தமிழகச் செய்திகள்

மாநிலங்களவை செல்லும் பெண் கவிஞர் : யார் இந்த சல்மா?

3 months 2 weeks ago

மாநிலங்களவை செல்லும் பெண் கவிஞர் : யார் இந்த சல்மா?

30 May 2025, 7:00 AM

who is Salma and what her background?

திமுக சார்பில் மாநிலங்களவைக்குச் செல்லவிருப்பவர்கள் பட்டியலில் ரொக்கையா மாலிக் என்கிற சல்மா என்னும் பெயரைப் பார்த்ததும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இவர் கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி. ஆனால் ஆரவாரமான அரசியலுக்கோ பரபரப்பான எழுத்துக்கோ இவரிடம் இடம் இல்லை. அதனாலேயே பலருக்கும் இவரைத் தெரியாது. ஆனால், இவரைத் தெரிந்தவர்களுக்கு இவர் மீது மரியாதை அதிகம். காரணம், அவருடைய நேர்மை, உழைப்பு, அன்பு, எழுத்துத் திறமை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இலக்கிய உலகில் அழுத்தமான தடம் பதித்துவருபவர் சல்மா.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர் தொண்ணூறுகளின் மத்தியில் எழுதத் தொடங்கினார். சிறிய ஊர்களையும் கிராமங்களையும் சேர்ந்த பலர் எழுத்தாளர்களாகியிருக்கிறார்கள். இவர் மட்டும் என்ன சிறப்பு என்ற கேள்வி எழலாம்.

சல்மா எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை. படிக்கவைக்க அவர் குடும்பத்துக்குப் பண வசதி இல்லையா? அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் பிறந்த ஊரில், அவர் சார்ந்த தமிழ் இஸ்லாமியச் சமூகத்தில் பெண்கள் படிப்பது என்பது இயல்பான ஒன்றல்ல. பெண்கள் வயதுக்கு வரும்வரை படிக்கவைப்பார்கள். அதன் பிறகு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு படிப்பது என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத சங்கதிகள். ரொக்கையா பேகம் என்னும் இயற்பெயர் கொண்ட சல்மாவுக்கும் 17 வயதிலேயே திருமணமாகிவிட்டது. ஆனால் அதுவரை படித்திருந்தாலும் குறைந்தது 10ஆம் வகுப்பு தேறியிருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமாதான் சல்மாவின் கல்வியை முடக்கிப்போட்டது என்று சொன்னால் நம்புவீர்களா?

8ஆம் வகுப்பு படிக்கும்போது சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பள்ளித் தோழிகளுடன் உள்ளூர்த் திரையரங்கிற்குச் சென்றிருக்கிறார். அவர் படம் பார்த்த விஷயம் குடும்பத்திற்கும் ஊருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் முகம் சிவந்த அவர் குடும்பம் பள்ளிக்கூடத்திற்கே போக வேண்டாம் என்று சொல்லிவிட்டது.

unnamed-9-888x1024.jpg

இலக்கிய வாசனை

என்றாலும் சல்மா தளரவில்லை. தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் அப்துல் ஹமீதின் (கவிஞர் மனுஷ்யபுத்திரன்) உதவியால் நிறைய புத்தகங்களைப் படித்தார். அந்த நூல்கள் அவருடைய சிந்தனையின் வாசல்களை அகலமாகத் திறந்தன. உலகை அறிய வழி வகுத்தன. இந்த உலகில் தான் யார், தன்னுடைய இடம் எது, ஏன் சிலருக்கு மட்டும் சில விஷயங்கள் கிடைப்பதில்லை என்பது குறித்த கேள்விகள் முளைத்தன. இந்தக் கேள்விகளை முன்வைத்து அவர் எழுதத் தொடங்கினார். இப்படித்தான் ராஜாத்தி என்னும் சிறுமி, சல்மா என்னும் கவிஞராகப் பரிணமித்தார்.

சல்மாவின் படைப்புலகம்

சல்மாவின் கவிதைகள் பெண்களின் அக உலகையும் தனிமையையும் பாடுபொருளாகக் கொண்டவை. பெண்கள்மீதான அடக்குமுறைகள் எவ்வளவு நுட்பமான தளங்களில் செயலாற்றுகின்றன என்பதை அவர் கவிதைகள் கூர்மையாகவும் ஆரவாரமற்ற தொனியிலும் கூறுகின்றன. அவருடைய சமூகமும் குடும்பமும் அவர் எழுதிய இந்தக் கவிதைகளை ரசிக்கவில்லை. என்றாலும் அவர் எழுத்தின் மூலம்தான் விடுதலை என்பதை உணர்ந்தவராகத் தொடர்ந்து எழுதிவந்தார். பிறரது கட்டுப்பாடுகள் தன் எழுத்தைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த உறுதியே இலக்கிய உலகில் இவருக்கென்று ஓர் இடத்தை உறுதிசெய்தது.

1990களில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை அதிகம் பங்குபெறாமல் இருந்த பிரிவுகளிலிருந்து பலரும் எழுதத் தொடங்கினார்கள். தலித்துகள், இஸ்லாமியர்கள், ஒடுக்கப்பட்ட இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். தமிழ் இலக்கியத்திற்கு இது புது வரவாக இருந்தது. இந்தப் புதிய எழுத்துக்களில் சல்மாவின் பங்களிப்பு கணிசமானது. பெண்களின் அக உலகையும் வெளியில் தெரியாத விதங்களில் அவர்கள் அடக்கப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கான புழங்குவெளி குறுக்கப்படுவதையும் சல்மா வலுவான கவிதை மொழியில் வெளிப்படுத்தினார். பல பெண்களுக்கு உத்வேகமூட்டும் கவிதைகளாக அவை அமைந்தன. தமிழில் பெண் கவிதைகளின் புதிய அலையை உருவாக்கியதில் சல்மாவின் கவிதைகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமியின் அறிமுகம் 1995இல் ஏற்பட்டது. சுந்தர ராமசாமியின் வழிகாட்டுதலும் அவர் தந்த ஊக்கமும் சல்மாவின் இலக்கியப் பயணத்திற்குப் பெரிதும் துணைபுரிந்தன. சல்மாவின் நூல்களை வெளியிட்டுவரும் காலச்சுவடு பதிப்பகமும் அவருடைய எழுத்து தமிழகத்திலும் அதைத் தாண்டியும் பலரைச் சென்றடைவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது. இரண்டாம் சாமங்களின் கதை என்னும் நாவலை 2003இல் எழுதினார். தமிழ்நாட்டின் சிறு நகரங்களைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்துப் பெண்களின் அக உலகைச் சித்தரித்த அந்த நாவல், தமிழ் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் ஆங்கில மொழியாக்கம் ஆசியப் படைப்புகளுக்கான புக்கர் விருதின் தேர்வுப் பட்டியலில் இடம்
பெற்ற முதல் தமிழ்ப் படைப்பு. இதையடுத்து மனாமியங்கள், அடைக்கும் தாழ் என இன்றைய சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய நாவல்களையும் முஸ்லிம் பெண்களின் இன்றைய நிலையை உணர்த்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.

image-2220-1024x570.png

உலகமே வீடு

சல்மாவின் படைப்புகள் ஆங்கிலம் மலையாளம் ஆங்கிலம், மராத்தி, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. சிற்றூரில் பிறந்து பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத நிலையில் வாழ்ந்துவந்த சல்மா, தன் எழுத்தின் மூலம் உலகம் சுற்றும் படைப்பாளியாக மாறினார். வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து உலகமே என் வீடு என்ற நிலைக்கு அவர் வாழ்க்கை விரிவடைந்தது. 2002இல் இலங்கையில் நடந்த சர்வதேசப் பெண்ணுரிமை மாநாட்டில் பங்குகொள்ள அழைக்கப்பட்டார். 2006இல் ஃப்ராங்க்பர்ட் புத்தக விழா, 2009இல் லண்டன் புத்தகக் கண்காட்சி, 2010இல் பெய்ஜிங் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றார். 2007இல் சல்மாவின் படைப்புகளை முன்வைத்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு நடைபெற்றது. 2007இல் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FETNA) தமிழ் விழா, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சிக்காகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழாவில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார்.

unnamed-3.jpg

அரசியல் பணிகள்

எழுத்துப் பயணத்துடன் அரசியலிலும் ஈடுபட்ட சல்மா, தன் கணவர் அப்துல் மாலிக் சார்ந்திருந்த திமுகவில் இணைந்து தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2004இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பொன்னாம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சி பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. சல்மா அதில் போட்டியிட்டுத் தேர்தலில்
வென்றார். தொகுதியில் சிறப்பான பணிகளைச் செய்ததால் பரவலாக அவர் கவனிக்கப்பட்டார். 2006இல் மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார். சமூகநல வாரியத்தில் பல நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.
திருச்சி நகரில் பிச்சை எடுப்பவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தைத் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைத்தார். கிராமத் தத்தெடுப்புத் திட்டம் மூலம் கிராமத்தில் பெண் முன்னேற்றம், அனைவருக்குமான கல்வி, போன்ற திட்டங்களை முன்னெடுத்தார். திருச்சி மாவட்டத்தில் திருநங்கையருக்கான ஆலோசனை மையங்கள், ஆதரவற்ற பெண்களுக்கான கணினி மையங்கள்,மாணவர்களுக்கான ஆலோசனை மையங்களை அவரது தலைமையில் சமூகநல வாரியம் ஏற்படுத்தியது. 2018ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் ‘தந்தை பெரியார் விருது’ சல்மாவுக்கு வழங்கப்பட்டது. 

image-2221-1024x576.png

இவருடைய அசாத்தியமான பயணத்தைச் சித்தரிக்கும் விதமாக ‘சல்மா’ என்னும் ஆவணப்படம் 2013இல் எடுக்கப்பட்டது. இது சல்மாவின் தன்வரலாற்றையும் அவர் சந்தித்த ஒடுக்குமுறைகளின் பின்னால் உள்ள சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் சிக்கல்களையும் பற்றியது. இப்படத்தை கிம் லோங்னோரோ (Kim Longinotto) இயக்கினார். இப்படம் சண்டான்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டு, பின்னர் பல நாட்டு விழாக்களிலும் நிகழ்வுகளில் திரையிடப்பட்டது.

தன் சமூகம் தனக்கு முன் கட்டியெழுப்பியிருந்த தடைகளையும், அதனால் விளைந்த பிரச்சனைகளையும் அவர் தாண்டி வந்த விதம் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பெரும் தன்னம்பிகையை அளிக்கின்றன. அரசியலை அதிகாரத்துக்கான வாகனமாக எண்ணாமல் மக்கள் தொண்டுக்கான வாய்ப்பாகப் பார்த்து இவர் செய்துவந்த சேவைகளை அங்கீகரிக்கும் விதமாகவே திமுக தலைமை அவரை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியிருக்கிறது.

image-2219-1024x574.png

சல்மாவின் நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

🔷ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
🔷பச்சை தேவதை
🔷 தானுமானவள்

நாவல்கள்

🔷இரண்டாம் ஜாமங்களின் கதை
🔷மனாமியங்கள்
🔷அடைக்கும் தாழ்

சிறுகதைத் தொகுப்புகள்

🔷 சாபம்
🔷பால்யம்

அபுனைவு

🔷 கனவு வெளிப் பயணம்

தொகுப்பு: மின்னம்பலம் ஆசிரியர் குழு

https://minnambalam.com/who-is-salma-and-what-her-background/#google_vignette

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!

3 months 2 weeks ago

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!

Yogeshwaran MoorthiUpdated: Thursday, May 29, 2025, 12:40 [IST]

PMK Founder Ramadoss Alleges Anbumani s Suicide Threat to Push for BJP Alliance

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக - பாஜக கூட்டணி அமைந்தது. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் அன்புமணி மனைவி செளமியா அன்புமணி மட்டும் கடுமையான சவால் அளித்து, கடைசியில் தோல்வியை அடைந்தார்.

ராமதாஸ் பேட்டி

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவை அன்புமணியே எடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், தகப்பனிடம் தோற்பது மானக்கேடு அல்ல.

அதிமுக கூட்டணி

அன்புமணி கூசாமல் பொய் பேசுவார்.. கூட்டத்திற்கு நிர்வாகிகள் வருவதை அன்புமணி தடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றி பேசினோம். நான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி, எடப்பாடி பழனிசாமியுடன் பேசுமாறும் அறிவுறுத்தினேன். அதன்பின் அவரும் பேசினார். எடப்பாடி பழனிசாமியும் சிவி சண்முகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

கதறிய அன்புமணி

ஆனால் திடீரென ஒருநாள் பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால், குறைந்தது 3 தொகுதிகளில் வென்றிருப்போம். அவர்களும் 6 முதல் 7 தொகுதிகளில் வென்றிருப்பார்கள். அதிமுக - பாமக இயல்பான கூட்டணி. ஆனால் எனது ஒரு காலினை அன்புமணி பிடித்து கொண்டார்.

தற்கொலை மிரட்டல்

இன்னொரு காலினை அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி பிடித்து கொண்டு கதறினார். எதற்கு அழுதார்கள் என்றால், பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின், அன்புமணி வாயில் இருந்து, இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும்.

பாரத் மாதா கி ஜே

பாஜக கூட்டணிக்காக ஏற்பாடுகளை செளமியா செய்துவிட்டார். அண்ணாமலையுடன் அவர்களே பேசிவிட்டார்கள். அடுத்த நாள் காலையிலேயே பாரத் மாதா கி ஜே என்று ஒரு கோஷம் கேட்கிறது. காலையிலேயே அண்ணாமலையும் வந்துவிட்டார். எனக்கு தெரியாமலேயே இது நடந்தது. இப்படிதான் கூட்டணி அமைந்தது என்று தெரிவித்தார்.

https://tamil.oneindia.com/news/villupuram/pmk-founder-ramadoss-alleges-anbumani-s-suicide-threat-to-push-for-bjp-alliance-708047.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

பிகு

அரசவை புலவர் பாலபத்ர ஓணாண்டி க்கு யாராவது @ போட்டு விடுங்கப்பா.

பெரிய மாங்கா- சின்ன மாங்கா மோதலுக்கு பிஜேபி காரணம் அல்ல, அது குடும்ப உட்பூசல், நான் “பிஜேபி-நோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறேன்” என சொன்னவர்.

விஜய்யின் மர்ம வியூகம்! திமுக-அதிமுகவின் கோட்டை உடைக்கப்படுமா?

3 months 2 weeks ago

Screenshot-2025-05-29-162620.png?resize=

விஜய்யின் மர்ம வியூகம்! திமுக-அதிமுகவின் கோட்டை உடைக்கப்படுமா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (டிவிகே), பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசியல் கட்சியாக, 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பொதுத் தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் (ECI) வகுக்கப்பட்ட விதிகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், கிரிக்கெட் மட்டை, வைரம், ஹாக்கி ஸ்டிக் மற்றும் பந்து, மைக்ரோஃபோன் (மைக்), மோதிரம் மற்றும் விசில் போன்ற சின்னங்கள் சாத்தியமான தேர்வுகளில் முதலிடத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இவற்றுள், கிரிக்கெட் மட்டை, மைக், வைரம் மற்றும் மோதிரம் ஆகியவை இதுவரை மிகவும் விரும்பப்படும் தேர்வுகளாகத் தோன்றுகின்றன. இது ஒருபுறம் ஒரு புதிய கட்சிக்கு ஒரு அங்கீகாரமாகத் தோன்றினாலும், மறுபுறம், தமிழகத்தின் ஆளும் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, புதிய கட்சிகள் எழுச்சி பெறுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் விதிகளைப் பயன்படுத்துகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. ஒரு பொதுச் சின்னம் பெறுவதற்கான இந்த போராட்டம், தமிழக அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ள அதிகாரப் போட்டியின் பிரதிபலிப்பாகும்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு (மே 6, 2026) ஆறு மாதங்களுக்கு முன்னதாக, நவம்பர் 5 அன்று சின்னத்திற்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கும். டிவிகே வட்டாரங்கள், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், சமீபத்தில் மூத்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, தேர்தல் ஆணையத்தின் 190 இலவச சின்னங்கள் பட்டியலில் இருந்து பரிந்துரைகளை அழைத்ததாகத் தெரிவித்தனர்.

நடிகர் விஜய் தனது திரைப்படப் புகழ் மூலம் அரசியல் களத்தில் நுழைய முயல்கிறார். ஆனால், ஒரு பொதுச் சின்னத்தைப் பெறுவதற்கான போராட்டம், அவர் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாகும். ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுகவின் ஆதிக்கம் உள்ள நிலையில், ஒரு புதிய கட்சிக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட சின்னம் கிடைப்பது மிகவும் முக்கியம். இது ஒருபுறம் ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதி என்றாலும், மறுபுறம், பெரிய கட்சிகள் புதிய கட்சிகள் தங்கள் இடத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தடையாக உள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலைமையுடன் செயல்படுகிறதா அல்லது ஆளும் கட்சிகளின் செல்வாக்கிற்கு உட்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தச் சின்னம் குறித்த போராட்டம், தமிழக அரசியலில் ஒரு பெரிய மோதலைத் தூண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

https://athavannews.com/2025/1433810

'ரூ.15,000 கடனுக்காக வாத்துப் பண்ணையில் கொத்தடிமை' - 9 வயது சிறுவனுக்கு காஞ்சிபுரத்தில் நேர்ந்த கொடுமை

3 months 2 weeks ago

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 29 மே 2025

"என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக்கூடாது" எனக் கலங்கியவாறு பேசுகிறார், ஆந்திர மாநிலம், கூடூரைச் சேர்ந்த அங்கம்மாள்.

மே 19ஆம் தேதியன்று சத்தியவேடு காவல் நிலைத்தில் 9 வயதான தனது மகனை மீட்டுத் தருமாறு அங்கம்மாள் புகார் கொடுத்திருந்தார். அடுத்த 3 நாள்களில் காஞ்சிபுரத்தில் உள்ள பாலாறு படுகையில் அவரது மகன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில், சிறுவனை குழந்தைத் தொழிலாளராகப் பணியமர்த்திய முத்து-தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் கூறுகிறார்.

குழந்தைத் தொழிலாளராக வைக்கப்பட்ட ஒன்பது சிறுவன் இறந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவிருப்பதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஒன்பது சிறுவன் கொத்தடிமையாக வைக்கப்பட்டாரா? சிறுவன் மரணத்தின் பின்னணியில் என்ன நடந்தது?

15 ஆயிரம் கடனுக்கு பண்ணை வேலை

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், கூடூரில் உள்ள சாவடபலேம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான அங்கம்மாள், சத்தியவேடு காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது கணவர் மற்றும் குழந்தைகள் சத்தியவேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் பண்ணையில் வேலை செய்து வந்தோம்."

"ஒரு வருடத்துக்கு முன்பு நெலட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் எனது கணவருக்குக் கொடுத்த கடன் தொகையைக் கேட்டார். இதை அறிந்து எனக்கு 15 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து முத்து உதவி செய்தார். இதற்கு ஈடாகத் தனது வாத்துப் பண்ணையில் எங்களைக் குடும்பத்துடன் வேலை பார்க்க வைத்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

காலை முதல் இரவு வரை அதிக வேலைகள் கொடுக்கப்பட்டதாகப் புகார் மனுவில் கூறியுள்ள அங்கம்மாள், "எனக்கும் என் குழந்தைகளுக்கும் அதிக வேலைகளைக் கொடுத்தனர். ஆனால், சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

இதற்கிடையில், தனது கணவர் செஞ்சய்யா இறந்துவிடவே அதற்கான சடங்குகளைச் செய்துவிட்டு பணத்தைத் திரட்டி அனுப்புவதாக முத்துவிடம் அங்கம்மாள் கூறியுள்ளார்.

ஆனால், "42 ஆயிரம் ரூபாய் வரை பணம் தர வேண்டும். ஒன்று பணம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் ஒன்பது வயது மகனை பணத்துக்கு உத்தரவாதமாக வாத்துப் பண்ணையில் விட்டுச் செல்ல வேண்டும்" என முத்து கூறியதாக புகார் மனுவில் அங்கம்மாள் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது கடைசி மகனை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு கூடூர் வந்ததாகக் கூறுகிறார், அங்கம்மாள்.

பிபிசி தமிழிடம் பேசிய அங்கம்மாள், "10 மாதங்களுக்குப் பிறகு (மே 15) பணத்தைத் திரட்டிக் கொண்டு மகனை மீட்கப் போனேன். அப்போது, என் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, '70 ஆயிரம் தர வேண்டும். அப்படியே பணம் கொடுத்தாலும் உன் மகனை அனுப்ப மாட்டேன்' என முத்துவும் அவரது மனைவி தனபாக்கியமும் மிரட்டினர்" என்றார்.

வாத்து பண்ணையில் என்ன நடந்தது?

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,வாத்துப் பண்ணை உரிமையாளர் முத்து

"வாத்துப் பண்ணையில் என் மகன்கள் மிகவும் சிரமப்பட்டனர். வாத்துகளை வயலுக்குள் அழைத்துச் செல்லும்போது சேற்றில் நடந்து காலில் காயங்கள் ஏற்படும். வேலை செய்யாவிட்டால், கடுமையாகத் திட்டி அடிக்க வருவார்கள்" என்கிறார் அங்கம்மாள்.

தொடர்ந்து பேசிய அவர், "கையில் பணம் தர மாட்டார்கள். அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருள்களை வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் குறைவாகத்தான் தருவார்கள். ஒரு கட்டத்தில் வெளியில் சென்று வேலை பார்த்து உங்கள் பணத்தைக் கொடுத்து விடுகிறோம் எனக் கூறியும் அவர்கள் விடவில்லை" என்கிறார்.

தனது மகனை மீட்டுத் தருமாறு சத்தியவேடு காவல் நிலையம் சென்ற அங்கம்மாள் அங்கு தனக்குத் தொடக்கத்தில் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்.

அதுகுறித்துப் பேசியபோது, "அங்கிருந்த போலீசார், இரண்டு நாள் அவகாசம் கேட்டனர். அங்கு சரியான பதில் கிடைக்காததால் கூடூர் எம்.எல்.ஏ பாசம் சுனில்குமார் மூலமாக உதவி கேட்டேன். அவர் காவல்துறைக்கு ஃபோன் செய்து பேசியதால் முத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்" எனக் கூறுகிறார் அவர்.

"மே 21 அன்று முத்து-தனபாக்கியம், அவர்களது மகன் ராஜசேகர் ஆகியோரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ஏப்ரல் 12 அன்று திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறினர்" என்று சத்தியவேடு முதன்மை நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலாற்று படுகையில் சிறுவன் சடலம்

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

ஆந்திராவின் சத்தியவேடு கிராமத்தில் இருந்து, தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள தங்கள் உறவினரின் வீட்டுக்கு வாத்துகளை மேய்ப்பதற்காக சிறுவனை கூட்டிச் சென்றதாகவும் முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் இறப்பு குறித்து பெற்றோருக்குக் கூறாமல், காஞ்சிபுரம் மாவட்டம், புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்துக்கு அருகில் உள்ள பாலாறு படுகையில் சிறுவனை அடக்கம் செய்தது விசாரணையின்போது தெரிய வந்ததாக காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதிச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், யாருக்கும் தெரியாமல் சடலத்தைப் புதைத்தது உள்படப் பல்வேறு பிரிவுகளில் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றுப் படுகையில் சிறுவனின் சடலத்தை தாசில்தார் முன்னிலையில் காவல் துறை தோண்டியெடுத்தது. அப்போது ஆந்திரா, தமிழ்நாடு என இரு மாநில காவல் துறையும் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.

புத்தூர் டி.எஸ்.பி கூறியது என்ன?

ஆந்திர மாநிலம் புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியபோது, "சிறுவனை கொடிய ஆயுதம் கொண்டு தலையில் தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உடற்கூராய்வு முடிவு கூறுகிறது. இதனால் கைதான மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மே 19 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மே 21 அன்று இந்த வழக்கில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் கைது செய்யப்பட்டனர். உடற்கூராய்வு முடிவுகளுக்குப் பிறகு இது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார்

அதன்படி, 103(1) BNS (Punishment for murder) எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989, சிறார் நீதிச் சட்டம் 2015, குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் 1986 உள்படப் பல்வேறு பிரிவுகளில் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனை ஆயுதங்களைக் கொண்டு தலையில் தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளதால், அதற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.

'கைது செய்வதில் சிரமம் ஏற்படவில்லை'

"முதலில் மஞ்சள் காமாலை ஏற்பட்டு சிறுவன் இறந்துவிட்டதாக முத்து கூறியுள்ளார். ஆனால் கடுமையான சித்திரவதைக்குப் பிறகே சிறுவன் இறந்துள்ளார். தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் ஆயுதத்தால் கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்" எனக் கூறுகிறார், வழக்கை கவனித்து வரும் குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர்.

"சிறுவன் காணாமல் போவதற்குச் சில நாள்களுக்கு முன்பு அவனிடம் அங்கம்மாள் பேசியுள்ளார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என சிறுவன் கூறவில்லை. கடுமையான தாக்குதலுக்குப் பிறகே அவர் இறந்துள்ளார். அதைத்தான் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.

"இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைது செய்வதில் எந்தச் சிரமங்களும் ஏற்படவில்லை" எனக் கூறுகிறார், புத்தூர் டி.எஸ்.பி ரவிக்குமார். "அவர்கள் மூன்று பேர் மீதும் சந்தேகம் இருப்பதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அவர்களைக் கைது செய்து விசாரிப்பதில் எந்தச் சிரமங்களும் ஏற்படவில்லை" எனத் தெரிவித்தார்.

கூடூர் பகுதியில் ஏனாதி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் அதிகம் வசிப்பதாகக் கூறிய ரவிக்குமார், "அங்கம்மாள் குடும்பம், மிக ஏழ்மையான நிலையில் உள்ளது. விவசாயப் பணிகள், வாத்து மேய்த்தல், மாடு மேய்த்தல் பணிகளில் மாத சம்பளத்துக்குத் தங்கி வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்க வேண்டியதில்லை," என்றும் குறிப்பிட்டார்.

"முத்துவின் வாத்துப் பண்ணையில் எங்களைப் போல குடும்பமாக யாரும் வேலை செய்யவில்லை. நாங்கள் சென்றபோது, ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த 12 வயது சிறுவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் அவரது பெற்றோர் பணம் கொடுத்து கூட்டிச் சென்றனர்" எனக் கூறுகிறார் அங்கம்மாள்.

'அந்த வலி இன்னொருவருக்கு வரக் கூடாது'

இந்த வழக்கில் கூடூரை சேர்ந்த சிவா ரெட்டி என்பவர், அங்கம்மாள் குடும்பத்தினருக்கு உதவிகளைச் செய்துள்ளார்.

"அவரது எலுமிச்சம் பழத் தோட்டத்தில் வேலை பார்க்கிறேன். பத்தாவது படிக்க வேண்டிய மகன், இடையில் வாத்துப் பண்ணையில் வேலை பார்த்ததால் படிப்பு பாதியில் நின்றுவிட்டது. விரைவில், அவர் தனது படிப்பைத் தொடரவுள்ளார். மகள், ஏழாவது படித்து வருகிறார்" எனக் கூறுகிறார் அங்கம்மாள்.

இதற்கான செலவை சிவா ரெட்டி பார்த்து வருவதாகவும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைதாவதற்கு அவர் பல வகைகளில் உதவி செய்ததாகவும் அங்கம்மாள் குறிப்பிட்டார்.

"என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் பல மாதங்களாக ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக் கூடாது" எனவும் வேதனையுடன் கூறினார்.

'இறந்தால் மட்டுமே வருகின்றனர்'

சிறுவன் மரணம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் அரசு, "ஒரு குழந்தைத் தொழிலாளர் இறந்துவிட்டால் மட்டுமே அனைத்து உதவிகளும் செய்வதற்கு அரசுத் துறைகள் முன்வருகின்றன" எனக் கூறுகிறார்.

"கிராம குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு முறையாகச் செயல்பட்டிருந்தால் சிறுவன் இறந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது" என விமர்சிக்கும் தேவநேயன் அரசு, "இக்குழுவினர், தங்கள் பகுதியில் உள்ள குழந்தைத் தொழிலாளர் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுக்க வேண்டும். அதை முறையாகச் செய்திருந்தால் இது நடந்திருக்காது" என்கிறார்.

ஆந்திரா, தமிழ்நாடு, குற்றம், குழந்தைத் தொழிலாளர்

படக்குறிப்பு,தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்

"தமிழ்நாட்டில் மாட்டுப் பண்ணைகள், கல் குவாரிகளில் வேலை செய்வதற்கு வடமாநிலங்களில் இருந்து குடும்பமாக வருகின்றனர். அவர்களின் வாழ்வுநிலை குறித்தோ, குழந்தைகள் பணி செய்வது குறித்தோ அதிகாரிகள் சரி வர ஆய்வு நடத்துவதில்லை" எனவும் தேவநேயன் குற்றம் சாட்டினார்.

மேலும், "குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகளை நடத்த வேண்டும். அவர்களும் ஆய்வு நடத்துவதில்லை. குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதற்கு வருவாய்த் துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். ஆனால், அது முறையாக நடப்பதில்லை" என்றார்.

அமைச்சர் சொல்வது என்ன?

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியது.

அப்போது அவர், "ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். எங்கள் கவனத்துக்குத் தகவல் தெரிய வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறோம்" எனக் கூறினார்.

சிறுவன் இறப்பு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2je05pg48o

Checked
Thu, 09/18/2025 - 07:53
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed