Aggregator
கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
கிளிநொச்சியில் அதிகாலை நடந்த கோர விபத்து!
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் தாய்லாந்து பிரதமர்
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் தாய்லாந்து பிரதமர்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெறவுள்ள 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக இலங்கைக்கான தாய்லாந்து பிரதமரின் இரண்டு நாள் விஜயம் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தாய்லாந்து பிரதமர் சுமார் ஒரு மணிநேரம் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்
ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்
(நெவில் அன்தனி)
கத்தாரில் நடைபெற்றுவரும் 2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு கடைசி இரண்டு அணிகளாக ஜப்பானும் ஈரானும் தகுதிபெற்றன.
கத்தாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 7ஆவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பஹ்ரெய்னை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜப்பானும் கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் சிரியாவை 5 - 3 என்ற பெனல்டி முறையில் ஈரானும் வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறின.
ஜப்பானுக்கு இலகுவான வெற்றி
அல் துமாமா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை பஹ்ரெய்னை விஞ்சும் வகையில் விளையாடிய ஜப்பான் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
நான்கு தடவைகள் ஆசிய சம்பியனான ஜப்பான் சார்பாக போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ரிட்சு டோஆன் முதலாவது கோலை போட்டார்.
சுமார் 35 யார் தூரத்திலிருந்து செய்யா மல்குமா ஓங்கி உதைத்த பந்து பஹ்ரெய்னின் வலது கோல் கம்பத்தில் பட்டு திரும்பிவந்தபோது வேகமாக செயற்பட்ட டோஆன் இடதுகாலால் பந்தை உதைத்து அலாதியாக கோலை போட்டார்.
இடைவேளையின் போது ஜப்பான் 1 - 0 என முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய ஜப்பான் 49ஆவது நிமிடத்தில் தனது கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியது.
பஹ்ரெய்ன் வீரர் ஹஸா அலி தவறாக பரிமாறிய பந்தை தனதாக்கிக்கொண்ட டக்கேஃபுசா குபோ மிக இலாவகமாக பந்தை நகர்த்திச் சென்று கோலினுள் புகுத்தினார்.
போட்டியின் 69ஆவது நிமிடத்தில் பஹ்ரெய்ன் வீரர் அயாசே உவேடா 30 யார் தூரத்திலிருந்து ப்றீ கிக் மூலம் உதைத்த பந்தை சய்யத் பாக்வெர் கோலை நோக்கி தலையால் முட்டினார். ஜப்பான் கோல் காப்பாளர் இஸட். சுசிக்கி பந்தைத் தடுக்க முயன்றபோது குறுக்கே பாய்ந்த ஆயாசே உவேடா பந்தை சொந்த கோலினுள் புகுத்தி பஹ்ரெய்னுக்கு இனாம் கோல் ஒன்றைக் கொடுத்தார்.
எவ்வாறாயினும் 3 நிமிடங்கள் கழித்து செய்யா மைக்குமா பரிமாறிய பந்தை ஆயாசே உவேடா கோலாக்கி தனது முன்னைய தவறை நிவர்த்திசெய்தார். இறுதியில் ஜப்பான் 3 - 1 என வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
பெனல்டி முறையில் ஈரான் வெற்றி
ஈரானுக்கும் சிரியாவுக்கும் இடையில் தோஹா, அப்துல்லா பின் கலிபா விளையாட்டரங்கில் நடைபெற்ற கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் 5 - 3 என்ற பெனல்டி முறையில் ஈரான் வெற்றிபெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
இரண்டு அணிகளும் ஒன்றொக்கொன்று சளைக்காமல் விளையாடி அரங்கிலிருந்த பார்வையாளர்களை விறுவிறுப்பின் உச்சத்திற்கு இட்டுச் சென்றன.
போட்டியின் முதலாவது பகுதியின் 34ஆவது நிமிடத்தில் ஈரான் வீரர் மெஹ்மதி தரேமியை சிரியா வீரர் ஆய்ஹாம் ஒளசூ தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து வீழ்த்தியதால் ஈரானுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
அந்த பெனல்டியை மெஹ்தி தரேமி கோலாக்கி ஈரானை 1 - 0 என முன்னிலையில் இட்டார்.
இடைவேளையின் பின்னர் 64ஆவது நிமிடத்தில் சிரியா வீரர் பப்லோ சபாக்கை ஈரான் வீரர் அலிரீஸா பெய்ரான்வாந்த் வீழ்த்தியதால் சிரியாவுக்கு பெனல்டி கிடைத்தது.
இந்த பெனல்டியை ஓமர் க்ர்பின் இலக்கு தவறாமல் உதைத்து கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலைப் போடத் தவறியதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
மேலதிக நேர நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டிருந்ததால் வெற்றி அணியைத் தீர்மானிக்க மத்தியஸ்தர் பெனல்டி முறையை அமுல்படுத்தினார்.
இரான் சார்பாக கரிம் அன்சாரிபார்ட், ரமின் ரீஸாயான், ஓமித் இப்ராஹிம், மெஹ்தி தோராபி, ஈஷான் ஹாஜிசபி ஆகிய ஐவரும் தங்களது பெனல்டிகளை இலக்கு தவறாமல் உதைத்தனர்.
சிரியா சார்பாக பெப்லோ சபாக், ஆய்ஹாம் ஒளசூ, அலா அல் தலி ஆகியோர் பெனல்டிகளை கோலாக்கினர்.
சிரியா வீரர் பாஹ்த யூசெவ் உதைத்த இரண்டாவது பெனல்டியை ஈரான் கோல் காப்பாளர் தடுத்து நிறுத்தினார்.
இதன் பிரகாரம், ஈரான் 5 - 3 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!
பணிப்புறக்கணிப்பு தொடர்பில் சுகாதார தொழிற்சங்கங்களின் தீர்மானம் !
பணிப்புறக்கணிப்பு தொடர்பில் சுகாதார தொழிற்சங்கங்களின் தீர்மானம் !
72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று மதியம் தீர்மானிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இன்று கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்றுகுழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும், 35,000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார தொழிற்சங்கத்தினருக்கும் வழங்க வேண்டும் என கோரி, நேற்று முதல் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
உல்ஃப்காங் பௌலி: ஐன்ஸ்டீன் தனது அறிவுசார் வாரிசாக அறிவித்த சிறந்த இயற்பியலாளர்
உல்ஃப்காங் பௌலி: ஐன்ஸ்டீன் தனது அறிவுசார் வாரிசாக அறிவித்த சிறந்த இயற்பியலாளர்
பட மூலாதாரம்,GETTY IMAGES
- எழுதியவர், டாலியா வென்ச்சுரா
- பதவி, பிபிசி முண்டோ
-
1 பிப்ரவரி 2024
உல்ஃப்காங் பௌலி 20ஆம் நூற்றாண்டில் இயற்பியல் துறையில் மிகவும் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். இருப்பினும் இயற்பியல் துறையில் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த மற்றவர்களைப் போல் அவர் நன்கு அறியப்படவில்லை.
இயற்கையின் புதிய விதி ஒன்றை அவர் கண்டுபிடித்ததற்காக அவருக்கு 1945இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது சகாக்களின் ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய அவரது கடுமையான விமர்சனங்களைக் கடந்து அவரை சமமாகப் பாராட்டினர். மேலும், அவர்கள் அவரை "இயற்பியலின் மனசாட்சி" என்று அழைத்தனர் என்ற தகவல்கள் தொடர்ந்து அவர் குறித்துப் பேசும்போது மேற்கோள் காட்டப்படுகின்றன.
மேலும், தெளிவற்ற நியூட்ரினோ துகள் இருப்பதை உறுதி செய்வதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே அப்படி ஒன்று இருப்பதாக அவர் கணித்திருந்தார். "நான் ஒரு பயங்கரமான உண்மையைக் கண்டறிந்துள்ளேன். நான் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு துகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளேன்," என்று அவர் அப்போது அறிவித்தார்.
இது எப்போதோ ஒருமுறை சாத்தியமானதுதான். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது உண்மையில் சாத்தியமாயிற்று. அது போன்ற தெளிவற்ற துகள்கள் இன்னும் பிரபஞ்சத்தில் நம்பமுடியாத அளவிற்கு ஏராளமாக இருந்தாலும், கண்டறியக் கடினமாக இருக்கும் கண்ணுக்குத் தெரியாதவற்றைப் போலவே இருக்கின்றன.
அவரது சகாக்கள் "பௌலி விளைவு" என்று அவரது பெயரை வைத்தே மூடநம்பிக்கையாக ஒரு கருத்துருவை உருவாக்கினர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர் அருகில் இருந்தபோது, சில அழிவுகள் ஏற்பட்டன என்பதால் அவர் ஒரு துரதிர்ஷ்டசாலி என்பது போன்று அவருடன் இருந்தவர்கள் கருதினர்.
பல ஆண்டுகளாக, அவர் அருகில் இருந்தாலே துரதிர்ஷ்டவசமானது எனக் கருதப்படுவதற்கு என்ன காரணம் என்றால் அவர் இருந்த போதெல்லாம் ஆய்வகத்தில் இருந்த சோதனை உபகரணங்களில் ஏற்பட்ட தோல்விகள் பற்றிய நிகழ்வுகள் பரப்பப்பட்டன என்பதுதான். இது அவரது பெரும்பாலான சக ஊழியர்களுக்கு ஒரு திசை திருப்பலாக இருந்தது. இந்நிலையில், சிலர் அவரைத் தங்கள் ஆய்வகங்களுக்குள் நுழையவே தடை விதித்தனர்.
ஆனால் அது உண்மை என்று அவரும் நம்பினார். மேலும் 1948இல் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து கொண்டபோது அவர்கள் அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசிய நகைச்சுவைப் பேச்சுக்கள், அவரே அதை மேலும் அழுத்தமாக நம்ப வழிவகுத்தது.
இத்தாலிய இயற்பியலாளர் பெப்போ ஒச்சியாலினி ஒரு நடைமுறையைக் கொண்டு வந்தார். அதனால் பௌலி தனது ஆய்வகத்திற்குள் நுழைந்தபோது கூரையில் இருந்து ஒரு விளக்கு கீழே விழுந்து உடைவதைப் போல் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் பௌலி அங்கே இருந்தபோது சாதனங்கள் வழக்கமாக பாதிப்படைந்ததைப் போலவே அந்தச் செய்முறையும் தோல்வியடைந்தது.
அதேநேரம், பௌலி செல்வாக்கு மிக்க சுவிஸ் மனநல மருத்துவர் கார்ல் ஜங்குடன் எதார்த்தத்தின் தன்மையைப் பற்றி நீண்ட ஆய்வு செய்து கொண்டிருந்தார். மேலும் அறிவியலுக்கான ஆதாரமாகத் தொடர்ந்து விஞ்ஞானிகளுடனான கடிதப் பரிமாற்றத்தின் ஏராளமான மரபுகளையும் அவர் விட்டுச் சென்றார்.
பட மூலாதாரம்,CERN
பௌலி பிறந்து 20 மாதங்களில் அவரது தாயுடன் இருந்தபோது எடுத்த படம்.
பௌலி வியன்னாவில் 1900ஆம் ஆண்டு பிறந்தார். அந்த ஆஸ்திரிய தலைநகரம் கலாசாரம் மற்றும் அறிவியல் படைப்பாற்றலின் மையமாக இருந்தது.
அவரது பெற்றோர் ஐரோப்பாவில் வளர்ந்து வரும் யூத எதிர்ப்பு காரணமாக கத்தோலிக்க மதத்திற்கு மாறி மதச் சார்பற்ற யூதர்களாக இருந்தனர். இருப்பினும், நாஜிக்களின் நடவடிக்கைகளில் இருந்து தப்பும் நோக்கத்துடன் அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம் பெயரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவரது இயல்பான திறமைகளுக்கும் மேலாக, அவரைச் சுற்றியிருந்த அனைத்தும் அவரது அறிவுக்கு ஊக்கமளித்தன. அவருடைய அப்பா மருத்துவ வேதியியல் துறையில் ஒரு மரியாதைக்குரிய பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தார். இந்நிலையில், அவரது அம்மா பெர்தா கமிலா ஷூட்ஸ், ஒரு பிரபல எழுத்தாளர், சோசலிஸ்ட் மற்றும் பெண்ணியவாதியாக இருந்தார்.
மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் தத்துவஞானி எர்ன்ஸ்ட் மாக் போன்ற ஆளுமைகளை அவரது சமூக வட்டம் உள்ளடக்கியதாக இருந்தது.
பள்ளியில், பௌலி கணிதம் மற்றும் இயற்பியலில் மிகச் சிறந்த மாணவராக விளங்கினார். மற்ற பாடங்களில் அவர் அதிக ஆர்வம் காட்டவில்லை. மேலும் 18 வயதில் அவர் மியூனிச் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியலாளர் அர்னால்ட் சோமர்ஃபெல்டுடன் படிக்கச் சென்றார். அவர்தான் பௌலிக்கு கனவு வழிகாட்டியாக இருந்தார். அவரது மாணவர்களில் 6 பேர் நோபல் பரிசு பெற்றவர்கள்.
பட மூலாதாரம்,CERN
இயற்பியலாளர் உல்ஃப்காங் பௌலிக்கு (1900-1958), ‘விலக்கு கொள்கையை’ கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
பௌலியின் கணிதத் திறனால் சோமர்ஃபெல்ட் மிகவும் ஈர்க்கப்பட்டார். மதிப்புமிக்க கணித அறிவியல் கலைக் களஞ்சியத்திற்கு சார்பியல் கோட்பாடு பற்றிய கட்டுரையை எழுதுவதற்கான அழைப்பை ஐன்ஸ்டீன் நிராகரித்தபோது, அதைச் செய்யும்படி அவரிடம் கேட்டார்.
சார்பியல் கோட்பாடு புரட்சிகரமானது மட்டுமல்ல - அது இன்னும் புதியதாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்; அந்த நேரத்தில் பெரும்பாலான இயற்பியலாளர்களே கூட அதை நன்கு அறிந்திருக்கவில்லை.
இயற்பியலாளர் ஹான்ஸ் வான் பேயர் மெட்டானெக்ஸஸில் வலியுறுத்துவது போல, உயர்நிலைப் பள்ளியில் இருந்து புதிதாக வெளியேறும் மாணவரிடம் விமர்சன மதிப்பாய்வை உருவாக்கும் பணியை ஒப்படைப்பது விவேகமற்றது. ஆனால், சோமர்ஃபெல்டின் பந்தயம் வெற்றிகரமாக முடிந்தது.
பௌலியின் 200 பக்கங்களுக்கு மேல் இருக்கும் விமர்சனம் அக்காலத்தின் சிறந்த கணிதவியலாளர்களால் பாராட்டப்பட்டது.
"கோட்பாட்டின் ஓர் எளிய ஆய்வை எழுதுவதற்கு அப்பால், அவர் சார்பியல் கோட்பாடுகளில் உள்ள வெளிப்படையான பிரச்னைகளைச் சுட்டிக்காட்டினார்," என்று எடின்பர்க் பல்கலைக்கழக அறிவியல் தத்துவ பேராசிரியர் மைக்கேலா மஸ்ஸிமி பிபிசியிடம் கூறினார்.
"இது அனைவரையும் கவர்ந்தது என்பதுடன் சர்வதேச அரங்கில் அவரை உறுதியாக நிலைநிறுத்தியது," என்று அவர் மேலும் கூறினார். அதுமட்டுமின்றி ஐன்ஸ்டீனே அதைப் பாராட்டினார்.
"இந்த முதிர்ந்த மற்றும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட படைப்பைப் படிக்கும் யாரும், அதன் ஆசிரியர் 21 வயதுடையவர் என்று நம்ப மாட்டார்கள்," என்று இந்த சார்பியல் கோட்பாட்டின் ஆசிரியர் கருத்து தெரிவித்தார்.
அந்த மதிப்பாய்வு உடனடி கிளாசிக் ஆனது என்பதுடன் நிலையான படைப்பாக இருந்தது. அவரது துறையில் நிபுணர்களின் பார்வையில், அந்த இளம் மாணவர் நிறைய வாக்குறுதிகளைக் காட்டினார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
கடந்த 1940களில் அணு மற்றும் குவாண்டம் இயற்பியலில் முன்னோடி விஞ்ஞானியாக இருந்த அர்னால்ட் சோமர்ஃபெல்டை (1868-1951) பௌலி சந்தித்தபோது எடுத்த படம்.
டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, பௌலி கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான மேக்ஸ் பார்னின் (நோபல் 1954) உதவியாளராகப் பணியாற்றினார். அடுத்த ஆண்டு, அணுவைப் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்திய டேனிஷ் இயற்பியலாளர் நீல்ஸ் போரை (நோபல் 1922), டென்மார்க்கின் கோபன்ஹேகனில் தன்னுடன் பணியாற்ற அழைத்தார்.
ஆனால் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க ஜெர்மனிக்கு சென்றபோதுதான், அணுவின் கட்டமைப்பில் உள்ள அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்கும் இரண்டு தீவிரமான கருத்துருக்களை முன்வைத்தார். அவற்றில் ஒன்று அவருக்கு நிச்சயமாக நோபல் பரிசைப் பெற்றுத் தரும்: அது விலக்கு கொள்கை (Pauli exclusion principle) அல்லது பௌலி கொள்கை என அறியப்பட்டது.
அதை நன்கு புரிந்துகொள்வது சிக்கலானது. ஆனால் இது எதைப் பற்றியது அல்லது அது ஏன் மிகவும் அடிப்படையானது என்பதை பிபிசிக்கு விளக்கிய இயற்பியலாளர் க்ளோஸின் உதவியுடன் அதைப் புரிந்துகொள்ள முயல்வது பயனளிக்கும் விதத்தில் இருக்கும்.
அந்த நேரத்தில், அணுக்களுக்கு நேர்மறை மின்னூட்டம் உள்ளது என்றும், எலக்ட்ரான்கள் ஏணியில் உள்ள படிகளைப் போல பிரிக்கப்பட்ட நீள்வட்ட சுற்றுப்பாதையில் அவற்றைச் சுற்றி வருகின்றன என்றும் அறியப்பட்டிருந்தது.
ஒவ்வொரு கட்டத்திலும், அல்லது குவாண்டம் நிலையிலும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலக்ட்ரான்கள் இருக்கலாம். மிகக் குறைந்த அளவில், எடுத்துக்காட்டாக இரண்டு எலக்ட்ரான்கள் மட்டுமே இருக்க முடியும்.
மேலும் அவை என்ன என்பதை அந்தக் கருத்துரு வரையறுக்கிறது. ஹைட்ரஜன் அதன் மிகக் குறைந்த அளவில் ஒற்றை எலக்ட்ரானை கொண்டுள்ளது; இரண்டு எலக்ட்ரான்கள் இருந்தால், அது ஹீலியம். அடுத்த உறுப்பு லித்தியம். ஆனால் அதில் மூன்று எலக்ட்ரான்கள் இருப்பதால், அவை அடுத்த கட்டத்தை ஆக்கிரமிக்கின்றன.
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஐன்ஸ்டீனும் பௌலியும் ஒருவரையொருவர் போற்றிக் கொண்டனர். (1930களில் எடுக்கப்பட்ட படம்).
குளோஸ் குறிப்பிட்டுள்ள கொள்கை, "அந்த குவாண்டம் நிலைகளில் ஒன்றை ஏற்கெனவே எலக்ட்ரான் ஆக்கிரமித்திருந்தால், அங்கு மற்றொரு எலக்ட்ரானை வைக்க முடியாது: அது விலக்கப்பட்டது," என்று கூறுகிறது.
இதை விளக்குவதற்காக, அவர் ஒரு உதாரணம் கூறினார். "நான் மேசையைத் தட்டினால், என் கையிலிருந்து எலக்ட்ரான்கள் மேசை மீது செல்லாது. ஏனென்றால் என் கைகளில் வெளிப்புற விளிம்பில் உள்ள எலக்ட்ரான்கள், அந்த மர மேசையில் எலக்ட்ரான்கள் ஏற்கெனவே ஆக்கிரமித்துள்ள நிலையை ஆக்கிரமிக்க முயல்கின்றன."
"எலக்ட்ரான்கள் எங்கும் செல்ல முடியாது. அவை ஆக்கிரமித்துள்ள இடங்களில் இருந்து ஏற்கெனவே விலக்கப்பட்டிருப்பதால் அவற்றைத் தனி இடங்களில் வைக்க வேண்டும் என்பது அணுக்களின் வெவ்வேறு ரசாயன இயல்புகளுக்கு வழிவகுக்கிறது."
அதன் விளைவாக, நீங்களும், நானும், பிரபஞ்சம் மற்றும் அனைத்தும் உள்ளன என்று அவர் கூறினார். விதிவிலக்குக் கொள்கை தொடர்பான புதிரில் வெவ்வேறு இடங்களில் எலக்ட்ரான்களை உருவாக்கி கட்டமைப்புகளைக் கட்டமைக்கவில்லை என்றால், அவை மிதந்து கொண்டிருக்கும் என்பதுடன் அணுக்கள், திடப் பொருள்கள் அல்லது படிகங்கள் என எதையும் உருவாக்காது.
"பிரபஞ்சத்தில்கூட, நட்சத்திரங்களின் முடிவு விலக்கு கொள்கையுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. நட்சத்திரம் அதன் ஆயுள் முடிந்து வீழ்ச்சியடையும்போது, அதன் கூறுகள் தங்களைத் தாங்களே மேன்மேலும் சுருக்கிக்கொள்ள முயல்கின்றன. ஏனெனில் அவை விலக்கப்படுகின்றன."
பட மூலாதாரம்,GETTY IMAGES
பௌலி 1949ஆம் ஆண்டு சர்வதேச அணு இயற்பியல் காங்கிரஸில் அவர் பங்கேற்றபோது எடுத்த படம்.
எல்லோரும் எதிர்பார்க்கிறபடி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறிஞர்கள் அதை விரைவாக அடையாளம் கண்டுகொண்டனர்.
"இந்தச் செய்தி மிக வேகமாகப் பரவியது," என்கிறார் மாசிமி. "பௌலி ‘விலக்கு விதியை’ அறிவித்தார். மேலும் அவர் அதை ஒரு விதி என்றே அழைத்தார். அதை ஒரு கொள்கை என்று அவர் கருதவில்லை,” என ஆல்ஃபிரட் லாண்டே, ஒரு முக்கிய பரிசோதனை இயற்பியலாளருக்கு எழுதிய கடிதத்தில், இறுதியில் 1924 தெரிவித்தார்.
"ஒரு மாதம் கழித்து, நீல்ஸ் போர் (Niels Bohr) கோபன்ஹேகனில் இருந்து அவருக்கு எழுதிய கடிதத்தில், ‘நீங்கள் கண்டுபிடித்த பல அழகான விஷயங்களால் நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். மேலும் நான் எந்த விமர்சனத்தையும் மறைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் எல்லாவற்றையும் பைத்தியம் என்று விமர்சித்தீர்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்," என்று மாசிமி கூறினார்.
"எதார்த்தம் என்னவென்றால், விலக்கு விதியைப் புரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் தலையைச் சொறிந்தனர்.”
"ஆனால் பௌலியின் தொலைநோக்குப் பார்வை 1924இல் அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் குவாண்டம் இயக்கவியலின் அடித்தளம் அமைக்கப்படுவதற்கு முன்பு, பல தசாப்தங்களாக இயற்பியலாளர்களைப் பாதித்த ஒரு பிரச்னைக்கு இந்த விதி இறுதியாக ஒரு தீர்வை வழங்கியது," என்று அவர் கூறி முடித்தார்.
பின்னர் இந்த விதி ஒரு கொள்கையாக உறுதிப்படுத்தப்பட்டு, இயற்பியலுக்கான நோபல் கமிட்டியின் உறுப்பினர் பேராசிரியர் ஐ. வாலர் கூறியது போல், அதை வழங்கும்போது, இது இயற்கையின் அடிப்படை விதியாக வகைப்படுத்தப்பட்டது.
"எலக்ட்ரான்களுக்காக முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கை, புரோட்டான்கள் எனப்படும் ஹைட்ரஜன் கருக்களுக்கும் மற்றும் பல அணுக்கரு வினைகளில் உருவாகும் நியூட்ரான்களுக்கும் செல்லுபடியாகும் என நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
"இந்த விதியை ஆதரிக்க எலக்ட்ரான்களுக்கு இடையில் எந்த புதிய சக்தியையும், எந்த பொறிமுறையையும், தர்க்கத்தையும்கூட அவர் முன்மொழியவில்லை.”
"இது வெறுமனே ஒரு விதியாக இருந்தது. அதன் இயல்பான தன்மையில் கட்டாயமானது என்பதுடன் நவீன இயற்பியலின் முழு பகுதியிலும் வேறு எதையும் போலல்லாமல் இருந்தது.”
"எலக்ட்ரான்கள் ஒன்றுக்கொன்று தனிப்பட்ட குவாண்டம் எண்களைத் தவிர்க்கின்றன. இது வேறு எந்த காரணத்திற்காகவும் இல்லாமல், பௌலியின் விலக்கு கொள்கையின் காரணமாகவே நடைபெறுகிறது.”
பட மூலாதாரம்,CERN
"ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் அவருக்கு 1945இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வழங்கியது" என்று தந்தி மூலம் அறிவித்தது. அதைப் பெற அவரால் செல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் அதை பிரின்ஸ்டனில் கொண்டாடினர்.
அக்கால அணு இயற்பியலின் சோதனை மற்றும் கோட்பாட்டு அறிவை ஆழமாகப் பகுப்பாய்வு செய்வதன் மூலமும், அவரது அற்புதமான கணிதத் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலமும் பௌலி தனது அனைத்து கண்டுபிடிப்புகளையும் உருவாக்கினார். அது அவரை மற்றவர்களின் வேலையைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்தது.
இயற்பியல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது நிராகரிக்கப்படுவதற்கு புதிய யோசனைகள் பற்றிய அவரது கருத்து மிகவும் முக்கியமானது. அவர்கள் அவரை "இயற்பியலின் மனசாட்சி" என்று கருதினர்.
பௌலியின் தலையாட்டுதலைவிட வேறு எந்த வகையான ஒப்புதலும் இயற்பியலாளர்களுக்கு மதிப்புமிக்கதாக இருக்காது," என்று பெல்ஜிய இயற்பியலாளர் லியோன் ரோசன்ஃபெல்ட் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு அவரை முக்கியமானவராகக் கருதினார்கள்.
அந்த பாத்திரத்திற்காக, அவர் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படும் சொற்றொடர்களின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார். அவற்றில் மிகவும் பிரபலமானது அழிவுகரமானது.
இயற்பியலாளர் ருடால்ப் பீயர்ல்ஸ் பௌலியின் வாழ்க்கை வரலாற்று நினைவுக் குறிப்பில் எழுதியது போல், நண்பர் ஓர் இளம் இயற்பியலாளரின் கட்டுரையை அவருக்குக் காட்டினார்; அவர் மிகவும் மதிப்புமிக்கவர் அல்ல, ஆனால் அவர் பௌலியின் கருத்தை அறிய விரும்பினார்.
"இது போலியானதுகூட இல்லை' என்று பௌலி வருத்தத்துடன் கருத்து தெரிவித்தார்.”
"அது சரியல்ல என்பது மட்டுமல்ல, பொய்யும்கூட இல்லை" என்பதே அவரது பதிலுக்கான பொருள் என்று மற்ற ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், தத்துவஞானி கார்ல் பாப்பரின் பொய்யான கொள்கைக்கு அவை தகுதி பெறாத அளவுக்கு ஊகமான வாதங்களை நிராகரிக்க இந்த சொற்றொடர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒரு குறைபாடுள்ள கருதுகோளைச் சோதிப்பதன் மூலம், ஒருவர் செயல்பாட்டில் ஏதாவது கற்றுக்கொள்கிறார். அது அறிவியல் கண்டுபிடிப்புக்குத் தூண்டுகிறது. ஆனால் அது பொய்யாகக்கூட இல்லாவிட்டால், அவர் நேரத்தை வீணடிக்கிறார் என பாப்பர் கூறினார்.
இவ்வாறு, அவரது பல விமர்சனங்கள் நினைவில் நிலைத்திருந்தன. ஏனெனில், கசப்பானவையாக இருந்தாலும், அவை வேடிக்கையாகவும் பொதுவாக வரவேற்கத்தக்கதாகவும் இருந்தன.
இருப்பினும், சிலர் புண்படுத்தப்பட்டனர் என்பதுடன் 1933 முதல் 1944 வரை அவர் சிறந்த விஞ்ஞானிகளால் 20 முறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும், நோபல் கமிட்டி அவருக்குப் பரிசு வழங்குவதற்கு இவ்வளவு காலம் எடுத்ததற்கு இது காரணமா என்று சந்தேகிப்பவர்களும் உள்ளனர்.
ஆனால் 1945இல், அதாவது அவர் தனது பிரத்தியேகக் கொள்கையை வகுத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு ஏன் இந்த விருது வழங்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது.
அந்த ஆண்டு, அவரைப் பரிந்துரைத்த மூவரில் ஒருவரான ஐன்ஸ்டீன், இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவை விட்டு வெளியேறியதில் இருந்து பௌலி பணியாற்றிய பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புதிய நோபல் பரிசு வென்றவரைக் கொண்டாடிய விழாவில் பங்கேற்றார்.
செர்ன் (CERN) இணையதளம் விவரித்தபடி, பல புகழ்பெற்ற விருந்தினர்கள் பேசிய பிறகு, ஐன்ஸ்டீன் எழுந்து நின்று, பௌலியை அவரது அறிவுசார் வாரிசாகக் குறிப்பிட்டு ஒரு திடீர் உரையை நிகழ்த்தினார்.
இதைக் கேட்டபோது பௌலி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். ஐன்ஸ்டீன் இறந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மேக்ஸ் பர்னுக்கு எழுதிய கடிதத்தில் அவர் அதை நினைவு கூர்ந்தார். மேலும் அந்தப் பேச்சு தன்னிச்சையாக இருந்ததால், அதைப் பற்றிய பதிவு எதுவும் இல்லை என்றும் வருந்தினார்.
அவரது அறிவுசார் வாரிசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவருக்குப் போதுமான நேரம் இல்லை. பௌலி தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த சூரிச்சில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காலமானார்.
இரண்டாம் பயணம்
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
பட மூலாதாரம்,AGS
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் விவரம் :
"விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு நிவாரண உதவிகளையும் மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும்,செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
"தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. "
"ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. "
"மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைப்பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்."
பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE
"இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM
அந்த அறிக்கையில் மேலும், "இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்கபணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவும் இல்லை என்றும் பொதுக்குழ, மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்." என்று விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,PIB ARCHIVE
2006ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வைத்து பொங்கல் சிறப்பு தபால்தலையை வெளியிட்டார். முதல் தபால்தலையை பெற்றுக்கொண்டவர் நடிகர் விஜய். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் போன்றோர் உடன் இருந்தனர். அரசு சார்ந்த நிகழ்ச்சியாக இது இருந்தாலும் அப்போதே விஜய் மீது அரசியல் வெளிச்சம் பாயத் தொடங்கியது.
2009ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ரத்த தானம், அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் மூலம் தொடங்கினார். அப்போது மன்றம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் இருந்தது.
நடிகர் விஜயின் அரசியல் பிம்பம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து வந்தது என்று கூறுகிறார் மூத்த செய்தியாளர் தராசு ஷ்யாம். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், `விஜயின் அரசியல் என்பது அவரது அப்பாவிடம் இருந்தே தொடங்கிவிட்டது. திராவிட சித்தாந்தம் சார்ந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்துடன் சேர்ந்து எஸ்.ஏ.சி.யும் ஒன்றாக 90களிலேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். ஏனோ, எஸ்.ஏ.சி.யால் அரசியல் அடிகளை எடுத்துவைக்க முடியவில்லை` என்றார்
பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE
2011ல் விஜயின் 'காவலன்' திரைப்படம் வெளியாவதில் அரசியல் தலையீடு காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தீவிர முயற்சிக்கு பின்னர் காவலன் வெளியானாலும் , வெளியீட்டில் ஏற்பட்ட `காயம்` விஜயை வெகுவாக பாதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்ற நிலையில் 'இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்' என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து தலைவா திரைப்படமும் அரசியல் தலையீட்டை சந்தித்து. பிற மாநிலங்களில் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை. திரையரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டன. விஜய் கோடநாடு சென்று, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றார். ஆனால், சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த நேரத்தில் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ` முதலமைச்சர் அம்மா(ஜெயலலிதா)வை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். 'தலைவா' பிரச்சனையில் தலையிட்டு அம்மா ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்` என்று கூறியிருந்தார்.
பின்னர், தலைவா படத்தின் தலைப்பில் இடம்பெற்றிருந்த டைம் டூ லீட் என்ற வாசகம் நீக்கப்பட்டு படம் தமிழ்நாட்டில் வெளியானது.
பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM
கத்தி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்ததை முன்னிறுத்தி பிரச்சனைகள் கிளம்பின. இந்த படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று சில அமைப்புகள் போர்க்கொடி எழுப்பின. இதையெல்லாம் தாண்டி கத்தி படம் வெளியானபோது, படத்தில் இடம்பெற்ற `காற்றை வைத்து ஊழல் செய்கின்ற நாடு இது ` என்ற வசனம் அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் விஜயின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறைக்கு எதிரான வசனம் இடம்பெற்றிருந்ததற்கு பாஜகவினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சர்கார் படத்தில் அரசு தரும் இலவசங்கள் குறித்து அவர் விமர்சித்திருந்தது பேசுபொருள் ஆனது. இது ஒருபுறம் இருக்க தனது திரைப்படங்களின் நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேச தொடங்கினார். சர்கார் பட ஆடியோ வெளியீடு விழாவில் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி விஜயிடம் எழுப்பப்பட்டபோது, ` முதலமைச்சர் ஆனால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன், உண்மையாக இருப்பேன்` என்று பதிலளித்தார்.
அரசியல் தொடர்பான விஜயின் ஒவ்வொரு கருத்தும் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரத் தொடங்கின. தமிழ்நாட்டை தலைமை தாங்க விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, தற்போதும் ஒட்டப்பட்டு வருகின்றன.
பட மூலாதாரம்,YOUTUBE/SONY MUSIC INDIA
2020ல் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை தொடங்குவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இது குறித்த அறிவிப்பு வந்த போதே அதற்கு எதிர்வினையாற்றிய நடிகர் விஜய், தனக்கும் தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது பெயரையும் புகைப்படத்தையும் அரசியல் அமைப்புக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார்.
அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இயக்குநர் எஸ்.ஏ.சி, தாய் ஷோபா மற்றும் அவருடன் இருந்த மற்ற நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.