தமிழகச் செய்திகள்

'சாதியின் கோரத்தை இனி யாரும் காணக்கூடாது' - ஊர்கூடி நடத்திய குடமுழுக்கில் நெகிழும் பட்டியலின மக்கள்

2 months 3 weeks ago

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நித்யா பாண்டியன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களின் கோவில் பிரவேச நிகழ்வுகள் போராட்டங்களிலும் பிரச்னைகளிலும் முடிகின்ற சூழலில் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் முதல் முறையாக மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா ஜூன் 8, 9 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

கோவில் திருவிழா காலத்தில் அச்சிடப்படும் டி-சர்ட்கள், பேனர்கள் போன்றவற்றில் சாதிப் பெயர் ஏதுமின்றி, சாதிய பெருமை பேசும் பாடல்கள் ஏதுமின்றி, ஒற்றுமையாக குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாமி சிலையின் பல்லக்கைத் தூக்குவதில் இருந்து கோவில் கோபுர கலசத்தில் நீரைத் தெளிப்பது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அனைத்து தரப்பு மக்களும் சமமாகப் பங்கேற்றனர். அறுபது ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பட்டியல் சமூக மக்கள் மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியது எப்படி?

வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய பட்டியல் சமூக மக்கள்

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டனம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டி கிராமம். அந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே ஊரில் பட்டியலின மக்கள் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர்.

அந்த ஊரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக அந்தக் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு அந்தப் பழமையான கோவிலை இடித்துவிட்டுப் புதிய மாரியம்மன் கோவிலைக் கட்ட ஊர்மக்கள் திட்டமிட்டனர்.

பிபிசி தமிழிடம் பேசிய உள்ளூர் கிராம மக்கள், அந்த கோவிலின் பெரும்பான்மைப் பணிகள் முடிக்கப்பட்டு, முழுமை பெறாமல் சில ஆண்டு காலம் அப்படியே இருந்தது. அதன் பின்னர் ஊர் மக்கள் அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டி இந்தக் கோவில் பணிகளை முடிக்க ஆர்வம் காட்டினோம் என்று தெரிவிக்கின்றனர்.

நான்கு முக்கியக் கோரிக்கைகள்

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கோவில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்க முடிவெடுத்த தருணம்

"கோவில் கட்டி முடித்த பிறகு நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வில் பட்டியலின மக்களின் சம பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகப் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் நான்கு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்தோம்" என்று தெரிவிக்கிறார் பட்டியல் பிரிவைச் சேர்ந்த ராம்ஜி. அந்தக் கோரிக்கைகள்,

  • பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும்

  • விழா கமிட்டியில் சம அளவிலான பொறுப்புகளை பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்

  • கோவிலில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வழி வகை செய்ய வேண்டும்

  • கோவில் திருவிழாவின்போது சாமி சிலை தூக்குவதைப் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகின்றனர். ஆனால் அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சிலைகளை வண்டியில் வைத்து பவனி அழைத்து வர வேண்டும்.

"ஆரம்பத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். பிறகு ஒவ்வொரு வீடாக கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5000 வசூலிக்கப்பட்டது. பின்னர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன," என்று தெரிவிக்கிறார் ராம்ஜி.

"ஆரம்பத்தில் சிறு சிறு கோவில் நிகழ்வுகளில் பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தோம். பிறகு சாதி இந்து சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் போன்றவற்றை கோவிலுக்கு மேல்புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பட்டியலின பெண்கள் கீழ் புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பேச்சுகள் அடிபடத் தொடங்கின," என்று விவரிக்கும் ராம்ஜி, பிறகு மாவட்ட நிர்வாகத்தின் தலையீடுதான் இதற்குச் சிறந்த தீர்வாக இருக்கும் என்று நிர்வாகத்தை நாடியதாகக் குறிப்பிடுகிறார்.

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முடிவுகள்

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,மாரியம்மன் சிலை பவனி நிகழ்வில் பங்கேற்ற ஊர்ப் பொதுமக்கள்

இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினருக்கும் இடையே வட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் மே 29ஆம் தேதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் விழா கமிட்டி குழுவினர், கோவில் நிர்வாகிகள் மற்றும் இரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட மூன்று முக்கிய முடிவுகள் தொடர்பான விரிவான அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி:

  • கோவில் குடமுழுக்கு விழாவில், பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வகுப்பினர்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கோவில் விழாக் குழுவில் அனைத்து வகுப்பினரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும். சாமி ஊர்வலத்திற்கான வாகன ஏற்பாட்டைப் பொதுவான முறையில் செய்ய வேண்டும்.

  • வாட்ஸ்ஆப் குரூப்பில் சாதி தொடர்பான பதிவுகள் எதையும் பதிவிடக்கூடாது. சாமி ஊர்வலம், வழிபாட்டு முறைகள் என அனைத்திலும் சாதிப் பாகுபாடின்றி அனைத்து வகுப்பினரும் ஒற்றுமையுடன் கலந்துகொள்ள வேண்டும்.

  • திருவிழா சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும், மேற்படி இருதரப்பினரும் வழங்க வேண்டும்.

இந்த முடிவுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சுவாமிநாதன், "மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதன் அடிப்படையில், அமைதியான முறையில் வழிபாடு நடத்த மக்கள் அனைவரும் முன்வந்தனர்" என்று கூறினார்.

'அடுத்த தலைமுறையினர் இதனால் பாதிக்கக் கூடாது'

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட ஊர் பொதுமக்கள்

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விழாக் கமிட்டி குழுவின் தலைவர் காசி விஸ்வநாதன் அடுத்து வரும் தலைமுறையினர் சாதிய கொடுமை மற்றும் தீண்டாமையின் வாசமின்றி வளர வேண்டும் என்று கூறினார்.

"தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற இடங்களில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் இருப்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். ஆனால் கடவுள் மற்றும் வழிபாட்டு உரிமையானது அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வேண்டுதல்கள் இருக்கும். அதை கடவுளிடம் முறையிட கோவில்களுக்கு வருகின்றனர். பிற்போக்குத் தன்மை கொண்ட சாதிய கட்டுப்பாடுகளை நாங்கள் உடைக்க விரும்பினோம்," என்று தெரிவித்தார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், "கோவில் திருவிழாவின்போது உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் சாதிய பெருமைகளைப் பேசும் வீடியோக்கள், சாதிப் பெயர்கள் மற்றும் பாடல்கள் போன்றவை பகிரப்படுவதை மறுத்தோம்.

மேற்கொண்டு பேனர்களிலும் சாதிப் பெயர்கள் ஏதும் இடம் பெறாமல் அச்சிடப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். அதை அனைவரும் முறையாகப் பின்பற்றினோம். மக்களும் எந்தவித எதிர்ப்பும் கூறாமல் மகிழ்வுடன் பங்கேற்றனர்," என்றார்.

இனி வருங்காலங்களிலும், அனைத்து கோவில் திருவிழாக்களிலும் இத்தகைய போக்கே தொடரும் என்றும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

அனைத்து கோவில் நிகழ்வுகளிலும் பங்கேற்ற பட்டியலின மக்கள்

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,குடமுழுக்கு நிகழ்வின்போது ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி பங்கேற்றனர்.

ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அனைத்துப் பிரிவினரும் ஒன்றாகச் சேர்ந்து பால் குடம் எடுத்துள்ளனர்.

"அனைவரும் ஒன்றாக பால் குடம் எடுத்தோம். பொங்கலும் ஒன்றாகப் படையலிடப்பட்டது. மேலும் மாரியம்மன் சிலை பவனியின்போது அந்தச் சிலையை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தூக்கிச் சென்றனர். எங்கள் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க அனைத்தும் நடைபெற்றது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று கூறினார் ராம்ஜி.

கேள்விக்குள்ளாகிறதா பட்டியலின வழிபாட்டு உரிமைகள்?

"பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் காலம் காலமாகப் பல்வேறு இடங்களில் மறுக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் சில மாற்றங்களையும், சேலம் கிராமத்தில் நடந்திருப்பது போன்று நேர்மறையான மாற்றங்களையும் காண்பது மக்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும், மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெளியுலக அனுபவத்தையும் காட்டுகிறது," என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் வெளியான தலித் இதழ்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வு மாணவரான ஆர். யுவராஜ்.

தமிழ்நாடு பட்டியலின மக்களின் உரிமைகள் தொடர்பாக ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனித்து வரும் அவர், "இதுபோன்ற கோவில் வழிபாட்டு உரிமைகள் அனைத்து இடங்களிலும் சாத்தியம் இல்லை," என்றும் குறிப்பிட்டார்.

"பல சமூகத்தினர் சேர்ந்து வாழும் பகுதி என்பதால் இணக்கமாகச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. ஒரு தொழில்மயமாக்கப்பட்ட பகுதி என்றால் ஒரே தொழிலைச் சார்ந்து பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில், பழைய தீண்டாமை பழக்கவழக்கங்கள் எளிமையாக முடிவுக்கு வருகிறது. ஏனெனில் அவர்கள் தொழில் ரீதியாகவும், வாழ்வாதாரத்திற்கும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர்.

ஆனால் ஒரேயொரு சாதி இந்து பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையுடன், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு, வாழ்வும் வருமானமும் ஒரு எல்லைக்குள்தான் என்று வாழும் மக்களைக் கொண்ட பகுதிகளில் சாதிய கட்டுப்பாடுகள் இன்னும் இறுக்கமாகவே இருக்கின்றன," என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

அதோடு, சமூக நீதிக்கான பயணம் மிக நீண்டது எனவும், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கோவில் பிரவேசம் ஓர் இளைப்பாறல் எனவும் யுவராஜ் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpw7g1ee0n2o

'14 மணிநேர வேலை, உடல் வலிக்கு ஊசி' - திருவள்ளூரில் மீட்கப்பட்ட ஒடிசா தொழிலாளர்கள்

2 months 4 weeks ago

கொத்தடிமைகள், பிபிசி தமிழ், திருவள்ளூர், புலம்பெயர் தொழிலாளார்கள்

பட மூலாதாரம்,IRCDS

படக்குறிப்பு,ஷிபா மாலிக் மற்றும் அவரின் குடும்பத்தினர்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 7 பேரை, ஜூன் 17 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

35 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக ஆறு மாதங்களாக செங்கல் சூளை உரிமையாளரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக ஒடிசாவை சேர்ந்த ஷிபா மாலிக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அரசின் அனுமதியின்றி சூளை செயல்பட்டதால், அதன் உரிமையாளர் எஸ். துளசி மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர்.

ஒடிசா மாநில தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டது எப்படி?

கொத்தடிமைகள், பிபிசி தமிழ், திருவள்ளூர், புலம்பெயர் தொழிலாளார்கள்

பட மூலாதாரம்,IRCDS

படக்குறிப்பு, விசாரணை மேற்கொண்ட வருவாய்த்துறை துறை அதிகாரிகள்

ஒடிசா மாநிலம், பாலாங்கீர் (Balangir) மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இருந்து சுமார் 80 பேர், கடந்த ஜனவரி மாதம் திருவள்ளூருக்கு வந்துள்ளனர்.

அவர்கள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளை ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

"செங்கல் சூளைகளில் வேலை பார்ப்பதற்காக இவர்களை அழைத்து வந்துள்ளனர். இவர்களுக்குத் தலா 35 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செங்கல் சூளை உரிமையாளர் அளித்துள்ளார்" என்கிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன்.

"சொந்த ஊரில் வானம் பார்த்த பூமி என்பதால் வருடத்தில் சில மாதங்கள்தான் விவசாய வேலைகள் இருக்கும். மற்ற நாட்களில் வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுவோம். குடும்பத்தில் கஷ்டம் அதிகரித்ததால், முன்பணத்தை வாங்கிக் கொண்டு செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்தோம்" எனக் கூறுகிறார், ஒடிசாவின் சலேபாடி கிராமத்தைச் சேர்ந்த ஷிபா மாலிக்.

பாலாங்கீர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், திருவள்ளூரில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரிய வருவது வாடிக்கையாக உள்ளது.

கொத்தடிமைகள், பிபிசி தமிழ், திருவள்ளூர், புலம்பெயர் தொழிலாளார்கள்

பட மூலாதாரம்,IRCDS

படக்குறிப்பு, சிவன்வாயல் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றியவர்கள் தங்கியிருந்த இடம்

'ஆறு மாதங்களாக அவஸ்தை' -

"கடந்த ஆறு மாதங்களாக குடிநீர், உணவு, இருப்பிடம் என முறையான அடிப்படை வசதிகள் எதுவும் நாங்கள் வேலை பார்த்த சூளையில் செய்து தரப்படவில்லை" என பிபிசி தமிழிடம் கூறினார் ஷிபா மாலிக்.

ஷிபாவிடம் ஒடியா மொழியில் உரையாடுவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த சகில் எக்கா என்பவர் பிபிசி தமிழுக்கு உதவி செய்தார். இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

நாள் ஒன்றுக்கு 13 முதல் 14 மணிநேரம் தங்களிடம் வேலை வாங்கப்பட்டதாகக் கூறும் ஷிபா மாலிக், "நாங்கள் குடும்பமாக வந்து வேலை செய்தோம். வாரம் முழுக்க செங்கல்லை அறுத்தாலும் ரூ. 500 தான் உரிமையாளர் தருவார். எதிர்த்துக் கேள்வி கேட்டால், அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறுவார்," என்கிறார்.

தங்கள் வேலைக்கு உரிய சம்பளம் இல்லாததால், சூளை உரிமையாளரிடம் சில தொழிலாளர்கள் சண்டையிட்டுள்ளனர். கடந்த ஜூன் முதல் வாரத்தில் சுமார் 70 தொழிலாளர்கள் முன்பணத்தைக் கொடுத்துவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டனர்.

"மீதமுள்ள மூன்று வயது குழந்தை உள்பட ஏழு பேருக்கு பணம் செலுத்துவதற்கு யாரும் இல்லை. இந்த தகவலை சூளையில் வேலை பார்த்த பெண்ணின் மகன், ஒடிசாவில் உள்ள அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர்," எனக் கூறுகிறார், திருவள்ளூர் ஆர்.டி.ஓ.ரவிச்சந்திரன்.

இதன்பிறகு ஜூன் 17 அன்று சிவன்வாயலில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது அதிர்ச்சியூட்டும் சில விஷயங்களை கண்டறிந்துள்ளனர்.

கொத்தடிமைகள், பிபிசி தமிழ், திருவள்ளூர், புலம்பெயர் தொழிலாளார்கள்

பட மூலாதாரம்,IRCDS

படக்குறிப்பு, வலி நிவாரணிகளாக போலி மருத்துவரால் வழங்கப்பட்ட மருந்துகள்

'உடல் வலியைப் போக்குவதற்கு ஊசி'

"குடும்பமாக தங்குவதற்கு சிறிய குடிசை மாதிரி அமைத்துத் தந்துள்ளனர். அதன் உள்ளே நுழைவதற்கு 2 அடி உயரம்தான் உள்ளது. மின்வசதி உள்பட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை" எனக் கூறுகிறார், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன்.

தொடர்ந்து பேசிய அவர், "14 மணிநேரத்துக்கும் மேலாக வேலை பார்த்ததால் அவர்களுக்கு உடல் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஊசி போட்டு மருந்து கொடுத்துள்ளனர். இதற்காக வாரம் ஒருமுறை போலி மருத்துவர் ஒருவரை வரவழைத்துள்ளனர்," எனக் கூறுகிறார்.

போலி மருத்துவர் மூலம் மருந்துகளைக் கையாண்டதாக சூளை உரிமையாளர் மீது வெங்கல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, பயன்படுத்திய ஊசிகள், ஏராளமான மருந்து அட்டைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

மருந்துகளின் தன்மை குறித்து சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தியிடம் கேட்டபோது, "வலி நிவாரணத்துக்கான மருந்துகளாக இவை உள்ளன" என்று மட்டும் பதில் அளித்தார்.

"நாளொன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் செங்கற்களை அறுப்போம். ஆனால், மிகக் குறைவான கூலியே கொடுக்கப்பட்டதால், அது உணவு செலவுக்கே சரியாக இருக்கும். ஊருக்குள் சென்று ரேசன் அரிசியை வாங்கி பயன்படுத்துவோம்" எனக் கூறுகிறார் ஷிபா மாலிக்.

"ஆறு மாதங்களாக வேலை பார்த்தாலும் சூளை உரிமையாளரிடம் வாங்கிய முன்பணத்தைக் கழிக்க முடியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொத்தடிமைகள், பிபிசி தமிழ், திருவள்ளூர், புலம்பெயர் தொழிலாளார்கள்

பட மூலாதாரம்,IRCDS

'ஒடிசா தொழிலாளர்களை குறிவைக்கும் முகவர்கள்'

"திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உரிமம் பெறாத சூளைகளும் உள்ளன. ஒடிசாவில் வறுமையால் வாடும் மக்களை குறிவைத்து சில முகவர்கள் இயங்கி வருகின்றனர்" எனக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைப்பின் (Integrated rural community development society) ஒருங்கிணைப்பாளரான பழனி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது மீட்கப்பட்ட தொழிலாளர்கள் முகவர் மூலமாக வந்துள்ளனர். பகலில் வெயில் அதிகமாக இருப்பதால் இரவு 10 மணிக்கு மேல் சூளைக்குச் செல்கின்றனர். அதிகாலை வரை வேலை பார்ப்பார்கள். பகலில் கற்கள் காய்வதற்கு எளிதாக இருக்கும். சிலர் மாலை 4 மணிக்கு சென்றுவிட்டு 12 மணி வரையில் வேலை பார்ப்பார்கள்," எனவும் அவர் குறிப்பிட்டார்.

"ஒருவர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தாலும் ஆய்வு நடத்தும்போது, தங்களின் உரிமையாளர் குறித்து தவறாக எதுவும் கூற மாட்டார்கள். அதனால் மீட்பதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படும்," எனக் கூறுகிறார் ஒருங்கிணைந்த கிராமப்புற சமூக மேம்பாட்டு அமைப்பின் களப் பணியாளர் சூர்யா நடராஜன்.

ஒருவர் கொத்தடிமை எனக் கண்டறியப்பட்டால் அவருக்கு மாநில அரசு ஒரு லட்ச ரூபாயை வழங்குவதாகவும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.

"மீட்கப்பட்ட தொழிலாளிக்கு வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டு உடனே முப்பதாயிரம் ரூபாயை அரசு வரவு வைக்கிறது. வழக்கு நடக்கும் காலங்களில் மீதமுள்ள தொகையை வரவு வைப்பது வழக்கம்" என்கிறார் சூர்யா நடராஜன்.

செங்கல் சூளையில் இருந்து மீட்கப்பட்ட ஷிபா மாலிக், தீபாஞ்சலி மாலிக், சாய்ரேந்திரி நாக், பகாரட் நாக், ஹடுபரிகா, ஜென்ஹி பரிஹா மற்றும் மூன்று வயது குழந்தை ஆகியோரை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவே ரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

'2 மாதங்களில் மூன்றாவது சம்பவம்'

செங்கல் சூளையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் கீழ் உரிமம் பெறவில்லை என்பதைக் கண்டறிந்தனர். ஊழியர்களுக்கான வருகைப் பதிவேடு, ஊதிய பதிவேடு ஆகியவற்றை பராமரிக்கவில்லை என்பதும் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதையும் ஆய்வில் கண்டறிந்தனர்.

சூளை உரிமையாளர் துளசி மீது வெங்கல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூளை உரிமையாளர் மீதான நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன், "முன்தொகை கொடுத்து தொழிலாளர்களைக் கூட்டி வருவது என்பது கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டங்களை மீறி அதிக நேரம் வேலை பார்க்க வைத்தது உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

"ஆனால், அவரைக் கைது செய்ய முடியவில்லை. தற்போது சூளையின் உரிமையாளர் தலைமறைவாக இருக்கிறார்" என, ஆர்.டி.ஓ ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த 2 மாதங்களில் மட்டும் மூன்று நிகழ்வுகளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டுள்ளதாகக் கூறும் ரவிச்சந்திரன், மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்துக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் கூறுகிறார்.

"கொத்தடிமைகளாக யாரையும் பயன்படுத்த மாட்டோம் என்பதை அவர்களிடம் எழுதி வாங்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

கொத்தடிமைகளாக மக்களை பணிக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டால், கொத்தடிமைத் தொழிலாளர் முறை (அழித்தல்) சட்டம், 1976-ன் கீழ், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2000 வரை அபராதமும் விதிக்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1wpn9rqg12o

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது

2 months 4 weeks ago

19 JUN, 2025 | 03:33 PM

image

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகிறார். எனவே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது. அப்போது , இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் தர வேண்டாமா என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. இதையடுத்து, வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

https://www.virakesari.lk/article/217916

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

2 months 4 weeks ago

WhatsApp-Image-2025-06-19-at-11.02.55-AM

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

மீன்பிடித் தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற தம் மீது இலங்கைக்  கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக  ராமேஸ்வரம் மீனவர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக அரசால் ஆண்டுதோறும் அமுல் படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி  ஆரம்பமாகி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில் வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக மீன்பிடி அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும்  மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்கள் பின் நேற்று (18)  ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களை விரட்டி அடித்ததாகவும், ஒரு சில படகில் இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால்  பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக மீனவர்கள்   தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்த்த அளவு மீன் பிடிக்க முடியாததால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள்  வேதனை தெரிவித்துள்ளனர்.

இதே வேளை மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில்,இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்ததோடு, கடற் படையினரின் உதவியுடன் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1436261

கேரளா, ஆந்திரா போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடை திறப்பதில் என்ன பிரச்னை? மது விலக்கின் வரலாறு

3 months ago

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேரள மாநிலம் கொச்சியில் கள்ளுக்கடை (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 17 ஜூன் 2025, 02:43 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மதுவிலக்குக் கோரிக்கையை சிலர் முன்வைத்துவரும் நிலையில், கள் இறக்க அனுமதிக்க கோரும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்துவருகின்றன. கள் இறக்கி விற்பனை செய்வது விவசாயிகளுக்கு உதவும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? கேரளா, ஆந்திராவைப் போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடைகளை திறப்பதில் என்ன பிரச்னை? அரசு கூறும் சிக்கல் என்ன?

தமிழ்நாட்டில் கள் விற்க தடை

தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமெனக் கோரி, தூத்துக்குடி மாவட்டத்தில் கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்கம் நீண்ட காலமாக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கள்ளை இறக்கி, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுபானங்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் மூலம் மொத்தமாக வாங்கி, தன்னுடைய கடைகள் மூலமாக விற்பனை செய்துவருகிறது. இது தவிர, தனியான உரிமங்கள் மூலம் தங்கும் விடுதிகள், தனியார் பார்களிலும் மதுபானங்களை விற்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், அங்கும் கள், சாராயம் போன்றவற்றை விற்க முடியாது.

டாஸ்மாக் கடைகளிலும் உணவகங்களிலும் பார்களிலும் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களையும் வெளிநாட்டு மதுபானங்களையும் மட்டுமே விற்பனை செய்ய முடியும். கள், சாராயம் போன்ற பானங்களை விற்க முடியாது. ஆனால், வெளிநாட்டு மதுபானங்களை விற்க அனுமதியளிக்கும் நிலையில், கள், சாராயம் போன்ற பானங்களையும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்துவருகிறது.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,SEEMAN4TN_OFFICIAL/INSTAGRAM

கள்ளுக்கு ஏன் அனுமதி இல்லை? ஆர்டிஐ கேள்விக்கு அரசு பதில்

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளை இறக்கி, விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு 'கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பு நீண்ட காலமாக இயங்கிவருகிறது.

"2005ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கள்ளுக்கு ஏன் அனுமதியில்லை எனக் கேட்டோம். அதற்குப் பதிலளிக்கும் போது, பனை மரத்தில் இறக்கும் கள்ளில் போதை குறைவு என்பதால் குளோரல் ஹைட்ரேட் கலக்கிக் கொடுப்பார்கள். ஒவ்வொரு பனை மரத்திலிருந்தும் கள்ளை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஒவ்வொரு மரத்தையும் கண்காணிக்க முடியாது. இதனால் 1987ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கள் இறக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது என்றார்கள். இதற்குப் பிறகுதான் போராட ஆரம்பித்தோம். தமிழ்நாட்டில் மட்டும்தான் கள் இறக்க முடியவில்லை. புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கள் விற்கிறார்கள். அங்கெல்லாம் கலப்படம் நடக்காது, இங்கே மட்டும்தான் நடக்குமா?" எனக் கேள்வி எழுப்புகிறார், தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி.

தங்களைப் பொறுத்தவரை, கள் ஒரு போதை ஏற்படுத்தும் பானமல்ல என்றும் அது உணவின் ஒரு பகுதி என்றும் குறிப்பிடும் அவர், தமிழ்நாடு அரசு தனது மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென்கிறார். "பனை மரத்திலிருந்தும் தென்னை மரத்திலிருந்தும் கள் இறக்குவதில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது. அது போதை ஏற்படுத்தும் பானமே அல்ல" என்கிறார்.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,NALLASAMY

'கலாசார சீரழிவு ஏற்படும்'

ஆனால், கள்ளை ஒரு உணவைப் போல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கடுமையாக எதிர்க்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார்.

"கள் என்பது அடிப்படையில் மது. அது உணவு அல்ல. கஞ்சாவை மூலிகை என்று சொல்வதைப் போலத்தான், கள்ளை உணவு என்று சொல்வதும். மதுபானங்களின் விலை அதிகம் என்பதால், எல்லோராலும் நிறைய வாங்கிக் குடிக்க முடியாது. ஆனால், கள்ளின் விலை குறைவாக இருக்கும் என்பதால் இன்னும் நிறையப் பேர் குடிக்க ஆரம்பிப்பார்கள். இப்போது குடிப்பதைப் போல அதிக மடங்கு குடிப்பார்கள். குடி நோயாளிகளின் எண்ணிக்கை 3-4 மடங்கு அதிகரிக்கும்" என்கிறார் து. ரவிக்குமார்.

கள்ளுக் கடைகள் அமையும் இடங்களும் பிரச்னைக்குரியவை என்கிறார் அவர். "யார் வாடிக்கையாளரோ, அவர்களுக்கு அருகில்தான் இந்தக் கடைகளை அமைக்க நினைப்பார்கள். இயல்பாகவே அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் இந்தக் கடைகளை அமைப்பார்கள். அது அந்த அடித்தட்டு மக்களை மிகப் பெரிய கலாசாரச் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்" என்கிறார் அவர்.

ஒவ்வொரு மரத்திலிருந்தும் பெரிய அளவில் கள் இறக்க முடியாது என்பதால் அது கலப்படத்துக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் ரவிக்குமார்.

"கள்ளுக் கடைகளைத் திறந்தால், அத்தனை கடைகளுக்கும் தேவைப்படும் அளவுக்கெல்லாம் கள் கிடைக்காது. அத்தனை மரங்களில் ஏறவும் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். ஆகவே, அதில் கலப்படம்தான் நடக்கும். கள்ளைப் போன்ற பானத்தை உருவாக்குவதற்காக கலக்கப்படும் ரசாயனங்கள் மிகத் தீங்கானவை. போலியான கள்ளை அருந்தியதால் கேரளாவில் பாதிப்புகள் ஏற்பட்டடதாக அவ்வப்போது செய்திகளில் வரத்தான் செய்கின்றன. 20 லிட்டர் கள்ளை வடித்தால், 200 லிட்டர் கள்ளை விற்பனை செய்வார்கள். ஆகவே கள்ளை இறக்க வேண்டும் எனச் சொல்வதே சட்ட விரோதம்" என்கிறார் ரவிக்குமார்.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,WRITERRAVIKUMAR/X

படக்குறிப்பு,ஒவ்வொரு மரத்திலிருந்தும் பெரிய அளவில் கள் இறக்க முடியாது என்பதால் அது கலப்படத்துக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் ரவிக்குமார்

கேரளா, ஆந்திராவில் நிலைமை என்ன?

70களின் இறுதியிலும் 80களிலும் கள்ளும் சாராயமும் அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கிறது என்பதால்தான் கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் மூடப்பட்டன என்கிறார் அவர்.

தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மாநிலங்களில் கேரளாவிலும் ஆந்திராவிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கள்ளுக்கடைகள் உள்ளன. கேரள அரசின் 2023-24 மதுக் கொள்கையில், கள்ளை கள்ளுக் கடைகளில் மட்டுமல்லாமல் பிராண்ட் செய்து, ஹோட்டல்கள், பார்களிலும் விற்க நினைப்பதாக குறிப்பிட்டது. ஆனால், அங்கு கள் இறக்க பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கேரளா கள் இறக்கும் தொழிலாளர்கள் நல நிதியில் 2014ல் 30,000 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2023ல் இந்த எண்ணிக்கை 15,000ஆக குறைந்தது. ஆந்திர மாநில அரசின் 2022-27 ஆண்டுகளுக்கான கள் கொள்கையின்படி, அம்மாநிலத்தில் 4,138 கள்ளுக்கடைகள் இயங்கிவருகின்றன.

நல்லுசாமியைப் பொறுத்தவரை வெளிநாட்டு மதுபான வகைகளின் விற்பனையை நிறுத்திவிட்டு கள் விற்பனையை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்கிறார். "தமிழ்நாட்டில் விஸ்கி, பிராந்தி போன்ற வெளிநாட்டு மது வகைகளை விற்க தடை விதிக்கப்படுவதோடு, கள் விற்க அனுமதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் கள் விடுதலை - மதுவிலக்கு மாநாடு ஒன்றை நடத்தப் போகிறோம். அந்த மாநாட்டுக்கு பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை அழைக்கப்போகிறோம்" என்கிறார் நல்லுசாமி.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளை உணவின் ஓர் அங்கமாக பார்க்க வேண்டும் என, கள் பாதுகாப்பு இயக்கம் கூறுகிறது

தமிழ்நாட்டில் மது விலக்கின் வரலாறு

தமிழ்நாட்டில் மதுவிலக்கு 1937ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் ராஜாஜி ஆட்சியில் இருந்தபோது 1937ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரை ஒட்டி, ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகிய பிறகு மதுவிலக்கு மெல்லமெல்ல தளர்ச்சியடைந்தது.

1947ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராகப் பதவி வகித்த போது, வடஆற்காடு, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மதுவிலக்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. பிறகு 1948ல் அக்டோபர் 2ஆம் தேதி சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழுந்துவந்தது.

இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியான டேக் சந்த் என்பவர் தலமையில் ஒரு குழுவை 1963ல் அமைத்தது மத்திய அரசு. இந்தக் குழு 1964ல் தனது அறிக்கையை அளித்தது. அதில் மதுவிலக்கு தொடர்பான பல கடுமையான பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கையை மாநிலங்கள் ஏற்கவில்லை. மதுவிலக்கினால் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதையும் அவை சுட்டிக்காட்டின.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நிலையில், மதுவிலக்கை அமல்படுத்த முன்வரும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் பாதியை தாங்கள் தருவதாக மத்திய அரசு கூறியது. ஆனால், மாநிலங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, ஏற்கெனவே மதுவிலக்கை அமல்படுத்தி வரும் தங்கள் மாநிலத்துக்கும் நிதியுதவி அளிக்க வேண்டும் எனக் கோரியது. ஆனால், மத்திய அரசின் நிதியுதிவி என்பது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தானே தவிர, ஏற்கெனவே அமல்படுத்திய மாநிலங்களுக்கு அல்ல எனக் கூறியது. இதையடுத்து, மாநில நிதி நிலையைக் காரணம் காட்டி 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் மதுவிலக்கை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்த நினைத்த தமிழ்நாடு அரசு 1973ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கள்ளுக்கடைகளையும் மூடுவதாக அறிவித்தது. பிறகு, 1974ல் இருந்த அனைத்துச் சாராயக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

1977ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு மதுவிலக்கைத் தளர்த்துவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. முடிவில், 1981ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் மதுவிலக்குத் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கள்ளுக்கடை, சாராயக் கடை, வெளிநாட்டு மதுபானங்களை விற்கும் கடைகள் திறக்கப்பட்டன. இதற்குப் பிறகு, 1987ல் கள், சாராயக் கடைகளை மூடுவதாக அரசு அறிவித்தது. ஆனால், இந்தியாவிலேயே தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை தொடர்ந்தது.

1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, 1990 முதல் மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. இதைத் தயாரித்து விற்பனை செய்ய டாஸ்கோ நிறுவனம் தொடங்கப்பட்டது. 1991ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, மலிவு விலை மது விற்பனையைத் தடை செய்தது. ஆனால், இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது பானங்களின் விற்பனை தொடர்ந்தது. 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் மதுபான விற்பனையை டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பித்தது தமிழ்நாடு அரசு.

அதிர்வலையை ஏற்படுத்திய சசி பெருமாள் மரணம்

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,சசிபெருமாளின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு ஆதரவான கோரிக்கைகள் வலுவடைந்தன. சசி பெருமாள் என்பவர் இதற்காகத் தீவிரப் போராட்டங்களை நடத்திவந்தார். இந்நிலையில், 2015ஆம் ஆண்டில், ஒரு சிறுவனுக்கு அவனுடைய உறவினர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து, அவன் அதைக் குடிப்பதை வீடியோ எடுத்தார். அது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அப்போதைய தி.மு.க. தலைவரான மு. கருணாநிதி, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து பல கட்சிகள், மதுவிலக்கு குறித்து தங்கள் நிலைப்பாட்டை வெளியிட ஆரம்பித்தன.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை என்ற இடத்தில் இருந்த மதுபானக் கடையை மூட வேண்டும் என போராட்டம் நடந்துவந்தது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சசி பெருமாள் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். இதையடுத்து அவரும் அந்த ஊரின் ஊராட்சி தலைவருமான ஜெயசீலனும் செல்போன் டவர் மீது ஏறினர். பாதிக்கு மேல் ஜெயசீலனால் ஏற முடியாத நிலையில், சசி பெருமாள் உச்சிக்குச் சென்றுவிட்டார். சுமார் ஐந்து மணி நேரம் செல்போன் டவர் உச்சியில் இருந்து போராடிய சசி பெருமாள், அங்கேயே மயங்கினார். அவரை தீயணைப்பு படையினர் கீழே இறக்கிவந்தபோது, அவரது உடலில் உயிர் இல்லை.

சசிபெருமாளின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் தாக்குதலுக்கு இலக்காயின. அன்றைய ஆளும் கட்சி தவிர்த்த அனைத்துக் கட்சிகளுமே பூரண மதுவிலக்குக்காக கோரிக்கை விடுத்தன.

இதற்கு அடுத்த வந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆளும் அ.தி.மு.கவே வெற்றிபெற்ற நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை அரசியல் கட்சிகள் படிப்படியாக கைவிட ஆரம்பித்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyqjn553rwo

கோவை: ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி நடந்தது எப்படி? நடிகைகள் மீது நடவடிக்கை சாத்தியமா?

3 months ago

கிரிப்டோகரன்சி, மோசடி, புதுச்சேரி, தமிழ்நாடு

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மோகன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

ரூ.100 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடியில் 5 மாநில காவல்துறையினரால் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட ஒருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் பணத்தை இழந்துள்ளனர்.

கோவையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தியா முழுவதும் ரூ. 100 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டது எப்படி? அவர்களிடம் பணத்தை இழந்தவர்களால் அதனை திரும்பப் பெற முடியுமா? அந்த நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

ஹாஷ்பே மோசடி நடந்தது எப்படி?

கிரிப்டோகரன்சி, மோசடி, புதுச்சேரி, தமிழ்நாடு, போலி விளம்பரம், பிரபலங்கள், தண்டனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,hashpe.io இணையதள முகவரியை தற்போது விற்பனைக்கு உள்ளது

கோவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஹாஷ்பே என்கிற நிதி சேவை வழங்கும் நிறுவனம் தொடங்கப்பட்டது. ட்ரான் கனெக்ட் (Tron Connect) என்கிற திட்டத்தில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று அவர்கள் விளம்பரம் செய்தனர். ஹாஷ்பே இணையதளம் மூலம் கிரிப்டோகரன்சி வாங்கவும், பணத்தை எளிதாகவும் வேகமாகவும் அனுப்ப முடியும் என்றும் அவர்களது விளம்பரங்களில் கூறப்பட்டிருந்தது.

50 டாலர் செலவு செய்து புக்கிங் செய்வதன் மூலம் 50 மில்லியன் டாலர் வரை லாபம் சம்பாதிக்க முடியும் என்றது அந்த விளம்பரம். அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிப்டோகரன்சி பற்றிய பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனத்தை பிரபலப்படுத்த சென்னையிலும் பின்னர் மும்பையில் சொகுசு கப்பலிலும் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

கார் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அறிவித்து குறுகிய காலத்திலேயே முதலீட்டாளர்களை கணிசமாக அவர்கள் ஈர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை அவர்கள் திருப்பித் தராமல் போகவே புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அசோகன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பின்னரே இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அவர் கிரிப்டோ முதலீட்டில் ரூ.93 லட்சத்தை இழந்துள்ளார்.

காவல்துறை விசாரணையில், புதுச்சேரியில் மட்டும் 9 பேர் சுமார் 2.6 கோடி ரூபாயை இழந்திருப்பது தெரியவந்தது. முதலில் புதுச்சேரி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்த, இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த இம்ரான் பாஷா என்பவர் பல மாத தேடலுக்குப் பிறகு பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இம்ரான் பாஷாவை புதுச்சேரி அழைத்துச் சென்ற காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான இம்ரான் பாஷா மீது புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் மோசடி வழக்குகள் உள்ளன.

கிரிப்டோகரன்சி, மோசடி, புதுச்சேரி, தமிழ்நாடு, போலி விளம்பரம், பிரபலங்கள், தண்டனை

பட மூலாதாரம்,HASHPE.IO

"நடிகைகளுக்கு விரைவில் சம்மன்"

இந்தியா முழுவதும் இந்தக் குழு 100 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கிறார் புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு காவல் ஆணையர் கீர்த்தி. பிபிசி தமிழிடம் பேசியவர், "முதலீடு செய்தவர்களை நம்ப வைப்பதற்காக ரூ.50 லட்சம் வரை ரொக்கமாக பரிசுத் தொகை வழங்கியுள்ளனர். இதனை நம்பிய முதலீட்டாளர்கள் அவர்கள் தளத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வந்துள்ளனர்.

இணையதளத்தை இவர்களே வடிவமைத்திருந்தனர் என்பதால் கிரிப்டோகரன்சியின் மதிப்பை தங்களின் இஷ்டத்திற்கு ஏற்றி வைத்துள்ளனர். பிறகு திடீரென ஒருநாள் அனைத்தும் நஷ்டம் அடைந்துவிட்டதாகக் கூறி அதன் மதிப்பை குறைத்துவிட்டனர். முதலீடு செய்தவர்கள் சந்தேகம் வந்து கேட்கவே இணையதளத்தை முடக்கிவிட்டு அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

இதில் மொத்தமாக எவ்வளவு மோசடி நடைபெற்றுள்ளது, யாருக்கு எவ்வளவு தொகை சென்றுள்ளது என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரைப்பட நடிகைகளுக்கு இவர்கள் கொடுத்த பணமும் மோசடியாக சம்பாதித்தவை என்பதால் அவர்களுக்கும் விரைவில் முறையாக சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும்" என்றார்.

கிரிப்டோகரன்சி, மோசடி, புதுச்சேரி, தமிழ்நாடு, போலி விளம்பரம், பிரபலங்கள், தண்டனை

பட மூலாதாரம்,HASHPE.IO

படக்குறிப்பு,ஷாஷ்பே நிறுவனம்

கைது செய்யப்பட்டவர்கள் யார்?

கோவையைச் சேர்ந்த இம்ரான் பாஷா, செயத் உஸ்மான் மற்றும் நித்திஷ் ஜெயின் என்கிற மூவர் தான் ஹாஷ்பே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக இருந்து வந்தனர். இவர்களில் நித்திஷ் ஜெயின் முதலில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மே 17-ம் தேதி செயத் உஸ்மான் கோவையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். தலைமறைவாக இருந்த இம்ரான் பாஷா தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் போக கோவையைச் சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் 3 பேரை தேடி வருகிறோம். இந்த மோசடியில் ஹாஷ்பே நிறுவனம் மட்டுமல்ல, பல இணை நிறுவனங்களும் சம்மந்தப்பட்டுள்ளன. மோசடி பணத்தை வெளிநாடுகள் உட்பட பல இடங்களுக்கு அனுப்பியுள்ளனர். அடுத்தக்கட்ட விசாரணைகளில் இவை முழுமையாக ஆராயப்படும்" எனத் தெரிவித்தார் ஆய்வாளர் கீர்த்தி

பணத்தை மீட்க முடியுமா?

சைபர் குற்றங்களைக் கையாளும் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கிரிப்டோகரன்சி என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல. பல பெயர்களில், பல குழுக்கள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. கிரிப்டோகரன்சியை மைனிங் செய்வதில் தொடங்கி அவற்றைப் பதிவு செய்து, தளத்தை உருவாக்கி, விற்பனை செய்வது என இதில் பல கட்டங்கள் இருக்கின்றன. இதில் திரட்டப்படும் பணம் வங்கிகளையும் கடந்து செல்வதால் அவற்றை மீட்பது கடினமான ஒன்றாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

சைபர் சட்ட வழக்கறிஞரான ந.கார்த்திகேயன் கூறுகையில், "பணத்தை இழந்துவிட்ட நிலையில் முதலீடு செய்தவர்களிடம் உள்ள ஒரே தகவல் அவர் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விவரங்கள் தான். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பிறரின் வங்கிக் கணக்கை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்துகின்றனர். இதனால் மோசடி செய்யப்பட்ட பணம் அடுத்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை அறிவது கடினமாகிறது" என்றார்.

நடிகைகள் மீது என்ன நடவடிக்கை?

கிரிப்டோகரன்சி, மோசடி, புதுச்சேரி, தமிழ்நாடு, போலி விளம்பரம், பிரபலங்கள், தண்டனை

இதனை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார் கார்த்திகேயன், "2019-ல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் இதற்கான ஷரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது யாராவது தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் நடித்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர முடியும்."

"காவல்துறை கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்கையில் பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் அளித்து நிவாரணமும் பெற முடியும். பார்வையாளர்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் ஒருவர் முதன் முறையாக நடித்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் மற்றும் ஓராண்டு வரை விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்க முடியும். மீண்டும் இதே தவறைச் செய்தால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதித்து மூன்று ஆண்டுகள் வரை தடை விதிக்க முடியும். இவை விளம்பரத்தை எடுப்பவரில் இருந்து அதில் நடிப்பவர் வரை அனைவருக்கும் பொருந்தும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg717lekv1no

கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா?

3 months ago

கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா?

15 Jun 2025, 9:17 PM

T4Xiw42m-Seeman-4.jpg

– ரவிக்குமார்

( Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி யாராவது கள் இறக்கினால் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். )

கள்ளுக்கடையைத் திறக்கவேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். ‘மற்ற மதுவகைகளை அரசாங்கம் அனுமதிக்கிறது. சாராயம் விற்கிறார்கள். அயல்நாட்டு மதுவகைகளைத் தயாரித்து விற்கிறார்கள். அவையெல்லாம் செயற்கையாக இரசாயனப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது.

கள் என்பது இயற்கையாக வடிகிற ஒரு பொருள். அது ஒரு இயற்கை உணவு. அது உடம்புக்கு நல்லது. சாதாரண ஏழைகள் சாப்பிடக் கூடியதாக இருக்கிறது.

அதனால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அப்படி இருக்கும்போது சாராயத்தையும், பிராந்தி விஸ்கி போன்றவற்றையும் விற்க அனுமதிக்கிற அரசாங்கம் அதன் மூலம் பெருமுதலாளிகளுக்கு லாபம் சேர்ப்பதற்குத் துணைபுரிகின்ற இந்த அரசாங்கம் ஏன் கள்ளை மட்டும் விற்கக் கூடாது என்று தடைபோடுகிறது?’ என்று கேட்கிறார்கள்.

அவர்களுடைய இந்த கோரிக்கையை அரசியல் கட்சிகள் சிலவும் ஆதரிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Ka2.jpeg

கஞ்சா வளர்க்கும் போராட்டத்தை நடத்துவார்களா?

கள்ளுக் கடை திறப்பதை ஆதரித்துப் பேசுகிறவர்கள் இது இயற்கையாகக் கிடைக்கிற ஒரு பொருள் என்று வாதிடுகிறார்கள். ‘‘கஞ்சாவும் கூட இயற்கையாகக் கிடைக்கும் ஒரு மூலிகைதான்‘‘ என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக கஞ்சா வளர்க்கும் போராட்டத்தையும் நடத்துவார்களா?

கள் நல்லது என எந்த மருத்துவர் சொன்னார்?

கள் குடித்தால் உடம்புக்கு நல்லது என எந்த மருத்துவரும் சொன்னது இல்லை. மருத்துவ ரீதியாகப் பார்த்தால் கள் என்பது சிலர் சொல்வது மாதிரி உடலுக்குக் கேடு விளைவிக்காதது அல்ல. ஏனென்றால் அதில் ஐந்து சதவீதம் முதல் பத்து சதவீதம்வரை ஆல்கஹால் இருக்கிறது.

நான்கு சதவீதத்துக்குமேல் ஆல்கஹால் இருக்கும் ஒரு பொருளைத் தொடர்ந்து உட்கொண்டால் அது மிகவும் மோசமாக உடலைப் பாதிக்கும். குறிப்பாக மூளையைப் பெரிதும் பாதிக்கும். கள் அருந்துவதால் என்சைம்கள் பாதிக்கப்படுகின்றன.அதனால் நினைவாற்றல் குறைகிறது . இந்த விஷயங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையாகும்.

Ka3.jpg

கள் அருந்துவதால் ஏற்படும் கேடுகள்

கள் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கேரளப் பல்கலைக் கழகத்தின் பயோ கெமிஸ்ட்ரி துறையைச் சேர்ந்த இந்திரா, விஜயம்மாள், ஜே.ஜே.லால் மற்றும் ஸ்ரீரஞ்சித்குமார் ஆகிய நான்கு ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். கள் குடிப்பதால் வளர் பருவத்தில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான கேடுகள் ஏற்படும் என்றும் அவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

சினையாக இருந்த எலிகளைப் பிடித்து அவற்றுக்குத் தினமும் குறிப்பிட்ட அளவு கள்ளைப் புகட்டி அவை குட்டி போட்டதற்குப் பிறகு ஆராய்ந்து பார்த்ததில் அந்தக் குட்டிகளுக்குக் கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே விதமான பாதிப்புகள் மனிதர்களுக்கும் ஏற்படும் என்பதை அந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இயற்கையான ‘ஒரிஜினல்‘ கள்ளைக் குடித்தாலே பிரச்சனை என்னும்போது ‘ கலப்பட கள்‘ குடித்தால் என்ன ஆகும் என்பதற்கு கேரளாவில் அவ்வப்போது கலப்படம் கள் குடித்ததால் ஏற்படும் மரணங்களே சாட்சி.

கள்ளில் கலப்படம்

ஒரு கள்ளுக்கடையை லாபகரமாக நடத்த வேண்டுமென்றால் அதற்குப் போதுமான கள் உற்பத்தி செய்யப்படவேண்டும். அப்படி உற்பத்தி செய்வதற்கு அந்த அளவுக்குத் தென்னை மரங்கள் இருக்கவேண்டும். தென்னை மரம் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து அவற்றைக் கள் இறக்குவதற்கு விடமாட்டார்கள்.

காய்ப்பு பொய்த்துவிடும் என்பதால் ஒரு வருடம் விட்டு ஒரு வருடம்தான் கள் இறக்க விடுவார்கள். அப்படிச் செய்யும்போது கள் இறக்கப் போதுமான மரங்கள் கிடைக்காமல் போய்விடும். இதைச் சமாளிப்பதற்கு மட்டுமின்றி அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் கள்ளுக் கடைக்காரர்கள் கண்டுபிடித்துள்ள உபாயம்தான் கலப்படக் கள் என்பதாகும். கலப்படக் கள் தயாரிப்பதற்கு என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்தால் நாம் கனவில்கூட கள்ளுக்கடையைப் பற்றி நினைக்கமாட்டோம்.

Gtec7NrbgAAHd1D-683x1024.jpg

கள்ளில் உயிருக்கு ஆபத்தான கலப்பட பொருட்கள்

ஸ்பிரிட், க்ளோரல் ஹைட்ரேட், வெள்ளை நிற சாந்து இவைதவிர டையாஸ்பாம் என்னும் மாத்திரையும்கூட கள்ளில் கலக்கப்படுகிறது. இப்படிக் கலப்படம் செய்து தயாரிக்கப்படுகிற ‘கள்ளில்’ இருக்கும் போதை நாற்பது சதவீத ஆல்கஹாலின் போதைக்குச் சமம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி ‘ செயற்கைக் கள்‘ தயாரிப்பதற்கு மட்டுமின்றி இயற்கையாக இறக்குகிற கள்ளிலும்கூட க்ளோரல் ஹைட்ரேட்டைக் கலந்து அதில் தண்ணீர் ஊற்றி கூடுதல் கள்ளை உற்பத்தி செய்வது அநேகமாக எல்லா கள்ளுக் கடைகளிலும் உள்ள நடைமுறையாகும்.‘ இருநூறு லிட்டர் கள்ளில் எழுபது லிட்டர் ஸ்பிரிட்டைக் கலந்து அதில் க்ளோரல் ஹைட்ரேட், டயாஸ்பாம் மாத்திரை போன்றவற்றைச் சேர்த்து தண்ணீர்விட்டுக் கலக்கினால் பத்தாயிரம் லிட்டர் கலப்படக் கள் கிடைக்கும்.

க்ளோரல் ஹைட்ரேட் என்னும் இந்த வேதிப் பொருள் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகும். இதைக் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் மயக்கம், இருதய பாதிப்பு, வாந்தி எனப் பல்வேறு உடல்நலக் கேடுகள் வருவதோடு கல்லீரல் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி இதைத் தொடர்ந்து பாவித்துவந்தால் அந்த நபர் நிரந்தரமாக இதற்கு ‘அடிக்ட்‘ ஆகிவிடுவாரென்றும் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

ஆக, கள் இயற்கை உணவு என்பதும் அதைக் குடித்தால் உடம்புக்கு நல்லது என்பதும் அப்பட்டமான பொய்யே தவிர வேறொன்றுமில்லை. கள் குடிப்பதற்கு ஆதரவான பேச்சு யாவும் அடிப்படையில் மதுவுக்கு ஆதரவான பேச்சே தவிர வேறில்லை. கள்ளுக் கடைகளால் லாபம் ஈட்டி முதலாளிகள் ஆனவர்கள் வேண்டுமானால் சுயநலத்துக்காக அதை ஆதரிக்கலாம். கள்ளுக் கடைகளால் சுயமரியாதையையும் வாழ்க்கையையும் இழந்தவர்கள் அதை ஆதரிக்க முடியாது.

மது ஆதரவு பிரசாரத்துக்கு தடை

மது அருந்துவதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய சட்டப்படி அனுமதி இல்லை. மது அருந்துவதை ஆதரித்து விளம்பரம் செய்வது 1995 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

கள் இறக்கினால் 3 மாதங்கள் சிறை

Kal1.jpeg

கள் இறக்குவதென்பது தமிழ்நாட்டில் சட்டப்படி குற்றமாகும். Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி ஒருவர் கள் இறக்கினால் 3 மாதங்கள் வரை அவருக்கு சிறை தண்டனை விதிக்கலாம் .

Kal2.jpeg

சனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கத் தயங்கும் தமிழ்நாடு அரசு இதுபோன்ற போராட்டங்களை எப்படி அனுமதிக்கிறது ? என்பது வியப்பளிக்கிறது.

Ref:
https://indiankanoon.org/doc/77545447/

கட்டுரையாளர் குறிப்பு:

image-1599.png

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்  (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

https://minnambalam.com/oes-the-law-permit-protests-supporting-toddy/#google_vignette

பரமக்குடியில் வயதான பெண் படு கொலை – இலங்கை பெண்ணும் மகனும் கைது!

3 months ago

பரமக்குடியில் வயதான பெண் படு கொலை – இலங்கை பெண்ணும் மகனும் கைது!

adminJune 16, 2025

இந்தியாவின் பரமக்குடியில் வயதான பெண்ணைக் கொன்று தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 52 வயதான அன்னலட்சுமி, பரமக்குடியில் உள்ள 92 வயதான ஞானசவுந்தரியின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வயதான பெண்ணின் மரணம் குறித்து அன்னலட்சுமி உறவினர்களுக்குத் தகவல் அளித்திருந்தார்.

பரமக்குடி நகர காவற்துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வயதான பெண்ணின் வீட்டிலிருந்து சுமார் 7.5 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

பணிப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் இரவில் வயதான பெண்ணைக் கொன்று, கரூரிலிருந்து வந்த அவரது மகன் 36 வயது பிரபுவிடம் தங்க நகைகளைக் கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து காவற்துறையினர் அந்தப் பெண்ணையும் அவரது மகனையும் கைது செய்து, திருடப்பட்ட நகைகளை மீட்டுள்ளனர்.

https://globaltamilnews.net/2025/216866/

தமிழ்நாட்டில் கடன் வசூல் முறையை நெறிப்படுத்த புதிய சட்டம் - கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?

3 months ago

லோன் செயலிகளால் ஏற்படும் பிரச்னைகள், தமிழ்நாடு அரசு புதிய சட்டம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் 'கடன் வழங்கும் நிறுவனங்கள் - நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' (Tamil Nadu Money Lending Entities-Prevention of Coercive Actions Act, 2025) அமலுக்கு வந்துள்ளது.

கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதுடன், 'பொதுமக்களிடம் இருந்து கடன் வசூல் செய்யும் போது நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தால் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்' என்றும் புதிய சட்டம் கூறுகிறது.

புதிய சட்டத்தின்படி, கடனை வசூலிக்க எந்தெந்த வழிமுறைகளைக் கையாள்வது குற்றமாகும்? அதற்கு என்ன தண்டனை? அதனால் கடன் செயலிகள் (app) கட்டுக்குள் வருமா?

கடன் தொல்லையால் தொடரும் தற்கொலைகள்

  • கடன் தொல்லை காரணமாக, கடந்த ஜனவரி மாதம் சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பால்ராஜ் தனது மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரியை சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களாக வேலையில்லாமல் தவித்த அவர், கடன் செயலியில் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் செயலி நிறுவனத்தினர் அளித்த மனஉளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்தில் பதிவான எஃப்.ஐ.ஆர்.

சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

இத்தகைய சூழலில், கடன் வசூலிப்பதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில், "கடன் வழங்குவோர், அடகு கடைகள் ஆகியவை அதிக வட்டி பெறுவதை ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குவோர் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.

ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள் ஆகியோர் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.

இந்நிறுவனங்களின் வசூல் முறைகளால் மக்கள் பாதிக்கப்படுவதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சட்டத்தை இயற்றுவது அவசியமாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினமே விவாதங்களுக்குப் பின் இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதிய சட்டத்தில் என்ன உள்ளது?

அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்குப் பின் சட்டமாகியுள்ளது. அதன்படி, கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுப்பது நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவு (Registration of money lending Entity)

  • கடன் வழங்கும் நிறுவனத்தை முறைப்படுத்துதல் (Regulations of money lending entity)

  • பதிவு செய்யும் நிறுவனங்களின் அதிகாரம் (Powers of registering authority)

  • குற்றங்களும் அபராதமும் (Offences and penalties)

எவையெல்லாம் குற்றம்?

ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (NBFC), கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் தவிர அனைத்து பணம் வழங்கும் நிறுவனங்களுக்கும் புதிய சட்டம் பொருந்தும்.

  • கடன் பெற்ற நபரிடம் கட்டாய வசூல் செய்யும் நடவடிக்கையில் இறங்குதல். (வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கும் இவை பொருந்தும்)

  • கடன் வாங்கிய நபரின் பெற்றோர், கணவர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் நிறுவனமோ அதன் பிரதிநிதிகளோ கட்டாய வசூல் நடவடிக்கையில் ஈடுபடுதல்

  • கடன் வாங்கிய நபரின் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அவர்களை அவமதிப்பது, மிரட்டுவது, பின்தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபடுதல்

  • கடன் பெற்ற நபருக்கு சொந்தமான அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதைப் பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல்

  • கடன் பெற்ற நபரின் சொத்துகளை பறிமுதல் செய்தல், வீடு, வேலை பார்க்கும் இடங்களுக்குச் சென்று பேசுதல் போன்றவை குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?

"வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company) ஆகியவற்றுக்கு அரசின் சட்டம் பொருந்தும். உடனடி கடன் செயலிகளால் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆனால், இவை எதுவும் நிறுவனங்களாக நடத்தப்படுவதில்லை" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது ஒரு மென்பொருள். உலகில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கடன் பெறலாம். ஐந்தாயிரம், பத்தாயிரம் உடனடியாக கடன் கொடுத்துவிடுகின்றனர்" எனக் கூறுகிறார்.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இதுபோன்ற கடன் செயலிகள் அதிகம் உள்ளதாகக் கூறும் அவர், "ஃபேஸ்புக், யூட்யூப் ஆகியவற்றில் விளம்பரம் செய்து இந்நிறுவனங்கள் மக்களை ஈர்க்கின்றன. இதனை முறைப்படுத்த வேண்டும்" எனக் கூறுகிறார்.

"ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது ஆவணங்களை சரிபார்த்து நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன. ஆனால், கடன் செயலிகளுக்கு இந்த விதிகள் எதுவும் இல்லை. பணம் கொடுத்து மிரட்டிப் பணம் பெற வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது," எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.

ஆன்லைன் ரம்மியை தமிழ்நாடு அரசு முறைப்படுத்தியதுப் போல, கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

லோன் செயலிகளால் ஏற்படும் பிரச்னைகள், தமிழ்நாடு அரசு புதிய சட்டம், ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் என்று கூறுகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்

"கடன் செயலியாக இருந்தாலும் பதிவு செய்வது கட்டாயம்"

இதனை மறுக்கும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன், "கடன் செயலிகளை யார் நடத்துகிறார்கள் என்பது தெரிய வாய்ப்பில்லை. ஆனால், புதிய சட்டத்தின்படி தமிழ்நாட்டில் கடன் வழங்கும் தொழில் செய்வோர் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்வது கட்டாயமாகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இயங்கும் கடன் செயலிகளை முடக்கலாம். அதன் சார்பாக, செல்போனில் பேசி கடனை வசூலிக்க முயற்சிப்பவர்கள் மீது சைபர்கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். கடன் செயலிக்காக நேரில் சென்று பணத்தை வசூலிக்க முயலும் நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

"அவ்வாறு பதிவு செய்யாமல் கடன் கொடுத்தால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கடன் வழங்கும் அனைவரையும் பதிவு செய்ய வைத்து முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது" எனவும் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதற்காக, தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதன்படி,

  • கடன் வழங்கும் நிறுவனத்தை ஒருவர் நடத்த விரும்பினால் அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

  • கடன் வழங்கும் நிறுவனத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்.

  • மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

  • வட்டி வீதம், இணையதள முகவரி, அலுவலக விவரங்கள் ஆகியவற்றை விளம்பர அறிவிப்புகளில் தெளிவாக கூற வேண்டும்.

  • அரசிடம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

லோன் செயலிகளால் ஏற்படும் பிரச்னைகள், தமிழ்நாடு அரசு புதிய சட்டம், ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன்

தீர்வு கிடைக்குமா?

2003 ஆம் ஆண்டில் கந்துவட்டி தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததை மேற்கோள் காட்டிப் பேசிய சி.பி.கிருஷ்ணன், "அதில், எத்தனை சதவீதத்துக்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்ற விவரம் இல்லை. 'மிகவும் அதிகமான', 'மனதை உலுக்கும்' ஆகிய வார்த்தைகள் மட்டும் இடம்பெற்றிருந்தன" எனக் கூறுகிறார்.

"கடன் செலுத்த முடியாவிட்டால் குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டுவது, பலர் முன்னிலையில் தாக்குவது போன்றவற்றை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு மிகப் பெரிய தீர்வாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனவும் அவர் தெரிவித்தார்.

இதே கருத்தை வலியுறுத்தும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, " கடன் வசூலிப்பதில் காட்டப்படும் கெடுபிடியால் தற்கொலைகள் நடக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது மிரட்டல்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார்.

கல்வி, வியாபாரம் ஆகியவற்றுக்கு அதிகளவில் கடன் பெறப்படுவதாகக் கூறுகிறார், நுகர்வோர் நலன் வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் நடராஜன்.

கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும்போது சிக்கல் ஏற்படுவதாகக் கூறும் நடராஜன், "ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது அவருக்கு கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் உள்ளதா என்பதை நிதி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. அதைக் கவனித்தாலே பிரச்னைகள் குறைந்துவிடும்" என்கிறார்.

தொடர்பு கொள்க...

  • நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் உதவி எண்ணான 044-24640050 -க்கு அழைப்பு விடுக்கவும்.

  • மாநில சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தற்கொலை தடுப்பு மையத்திற்கு அழைப்புவிடுக்க 104 என்ற எண்ணையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy0j08lvzvwo

கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

3 months ago

கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

1365447.jpg

கோப்புப் படம்

சென்னை: “எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக) முயல்கிறார்கள்” என்று கீழடி விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ஏஎம்எஸ் (AMS) அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள் அவர்கள். இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. எந்த நம்பத்தகுந்த சான்றும் இல்லாமல் இதனை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.ஆனால், நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள். கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையைப் பொறுத்தவரை பாஜக - ஆர்எஸ்எஸ் கும்பல் கதறுவது சான்றுகள் இல்லை என்பதால் அல்ல, கீழடி காட்டும் உண்மை அவர்கள் முன்னெடுக்கும் 'ஸ்க்ரிப்ட்'-க்கு எதிரானதாக இருப்பதால்தான். எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் முயல்கிறார்கள். எல்லாவற்றையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது. காலமும் கூட” என்று அவர் பதிவிட்டுள்ளார்.திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு: இதனிடையே, அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜகவை கண்டித்து மதுரையில் வருகிற 18-ம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, கீழடி என்கிற பெயரே பாஜக அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பாஜகவின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.

கடந்த கால அடிமை எடப்பாடி அரசும் பாஜக-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார். அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பாஜக அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் - மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | Chief Minister Stalin says that BJP is trying to erase Keezhadi history - hindutamil.in

தடைக்காலம் நிறைவடைந்த பின், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் - மல்லிபட்டினத்தில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

3 months ago

13 Jun, 2025 | 05:05 PM

image

தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லப்போவதாக முடிவு செய்துள்ளனர்.

மேலும், கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் எனவும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் சென்று இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்படி  மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி ஜூன் 14ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம், சோளியாக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் மல்லிபட்டிணம், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும் நாள் என்பதால்  தடைக்காலம் முடிந்து எப்போது கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது என்பது குறித்து நேற்று (12) மாலை 6 மணியளவில் மல்லிபட்டினத்தில் ஆறு  மாவட்ட மீனவர்கள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தி திங்கட்கிழமை அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது என முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மல்லிப்பட்டினத்தில் நடந்த ஆறு மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினர்.

அந்த கூட்டத்தில் வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும், தடையை மீறி மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் மீன்பிடிக்க சொல்லும் மீன்பிடி படகுகள் மீது மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் படி மீன் பிடிக்க வேண்டாம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடைக்காலம் நிறைவடைந்த பின், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் -  மல்லிபட்டினத்தில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு | Virakesari.lk

என்ன தான் நடக்கிறது பாமகவில்…? -சாவித்திரி கண்ணன்

3 months ago

என்ன தான் நடக்கிறது பாமகவில்…?

-சாவித்திரி கண்ணன்

1200-675-24268875-142-24268875-174851349

மகன் அன்புமணியிடம், அப்பா ராமதாஸின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன? எதைப் பெறுவதற்கு  இந்த முட்டல், மோதல்கள்..? நிஜமாகவே இவர்கள் இருவரும் கடுமையாக முரண்படுகிறார்களா..? இவர்கள் ஒன்றிணையும் வாய்ப்புகள் உண்டா? இல்லையா…? இதோ ஒரு அப்பட்டமான ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ ;

சுயநலம் மேலோங்கிய ஒவ்வொரு தலைவரும் தன் இறுதி நாளில் இத்தகைய அவமானங்களில் இருந்து தப்ப முடியாது. ஏனென்றால், அவர்கள் எதை விதைத்தார்களோ.., அதைத் தான் அறுவடை செய்து வருகின்றனர்.

இந்த அருவருக்கதக்க – முற்றிலும் சுயநலமுள்ள இந்த இருவரின் – சண்டை  இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதத்திலும் பயனற்றது.

ராமதாஸ்- அன்புமணி பிரச்சினை பொது வெளியில் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதல்ல. முற்ற முழுக்க அலட்சியப்படுத்த வேண்டிய ஒன்று என நான் உறுதியாக நம்புகிறேன்.

எனினும், இந்த விவகாரம் பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சில காத்திரமான படிப்பினைகள்  தருகிறது என்பது மட்டுமல்ல, இந்த சண்டையின் பின்னணியில் உள்ள அதிர்ச்சிகரமான உண்மைகளை சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரையில் நான் சிலவற்றை கவனப்படுத்துகிறேன்.

டாக்டர் ராமதாஸ் தன் சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாதவராகவே பொதுத் தளத்தில் தான் தந்த வாக்குறுதிகளைத் தானே மீறியவர். ”என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்”. ”நாங்கள் ஊழல் செய்தால் எங்களை முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள்”   ”நான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என் தாயுடன் உறவு கொள்ளத்தக்க கொடுங் குற்றமாகும்…” இப்படி எண்ணற்ற வகையில் பேசி, தான் பேசியதை தானே மீறி, ‘நான் நம்பகமான தலைவரல்ல’ என்பதை அப்பட்டமாக நிறுவியவர் என்று நமக்கெல்லாம் தெரியும்.

அப்படிப்பட்டவர் தன் மகனிடம் நீதி, நேர்மை, நியாயங்களை எதிர்பார்த்து அது பொய்த்து போனதால் இன்று முரண்படுகிறாரா? தொண்டு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை மகனிடம் காண முடியவில்லையே என கலக்கம் கொண்டாரா?

கிடையாது, கிடையவே கிடையாது.

Screenshot_20250612_174644_Chrome.jpg

”35 வயதில் என் மகனை கேபினெட் அமைச்சராக்கியது என் தவறு தான்” என 25 ஆண்டுகள் கழித்து தான் ராமதாஸ் சொல்கிறார்…!

இந்த 35 வயதிற்கு முன்பாகவே வாஜ்பாய் அமைச்சரவையில் பொன்னுசாமியும், தலித் எழில்மலையும், சண்முகமும் இருந்த போது, ”அவர்களை சும்மா பெயருக்கு அமைச்சராக்கி, அவர்களை பின்னிருந்து நிர்பந்தித்து, கோடிக் கோடியாக பணம் சம்பாதிக்கிறார் அன்புமணி. உங்கள் மகனை கட்டுப்படுத்தி வையுங்கள்” என வாய்பாயே அழைத்து கடிந்து கொண்ட பிறகும், தன் மகனுக்கு வாதாடி மல்லுக்கட்டி, கேபினெட் அமைச்சர் பொறுப்பு வாங்கிய உத்தமர் தான் ராமதாஸ்.

”ஐயோ இப்படி பொதுச் சொத்தை சூறையாடும் பிள்ளையை அமைச்சராக்குகிறோமே என அப்போது அவருக்கு மனம் உறுத்தவில்லையே..?’’

Screenshot_20250612_174731_Chrome.jpg

”மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு, வரலாறு காணாத வசூல் வேட்டை நடத்துகிறார்” என வட நாட்டு ஊடகங்கள் எல்லாம் அன்புமணி குறித்து எழுதி, எழுதி மாய்ந்தனவே அப்போது கூட, ‘மகனை கேபினெட் அமைச்சராக்கியது தவறு’ என்று ராமதாசுக்கு குற்ற உணர்வு தோன்றவில்லையே…? தோன்றி இருந்தால், இன்று பாஜக தலைமை கண்டு அஞ்சி மண்டியிட்டு உங்கள் மகன் கூட்டணி வைக்கக் கோரி கதறி இருக்க வாய்ப்பில்லையே…!

‘தன் வாரிசுக்கு இடையூறாக கட்சியில் திறமைசாலிகள் யாரும் இருக்கக் கூடாது’ என எத்தனை பேரை வேட்டையாடி வெளியேற்றினார் ராமதாஸ். ஆனால் தற்போதோ, ”அரசியலில் வாரிசு என்பது கிடையாது” என திருவாய் மலர்கிறார். உடனே, அவரே தான் பேசியதற்கு முரணாக, ”அன்புமணியை கட்சியை விட்டு வெளியேற்ற நான் என்ன முட்டாளா? இன்னும் ஓரிரு ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால் நானே அவருக்கு முடிசூட்டுவிழா நடத்தியிருப்பேன்…’’ என்கிறார்.

WhatsApp_Image_2022_05_28_at_12_51_54_PM

அதாவது, தன்னை அவமானப்படுத்தினாலும், நெஞ்சிலே குத்தினாலும், உயிருள்ள தன்னை  உதாசினம் செய்துவிட்டு, உற்சவராக்கி ஏமாற்றினாலும், எல்லாமே அய்யா தான் என சொல்லிக் கொண்டே தன்னை அதள பாதாளத்தில் தள்ளினாலும், மகனே இந்தக் கட்சியின் அடுத்த தலைவர். 2026 தேர்தலுக்கு பிறகு அன்புமணி பொறுப்பில் விடுகிறேன் என்கிறார், ராமதாஸ்.

ஆக, பாதிக்கப்பட்டவரே, பாதிப்புக்கு உள்ளாக்கியவரை விட்டால் தனக்கு நாதியில்லை என்கிறார் என்றால்,

”மகனே, 2026 தேர்தல் தான் நான் கடைசியாக சந்திக்கும் தேர்தலாக இருக்கக் கூடும். ஆகவே, அது வரையிலேனும் கூட்டணி பேரத்தில் பொட்டி வாங்கும் அதிகாரத்தில் இருந்துவிட்டு போகிறேனே…”

என்பது தான் அவர் மகனுக்கு விடுக்கும் வேண்டுகோள். இதைத் தான் அவரது வார்த்தைகளில் , ”இன்னும் ஓரிரு ஆண்டுகள் இக்கட்சிக்கு தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?” என்றெல்லாம் கேட்டு புலம்புகிறார்.

மேலும், அன்புமணிக்கு போட்டியாக சகோதர்கள் யாரும் இல்லை. ஆகவே, ”அதிகாரத்தை அவரே ஓட்டுமொத்தமாக குவித்து வைத்துக் கொள்ளாமல், குடும்பத்திற்குள் சகோதரிகளின் பிள்ளைகளுக்கு கொஞ்சமேனும் பங்கிட்டு கொடு” என்கிறார் ராமதாஸ்.

ஆக, இது முழுக்க, முழுக்க பொது வாழ்வில் கிடைக்கும் பொருளாதாரம், அதிகாரம் போன்ற பலாபலன்களை பங்கிட்டுக் கொள்வதில் குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை அவ்வளவே!

அன்புமணியோ, இந்த புலம்பல்கள் எதற்கும் பதில் சொல்லாமல், பாஜக தலைமை சொல்லிக் கொடுத்தபடி  நடை பயணம் சென்று மக்களை சந்திக்க போகிறாராம்…!

இத்தனை ஆண்டுகாலம் ஏசி அறையில் இருந்து கொண்டே சொகுசு அரசியல் செய்து வந்த அன்புமணி அவர்கள்,  ராமதாஸ் கூறியபடி, ’உழைக்க தயார் இல்லாதவர், தற்போது தான் மக்கள் ஞாபகம் வந்து நடை பயணமாகப் பார்க்கப் போகிறாராம்…!

வன்னிய மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள், உழைத்து வாழும் உத்தமர்கள். கஞ்சி குடிக்கும் நிலையிலும் கவுரவத்தை இழக்காதவர்கள், நேருக்கு நேராக பொட்டில் அறைந்தது போல தவறுகளை தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர்கள். இவையெல்லாம், நான் நீண்ட நாட்கள் இவர்களோடு பழகி உணர்ந்த உண்மைகள். வெறும் புகழ்ச்சியில்லை.

அன்புமணி நடைபயணத்தில் அவரை முச்சந்தியில் நிறுத்தி, வன்னிய மக்கள், ”உன் தந்தை வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உன் பதில்  என்ன..?”  எங்களை பகடை காயாக்கி உங்கள் குடும்பம் சேர்த்த செல்வங்கள் என்னென்ன…? போன்ற தங்களது ஏமாற்றம், கோபம், இவர்களின் துரோகம்.. ஆகியவை குறித்து கேட்கப் போகும் கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? எனப் பார்ப்போம்.

‘சமூகநீதி என்ற சாக்லேட்டை காட்டி, வெறும் கையை சப்பவைத்து விட்டு, அதிகார அரசியலின் ஆதாயங்களை முழுக்க, முழுக்க அனுபவித்துக் கொண்டு, மதவாத, பாசிச சக்திகளுடன் கைக் கோர்த்து, தமிழ்நாட்டை படுகுழிக்குள் தள்ளுவது குறித்து அப்பவிற்கோ, மகனுக்கோ சிறிதளவும் குற்ற உணர்வில்லை’ என்பதை நாம் கவனத்தில் கொள்வோமாக!

ஆக, இந்த அப்பா – மகன் சண்டையில் வெல்லப் போவது யார்? என்றால், அது பணமும், அதிகாரமும் தான்! தோற்றுக் கொண்டிருப்பது தமிழக மக்கள் தாம்!

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/21865/ramadoss-vs-anbumani-ramadoss/

மழைத்துளியாய் பிறந்து காவிரியில் கழிவு நீராக கலக்கும் நொய்யல் நதியின் அவல நிலை

3 months ago

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி

படக்குறிப்பு, மசவரம்பு ஓடை

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கோவை மாவட்டம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் என 180 கி.மீ தூரம் பயணித்து, கரூர் மாவட்டத்தில் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் நதி. இந்த பயண தூரத்தில் வன விலங்குகளுக்கு நீர் ஆதாரமாகவும், வேளாண் நிலங்களுக்கு உயிர்நாடியாகவும், மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் விலங்கும் நொய்யல் நதி சந்திக்கும் சவால்கள் ஏராளம்.

நொய்யலுக்கு ஆதாரமாக விளங்கும் நீர் வீழ்ச்சிகளில் முதன்மையானது கோவைக் குற்றாலம் நீர் வீழ்ச்சி. இது கோவை மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி

படக்குறிப்பு,நண்டங்கரை ஓடை

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து புறப்பட்டு வரும் பல இயற்கை நீரோடைகள் இந்நதியின் முக்கியமான நீர் ஆதாரங்களாக உள்ளது. அத்தகைய ஓர் ஓடை தான் மசவரம்பு ஓடை.

நொய்யலின் மற்றுமொரு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது நண்டங்கரை ஓடை. அதன் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதுவே நொய்யலின் ஆற்றில் அமைந்துள்ள முதல் நீர்த்தேக்கமாகும். காட்டுப்பகுதியிலுள்ள யானை, புலி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட பல்வேறு காட்டுயிர்களுக்கு தாகம் தணிக்கும் நீர்நிலையாகவும் உள்ளது.

இவ்வாறு நீர்வீழ்ச்சிகளாக, காட்டாறாக, சிற்றோடைகளாக பயணித்து, பரிணமித்து வரும் நொய்யல் நதியாக உருவெடுக்கும் இடம் இந்த கூடுதுறைதான். (நொய்யலுக்கு காஞ்சிமா நதி, பெரியாறு என்றும் பெயர்கள் இருப்பதாகச் சொல்கிறது பேரூர் புராணம்)

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி

படக்குறிப்பு,முன்னோர்களுக்கு மக்கள் பேரூர் படித்துறையில் தர்ப்பணம்

பெரு மழை காலங்களின்போது நொய்யலில் வழிந்தோடும் நீர் வெள்ளம் போல காட்சியளிக்கும். நொய்யல் வழித்தடத்தில் அமைந்துள்ள அடுத்த நீர்த்தேக்கமான சித்திரைச்சாவடி அணைக்கட்டைத் தாண்டிப் பெருவெள்ளம் நொய்யல் நதி பாய்ந்தோடும்.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,கோவைக் குற்றாலம் நீர்வீழ்ச்சி

வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய இடங்களில் பயணிக்கும் வரை தெளிந்த நீரோடையாக உள்ள நொய்யல் நதி கோவையின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தபின்பு தான் பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட திடக்கழிவுகள் சுமந்து செல்லும் வடிகாலாக மாறுகிறது.

இங்கிருந்து சாய ஆலைகள், தங்க நகைப்பட்டறைகள் மற்றும் வீடுகளிலிருந்து வரும் கழிவுகள் அனைத்தும் கலக்கத்துவங்குகின்றன.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,சித்திரைச்சாவடி அணைக்கட்டு

நதி என்பது மக்களின் வாழ்வில் பல வழிகளில் பின்னிப்பிணைந்திருக்கிறது. சாக்கடையும் குப்பையும் கலந்து கால்வாயாக ஓடிவரும் நொய்யல் ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு மக்கள் பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது.

கோவை நகருக்குள் அமைந்துள்ள நொய்யல் வழித்தடம் புதர் மண்டி, கழிவுநீர் கலந்து, ஆக்கிரமிப்புக் கட்டடங்களால் குறுத்து, கருத்து சாக்கடை நதியாக உருமாறுகிறது.

சாய ஆலை உள்ளிட்ட நிறுவனங்களின் ரசாயனக் கழிவுகளால் பெரும்பாலும் நொய்யல் ஆற்றில்தான் கலக்கின்றன. இதனால் ஆற்றின்போக்கில் அவ்வப்போது நுரை ஏற்பட்டு காணப்படும்.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,ஆற்றின்போக்கில் அவ்வப்போது நுரை ஏற்பட்டு காணப்படும்

கோவை நகரில் நொய்யல் பாயும் முக்கியக் குளமான குமாரசாமி குளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்தன. நொய்யல் நதியை மீட்பதற்காக கடந்த 2003 ஆம் ஆண்டில் 'சிறுதுளி' என்கிற அமைப்பு துவக்கப்பட்டது.

நொய்யலில் ஏற்பட்டு வரும் மாசுபாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு, கோவையிலுள்ள ஏராளமான அமைப்புகள், பொது மக்கள் இணைந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி ஒன்றும் நடந்தது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,கோவை நகருக்குள் அமைந்துள்ள நொய்யல் வழித்தடம், புதர் மண்டி, கழிவுநீர் கலந்து, கருத்து சாக்கடை நதியாக உருமாறுகிறது

கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, நொய்யல் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு காரணமாக, கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில், கோவை நகரிலுள்ள நொய்யல் குளங்களில் வாலாங்குளம், குமாரசாமி குளம் உள்ளிட்ட பல குளங்களில் இருந்த பல ஆயிரம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

அங்கு வாழ்ந்தோர்க்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் மாற்று வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

தமிழக அரசு மற்றும் சிறுதுளி இணைந்து மேற்கொண்ட முயற்சியால், கோவை நகரிலுள்ள அனைத்து நொய்யல் குளங்களும் துார் வாரப்பட்டன. பல வாரங்களாக ஞாயிறுதோறும் நடந்த இந்தப் பணியில் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும், தொழில் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மாநகர காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

பட மூலாதாரம்,SIRUTHULI

படக்குறிப்பு,முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் பார்வையிட்டிருந்தார்

ஊர் கூடி துார் வாரிய குளங்களை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் பார்வையிட்டிருந்தார். அப்போது ஊரணியைக் காக்க ஓரணியில் மக்கள் திரள வேண்டுமென்று என்றும் கூறியிருந்தார் கலாம்.

நொய்யல் வழித்தடங்கள் மீட்கப்பட்டு, குளங்கள் துார் வாரப்பட்டதால் நொய்யல் ஆற்றில் மழைக்காலங்களில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து குளங்களை நிரப்பியது. இதனால் 1990 களில் கோவை நகரில் அதல பாதாளத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் மேலே உயர்ந்தது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,அல்லி பூத்திருக்கும் கோளரம்பதி குளம் ஆகியவையே சாட்சி

ஆனால் நொய்யல் கோவை நகருக்குள் பாய்வதற்கு முன்பாகத்தான் அது பயன்பாட்டுக்கும் பாசனத்துக்கும் உரிய தண்ணீராக இருக்கிறது என்பதற்கு கோவை நகருக்கு வெளியே அமைந்துள்ள வேடபட்டி புதுக்குளம் மற்றும் அல்லி பூத்திருக்கும் கோளரம்பதி குளம் ஆகியவையே சாட்சி.

நகருக்கு வெளியிலுள்ள குளங்களில் செந்நீராக வேளாண் நிலத்தில் பாய்ந்து, அல்லியை பூக்க வைக்கும் நொய்யல் ஆற்றின் நீர்தான், கோவை நகருக்குள் முதலில் அமைந்துள்ள கிருஷ்ணாம்பதி மற்றும் குமாரசாமி குளங்களில் கருப்பு நீராக கண்களை அச்சுறுத்துகிறது. துர்நாற்றத்தால் மக்களைத் துரத்தியடிக்கிறது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம்

படக்குறிப்பு,கோவை நகருக்குள் கருப்பு நீராக உள்ள நீர்

கோவை நகரின் கழிவுநீரையும், குப்பைகளையும் சுமந்தபடி, பல்வேறு குளங்களைக் கடந்து, கூடுதலாக சாயக்கழிவு மற்றும் ரசாயனக் கழிவுகளையும் சேர்த்துக் கொண்டு திருப்பூர் நகரில் கருப்பு ஆறாக பாயும் நொய்யல் நதி.

கழிவு நீராக காட்சியளிக்கும் 9 குளங்களில்தான், மத்திய–மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.475 கோடி மதிப்பில் சாலையோரப் பூங்கா, படகுக் குழாம், நடைபாதை, ஜிப் லைன் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம், திருப்பூர்

படக்குறிப்பு,திருப்பூர் நகரில் கருப்பு ஆறாக பாயும் நொய்யல் நதி.

திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கான சாய ஆலைக் கழிவுகளால் முன்பு நொய்யல் பெருமளவில் பாழ்பட்டு வந்தது. தற்போது 18 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் (C.E.T.P.) வாயிலாக 340 சாய ஆலைகளின் கழிவுகளும், 100 சாயஆலைகளில் உள்ள தனிப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களில் (I.E.T.P.) அந்த ஆலைகளின் கழிவுகளும் சுத்திகரிக்கப்பட்டு வருவதால் சாய ஆலைக் கழிவு கலப்பது குறைந்துவிட்டதாக திருப்பூர் தொழில் அமைப்புகள் கூறுகின்றன.

ஆனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் வழியோர கிராமங்களில் வீடுகளிலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் அனுமதியற்ற சாயஆலைகள், தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இவையனைத்தும் சேர்ந்தே நொய்யலை சாக்கடை ஆறாக உருமாற்றியுள்ளன.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம், திருப்பூர்

படக்குறிப்பு,ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையத்தில் நொய்யலின் குறுக்கே கட்டப்பட்ட அணை

இதுதான் ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையத்தில் நொய்யலின் குறுக்கே கட்டப்பட்ட அணை. கடந்த 1992 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது இந்த அணை திறக்கப்பட்டது. அப்போது திருப்பூர் சாயஆலைக் கழிவு பிரச்னை உச்சத்தில் இருந்தது. அங்கிருந்து சாயஆலைக் கழிவுநீருடன் கலந்து வந்த நொய்யல் ஆற்று நீர், இந்த அணையில் தேக்கப்பட்டது.

மொத்தம் 10,375 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பாசனத்துக்குப் பயன் பெறும் என்று நம்பிக் கட்டப்பட்ட அணை, விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியது. வழக்கமாக அணை நீரைத் திறக்கச்சொல்லி விவசாயிகள் போராடுவார்கள். ஆனால் முற்றிலும் முரணாக இந்த அணையைத் திறக்க வேண்டாம் என்று அணைக்குக் கீழேயுள்ள விவசாயிகள் போராடினர். அணையில் நீர் தேங்கியிருந்தால் தங்களுடைய பகுதியில் நிலத்தடி நீர் விஷமாகும் என்று மேலேயுள்ள விவசாயிகள், அணையைத் திறந்து விடச்சொல்லி போராடினார்கள். இறுதியில் அணையில் நீரைத் தேக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

நொய்யல் ஆறு, கோவை, நொய்யல், நதி, கோவை குற்றாலம், ஈரோடு

படக்குறிப்பு,காவிரி ஆற்றுடன் நொய்யல் ஆறு கலக்கும் இடத்தில் ஒரு சாக்கடைக் கால்வாய் போலவே காட்சியளிக்கிறது.

தற்போது இந்த அணையில் உள்ள நீரின் மாசுத்தன்மை தினமும் அளவிடப்படுகிறது. அணையின் நீர் மட்டம், கொள்ளளவு, மழையளவு மற்றும் உப்புத்தன்மை (TDS‌ ) ஆகியவற்றை நீர்வள ஆதாரத்துறை தினமும் காலை 6 மணிக்கு வெளியிடுகிறது. ஜூன் 11 அன்று இத்துறை வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 39.37 அடி உயரமுள்ள அணையில் 3.48 அடிக்கு மட்டுமே அதாவது 5.6 மில்லியன் கன அடி (மொத்த கொள்ளளவு 616 mcft) அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. நீரின் டிடிஎஸ் அளவு 1180 என்ற நிலையில் இருந்தது.

நொய்யல் ஆற்றின் 180 கி.மீ. துார பயணத்தின் இறுதி நிலை இதுதான். மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறந்த நொய்யல் நகரமயமாக்கலின் எல்லாத் தாக்குதல்களையும் தாங்கி, சாக்கடை நதியாகி, இங்கே ஒரு ஓடையாகக் குறுகிவிடுகிறது. கரூர் மாவட்டம் நொய்யல் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றுடன் நொய்யல் ஆறு கலக்கும் இந்த இடத்தில் ஒரு சாக்கடைக் கால்வாய் போலவே காட்சியளிக்கிறது நொய்யல்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1dew712nlvo

கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்

3 months ago

Published:Yesterday at 12 PMUpdated:Yesterday at 12 PM

கீழடி

கீழடி

Join Our Channel

21Comments

Share

சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு ஆய்வறிக்கையைக் கடந்த 2023-ல் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.

கீழடி - அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடி - அமர்நாத் ராமகிருஷ்ணன்

ஆனால், இந்த ஆய்வறிக்கை கிடப்பில் போடப்பட்டு, இன்னும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசால் திருப்பியனுப்பப்பட்டது.

இதனால், தமிழர்களின் வரலாற்றை பா.ஜ.க அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன.

இத்தகைய சூழலில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், "கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரியவேண்டியிருக்கின்றன.

எனவே, அத்தகைய அறிவியல்பூர்வ முடிவுகள் வந்த பிறகே கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க முடியும்." என்று கூறினார்.

நயினார் நாகேந்திரன் - கஜேந்திர சிங் - தமிழிசை சௌந்தரராஜன்

நயினார் நாகேந்திரன் - கஜேந்திர சிங் - தமிழிசை சௌந்தரராஜன்

இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள்.

அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள்.

இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.

அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?

தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா? மறந்து விடாதீர்கள்.

வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது.

அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?" என்று எக்ஸ் தளத்தில் பா.ஜ.க-வை விமர்சித்தார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனும் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் சு.வெங்கடேசன், "இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை.

ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை.

கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்

கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்

கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

“அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார்.

கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது.

ஆனால் அந்த மாட்டுக் கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே." என்று பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முருகன் அரசியல் எடுபடுமா? கடந்த காலம் சொல்வது என்ன?

3 months 1 week ago

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 15 நிமிடங்களுக்கு முன்னர்

மதுரையில் ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு, பா.ஜ.கவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன. மதுரையில் நிர்வாகிகள் மாநாட்டில் பேசிய அமித் ஷா முருகனை குறிவைத்து சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். முருகனை முன்வைத்து செய்யும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் பலன் இருக்குமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அமித் ஷா குறிப்பிடும் முருகன் மாநாட்டை, 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற பெயரில் இந்து முன்னணி ஜூன் 22ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை பாண்டி கோவிலுக்கு அருகிலுள்ள அம்மா திடலில் இந்த மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டிருக்கிறது.

இந்தத் திடலில் மாநாடு நடப்பதற்கு முன்பாகவே, அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து பூஜைகளை நடத்தவும் பொது மக்களுக்குப் பிரசாதம் கொடுக்கவும் மாநாட்டு அமைப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஜூன் 10ஆம் தேதியில் இருந்து மாநாடு நடக்கும் ஜூன் 22ஆம் தேதிவரை இந்த நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், காவல் துறை இந்த நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை, ஜூன் 12ஆம் தேதிக்குள் காவல்துறை முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளது.

இந்த மாநாடு குறித்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

"மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க. தனது அரசியல் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், இந்த மாநாட்டை பா.ஜ.க. அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கருதப்படுகிறது.

தமிழ்நாடு அரசியலில் முருகன்

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,L MURUGAN/X

படக்குறிப்பு,பா.ஜ.க 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது.

தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இது நடந்துள்ளது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இருந்தே முருகனை முன்னிறுத்தி வருகிறது. 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் முருகனை முன்னிறுத்தி வீரத்தமிழர் முன்னணி என்ற துணை அமைப்பை பழனியில் துவங்கினார் சீமான். இதற்கு அடுத்த மாதமே திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமெனக் கோரி வீரத்தமிழர் முன்னணி பேரணி ஒன்றை நடத்தியது. 2016ஆம் ஆண்டில் இருந்து வேல் வழிபாடு என்ற பெயரில் தைப்பூச நாளில் விழா ஒன்றையும் அக்கட்சி நடத்தி வருகிறது.

பா.ஜ.கவை பொறுத்தவரை 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் முருகனைப் போற்றிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும் பா.ஜ.கவினரும் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க. புகார் அளித்தது. அந்த யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டுமெனக் கோரி போராட்டங்களையும் பா.ஜ.க. நடத்தியது. மேலும், அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் இந்த விஷயத்தில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமென்றும் அழுத்தம் கொடுத்தது. முடிவில் அந்த சேனலை சேர்ந்தவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். சிலர் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கறுப்பர் கூட்டம் சர்ச்சையின் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பா.ஜ.கவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல். முருகன் அறிவித்தார். நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் துவங்கி, டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த யாத்திரையை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

அந்தத் தருணத்தில் கொரோனா பரவல் இருந்ததால், அந்த யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. கூட்டணிக் கட்சியாக இருந்தும் வேல் யாத்திரைக்கு அ.தி.மு.க. அரசு அனுமதி மறுத்தது அந்தத் தருணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதும் நவம்பர் 6ஆம் தேதி சென்னையில் இருந்து திருத்தணிக்குப் பெரும் ஊர்வலமாகப் புறப்பட்டார் எல். முருகன். இதை காவல்துறை தடுத்து நிறுத்தி, பிறகு சில வாகனங்களுடன் அனுமதித்தது.

பின்னர் திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய முருகனை காவல்துறை கைது செய்தது. இதுபோல, தினமும் வேல் யாத்திரை செய்ய முருகன் முயல்வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தது. முடிவில் டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினார். இதில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முருகன் வழிபாடு – ஆன்மீகமா? அரசியலா?

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,திருப்பரங்குன்றம் மலையின் ஒருபுறம் முருகன் கோவில் உள்ளது, மறுபுறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.

"வீரத் தமிழர் முன்னணி மூலம் முதன்முதலில் முருகனை முன்னிறுத்தியது நாங்கள்தான். திருமுருகப் பெருவிழா என்ற விழாவை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகிறோம். முருகன் ஒரு கடவுள் என்பதற்காக அல்ல, அவன் எங்கள் முப்பாட்டன், எங்கள் முன்னோர் என்று கூறி இதை நடத்தி வருகிறோம். இதற்கும் தேர்தல் அரசியலுக்கும் சம்பந்தமில்லை" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளரான சே. பாக்கியராசன்.

இப்போது பா.ஜ.கவும் அதைத்தான் சொல்கிறது. "இதை நாங்கள் தேர்தல் அரசியலுக்காகச் செய்யவில்லை. காலங்காலமாக இந்து சமயத்தினர் நம்பும் ஒரு கோவிலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அசைவ உணவை அருந்தினார். அவர் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை.

தமிழ்நாட்டை ஆளும் கட்சி, இந்து சமயத்திற்கு எதிரான கட்சியாக இருக்கிறது. இதனால், இஸ்லாமியர்களின் வாக்கு மொத்தமாக தி.மு.க-வுக்கு விழுகிறது. இந்தச் சூழலில் சாதாரணமான எதிர்ப்புக்கெல்லாம், அரசு மசிவதாக இல்லை. ஆகவே, தமிழ்நாட்டில் அதிகமாக வழிபடக்கூடிய தெய்வமான முருகனை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்தார் பா.ஜ.கவின் மாநிலப் பொறுப்பாளரான எஸ்.ஆர். சேகர்.

மேலும், "கோடிக்கணக்கான முருக பக்தர்கள் இருக்கிறார்கள். அந்த பக்தர்கள் மூலமாக எதிர்ப்பைக் காண்பிக்கலாம் எனக் கருதுகிறோம். இந்த எதிர்ப்பை பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் முன்னெடுத்துச் செய்வதால் அரசியலாகப் பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

அதோடு, அரசியல் கட்சியான தாங்கள் இதைச் செய்ய வேண்டியிருப்பதற்குக் காரணமாக "இந்து சமயத்தில் இப்படி எதிர்ப்புகளை முன்னெடுத்துச் செல்ல ஆட்கள் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மடாதிபதிகளையும் சங்கங்களையும் இதன் மூலம் ஒன்றிணைக்க நினைக்கிறோம். இந்த மாநாடு இந்த சமய அவமானத்தைத் துடைக்கும் மாநாடு. இந்த மாநாட்டின் மூலம் இந்துக்களை ஒருங்கிணைக்க முடியும் என நினைக்கிறோம்" என்றார் எஸ்.ஆர். சேகர்.

இந்த மாநாட்டின் மூலம் எவ்வித தேர்தல் லாபத்தையும் இலக்கு வைக்கவில்லை என்றும், இந்து உரிமைகளைப் பெறுவதுதான் நோக்கம் என்றும் கூறுகிறார் அவர். "ஆனால், இதன் விளைவு அரசியல் ரீதியாக பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்கலாம்" எனத் தெரிவித்தார் எஸ்.ஆர். சேகர்.

ஆனால், இதற்கு முந்தைய இதுபோன்ற முயற்சிகளுக்கு அப்படி எந்தச் சாதகமான விளைவும் கிடைக்கவில்லை. 2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க. முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும்கூட, 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.கவின் கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களையும் 2.62 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

பாக்கியராசனும் இதையேதான் கூறுகிறார். "தமிழ்நாட்டு மக்கள் இது போன்ற விஷயங்களை தேர்தலோடு இணைத்துப் பார்ப்பதில்லை. அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்றுதான் இருக்கிறார்கள். மதம் சார்ந்த செயல்பாடுகள் ஒருபோதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை. ஒரு சில தொகுதிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மாநிலம் தழுவிய அளவில் மதம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. மதத்தையும் அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை" என்று கூறினார்.

முருகன் வழிபாடு பாஜகவுக்கு பலன் தருமா?

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தை உள்ளூர்க்காரர்களே பெரிதாக விரும்பாத நிலையில், பா.ஜ.க. அதைக் கையில் எடுத்திருப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

அதுகுறித்து விரிவாகப் பேசியபோது, "பா.ஜ.கவை பொறுத்தவரை பொதுவாக ராமரை முன்வைத்து அரசியல் செய்வதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கடவுள் பிரபலமாக இருக்கிறாரோ, அந்தக் கடவுளை முன்னிறுத்தவும் பா.ஜ.க. முயல்வதுண்டு. ஒடிசாவுக்கு சென்றால் ஜெய் ஜெகன்னாத் என்பார்கள். கொல்கத்தாவுக்கு சென்றால் ஜெய் துர்கா என்பார்கள். தமிழ்நாட்டில் முருகனை தூக்கிப் பிடிப்பார்கள். ஆனால், இதற்கெல்லாம் பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ராமர் கோவிலைக் கட்டிய பிறகும் உத்தர பிரதேசத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது," என்று விளக்கினார்.

மேலும், தமிழ்நாட்டில், கறுப்பர் கூட்டம் வீடியோவை வைத்து வேல் யாத்திரையெல்லாம் சென்றும் 2021 தேர்தலில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்ட ப்ரியன், தற்போதும் திருப்பரங்குன்றத்தை முன்வைத்துச் செய்யும் அரசியலுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது என்கிறார்.

"அங்கே பெரிய கூட்டத்தைக் கூட்டலாம். அவர்கள் எல்லாம் ஏற்கெனவே பா.ஜ.கவில் இருப்பவர்கள்தான். முருகனைக் காப்பாற்றப் போகிறார்கள், திருப்பரங்குன்றம் மலையைக் காப்பாற்றப் போகிறார்கள் என யாரும் புதிதாக அந்தக் கூட்டத்தில் இணையப் போவதில்லை. உள்ளூர்வாசிகளே இதை ரசிக்க மாட்டார்கள்" என்கிறார் ப்ரியன்.

தமிழ்நாட்டில் தோன்றும் முருகனின் பிரமாண்ட சிலைகள்

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மலேசியாவில் உள்ள பிரமாண்ட முருகன் சிலை (கோப்புப் படம்)

இவையெல்லாம் ஒருபுறமிருக்க கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முருகனுக்கு பிரம்மாண்டமான அளவில் சிலை வைக்கும் போக்கும் தொடங்கியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடிக்கு அருகிலுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் 146 அடி உயரத்தில் பிரமாண்டமான முருகன் சிலை நிறுவப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பாக, வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவிலில் 92 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மருதமலை கோவிலில் 160 அடி உயரத்தில் கற்களால் ஆன முருகன் சிலையை பிரதிஷ்டை செய்வது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் அப்படி ஒரு சிலை அமையும்பட்சத்தில் அந்தச் சிலை ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலையாக இருக்கும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

இதுபோல முருகனுக்கு ஒரு பிரமாண்டமான சிலையை வைப்பது மலேசியாவில்தான் நடந்தது என்கிறார் முருகன் வணக்கத்தின் மறுபக்கம் என்ற நூலின் ஆசிரியரான சிகரம் ச. செந்தில்நாதன்.

மலேசியாவில் உள்ள பட்டு மலையின் (Batu Caves) அடிவாரத்தில் 2006ஆம் ஆண்டில் 140 அடி உயரத்திற்கு ஒரு முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்கப்பட்டபோது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலையாக இது அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டிலும் இதுபோல மிகப்பெரிய அளவில் முருகன் சிலைகளை வைக்கும் போக்கு துவங்கியிருக்கிறது. ஆனால், இது மரபு அல்ல என்கிறார் சிகரம் ச. செந்தில்நாதன்.

"தமிழ்நாட்டில் கோபுரங்களைத்தான் பெரிதாகக் கட்டுவார்கள். சிலைகளை இப்படிப் பெரிதாக வைக்கும் வழக்கம் கிடையாது. சிலைகளை இப்படிப் பெரிதாக வைத்தால், அவற்றுக்கு ஆராதனை செய்வது சிக்கலாகிவிடும். இவ்வளவு பெரிய சிலைகள் குறித்து எந்த ஆகமத்திலும் குறிப்பிடப்படவில்லை" என்கிறார் அவர்.

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

ஆன்மீகப் பேச்சாளரான சுகி சிவமும் இந்தப் போக்கு சரியானதல்ல என்கிறார்.

"மரபுகளோ சிந்தனையோ இப்போது தேவையில்லை என்றாகிவிட்டது. ஆகம விதிகளின்படி, ஒரு சிலை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய சிலைக்கு அப்படிச் செய்ய முடியுமா? ஆனால், அந்தக் கணக்கெல்லாம் இப்போது யாருக்கும் தேவையில்லை என்றாகிவிட்டது.

கூட்டமும் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயும் போதுமென்று நினைக்கிறார்கள். மதம் இப்போது அரசியல்வாதிகளாலும் வியாபாரிகளாலும் கைப்பற்றப்பட்டுவிட்டது. இதெல்லாம் தவறு எனச் சொல்ல வேண்டியவர்கள்கூட இதனால் பேசாமல் இருக்கிறார்கள்" என்கிறார் சுகி சிவம்.

முருகனுக்கான முக்கியத்துவம் மீண்டும் அதிகரிக்கிறதா?

தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக முருகனை வழிபடும் மரபு இருக்கிறது. சங்க இலக்கிய நூல்களில் பிற்காலத்தைச் சேர்ந்த நூலான பரிபாடலில் திருப்பரங்குன்றத்தில் முருகனை வழிபடுவது குறித்த செய்திகள் இருப்பதை நா. வானமாமலை தனது 'பரிபாடலில் முருக வணக்கம்' நூலில் சுட்டிக்காட்டுகிறார். இதற்குப் பிறகு வட இந்திய வழிபாட்டு மரபுகளின் தாக்கம் ஏற்பட்டது என்கிறார் நா. வானமாமலை.

"ஆனால், அதற்குப் பிறகு தேவார காலத்தில் முருக வழிபாடு பின்னால் சென்றுவிட்டது. சோழர்கள் முழுக்க முழுக்க சிவன் வழிபாட்டைத்தான் முன்னெடுத்தார்கள். சிவனுடைய மகன் என்ற வகையில்தான் முருகன் வழிபடப்பட்டார். பிறகு நாயக்கர் காலத்தில் அருணகிரிநாதர்தான் மீண்டும் முருகன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தார்.

நாயக்கர் காலத்தில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டபோது, மீண்டும் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தார் அவர். சிவன் கோவில்கள் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தமிழ்க் கடவுளாக முருகன் முன்னிறுத்தப்பட்டார்" என்கிறார் ச. செந்தில்நாதன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgq3d4lg755o

மத்திய அரசு அறிமுகம் செய்த 2 மரபணு மாற்ற அரிசி ரகங்களுக்கு வேளாண் நிபுணர்கள் எதிர்ப்பு ஏன்?

3 months 1 week ago

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,புதிய வகைகள் அதிக விளைச்சல் தரும் என அரசு கூறுகிறது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்

  • பதவி, பிபிசிக்காக

  • 9 ஜூன் 2025, 02:37 GMT

சமீபத்தில் இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில் புசா டிஎஸ்டி அரிசி -1 வகை, புசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஒரு அங்கமான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதே போல் டிஆர்ஆர் 100 அரிசி (கமலா) வகை ஹைதராபாத்தின் ராஜேந்திர நகரில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

"இந்த இரண்டு புதிய வகை விதைகள் 20 சதவிகிதம் வரை விளைச்சலை அதிகரிக்கும். பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை குறைக்கும். இந்த புதிய நெல் விதைகள் உரப் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த விதைகளைப் பயிரிடுவதன் மூலம் தண்ணீரை சேமித்து காலநிலை நெருக்கடிகளை சமாளிக்க முடியும்" என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த இரண்டு வகைகளும் அறுவடை காலத்தை 20 நாட்கள் வரை குறைக்கின்றன. வழக்கமாக, நெல் பயிரின் விளைச்சல் காலம் 130 நாட்கள் என்ற நிலையில் இந்த விதைகள் 110 நாட்களிலே விளைச்சலைத் தரும்.

ஒட்டுமொத்த பயிர் காலம் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

டிஆர்ஆர் 100 அரிசி வகை ஒவ்வொரு நெல்லுக்கும் அதிக தானியங்களைக் கொடுக்கும் என வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது. அதே போல் புசா டிஎஸ்டி 1 அரிசி வகை உப்புத்தன்மை மற்றும் களர் நிலங்களில் விளைச்சலை 9.66 சதவிகிதத்தில் இருந்து 30.4 சதவிகிதமாக உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகைகள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை சமாளித்து 20 சதவிகிதம் அதிக விளைச்சலைத் தரும் இந்த மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் இரண்டும் கிறிஸ்ப்ர்-கிராஸ்-9 என்கிற புதிய மரபணு திருத்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

எப்படி உருவாக்கப்பட்டது?

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி ரகங்கள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது

மரபணு திருத்தம் என்பது ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

ஒரு உயிரணுவின் மரபணு வரிசையை ஒரு உயிரியல் ஆய்வகத்தில் வெட்டி ஒட்டுவதைப் போன்றது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு தாவரம் அல்லது விலங்கின் டிஎன்ஏவில் சிறிய மாற்றங்களை விஞ்ஞானிகளால் செய்ய முடியும்.

இந்த வகை தொழில்நுட்பம் கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9 என்கிற கருவியை பயன்படுத்துகிறது. இதனை மரபணு கத்திரிக்கோல் என கூறலாம்.

"கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9-ஐ பயன்படுத்தி விஞ்ஞானிகள் மரபணு வரிசையில் குறிப்பிட இடங்களில் டிஎன்ஏவை வெட்டுகின்றனர் அல்லது மரபணுவை அழிப்பது அல்லது திருத்துவது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்" என வேளாண் பொருளாதார நிபுணர் முனைவர் கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

டிஆர்ஆர் அரிசி 100 (கமலா) வகை சம்பா முசோரி வகையைச் சார்ந்தது.

இது ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் சம்பா முசோரி (பீபிடி-5204) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புசா டிஎஸ்டி அரசி-1 வகை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் எம்டியூ 1010 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

"சம்பா முசோரியின் பீபிடி 5204 வகை குறுகிய காலத்தில் அதிக விளைச்சலைப் பெறும் வகையில் மரபணு திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பரிசோதனை கட்டத்தில் இருந்து கள நிலைக்குச் செல்வதற்கு இன்னும் காலம் எடுக்கும். பீபிடி 5204 வகை நாற்பது வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நம் மாநிலத்தில் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் அரிசி சம்பா முசோரி, குர்னூல், நந்த்யால், சோனா அரிசி மற்றும் இதர அரிசி வகைகள் பீபிடி 5204-ஐ சேர்ந்தது தான்." என பபாட்லாவில் உள்ள ஆச்சாரியா என்.ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் சதீஷ் யாதவள்ளி பிபிசியிடம் தெரிவித்தார்.

மத்திய வேளாண் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள கமலா மற்றும் புசா என்கிற இரண்டு மரபணு மாற்ற அரிசி வகைகளுக்கும் சில வேளாண் வல்லுநர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

மணல் கலவை, ஊட்டச்சத்துகள், தண்ணீர் மற்றும் நுண் உயிர்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாற்றத்தை மட்டும் செய்து விளைச்சலை அதிகரிக்க முடியுமா என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த புதிய வகை அரிசி விதை விளைச்சலை அதிகரிக்கவே என அரசு கூறுகிறது.

இந்த விதைகளால் என்ன பயன்?

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி

விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி "அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் சமாளிக்க முடியாத விலையேற்றம் போன்ற விவசாயிகள் சந்திக்கும் நிஜப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தாமல் இந்த அறிவியல்பூர்வமற்ற மரபணு திருத்தப்பட்ட விதைகளால் என்ன பயன்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

"மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் இந்த அரிசி வகைகள் ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சி என்கின்றனர். அரசியில் உள்ள ஒரு மரபணு அதிக விளைச்சலைத் தரும் என்கின்றனர். அவர்கள் மரபணுவை திருத்துவதால் வரும் நீண்ட கால விளைவுகளைப் பற்றி பேசுவதில்லை.

இந்த விதைகளை உற்பத்தி செய்யும் மக்கள் மீது இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என யாருக்கும் தெரியாது. இத்தகைய விதைகளால் இயற்கை விதைகள் மாசடைந்தால் அதனை தூய்மைப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும். ஆராய்ச்சி, அவதானிப்புகள் மற்றும் பரிசோதனைகள் இன்னும் சில வருடங்களுக்கு ஆய்வகங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ள நிலையில் அவசர கதியில் இந்த இரண்டு வகைகளையும் மத்திய அரசு வெளியிட்டது சரியில்லை" என பிபிசியிடம் தெரிவித்தார்.

"இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை"

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"மத்திய அமைச்சர் அதனை அன்று சம்பிரதாயமாக அறிமுகம் செய்து வைத்தார், ஆனால் இந்த வகைகள் அனைத்தும் தற்போது ஆராய்ச்சி கட்டத்தில் தான் உள்ளன. இந்த அரிசி விதைகள் பற்றிய தெளிவு மூன்று, நான்கு மாதங்கள் கழித்து தான் கிடைக்கும். தற்போது அதைப்பற்றி பேசவோ விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவோ முடியாது" என இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சாய் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த புதிய மரபணு மாற்றப்பட்ட வகைகளைப் பற்றி நிலத்தில் பரிசோதித்த பிறகு பேசுவதே சிறந்ததாக இருக்கும். தற்போதே அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது. பலரும் இவற்றை மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நினைக்கின்றனர். வேறொரு உயிரினத்தின் உயிரணுக்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டால் அவை மரபணு மாற்றப்பட்டது என அழைக்கப்படுகிறது" என ஓய்வுபெற்ற வேளாண் பொருளாதார நிபுணரான கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "காட்டன் விதைகளுக்குள் பேசிலஸ் துரிஞ்சியென்ஸ் பாக்டீரியாவில் இருந்து ஒரு மரபணுவை செலுத்தி பிடி காட்டன் உற்பத்தி செய்யப்பட்டது. இது மரபணு மாற்றம் என அழைக்கப்படுகிறது. இங்கு அது செய்யப்படவில்லை. விஞ்ஞானிகள் இங்கு மேற்கொண்டது மரபணு திருத்தம் மட்டுமே. அதாவது, தாங்களே அரிசி விதைகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். எனவே தான் களத்தில் பரிசோதித்து முடிவுகளை அறிந்த பிறகே அவற்றைப் பற்றி நாம் பேச முடியும்" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1e61gq6wewo

சென்னையில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் சாவில் திருப்பம் - மருத்துவர் கைது

3 months 1 week ago

சென்னையில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் சாவில் திருப்பம் - மருத்துவர் கைதானது ஏன்? இன்றைய முக்கிய செய்தி

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,TAMIL HINDU

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இன்று, ஜூன் 8 அன்று, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம்.

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் இறந்த வழக்கில் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு, இவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

"திருச்சியை சேர்ந்தவர் நித்யா (26). இவரும், கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா காலனி 6-வது தெருவைச் சேர்ந்த பாலமுருகனும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கொடுங்கையூர் ஆசிரியர் காலனியில் வாடகை வீட்டில் இரண்டு மாதங்களாக தம்பதியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த நித்யாமர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 25 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நித்யா, சில மாதங்களுக்கு முன்பு வரை சைதாப்பேட்டை சடையப்பன் சந்து பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ்குமார் (27) என்பவரை காதலித்திருப்பதும், பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதும், சம்பவம் நடந்த அன்று சந்தோஷ்குமார் அங்கு வந்து சென்றிருப்பதும் தெரியவந்தது.

தொடர் விசாரணை இதையடுத்து போலீஸார் சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில், நித்யா கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மறுத்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்து சென்றது குறித்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட ஆதாரங்களை காட்டி போலீஸார் விசாரணை நடத்தியதில், நித்யாவை கொலை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக் கொண்டார்.

விசாரணையில் சந்தோஷ் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார், ஆலந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருகிறார். சமூக ஊடகம் மூலமாக கடந்தாண்டு அவருக்கு நித்யா அறிமுகமாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நித்யா, தான் மென்பொறியாளர். அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன் என்று சொன்னதை, சந்தோஷ்குமார் நம்பியுள்ளார். காதலிக்க தொடங்கிய இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் தம்பதிகளாக வாழ்ந்தனர். இதற்கிடையே நித்யாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், சந்தோஷ்குமார் பிரிந்து சென்றுள்ளார்.

ஆனால் நித்யா, இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை சந்தோஷ்குமாரிடம் காட்டி, சமூக ஊடகங்களில் அதை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி சந்தோஷ் குமாரிடம் இருந்து ரூ.8.50 லட்சம் பறித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று நித்யா, சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அன்று சந்தோஷ்குமார் சென்றதும், இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில் நித்யா, மதுபோதையில் இருந்தபோது தனக்கு லேசாக தலைவலிப்பதாக தெரிவித்துள்ளார்.

உடனே சந்தோஷ்குமார், நித்யாவின் தலைக்கு மசாஜ் செய்வதுபோல நடித்து, அவரை கொலை செய்துள்ளார்.

பின்னர் அந்த வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தை நித்யாவின் கைவிரல் ரேகை மூலம் திறந்து, அதில் இருந்த 25 பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு தப்பியோடியுள்ளார். நகையை, தனது வீட்டின் எதிரே வசிக்கும் நண்பரிடம் கொடுத்துள்ளார். அந்த நகையையும் போலீஸார் தற்போது மீட்டுள்ளனர். இதையடுத்து, சந்தோஷ்குமாரை கைது செய்த போலீஸார், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர் என நீதிபதி கருத்து

பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கும் குவாரி உரிமையாளர்கள்: உயர் நீதிமன்றம் கருத்து

தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"குவாரி உரிமம் முடிந்த நிலையிலும், குவாரியை வெட்டி எடுத்த கோவை குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 7 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் குவாரி நடத்த உரிமையில்லை. சட்டவிரோதமாக எடுத்த கனிமத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அபராதம் விதிப்பை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவார்த்தி, "தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர்.

பேராசைக்காரர்களிடம் இருந்து பூமியைக் காக்கவே சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உள்ளது. குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள்.

குவாரி உரிமம் 2023ல் முடிந்ததால் அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இந்த வழக்கில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. குவாரி மோசடியில் அதிகாரிகள் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும், "நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yxv3155kgo

கோபுர கலசங்களில் இரிடியம் உள்ளது என்பது உண்மையா? சிலர் கோடிக்கணக்கில் தர தயாராக இருப்பது ஏன்?

3 months 1 week ago

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 6 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

'ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசு ரகசியமாக இரிடியத்தை விற்பனை செய்வதால் அதில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும்' எனக் கூறி சுமார் 4.5 கோடி ரூபாயை மோசடி செய்ததாக 6 பேரை தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்தும் போலி ஆவணங்களைத் தயாரித்தும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக, ஜூன் 2-ஆம் தேதி சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.

பிளாட்டினம், தங்கத்தைவிட அதிக மதிப்புள்ளதாக இருப்பதால் இரிடியத்தை மையமாக வைத்து மோசடிகள் அரங்கேறுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் சிக்கியது எப்படி? இரிடியத்தை முன்வைத்து மோசடி நடப்பது எப்படி?

இரிடியம் மோசடி நடந்தது எப்படி?

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

படக்குறிப்பு, இரிடியம்

இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் ஏ.ஜே.கென்னடி, கடந்த ஆண்டு மே மாதம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

நிதி மோசடிப் புகார்கள் தொடர்பான புகார்களைக் கையாளும் ரிசர்வ் வங்கியின் 'SACHET' இணையதளத்தில் தனி நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், புகார் மனுவை ஏ.ஜெ.கென்னடி அளித்திருந்தார்.

தனது மனுவில், 'இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தியும் போலியான ஆவணங்களைத் தயார் செய்தும் பொதுமக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கி மூலமாக இந்திய அரசிடம் இருந்து இரிடியம் மற்றும் தாமிரம் விற்பனைக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பெறப்பட்டதாகவும் இந்தப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கிக்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் சிலர் பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தைப் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தினால் அதிக வட்டியுடன் முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்கும் எனக் கூறி ஏமாற்றியுள்ளதாக மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதுதொடர்பான போலி ஆவணங்களை நம்பி சிலர் ஏமாந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் கடந்த மே மாதம் 28 அன்று தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம், சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

அவர்கள் மீது 419, 465, 468, 471, 420 IPC & 66 D of IT Act 2000 3 r/w 5of Emblems & Name (Prevention of improper use) Act 1950 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றுதல், மோசடி, ரிசர்வ் வங்கி முத்திரையை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இப்பிரிவுகள் குறிக்கின்றன.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலத்தைச் சேர்ந்த அன்புமணி, முத்துசாமி, கேசவன், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காடி சார்லா கிஷோர்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக, சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து தங்க நிற உலோகம், போலி ஆவணங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சிபிசிஐடி, சென்னை, தஞ்சாவூர், கோவை, சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களை இவர்கள் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.

'மும்பை, டெல்லியில் ரகசிய கூட்டம்'

இரிடியம் வர்த்தகத்தை மத்திய அரசு ரகசியமாக மேற்கொண்டு வருவதாகக் கூறி ரிசர்வ் வங்கி சின்னத்துடன் கூடிய போலி சான்றிதழ்களைக் காட்டி பண மோசடியில் இக்குழுவினர் ஈடுபட்டு வந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி கூறியுள்ளது.

ஒருகட்டத்தில் முதலீட்டுத் தொகையை வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். 'அவர்களை நம்ப வைப்பதற்காக டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அவர்களை வரவழைத்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல சிலரை நடிக்க வைத்து நம்ப வைத்துள்ளனர்' என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

இரிடியம்-காப்பர் திட்டத்தில் முதலீடு எனக் கூறி சுமார் 4.5 கோடி ரூபாய் வரை இக்குழுவினர் ஏமாற்றியுள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

தங்களை ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் என்றும் இரிடியம்-செம்பு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி கட்டாயப்படுத்தி முதலீடு செய்ய வைத்ததாக, சில ஊடகங்களிடம் சிபிசிஐடி பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் டி.எஸ்.அன்பு தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுவது என்ன?

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

மோசடியைக் கண்டறிந்தது தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய, இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல கிளை அலுவலகத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

"ரிசர்வ் வங்கியின் புகார் தளத்தில் (Sachet) தனி நபர் அளித்த தகவலின் அடிப்படையில் உதவிப் பொது மேலாளர் புகார் அளித்தார். அவர் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்" எனக் கூறினார், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர்.

"நிதி மோசடி தொடர்பாக புகார்கள் வந்தால் அதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பேரில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" எனக் கூறிய அவர், "இதுதொடர்பாக, மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து மட்டுமே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும்" என்று மட்டும் பதில் அளித்தார்.

தொடரும் இரிடியம் மோசடிகள்

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பூமிக்கு அடியில் மிகக் குறைவாக கிடைக்கும் உலோகங்களில் ஒன்றாக இரிடியம் உள்ளது

தமிழ்நாட்டில் இரிடியத்தை முன்வைத்து தொடர்ந்து பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. 2023 ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் இரிடியம் விற்பனை தொடர்பாக 4 பேருக்குள் ஏற்பட்ட மோதல், மோசடியை வெளிக்கொண்டு வந்தது.

முதல் தகவல் அறிக்கையின் படி, "ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சீனி முகமது என்ற நபர், திருவண்ணாமலையை சேர்ந்த ரவி என்பவரை அணுகியுள்ளார். அவரிடம், தன்னிடம் இரிடியம் உள்ளதாகவும் அதை விற்பனை செய்தால் பல லட்சம் சம்பாதிக்கலாம் என சீனி முகமது கூறியுள்ளார். இதை நம்பி ரவி உள்பட மூன்று பேர் சில லட்சங்களை முதலீடு செய்துள்ளனர். ஒருகட்டத்தில், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து சீனி முகமதுவிடம் தகராறு செய்துள்ளனர். இதையறிந்து நான்கு பேரையும் திருவண்ணாமலை போலீஸ் கைது செய்துள்ளது."

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் மீது இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி மதுரை தெற்கு வாசல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரனிடம், இரிடியம் கலசத் தொழிலில் ஈடுபட்டால் பல லட்சம் சம்பாதிக்கலாம் எனப் பெண் ஒருவர் கூறியதை நம்பி திருவள்ளூரை சேர்ந்த தி.மு.க பிரமுகரிடம் சுமார் 18 லட்ச ரூபாய் வரை இழந்துவிட்டதாக, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இரிடியம் மூலம் சுமார் 20 கோடி வரை லாபம் கிடைக்கும் எனக் கூறி மோசடி செய்ததாக காவல்துறையில் தெய்வேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முகமது ரபி, கலைச்செல்வி ஆகியோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இரிடியத்துக்கு இவ்வளவு மதிப்பு ஏன்?

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

படக்குறிப்பு,பிளாட்டினம், தங்கம் ஆகியவற்றைவிட இரிடியத்தின் விலை 2 அல்லது 3 மடங்கு அதிகம் என்கிறார் பார்த்திபன்.

கடந்த 10 ஆண்டுகளாக இரிடியத்தை முன்வைத்து பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடப்பதாகக் கூறுகிறார், அசாமில் உள்ள தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி பார்த்திபன்.

"பூமிக்கு அடியில் மிகக் குறைவாக கிடைக்கும் உலோகங்களில் ஒன்றாக இரிடியம் உள்ளது. கனடா, மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இரிடியம் அதிகமாக கிடைக்கிறது. குறிப்பாக, கடற்கரையோர பகுதிகள் மற்றும் வண்டல் (sediment) படிமங்களில் இவை கிடைக்கிறது.

பிளாட்டினம், தங்கம் ஆகியவற்றைவிட 2 அல்லது 3 மடங்கு இதன் விலை அதிகம். சர்வதேச சந்தையில் ஒரு கிராம் இரிடியத்தின் விலை என்பது நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் டாலர்களாக உள்ளது. அதனால் இதனை மோசடியாக வாங்கி விற்பதில் சிலர் முயற்சிக்கின்றனர்" எனக் கூறுகிறார் பார்த்திபன்.

'தங்கத்தைவிட அடர்த்தி அதிகம்'

"இரிடியத்தின் அணு எண் 191. இதை வேதியியல் ஆய்வகத்தில் வினை ஊக்கியாக (Catalyst) பயன்படுத்துகின்றனர். தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றைவிடவும் அதிக அடர்த்தி கொண்ட உலோகமாக இரிடியம் உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"நீர், அமிலம் என இரிடியத்தை எங்கு தூக்கிப் போட்டாலும் அதற்கு ஒன்றும் ஆகாது" எனக் கூறும் பார்த்திபன், "அடர் அமிலத்தில் அதிக நேரம் வைத்திருந்தால் மட்டுமே அதற்கு பாதிப்பு ஏற்படும். எளிதில் தீப்பிடிக்காது என்பதால் விமானத்தில் மின்சாதன கருவிகளில் பயன்படுத்துகின்றனர்" என்கிறார்.

"இரிடியம் பூசப்பட்ட (coated) எல்.இ.டி விளக்குகள், லேப்டாப் போன்றவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதை தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இரிடியத்தை நியூட்ரான் கொண்டு மோதவிடும்போது அது இரிடியம் 192 ஆக மாறிவிடும். இதை ரேடியோ ஆக்டிவ் ஐசோடோப் (radio active isotope) என்கின்றனர். அப்போது அதிக கதிரியக்க தன்மை வாய்ந்த கதிர்கள் வெளிப்படும்" எனக் கூறுகிறார் பார்த்திபன்.

'மனித உயிருக்கே ஆபத்து'

"இவ்வாறு மாற்றப்படும் போது அதை இயல்பாக கையாள முடியாது. பாதுகாப்பான கருவிகள் அல்லது மரத்தால் ஆன பொருள் மூலம் மூடப்பட வேண்டும் (Personal protected equipment (PPE). சுமார் 90 அடி வரையில் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு கையாளாவிட்டால் கதிரியக்கம் வெளிப்பட்டு மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்" எனவும் தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் இரிடியம் 192 பயன்படுத்துவதாகக் கூறும் அவர், "ப்ராஸ்டேட் புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் இவை பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன" எனக் கூறுகிறார்.

கோவில் கலசங்களில் இரிடியம் உள்ளதா?

இரிடியம், பணமோசடிகள், ரிசர்வ் வங்கி முத்திரை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கோவில் கலசங்களில் இரிடியம் உள்ளதாக மோசடிகள் நடந்தன. இதில் உண்மை உள்ளதா?" எனக் கேட்ட போது, "தங்கம், செம்பு உள்பட வேறு உலோகங்களுடன் வினைபுரியும்போது துணைப் பொருளாக (Bi Product) இரிடியம் கிடைக்கிறது. மிகப் பழைமையானதாக இருக்கும் உலோகத்தில், இவை இயல்பாகவே உருவாகும்" எனக் கூறுகிறார்.

உதாரணமாக, பழமையான கோவில் கலசத்தில் 2 கிராம் அளவு தங்கம் இருந்தால் அதில் சுமார் 500 மி.கி அளவு இரிடியம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் அவர், "மிகக் குறைவாக கிடைத்தாலும் அதன் விலை என்பது மிக அதிகம். அரசு அனுமதி பெற்ற ஆய்வகங்களுக்கு 1 கிராம் சுமார் 83 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது" என்கிறார்.

தொடர்ந்து பேசும்போது, "இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அலாய் வீல்களைத் தயாரிக்கும்போதும் நகை தயாரிப்பிலும் இரிடியம் உருவாகின்றன. அவ்வாறு கிடைத்தால் சட்டவிரோதமாக யாருக்கும் விற்கக் கூடாது என இந்திய அரசு தடை விதித்துள்ளது" எனக் கூறினார்.

"இரிடியம் 192 வகையை மிகப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்" எனக் கூறும் பார்த்திபன், 2015 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டில் உள்ள டாபாஸ்கோ (Tabasco) மாநிலத்தில் மருத்துவ ஆய்வகத்தில் இருந்து இரிடியத்தை சிலர் சட்டவிரோதமாக திருடிய சம்பவத்தை மேற்கோள் காட்டினார்.

"இரிடியத்தை மூடப்பட்ட கலனில் பாதுகாப்பாக கொண்டு செல்லாததால் நிறைய பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதில் தொடர்புடைய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்தது" எனக் கூறுகிறார் பார்த்திபன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd62l1z4710o

பொள்ளாச்சி: மனநலம் குன்றியவர் கொலையில் என்ன நடந்தது? மனநல காப்பகங்களை கண்காணிப்பது யார்?

3 months 2 weeks ago

மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள்

பட மூலாதாரம்,YUTHIRA WEBSITE

படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில், 'யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்' என்ற பெயரில், மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது.

ஆட்டிசம், டிஸ்லெக்சியா, டவுன்சிண்ட்ரோம் உள்ளிட்ட 5 வகையான மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கான காப்பகம் மற்றும் பயிற்சி மையம் என்ற பெயரில் இதற்கு இணையத்திலும் ஏராளமான புகைப்படங்களுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இணைய விளம்பரத்தில் ஈர்க்கும் மனநல காப்பகம்

நட்சத்திர விடுதிகளுக்கு இணையான வசதிகளுடன் கூடிய கட்டடம், உள்விளையாட்டு அரங்கம், சிறப்புப் பயிற்சி மையங்கள், திறந்தவெளி மைதானங்கள், அதிநவீன பயிற்சி வகுப்பறைகள் என இந்தக் காப்பகத்தின் விளம்பரமே எல்லோரையும் ஈர்ப்பதாக உள்ளது.

இதை மனநல ஆலோசகரான டாக்டர் கவிதா, அவருடைய கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, ஷாஜி ஆகியோர் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்து நடத்தி வந்துள்ளனர். இங்கு மனநல பயிற்சியளிக்கும் பயிற்றுநர்கள், உடல் திறன் தேர்வுக்கான பயிற்சியாளர்கள், காப்பாளர்கள், பராமரிப்பாளர்கள் எனப் பலர் பணியாற்றி வந்தனர்.

இந்தக் காப்பகத்தில், கோவை மாவட்டம் சோமனுார் அருகேயுள்ள கரவளி மாதப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் வருண் காந்த் (வயது 24) உள்பட 25க்கும் மேற்பட்டோர் மனநல சிகிச்சைக்காகத் தங்கியிருந்தனர்.

கடந்த மே 13 ஆம் தேதியன்று, அவர்களை ஆழியாறு அணைக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றபோது, வருண் காந்த் காணாமல் போய்விட்டதாக, ரவிக்குமாருக்கு காப்பகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி ஆழியாறு காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு ரவிக்குமாரும், அவரது மனைவியும் காப்பகத்திற்குச் சென்று பார்த்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்

மனநல காப்பகத்தில் கொலை, யுத்ரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

பட மூலாதாரம்,TNPOLICE

படக்குறிப்பு, கொலை செய்யப்பட்ட வருண் காந்த்

அப்போது அங்கிருந்த சிலர் அளித்த தகவலின்பேரில், மே 13ஆம் தேதி ஆழியாறுக்கு அழைத்துச் சென்றபோது, காப்பகத்தில் இருந்து தங்கள் மகன் வருண் காந்த் வாகனத்தில் ஏறுகின்ற காட்சி, காப்பகத்திலுள்ள சிசிடிவியில் இருக்கிறதா என்று ரவிக்குமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது, அவர் அங்கிருந்து ஏறவில்லை என்பதும், அதற்கு முதல் நாளிலேயே வருண் காந்த்தை காப்பக ஊழியர்கள் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.

அதுகுறித்த விவரங்களை வழங்கிய மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் "கடந்த மே 12ஆம் தேதியன்று, வருண் காந்தை காப்பக ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார். ஆனால் அதை வருணின் பெற்றோர் மற்றும் காவல்துறையிடம் தெரிவிக்காமல், மறைக்க முயன்று, டாக்டர் கவிதாவுக்கு சொந்தமான நடுப்புணி பி.நாகூர் பகுதியிலுள்ள தோட்டத்தில் குழி தோண்டி வருண் காந்தின் உடலைப் புதைத்துள்ளனர்.

அதன் பிறகு மே 13ஆம் தேதியன்று, ஆழியாறுக்கு காப்பகத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் சுற்றுலா அழைத்துச் செல்வது போல அழைத்துச் சென்று, அங்கே வைத்து வருண் காணாமல் போய்விட்டதாகப் புகார் கொடுக்கவும் திட்டமிட்டு, அதையே செய்துள்ளனர்," என்று தெரிவித்தனர்.

தலைமறைவான நிர்வாகிகள்

மனநல காப்பகத்தில் கொலை, யுத்ரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு, வருண் காந்தின் உடல் புதைக்கப்பட்ட இடம்

இந்தக் கொலை தொடர்பாக, முதலில் காப்பக நிர்வாகி கிரி ராம், கேர் டேக்கர் நிதீஷ், பணியாளர்கள் சதீஷ், ஷீலா, ரங்கநாயகி, அறக்கட்டளை நிர்வாகி ஷாஜியின் தந்தை செந்தில் பாபு ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

காப்பக அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் கவிதா, அவருடைய கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, ஷாஜி ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். அவர்களைப் பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஐந்து பேரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக, விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இறுதியில் 5 பேரும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேர் மீதும் கொலை, கொலையை மறைத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மகாலிங்கபுரம் போலீசார் தெரிவித்தனர்.

''தாக்கப்பட்டதில் வருண் காந்த் உயிரிழந்ததும் காவல்துறையிடம் தெரிவித்திருந்தால், அவரைத் தாக்கியவர்கள் மீது மட்டும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அறக்கட்டளை நிர்வாகிகள், காப்பகப் பணியாளர்கள் என எல்லோரும் சேர்ந்து இந்தக் கொலையை மறைப்பதற்கு முயற்சி எடுத்து, இந்த நாடகத்தை அரங்கேற்றியதால்தான் இப்போது 11 பேரையும் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது'' என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரி கைது

மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

பட மூலாதாரம்,TN POLICE

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட காப்பக அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் கவிதா, அவரது கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி மற்றும் ஸ்ரேயா (இடப்புறத்தில் இருந்து)

இந்தச் சம்பவத்தில் கொலையில் தொடர்புடையதாக 11 பேர் கைது செய்யப்பட்டதுடன், எதிர்பாராத திருப்பமாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் பணம் மற்றும் நகையைக் கையாடல் செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

காப்பக அறக்கட்டளை நிர்வாகிகளைக் கைது செய்தபோது, அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 18.5 சவரன் நகை ஆகியவை தனிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

அதை முறைப்படி ஒப்படைக்காமல் தனிப்படையைச் சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும், அவருடன் பணத்தைப் பங்கிட்டுக் கொண்ட மற்றொரு துணை ஆய்வாளரான மகாராஜா இருவரும் கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்த விவாதங்களும் சூடு பிடித்துள்ளன.

மனநல காப்பகங்கள் குறித்து எழும் அச்சம்

மனநலம் குன்றிய இளைஞர் வருண் காந்த் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. கொலை செய்யும் அளவுக்கு அவரைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஊடகங்களில் பல தரப்பினரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி, ''வருண் காந்த் காப்பகத்திலுள்ள மற்றவர்களைவிட, எப்போதுமே விவாதம் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். கடந்த வாரத்தில் ஒரு நாள் அவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை வெளியில் அழைத்துச் சென்றதால், கோபமாகிக் கத்தியுள்ளார். அப்போது காப்பக நிர்வாகியின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார். அதில்தான் மிகவும் கோபமடைந்து, எல்லோரும் சேர்ந்து குரூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்'' என்று விவரித்தார்.

இதற்கு முன்பாக வருண் காந்த், கோவை சரவணம்பட்டியில் உள்ள கெளமாரம் பிரசாந்தி அகாடமி என்ற மனநல காப்பகத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்துள்ளார். யுதிரா மனநல காப்பகத்தின் வசதிகளைப் பார்த்துவிட்டு, கடந்த பிப்ரவரியில்தான் வருண் காந்தை அவருடைய பெற்றோர் இங்கு சேர்த்துள்ளனர்.

ஆனால் அவருக்கு அங்கு பல பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததால், இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் பழைய காப்பகத்தில் சேர்ப்பதற்கு அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகத் தங்கள் விசாரணையில் தெரிய வந்ததாக மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய கெளமாரம் பிரசாந்தி அகாடமி மனநல காப்பகத்தின் பிசியோதெரபிஸ்ட் மாதையன், ''வருண் காந்த் அதிகமாகப் பேசுவார். எங்களிடம் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஒருபோதும் முரட்டுத்தனமாகவோ, தவறாகவோ நடந்து கொண்டதில்லை. பயிற்சி கொடுத்தால் நன்றாகச் செய்வார். எங்களிடம் இருந்தபோது யார் மீதும் எச்சில் துப்பியதில்லை,'' என்றார்.

அரசின் அனுமதி கிடைத்த அதே நாளில் நடந்த கொலை

மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

பட மூலாதாரம்,YUTHIRA WEBSITE

படக்குறிப்பு, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட் முகப்பு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, இந்த மனநலக் காப்பகம், அரசின் நிதியுதவி ஏதுமின்றி சுயநிதியில் நடந்துள்ளது.

ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மாதாந்திர கட்டணம் வசூலித்துள்ளனர். வருணின் பெற்றோர் அவரைப் பார்க்க வரும்போதெல்லாம், உணவு, விளையாட்டுப் பொருள் என எது வாங்கினாலும் அனைவருக்கும் சேர்த்தே வாங்கி வருவார்கள் என்றனர்.

இந்தக் கொலை சம்பவத்துக்குப் பின், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறையினர், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலில், காப்பகத்தை ஆய்வு செய்து, அங்கிருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றியுள்ளனர். தற்போது அந்தக் காப்பகம் மூடப்பட்டுள்ளது. இந்தக் காப்பகம், வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கி வந்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தாலும், கடந்த மாதத்தில்தான் இதற்கு தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் துறையிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளது.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், ''அந்தக் காப்பகத்துக்கு அனுமதி கோரி கடந்த பிப்ரவரியில் விண்ணப்பித்துள்ளனர். அதன்பின் நாங்கள் ஆய்வு செய்தோம். கட்டடம் சகல வசதிகளுடன் இருந்தது. வட்டாட்சியரிடம் கட்டட அனுமதியும், தீயணைப்புத்துறையிடம் தீயணைப்புச் சான்றும் பெற்றிருந்தனர். காப்பகங்களுக்கான விதிமுறைகளின்படி காப்பகப் பராமரிப்பாளர், மருத்துவர், பயிற்றுநர் என எல்லோரும் தகுதியுடன் இருந்ததால் நாங்கள் ஆய்வு செய்து பரிந்துரை செய்தோம். அதற்கான அனுமதி மே 12 அன்றுதான் வந்தது'' என்றார்.

காப்பகத்துக்கு அரசின் முறையான அனுமதி வந்ததாக மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கூறும் அதே நாளில்தான், அந்தக் காப்பகத்தில் வருண் காந்த் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். இந்த மனநல காப்பக்ததில் வருணையும் சேர்த்து 28 பேர் இருந்துள்ளதாகக் கூறிய மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், அவர்களில் 20 பேர், கோடை விடுமுறைக்கு அவர்களின் பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

படக்குறிப்பு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கோயம்புத்தூர்

''கொலை நடந்தபோது, வருணையும் சேர்த்து 8 பேர் மட்டுமே இருந்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு, மீதமுள்ள 7 பேரில் 6 பேருடைய பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவரின் பெற்றோர் கனடாவில் இருந்ததால், அவருடைய உறவினர் வீட்டில் ஒப்படைத்தோம். மீதமிருந்த ஒருவருக்கு பெற்றோர் இல்லை. தாத்தா, பாட்டி வயதானவர்கள் என்பதோடு, அவரின் பாட்டிக்கு இதய அறுவை சிகிச்சை நடக்க இருப்பதால், அவரை மற்றொரு காப்பகத்தில் சேர்த்துள்ளோம்'' என்றார் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கோவை மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 19 காப்பகங்களிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். கடந்த 3 நாட்களில் 17 காப்பகங்களில் ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2 காப்பகங்களில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட வேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் பகிர்ந்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மனநல மீளாய்வுக் குழு என்ற குழு செயல்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான இந்தக் குழுவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் உள்ளனர்.

அந்தக் குழுவின் கூட்டமும் நடத்தப்பட்டு, அவர்களும் காப்பகங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர். தற்போது இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி குமணன் உள்ளார். சேலம் மாவட்டத்துக்கான குழுத் தலைவரான இவர்தான், தற்போது கூடுதலாக கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களையும் பார்த்து வருவது தெரிய வந்துள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்தின் எதிரொலியாக, கோவை மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்களில் ஆய்வுகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநில மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு உரிமைகள் (TN RIGHTS) மாவட்ட திட்ட அலுவலர் சுந்தரேஸ்வரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள TN RIGHTS என்பது, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் துவக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் உலக வங்கியின் நிதி 70 சதவிகிதமும், தமிழக அரசின் 30 சதவிகிதமும் இதற்காகச் செலவிடப்படுவதாகவும் திட்ட அலுவலர் விவரித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், தற்போது தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பும் தொடங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

மனநல காப்பகங்களுக்கான விதிமுறைகளும் கண்காணிப்பும்

மனநல காப்பகத்தில் கொலை, யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட், கோவை, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், வருண் காந்த்

பட மூலாதாரம்,DEPARTMENT OF WELFARE OF DIFFERENTLY ABLED PERSONS

படக்குறிப்பு, கோவை மாவட்ட மனநல மீளாய்வுக் குழுவினரின் ஆலோசனை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை தமிழக முதல்வரின் கீழ் இருந்தாலும், சமூக நலத்துறை அமைச்சரான கீதா ஜீவன்தான் இந்தத் துறை சார்ந்த பல்வேறு கூட்டங்களையும் நடத்தி, கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணித்து வருவதாக அத்துறை அலுவலர்கள் தகவல் பகிர்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்தான் மனநல காப்பகங்களுக்கான அனுமதியை வழங்குகிறது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016இன் படியே (RPWD-The Rights of Persons with Disabilities Act, 2016) மனநல காப்பகங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

"இதற்கு படிவம் வடிவிலான விண்ணப்பமே இத்துறை மூலமாக வழங்கப்படுகிறது. அதில் ஏராளமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்டடம், கழிப்பறை, சாய்வு தளம், மேல்மாடி அனைத்தும் எந்தெந்த விதங்களில் பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டும் என்று விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இதன்படி கட்டடம் அமைந்துள்ளதா என்பதைப் பார்த்து வருவாய் வட்டாட்சியர் கட்டட உரிமம் தர வேண்டும். தீத்தடுப்பு பாதுகாப்பு முறைகளை ஆய்வு செய்து, தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று வழங்க வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டுகள் அந்தக் காப்பகம் இயங்கியிருக்க வேண்டும்," என்று மாற்றுத்திறனாளிகள் துறையினர் விளக்குகின்றனர்.

அவர்களது கூற்றுப்படி இயங்கும் காப்பகங்களில் சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா, மனநலம் குன்றியவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத அலுவலர்கள் முறையான பயிற்சி பெற்றிருக்கிறார்களா, கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, மருத்துவர்கள், மருத்துவ வசதிகள் உள்ளதா, மனநலம் குன்றியவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், அதற்கான கட்டமைப்பு, கண்காணிப்பு கேமரா உள்ளனவா என்பதை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையிலான குழு ஆய்வு செய்து, அந்த விண்ணப்பத்தை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்குப் பரிந்துரைக்கும்.

அந்த ஆணையரகத்தில் மனநல மருத்துவர்கள் உள்ளனர். அவர்களும் பரிசீலித்து பரிந்துரைக்கும் அடிப்படையில் இறுதியாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரால் மனநல காப்பகத்துக்கான அனுமதி வழங்கப்படும்.

இந்த காப்பகங்களைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான மாவட்ட மனநல மீளாய்வுக் குழு செயல்படுகிறது.

"அந்தக் குழு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் காப்பகங்களை ஆய்வு செய்யும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொள்வார். ஏதாவது குறைபாடுகள் இருப்பின், அந்தக் காப்பகத்தின் அனுமதியைப் புதுப்பிப்பது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்," என்று மாற்றுத்திறனாளிகள் துறையினர் விளக்கினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0mrg310p0no

டெல்லியில் இடிக்கப்பட்ட 'மதராஸி கேம்ப்' - 4 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை என்ன?

3 months 2 weeks ago

மதராஸி கேம்ப், மதராஸி முகாம், ஜங்பூர், டெல்லி, தமிழர்கள், டெல்லி தமிழ்ச்சங்கம் , புலம்பெயர் தமிழர்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

"என்னை டெல்லி அழைத்து வந்த கணவர் இப்போது இல்லை. மகனும் இறந்து விட்டார். இப்போது வீட்டை இடித்து விட்டார்கள். நான் எங்கே செல்வேன்?" என்கிறார் கண்ணம்மா. கடலூர் மாவட்டம் விருத்தசாலத்தைச் சேர்ந்த 70 வயதான கண்ணம்மா அவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்ததால் அவருடன் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து குடியேறினார். அன்று முதல் டெல்லியே அவரது நிரந்த முகவரி ஆனது. சொந்த ஊரில் தனக்கென யாரும் இல்லை எனக் கூறும் கண்ணம்மா, தன்னால் அரசு கூறும் புதிய இடத்தில் வாழ முடியுமா என கவலையுடன் யோசிக்கிறார்.

புதுடெல்லியில் உள்ள ஜங்புராவில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்பில் சுமார் 370 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டன. நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வீடுகள் இடிக்கப்பட்டன. இங்கு வசித்த சுமார் 189 குடும்பங்களுக்கு மட்டுமே புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய குடும்பங்கள் வீடுகளைப் பெற தகுதி பெறவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் புதிய இடம் தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

புதுடெல்லியில் உள்ள ஜங்புரா பகுதிக்கு நாங்கள் சென்ற போது, காலை 8 மணியளவில் வீடுகளை இடிக்கும் பணியை தெற்கு டெல்லி மாவட்ட நிர்வாகம் தொடங்கியிருந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. பொக்லைன் எந்திரங்கள் வீடுகளை இடிக்கும் முன்னதாக போது வீடுகளிலிருந்து மின்சார மீட்டர்கள், போன்றவற்றை மின்துறை பணியாளர்கள் அகற்றிவிட்டு வெளியேறினர். பொதுமக்கள் யாரும் இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்குள் நுழைந்து விடாதவாறு போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

கேள்விக்குறியாகும் கல்வி

மதராஸி கேம்ப், மதராஸி முகாம், ஜங்பூர், டெல்லி, தமிழர்கள், டெல்லி தமிழ்ச்சங்கம் , புலம்பெயர் தமிழர்கள்

படக்குறிப்பு, மதராசி கேம்ப் இடிக்கப்பட்டு தங்களின் வீடுகள் மாற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த ரந்தன் டெல்லி ஜங்புராவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருகில் உள்ள நான்கு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் ரந்தன் 10ம் வகுப்பு முடித்திருக்கிறார். இவரது தலைமுறையில் முதன்முறையாக தனது குழந்தைகளை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறும் ரந்தன் குமார், தற்போது மதராசி கேம்ப் இடிக்கப்பட்டு தங்களின் வீடுகள் மாற்றப்பட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என அச்சப்படுகிறார். ஆனால் தமது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளாக தமது குழந்தைகளை உருவாக்குவேன் என உறுதியுடன் தெரிவித்தார் ரந்தன்.

"எனது மகன் 7வது வகுப்பு படிக்கிறார், மகள் 3 ம் வகுப்பு படிக்கிறார். இருவரும் இங்கு லோதிபார்க் பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளியில் படிக்கின்றனர். ஆனால் இங்கிருந்து புதிதாக வீடுகள் வழங்கப்படும் நரேலா பகுதிக்கு சென்றால் அங்கிருந்து பள்ளிக்கு வரவே 40 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியது வரும்" என்கிறார் ஜங்புராவில் வசித்து வரும் ரந்தன். இவரது மகன் "ஞாலம் கருதினுங் கைகூடுங்" என்ற திருக்குறளை மனப்பாடமாக கூறினார்.

"வருவாய் ஆதாரம் பறிபோகும்"

மதராஸி கேம்ப், மதராஸி முகாம், ஜங்பூர், டெல்லி, தமிழர்கள், டெல்லி தமிழ்ச்சங்கம் , புலம்பெயர் தமிழர்கள்

படக்குறிப்பு, "புதிய வசிப்பிடத்தினருகே தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை"

ஜங்புரா மதராசி கேம்ப்பில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலானோர் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று பணிகளைச் செய்கின்றனர். அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கார்களை கழுவும் பணிக்குச் செல்கின்றனர். கார் ஒன்றுக்கு மாதம் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைப்பதாகவும் இதன் மூலம் மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடிவதாக சிவா என்பவர் குறிப்பிடுகிறார். இதுவே இருப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் தற்போது குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நரேலா பகுதிக்கு சென்றால் இந்த வாழ்வாதாரமே இல்லாது போய்விடும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதே போன்று பெண்களும் வீட்டு வேலை செய்பவர்களாக உள்ளனர். சுற்றுவட்டார குடியிருப்புகளிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றால் வாழ்வாதாரம் எப்படி கிடைக்கும்? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பிருந்தா என்ற பெண், தனது தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது போதுமான நேரம் கொடுக்கப்படாமல் தங்களின் வீடுகள் இடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

வீடுகளை இடிக்கும் பணிக்கு நடுவே பெண்களில் சிலர் தடுப்புகளை மீறி தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய முயன்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

"ஆக்கிரமிப்பு எனில் வீடு கட்ட அனுமதித்தது ஏன்?"

மதராஸி கேம்ப், மதராஸி முகாம், ஜங்பூர், டெல்லி, தமிழர்கள், டெல்லி தமிழ்ச்சங்கம் , புலம்பெயர் தமிழர்கள்

படக்குறிப்பு, குடிசை அகற்றம் என கூறப்பட்டாலும் பெரும்பாலும் கான்கிரீட் வீடுகளே உள்ளன

ஜங்புராவில் மதராசி கேம்ப் இடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுவது, இதன் அருகில் ஓடக் கூடிய பாராபுலா ஓடை தான். கடந்த 2024ம் ஆண்டு பருவமழையின் போது இந்த ஓடை நிறைந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆக்கிரமிப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஓடையின் குறுக்கே உள்ள புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்தே தற்போது ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்று வருகிறது.

ஆனால் கடந்த காலத்தில் அதிகாரிகளின் அலட்சியம் இதில் இருப்பதாக அங்கு வசிப்பவர்கள் குற்றம் சாட்டினர். பிபிசி தமிழிடம் பேசிய சரவணன் என்ற ஜங்புராவாழ் தமிழர், கடந்த ஆண்டு தான் 3 முதல் 4 லட்ச ரூபாய் செலவிட்டு தனது வீட்டைக் கட்டியதாக கூறுகிறார். குடிசை அகற்றம் என்று தான் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவர்களின் கூற்றுக்குமாறாக இங்கு அனைத்தும் காங்கிரீட் வீடுகளாக உள்ளன எனச் சுட்டிக்காட்டும் அவர் வீடு கட்டுவதற்காக தானே அதிகாரிகளுக்கு சுமார் 20,000 ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாடு அரசின் வாக்குறுதி என்ன?

மதராஸி கேம்ப், மதராஸி முகாம், ஜங்பூர், டெல்லி, தமிழர்கள், டெல்லி தமிழ்ச்சங்கம் , புலம்பெயர் தமிழர்கள்

படக்குறிப்பு,போராட்டம் நடத்த முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்

"குடிசை எங்கோ, அங்கேயே வீடு" (aha Jhuggi Waha Makaan) என்ற வாக்குறுதியின் பேரில் டெல்லியில் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்ததாகக் கூறும் மக்கள், தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மதராசி கேம்ப் எனக் குறிப்பிடப்படும் பகுதியிலிருந்து மேலும் 50 மீட்டர் வரையிலும், புறம் போக்கு நிலத்தில் தான் வீடு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வசிக்கும் பகுதியைத் தாண்டி ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கவில்லை என்பது அங்குவசிக்கும் மக்களின் புகாராக உள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய தெற்கு டெல்லி மாவட்ட மாஜிஸ்திரேட் (ஆட்சியர்) அனில் பங்கா," நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது, நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே அனைத்துப் பணிகளும் நடைபெறுகிறது" என்று கூறினார்.

"பாராபுலா ஓடை ஆக்கிரமிப்புகள் காரணமாக மிகவும் குறுகிவிட்டது. கனழை பெய்யும் போது ஆக்கிரமிப்புகள் காரணமாக குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கொள்கிறது. இதனால் இங்கு வீடுகள் இடிக்கப்பட்டு , நரேலா பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.

"சட்ட விரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு, 370 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 189 குடும்பங்கள் மறுகுடியேற்றத்திக்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 181 குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படவில்லை" எனக் கூறினார்.

டெல்லி முதலமைச்சரான ரேகா குப்தா, தாம் பொறுப்பேற்ற பின்னர் குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் என ஏஎன்ஐ செய்தி முகமை குறிப்பிடுகிறது. குடிசை வாழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் யமுனை நதியும் பாதுகாக்கப்பட வேண்டும் என ரேகா குப்தா அதில் கூறியுள்ளார்.

இதனிடையே தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் டெல்லி "மதராசி கேம்ப்" குடியிருப்புவாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தமிழ்நாடு திரும்பி வர விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனவும் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9q0e881lyvo

Checked
Thu, 09/18/2025 - 07:53
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed