புதிய பதிவுகள்2

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
இலங்கைத் தமிழர் உட்பட... உலகில் எங்கும் வாக்குப் போடத் தெரியாத கூட்டம் ஒன்று இருக்குது தானே... அதுதான்... இந்த 12%

குற்றமே தண்டனை

3 months 2 weeks ago
(குறுங்கதை) குற்றமே தண்டனை --------------------------------- நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சேகர் எங்கள் வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் ஐயா சேகரை கூட்டி வந்தார். சேகருக்கும் எனக்கும் ஒரே வயது. மலையகத்தைச் சேர்ந்தவன். யாழில் ஒரு வீட்டில் வேலைக்காக அனுப்பப்பட்டிருக்கின்றான். அந்த வீட்டுக்காரர்களின் கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓடிக்கொண்டிருந்த சேகரை ஐயா யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் வைத்துக் கண்டதாகச் சொன்னார். நாங்கள் அப்போது ஏழு பிள்ளைகள். எட்டாவது தம்பி இன்னும் பிறக்கவில்லை. சேகர் தற்காலிகமாக எட்டாவது பிள்ளை ஆகினான். சேகரை சேகரின் ஊர், தாய் தந்தையர் விவரம் அறிந்த பின், அவனின் வீட்டாரை எச்சரித்து, அங்கு கொண்டு போய் விடுவதாக ஐயா அம்மாவிற்கு ஒரு தகவலாக மட்டுமே ஒரு இரவில் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா மிகுந்த இரக்கமுள்ளவர். ஆனாலும் ஏற்கனவே ஏழு குஞ்சுகளுக்கு தினமும் இரை தேடும் ஒரு தாய்ப்பபறவையின் நிலையிலேயே அம்மா இருந்தார். அம்மாவின் தவிப்புகள் எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஐயாவிற்கு எட்டாவது நிரந்தரப் பிள்ளை ஒன்றிற்கான திட்டம் இருந்ததும் அம்மாவிற்கு அப்போது தெரிந்தே இருக்காது. சேகரை பள்ளிக்கூடம் அனுப்பவில்லை. இது அநியாயம், அக்கிரமம் என்று உடனேயே முடிவெடுத்துவிடாதீர்கள். என்னையே அப்பொழுது தான் பள்ளிக்கூடம் அனுப்ப ஆரம்பித்திருந்தனர், அதுவும் அக்கம்பக்கம் இருந்தவர்களுக்குப் பயந்து. இரண்டாம் வகுப்பு எனக்கு அரிவரியே, முதலாம் வகுப்பின் பிற்பகுதியில் தான் நானே பாடசாலையை ஆரம்பித்திருந்தேன். நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தால், சேகரும் நானும் எப்போதும் ஒன்றாகவே விளையாடுவோம். சேகர் உடல் மிகவும் உறுதியானவன். வேகமானவனும் கூட. ஒருநாள் ஒரு தென்னந்தோப்பிற்கு எங்களிவரையும் கூட்டிச்சென்றனர். நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள். தென்னை மரங்களில் பாம்பு கீறும் வேலையை எங்களிருவருக்கும் கொடுத்தனர். கறுப்பு மையால் வளைச்சு வளைச்சு தென்னை மரத்தில் பாம்பு கீறவேண்டும். பாம்பின் தலைப்பக்கம் கொஞ்சம் பெரிதாக இருக்க வேண்டும், வால் பக்கம் மெல்லிதாக இருக்கவேண்டும். தேரையின் கண்ணுக்கு அது பாம்பாகத் தெரிய வேண்டும், அது தான் நிபந்தனை. தேரை தென்னையில் ஏறி, குரும்பைகளை மேய்ந்தால், தேங்காய்கள் ஒல்லித்தேங்காய்கள் ஆகிவிடும் என்பது ஐயாவினதும் அவர்களினதும் நம்பிக்கை. நான் இன்றுவரை இந்த பாம்பு - தேரை - ஒல்லித்தேங்காய் விசயத்தை எங்கும் தேடி உறுதிபபடுத்தவில்லை. பாம்பை விட வேறு ஏதாவது என்னைக் கீறச் சொல்லியிருந்தால், அது அதுவாக வந்தே இருக்காது. சித்திரம் அவ்வளவு மட்டுமட்டு. தேரையைத் தூக்கும் ஒரு பருந்தோ அல்லது ஒரு கழுகோ கீறி இருந்தால், அங்கிருந்த தேரைகள் நிச்சயமாக என் சித்திரத்தின் மேலால் தென்னைகளில் ஏறி ஒரு உயரத்தில் வாழ்ந்திருக்கும். ஒவ்வொரு பாம்புடனும் A, B, C, D இப்படி ஒரு எழுத்தையும் தென்னையின் மற்ற பக்கத்தில் போடலாமே என்று எனக்கு ஒரு யோசனை திடீரெனத் தோன்றியது. அப்பொழுது தான் நான் இரண்டாம் வகுப்பில் ஆங்கிலப்பாடம் படிக்க ஆரம்பித்திருந்தேன். நான் அதை சேகருக்கும் சொன்னேன். அவனும் அதை ஏற்றுக்கொண்டான். ஆனால் அவனுக்கு ஆங்கில எழுத்துகள் தெரியாது, தமிழ் எழுத்துகளும் தெரியாது. பாம்புகளைக் கீறி முடித்த பின், இருவருமாகச் சேர்ந்து A, B, C, D போடுவதாக முடிவெடுத்தோம். பாம்புகளை கீறிக்கொண்டிருக்கும் போது, சேகர் அடிக்கடி என்னிடம் வந்தான். இடையிடையே சின்னச் சின்ன ஓய்வு எடுப்பது போன்று. ஒவ்வொரு தடவையும் A என்றால் எப்படி இருக்கும், B என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டான். எழுதிக்காட்டினேன். பாவமாக இருந்தது, சேகரையும் எப்படியும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும், அம்மாவிடம் மட்டுமே பேசலாம், அம்மாவையே கேட்போம் என்று நினைத்தபடியே என்னுடைய தென்னை மரங்களில் பாம்புகளைக் கீறி முடித்தேன். சேகர் எப்பவோ கீறி முடித்திருக்கவேண்டும். அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பக்கத்தை நோக்கி நடந்தேன். அவனுடைய தென்னை மரங்களையும், பாம்புகளையும் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டேன். ஒவ்வொரு பாம்பின் வாலுக்கு கீழும் ஒரு ஆங்கில எழுத்து எழுதப்பட்டிருந்தது. ஓடி ஓடிப் பார்த்தேன். 26 எழுத்துகளும் 26 பாம்புகளின் வால்களில் எழுதப்பட்டிருந்தது. அப்படியே முட்டி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அங்கேயே நின்றேன். எனக்கு தெரிந்த முழு ஆங்கிலத்தையும் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்தேன், ஆனால் இவன் என்னை ஏமாற்றி விட்டானே என்று. கோபமும் அழுகையும் கரையை உடைக்கக் காத்திருந்தன. வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் சேகர் என்னிடம் எதுவும் கதைக்கவில்லை, நானும் தான். வீட்டிற்கு வந்த பின்னர், இருவரும் குளிப்பதற்காக கிணற்றடிக்குப் போனோம். பெரிய வட்டக் கிணறு. எப்போதும் ஆறு அடிகளுக்கு தண்ணீர் நிற்கும். மாறி மாறித் தண்ணீர் இறைத்துக் குளிப்பது எங்கள் வழக்கம். சேகர் முன்னால் நின்று தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் தயங்கி விட்டு, அப்படியே சேகரைப் பிடித்துத் தள்ளி விட்டிட்டேன். 'அய்யோ' என்ற அவனின் குரல் முடிவதற்குள் பெரிய சத்தத்துடன் சேகர் தண்ணீருக்குள் போய்விட்டான். அம்மாவும், வேறு ஆட்களும் ஓடிவந்தனர். பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர் மிக இலகுவாக கிணற்றுக்குள் காலை கீழே விட்டுப் பாய்ந்து, சேகரை தண்ணீருக்குள் இருந்து தூக்கி எடுத்தார். சேகர் தானே தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகவே சொன்னான். எனக்குப் பக்கத்திலேயே ஒட்டிக்கொண்டே இருந்தான். இரவாகியது. ஐயாவிற்கும் அம்மாவிற்கும் ஒரே வாய்த்தர்க்கம். அம்மா ஒரே விசயத்தையே ஐயாவிடம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார், சேகருக்கு எதுவும் ஆகியிருந்தால் நாங்கள் இந்த உலகத்திற்கு என்ன பதில் சொல்வது என்று. நானும் சேகரும் அப்படியே நித்திரை ஆகிவிட்டோம். காலை எழும்பி அவசரம் அவசரமாக நான் பள்ளிக்கூடத்திற்கு போவதற்கு ஆயத்தமானேன். சேகரும் எழும்பி விட்டிருந்தான். பள்ளிக்கு கிளம்பும் போது, வாசலில் நின்று திரும்பிப் பார்த்தேன், சேகர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அன்று வகுப்பில் இதே நினைவு மட்டுமே. சேகர் எப்படியும் வீட்டில் என்னை மாட்டி விட்டுவிடுவான் என்று மனம் சொல்லிக்கொண்டேயிருந்தது. பள்ளிக்கூடம் முடிந்து பயத்துடன் வீட்டிற்குள் மெதுவாக நுழைந்தேன். சேகரைக் காணவில்லை. அவனை எங்கும் காணவில்லை. மெதுவாக அம்மாவிடம் போய் சேகர் எங்கே என்று கேட்டேன். சேகரைக் கூட்டிக்கொண்டு ஐயா மஸ்கெலியாவிற்கு போயிருப்பதாக அம்மா சொன்னார். மஸ்கெலியாவில் சேகரின் தாய் தந்தை இருப்பதாகவும் அம்மா சொன்னார். சேகர் அழுதுகொண்டே போனதாகவும் அம்மா சொன்னார், சொல்லும் போதே அம்மாவின் குரலிலும் ஒரு அழுகை தெரிந்தது. நான் அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன். தொண்டை அடைத்த பின், கண்ணீர் ஓட இருந்தேன். மஸ்கெலியாவிலிருந்து ஐயா மட்டும் திரும்பி வந்தார். அதன் பின் சேகர் பற்றி எங்கள் வீட்டில் எவரும் கதைக்கவில்லை. நானும் ஐயாவையோ அம்மாவையோ எதுவும் கேட்டதும் இல்லை.

காதல் கடை - T. கோபிசங்கர்

3 months 2 weeks ago
காதல் கடை மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும் , சைக்கிள் வித்தவனும் முதலாளியா மாறின காலம் அது, அதே பவுசு மோட்டச் சைக்கிள் சைக்கிள் திருத்திற ஆக்களுக்கும் வந்திச்சுது. பவுண் வித்து பாண் வாங்கின நிலமை அப்ப . ஆசுபத்திரிக்கு போறதை கூட அடுத்த மாசம் தள்ளிப்போட்டிட்டு ஓடிறதுக்கு ரெடியா உடுப்பெல்லாம் கட்டி வைச்சிருந்த காலம். எல்லாருக்கும் அடிக்கடி அவசரத்துக்கு இடம்பெயர்ந்து ஓடிப்போக ஒரே போக்குவரத்து சைக்கிள் எண்ட படியால் மருந்துக்கடையிலும் பாக்க இருக்கிற ஒரே வாகனமான சைக்கிள் கடைக்கு உடன ஓடிப் போய் காட்டின நிலமை இருந்த நாட்கள் அவை. மோட்டச் சைக்கிள் பேருக்கு ஏத்த மாதிரி மோட்டுச் சைக்கிளாத்தான் இருக்கும்; ஒரு நாள் ஓடினா ஒரு கிழமை கராஜ்ஜில இருக்கும். ஆட்டிறைச்சிக்கடையில ஒண்டும் மிச்சம் இல்லாமல் காலில இருந்து தொங்கிற வால் வரை வித்து முடிக்கிற மாதிரி, சைக்கிள் கடையிலேம் கிழிஞ்ச ரயர் , நசிஞ்ச rim, அறுந்த chain எண்டு எல்லாம் சொல்லிற விலைக்கு “ விருப்பம் எண்டால் வாங்கு“ எண்டு வித்த நிலமை இருந்திச்சுது. திடீர் திடீரெண்டு இந்தா வெளிக்கிடிறன் எண்டு கோட்டையில இருந்து அடிக்கிற செல்லுக்கு ஆக்கள் கொஞ்சம் முதல் ஓட , பிறகு ஆசுபத்திரியும் இடம் பெயர , இனி இருக்ககேலாது எண்டு அதுக்குப் பின்னால நாங்களும் ஓடிப் போக வேண்டி இருந்தது. இதால சைக்கிள் கட்டாயம் தேவை எண்டதால ஆக்களிலும் பாக்க அதைக் கழுவித் துடைச்சு கவனமாப் பாக்க வேண்டி இருந்திச்சுது. அடிக்கடி அடிக்கிற செல்லுக்கு இப்பிடியே போக்கும் வரவுமாய் இருந்த படியா எப்பவும் ஓட ரெடியா சைக்கிளை வைச்சிருக்கிறனாங்கள். ஒயில் ஓடிக்காஞ்சு போன கறுத்த மண், எண்ணையில வழுக்கிற உடைஞ்சும் உடையாத சீமெந்து தரை, ஆண்டாண்டு காலமா தடீல தொங்கிற பழயை ரயர்கள், குமிச்சு அடுக்கின கறள் கட்டின rims, ஆணிகள் அடிச்ச பக்கீஸ்பெட்டீல தொங்கிற ஆறாம், எட்டாம் , பத்தாம் , பன்ரெண்டாம் சாவி , பழைய மரப் பெட்டீக்க குறடு ,சுத்தியல் ,ஸ்பனர் எண்டு கையால தொட்டாலே ஏற்பூசி போட வேண்டிய நிலைமையில கறள் கட்டின சாமாங்கள் , குறுக்கால வெட்டின பழைய பரல் ஒரு மாதமா மாத்தாத தண்ணியோட , ஓட்டு தீராந்தீல இருந்து தொங்கிற ரெட்டைப்பட்டுச் சைக்கிள் செயின் நுனியில வளைஞ்ச ரெண்டு கம்பி அதில முன்காலைத் தூக்கின குதிரை மாதிரி ஏத்தி விட்ட சைக்கிள், நிலத்தில விரிச்ச சாக்கில ; வால் பிளேட், கத்திரிக்கோல் , பாதி தேஞ்ச அரம், வடிவா வெட்டின வெவ்வேறு சைஸ் சதுர ரியூப் துண்டு , பினாட்டு மாதிரி கறுப்பா உருட்டின கொம்பவுண்ட் , பிங் கலர் சொலூசன் , ஒட்டுப் போட்டாப் பிறகு வல்கனைஸ் பண்ண (அவிக்கிறதுக்கு ) ஒரு செட்டப் இவ்வளவும் இருந்தால் இது சைக்கிள் கடை. கடையில ஒரு பெரிய bossம் மற்றது வேலை பழகிற சின்ன boss எண்டு ரெண்டு பேர் தான் இருப்பினம். கடை இப்பிடி இருக்கிறதால கடைக்காரரை சில்லறை ஆள் எண்டு நெக்கக்கூடாது. சில Senior citizens ன்டை கடைகள் இருக்கும் அவைகளுக்காக, என்ன அவை திறந்திருக்கிறதிலும் பாக்க பூட்டி இருக்கிறது தான் கூட. எங்களுக்க ஏத்த மாதிரி கடையைத் தான் தேடிப் போறது. எங்கடை வயதுக்காரர் ஆனால் அவை boss. நாங்கள்சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் கடையில விட எங்களைக் கண்டாலும் busy மாதிரி கவிட்டு வைச்ச பழைய wheel spoke க்குள்ள சில்லை வைச்சு பக்கிள் எடுக்கிறவங்கள் , காத்தடிக்கப் பொம்பிளைப் பிள்ளைகள் வந்தால் எழும்பி ஓடிப்போய் உடனயே கவனிப்பாங்கள் . கவனிப்பு சைக்கிளுக்கும் ஆளுக்கும் பலமாய் இருக்கும் . அடிக்கடி இந்த கதை நடக்கும்; “ என்ன கனநாளா காணேல்லை “ “ ஏன் சும்மா சும்மா வாறதே “ “அண்டைக்கு ஆரோ பெடியன் பின்னால வந்தான்” “ எனக்கு அப்பிடி ஒருத்தரும் இல்லை“ ( confirmation) காத்தடிச்சிட்டு ,பக்கத்தில நிண்ட சைக்கிளில இருந்து வால்கட்டையின்டை capபைக் கழற்றி பூட்டீட்டு “ இது இல்லாட்டி மண் போய் அடைச்சிடும் “ எண்டு சொல்லி, அதோட பிறேக்கையும் சரிபாத்திட்டு விட; “ எவ்வளவு” “சீ காசு வேணாம் , அடுத்த முறை பாப்பம் “ சொல்லாத thank you சிரிப்பை வாங்கிக் கொண்டு வந்து எங்களைக் கவனிக்காமல் திருப்பியும் buckle எடுக்கத் தொடங்குவாங்கள். இதை கவனிச்சும் இல்லாத மாதிரி, “ கழுவிப் பூட்டேக்க எதையும் மாத்திப் போடுவான்“ எண்டு அம்மா சொன்னதால, நாள் முழுக்க கடையிலயே இருந்து; லாபம் பாத்து சாமாங்களை வேண்டித் தாறம் எண்டு சொல்லி , ஒரு போத்தில் மண்ணெண்ணை , இருவது ரூவாக்கு கிறீஸ், ரெண்டு சைசில ஐம்பது சைக்கிள் போள்ஸ் எல்லாம் வாங்கிக் குடுத்து , கழட்டி வைக்கிறதை கவனமாப் பாத்துக் கொண்டிருந்து, கழுவிப்பூட்டிறவருக்கு கேக்காமலே ஒத்தாசையும் செய்தாத் தான் சைக்கிள் கெதியாக் கிடைக்கும். புதுசா வாங்கின சைக்கிள் ஆருக்கு நேந்ததோ தெரியேல்லை வாங்கி ஒரு வருசத்திலயே காணாமல் போக , ரெண்டு வருசமா பஸ்ஸில அலையவிட்டு வாங்கித்தந்தது தான் கழுவிப் பூட்டக் கொண்டந்த இந்தப் பழசு. இதாலயே பட்டப்பேரும் பழசு எண்டு வந்திச்சுது. நிண்டு கால் நோக இருக்க இடமில்லாமல் பெரிய கரியர் ஓட நிண்ட சைக்கிளை central ஸ்டாண்டில விட்டிட்டு அதில இருந்தபடி சாடயா கண்ணயர்ந்து விழப்பாக்க , “ தம்பி போய்ச்சாப்பிட்டிட்டு வாரும்” எண்டு சைக்கிள் கடைக்காரர் சொன்னார். ,“ இல்லை பரவாயில்லை இருந்து எடுத்துக்கொண்டே போறன்” எண்டு நம்பிக்கையில்லாமல் சொல்ல , அப்ப கொஞ்ச நேரம் இரும் நான் சாப்பிட்டிட்டு வாறன் எண்டு ஒரு மணிக்குப் போனவர் திருப்பி வர மூண்டு மணி ஆச்சிது. என்னை வைச்சு அடிக்கடி சின்னச்சின்ன வேலையும் வாங்கீட்டு பின்னேரம் வரை விடாக்கண்டனா என்னை சைக்கிள்கடைக் கொடாக்கண்டன் “ஆறு மணியாயீட்டுது இருட்டீட்டுது நாளைக்குப் பாப்பம் “ எண்டு சொல்லீட்டு சாமாங்களை உள்ள எடுத்து அடுக்க வேற வழியில்லாமல் வீட்டை போனன். ஒருமாதிரி அடுத்த நாள் சைக்கிளை எடுத்து உழக்கிக் கொண்டு போக செயின் கவரோட முட்டிற சத்தம் கேக்க ஒரு தட்டுத் தட்ட நிண்டிட்டுது சத்தம். எத்தினை சைக்கிள் ரோட்டில போனாலும் எங்கடை வேண்டிய ஆரும் சைக்கிளி்ல வாறதை தூரத்தில வரேக்கையே கண்டு பிடிக்கலாம். ஒவ்வொருத்தன்டை சைக்கிளுக்கும் ஒரு சத்தம் இருக்கும் வாறதை கண்டு பிடிக்க , மணி அடிக்கிற சத்தம் , பிரேக் பிடிக்கேக்க வாற சத்தம் , செயின் உரஞ்சிற சத்தம் எண்டு எல்லாச் சத்தங்களும் உதவி செய்யும் அதோட அவன் அரைக்குண்டீல ஓடிறானா, சீட் நுனீல இருந்து ஓடிறானா, காலை அகட்டி ஓடிறானா எண்டு ஓடிற ஸ்டைலிலேம் கண்டு பிடிக்கலாம். ரியூசன் வகுப்புகள் முடிஞ்சு பின்னேரம் எண்டால் பிரவுண் ரோட்டில குமரன் வீட்டு ஒழுங்கை முடக்கில சாத்தீட்டு நிக்க ஒவ்வொருத்தரா வருவாங்கள். வந்து வழமை போல அரட்டை தொடங்கும் . கடைசீல் நேற்றைக்க அடிச்ச செல் விண் கூவினதையும், யாரை யார் பாக்கிறாங்கள் எண்ட update ஓட கூட்டம் கலையும். ஒருநாள் இப்பிடித்தான் தேடிப்போனா குமரனைக் காணேல்லை. அவன் உங்களோட தானே வந்தவன் எண்டு அம்மா சொல்ல, “டேய் அவன் நேற்றைக்கு சேகரோட ஒளிஞ்சு ஒளிஞ்சு கதைச்சவன் ஒரு வேளை இயக்கத்துக்குப் போட்டானோ” எண்டு பிரகாஸ் கேக்க “விசரே உனக்கு இவனாவது போறதாவது , வா கபிலன் வீட்டை போய்ப் பாப்பம்” எண்டு நவாஸ் சொல்ல போய்ப்பாத்தால் அங்கையும் இல்லை. காணேல்லை எண்டு ரோடு ரோடாத் தேட, கலட்டீக்க புதுசாத் திறந்த சைக்கிள் கடையில காத்துப் போகாத tyreக்கு காத்து அடிச்சும் வந்தவனுக்கெல்லாம் அடிச்சு விட்டு சமூக சேவை செய்து கொண்டு நிண்டான். ஏனெண்டு கேக்க அண்டைக்கு ரோட்டால போகேக்க பாத்துச் சிரிச்ச பிள்ளை இந்த இடத்தில தான் எங்கேயோ இருக்குதாம் எண்டான். கடைசீல இண்டைக்கு காணேல்லை நாளைக்கு ஒருக்கா வந்து பாப்பம் எண்டு எங்களோட வந்தான். இவனுக்கு அவனுக்கு மட்டும் இல்லை எங்கள் எல்லாருக்கும் சுழற்றித் திரிஞ்ச காலத்தில ஒண்டிறதுக்கு எண்டு ஒரு சைக்கிள் கடை இருந்தது. முதலில அந்தப் பிள்ளை இருக்கிற ஏரியாவில ஒருத்தனை friend பிடிச்சு , அவனோட போய் அவளின்டை வீட்டிக்கு கிட்ட இருக்கிற சைக்கிள் கடைக்காரனை friend பிடிச்சு , பிறகு ரியூசன் கொப்பியோட வெளிக்கிட்டு நேராச் சைக்கிள் கடையில போய் இறங்கினதும் உண்டு. தப்பித்தவறி தெரிஞ்ச ஆக்கள் வந்து கேட்டால், சைக்கிள் காத்துப் போட்டுது எண்ட பொய்யோட சமாளிக்கலாம். கடைக்காரனிற்கும் காத்தடிச்சு விட , சாவியை எடுத்துத் தர எண்டு காசில்லாமல் உதவி செய்ய ஒருத்தன் கிடைக்கிறதால பேசாம இருந்திடுவான். அப்ப சைக்கிள் கடை தான் கன பேரின்டை காதலை develop பண்ண உதவி செய்யிற கடையா இருந்திச்சுது. இப்ப சைக்கிளும் குறைஞ்சு , சைக்கிள் கடையும் குறைஞ்ச படியால் இப்பத்தைப் பெடியள் என்ன செய்யிறாங்களோ தெரியேல்லை. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

3 months 2 weeks ago
ஆமாம் உண்மை ஏனெனில் புதின். ஜேர்மனியை ஒருபோதும் ஆள முடியாது ஜேர்மனி மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் பெறுமதி மிக்கவை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய பயன்படுத்துவதால்,...இங்கே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெறுகிறது நான் நேரில் பார்த்து உள்ளேன்

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.

3 months 2 weeks ago
அவர் நியாயமான தேர்தலை நடத்த முடியாது,.....அப்படி நடத்தி தோல்வி அடைந்தால் [ கண்டிப்பாக தோல்வி அடைவார்] ..ரஷ்யாவில் தெருக்களில் சாதாரணமாக மற்றைய குடிமகன்கள் போல நடந்து திரிய முடியாது ..அங்கு வாழும் மக்களே இந்த உலகத்தை விட்டு அனுப்பி வைப்பார்கள் இது புடினுக்கு 100 % தெரியும் எனவே… ஒரு மனிதன் வாழட்டும் ஆளட்டும். வாழ்த்துக்கள் 🙏.

புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தில் நெருக்கடி!

3 months 2 weeks ago
புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தில் நெருக்கடி! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய கூட்டணி தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டமும் அண்மையில் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இந்த நெருக்கடி நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறாயினும், புதிய கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அந்த கலந்துரையாடலில் மீண்டும் ஒருமுறை முன்னாள் ஜனாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேச்சைகள் என பலர் இணைந்து கூட்டணியில் செயல்படுவதால், தங்கள் கருத்து, நிலைப்பாடு குறித்து கூட்டணியில் செயல்படுவது குறித்தும் விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=185298

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை! “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 88 சதவீத வாக்குகளுடன் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் அவர் ஜனாதிபதி அரியணையில் ஏறியிருக்கிறார். இதன்போது, கருத்து தெரிவித்த விளாடிமிர் புட்டின், வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை. மூன்றாவது உலகப்போர் வெகு தொலைவில் இல்லை. ஒரே அடி தொலைவில் தான் இருக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது. நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது என அவர் தெரிவித்தார். https://athavannews.com/2024/1373835

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.

3 months 2 weeks ago
எனது மகளிடம் இத்தேர்தல் பற்றி கேட்டேன். தன்னுடன் படிக்கும் இரு ரசிய பிள்ளைகள் சொன்னார்களாம் அது தேர்தலே அல்ல வெறும் நாடகம் என்று.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
காசாவில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொலை! காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேலிய படைகள் சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக, அல்-ஷிஃபா மருத்துவமனையில் உள்ள அறுவைச்சிகிச்சை பிரிவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு குண்டுவீச்சு தாக்குதல்களும் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளன. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 13,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/296160

வாலுடன் பிறந்த ஆண் குழந்தை!

3 months 2 weeks ago
சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10cm அளவில் வால் இருந்ததால் வைத்தியர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். Tethered Spinal Cord எனப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், வாலில் எந்தவித அசைவும் இருக்காது எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் குறித்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்துள்ளதால், அறுவை சிகிக்சை செய்து வாலை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/296122

நாட்டில் நிகழும் கொலைகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

3 months 2 weeks ago
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கையை ஆரம்பிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது அதிக கொலைகள் இடம்பெறும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி இப்பகுதிகளில் 20 ஆயுதம் தாங்கிய தாக்குதல் பொலிஸ் பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன. இதேவேளை, அனைத்து கிராமிய சேவை பிரிவுகளிலும் ஸ்தாபிக்கப்பட்ட சமூக பொலிஸ் பிரிவை மேலும் பலப்படுத்தி அதன் ஊடாக தேசிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குழுக்களுக்கு உண்டு என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சமூகப் பொலிஸ் பிரிவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://thinakkural.lk/article/296140
Checked
Wed, 07/03/2024 - 04:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed