்த விடாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முட்டாள்கள் போன்று  செயற்பட்டுள்ளனர்.

அமைச்சர் அரசியல் நோக்கில் அங்கு வந்திருந்தால்  கூட அதுபற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில்,  இவர்களும் தமிழ்த் தேசிய அரசியல் ஆதாயத்திற்காகத்தான் தியாக தீபம் திலீபனை உரிமை கொண்டாடுகின்றனர்.

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த நினைவிடத்திற்கு வந்த போதும்  இதேபோன்றே செம்மணி மனித புதைகுழிப்பகுதிக்கு   அஞ்சலி செலுத்த வந்தபோதும் அமைச்சர் சந்திரசேகரும் அவரது எம்.பி.க்கள் குழுவினரும் விரட்டப்பட்டுள்ளனர். 

இவ்வாறு விரட்டியவர்கள் இதன் மூலம்  சாதிக்க நினைப்பது என்ன? . செம்மணிக்கு வந்த அமைச்சரை அஞ்சலி செலுத்த விடாது விரட்டி விட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி செம்மணிக்கு வரவில்லையென ஒப்பாரி வைக்கின்றனர்.

ஜனாதிபதி இனவாதி என்கின்றனர் .இது மிகவும் இழிநிலையான அரசியல்  .
திலீபன் நினைவேந்தல் விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்  நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. திலீபனின் நினைவேந்தலை பொறுத்த வரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்  திலீபனை உரிமை கொண்டாடி  அசிங்க அரசியல்.அடாவடி அரசியல் செய்கின்றனர். என்பதே உண்மை.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அசிங்க-அரசியலும்-அடாவடி-அரசியலும்/91-365653

அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

2 months 4 weeks ago

அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும்

September 30, 2025

அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும்

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர்  தங்களுக்கு இனிமேலும் கூட அரசியலில் ‘மீட்சி’ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். 

தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை’ தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை  ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். 

அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் பிரமாண்டமான  அரசாங்க  மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தனக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ‘அரசியல் பயங்கரவாதத்தில்’ ஈடுபடுவதாகவும்  கூறி மக்கள் மத்தியில் மீண்டும்  தனக்கு ஆதரவைப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் (கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் )  வைக்கப்பட்டிருந்தபோது  அனேகமாக சகல  எதிர்க்கட்சிகளுமே அவருக்கு ஆதரவாக குரலெழுப்பின.   அவருடன் கடுமையான அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்  அரசியல்வாதிகளும் கூட அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.

அந்தவேளையில்  எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த உத்வேகத்தை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டலைச் செய்யலாம் என்று விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகளும் நம்பினார்கள்.  ஆனால், அந்த உத்வேகம் ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே  தணிந்துவிட்டது. அதற்கு பிறகு கடந்த வாரம் (செப்டெம்பர் 20)  நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79 வது வருடாந்த மகாநாட்டை எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதில் விக்கிரமசிங்க அக்கறை காட்டினார்.

ஆளும் தேசிய மக்கள் சக்தியை தவிர பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட சுமார் 40 கட்சிகள் மகாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தன. அழைக்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும்,  தங்களது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவருமான சஜித் பிரேமதாச மகாநாட்டுக்கு வரவில்லை. ஆனால்,  பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மூத்த அரசியல்வாதிகள் பலர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர். பிரேமதாசவின் செய்தியை மத்தும பண்டார மகாநாட்டில் வாசித்தார். 

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவோ அல்லது  தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவோ மகாநாட்டுக்கு வரவில்லை.  பொதுச் செயலாளர் சாகர காரியவாசம்  மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  ஐக்கிய மக்கள் சக்தியுடன் அணிசேர்ந்து நிற்கும்  சகல தமிழ், முஸ்லிம் கட்சிகளினதும் தலைவர்கள் மகாநாட்டில் கலந்துகொண்ட அதேவேளை, அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும்,  வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் எவரும் பங்கேற்கவில்லை. 

வழமையாக ஐக்கிய தேசிய கட்சியின் மகாநாடுகளில் அதன் முன்னாள் தலைவர்களுக்கே அஞ்சலி செலுத்தி கௌரவம் அளிக்கப்படும். ஆனால் இந்த தடவை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கு மேலதிகமாக,  முன்னாள் பிரதமர்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கும் முக்கியமான அரசியல் தலைவர்களாக விளங்கிய என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி சில்வா, பீற்றர் கெனமன், டி.ஏ. ராஜபக்ச, ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே.வி. செல்வநாயகம்,  சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆர். சம்பந்தன் ஆகியோருக்கும் நினைவஞ்சலி செய்யப்பட்டது.

மகாநாட்டில் விக்கிரமசிங்க நிகழ்த்திய உரை கடந்த மாதம் கைது செய்யப்பட்டதற்கு பிறகு பொதுவெளியில்  அவரின் முதன் முதலான உரையாக அமைந்தது. வழமைக்கு மாறாக வித்தியாசமான முறையில் தனது கட்சியின் வருடாந்த மகாநாடு இந்த தடவை நடத்தப்பட்டதற்கு பிரதான காரணம் தனது கைது என்பதை அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். 2023 செப்டெம்பரில் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் மேற்கொண்ட விஜயத்துக்கு பிறகு நாடு திரும்பும் வழியில்  ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றதும் கூட உத்தியோகபூர்வ விஜயமே என்று  தனதுரையில்  அவர் விளக்கினார்.

கட்சியைப் பற்றி பேசுவதை விடவும் நாட்டில் இன்று உருவாகி வருகின்ற அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பாடுபடவேண்டியதே அவசியமானது என்று விக்கிரமசிங்க வலியுறுத்தினார். மகாநாட்டில் பேசிய வேறு பல அரசியல்வாதிகளும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் கண்காணிப்பில் இன்று நாட்டில் அரசியலமைப்புச் சர்வாதிகாரம் ஒன்று உருவாகிவருவதாக குறிப்பிட்டனர்.

அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டல்களைச் செய்வதற்கு எதிரணி கட்சிகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால், விக்கிரமசிங்க அவரது கைதுக்கு பிறகு கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கக்கூடிய அளவுக்கு பலம் பொருந்திய ஒரு தலைவராக மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. 1975 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராவும்  நடத்தியதைப் போன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரம் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மாகாநாட்டில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அத்தகைய கூட்டங்களை முன்னின்று நடத்தக்கூடிய அளவுக்கு அவரது கட்சி பலம்பொருந்தியதாக இல்லை. தற்போதைய முக்கியமான எதிர்க்கட்சிகளில் எந்தவொன்றுமே பிரமாண்டமான கூட்டங்களை நடத்தக்கூடியதாக வலுவான கட்டமைப்புக்களை கொண்டவையாக இல்லை. அதன் வரலாற்றிலேயே மிகவும் மோசமான அளவுக்கு பலவீனப்பட்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அணிதிரளுவதற்கு மற்றைய கட்சிகள் முன்வரக்கூடிய சாத்தியம் இல்லை.

மகாநாட்டில் உரையாற்றிய மற்றைய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் இதை தெளிவாக உணர்த்துகின்றன.

ஐக்கிய தேசிய கட்சியுடன் தங்களுக்கு எந்தவிதமான இணக்கப்பாடும் கிடையாது என்றும் ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் மத்தும பண்டாரவும் பெ்துஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் காரியவாசமும் மகாநாட்டில் அறிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற பழைய முக்கியமான கட்சிகள் எல்லாமே பல குழுக்களாக பிளவடைந்திருக்கின்றன. அவை இன்றைய சூழ்நிலையில் அரசியலில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடிக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக என்று கூறப்படுகின்ற முயற்சிகளில் வலிந்து பங்கேற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. 

கடந்த மாதம் விக்கிரமசிங்கவின் கைதுக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அதன் ஆதரவை கட்டியெழுப்புவதற்கு இரு முனைகளில் முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஒருபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதியில் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதும்  மறுபுறத்தில், மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து  பரந்தளவிலான அரசாங்க எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைப்பதுமே அவர்களது நோக்கம். 

சஜித் பிரேமதாசவை பொறுத்தவரை, ஐக்கிய தேசிய கட்சியின் இந்த பொறியில் வீழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறார். விக்கிரமசிங்க தலைமைத்துவத்தில் இருந்து விலகும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தனக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்குமானால் பிரேமதாச இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கு இணங்கக்கூடும். ஆனால், முன்னாள் ஜனாதிபதி கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்தோ அல்லது அரசியலில் இருந்தோ விலகுவதற்கான அறிகுறி ஏதுவுமில்லை. அதனால் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியில் தனது தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதிலேயே அக்கறை காண்பிப்பார். அத்துடன் அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூட அண்மையில் அறிவித்தார்..

மற்றைய எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை, ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டினாலும் கூட தேர்தல் கூட்டு ஒன்றைச் செய்து கொள்வது சாத்தியமில்லை. பலம்பொருந்திய ஒரு கட்சியை மையமாக வைத்து கூட்டணியை அமைத்தால் மாத்திரமே தேர்தலில் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி அத்தகைய ஒரு நிலையில் தற்போது இல்லை என்பது மாத்திரமல்ல, அண்மைய எதிர்காலத்திலும் அதன் மக்கள் ஆதரவு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை.

கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டாமல் விக்கிரமசிங்கவின் கைது போன்ற விடயங்களை முன்னிறுத்தி ‘ அரசியலமைப்புச் சர்வாதிகாரத்துக்கு ‘ எதிராக அணிதிரளுமாறு விடுக்கப்படும் அழைப்பு மக்களின் கவனத்தை எந்தளவுக்கு ஈர்க்கும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.

இது இவ்வாறிருக்க,  முன்னாள் ஜனாதிபதிகள் இதுகாலவரை அனுபவித்துவந்த மட்டுமீறிய வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்காக பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தொடர்ந்து கொழும்பில் உள்ள அரச மாளிகையில் இருந்து வெளியேறி தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையின்  தங்காலைக்கு சென்றிருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அரசியல் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டுகிறார். 

தங்காலை வாசஸ்தலத் துக்கு தினமும் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் மாத்திரமல்ல, கொழும்பில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அவரை சந்தித்து வருகிறார்கள். கொழும்பு மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாமல் போனதால் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அரசாங்கம் அவருக்கு அநீதி இழைத்துவிட்டது என்றும் நாட்டு மக்கள் நினைக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி நம்புகிறார் போலும். போரை முடிவுக்கு கொண்டு வந்ததால் தனக்கும் குடும்பத்தவர்களுக்கும் சிங்கள மக்கள் என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச ‘ அறகலய ‘ அனுபவத்துக்கு பின்னரும் கூட விடுபடவில்லை. 

இன்றைய அரசியல் நிலைவரத்தில் உள்ள விசித்திரம் என்ன வென்றால் ரணில் விக்கிரமசிக்கவும் மகிந்த ராஜபக்சவும் தங்களுக்கு அரசியலில் ஒரு ‘ மீட்சி’ இருக்கிறது என்று நம்புவதுதான்!

https://arangamnews.com/?p=12346

நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்

3 months ago

நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்

Published On: 29 Sep 2025, 7:47 AM

| By Minnambalam Desk

Rajan.jpg

ராஜன் குறை 

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நெகிழவைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களின் உதவியுடன் கல்வியிலும், வாழ்விலும் ஏற்றம் பெற்றதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அது அமைந்தது அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்தது.

Rajan-6-1024x536.jpg

அந்த மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் வகையில் கரூரில் சனிக்கிழமையன்று பெருந்துயரம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக சனிக்கிழமை தோறும் செய்யும் பரப்புரைப் பயணத்தில் அன்றைக்கு நாமக்கல்லிற்கும், கரூரிற்கும் சென்றார். மாலை ஏழரை மணி அளவில் அவர் கரூரில் பேசும்போது கூட்ட த்தில் ஏற்பட்ட கட்டுங்கடங்காத நெரிசலில் சிக்கி 40 பேர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மரணமடைந்தனர். 

இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்டு அழுக்காறு கொள்ளும் கூட்டம் உடனே இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா, சினிமா மோகத்தில் சிக்கிச் சீரழியும் நாடு அது என்றெல்லாம் பேசத்துவங்கியது. இன்னொரு கூட்டம் வழக்கம் போல தி.மு.க-தான் சினிமாவையும், அரசியலையும் கலந்தது என்று பிலாக்கணம் வைக்கத் துவங்கியது. இதுதான் பெரியார் மண்ணா, நடிகனைக் காணப்போய் மடிந்துபோகிறார்கள் என்று பொங்குகிறார்கள். 

உலகின் எந்த பெரிய தீர்க்கதரிசியும், மகானும், சிந்தனையாளரும் தாங்கள் பிறந்த மண்ணை முற்றாக பொன்னுலகாக மாற்றியதில்லை. காந்தி பிறந்த, பெருமளவு வாழ்ந்த குஜராத் மண்ணில்தான், இந்தியாவில்தான் மதவாத வன்முறை பேயாட்டம் போட்டது. இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அதற்காக சமகால இந்தியாவை உருவாக்கியதில் காந்திக்கு பெரும்பங்கு இல்லையென்று சொல்ல முடியாது. பெரியாரே இந்தியாவிற்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டுமென்று கூறினார். 

முதலில் நாம் திராவிட இயக்கத்திற்கும், சினிமாவிற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் நாயக நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறுவது எப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பதில் உள்ள அரசியல் போதாமை என்ன, ஏன் இந்த உயிரிழப்பு கரூரில் நிகழ்ந்தது என்பதை பிரித்தறிந்து புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான தத்துவார்த்த மானுடவியல் புரிதல் உருவாக வேண்டும் என்றால் சற்றே பொறுமையாக வரலாற்றை அணுகவேண்டும். 

இருபதாம் நூற்றாண்டில் சினிமாவும், அரசியலும்

உலகின் பல நாடுகளிலும் சினிமா அதன் துவக்கம் முதலே அரசியல் பிரசாரத்திற்கு, அல்லது தேசிய கருத்தியலை உருவாக்க பயன்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இதாலி என பல நாடுகளைச் சொல்லலாம். இந்தியாவிலும் காலனீய எதிர்ப்பு தேசிய உணர்வு சினிமாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் சினிமாவிலும் கூட தேசிய விடுதலைக் கருத்தியல் பேசப்பட்டதை ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் தன்னுடைய Message Bearers நூலில் தொகுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் தேசிய விடுதலை தவிர சமூக நீதிக் கருத்துக்களும் சினிமாவில் புகுந்தன. இதற்கு பல காரணங்கள் இருந்தன. நாடகம், சினிமா இரண்டிலுமே புராணக் கதைகளே ஆக்கிரமித்திருந்த நிலையில் சமகால சமூகக் கதைகளை நாடகமாக்க வேண்டும், சினிமா ஆக்கவேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருந்தது. ஆனால் தமிழ் உரைநடை என்பது ஒருபுறம் எழுத்தில் பண்டிதத்தனமாகவும், மற்றொருபுறம் வடமொழி கலந்ததாகவும், பேச்சு வழக்கில் ஜாதீய கொச்சைகள் நிறைந்ததாகவும் இருந்தது. 

இந்த நிலையில்தான் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பலர் மக்களூக்கு அணுக்கமான ஒரு புதிய உரைநடையை பேச்சிலும், எழுத்திலும் உருவாக்கினர். அதையே நாடகங்களிலும், பின்னர் சினிமாவிலும் வசனமாக பயன்படுத்தினர். அந்த மொழி நடை அடுக்குமொழியாகவும், ஓசை நயமிக்க சொல்லணியாகவும் அமைந்த தால் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றது. அந்த மொழிநடையுடன் சமூக நீதிக் கருத்துக்களையும் இணைத்ததால் நாடகங்களும், சினிமாவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 

அந்த திராவிட தமிழ் அலையில் உருவான நட்சத்திரங்கள்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். அதில் சிவாஜி குணசித்திர நடிகராகவும், எம்.ஜி.ஆர் தார்மீக சாகச கதாநாயகனாகவும் இணைந்து தமிழ் நவீன தன்னிலையின் இருபகுதிகளாக மாறியதில் பெரும் சமூக முக்கியத்துவம் பெற்றனர். சிவாஜி தி.மு.க-வில் ஒரு பகுதியினரின் எதிர்ப்பால் விலகிச் சென்று காமராஜருக்கும், காங்கிரசிற்கும் நெருக்கமானார். எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணித்தார். கட்சியுடன் சேர்ந்து வளர்ந்தார். கட்சியின் கருத்தியலை திரைக் கதையாடல்களாக மாற்றினார். இருபதாண்டு காலம் கட்சியுடன் பிணைந்த நாயக நடிகராக கட்சியின் கருத்துக்களை வசன ங்களிலும், பாடல்களிலும் வெளிப்படுத்தி அத்துடன் முழுவதுமாக அடையாளப் படுத்திக்கொண்டார். எழுத்தறிவு பரவாத சமூகத்தில் திரைப்படங்களே வெகுஜனக் கல்வி வடிவமாக விளங்கியது எனலாம். அது தமிழ் சமூகத்தின் தன்னுணர்வை செழுமைப்படுத்தியது என்பதே உண்மை.

எம்.ஜி.ஆர் ஏழ்மையில் வளர்ந்தவர் என்பதால் அடித்தட்டு சமூகத்தை அறிந்தவர். அண்ணா மறைவிற்குப் பின் அவர் கலைஞருடன் முரண்பட்டு கட்சியைப் பிளந்து புதிய கட்சியை உருவாக்கியபோது அவருக்கு மாநிலம் முழுவதும் கட்சிக் கட்டமைப்பும். தொண்டர் பலமும் உடனே கிடைத்தது. நாவலர் உட்பட பல இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருடன் இணைந்தனர். 

Rajan-4-1-1024x669.jpg

நாயக நடிகர்கள் நேரடியாக அரசியல் தலைவராக முடியுமா? 

திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையாகச் செல்வாக்கு பெற்றிருந்த சிவாஜி கணேசனால் அரசியல் தலைவராக முடியவில்லை. ஏனெனில் அவரது கதாநாயக பிம்பம் குணசித்திர வார்ப்பாக இருந்தது. அவரும் சாகசப் படங்களில் நடித்தாலும் அவரது சிறப்பம்சம் அவர் ஏற்கும்  கதாபாத்திரமாகவே மாறுவதாக இருந்தது. எம்.ஜி.ஆர் தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டதைப் போல, சிவாஜியால் செய்ய முடியவில்லை. இந்த உண்மை எம்.ஜி.ஆர் என்ற நாயக நடிகர் கட்சித் தலைவராக, முதல்வராக மாறியது பிறரால் பின்பற்ற இயலாதது என்பதை உடனடியாகத் தெளிவாக்கியது. 

எம்.ஜி.ஆர் போல வெற்றிகரமாக கட்சித் தலைவராக, முதல்வராக மாறிய மற்றொருவர் என்.டி.ஆர் எனப்பட்ட என்.டி.ராமராவ். இவர் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லாத நிலையில் அதில் கடும் கோஷ்டிப் பூசல் நிலவியதால் அந்த கட்சியின் தலைவர்கள் பலரை ஈர்த்துதான் தன் கட்சியைக் கட்டிக் கொண்டார். அவர் மருமகன் சந்திரபாபு நாயுடுவே காங்கிரஸ் அமைச்சராக இருந்தவர்தான்; சஞ்சய் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். 

என்.டி.ஆர் புராணப் படங்களில் கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வ வேடங்களைத் தாங்கியவர் என்பதுடன், பல படங்களில் எம்.ஜி.ஆர் போல தார்மீக சாகச நாயகனாகவும் நடித்தவர். இளமைக்கால வாழ்வில் சமூக அமைப்பை நன்கு பழகி அறிந்தவர். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்று இல்லாத சூழ்நிலையில் அந்த கட்சியின் ஒரு பகுதியினரைக் கொண்டுதான் அவர் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் தெலுங்கு சினிமாவில் பெரும் சாகச நாயகனாக புகழ்பெற்ற சிரஞ்சீவியால் கட்சியைத் துவங்கி வெற்றி பெற முடியவில்லை.  

இந்த உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது ஒரு நாயக நடிகரின் பிம்பம் எப்படிப் பட்டது, அவர் தலைமை ஏற்க ஏற்கனவே உருவான ஒரு  கட்சியின் கட்டுமானம் கிடைக்குமா, அவர் தலைவராகும் சூழ்நிலை நிலவுமா என பல்வேறு காரணிகளை வைத்துதான் ஒரு நாயக நடிகர் வெற்றிகரமான கட்சித் தலைவராக, முதல்வராக மாற முடியும் என்பது தெளிவாகிறது. ஓரளவு சிறிய கட்சிகளை உருவாக்கி, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சில தொகுதிகளில் வெல்லலாமே தவிர எம்.ஜி.ஆர் போலவோ, என்.டி.ஆர் போலவோ முதல்வராக வெல்வது சாத்தியமில்லை எனலாம். ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்து, அவரால் கட்சியில் இணைக்கப் பட்ட தால் தன்னை அவருடைய வாரிசாக நிறுவிக்கொண்டு அவர் கட்சிக் கட்டுமானத்தை கைப்பற்ற முடிந்தது.

எம்.ஜி.ஆர் போல ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி புதிதாக கட்சி தொடங்கிய பிரபல கதாநாயகர்கள் யாருக்கும் சாத்தியமாகவில்லை என்பதே உண்மை. பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், கமல்ஹாசன் என பலர் முயற்சித்துள்ளனர். யாருமே ஒரு கட்சிக் கட்டுமானத்தை உருவாக்கி அரசியலில் ஒரு முக்கியத் தலைவராக, முதல்வர் வேட்பாளராக பரிணமிக்க முடியவில்லை. விஜய்காந்த் பத்து சதவீத வாக்கு வரை பெற்றாலும் அவரால் தொடர்ந்து கட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பத்தே ஆண்டுகளில் முதல்வர் வேட்பாளராக அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். 

Vijays lust for power and the lives lost in Karur

விஜயின் பதவி மோக அரசியல் 

மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கி, ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது உண்மைதான். நாயக நடிகர்கள் தலைவராகலாம் என்பதும் உண்மைதான். ஆனால் எத்தகைய களப்பணி செய்து அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. களத்திற்கு செல்லாமல், மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கட்சிக் கட்டமைப்பை வேர் மட்ட த்திலிருந்து உருவாக்காமல், தன் நாயக பிம்ப வெளிச்சத்தை வைத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பதைத்தான் பதவி மோக அரசியல் என்று கூற வேண்டியுள்ளது. அதாவது அரசியல் என்பதே நேரடியாக முதல்வராக பதிவியேற்பதுதான் என்று எண்ணுவது அப்பட்டமான பதவி மோகமே தவிர அரசியல் ஈடுபாடு அல்ல. அரசியல் ஈடுபாடு என்பது மக்கள் பணிதானே தவிர ஆட்சி ஆதிகாரமல்ல. 

உண்மையில் மக்கள் பணி செய்ய விருப்பமிருந்தால் ஒரு நாயக நடிகர் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடையே பழக வேண்டும். அவர்கள் தேவைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். தன்னை பின்பற்றுவர்களைக் கொண்டு கட்சிக் கிளைகளை உருவாக்க வேண்டும். அந்த வேர்மட்ட செயல்பாட்டாளர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களிலிருந்து தங்கள் செயல்பாடுகள் மூலம் தலைமைப் பண்புடன் வெளிப்படுபவர்களைக் கொண்டு கட்சியின் இரண்டாம் கட்ட தலைமையை உருவாக்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் கட்சிக்குள் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், சமூக முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து, தன் தலைமைப் பண்பை நிறுவ வேண்டும். பின்னர்தான் தேர்தல், ஆட்சி எல்லாம் சாத்தியப்படும். 

இவ்வாறு தானே கட்சியை வேர்மட்ட த்தில் கட்ட முடியாது என்றால், வேறொரு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தன்னை தலைமைப் பொறுப்பிற்கு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதிலும் பத்திருபது ஆண்டுகள் பயணமே ஒருவரை பக்குவப்படுத்தும். ஆனால் அப்படி யாருடைய தலைமையையும் ஏற்று பணியாற்ற முடியாது, நான் பிரபல கதாநாயகன் என்பதால் நேரடியாக முதல்வராகத்தான் பதவி ஏற்பேன் என்பது சாத்தியமற்ற ஒரு வேட்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

வாரிசு அரசியல் தலைமை என்பதும் சுலபமானதல்ல. கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். கட்சி கட்டமைப்பின் வேர் மட்டம் வரை சென்று பரிச்சயம் கொள்ள வேண்டும். பல்வேறு முரண்பாடுகளை, சிக்கல்களை தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கெட்ட பெயர் ஏற்பட்டு நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். எல்லா வாரிசு தலைவர்களும் கட்சியினர் ஆதரவையும், அவர்கள் மூலம் மக்கள் ஆதரவையும் பெற்றுவிடுவதில்லை என்பதால் வாரிசு தலைமை என்பதும் ரோஜாப் பூக்களாலான பாதையல்ல. முழுப் பொறுப்பையும் தன் தோளில் ஏற்கும் முன் நிறைய பக்குவப்பட வேண்டும்.  

Rajan-2-7.jpg

கூட்டக் காட்சி அரசியல் 

விஜய்க்கு ஆட்சி செய்ய ஆசை இருக்குமளவு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஏனெனில் அப்படி இருந்தால் அரசியல் குறித்து நிறைய பேசுவார். செய்தியாளர்களை சந்திப்பார். பிற அரசியல் தலைவர்களைச் சந்திப்பார். கட்சிக்காரர்களுடன், பல்வேறு மக்கள் பிரிவினருடன் தொடர்ந்து விவாதிப்பார். ராகுல் காந்தி பதினைந்து ஆண்டுகளாகத் தீவிரமாக இவ்விதம் இயங்கி வருகிறார். அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே அவர் ஆழ்ந்த கவனத்துடன் உரையாடுவதாக, பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக வியப்புடன் கூறுவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி தன்னை ஒரு தேசியத் தலைவராக செதுக்கிக் கொண்டு வருகிறார்.  

விஜய் அப்படி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. அவருடன் ஆலோசனையில் பங்கேற்றதாக எந்த சமூக சிந்தனையாளரும் கூறுவதில்லை. மாறாக ஒரு சில தொழில்முறை அரசியல் ஆலோசகர்கள் தயாரிக்கும் நிகழ்வுகளில் அவர்கள் கூறியபடி செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. உதாரணமாக அவர் நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு சென்றபோது தரையில் அமரும்படியும், அனிதாவின் சகோதரர் தோளில் கை போடும்படியும் சொல்லி அனுப்பியதாக மணிகண்டன் வீராசாமி என்பவர் கூறுகிறார். 

கட்சி அமைப்பை உருவாக்குவதையே விஜய் அவுட்சோர்ஸிங் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என சிலரிடம் அவர் அந்த பொறுப்புகளைக் கொடுத்து விட்டார். அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்கிறார். மக்கள் திரளைக் கூட்டி கூட்டக்காட்சி (crowd optics) ஏற்பாடு செய்துவிட்டால் மக்களெல்லாம் தான் சொல்பவர்களுக்கு எல்லா தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறார். அப்படி கூட்டக் காட்சி நடக்கும்போது ஏதோ பேச வேண்டுமே என்று தயாரிக்கப்பட்ட உரைகளை தப்பும் தவறுமாக வாசிக்கிறார். அந்த உரைகளில் இடம்பெறும் தகவல் பிழைகளை யார் சுட்டிக் காட்டினாலும் அவர் கவலைப் படுவதில்லை. 

ரசிகர்கள், பாமர மக்கள் மனோநிலை

இத்தகைய உள்ளீடற்ற பதவி மோக அரசியலில் விஜய் ரசிகர்கள் சிக்கி சீரழிவதுதான் வேதனை. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் புதிய வரலாறு படைப்பதாக நம்புகிறார்கள். கல்லூரி ஸ்டிரைக்கில் பங்கெடுத்த அனுபவம் உள்ளவர்களுக்கு அந்த மனநிலை புரியும். என்னுடைய கல்லூரி நாட்களில் ஒருமுறை ஸ்டிரைக் செய்த போது என் சக மாணவன் ஒருவன் பிரின்ஸிபல் அறைக்குத் தீவைக்கலாமா என்று கேட்டான். விடுதியில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றுதான் ஸ்டிரைக். ஆனால் அதை ஏதோ யுகப்புரட்சி போல நினைக்கும் விடலைப் பருவம். 

பாமர மனிதர்கள் எல்லா காலங்களிலும் தங்கள் குறைகள் தீர்க்கப் படவில்லை என்ற ஏக்கத்துடன்தான் இருப்பார்கள். அடித்தட்டு மக்களுக்கு நிறைய குறைகள் இருக்கும். அதனால் யாரேனும் ஒரு மீட்பர் உருவாகி பொன்னுலகை படைப்பார்கள் என்ற ஏக்கம் அல்லது கனவு இருக்கும். எவ்வளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகத்திலும் ஒரு சாராருக்கு இதுபோல யுகப்புரட்சி கனவுகள் இருக்கும். அது மதவாத வடிவமெடுக்கலாம்; புரட்சிகர வடிவமெடுக்கலாம். அல்லது ஏதோவொரு தற்செயலான கவர்ச்சிகர பிம்பத்திற்கு பின்னால் செல்லலாம்.  

Vijays lust for power and the lives lost in Karur

உலகிலேயே நவீன மக்களாட்சி சமூகங்களில் மூத்த சமூகம் அமெரிக்காதான். அங்கே மக்களாட்சிக் குடியரசு உருவாகி இருநூற்றைம்பது ஆண்டுகள் ஆகப் போகிறது. அந்த சமூகத்தில் டொனால்ட் டிரம்ப் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் வியாபாரி, வெகுஜன ஆதரவுடன் அதிபராகி உலகையே கிலியில் ஆழ்த்தி வருவதைப் பார்க்கிறோம். அவருக்கு மன நிலை சரியாக உள்ளதா என்பதைக் குறித்தே பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். 

இத்தாலியை எடுத்துக்கொண்டால் குடியரசுத் தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்த நாடு அது. ரோமப் பேரரசின் காலத்திலும் சரி, பதினைந்தாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்திலும் சரி, இத்தாலி பல அரசியல் தத்துவங்களின் பரிசோதனைக் களமாக இருந்தது. அத்தகைய நாட்டில் பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, 1936-2023) என்ற எதேச்சதிகாரி வெகுஜன ஆதரவுடன் கோலோச்சியதையும் பார்த்தோம். எனவே தமிழ்நாட்டில் விஜய் போன்ற நடிகர் பின்னால் முதிரா இளைஞர்கள் சிலரும், எளிய மக்கள் சிலரும் திரள்வது அதிசயமல்ல. 

நம்முடைய அரசியல் முதிர்ச்சி அவரை விமர்சன ரீதியாக எதிர்கொள்வதன் மூலம், கண்டிப்பதன் மூலம் இத்தகைய துர்ச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்காக நாம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள திராவிட தமிழர் என்ற முற்போக்கு அரசியல் சமூகத்தை குறைகூறத் தேவையில்லை. எந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தாலும் திராவிட அரசியலைக் குறைகூறும் பார்ப்பனீய சமூக நினைவிலி மனதை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்.    

கட்டுரையாளர் குறிப்பு:  

Vijays lust for power and the lives lost in Karur - Article in Tamil By Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

https://minnambalam.com/vijays-lust-for-power-and-the-lives-lost-in-karur/


விஜய்;கமல்;போராளிகள்;தேர்தல்? - நிலாந்தன்

3 months ago

விஜய்;கமல்;போராளிகள்;தேர்தல்? - நிலாந்தன்

27int-india-stampede-superJumbo-1024x683

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் கட்சி தொடர்பாக அண்மையில் நடிகர் கமலஹாசன் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தார். கூட்டத்துக்கு வருபவர்கள் எல்லாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற பொருள்பட அக்கருத்து அமைந்திருந்தது. அது விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும் பொருந்தும் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார். சமூகத்தில் வெவ்வேறு துறைகளின்மூலம் தாங்கள் பெற்ற பிரபல்யத்தை,செல்வாக்கை தேர்தலில் முதலீடு செய்வது என்பது தேர்தல்மைய அரசியலில் ஒரு பிரதான போக்கு. ஆனால் அதற்காக ரசிகர்கள் எல்லாருமே வாக்களிப்பார்கள் என்று இல்லை. மாணவர்கள் எல்லாருமே ஆசிரியருக்கு வாக்கு போடுவார்கள் என்று இல்லை.  சமூகத்துக்காக தியாகம் செய்தவர்கள் எல்லாரும் தேர்தலில் வெல்வார்கள் என்று இல்லை.

உதாரணமாக, தமிழ்த் தேசிய அரசியலில் ஆசிரியர்கள்  வரதராஜன்,ஐங்கரநேசன், அருந்தவபாலன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக வரதராஜன் தேர்தல் கேட்ட பொழுது மற்றொரு ஆசிரியர் என்னிடம் சொன்னார் “அவருடைய மாணவர்கள் வாக்களித்தாலே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்து விடுவார். ஆனால் மாணவர்களாக இருப்பது வேறு வாக்காளர்களாக இருப்பது வேறு. எல்லா மாணவர்களும் ஆசிரியருக்கு வாக்களிப்பார்கள் என்று இல்லை” என்று.

அப்படித்தான் இந்தியாவில் மணிப்பூரில் இரோம் ஷர்மிலா என்ற பெண் செயற்பாட்டாளர் அங்கு அமுலில் இருந்த சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 15 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மணிப்பூரின் “இரும்புப் பெண்மணி” என்று அழைப்பார்கள். பின்னர் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு 2017ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எந்த மக்களுக்காக அவர் 15 ஆண்டுகள் உண்ணாமல் போராடினாரோ,அதே மக்கள் அவரைக் குரூரமாக நிராகரித்தார்கள். அவருக்கு 100 வாக்குகள்கூட கிடைக்கவில்லை. கட்டுப்பணமும் இல்லை.

தமிழ் தேசியப் பரப்பில்,ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் பின்னர் தேர்தல் கேட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருகிறார்கள். எனினும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நீண்ட காலம் ஈடுபட்ட அமைப்பாகிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே கடந்த 16 ஆண்டுகளிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகளை பெற்றதில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்றபின் கட்சிகளைத் தொடங்கியவர்களும் வெற்றி பெறவில்ல்லை. ஏனைய கட்சிகளில் இணைந்து போட்டியிட்டவர்களுக்கும் வெற்றிபெறவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு பெண், போரில் காலை இழந்தவர்,வன்னியில் போட்டியிட்டார். அவரை வெற்றிபெற வைப்பதற்காக அவருடைய நண்பர்கள் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குப் போய் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அவருக்கு கிடைத்தது இரண்டு ஆயிரத்த்துச்  சொச்சம் வாக்குகள்தான்.

தமிழ்த் தேசியப் பரப்பில் ஏனைய கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எல்லாப்  போராட்டங்களிலும் பொன் மாஸ்டர் காணப்படுவார். அவர் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர். அவர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் கேட்டிருக்கிறார். ஆனால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக வரத் தேவையான வாக்குகளைக் கூட மக்கள் அவருக்குக் கொடுக்கவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தன்னை கொள்கையில் விட்டுக் கொடுப்பற்ற ஒரு கட்சியாகக் கூறிக் கொள்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியத்தை விட்டுக்கொடுப்பின்றி பின்பற்றும் ஒரு கட்சியாகவும் அது தன்னைக் காட்டிக் கொள்கிறது. அப்படியென்றால் ஒவ்வொரு மாவீரர் நாளின் போதும் துயிலுமில்லங்களில் சிந்தப்படும் கண்ணீர் யாவும் அந்தக் கட்சிக்குத்தானே வாக்குகளாகத் திரள வேண்டும்? ஏன் அப்படி நடக்கவில்லை?

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களால் ஏன் தேர்தல்களில் பெரு வெற்றி பெற முடியவில்லை? அவர்களுக்கு தேர்தல் மொழியில் பேசத் தெரியவில்லையா? அல்லது அவர்களைச் சமூகம்  போர்க்களத்துக்கு மட்டும் உரியவர்களாகப் பார்க்கின்றதா? தேர்தல் களத்துக்கு உரியவர்கள் அல்ல என்று கருதுகின்றதா?

இதே  கேள்விகளைச் சிங்கள வாக்காளர்களை நோக்கியும் கேட்கலாம். ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் அடித்தளமாக இருந்தவர்கள் என்று கருதப்படுகின்ற அமைப்புக்களில் ஒரு பகுதி ஒன்றாகத் திரண்டு குடைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டன. ஆனால் அவர்களுக்கு அற்பசொற்ப வாக்குகள்தான் கிடைத்தன. நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 11 ஆயிரம் வாக்குகள் ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட 30,000 வாக்குகள். அதேசமயம் போராட்டங்களின் விளைவுகளை தேர்தல் மொழியில் கவர்ச்சியாக மொழிபெயர்த்த ஜேவிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மையப் பெற்று இப்பொழுது நாட்டை ஆட்சி செய்கின்றது.

அப்படியென்றால் சிங்கள மக்கள் தங்களுக்காக வீதியில் இறங்கிப் போராடியவர்களை அல்லது அந்தப் போராட்டங்களைப் பின்னிருந்து ஊக்குவித்தவர்களை ஏன் தோற்கடித்தார்கள் ?

போராளிகள் வேறு அரசியல்வாதிகள் வேறு என்று மக்கள் கருதுகின்றார்களா? போராளிகள் அரசியல்வாதிகளாக மாறுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லையா ? அல்லது போராளிகளுக்கு தங்கள் போராட்டத்தை தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியவில்லையா? அல்லது உண்மையான அர்ப்பணிப்புக்கும் நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் தியாகத்துக்கும் தேர்தல் அகராதியில் இடமில்லையா ?

ஆனால் ஜேவிபியும் முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் குரூரமாக நசுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் அவர்கள் தேர்தல் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்து விட்டதனால்தான் இம்முறை ஆளுங்கட்சியாக வர முடிந்திருக்கின்றது. ஜேவிபி தன்னை எம்பிபியாக உருமாற்றிக் கொண்டது. அதன் விளைவாகத்தான் இப்பொழுது நாட்டை ஆள்கின்றது.

ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தியாகங்கள்,இரோம் சர்மிளா போன்றவர்களின் தியாகம் என்பவற்றோடு நடிகர் விஜயின் செல்வாக்கை ஒப்பிட முடியாது. ஆனால் இங்கு இந்த கட்டுரையின் குவிமையம் என்னவென்றால் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்கான தகமைகள் எவை எவை என்ற கேள்விதான். மிக உயர்வான தகமைகள் என்று கருதப்படும் தியாகம், அர்ப்பணிப்பு,நேர்மை போன்றவற்றைத் தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியாத போராளிகள் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறார்கள். அரசியலில் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் தொடர்ந்து பின் தள்ளப்படுவார்கள். மாறாக அரசியலை ஒரு  பிழைப்பாக முன்னெடுப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

தமிழகத்தில் நல்லகண்ணு என்று ஒர் இடதுசாரி இருக்கிறார். நேர்மையானவர், கண்ணியமானவர், ஒரு சன்னியாசியைப் போன்றவர், அர்ப்பணிப்பு மிக்கவர். ஆனால் அவர் தேர்தலில் வென்றதில்லை. இது தேர்தல் ஜனநாயகத்தில் உள்ள அடிப்படைப் பலவீனம்.

nallakannnu-2.jpg

வாக்காளர்களின் நாடித்துடிப்பை  நன்கு அறிந்தவர்கள்,தேர்தல் அரசியலின் கள்ளத்தனங்களை விளங்கிக் கொண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இங்கு வெற்றியைத் தீர்மானிப்பது வாக்காளர்களின் அறியாமையா? அல்லது அறிவா? அல்லது விழிப்பற்ற பொதுப் புத்தியா ?அல்லது குறிப்பிட்ட வேட்பாளரின் அதிர்ஷ்டமா? ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய,அரசியல் செயற்பாட்டாளராகிய எம்மா கோல்ட்மன் கூறுவதுபோல, “”வாக்களிப்பு எதையாவது மாற்றுமாக இருந்தால்,அவர்கள் தேர்தலைச் சட்டவிரோதமாக்கி விடுவார்கள்” என்பதுதான் சரியா ?

https://www.nillanthan.com/7802/

இது போர்க்களமல்ல; அரசியற் களமே! — கருணாகரன் —

3 months ago

இது போர்க்களமல்ல; அரசியற் களமே!

September 29, 2025

இது போர்க்களமல்ல; அரசியற் களமே!

— கருணாகரன் —

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாணசபைகளுக்கு மேலான (13+) அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் இதுவரையிலும் வலியுறுத்திக் கொண்டிருந்தன தமிழ்த்தேசியக் கட்சிகள். இதற்காக இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் கோரிக் கொண்டிருந்தன. இந்தக் கோரிக்கையோடு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரலாயத்துக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்துக்கும் பல தடவை சென்று முறையிட்டும் பேசியும் வந்திருக்கிறார்கள். 23.09.2025 அன்று கூட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் இதற்காக இந்தியத் தூதரைச் சந்தித்திருக்கின்றனர்.

ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தமிழ்க் கட்சிகள் அதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்காமல், வழமையைப்போல “தனித்தவில்” வாசிக்கின்றன. இது ஏன்? குறைந்த பட்சம் தமிழ்பேசும் கட்சிகளாகக் கூட ஒருங்கிணைந்த கூட்டுக் கோரிக்கையாக இதனை மாற்ற முடியாமல் இருப்பது ஏன்? 

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தென்னிலங்கைக் கட்சிகள் எல்லாம் இலங்கை அரசை (NPP அரசாங்கத்தை) மட்டும் கேட்கவில்லை. இந்திய அரசையும் கேட்டுள்ளன. இதற்கான சந்திப்பு ஒன்றுகூட கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சந்தியின் எம்பிக்களுக்கும் இந்தியத்தூதுவருக்குமிடையில் நடந்துள்ளது. அப்பொழுது எல்லாக் கட்சிகளும் கூடி ஒன்றாக வாருங்கள். அப்போதுதான் இந்தக் கோரிக்கைக்கு வலுக் கூடும் என்று சொல்லியிருக்கிறார் இந்தியத் தூதர். 

இவ்வளவு காலமும் மாகாணசபைகளுக்கான அதிகாரத்தைப் பகிர்வதில் பின்னடித்த கட்சிகள் (சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன உள்ளிட்டவை) எல்லாம் மாகாணசபைகளைப் பற்றியே பேசுகின்ற – பேச வேண்டிய ஒரு காலம் வந்துள்ளது.  அப்படியான ஒரு அரசியல் நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது. 

இதற்குக் காரணம், ஜனாதிபதி, பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றம் போன்ற அதிகார மையங்களை NPP கையகப்படுத்தி வைத்திருக்கிறது. ஏனைய கட்சிகள் வரலாற்றில் முதற்தடவையாக அதிகாரமற்ற தரப்புகளாக மாறியுள்ளன. இதனால்  மாகாணசபைகளிலாவது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக அதற்கான தேர்தலைக் கோருகின்றன. தேர்தலை  நடத்தினால் எப்படியாவது மாகாணசபைகளைக் கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையோடிருக்கின்றன. 

அப்படித் தேர்தலை நடத்தி மாகாணசபைகளைக் கைப்பற்றினால், பிறகு இந்தக் கட்சிகளால் அடுத்த கட்டப்போராட்டம் மாகாணசபைகளுக்கான அதிகாரத்துக்காக  நடத்தப்படும். ஏனென்றால், அதிகாரமற்ற மாகாணசபைகளை வைத்துக் கொண்டிருப்பதால் இவற்றுக்கு என்ன பயன்? எனவே சிங்களக் கட்சிகளே மாகாண அதிகாரத்தைக் கோருகின்ற, அதற்காகப் போராடுகின்ற ஒரு காலம் கனிந்துள்ளது. 

இவ்வாறு கனிந்துள்ள நல்வாய்ப்புச் சூழலைப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றித் தமிழ்த்தேசியக் கட்சிகளிடத்திலும் சரி, தமிழ்த்தேசியம் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்காத ஏனைய தமிழ்க்கட்சிகளும் (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, கிழக்குத் தமிழர் ஒன்றியம், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சி போன்றவை) சரி அக்கறையற்றே உள்ளன. அல்லது இதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றன. 

மாகாணசபைகளைப் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் முதற்கட்ட அனுகூலங்களைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்று மெய்யாகவே இந்தக் கட்சிகள் நம்பினால், இப்பொழுது உருவாகியிருக்கின்ற மாகாணசபைகளின் மீதான அனைத்துத் தரப்பின் கரிசனைச்  சூழலைக் கையாளக் கூடிய கட்டமைப்பையும் பொறிமுறையையும் உருவாக்க முயற்சித்திருக்கும். அதற்கான சந்திப்புகளையும் உரையாடல்களையும் வடக்குக் கிழக்கு தெற்கு மேற்கு மத்தி என அனைத்துப் பரப்பிலுமுள்ள சக்திகளுடன் நடத்துவதற்கான தயாரிப்புகள் நடந்திருக்கும். மாகாணசபைகளைப் பற்றிச் சிந்திக்கின்ற அனைத்து தரப்பையும் ஒருங்கிணைந்த ஒரு Net Work இல் கொண்டு வந்திருக்கும்.

இதில் அரசியற் கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்துச் சூழலிலும் உள்ள ஊடகவியலாளர்கள், ஜனநாயக விரும்பிகள், மாகாணசபைகளைப் பற்றியும் அதிகாரப் பகிர்வு பற்றியும்  சாதகமாகப் பேசி வரும் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டு முன்னணியாக மாற்ற வேண்டும். இதைச் சாத்தியமாக்குவது ஒன்றும் கடினமே இல்லை. ஏனென்றால், இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளதைப்போல, எல்லாத் தரப்பும் மாகாணசபைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அதற்கான கட்டமைப்பை உருவாக்குவது எளிதல்லவா! 

முதற்கட்டமாக கொழும்பில் இதற்கென ஒரு தொடர்பாடல் மையத்தையும் தொடர்பாடற் குழுவையும் உருவாக்க வேண்டும். அதிலிருந்தே விடயங்களைக் கையாளலாம். 

இதில் கவனிக்க வேண்டியது, இந்த விடயத்தில் படிப்படியாகவே விடயங்களை நகர்த்த வேண்டும். முதலில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு அரசிடம் கூட்டாகக் கேட்பது, அழுத்தம் கொடுப்பது. குறிப்பாக கால எல்லையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்துவது. இதற்கு அரசாங்கம் சரியான பதிலளிக்கவில்லை என்றால், போராட்டங்களை நடத்துவதைப் பற்றிச் சிந்திப்பது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவது என்பது, ஜனாநாயக அடிப்படையிலான கோரிக்கையாகும். அதை வலியுறுத்துவது ஜனநாயக அடிப்படையிலானது. எந்த நிலையிலும் எதன் பொருட்டும் அரசாங்கம் ஜனநாயக மறுப்பைச் செய்யக் கூடாது என்பதாக இந்தப் போராட்டங்களும் கோரிக்கைகளும் அமைய  வேண்டும். 

அரசாங்கம் இணங்கியோ உடன்பட்டோ மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், அதை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி ஆராயலாம். இது ஒன்றும் முக்கியமானதல்ல. ஏனென்றால், மாகாணசபைகளுக்கான தேர்தல் வெவ்வேறு சூழலைக் கொண்ட பிராந்தியங்களின் தேர்தலாக இருப்பதால், அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவாறே தேர்தலை எதிர்கொள்ளும் நடைமுறைகளும் இருக்கும். ஆனாலும் அதைக் குறித்தும் சிந்திக்கலாம். 

அடுத்தது முக்கியமானது. அதுதான் அதிகாரங்களை வலுப்படுத்துவதாகும். மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைக் கோருவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதுமாகும். இதற்கான கலந்துரையாடல்களு பொறிமுறையும் வேணும். ஆனால், அதை இப்பொழுது எக்காரணம் கொண்டு செய்யவே கூடாது. அப்படி அவரசப்பட்டு அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேச முற்பட்டால், மாகாணசபைகளுக்கான தேர்தல் கோரிக்கையே விடுபட்டுப் போகக் கூடிய சூழல் உருவாகி விடும். மட்டுமல்ல, தொடக்கத்திலேயே தேவையற்ற விவாதங்கள் உருவாகி எல்லாமே பாழாகி விடும். அது அரசாங்கத்துக்கே நல்வாய்ப்பை அளிக்கும். 

ஆகவே இந்த விடயத்தை மிக நுட்பமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டிய கூடுதல் பொறுப்பு தமிழ்க்கட்சிகளுக்கு உள்ளது. தமிழ்த்தரப்பு அல்லது தமிழ் பேசும் சமூகங்கள்தான் இதனால் (மாகாணசபைகள் முடக்கப்பட்டதால்) கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றன. 

எனவே கூடிய கரிசனையை எடுக்க வேண்டியது தமிழ் பேசும் தரப்பினரே. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களிடமிருந்து இன்னும் அழுத்தம் திருத்தமான ஒரு அபிப்பிராயத்தையும் அல்லது நிலைப்பாட்டையும் காண முடியவில்லை. எனவே தமிழ்தரப்பு முக்கியமாக முஸ்லிம் கட்சிகளோடு பிரத்தியேகமாகப் பேச வேண்டும். 

தேர்தல் கூட்டுகளை வைப்பதற்கு ஆலாய்ப் பறந்து இரவு பகலாகச் சிந்திக்கின்ற – சந்திப்புகளை நடத்துகின்ற, கூட்டுகளை உருவாக்குகின்ற அரசியற் கட்சிகள், அதை விட முக்கியமான மாகாணசபை விடயத்தில் ஆர்வமற்றிருப்பது ஏன்?

மாகாணசபைகளைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசி வருகிறோம். அப்படியிருக்கும்போது அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை என்று எப்படிக் குற்றம் சாட்ட முடியும் என்று சில கட்சியினர் கேட்கலாம். எதையும் பேசுவது வேறு. அவற்றைச் செயலாக்கமாக வெற்றியடையச் செய்வது வேறு. இப்பொழுது பேசுவதை விட செயற்படுவதற்கான சூழல் தானாகவே வந்திருப்பதால், அதை வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றே இங்கே வலியுறுத்தப்படுகிறது. மாறாக எவரையும் குற்றப்படுத்தி நிந்திப்பதற்காக அல்ல. ஆனால், மந்த கதியில் எதையும் செய்ய  முயற்சித்தால், அது எதிர்விளைவுகயே – பின்னடைவுகளையே தரக் கூடிய சாத்தியமுண்டு. அரசியலில் அபூர்வமாகவே வாய்ப்புகள ஏற்படுவது. அதைக் கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதே நிபுணத்துவமும் சாணக்கியமுமாகும். 

இப்போது உருவாகியிருக்கும் மாகாணசபைகளுக்கான தேர்தல் குறித்த பல தரப்பின் குரல்களுக்காக அரசாங்கம் அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவதாகப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியுள்ளது. ஆனால், அதற்கான கால எல்லையை அது சொல்லவில்லை. மந்த கதியில் அல்லது தனித்த நிலையில் இந்தக் கோரிக்கை இருக்குமாக இருந்தால், அரசாங்கம் இதை இழுத்தடித்து, வேறொரு சூழ்நிலைக்குத் தள்ளி விடவும் வாய்ப்புண்டு. அப்பொழுது இந்தக் கோரிக்கையைக் கை விட்டுத் தென்னிலங்கைக் கட்சிகள் வேறு பிரச்சினையில் தாவி விடவும் கூடும். 

ஆகவேதான் தாமதிக்காமல் விரைவில் இது தொடர்பாக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது மாகாண சபைகளை இயங்க வைப்பதற்காக வேலை செய்வதற்கு வாய்ப்பான சூழல். இதில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தவணை முறையில் மரணமே!

தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடக்கம் அனைத்துத் தமிழ் பேசும் தரப்பினரும் தங்களுடைய அடையாளத்துக்கு ஏற்பவும் மாகாணசபைகளைக் கொண்டு வருவதற்கு முன்னின்றவர்கள் என்ற அடிப்படிக் காரணத்துக்காகவும் விரைந்து களத்தில் இறங்க வேண்டும். இது ஒன்றும் போர்க்களமல்ல. அரசியற் களமே!

https://arangamnews.com/?p=12343

நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும் - ராஜன் குறை 

3 months ago

நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்

29 Sep 2025, 7:47 AM

Rajan.jpg

ராஜன் குறை 

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நெகிழவைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களின் உதவியுடன் கல்வியிலும், வாழ்விலும் ஏற்றம் பெற்றதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அது அமைந்தது அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்தது.

Rajan-6-1024x536.jpg

அந்த மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் வகையில் கரூரில் சனிக்கிழமையன்று பெருந்துயரம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக சனிக்கிழமை தோறும் செய்யும் பரப்புரைப் பயணத்தில் அன்றைக்கு நாமக்கல்லிற்கும், கரூரிற்கும் சென்றார். மாலை ஏழரை மணி அளவில் அவர் கரூரில் பேசும்போது கூட்ட த்தில் ஏற்பட்ட கட்டுங்கடங்காத நெரிசலில் சிக்கி 40 பேர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மரணமடைந்தனர். 

இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்டு அழுக்காறு கொள்ளும் கூட்டம் உடனே இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா, சினிமா மோகத்தில் சிக்கிச் சீரழியும் நாடு அது என்றெல்லாம் பேசத்துவங்கியது. இன்னொரு கூட்டம் வழக்கம் போல தி.மு.க-தான் சினிமாவையும், அரசியலையும் கலந்தது என்று பிலாக்கணம் வைக்கத் துவங்கியது. இதுதான் பெரியார் மண்ணா, நடிகனைக் காணப்போய் மடிந்துபோகிறார்கள் என்று பொங்குகிறார்கள். 

உலகின் எந்த பெரிய தீர்க்கதரிசியும், மகானும், சிந்தனையாளரும் தாங்கள் பிறந்த மண்ணை முற்றாக பொன்னுலகாக மாற்றியதில்லை. காந்தி பிறந்த, பெருமளவு வாழ்ந்த குஜராத் மண்ணில்தான், இந்தியாவில்தான் மதவாத வன்முறை பேயாட்டம் போட்டது. இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அதற்காக சமகால இந்தியாவை உருவாக்கியதில் காந்திக்கு பெரும்பங்கு இல்லையென்று சொல்ல முடியாது. பெரியாரே இந்தியாவிற்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டுமென்று கூறினார். 

முதலில் நாம் திராவிட இயக்கத்திற்கும், சினிமாவிற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் நாயக நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறுவது எப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பதில் உள்ள அரசியல் போதாமை என்ன, ஏன் இந்த உயிரிழப்பு கரூரில் நிகழ்ந்தது என்பதை பிரித்தறிந்து புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான தத்துவார்த்த மானுடவியல் புரிதல் உருவாக வேண்டும் என்றால் சற்றே பொறுமையாக வரலாற்றை அணுகவேண்டும். 

இருபதாம் நூற்றாண்டில் சினிமாவும், அரசியலும்

உலகின் பல நாடுகளிலும் சினிமா அதன் துவக்கம் முதலே அரசியல் பிரசாரத்திற்கு, அல்லது தேசிய கருத்தியலை உருவாக்க பயன்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இதாலி என பல நாடுகளைச் சொல்லலாம். இந்தியாவிலும் காலனீய எதிர்ப்பு தேசிய உணர்வு சினிமாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் சினிமாவிலும் கூட தேசிய விடுதலைக் கருத்தியல் பேசப்பட்டதை ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் தன்னுடைய Message Bearers நூலில் தொகுத்துள்ளார். 

தமிழ்நாட்டில் தேசிய விடுதலை தவிர சமூக நீதிக் கருத்துக்களும் சினிமாவில் புகுந்தன. இதற்கு பல காரணங்கள் இருந்தன. நாடகம், சினிமா இரண்டிலுமே புராணக் கதைகளே ஆக்கிரமித்திருந்த நிலையில் சமகால சமூகக் கதைகளை நாடகமாக்க வேண்டும், சினிமா ஆக்கவேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருந்தது. ஆனால் தமிழ் உரைநடை என்பது ஒருபுறம் எழுத்தில் பண்டிதத்தனமாகவும், மற்றொருபுறம் வடமொழி கலந்ததாகவும், பேச்சு வழக்கில் ஜாதீய கொச்சைகள் நிறைந்ததாகவும் இருந்தது. 

