புதிய பதிவுகள்2

பிராஜா சக்தி திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்

4 days 20 hours ago
இன்னொரு தேர்தல் இப்போது நடந்தால் சிங்கள பகுதிகளில் இதேயளவு இடங்களைப் பிடிப்பது சந்தேகமே. எதிர்க் கட்சிகள் ஒன்றாகினால் என்பிபி பாடு கஸ்டமாகலாம்.

கியூபா மீது தேசிய அவசரநிலையை டிரம்ப் அறிவித்தார்

4 days 20 hours ago
ஏற்கனவே கியூபா மிகவும் வறிய நாடாக உள்ளது. மக்களும் ரொம்ப கஸ்டப்படுகிறார்கள். இப்போ அங்கும் ஒரு புரட்சியை உண்டுபண்ண நினைக்கிறார்.

சங்கானை இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!

4 days 20 hours ago
2024´ம் ஆண்டு, 31´ம் திகதி ஒக்ரோபர் மாதம்... அச்சுவேலி – வசாவிளான் வீதியை, திறக்கப் போகின்றார்கள் என்று உள்ளூர் கிராமசேவகர் மூலம் அறிந்த சுமந்திரன், முதல் நாள் மாலை மூடியிருந்த பாதை முன் நின்று இராணுவத்தினருடன் படம் எடுத்து, தான் சொல்லித்தான் திறந்தது என்று அடுத்த நாள் பத்திரிகைகளுக்கு படத்துடன் "பீலா" விட்டு.. பொங்கல் பொங்கி தின்ற காட்சியை இன்னும் நாம் மறக்கவில்லை. 😂 இவர் 15 வருடமாக பாராளுமன்றத்தில்... மைத்திரி, ரணிலுடன் தேன்நிலவில் இருந்த போது.... கேட்காமல், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாத நிலையில்... அனுராவிடம் வீதியை விடுவிக்கக் சொல்லி கேட்கிறாராம். விடுவித்தவுடன்.... தான் சொல்லித்தான் விடுவித்ததாக... சுத்துமாத்து ஈன அரசியல் செய்கிறார். பவானந்த ராஜாவுக்கு முதலே... சுத்துமாத்து சுமந்திரன், இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்து காட்டி விட்டார். 🤣

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

4 days 20 hours ago
வழமையை விட ரம் இந்தியா மேல் ரொம்பவும் காண்டாக உள்ளார். ஆனாலும் வரி வீதத்தைக் குறைக்கலாம் என்றே சொல்கிறார்கள்.

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

4 days 20 hours ago
ராதாரவி ஒரு நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர்களால்த் தான் இந்திய கலைஞர்கள் வெளிநாடு போய் வருகிறார்கள் என்று சொல்லியிருப்பார்.

சங்கானை இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!

4 days 20 hours ago
ஏற்கனவே இந்த முகாம் விடுவிக்கப்பட போவதாக சொல்லியிருப்பார்கள். தான் கேட்டுத் தான் முகாம் மூடப்படுகிறதாக அடித்து விட்டுள்ளார்.

குட்டிக் கதைகள்.

4 days 20 hours ago
ஒரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள். அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். அப்படி மகிழ்வுடன் அவர்கள் வாழ என்ன ரகசியம் என அறியும் ஆவலுடன், பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர். ஒரு பத்திரிக்கையாளர் "நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள். அதன் ரகசியம் என்ன?" என்று கேட்டார். அந்த கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு, "திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம். ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம். நான் அமர்ந்த குதிரை அருமையானது. அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்ந்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது. அப்படி சென்று கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது.. எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, 'இது உனக்கு முதல் தடவை' என்றாள்.. மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவாக சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது.. அமைதியாக எழுந்த என் மனைவி, 'இது உனக்கு இரண்டாவது தடவை.." என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்... அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்... நான் உடனே பதற்றமாய் என் மனைவியைப் பாத்து, அந்த பாவப்பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே.. ஏன் இந்த கொலைவெறி என்று உரக்கக் கத்தினேன்.. உடனே, அவள் அமைதியாக, இது உனக்கு முதல் முறை என்றாள் அவ்வளவு தான் அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்".. என்றார். யானை

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

4 days 21 hours ago
இந்தக் கூத்து எப்ப நடந்தது? எப்ப சொன்னவர்? யாரிடம் சொன்னவர்? @goshan_che வணக்கம் கோசான் மேலே சம்பந்தன் சொன்னதை என் காதார கேட்டிருக்கிறேன். ஆனாலும் தேடி எடுக்க முடியவில்லை. உங்களால் முடிந்தால் தேடித்தர முடியுமா? வாலி நல்ல கேள்வி. தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.மன்னிக்கவும்.

தமிழக தேர்தல் களம்: சில கருத்துகள்

4 days 21 hours ago
தமிழக தேர்தல் களம்: சில கருத்துகள் January 30, 2026 — கருணாகரன் — சென்னைப் புத்தகக் காட்சிக்குச்சென்று திரும்பியவுடன் இலங்கையில் சந்தித்த ஊடகத்துறை நண்பர்கள் கேட்ட முதற்கேள்வி, “தமிழ் நாட்டின் அரசியல் நிலவரம் எப்படி உள்ளது? வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு அல்லது எந்தத் தரப்புக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?” என்பதே. தமிழ்நாட்டுக்குச்சென்று வந்த ஒருவருடன் பேசுவது, அங்குள்ள களநிலவரத்தை அறிவதற்குக் கூடுதலாக உதவக் கூடும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு. நான் சென்றது புத்தகக்காட்சிக்காக. அங்கே என்னுடைய நான்கு நூல்களின் வெளியீடு. சக எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகளிலும் உரையாடல் அரங்குகளிலும் கலந்து கொண்டேன். இவை முடிய இலக்கிய, பதிப்புத் துறையைச் சேர்ந்த சில நண்பர்களைச் சந்தித்தேன். அடுத்துச் செய்தது, வீட்டுக்கு(இலங்கைக்கு) எடுத்து வருவதற்கு சில பொருட்களை வாங்குவதற்காக நண்பர்களோடு கடைக்குச்சென்றது. இந்தச் சிறிய நிகழ்ச்சி நிரலில் எந்த அரசியல் சந்திப்புகளும் இல்லை. முந்திய சென்னைப் பயணங்களில் தவறாமல், சில அரசியல் தலைவர்களையும் அரசியற் செயற்பாட்டாளர்களையும் ஊடகர்களையும் சந்தித்துப் பேசுதுண்டு. இந்தத் தடவை அதற்கான அவகாசம் இருக்கவில்லை. மட்டுமல்ல, அதற்கான உந்துதலும் இல்லை. காரணங்கள் – 1. தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் அரசியற்தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். அதற்கிடையில் எமக்கு நேரம் ஒதுக்கிக்கொள்ளக் கேட்பது அவ்வளவு பொருத்தமானதல்ல. 2. ஈழத்திலே நம்முடைய அரசியலையே ஈடேற்ற முடியாமல், திணறிக்கொண்டிருக்கிறோம். ஈழப்போராட்டம் சிதைந்து தெருவிலே நாறிக்கிடக்கிறது. அறுபது ஆண்டுகாலப் போராட்டத்தில் எதையுமே பெறாதிருப்பது மட்டுமல்ல, அதிலிருந்து எந்தப்பாடத்தையும் படிக்க விருப்பமின்றிய மக்கள் கூட்டமாக இருக்கிறோம். அதாவது நம்முடைய அரசியலையே கொண்டு நடத்த முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் – தேர்தல் பற்றி நாம் என்ன அவர்களுக்குச்சொல்ல முடியும்? 3. தேர்தல் வெற்றி – தோல்விகள், தேர்தற்கூட்டுகள் பற்றிய செய்திகளும் பேச்சுகளுமே சென்னைத் தெருக்களையும் ஊடகங்களையும் நிறைத்திருந்தன. ஓட்டோ ஓட்டுநர்கள், ஊபர் சாரதிகள், கடைக்காரர்கள், கடற்கரையில் காற்று வாங்கிக் களிப்பவர்கள் தொடக்கம் சந்திப்போரில் பெரும்பாலானோரும் தேர்தல் நிலவரத்தைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களையும் விருப்பங்களையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தனர். அதை அறிவதில் இந்தப் பயணத்தில் ஆர்வம் காட்டினேன். இதுதான் என்னுடைய பயணத்தில் நடந்தவைகளும் நான் கவனித்தவையும் என்றேன். அவர்கள் விடுவதாயில்லை. ஊடகத்துறையினரின் குணமே இதுதான். தாம் எதிர்பார்க்கின்ற விடயத்தில் ஒரு சிறு துரும்பாவது தமக்குக் கிடைத்து விடாதா? என்ற தீவிரத்தில் விடாப்பிடியாக முயன்று கொண்டேயிருப்பார்கள். “அரசியற் தலைவர்களையும் கட்சிகளின் பிரமுகர்களையும்விட மக்கள்தான் முக்கியமானவர்கள். அதுவும் தேர்தல் காலத்தில் அவர்களுடைய அபிப்பிராயங்களுக்கே பெறுமதி அதிகம். அவர்கள்தான் வாக்களிப்பவர்கள். மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய வல்லமை உடையவர்கள். ஆகவே அங்கே மக்கள் என்ன சொல்கிறார்கள்? அதைச் சொல்லுங்கள்” என்று பிடித்துக் கொண்டார்கள். என்னுடைய அவதானிப்பைச் சொன்னேன். சென்னையில் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் தி.மு.கவின் ஆட்சி தொடர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ”தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் சாதிய ஒடுக்குமுறையை மட்டுப்படுத்தியதிலும் மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் காப்பாற்றி, வளர்க்கும் முயற்சிகளிலும் தி.மு.க அளித்த வரலாற்றுப் பங்களிப்புகள் முக்கியமானைவை. அண்ணாத்துரை, கருணாநிதி எனத் தொடர்ந்த உறுதியான இந்த வழிமுறையை இப்பொழுது ஸ்டாலின் தொடருகிறார். இதனை மேலும் வளர்த்து முன்னெடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் உள்ளது. என்பதால் நாம் மிக நிதானமாக இந்தத் தேர்தலையும் கையாள வேண்டும். தி.மு.க இல்லை என்றால், தமிழ் நாட்டில் பா.ஜ.கவின் கைதான் மேலோங்கும். அது மாநிலத்தின் சுயாதீனத்தையே அடியோடு அளித்து விடும். இப்போதே மத்திய அரசின் ஏவலாளைப் போல ஆளுநர் செயற்படுகிறார். தி.மு. க இல்லை என்றால் மாநிலத்தின் அதிகாரம் மத்திய அரசிடமே குவியும். பா.ஜ.க வின் வேலையே அதுதான். அதற்கு நாம் இடமளிக்க முடியாது….”என்றவாறு சொல்கிறார்கள். இன்னொரு நிலையில் இவர்களிற் பலருக்கும் தி. மு.கவில் தொடருக்கின்ற குடும்ப ஆட்சி உவப்பானதாக இல்லை. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினை ஏற்றுக்கொள்கின்றவர்கள், உதயநிதியின் இடையீட்டையும் ஆதிக்கத்தையும் விரும்பவே இல்லை. பலரும் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள். ”தி.மு.க என்ற பகுத்தறிவுக் கட்சியில் இப்படிக் குடும்ப ஆட்சிக் கட்டமைப்புத் தொடருவது முரண். பிரபுத்துவ அம்சங்கள் தி.மு.க வுக்குள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு வழிகோலியவர் கருணாநிதி. இது தி.மு.கவைப் பலவீனப்படுத்துகிறது. அதாவது எதிர்காலத்தில் கட்சியையும் இது பலவீனப்படுத்தும். மாநிலத்தில் தி.மு.க வின் செல்வாக்கையும் ஆட்சித் தகுதியையும் கேள்விக்குள்ளாக்கும்”என்கிறார்கள். இதனை அவர்கள் விமர்சனமாக முன்வைப்பதைவிடக் கவலையோடு சொல்கிறார்கள். வெளியே உள்ள அச்சுறுத்தல் மிகுந்த அபாய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்புடன் – வரலாற்றுக் கடமையுடன் கருணாநிதியின் குடும்பம் நடந்து கொள்ளவேண்டும். கட்சியில் மூப்பு, திறமை, பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படையில் ஜனநாயக ரீதியில் பொறுப்புகளும் அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், இதுவரையில் அவர்கள் (கருணாநிதி தரப்பினர்) ஆற்றிய பங்களிப்புகளும் பணிகளும் பெறுமதியற்றுப்போய் விடும். நேரு குடும்பத்தின் செல்வாக்கு எப்படி அழிந்து மங்கி மறைந்து போய்க்கொண்டிருக்கிறதோ, அதைப்போல கருணாநிதி குடும்பத்தின் வரலாறும் அமையக்கூடாது. காங்கிரஸை நேரு குடும்பத்தின் சொத்துப் போலாக்கியதன் விளைவே, இப்போதும் காங்கிரஸ் மீள எழு முடியாதிருக்கிறது. மட்டுமல்ல, அந்த இடத்தில் பா.ஜ.க என்ற தீய சக்தி வந்து வலுப்பெற்றுள்ளது. அதே நிலை தமிழ் நாட்டிற்கும் தி.மு.கவுக்கும் வரக்கூடாது. தி.மு.க வை ஆதரிப்பது என்பது நியாயமான ஒரு ஆட்சித் தரப்பை வலுப்படுத்துவதற்கே அன்றி, ஒரு குடும்பத்தின் நலனுக்காக இல்லை. ஆகவே இந்த அடிப்படையை ஸ்டாலினும் உதயநிதியும் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதே எங்களுடைய விருப்பம் என்று சொன்னார்கள். மேலும் அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள் – இந்தத் தேர்தல், தி. மு. க வுக்குச் சவாலானதுதான். இந்தச்சவாலுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, ஊழல் குற்றச்சாட்டு. தி. மு.க வுக்கும் ஊழலுக்கும் தொடர்பு உள்ளது. நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லை என்றாலும் மக்களின் மனதில் தி.மு. க ஊழலுடன் சம்மந்தப்பட்டே உள்ளது என்ற நம்பிக்கை பலரிடத்திலும் உள்ளது. அதை யாருமே மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. ஊழல் இருப்பதால்தான் கட்சிக்குள் ஜனநாயகத்தைப் பேணமுடியவில்லை. கட்சியின் மூத்த உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் தமது அடையாளம், தமது பதவி, தமக்கான அங்கீகாரம் போன்றவற்றை விடவும் தாம் உழைத்துக் கொள்வதற்கான இடமிருந்தால் போதும் என்றே சிந்திக்கிறார்கள். ஆகவேதான், கட்சிக்குள் அதற்கான வாய்ப்பை மட்டும் தேடிக்கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் உதயநிதியின் மகன் வந்து பொறுப்பை எடுத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. தமது வருவாய்க்கான வாய்ப்பிருந்தால்போதும் என்றே பார்க்கிறார்கள். ஊழல் இல்லாத ஆட்சியொன்றை வழங்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் போய் விட்டது. ஊழல்பற்றி மக்களிடம் உள்ள நியாயமான உணர்வை மதிப்பதற்கு முடியாமல் இருக்கிறார்கள். இரண்டாவது காரணம், தி.மு.க வில் தொடரும் குடும்ப ஆட்சியும் அதிகாரமும். ஐம்பது ஆண்டுகளைக் கடந்த ஒரு பெரிய பகுத்தறிவுக் கட்சிக்குள்ளே பெருந்தலைவர்கள் இல்லை. அல்லது அவர்களைக் கட்சி அங்கீகரிக்கத் தயாரில்லை என்பது அதனுடைய பகுத்தறிவுச்சிந்தனைக்கும் கோட்பாட்டுக்கும் எதிரானது என்று தலையைக் குனிகிறார்கள். கட்சிக்குள் அடிமைத்தனம் வளர்ந்துள்ளதன் அடையாளமே இதுவாகும். இதையெல்லாம் நீங்கள் தி.மு. கவின் உயர் மட்டக் கவனத்துக்குக்கொண்டு செல்ல்லாம் அல்லவா என்று கேட்டேன். ”தி,மு.க வின் உயர் மட்டத்தில் நம்முடைய பேச்சைக் கேட்கக்கூடியவர்களுக்கு அதிகாரம் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் இதையெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களுக்குக் காதுகளில்லை” என்றார் ஒரு மூத்த எழுத்தாளர். “அப்படியென்றால் என்னதான் முடிவு?” என்று கேட்டேன். ”நெருக்கடிதான். ஆனால் எதையும் மக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். அதுதானே வரலாறு” என்று சொல்லி மெதுவாகப் பலரும் நகர்ந்துவிட்டனர். சிலரோ ‘தி.மு.க வே இந்தத் தடவையும் வெற்றியைப் பெறும்‘ என்று அடித்துச் சொல்கிறார்கள். ஆனால் ‘அந்த வெற்றி சவாலானதாக இருக்கும். சிலவேளை தி.மு.க கூட்டணி தோற்கடிக்கப்படலாம். அப்படித்தோற்கடிக்கப்பட்டாலும் அதுவும் சவாலான – கடினமான தோல்வியாகவே இருக்கும்‘ என்றனர். இதையெல்லாம் விலகியதாகவே ஓட்டோ ஓட்டுநர்கள், ஊபர் சாரதிகள், கடைக்காரர்கள், விடுதிக் காப்பாளர்கள், விடுதிகளில் பணி செய்வோர் போன்ற சாதாரணர்களின் அபிப்பிராயம் உள்ளது. அவர்களிடம் தி.மு.க மீதான கோபமே உள்ளது. இவர்கள்தான் பொது மக்களின் உளநிலையைப் பிரதிபலிப்பவர்கள். தினமும் பல ஆயிரக்கணக்கானோருடன் உறவாடுகின்றவர்கள். இவர்களில் ஒரு சாரார் தமிழ்நாடு வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வெற்றியடைவார் என்று சொல்கிறார்கள். அப்படி அவருக்கு வெற்றி கிடைக்காதுவிட்டாலும் தங்களுடைய வாக்குகள் விஜய்க்குத்தான் என்று உறுதியுடன் சொல்கிறார்கள். ‘எதற்காக இப்படியொரு தீர்மானத்துக்கு வந்தீர்கள்?‘ என்று கேட்டேன். ‘விலைவாசி ஏறியிருக்கு. வருமானத்தில் உயர்வில்லை. எந்தப் பிரச்சினையும் தீர்ந்தமாதிரித் தெரியவில்லை. கிராமங்களில் வளர்ச்சியே இல்லை. நகரத்தில் சும்மா “ஷோ” காட்டுகிறார்கள். அவ்வளவுதான். கிராமங்கள் அப்படியே பாழடைந்து கிடக்கின்றன. எனவே ஒரு மாற்றம் வருவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்‘ என்கின்றனர். ‘நீங்கள் விரும்புகிற மாற்றத்தை விஜய் தருவார், செய்வார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவருக்கு அதற்கான அனுபவமும் ஆற்றலும் உண்டா? வெறும் சினிமா கவர்ச்சி மட்டும்போதுமா?‘ என்று சில கேள்விகளைப்போட்டேன். தமிழ் நாட்டில் சினிமாக்காரன்கள்தானே ஆட்சியை நடத்துகிறார்கள். கலைஞர், எம். ஜி. ஆர், ஜெயல்லிதா, விஜயகாந் எல்லோரும் சினிமாக்காரர்கள்தானே! இப்ப உதயநிதி எத்தகைய அனுபவங்களோடு, துணைமுதல்வராக இருக்கிறார்? அவர் சினிமாக்காரர் இல்லையா? உதயநிதியை விட விஜய் திறமையாளர் இல்லையா? உதயநிதியை விட விஜய்க்கு மக்கள் ஆதரவு உண்டா இல்லையா?‘ என்று என்னை மடக்க முயற்சிக்கிறார்கள். இன்னொரு சாரார் பா.ஜ.க வை விரும்புகிறார்கள். ”ஒரு தடவை மாற்றத்துக்கு இடமளித்துப் பார்ப்போமே. எப்போதும் ஒரேதரப்பு ஆட்சியிலிருந்தால் அது தப்பாகி விடும். மாற்றிப்பார்த்தால்தான் நன்மைகள் தீமைகள் என்ன என்று விளங்கும். சில ஊடகங்களும் சில ஆய்வாளர்களும் பயங்காட்டுகிறார்கள். அது உண்மையா இல்லையா என்பதை நாம் நேரில் அறிய வேண்டாமா?”என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு, பா.ஜ.கவின் நோக்கத்தையும் அது பிற மாநிலங்களில் செய்து வரும் அத்துமீறல்களையும் ஆட்சித்தவறுகளையும் சொன்னேன். ‘அதெல்லாம் முழுசா உண்மை கிடையாது. வதந்திதான்‘ என்று நம்முடைய கருத்தை ஏற்கமறுக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் நாம் தெளிவூட்டும் விடயங்களைப்பற்றிச் சிறிது சிந்தித்து, தம்முடைய முடிவை மாற்றிக்கொள்ளும் உளநிலையுடன் உள்ளனர். ஆனால், இதற்குக் கடுமையாக வேலை செய்யவேண்டும் என்றேன் ஊடக நண்பர்களிடம். ‘அப்படியென்றால், அ.தி.மு.க, சீமானைப் பற்றியெல்லாம் பேச்சே இல்லையா?‘ என்று கேட்கிறார்கள் நமது ஊடகர்கள். ஈழத் தமிழ் ஊடகர்களுக்கு சீமான் இன்னும் ஒரு கவர்ச்சி முகம்தான். அ.தி.மு.க, பா.ஜ.க விற்குள் கரைந்து விட்டது. சீமானை, அவருடைய வாக்குத்தளத்தை விஜய் எடுத்துக் கொள்கிறார். இதுதான் அங்குள்ள நிலவரமாக உள்ளது. இதை நான் ஒரு வெளிப்பார்வையாளராகத்தான்அவதானித்தேன்‘ என்று முடித்துக்கொண்டேன். தேர்தல் நிலவரத்தை அறிவதற்கு தி.மு.க உட்பட ஒவ்வொருதரப்பும் தமிழகம் முழுவதிலும் சர்வே (மதிப்பீட்டுக் கணக்கெடுப்பை) நடத்துகின்றன. தி.மு.க வில் செல்வாக்கு மிக்க நபராக, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீஸ்வரன் இருக்கிறார். தி.மு.க வில் கட்சிக்குள்ளே செல்வாக்கும் அதிகாரமும் உள்ள நபர் சபரீஸ்வரன்தான். இலங்கையில் ராஜபக்ஸக்களின் தரப்பில் பஸில் ராஜபக்ஸ இருந்தாரோ அப்படி. பஸில் எம்.பியாகவும் அமைச்சராகவும் கட்சியின் பொறுப்பு மிக்க பதவியிலும் வெளிப்படையாகவும் செயற்பட்டார். சபரீஸ்வரன் அப்படியல்ல. அவர் நிழல் முகம். ஆனால், உள்ளே இருந்து எதையும் தீர்மானிக்கும் கப்டன் அவர்தான். தி.மு.க வின் சார்பாக மேற்கொள்ளப்படும் சர்வே நடவடிக்கை, சபரீஸ்வரன் வேதமூர்த்தியின் தலைமையில்தான் நடக்கிறது. இதைப்போல வெவ்வேறு கட்சிகளும் சர்வேயை மேற்கொள்கின்றன. அதற்காகப்பெருந்தொகை நிதி செலவழிக்கப்படுகிறது. நிபுணத்துவ நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் என்பது எளிய ஒரு ஏற்பாடு. மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும் ஒரு ஜனநாயக நடவடிக்கை என்ற காலம் போய் விட்டது. இப்பொழுது அது பல்வேறு உத்திகள், தந்திரங்கள், ஏமாற்றுக்கலை எனப் பலவகையான ஏற்பாடுகளுடன் தொடர்புபட்ட ஒன்றாகி விட்டது. மக்களின் உணர்வை நாடிபிடித்து அறிவதில் இருக்கும் ஆர்வமும் பதட்டமும் தேர்தல் காலத்தில் மட்டும் என்றில்லாமல், மக்களுடைய வாழ்க்கையின் நிலைவரம் எப்படி உள்ளது, அதை மாற்றுவதற்கான பொறிமுறைகளின் – நடவடிக்கைகளின் வளர்ச்சி எப்படி உள்ளது என்று தொடர்ந்து அறிந்து கொண்டிருப்பதும் அதற்கான தீர்வுகளை வைப்பதுமே உண்மையான சர்வேயாக இருக்கவேண்டும். ஒரு வெளியாளின் பார்வை என்று இதைப் பார்த்தாலும் அடிப்படையில் ஒரு உண்மை உண்டு. மக்கள் இயல்பாகவே மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த உணர்வு அவர்களுடைய நிறைவின்மைகளினால் உருவாகிறது. அதிற் குறிப்பாகப் பொருளாதார நெருக்கடி முதன்மையான பாத்திரத்தை வகிக்கிறது. இதில் ஊழல் ஒரு தீர்க்கமான பாத்திரமாகும். ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளைக் கையாள்வதில்தான் எதிர்த்தரப்புகள் கவனம் செலுத்துகின்றன. ஊழலின் பருமன் எவ்வளவு என்பது இங்கே முக்கியமானதல்ல. அந்தச் சொல் ஒரு அழகிய, ஆழமான அரசியல் முதலீடாக உருமாற்றம் பெறுகிறது. இலங்கையின் அனுபவம் கூட அதுதான். போரை முடித்து வைத்தவர்கள், போரிலே வெற்றியடைந்தவர்கள் என்ற கதைகளை எல்லாம் மக்கள் தூக்கி எறிந்து விட்டு, ஊழலுக்கு எதிராகவே மக்கள் ஒன்று திரண்டார்கள். அதனுடைய விளைவே எவராலுமே மதிப்பிட முடியாதிருந்த தேசிய மக்கள் சக்தி (NPP) யின் வெற்றியாகும். உலகெங்கும் ஊழலுக்கு எதிரான ஆட்சி மாற்றம் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் விஜய் கையில் எடுத்திருப்பதும் இதையே. ஆனால், அதைசினிமாக் சாகஸமாகவே அவர் கையாளர்கிறார். இயல்பான மக்கள் எழுச்சியாக இல்லாமல் செயற்கையாக உருவாக்கப்படும் அரசியல் கூடுகைகள் வீண் செலவீனத்திலேயே போய்முடிவதுண்டு. எதிர்க்கட்சிகளும் விஜயை ஒரு சினிமாச் சாகஸக்காரராகவே அடையாளப்படுத்த முயற்சிக்கின்றன. ஆனாலும் இதை ஆதரிப்பதற்கும் ஒரு குழு உண்டு. அதில் விஜய் ரசிகநிலையில் உள்ள எழுத்தாளர்கள் சிலரும் இருக்கிறார்கள். விஜயைப்போல ஊழல் விவகாரத்தை அ.தி.மு.கவோ, பா.ஜ.க வோ இதை எடுக்கமுடியாது. அவற்றின் கைகளில் கறைகள் தாராளமாகவும் ஏராளமாகவும் உண்டு. அவர்களுடைய ஒரே முதலீடு, மோடிதான். மோடியும் அமித்ஸாவும் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்று கைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.கவினர். இப்படியொரு நிலை அ.தி.மு.கவுக்கு வரும் என்று தாம் நினைக்கவே இல்லை என்று அ.தி.மு.க வின் நெடுங்கால ஆதரவாளர் ஒருவர் கண்ணீர் விட்டார். எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்காது சார் என்று கைகளைப் பிடித்தார். தமிழ்நாடு வரலாற்று நெருக்கடிகளையும் சோதனைகள் பலவற்றையும் கண்டு வந்திருக்கிறது. அதனிடம் ஒரு அறிவார்ந்த நோக்கு நிலை எப்போதும் உண்டு. பெரியார், அண்ணாத்துரை, காமராஜர், கருணாநிதி எனப் பல ஆளுமைகளும் தலைவர்களும் உருவாக்கி வளர்த்தெடுத்த பாரம்பரியம் இது. இந்தத்தலைமுறை இதை எப்படிக்கையாளப்போகிறது, எப்படித்தொடரப்போகிறது என்பதைப்பார்க்க வேண்டும். தி.மு.ககூட்டணியின் அரசியல் வியூகம் எப்படி இருக்கப்போகிறது என்பதில்தான் எல்லாமே தங்கியுள்ளது. https://arangamnews.com/?p=12645

சங்கானை இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை!

4 days 22 hours ago
சங்கானையில் இராணுவ முகாமை அகற்றி காணியை கையளிக்க இணக்கம்: எம்.பி எஸ். பவானந்தராஜா தகவல்! Published By: Digital Desk 1 31 Jan, 2026 | 01:39 PM யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில், தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரை கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இராணுவத்தினர் சாதகமாக பதிலளித்ததாகவும் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுழிபுரத்தில் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர், அண்மையில் அங்கிருந்து வெளியேறியதையடுத்து, அக்காணியை சங்கத்தினருக்கு மீள கையளித்துள்ளோம். அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அதனையும் பிரதேச சபையிடம் மீள கையளித்துள்ளோம். இதேவேளை, சங்கானை கிழக்கு பகுதியில் தனியார் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அவர்களையும் அங்கிருந்து வெளியேறி, அந்த காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரியுள்ளேன். அது தொடர்பில் தாம் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளனர். மிக விரைவில் அந்த காணிகளையும் அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராஜா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/237473

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்

4 days 22 hours ago
ஆகாஷ், விரான் ஆகியோரின் அற்புத ஆற்றல்களால் தென் ஆபிரிக்காவை வென்றது இலங்கை Published By: Vishnu 29 Jan, 2026 | 10:53 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்படும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் சுப்பர் சிக்ஸஸ் சுற்றில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களால் இலங்கை இளையோர் அணி மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. விக்னேஸ்வரன் ஆகாஷ் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல், விராம் சமுதித்த குவித்த அபார சதம் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன. இந்த வெற்றிமூலம் இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு ஓரளவு பிரகாசமாக இருக்கிறது. இந்த வெற்றியுடன் குழு 1இல் சுப்பர் சிக்ஸஸ் அணிகள் நிலையில் இலங்கை இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ள போதிலும் நிகர ஓட்ட வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை விட பின்னிலையில் இருக்கிறது. எனவே அயர்லாந்துடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தால் மாத்திரமே இலங்கை அரை இறுதிக்கு செல்லக்கூடியதாக இருக்கும். புலவாயோ, குவீன்ஸ் பார்க் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற சுப்பர் சிக்ஸஸ் போட்டியில் தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 262 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 46 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது திமன்த மஹாவித்தான (4) ஆட்டம் இழந்தார். எனினும் விரான் சமுதித்த, செனுஜ வேக்கனாகொட (48) ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 143 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை வலுவான நிலையில் இட்டனர். தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 191 ஓட்டங்களாக இருந்தபோது விரான் சமுதித்த 110 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். உலகக் கிண்ணப் போட்டியில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும். 94 பந்துகளை எதிர்கொண்ட விரான் சமுதித்த 13 பவுண்டறிகளையும் ஒரு சிக்ஸையும் பெற்றார். மத்திய வரிசையில் அணித் தலைவர் விமத் தின்சார (32), கவிஜ கமகே (13), சாமிக்க ஹீனட்டிகல (20 ஆ.இ.), துல்னித் சிகேரா (15 ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி இலங்கையை வெற்றிபெறச் செய்தனர். பந்துவீச்சில் கோர்ன் போத்தா 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மைக்கல் க்ருய்ஸ்காம்ப் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றது. ஜோரிச் வன் ஸோக்வைக், அத்னான் லகாடியன் (46) ஆகிய இருவரும் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். லகாடியனின் விக்கெட்டை ஆகாஷ் வீழ்த்தியதும் விக்கெட்கள் அடிக்கடி சரிய தொடங்கின. எனினும் ஜோரிச் வன் ஷோக்வைக் திறமையாத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் பெண்டைல் எம்பாத்தா (12) உடன் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர்செய்தார். ஜோரிச் வன் ஷோக்வைக் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 116 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆகாஷின் பந்துவீச்சில் 5ஆவதாக ஆட்டம் இழந்தார். கடைசி 5 ஓவர்களில் போல் ஜேம்ஸ் (37 ஆ.இ.), மைக்கல் க்ருய்ஸ்காம்ப் (21 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்க இளையோர் அணியை சிறப்பான நிலையில் இட்டனர். பந்துவீச்சில் விக்னேஸ்வரன் ஆகாஷ் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்களில் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கவிஜ கமகே 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். தென் ஆபிரிக்க வீரர்கள் மூவரின் விக்கெட்களை ஆகாஷ் நேரடியாக பதம் பார்த்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அத்துடன் இந்த உலகக் கிண்ணத்தில் விரான் சமுதித்த இரண்டாவது ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/237367

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

4 days 22 hours ago
வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடக் குழி கல்லு கட்டும் வேலை நடைபெறுகிறது. காரைநகர் புதிய மலசலகூடத்திற்கான மாதிரி அளவுத்திட்டம்.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

4 days 22 hours ago
தமிழரசு: சுமந்திரனின் வலையில் சிக்கிய சிறிதரன்…! January 27, 2026 — அழகு குணசீலன் — இலங்கை தமிழரசுக்கட்சி என்றால் சுமந்திரன், சுமந்திரன் என்றால் தமிழரசுக்கட்சி என்ற நிலை இரா .சம்பந்தர் – மாவை சேனாதிராஜா காலத்து விளைவு. இந்த வலை தமிழரசுக்கட்சி தன்னைச் சுற்றி தானாகவே பின்னிக்கொண்ட ஒன்று. கடந்த ஒன்றரை தசாப்தங்களாக சுமந்திரனை எல்லா சந்தர்ப்பங்களிலும் நியாயப்படுத்தி வந்த தமிழரசுக்கட்சியின் சிலந்திகளும் சேர்ந்து பின்னிய வீடுதான் இந்த சிலந்திவலை. இப்போது அனைவரும் அதில் சிக்கிக்கொண்டுள்ளனர். பா.அரியநேந்திரன், கே.வி.தவராசா, சி.யோகேஸ்வரன்,…….. என்ற வரிசையில் தற்போது சிக்கி இருப்பவர் சி.சிறிதரன். ஞா.சிறிநேசனும் விரைவில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சிறிதரன் விவகாரத்தில் அவரின் முடிவே அதைத் தீர்க்மானிக்கும். சிலந்திகள் பற்றி பேசும் போது வலை ஒன்றை பின்னுவதற்கு பல தடவைகள் முயன்று தோற்றுப்போன ஒரு சிலந்தி, முயற்சியை கைவிடாது தொடர்ச்சியாக முயற்சி செய்து ஆறாவது தடவை அதை சாதித்தது என்ற ஆரம்பப்பள்ளிபாடம் நினைவுக்கு வருகிறது. அந்த சிலந்திதான் சுமந்திரன். தமிழரசு கட்சியில் ஒரு தலைமைத்துவமாக, நிர்வாக ஆளுமையாக, அரசியல் விவகாரங்களை விரைவாக விளங்கிக்கொண்டு செயற்படுபவராக, உள்நாட்டு, வெளிநாட்டு தரப்புகளுடன் தொடர்புகளை பேணக்கூடிய ஒருவராகவும் மட்டும் அல்ல, அவர்களின் நம்பிக்கையை பெற்ற ஒருவராகவும் சுமந்திரனே இருக்கிறார். இதற்கு அவரது சட்டத்துறை நிபுணத்துவமும், மொழிவளமும், பூகோள அரசியல் அறிவும் பக்க பலமாக இருக்கிறது. இந்த குணாம்சங்களுடன் ஒப்பிடும்போது தமிழரசின் மற்றைய எம்.பி.க்களும், முக்கியஸ்த்தர்களும் பெயரளவில் தான் உள்ளனர். அரசியல் விவகாரங்களை தர்க்கரீதியாக விவாதிப்பதில், நியாயப்படுத்துவதில், பொய்யையும் பொருந்த சொல்வதில் சுமந்திரனுக்கு நிகர் தமிழரசில் சுமந்திரன் தான். தமிழரசு வண்டியை இரண்டு சக்கரங்களாக சுமந்திரனும், சாணக்கியனும் சேர்ந்து ‘உருட்டுகிறார்கள்’ சிவஞானம் பின்னால் நின்று தள்ளிக்கொடுக்கிறார். இங்கு பேசப்படுகின்ற வலைப்பின்னல், உருட்டுதல் என்ற வார்த்தைகளில் சுமந்திரனின் அரசியலின் மறுபக்கம் மறைந்து இருக்கிறது. அதற்குள் அவரின் அரசியல் குறித்த நேர்மை, நீதி, நியாயம், வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம்…. என்ற கேள்விகள் இல்லாமல் இல்லை. ஆனாலும், அனைத்து சுத்துமாத்துக்களுக்கு மத்தியிலும் சுமந்திரனே வெற்றி பெறுகிறார். தன்னோடு ‘ஒத்து ஓடாதவர்களை ஓரங்கட்டுதல்’ என்பது சுமந்திரனின் கைவந்த கலை. தமிழரசுக்கட்சியின் சம்பந்தருக்கு பின்னரான காலத்தை திரும்பி பார்த்தால் இது புரியும். திருகோணமலை பொதுச்சபைக்கூட்டமும், தலைவர்தேர்வும், கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியதும், உள்ளூராட்சி தேர்தலில் சுமந்திரன் பேசிய பொறிமுறையும் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உடைவும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை நிராகரித்தமையும், தீவிர தமிழ்த்தேசியவாதத்தை எதிர்த்து சஜீத் பிரேமதாசவை ஆதரித்தமை, பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்னரும் பாராளுமன்றத்திற்கு வெளியில் மட்டும் அன்றி உள்ளும் சத்தியலிங்கம், சாணக்கியன் ஊடாக சுமந்திரனே தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளார், தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை, மத்திய குழு, அரசியல் குழுக்களை கட்டுப்படுத்தும் திட்டமிட்ட செயற்பாடுகளால் சுமந்திரன் அணியே இவற்றை கட்டுப்படுத்துதல், சத்தியலிங்கத்தை தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமித்து பாராளுமன்றத்திற்கு உள்ளே சாணக்கியனுக்கும், வெளியே தனக்கும் பலத்தை அதிகரித்தமை, பாராளுமன்றத்தில் சத்தியலிங்கத்தை பிரதம கொறடாவாகவும், சாணக்கியனை பாராளுமன்ற செயற்பாடுகள் பொறுப்பாளராகவும் நியமித்தமை, சிறிதரனுக்கு எதிராக சாராயத்தவறணைகளுக்கு சிபாரிசு செய்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு தொடர்ந்தும் அரசாங்கத்தை கோருதல், அரசியல் அமைப்பு சபையில் கணக்காய்வாளர் நாயக தேர்வில் சிறிதரனின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்தியமை, ஓடு மீன் ஓடி உறுமீன் வரும்வரையும் காத்திருந்த கொக்காக கிடைத்த சந்தர்ப்பங்களில் படிப்படியாக காய்களை நகர்த்தி, இன்று கணக்காய்வாளர் நியமனத்தில் சிறிதரனுக்கு எதிராக வலுவான குற்றச்சாட்டு தமிழரசுக்கட்சியிடம் இருந்து மட்டும் அல்ல எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்தும் எழும்போது சாட்டையை கையில் எடுத்திருக்கிறார் சுமந்திரன். அரசியல் குழு சிறிதரனை அரசியல் அமைப்பு குழுவில் இருந்து விலகுமாறு கோரியது. அது இன்னும் நிகழவில்லை அது சுமந்திரனால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அடுத்து தயாராக வைத்திருந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியை விட்டு விலகுமாறு முன்னையதற்கு சமாந்தரமாக அடுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியைப் பறிப்பது தமிழரசுக்கட்சியின் சுய தீர்மானத்தில் தங்கியிருக்கிறது. இதை செய்யாமல் இருப்பதாயின் சிறிதரன் பாராளுமன்ற குழுவிலும், அரசியல், மத்திய குழுக்களிலும், ஏன் பொதுச்சபையிலும் கூட தனது பெரும்பான்மையை காட்ட வேண்டி வரலாம். ஆனால் அதற்கான – சிறிதரனுக்கு சாதகமான சூழல் இன்றில்லை என்றே கூறப்படுகிறது. நீதி மன்றத்தை நாடினால் சுமந்திரனை எதிர்த்து வாதிடவேண்டி இருக்கும். சிறிதரன் கிளிநொச்சிக்குள் தனித்து விடப்பட்டுள்ளார். கிளி நொச்சியில் சிறிதரனுக்கு எதிரான சந்திரகுமார் அணி சரியான நேரத்தில் சுமந்திரனுக்கு சார்பாக காய்களை நகர்த்துகிறது. பதிவுகளை பார்த்திருப்பீர்கள். இப்போது கிழக்கு எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை தக்க வைக்க சிறிதரனின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவிக்கு ஆப்பு வைக்க தீர்மானித்து விட்டனர். அமரர் இராசமாணிக்கத்தின் 113 வது ஜனனதின விழாவில் சிவஞானமும், சுமந்திரனும் வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிட்டவர்களே , அழைப்பின்றி ஓடிப்போய் நிகழ்வில் கலந்து. கொண்டிருக்கிறார்கள். யார் என்னத்தை சொன்னாலும், தமிழரசை காப்பாற்ற மட்டும் அல்ல சிறிதரனையும் காப்பாற்ற சுத்துமாத்துக்களை செய்தாவது சுமந்திரனால் மட்டுமே முடியும். https://arangamnews.com/?p=12635

📜  பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக  பிரகடனம்

4 days 23 hours ago
📜 பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்: adminJanuary 31, 2026 இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பின்றி முன்னெடுப்பதற்காக, மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் (Essential Services) பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் (Public Security Ordinance) கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு (LP Gas) விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு, வைத்தியசாலைகள், மருந்தகங்கள் (Nursing homes/Dispensaries) மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு தொடர்பான அனைத்து சேவைகள், பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்துக்கான அனைத்து சேவைகள், புகையிரத போக்குவரத்து மற்றும் வீதிப் போக்குவரத்து சேவைகள்மற்றும் துறைமுகச் சேவைகள் மற்றும் உணவு விநியோகம் தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கைகள் உள்ளடங்குகின்றன. இந்தச் சேவைகளை அத்தியாவசியமாக்குவதன் மூலம், இந்தத் துறைகளில் பணிபுரிபவர்கள் பணிப்புறக்கணிப்பு (Strike) செய்வதற்கோ அல்லது சேவைகளுக்குத் தடை ஏற்படுத்துவதற்கோ சட்டப்படி முடியாது. மீறினால் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களுக்குத் தடையில்லாச் சேவையை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். அத்தியாவசிய சேவைகள் தொடர்பான இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும். தேவைப்படின், ஒவ்வொரு மாதமும் புதிய வர்த்தமானி மூலம் இது நீடிக்கப்படலாம். அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட துறைகளில் பணியாற்றுவோர், பணிக்கு சமூகமளிக்கத் தவறினால் அல்லது சேவைகளுக்குத் தடை ஏற்படுத்தினால், அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படவும், பிணையின்றி விளக்கமறியலில் வைக்கப்படவும் சட்டத்தில் இடமுண்டு. அத்துடன் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பல தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இது தங்களது ஜனநாயக ரீதியான போராட்ட உரிமையைப் பறிக்கும் செயல் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பள உயர்வு அல்லது சீர்திருத்தங்கள் கோரி போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வந்த நிலையிலேயே, அரசாங்கம் இந்தத் தடையை விதித்துள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். இந்த வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்யச் சில தொழிற்சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன. https://globaltamilnews.net/2026/228028/

🌊 திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்

4 days 23 hours ago
🌊 திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: adminJanuary 31, 2026 திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் சரியாக 3:49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு கடலில் ஏற்பட்ட போதிலும், கடற்கரையோர நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் சிலருக்குச் சிறியளவிலான அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், இது மிகச் சிறிய அளவிலானது என்பதால் சுனாமி (Tsunami) ஆபத்து எதுவும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடந்த சில காலங்களாக இதுபோன்ற சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்றன. பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். https://globaltamilnews.net/2026/228035/
Checked
Thu, 02/05/2026 - 10:42
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed