புதிய பதிவுகள்2

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

2 months 2 weeks ago
மட்டக்களப்பில் 166.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு 29 Nov, 2025 | 08:45 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பலத்த மழை சனிக்கிழமை (29) ஓயந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெள்ள நிலமை காணப்படுகின்றன. எது எவ்வாறாயிருப்பினும், மட்டக்களப்பு முகத்துவாரம், மற்றும் பெரியகல்வாறு ஆற்றுவாய் எனபன வற்றினூமாக மிக வேகமாக வெள்ளநீர் கடலை நோக்கிப் பாய்ந்து வருகின்றது. இன்றிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது. அதபோல் பெரிய நீர்ப்பாசனக் குளங்களாகவுள்ள வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம 19 அடி 7 அங்குலம், உறுகாமம் 16 அடி 3 அங்குலம், உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 29 அடி 6 அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 29 அடியாக உயர்ந்துள்ளதாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறு இருக்க இவ்வருடம ஆரம்பத்திலிருந்து சனிக்கிழமை (29) காலை 8.30 மணிவரையில் 166.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எனினும் இம்முறை செய்கை பண்ணப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பல ஆயிரக்கணக்கான நெல்வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன. இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,994 குடும்பங்களைச் சேர்ந்த 30,443 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட அனர்த்த முன்னாயத்த பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231968

படுபட்சி நாவல்: விசாரணை

2 months 2 weeks ago
மெய்யுண்மைக்கு (facts) மாறான பொய்களால் சோடிக்கப்பட்ட கட்டுரை. என். குணரத்தினம் அமெரிக்க Pazhmany Pl2 ஐ இலங்கையில் கட்டியுள்ளார், பாகங்களை ஒன்றாக்கி/ உருவாக்கி. https://en.wikipedia.org/wiki/Pazmany_PL-1 பிலிப் றே விஜயவர்த்தன விமானங்களை உருவாக்கவில்லை. மெய்யான ஓர் விமானத்தின் பாகங்களை வாங்கி அவற்றை மீண்டும் ஒன்றாக்கி விமானமாக்கினார். இது விமானம் உருவாக்குவதல்ல. கொப்பியடிப்பது! மேலும் இதில் அடித்து விடப்பட்டுள்ளது போன்று பல நூறு வானூர்திகள் இலங்கையில் உருவாக்கப்படவுமில்லை.🤣🤣 புலிகள் தரப்பில்: 1986 ம் ஆண்டு வாக்கில் லெப். கேணல் அப்பையா அவர்களால் விமானம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதை கப்டன் கண்ணாடி வாசு தரையில் ஓட்டி வானேற முயற்சித்து முடியவில்லை. மொத்தமாக இரண்டு உருவாக்கப்பட்டன. அவை பின்னாளில் இந்திய வான்படையின் வான் தாக்குதலில் பாரிய சேதமடைந்து போயின. பின்னர் அவற்றில் ஒன்று இந்திய படையினரால் கைப்பற்றப்பட்டது: இது முற்றிலும் சொந்த வடிவம். பின்னர் 2008 ம் ஆண்டு பாரிய வானூர்திகள் கட்டும் முயற்சிகளை புலிகள் மேற்கொண்டனர். அதன் முதற்கட்டமாக தொழிற்சாலை அமைத்து வானூர்தி மாதிரிகள் தயாரித்தனர். 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்' 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் எச்சம்' 'எரியூட்டப்பட்ட வானூர்தி மாதிரியின் மையப்பகுதி' அம்புட்டும்தா... நானறிந்தது. மொத்தத்தில் சொந்த வடிவத்தில் யாரும் பறக்கக்கூடிய ஆள்கொண்ட வானூர்தியை தீவினுள் உருவாக்கவில்லை.

பாகிஸ்தான் - ஸிம்பாப்வே - இலங்கை மும்முனை ரி20 கிரிக்கெட் தொடர்

2 months 2 weeks ago
பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை 29 Nov, 2025 | 09:04 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டியில் தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான மும்முனை சர்வதேச ரி20 கிரக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷீஹீன் ஸா அப்றிடி, மொஹம்மத் நவாஸ், அப்ரார் அஹ்மத் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளில் இலங்கை வீரர்களில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். காமில் மிஷாரவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்ற ஓரளவு பலமான நிலையில் இருந்தது. ஆனால், குசல் மெண்டிஸின் ஆட்டம் இழப்புடன் 52 பந்துகளில் எஞ்சிய 9 விக்கெட்களை 31 ஓட்டங்களுக்கு இலங்கை இழந்தது. காமில் மிஷார 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். அவரைவிட குசல் மெண்டிஸ் 14 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 11 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை. காமில் மிஷாரவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். உதிரிகளாக 13 ஓட்டங்கள் கிடைத்தது. பந்தவீச்சில் மொஹம்மத் நவாஸ் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 115 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் தற்போது பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது. https://www.virakesari.lk/article/231978

கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் ஹரிணி!

2 months 2 weeks ago
29 Nov, 2025 | 04:33 PM "திட்வா" சூறாவளி மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்ததால் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (29) மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். போமிரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களையும் பிரதமர் சந்தித்தார். இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை ஆய்வு செய்த பிரதமர், உணவு, சுகாதார உபகரணங்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை விரைவாக வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை மேற்பார்வையிட்டார். தற்போது ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்தத்தைப் புரிந்துகொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதில் அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், கொழும்பு மாவட்டச் செயலாளர், கொலன்னாவ பிரதேச செயலாளர், நகர பிதா உட்பட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/231944

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

2 months 2 weeks ago
அலவத்துகொடை பகுதியில் பாரிய மண்சரிவு - சுமார் 20 குடும்பங்கள் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்! 29 Nov, 2025 | 04:50 PM கண்டியில் அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்புக்கே ஆறு பகுதியில் இன்று சனிக்கிழமை (29) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் இருந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/231949

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

2 months 2 weeks ago
டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது - அடுத்த கட்டங்கள் எப்படி அமையும்! Published By: Priyatharshan 29 Nov, 2025 | 04:08 PM டிட்வா புயல் 29.11.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி நிலைவரப்படி, புயலின் மையத்தின் பின்பகுதி தற்போது நிலத்திலிருந்து கடலுக்குள் சென்றது. புயலின் மையம் எப்போதும் அமைதியானது. அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது. அதன் விளைவே தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெற்றுக்கொள்ளும் சற்று கனமான மழை. இந்த மிதமான அல்லது சற்று கனமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். அத்தோடு வடக்கு மாகாணத்தில் இந்த புயல் முழுவதும் கடலைச் சென்றடையும் வரை காற்று சற்று வேகமாக வீசும் ( மணிக்கு 40-60 கி.மீ.) என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே காற்று வேகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு புயலின் மிக ஆபத்தான பகுதி உள்வளையமே. வலுவான காற்றையும், அடர்த்தியான ஈரப்பதன் மிக்க முகில்களையும் கொண்ட உள்வளையமே புயலின் மிக ஆபத்தான பகுதி. அது நீர்ப் பகுதியிலிருந்து நிலப்பகுதிக்குள் வரும்போதும், நிலப்பகுதியிலிருந்து நீர்ப் பகுதிக்கு செல்லும்போதும் அமைதியாக செல்லாது. இதுவே இலங்கை முழுவதும் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று இரவு இதன் வெளிவளையமும் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மழை குறைந்தாலும் குளங்களுக்கான நீர்வரத்து அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகமாகவே இருக்கும். ஆகவே வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம். இந்த புயல் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலவும் என்பதனால் வடக்கு, வட மேற்கு, கிழக்கு கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/231942

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

2 months 2 weeks ago
கொத்மலை ரம்பொடை பகுதியில் மண்சரிவு : 14 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 1 29 Nov, 2025 | 03:04 PM நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கொத்மலை ரம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒரு குழுவினர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்மலை பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231923 குருணாகல் - அலவ்வ பகுதியில் பாரிய மண்சரிவு! 29 Nov, 2025 | 02:02 PM குருணாகல் - அலவ்வ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கி சுமார் 22 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது. மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. https://www.virakesari.lk/article/231924 அரநாயக்க மண்சரிவு; குழந்தைகள் உட்பட 120 பேர் மண்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்! 29 Nov, 2025 | 03:36 PM கேகாலை - அரநாயக்க பகுதியில் இன்று சனிக்கிழமை (29) மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் 20 குழந்தைகள் உட்பட 120 பேர் சிக்கியுள்ளனர். மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/231938

இலங்கைக்கு உதவத் தயார்.. இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு

2 months 2 weeks ago
நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் 2ஆவது விமானமும் கொழும்பை வந்தடைந்தது! 29 Nov, 2025 | 03:11 PM சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது விமானமும் சனிக்கிழமை (29) கொழும்பை வந்தடைந்துள்ளது. https://www.virakesari.lk/article/231935

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

2 months 2 weeks ago
இராஜங்கனை - கிரிபாவ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 33 பேரை ஹெலிகொப்டர் மூலம் மீட்ட விமானப்படையினர்! 29 Nov, 2025 | 02:07 PM இராஜங்கனையின் கிரிபாவ பகுதியில் இன்று சனிக்கிழமை காலை (29) வெள்ளத்தில் சிக்கித் தவித்த 33 பேரை, அனுராதபுரம் விமானப்படை தளத்தின் எண் 06 படைப்பிரிவுக்குச் சொந்தமான MI-17 ஹெலிகாப்டரை விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அனைத்து மக்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அனுராதபுரம் விமானப்படை தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். https://www.virakesari.lk/article/231925

இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

2 months 2 weeks ago
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்! 29 Nov, 2025 | 01:40 PM சீரற்ற வானிலை காரணமாக, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவித்தலின்படி, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும், உதவிகளுக்கு 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231918

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

2 months 2 weeks ago
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலைதீவு நிதியுதவி! 29 Nov, 2025 | 12:31 PM சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 50,000 டொலர் நிதியுதவியையும், 25,000 டூனா மீன் டின்களையும் நிவாரணமாக வழங்க மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/231909

கனடாவில் குடிவரவு விதிகள் கடுமையாக்கப்பட்டதால் இந்திய மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு அதிகரிப்பு

2 months 2 weeks ago
கனடாவில் இந்தியர்களின் மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு அதிகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கனடா மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கட்டுரை தகவல் குர்ஜோத் சிங் பிபிசி பஞ்சாபி 9 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்தியர்களின் மாணவர் விசா (Student Permit) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் விகிதம் அதிகமாகி இருக்கிறது. கனடாவின் குடிவரவுத் துறை பிபிசியுடன் பகிர்ந்து கொண்ட தரவுகளில் இது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 2025-இல் முடிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில், 74% நிராகரிக்கப்பட்டுள்ளன. 2023 (27%) மற்றும் 2024 (23%) ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த நிராகரிப்பு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். 2023-இல் 2,22,540 இந்தியர்களின் மாணவர் விசா விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024-இல் இந்த எண்ணிக்கை 94,590 ஆகக் குறைந்தது. 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், வெறும் 9,955 இந்திய விண்ணப்பதாரர்களின் மாணவர் விசாவிற்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கனடா மாணவர் விசா ஒதுக்கீட்டைக் குறைத்து, விதிகளை இறுக்கியதின் தாக்கம் இந்திய மாணவர்களை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை இது காட்டுகிறது. அதேவேளை, கனடா மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அந்த துறையின் கூற்றுப்படி ஆகஸ்ட் 2025-இல், 3,920 இந்தியர்கள் மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர், ஆகஸ்ட் 2023-இல் இந்த எண்ணிக்கை 19,175 ஆக இருந்தது. ஜனவரி 2025 முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலப்பகுதியில் இந்திய விண்ணப்பதாரர்களுக்கான சராசரி நிராகரிப்பு விகிதம் 71% ஆக உள்ளது. இதே காலகட்டத்தில் உலகளாவிய சராசரி விகிதம் 58% ஆகும். உலக அளவில் மொத்த விண்ணப்பங்களின் சராசரி நிராகரிப்பு விகிதம் 2023 இல் 40% ஆக இருந்தது, அது 2024 இல் 52% ஆக அதிகரித்தது. குடிவரவுத் துறை ஆகஸ்ட் வரையிலான தரவுகளை மட்டுமே வழங்கியுள்ளது. கனடா 2023-இல் மொத்தம் 5,15,475 மாணவர் விசாக்களை (Study Permits) அங்கீகரித்தது. இதில் 2,22,540 பேர் இந்தியர்கள் ஆவர். 2025-ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மொத்தம் 87,995 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 9,955 இந்தியர்கள் ஆவர். இந்திய மாணவர்கள் நிராகரிக்கப்படுவதற்கு என்ன காரணம்? இந்திய மாணவர்களின் நிராகரிப்பு விகிதம் அதிகரிப்பது குறித்து பிபிசிக்கு அளித்த பதிலில், கனடாவின் குடிவரவுத் துறை, "கடந்த 2 ஆண்டுகளில் சர்வதேச மாணவர்கள் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களால் ஒப்புதல் விகிதம் குறைந்திருக்கலாம்," என்று கூறியுள்ளது. "இந்த மாற்றங்களில் கல்லூரிகள் மாணவர்களின் அனுமதி கடிதங்களை IRCC (குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா) மூலம் உறுதிப்படுத்துவது மற்றும் மாணவர்கள் கனடா வரத் தேவையான நிதியைக் கோரும் அளவை அதிகரிப்பது ஆகியவை அடங்கும்." 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மாணவர் நேரடித் திட்டம் (Student Direct Stream) நீக்கப்பட்ட போது இந்திய விண்ணப்பதாரர்களின் நிராகரிப்பு விகிதம் அதிகரித்ததாகவும் குடிவரவுத் துறை கூறியுள்ளது. தரவுகளின்படி, நவம்பர் 2024-இல் இந்திய மாணவர்களின் நிராகரிப்பு விகிதம் 31% ஆக இருந்தது. டிசம்பர் 2024-இல் இது 56% ஆக அதிகரித்தது மற்றும் ஜனவரி 2025-இல் 71% ஆக உயர்ந்தது. அனைத்து மாணவர் விசா விண்ணப்பங்களும் சமமாக மதிப்பிடப்படுகின்றன என்றும், விண்ணப்பதாரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அத்துறை கூறியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து குடிவரவுத் துறை தகவல் அளித்துள்ளது. நிராகரிப்புக்கான காரணங்கள் R216(1)(b) - கனடாவிற்குச் செல்வதற்கான நோக்கம் தெளிவாக இல்லாதது R220(a) - விண்ணப்பதாரரிடம் போதிய நிதி (Funds) இல்லாமை R216 பிரிவில் வராத பிற காரணங்கள். குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு ஒழுங்குமுறையின் பிரிவு 216 மாணவர் விசாக்கள் பற்றியது. கனடா மற்றும் இந்திய மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப், ஹரியாணா மற்றும் குஜராத் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவிற்குச் சென்றுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், கனடாவில் நிரந்தர குடியேறுவதற்கான பாதை எளிதாக இருந்ததால், கடந்த காலத்தில் மாணவர்கள் கனடாவைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், சமீபத்திய மாதங்களில் கனடாவில் குடிவரவு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2025-இல் நடைபெற்ற கனடியப் பொதுத் தேர்தலுக்கு முன்னரும் குடிவரவு பிரச்னை முக்கியத் தேர்தல் பிரச்னைகளில் ஒன்றாக இருந்தது. கனடா நவம்பர் 5-ஆம் தேதி வெளியிட்ட குடிவரவு இலக்குகளின்படி, 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் விசா ஒதுக்கீடு 3,05,900 இலிருந்து 1,55,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்திய தூதரகம் கூறியது என்ன? இந்திய மாணவர்களின் 'நிராகரிப்பு விகிதங்கள்' குறித்து ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம், "இந்தியர்களின் மாணவர் விசா நிராகரிக்கப்படுவது தூதரகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. விசா வழங்குவது கனடிய அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இதுகுறித்து இந்திய தூதரகம் கருத்து தெரிவிக்க முடியாது," என்று கூறியுள்ளது. இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜ்ஜிய உறவுகள் மீண்டும் சீரமைக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் குடிவரவு விதி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அக்டோபர் மாதம், கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியாவிற்கு வந்தார். அதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கனடாவிற்கு பயணம் மேற்கொண்டார். செப்டம்பர் 2023-இல், அப்போதைய கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு ஏஜெண்ட்களின் பங்களிப்பு இருப்பதாக குற்றம் சாட்டிய பிறகு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடையத் தொடங்கின. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று இந்திய அரசாங்கம் கூறியது. 'மோசடி வழக்குகளால் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன' டொரன்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணிப் பேராசிரியராக இருக்கும் உஷா ஜார்ஜ், புலம்பெயர்ந்தோர் தொடர்பான விவகாரங்கள் குறித்துப் பல ஆய்வுகளைச் செய்துள்ளார். இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்குக் காரணம், கனடா மாணவர் விசா விதிகளை கடுமையாக்கியதுதான் என்று அவர் கருதுகிறார். "ராஜ்ஜிய உறவில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் மாணவர் விசா பிரச்னை ஆகியவற்றை இரண்டு இணையான பிரச்னைகளாக நான் பார்க்கிறேன். இவை சற்றே தொடர்புடையவையாக இருக்கலாம், ஆனால் கனடிய குடிவரவு அரசியல் தலையீடின்றி செயல்படுகிறது," என்று பேராசிரியர் உஷா ஜார்ஜ் கூறுகிறார். "முன்னர் கனடாவில் 'படி, வேலை செய், தங்கு' என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது குடிவரவின் நோக்கம், தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, மோசடியைக் கையாள்வது மற்றும் குடிவரவு முறையில் மக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்துவது ஆகும்," என்று குறிப்பிடுகிறார். சர்வதேச மாணவர்களின் பயணம் கனடாவில் எப்படி இருந்தது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் ஃபிரேசர் வேலி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான சத்விந்தர் கவுர் பெயின்ஸ், இது கனடாவின் குடிவரவுக் கொள்கையில் ஒரு போக்கை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கையாக பார்க்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவிற்குள் நுழைய மாணவர் விசா ஒரு சட்டப்பூர்வ வழியாகப் பிரபலமடைந்தது என்று அவர் கூறுகிறார். "இந்த வழியில் கனடாவை அடைந்த குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் பலருக்கும், இங்கு யாரையும் தெரியாது, அதாவது அவர்களுக்கு எந்தவொரு ஆதரவு அமைப்பும் இல்லை. இங்கு தங்கள் இடத்தைப் பெற அவர்கள் போராட வேண்டியிருந்தது மற்றும் இனவெறி போன்ற சிக்கல்களையும் எதிர்கொண்டனர்." "பெரும்பாலான மாணவர்கள் ஒரு பட்டம் பெறச் சேர்வதற்குப் பதிலாக 1 அல்லது 2 ஆண்டு படிப்புகளுக்கு முன்னுரிமை அளித்தனர். சில சமயங்களில் பல்கலைக்கழகங்கள் இந்த மாணவர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலித்தன, ஆனால் கனடாவிற்கு வர இந்த மாணவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு சட்டபூர்வமான வழி இது." "அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்கள் கனடிய பல்கலைக்கழகங்களுக்கு வந்தனர், அவர்களில் பலர் தரமான கல்வியைப் பெற முடியவில்லை. எனவே, குடிவரவுக் கொள்கைகளுடன் பல்கலைக் கழகங்களும் பொறுப்பேற்க வேண்டும்." கனடாவில் மாணவர்களுக்கான வாய்ப்புகள் முன்பு போல் இல்லை என்றும், தற்போது கனடிய பொருளாதாரம் இவ்வளவு எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க முடியாது என்றும் அவர் கூறுகிறார். 'அதிக நிராகரிப்பு விகிதம் கவலை தருகிறது' கனடாவில் குடிவரவுத் துறையில் பணிபுரியும் ரத்தன்தீப் சிங் கூறுகையில், "இந்த அதிக நிராகரிப்பு விகிதம் கவலை அளிக்கிறது. இது கனடாவில் படிக்க விரும்பும் பஞ்சாபி அல்லது பிற இடங்களைச் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையை சிதைக்கும்," என்றார். இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் மாணவர் விசாவைச் சுற்றி ஒரு பொருளாதாரம் உருவானதாகவும், இந்த வீழ்ச்சியால் அது பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7vmd7jvvzpo

'2 நாட்களாக உணவில்லை' - கொழும்பு விமான நிலையத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன?

2 months 2 weeks ago
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அவசர உதவி மையம்! 29 Nov, 2025 | 12:26 PM இந்திய உயர் ஸ்தானிகராலயம், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. பயணிகளுக்கு உணவு மற்றும் நீர் உட்படத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வழங்கி வருகிறது. உதவி தேவைப்படும் எந்தவொரு இந்தியப் பயணியும் அவசர இலக்கமான +94 773727832 ஐத் தொடர்புகொள்ள முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231908

அனர்த்தத்தில் சிக்கியுள்ள இலங்கைக்கு 2 மில்லியன் டொலர் வழங்கும் அமெரிக்கா

2 months 2 weeks ago
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ அமெரிக்கா தயார்! 29 Nov, 2025 | 12:16 PM சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை மீட்கும் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதி பேச்சாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார். "டிட்வா" புயலின் விளைவாகத் தொடர்ந்து மோசமான கலாநிலை,வெள்ளம், மண்சரிவு என்பன பதிவாகிவரும் நிலையில் இலங்கையர்களுக்கு எமது ஆழந்த அனுதாபங்கள். உயிரிழந்தோருக்காகப் பிரார்த்திப்பதுடன் தொடர் மீட்பு உதவிகளை வழங்கிவருவோருக்கு நன்றி எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதி பேச்சாளர் டாமி பிகாட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231907

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

2 months 2 weeks ago
ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருக்கும் - இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்! 29 Nov, 2025 | 12:09 PM இலங்கை முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்திய “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் அன்பு உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் மனம் ஒற்றுமையில் நிற்கிறது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் துயரங்களை எதிர்கொள்ளும் அனைவரின் துயரத்தையும் என் இதயம் உணர்கிறது. தேவைப்படும் மக்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவும் பகல் இரவு பாராமல் பாடுபடும் அவசர மீட்புப்படையினர், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிக ஆழமாக பாராட்டப்படுகின்றன. ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருந்துள்ளது, மேலும் இனியும் உங்கள் பக்கம் நிற்கும். பாதிக்கப்பட்ட அனைவரும் வலிமை, நம்பிக்கை பெற்று விரைவில் பாதுகாப்பான மற்றும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிடுவீர்கள் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231906

அனர்த்தத்தில் சிக்கியுள்ள இலங்கைக்கு 2 மில்லியன் டொலர் வழங்கும் அமெரிக்கா

2 months 2 weeks ago
இலங்கைக்கு உடனடி நிவாராணமாக 2 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 'டிட்வா' சூறாவளியின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நாடு தொடர்ந்து மீண்டு வருவதால், இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளை ஆதரிக்கவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தீவு முழுவதும் உள்ள சமூகங்கள் கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தால் "கடினமான நாட்களை" எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடியின் போது இலங்கையுடன் ஒற்றிணைந்து அமெரிக்கா நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கும்,இலங்கையை மீள கட்டியெழுப்புவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என்றார். https://tamilwin.com/article/us-commits-usd-2-million-urgent-flood-relief-1764401818

மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்

2 months 2 weeks ago
Courtesy: Rajugaran மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திரும்பி வந்த இராணுவத்தினர் இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது. அதனை தொடர்ந்து, விமான படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mannar-maanthai-eaxtreme-flood-40-trapped-1764414289

சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்!

2 months 2 weeks ago
29 Nov, 2025 | 01:47 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சுத்தமான நீரை பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது. சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்! | Virakesari.lk

அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு!

2 months 2 weeks ago
29 Nov, 2025 | 02:51 PM நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று, நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் ஏற்பட்ட மண்மேடு சரிவின் காரணமாக சோதனைச் சாவடி முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. அப்போது 19வது இலங்கை தேசிய இராணுவப்படையைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஒருவரை உள்ளடக்கிய ஐந்து வீரர்கள் சோதனை சாவடி நிலையத்தில் வழக்கம் போல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சரிவு ஏற்பட்டதை முதலில் கவனித்த நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் உடனடியாக லக்சபான இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியைத் தொடர்புகொண்டனர். தகவல் கிடைத்ததையடுத்து, கட்டளை அதிகாரி உடனடியாக மீட்புக் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். பின்னர், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மண்க்குள் சிக்கியிருந்த வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும், வீதியில் உள்ள மண்மேட்டை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு! | Virakesari.lk

யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி

2 months 2 weeks ago
29 Nov, 2025 | 02:57 PM யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்ட செயலாளர்கள் , விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் மீட்பு பணியாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகல மாவட்ட அரச அதிபர்களுடனான ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. . பல்வேறு நெருக்கடிகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி | Virakesari.lk
Checked
Sun, 02/15/2026 - 00:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed