புதிய பதிவுகள்2

15 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொஸ்வத்த பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 2 03 JUL, 2025 | 05:05 PM அரசாங்கத்தின் 15 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொஸ்வத்த பகுதியில் புதன்கிழமை (02) தீப்பந்தங்களை கையில் ஏந்தி மக்கள் போராட்ட இயக்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மின்கட்டணத்தை கணிசமானளவு குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதாக உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் மக்கள் போராட்ட இயக்கத்தினரால் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை வேளையில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு”, சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கேற்க அரசாங்கம் செயல்படுகிறது, சர்வதேச நாணய நிதியம் ஓர் மரணப் பொறி, மின் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதைகளையும், தீப்பந்தங்களையும் கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் மக்கள் போராட்ட இயக்கத்தின் கொழும்பு மாவட்ட குழு பிரதிநிதி திலான் சம்பத் குறிப்பிடுகையில், கடந்த மாதம் முதல் மின்சாரக் கட்டணம் 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மின்சார கட்டணத்தில் மூன்றில் இரண்டைக் குறைக்க முடியும் என்றே அரசாங்கத்தினர் தெரிவித்தனர். எனினும் ஆட்சிக்கு வந்த பிறகு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டனர். முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட மின்சார சபை மறுசீரமைப்புக்கான சட்டமூலத்தை செயற்படுத்த அனுமதிக்கப் போவதில்லை, என தெரிவித்த அரசாங்கம் அதை மீள கையில் எடுத்துள்ளது. மின் கட்டண உயர்வால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாதிப்படையக்கூடும். அரசாங்கத்தின் இத்தீர்மானத்தால் மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் மீண்டும் நெருக்கடிக்குள்ளாகலாம். ஆகையால் மின் கட்டணத்தைக் குறைப்பதுடன் மின்சார சபை மறுசீரமைப்புக்கான சட்ட மூலத்தை மீளப் பெருமாறும் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/219120

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

3 months 1 week ago
🟥 இரு இளைஞர்கள் உயிரிழப்பு! புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், இன்று பிற்பகல் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் கந்தரோடையை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 🕯️ இளம் உயிர்கள் பிரிந்தது வேதனை! ⚠️ இளைஞர்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியம் எனும் செய்தியையும் இந்த விபத்து எடுத்துக்காட்டுகிறது. புதிய விடியல் யாழ்ப்பாணம்

ஐரோப்பாவை திணற வைக்கும் வெப்ப அலை - அதிகரிக்கும் உயிரிழப்பு.

3 months 1 week ago
ஐரோப்பாவை திணற வைக்கும் வெப்ப அலை - அதிகரிக்கும் உயிரிழப்பு. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அதிக வெப்பநிலையாக 46 செல்சியஸ் பதிவானது. ஐரோப்பா முழுவதும் வீசும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தெற்கு ஸ்பெயினும் ஒன்று. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் சில நாடுகள் 40 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன. போர்ச்சுகல், குரோஷியா மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இத்தாலியில் வெப்ப அலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் நாடு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஹூட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பார்சிலோனாவில் சனிக்கிழமை வெப்பம் அதிகமாக இருந்தபோது, சாலை துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய ஒரு பெண் உயிரிழந்தார். ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, பெல்ஜியம், போஸ்னியா, ஹங்கேரி, செர்பியா, ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஆம்பர் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆம்பர் எச்சரிக்கை என்பது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்க கூடிய கடுமையான வானிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறிக்கும் எச்சரிக்கையாகும். BBC News தமிழ்

எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம்

3 months 1 week ago
03 Jul, 2025 | 11:13 AM எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. பொரும்பாலான பயணிகளின் மனதை வென்ற நம்பகமான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை காணப்படுகிறது. LMD வர்த்தக சஞ்சிகையின் விரும்பத்தக்க அதிக தரம் கொண்ட விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை காணப்படுகிறது. சஞ்சிகை ஊடாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து நாடளாவிய ரீதியில் உள்ள பல மக்கள் அறிந்து கொண்டனர். LMD என்பது இலங்கையின் பிரபல வர்த்தக சஞ்சிகையாகும். பயணிகளுக்கு நம்பகமான சேவையை வழங்குவது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை பெருமை கொள்கிறது. ஒவ்வொரு பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை மதித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சேவையை வழங்குகின்றது. ஸ்ரீலங்கன் விமான சேவையானது ஐரோப்பா, இந்திய துணைக் கண்டம், மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் ஓசியானியா ஆகியவற்றிற்கு ஒவ்வொரு வாரமும் சுமார் 300 தடவைகள் விமான சேவைகளை வழங்குகின்றது. இது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் முன்னேற்றம் மற்றும் சேவையை இது எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய ரீதியில் உள்ள பயணிகளின் விரும்பத்தக்க விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை காணப்படுகின்றது. எல்.எம்.டி. சஞ்சிகையின் "அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமங்கள் " பட்டியலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முதலிடம் | Virakesari.lk

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் ; சுமார் 67,000 பன்றிகள் பாதிப்பு

3 months 1 week ago
03 Jul, 2025 | 02:24 PM நாட்டில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இந்நோய் கொடிய வைரஸ் நோய் தாக்கத்தினால் சுமார் 67,000 பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அராசங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிப் பொருட்களைப் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு முற்றாக தடை தடை விதித்தல் உட்பட கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில்,மேல், ஊவா, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட பல மாகாணங்களில் இந்த வைரஸ் நோய் வேகமாகப் பரவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வைத்தியசர கொத்தலாவல சுட்டிக்காட்டினார். இந்த நோய் 100 சதவீதம் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை 95 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ச்சியான விழிப்புணர்வு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க பண்ணையார்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். "பதிவு செய்வதன் ஊடாக உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தவும் எதிர்கால இழப்புகளைக் குறைக்கவும் எங்களுக்கு உதவுகிறது" என தெரிவித்துள்ளார். ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல் ; சுமார் 67,000 பன்றிகள் பாதிப்பு | Virakesari.lk

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

3 months 1 week ago
03 Jul, 2025 | 03:11 PM குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர | Virakesari.lk

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர்

3 months 1 week ago
03 Jul, 2025 | 04:46 PM இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில்கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்டத் தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (3) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட பிராந்திய மீனவர்களின் பாரிய பிரச்சினையாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை காணப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கச்சத்தீவு மீட்பு போராட்டம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் கூறப்பட்ட விடயம் குறித்தும் அதற்கான தக்க பதிலடியை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளார். எமது கடற்றொழில் அமைச்சர் வழங்கிய பதிலை நாங்களும் கூற விரும்புகிறோம். இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்து எமது கடல் வளத்தை நாசப்படுத்துவதும், இராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தச் சொல்வதும் கால அவகாசத்தை கோருவதாகவும் காணப்படுகிறது. இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான கடற்றொழிலையே செய்கின்றனர். இதனை முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் வழங்கும்போது அதற்கான பல்வேறு விடயங்களை இலங்கை விட்டுக் கொடுத்துள்ளது. எமது மீனவர்களின் பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டதாக காணப்படுகிறது. இலங்கை வட பகுதி மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். எமது மீனவர்களின் வயிற்றில் அடிக்கிற செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்கவேண்டியது ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரின் கடமை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே, இவற்றை கருத்தில் கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல், எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர் | Virakesari.lk

நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு

3 months 1 week ago
03 Jul, 2025 | 05:40 PM நாட்டில் நாய்க்கடி அதிகரிப்பதற்கு, அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கை மற்றும் கால்நடைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பொதுமக்களிடம் புரிதல், போதிய கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இன்மையே முக்கிய காரணம் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க, 2000 ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு ரேபிஸ் வைரஸ் எனப்படும் விசர் நாய் கடி நோயை ஒழிக்க நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விசர் நாய் கடி கட்டளைச் சட்டத்தின் படி, தெருநாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களைப் பிடிக்கவோ அல்லது கருணைக்கொலை செய்யவோ அதிகாரிகள் ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார். மனிதர்களுக்கு விசர் நாய் கடி நோய் ஏற்படுவதை தடுக்க சுகாதார அமைச்சு முக்கிய பங்காற்றி வருகிறது என்றாலும் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்ட விசர் நாய் கடி கட்டுப்பாட்டிற்கான பொறுப்பு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் (DAPH) கீழ் வருகிறது. 2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை, அரசாங்கக் கொள்கையின்படி நாய்களைப் பிடிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக, நாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்க சுகாதார அமைச்சு கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஒரு கட்டத்தில், கால்நடை இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த டெப்போ - புரோவெரா ஊசியைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இந்த முயற்சி பின்னர் நிறுத்தப்பட்டது. தற்போது, சுகாதார அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33,000 நாய்களுக்கு கருத்தடை செய்கிறது. இருப்பினும், நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்த இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு குறைந்தது 100,000 ஆக அதிகரிக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக, சரியான குப்பைகள் அகற்றப்பட வேண்டும். வீதியோரங்களில் குப்பைகளை கொட்டுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கால்நடைகளின் நடத்தை தொடர்பில் குறிப்பாக சிறுவர்களுக்கு பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவை அதிகரிக்க வேண்டும். நாய் கடியில் இருந்து எவ்வாறு தடுப்பது என்பதை பொது மக்கள் கற்றுக்கொள்வதும், நாய்கள் ஏன் கடிக்கக்கூடும் என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம். இது சம்பந்தமாக, கால்நடை பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டங்களில் கல்வி அமைச்சு தீவிர நாட்டம் காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். நாய்க்கடி அதிகரிப்பு : நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் விழிப்புணர்வு இன்மைக்கும் தொடர்பு | Virakesari.lk

யுக்ரேன் போர் வீரர்களின் உயிரை காப்பாற்ற காந்தம் உதவுவது எப்படி?

3 months 1 week ago
பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC படக்குறிப்பு, யுக்ரேனிய வீரர் செர்ஜி மெல்னிக் தனது இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டை கையில் வைத்திருக்கிறார். கட்டுரை தகவல் அனஸ்தேசியா கிரிபனோவா மற்றும் ஸ்கார்லெட் பார்டர் பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் செர்ஹி மெல்னிக் தனது சட்டைப் பையில் இருந்து காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு உலோகத் துண்டை வெளியே எடுக்கிறார். அது துருப்பிடித்திருக்கிறது. அந்த உலோகத் துண்டை கையில் பிடித்தவாறே, "இது என் சிறுநீரகத்தைக் கீறி, என் நுரையீரலையும் இதயத்தையும் துளைத்தது," என்கிறார் அந்த யுக்ரேனிய வீரர். ரஷ்ய டிரோனின் துண்டுகள் போல தோற்றமளிக்கும் அந்த உலோகத் துண்டில், உலர்ந்த ரத்தத்தின் தடயங்கள் இன்னும் காணப்படுகின்றன. கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அவர் போராடியபோது இந்த துண்டு அவரது உடலில் நுழைந்தது. "முதலில் எனக்கு அது தெரியவில்லை. ஆனால் பின்னர் எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. குண்டு துளைக்காத ஜாக்கெட் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று நினைத்தேன். பின்னர் மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்" என்று பகிர்கிறார் செர்ஹி மெல்னிக். யுக்ரேன் போரில் டிரோன் பயன்பாடு தீவிரமடைந்துள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. டிரோன்கள் வெடிக்கும்போது, இதுபோன்ற சிறிய உலோகத் துண்டுகள் மக்களைக் காயப்படுத்தக்கூடும். போர்க்களத்தில் ஏற்படும் காயங்களில் 80 சதவீதம் இந்த வகையைச் சேர்ந்தவை என்று யுக்ரேன் ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். செர்ஹியின் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது அவருக்கு ஆபத்தானதாக இருந்திருக்கும். "இந்த துண்டு கத்தியைப் போல கூர்மையாக இருந்தது. இந்தத் துண்டு பெரியது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்" என்று கூறுகிறார் செர்ஹி. ஆனால் அவரது உயிரைக் காப்பாற்றியது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஒரு புதிய மருத்துவ தொழில்நுட்பம் உள்ளது. அதுதான் 'உலோக துண்டை எடுக்கும் காந்தக் கருவி'. அறுவை சிகிச்சை எப்படி செய்யப்பட்டது? பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC படக்குறிப்பு, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செர்ஹி மக்ஸிமென்கோ செர்ஹி மெல்னிக்கின் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தில் சிக்கிய உலோகத் துண்டின் காட்சிகளை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் செர்ஹி மக்ஸிமென்கோ காட்டினார். அந்த உலோகம், நுனியில் காந்தம் கொண்ட ஒரு மெல்லிய கருவியின் உதவியுடன் மிகக் கவனமாக அகற்றப்பட்டது. "இந்த சாதனம் இதயத்தில் பெரிய கீறல்கள் இடுவதற்கான தேவையை நீக்குகிறது," என்று மருத்துவர் மக்ஸிமென்கோ விளக்குகிறார். "நான் ஒரு சிறிய கீறலைச் செய்து, ஒரு காந்த கருவியை உள்ளே செருகினேன். அது உலோகத் துண்டை வெளியே இழுத்தது."என்கிறார் மக்ஸிமென்கோ. மருத்துவர் மக்ஸிமென்கோவும் அவரது குழுவினரும் இந்த சாதனத்தைப் பயன்படுத்தி ஒரு வருடத்தில் 70 வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளனர். போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த பார்வையை இந்தச் சாதனம் முற்றிலுமாக மாற்றியுள்ளது. இதற்கு முன்னதாக, உடலில் நுழைந்த அத்தகைய துண்டுகளை அகற்றுவது ஒரு சிக்கலான பணியாக இருந்தது. ஆனால் போர் முனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மிகச் சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவற்றைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபோது, அத்தகைய சாதனங்கள் உருவாக்கப்பட்டன. வழக்கறிஞராக பணிபுரியும் ஓலே பைகோவ், இந்த காந்த சாதனத்தை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் 2014 முதல் யுக்ரேன் ராணுவத்தில் தன்னார்வலராக சேவை செய்து வருகிறார். போர் முனையில் பணியாற்றும் மருத்துவர்களுடன் நேரடியாக பேசினார் பைகோவ். அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, காந்தத்தைப் பிரித்தெடுக்கும் இந்த கருவி உருவாக்கப்பட்டது இருப்பினும், இது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. உடலில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்ற காந்தங்களைப் பயன்படுத்துவது 1850களில் நடந்த கிரிமியன் போரில் கூட பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஓலே பைகோவ் மற்றும் அவரது குழு இந்த பழைய கருத்துக்கு ஒரு நவீன வடிவத்தை வழங்கினர். வயிற்று அறுவை சிகிச்சைக்காக அதன் நெகிழ்வான மாதிரிகளை அவர் உருவாக்கினார். மிக நுண்ணிய மற்றும் நுட்பமான அறுவை சிகிச்சைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மைக்ரோ எக்ஸ்ட்ராக்டர்களான இவை, எலும்புகளில் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்றுவதற்காக மிகவும் வலுவான கருவிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. அருமையான யோசனை பட மூலாதாரம்,KEVIN MCGREGOR/BBC படக்குறிப்பு, இந்த காந்தம் மிகவும் சக்தி வாய்ந்தது, இது ஒரு கனமான சுத்தியலைக் கூட தூக்கும். அறுவை சிகிச்சைகள் இப்போது மிகவும் துல்லியமானவையாகவும், குறைந்த கீறல்களுடன் நடைபெறும் வகையிலும் மாறியுள்ளன. காயத்தின் மேற்பரப்பில் ஒரு காந்தத்தை மெதுவாக இயக்குவதன் மூலம், உடலில் சிக்கிய உலோகத் துண்டுகளை வெளியே இழுக்க முடியும். பின்னர் அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு சிறிய கீறலைச் செய்வதன் மூலம், உலோகத் துண்டு அகற்றப்படும். ஒரு மெல்லிய பேனா அளவிலான கருவியைப் பிடித்துக்கொண்டு, ஓலே அதன் சக்தியை நிரூபிக்கிறார். அதில் உள்ள காந்தத்தைப் பயன்படுத்தி அவர் ஒரு சுத்தியலைக் கூட தூக்கிக் காட்டுகிறார். அவரது பணி உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. டேவிட் நோட் போன்ற முன்னாள் வீரர்கள் அவரைப் பாராட்டுகிறார்கள். "பொதுவாக, யோசிப்பதற்கு கூட கடினமான சில விஷயங்கள் போரில் உருவாகின்றன," என்று அவர் கூறுகிறார். இப்போது போரின் முகம் மாறிவிட்டது, இதுபோன்ற துண்டுகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடலில் சிக்கிய அத்தகைய உலோகத் துண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கு நிறைய நேரம் எடுக்கும் என்பதால், இந்த சாதனம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் நம்புகிறார் நோயாளிகளின் உடலுக்குள் இதுபோன்ற சிறிய துண்டுகளைத் தேடுவது "வைக்கோல் குவியலில் ஊசியைத் தேடுவது போன்றது" என்கிறார் அவர். அதேபோல், இந்தக் கருவியும் எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை. பல நேரங்களில், இது காயமடைந்த மற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தாமதப்படுத்தும். "இதுபோன்ற சிறிய துண்டுகளை கையால் தேடுவது ஆபத்தானது. இதற்காக, பெரிய கீறல்கள் செய்யப்பட வேண்டும். இதனால் உடலில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது. எனவே அவற்றை ஒரு காந்தத்தால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தால், அது மிகவும் நல்ல யோசனையாகும்" என்று டேவிட் கூறுகிறார். இந்தக் கருவி யுக்ரேன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, யுக்ரேன் தலைநகர் கீயவில் விழுந்த ஏவுகணை துண்டு (கோப்பு படம்) போர் முனையில் சோதிக்கப்பட்ட இந்தக் கருவி, இப்போது யுக்ரேன் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகளிலும் போர் முனையிலும் பணிபுரியும் ஆண்ட்ரி ஆல்பன் போன்ற மருத்துவர்களுக்கு இதுபோன்ற 3000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இப்போது இந்தக் கருவியைச் சார்ந்து உள்ளார்கள். இந்த மருத்துவர்கள் பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டின் மத்தியிலும், பதுங்கு குழிகளிலும், தற்காலிக வெளிப்புற மருத்துவமனைகளிலும், சில சமயங்களில் மயக்க மருந்து இல்லாமலும் பணி புரிகிறார்கள். "வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதும், அவர்களின் காயங்களுக்குக் கட்டு போடுவதும், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதும் எனது வேலை" என்கிறார் ஆண்ட்ரி ஆல்பன். இருப்பினும், இந்தக் கருவிக்கு அதிகாரப்பூர்வமாகச் சான்றளிக்கப்படவில்லை. பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று யுக்ரேன் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும், போர், ராணுவச் சட்டம் மற்றும் அவசரநிலை போன்ற சூழ்நிலைகளில், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுபோன்ற சான்றளிக்கப்படாத சாதனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. "போரின் உச்சத்தில் அதிகாரத்துவ நடைமுறைகளுக்கு நேரமில்லை" என்கிறார் ஓலே. "யாராவது என்னுடைய வேலையை குற்றம் என்று நினைத்தால், அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். தேவைப்பட்டால், நான் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன். அப்படியானால், இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் அனைத்து மருத்துவர்களையும் சிறைக்கு அனுப்ப வேண்டும்" என்று ஓலே நகைச்சுவையாகக் கூறுகிறார். இந்த நேரத்தில் (சாதனத்தின்) சான்றிதழ் ஒரு முன்னுரிமை அல்ல என்று டேவிட் நாட் நம்புகிறார். காஸா போன்ற பிற போர் பகுதியிலும் இந்த சாதனம் உதவியாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். "போரில், இது (சான்றிதழ்) தேவையில்லை. மக்களின் உயிரைக் காப்பாற்றத் தேவையானதை நீங்கள் செய்கிறீர்கள்." லிவிவில் உள்ள செர்ஹியின் மனைவி யூலியா, தனது கணவர் உயிர் பிழைத்ததற்கு நன்றி தெரிவிக்கிறார். "இந்தக் கருவியை உருவாக்கியவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன்" என்று கூறிய யூலியா, "அவர்களால்தான் என் கணவர் இன்று உயிருடன் இருக்கிறார்" என்று கண்களில் கண்ணீருடன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3njpl13gjo

செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை

3 months 1 week ago
03 Jul, 2025 | 05:40 PM செம்மணி மனித புதைகுழிகள் குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளதாக பிரிட்டிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கேள்வியொன்றிற்கான எழுத்து மூல பதிலில் பிரிட்டிஸ் அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் பொறுப்புக்கூறலி;ற்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வெளியிட்டுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் செம்மணியில் மனித புதைகுழி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளிற்கான பொறுப்புக்கூறலிற்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி உட்பட பலரை சந்தித்து உரையாடியதை நினைவுகூர்ந்துள்ள அவர் இலங்கையில் காணாமல்போனவர்களிpன் உறவுகளுடன் பிரிட்டிஸ் தூதரகம் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது என தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழிகள் - பிரிட்டிஸ் அரசாங்கம் ஆழ்ந்த கவலை | Virakesari.lk

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு!

3 months 1 week ago
03 Jul, 2025 | 07:14 PM யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார். குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்களில் சிலர் தலைமறைவாகிய நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் திடீரென உயிரிழப்பு! | Virakesari.lk

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

3 months 1 week ago
ஏராளன், இவ்வாறான ஒரு சம்பவத்தின் / செய்தியின் புதிய தகவல்கள் பல நாட்கள் கழித்து வருமாயின், அவற்றை புதிய திரி திறந்து பகிருங்கள். ஏற்கனவே உள்ள, பல நாட்களுக்கு முன்னர் திறந்த திரியில் இணைத்தால் அது பலரைச் சேர்ந்தடைய வாய்ப்புகள் குறைவு. நான் இந்த செய்தியை புதிய திரியாக மாற்றியுள்ளேன்.

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவு - வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடினப்பந்திலான துடுப்பாட்டம்

3 months 1 week ago
வாழ்த்துக்கள் விக்டோரியா. எனது அப்பாவின் ஆரம்பபாடசாலை விக்டோரியா, எனது தாய் வழி மூதாதைகள் பெயர் பலகையில் இடம்பிடித்திருக்கும் பரியோவானோடு மோதுகிறது. ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.

கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

3 months 1 week ago
மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் : விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் அமைதிப் பேரணி 03 JUL, 2025 | 04:57 PM கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி டில்சி அம்ஷிகாவின் மரணம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை (3) அமைதிவழிப் பேரணியொன்று நடத்தப்பட்டது. இந்தப் பேரணி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு, கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. கடந்த மே மாதம் பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்ற டில்சி அம்ஷிகா என்ற மாணவி கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடியில் இருந்து கீழே குதித்து உயிர்மாய்த்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219124

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

3 months 1 week ago
மாத கட்டணம் 15,000 ரூபா (Light use: 12,000 per month) கொஞ்சம் ஓவர் தான், தொடக்க கட்டணமும் மிக அதிகம் 118,000 ரூபா 🙂 இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவை - அறிவித்தார் இலோன் மாஸ்க் ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும். இலங்கைக்கான குடியிருப்பு தொகுப்பின் விலை மாதத்திற்கு ரூ. 15,000 ஆகும், மேலும் தேவையான வன்பொருளுக்கு ரூ. 118,000 கூடுதல் செலவாகும். இந்தத் தொகுப்பு வரம்பற்ற செயற்கைக்கோள் இணையத்தை வழங்குகிறது, இருப்பினும் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. Selvakumar Natkunasingam

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவு - வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடினப்பந்திலான துடுப்பாட்டம்

3 months 1 week ago
2025ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெருவிளையாட்டுக்களில் கடினப்பந்திலான துடுப்பாட்டம் (Leather ball cricket) யாழ்ப்பாணமத்திய கல்லூரி, பரியோவான் கல்லூரி , புனிதபத்திரிசியார் கல்லூரி ஆகிய மைதானங்களில் 01,02/07/2025 ஆகிய இரு தினங்களில் 10 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட போட்டி நடைபெற்றது. எமது விக்ரோறியாக் கல்லூரி துடுப்பாட்ட அணி வடமாகாணத்தின் துடுப்பாட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அணிகளினை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டியினை யாழ் பரியோவான் கல்லூரியுடன் மோதவுள்ளது. இப்போட்டியில் நகரப் புறப் பாடசாலையின் ஆதிக்கத்தில் இருந்து முதன்முறையாக வேறு பாடசாலை இறுதிப்போட்டிக்குத் தெரிவானது இதுவே முதல் தடவையாகும். அணிக்காக உழைத்த அனைவருக்கும் கல்லூரிச் சமூகத்தின் பாராட்டுக்கள்! https://www.facebook.com/61550105270847/posts/122320356524003509/?rdid=uIRiwNPYoFHeoH2U#

'உயரம் செல்ல உருவம் தடையில்லை' - மும்பை ஐஐடியில் படிக்க தேர்வான விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி

3 months 1 week ago
படக்குறிப்பு,அரசுப் பள்ளி மாணவியான 17 வயது யோகேஸ்வரி 125 செ.மீ உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 26 ஜூன் 2025 உருவத்தில் குள்ளமாக இருந்தாலும், 17 வயது யோகேஸ்வரி அடைந்திருக்கும் உயரம் அதிகமானது. விருதுநகர் மாவட்டம் பரந்தாலூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான யோகேஸ்வரி. அவரது தந்தை செல்வம் டீக்கடையில் பணி புரிகிறார். அவரது தாய் பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். அவர்களின் மூன்றாவது பிள்ளையான யோகேஸ்வரி 125 செ.மீ மட்டுமே உயரம் கொண்ட ஒரு மாற்றுத் திறனாளி. அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று வந்த அவர், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் எழுதி, அதில் தேர்ச்சி பெற்று, மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் பிரிவில் பொறியியல் படிப்பதற்குத் தேர்வாகியுள்ளார். ஜேஇஇ தேர்வுக்காக தனியார் பயிற்சி மையங்களில் பலரும் நிறைய தொகையைச் செலவு செய்யும் நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த யோகேஸ்வரி, அரசு வழங்கிய 40 நாள் பயிற்சியை மட்டும் பெற்று இந்த இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பில் சேரவுள்ள யோகேஸ்வரி, ஏழாம் வகுப்பு முதல் அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய யோகேஸ்வரி, "நான் சிறு வயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என்றுதான் நினைத்து வந்தேன். படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி அல்ல நான், சராசரியாகவே படிப்பேன். ஆனால் இந்தப் பயிற்சியைத் தீவிரமாக எடுத்துக் கொண்டேன். நாற்பது நாட்கள் ஈரோட்டில் தங்கியிருந்து பயின்றேன். தமிழ் வழியில் பயின்ற எனக்கு ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் பயிற்சி மையத்தில் இருந்த ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்" என்கிறார். தனது தங்கைக்கு ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய யோகேஸ்வரியின் அண்ணன் பாண்டீஸ்வரன், "என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. எங்களைப் போன்றோருக்கு ஐஐடி எட்டாத உயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கும்கூட அங்கு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இன்று என் தங்கைக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். இன்று ஐஐடியில் இடம் கிடைத்த மகிழ்ச்சி யோகேஸ்வரியின் குடும்பம் முழுவதும் பரவியிருந்தாலும், அவர் கடந்து வந்த பாதை கடினமானது. ஏழாம் வகுப்பு வரை, மற்ற மாணவர்களைப் போலவே காணப்பட்டாலும், அதன் பிறகு யோகேஸ்வரி மற்ற பிள்ளைகளைவிட உயரம் குறைவாக இருப்பது வெளியில் கவனிக்கப்பட்டது. வழிகாட்டி ரன்னர்கள்: பார்வை மாற்றுத் திறனாளிகள் தடகளப் போட்டிகளில் பங்கெடுக்க உதவும் இவர்கள் யார்? துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்: பரவலாகும் புதிய அபாயம்! - விளைவுகள் மற்றும் தீர்வுகள் யானைகளை கொல்ல உத்தரவிட்ட ஜிம்பாப்வே - இந்த புத்திசாலி விலங்கால் என்ன பிரச்னை? இளமையில் சந்தித்த கேலியும் கிண்டலும் படக்குறிப்பு, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற யோகேஸ்வரி, ஐஐடி பாம்பேவில் ஏரோஸ்பேஸ் பொறியியல் படிக்கத் தேர்வாகியுள்ளார். "யோகேஸ்வரியைவிட இளையவர்கள் சில நேரங்களில் அவரைப் பார்த்து, வயதில் சிறியவர் என்று நினைத்துக் கொண்டு 'சொல்லு பாப்பா' என்று கூறிவிடுவார்கள். அவர்கள் தெரியாமல் கேட்டாலும் அதுபோன்ற தருணங்கள் வலி மிகுந்ததாக இருக்கும்" என்கிறார் பாண்டீஸ்வரன். விழாக்கள், திருமணங்களுக்குச் செல்லும்போது இன்னும் வேதனையாக இருக்கும் என்கிறார் பாண்டீஸ்வரன். "அவர் 12ஆம் வகுப்பு படிக்கிறார், உயரம் குறைவாக இருக்கிறார் என்று கூறியவுடன், அப்படியா என்று ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள். ஏன் இதைச் சரி செய்ய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்று எங்களிடம் கேட்பார்கள். ஒரே பதிலை குறைந்தது 20 முறையாவது சொல்ல வேண்டியிருக்கும். அதுவும் வலியை மறைத்துக்கொண்டு, முகத்தில் புன்னகையுடன் பதில் சொல்வது இன்னும் துயரம்" என்கிறார் அவர். யோகேஸ்வரிக்கு 11 அல்லது 12 வயதாகும்போது அவர் உயரம் குறைவாக இருக்கிறார் என்பதைக் கவனித்த பெற்றோர்கள், அரசு மருத்துவமனை, தனியார் சிகிச்சை மையங்கள் எனப் பல இடங்களில் அவருக்கு மருத்துவம் பார்த்ததாகக் கூறுகின்றனர். அவரது தாய் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் மருந்து துறையில் பணியாற்றி வருகிறார். "எப்படி மீனவர்கள் கடலுக்குச் சென்றால் உயிருடன் திரும்புவது உறுதி கிடையாதோ, அதே போலத்தான் எங்கள் அம்மா வீடு திரும்புவதும். அந்த ஆலைக்குச் சென்று வீடு திரும்பும் வரை பயமாகவே இருக்கும். எங்கள் குடும்பத்திற்குப் பல லட்சம் ரூபாய் கடன் உள்ளது" என்கிறார் பாண்டீஸ்வரன். யோகேஸ்வரியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் படித்து வரும் எஸ்.ரேகா, அவருக்கு ஐஐடியில் சீட் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார். "நாங்கள் இருவரும் பள்ளியில் எப்போதும் ஒன்றாக இருப்போம், நான் கணினி பாடப்பிரிவு படித்ததால், உயிரியல் வகுப்பில் மட்டும் அவரும் நானும் தனியாகச் செல்ல வேண்டியிருக்கும். தினமும் காலையில் நான் அவரது வீட்டுக்குச் செல்வேன், அங்கிருந்து இருவரும் பள்ளிக்கு ஒன்றாக நடந்து செல்வோம். அவரது அம்மா மிகவும் அன்பாகப் பேசுவார். எனக்கு என் வீட்டில் இருப்பது போலவே தோன்றும்," என்றார் ரேகா. அவருக்கு சீட் கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும், அவர் தன்னை விட்டு வெகுதொலைவாகச் செல்லப் போவது குறித்த வருத்தம் சற்று இருப்பதாகக் கூறுகிறார் ரேகா. யோகேஸ்வரியின் 12ஆம் வகுப்பு கணித ஆசிரியர் உமா மகேஸ்வரி, அவர் வகுப்பில் மிகவும் அமைதியானவராக இருப்பார் என்கிறார். "யோகேஸ்வரி மிக அமைதியாக இருப்பார், யாரிடமும் தேவையின்றிப் பேச மாட்டார். அவரால் வகுப்பில் எந்தத் தொந்தரவும் இருக்காது. பாடங்களைச் சிரத்தையுடன் கவனிப்பார்" என்கிறார். அரசுப் பயிற்சி மையத்தில் தங்கிப் படித்தவர் படக்குறிப்பு, பொது இடங்களில், விழாக்களில் வலி மிகுந்த வார்த்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக யோகேஸ்வரியின் சகோதரர் பாண்டீஸ்வரன் கூறுகிறார் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அவர்களது பள்ளியில் இருந்து இரண்டு பேர் பங்கேற்றதாக ஆசிரியர் உமா மகேஸ்வரி கூறுகிறார். "ஜேஇஇ தேர்வுப் பயிற்சிக்கு விருப்பமாக இருக்கும் மாணவர்கள் பற்றிக் கேட்டவுடனே ஆர்வத்துடன் யோகேஸ்வரி முன்வந்தார். இன்று கிடைத்திருப்பது அவரது முயற்சிக்கான அங்கீகாரம்" என்கிறார் அவர். உயரம் தனக்கு எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய யோகேஸ்வரி கூறினார். இதே கருத்தை அவரது தோழியும், ஆசிரியரும் குறிப்பிட்டனர். "அவர் எப்போதும் போலவே, எல்லா மாணவர்களையும் போலவே இருப்பார். படிப்பில் மட்டுமின்றி எல்லாவற்றிலும் தைரியமாக முதல் ஆளாக நிற்பவர். காலையில் மாணவர் கூட்டங்களில் பாடுவது, விழாக்களில் ஆடுவது என அனைத்திலும் பங்கேற்பார். ஒரு முறை சென்னைக்கு சுற்றுலா சென்றபோது, சில விளையாட்டுகளில் உயரம் காரணமாக அவர் அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த ஒரு நிகழ்வு தவிர வேறு எங்கும் அவருக்கு உயரம் ஒரு பிரச்னையாக இருப்பதை நான் பார்த்ததில்லை" என்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி. யோகேஸ்வரியை நேரில் அழைத்துப் பாராட்டிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், அவரது உயர் கல்விக்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி அளித்துள்ளதாக யோகேஸ்வரி கூறினார். உயரம் குறைவானவர்கள் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES வயது வந்தோரில் ஒருவர், அவர் எந்தப் பாலினமாக இருந்தாலும், 147 செ.மீக்கு (4 அடி,10 அங்குலம்) குறைவான உயரம் கொண்டவராக இருந்தால் அவர் உயரம் குறைவானவர் (dwarf) என்று கருதப்படுவதாக மத்திய அரசு வரையறுக்கிறது. இது மரபணு காரணமாகவோ அல்லது மருத்துவக் காரணங்களாலோ ஏற்படலாம். நான்கு அடி, 10 அங்குலம் உயரத்தில் இருந்து ஒவ்வொரு அங்குலம் குறையும்போதும், அது 4% இயலாமை என்று கருதப்படும். உதாரணமாக, 4 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவருக்கு 4% இயலாமை இருப்பதாகவும், 4 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவருக்கு 8% இயலாமை இருப்பதாகவும் கணக்கிடப்படும். அகோண்ட்ரோபிளாசியா என்பது எலும்பு வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு. மனிதர்கள் குள்ளமாக இதுவே 70% காரணமாக இருக்கிறது. மேலும் பலருக்கு, வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கலாம். இவை தவிர வேறு சில காரணங்களும் இருக்க வாய்ப்பு உண்டு. குள்ளமாக இருப்பவர்களில் இரண்டு வகை உண்டு. சிலருக்கு, உடலின் எல்லா பாகங்களும் சிறியதாக இருக்கும். சிலருக்கு தலை பெரிதாகவும், கை கால்கள் மட்டும் சிறியதாகவும் இருக்கும். குள்ளமாக இருப்பவர்களின் அறிவுத்திறனும் சராசரி வாழ்நாளும் இயல்பாகவே இருக்கும். பொதுவாக அவர்களால் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்று மத்திய அரசின் இயலாமை அறியும் வழிகாட்டு நெறிகள் கூறுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew0xv980j9o
Checked
Mon, 10/13/2025 - 09:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed