Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இழுவைப் படகு பிரச்சினை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இழுவைப் படகு பிரச்சினை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 செப்டெம்பர் 22

 


 

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, வடபுலத்து மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் ஏற்படும் சேதங்களையும் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீன்பிடியையும் எதிர்த்து, அமைதி வழியாலான போராட்டமொன்றை இந்த வாரம் முன்னெடுத்திருந்தார்கள். 

நீண்டகாலமாக முடிவற்றுத் தொடர்கின்ற பிரச்சினை இது. இந்த நெருக்கடி, பல்பரிமாணங்களைக் கொண்டது. அரசியல் ரீதியாக இரு நாடுகளும் பேசித் தீர்க்கக்கூடிய பிரச்சினை. ஆனால், அதற்கு இரண்டு நாடுகளும் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியாவுடன் பேசித்தீர்க்கவேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன. அந்த வரிசையில், இந்திய மீனவர்களால் வடபுலத்து மீனவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், முன்னிலையில் இல்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை, “பெரியண்ணன்” ஏன் பேசவேண்டும் என்பதே நிலைப்பாடு. இதில் பாதிக்கப்படுவது, இரண்டு நாடுகளிலும் உள்ள அப்பாவி மீனவர்களே.   

இந்தப் பிரச்சினையின் கதை, கொஞ்சம் நீண்டது. அதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம். பாக்கு நீரிணை மீன்பிடித் தொடர்பாக, இலங்கை-இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இருந்துவந்த மோதல், இப்போது புதிய தளத்தை எட்டியுள்ளது.

இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின் முடிவும் அண்மைய ஆட்சி மாற்றத்தின் பின்னரான கள நிலைமைகளும், இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியைப் புதிய பரிமாணத்துக்குக் கடத்தியுள்ளது. இலங்கைக் கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய பிரவேசமும் மீன்பிடியும், வளங்களின் சூறையாடலும், அவற்றுக்கு இந்திய அரசாங்க ஆதரவும், இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைகளின் கள்ள மௌனமும் ஒன்றோடொன்று இணைந்துள்ளமை தவிர்க்கவியலாதது.

கவனிக்க வேண்டிய இன்னோர் அம்சம் யாதெனில், இந்தியப் பெருமுதலாளிகளின் நலன்களுக்காக, இந்த வளக்கொள்ளை, நடைமுறையில் சாதாரண இலங்கை, இந்திய மீன்பிடித் தொழிலாளருக்கிடையினதாகத் தோற்றம் பெறுவதாகும்.   

இரண்டு பகுதிகளாக அமைகின்ற இந்தப் பத்தி, இப்பிரச்சினையை மூன்று அடிப்படைகளில் அணுகுகிறது.

முதலாவதாக, இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப் பிரச்சினைக்குள்ளானது எவ்வாறு என்பதையும் அதன் காரணங்களையும், வரலாற்று நோக்கில் ஆராய்கிறது.

இரண்டாவதாக, அங்கு நிகழும் ஒவ்வாத மீன்பிடிச் செயற்பாடுகள், எவ்வாறு கடல் வளத்தையும் நீண்டகாலத்தில் மீன்வளத்தையும் பாதிக்கின்றன என்பதையும் நோக்குகிறது.

மூன்றாவதாக பிரச்சினையின் பின்னால் உள்ள அரசியல் நலன்களை, குறிப்பாக இந்திய அரசின் பிராந்திய நலன்களும் இலங்கை அரசினதும் தமிழ் அரசியல் தலைமையினதும் மௌனங்கள் பற்றிய ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தர முனைகிறது. இவற்றின் அடிப்படையில், எதிர்காலத்தில் இலங்கையின் வடக்கு மீன்வளத்தைப் பாதுகாக்க உகந்த காப்பு நடவடிக்கைகளையும் அவற்றின் சாத்தியங்களையும் ஆராய்கிறது.   

இந்தியாவில் 1960களில் அறிமுகமான இழுவைப் படகுகள், புதிய மீன்பிடிமுறையை அறிமுகப்படுத்தின. இது, “நீலப் புரட்சி” என அழைக்கப்பட்டது. சாதாரண மீன்பிடி முறைகட்குப் பழக்கப்பட்டிருந்த மீனவர்கட்கு, இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளும் பின்னர் தனியார் தொண்டு நிறுவனங்களும், கடன்களையும் உதவிகளையும் வழங்கி, இழுவைப் படகுகளின் பயன்பாட்டை ஊக்குவித்தன. இதனால், மீன்பிடியில் பெருமுதலாளிகளின் பங்கு வலுத்ததுடன், சுயதொழிலாக மீன்பிடியை மேற்கொண்ட சாதாரண மீனவர்கள், நெருக்கடிகளை எதிர்நோக்கினர். காலப்போக்கில், அவர்கள் முதலாளிகளின் இழுவைப் படகுத் தொழிலாளிகளாக வேலை செய்வதற்கே அது வழிவகுத்தது.

1980க்கும் 1996க்கும் இடையில், தமிழ்நாட்டில் இழுவைப் படகுகளின் பாவனை பாரியளவு அதிகரித்தது. இக்காலப் பகுதியில், மீன்பிடியின் அளவு இருமடங்காகியது. அதனால், இழுவைப் படகுகளின் தொகை மேலும் அதிகரித்தது.

2015ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, தமிழ் நாட்டில் தற்போது 5,500 இழுவைப் படகுகள் உள்ளன. அவற்றில், கிட்டத்தட்ட 2,800 மீன்பிடிக்கு, இலங்கைக் கடற்பரப்பையே நம்பி இருக்கின்றன. அதேவேளை, இலங்கையில் இழுவைப் படகுப் பாவனை, முற்றாகத் தடைக்குட்பட்டுள்ளது என்பதை நினைவிற் கொள்வது தகும்.   

மறுபுறம், 1974ஆம் ஆண்டு இலங்கை-இந்திய உடன்படிக்கைப்படி, சர்வதேச கடற்பரப்பு எல்லைக்கோடு (IMBL) தீர்மானிக்கப்பட்டது. இது, பாக்கு நீரிணையை இறைமையுள்ள இரண்டு நாடுகளின் கடற்பரப்புகளாகப் பிரித்தது. இரு நாட்டு மீனவர்களும், தொடர்ந்தும் குறுகிய காலத்துக்குப் பாரம்பரியக் கடற்பரப்பில் மீன்பிடிக்க உடன்பாடு அனுமதித்தது. எனினும், மீன்பிடிப்பு அந்தக் காலவரையறைக்குப் பின்னும் தொடர்ந்தது.

பாரம்பரிய மீன்பிடி முறை தொடர்ந்தளவும், அந்த மீன்பிடிப்பு பற்றி இரு தரப்பு மீனவர்கட்கும் தகராறு இருக்கவில்லை. இழுவைப் படகுகளின் வருகையுடனேயே முரண்பாடு எழுந்தது. எனினும் இன்று, பாரம்பரிய மீன்பிடி முறையிலில்லாமல், இழுவைப் படகுமுறையில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், அந்த எல்லைக்கோடு சட்டவிரோதமானது என்று அதை ஏற்கமறுத்து தமது பாரம்பரிய மீன்பிடிக் கடற்பரப்பை விட்டுத்தர முடியாதென்றுக் கூறுகிறார்கள்.   

1980களில், இலங்கையில் வலுத்த யுத்தம், இலங்கை மீனவர்களின் வாழ்க்கையைப் பாதித்தது. குறிப்பாக, மீன்பிடிக்கு விதித்த தடைகளும் கட்டுப்பாடுகளும், வடபகுதி மீனவர்களின் மீன்பிடியைக் கிட்டத்தட்ட இல்லாமலாக்கியது. அதை, இந்திய மீனவர்கள் வாய்ப்பாக்கினர். ஒரு சிக்கலுமின்றி இந்தியப் படகுகள் இலங்கைக் கடலில் கோலோச்சின.

1990ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, இலங்கை அரசாங்கம், வடக்கில் ஆழ்கடல் மீன்பிடியை முற்றுமுழுதாகத் தடை செய்தது. மேலும், உயர் பாதுகாப்பு வலயங்கள் மீன்பிடிக்கு வாய்ப்பான பாரம்பரிய மீன்பிடிக் கடற்கரைகளை உள்வாங்கியமையும், வடக்கில் பாரிய மீன்பிடி வீழ்ச்சிக்கு உதவியது. 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2005 வரை, போர்நிறுத்த உடன்பாடு நடைமுறையிலிருந்த காலத்தில் மட்டும், வடபகுதி மீனவர்கட்குக் குறையளவான ஆழ்கடல் மீன்பிடி அனுமதிக்கப்பட்டது.   

1982ஆம் ஆண்டு, வடபகுதி மீன்பிடியின் அளவு, இலங்கையின் மொத்த மீன்பிடியில் இருபத்தைந்து சதவீதமாகும். இது, 2011ஆம் ஆண்டு, வெறும் ஆறு சதவீதமாகக் குறைந்து, 2015ஆம் ஆண்டளவில் பதினொரு சதவீதமாகி யுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தமே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இந்நிலை, வடபகுதி மீனவர்களின் மீன்பிடியை இல்லாமல் செய்ததுடன், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி மீன்பிடிக்க வழிசமைத்தது.   

இலங்கை-இந்திய மீனவரிடையான சிக்கலுக்கு, பல பரிமாணங்கள் உள்ளன. அவற்றில் பிரதானமானது, இலங்கைக்குரிய கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதாகும். குறிப்பாக, உள்நாட்டு யுத்தம் முடிந்து, ஆழ்கடல் மீன்பிடிக்கு விதித்திருந்த தடைகள் நீங்கிய நிலையில், இலங்கையின் ஆட்புல எல்லைக்குட்பட்ட, வடபகுதி மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது பாரிய பிரச்சினையாகும்.

பிரச்சினையை இரு பகுதியினரும் நோக்கும் விதம் வேறுபடுகிறது. இந்தப் பிரச்சினை குறித்து, இந்திய அயலுறவுகளுக்கான அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜிடம் கேட்டபோது, “மீனவர்கள் மீன்களைத் தேடிச் செல்வோர். எங்கே மீன் உண்டோ அங்கே அவர்கள் மீன் பிடிப்பார்கள்? அவர்களுக்குத் தேச அரசுகளின் எல்லை பற்றிய கவலையோ அக்கறையோ கிடையாது” என்றார். இந்தியாவின் பொதுவான நிலைப்பாடு இதுவே.

பாக்கு நீரிணை மீன்பிடியில் உள்ள சிக்கல்களை ஆராயும் இந்திய ஆய்வாளர்களும், இந்த நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள். இது, மிக ஆபத்தானதும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதுமான நிலைப்பாடு என்பதை நாம் மறக்கலாகாது.   

இலங்கையில் தடைக்குட்பட்ட இழுவைப் படகுகளை, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் பயன்படுத்துவதால், இலங்கை மீனவர்கள் கடலின் மேற்பரப்பை அண்டி விரிக்கும் வலைகளை, இந்திய இழுவைப் படகுகள் வாரிச்சென்று கடலடிக்கு அமிழ்த்துகின்றன. அடிக் கடலுக்குள் இழுபடும் வலைகள், பெரும்பாலும் தொலைந்து போகின்றன. எஞ்சுகிற வலைகளும் பாவனைக்குதவாது போவதோடு, மீனவர்களது அன்றாட வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடிக்கும் போது, வடபகுதி மீனவர்கள் மீன்பிடிக்க முடிவதில்லை. இதனால், இழுவைப் படகுகள் மீன்பிடிக்கும் நாள்களில், வடபகுதி மீனவர்கள் பெரும்பாலும் மீன்பிடிப்பதில்லை.   

இந்திய மீனவர்களின் பெரும் இழுவைப் படகுகள், நாட்டின் பவளப் பாறைகளையும் கடற் படுக்கையையும், மீன்களையும் அழிக்கின்றன. இது குறித்து ஆய்வு செய்யும் பேராசியர் ஒஸ்கார் அமரசிங்க, கடல் அட்டைகளையும் பிற கடல்வாழ் உயிரிகளையும் இந்தியாவுக்குக் கொண்டுசெல்வதால், இலங்கைக்கு வருடத்துக்கு ஐநூறு கோடி ரூபாய் நட்டம் எற்படுவதாகக் கணித்துள்ளார். இது, 2011ஆம் ஆண்டுத் தரவுகளின் அடிப்படையிலான கணிப்பீடு. இத்தொகை, இப்போது இன்னும் அதிகமாக இருக்கலாம்.   

இருதரப்பு மீனவர்கட்குமிடையில் தொடர்ச்சியாக நடைபெறும் பேச்சுகள், சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் உடன்பாட்டையும் எட்டியுள்ளன. ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2010ஆம் ஆண்டு, இரண்டு தரப்புகளும் அடைந்த உடன்படிக்கை முக்கியமானது. அதில், வருடத்தில் 70 நாள்கள் இலங்கைக் கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பதென்றும் ஓராண்டுக்குள் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் பாவனையை முற்றாக நிறுத்த வேண்டும் என்றும் கண்ட உடன்பாடு, இலங்கை, இந்திய அரசுகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்திய அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது.  

இந்தப் பிரச்சினை வெறுமனே பொருளாதாரப் பிரச்சினையோ அல்லது வாழ்வாதாரப் பிரச்சினையோ மட்டுமல்ல. இது மிகப்பெரிய கடல் வள, சூழலியல் பிரச்சினை. 

(இது குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்)   
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-இழுவைப்-படகு-பிரச்சினை/91-255787

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இழுவைப் படகுப் பிரச்சினை - ii

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 செப்டெம்பர் 25

(கடந்த வாரத் தொடர்ச்சி)   

இலங்கை, இந்திய மீனவர்களிடையே, பாக்கு நீரிணை கடற்பரப்பில் மீன்பிடி தொடர்பாக, நீண்டகாலமாக இருந்துவந்த மோதலை, இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் முடிவு, புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.   

போர் முடிந்து ஒரு தசாப்தகாலம் முடிவடைந்துவிட்ட நிலையிலும், வடபுலத்து மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்கின்றன. இலங்கைக் கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய பிரவேசமும் மீனையும் பிற வளங்களையும் சூறையாடுவதும் அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவும் தமிழ் அரசியல் தலைமைகளது மௌனமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை என்ற கொடிய உண்மையைச் சொல்லியாக வேண்டியுள்ளது.  

 கடந்த வாரம், இந்திய இழுவைப் படகுகளால் வடபுலத்து மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அதன் வரலாற்றுப் பின்புலத்தையும் அரசியல் காரணிகளையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்திய இழுவைப் படகுகள் ஏற்படுத்தியுள்ள சூழலியல் பிரச்சினைகளையும் பிராந்திய அரசியலையும் நோக்குவோம்.   

இலங்கைக் கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகள் பல சூழலியல் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன. மீன்களின் பெருக்கமும் வளர்ச்சியும் ஆழ்கடலுக்கும் பரவைக் கடலுக்கும் இடைப்பட்ட கடலடித்தளமேடைப் பகுதியிலேயே நடக்கின்றன. இலங்கையின் கடலடித்தள மேடையின் பெரும்பகுதி, மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட 480 கிலோமீற்றர் நீளமும் 22 முதல் 60 கிலோமீற்றர்அகலமும் கொண்ட பிரதேசமாகும். இப்பகுதியில், இழுவைப் படகு மீன்பிடி மிகக் கேடானது. 

இழுவைப் படகுமீன்பிடி என்பது, கடலின் அடிவரை உள்ள அனைத்தையும் வாரிஅள்ளி எடுப்பதாகும். இதை, அடியோடு அள்ளுதல் (Bottom trawling) என்று அழைப்பர். இம் மீன்பிடி முறையில், ஆறு முக்கிய அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன.  

1. வலையை வீசி, கடலின் அடி வரையுள்ள அனைத்தையும் அள்ளுவதால், மீன்களின் வகை, வளர்ச்சி போன்ற எவையும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.    

2. கடலின் அடியோடு அள்ளும்போது, மீன்களுக்கான உணவாகவும் கடலடி உயிரியல் சமநிலையைப் பேண முக்கியமாகவும் உள்ள கடலடித் தாவரங்கள் அழிகின்றன. அவற்றின் அழிவு, கடலடி உயிரியல் சமநிலையைப் பாதிக்கிறது.   

3. கடலின் அடியோடு அள்ளும் போது, மீன்களும் தாவரங்களும் மட்டுமன்றிப்பிற கடல்வாழ் உயிரினங்களும் சிக்குகின்றன. அவை மனிதப் பாவனைக்கு உதவாத,கடலடித்தள உயிரியல் நிலைப்புக்கு வேண்டிய நுண்ணுயிரிகளும் உயிரினங்களுமாகும். அவை பயனின்றி அழிகின்றன.   

4. இழுவைப் படகு மீன்பிடியால் கடலடி பவளப்பாறைகளும் முருகைக் கற்களும் அழிகின்றன. முருகைக் கற்களின் அளவுக்கு மீறிய அழிவு, வடபகுதியில் மண்ணரிப்பு அதிகரிக்கவும் கடல் நீர் குடாநாட்டுக்குள் புகவும் வழிவகுக்கும்.   

5. கடலின் அடியோடு அள்ளும் போது, மீன்களின் முட்டைகளும் குஞ்சுகளும் சிக்குகின்றன. இது, மீன்களின் இனப்பெருக்கத்தையும் விருத்தியையும் தடுக்கிறது. இச்செயற்பாடு, நீண்டகாலத்தில் அப்பகுதியை மீன்களற்ற பிரதேசமாக்கும்.   

6. தேவையற்று வாரியள்ளப்படும்  கடல் தாவரங்களும் இறந்த உயிரினங்களும் மீண்டும் கடலில் கொட்டப்படுகின்றன. இவையும் பாரிய சூழலியல் பாதிப்புக்குக் காரணமாகின்றன.   

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், மீன் என்பது இயற்கை வளமாகும். அது இல்லாமல்போகக் கூடியது. கடலையும் இயற்கையையும் பாதுகாப்பதன் மூலமே, மீனை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் வளமாகப் பேணலாம். மீன்வளத்தின் உருவாக்கம், கடலின் ஆழம்,கடலடித் தாவரவியல், கடலின் புவிசார் அமைப்பு, கடல் நீரோட்டம்,கடலின் வெப்ப தட்ப நிலை போன்ற பல காரணிகளில் தங்கியுள்ளது. 

கடல்வள ஆய்வுகளைப் பொறுத்தவரையில், கடலில் பிடிக்கக்கூடிய மொத்த மீன்களில் 75% மட்டுமே பிடிக்கலாம். எஞ்சியதில் 75% முட்டையிட்டு இனப்பெருக்கத்தைப் பேணக்கூடிய பெண் மீன்களாக இருத்தல் வேண்டும். இச்சமநிலையைப் பேணின் மட்டுமே, மீன்வளம் தொடர்ச்சியாகக் கிடைக்கும் வளமாக இருக்கும். மீன்பிடியின் அளவை, சந்தை நிலைமைகள் தீர்மானிக்க முடியாது. கிடைக்கக்கூடிய மீன்களின் அளவே, சந்தையைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நிகழ்வது அரிது.   

இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு மாநில அரசாங்கமும் இந்திய, இலங்கை மீனவர் முரண்பாட்டின் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர். ஒரு நாட்டின் கப்பல்கள், இன்னொரு நாட்டின் ஆட்புல எல்லைக்குள் மீன்பிடித்தால், அதைத் தடுப்பது அந்நாட்டின் அடிப்படைப் பொறுப்பாகும். 

ஆனால், இந்திய மத்திய அரசாங்கம் வருடத்துக்கு 65 நாள்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருகிறது. வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையோ, இழுவைப் படகுகளால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதையோ கவனிக்க, இந்தியா தயாராக இல்லை. 

மாறாக, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடைமுறை ஒழுங்கு தேவை எனவும் அவ்வாறான ஒழுங்கின் மூலம், இரு தரப்பினரும் அரசியல் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் எனவும் இரு தரப்பினரும் மீன் பிடிக்கும் உரிமையுடன் கூடிய மீன் வளங்களைக் கூட்டு முகாமைத்துவத்தின் கீழ்ப் பகிர வேண்டும் எனவும் இந்தியத் தரப்பினர் சொல்லி வருகிறார்கள்.   

சில ஆண்டுகளுக்கு முன், பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகளையும் மீனவர்களையும் இலங்கை மீனவர்கள் கைது செய்தனர். மறுநாள், மாதகல் மீனவர்களும் இதேவகையில், இந்திய இழுவைப் படகுகளையும் மீனவர்களையும் கைது செய்தனர். மறுநாள், உயர்மட்ட இந்திய இராஜதந்திர அழுத்தத்தின் மூலம் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாதென இலங்கை அதிகாரிகள், இந்திய மீனவர்களை எச்சரித்தனர்.   

இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு அரசாங்கங்களும் இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை, இச் சம்பவங்கள் விளக்குகின்றன. இலங்கை மீனவர்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டிய கடற்படையினர், எதுவும் செய்யவியலாது தவிக்கின்றனர். அவர்கள், “எங்கள் கைகள், அதிகார மய்யத்தின் உயர்பீடத்தால் கட்டப்பட்டுள்ளன”  என்கிறார்கள். 

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சாதாரண கூலித் தொழிலாளர்களே ஆவர். அவர்களை வேலைக்கமர்த்தி வேலைவாங்கும் முதலாளிகளில், இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களும் அடங்குவர். கடல் எல்லையைத்தாண்டி மீன்வளத்தைக் வாரிஅள்ளிக் கொண்டுவருமாறு, சாதாரண மீனவர்கள், முதலாளிகளால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். 

அத்துமீறி மீன்பிடிப்போரைப் பற்றிப் பேசும்போது, அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் அவர்களுக்குப் பின்னால் உள்ள தமிழகத்தின் பெருமுதலாளிகளையும் வெவ்வேறாகக் கவனிக்க வேண்டும். அதைச் செய்யாமையாலேயே பிரச்சினை தீராதுள்ளது.   

பல வருடங்களாக, இலங்கை அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலும் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துள்ளன. ஆனால், இந்திய அரசாங்கத்தினதும் இந்தியப் பெருமுதலாளிகளினதும் கடும் போக்கு, தீர்வை எட்டத் தடையாகிறது. 

மறுபுறம், தமிழ் மக்களையும் அவர்களில் பகுதியினரான வடபகுதி மீனவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் மௌனம் காக்கின்றன. பலவற்றைப் பற்றியும் தீர்மானம் நிறைவேற்றிய வடமாகாண சபை, மீனவர் பிரச்சினை பற்றி, எதுவும் பேசவில்லை. 

அதேவேளை, இலங்கை, இந்திய அரசாங்கங்கள், இருதரப்பு மீனவர்களினது பிரச்சினைகளையும் மோதல்களையும் அத்துமீறல்களையும் வைத்து, தத்தமது அரசியல் இலாபங்களைப் பெறுகின்றன. தமிழ்நாட்டுக் கட்சிகள் சில, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையில் குளிர்காய்ந்து கொண்டு, மீன் முதலாளிகளின் பக்கம் நிற்பதுடன், தமது வாக்கு வங்கிகளுக்கு ஏற்றவாறும் நடந்து கொள்கின்றனர்.  

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையில் இந்தியாவின் பிராந்திய நலன், இந்தியப் பெருமுதலாளிகளின் நலன், இலங்கை அரசாங்கத்தின் இயலாமை என்பன பின்னிப்பிணைந்துள்ளன. மொத்தத்தில், இந்திய, இலங்கை அரசாங்கங்கள் கடல்வளத்தைப் பாதுகாப்பது பற்றி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. 

 இவ்விடயத்தில்  இந்தியா, பிராந்திய அதிகாரத்தை நிறுவ முனைகிறது.  இலங்கைக்கோ, தேர்தலில் பாதிப்பைச் செலுத்தக்கூடிய விடயமல்ல; சில மீனவர்கள் பாதிக்கப்படுவதற்காக இந்தியாவைப் பகைப்பது சரியல்ல என்பதே, அதன் நிலைப்பாடாகும்.

பிரச்சினைப்படுவதும் மோதுவதும் இரு புறத்திலும் தமிழ் மீனவர்கள் என்பதால், இலங்கை அரசாங்கம் இம் மீனவர் பிரச்சினையில் அதிக ஆர்வம் காட்டாதிருப்பதும் அவதானிக்கக் கூடியதாகும்.  

தமிழக மீனவத் தொழிலாளர்களும் வடபகுதி மீனவத் தொழிலாளர்களும் தமிழர்கள் என்பதற்கு அப்பால், வர்க்க ரீதியில் உழைக்கும் மக்களாவர். அவர்களைப் பகடைக்காய்களாக்கும் போக்கு, இரு புறமும் உள்ளதையிட்டு அவதானமாக இருத்தல் வேண்டும். அதேவேளை, இந்திய மேலாதிக்கத்தின் கரங்கள், எம்மீது படிவதை அனுமதியாது, அவற்றுக்கு எதிராகவும் அணிதிரள வேண்டும்.

இப்பிரச்சினையை இரண்டு அரசாங்கங்களோ தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளோ தீர்க்கக்கூடியதல்ல என்பதை உணர்ந்திருக்கிறோம். ஏனெனில், இவர்களில் எவருக்கும் இப்பிரச்சினைக்குத் தீர்வு தேடும் அக்கறையில்லை. 

வடபகுதி மீனவர்கள் முதலில் குழுவாதங்களைத் தவிர்த்து, ஒன்றுதிரளல் தவிர்க்க இயலாதது. “இந்தியா தீர்வைப் பெற்றுத்தரும்” என்று சொல்பவர்கள், முதலில் வடபுலத்து மீனவர்களின் பிரச்சினையில் இந்தியாவின் நடத்தையை நோக்க வேண்டும். “இந்தியாவை நம்பவேண்டும்”  என்று கதை சொல்பவர்களின் நிலை யாதெனில், ‘பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை’.   
 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-இழுவைப்-படகுப்-பிரச்சினை-ii/91-255912

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.