இந்த நிலையில்தான் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பலர் மக்களூக்கு அணுக்கமான ஒரு புதிய உரைநடையை பேச்சிலும், எழுத்திலும் உருவாக்கினர். அதையே நாடகங்களிலும், பின்னர் சினிமாவிலும் வசனமாக பயன்படுத்தினர். அந்த மொழி நடை அடுக்குமொழியாகவும், ஓசை நயமிக்க சொல்லணியாகவும் அமைந்த தால் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றது. அந்த மொழிநடையுடன் சமூக நீதிக் கருத்துக்களையும் இணைத்ததால் நாடகங்களும், சினிமாவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 

அந்த திராவிட தமிழ் அலையில் உருவான நட்சத்திரங்கள்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். அதில் சிவாஜி குணசித்திர நடிகராகவும், எம்.ஜி.ஆர் தார்மீக சாகச கதாநாயகனாகவும் இணைந்து தமிழ் நவீன தன்னிலையின் இருபகுதிகளாக மாறியதில் பெரும் சமூக முக்கியத்துவம் பெற்றனர். சிவாஜி தி.மு.க-வில் ஒரு பகுதியினரின் எதிர்ப்பால் விலகிச் சென்று காமராஜருக்கும், காங்கிரசிற்கும் நெருக்கமானார். எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணித்தார். கட்சியுடன் சேர்ந்து வளர்ந்தார். கட்சியின் கருத்தியலை திரைக் கதையாடல்களாக மாற்றினார். இருபதாண்டு காலம் கட்சியுடன் பிணைந்த நாயக நடிகராக கட்சியின் கருத்துக்களை வசன ங்களிலும், பாடல்களிலும் வெளிப்படுத்தி அத்துடன் முழுவதுமாக அடையாளப் படுத்திக்கொண்டார். எழுத்தறிவு பரவாத சமூகத்தில் திரைப்படங்களே வெகுஜனக் கல்வி வடிவமாக விளங்கியது எனலாம். அது தமிழ் சமூகத்தின் தன்னுணர்வை செழுமைப்படுத்தியது என்பதே உண்மை.

எம்.ஜி.ஆர் ஏழ்மையில் வளர்ந்தவர் என்பதால் அடித்தட்டு சமூகத்தை அறிந்தவர். அண்ணா மறைவிற்குப் பின் அவர் கலைஞருடன் முரண்பட்டு கட்சியைப் பிளந்து புதிய கட்சியை உருவாக்கியபோது அவருக்கு மாநிலம் முழுவதும் கட்சிக் கட்டமைப்பும். தொண்டர் பலமும் உடனே கிடைத்தது. நாவலர் உட்பட பல இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருடன் இணைந்தனர். 

Rajan-4-1-1024x669.jpg

நாயக நடிகர்கள் நேரடியாக அரசியல் தலைவராக முடியுமா? 

திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையாகச் செல்வாக்கு பெற்றிருந்த சிவாஜி கணேசனால் அரசியல் தலைவராக முடியவில்லை. ஏனெனில் அவரது கதாநாயக பிம்பம் குணசித்திர வார்ப்பாக இருந்தது. அவரும் சாகசப் படங்களில் நடித்தாலும் அவரது சிறப்பம்சம் அவர் ஏற்கும்  கதாபாத்திரமாகவே மாறுவதாக இருந்தது. எம்.ஜி.ஆர் தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டதைப் போல, சிவாஜியால் செய்ய முடியவில்லை. இந்த உண்மை எம்.ஜி.ஆர் என்ற நாயக நடிகர் கட்சித் தலைவராக, முதல்வராக மாறியது பிறரால் பின்பற்ற இயலாதது என்பதை உடனடியாகத் தெளிவாக்கியது. 

எம்.ஜி.ஆர் போல வெற்றிகரமாக கட்சித் தலைவராக, முதல்வராக மாறிய மற்றொருவர் என்.டி.ஆர் எனப்பட்ட என்.டி.ராமராவ். இவர் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லாத நிலையில் அதில் கடும் கோஷ்டிப் பூசல் நிலவியதால் அந்த கட்சியின் தலைவர்கள் பலரை ஈர்த்துதான் தன் கட்சியைக் கட்டிக் கொண்டார். அவர் மருமகன் சந்திரபாபு நாயுடுவே காங்கிரஸ் அமைச்சராக இருந்தவர்தான்; சஞ்சய் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். 

என்.டி.ஆர் புராணப் படங்களில் கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வ வேடங்களைத் தாங்கியவர் என்பதுடன், பல படங்களில் எம்.ஜி.ஆர் போல தார்மீக சாகச நாயகனாகவும் நடித்தவர். இளமைக்கால வாழ்வில் சமூக அமைப்பை நன்கு பழகி அறிந்தவர். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்று இல்லாத சூழ்நிலையில் அந்த கட்சியின் ஒரு பகுதியினரைக் கொண்டுதான் அவர் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் தெலுங்கு சினிமாவில் பெரும் சாகச நாயகனாக புகழ்பெற்ற சிரஞ்சீவியால் கட்சியைத் துவங்கி வெற்றி பெற முடியவில்லை.  

இந்த உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது ஒரு நாயக நடிகரின் பிம்பம் எப்படிப் பட்டது, அவர் தலைமை ஏற்க ஏற்கனவே உருவான ஒரு  கட்சியின் கட்டுமானம் கிடைக்குமா, அவர் தலைவராகும் சூழ்நிலை நிலவுமா என பல்வேறு காரணிகளை வைத்துதான் ஒரு நாயக நடிகர் வெற்றிகரமான கட்சித் தலைவராக, முதல்வராக மாற முடியும் என்பது தெளிவாகிறது. ஓரளவு சிறிய கட்சிகளை உருவாக்கி, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சில தொகுதிகளில் வெல்லலாமே தவிர எம்.ஜி.ஆர் போலவோ, என்.டி.ஆர் போலவோ முதல்வராக வெல்வது சாத்தியமில்லை எனலாம். ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்து, அவரால் கட்சியில் இணைக்கப் பட்ட தால் தன்னை அவருடைய வாரிசாக நிறுவிக்கொண்டு அவர் கட்சிக் கட்டுமானத்தை கைப்பற்ற முடிந்தது.

எம்.ஜி.ஆர் போல ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி புதிதாக கட்சி தொடங்கிய பிரபல கதாநாயகர்கள் யாருக்கும் சாத்தியமாகவில்லை என்பதே உண்மை. பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், கமல்ஹாசன் என பலர் முயற்சித்துள்ளனர். யாருமே ஒரு கட்சிக் கட்டுமானத்தை உருவாக்கி அரசியலில் ஒரு முக்கியத் தலைவராக, முதல்வர் வேட்பாளராக பரிணமிக்க முடியவில்லை. விஜய்காந்த் பத்து சதவீத வாக்கு வரை பெற்றாலும் அவரால் தொடர்ந்து கட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பத்தே ஆண்டுகளில் முதல்வர் வேட்பாளராக அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். 

Vijays lust for power and the lives lost in Karur

விஜயின் பதவி மோக அரசியல் 

மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கி, ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது உண்மைதான். நாயக நடிகர்கள் தலைவராகலாம் என்பதும் உண்மைதான். ஆனால் எத்தகைய களப்பணி செய்து அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. களத்திற்கு செல்லாமல், மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கட்சிக் கட்டமைப்பை வேர் மட்ட த்திலிருந்து உருவாக்காமல், தன் நாயக பிம்ப வெளிச்சத்தை வைத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பதைத்தான் பதவி மோக அரசியல் என்று கூற வேண்டியுள்ளது. அதாவது அரசியல் என்பதே நேரடியாக முதல்வராக பதிவியேற்பதுதான் என்று எண்ணுவது அப்பட்டமான பதவி மோகமே தவிர அரசியல் ஈடுபாடு அல்ல. அரசியல் ஈடுபாடு என்பது மக்கள் பணிதானே தவிர ஆட்சி ஆதிகாரமல்ல. 

உண்மையில் மக்கள் பணி செய்ய விருப்பமிருந்தால் ஒரு நாயக நடிகர் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடையே பழக வேண்டும். அவர்கள் தேவைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். தன்னை பின்பற்றுவர்களைக் கொண்டு கட்சிக் கிளைகளை உருவாக்க வேண்டும். அந்த வேர்மட்ட செயல்பாட்டாளர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களிலிருந்து தங்கள் செயல்பாடுகள் மூலம் தலைமைப் பண்புடன் வெளிப்படுபவர்களைக் கொண்டு கட்சியின் இரண்டாம் கட்ட தலைமையை உருவாக்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் கட்சிக்குள் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், சமூக முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து, தன் தலைமைப் பண்பை நிறுவ வேண்டும். பின்னர்தான் தேர்தல், ஆட்சி எல்லாம் சாத்தியப்படும். 

இவ்வாறு தானே கட்சியை வேர்மட்ட த்தில் கட்ட முடியாது என்றால், வேறொரு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தன்னை தலைமைப் பொறுப்பிற்கு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதிலும் பத்திருபது ஆண்டுகள் பயணமே ஒருவரை பக்குவப்படுத்தும். ஆனால் அப்படி யாருடைய தலைமையையும் ஏற்று பணியாற்ற முடியாது, நான் பிரபல கதாநாயகன் என்பதால் நேரடியாக முதல்வராகத்தான் பதவி ஏற்பேன் என்பது சாத்தியமற்ற ஒரு வேட்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

வாரிசு அரசியல் தலைமை என்பதும் சுலபமானதல்ல. கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். கட்சி கட்டமைப்பின் வேர் மட்டம் வரை சென்று பரிச்சயம் கொள்ள வேண்டும். பல்வேறு முரண்பாடுகளை, சிக்கல்களை தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கெட்ட பெயர் ஏற்பட்டு நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். எல்லா வாரிசு தலைவர்களும் கட்சியினர் ஆதரவையும், அவர்கள் மூலம் மக்கள் ஆதரவையும் பெற்றுவிடுவதில்லை என்பதால் வாரிசு தலைமை என்பதும் ரோஜாப் பூக்களாலான பாதையல்ல. முழுப் பொறுப்பையும் தன் தோளில் ஏற்கும் முன் நிறைய பக்குவப்பட வேண்டும்.  

Rajan-2-7.jpg

கூட்டக் காட்சி அரசியல் 

விஜய்க்கு ஆட்சி செய்ய ஆசை இருக்குமளவு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஏனெனில் அப்படி இருந்தால் அரசியல் குறித்து நிறைய பேசுவார். செய்தியாளர்களை சந்திப்பார். பிற அரசியல் தலைவர்களைச் சந்திப்பார். கட்சிக்காரர்களுடன், பல்வேறு மக்கள் பிரிவினருடன் தொடர்ந்து விவாதிப்பார். ராகுல் காந்தி பதினைந்து ஆண்டுகளாகத் தீவிரமாக இவ்விதம் இயங்கி வருகிறார். அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே அவர் ஆழ்ந்த கவனத்துடன் உரையாடுவதாக, பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக வியப்புடன் கூறுவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி தன்னை ஒரு தேசியத் தலைவராக செதுக்கிக் கொண்டு வருகிறார்.  

விஜய் அப்படி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. அவருடன் ஆலோசனையில் பங்கேற்றதாக எந்த சமூக சிந்தனையாளரும் கூறுவதில்லை. மாறாக ஒரு சில தொழில்முறை அரசியல் ஆலோசகர்கள் தயாரிக்கும் நிகழ்வுகளில் அவர்கள் கூறியபடி செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. உதாரணமாக அவர் நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு சென்றபோது தரையில் அமரும்படியும், அனிதாவின் சகோதரர் தோளில் கை போடும்படியும் சொல்லி அனுப்பியதாக மணிகண்டன் வீராசாமி என்பவர் கூறுகிறார். 

கட்சி அமைப்பை உருவாக்குவதையே விஜய் அவுட்சோர்ஸிங் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என சிலரிடம் அவர் அந்த பொறுப்புகளைக் கொடுத்து விட்டார். அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்கிறார். மக்கள் திரளைக் கூட்டி கூட்டக்காட்சி (crowd optics) ஏற்பாடு செய்துவிட்டால் மக்களெல்லாம் தான் சொல்பவர்களுக்கு எல்லா தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறார். அப்படி கூட்டக் காட்சி நடக்கும்போது ஏதோ பேச வேண்டுமே என்று தயாரிக்கப்பட்ட உரைகளை தப்பும் தவறுமாக வாசிக்கிறார். அந்த உரைகளில் இடம்பெறும் தகவல் பிழைகளை யார் சுட்டிக் காட்டினாலும் அவர் கவலைப் படுவதில்லை. 

ரசிகர்கள், பாமர மக்கள் மனோநிலை

இத்தகைய உள்ளீடற்ற பதவி மோக அரசியலில் விஜய் ரசிகர்கள் சிக்கி சீரழிவதுதான் வேதனை. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் புதிய வரலாறு படைப்பதாக நம்புகிறார்கள். கல்லூரி ஸ்டிரைக்கில் பங்கெடுத்த அனுபவம் உள்ளவர்களுக்கு அந்த மனநிலை புரியும். என்னுடைய கல்லூரி நாட்களில் ஒருமுறை ஸ்டிரைக் செய்த போது என் சக மாணவன் ஒருவன் பிரின்ஸிபல் அறைக்குத் தீவைக்கலாமா என்று கேட்டான். விடுதியில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றுதான் ஸ்டிரைக். ஆனால் அதை ஏதோ யுகப்புரட்சி போல நினைக்கும் விடலைப் பருவம். 

பாமர மனிதர்கள் எல்லா காலங்களிலும் தங்கள் குறைகள் தீர்க்கப் படவில்லை என்ற ஏக்கத்துடன்தான் இருப்பார்கள். அடித்தட்டு மக்களுக்கு நிறைய குறைகள் இருக்கும். அதனால் யாரேனும் ஒரு மீட்பர் உருவாகி பொன்னுலகை படைப்பார்கள் என்ற ஏக்கம் அல்லது கனவு இருக்கும். எவ்வளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகத்திலும் ஒரு சாராருக்கு இதுபோல யுகப்புரட்சி கனவுகள் இருக்கும். அது மதவாத வடிவமெடுக்கலாம்; புரட்சிகர வடிவமெடுக்கலாம். அல்லது ஏதோவொரு தற்செயலான கவர்ச்சிகர பிம்பத்திற்கு பின்னால் செல்லலாம்.  

Vijays lust for power and the lives lost in Karur

உலகிலேயே நவீன மக்களாட்சி சமூகங்களில் மூத்த சமூகம் அமெரிக்காதான். அங்கே மக்களாட்சிக் குடியரசு உருவாகி இருநூற்றைம்பது ஆண்டுகள் ஆகப் போகிறது. அந்த சமூகத்தில் டொனால்ட் டிரம்ப் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் வியாபாரி, வெகுஜன ஆதரவுடன் அதிபராகி உலகையே கிலியில் ஆழ்த்தி வருவதைப் பார்க்கிறோம். அவருக்கு மன நிலை சரியாக உள்ளதா என்பதைக் குறித்தே பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். 

இத்தாலியை எடுத்துக்கொண்டால் குடியரசுத் தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்த நாடு அது. ரோமப் பேரரசின் காலத்திலும் சரி, பதினைந்தாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்திலும் சரி, இத்தாலி பல அரசியல் தத்துவங்களின் பரிசோதனைக் களமாக இருந்தது. அத்தகைய நாட்டில் பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, 1936-2023) என்ற எதேச்சதிகாரி வெகுஜன ஆதரவுடன் கோலோச்சியதையும் பார்த்தோம். எனவே தமிழ்நாட்டில் விஜய் போன்ற நடிகர் பின்னால் முதிரா இளைஞர்கள் சிலரும், எளிய மக்கள் சிலரும் திரள்வது அதிசயமல்ல. 

நம்முடைய அரசியல் முதிர்ச்சி அவரை விமர்சன ரீதியாக எதிர்கொள்வதன் மூலம், கண்டிப்பதன் மூலம் இத்தகைய துர்ச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்காக நாம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள திராவிட தமிழர் என்ற முற்போக்கு அரசியல் சமூகத்தை குறைகூறத் தேவையில்லை. எந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தாலும் திராவிட அரசியலைக் குறைகூறும் பார்ப்பனீய சமூக நினைவிலி மனதை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும்.    

கட்டுரையாளர் குறிப்பு:  

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி

நோக்கம் திசை மாறாமல் இருக்கட்டும்

3 months ago

நோக்கம் திசை மாறாமல் இருக்கட்டும்

லக்ஸ்மன்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆவது அமர்வில் கடந்த 25ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை உலகத் தலைவர்களுக்கு ஒப்புவித்ததாகவே நோக்க முடிகிறது.

இலங்கையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.போதைப்பொருள் பிரச்சினையும், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளே இருக்கிறது. வேறு ஒன்றுமில்லை.

அதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழையுங்கள், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுபோன்ற தொனியில் தன்னுடைய உரையினை நிகழ்த்திவிட்டு, ஜப்பானுக்குப் பயணமாகியிருக்கிறார்.

அங்கு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற ‘எக்ஸ்போ 2025’ கண்காட்சியில் 
பங்கேற்றார். ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
ஜனாதிபதியின் இந்த உரையானது மக்கள் மத்தியில், குறிப்பாக, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கவலையான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நோக்கம், திசைமாறுதல் என்பது சாதாரணமானதுதான், ஆனால், நம்பிக்கை கொண்டவர்களின் நோக்கம் திசை மாறுவது கவலையானது. இலங்கையில் தமிழ் மக்களின் நோக்கம் ஒரு இடது சாரிச் சிந்தனையுள்ள அரசாங்கமானது நீண்டகாலமாக இருந்து வருகின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் தீர்வினை வழங்கும் என்றே நம்பிக்கை கொண்டிருந்தனர். 

ஆனால், நடப்பதென்னவோ பழையதைப் போலவே இருப்பது அவர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது.ஒவ்வொரு வருடத்திலும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகின்ற வேளைகளில், தமிழ் மக்கள் தம்முடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதாகவே நினைத்துக் கொள்வர்.

ஆனால், அது நிறைவுக்கு வருகையில் ஏமாற்றமாகிப்போவதே வழமையானது. இம்முறை நடைபெறுகின்ற 60ஆவது கூட்டத் தொடரிலும்கூட பொறுப்புக்கூறலின் அவசியமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசரமும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், ஏதுமற்று நிறைவுக்கு வரும்.

இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் அவசியம் தொடர்ந்தும் வலியுறுத்தப்படுகிறது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான விரிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்துமாறும், உடனடி நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தாமதமும் இன்றி நடத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் 
தமிழர் தரப்பு, சர்வதேசத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் கோரி வருகிறது. 

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், ரோம் சாசனத்தில் கையொப்பமிடுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் போன்றவற்றைத் தவிர இனப்படுகொலை, இனப் படுகொலைக்கான நோக்கம் ஆகியவற்றினைக் குறிக்கும் ஆதாரங்களைக் குறிப்பாக சேகரிக்க வேண்டும்.

இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தில் இந்த ஆதார சேகரிப்பு முக்கியமான விடயமாகும். இந்தச் செயற்றிட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். 

என்று பல கடிதங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அனுப்பப்பட்டன.இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் நடைபெற்றன. இவை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு மனித உரிமைப் போரவையிலும் கொண்டுவரப்படும் பிரேரணைகளும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் காணாமல் போகின்றன. இம்முறையிலும் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொண்டுவரப்பட்ட 30-1 பிரேரணைக்கு அன்றைய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீரவின் முன்மொழிவுடன் இலங்கை இணை அனுசரணை வழங்கியது. அதிலிருந்து தொடங்கப்பட்ட பொறுப்புக்கூறல் விவகாரம் இன்னமும் நிறைவுக்கு வரவில்லை.

ஆனால், காலம் கடத்தல் மாத்திரம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாட்டின் அவசியத்தை தமிழர் தரப்பு வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஆனால் நடைபெறுவது ஒன்றுமில்லை என்றே ஆகிப்போகின்றது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் அக்கறையற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றது.

இந்தப் போக்கானது முன்னைய அரசாங்கங்களின் செயற்பாட்டைப் போன்றதாகவே இருக்கிறது, பொறுப்புக்கூறல் விடயத்தில் இந்த அரசாங்கம் பொறுப்பாக நடந்து கொள்ளும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர்.

இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பினூடாக தீர்வு முன்வைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதி வழங்கியிருந்த போதும் இன்னமும் பொறுப்புக்கூறல் விடயத்திலோ அல்லது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு விவகாரத்திலோ உரிய அக்கறை காண்பிக்கப்படவில்லை. இருந்தாலும் பரவாயில்லை, என்றிருந்த தமிழ் மக்கள் ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகள் சபை உரையுடன் முழுவதுமாக ஏமாந்திருப்பர் என்றே கூறலாம்.

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்குப் பயணமாவதற்கு முன்னர் மன்னார் காற்றாலை மின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.

அதன் எதிரொலியாக, வெள்ளிக்கிழமை அந்த திட்டத்திற்கெதிராகப் போராடியவர்கள் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இது நாட்டில் மக்களாட்சி உறுதிப்படுத்தப்படும் என்று கூறிக்கொண்டு ஆட்சி பீடமேறிய இன்றைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஆயுதப்படைகளைக் கொண்டு அடக்க முனைவது “இவர்களும் அவர்கள்” தானா என்று கேட்கத் தோன்றுகின்றது என்கிற விமர்சனத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

இந்த நடவடிக்கை வன்மையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. காற்றாலை செயற்திட்டத்திற்கெதிராக மக்கள் மேற்கொண்ட ஜனநாயக போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்கள், மத குருக்கள் உட்பட சகலரையும் பொலிஸார் அடித்துக் கலைத்தது காற்றாலை இயந்திர பாகங்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்ததிருக்கின்றனர்.

மக்களின் உணர்வுகளை காவல்துறையினரின் ‘பூட்ஸ்’களால் நசுக்கியிருக்கின்றமையானது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இல்லாமல் செய்கிறோம், பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிகளைக் குறைக்கிறோம், நாட்டில் ஊழலை ஒழிக்கிறோம் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துகிறோம்.

நிலைபேறான அபிவிருத்திகளுக்கு முயற்சிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, அதே நேரத்தில், மக்களின் உரிமைகளை மறந்து செயற்படுவதானது ஒருபோதும் நற்போக்காக பார்க்கப்படாது.கடந்தகால செயற்பாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயத்தில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அக்கறையின்றிச் செயற்படுவது தொடர்பில் பல்வேறு தரப்புகளாலும் விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மக்களால் தங்களது நலன் சார்ந்து விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு வழங்கப்படும் பதில்கள் அவர்களைத் திருப்திப்படுத்துவதாக இல்லை என்ற உணர்வு மேலோங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதற்கேற்ற வகையிலேயே அரசாங்கத்தின் அடுத்த அடுத்த நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

இந்த இடத்தில்தான், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் உள்ளக் குமுறல்களையும் நன்கு அறிந்து செயற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,
முன்னைய அரசாங்கங்களைப் போன்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பதான அபிப்பிராயத்துக்குள் அடக்கப்படும் நிலைமை நிலைப்பாடாக மாற்றமடையத் தொடங்கியிருக்கிறது.

இந்தத் தொடக்கம் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பினை அதிகரிப்பதோடு, எதிர்மறையான சிந்தனைகளையும் உருவாக்கும் எனலாம்.  கடந்த கால அரசாங்கங்களின் செயற்பாடுகள் மீது வெறுப்புக்கொண்டிருந்த மக்கள், தேசிய மக்கள் சக்தியைக் கடந்த தேர்தல்களில் ஒரு மாற்றுச் சக்தியாகவே கருதினர்.

ஜனாதிபதித் தேர்தலைவிட, பாராளுமன்றத் தேர்தலில் பேராதரவு கிடைத்திருந்தது. இந்தப் பேராதரவைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களது ஆதிக்கப் பிரயோகத்துக்கான ஆணையாகக் கொள்வது தவறாகும்.

மொத்தத்தில், தங்களது நோக்கம் வேறாக இருந்தாலும் மக்களது நோக்கத்தினை சரியாகப் புரிந்து கொண்டு அவர்களது நோக்கத்தின் பாதையில் ஆட்சியின் நகர்த்தலை மேற்கொள்வதே சிறப்பானது என்பதனையே அவர்கள் அடையாளம்
கண்டுகொள்ள வேண்டும். இருந்தாலும், நோக்கம் திசைமாறாமலிருக்கட்டும் 
என்று எண்ணிக்கொள்வோம.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நோக்கம்-திசை-மாறாமல்-இருக்கட்டும்/91-365485

அநுரவின் 12 மாதகால ஆட்சி

3 months ago

Published By: Vishnu

29 Sep, 2025 | 09:43 PM

image

ஆர்.ராம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியானது தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த முதலாவது ஆண்டானது, அரசாங்கத்தின் முயற்சிகள், எச்சரிக்கையான செயற்பாடுகள், முக்கிய பொருளாதார விடயங்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான வியூகங்கள் என்று பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதொரு காலகட்டமாகும்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவின் முதலாவது ஆட்சிக்காலத்தினை நோக்கும்போது அரசியல் ரீதியாக அதன் அடைவுமட்டங்களை பார்ப்பதிலும், பொருளாதார ரீதியான அடைவுமட்டங்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானதாக இருக்கும்.

ART_02__1_.jpg

ஏனென்றால் அரசாங்கம், அரசியல் ரீதியான விடயங்களை விடவும், சமூக, பொருளாதார ரீதியான விடயங்களுக்கே தாங்கள் முக்கியத்துவம் அளிப்பாக ஆட்சியைப் பொறுப்பெடுத்த முதல்நாளில் இருந்தே தெரிவித்து வந்திருந்தது.

பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, சுற்றுலா, ஏற்றுமதிகள், தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மற்றும் கையிருப்பு ஆகியவற்றுடன் சில காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அந்தவகையில், முதலாவதாக, பணவீக்க விடயத்தினைப் பார்க்கின்றபோது, பணவீக்கம் என்பது சாதாரணமாக குடும்பம் மிக விரைவாக உணரக்கூடியதான விடயமாகும்.  அந்தவகையில், 2024ஆம் ஆண்டு நெருக்கடியான கலகட்டத்தில்  ஜூலையில் 2.4சதவீதமாக இருந்தது. அக்காலப்பகுதியுடன் ஒப்பீடும்போது, உணவுப் பொருட்களின் விலைகள் 0.8சதவீதம் உயர்வடைந்துள்ளன. உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 0.4சதவீதம் உயர்வடைந்துள்ளன. 

மாதாந்த அடிப்படையில், பார்க்கின்றபோது 1.85 சதவீதம் குறைவாக காணப்படுகின்ற அதேசமயம் பணவீக்கம் 4.4 சதவீதத்திலிருந்து 3.6 சதவீதமாகக் குறைந்ததுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் பணவீக்கமான குறுகிய காலத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் பின்னர் இலக்கை நோக்கி படிப்படியாக நகரும் என்றும் எதிர்பார்த்தது.

எனினும் நாட்டின் பணவீக்கத்தின் போக்கானது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாறியிருக்கின்றது. ஒருவருட இடைவெளி காணப்படுகின்றபோதும் பணவீக்கம் 1.2 சதவீதமாக நேர்மறையாக மாறியுள்ளது. இதனால், ஜூலையில் இருந்த விலைகளில் 0.3 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமன்றி, உணவுப்பொருட்களின் விலைகள் 2 சதவீதமாக உயர்ந்ததுள்ளதோடு உணவு அல்லாத உணவுப் பொருட்கள் அல்லாதவற்றின் விலைகள் 0.8 சதவீதமாக நேர்மறையாக மாறியது. மாதாமாதம் குறியீடு சற்று குறைந்தாலும், உணவு அல்லாத பொருட்கள் சிறிய உயர்வைச் சந்தித்தன. 

முக்கிய பணவீக்கம் 2 சதவீதமாக அதிகரித்தது. இதனடிப்படையில், 2024 இல் வீழ்ச்சியடைந்த விலைகள் 2025 இல் மீண்டும் மிதமான அளவில் உயரத் தொடங்கியுள்ளன. ஆகவே பணவீக்கத்தின் அடிப்படையில் குடும்பங்கள் மகிழ்ச்சியான மாற்றத்தினைக் காணவில்லை. 

அடுத்ததாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை எடுத்துக்கொண்டால், 2024இன் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5சதவீத வளர்ச்சி கண்டது. விவசாயம் 3சதவீதமாகவும், தொழில் 10.8சதவீதமாகவும், மற்றும் சேவைகள் 2.6சதவீதமாகவும் வளர்ச்சியைக் கண்டன. கட்டுமானத் துறை, சுரங்கத் தொழில் மற்றும் பல்வேறு உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால் தொழில்துறை உயர்வுக்கு வந்தது. தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் வர்த்தகத்தின் மூலம் சேவைகள் துறைகளும் வளர்ந்தன.

எனினும், 2025இன் இரண்டாம் காலாண்டில் மெத்த உள்நாட்டு உற்பத்தியானது, 4.9சதவீதமாகவே வளர்ந்துள்ளது, இது பொருளாதா மீட்சிக்கான விரிவாக்கத்தின் எட்டாவது தொடர்ச்சியான காலாண்டாகும். அதன்படி, விவசாயம் 2சதவீதம், தொழில்துறை 5.8சதவீதம், மற்றும் சேவைகள் 3.9சதவீதம் அதிகரித்தன. ஆடை, உலோகங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியம் உள்ளிட்ட பல துறைகளில் உற்பத்தி வளர்ந்தது.

ஒட்டுமொத்தமாக, 2024 இன் பிற்பகுதியில் 5.5சதவீதமாக இருந்த இருந்த வளர்ச்சி 2025 இன் நடுப்பகுதியில் 4.9சதவீதமாக சற்றுக் குறைவாக வெளிப்படுத்தப்பட்டாலும் கட்டுமானம், உற்பத்தி மற்றும் விரிவடையும் சேவைகள் ஆகியவற்றால் தொடர்ந்து பலமாக இருந்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாட்டின் வருமாணத்தில், சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியன அந்நிய செலாவணிக்கான முக்கியமான மூலமாக காணப்படுகின்ற நிலையில் இந்தாண்டில் அவற்றின் முன்னேற்றம் காத்திரமாக உள்ளது.  2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 1.3 மில்லியனாக இருந்தது.

ஆனால் 2025 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்துவிட்டது. இத்துறை 2025ஆம் ஆண்டிற்கான இலக்கை மூன்று மில்லியன் பார்வையாளர்களாக நிர்ணயித்துள்ளமை முக்கிய விடயமாகும். 

விசேமாக, 2025 ஆகஸ்ட்டில் முதல் 13 நாட்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 17.1சதவீதமாக அதிகரித்திருந்தது. இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதோடு அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை அடுத்த இடத்தில் உள்ளன. 

அடுத்ததாக, 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் ஆடைத்துறை, தேயிலை, இறப்பர் சார்ந்த பொருட்கள், தேங்காய் சார்ந்த பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவற்றின் உதவியுடன் மொத்த ஏற்றுமதி 10.6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. 2024 ஆகஸ்ட்டில் ஆடைத்துறை இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 500 மில்லியன் டொலர்கள் என்ற வரம்பைக் கடந்துள்ளது. 

அதேபோன்று 2025 ஆகஸ்டில் ஏற்றுமதி வலிமையடைந்ததை அடுத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஆகிய இரு துறைகளையும் இணைத்து மொத்த ஏற்றுமதி 1,607.58 மில்லியன் டொலர்களை கடந்துள்ளது. 2024 ஆகஸ்ட்டை விட 2.57சதவீதம் அதிகமாகும். 

அடுத்ததாக, பணப்பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு கையிருப்பு விடயத்தினைப் பார்கிக்கின்றபோது,  ஜனவரி முதல் 2024 ஆகஸ்ட் வரையில் தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் மொத்தம் 4,288 மில்லியன் டொலர்களாகும். இது 2023 இல் இதே காலகட்டத்தில் 3,863 மில்லியன் டொலர்களில் இருந்தை விடவும் அதிகரிப்பாகும். 

இவ்வாறான நிலையில் 2025 ஜூலை வரையிலான தரவுகள் தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் ஆண்டு இன்றுவரை 4,435.2 மில்லியன் டொலர்களைக் காட்டுகின்றன. மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2025 ஜூலையின் இறுதியில் 6.1 பில்லியன் டொலர்களாக இருந்தது. 

அந்தவகையில், புதிய ஆட்சி நிர்வாகத்தின் முதலாண்டைப் பற்றி கருத்துவெளியிட்டள்ள பெஸ்ட் கப்பிற்றலின் தலைமையாராய்ச்சி மற்றும் மூலோபாய அதிகாரியான திமந்த மாத்யூ, ஸ்திரத்தன்மை அடையப்பட்டிருந்தாலும், முக்கிய சவால்கள் இன்னும் உள்ளன என்று குறிப்பிட்டார்.

அத்துடன் சீர்திருத்தங்களின் நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சி ஓரளவுக்கு அடையப்பட்டுள்ளது. முடிக்கப்பட வேண்டிய மறுசீரமைப்பு செயன்முறை தொடரப்பட்டு, அதன் மூலம் ஒருவித ஸ்திரத்தன்மை அடையப்பட்டுள்ளது. கையிருப்பு இலக்குகள் போன்ற பெரும்பாலான பொருளாதார குறிகாட்டிகளும் அதிகநிலையான மட்டத்தில் நிலைபெற்றுள்ளன. என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முன்னேற்றத்தைப் பொறுத்தவரை, வரவுசெலவுத் திட்டத்தின் செலவினப் பக்கத்தில் மூலதனச் செலவினத்தில் மந்தநிலை இருப்பதாகத் தெரிகிறது, என்றும் பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து வெளியே வருவதால், வளர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு சில அரசாங்க ஆதரவு தேவையாக உள்ளது என்றும் கூறினார்.

ஆவரின் கூற்றுப்படி, மூலதனச் செலவினத்தின் மந்தநிலை வளர்ச்சியைப் பாதிக்கத் தொடங்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சற்றுக் குறைந்து வருகிறது, மேலும் இது வரவிருக்கும் காலாண்டுகளில் மிகவும் தெளிவாகத் தெரியக்கூடும். அதனை உரியவாறு கையாள வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக அரச நிறுவனங்களில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் அவசியமாக முன்னெடுக்கப்பட  வேண்டியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இலங்கை மின்சார சபையில் சில சீர்திருத்தங்கள் நடந்துள்ளன, ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டிற்கு ஏற்ப இன்னும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இதை வெற்றிகரமாக அடைவது, நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், பொருளாதாரம் மீண்டும் நெருக்கடிக்குள் செல்லாமல் இருக்கவும் பாதுகாப்புகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அடுத்த ஆண்டுக்கான சவால், இந்த வேகத்தை மேலும் கட்டியெழுப்புவதாக உள்ளதோடு பணவீக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதுடன், பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் ஈட்டுவதற்கான துறைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தான் தங்கியுள்ளது.  

ஆக மொத்தத்தில் அநுரவின் முதலாவது ஆண்டு பொருளாதார ரீதியாக முதலாவது படியை அடைந்திருந்தாலும் அது அழுத்தமாக பதிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/226442

Checked
Thu, 01/01/2026 - 16:22
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed