நெஞ்சினுள் முள்ளாய்.....
கண்ணே மணியே என்றான்..
கண்டவுடன் எனக்கு காதல் வரவில்லை..
உன்னை காணாமல் நான் ஏங்கினேனே...
அப்போதே காதல் என்னுள் கருத்தரித்தது
என்றும் சொன்னான்...
நீ அழுதால் உன் இரு விழி துடைக்க மாட்டேன்..
நானும் சேர்ந்து அழுவேன் என்றான்!
நட்ட நடு மழையில்
தன்னிடம் இருந்த ஒற்றை குடையை நீட்டி...
நீ பிடி... நான் நனைவேன்..
என் வாழ்வு முடியும் வரை.. உனக்காய் என்றான்!
கால நதி வாழ்வு விருட்சத்தின்
ஆணி வேர்வரை அலசி செல்ல..
என் காதலனும் எங்கோ தொலைந்தான்..!
பிறர்க்கு சலனமற்று இருந்த இரவுகள்
பல எனக்கு மட்டும்...
சஞ்சலத்தை மணம் முடித்து வைக்க..
கண்ணீருக்குள் தற்கொலை செய்து
என் கால நிமிடங்கள் தொலைந்தன!
ஒரு மாலை...
மஞ்சள் சேலை கொண்டு வானம் மௌனமாய் ..
உடை மாற்றும் வேளை..
கண்டேன் அவனை....
தன் காதலி(???) கரம் இறுக்கிப் பிடித்து கொண்டே
அவன் எங்கோ சென்று கொண்டிருந்தான்..
அவள் கண்ணை மூடி சிரிக்க..
இவன் அவள் காதில் ஏதோ சொன்னபடி
நகர்ந்து கொண்டிருந்தான்...
அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்...
பொட்டு வைத்த விதவை என்றானேன்..
என்ன சொல்லி இருப்பானோ?
என்னிடம் சொன்ன வார்த்தைகள் தானோ?
அவை என்றும் குறையாத கையிருப்போ அவனிடம்?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சேர்ந்திருந்த நாட்கள்..
நாம் சிரித்திருந்த நாட்கள்..
சிந்திய மழைத்துளி எனக் காலம்
சிதறியே மறைந்தாலும்..
நெஞ்சினுள் முள்ளாய்
அந்த நினைவுகள் என்னை கொல்லுமடா!
Recommended Comments