புதிய பதிவுகள்2

தேசிய மட்டத்தில் சிறந்த தமிழ் வீராங்கனையாக திகழ்வேன் - கிரிக்கெட் வீராங்கனை சயிந்தினி !

3 months 2 weeks ago
09 JUN, 2024 | 08:14 PM நான் தேசிய மட்டத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக திகழ வேண்டும் என்று அவா இருக்கின்ற போதும் எனது வீட்டின் பொருளாதார சிக்கலால் கைகூடுமோ என்ற அச்சம் இருக்கின்றது, இருந்தும் உதவிகள் கிடைக்குமாயின் வட மாகாணத்துக்கு ஒரு தமிழ் பெண்மணியாக புகழை ஈட்டிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது என தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இலங்கையின் வன்பந்து கிரிக்கெட் கழக மட்டத்தில் விளையாடி வரும் பேசாலை மன்.சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி இவ்வாறு தெரிவித்தார். பேசாலை மன்னார் சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி வன்பந்து துடுப்பாட்ட வீராங்கனையாக வட மாகாணத்தில் முதல் பெண்மணியாக தெரிவு செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையின் கழக மட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் மாணவி சயிந்தினி ஊடகத்துக்கு மேலும் தெரிவிக்கையில் , எனக்கு கல்வியும், கிரிக்கெட் விளையாட்டும் இரு கண்கள். தேசிய மட்டத்தில் விளையாடுவதற்கு இப்பொழுது வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் வீரர்கள் தெரிவாகும் சூழ்நிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில் வடக்கிலிருந்து நான் முதல் பெண்மணியாக கிரிக்கெட் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது எனக்கு பெருமையாக இருக்கின்றது. நான் இப்பொழுது மன்னார் பேசாலை சென்.பற்றிமா ம.ம.வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தர வகுப்பில் கற்று வருகின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இப்பரீட்சையில் தோற்ற இருக்கின்றேன். இதன் பின் நான் கொழும்பில் தங்கியிருந்து சிறந்த பயிற்ச்சிகளை பெறுவதற்கு ஆவலாக இருக்கின்றேன். இருந்தும் எங்கள் வீட்டின் பொருளாதாரம் இதற்கு ஒரு தடையாக இருக்குமோ என்ற அச்சமும் இருக்கின்றது. இந்த முயற்சிக்கு எனக்கு உதவிகள் கிடைக்குமாயின் எனது பாடசாலைக்கும் , மாவட்டத்துக்கும் , மாகாணத்துக்கும் பெருமையை ஈட்டிக் கொடுக்கும் கனவை நனவாக்கிக் கொள்வேன். சக வீராங்கனைகளுடன் கொழும்பில் நான் பயிற்சி பெறும்போது நான் மட்டுமே தமிழ் பெண்மணி. எனக்கு அவர்களின் மொழியை புரிந்துகொள்ள முடியாது. இதனால் எனக்கு ஆரம்பத்தில் பெரும் அச்சமாகக் காணப்பட்டது. இருந்தும் எங்களுக்குள் மொழி புரிந்துணர்வு இல்லாதபோதும் அவர்கள் எனக்கு காட்டிய அன்பும் பாசமும் எனது அச்சத்தை தற்பொழுது தளர்த்தியுள்ளது. எனக்கு இப்பொழுது சிங்கள மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவா ஏற்பட்டுள்ளது. நான் இதற்கான முயற்சியை நான் முன்னெடுக்க இருக்கின்றேன். உண்மையில் நான் இந்த கிரிக்கெட் விளையாட்டுக்குள் உட்புகுவதற்கு எனது பயிற்றுவிப்பாளர் ரி.பிறேமன் டயஸ் அண்ணா , பெனட் சேர் , ரூபன் சேர் , கொலின்றா ரீச்சர் எனது பாடசாலை பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாவட்ட மாகாண விளையாட்டு அதிகாரிகள் லங்கா சேர் . றொகான் சேர் . செல்வா சேர் , சுரேஸ் சேர் போன்ற பலரின் முயற்சியே இன்று நான் இந்த நிலையில் இருக்கின்றேன். உண்மையில் பாடசாலை நிர்வாகம் மற்றும் எனது பெற்றோர் இவர்களின் ஒத்துழைப்பு இருந்திருக்காவிடில் நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185677

டி20 உலகக் கோப்பைச் செய்திகள்

3 months 2 weeks ago
நெதர்லாந்தின் கடும் சவாலுக்கு மத்தியில் மில்லர், ஸ்டப்ஸ் ஆகியோர் தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தனர் Published By: DIGITAL DESK 7 09 JUN, 2024 | 09:51 AM (நெவில் அன்தனி) நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் (இலங்கை நேரப்படி சனிக்கிழமை) நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்த நசவ் ஆடுகளத்தில் நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 104 ஒட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆனால், அந்த வெற்றி தென் ஆபிரிக்காவுக்கு இலகுவாக வந்துவிடவில்லை. ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர ஆகியோரின் பொறுப்பணர்வுடன்கூடிய துடுப்பாட்டங்களே போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தன. தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. குவின்டன் டி கொக் (0) முதல் பந்திலேயே தவறான கணிப்பு காரணமாக ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ரீஸா ஹென்றிக்ஸ் (3), அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (0), ஹென்றிக் க்ளாசன் (4) ஆகியோர் ஆட்டம் இழக்க, தென் ஆபிரிக்கா 5ஆவது ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. மிகவும் இக்காட்டான வேளையில் ஜோடி சேர்ந்த ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்து அணிக்கு தெம்பூட்டினர். ஸ்டப்ஸ் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (77 - 5 விக். கடைசி 3 ஓவர்களில் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 25 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரில் டேவிட் மில்லரால் 9 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் மாக்கோ ஜென்சன் (3) ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் மில்லர் 18 ஓட்டங்களை விளாசி அரைச் சதம் குவித்ததுடன் தென் ஆபிரிக்காவுக்கு மிகவும் அவசியமான வெற்றியையும் ஈட்டிக்கொடுத்தார். கடைசிக் கட்டத்தில் அதிரடியில் இறங்கிய டேவிட் மில்லர் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் விவியன் கிங்மா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லோகன் வென் பீக் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது. 12ஆவது ஓவரில் நெதர்லாந்தின் 6ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை 48 ஓட்டங்களாக இருந்தது. மத்திய வரிசை வீரர்களான சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் (40), லோகன் வென் பீக் (23) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 7ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர். அவர்களைவிட விக்ரம்ஜித் சிங் (12), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ஒட்நீல் பாட்மன் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அன்றிச் நோக்கியா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: டேவிட் மில்லர். https://www.virakesari.lk/article/185628 அக்கீல் ஹொசெய்ன் அற்புதமான பந்துவீச்சு; மேற்கிந்தியத் தீவுகளுக்கு மிகப் பெரிய வெற்றி 09 JUN, 2024 | 11:13 AM (நெவில் அன்தனி) உகண்டாவுக்கு எதிராக கயானா ப்ரொவிடன்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (9) (இலங்கை நேரப்படி) காலை நடைபெற்ற சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சகலதுறைகளிலம் அற்புதமாக பிரகாசித்த மேற்கிந்தியத் தீவுகள் 134 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் ஈட்டிய மிகப் பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 84 ஓட்டங்களால் ஈட்டப்பட்ட வெற்றியே மேற்கிந்தியத் தீவுகளின் மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக துடுப்பெடுத்தாடிய அனைவரும் திறமையை வெளிப்படுத்தினர். ஜோன்ஸ்டன் சார்ள்ஸ் (44), அண்ட்றே ரசல் (17 பந்துகளில் 30 ஆ.இ.), அணித் தலைவர் ரோவ்மன் பவல் (23), நிக்கலஸ் பூரண் (22), ஷேர்ஃபேன் ரதஃபோர்ட் (22) ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் ப்றயன் மசாபா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா 12 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 39 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் ஜுமா மியாகி (13 ஆ.இ.) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். பந்துவீச்சில் அக்கீல் ஹொசெய்ன் 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இது அவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். இதுவே ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக பதிவான அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதி ஆகும். அவரைவிட அல்ஸாரி ஜோசப் 3 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: அக்கீல் ஹொசெய்ன் https://www.virakesari.lk/article/185646

வழமைக்கு மாறாக பொது நிகழ்வில் கலந்துகொண்ட புட்டினின் புதல்விகள்

3 months 2 weeks ago
09 JUN, 2024 | 12:50 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புதல்விகள் வழமைக்கு மாறாக நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர். ரஸ்யாவின் சென்பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் புட்டினின் புதல்விகள் கலந்துகொண்டுள்ளனர். மரியா வொரொன்ட்சோவாவும் கட்டரினாஎடிகோனோவாவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் 30 வருட திருமண வாழ்க்கையின் பின்னர் 2013 இல் புட்டின் விவகாரத்து செய்த முதல் மனைவியின் பிள்ளைகள் என்பதுகுறிப்பிடத்தக்கது. தனது பிள்ளைகள் விஞ்ஞான கல்வித்துறையில் பணிபுரிவதாகவும் தனக்கு பேரப்பிள்ளைகள் உள்ளதாகவும் புட்டின் தெரிவித்துள்ளார்- எனினும் அது ஒருபோதும் உறுதி செய்யப்படவில்லை.' உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஸ்ய இராணுவத்திற்கு உதவியமைக்காக 2022 இல் கட்டரினாஎடிகோனோவாவிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மரியா வொரொன்ட்சோவாவுக்கு எதிராகவும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. புட்டினின் சொத்துக்கள் அவரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 2019 முதல் 2022ம் ஆண்டிற்குள் மருத்துவநிறுவனம் ஒன்றின் ஊழியராக பணிபுரிந்து மரியா வொரொன்ட்சோவா 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் சம்பாதித்தார் என ரஸ்யாவின் ஊழலிற்கு எதிரான அமைப்பு இந்த வருடம் குற்றம்சாட்டியிருந்தது. புட்டின் தனது மகள் குறித்த விபரங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றார். https://www.virakesari.lk/article/185657

ஆதித்த கரிகாலன் உண்மையில் கொன்றது யார்?

3 months 2 weeks ago
சதியால் கொல்லப்பட்ட சோழ இளவரசர் 'ஆதித்த கரிகாலன்' பற்றி புதிய கல்வெட்டு கூறுவது என்ன? படக்குறிப்பு,சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் கால கல்வெட்டு கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 ஜூன் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் கடந்து நாடுகளை வென்ற சோழர்களின் வரலாற்றில் ராஜ ராஜ சோழன் ஆட்சி முறை, ராஜேந்திர சோழனின் வெற்றிகள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு இணையாக, பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் மர்ம மரணம் பற்றி வரலாற்று ஆர்வலர்கள், பேராசிரியர்கள் மட்டுமின்றி சாமானியர்களும் கூட இன்றளவும் விவாதிக்கிறார்கள். இதற்கு பொன்னியின் செல்வன் நாவலும், திரைப்படமும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. சோழர் வரலாற்றில் மன்னருக்கு இணையான அதிகாரங்களுடன் இளவரசர் ஆதித்த கரிகாலன் வலம் வந்தார் என்பதற்கான கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டம் அருகே ஏமப்பூர் கோவிலில் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு சில நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது? என்பது குறித்து விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் நம்மிடம் விரிவாக விளக்கம் அளித்தார். அத்துடன், ஆதித்த கரிகாலன் ஆட்சிக்குட்பட்டிருந்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகள் ஆதித்த கரிகாலன் குறித்து கூறும் செய்திகள் என்ன என்றும் அவர் விளக்கம் தந்தார். ஏமப்பூர் கல்வெட்டு கூறுவது என்ன? சோழர் காலத்தில் பெரும்பாலும் மன்னர்களின் பெயரை முன்னிலைப்படுத்தியே கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டன என்ற போதிலும் இளவரசர் ஆதித்த கரிகாலனின் பெயர் தாங்கிய கல்வெட்டுகள் மன்னருக்கு இணையாகவே பொறிக்கப்பட்டுள்ளன என்கிறார் பேராசிரியர் ரமேஷ். விழுப்புரம் அருகே ஏமப்பூரில் கல்வெட்டு "ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி" என்று தொடங்குகிறது. இதுகுறித்து விளக்கிய பேராசிரியர் ரமேஷ், "ஆதித்த கரிகாலன் ஆட்சியின் நான்காவது ஆண்டான பொது ஆண்டு 960 -ல் பொறிக்கப்பட்ட இந்த கல்வெட்டு திருமுனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு என்று இந்த ஊரை அழைக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது. ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் மூலவருக்கு (இறைவனுக்கு) காலம் முழுவதும் (சந்திரன்- சூரியன் உள்ள வரை ) விளக்கு ஏற்றுவதற்காக 96 ஆடுகளை இந்த கோவில் அறங்காவலர் பான் மகேஸ்வரர் என்பவரிடம் வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கின்றது" என்றார். “இந்தக் கல்வெட்டு ஆதித்த கரிகாலனின் ஆட்சியைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது என்ற அவர், ஆதித்த கரிகாலன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் இதன் மூலம் அறிய முடிவதாக கூறினார். ஆனைமங்கல செப்பேடு படக்குறிப்பு,ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது. "சுந்தர சோழன் தன் மூத்த மகனான பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு தொண்டை மண்டலம், திருமுனைப்பாடி ஆகிய பகுதிகளை ஆளும் உரிமையை வழங்கி இருக்கிறார். எனவே தான் இப்பகுதியில் ஆதித்த கரிகாலனின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன" என்று அவர் கூறினார். சிறு வயதிலேயே வீரத்துடன் விளங்கிய ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீர பாண்டியனைப் போரில் வென்றான் என்பதைக் குறிக்கும் வகையில், "இளைஞனான ஆதித்தியன் மனுகுலத்தின் ஒளி போன்றவன் மதங்கொண்ட யானைகளோடு சிங்கக் குட்டி விளையாடுவது போன்று வீரபாண்டியனுடன் இவன் போர் செய்தான்," என்கிறது ஆனைமங்கலச் செப்பேடு. இந்த கிராமம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ளது. "ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் தோற்கடித்து அவன் தலையை வெட்டி கொண்டு வந்து தஞ்சை அரண்மனை முன்பு செருகி வைத்தான் என்று திருவாலங்காடு, எசாலம், லெய்டன் ஆகிய செப்பேடுகள் கூறுகின்றன. எனவே இவன் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று அழைக்கப்பட்டான். பெரும்பாலான கல்வெட்டுகளில் ஆதித்த கரிகாலன் இந்த பெயரில்தான் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏமப்பூர் கல்வெட்டிலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது" என்று கூறிய பேராசிரியர் ரமேஷ், அதை படித்தும் காண்பித்தார். ஏரி பராமரிப்பு கல்வெட்டு திருக்கோயிலூர் வட்டம், பொ.மெய்யூர் கிராமத்தில் மயிலாடும்பாறையில் உள்ள கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக் குறிப்பிடப்படுகிறார். தொடர்ந்து அந்த கல்வெட்டில் "ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை “ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது. ”பட்டி” என்பது நிலத்தைக் குறிக்கும் என்று கல்வெட்டு செய்தியையும் அவர் விளக்கிக் கூறினார். தொடர்ந்து பேராசிரியர் ரமேஷ் கூறுகையில் "ஆதித்த கரிகாலனின் ஆட்சி காலம்.கி.பி. 957-969 ஆகும். ஆதித்த கரிகாலன் இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் ஆவார். இவர் காஞ்சிபுரத்தை (தொண்டை நாடு பகுதி) தலைநகராக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்து வந்தார். பாண்டியன் தலைகொண்டவன், வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்று புனைப் பெயர்களால் அழைக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் மிக வலிமை வாய்ந்த இளவரசர் ஆவார்." என்று கூறினார். ஆதித்த கரிகாலன் மர்ம மரணம் "கி.பி. 966- ல் ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளிலேயே, அதாவது கி.பி. 969இல் அவர் கொல்லப்பட்டார். இந்த சோகம் தாங்காமல் அடுத்த சில மாதங்களிலேயே ஆதித்த கரிகாலனின் தந்தையான சுந்தர சோழன் உயிரிழந்தார்" என்று ஆதித்த கரிகாலனின் பேராசிரியர் ரமேஷ் வரலாற்றை விவரித்தார். படக்குறிப்பு,ஆதித்த கரிகாலனின் ஆட்சி காலம்.கி.பி. 957-969 என்று கூறுகிறார் பேராசிரியர் ரமேஷ். ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய கல்வெட்டு ஆதித்த கரிகாலன் சதியால் கொல்லப்பட்டார் என்பதை காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆனாலும் எதற்காக அவர் கொல்லப்பட்டார் என்று முழு தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் குற்றவாளிகள் பெயர்களை அவர்களின் நிலத்தை கையகப்படுத்தியது குறித்த இக்கல்வெட்டு செய்தியால் அறியலாம். "ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்ட இந்த கல்வெட்டு, ஆதித்த கரிகாலன் கொலையில் தொடர்புடையவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை, விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது. ஆனால் ஆதித்த கரிகாலனை எதற்காக கொலை செய்தார்கள், யார் அவர்களுக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது போன்ற தகவல்கள் அதில் இல்லை." என்று பேராசிரியர் ரமேஷ் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c0xx4z4ey06o

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ் விஜயம்!

3 months 2 weeks ago
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயங்கமாட்டேன் - சஜித் பிரேமதாச 09 JUN, 2024 | 06:21 PM (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் பேசுவதற்கே சிலர் அச்சமடைகின்றனர். ஆனால் நான் அதற்கு தயங்குபவன் அல்ல. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13ஆவது திருத்தம் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப செயற்றிட்டத்தின் கீழ் கிளிநொச்சி, பாரதி வித்தியாலயத்துக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (9) கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு உறுதியளித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பல்வேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வழிகளில் பொய்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கூறிவருகிறது. சர்வதேச தொழிலாளர் தினத்தன்றும் அந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தம் நிச்சயம் அமுல்படுத்தப்படும். வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி 9 மாகாணங்களிலும் உள்ள மக்களுக்கும் இந்த வாக்குறுதியை வழங்குகிறேன். இதனை நடைமுறைப்படுத்த தயங்கப் போவதில்லை. இதன் மூலம் இப்பிரதேச மக்களின் அரசியல், மத, சமூக, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும். அடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளே உள்ளடங்கியுள்ளன. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த அத்தியாயத்தை விரிவுபடுத்தி இதில் பொருளாதார, சமூக, மத, சுகாதார, கல்வி உரிமைகள் வழங்கப்படும். 13ஆவது திருத்தம் குறித்து பேசும்போது பல தலைவர்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டு கேட்காதது போல் பாசாங்கு செய்வர். அல்லது அது பற்றிய பேச்சினை உதாசீனப்படுத்துவார்கள். ஒரு சிலர் அது தொடர்பில் பேசுவதற்கு அச்சப்படுகின்றனர். இவ்வாறு பெரும்பாலானோர் சந்தர்ப்பவாதிகளாக நடந்துகொண்டாலும் நாம் இவ்விடயத்தில் நேர்மையாகவே நடந்துகொள்கின்றோம். எனவே எவ்வித பேதமும் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். பல்வேறு அரசியல்வாதிகள் வடக்கிற்கு வந்து அரசாங்கத்தின் வளங்களை பகிர்ந்தளித்தாலும், பல்வேறு நன்கொடையாளர்கள் வழங்கிய உதவிகளையே நான் வழங்கி வருகிறேன். எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய கட்சிகள் பணியாற்றாது இருந்தாலும், நானும் எனது குழுவும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம். இனவாதத்தைப் பரப்பி தமது வாக்குகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தமது வாக்குகள் குறித்து சிந்திப்பவர்களே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நான் அவ்வாறு செயற்படவில்லை. வட மாகாணத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாத வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்திய இந்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் தலைவரான பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்து தருவேன் என உறுதியளிக்கிறேன். இப்பிரதேசத்தில் தனியான கைத்தொழில் பேட்டைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்துத் தரப்படும். இந்தியாவில் உள்ள நவீன தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலும் அதுபோன்ற நிறுவனங்களை நிறுவி, சர்வதேச தரத்தில் அமைந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ நிறுவனங்கள் நிறுவப்படும். இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பைக் பெற்றுக்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/185686

இரண்டு மாத சந்தோஷம் 15ஆம் திகதியுடன் பறி போக போவதாக வடக்கு மீனவர்கள் கவலை

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 7 09 JUN, 2024 | 08:11 PM தமது இரண்டு மாத சந்தோஷம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் பறிபோகப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கவலை தெரிவித்துள்ளார். யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மீன் பிடி தடைக்காலம் கடந்த இரண்டு மாதங்களாக இருந்தமையால், வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் மேற்கொள்ளக் கூடியதாகவிருந்தது. எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் மீன்பிடித் தடைக் காலம் முடிவடையவுள்ளது, அதனால் மீண்டும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையலாம். எனவே இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேவேளை இந்திய பிரதமராக மோடி மீண்டும் தெரிவானமை தமக்கு மகிழ்ச்சியே என தெரிவித்த அவர், இந்திய பிரதமர் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடிப் படகுகளை தடைசெய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/185682

நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்

3 months 2 weeks ago
இங்கே கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் அதற்குக் கூறப்படும் காரணங்கள் பற்றியே கருத்துரைக்கப்படுகிறது.. ஹமாஸ் நல்லவர்கள் என்றோ அல்லது புலிகள் பயங்கரவாதிகள் என்பதோ அல்ல. எனவே கருத்துரைக்க முன்னர் கூறப்பட்டவற்றை ஆழ்ந்து வாசிப்பது முட்டள்தனமான கருத்துக்களை முன்வைப்பதைத் தவிர்க்க உதவும். 😏 ஹமாஸின் நரவெறியாட்டத்தை முஸ்லிம்கள் தவிர்ந்த யாரும் ரசிக்கவில்லை என நம்புகிறேன்.

யாழில் ஆலய கும்பாபிஷேகத்தில் தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளை திருடிய பெண் கைது!

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 7 09 JUN, 2024 | 04:55 PM யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அடியார்களின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை (9) கைது செய்யப்பட்டார். கைதான பெண் வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் கொழும்பு - வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். அப்பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தியபோது, திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் தங்க நகைகள் பெண்ணின் உள்ளாடைக்குள்ளிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பெண், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு, பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். https://www.virakesari.lk/article/185676

சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கொவிட் மாறுபாடு பரவ ஆரம்பித்துள்ளது!

3 months 2 weeks ago
சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கொவிட் மாறுபாடு பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. கோடை மாதங்கள் முழுவதும் இந்த கொவிட் மாறுபாடு காணப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கொவிட் மாறுபாடு வேகமாகப் பரவி வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அந்த நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், புதிய கொவிட் மாறுபாடு அதன் தீவிரப் போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/303392

பாஸ்போர்ட்டுகளை பெற புதிய தேசிய அடையாள அட்டை அவசியம்

3 months 2 weeks ago
புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். ஏராளமான விண்ணப்பதாரர்கள் பல தசாப்தங்கள் பழமையான தேசிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பதாக அறியப்படுகிறது, மேலும் பாஸ்போர்ட் பெற தேவையான ஆவணங்களுடன் ஒட்டப்பட்ட புகைப்படம் வண்ண புகைப்படத்துடன் பழைய அடையாள அட்டை புகைப்படங்கள் பெரிதும் வேறுபடுகிறன என்றார். பழைய தேசிய அடையாள அட்டைகள் எண்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதால் இந்த நடைமுறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் பொலிஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) 523 போலி கடவுச்சீட்டுகள் பதிவாகியுள்ளதாக என்றும் அவர் கூறினார். எனவே புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/303407

தென்னிந்திய படகு உரிமையாளர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் கட்டளை இரத்து : யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவு

3 months 2 weeks ago
09 JUN, 2024 | 11:20 AM (நமது நிருபர்) தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளை பறிமுதல் செய்யும் நீதிவான் நீதிமன்ற கட்டளைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த தென்னிந்திய படகு உரிமையாளர்களின் படகுகளையும் அவர்களின் கடற்றொழில் உபகரணங்களையும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர் எனும் குற்றத்துக்காக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் 21.11.2022 அன்று வழங்கிய கட்டளைகளினால் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யும் கட்டளைகள் வழங்கியிருந்ததுடன் அதன் அடிப்படையில் இந்த படகுகள் மயிலிட்டி துறைமுகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தன. இக்கட்டளைகளுக்கு எதிராக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்குகள் படகு உரிமையாளர்களால் தொடரப்பட்டன. இவ்வழக்கில் படகு உரிமையாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அந்த கட்டளைகளை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இரத்து செய்து கட்டளையாக்கியிருந்தது. தென்னிந்திய படகு உரிமையாளர்களது படகுகளையும் கடற்றொழில் உபகரணங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கான உரிமைக்கோரிக்கையை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் மேல்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டு 03 மாத காலத்துக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு படகு உரிமையாளர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜனுடன் சட்டத்தரணிகள் சாரா ஹரிபிரவீன், சபிஷாந்த் மோகன் தோன்றியதோடு எதிர்மனுதாரர்கள் சார்பில் அரச சட்டவாதி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185641

நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்

3 months 2 weeks ago
ஹமாஸ் எனும் அதி புனிதர்கள் விடுதலை வேட்கையில் இஸ்ரேல் பெண்கள் மீது நிகழ்த்திய அதி தீவிர கொடூரஙகள் பற்றி கீழே உள்ள திரியில்: இஸ்ரேல் செய்வது மோசமான இனப்படுகொலை ஹமாஸ் செய்வது பயங்கரவாதம் (பாலஸ்தீன போராட்டம் அல்ல) நடுநிலை எனும் பெயரில் இதில் ஒன்றை நியாயப்படுத்தி இன்னொன்றை புனிதர்களாக்குவது அவரவர் அரசியல் நிலைப்பாடு சார்ந்த அறமற்ற செயல்!

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்து!

3 months 2 weeks ago
இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவராக வலம் வருகிறார். சென்னை 28 மற்றும் அஜித் நடித்த மங்காத்தா உள்ளிட்ட படங்களில் பிரேம்ஜி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சில படங்களுக்கு இசை அமைத்து பாடல்களும் பாடியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நகைச்சுவை கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்து வருவார். பன்முகத் திறமை கொண்ட இவர் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவரிடம் ரசிகர்கள் எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும் என ரசிகர்கள் கேட்கும் போது, நடக்கும் போது நடக்கும் என நகைச்சுவையாக பதில் அளித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இந்து என்பவருக்கும் இன்று (ஜூன்.9) திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. முன்னதாக இவர்களது திருமண பத்திரிக்கை வெளியாகி வைரல் ஆனதையடுத்து தங்களது பிரைவெசியை மதித்து மணமக்களை மனதார வாழ்த்துங்கள், திருமணம் முடிந்ததும் புகைப்படங்கள் பகிர்கிறேன் என்று வெங்கட் பிரபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் மணமகளின் உறவினர்கள் மற்றும் பிரேம்ஜியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சென்னை 28 படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நேற்று திருத்தணியில் உள்ள தனியார் ஓட்டலில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கங்கை அமரன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் கச்சேரியில் பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://thinakkural.lk/article/303423

"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"

3 months 2 weeks ago
"தீவிர தமிழ் தேசியம் பேசி இனவாதத்தை மேலும் வளர்தது விடுவதும் உசுப்பேற்றி உசுப்பேற்றி வெறுப்பு கருத்துக்களை விதைத்து உண்மையான தமிழ் தேசியத்துக்கு உலை வைப்பது தான் தான் எமது வேலை.??? நன்றி உங்க வேலையை , நோக்கத்தை, அழகாக சுருக்கமாக வெளிப்படையாக தெரியப்படுத்தியத்துக்கு. நான், எனக்கு உண்மையில் யார் யார் என்ன வேலை, நோக்கம் கொண்டு உள்ளார்கள் என்பதில் அக்கறை என்றும் இல்லை நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். சரி பிழை , அதை வாசிப்பவர்கள் சரியாக சுட்டிக்காட்டும் இடத்து ஏற்றுக்கொள்கிறேன் , அல்லாவிட்டால் அவர்களின் பதிலுக்கு மட்டும் விளக்கமாக வரலாற்றில் இருந்தும் மற்றும் தொல்பொருள் / இலக்கியங்களில் இருந்து எடுத்துக் கூறுகிறேன் அவ்வளவுதான் , நான் என்றும் ஒரு அறிவில் சிறியவனே, ஆனால் அறிந்து கொள்ளும் / கற்றுக் கொள்ளும் ஆவல் உள்ளவன் இரண்டாவது நான் எழுதிய கேள்விகள் / பதில்கள் "பெருமாள்" என்ற ஒருவர் என் கட்டுரைக்கு எழுதிய ------ ..... அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ? முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் . கொஞ்சநாள் வராவிட்டால் தொடங்கிடுவான்கள் மதமாற்றம் ..... என்பதற்கானதே , மற்றும் படி நான் வேறு எவருக்கும் அல்ல. என்றாலும் யாராகினும் அதற்கு நான் எழுதிய கேள்விகளுக்கு பதில் தந்தால் கட்டாயம் வாசிப்பேன் மீண்டும் நன்றி

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

3 months 2 weeks ago
இந்த போட்டியை பார்க்க முடியாதே, வெளியில் போக வேண்டி இருக்கே என்ற நிலை......கடவுள் இருக்கார், சார்..... இது பெரிய மாயாண்டி குடும்பப் பகை போல......ஒன்றுமே தெரியாத அப்பாவி அமெரிக்கா குடும்பச் சண்டைக்கு நடுவில போய் மாட்டுப்பட்டிட்டுது...........
Checked
Sat, 09/28/2024 - 20:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed