ஊர்ப்புதினம்

நன்மைகள் இருப்பின் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு அனுமதி - அரசாங்கம்

3 months 2 weeks ago

31 Aug, 2025 | 09:09 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய இனி அனுமதியளிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்  பிமல் ரத்நாயக்க, இதன் போது இந்தியாவா - சீனாவா அல்லது அமெரிக்காவா என்பது எமக்கு முக்கியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது குறித்து தீர்மானிக்க வெளிவிவகார அமைச்சு விசேட குழு அமைத்து கலந்துரையாடி வருகிறது. இவ்வாறான ஆய்வுக்கப்பல்களின் வருகை குறித்து ஏனைய நாடுகள் முன்னெடுக்கும் பொறிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து பொதுவானவொரு திட்டத்தை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சீனா மாத்திரம் அல்ல வேறு எந்தவொரு நாட்டினதும் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதாயின், நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மறுபுறம் இவ்வாறான ஆய்வுக்கப்பல்கள் வரும் போது உலகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதனையும் ஆராய வேண்டும். ஏனெனில் வல்லரசு நாடுகளுக்கு இடையில் போர் சூழலும் போட்டித்தன்மையும் காணப்படுகின்றமை இரகசியமான விடயமல்ல.

எனவே ஏவுகணை தாக்குதல்கள், புவிசார் அரசியல் நலன்கள், ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் கலாசார விஜயங்கள் என பல கோணங்களில் ஆய்வுக்கப்பல்களின் வருகையை கவனத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. எனவே தான் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் வருகையை விசேட கண்ணோட்டத்தில் நோக்குகிறோம்.

இந்த விடயத்தில சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா என வேறுப்படுத்தி பார்க்க விரும்ப வில்லை. இறுதியில் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகளின் அடிப்படையிலேயே ஆய்வுக்கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்ற தீர்மானம் எடுக்கப்படும்.

இலங்கை போன்ற சிறிய நாடுகள் எவ்வாறு உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களை அனுமதிக்கிறது என்ற உலக படிப்பினையுடனான திட்ட வரைபை வெளிவிவகார அமைச்சின் சிறப்பு குழு விரைவில் அமைச்சரவைக்கு சமர்பிக்கும். இதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/223801

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு

3 months 2 weeks ago

செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு

31 Aug, 2025 | 09:09 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டின் தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்க வழிவகுக்காது. எனவே செம்மணி மனித புகைக்குழி விவகாரத்திற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்க போவதில்லை என தெரிவித்துள்ள அரசாங்கம், உள்ளக விசாரணை பொறிமுறைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் மற்றும் வழிகாட்டல்களை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவதில் அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

செம்மணி மனித புதைக்குழி விவகாரம் மற்றும் ஜெனிவா மனத உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.  

ஆவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்பதை 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் முன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்கவை ராஜபக்ஷர்கள் வெளியேற்றிய விதததிற்கு பின்னர் உலகிற்கு எம்மாள் எதுவும் கூற முடியாது போனது.

ஆனால் எமது ஆட்சியில் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்தி உள்ளோம். 2005 ஆம் ஆண்டில் தாரகி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இவ்வகையான சம்பவங்களை மீள் விசாரணைக்கு எடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதி உத்திரவிட்டார்.

பாரின் பின்னர் செய்ய குற்றங்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. நாம் ஆட்சிக்கு வரும் போது செம்மணி மனித புதைக்குழியில் 30 எழும்புக்கூடுகளே கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

அங்குள்ள காவலர்களுக்கும் அரசாங்கமே ஊதியம் வழங்குகின்றது. செம்மணி மாத்திரம் அல்ல, கொக்குத்தொடுவாய், மண்டைத்தீவு, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனித புதைக்குழிகள் இருக்கின்றன. அவற்றை தோண்டும் பணிகளும் ஆரம்பிக்கப்படும். காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மீள நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. எனவே அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்க விரும்புகிறது.  

இந்த புதைக்குழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்ஷர்களே தவிர நாம் அல்ல. சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனித புதைக்குழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளுராட்சிமன்றங்களுக்கும் தெரிவாகியுள்ளனர். எனவே சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு நாட்டில் காணப்படும் போது, சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. எனவே தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணைகள் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்துமே தவிர நீதியை பெற்றுக்கொடுக்காது.

இருப்பினும்  உள்ளக விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுக்கு அனுமதியளிக்க தயாராகவே உள்ளோம். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழிகாட்டல்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தேவைப்படலாம்.

மறுபுறம் சர்வதேச விசாரணைகள் நாட்டிற்குள் வந்ததும், தோல்வியடைந்துள்ள இனவாதிகள் மீள எழுவார்கள். குறிப்பாக ராஜபக்ஷர்கள் இதனை காரணம் காட்டி இனவாத அரசியலை முன்னெடுப்பார்கள். 6 தடவைகள் பிரதமராக இருந்த ரணிலை நீதவான் நீதிமன்றத்தினால் கைது செய்ய முடியும் என்றால் எமது நாட்டின் நீதித்துறை எவ்வாறு உள்ளது என்பதை அனைவராலும் புரிந்துக்கொள்ள முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/223800

300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

3 months 2 weeks ago

30 Aug, 2025 | 05:46 PM

image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம். அரச சேவைக்கு பொறுத்தமற்றவர்கள் சேவையில் இருக்கக் கூடும். அவ்வாறான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

மஹரகம நகரசபையில்  சனிக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

எவராயினும் நேர்மையாக பணியாற்றினால் யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டிய நிலைமை ஏற்படாது. அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையை சரிவர நிறைவேற்றும் பட்சத்தில் நாம் அவர்களை பாதுகாப்போம்.

எவ்வாறிருப்பினும் அரச சேவைக்கு பொறுத்தமற்ற சிலர் இருக்கலாம். பொலிஸில் கூட அவ்வாறானவர்கள் இருக்கக் கூடும். அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த சட்ட விரோத செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பொலிஸாரின் எண்ணிக்கை குறைவாகும். அதற்காக சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபபவர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிக்க முடியாது. இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 300 பொலிஸார் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தவறிழைப்பவர்களை எக்காரணத்துக்காகவும் அரச சேவையில் வைத்திருக்கப் போவதில்லை. அதேபோன்று ஏனைய துறைகளிலும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து பணியாற்றுமாறு சகல அரச உத்தியோகத்தர்களையும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/223794

சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்!

3 months 2 weeks ago

New-Project-68.webp?resize=750%2C375&ssl

சஷேந்திர ராஜபக்ஷவுக்கு 4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்!

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள் முன்னாள் அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு  4000 கோடி ரூபாய்  மதிப்புள்ள சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷவின் மகனான சஷேந்திர ராஜபக்ஷ, அரசியலில் முன்னதாக ஊவா மாகாண சபையின் தலைவராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார்.

அவரிடம், BMW கார், V8 வகை கார், நிஷான் வகை பெட்ரோல் கார் மற்றும் யாரிஸ் வகை கார் போன்ற நான்கு ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளன. இவை மனோஜ் ஏகநாயக்க என்ற எழுத்தாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சஷேந்திர ராஜபக்ஷவிற்கு நுகேகொடை, நாவல வீதியில்  40 கோடி  ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு மற்றும் நிலமும்,  பாலவத்த வீதியில்  11 கோடி ரூபாய்  மதிப்புள்ள வீடும், கொழும்பு 7, ரோஸ்மீட் பிரதேசத்தில் 4 அடுக்கு கொண்ட  55 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீடும், தெஹிவளையில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும்  நாரஹென்பிட்டவில்  20 கோடி ரூபாய்  மதிப்புள்ள நிலமும் இருப்பதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவைதவிர நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான, பத்தரமுல்லையில்  70 பெர்ச் அளவுள்ள ஒரு நிலத்தை, சஷேந்திர ராஜபக்ஷ, தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தவறான ஆவணங்களை உருவாக்கி, தனது பெயரில் பெற்றுள்ளார். அதன் மதிப்பு 70 கோடி ரூபாய்  ஆகும்.

அத்துடன் சீதுவ பிரதேசத்தில் ஒரு வீடு மற்றும் நிலம் 300 கோடி மதிப்பில் சமீபத்தில் விற்கப்பட்டதாகவும், கதிர்காமம் பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சஷீந்திர ராஜபக்ஷவிடம், அவுஸ்திரேலியாவில் சொகுசு வீடுகள் இரண்டு உள்ளன. அவற்றை அங்கு அவரது மகன் கண்காணிக்கிறார் எனக் கூறப்படுகின்றது.

இவை தவிர, சஷேந்திர ராஜபக்ஷவிடம் இன்னும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக ஊகிக்கப்பட்டு வருகிறது. சில சொத்துக்கள் அவர் பெயரிலும், சில நெருக்கமான நபர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முழுமையான விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445387

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

3 months 2 weeks ago

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

August 31, 2025 3:38 pm

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட வேளைகளில் அவர்களின் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி , மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைத்திருந்தனர்.

அவ்வாறு 124 படகுகள் தற்போது மயிலிட்டி மீன்பிடி துறைமுக பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் தனித்தனி வழக்குகளாக நடைபெற்று வரும் நிலைகளில் சில வழக்குகள் முடிவடைந்துள்ளன.

அவற்றின் அடிப்படையில் இதுவரையில் முடிவற்ற வழக்குகளில் 33 படகுகள் அரச உடமையாக்கப்பட்டுள்ளன. மேலும் 07 படகுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏனைய படகுகள் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையிலையே நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மயிலிட்டி துறை முக பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அரசுடைமையாக்கப்பட்ட 33 படகுகளையும் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைத்து அவற்றை அச்சுவேலி தொழில் பேட்டைக்கு எடுத்து செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உரிமையாளர்களிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட 07 படகுகளையும் அதன் உரிமையாளர்கள் கடந்த 25ஆம் திகதி தமிழகத்தில் இருந்து கடற்படையினரின் பாதுகாப்புடன் மயிலிட்டி பகுதிக்கு வந்த தமது படகுகளை பார்த்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/tamil-nadu-fishermens-boats-being-smashed-in-myiliti-ahead-of-presidents-visit/

அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள்

3 months 2 weeks ago

அதிக நேரம் நிகழும் சந்திர கிரகணம் ; காணத்தவறாதீர்கள்

31 Aug, 2025 | 03:51 PM

image

செப்டம்பர் 7 ஆம் திகதி இரவு வானத்தில் முழு சந்திர கிரகணம் தோன்றுவதால், இலங்கையர்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு பார்வையிடும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த அற்புதமான நிகழ்வு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாகத் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் தலைவரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளரும் ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

பூமி சூரியனை சுற்றி வரும் பாதையிலும், சந்திரன் பூமியை சுற்றி வரும் பாதையிலும் சில நேரங்களில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும். 

அப்போது, சூரிய ஒளி பூமியில் விழுந்தாலும் சந்திரன் மீது விழாது. இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு, 

கிரகணம் ஆரம்பம் - இரவு 8:58 (செப்டம்பர் 7) 

பகுதி கிரகணம் ஆரம்பம் - இரவு 9:57 

முழுமையான கிரகணம் - இரவு 11:01 

அதிகபட்ச கிரகணம் - நள்ளிரவு 11:42 

கங்கண கிரகணம் முடிவு - அதிகாலை 12:22 (செப்டம்பர் 8) 

பகுதி கிரகணம் முடிவு - அதிகாலை 1:26 

கிரகணம் முடிவு - அதிகாலை 2:25

https://www.virakesari.lk/article/223852

கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

3 months 2 weeks ago

கோட்டாபய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு

adminAugust 31, 2025

Gotabaya.jpg?fit=650%2C433&ssl=1

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  வாக்குமூலம்   பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியமை  தொடர்பாக முன்னாள்  காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பிலேயே  அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது போதிலும் அவர் அழைக்கப்பட்ட திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2025/219865/

ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது

3 months 2 weeks ago

ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது

adminAugust 31, 2025

0-9.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நபரை கைது செய்யாது தவிர்க்க 20 இலட்ச ரூபாய் இலஞ்சம் வாங்க முற்பட்ட மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மூவர்  காவல்துறையினரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்

மாதகல் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவர் மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தரினால் கைது செய்யப்பட்டார்.   கைதில் இருந்து குறித்த நபரை விடுவிக்க , 30 இலட்ச ரூபாய் பணம் இளைஞனிடம் லஞ்சமாக கோரியுள்ளனர். அதற்கு இளைஞன் சம்மதிக்காது , 20 இலட்ச ரூபாய் கொடுப்பதற்கு சம்மதித்ததை அடுத்து , இளைஞனை விடுவித்து , சங்கானையில் உள்ள மதுவரி திணைக்கள அலுவலகத்திற்கு வந்து பணத்தினை தருமாறு கூறி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து , தன்னிடம் லஞ்சம் கோரிய விடயம் தொடர்பாக இளைஞன் காங்கேசன்துறை பிரிவு குற்றத்தடுப்பு  காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார்.  காவல்துறையினர் குறித்த  இளைஞனுடன் சிவில் உடையில் மதுவரி திணைக்களத்திற்கு சென்று , இளைஞனை ஒரு தொகை பணத்தினை கொடுக்க வைத்து , பணத்தினை பெற முயன்ற மூன்று அதிகாரிகளையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையின ர்  இலஞ்சமாக கொடுக்க முற்பட்ட ஒரு தொகை பணத்தினை  சான்று பொருளாக    மன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

https://globaltamilnews.net/2025/219869/

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி!

3 months 2 weeks ago

sattama-athibar.jpg?resize=461%2C296&ssl

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் அதிருப்தி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் அண்மைய அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்து தெரிவித்த  கருத்துக்கள் தொடர்பில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிரேஞ்ச்சுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான இலங்கையின் பதில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்படுவதற்காக வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபரின் பதில், இலங்கை அரசின் முழுமையான அறிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில், சட்டமா அதிபர் திணைக்களம் நீதிக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக அந்த திணைக்களத்தில் திருத்தங்கள் அவசியம் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445327

ஜெனீவா பயணத்திற்கு முன்னர் ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ள விஜித ஹேரத்!

3 months 2 weeks ago

vijitha-herath.jpg?resize=750%2C375&ssl=

ஜெனீவா பயணத்திற்கு முன்னர் ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ள விஜித ஹேரத்!

செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் 60வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னர், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பை தளமாகக்கொண்ட ராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.

இதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கண்ணோட்டத்தை வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒரு சுயாதீன வழக்கு தொடுநர் அலுவலகத்தை அமைத்தல் ஆகியவை இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445311

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு

3 months 2 weeks ago

30 Aug, 2025 | 01:48 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜெனீவாவில் செப்டெம்பர் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை வெளியிட உள்ளார்.

இந்நிலையில் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. உயர்ஸ்தானிகர் வோல்கர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடு இடம்பெறவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கை இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அந்த வகையிலேயே இதற்கு எதிர்ப்பினை வெளியிடும் நோக்கில் பொது மக்களிடம் கையெழுத்து சேகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு 8இல் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பௌத்த மதகுமாரர், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

அத்தோடு திங்கட்கிழமை கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொது மக்களின் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தை கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஐ.நா. அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார்.

அவர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல், ஜனநாயக மற்றும் மனித உரிமை நிலைப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து, இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223772

Checked
Sat, 12/20/2025 - 08:29
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr