புதிய பதிவுகள்2

அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி, ஊழலை ஒழித்தல் - கொரிய தூதுவரிடம் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:49 PM அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும தெரிவித்தார். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியான் லீ ஆகியோருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கைியலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை தூதருக்கு விளக்கிய அமைச்சர் சூரியப் பெரும மேலும் தெரிவிக்னையில், அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது, மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது ஆகும். அரசாங்கத்தின் முன்னுரிமை நடவடிக்கையாக, "தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை" (National Single Window) நிறுவுவது மிகவும் முக்கியமானது, அதாவது, நாட்டின் குடிமக்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்றார். இந்தக் கூட்டத்தில், கொரியத் தூதுவர் லீ, கொரியக் கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். மேலும், அவற்றை விரைவாகச் செயல்படுத்துவதன் மூலம் இலங்கைப் பொருளாதாரம் அதிக பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை அடைய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தக் கலந்துரையாடலின் போது, கொரிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாட்டுப் பணம் அனுப்புதலை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கொரிய தூதரகத்தின் துணைத் தலைவர் யூன்ஜி கான், (Eunji Kan) நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் சஞ்சீவ ஹேரத், மற்றும் பிரதிப்பணிப்பாளர் உதித பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217627

ஜனாதிபதி நிதியமூடாக கிளிநொச்சியில் வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு

1 month 2 weeks ago
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு நிகழ்வு Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:40 PM 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் தெரிவு, மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டமாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 2025 ஜூன் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படவுள்ளனர். இதேவேளை, ஏனைய மாகாணங்களிலும் விரைவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/217623

கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா்.

1 month 2 weeks ago
இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி திட்டமாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டம் விளங்கவேண்டும் - கீதா கோபிநாத் 16 JUN, 2025 | 12:39 PM சர்வதேச நாணய நிதியம் தற்போது முன்னெடுக்கும் திட்டத்தினை இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி திட்டமாக மாற்றுவோம் என சர்வதேச நாணயநிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் அங்கீகாரம் மற்றும் உறுதிப்பாடு குறித்த வலுவான செய்தியை தெரிவித்துள்ளார் - இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி திட்டமாக இது இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை மேம்படுத்தும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பாதையை தொடருகின்ற நிலையில் சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாகயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்தது போல இந்த நேரம் வித்தியாசமானதாகயிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இலங்கைக்கு தேவைப்படும் இறுதி சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமாக இதனை மாற்றுவோம் என தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பாதையில் தொடர்ந்தால் இது சாத்தியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217608

ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள்

1 month 2 weeks ago
விந்தணு கருமுட்டையை இனங்கண்டு நீந்திச் செல்வது எப்படி? ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள் படக்குறிப்பு, ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும் கட்டுரை தகவல் எழுதியவர், கேத்தரின் லாதம் பதவி, 9 மணி நேரங்களுக்கு முன்னர் விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? அவை எப்படி பயணிக்கின்றன? அவை எவ்வாறு உருவாகின்றன? இரண்டாம் உலகப் போரில் ரகசிய குறியீடுகளை படித்தவருக்கும் விந்தணுவுக்கும் இடையிலான தொடர்பு என்ன? விந்தின் விந்தையான மர்மங்களைப் பற்றிய சில உண்மைகளை தெரிந்துக் கொள்வோம். ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும் என்பது ஆச்சரியமான உண்மை. அதேபோல், உடலுறவின் போது, 50 மில்லியனுக்கும் அதிகமான விந்துக்கள் வீரியத்துடன் சூறாவளியாய் நீந்திச் சென்று கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முயற்சிக்கின்றன. விந்துக்களிடையிலான பந்தயத்தில் வென்று கருமுட்டையை அடையும் பயணத்தில், கோடிக்கணக்கிலான விந்தணுக்களில் வெகுசிலவே இலக்கை வெற்றிகரமாக சென்றடைகின்றன. இதுவரையில் தான் விந்து பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், விந்துக்களின் வீரியமான நீச்சல் பயணமானது அறிவியலுக்கும் மர்மமாகவே உள்ளது. "விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு? அது எப்படி கருமுட்டையுடன் இணைந்து கருவாகிறது எனத் தெரியுமா? " என்று இங்கிலாந்தின் டண்டீ பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நாளமில்லா சுரப்பியியல் மற்றும் இனப்பெருக்க உயிரியலின் "கிளினிகல் ரீடர்" சாரா மார்டின்ஸ் டா சில்வா கேட்கிறார். விந்தணு கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் ஆன பிறகும், விந்தணு தொடர்பான பல கேள்விகளுக்கு விடை காண முடியவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இடப்பெயர்வு குறித்து கண்காணித்து வருகின்றனர். இதில் விந்தணுக்களின் தோற்றம் முதல், அது ஆணிடம் இருந்து கடந்து, பெண் உடலில் கருமுட்டையுடன் இணைந்து கருத்தரித்தல் வரை அனைத்தும் அவதானிக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் விந்தணுக்கள் எவ்வாறு நீந்துகின்றன என்பதில் தொடங்கி, அவை பெண் உடலை அடையும் போது ஏற்படும் வியக்கத்தக்க பெரிய மாற்றங்கள் வரை பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்து வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு? "உடலுக்குள் வேறு எந்த உயிரணுவும் இவ்வளவு தனித்துவமான முறையில் அதன் அமைப்பை, வடிவத்தை மாற்றுவதில்லை" - ஆடம் வாட்கின்ஸ் "விந்தணுக்கள் பூமியில் உள்ள மற்ற அனைத்து செல்களிலிருந்தும் 'மிக மிக வேறுபட்டவை'" என்கிறார் மார்டின்ஸ் டா சில்வா. "அவை ஆற்றலை ஒரே மாதிரியாகக் கையாளுவதில்லை. மற்ற எல்லா செல்களிலும் இருக்கும் அதே வகையான செல்லுலார் வளர்சிதை மாற்றம் மற்றும் வழிமுறைகள் விந்துக்களில் இல்லை." விந்தணுக்களின் மிகப்பெரிய அளவிலான செயல்பாடுகள் காரணமாக, அவற்றுக்கு பிற செல்களை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. விந்து வெளியேறும் போதும், பெண்ணின் யோனி வழியாக கருமுட்டையை நோக்கி பயணிக்கும் போதும், கருத்தரித்தல் வரை, சுற்றுச்சூழல் குறிப்புகள் மற்றும் மாறுபட்ட ஆற்றல் தேவைகளுக்கு இணக்கமாக இருக்க, விந்து நெகிழ்வானதாக இருக்க வேண்டும். மனித உடலுக்கு வெளியே உயிர் வாழக்கூடிய ஒரே செல்கள் விந்தணுக்கள் மட்டுமே என்று மார்டின்ஸ் டா சில்வா கூறுகிறார். "அதனால்தான், அவை அசாதாரணமான சிறப்பு வாய்ந்தவை" என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவற்றின் மிகச் சிறிய அளவின் காரணமாக அவற்றை அவதானிப்பது மிகவும் கடினம் என்றும் அவர் கூறுகிறார். "இனப்பெருக்கம் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்றாலும், தெரியாத விசயங்கள் அதைவிட மிகவும் அதிகமாக உள்ளது." பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, மனித உடலில் மிகச்சிறிய செல்லாக இருந்தாலும், அசாதாரணமாக சிறப்பு வாய்ந்தது விந்தணு கிட்டத்தட்ட 350 ஆண்டுகால ஆராய்ச்சியில் இதுவரை விடையறியா வினா: விந்தணு என்றால் என்ன? "விந்தணு அதிசயமான விதத்தில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது," என இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி உடலியல் இணைப் பேராசிரியர் ஆடம் வாட்கின்ஸ் வியக்கிறார். "விந்தணுவை ஒரு வாலில் உள்ள டிஎன்ஏ பை என்றே நாங்கள் பொதுவாக நினைத்தோம். ஆனால், இது மிகவும் சிக்கலான செல் என்றும், அதில் பல்வேறு வகையிலான மரபணு தகவல்களும் உள்ளதை உணரத் தொடங்கியுள்ளோம்." விந்தணு ஆராய்ச்சிகளின் தொடக்கப் புள்ளி விந்தணு பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் 1677 ஆம் ஆண்டில் தொடங்கியது, டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக் வீட்டில் தயாரிக்கப்பட்ட 500 நுண்ணோக்கிகளில் ஒன்றில் விந்துக்களைப் பார்த்து, அவற்றை "விந்து விலங்குகள் " என்று அவர் அழைத்தார். 1683 ஆம் ஆண்டில், முன்பு நம்பப்பட்டது போல, முட்டையில்தான் அந்த மினியேச்சர் மற்றும் முழு மனிதனும் அடங்கியிருக்கவில்லை, ஆனால் மனிதன் "ஆண் விதையில் உள்ள ஒரு விலங்குக் கூட்டிலிருந்து" வருவதாக அவர் கருதினார். 1685 வாக்கில், ஒவ்வொரு விந்தணுவும், அதன் சொந்த "உயிருள்ள ஆன்மா" கொண்ட ஒரு முழு மினியேச்சர் நபரைக் கொண்டுள்ளது என்று அவர் முடிவு செய்தார். அதற்கு கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, 1869 ஆம் ஆண்டில், சுவிஸ் மருத்துவரும் உயிரியலாளருமான ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், விந்து தொடர்பான மற்றுமொரு முக்கிய விசயத்தைக் கண்டறிந்தார். நோயாளிகளின் கட்டுக்களை பிரித்து மருத்துவமனைகளின் குப்பையில் வீசப்படும் சீழ் நிறைந்த கழிவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மனித ரத்த வெள்ளை அணுக்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அவர் கண்டறிந்த விசயத்துக்கு "நியூக்ளின்" என்று பெயரிட்டார். "நியூக்ளின்" என்ற சொல் பின்னர் "நியூக்ளிக் அமிலம்" என்று மாற்றப்பட்டு இறுதியில் "டியாக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம்" என்றும் சுருக்கமாக "டிஎன்ஏ" என்றும் அழைக்கப்பட்டது. டிஎன்ஏ பற்றிய தனது ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த விரும்பிய ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், ஆய்வின் ஆதாரமாக விந்தணுவைத் தேர்ந்தெடுத்தார். குறிப்பாக சால்மன் மீன்களின் விந்தணுக்கள், அவற்றின் பெரிய கருக்கள் காரணமாக "அணுக்கருப் பொருளின் சிறந்த மற்றும் சுவராஸ்யமான மூலமாக" இருந்தன. சால்மன் மீனின் விந்தணுக்கள் சிதைவதைத் தவிர்ப்பதற்காக, அவர் உறைபனி தட்பவெப்பநிலையில், ஆய்வக ஜன்னல்களைத் திறந்து வைத்திருந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1874 ஆம் ஆண்டில், அவர் விந்தணுவின் ஒரு அடிப்படை கூறுகளை அடையாளம் கண்டார், அதற்கு "புரோட்டமைன்" என்று அவர் பெயரிட்டார். முதன்முதலாக விந்தணுக்களை உருவாக்கும் புரதங்கள் தொடர்பான உண்மை வெளியானது என்றே சொல்லலாம். இருப்பினும், அதற்கு பிறகு 150 ஆண்டுகள் கழித்தே, விந்தணுக்களின் முழு புரத உள்ளடக்கத்தையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதற்குப் பிறகு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது என்ற போதிலும், இன்னும் பல விசயங்கள் மர்மமாகவே உள்ளன என்று வாட்கின்ஸ் கருதுகிறார். விஞ்ஞானிகள் கருவின் ஆரம்பகால வளர்ச்சியை நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளதால், விந்துவானது, தந்தையின் குரோமோசோம்களை மட்டுமல்ல, எபிஜெனெடிக் தகவல்களையும் கடத்துகிறது என்பது புரிந்திருப்பதாக அவர் கூறுகிறார். எபிஜெனெடிக் என்பது, டிஎன்ஏ வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், மரபணு வெளிப்பாட்டை மாற்றியமைக்கின்றன. இது மரபணுக்கள் எவ்வாறு, எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கூடுதல் தகவல் அடுக்கு ஆகும். "இது கரு எவ்வாறு உருவாகிறது என்பதையும், அந்த விந்தணுக்கள் உருவாக்கும் சந்ததிகளின் வாழ்நாள் பாதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று வாட்கின்ஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது "பெண் பரிணாமம்தான் இந்த அமைப்பை இயக்குகிறது என்பது தெரியவந்துள்ளது; ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கிறார்கள்" - ஸ்காட் பிட்னிக் ஆண் பருவமடையும்போது அவரின் உடலில் உருவாகத் தொடங்கும் விந்தணு செல்கள் விரைப்பைகளுக்குள் இருக்கும் செமினிஃபெரஸ் குழாய்கள் எனப்படும் நாளங்களில் உருவாகின்றன. "விந்தணுக்கள் உருவாகும் விரைப்பைக்குள், அது வேறு எதையும் போலவே தோற்றமளிக்கும் ஒரு வட்டமான செல்லாகவே தொடங்குகிறது," என்று வாட்கின்ஸ் கூறுகிறார். "பின்னர் அது வியத்தகு மாற்றத்துக்கு உட்படுகிறது, அது வால் கொண்டதாக உருமாறுகிறது. உடலில் உள்ள வேறு எந்த உயிரணுவும் அதன் அமைப்பையோ தனது வடிவத்தையோ இவ்வளவு தனித்துவமான முறையில் மாற்றுவதில்லை." ஆண் உடலுக்குள் உருவாகும் விந்தணு முதிர்ச்சி அடைய ஒன்பது வாரங்கள் ஆகும். வெளியேறாத விந்தணுக்கள் உடலிலேயே மடிந்து, உடலாலே மீண்டும் உறிஞ்சப்படுகின்றன. வெளியேறிய அதிர்ஷ்டசாலி விந்தணுக்கள் தங்கள் சாகசப் பயணத்தைத் தொடங்குகின்றன. விந்தணு வெளியேறிய பிறகு, நுண்ணிய வடிவிலான இந்த செல்கள் ஒவ்வொன்றும் கருமுட்டையை சென்றடையும் பயணத்தில் தனது வால் போன்ற பிற்சேர்க்கைகளைப் பயன்படுத்தி முன்னோக்கி பாய்கின்றன. இந்த பயணத்தில் ஒரு விந்தணு, தோராயமாக 50 மில்லியன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முன்னேறிச் செல்கிறது. தலைப்பிரட்டையைப் போல் இருக்கும் விந்தணுக்கள் நீந்தும் வீடியோக்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். விந்து உண்மையில் எப்படி நீந்துகிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டோமா என்ற கேள்விக்கு, இல்லை, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இயக்கம் குறித்து புரிந்து கொள்வதற்கான ஆரம்பகட்டத்தில்தான் தற்போதுவரை இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். முன்னதாக, விந்தணுவின் வால் - அல்லது ஃபிளாஜெல்லம், தலைப்பிரட்டையைப் போல பக்கவாட்டில் நகர்கிறது என்று கருதப்பட்டது. ஆனால், கணிதவியலாளரும், இரண்டாம் உலகப்போரில் ரகசியக் குறியீடுகளை படிப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டவருமான ஆலன் டூரிங் கண்டுபிடித்த வடிவ உருவாக்கத்திற்கான டெம்ப்ளேட்டை விந்தணு வால்கள் ஒத்திருக்கின்றன என்பதை 2023 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் . 1952 ஆம் ஆண்டில், வேதியியல் எதிர்வினைகள் வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை டூரிங் உணர்ந்தார். கைரேகைகள், இறகுகள், இலைகள் மற்றும் மணலில் உள்ள சிற்றலைகள் உள்ளிட்ட இயற்கையின் மிகவும் சுவாரஸ்யமான உயிரியல் வடிவ அமைப்புகளை விளக்க, நகரும் மற்றும் ஒன்றுக்கொன்று வினைபுரியும் இரண்டு உயிரியல் ரசாயனங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர் முன்மொழிந்தார். இது, "எதிர்வினை-பரவல்" கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்திய பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விந்தணுவின் வால் பகுதியான ஃபிளாஜெல்லம், விந்தணு முன்னோக்கி செல்வதற்காக வால் வழியாக பயணிக்கும் அலைகளை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தனர். ஆணின் கருத்தரிக்கச் செய்யும் தன்மையைப் புரிந்துகொள்ள விந்தணு நகர்வு விஞ்ஞானிகளுக்கு உதவும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்தணுக்கள், பெண்ணின் கருப்பை வாய் வழியாக, கருவறைக்குள் சென்று, ஃபெலோபியன் குழாய்கள் வழியாக, கருமுட்டையை அடைகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் விந்தணு, கருமுட்டையை எவ்வாறு சென்றடைகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது அறிவியலில் நாம் கண்டறியாத மற்றொரு இடைவெளியாக இருக்கிறது. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, 17 ஆம் நூற்றாண்டு டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக், விந்தணுக்களுக்குள் ஒரு சிறிய ஆனால் முழுமையான மனிதன் இருப்பதாக நம்பினார் ஆரோக்கியமான மற்றும் சரியான பாதையில் செல்லும் விந்தணுக்கள் அரிதானவை. பெண் உடல் என்ற பிரமையில் தவறான இடத்தை பல விந்தணுக்கள் சென்றடைவதும், இலக்குக் கோட்டுக்கு அருகில் கூட செல்லாத விந்தணுக்களுமே எண்ணிக்கையில் அதிகமானவை. ஃபெலோபியன் குழாய்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கும் விந்தணுக்களை, பெண்ணின் கருமுட்டையில் இருந்து வெளிப்படும் வேதியியல் சமிக்ஞைகள் வழிநடத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். விந்தணுக்கள் முட்டையை அடையச் செல்லும் வழியில் "சுவைக்க" சுவை ஏற்பிகளைப் பயன்படுத்தலாம் என்பது சமீபத்திய கோட்பாடு. விந்தணு கருமுட்டையைக் கண்டுபிடித்துவிட்டால், சவால் முடிவடைந்துவிடுகிறதா? இல்லை. கரு முட்டையானது, கொரோனா ரேடியாட்டா எனப்படும் செல்களின் வரிசை; சோனா பெல்லுசிடா எனும் புரதத்தால் ஆன ஜெல்லி போன்ற மெத்தை; முட்டை பிளாஸ்மா சவ்வு என மூன்று இழை கவசங்களால் சூழப்பட்டுள்ளது. விந்தணுக்கள், கருமுட்டையின் அனைத்து அடுக்குகளிலும் போராடி உள்நுழைய வேண்டும். அவற்றின் அக்ரோசோமில் உள்ள ரசாயனங்களைப் பயன்படுத்தி, கருமுட்டையின் செல் பூச்சை செரிமானம் செய்யும் நொதிகளைக் கொண்ட விந்தணு செல்லின் தலையில் உள்ள தொப்பி போன்ற அமைப்பைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், இந்த நொதிகள் எப்படி வெளியாகின்றன என்பதற்கான காரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது. விந்தணுக்களின் "தலைப்பகுதியில்" உள்ள ஒரு கூர்முனையைப் பயன்படுத்தி அவை கருமுட்டைக்குள் நுழைய முயற்சிக்கின்றன, தங்கள் வால்களை அடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாக தங்களை முன்னோக்கி நகர்த்துகின்றன. இறுதியாக, கருமுட்டை சவ்வுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே, அது கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முடியும். மனித செல்கள், இரண்டு முழுமையான குரோமோசோம்களைக் கொண்டுள்ள டிப்ளாய்டு வகையைச் சேர்ந்தவையாகும். ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று என இரு குரோமோசோம்களைப் அவை பெற்றுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைந்தால், பாலிஸ்பெர்மி எனப்படும் ஒரு நிலை ஏற்படும். தவறான எண்ணிக்கையிலான குரோமோசோம்களைக் கொண்ட நான்டிப்ளாய்டு வகை செல்கள், வளரும் கருவுக்கு ஆபத்தான நிலையை உருவாக்குபவை. இது நிகழாமல் தடுக்க, ஒரு விந்து செல் அதனுடன் தொடர்பு கொண்டவுடன், கருமுட்டை துரிதமாக இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. முதலாவதாக, அதன் பிளாஸ்மா சவ்வு விரைவாக டிப்போலரைஸ் செய்கிறது, அதாவது மேலும் விந்து கடக்க முடியாத ஒரு தடையை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தத் தடை சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இங்குதான் கருமுட்டையின் 'புறணி எதிர்வினை' வருகிறது. கால்சியம் திடீரென வெளியிடப்பட்டு, சோனா பெல்லுசிடா எனப்படும் கருமுட்டையின் "புற செல் பூச்சு" கடினமாகி, விந்தணு ஊடுருவ முடியாமல் தடையை உருவாக்குகிறது. பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும் எனவே, கருமுட்டையை நோக்கி பயணத்தைத் துவங்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களில், ஒன்று மட்டுமே தனது அதிகபட்ச வேலையைச் செய்கிறது. விந்தணுவின் பிரமாண்டமான பயணம் கருமுட்டையுடன் இணைவதுடன் முடிவடைகிறது. இன்றும், ஆராய்ச்சியாளர்கள் விந்தணு-கருமுட்டை அங்கீகாரம், பிணைப்பு மற்றும் இணைவுக்கு காரணமான செல் மேற்பரப்பு புரதங்களின் அடையாளம் மற்றும் பங்கைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர். அண்மை ஆண்டுகளில், பல புரதங்கள் இந்த செயல்முறைக்கு முக்கியமானவை என்று, எலிகள் மற்றும் மீன்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் இதில் உள்ள பல மூலக்கூறுகளை அடையாளம் காணமுடியவில்லை. எனவே, இப்போதைக்கு, விந்தணுவும் கருமுட்டையும் எவ்வாறு ஒன்றையொன்று அடையாளம் காண்கின்றன, அவை எவ்வாறு இணைகின்றன என்பவை இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களாகவே தொடர்கின்றன. நியூயார்க் சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் ஸ்காட் பிட்னிக் கூறுகையில், ஆராய்ச்சியாளர்கள் விந்தணுக்களைப் பற்றி புரிந்துக் கொள்ள பிற உயிரினங்களை ஆய்வு செய்வது உதவியாக இருக்கும் என குறிப்பிடுகிறார். மனித விந்தணுக்கள் நுண்ணியவை, எனவே நாம் அவற்றை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது. பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும். பழ ஈ விந்தணுக்களின் தலைகளை பிட்னிக் வடிவமைக்கிறார். பெண் ஈயின் இனப்பெருக்க பாதைகள் வழியாக அவற்றை செலுத்தி அவை பயணிப்பதை ஆராயும் இந்த ஆய்வு, மூலக்கூறு மட்டத்தில் கருத்தரித்தல் பற்றிய புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது . "சில உயிரினங்கள் பெரிய விந்தணுக்களை உருவாக்குவது ஏன் தெரியுமா?" என்று பிட்னிக் கேட்கிறார். "அந்த இனங்களின் பெண்கள் தங்களுக்கு சாதகமாக இனப்பெருக்க பாதைகளை உருவாக்குகின்றன. அதற்கு உகந்ததாக ஆணினம் பெரிய விந்தணுக்களை உருவாக்குகிறது" என்பதே பதிலாக இருக்கும். ஆனால், "உண்மையில் இது முழுமையான பதில் இல்லை" என்று கூறும் அவர், அந்த பதிலே கேள்வியை திசைதிருப்புகிறது என்றும் சொல்கிறார். அந்தக் கேள்வி: பெண்ணினம் ஏன் இந்த வழியில் பரிணமித்தது? அது எங்களுக்கு இன்னும் அது புரியவில்லை. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, விந்தணுக்கள் மிகச் சிறியவை, அவற்றை அவதானிப்பது கடினமாக இருக்கும். மாதிரிகளை நுண்ணோக்கியின் கீழ் எளிதாகப் பார்க்க, வண்ணம் தீட்டலாம் உலகளவில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது ஆனால், ஆண் உடலில் விந்தணுக்கள் இருப்பது என்பது கதையின் பாதி தான் என்பதை இதுவே நமக்கு உணர்த்துகிறது என பிட்னிக் கூறுகிறார். "அறிவியலில் வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பாலின சார்பு உள்ளது. ஆண்கள், ஆண்களின் குணாதிசயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அருவருப்பானது. ஆனால் இந்த அமைப்பை இயக்குவது பெண் பரிணாமம் என்பது தெரியவந்துள்ளது, ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கின்றனர்." பூமியின் மிகவும் மாறுபட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் உயிரணு வகை என்ன என்றால், அது விந்தணுக்கள் தான் என்று பிட்னிக் கூறுகிறார். விந்தணுக்கள் ஏன் இவ்வளவு வியத்தகு பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உயிரியலாளர்களால் விடை கண்டுபிடிக்க முடியாமல் திகைக்க வைத்துள்ள ஒரு மர்மமாகும். "பெண் இனப்பெருக்க பாதை என்பது நம்பமுடியாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்று மாறிவிடும்," என்று பிட்னிக் கூறுகிறார், "விந்தணு, பெண்ணின் உள்ளே என்ன செய்கிறது என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அதுதான் மறைக்கப்பட்ட மாபெரும் உலகம். பெண்ணின் இனப்பெருக்க பாதை என்பது பாலியல் தேர்வு, கோட்பாடு மற்றும் இனவிருத்தி [புதிய இனங்கள் உருவாகும் செயல்முறை] ஆகியவற்றுக்கான ஆராயப்படாத மிகப்பெரிய எல்லையாகும்" என நான் நினைக்கிறேன்." பழ ஈயின் நீண்ட வால் கொண்ட விந்தணு என்பது, மானின் கொம்புகள் அல்லது மயில்தோகை போன்ற ஒரு அலங்காரமாகக் கருதப்படலாம் என்று பிட்னிக் கூறுகிறார். ஆபரணங்கள் என்பவை "பரிணாம வளர்ச்சியில் ஒரு வகையான ஆயுதம்" என்று பிட்னிக் விளக்குகிறார். வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பது என்பதைத் தவிர, கொம்புகள் போன்ற ஆபரணங்கள் பெரும்பாலும் இரண்டு பரிணாமங்களைக் கொண்டவை. "இதுபோன்ற ஆயுதங்களில் பெரும்பாலானவை பாலினம் தொடர்பானவை. பொதுவாக ஆணுக்கும் ஆணுக்குமான போட்டி பற்றியவை. பழ ஈயின் நீண்ட விந்து ஃபிளாஜெல்லம் என்பது உண்மையில் ஒரு ஆபரணத்தின் வரையறைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது. பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறோம்." பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது இனச்சேர்க்கைக்கு முந்தைய பாலியல் தேர்வைப் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்று பிட்னிக் கூறுகிறார். "புல்வெளியில் நடனமாடும் மானாக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் காட்சியளிக்கும் பறவையாக இருந்தாலும் சரி, அதன் இயக்கம், அதன் நிறம், அதன் வாசனை போன்றவை துணையை பாலியல்ரீதியாக ஈர்க்கும்" இந்த புலன் உள்ளீட்டைச் செயலாக்குவது, ஜோடி இணைகிறதா, இல்லையா என்பதை முடிவெடுக்க வழிவகுக்கிறது என்று பிட்னிக் விளக்குகிறார். இனச்சேர்க்கைக்கு முந்தையவற்றை பற்றி நமக்கு தெரிந்த அளவு, இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண்ணின் உள்ளே நடக்கும் பாலியல் தேர்வு விந்தணுவின் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு இயக்குகிறது என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது என்று பிட்னிக் கூறுகிறார். "ஆபரணங்கள் மற்றும் விருப்பங்களின் மரபியல் பற்றி மிகக் குறைவாகவே புரிந்துகொண்டுள்ளோம்," என்று அவர் கூறுகிறார். விந்தணுவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள, விந்தணுவின் முழு வாழ்க்கைச் சுழற்சி மட்டுமல்ல, பெண்ணின் உடலும் விந்தணுவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று பிட்னிக் விளக்குகிறார். "விந்தணுக்கள் விரைப்பையிலேயே முதிர்ச்சியடையாவிட்டால், அவை வளர்ச்சியடையவில்லை என்றே பொருள்." விந்தணுவுக்கும் பெண் இனப்பெருக்க பாதைக்கும் இடையில் சிக்கலான மற்றும் முக்கியமான தொடர்புகள் இருப்பதாக அவர் கருதுகிறார். "விலங்குகளின் விந்தணுக்களில் விந்தணு வெளியேறிய பிறகு ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதில் தற்போது நிறைய நேரம் செலவிடுகிறோம்." கருத்தரித்தல் நிறைவடைய ஒரு விந்தணு மேற்கொள்ளும் பல்வேறு மாறுபட்ட செயல்முறைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வரும் நிலையில், பிற ஆராய்ச்சிகள் மனித விந்தணுக்களின் தற்போதைய நிலை குறித்து உண்மையான கவலையை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் தங்கள் வாழ்நாளில், ஒரு டிரில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றனர், எனவே விந்தணுக்கள் சிக்கலில் இருப்பதாக கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினமாக இருக்கலாம். ஆனால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதாவது, ஒரு விந்து மாதிரியில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை என்பது உலகளவில் குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO) 2023இல் வெளியிட்ட அறிக்கையின்படி , உலகளவில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை இருக்கிறது. அதில் ஆண் மலட்டுத்தன்மை சரிபாதியாக இருக்கிறது. (சமீபத்திய ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி அறிக்கை அடிக்கோடிட்டு காட்டியபடி, குழந்தை வளர்ப்புக்கான செலவு போன்ற பிற காரணங்களுக்காகவும் உலகெங்கிலும் உள்ள பலர், தாங்கள் விரும்பும் அளவுக்கு குழந்தைகளைப் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). மாசுபாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், கருவுறச் செய்வது தொடர்பான பிரச்னைகள் கொண்ட பெரும்பாலான ஆண்களுக்கு அதற்கான காரணம் என்ன என்பது தெரிவதில்லை. "நகரும் விந்தணுக்கள் அனைத்திலும், தவறாக நடக்கக்கூடிய பல விசயங்கள் உள்ளன," என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் கரு ஆரோக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஹன்னா மோர்கன் கூறுகிறார். "இது ஒரு பொறிமுறையாக இருக்கலாம்: அது சீராக நீந்த முடியாததால் கருமுட்டையை அடைய முடியாமல் போகலாம் அல்லது விந்தணுவின் தலைக்குள் அல்லது பிற பகுதிகளுக்குள் சிக்கல் இருக்கலாம். பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், விந்தணுக்களில் சிறிய பல விசயங்கள் தவறாக இருக்கக்கூடும்." ஆணின் மலட்டுத்தன்மையைக் கண்டறிய ஒரு வழி, விந்தணுவின் உள்ளே ஆராய்ந்து பார்ப்பது என்று மோர்கன் கூறுகிறார். "டிஎன்ஏ எப்படி இருக்கிறது? அது எப்படி தொகுக்கப்பட்டுள்ளது? அது எவ்வளவு பிரிந்துள்ளது? விந்தணுவைப் பிரித்துப் பார்க்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் எந்த அளவீடு நல்லது அல்லது கெட்டது? உண்மையில் நமக்கு எதுவுமே தெரியாது." விந்தணுக்களின் மர்மத்தையும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது போன்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதன் மூலம், ஆண் மலட்டுத்தன்மையைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கலாம் என்று மோர்கன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy9098y8p32o

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பம்

1 month 2 weeks ago
சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு - ஐ.நா எச்சரிக்கை Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 05:53 PM சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமீபத்தைய வரிகள் குறித்தே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ள மனித உரிமை ஆணையாளர், வர்த்தகப் போரின் அதிர்ச்சிகள் மூன்றாம் உலக நாடுகளை சுனாமியின் வலுவோடு தாக்கும் என தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கரீபியன் நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் சிறிய தீவு நாடுகள் ஆகியவை மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம் போன்ற ஏற்றுமதி தொழில்துறையை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் பெரும் பேரழிவு பாதிப்புகளை எதிர்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217654

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

1 month 2 weeks ago
அவர் வலு கவனமாக மூன்றடுக்களுக்கு வரிச்சுகட்டிவிட்டு 😜ஏறியதால் உங்கள் கள் எடுத்தல் நடக்காது ராசா...

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

1 month 2 weeks ago
போதை தரும் எந்த பொருளும் தடை செய்ய இலாயக்கானதே…. அதில் கள்ளில் அல்கஹோல் 6% டாஸ்மார்க் பியரில் 5% என்ற வேறுபாடுகள் எல்லாம் முட்டையில் மயிர் புடுங்கும் வேலைகளே. ஆனால் prohibition எனப்படும் பூரண மதுவிலக்கு அமெரிக்கா உட்பட இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் பலத்த தோல்வியை சந்தித்தது என்பதுதான் உண்மை. இப்போதும் குஜராத்தில் உள்ளது, ஆனால் அங்கே கள்ளசாராய விற்பனை அமோகம். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு உருவான கருத்தியலே அரசு மதுகடைகளை நடத்த வேண்டும் என்பது. தனிநபர்கள் மது உற்பத்தி, விற்பனையில் இறங்க கூடாது என்றால் அதில் கள்ளும் அடங்கத்தான் வேண்டும். இதில் தனது நாடார் சாதி வாக்குகளை கவர சீமான் போன்றோர் சட்டத்தை மீறும் போது அவர்களை உள்ளே தள்ள வேண்டியது அரசின் கடமை. ஆனால் பிஜேபி ஆளான சீமான் மீது கைவைக்க திமுக அரசுக்கு பயம். கூடவே அரச மது தயாரிப்பு, விநியோக உரிமை விடயத்தில் தாம் செய்யும் பெரும் ஊழல் மீது வெளிச்சம் படக்கூடாது என்ற பயம் வேறு உள்ளது. பிகு புகையிலை வித்து சொந்த மாவட்ட, நாட்டு மக்களை கான்சர் மூலம் பரலோகம் அனுப்பிய, இப்போதும் புலம்பெயர் நாட்டில் off licence, restaurant என மது வித்து, அடைக்கலம் தந்த நாட்டு மக்களை பரலோகம் அனுப்பி வைக்கும் ஈழத்து புலம்பெயர் தமிழ் சமூகம் - கள்ளுக்கு ஆதரவு கொடுப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

1 month 2 weeks ago
மதுவோ கள்ளோ .... சாராயக் கடைகளை மூடுங்கள் என்றபடி கள்ளிறக்குவேன் என்பது சரியாகப் படவில்லை. ஆனால் இது கள்ளை தடை செய்வது போல் சாராயத்தையும் தடை செய் என்றால் ஏற்கலாம்.

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

1 month 2 weeks ago
புகையிலை உற்பத்தியால் உணவுப்பயிர் பயிருடுவதற்கு நில பற்றாக்குறை வருமென்பது பொய்க்கதை. ஏனெனில் நான் விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயத்தால் வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கு எல்லாம் தெரியும். இப்ப மட்டும் என்ன வாழுதாம்? உப்பிற்கும் வெங்காயத்திற்கும் வெளிநாட்டை நம்பித்தானே இருக்கின்றார்கள்.

தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்

1 month 2 weeks ago
I அஞ்சலி I I பண்டிதர் பரந்தாமன் I இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய தொண்ணூறுகளில் தன்னுடைய நாற்பதுகளிலிருந்த பண்டிதர் ஆசிரியர் வேலையைவிட்டு விலகி முழுநேர உறுப்பினராக சீருடையணிந்து புலிகளில் இணைந்தார். சங்க காலக் கவிதைகளில் ஒரு அதிபதியான பரந்தாமனின் பொற்காலமும் சங்ககாலத்திலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் பொற்காலமான தொண்ணூறுகளில் புராதன சங்ககாலம் “தமிழீழத்தில்” Re Enact பண்ணப்படுவதாக ஒரு குழந்தையின் முகச்சாயலைக் கொண்டிருந்த பண்டிதர் உண்மையிலேயே நம்பினார். சங்ககாலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பண்டிதர் சங்ககால மொழியையும் பதங்களையும் கொண்டு பிரச்சாரமில்லாத சில நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார். பண்டிதர் பரந்தாமனுடைய மகனும் வேறொரு பிரிவில் எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளில் போய்ச் சேர்ந்தான். மகன் புலிகளில் இணைவதை பண்டிதர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் மகன் இணைந்ததை மிகப்பெருமையாகச் சொல்லியும் திரிந்தார். புலிகள் யாழை விட்டு வன்னிக்குச் சென்றபோது பண்டிதரும் வன்னிக்குப் போனார். ஈழப்போர் முடிந்தபின் புனர்வாழ்வுபெற்று தன் ஊருக்கு திரும்பி தன் எஞ்சிய நாட்களை நேற்று இறக்கும்வரை வாழ்ந்துவந்தார். அந்தணன் - அவர் மகன் ஊருக்கு திரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு மாயையிலிருந்தாலும் நியாயமானதாக நம்பியவரும் கவிஞர் முருகையனைப் போன்ற Hypocrite அல்லாதவருமான நேர்மையான மனிதனும் கவிஞரும் சொல்லப்பட்ட தமிழாசிரியருமானவர் பண்டிதர் பரந்தாமன். பகுத்தறிவுத் தந்தை என வர்ணிக்கப்படும் தென்புலோலியூர் கந்த முருகேசனார் இவருடைய குரு. ஹாட்லிக்கல்லூரியில் நான் படித்த காலப்பகுதியில் இவர் ஆசிரியராக இருந்தாலும் இவரிடத்தில் தமிழ் படித்திருக்ககூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. பண்டிதரின் நல்ல கவிதையொன்று I நல்லையல்லை நெடுவெண்ணிலவே I இல்லும் இழந்தனம் ஊரும் இழந்தனம் ஏல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம் வேற்றூர் தன்னில் வெய்யிலுக்கொதுங்கல் போற்றெருவோரம் புளியோ வேம்போ ஆலோ அரசோ அருநிழல் தேடி ஓலை மறைப்பில் உழலும் வாழ்க்கை ஒழியுநாள் வருமோ? முன்னாள் எம்மூர் உழுது வித்திய பழனச் செந்நெல் அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு ஆர உண்டே மூரல் முறுவலர் சேர இருந்து திங்கள் சொரிந்த பாலொழிப் பரப்பில் மாலைத் தென்றல் முல்லை நறுமணம் முகந்து வீச மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த எழில் வாழ்வு கழிந்தது மாதோ இன்னாள் ஏர்க்களம் யாவும் போர்க்களம் ஆன வாரியிடையே வலைஞர் செல்லார் குயிலும் கோழியும் கூவல் மறந்தன கிள்ளை மழலையும் கேளா நல் ஆன் கன்று துள்ளா கறவை சுரவா எல்லாம் அழுக்காறுடையான் உள்ளம் போல் புல்லென்றாகிப் போன யாமோ கடுவெயில் அருவழி நெடுந்தொலை ஏகி கான விறகு கட்டி விற்கும் அல்லல் வாழ்க்கையே ஆனோம் இங்ஙன் சிறுவர் மகிழார் இளையோர் நயவார் பாடுநர் நோக்கார் பகையறக் களத்தில் ஆடுநர் வேண்டார் நீடொழி பரப்பி மெல்ல வானில் வருகுவை நல்லை அல்லை நெடுவெண்ணிலவே ❤️ இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி முதலிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். - நட்சத்திரன் செவ்விந்தியன் https://www.facebook.com/share/p/15mXpGm7oi/?

போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

1 month 2 weeks ago
ஈராக் அணுஆயுதம் தயாரிக்கிறது என்று சொல்லி அமெரிக்கா அந்த நாட்டை துவம்சம் செய்தது. அதன் பின் செய்த ஆய்வறிக்கையில் அப்படி ஏதும் அங்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. அதற்காக அமெரிக்கா வருந்தவுமில்லை மன்னிப்பு கேட்கவுமில்லை. தங்கள் சுயநலத்திற்காக ஏதோவொரு காரணத்தை காட்டி அந்த நாட்டின் வளங்களை சுரண்டி அரசியலில் முரண்பாடுகளை தோற்றுவித்து அந்த நாட்டை சுடுகாடாக்குவது இவர்களின் வழமை. இவர்கள் அணுஆயுதம் தயாரிக்கலாம், வைச்சிருக்கலாம், தாக்கலாம் ஆனால் மற்ற நாடுகளை கட்டுப்படுத்துவது. இதற்கெல்லாம் இவர்கள் விலை கொடுப்பார்கள். மத்திய கிழக்கிலே அவர்கள் தங்கள் சட்டங்களோடு வாழ்ந்து வந்தவர்களை, அவர்களின் வளங்களை சுருட்ட புகுந்து அவர்களை உலகெங்கும் இழுத்துவிட்டு அவர்களின் கொலைவெறியை மற்றயவர்கள் மேல் திணித்தது அமெரிக்கா. அமெரிக்காவுக்குள் அவர்கள் குடியேறுவதற்கு தடை விதித்த ட்ரம், அவர்கள் நாட்டுக்குள் புகுந்து அவர்களின் வளங்களை சுரண்டியது சரியா? கண்டிப்பாக மத்திய கிழக்கினாலேயே அமரிக்காவிற்கு அழிவு.

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

1 month 2 weeks ago
புகையிலையாலும் பொருள் ஈட்டித் தமிழர்கள் வளர்ச்சி பெற்றது உண்மை. அதனை அழிப்பதற்காகவே கரிசனை கொண்டன சிங்கள அரசுகள்.😲

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

1 month 2 weeks ago
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இட ஒதுக்கீட்டிற்கு பிறகு விமர்சனங்களை கடந்து சிகரம் தொட்ட வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெம்பா பவுமா கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "உலகை மாற்றும் சக்தி, ஊக்கமளிக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. வேறு எதையும் விட மக்களை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. விரக்தி மட்டுமே இருக்கும் இடத்தில் விளையாட்டு நம்பிக்கையை விதைக்கும். விளையாட்டு, மக்களை ஊக்குவிக்கவும் ஒன்றிணைக்கவும் வேண்டுமென்றால், அது முதலில் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்." - இது தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நோபல் பரிசு வென்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள். கிரிக்கெட் என்பது 11 பேர் ஆடும் விளையாட்டு. இதில் திறமையுள்ள அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு வழங்கினால்தான் அது "ஜென்டில்மேன் கேமாக" இருக்க முடியும். தென் ஆப்ரிக்காவில் நிறவெறி தென் ஆப்ரிக்காவில் 1991-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நிலவிய நிறவெறி காரணமாக அந்த அணியே சர்வதேச கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட்டில் தடம் பதித்த தென் ஆப்ரிக்கா தான் விளையாடிய முதல் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலேயே சிறப்பாக ஆடி அரையிறுதி வரை முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த அரையிறுதியில்தான் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் மழையால் தடைபட, பின்னர் அந்த இலக்கு ஒரு ரன்னில் 21 ரன்கள் என்று மாற்றியமைக்கப்பட்டது சர்ச்சையாகி இன்று வரையிலும் பேசப்படுகிறது. பட மூலாதாரம்,CRAIG GOLDING/FAIRFAX MEDIA VIA GETTY IMAGES படக்குறிப்பு,1992 ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அரையிறுதி ஆட்டத்தில் ஒரு காட்சி. அதுமுதல் கிரிக்கெட் உலகில் தென் ஆப்ரிக்கா வலுவான அணியாக வலம் வந்தாலும் கூட நாக் அவுட் என்றாலே அந்த அணி நெருக்கடிக்குள்ளாகி கோட்டை விட்டு விடுகிறது. லீக் ஆட்டங்களில் அனைத்திலுமே வென்றிருந்தாலும் கூட, ஐசிசி தொடர்களின் அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் முற்றிலும் வேறு விதமாக ஆடி தொடரை விட்டே வெளியேறிவிடுவது வாடிக்கையாகவே தொடர்ந்தது. அதனால்தான், அந்த அணி 'சோக்கர்ஸ்' (chokers) என்ற பெயரையும் பெற்றது. மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் கடந்த 1998ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் 27 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்கா அணி ஐசிசி கோப்பைக்காக காத்திருந்தது. அந்த கனவை 27 ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா கேப்டனாகி உலகக்கோப்பையையே அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். டி20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேச அளவில் ஆடப்படும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் டெஸ்ட் வெற்றிகளே மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக கிரிக்கெட் நிபுணர்களால் கருதப்படுகிறது. அந்த டெஸ்டில் உலக சாம்பியனாக, அதுவும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சாதித்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பட மூலாதாரம்,CRAIG PRENTIS /ALLSPORT படக்குறிப்பு,1999 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் சுற்றில் தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் டை ஆனது. தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் வந்தது எப்படி? தென் ஆப்ரிக்காவின் பூர்வீகக்குடி ஆப்ரிக்க கருப்பினத்தவர்கள்தான். ஆனால், 1652ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து தென்ஆப்ரிக்காவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் கேப்டவுனில் தடம் பதித்தது. அந்த நிறுவனம் படிப்படியாக தனது கிளைகளையும், அதிகாரத்தையும் விஸ்தரிப்பு செய்து, 17 மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆழப் பதித்தது. பிரெஞ்சு புரட்சி நடந்தபோதுதான், ஆங்கிலேயர் ஜேம்ஸ் ஹென்றி தலைமையில் 1795ல் கேப்டவுனை கைப்பற்றினர். இங்கிலாந்தில் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவில் அறிமுகமானது. 1843-ம் ஆண்டில் போர்ட் எலிசபெத்தில் முதல் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1889-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக டெஸ்ட் விளையாடும் அணியாக தென் ஆப்ரிக்கா மாறியது. தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் அணி உருவான காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியில் வெள்ளையின வீரர்கள் மட்டுமே நிரம்பி இருந்தனர். 80 சதவிகிதம் கருப்பின மக்கள் வாழும் நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியில் அவர்களுக்கு இடம் தரப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES நிறவெறியால் தடை தென் ஆப்ரிக்காவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய நிறைவெறி, விளையாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. 1956-ஆம் ஆண்டில் முதன்முதலாக விளையாட்டுக் கொள்கையை தென் ஆப்ரிக்க அரசு வெளியிட்டது. அதில் தென் ஆப்ரிக்க அணி சார்பில் வெள்ளையினத்தவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. நிறவெறிச் சட்டம் 1960களில் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிறவெறியால் ஒலிம்பிக், ரக்பி, பிஃபா ஆகியவை தென் ஆப்ரிக்க அணியை தடை செய்தன. 1970 முதல் 1990ம் ஆண்டுவரை ஐசிசி அமைப்பும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்ரிக்க அணிக்கு தடை விதித்திருந்தது. இடஒதுக்கீடு அறிமுகம் தென் ஆப்ரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்து தடைகள் விலக்கப்பட்ட போதிலும்கூட, அனைத்து விளையாட்டுகளிலும் வெள்ளையின வீரர்களே நிரம்பியிருந்தனர். 1998-ஆம் ஆண்டு நிறவெறி தடைச் சட்டமும், விளையாட்டுகளில் கருப்பினத்தவருக்கான இடஒதுக்கீடும் கொண்டு வரப்பட்ட பின்புதான் தென் ஆப்ரிக்காவில் மாற்றத்துக்கான துளிர்விட்டது. விளையாட்டில் இடஒதுக்கீடு முறை இதன் தொடர்ச்சியாக 2013-ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியில் வீரர்கள் தேர்வு குறித்து அந்நாட்டு அரசே வகுத்தது. அதன்படி 11 வீரர்கள் கொண்ட தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் 6 வீரர்கள் கருப்பு கலப்பின வீரர்கள் இருக்க வேண்டும், அதில் 2 பேர் ஆப்ரிக்க கருப்பின வீரர்களாக இருக்க வேண்டும், 5 பேர் வெள்ளையின வீரர்களாக இருக்கலாம். இந்த இடஒதுக்கீடு முறை வந்த பின்பே சமூகத்தின் அனைத்து பிரிவு வீரர்களும் தென் ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றனர். கருப்பின வீரர்கள் அணிக்குள் வந்தபோதிலும்கூட சக வெள்ளையின வீரர்களின் நிறவெறிப் பேச்சும் செயலும் தொடர்ந்ததாக சர்ச்சைகள் உண்டு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க அணியில் இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தபின் அணிக்குள் வந்த முதல் கருப்பின ஆப்ரிக்க வீரர் வேகப்பந்துவீச்சாளர் மகாயா என்டினி மகாயா என்டினி குற்றச்சாட்டு தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் என்டினி, சக வீரர்களால் எவ்வாறு நிறவெறியுடன் நடத்தப்பட்டேன், கேலி கிண்டலுக்கு ஆளானேன் என்று தென் ஆப்ரிக்க ஒளிபரப்பு கழகத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். என்டினி பேசுகையில் "நான் அணிக்குள் வந்த நேரத்தில் தனிமையாகவே உணர்ந்தேன். இரவு சாப்பிட வேண்டுமென்றால் சக வீரர்கள் யாரும் என்னை உடன் அழைத்துச் செல்லமாட்டார்கள், 'சாப்பிடப் போகிறோம் வா' என்று கூட அழைக்க என் அறைக் கதவை தட்டமாட்டார்கள். என் கண் முன்னே, என்னிடம் ஆலோசனை கேட்காமலே, சக வீரர்கள் திட்டங்களை அவர்களாகவே வகுப்பார்கள். காலை உணவு சாப்பிட சென்றால் என் அருகேகூட எந்த வீரரும் அமரமாட்டார். சக வீரர்களால் புறக்கணிக்கப்பட்டு தனிமையாக இருப்பதால் சக வீரர்களுடன் பேருந்தில் செல்வதற்கு பதிலாக நடந்தே மைதானத்துக்கு செல்லலாம் எனத் தோன்றியது. என்னை எந்த வீரரும் புரிந்து கொள்ளவில்லை" எனத் தெரிவித்திருந்தார். வெள்ளையர் அல்லாத முதல் கேப்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார். அவரும் சக வீரர்களால் நிறவெறிப் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாக ஒருமுறை வேதனையுடன் பகிர்ந்திருந்தார். தென் ஆப்ரிக்க சமூக நீதி மற்றும் தேசிய கட்டமைப்புக்கான விசாரணையில் பிரின்ஸ் பேசுகையில், "தென் ஆப்ரிக்க அணி வெள்ளையினத்தவர் அல்லாதவருக்கு தனிமையான இடம். ஒரு புதிய வீரர் வெள்ளையராக இருந்தால் வீரர்கள் உங்களை விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்பதை நடக்கும் சம்பவங்களை வைத்து புரிந்து கொள்ளலாம். ஆனால் வீரர் வெள்ளையராக இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்காது" எனத் தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவில் இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டு கருப்பின வீரர் என்டினி, கருப்பு கலப்பின வீரர்கள் ஹாசிம் அம்லா, டுமினி, ஆஷ்வெல் பிரின்ஸ் உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்த போதிலும் அவர்கள் "கோட்டா ப்ளேயர்ஸ்", அதாவது 'இடஒதுக்கீடு வீரர்கள்' என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹாசிம் ஆம்லா தொடர்ந்த நிறவெறி 2021-ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சர் தன்னை நிறவெறியுடன் நடத்தினார் என்ற ஆடம்ஸ் குற்றம்சாட்டினார். உலகளாவிய பிளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ் இயக்கத்தின் போது, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 30 பேர் தாங்கள் எவ்வாறு நிறவெறியால் பாதிக்கப்பட்டோம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினர். கருப்பினத்தவருக்கும் வாய்ப்புகளை வழங்க இடஒதுக்கீடு முறை தீவிரமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்காவின் தோல்விகளுக்கு இந்த இட ஒதுக்கீடே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்திடம் தென் ஆப்ரிக்கா அடைந்த தோல்விக்கு கருப்பின கலப்பு வீரர் பிலாண்டர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம், தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் என்டினி சேர்க்கப்படவில்லை. இந்த ஆட்டம் பற்றி கிரேம் ஸ்மித் ஒருமுறை நினைவுகூர்கையில் " நண்பர்களே, நான் விளையாடக் கூடாது என சொன்னீர்கள் என்றால் என் முகத்தைப் பார்த்து நான் விளையாடக் கூடாது என்று சொல்லுங்கள். இட ஒதுக்கீடு முறைதான் பிரச்னை என சொல்லாதீர்கள். முடிவுகள் தவறாக நடந்த போது, இட ஒதுக்கீட்டால் அணிக்குள் வந்த வீரர்கள் மீது தவறு. விஷயங்கள் சரியாக நடந்த போது, மற்றவர்கள் ஹீரோக்கள். நான் தேசிய அணிக்காக விளையாடிய வரைக்கும், அது ஒரு அணியே இல்லை. நாங்கள் ஒன்றுமில்லை" என வேதனையுடன் தெரிவித்திருந்தார். என்டினி தனது 100வது டெஸ்டுக்குப் பிறகு, முறையான மரியாதையின்றி அணியிலிருந்து நீக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது, ஒரு மாதத்துக்குள் அவரது ஒப்பந்தத்தையும் அணியிலிருந்து இழந்தார். அப்போது என்டினி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "நாங்கள் எப்போது வென்றாலும், அது மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் நாங்கள் தோற்ற போதெல்லாம் முதலில் குற்றம் சாட்டப்பட்டது நான்தான்" என்று தெரிவித்தார். இடஒதுக்கீடு முறை தேவையா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணி நீண்டகாலம் ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாமைக்கு அணிக்குள் நிலவிய இடஒதுக்கீடு முறைதான் காரணம் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ரக்பி உலகக் கோப்பையை 1995 மற்றும் 2007ம் ஆண்டுகளில் தென் ஆப்ரிக்கா வென்ற போது அதில் பெரும்பாலும் வெள்ளையின வீரர்கள்தான் இருந்தனர், ஒன்று அல்லது இருவர் மட்டுமே கருப்பின வீரர்கள் இருந்தார்கள். இடஒதுக்கீடு முறை இல்லாத அணிதான் ரக்பி உலகக் கோப்பையை வென்றது என்ற வாதம் வைக்கப்பட்டது. ஆனால், 2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியில் 11 வெள்ளையர் அல்லாத வீரர்கள் இருந்தார்கள். இந்த புதிய மாற்றத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் இருந்த வீரர்கள் பெரும்பாலும் நிறவெறி தடைக்குப்பின் பிறந்த இளம் வீரர்கள், இவர்கள் தங்கள் தேசத்துக்காக பங்களிப்பு செய்ய கிடைத்த வாய்பை சரியாகப் பயன்படுத்தி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றனர். அதன் மூலம் இடஒதுக்கீடு முறையால்தான் தென் ஆப்ரிக்கா கோப்பையை வெல்ல முடியாமல் போனது என்ற வாதத்தை அவர்கள் தவிடுபொடியாக்கினர். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்குள்ளும் படிப்படியாக கருப்பின வீரர்கள், கலப்பின வீரர்கள் கொண்டுவரப்பட்டு படிப்படியாக மாற்றம் நடந்தது. மாற்றத்துக்கான வெற்றி தென் ஆப்ரிக்காவின் இந்த இடஒதுக்கீடு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா என்பது குறித்து விளையாட்டுப் பிரிவு மூத்த பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "இட ஒதுக்கீட்டால் திறமையற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற வாதத்தை இந்த வெற்றி மாற்றியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு முறை கருப்பினத்தவர் மற்றும் கலப்பின மக்களுக்கும் சமமான வாய்ப்பளிக்கிறது, வெள்ளையின மக்களுக்கும் வாய்ப்பளிக்கிறது. தென் ஆப்ரிக்காவின் இந்த சாம்பியன்ஷிப் வெற்றியை கிரிக்கெட் வெற்றியாக, கிரிக்கெட் தொழில்நுட்பம் சார்ந்த வெற்றியாக மட்டும் பார்க்கக்கூடாது. சமூக மாற்றத்துக்கான வெற்றியாகவும் இதை பார்க்க வேண்டும். கருப்பின வீரர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தில், கருப்பின கேப்டன் தலைமையில் அந்த அணி சாம்பியன்ஷிப் வென்றது மாற்றத்துக்கான வெற்றியாகும்" என்றார். யார் இந்த பவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணியினருடன் டெம்பா பவுமா கேப்டவுன் நகரில் உள்ள லாங்கா எனும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் டெம்பா பவுமா. முறையான கிரிக்கெட் பயிற்சிக் கூடத்துக்கு செல்ல முடியாமல் தெருக்களிலும், சாலைகளிலும் கிரிக்கெட் விளையாடி பவுமா பயிற்சி எடுத்தார். சான்டன் நகரில் புனித டேவிட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், நியூலாந்தில் கல்லூரிப் படிப்பையும் பவுமா முடித்தார். 2008ம் ஆண்டிலிருந்துதான் பவுமாவின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. கட்டெங், லயன்ஸ் போன்ற உள்நாட்டு அணிகளில் பவுமா விளையாடத் தொடங்கினார். இவரின் ஆட்டத்தைப் பார்த்து, 2012ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ஏ அணியில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இந்த தொடரிலும் பவுமா சிறப்பாக செயல்படவில்லை, இருப்பினும் ஆஸ்திரேலிய ஏ, இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடர்களில் பவுமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் அவரின் திறமை வெளிப்பட்டது. 2017ம் ஆண்டில் கேப் கோப்ராஸ் அணிக்காக பவுமா ஆடத்தொடங்கி, அதன்பின் லயன்ஸ், டர்பன் ஹீட், ஜோஸி ஸ்டார்ஸ் அணிகளுக்காக பவுமா விளையாடினார். 2014ம் ஆண்டில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியில் பவுமாவுக்கு வாய்ப்புக் கிடைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து, தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பவுமா பெற்றார். 2016ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்காக பவுமா அறிமுகமாகினார். அறிமுக போட்டியிலேயே பவுமா சதம் அடித்து அசத்தி, ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவ வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார். டெஸ்ட் கேப்டன் பொறுப்பு 2019ம் ஆண்டில்தான் டி20 போட்டியில் பவுமா அறிமுகமானார். 2019, செப்டம்பர் 18ம் தேதி இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பவுமா அறிமுகமாகினார். 2021, மார்ச் 4ம் தேதி, தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணிக்கு முழுநேர, நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் கருப்பின வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார். 2022ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டு, 10 போட்டிகளில் அணியை வழிநடத்தினார். இதில், 9 வெற்றிகளுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். பவுமா இதுவரை 42 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதில் 22 வெற்றிகளையும், 25 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 15 வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். கனவிலும் நினைக்கவில்லை சாதாரண பின்புலத்தில் பிறந்து, வளர்ந்த பவுமா இன்று கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ஸ்ட் மைதானத்தில், தனது தேசத்துக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அவர் அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது குறித்து பவுமா கூறுகையில், "லார்ட்ஸ் மைதானத்தில் நான் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை." எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0eqe2xjgwqo

கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு

1 month 2 weeks ago
கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் விளக்குகள் அழிப்பு - கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 10:23 AM பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கனடிய தமிழர் தேசிய அவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் ஜூன் 15 2025 இல் இடம்பெற்றமை குறித்து கனடிய தமிழர் தேசிய அவை தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் முக்கியமான அம்சங்களை வெளிச்சம்போட்டுக்காட்டும் விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. மே 27ம் திகதி இரவும் இவ்வாறான வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் கண்டிக்கப்படவேண்டிய இந்த இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் தமிழ் இனப்படுகொலையின் போது பலியானவர்களின் நினைவுகளை அவமதிப்பதுடன், பன்முகத்தன்மை கொண்ட எங்கள் கனடா சமூகத்திற்கு அடித்தளமாக உள்ள உண்மையின் மதிப்புகள் நல்லிணக்கம் போன்றவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. https://www.virakesari.lk/article/217583
Checked
Sat, 08/02/2025 - 11:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed