Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புள்ளடிக்குக் காத்திருக்கும் புதிய திருப்பம்

Featured Replies

election

 

கொழும்பு மிரருக்காக பீ. தெய்வீகன்

சிறிலங்காவின் எட்டாவது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாட்டின் பதிவுசெய்யப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் களத்திலிறங்கி மக்கள் முன்னிலையில் மத்தளம் கொட்ட ஆரம்பித்துவிட்டன. வழமையான வாக்குறுதி, திருவிழாக்கள் சந்திக்குச் சந்தி, முழத்துக்கு முழமென முழங்கிக்கொண்டிருக்கின்றன.

சுமார் இரண்டரைக்கோடி சனத்தொகை கொண்ட சிறிலங்காவில் வாக்களிப்பதற்கு தகுதியான ஒன்றரை கோடி வாக்காளர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விறுவிறுப்பான தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 400 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள இந்த தேர்தலினால் எந்த திசையில் நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படவுள்ளது என்பதை அறிவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு தரப்புக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சிறிலங்காவின் எட்டாவது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நாட்டின் பதிவுசெய்யப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் களத்திலிறங்கி மக்கள் முன்னிலையில் மத்தளம் கொட்ட ஆரம்பித்துவிட்டன. வழமையான வாக்குறுதி, திருவிழாக்கள் சந்திக்குச் சந்தி, முழத்துக்கு முழமென முழங்கிக்கொண்டிருக்கின்றன.


சுமார் இரண்டரைக்கோடி சனத்தொகை கொண்ட சிறிலங்காவில் வாக்களிப்பதற்கு தகுதியான ஒன்றரை கோடி வாக்காளர்களும் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விறுவிறுப்பான தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 400 கோடி ரூபா செலவில் நடைபெறவுள்ள இந்த தேர்தலினால் எந்த திசையில் நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படவுள்ளது என்பதை அறிவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு தரப்புக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

TNA1

வழமைபோல தமிழர் தரப்பின் அரசியல் வேட்கை மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வியூகங்கள் ஆகியன இம்முறைத் தேர்தலிலும் எல்லத்தரப்புக்களினதும் விசேட கவனத்தை பெற்றுள்ளன.

சிறிலங்கா சுதந்திரமடைந்த காலம் முதல் இன்றுவரை காலம் காலமாக தொடரும் சிறிலங்காவின் அரசியல் கோட்பாடு என்பது தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு எந்தளவுக்குத் தீர்வினை பெற்றுக்கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரிந்த கசப்பான பக்கங்கள்.

தமிழர்களின் நீதியான அரசியல் கோரிக்கைகளுக்கு அரசியல் ரீதியாக எந்த தீர்வையும் தராத – தர விரும்பாத – சிங்கள ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான பிடிவாதம் பின்னர், தமிழர்தரப்பினை எவ்வாறு ஆயுதவழிமுறைகளின் ஊடாக தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உந்தித் தள்ளியதும் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த பக்கங்கள்.

இவ்வாறு நாடாளுமன்ற அரசியலின் ஊடாக தமது உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடியாது என்ற அனுபவத்தைக் கடந்த 35 வருடப் பட்டறிவினால் தெரிந்துகொண்ட பின்னரும், தமிழர்தரப்பு இன்று மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கவேண்டிய கட்டாயநிலைக்கு வந்துநிற்பது துரதிஸ்டவசமானது.

ஆனால், பூகோள அரசியல் ஒழுங்கின் கால அட்டவணையிலும், சர்வதேச சக்திகளின் இராஜதந்திர நிகழ்ச்சிநிரலிலும் ஈழத்தமிழர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படவேண்டிய புள்ளி இப்போதைக்கு சிறிலங்காவின் அரசியலமைப்புத்தான். இதற்கு அப்பால், எதுவும் இல்லை. இதுதான் யதார்த்தம்.

அப்படியானால், இந்த தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப்போகிறது.

