புதிய பதிவுகள்2

என்று தணியும் வெளிநாட்டு மோகம்

2 months ago
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை -இனவழிப்புக் காரணமாக உயிர்பிழைக்கும் நோக்குடன் வெளிநாடுகளுக்கு தமிழர்கள் ஓடித் தப்பினர். காலாட்டத்தில் வெளிநாட்டுக்குச் செல்வது என்பது ஒரு கட்டாயக் கடமையாகவே மாறி விட்டது. போர்க்காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் வெளிநாட்டுக்குச் செல்லும் கனவுடனேயே இளைஞர்கள் பெற்றோரால் வளர்க்கப்படும் துரதிர்ஷ்டமான சூழலே இங்கு அதிகம் நிலவுகின்றது. 2011 -2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அதிகளவானோர் சட்டவிரோதமான வழியில், படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லலாம் என நம்ப வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பலர் கடலில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டனர். வெகு சிலரே அவுஸ்திரேலியாவுக்கு அண்மித்த தீவுகளை சென்றடைந்தனர். அவர்களில் மிகச் சிலருக்கே அவுஸ்திரேலியாவுக்கு நுழைவதற்கான அனுமதி கிடைத்தது. பல இலட்சங்களைச் செலவு செய்து ஏமாந்தவர்களே அதிகம். அவுஸ்திரேலிய அரசாங்கம், சட்டவிரோதமாக தனது நாட்டுக்குள் நுழைய முடியாது என்பதை பரப்புரைப்படுத்தினாலும் எம்மவர்களின் வெளிநாட்டு ஆசை முன்பாக அவை ஏறவில்லை. 2016-2020 வரையிலான காலப் பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்குச் சென்ற எம்மவர்கள் பலர் அங்கு உயிரிழந்த சோகங்கள் அரங்கேறியிருந்தன. எல் லைப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல நாள் நடைபயணம், ஆபத்தான வகைகளில் கனரக வாகனங்களில் அடைத்துச் செல்லப்படுதல் என ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு முயன்று உயிர் பிரிந்த சோகங்கள் தான் நடந்தன. இப்போது கனடாவுக்குச் செல்லுதல் என்ற அடிப்படையில் பலரும் தங்கள் புலம்பெயர்தலை ஆரம்பித்திருக்கின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகச் செல்கின்றோம் என்று சொல்லிக் கொண்டாலும், வெளிநாட்டுக் கலாசாரம் எங்கள் மனதில் இன்னமும் ஆழமாக வேரூன்றியிருப்பதுவும் தற்போதைய புலம்பெயர்தலுக்குக் காரணமாக இருக்கின்றது. இதை வைத்து பணம் உழைக்கும் கூட்டமும் இருந்து கொண்டிருக்கின்றது. எத்தனை தடவைகள் ஏமாந்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். வடக்கிலுள்ள காவல் நிலையங்களில், அண்மைக்காலமாகப் பதிவாகும் முறைப்பாடுகளில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் சம்பவமாக, வெளிநாட்டுக்குச் செல்வதற்காக முகவர்களுக்கு பணத்தைச் செலுத்தி ஏமாறுவதே இருக்கின்றது. இது தொடர்பில் காவல்துறையினர் மக்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும் திரும்பத் திரும்ப ஏமாந்து கொண்டேயிருக்கின்றனர். எந்தவொரு நம்பிக்கையும் இல்லாது வெளிநாட்டு மோகத்துக்காக பல இலட்சங்களை இழக்கத் தயாராக இருக்கும் மக்கள் அதை இங்கேயே முதலீடாக்கி வருமானமீட்டத் தயாரில்லை. தமிழ் அரசியல் தலைமைகளும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களை அறிவூட்டுவதில்லை. வெறுமனே அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவது மாத்திரம் அவர்களது பொறுப்பு அல்ல. எந்த மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்குகின்றனரோ, அவர்கள் வழி தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவர்களது கடமையே. https://newuthayan.com/article/என்று_தணியும்_வெளிநாட்டு_மோகம்

வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்”

2 months ago
பெரிய பெரிய கட்டுரைகளையே ஒரே மூச்சில் வாசிக்கும் உங்களுக்கே, இதை வாசிப்பதற்கு இன்னும் சில வருடங்கள் வேணும் என்றால் எனக்கு இன்னும் ஒரு ஆயுள் வேண்டும்.

இன்னுமொரு வாய்ப்பந்தல்

2 months ago
அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் (08) நேற்று முன்தினம் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியிருந்தார். மிக நீண்ட அவரது உரையில், தன்னால் இந்தநாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்திருக்கின்றது என்ற சுய புராணமே அதிகமாகத் தெரிந்தது. தனது இந்த முயற்சிக்கு ஏனைய அரசியல் தரப்புகள் ஆதரவளிக்கத் தான்வேண்டும் என்பது போலவே அந்த உரை அமைந்திருந்தது. பொருளாதார மேம்பாடு மாத்திரமே இந்த நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே சவால் என்பதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருந்தார். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதும், பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்னமும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக கடன்களை மீளச் செலுத்தத் தொடங்கும் போது நாடு பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று குறிப்பிட்டதுடன், ஆட்சியாளர்கள் கடன்களை வாங்கி வாங்கியே குவித்து இந்த நாட்டு மக்களையும் அதற்குப் பழக்கப்படுத்தி விட்டனர் என்றெல்லாம் சுட்டிக்காட்டினார். நாட்டின் பொருளாதார மீட்சிக்காக சில திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி ஊடாக அந்தியச் செலாவணி, வெளிநாட்டு முதலீடுகள், மாகாணங்களுக்கு இடையிலான போட்டி உற்பத்தி என்று சில விடயங்களைப் பட்டியலிட்டிருந்தார். இவையெல்லாவற்றையும் முன்னெடுப்பதற்கு இருக்கும் தடங்கல்களை மேலோட்டமாகவே கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டிருந்தார். அதை ஆழ அகலமாக அலசி ஆராய்வதற்கு அவர் விரும்பவில்லை. அதை வேண்டுமென்றே அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தவிர்த்திருந்தார். இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஆணி வேராக இருக்கின்ற இனப்பிரச்சினை தொடர்பில், அப்படியொன்று இந்த நாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பில் அரச தலைவர் ரணில் மூச்சே விடவில்லை. அதற்குத் தீர்வை எட்டாமல் இந்த நாடு பொருளாதாரத்தில் மீட்சியடைவது என்பது சாத்தியமேயில்லாத விடயம். அரச தலைவர் ரணில் தனது கொள்கை விளக்கவுரையில், மாகாணங்களுக்கான நிகழ்ச்சி நிரலில் மேலும் சில அதிகாரங்கள் வழங்குவதன் பொருளாதார ரீதியில் உறுதிப்பாடுடையவை அவற்றை மாற்ற முடியும் என்று கூறுகிறார். ஆனால் இப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வுக்கான யோசனை எதையும் முன்வைக்கவில்லை. கடந்த ஆண்டு சுதந்திரத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகான காணப்படும் என்று கூறி எதுவுமே நடக்காததால் இம்முறை அது தொடர்பில் அலட்டிக் கொள்ளாமல் விட்டிருக்க கூடும் ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணாமல் பொருளாதார மேம்பாடு என்பதை எட்டவே முடியாது என்பதை மிக நீண்ட பழுத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க உணர்ந்திருந்தும், அதை வெளிக்காட்டாமல் வெறுமனே பூசி மெழுகுவது பொருந்தப்பாடானதாக இல்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்ற உளரீதியான விருப்பு இருக்குமாக இருந்தால், இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வை - தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை முன்வைக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரவேண்டும் என்பதை திரும்பத் திரும்பச் சொல்லும் இந்த அரசாங்கம், அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு இந்த நாடு பாதுகாப்பில்லை 'என்பதை உணருவதையும் ஏற்றுக் கொள்ளும் அரசாங்கம், அதற்கான காரணங்களைத் தீர்ப்பதற்கு மாத்திரம் தயங்குகின்றது. பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் வழங்கக்கூடாது என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கின்றமை தெளிவாகவே தெரிகின்றது. அரச தலைவர் ரணிலும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதைத் தான் அவரது உரை பறைசாற்றியிருக்கின்றது. https://newuthayan.com/article/இன்னுமொரு_வாய்ப்பந்தல்

யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!

2 months ago
நீங்கள் மறுக்கும் அளவுக்கு அது ஒன்றும் தவறான செயல் அல்ல. நிதி சேகரிப்புக்கு அது அவசியமாக பட்டதால் அன்று மிகவும் வெளிப்படையாக புலிகள் அதைச் செய்தார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. அது அன்றைய நிலையில் அவசியமானதும் கூட. நிகழ்ச்சிக்கான ரிக்கட் கூட வழமையாக போராட்ட நிதி சேகரிக்கும் இயக்க உறுப்பினராலேயே விற்கப்பட்டது. ( நானும் அவர்களிடம் தான் வாங்கினேன்) அதன் பின்னர் சிறிது காலத்தில் எஸ். பி பாலசுப்ரமணியம் அவர்களின் நிகழ்சியும். 1990 கோடை காலத்தில் கங்கை அமரனின் நிகழ்ச்சியும் வெளிப்படையாக புலிகளால் நடத்தப்பட்டன. அதற்கு வாழும் சாட்சிகள் பல உண்டு. அந்நேரத்தில் ஐரோப்பாவில் இயங்கிய உறுப்பினர்களை கேட்டுப் பாருங்கள். அவர்களில் பலரை எனக்கு தனிப்பட தெரியும் என்றாலும் இங்கு அவர்களின் தனிப்பட்ட விபரங்களை கூறுவது தவறு. ஆனால், நிச்சயம் உங்களுக்கு அந்த நேரத்தில் இயங்கியவர்களில் சிலரையவது தெரிந்திருக்கும். விசாரித்துப் பாருங்கள். 1985 ல் சென்னையில் தமிழ் திரையுலகின் அத்தனை நட்சத்திரங்களும் இணைந்து மிகப்பெரிய Star Night நிகழ்சியை தமிழ் ஈழ போராட்ட நிதி சேகரிப்புகாகவே செய்திருந்தனர். அதில் புலிகளின் பிரதி நிதி ஒருவரும் உரையாற்றி இருந்தார் என்பதையும் கூடுதல் தகவலாக தெரிவித்து கொள்கிறேன். . நீங்கள் கூறிய நிகழ்ச்சி பற்றி நான் கேள்விப்பட வில்லை. நடந்திருக்கலாம். ஆனால், நடிகைகள் ஆடும்போது பண நோட்டுகளை வீசியெறிந்தது என்றால் அது நிச்சயமாக தனியாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்திருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

“ கப்பு முக்கியம் “ - T. கோபிசங்கர்

2 months ago
‘சித்தப்பா’ என்றுதான் அவனை அழைப்போம். கடற்தொழிலாளி. எனது நண்பன். மீன்கள் பிடிக்கும்போது அரிதாக இந்த ‘காளை’ மீன் அகப்படும். அதை சந்தைக்கு அனுப்பாமல், தாங்களே சமைத்துச் சாப்பிடுவதாகவும் மிகவும் ருசியாக இருப்பதாகவும் அவன் என்னிடம் சொல்லி இருக்கிறான். நானும் அதை சாப்பிட ஆசைப்பட, எப்பொழுது அந்த மீன் அவன் விரித்த வலையில் விழுந்தாலும் அது என் வீட்டுச் சட்டிக்குள் வந்து விடும். மேற்கொண்டு அந்த காளை மீன் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது. காளை மீன் சாப்பிட்டு நாலு தசாப்தங்களுக்கு மேலாயிற்று. சும்மா இருந்த சங்கை எடுத்து டொக்டர் ஊதிப் போட்டு போட்டார்.

அத்தியாவசிய சேவையாக சுகாதாரசேவை அறிவிப்பு

2 months ago
சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரச தலைவரின் உத்தரவின் பேரில் இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனைகள், நோயாளர் விடுதிகள். மருந்தகங்கள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசனை ஊட்டல் மற்றும் சிகிச்சை தொடர்பாகத் தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்துச் சேவைப்பணிகளும் அத்தியாவசிய சேவைகளாக அதிவிசேட வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மேலதிகக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டன. இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடர அவை தீர்மானித்துள்ளன. இந்த நிலையிலேயே சுகாதாரத்துறை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட ஒருதுறையின் ஊழியர்கள் எழுந்தமாறாக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தமுடியாது. ஆதலால். போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் பார்க்கப்படுகின்றது. https://newuthayan.com/article/அத்தியாவசிய_சேவையாக_சுகாதாரசேவை_அறிவிப்பு

எமது கிராமத்தின் வரலாறு

2 months ago
'முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்' என்னும் பழமொழிக்கிணங்க உங்கள் தந்தையார் வாழ்ந்திருக்கிறார் போல உள்ளது! இப்போதெல்லாம் இவ்வாறான பெரியோர்களைக் காண்பதென்பது மிகவும் அரிதானது!

தமிழரசு கட்சியின் தலைவருக்கு கனேடிய தூதுவர் வாழ்த்து

2 months ago
தமிழரசு கட்சியின் தலைவருக்கு கனேடிய தூதுவர் வாழ்த்து. நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன், கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவித்த கனேடியத் தூதுவர், ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளுக்கு தம்மாலான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2024/1369765

அபுதாபியில் இந்துக் கோயில்

2 months ago
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்துக்கோயிலை திறந்து வைக்கிறார் மோடி. அபுதாபியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்துகோயிலானது இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்துவைக்கப்படவுள்ளது. 700 கோடி இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட குறித்த கோயிலில் கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கேட்போர் கூட்டங்கள், உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5000 பேர் வரை ஒரே நேரத்தில் நிகழ்ச்சிகளைப் பார்வையிடக் கூடியவாறு 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில் மொத்தமாக 1,200 கார்கள் மற்றும் 30 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1369764

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்

2 months ago
19 வயதின் கீழ் உலகக் கிண்ண தெரிவு அணியில் நான்கு இந்தியர்கள்; அணித் தலைவர் ஹியூ வெய்ஜென் Published By: VISHNU 13 FEB, 2024 | 12:09 AM (என்.வீ.ஏ.) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவந்த ஐசிசி ஆடவர் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களிலிருந்து தெரிவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 12 அணிகள் பங்குபற்றிய போதிலும் ஐசிசி தெரிவு அணியில் ஐந்து நாடுகளைக் கொண்ட வீரர்களே பெயரிடப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் 12ஆவது வீரராக ஸ்கொட்லாந்து வீரர் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். ஆறு துடுப்பாட்ட வீரர்கள், ஒரு சகலதுறை வீரர், 4 பந்துவீச்சாளர்கள் தெரிவு அணியில் இடம்பெறுகின்றனர். நான்கு இந்திய வீரர்கள் இடம்பெறும் தெரிவு அணிக்கு சம்பியனான அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஹியூ வெய்ஜென் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். ஐசிசியின் தெரிவு அணி துடுப்பாட்ட வரிசையில்: லுவான் ட்றே ப்ரிட்டோரியஸ் (தென் ஆபிரிக்கா, விக்கெட் காப்பாளர் 287 ஓட்டங்கள்) ஹெரி டிக்சன் (அவுஸ்திரேலியா, 309 ஓட்டங்கள்) முஷீர் கான் (இந்தியா, 360 ஓட்டங்கள்) ஹியூ வெய்ஜென் (அவுஸ்திரேலியா, தலைவர், 304 ஓட்டங்கள்) உதய் சஹாரன் (இந்தியா, 397 ஓட்டங்கள்), நேதன் எட்வேர்ட் (மே. தீவுகள், 101 ஓட்டங்கள், 11 விக்கெட்கள்) கெலம் விட்லர் (அவுஸ்திரேலியா, 14 விக்கெட்கள்), உபைத் ஷா (பாகிஸ்தான், 18 விக்கெட்கள்) க்வேனா மஃபாக்கா (தென் ஆபிரிக்கா, 21 விக்கெட்கள்) சௌமி பாண்டே (இந்தியா, 18 விக்கெட்கள்) 12ஆவது வீரர்: ஜெமி டன்க் (ஸ்கொட்லாந்து 263 ஓட்டங்கள்) https://www.virakesari.lk/article/176234

தூக்க விவாகரத்து! 'ஸ்லீப் டைவர்ஸ்'

2 months ago
துணையுடன் தூங்குவதைத் தவிர்க்கும் இளைய தலைமுறை - நன்மைகள் கிடைக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபெர்னாண்டா பால் பதவி, பிபிசி நியூஸ் வேர்ல்டு 34 நிமிடங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு இந்த பிரச்னை தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் கணவரின் குறட்டையை சிசிலியாவால் தாங்க முடியவில்லை. அவர் தூங்க முடியாமல் தவித்தார். எவ்வளவோ முயற்சிகள் எடுத்துப் பார்த்தும், கணவரின் குறட்டையை அவரால் நிறுத்த முடியவில்லை. 35 வயதான சிசிலியாவால் இதை மேலும் தாங்க முடியவில்லை. எனவே கணவன் மனைவி இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். இனி ஒரே அறையில் ஒன்றாக தூங்க முடியாது என்ற முடிவு. "என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறேன். ஓரிரு இரவுகள் அதைப் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் தொடர்ந்து அவ்வாறு தூக்கமில்லாமல் வாழ முடியாது" என்று பிபிசியிடம் கூறினார் சிசிலியா. இவர் லண்டனில் வசித்து வருகிறார். "இது சற்று கடினமான முடிவு தான், மனதளவில் மிகவும் கஷ்டமாக தான் உள்ளது. ஆனால் இப்படி செய்தால் தான் தூங்க முடியும் என்பதால், இந்த முடிவை எடுத்தோம்" என்கிறார் சிசிலியா. சிசிலியா மற்றும் அவரது 43 வயது கணவர், 'ஸ்லீப் டிவோர்ஸ்' என்ற முறையைப் பின்பற்றுகிறார்கள். அதாவது கணவன், மனைவி தனித்தனி அறையில் தூங்கும் வழக்கம். "பொதுவாக 'ஸ்லீப் டைவர்ஸ்' என்பது தற்காலிமாக தான் கணவன் மனைவி இடையே கடைபிடிக்கப்படும். ஆனால் தனியாக தூங்குவதன் மூலம் நன்றாக தூங்க முடியும் என்பதை தம்பதியினர் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்" என்கிறார் அமெரிக்காவில் உள்ள மெக்லீன் மருத்துவமனையின் மனநல மருத்துவர் ஸ்டெபானி கோலியர். “முக்கிய காரணம் உடல்நலம் தான். பொதுவாக குறட்டை விடும் ஒரு நபர், தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுவார் அல்லது பலமுறை கழிப்பறையைப் பயன்படுத்துவார். மேலும் அவர்கள் தூக்கத்தில் அடிக்கடி புரள்வார்கள், இது பக்கத்தில் படுத்திருக்கும் நபரை மிகவும் தொந்தரவு செய்கிறது" என்று அவர் பிபிசியிடம் கூறினார். "'ஸ்லீப் டிவோர்ஸ்' என்ற இந்த டிரெண்ட் இப்போது வேகமாக பரவி வருகிறது" என்கிறார் ஸ்டெபானி கோலியர். பட மூலாதாரம்,GETTY IMAGES இளம் தலைமுறையினர் விரும்பும் 'ஸ்லீப் டிவோர்ஸ்' கடந்த ஆண்டின் இறுதியில், பிரபல அமெரிக்க நடிகை கேமரூன் தியாஸ், தானும் தன் கணவரும் ஒரே அறையில் தூங்குவதில்லை என்று ஒரு போட்காஸ்டில் பேசியிருந்தார். மேலும் கணவன் மனைவி தனித்தனி அறைகளில் தூங்குவதை ஒரு சாதாரண விஷயமாக பார்க்க வேண்டுமென கூறியிருந்தார். அவரது கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான எதிர்வினைகள் வந்தது. சர்வதேச ஊடகங்கள் பல்வேறு கட்டுரைகள் எழுதவும் அது வழிவகுத்தது. ஆனால் இது நடிகை கேமரூனின் கருத்து மட்டுமல்ல, பலர் இவ்வாறு கூறியிருக்கிறார்கள். தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் (ஏஏஎஸ்எம்) 2023ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, மூன்றில் ஒரு தம்பதியினர், எப்போதாவது அல்லது தொடர்ந்து தனித்தனி அறைகளில் தூங்குவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதாகக் கூறியிருக்கிறார்கள். 'மில்லினியல்கள்' எனப்படும் புதிய தலைமுறையினர் மத்தியில் (தற்போது தோராயமாக 28 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்ட தலைமுறையினர்) 'ஸ்லீப் டிவோர்ஸ்' போக்கு அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் 43% பேர், தங்கள் துணையுடன் அல்லாமல் தனி அறையில் தூங்குவதாக கூறியுள்ளனர். மற்ற தலைமுறைகளைப் பொறுத்தவரை, தலைமுறை Xஇல் (1965 மற்றும் 1980க்கு இடையில் பிறந்தவர்கள்) 33% இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தலைமுறை Zஇல் (1997 மற்றும் 2012க்கு இடையில் பிறந்தவர்கள்) 28% இதற்கு ஆதரவாக உள்ளார்கள். இறுதியாக பேபி பூமர்ஸ் எனப்படும் தலைமுறையினர் (1946 மற்றும் 1964க்கு இடையில் பிறந்தவர்கள்) 22% 'ஸ்லீப் டிவோர்ஸ்' முறைக்கு ஆதரவாக உள்ளார்கள். "குறிப்பாக இளைய தலைமுறையினர் ஏன் அவ்வாறு செய்கிறார்கள், இதற்கு என்ன காரணம் என சரியாக சொல்ல முடியவில்லை. கணவன் மனைவி தனித்தனியாக தூங்குவது ஒரு வகையான கலாச்சார மாற்றம். ஆனால் இளம் தலைமுறையினர் நினைப்பது என்னவென்றால் 'நான் நன்றாக தூங்கினால், நாள் முழுவதும் நன்றாக உணர்கிறேன். எனவே இதில் என்ன தவறு?" என்கிறார் மனநல மருத்துவர் ஸ்டெபானி கோலியர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த காலங்களில் தம்பதிகள் தனித்தனி அறைகளில் தூங்குவது வழக்கம் என்று வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். வரலாற்றில் கணவன் மனைவி தனித்தனி அறையில் தூங்குவது புதிதல்ல. கணவன் மனைவி 'ஒரே படுக்கையில்', ஒரு அறையில் தூங்குவது என்பது ஒரு நவீன கருத்தியல் என சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தொழில்துறை புரட்சியின் காரணமாக அது அதிகரித்தது என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழும்போது, இட நெருக்கடி காரணமாக இந்த முறை வந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர். விக்டோரியா காலத்திற்கு முன்பாகவே திருமணமான தம்பதிகள் தனித்தனியாக தூங்குவது பொதுவான ஒன்றாக இருந்துள்ளது. "மேலும் பணக்கார வர்க்கத்தினரிடையே, அது மிகவும் பொதுவானதாக இருந்தது. சமூகத்தின் உயர் வகுப்பினர் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் இது உதவுகிறது" என சிலியின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின் சோம்னாலஜிஸ்ட் (தூக்க அறிவியல் நிபுணர்) பாப்லோ ப்ரோக்மேன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நன்றாக தூங்குவது ஒரு 'ஆரோக்கியமான' உறவைப் பேணவும் உதவும் என மனநல மருத்துவர் உறுதியளிக்கிறார். தம்பதியினர் தனித்தனியாக தூங்குவது நன்மைகள் என்ன? தனித்தனி அறைகளில் தூங்க முடிவு செய்யும் தம்பதிகளுக்கு பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். "முக்கிய நன்மை என்னவென்றால், தொடர்ச்சியாக ஆழ்ந்த உறக்கத்தை அவர்களால் பெற முடியும். மேலும் நல்ல தூக்கம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அவசியம்” என்கிறார் மருத்துவர் ஸ்டெபானி கோலியர். தொடர்ந்து பேசிய கோலியர், “ஒருவரால் தூங்க முடியாவிட்டால், அது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் செயல்பாடு வரை அனைத்தையும் பாதிக்கிறது. கூடுதலாக, நீங்கள் அடிக்கடி கோபப்படுவீர்கள், எளிதில் பொறுமையை இழப்பீர்கள். இது ஒரு வகையான மனச்சோர்வை கூட உருவாக்கலாம்” என்று கூறுகிறார். நன்றாக தூங்குவது ஒரு 'ஆரோக்கியமான' உறவைப் பேணவும் உதவும் என மனநல மருத்துவர் உறுதியளிக்கிறார். "தம்பதியினர், நன்றாக ஓய்வெடுக்காதபோது, அவர்களுக்குள் அதிகமாக விவாதங்கள் ஏற்படலாம், அதிகமாக எரிச்சல் அடைவார்கள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் புரிதலை இழக்க நேரிடும்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். நுரையீரல் நிபுணர் மற்றும் ஏஏஎஸ்எம் செய்தித் தொடர்பாளர் சீமா கோஸ்லா, மேலே உள்ள கருத்துடன் உடன்படுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனித்தனி அறைகளில் தூங்க முடிவு செய்யும் தம்பதிகளுக்கு பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். "மோசமான தூக்கம் ஒருவரின் மனநிலையை மோசமாக்கும் மற்றும் தூக்கமின்மை உள்ளவர்கள் தங்கள் துணையுடன் வாதிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தூக்கத்தை கெடுக்கும் நபர் மீது அவர்களுக்கு சில மனக்கசப்புகள் இருக்கலாம், இது உறவுகளை எதிர்மறையாக பாதிக்கும்" என்று ஏஏஎஸ்எம் தனது 'ஸ்லீப் டிவோர்ஸ்' குறித்த தனது ஆய்வைத் தொடங்கியபோது அவர் குறிப்பிட்டிருந்தார். "ஒரு நல்ல இரவு தூக்கம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டிற்கும் முக்கியமானது, எனவே சில தம்பதிகள் தங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக தனியாக தூங்குவதைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை," என்று அவர் மேலும் கூறினார். சிசிலியாவைப் பொறுத்தவரை, கணவரிடமிருந்து விலகி வேறு அறையில் தூங்குவது அவருடைய வாழ்க்கையை மாற்றியுள்ளது. "நன்றாக தூங்குவது, படுக்கையில் அதிக இடம் இருப்பது, யாருக்கும் இடையூறு விளைவிக்காமல் புரண்டு படுப்பது என இது மிகவும் வசதியாக உள்ளது” என்று அவர் கூறுகிறார். “மேலும், உங்கள் துணை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் விரும்பும் போது அல்லது தேவைப்படும் போது தூக்கத்திலிருந்து எழ முடியும்" என்கிறார் சிசிலியா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதற்கிடையில் 'ஸ்லீப் டைவர்ஸ்' என்பது எல்லா தம்பதியினருக்கும் வேலை செய்யக்கூடிய ஒன்றல்ல என்று உறுதியாக கூறுகிறார் தூக்க அறிவியல் நிபுணர் தனித்தனி அறையில் தூங்குவதில் உள்ள தீமைகள் என்ன? இருப்பினும், இந்த முடிவு சில எதிர்மறை அம்சங்களையும் கொண்டு வரலாம். பல தம்பதிகள், தங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை இழப்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். "எனது துணையுடனான உறவில், ஏதோ ஒன்று மாறிவிட்டது என்று நான் நினைக்கிறேன்," என்று சிசிலியா ஒப்புக்கொள்கிறார். "கணவன்- மனைவி உறவு, நெருக்கம் பாதிக்கப்படுகிறது. ஆனால் அது அவ்வளவு தீவிரமானது அல்ல. நன்மைகள் தான் அதிகம் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார். முழுநேர வேலை செய்யும் பலருக்கு, தங்கள் துணையுடன் இணையும் தருணம் என்பது அவர்கள் தூங்கச் செல்லும் நேரமாகத் தான் இருக்கும் என்று மருத்துவர் ஸ்டீபனி கோலியர் விளக்குகிறார். "எனவே, கணவன் மனைவி ஒன்றாக செலவழிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவதே இதற்கான தீர்வுகளில் ஒன்றாகும்" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கிடையில் 'ஸ்லீப் டைவர்ஸ்' என்பது எல்லா தம்பதியினருக்கும் வேலை செய்யக்கூடிய ஒன்றல்ல என்று உறுதியாக கூறுகிறார் தூக்க அறிவியல் நிபுணர் பாப்லோ ப்ரோக்மேன். பட மூலாதாரம்,GETTY IMAGES "ஜோடியாக தூங்குவதால் சில உயிரியல் நன்மைகள் உள்ளன. பலருக்கு, கனவில் ஒரு இணைப்பு உருவாகிறது. இது மனித இனத்தின் பழமையான ஒரு இணைப்பு. உதாரணமாக, ஒரு தாய்க்கும் அவளுடைய குழந்தைக்கும், பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த பிணைப்பு உருவாகிறது. இதனால் இருவரும் ஒரே சமயத்தில் ஓய்வெடுக்கும் வகையில் ஒரே மாதிரியான தூக்க சுழற்சிகளைக் கொண்டிருப்பார்கள்" என்கிறார் பாப்லோ ப்ரோக்மேன். "பல வருடங்களாக ஒன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் தம்பதிகள், மனதளவில் நல்ல இணைப்பில் இருந்தால் நல்ல அமைதியான ஆழமான உறக்கத்தைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டும் ஆய்வுகள் உள்ளன. இதன் மூலம் உங்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறீர்கள்,” என்கிறார் சோம்னாலஜிஸ்ட் பாப்லோ. மொத்தத்தில் ஒரு ஜோடி 'ஸ்லீப் டிவோர்ஸ்' முறையை பின்பற்ற முடிவு செய்தால், கவனத்தில் கொள்ள வேண்டிய சில பரிந்துரைகள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர். “ஒருவர் இந்த முறையை விரும்பி, மற்றவர் விரும்பாதபோது இது வேலை செய்யாது, ஏனெனில் அது மேலும் வெறுப்புக்கு வழிவகுக்கும்” என்கிறார் ஸ்டெபானி கோலியர். "சிலர் தனியாக தூங்க விரும்புவதில்லை, அது அவர்களை மனதளவில் மோசமாக உணர வைக்கிறது. இது போன்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சரிசமமாக பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும்" என ப்ரோக்மேன் ஒப்புக்கொள்கிறார். “பிரச்னை உள்ளவருக்கு, அதாவது குறட்டை, தூக்கத்தில் நடப்பது அல்லது தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுவது என எதுவாக இருந்தாலும், அது அவரது துணைக்கு கஷ்டமாக இருக்கலாம். இதைப் பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள், பொதுவாக பல ஆண்களே தனியாகத் தூங்க தயங்குவார்கள்’’ என்கிறார் ப்ரோக்மேன். இருப்பினும், அதிகரிக்கும் 'ஸ்லீப் டைவர்ஸ்' போக்கு, ஒரு நல்ல இரவு தூக்கத்திற்காக, எதுவும் செய்யலாம் என்பதை நிரூபிப்பதாகத் தெரிகிறது. படக்குறிப்பு, மருத்துவர் எஸ்.ஜெயராமன் 'குறட்டை ஒரு நோயின் அறிகுறி' பலர் தன் துணையிடமிருந்து விலகி தனியாக உறங்க விரும்புவதற்கு முக்கிய காரணம் குறட்டை தான் என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் எஸ்.ஜெயராமன். "பெரும்பாலும் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக குறட்டை ஏற்படுகிறது, அதாவது ஸ்லீப் அப்னியா அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்ற நோயின் அறிகுறியே குறட்டை. ஒருவர் குறட்டை விட்டால், அசந்து தூங்குகிறார் போல, தூங்கட்டும் என நினைப்போம். ஆனால் குறட்டை என்பது ஒரு நோயின் அறிகுறி. வயதானவர்களுக்கு குறட்டையின் மூலமாக மரணம் கூட நிகழலாம்" என எச்சரிக்கிறார் மருத்துவர் எஸ்.ஜெயராமன். "பெரும்பாலும் ஆண்களுக்கே இந்த குறட்டை பிரச்னை உள்ளது. கணவன் குறட்டை விடுவதால், அருகே இருக்கும் மனைவி தூக்கத்தை இழப்பார். இது மனச்சோர்வை உண்டாக்கும். இதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படலாம். வெளிநாடுகளில் இதனால் விவாகரத்து வரை செல்கிறார்கள். நம் ஊரில் பலர் பொறுத்துக் கொள்கிறார்கள். எனவே குறட்டை ஒரு தீவிரமான பிரச்னை என்பதை முதலில் உணர வேண்டும்" "என்னிடம் குறட்டைக்கான சிகிச்சைக்கு வந்த ஒரு நபரின் மனைவி, 'என் கணவர் அடிக்கடி மூச்சு விட முடியாமல், தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறார்' என்றார். இவ்வாறு தூக்கத்தில் மூச்சு விட முடியாமல் முழிப்பது மாரடைப்பு வருவதற்கான அறிகுறி. தொடர்ச்சியாக குறட்டை பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு இது நிகழும், முக்கியமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு" என்கிறார் மருத்துவர் எஸ்.ஜெயராமன். "இளம் வயதினருக்கு குறட்டை பிரச்னை என்றால் எளிதில் குணப்படுத்தலாம். முதலில் அவர்களது தூக்க சுழற்சியை ஆய்வு செய்வோம். பின்னர் அதைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். உடல் எடையைக் குறைத்தல், தொண்டையில் வளர்ந்துள்ள சதையை லேசர் மூலம் அகற்றுதல், தைராய்டு பிரச்னை இருந்தால் அதற்கான தீர்வு என நிறைய வழிகள் உள்ளன. ஆனால், 20% பேருக்கு தான் குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்கும், 80% பேருக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் எஸ்.ஜெயராமன். (இந்தக் கட்டுரையில் பிபிசி தமிழுக்காக கூடுதலாக சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன) https://www.bbc.com/tamil/articles/c4nw0lrw000o

வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்”

2 months ago
வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்” ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன். குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது. முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் - தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் சகோதரி - சிந்து நாட்டரசன் ஜயதத்ரனின் அரசி) , பானுமதி (துரியோதனன்), அசலை (துச்சாதனன்), தாரை (விகர்ணன்), விருஷாலி (கர்ணனின் சூத அரசி), சுப்ரியை (கர்ணனின் ஷத்திரிய அரசி) - ஆளுமைகளும், உளநிலைகளும், அகத்தளத்தில் இருந்து வெளியே வந்து அரசசூழ்தலில் (ராஜதந்திரங்களில்) அவர்கள் பங்குகொள்ளுவதும் நாவலை நகர்த்துகின்றது. துரியோதனனின் அஸ்தினபுரியைத் தலைநகராகக் கொண்ட குருநிலம் முழுவதையும் ஆளவேண்டும் என்ற மண்ணாசையை தடுக்கமுடியாத புத்திர பாசத்தில் திருதராஷ்டிரர் இருக்கின்றார். அவர் அசலை, மற்றைய அரசியர்களின் வேண்டுதலாலும், தூண்டுதலாலும் மைந்தர்களையும், கொடிவழியினரையும் காக்க அணுக்கன் சஞ்சயன் மூலமாக பாண்டவர்களிடம் ‘போர் நிகழலாகாதென்று. எந்நிலையிலும் பாண்டவர்கள் படைக்கலம் எடுக்கலாகாது. அனைத்தையும் இழக்க நேரிட்டாலும்கூட’ என்ற ஆணையை மன்றாட்டாக வைக்கின்றார். சஞ்சயன் தூதுச்செய்தியை தெரிவித்தபோது திரெளபதி தான் துகிலுரியப்பட்டவேளை உரைத்த வஞ்சினத்தை துறந்துவிட்டதாகச் சொன்னாள். சகாதேவன் பாண்டவர் கொண்டுள்ள வஞ்சம் இப்புவியில் எழுந்த அத்தனை பெண்டிருக்காக எனவும் தனியே திரெளபதிக்கு மாத்திரமல்ல எனவும், போரைத் தவிர்த்தல் என்பது அவ்வஞ்சத்தை துறந்து மீளவும் கானேகுவதை ஏற்பதில் முடியும் என்றான். எனினும் மூத்த தந்தையான திருதராஷ்டிரரின் ஆணையை பாண்டவர்கள் தட்டாமல் ஏற்கின்றனர். கிருஷ்ணர் முதலாவது தூதில் கெளரவரின் அரசவைக்குச் சென்று, நால்வேதத்தின் காவலனாக நிற்பதாகச் சொல்லும் துரியோதனனிடம் அவன் முன்னர் கொடுத்த சொல்லுறுதியாகிய அஸ்தினபுரி அரசின் மேற்குநிலம், பாதிக் கருவூலம், இந்திரப்பிரஸ்தம் ஆகியவற்றை பாண்டவர்கள் சார்பில் கேட்கின்றார். பாண்டவர்கள் நாடாளும் தகுதியற்றவர்கள் என துரியோதனன் அக்கோரிக்கையை மறுதலித்தும், தந்தை திருதராஷ்டிரரை விலக்கியும், தன்னை கலிதேவனுக்கு முழுதளிக்கின்றான். போருக்கு ஒருங்கும் ஷத்திரிய அவைக்கு இரண்டாம் முறையாகத் தூது வந்த கிருஷ்ணர் அஸ்தினபுரி நாட்டின் வடகிழக்கெல்லைக் காட்டின் அருகே ஐந்து ஊர்களை பாண்டவர்களுக்காகக் கோருகின்றார். பாண்டவர்கள் ஷத்திரியர் அல்ல, அவர்கள் நாலாம் வர்ணமாகிய சூதர்களே என்று பாண்டவர்களின் பிறப்பை இழிவுசெய்து, குந்தி அவைக்கு வந்து பாண்டவரின் தந்தையர் எவர் எனக் கூறவேண்டும் எனவும் துரியோதனன் சிறுமை செய்கின்றான். அஸ்தினபுரியின் ஒரு பருமணலையும் கொடுக்கமுடியாது என கிருஷ்ணரை வெறுங்கையுடன் திருப்புகின்றான். போரின் வெற்றிக்காக துரியோதனன் ஏற்பாடு செய்த புருஷமேத யாகத்தின் (யாகங்களில் உச்சமாக தூய அந்தணனை எரிகுளத்தில் அனலுக்கு பலிகொடுப்பது!) வேத அவைக்கு மூன்றாவது தூதுடன் சாந்தீபினி குரு நிலையின் ஆசிரியராக வந்த கிருஷ்ணர், ஷத்திரியர் வேலிகட்டிப் பாதுகாக்கும் நால்வேதங்களை மட்டுமல்ல, அசுரவேதம், நிஷாதவேதம் என இன்னும் பலவேதங்களின் நற்கூறுகளை எடுக்கும் வேதமுடிபே தூயது என்று வேத அவையில் வேதியரோடும், முனிவர்களோடும் தத்துவவிசாரணைகளில் ஈடுபடுகின்றார். எனினும் எவரும் வேதமுடிபை ஏற்காததால் தோல்வியே வருகின்றது. இந்த தத்துவ விசாரணைகளின்போது கிருஷ்ணர், துரியோதனனால் வேள்வியின் துணைக்காவலனாக இருத்தப்பட்ட கர்ணனை அவன் சூதன் என்பதால் ஷத்த்ரியர்களையும், அந்தணர்களையும் கொண்டே அகற்றச் சூழ்கை செய்கின்றார். வரவிருக்கும் போரில் கர்ணன் போர்த்தளபதியாக ஆகமுடியாத நிலையை இது உருவாக்குகின்றது. கிருஷ்ணர் வேள்வியை ஏற்காமல் அவையிலிருந்து வெளியேறும்போது துரியோதனனிடம் கொடையாக பாண்டவர்களை அஸ்தினபுரியின் குடிகள் என ஏற்று அவர்களுக்கு ஐந்து வீடுகளைக் கோருகின்றார். அதனையும் துரியோதனன் தொல்வேதங்களின் நெறிகளைக் காரணம்காட்டி மறுக்கின்றான். இவ்வாறாக, கிருஷ்ணர் மூன்று தூதுகளிலும், வேதமுடிபை ஏற்கச் செய்வதிலும் தோல்விகளைத் தழுவி அஸ்தினபுரிக்கும், அரசகுடிக்கும் தான் இனி பொறுப்பல்ல என்று கூறித் திரும்பும்போது, திருதராஷ்டிரர் அவர் முன்னர் பாண்டவர்கள் தன்மைந்தரை களத்தில் எதிர்கொள்ளலாகாது எனக் கொடுத்த ஆணையைத் திரும்பப் பெறுவதாகக் கிருஷ்ணருக்குச் செய்தி அனுப்புகின்றார். போருக்கான தடைகள் இல்லாமல் போவதோடு, கிருஷ்ணரின் மூன்று தூதுகளினூடாக பாண்டவர்கள் ஒருபோதும் போரை விரும்பவில்லை என்பதும், துரியோதனனின் மண்மீதான பேராசையும் உறுதிப்படுத்தப்படுகின்றன. நாவலில் போரைப் பற்றிய பீஷ்ம பிதாமகரின் கூற்று. “ போர் என ஒன்று எழுமென்றால் நாம் ஆடைகளை என நாம் பெற்றும் கற்றும் உற்ற அனைத்தையும் கிழித்துவீசிவிட்டுத்தான் முன்செல்வோம். தந்தையர் நெஞ்சில் உதைப்போம். ஆசிரியர்களின் முகத்தில் உமிழ்வோம். உடன்பிறந்தார் தலைகளைக் கொய்வோம். இளமைந்தர் குருதியில் குளித்துக் களியாடுவோம்.” மனித உரிமைகளும், மனித நேயமும் நிலவுவதாகச் சொல்லப்படும் இந்நவீன உலகில் நடக்கும் போர்களில் இழைக்கப்படும் அநீதிகளும், போர்க்குற்றங்களும் அன்றைய குருஷேத்திரப் போருக்குச் சற்றும் குறைவானதல்ல!

மன்னாரில் அழகு நிறைந்த ஃபிளமிங்கோ பறவைகள்!

2 months ago
அழகு நிறைந்த ஃபிளமிங்கோ பறவைகள்! Published By: DIGITAL DESK 3 14 FEB, 2024 | 10:32 AM “ஃபிளமிங்கோ” வலசை பறவைகள் மன்னார் பகுதியில் காணப்படுகிறது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதாக அறியப்படுகிறது. இவ்வாறு இடம்பெயரும் பறவைகளுள், மிகவும் அரிதான மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட பறவை ஃபிளமிங்கோ ஆகும். தற்போது அவை அனைத்தும் மன்னாரில் குவிந்துள்ளன. இடம்பெயர்ந்த காலம் எப்போதுமே பார்வையாளர்களுக்கு ஒரு உற்சாகமான நேரமாக உள்ளது, அவர்கள் மன்னாரின் ஈரநிலங்களில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக செலவழிக்கும் அழகான மற்றும் கம்பீரமான ஃபிளமிங்கோ பறவைகளை ஓய்வு நேரத்தில் பார்க்கவும், ஆச்சரியப்படுத்தவும், படிக்கவும் மற்றும் புகைப்படம் எடுக்கவும் இணையற்ற வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த வகை பறவைகள் நவம்பரில் மாதம் முதல் ஏப்ரல் வரை தங்கியிருக்கும். அவைகள் இலங்கைக்கு மட்டுமன்றி, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கும் இடம்பெயர்கின்றன. ஃபிளமிங்கோ பறைவைகளை புகைப்படம் பிடித்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஏ.எல் முஹமட் ரசீம் தெரிவிக்கையில், மன்னாரில் தற்போது சுமார் 3,000 க்கும் அதிகமான ஃபிளமிங்கோ பறைவைகளை என்னால் அவதானிக்க கிடைத்தது. ஆனால் பல ஆண்டுகளாக எண்ணிக்கையில் தெளிவான ஏற்ற இறக்கத்தை காணக்கூடியதாக உள்ளது. "2012 இல், 12,000 ஃபிளமிங்கோ பறவைகள் இருந்தன, ஆனால் அது 1,500 ஆகவும் குறைந்து பின்னர் 7,000 ஆக உயர்ந்தது. பின்னர் சென்ற வருடம் 3,000 தெடக்கம் 5,000 வரை இருந்தது. தற்போது அது 3,000 ஃபிளமிங்கோ பறவையாக உள்ளது." அந்த வகையில் இந்த ஃபிளமிங்கோ பறவைகளை காண அதிமான வெளிநாட்வர்கள் வந்துள்ளனர். இந்த வருடம் பல நாட்கள் நான் மன்னார் சென்று இந்த புகைப்படங்களை எடுத்து வருகின்றேன். https://www.virakesari.lk/article/176329

கிராம சேவையாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை அடுத்த வாரம்

2 months ago
14 FEB, 2024 | 11:48 AM புதிய கிராம சேவையாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிதாக 2,100 கிராம சேவையாளர்களை கடமையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த குறிப்பிட்டுள்ளார் . இதில் பங்கு பற்றியவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/176328

சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒருவார காலத்தில் பிறப்பிக்கப்படும் - இந்திய மத்திய அரசாங்கம்

2 months ago
நீண்ட கால சிறை வாசம்: இலங்கை திரும்பும் சாந்தன்! இந்திய அரசு கொடுத்தது அனுமதி சாந்தன் என்கிற தில்லையம்பலம் சுதேந்திரராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான அனுமதியை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் வழங்கியுள்ளன. இதனால், தனது முதுமைக் காலத்தில் மகனுடன் இணைந்து வாழ வேண்டும் என்கின்ற சாந்தனின் தாயாரின் கனவும் நனவாகும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த அவர் உள்ளிட்ட ஏழு பேரையும் இந்திய உச்சநீதிமன்றம் விடுவித்திருந்தது. இதே வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, நீதியரசர்கள் பி.ஆர் கவாய் மற்றும் பி.வி நாகரட்ணா ஆகியோர் சாந்தன் உட்பட அனைவரையும் விடுவித்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தனர். சாந்தன் இலங்கை திரும்பிச் செல்வதற்கான தற்காலிக பயண ஆவணத்தை சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் இந்த மாதத்தின் முற்பகுதியில் வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து, அவரது பயணத்திற்கான அந்த மூல ஆவணம், தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மேலும், அவரை நாட்டிற்கு திருப்பியனுப்பும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு துணைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. “இந்த பயண ஆவணம் கிடைக்கப்பெற்றதென்பதை நீங்கள் தெரிவித்தால் நன்று, மேலும் அவரை விரைவாக நாடு கடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்து, அது குறித்த விபரங்களை எமக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் உயரதிகாரி தமிழக அரசுக்கு எழுதியிருந்தார். தற்போது, திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான பயண ஆவணமானது இந்திய மத்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் வேண்டுகோளின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தூதரக அதிகாரிகள் கூறுகின்றனர். முன்னதாக, வயதான தனது தாயாருடன் வசிக்க வழியேற்படுத்தும் வகையில் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென சாந்தன் இந்திய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். அதேவேளை, அவரது தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரியும் இந்தியப் பிரதமர் நரேந்தி மோடிக்கு கண்ணீர் மல்க நேரடியாக ஒரு வேண்டுகோளை காணொளி மூலம் விடுத்திருந்தார். சாந்தனின் மனுக்கு உரிய பரிந்துரையுடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மத்திய அரசுக்கு மாநில அரசால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமிலிருந்த சாந்தனின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி அரச பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன. அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு மூச்சிழுப்பு இருந்ததோடு வயிற்றில் திரவம் நிரம்பி கால்கள் வீக்கமடைந்திருப்பதாகவும், அவருக்கு உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை தேவைப்படும் எனவும், அவரது உடல்நிலை ஸ்திரமடைந்த பின்னர் அதை செய்யலாம் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர். இதேவேளை, அவரது சட்டத்தரணி பாண்டியன் புகழேந்தி, அவரது உடல்நிலை சிறிது முன்னேறியுள்ளதாகவும் அவரால் பயணிக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=268497
Checked
Thu, 04/18/2024 - 23:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed