புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய செல்வந்தர்கள் என்ன ஆனார்கள்? - போரின் நடுவே நிலையற்ற சூழல்

பட மூலாதாரம்,ALEXEY NIKOLSKY/SPUTNIK/AFP
படக்குறிப்பு,யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு உத்தரவிட்ட நாளன்று, தொழில் தலைவர்களை கிரெம்ளினுக்கு புதின் வரவழைத்தார்.
கட்டுரை தகவல்
யுக்ரேனுடனான போரின் நடுவே, ரஷ்யாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. ஆனால், விளாடிமிர் புதின் அதிகாரத்தில் இருக்கும் 25 ஆண்டுகளில், ரஷ்யாவின் செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களும் - அதாவது 'ஒலிகார்ச்சுகள்' (oligarchs) தங்கள் அரசியல் செல்வாக்கை கிட்டத்தட்ட முழுமையாக இழந்துவிட்டனர்.
இவை அனைத்தும் ரஷ்ய அதிபருக்குச் சாதகமான செய்திகள். மேற்கத்திய நாடுகளின் தடைகள் பெரும் பணக்காரர்களை புதினுக்கு எதிரிகளாக மாற்றத் தவறிவிட்டன, மேலும் அவரது ' சலுகைகள் மற்றும் தண்டனைகள்' கொள்கைகள் அவர்களை மௌன ஆதரவாளர்களாக மாற்றியுள்ளன.
முன்னாள் வங்கி கோடீஸ்வரரான ஓலெக் டின்கோவ், புதின் எவ்வாறு தண்டனைகளை வழங்குகிறார் என்பதைத் தெளிவாக அறிவார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் போரை "பைத்தியக்காரத்தனமானது" என்று விமர்சித்த மறுநாளே, அவரது நிறுவன நிர்வாகிகளை கிரெம்ளின் தொடர்புகொண்டது. அந்த நேரத்தில் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வங்கியான அவரது 'டின்கோஃப் வங்கி' அதன் நிறுவனருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்காவிட்டால் தேசியமயமாக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
"என்னால் விலை குறித்துப் பேச முடியவில்லை" என்று டின்கோவ் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார். "இது ஒரு பிணைக் கைதியைப் போன்றது - உங்களுக்கு என்ன வழங்கப்படுகிறதோ அதை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னால் பேரம் பேச முடியவில்லை."
ஒரு வாரத்திற்குள், தற்போது ரஷ்யாவின் ஐந்தாவது பணக்கார தொழிலதிபரும், போர் விமான இயந்திரங்களுக்கு நிக்கல் வழங்குபவருமான விளாடிமிர் பொட்டானின் என்பவருடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் வங்கியினை வாங்குவதாக அறிவித்தது. அது அதன் உண்மையான மதிப்பில் 3% விலைக்கு மட்டுமே விற்கப்பட்டது என்கிறார் டின்கோவ்.
இறுதியில், டின்கோவ் தான் ஒரு காலத்தில் வைத்திருந்த சுமார் 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.82 ஆயிரம் கோடி ) மதிப்புள்ள சொத்தை இழந்து, ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.

பட மூலாதாரம்,Chris Graythen/Getty Images
படக்குறிப்பு,யுக்ரேனுக்கு எதிரான போரை விமர்சித்த பிறகு ஓலெக் டின்கோவ் பில்லியன் கணக்கான டாலர்களை இழந்து ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.
புதின் அதிபராவதற்கு முன்பு இருந்த நிலைமைக்கு இது முற்றிலும் மாறானது.
சோவியத் யூனியன் உடைந்ததைத் தொடர்ந்த ஆண்டுகளில், சில ரஷ்யர்கள் முன்னர் அரசுக்குச் சொந்தமாக இருந்த பிரமாண்ட நிறுவனங்களின் உரிமையைப் பெற்றதன் மூலமும், நாட்டின் ஆரம்பகால முதலாளித்துவ வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டதன் மூலமும் மிகப்பெரிய பணக்காரர்களானார்கள்.
அவர்கள் புதிதாகப் பெற்ற செல்வம், அரசியல் கொந்தளிப்பான காலக்கட்டத்தில் அவர்களுக்குச் செல்வாக்கையும் அதிகாரத்தையும் தந்தது; அவர்கள் 'ஒலிகார்ச்சுகள்' என்று அழைக்கப்பட்டனர்.
ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஒலிகார்ச்சான போரிஸ் பெரெசோவ்ஸ்கி, 2000-ஆம் ஆண்டில் புதின் அதிபராக உயர்வதற்குத் தான் தான் பின்னணியில் இருந்ததாகக் கூறினார், மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வாறு செய்ததற்காக மன்னிப்பும் கோரினார்: "சுதந்திரத்தை மிதித்து ரஷ்யாவின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு பேராசை கொண்ட எதிர்கால கொடுங்கோலனையும் ஆக்கிரமிப்பாளனையும் அவரிடம் நான் பார்க்கவில்லை," என்று அவர் 2012-இல் எழுதினார்.
பெரெசோவ்ஸ்கி தனது பங்கை மிகைப்படுத்தியிருக்கலாம், ஆனால் ரஷ்யாவின் ஒலிகார்ச்சுகள் அதிகாரத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் திறன் கொண்டவர்களாக இருந்தனர் என்பது நிச்சயம்.
அவர் மன்னிப்பு கேட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, பிரிட்டனில் புகலிடம் பெற்றிருந்த பெரெசோவ்ஸ்கி அங்கு மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். அந்த காலகட்டத்திற்குள், ரஷ்ய ஒலிகார்ச்சி முறையும் முழுமையாக இறந்துவிட்டது.

பட மூலாதாரம்,Hulton Archive/Getty Images
படக்குறிப்பு,போரிஸ் பெரெசோவ்ஸ்கி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார், அங்கு அவர் பின்னர் 2013-இல் மர்மமான சூழ்நிலையில் இறந்தார்.
எனவே, பிப்ரவரி 24, 2022 அன்று யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு உத்தரவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, கிரெம்ளினில் ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களை புதின் கூட்டியபோது, அவர்களின் சொத்துக்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கப் போகின்றன என்பதை அறிந்திருந்தும் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
"இந்த புதிய சூழ்நிலையிலும் நாம் அதே அளவு சிறப்பாகவும் திறம்படவும் இணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறேன்," என்று அவர் அவர்களிடம் கூறினார்.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு நிருபர், அங்கு குழுமியிருந்த கோடீஸ்வரர்கள் "வெளிறிப்போய் தூக்கமில்லாதவர்களாக" இருந்தார்கள் என விவரித்தார்.
படையெடுப்புக்கு முந்தைய காலமும், அதன் உடனடிப் பின்விளைவுகளும் ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு மிகவும் மோசமாக இருந்தன.
ஃபோர்ப்ஸ் இதழின் படி, ஏப்ரல் 2022 வரையிலான ஓராண்டில், போர், தடைகள் மற்றும் பலவீனமான ரூபிள் மதிப்பு காரணமாக அவர்களின் எண்ணிக்கை 117-லிருந்து 83 ஆகக் குறைந்தது. ஒட்டுமொத்தமாக, அவர்கள் 263 பில்லியன் டாலர்களை இழந்தனர் - அதாவது சராசரியாக தலா 27% சொத்துக்களை இழந்தனர்.
ஆனால் அதற்குப் பிந்தைய ஆண்டுகள், புதினின் போர் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் பெரும் நன்மைகளை அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டின.
போருக்கான தாராளமான செலவினங்கள் 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவில் ஆண்டுக்கு 4% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியைத் தூண்டின. பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக பில்லியன் கணக்கில் சம்பாதிக்காத ரஷ்யாவின் அதி-பணக்காரர்களுக்குக் கூட இது சாதகமாக அமைந்தது.
2024-ஆம் ஆண்டில், ரஷ்யாவின் பாதிக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் ராணுவத்திற்குப் பொருட்களை வழங்குவதில் ஏதோ ஒரு பங்கைக் கொண்டிருந்தனர் அல்லது படையெடுப்பால் பயனடைந்தனர் என்று ஃபோர்ப்ஸின் ஜியாகோமோ டோக்னினி கூறுகிறார்.
"நேரடியாக ஈடுபடாதவர்கள் ஆனால் கிரெம்ளினுடன் ஒரு வகையான உறவை வைத்திருக்க வேண்டிய அவசியமுள்ளவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே இந்த நிலை. ரஷ்யாவில் தொழில் நடத்தும் எவரும் அரசாங்கத்துடன் உறவு வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது நியாயமானது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
2025ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஷ்யாவில் முன்னெப்போதும் இல்லாத அளவு மிக அதிகமான எண்ணிக்கையில் 140 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றனர். அவர்களின் கூட்டு மதிப்பு (580 பில்லியன் டாலர்) படையெடுப்புக்கு முந்தைய ஆண்டை விட வெறும் 3 பில்லியன் டாலர் மட்டுமே குறைவாக இருந்தது.
விசுவாசமாக இருப்பவர்களை லாபம் ஈட்ட அனுமதிக்கும் அதே வேளையில், தனது சொல்லுக்குக் கட்டுப்படாதவர்களை புதின் தொடர்ந்து தண்டித்து வருகிறார்.
எண்ணெய் அதிபர் மிகைல் கோடர்கோவ்ஸ்கிக்கு என்ன நடந்தது என்பதை ரஷ்யர்கள் நன்கு அறிவார்கள். ஒரு காலத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த அவர், 2001-இல் ஒரு ஜனநாயக ஆதரவு அமைப்பைத் தொடங்கிய பிறகு 10 ஆண்டுகளைச் சிறையில் கழித்தார்.

பட மூலாதாரம்,AFP
படக்குறிப்பு,மிகைல் கோடர்கோவ்ஸ்கி ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார், ஆனால் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார், அவரது யுகோஸ் எண்ணெய் நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது.
படையெடுப்புக்குப் பிறகு, ரஷ்யாவின் பெரும் பணக்காரர்கள் கிட்டத்தட்ட அனைவரும் மௌனமாகவே உள்ளனர், மேலும் பகிரங்கமாக எதிர்த்த ஒரு சிலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி பெரும் சொத்துக்களை இழக்க நேரிட்டது.
ரஷ்யாவின் பெரும் செல்வந்தர்கள் புதினின் போர் முயற்சிக்கு முக்கியப் பங்களிக்கின்றனர், மேலும் பிப்ரவரி 24, 2022 அன்று கிரெம்ளினுக்கு அழைக்கப்பட்ட 37 வணிகர்கள் உட்பட அவர்களில் பலர் மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆனால் மேற்கத்திய நாடுகள் அவர்களை ஏழைகளாக்கி அதன்மூலம் அவர்களை கிரெம்ளினுக்கு எதிராகத் திருப்ப விரும்பியிருந்தால், ரஷ்ய கோடீஸ்வரர்களிடையே நீடிக்கும் செல்வம் மற்றும் எதிர்ப்பு இல்லாத நிலையை பார்க்கும்போது அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
அவர்களில் யாராவது தங்கள் பில்லியன் கணக்கான டாலர்களுடன் மேற்கத்திய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல நினைத்திருந்தால், இந்தத் தடைகள் அதைச் சாத்தியமற்றதாக்கிவிட்டன.
"ரஷ்ய கோடீஸ்வரர்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியின் கீழ் அணிதிரள்வதை உறுதி செய்ய மேற்கத்திய நாடுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தன," என்கிறார் ஐரோப்பிய கொள்கை ஆய்வு மையத்தின் (சிஇபிஏ) அலெக்சாண்டர் கோல்யாண்ட்ர்.
"அவர்களில் யாருக்கும் வெளியேற எந்தத் திட்டமோ, யோசனையோ அல்லது தெளிவான பாதையோ இல்லை. சொத்துக்கள் முடக்கப்பட்டன, கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் புதின் கோடீஸ்வரர்களையும் அவர்களின் சொத்துக்களையும், அவர்களது பணத்தையும் திரட்டி அவற்றை ரஷ்ய போர் பொருளாதாரத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்த உதவியது," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
யுக்ரேன் படையெடுப்பைத் தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை, கிரெம்ளின் ஆதரவு பெற்ற தொழிலதிபர்கள் விரைவாக நிரப்பினர்; அவர்களுக்கு மிகவும் லாபகரமான சொத்துக்களைக் குறைந்த விலைக்கு வாங்க அனுமதி வழங்கப்பட்டது.
இது ஒரு புதிய "செல்வாக்குமிக்க மற்றும் தீவிர விசுவாச ராணுவத்தை" உருவாக்கியுள்ளது என்று கார்னகி ரஷ்யா யூரேசியா மையத்தின் அலெக்ஸாண்ட்ரா ப்ரோகோபென்கோ வாதிடுகிறார்.
"அவர்களின் எதிர்கால நலன் ரஷ்யாவுக்கும் மேற்குக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலைச் சார்ந்தே இருக்கிறது," அதே நேரத்தில் முந்தைய உரிமையாளர்கள் மீண்டும் வந்துவிடுவார்கள் என்பதே அவர்களின் மிகப்பெரிய அச்சமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.
ஜியாகோமோ டோக்னினியின் கூற்றுப்படி, 2024-ஆம் ஆண்டில் மட்டும் 11 புதிய கோடீஸ்வரர்கள் இந்த வழியில் ரஷ்யாவில் உருவாகியுள்ளனர்.
போர் மற்றும் மேற்கத்திய தடைகள் இருந்தபோதிலும், அவற்றின் காரணமாகவே ரஷ்யத் தலைவர் நாட்டின் முக்கியப் புள்ளிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களைத் தனது உறுதியான பிடியில் வைத்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.virakesari.lk/article/237567