சிங்கள தேசத்திடம் தமிழ்மக்களின் உரிமைகளைப் பேரம்பேசிப் பெற்றுக்கொள்வதற்கு காலாகாலமாக தமிழ் அரசியல் தலைமைகள் கையாண்ட அரசியல் வழிமுறைகளையும் அரசியல் சூத்திரங்களையும் 35 வருடங்களின் பின்னர் இப்போதும் கையாண்டு இறைஞ்சி நிற்கப்போகிறார்களா?

அல்லது

தமிழர்களின் உரிமை பிரச்சினை தொடர்பாக சிங்கள தேசம் கொண்டுள்ள அடிப்படை மனநிலை குறித்த கடந்த கால பட்டறிவின் அடிப்படையில் – மித வாத அணுகுமுறைக்கு அப்பால் சென்று – தமிழர்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியத்தை இடித்துரைக்கப்போகின்றவா?

இந்த இரண்டுவிதமான அரசியல் அணுகுமுறையின் ஊடாகவும் தமிழர்களுக்கான -நடைமுறைக்கு சாத்தியமான – தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் முன்வைக்கவுள்ள வியூகங்கள் என்ன?

இந்த கேள்விகளின் ஊடாக தமிழ் தேசிய அரசியல் பரப்பினை ஆய்வுக்கு உட்படுத்தும் எவரும், இதற்கு விடைகளாக இரண்டு பிரதான தமிழ் அரசியல் தரப்புக்களை இனம்காணமுடியும்.

TNPF1

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அரசியல் தரப்புக்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான அரசியல் அணுகுமுறைகளையும் தங்களது அணியங்களாக கொண்டு தமிழர் தரப்பிடம் ஆணையை கோரி நிற்கும் மிக முக்கிய தேர்தலாக எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி அமையப்போகிறது.

இந்த இரண்டு கட்சிகளும் முன்வைக்கு வாதப்பிரதிவாதங்களை நோக்குவுமேயானால் –

சிங்கள தேசத்தின் நடுவண் அரசிடம் குவியப்படுத்தப்பட்டுள்ள ஏகபோக அதிகாரங்களை தமிழர் தரப்புக்கு பகிர்ந்தளிக்கக் கோருவதன் மூலம் கிடைக்கப்பெறும் தீர்வினை தனது உச்சபட்ச பேரம்பேசுதலாக கூறிவருகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு, அதுவே தமிழ்மக்களுக்கான சாத்தியமான தீர்வாக அமையும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. அதாவது, அதிகாரக் கூம்பு ஒன்றின் மேலிருந்து கீழாக நோக்கப்படும் பேரம்பேசும் செயன்முறையாக இது பார்க்கப்படுகிறது.

ஆனால், தமிழ் மக்களுக்கான தீர்வெனப்படுவது சிங்கள தேசத்திடம் பகிர்ந்தெடுக்கப்படுவது அல்ல. தன்னை தானே ஆளும் சுயநிர்ணய உரிமைகொண்ட இனமொன்றின் தேசிய வேட்கையை இன்னொரு இனத்திடம் பகிர்ந்துகொள்வது சாத்தியமற்றது. அது முற்றிலும் வேறுபட்ட இரண்டாவது தேசக்கட்டுமானத்திற்குள் வரையறுக்கப்படவேண்டும் என்று கூறுகிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தை தமிழர் பிரச்சினைக்குரிய தீர்வுக்கு ஆரம்பப்புள்ளியாக நிர்ணயித்துக்கொண்டால், அதை அடிப்படையாக கொண்ட அரசியல் போராட்டம் அந்த ஆரம்பப்புள்ளியை மேலும் மலினப்படுத்தி, அந்த அதிகாரப்பகிர்வையும் எட்ட முடியாத நிலையில், அதல பாதாளத்திலேயே கொண்டு சென்றுதள்ளுமே தவிர, முன்னோக்கி நகர்வதற்கான சாத்தியப் பாதைகளை ஒருபோதும் திறக்காது என்றும் தமிழ் தேசிய முன்னணி வாதிடுகிறது.

மாற்றங்களும், மர்மங்களும், நயவஞ்சகச் சதிகளும் நிறைந்த பூகோள அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத பெரும் சக்தியான தமிழர் தரப்பு, சரியான சந்தர்ப்பங்களில் தனது பேரம் பேசும் வலுவைப் பிரயோகிப்பதன் மூலம் அல்லது பறைசாற்றுவதன் மூலம் தனக்குரிய உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் –

இப்படியான சந்தர்ப்பங்களை கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெருவாரியாக தவறவிட்டுவிட்டது என்று கூறி மித வாதப்போக்குடைய அதன் உறுப்பினர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

மறுபுறத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்வு தொடர்பான அரசியல் கோட்பாட்டை எடுத்துநோக்கினால், தாங்கள் சாத்தியங்களை நோக்கி பயணிப்பதாக தொடர்ந்து கூறுகிறார்களே தவிர, அவர்கள் கூறுவதைப்போல அதிகாரப்பகிர்வு விடயம் அவர்களுக்கோ மக்களுக்கோ புரியாத மந்திரப்பொருளாகவே காணப்படுகிறது.

ஆனால், தேர்தல் பிரச்சாரங்களில் மக்களின் அபிமானத்தை வெற்றிகொள்வதற்காக – கட்சியின் கொள்கையாக கருதப்படுவதற்கு முற்றிலும் மாறான – ஜனரஞ்சக கோஷங்களை எழுப்புகின்றனர் அதன் உறுப்பினர்கள்.

இப்படியே போனால் பிரிந்து செல்வதை தவிர வேறு வழியில்லை என்று சிங்கள தேசத்தை நோக்கி உறுமுகிறார் செல்வம் அடைக்கலநாதன்.

தனிநாடுதான் தீர்வென்று தேர்தலுக்கு முன்னர் ஒருமுறை சீறினார் மாவை சேனாதிராசா.

தற்போது திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப்போவதாக கூட்டமைப்பை மேற்கோள்காட்டி செய்தி சொல்கிறது உதயன் பத்திரிகை.

இரு தேசம் ஒரு நாடு என்பது சாத்தியமானதா இல்லையா என்பதற்கு அப்பால், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது கொள்கைப்பிடிப்பில் உறுதியாக இருக்கிறது. தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்தி – தமிழர்களின் நலன்களை முதன்மைப்படுத்தி – இலக்கை நோக்கிப் பயணிக்கவேண்டும் என்று சொல்கிறது அந்தக் கட்சி.

போருக்கு பின்னர் தமிழ்மக்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை வரிசைப்படுத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அவற்றையெல்லாம் எப்படி தமிழர் நலன்நோக்கி வளைத்திருக்கமுடியும் என்றும் –

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு அவற்றை கோட்டைவிட்டுவிட்டது என்றும் பட்டியலிட்டுக்காட்டுகிறது.

இப்போது, தமிழ் மக்களின் முன்னாலுள்ள கேள்வியெல்லாம் இவற்றில் எந்த “குதிரைக்கு பணம் கட்டுவது” என்பதுதான்.

இவ்வளவு விடயத்தை நீட்டி முழக்கி விளக்கியபோதும், மக்களை பொறுத்தவரை தீர்வைப்பெற்று தருவார்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எந்தக்கட்சிக்கும் இவ்வளவு காலமும் வாக்களித்ததில்லை. இனிமேல் வாக்களிக்கப்போவதுமில்லை. ஏனேனில், அது நடக்கப்போவதில்லை என்ற யதார்த்தம் அவர்களுக்கு எப்போதோ தெரிந்த உண்மை. எம் மக்களுக்குப் புரியாத அரசியலா?

ஆனால், விடுதலைப்புலிகள் என்ற பலம் மிக்க கவசத்தினால் பேணப்பட்டுவந்த தமது இருப்பு இன்று எந்த பாதுகாப்பும் இல்லாது சிங்கள தேசத்தினால் தூக்கியெறியப்பட்டுள்ள நிலையில், அரசியலுக்கு அப்பால் தங்களது ஒற்றுமையே தமது இருப்புக்கு பலம் சேர்க்கும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளார்கள். அதற்காக, விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி தமக்கான பலத்தை ஒன்று திரட்டி ஓரளவுக்கு தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். இந்த முடிவுக்காக அவர்கள் கூட்டமைப்பைத் தெரிவுசெய்வதில் அவர்களுக்கு பெரிய பிரச்சினையொன்றும் இருக்கவில்லை.

இதேநிலைமை தான் இன்றுமுள்ளதை மறுக்கவும் முடியாது.

ஆனால், தங்களது பலம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக கூட்டமைப்புக்கு வழங்கிய ஏகோபித்த ஆதரவு தமக்காக குரல்கொடுக்கும் இன்னொரு தரப்பை பலவீனமாக்கி வருவதை பொறுத்துக்கொள்ளமுடியாத நிலை இன்று தமிழ் மக்கள் மத்தியில் புதிய கரிசனையாக எழுவதைக் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் காணமுடிகிறது.

இந்த கரிசனையின் ஊடாக கூட்டமைப்பின் கடந்தகால நடவடிக்கைளின் மீதான விமர்சனப் பார்வைகளும், காரசாரமான ஆய்வு அனுமானங்களும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.

2009 வரையான தமிழரின் இராச்சியத்துக்கு பெரும் துரோகத்தினால் ஏற்படுத்தப்பட்ட வீழ்ச்சி, தமிழ் மக்களைப் பொறுத்தவரை எவரையும் எளிதில் நம்புவதற்கான மனத்திடத்தை அப்போது கொடுக்கவில்லை. ஆகவே, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கமானது தமிழ் மக்களுக்கு அப்போது உறுதியான நம்பிக்கையை கொடுக்கவில்லை. அத்தியாவசியம் மிக்க தங்களது ஒற்றுமைக்கு அப்பால் சென்று ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொள்வதற்கான துணிவையும் வழங்கவில்லை.

எதிர்த்தரப்பில் கோலோச்சிக்கொண்டிருந்த சிங்கள பௌத்த பேரினவாத சக்தியின் முழுவடிவமான மகிந்தவின் பலத்தை சமன்செய்வதற்கான சுயபலத்தை தங்களுக்குள் திரட்டிக்குவிப்பதற்கான அரசியல்தளமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்திக்கொண்டனர் தமிழ் மக்கள்.

இவையெல்லாம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தமிழ் மக்களிலிருந்து சற்று அன்னியப்படுத்தியே வைத்திருந்தது.

ஆனால் இன்று –

தொடர்ச்சியான அரசியல் பாரம்பரியத்தினால் அதிருப்திக்குள்ளாகி அதிலிருந்து மாற்றுத்தலைமைகளுக்காக தாகம் கொள்ளும் வழமையான தேடல்கள் செறிந்த களமாக தமிழ் தேசிய அரசியல் நீரோட்டம் சற்று தெளிவடைந்திருப்பதை பார்க்கமுடிகிறது.

இந்த தெளிந்த அரசியல் நீரோட்டத்தில், இம்முறை தேர்தல் சிறிய திருப்பங்கள் நிறைந்ததாக காணப்படுவதை எதிர்வுகூறலாம். இந்த மாற்றங்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான தலைகீழ் மாற்றங்களாக புரட்சியடைவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனாலும், இரு கட்சிப் போட்டிநிலை மிக்க அரசியல் வலுநிலையை இன்றல்ல இனிவரும் காலத்திலும் தமிழ் அரசியல் தளத்தில் உருவாக்குவதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன என்றால் அது மிகையாகாது.

மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி…..!

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122293/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.