Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருள் தின்ற ஈழம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருள் தின்ற ஈழம்
தேவஅபிராவின் 'இருள் தின்ற ஈழம்' கவிதைத் தொகுப்பை முன்வைத்து...


1.
கவிதைகளை எவ்வாறு வாசிப்பது என்பது நம் எல்லோருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இன்று தமிழ்ச்சூழலில் எழுதப்படும் வகைமையில் கவிதைகளே நிறைய எழுதப்படுகின்றன . மேலும் கவிதைகளுக்கு சங்ககாலம் தொடக்கம் நீண்டகால தொடர்ச்சியும் தொன்மையும் இருக்கின்றன. ஆகவே நீண்டகால பராம்பரியம் உள்ள கவிதை உலகில், இவற்றில் எவற்றை வாசிப்பது என்னும்போதே நம்மையறியாமலே நாம் சில  தேர்வுகள் செய்து கொள்ளத் தொடங்குகின்றோம். அந்தத் தேர்வுகளின் அடிப்படையில் எது நல்ல கவிதை, எது நல்லது அல்ல என்கின்ற பிரிப்புக்களை நம்மையறியாமலே ஏற்படுத்திக் கொள்கிறோம். நான் இப்போது அந்த பிரிப்புக்களில் இறங்க விரும்பவில்லை. நம் வாசிப்பிற்கும் இரசனைக்கும் ஏற்ப நாம் தேர்ந்தெடுக்கும் கவிதைகள் மாறுபடும் என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நாம் வாசிக்கும் கவிதைகள், நம் இரசனைகளுக்கு ஏற்பத்தான் நமக்குப் பிடித்துப் போகின்றனவா? எனவும் யோசித்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் கவிதைகள் நம் அகமனத்தூண்டலுக்கும் , புறச்சூழலுக்கும் ஏற்ப நமக்கு நெருக்கமாகிக் கூடப் போய்விடலாம். உதாரணமாக பிரிவுத் துயரில் இருந்தபோது றஷ்மியின் 'காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள்' தொகுப்பு எனக்கு நெருக்கத்தைத் தந்திருந்தது. இப்போது சிலவேளைகளில் அதை மீண்டும் வாசித்தால், நான் சாதாரணமாய்க் கடந்து போய் விடவும் கூடும். அவ்வாறே வாசுதேவனின் 'தொலைவில்' என்கின்ற தொகுப்பை முதலில் வெகு எளிதாய் ஒரு பத்திரிகையைச் செய்திகளை வாசிப்பதுபோலக் கடந்து சென்றிருந்தேன். பின்னொரு பொழுது  தீராத் தனிமையும்  சுயம் குறித்த தேடலுமாயிருந்த பொழுதில் அது எனக்கு  நெருக்கமான ஒரு தொகுப்பாயிருந்தது. ஆக தனிமனிதர் ஒருவருக்கே அக/புறச்சூழலிற்கு ஏற்ப கவிதை வாசிப்பு நெருக்கத்தையும் விலகலையும் த்ருகின்றதென்றால் நம்மால் எது நல்ல கவிதை எது நல்லது அல்லாத கவிதை எனப் பிரிப்பதில் சிக்கல்கள் வருகின்றன தான் அல்லவா?
 

 

Book+2_CI.jpg

 

மேலும் கடந்த மூன்று தசாப்தகாலமாய் போரிற்குள் இருந்த ஈழத்தமிழர்களுக்கு இன்று போர் சார்ந்து வருகின்ற படைப்புக்கள் முக்கியமாய் இருக்கின்றன. ஆனால் இன்னும் 10/20 வருடங்களின் பின் இந்தப் படைப்புக்களிற்கான வாசிப்பு எப்படியிருக்கும்? இதன் அர்த்தம் போர்ச்சூழலைப் பதிவு செய்யக்கூடாது  என்பதல்ல. சிலவேளைகளில் காலம் நாமறியாத வேகத்திலேயே சுழன்று சென்று, நாம் கவனிக்காத ஊற்றுக்களைக் கூட திறந்துவிடக்கூடும் என நினைவூட்டுவதற்காய் இதைக் குறிப்பிடுகிறேன்.  எனவே எவை சிறந்த கவிதையென உரையாடுவதைவிட எவை எமக்குப் பிடித்தமான கவிதைகள், ஏன் அவை எங்களுக்குப் பிடித்தவையாக இருக்கின்றன என்றவகையில் கவிதைகளில் வாசிப்பை நிகழ்த்தவே நான் விரும்புவேன். சிலவேளைகளில் கவிதைகளுக்கு காலமோ வடிவமோ கூட அவ்வளவு முக்கியமில்லையென நினைப்பதுண்டு. காலம் முக்கியமானது என்றால் நமக்கு அண்மையாய் இருக்கும்  மரபுக்கவிதைகள் பற்றி அல்லவா நாம் நிறையப் பேசியிருக்கவேண்டும். ஆனால் அதையும் தாண்டி நூற்றாண்டுகள் தாண்டிய சங்கப்பாடல்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகின்றோம் என்றால் கவிதை நமக்குள் அவிழ்த்துவிடுகின்ற பல்வேறு வாசிப்புக்களே முக்கியம் என்றுதான் நினைக்கின்றேன்

என் இலக்கிய வாசிப்பில் நான் தொடர்ந்து ஒருவர் தொடர்ச்சியாகவும் நிறையவோ எழுதவேண்டும் என்கின்ற அவசியமில்லை என்பதை வலியுறுத்துகின்ற ஒருவன் . படைப்பாளியொருவரை நினைவுகொள்ள அவர் ஒன்றிரண்டு நல்ல படைப்புக்களைத் தந்தால் கூட என்னளவில் போதுமானது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கின்ற கணியன் பூங்குன்றனிடமிருந்து, 'கோணேஸ்வரிகள்' எழுதிய கலா வரை இதற்கு நிறைய உதாரணங்களை முன்வைக்க முடியும்.

2.
'இருள் தின்ற ஈழம்' என்கின்ற தேவஅபிராவின் இத்தொகுப்பில் அவர் 89ம் ஆண்டிலிருந்து 2013 வரை -கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக- எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஈழத்தில் நா.பஞ்சாட்ரம் அவர்களின் பாதிப்பில் மரபுக்கவிதைகளை எழுதத்தொடங்கியவர் என்பதால் தேவஅபிராவின் கவிதைகளின் இன்னும் மரபின் நீட்சியைக் காணலாம். அது பலவேளைகளில் கவிதைகளுக்குச் சிறப்பியல்பாகவும் சிலவேளைகளில் பலவீனமாகவும் தெரிகிறது. தேவஅபிராவின் கவிதைகளை வாசிக்கும்போது சு.வில்வரத்தினம், வ.ஜ.ச.ஜெயபாலன் ஒரு தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கலாமோ என்று தோன்றியது. அதற்கும் முன்னால் போகவிரும்புபவர்கள் மஹகவியிடமும், முருகையனிடத்தும் போகவும் கூடும். சு.வியும், ஜெயபாலனும்  மரபுக் கவிதையுலகிலிருந்தும், பண்ணோடு பாடும் பாடல்களிலிருந்தும் தமக்கான வடிவங்களை நவீன கவிதையுலகில் செதுக்கிக் கொண்டவர்கள்.  இந்தத் தொடர்ச்சியை தேவஅபிரா கவிதைகளில் நாம் காணலாம்.  இதை ஒரு எளிய புரிதலுக்காய்ச் சொல்கின்றேனே தவிர, அவரது முழுத்தொகுப்பையும் அப்படி அடையாளப்படுத்தி விட முடியாது

'ஒரு கவிதை எங்கே ஆரம்பிக்கின்றது?'  எனும்  93ம் ஆண்டு எழுதப்பட்ட கவிதை,  கவிதை உருவாகும் தருணங்களை முதலில் இப்படிப் பட்டியலிடுகிறது.'யாழ்ப்பாணத்தில் என்றால்/ மாவீரர் துயிலும் இல்லத்தை/ எவனும் சுட்டிக் காட்டுவான்/ யாரேனும் ஒருவன் தன்னிலை மறந்து/ இன்னும் உடைக்கப்படாத பள்ளிவாசலையும் காட்டக் கூடும்/  கொழும்பிலோ என்றால்/ நெரிசலான பேருந்துக்குள்/  முன்னும் பின்னும் நெரிக்கும்/ ஆண் குறிகளுக்கிடையில்/ தவிக்கும் பெண்ணிலிருந்தோ....' தொடங்கக்கூடும் என நீளும் கவிதை...'அது சரி/ ஒரு கவிதை எங்கே முடிகிறது?/ அங்கே...அதோ.../ 'நிறுத்து' என்றறிவித்தல் பலகையை நீட்டியபடி/ சீருடை அணிந்தவொருவன் மறிக்கிறானே/ அங்கே....' என முடிகிறது.  இதைத்தான் இன்னொருவகையில் மரணத்தில் வாழ்வது என்பது. உயிருக்கே எந்தக்கணமும் உத்தரவாதம் இல்லையென்கின்றபோது ஒரு கவிதையை எவர்தான் நிம்மதியாக எழுதிவிடமுடியும்?அதைத்தான் தேவஅபிராவின் இந்தக் கவிதை பிரதிபலிக்கிறது.
 

devaabira.jpg

 

'ஈழக்காளி' என்கின்ற இன்னொரு கவிதை, எப்படி தமிழர்கள் முஸ்லிம்களை யாழிலிருந்து துரத்தினார்கள் என்பதை 'குருதியிற் சிவந்த கோர உதடுகள்.../நரமாமிசம் தொங்கும் நீண்ட பற்கள்..../ சிசுக்களை இரண்டாய்க் கிழித்த கைகள்.../ மானுட விழுமியம் மீது/ இரத்தக் கோடுகள் வரைந்தாள்/ ஈழக்காளி...என மானுடத்தின் பெரும் அவலத்தை நரபலி கேட்க எழுந்த காளியிற்கு படிமமாக்குகின்றார் தேவஅபிரா. இவ்வாறு குறிக்கப்பட்ட மணித்தியாலங்களுக்குள் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடமைகளுக்கு என்ன நடந்தது என்பதை... 'இரத்தத்தில் நனைந்த எல்லாப் பொருட்களும்/ 'எழிலக்த்திலும் தமிழருவியிரும்'/மலிவு விற்பனையில்... எனத் தொடர்ந்து அந்தக் காலத்தைப் பதிவு செய்கிறார். இறுதியில் 'ஈழக்காளி உன் ஆத்மாவையும் பிடுங்கி/ அங்காடியில் வில்/ என முடிக்கிறார். ஒருவரின் சுயத்தை/ஆன்மாவையும் அங்காடியில் விற்கப்போகின்ற நிலை என்பது எவ்வளவு வெட்கக்கேடானது. முஸ்லிம்களின் விடயத்திலும் நாமெல்லோரும் தமிழர்கள் எனச் சொல்லவே அவமானப்பட்டு தலைகுனிந்து அல்லவா நிற்கவேண்டும். மேலும் இக்கவிதை எப்போது பிரசுரமானது என்று தெரியவில்லை, ஆனால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதேயாண்டு எழுதப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.

'இரவின் பாடல்' என்கின்ற கவிதை எப்படி ஒரு காலத்தில் நம் நாடுகளை காலனித்துவமாக்கினார்களோ, இப்போது அவர்களில் நாட்டிலும் நாம் விளிம்புநிலை வாழும் அவலத்தைச் சொல்கிறது.
'சில நூறு ஆண்டுகளின் முன்பு
எமது கிராமங்களில் அள்ளி வந்த
பொற்கழஞ்சுகள் சிதறச் சிதற
சீமான்களும் சீமாட்டிகளும் ஆடிய நடனத்தின் ஒலி இன்னும்
அடங்காது திரிகிறது
நானோ
கனவுகள் வெடித்த காலக்கிழவியின் நெற்றியெனக் கற்கள் நெருக்கி
புல்லும் கருக மருந்தடித்த இரவு வீதியில்
திமிறிக்கிடந்த வரலாற்று வேர்களில் தடக்கி
புலத்தைப் பாடும் துருக்கிக்காரன் இரவுப்பாட்டில் சில்லறையென விழுந்தேன்'
என கவனிக்கத்தக்கப் படிமமாய் தேவஅபிரா மாற்றுகிறார்.

நதி என்னும் கவிதை தான் பிறந்தபோது தனக்குள்ளேயே ஒரு நதியும் பிறந்தது. அதை தன் வாழும் ஒவ்வொரு காலங்களிலும் இடங்களிலும் காவிக்கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு, ஆனால் என்றேனும் ஒருநாள் தன் மகன், 'என்னை நீயேன் அகதியாக்கினாய் அப்பா?' எனக் கேட்கும்போது அந்நதி இறந்துபோய்விடும் என்கிறார். அகதிகளாக்கப்பட்டது மட்டுமில்லை அண்மையில் நடந்துமுடிந்த கோர யுத்தத்தின் சுவடுகள் பற்றியும் அடுத்த தலைமுறை தொடுக்கும் கேள்விகளுக்கு நமக்குப் பதில் சொல்லும் தைரியந்தான் இருக்கிறதா என்ன?

வேறு சில கவிதைகளில் வந்துவிழும் சில வரிகள் என்னைக் கவர்ந்திருக்கின்றன....
'வாழ்வென்று எவர் சொன்ன வாழ்வும் வாழ்வல்ல
என்றறைகிறது ஆழி'
என ஓரிடத்திலும், இன்னொரிடத்தில்
'நாங்களறியா ஆழத்துள் வேரோடிய திமிரில்
போர் கைகொட்டிச் சிரிக்கிறது'
எனவும்
'தனக்குள் ஒரு நதியைக் கொண்டிருக்கின்ற
எவரும் தலைநிமிர்ந்தே நடப்பர்'
எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

மேலே கூறியவை ஒன்றிரண்டு வாசிப்புக்களில் நான் கண்டுகொண்ட எனக்குப் பிடித்த தேவஅபிராவின் சில கவிதைகள். இத்தொகுப்பை வாசிக்கும் நீங்களும் உங்களுக்குப் பிடித்தமான சில கவிதைகளையேனும் அடையாளங் கண்டுகொள்வீர்கள் எனவே நம்புகிறேன்.

இத்தொகுப்பிலில் தவிர்த்துக்கொள்ளக்கூடிய சில குறைகளும் இருக்கின்றன. உதாரணமாக நீண்டவரிகள் உடைய கவிதைகளை தேவஅபிரா எழுதும்போது புத்தக வடிவமைப்பின் காரணத்தால் கீழே உடைத்துப் போடும்போது பல பக்கங்களில் கவிதைகள் வாசிக்கும் உணர்வைத் தராது தடுக்கின்றது.  மேலும் மரபுக்கவிதையின் மிச்சமான சில வரிகளின் பின் வரும் நிறையப் புள்ளிகளும்...ஆச்சரியக்குறிகளும் சிலவேளைகளில் அலுப்பைத் தருகின்றன.

'எனது தனிமைக்கு எதிராக நான் எழுதுகிறேன்' என்றார் ஒரு படைப்பாளி. இன்னொருவர். 'எனக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாது, மகிழ்ச்சியாக இருப்பதற்காக எழுதுகிறேன்' என்றார். அதுபோல் தான் எதற்காக எழுதுகிறேன் என்பதை தேவஅபிரா உட்கிடக்கையாகச் சொல்வதை இத்தொகுப்பை வாசிக்கும் நீங்களும் சிலவேளைகளில் கண்டுகொள்ளக்கூடும். அவ்வாறு கண்டுகொள்ளும்போது அந்த அலைவரிசையில் நீங்களும் இருந்தால் தேவஅபிராவின் கவிதைகளை உங்களுக்கு  நெருக்கமாய் உணரவும் கூடும்.

(ஜூன் மாதம் கனடாவில்  நிகழ்ந்த தேவஅபிராவின் 'இருள் தின்ற ஈழம்' நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
 
 

http://djthamilan.blogspot.co.uk/2013/07/blog-post_5894.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.