ஊர்ப்புதினம்

மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

3 months 1 week ago

மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

news-05-300x200.jpg

செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் இருவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியாவிற்கான இலங்கை தூதுவரால் இருவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

குறித்த இருவரும் தற்போது ஜிபுட்டியில் தங்கியுள்ளனர்.

சீனாவிலிருந்து ஜெட்டா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த True Confidence வணிகக் கப்பல் மீது யேமன் நேரப்படி நேற்று முன்தினம் (07) காலை 11.30 அளவில் ட்ரோன் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலால் கப்பலின் கட்டுப்பாட்டு அறையை அண்டிய பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் யேமனிலுள்ள ஏடன் துறைமுகத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. 23 பேரைக் கொண்ட பணியாளர்கள் கப்பலில் இருந்துள்ளதுடன், அவர்களுள் நால்வர் கடுமையான தீக்காயங்களுக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த கப்பலில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் இருந்துள்ளதுடன், அவர்களில் இருவர் இலங்கையர்களாவர். நேபாள பிரஜை ஒருவரும் அதில் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வியட்நாம் பிரஜைகள் நால்வர், பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 15 பேர், இந்திய பிரஜை ஒருவரும் குறித்த கப்பலில் இருந்துள்ளனர். கப்பலில் இருந்த பணியாளர்கள், இந்திய கடற்படைக்கு சொந்தமான கொல்கத்தா போர்க் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/295098

பொருளாதார நெருக்கடியினால் நாட்டை விட்டு வெளியேறும் அரசியல்வாதிகள்

3 months 1 week ago

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம்காட்டி  தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளிநாடு செல்ல எத்தனிக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றிற்கு மீண்டும் தெரிவாகும் சாத்தியப்பாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சிப்பதற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற எத்தனிப்பதாக சபநாயாகர் 

 

இதேவேளை, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளிறேத் திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என நாடாளுமன்றில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டமொன்றில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியினால் நாட்டை விட்டு வெளியேறும் அரசியல்வாதிகள் | Parliment Mps Trying To Move Aboroad

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி நாடாளுமன்ற பதவி விலகியிருந்தார்

மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்ன பதவி விலகி கனடா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/parliment-mps-trying-to-move-aboroad-1709954375

போசணை குறைப்பாட்டினால் 410,000 பெண் பிள்ளைகள் உடல் எடை குறைந்திருப்பதாக ஆய்வில் தகவல்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   09 MAR, 2024 | 02:38 PM

image

இலங்கையில் 5 முதல் 19 வயது வரையிலான 410,000 பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள்  போசணைக் குறைபாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது, 

பிரித்தானிய ‘லான்செட் மெடிக்கல் ஜர்னல்’ இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது.

உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் வீதம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக  இலங்கையில் உள்ளது.

199 நாடுகளில் 22 கோடி பேரிடம் சுமார் 1,900 ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உடற் திணிவுச் சுட்டி (உயரத்திற்கான எடை) முக்கிய அளவுகோலாக எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரது உடலினது உயரத்திற்கு பொருத்தமான நிறை எவ்வளவு என்பதை கணித்தல் உடற் திணிவுச் சுட்டி ஆகும்.

1990-2022 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  போசணைக் குறைப்பாட்டால் பாடசலை பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டு மன்றி, மனவளர்ச்சி குன்றும் ஆபத்தில் உள்ளனர். எனவே இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில்  மனவளர்ச்சி குன்றிய  பிள்ளைகளின் தலைமுறை உருவாகும்.

போசணை குறைபாடு காரணமாக  பிள்ளைகளிடையே  என்சைம்கள் மற்றும் ஹோர்மோன்களின் உற்பத்தி  பலவீனமடைந்து நாளாந்த உடல் செயல்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட வழிவகுக்கிறது. அத்தோடு சிறுவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.

போசணைக் குறைப்பாடு நெருக்கடி மனவளர்ச்சி குன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது நாட்டில் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய கல்வி கற்ற  மற்றும் புத்திசாலி இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும்.

நாட்டில் 17.8 சதவீத ஆண் பிள்ளைகள் தங்கள் வயதுக்குக் குறைவான எடையுடன் உள்ளனர். அதாவது 450,000 ஆண் பிள்ளைகள்  உள்ளனர்.

அதன்படி, நாட்டில் மொத்தமான 860,000 பாடசாலை மாணவர்கள்  எடை குறைவாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

https://www.virakesari.lk/article/178307

2,100 நாட்களை கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்

3 months 1 week ago
09 MAR, 2024 | 02:58 PM
image

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு தாம் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அந்த அலுவலகத்தின் அதிகாரிகள் தமிழ்த் தாய்மாரிடம் கட்டாயப்படுத்தி தகவல்களை பதிவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவிக்கின்றார்.

IMG_20240308_11373122.jpg

இது தொடர்பாக அவர் கூறுகையில், 

“ஓ.எம்.பி. அலுவலகத்துக்கு எதிராக நாங்கள் எதிர்த்து போராடுகின்றபோது கச்சேரி ஊடாக வலுக்கட்டாயமாக கடிதம் அனுப்பியிருக்கின்றார்கள். அந்த கடிதத்தின் ஊடாக அவர்கள் வராத பட்சத்தில் அவர்களை வீடு வீடாகச் சென்று அந்த பதிவுகளை  மேற்கொண்டு அவர்களுக்கு வாகனத்தை அனுப்பி ஏற்றி அவர்களுக்கான பதிவுகளை மேற்கொண்டு இந்த சர்வதேசத்தையும் ஏமாற்றி எமது உறவுகளையும் ஏமாற்றிக்கொண்டுதான் இவர்கள் இந்த அலுவலகம் ஊடாக பணியாற்றுகின்றார்கள்” என்றார். 

சர்வதேச மகளிர் தினமான நேற்றைய தினம் (08) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்ட பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்தனர்.

IMG_20240308_11372913.jpg

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுபடுத்தியும், மகளிர் தினத்தை துக்க தினமாக அறிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் தென்பகுதியில் இருந்து வருகை தந்த மதகுருமார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இணைந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் “இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்”, “நீதி தேவதை ஏன் கண்மூடிவிட்டாய்”, “சர்வதேசமே இன்று பெண்கள் தினமா, பெண்கள் ஒடுக்கப்படும் தினமா?”, “முடிவில்லா துயரம் தான் தமிழ் தாயின் தலைவிதியா”, “55ஆவது தொடரிலாவது எமக்கு நீதி கிடைக்குமா”, “கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும்” போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

IMG_20240308_11371615.jpg

இதில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி, மகளிர் தினமான இன்றைய தினத்தை (நேற்றைய தினம்) துக்க தினமான அனுஷ்டிப்பதாகவும், அடுத்த வருடத்திலாவது மகளிர் தினத்தை சுதந்திரமாக கொண்டாடும் வகையில் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,  முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இது போன்றதொரு நாளில் தமது தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

பாதுகாப்புத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், சரணடைந்த நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைத் தேடி தமிழ்த் தாய்மார் ஆரம்பித்த இந்த போராட்டம் இன்று 2,210 நாட்களை எட்டியுள்ளது.

எனினும், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்பினரோ இதுவரை பதிலளிக்கவில்லை.  

IMG_20240308_11370503.jpg

https://www.virakesari.lk/article/178309

‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் நிதி நெருக்கடியிலுள்ள மாணவர்களுக்கு பெரும் உதவியாக அமையும்

3 months 1 week ago
aravindakumar.jpg

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தியலுக்கு அமைய 2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட “ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்” திட்டம் பொருளாதார நெருக்கடியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு புதிதாக 20 வலயக் கல்வி அலுவலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

2024/2025 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்ட ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில்’ திட்டம் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் ஆதரவை வழங்கும் என்பதைக் கூற வேண்டும். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, கல்வியில் திறமை காட்டினாலும், கல்வியைத் தொடரும் வாய்ப்பை இழக்க, குடும்ப வருமானம் இன்மை ஒரு காரணமாக இருக்கக் கூடாது. எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

மேலும், கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளோம். பாடசாலையில் தரம் 13 இல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12 இல் நடத்த எதிர்பார்த்துள்ளோம். மேலும், தற்போது தரம் 11 இல் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10 இல் நடத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிப்பதில் பட்டதாரிகளாக இளம் வயதிலேயே பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதும் அவர்களுக்கு முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்.

மேலும், முதலாம் தரத்திற்கு முன்னதாகவே சிறு குழந்தைகளுக்கு (Pre – Grade) வகுப்புகளைத் தொடங்கவும் தயாராக உள்ளோம். இன்று பிறக்கும் குழந்தைகள் எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நாடு முழுவதும் சுமார் 100 வலயக் கல்வி அலுவலகங்கள் உள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் கல்வித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பாடசாலைக் கல்வியின் தரத்திற்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்பதை குறிப்பிட வேண்டும். பாடசாலைக் கல்விக்காக பல பாடசாலை இணைத்து ஒரு கொத்தணிக் கல்வி முறையை அறிமுகப்படுத்த உள்ளோம்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஆசிரியர்கள், அதிபர்களும் நியமிக்கப்பட உள்ளனர். தற்போதுள்ள அதிபர் தர வெற்றிடங்களுக்குத் தேவையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/295049

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்துக்கு அபராதத்துடன் சீல்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   09 MAR, 2024 | 10:43 AM

image

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று, குறித்த உணவகத்தையும் சீல் பண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது. 

சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகரான செ. பிரின்சன் தலைமையில் உணவகங்களில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , 180 கிலோ பழுதடைந்த ரொட்டிகள் , 05 கிலோ இடியப்பம் மற்றும் 08 கிலோ பிட்டு என்பவற்றை பொலித்தீன் பைகளில் கட்டி குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை கண்டறியப்பட்டது. 

குறித்த உணவகத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உணவாக உரிமையாளருக்கு 73ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று  உணவகத்தை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டது. 

அதேவேளை, பழுதடைந்த இறைச்சி மற்றும் இறால் ஆகியவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உணவக உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும், பழுதடைந்த இறைச்சி ரொட்டியை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உணவகத்தை சுத்தமின்றி பேணிய மற்றுமொரு உணவக உரிமையாளருக்கு 33 ஆயிரம் ரூபாய் தண்டமும் நீதிமன்று விதித்துள்ளது. 

அதேவேளை மல்லாகம் நீதவான் நீதிமன்று நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட 06 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சுமார் 03 இலட்ச ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ள நிலையில், சில உணவகங்களை சீல் வைத்து மூடுமாறும் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

5__5_.jpeg

5__8_.jpeg

5__6_.jpeg

https://www.virakesari.lk/article/178302

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்

3 months 2 weeks ago
kanchana-wijesekera-300x200.jpg

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

2024 மார்ச் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்தது. 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது. 31 – 60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளது. 60 – 90 அலகுளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு 30% கடடண குறைப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 – 180 இடையிலான பாவனையாளர்களுக்கு 24% இனால் கட்டண குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், 180 அலகுகளுக்கு மேலான வீட்டு பாவனையாளர்களுக்கு 18% கட்டண குறைப்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு 33% கட்டண குறைப்பும் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளுக்கு 18% கட்டண குறைப்பும் அரச துறைக்கு 23% கட்டண குறைப்பும் தனியார் துறைக்கு 22% கட்டண குறைப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அதற்கு நிகராக உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியாக உள்ளது. பொது சேவைகளில் ஈடுபடுவோரால் மக்களுக்கு பெருமளவான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் . அதனை மின்சார சபையோ அல்லது அமைச்சுக்களோ செய்ய முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும், அண்மைக் காலமாக கிடைத்த பெரும் மழைவீழ்ச்சியின் காரணமாக, மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை குறைந்துள்ளது. அதன் பலனாக 2022 ஆம் ஆண்டின் 270 பில்லியன் ரூபா இழப்பீட்டையும் அதனால் சரிசெய்ய முடிந்தது. இருப்பினும் இருள் யுகத்தில் கிடந்த நாடு பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதன் பலனாகவே மின்சார கட்டணத்தை குறைக்க முடிந்துள்ளது.

அதனால் மின்சார உற்பத்திச் செலவு பெருமளவில் குறைவடைந்துள்ளதோடு, அதேபோலு மூன்றிலக்க பெறுமதியாக காணப்பட்ட வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமையும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், இந்திய கடனின் கீழ் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களில் முதல் பகுதியைக் கொண்டு, பாடசாலைகள், பாதுகாப்பு முகாம்கள், பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் மின்சாரம் பெறுவதற்கு சூரிய சக்தி படலங்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மின் கட்டணத்தை மேலும் குறைக்க, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது தற்போது அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதை விடுத்து குறைந்த செலவிலான மாற்று முயற்சிகளுக்கு செல்ல வேண்டும்.

2025 ஆம் ஆண்டில் சியாம்பலாண்டுவ மின் உற்பத்தித் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நூறு மெகாவோட் மின்சாரத்தை 25 – 26 ரூபாய்க்கு பெற்றுகொள்ள முடியும். இதேபோன்ற பல பாரிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் எம்மோடு இணைந்துகொண்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய முதலீட்டாளர்களுக்காக 10 காற்றாலை மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியை மையமாக கொண்டு 50 மெகாவாட் காற்றாலைக்கான விலைமனு அடுத்த வாரம் கோரப்படும்.

மேலும் உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையினையும் மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மாற்றங்களை உரிய தரப்பினரும், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பான 46 திருத்தங்களுடன் கூடிய சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும் என அமைச்சர்  தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/294967

எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்! : முல்லைத்தீவில் தபால் அட்டை மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை அனுப்பிவைப்பு

3 months 2 weeks ago
08 MAR, 2024 | 06:14 PM
image

நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக 'எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்' எனும் தொனிப்பொருளில் வட மாகாண ரீதியாக முப்படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகிறது. 

வட மாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி, அந்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், காணிகளின் உரிமையாளர்கள் தமது காணியின்றி வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். 

மக்களின் காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினர், அந்த காணிகளை விடுவித்து, மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் காரியாலயத்துக்கு ஐயாயிரம் தபால் அட்டைகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல்வேறு காணிகளை சேர்ந்த மக்களை இணைத்து ஜனாதிபதிக்கான தபால் அட்டையை அனுப்புவதற்கான பணிகள் நேற்று (07) மேற்கொள்ளப்பட்டன. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற முக்கியமாக கேப்பாப்புலவு வட்டுவாகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமது காணிகள் முப்படைகளினால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் உள்ள மக்களை இணைத்து இவர்களினூடாக தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. 

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முன்னதாக காணி உரிமையாளர்கள் மெசிடோ நிறுவன பிரதிநிதிகள், சூழலியல் மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் காணியை இழந்த மக்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

அதனைத் தொடர்ந்தே, தபால் அட்டைகளை பூர்த்தி செய்த மக்கள் முல்லைத்தீவு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று, அங்கு தபால் அட்டைகளை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர். 

received_781924637176048.jpeg

received_373696705432569.jpeg

received_318033964617072.jpeg

received_279203015205321.jpeg

received_421763727065971.jpeg

received_704431481601889.jpeg

received_767836758613313.jpeg

received_1468730270663880.jpeg

https://www.virakesari.lk/article/178281

வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது

3 months 2 weeks ago

Published By: VISHNU   08 MAR, 2024 | 09:23 PM

image

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்று வெள்ளிக்கிழமை (08) மாலைவேளையில் நடைபெற்றுகொண்டிருந்த போது சற்று பதற்றநிலை அதிகரித்தது. இதனால் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

2.png

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுகொண்டிருந்த போது பொலிஸார் மாலை ஆறுமணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் தொடர்ந்தும் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழநிலை ஏற்பட்டது.

அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளி்ட்ட பலர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் வழிபாடுகளில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/178290

107 வயதான முதியவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   08 MAR, 2024 | 02:44 PM

image
 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (07) சுகயீனம் காரணமாக  உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினைச் சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

1917ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார். இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.  இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/178254

கொழும்பு, யாழ் உட்பட பல நகரங்களில் காற்று மாசுபாடு : வானிலை அவதான நிலையம்!

3 months 2 weeks ago
கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை மோசம் : வானிலை அவதான நிலையம்!
08 MAR, 2024 | 01:49 PM
image

கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரில் காற்றின் தர சுட்டெண் 158 (பி.எம்.2.5) எனவும் சுட்டெண் மேலும் மோசமடைந்தால், கடுமையான அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பைத் தவிர அக்குறணை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வளி மாசு நிலைமை மோசமாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/178248

சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

3 months 2 weeks ago
sajith-premadasa-opposition-leader-5-675 சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க முயன்றதாக இரா. சாணக்கியன் எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை குறித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சாணக்கியன் பிரதமரைச் சந்திக்கச் சென்ற வேளை, அவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்குதல் நடத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது.

ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், உடல் ரீதியான காயங்களையோ அல்லது தாக்குதலையோ மேற்கொள்ள எந்த உரிமையும் இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளே பாதுகாக்கின்றமையினால், இது குறித்து கவனம் செலுத்தி, அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இது தொடர்பில் முறையான விசாரணையையும் நடத்த வேண்டும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1372640

வெடுக்குநாறி ஆலய பூசகரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!

3 months 2 weeks ago
vedukku-naari.jpg வெடுக்குநாறி ஆலய பூசகரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!
சிவராத்திரியை முன்னிட்டு பூஜைக்கான நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகரையும், நிர்வாகசபை உறுப்பினரையும்  நேற்று   நெடுங்கேணி பொலிஸார் கைது செய்திருந்தனர்.
 
இந்நிலையில் அவர்கள் இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் சங்குக் கடத்தலில் ஈடுபட்ட தேரர் கைது!

3 months 2 weeks ago
sangu-750x375.jpg மட்டக்களப்பில் சங்குக் கடத்தலில் ஈடுபட்ட தேரர் கைது!  

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளைக்  கடத்தி வந்த தேரர் உட்பட இருவர் கல்குடாவில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள்  கல்குடா பொலிஸாரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் கல்குடா பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2024/1372655

ஒரு தரப்பினருக்கு பக்க சார்பாக நடந்து கொள்ள முடியாது!

3 months 2 weeks ago
ஒரு தரப்பினருக்கு பக்க சார்பாக நடந்து கொள்ள முடியாது!
 
 



யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் சமூகமளித்திருந்தார் அவர் ஒரு பக்க சார்பான நிலையினை மேற்கொண்டதை என்னால் காணக் கூடியதாக இருந்தது என வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை தொழிலாளர் குழுமத்தின் போசகர் நவரத்தினம் கோபி கிருஷ்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களுக்கான பிரதிநிதி பொதுமக்கள் சேவை முடக்கப்பட்டு கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். போக்குவரத்து சேவை என்பது அத்தியாவசியமான ஒரு சேவை. முடக்கம் ஏற்பட்டு கொண்டிருந்த பொழுது பொலிஸார் மூலம் அதனை நிவர்த்தி செய்யாமல், அவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களையும் மேற்கொண்டனர்.

பொதுமக்கள் பிரதிநிதி என்பவர், பொது மக்களுக்கு சார்பாக பொதுமக்களுக்கு ஏற்ற முறையில் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும், ஒரு தரப்பினருக்கு பக்க சார்பாக நடந்து கொள்ள முடியாது. இது அங்கஜன் இராமநாதனின் வாக்கு வங்கிக்கான ஒரு வேட்டையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

எங்களைப் பொறுத்தவரை இலங்கை போக்குவரத்து சபை என்பது மக்களுக்கு ஒரு சேவை செய்யும் ஒரு சபை. கடந்த காலங்களில் இது அரசியலாக மாறி உள்ளது. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் ஒவ்வொரு கட்சிகளுடன் சேர்ந்து தமது போராட்டங்களை மேற்கொள்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சார்பாக இல்லை. அவர்கள் தங்களுடைய வாக்குவங்களை எவ்வாறு நிரப்பிக் கொள்ளலாம் என்பதை யோசித்துக் கொண்டுள்ளனர்.

அன்றைய தினம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து சாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைப் போராட்டம், பக்கபலமாக நின்றது. அங்கஜன் ராமநாதன் என்று எல்லோரும் கூறிக் கொள்கின்றனர், அங்கு நின்ற ஒரு சில போலீஸ் உத்தியோகத்தர்களும் கடமையிலே சரியாக முறையில் மேற்கொள்ளவில்லை.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் என்பது தனிப்பட்ட சொத்து அல்ல. இது மக்களுடைய சொத்து. மக்கடே சொத்தினை கடந்த 50 வருடங்களாக இலங்கை போக்குவரத்து சபை பாவித்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த பேருந்து நிலையம் ஆனது, இந்த இடத்திலிருந்து எங்கும் நகர்த்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை. எங்களுடைய சேவைக்குள் எந்த ஒரு தனியாரும் உள் வருவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு திணிப்புகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால், மாவட்டம் தவிர்ந்து அல்லாமல் மாகாணம் தவிர்ந்து அல்லாமல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்வோம்.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை மேற்கொள்வது நாங்கள் அல்ல. இலங்கை போக்குவரத்து சபை குழுவினருக்கு எதிராக, இந்த ஒரு அரச அதிகாரியாக இருந்தாலும் சரி அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பொதுமக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாக கருதி, நாங்கள் வலுக்கட்டாயமாக போராட்டத்தில் இறங்காமல் இது மக்களுடைய பிரச்சினைகளை யார் ஏற்படுத்தினார்களோ அவர்களை அதற்கு பொறுப்பு கூற வேண்டும். நாங்கள் முற்கூட்டியே கூறிக் கொள்ளுகின்றோம், மத்திய பேருந்து நிலையத்தை விட்டு நாங்கள் போகப்போவது இல்லை, அதேபோல் தனியார் துறையினர் எங்களுடன் இணைந்து செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

எங்களுடைய போராட்டம் நியாயமானது, பொது மக்களுக்கு நாங்கள் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். மத்திய பேருந்து நிலைய பிரச்சனையை, அரசியல் ஆக்கவே ஒரு சிலர் எதிர்பார்த்துள்ளனர். அரசியலை தவிர்த்து பொதுமக்களுக்கு சேவை செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, குறித்த அரசியல்வாதிகளிடம் நீங்கள் கூறிக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

 

-யாழ். நிருபர் பிரதீபன்-
 

https://tamil.adaderana.lk/news.php?nid=184839

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரிப்பு

3 months 2 weeks ago
07 MAR, 2024 | 04:59 PM
image
 

நாட்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவரும் நிலையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த 2022 ஆம் ஆண்டில் 1,232 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ள நிலையில்  2023 ஆம் ஆண்டில் 1,497 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்களில் 16 வயதுக்குட்பட்ட 110 முதல் 112 வரையிலான சிறுமிகள் கருத்தரித்துள்ளனர்.

நீதிமன்றில் பதிவாகியுள்ள வழக்குகள் அடிப்படையில் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகளவில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகி வருவதாக தெரியவருகிறது.

இந்நிலையில், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர்களில் சிலர் அவர்களது தண்டனை காலம் முடிவைந்த பின்னர் மீண்டும் சமூகத்திற்குள் வந்து அந்த தவறுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.

ஆகவே இவ்வாறு தண்டனை பெற்று மீண்டும் சமூகத்திற்குள் வரும் நபர்களிடம் இருந்து சிறுமிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 16 வயதுக்குட்பட்ட 112 சிறுமிகள் கருத்தரிப்பு | Virakesari.lk

இலங்கையில் நாளாந்தம் 3 பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்! -டாக்டர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க

3 months 2 weeks ago

Published By: VISHNU

07 MAR, 2024 | 07:37 PM
image
 

 

இலங்கையில் வருடாந்தம் 1,095 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும் 5,475 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் டாக்டர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க கூறுகிறார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டியில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இந்திரா ஜயசூரிய புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு 8 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மார்பகப் புற்றுநோயால் எமது நாட்டில் தினமும் மூன்று பெண்கள் உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார்.

இலங்கையில் நாளாந்தம் 3 பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்! -டாக்டர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க | Virakesari.lk

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 22 இந்தியர்கள் தலங்கமவில் கைது!

3 months 2 weeks ago

Published By: VISHNU    07 MAR, 2024 | 07:49 PM

image

கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 22 இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 35 மொபைல் போன்கள் மற்றும் 5 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்திய தூதரகத்தின் அதிகாரி ஒருவர்  பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், தலங்கம நாகஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178205

கத்தரிக்காயில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள்

3 months 2 weeks ago

சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய ஆய்வில், சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய கத்தரிக்காய் மாதிரிகளில் 23 சதவீதம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

எனவே காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்ந்த நீரில் கழுவுவதற்குப் பதிலாக, வினிகர் அல்லது உப்பு சேர்த்து கழுவ வேண்டும். இதன் மூலம் இரசாயனங்களை அகற்ற முடியும். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களின் வெளிப்புற தோலை அகற்றுவதன் மூலம் உணவில் உள்ள நச்சு இரசாயனங்களை எளிதில் அகற்ற முடியும் என்று ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். ஏ. அபேசுந்தர தெரிவித்துள்ளார்.

அருண

https://thinakkural.lk/article/294783

மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் - அருட்தந்தை எஸ்.மாக்கஸ்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   07 MAR, 2024 | 03:49 PM

image

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று வருகின்றது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வியாழக்கிழமை (7) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையின் காரணமாக கடல் வளம்  சுறண்டப்படுவதினால் எமது மீனவர்கள் வாழ முடியாத நிலை காணப்படுகிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதும் இதற்கு எவ்வித முடிவும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் முன் நின்று குரல் கொடுத்து வருகிறோம்.

இலங்கை  கடற்பரப்பினுல் ஆயிரக்கணக்கான இந்திய இழுவைப்படகுகள் வந்து மீன் வளங்களை அழிப்பதோடு, மீனவர்களின் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றது. இதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம் பெறுகின்றது.

மன்னார் தீவை பாதுகாக்க மன்னார் மாவட்ட மக்கள் எம்முடன் கைகோர்த்துள்ளனர். வளம் நிறைந்த மன்னார் மண்ணை வளமற்ற நிலமாக  மற்ற அந்நிய சக்திகள் முயற்சிக்கின்றது.

கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று வருகின்றது.

எனவே மக்களை பாதிக்கும் குறித்த நடவடிக்கைகள் மன்னார் தீவு பகுதியில் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/178171

Checked
Sun, 06/23/2024 - 02:23
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr