புதிய பதிவுகள்2

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 days 2 hours ago
ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடாது Published By: Vishnu 01 Feb, 2026 | 09:29 PM (நெவில் அன்தனி) இந்த வருட ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் எனவும் ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. சுமார் ஒரு வாரம் நீடித்த நிச்சயமற்றத் தன்மைக்கு பின்னர் பாகிஸ்தான் அரசாங்கம் தனது அணியை ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற அனுமதிக்க இன்று முடிவுசெய்தது. ஆனால், பெப்வரி 15ஆம் திகதி இந்தியாவை எதிர்த்தாடாமல் இருக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. தனது பரம வைரியான இந்தியாவை பி குழுவுக்கான முதலாவது சுற்றில் பாகிஸ்தான் எதிர்த்தாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. 'ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் பங்குபற்றுவதற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக பெப்ரவரி 15ஆம் திகதி அட்டவணை படுத்தப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் இறங்காது' என பாகிஸ்தான் அரசாங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து பங்களாதேஷ் விலகியதை அடுத்து ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் நிலை தோன்றியதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிபை கடந்த திங்களன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி சந்தித்தார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விடயம் குறித்து பிரதமரிடம் விளக்கியதாக இந்த சந்திப்பின் பின்னர் குறிப்பிட்ட நக்வி, இது தொடர்காக வெள்ளிக்கிழமை அல்லது திங்களன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்தை இணைத்ததை அடுத்து பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது. அயல் நாடுகளான இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அரசியல் உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணத்தைக் காட்டி இந்தியாவுக்கு செல்ல முடியாது என பங்களாதேஷ் அறிவித்தது. அதன் பின்னர் பங்களாதேஷுக்கு பதிலாக உலகக் கிண்ணத்தில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டதாக ஜனவரி 24ஆம் திகதி ஐசிசி அறிவித்தது. தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை நிராகரித்த ஐசிசி, உலகக் கிண்ணப் போட்டி நெருங்கிவரும் நிலையில் இடத்தை மாற்றுவதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/237579

பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?

3 days 3 hours ago
பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் ஒரு அறிவிப்பால் ஆட்டம் கண்ட பங்குச்சந்தை பட மூலாதாரம்,Getty Images 1 பிப்ரவரி 2026, 08:30 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரை பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நிதி அமைச்சரின் உரை முடிவடைவதற்குள், பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் (Sensex) 2,000 புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி 500 புள்ளிகள் வரை சரிந்தது. பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்தின் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை (STT) அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டதே இந்த எதிர்வினைக்குக் காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை இயங்குவது மிகவும் அரிதான ஒன்றாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தை இன்று இயங்கியது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் முதல் கல்வி மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்னைகள் வரை சில முக்கியமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ஆனால் அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பு பங்குச் சந்தைகளை ஆட்டம் காணச் செய்தது. மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி, ஃபியூச்சர்ஸ் ((Futures) மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்கிறது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு காணப்பட்டது. எஸ்டிடி என்றால் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் எஸ்டிடி என்பது 'பங்குப் பரிவர்த்தனை வரி' (Securities Transaction Tax) என்பதைக் குறிக்கும். இது பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் விதிக்கப்படுகிறது. ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். எஃப் அண்ட் ஓ மீதான எஸ்டிடி 0.02% ஆக இருந்தது. இப்போது அதனை 0.05% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. எஸ்டிடி என்பது அடிப்படையில் மற்ற வரிகளிலிருந்து தனித்துவமானது. வருவாய் ஈட்டவும், நிதிச் சந்தைகளில் நிலைத்தன்மையை அதிகரிக்கவும் பங்குப் பரிவர்த்தனைகள் மீது இந்த வரி விதிக்கப்படுகிறது. இது முற்றிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலானது, அதாவது சம்பந்தப்பட்ட தனிநபர் பங்குப் பரிவர்த்தனையில் லாபம் ஈட்டினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு எஸ்டிடி வரி விதிக்கப்படும். வருமான வரி தொடர்பான அறிவிப்பு பட மூலாதாரம்,SANSAD TV படக்குறிப்பு,மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். வருமான வரித் தாக்கல் (ITR) தொடர்பான காலக்கெடு மற்றும் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐடிஆர்-1 (ITR-1) மற்றும் ஐடிஆர்-2 (ITR-2) படிவங்களைத் தாக்கல் செய்பவர்கள் இனி ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இந்த முறை வருமான வரி வரம்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பின் கீழ், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. சம்பளதாரருக்கான நிலையான கழிவு ₹75,000 ஆகும். எனவே ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இருக்காது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14rdlv87npo

ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! ,

3 days 4 hours ago
ஒரு யாழ்பாண யூடியூப் காரனுக்கு இருக்கிற பிரச்சினையையும் மன அழுத்தத்தை யும் விடவா உலகத்திலே உங்களுக்கு வேற பிரச்சினை இருக்கப் போகிறது! உதாரணமா பார்த்தீங்க என்றால், * ஒரு மாடு 3 கன்று குட்டி போட்டால் * டிராகன் ஃப்ரூட்டில் ஜூஸ் அடித்து விற்றால் * எங்கேயாவது புதிய சாப்பாடு கடை புடவை கடை திறந்தால் * கனடா அண்ணா கனவு மாளிகை கட்டினால் * கோவில் திருவிழாவுக்கு யானை வந்தால் *யாழ்ப்பாணம் ஏர்போர்ட்டுக்கு பாட்டுக்காரர்கள் வந்தால் தனித்தீவில் ஒரு ஐயா வசித்து வந்தால் செக்கில எண்ணெயை ஆட்டினால் *செம்மறி ஆட்ட தெருவில கொண்டு போனா * அனுர அரைக்காச்சட்டையோட அளவெட்டியில நடந்து போனா என்று நிம்மதியே இல்லாமல் ஓடி திரிந்து வீடியோ எடுத்து போட்டு உழைக்கணும் !! இதைவிட மேலாக, பிள்ளைகளை வைத்து வீடியோ எடுத்து அதுகளையும் சாப்பிட விடாமல் 10 டேக் படம் எடுத்து, பாடா படுத்தி தாங்களும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறதுகளை விடவா உங்களுக்கு மன அழுத்தவும் கஷ்டமும் இருந்து விடப் போகிறது!! ஏதாச்சும் நல்லதா, விஷயமா, அறிவுபூர்வமா, இல்ல ரசிக்கக் கூடிய ஏதாவது போடுங்கடா!! #அழகியதொருவாழ்வு முகநூலில் பிரதி பண்ணப்பட்டது...நன்றி KB Jeyanthan ·....

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 days 4 hours ago
பாகிஸ்தான் லிளையாடுவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்கள்.

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!

3 days 5 hours ago
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்! ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பான சந்திப்புகளை அவர்கள் தமிழர் தாயகம் எங்கிலும் முன்னெடுத்து வருகிறார்கள். கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், என்று பல்வேறு தரப்புக்களையும் மாணவ பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள். “மாணவர்களே போராட்டத்தின் கூர்முனைகள்” என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறினார்.கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பின் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளி வர்க்கம்தான் போராட்டத்தின் கூர்முனை என்று கருதப்பட்டு வந்த ஒரு பின்னணியில்,கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, ஹெர்பர்ட் மார்க்யூஸ் மாணவர்களே போராட்டத்தின் கூர் முனை என்று கூறினார். ஆனால், தமிழர் தாயகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கும் மாணவ அமைப்பு கிடையாது. மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றி போராட்டத்தை முன்னெடுக்க தேவையான அரசியல் இயக்கங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இப்படிப்பட்டதோர் வெற்றிடத்தில்தான்,கடந்த 16 ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வப்போது உணர்ச்சிகரமாக எழுச்சி கொண்டு போராடியிருக்கிறார்கள்.கடந்த 16ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் வீரமாகப் போராயிருக்கிறார்கள்.அரசியல் கைதிகளுக்காக,நினைவு கூரும் உரிமைக்காக,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக….என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடியிருக்கிறார்கள். “எழுக தமிழ்கள்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டம்” போன்றவற்றின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் அவ்வாறு போராட்டத்தை ஒருங்கிணைக்கும்போது கட்சிகளும் உற்சாகமாக களத்தில் இறங்குகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான பேரெழுச்சிகளைக் காண முடியவில்லை.ஒரு மக்கள் இயக்கம் இல்லாத அரசியற் சூழலில்,பல்கலைக்கழக மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாகச் செதுக்கியெடுக்கும் சக்தி எந்தத் தமிழ்த் தேசியக் கட்சியிடமாவது உண்டா ? இக்கட்டுரை எழுதப்படுகையில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஆகிய மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.மாவை என்று கூறி யாருடையதோ ஒரு முகத்தைச் செதுக்கி,சிலையாக்கி,திறந்து வைத்திருக்கிறார்கள்.அதைத் தனியே எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக இங்கே எழுத வேண்டியது என்னவென்றால், அந்தத் திறப்பு விழாவில் கட்சியின் பதில் தலைவரோ பதில் செயலரோ அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான்.கட்சியின் பதில் தலைவராகிய சிவஞானமும் பதில் செயலர் ஆகிய சுமந்திரனும் கட்சியின் விவகாரங்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் பின்னணியில், அவர்கள் இருவரையும் புறக்கணித்துவிட்டு சிலை திறக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாவை சேனாதிராஜாவின் நினைவுக் கூட்டத்தில்,நினைவுப் பேருரை ஆற்றியது யார் என்றால் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகும். அண்மையில் அவர் சிவஞானத்தையும் சுமந்திரனையும் கடுமையான வார்த்தைகளால் குற்றம் சுமத்தி விமர்சித்திருந்தார்.அவர் சிவஞானத்துக்கு எதிராக முன் வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியும் என்று சுமந்திரனுக்கு ஆதரவாக எழுதும் “காலை முரசு” பத்திரிகை எழுதியிருக்கிறது. அவ்வாறு சுமந்திரனையும் சிவஞானத்தையும் விமர்சித்த ஒருவரை அழைத்து மாவையின் நினைவு நாளை அனுஷ்டித்ததன் மூலம் கட்சிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் உட்பூசல் நினைவு நாட்களையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. மாவை இறந்தபோது அவருடைய இறுதி நிகழ்விலும் அந்த உட்கட்சிப் பூசல் அசிங்கமாக வெளிப்பட்டது. இப்பொழுது அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் வெளிப்படுகிறது. அதாவது மாவை இறந்து ஓராண்டு கழிந்து விட்டது.ஆனால் கட்சிக்குள் உட்பகை தொடர்ந்து புகைந்து கொண்டேயிருக்கிறது.அந்த உட்பகையை தீர்த்துக் கொள்ள கட்சியால் முடியவில்லை. இரண்டு அணிகளுக்கும் இடையே கட்சி கிழிபடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுமந்திரன் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். அவருடைய அணி அணி சிறீதரனை பெருமளவுக்குச் சுத்திவளைத்து விட்டது. ஆனாலும் கட்சியின் தலைமைத்துவத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர இன்றுவரை சுமந்திரனால முடியவில்லை. உள்ளதில் பெரிய கட்சி இவ்வாறு உட்பகைக்குள் சிக்கி தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.நினைவு நாட்களை அனுஷ்டிப்பதில் மட்டும் அல்ல,அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும்,இந்தியாவைக் கையாளும் விடையத்திலும் இந்த உட்கட்சி பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்டதோர் பின்னணியில்,சுமந்திரன் அணி கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையிலும் உட்கட்சிப் பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துமா தெரியவில்லை. இவ்வாறு உள்ளதில் பெரிய கட்சி,தானே தனக்குள் மோதி, தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளை தமது கோரிக்கைகளை நோக்கித் திரட்டுவார்களா? தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது சாராம்சத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல.அது தமிழ்த் தேசிய வியூகத்தின் ஒரு பகுதி மட்டும்தான். இதயமான பகுதி எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான். தமிழ் மக்களை கட்சி பேதம் கடந்து ஒரு திரளாகத் திரட்டினாலே போதும்.அதுவே பலம். அவ்வாறு திரட்டப்பட்ட மக்கள் தென்னிலங்கைக் கட்சிகள் நோக்கிப் போக மாட்டார்கள்.தேசமாகத் திரட்டப்படாத மக்களே தென்னிலங்கைக் கட்சிகளால் கவரப்படுகிறார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி தன்னிடம் உள்ள பலமான கீழ்மட்டக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு,தானே பெரிய கட்சி, தானே தலைமை தாங்கும் கட்சி என்று கூறிக் கொண்டாலும்,தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தோல்வி அடைந்து விட்டது. அக்கட்சி மட்டுமல்ல எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் தோல்வியடைந்து விட்டன; தங்களை கட்சிகளாகப் பலப்படுத்திக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டன. இவ்வாறு தங்களைப் பலமான கட்சிகளாகத் திரட்டிக் கொள்ள முடியாதவர்கள் எப்படித் தமிழ் மக்களைத் திரட்டுவார்கள்? இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியைப் போன்ற ஒரு பேரெழுச்சியைக் காட்ட தமிழ் மக்களால் கடந்த சில ஆண்டுகளாக முடியவில்லை என்பதுதான் துர்ப்பாக்கியமான ஒர் அரசியல் யதார்த்தமாகும். தையிட்டியில் நடக்கும் கவன ஈர்ப்பு போராட்டங்களைத்தவிர பேரெழுச்சிகள் என்று சொல்லத்தக்க எழுச்சிகளை தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகக் காண முடியவில்லை.இந்நிலையில்,சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, அதுபோன்ற அரச எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாவற்றின் விடயத்திலும், தமிழ்த் தேசிய அரசியலானது கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக ரியாக்ரிவ் ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத்தான் காணப்படுகிறது.ப்ரோ ஆக்ட்டிவாக-செயல் முனைப்புடையதாக இல்லை. அரசாங்கத்தின் நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது ஐநா கூட்டத் தொடர்களை முன்னிட்டு தமிழ் மக்கள் அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபடுகிறார்கள்.ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுவதில்லை. இது முதலாவது பலவீனம்.அவை தொடர்ச்சியானவை அல்ல என்பது இரண்டாவது பலவீனம்.மூன்றாவது பலவீனம்,இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது அவை பதில் வினையாற்றும் அரசியல் நடவடிக்கைகள்தான்.அதாவது தமிழ்த் தேசிய அரசியலை செயல் முனைப்போடு முன்னெடுக்கின்ற புரோஆக்டிவ் ஆன நடவடிக்கைகள் அல்ல. இப்பொழுது கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டமும் அத்தகையது தான்.சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதும் அத்தகையதுதான். இவை போன்ற ரியாக்ட்டிவ் நடவடிக்கைகளின்மூலம் தமிழ் மக்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றுவதில் எவ்வளவு தூரம் வெற்றிபெற முடிந்திருக்கிறது என்ற கேள்விக்கு விடை முக்கியம். தமிழ்த் தேசிய அரசியலானது தொடர்ந்தும் கட்சி அரசியலாக, ரியாக்ரிவ் ஆனதாக காணப்படுகிறது.உள்ளதில் பெரிய கட்சி தானே தன்னைத் தோற்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில், அதை ப்ரோஆக்டிவ் ஆக முன்னெடுக்கும் அரசியல் இயக்கம் எதுவும் அரங்கில் இல்லாத வெற்றிடத்தில்,பல்கலைக்கழக மாணவர்களின் தலையில் அதிகம் பொறுப்பு சுமத்தப்படும் ஓர் அரசியற் சூழலில்,2009க்குப் பின்னரான 16 ஆவது சுதந்திர தினம் வருகிறது. https://athavannews.com/2026/1462539

'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும்

3 days 5 hours ago
இவருக்கு சொல்லிப் போட்டுத் தான் மோடி போயிருப்பாரோ? அல்லது இவரும் சேர்ந்து போனாரோ?

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் –  நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

3 days 5 hours ago
அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு! யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களின் படகொன்று அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களை தமது கடற்பரப்பினுள் இருந்து வெளியேறுமாறு நயினாதீவு கடற்தொழிலாளர்கள் அறிவுறுத்தியும் , அதனையும் மீறியும் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களின் படகுக்கு அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீது கல் வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். அதனை அடுத்து கைத்தொலைபேசியில் “வீடியோ கோல்” ஊடாக இந்திய துணைத்தூதராக அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட , கடற்தொழிலாளர் ஒருவர் , நேரடியாக இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை காண்பித்துள்ளார். அதன் போது படகின் இலக்கத்தினை தூதரக அதிகாரி வினாவிய வேளை , படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்ததனை அவதானித்துள்ளனர். பின்னர் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் காணொளி ஆதாரங்களுடன் முறைப்பாடு ஒன்றினை தூதரக அதிகாரிக்கு நயினாதீவு கடற்தொழிலார்கள் அனுப்பி வைத்துள்ளனர். https://athavannews.com/2026/1462549

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

3 days 5 hours ago
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்! சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் கராப்பிட்டிய மற்றும் வென்னப்புவ பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வென்னப்புவ துறைமுகத்தில் இருந்து சென்ற இலங்கை மீனவ படகுமீது இந்திய கடலோர காவல்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளiமை அண்மையில் தெரியவந்தது குறித்த மீனவர்கள் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மீனவர்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தது போதைப்பொருள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் தாக்குதல் நடாத்தியதாக குறித்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையினை நிறைவு செய்து மீண்டும் இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது இதேவேளை தாம் எதிர்கொண்ட அசம்பாவிதம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கியிருந்ததைடுத்து அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் நால்வர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் வென்னப்புவ பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இந்த அரசுடன் ராஜதந்திரமட்டத்தில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1462572

யார் முருகன் ?  யார் சூரன்? -நிலாந்தன்

3 days 6 hours ago
இந்தப் படத்தைப் பார்த்ததும் அனுராவுக்கு இன்னும் பக்தைகள் வரப் போகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்தால் அனுராவுக்கே சந்தோசமாக இருக்கும்.
Checked
Wed, 02/04/2026 - 19:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed