ஊர்ப்புதினம்

சீரற்ற வானிலையால் பாரிய வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கும் முத்து ஐயன்கட்டுகுள நன்னீர் மீனவர்கள்

3 days 8 hours ago

5 Dec, 2025 | 12:50 PM

image

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால்  முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுகுளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பினர் முறையிட்டுள்ளனர். 

இந்நிலையில் முத்து ஐயன்கட்டு குளம் நன்னீர் கிராமிய அமைப்பின் முறையீட்டையடுத்து, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நன்னீர் மீன்பிடியாளர்களின் பாதிப்பு நிலமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்ததுடன், குறித்த நன்னீர் மீனவ அமைப்பினரிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக்கெண்டார். அத்தோடு மீனவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையினால் முத்துஐயன்கட்டு குளத்தின் கரையில் பாதுகாப்பாக கட்டிவைக்கப்பட்டிருந்த, முத்துஐயன்கட்டுக்குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பிற்குரிய 15 சிறிய படகுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், மீன்பிடி வலைகள் குளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும்  இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

அதேவேளை முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து வான்கதவுகள் தூக்கப்பட்டநிலையில், குளத்தில் விடப்பட்டிருந்த மீன்குஞ்சுகள் மற்றும் பெரிய மீன்கள் என்பன வான்கதவுகளினூடாக வெளியேறியுள்ளதாகவும் இதன்போது நன்னீர் மீனவ நாடாளுமன்ற உறுப்பினரது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். 

குறிப்பாக முத்துஐயன்கட்டுக்குளத்தில் ஒரு வருடகாலமாக மீன்குஞ்சுகள் விடப்படாதநிலையில், குறித்த நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் பயனாளிகளிடமிருந்து பணத்தினை அறவிட்டு இந்த வருட ஆரம்பத்தில் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டிருந்ததாக நன்னீர் மீன்பிடியாளர்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. 

இவ்வாறு விடப்பட்ட மீன்குஞ்சுகள் வான் கதவுகளினூடாக வெளியேறியுள்ள நிலையில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் முத்துஐயன்கட்டு குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பில் அங்கத்துவம் பெறுகின்ற 101அங்கத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களால் தெரிவிக்கப்பட்டதுடன், தற்போது ஒரு பயனாளி 1கிலோ தொடக்கம் 02கிலோ வரையிலான மீன்களையே பிடிக்கக்கூடிய நிலைகாணப்படுவதாகவும் நன்னீர் மீன்பிடியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டனர்.

இவ்வாறாக படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் குளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன், குளத்தில் விடப்பட்ட மீன்குஞ்சுகளும் வான்கதவுகளினூடாக வெளியேறியுள்ளநிலையில் தமது அன்றாட வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முத்துஐயன்கட்டுகுளம் நன்னீர் மீனவர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்ததுடன், இவ்வாறாக பாரிய வாழ்வாதாரப் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள தமக்கு இதுவரை நிவாரணங்களையோ, இழப்பிடுகளையோ வழங்குவதற்கு உரியதரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்வில்லைஎனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின்   கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அதேவேளை, ஒட்டுசுட்டானுக்கு செல்வதற்குரிய வீதியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் இதன்போது நடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த மீனவ அமைப்பினரின் பிரச்சினைகளைச் செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், மீனவ அமைப்பினரிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களையும் பெற்றுக்கொண்டார்.

அதேவேளை, மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பாக உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்து நெருகடிகளைத் தீர்ப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

சீரற்ற வானிலையால் பாரிய வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கும் முத்து ஐயன்கட்டுகுள நன்னீர் மீனவர்கள் | Virakesari.lk

பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு!

3 days 8 hours ago

பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் கையளிப்பு!

15 Dec, 2025 | 03:52 PM

image

பாகிஸ்தானிலிருந்து 200 தொன் அனர்த்த நிவாரண பொருட்கள் இலங்கை அரசாங்கத்திடம் இன்று திங்கட்கிழமை  (15) கையளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானி காரியாலயம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரைகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண பொருட்கள் மற்றும் சேவைகள் கையளிக்கப்பட்டு வருகிறது. 

இதன் மூலம் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்புறவும் வலுவான இருதரப்பு உறவுகளும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த நிவாரண சேவைக்காக பாகிஸ்தான் தமது விமானப்படையின் C-130 விமானங்களை அனுப்பியிருந்தது.

மேலும், 'தித்வா' புயலின் போது, பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று, அதன் ஹெலிகொப்டருடன், இலங்கை ஆயுதப் படைகளுடன் நெருங்கி ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றது. 

அத்துடன், பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடி, உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவுக்கான உறுதிப்பாட்டை மீளவும் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் பிரதமரின் விசேட பணிப்புரையின் பேரில், பாகிஸ்தானின் மத்திய கடல்சார் விவகார அமைச்சர் முஹம்மது ஜுனைத் அன்வர் சௌத்ரி (Muhammad Junaid Anwar Chaudhry) இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த கடந்த வாரம் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-12-15_at_15.07.35.jp

WhatsApp_Image_2025-12-15_at_15.07.34.jp

WhatsApp_Image_2025-12-15_at_15.07.34__1

https://www.virakesari.lk/article/233420

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

3 days 8 hours ago

15 Dec, 2025 | 02:30 PM

image

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் என வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம உரிமை இயக்கம் அவசர கடிதம் எழுதியுள்ளது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் இந்திரானந்த டி சில்வாவின் கையொப்பத்துடனான குறித்த கடிதம் இன்று திங்கட்கிழமை (15) ஜனாதிபதி செயலத்தில் சம உரிமை இயக்கத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

நாட்டின் மக்கள் தொகையில் 25 சத வீதமானோர் தமிழ் மொழியை தமது தாய் மொழியாகக் கொண்டிருப்பதோடு நாட்டின் அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிவித்த சிங்களத்தை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்ட கொள்கை இன்னும் யாதார்த்தமாக உள்ளது என்பது கவலைக்குரியதாக இருந்தாலும், நான் அதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இது ஒரு ஜனநாயக விரோத அரச கரும மொழிக் கொள்கையாகும், இது தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை நாட்டிலில் மீண்டும் மீண்டும் ஒதுக்கி வைக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் சில, நாடு முழுவதையும் பாதித்த அண்மைய பேரழிவுகளின் போது மொழிக் கொள்கை குறுகிய மனப்பான்மையோடு செயற்படுத்தப்பட்டமை  ஆகும்.

01. பேரிடர் தொடர்பான அரச அறிவிப்புகளை சிங்கள மொழியில் மட்டும் வெளியிடுதல்

02. வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையின் அதிகாரப்பூர்வ வெளியீடு சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமை

03. ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பான அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமை

04. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, சிங்களத்தில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகின்றமை

மாவட்டச் செயலாளர் முதல் கிராம அலுவலர் வரை மேற்கூறிய பல அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்படுகின்றன. அது மட்டுமல்ல, அண்மையில், ஜனாதிபதியாக, இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களைத் தவிர்க்கும் வகையில், நீங்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றினீர்கள். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது கூட தனது உரையை தமிழில் மொழிபெயர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

ஜனாதிபதி அவர்களே, தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு மற்றும் மொழிபெயர்ப்பில் கூட அதன் பயன்பாட்டின் எளிமை இருந்தபோதிலும், "சிங்களம் மட்டும்" என்ற அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கை இன்னும் நடைமுறையில் உள்ளதோடு மக்கள் தங்கள் தாய்மொழியில் அரசுடன் தொடர்பு கொள்ளும் மனித மற்றும் ஜனநாயக உரிமைகளை அது அப்பட்டமாக மீறுகிறது. 30 ஆண்டுகால இனவாதப் போரைச் சந்தித்த ஒரு நாட்டிலேயே இதுபோன்ற ஒரு அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்தத் தருணத்தில் கூட, பேரிடர்களுக்கான இழப்பீடு தொடர்பான சுற்றறிக்கை சிங்களத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் கூகிள் மூலம் அந்த அறிவிப்புகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது சரியான செயன்முறை அல்ல என்பதைச் கூறத் தேவையில்லை.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை. நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சுற்றாடல் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. யாராவது ஒரு கட்டடம் கட்ட விரும்பினால், அந்த அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்தப் படிவம் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் தான் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகிரங்கமாகக் கூறிய கோத்தபய ராஜபக்சதான் இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை இன்னும் வகித்து வருகிறார் என்றிருந்தால், நாம் இந்த நிலையக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. தேசிய மக்கள் சக்தியின் முந்தைய தேர்தல் விஞ்ஞாபனங்களில், சிங்களவர்கள், தமிழ், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய அனைத்து மக்களும் தங்களுக்கு விருப்பமான மொழியில் அரசோடு தொடர்புகொள்ளும் உரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மூலம், இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். எனவே, இந்த நிலையை உடனடியாக மாற்றவும், அரச அறிவிப்புகளிலிருந்து பல்வேறு திணைக்களங்களால் வெளியிடப்படும் ஒவ்வொரு அறிவிப்பு வரையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவும், இந்த சமத்துவமற்ற நிலைமைகளை உடனடியாக மாற்றியமைக்கவும் சம உரிமை இயக்கம் உங்களை வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம் | Virakesari.lk

டித்வா சூறாவளி ; 22,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

3 days 9 hours ago

Published By: Digital Desk 3

15 Dec, 2025 | 04:53 PM

image

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தங்களில் சிக்கி 643 பேர் உயிரிழந்துள்ளதோடு, 183 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டியில் 237 பேரும், நுவரெலியாவில் 89 பேரும்,  பதுளையில் 88 பேரும், குருநாகலையில் 61 பேரும், புத்தளத்தில் 36 பேரும், கேகாலையில் 32 பேரும், மாத்தளையில் 29 பேரும், கம்பளையில் 17 பேரும், அநுராதபுரத்தில் 13 பேரும், கொழும்பில் 09 பேரும், அம்பாறையில் 08 பேரும், மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் மன்னாரில் தலா 4 பேரும், யாழ்ப்பாணம், பொலன்னறுவையில் தலா மூவரும், இரத்தினபுரியில் இருவரும், அம்பாந்தோட்டை மற்றும் காலியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, 459,726 குடும்பங்களைச் சேர்ந்த 1,600,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 6,193 வீடுகள் பகுதியளவிலும்,  95,456 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் 762 தற்காலிக தங்குமிடங்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தற்காலிக தங்குமிடங்களில்  பெரும்பாலானவை கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளன. அங்கு 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் 222 தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளனர். 

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலான தற்காலிக தங்குமிடங்கள் அமைந்துள்ளன. நுவரெலியாவில் 206 தற்காலிக தங்குமிடங்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளையில் 155 தற்காலிக தங்குமிடங்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தங்கியுள்ளனர். 

டித்வா சூறாவளி ; 22,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் | Virakesari.lk

21 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

3 days 9 hours ago

15 Dec, 2025 | 03:52 PM

image

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர்  மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 73 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 489,948 ஆகும்.

மேலும், ஜெர்மனியிலிருந்து 137,012 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 166,626 சுற்றுலாப் பயணிகளும்,  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 196,958 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 98,318 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 125,720 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 103,782 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்

அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களில் 70,023 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது

21 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை! | Virakesari.lk

யாழில் 6 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றல்!

3 days 9 hours ago

15 Dec, 2025 | 05:53 PM

image

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 26 கிலோ 900 கிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ஆறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 6 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றல்! | Virakesari.lk

வீதி நிலைவரங்களை அறிவிக்க புதிய பொதுத் தளம் - போக்குவரத்து அமைச்சு

3 days 9 hours ago

15 Dec, 2025 | 02:45 PM

image

(எம்.மனோசித்ரா)

போக்குவரத்து அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அமைச்சின் டிஜிட்டல் பணிக்குழுவுடன் இணைந்து, இலங்கையிலுள்ள வீதிகள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் அறிவிப்பதற்காக ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வீதி மூடல்கள், சேதங்கள், விபத்துகள் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் போன்ற வீதி நிலைவரங்கள் குறித்த நிகழ்நேரத் தகவல்கள் இல்லாததை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்தத் தளத்தை https://road-lk.org என்ற இணைய முகவரியில் அணுகலாம். இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வழிசெலுத்தல் (Navigation) செயலிகள் இவ்வாறான பிரச்சினைகள் குறித்து முறையான புதுப்பிப்புகளை வழங்குவதில்லை என்றும், பல நாடுகளில் இந்தக் குறைபாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பரவலான வீதி சேதங்கள் மற்றும் மூடல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முயற்சி உருவாக்கப்பட்டது என்றும், சாதாரண நிலைமைகளிலும் இது தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த அமைப்பு பொதுமக்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டது. சேதமடைந்த வீதிகள், மூடல்கள் அல்லது விபத்துகளைக் காணும் வீதிப் பயனர்கள் https://road-lk.org/report என்ற இணையதளம் மூலம் புகார்களைச் சமர்ப்பிக்கலாம். புகார்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பதிவு செய்யலாம். மேலும் முடிந்தால் புகைப்படங்களைப் பதிவேற்றுமாறு பயனர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தகவல்களைச் சரிபார்த்து, அதன் பின்னரே பாதிக்கப்பட்ட இடத்தைத் தேசிய வீதி வரைபடத்தில் குறிப்பார்கள். இந்த அமைப்பை இற்றைப்படுத்தும் அதிகாரம் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் வீதிப் பிரச்சினைகளை நேரடியாகக் குறிக்க அனுமதி வழங்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மற்றும் மாகாண வீதி வலையமைப்பிற்காக இந்த அமைப்பு முழுமையாக நிறுவப்பட்ட பின்னர், கிராமப்புற வீதிகளையும் இதில் இணைப்பதற்கான திட்டங்கள் உள்ளன.

இந்தத் தளம் தற்போது ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) பல வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, அதன் பின்னர் இது நிரந்தரமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மற்றும் மாகாண வீதிகளில் உள்ள பிரச்சினைகளை இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க மக்கள் சுறுசுறுப்பாக அறிவிக்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/233405

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கேட்ட மனோ! அர்ச்சுனாவின் அறிவுரை

3 days 15 hours ago

உங்கள் சொத்துக்களை விற்று வீடற்ற மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை வாங்கித் தருகிறோம் என ராமநாதன் அருச்சுனா எம்.பி, மனோ கணேஷன் எம்.பியிடம் கேட்டுக் கொள்வதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கண்டியில் மனோ கணேஷன் எம்.பி மலையகத்தில் காணி இல்லாவிட்டால் வடக்கு கிழக்கில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் காணிகளை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலே அர்ச்சுனா எம்.பி மேற்கண்டவாறு குறிப்பிடிருந்தார்.

மலையக மக்களுக்கு அன்பான கோரிக்கை

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மலையக மக்கள் எங்கள் இரத்த உறவுகள், அவர்களை பார்த்து கொள்ள வேண்டியது எமது கடமையாகும். அதனால் உங்களுக்கு மலையகம் வேண்டாம், வவுனியா, யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கேட்ட மனோ! அர்ச்சுனாவின் அறிவுரை | Archchuna Ramanathan Mano Ganesan

மனோ கணேஷன் எம்.பியின் தந்தை ஒரு நடிகர் என்பதால் அவர்களுக்கு பரம்பரை சொத்து இருக்கிறது தானே. அதை விற்று அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள். பின்னர் நாங்கள் புலம் பெயர் தமிழர்களிடம் காணிகளை பெற்றுத் தருகிறோம்.

புலம்பெயர் தமிழர்கள் போராட்டத்தில் தமது உறவுகளை இழந்து தப்பிப் பிழைத்த ஒரு சிலரே புலம் பெயர்ந்து கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். அதனால் நீங்கள் முன்னுதாரணம் காட்டுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tamilwin
No image previewபுலம்பெயர் தமிழர்களிடம் காணி கேட்ட மனோ! அர்ச்சுனாவின் அறி...
உங்கள் சொத்துக்களை விற்று வீடற்ற மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை வாங்கித் த...

கல்வி மறுசீரமைப்பில் மாற்றமில்லை!

3 days 16 hours ago

கல்வி மறுசீரமைப்பில் மாற்றமில்லை!

நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுப் பாதிப்புகள் காரணமாக, 2026 ஜனவரியில் தொடங்கத் திட்டமிடப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் பாதிக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஜனவரியில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது, முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து மாற்றங்களும் சம்பந்தப்பட்ட வகுப்புகளில் நடைமுறைக்கு வரும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் முழுமையான அமுலாக்கம் ஜனவரி 22 ஆம் திகதிக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய கட்டமைப்புக்கு இணங்க செயற்படுமாறு சுற்றறிக்கைகள் மூலம் பாடசாலைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கும் முன் ஆறாம் தர மாணவர்களுக்கு ஒரு வார கால அறிமுக நிகழ்ச்சி (Familiarisation programme) நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை நேர அட்டவணை ஒரு நாளைக்கு 7 கற்பித்தல் காலங்களாக (Teaching periods) மாற்றப்படுவதுடன், ஒவ்வொரு பாடமும் 50 நிமிடங்கள் நீடிக்கும்.

மேலும் சீர்திருத்தத்தின்படி, சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாகக் குறைக்கப்படவுள்ளது.

மாணவர்கள் கணிதம், ஆங்கிலம், தாய்மொழி, சமயம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய 5 முக்கியப் பாடங்கள் படிக்க வேண்டும்.

அத்துடன் தொழில்நுட்பம், அழகியல், முகாமைத்துவம் மற்றும் தொழில்முனைவு, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல், மற்றும் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற பிரிவுகளிலிருந்து மேலும் 2 பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சீர்திருத்தங்களை இறுதி செய்வதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுக்கு தங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் சில பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபடவில்லை என்றும் செயலாளர் களுவெவ தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/கல்வி-மறுசீரமைப்பில்-மாற/

சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்

4 days 7 hours ago

சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்

14 Dec, 2025 | 10:46 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர், செனட் வெளியுறவு உறவுகள் குழுவிடம் சாட்சியமளித்த போது, இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு, பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்குக்கு எதிர்வினையாற்றுவது என்பவற்றுக்கே வாஷிங்டன் முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்த ஆண்டு ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியின் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், எரிக் மேயரின் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அவர் மேலும் கூறுகையில்,

உலகளாவிய கப்பல் வழித்தடங்களில் இலங்கை அமைந்திருப்பதால், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கும், சீனாவின் வளர்ந்து வரும் பிரசன்னம் உட்பட பகைமைச் செல்வாக்குகளை எதிர்கொள்வதற்கும் இலங்கை மையமாக உள்ளது.

அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும், உலகின் கடல்வழியாகக் கொண்டுசெல்லப்படும் கச்சா எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கும் இலங்கையின் கடல்வழியே செல்கின்றன. எனவே அதன் மூலோபாய இருப்பிடம், அமெரிக்க முயற்சிகளின் மையமாக அமைகிறது.

தான் உறுதிப்படுத்தப்பட்டால், அமெரிக்கக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே தனது முதல் முன்னுரிமையாக இருக்கும். அதேவேளை, சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இடப்பெயர்வுகளுக்குப் பிந்தைய இலங்கைக்கான அமெரிக்காவின் உதவிகள் முக்கியமானதாகும்.

உடனடி உதவிக்காக 2 மில்லியன் டொலரை அமெரிக்கா ஒதுக்கியுள்ளதுடன், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க இராணுவத்தின் மூலோபாய வான்வழிப் போக்குவரத்துத் திறன்களையும் பயன்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கையுடனான அமெரிக்காவின் வலுவான மற்றும் நீடித்த பங்களிப்புக்கு ஆதாரம் உள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சியைக் குறித்துப் பேசிய எரிக் மேயர், கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டங்களைக் குறிப்பிட்டு, இலங்கை பிராந்தியப் பொருளாதாரத்தின் தலைமைத்துவமாக மாறத் தயாராக இருக்கும் ஒரு மீள்திறன் கொண்ட நாடு' என்றார். அடுத்த ஆண்டில், கொழும்புத் துறைமுகம் சரக்குக் கையாளும் திறனை இரட்டிப்பாக்க உள்ளது. இது இலங்கையின் துறைமுகங்கள், தளவாடங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளில் உள்ள குறிப்பிடத்தக்க மற்றும் மூலோபாய வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

சர்வதேச நாணய நிதிய திட்டத்துடன் இணைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர கொழும்பை வலியுறுத்துவோம். நாட்டின் பொருளாதாரச் சுதந்திரம் தேசிய சுதந்திரத்துடன் பிணைந்துள்ளது. எனவே புதிய சீர்திருத்தங்கள், அமெரிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

சீனாவின் செல்வாக்கு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், செனட் வெளியுறவு உறவுகள் குழுவின் தலைவர் ஜிம் ரிஷ், இலங்கையின் துறைமுக உள்கட்டமைப்பில் சீனாவின் பங்களிப்பு குறித்து உலகளாவிய அளவில் ஒரு எச்சரிக்கையாகும் என குறிப்பிட்டார். சீனர்கள், இலங்கைத் துறைமுகத்திற்குச் செய்ததெல்லாம், மக்கள் ஏன் சீனாவுடன் வணிகம் செய்யக் கூடாது என்பதற்கான உலகளாவிய உதாரணச் சின்னமாக மாறியுள்ளது என்றார்.

இதற்குப் பதிலளித்த எரிக் மேயர், அமெரிக்கா 'திறந்த மற்றும் வெளிப்படையான' இருதரப்பு உறவுகளை விரும்புவதாகவும், இலங்கை அதன் இறையாண்மையை உறுதிப்படுத்துவதை உறுதி செய்யவும், அதில் துறைமுகங்கள் மீதான இறையாண்மையும் அடங்கும் எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கக் கூட்டுறவு, கடல்சார் ஆதிக்கம் குறித்த விழிப்புணர்வு, மற்றும் துறைமுகப் பாதுகாப்பைப் பேணுதல் ஆகியவை இந்தோ-பசிபிக் அணுகுமுறையின் ஒரு பகுதியாக இலங்கையுடனான அமெரிக்காவின் ஈடுபாட்டில் மையமாக இருக்கும் என்றும் மேயர் உறுதியளித்தார்.

https://www.virakesari.lk/article/233311

நிவாரணங்களை வழங்க கோரி வெருகல் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை

4 days 11 hours ago

நிவாரணங்களை வழங்க கோரி வெருகல் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை

14 Dec, 2025 | 01:30 PM

image

திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்கக் கோரி போராட்டத்தில் மக்கள் நேற்று சனிக்கிழமை  (13) ஈடுபட்டனர்.

சீரற்ற கால நிலை காரணமாகவும் மாவிலாறு அனைக்கட்டு உடைப்பெடுப்பு தொடர்பில் பல சேதங்கள் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணங்களை அலுவலகத்தில் பூட்டி வைக்காது பகிருமாறும் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் பிரதான நுழைவாயிலை மறித்து போராடினர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வெருகல் பிரதேச செயலக வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் கொடுப்பனவுகளை வழங்குமாறும் குரல் எழுப்பிய மக்கள் பிரதேச செயலாளரை வெளிதே விடாது தடுத்தனர்.

IMG-20251213-WA0070.jpg

IMG-20251213-WA0061.jpg

IMG-20251213-WA0045.jpg


https://www.virakesari.lk/article/233327

ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!

4 days 11 hours ago

ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!

14 Dec, 2025 | 02:11 PM

image

ஆபாச படம் காண்பித்து மகளை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை உட்பட 5 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடனான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (12)  சம்மாந்துறை  நீதவான் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  அன்றைய தினம் சந்தேக நபர்களான நால்வரை  அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி கல்முனை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்  பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 5 மாத காலமாக திரைமறைவில் விபச்சார நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வந்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின்  1929 தொலைபேசி ஊடாக அப்பகுதியில் இருந்த சிறுவர் பெண்கள் தொடர்பான அமைப்பு ஒன்று வழங்கிய தகவலின் படி துரிதமாக செயற்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நிந்தவூர் பொலிஸார்  மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு   அதிகாரிகளிடம்  சம்பவம் குறித்து அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து  பாதிக்கப்பட்ட  சிறுமியை நிந்தவூர் பொலிஸ்  நிலையத்திற்கு  அழைத்து வந்து விசாரித்த அம்பாறை மாவட்ட சிறுவர்  மற்றும் மகளிர் பணியக  அதிகாரிகளிடம் நடந்த விடயங்களை குறித்த  சிறுமி கூறியுள்ளார்.

இதன் போது பொருளாதார சிரமம் காரணமாக  12 வயது மதிக்கத்தக்க தனது மகளை  முதலில் ஆபாச படம் பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய தந்தை பின்னர் சம காலத்தில்  ஏழு பேருக்கு விபச்சார செயலுக்காக மகளை ஈடுபடுத்தியுள்ளமை மற்றும் இந்த செயலுக்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்துவந்தமையும்  ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தந்தை உட்பட 5 பேரை தற்போது  கைது செய்துள்ள பொலிஸார்  தலைமறைவாகிய ஏனைய 3 சந்தேகநபர்களை தேடி வருகின்றனர்.

சந்தேகநபர்கள் 52,41,24 மற்றும் 40  வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் தந்தை சுமார் 05 மாத காலமாக தனது மகளை  பல்வேறு நபர்களுடன் பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தியதாக பொலிஸ்  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

https://www.virakesari.lk/article/233332

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை

4 days 11 hours ago

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை

14 Dec, 2025 | 03:07 PM

image

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராஜா அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு , மயானத்தை மீள பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்

1990ஆம் ஆண்டு கால பகுதியில் யுத்தம் காரணமாக காங்கேசன்துறை பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் அப்பகுதிகளில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. 

அதன் போது, காங்கேசன்துறை இந்து மயானம் அமைந்துள்ள காணியும், அதனை சூழவுள்ள காணிகளும் விடுவிக்கப்படாது , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த நிலையில் , தற்போது அப்பகுதி அனைத்தும் துறைமுக அதிகார சபையின் ஆளுகைக்குள் உள்ளது. 

இதனால் அப்பகுதி மக்கள் இந்து மயானத்தை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக சுமார் 10 வருட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

தமது முன்னோர்கள் எரியூட்டப்பட்ட இடத்தில் , தமது சொந்த மண்ணில் உள்ள இந்து மயானத்திலையே தமது உடல்களும் தகனம் செய்யப்பட்ட வேண்டும் என அங்குள்ள முதியவர்கள் பலரும் தமது இறுதி ஆசையாக கூறி வரும் நிலையில் , மாயனத்தினையும் அதற்கான பாதையையும் மீள பெற்று தருமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்ததை , அடுத்து , அவரால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவானந்தராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் வந்து அவ்விடத்தினை பார்வையிட்டார். 

அதன் போது , மயானத்தினை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி விரைவில் அதனை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.

0__1_.jpg

0__2___1_.jpg

0__3___1_.jpg


https://www.virakesari.lk/article/233340

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை

4 days 11 hours ago

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை

14 Dec, 2025 | 04:09 PM

image

‘டித்வா’ புயல் தாக்கத்தையடுத்து நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி சபரிமலை சபரீச ஐயப்பன் ஆலயத்தில் பிரார்த்திக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், கோண்டாவில் அமைந்துள்ள ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (13)  விசேட புஷ்பாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்கார பூஜைகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.

அதில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

1__1___1_.jpg

1__2_.jpg

1__3___1_.jpg


https://www.virakesari.lk/article/233346

மகேஸ்வரன் கொலை வழக்கு: குற்றவாளிக்கான மரண தண்டனை உறுதி

4 days 11 hours ago

மகேஸ்வரன் கொலை வழக்கு: குற்றவாளிக்கான மரண தண்டனை உறுதி

14 December 2025

1765702002_8417468_hirunews.jpg

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்று கூறப்படும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

'வசந்தன்' என்ற ஜோன்சன் கொலின் வலன்டினோ என்ற குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்தநிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை இரத்து செய்யக் கோரி குற்றவாளி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்களான யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற ஆயத்தின் முன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை மீளப் பெற அனுமதிக்குமாறு கோரினார்.

2008 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி கொழும்பு - பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் வைத்து மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்போது சுடப்பட்ட மகேஸ்வரன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், சுட்டுக் கொன்றவர் இவர்தான் என்று குற்றவாளியை அடையாளம் காட்டியிருந்தார்.

அத்துடன், இந்த சம்பவத்தின்போது மகேஸ்வரின் மெய்ப்பாதுகாவலர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளியின் இரத்த மாதிரி மரபணு சோதனை மூலம் குற்றத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த உண்மைகளை மறுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்ட சட்டத்தரணி, மனுவை மீளப் பெற அனுமதி கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை அனுமதித்தது.

https://hirunews.lk/tm/435740/maheswaran-murder-case-death-sentence-confirmed-for-the-convict

கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம்

4 days 12 hours ago

கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம்.

பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வீதிகளைத் திருத்துவதற்குத் தேவையான நிதியை வடக்கு மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் கிராமிய வீதிகளைப் புனரமைப்பதே எமது தற்போதைய முக்கிய இலக்காகும் கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம் எனச் சுட்டிக்காட்டியதுடன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (13.12.2025) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் பிரதியமைச்சரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்றக் கூட்டத்தின்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வரவேற்புரையின்போது மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக ஜனாதிபதி அவர்களை வரவேற்கின்றேன்.

சூறாவளி மற்றும் இதனுடன் இணைந்த வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்களை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்காக எடுக்கும் முயற்சிக்காக மன்னார் மக்கள் சார்பாக நன்றி கூறுகின்றேன்.

பாதிப்புகளிலிருந்து மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டல்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின்- பாதுகாப்பு படையினர்- அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புகளுடன் பாதிப்புகளிலிருந்து விரைவாக மீட்nடுக்கப்பட்டதையிட்டு யாவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றேன்.

வரவேற்புரையைத் தொடர்ந்து ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவிக்கையில் அனர்த்தத்தின் போது அரச அதிகாரிகள் ஆற்றிய பணிகளைப் பாராட்டினார். ‘பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான முதற்கட்ட உதவிகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தற்போது அவர்களின் வாழ்வாதாரத் துறைகளான விவசாயம்இ மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதிலும் உட்கட்டுமானங்களை மீளமைப்பதிலும் எமது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இதன்போது ஒவ்வொரு துறை சார்ந்தும் ஜனாதிபதி விரிவாக ஆராய்ந்தார். வீதி அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்திய அவர், மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ள வீதிகள் மற்றும் அவற்றுக்கான நிரந்தரத் திருத்த மதிப்பீடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும், மன்னார் மாவட்டத்தின் வெள்ள நீர் கடலைச் சென்றடைவதற்கான வடிகால் வாய்க்காலின் அளவு போதாமையாக உள்ளமை குறித்து ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணிப்புரை விடுத்தார்.

மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதில் நிலவும் சிரமங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.

உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகக் கிணறுகள் துப்புரவு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்இ தொலைத்தொடர்பு வசதிகள் மீளமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் அவர் அதிகாரிகளிடம் வினவினார்.

நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறை குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, பெரும்போகத்துக்கான நீர் விநியோகம், மீள்விதைப்புக்கான ஆயத்தங்கள் மற்றும் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலப்பரப்புகள் குறித்துக் கேட்டறிந்தார்.

நிவாரணக் கொடுப்பனவுகள் மக்களைச் சென்றடைவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். மரக்கறி மற்றும் தானியச் செய்கை அழிவுகள் தொடர்பிலும் குறிப்பாக வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையாளர்களின் இழப்புகளுக்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதி வினவினார்.

இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அடுத்த ஆண்டு வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கவும் குறுகிய காலத்தில் விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாகாண விவசாய அமைச்சு ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கால்நடை இழப்பீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி பதிவு செய்யப்படாத கால்நடைகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்குத் தனியான பொறிமுறை அவசியம் எனச் சுட்டிக்காட்டினார். பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் பதிவு செய்யப்படாதவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும்போது முறைகேடுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். இதன்போது மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலம் இல்லாத தன்மையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் நீரேந்துப் பிரதேசங்களை ஆக்கிரமித்து நெற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணித்தார்.

மீன்பிடித்துறை தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது. புயல் காரணமாகத் தொழிலுக்குச் செல்லாத மீனவர்களுக்கு இதுவரை எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் எமது கடல் வளத்தைப் பாதுகாக்கக் கடற்படை நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளை, இது இராஜதந்திர ரீதியிலும் கையாளப்பட வேண்டும். வடக்கு மீனவர்களின் உரிமைகளை இழப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்’ என உறுதியாகத் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான 25இ000 ரூபா கொடுப்பனவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். எதிர்வரும் டிசம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணப் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பாடசாலைப் புத்தகங்கள் அழிவடைந்துள்ளமை குறித்துக் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி அது தொடர்பில் தனது அவதானத்தை செலுத்தினார்.

முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகள் அபாய வலயங்களில் வசிப்போரை மீள்குடியேற்றுதல் மற்றும் நிவாரண உதவிகள் பகிர்ந்தளிப்பு குறித்தும் ஜனாதிபதி தெளிவான வழிகாட்டல்களை வழங்கினார்.

இறுதியாகச் சுகாதாரத் துறை குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கமளித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையிலான முன்னாயத்தக் கூட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் காரணமாகப் பேரிடரால் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்தன எனவும் அவர் தெரிவித்தார்.

வெள்ள அனர்த்த வேளைகளில் நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கு ஏற்ற விசேட உயரமான அம்புலன்ஸ் வண்டி மற்றும் அம்புலன்ஸ் படகுத் தேவையை அவர் முன்வைத்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி உடனடித் தீர்வுகள் குறித்தும், எதிர்கால நீண்டகாலத் தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், ரிசாட் பதியுதீன், காதர் மஸ்தான் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

https://www.samakalam.com/கால்நடைகளுக்கான-இழப்பீட/

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

4 days 12 hours ago

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

adminDecember 14, 2025

1-1-1.jpg?fit=1170%2C878&ssl=1

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை – வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

அதன் போது, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

அன்ரன் பாலசிங்கம்

https://globaltamilnews.net/2025/224165/

மலையக மண்ணை வெளியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதா அல்லது பாதுகாப்பதா எமது பொறுப்பு : மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி நாயுடு கேள்வி

4 days 15 hours ago

மலையக  மண்ணை வெளியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதா அல்லது பாதுகாப்பதா எமது பொறுப்பு : மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி நாயுடு கேள்வி

Published By: Digital Desk 1

14 Dec, 2025 | 09:08 AM

image

அண்மையில் ஏற்பட்ட  இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய மாற்றிடம் இல்லாவிட்டால் அவர்களை வடபகுதியில் குடியேற்ற வேண்டும் என சில அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அரசியல் களத்தில் எதையும் பேசலாம் என்ற நிலையே இன்றுள்ளது. புதிதாக அரசியல் செய்ய வந்தவர்களுக்கு மலையக வரலாறும் மலையக மண்ணை பாதுகாக்க எத்தகைய தியாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும் தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட பிரமுகரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கந்தசாமி நாயுடு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  

தற்போது அரசியல்வாதிகள்    முகநூல் அரசியல் செய்வதால் களத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.   மலையக மக்களை மிகவும் பாதித்த ஒரு சம்பவம் ஜுலை கலவரமாகும்.அச்சந்தர்ப்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பாதிக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று மக்களை சந்தித்தார். அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக அவர் இருந்ததால் அது சாத்தியமாயிற்று. 

இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, கம்பளை, நுவரெலியா என பல மலையக நகரங்களுக்குச் சென்ற அவர் மக்களிடம் வினயமாகக் கேட்டுக்கொண்டது  ஒரு விடயம் மாத்திரமே. தயவு செய்து நீங்கள் இந்த மண்ணை விட்டு சென்று விடாதீர்கள். எமது மக்கள் மீது காடைத்தனத்தை ஏவி விட்டவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையான இனவாதிகளே. அவர்களுக்கு பயந்து கொண்டு நாம் ஏன் எமது மண்ணை விட்டுச் செல்ல வேண்டும்? இங்கிருந்தே போராடுவோம். நானும் அதற்குத் தயார். நாமும் எமது பரம்பரையினரும் கட்டியெழுப்பிய இம்மண்ணை பாதுகாப்பது எமது கடமை. 

எதிர்காலத்தில் நாம் இந்த மண்ணில் சகல துறைகளிலும் தடம் பதிப்போம். ஆகவே வன்முறைகளுக்கு பயந்து கொண்டு எமது மண்ணை விட்டு செல்லும் எண்ணம் இருந்தால் அதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்றார். நான் அப்போது அவரது பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக இருந்ததால் அவர் சென்ற அனைத்து இடங்களுக்கும் அவருடன் நானும் பயணித்தேன். மலையக மண்ணை பாதுகாப்பதிலும் எதிர்கால திட்டமிடலிலும்  அவரது தீர்க்கதரிசனத்தை கண்டு வியந்தேன்.

கல்வி,குடியிருப்பு, இளைஞர் கட்டமைப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் அவரது செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளன. வன்முறையை காரணம் காட்டி அன்று பெருந்தொகையானோர் வெளியேறியிருந்தால்  எமது  பிரதிநிதித்துவங்கள் இல்லாது போயிருக்கும்.இன்று அரசியல் வீரவசனம் பேசும் சிலர் கறுப்பு ஜுலை கலவரம் உட்பட பல சந்தர்ப்பங்களில் அச்சத்தினால்   இந்தியாவுக்கு ஓடியவர்கள் என்பது முக்கிய விடயம்.   ஆனால் இன்று அப்படியான ஒரு சூழ்நிலை இல்லை. நிலவுரிமை தொடர்பில் நாம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். அதை முன்னெடுப்பதற்கு பிரதிநிதிகள் மத்தியில் ஒற்றுமை அவசியம். 

அதை கட்டியெழுப்புவதை விடுத்து இங்கே இல்லாவிட்டால் வேறு எங்காவது செல்வோம் எனக் கூறுவது கோழைத்தனம் மாத்திரமின்றி  போரட்ட உணர்வு மங்கி போன அரசியலின் வெளிப்பாடு. எமது மண்ணை விட்டு மக்கள் சென்றால் அது வெளியாரின் ஆக்ரமிப்புக்கு வழிவகுக்கும். மலையகம் என்ற அடையாளம் கேள்விக்குறியாகும். எனவே அரசியல் பிரமுகர்கள் ஏதாவது பேசுவதற்கு முன்பு சிந்தித்து வார்த்தைகளை வெளிப்படுத்தல் நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/233297

பேரனர்த்த முகாமைத்துவத்திற்காக ஸ்டார்லிங்க் இணைய சேவை 100 அலகுகளை இலவசமாக வழங்குகிறது

4 days 16 hours ago

பேரனர்த்த முகாமைத்துவத்திற்காக ஸ்டார்லிங்க் இணைய சேவை 100 அலகுகளை இலவசமாக வழங்குகிறது

Published By: Digital Desk 3

14 Dec, 2025 | 09:43 AM

image

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் நிறுவனம், நாட்டில் பேரனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாக இணைய சேவைக்கு 100 அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடை தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்த உதவும் எனவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மிகவும் திறம்பட மேற்கொள்ள உதவும் எனவும் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

சனிக்கிழமை (13) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இணையச் சேவைக்கான வன்பொருள் அலகுகள் ஏற்கனவே நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், அனர்த்த மீட்புப் பணிகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக அவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/233302

அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு

5 days 6 hours ago

அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு

Dec 13, 2025 - 09:44 PM

அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக இதுவரையில் மொத்தமாக 13 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். 

நிவாரண வேலைத்திட்டத்திற்கு உதவியாகக் கிடைத்த நிதியுதவி மற்றும் திறைசேரியிலிருந்து வழங்கப்பட்ட நிதி உள்ளிட்டதாகவே இந்த மொத்தத் தொகை நிவாரணங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இதனைத் தெரிவித்தார். 

மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும், வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வர்த்தக சமூகத்தினருக்கும் தேவையான உதவிகள், உபகரணங்கள் மற்றும் பண நன்கொடைகள் பலரிடம் இருந்தும் கிடைப்பதாகக் குறிப்பிட்ட செயலாளர், இந்த ஒத்துழைப்பை வழங்கும் அனைவருக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார். 

இந்த நிவாரண பொறிமுறை சிறப்பாகச் செயற்படுவதாகவும், அதன் காரணமாக பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் நிவாரணங்களை வெற்றிகரமாக வழங்க முடிந்துள்ளதாகவும் அவர் அங்கு வலியுறுத்தினார். 

அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான தொடர்பாடலைப் பேணுவதற்காக அமெரிக்காவின் ஸ்டார்லிங்க் நிறுவனம் 100 ஸ்டார்லிங்க் அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மேலும் குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmj4hxqon02pko29n8tr7bzlp

Checked
Thu, 12/18/2025 - 20:15
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr