இரண்டடிக்குள் இரண்டரை கோடி!
நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்.....
குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்!
அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு..
மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு...
ஆடம்பரம் ஏதுமற்ற வீடு...
அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை...
மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை..
மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை...
பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்..
அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட..
தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற
ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா?
அழகில்லைத்தான்..அசிங்கம்தான்...
ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது..
உதவாத பழக்கம் தான்...
இருந்தும் மனம் ஏங்கியது...........
அடடா....
அழகிய வாழ்வென்பதை இவர்களின் பெயரில் மட்டும்
எழுதி வைத்துவிட்டு ஒளிந்து கொண்டவனே..
இறைவா... எங்களுக்கும் கொஞ்சம் தாவேன் என்றபடி!
அங்கே என்னடி பராக்கு- அதட்டினாள் அம்மா..
திரும்பி திரும்பி அவர்களை பார்த்தபடி வீட்டுள் நுளைந்தேன்!
எம்முள் சிலருக்கு ஏன் இப்படி ஒருவாழ்வு இல்லை??
வாழ தெரியவில்லை??
ஆயிரம் ஆயிரம் கேள்விகள் என்னுள்..
செவ்வந்தியை சுற்றிய தேனீக்களாய்..
விடைமட்டும் கடலில் கரைத்த உப்பென இன்னும் காணோம்!
இரண்டடி கூட கொள்ளா கூட்டுக்குள்
இரண்டரை கோடி சந்தோசங்களா?
ம்ம்ம்ம்ம்..........
காகம் கொடுத்து வைத்த பிறவிதான்!!
ஜோசப் பரராஜசிங்கம்!
--------------------
சிங்கம் அவர் பெயருள் உண்டென்று உலகம் சொல்லும்....
அவர் உடல் முழுக்க ஓடியது புலி இரத்தம்!
எங்களுக்கு மட்டுமே அது புரியும்!!
எத்தனையோ இரவுகளில் எமக்கு துணை நின்ற ஒளி விளக்கு...
விடிகிறது என்று எம்முள் சிலர் நினைக்கையில் ..
எப்படி விடை பெற்று போயிற்று
தன் மானத்துடன் வாழ்பவனுக்கு...
சாவுதான் பரிசென்ற சாபகேடா எம் வாழ்வு?
யுத்தம் அழித்தது...
மேகம் அழித்தது...
கடலும் வந்து கொன்று எமை கரை மணலுள் புதைத்து போனது!
இன்று எம் கூட நின்றவரையும் கொன்று - கர்த்தரே
உன் காலடியில் அவர் ரத்தம் தெளித்து போகிறார்!
அழிவென்றால் தமிழன் - என்று அகராதி
ஒன்று ஆகிடுமோ?
உம்மை அழிவு கொடுத்து எம்மை காத்தவரே - கர்த்தரே
இப்போ நாமழிகிறோம்... வந்து
எப்போது .............
எமை காப்பீர்????
வா..வா!!
---------------
கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே
2005 போய்வா தோழா!
சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை
கொன்று தொலைத்தாய்!
என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி?
இருந்தாலும் போய்வா!
2006 ஏ வா வா !
வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா?
வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை..
பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா?
கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை
எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்!
வாய் மூடிபோன பீரங்கி வாய்களை
ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்!
அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும்
எரித்திடாதே.. அணைத்திடாதே!
தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-நினைக்கிறோம்..
ஆனால் தர்ஷினிவரை இன்று பறி கொடுத்து நிற்கிறோம்!
தமிழராய் பிறந்ததை தவிர தவறு வேறென்ன செய்தோம்?
போனது போகட்டும்.. வாயிலில் கண்திறந்த
மலர்கள் இனி குருதியில் குளிக்காது பூக்கட்டும்!
சிரிப்பு பெரிதாய் எம் முகத்தில் இல்லாவிடினும்..
செங்கம்பளம் விரித்து உன்னை வரவேற்கிறோம்..
வா வா 2006 ஆண்டே!!
போ கடலே நீயுமா?
=========================
நீல வானம் குடை பிடிக்க
நெடும் கழுத்து நாரைகள் உனை கடக்க..
கொக்கின் தவம்..கரையில் ஒற்றை காலில் நின்று அடம் பிடிக்க
கொள்ளை அழகு நீ என்று கொஞ்சி மகிழ்ந்தோம் கடலே..
கொத்தும் குலையுமாய் எம்மை கொன்று சென்றாய் கடலே!
ஈவு இரக்கம் என்னவென்று தெரியாதார் நாளும் - எமை
நார்..நாராய் கிழிதெறிந்து நரபசி ஆறினரே...
குமுறி குமுறி அழுது.. கூடெரிந்த குருவிகளாய்
வழி தெரியாது நின்றோம் - கடலே
நீயும் வந்து எங்கள் விழிகளில் தீ மூட்டி போனாயே...
வெந்து ஆவியாய் போயேன் கடலே!
அன்னை என்றோம் ..மாதா என்றோம்...
தாய் என்றோம் ... எம் கரையை தாங்குபவள் என்றோம்...
அத்தனை முறையும் எம்மை பெற்றவள் பெயர் கொண்டே..உனை அழைத்தோம்..
பெற்றவள் பதற பிஞ்சினயும்..இன்னும் பேசவே தொடங்கா மழலை
அழுது நிற்க பேறு கொண்டவளையும்...
பெரிசுகளையும் ..சிறிசுகளையும்...
கரை தாண்டி வந்து சுருட்டி சென்று..கருக்கு மட்டையில் அடித்து கொன்று
காவு கொண்டு போனாய் கடலே!
இனி என்ன பெயர் கொண்டு நாம் உனை அழைக்க
நீயே சொல்லு கடலே!
தலை மூடி போன போர் வெள்ளம் கொஞ்சம் வடிய...
இனியாவது விடியாதா என்று ஏக்கத்தோடு நாம் நிமிர...
தலை மீது நெருப்பள்ளி கொட்டி போனாய் கடலே...
இனி உன்னை தாயென்று பாடமாட்டோம் கடலே!
என்ன செய்ய போகிறோம்?
-----------------------------------------
எவ்வளவு அழகிய பூமி.....என்னை சுற்றி இருப்பது!
என்னதான் வாழ்கை பெரிய சுமையாக தெரிந்தாலும்..
கொட்டுகின்ற பனியும்...அதனை கொஞ்சுகின்ற புல் தரையும் ..
நான் நட்டு வைத்த செடியில் முதல் முதலாய் பூத்து....
நாணத்துடன் சிரிப்பது போன்ற பூவும்...
சின்ன குழந்தை முத்தமாய்..
என் தேகம் நனைக்கும் மழை துளியும்..
என்றோ பிரிந்து வந்தாலும்..
இன்னும் என் இதயத்தின் வலி கொண்ட சிறகாய்.........
இன்றும் என் உயிர் பிசையும்.....
வாழ்ந்து விட்டு வந்த என் தேசத்து வசந்தமும்..
ம்ம் எண்ணியே பார்க்கிறேன்.. இன்னும் ஏதோ இருப்பது போல்த்தான் இருக்கு வாழ்வில்..!
ஆயினும்..
நான் இரசித்த அழகுகள் எல்லாம் என்றும் அப்படியே இருக்க........
தான் மட்டும் இருந்து கொண்டு பூமி .. எம்மை...
காலம் வந்தால் கை அசைத்து வழி அனுப்பி வைக்கும்!!!
கட்டாயம் அது நடக்கும்!!!
இருட்டில் தொலைத்த கறுப்பு மலரா வாழ்வு என்றெண்ணி ...
கனக்கிறது ...நிகழ் காலம்..!!
எதிர் காலம்..........
தன் ஒரு கரத்தினை தான் எங்களுக்காய் தரும்... !
மறு கரத்தை...
தனக்கும் கடவுளுக்கும் இடையில் செய்த ஒப்பந்தம் போலவே ஒளிச்சு வைக்கும்!!
வாழ்வு என்ற படகு கால கடலில் மூழ்கையில்...
நீ நீட்டுகின்ற கையை .. தட்டி விட்டு....
அது தன் பாட்டில் நடை பயிலும்!!!
பிறப்பு ..........ஆரம்பம்!
இறப்பு... முடிவு!!
வாழ்க்கை சிறு இடைவேளை!!
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் என்ன செய்ய போகிறோம்??
நடப்பது நடக்கட்டும்... நம் கையில் என்னவென்று...
உயிர் இருக்கயிலேயே உணர்வு செத்து போவாமா?
இல்லை..... விதியை பிடித்து வந்து...தூக்கில் ஏற்றி...
வெற்றி குதிரையின் முதுகில் பயணம் செய்து...
உன்னையும் என்னையும் தந்த உலகிற்கு...
உருப்படியாய் ஏதும் செய்வோமா?
பச்சை பாய் விரித்த எங்கள் வயல் நிலமும்...
பால் நிலவொளி கொண்டு கழுவிய எம் வீட்டு முற்றமும்...
எப்படி பறி போனதென்று எழுதி வைப்போமா?
இனி வரும் சந்ததி கையிலதை ஏடாய் ஆக்கி கொடுப்போமா?
எப்படி உன் பாட்டன் திரும்ப திரும்ப அடி வாங்கினான்...
எப்படி அவனை அடித்தவனை நாங்கள் திருப்பி அடித்தோம்..
என்றும் மறக்காமல் சொல்வோமா?
காதல்...காதல்..என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா?
இல்லை....கணணி யுகத்துடன் சேர்ந்து ஓடி..
நாமும் கொஞ்சம் வெல்வோமா?
என்ன செய்ய போகிறோம்???
நன்றி கெட்ட நான்..!
================
கண் மூடியபடி நான் பிறந்தேன்..அன்று முதல் - அம்மா
தன் கண்களை தூக்கம் காவு கொள்ள விடாதிருந்து எனைக் காத்தாள்!
எங்கே என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயம் அவளுக்கு..
நான் தவழ தொடங்கினேன்..
தரையோடு தனை விழுத்தி தானும் சேர்ந்து தவழ்ந்து..
என் தத்தக்கா பித்தக்கா என்ற ஊர்தலில் தன் உயிர் மூச்சை
ஒளித்து வைத்தாள் -அம்மா
வளர்ந்தேன்...
கங்காரு போல் எனை உடலில் காவி காவியே தான் மெலிந்தாள்.
கண்ணு இல்ல.....செல்லம் இல்ல....
காகம் சொல்லு...மேகம் சொல்லு.....
அம்மா...என்னை பேச பழக்கினாள்!
காலம் காற்றில் மிதக்கும் தூசி என பறந்தது!
இப்போ அம்மா கை தடியுடன் நடக்கிறாள்....
தட்டு தடுமாறி படியேறி வருகிறாள்..பிள்ளை
சாப்பிட்டு போட்டு படியேன் என்கிறாள்......
முகம் சிவக்கிறது எனக்கு..........
"உன்னை பேசாம இரு எண்டு சொன்னன் தானேமா..
பெரிய கரைச்சல்"
எனக்கு பேச கற்று கொடுத்தவளை
பேசாமல் இருக்க சொல்லி நான் நன்றி செய்தேன்!
என்னை எறும்பு கடித்திடுமோ என்று பயந்தவள் மனசை
இரை கவ்விய பாம்பாய் கொன்றேன்!
ஓடி வாடி..ஓடி வாடி....
அம்மா உலகத்தை மறந்து..என்னுள் மீண்டும் பிறந்து..
நடை பழக்கினாள்!
தன் இரு கை நீட்டி அதனிடையுள் என்னை நடக்கவைத்தாள்..
எங்கே...நான் விழுந்து விடுவேனோ என்று பயம் ..அம்மாக்கு!
வாழ்வு புத்தகத்தை கால காற்று மறுபடியும்..
பக்கம் வேறாய் புரட்டுகிறது
அம்மா தலை வெள்ளி சரிகை கொண்டு நெய்த
கறுப்பு துணி என்றாகிறது!
"பிள்ளை கால் வலிக்குது ஒருக்கா கடைக்கு போட்டு வாயேன்"
இது..அம்மா!
"எனக்கு ஏலாது சும்மா போமா"
அது..நான்!
முழங்கால் வலிக்க.. முக்கி முனகி அம்மா நடப்பாள் -கடை திசையில்!
எனக்கு நடை பழக்கியவளை..பாதம் கொதிக்க நடக்கவிட்டு..
நான் நன்றி செய்தேன்!
திரும்பி வந்தபின் தேநீர் போடுவாள்- மூச்சு வாங்குமே!
எனக்கு முதல் தந்துவிட்டு தான் குடிப்பாள்!
கால் கடுக்க சென்றது அவள்....
களைப்பாறியது ..நான்!
எப்படிச் சொல்ல?
இச்சென்று கன்னம் முத்தமிட்டாலும் சரி..
இடியென்று அவள் தலையுள் நான் இறங்கினாலும் சரி..
எதையுமே ஒன்றாய்தான் எடுப்பாள் - அம்மா!
காலம் ஓடும் ...அம்மா
ஒருபொழுதில் காலமாவாள்..
கதறி அழுவேன் ..நான்
அம்மா போயிட்டாளே என்றா?
இல்லை இனி எல்லாம் நானேதான் செய்யவேண்டும் என்றுமா?
கண்ணீருக்குள்ளும் சுயநலம்.. சீ..
நன்றி கெட்ட நான்!!