யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை வளர்ப்பு பெரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது.
மேலும், ஊர்காவற்துறை, வேலணை, சங்கானை மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் கடற்பாசி வளர்ப்பும் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பைப் பயன்படுத்திப் புதிய வளர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும்
இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இறால், நண்டு மற்றும் சிப்பி வகை வளர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
அத்துடன், கடல்வளமற்ற வவுனியா மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியைப் பிரத்தியேகமாக மேம்படுத்தலாம்.
குஞ்சு உற்பத்தி நிலையங்களின் பற்றாக்குறை, மன்னார் (மாந்தை மேற்கு, நானாட்டான்) மற்றும் கிளிநொச்சி (பூநகரி) பகுதிகளில் புதிய காணிகளை அடையாளங்காண்பதில் வனவள மற்றும் வனஉயிரிகள் திணைக்களங்களுடனான முரண்பாடுகள், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை மற்றும் காலாவதியான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தலில் ஏற்படும் தாமதங்கள் ஆகியன பிரதான சவால்களாகக் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் உள்ள பண்ணைகளின் சனநெரிசலைக் குறைத்தல், பூநகரி போன்ற பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரியத் தொழில்களுடன் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சுமுகமான பொறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளது.
இவ்வாறான சவால்கள் தீர்க்கப்படுவதன் ஊடாக வடக்கு மாகாணத்திலிருந்து வருடாந்தம் அண்ணளவாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
யாழில் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது - கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் | Virakesari.lk
By
பிழம்பு ·
Archived
This topic is now archived and is closed to further replies.