ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?
ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?

பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
கெய்லின் டெவ்லின், டாம் எடிங்டன், யி மா
பிபிசி வெரிஃபை
3 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஹோர்மூஸ் நீரிணை அருகே அவ்வப்போது கப்பல்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக 100க்கும் சற்று குறைவான கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து தினசரி போக்குவரத்து சுமார் 95% குறைந்துள்ளது.
கூட்டு கடல்சார் தகவல் மையத்தின் கூற்றுப்படி, போருக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 138 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் சென்றன. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை சுமந்து சென்றது.
கப்பல் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் வழங்கிய தரவுகள், இந்த மாதத்தில் இதுவரை 99 கப்பல்கள் மட்டுமே இந்த குறுகிய நீரிணையைக் கடந்துள்ளதை காட்டுகின்றன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 6 கப்பல்கள் மட்டுமே ஆகும்.
இந்த பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பிபிசி வெரிஃபை ஆய்வு செய்தது.

எந்தெந்த கப்பல்கள்
சமீபத்தில் இந்த பாதையைக் கடந்த கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு இரானுடன் தொடர்புடையவை என்று பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
இதில் இரானில் பதிவு செய்யப்பட்ட14 கப்பல்களும், இரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தடைகளை எதிர்கொள்ளும் பிற கப்பல்களும் அடங்கும்.
ஒன்பது கப்பல்கள் சீனாவுடன் தொடர்புடைய முகவரிகளைக் கொண்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானவை, அதே சமயம் ஆறு கப்பல்கள் இந்தியாவைத் தாங்கள் சேருமிடமாகக் குறிப்பிட்டுள்ளன.
இரானுடன் தொடர்பில்லாத சில கப்பல்கள் அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதையும் இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. இதில் கிரேக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் அடங்கும்.
நீரிணையை வெற்றிகரமாகக் கடக்கும் சில கப்பல்கள் வழக்கத்தை விட நீண்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஓர் எண்ணெய் கப்பலின் பயணத் தரவுகள், அது மார்ச் 15 அன்று நீரிணை வழியாகச் செல்லும்போது, நடுப்பகுதியில் உள்ள வழக்கமான பாதையைத் தவிர்த்து, இரானியக் கடற்கரைக்கு மிக நெருக்கமாகப் பயணித்ததைக் காட்டுகின்றன.

பட மூலாதாரம்,PTI
படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல்
திட்டம் என்ன?
அமெரிக்க பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ரேண்ட் கார்ப்பரேஷனின் மூத்த ஆராய்ச்சியாளர் பிராட்லி மார்ட்டின், அந்த கப்பல் "இரானிடமிருந்து வந்த சில அறிவுறுத்தல்களுக்கு இணங்கி" செயல்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்
அந்த கப்பல் பயணித்த பாதையானது, அங்கு கண்ணிவெடிகள் இருப்பதையோ அல்லது இரானிய அதிகாரிகள் அந்த கப்பலை எளிதாக அடையாளம் காண்பதற்கான முயற்சியையோ குறிக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
கப்பல்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவதன் மூலம், அவை இரானின் கடல் எல்லைக்குள்ளும் இரானின் கடல்சார் விதிகளுக்குள்ளும் நுழைகின்றன என்று விண்ட்வார்ட் கடல்சார் பகுப்பாய்வை சேர்ந்த மிச்செல் வைஸ் பாக்மேன் கூறுகிறார்.
"தாக்குதல் மற்றும் கண்ணிவெடிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் இரான் இந்த நீரிணையை மூடி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதே நான் இதிலிருந்து தெரிந்துகொள்வது".
"அதனால்தான் அனைவரும் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் செல்வதற்கு பதிலாக, இரானின் கடல் எல்லைப் பகுதியை ஒட்டியே செல்ல வேண்டியுள்ளது," என்று அவர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை பகுப்பாய்வு மையத்தின் மைக்கேல் கோனலும், கப்பல்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதை ஒப்புக்கொள்கிறார்.
''வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இரானிய அதிகாரிகளுடன் அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம்.''

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல்
கப்பல் போக்குவரத்தின் முன்னுள்ள அச்சுறுத்தல்கள்
மோதல் தொடங்கியதிலிருந்து, இரானியக் கடற்கரையை ஒட்டி 20 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இவை அனைத்தும் ஹோர்மூஸ் நீரிணையின் நேரடி அருகாமையில் மட்டும் நடக்கவில்லை.
மார்ச் 11 அன்று, தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட 'மயூரி நாரி' என்ற சரக்குக் கப்பல் அந்தப் பாதையைக் கடக்க முயன்றபோது, இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.

பட மூலாதாரம்,EPA
படக்குறிப்பு,மயூரி நாரி கப்பல் மார்ச் 11 அன்று தாக்கப்பட்டது.
அந்த கப்பலின் 23 ஊழியர்களில் மூன்று பேரை இன்னும் காணவில்லை.
கப்பல் தாக்கப்பட்டபோது அவர்கள் என்ஜின் அறையில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தப்பிப்பிழைத்த ஊழியர்கள் "கடலில் இரண்டு வெடிப்புகளால் தாக்கப்பட்டபோது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகினர்" என்று அக்கப்பலின் உரிமையாளர்கள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர்.
அதே நாளில் கிரேக்கத்துக்குச் சொந்தமான 'ஸ்டார் க்வினெத்' மற்றும் அமெரிக்காவிற்குச் சொந்தமான 'எம்டி சேப்சீ விஷ்ணு' ஆகிய இரண்டு கப்பல்களும் தாக்கப்பட்டன.
"வணிகக் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் போர்க்களங்களாக மாற முடியாது," என்று எம்டி சேப்சீ விஷ்ணுவின் உரிமையாளர் பிபிசி வெரிஃபையிடம் கூறினார்.
இராக் அருகே கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். எரியும் கப்பலில் இருந்து தப்பிக்க 28 ஊழியர்களும் தண்ணீரில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று எஸ்வி அஞ்சன் தெரிவித்தார்.
"அவர்கள் படை வீரர்கள் அல்ல... அவர்கள் உலகளாவிய வர்த்தகத்தை இயங்க வைக்கும் தொழில் வல்லுநர்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,துபை அருகே உள்ள வணிக கப்பல்கள்
நிலவியல் அமைப்பை சாதகமாக பயன்படுத்தும் இரான்
டிரோன்கள், ஏவுகணைகள், அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் கண்ணிவெடிகள் எனப் பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்துகின்றன என்று கிங்ஸ் கல்லூரியின் ஃப்ரீமேன் வான் மற்றும் விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த அருண் டாசன் கூறுகிறார்.
"மெதுவாகவும் கவனமாகவும் செயல்படும் ஒரு பாரம்பரிய கண்ணிவெடி அகற்றும் கப்பல் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது, கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வது மிகவும் கடினம்," என்று அவர் கூறினார்.
நீரிணையின் நிலவியல் அமைப்பையும் இரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த நீரிணை குறுகலாகவும் ஆழம் குறைவாகவும் இருப்பது மட்டுமின்றி, அதன் கடற்கரைப் பகுதி மலைப்பாங்கானது.

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை
இது இரான் உயரமான இடங்களிலிருந்து தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது. இதனால் கப்பல்கள் எதிர்வினையாற்றுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது.
கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பல கப்பல்கள் ஏஐஎஸ் (ஏஐஎஸ் - தானியங்கி அடையாள அமைப்பு) எனப்படும் தங்களின் கண்காணிப்பு அமைப்பைத் திட்டமிட்டு அணைத்து வைப்பதாக தெரிகிறது.
"இந்தக் கப்பல்களில் பெரும்பாலானவை தங்கள் கண்காணிப்பு சாதனங்களை அணைத்தபடி கடந்து செல்கின்றன" என்கிறார் கெப்லர் நிறுவனத்தைச் சேர்ந்த டிமிட்ரிஸ் அம்பாட்ஸிடிஸ்.
ஓமன் வளைகுடாவிற்குள் நுழையும்போது தங்களின் கண்காணிப்புக் கருவிகளை அணைப்பதன் மூலம், படகுகள் வரைபடங்களிலிருந்து மறைந்து விடுகின்றன. பின்னர் பல மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு மற்றொரு இடத்தில் மீண்டும் தோன்றுகின்றன.
இது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை மறைக்க உதவினாலும், நீரிணையில் கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கெப்லர் போன்ற நிறுவனங்களுக்கு சவால்களை ஏற்படுத்துகிறது.
"அனைத்துத் தகவல்களும் எங்களது பகுப்பாய்வாளர்களால் நேரடிச் சரிபார்ப்பு மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன," என்று அம்பாட்ஸிடிஸ் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.
கூடுதல் தகவல் : டேனியல் பலம்போ மற்றும் ஜோசுவா சீதம்
கிராபிக்ஸ் : டாம் ஷீல்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


















