Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் உரிமைக்குரல் சர்வதேச அரங்கில் ஒலிக்குமா?-இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் உரிமைக்குரல் சர்வதேச அரங்கில் ஒலிக்குமா?-இதயச்சந்திரன்

Published on June 12, 2011

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தீர்மானமொன்று, தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அரசானது, நிபுணர் குழு அறிக்கை குறித்து தொடர்ச்சியாக மௌனம் சாதித்து வருகையில், தமிழக அரசினால் இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் பின்புலத்தை நோக்க வேண்டும்.

இத்தீர்மானத்தில், இலங்கை ஜனாதிபதி போர்க் குற்றவாளியென ஐ.நா. நிபுணர்குழு அளித்த பரிந்துரையை ஏற்று, அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக ஏனைய நாடுகளுடன் இணைந்து பொருளாதார தடை விதிக்கவும், இந்திய அரசு முன்வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது உரையில், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை குறித்தும், இன்றைய அவலச் சூழல் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். தனது நிரந்தர அரசியல் எதிரியான கருணாநிதியின் எம்.பி.க்கள் ராஜினாமா மற்றும் உண்ணாவிரத நாடகங்கள் போன்றவற்றையும் அம்மையார் குறிப்பிடத் தவறவில்லை.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேண்டுகோளின்படி, இலங்கை மீது பொருளாதாரத் தடையை மேற்கொள்வதற்கு முன்பாக, கோரிக்கை ஒன்றினை விடுத்து, அது நிறைவேறாத பட்சத்தில் தடைகளைப் போடலாம். அதேபோன்று போர்க் குற்றவாளி என்று அறிவிப்பதற்கு அது குறித்த விசாரணையொன்று அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட வேண்டும்.

உதாரணமாக ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுமக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் சிரியா மீதான கண்டனத் தீர்மானமொன்றினை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிறைவேற்ற பிரித்தானியாவும் பிரான்ஸும் முயற்சிக்கின்றன. அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன் அடுத்த கட்டமாக பொருளாதாரத் தடையை சிரியா மீது ஐ.நா. சபை மேற்கொள்ளும்.

அதே போன்று 1970 தீர்மானம் ஊடாக லிபியா மீது சீன, ரஷ்ய ஆதரவோடு பொருளாதாரத் தடை குறித்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. ஆகவே, தீர்மானம் ஏதுமின்றி, தனிப்பட்ட முறையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையினை இந்தியா விதிக்குமா என்கிற கேள்வி எழுகிறது.

தமிழக முதல்வர் கூறுவது போன்று ஏனைய நாடுகளுடன் கூட்டாக இணைந்து தடைத் தீர்மானத்தை எடுக்க வேண்டுமாயின், அதற்கான பொதுத் தளம், பாதுகாப்புச் சபையோ, மனித உரிமைப் பேரவையோ அல்லது ஐ.நா. பொதுச் சபையாக இருக்க வேண்டும். இவை தவிர இந்தியா அங்கம் வகிக்கும் “சார்க்’ கூட்டமைப்பு அல்லது அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பின் ஊடாகவும் இலங்கை மீதான பொருளாதாரத் தடையை இந்தியா மேற்கொள்ளலாம்.

ஆனாலும் இவ்விரு அமைப்புக்களினூடாக இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வரும் இராஜதந்திர வல்லாண்மை, இந்தியாவிற்கு இருக்கிறதாவென்று தெரியவில்லை. அடுத்ததாக “போர்க்குற்றவாளி’ “போர்க்குற்ற நாடு’ என்று தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதல்வர் கூறிய கருத்துக்கள் பற்றி பார்க்க வேண்டும்.

போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகளென இந்தியா பிரகடனம் செய்ய வேண்டும் என்பதோடு அதனை ஐ.நா. சபையில் வலியுறுத்த வேண்டுமென முதல்வர் கூறுகின்றார். போர்க் குற்றங்களை இலங்கை அரசே விசாரிக்க வேண்டுமென, நிபுணர் குழு அறிக்கை பரிந்துரை செய்கிறது. அதனை நவநீதம்பிள்ளை அம்மையாரும் தனது மனித உரிமைப் பேரவையின் ஆரம்ப உரையில் குறிப்பிட்டிருந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணையொன்றினை நடத்த முடியாது என்பது வெளிப்படையான உண்மையென்பதால், சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். தீர்மானங்களை நிறைவேற்றக்கூடிய ஐ.நா. சபையின் உயர் அமைப்பொன்றோ அல்லது இலங்கை அரசோ, விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை முன்வைக்க முடியுமென்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அடிக்கடி குறிப்பிடுகின்றார்.

ஆனால் தம்மால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையை ஐ.நா. பொதுச்சபைக்கோ, பாதுகாப்புச் சபைக்கோ அல்லது மனித உரிமைப் பேரவைக்கோ பான் கீ மூன் அனுப்பவில்லை. இலங்கை அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன் என்கிற கால நீட்சி உத்தியையே மார்டீன் நெசர்க்கி ஊடாக ஊடகங்களின் முன் பயன்படுத்துகிறார்.

இலங்கை அரசைப் பொறுத்தவரை உத்தியோகபூர்வ பதில் எதனையும் வழங்காமல் அமைச்சர் ஒருவர் சேகரித்த பல இலட்சம் கையெழுத்து மனுவை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைத்துள்ளது. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிரான, சிங்கள மக்களின் உணர்வு ரீதியிலான வெளிப்பாட்டினை முன்வைத்து, தனது கருத்தும் இதுவெனக் காண்பிக்கும் வகையில் அரசு செயற்படுகிறது.

அரசால் உருவாக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கை வரும்வரை, இரு தரப்பும் இழுத்தடிப்பு நாடகத்தை நிகழ்த்துவது போலுள்ளது. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக, ஜனவரி 2007இல் பதவியேற்ற பான் கீ மூனின் பதவிக் காலம் வருகிற டிசம்பர் 31ஆம் திகதியோடு முடிவடைகிறது.

அனைத்துலக நாணய நிதியத்தின் புதிய தலைவர் பதவியைப் பெறுவதற்காக உலக வலம் மேற்கொள்ளும் பிரெஞ்சு நிதியமைச்சர் கிறிஸ்டீன் லகார்ட் போன்று, அடுத்த 5 ஆண்டு கால ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றுவதற்கான சர்வதேச நாடுகளின் ஆதரவைத் தேடும் பரப்புரையில் பான் கீ மூன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை விவகாரத்தில் ஒரு காட்டமான முடிவினை மேற்கொண்டு அதற்கு ஆதரவு வழங்கும், குறிப்பாக மேற்குலகிற்கு எதிரான நாடுகளின் ஆதரவினை இழந்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வோடு காய்களை நகர்த்துகிறார் பான் கீ மூன். ஆனாலும் புவிசார் பொருண்மியத்தில் (GEO-ECONOMICS) முன்னிலை வகிக்கும் அமெரிக்காவும், சீனாவும், பான் கீ மூனை ஆதரிக்குமென நம்பப்படுகிறது.

இரண்டாவது தடவையாக ஐ.நா. பொதுச் செயலாளருக்கான போட்டிக் களத்தில் குதிக்கும் பான் கீ மூனை தாமும் ஆதரிப்பதாக, இலங்கை அரசு வெளியிடலாம்.

ஆகவே நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா. சபையில் முன்வைக்காமல் இழுத்தடிக்கும் பான் கீ மூனின் உள்நோக்கத்தை, மேற்குறிப்பிடப்பட்ட செய்திகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்பார்ப்பது போன்று, ஐ.நா. சபையின் எந்தத் தளத்தில் தமிழக அரசின் தீர்மானத்தை இந்தியா வலியுறுத்த முடியும்?

தற்போது நடைபெறும் மனித உரிமைப் பேரவையின் 17ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் 47 நாடுகளில் இந்தியா இல்லை. கடந்த வருடம் ஜூன் 2010 வரை இந்தியாவின் உறுப்புரிமை இப்பேரவையில் இருந்தது. இவை தவிர ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உள்ள, நிரந்தர உறுப்புரிமையற்ற பத்து நாடுகளில் இந்தியாவும் இருக்கின்றது.

இச்சபையில் டிசெம்பர் 2012 வரை உறுப்பினராகவிருக்கும் இந்தியாவானது இலங்கை அரசிற்கெதிரான போர்க் குற்ற விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்கிற பிரேரணையை முன்மொழியலாம். அதற்கு ஆதரவாக ஒன்பது நாடுகளை இந்தியாவால் திரட்ட முடியும். அவ்வாறான தீர்மானத்தை இந்தியா முன்வைத்தால் ரஷ்யா, சீனா மற்றும் பிறேசில் போன்ற பிரிக்ஸ் (BRICS) இல் அங்கம் வகிக்கும் நாடுகள், வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகி நிற்கும் வாய்ப்புண்டு.

ஆனாலும் நிபுணர் குழுவின் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் சமர்ப்பிக்கவில்லை என்கிற காரணத்தை முன்வைத்து இந்தியா நழுவிச் செல்லலாம். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீர்மானத்தின் கனதியை உள்வாங்கி, தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா சடுதியாக மாற்றிக் கொள்ளுமாவென்று தெரியவில்லை.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும், இலங்கை அமைச்சர் ஜீ.எல். பீரிசும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை குறித்து விவாதிப்பதற்கு, பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் இந்திய வெளி விவகாரச் செயலாளர் நிரூபமாராவ் மற்றும் பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் ஆகியோர் இலங்கைக்கான அவசரப் பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்குச் செல்வதற்கு முன்பாக, தமிழக முதல்வரை சிவ்சங்கர் மேனன் சந்தித்துள்ளார். அத்தோடு கச்சதீவை மீளப் பெற வேண்டுமென்கிற ஜெயலலிதா அம்மையாரின் கோரிக்கையும், இந்திய -இலங்கை அரசுகளுக்கிடையிலான இராஜ தந்திர உறவுகளில்,

புதிய நெருக்கடிகளை உருவாக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை அ.தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக் கூறியவாறு, தமிழக முதல்வருடன் உறவினை ஏற்படுத்த இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சிகள் யாவும், சட்ட சபைத் தீர்மானத்தோடு நொருங்கிப் போனதால், மாநில அரசுகள் குறித்து எமக்குக் கவலையில்லையென மீசையில் மண் ஒட்டாத கதையொன்றினைக் கூறியுள்ளார் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர் மட்ட இராஜதந்திரிகள், இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கு தமிழக சட்ட சபைத் தீர்மானத்தை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முற்படலாம்.

காங்கிரஸின் தி.மு.க.வுடனான உறவு மிகப் பலவீனமாகவுள்ள நிலையில், ஈழப் பிரச்சினை குறித்து இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் நெருங்கி வருவதையிட்டு, இலங்கை அரசு பதட்டமடையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆகவே, நிபுணர்குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசு திரும்பிவிடலாம் என்று கணிப்பிடும் இலங்கை அரசு, இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் வாய்ப்புண்டு. அதேவேளை இலங்கையின் பெரும் முதலீடுகளையும் வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்துள்ள இந்திய நிறுவனங்கள் ஜெயலலிதா அம்மையாரின் “பொருளாதாரத் தடை’ என்கிற விவகாரத்தை தமது வர்த்தக விரிவாக்கத்திற்குச் சாதகமான விடயமாகப் பார்க்காது.

“சீபா’ ஒப்பந்தம் ஊடாக சீனாவின் காலூன்றலை தடுத்துவிடலாமெனக் காய்களை நகர்த்தும் இந்திய ஆட்சியாளர், சட்டசபைத் தீர்மானத்தை அழுத்தம் கொடுக்கும் கருவியாகப் பயன்படுத்துவார்களே தவிர, அவ்வாறான தடைகளை மேற்கொள்ள நிச்சயம் முயலமாட்டார்கள். ஆனாலும் அகில இந்திய அளவில் திரட்டப்படும் ஆதரவு, சிலவேளைகளில் மத்திய அரசின் போக்கினை மாற்ற உதவலாம்.

நன்றி – வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.