புதிய பதிவுகள்2

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம்

4 days ago
இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம் Apr 2, 2026 - 04:26 PM இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் (02) அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இலங்கை இராணுவத்தின் இலேசாயுத காலாட் படையணியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnhcsl080003356psgcofpfg

குட்டிக் கதைகள்.

4 days ago
tonSodpres19 fhàashi06gltf:9155f1l2t9 1L2el3cmg3 i5i926lmrt · பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!” அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார். “இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க முனுசாமினு யாரும் இல்ல…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல முனுசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது. “ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார். “மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… முனுசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!” மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?” “இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்… … லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார். “ஹலோ… நான் முனுசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…😂" Voir la traduction.....!

சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை [ஒன்பது பகுதிகள்]

4 days 1 hour ago
சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 8 [இந்த கதை ஒரு கல்லைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒரு நிலத்தின் கதை. அதில் வாழ்ந்த மக்களின் கதை. மாற்றப்பட்ட ஒரு சொல்லின் கதை. மறைக்கப்பட்ட நினைவுகளின் கதை. வரலாறு என்றால் நாம் புத்தகங்களில் படிப்பதையே நினைப்போம். ஆனால் வரலாறு மக்களின் நினைவுகளிலும் வாழ்கிறது. ஒரு கல், ஒரு சொல், ஒரு மாற்றம் — இவை எல்லாம் சேர்ந்து எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுகின்றன என்பதையே இந்த கதை சொல்லுகிறது. ஒரு கல் பேசாது. ஆனால் அது பல காலங்களைக் காணும். மனிதர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் எழுத மாட்டார்கள். சில உண்மைகள் தெரிவு செய்யப்படுகின்றன. சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த கதை சொல்லும் முக்கியமான செய்தி இதுதான்: வரலாறு முழுவதும் பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஆபத்தாக மாறுவதற்கு சில உண்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து சொல்லினால் போதும். என் குறிப்பு: இந்த நூல் ஒரு கற்பனைக்கதை. ஆனால் இதில் பேசப்படும் உணர்வுகள் உண்மையானவை. நிலம், மொழி, அடையாளம், நினைவு — இவை எல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானவை. இந்த நூல் ஒருபக்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. பேசப்படாத குரல்களை நினைவில் கொள்ளச் செய்வதற்காக. நாம் வரலாற்றைப் படிக்கும் போது ஒரு கேள்வியை கேட்க வேண்டும்: “இங்கே யாருடைய குரல் கேட்கப்படவில்லை?” அந்தக் கேள்வியே இந்த கதையின் இதயம்.] கலினி அந்த மட்குடத்தைப் புதைத்து, சிவா அந்தக் கல்லைத் தொட்டுச் சென்ற பிறகு பல நூற்றாண்டுகள் உருண்டோடின. காலம் மாறியது; இப்போது இந்த நிலத்திற்குப் புதியவர்கள் வந்தனர். அவர்கள் கைகளில் வாள்கள் ஏந்தி வரவில்லை, மாறாகக் காலணிகள் அணிந்து, கைகளில் குறிப்பேடுகளுடன் வந்த ஐரோப்பிய காலனித்துவவாதிகள் அவர்கள். அவர்கள் போர்வீரர்கள் அல்ல; நில அளவையாளர்கள், மதபோதகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள். அவர்கள் பாசி படிந்த இடிந்த கட்டிடங்களை அளந்தார்கள், நில வரைபடங்களைத் தயாரித்தார்கள். அகலம், நீளம், வடிவம் என அனைத்தையும் துல்லியமாகப் பதிவு செய்தார்கள். ஆனால், அந்த நிலத்தோடு பிணைந்திருந்த மக்களின் வலிகளையும், அவர்களின் ரகசிய நினைவுகளையும் அவர்கள் ஒருபோதும் கேட்கவில்லை. எல்லைக் கல்லின் அருகே மண்டியிட்ட ஒரு ஆய்வாளர், "இது மிகவும் சுவாரஸ்யமானது" என்றார். மற்றொருவர், "இது பழைய வரலாற்று நூல்களை உறுதிப்படுத்துகிறது" என்றார். ஆனால் அவர்கள் ஒரு கேள்வியை மட்டும் கேட்க மறந்துவிட்டார்கள்: "எந்த நூல்கள்? அவற்றை யார் எழுதியது? யாருக்காக எழுதப்பட்டது?" புதைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால், அதில் ஒரு தந்திரம் இருந்தது. தங்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தார்கள். புதிய வரலாற்றுச் சட்டகத்திற்குப் பொருந்தாத தகவல்களை "பிழையானவை" என்றும், "மூடநம்பிக்கைகள்" என்றும் முத்திரை குத்தித் தள்ளுபடி செய்தனர். ஐரோப்பிய அறிஞர்கள் இந்த நாட்டின் சிக்கலான வரலாற்றை எளிமைப்படுத்த முயன்றார்கள். அவர்கள் விரும்பிய "ஒழுங்கிற்காக", பல்லாயிரம் ஆண்டு வரலாற்றை ஒரு நேர்க்கோட்டில் அடக்கினார்கள். வாய்மொழிக் கதைகளை விடவும், ஏற்கனவே அதிகாரத்தால் எழுதப்பட்ட நூல்களுக்கே அவர்கள் முன்னுரிமை அளித்தனர். கிராமங்களை விட மடங்களையும், உழைக்கும் விவசாயிகளை விட மன்னர்களையுமே வரலாற்றின் நாயகர்களாகச் சித்தரித்தனர். வரலாற்று உண்மைகள் (Historical Facts & Figures): காலனித்துவத் தாக்கம் (18-19ஆம் நூற்றாண்டு): பிரிட்டிஷ் ஆட்சியின் போது (குறிப்பாக ஜார்ஜ் டேர்னர் - George Turnour போன்றவர்கள்), 'மகாவம்சம்' போன்ற பாலி மொழி நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இதுவே இலங்கையின் அதிகாரப்பூர்வ வரலாறாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. வாய்மொழி வரலாறு புறக்கணிப்பு: ஐரோப்பியர்கள் "ஆவணப்படுத்தப்பட்ட" வரலாற்றையே நம்பினர். இதனால், தமிழ் மற்றும் எலு மொழிகளில் மக்களிடையே புழங்கிய நாட்டுப்புறப் பாடல்கள், குலவரிசைக் கதைகள் "ஆதாரமற்றவை" எனக் கருதப்பட்டு வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டன. தொல்லியல் அணுகுமுறை: ஐரோப்பிய ஆய்வாளர்கள் பிரம்மாண்டமான ஸ்தூபிகளையும், மடங்களையும் ஆய்வு செய்த அளவிற்கு, சாமானிய மக்கள் வாழ்ந்த இடங்களையோ அல்லது அவர்களின் சிறிய வழிபாட்டுத் தலங்களையோ முக்கியமாகக் கருதவில்லை. இனத்துவ அடையாளம்: சிக்கலாகப் பிணைந்திருந்த பல இன, மொழி அடையாளங்களை ஐரோப்பியர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக "சிங்களவர்", "தமிழர்" எனத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தினர். இது பண்டைய காலத்தில் நிலவிய மொழி மற்றும் கலாச்சாரக் கலப்பை மறைக்கக் காரணமாகியது. ஐரோப்பிய ஆய்வாளர்கள் எழுதினார்கள்: "நாகரிகமடைந்த ஒரு மக்கள் கூட்டம் இங்கு வந்து முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது." மற்றொன்று, "மேம்பட்ட கலாசாரம் பழமையான மக்களைப் பண்படுத்தியது" என்றது. அவர்களின் வரலாற்றுப் பதிவுகளில் பல உண்மைகள் மறைக்கப்பட்டன: கலினி காப்பாற்ற முயன்ற ஊர்ப் பெயர்கள் வெறும் "எழுத்துப் பிழைகளாக" முத்திரை குத்தப்பட்டன. சிவா கண்டெடுத்த கல்வெட்டுகள் "முதிர்ச்சியடையாத ஆரம்பகால முயற்சி" எனக் குறைத்து மதிப்பிடப்பட்டன. பூர்வகுடி மக்கள் மெல்ல மெல்ல "இணைந்தார்கள்" அல்லது "அமைதியாக மறைந்தார்கள்" என மேலோட்டமாக எழுதப்பட்டது. இப்படித்தான், பலதரப்பட்ட உண்மைகள் அடங்கிய வரலாறு பாடப்புத்தகங்களில் ஒரு நிலையான, கடினமான வடிவத்தைப் பெற்றது. காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற புத்தகங்களே எஞ்சின. புதிய ஆட்சியாளர்கள் அந்தப் புத்தகங்களையே ஆதாரமாகக் கொண்டனர். இப்போது வரலாறு என்பது உண்மையை அறிவதற்கான தேடல் அல்ல; மாறாக, அதிகாரம் மற்றும் உரிமையைக் கோருவதற்கான கருவியானது. மேடை உரைகளில் நூல்கள் மேற்கோள் காட்டப்பட்டன; கல்வெட்டுகள் தங்களுக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. புராதனமான சான்றுகள் இப்போது நீதிமன்றங்களில் உரிமைகளைத் தீர்மானிக்கும் ஆதாரங்களாக மாறின. கேள்விகள் திசைமாறின: "முதலில் வந்தவர் யார்?" "இந்த மண்ணின் மூலக்குடி யார்?" "உண்மையான வாரிசு யார்?" ஒவ்வொரு சொல்லும் அரசியலின் கூர்மையான ஆயுதமாக மாறியது. பல நூற்றாண்டுகளாகப் பிணைந்து வாழ்ந்த மக்கள், ஒருவரை ஒருவர் அந்நியர்களாகப் பார்க்கக் கற்றுக்கொண்டனர். வெவ்வேறு மொழி பேசுபவர்களிடையே மலர்ந்த காதல் "துரோகமாகப்" பார்க்கப்பட்டது. மக்கள் இணைந்து வழிபட்ட புனித இடங்கள் இப்போது போர்க்களங்களாக மாறின. பல்லாயிரம் அடுக்குகளைக் கொண்ட, உயிருள்ள ஓட்டமாக இருந்த வரலாறு, இப்போது ஒருவரை ஒருவர் வெட்டப் பயன்படும் கூர்மையான கத்தியாக மாறியது. வரலாற்று உண்மைகள் (Historical Facts & Figures): புனரமைக்கப்பட்ட வரலாறு (Reconstructed History): 19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களால் மீளுருவாக்கம் செய்யப்பட்ட வரலாற்றையே 20-ஆம் நூற்றாண்டுத் தலைவர்கள் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தினர். இது "வரலாற்றுப் புனைவு" (Historical Fiction) உண்மையாக நம்பப்படக் காரணமாகியது. மொழிக் கலப்பு மறைப்பு: கல்வெட்டுகளில் காணப்படும் பிராகிருதம், தமிழ், எலு ஆகிய மொழிகளின் பிணைப்பு, காலப்போக்கில் "சிங்களம்" அல்லது "தமிழ்" எனத் தனித்தனி துருவங்களாகப் பிரிக்கப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் 'பருமக' (Parumaka) போன்ற பெயர்கள் தமிழின் 'பெருமகன்' என்பதோடு தொடர்புள்ளவை என்பதைப் போன்ற உண்மைகள் பாடப்புத்தகங்களில் தவிர்க்கப்பட்டன. அடையாள அரசியல்: 1948-க்குப் பிந்தைய காலகட்டத்தில், காலனித்துவ வரலாற்று வரைவியலால் (Colonial Historiography) உருவாக்கப்பட்ட "ஆரிய-திராவிட" இனக் கோட்பாடுகள், இலங்கையில் இனங்களுக்கு இடையிலான பிளவை ஆழப்படுத்தின. புனிதத் தலங்கள்: கதிர்காமம் போன்ற பல இடங்கள் இரு சமூகத்தவர்களாலும் இணைந்து வழிபடப்பட்ட வரலாறு மறைந்து, அவை உரிமைப் போராட்டக் களங்களாக மாற்றப்பட்டன. ஒரே நிலம்—ஆனால் ஆளுக்கொரு கதை. ஒரே கல்—ஆனால் ஆளுக்கொரு உரிமை. கடந்த காலம் என்பது இப்போது ஒரு போர் ஆயுதமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், வரலாற்றுக்கு ஒரு பலவீனம் உண்டு; அது மனித மனதின் ஆழமான தேடலையும் ஏக்கத்தையும் ஒருபோதும் முழுமையாக அழித்துவிட முடியாது. இன்றைய நவீன யாழ்ப்பாணத்தில், தொல்பொருள் ஆய்வு மாணவி ஒருத்தி, அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு கல்லின் தூசியைத் துடைத்தாள். அதில் ஒரு பழைய ஊர் பெயர் தென்பட்டது. அந்தப் பெயர் இன்றைய அதிகாரப்பூர்வ வரைபடங்கள் எதிலுமே இல்லை. அதே சமயம் கொழும்பில், ஒரு இளைஞன் பழைய கல்வெட்டுகளை வாசிக்கும்போது, அவனுக்குள் ஒரு புரியாத உணர்வு ஏற்பட்டது. அந்தப் பழைய எழுத்துக்கள் மௌனமாக இருந்தாலும், அவனிடம் ஏதோ ரகசியத்தைப் பேசுவது போல் அவனுக்குத் தோன்றியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வரலாற்று மாநாட்டில் அவர்கள் இருவரும் சந்தித்தனர். ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து வாதிட்டனர்—காலக் கணக்கீடு (Dates), எழுத்து வடிவம் (Script) மற்றும் அவற்றின் அர்த்தங்கள் குறித்து கடும் விவாதங்கள் நடந்தன. ஆனால் மெதுவாக—பல நூற்றாண்டுகளுக்கு முன் கலினியும் சிவாவும் உணர்ந்ததைப் போலவே—இவர்களும் மற்றவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினர். வெறும் எழுத்துக்களை மட்டுமல்ல, அந்த எழுத்துக்களுக்குப் பின்னால் இருக்கும் மௌனத்தையும் அவர்கள் உணரக் கற்றுக் கொண்டனர். ஒரு மாலை வேளையில், அந்தப் பழைய எல்லைக் கல்லின் முன்னே நின்றபோது, அந்தப் பெண் மெதுவாகக் கேட்டாள்: "காதல், வரலாற்றைத் தாண்டி உயிர்வாழுமா?" அதற்கு அந்த இளைஞன் அமைதியாகப் பதிலளித்தான்: "இல்லை, காதல் இருப்பதால்தான் வரலாறே உயிர்வாழுகிறது." அந்தக் கல் எதுவும் பேசவில்லை. ஆனால், அது எல்லாவற்றையும் தன் மௌனத்தில் நினைவில் வைத்திருந்தது. வரலாற்று உண்மைகள் (Historical Facts & Figures): நவீன தொல்லியல் (Modern Archaeology): இன்று யாழ்ப்பாணம் (கந்தரோடை) மற்றும் கொழும்பு (அனுராதபுரம் சார்ந்த ஆய்வுகள்) ஆகிய இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகள், இலங்கையின் வரலாறு என்பது தனித்தனி தீவுகள் அல்ல, அவை ஒன்றோடொன்று பிணைந்தவை என்பதை நிரூபித்து வருகின்றன. பரிணாம வளர்ச்சி: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. வரை, பிராமி எழுத்துக்கள் படிப்படியாக வட்டெழுத்தாகவும், பின்னர் தமிழ் மற்றும் சிங்கள எழுத்துக்களாகவும் பிரிந்தன. இந்தத் தொடக்கக்கால எழுத்துக்களில் (Early Brahmi) இரண்டு மொழி வேர்களும் கலந்தே காணப்படுகின்றன. மறைக்கப்பட்ட ஊர்ப்பெயர்கள்: இலங்கையின் இடப்பெய ஆய்வு (Place-name studies) படி, பல சிங்கள ஊர்ப்பெயர்களுக்குப் பின்னால் தமிழ்/எலு மொழி வேர்களும், பல தமிழ் ஊர்ப்பெயர்களுக்குப் பின்னால் பழைய குலப் பெயர்களும் மறைந்து கிடக்கின்றன. பண்பாட்டுப் பிணைப்பு: வரலாறு அரசியலாக்கப்பட்டாலும், மக்களின் அன்றாட வழிபாடுகள், உணவு முறைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இன்றும் அந்தப் பழைய எலு-தமிழ் கலப்பு உயிருடன் இருக்கிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம் 9 தொடரும் துளி/DROP: 2129 [சிறு கதை - 207 / பெயர்களுக்கு முன் நினைவிருந்த தீவு அல்லது ஒரு நிலத்தின் கதை / அத்தியாயம் 8 https://www.facebook.com/groups/978753388866632/posts/34670688385913033/?

இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை [நாலு பகுதிகள் ]

4 days 1 hour ago
இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை / பகுதி 04 [தொல்பொருள் சான்றுகள், கல்வெட்டியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு 'நிர்வாகச் சுருக்கமாக' (Executive Summary) அமைகிறது; இதனைத் தொடர்ந்து, இலங்கையின் தொடக்ககால வரலாறு குறித்த முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்புகள், வரலாற்று மேற்கோள்கள் மற்றும் முதன்மை ஆதாரங்களைக் கொண்ட விரிவான 30-பகுதி தொடர் வெளியிடப்படும்.] 8. மத்திய காலப் பகுதி (கி.பி. 1000 – கி.பி. 1505) இலங்கையின் மத்திய கால வரலாறு பெரும் அரசியல் மாற்றங்களைக் கண்டது. கி.பி. 1017-இல் சோழர்கள் அனுராதபுரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, நாட்டின் தலைநகரம் பொலன்னறுவைக்கு மாறியது. பின்னர், 13-ஆம் நூற்றாண்டில் தீவின் வடக்குப் பகுதியில் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தின் கீழ் யாழ்ப்பாண இராச்சியம் ஒரு வலிமைமிக்க அரசாக உருவெடுத்தது. புகழ்பெற்ற உலகப் பயணிகளான இப்னு பதூதா மற்றும் மார்கோ போலோ ஆகியோர் இந்த வடபுல இராச்சியத்தின் செல்வம் மற்றும் கடல்வழி வலிமை குறித்தும், குறிப்பாக மன்னார் வளைகுடாவின் முத்துக்குளிப்பு துறையில் அவர்களுக்கு இருந்த கட்டுப்பாடு குறித்தும் பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மன்னர்களால் வெளியிடப்பட்ட 'சேது' நாணயங்கள், இந்தத் தமிழ் இராச்சியத்தின் இறையாண்மைக்கு வலுவான சான்றாக அமைகின்றன. இந்த நாணயங்களில் வம்ச இலச்சினையான நந்தி உருவமும், தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன, இது ஒரு சுதந்திரமான மற்றும் முறையான நிர்வாகம் அங்கு இருந்ததை உறுதிப்படுத்துகிறது. 9. காலனித்துவ காலம் (கி.பி. 1505 – 1815) இலங்கையில் ஐரோப்பியர்களின் தலையீடு 1505-இல் போர்த்துக்கேயரின் வருகையுடன் தொடங்கியது. அவர்கள் வாசனைத் திரவிய வர்த்தகத்தை ஆதிக்கம் செலுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். 1619-இல் யாழ்ப்பாண இராச்சியத்தை அவர்கள் முழுமையாகத் தகர்த்ததன் மூலம், வடபகுதியில் பல நூற்றாண்டுகளாக நீடித்த சுதந்திரமான தமிழ் ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர், 1658-இல் ஒல்லாந்தர் (Dutch) போர்த்துக்கேயரை வெளியேற்றி, சுமார் 150 ஆண்டுகள் கடலோரப் பகுதிகளை ஆண்டனர். இறுதியில், 1796-இல் பிரித்தானியர் இப்பகுதிகளைக் கைப்பற்றினர். 1815-இல் கையெழுத்திடப்பட்ட கண்டி ஒப்பந்தம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது; இது வரலாற்றிலேயே முதன்முறையாக முழுத் தீவையும் ஒரு ஒற்றை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது. குறிப்பிடத்தக்க வகையில், கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் இன ரீதியாக ஒரு சிங்களவர் அல்ல; அவர் தென்னிந்தியாவின் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு சிங்கள பௌத்த மக்களை ஆண்ட போதிலும், அவரது தனிப்பட்ட பின்னணி திராவிடமானது. மேலும், தமிழ் மொழியே அந்நாளில் அரசவையின் முதன்மை மொழியாக இருந்தது. இதற்குச் சான்றாக, 1815-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் மன்னரும் பல உயர்மட்ட அதிகாரிகளும் தமிழ் எழுத்துக்களிலேயே கையெழுத்திட்டுள்ளனர். இந்தத் தீவின் இணைப்பைத் தொடர்ந்து, பிரித்தானியர் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை உருவாக்கி, தென்னிந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான தமிழ் தொழிலாளர்களை (மலையகத் தமிழர்கள்) அழைத்து வந்தனர். இது இலங்கையின் மக்கள்தொகை மற்றும் கலாசார வரலாற்றில் மேலும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்தது. 10. முடிவுரை நவீன தொல்லியல், மொழியியல் மற்றும் மரபணு ஆய்வுகள், இலங்கையின் வரலாறு என்பது பழங்குடிச் சமூகங்கள், தென்னிந்திய திராவிட மக்கள் மற்றும் இந்தோ-ஆரியக் குடியேறிகளுக்கு இடையிலான தொடர்ச்சியான கலாசாரப் பரிமாற்றத்தின் விளைவு என்பதைக் காட்டுகின்றன. ஒரு தனித்துவமான "ஆரம்பக் கதைக்கு" பதிலாக, இத்தீவின் கடந்த காலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகால இடம்பெயர்வு, வர்த்தகம் மற்றும் சகவாழ்வைப் பிரதிபலிக்கிறது. சிங்களவர் மற்றும் தமிழர் ஆகிய இரு தரப்பினரின் முன்னோடிகளும் ஒரு பொதுவான கலாசார மற்றும் உயிரியல் பின்னணியிலிருந்து உருவானவர்கள் என்பதை நவீன ஆய்வுகள் அங்கீகரிக்கின்றன. மரபணு ஆய்வுகளின்படி, தீவின் முக்கிய இனக்குழுக்கள் தென்னிந்திய மக்களுடன் ஆழமான மூதாதையர் தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றன; இது "இந்தோ-ஆரிய" மற்றும் "திராவிட" அடையாளங்கள் என்பவை உயிரியல் ரீதியான பிரிவினையை விட, முதன்மையாக மொழி மற்றும் கலாசார ரீதியான வளர்ச்சிகளே என்பதை உணர்த்துகின்றன. இலங்கையின் ஆரம்பகால வரலாற்றை ஒரு குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முடியாது. வரலாற்றுக்கு முந்தைய வேட்டைக்காரர்கள் மற்றும் பெருங்கற்காலப் பண்பாடு முதல், அனுராதபுரத்தின் செழுமையான நகரங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தின் சுதந்திரமான இராச்சியம் வரை, இத்தீவு எப்போதும் இந்தியப் பெருங்கடலின் ஒரு துடிப்பான சந்திப்பு மையமாகவே இருந்துள்ளது. "சிங்கள" மற்றும் "தமிழ்" அடையாளங்கள் வரலாற்றின் தொடக்கத்தில் நிலைநிறுத்தப்பட்டவை அல்ல; அவை மாற்றமடைந்து வந்த மக்கள் கூட்டங்கள் (Populations in transition) என்பதை ஏற்றுக்கொள்வதன் மூலம், தீவின் பண்டைய காலத்தைப் பற்றிய மிகவும் துல்லியமான மற்றும் உள்ளடக்கிய புரிதலை நாம் பெறுகிறோம். எனவே, நவீன வரலாற்று ஆய்வுகள் ஒரு பொதுவான பாரம்பரியம், பிராந்தியத் தொடர்புகள் மற்றும் கலாசார வளர்ச்சியின் இயங்குதன்மை ஆகியவற்றையே வலியுறுத்துகின்றன. தீவின் எதிரொலி: காலத்தினூடாக ஒரு பயணம் பலாங்கொடை குகையின் மழைச்சாரலில், வேட்டையாடித் திரிந்த ஆதி மனிதன்; இரணைமடு மணலில் கற்கருவிகள் செய்த, இயற்கையின் மடியில் பிறந்த இனிய தீவு. பாக் நீரிணை நிலப்பாலத்தின் ஊடாக, பெருங்கற்கால நெருப்பு சுடர்விட்டது; கருப்பு-சிவப்பு மண்பாண்டமும் இரும்புக் கருவிகளும், திராவிட பண்பாட்டின் சீரான ஓட்டமானது. அனுராதபுரத்தின் ஓங்கிய கோபுரங்களில், பிராகிருதமும் தமிழும் ஒன்றாய் ஒலித்தன; பிரிந்த தேசங்களாக அல்ல, போட்டி அரசுகளாக அல்ல, ஒரு அழகிய சித்திரத்தின் பல வண்ணங்களாகத் தெரிந்தன. வடக்கே ஈழத்துப் பூதன்தேவன் பாடினார், நாகர் பழங்குடி கரைகளைக் காத்தனர்; அல்-மசூதி கண்ட அந்தத் தமிழ் சடங்குகள், பண்டைய தமிழ் இராச்சியத்தின் பெருமையைப் பறைசாற்றின. பின்னர் வந்த ஆரியச்சக்கரவர்த்திகள், சேது நாணயமும் நந்தி இலச்சினையும் ஏந்தினர்; கண்டியில் அமர்ந்த நாயக்கர் மன்னனோ, தமிழில் கையெழுத்திட்டுச் செங்கோல் ஓச்சினான். போர்த்துக்கேய வாளும் ஒல்லாந்த வணிகமும் கடந்து, பதினெட்டு-பதினைந்தின் பிரித்தானிய எழுதுகோலில்; முதன்முறை தீவு ஒரு வரைபடமானது, மறைக்கப்பட்ட பொதுவான வரலாற்றைச் சுமந்து நின்றது. இது ஒரு விதை அல்ல, ஒரு காடு, ஒரே மண்ணில் கிளைத்த பல வேர்கள்; இலங்கையின் கதை என்பது மாறிவரும் மக்கள் கூட்டம், இடம்பெயர்வு, வர்த்தகம் மற்றும் உழைப்பால் உருவான சித்திரம். நன்றி ✍️ கந்தையா தில்லைவிநாயகலிங்கம் BSc Engineering (Honours) அத்தியடி, யாழ்ப்பாணம் முற்றிற்று துளி/DROP: 2130 [இலங்கையின் சுருக்கமான தொல்பொருள் வரலாறு - வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை / பகுதி 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/34670541455927726/?

யாழின் 28வது அகவையை முன்னிட்டு உருவாக்கிய பாடல்

4 days 2 hours ago
யாழில் பிறக்கும் பாடலிசை காதுக்கு இனிமை தரும். யாழ் களத்திற்குப் பிறந்த பாடலிசை இனிமையோடு கருத்தையும் கவர்கிறதே. வாழ்க யாழ்களம் வளர்க எம்மினம்……..ஆகா….அருமை😍

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

4 days 2 hours ago
கவிஞரே, இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் நல்லவர்கள் அத்துடன் மக்கள் ஆதரவு உள்ளவர்கள் என்று யாராவது இருக்கின்றார்களா, அப்படி ஒருவருமே கிடையாதே என்று நீங்களும் கோஷானும் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்ளுகின்றேன். உண்மையான இடதுசாரிகள் நிஜ உலகத்தில் புறநடைகளே, அவர்கள் வீட்டில் கூட அவர்கள் புறநடைகளாகவும் இருக்கக்கூடும். அவர்களை திராவிட, தேசிய, சாதியக் கட்சிகளுக்கு மாற்றாக நான் நினைக்கவும் இல்லை. என்னுடைய தத்தளிப்புகள் எல்லாமே புதிய வரவுகள் இருக்கும் நிலையை இன்னும் சீரழித்து விடுவார்களோ என்னும் அச்சமே. புதிதாக வருபவர்கள் சமூகத்தை கொஞ்சமேனும் பக்குவப்பட்ட, பொதுப் பண்புகள் உள்ள, சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களா மாற்ற மாட்டார்களா என்னும் ஆதங்கமே.
Checked
Mon, 04/06/2026 - 16:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed