இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சோதனை செய்தது வட கொரியா
Published By: DIGITAL DESK 3
24 AUG, 2025 | 11:46 AM
![]()
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மேற்பார்வையில் கீழ் இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆயுதங்கள் "சிறந்த போர் திறன்" மற்றும்"தனித்துவமான தொழில்நுட்பத்தைப்" கொண்டவைகள் என கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை, ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட "பல்வேறு வான் இலக்குகளை அழிக்க இரண்டு வகையான ஏவுகணைகளின் தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் பொருத்தமானவை என்பதை நிரூபித்துள்ளன" என கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடுகளைப் பிரிக்கும் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை (DMZ) சிறிது நேரம் கடந்த வட கொரிய வீரர்கள் மீது செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தென் கொரியா உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு இடையேயான பலத்த பாதுகாப்புடன் கூடிய எல்லையை சுமார் 30 வட கொரிய துருப்புக்கள் கடந்து சென்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளை தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவும் அமெரிக்காவும் திங்கட்கிழமை முதல் இப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
வொஷிங்டனில் திங்கட்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை சந்திக்க உள்ளார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி, கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரச்சாரம் செய்தார்.
இருப்பினும், கிம்மின் சகோதரி லீயின் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளை நிராகரித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் கிம் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் கண்டித்து, அவற்றை "மிகவும் விரோதமான மற்றும் மோதல் நிறைந்தவை" என விவரித்தார்.
வட கொரியத் தலைவர் நாட்டின் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் தனது நோக்கத்தை விரைவுபடுத்துவதாக சபதம் செய்தார்.
ஜனவரியில், வட கொரியா ஒரு ஹைப்பர்சோனிக் போர்முனையுடன் கூடிய புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவுவதாகக் கூறியது, இது "பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளரையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்" என கூறியது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பை ஆதரிக்க துருப்புக்களை அனுப்புவதற்கு ஈடாக வட கொரியா ரஷ்ய ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பெறுவது குறித்து தென் கொரிய மூத்த அதிகாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
