Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல்; இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் தமிழ் மக்கள்

Featured Replies

இலங்கையைப் பொறுத்த வரையில் தேசிய ரீதியிலான எந்தவொரு தேர்தலிலும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் எப்போதும் ஆட்சியை தீர்மானிப்பதாகவே இருந்திருக்கிறது.  அதை உணர்ந்த பிரதான அரசியல் கட்சிகளும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக் கவர்வதில் அதாவது சிறுபான்மை மக்களின் வாக்குகளை கவர்வதற்காக தன்னால் முடிந்த சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது இதுவரையான தேர்தல்களில் வழமையாகவே இருந்திருக்கின்றன. அதற்கு பல்வேறு தேர்தல் உறுதிமொழிகள் கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை திருப்திப்படுத்தினால் போதுமானது என்பதே இலங்கையில் இதுவரை இருந்துவந்த அரசியல் சமன்பாடாகவும் இருந்து வந்திருக்கிறது.

 

ஆனால், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கள நிலைவரம் வழமையான இலங்கை தேர்தல் சூழ்நிலைகளில் இருந்து சற்று மாறுபட்டதாகவே தென்படுகிறது.  தற்போது நிர்வாகத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சூழ்நிலைகளே இதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.  இந்த நிலைமைகளானது இறுதியில் அரசாங்கத்திற்கே பாதகம் விளைவிக்கக்கூடிய கள நிலைவரமொன்றை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும் மிகையில்லை.

 

காரணம் அரசாங்கம் இதுவரை தக்க வைத்திருந்த சிறுபான்மை கட்சிகளின் ஆதரவில் பெரும்பான்மையை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.  அந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு திரட்டிக் கொள்வதற்கான பிரயத்தனங்களை எதிர்க்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இது முற்று முழுதாக அரசாங்கத்திற்கு மட்டுமே பாதகமா என்பதே இங்கு இருக்கும் முக்கியமான கேள்வியாகும்.  இதில் அதையும் தாண்டி சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகள் பற்றிய பிரச்சினைகளும் இருக்கின்றன. இந்த ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்கள் யார் என்பது தற்போது அனைவரும் அறிந்த விடயமே. ஆளுந்தரப்பின் வேட்பாளராக இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிரணியின் பொது வேட்பாளராக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவும் தங்களது வெற்றியில் இதுவரை உறுதியாக இருப்பதாகவே வெளிக்காட்டிக் கொள்கின்றனர்.  ஆனால், அவர்களுக்குள் உள்ளூர இருக்கும் நம்பிக்கை மற்றும் சந்தேகம் அல்லது அச்சம் என்னவென்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். அதேபோல், மக்களின் அபிப்பிராயங்களும் வெளிப்படையில் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற தீர்மானம் அவர்களது உள்மனதுக்கு மட்டுமே தெரியும்.

 

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஒன்றுகூடும் அல்லது ஒன்றுகூட்டப்படும் மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு மட்டுமே தேர்தல் முடிவுகளை எதிர்வுகூறிவிட முடியாது.  எம் மத்தியில் காணப்படும் வெளிப்படையான பிரதிபலிப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக தேர்தல் முடிவுகள் அமைந்தாலுமே கூட இலங்கையின் தேர்தல் கலாசாரத்தை நன்கு அறிந்தவர்கள் ஆச்சரியப்படமாட்டார்கள். மருத்துவ உலகில் இடம்பெறும் அதிசயத்தைப் போன்று இந்தத் தேர்தல் முடிவுகளும் அதிசயமொன்றாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  ஆனால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வகிபாகம் எந்த மாதிரியானதாக அமையப் போகிறது என்பதை விடவும், அவர்களது அபிலாஷைகளுக்கு கிடைக்கக்கூடிய முக்கியத்துவம் எந்தளவில் இருக்கும் என்பதே இங்குள்ள பிரதான கேள்வியாக இருக்கிறது. ஏனெனில், சிறுபான்மை கட்சிகள் இதை விட்டால் வழியில்லை என்று ஒரு தரப்புக்கு மட்டுமே ஆதரவளிக்கக் கூடிய நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்று கூட தற்போதைய நிலைமையை கூற முடியும்.

 

 இதில் முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால், கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் காரணமாகவும் அவற்றை கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் காட்டியிருந்த அசமந்தப் போக்கினாலும் முஸ்லிம் மக்கள் இந்த தேர்தலில் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்னவென்பது யாவருக்கும் எளிதில் புரியக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.  முஸ்லிம் மக்கள் கடந்தத் காலங்களில் முகம் கொடுத்த விரும்பத்தகாத சூழ்நிலைகள் இறுதியில் அரசாங்கத்துக்கு துரதிர்ஷ்டமாக அமைந்துவிட்டன என்பதே உண்மை.  இதனால், முஸ்லிம் மக்களின் இந்த முடிவு காரணமாக முஸ்லிம் கட்சிகள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ அரசாங்கத்தை கைவிட்டுச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.  அவ்வாறு அரசாங்கத்தில் இருந்து அவர்கள் விலகிச் செல்வதற்கு பல்வேறு நியாயப்பாடுகள் கூறப்பட்டாலும் முஸ்லிம் மக்களின் மத்தியில் ஏற்பட்ட உறுதியான மனநிலை மாற்றங்களே அரசியல் கட்சிகளை இந்த நிர்ப்பந்தத்திற்கு தள்ளியுள்ளது.

 

ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் பிரதிபலிப்புகள் தங்களுக்கு அமைந்துவிடக்கூடும் என்ற அச்சம் இந்தக் கட்சிகளுக்கு இருந்திருக்கலாம்.  இந்த ஜனாதிபதித் தேர்தலின் சிறப்பம்சம் என்னவெனில், மக்களின் நிலைப்பாட்டை அறிந்து அதற்கு ஏற்ப தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு சிறுபான்மை கட்சிகள் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதாகும். வேறு அரசியல் பேரம் பேசல்களுக்கு இந்தத் தேர்தலில் இடமில்லாமல் போயுள்ளது.  இது இவ்வாறிருக்க தமிழ்க் கட்சிகளின் நிலைமை இந்தத் தேர்தலில் சற்று நெருக்கடி மிக்கதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் யாருக்கு ஆதரவளிப்பது என்பதையும் விட எந்த வேட்பாளரை நம்புவது என்ற நெருக்கடியை சந்தித்துள்ளன.  

 

மலையக தமிழ்க் கட்சிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிர்த்து ஏனைய பிரதான கட்சிகள் அனைத்தும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே தங்களது ஆதரவை வெளியிட்டுள்ளன. இதுவரை காலமும் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.  ஆனால், இதுவரை ஆட்சியில் இருந்து எந்தவொரு ஜனாதிபதியும் செய்திராத துரிதமான அபிவிருத்திகளையும் முன்னேற்றங்களையும் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷவே மலையக மக்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வாதமாக இருக்கிறது.

 

ஆனால், இதில் எது உண்மை என்பதை  இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும் என்று நம்பலாம்.  ஆனால், மலையக மக்களுக்கு இதுவரை செய்து கொடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் மட்டுமே இதில் செல்வாக்கு செலுத்துமா அல்லது இதுவரை காலமும் உரிய கவனம் செலுத்தப்படாமல் இருக்கும் பல பிரச்சினைகளும் அதில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவரும். ஆனால், அதற்கும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலொன்றை உறுதிப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தேர்தல்கள் ஆணையாளருக்கு இருக்கிறது.  இதேநேரம், வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பதற்கு சரியான தெரிவுகள் இருக்கின்றனவா என்பதே இங்கு சந்தேகமாகவே இருக்கின்றது. வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தழிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த வகையிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முடியாதவொரு சூழ்நிலையில் இருக்கிறது.  

 

கடந்தகால நிகழ்வுகள் அதற்கு சான்று பகிர்வனவாக இருக்கின்றன. அப்படியே ஆதரவளித்தாலும் ஏற்படக்கூடிய முடிவு என்னவாக இருக்கும் என்பது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் மத்தியில் ஒரு மதிப்பீடொன்றும் இருக்கக்கூடும்.  அப்படியென்றால் அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரேயொரு வேட்பாளர் தெரிவு எதிரணி பொது வேட்பாளராகவே இருக்க முடியும்.

 

அல்லது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை அவர்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறும் கூறி கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று ஊக்குவிக்க முடியும்.  ஆனால், மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இனி எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பதா அல்லது மக்களின் விருப்பப்படி வாக்களிக்க ஊக்குவிப்பதா என்பதே அடுத்துள்ள நடவடிக்கையாகும்.  ஆனால், வழமையாக சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தேசியத் தேர்தல்களில் குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலின் இறுதியில் யார் ஆட்சிபீடம் ஏறுவது என்பதை முடிவு செய்வதில் பிரதான வகிபாகத்தை கொண்டிருக்கின்றன. தெற்கு பெரும்பான்மை மக்களின் அதிகப்படியான வாக்குகள் ஒரு வேட்பாளருக்கு கிடைக்காவிட்டால் சிறுபான்மை மக்களின் வாக்குகளே யார் வெற்றி பெறுவது என்பதை தீர்மானிக்கின்றன. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இதற்கு சிறந்த உதாரணம்.

 

வடக்கில் தேர்தல் புறக்கணிக்கப்பட்டமையால், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஒப்பீட்டளவில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார்.  ஆனால், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரையில் தென்பகுதி சிங்கள மக்களின் வாக்குகள் அதிகப்படியாக கிடைத்தமையால் தனது போட்டியாளரான சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இலகுவாக தோற்கடிக்க முடிந்திருந்தது.  இருப்பினும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் களத்தை பார்க்கும் போது பிரதான இரு வேட்பாளர்களான மகிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான போட்டி சமனான நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில், மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியிலும் ஜாதிக ஹெல உறுமய போன்ற தெற்கு சிங்கள மக்களின் செல்வாக்கு பெற்ற சக்திகள் ஒன்றுசேர்ந்திருப்பதும் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

 

 இவ்வாறான நிலைமையில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இம்முறை தேர்தலில் முடிவை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக அமையப் போகிறது. ஆனால், பிரதான வேட்பாளர்களில் இருவரும் அவரவரது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக நியாயமான அரசியல் தீர்வொன்றை கோரிவரும் இன பிரச்சினை தொடர்பில் எந்தவொரு நிலையான உறுதிமொழிகளையும் வழங்கியிருப்பதை காணக்கூடியதாக இல்லை.  ஆனால், எதிரணி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பை தமது பிரதான உறுதிமொழியாக வழங்கியிருப்பதால், அந்த அதிகாரத்தை ஒழித்துவிட்டு அவரால் தனித்து தீர்வொன்று தொடர்பில் முடிவொன்றை எடுக்க முடியாது என்பதனால் அவர் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் உறுதிமொழியொன்றை வழங்க முடியாது என்று நியாயப்படுத்த முடியும்.

 

 எனினும், தான் ஆட்சிக்கு வந்த பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்தினால் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் முடிவு செய்யப்படும் என்று மைத்திரிபால  சிறிசேன கூறியிருக்கிறார்.  இதேநேரம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒழிப்பு பற்றியும் நிச்சயமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன், ஜனாதிபதி ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த இதுவரையான காலப்பகுதியில் இன நெருக்கடிக்கு அனைவரும் ஏற்றுக்கொண்ட முன்னெடுப்பொன்றும் மேற்கொள்ளப்படவுமில்லை.  இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்றதும் அரசாங்கம் கூறும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அமர்வுகளோ ஆளுங்கட்சியினரின் பங்களிப்புடன் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

 

 இப்படியான நிலைமையில், பிரதான வேட்பாளர்கள் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் உறுதிமொழிகள் வழங்காமல் விட்டிருப்பது தமிழ் மக்களின் வாக்குகளில் தங்களுக்கு பலன் கிடையாது என்பதனாலா அல்லது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே தங்களது வெற்றியை தீர்மானிக்கப் போகின்றன என்பதனாலா அல்லது தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதனாலா அல்லது தமிழ் மக்கள் தங்களுக்கு எப்படியும் வாக்களிக்கப் போவதில்லை என்ற சிந்தனையினாலா என்ற பல கேள்விகள் எழவே செய்கின்றன.  ஆனால், உண்மையில் இந்தத் தேர்தலின் கள நிலைவரத்தை பார்க்கும் போது தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் வாக்குகளே யார் வெற்றி பெற போகிறார் என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றப் போவதாக தெரிகிறது.  

 

ஆனால், தான் ஜனாதிபதியானதும் அமைக்கப்படும் தேசிய அரசாங்கம் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் முடிவெடுக்கும் என்ற உறுதிமொழி எதிரணி பொது வேட்பாளரினால் வழங்கப்பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் தங்களது நீண்ட கால அபிலாஷகள் தொடர்பில் ஒருவித நிச்சயமற்ற தன்மையிலேயே இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டியுள்ளது. வழங்கப்படும் உறுதிமொழிகளே காற்றில் பறந்துவிடும் நிலையில், வழங்கப்படாத உறுதிமொழிகளின் நிலைமை என்னவென்பது புரியக்கூடியதாகவே இருக்கிறது.  ஆனாலும், கடந்த தேசியத் தேர்தல்களில் மத்தியில் ஆட்சியமைக்கும் திறன் கொண்ட பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி தமிழ் மக்கள் வாக்களித்திருந்ததில்லை. மாறாக தங்களது அபிலாஷைகளை நிறைவேற்ற மறுத்தவர்களை எதிர்த்தோ அல்லது தங்களது அபிலாஷைகளுக்காக குறைந்தபட்சம் குரலாவது கொடுக்கக்கூடியவர்களை ஆதரித்தோ தான் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்.  

 

அது ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் வாக்காளர்களால் பின்பற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே கூறியது போன்று வழமைக்கு மாறாக சிறுபான்மையினக் கட்சிகள் தமது நலன் கருதி பேரம் பேசும் சக்தியை இழந்து மக்களின் நிலைபபாட்டுக்கு அமைய தங்களது முடிவுகளை மாற்றிக்கொள்ளும் நிலைமைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது தான் இந்தத் தேர்தலின் சிறப்பம்சமாகும். இதற்கு தற்போதைய அரசாங்கத்தின் கடந்த கால போக்குகளும் அடிப்படையாக அமைந்து விட்டமை தான் ஆளுந்தரப்பிற்கு ஏற்பட்டுவிட்ட துரதிர்ஷ்டமாகும்.    

 

http://thinakkural.lk/article.php?article/5whsxwkfdc1131fe709c654e2822ceqlkac84d5239d1a12a4f71877imdaq#sthash.ZBDgBTmr.dpuf


376_thumb_cartoon_27-12-2014.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.