ஊர்ப்புதினம்

யாழ். இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

3 months ago
10 MAR, 2024 | 09:11 PM
image

வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை  ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில், வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் ஒன்றை ஆரம்பித்து வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல், விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று வழங்கி வந்துள்ளார். 

அவரை நம்பி யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தை வழங்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்ச பணத்தை  வழங்கியுள்ளார். 

பணத்தை  வழங்கியவர் தனது வெளிநாட்டு, பயண ஏற்பாடுகள் தாமதமாகி வந்தமையால், அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன் போது அவரது வங்கி கணக்கு இலக்கம் ஊடாக சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதனை கண்டுபிடித்துள்ளனர்.

கொழும்பு உள்ளிட்ட இதர பகுதிகளில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர்களாக செயற்படும் மோசடியாளர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமக்கான முகவர்களாக சிலரை நம்பிக்கைக்காக அமர்த்தி அவர்கள் ஊடாக பெரும் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/178373

சரசாலையில் கசிப்புடன் கைதான 15 வயதுடைய சிறுவன்!

3 months ago
10 MAR, 2024 | 08:57 PM
image
 

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உபட்ட சரசாலை பகுதியில் 4 லீற்றர் 500 மில்லிலீட்டர் கசிப்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (10)  15 வயதுடைய சிறுவன்  கைது செய்யப்பட்டுள்ளான்.  

குறித்த சிறுவன் கசிப்பை எடுத்து சென்றபோது சாவகச்சேரி பொலிஸால் கைது செய்யப்பட்டார் .  

மேலதிக விசாரணைகளின் பின்னர் சிறுவன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/178375

2028ற்குப் பிறகு சாதாரண தரத்தோடு கல்வி முற்றுப்பெறுவதில்லை – கல்வி அமைச்சர்

3 months ago

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எவருக்கும் தோல்விகள் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஹட்ச் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புறங்களுக்கு மின்சார சைக்கிள்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி அல்லது தொழில் பயிற்சியை பின்பற்றும் அனைத்து மாணவர்களும் க.பொ.த சாதாரண தரத்திற்கு பிறகும் பாடசாலையில் கல்வி கற்க அமைச்சு அனுமதியளிக்கும் என்றார்.

அதன்படி, குழந்தைகள் தங்கள் பாடசாலைகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களின் கல்வி அல்லது தொழில் பயிற்சியுடன் மேலும் இரண்டு ஆண்டுகள் தொடரலாம். பின்னர், அவர்கள் தொழில் பயிற்சி திட்டங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

“பெரும்பாலான திட்டங்களை நாங்கள் புதுப்பித்துள்ளோம். மொத்தம் 4.3 மில்லியன் மாணவர்கள் தற்போது 10,126 அரசுப் பாடசாலைகளிலும், 300க்கும் மேற்பட்ட சர்வதேசப் பாடசாலைகளிலும், 110க்கும் மேற்பட்ட தனியார் பாடசாலைகளிலும் படித்து வருகின்றனர். இப்போது நாங்கள் கல்வி திட்டத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 75 ஆண்டுகளாக, நாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததால், நாங்கள் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றினோம்,” என்று அமைச்சர் கூறினார்.

பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியில் இருந்து நடைமுறைக்கு மாறுவதற்கு அல்லது தொகுதிகளை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் விரும்புகிறோம் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/295117

புதுக்குடியிருப்பில் பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு

3 months ago
10 MAR, 2024 | 04:15 PM
image

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாகத் தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்ட வாகனத்தின் சாரதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (09) மாலை  இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

புதுக்குடியிருப்பு பகுதியில் பட்டா ரக வாகனத்தில் தேக்கு மரகுற்றிகளை கடத்துவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைதானார் . 

இந்தநிலையில் 13 தேக்கு மர குற்றிகள் பொலிஸாரால்  கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

https://www.virakesari.lk/article/178362

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் இராணுவ புலனாய்வு அதிகாரியும் இளைஞரும் கைது

3 months ago
10 MAR, 2024 | 01:52 PM
image

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று (09) பிற்பகல் கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, இவர்களிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடைய சார்ஜன்ட் மேஜரையும், உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று  முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் நிறுத்தியபோது இருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை, சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/178355

யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு!

3 months ago
10 MAR, 2024 | 03:19 PM
image

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரட்நாயக்க கலந்துகொண்டு காணி உரிமையாளர்களுக்கான காணிப் பத்திரங்களை வழங்கிவைத்தார்.

இதில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரம ரட்ன, ஜனாதிபதி செயலக வட மாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

VideoCapture_20240310-120828.jpg

VideoCapture_20240310-120743.jpg

VideoCapture_20240310-120754.jpg

VideoCapture_20240310-120759.jpg

VideoCapture_20240310-125642.jpg

VideoCapture_20240310-125638.jpg

https://www.virakesari.lk/article/178361

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்

3 months ago
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன் Screenshot-2024-03-10-at-2.21.29%E2%80%A

கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியை பார்வையிட நேரில் சென்றுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கிரிக்கெட் போட்டியை பார்வையிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. மைதானத்திற்கு வருகை தந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய ஜனாதிபதி மைதானத்திற்கு வருகை தந்த மாணவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியைக் காண வந்திருந்த மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

ரோயல் கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்களான அநுராத ஜயரத்ன, ரவி கருணாநாயக்க மஹிந்தானந்த அலுத்கமகே, ஹர்ஷ டி சில்வா மற்றும் சாகல ரத்நாயக்க, எம். ஏ. சுமந்திரன், சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

 

https://akkinikkunchu.com/?p=270716

 

இலங்கையில் கடந்த வருடம் 1,550 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

3 months ago
10 MAR, 2024 | 10:44 AM
image
 

சுகாதார அமைச்சின் தேசிய தொழுநோய் அறிக்கையின்படி  , 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் படி ,2023 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் 259  தொழுநோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழு நோயாளர்களும் , களுத்துறை மாவட்டத்தில் 116 தொழு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் . 

2019 ஆம் ஆண்டு  1,660 தொழுநோயாளிகளும், 2020 ஆம் ஆண்டு  1,213 நோயாளிகளும், 2021 ஆம் ஆண்டு 1,026 தொழுநோயாளிகளும், 2022 ஆண்டு  1,401 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

https://www.virakesari.lk/article/178340

வெடுக்குநாறி மலையில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு முன்னெடுப்பு - சிறிதரன், கஜேந்திரன் சுட்டிக்காட்டு

3 months ago

Published By: DIGITAL DESK 3   09 MAR, 2024 | 08:26 PM

image

ஆர்.ராம்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டுமென்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிவராத்திரி பூஜைவழிபாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் எதேச்சதிகாரமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்நிலையில் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில், 

வெடுக்குநாறிமலை ஆலயம் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் இருந்தபோதும், விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோதும் பூஜைவழிபாடுகள் இடம்பெற்று வந்தவொரு ஆலயமாகும்.

அதுமட்டுமன்றி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வரலாறும் இதற்கு காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் எமது மக்கள் மரபு ரீதியாக வழிபட்டு வந்த இந்த ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு முன்னெடுத்த விசேட வழிபாடுகளை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். 

இந்தச் செயற்பாடு கண்டிக்கதக்கது என்பதோடு, தற்போதும் தென்னிலங்கை சிங்கள, பௌத்த தேசியவாதிகள் அரசாங்கத்தின் கட்டமைப்புக்கின் துணையுடன் ஆக்கிரமிப்பைச் செய்வதற்கு எவ்வளவு தூரம் முனைகின்றார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும் என்றார்.

இதேவேளை, செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கையில்,

தமிழர்களுக்கு பூர்வமாகவுள்ள பகுதிகளை தொல்பொருளின் பெயரால் முதலில் அடையாளப்படுத்துவதும் பின்னர் பௌத்த அடையாளங்களை அங்கு நிறுவுவதும் தொடர்ச்சியாக தாயகப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடாகிவிட்டது.

சிவராத்திரி பூஜை நிகழ்வுகளுக்காக நாம் வெடுக்குநாறி மலைக்குச் சென்றபோது அங்கு பௌத்த தேரர்கள் வருகை தந்தமைக்கான நோக்கம் என்ன?

அவர்கள்,வெடுக்குநாறி மலையில் தமது அடையாளங்களை அமைத்து தமது ஆக்கிரமிப்பை விஸ்தரிப்பதனையே நோக்காகக் கொண்டு அங்கு வருகை தந்திருந்தார்கள்.

ஆகவே, தென்னிலங்கையின் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன என்பதற்கு வெடுக்குநாறிமலை மீண்டும் சாட்சியாகின்றது.

அதுமட்மன்றி, பொலிஸாரும், அரச படைகளும் பெரும்பான்மை இனத்துக்கும், தேரர்களுக்கும் சாதகமாக செயற்படுகின்றார்கள் என்பதும் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர்கள், வழிபாட்டுக்காகச்சென்ற மக்களை நடத்திய விதமும், மக்களின் பிரதிநிதியான என்னை கையாண்ட முறைமையும் அதற்கு சான்றாகின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/178314

முதலில் 'ஜனாதிபதி தேர்தல்' என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி ரணில், மஹிந்த, பஷில் சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவு

3 months ago
10 MAR, 2024 | 10:18 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்தும் தீர்மானத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, உத்தேச தேசிய தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சினிலமவின் புதல்வரின் திருமணத்தில் சாட்சி கையெழுத்திடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தார். 

அங்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ உரிய நேரத்துக்கு வருவதாக இருந்த போதிலும் ஜனாதிபதி ரணில், திருமண நிகழ்விலிருந்து சென்ற பின்னரே பஷில் ராஜபக்ஷ வந்துள்ளார்.

எனினும், அன்றைய தினம் இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது. 

ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.

உத்தேச தேசிய தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணி குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல் மூலங்கள் குறிப்பிட்டன. எந்த தேர்தல் முதலில் இடம்பெறும் என்ற ஐயப்பாடு அரசியல் கட்சிகளுக்கு மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கும் உள்ளன. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய பாராளுமன்ற கொள்கை பிரகடன உரையில் தெளிவாகவே வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்ற விடயத்தை உறுதிப்பட கூறியுள்ளார்.

ஆனால், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் நலன்களை மையப்படுத்தி முதலில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை முன்வைத்து ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் பிரகாரம் ஜனாதிபதி ரணிலுக்கும், பஷில் ராஜபக்ஷ மற்றும் மஹந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பிலும் தேர்தல் விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தலும் அதனை தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்தப்படும் என்ற தேர்தல் கால அட்டவனையை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார். எனினும், இந்த விடயம் குறித்து மீண்டும் கட்சி உறுப்பினர்களுடன் பேசுவதாக பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், முதலில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு ஏற்கனவே எடுத்துள்ளது. எனவே இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றியும் அடுத்த சந்திப்பிற்கான நாட்கள் இறுதிப்படுத்தப்படாமலும் நிறைவடைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/178339

ரணிலின் தொங்கு பாலத்திலிருந்து ராஜபக்ஷர்களே கரை சேர்ந்துள்ளனர் - சஜித் பிரேமதாச

3 months ago
09 MAR, 2024 | 05:46 PM
image

(எம்.மனோசித்ரா)

தொங்கு பாலத்திலிருந்து நாட்டு மக்களை கரைசேர்த்ததாக ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் நாட்டை அழித்த ராஜபக்ஷர்களை மாத்திரமே ஜனாதிபதி தொங்கு பாலத்திலிருந்து கரைசேர்த்துள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் 'மக்கள் அரண்' வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம், யாப்பஹுவ தேர்தல் தொகுதியின் தலதாகம சந்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று சனிக்கிழமை (09)நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முழு நாடும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் மின்சாரக் கட்டணம் 500 - 600 சதவீதம் வரை அதிகரித்தது. நீர்க் கட்டணம் அதிகரித்து, வாழ்க்கைச் சுமை அதிகரித்து, வேலையிழப்பு அதிகரித்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இளைஞர்கள் வீதிக்கு இறங்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் காலத்தைப் போல நாட்டில் ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு சுமைகள் அதிகரித்து வரும் நிலைமையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பார்வையில் புதிய இயல்பு நிலையாக உள்ளது.

இன்று சில தரப்பினர் கோப்பு மூட்டைகளை காட்டி திருடர்களை பிடிக்க அதிகாரம் கோருகின்றன. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும், தனது ஐக்கிய சட்டத்தரணிகள் குழு, மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை மூலம் உயர் நீதிமன்றத்துக்கு சென்று எதிர்க்கட்சியில் இருந்தவாறே ராஜபக்ஷர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற தீர்ப்பை பெற்றுக்கொண்டது. திருடர்களை பிடிப்போம் என கோப்புகளை காட்டி அரசியல் நாடகங்களை நடத்தாது ஐக்கிய மக்கள் சக்தி செயல் ரீதியாக நடவடிக்கை எடுத்தது.

நாட்டு மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகும்போது ஜனாதிபதி தலைமையிலான நாட்டை அழித்த மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஷர்களுடன் இணைந்து தமது விருப்பப்படி நடந்து வருகின்றனர். 

பாராளுமன்றத்தில் 113 பேர் சுகாதாரத்துறையில் நடந்த மோசடிகளுக்கு ஆதரவாக கைகளை உயர்த்துகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் இந்நாட்டிலுள்ள தேசிய வளங்கள், மக்களின் வளங்கள், சொத்துக்கள் மற்றும் பணத்தை அபகரித்த குழுக்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது.

வறுமையின் காரணமாக நாட்டு மக்கள் நுண்கடன் வலையில் சிக்கியுள்ள நிலையில், வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் வரம்பற்ற அழுத்தங்களை பிரயோகித்து. 

தமது தொழில் இலக்கை முதன்மைப்படுத்தி வர்த்தகர்களால் இது பெரும் கடன் பொறியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கடன் சுமையில் தவிக்கும் மக்களுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். இந்த நுண்கடன் திட்டங்களுக்கு வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் வைப்புச் சொத்துக்கள் மற்றும் வளங்களை பராட்டே சட்டத்தின் மூலம் ஏலம் விடுவதற்கான மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

2024ஆம் ஆண்டு தேர்தல் வருடமாக இருப்பதால், ஏல நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்தாலும், தனியார் நிதி நிறுவனங்கள் போட்டிக்கு ஏலங்களை நடத்தி வருகின்றன என்றார்.

https://www.virakesari.lk/article/178322

மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை

3 months ago
news-3.jpg

வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள விடுவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச மரக்கூட்டுதாபனத்தில் அமைச்சரை நேரடியாக சந்தித்து ஆளுநர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த காணிகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாதுள்ளதாக ஆளுநர், துறைசார் அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

இதனால் குறித்த வர்த்தமானியை மீளப்பெற்று, மக்களுக்கான பயன்பாட்டு காணிகளை விடுவிக்குமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரம் அடங்கிய அறிக்கையும் அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சியிடம், ஆளுநர் இதன்போது சமர்ப்பித்தார்.

வடக்கு மாகாண ஆளுனரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் கலந்தாலோசிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆராச்சி, ஆளுநரிடம் உறுதியளித்தார்.

https://thinakkural.lk/article/295069

நாட்டிற்கு 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி

3 months ago
நாட்டிற்கு 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி
 

DOLLER-300x200.jpg

வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் நாட்டிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் 14% அந்நியச் செலாவணி அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கியமை, பல்நோக்கு கடன் திட்டத்தை அமுல்படுத்தியமை, ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தியமை உள்ளிட்ட திட்டங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/295096

மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

3 months ago

மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

news-05-300x200.jpg

செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் இருவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவிற்கான இலங்கை தூதுவரால் இருவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

குறித்த இருவரும் தற்போது ஜிபுட்டியில் தங்கியுள்ளனர்.

சீனாவிலிருந்து ஜெட்டா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த True Confidence வணிகக் கப்பல் மீது யேமன் நேரப்படி நேற்று முன்தினம் (07) காலை 11.30 அளவில் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலால் கப்பலின் கட்டுப்பாட்டு அறையை அண்டிய பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் யேமனிலுள்ள ஏடன் துறைமுகத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. 23 பேரைக் கொண்ட பணியாளர்கள் கப்பலில் இருந்துள்ளதுடன், அவர்களுள் நால்வர் கடுமையான தீக்காயங்களுக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த கப்பலில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் இருந்துள்ளதுடன், அவர்களில் இருவர் இலங்கையர்களாவர். நேபாள பிரஜை ஒருவரும் அதில் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வியட்நாம் பிரஜைகள் நால்வர், பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 15 பேர், இந்திய பிரஜை ஒருவரும் குறித்த கப்பலில் இருந்துள்ளனர். கப்பலில் இருந்த பணியாளர்கள், இந்திய கடற்படைக்கு சொந்தமான கொல்கத்தா போர்க் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/295098

பொருளாதார நெருக்கடியினால் நாட்டை விட்டு வெளியேறும் அரசியல்வாதிகள்

3 months ago

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம்காட்டி  தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளிநாடு செல்ல எத்தனிக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றிற்கு மீண்டும் தெரிவாகும் சாத்தியப்பாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சிப்பதற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற எத்தனிப்பதாக சபநாயாகர் 

 

இதேவேளை, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளிறேத் திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என நாடாளுமன்றில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டமொன்றில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் நாட்டை விட்டு வெளியேறும் அரசியல்வாதிகள் | Parliment Mps Trying To Move Aboroad

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி நாடாளுமன்ற பதவி விலகியிருந்தார்

மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்ன பதவி விலகி கனடா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/parliment-mps-trying-to-move-aboroad-1709954375

போசணை குறைப்பாட்டினால் 410,000 பெண் பிள்ளைகள் உடல் எடை குறைந்திருப்பதாக ஆய்வில் தகவல்

3 months ago

Published By: DIGITAL DESK 3   09 MAR, 2024 | 02:38 PM

image

இலங்கையில் 5 முதல் 19 வயது வரையிலான 410,000 பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள்  போசணைக் குறைபாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது, 

பிரித்தானிய ‘லான்செட் மெடிக்கல் ஜர்னல்’ இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது.

உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் வீதம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக  இலங்கையில் உள்ளது.

199 நாடுகளில் 22 கோடி பேரிடம் சுமார் 1,900 ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உடற் திணிவுச் சுட்டி (உயரத்திற்கான எடை) முக்கிய அளவுகோலாக எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரது உடலினது உயரத்திற்கு பொருத்தமான நிறை எவ்வளவு என்பதை கணித்தல் உடற் திணிவுச் சுட்டி ஆகும்.

1990-2022 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  போசணைக் குறைப்பாட்டால் பாடசலை பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டு மன்றி, மனவளர்ச்சி குன்றும் ஆபத்தில் உள்ளனர். எனவே இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில்  மனவளர்ச்சி குன்றிய  பிள்ளைகளின் தலைமுறை உருவாகும்.

போசணை குறைபாடு காரணமாக  பிள்ளைகளிடையே  என்சைம்கள் மற்றும் ஹோர்மோன்களின் உற்பத்தி  பலவீனமடைந்து நாளாந்த உடல் செயல்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட வழிவகுக்கிறது. அத்தோடு சிறுவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.

போசணைக் குறைப்பாடு நெருக்கடி மனவளர்ச்சி குன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது நாட்டில் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய கல்வி கற்ற  மற்றும் புத்திசாலி இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும்.

நாட்டில் 17.8 சதவீத ஆண் பிள்ளைகள் தங்கள் வயதுக்குக் குறைவான எடையுடன் உள்ளனர். அதாவது 450,000 ஆண் பிள்ளைகள்  உள்ளனர்.

அதன்படி, நாட்டில் மொத்தமான 860,000 பாடசாலை மாணவர்கள்  எடை குறைவாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

https://www.virakesari.lk/article/178307

2,100 நாட்களை கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்

3 months ago
09 MAR, 2024 | 02:58 PM
image

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு தாம் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அந்த அலுவலகத்தின் அதிகாரிகள் தமிழ்த் தாய்மாரிடம் கட்டாயப்படுத்தி தகவல்களை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவிக்கின்றார்.

IMG_20240308_11373122.jpg

இது தொடர்பாக அவர் கூறுகையில், 

“ஓ.எம்.பி. அலுவலகத்துக்கு எதிராக நாங்கள் எதிர்த்து போராடுகின்றபோது கச்சேரி ஊடாக வலுக்கட்டாயமாக கடிதம் அனுப்பியிருக்கின்றார்கள். அந்த கடிதத்தின் ஊடாக அவர்கள் வராத பட்சத்தில் அவர்களை வீடு வீடாகச் சென்று அந்த பதிவுகளை  மேற்கொண்டு அவர்களுக்கு வாகனத்தை அனுப்பி ஏற்றி அவர்களுக்கான பதிவுகளை மேற்கொண்டு இந்த சர்வதேசத்தையும் ஏமாற்றி எமது உறவுகளையும் ஏமாற்றிக்கொண்டுதான் இவர்கள் இந்த அலுவலகம் ஊடாக பணியாற்றுகின்றார்கள்” என்றார். 

சர்வதேச மகளிர் தினமான நேற்றைய தினம் (08) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்ட பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர்.

IMG_20240308_11372913.jpg

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுபடுத்தியும், மகளிர் தினத்தை துக்க தினமாக அறிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் தென்பகுதியில் இருந்து வருகை தந்த மதகுருமார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் “இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்”, “நீதி தேவதை ஏன் கண்மூடிவிட்டாய்”, “சர்வதேசமே இன்று பெண்கள் தினமா, பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?”, “முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா”, “55ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா”, “கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும்” போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

IMG_20240308_11371615.jpg

இதில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி, மகளிர் தினமான இன்றைய தினத்தை (நேற்றைய தினம்) துக்க தினமான அனுஷ்டிப்பதாகவும், அடுத்த வருடத்திலாவது மகளிர் தினத்தை சுதந்திரமாக கொண்டாடும் வகையில் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இது போன்றதொரு நாளில் தமது தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடி தமிழ்த் தாய்மார் ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று 2,210 நாட்களை எட்டியுள்ளது.

எனினும், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இதுவரை பதிலளிக்கவில்லை.  

IMG_20240308_11370503.jpg

https://www.virakesari.lk/article/178309

‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்

3 months ago
aravindakumar.jpg

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்” திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு புதிதாக 20 வலயக் கல்வி அலுவலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் ஆதரவை வழங்கும் என்பதைக் கூற வேண்டும். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, கல்வியில் திறமை காட்டினாலும், கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழக்க, குடும்ப வருமானம் இன்மை ஒரு காரணமாக இருக்கக் கூடாது. எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

மேலும், கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். பாடசாலையில் தரம் 13 இல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12 இல் நடத்த எதிர்பார்த்துள்ளோம். மேலும், தற்போது தரம் 11 இல் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10 இல் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிப்பதில் பட்டதாரிகளாக இளம் வயதிலேயே பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதும் அவர்களுக்கு முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்.

மேலும், முதலாம் தரத்திற்கு முன்னதாகவே சிறு குழந்தைகளுக்கு (Pre – Grade) வகுப்புகளைத் தொடங்கவும் தயாராக உள்ளோம். இன்று பிறக்கும் குழந்தைகள் எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நாடு முழுவதும் சுமார் 100 வலயக் கல்வி அலுவலகங்கள் உள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பாடசாலைக் கல்வியின் தரத்திற்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்பதை குறிப்பிட வேண்டும். பாடசாலைக் கல்விக்காக பல பாடசாலை இணைத்து ஒரு கொத்தணிக் கல்வி முறையை அறிமுகப்படுத்த உள்ளோம்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர்கள், அதிபர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தற்போதுள்ள அதிபர் தர வெற்றிடங்களுக்குத் தேவையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/295049

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்துக்கு அபராதத்துடன் சீல்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   09 MAR, 2024 | 10:43 AM

image

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று, குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது. 

சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகரான செ. பிரின்சன் தலைமையில் உணவகங்களில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , 180 கிலோ பழுதடைந்த ரொட்டிகள் , 05 கிலோ இடியப்பம் மற்றும் 08 கிலோ பிட்டு என்பவற்றை பொலித்தீன் பைகளில் கட்டி குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை கண்டறியப்பட்டது. 

குறித்த உணவகத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உணவாக உரிமையாளருக்கு 73ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று  உணவகத்தை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டது. 

அதேவேளை, பழுதடைந்த இறைச்சி மற்றும் இறால் ஆகியவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உணவக உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும், பழுதடைந்த இறைச்சி ரொட்டியை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உணவகத்தை சுத்தமின்றி பேணிய மற்றுமொரு உணவக உரிமையாளருக்கு 33 ஆயிரம் ரூபாய் தண்டமும் நீதிமன்று விதித்துள்ளது. 

அதேவேளை மல்லாகம் நீதவான் நீதிமன்று நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட 06 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சுமார் 03 இலட்ச ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ள நிலையில், சில உணவகங்களை சீல் வைத்து மூடுமாறும் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

5__5_.jpeg

5__8_.jpeg

5__6_.jpeg

https://www.virakesari.lk/article/178302

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்

3 months 1 week ago
kanchana-wijesekera-300x200.jpg

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

2024 மார்ச் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்தது. 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது. 31 – 60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளது. 60 – 90 அலகுளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு 30% கடடண குறைப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 – 180 இடையிலான பாவனையாளர்களுக்கு 24% இனால் கட்டண குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், 180 அலகுகளுக்கு மேலான வீட்டு பாவனையாளர்களுக்கு 18% கட்டண குறைப்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு 33% கட்டண குறைப்பும் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளுக்கு 18% கட்டண குறைப்பும் அரச துறைக்கு 23% கட்டண குறைப்பும் தனியார் துறைக்கு 22% கட்டண குறைப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அதற்கு நிகராக உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியாக உள்ளது. பொது சேவைகளில் ஈடுபடுவோரால் மக்களுக்கு பெருமளவான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் . அதனை மின்சார சபையோ அல்லது அமைச்சுக்களோ செய்ய முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும், அண்மைக் காலமாக கிடைத்த பெரும் மழைவீழ்ச்சியின் காரணமாக, மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை குறைந்துள்ளது. அதன் பலனாக 2022 ஆம் ஆண்டின் 270 பில்லியன் ரூபா இழப்பீட்டையும் அதனால் சரிசெய்ய முடிந்தது. இருப்பினும் இருள் யுகத்தில் கிடந்த நாடு பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதன் பலனாகவே மின்சார கட்டணத்தை குறைக்க முடிந்துள்ளது.

அதனால் மின்சார உற்பத்திச் செலவு பெருமளவில் குறைவடைந்துள்ளதோடு, அதேபோலு மூன்றிலக்க பெறுமதியாக காணப்பட்ட வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமையும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், இந்திய கடனின் கீழ் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களில் முதல் பகுதியைக் கொண்டு, பாடசாலைகள், பாதுகாப்பு முகாம்கள், பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் மின்சாரம் பெறுவதற்கு சூரிய சக்தி படலங்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மின் கட்டணத்தை மேலும் குறைக்க, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது தற்போது அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதை விடுத்து குறைந்த செலவிலான மாற்று முயற்சிகளுக்கு செல்ல வேண்டும்.

2025 ஆம் ஆண்டில் சியாம்பலாண்டுவ மின் உற்பத்தித் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நூறு மெகாவோட் மின்சாரத்தை 25 – 26 ரூபாய்க்கு பெற்றுகொள்ள முடியும். இதேபோன்ற பல பாரிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் எம்மோடு இணைந்துகொண்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய முதலீட்டாளர்களுக்காக 10 காற்றாலை மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியை மையமாக கொண்டு 50 மெகாவாட் காற்றாலைக்கான விலைமனு அடுத்த வாரம் கோரப்படும்.

மேலும் உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையினையும் மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மாற்றங்களை உரிய தரப்பினரும், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பான 46 திருத்தங்களுடன் கூடிய சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும் என அமைச்சர்  தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/294967

Checked
Sun, 06/16/2024 - 04:00
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr