1 month ago
கரும்புக்காரன் எனும் தெய்வமும் வழிபாட்டுமுறைகளும் தி. செல்வமனோகரன் அறிமுகம் மனிதகுல வரலாற்றில் புதிய கற்காலத்திலேயே (ஏறத்தாழ கி.மு 9000 – 6000) விவசாய உற்பத்தி, ஆயர்வாழ்வு என்பன தோன்றிவிட்டன (Allchin, F.R. 1963, Neolithic Cattle Keepers of South India, Cambridge). தமிழ்ச்சமூகத்திலும் காடுசார் வாழ்வுடைய திணைக்குடிகளான முல்லைநில மக்கள், ஆரம்பத்தில் மேய்ச்சல் நிலத்துக்கான புலம்பெயர்வாளர்களாக இருந்தபோதிலும் நிலையான குடியிருப்புகள் உடையவர்களாகவும் காணப்பட்டுள்ளனர். தரிசாக இருந்த கொல்லை நிலத்தில் (அகம்:89:17) பயிரிடல் மேற்கொள்ளப்பட்டது. காடழித்துக் களனியாக்கப்பட்டது (அகம், 394:3). முல்லைநில மக்கள் எருமை (கோட்டினத்தாயர்), மாடு (பசு ஆயர், கோவினத்தாயர்), ஆடு (புல்லினத்தாயர்) ஆகியனவற்றை மேய்த்துள்ளமையை அறியமுடிகிறது. இவர்களது பொருளாதாரம் கால்நடை வளர்ப்பு, விவசாய உற்பத்தி (வன்புல வேளாண்மை) என்பவற்றால் கட்டமைக்கப்பட்டது (நற்றிணை, 266:1-3). இந்த வாழ்வியலின் நீட்சியும் மருதநில, முல்லைநில வாழ்வியல் இணைவும் புதிய வர்க்கங்களையும் சமூகக்கட்டுமானங்களையும் தோற்றுவித்தன. கால்நடை, உழவு, உற்பத்தி எனக் கலப்புநிலையை ஏற்படுத்தின. ஈழத்துப்புலத்தில் விவசாயமும் கால்நடைவளர்ப்பும் இணைந்த வாழ்வமைவு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையது. நிலவுடமையாளரே கால்நடைப்பட்டியை உடையவராதலால் பெருங்குடி வேளாளர், சிறுகுடி வேளாளர் எனும் சாதிய அடுக்கமைவும், உழுவித்துண்போர், உழுதுண்போர் என்ற வர்க்கவமைவும் தவிர்க்கமுடியாதபடி உருவாயிற்று. அவற்றின்வழியே தெய்வங்களும் தெய்வநம்பிக்கைகளும் கட்டமைக்கப்பட்டன. புறப்பொருள் வெண்பாமாலை ஆதிகாலத் தமிழ்ச்சமூகத்தில் நிகழ்ந்த போர்களை எட்டாக வகுத்துரைக்கின்றது. அவற்றுள் ஆநிரை கவர்தல் – வெட்சி, ஆநிரை மீட்டல் – கரந்தை என்பன முதன்மை பெறுகின்றன. பூசல் எனும் போர் தொறுகோடல், மீட்டல் எனும் இரண்டையும் குறிக்கும் வண்ணம், தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை 5 இல் குறிக்கப்படுகிறது. தொறு – பசுக்கூட்டம், மாடுகள் எனவும்; தொறுப்பூசல் – மாடுபிடி, சண்டை எனவும் கூறப்படுகின்றது. ஆகவே பூசல் என்பது பெரும் போரைக் குறிக்காது. ஆநிரை கவர்தலையும் மீட்டலையும் வேறுபடுத்திக்காட்டப் பயன்பட்ட சொல்லாகவும் இது விளக்கப்படுகிறது (பக்தவத்சல பாரதி, 2020, பண்டைத்தமிழ்ப் பண்பாடு, அடையாளம், திருச்சி). முல்லைநிலக் கடவுளான மாயோனே கால்நடைகளின் தெய்வமாகச் சுட்டப்படினும் பிற்காலத்தில் மாயோன், திருமால் எனும் பெருந்தெய்வமானார். கால்நடைவளர்ப்போர் பிராந்திய மற்றும் முன்னோர் நம்பிக்கையின்வழி புதிய தெய்வங்களை தமக்கேற்றவகையில் உருவாக்கிக்கொண்டனர். அந்தவகையில் ஈழத்து வடபுல, கிளிநொச்சி மாவட்ட, பூநகரி வாழ்புலத்தில் நின்றிலங்கும் தெய்வமாக ‘கரும்புக்காரன்’ காணப்படுகின்றார். கரும்புக்காரன் கரும்புக்காரன் எனும் பெயர் அநேக ஊகங்களுக்கு இடமளிக்கின்றது. கருப்பு, கருப்புசாமி, கருப்பணசாமி எனப்பல பெயர்களால் குறிப்பிடப்படும் கருப்பன், கரும்புக்காரனாக விரிந்திருக்கலாம் எனக் கருதமுடிகிறது. ஆயினும் கருப்புசாமிக்குச் சொல்லப்படும் எந்த இலட்சணங்களும், வழிபடுமுறைகளும், கதைகளும் கரும்புக்காரனுடன் பொருந்துவதாயில்லை. விவசாய நடவடிக்கையில் கரும்பு, நெல் உற்பத்தி என்பன முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கரும்புத்தோட்டத்திற்குக் காவலாகக் கருதப்பட்ட தெய்வமாக இருக்கலாம் என அனுமானிப்பின், பூநகரியில் இத்தெய்வம் நின்றுநிலவும் பிரதேசங்களில் முன்போ தற்போதோ கரும்புப்பயிரிடல் இடம்பெற்றதாக அறியமுடியவில்லை. கரும்பைக் கையில் உடைய காமன், கரும்புக்காரன் எனப்பட்டான் எனக் கருதின், விவசாயத்துக்கும் கால்நடைவளர்ப்புக்கும், காதல் தெய்வமான காமனுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக அறியமுடியவில்லை. வடமராட்சியில் குறும்பன் எனும் தெய்வம் காணப்படுகிறது; தற்போது அது கருப்பன்சாமியாக வழிபடப்படுவது ஆய்வுக்குரியது என்ற ஒரு கருத்தை பா. இரகுவரனின் முகநூற்பதிவில் காணமுடிந்தது. பொதுவில் மலையகம் தவிர்ந்த, குறிப்பாக ஈழத்து வடபுலத்தில் கருப்பன்சாமி வழிபாடு அரிதான ஒன்றாகவே காணப்படுகின்றது. தமிழகச்சூழலிலோ ஈழத்தின் ஏனைய பிராந்தியங்களிலோ இத்தெய்வத்தையோ அல்லது இதனை ஒத்த தெய்வத்தையோ அடையாளப்படுத்த முடியவில்லை. ஆகவே பூநகரிப் பிராந்தியத்தின் கால்நடை, வேளாண்மைசார்ந்த தனித்துவமான தெய்வமாக கரும்புக்காரன் காணப்படுகின்றார். இத்தெய்வத்தைப் பற்றிய முதற்குறிப்பை வழங்கியவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் சி. செரஞ்சன் அவர்கள். இவரும், ஊடகவியல்துறை முகாமைத்துவ உதவியாளரும், ஆய்வு ஆர்வலருமான கோ. விஜிகரனும் எம்மோடு கள ஆய்வில் ஈடுபட்டனர். பூநகரியில் கரும்புக்காரன் பூநகரியின் கொடுதாவில் பிரதேசத்திலும், கிராஞ்சியிலும் கரும்புக்காரனுக்குத் தனிக்கோயில்கள் உண்டு. பல்லாய் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பரிவாரத்தெய்வமாக தெற்குப்பக்கத்தில் கரும்புக்காரன் வீற்றிருக்கின்றார். இவற்றைவிட வேறெங்கும் கரும்புக்காரன் இருப்பதாக அறியமுடியவில்லை. வயலும் (மருதம்), காடும் (முல்லை) சேர்ந்திருக்கின்ற, நெல்விளைச்சலும் பட்டிகளுக்கான மேய்ச்சல் தரவைகளும் (விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி) இணைந்திருக்கின்ற இந்தப்பிரதேசத்தின் தனித்தெய்வமாக, கரும்புக்காரன் முக்கியத்துவம் பெறுகின்றார். கரும்புக்காரன் யார்? இத்தெய்வத்தின் தோற்றம் பற்றிய கதைகள், வரலாறுகள் எவை? போன்ற கேள்விகளுக்கான விடைகளை வாய்மொழி வழக்காறுகளாகவேனும் அறியமுடியவில்லை. கொடுதாவில் கரும்புக்காரன் கோயில் பூநகரிப் பிரதேசத்தில், மன்னார் செல்லும் பாதையினால் உள்நுழையும் கிராமங்களில் ஒன்று கொடுதாவில். காடாகிக்கிடக்கும் இப்பிரதேசத்தில் முன்பு தோட்டங்கள் இருந்தபோதும் இப்போது இல்லை. சில மரமுந்திரிகைத் தோட்டங்கள் உள்ளன. கோயில் உரித்தாளர்களுள் முக்கியமானவரான இராமன் நாகேஸ்வரன் (இராசன் – வயது – 64), தனது பூட்டன் காலத்துக்கு முன்னைய ஆலயமாக கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலைக் குறிப்பிடுகிறார். கும்பாபிக்ஷேகம் நடைபெற்று மேனிலையாக்கம் செய்யப்பட்ட பல்லாய் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயமான பிள்ளையார் கோயிலில், குறித்த சமூகத்தையும், தெளிகரை எனும் ஊரையும் சேர்ந்த தம்பையா பொன்னம்பலம் பூசாரி (வயது, 70) அவர்களால் தொடர்ந்தும் பூசை செய்யப்பட்டு வருகிறது. இப்பல்லாய் பிள்ளையார் கோயிலில் இருந்தே ஏறத்தாழ இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலுக்கு மடைப்பண்டம் கொண்டுசெல்லப்படுகிறது. பல்லாய் மிகவும் செழிப்பான மருதநிலம்; பனைவளம் நிறைந்த ஊர். ஆயினும் ஈழப்போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டபின் வெள்ளப்பெருக்கு நிலையை அடிப்படையாகக்கொண்டு குள அபிவிருத்திக்காக இடப்பெயர்விக்கப்பட்ட நிலமாக அது மாறிவிட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் தெளிகரை, பூநகரி எனச் சிதறி வாழ்கின்றனர். இன்றும் குள அபிவிருத்தி தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிலிருந்து வெள்ளம் கடந்தே கொடுதாவிலுக்குச் செல்லும் சூழல் இவ் ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு பாடசாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. பல்லாய் வாழ்விழந்த ஊராயிற்று. பிள்ளையார் மட்டும் நிமிர்ந்து நிற்கின்றார். பட்டிமாடுகளும் மேய்ச்சல் தரவைகளும் வயல்வெளியும் நிறைந்த இப்பூமியின் சிறுகுடி வேளாள சமூகத்தின் (பள்ளர்) குலதெய்வமான கரும்புக்காரனின் கோயில், இன்றும் நாட்டார் மரபு சிறிதேனும்மாறாத பண்பியலோடு காணப்படுகிறது. ஆயினும் சீமெந்தாலான கட்டடச்சுவர் உடையதாக தற்போது கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்லாய் பிள்ளையார் கோயிலிலும் கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலிலும் கல்ரூபத்தோடு இரும்பாலான ரூபத்தில் கரும்புக்காரன் காட்சியளிக்கின்றார். பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் கல், முச்சூலம் (திரிசூலம்) வடிவங்களிலேயே காட்சி தருகின்றனர். ஆனால் கரும்புக்காரனின் இரும்பாலான ரூபம் தனித்துவமானது. குறித்த இரும்புக்கம்பியின் நுனியில் இருந்து 4-5 இஞ்ச் இடைவெளியில் மொட்டுப்போன்ற வடிவில் மூன்று வளைவு கம்பிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவை தாமரைமலர் மொட்டுப்போலக் காணப்படுகின்றன. நுனியில் வெள்ளி, தகரம் ஒட்டப்பட்டிருக்கின்றது. இன்னொன்றின் நுனி, இலை அல்லது வேல் போன்ற வடிவம் உடையதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது மாடுகளைக் கட்டும் கம்பியின் வடிவம் எனில் நுனியின் வட்டம் அல்லது வளைவே அதில் காணப்படும். இது மலர் மொட்டுப்போலவே காட்சியளிப்பது தனித்துவமும் அழகியலும் உடையதாக உள்ளது. இதற்கு உரிய விளக்கத்தை யாராலும் சொல்லமுடியவில்லை. கிராஞ்சி கரும்புக்காரன் கோயில் பூநகரி பிரதேசத்தின் கிராஞ்சி, விளாத்திமோட்டை, உறக்கிணறு பகுதியில் இக்கரும்புக்காரன் கோயில் காணப்படுகிறது. அப்பிரதேசத்தில் வாழும் சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தின் குலதெய்வமாக இத்தெய்வம் விளங்குகிறது. ஆரம்பத்தில் இத்தெய்வம் பிருந்தாவனக் கரைகடல் எனும் இலவங்குடாவில் இருந்ததாகவும், பின்னர் கிராஞ்சி, சிவபுரம் ஊர்மனையுள் இருந்ததாகவும், பின் அதன்மீதான அச்சத்தினால் கிராமத்தின் வடதிசையில் தற்போது உள்ள இடத்தில் கோயிலமைத்து வழிபட்டுவருவதாகவும் பூசாரி பழனி செல்லதுரை (வயது, 72) கூறுகின்றார். இந்த ஆலயத்தில் கரும்புக்காரன் ‘கல்’ வடிவத்திலேயே வணங்கப்படுகின்றார். இந்த ஆலயத்தின் பூசாரி தெரிவுமுறை மிகச் சுவாரசியமானது. நாற்பது வருடங்களுக்குமேல் பூசாரியாகத் தெய்வமாடிப் பூசை செய்துவந்த கணபதி சின்னத்தம்பி இறந்ததன்பின் பூசாரி இன்றி ஆலயவழிபாடு தடைப்பட்டது. உரிய விசேட காலத்தில் பானை வைத்துப் பொங்கும்போது, கரும்புக்காரன் வளந்துப்பானையில் பொங்கிவரும் நுரையை உரியநேரத்தில் அள்ளுபவர் யாரோ அவரே பூசாரி என்ற சம்பிரதாயம் உண்டு. அதன்படி எல்லாத் தெய்வங்களுக்கும் பொங்கலிடப்பட்டது. கரும்புக்காரன் பானை பொங்கிவரும் நேரத்தில் எங்கோவொரு மூலையில் மரத்தடியில் நண்பர்களோடு பொழுது போக்கிக்கொண்டிருந்த செல்லத்துரை அவர்கள் உருவேறி வேகமாகவந்து யாரும் எதிர்பாராதவகையில் நுரையை அள்ளியதோடு, அன்றிரவு முழுவதும் கலையாடி, காலையிலேயே தெய்வமிறங்கியதாக திரு. செல்வம் (வயது, 77) தெரிவித்தார். இருபது வருடங்களுக்குமேலாக பழனி செல்லத்துரையே பூசாரியாக இருந்துவருகிறார். மழைநீர் தேங்கும் நிலம் கடந்தே இந்த ஆலயத்திற்கும் செல்ல வேண்டும். காட்டினில் இக்கோயில் எந்தவகையிலும் நாட்டார்மரபு மாறாதவகையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலும் மருதமும், முல்லையும் – பட்டி வளர்ப்பும், விவசாயமும் இணைந்த பாரம்பரிய நிலமாகவே காட்சியளிக்கின்றது. விசேட தினங்கள் இவ்விரு கோயில்களிலும் தைப்பொங்கல், சித்திரைப் பிறப்பு, தீபாவளி, திருக்கார்த்திகை ஆகிய தினங்கள் விசேட தினங்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆயினும் கிராஞ்சிக் கோயிலின் சிறப்பு வழிபாடாக வைகாசி, ஆனி மாதங்களுக்கிடையில், ஏனைய ஆலயங்களின் பட்சங்களையும் அனுசரித்து வருடாந்தப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து ஞாயிறு வழி வெட்டப்படும். கொடுதாவில் கோயிலில் ஆனிப் பௌர்ணமியை மையமாக வைத்து வருடாந்தப் பொங்கல் இடம்பெற்று வருகின்றது. வழிபாட்டு முறைகள் பிராந்திய, சமூகத்தேவைகள் சார்ந்து இவ்விரு கோயில்களிலும் சிலசில வேறுபாடுகள் காணப்படினும், வழிபாட்டுமுறைகள் ஒத்ததன்மையுடையனவாகவே பெரிதும் காணப்படுகின்றன. கொடுதாவில் கரும்புக்காரனுக்கு பல்லாய் பிள்ளையார் கோயிலிலிருந்தும், கிராஞ்சி விளாத்திமோட்டை கோயிலுக்கு, வாண்டையான் பள்ளத்தில் உள்ள புளியமரத்தடியிலிருந்தும் மடைப்பண்டம் எடுத்துச் செல்லப்படும். வெள்ளிக்கிழமை காலையில் கிராஞ்சியில் காட்டுப்பிள்ளையாருக்கும், கொடுதாவிலிலுள்ள பல்லாய் பிள்ளையாருக்கும் பொங்கல் நடைபெறும். பிள்ளையார் பொங்கல் இடம்பெறும் அதேவேளை பல்லாய் பிள்ளையார் ஆலயத்திலிருந்து செல்லையாத்தீவு அம்மனுக்கு பண்டம் அனுப்பப்படும். அவ்வாலயப் பூசாரி அதனைப் பொங்கிக் கொடுத்தனுப்புவார் (அவ்வாலய மரபு உயர்குடி வேளாளருக்கானது). அப்படையல் பிள்ளையார் கோயிலில் விரதகாரருக்கு வழங்கப்பட்டபின், அன்னதானம் வழங்கப்படும். பின் அவ்வளந்துப்பானை கழுவப்பட்டு அம்மன் வளந்துடன், கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு அவ்வளந்துப்பானையில் மீளவும் பொங்கும் மரபு உண்டு. அப்பானையின் பொங்கல் படைக்கப்படுவதில்லை. அதனோடு, ஏனைய தெய்வங்களின் மூன்று படையல்களையும் இணைத்து சலவைத் தொழிலாளிக்கு வழங்கும் வழக்கமும் காணப்படுகின்றது. இம்மரபு கிராஞ்சி கரும்புக்காரன் கோயிலில் இடம்பெறுவதில்லை. கிராஞ்சியில் மடைப்பண்டம் எடுக்கமுன், ஐயனார் மடையை மரத்தின் அடியில் படைத்தபின்பு அன்னதானம் இடம்பெறும். அதன்பின் ‘கயிறு நேருதல்’ எனும் நிகழ்வு இடம்பெறும். கிராஞ்சியில் ஆத்திமரநாரைக் கிழித்து முப்புரியாகத் திரித்து நான்கு கயிறுகள் செய்வர். கொடுதாவிலில் உவரி மரநாரைப் பயன்படுத்துவதாக இ. நாகேஸ்வரன் தெரிவித்தார். அந்தக் கயிற்றை அடுத்த வருடம் பயன்படுத்துவதில்லை. வருடாவருடம் புதிதாகத் தயாரித்தே இருகோயில்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வெள்ளிக்கிழமை மாலை வெற்றிலை, பழம், பாக்கு, தேசிக்காய் உள்ளிட்ட ‘வெற்றிலை மடை’யை கரும்புக்காரன் கோயிலுக்குக் கொண்டுசெல்வர். ஆலயத்தை நீரால் கழுவுவதோடு சுற்றுப்புறச்சூழலையும் துப்புரவு செய்வர். அதன்பின் சலவைத் தொழிலாளியால் ‘வெள்ளை’ கட்டப்படும். பூசாரியால் விளக்கு வைக்கப்பட்டு, தெய்வமாடி, பூசையின் தன்மை பற்றியும் நிறைகுறைகள் பற்றியும் கூறப்படும். அதற்கேற்றபடி பூசைகள் முன்னெடுக்கப்படும். கிராஞ்சிக் கோயிலில் கரும்புக்காரன், இளந்தாரி, முன்னோடி, சிங்கள இளந்தாரி எனும் தெய்வங்களுக்கான பூசாரிகள் தெய்வமாடுவர் (செல்லத்துரை பகீரதன், வயது – 30). கொடுதாவில் கோயிலில் கரும்புக்காரனோடு நாச்சியார், பூவாளிப் பிள்ளையார், ஐயன் இளந்தாரி, சிங்கள இளந்தாரி, குறிப்பன், மாடன் போன்ற ஒன்பது தெய்வங்கள் காணப்பட்டாலும் கரும்புக்காரன், ஐயன் இளந்தாரி, சிங்கள இளந்தாரி, நாச்சிமார் போன்றவற்றின் பூசாரிகளே தெய்வமேறியாடுவர். இப்பூசாரிகளுக்கு வேளநூல் (கும்பத்துக்குச் சுற்றும் நூல்) கொண்டு பூணூல் போடப்படுகிறது. நூற்பந்திலிருந்து நூலை முழங்கையாற் சுற்றி பூசாரியின் இரண்டு பக்கமும் போடும் மரபு காணப்படுகின்றது (பிராமணர் ஒரு பக்கமாகப் பூணூல் போடுதல் நினைவுகூரத்தக்கது). நாச்சிமார் தெய்வமேறி ஆடுபவர் பெண்பூசாரி; அவருக்குப் பூணூல் இடப்படுவதில்லை. பூசாரிகளுக்கு திருநீறு, சந்தனம் இட்டு பன்னீர் தெளிக்கும் வழக்கமும் காணப்படுகிறது. கிராஞ்சி கரும்புக்காரன் கோயில் பூசாரி கறுப்புநிற ஆடை அணிவார். அது சுருக்கு வைத்த பாவாடையாக இருக்கும். காலில் சலங்கை, வெள்ளியாலான நெத்திப்பட்டம், பூட்டுக்காப்பு, வெண்டயம், அரையில் ஒட்டியாணம் என்பனவற்றையும், வெள்ளியாலான பூணூலையும் அணிவார். கொடுதாவில் பூசாரி வெள்ளி அணிகலன்களை இவ்வண்ணமே அணிகின்ற அதேவேளை, வெள்ளாடை அணிவார். அச்சுருக்குப் பாவாடையில் மூவர்ணக் கோடுகள் காணப்படும். கொடுதாவில் ஐயன் இளந்தாரி நெத்திப்பட்டம், வெண்டயம், பித்தளைப்பூணூல், வெள்ளாடை என்பனவற்றை அணிவார். சிங்கள இளந்தாரி வெள்ளாடை மட்டும் அணிவார். கிராஞ்சியில் சிங்கள இளந்தாரிக்கான பூசாரி வெள்ளை, சிவப்பு கலந்த ஆடையை அணிவார். கால்நடையும் கரும்புக்காரனும் கரும்புக்காரன் வழிபாட்டுச்சடங்கில் ‘பலகாலத்துக்கு’ முன்பு மாடுகளை வெட்டிப்பலியிட்டு வழிபடும் மரபு காணப்பட்டுள்ளது. பொங்கலோடு இவ்விறைச்சியைப் படைக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளது (வெட்டிப்பலியிடப்படும் மாடுகளின் எண்ணிக்கை 200க்கு மேல், 108, 60 என மாறுபட்டவகையில் பலவாறு கூறப்படுகிறது). படையல் சடங்கு முடிவடைந்ததன்பின் யாவரும் ஆலயத்தில் இருந்து வெளியேறிய பிறகே பூசாரி வீடு திரும்புவார். அதன்பின் ஆலயத்தில் நிற்பவருக்கு மரணம் நேரும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் காணப்படுகிறது. ஆயினும் குறித்த ஒரு வருடப் பூசை முடிந்து யாவரும் வெளியேறிய பிறகு, பூசாரியும் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரது சிறிய வயது மகன் ஆலயத்திலேயே விடப்பட்டுவிட்டது பின்பே அவருக்குத் தெரிந்தது. ஆலயத்துக்குச் செல்ல அவர் மனம் துணியவில்லை. தன் மகனைக் காக்குமாறு கரும்புக்காரனையே அவர் வேண்டிநின்றார். அச்சிறுவன் வீடு வந்து சேர்ந்தான். யாருடன் வந்தாய் என்ற கேள்விக்கு, தன்னை ஒரு மாமா கொண்டுவந்து விட்டதாகவும், கையில் ஓர் இறைச்சித்துண்டும் சிறுசோறும் தந்து ‘மாடுகளை வெட்டிப் படைக்க வேண்டாம்’ என்று கூறியதாகவும், பசுக்கன்றின் செவிகளில் இருந்து இரு சிறுதுண்டுகளையும், நாகு கன்றின் செவியில் இருந்து ஒரு சிறுபகுதியையும் வெட்டிப் படைக்குமாறு கூறியதாகவும் பதில் சொல்லி, கையிலிருந்த சோற்றையும் ஓர் இறைச்சித்துண்டையும் அவன் காட்டினான். அன்றிலிருந்து கரும்புக்காரனுக்கான பலியிடல் நிறுத்தப்பட்டு கன்றின் செவியில் சிறுதுண்டு வெட்டிப்படைத்தல் இரு ஆலயங்களிலும் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் இது கால்நடை வளர்ப்பாளர்களின் தெய்வம் எனலாம். மாட்டுக்கன்று பிடித்தல் கிராஞ்சியில் ஐயனார் பொங்கல் முடிந்து அன்னதானம் வழங்கிய பின்பும், கொடுதாவிலில் பிள்ளையார் பொங்கல் முடிந்து அன்னதானம் வழங்கிய பின்பும், கன்று பிடிக்கப் போவர். பிடிக்கப்போகும் மாட்டுக்கன்றுகள் நிற்கும் திசை, குறிப்பு என்பவற்றை, கிராஞ்சி சிங்கள இளந்தாரி, கொடுதாவில் ஐயன் இளந்தாரிப் பூசாரிகள் கலையாடிக் கூறுவர். கொடுதாவில் கரும்புக்காரன், ஐயன் இளந்தாரி பூசாரிகளும், மாடு பிடிக்கும் உரித்துடையோரும் கன்று பிடிக்கச்செல்வர். தனிக்கறுப்புநிற, மறை ஏதும் இல்லாத (அடையாளம்), குறிசுடப்படாத ஒரு பசுக்கன்றும் ஒரு நாம்பன் கன்றும் பிடித்துவரப்படும். மரநாரில் திரிக்கப்பட்ட கயிறுகள் கொண்டே இக்கன்றுகள் பிடிக்கப்படுகின்றன. இதன்பின்பு முன்னோடித் தெய்வமேறிய பூசாரி முன்னேசெல்ல, மடைப்பண்டங்களோடு கன்றுகளையும் கொண்டு, கால்நடையாக, பறை முதலிய வாத்தியங்கள் இசைக்கப்பட, கரும்புக்காரன் கோயிலுக்குச் செல்வர். அங்கு பூசை ஏற்பாடுகள் யாவும் நடைபெறும். ஆலயத்தின் முன்னே சற்றுத்தூரத்தில் உள்ள மரத்தில் குடை போன்ற முக்காடு போடப்பட்டு, சுற்றிவர வெள்ளை கட்டப்படும். அம்மரத்தடியில் கன்று கட்டப்படும். அது கன்றுக்கட்டை அல்லது கன்றுக்கொல்லை அல்லது கன்றுகட்டும் பாலை என்று கூறப்படுகிறது. முன்பு, பன்னைக் குழையினாலேயே கொல்லை வேயப்பட்டு வந்துள்ளது. பின்பு வெள்ளை கட்டும் மரபு உருவானது. இன்றும் இயற்கையோடு இணைந்த குலதெய்வ வழிபாடாகவே கரும்புக்காரன் வழிபாடு திகழ்கின்றது. மடை பரவுதல் கரும்புக்காரன் கோயிலில் கரும்புக்காரனுக்கும் பரிகலன்களுக்குமான வளந்துப்பானைகளை வைத்துப் பொங்கல் இடம்பெறும். தனிப்பசும்பாலே பொங்கலுக்குப் பயன்படுத்தப்படும். பால் கொதித்து வரும்போது மடை பரவப்படும். குலைகுலையாக பல்வேறு வகை வாழைப்பழங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றைச் சீப்புச்சீப்பாக வெட்டி அடுக்குவர். வெற்றிலை, பாக்கு என்பனவும் சிறப்பாக அடுக்கப்பட்டிருக்கும். பலாப்பழம், மாம்பழம் போன்றனவும் மடையில் இடம்பெறும். முறுக்கு, பால்றொட்டி (வெள்றொட்டி) போன்ற பலகாரங்கள் நிறைவாகச் செய்யப்பட்டு படைக்கப்படும். கிராஞ்சியில் வளந்துப்பானையில் பொங்கிவரும் நுரையை, பூசாரி தெய்வமேறி ஆடி, கைகளால் சுடச்சுட அள்ளிக்கொண்டுபோய் மடையில் தெளித்தல் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கொடுதாவிலில் மடையை ‘துலங்கல் மடை’ என்பர். கரும்புக்காரனோடு நாச்சிமார், பிள்ளையார், ஐயன் இளந்தாரி, சிங்கள இளந்தாரி, குறிப்பன், மாடன் உள்ளிட்ட ஒன்பது தெய்வங்களுக்கும் வெள்ளைவிரித்து வாழைப்பழம் சீப்புச்சீப்பாக அடுக்கி மடை வைக்கப்படும். பொங்கல் பொங்கி முடிந்ததன்பின் அவையாவும் படையல் செய்யப்படும். பூசாரிகள் தெய்வமேறிக் கலையாடுவர். அப்போது முன்னோடியின் கையில் மூன்று பூண்கள் (வெள்ளி) இடப்பட்ட கருங்காலிப்பொல்லும், கரும்புக்காரன் கையில் தனித்தடி அல்லது இரும்பாலான பொல்லு அல்லது முக்காலிப் பொல்லும் காணப்படும். மடை பரவி முடிந்ததன்பின் கன்றின் காதறுப்போருக்கு திருநீறு, சந்தனம் வழங்கப்பட்டு ஒருவர் கையில் வெற்றிலையும் மற்றவர் கையில் சிறுகத்தியும் வழங்கப்படும். மரத்தின் அடியில் கட்டப்பட்ட கன்றுகளுக்கு தீருநீறு, சந்தனம் இடப்பட்டு மாலை போடப்படும். நாகுவின் செவியொன்றின் சிறுபகுதியும், பசுக்கன்றின் இரு செவிகளிலிருந்து இரு சிறுதுண்டுகளும் வெட்டப்பட்டு, வெற்றிலையில் வைக்கப்பட்டு வழங்கப்பட, கரும்புக்காரன் பூசாரி அதைப் பெற்றுக்கொண்டு கலையாடியபடி ஓடிச்சென்று மடையின் மீது அதனை வைப்பார். ஆயினும் அச்செவித்துண்டுகளை, பின்பு மடையின் மீது காணமுடியாது எனத் தகவலாளிகள் யாவரும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வழிவெட்டல் சடங்கு முடிந்ததும், கன்றுகள் அவிழ்த்துவிடப்படும். அவை தத்தம் பட்டியைத் தவறாமல் சென்றடையும் என்றும், கரும்புக்காரனுக்கு செவிப்பலி வழங்கிய கன்றுகள் உள்ள பட்டிகள் நன்றே பெருகும் என்றும் நம்பப்படுகின்றது. பன்றி குத்தும் நிகழ்வு வழிவெட்டல் நிகழ்வுக்குமுன் பன்றி குத்தும் நிகழ்வு என்னும் சடங்கு நடைபெறும். ஒரு இளநீரைக் குறித்த இடத்தில் மண்ணுக்குள் (இளநீரின் அளவுக்கு ஏற்ப) கிடங்கு வெட்டிப் புதைப்பர். அவ்வாறு புதைக்கும்போது மரநாரில் திரிக்கப்பட்ட கயிறைத் தடம்போட்டு மண்ணில் மறைத்து கயிற்றின் நுனியினை சற்றுத் தள்ளிப்பிடித்தபடி நிற்பர். இளநீரை மண்ணுக்குள் புதைக்கும் சடங்கினை இளந்தாரி தெய்வத்துக்கான பூசாரி நிகழ்த்துவார். இவ்விடத்தின் மேல் பன்னைக்குழை போடப்படும். கரும்புக்காரன் பூசாரி கலையாடியபடி வர, பறை உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கப்பட, பாடல்கள் பாடப்பட, இச்சடங்கு நிகழும். பல்வேறு இடங்களுக்கு ஆடியாடிச்சென்று, இறுதியில் இளநீர் புதைக்கப்பட்ட இடத்திற்கு கரும்புக்காரன் பூசாரி சென்று, கையில் உள்ள இரும்பால் குத்தி இளநீரைத் தூக்க, தடக்கயிறு இழுக்கப்பட்டு இளநீர் இறுக்கிப்பிடிக்கப்படும். பின்பு அதனை கயிற்றோடு இழுத்துச்சென்று ஆலயத்துக்குப் புறத்தில் வீசிவிடுவர். கொடுதாவிலில் சூலத்தால் இளநீர் குத்தப்பட்டு எறியப்படும். யானையேற்றம் பூசாரி, பலம் பொருந்திய மனிதர்கள்மீது ஏறி வலம்வருதலே யானை ஏற்றம் எனப்படுகிறது. இவ்வாறு யானையேறி தெய்வத்தைச் சுற்றி வந்ததன்பின் வெள்ளை வேட்டியை நால்வர் ஏந்திப்பிடிக்க, பூசாரியின் ஆபரணங்கள், பொல், பிரம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் அவ்வேட்டியில் இடப்படும். அதன்பின் அவ்வேட்டியினால் அவற்றைச் சுற்றிக்கட்டி கோயில் வாசலின்மேல் வைக்கும் வழக்கம் கொடுதாவிலில் காணப்படுகின்றது. மேலும் யானையேற்றத்தின் போது வெள்ளிப்பூண் போடப்பட்ட கருங்காலிப் பொல்லில் துணியைக்கட்டி எண்ணையில் நனைத்துத் தீயிட்டு, பந்தமாக்கிக் கொண்டு செல்லுகின்ற மரபும் அங்கு உண்டு. வழிவெட்டல் சடங்கு பூசைகளில் யாவும் முடிந்ததன்பின் வழிவெட்டல் சடங்கு இடம்பெறும். ஆலயத்தில் இருந்து சிறிதுதூரத்தில் சூலம் குத்தப்பட்டு, இளநீர் வெட்டப்பட்டு இச்சடங்கு செய்யப்படுவதோடு கரும்புக்காரனுக்கான பூசை நிறைவுபெறும். வழிவெட்டியபின் பூசாரி திருநீறு, சந்தனம் என்பவற்றை அடியவர்களுக்கு வழங்குவார். அவரால் திருநீறு இடப்பட்டவர்களுக்கு நோய் நீக்கம் உள்ளிட்டவை ஏற்படும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. நேர்த்தி வைத்தவர்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி, தீச்சட்டி, பாற்செம்பு எடுத்தல் முதலிய செயற்பாடுகளைச் செய்வர். ஆலய முன்றலில் தீ மிதித்தல் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. கொடுதாவில் கோயிலில் பேய்விரட்டும் சடங்கும் நடைபெறுகின்றது. பேய்பிடித்த நபரின் தலைமயிரை ஓர் ஆணியில் சுற்றி ஆலயத்தின் முன்னே இருக்கின்ற மரத்தில் அடித்துவிட்டால் அவர் சுகம் பெறுவார் என நம்பப்படுகின்றது. வைத்தியர்களால் கைவிடப்பட்ட, தீரா நோயுடையவர்களுக்கும், படுக்கையில் நீண்டகாலம் மரணத்தை எதிர்பார்த்து (இழுத்துக்கொண்டு கிடப்பவர்கள்) இருப்பவர்களுக்கும் திருநீறிட்டு, பிரம்பால் அடித்து, தலைமையிரை ஆணியில் சுற்றி வெட்டிவிழுத்த சுகம்வரும் என கொடுதாவில் கோயிலைச் சேர்ந்த இராமன் நாகேஸ்வரன் தெரிவிக்கின்றார். கிராஞ்சி சரிமொந்தன் தெய்வம் கிராஞ்சி சிவபுரம் குளத்துக்கருகே உள்ள மருதமரத்தடியில் இத்தெய்வத்தை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். அக்காலத்தில் அவ்வழியில் செல்பவர்கள் மீது ஏறிச் ‘சேட்டைகள்’ புரிவதாகவும், நோய்நொடிகளை ஏற்படுத்துவதாகவும், மொத்தத்தில் மக்களுக்குத் துன்பம் தருவதாகவும் இத்தெய்வம் இருந்து வந்துள்ளது. கிராஞ்சிக்குவந்த பூசாரி ஒருவர், இத்தெய்வத்தை தெய்வமாடி அடக்கமுடியாது, இதனை இரு கோயில்களுக்கு நடுவே வைத்தால்தான் அமைதிபெறும், மக்களுக்குத் துன்பம் தராது என்று கூறியதாகவும், அதன்படி கரும்புக்காரனுக்கும் அதன் அருகே உள்ள முறிகண்டிப் பிள்ளையாருக்கும் இடைப்பட்ட இடத்தில் இந்த சரிமொந்தன் தெய்வத்தை வைத்ததாகவும், அதன்பின் இத்தெய்வம் அமைதி கொண்டதாகவும் கிராஞ்சியைச் சேர்ந்த செல்வம் குறிப்பிடுகின்றார். இத்தெய்வத்திற்கும் உருவமில்லை. வேறுகதைகள் இருப்பதாகவும் தெரியவில்லை. வேறு இடங்களில் இத்தெய்வம் வழிபடப்படுவதாகவும் அறிய முடியவில்லை. கரும்புக்காரன் பூசையின்பின் மூன்றாம் நாள் சரிமொந்தனுக்குப் பொங்கலிடப்படும். பானை பொங்கிவரும் போது கோழியின் கழுத்தை அறுத்து அல்லது முறித்து பலியிடும் வழக்கம் காணப்படுகின்றது. அத்தோடு அக்கோழியை அப்படியே நெருப்பில் இட்டுச் சுடுவர். தெய்வத்துக்கு மடைபரவும்போது இதனையும் வைத்துப் படைப்பர். இச்சடங்கு ‘எச்சில் மாத்தல்’ (எச்சில் மாற்றல்) எனப்படுகின்றது. இந்த மடை முழுவதும் சலவைத் தொழிலாளிகளுக்கு உரியதாகும். எட்டாம் மடை நாட்டார் தெய்வங்களுக்கு எட்டாம் மடை எனப்படுகின்ற சடங்கு பொதுவில் நிகழ்த்தப்படுதல்போல, கிராஞ்சியிலும் கரும்புக்காரனுக்கு எட்டாம்நாள் விளக்கு வைத்து, பொங்கி மடை பரவுவர். இத்தோடு கரும்புக்காரனுக்கான வருடாந்தப்பூசை நிறைவு செய்யப்படும். கொடுதாவில் கோயிலில் இச்சடங்கு இடம்பெறுவதில்லை. மூன்றாம் நாளே கோயில் பூசாரி, உரித்துடையோர் ஆகியோர் வருகை தந்து கோயிலைச் சுத்தப்படுத்தி, விளக்கு வைத்தலோடு வருடாந்தப்பூசை நிறைவு செய்யப்படுகின்றது. இவ்விரு ஆலயங்களிலும் விசேட தினங்களில் மட்டுமே விளக்கு வைக்கப்பட்டு வருகின்றது. ஏனையவை நேர்த்தி வைத்தவர்களுக்காக சிறப்புப் பூசைகளும் நடைபெற்றுவருகின்றன. அதேவேளை கொடுதாவில் கோயிலில் விசேட பூசைகளின்போது, கோயிலின் உள்ளே மடை பரவாது வாசலில் வைத்தே மடை பரவப்படுவது குறிப்பிடத்தக்கது. கிராஞ்சியில் வைத்தியர்களால் கைவிடப்பட்டவர்களுக்கான பூசை அவரவர் வீட்டில் இடம்பெற்று வருகிறது. கரும்புக்காரன், இளந்தாரி, முன்னோடி, சிங்கள இளந்தாரி எனும் நான்கு தெய்வங்களின் பூசாரிகளும் குறித்த நோயாளியின் வீட்டுக்குச் செல்வர். அப்பூசாரிகள் நால்வருக்கும் அவ்வீட்டவர் பச்சை அரிசி, பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய், மரக்கறிகள் என்பனவற்றைத் தானமாக வழங்குவர். அப்போது கரும்புக்காரனுக்கான பாடல், திருமுறைகள் என்பன பாடகரால் இசைக்கப்படும். அந்த இசையின்வழி கரும்புக்காரன் பூசாரியின்மீது தெய்வமேறி ஆடி, வழங்கப்பட்ட அரிசியைக் கிள்ளி எறிந்து அடங்க, நோயாளி தெளிந்துவிடுவார். அதன்பின் எட்டாம்நாள் கரும்புக்காரனுக்கு விளக்குவைத்துப் பொங்கலிட அந்த நோயாளி முழுச்சுகம் பெற்று விடுவார் என கிராஞ்சியைச் சேர்ந்த செல்வம் குறிப்பிடுகின்றார். இந்த நம்பிக்கை இன்றும் அவ்வூர் மக்களிடம் காணப்படுகின்றது. சில குறிப்புகள் இது கால்நடை – குறிப்பாக மாடுவளர்ப்புத் தொழிலுடன் இணைந்த வழிபாட்டுமரபு என்பது தெளிவாகின்றது. முக்காலிக்கம்பி, கரும்புக்கார தெய்வத்தின் குறியாக, அடையாளமாக அமைந்திருப்பதும் அதனை மக்கள் வழிபட்டுவருவதும் தனித்துவமான ஒரு விடயமாகின்றது. அண்ணமார், குறிப்பன், கரும்புக்காரன் உள்ளிட்ட சிறுவேளாண் குடி மக்களின் குலதெய்வங்கள், குறிப்பாக கால்நடைவளர்ப்புடன் தொடர்புபட்ட இத்தெய்வங்கள் யாவும் பிரம்பு அல்லது பொல்லுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாடுகள் பலவற்றை ஒன்றாகப் பலியிடல் சமய நம்பிக்கை எனினும், அது பெரும் பொருளாதார இழப்பாகவும் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் அறுபதுக்கு மேற்பட்ட மாடுகளை ஒன்றாகப் பலியிடல் ‘பட்டியழித்தல்’ ஆகவும் அமைந்தது. ஆகவே ‘இறைக்கட்டளை’யாக கூறுதல் சமய நம்பிக்கை இழப்பாகவோ, நம்பிக்கை மீறலாகவோ கருதப்படமாட்டாது எனும் எண்ணத்தின்வழி இக்கதை உரைக்கப்பட்டிருக்கலாம். பட்டி மாடுகளை ஏதோவொரு சூழலில் பலியிட விரும்பாத – பட்டி தொலைந்து போன – ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் இவ்வாறான கதை உருவாக்கப்பட்டிருக்கலாம். வேளாண்மை – கால்நடைவளர்ப்பு இருநிலப் பண்பாடாக இருந்தகாலத்தில் விவசாயத்தை அழித்த மேய்ச்சல் மாடுகளைப் பலி செய்திருக்கலாம். பின் இரண்டும் ஒன்றான வேளாண்மை வந்தகாலத்தில், பட்டியைப் பலியிட விரும்பாதநிலையில் இக்கதை உருவாக்கப்பட்டிருக்கலாம். பட்டியைக் காக்க உயிர் கொடுத்த தலைவனின் வேண்டுகோளாக, இப்பலியிடல் மரபு நிறுத்தப்பட்டு இருக்கலாம். சரிமொந்தன் கிராஞ்சிக்கு உரிய தனித்துவமாகின்றது. இத்தெய்வம் தனித்து ஆராயப்பட வேண்டியதாயினும் இத்தெய்வம் குறித்த தகவல்களைப் பெறமுடியாதுள்ளது. சரிமொந்தன் – சாரி பொத்தன் – சாரி புத்தன் என்பவற்றை ‘சாரிபுத்தன்’ என்பதன் திரிபாகக் கருதினால், அது பௌத்தத்துடன் இணைத்துச் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகின்றது (சம்பந்தர் வரலாற்றில் சாரிபுத்தன் தலையில் இடிவிழச் செய்யப்பட்டுக் கொல்லப்பட, அவருடன் வந்த ஏனைய பௌத்தர்களுடன் சம்மந்தர் வாதிட்டு வென்று அவர்களைச் சைவத்தில் சேர்த்த வரலாறு பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் கிராஞ்சிக்கு அருகில் உள்ள மன்னார் மாதோட்டத்தை, அங்குள்ள திருக்கேதீஸ்வரத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளமை கவனத்திற்குரிய விடயமாகும்.) கரும்புக்காரன் சிறுகுடி வேளாளரின் குலதெய்வம் எனினும், இவ்விரு கோயில்களும் சலவைத் தொழிலாளர்களுக்கும் மடைப்பங்கை வழங்கி வருகின்றன. கிராஞ்சியில் பங்குனி மாதத்தில் ‘பால் காய்ச்சுதல்’ எனும் சிறப்பு வழிபாடு கரும்புக்காரனுக்கு நிகழ்த்தப்படுகிறது. பச்சைப் பாலைக் கடைந்து நெய் எடுத்து அதில் விளக்கேற்றி, மடை வைத்து வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. பன்றி குத்தும் நிகழ்வு என்பது விவசாயத்தோடு சம்பந்தப்பட்டது. வயலை நாசம் செய்யவரும் பன்றியைக் குத்திக் கொல்லுதலும், தடம் வைத்துப் பிடித்தலுமான செயல்முறை இத்தெய்வத்தின்முன் சடங்காக, ஒருவகைக் கூத்தாக நிகழ்த்தப்படுகின்றது. பன்றியை உணவாகவோ தெய்வத்துக்கான படையலாகவோ எடுப்பதில்லை என்பது இங்கு கவனத்துக்குரியது. அதேவேளை இந்தச்சடங்கு வன்னிப் பிராந்தியத்தின் ‘பன்றிப் பள்ளு’ இலக்கியத்தையும் கூத்தையும் ஞாபகமூட்டி நிற்கின்றது. முடிவுரை கிராஞ்சி, கொடுதாவில் கிராமங்களில் காடுகளை அண்மித்தும், பல்லாய் பிள்ளையாரில் பண்டமெடுக்கும் இடத்திலும் கரும்புக்காரன் தெய்வம் வழிபடப்பட்டு வருகின்றது. மாடுவளர்ப்புத் தொழிலுடன் முழுமையாகத் தொடர்புபட்ட வழிபாடு இதுவாகும். ஆயினும் விவசாயநிலத்தோடும் இது தொடர்புறுத்தப்படுகின்றது. சிறுகுடி வேளாளர்களின் குலதெய்வமான கரும்புக்காரன் வழிபாட்டை வேறு எங்கும் காண முடியாதுள்ளது. சிறுகுடி வேளாளரின் அனைத்துக் குலதெய்வங்களும் பிரம்பு, பொல் என்பனவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. வேத வேள்வி மரபில் காணப்பட்ட ‘மாட்டைப் பலியிடல்’ எனும் கருத்துரு பிற்காலத்தில் பல்வேறு காரணங்களால் வேத வேள்வி மரபினரான வைதிக மதத்தவர்களாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இயற்கை தெய்வவழிபாட்டில், குறிப்பாக ஈழத்துத் தமிழ்ச்சூழலில் ‘மாடு பலியிடல்’ எனும் மரபு கரும்புக்காரனோடு பின்னிப்பிணைந்துள்ளது. இன்று முழுமையான பலியிடல் இல்லையாயினும், கன்றுகளுடைய காதுகளின் சிறுபகுதிகளை அறுத்துப்படைத்தல் என்பது அதன் நீட்சியே. கரும்புக்காரன் பற்றிய கதையாடல்கள், வாய்மொழிவழக்காறுகள் என்பவற்றை இன்று அறிவது சிரமமாக இருப்பினும், இவ்வழிபாடு இந்த நிலத்தோடும், அதன் பண்பாட்டோடும், பொருளாதாரத்தோடும் இரண்டறக்கலந்த இயற்கை வழிபாடாக இன்றும் திகழ்தல் குறிப்பிடத்தக்கது. https://www.ezhunaonline.com/the-god-of-karumpukkaran-and-its-rituals/
1 month ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் 19 வயதுப் பெண்ணால் இப்படியொரு அறிவியல் புனைவை எழுத முடியுமா என்று கேட்டார்கள்! அ. குமரேசன் எழுத்து நடை இவ்வளவு மோசமாகவா இருப்பது என்று ஒதுக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் அத்துமீறல்களை நியாயப்படுத்துவதாகத் தாக்கப்பட்ட அந்த நாவல், சிறந்த அறிவியல் புனைவுகளின் தொடக்கமாகக் கொண்டாடப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில் இங்கிலாந்தின் மேரி ஷெல்லி (Mary Shelley) (1797–1851) எழுதிய, 1818ஆம் ஆண்டில் வெளியான ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ (Frankenstein) என்ற நாவல் தான் இப்படி விமர்சனத் தடைகளைத் தாண்டியது. அவர் வாழ்ந்த காலத்தில் இத்தகைய எதிர்ப்புகளால் மிகக் குறைவாகவே விற்பனையாகிய புத்தகம், பின்னர் உலக அளவிலேயே அதிகமாகப் பரவிய அறிவியல் புனைவாக அடையாளம் பெற்றது. 1818இல் வந்த இந்த நாவலுக்கு ‘தி மாடர்ன் புரோம்தியஸ்’ என்ற தலைப்பும் உண்டு. நாவலின் உள்ளடக்கம் சார்ந்து விமர்சித்தவர்கள் முன்வைத்த வாதங்கள்: மதம் கற்பித்து வந்துள்ள வாழ்க்கை நெறிகளை மீறுகிறது; கடவுளன்றி ஒரு புதிய உயிரினத்தைப் படைக்கிற மகத்துவம் மனிதனுக்குக் கிடையாது; பொறுப்பற்ற அறிவியல் ஆராய்ச்சியை உயர்த்திப் பிடிக்கிறது; பிசாச குணம், உயிரின உருவாக்கம் ஆகியவை குடும்ப இலக்கிய மரபுக்கு மாறானவை; கதையின் முடிவு உணர்வற்றதாக, தீர்வை முன்வைக்காததாக இருக்கிறது. கதை நடை சார்ந்து விமர்சித்தவர்கள் கூறிய கருத்துகள்: (அந்நாளைய வழக்கப்படி) கவிதை நடையில் இல்லாமல் நேரடி உரைநடையில் எளிதாக வாசிக்கக்கூடியதாக இருக்கிறது; முந்தைய இலக்கியங்கள் போன்ற மொழிச் சிறப்புகள் இல்லை; கதையோட்டம் ஒரே சீராக இல்லாமல் பயணியின் நடை, ஆராய்ச்சியாளரின் நடை, அமானுடப் பிறவியின் நடை என மாறிக்கொண்டே இருக்கிறது; கதையை விட அதிகமாகத் தத்துவத்தைப் பேசுகிறது. பாதுகாத்த திறனாய்வுகள் பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) மற்றும் மேரி ஷெல்லி (Mary Shelley) பின்னர் வந்த இலக்கிய அன்பர்களும் திறனாய்வாளர்களும் இத்தகைய தாக்குதல்களிலிருந்து நாவலைப் பாதுகாத்தனர். மிகச் சிறந்த அறிவியல் புனைவு கிடைத்திருக்கிறது, ஆங்கில இலக்கியத்திற்கு ஒரு புதிய எழுத்துநடை அறிமுகமாகியிருக்கிறது, அறிவியல் பயன்பாடு பற்றிய ஆழ்ந்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது, பழமைச் சிந்தனைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறது என்று பாராட்டினார்கள். இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்ற நாவலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, நாவலை எழுதிய மேரி ஒல்ஸ்டோன்கிராஃப்ட் ஷெல்லி பற்றித் தெரிந்துகொள்வோம். அன்றைய சமூக–இலக்கியச் சூழலில், பெண்களால் ஆழ்ந்த இலக்கியத்தைப் படைக்க முடியாது என்று சிறுமைப்படுத்தும் ஆணாதிக்க மனநிலையிலிருந்தும் அவர் மீது விமர்சனக் கற்கள் வீசப்பட்டன. நாவலை எழுதியபோது மேரியின் வயது 19 மட்டுமே. அந்த வயதில் மனித வாழ்க்கையைப் பற்றியோ, சமூக மதிப்புகள் பற்றியோ, அறிவியலுக்கு உரிய இடம் பற்றியோ ஒரு பெண்ணுக்கு என்ன தெரிந்துவிடும் என்ற அலட்சியமும் விமர்சனங்களில் இருந்தது. உலகம் முழுவதுமே பெண் எழுத்தாளர்கள் இதைக் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது, இல்லையா? இத்தனைக்கும் மேரியின் தாய் பெண்களின் உரிமைகளுக்காக வாதாடியவர், எழுதியவர். தந்தை ஒரு தத்துவ அறிஞர், சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர். புதிய சிந்தனைக்கும் எழுத்தாக்க ஈடுபாட்டிற்கும் ஆதரவான குடும்பச் சூழலிருந்து வந்தவரானாலும் மேரி இந்த வேலிகளைக் கடக்க வேண்டியிருந்தது. புத்தகத்தின் தொடக்கப் பதிப்புகள் அவருடைய பெயர் இல்லாமல், “அனாமதேயர்” என்ற அடையாளத்துடன்தான் வெளியிடப்பட்டன! பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) மற்றும் மேரி ஷெல்லி (Mary Shelley) இன்னொரு முக்கியமான தகவல் – நீங்கள் பெயரை வைத்தே ஊகித்திருப்பீர்கள் – “ஷெல்லி” என்ற சுருக்கப் பெயரில் அறியப்பட்ட உலகப் புகழ்பெற்ற கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) (1792–1822) நாவலாசிரியரின் இணையர்தான். ஆங்கில இலக்கியத்தில் “ரொமாண்டிசிசம்” எனப்படும் உணர்ச்சிப் புனைவியல் வகை ஒன்று உண்டு. அதைக் கொண்டுவந்த முன்னோடிகளில் ஒருவர் ஷெல்லி. மானுட விடுதலை, மனித நேயம், அரசியல் எழுச்சி, மதவெறி எதிர்ப்பு, இயற்கை மேன்மை, காதல் சுதந்திரம், மனித நேயம் ஆகியவற்றைத் தம் கவிதைகளின் உயிரோட்டமாக வைத்தவர். போட்டியில் பிறந்த நாவல் இளம் வயதிலேயே ஷெல்லி–மேரி இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பல ஊர்களுக்குச் சுற்றினார்கள். அப்படியொரு பயணத்தின்போது 2016இல் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது, இருவருக்கும் இடையே, ஒரு முற்றிலும் புதுமையான, பயங்கரமான புனைவை யாரால் உருவாக்க முடியும் என்ற போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டிக்காக மேரி எழுதியதுதான் இந்த நாவல். அந்தப் புத்தகத்திற்கு ஷெல்லி முன்னுரை எழுதினார். 1822இல் ஒரு படகுப்பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் ஷெல்லி, தனது 30ஆவது வயதில் இறந்துவிட்டார். அவருடைய படைப்புகளைப் பின்னர் மேரி புத்தகங்களாகத் தொகுத்து வெளியிட்டார். ’வால்பெர்கா’ என்ற வரலாற்றுப் புனைவு (1823), ‘தி லாஸ்ட் மேன்’ என்ற எதிர்காலவியல் நாவல் (1826), ‘பெர்க்கின் வார்பெக்’ என்ற அரண்மனை வாழ்க்கை பற்றிய புதினம் (1830), ‘லோடோர்’ என்று பெண்ணின் கல்வி, மண வாழ்க்கை பற்றிப் பேசிய நெடுங்கதை (1835), ‘ஃபாக்னர்’ என்ற குடும்ப உறவுகளின் பின்னணியில் பெண்ணின் உள்ளுணர்வுகளில் வெளிச்சம் பாய்ச்சிய படைப்பு (1937) ஆகியவை மேரி ஷெல்லி எழுதியவையே. அத்துடன் மனித இயற்கை, சமூகச் சிக்கல்கள், பெண்களின் உரிமைகள், பயணக் குறிப்புகள் எனப் பல கட்டுரை நூல்களும் அவரிடமிருந்து வந்துள்ளன. ஷெல்லியின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தார். தன் சமகாலப் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொண்ட நிலைமைகள் குறித்த கடித வடிவிலான கட்டுரைகள் தொகுப்பும் குறிப்பிடத்தக்கது. கடைசி ஆண்டுகளில் ஒரு தனிமை உணர்வால் தவித்து வந்தவர் 1851இல் 53 வயதில் புற்றுநோய் தன்னை விழுங்கக் கொடுத்தார். விமர்சனங்களால் விழுங்க முடியாத இலக்கியச் சிறப்பைப் பெற்ற நாவலின் கதைமாந்தர்களைச் சந்திப்போம். புதிய உயிர் தென் அமெரிக்காவின் அலாஸ்கா அருகே பயணம் செய்கிற கடற்படை அதிகாரி ராபர்ட் வால்டன் எழுதிய கடிதங்களிலிருந்து கதை தொடங்குகிறது. பயணத்தின்போது உறைபனிக்குள் சாகும் நிலையில் கிடக்கும் ஒரு மனிதனை மீட்கிறார். அவன் பெயர் விக்டர் ஃபிராங்கஸ்டைன் – சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்தவன். அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமும் செயல்திறனும் உள்ளவன். விக்டர் தனக்கு நேர்ந்ததையும் தன்னால் நேர்ந்ததையும் அவரிடம் சொல்கிறான். கேப்டன் வால்டன் மூலம் நாம் விக்டரின் கதையைத் தெரிந்துகொள்கிறோம். மரணத்தை ஒரு முடிவாக அல்லாமல் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவனான விக்டர் ஃபிராங்கன்ஸ்டெய்ன், இறந்தவர்களின் உடல்களை வைத்து ஒரு நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான். புதிய உயிரை செயற்கையாக உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி. ஒரு கட்டத்தில் அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெறுகிறான். அந்த உடல்களிலிருந்து எடுத்த உறுப்புகளை இணைத்து, உயிரணுக்களைச் சேர்த்து ஒரு புதிய உயிரினத்தையே உருவாக்கிவிடுகிறான். மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத அந்த உயிரி அச்சமூட்டும் தோற்றத்துடன் கட்டுங்கடங்காத வலிமையைப் பெற்றிருக்கிறது. தான் உருவாக்கியதைப் பார்த்து தானே அஞ்சுகிற விக்டர், அதை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். பெயர் எதுவும் சூட்டப்படாத அந்த உருவம் தன் சொந்த முயற்சியில் மொழியைக் கற்றுக்கொள்கிறது. என்ன செய்தாலும் மனிதர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உணர்கிறது. தன்னை நேசிக்கக்கூடிய ஒரு மனித உயிரையாவது காண முடியாதா என்று தேடுகிறது. பல இடங்களுக்கும் செல்கிறது, அங்கெல்லாம் அதைப் பார்த்துவிட்டு மனிதர்கள் அலறியடித்து ஓடுகிறார்கள். ஒரு விவசாயக் குடும்பத்தை ஒளிந்திருந்து கவனிக்கும் அந்த உயிரினம், அவர்களுடன் பழக முயல்கிறது. ஆனால் அவர்களும் அதைக் கண்டு ஓடிவிடுகிறார்கள். இப்படி எல்லோராலும் ஒதுக்கப்படுவதால் தனிமையாக உணரும் புதிய உயிரி தன்னுள் வெறுப்பையும் ஆத்திரத்தையும் வளர்த்துக்கொள்கிறது. பழிவாங்கும் செயல்களில் இறங்கும் அந்த உயிரி விக்டரின் ஒரு நண்பரைக் கொல்கிறது. தம்பியைக் கொல்கிறது. பின்னர் அவனுடைய மனைவியையும் கொல்கிறது. ஒரு புனிதச் சடங்கு நிகழ்விலும், ஒரு திருமண விழாவிலும் புகுந்து பலரையும் தாக்குகிறது, சேதங்களை ஏற்படுத்துகிறது. திரும்பி வரும் விக்டரிடம், தனக்குத் துணையாகத் தன்னையொத்த ஒரு பெண் உயிரியை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது. அவன் மறுத்துவிடுகிறான். இது அதனுடைய ஆத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது. அவன் சார்ந்த எல்லோரையும் கொல்கிறது, கடைசியில் தன்னைப் படைத்தவனையும் கொன்றுவிடுகிறது. விக்டரின் மரணத்திற்குப் பிறகு, கப்பலுக்கு வரும் உயிரி, கேப்டன் வால்டனைச் சந்திக்கிறது அந்த உயிரி. ஏற்கெனவே அவனிடமிருந்து அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிற வால்டனுக்கு அதைப் பார்த்ததும் பயம், கவலை, குழப்பம் ஆகிய உணர்வுகள் ஏற்படுகின்றன. இருந்தபோதிலும் அதன் மீது பரிவும் ஏற்படுகிறது. அந்த “அசுரன்” பாவம் செய்கிற குற்றவாளியல்ல, பாதிக்கப்பட்ட ஓர் உயிர்தான் என்று புரிந்துகொள்கிறார். அதேவேளையில், அது செய்த கொலைகளையும் மற்ற கொடூரங்களையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவராகக் குழப்பத்தில் தவிக்கிறார். அவரிடம், தன்னைப் படைத்தவன் தனக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்திருப்பான் என்று கூறும் உயிரி, தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புவதாகக் கூறுகிறது. “நான் இறந்துவிடுவேன், இப்போது நான் உணரும் எதுவும் இனி உணரப்பட மாட்டாது. இந்தத் துன்பத் தீ விரைவில் அணைந்துவிடும். என் சிதைக் குவியலின் மீது நான் வெற்றிகரமாக ஏறுவேன், வதைக்கும் தீப்பிழம்புகள் ஏற்படுத்தும் வேதனையில் மகிழ்வேன். அந்தப் பெரும் நெருப்பின் ஒளி மங்கிவிடும்; என் சாம்பலைக் காற்று கடலுக்குள் அடித்துச் சென்றுவிடும். என் ஆன்மா அமைதியாக உறங்கும், அல்லது அது சிந்திக்குமானால், நிச்சயம் இது போலச் சிந்திக்காது. விடைபெறுகிறேன்!” இவ்வாறு கூறிவிட்டு, காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. அது தற்கொலை செய்துகொண்டதாக நாம் முடிவுக்கு வருகிறோம். கேள்விகள் இணையத் தரவுகளில் கிடைக்கிற இந்தக் கதையும், தெரியவரும் பாத்திரங்களும் கற்பனை என்றாலும், உண்மை வாழ்க்கையில் அறிவியலைப் பொறுப்புடன் கையாளத் தவறினால் என்னாகும் என்ற வினாவை எழுப்புகின்றன. சிலர் இந்த நாவல் அறிவியலுக்கு எதிரானது என்றும் ஆராய்ச்சிகள் பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்கள். ஆயினும், இது அறிவியல் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்களுக்கு ஆதரவான நாவல்தான் இது என்று திறனாய்வாளர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள். இன்றைய ஏஐ தொழில்நுட்பத்தை சுயநலமிகளும் சுரண்டல் வேட்கையர்களும் தவறாகப் பயன்படுத்துவதால் மனித இனத்திற்கே ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள் அல்லவா? இன்று நாம் காணும் மரபணு ஆராய்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் வளர்ச்சிகளுக்கான தொடக்கப் புள்ளிகளை அந்தக் காலத்திலேயே, அந்த வயதிலேயே ஒரு பெண் கற்பனை செய்து எழுதியிருப்பது எளிதாகக் கடந்துவிடக் கூடியதல்ல என்று இப்போது அந்த நாவல் பற்றிப் பேசுகிறவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவ்வகையில் மேரி ஷெல்லி தன் காலத்தை மீறிச் சிந்தித்துக் கதை புனைந்தவர் என்ற பாராட்டையும் வழங்குகிறார்கள். விக்டரிடம் பேசும் உயிரி, “நான் உன் ஆதாமாக இருக்க வேண்டியவன். ஆனால் வீழ்ந்த தேவதூதனாகிவிட்டேன்,” என்று கூறுகிறது. பைபிள் கதைப்படி, கடவுளின் கட்டளைக்கு எதிராகப் போகிற தேவதூதர்களை வீழ்ந்த தேவதூதர்கள் என்று குறிப்பிடுவது மதமும் இலக்கியமும் சார்ந்த மரபு. நல்ல நோக்கங்களிலிருந்து விலகித் தன்னலத்திற்காகத் தரம் தாழ்கிறவர்களைக் குறிப்பிடவும் “வீழ்ந்த தேவதூதர்” என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு இடத்தில் விக்டர் இவ்வாறு கூறுகிறான்: “என்னிடமிருந்து கற்றுக்கொள், என் போதனைகளால் இல்லாவிட்டாலும், என்னை எடுத்துக்காட்டாகக் கொண்டாவது என்னிடமிருந்து கற்றுக்கொள் – அறிவைப் பெறுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை.” நுட்பமான எச்சரிக்கை அறிவும் அறிவியலும் மனித மாண்புகளுக்காக அல்லாமல் சுய மோகங்களுக்கும் லாபத் தாகங்களுக்கும் கையாளப்படுமானால் அது அவ்வாறு கையாளுகிறவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தானதாக முடிந்துவிடும். இதை இந்த வரிகள் நுட்பமாக எடுத்துரைக்கின்றன. அறிவியல் மக்களுக்கே என்று சொல்லாமல் சொல்கிற இடம் இது. இந்தக் கருத்தாக்கம் இந்த நாவலைத் தொடர்ந்து பிற்காலத்தில் வந்த பல இலக்கியப் படைப்புகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சியால் உருவாகும் ஆபத்தான உயிரிகளிடமிருந்து அல்லது ரோபோக்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாக்கும் வீரர்கள் பற்றிய ஒற்றைக் கதைகளும் தொடர்களும் வலைத்தளத் திரைகளுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. உயிரினம் ஒன்று தனிமையில் விடப்படுவது எவ்வளவு அபாயகரமானது என்று சித்தரித்து, மனிதர்களும் என்றும் எங்கும் தனிமைப்பட்டுப் போகாமல் துணைகளோடு வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அந்தக் கதைகள் எடுத்துரைக்கின்றன. மனித உணர்வும், மானுட அக்கறையும் அனைத்தையும் விட மகத்தானவை என்று இலக்கியமும் கலையும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அப்படிச் சொல்வதற்கு “ஸ்டார்ட்” பட்டனை அழுத்தியது ‘ஃபிராங்கன்ஸ்டெய்ன்’ நாவல் என்று உறுதியாகச் சொல்லலாம். https://bookday.in/books-beyond-obstacles-16-mary-shelleys-frankenstein-novel-based-article-written-by-a-kumaresan/