சட்டம் இல்லாத நாட்டில் ஒரு சட்டத்துக்கான அமைச்சர் தேவையில்லை. தெற்கில் ஒரு சட்டம்; வடக்கு, கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவீர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கை பிரித்து தனிநாடாக தர வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்காக எவ்விதம் அச்சுறுத்தப்பட்டாலும், எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டாலும், தொடர்ச்சியாக நினைவேந்தல்களை செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தலை கடந்த 2022ஆம் ஆண்டில் அனுஷ்டித்த கோ. கருணாகரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற தடை உத்தரவை மீறி நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.முகமட் ஹம்சா முன்னிலையில் நேற்று புதன்கிழமை (31) விசாரணக்கு எடுக்கப்பட்டது.
அவ்வேளை, கோ. கருணாகரன், த.சுரேஸ் ஆகிய இருவரும் நீதிமன்றில் ஆஜராயினர்.
அடுத்து, விசாரணையின் பின்னர், இந்த வழக்கு எதிர்வரும் மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.
அதன் பின்னர், கருணாகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
கடந்த 1987ஆம், 1991ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 152 பேருக்காக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் ஜனவரி 28ஆம் திகதி வருடா வருடம் நினைவுகூருவது வழக்கம்.
2022 ஜனவரி 28 வழமை போல நானும் எனது கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் சென்று நினைவேந்தலுக்கு விளக்கேற்றினோம். எந்தவிதமான தடை உத்தரவும் கிடைத்திருக்கவில்லை.
அதன் பின்னர், எனக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸுக்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு வழங்கினர்.
2021, 2022, 2023, 2024 விளக்கேற்றினோம். எந்த விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால், 2022ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், அவரின் உத்தரவின் பெயரில் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டிலே ஒரு சட்டம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த நாட்டை ஆள வருகின்ற ஆட்சியாளர்கள், அரச அதிபர்கள் தாங்கள் நினைத்ததையே சட்டமாக கொண்டு நடத்துவதுதான் ஒரு முறையாக இருக்கிறது.
இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா? அல்லது ஒரே நாடு என்ற சட்ட முறை இருக்கின்றதா? என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.
வடக்கு, கிழக்கில் இறந்தவர்களுக்கு நாங்கள் நினைவுகூர, விளக்கேற்ற முடியாது என கூறினால், தெற்கில் இந்த நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்படுத்திய ஜே.வி.பி தங்களது தலைவர்கள் மற்றும் மரணித்தவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் சிலை வைத்து நினைவுகூரலாம் என்றால் ஏன் வடக்கு, கிழக்கில் இப்படியான தடைகள் இருக்கிறது?
இந்த தடைகளை மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்கள், தான் விரும்பியபடி செய்பவர்களாக இருந்தால் இந்த நாட்டில் ஜனநாயக சட்டமும் இல்லை.
ஒரே நாட்டில் ஒரே சட்டத்தை பேணி பாதுகாக்க முடியாவிட்டால், ஒரே நாடு தேவையில்லை. அந்த நிலைமைக்கு நீங்கள் எங்களை தள்ளிவிடுகின்றீர்கள். தெற்கிலே நடைபெறுவது வட, கிழக்கில் நடைபெற வேண்டும். ஒரே நாடு ஒரே சட்டமாக இருந்தால் இப்படியான தொந்தரவுகளை கொடுக்கக்கூடாது.
தமிழ் தேசியத்துடன் இணைந்திருக்கும் தமிழ் தேசிய தலைவர்களை எங்கள் இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தக்கூடாது என அச்சுறுத்துவதன் மூலம் நாங்கள் இதை நிறுத்தப் போவதில்லை. எங்களுக்காக உயிர் நீத்தவர்களை தொடர்ச்சியாக நாங்கள் நினைவுகூருவோம். அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக மரணித்தவர்கள் அதில் பொதுமக்களும் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.
எனவே எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும், எத்தனை பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தாலும், தொடர்ச்சியாக நினைவேந்தல்களில் ஈடுபட்டுக்கொண்டே இருப்போம். அதை செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என்றார்.
https://www.virakesari.lk/article/175330