புதிய பதிவுகள்2

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

3 months 2 weeks ago
சுமந்திரனுக்கு, என்ன… மண்டையிலையா சுகமில்லை. 😂 அப்படி என்றால்…. மந்திகை அல்லது அங்கோடையில் கொண்டு போய் காட்டினால் சுகம் வந்து விடும். 🤣

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொது பட்டமளிப்பு விழா

3 months 2 weeks ago
கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா ; 1883 பட்டதாரிகளுக்கு பட்டங்கள், 155 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் 16 Oct, 2025 | 02:07 PM ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொது பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை (15) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பிரதம அதிதியாக கலந்துக் கொண்டதுடன், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) மற்றும் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோர் வரவேற்றனர். அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பு கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த மொத்தம் 1883 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் மற்றும் முதுகலை டிப்ளோமாக்கள் வழங்கப்பட்டன. அத்துடன், இறுதி அமர்வில், 155 பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், விசேட திறமை எய்திய மாணவர்களுக்கு பிரதி அமைச்சரால் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு), பட்டதாரிகளின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார். தேசத்திற்கான சேவையில் தங்கள் அறிவை பொறுப்புடன் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டதுடன் கல்வி, புத்தாக்கம் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு இடையிலான முக்கிய தொடர்பை அவர் வலியுறுத்தினார். 'அறிவு ஒரு சக்தி, ஆனால் அறிவு மனிதகுலத்திற்கும் தேசிய முன்னேற்றத்திற்கும் சேவை செய்யப் பயன்படுத்தப்படும்போது மட்டுமே சக்தி வாய்ந்ததாக மாறும்' என்றும் கூறினார் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்த பிரதி அமைச்சர், இலங்கையை அறிவு சார்ந்த பொருளாதாரமாக மாற்ற வடிவமைக்கப்பட்ட வரவிருக்கும் தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையின் மூலம் கல்வி முடிவுகளை தேசிய முன்னுரிமைகளுடன் இணைக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். பட்டதாரிகள் நேர்மை, தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்கத்துடன் பணியாற்றுவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்க வேண்டும் என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மை தேசிய பாதுகாப்பின் அடித்தளம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டி அவர் அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வில் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், இராஜதந்திரிகள், முன்னாள் வேந்தர்கள் மற்றும் உபவேந்தர்கள், முனுருவின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/227881

148 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜாக் காலிஸ் சாதனையை யாராலும் நெருங்க முடியாதது ஏன்?

3 months 2 weeks ago
பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் இன்று அரைசதம் அடித்திருக்கிறார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து ஏரியாக்களிலும் ஜொலித்த அவருக்கு இன்றோடு ஐம்பது வயது ஆகிறது. சுமார் 19 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடிய அவரது பயணத்தை எண்களின் வாயிலாக அலசுவோம். ஏனெனில், "நம்பர்களை வைத்துப் பார்த்தால் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என்பதற்கு மிக அருகில் வருவது காலிஸ்தான்" என்று டிராவிட்டே கூறியிருக்கிறார்! பட மூலாதாரம், Cameron Spencer/Getty Images டெஸ்ட் கிரிக்கெட்டில் காலிஸ் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் காலிஸ், 55.37 என்ற சராசரியில் 13289 ரன்கள் குவித்திருக்கிறார். சச்சின், ஜோ ரூட், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்து டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்தவர் இவர்தான். அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு (51) அடுத்து 45 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். "டெஸ்ட் பேட்டர் காலிஸை உடைப்பதென்பது சாதாரண விஷயமில்லை. எத்தனை திட்டங்கள் வேண்டுமானால் தீட்டுங்கள், நாளின் முடிவில் அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்பார்" என்று ஒருமுறை புகழ்ந்திருந்தார் ரிக்கி பாண்டிங். ஆனால், அவரது சாதனைகள் பேட்டிங்கோடு நின்றுவிடவில்லை. பேட்டிங் போல் பந்துவீச்சிலேயும் காலிஸ் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 32.65 என்ற சராசரியில் 292 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அவர். அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 43வது இடத்தில் இருக்கும் காலிஸ், ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா, ஜஹீர் கான், ஸ் ரீவ் ஹார்மிசன் (steve harmison) போன்ற முன்னணி பௌலர்களுக்கு இணையான சராசரி வைத்திருக்கிறார். 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களுக்கு மேலும் 250 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்த ஒரே வீரர் காலிஸ்தான். ஏன், 5000+ ரன்கள் & 250+ விக்கெட்டுகள் என்ற பட்டியலில் இருப்பவர்களே மூவர்தான். அதில் காலிஸோடு இருப்பவர்கள் கபில் தேவ் மற்றும் சர் இயான் போத்தம் ஆகியோர் மட்டுமே. இது மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகள் (23) வென்றவரும் இவர்தான். 9 முறை தொடர் நாயகன் விருது பெற்று, அஷ்வின் & முரளிதரன் (இருவரும் 11) இருவருக்கும் அடுத்து அந்தப் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் காலிஸ். பட மூலாதாரம், Graham Crouch-ICC/ICC via Getty Images ஒருநாள் போட்டிகளில்... ஒருநாள் ஃபார்மட்டைப் பொறுத்தவரை 328 போட்டிகளில் 44.36 என்ற சராசரியில் 11579 ரன்கள் விளாசியிருக்கிறார். அதிக ஒருநாள் ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் எட்டாவது இடம். அதேபோல் 31.79 என்ற சராசரியில் 273 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இந்தப் பட்டியலில் 19வது இடம். தென்னாப்பிரிக்காவின் மிகச் சிறந்த பௌலராகக் கருதப்படும் ஆலன் டொனால்டை விடவும் அதிக விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். ஆல்ரவுண்டராகப் பார்க்கும்போதும், ஒருநாள் போட்டிகளில் 5000+ ரன்களும் 250+ விக்கெட்டுகளும் எடுத்திருக்கும் ஐந்து பேரில் இவரும் ஒருவர். முன்பொருமுறை காலிஸின் ஒருநாள் போட்டி அணுகுமுறையைப் புகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங், "காலிஸ் ஒருநாள் கிரிக்கெட்டை செஸ் போட்டி போல் மாற்றிவிடுவார். வியூகங்கள் வகுப்பார், நிதானமாகக் காத்திருப்பார், கருணை காட்டமாட்டார். ஆர்ப்பாட்டமே இருக்காது. ஆனால், முடிவுகள் கிடைக்கும்" என்று கூறியிருந்தார். பட மூலாதாரம், Carl Fourie/Gallo Images/Getty Images மூன்று ஃபார்மட்களிலும் சேர்த்தால்? கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு ஃபார்மட்களிலுமே 10,000 ரன்களுக்கு மேல் எடுத்தவர்கள் மொத்தமே ஆறு பேர் தான் - சச்சின், டிராவிட், பான்டிங், ஜெயவர்தனே, சங்கக்காரா, காலிஸ். இவர்களுள் பந்துவீச்சிலும் கலக்கியது சச்சினும், காலிஸும் மட்டும்தான். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து 25534 ரன்கள் (ஆறாவது இடம்) & 519 விக்கெட்டுகள் (31வது இடம்) எடுத்துள்ள இவர், அதிக 50+ ஸ்கோர்கள் (211) எடுத்ததில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கிறார். இவ்வளவு ஏன் ஐபிஎல் அரங்கிலும் கூட சிறப்பாகவே செயல்பட்டார். 2010 சீசனில் 572 ரன்கள் விளாசி இரண்டாம் இடம் பிடித்தார். 2012 சீசனில் 409 ரன்கள் குவித்ததோடு 15 விக்கெட்டுகளும் கைப்பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக விளங்கினார். பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images நீண்ட காலம் சீராக ஆடியவர்! காலிஸ் இன்னும் அதிகளவு புகழப்படுவதற்கு இன்னொரு காரணம் அவர் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது. வேகப்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும்போதே கிரிக்கெட் வீரர்கள் காயத்துடனான போராட்டத்துக்கும் தயாராகிவிடுவார்கள். பேட்டர்கள் போல், ஸ்பின்னர்கள் போல் அவர்களால் அனைத்து போட்டிகளிலும் விளையாடிவிட முடியாது. அதேபோல், எந்தவொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராலும் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் விளையாடிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் ஹர்திக் பாண்டியா தொடங்கி ஆண்ட்ரே ரஸல் வரை அவர்கள் காயத்தோடு போராடுவதை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சர்வதேச அரங்கில் 519 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் காலிஸ். அனைத்து ஃபார்மட்களிலும் சேர்த்து அதிக போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 45346 பந்துகளை சந்தித்திருக்கும் காலிஸ், பௌலராக 31258 பந்துகள் வீசியிருக்கிறார். வக்கார் யூனுஸ், டேல் ஸ்டெய்ன், பிரெட் லீ போன்ற ஜாம்பவான் பௌலர்களை விடவும் அதிக பந்துகள் வீசியிருக்கிறார். மொத்தம் 76604 பந்துகளில் நேரடியாக காலிஸின் பங்களிப்பு இருந்திருக்கிறது. அதாவது சுமார் 10026 ஓவர்கள் அந்த 22 யார்டு பிட்சுக்கு நடுவே உழைத்திருக்கிறார். தொடர்ந்து போட்டிகளில் விளையாடியது மட்டுமல்லாமல், அந்தப் போட்டிகளில் அவர் சீரான செயல்பாட்டையும் கொடுத்திருக்கிறார். 1999 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஒரே ஒரு ஆண்டு மட்டும்தான் (2008) அவரது ஆண்டு பேட்டிங் சராசரி நாற்பதுக்கும் குறைவாக இருந்திருக்கிறது. காலிஸ் பற்றி ஒருமுறை பேசிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார, "தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு டிராவிட்டும், கபில் தேவும் இருந்திருந்து, அவர்களை ஒன்றிணைத்தால் என்ன வருமோ அதுதான் காலிஸ். அவரது திறன், ஒழுக்கம், நீண்ட காலம் ஆடிய தன்மையெல்லாம் அசாத்தியமானது" என்று புகழ்ந்தார். ஃபீல்டிங்கிலும் அசத்துபவர்! பட மூலாதாரம், Getty Images பேட்டிங், பௌலிங் மட்டுமல்ல, காலிஸ் ஃபீல்டிங்கிலும் அசத்தும் முழுமையான 3D வீரர். சர்வதேச அரங்கில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் 338 கேட்சுகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார் அவர்! இத்தனைக்கும் பெரும்பாலான கேட்ச்களை கடினமான ஸ்லிப் பகுதியில் நின்று பிடித்திருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஜாய் பட்டச்சார்யா காலிஸின் ஃபீல்டிங் திறனை வெகுவாகப் பாராட்டி சில ஆண்டுகளுக்கு X தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "2011ம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் பௌண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் காலிஸ். அங்கு மூன்று முழு நீள டைவ்கள் அடித்து 3 பௌண்டரிகளைத் தடுத்தார் காலிஸ். அணியின் ஃபிசியோ அவருக்கு உதவி செய்வதற்காக கிளம்பியபோது வேண்டாம் என்று காலிஸ் மறுத்துவிட்டார். அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்களில் வென்றது. டிரஸிங் ரூமில் காலிஸ் அவர் உடையைக் கழற்றியபோது அனைவரும் உரைந்து போனார்கள். ஏனெனில் உடல் முழுக்க காயம் பட்டிருந்தது. ரத்தம் ஒழுகியது. இளம் வீரர்கள் அர்ப்பணிப்பின் அர்த்தத்தை அன்று உணர்ந்து கொண்டார்கள்" என்று குறிப்பிடிருந்தார் ஜாய் பட்டாச்சார்யா. இந்த நிகழ்வு நடந்தபோது காலிஸின் வயது 35. ஓய்வுப் பிறகான சர்ச்சைகள் ஓய்வு பெறும் வரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பைக் கொடுத்த காலிஸ், ஓய்வுக்குப் பிறகு சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். 2016ம் ஆண்டு இட ஒதுக்கீடு இலக்குகளை எட்டாததற்காக தென்னாபிரிக்க விளையாட்டு சங்கத்தை அந்நாட்டு அரசு கலைத்தது. அதை விமர்சித்து அப்போது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் காலிஸ். அது விமர்சனத்துக்குள்ளனதும், "நான் அரசியில் தலையீட்டைத்தான் விமர்சித்தேனே ஒழிய, சமத்துவத்துக்கு எதிராக கருத்து சொல்லவில்லை" என்று விளக்கம் கூறிவிட்டு அந்தப் பதிவை நீக்கினார். 1995ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்காக அறிமுகம் ஆனவர் 2014 வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். சாதனைகள் பல படைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்க அணிக்காக ஒரு உலக கோப்பையை வெல்ல முடியாதது குறித்து எப்போதுமே வருந்தியிருக்கிறார். காலிஸைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல, ஜாம்பவான் பிரயன் லாரா ஒருமுறை சொன்னதையே பயன்படுத்தலாம் "ஒரு அணியில் பேட்டராக மட்டும் காலிஸால் இடம்பெற முடியும். ஒரு அணியில் பௌலராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். ஒரு அணியில் ஸ்லிப் ஃபீல்டராக மட்டுமே அவரால் இடம்பெற முடியும். காலிஸ் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்". இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg4z00w6gqo

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

3 months 2 weeks ago
சில கேள்விகள் - சில புரிதல்கள் ----- -------- ------ *13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? * 2009 இற்குப் பின்னர் 13 ஐ கோருமாறு தமிழர்களை மாத்திரம் வற்புறுத்துவது ஏன்? *ஜெனிவாவின் மடைமாற்றல்! -------- --- ------ இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது. 13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, தனது மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு. ஆனால் --- ஜேஆர் முதல் மகிந்த ரணில் வரையும் அதனை செய்யவில்லை. சமாதான தேவதை என்று மார்தட்டிக் கொண்டு வந்த சந்திரிகாவும் போரை நாடினார். இடதுசாரி - சோசலிசம் என்றெல்லாம் புனை கதை சொல்லி வந்த அநுர, இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான 60/1 ஜெனிவா தீர்மானத்தைக் கூட நிராகரித்துவிட்டார்... ஆகவே ------ A) 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும். அல்லது அவர்கள் ஒத்துழைக்கிறார்கள் இல்லை என்று ஏன் இலங்கை அரசாங்கம் உலகம் எங்கும் சொல்லித்திரிய வேண்டும்? B) அதனை இந்திய ஏன் நியாயப்படுத்த வேண்டும்? அப்படியானால் ---- 13 இல் இருந்து மிக முக்கியமான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு அல்லது அவர்களுடன் பேசப்பட்டதா? இல்லையே? 1) ஒரு இரவில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவித்தல் மூலம், 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் தன்னிச்சையாக (Arbitrarily) மீளப் பெறப்பட்டிருக்கிறதே? 2) அதைவிடவும் இருக்கின்ற அதிகாரங்களை இயங்க விடாமல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறதே? இப் பின்னணியில் யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் சில போலியான முற்போக்குத் தமிழர்கள், 13 பற்றி தரும் விளக்கம் வேடிக்கையானது. நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் - மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது... அது மாத்திரமல்ல --- ஒரு நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெற்று முடிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தையும் ஒரே தராசில் போட்டு, ஒட்டுமொத்தமாக தனி நபர் பொறுப்புக் கூறல் என்றும் ஜெனீவா வரையறை செய்வது தான் மாபெரும் அரசியல் வேடிக்கை... உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விவகாரத்தை மற்றொரு நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தி ஆராய முடியும். பொருத்தமான நிகழ்ச்சி நிரல் ஜெனிவாவில் உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன்? அத்துடன் ---- ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் எனவும், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார குற்றங்கள் எனவும், அதிகாரத் துஷ்பிரயோகம் - ஊழல் மோசடி எனவும், இனப் பிரச்சினை விவகாரம் சுருக்கப்பட்டுள்ளது. இந்த மடைமாற்றங்கள் --- ஈழத்தமிழர்களின் ”சுயநிர்ணய உரிமை” ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி” ஆகியவற்றுக்கு எதிரான சதி அரசியல் என்று தானே பொருள் கொள்ள முடியும்? புவிசார் அரசியல், குறிப்பாக இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் நோக்கில், அமெரிக்க - இந்திய அரசுகளை மையப்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கை குறித்த அணுகுமுறை உள்ளது. ஆகவே ----- ஜெனிவாவுக்கும் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என விருப்பினால்----- -------குறைந்த பட்சம் 13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களுக்கு கட்டளையிட முடியுமா?------ அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஐ கோருமாறு, 2009 இற்குப் பின்னரான சூழலில் பலவீனமாகவுள்ள தமிழர்களை மாத்திரம் ஏன் வலிந்து இழுக்கிறார்கள்? அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02zEDUjWq26S1UhUSbMU4QE1kQoQ8MFHDVaZo9eVZ5zciM76pRk1dK8mK8FJQZ5M8wl/?

யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்

3 months 2 weeks ago
வடமாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் - கூடி ஆராய்ந்தது தமிழ் கட்சிகள் 16 Oct, 2025 | 02:05 PM மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது தொடர்பில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் நேற்று புதன்கிழமை (15) நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூட்டத்திற்கு வருவதாக கூறிய நிலையில் இறுதி நேரத்தில் சுகவீனம் காரணமாக கூட்டத்திற்கு வருகை தர முடியவில்லை என அறிவித்து, கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. மாகாண சபை தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வடமாகாண சபை தேர்தலை தமிழ் காட்சிகள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் முகமாகவே இக் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்டவர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/227880

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

3 months 2 weeks ago
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு : கல்வி ஒத்துழைப்புக்கு உறுதி! Published By: Digital Desk 3 16 Oct, 2025 | 12:42 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை (ஒக். 16) காலை டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்தச் சந்திப்புக் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், "இன்று காலை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை டெல்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சி. இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். கல்வி அமைச்சராகவும் இருக்கும் அவர், தனது இந்திய விஜயத்தின் போது, இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) டெல்லி, மற்றும் நிதி ஆயோக் (NITI Aayog) ஆகியவற்றிற்கு விஜயம் செய்து, கல்வி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதுடன் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்தாலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227873

"ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!" - டிரம்ப் பரபரப்பு தகவல்

3 months 2 weeks ago
"ரஷ்ய எண்ணெய் தொடர்பாக பிரதமர் மோதி வாக்குறுதி" - டிரம்ப் கூறிய புதிய தகவல் பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டேனியல் கேய் வணிக செய்தியாளர் 16 அக்டோபர் 2025, 04:31 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, "குறுகிய காலத்துக்குள்" ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடும் என மோதி தனக்கு உறுதிமொழி அளித்ததாகக் கூறிய டிரம்ப், இதை "ஒரு முக்கியமான முடிவு" என்று குறிப்பிட்டார். வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தின் வெளியுறவுச் செய்தியாளர் இதைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். அமெரிக்கா, இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் விவகாரத்தை வர்த்தகப் போரில் ஓர் ஆதாயமாக பயன்படுத்த முயன்றது. ஆனால் இந்தியா அதை எதிர்த்தது, இதனால் இரு நாடுகளுக்கிடையே ஒரு ராஜீயப் பிளவு ஏற்பட்டது. எண்ணெயும், எரிவாயுவும் ரஷ்யா அதிகளவு ஏற்றுமதி செய்யும் பொருட்கள். ரஷ்யாவின் முக்கிய வாடிக்கையாளர்களாக, சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன. "இப்போது சீனாவையும் அதே மாதிரி செய்ய வைக்க வேண்டும்," என்று டிரம்ப் புதன்கிழமையன்று அதிபர் அலுவலகத்தில் கூறியுள்ளார். பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images படக்குறிப்பு, ரஷ்யாவுடனும் இந்தியா நல்ல உறவு நிலையைக் கொண்டுள்ளது அமெரிக்கா, ரஷ்யாவின் எரிசக்தி வருமானத்தை குறைக்க முயல்கிறது. அதற்காக, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் சீனாவிடமும் மற்ற பிற நாடுகளிடமும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்துகிறது. இந்தியா "உடனடியாக" எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது என்று கூறிய டிரம்ப், இந்த மாற்றம், "மெதுவாக நடைபெறும் செயல்முறையாக இருக்கும், ஆனால் விரைவில் முடிவடையும்" என்று தெரிவித்தார். டிரம்ப் நிர்வாகம், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. இது, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்காக இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை எனக் கூறினார் டிரம்ப் . இந்த வரிகள் ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தன. உலகிலேயே மிக அதிக வரிகளில் இதுவும் ஒன்று. ரஷ்யாவுடனான பரிவர்த்தனைகளுக்கு 25% அபராதம் விதிக்கப்படுகிறது, ஏனெனில் அவை யுக்ரேன் போருக்கான பொருளாதார ஆதாரமாக இருக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நல்லுறவைக் கொண்டிருந்தாலும், இந்தியா ரஷ்யா-யுக்ரேன் போரில் நடுநிலை வகிக்கிறது என்று கூறி, பல மாதங்களாக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, பிப்ரவரியில் எடுக்கப்பட்ட புகைப்படம் - டிரம்புக்கும் மோதிக்கும் இடையே அந்நேரத்தில் வர்த்தக விவகாரத்தில் முரண்பாடு எழுந்தது. யுக்ரேன் போரில் ரஷ்யா ஈடுபட்டதால் இந்தியா லாபம் அடைகிறது என்ற டிரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இந்திய அதிகாரிகள், அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யாவுடன் இன்னும் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்பதை குறிப்பிட்டு , இது 'இரட்டை வேடம்' எனக் கூறியுள்ளனர். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, தனது பொருளாதாரத்தை ஆதரிக்க, தொடர்ந்து தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. ரஷ்ய எண்ணெய் தொடர்பான சர்ச்சை, டிரம்புக்கும் மோதிக்கும் இடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், புதன்கிழமையன்று டிரம்ப், மோதியை "சிறந்த மனிதர்" என பாராட்டினார். மோதி, கடந்த வாரம் டிரம்புடன் பேசியதாகவும், "வர்த்தக பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அவர்கள் பரிசீலித்ததாகவும்" கூறியிருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,"மாறும் தன்மை கொண்ட எரிபொருள் சூழலில், இந்தியாவின் நுகர்வோர் நலனை பாதுகாப்பதே எங்களின் நிலையான முன்னுரிமை" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிறைவு செய்யும் நோக்கிலேயே இந்தியாவின் இறக்குமதி கொள்கைகளும் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், நிலையான எரிபொருள் விலை மற்றும் பாதுகாப்பான விநியோகம் ஆகியவை இந்தியாவின் எரிபொருள் கொள்கையின் இரட்டை இலக்குகள் எனவும், சந்தை நிலவரத்தை எதிர்கொள்ளும் வகையில் எரிபொருள் மூலங்களை விரிவு படுத்துவது தங்களின் நோக்கம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. "அமெரிக்காவைப் பொறுத்தவரையிலும் நாங்கள் நீண்டகாலமாக எங்களின் எரிபொருள் கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இது நிலையாக முன்னேறியுள்ளது. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடன் எரிபொருள் ஒத்துழைப்பை அதிகப்படுத்த முயன்று வருகிறது, இதற்கான விவாதங்களும் நடந்து வருகின்றன" எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7n8l75e4yo

யாழிற்கு வருகை தந்த வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள்

3 months 2 weeks ago
வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் நேற்று (13) மாலை இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். சுமார் 30 பேர் வரை வருகை தந்துள்ளதோடு இன்று (14) குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணிக்கின்றனர். குடாநாட்டின் கரையோரக் கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளை (15) நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmgq4g68g0101o29noeyxhu2f

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

3 months 2 weeks ago
இங்கிலாந்து - பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இடையில் கைவிடப்பட்டது Published By: Vishnu 16 Oct, 2025 | 03:27 AM (நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது. மழையினால் தடைப்பட்டு சுமார் 4 மணித்தயாலங்களின் பின்னர் மீண்டும் தொடர்ந்த இந்தப் போட்டி அணிக்கு 31 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. 31 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 9 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. எனினும் பாகிஸ்தானின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 31 ஓவர்களில் 113 ஓட்டங்கள் என அறவிக்கப்பட்டது. பதிலுக்கு திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் இரவு 9.32 மணிக்கு இரண்டாவது தடவையாக தடைப்பட்டது. ஒமய்மா அலி 19 ஓட்டங்களுடனும் முனீபா அலி 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். சிறு மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்ட தாக இரவு 9.58 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 31 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சுகளில் சரிவு கண்ட இங்கிலாந்து 25 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் பிற்பகல் 4.43 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது. மழை ஓய்ந்த பின்னர் இரவு 8.30 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது அணிக்கு 31 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. எஞ்சிய 6 ஓவர்களில் இங்கிலாந்து மேலும் 2 விக்கெடகளை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தியது. மத்திய வரிசையில் சார்ளி டீன் (33), எமி ஆர்லட் (18) ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர். அவர்களை விட ஹீதர் நைட் (18), அலிஸ் கெப்சி (16), சொஃபியா டின்க்லி (11) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் பாத்திமா சானா 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சாடியா இக்பால் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தப் போட்டி கைவிடப்பட்டதை அடுத்து இங்கிலாந்தும் பாகிஸ்தானும் 2 புள்ளிகளைப் பகிர்ந்துகொண்டன. இதற்கு அமைய இங்கிலாந்து 4 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது. அவுஸ்திரேலியாவும் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தென் ஆபிரிக்கா 6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் வரவேற்பு நாடான இந்தியா 4 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன. https://www.virakesari.lk/article/227842

இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை!

3 months 2 weeks ago
இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை! சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா பயணமானது 120 நாட்களில் பின்னர் நேற்றையதினம் மீண்டும் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் நிறைவடைந்துள்ளது. குறித்த இளைஞர்கள் வான் ஒன்றினை வீடாக மாற்றி அதில் சகல வசதிகளையும் உள்ளடக்கி, 25 மாவட்டங்களுக்கும் அந்த வானிலேயே சென்று, அந்த வானிலேயே தங்கி அன்றாட செயல்பாடுகளை முன்னெடுத்தனர். இவர்கள் நால்வரும் 25 மாவட்டங்களுக்கும் சென்று, அந்த 25 மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலாத்தலங்களை அடையாளப்படுத்தி அந்த இடங்களுக்கு அனைவரும் சென்று வரலாம் என்று எண்ணப்பாட்டினை இலங்கை மக்கள் மத்தியில் அல்லாமல் குறிப்பாக புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற மக்களின் மனதிலும் ஏற்படுத்தி சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு வலுச்சேர்த்துள்ளனர். இலங்கையின் அதிகளவான வருமானம் சுற்றுலா துறையின் மூலமே ஈட்டப்படுகின்றது. அந்தவகையில் சுற்றுலாத் துறை வருமானத்தை அதிகரிப்பதற்காக இளைஞர்கள் எடுத்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணம் - யாழ். திரும்பிய இளைஞர்கள் சாதனை!

மக்கள் 2019 இலும் 2024 இலும் ஏமாந்தனர் - அதனால் 2028 இல் கடனை செலுத்த முடியாது!

3 months 2 weeks ago
மக்களின் துயரங்கள், கண்ணீர், வலிகள் மற்றும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் பலமானதொரு அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ வேண்டும். அண்மையில் நடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாட்டின் 220 இலட்சம் மக்களும் ஏமாந்தனர். 2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நாடு வங்குரோந்தடைந்தது. 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது சமூகமயப்படுத்தப்பட்ட பொய்கள் மற்றும் ஏமாற்று பேச்சுக்களால் நாட்டு மக்கள் ஏமாறும் நிலைக்கு இன்று வந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நேற்று (15) மாத்தளை நகரில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, முன்னாள் பாராளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார உள்ளிட்ட மாவட்ட மட்ட பல அரசியல் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 2028 ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளப் போகும் சவால்கள் தொடர்பில் நல்ல புரிதலை கொண்டிருக்க வேண்டும். 2028 ஆம் ஆண்டளவில், ஆண்டுதோறும் 5 பில்லியன் டொலர் கடனை நாம் திருப்பிச் செலுத்த வேண்டி காணப்படுகின்றன. கடனைத் திருப்பிச் செலுத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை வேகப்படுத்த வேண்டும். தொழிற்துறை, விவசாயம், சுற்றுலா மற்றும் சேவைத்துறைகள் உட்பட சகல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றத்தை வேகப்படுத்தினால் மாத்திரமே 2028 முதல் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். பெற வேண்டிய வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பெறப்பட்டு வருகின்றன. பொருளாதாரம் வளர்ச்சி வேகம் முன்னேற்றம் காணாதவிடத்து, எம்மால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் அபாயம் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். IMF ஒப்பந்தம் குறித்து முந்தைய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய பொருளாதார ஆலோசகர்களின் கருத்துப்படி, இவ்வாறு போகும் போக்கில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்று கூறுகின்றனர். இன்று இவ்வாறு கூறும் இதே பொருளாதார ஆலோசகர்களே 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் வேண்டியிருந்த சமயத்தில், இல்லை 2028 ஆம் ஆண்டு முதலே கடனைத் திருப்பிச் செலுத்துகிறோம் எனக் கூறி முடிவை எடுத்தனர். எமது நாட்டின் பொருளாதார நிதியல் தொடர்பான பரந்த ஆய்வை மேற்கொண்டு, எமது நாட்டின் நிதியியல் இயலுமையைக் கருத்திற் கொண்டே 2033 ஆம் ஆண்டில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்தது. இந்த இணக்கத்தை மாற்றி, 2028 ஆம் ஆண்டு முதலே கடனைத் திருப்பிச் செலுத்த முடிவை எடுத்த பொருளாதார ஆலோசகர்களே இன்று இவ்வாறு வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால் நாடும் நாட்டு மக்களுக்குமே பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கம் பயணித்தது போலவே பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி பதவியையும், 159 பெரும்பான்மையையும், உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையையும் கொண்ட இந்த அரசாங்கம், முந்தைய அரசாங்கத்தின் அதே இணக்கப்பாட்டையே இன்னும் பின்பற்றி வருகின்றது. இதனை மாற்றியமைத்து, எமது நிதியியல் இயலுமைகளுக்கு ஏற்ப திருத்தங்களை மேற்கொள்ளுமாறே நாம் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறோம். எம்மால் மீண்டுமொரு வங்குரோத்து நிலையை சந்திக்க முடியாது. முகம் கொடுக்கவும் முடியாது. நேர்மையாகவே நாம் இந்த கருத்துக்களை முன்வைத்து வருகிறோம். அரசாங்கம் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். முந்தைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டாம் என்றே சொல்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், வங்குரோத்தடைந்த நாடு எனும் நாமமே நாட்டுக்கு கிட்டும். 2033 ஆம் ஆண்டு முதல் கடனைத் திருப்பிச் செலுத்தினால் போதும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், 2028 ஆம் ஆண்டு கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நாமாகவே இணக்கம் தெரிவித்துள்ளோம். எனவே, வரும் மூன்று ஆண்டுகளில் நாம் விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். அந்நிய செலாவணி கையிருப்பைப் பேணி வர வேண்டும். என்றாலும், இந்த அரசாங்கம் ஏமாற்று மற்றும் பொய்களையே சொல்லி வருகின்றது. ஏமாற்று நடவடிக்கைகளால் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடியாது. நடைமுறை ரீதியான பொருளாதார செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் வேறு, நாட்டு விவகாரம் என்பது வேறு. நாட்டை கருத்திற் கொண்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யான பேச்சுக்களை வைத்து அரசியல் அதிகாரத்தை தக்க வைக்க முயற்சித்தால் அது தற்காலிகமானது என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmgt2zlo0011no29nwh3caklb

மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் - இராமலிங்கம் சந்திரசேகர்

3 months 2 weeks ago
16 Oct, 2025 | 12:20 PM நாடாளுமன்ற உறுப்பினரானான ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே, கேடு கெட்ட அரசியலை அவர்கள் நிறுத்தாவிட்டால் முகத்திரைகளை கிழித்தெறிய வேண்டிய நிலை ஏற்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் அமைச்சில் (15) அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, ' மீரியபெத்த மண்சரிவு ஏற்பட்டு எத்தனை வருடங்கள்? இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்கள் என ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாரம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் கேட்கின்றேன். இவ்வளவு நாளும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தீர்களா? அவர்களுக்கான வீடுகள் தற்போதுதான் கட்டப்பட்டு கையளிக்கப்படக்கூடிய சூழ்நிலை வந்துள்ளது. வெத்து காகிதம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. வழங்கப்பட்டது காகிதமாக இருந்தாலும் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரியும். எனவே, கேடு கெட்ட அரசியலை நிறுத்துங்கள். எமது மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காமல், அவர்களை அடிமை வாழ்வு வாழ வைத்ததால்தான் கடந்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்தார்கள். கொழும்பில் இருந்த மக்களும் மனோவின் நாடக நடிப்பு அரசியலை நிராகரித்து, அவரை ஒதுக்கி வைத்துள்ளனர். மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்குரிய ஆதரவு அதிகரித்துவருவதால்தான் இவர்கள் கத்துவதற்கு ஆரம்பித்துள்ளனர். தம்பி ஜீவன் அரசியலை நல்ல முறையில் கத்துக்கொள்ளுங்கள். கூவித்திரிவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. கடந்த காலங்களில் நீங்கள் எத்தனை வீடுகளை கட்டினீர்கள்? கட்டிய சில வீடகள்கூட எந்த நிலையில் உள்ளது? எனவே, முடியுமாக இருந்தால் உதவி செய்யுங்கள், தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள் என திகா, மனோ, ராதா, ஜீவனிடம் கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் கதைக்கபோனால் உங்களின் முகத்திரைகளை கிழிக்க நேரிடும்." - என்றார். மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஜீவன் தொண்டமான், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk

இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்

3 months 2 weeks ago
( இணையத்தள செய்திப் பிரிவு ) இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனை கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார். இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்தது. அப்படியானால் மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு எங்கே நேரம் இருந்தது. இப்போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்களுக்கு சேவை செய்ய அரசாங்கத்துக்கு நேரம் உள்ளது. பாதாள உலக கும்பல் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கத்திடம் பல வசதிகள் உள்ளன. எனவே பாதாள உலக கும்பல் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையில்லை. ஆனால் அரசாங்கம் தவறு செய்தால், அதனை சுட்டிக்காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார். இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம் | Virakesari.lk
Checked
Wed, 02/04/2026 - 07:31
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed